மே 1-ம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை 18-45 வயதினோருக்கு வழங்குவதை மாநிலங்களின் மீது சுமத்தி மோடி அரசாங்கம் பொறுப்பு துறந்திருக்கிறது. மாநிலங்களுக்கு தர வேண்டிய பொருள் மற்றும் சேவைகள் வரி ரூபாய் 1.08 இலட்சம் கோடியை தராமல் இழுத்தடித்து வரும் நிலையில் பெரும் கடன் சுமையில் இருக்கும் மாநில அரசாங்கங்கள் தடுப்பூசியை வழங்குவதில் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்கவிருக்கின்றன.
இந்தியாவில் 18-45 வயதினிருடைய எண்ணிக்கை சுமார் 60 கோடி. இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க சராசரியாக ரூபாய் 0.72 இலட்சம் கோடி வரை செலவாகும். ஏற்கனவே, வரவேண்டிய வரி வருவாயும் வரவில்லை. கடன் சுமையும் அதிகமாக உள்ள நிலையில் வேறு என்ன வழிமுறைகள் மாநிலங்கள் முன்னே இருக்கின்றன?
படிக்க :
கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !
அம்பானி ரூபாய் 500 கோடி, அதானி ரூபாய் 100 கோடி முதன்மை அமைச்சர் அவசர நிதி (PM Energency fund) வழங்கியதாக செய்திகள் வெளியாயின. வேறு சில பணக்காரர்களும் கூட அதில் பங்களிப்பு செய்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால், முதன்மை அமைச்சர் அவசர நிதி என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை. ஆனால், வேறு வழி இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் ரூபாய் 1,000 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் 827 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 2019-ல் ரூபாய் 37 இலட்சம் கோடி. பெருந்தொற்றோ அல்ல வேறு காலமோ இவர்கள் காட்டில் மழைதான். தொடர்ந்து பல மடங்கு சொத்து சேர்த்து வருகின்றனர். 2019-ஆம் ஆண்டை விட 20 சதவீதம், அதாவது ரூபாய் 10 இலட்சம் கோடி அதிகமாக (44.067 இலட்சம் கோடி) சேர்த்துள்ளனர். இவர்களுடைய சராசரி வருவாய் ரூபாய் 7,300 கோடி. இவர்களின் சொத்து மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது.
விரல் விட்டு எண்ணக்கூடிய இவர்களுக்கு ஒரே ஒருமுறை 1.6 விழுக்காடு கோவிட்-19 வரி விதித்தாலே போதும் 60 கோடி மக்களுக்குத் தடுப்பூசியை முழுமையாகப் போட முடியும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுதும் பொருந்தும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
- கடந்த சில பத்தாண்டுகளில் உலகில் சில நபர்களுடம் அதிர்ச்சியூட்டும் அளவில் பெரும் செல்வம் குவிந்துள்ளது. வெறும் 10 தனி நபர்கள், ஏப்ரல் முதல் வாரத்தில் மட்டும் பங்கு
சந்தை மூலம் ரூபாய் 3.9 இலட்சம் கோடி குவித்துள்ளனர். இதே காலகட்டத்தில் கொரோனாவினால் வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து ஏழ்மையின் ஆழத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அம்பானிக்கு அதில் ரூபாய் 38,000 கோடி பங்கு கிடைத்திருக்கிறது.
- வரி ஏய்ப்பு, கடன் தள்ளுபடி மற்றும் வரி தள்ளுப்படி : சான்றாக கூகிள், ஃபேஸ்புக் வெறும் ரூபாய் 200 கோடி வரி கட்டிவிட்டு ரூபாய் 10,000 கோடி எடுத்து சென்றதாக 2019-ல் ஒரு செய்தி வந்தது. அதாவது, வெறும் 2 சதவீதம் மட்டுமே கட்டியிருக்கிறார்கள். மேலும், பல இலட்சம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு வரி தள்ளுப்படி கிடைக்கிறது. இதில் வாராக்கடன் தனி. மேலும், நிழல் நிறுவனங்களைப் பற்றி இந்திய அரசாங்கத்திற்கு எந்த வரையறையும் இல்லை.
- கடந்த 30 ஆண்டுகளாகக் கார்ப்பரேட் வரிக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அந்நிய முதலீடு என்ற ஒற்றைக் கொள்கை முடிவினால் நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய இலட்சக்கணக்கானக் கோடி வருவாயை இந்தியா இழக்கிறது. இந்திய அரசாங்கம் 2019-ல் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிட்டதட்ட ரூபாய் 1.45 இலட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கடுமையாகப் பொருளாதார இழப்பில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்தது.
கடைசியாக, அவர்கள் பல மடங்கு அதிகமாக செல்வம் சேர்க்கின்றனர். குறைவாக திருப்பிச் செலுத்துகின்றனர். ஆனால், இது இந்தியாவின் பெரும்பணக்காரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அவர்களும் அவர்களின் சேவகர்களும் எதிர்க்கக் கூடும். ஏற்கனவே, தேர்தல் பத்திரங்கள் வாங்கி இந்திய ஜனநாயகத்திற்குப் பங்களித்தாயிற்று என்று அவர்கள் சொல்லக் கூடும்.
ஆறுமுகம்
செய்தி ஆதாரம் : Scroll.in