சத்தீஸ்கர் மாநிலம் தெற்குப் பகுதியில், சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது சில்கர் கிராமம். இக்கிராமத்தில் துணை இராணுவப் படையின் முகாம் ஒன்று கடந்த மே 12-ம் தேதி இரவு அமைக்கப்பட்டது.
கிராம சபையிடம் அனுமதி கேட்காமல் அமைக்கப்பட்ட இம்முகாமை அகற்றக்கோரி, மே 12 இரவு முதல் சில்கர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதிவாசி பழங்குடியின மக்கள் 22 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க :
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் மாவோயிஸ்டுகளின் தலையீடு இருப்பதாகக் கூறி, மே 17 அன்று போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் தலையீடு என்று போலீசு தரப்பு கூறியதை மறுக்கும் கிராம மக்கள், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கினர்.
ஆதிவாசி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை கிராமத்திற்குள் நுழையவிடாமல் போலீஸ் தடுத்தபோதும், போராட்டக் களத்தில் மக்கள் கூடுவது அதிகரித்தே வருகிறது. மே 25 அன்று, துணைராணுவப் படையினர் முகாமிட்டிருக்கும் டாரெம் எனும் இடத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லவிடாமல் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள், “துணைராணுவப்படையின் முகாமை அகற்றுங்கள்; நாங்கள் முகாம்களை விரும்பவில்லை; இந்த நிலம் எங்களுடையது; தண்ணீர், காடு, காற்று எங்களுடையது” என முழங்கினர்.
“சில்கர் கிராமத்தில் இருந்து முகாம் அகற்றபடும் வரை, முகாமிற்கான ரேஷன் பொருட்களையோ அல்லது வேறு பொருட்களையோ எடுத்து செல்வதற்கான அனைத்து வாகன வழித்தடங்களையும் மறிப்போம்” என்கிறார் “மூல் நிவாசி பச்சாவ் மஞ்ச்சை” (பூர்வ குடிமக்களை காப்பாற்றுவோம் அமைப்பு) சேர்ந்த இளம் பெண் ஒருவர்.
போராட்டம் வீரியமடைந்த நிலையில் இனியும் தாமதம் செய்தால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று அஞ்சிய அம்மாநிலத்தின் பூபேஷ் பாகேல் அரசு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது.
அரசு அமைத்துள்ள குழுவில், 11 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாஸ்டர் மக்களவை எம்.பி.யான தீபக் பைஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டு மாவட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், பிஜாப்பூர் மற்றும் சுக்மா ஆகிய இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பாஸ்டர் காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோர் அரசு பிரதிநிதிகளுடன் சென்றனர்.
அரசு அமைத்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சுக்மா, பிஜாப்பூர் மற்றும் தாந்தேவாடாவில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நான்கு பெண்கள், ஆறு ஆண்கள் உட்பட பத்து பேரை கொண்ட இளைஞர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 17 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்கள்தான் இக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்.
ஜூன் 2 அன்று அரசு தரப்பிற்கும் கிராமப்புற இளைஞர் குழுவுக்கும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என பலர் அரசு தரப்பில் இருந்து வருபவர்களுக்காக காத்திருந்தனர்.
அரசு தரப்பு குழு டாரெம் பஞ்சாயத்து கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறியுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை பொதுவெளியில் அனைவரின் முன்பும் நடத்தப்பட வேண்டுமென்று மூல் நிவாசி பச்சாவ் மன்ச் வலியுறுத்தியது. இந்த நிபந்தனைக்கு அரசாங்க தரப்பு குழு ஒப்புக்கொண்டது. ஆனால், பேச்சுவார்த்தை நடக்கும் அந்த இடத்திற்கு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் செல்ல போலீசு அனுமதிக்கவில்லை.
“பேச்சுவார்த்தை பயன் தரும் விதமாக அமைந்தது. போராட்டக்காரர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவற்றை நாங்கள் விவாதித்து ஒரு முடிவெடுத்து அவர்களிடம் தெரிவிப்போம்” என்று கூறிய எம்.பி. தீபக் பைஜ், போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஊடகங்களுக்கு சொல்ல மறுத்துவிட்டார்.
“துணைராணுவப் படையின் முகாமை வெளியேற்ற வேண்டும். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இதனை விசாரிக்க வேண்டும். இறந்தவர்களுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னத்தை எதுவும் செய்யக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை”, என்கிறார் முன்னாள் பள்ளி ஆசிரியை மற்றும் சமூக செயல்பாட்டாளரான சோனி சோரி.
மேலும், “எந்தவொரு போராட்டக்காரர்களையும் போலீசு துன்புறுத்தக்கூடாது. முகாம் அமைப்பதற்கு முன்பு 7 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்படும் குழுவில் கலந்து ஆலோசிக்க வேண்டும். இனி கிராம சபைக் கூட்டத்தை நடத்தாமல் எந்தவொரு முகாம்களும் அமைக்கக்கூடாது” என்றார் அவர்.
பேச்சுவார்த்தை நடந்த ஒருமணி நேரம் கழித்து, அரசு தரப்பு குழு போராட்டக்காரர்களிடம் சென்று, “உங்களது பெரும்பாலான கோரிக்கைகளுக்கு அரசு கட்டுப்படும். ஆனால், துணைராணுவப் படையின் முகாமை அகற்ற மத்திய அரசோ மாநில அரசோ முடிவுக்கு வரவில்லை” என தெரிவித்துள்ளனர்.
“அரசாங்க தரப்பு பதிலை நாங்கள் எழுத்துப்பூர்வமாக தரச்சொல்லி கேட்டுள்ளோம். ஏனென்றால், நாங்கள் இந்த அரசாங்கத்தை துளியும் நம்பவில்லை”, என்கிறார் இளம் தலைவர்களில் ஒருவர். மேலும், “பதில் கேட்டு நான்கு நாட்கள் ஆகியும் அரசாங்கத்தில் இருந்து எங்களுக்கு எழுத்துப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை என்றால் அரசாங்கம் எங்களை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இப்போது எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் அவர்.
எழுத்துப்பூர்வ பதிலுக்காக கிராம மக்கள் காத்திருப்பதைப் பற்றி, அரசு தரப்பு குழுவை தலைமை தாங்கிய எம்.பி. தீபக் பைஜ்ஜிடம் ஸ்காரல் இணையதளம் கேட்டுள்ளது. அதற்கு, “எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தால் மட்டும் போராட்டத்தை நிறுத்தப்போகிறார்களா என்ன?”, என்று திமிர்தனமாக பதிலளித்துள்ளார் தீபக் பைஜ்.
அரசு தரப்பு குழுவில் இருந்து எழுத்துப்பூர்வ அறிக்கை ஏதும் வராத நிலையில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்திருக்கிறார்கள் கிராம மக்கள். “எழுத்துப்பூர்வ அறிக்கை வரவில்லை என்று தெரிந்ததும் முன்பை காட்டிலும் அதிகமான கிராம மக்கள் போராட்டத்தில் இணைந்துள்ளார்கள்” என்கிறார்கள் போராட்டக் களத்தில் இருப்பவர்கள்.
“போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் துன்புறுத்தமாட்டார்கள் என்று அரசு தரப்பு குழு உறுதியளித்தபோதிலும், கிராம இளைஞர் ஒருவரை டாரெம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றது” என மஞ்ச் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சில்கர் கிராமத்திற்குள் யாரும் நுழையமுடியாதபடி, போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஜூன் 5 அன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வந்த குழு ஒன்று டாரெம் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. சில்கர் கிராமத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட அரசியல் ஆர்வலர்கள் சிலர் டாரெமிலே சாலை மறியல் போராட்டத்தை நடத்தி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். ஜூன் 6 அன்றும் கிராம மக்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள வெளியில் இருந்து சில்கர் வந்த எட்டு பேர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கிராம மக்களின் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவினை கண்டு அஞ்சிய அரசாங்கம் ஜூன் 6 அன்று 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அப்பகுதியில் நான்கு பேர் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை மீறி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சத்தீஸ்கர் பச்சாவ் அந்தோலன் என்ற சமூக ஆர்வ குழு ஒன்று பிஜாப்பூர் நகரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
படிக்க :
♦ தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
♦ கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்
போலீசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடிவரும் மக்களின் நோக்கம், தங்களது கிராமத்தில் அத்துமீறி முகாமிட்டிருக்கும் துணைராணுவப் படையின் முகாமை அகற்ற வேண்டும் என்பதுதான். வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், மலைகளில் இருக்கும் கனிம மற்றும் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நோக்கத்தில் செயல்படுகிறது மத்திய மாநில அரசுகள்.
அதை எதிர்த்துப் போராடும் மக்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்தி ஒடுக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, போராடும் மக்களோடு துணைநிற்போம் !
ஷர்மி
செய்தி ஆதாரம் : Scroll.in