ர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரங்களின் பல்வேறு அமைப்புகள் பற்றி பல நூல்கள் வந்துவிட்டாலும் அது அந்தந்த அமைப்புகளின் அடிப்படைவாத செயல்பாடுகளின் விளைவுகள் மூலம் பெற்ற கருத்துக்கள் அல்லது உண்மைகளின் அடிப்படையில் எழுதியதாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒரு வேளை, அதன் உண்மைத் தன்மையில் சிறிது சந்தேகம் கூட எழலாம்.

ஆனால், பன்வர் மெக்வன்ஷி, ஆர்.எஸ்.எஸ்-இல் பதினாறு ஆண்டுகள் செயலாற்றி, அந்த அமைப்பிற்குள் அவர் மீது எழுந்த சாதீய அவமதிப்பின் காரணமாக மனம் வெதும்பி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு வெளியேறியவர். அவர் அந்த அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பற்றியும், சதித் திட்டங்களைப் பற்றியும் புள்ளி விபரங்களோடு விளக்கி இருப்பது உண்மையில் நமக்கு திகிலூட்டுவதாக இருக்கிறது.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா
♦ நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை 11 மண்டலங்களாகவும், 41 மாவட்டங்களாகவும் பிரித்து கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கம் போல் செயல்படுகிறது என்று குறிப்பிடுகிறார் பன்வர் மெக்வன்ஷி. அதேபோல் ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு அல்லது மூன்று சங் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் மற்றும் மாவட்டத்திற்கும் ஒரு ஷாகா பயிற்சியாளர், விஸ்ட்டாரக், வட்டார பிரசாரக், மாவட்ட பிரசாரக் மற்றும் நன்கொடைகள் மூலம் பெறப்படும் நிதியை பராமரிக்கும் வணிகக்கும்பல் (பனியாத் தலைவர்) என்று கிட்டத்தட்ட ஒரு இராணுவம் போல் செயலாற்றுவதை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.

அதாவது, ஒருவர் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ந்தவுடன் சுயம்சேவக் ஆகி பின்னர், படிப்படியாக கடநாயக் – ஞான நாயக் – முதன்மை ஆசிரியர் – ஷாகா மேலாளர் – கார்யவாஹ் – மண்டல அலுவலர் என்று பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த மண்டல அலுவலர்கள் தான் சர்சங்க்ஸ்லாக் என்ற மிக மேல்நிலைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரே நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை இடமான ஹெட்கேவர் பவனின் தலைமை இயக்குனர் ஆவார்.

இந்த சர்சங்க்லாக் பதவி என்பது “வாழ்நாள் பதவி” ஆகும். பொதுவாக இந்தப் பதவிக்கு மராட்டிய சித்பவன் பிராமணர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது முதல் இதுவரை சர்சங்க்லாக் பதவியில் இருந்தவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;

  1. கேசவ் பலிராம் ஹெட்கேவர் – கி.பி. 1925-1930.
  2. லட்சுமண் வாசுதேவ் பரஞ்சபே – கி.பி. 1930-1931 (தற்காலிகமாக ).
  3. கேசவ் பலிராம் ஹெட்கேவர் – கி.பி. 1931-1940.
  4. குருஜி எம்.எஸ். கோல்வாக்கர்- கி.பி. 1940-1973.
  5. மதுக்கர் தத்தாத்ரேயா தேவரஸ் – கி.பி. 1973-1994.
  6. ராஜு பைய்யா ராஜேந்திரசிங்- கி.பி. 1994-2000 (இவர் மட்டுமே சத்திரியர் வகுப்பைச் சேர்ந்தவர்).
  7. கே.எஸ். சுதர்சன்- கி.பி. 2000-2009.
  8. மோகன் பகவத்- 21/03/2009 ந்தேதி முதல்.

தற்போதைய ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமை இயக்குனராக மோகன் பகவத் அவர்கள் 21/03/2009 ந்தேதி முதல் இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். தமது அமைப்பில் கும்ஹார், ஜாட், குஜ்ஜார், மாலி போன்ற உயர்சாதி இந்துக்களையும், பங்கார்கள், கோலிகள் போன்ற தலித்துகளையும், பில் – ஆதிவாசிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், உயர்சாதி இந்துக்களுக்குத்தான் முதன்மை செயல்பாட்டாளர்கள் பதவி கிடைக்கும் என்றும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார் பன்வர் மெக்வன்ஷி.

ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் பிரிவான பா.ஜ.க-வில் ஒரு தலித்தான ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-இல் அவர் ஒரு மாவட்ட அல்லது மணடல பிரசாராக் போன்ற பதவிக்கு வர முடியாது என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.

ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மனுநீதி வழிகாட்டியபடி தான் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய குறிக்கோள்களாக இருப்பவைகள் என்னவென்றால்;

  • இந்து – இந்தியா – இந்துஸ்த்தான்.
  • இந்துயிசத்தை இராணுவமயமாக்குவதும், இராணுவத்தை இந்து மயமாக்குவதும்.
  • கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல் அல்லது அழித்தொழித்தல்.

இவற்றை அடித்தளமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு ஷாகா பயிற்சி கொடுக்கப்படுகிறது. சுருக்கமாக, அவர்களுக்கு இந்துத்துவத்தையும், தேசபக்தியையும் புகட்டி பிற மதத்தினரை எதிரிகளாக நினைக்க பயிற்றுவிக்கிறது. இவ்வாறான ஒரு சுயம்சேவக் போன்றுதான் பன்வர் மெக்வன்ஷியும் இருந்தார்.

இவர் 1990-ஆம் ஆண்டு நடந்த முதல் கரசேவையில் கலந்து கொள்ள இவரது உடன்பிறந்த சகோதரர் பத்ரிலாலும் அயோத்தி நோக்கிச் செல்லும்போது அப்போதைய உ.பி முதல்வர் முலாயம்சிங் யாதவ்-ன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு மதுராவில் சிறைவைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகிறார். தோல்வியுடன் சிர்தியாஸ் திரும்பிய பன்வர் மெக்வன்ஷி பின்னர் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் முன்னிலும் வேகமாக இயங்கி ஆர்.எஸ்.எஸ்-இன் மாவட்ட கார்யவாஹ் பதவி வரை முன்னேறுகிறார்.

இந்த சூழலில், தமது பட்டப்படிற்காக இவரது சிர்தியாஸ் கிராமத்திற்கு அருகில் உள்ள பில்வாரா கிராமத்திற்கு செல்கிறார். அங்கே, இவர் ஒரு தலித் என்பதால் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. அதனால், பில்வாராவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் தங்கும் நிலை ஏற்படுகிறது. அதுவரை சாவர்க்கர், மூஞ்சே, திலகர், கோகலே, ஹெக்டேவர் மற்றும் குருஜி கோல்வாக்கர் போன்ற இந்துத்துவா தலைவர்களை மட்டுமே தெரிந்திருந்த பன்வர் மெக்வன்ஷிக்கு பூலே, கபீர், புத்தர் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அங்கே கிடைத்தது.

அதேபோல் அதுவரை ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான “பாஞ்சஜன்யா”-வை மட்டுமே படித்து வந்த அவருக்கு, ஓஷோ ரஜனீஷ் வெளியிட்ட “ஓஷோ டைம்ஸ்” செய்தித்தாள் படிக்கும் வாய்ப்பும் அங்குதான் கிடைத்தது. இந்தச் செய்தித்தாள் தனது மனதின் மற்ற கதவுகளைத் திறந்து விடத் துவங்கியது என்றும், ஆர்.எஸ்.எஸ். தனது மனதிற்குள் புகுத்தியிருந்த தேசியம், நற்குண உயர்பண்பு, மனத்துறவு, ஆன்மீக இயல்பு ஆகியவைகள் ஓஷோவை படித்த பிறகுதான் மாறத் துவங்கியது என்றும் கூறுகிறார், பன்வர் .

இந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு கரசேவை செய்ய அயோத்திக்கு சென்றபோது இறந்துபோன தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பில்வாராவில் இறந்தவர்களுக்கும் சேர்த்து “தியாகிகள்” தினம் கொண்டாட 1991-ஆம் ஆண்டு மே மாதம் பில்வாராவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிர்தியாஸ் வரும்போது அவர்களுக்கு உணவளிக்க முன் வருகிறார் பன்வர் மெக்வன்ஷி.

ஆனால், அவர் தந்தை நாராயணன்லால் “ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர், அவர்கள் போலி வேடதாரிகள்; பொதுவில் ஒன்றைச் சொல்வார்கள்; ஆனால், தனிமையில் வேறு ஒன்றைச் செய்வார்கள், அவர்கள் நமக்கு எதிரான விஷம் நிறைந்தவர்கள். அதனால், நமது வீட்டில் தயாரிக்கப்படும் உணவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று எச்சரிக்கிறார்.

ஆனால், பன்வர் மெக்வன்ஷி நம்பிக்கையுடன் தான் ஆர்.எஸ்.எஸ்-இன் முக்கிய பொறுப்பில் இருப்பவன், அதனால் என்னை உதாசீனப்படுத்த மாட்டார்கள் என்று அவரை சமாதானப்படுத்தி பூரியும், உருளைக்கிழங்கும் தயாரிக்கச் சொல்கிறார். ஆனால், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாப்பிடுவதற்கு தங்களுக்கு நேரம் இல்லை என்று கூறி, உணவை பொட்டலமாக கட்டித் தருமாறும், தாங்கள் அடுத்த ஊருக்குச் செல்லும் வழியில் அதை சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். பன்வர் மெக்வன்ஷியும் பூரியையும் கிழங்கையும் பொட்டணம் செய்து தருகிறார். ஆனால், சங் பரிவாரங்கள் பன்வர் மெக்வன்ஷி கொடுத்த உணவை சாப்பிடாமல் ஊருக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார்கள்.

இந்த தகவலை அறிந்த பன்வர் மெக்வன்ஷிக்கு பெருத்த அவமானமும், கோபமும் ஏற்படுகிறது. இந்த தீண்டாமை செயலினால் அவரது மனம் பேதலித்துப்போகிறது. அவர்கள் தனது வீட்டின் உணவை நிராகரித்ததன் மூலம் தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்ததாகவும், தன்னை வெகு தூரத்தில் வீசி எறிந்தது போல் இருந்தது என்றும், தான் அவர்களிடமிருந்து தொலைவில் இருப்பது போல உணர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார், பன்வர்.

தனக்கு ஏற்பட்ட இந்த தீண்டாமை கொடுமையை அவர் மாவட்ட, மண்டல பிரச்சாரக்குகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், யாரும் அவருக்கு சரியான பதிலைக் கூறவில்லை. ஆனால், நந்தலால் காஸ்ட் என்ற பனியா பொறுப்பாளர் மட்டும் “சங் அமைப்பின் எல்லா முயற்சிகளுக்குப் பிறகும், இந்து சமுதாயம் ஒன்றாக ஆகவில்லை. நம்மைப் பொறுத்தவரை எந்த நாளிலும் உங்களுடன் ஒன்றாக அமர்வோம், ஒரே தட்டில் உணவு உண்போம்.

ஆனால், சங் பரிவாரத்தினருக்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் வீட்டிலிருந்து உணவு கொடுப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அவர்கள் மிகவும் கோபம் கொள்ளுவார்கள். அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்” என்று கூறுகிறார். அவரது வார்த்தைகள் தன்னைக் கல்லாக மாற்றியதாகக் கூறுகிறார் பன்வர் மெக்வன்ஷி.

படிக்க :
♦ நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை விடக் கூடாது என்று கருதி இந்த சம்பவத்தை பற்றி நாக்பூரில் இருக்கும் சர்சங்க்லாக் தேவரஸ் அவர்களுக்கு எழுதுகிறார். ஆனால், அவரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை. அதன்பிறகு சங் அமைப்பிலிருந்து முற்றிலும் உடைத்துக் கொண்டு வெளியேறுகிறார். சங் பரிவாரங்களின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் அவருக்குள் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிர் திசையில் அவரது பயணம் துவங்குகிறது.

1992 டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்படும் போது அவர் பில்வாராவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் இருக்கிறார். இப்போது அவர் ஒரு கரசேவர் அல்ல. சங்கிகளால் தீண்டாமை சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு தலித். அந்த சூழ்நிலையில் அவருக்கு நௌசாத்-ஹதர்-எ- கர்ரார் என்ற இஸ்லாமிய நண்பரின் அறிமுகம் கிடைக்கிறது. அவருடன் ஏற்பட்ட உரையாடல்கள் வழியாக ஏற்பட்ட தெளிவின் மூலம் முஸ்லிம்களின் மீது கொண்டிருந்த வெறுப்பு பனிக்கட்டி போல் உருகியது என்கிறார் பன்வர் மெக்வன்ஷி.

அவர்கள் இருவரும் மாணவர்களை ஆர்.எஸ்.எஸ். வலையில் சிக்கவிடாமல் தடுப்பதற்கும், பல்கலைக்கழகத்திற்குள் குழப்பம் விளைவிக்கும் ABVP (தலிபானின் இந்திய வடிவம் என்கிறார் பன்வர் மெக்வன்ஷி) அமைப்பிற்கு எதிராக செயல்படவும் மாணவர் அமைப்புகளை உருவாக்க நினைத்தார்கள். அதனால், 1993 டிசம்பரில், பன்வர் மெக்வன்ஷி “வித்தியார்த்தி அதிகார் ரக்ஷக் சங் (VARS – மாணவர் உரிமை பாதுகாப்பு மையம்)” என்ற அமைப்பையும், நௌசாத் “இஸ்லாமிய சேவா சங்கத்தையும்” துவக்கினார்கள். இவை இரண்டும் ஆர்.எஸ்.எஸ்-இன் நடவடிக்கையை அம்பலப்படுத்தும் அமைப்புகளாக இருந்தன.

இருந்தாலும் போலீஸ் தொல்லைகளால் இந்த அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்கிறார் பன்வர் மெக்வன்ஷி. அதனால், நௌசாத் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிய – லெனினிய) பிரிவுக்கு சென்றுவிட்டார். பன்வர் மெக்வன்ஷி-க்கு அம்பேத்கரை போல் இந்து மதத்தை விட்டு வெளியேறும் எண்ணம் எழுகிறது !.

மதமாற்றம் பற்றி சிந்திக்கும் போது சீக்கியம், ஜைனம், பௌத்தம் போன்ற மதங்கள் “இந்து மதத்தின் பாகங்கள்” என்று சங் பரிவாரங்கள் சொல்லி வருவதால் அந்த மதங்களுக்கு மாறுவதை பன்வர் மெக்வன்ஷி விரும்பவில்லை. அதே சமயத்தில் இஸ்லாம் மதத்திற்கு செல்வதை விட கிறித்துவ மதத்திற்கு செல்வதை விரும்புகிறார். அதனால் பாப்டிஸ்ட், மேதேடிஸ்ட், சிரியன் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சென்று தன்னை கிறித்துவ மதத்தில் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால், இவரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பை நன்கு அறிந்திருந்த கிறித்துவர்கள் இவரை ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளி என்று கருதி கிறித்துவ மதத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.

ஒரு வழியாக ஜோத்பூர் பாதிரியார் பாவெஸ் அவர்களை சந்தித்து வேண்டுகோள் வைக்கிறார். அவர் இவரை நம்பினாலும் உடனடியாக கிறித்துவ மதத்தில் சேர்த்து கொள்ளாமல், மத போதனைகளை முதலில் கடைபிடித்து வருமாறும், தக்க சமயத்தில் சேர்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுகிறார். சில நாட்கள் இயேசுவின் போதனைகளை கற்று வருகிறார். ஆனால், கிறித்துவம் முழுவதும் இயேசுவை சுற்றியே சுழல்வதாக இருப்பது அவருக்கு வெறுப்பைத் தருகிறது. “ஒரு சாக்கடையில் இருந்து தப்பி ஒரு கிணற்றுக்குள் விழுந்தது” போன்ற உணர்வு எழுந்ததால் அவரால் கிறித்துவத்தை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால், இயேசு மட்டும் ஏற்றுக் கொள்ள முடிந்தது என்கிறார்.

1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தன் கிராமத்திற்குத் திரும்புகிறார். அவரது பார்வை அம்பேத்கர் மீது ஆழமாக பதிகிறது. இந்துமதத்தின் புதிர்கள், சாதி ஒழிப்பு போன்ற நூல்களை வாசிக்கிறார். அந்நூல்கள் அவருக்கு பிராமணீயத்தை புரிய வைத்தது. மூடப்பட்டிருந்த அவரது மனக்கதவுகள் படபடவென்று திறந்து கொள்கின்றன. அதன் பிறகு கபீர், பெரியார் மற்றும் பூலே ஆகியோர்களின் படைப்புகளைத் தேடித்தேடி படிக்கிறார். ஒரு சங்கியாக இருந்த பன்வர் மெக்வன்ஷி ஒரு கிளர்ச்சியாளனாக உருமாறத் தொடங்கினான்.

சமூகத்தின் நலனில் தனது செலுத்த ஆரம்பித்த பன்வர் மெக்வன்ஷி சங்கிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்கு பெரும் தடையாக மாறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றுகிறது. அவற்றை எல்லாம் தனது தந்தை, சகோதரர் பத்ரிலால் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எதிர் கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பன்வர் மெக்வன்ஷி-ன் வலுவான எதிர் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

பின்னர் 2001, ஜனவரி 14-இல் அவரும், அவரது 13 நண்பர்களும் சேர்ந்து “டைமண்ட் இந்தியா” என்ற பத்திரிக்கையை ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பத்திரிகை ஆர்.எஸ்.எஸ்-இன் செயல்பாட்டை தோலுரித்துக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வைத் தந்தது. பன்வர் மெக்வன்ஷி ஆளுமை மிக்க பத்திரிக்கையாளராக வளர ஆரம்பித்தார். எங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தமது நாசக்கரங்களை நீட்டி கொடுமைகள் புரிகிறதோ அங்கெல்லாம் பன்வர் மெக்வன்ஷியின் கரம் நீண்டது.

குறிப்பாக, ராஜஸ்தானில் உள்ள அசிந்திக்கு அருகிலுள்ள லோவிந்தபுரா கிராமத்தில் இருந்த மசூதி இடிப்பு, தண்பி பார்யா கிராமத்தில் கண்டேஸ்வரி பாபா நடத்திய யாகத்தில் தலித்துகள் புறக்கணிப்பு போன்ற நிகழ்வுகளில் தலையிட்டு அவற்றை செய்திகளாக்கி பிரச்சனை தீர நடவடிக்கை எடுத்தார்.

2002-இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, “தலிபானி இந்துக்களே, கவனியுங்கள்” என்று டைமண்ட் இந்தியா பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினார். அதில், “தேவகி-ன் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்றுவிடும் என்று தெரிந்திருந்த கம்சன் கூட, அவளது கர்ப்பத்தைக் கிழித்துத் திறக்கவில்லை. இன்னும், இரவும் -பகலும் யாரெல்லாம் “ஜெயகிருஷ்ணா” என்று பஜனை செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களால் கம்சன் கூட கனவு கண்டிராதவாறு அப்பாவிகள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பொது இடங்களில், பெரும் கூட்டத்தின் முன்னிலையில் பெண்கள் கூட்டுக் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள் – இது தான் அவர்களின் இந்துயிசமா ?” என்று கடுமையாக எழுதியிருந்தார்.

சங்கிகளை “இந்து தலிபான்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டது சங்கிகளுக்கு கோபமூட்டியது. அதனால், பில்வாராவில் இருந்த டைமண்ட் இந்தியா அலுவலகம் சூறையாடப்பட்டது. அந்த பத்திரிக்கைக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டதால் அவர்கள் பின்வாங்கினார்கள். அதன்பிறகு டைமண்ட் இந்தியா வெளிவரவேயில்லை.

பின்னர், 2005-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பில்வாரா மற்றும் மண்டல் பகுதிகளில் நடந்த இந்து – முஸ்லிம் கலவரங்களை விசாரிக்கும் “குடிமக்கள் விடுதலைக்கான மக்கள் ஒற்றுமை (PUCL)” நடத்திய உண்மை அறியும் குழுவில் சென்ற பன்வர் மெக்வன்ஷி, “அணுகும் பாசிசத்தின் காலடிச் சுவடுகள்” என்ற அறிக்கையை தயார் செய்து, அதை துண்டறிக்கையாக வெளியிட்டார். இது ராஜஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.எஸ். பன்வர் மெக்வன்ஷியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களால் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கிகள் பயந்து ஓடினார்கள்.

ஆனாலும், பன்வர் மெக்வன்ஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு குல்தீப் நய்யார், ஹரிஷ் மந்தர், அருந்ததிராய், பாரத் தோக்ரா மற்றும் பிரபாஷ் ஜோஷி ஆகியோர்களை சந்தித்து உதவி கோரினார் பன்வர் மெக்வன்ஷி. இறுதியாக பிரபாஷ் ஜோஷி, அப்போதைய துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத்திடம் பேசி பிரச்சனையை தீர்க்க உதவி செய்தார்.

மேலும், தேசிய அளவில் பத்திரிக்கையாளர்களாலும், சமூக செயல்பாட்டாளர்கள் தலையீட்டாலும் இந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தது. PUCL அவருக்கு முழுமையாக ஆதரவு தந்ததை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். இருந்தாலும், எந்தவொரு தலித் அமைப்பும் அல்லது தலித் இலக்கியவாதிகளும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது அவருக்கு ஆச்சரியம் தந்ததாக பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் இந்த நூல் பன்வர் மெக்வன்ஷி என்ற சமூகப் போராளியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரங்களுக்கு எதிரான அவரின் திடமான போராட்டம் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஒரு தனி மனிதனாக ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அடுக்கடுக்கான பல போராட்டங்களை நிகழ்த்தி இருக்கிறார். குறிப்பாக, வட மாநிலங்களில் தலித் மக்கள் ஆர்.எஸ்.எஸ்-இல் சேருவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இந்தியாவின் மூலை முடுக்கில் எல்லாம் கொண்டு சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நூல் மூலம் பன்வர் மெக்வன்ஷி, தான் ஒரு இந்துவாக இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்; ஒரு இந்திய குடிமகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையாநூல் ♦ அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா

இந்த புத்தகத்தை வாசித்தபோது எனக்கு ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகம்தான் ஞாபகம் வந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை அந்தப் புத்தகம் வெளிப்படுத்தியது போல், இந்தப் புத்தகம் இந்துத்துவ பாசிசத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தாலும், இந்தப் புத்தகம் எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

  • இந்தியா முழுவதும் விஷவித்துக்களாக பரவியுள்ள இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலிடமிருந்து இந்திய நாட்டை எப்படி மீட்டெடுப்பது ?
  • இடது சாரி, தலித் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் இந்த இந்துத்துவ-பாசிச அமைப்புக்கு எதிராக ஏன் வலுவாக போராடுவதில்லை ?
  • நாடு முழுவதும் கிட்டத்தட்ட 57,000 கிளைகளையும், 6 மில்லியன் உறுப்பினர்களையும், 34 துணை அமைப்புகளையும் கொண்ட இந்த இந்துத்துவ -பாசிச அமைப்பை வீழ்த்தி எவ்வாறு நம் நாட்டை மதச்ச்சார்பற்ற நாடாக மீண்டும் புத்தாக்கம் செய்வது ?

இந்த கேள்விகளுக்கான பதிலை காலம் சொல்லும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

நல்லதொரு புத்தகத்தை தமிழுக்கு கொடுத்த மொழிபெயர்ப்பாளர் ச.நடேசனுக்கு நன்றி!

(குறிப்பு : இந்த நூலை எழுதிய பன்வர் மெக்வன்ஷி (Bhanwar Maghwanshi) ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல் கிராமத்தின் அருகில் உள்ள சிர்தியாஸ் என்ற கிராமத்தில் 1975 இல் பிறந்தவர். தனது 13 வயதில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங் -கில் (RSS) சேர்ந்த இவர் பின்னர் 1991 இல் ஆர்.எஸ்.எஸ் லிருந்து விலகி தற்போது ஒரு தலித் இயக்க செயல்பாட்டாளராகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார். அவர் தனது நேரத்தை சிர்தியாஸில் உள்ள அம்பேத்கர் பவனைக் கவனித்துக் கொள்வதற்கும் , நாடு முழுவதும் அவரைக் கொண்டு செல்லும் அரசியல் வேலைகளுக்கும் இடையில் பிரித்துக் கொள்கிறார். இந்த நூல் முதலில் ” நான் கரசேவகனாக இருந்தேன் “என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதப்பட்டது. பின்பு “ இந்துவாக நான் இருக்க முடியாது – ஆர்.எஸ்.எஸ்ஸில் ஒரு தலித்தின் கதை (I could not be Hindu-Story of a Dalit in the RSS)” என்ற தலைப்பில் தமிழில் வெளிவருகிறது.)

நுல் ஆசிரியர் : பன்வர் மெக்வன்ஷி
தமிழில் : செ.நடேசன்
பதிப்பகம் : எதிர் வெளியீடு, ஆகஸ்ட் 2020
பக்கங்கள் : 256
விலை : ரூ.299

நூல் அறிமுகம் : சு.கருப்பையா

 

 

 

disclaimer