அரசின் நலத்திட்டங்களோ, இலவச சுகாதார வசதியோ கிடைக்காத நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகள் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உரிமைகள் குழுக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நாடற்ற அவர்கள், வங்கிக் கணக்கு அல்லது குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாத காரணத்தால் அரசாங்கத்தால் வழங்கப்படும் பொருளாதார நிவாரணப் பொதிகளை பெற முடியவில்லை” என்கிறது, நாடற்ற மக்கள் மீது கோவிட் 19 தாக்கம் மற்றும் மாற்றத்துக்கான பாதை என்கிற தலைப்பிலான ஆய்வு.
படிக்க :
♦ இந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் !
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
ஐரோப்பாவை தளமாகக் கொண்ட Institute on Statelessness and Inclusion என்ற நிறுவனம் தொகுத்த இந்த அறிக்கை, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் வாழும் நாடற்ற மக்கள் மீது பெருந்தொற்றின் தாக்கம் குறித்து ஆய்ந்தறிந்தது.
“கோவிட் -19 பெருந்தொற்று மற்றும் அரசின் நடவடிக்கை உலகெங்கிலும் உள்ள 15 மில்லியன் நாடற்ற மக்களின் உரிமைகள், நல்வாழ்வு ஆகியவற்றின் மீது குறிப்பிடத்தகுந்த எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என கென்யா, வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1951 அகதிகள் மாநாடு அல்லது அகதிகள் மாநாட்டின் 1967 நெறிமுறைகளிலோ இந்தியா இல்லை. மேலும், தேசிய அகதிகள் பாதுகாப்பையும் இந்தியா கொண்டிருக்கவில்லை. ஆனால், தொடர்ந்து அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரிலிருந்து அதிகப்படியான அகதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது.
இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோயால் வறிய குடிமக்கள் பலர், சுகாதாரத்துக்கான அணுகலுக்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் போராடி வருகின்றனர், ஏனெனில் நீண்டகால பொதுமுடக்கத்தின் தாக்கத்தால் பொருளாதாரம் நொறுங்கியுள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் வரை சுமார் 800 மில்லியன் ஏழை இந்தியர்களுக்கு மத்திய அரசு இலவச உணவை அறிவித்துள்ளது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அகதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவமோ இலவச ரேஷனோ பெறமுடியாது.
சர்ச்சைக்குரிய குடிமக்கள் பதிவு 2019-ல் வெளியிடப்பட்ட பின்னர், கிழக்கு மாநிலமான அசாமில் கிட்டத்தட்ட 1,25,000 பேரை வெளிநாட்டினராக அறிவித்தது இந்திய அரசு. அண்டை நாடான மியான்மரிலிருந்து தப்பி வந்த 40,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களும் இந்தியாவில் உள்ளனர்.
இதுபோக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை போர்ச்சூழலில் இருந்து தப்பிவந்த தமிழர்கள், தமிழக முகாம்களில் அடைபட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது, ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என திமுக, அதிமுக கட்சிகள் வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தல் வெற்றி பெற்றவுடன் கண்டுகொள்ளாமல் இருப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.
படிக்க :
♦ உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை
♦ அவலமே வாழ்க்கையாய் வாழும் ரோஹிங்கியா அகதிகள் !
இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், இலங்கை தவிர பிற அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என இந்துத்துவ அரசு கயமைத்தனம் செய்கிறது. 40 ஆண்டுகாலமாக இந்தியா தங்களை குடிமக்களாக அங்கீகரிக்கும் என காத்திருக்கும் ஈழத்தமிழர்களை பெருந்தொற்றும் வஞ்சித்துக்கொண்டிருக்கிறது.
தனக்கு வாக்களித்த தனது குடிமக்களையே குவியல் குவியலாக சாகக் கொடுத்த மதவெறி அரசு, அசாமில் உள்ள அகதிகளின் மீதோ ரோஹிங்கியா அகதிகளின் மீதோ கிஞ்சித்தும் அக்கறை காட்டாது.
கலைமதி
நன்றி : The Wire