கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
கடந்த சில மாதங்களாக ஸ்ரீராம சேனை, பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா குழுக்கள் மாநிலத்தின் பல இடங்களில் கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி தேவாலயங்களை தாக்குவது, கூட்டம் நடத்தவிடாமல் செய்வது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டுகின்றனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் நகரில், பஜ்ரங்தள் அமைப்பின் காவி குண்டர்கள் ஓர் கிறிஸ்துவ பிரார்த்தனை கூடத்திற்குள் நுழைந்து பிரார்த்தனையை நிறுத்தி மக்களை வலுக்கட்டாயமாக மண்டபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
கடந்த நவம்பர் 28-ம் தேதியன்று நண்பகல் 12.30 மணியளவில் சுமார் 30 பஜரங்தள் குண்டர்கள், லைஃப் டு நேஷன்ஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற கிறிஸ்துவ அமைப்பால் நடத்தப்பட்டுவரும் பிரார்த்தனைக் கூடத்திற்குள் நுழைந்ததாக அதன் பொருப்பாளர் பாதிரியார் சுரேஷ் பால் தெரிவித்துள்ளார்.
“இந்துக்களை மதமாற்றியதாகவும்”, “சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்ததாகவும்” பஜ்ரங்தள் குண்டர்கள் சுரேஷ் பால் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் மீது குற்றம்சாடி, “ஜெய் ஸ்ரீ ராம்” என கூச்சலிட்டனர்” என்று சுரேஷ் பால் தெரிவித்தார்.
பஜரங்தள் குண்டர்கள் கர்நாடக மாநிலத்தின் பெலகாவி பகுதியிலும் இதுபோன்ற ஓர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
“இந்துத்துவா சக்திகள் தங்களை தாக்கக்கூடும் என்றும், போலீசுத்துறை பிரார்த்தனைக் கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியதாலும், கூட்டம் நடத்த வேண்டாம்” என்று பெலகாவி பகுதியில் உள்ள ஓர் தேவாலயத்தின் பாஸ்டர் தாமஸ் ஜான்சன் கூறினார்.
பெலகாவியில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை கிறிஸ்துவக் குழுக்கள் பிரார்த்தனைக் கூட்டங்களை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 13 முதல் 24 வரை நடைபெறும் இந்த அமர்வில் சர்ச்சைக்குரிய மதமாற்ற எதிர்ப்பு மசோதா இடம்பெறும் என கூறப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட போதகர்களை பிரார்த்தனை கூட்டங்களைத் தவிர்க்குமாறு போலீசு அறிவுறுத்தியுள்ளது.
Members of Hindutva group Bajrang Dal raided a Christian prayer group in Belur, after falsely accusing them of forcibly converting Hindus.
But the Christian women fought back against their cowardly attackers!
அதாவது, “பாஸ்டர் செரியன் தாக்கப்பட்ட முகாம் மற்றும் திலகவாடி போலீசு நிலைய எல்லைகளில் உங்களுக்குச் சொந்தமாக தேவாலயக் கட்டிடங்கள் இருந்தால் நீங்கள் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தலாம். ஆனால், வாடகை கட்டிடத்திலோ அல்லது தனியார் வீடுகளிலோ நடத்த வேண்டாம்” என்று போதகர்களிடம் போலீசார் கூறியுள்ளனர்.
போலீசின் அறிவுரையாளும், காவி குண்டர்களின் அச்சுறுத்தல்களாலும் ஜெபக் கூட்டங்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலானவர்கள் பிரார்த்தனை கூட்டங்களுக்கு இடம் கொடுக்க மறுப்பதாக பாஸ்டர் ஜான்சன் கூறுகிறார்.
டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் கூட்டத்தில் “லவ் ஜிஹாத்” சட்டம் என்று பெயரிடப்பட்ட மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டுவர கர்நாடகா ஆர்வமாக உள்ளது. மாநிலத்தின் 6.5 கோடி மக்களில் 1.87 சதவீதத்தைக் கொண்ட கிறிஸ்தவ சமூகத்தின் சார்பில் மசோதாவை எதிர்த்து பெங்களூரு பேராயர் ரெவரெண்ட் பீட்டர் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று நந்துகுமார் மற்றும் ரெவரெண்ட் டெரெக் பெர்னாண்டஸ் தலைமையிலான பிஷப்கள் மற்றும் கிறிஸ்துவ தலைவர்கள் குழு பெலகாவி போலீஸ் கமிஷ்னரை சந்தித்து பாதுகாப்பு கோரி ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர்.
அதில், “இது ஒரு ஆபத்தான வளர்ச்சியாகும். இதில் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக சமூகத்தில் உள்ள சில பிரிவினரின் அச்சுறுத்தல்களால் எங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு கூறுகிறீர்கள். பாதிரியார்கள் மற்றும் போதகர்கள் பிரார்த்தனை செய்வதைத் தடுப்பதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். இந்த பிரார்த்தனைக் கூடங்களில் நடப்பவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஸ்ரீராம சேனை மற்றும் பஜ்ரங்தள் உள்ளிட்ட பல இந்துத்துவா குழுக்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்துவ போதகர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து, தேவாலயங்களை தாக்குவது, கூட்டம் நடத்தவிடாமல் செய்வது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது, சட்டமன்றத்தில் கொண்டுவரவுள்ள மதமாற்றத்தை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
“இந்துத்துவ சக்திகள் தேவாலயங்களுக்குள் நுழைகிறார்கள், மக்களைத் தாக்குகிறார்கள், ஆனால் இறுதியாக மத போதகர்கள் கட்டாய மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பலர் இப்போது ஜூம்(Zoom) செயலியில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துகிறார்கள்”, என்று ஒரு போதகர் கூறினார்.
கிறிஸ்துவ மதக்கூட்டங்களை நடத்த விடாமல் இடையூறு மற்றும் தாக்குதல் தொடுத்து வரும் பஜரங்தள் காவிக்குண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல், மதக்கூட்டங்களை நடத்தாமல் இருப்பது நல்லது என்று கூறி காவிக் குண்டர்களின் அடியாளாக செயல்பட்டு வருகிறது கர்நாடக போலீசு. மேலும், காவிக்குண்டர்கள் மீது குற்றம்சாட்டினால், கிறிஸ்துவ மத போதகர்கள் மீது கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு. அதாவது, வழக்கு தொடுக்க வந்தவர்கள் மீதே வழக்கு போட்டு காவிகளின் கைக்கூலி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது கர்நாடக போலீசு.
கடந்த அக்டோபரில், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்வலர்கள் ஹூப்ளியில் இயேசு கிறிஸ்துவை நம்பும் சோமு அவராதி என்ற இந்து லிங்காயத் நபரால் நடத்தப்படும் “சர்வமத” பிரார்த்தனை மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
அவராதி மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டி, ஊடுருவியவர்கள் பிரார்த்தனைக் கூடத்தில் அமர்ந்து பஜனைப் பாடினர். அவராதியை தூண்டிவிட்டு தன்னை மதம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டிய ஒருவரின் புகாரின் பேரில் அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். அவராதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கிறிஸ்துவ சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களில் ஈடுபடுவதன் மூலம், கர்நாடகா மற்றுமொரு, உத்தரப் பிரதேசமாக மாறி வருகிறது என்பது புலப்படுகிறது. மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்படுமா? படாதா? என்பது தெளிவாக புலப்படுவதற்கு முன்பே அம்மாநிலத்தில் கிறிஸ்துவ சிறுபான்மை வழிபாட்டு தலங்கள் மீது இத்தனை தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை பஜரங்தள் என்ற காவிக்கூட்டம் முன்னின்று செய்து வருகின்றது என்றால், சட்டம் நிறைவேற்றப்பட்டால் கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.