மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை
மும்பை நகரில், உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும்.
மிகவும் சிக்கலான குழாய்களின் மூலம், கிரேட்டர் மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன் சுமார் 15 மில்லியன் குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் தினசரி 4 பில்லியன் லிட்டர் குடிநீரை மும்பை நகரத்திற்கு வழங்குகிறது.
தொழில்நுட்ப ரீதியாக அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான தண்ணீர் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட) சேவை நிலை அளவுகோலின்படி தினசரி 135 லிட்டர் பூர்த்தி செய்யும் நிலை உள்ளது.
உயர்தட்டு குடிமக்களுக்கு கார்ப்பரேசன் அதிக மானிய கொடுத்து 1000 லிட்டருக்கு ரூ.5 என்ற விலையில் விற்கிறது. ஒரு உயர்ந்த சமுதாயத்தில் வாழும் ஒரு குடிமகன் தினசரி தன் நுகர்வுக்கு 240 லிட்டர் வரை தண்ணீரை பெறுகிறார். மறுபுறம் முறைசாரா குடியேற்றங்களில் உள்ள குடிமக்கள் (சேரிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள்) தண்ணீருக்காக ரூ.40 முதல் ரூ.120 வரை அதிகமாக பணம் செலுத்துகிறார்கள்; அவர்களுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.
வரலாற்று ரீதியாக ‘மேல்சாதி இந்துக்கள்’, சாதி ஏணியின் அடித்தட்டு மக்களுக்கு தண்ணீர் மறுப்பது இந்தியாவில் ஒரு தொடர் கதையாக இருந்து வருகிறது. ஹைட்ராலிக் சிட்டி என்ற நூலில் ஆசிரியரான நிகில் ஆனந்த், குடிமக்களாக இருக்க தகுதியானவர்கள் மற்றும் பெருநகரத்தில் முறைசாரா முறையில் குடியேறியவர்கள் இடையே இன்று வரை நீர் பகிர்ந்தளிப்பதில் நிலவும் பாகுபாட்டைப் விளக்குகிறார்.
1995-ல் பம்பாய் ‘மும்பை’ஆனது, மேலும் மக்கள் நகரத்திற்கு இடம்பெயர்வதைத் தடுக்க, 1995-க்குப் பிறகு அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த மனிதாபிமானமற்ற கொள்கையை பானி ஹக் சமிதி உள்ளிட்ட சிவில் அமைப்புகள் மற்றும் குடிமக்கள் உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
டிசம்பர் 15, 2014-ல் பம்பாய் உயர்நீதிமன்றம் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு எதிராக தீர்ப்பளித்தது. “தண்ணீர் பெறும் உரிமை இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வாழும் உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று கூறியது. மேலும், பல குடும்பங்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகவும், ‘அறிவிக்கப்பட்ட’ சேரிகளின் கட்-ஆஃப் தேதியை ஜனவரி 1995 முதல் ஜனவரி 2000 வரை நீட்டிக்கவும் இந்த தீர்ப்பு கூறியது.
ஆனால், தீர்ப்பு இருந்தபோதிலும் எந்த மாற்றங்களும் இதுவரை செய்யபடவில்லை.
கொரோனா காலங்கள் அடித்தட்டு மக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும். உயிர்வாழும் அடிப்படை உரிமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் மும்பை முனிசிபாலிட்டி கார்ப்பரேசனுக்கு எதிராக மும்பை நகர உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.
சந்துரு செய்தி ஆதாரம் : த வயர் புகைப்படங்கள் : சூரஜ் கத்ரா புகைப்படக் கலைஞர் மும்பை