கடந்த டிசம்பர் 20-ம் தேதி எந்தவித விவாதமும் இல்லாமல் தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021-ஐ ஒன்றிய மோடி அரசு எதிர்கட்சிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் நிறைவேற்றியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 பிரிவு 23-ல் திருத்தம் மேற்கொண்டு, ஆதார் அட்டையின் தரவுகளுடன் வாக்காளர் பட்டியல் தரவுகளை இணைக்க அனுமதிக்கும் வகையில் இந்த மசோதா இருக்கிறது.
RP சட்டம், 1950, பிரிவு 14-ன் படி தகுதியுள்ள நபர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நான்கு “தகுதித்” தேதிகளில் திருத்தத்தை உள்ளடக்கியிருக்கிறது இந்த மசோதா.
படிக்க :
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 1-ம் தேதி, ஏப்ரல் 1-ம் தேதி, ஜூலை 1-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் அல்லது திருத்தம் தொடர்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத் திருத்தம், ஜனவரி 1- ஐ மட்டுமே புதிய சேர்க்கைக்கான நாளாக குறிப்பிட்டுள்ளது .
வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிப்பதற்காக, வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட நபர்களிடமிருந்து ஆதார் எண்ணைக் கேட்கவும், அதே நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதை அடையாளம் காணவும், தேர்தல் பதிவு அலுவலர்களை – இச்சட்டம் அனுமதிக்கிறது.
வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் எதுவும் நிராகரிக்கப்பட மாட்டாது என்றும், போதுமான காரணங்களுக்காக ஆதார் எண்ணை வழங்கவோ அல்லது தெரிவிக்கவோ இயலாதக் காரணத்திற்காகவோ வாக்காளர் பட்டியலில் உள்ள எந்தப் பதிவுகளும் நீக்கப்படக் கூடாது என்றும் திருத்தம் கூறுகிறது. மேலும், அத்தகைய நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட பிற மாற்று ஆவணங்களை வழங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறது.
000
இம்மசோதா குறித்துப் பேசிய ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “அரசு வழங்கும் நலத் திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் காண மட்டுமே ஆதாரை பயன்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் 2015-ல் கூறியது. இதனால் வாக்காளர்களின் தேர்தல் தரவுகளுடன் ஆதார் எண்களை இணைக்கும் தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை அத்தீர்ப்பு தடுக்கிறது. இருப்பினும், இந்த திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறவில்லை” என்று கூறினார்.
மேலும், “இது தேர்தல் செயல்முறையை மேலும் நம்பகத்தன்மையுடையதாக மாற்றும். இது போலியான வாக்களிப்பைத் தடுக்க உதவும்; அதனால்தான் சபை அதை ஆதரிக்க வேண்டும்; இம்மசோதாவின் நோக்கத்தை எதிர்கட்சிகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” என்று கூறினார்.
ஒன்றிய அரசின் கூற்றுப்படி, தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையின் தரவுகளை இணைக்க முயல்வது குடிமக்களின் தனியுரிமையை மீறும் செயல் என்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
மசோதாவை எதிர்த்து, மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “இந்த சட்டம் மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும்” என்று கூறினார். மேலும், இந்த மசோதாவை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படிக்க :
இருப்பினும் இம்மசோதா அவசர அவசரமாக மோடி அரசால் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாசிச பாஜக-வின் இந்த நடவடிக்கை, மக்கள் இதுநாள் வரை தனது கடைசி ஜனநாயகமாக நம்பிக் கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானது.
ஆதார் கார்டு என்பதே தனி மனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்று எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைப்பது பாசிச நடவடிக்கை. நாடு முழுவதும் பரவிவரும் மோடி அரசின் இத்தகைய காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை முற்போக்கு கட்சிகளும், புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டிய தருணமிது.
சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்
Related