சீனாவில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்த 1911-ம் ஆண்டுப் புரட்சியின் 110-ஆவது நினைவுக் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ‘‘தைவான் அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படும், தைவான் அரசின் தனிநாட்டுப் பிரிவினைவாதம்தான், தாய்நாடான சீனாவுடன் மீண்டும் தைவானை ஒன்றிணைப்பதற்கு தடையாக இருக்கிறது. சீன அரசாங்கம் தனது தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிச்சயமாக நிறைவேற்றும்’’ என்று பேசியதைத் தொடர்ந்து சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலுள்ள பிரச்சினை சர்வதேச அளவில் பேசுபொருளானது.
ஷி ஜின்பிங்கின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய தைவான் அதிபர் சாய் இங் வென், ‘‘நாம் எந்த அளவுக்கு சாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் நமக்கு அதிகரிக்கும். தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’’ என்றார்.
தைவான் இணைப்பு குறித்து ஷி ஜின்பிங் பேசுவதற்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே,  150−க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அடுத்தடுத்து தைவான் வான் பரப்பில் பறக்கவிட்டிருக்கிறது, சீனா. இதுபற்றி ‘‘கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சீனா, தைவான் மீது போர்த்தொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது’’ எனக் கூறுகிறார் தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சர் சியூ குவோ-செங்.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் இவ்விவகாரங்கள் போய்க் கொண்டிருக்கும்போதே, பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘தைவானுக்கு சீனாவால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால், தைவானுக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம்’’ என்கிறார். அதாவது அமெரிக்காவின் இராணுவத் தலையீடு இருக்குமென்கிறார். அவர் சொன்னதைப் போல, தைவானுக்குள் தனது இராணுவத் துருப்புகளை இறக்கியது அமெரிக்கா. ‘‘தைவான் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க குறைந்த அளவிலான அமெரிக்கத் துருப்புகள் உள்ளன’’ என பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சாய் இங் வென், ‘‘எங்கள் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவுடன் நாங்கள் பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்’’ என்று கூறினார்.
படிக்க :
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !
தைவானை சீனாவுடன் இணைக்கப்போவதாக ஷி ஜிங்பிங் கூறுவதும் ‘தைவானுக்கு ஆதரவு’ எனும் பெயரில் அமெரிக்கா தனது இராணுவத் துருப்புகளை தைவானில் குவிப்பதையும் புரிந்துகொள்ள நாம் தெற்காசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவப் போக்குகளின் நிலைமைகளிலிருந்து இப்பிரச்சினையைப் பரிசீலிப்பது அவசியம்.
தைவான் மீது சீனாவிற்குள்ள மரபுரிமையும்
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடும்
சீனா-தைவான் பிரச்சினை இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 1949-ம் ஆண்டில் இருந்தே தொடர்கிறது. காலங்காலமாக தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. தைவானைச் சேர்ந்தவர்களும் சீனாவைச் சேர்ந்தவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மொழி, நெருங்கிய பண்பாடு, வரலாற்றைக் கொண்டவர்கள். 1895-ம் ஆண்டு சீனாவை ஆண்ட கிங் வம்ச அரசுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரில், தைவானை ஜப்பான் கைப்பற்றி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுத்தோல்வி அடைந்தவுடன், தைவானை மீண்டும் சீனாவிடமே ஒப்படைத்துவிட்டது. உலகப் போர் முடிவடையும் போது, தோழர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால், சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி வெடித்துக் கிளம்பியது. பெய்ஜிங்கை தலைநகராக கொண்ட சீனாவை ‘‘மக்கள் சீனக் குடியரசு’’ (PRC – People’s Republic of China) என தோழர் மாவோ அறிவித்தார். கோமிண்டாங் படைகள் விரட்டியடிக்கப்பட்டு தற்போதுள்ள சீனா முழுமையையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்துத் துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
உள்நாட்டுப் போரில் விரட்டியடிக்கப்பட்ட சியாங்கே ஷேக் தலைமையிலான கோமிண்டாங் கட்சி தனது படைகள் – பரிவாரங்களுடன் சீனாவின் ஒரு பிராந்தியமான தைவான் தீவுக்கு தப்பியோடியது. தைபெய் (taipei) நகரை தலைநகரமாக கொண்டதுதான் உண்மையான ‘‘சீனக் குடியரசு’’ (ROC − Republic of China) என தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டது. அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் மாவோ தலைமையிலான புதிய ஜனநாயக சீனாவை சட்டப்பூர்வ நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. தைவானையே சீனாவாக ஏற்றுக் கொண்டன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் தயவில்தான் இன்றைய தைவான் ‘இறையாண்மை’ பெற்ற தனிக் குடியரசானது.
1971-இல், சீனா தனது பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்பி தலைதூக்கி நின்றபோது பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்ட மக்கள் சீனக் குடியரசை (PRC) அங்கீகரிக்கப்பட்ட நாடாக ஐ.நா சபையின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டன. முன்னர் தைவானுக்கு வழங்கிய அங்கீகாரத்தை இரத்து செய்தன. அப்போது தைவானை மீண்டும் சீனா தன்னுடன் இணைத்துக் கொள்ள முயற்சித்தபோது, அதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்தது. தைவான் சீனாவினுடைய ஒரு பிரதேசம்தான் என்பதை 1979-ம் ஆண்டு (சீனாவை முதலாளித்துவப் பாதைக்கு அழைத்துச் சென்ற டெங் சியாவோ பிங் ஆட்சிக்காலம்) அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டாலும் சீனாவின் இறையாண்மைக்குக் கீழ் தைவான் கொண்டுவரப்படுவதை ஏற்றுக் கொள்ளாமல் இரட்டை நிலை வகித்தது.
அதாவது, அன்று மக்கள் சீனக் குடியரசான (PRC) தற்போதைய சீனாவும், சீனக் குடியரசாக (ROC) தன்னை அறிவித்துக் கொண்ட இன்றைய தைவானும் தாங்கள்தான் உண்மையான சீனா என்று கூறி ‘‘ஒரே சீனக் கொள்கையை’’ அறிவித்தன. இதில் மக்கள் சீனக் குடியரசின் (PRC) ஒரே சீனக் கொள்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில், சீனக் குடியரசு (ROC) என்று தைவான் தன்னை அறிவித்துக் கொள்வதையும் அதன் தனி இறையாண்மையையும் அமெரிக்கா மறுக்கவில்லை.
மாறாக, தைவான் உறவுச் சட்டம் (Taiwan Relation act − 1979) என்ற ஒரு சட்டத்தை அமெரிக்காவின் செனட் சபையில் கொண்டுவந்து தைவானுடனான உறவை அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளில் தொடர்ந்தது. அமெரிக்கா அன்றே கடைபிடித்த இந்த இரட்டை நிலைப்பாடுதான் இன்று சீனாவுக்கு எதிராக தைவானில் அது தலையிடுவதற்கான முகாந்திரத்தைக் கொடுத்துள்ளது.
ஏகாதிபத்திய சீனாவும் தைவான் தீவும்
1949-ம் ஆண்டினைப் போல தற்போதைய நிலை இல்லை. அன்று தைவானுக்கு மரபுவழி உரிமை கோரியது சோசலிச சீனா. இன்று சீனா அமெரிக்காவுக்கு சவால்விடக்கூடிய அளவிற்கு ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்ந்துவரும் கட்டத்தில் உள்ளது. ஆசிய – ஆப்பிரிக்க கண்டங்களிலுள்ள பல நாடுகளை தனது அரசியல் – பொருளாதாரத் திட்டத்திற்குள் கொண்டுவந்து செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கி வருகிறது. உலக நாடுகளை இணைக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். மேலும் பல்வேறு நாடுகளுக்கு கடன்கொடுத்து அங்கு தனது மூலதன நலன்களை விஸ்தரித்து வருகிறது.
அன்றைய சோசலிச சீனா தைவான் மக்களை சுரண்டலின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக நின்றது, இன்றைய ஏகாதிபத்திய சீனா சுரண்டலுக்காக நிற்கிறது. எனவே இரண்டையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.
தனது ‘ஒரே சீனக்’ கொள்கையின்படி தைவானின் வரம்புக்குட்பட்ட கிங்மென், பெங்கு, மாட்சு போன்ற சிறிய தீவுகளை சீனா தன்னுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தைவானின் புவியியல் பரப்பு என்பது கிழக்கு ஆசியா மற்றும் தென் சீனக் கடலில் இராணுவ முக்கியத்துவம் பெற்ற பகுதியாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா மீது தாக்குதல்களை நடத்த தைவான் தீவைதான் ஜப்பான் பயன்படுத்தியது. இதுமட்டுமன்றி, தைவான் தீவு உலகின் கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடமாக விளங்குகிறது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கிழக்கு சீனக் கடலில் உள்ள சீனாவின் கடற்கரையோரத்தில் ஆழமான நீர்த்துறைமுகங்கள் இல்லை. எனவே, தைவானை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டால், அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் தைவானின் ஆழ்கடல் துறைமுகங்களில் இருந்து பசிபிக் பகுதிக்கு மிக எளிதாக கொண்டு செல்லமுடியும்.
மேலும் 1990-களுக்கு பிறகு தைவான் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தைவானில் இருந்து மின்னணுப் பொருட்கள், கணினி, கார் உதிரி பாகங்கள், மருத்துவ சாதனங்கள், இரும்பு, கனிம இரசாயனங்கள், எண்ணெய் உள்ளிட்ட  எரிபொருட்கள், ஸ்மார்ட்போனுக்கு தேவையான உதிரிபாகங்கள் ஆகியவை தைவானிலிருந்து பெரியளவில் ஏற்றுமதியாகின்றன. தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் இப்பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, ஏற்கெனவே உலகின் உற்பத்தி மையமாக உள்ள சீனாவுக்கு மலிவான உழைப்புச் சக்தியும் கிடைக்கும்.
1981-ம் ஆண்டு ‘ஒரு நாடு இரண்டு அமைப்புகள்’ என்ற கொள்கைப்படி ஹாங்காங்கில் இருப்பது போல தைவானுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதாக சீனா முன்வைத்தது. ஆனால், தைவான் ஏற்றுக்கொள்ளவில்லை. 2005-ம் ஆண்டு, தைவானுக்கு எதிராக பிரிவினை எதிர்ப்புச் சட்டத்தை (Anti-Secession Law) பிறப்பித்தது சீனா. அமைதியான வழிமுறைகளின் மூலம் தைவானை தன்னுடன் இணைக்கும் முயற்சிக்கு தைவான் இணங்காவிட்டால், இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்த சீனாவிற்கு இந்தச் சட்டம் உரிமை வழங்குகிறது.
சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க,
தெற்காசியாவில் களம் அமைக்கும் அமெரிக்கா!
சீனா மீது பொருளாதாரத் தடை, காப்புவாதம் ஆகிய ஆயுதங்களை அமெரிக்க மேலாதிக்க வல்லரசு ஏவியபோதிலும், அதனால் வெற்றி பெற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்குப் போட்டியாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும்கூட சீனா சந்தையைக் கைப்பற்றி வருகிறது. தனது பொருளாதார ஆற்றலைக் கொண்டு அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக சீனா வளர்ந்துள்ளதால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான முரண்பாடும் மோதலும் தீவிரமடைந்து வருகிறது. எனவே சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்து துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக தனது கவனத்தை தெற்காசியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு சீனாவுக்கு எதிராக அமெரிக்கா குவாட் என்னும் நான்கு முனைக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகள், கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதோடு, தங்களது போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை மற்ற நாடுகளின் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் நிறுத்தி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் எரிபொருள்களை நிரப்பிக் கொள்ளவும் உணவு, உடை, நீர், மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்ப சேவைகளைச் செய்துகொள்ளவும் முடியும். தன்னுடைய சீன எதிர்ப்பு இராணுவ போர்தந்திரத்திற்காகவே இந்த குவாட் கூட்டணியை உருவாக்கியுள்ளது என்பது உலகறிந்த இரகசியம்.
மேலும் சீனாவுடன் எல்லைப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை தூண்டிவிட்டு அவர்களை சீனாவுக்கு எதிரன நடவடிக்கைகளில் இறக்கிவிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது அமெரிக்கா. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15 தேதி லடாக் எல்லையை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நடந்த பயங்கரமான மோதலின் தொடர்ச்சியாக அமெரிக்கா இந்தியாவை தொடர்ந்து போருக்குத் தூண்டிவிட்டதே இதற்குச் சான்றாகும்.
சீனாவின் அண்டை நாடுகளில் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், சீனாவிற்குட்பட்ட சுயாட்சிப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைப் பயன்படுத்தியும் சீன அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து நெருக்கடி கொடுத்துவருகிறது அமெரிக்கா.
ஹாங்காங்கின் ‘‘கைதிகள் பரிமாற்றச் சட்டத்தில்’’ திருத்தம் கொண்டுவர ஹாங்காங் அரசு 2019 ஏப்ரலில் முடிவு செய்தது. இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக, மாணவர்களும் இளைஞர்களும் ஹாங்காங் அரசிற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கூடுதலாகத் தூண்டிவிட்டன.
இதேபோல, சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள ஷின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் சுயாட்சிப் பிரதேசத்தில், அம்மக்களின் தனித்த அடையாளம், மரபுகள் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக சீன அரசின் சட்டங்களும் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகக் கூறி அங்குள்ள துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியானது (TIP – Turkistan Islamic Party) தனிநாடு கோரிக்கையை முன்வைக்கிறது. இக்குழுவை அமெரிக்காதான் ஊட்டி வளர்க்கிறது. சீனாவின் பயணிகள் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததோடு, பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது கஷ்கர் நகரில் குண்டு வெடிப்புகளை நடத்தி பலரைப் படுகொலை செய்தது இத்தீவிரவாத குழு.
இவ்வாறு தெற்காசியப் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைத்து நெருக்கடி கொடுத்து வரும் அமெரிக்காவிற்கு தற்போதைய சீனா – தைவான் பிரச்சினை பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மாறியிருக்கிறது. ‘தைவானின் இறையாண்மையைக் காக்க உதவுகிறோம்’ என்ற போர்வையில், சீனாவிற்கு எதிராக இராணுவ மிரட்டல் விடுக்கும் வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கிறது.
படிக்க :
கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?
நெடுங்காலமாக தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துவரும் அமெரிக்கா, தற்போது மிகப்பெரிய அளவில் விற்பனையை அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் 280 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்பனை செய்த அமெரிக்கா, 2021-ம் ஆண்டில் அதை 750 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மேலும் தைவானுக்கு இராணுவப் பயிற்சியளிப்பதில் தொடங்கி, தனது இராணுவத் தளவாடத்தையே தைவானில் அமைத்து சீனாவை அச்சுறுத்துகிறது அமெரிக்கா.
கூடுதலாக அமெரிக்கா, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தவிருக்கும் முதல் சர்வதேச ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் தைவானை தனி நாடாக அங்கீகரித்து அழைப்புவிடுத்துள்ளது. இவையெல்லாம் சீனா – தைவான் இடையே மேலும் கடுமையான மோதல் போக்கையும், சீனாவுடனான அமெரிக்காவின் பனிப்போரையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
தைவான் சீனாவுடன் இணைவதும் இணைய மறுப்பதும் அம்மக்களுக்கும் சீன அரசுக்கும் உள்ள பிரச்சினை. சீனாவுடன் தைவான் மக்கள் இணைய மறுத்தால், அதற்கெதிராக அவர்கள் சுயமாக அணிதிரண்டுப் போராடுவதே சரியானது.
உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் அப்போராட்டத்தை வரவேற்க கடைமைப்பட்டிருப்பார்கள். ஆனால், தங்கள் ‘இறையாண்மையை’ வென்றெடுக்க தாம் உதவுவதாகக் கூறி உள்நுழையும் அமெரிக்காவை அம்மக்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும். ஒரு மேலாதிக்கத்திற்கு எதிராக, இன்னொரு மேலாதிக்கத்தை அரவணைப்பதன் மூலம் உண்மையான விடுதலையையும் இறையாண்மையையும் என்றுமே வென்றெடுத்ததில்லை.
எல்லா ஏகாதிபத்தியங்களின் நோக்கமும் மேலாதிக்கம்தானே ஒழிய அவர்கள் நமக்கான ‘மீட்பர்கள்’ இல்லை. ‘‘அதிபர் சாய் இங் வென் தனது அமெரிக்க எஜமானது மேலாதிக்க நோக்கத்திற்காக தைவானை அடகு வைக்கும் தேசத் துரோகத்தை எதிர்த்து முறியடிப்போம்! தைவானது சுயநிர்ணய உரிமையை உழைக்கும் மக்கள் முடிவுசெய்வோம்!” – என்ற முழக்கம்தான் தைவானில் எழுப்பட வேண்டியுள்ளது.

வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க