பா.ஜ.க. தலைவர்களுக்குப் பிறகு தமிழக மக்களால் மிகவும் வெறுக்கப்படும் நபராக ஒருவர் இருப்பாரென்றால், அவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியாகத்தான் இருக்கும். சமீபத்தில் பண மோசடி வழக்கில், சிறையிலடைக்கப்பட்ட அவரை உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணையில் விடுவித்துள்ளது.
ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை பண மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவர் உதவியாளர்கள் உட்பட நால்வர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 32 பேர் இதுவரை போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக, ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யபட்டது.
அன்று முதல் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கிரிமினல்களின் துணையுடன்  தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. அவரைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைத்து போலீசு தேடி வந்த நிலையில், 19 நாட்கள் கழித்து கர்நாடக மாநிலத்தில் பிடிபட்டு, திருவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மக்களோ ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.
படிக்க :
மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த, ஊழல் பேர்வழியான ராஜேந்திர பாலாஜியை அடித்து இழுத்துச் செல்லாமல் எல்லாவிதமான மரியாதையுடன் போலீசு கைது செய்தது என்பதே உண்மை. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி ‘கைது செய்யப்பட்ட விதம்’ தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் மீது தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
“முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அரசின் உள்நோக்கம் உண்டா? மேலும் அவரின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம், அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம், உச்ச நீதிமன்றம் உறங்குவதாக நினைக்கிறீர்களா! உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். நாங்கள்தான் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஒருநாள் அவகாசம் இருக்கும்போது அவரை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா? இதனை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம்” என்று அந்த அமர்வு கூறியது.
தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தமிழக போலிசிடம் பிடிபட்ட காட்சி.
சாதாரண ஆள் கைது செய்யப்பட்டிருந்தால், தலைமை நீதிபதி அமர்வு இவ்வாறு பொங்கி இருக்கப்போவதில்லை. கைது செய்யப்பட்டது மோடியின் செல்லப் பிள்ளை அல்லவா?
பீமாகோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட 83 வயதான ஸ்டான் சுவாமி, நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவர் தண்ணீரை உறிஞ்சி குடிக்க ஒரு ஸ்ட்ராவுக்காகவும் தன்னை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் நீதிமன்றத்திடம் எத்தனை முறை மன்றாடினார். கடைசியில், நீதிமன்றமும் சிறைத்துறையும் அவரை கொன்றேவிட்டன.
அப்போதெல்லாம் செத்த பிணமாக இருந்த நீதித்துறை, அர்னாப் கோஷ்வாமி, மாரிதாஸ் வரிசையில், தற்போது ராஜேந்திர பாலாஜிக்கு உள்ள தனிமனித உரிமையைப் பற்றி கவலைப்படுகிறது. இதே உச்ச நீதிமன்றம், 90% உடல் அசைவற்றவராகவும் (மாற்றுத்திறனாளி) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுமுள்ள பேராசிரியர் சாய்பாபாவை, இதுவரை பிணையில் விடமுடியாதென இறுமாப்புடன் இருந்துவருகிறது. ஆனால் ஒரு கொள்ளைக்காரனுக்காக கோதாவில் இறங்குகிறது.
முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாத நிலையிலும் கைது செய்யப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை மறுத்த நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்காக தனிமனித உரிமையைப் பற்றி தமிழக அரசுக்கு ஏன் வகுப்பு எடுக்கிறது?
படிக்க :
ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !
அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!
ஆர்.எஸ்.எஸ் அடியாளான ராஜேந்திர பாலாஜி ஊழல் பேர்வழிமட்டுமல்ல, ரவுடித்தனமும் பொறுக்கித்தனமும் நிறைந்தவர் என்பதை தனது பேச்சுக்களின் வழியாக பலமுறை நிரூபித்துள்ளார். தலைமறைவாவதற்கு சில நாட்கள் முன்புகூட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிகவும் இழிவாகப்பேசினார். தான் என்ன செய்தாலும், பேசினாலும் தன்னைக் காப்பாற்ற மோடி இருக்கிறார் என்ற துணிச்சல்; அவரே சொல்லியது போல, “மோடி அவரது டாடி” அல்லவா?
மோடியின் பிள்ளைகளான மாரிதாஸ், கல்யாண ராமன், ராஜேந்திர பாலாஜி போன்றோரை பாதுகாப்பது பா.ஜ.க.வின் கடமை. அதற்கு நீதிமன்றங்கள் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளித்து ஊழல்வாதிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் தான் மட்டுமே சிறந்த புகலிடம் என்பதை அறிவிக்கின்றன.
இனியும் நீதிமன்றங்கள், “மக்களின் கடைசி புகலிடம்” என்று கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு கேலிக்கூத்தானது. மக்கள் விரோதிகளையும் பாசிஸ்டுகளையும் மக்களே தண்டிக்கும் ஒரு சூழலை உருவாக்காமல் இருக்கும் வரை, இத்தகைய நீதிபரிபாலனங்களை நாம் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும்.

தமிழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க