வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. அதை எதிர்த்து போராட வேண்டும் என நடந்து முடிந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி தனது திருவாயை மலர்ந்துள்ளார்.
வாரிசு அரசியல் என்பது மோடியின் எஜமானனான அமெரிக்காவின் கென்னடிபுஷ், டிரம்ப் முதல் இந்தியாவின் காங்கிரஸ் திமுக, பாமக, மதிமுக முதல் பாஜக தான் அங்கம் வகிக்கும் தே.ஜ.கூ உள்ளிட்ட பிற ஓட்டுக்கட்சிகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளன.
கருத்து சுதந்திரத்தை கிஞ்சித்தும் அனுமதிக்காத பார்ப்பன பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ் – பாஜக-வின் தீவிர உறுப்பினரான மோடி, வாரிசு அரசியல் பற்றி வகுப்பெடுப்பதுதான் சாத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது.
வாரிசு அரசியல் என்பது ஜனநாயக விரோதமானது. பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆனால், ஜனநாயகத்தைப் பற்றி, ஜனநாயகம் எனும் பதத்தையே அகராதியில் இருந்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட பார்ப்பன பாசிஸ்ட்டுகள் பாசிசத்தைப் பற்றிப் பேசுவதுதான் கேலிக்கூத்து.
படிக்க :
உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !
கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை !
அதாவது அன்றாடம் அனைத்து வகை அட்டூழியங்களையும் கொடூரமான முறையில் கொலைகளையும் நடத்திவருவது ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் துணை அமைப்புகளும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்புகளில் ஒன்றான சனாதன் சன்ஸ்த்தா என்ற கொலைகார அமைப்பானது, பகுத்தறிவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் பயிற்சி பட்டறைகளையும் இலக்கு வைத்து தாக்கியுள்ளது. தொடர்ந்து தாக்கியும் வருகிறது.
மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தி மகாராஷ்டிரத்தில் பகுத்தறிவு இயக்கங்களையும் நடத்திவந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை சுட்டுக்கொன்றுள்ளது இக்கும்பல். மூடநம்பிக்கை, வகுப்புவாதம் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து போராடிய பன்சாரே, கல்புர்க்கி போன்றவர்களையும் கொன்றுள்ளது சனாதன் சன்ஸ்த்தா என்ற இந்தக் கொலைகார அமைப்பு.
முஸ்லீம் மக்களுக்கு எதிராக யோகியின் அடியாள்படையான இந்து யுகவாகினி நடத்திய மதவெறியை தூண்டும் பிரச்சாரத்தாலும், இதன் தொடர்ச்சியான முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களாலும், வழக்குகளும் ஏராளமாக இன்று வரை நடந்து வருகிறது. யோகியும் இந்து யுவவாகினியின் உறுப்பினர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சுதந்திரமாக இன்றுவரை வலம்வந்து கொண்டு இருக்கின்றனர்.
பஜ்ரங் தள் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் மங்களூரில் சிட்டி சென்டர், ஃபோர்ம் ஃபிசா, பிக்பஜார் போன்ற பல்வேறு மார்க்கெட்களில் எல்லாம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இங்கு பெரும்பான்மையான முஸ்லீம் கடைகளை அப்புறப்படுத்தி பணிய வைத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன்மூலம் எப்போதும் முஸ்லீம் வியாபாரிகளை அச்சத்திலேயே வைத்துள்ளனர்.
வி.எச்.பி.யில் உருவாக்கப்பட்ட திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்ட அடியாள்படையான பஜ்ரங் தள் மோடி கொடுத்த தைரியத்தில் கர்வாப்சி என்ற பெயரில் ஜலெளன் மாவட்டத்தில், கிறித்துவ மதத்திற்கு மாறும்படி பிரச்சாரம் செய்தார் என்று குற்றம் சுமத்தி அவதேஷ்குமார் என்பவருக்கு மொட்டையடித்து செருப்பு மாலை போட்டு கழுதைமேல் அமர்த்தி ஊர்வலம் நடத்தி அசிங்கப் படுத்தியுள்ளது.
அவ்வப்போது வகுப்பு வாதத்தை கிளறிவிட்டு முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வாழ்விடத்திலிருந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு முஸ்லீம்கள் அற்றபகுதி என்ற அறிவிப்பு பலகையும் பொருத்தியுள்ளது.
ஆஸ்திரிலேய பாதிரியான கிரகாம் ஸ்டெயின்சையும் அவரது குழந்தைகளையும் கார்க்குள்ளேயே வைத்து உயிரோடு எரித்ததோடு அவர்கள் தப்பவிடாமல் தடுத்து தீயில் முழுமையாக எரியவிட்ட கொலைபாதகப் குண்டர்களைக் கொண்ட அமைப்புதான் இந்த பஜ்ரங் தள்.
மாட்டுக்கறி வைத்து இருப்பதாகக்கூறி பல முஸ்லீம் தலித் மக்களை பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மதவெறிகும்பல் கொடூரமாக தாக்கியதோடு கொலையும் செய்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம். மேலும், மாநில அரசுகளை சதித்தனமாக கவிழ்ப்பது, மாநில உரிமைகளை நசுக்குவது, மாநில சுயாட்சிகளை கேள்விக்குள்ளாக்குவது விமர்சிப்பவரகள் எதிர்ப்பவர்களை கொடூரமாக கொலை செய்வது.
குறிப்பாக, தமிழகத்தில் முஸ்லீம் மக்கள்மீது வெறுப்பை மக்களிடம் உருவாக்க முடியவில்லை என்பதால் கிறித்தவர்கள், தலித் மக்கள் மீதான வெறுப்பை கொம்பு சீவிவிடுகிறது. இதன் துவக்கம்தான் தஞ்சாவூர் கிறித்துவப் பள்ளி மாணவியின் தற்கொலை. இவை எல்லாம் எந்த வகையில் ஜனநாயகத்திற்கு எதிராக இல்லை என்பதை மோடிதான் விளக்கம் தர வேண்டும். இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போலதான்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானதுதான், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வெறுப்பு அரசியல் – மதவெறி அரசியல் மூலம் வன்முறையை தூண்டிவிட்டு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றை அன்றாடம் அரங்கேற்றும் ஆபத்தான பாசிச அரசியலை ஒப்பிடும்போது வாரிசு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.
வாரிசு அரசியல் அதிகபட்சம் தனது வாரிசுகளை கொண்டு வரும். பாரம்பரிய குடும்ப அரசியலாகவும் மற்றும் அதன்மூலம் தனக்கும் தனது வாரிசுகளுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான சொத்துக்களை சேர்த்துக்கொள்ளும். ஆனால், பாசிச அரசியல் சித்தாந்த அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட அமைப்புகளையும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்ட பாசிச அமைப்புகள் அப்படி அல்ல. சமூகத்தின் ஒரு பகுதியை எதிரியாக சித்தரித்து அவர்கள் மீதான வன்முறையை செலுத்துவதை நியாயப்படுத்தி தன்னால் முயன்றவரை பாசிசத்தை ஏற்கவைக்கும்.
அந்த வகையில் பார்ப்பன பாசிச அமைப்பில் தனது எதிரிகளாக சித்தரிப்பவர்களை கொடூரமாக சித்தரவதை செய்து ஈவிரக்கமற்ற முறையில் உயிரோடு குழந்தைகளை எரிப்பது சிறுபான்மை மக்கள் குறிப்பாக கிறித்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து அவர்களின் வீடுகளை இடித்து தீக்கிரையாக்குவது, அவர்கள் வாழும் இடத்தைவிட்டு விரட்டியடிப்பது போன்ற கொடூரமான செயல்களை மேற்கொள்ளும் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு கொடூரமானது அல்ல ஆபத்தானது அல்ல வாரிசு அரசியல்.
ஆபத்தான பார்ப்பன பாசிச அரசியல் அதிகாரத்துக்கு வருவதை தடுத்தாக வேண்டும். இதற்கு பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக அனைத்துப் பிரிவு அடித்தட்டு மக்களோடு இணைந்து இருப்பது மிக மிக அவசியம், கடமையும் கூட.
படிக்க :
கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
இதன்மூலம் காவி – கார்ப்பரேட்டு பாசிசத்தை அரசியல் அரங்கில் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக, பஜ்ரங் தள், இந்து யுகவாகினி, சனாதன் சன்ஸ்த்தா போன்ற அமைப்புகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தவதோடு அவற்றை முறியடிக்க வேண்டும். வெறுமனே போலி ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவது போதாது.
பாசிச அரசியலை பெரும்பான்மை இந்து மக்களின் மத்தியில் விதைத்து அவற்றை அங்கீகரிக்கும் மனப்பான்மையை உருவாக்கி சிறுபான்மை மக்கள் ஜனநாயக சக்திகள், கம்யூனிச பற்றாளர்களுக்கு  எதிரான விரோதபோக்கை  வெறுப்பை உருவாக்கி நிலைப்படுத்துவதையே ஒரு இலக்காகக் கொண்டு செயல்படுகிறது பாசிசக் கும்பல்.
ஆகையால்தான் பாசிஸ்டுகளுக்கு எதிராக போராட்டத்தை கட்டமைக்க பகுத்தறிவாளர்களை ஜனநாயக சக்திகளை கம்யூனிச பற்றாளர்களை இலக்கு வைத்து தீர்த்துக்கட்டப்பட்டு வருகின்றனர்.
எனவே, வர்ணாசிரம முறையை அடிப்படையாக கொண்ட பார்ப்பன விரோத பண்புகளை விதைத்து வர்க்க முரண்பாடுகளை புதைக்கும் காவி – கார்ப்பரேட்டுகளின் பாசிசத்தையும் அதன் அதிகாரத்தையும் அகற்றுவதைப் பிரதான பணியாக மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க