சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை கட்டச் சொல்வதை கண்டித்து கடந்த மார்ச் 31 அன்றிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2020 – 2021-ம் ஆண்டுக்கு முன்பு சேர்ந்த மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிக்கான பழைய கட்டணத்தை மார்ச் 30-க்குள் செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. கட்டணத்தை செலுத்தாவிட்டால் வகுப்புகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்களை மிரட்டியுள்ளது.
இதைக் கண்டித்து மார்ச் 31, 2022 அன்று அனைத்து நிலை மருத்துவ மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில், நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரம் அவகாசம் வழங்குவதாகவும், அரசுடன் கலந்து பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாகவும் நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கட்டணத்தை குறைக்காததால் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஏப்ரல் 10-ந்தேதி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.
படிக்க :
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?
ஏப்ரல் 21 முதல் இன்று வரை மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2,3,4-ம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
***
2013-ம் ஆண்டு தமிழக அரசானது அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்த பிறகும், தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணம் வசூலிக்க சொல்லி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.
2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி முதல் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 2020 டிசம்பர் 9 முதல் 57 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ மாணவர்களின் விடாப்பிடியான போராட்டத்தால் தமிழக அரசானது ஜனவரி 28, 2021 அன்று ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதாக அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில் இக்கல்லூரியானது இனிமேல் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. கல்விக் கட்டணம் சம்மந்தமாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பிப்ரவரி 4, 2021 அன்று தமிழக அரசானது கட்டணக் குறைப்பு சம்மந்தமாக அரசாணையை வெளியிட்டது.
பிப்ரவரி 4 அன்று தமிழக அரசானது வெளியிட்ட அரசாணையை அப்படியே நடைமுறைப்படுத்தி இருந்தால், தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருக்காது.
ஆனால் பிப்ரவரி 26 அன்று அரசாணை 122-யை தமிழக அரசானது வெளியிட்டது. அதில் 2020 – 21-ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும்தான் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
கடந்த பிப்ரவரி 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்டோபர் 26-ம் தேதி மேலும் ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில் 2016 – 2018 ஆண்டுகளில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5.44 லட்சம், 2018 – 2020 ஆண்டுகளில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம், அதன் பிறகு சேர்ந்த மாணவர்களிக்கு அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டு இருந்தது. தற்போது மேற்கூறிய கட்டணத்தை கட்ட சொல்லிதான் நிர்வாகமானது மாணவர்களை நிர்பந்திக்கிறது. அதை எதிர்த்துதான் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியானது, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக கடந்த ஆண்டே மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் 2020 – 2021 ஆண்டுக்கு பிறகு சேர்ந்தவர்கள்தான் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள், அதற்கு முன் சேர்ந்தவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது 2020 – 2021 முன்பு சேர்ந்தவர்கள் உயர்கல்வித் துறையின் கீழும், அதற்குப் பிறகு சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வித்துறையின் கீழும் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால்தான் மாணவர்களிடையே இந்த கட்டண வேறுபாடு.
“ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துச் சென்றுவிட்டார்கள். 2020 – 2021 ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த மாணவர்களுக்கு அரசுக் கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும். அவர்களுக்குக் கூட அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த சலுகையை வழங்க வேண்டியிருக்கும். இதற்காக அரசுக்கு பெரும் தொகை செலவாகாது” என்று அண்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2020 டிசம்பர் மாதத்தில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக “ஆட்சி மாறியதும், கட்டணத்தை மாற்றுவோம்” என்று மாணவர்களுக்கு உறுதியளித்தது.
மேற்கூறியவாறு 2018, 2019-ம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டியிருந்தும், ஆட்சிக்கு வந்த திமுக அரசானது ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியானது 2016 முதல் கட்டணக் குறைப்புக்கான மாணவர்களின் தொடர் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல், 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தவுடன், தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கல்விக் கட்டணத்தை குறைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது.
திமுகவும் எதிர்க்கட்சியாக இருந்தபோது, தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்கு வந்தால் கட்டணத்தை மாற்றுவோம் என்று கூறியது, ஆனால் தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டது.
மேற்கூறியவைதான் திமுக, அதிமுக போன்ற ஓட்டுக் கட்சிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே தங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு மாணவர்கள் மீது எல்லாம் அக்கறை கிடையாது. அதனால்தான் இரு கட்சிகளும் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் கண்டுகொள்வது இல்லை. நிர்வாகம் மற்றும் போலீசை வைத்து ஒடுக்கவே செய்கின்றனர்.
ஆனால் மாணவர்கள், நிர்வாகம் மற்றும் போலீஸ் ஒடுக்குமுறைக்கு எல்லாம் அஞ்சக் கூடியவர்கள் அல்ல என்பதை அவர்களின் போராட்ட பாரம்பரியமே நிருபிக்கிறது.
குறிப்பாக 2020 டிசம்பர் முதல் கிட்டதட்ட இரண்டு மாத காலமாக மாணவர்கள் கட்டணக் குறைப்பை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை சீர்குலைக்க நிர்வாகமானது முதலாம் ஆண்டு மாணவர்களிடம் மதிப்பெண்ணில் கைவைப்போம், ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியது. ஆனால் அதை மீறி முதலாம் ஆண்டு மாணவர்கள், பிற கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.
படிக்க :
விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
அதன்பிறகு நிர்வாகம் குடிநீர், உணவு, மின்சாரம் என அனைத்தையும் நிறுத்தியது, மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற சொல்லியது, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தது. ஆனால் அதை மீறியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உணவு, தண்ணிரை மாணவர்கள் தங்கள் கைக்காசுகளை போட்டு வாங்கிய போதும், போலீசை வைத்து மாணவர்களை நிர்பந்தித்தது.
மேற்கூறிய கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசின் அடக்குமுறைகளை எல்லாம் மீறிதான், கல்லூரி மாணவர்கள் நெஞ்சுரமிக்க போராட்டம் நடத்தினர். அப்படிப்பட்ட போராட்ட பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் உரிமைக்காக, எவ்வளவு அடக்குமுறை வந்தாலும், நெஞ்சுரமிக்க போராட்ட பாரம்பரியத்தின் வழியில் விடாப்பிடியான போராட்டத்தை கட்டியமைக்க கூடியவர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் நிச்சயம் வெற்றி அடைந்தே தீர்வார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள பிற மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக சக்திகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் அவர்களுடன் கைகோர்த்து நிற்க வேண்டியது நம் கடமை.

அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க