ட்டுமொத்த இசுலாமியர்களையும் படுகொலை செய்துவிட்டு, நாட்டை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவியது காவி பயங்கரவாதிகளின் உத்தரகாண்ட் தர்ம சன்சத் மாநாடு.
அப்போதே ஜனவரி மாத புதிய ஜனநாயகம் இதழில், “இவற்றையெல்லாம் ‘வெற்று மதவெறிப் பேச்சுக்கள்’ அல்லது ‘உளறல்கள்’, ‘வழக்கமாகப் பேசுவதுதான்’ என நாம் இருமாந்திருக்க முடியாது. பாசிஸ்டுகள் ஒவ்வொன்றையும் முன்னறிவித்து செய்பவர்கள் என்ற கடந்தகால உண்மைகள் நம்மை எச்சரிக்கை செய்கின்றன” என்று எழுதியிருந்தோம். இன்று ஆய்வாளர்களே அறுதியிட்டு கூறுகிறார்கள் நாடு பாசிச இனப்படுகொலைக்கு பக்குவப்பட்டுவிட்டது என்று.
“இனப்படுகொலைக்கான பாதையின் விளிம்பில் உள்ள இந்தியா” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான இணையவழி உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை சரக்கு இரயில்களில் ஏற்றிச் சென்று, வதைமுகாம்களில் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்றான் பாசிசக் கொடூரன் ஹிட்லர். இசுலாமிய மக்களைக் குறிவைத்து, அத்தகையதொரு பாசிசப் படுகொலை நம் நாட்டிலும் ஆயுதமேந்திய அரசுப்படைகளாலோ அல்லது தனியார் படைகளாலோ நடத்தப்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச வல்லுநர்கள்.
படிக்க :
இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !
கம்போடியாவில் உள்ள இனப்படுகொலைக்கான ஆவண மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மவுங் ஜர்னி, இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப்போக்கு இந்தியாவில் தொடங்கிவிட்டதாகத் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் மதத்திற்கு அச்சுறுத்தலானவர்களாக சித்தரிப்பது குறித்து குறிப்பிடும் அவர், இன்னும் வெளிப்படையானதொரு இனப்படுகொலை நடக்காவிட்டாலும் மனிதநேயத்தை இழக்கத்தொடங்கிவிட்டதே (Dehumanisation) இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப் போக்குதான் என்கிறார்.
வெறுப்புப் பேச்சுகளிலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதிலும் மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான குணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் மிதாலி ஜெயின்.
ஐ.நா சபையின் இனப்படுகொலைத் தடுப்பு சிறப்பு ஆலோசகரான அடாமா டியாங், நீண்ட மற்றும் போற்றத்தக்க சமாதான சகவாழ்வு வரலாறு கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால் சகிப்புத்தன்மையின்மையும் பாகுபாடும் அதிகரித்திருக்கிறது என்று தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்கள், நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் இசுலாமிய வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். மேலும் இனப்படுகொலைக் குற்றவாளியாகவும் குற்றவாளிகளின் பாதுகாவலனாகவும் இருக்கிற இந்திய அரசால் இனப்படுகொலை அரங்கேறுவதை தடுக்க முடியாது என்கின்றனர்.
மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தம் பாசிச ஜெர்மனியின் நுரெம்பர்க் சட்டத்திற்கு நிகரானது என்று அவர்கள் வரையறுக்கின்றனர்.
வெறுப்பு பேச்சுகள், பொய்ப் பிரச்சாரங்கள், சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தலாக காட்டுவது, மனிதநேயத்தை இழந்துவரும் போக்கு ஆகியவைதான் இனப்படுகொலைக்கான அறிகுறிகள் என மேற்கூறிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
முசுலீம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியவர்கள், அந்நியர்கள், தேசவிரோதிகள் – தீவிரவாதிகள், சட்டவிரோத குடியேறிகள் என்று முசுலீம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாக பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல். எந்தவொரு இனப்படுகொலையும் திடீரென நடந்துவிடுவதில்லை. இத்தகைய நிகழ்ச்சிப் போக்கின் வளர்ச்சியில்தான் நடந்தேறுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தர்ம சன்சத் மாநாட்டில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்துவிட்டு நாட்டை இந்துராஷ்டிரமாக அறிவிக்க அறைகூவும் காவி பயங்கரவாதிகள்.
இசுலாமியர்களுக்கு எதிராக 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேற்சொன்ன அத்தனை அறிகுறிகளும் இப்படுகொலைகக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் உருவாக்கப்பட்டன.
2014-ல் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 1130 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்கிறது என்.டி.டிவி-இன் அறிக்கை. வெறுப்புப் பேச்சுகளுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட 58 எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் என்கிறது, ஜனநாயக மறுசீரமைப்பிற்கான கூட்டமைப்பின் அறிக்கை.
முசுலீம்களது உடை, தொழுகை முறை, தாடி, குல்லா, குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வீதம், மாட்டுக்கறி உணவு என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் பொது சமூகத்திலிருந்து அவர்களை விலக்கி வைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கிறது காவி பாசிச கும்பல். இதன் உச்சம்தான் கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்.
இசுலாமியர்களை மனிதர்களாக நடத்த மறுப்பது, அவர்களது உரிமைகளை நசுக்குவது, சட்டவிரோத ஊடுருவலாளர்கள் என்று வகைப்படுத்துவது, பொய் வழக்குகளில் துன்புறுத்துவது, பாகுபாட்டுடன் நடத்துவது ஆகியவை அரசாங்கங்களாலேயே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
ஆட்டிறைச்சி வைத்திருந்ததை மாட்டிறைச்சி என சந்தேகித்து கொலைசெய்யப்பட்ட அக்லக், மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக கொல்லப்பட்ட பீகாரின் கலீல் ஆலம் ரிஸ்வி, பசுப்பாதுகாப்புக் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லூகான், லவ்ஜிகாத் எனும் நச்சுப் பிரச்சாரத்தால் முசாபர் நகரில் நடத்தப்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான கலவரம், திரிபுராவில் மசூதிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவற்றை வெறும் கும்பல் வன்முறைகளாக சுருக்கிப் பார்க்க முடியாது. இத்தகைய கும்பல் வன்முறைகள்தான் மிகப்பெரிய இனப்படுகொலைக்களுக்கான கருவடிவம்.
அனைத்து வகைகளிலும் நம் நாடு பாசிசப் படுகொலைகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு நிற்கிறது. பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். பரிவரங்கள் நாடு முழுக்க இத்தகைய சூழலை உருவாக்குவதற்காக வேலைசெய்திருக்கிறார்கள். இன்று உலகின் மிகப் பெரிய கொடிய பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான்.
இசுலாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடங்கிவிட்டது என்று சொல்லும்போது அதனை வெறும் இசுலாமியர்களுக்கு எதிரானது என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அது முதல்சுற்றுதான். பாசிசம் என்பது அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்குமே எதிரானது.
ஜெர்மனியில் பாசிசக் கொடுங்கோலன் ஹிட்லர் யூதர்களை மட்டுமல்ல. தன்னுடைய சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாத ஜெர்மானியர்களையுமே கொன்றொழித்தான். ஆர்.எஸ்.எஸ்.இன் பார்ப்பன பாசிச சித்தாந்தம் ஜெர்மன் நாஜி சித்தாந்ததைவிட கொடியது. ஆயிரக்கணக்கான சாதிகளாய் மக்களை துண்டுபோட்டு தங்களுக்குள்ளாகவே வெட்டி மடிந்து சாக, நம்மை இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பயிற்றுவித்துள்ளது பார்ப்பனியம்.
படிக்க :
டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !
முசுலீம்களுக்கு எதிராக தலித்துகளையும் இந்துக்களாக சேர்த்துக் கொள்ளும் காவி பாசிஸ்டுகள், தலித்துகளை ஒடுக்க ஆதிக்க சாதியினரிடம் கூட்டு சேருக்கிறார்கள். ஆதிக்க சாதிகளுக்குள்ளாகவே ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொரு பிரிவை தூண்டிவிடுகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கத்தினை பாதுகாக்க ஆதிக்க சாதியினரையும் பலியிடுகிறார்கள்.
நாடு; நாட்டுக்காக கட்சி; கட்சிக்காக தலைவன். இம்மூன்றுக்காக யாரையும் பலியிடலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் சித்தாந்தம். நாட்டு வளர்ச்சிக்காக ஒரு மாநிலத்தையும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு ஊரையும் பலியிடலாம் என்று இல.கணேசன் சொன்னதை இந்நேரம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், எட்டுவழிச்சாலை எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என அனைத்துவகையான உரிமைப் போராட்டங்களிலும் நமக்கு எதிராக நின்றது காவி பாசிச சித்தாந்தம்தான்.
எனவே சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக பெருகி வரும் பாசிசத் தாக்குதல்களை பெரும்பான்மையைச் சேர்ந்த மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உச்சுக்கொட்டி இறக்கப்படுவதோடு கடந்துசென்றாலோ, ‘நமக்கு பிரச்சினை இல்லை’ என்று ஒதுக்கிச் சென்றாலோ, பாசிசத்தில் பலிபீடத்தில் அடுத்த சுற்று தங்கள் உடலும் கிடத்தப்படுவதைத் தடுக்க முடியாது.

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க