விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்

மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியுள்ள, “பொம்மை” நாடாளுமன்றத்தில் வாதப் “போரில்” ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதாக நாடகமாடுகின்றனர்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற சட்டப்பூர்வ உரிமையைக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விவசாயிகள் அறிவிப்பை வெளியிட்டதுடன், அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, பிப்ரவரி 11-ஆம் தேதி முதலாக விவசாயிகளின் கோரிக்கைகள், அவர்கள் போராட்டத்திற்கு தயாராவது, விவசாயிகள் டெல்லியில் நுழைவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசு இராணுவத்தைக் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட செய்திகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன.

அதுவரை, காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட தேசிய கட்சிகளும் தமிழ்நாட்டில் இருக்கும் முதன்மையான பா.ஜ.க. எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள், தி.மு.க., சி.பி.எம்-இன் செய்தி ஊடகங்களும் இது தொடர்பாக எந்த செய்திகளையும் வெளியிடாமல், விவசாயிகளின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்தன.


படிக்க : மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!


இந்நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதியான நேற்று டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது நாட்டின் எதிரிகளைத் தாக்குவதைப் போன்றதொரு தாக்குதலை இந்திய இராணுவத்தைக் கொண்டு நடத்தியது மோடி அரசு. இதனைதொடர்ந்து, டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே ஊடகங்களுக்கு அளித்த பேட்டி வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில், “மத்தியில் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இப்போது அறிவிக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களின் முதல் வாக்குறுதி இது. ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதியை நிச்சயம் செயல்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கையானது, குறிப்பாக, வடமாநில விவசாயிகளுக்கு உயிராதாரமான ஒரு கோரிக்கை என்பது மோடி ஆட்சி வருவதற்கு முன்பாக, 2014-லிருந்தே பேசப்பட்டுவரும் விவாதப்பொருளாகும். பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தப் பின்னர், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக விவசாயிகளை ஏமாற்றியது. அன்றிலிருந்து குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான கோரிக்கைக்கான போராட்டங்கள் அதிகரித்து வருவது காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும்.

விவசாயிகள் போராட்ட காட்சி

2020-ஆம் ஆண்டின் இறுதியில் டெல்லி விவசாயிகள் தொடங்கிய, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான, “டெல்லி சலோ” போராட்டத்தின் போதே இது அதிகம் விவாதிக்கப்பட்ட விசயமும் ஆகும். இந்தப் போராட்டத்தின் வெற்றியானது, மோடி-அமித்ஷா கும்பலை அரசியல் ரீதியாக தோல்வி முகத்திற்குத் திருப்பியது.

தமிழ்நாட்டிற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல, வட மாநிலங்களுக்கு விவசாயிகள் போராட்டம் மோடி கும்பலைப் பணியவைத்தப் போராட்டமாகும்.

மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியுள்ள, “பொம்மை” நாடாளுமன்றத்தில் வாதப் “போரில்” ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதாக நாடகமாடுகின்றனர்.

இப்போதும் கூட, விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரசு உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக சிறு வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.

கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு சேவை செய்வது, ஆனால், பா.ஜ.க-வை எதிர்ப்பது என்று உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்யும் திட்டத்தை தங்களது கொள்கையாக எதிர்க்கட்சிகள் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.


படிக்க : பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்


மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிர்ப்பைக் காட்டுவதன் மூலமாக மட்டுமே, மக்களிடம் உள்ள மோடி எதிர்ப்பலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அப்பட்டமான சந்தர்ப்பவாதப் போக்கையே எதிர்க்கட்சிகள் கடைப்பிடிக்கின்றனர்.

பாசிச பா.ஜ.க-வின் அடிக்கட்டுமானங்களான ஜி.எஸ்.டி., நீட், புதியக் கல்விக் கொள்கை, சி.ஏ.ஏ., கிரிமினல் சட்டத்திருத்தம், தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து  உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களை திருப்பப் பெறுவதாக வாக்குறுதிகள் எதையும் கொடுக்காமல், விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை, சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை தாமாக முன்வந்து ஆதரிக்காமல், எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் “பாதுகாக்கப்” போவதாகக் கூறுகின்றன.

தங்களது இந்த சந்தர்ப்பவாதப் போக்கை எதிர்க்கட்சிகள் கைவிட்டு, விவசாயிகள்-தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்நிற்காதவரை எதிர்க்கட்சிகளை மக்கள் நம்பப்போவதில்லை. ஆகையால், விவசாயிகள், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை கொள்கை ரீதியாக முன்வைத்து மக்களின் களப்போராட்டங்களில் பங்கேற்பதன் மூலம் மட்டுமே எதிர்க்கட்சிகளால் பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் கூட வீழ்த்த முடியும்.


தங்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க