ஒட்டச்சுரண்டப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்

வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டட - கட்டுமான பணிகள், ரயில்வே தொழிற்சாலைகள் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளில் எந்தவித பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நாட்டில் பல இடங்களில் குறிப்பாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் தீவிரமாகும் நகரமயமாக்கலின் விளைவாக பல புதிய பெரிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக ஹியூமன் ரைட்ஸ் ஃபோரம் (Human Rights Forum) என்ற நிறுவனம் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள கட்டுமான பணியிடங்களில் ஆய்வு நடத்தி வந்தது. இந்த ஆய்வு தொழிலாளர் சட்டங்களெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைகளுக்கு ஒழுங்குமுறை மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1979 [The Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979] முற்றிலுமாக மீறப்பட்டு புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் உரிமைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன என்பதை ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது.

பெருகிவரும் கட்டுமான பணிகளின் மூலம் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு வடமாநிலங்களிலிருந்து பல தொழிலாளர்கள் தென் மாநிலங்களை நோக்கி குவிந்து வருகின்றனர்.

அவர்கள் ஏன் புலம்பெயர்ந்து வருகிறார்கள்? இங்கு அவர்களின் நிலை எப்படி உள்ளது?

தென் மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கல்வியும் வேலைவாய்ப்பும் வட மாநிலங்களில் மிகவும் குறைவாக உள்ளதால் அங்குள்ள மக்கள் பிழைப்புக்காக தங்கள் சொந்த ஊர்களை விட்டு புலம்பெயர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி தங்களது சொந்த ஊரை விட்டு தென்மாநிலங்களுக்கு வரும் இளைஞர்கள் அற்ப கூலிக்கு பணியமர்த்தப்பட்டு மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். அவர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அவர்களின் தேவைகள் குறித்து துளியளவும் சிந்திக்காமல் எல்லா வகைகளிலும் அவர்களை ஒட்டச் சுரண்டுவதிலேயே குறியாக உள்ளன.


படிக்க: புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு


புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் 1979-இன் பிரிவுகள் 39, 40, 45 தொழிலாளர்களுக்கு முறையான வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை உறுதி செய்து தருவதை வலியுறுத்துகிறது. ஆனால் இத்தொழிலாளர்களுக்கு போதிய வசதிகள் கொண்ட தங்கும் இடங்கள் உருவாக்கப்படாமல் பெரும்பாலும் குடிசைகளிலும் நெகிழி விரிப்புகள் மூலம் தாங்களே ஏற்பாடு செய்த குடில்களிலும் குடும்பத்தோடு வசிக்கும் அவலநிலையே உள்ளது. இன்னும் சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) விரிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். வெயில் சமயங்களில் இங்கு தங்குவது தொழிலாளர்களுக்கு பல நோய்களை ஏற்படுத்துகிறது.

இன்னும் கொடுமையாக ஒரு சில நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். சமீபத்தில் திருப்பூரில் நகராட்சியில் வேலை செய்த வட மாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைக்கப்பட்டிருந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.

சட்டத்தின் பிரிவு 41 தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்கு முறையான உணவு கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த சட்டமும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அவர்களின் உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதில்லை.

பெரும்பாலும் இந்த வட மாநில தொழிலாளர்கள் காண்ட்ராக்ட் (contract) முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்கள் தங்கள் நலன்களை கோரிக்கையாக முன்வைப்பதற்கு சங்கம் வைக்கும் வழிமுறைகளும் இல்லை. மேலும் வட மாநிலங்களிலிருந்து இங்கு வேலைக்கு வருபவர்கள் குறித்து அரசு பதிவேடுகளில் முறையாக பதியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி வெறும் 10 – 12 சதவிகித தொழிலாளர்கள் குறித்து மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் பிற தொழிலாளர்களால் எந்தவித உறுதியான அரசு ஆவணங்களையும் பெற முடிவதில்லை. அரசு வழங்கும் உதவிகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.


படிக்க: பிரிட்டன்: புலம்பெயர்ந்தோரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகள்


வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டட – கட்டுமான பணிகள், ரயில்வே தொழிற்சாலைகள் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளில் எந்தவித பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப்படுகின்றனர். உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் இவர்களின் மொத்த உழைப்பும் சுரண்டப்பட்டு மிகவும் குறைவான கூலியே வழங்கப்படுகிறது.

இந்த நிலைமை கடந்த சில ஆண்டுகளிலும் மிகவும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மோடி தலைமையிலான பாசிச கும்பல் இந்தியாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அதானி-அம்பானிகளின் கொள்ளைக்காக தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பாசிஸ்டுகளுக்கே உரிய தொழிலாளர் விரோத போக்கைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது.

இதனால் அனைத்து துறைகளும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்று உத்தரவாதமான வேலை, அரசு வேலை என்பன அதன் இறுதிக் கட்டத்தை எட்டி வருகின்றன. 1947-க்கு முன்பிருந்ததை விட வேலையின்மை விகிதம் அதிகரித்து நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கார்ப்பரேட்டுகளின் சுரண்டலால் இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்து மக்களின் சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்றவை கேள்விக்குறியாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக, பெரும்பாலான வட மாநிலங்களில் பாசிச பா.ஜ.க. ஆட்சியிலிருப்பது மக்கள் மீதான இந்த பேரழிவை இரட்டிப்பாக்கியுள்ளது. இது வட மாநிலங்களிலிருந்து மக்கள் புலம்பெயர்வதை தவிர்க்கவியலாததாக்கி, உழைக்கும் மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக விரட்டியடிக்கப்படுவதைத் தீவிரப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை இப்படி இருக்க, வட மாநில தொழிலாளர்களால் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேலை பறிபோகிறது என இனவெறி அமைப்புகளாலும் நாம் தமிழர் போன்ற பாசிச கட்சிகளாலும் வெறுப்பு பிரச்சாரம் பரப்பப்படுவதால், அவர்கள் அன்றாடம் பல அவமானங்களையும் அடக்குமுறைகளையும் சந்திக்கின்றனர். தொழிலாளர் வர்க்கமே ஒட்டுமொத்தமாகச் சுரண்டப்பட்டு வருகிறது; அதிலும் குறிப்பாக வட மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களால் தங்களின் வேலை பறிபோகும் என்ற கருத்தைப் பரப்பி தொழிலாளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி அவர்களை ஒன்றிணைய விடாமல் இருப்பதற்கான வேலைகளை ஆளும் வர்க்கம் தொடர்ந்து செய்து வருகிறது. இத்தகைய வெறுப்பு பிரச்சாரம் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டும் முதலாளிகளுக்கும் பாசிச கும்பலுக்குமே சாதகமாக அமைகிறது.

பாசிச கும்பலின் ஆட்சியில் தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் அனைத்தும் பட்டவர்த்தனமாக மீறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் சடங்கிற்காகக்கூட பின்பற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதும் இதனுடன் இணைந்ததாகும். 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு சட்டத் தொகுப்பாக மாற்றப்பட்டுவிட்டன. இத்தகைய சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைத்து தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமும் பாசிச கும்பலை விரட்டியடிப்பதற்கான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். உண்மையான தொழிலாளர் நலக் கட்டமைப்பிற்காகப் போராட வேண்டும்.


மாயவள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க