Monday, June 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 466

ஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் !

1

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக, புதிய தொழிலாளி  பத்திரிக்கையை இரயிலில் (கடற்கரை – தாம்பரம் ) பிரச்சாரம் செய்து விற்பது வழக்கம்.

பத்திரிகை மட்டும் அல்ல, மக்கள் – தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க கூடிய அடக்கு முறை சட்டங்களை எதிர்த்தும், தனியார் மயம் – தாராள மயம் – உலகமயம் என்ற பெயரில் நாட்டையே சூறையாடும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கெதிராகவும் இரயில்களில் பிரச்சாரம் செய்கிறோம்.

மக்களும் இக்கருத்துக்களை ஆதரிக்கின்றனர். எமது பத்திரிக்கைகளை வாங்கி விழிப்படைந்து வருகின்றனர். நடப்பு உண்மைகளை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் துணிச்சலுடன் அம்பலப்படுத்தினால், மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்பதற்கு சான்றுதான் 4.11.17 அன்று இரயில் பிரச்சாரத்தில் நடந்த நிகழ்வு.

அன்று துரதிர்ஷ்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.

சம்பவம் – 1

பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் ஆனந்தன் மா.வ.செயற்குழு உறுப்பினர் தோழர் எழில் ஆகியோர் மேற்படி புதிய தொழிலாளி (நவம்பர் -15 டிசம்பர் – 14 ) இதழை காட்டி மோடியின் புதிய இந்தியா யாருக்காக ? என பிரச்சாரம் செய்தனர். பேசியதின் விவரத்தை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.

  1. வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு தலைக்கு 15 லட்சம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் போடுவேன் !
  2. கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கத்தான் பணமதிப்பழிப்பு !
  3.  ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் விலை வாசி குறைந்து விடும் என்றது !
  4. வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்பு !
  5. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா… மூலம் தொழில் பெருகும் என்றது !
  6. தமிழகத்தின் வாழ்வாதார உரிமையான காவிரியில் இழைத்த துரோகம் !

இவற்றில் எதை எடுத்துக் கொண்டாலும் நாட்டிற்கும் மக்களுக்கும் மோடி செய்தது துரோகம்தான். பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது மக்களுக்கு பணம் இல்லை. ஆனால் சேகர் ரெட்டி வீட்டில் எப்படி? ரூ 300 கோடிமதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு  கட்டு கட்டாக இருந்தது…?

இந்த நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் வாழ முடியாது அம்பானி, அதானி, மல்லைய்யா, சேகர் ரெட்டி போன்ற திருட்டு கும்பலுக்குதான் மோடியின் புதிய இந்தியா; இதை நாம் அனுமதிக்க போகுறோமா….? என தோழர் சிவா பேசினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே 25 – 30 வயது மிக்க ஒருவர்  தனது கைப்பேசி மூலம் போட்டோ எடுத்தார். அவரை பார்த்து தோழர் ஆனந்தன் எதற்காக போட்டோ எடுக்கின்றீர்கள்…? என கேட்ட போது, மத்திய அரசுக்கு சொந்தமான இரயிலில் ஏறி, அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது என்றார்.

இதற்க்குள் பேசி முடித்த தோழர் சிவா அதை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… மக்கள் சொல்லட்டும் என சொல்லிவிட்டு மக்களிடம் பத்திரிக்கைக்கு ஆதரவு கேட்ட போது பலரும் வாங்கினார்கள்.

60 – 65 வயதுள்ள ஒரு பார்ப்பனர் ரூ 10 கொடுத்து முதலில் ஒரு பத்திரிக்கையை வாங்கினார். வாங்கிக் கொண்டு எப்படி மோடியை விமர்சிக்கலாம் என கத்தியபடியே இதழை நான்கு துண்டுகளாக கிழித்தெறிந்தார்…

இதனை பார்த்த அங்கிருந்த ஒரு பெரியவர் ஓடி வந்து எப்படி பத்திரிக்கையை கிழிக்கலாம்…? நீ எல்லாம் மனுஷனா… நாயே! என அந்த பார்ப்பனரைக் கண்டித்தார்.

உடனேஅந்த பார்ப்பனருடன் முன்னர் கண்ட இளம் வயது ஆர்.எஸ்.எஸ் அபிமானியும் கூட்டு சேர்ந்து கொண்டு இரயிலில் பேசக் கூடாது என்றனர்.

அப்போது 30 -35 வயதுமிக்க இளைஞர் ஒருவர் இரயிலில் பேசக் கூடாதுன்னு சொல்லறதுக்கு நீ யாரு…? அவங்க பேசுவாங்க என பதிலடி கொடுத்ததுடன், வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு தலைக்கு 15 லட்சம் போடுவேன் மோடி சொன்னாரே அதைப் பற்றி என்றைக்காவது பேசியிருக்கின்றார..? எனக் கேட்ட போது …

மோடி அப்படி சொல்லவேயில்லை என்றார் இளம் வயது சங்கி.

அப்போது ரயிலில் கூடியிருந்த மக்கள் அவர்கள் இருவரையும் எச்சரிக்கும் வகையில் ஒழுங்கா இறங்கி போய்டு என்றனர்.

இதற்கு இடையில் பத்திரிக்கையை கிழித்துப் போட்ட முதிய பார்ப்பனர் கத்திக் கொண்டிருந்தார்.அவரிடம் நீங்க பேசறத்துக்கு யாராவது உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களா… என அவரை எதிர்த்து பேசிய பெரியவர் கேட்ட போது அதற்கு பதில் சொல்லாமல் அரசிடம் புகார் கொடுப்பேன் நடவடிக்கை எடுக்க வைக்றேன் பார் ! என்றார்.

இதற்கு அருகில் இருந்த மற்றொருவர் தேவையில்லாமல் பிரச்சனை பன்னிகிட்டு இருக்காதிங்க… அவங்க உங்க வீட்டிற்குள் வந்து பேசலை இரயிலில் பேசக் கூடாதுன்னு சொல்லறதுக்கு நீங்க யாரு? என பதிலடி கொடுத்தார்.

அப்போது தோழர் சிவா இவர்கள் RSS கும்பல் இப்படித்தான் பேசுவார்கள், என்ற போது அந்த சங்கி ஆமாம் நாங்க இந்து – இந்தியன்! என்றவரிடம் சுற்றியிருந்தவர்கள் நாங்க என்ன பாகிஸ்தானா… எனக் கேள்வியெழுப்பி பதிலடி கொடுத்தனர் மக்கள்.

ஒரு கட்டத்தில் பெட்டியில் இருந்த பெரும்பாலோனர் எதிர்ப்பு தெரிவித்து பேசுவது உரிமை அதை யாரும் தடுக்க முடியாது என எச்சரித்த பிறகே அமைதியானர்கள் அந்த இரு பாஜக அபிமானிகள். உள்ளுக்குள்ளே கலியுகம் முத்திடுத்து என்று அவர் புலம்பியிருக்கலாம். அவர்கள் அமைதியானாலும் மக்கள் மோடி ஆட்சி குறித்து கடும் வெறுப்போடு பேசிக் கொண்டிருந்தனர்.

சம்பவம் – 2

இதற்கு பிறகு மற்றொரு பெட்டியில் மேற் குறிப்பிட்டபடி பேசி முடித்த பின் பத்திரிக்கையை காட்டி வாங்கி ஆதரவு தருமாறு கோரிய போது, இங்கேயும் ஒரு பாஜக அபிமானி 5 ரூபாய் பத்திரிக்கையிலே என்ன வேண்டுமானாலும் எழுதி மக்களிடம் பரப்புறிங்க… என்றும் மோடி இந்தளவிற்கு வர எவ்வளுவு கஷ்ட்டப் பட்டிருப்பார் என்றெல்லாம் பேசியவரிடம்… நாங்க சொன்ன கருத்துப் பற்றி சொல்லுங்க…. என்ற போது 5  ரூபா பத்திரிக்கையை பிரச்சாரம் பன்றீங்க நாளைக்கு கத்தியை காட்டி வாங்கனும் மிரட்டுவிங்க… என்றார்.

இதற்கு தோழர் சிவா பெட்டியில் இருந்த மக்களை பார்த்து “எமது அமைப்பு 25 ஆண்டுகளுக்கு மேலாக சமூக மற்றத்தை லட்சியமாக கொண்டு, அதாவது உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும், அதற்கான கருத்தை பத்திரிக்கையின் மூலமும், அரசியல் இயக்கங்கள் மூலமாகவும். மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். இதுதான் எங்களின் நோக்கம்” ஆனால் இந்த நபர்  கத்தியை காட்டி மிரட்டுவதாக எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார், என்கிறார்.

அதற்கு அந்த பாஜக அபிமானி… “திமிராக இரயிலிலே வந்து இப்படியெல்லாம் பேசவே கூடாது .. எங்க அனுமதி வாங்கியிருக்கிறீங்க…” என சொல்லிக் கொண்டு இரயிலை விட்டு இறங்க முற்பட்ட போது அமர்ந்திருந்த பயணியொருவர் அவங்க என்ன சொல்றாங்க… நீ என்ன பேசிட்டு இருக்க… என சொல்லிக்கொண்டு அடிக்கவே சென்று விட்டார். தோழர்களும் பயணிகளும் தடுத்து அமைதிப்படுத்தினார்கள். அதற்குள் அந்த மோடி பக்தர் இரயிலை விட்டு இறங்கி விட்டார்.

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளிலும் பாஜக ஆதரவு கும்பல் வெறி கொண்டு பாய்வதை பார்க்க முடிகிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கேள்வியை திசை திருப்புவதும், சம்பந்தம் இல்லாமல் பேசி மடை மாற்றுவது என்ற பார்ப்பன சதித்தனம் மக்களிடம் எடுபடவில்லை. அறியாமையிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் மக்கள் விழிப்படைவதை முதலாளித்துவம் மட்டும் அல்ல பார்ப்பன இந்துமதவெறி அமைப்புகளும் விரும்புவதில்லை. அதனால்தான் மோடியின் ‘வளர்ச்சி’ புராணத்தையும் அதனின் நாயகனான மோடியை கேள்விக்குள்ளாக்கினால் ஆத்திரமடைகிறார்கள்.

பு.ஜ.தொ.மு -வோ மக்களின் துன்பத்திற்கான காரணத்தையும் எதிரிகளையும் மக்களுக்கு அடையாளம் காட்டுகின்றோம்.

அதனால்தான் முகம் தெரியாத தோழர்களையும் பு.ஜ.தொ.மு – வின் கருத்தையும் மக்கள் ஆதரிக்கிறார்கள். மத்தியில் நமது ஆட்சி, அதுவும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்கிறோம், நமது கட்டுப்பாட்டில் உள்ள இரயில்வே துறைக்கு சொந்தமான இரயிலில் ஏறி நம்மையே எதிர்ப்பதா..? என ஆர்.எஸ்.எஸ் கும்பல் சிந்திக்கின்றது.

ஆனால் அதிகாரம்  உங்களிடம் இருந்தாலும் மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால், உழைக்கும் மக்களின் குரலை உங்களால் ஒடுக்க முடியாது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்  மாவட்டம் – 88075 32859.


 

சோசலிசத்தில் மோசார்ட் இசைப்பார் – முதலாளித்துவத்தில் இசைக்க மாட்டார் !

0

சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள் – 2

“கருத்துச் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று எப்போதாவது கவலைப் பட்டதுண்டா?” என்று கேட்டான் பிராங்.

உண்மையில் இல்லை. சுருக்கமாக சொன்னால், அதைப் பற்றி எதுவும் தெரியாது. அங்கு சில விடயங்கள் தடை செய்யப் பட்டிருந்தாலும், ஒடுக்கப் படுகிறோம் என்று யாரும் கருதிக் கொள்ளவில்லை. மேற்குலகில் பல தசாப்தகாலமாக கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், தவறுகளுக்கும் குறைவில்லை.

எதையுமே மாற்ற முடியாத கருத்துச் சுதந்திரம் எதற்கு? அது இருந்து என்ன பிரயோசனம்? கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைத்தது. திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது. ஆனால், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை.

திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது.

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதால் எந்த நன்மையையும் உண்டாகவில்லை. நிலைமை முன்னரை விட மோசமடைந்தது. மக்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள். அவர்களது வீடு, சேமிப்புப் பணம், இலட்சியங்கள். அதிக பணம் கொடுக்கத் தயாராக இருந்தவரால் நீதிமன்ற தீர்ப்பை கூட விலைக்கு வாங்க முடிந்தது.

நாட்டில் நடக்கும் குற்றச் செயல்கள் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். ஏனென்றால் அது ஊடக சுதந்திரத்திற்கு நல்லது என்றார்கள். ஒவ்வொரு இறந்த உடலையும், வன்முறைச் சம்பவத்தையும் பார்க்கும் பொழுது, எமது அழகான நாட்டில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம்.

கம்யூனிசக் காலத்தில் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், கிரிமினல் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமல்ல, உணவை வாங்குவதற்கு கையில் போதுமான பணம் இருக்கிறதா என்ற கவலை கூட இருக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு தம் மக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கும். இந்த மக்கள் எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எதற்காக? கடைசியில், மக்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல முடிந்தது. அப்போதும் அவர்களுக்கு திருப்தி வரவில்லை.

“அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றால், குரலை உயர்த்தி சொல்ல வேண்டியது தானே?” என்றான் பிராங்.

அதைத் தானே நாமும் செய்தோம்? அரசாங்கம் மாறியது. ஆனால், எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் வெறும் வயிற்றை நிரப்பவில்லை. இடது, வலது வித்தியாசம் இல்லாமல், அனைத்து அரசியல்வாதிகளதும் பிரதானமான நோக்கம், தமது பணப் பைகளை நிரப்புவது மட்டுமே.

“எது முக்கியம்? கருத்துச் சுதந்திரமா, பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதா? என்று தெரிவு செய்ய வேண்டிய நிலைமை வந்தால் என்ன செய்வாய்?” நாங்கள் எதையும் விருப்பத்துடன் தெரிவு செய்யவில்லை. அதை வரலாறு எமக்காக செய்தது. ஒரு நாள் வயிறு நிறைய உணவு கிடைத்தது. ஆனால், முழுச் சுதந்திரம் இருக்கவில்லை. அடுத்த நாள் முழுச் சுதந்திரம் இருந்தது, கையில் காசு இருக்கவில்லை.

நிச்சயமாக, இது எல்லோருக்கும் பொருந்தாது. வழமையாக முதலாளித்துவத்தில் இருப்பது போன்று, புதிய சமுதாயத்தில் எல்லாம் நேர்மையற்ற வகையில் பங்கிடப் பட்டது. வலிமை மிக்க பணக்காரர்கள் சரியான தருணத்தில் ஒரு மூழ்கும் கப்பலை விட்டு வெளியேற முடிந்தது. பலவீனமான ஏழைகள் அதற்குள் கிடந்தது அமிழ்ந்து போனார்கள். யாருமே அவர்களை காப்பாற்ற வரவில்லை.

ஏழு பேரில் ஒருவர் தனது உணவுக்காக கஞ்சித் தொட்டியை நம்பியிருக்கும் மக்களைக் கொண்ட அமெரிக்காவை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றினோம். ஆனால் ஒரு வித்தியாசம். எமது நாட்டில் ஏழைகளுக்கான கஞ்சித் தொட்டிகள் இருக்கவில்லை, எந்தவொரு செல்வந்தரும் தான தர்மம் செய்யவில்லை. எத்தனையோ பேர் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு ஏழைகளுடன் பணத்தைப் பங்கிடும் மனம் இருக்கவில்லை.

சோவியத் யூனியனில் கோர்பசேவ் அதிபர் பதவிக்கு வந்தார். பெறேஸ்ட்ரோய்கா கொண்டு வந்தார். பெர்லின் மதில் வீழ்ந்தது. ஆரம்பத்தில், பல்கேரியாவில் கோர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ரஷ்ய பத்திரிகைகள், சஞ்சிகைகள் தடை செய்யப் பட்டன. “சோஷலிசத்தை காப்பாற்றுவதற்காக, பல்கேரியா சோவியத் யூனியன் மீது படையெடுக்குமா?” என்று நாங்கள் எமக்குள் வேடிக்கையாக பேசிக் கொண்டோம்.

ஒரு நாள் பல்கேரியாவிலும் ஆட்சி மாற்றம் நடந்தது. எந்நேரமும் சிரித்துக் கொண்டிருந்த எமது “மகிழ்ச்சியான சர்வாதிகாரி” பதவி விலக நிர்ப்பந்திக்கப் பட்டதை தொலைக்காட்சியில் காண முடிந்தது. திடீரென கட்டவிழ்த்து விடப் பட்ட மாதிரி எல்லாம் நடந்தேறின. ஏனென்றால், எமது நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சித் தலைவரை அகற்றலாம் என்றால், எதுவும் சாத்தியமே. திடீரென பலர் தெருவுக்கு வந்து கம்யூனிசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். நாற்பது வருட கால பரிசோதனை போதும். கம்யூனிசத்தை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம். எல்லோரும் இறக்கை முளைத்ததை போன்று நடந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் நடக்க முடியாதவை என்று நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நடந்தன. இந்த ஆட்சி மாற்றம் மூலம், கம்யூனிஸ்டுகள் தமது அதிகாரத்தை பலப் படுத்தி விட்டதாக நினைத்தார்கள். ஆனால், திடீரென சிறிய சிறிய எதிர்க்கட்சிகள் முளைத்தன. கடைசியில் சுதந்திரம் பெற்றோம். அதாவது, பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தலை சொல்கிறேன். கம்யூனிச எதிர்ப்புப் கட்சிகள் ஒன்று சேர்ந்து நீல வர்ணத்தில் போட்டியிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புக்கும், நீலத்திற்கும் இடையில் தேர்தல் போட்டி ஆரம்பமானது.

அப்போது எனக்கு பதினெட்டு வயது ஆகியிருந்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை கிடைத்தது. எனது தெரிவு நீலக் கட்சிக்குத் தான் என்பது எப்போதோ தீர்மானிக்கப் பட்டு விட்டது. குறிப்பாக நகரங்களில் வாழ்ந்த இளைஞர்களின் தெரிவும் அதுவாக இருந்தது. எனது நாய்க்குட்டியின் கழுத்துப் பட்டியில், எதிர்க்கட்சியின் நீல நிற பலூன் கட்டி விட்டேன். அதையும் இழுத்துக் கொண்டு எனது தாத்தா, பாட்டி இருக்கும் வீட்டிற்கு சென்றேன்.

தாத்தா, பாட்டிக்கு அது பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதுமே கம்யூனிச ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்படி நிறையப் பேர் இருந்தனர். இந்தக் கருத்து முரண்பாடு பல குடும்பங்களுக்குள் பிரச்சினையை உண்டாக்கியது. இரவும், பகலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் இடையறாத வாக்குவாதங்கள் நடந்தன.

நான் தாத்தா, பாட்டியின் வீட்டிற்கு சென்று அவர்களது அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்து வந்து, எனது நாயின் கழுத்துப் பட்டியில் இருந்த நீல பலூனை கண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், இது சகிக்க முடியாத, கம்யூனிச விரோத சீண்டுதல். அதனால், கோபத்துடன் கதைவை அடித்து சாத்தி விட்டார்கள்.

அப்போது தான் எனது முட்டாள்தனம் உறைத்தது. தாத்தாவும், பாட்டியும், இந்த உலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர்களாக இருந்தனர். சிறு வயது முதல் கொஞ்சி மகிழ்ந்து, இனிப்புப் பண்டங்களை கொடுப்பதை தவிர வேறெதையும் செய்திராதவர்கள். பாட்டி பல்கனியில் நின்று கொண்டு என்னைப் பார்த்து கண்ணீர் விடுவதைக் கண்டேன்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களில் மும்முரமாக இருந்த எனக்கு, தாத்தா, பாட்டியின் பிரிவின் துயரம் பெரிதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எல்லோரும் புன்முறுவலுடன் வீடுகளுக்கு திரும்பினோம். வழியில் எதிர்ப்பட்ட கம்யூனிச ஆதரவாளர்கள் மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், எதுவும் பேசவில்லை. (எதிர்க்கட்சி ஆதரவாளரின்) மகிழ்ச்சி ஆரவாரம் ஒரு சில நாட்கள் நீடித்தது.

கம்யூனிச எதிர்ப்பு எதிர்க்கட்சிக்கு நகரங்களில் மட்டுமே செல்வாக்கு இருந்தது என்று சொல்லலாம். ஆனால், கிராமப் புறங்கள் அப்போதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்தன. கிராமங்களில் நீலக்கொடி காட்டிய சிலருக்கு விவசாயிகள் அடி போட்டு அனுப்பினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தனது கடந்த கால சாதனைகளை சொல்லிக் காட்டி பிரச்சாரம் செய்தது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் எதிர்க்கட்சி அரசாங்கம் பற்றிய அச்சவுணர்வை தோற்றுவித்து இருந்தனர். எதிர்க்கட்சி அவர்களது நிலங்கள் பறித்து, முந்திய நிலவுடைமையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இதனால் வேலையிழப்புகள் ஏற்படும். அத்துடன், மருத்துவத்திற்கு காசு கொடுக்க வேண்டி இருக்கும். சந்தைப் பொருளாதாரம் வந்தால், அவர்கள் எடுக்கும் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் பெறுமதி இருக்காது.

ஆரம்பத்தில், நான் இந்த அச்சுறுத்தல்களை கம்யூனிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரம் என்று நினைத்தேன். இருப்பினும் கிராமப் புற விவசாயிகள் அதை நம்பினார்கள். மேற்கத்திய அமைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த நகர்ப்புற அறிவுஜீவிகளை விட, கிராமப்புற விவசாயிகள் உண்மைக்கு அண்மையில் நின்றுள்ளனர் என்பது கடைசியில் தெரிய வந்தது. எதிர்க்கட்சி அவமானப் பட்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்த நேரம், மிக மோசமான நிலைமை நிதர்சனமானது. ஆனால், அந்த நேரம் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் மனதில் எந்த வித எதிர்மறையான எண்ணமும் இருக்கவில்லை.

ஒரு தலைமுறை கடந்ததும் வந்த பிள்ளைகள் எவருக்கும் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அவர்கள் படிக்கும் சரித்திரப் பாடநூலில் ஒரு சுருக்கமான குறிப்பு இருக்கும். அந்தளவு தான் அறிவு. நாங்கள் மார்க்ஸ், லெனின் சிலைகளுடன் வளர்ந்தோம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவர்கள் யார் என்பதே தெரியாது. லெனினை பார்த்து “யார் இவர்? மாஸ்கோ நகர மெட்ரோ ரயில் கட்டியவரா?” என்று கேட்கிறார்கள்.

லெனின் ஒரு இலட்சியவாதியாக இருந்தார். அவரது பிரதானமான சாதனையாக, சோவியத் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் நல்லுறவு நிலவியதைக் குறிப்பிடலாம். அதாவது, இனவாதத்திற்கு இடமிருக்கவில்லை. சோவியத் அமைப்பு விழுந்த பின்னர், எண்ணில் அடங்காத தேசியவாதக் கட்சிகள் தோன்றின. அவை மக்களின் அடிமனது உணர்வுகளைப் பிரதிபலித்தன. “மோசமான பொருளாதார நிலைமைக்கு காரணம் சிறுபான்மை இனத்தவர் தான்.” – எப்போதும் பழி போடுவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவர்கள், மேற்கத்திய “ஜனநாயக” நாடுகளைப் பார்த்து கற்றுக் கொண்டார்கள்.

ஒரு பெர்லின் மதில் மட்டுமே வீழ்ந்தது. ஆனால், கணக்கிட முடியாத புதிய மதில்கள் எழுந்தன. உக்ரைன் ரஷ்ய எல்லையில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் மதில் கட்டுவதற்கு யோசித்தது. அதனோடு ஒப்பிடும் பொழுது பெர்லின் மதில் ஒன்றுமேயில்லை. மிகவும் தடிமனான மதில் மக்களின் மனதில் தான் உள்ளது. அதை ஊடுருவுவதும் கடினமானது. பனிப்போர் முடியவில்லை. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தொடர்கிறது. நீண்ட நெடுங்கால ஜனநாயக மரபைக் கொண்ட நாடுகளில் கூட, நாகரிகம், சகிப்புத்தன்மை என்பன இலகுவில் உடையும் அளவிற்கு மெல்லிய தடுப்புச் சுவர்களாக உள்ளன.

***

ம்யூனிச ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கலாச்சார மண்டபம் இருந்தது. அங்கு நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான கட்டணம் மிகவும் குறைவு, சிலநேரம் இலவசம். சாதாரண மக்கள் கண்டுகளிப்பதற்காக, அங்கு மேடையேறிய நாடகக் குழுக்கள், இசைக் குழுக்கள் போன்றவற்றிற்கு அரசு மானியம் கொடுத்து ஊக்குவித்தது. மொஸார்ட் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் உருவாக்கிய படைப்புகளும் சாமானியர்களுக்காக இசைக்கப்பட்டன.

ஜனநாயகம் வந்ததும் மொஸார்ட் இசையும் நின்று விட்டது. ஏனென்றால் அரசு அதற்காக பணம் செலவிட விரும்பவில்லை. இசை, கலாச்சாரம், கல்வி? இதற்கெல்லாம் அரசிடம் பணம் கிடையாது. கிராமங்களில் இருந்த கலாச்சார மண்டபங்கள் எல்லாம் மூடப் பட்டு விட்டன. நகரங்களில் அவை குறைக்கப் பட்டன. எல்லா இடங்களிலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இசைக் கலைஞர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. உயிர் பிழைப்பதற்காக இரவு விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் பல நம்ப முடியாத விடயங்கள் நடந்தன. மிகக் குறுகிய காலத்தில் நாம் மேற்குலகை எட்டிப் பிடித்தோம். குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலாவது. ஏனெனில் எமது நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பிரான்ஸ், நெதர்லாந்தை விட அதிக விலைக்கு விற்கப் பட்டன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன. சில விளம்பரங்களில் தோன்றும் பெண்கள் ஏறக்குறைய நிர்வாணக் கோலத்தில் இருந்தனர்.

மேற்குலகம் கொடுத்த பொருளாதார உதவிக்கு பிரதியுபகாரமாக IMF மூலம் நிபந்தனைகளை விதித்தது. அந்த நிதியத்தின் “புத்திசாலி” பொருளாதார ஆலோசகர்கள், கூடிய விரைவில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அறிவித்தனர். பெறுமதியான இயந்திரங்கள் எல்லாம் விற்கப் பட்டன. ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

தொழிற்சாலைகள் மறைந்து விட்டன. பொருளாதாரமும் போய் விட்டது. மக்களுக்கு சாப்பிட எதுவும் இருக்கவில்லை. திடீரென உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மட்டும் தடை இருக்கவில்லை.

மேற்குலகம் நினைத்திருக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை அறிமுகப் படுத்தினால், ஒரே நாளில் எல்லாம் நல்ல படியாக மாறி விடும் என்று. “இதுவா சந்தைப் பொருளாதாரத்தின் வலிமை” என்று ஏழைகள் ஆக்கப்பட்ட மக்களால் நம்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வறுமையும், பிணியும் தலைவிரித்தாடின.

கம்யூனிச காலத்தை விட மிக மோசமான நிலைமை வந்தது. இருப்பதை எல்லாம் இழந்த பலர் மீதியை குடித்து அழித்தார்கள். தமது வாழ்க்கை இதை விட துயரம் மிக்கதாக அமைய முடியாது என்று உணர்ந்தார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாத பலர் தற்கொலை செய்து கொண்டனர். அனேகமாக, அவர்கள் தம் இளம் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த குடும்பத் தலைவராக இருந்தனர்.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நொறுங்கி விழுந்தது. அவர்களது கனவுகள் குப்பைத் தொட்டிக்குள் கிடந்தன. புதிய சமுதாயம் அவர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்கவில்லை. புதியதொரு வர்க்கம் உருவானது. அது “வேண்டப்படாதவர்கள்” என்ற சமூகத்தால் ஒதுக்கப் பட்ட வர்க்கம். “வேண்டப்படாதவர்கள்” வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால், எங்கேயும் வேலை இல்லை. அவர்களுக்கு கிடைத்த அரச உதவிப்பணம் அத்தியாவசிய செலவுகளுக்கே போதாது.

சந்தைப் பொறிமுறை ஒரு மந்திரச் சொல் போன்று ஒலித்தது. ஆனால், பின்னர் அந்த மாயை மறைந்தது. பணவீக்கம் ஏறிக்கொண்டே சென்றது. கையில் கிடைத்த சம்பளம் பெறுமதி இழந்திருந்தது. பல நிறுவனங்களிடம் சம்பளம் கொடுக்க பணமும் இருக்கவில்லை. சிலருக்கு மாதக் கணக்காக சம்பளம் கிடைக்கவில்லை. சிலருக்கு பணத்திற்கு பதிலாக பொருட்களை கொடுத்தார்கள். நீங்கள் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை செய்தால். சம்பளமும் கண்ணாடியாகத் தான் கிடைக்கும். அதை உணவுக்காக வேறொருவருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும்.

முன்பிருந்த கம்யூனிச அரசு அடிக்கடி ஒரு பிரச்சாரம் செய்து வந்தது: “பல்கேரியாவில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதே நேரம், மேற்குலகில் வருடக் கணக்காக விசுவாசமாக வேலை செய்பவர்களையும் பணி நீக்கம் செய்கிறார்கள்.” என்று சம்மட்டியால் அடித்த மாதிரி பிரச்சாரம் செய்தனர். புதிய (முதலாளித்துவ) அரசு அதை நடைமுறைப் படுத்தி மெய்ப்பித்தது. கம்யூனிச அதிகாரம் இருந்த இடத்தில் பணத்தின் அதிகாரம் வந்தது. என்ன முன்னேற்றம்?

ஏழ்மையில் கூட சமத்துவம் இருந்த இடத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. புதிய பணக்காரர்கள் சேர்த்த பணத்தில் கோட்டைகள் கட்டினார்கள். புதிய மாடல் கார்களை இறக்குமதி செய்தார்கள். அதே நேரத்தில், தெருக்களில் பிச்சைக்காரர்களும் பெருகினார்கள்.

இதற்கு முன்னர், இப்படியான காட்சிகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்டிருந்த எமக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஓய்வூதியப் பணத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாத மூதாட்டி ஒருவர், குப்பைத் தொட்டிக்குள் கிளறிக் கொண்டிருந்ததை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனுடன் ஒப்பிட்டால், கம்யூனிசத்தின் திட்டமிடல் பொருளாதாரக் காலத்தில் நிலவிய தட்டுப்பாடு ஒரு கொடை எனலாம்.

நிச்சயமாக, எங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கருத்துச் சுதந்திரம் இருந்தது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? என்னைப் பொறுத்தவரையில், வயதானவர்களுக்கு உணவு கொடுக்க வழி கிடைக்குமென்றால் அந்தக் கருத்துச் சுதந்திரம் கூட வேண்டாம் என்பேன். எமது ஊடகங்கள் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை பிழையாக புரிந்து வைத்திருக்கின்றன. ஒரு குற்றம் நடந்தால், சந்தேகநபரின் பெயர் விபரங்களை உடனே வெளியிட்டு விடுகின்றன. அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. வதந்திகளை உண்மை என்று சொல்கின்றன.

முதலாளித்துவமானது பற்றாக்குறை பொருளாதாரத்தை நிவர்த்தி செய்தது. அது சந்தைப் பொருளாதாரம் வேலை செய்வது போலிருந்தது. கம்யூனிச காலத்தில் இருந்த மாதிரி வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம், பலரிடம் வாங்குவதற்கு கையில் பணம் இருக்கவில்லை. முந்திய கம்யூனிச அரசு உணவுப் பொருட்களுக்கு கொடுத்து வந்த மானியம் இரத்து செய்யப் பட்டது. அதனால், பொருட்களின் விலைகள் நூறு சதவீதம் அதிகரித்தன. ஒரு சோடிக் காலணிகள் வாங்குவதற்கு ஒரு மாத சம்பளம் தேவைப்பட்டது.

பெரும்பாலான மக்களுக்கு சாதாரணமான பொருட்களையும் வாங்கும் வசதி இருக்கவில்லை. எனது மாமியின் வீட்டை பார்த்தாலே போதும். மாமி வாழும் அடுக்குமாடிக் கட்டிடம் சோபை இழந்து காணப்பட்டது. அவரிடம் ஒரு பழைய காலத்து கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அது தான் விரும்பிய நேரத்திற்கு தான் வேலை செய்யும். குப்பையில் போட வேண்டிய தளவாடங்கள் அங்கு கிடந்தன. மாமி இதையெல்லாம் வீசாமல் வைத்திருக்கக் காரணம் பழைய நினைவுகள் அல்ல. புதிதாக வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் விதவை ஓய்வூதியத் தொகை பற்றிக் கேள்விப் பட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன்.

“இந்தளவு குறைந்த பணத்துடன் எப்படி வாழ முடிகிறது?”

மாமி தனது தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னார் : “தேவையில்லாத பொருள் எதையும் வாங்குவதில்லை. அதே நேரம், எனக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதில்லை. ஒவ்வொரு சதமும் பார்த்து செலவளிக்க வேண்டும். காசைப் பற்றிய கவலை தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறு படுத்துகின்றது.”

எதற்காக கம்யூனிசக் காலத்தில் எல்லாம் சிறப்பாக இருந்தது என்று வயதானவர்கள் சொல்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. உண்மையில் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், பொருட்களின் விலைகள் வருடக் கணக்காக மாறாமல் இருந்தன. வாழ்க்கையில் பெரியளவு பிரச்சினைகளும் வரவில்லை.

புதியதொரு எதிர்காலத்திற்கு கட்டியம் கூறினார்கள். ஆனால் அதன் மேல் கட்டப்பட்ட நம்பிக்கை எல்லாம் நீர்த்துப் போயின. இவை கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் அதிர்ச்சியூட்டிய வருடங்கள். பெர்லின் மதில் வீழ்ந்தவுடன் எல்லாம் நல்ல படி நடக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகிப் போனது. அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுதந்திரமாக வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிந்தது. ஆனால், பயணம் போவதற்கு மக்களிடம் பணம் இருக்கவில்லை. நீங்கள் விரும்பிய எந்த இடத்திலும் சென்று தங்கி வேலை செய்யலாம். ஆனால், எங்கேயும் வேலை இருக்கவில்லை.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், எவருமே மக்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களை தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. எந்த வர்ணம் பூசி இருந்தாலும், நாங்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இருக்கவில்லை. முதலாளித்துவ பரிசோதனைச் சாலையில் நாங்கள் வெறும் எலிகள் மட்டுமே.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு பலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களது எல்லா நம்பிக்கைகளும் பறந்து போயின. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்தில் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லா கிழக்கைரோப்பிய நாடுகளிலும் சுய முன்னேற்ற நூல்கள் பெருமளவு விற்பனையாகின. சிலநேரம், மதமும் உதவ முடியும். மேற்குலகில் இருந்த அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள் பெருகின. அந்த சபைகள் ஏற்கனவே மேற்கில் வெளிச்சத்தை கண்டுவிட்டார்கள் என்பதால் நாமும் காண்போம் என்று நம்பினார்கள்.

கொஞ்சக் காலத்திற்கு முன்னர் நாம் வாழ்ந்த சமுதாயம் மறைந்து, பல ஒளிவருடங்கள் தள்ளிப் போன உணர்வை உண்டாக்கியது. கம்யூனிச காலத்தில் “எவ்வாறு இலட்சக் கணக்கான கிழக்கு ஐரோப்பிய மக்கள் மூளைச்சலவை செய்யப் பட்டனர்” என்ற ஆராய்ச்சிகள் கட்டுக் கட்டாக வெளிவந்தன.

வரலாற்றை நீங்கள் திருப்பிச் சொல்லலாம். ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்களில் தான் உண்மை ஒளிந்துள்ளது. எல்லா சரித்திர நூல்களையும் வாசிக்கையில் பெரியதொரு புதிர் தென்பட்டது. சம்பவங்கள் சரியாகத் தான் இருந்தன. ஆனால், வாழ்பனுபவங்கள் ஒத்துப் போகவில்லை. கம்யூனிசத்தின் மடத்தனங்கள் வெளியில் இருந்து பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால், அதற்குள் வாழ்ந்தீர்கள் என்றால் பல விடயங்கள் சரியாகத் தான் நடந்துள்ளன என்று தோன்றும்.

பல வருட காலமாக, மேற்கத்திய நாட்டவர் எம்மைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொண்டனர். எங்களை சுயவிருப்பில்லாமல் நடக்கும் பொம்மைகளாக பார்த்தார்கள். நாங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப் படிந்து நடந்ததாகவும், அனைத்து விடயங்களும் அரசியலை சுற்றி சுழன்றதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். கிழக்கு ஐரோப்பிய இளைஞர்களுக்கும், மேற்கு ஐரோப்பிய இளைஞர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதார நிலைமையை விட இளம் பருவத்தில் தோன்றும் முகப்பரு எமக்கு முக்கியமாகப் பட்டது.

மேற்கத்திய நாட்டவர் பற்றிய எங்களது கற்பனைகளும் விசித்திரமானவை தான். அவர்கள் எல்லோரும் பணக்கார, சுயநலம் பிடித்த, சுருட்டு புகைக்கும் முதலாளிகள். மேற்குலகவாசிகள் பலர் விலை உயர்ந்த சுருட்டு வாங்கவும், சிலநேரம் மாத முடிவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் பணமில்லாதவர்கள் என்பதை பல வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன்.

நன்றி : தோழர் கலையரசன், கலையகம்

இந்த கட்டுரையின் முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :


 

மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?

1

சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்

ப‌ல்கேரியா ஒரு சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் த‌ன‌து இள‌ம் பிராய‌த்தை க‌ழித்த‌ ம‌ரியா ஜெனோவா, த‌ற்போது நெத‌ர்லாந்தில் வாழ்கிறார். அவ‌ர் சோஷ‌லிச‌ ப‌ல்கேரியாவையும், முத‌லாளித்துவ‌ நெத‌ர்லாந்தையும் ஒப்பிட்டு, இர‌ண்டிலும் உள்ள‌ குறை நிறைக‌ள் ப‌ற்றி ஒரு நூல் (Dansen op de Muur) எழுதி இருக்கிறார்.

“உண்மையைச் சொல்வ‌தென்றால் நான் ஒரு க‌ம்யூனிச‌ ச‌முதாய‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌தையிட்டு ம‌கிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறுகின்றார். அந்த‌க் கால‌த்தில் த‌ன‌க்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அர‌சிய‌ல் ஆர்வ‌ம் இருக்கவில்லை என்கிறார். த‌ன‌து அனுப‌வ‌ங்க‌ளை ந‌கைச்சுவையாக‌ எழுதி இருக்கிறார். அவரது நூலின் சில பகுதிகளை கீழே மொழிபெயர்த்து எழுதி இருக்கிறேன்.

நூலில் இருந்து….

அப்போதும் அர‌சிய‌ல்வாதிக‌ள் நிறைய‌ வாக்குறுதிக‌ள் அளிப்பார்க‌ள். யார் அதைப் ப‌ற்றி க‌வ‌லைப் ப‌ட்டார்க‌ள்? அவ‌ற்றில் ஒன்று: “உண்மையான‌ க‌ம்யூனிச‌ ச‌முதாய‌ம் உருவான‌ பின்ன‌ர், க‌டைக‌ளில் ப‌ண‌ம் கொடுக்காம‌லே பொருட்க‌ளை வாங்க‌லாம்.”

அத‌ன் அர்த்த‌ம், த‌ற்போது வ‌ங்கி அட்டையில் ப‌ண‌ம் செலுத்துவ‌து மாதிரியான‌ அமைப்பு. பிற்கால‌த்தில் முத‌லாளித்துவ‌ம் வ‌ந்த‌ பின்ன‌ர் அந்த‌ வ‌ச‌தியும் வ‌ந்த‌து. ஆனால், சில‌ர் “காசு கொடுக்காம‌ல் வாங்கும் முறையை” த‌வ‌றாக‌ப் புரிந்து கொண்ட‌ன‌ர் போலிருக்கிற‌து.

கிரிமின‌ல் குற்ற‌ங்க‌ள் பல்கிப் பெருகின‌. நாடு முழுவ‌தும் குழ‌ப்ப‌க‌ர‌மான‌ சூழ்நிலை நில‌விய‌ நேர‌ம், மாபியாக்க‌ள் ம‌ட்டும் ஒழுங்காக‌ இய‌ங்கினார்க‌ள். இது தானா நாங்க‌ள் க‌ன‌வு க‌ண்ட‌ முத‌லாளித்துவ‌ம்?

நான் சிறுமியாக இருந்த நேரம், ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கூப்பிட்டுக் கேட்டார்: “என்ன மரியா இது? தலைமுடி காடு மாதிரி வளர்ந்திருக்கு? கவனிக்க மாட்டாயா?” என்று கேட்டு கத்தரிக்கோலால் வெட்டி விட்டார். அதைக் கண்டு வகுப்பில் பிற மாணவர்கள் சிரிக்கவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை. ஏனெனில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இடைவேளை நேரத்தில் நக்கல் குரூப்பில் ஒன்று வந்து கேட்டது: “அடியே, உனது தலை கார்ச் சக்கரத்தில் அகப்பட்ட பூசணிக்காய் மாதிரி இருக்குடி!”

வீட்டுக்கு சென்ற பின்னர் அம்மாவுக்கு மாரடைப்பே வந்து விட்டது.
“என்னடி இது? என்ன நடந்தது?”
“தோழர் டிமித்ரோவா (ஆசிரியை) எனது தலை முடி நீளம் என்று சொல்லி வெட்டி விட்டார்.”
“தோள்பட்டை அளவு கூட வளரவில்லை… அது நீளமாமா?”

எனது அம்மா கடுங் கோபத்தில் இருந்தார். இருந்தாலும் அவர் பள்ளிக்கூடம் சென்று விசாரிக்கவில்லை. காரணம், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்களை எதிர்த்துப் பேச முடியாது. அவர்கள் எப்போதும் ஏதாவது எழுதப் படாத சட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். கட்சித் தலைவர்கள் அதை விட மோசம். அந்த விதிகள் எங்காவது எழுதி இருந்தால், நாமும் தயார் படுத்திக் கொள்ளுவோமே?

நூலில் இருந்து….

அன்றிருந்த கிழக்கு ஐரோப்பிய (சோஷலிச) நாடுகள், ஒவ்வொன்றுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அதே நேரம் ஒற்றுமைகளும் இருந்தன. எல்லாம் வல்ல கட்சி, அணிவகுப்புகள், அரைகுறையாக நிரப்பப் பட்ட கடைகள், வரிசைகள், தகவல் கொடுப்பவர்களைப் பற்றிய அச்சம்… இவையெல்லாம் ஒரே மாதிரி இருந்தன.

அது மட்டுமல்ல, செக்கோஸ்லோவாகியாவின் அதே மின் விளக்குகள், போலந்து அலுமாரிகள், கிழக்கு ஜெர்மன் தொலைபேசிகள் தான் பல்கேரியாவிலும் இருந்தன. திருத்தப் படாத பெருந்தெருக்கள் குண்டும் குழியுமாக இருந்தன. வாகனம் ஓட்டுவோர் பள்ளத்திற்குள் இறங்கக் கூடாது என்று எச்சரிக்கையாக தெருவோரமாக திருப்பினால், அந்தப் பக்கம் சிலநேரம் எதிர்த் திசையில் இருந்து வாகனம் வரலாம். வந்தால் அதோ கதி தான். எனது மாமா ஒரு தடவை பள்ளத்திற்குள் வண்டியை விட்டு ஸ்டேயரிங் வீலை கையில் கழற்றி வைத்திருந்தார்.

மேற்குலக எதிர்ப்பு பிரச்சாரங்களும் ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன. மேற்கத்திய நாடுகளில் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர்கள் தறிகெட்டு செல்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தனர். எங்களது நாட்டில் போதைவஸ்து எங்கேயும் கிடைக்காது, அதனால் அந்தப் பிரச்சினையும் இல்லை. மேற்கத்திய இளைஞர்களுடன் ஒப்பிடும் பொழுது, நாம் பொருளாசை குறைந்தவர்களாக இருந்தோம். சிலநேரம், “கிட்டாதாயின் வெட்டென மற” என்று மனதை தேற்றிக் கொண்டிருப்போம்.

அதற்காக எதுவுமே கிடைக்கவில்லை என்று சொல்லி விட முடியாது. அருகில் இருக்கும் கம்யூனிச யூகோஸ்லேவியா நாட்டவர் மீது எங்களுக்கு பொறாமை இருந்தது. காரணம், அவர்களது கம்யூனிஸ்ட் கட்சி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும், டெனிம் ஜீன்ஸ் வாங்கவும் அனுமதித்திருந்தது. யூகோஸ்லேவியா நாட்டினர், மூன்று மடங்கு விலை வைத்து எங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் விற்று வந்தனர்.

பள்ளிக்கூடங்களில் நாம் எல்லோரும் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டோம். சல்யூட் அடிக்கவும், போராட்டக் கோஷம் எழுப்பவும் பழகி இருந்தோம். அதை யாரும் அதிசயமாக பார்ப்பதில்லை. “Budete gotovi! Vinagi gotov!” என்ற பல்கேரிய கோஷத்தை மொழிபெயர்த்தால் “நாங்கள் தயாராக இருக்கிறோம்!” என்று அர்த்தம் வரும். எதற்குத் தயாராக இருக்க வேண்டும்? அதைப் பற்றி யார் கவலைப் பட்டார்கள்?

பாடசாலை மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து வர வேண்டும். முதலில் நீலம் பின்னர் சிவப்பு கழுத்துப் படி அணிந்திருந்தோம். நாம் விரும்பிய படி சீருடையில் சிறிது மாற்றம் செய்யவும் தடை இருந்தது. சக மனிதனை விட நான் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது தவறானது. எங்களுடைய இலட்சியமான, ஏழை பணக்காரர் இல்லாத நீதியான வருங்காலத்தை எண்ணிக் கொண்டோம்.

இருப்பினும், வர்க்கமில்லாத சமுதாயம் என்பது சிலநேரம் எழுத்தில் மட்டும் இருந்தது. நான் ஒரு தொழிலாளியை அல்லது விவசாயியை திருமணம் செய்வதற்கு எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். அதற்கான காரணம், அவர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. வழமையாகவே, ஒரு பட்டதாரி மணமகனை தான் அவர்கள் தேடி இருப்பார்கள்.

பல்கேரியாவில் ஏற்கனவே பொருளாதார ரீதியான சமத்துவம் எட்டப் பட்டு விட்டது.ஏறக்குறைய எல்லோரும் சமமாக சம்பாதித்தனர். ஒரு கட்டிடத் தொழிலாளிக்கும், ஒரு பேராசிரியருக்கும் கிடைக்கும் சம்பளத்தில் வேறுபாடு இருக்காது. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த வித்தியாசம் ஒன்றிருந்தது. கட்சி முக்கியஸ்தர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டனர். புது வீட்டுக்கு காத்திருக்கும் பட்டியலில் அவர்களது பெயர் வராது. மருத்துவ சிகிச்சைகளும் விசேடமாக கிடைக்கும். ரஷ்யாவில் கட்சி முக்கியஸ்தர்கள் வாங்குவதற்கு தனியான விற்பனை அங்காடிகள் இருந்தன.

கட்சி முக்கியஸ்தர்கள் விசேட சலுகைகள் பெறுவது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், எங்களுக்கு எல்லாம் கிடைத்து வந்த படியால், சாதாரண மனிதர்களான நாமும் திருப்திப் பட்டோம். விளையாட்டுக் கழகங்கள், விடுமுறை விடுதிகள் என்று, சிறுவர்கள், இளைஞர்கள் பொழுதுபோக்குவதற்கான அனைத்தும் மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.

அநேகமான நிறுவனங்கள், மலையடிவாரங்கள், கடற்கரைகளில், தமக்கென சொந்தமாக சுற்றுலா விடுதிகள் வைத்திருந்தன. அந்த நிறுவனங்களில் வேலை செய்வோர், மிகக் குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க முடிந்தது. அது மட்டுமல்ல, வேலை நேரங்களில் கூட களைத்துப் போனால் சிறிது ஓய்வெடுக்கலாம். யாரும் அவர்களை தடி வைத்து விரட்டிக் கொண்டிருக்கவில்லை.

“சுத‌ந்திர‌ம் இன்மை, வ‌றுமை, எந் நேர‌மும் க‌வ‌னித்துக் கொண்டிருக்கும் புல‌னாய்வுத்துறை… அப்ப‌டியான‌ ஒரு நாட்டில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌தையிட்டு வேத‌னைப் ப‌டுகிறேன்.” இப்ப‌டிக் கூறினான் என‌து ட‌ச்சு காத‌ல‌ன் ஃப்ராங்.

“நிறுத்து!” நான் எரிச்ச‌லுட‌ன் க‌த்தினேன். இத்த‌கைய‌‌ க‌றுப்பு – வெள்ளைப் ப‌ட‌ங்க‌ளை போதுமான‌ அள‌வு பார்த்து விட்டேன். என‌து இள‌மைக் கால‌ம் இனிதாக‌ அமைந்திருந்த‌து. நான் ஒரு நாள் கூட‌ வ‌றுமையில் வாழ்வ‌தாக‌ உண‌ர‌வில்லை. அத்துட‌ன் எந்த‌வொரு பாதுகாப்பு அதிகாரியும் எங்க‌ளை எந்த‌ நேர‌மும் க‌வ‌னித்துக் கொண்டிருக்க‌வில்லை.

ஏதோ நீங்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வாழ்கிறீர்க‌ள் போலும். எத்த‌னை ஆயிர‌ம் க‌மெராக்க‌ள் உள‌வு பார்க்கின்ற‌ன‌? NSA உங்க‌ள் மின்ன‌ஞ்ச‌ல், குறுஞ்செய்திக‌ளை வாசிக்கின்ற‌ன‌. உன்னை மாதிரி ந‌ல்லொழுக்க‌ம் மிக்க‌‌ குடிம‌க்க‌ளை உள‌வு பார்க்கும் புல‌னாய்வுத்துறை செய்வ‌தில் நூற்றில் ஒரு ப‌ங்கு கூட‌ எங்க‌ள் நாட்டில் ந‌ட‌க்க‌வில்லை.”

மேற்கத்திய நாட்டவர்கள் சர்வாதிகாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது. எனது கம்யூனிச இளம்பருவக் காலங்கள் இனிமையானவை. இன்னும் சொன்னால், “எனது இளம்பருவத்தை சுதந்திர மேற்குலகில் கழிக்கவில்லையே” என்று நான் ஒருபோதும் கவலைப் பட்டதில்லை.

தங்கள் வாழ்க்கையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்தலையும் நெதர்லாந்து இளைஞர்களை பார்த்தாலே போதும். அளவு கடந்த தெரிவுச் சுதந்திரம் அவர்களை எந்த முடிவுக்கும் வர விடாமல் தடுக்கிறது. அத்துடன் மன உளைச்சலும் உண்டாகிறது.

இலட்சக் கணக்கான டச்சுக் காரர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப் பட்டு அதற்காக மருந்து (Antidepressants) குடிக்கிறார்கள் என்பதை முதல் தடவையாக கேள்விப் பட்ட நேரம், முதலில் அது ஒரு ஜோக் என்று நினைத்தேன். ஒரு மில்லியன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மன உளைச்சல் தடுப்பு மருந்துக் குளிசையை உபயோகிக்கிறார்கள்!

மேற்குலக மன உளைச்சல் தடுப்புக் குளிசை விழுங்கிகள் எல்லாம், “நாங்கள் கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள் வாழ்ந்த படியால் மகிழ்ச்சியை காணாதவர்கள்” என்று நினைத்துக் கொள்கிறார்கள்! நல்லது, நாங்கள் எந்தக் காலத்திலும் உங்களைப் போல மகிழ்ச்சியை மருந்துக் குளிசையாக வாங்கிக் குடிக்கவில்லை.

நாங்கள் மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அதைவிட அதிகமாக மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்பது புரிகின்றது. முதலாளித்துவம் சிறந்தது என்றும், எங்களது நாட்டில் எல்லாமே நாசமாகப் போனவை என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.

“முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த மிகப் பெரிய வறுமையை பார்த்தால் என்ன சொல்லத் தோன்றும்.” என்று சொன்னான் பிராங்.

ஒரு நாட்டில் எல்லோரும் வறுமையில் வாழ்ந்தால் யார் அதை உணரப் போகிறார்கள்? நம்பினால் நம்புங்கள். நான் எந்தக் காலத்திலும் வறுமையை உணரவில்லை. எங்களுக்கு போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. பெரும்பாலானவர்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக இன்னொரு வீடு வைத்திருந்தார்கள். எல்லோரும் கருங்கடல் பகுதி கடற்கரைக்கு சுற்றுலா சென்று வந்தனர்.

எந்தவொரு தருணத்திலும் எங்கள் நாட்டில் காசில்லாதவர்களுக்கு உணவளிக்க கஞ்சித் தொட்டி இருக்கவில்லை. வேலையிழந்தாலும் அரசு அவர்களுக்கு இன்னொரு இடத்தில் வேலை எடுத்துக் கொடுத்தது.

“இது தான் பிரச்சினையே,” என்றான் பிராங். “அரசு மக்களை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு இருக்காது தானே?”

எங்கள் நாட்டில் இருந்தது. இது பற்றி மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நகைச்சுவைத் துணுக்கு உலாவியது: “ஒவ்வொரு தொழிலகத்திலும் மூன்று பேரை வேலைக்கு போட வேண்டும். வேலை செய்ய ஒருவர். அதை மேற்பார்வை பார்க்க மற்றவர். மூன்றாவது நபர் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கி விடுவார்.”

பிராங் புருவத்தை உயர்த்திக் கேட்டான்: “அப்படி எல்லாம் செயல்பட வைக்க முடியுமா?”

“நிச்சயமாக செயற்படுத்த முடிந்தது. பெரும்பாலானவர்கள் தமது வேலையில் திருப்தி கண்டனர். அத்துடன் வேலை நேரத்தில் வெளியே சென்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் நேரம் ஒதுக்கினார்கள். அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கடையில் உள்ள பொருட்கள் எந்த நேரத்திலும் விற்று முடிந்து விடலாம். நேரத்திற்கு சென்று வாங்கி வைத்து விட வேண்டும்.”

“அப்படிப் பார்த்தாலும் அது நல்லதில்லை தானே? நீ ஏதாவது வாங்கப் போனால், அது அங்கே இருக்காது?” – பிராங்

நிச்சயமாக, அது நல்லதில்லை தான். ஒரு பொருளை திரும்பவும் எப்போது விற்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும். பண்டமாற்று பொருளாதாரம் சிறப்பாக இயங்கியதால், யாரும் பற்றாக்குறையுடன் வாழவில்லை.

எனது வாழ்க்கையில் முதல் தடவையாக நெதர்லாந்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றைக் கண்டவுடன் வாயடைத்துப் போனேன். பத்து வகையான அரிசி, ஏழு வகையான சீனி, எட்டு வகையான கழிவறைக் கடதாசிகள். எந்த நேரமும் சிரித்துக் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை கண்டவுடன் மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சி உண்டானது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாளர்கள் சிரிக்க மாட்டார்கள். எந்த நேரமும் முறைத்துப் பார்ப்பார்கள். நாங்கள் வாங்கத் தானே வந்திருக்கிறோம்? களவெடுக்கப் போகிறோமா? கொஞ்சம் சிரிக்கலாம் தானே? அதற்கு மாறாக மேற்கத்திய நாடுகளில் செயற்கையாக சிரிக்கிறார்கள்.

ஒரு தடவை அமெரிக்கா சென்ற நேரம் வாடிக்கையாளர்களை “How are you today?” என்று நலம் விசாரிப்பதை பார்த்தேன். என்னவோ எங்கள் சுகநலம் குறித்து அவர்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் நடிப்பு தானே?

நெதர்லாந்து வந்த பின்னர் தான், நாம் ஒருவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசவும் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் குறித்து வைக்கும் வழக்கத்தை கண்டேன். இதை எனது அம்மாவுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை.

“அப்படியா? டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் எழுதி வைப்பார்களா?”

“ஆமாம் அம்மா, சந்திப்பதற்கு முன்னர் அதை ஒரு டயரியில் குறித்துக் கொள்வார்கள். நினைத்த நேரத்தில் யார் வீட்டுக்கும் போக முடியாது. அவர்கள் ரோபோ மாதிரி இயங்குகிறார்கள். எல்லாற்றையும் முன்கூட்டியே திட்டமிடுவார்கள். மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்று மருந்து வாங்கிக் குடிப்பார்கள். இயற்கையை காசு கொடுத்து அனுபவிப்பார்கள்.”

இந்தக் கதை எல்லாம் கேட்டால் அம்மாவின் மண்டை விறைத்து விடும் என்பது தெரியும். வேறு வழியில்லை. நானும் சொல்லியே ஆக வேண்டும். முதல் தடவையாக எனது துணைவர் பிராங் மணல் திட்டுக்கு போவதற்கு டிக்கட் வாங்கியதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன்.

“நாங்கள் இயற்கையை தேடித் தானே போகிறோம்?”
“ஆம்”
“அதற்கு ஏன் காசு?”
“மணல் திட்டில் நடப்பதற்கு காசு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டம் கட்ட வேண்டும்.”

ம்ஹ்ம்… இயற்கையை அனுபவிக்க காசு கொடுக்காமல் சென்றால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாம். எனது பல்கேரிய மண்டைக்கு இது புரியவே இல்லை.

எமக்கு இடையில் பெருமளவு கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், எமது இல் வாழ்வில் எந்த இடையூறும் இருக்கவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. என்னால் முடிந்தளவு விளக்க முயற்சித்தேன். நாங்கள் ஒரு நாளும் சர்வாதிகாரத்தின் கீழ் அல்லல் படவில்லை என்ற உண்மையை அவனுக்கு உணர வைக்க வேண்டி இருந்தது.

முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் கம்யூனிசத்தின் வெற்றியை கொண்டாடும் அணிவகுப்புகளில் கலந்து கொண்டு கையசைத்து வந்தோம். நிச்சயமாக, நாங்கள் இன்னும் வெல்லவில்லை. பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், என்றோ ஒரு நாள் நாங்கள் வெல்வோம் என்று நம்பினோம்.

பாடசாலைகளில் எமக்கு துப்பாக்கியால் சுடுவதற்கு கற்றுக் கொடுத்தார்கள். அணுகுண்டு வெடித்தால் பதுங்குகுழிக்கு செல்வது எப்படி என்று பழக்கினார்கள். ஏனென்றால், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. அமெரிக்கர்களை நம்ப முடியாது.

எதிரிகள் எங்களது கம்யூனிச சொர்க்கத்தை அழிக்கும் நோக்கில் எந்நேரமும் படையெடுக்கலாம். தாய்நாட்டை பாதுகாப்பதற்காக போரிட வேண்டி இருக்கும். எதிரிகள் எமது பொன்னான கம்யூனிச இலட்சியங்களை அழிக்க விரும்பினார்கள். அவர்கள் சமத்துவத்தில் நம்பிக்கை அற்றவர்கள்.

எமது சமுதாயம் பூரணத்துவம் அடைந்தது என்று சொல்லவில்லை. ஆனால், பூர்த்தி செய்ய முயற்சித்தார்கள். எப்போதாவது ஒரு தடவை விவசாய விளைச்சல் குறைவடைந்தால், பத்திரிகையில் அமோக விளைச்சல் என்று மிகைப் படுத்தி எழுதினார்கள். (இது ஒரு உளவியல் ஊக்குவிப்பு. பரீட்சையில் தோற்ற மாணவர்களின் மனம் தளர விடாமல் பாராட்டி படிக்க வைப்பது போன்றது.)

நாம் கையில் கிடைக்கும் குறைந்தளவு உபகரணங்களை கொண்டு திருத்தவும், உருவாக்கவும் கற்றுக் கொண்டோம். மேற்குலகை விட, கிழக்கு ஐரோப்பாவில் தான் அதிகளவு கண்டுபிடிப்பாளர்கள் இருந்தார்கள். இதற்காக நான் பந்தயம் கட்டுவேன். உதாரணத்திற்கு, மேற்கத்திய சமையலறையில் ஏதாவதொன்று குறைந்தாலும் சமைக்கத் தெரியாமல் தவிப்பார்கள். நாங்களோ இருப்பதை பாவித்து புதியதொரு உணவு வகையை உருவாக்கி இருப்போம்.

***

ம்யூனிச சமூக அமைப்பில் முதலாளித்துவ சிந்தனை இல்லாமல் இல்லை. சோஷலிச நாட்டில் சந்தைப் பொருளாதாரம் இருக்கவில்லை என்று யார் சொன்னார்கள்? புதிய கார் வாங்க வேண்டுமென்றால், பதிவு செய்து விட்டு வருடக் கணக்கில் (5-10 வருடங்கள்) காத்திருக்க வேண்டி இருந்தது.

உங்களால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்றால், இருக்கவே இருக்கிறது பழைய கார். யாராவது பாவித்த ஒரு கார் வாங்கி ஓடலாம். சிலநேரம் பழைய காரின் விலை, புதிய காரை விட அதிகமாக இருக்கும். அதாவது “கேள்வி – வழங்கல்” முறையில் இயங்கும் சந்தைப் பொருளாதாரம்.

சோவியத் யூனியனில் சந்தை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் சந்தை பெருந்தெருக்களின் ஓரத்திலேயே இருந்தது. கோர்பசேவ் பதவிக்கு வரும் முன்னரே அங்கு தனியார் துறை இருந்தது. கம்யூனிச சமூகத்தில் அந்தளவு நெளிவு சுளிவுகள் இருந்தன.

பொருட்கள் விரைவில் பழுதடைவதா அல்லது தட்டுப்பாடு நிலவுவதா? பொருளாதாரத்தில் எது மிக மோசமானது என்பது எமக்குத் தெரியாது. திட்டமிட்ட பொருளாதாரத்தில் அடிக்கடி பொருட்களுக்கு தட்டுப்பாடு வருவதை தவிர்க்க முடியாது. நுகர்வோரின் தேவையை முன்கூட்டியே அறிந்து செயற்படுவதற்கு பொருளியல் அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஆனால், அது எப்போதும் இலகுவானதல்ல.

கம்யூனிச காலத்தில் அது ஒரு தவறாக இருந்தது. எல்லா இடங்களிலும் தையல் மெஷின் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், பிறகு ஊசி வாங்கக் கிடைக்காது என்பது மாதிரி. திருத்த வேலை செய்வதற்கு சில பகுதிகளை வாங்கிப் பொருத்த வேண்டி இருக்கும். ஆனால், அது கடையில் இருக்காது. நெதர்லாந்து வந்த பின்னர், “நீங்களே செய்து பாருங்கள்” (Do it yourself) கடைக்கு சென்று பார்த்தேன். அங்கே எல்லாம் தயார் நிலையில் பொருத்தக் கூடிய உபகரணங்களாக இருந்தன. அதெப்படி, நாங்களாகவே செய்து கொள்வதாகும்?

முதலாளித்துவமா, அல்லது கம்யூனிசமா, மனிதர்களின் படைப்புத் திறனை வளர்க்கிறது என்ற பட்டிமன்ற விவாதத்தில், ஏற்கனவே கம்யூனிசமே வென்று விட்டது. பற்றாக்குறை நிலவும் பொழுது, மனிதர்கள் தாமாகவே சிலவற்றை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தடவை எமக்கு புல்வெட்டும் கருவி தேவைப் பட்டது.

நிச்சயமாக அதற்கும் தட்டுப்பாடு தான். எனது அப்பா ஒரு வேலை செய்தார். நான் குழந்தையாக இருந்த நேரம் பாவித்த தள்ளுவண்டியின் அடிப்பாகத்தையும், பழைய சலவை இயந்திரத்தின் மோட்டாரையும் இணைத்து ஒன்றை உருவாக்கி விட்டார். இருபது வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பொருள் நன்றாக வேலை செய்கிறது.

சில விடயங்களை சொல்லிப் புரிய வைக்க முடியாது. இரட்டைத் தொலைபேசி இணைப்பு (Duplex line) அதில் ஒன்று. (ஒரே இணைப்பு இரண்டு வீடுகளுக்கு செல்லும்) நாங்கள் தொலைபேசினால் பக்கத்து வீட்டுக்காரர் பேச முடியாது. எனது சகோதரி மணித்தியாலக் கணக்கில் தனது காதலனுடன் வம்பளந்து கொண்டிருப்பாள். எரிச்சலில் மேல் வீட்டுக்காரி தொம் தொம் என்று நிலத்தில் குத்துவாள். மணித்தியாலக் கணக்காக வம்பளந்து கொண்டிருக்க அவளுக்கும் ஒரு காதலன் இருந்திருக்கலாம்.

பக்கத்து வீட்டுக்காரர் அறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எமக்கு தொலைபேசி பாவிக்க வேண்டி இருந்தால் ஒரு வேலை செய்வோம். இரகசியமாக சென்று Duplex பெட்டியில் குத்தி விட்டால் இணைப்பு துண்டிக்கப் பட்டு விடும். நிச்சயமாக, அன்று நாடு முழுவதும் இணைப்பு திடீரென துண்டிக்கப் படுவது அடிக்கடி நடக்கும்.

கம்யூனிச காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா தலைமுறைகளிலும், நாங்கள் வாழ்ந்த காலம் தான் சிறப்பானது. பொது இடத்தில் யாராவது கம்யூனிஸ்ட் கட்சியை குறை சொன்னால், அதிக பட்சம் அவரது உத்தியோகத்திற்கு ஏதாவது பிரச்சினை வரலாம். ஆனால், ஜெயிலுக்கு எல்லாம் போக வேண்டி வராது. அரசியல் கைதிகளுக்கான மீள் படிப்பு முகாம்கள் எல்லாம் கடந்த காலம். அதெல்லாம் முந்தி இருந்தன. சிலநேரம், ஒருவர் அமெரிக்க டாலர் சின்னம் வரைந்திருந்தால் கூட சந்தேகிக்கப் பட்ட காலம் ஒன்று இருந்தது.

கம்யூனிசத்தின் ஆரம்ப காலங்களில் சில அற்பமான விடயங்களையும் அவதானித்தார்கள். எனது அம்மா குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வெளியே போனால், முழங்காலில் கரும் புள்ளி குத்தி விடுவார்கள். அதே மாதிரி,அப்பா இறுக்கமான காற்சட்டை அணிந்து சென்றால் இடுப்புக்கு கீழே கத்திரிக்கோலால் வெட்டி விடுவார்கள்.

அனேகமாக இப்படியான வேலைகளை செய்வது பொலிஸ்காரர்கள் அல்ல. சாதாரண பொது மக்கள். அதற்கென கையில் சிவப்புப் பட்டி அணிந்த தொண்டர்கள் இருந்தனர். இறுக்கமாக காற்சட்டை அணிவது முதலாளித்துவ நாகரிகம். ஆகையினால் அதைக் கண்டால் வெட்டி விட்டார்கள்.

ஒரு தலைமுறைக்கு பிறகு சமுதாயம் மாறி விட்டது. அப்போதும், நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசலாம், செய்யலாம் என்று அர்த்தம் அல்ல. இருப்பினும், நாம் எல்லோரும் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தோம். எல்லோருக்கும் வேலை இருந்தது. பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதி என்பன இலவசமாக கிடைத்தன.

பெரும்பாலான மக்கள் போதுமான அளவு சம்பாதித்தார்கள். அத்துடன் விடுமுறைக்காக கொஞ்சப் பணம் சேமித்து வந்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், இரண்டாம் வருடம் சம்பளம் இல்லாத விடுப்பும் கிடைத்தது.

பெரிய நகரங்களில் உள்ள தெருக்கள் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் கழுவித் துப்பரவாக்கப் பட்டன. பூங்காக்கள் அழகாகவும், பசுமையாகவும் இருந்தன. எங்கேயும் நாசவேலைகள் நடக்கவில்லை. போதைவஸ்து பாவனை இருக்கவில்லை. அத்துடன் சமூகத்தில் பதற்றமும் நிலவவில்லை.

Dansen op de Muur நூலின் ஆசிரியர் – மரியா

பள்ளிக்கூடங்களில் மனித இன வரலாற்றின் வித்தியாசமான காலகட்டங்கள் பற்றி சொல்லித் தந்தார்கள். அந்த அடிப்படையில், இப்போது நாங்கள் “அபிவிருத்தி அடைந்த சோஷலிச சமுதாயத்தில்” வாழ்வதாக சொன்னார்கள். இப்போதுள்ள குறைபாடுகள் எல்லாம், கம்யூனிச காலகட்டத்தை அடையும் பொழுது தான் பூர்த்தியாக்கப் படும் என்றார்கள். அப்போது மனிதர்களின் தேவைக்கு ஏற்றவாறு எல்லாம் கிடைப்பதுடன், கடைகளில் பணம் இல்லாமல் எதுவும் வாங்கலாம் என்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் சொல்வதைப் போன்று நடக்குமாக இருந்தால் அழகாகத் தானிருக்கும்.

நேர்மையாகத் தான் சொல்கிறேன். அமெரிக்காவில் நூறில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்த நேரம், எங்கள் நாட்டில் கிரிமினல் குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடந்தன. அதற்குக் காரணம், சர்வாதிகாரமானது அயோக்கியர்களையும் அடிபணிய வைத்திருக்கலாம். சிலநேரம், யாருமே பணக்காரர் இல்லாத ஒரு தேசத்தில் திருடுவதற்கு எதுவும் இல்லை என்று திருடர்கள் நினைத்திருக்கலாம்.

விடுமுறையை கழிப்பதற்கு கருங்கடல் ஓரம் நிறைய கம்யூனிச இளைஞர் விடுதிகள் இருந்தன. அங்கு தங்குவது மிகவும் மலிவானது. ஒரேயொரு குறை என்னவெனில், விடியற் காலையில் எழுந்து நாட்டுப் பற்றுப் பாடல்கள் பாட வேண்டும். அணிவகுக்க வேண்டும். சில பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

ஆனால், மாலை நேரம் நெருப்புத் தணலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நேரம், எவராலும் காதல் உணர்வை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான், எனது பெற்றோர் என்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. நான் அவர்களது கடும் கண்காணிப்பில் இருந்து தப்புவதுடன் கர்ப்பமாக வீடு வந்து சேருவேன் என்று அஞ்சினார்கள்.

ஆகையினால், நான் “பிரிகேட்” பணி செய்ய செல்லும் காலங்களில் அரும்பும்   காதல்களுடன் திருப்திப் பட வேண்டும். பிரிகேட் பணிக் காலத்தில் நாங்கள் வயல்களில் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். நிச்சயமாக, அது விடுமுறை அல்ல. ஆனால், எனக்கு அப்படித் தெரிந்தது. ஆளரவம் இல்லாத மூலையில் ஒரு இளைஞனும், யுவதியும் செய்யும் குறும்புகளை மேற்பார்வையாளர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களும் இளம் வயதினர் தானே.

அப்படியான பிரிகேட் போவதற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வரும். அதற்கு சமூகமளிப்பது கட்டாயம் என்று, மீறினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுதப் பட்டிருக்கும். என்ன நடவடிக்கை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், தொண்டர் படையணிக்கு ஒருவர் தவறாமல் எல்லோரும் நேரத்திற்கு வந்து விடுவார்கள்.

எல்லா கம்யூனிச நாடுகளிலும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வது வழக்கம். போலந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த படியால், அங்கே ஒவ்வொரு வருடமும் உருளைக்கிழங்கு தோண்டுவது தான் வேலை. பல்கேரியாவில் வித்தியாசம். திராட்சைப் பழம், செரி பழம், அல்லது ஆப்பிள் பிடுங்க வேண்டி இருக்கும். கடலை பறிப்பது  என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு. நிலத்தை தோண்டி விரல்கள் கறுத்து விடும். முதுகு வலி வரும். அத்துடன் மழை பெய்தால் அந்த மண் சேறாகி விடும்.

அதை விட மோசமான விடயம், குறிப்பிட்ட அளவு செய்து முடிக்கவில்லை என்றால், மேற்பார்வையாளர் எல்லோருக்கும் முன்னால் திட்டுவார். அதற்காக நான் ஒரு வேலை செய்வேன். வாளியின் அடிப்பகுதியில் கொஞ்சம் மண் போட்டு வைத்திருப்பேன். நிறுக்கும் பொழுது கடலையை விட மண்ணின் நிறை அதிகமாக இருக்கும்.

நமது காவியத்திற்குள் யாராவது வந்து குழப்பி விடுவார்களா? ஆம், சில நேரம் கட்சி முக்கியஸ்தர்கள் விஜயம் செய்வார்கள். அந்த நேரம் பாதையை கூட்டி, அருகில் வளர்ந்திருக்கும் புற்களை வெட்ட வேண்டும். ஊத்தையான குப்பை வாளியை அகற்ற சொன்னார்கள். எங்கே கொண்டு போய் வைப்பது என்று மேற்பார்வையாளருக்கு தெரியவில்லை. அந்த இடம் கூடாது, இங்கே வேண்டாம் என்று சொல்லி சொல்லி ஆறு தடவைகளுக்கு மேல் அலைக்கழிக்கப் பட்டோம். கடைசியில் அது முதலில் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது.

அப்படியான தருணத்தில் அங்கு வருகை தரும் அரசியல்வாதி பற்றி நமக்குள் பேசிக் கொள்வோம். ஆனால், பொதுவாக சொன்னால், நாங்கள் ஒரு நாளும் அரசியல் பற்றிப் பேசுவதில்லை. இந்த கம்யூனிச தலைவர்கள் ஐந்தாண்டு திட்டத்தில் என்னவெல்லாம் புனைந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப் படவில்லை.

எங்களுடைய ஆர்வம், கவலை எல்லாம் எதிர்ப் பாலினத்தவர் பற்றியதாகவே இருந்தது. அவர்களது நடையுடை, தோற்றம் பற்றியதாகவே இருந்தது. ஆண், பெண் இனக்கவர்ச்சி பற்றியே அதிக அக்கறை கொண்டோம்.

யாரையாவது கவரும் வகையில் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டி இருந்தது. பிரபல அமெரிக்க பாடகி Tina Turner மாதிரி முடி அலங்காரம் அந்தக் காலத்து நாகரிகம். இதெல்லாம் பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், வெளியில் யாரும் என்னைக் கேட்க முடியாது.

அந்தக் முடி அலங்காரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, அப்பாவின் ஷேவிங் கிறீம் எடுத்து பூசிக் கொள்வேன். ஏன் தனது ஷேவிங் கிறீம் அடிக்கடி முடிகிறது என்று அப்பாவுக்கு அதிசயமாக இருக்கும். அந்தக் காலங்களில் தலைக்கு வைக்கும் ஜெல் கடைகளில் விற்பதில்லை. ஆகவே, எனக்கும் வேறு வழியில்லை. ஒரேயொரு குறை. மழை பெய்தால் எல்லாம் கரைந்து வழிந்து விடும்.

“உங்கள் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை இருக்கவில்லை. அது எப்படி சாத்தியமானது?” எனது துணைவர் பிராங் இடையிடையே இப்படி விசித்திரமான கேள்விகள் கேட்பார்.

இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். நிறையப் பேரை பிடித்து அர்த்தமில்லாத வேலைகளையும் செய்ய வைத்தால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீர்ந்து விடும். கடுமையாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்து சாதனை படைக்கிறார்கள் என்று பத்திரிகைகளே எழுதுகின்றன.

நிறையப் பேர் தாம் வேலை செய்யும் தொழிலகங்களில் உள்ள பொருட்களை கொண்டு சென்று அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்வார்கள். அதனால் சிலநேரம் உற்பத்தி தடைப் படும். அதற்காக யாரையும் பணி நீக்கம் செய்ய முடியாது. செய்வதற்கு ஒரு வேலையும் இல்லையென்றாலும் சம்பளம் கொடுத்தாக வேண்டும். இது தான் கம்யூனிசத்தின் பொருளாதார சுழற்சி.

மேற்குலக பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது :
உற்பத்தி குறைவு : தொலைந்து போ!
கேள்வி அதிகரிக்கிறது : உற்பத்தி முழுவதையும் சீனாவுக்கு கொண்டு போ!
சீனாவில் செலவு அதிகம் : உற்பத்தியை மலேசியாவுக்கு இடம் மாற்று!
எதிர்ப்புப் போராட்டம் : இன்னமும் உயிரோடு இருக்கிறாயா?
உச்ச கட்ட சம்பளம் : வங்கியில் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்று சொல்லு!
பொருளாதார நெருக்கடி : நெருக்கடிக்கு காரணமான வங்கிகளுக்கு ஆதரவளி. செலவை மக்கள் தலையில் கட்டி விடு!

உண்மையை சொன்னால், எந்த பொருளாதார சுழற்சி நல்லது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கம்யூனிசத்தில் மக்களுக்கு பெருமளவு திருப்தி கிடைத்தது. மேற்குலகில் மரணப் போட்டி நிலவுகிறது. இரும்புத் திரைக்குப் பின்னால் போட்டி என்ற சொல்லை யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை.

விளம்பரம் ஒரு அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம். அது மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து மேலதிக பணத்தை எடுக்கிறது. எங்கள் நாட்டில் விளம்பரங்களால் மூழ்கடிக்கப் படாத படியால் தொடர்ந்து புதிய பொருட்களை வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் படவில்லை. அதனால் பல விடயங்கள் இலகுவாக நடந்தன.

உன்னுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யவில்லையா? நல்லது. நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடலாம். ஒரு கார் வாங்குவதற்காக பதிவு செய்து விட்டு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? அது பற்றி கவலைப் படாமல் வாழ்க்கையில் நல்ல பக்கத்தை பாருங்கள். “வாகன வரி கட்டத் தேவையில்லை. காற்றுப் போன டயர் மாற்றத் தேவையில்லை. சர்விஸ் செலவு இல்லை…”

மொத்தத்தில் நிறைய நேரம் மிச்சம் பிடிக்கலாம். கம்யூனிச காலகட்டத்தில் “மாற்றி யோசிக்க” கற்றுக் கொண்டோம். மேற்குலக பொருளாசை தரும் போதைக்குள் மூழ்குவதற்கு முன்னர் இது ஒரு நல்ல பயிற்சி.

(தொடரும்)
நன்றி : தோழர் கலையரசன், கலையகம்


 

பயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !

0

பயிர் இன்ஸ்யூரன்ஸ் : பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : டிசம்பர் 08 2017,  வெள்ளிக் கிழமை,
நேரம் : காலை 10 மணி, 
இடம் : பனகல் கட்டிடம், தஞ்சை.

பங்கேற்போர் : மக்கள் அதிகாரம், விவசாய சங்கத் தலைவர்கள்.

அனைவரும் பங்கேற்பீர் !!

ன்பார்ந்த விவசாயிகளே!

விவசாயம் லாபமீட்டும் தொழிலல்ல, மனித சமூகம் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் என்பதை உலகம் அறியும் இந்த ஆதாரத்தை அளிக்கும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம், விளைச்சல் வீழ்ச்சி, விலை வீழ்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, கடன் தொல்லை என சொல்ல முடியா தொல்லைகளால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் தற்கொலையை நாடுகின்றனர். வாயாலே வடை சுட்டு, ஆட்சியைப் பிடித்த மோடி “விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம், நட்டத்தை ஈடுகட்ட புதிய பயிர்காப்பீட்டுத் திட்டம்” என வாய்சவடாலடித்தார்.

ஆனால், கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்தும், மத்திய மாநில அரசுகளின் கஜானாவிலிருந்தும், பல்லாயிரம் கோடி பணத்தைப் பிரிமியத் தொகையாகச் சுருட்டிக்கொண்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யாமல் இழுத்தடிப்பது, நிராகரிப்பது என மோசடி செய்கின்றன.

மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளைக் கைகழுவி விடுகின்றன. நாடு முழுவதும் தமிழகம் முதல் குஜராத் வரை விவசாயிகள் போராடுகின்றனர். தமிழக டெல்டா விவசாயிகள் தலைமடை திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் தொடங்கி, கடைமடை வேதாரண்யம், நாகை வரை அன்றாடம் போராடுகின்றனர்.

இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு சில இடங்களில், ஒரு சிலருக்கு இழப்பீடு வழங்கிவிட்டு சாக்கு போக்கு காட்டி ஏமாற்றுகின்றன. நட்டமடைந்த எல்லா விவசாயிகளும் இன்ஸ்யூரன்ஸ் மூலம் பயன்பெறுவதில்லை என்பதே நடைமுறை உண்மை.

பயிர் இன்ஸ்யூரன்ஸ் யாருக்குலாபம்?

வட்டிக்கு விடுவது, சீட்டு பிடிப்பது, லாட்டரி சீட்டு நடத்துவது போல் இன்ஸ்யூரன்ஸ், லாபம் சம்பாதிக்க முதலாளிகள் நடத்தும் தொழில். பயிர் இன்ஸ்யூரன்ஸ் தொழிலில் இந்தியாவின் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் ஒன்பது நிறுவனங்கள் டாடா, அம்பானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்.

மோட்டார் – வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு இவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரும் தொழிலாக பயிர் இன்ஸ்யூரன்ஸ் வளர்ந்துள்ளது. தனியார் முதலாளிகள் தங்கள் லாபத்தை அதிகரிக்க எல்லாவிதமான தில்லு முல்லு, பித்தலாட்டம் மோசடிகளில் ஈடுபடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. அத்தகைய முதலாளிகளிடம் (அரசு உட்பட) விவசாயிகளின் பாதுகாப்பை ஒப்படைத்தால் என்ன நடக்கும்? அதுதான் இப்போது நடக்கிறது.

இந்தியாவில் தனியார்மயம் வேகமாகப் புகுத்தப்பட்ட பிறகு இன்ஸ்யூரன்ஸ் துறையில் தங்களை அனுமதிக்குமாறு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன் விளைவாக அரசின் ஏகபோகமாக இருந்த இன்ஸ்யூரன்ஸ் துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது.

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மருத்துவ சேவையை தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளிலும் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இன்று பல்லாயிரம் கோடி வரிப்பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஏழை எளிய மக்களே சரியான மருத்துவம் கிட்டாமல் சாகின்றனர்.

இதே போல்தான் பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டமும். ஒவ்வொருவரிடமும் பிரீமியம் தொகையை வசூலித்து கொண்டு “ஊர் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து விவசாயம் அழிந்தால்தான் நட்டஈடு தருவோம்” என்ற விதி எவ்வளவு பெரிய மோசடி என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

2016 – 17 ம் ஆண்டுக்கு இந்தியா முழுவதும் வசூலிக்கப்பட்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியத்தொகை 22,437 கோடி ரூபாய். விவசாயிகளுக்கு வழங்க ஒத்துகொண்ட தொகை 8,087 கோடி வழங்கிய தொகையோ 714 கோடி. அதாவது 97 சதவீத மக்கள் பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஏப்பம் விட்டு விட்டன. இதை விவசாயிகளுக்கு அரசே கொடுத்திருந்தால், 21,000 கோடி மிச்சம்.

எவ்வளவோ நலத்திட்டங்களுக்குச் செலவிடலாமே! குஜராத்தில் எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனங்கள் பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி செய்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே, “பயிர் இன்ஸ்யூரன்ஸ்” முதலாளிகள் கொள்ளையடிக்கும் திட்டமேயன்றி விவசாயிகளை பாதுகாக்கும் திட்டம் அல்ல.

எதற்கு இந்த அரசாங்கம்?

கல்விக்குக்கடன், மருத்துவத்திற்கு விவசாயித்திற்கு இன்ஸ்யூரன்ஸ், காசு கொடுத்தால்தான் நல்ல குடிநீர்! குப்பை பொறுக்கி பிழைக்க முயன்றாலும் ஜி.எஸ்.டி வரி. அதாவது, அரசு மக்களுக்கு எதையும் செய்யாது. மக்கள் எதைச் செய்தாலும் அரசுக்குக் கப்பம் கட்ட வேண்டும் இதுதான் மோடி அரசின் கொள்கை. அரசுத்துறை வங்கிகளிலிருந்து பல இலட்சம் கோடி கடன் வாங்கி முதலாளிகள் ஏப்பம் விட்ட தொகையை வசூலிக்காமல் அந்த நட்டத்தை ஈடுகட்ட ஒன்றேகால் லட்சம் கோடி மக்கள் பணத்தை வங்கிகளுக்கு வழங்கி காப்பாற்றுகிறது மத்திய அரசு. இதுதான் மோடியின் திட்டம்.

இந்திய அரசியல் சட்டம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என ஆணையிடுகிறது. ஆனால், அரசு கைவிரிக்கிறது. எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் அகற்ற வேண்டும் என்கிறது சட்டம். அரசு, மக்களை மேலும் மேலும் போண்டியாக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் உத்திரப் பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மடிந்தனர். கொலைகளும் தற்கொலைகளும் அன்றாடம் செய்தித்தாள்களை நிறைக்கின்றனர்.

மக்களிடம் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு இவற்றை அரசு செய்யாது, காப்பீடு செய்து கொள், காசு கொடுத்து வாங்கிக்கொள்! என்றால் இந்த அரசை ஏன் சுமக்க வேண்டும்? மக்களுக்கு எதிராகக் செயல்படும் இந்த அரசை நம்புவதால் என்ன பயன்?

விவசாயிகளே பயிர் இன்ஸ்யூரன்ஸ் என்பது ஒரு மாபெரும் மோசடி. எரியும் வீட்டில் இருப்பதையும் பிடுங்கும் அராஜகம், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் முதல் கடமை. (அதாவது அரசின் கடமை) மலிவான விலையில் இடுபொருள், கட்டுப்படியான விலையில் கொள்முதல், இயற்கை இடரால் ஏற்படும் இழப்பு அனைத்தையும் அரசே முழுமையாக ஈடு செய்தல். இதுதான் விவசாயிகளைப் பாதுகாக்கும் உண்மையான காப்பீடு. இந்தக் கோரிக்கைக்காக ஒன்றிணைவோம்! போராடுவோம்! வென்றிடுவோம்!

மத்திய மாநில அரசுகளே!

  • பயிர் காப்பீடு மோசடியை உடனே கைவிடு !
  • மலிவான இடுபொருள், கட்டுபடியான விலையில் அரசே கொள்முதல் செய் !
  • விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்திற்கும் பொறுப்பாகு !
  • அனைத்து விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய் !
  • நட்டமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை கொடுக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்கு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 94431 88285 – 96263 52829 – 89037 36020.


 

ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?

5

“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா” – என்ற வசனம் இப்போது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, பத்திரிகையாளர் மாலனுக்குப் பொருந்தும். பொதுவாக ஊடக விவாதங்களில் மென்மையான குரலில் பா.ஜ.க.வுக்கு முட்டுக்கொடுக்கும் கலையை கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்ததில், ஒரு தொழில்முறை தேர்ச்சியை பெற்றுவிட்டார் மாலன்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது எந்த டி.வி.க்கு பேச போனாலும், தருமபுரி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த ஊர் முழுக்க, முழுக்க டிஜிட்டல் மயமாகிவிட்டது. பணமில்லா பரிவர்த்தனைக்குப் பழகிவிட்டது என்று மீண்டும், மீண்டும் உருப்போட்டுக் கொண்டிருந்தார்.

ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் போராட்டங்கள், இறைச்சிக்கு மாடு விற்கத் தடை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., அனிதா தற்கொலை என சப்ஜெக்ட் எதுவானாலும் இண்டு, இடுக்குகளில் புகுந்து பா.ஜ.க.வையோ, அவர்களின் பினாமியான எடப்பாடி ஆட்சியையோ ஆதரிப்பதில் மாலன் ஒரு துறைசார்ந்த வல்லுனராக காட்சி தருவார்.

ஆனால், ரொம்ப நேரம் ஒத்த காலில் நின்றதால் கால் வலித்ததோ என்னவோ, இப்போதெல்லாம் நேரடியாக உடைத்துப் பேசத் தொடங்கிவிடுகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு மாலன் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

எதிர்வினை

நாத்திகம் பேசினீர்கள்
பக்தி செழித்தது
ஜாதியை ஒழிக்கப் புறப்பட்டீர்கள்
சங்கங்கள் வலுத்தன
தமிழ் முழங்கினீர்கள்
ஆங்கிலம் மழலையர் மொழியாச்சு
கணினிமயத்தை எதிர்த்தீர்கள்
கைகள் தோறும் ஒரு கணினி
மார்க்சீயம் பேசினீர்கள்
தரணி எங்கும் தாராளமயம்

தேசபக்தியை இகழ்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது

இதில், நாத்திகம், சாதி ஒழிப்பு, தமிழ்ப் பற்று, மார்க்சியம், தேசவிரோதம்… – இதையெல்லாம் ஒரு பக்கம் நிறுத்துகிறார் மாலன். இவை அவருக்குப் பிடிக்காத அயிட்டங்கள். அவர் எதிர் வரிசையில் நிறுத்துகிற ஆத்திகம், சாதிப்பற்று, தமிழ் வெறுப்பு, தாராளமயம், தேசபக்தி… இவை எல்லாம் அவருக்குப் பிடித்த அயிட்டங்கள். பிடித்தவை நாட்டில் வளர்கின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

அதற்கான ‘உரிமை’ அவருக்கு உள்ளது. ஆனால் பிடித்தவை வளர்வதற்குக் காரணமே பிடிக்காதவைதான் என்கிறார். எனினும், இந்த கண்டுபிடிப்புக்கு மாலன் காப்புரிமை கோர முடியாது. ஏனென்றால் நாட்டில் இந்துத்துவ சக்திகள் இத்தனை பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு என்ன என்ற தலைப்பில் தமிழ் இந்துவில் பத்திரிகையாளர் சமஸ் இதே டைப் ஆராய்ச்சியை ஏற்கெனவே செய்துவிட்டார். அந்த வகையில் மாலன் வண்டியில் ஏறியது கொஞ்சம் லேட்டுதான்.

எனினும் இவர்கள் சொல்ல வருவது என்ன? ‘முற்போக்கு சக்திகள் தீவிரமாக செயல்படாததன் விளைவுதான் மதவாதம் இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது. உங்கள் செயலற்ற தன்மைதான் அவர்கள் வளர்வதற்குக் காரணம். அதாவது அவர்கள் வளர்ந்திருப்பதற்கு நீங்கள்தான் காரணம்’

மதவாதம் வளரவும், தமிழ்ப்பற்று மங்கவும், சாதியவாதம் தலைதூக்கவும் யார் காரணம் என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் யார் தரப்பில் இருந்து இந்த சிக்கலை அணுகுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ‘எல்லாம் உங்க நன்மைக்குதான் சார் சொல்றோம்’ என்று நைச்சியமாகப் பேசும் இவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியாதா?

தமிழ் அழிகிறது என்றால் அதற்குக் காரணம், ஆங்கில வழிக்கல்வி திணிக்கப்படுகிறது; அரசுப் பள்ளிகளில் தரமான தமிழ் வழிக்கல்வி வழங்கப்படவில்லை. முற்றுமுதலாக அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வியை வழங்கும் தனியார்ப் பள்ளிகள் எங்கும் நிறைந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை ஓர் இயல்புபோல மாற்றப்பட்டு மக்கள் மனங்கள் ஆங்கில வழிக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மாலன் இதை எல்லாம் ஏற்கவில்லை. ‘இங்கிலீஸ் வளர்ந்ததுக்கு காரணம் நீங்க தமிழ் வாழ்கனு சொன்னதுதான்’ என்கிறார்.

இப்படியே, பக்தி வளர்ந்ததுக்கு நாத்திகம் பேசினதுதான் காரணம். சாதி சங்கம் வளர்ந்ததுக்கு சாதி ஒழிகன்னு சொன்னதுதான் காரணம்… என்று முதுகுப்பக்கத்தில் இருந்து முணகுகிறார். இது பின்நவீனத்துவ அறிஞர்களே செய்திடாத கட்டுடைப்பு. நாத்திகம் பேசினால் பக்தி எப்படி சார் செழிக்கும்? ‘ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் புள்ளைப் பொறக்குமா? அய்யப்பன் பிறப்பு அறிவுக்கு எட்டுமா?’ன்னு திராவிடர் கழகம் கேட்டால், அதுக்குப் பதில் சொல்லுங்கள். ‘இன்னமும் எங்க ஊர்லயெல்லாம் ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும்தான் புள்ளைப் பொறக்குது’ என ஆதாரத்தைக் காட்டுங்கள். அதை விட்டுவிட்டு, இதெல்லாம் ஒரு பேச்சா?

டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் பக்தி என்னதான் டிஜிட்டல் வேடம் போட்டாலும், இராம. நாராயணன் வகை பக்திப் படங்களை இப்போது யாரும் எடுப்பதில்லை. பக்தி மணம் கமழும் பண்டிகை நாட்களில் கூட பட்டையைக் கிளப்பும் குத்துப் பாடல்களோ, படங்கள்தான் டிவி சானல்களின் டிஆர்பியை கூட்டுகிறது. இதுதான் திருவாளர் மாலன் வியந்தோதும் பக்தியின் உண்மை நிலை.

டீயை விட டீ கிளாஸ் சூடாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. உள்ளே இருக்கும் டீயின் சூட்டை டம்ளர் தனதாக்கிக்கொள்கிறது. மாலனும் அவ்வாறுதான். அவர் பா.ஜ.க.வுக்கோ, ஆளும் அ.தி.மு.க.வின் பா.ஜ.க. பிரிவுக்கோ ஓர் இன்னல் என்றால் உள்ளம் குமுறி மனதார பாதிக்கப்படுகிறார். அந்த வகையில் கேரளப் பெண் ஹதியா திருமண சிக்கலில் இப்போது மாலன் அதிரடி ஸ்டேட்மெண்ட் ஒன்றை எழுதியிருக்கிறார். அதையே ஊடக விவாதங்களிலும் பேசி வருகிறார்.

ஹதியா ஒரு 24 வயது பெண். அவருக்கு மதம் மாறும் உரிமையும், விரும்பிய துணையை தேர்வு செய்துகொள்ளும் உரிமையும் உண்டு. அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்தில் ஆஜராகி தான் விரும்பியே மதம் மாறினேன் என சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது இதில் கோர்ட் தலையிட்டு எப்படி திருமணத்தை ரத்து செய்ய முடியும்? எந்த சட்டப் புத்தகத்தின் உதவியுடன் இதை லவ் ஜிகாத் என நீதிமன்றம் அறிவிக்கிறது?

ஹதியாவின் கணவர் ஷபின் ஜஹான் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கு ஒரு சின்னஞ்சிறிய ஆதாரத்தைக் கூட இதுவரை காட்ட முடியவில்லை. அவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இருக்கிறார் என்பது எப்படி தீவிரவாத செயலாக இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரானவுடனேயே ஒரு ஆட்கொணர்வு மனு அதன் நோக்கத்தை பூர்த்தி செய்கிறது. ஆனால் இதில் நீதிமன்றம் வரம்பு மீறி தலையிட்டு ஷபின் ஜஹானின் ஃபேஸ்புக் பக்கத்தை எல்லாம் ஆராய்ச்சி செய்கிறது. இதை எல்லாம் கண்டுகொள்ளவே செய்யாத மாலன், ‘ஷபின் ஜஹான் சார்பாக கபில்சிபல் உள்ளிட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அவருக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு பணம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?’ என்று கேட்கிறார்.

இந்த ஆபாசமான வாதத்தைதான் நீட் அனிதா விஷயத்திலும் கேட்டார்கள். மாலன் போன்றோர் தங்களைப் போன்றுதான் ஒட்டுமொத்த உலமும் குறுகலாக சிந்திக்கிறது என எண்ணிக் கொள்கின்றனர். ஜனநாயகம் மடிந்துவிடக்கூடாது என்று எண்ணுவோர் இன்னும் மிச்சமிருக்கின்றனர். ஹதியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகள் வக்கீல் ஃபீஸ் கொடுத்தால் இவருக்கு என்ன பிரச்னை? ஷபின் ஜஹான் சார்ந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி செலவு செய்து வக்கீல் அமர்த்தினால் மாலனுக்கு என்ன சிக்கல்?

‘கேபியஸ் கார்பஸ் மனு விசாரணையில் இருக்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு நீதிமன்றம்தான் கார்டியனாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஹதியா எப்படி நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் திருமணம் செய்துகொள்ளலாம்?’ எனக் கேட்கிறார் மாலன். நீதிமன்றத்துக்கு தகவல்தான் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டியது இல்லை. அப்படியே தகவல் சொல்லவில்லை என்றாலும், ‘எனக்கு ஒரு வார்த்தை சொல்லாம இப்படி பண்ணிட்டீங்களே’ என ஒரு பெரிய மனித தோரணையில் நீதிமன்றம் வருந்தலாம். ஆனால், கண்டிப்பதற்குக் கூட அதிகாரம் இல்லை. ஆனால் நீதிமன்றமோ திருமணத்தையே ரத்து செய்து, அதற்கு பயங்கரவாத உள்நோக்கம் கற்பிக்கிறது.

பார்ப்பனியத்தை விட்டுக்கொடுக்காமல் முற்போக்கு உடையையும் தரித்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு வயதாக, வயதாக அதுவரை தங்களின் இயல்பு குணத்துக்குப் பொருந்தாத; ஆனால் இறுக்கப் பிடித்துக்கொண்டு இழுத்து வந்த சில முற்போக்கு அம்சங்களையும் வலி தாங்காமல் கீழே போட்டுவிடுகின்றனர். மாலனும் இதற்கு விதிவிலக்கல்ல.

மாலனின் முகநூல் பக்கத்துக்குச் சென்றால் பல அம்சங்களுக்கும் பொங்கியிருக்கிறார். ஜி.எஸ்.டி.யால் நாடு சுபிட்சம் அடைந்துவிட்டது என எங்காவது யாராவது எழுதியிருந்தால் அங்கு பிரசன்னமாகிவிடுகிறார். அந்த இணைப்புகளை பகிர்ந்து, ‘நாடு எப்படி வளர்ந்துள்ளது. முதலீடுகள் எப்படி குவிகின்றன என்று பாருங்கள்’ என்று பெருமிதம் அடைகிறார். அவர் அப்படியே கிளம்பி திருப்பூருக்கு சென்று வர வேண்டும்.

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால், அந்த தொழில் நகரம் எப்படி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது என்பதை, திருப்பூரின் தொழிலாளர்கள் அல்ல… முதலாளிகளே சொல்வார்கள். திருப்பூர் என்ற ஒரு நகரம் உருவானதில் இருந்து இப்படி ஒரு வீழ்ச்சியை கண்டதில்லை என்று அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். திருப்பூர் மட்டுமல்ல… எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அடிமேல் அடி. சிறு வியாபாரிகள் முதுகொடிந்து கிடக்கின்றனர். ஆனால், மாலன் கண்களுக்கு மட்டும் வளர்ச்சி தெரிவது எப்படி?

அது காமாலை கண் அல்ல. அதிகாரத்தின் தாழ்வாரத்தை அண்டிப் பிழைக்கும் கண்கள். இவர்கள் பிரச்னைகளை மக்களின் கோணத்தில் இருந்து பார்க்க மாட்டார்கள். வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. அது இவர்களுக்கு இயல்பிலேயே வருவதில்லை. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இயற்கைக் கூட்டணியாக இருப்பதைப் போல, மாலன்கள் அதிகார வர்க்கத்துடனான இயற்கை கூட்டணியில் ஆயுட்கால உறுப்பினர்கள்.

கீரன்


 

பாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து – கருத்துக் கணிப்பு

18

தமிழ் தி இந்துவின் ஆசிரியர் சு.சாமியா ?

“அயோத்தியில் ராமர் பிறந்த இடம் யாருக்கு சொந்தம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்” இது இன்றைய (5.12.2017) தமிழ் தி இந்து நாளேட்டின் 10 -ம் பக்கத்தில் வந்துள்ள செய்தியின் தலைப்பு. விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளைதான் தொடங்கப்போகிறது. ஆனால் “அது ராமர் பிறந்த இடம்தான்” என்று இன்றைக்கே தீர்ப்பளித்து விட்டது தமிழ் இந்து.

“பாபர் மசூதியை சங்க பரிவாரத்திடம் ஒப்படைப்பதுதான் நீதியானது” என்பது தமிழ் தி இந்து நாளேட்டின் கருத்தாக இருந்தால், அதனை தலையங்கத்தில் எழுதுவதுதான் “பத்ரிகா தர்மம்”. NEWS -க்கும் VIEWS -க்கும் இடையிலான வேறுபாடு பற்றி இந்து ஆசிரியர் குழுவுக்கு நாம் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

இதே செய்திக்கு இன்று தினமணி கொடுத்திருக்கும் தலைப்பு இது – “அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை”

செக்யூலர் “இந்து”வின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ள தினமணி தலைப்பு ஒரு உரைகல்.

நமக்குத் தெரிந்தவரை, பாபர் மசூதி இடிப்பை எதிர்ப்பதுதான் இந்துவின் தலையங்க நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. தற்போது “சங்க பரிவாருக்கு ஜே” என்று “எடிட்டோரியல் பாலிசி” மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக, சொந்த தன்மானத்தையோ சொந்த சொத்துகளையோ அடுத்தவனுக்கு உரிமையாக்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை இந்து ஆசிரியர் குழுவுக்கும் உண்டு. அடுத்தவன் உடைமையை பிடுங்கிக் கொடுக்கும் தொழிலுக்குப் பெயர் நிச்சயமாக ஊடகவியல் அல்ல.

“டிசம்பர் 5 ஆம் தேதியன்று விசாரணை தொடங்குகிறது” என்ற இதே செய்தி ஆகஸ்டு 12 -ம் தேதியன்றும் தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது. அப்போது அதன் தலைப்பு கீழ்க்கண்டவாறு இருந்தது.

“ராமஜென்ம பூமி – பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம்? – உச்ச நீதிமன்றம் டிசம்பர் 5 -ம் தேதி விசாரணை” அதிலும் முதலில் ராமஜென்ம பூமி, அப்புறம்தான் பாபர் மசூதி. இன்றைக்கு அதே செய்தியின் தலைப்பு தலைகீழாக மாறி, அந்த இடத்தின் பெயர் ராமர் பிறந்த இடம் என்று ஆகிவிட்டது. நான்கே மாதத்தில் இந்த “முன்னேற்றம்”.

இவையெதுவும் தற்செயல் நிகழ்வாகத் தெரியவில்லை. “அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு தீபாவளி: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை” என்று தலைப்பிட்டு நேற்று ஒரு செய்தி வெளியானது. ஒரு செய்தி என்ற முறையில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. முஸ்லீம் மக்களை அவமானப்படுத்தி ஆத்திரமூட்டுவதுதான் அந்த “செய்தி”யின் நோக்கம்.

ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, சு.சாமியின் இத்தகைய அறிக்கைகளை வெளியிட மறுத்த காரணத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலைகளைப் பற்றி சித்தார்த் வரதராஜன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இன்று சு.சாமி வகையறாக்களே தமிழ் இந்துவின்  DEFACTO ஆசிரியர் குழுவாகி விட்டார்கள் போலும்!

தெற்கில் சூரியன் – வடக்கில் பார்ப்பனியம். சாமர்த்தியம்தான்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த செய்திக்கு இந்து நாளேடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இப்படி ஒருசெய்தி வெளியானதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் ஊடக அறத்திலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் தமிழ் தி இந்துவுக்கு தங்களது கண்டனத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இது தமிழ் இந்து தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இன்று இதனை கண்டிக்கத் தவறினால் இந்த நோய் பரவும். மற்ற ஊடகங்களும் கூச்சமின்றி மதவெறியப் பரப்பத் தொடங்குவார்கள். பிறகு ஏதாவது சொல்லி அதற்கு சப்பை கட்டுவார்கள்.

காவி இருள் தமிழகத்தின் மீது கவியத் தொடங்கியிருக்கிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!

இன்றைய கருத்துக் கணிப்பு:

பாபர் மசூதி இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதும் தமிழ் தி இந்துவின் கருத்து ….

  • சரியானது
  • கண்டனத்திற்குரியது

 

மோடி ஆட்சியில் பறிபோகும் தொழிலாளர் உரிமை !

0

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில், பெங்களூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தொழிற்புரட்சி ஏற்பட்டு ஐரோப்பா கண்டத்தில் ஆலைகள், சுரங்கங்கள், நெசவாலைகள் என எந்திரமயமாக்கப்பட்ட தொழில்கள் தொடங்கப்பட்டன.

இதன் காரணமாக சமூகம் முதலாளித்துவ வர்க்கம், உழைப்பாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்களாக பிரிக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் அதிக வேலை நேரம், குறைந்த கூலி என எந்தவித சலுகையுமில்லாத வாழ்க்கை வாழ்ந்தது. முதலாளித்துவ வர்க்கமோ, தொழிலாளிகளைச் சுரண்டி கொழுத்த இலாபத்தில் செழித்திருந்தது.

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, 1848-ம் ஆண்டு வெளிவந்த பின்னர் 1850 முதல் 1871 வரை உலகெங்கும் மிகப்பெரிய போராட்டங்களும் புரட்சிகளும், போர்கள் நடந்தன. இதில் 1851 சீனப்புரட்சி, தாய்ப்பின் விவசாயிகளின் எழுச்சி, 1857வது வருடம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1871 ஆம் ஆண்டு அல்ஜீரியாவின் எழுச்சி போராட்டம் ஆகியன குறிப்பிடத்தக்கவை.

இந்த காலகட்டத்தில் தான் பல தொழில்கள் தொடங்கப்பட்டு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டினர். ஆனால் தொழிலாளர்களோ தன்னுடைய பணி பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக போராடிக் கொண்டிருந்தனர். இந்த வகையிலே 1886 சிகாகோ வீதியிலே எட்டு மணி நேர வேலைக்காக 12,000 தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிகாகோ நகரில் மெக்கார்மிக்ஸ் என்ற தொழிற்சாலையில் 2,500 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, ஹேமார்க்கெட் ஸ்கொயர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு ஆல்பர்ட் ஸ்பைக், ஆல்பர்ட் பர்சன்ஸ், சாமுயல் பெல்ட்மேன் ஆகியோர் உரையாற்றுகையில் போலீஸ்காரர்களால் மூண்ட கலவரத்தில்  போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. 4 தொழிலாளர்கள் பலியானார்கள், 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 1887-ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டனர்.

இம்மாதிரியான தியாகத்தின் வாயிலாகத்தான் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு என்ற உரிமை கிடைத்தது. 1886-க்கு பிறகு 1905 முதல் 1917 வரை ரஷ்யாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1917 நவம்பரில் ஆலைகள், விவசாய நிலங்கள் என அனைத்தும் உழைப்பவருக்கே சொந்தம் என்று தோழர் லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது.

அந்த நவம்பர் புரட்சிக்குப்பின், ரஷ்யாவில் முதலாளித்துவம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. பண்ணை நிலங்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. படையாட்கள், சமாதானம் குறித்து பேசினார்கள். இது வரலாறு.

1917-க்கு பிறகு பல நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கம் கண்டு போராடினர். அதன் காரணமாக சிலி, கியூபா, அல்பேனியா என பல்வேறு நாடுகளில் இராணுவ சர்வாதிகாரிகள் ஒழிக்கப்பட்டு அங்கு குடியாட்சிகள் அமர்த்தப்பட்டன. அதே நேரத்தில் ஹங்கேரி, போலந்து, வியட்னாம், வட கொரியா போன்ற பல நாடுகளில் சோசியலிஸ்ட் அரசுகள் உருவாகின. இதன் காரணமாக 1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது.

அதன் விளைவாகத்தான் ஜான் மெனாட் கீன்ஸ் கோட்பாடு வந்தது. ரூஸ்வெல்ட் தலைமையில் முதலாளித்துவ நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்றவை தனது கோர முகத்தை மாற்றிக்கொண்டு, முதலாளித்துவ அரசுகள் அதன் மக்களுக்கு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, குடியிருப்பு என அனைத்து சலுகைகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தார்கள்.

அக்காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற காலனிய நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக 1926-ல் இந்தியாவில் தொழிற்சங்க சட்டம் வருகிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, போராடும் உரிமை என மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனுடைய மாபெரும் தியாகத்தினால் பாசிசம் வீழ்த்தப்பட்டது. உலகம் முழுவதும் சோசலிசத்தின் தாக்கம் உண்டாகிறது. இந்த பின்னணியில் தான் இந்தியாவில், 44 தொழிலாளர் சட்டங்கள் வருகின்றன. சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, குடியுரிமை, பணிப் பாதுகாப்பு, LTC, ESI, PF, தொழிற்தகராறு சட்டங்கள், தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர் துறை என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டன. அன்று தொழிலாளிக்கு, ESI, BASIC PAY, PF, பஞ்சப்படி, குடியிருப்பு என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் மத்திய அர்சின் தொழிற்சாலைகளிலும், தனியார் வங்கி, இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றிலும் கூட அனைத்து தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்கள். ஆனால், இந்த நிலைமை 1980 வரைதான் நீடித்தது.

1980-ல் சுமார் 20% தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள். 80% தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருந்தனர். இந்த நிலைமை 1990-ல் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் புகுத்தப்பட்ட பிறகு, 90% பாதுகாப்பற்ற தொழிலாளர்களாக மாறியது. தற்போது 97% தொழிலாளர்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.

1971-ல் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள் (CONTRACT REGULATION AND ABOLITION ACT) ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளியாக ஆக்கக்கூடிய சட்டம் அது. 1976-ல் மத்திய அரசின் அரசாணை ஒன்று வருகிறது. அந்த அரசாணையின் படி துப்புரவு, கேண்டீன், கார்டனிங், செக்கியூரிட்டி ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கூறியது அந்த அரசாணை.

இந்த சட்டத்தை முன்மாதிரியாக வைத்து நடந்த வழக்கில்தான் பல ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். 1997-ல் நடந்த ஏர் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால் அவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. சுமார் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாயினர்.

வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், 2002-ல் மந்திரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் துப்புரவு, கேண்டீன், கார்டனிங், டிரைவிங் முதலிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்க தேவையில்லை என்று தீர்மானம் போட்டார்கள். 2001-ல் செயில் (STEEL AUTHORITY OF INDIA) வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தகைய  நடவடிக்கையின் மூலம் இந்த நாட்டின் 100 கோடி கைகளும், கால்களும் இலவசம் என்று அறிவித்து விட்டார்கள். ஆகையால் தான் மோடி நாடு நாடாகச் சென்று எங்கள் நாட்டில் உள்ளதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூவி கூவி அழைக்கிறார். வந்தால் அவர்களுக்கு இந்த கைகளும் கால்களும் இலவசம், உறவுகள் குடும்பம் ஏதுமற்ற ஒரு எந்திரத்தைப்போல இவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாருதி தொழிற்சாலையில் 80% ஒப்பந்த தொழிலாளர்கள். ஹுண்டாய் கம்பெனியில் 82% ஒப்பந்த தொழிலாளர்கள். அரசு அலுவலகங்களிலும் பெரும்பான்மை ஒப்பந்தத் தொழிலாளர்கள்.  ஒப்பந்த தொழிலாளிக்கு ஊதியம் ரூ.7000 அல்லது ரூ.8000-ம் தான்.

மத்திய அரசும், மாநில அரசும், நீதிமன்றங்களும், தொழிலாளர் துறையும், காவல்துறையும் தொழிலாளர்களை கைகழுவி விட்டார்கள். நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர்களை நியமிப்பதில் HIRE AND FIRE (நினைத்தால் பணியில் அமர்த்து துறத்து) விதிமுறையையே கையாள்கின்றன.

பெங்களூரில் துப்பரவு தொழிலாளர்கள் துடைப்பம் கேட்டார்கள் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் செருப்பு கேட்டார்கள் என்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். சங்கம் வைத்தால், சங்கத்தில் பெயர் பதிவிட்டுள்ள அனைவரும் வீட்டிற்கு போகவேண்டியதுதான்.

இந்த மாதிரியான நிலைமையில்தான், இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் 3 கோடியே 22 லட்சம் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 4 கோடி தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும், பாதுகாப்பற்ற தொழிலாளர்களாகவும், குறைந்த பட்ச ஊதியம் இல்லாத தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

ஜெர்மனியில் குறைந்த பட்சக் கூலி ஒரு மணி நேரத்திற்கு 32 டாலர். அதேபோல், ஜப்பானில்  24 டாலர்,  அமெரிக்காவில் 17 டாலர், தைவானில் 8 டாலர், சீனாவில் 3 டாலர். உலகத்திலேயே குறைந்த கூலி இந்தியாவில்தான். இந்தியாவிலேயே குறைந்த கூலி மோடியின் குஜராத். இந்தியாவில் வெல்டர், டர்னர், ஃபிட்டர், டிரைவர், எலக்ட்ரிசியன், பிளம்பர், குக், கார்டனர், வீட்டு வேலை செய்வோர் ஆகியோருக்கு ஒரு மணி நேரத்துக்கான கூலி ஒரு டாலரில் கால் பங்கு கூட இல்லை.

மாதம் 8000 ரூபாய்க்குள் ஒரு தொழிலாளி அவருடைய குடும்பம், வீட்டு வாடகை, உடுத்த துணி, குழந்தைகளுக்கான கல்வி, நல்லது கெட்டது, நோய் வாய்ப்பட்டால் மருத்துவமனை என அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும். இவையெல்லாம் வெறும் ரூ.8000-த்தில் சாத்தியமாகாது என்று ஒரு சாதாரண தொழிலாளிக்கு கூட தெரியும். ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், எடப்பாடி, சித்தாராமையா, மோடி நிர்ணயித்த கூலி வெறும் 8000 ரூபாய்.

அப்படியென்றால், இந்த நூறு கோடி கைகள், நூறு கோடி கால்கள் நியாயம் கேட்டு எங்கே போவார்கள்? எங்கு போவது? யாரை கேட்பது? இந்த தொழிலாளர்கள் சட்டசபையிலே சென்று முறையிட்டால் நடக்குமா?. 70 ஆண்டு கால வரலாறு சட்டசபையிலே எதுவும் நடக்காது.

பாராளுமன்றத்தில் தொழிலாளியின் நலனை ஒட்டி பேசுவதற்கு ஒரு எம்.பி கூட கிடையாது. பிறகு நீதிமன்றத்திற்கு போகலாம். அங்கு சென்றால் உச்ச நீதிமன்றம் நீதி தரமுடியாது என்கிறது. அதுதான் கடந்த 2001-ம் ஆண்டில் செயில் (STEEL AUTHOURITY OF INDIA) வழக்கில் நடந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு உமாபாரதி வழக்கு, 2012-ம் ஆண்டு வர்த்தக வழக்கு, ஆகியவற்றில் உச்ச நீதிமன்றம் அவர்களை நிரந்தரத் தொழிலாளியாக்க முடியாது என்றது. இப்படி எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தனது 50 கோடி தொழிலாளர்களைக் கைகழுவி விட்டது. இனி தொழிலாளி போவதற்கு எந்த இடமுண்டு? போலீசு நிலையம், தொழிலாளர் துறை போன்ற மற்ற துறைகளுக்கு போகலாம், ஆனால் சங்கம் வைத்து போராடினால் போலீசோ லத்தியை தூக்கிகொண்டு வருகிறார்கள். நிறுவன முதலாளி காலை நக்கி பிழைக்கிறது போலீசு.

மாருதியில் என்ன நடந்தது? திரும்பக்கூட முடியாத அளவு பிழிந்தெடுக்கப்படும் வேலைப் பளு; தேநீர் இடைவேளை 15நிமிடம் தான்; கேண்டீன் வரை சென்று வரவே 10 நிமிடங்கள் கடந்துவிடும்; டீ குடிக்கவும், சிறுநீர் கழிக்கவும் 5 நிமிடம், தேநீர் கப்புடன் சிறுநீர் கழிக்கும் பல தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஊதியமோ, ரூ.7000-ம்தான்.

இவ்வளவு நெருக்கடியிலும் அவர்கள் கேட்ட ஊதிய உயர்வை சகித்துக்கொள்ள முடியாமல் குண்டர்களை ஏவி விட்டது மாருதி நிறுவனம். அந்த குண்டர்களுக்கு ஆதரவாக காவல் துறையும், பாரா மிலிட்டரி படைகளும் வந்தன. தொழிலாளிகளை அடித்து துவைத்தார்கள். குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்திற்காக 500 தொழிலாளிகள் மீது வழக்கு, 110 தொழிலாளிகள் நிரந்தரமாக 3 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர்.

டெல்லி நீதிமன்றம், இவர்களுக்கு பிணை வழங்கினால் ஜப்பான் மூலதனம் வராது என்று கூறி பிணை வழங்க மறுத்தது. உச்ச நீதிமன்றமும் அதையே கூறியது. ஆகவே தொழிலாளர்களுக்கு நீதிமன்றங்களில் தீர்வு இல்லை.

மூடியின் தரப்பட்டியலில் இந்தியா முன்னேறிய பெருமை மோடியைச் சேரும் என பாஜக பெருமை பீற்றுகிறது. ஆனால் அர்ஜீன் சென்குப்தா கமிட்டி, 77% இந்தியர்கள் அதாவது 84 கோடி இந்தியர்கள் தினமும் 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்து வாழ்கிறார்கள் எனக் கூறுகிறது. இந்தப் பெருமையும் மோடியையே சேரும்.

1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கிய போது ஜெர்மானிய முதலாளிகள் ஹிட்லரை தேர்ந்தெடுத்தார்கள். தொழிலாளர்கள் போராடினால் அவர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் என்பதால்தான் தேர்ந்தெடுத்தார்கள். அதுபோல், இந்திய பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய முதலாளிகள், மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர். அன்றைய ஹிட்லரின் 2014 முகம்தான் மோடி. ஹிட்லர் வீழ்த்தப்பட்டார், மோடியும் வீழ்த்தப்படுவார்.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 44 சட்டங்கள், கூலி பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, PF, 8,10,12 – Components of Wages, இதற்கான சட்டங்கள் அனைத்தையும் மூடிவிட்டு இன்று 4 தொழிலாளர் விதிகளை (Labour code) கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் தொழிலாளர் துறையில், தனக்கு வேண்டியவர்களை, ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் முதலாளிகளை அமரச் செய்யப் போகின்றனர்.

இவர்கள்தான் தொழிலாளர்களுக்காக பேசப்போகிறார்கள். செங்கொடி வைத்துக்கொண்டோ இல்லை பிற சங்கங்களோ போய் நின்று இனி பேசமுடியாது. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, அநேகமாக மோடி அடுத்த முறை வெற்றி பெற்றால் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் எல்லாம் ஊத்தி மூடப்பட்டு, இந்த சட்டம் நிறைவேற்றப்படலாம். இன்றைய தொழிலாளர்களின் நிலைமையாக 18,19ஆம் நூற்றாண்டிலே இருந்த அதே நிலைமைதான் நீடிக்கிறது.

ரவுன்டவுண் பாதிரி என்ற முதலாளி எழுதுகிறான், ”தொழிலாளிக்கு வயிறு நிறைய உணவளிக்கக்கூடாது” என்று, ”நாளைக்கு என்ன நிலைமை என்ற பயத்திலே அவர்கள் இருக்கவேண்டும்” என்கிறான் அவன். இது 18, 19-ஆம் நூற்றாண்டின் நிலைமை.

இன்று உலகம் முழுவதிலும் இந்த நிலைமைகள் மாற்றப்பட்டுவிட்டன, ஜெர்மன், அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டில் தொழில் தொடங்குவதில்லை. குறைவான கூலிக்காக இந்தியா போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

ரஷ்ய தொழிலாளி, முதலாளி வர்க்கத்தை தூக்கியெறிந்த பின்புதான் சுரண்டலிலிருந்து விடுபட்டான். இந்திய தொழிலாளிக்கு சுரண்டலில் இருந்து விடுபட வேறு எதாவது வழி உண்டா என்றால் கிடையாது. 50 கோடி தொழிலாளர்களும் ஒன்று திரண்டு இந்த முதலாளித்துவ அரசுக்கு எதிராக குரல் கொடுத்தால் தான் இதிலிருந்து விடுதலை பெற முடியும்.

இந்த முதலாளித்துவ அமைப்பு முறை, அரசு எந்திரம், அதிகார வர்க்கம் அனைத்தும் முடங்கி போய்விட்டது, செயலிழந்து போய்விட்டது, இந்த அமைப்பிலே தொழிலாளர்களுக்கான விடுதலை கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாண்டுகால மோடியரசின் ஆட்சியில் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய எந்த உரிமையும் பெறப்படவில்லை. மக்கள் நல அரசு என்ற தகுதியை மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் என அனைத்தும் இழந்துவிட்டன. இவர்கள் யாரும் தொழிலாளியின் பக்கமில்லை.

ஆகவே தீர்வு என்னவெனில், ரஷ்யப்புரட்சி போன்றதொரு புரட்சியே! சிகாகோ தொழிலாளர்களின் வழிதான் நமது வழி! சங்கமாக திரள்! போராடு! வெற்றி பெறு!

”உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர, ஆனால் அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மார்க்ஸ்.

முதலாளித்துவவாதிகள் இந்த அமைப்புக்கு மாற்று என்ற ஒன்று இல்லை என்கிறார்கள். நாம் கூறுகிறோம் “சோசலிசமே மாற்று, அதுவே மக்களுக்கானது” என்று !

தொழிலாளர்கள் போராட்டங்களினால் மட்டுமே வெற்றி பெற முடியும்! சோசலிசமே வெல்லும், கம்யூனிசமே வெல்லும்!

 


 

PRPC – 14வது ஆண்டு விழா கருத்தரங்கம் – மதுரையில் !

0

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – 14வது ஆண்டுவிழா கருத்தரங்கம் !

ன்பார்ந்த நண்பர்களே! அன்றாட தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிக்கைச் செய்திகளில் இரண்டு விசயங்கள் பெரும்பாலும் பேசப்படாது. ஒன்று, மோடி-அமித் சா குற்றங்கள்; இரண்டு, நீதித்துறையின் தவறுகள்/குற்றங்கள். இதற்கு உதாரணங்களாக “தி காரவன்” மற்றும் “தி வயர்” இதழ்களில் வந்த செய்திகள் நம்மை அதிரச் செய்கின்றன.

இந்தியாவில் மோடிக்கு அடுத்த அதிகாரம் மிக்க நபர் அமித் சா. அவர் மீது இரண்டு போலி என்கவுண்டர் வழக்குகள் பதியப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இக்கொலைகள் மோடியின் மதிப்பை உயர்த்துவதற்காக நடத்தப்பட்டதாகச் செல்லப்பட்டது. இதில் சொராபுதீன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வந்தவர்தான் மும்பை நீதிபதி பிரிஜ்கோபால் லோயா. இவர் திடீரென டிசம்பர்1, 2014 அதிகாலையில் மாரடைப்பால் இறந்ததாகச் சொன்னார்கள். அன்று அது சிறு செய்தி கூட இல்லை. தற்போது அவரது மரணம், கொலைதான் என்பதற்கான மிக வலுவான சந்தேகங்களை நீதிபதி லோயா குடும்பத்தினர் எழுப்பியுள்ளனர்.

இறந்த நீதிபதி தலையில் காயம், சட்டையில் இரத்தக் கறை இருந்தது; பிரேத அறிக்கையில் இறப்பு நேரம் 06.15 என உள்ளது; ஆனால் காலை 5 மணிக்கே இறப்பு குறித்த தகவல் குடும்பத்துக்கு வந்தது. தகவல் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்து ஈஸ்வர் பகேதி. இந்த பகேதி போஸ்ட் மார்ட்டம் அறை வரை வந்து உடலை சீக்கிரம் வாங்கச் சொன்னார். நீதிபதியின் போனும் அவரிடமே இருந்தது. அதில் அழைப்பு, குறுஞ்செய்தி விவரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. இந்த ஆர்.எஸ்.எஸ் நபர் யார் என்று லோயா குடும்பத்தினருக்குத் தெரியாது! இயற்கை மரணம் என்றால் போஸ்ட் மார்ட்டம் ஏன் நடந்தது? குடும்பத்தினரிடம் ஏன் அனுமதி பெறவில்லை? என அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்புகின்றனர்.

அமித் சாவை வழக்கிலிருந்து விடுவிக்க 100 கோடி பேரம் பேசிய அன்றைய மகாராஷ்டிரா மாநில தலைமை நீதிபதி மொகித் சா, அமித் சாவுக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்தால் அது பெரிய செய்தி ஆகாது, தீர்ப்பு அன்று ஓர் குண்டு வெடிப்பு நடக்கும், மக்கள் அதைத்தான் பேசுவார்கள் என்று லோயாவிடம் வற்புறுத்தியுள்ளார். லோயா அதற்கு உடன்படவில்லை டிச.15-ல் அமித்சாவை ஆஜர் ஆகச் சொன்ன நீதிபதி லோயா, டிச.1-ல் இறக்கிறார். அடுத்த 30 நாட்களில், 10,000 பக்க குற்றப்பத்திரிக்கையிலிருந்து அமித்சா விடுவிக்கப்படுகிறார். சிபிஐ மேல்முறையீடு செய்யவில்லை. தனது தந்தை இறப்பு குறித்து விசாரணை கோரிய லோயாவின் மகன் மனுவும் கண்டுகொள்ளப்படவில்லை. இன்று வரை இக்குற்றச்சாட்டிற்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

அடுத்து மருத்துவக் கல்லூரி ஊழல் கதை. லக்னோவில் உள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மருத்துவக் கல்லூரியில் 2016-2017 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தருவதாகவும், அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் பேசுவதாகவும் சொல்லி பணம் பெற்ற ஹவாலா டீலர் மற்றும் முன்னாள் ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதி  குதுா-சி  ஆகியோர் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்கள். இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மருத்துவக் கவுன்சில் வழக்குகளை அப்போது விசாரித்து வந்தவர்கள் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபது தீபக் மிஸ்ராவும், கான்வல்கரும். இப்பின்னணியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் மற்றும் காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர்.

நவம்பர்,9,2017-ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு, உச்சநீதிமன்றத்தின் மூத்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தது. உடனே, நவம்பர் 10 அன்று, உச்சநீதிமன்றத்தின் மூத்த 4 நீதிபதிகள் தவிர்த்து, வேறு நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வை உடனே கூட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூசனைப் பேசவிடவில்லை. கட்சிப் பொதுக்குழுவில் தலைமையை எதிர்க்கும் நபர்களை கட்சிக்காரர்களை வைத்து மிரட்டி வெளியேற்றுவது போல, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தையும் சேர்த்துக் கொண்டு பிரசாந்த் பூசனை வெளியே அனுப்பி விட்டு நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பின்பு காமினி ஜெய்ஸ்வால் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் அனைவரும் எழுப்பும் கேள்வி “எவரொருவரும் அவரது வழக்கிற்கு அவரே நீதிபதியாக இருக்க முடியாது” என்ற சட்ட நிலையை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே மீறலாமா?

இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஊடகங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ராஜீ ராமச்சந்திரன், துஷ்யந்த் தவே, மோகன் பராசரன் உள்ளிட்ட பலர், ’தலைமை நீதிபதிக்கு சக மூத்த நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லை எனில், உச்சநீதிமன்றம் எப்போதும் எதிர்கொள்ளாத அபாயகரமான உள்நெருக்கடி இது’ என்கிறார்கள். இதை எங்கே போய் முறையிடுவது?

இதே உச்சநீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில் எப்படி நடந்து கொள்கிறது? ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி தியாகராஜன் இப்போது சொல்கிறார் ’கொலைக்குப் பயன்பட்ட பெல்ட் வெடிகுண்டில் இருந்த பேட்டரி எதற்காக வாங்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது எனப் பேரறிவாளன் சொன்னார். அதை வாக்குமூலத்தில் நான் எழுதவில்லை’. தடா சட்டத்தின் கீழான இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் பேரறிவாளன் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தீர்ப்புச் சொன்ன நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள் சி.பி.ஐ. சில கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை, பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என கடிதம் எழுதுகிறார். ராஜீவ் கொலைச் சதியின் விரிவான விசாரணை 17 ஆண்டுகளாக எம்.டி.எம்.ஏ என்ற சிபிஐ குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தனை ஓட்டைகள் இருந்தும் தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முடிவு எடுத்த பின்பும் உச்சநீதிமன்றம் விடுவிக்க மறுக்கிறது.

இதேபோல நேரடி வன்முறை ஏதும் இன்றி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தார் என்று மட்டும் சொல்லி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார், 90% உடல் ஊனமுற்ற, சக்கர நாற்காலியில் மட்டுமே செல்ல முடிந்த பேராசிரியர் சாய்பாபா. சிறையிலிருந்து அக்,17,2017-ல் அவரது மனைவிக்கு எழுதிய கடிதம் நமக்குக் கண்ணிரை வரவழைக்கிறது.

“அன்புள்ள வசந்தா, நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் குளிர்காலத்தில், நான் இங்கு பிழைப்பது சாத்தியமற்றது. இறுதி மூச்சு விடும் மிருகத்தை போல நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திரு.காட்லிங் அவர்களிடம் எனது பிணை மனுவை நவம்பர் முதல் வாரம் அல்லது அக்டோபர் இறுதி வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கவும். உங்கள் அனைவரிடமும் பிச்சைக்காரனைப் போலவும், கைவிடப்பட்டவனைப் போலவும் பல முறை கெஞ்சுவதால், மிகவும் மனச்சோர்வுற்று இருக்கிறேன். தொண்ணூறு விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உடல் உபாதைகளையும் கொண்ட மாற்றுத்திறனாளி மனிதன், சிறைக்குள் இருந்துகொண்டு, இயங்கும் ஒரே கையுடன் என்ன செய்வான் என்பது யாருக்கும் புரிவதில்லை.”

இந்த மனிதரைத்தான் ’உடல் ஊனமுற்றால் என்ன? மூளை வேலை செய்கிறதே’ என்று வக்கிரமான முறையில் தீர்ப்பெழுதினார் கட்ஜ்ரோலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி. இன்றுவரை சாய்பாபாவுக்கு பிணை மறுக்கப்படுகிறது.

மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்பட்ட நீதித்துறை, இப்படி நபர்களைப் பொறுத்து, அதிகாரத்தைப் பொறுத்து தனது நியதிகளை தானே மீறிவருகிறது. அரசின் பல்வேறு அநீதிகளுக்குத் துணைபோகிறது.

அதேசமயம் இந்த அநீதிகளை எதிர்க்கும் பலர் கைது, சிறை, கொலை எனப் பலவகையிலும் அரசு அதிகாரத்தால் முடக்கப்படுகிறார்கள். குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்திய தீஸ்தா சேதல்வாத், பார்ப்பனியத்தை எதிர்த்த கல்புர்கி, கவுரி லங்கேஷ், மோடியை விமர்சித்த என்டிடிவி, திரிபுரா ரைபிள் படை ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் சுதீப் தத்தா எனத் தேசிய அள்விலும், தமிழகத்திலோ வழக்கறிஞர் முருகன், மாணவி வளர்மதி, கார்ட்டுனிஸ்ட் பாலா, பேராசிரியர் ஜெயராமன், வழக்கறிஞர் செம்மணி என அடக்குமுறைப் பட்டியல் நீள்கிறது.

மொத்த அரசமைப்பும் அநீதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயுள்ள சூழலில், அரச வன்முறை, சாதி, மத ஒடுக்குமுறை, வாழ்வுரிமை பறிப்பு என பலமுனைத் தாக்குதலில் பாதிக்கப்படும் மக்கள் எங்கு செல்வது? மாற்று என்ன?

அறிவிக்கப்படாத அவசரநிலை போன்ற இச்சூழலில்தான் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கொண்ட, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

அதற்குத்தான் இக்கருத்தரங்கம்.  வாருங்கள், செயல்படுவோம்!

நிகழ்ச்சி நிரல்

கருத்தரங்கம்:

தலைமை: பேராசிரியர் அ.சீனிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை

தொடக்க உரை: வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

கருத்துரை:

நொறுக்கப்படும் மனித உரிமைகள் பறிக்கப்படும் ஊடக சுதந்திரம்!

திரு பி.எஸ்.எம். இரகுமான்,
ஊடகவியலாளர்,
சென்னை.

நசுக்கப்படும் கருத்துரிமை நிலை குலையும் நீதித்துறை – நமது கடமை என்ன?

திரு. அரிபரந்தாமன்,
நீதிபதி (ஓய்வு), சென்னை உயர்நீதிமன்றம்

காட்சி அரங்கம்: குறும்படங்கள் – மக்கள் உரிமைகளும், கார்ப்பரேட் ஜனநாயகமும்

நன்றியுரை: திரு. ம. லயனல் அந்தோனிராஜ்,
செயலாளர், ம.உ.பா. மையம் மதுரை

நூலரங்கம்: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டம். அலைபேசி: 94434 71003

 

 

பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் ?

0

நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மரணத்தின் பின்னணி என்ன ? பாகம் 2

சோராபுதீன் போலி மோதல் கொலை தொடர்பான வழக்கு 2012 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. 2014 -ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை அடுத்து மோடி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். சோராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த அமித்ஷா 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்ததென்ன?

மும்பை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஜே.டி உத்பத் தான் முதலில் இந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி வழக்கை ஒரே நீதிபதி ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பது இங்கே கவனத்திற்குரியது. வழக்கு விசாரணையின் துவக்கத்தில் இருந்தே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமித்ஷா. நீதிபதி உத்பத் விசாரணையின் பல கட்டங்களில் ஆஜராக உத்தரவிட்ட பின்னரும் அமித்ஷா டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் 2014 -ம் ஆண்டு ஜூன் 6 -ம் தேதி நடந்த விசாரணையின் போது அமித்ஷாவின் வழக்கறிஞர்களிடம் கண்டிப்பு காட்டிய நீதிபதி உத்பத், 20 -ம் தேதி நடக்கவுள்ள விசாரணையின் போது அமித்ஷா கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் 20 -ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அமித்ஷா ஆஜராகவில்லை; மேற்கொண்டு விசாரிக்காமல், 26 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி, அப்போது கட்டாயம் அமித்ஷா ஆஜராகியே தீர வேண்டுமென உத்தரவிட்டார். 26 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், 25 -ம் தேதியே உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலையும் மீறி நீதிபதி உத்பத் பூனா நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்யப்படுகிறார். எந்தவித முகாந்திரமோ, காரணமோ சொல்லாமல் தனது சொந்த வழிகாட்டுதலே மீறப்பட்டிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் வாயை மூடிக் கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் மோடி அதிகாரத்திற்கு வந்து விட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நீதிபதி உத்பத் மாற்றலான பிறகு லோயா நியமிக்கப்படுகிறார். வழக்கை நீதிபதி லோயா விசாரிக்கத் துவங்கிய ஆரம்பத்தில் நீதிமன்றத்துக்கு ஆஜராக வேண்டுமென அமித்ஷாவை வற்புறுத்தாமல் கொஞ்சம் நீக்குப் போக்காக நடந்து கொண்டார். அதாவது, வழக்கு விசாரணைகளின் போது அமித்ஷா வெளியூரில் இருந்தால் ஆஜராகத் தேவையில்லை எனவும், சாட்சி விசாரணைகளுக்கு பின் நேரடி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனவும் லோயா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அக்டோபர் 31 -ம் தேதி வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மும்பை வந்திருந்தார் அமித்ஷா. மும்பையில் இருந்து கொண்டே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த அமித்ஷாவை அன்றைக்கு கண்டித்தார் நீதிபதி லோயா.

அமித்ஷாவின் மேல் சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த 10,000 பக்கத்திற்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை முழுவதும் படித்து வழக்கை முழுவதுமாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டினார் லோயா. ஆனால், அமித்ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து விசாரணையின் ஒவ்வொரு அமர்வின் போதும் வழக்கை விசாரிப்பதற்கு முன் அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்கும் மனுவை முதலில் விசாரிக்க வேண்டுமென நீதிபதி லோயாவிடம் வற்புறுத்தி வந்தனர்.

இதற்கிடையே வழக்கின் தீர்ப்பை “சாதகமாக” வழங்க வேண்டுமென நீதிபதி லோயாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான மிரட்டல்கள் வந்துள்ளன. தனக்கு வரும் மிரட்டல்கள் பற்றியும் அதன் பின்னே இருப்பவர்களின் அதிகார பலம் பற்றியும் நன்கு அறிந்திருந்த லோயா, அவற்றைக் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த வழக்கோடு நீதிபதி வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டு ஊருக்கு வந்து நிம்மதியாக விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசிய நீதிபதி மோஹித் ஷா

2014 -ம் ஆண்டு ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் தன்னைத் தொடர்பு கொண்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித்ஷா, அமித்ஷாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்க 100 கோடி ரூபாய் பேரம் பேசியதாக நீதிபதி லோயா தனது சகோதரி அனுராதா பியானியிடம் கூறியுள்ளார். நள்ளிரவுகளில் நீதிபதி லோயாவை சிவில் உடையில் வெளியிடங்களுக்கு வரச் சொல்லி சந்தித்த தலைமை நீதிபதி மோகித்ஷா, சோராபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் தீர்ப்பை அமித்ஷாவுக்கு சாதகமாக எழுதும்படி அழுத்தம் கொடுத்து வந்தார் என நீதிபதி லோயாவின் சகோதரி குறிப்பிடுகிறார்.

தனது மகனுக்கு லஞ்சமாக பணம் மட்டுமின்றி மும்பையில் ஒரு வீட்டையும் கொடுக்க அமித்ஷா தரப்பினர் தயாராக இருந்தார்கள் என நீதிபதி லோயாவின் தந்தை குறிப்பிடுகிறார். மேலும் அமித்ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை டிசம்பர் 30 -ம் தேதி அறிவிக்க வேண்டுமெனவும், ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனம் இந்த வழக்கின் மேல் இல்லாத வகையில் அன்றைய தினம் வேறு ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் எனவும் அமித்ஷா தரப்பினர் சொல்லி வந்திருக்கின்றனர். நீதிபதி லோயாவின் மரணத்திற்குப் பின் 2014 -ம் ஆண்டு டிசம்பர் 15 -ம் தேதி எம்.பி கோசாவி எனும் நீதிபதி பொறுப்பேற்கிறார். புதிய நீதிபதி பொறுப்பேற்ற பதினைந்தே நாளில் (அதே டிசம்பர் 30 -ம் தேதி) அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்கிறார்.

அதே டிசம்பர் 30 -ம் தேதி தான் கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுகிறார். அன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் தோனியின் கிரிக்கெட் சாதனைகள், அவரது அறிவிப்பின் பின் உள்ள அரசியல் குறித்தெல்லாம் கிரிக்கெட் வல்லுநர்கள் அலசித் துவைத்துக் காயப் போட்டனர்; இந்த ஆரவாரங்கள் தொலைக்காட்சித் திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது கீழே ஒருவரிச் செய்தியாக அமித்ஷா விடுதலை கடந்து போனது.

***

அமித்ஷாவைத் தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, பி.சி பாண்டே, கூடுதல் டி.ஜி.பி ஜோஹ்ரி, அதிகாரிகள் அபய் சுதாசாமா, ராஜ்குமார் பாண்டியன் அமீன் போன்றோரும் யாஷ்பால் சுதாசாமா, அஜய் பட்டேல் போன்ற கூட்டுறவு வங்கி அதிகாரிகள் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒவ்வொருவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட அனைவருக்குமே பதவி உயர்வுகள் தேடி வந்தன. இன்னொருபுறம் வழக்கை நேர்மையாக விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய் 2007 -ல் இருந்து தொடர்ந்து பணியிடமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறார்.

அமித்ஷாவை விடுதலை செய்த சி.பி.ஐ. நீதிமன்றம், அவர் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. பொதுவாக புலனாய்வு அமைப்புகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் போது அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வது வழக்கம்; அமித்ஷா விவகாரத்தில் இந்த வழக்கம் பின்பற்றப்படவில்லை.

சோராபுதீன் ஷேக்கை மக்கள் அப்படியே மறந்து போனார்கள். போலி மோதல் கொலைகள் சூடாக விவாதிக்கப்பட்டு வந்த சூழலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் இவ்வாறாகப் பேசினார் மோடி:

“காங்கிரசுக்காரர்கள் மோடி சட்டவிரோத என்கவுண்டர் கொலைகளைச் செய்வதாகச் சொல்கிறார்கள். அவர்கள் மோடி தான் சோராபுதீனைக் கொன்றதாகச் சொல்கிறார்கள். காங்கிரசு நண்பர்களே, உங்கள் கையில் மத்திய அரசு அதிகாரம் உள்ளது. உங்களுக்குத் துணிவிருந்தால் மோடியை தூக்கு மேடைக்கு அனுப்பிப் பாருங்களேன்” இவ்வாறாகச் சவால் விட்டவர், கூட்டத்தினரை நோக்கி “சோராபுதீன் ஷேக்கை என்ன செய்யலாம்?” எனக் கேட்டார்.

அதற்கு அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவினர் “அவனைக் கொல்லுங்கள், அவனைக் கொல்லுங்கள்” என பதிலளித்தனர்.

***

நீதிபதி லோயாவின் சந்தேகத்துக்குரிய மரணம் அம்பலமானதைத் தொடர்ந்து தேசிய மற்றும் பிராந்திய  ஊடகங்கள் அனைத்தும் ஓர் ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்று விட்டன. அமித்ஷாவைப் பற்றிய செய்தியை வெளியிடும் அளவுக்கு இந்த ஊடகங்களின் முதுகெலும்பு உறுதியாக இருக்கும் என எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான்; எனினும், பொதுவாக பீற்றிக் கொள்ளப்படும் நீதித்துறை மாண்பின் கோவணத்தை லோயாவின் குடும்பத்தார் உருவி எறிந்திருப்பதைப் பற்றிக் கூட யாரும் பேசவில்லை. வயர், ஸ்க்ரோல் போன்ற ஓரிரு இணையப் பத்திரிகைகளே இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகின்றன.

செய்தி வெளியாகி ஏழு நாட்களுக்குப் பின் கேரவனில் வெளியான கட்டுரையில் உள்ள தரவுகள் உறுதியில்லை என்பதைத் தமது சொந்த விசாரணைகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக எழுதியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. உண்மையில் கேரவன் கட்டுரை எழுப்பும் சிக்கலான கேள்விகளை மிக கவனமாக தவிர்த்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், அந்தக் கட்டுரை எழுப்பும் இரண்டாம்பட்சமான கேள்விகளை மட்டும் தெரிவு செய்து அதற்கு பதிலளித்துள்ளது. அப்படி அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களும் தம்மளவில் முரண்பாடுகள் கொண்டவையாகவே உள்ளன.

முதலில் நீதிபதி லோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதென்பதையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையும் உடன் தங்கியிருந்த நீதிபதிகளிடம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்கிறது. ஆனால், நீதிபதி லோயா முதலில் திருமணத்திற்குச் செல்லும் உத்தேசத்தில் இல்லை என்பதையும் சில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வற்புறுத்தலுக்குப் பின்னரே திருமணத்திற்குச் சென்றார் என்பதும் கேரவன் கட்டுரையிலேயே உள்ளது. மேலும், நீதிபதியின் மரணம் சந்தேகத்துக்குரியது என்றால், உடனிருந்தவர்களின் உதவியின்றி அதை நிறைவேற்றியிருக்க முடியாது.

ரஜ்னீஷ் ராய்

அடுத்து மாரடைப்பு ஏற்பட்ட உடன் கேரவனில் சொல்லப்பட்டதைப் போல் லோயாவை ஆட்டோவில் அழைத்துச் செல்லவில்லை எனவும், உள்ளூர் நீதிபதி விஜய்குமார் பார்டேவின் காரில் அழைத்துச் சென்றதாகவும் எக்ஸ்பிரஸ் கட்டுரை தெரிவிக்கிறது. எந்த வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள் என்பதல்ல – அப்படி மாரடைப்பு ஏற்பட்ட உடன் குடும்பத்தாருக்கு ஏன் தெரிவிக்கவில்லை. மேலும் நீதிபதி அதிகாலை 4:45 -க்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் 6:15 -க்கு இறந்துள்ளார் – ஆனால், அதிகாலை 5:00 மணிக்கே நீதிபதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

அடுத்து, நீதிபதிக்கு ஈ.சி.ஜி எடுத்ததாக எக்ஸ்பிரஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால், அந்த ஈ.சி.ஜி -யில் நேரமும், பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி பலரும் சுட்டிக்காட்டிய பின், தமது பத்திரிகை சார்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசியதாகவும் அவர்கள் “டெக்னிக்கல் பிரச்சினை” காரணமாக தவறான நேரமும் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனச் சொன்னதாகவும் தனது கட்டுரையில் பிற்சேர்க்கையாக குறிப்பிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

அடுத்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணம் சந்தேகத்துக்குரியதல்ல என குறிப்பிட்டுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இயற்கையான மரணத்திற்கு பிரேதப் பரிசோதனை அவசியம் என தீர்மானித்தது யார் என்பதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. மேலும் பிரேதப்பரிசோதனையின் போது வெளியேறிய ரத்தம் நீதிபதியின் உடையில் பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டுள்ளனர் – ஆனால், பிரேதப் பரிசோதனை முடிந்த பின் மருத்துவமனை கவுன் அல்லது வெள்ளைத் துணியால் சுற்றி உடலைக் கொடுக்கும் வழக்கமான நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதைப் பற்றி எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஏதும் சொல்லவில்லை.

அடுத்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட்டது நீதிபதி லோயாவின் ஒன்றுவிட்ட சகோதரனின் மருமகன் பிரஷாந்த் ரத்தி என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கண்டறிந்துள்ளது. ஆனால், கேரவனின் விசாரணையின் போது நீதிபதியின் தந்தை தனக்கு நேரடிச் சொந்தம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தன்னுடைய மாமா தன்னை அழைத்து தனது ஒன்றுவிட்ட சகோதரன் இறந்து விட்டதாகச் சொல்லி மற்ற நடைமுறைகளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பிரஷாந்த் ரத்தி குறிப்பிட்டுள்ளார். இதை ஏன் இத்தனை நாட்களாக நீதிபதி லோயா குடும்பத்தாரிடம் சொல்லவில்லை என்பது பற்றியோ, அப்படி பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட நீதிபதி குடும்பத்தாரிடம் தொலைபேசியிலாவது அனுமதி பெறப்பட்டதா என்பதைக் குறித்தும் பிரஷாந்த் ரத்தி ஏதும் சொல்லவில்லை.

லோயாவின் மர்ம மரணம் குறித்த கேரவனின் கட்டுரைகளுக்கு வழக்கமான பா.ஜ.க சொம்புகளான ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்றவர்களை நாடாமல் வழக்கமாக ஓரளவு நடுநிலையோடு செயல்படும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நாடியுள்ளனர் என்பதை அப்பத்திரிகையில் வெளியான மறுப்புக் கட்டுரையில் உள்ள ஏராளமான ஓட்டைகளே தெரிவிக்கின்றன. மேலும், பதிலளிப்பதற்கு வசதியான கேள்விகளை மட்டுமே தெரிவு செய்து பதிலளித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஈஸ்வர் பஹேட்டியின் அதீத அக்கறை பற்றியோ, நீதிபதியின் செல்பேசியை மூன்று நாட்கள் கழித்து இவரே கொண்டு வந்து கொடுத்தது பற்றியோ ஏதும் சொல்லவில்லை.

***

பச்சை ரத்தப் படுகொலைகளை எந்த மன உறுத்தலும் இன்றிச் செய்யும் கிரிமினல் கும்பல் ஒன்றின் கையில் மொத்த அதிகாரமும் குவிந்துள்ளது. தங்கள் உடலில் காவி ரத்தம் பாயும் ஒரு சில ‘இந்துக்கள்’ “சாகப் போவது துலுக்கனும் கிறித்தவனும் தானே” என இறுமாந்து இருக்கின்றனர். துள்சிராம் பிரஜாபதியும் நீதிபதி லோயாவும் இந்துக்கள் தான். சொல்லப் போனால் சோராபுதீன் ஷேக் மற்றும் கௌசர்பி ஆகியோரின் உயிர்கள் ஓரிரு நாள் சித்திரவதைக்குப் பின் பறிக்கப்பட்டுவிட்டன.

ஆனால், துள்சிராம் பிரஜாபதி பல மாதங்களாக நெருங்கி வரும் மரணத்தைக் கண்டு அஞ்சியவாறே சிறைக் கொட்டடியில் தவித்து பின் உயிரை விட்டுள்ளான். நீதிபதி லோயா பல மாதங்கள் உளவியல் சித்திரவதைகளை அனுபவித்த பின் “இயற்கை மரணம்” அடைய வைக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளது; அவர்களில் பெரும்பாலானோர் “இந்துக்கள்” என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் ஊழல்வாதிகள் என்றால் பாரதிய ஜனதாவோ மதவெறியும், கொலை வெறியும், ஊழல் வெறியும் இணைந்த வீரிய ஒட்டுரகமாக உள்ளது. இரத்த தாகத்தோடு அலையும் இந்த பாசிச மிருகத்தை உடனடியாக அழித்தொழிப்பதே உண்மையான தேசபக்தர்களின் முன் உள்ள அவசரக் கடமை.

– சாக்கியன்

இந்த கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

செய்தி ஆதாரம் :


 

நாப்கீன் மாத்தாம பீரியட்ஸ் டயத்துல எப்படி இருக்க முடியும் ?

3

செவிலியர்களுடன் ஒரு நாள் – 29. 11. 2017

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்துல போராட்டம் நடத்துற செவிலியர்கள பாத்துட்டு வரலாம்ன்னு போயிருந்தேன். காம்பவுண்டுக்கு வெளியவே முட்டு முட்டா போலீசு குவிஞ்சுருந்தாங்க. உள்ள யாரையும் விடல. மீடியாக்காரவங்களே கேமராவ வச்சுகிட்டு ரோட்டுக்கு எதிர்லதான் நின்னாங்க. நிலமைய பாத்தா இவங்கள தாண்டி வளாகத்துக்குள்ள நுழையிறது சவால்தான். டீ குடிக்க வந்த செவிலியர் கூட்டத்தோட கூட்டமா ஒரு வழியா உள்ள வந்து சேந்தேன்.

மக்கள்கிட்ட இப்படி குப்பைய சேத்து வைக்காதிங்க, தண்ணிய மூடி வைங்க, காய்ச்சி குடிங்க, குழந்தைக்கி கைய கழுவிட்டு சாப்பாடு குடுங்க, அழுக்கில்லாத உள்ளாடைகள போடுங்க இப்படி சொல்லும் போது அவங்க செவிலியரா மட்டும் இருக்க மாட்டாங்க. நம்ம வீட்டாளுங்களாவே தோணும். ஆனா டி.எம்.எஸ். வளாகத்துல செவிலியருங்க இருந்த நிலை சொல்லி மாளாது!

அவங்க குந்திருந்த எடம் பூரா கட்டம் கட்ட பயன்படுத்துற சரளக்கல்லு. அதுல துணி, பேப்பரு, துப்பட்டாவெ விரிச்சுப்போட்டு கொத்தடிமை கணக்கா குந்திருந்தாங்க. அவங்க இருந்த எடத்த சுத்தி மூணு நாளா அள்ளப்படாத சாப்பாட்டு குப்பைங்க. ஒரே நாத்தம். இது கூட பரவாயில்ல, டாய்லெட்டு நிலைமையோ இன்னும் மோசம்.

தேனி மாவட்டத்த சேந்த ஒரு பெண் செவிலியர், “நூறு பேரு இருந்தாலே அதுல நாலு பேருக்காவது பீரியட்ஸ் இருக்கும். ரெண்டாயிரம் பேருக்கும் மேல இருக்கோம், என்ன செய்ய முடியும் சொல்லுங்க? ஒரு பொம்பள தண்ணி இல்லாமெ நாப்கீன் மாத்தாமெ பீரியட்ஸ் டயத்துல எப்படி இருக்க முடியும்? மூணு நாளா இந்த கொடுமைய அனுபவிக்கிற பொம்பளைங்களுக்கு போராட்டமும் வேண்டாம் வேலையும் வேண்டான்னு ஓடத்தான் தோனும்.”

பெண் செவிலியருங்க சீருடையில சரியா கீழ உக்கார முடியாம செரமபட்டது தெரிஞ்சுது. வெளிய ரோட்டோர டீ கடையில சொல்லி லெக்கீன்ஸ் வியாபாரிய வரவச்சு காசிருந்தவங்க வெள்ளக் கலர்ல வாங்கி போட்டுகிட்டாங்க. சுத்தி வளச்சு போலீசு நிக்குது. இருக்குற எந்த கட்டடத்துலயும் உள்ள போக அனுமதி கெடையாது. குழந்தைக்கி பால் குடுக்குற தாய்மாரெல்லாம் போராட்டத்துல இருக்காங்க. எங்குன ஒதுங்க முடியும்?

இந்த இலட்சணத்துல ஒரு அரசு அதிகாரி பேசும் போது சொல்றாங்க “நீங்க எல்லாம் எங்க பிள்ளைங்க மாதிரி. இந்த வயசுல எங்க எல்லாருக்கும் பிள்ளைங்க இருக்கு. நீங்க மூணு நாளா இங்க பனியிலயும் குளிருலயும் இருக்குறத பாக்கும் போது தாங்க முடியல.” அந்த அம்மா பேசின பத்து நிமிசத்துல இந்த டயலாக்க மூணு தடவ சொல்லுது.

எந்த தாயும் கைக்கொழந்தைய வச்சுகிட்டு அத்தன குளிருல வெட்ட வெளியில கெடக்குறத பாத்துட்டு இருக்க மாட்டா. அந்தம்மா தாம்பிள்ளைங்களா நெனச்சதுன்னே எடுத்துக்குவோம். தனிச்சு போராட்டத்துக்கு ஒரு முடிவு சொல்ல முடியாதுன்னே வச்சுக்குவோம். ஆனா டி.எம்.எஸ். அதிகாரிங்கற முறையில குடிக்க தண்ணியும், சுகாதாரமான டாய்லெட்டும் தந்துருக்கலாம். அந்தம்மா என்னவோ “உங்களால் நான் உங்களுக்காகவே நான்” அப்புடிங்குற ரேஞ்சுலேயே பேசுச்சு.

இத கேட்ட கன்னியாகுமரி மாவட்டத்த சேந்த ஒரு பெண் செவிலியர் சொன்னாங்க “இந்தம்மா சொந்தம் கொண்டாடலன்னு நாங்க அழல. இந்த தொழில நாங்க புனிதமா நெனச்சு செய்றொம். நோயாளிங்கள சுத்தபத்தமா இருக்க வச்சு அருவெறுப்பு பாக்காமெ ராத்திரி பகலா உழைக்கிறோம். ஆனா பாருங்க எங்கள சுத்தியே நோய் பரப்பும் வசதி அனைத்தையும் செஞ்சு கொடுத்துருக்கு அரசு. நாங்க என்னங்க பெருசா கேட்டுட்டோம். நேரங்காலம் பாக்காமெ வேலை செய்றோம் எங்களுக்கு பிச்ச போடாதிங்க சமமா நடத்துன்னு சொல்றோம்.”

அதிகாரிங்க பேசிட்டு போன பிறகு அங்கே ஒரே சலசலப்பு. அதிகாரிங்க ஒத்திகை பாத்துட்டு வந்து அரங்கேத்துன நாடகம் சரியில்லன்னு திருப்பி அனுப்பிட்டாங்க செவிலியருங்க. எரிச்சலோட திரும்பி போனாங்க போலீசுங்க. பேச்சுவார்த்தையில திருப்பம் வருமான்னு மேடை பக்கத்தையே பாத்திருந்த செவிலியருங்க திரும்பவும் பேச ஆரம்பிச்சாங்க.

“ஒங்களுக்கே தெரியும் அம்மா செத்ததும் பதவிக்காக என்ன தர்மயுத்தமெல்லாம் செஞ்சாங்கன்னு. நாங்க மட்டும் கடைசி வரைக்கும் ஒப்பந்த பணியாளரா இருக்கனும்ன்னு சொல்றது ஞாயமாங்க. வருசத்துக்கு 200 பேரு பணி நெரந்தரம் பன்னுவோம்னு விஜயபாஸ்கரு சொல்றாரு. அவரு கணக்குப்படி பாத்தா நானு இந்த கையில வேலைக்கான ஆட்ரையும் இந்த கையில ரிட்டேயர்மெட்டுக்கான ஆர்டரையும் வாங்கிட்டு வீட்டுக்குதான் போகணும்.”

“இவளாவது ஆர்டரை வாங்கி பாக்குறதுக்கு உயிரோட இருப்பா. என் வயசுக்கு நான் பரலோகம் போயிருவேன். எனக்கு 42 ரெண்டு வயசாகுது. தனியாரு மருத்துவமனையில வேலை பாத்தப்ப நல்ல சம்பளம் வாங்கினேன். தனியாரு எப்ப வேணுன்னாலும் வீட்டுக்கு அனுப்பிடுவான் அரசு வேலையின்னா ஒரு நிம்மதி இருக்குமேன்னு சேந்தேங்க. தூத்துக்குடி பகுதிய சேந்தவ நானு. என்ன தூக்கி திருவாரூல போட்டானுங்க. மாத்திகிட்டு போக ரெண்டரை லட்சம் குடுத்தேன்”-னு தன்னோட மன ஆதங்கத்த ஆத்தரத்தோட சொன்னாங்க திருவாரூர் பகுதிய சேந்த செவிலியர் ஒருவர்.

“எனக்கு 25 வயசாகுது. பேங்குல எஜுகேசன் லோனு வாங்கிதான் படிச்சேன். சொந்த ஊரு திருநெல்வேலி. வேலை பாக்குறது திருப்பூரு. இன்னும் கல்யாணம் ஆகல. திருநெல்வேலிக்கே மாத்திக்கலாம்ன்னா 2 லட்ச ரூபா லஞ்சம் கேக்குறாங்க சுகாதாரத் துறை ஆளுங்க. இன்னும் படிப்புக்கு வாங்குன லோன கட்ட முடியல. 7,700 சம்பளத்த வச்சு வாடக குடுத்து சாப்பிட்டு வீட்டுக்கு பணம் அனுப்பனும், பஸ்சு காசுக்கு பயந்து ஊருக்கு போறது கூட தள்ளி போட்டுருவேன். இப்ப சொல்லுங்க நாங்க என்ன செய்யட்டும்”னு இது விருதுநகர் பகுதி செவிலியரோட கேள்வி.

“நானு திருப்பூர் மாவட்டத்துல வேலை செய்றேன். ஒரு செவிலியரு 8 உள் நோயாளிகள பாத்து பராமரிக்கணுமுன்னு விதி சொல்லுது. ஆனா நாங்க ஒரு நாளைக்கி 70, 80 நோயாளிங்கள கவனிக்கிறோம். அதுவும் ஆண்கள் வார்டு அதுல 30 பேரு ஆப்ரேசன் செஞ்சவங்க. டாக்டரோட பல வேலைகள நாங்க பாக்கணும். டாய்லெட் கழுவலன்னா கூட எங்களதான் கேப்பாங்க. ஒரு நிமிசத்துல பதினஞ்சு வேலையப் பத்தி மூளை சிந்திக்கனும். இவ்வள வேலை செய்றதுக்கு நியாயமான சம்பளம் குடுன்னுதான் கேக்குறோம்.”

அதே பகுதியில வேலை செய்ற ஆண் செவிலியர் சொல்லும் போது, “எங்க அப்பா ஒரு துப்புறவு தொழிலாளிங்க. லோன் வாங்கித்தான் படிச்சேன். முப்பத்தேழு வயசாகுது. 7,700 சம்பளத்த வச்சு கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துறதுன்னு பயந்தே தள்ளி போட்டிருக்கிறேன். பகல் இரவுன்னு மாறி மாறி டூட்டி போடுவாங்க. பகுதி நேரமா வேற வேலைக்கும் போக முடியாது. சுகாதார அமைச்சர் சொல்றாரு மத்த மாநிலத்த விட தமிழ்நாடுதான் ஒப்பந்த தொழிலாளர வருங்காலத்துல நிரந்தர தொழிலாளரா நியமிக்க முன்வந்துருக்கும் மாநிலமுன்னு. இந்தாளு சொல்ற கணக்குப்படி பாத்தா வருங்காலங்கறது எங்களுக்கு இறந்த காலமா மாறிடுமுன்னு நாங்க சொல்றோம்.”

கூடியிருந்த செவிலியருங்க ஒரு பன்னை மூணு துண்டாக்கி மூணு பேரா மதிய சாப்பாடா சாப்பிட்டவங்க, எனக்கும் ஒரு துண்ட கொடுத்தாங்க. அப்பதான் வெறுங்கைய வீசிகிட்டு இந்த பிள்ளைங்கள பாக்க வந்தோமேன்னு எனக்கு உறச்சது.

வெளிய வந்த போது போலீசு நிறுத்தினாங்க. நான் என்னமோ போராட்டத்தை தூண்டி விட்டது போல ஓரங்கட்டி நிக்க வச்சாங்க. எதுக்கு கலர் டிரஸ் போட்ருக்க, ஐடிய காமி, யார பாக்க வந்தியோ அவங்கள போன் பன்னி இங்க வரச்சொல்லு இப்படி அடுக்கிகிட்டே போனாங்க.

“என்னோட அக்கா பொண்ணுக்கு சாப்பாடும் அவசர செலவுக்கு காசும் குடுக்க வந்தேன். குடுத்துட்டேன், வெளிய போறேன். உள்ள வரும்போதுதான் எல்லாத்தையும் செக்பண்ணித்தான் விட்டாங்க. நான் பள்ளிகூடத்துக்கு பிள்ளைய அழைக்க போகனும், நேரமாயிருச்சு, இப்ப நீங்க வேற நிறுத்தி வச்சா என்ன செய்ய?” என்று போலீசிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

இப்ப போராட்டம் நீதிமன்றத்தால நிறுத்தப்பட்டாலும் அந்த செவிலியருங்க அடுத்த முறை ஜட்ஜ் ஐயாவுக்கு கட்டுப்படாம வெற்றி கிடைக்குற வரை போராடுவாங்க! ஏன்னா ஒவ்வொரு போராட்டமும் நிறைய விசயங்கள கத்துக் கொடுக்குது!

சரசம்மா


 

நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மரணத்தின் பின்னணி என்ன ?

4

சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014 -ம் ஆண்டு டிசம்பர் 1 -ம் தேதி திருமணம் ஒன்றிற்காக நாக்பூர் சென்றிருந்த சமயத்தில் திடீரென அகால மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பே காரணமென அப்போது சொல்லப்பட்டது.

நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா

எனினும், நீதிபதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று அப்போதே தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக நீதிபதி லோயாவின் உறவினர்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடமும் நீதிபதியின் மரணம் குறித்து தகவல் திரட்டிய பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே, தான் கண்டறிந்தவைகளை கேரவன் இணையப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

நீதிபதி லோயாவின் மரணம் உண்மையில் சந்தேகத்துக்குரியது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. தேசிய ஊடகங்கள் இது குறித்து கள்ளமௌனம் சாதித்தாலும் சமூக வலைத்தளங்களில் இது பற்றி விவாதிக்கப்படுகின்றது. முதுகெலும்பைச் சில்லிட வைக்கும் இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், குஜராத்தில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சில சம்பவங்களில் இருந்து துவங்க வேண்டியது அவசியம்.

***

கொடூர கொலையாளிகளின் கதை இது. தினத் தந்தியின் எட்டாம் பக்கத்தில் தலைகாட்டும் “கள்ளக் காதல்” கொலை கதையை  அறிந்திருப்போம். நக்கீரனிலோ ஜூனியர் விகடனிலோ தலைகாட்டும் கொலைகார ரவுடிகளை அறிந்திருப்போம். ஆனால், இங்கு நாம் பார்க்க இருப்பது வேறு வகையான கொலையாளிகள். அரசியல் பதவிகளுக்காகவும், கேள்விக்கிடமற்ற அதிகாரத்திற்காகவும் தங்களது கொலைகளுக்கு “தத்துவார்த்த” அடிப்படை ஒன்றை உருவாக்கிக் கொண்டதோடு, பெருந்திரளான மக்களை உளவியல் ரீதியில் கொலைவெறியர்களாக உருமாற்றும் வித்தை தெரிந்தவர்கள் இவர்கள் – இந்துத்துவ பாசிஸ்டுகள்.

அவன் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்தவன். அரசியல்வாதிகளின் சார்பாக தொழிலதிபர்களை, குறிப்பாக கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டி பணம் பறிப்பது அந்த கும்பலின் வேலை. ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கும் அவனை இயக்கிய அரசியல்வாதிக்கும் இடையே முரண்பாடு எழுகிறது – பங்கு பிரித்துக் கொள்வதில் இந்த முரண்பாடு தோன்றியிருக்க வேண்டும் என பின்னர் இதை விசாரித்த சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை சொல்கிறது. சம்பந்தப்பட்ட அரசியல்வாதி இந்த ரவுடியை ஒழித்துக் கட்ட தீர்மானிக்கிறார்.

வெறுமனே கொன்று போட்டால் அதில் ஆதாயம் ஏதுமில்லை. அதே நேரம் மாநில அரசின் அதிகாரத்தில் இவரது கட்சி இருந்தாலும் கூட, ரவுடியின் மேல் “கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல்” போன்ற குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் – அப்படி முறையான நடவடிக்கை எடுத்தால், அவன் உண்மைகளை வெளியிட்டு அரசியல்வாதியின் தொடர்பை அம்பலப்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது.

ரவுடியைக் கொல்வது – அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைவது, என ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்தத் திட்டமிடுகிறார் அரசியல்வாதி. தனக்கு நெருக்கமான போலீசு அதிகாரிகளைக் கொண்டு போலி மோதல் ஒன்றை அரங்கேற்றும் அரசியல்வாதி, அதில் ரவுடியைப் போட்டுத் தள்ளுகிறார். போலீசைக் கொண்டு, கொல்லப்பட்ட ரவுடி பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு தொடர்புடையவன் என்றும், அவனால் மாநில முதல்வரின் உயிருக்கே ஆபத்து இருந்ததாகவும் கதைகள் எழுதப்படுகின்றன.

கதை இன்னும் முடியவில்லை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டு மேலே தொடர்வோம். கதையின் களம் குஜராத். சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயர் அமித்ஷா, இன்றைய பாரதிய ஜனதா தேசியத் தலைவர்; அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர். அந்த ரவுடி, சோராபுதீன் ஷேக்.

***

“முதல்வரைக் கொல்ல லஷ்கர்-ஏ-தொய்பா (அல்லது ஜெய்ஷ், அல்லது ஐ.எஸ்.ஐ) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் திட்டம் போலீசாருக்குக் கிடைத்தது. தகவலோடு ரோந்து சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ________ நிறுத்தினார்கள். அவர் வண்டியை நிறுத்தாமல் போலீசாரின் மேல் துப்பாக்கி பிரயோகம் நடத்தினார். தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில் பயங்கரத் தீவிரவாதி ___________ இறந்து விட்டார்”

மேற்படி கதையில் கோடிட்ட இடத்தை ஏதாவது ஒரு முசுலீமின் பெயரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம். 2003 -ல் இருந்து 2006 வரையிலான காலகட்டத்தில் இதே போன்ற கிழிந்து கந்தலான கதைகளைச் சொல்லி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையாக குஜராத் அரசே அறிவித்த போலி மோதல் கொலைகள் 21.

இந்த 21 பேரில் சோராபுதீன் ஷேக்கோ, அவரோடு கொல்லப்பட்ட அவரது மனைவி கௌசரோ இவர்களோடு கொல்லப்பட்ட துள்சிராம் பிரஜாபதியோ இல்லை.

சோராபுதீன் ஷேக் – கௌசர்பி

2005 -ம் ஆண்டு நவம்பர் 22 -ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலிக்கு தனது மனைவி கௌசர்பி மற்றும் நண்பர் துள்சிராம் பிரஜாபதியோடு பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார் சோராபுதீன். குஜராத் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியா தலைமையிலான போலீசு குழு ஒன்று பேருந்தை மறித்து அதில் பயணித்துக் கொண்டிருந்த இம்மூவரையும் கைது செய்து அழைத்துச் செல்கிறது. சட்டரீதியான நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாத இந்த “கைது” நடவடிக்கையை கடத்தல் என்று சொல்வதே சரியானது.

நவம்பர் 26 -ம் தேதி தனது கணவரிடமிருந்து பிரிக்கப்படும் கௌசர்பி, தனியே ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறார். பின்னர் துள்சிராம் பிரஜாபதி ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். அதே நாள் சோராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

அடுத்த சில நாட்கள் பயங்கரமான தீவிரவாதியைக் கொன்ற குஜராத் காவல்துறையின் வீரதீரச் செயல் குறித்து தேசிய ஊடகங்களில் பாராட்டுப் பத்திரங்கள் வெளியாகத் துவங்கின. பின்னர் (25.8.2010 -ல்) இது பற்றி விசாரித்த சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்த வாக்குமூலத்தின்படி அர்ஹாம் எனும் பண்ணை வீட்டில் கௌசர்பி அடைத்து வைக்கப்பட்டார்.

அவருக்கு சௌபே எனும் சூபிரெண்டு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டார். 26 -ம் தேதியில் இருந்து 28 -ம் தேதி வரை சௌபே, கௌசர்பியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார். பின்னர் 29 -ம் தேதி மதியம் (சோராபுதீன் கொல்லப்பட்ட அதே நாளில்) கௌசர்பியை ஷாஹிபாகில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றார் சௌபே. அங்கே டி.ஜி வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் கௌசர்பியுடன் சோராபுதீன் கொல்லப்பட்டார் என்பதைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாயைத் திறந்தால் கௌசர்பியும் கொல்லப்படுவார் என மிரட்டியுள்ளனர். கணவன் கொல்லப்பட்டதைக் கேட்டு அந்த பெண் அழுது புரண்டுள்ளார். கௌசர்பியை வெளியே விட்டால் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என போலீசார் அஞ்சியுள்ளனர். டாக்டரும், ஐபிஎஸ் அதிகாரியுமான நரேந்திர அமீன் (துணைக் கண்காணிப்பாளர்) வரவழைக்கப்பட்டு கௌசர்பியின் உடலில் மயக்க ஊசி போட்டுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த கௌசர்பி கொல்லப்பட்டு அவரது உடல் உருத்தெரியாமல் எரிக்கப்பட்டுள்ளது. இன்று வரை கௌசர்பியின் உடல் கிடைக்கவே இல்லை.

இதற்கிடையே ராஜஸ்தான் போலீசின் பிடியில் இருந்த பிரஜாபதிக்கு சோராபுதீன் மற்றும் கௌசர்பியின் நிலை தெரியவருகிறது. தனது உயிருக்கும் உத்திரவாதமில்லை என அவர் பதறியுள்ளார். தேசிய மனித உரிமைக் கமிசனுக்கு கடிதம் மேல் கடிதமாக எழுதித் தன்னைக் காப்பாற்றுமாறு இறைஞ்சியுள்ளார். தன்னை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என எதிர்பார்த்து தனது உறவினர்களிடம் தன்னை அழைத்துச் செல்லும் ரயிலில் யாராவது பயணிக்குமாறு கேட்டுள்ளார்.

டி.ஜி வன்சாரா

எனினும், 2006 -ம் ஆண்டு டிசம்பர் 26 -ம் தேதி விசாரணைக்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு அழைத்து வரும் போது அவரைக் கொன்று விட திட்டம் தீட்டுகின்றனர் குஜராத் போலீசார். விசாரணை முடிந்து டிசம்பர் 28 -ம் தேதி உதய்பூருக்குக் கிளம்பிய பிரஜாபதியை கடத்தும் டி.ஜி வன்சாரா தலைமையிலான குஜராத் போலீசார், அதே நாளில் குஜராத்-ராஜஸ்தான் எல்லையருகே வைத்து சுட்டுக் கொல்கின்றனர். தப்பிச் செல்லும் போது பிரஜாபதி தாக்கியதாகவும், தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் அவர் இறந்து விட்டார் எனவும் ஒரு கதையைத் தயாரிக்கின்றனர் குஜராத் போலீசார்.

பிரஜாபதி கொல்லப்பட்ட சமயம் மிக முக்கியமானது. சோராபுதீன் – கௌசர்பி கொலைகளுக்கான சிபிஐ விசாரணை அப்போது தீவிரமடைந்திருந்தது. சிபிஐ அதிகாரி வி.எல் சோலங்கி, சோராபுதீன் – கௌசர்பி கடத்தலை நேரில் கண்ட சாட்சியான பிரஜாபதியை விசாரிக்க அனுமதி பெற்றிருந்தார். பிரஜாபதி கொல்லப்பட்டதற்கு மறுநாள் அவரைச் சந்திக்கும் திட்டத்தோடு இருந்தார் சோலங்கி.

அன்றைக்கு குஜராத் போலீசு அதிகாரி ஜி.சி ராய்கர் என்பவர் அளித்த வாக்குமூலம் மிக முக்கியமானது. குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, போலீசு டைரக்டர் ஜெனரலை அழைத்து பிரஜாபதி விசயத்தை உடனே முடிக்க வேண்டும் என சொன்னதாகவும், சோலங்கியை சரிக்கட்ட உங்களுக்கெல்லாம் துப்பில்லையா என ஆத்திரத்தோடு ஏசியதாக தனது வாக்குமூலத்தில் ராய்கர் குறிப்பிடுகிறார்.

பின்னர் 2007 -ம் ஆண்டு மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஜ்னீஷ் ராய் என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரஜ்னீஷ் ராய் கொலைக் குற்றங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட ராஜ்குமார் பாண்டியனின் நெருங்கிய நண்பர். மேலும், டி.ஜி வன்சாரா போன்ற பெரிய அதிகாரிகளிடம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு வழக்கை மொத்தமாக ஊத்தி மூட துணை நிற்பார் எனும் நம்பிக்கையில் தான் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரஜ்னீஷ் ராயிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், ரஜ்னீஷ் ராய் நியாயமாகச் செயல்பட்டார்; முக்கியமாக, அவ்வாறு செயல்பட்டதற்காக அவர் கொல்லப்படவில்லை. இதற்கு அப்போது மத்தியில் காங்கிரசு அரசு இருந்தது என்பதும் கூட ஒரு காரணமாக இருந்திருக்க கூடும். தனது விசாரணை அறிக்கையில் சோராபுதீன், கௌசர்பி, பிரஜாபதி ஆகியோரின் கொலைகளுக்கு அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவருக்கு நெருக்கமான போலீசு அதிகாரிகளுமே காரணம் என்பதைத் தெளிவாக நிறுவினார்.

பின்னர் 2010 ஜனவரி மாதம் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதே ஆண்டு ஏப்ரல் மாதம், குஜராத் போலீசு அதிகாரி அபய் சுதாசாமா, அமித்ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவருமான குலாப்சந்த் கட்டாரியா ஆகியோர், சோராபுதீனுடன் சேர்ந்து தொழிலதிபர்களைக் கடத்திய குற்றங்களிலும் மற்றும் பணயத் தொகை வசூலிப்பதிலும் கூட்டாளிகளாகச் செயல்பட்டனர் என்று சிபிஐ குற்றம் சாட்டியது.

இதற்கு ஆதாரமாக இம்மூவருக்குள் நடந்த 331 தொலைபேசி உரையாடல்களை சிபிஐ முன்வைத்தது. கடத்தல்களில் அமித்ஷாவின் கூட்டாளியாக செயல்பட்ட சோராபுதீன் கட்டுப்படுத்த முடியாதவராக மாறியதாலேயே அவரைக் கொல்லும் முடிவை அமித்ஷா எடுத்ததாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஒரே நீதிபதி இறுதிவரை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென உத்தரவிட்டதன் பேரில், வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.

***

கடந்த 2014 -ம் ஆண்டு நவம்பர் 30 -ம் தேதி இரவு 11:00 மணி அளவில் தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்த நீதிபதி லோயா, சுமார் 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அது தான் தனது நெருங்கிய உறவினர்களோடான அவரது கடைசி பேச்சு. அப்போது அவர் நீதிபதி ஒருவரின் இல்லத் திருமணத்திற்காக நாக்பூர் சென்றிருந்தார். சொல்லப் போனால் முதலில் அந்த திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என்றே அவர் முடிவு செய்திருந்தார். எனினும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.

மறுநாள், அதிகாலை லோயாவின் உறவினர்களுக்கு அவர் இறந்து விட்ட தகவல் சொல்லப்பட்டுள்ளது. லோயாவின் மனைவி மும்பையிலும், சகோதரி லாத்தூரிலும், சகோதரியின் மகள்கள் தூலே, ஜல்காவ்ன் மற்றும் அவுரங்காபாத் நகரங்களிலும் இருந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து தகவல் சொல்லப்பட்டுள்ளது. தன்னை நீதிபதி பார்டே என அறிமுகப்படுத்திக் கொண்ட தொலைபேசிக் குரல் ஒன்று நீதிபதி லோயாவின் மரணம் குறித்த தகவலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனை முடிந்த லோயாவின் உடலை லாத்தூர் நகரில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது பூர்வீகமான கேட்காவ்ன் எனும் இடத்துக்கு அனுப்பப்பட்டதாக குடும்பத்தாருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. வழக்கமாக கேட்காவ்னில் தங்கும் லோயாவின் தந்தை, அன்றைய தினம் தனது மகள் வசிக்கும் லாத்தூரில் இருந்துள்ளார். தன்னை ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என அறிமுகம் செய்து கொள்ளும் ஈஸ்வர் பஹேட்டி என்பவர் நீதிபதி லோயாவின் தந்தையை நேரில் சந்தித்து தான் லோயாவின் உடலை கேட்காவ்னுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

லாத்தூரில் வசித்து வரும் லோயாவின் சகோதரிகளில் ஒருவரான சரிதா மந்தனேவுக்கு டிசம்பர் 1 -ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மருமகனை அழைத்துக் கொண்டு நாக்பூர் செல்ல உத்தேசித்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனையில் வைத்தே சரிதாவைச் சந்திக்கும் ஈஸ்வர் பஹேட்டி, உடல் கேட்காவ்னுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் அளித்துள்ளார்.

டிசம்பர் 1 -ம் தேதி இரவு 11:30 மணிக்கு நீதிபதி லோயாவின் உடல் கேட்காவ்னில் கூடியிருந்த குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. உடலைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதலில், பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட உடலின் மேல் பொதுவாக மருத்துவமனையின் கவுனையோ அல்லது வெள்ளைத் துணியைக் கொண்டோ சுற்றியிருப்பார்கள். ஆனால், லோயாவின் உடலில் அவரது உடையே போடப்பட்டிருந்தது. மேலும், கழுத்தருகேயும் தலையின் பின்புறத்திலும் உடைகளிலும் இரத்தக்கறை படிந்திருப்பதை உறவினர்கள் பார்த்துள்ளனர்.

அடுத்து, நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில், ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் கையெழுத்திட்டு உடலை வாங்கியிருக்கிறார். அப்படி ஒரு சொந்தமே தங்களுக்கு நாக்பூரில் இல்லை என்கிறார்கள் அவரது உறவினர்கள். மேலும், நீதிபதி லோயாவின் செல்போனை மூன்று நான்கு நாட்கள் கழித்து ஈஸ்வர் பஹேட்டி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார். அப்படி கொடுக்கப்பட்ட செல்பேசியில் இருந்த எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட தரவுகள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்டிருந்துள்ளது.

நீதிபதி லோயாவின் மரணத்தைத் தொடர்ந்த நிகழ்வுகள் ஏராளமான கேள்விகளை எழுப்புகின்றன.

மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் லோயாவை ஆட்டோ ரிக்சா ஒன்றில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக உடனிருந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது அவர் தங்கியிருந்த அரசு விடுதியின் இருபுறமும் சில கிலோமீட்டர்களுக்கு ஆட்டோ ஸ்டேண்ட் ஏதும் இல்லை. அவசர காலத்தில் ஆம்புலன்சை அழைக்காமல் ஏன் ஆட்டோவைத் தேடி அலைய வேண்டும்?

மாரடைப்பு ஏற்பட்டவுடன் குடும்பத்தாருக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? அவர் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் இருந்த போதும் கூட தகவல் சொல்லப்படாதது ஏன்? பொதுவாக சந்தேகத்துக்குரிய மரணங்களின் போது தான் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் – லோயாவின் மரணம் இயற்கையானதாக, மாரடைப்பினால் ஏற்பட்டதாக இருந்தால் ஏன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது?

பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி அதிகாலை 4:00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு 6:15 -க்கு மரணம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தாருக்கு ஐந்து மணிக்கே இறந்து விட்டதாக தகவல் சொல்லப்பட்டது எப்படி? பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே, பிரேதப்பரிசோதனை நடந்த அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் பேசிய போது அவர்கள், நள்ளிரவே நீதிபதி இறந்து விட்டாரென தன்னிடம் குறிப்பிட்டதாக எழுதியிருக்கிறார். உண்மையில் லோயா இறந்த நேரம் தான் என்ன?

இந்தக் கதையில் தலைகாட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஈஸ்வர் பஹேட்டிக்கு நீதிபதியின் குடும்ப நண்பர் அல்ல; அப்படியிருக்க அவருக்கு ஏன் இத்தனை அக்கறை? தனது மருமகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அதிகாலை சென்ற நீதிபதியின் சகோதரியை மருத்துவமனையிலேயே வைத்து சந்தித்திருக்கிறார் பஹேட்டி. அவர் அங்கே தான் செல்கிறார் என்பது இவருக்கு எப்படித் தெரியும். இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்படும் பொருட்கள் பிரேதப்பரிசோதனை முடிந்த பின் அவரது உடலுடன் சேர்த்து கொடுக்கப்பட்டு விடும் – அல்லது போலீசார் கையளிப்பார்கள். ஆனால், மூன்று நாட்கள் கழித்து ஈஸ்வர் பஹேட்டி தான் செல்பேசியை கொடுத்துள்ளார்.

அடுத்து மரணத்துக்குக் காரணம் Coronary artery insufficiency என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவரும், நீதிபதியின் சகோதரிகளில் ஒருவருமான பியானி, அறிக்கையில் மரணத்திற்கு காரணமாக குறிப்பிடப்படும் சிக்கல் பொதுவாக இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு, அதிக உடற்பருமன், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இருக்கிறவர்களுக்கே வரும் என்றும், தனது சகோதரனுக்கு அம்மாதிரியான உடற்கோளாறுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கிறார். மேலும், தனது சகோதரனுக்கு புகை, குடி போன்ற எந்த பழக்கங்களும் இல்லை என்றும், பல வருடங்களாக தொடர்ந்து தினசரி இரண்டு மணி நேரமாவது டேபிள் டென்னிஸ் விளையாடும் பழக்கமுள்ளவர் என்றும் குறிப்பிடுகிறார்.

லோயாவின் மரணத்திற்கு பின் எழும் கேள்விகளின் பட்டியல் மிக நீண்டது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், நாம் அவரது மரணத்துக்கு முன் நடந்த சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)

செய்தி ஆதாரம் :

 

வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

3

வர்கள் எங்களிட மிருந்து மரங்களைப் பறித்துக் கொண்டார்கள்; மீன்களை அள்ளிக்கொண்டார்கள் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள், பூமி எல்லைகளையே சுரண்டி எடுத்துவிட்டார்கள். பழங்குடி விவசாயிகளின் மண் உரிமை பறிக்கப்பட்ட போது அவர்கள் நெஞ்சிலிருந்து வெடித்த வேதனை இது. சந்தால் பழங்குடிகளுக்கோ இதே போன்ற வேதனை ஆழமானது. நெடுங்காலம் வெட்டிய இடத்திலேயே வெட்டி ரணம் பாய்ந்த வேதனை. 1855-இல் இந்த வேதனைகளுககெல்லாம் அவர்கள் ஓர் விடிவைக் கண்டார்கள், அதுவே சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி

***

Attack_by_600_Santhals_upon_a_party_of_50_sepoys,_40th_regiment_native_infantry
சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி

இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய பழங்குடி இனம் பீகார் சந்தால் இனம், எல்லாப் பழங்குடிகளையும் போலவே அவர்கள் தங்கள் பாரம்பரிய வீடு போல காட்டை மதித்தார்கள். அதுவே அவர்களின் பிறந்த வீடு; அவர்களின் தொட்டில்; தாய்மடி; அடர்ந்த காடுகளில் எதிரொலிக்கும் எந்தச் சிறு ஒலியும் அவர்களுக்குத் தெரியும், பறவை, செடி, கொடி, விலங்கு, பூச்சிகள் அனைத்தும் தெரியும், காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;

சந்தால் கிராமங்களில் உள்ள விளை நிலங்களை எந்த ஒரு தனிநபரும் தனிச் சொத்தாகப் பார்த்ததில்லை; எல்லாருக்கும் பொதுவானது அந்தச் சொத்து. பங்கீடு, மறுபங்கீடு எல்லாம் சந்தால் கிராமப் பஞ்சாயத்துதான் செய்யும். இந்த மரபுகளை அத்துமீறி மிதித்து நசுக்கி அவமதித்து உடைத்துப் போட்டது கிழக்கிந்தியக் கம்பெனி. ஒரே ஒரு சட்டம் போட்டு ஜமீன்தாரி முறையை கிராமங்களில் திணித்தது. இதன்படி மாவட்டங்கள், தாலுக்காக்கள், கிராமங்கள், பழங்குடி வாழும் பகுதிகள் எல்லாவற்றையும் தனியார் சொத்துக்களாக ஜமீன்தார்களுக்கு மாற்றிக் கொடுத்தது.

வரி வசூலிப்பதிலிருந்து தொடங்கி எல்லா அதிகாரங்களும் பிரிட்டிசாரால் ஜமீன்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரிட்டிசார் வருவதற்கு முன்னால் வரிகள் தானியமாகச் செலுத்தப்பட்டன, இப்போது பணம் திணிக்கப்பட்டது; பணத்தின் தேவையை ஒட்டி நில விற்பனை, அடகு, நிலம் கை மாறுதல், இருப்பு போன்றவை வழக்கத்தில் புகுத்தப்பட்டன. வியாபாரியும், வட்டிக் கடைக்காரனும் கடன் கொடுத்தார்கள். இதுவரை சந்தால்கள் சந்தித்தேயிராத சட்ட விசயங்களும், அதிகார வர்க்கமும் பேய்களாக வந்து நின்று அச்சுறுத்தின. பயிரிடும் விவசாயிக்கும் ஜமீனுக்குமிடையே ஒரு நூறு இடைத்தரகர்கள் உருவானார்கள்.

இதுவரை தனது சொந்த ரத்த பாசங்களோடு மட்டுமே வாழ்ந்த சந்தால்களின் மத்தியில் அந்நியர்கள் ஊடுருவினார்கள்; அவர்களை எதிரிகள் என்றார்கள் சந்தால்கள்.

மொத்தத்தில் பழங்குடிகளின் தாய்ப்பூமியை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள். அண்டவந்த ஜமீன்கள் நிலங்களைப்பிடுங்கிக் கொண்டு சந்தால்களைக் காட்டுக்குள் விரட்டினார்கள். சந்தால்கள் புதிய இடங்களில் காட்டை எரித்து விளைநிலங்களை உருவாக்கினார்கள். மீண்டும் ஜமீன்கள் கம்பெனிப் படையின் துணையோடு வந்து அந்த இடத்தையும் பறித்துக் கொண்டார்கள். பலமுறை விரட்டப்பட்ட சந்தால்கள் ஏறக்குறைய கங்கையின் கரைக்கே வந்து விட்டார்கள்.

”சந்தால்கள் சாதுவானவர்கள்; ஒரு பகுதியிலிருந்து விரட்டினால் இன்னொரு இடத்துக்குப் போய் வாழ்ந்து கொள்வார்கள்” என்று ஜமீன்கள் எடை போட்டதை உடைத்தெறியத் தொடங்கிய போதுதான் உண்மையான சந்தால்களை அவர்கள் சந்தித்தார்கள்.

***

times1855
காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;

பழங்குடிக்குச் சம்பந்தமேயில்லாத ஆட்கள் ஜமீனின் எடுபிடிகளாக ‘வரியைக் கொடு’ என்ற கட்டளையோடு வந்தார்கள், வரியைக் கட்ட காசு இல்லை என்று கைவிரித்தபோது வலுவந்தமாகச் சந்தால்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஜமீன்களின் கட்டில்களுக்குப் பழங்குடிப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள், கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டார்கள். இணங்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். படிப்பறிவற்ற சந்தால்களிடமிருந்து 50 முதல் 500 மடங்கு வரை அநியாயக் கந்துவட்டி கறந்தார்கள். சந்தைகளில் போலி எடைகளை வைத்து ஏமாற்றிக் கொள்முதல் நடத்தினார்கள்; ஏழை சந்தால் நிலங்களுக்குள்ளே அத்து மீறி மாடு, குதிரை, யானைகளை இறக்கிப் பயிர்களை அழித்தார்கள்; மோசடிக் கடன் பத்திரங்களில் கைநாட்டு வாங்கி சந்தால் குடும்பங்களைப் பரம்பரைக் கொத்தடிமையாக்கினார்கள். இவை ஜமீனின் ஆதிக்க அடையாளங்கள்.

சவுக்கார்கள் – இவர்களுக்கும் உழைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இவர்களது பிழைப்பும் மண்ணை நம்பியில்லை. பணமே அவர்களின் கடவுள், ஆடே இல்லாமல் ஆடு வியாபாரம், மாடே இல்லாமல் மாட்டு வியாபாரம் செய்து விடுவார்கள். பயிர், கால்நடை, சந்தால் குடும்பங்களையே கூட வட்டிப் பணத்துக்கு ஈடுகட்டுவர்கள், வட்டிப் பணமே அவர்களின் கடவுள், வெற்றுத் தாளை முன்னால் வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் கணக்குப் போட்டு வட்டியை விரித்துப் பெரிதாக்குவார்கள். இவர்கள் அனைவரும மொய்ரா, பனியா, போஜ்பூரி, பட்டியா, வங்காளி வியாபாரக் குடும்பங்கள் வந்தேறிகள்; இவர்கள் ஏராளமான எண்ணைய் வித்துக்கள், கடுகு ஆகியவற்றை மோசடிக் கொள்முதலில் பறித்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் தரகர்களாக மாறினார்கள். இவை சந்தால்களை ஏய்த்த சவுக்கார்களின் சுரண்டல் அடையாளங்கள்.

அரசாங்கம் – ஜமீன், சவுக்கார் இருவரையும் பாதுகாக்கும் கம்பெனித் துரைமார்களையும், அதிகாரிகளையும்தான் சந்தால்கள் அரசாங்கமாகப் பார்த்தார்கள். துரைகளின் பங்களாக்களை, அவர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை வெறுத்தார்கள். எழுச்சியின்போது ரயில் நிலையங்கள் தாக்கப்பட்டன; அரசாங்க அலுவலகங்கள், துரைமாரின் பங்களாக்கள், சிறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில் ரோடு நாகரிகம் அல்ல, சுரண்டலின் சின்னம் சந்தால்களுக்கு. ரயில் ரோடு கொண்டு வந்த துரைமார்கள் சந்தால் பெண்களைக் கற்பழித்ததை, வரமறுத்தவர்களைக் கொன்றதை, வேலைகளுக்காகச் சிறுவர்களைக் கடத்திச் சென்றதை அவர்கள் மறக்கவில்லை.

ஜமீன், சவுக்கார், சர்க்கார் – இந்த மூன்று பேரின் கூட்டினை எதிரி, அந்நியர் என்று சந்தால்கள் அறிவித்தார்கள். அவர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எழுச்சிப் பிரகடனம் செய்தார்கள்.

சிறுசிறு எதிர்ப்புக்களாகத் தொடங்கி எழுச்சியாகப் பரிமாணம் கொண்டது சந்தால் பழங்குடிப் போராட்டம். ஒவ்வொரு எதிர்ப்பின் போது சந்தால்கள் கைது செய்யப்பட்டார்கள்; அவர்களின் கைகள் முதுகில் பிணைத்துக் கயிற்றால் கட்டப்பட்டன; சந்தால்களின் பார்வையில் கயிறுகள் அடக்குமுறைக் கருவிகள், ஒரு சாதாரண எளிய உழைப்பாளி சந்தால் கோச்சோ ஜமீன் தரோகாவுக்குச் சவால் விட்டான்; கோச்சோ சொன்னான்: ”எத்தனை ஆயிரம் அடி கயிறு உனக்குக் கிடைத்துவிடும், பார்த்து விடலாம்; அமைதியான எல்லாச் சந்தால்களையும் கட்டிப் போட்டு இழுத்துச் சென்று ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விடுவாயா, பார்த்து விடுவோம்.”

சவால்கள் இல்லாமல் உழைக்கும் விவசாயிகளின் போராட்ட வரலாறுகள் இல்லை. ’எங்கள் நியாயத்தைக் கேட்கிறோம்’ என்ற உழைப்பவர் உரத்துக் கூறுவார்கள். ’என்ன அநியாயம், இப்படியும் நடக்குமா?’ என்று ஆண்டைகள் தாண்டிக் குதிப்பார்கள் அதுதான் வாடிக்கை.

”எதுக்குடா இங்க வந்தீங்க?”
“எங்களுக்குச்சேர வேண்டியதைக் கேக்க.”
”அது என்னடா சேர வேண்டியது, கொள்ளையடிக்க வந்திருக்கோமுன்னு சொல்லடா நாயே…”
“அப்புடி நீ நெனச்சா அப்புடியே வெச்சுக்குவோம்.”
– இது 1905-ஆம் ஆண்டில் ரசிய விவசாயிகள் எழுச்சியில் ஒரு நிகழ்ச்சி.

”வரியக் கொடுடா என்றா கேட்கிறான்? அவனை வெட்டி வீசுங்கள்! எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் நியாயத்துக்காகக் கலகம் செய்யுங்கள் ஆயுதங்களை கர்ரூ நதியில் ரத்தம் போகக் கழுவி எடுங்கள்!”
– இது சோட்டா நாக்பூர் ‘கோல்’ பழங்குடிகளின் வீரச் சூளுரை.

சந்தால் கோச்சோவின் சவால் வெற்றுச் சவால் அல்ல. அவர்கள் போராட்ட வரலாற்றின் பக்கங்களே சாட்சி.

***

warweb

1855-இன் மைய நாட்கள், சந்தால் பகுதி ராஜ்மகால் குன்றுகள் ரத்தத்தால் சிவந்து கொண்டிருந்தன. சந்தால் ஆயுதப் போராட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.

அது ஒரு மண் குடிசை உள்ளே 45 சந்தால் வீரர்கள் மறைந்திருந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் ஆங்கிலச் சிப்பாய்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியான துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கினார்கள்; ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதில் சென்றது. அம்புகள் சீறிப் பாய்ந்தன. அனேகமாக குடிசை சல்லடைக் கண்களாகத் துளைக்கப் பட்டுவிட்டது – இனியும் ஒட்டிக் கொண்டு ஊசலாடும் ஒரே ஒரு கதவைத் தவிர வேறு தடுப்புக்கள் இல்லை. எதிரி வீரர்கள் கதவைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி – சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார். ”சரணடைந்து விடு, பிழைத்துக் கொள்வாய்” என்று ஒரு ஆங்கிலேயச் சிப்பாய் அவரைப் பார்த்துக் கத்தினான். அடுத்த கணம் ஓர் அசைவு – ஒரே எட்டில் முதிய வீரர் அந்தச் சிப்பாய் மீது பாய்ந்தார், கையிலிருந்த சண்டைக் கோடரியால் ஒரே வெட்டில் வீழ்த்தினார். அடுத்த நொடியில் அவரும் சாய்ந்தார். அந்த முதிய வீரர் உடம்பு முழுவதும் ஏற்கெனவே ஏராளமான குண்டுகள் பாய்ந்து ரத்தம் கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது. அந்நியப் படை அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

முட்டாள்கள், கோழைகள் என்று சந்தால்களைத் தூற்றிய ஆங்கிலேயக் கம்பெனிப் படைகளும் சரி, ஜமீன் – சவுக்கார்களும் சரி எழுச்சியின் போது கிலி பிடித்து நடுங்கினார்கள்.

santals
சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார்

சந்தால்கள் சமவெளி மக்களில் பல்வேறு தாழ்ந்த சாதிப் பிரிவினரை போராட்டத்தின் நட்புச் சக்திகளாக வென்றெடுத்ததைப் பார்த்துப் பதறினார்கள்.

பெண்கள் கூட சந்தால்களுக்காக உளவு வேலை பார்த்ததையும், தங்கள் உளவுகளை முறியடித்ததையும் கண்டு பீதி அடைந்தார்கள்.

பழங்குடிக் கலையின் கருவிகளான முழவுகளும், குழலும் போராட்ட காலத்தில் செய்தி அறிவிப்புக்கருவிகளாகவும், வீர எழுச்சி இசையாகவும் மாறியதைக் கண்டு வெருண்ட ஆங்கிலேயே எடுபிடி போலீசும், ராணுவமும் கைதுகளின் போது முழவுகளையும், குழலையும் கூடப் பறித்தார்கள்; செய்தி வாசிக்கும் வழிகளை அடைத்து விட்டதாகக் கருதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் விரைவிலேயே புதிய முழவுகள், புதிய குழல்கள் களத்திற்கு விரைந்ததைக் கண்டு தூக்கம் இழந்தார்கள்.

களத்தில் பல முறை ஆங்கிலேயப் படைகள் சிதறி ஓடின. தன்னை ஒத்த 25 அதிகாரிகளை இழந்துவிட்டுத் திக்குமுக்காடிய மேஜர் பர்ரோஸ் படையை விட்டுவிட்டுத் தலை தெறிக்கத் தப்பி ஓடினான். அவன் அறிக்கையில் எழுதினான்; ”கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்.”

“ராஜ்மகால் குன்றுகள் சிவந்தன” என்று எழுதுவது இலக்கிய வருணனை அல்ல. ஆக்கிரமிப்பாளரை விரட்டிய போரில் அப்பிராந்தியத்தில் ரத்த ஆறு தான் ஓடியது, பல ஆயிரம் ரத்த சாட்சிகளின் வரலாறுகள் மக்களிடையே கதைகளாக, பாடல்களாக உலவுகின்றன.

எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு என்ற தியாக வீரர்கள் இன்றும் உடன் இருப்பதுபோல் பசுமையான நினைவுகளை சந்தால்கள் பல தலைமுறைகளாகக் காப்பாற்றி வருகின்றனர்.

***

சீது கானு
சீது கானு

சீது, கானு மற்றும் பிற தலைவர்கள் சந்தால் மக்களோடு கலந்து ஐக்கியமாகிப் போராடியவர்கள். இலையால் செய்யப்பட்ட தொன்னையில் மஞ்சளும், எண்ணெய்யும் எடுத்துக் கொண்டு அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்றார்கள். அது ஒரு பொது நிகழ்வுக்கான அழைப்பு போல. கூட்டாக மீன் பிடிக்க வேட்டை ஆட இவ்வாறு செய்தி சொல்வார்கள். இப்போது போராட்டத்துக்கும் அதையே ரகசியத் செய்தி அறிவிப்பாக மாற்றிக் கொண்டார்கள். அதேபோல சால்மரக் கிளைகள் கூட்டத்துக்கான அறிவிப்பாக அனுப்பப்பட்டது. இதைக் கொண்டு வருவோரிடம் “எங்கே கூட்டம்?” என்று கேட்டு அறிந்து கொள்வார்கள்.

சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள் எழுச்சியைக் குறிப்பிட வேட்டை, மீன் பிடித்தல் என்ற சங்கேதச் சொற்களை சந்தால்கள் பயன்படுத்தினார்கள். இதில் அனைத்து சந்தால்களும் கலந்து கொண்டார்கள். வயது வித்தியாசம் கிடையாது; சண்டைக்குப் பயன் படமாட்டார்கள் எனக் கருதப்படும் நோயாளிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தினார்கள்.

தலைவர் என்பவர் வீரரில் ஒருவர். கற்பனைக் கதாநாயகர்களாக, சூப்பர் ஹீரோக்களாகத் திரைப்படங்களில் காட்டுகிறார்களே அவர்களைப் போல் அல்ல. சந்தால் தலைவரும் போரிடுவார் சாதாரண மக்களும் போரிடுவார்கள். கூடுதலாக அவர் தலைமை தாங்கி வழிநடத்துவது சிறப்பம்சமாகும். இதனால்தான் சீது, கானு புகழ் இன்றளவும் நின்று நிலைக்கிறது.

***

execlow
கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்

எதிரிகள் சந்தால்களின் அம்புகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்திய மக்கள் மன்றத்திற்கும் அஞ்சினார்கள். எதிரிகளை அண்டிப் பிழைத்த கூலி எழுத்தாளர்கள் ”ரத்த வெறி பிடித்த இந்தக் காட்டு மிராண்டிகளுக்கு எதிராகப் பயங்கரத்தைக் கட்ட விழ்க்காமல் இந்த எழுச்சியை நாம் அடக்க முடியாது” என்று அரசைத் தூண்டி எழுதினார்கள்.

14 இடங்களில் ஒரே நேரத்தில் கலகம் வெடித்த போது ஒரிரு இடங்களில் ஓரிரு கொலைகள் மட்டுமே நடந்தன. கொலை அவர்களின் நோக்கம் அல்ல. அவ்வாறிருந்தால் பல ஆயிரக்கணக்கான பண்ணைகளின் தலைகள் வெட்டப்பட்டிருக்கும். ஆனால், மக்கள் மன்றத்தில் விவாதித்து முடிவெடுத்த வழக்குகளில் கொடூரமான வட்டிக்காரனுக்கும், பண்ணைக்கும் கடுமையான தண்டனை வழங்கவும் தவறவில்லை.

வட்டிக்கடை முதலாளிகளுக்கு மகாஜன்கள் என்று பெயர். எழுச்சியின் போது ஒரு மகாஜன் விசாரணையில் சிக்கினான். பழங்குடிகள் அவன் கையில் தாம்பட்ட கொடுமைகளை விவரித்தார்கள். அநியாயமாக இழந்த நிலங்கள், கண் போல் வளர்த்த மாடுகள், ஆடுகள், உயிராக நேசித்து வளர்த்து அவனுக்குக் கொத்தடிமையாக அனுப்பட்ட தன் மகன் – இப்படி கொடூரங்களை வரிசைப் படுத்தினார்கள். பலர் பாழாக்கப் பட்ட தம் வாழ்க்கையை சாட்சியமாக பலர் முன்னே திறந்து வைத்தார்கள். இறுதியில் அவனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அவ்வளவு கொடூரனை ஆடு வெட்டுவது போல வெட்டித் தீர்க்க யாருக்கும் இஷ்டமில்லை; எத்தனை சந்தால் குடும்பங்கள் எவ்வளவு வருடங்கள் எவ்வளவு வேதனைகள்?

அந்த மகாஜன் மன்றத்தின் நடுவே நிறுத்தப்பட்டான்.
– பாதங்கள்: அவை சந்தால் மண்ணை மிதித்துத்துவைத்து அழித்தவை; முதலில் அவை வெட்டப்பட்டன.
நான்கணாவைத் திரும்ப வாங்கி விட்டோம் என்று சொன்னார்கள் சந்தால்கள்.
ஓங்கிய வாளுக்கு அடுத்த குறி கால்கள், அவை சந்தால்களை இஷ்டப்படி எட்டி உதைத்தவை;
பெண்களை மானபங்கப்படுத்தி உதைத்தவை.
எட்டணா சேர்ந்து விட்டது இப்போது.

உடல்: சுரண்டலின் அருவெறுப்பான அடையாளம், இருதுண்டாக வெட்டப்பட்டது.
பணிரெண்டனா வசூலாகி முடிந்தது.
தலை: வட்டி மூலதனத்தின் பீடம் – ஒரே வெட்டில் கிள்ளி எறியப்பட்டது.
கோரமாக அலறிக் கொண்டிருந்த அதன் கண்கள் அணைந்தன.
கடைசியில் பதினாறு அணாக்களும் முழுசாக வசூலிக்கப்பட்டு விட்டன.

சந்தால் போராளிகள் மகிழ்ச்சியில் குதித்து ஆடினார்கள் ஆக்கிரமிப்பாளரில் ஒருவன் அழிக்கப்பட்டது அவர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து தான். விசாரணையையோ, மன்றங்களையோ எல்லா பழங்குடிக் கிராமங்களும் வரவேற்றன; ஆனால் ஆங்கிலேயரின் அடிவருடிகளும், ஜமீன்களும் எதிர்த்தார்கள்.

”இந்த விரல்களால்தானே வட்டிக் காசை வாரிக் கொண்டாய்? கொள்ளைப் பணத்தை அள்ளிக் கொண்டாய்? பசியால் துடித்த ஏழைகளின் வாயிலிருந்து சோற்றைப் பறித்தது உன் கைகள் தானே?” – இப்படி வட்டிக்கடை தீனதயாள் ராயின் தலை வெட்டப் பட்டு, ஊர்ச்சந்தையில் ஈட்டி முனையில் செருகப்பட்டது. பழங்குடிகள், சந்தால் அல்லாத ஏழைகள் இதை வரவேற்றார்கள்.

எதிரிகள் ஆங்கிலேயருக்குத் தகவல் அனுப்பி எதிர்த் தாக்குதல் தொடுக்க அவசரமாக முயற்சி எடுத்தார்கள்; பகல்பூர் ஜமீன்கள், உள்ளூர் அவுரிப் பயிர் முதலாளிகள், முர்ஷிதாலாத் பகுதி நவாப் நசீம், ஐரோப்பிய அவுரி முதலாளிகள் ஆகியோர் அரசுக்கு பணம் உட்பட எல்லா உதவிகளும் தாராளமாகக் கொடுத்தார்கள்.

எதிர்த் தாக்குதல் கொலை வெறியோடு நடத்தப்பட்டது. சந்தால் கிராமங்கள் பல முழுக்க அழிக்கப்பட்டன. பயிர்கள், வீடுகள், பெண்கள், குழந்தைகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் ஆங்கிலேய வெறிநாய்கள் குதறின. சந்தால் மக்களை கொலைக்காரர்கள், கொள்ளையர்கள் என்று பழி தூற்றியவர்களே பல ஆயிரம் கொலையினைச் செய்தார்கள்.

அதுபோதாதென்று சந்தால்களின் எல்லாக் கிராமங்களின் மீதும் ’தண்டத் தொகை’ விதிக்கப்பட வேண்டும் என்றும் எல்லா சந்தால்களுமே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆங்கிலேயரின் ஊதுகுழலான ஏடு எழுதியது. அந்த ஏட்டின் பெயர் வேடிக்கையானது ”இந்தியாவின் நண்பர்கள்”.

***

sido-kanhuஅன்று சீதுவும் கானுவும் மற்ற தலைவர்களும் ஆங்கிலேய கம்பெனி வெறிநாய்களால் தூக்கிலிடப்பட்டார்கள். சந்தால்கள் அந்த மாபெரும் வீரர்களைக் காடுகளில் கூவி அழைத்தார்கள். காடுகளுக்குள்ளே பாய்ந்து சென்ற அந்தக் குரல்கள் சீது, கானுவைத் தேடிச் சென்றன! இன்று அதே பரம்பரையில் வரும் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் இதோ பதில் குரல் கொடுக்கிறார்கள்.

அன்று இருபத்தைந்தாயிரம் சந்தால் வீரர்கள் கொடுத்த இன்னுயிர்கள் இன்றும் புரட்சிக் கனல் மணக்கும் பூக்களாக போராட்டத் தடமெங்கும் மணம் வீசி எழுச்சி ஊட்டிக் கொண்டு தான் இருக்கின்றன!

– பஷீர்
புதிய கலாச்சாரம், ஜூலை 1995.

முருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive

17
போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் வளர்ப்பில் துள்ளி விளையாடிய விவேக் ஜெயராமன்!

“முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ’அம்மா’எனக்கு வழித்துத் தருவார்” – இது கடந்த 21.11.2017, செவ்வாய்க்கிழமை தேதியிட்ட ஆங்கில The Hindu-வில் வெளிவந்துள்ள ஒரு சிறப்புக் (Exclusive) கட்டுரையில் இடம்பெற்றுள்ள ‘வைர’ வரி!

வழித்து தந்தது சாதா அம்மாவாக இருந்திருந்தால் இது ஒரு மேட்டரே இல்லை. மாறாக முருங்கை சதையை வழித்து தந்தவர் ‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’. வழித்த சதையை தின்ற வாய், விவேக் ஜெயராமனுடையது.

அம்மா, முருங்கைகாயை மட்டுமா வழித்துத் தந்தார்? ஜெயா டிவியோடு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தையும் அல்லவா விவேக்கிற்கு வழித்துத் தந்திருக்கிறார்! மட்டுமல்ல… சசிகலா குடும்பத்துக்காக தமிழ்நாட்டின் சரிபாதியை வழித்துக் கொடுத்தவர் ஜெயலலிதா. திருப்பதியில் மொட்டை போடும் தமிழ் மக்களின் தமிழகத்தையே ஒரு இருபது ஆண்டுகளில் மொட்டையடித்த பாரம்பரியம் இந்த ஜெயா சசிகால கும்பலினுடையது!

ஆனால் The Hindu பேட்டி, விவேக் ஜெயராமனை ஆர்வத் துடிப்புள்ள ஒரு இளம் தொழிலதிபராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனான விவேக், தனது ஒண்ணரை வயதில் இருந்து போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தவர். தற்போது ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டி.வி. நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

கடந்த வாரம் வரிமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டில் விவேக்கின் வீடு, அலுவலகங்கள் அனைத்தும் அடக்கம். ரெய்டை தொடர்ந்து, இந்த மன்னார்குடி குடும்பம் நடத்தியிருக்கும் சூறையாடல் குறித்து மக்கள் காறித் துப்பிக் கொண்டிருக்கும் நிலையில்தான், விவேக் குறித்து ஓர் இனிமையான சித்திரத்தை நம் முன்னே வைக்கிறது தி இந்து பேட்டி.

“நான் போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தேன். போயஸ் மாடியில் நின்றபடி பட்டம் விடுவது எனக்குப் பிடிக்கும். என்னை அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் எனினும், நான் தெரியாமல் பட்டம் விடுவேன். அதை சின்னத்தை (சசிகலா) பார்த்து விட்டால், கையில் குச்சியுடன் மொட்டை மாடியில் தட்டியபடியே என்னை நோக்கி வருவார். அந்த சத்தமே எனக்கு நடுக்கத்தை வரவழைக்கும்” – எப்படி ஒரு கண்டிப்பு மிகுந்த குடும்பச் சூழலில் விவேக் வளர்க்கப்பட்டார் என்பது நமக்கு சொல்லப்படுகிறது. ஆனானப்பட்ட சிபிஐ கட்சியின் நல்லக்கண்ணுவிற்கே ஒரு தேர்தலில் சீட் இல்லை என்று கதவடைத்த சொர்க்க வாசல் கொண்ட போயஸ் தோட்ட வேதா இல்லத்தில்தான் சீமந்த புத்திரன் விவேக் பட்டம் விட்டிருக்கிறார்.

அ.தி.மு.கவிற்காக அடிவயிற்றிலிருந்து குரலையும், வார்த்தைகளையும் எழுப்பி ஆவேச நடனம் புரியும் சி.ஆர்.சரஸ்வதி போன்ற செய்தித் தொடர்பு அடிமைகளே பார்த்திருக்காத அந்த மொட்டை மாடி, ‘அம்மா’ காலத்தில் ‘அம்மா’வையும், பரப்பன அக்ரகாரத்திற்கு முன்னால் ‘சின்னம்மா’வின் தரிசனத்தையும் தாங்கி நின்ற அந்த பால்கனி, கீழே நின்று கொண்டு பிரியாணி ஏப்பத்தோடு தரிசிக்கும் அதிமுக தொண்டர்களின் மகரவிளக்கு காட்சியான அந்த மாடியில்தான் இந்த விவேக பட்டம் விட்டிருக்கிறார். இப்பேற்பட்ட மொட்டை மாடியின் மகத்துவம் நம்மைப் போன்ற சாதா தமிழர்களின் நனவிலி மனதில் உறைந்திருக்க, விவேக்கின் விளையாட்டு பருவத்தின் மூலம் அந்த மகத்தான மாடியில் பட்டம் விடும் பட்டத்து இளவரசனை தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் ஹீரோ போல சித்திரிக்கிறார் தி இந்து கட்டுரையாளர்.

“என்னை சின்ன அத்தை அடிக்கமாட்டார். ஆனால் கையில் குச்சியுடன் என் அருகில் இருக்கும் பொருட்களை தட்டியபடியே அடிப்பதைப் போல் வருவார். உடனே பெரிய அத்தை (ஜெயலலிதா), ‘சசி… அடிக்காதே’ என சத்தம் போடுவார். நான் அழுவதை பெரிய அத்தையால் தாங்கவே முடியாது” – ஆனந்தம் தவழும் ஒரு வீட்டின் சூழல் நமக்கு விவரிக்கப்படுகிறது. இயக்குநர் விக்கிரமன் இதை ஒரு காட்சியாக்கினால் உலகமே அந்த கணங்களில் பாசிட்டீவ் எனர்ஜியின் ஆனந்தத்தில் துள்ளுவது உறுதி!

விவேக் உறுதியான மூன்று பெண்களால் வளர்க்கப்பட்டாராம். இதை சொல்வது விவேக் இல்லை. தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கர் அப்படி எழுதுகிறார். ஒருவர் விவேக்கின் அம்மா இளவரசி. இன்னொருவர் ‘சின்ன அத்தை’ சசிகலா. மற்றொருவர், ‘பெரிய அத்தை’ ஜெயலலிதா. ஆனால் ‘சின்னத்தையும், பெரியத்தையும் சாதா அத்தைகள் இல்லையே!

“எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். என் பிறந்த நாளுக்கு பெரிய அத்தை ஒரு கிப்ட் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் உள்ளே பெரிய ‘பாணா காத்தாடி’. முதல்முறையாக மொட்டை மாடியில் இருந்து அந்த பட்டத்தை விடுவதற்கு எனக்கு அனுமதி தந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நான் பாதுகாப்பாக பட்டம் விடுவதை கண்காணிக்க நான்கு போலீஸ்காரர்களையும் உடன் அனுப்பி வைத்தார்கள் – வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கிய நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக காவல்துறை, பொடியன் விவேக்கின் பட்டம் விடும் பணியை கண்காணிக்க தனிப்படை அமைத்திருந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார், கட்டுரையாளர்.

தீரன் அதிகாரம் ஒன்றில் தமிழக காவல்துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ஹீரோயிசத்தின் யோக்கியதை என்ன என்று ஆய்வு செய்வோருக்கு இந்தக் காட்சி ஒரு வரலாறு. ஸ்காட்லாந்து யார்டோடு போட்டி போடும் தமிழக போலீசு இங்கே ஒரு பையனின் பட்டம் விடும் விளையாட்டிற்கு பந்தோபஸ்து கடமை ஆற்றியிருக்கிறது.

டைம்ஸ் நவ் தொடங்கி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வரையிலும் ரவுண்ட் கட்டிய பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், ‘இப்படி போலீஸ்காரனை பந்து பொறுக்கி போட விட்டது நியாயமா?’ என்று கேட்கவில்லை. மாறாக, he recalls with a laugh – அவர் சிரிப்புடன் நினைவு கூர்கிறார்.. – என ஒரு இனிய “பசுமை நிறைந்த நினைவுகளே” பாடலை பாடுகிறார். பாருங்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பதால் அடிமைத்தனம் எவ்வளவு கவித்துமாக வருகிறது என்று!

“ஆஸ்திரேலியாவில் பி.பி.ஏ. சேர்ந்தேன். சின்ன அத்தை என் கையில் 5000 ஆஸ்திரேலியா டாலர் செலவுக்காகக் கொடுத்தாங்க. மூணே நாள்ல எல்லாம் செலவாகிடுச்சு. சின்னத்தைக்கு போன் பண்ணி பணம் வேணும்னு கேட்டேன். அனுப்பவே இல்லை. அப்புறம் சிங்கப்பூர்ல இருந்த என் அக்காவுக்குப் போன் பண்ணி பணம் கேட்டேன். என் அக்கா கணவர் நேரா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி வந்து இன்னொரு 5000 டாலரை கையில் கொடுத்துட்டு, ‘இனிமே குடும்பத்துலேர்ந்து பணத்தை எதிர்பார்க்காதே’ன்னு சொல்லிட்டுப் போனார்.’’ – என்று சொல்லிவிட்டு நேர்காணலில் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார், விவேக்.

ஐயாயிரம் டாலரை கொடுக்க சிங்கப்பூர்லேர்ந்து பிளைட் பிடிச்சு வந்த அதிர்ச்சியை விட, ‘அய்யய்யோ.. அதுக்குப் பிறகு விவேக் செலவுக்கு என்ன செய்திருப்பார்?’ என நம்மிடம் பதைபதைப்பை கூட்டுகிறார் சந்தியா ரவிசங்கர்.

“விவேக், ஆஸ்திரேலியாவில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தார். பிறகு ஒரு பீட்ஸா டெலிவரி பையனாக பணியாற்றினார். பிறகு பூனேவில் எம்.பி.ஏ. படித்தார்; ஐ.டி.சி-யில் வேலைக்கு சேர்ந்து கல்கத்தாவில் கடை, கடையாக சிகரெட் பாக்கெட் விற்றார்’ என்றெல்லாம்  தி இந்து நேர்காணலில் விவரிக்கப்படுகிறது. இதில் கட்டுரையாளர் இரண்டு நீதிகளை உணர்த்துகிறார். 1. விவேக், செல்வச் செழிப்பில் திளைத்த ஊதாரி அல்ல. தானே சம்பாதித்து தானே படித்த தானைத் தலைவன். 2. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஒரு புள்ளையை எப்படி டிசிப்ளினோட வளர்க்கிறார்கள் பாருங்கள்!

இப்படி கட்டுரை முழுக்க நிறைய பன்ஞ்ச் டயலாக்குகள் ரஜினிக்கே சவால் விடுகின்றன. அதில் கடைசி பீஸ், செம மாஸ்!

“2014 வரை என்னை யாருக்கும் தெரியாது. அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நான்கு பேரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் என் மேனேஜரிடம் லீவ் கேட்டேன். காரணம் கேட்டார். வேறு வழியின்றி நான் யார் என்று சொல்ல வேண்டியதாயிற்று. முதல்முறையாக அவரது கண்களில் பயத்தைக் கண்டேன்.’’  என்கிறார் விவேக்.

– அது பயம் இல்லை. மரண பீதி. உண்மையாவே அந்த ஊழியரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனானப்பட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதியை கைது செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவி நடத்திய சேஸிங் நாட்களில் கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது என்பது ஊருக்கே தெரியும். எனில் விவேக்கை வேலை வாங்கிய அந்த மேனேஜர் பயப்படாமல் என்ன செய்வார்?

“அதுவரையிலும் என்னை எல்லா ஊழியர்களை போலதான் நடத்துவார். காபி எடுத்து வரச் சொல்வார். ஏதேனும் ஒன்றுக்கு ஒப்புதல் தர மணிக்கணக்கில் காக்க வைப்பார். ஏனோ எனக்கு அதில் திருப்தி இருந்தது. நான் லீவ் முடிந்து மீண்டும் வேலையில் சேர்ந்தபோது எல்லோரும் என்னிடம் மிகையான மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். பயந்து ஒதுங்கினார்கள்”

– புகழையும், பணத்தையும், கௌரவத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு விவேக் எப்படி ஒரு துறவியைப் போல வாழ்ந்தார் என்பதை ஒரு திரைக்கதையின் நேர்த்தியுடன் விவரிக்கிறார் கட்டுரையாளர்.

*******

இந்தக் கட்டுரையை எக்ஸ்க்ளூசிவ் என்கிறது தி இந்து. ஆனால், அதே நாளில் இதே விவேக் ஜெயராமனின் இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எக்கனாமிக்ஸ் டைம்ஸில் வெளியானது. இந்த சிறிய பேட்டியை எழுதியிருந்தவர் பிரேம்சங்கர். இந்த பிரேம்சங்கரும், தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கரும் கணவன் மனைவி. ஒண்ணா கெளம்பிப்போயி ஒரு காபியை குடிச்சு அரட்டையடிச்சுட்டு, இந்தம்மா எழுதினது தி இந்து எக்ஸ்க்ளூசிவாம். அவரு எழுதினது எக்கனாமிக்ஸ் டைம்ஸில் எக்ஸ்க்ளூசிவாம்.

********

என்ன கேவலம் இது? எதற்காக இந்தப் பேட்டி? இதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா என்ற ஜனநாயகத்துக்கு சற்றும் பொருத்தமற்ற ஒரு சர்வாதிகாரியின் துணையுடன் சசிகலாவின் உறவினர் வலைப்பின்னல் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாபெரும் பொருளாதார சூறையாடலை நிகழ்த்தி வருகிறது. இவர்களால் சுரண்டப்படாத ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள் எதுவும் பாக்கியில்லை. அனைத்து அரசுத் துறைகளும் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் ரவுடித்தனத்தை; பொறுக்கித்தனத்தை நிறுவனமயபப்டுத்தியிருக்கிறார்கள். அடிமைத்தனத்தை ஓர் இயல்புபோல மாற்றி வைத்திருக்கிறார்கள். மிடாஸ் என்ற பெயரில் எரிசாராயம் காய்ச்சி ஒட்டுமொத்த மாநிலத்தையும் கொன்றொழிக்கும் கொலைகாரர் கூட்டம் இது. விவேக் என்ற 29 வயது இளம் தொழிலதிபருக்கும், இந்த பணத்துக்கும் சம்பந்தமே இல்லையா?

ஆனால் கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கருக்கோ, இதை முக்கியத்துவடன் வெளியிட்டுள்ள தி இந்துவுக்கோ இதுவெல்லாம் ஒரு பொருட்டில்லை. மாறாக, அவர்கள் விவேக்கை சில்லறைத்தனம் இல்லாத; ஒரு நாகரிகமான கண்ணியமான நபராக முன்வைக்கிறார்கள். விவேக் ஜெயா டி.வி.யில் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. செய்திகளும் அதில் இடம் பெறுகிறதாம். ஜெயா டி.வி.யில் துரைமுருகன் பேட்டி வந்ததாம். இது அவருடைய நாகரிகமான அணுகுமுறைக்கு உதாரணமாம்.

இந்த சந்தியா ரவிசங்கர் தான் வைகுண்டராஜனின் மணல் மாஃபியா குறித்து thewire.in  தளத்தில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அது பரவலாக பேசப்பட்டது. இப்போது வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியன் தான் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். அவரை ‘இளம் தொழிலதிபராக’ சித்தரித்து எழுதுவாரா? வைகுண்டராஜன் சட்டவிதிகளை மீறி இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளை அடிக்கிறார் என்றால், சசிகலா குடும்பத்தினர் என்ன உழைத்து பொருளீட்டும் உத்தமர்களா? அந்த ஒட்டுமொத்த கொள்ளை சாம்ராஜ்ஜியத்தின் தளபதியாக இருக்கிறார் விவேக் ஜெயராமன். ஆனால் அவரை ஓர் உத்தமனை போல சித்தரிக்கிறார்கள் இவர்கள்.

இந்த சந்தியா ரவிசங்கர் மக்களின் வில்லன்களான வரலாற்று மாந்தர்களை கஷ்டப்பட்டு அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி நேர்காணல் செய்தால் எப்படி இருக்கும்?

  • மோனோலிசா ஓவியத்தின் பொருளை ஆழமுடன் விளக்குகிறார் அடால்ப் ஹிட்லர்
  • 2002 குஜராத்தில் புறாக்களுக்காக மாடம் கட்டினார் ஒரு முன்னாள் டீக்கடை இளைஞர்!
  • பிலிப்பைன்ஸ் ஓட்டல் பையனின் கேர்ல் பிரண்டுக்காக ஆடை வடிவமைத்த விஜய் மல்லையா!
  • நித்தியானந்தாவின் நித்திரைக் கனவில் உதயமான நான் ஸ்டாப் அன்னதான ஓட்டல்!
  • அசீமானந்தா கண்டுபிடித்த அரிய ஆசனங்கள்!

இப்படியெல்லாம் சில பல நேர்காணல்கள் எடுக்கப்பட்டு தி இந்துவில் அவை சிறப்புக் கட்டுரைகளாக வராது என்பதற்கு எந்த உத்திரவாதத்தையும் நாங்கள் தர இயலாது!

– கீரன்

மேலும் படிக்க:

https://thewire.in/110405/tamil-nadu-sand-mining/

https://thewire.in/122893/mining-ball-centres-court/

கருத்துப் படம் : மார்க்சியம் X மதம்

151

பார்க்காதே – கேட்காதே – பேசாதே என்கிறது கடவுள் நம்பிக்கை !
பார் – கேள் – பேசு என்கிறது மார்க்சியம் !


படம் : வேலன்

இணையுங்கள்:

 

சபரிமலை பெயரில் மக்கள் அதிகாரத்தின் கூட்டத்தை மறுக்கும் விருதை போலீசு !

5

“அரசியல் அராஜகங்களுக்கு அக்கிரமங்களுக்கு முடிவு கட்டு !” என்ற தலைப்பில் விருத்தாசலம் வானொலித்திடலில் 28.11.2017 அன்று மாலை நடைபெற இருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீசு தடை!

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று பொதுக்கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும்.

 

இந்த மாதம் முழுவதும் நான்கு முறை பெதுக்கூட்டம் நடத்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என மனு அனுப்பினோம். நான்கு முறையும் தெரு முனை பிரச்சாரம் உட்பட அனைத்திற்கும் முதல் நாள் இரவு அனுமதி மறுத்து கடிதம் வழங்குகிறது போலீசு.

ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது. சேத்தியாதோப்பு மணல் குவாரிக்கு எதிராக மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடுவது காவல் துறைக்கு தொல்லையாக கருதுகிறது.

கருத்துரிமை நசுக்கப்படுகிறது. நடப்பது போலீசு ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கபட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 27.11.2017 அன்று பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி நடைபெற இருந்தது அதற்கும் முதல்நாள் இரவு 11.30 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளனர்.

நான் வைத்ததுதான் சட்டம் எந்த கோர்டுக்கு போனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் போலீசார் கூலிப்படையாக செயல்படுகிறார்கள். அதிகரித்து வரும் மக்கள் போராட்டம் போலீசுக்கு சரியான பாடம் புகட்டும். அதில் மக்கள் அதிகாரம் முன்னே நிற்கும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம். 97912 86994.