Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 474

வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

3

வர்கள் எங்களிட மிருந்து மரங்களைப் பறித்துக் கொண்டார்கள்; மீன்களை அள்ளிக்கொண்டார்கள் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள், பூமி எல்லைகளையே சுரண்டி எடுத்துவிட்டார்கள். பழங்குடி விவசாயிகளின் மண் உரிமை பறிக்கப்பட்ட போது அவர்கள் நெஞ்சிலிருந்து வெடித்த வேதனை இது. சந்தால் பழங்குடிகளுக்கோ இதே போன்ற வேதனை ஆழமானது. நெடுங்காலம் வெட்டிய இடத்திலேயே வெட்டி ரணம் பாய்ந்த வேதனை. 1855-இல் இந்த வேதனைகளுககெல்லாம் அவர்கள் ஓர் விடிவைக் கண்டார்கள், அதுவே சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி

***

Attack_by_600_Santhals_upon_a_party_of_50_sepoys,_40th_regiment_native_infantry
சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி

இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய பழங்குடி இனம் பீகார் சந்தால் இனம், எல்லாப் பழங்குடிகளையும் போலவே அவர்கள் தங்கள் பாரம்பரிய வீடு போல காட்டை மதித்தார்கள். அதுவே அவர்களின் பிறந்த வீடு; அவர்களின் தொட்டில்; தாய்மடி; அடர்ந்த காடுகளில் எதிரொலிக்கும் எந்தச் சிறு ஒலியும் அவர்களுக்குத் தெரியும், பறவை, செடி, கொடி, விலங்கு, பூச்சிகள் அனைத்தும் தெரியும், காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;

சந்தால் கிராமங்களில் உள்ள விளை நிலங்களை எந்த ஒரு தனிநபரும் தனிச் சொத்தாகப் பார்த்ததில்லை; எல்லாருக்கும் பொதுவானது அந்தச் சொத்து. பங்கீடு, மறுபங்கீடு எல்லாம் சந்தால் கிராமப் பஞ்சாயத்துதான் செய்யும். இந்த மரபுகளை அத்துமீறி மிதித்து நசுக்கி அவமதித்து உடைத்துப் போட்டது கிழக்கிந்தியக் கம்பெனி. ஒரே ஒரு சட்டம் போட்டு ஜமீன்தாரி முறையை கிராமங்களில் திணித்தது. இதன்படி மாவட்டங்கள், தாலுக்காக்கள், கிராமங்கள், பழங்குடி வாழும் பகுதிகள் எல்லாவற்றையும் தனியார் சொத்துக்களாக ஜமீன்தார்களுக்கு மாற்றிக் கொடுத்தது.

வரி வசூலிப்பதிலிருந்து தொடங்கி எல்லா அதிகாரங்களும் பிரிட்டிசாரால் ஜமீன்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரிட்டிசார் வருவதற்கு முன்னால் வரிகள் தானியமாகச் செலுத்தப்பட்டன, இப்போது பணம் திணிக்கப்பட்டது; பணத்தின் தேவையை ஒட்டி நில விற்பனை, அடகு, நிலம் கை மாறுதல், இருப்பு போன்றவை வழக்கத்தில் புகுத்தப்பட்டன. வியாபாரியும், வட்டிக் கடைக்காரனும் கடன் கொடுத்தார்கள். இதுவரை சந்தால்கள் சந்தித்தேயிராத சட்ட விசயங்களும், அதிகார வர்க்கமும் பேய்களாக வந்து நின்று அச்சுறுத்தின. பயிரிடும் விவசாயிக்கும் ஜமீனுக்குமிடையே ஒரு நூறு இடைத்தரகர்கள் உருவானார்கள்.

இதுவரை தனது சொந்த ரத்த பாசங்களோடு மட்டுமே வாழ்ந்த சந்தால்களின் மத்தியில் அந்நியர்கள் ஊடுருவினார்கள்; அவர்களை எதிரிகள் என்றார்கள் சந்தால்கள்.

மொத்தத்தில் பழங்குடிகளின் தாய்ப்பூமியை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள். அண்டவந்த ஜமீன்கள் நிலங்களைப்பிடுங்கிக் கொண்டு சந்தால்களைக் காட்டுக்குள் விரட்டினார்கள். சந்தால்கள் புதிய இடங்களில் காட்டை எரித்து விளைநிலங்களை உருவாக்கினார்கள். மீண்டும் ஜமீன்கள் கம்பெனிப் படையின் துணையோடு வந்து அந்த இடத்தையும் பறித்துக் கொண்டார்கள். பலமுறை விரட்டப்பட்ட சந்தால்கள் ஏறக்குறைய கங்கையின் கரைக்கே வந்து விட்டார்கள்.

”சந்தால்கள் சாதுவானவர்கள்; ஒரு பகுதியிலிருந்து விரட்டினால் இன்னொரு இடத்துக்குப் போய் வாழ்ந்து கொள்வார்கள்” என்று ஜமீன்கள் எடை போட்டதை உடைத்தெறியத் தொடங்கிய போதுதான் உண்மையான சந்தால்களை அவர்கள் சந்தித்தார்கள்.

***

times1855
காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;

பழங்குடிக்குச் சம்பந்தமேயில்லாத ஆட்கள் ஜமீனின் எடுபிடிகளாக ‘வரியைக் கொடு’ என்ற கட்டளையோடு வந்தார்கள், வரியைக் கட்ட காசு இல்லை என்று கைவிரித்தபோது வலுவந்தமாகச் சந்தால்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஜமீன்களின் கட்டில்களுக்குப் பழங்குடிப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள், கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டார்கள். இணங்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். படிப்பறிவற்ற சந்தால்களிடமிருந்து 50 முதல் 500 மடங்கு வரை அநியாயக் கந்துவட்டி கறந்தார்கள். சந்தைகளில் போலி எடைகளை வைத்து ஏமாற்றிக் கொள்முதல் நடத்தினார்கள்; ஏழை சந்தால் நிலங்களுக்குள்ளே அத்து மீறி மாடு, குதிரை, யானைகளை இறக்கிப் பயிர்களை அழித்தார்கள்; மோசடிக் கடன் பத்திரங்களில் கைநாட்டு வாங்கி சந்தால் குடும்பங்களைப் பரம்பரைக் கொத்தடிமையாக்கினார்கள். இவை ஜமீனின் ஆதிக்க அடையாளங்கள்.

சவுக்கார்கள் – இவர்களுக்கும் உழைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இவர்களது பிழைப்பும் மண்ணை நம்பியில்லை. பணமே அவர்களின் கடவுள், ஆடே இல்லாமல் ஆடு வியாபாரம், மாடே இல்லாமல் மாட்டு வியாபாரம் செய்து விடுவார்கள். பயிர், கால்நடை, சந்தால் குடும்பங்களையே கூட வட்டிப் பணத்துக்கு ஈடுகட்டுவர்கள், வட்டிப் பணமே அவர்களின் கடவுள், வெற்றுத் தாளை முன்னால் வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் கணக்குப் போட்டு வட்டியை விரித்துப் பெரிதாக்குவார்கள். இவர்கள் அனைவரும மொய்ரா, பனியா, போஜ்பூரி, பட்டியா, வங்காளி வியாபாரக் குடும்பங்கள் வந்தேறிகள்; இவர்கள் ஏராளமான எண்ணைய் வித்துக்கள், கடுகு ஆகியவற்றை மோசடிக் கொள்முதலில் பறித்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் தரகர்களாக மாறினார்கள். இவை சந்தால்களை ஏய்த்த சவுக்கார்களின் சுரண்டல் அடையாளங்கள்.

அரசாங்கம் – ஜமீன், சவுக்கார் இருவரையும் பாதுகாக்கும் கம்பெனித் துரைமார்களையும், அதிகாரிகளையும்தான் சந்தால்கள் அரசாங்கமாகப் பார்த்தார்கள். துரைகளின் பங்களாக்களை, அவர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை வெறுத்தார்கள். எழுச்சியின்போது ரயில் நிலையங்கள் தாக்கப்பட்டன; அரசாங்க அலுவலகங்கள், துரைமாரின் பங்களாக்கள், சிறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில் ரோடு நாகரிகம் அல்ல, சுரண்டலின் சின்னம் சந்தால்களுக்கு. ரயில் ரோடு கொண்டு வந்த துரைமார்கள் சந்தால் பெண்களைக் கற்பழித்ததை, வரமறுத்தவர்களைக் கொன்றதை, வேலைகளுக்காகச் சிறுவர்களைக் கடத்திச் சென்றதை அவர்கள் மறக்கவில்லை.

ஜமீன், சவுக்கார், சர்க்கார் – இந்த மூன்று பேரின் கூட்டினை எதிரி, அந்நியர் என்று சந்தால்கள் அறிவித்தார்கள். அவர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எழுச்சிப் பிரகடனம் செய்தார்கள்.

சிறுசிறு எதிர்ப்புக்களாகத் தொடங்கி எழுச்சியாகப் பரிமாணம் கொண்டது சந்தால் பழங்குடிப் போராட்டம். ஒவ்வொரு எதிர்ப்பின் போது சந்தால்கள் கைது செய்யப்பட்டார்கள்; அவர்களின் கைகள் முதுகில் பிணைத்துக் கயிற்றால் கட்டப்பட்டன; சந்தால்களின் பார்வையில் கயிறுகள் அடக்குமுறைக் கருவிகள், ஒரு சாதாரண எளிய உழைப்பாளி சந்தால் கோச்சோ ஜமீன் தரோகாவுக்குச் சவால் விட்டான்; கோச்சோ சொன்னான்: ”எத்தனை ஆயிரம் அடி கயிறு உனக்குக் கிடைத்துவிடும், பார்த்து விடலாம்; அமைதியான எல்லாச் சந்தால்களையும் கட்டிப் போட்டு இழுத்துச் சென்று ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விடுவாயா, பார்த்து விடுவோம்.”

சவால்கள் இல்லாமல் உழைக்கும் விவசாயிகளின் போராட்ட வரலாறுகள் இல்லை. ’எங்கள் நியாயத்தைக் கேட்கிறோம்’ என்ற உழைப்பவர் உரத்துக் கூறுவார்கள். ’என்ன அநியாயம், இப்படியும் நடக்குமா?’ என்று ஆண்டைகள் தாண்டிக் குதிப்பார்கள் அதுதான் வாடிக்கை.

”எதுக்குடா இங்க வந்தீங்க?”
“எங்களுக்குச்சேர வேண்டியதைக் கேக்க.”
”அது என்னடா சேர வேண்டியது, கொள்ளையடிக்க வந்திருக்கோமுன்னு சொல்லடா நாயே…”
“அப்புடி நீ நெனச்சா அப்புடியே வெச்சுக்குவோம்.”
– இது 1905-ஆம் ஆண்டில் ரசிய விவசாயிகள் எழுச்சியில் ஒரு நிகழ்ச்சி.

”வரியக் கொடுடா என்றா கேட்கிறான்? அவனை வெட்டி வீசுங்கள்! எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் நியாயத்துக்காகக் கலகம் செய்யுங்கள் ஆயுதங்களை கர்ரூ நதியில் ரத்தம் போகக் கழுவி எடுங்கள்!”
– இது சோட்டா நாக்பூர் ‘கோல்’ பழங்குடிகளின் வீரச் சூளுரை.

சந்தால் கோச்சோவின் சவால் வெற்றுச் சவால் அல்ல. அவர்கள் போராட்ட வரலாற்றின் பக்கங்களே சாட்சி.

***

warweb

1855-இன் மைய நாட்கள், சந்தால் பகுதி ராஜ்மகால் குன்றுகள் ரத்தத்தால் சிவந்து கொண்டிருந்தன. சந்தால் ஆயுதப் போராட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.

அது ஒரு மண் குடிசை உள்ளே 45 சந்தால் வீரர்கள் மறைந்திருந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் ஆங்கிலச் சிப்பாய்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியான துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கினார்கள்; ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதில் சென்றது. அம்புகள் சீறிப் பாய்ந்தன. அனேகமாக குடிசை சல்லடைக் கண்களாகத் துளைக்கப் பட்டுவிட்டது – இனியும் ஒட்டிக் கொண்டு ஊசலாடும் ஒரே ஒரு கதவைத் தவிர வேறு தடுப்புக்கள் இல்லை. எதிரி வீரர்கள் கதவைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி – சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார். ”சரணடைந்து விடு, பிழைத்துக் கொள்வாய்” என்று ஒரு ஆங்கிலேயச் சிப்பாய் அவரைப் பார்த்துக் கத்தினான். அடுத்த கணம் ஓர் அசைவு – ஒரே எட்டில் முதிய வீரர் அந்தச் சிப்பாய் மீது பாய்ந்தார், கையிலிருந்த சண்டைக் கோடரியால் ஒரே வெட்டில் வீழ்த்தினார். அடுத்த நொடியில் அவரும் சாய்ந்தார். அந்த முதிய வீரர் உடம்பு முழுவதும் ஏற்கெனவே ஏராளமான குண்டுகள் பாய்ந்து ரத்தம் கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது. அந்நியப் படை அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

முட்டாள்கள், கோழைகள் என்று சந்தால்களைத் தூற்றிய ஆங்கிலேயக் கம்பெனிப் படைகளும் சரி, ஜமீன் – சவுக்கார்களும் சரி எழுச்சியின் போது கிலி பிடித்து நடுங்கினார்கள்.

santals
சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார்

சந்தால்கள் சமவெளி மக்களில் பல்வேறு தாழ்ந்த சாதிப் பிரிவினரை போராட்டத்தின் நட்புச் சக்திகளாக வென்றெடுத்ததைப் பார்த்துப் பதறினார்கள்.

பெண்கள் கூட சந்தால்களுக்காக உளவு வேலை பார்த்ததையும், தங்கள் உளவுகளை முறியடித்ததையும் கண்டு பீதி அடைந்தார்கள்.

பழங்குடிக் கலையின் கருவிகளான முழவுகளும், குழலும் போராட்ட காலத்தில் செய்தி அறிவிப்புக்கருவிகளாகவும், வீர எழுச்சி இசையாகவும் மாறியதைக் கண்டு வெருண்ட ஆங்கிலேயே எடுபிடி போலீசும், ராணுவமும் கைதுகளின் போது முழவுகளையும், குழலையும் கூடப் பறித்தார்கள்; செய்தி வாசிக்கும் வழிகளை அடைத்து விட்டதாகக் கருதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் விரைவிலேயே புதிய முழவுகள், புதிய குழல்கள் களத்திற்கு விரைந்ததைக் கண்டு தூக்கம் இழந்தார்கள்.

களத்தில் பல முறை ஆங்கிலேயப் படைகள் சிதறி ஓடின. தன்னை ஒத்த 25 அதிகாரிகளை இழந்துவிட்டுத் திக்குமுக்காடிய மேஜர் பர்ரோஸ் படையை விட்டுவிட்டுத் தலை தெறிக்கத் தப்பி ஓடினான். அவன் அறிக்கையில் எழுதினான்; ”கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்.”

“ராஜ்மகால் குன்றுகள் சிவந்தன” என்று எழுதுவது இலக்கிய வருணனை அல்ல. ஆக்கிரமிப்பாளரை விரட்டிய போரில் அப்பிராந்தியத்தில் ரத்த ஆறு தான் ஓடியது, பல ஆயிரம் ரத்த சாட்சிகளின் வரலாறுகள் மக்களிடையே கதைகளாக, பாடல்களாக உலவுகின்றன.

எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு என்ற தியாக வீரர்கள் இன்றும் உடன் இருப்பதுபோல் பசுமையான நினைவுகளை சந்தால்கள் பல தலைமுறைகளாகக் காப்பாற்றி வருகின்றனர்.

***

சீது கானு
சீது கானு

சீது, கானு மற்றும் பிற தலைவர்கள் சந்தால் மக்களோடு கலந்து ஐக்கியமாகிப் போராடியவர்கள். இலையால் செய்யப்பட்ட தொன்னையில் மஞ்சளும், எண்ணெய்யும் எடுத்துக் கொண்டு அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்றார்கள். அது ஒரு பொது நிகழ்வுக்கான அழைப்பு போல. கூட்டாக மீன் பிடிக்க வேட்டை ஆட இவ்வாறு செய்தி சொல்வார்கள். இப்போது போராட்டத்துக்கும் அதையே ரகசியத் செய்தி அறிவிப்பாக மாற்றிக் கொண்டார்கள். அதேபோல சால்மரக் கிளைகள் கூட்டத்துக்கான அறிவிப்பாக அனுப்பப்பட்டது. இதைக் கொண்டு வருவோரிடம் “எங்கே கூட்டம்?” என்று கேட்டு அறிந்து கொள்வார்கள்.

சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள் எழுச்சியைக் குறிப்பிட வேட்டை, மீன் பிடித்தல் என்ற சங்கேதச் சொற்களை சந்தால்கள் பயன்படுத்தினார்கள். இதில் அனைத்து சந்தால்களும் கலந்து கொண்டார்கள். வயது வித்தியாசம் கிடையாது; சண்டைக்குப் பயன் படமாட்டார்கள் எனக் கருதப்படும் நோயாளிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தினார்கள்.

தலைவர் என்பவர் வீரரில் ஒருவர். கற்பனைக் கதாநாயகர்களாக, சூப்பர் ஹீரோக்களாகத் திரைப்படங்களில் காட்டுகிறார்களே அவர்களைப் போல் அல்ல. சந்தால் தலைவரும் போரிடுவார் சாதாரண மக்களும் போரிடுவார்கள். கூடுதலாக அவர் தலைமை தாங்கி வழிநடத்துவது சிறப்பம்சமாகும். இதனால்தான் சீது, கானு புகழ் இன்றளவும் நின்று நிலைக்கிறது.

***

execlow
கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்

எதிரிகள் சந்தால்களின் அம்புகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்திய மக்கள் மன்றத்திற்கும் அஞ்சினார்கள். எதிரிகளை அண்டிப் பிழைத்த கூலி எழுத்தாளர்கள் ”ரத்த வெறி பிடித்த இந்தக் காட்டு மிராண்டிகளுக்கு எதிராகப் பயங்கரத்தைக் கட்ட விழ்க்காமல் இந்த எழுச்சியை நாம் அடக்க முடியாது” என்று அரசைத் தூண்டி எழுதினார்கள்.

14 இடங்களில் ஒரே நேரத்தில் கலகம் வெடித்த போது ஒரிரு இடங்களில் ஓரிரு கொலைகள் மட்டுமே நடந்தன. கொலை அவர்களின் நோக்கம் அல்ல. அவ்வாறிருந்தால் பல ஆயிரக்கணக்கான பண்ணைகளின் தலைகள் வெட்டப்பட்டிருக்கும். ஆனால், மக்கள் மன்றத்தில் விவாதித்து முடிவெடுத்த வழக்குகளில் கொடூரமான வட்டிக்காரனுக்கும், பண்ணைக்கும் கடுமையான தண்டனை வழங்கவும் தவறவில்லை.

வட்டிக்கடை முதலாளிகளுக்கு மகாஜன்கள் என்று பெயர். எழுச்சியின் போது ஒரு மகாஜன் விசாரணையில் சிக்கினான். பழங்குடிகள் அவன் கையில் தாம்பட்ட கொடுமைகளை விவரித்தார்கள். அநியாயமாக இழந்த நிலங்கள், கண் போல் வளர்த்த மாடுகள், ஆடுகள், உயிராக நேசித்து வளர்த்து அவனுக்குக் கொத்தடிமையாக அனுப்பட்ட தன் மகன் – இப்படி கொடூரங்களை வரிசைப் படுத்தினார்கள். பலர் பாழாக்கப் பட்ட தம் வாழ்க்கையை சாட்சியமாக பலர் முன்னே திறந்து வைத்தார்கள். இறுதியில் அவனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அவ்வளவு கொடூரனை ஆடு வெட்டுவது போல வெட்டித் தீர்க்க யாருக்கும் இஷ்டமில்லை; எத்தனை சந்தால் குடும்பங்கள் எவ்வளவு வருடங்கள் எவ்வளவு வேதனைகள்?

அந்த மகாஜன் மன்றத்தின் நடுவே நிறுத்தப்பட்டான்.
– பாதங்கள்: அவை சந்தால் மண்ணை மிதித்துத்துவைத்து அழித்தவை; முதலில் அவை வெட்டப்பட்டன.
நான்கணாவைத் திரும்ப வாங்கி விட்டோம் என்று சொன்னார்கள் சந்தால்கள்.
ஓங்கிய வாளுக்கு அடுத்த குறி கால்கள், அவை சந்தால்களை இஷ்டப்படி எட்டி உதைத்தவை;
பெண்களை மானபங்கப்படுத்தி உதைத்தவை.
எட்டணா சேர்ந்து விட்டது இப்போது.

உடல்: சுரண்டலின் அருவெறுப்பான அடையாளம், இருதுண்டாக வெட்டப்பட்டது.
பணிரெண்டனா வசூலாகி முடிந்தது.
தலை: வட்டி மூலதனத்தின் பீடம் – ஒரே வெட்டில் கிள்ளி எறியப்பட்டது.
கோரமாக அலறிக் கொண்டிருந்த அதன் கண்கள் அணைந்தன.
கடைசியில் பதினாறு அணாக்களும் முழுசாக வசூலிக்கப்பட்டு விட்டன.

சந்தால் போராளிகள் மகிழ்ச்சியில் குதித்து ஆடினார்கள் ஆக்கிரமிப்பாளரில் ஒருவன் அழிக்கப்பட்டது அவர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து தான். விசாரணையையோ, மன்றங்களையோ எல்லா பழங்குடிக் கிராமங்களும் வரவேற்றன; ஆனால் ஆங்கிலேயரின் அடிவருடிகளும், ஜமீன்களும் எதிர்த்தார்கள்.

”இந்த விரல்களால்தானே வட்டிக் காசை வாரிக் கொண்டாய்? கொள்ளைப் பணத்தை அள்ளிக் கொண்டாய்? பசியால் துடித்த ஏழைகளின் வாயிலிருந்து சோற்றைப் பறித்தது உன் கைகள் தானே?” – இப்படி வட்டிக்கடை தீனதயாள் ராயின் தலை வெட்டப் பட்டு, ஊர்ச்சந்தையில் ஈட்டி முனையில் செருகப்பட்டது. பழங்குடிகள், சந்தால் அல்லாத ஏழைகள் இதை வரவேற்றார்கள்.

எதிரிகள் ஆங்கிலேயருக்குத் தகவல் அனுப்பி எதிர்த் தாக்குதல் தொடுக்க அவசரமாக முயற்சி எடுத்தார்கள்; பகல்பூர் ஜமீன்கள், உள்ளூர் அவுரிப் பயிர் முதலாளிகள், முர்ஷிதாலாத் பகுதி நவாப் நசீம், ஐரோப்பிய அவுரி முதலாளிகள் ஆகியோர் அரசுக்கு பணம் உட்பட எல்லா உதவிகளும் தாராளமாகக் கொடுத்தார்கள்.

எதிர்த் தாக்குதல் கொலை வெறியோடு நடத்தப்பட்டது. சந்தால் கிராமங்கள் பல முழுக்க அழிக்கப்பட்டன. பயிர்கள், வீடுகள், பெண்கள், குழந்தைகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் ஆங்கிலேய வெறிநாய்கள் குதறின. சந்தால் மக்களை கொலைக்காரர்கள், கொள்ளையர்கள் என்று பழி தூற்றியவர்களே பல ஆயிரம் கொலையினைச் செய்தார்கள்.

அதுபோதாதென்று சந்தால்களின் எல்லாக் கிராமங்களின் மீதும் ’தண்டத் தொகை’ விதிக்கப்பட வேண்டும் என்றும் எல்லா சந்தால்களுமே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆங்கிலேயரின் ஊதுகுழலான ஏடு எழுதியது. அந்த ஏட்டின் பெயர் வேடிக்கையானது ”இந்தியாவின் நண்பர்கள்”.

***

sido-kanhuஅன்று சீதுவும் கானுவும் மற்ற தலைவர்களும் ஆங்கிலேய கம்பெனி வெறிநாய்களால் தூக்கிலிடப்பட்டார்கள். சந்தால்கள் அந்த மாபெரும் வீரர்களைக் காடுகளில் கூவி அழைத்தார்கள். காடுகளுக்குள்ளே பாய்ந்து சென்ற அந்தக் குரல்கள் சீது, கானுவைத் தேடிச் சென்றன! இன்று அதே பரம்பரையில் வரும் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் இதோ பதில் குரல் கொடுக்கிறார்கள்.

அன்று இருபத்தைந்தாயிரம் சந்தால் வீரர்கள் கொடுத்த இன்னுயிர்கள் இன்றும் புரட்சிக் கனல் மணக்கும் பூக்களாக போராட்டத் தடமெங்கும் மணம் வீசி எழுச்சி ஊட்டிக் கொண்டு தான் இருக்கின்றன!

– பஷீர்
புதிய கலாச்சாரம், ஜூலை 1995.

முருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive

17
போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் வளர்ப்பில் துள்ளி விளையாடிய விவேக் ஜெயராமன்!

“முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ’அம்மா’எனக்கு வழித்துத் தருவார்” – இது கடந்த 21.11.2017, செவ்வாய்க்கிழமை தேதியிட்ட ஆங்கில The Hindu-வில் வெளிவந்துள்ள ஒரு சிறப்புக் (Exclusive) கட்டுரையில் இடம்பெற்றுள்ள ‘வைர’ வரி!

வழித்து தந்தது சாதா அம்மாவாக இருந்திருந்தால் இது ஒரு மேட்டரே இல்லை. மாறாக முருங்கை சதையை வழித்து தந்தவர் ‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’. வழித்த சதையை தின்ற வாய், விவேக் ஜெயராமனுடையது.

அம்மா, முருங்கைகாயை மட்டுமா வழித்துத் தந்தார்? ஜெயா டிவியோடு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தையும் அல்லவா விவேக்கிற்கு வழித்துத் தந்திருக்கிறார்! மட்டுமல்ல… சசிகலா குடும்பத்துக்காக தமிழ்நாட்டின் சரிபாதியை வழித்துக் கொடுத்தவர் ஜெயலலிதா. திருப்பதியில் மொட்டை போடும் தமிழ் மக்களின் தமிழகத்தையே ஒரு இருபது ஆண்டுகளில் மொட்டையடித்த பாரம்பரியம் இந்த ஜெயா சசிகால கும்பலினுடையது!

ஆனால் The Hindu பேட்டி, விவேக் ஜெயராமனை ஆர்வத் துடிப்புள்ள ஒரு இளம் தொழிலதிபராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனான விவேக், தனது ஒண்ணரை வயதில் இருந்து போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தவர். தற்போது ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டி.வி. நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

கடந்த வாரம் வரிமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டில் விவேக்கின் வீடு, அலுவலகங்கள் அனைத்தும் அடக்கம். ரெய்டை தொடர்ந்து, இந்த மன்னார்குடி குடும்பம் நடத்தியிருக்கும் சூறையாடல் குறித்து மக்கள் காறித் துப்பிக் கொண்டிருக்கும் நிலையில்தான், விவேக் குறித்து ஓர் இனிமையான சித்திரத்தை நம் முன்னே வைக்கிறது தி இந்து பேட்டி.

“நான் போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தேன். போயஸ் மாடியில் நின்றபடி பட்டம் விடுவது எனக்குப் பிடிக்கும். என்னை அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் எனினும், நான் தெரியாமல் பட்டம் விடுவேன். அதை சின்னத்தை (சசிகலா) பார்த்து விட்டால், கையில் குச்சியுடன் மொட்டை மாடியில் தட்டியபடியே என்னை நோக்கி வருவார். அந்த சத்தமே எனக்கு நடுக்கத்தை வரவழைக்கும்” – எப்படி ஒரு கண்டிப்பு மிகுந்த குடும்பச் சூழலில் விவேக் வளர்க்கப்பட்டார் என்பது நமக்கு சொல்லப்படுகிறது. ஆனானப்பட்ட சிபிஐ கட்சியின் நல்லக்கண்ணுவிற்கே ஒரு தேர்தலில் சீட் இல்லை என்று கதவடைத்த சொர்க்க வாசல் கொண்ட போயஸ் தோட்ட வேதா இல்லத்தில்தான் சீமந்த புத்திரன் விவேக் பட்டம் விட்டிருக்கிறார்.

அ.தி.மு.கவிற்காக அடிவயிற்றிலிருந்து குரலையும், வார்த்தைகளையும் எழுப்பி ஆவேச நடனம் புரியும் சி.ஆர்.சரஸ்வதி போன்ற செய்தித் தொடர்பு அடிமைகளே பார்த்திருக்காத அந்த மொட்டை மாடி, ‘அம்மா’ காலத்தில் ‘அம்மா’வையும், பரப்பன அக்ரகாரத்திற்கு முன்னால் ‘சின்னம்மா’வின் தரிசனத்தையும் தாங்கி நின்ற அந்த பால்கனி, கீழே நின்று கொண்டு பிரியாணி ஏப்பத்தோடு தரிசிக்கும் அதிமுக தொண்டர்களின் மகரவிளக்கு காட்சியான அந்த மாடியில்தான் இந்த விவேக பட்டம் விட்டிருக்கிறார். இப்பேற்பட்ட மொட்டை மாடியின் மகத்துவம் நம்மைப் போன்ற சாதா தமிழர்களின் நனவிலி மனதில் உறைந்திருக்க, விவேக்கின் விளையாட்டு பருவத்தின் மூலம் அந்த மகத்தான மாடியில் பட்டம் விடும் பட்டத்து இளவரசனை தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் ஹீரோ போல சித்திரிக்கிறார் தி இந்து கட்டுரையாளர்.

“என்னை சின்ன அத்தை அடிக்கமாட்டார். ஆனால் கையில் குச்சியுடன் என் அருகில் இருக்கும் பொருட்களை தட்டியபடியே அடிப்பதைப் போல் வருவார். உடனே பெரிய அத்தை (ஜெயலலிதா), ‘சசி… அடிக்காதே’ என சத்தம் போடுவார். நான் அழுவதை பெரிய அத்தையால் தாங்கவே முடியாது” – ஆனந்தம் தவழும் ஒரு வீட்டின் சூழல் நமக்கு விவரிக்கப்படுகிறது. இயக்குநர் விக்கிரமன் இதை ஒரு காட்சியாக்கினால் உலகமே அந்த கணங்களில் பாசிட்டீவ் எனர்ஜியின் ஆனந்தத்தில் துள்ளுவது உறுதி!

விவேக் உறுதியான மூன்று பெண்களால் வளர்க்கப்பட்டாராம். இதை சொல்வது விவேக் இல்லை. தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கர் அப்படி எழுதுகிறார். ஒருவர் விவேக்கின் அம்மா இளவரசி. இன்னொருவர் ‘சின்ன அத்தை’ சசிகலா. மற்றொருவர், ‘பெரிய அத்தை’ ஜெயலலிதா. ஆனால் ‘சின்னத்தையும், பெரியத்தையும் சாதா அத்தைகள் இல்லையே!

“எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். என் பிறந்த நாளுக்கு பெரிய அத்தை ஒரு கிப்ட் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் உள்ளே பெரிய ‘பாணா காத்தாடி’. முதல்முறையாக மொட்டை மாடியில் இருந்து அந்த பட்டத்தை விடுவதற்கு எனக்கு அனுமதி தந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நான் பாதுகாப்பாக பட்டம் விடுவதை கண்காணிக்க நான்கு போலீஸ்காரர்களையும் உடன் அனுப்பி வைத்தார்கள் – வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கிய நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக காவல்துறை, பொடியன் விவேக்கின் பட்டம் விடும் பணியை கண்காணிக்க தனிப்படை அமைத்திருந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார், கட்டுரையாளர்.

தீரன் அதிகாரம் ஒன்றில் தமிழக காவல்துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ஹீரோயிசத்தின் யோக்கியதை என்ன என்று ஆய்வு செய்வோருக்கு இந்தக் காட்சி ஒரு வரலாறு. ஸ்காட்லாந்து யார்டோடு போட்டி போடும் தமிழக போலீசு இங்கே ஒரு பையனின் பட்டம் விடும் விளையாட்டிற்கு பந்தோபஸ்து கடமை ஆற்றியிருக்கிறது.

டைம்ஸ் நவ் தொடங்கி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வரையிலும் ரவுண்ட் கட்டிய பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், ‘இப்படி போலீஸ்காரனை பந்து பொறுக்கி போட விட்டது நியாயமா?’ என்று கேட்கவில்லை. மாறாக, he recalls with a laugh – அவர் சிரிப்புடன் நினைவு கூர்கிறார்.. – என ஒரு இனிய “பசுமை நிறைந்த நினைவுகளே” பாடலை பாடுகிறார். பாருங்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பதால் அடிமைத்தனம் எவ்வளவு கவித்துமாக வருகிறது என்று!

“ஆஸ்திரேலியாவில் பி.பி.ஏ. சேர்ந்தேன். சின்ன அத்தை என் கையில் 5000 ஆஸ்திரேலியா டாலர் செலவுக்காகக் கொடுத்தாங்க. மூணே நாள்ல எல்லாம் செலவாகிடுச்சு. சின்னத்தைக்கு போன் பண்ணி பணம் வேணும்னு கேட்டேன். அனுப்பவே இல்லை. அப்புறம் சிங்கப்பூர்ல இருந்த என் அக்காவுக்குப் போன் பண்ணி பணம் கேட்டேன். என் அக்கா கணவர் நேரா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி வந்து இன்னொரு 5000 டாலரை கையில் கொடுத்துட்டு, ‘இனிமே குடும்பத்துலேர்ந்து பணத்தை எதிர்பார்க்காதே’ன்னு சொல்லிட்டுப் போனார்.’’ – என்று சொல்லிவிட்டு நேர்காணலில் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார், விவேக்.

ஐயாயிரம் டாலரை கொடுக்க சிங்கப்பூர்லேர்ந்து பிளைட் பிடிச்சு வந்த அதிர்ச்சியை விட, ‘அய்யய்யோ.. அதுக்குப் பிறகு விவேக் செலவுக்கு என்ன செய்திருப்பார்?’ என நம்மிடம் பதைபதைப்பை கூட்டுகிறார் சந்தியா ரவிசங்கர்.

“விவேக், ஆஸ்திரேலியாவில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தார். பிறகு ஒரு பீட்ஸா டெலிவரி பையனாக பணியாற்றினார். பிறகு பூனேவில் எம்.பி.ஏ. படித்தார்; ஐ.டி.சி-யில் வேலைக்கு சேர்ந்து கல்கத்தாவில் கடை, கடையாக சிகரெட் பாக்கெட் விற்றார்’ என்றெல்லாம்  தி இந்து நேர்காணலில் விவரிக்கப்படுகிறது. இதில் கட்டுரையாளர் இரண்டு நீதிகளை உணர்த்துகிறார். 1. விவேக், செல்வச் செழிப்பில் திளைத்த ஊதாரி அல்ல. தானே சம்பாதித்து தானே படித்த தானைத் தலைவன். 2. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஒரு புள்ளையை எப்படி டிசிப்ளினோட வளர்க்கிறார்கள் பாருங்கள்!

இப்படி கட்டுரை முழுக்க நிறைய பன்ஞ்ச் டயலாக்குகள் ரஜினிக்கே சவால் விடுகின்றன. அதில் கடைசி பீஸ், செம மாஸ்!

“2014 வரை என்னை யாருக்கும் தெரியாது. அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நான்கு பேரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் என் மேனேஜரிடம் லீவ் கேட்டேன். காரணம் கேட்டார். வேறு வழியின்றி நான் யார் என்று சொல்ல வேண்டியதாயிற்று. முதல்முறையாக அவரது கண்களில் பயத்தைக் கண்டேன்.’’  என்கிறார் விவேக்.

– அது பயம் இல்லை. மரண பீதி. உண்மையாவே அந்த ஊழியரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனானப்பட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதியை கைது செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவி நடத்திய சேஸிங் நாட்களில் கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது என்பது ஊருக்கே தெரியும். எனில் விவேக்கை வேலை வாங்கிய அந்த மேனேஜர் பயப்படாமல் என்ன செய்வார்?

“அதுவரையிலும் என்னை எல்லா ஊழியர்களை போலதான் நடத்துவார். காபி எடுத்து வரச் சொல்வார். ஏதேனும் ஒன்றுக்கு ஒப்புதல் தர மணிக்கணக்கில் காக்க வைப்பார். ஏனோ எனக்கு அதில் திருப்தி இருந்தது. நான் லீவ் முடிந்து மீண்டும் வேலையில் சேர்ந்தபோது எல்லோரும் என்னிடம் மிகையான மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். பயந்து ஒதுங்கினார்கள்”

– புகழையும், பணத்தையும், கௌரவத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு விவேக் எப்படி ஒரு துறவியைப் போல வாழ்ந்தார் என்பதை ஒரு திரைக்கதையின் நேர்த்தியுடன் விவரிக்கிறார் கட்டுரையாளர்.

*******

இந்தக் கட்டுரையை எக்ஸ்க்ளூசிவ் என்கிறது தி இந்து. ஆனால், அதே நாளில் இதே விவேக் ஜெயராமனின் இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எக்கனாமிக்ஸ் டைம்ஸில் வெளியானது. இந்த சிறிய பேட்டியை எழுதியிருந்தவர் பிரேம்சங்கர். இந்த பிரேம்சங்கரும், தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கரும் கணவன் மனைவி. ஒண்ணா கெளம்பிப்போயி ஒரு காபியை குடிச்சு அரட்டையடிச்சுட்டு, இந்தம்மா எழுதினது தி இந்து எக்ஸ்க்ளூசிவாம். அவரு எழுதினது எக்கனாமிக்ஸ் டைம்ஸில் எக்ஸ்க்ளூசிவாம்.

********

என்ன கேவலம் இது? எதற்காக இந்தப் பேட்டி? இதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா என்ற ஜனநாயகத்துக்கு சற்றும் பொருத்தமற்ற ஒரு சர்வாதிகாரியின் துணையுடன் சசிகலாவின் உறவினர் வலைப்பின்னல் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாபெரும் பொருளாதார சூறையாடலை நிகழ்த்தி வருகிறது. இவர்களால் சுரண்டப்படாத ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள் எதுவும் பாக்கியில்லை. அனைத்து அரசுத் துறைகளும் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் ரவுடித்தனத்தை; பொறுக்கித்தனத்தை நிறுவனமயபப்டுத்தியிருக்கிறார்கள். அடிமைத்தனத்தை ஓர் இயல்புபோல மாற்றி வைத்திருக்கிறார்கள். மிடாஸ் என்ற பெயரில் எரிசாராயம் காய்ச்சி ஒட்டுமொத்த மாநிலத்தையும் கொன்றொழிக்கும் கொலைகாரர் கூட்டம் இது. விவேக் என்ற 29 வயது இளம் தொழிலதிபருக்கும், இந்த பணத்துக்கும் சம்பந்தமே இல்லையா?

ஆனால் கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கருக்கோ, இதை முக்கியத்துவடன் வெளியிட்டுள்ள தி இந்துவுக்கோ இதுவெல்லாம் ஒரு பொருட்டில்லை. மாறாக, அவர்கள் விவேக்கை சில்லறைத்தனம் இல்லாத; ஒரு நாகரிகமான கண்ணியமான நபராக முன்வைக்கிறார்கள். விவேக் ஜெயா டி.வி.யில் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. செய்திகளும் அதில் இடம் பெறுகிறதாம். ஜெயா டி.வி.யில் துரைமுருகன் பேட்டி வந்ததாம். இது அவருடைய நாகரிகமான அணுகுமுறைக்கு உதாரணமாம்.

இந்த சந்தியா ரவிசங்கர் தான் வைகுண்டராஜனின் மணல் மாஃபியா குறித்து thewire.in  தளத்தில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அது பரவலாக பேசப்பட்டது. இப்போது வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியன் தான் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். அவரை ‘இளம் தொழிலதிபராக’ சித்தரித்து எழுதுவாரா? வைகுண்டராஜன் சட்டவிதிகளை மீறி இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளை அடிக்கிறார் என்றால், சசிகலா குடும்பத்தினர் என்ன உழைத்து பொருளீட்டும் உத்தமர்களா? அந்த ஒட்டுமொத்த கொள்ளை சாம்ராஜ்ஜியத்தின் தளபதியாக இருக்கிறார் விவேக் ஜெயராமன். ஆனால் அவரை ஓர் உத்தமனை போல சித்தரிக்கிறார்கள் இவர்கள்.

இந்த சந்தியா ரவிசங்கர் மக்களின் வில்லன்களான வரலாற்று மாந்தர்களை கஷ்டப்பட்டு அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி நேர்காணல் செய்தால் எப்படி இருக்கும்?

  • மோனோலிசா ஓவியத்தின் பொருளை ஆழமுடன் விளக்குகிறார் அடால்ப் ஹிட்லர்
  • 2002 குஜராத்தில் புறாக்களுக்காக மாடம் கட்டினார் ஒரு முன்னாள் டீக்கடை இளைஞர்!
  • பிலிப்பைன்ஸ் ஓட்டல் பையனின் கேர்ல் பிரண்டுக்காக ஆடை வடிவமைத்த விஜய் மல்லையா!
  • நித்தியானந்தாவின் நித்திரைக் கனவில் உதயமான நான் ஸ்டாப் அன்னதான ஓட்டல்!
  • அசீமானந்தா கண்டுபிடித்த அரிய ஆசனங்கள்!

இப்படியெல்லாம் சில பல நேர்காணல்கள் எடுக்கப்பட்டு தி இந்துவில் அவை சிறப்புக் கட்டுரைகளாக வராது என்பதற்கு எந்த உத்திரவாதத்தையும் நாங்கள் தர இயலாது!

– கீரன்

மேலும் படிக்க:

https://thewire.in/110405/tamil-nadu-sand-mining/

https://thewire.in/122893/mining-ball-centres-court/

கருத்துப் படம் : மார்க்சியம் X மதம்

151

பார்க்காதே – கேட்காதே – பேசாதே என்கிறது கடவுள் நம்பிக்கை !
பார் – கேள் – பேசு என்கிறது மார்க்சியம் !


படம் : வேலன்

இணையுங்கள்:

 

சபரிமலை பெயரில் மக்கள் அதிகாரத்தின் கூட்டத்தை மறுக்கும் விருதை போலீசு !

5

“அரசியல் அராஜகங்களுக்கு அக்கிரமங்களுக்கு முடிவு கட்டு !” என்ற தலைப்பில் விருத்தாசலம் வானொலித்திடலில் 28.11.2017 அன்று மாலை நடைபெற இருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீசு தடை!

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று பொதுக்கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும்.

 

இந்த மாதம் முழுவதும் நான்கு முறை பெதுக்கூட்டம் நடத்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என மனு அனுப்பினோம். நான்கு முறையும் தெரு முனை பிரச்சாரம் உட்பட அனைத்திற்கும் முதல் நாள் இரவு அனுமதி மறுத்து கடிதம் வழங்குகிறது போலீசு.

ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது. சேத்தியாதோப்பு மணல் குவாரிக்கு எதிராக மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடுவது காவல் துறைக்கு தொல்லையாக கருதுகிறது.

கருத்துரிமை நசுக்கப்படுகிறது. நடப்பது போலீசு ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கபட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 27.11.2017 அன்று பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி நடைபெற இருந்தது அதற்கும் முதல்நாள் இரவு 11.30 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளனர்.

நான் வைத்ததுதான் சட்டம் எந்த கோர்டுக்கு போனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் போலீசார் கூலிப்படையாக செயல்படுகிறார்கள். அதிகரித்து வரும் மக்கள் போராட்டம் போலீசுக்கு சரியான பாடம் புகட்டும். அதில் மக்கள் அதிகாரம் முன்னே நிற்கும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம். 97912 86994.

 

போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !

1

“உணவு மறுக்கப்படுகிறது ! பெண் செவிலியர்கள் இயற்கை உபாதைக்கு தடை ! போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் பாதியில் சிறை பிடிப்பு ! பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டல் !” என எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள் MRB ஒப்பந்த செவிலியர்கள்.

கடந்த 2015 -ம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு மூலம் 11ஆயிரம் செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் கழித்து நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது அரசு. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஏமாற்றி வருகிறது அரசு.

MRB தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்தார்கள். அதற்கு தேர்வு எதுவும் கிடையாது. அரசாணை 230 -ன் படி ஒப்பந்தம் செய்து எடுப்பார்கள். சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” எடுப்பார்கள். பிறகு 10 1A விதிகளின் படி அவர்களை நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013 -க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. இந்த தேர்வு முறை வந்த பிறகு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

தற்போது அரசும் இந்த 230 அரசாணையைத் தான் பிரதானப்படுத்துகிறது. இதுவே ஒரு மோசடி தான். ஆனால் போராடும் செவிளியர்களோ, G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.

இந்த கோரிக்கைக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 4,000 பேர் தங்கள் சொந்த செலவில் சென்னையில் கூடியிருக்கிறார்கள். சென்னை டி.எம்.எஸ் வளாகம் முழுவதும் வெள்ளை நிறப்பூக்களால் நிறைந்திருக்கிறது. “போராட்டம் நடக்க இருப்பதால் எங்கள் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுங்கள்” என்று போலீசிடம் கூறியுள்ளது டி.எம்.எஸ். நிர்வாகம். அதனால், போராட்டத்திற்கு வந்த பாதி செவிலியர்களை வழியிலேயே கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது போலிசு. 100 -க்கும் மேற்பட்ட போலிசு, போராடும் செவிலியர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தி வருகிறது.

மழை பெய்த போது போராட்டத்தில் பிசு பிசுப்பு ஏற்பட்டு விடும் என்று போலிசு நினைத்திருக்கலாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவிலியர்கள் அனைவரும் குடையுடன் வந்ததால் அவ்வளாகம் முழுவதும் வண்ணமயமாகியதை கண்டு காக்கிச் சட்டை அதிர்ச்சியடைந்திருக்கும்.

வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி செவிலியர்கள் என அனைவரும் கையில் குழைந்தையுடன் போராட்ட களத்தில் குதித்துள்ளார்கள். “நாங்கள் புதியதாக எதையும் கேட்கவில்லை. இருக்கின்ற சட்டத்தை அமல்படுத்து என்கிறோம். ஆனால் அதனை செய்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.

ஏற்கனவே விதி 191 மற்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. இதுவரை எடுத்துக் கொள்ளப்படவில்லை. கேட்டால் அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை. நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள் நீதிபதிகள். ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்குறது அரசு…. இரண்டுமே எங்களை ஏமாற்றுகிறது என போராட்டத்தின் முன்னணியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த டி.எம்.எஸ். வளாகத்தில் இதற்கு முன்பு மருத்துவர்கள் 13 நாட்களாக போராடினார்கள். எந்த போலீசும் வரவில்லை. நாங்கள் எங்கள் உரிமைக்காக அமைதி முறையில் போராடுகிறோம். ஆனால் போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். பேச்சு வார்த்தைக்கு போலீசு மூலம் கூப்பிடுகிறது நிர்வாகம். இதற்கும் போலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு எதற்கு போலீசு?

நோயாளிகள், மக்கள் இவர்கள் கூடவே வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களை தீவிரவாதிகளைப் போல் அச்சுறுத்துகிறார்கள். “நீங்க உடனடியாக கலைந்து போகவில்லை என்றால்  பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போட்டு விடுவோம்”என்று மிரட்டுகிறது போலீசு. இந்த வளாகத்தில் 13 அலுவலகம் உள்ளது. எந்த அலுவலகத்தின் பணிகளையும் நாங்கள் முடக்கவில்லை. எங்கள் கோரிக்கைக்காக நாங்கள் அமைதியான முறையில் கூடியிருக்கிறோம். பிறகு ஏன் போலீசு மிரட்டுகிறது என்பது புரியவில்லை. என்கிறார்கள்  போராடும் செவிலியர் முன்னணியாளர்கள்.

இவ்வளவு பேர் நாங்க கூடியிருக்கிறோம். இதைக் கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். “சாப்பாடு வாங்க கூட போக முடியாத அளவுக்கு போலீசு மிரட்டுகிறது…. பெண்கள் கழிவறைக்கு செல்ல கூட இடமில்லை. அலுவலகத்து உள்ளே செல்லவும் அனுமதியில்லை….. பத்திரிக்கையாளர்களை கூட உள்ளே அனுமதிக்காமல் எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.. நாங்கள் என்ன தீவிரவாதியா?” என்று கொந்தளிக்கிறார்கள் செவிலியர்கள்.

குழுவாக இருந்த செவிலியர்களில் இருபத்தைந்து வயது பெண் செவிலியர் ஒருவர், “என் சொந்த ஊர் ராமேஸ்வரம். நான் கிருஷ்ணகிரியில இருக்ககும் ஆரம்ப சுகாதார நிலையத்துல வேலை செய்றேன். எங்களுக்கு கொடுக்கும் 7500 ரூபாய் சம்பளத்தில் வாடகையே 3000 கட்டி விடுகிறேன். மீதி பணத்தில் நான் என்ன செய்ய முடியும்… மூணு வேள சாப்பாடு ஒழுங்கா சாப்பிட முடியல. என்னோட தேவைக்கு கூட வேலை செய்றவங்க கிட்ட கடன் கேட்க முடியல…. இன்றைய விலைவாசியில் வாழ முடியாமா? எவ்ளோ கஷ்டங்களை தான் நாங்க சுமக்கிறது….” என்று கேட்கிறார்.

அதுபோக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது…. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடை அதிகம் உள்ளது. அதன் தொல்லைகளை தினந்தோறும் சந்திக்கிறோம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் பணியாற்றுகிறோம். மருத்துவர்கள் இல்லை. ஆய்வக பணியாளர் இல்லை, மருந்தாளுனர் இல்லை. இவர்கள் வேலையையும் நாங்கள் சேர்த்தே கவனிக்கிறோம்.

“எந்த நோயாளிய கேட்டாலும்….. காலைல இருந்து இந்த ஒரு பொண்ணு தான் ஓடிகிட்டே இருக்குன்னு” சொல்லுவாங்க. அவ்வளவு பணிசுமை சார்.

நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை” என்ற சோகத்துடன் வரும் அந்த வார்த்தைகளில் இருந்து செவிலியர்களின் துயரங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அரசின் மற்ற துறையில் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால விடுமுறை உண்டு. ஆனால் எங்களுக்கு அதுகூட இல்லை…. நாங்கள் விடுமுறை எடுப்பதாக இருந்தால் சம்பளம் இல்லா விடுமுறை தான்… இது தான் எங்களின் வாழ்க்கை….. ஆனால் இதனை நாங்கள் எடுத்துக் கூறினால் “செவிலியர்களுக்கு சேவை தான் முக்கியம்” என்கிறார்கள். எங்கள் உழைப்பைச் சுரண்டுகிறது இந்த அரசு என்று ஒருசேர குரலில் கூறுகிறார்கள் போராடும் செவிலியர்கள்.

“இந்த போராட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றால் எந்த முகத்த வைத்துக் கொண்டு பணிக்கு போவது” என அழுது கொண்டே கேட்கிறார் 45 வயனதான பெண் செவிலியர். நீங்க ஏன் கலங்குறிங்க… நாம வெற்றி பெறாம இங்கிருந்து போகப்போறதில்லை என்று தேற்றுகிறார்கள் சக செவிலியர்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள் தான்.. எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா? என்று கோபத்துடன் கேட்கிறார் முதுகலை செவலியர் படிப்பு முடித்துள்ள ஒரு பெண் செவிலியர்.

இந்த நியாமான கோபமே இவர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளது. இனி இந்த அரசை நம்பினால் பலனில்லை. போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.. அதனால் தான் போராட்டத்திற்கு முதல் நாளே “டெர்மினேட்” செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

“நீ கொடுக்கும் சம்பளத்திற்கு அடிமையாக வேலை செய்வதை விட, டெர்மினேட் செய்வதை நாங்கள் பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் முடிவு தெரியாமல் இங்கிருந்து கலையப் போவதில்லை”என்று அதிகார வர்கத்தின் முகத்தில் அறைந்தாற்போல் கூறுகிறார்கள் அந்த செவிலியர்கள்.

செவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய அதிகார வர்க்கம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் 30 பேரை உள்ளே அழைத்து சென்று சுமார் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சு வார்த்தை இறுதியாக தோல்வியில் முடிந்தது.

“உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை இன்னும் நிரந்தரம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்கிறோம்… சம்பளம் வேண்டுமானால் கொஞ்சம் ஏற்றி தருகிறோம். மற்றபடி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதற்கு சுகாதாரத்துறை செயலர், அமைச்சர், நிதித்துறை செயலர் இவர்கள் முன்னிலையில் தான் தீர்மானிக்க முடியும். எங்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுங்கள்… அதன் பிறகு முடிவை அறிவிக்கிறோம்”என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். அதனை ஏற்காமல் வெளியில் வந்துவிட்டனர் செவிலியர்கள்.

பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த செவிலியர்களுக்கு “பேச்சு வார்த்தை தோல்வி” என்ற செய்தி சிறிது அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மை தான்.

ஆனால் பேச்சு வார்த்தைக்கு சென்ற செவிலியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று அறிவித்தவுடன் அனைத்து செவிலியர்களும் கைதட்டி வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் “உங்களுக்குத் தான் அதிகாரம் இல்லையே அப்புறம் எதுக்கு பேச்சு வார்த்தைக்கு கூப்பிடனும்” என்ற கேள்வி அதிகார வர்க்கத்தை நோக்கி எழுந்தது.

இதனை சற்றும் எதிரபரத அதிகாரிகள், இன்னும் அதிகமான போலீசை குவித்து உளவியல் ரீதியாக அச்சுறுத்த முயன்றது. போலீசு உயர் அதிகாரிகளை கொண்டு அட்வைசு மழை பொழிந்தது. கீழிருந்த செவிலியர்கள்… “நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்….. எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்யாதே…” என்ற கலகக் குரல் எழுந்தது.

கடைசி வாய்ப்பாக போராட்டத்தின் பிரதிநியான புஷ்பலதாவை மிரட்டி போராட்டத்தை கலை இல்லை என்றால் உன் மீது வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதால் பயந்த புஷ்பலதா, தற்போது அதிகாரிகள் கேட்கும் கால அவகாசத்தை நாம் தரலாம். எனவே போராட்டத்தை முடித்து கொள்வோம் என்றார்.

ஆத்திரமடைந்த செவிலியர்கள்… “இன்னுமா இவர்களை நாம் நம்ப வேண்டும். வாழ்க்கையையே இழந்து விட்டோம். இனி வழக்கு நம்மை என்ன செய்து விடப்போகிறது. உங்கள் மீது வழக்கு போட்டால் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் உரிமைக்காக போராட வந்துள்ளோம்… நீங்கள் சொல்லி வரவில்லை. எங்கள் சொந்த முயற்சியில் வந்துள்ளோம்…. நூறு வழக்கு போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்” என்று செவிலியர்கள் உறுதியுடன் கூறவே…… திணறினார் புஷ்பலதா.

மற்றொருவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் எப்படி வெற்றி பெற்றோம்.. தொடர்ந்து அங்கேயே இருந்ததால் தான் முடிந்தது. அது போன்று நாம் போராடுவோம். என்று இறுதியாக எடுத்த முடிவின் அடிப்படையில் இரவு போராட்டத்தை தொடர அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்ய ஆரம்பித்தனர். தங்கள் அலைபேசிகளை கொண்டு போராட்டம் நாளையும் தொடரும் என்று அனைவருக்கும் தகவல் கொடுக்க ஆரம்பித்தனர்.

அதிகார வர்க்கமோ தூக்கத்தை தொலைத்து விழி பிதுங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.! நேற்றை விட சுமார் 1,800 செவிலியர்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்களது போராட்டம் வெல்ல நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!

-வினவு செய்தியாளர்.

 

சீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் ? கருத்துக் கணிப்பு

66
கேலிச்சித்திரம்: முகிலன்

டிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார். தலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது. சீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.

முத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…?” என்று அவர் சாடியுள்ளார்.  “முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.

வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.

2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம். அதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.

வெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை. சட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

சீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.

ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?

இன்றைய கருத்துக் கணிப்பு :

சீமான், கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன்?

  • அன்புச் செழியன் ஒரு தமிழர்
  • அன்புச் செழியனிடம் ஏதேனும் ஆதாயம் அடைந்திருக்கலாம்
  • மார்வாடி – மலையாளி ஃபைனான்சியர்களை ஒழிப்பதற்காக
  • திரைத்துறையை சீர்திருத்துவதற்கு
  • ஏதோ நாக்கு பிறழ்ந்து பேசிவிட்டார்

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)

 

அமித்ஷா நினைத்தால் கவர்னரும் ஆகலாம் – கண்ணையும் மூடலாம் !

1

அமித்ஷா குற்றமற்றவர் என விடுவித்த ‘நீதியரசர்’ சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி, அமித்ஷா வழக்கில் நேர்மையாக செயல்பட்ட நீதியரசர் ஹர்கிஷன் லோயாவுக்கு மரணம்.

படம் : வேலன்

இணையுங்கள் :


இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன ? நவம்பர் 30 நெல்லை பொதுக்கூட்டம்

1

மக்கள் அதிகாரம் – இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?

பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள் : 30.11.2017, வியாழக்கிழமை – மாலை 5 மணி.
இடம் : சிந்துபூந்துறை, சாலைத்தெரு, திருநெல்வேலி ஜங்ஷன்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
தொடர்புக்கு : 75989 87316.

 

தொழில்நுட்பங்களின் கண்காணிப்பில் மக்கள் !

6

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 6

ரு குறிப்பிட்ட சூழலை முன்கூட்டியே அனுமானிப்பதும் அதன் அடிப்படையிலான திட்டமிடலும் இன்றைய உலகத்தில் அதிசயிக்கத்தக்க புதிய விசயங்கள் அல்ல. இயற்கைப் பேரிடர்களை முன்னறிந்து அந்த சூழலில் எம்மாதிரியான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என்பதைக் கணித்து அதற்குத் தகுந்த பொருட்களை இருப்பு வைத்துக் கொள்வதும், அவற்றின் விலைகளைக் கூட்டி வைப்பதும் சில பத்தாண்டுகளுக்கு முன்பே வால்மார்ட் கண்டுபிடித்த வியாபார ‘நடைமுறை’ தான்.

அதே போல் சமூக செயல்பாட்டாளர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வதும் வழக்கமான போலீசு நடைமுறை தான். நவம்பர் 2009 -ல் அமெரிக்காவின் தேசிய நீதி மையமும், நீதி உதவிக்கான பணியகமும் இணைந்து, “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் முன்னறிப் புலனாய்வுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக” மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்தின. எதிர்காலத்தில் போலீசின் பணியானது “என்ன நடந்தது என்பதை ஆராய்வதைத் தாண்டி, என்ன நடக்கவிருக்கிறது என்பதைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவமாக இருக்கும்” என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இந்த அணுகுமுறையும் போலீசுக்குப் புதியதல்ல – இதில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு இணைந்திருப்பதும், அதனடிப்படையில் காவல், கண்காணிப்பு அமல்படுத்தப்பட இருப்பதுமே புதிய விசயங்கள். மேற்படி மாநாடு நடப்பதற்கு முன் 2007 -ம் ஆண்டு புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் அமெரிக்க பாதுகாப்புச் சட்டம் (Protect America Act) நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு முகமையால் (NSA) துவங்கப்பட்ட பிரிசம் (PRISM) என்கிற இரகசிய திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து மின் தரவுகளைச் சேகரிக்கும் பணியை அமெரிக்க அரசு துவங்கியது.

ஒலிக் கோப்புகள், தொலைபேசி அழைப்புகள், மின் அஞ்சல்கள், மின் கோப்புகள், இணையத்தேடுதல் விவரங்கள், முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகள், கைபேசியில் உள்ள பழைய பதிவுகள், இணைப்பு விவரங்கள் என பகுப்பாய்வு செய்யத்தக்க ஒவ்வொரு மின் தரவும் வெரிசான், கூகுள் போன்ற நிறுவனங்களிடமிருந்து அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டு ஊடா மாகானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மீப்பெரும் மின் தரவுக் கிடங்கிற்கு (Big Data lake) அனுப்பப்பட்டன.

மக்களின் ஒப்புதலின்றி அவர்கள் உற்பத்தி செய்த விவரங்களைக் களவாடிய அமெரிக்க உளவு நிறுவனம், அவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மொத்த சமூகத்தையும் கண்காணிக்கத் துவங்கியது. கூகுள், ஃபேஸ்புக், லிங்க்ட்- இன், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்தும், வெரிசான் போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட விவரங்களை மொத்தமாகச் சேமித்து தனித் தனி விவரங்களுக்கு இடையிலான இணைப்புகளை ஆராயும் பணி “பிரிசம்” திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, முகநூலில் அரசுக்கு எதிராகப் பதிவிடும் நபர் அமேசானில் எந்தமாதிரியான நூல்களை வாங்குகிறார் என்பதையும் யூடியூபில் எந்த வீடியோக்களைப் பார்வையிடுகிறார் என்பதையும், அவரது கணினியில் எந்த பத்திரிக்கைகளைப் படிக்கிறார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவருடைய சிந்தனைப் போக்கு குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு வரமுடியும். இதனோடு அவர் செல்பேசியில் யார் யாருடன் பேசுகிறார், அவர்கள் ஒவ்வொருவரும் இதே போன்ற சிந்தனைப் போக்குகள் கொண்டவரா என்பதை அவர்களுடைய விவரங்களையும் அலசிப் புரிந்து கொள்ள முடியும். தொகுப்பாக, குறிப்பிட்ட சிந்தனைப் போக்கு உள்ளவர் எத்தனை பேர் உள்ளனர், இவர்களுக்கிடையே இணைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். இந்தப் புலனாய்வு விவரங்களைக் கொண்டு அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்கு உள்ளவர்களைத் தனியே பிரித்தெடுத்துக் கண்காணிப்பது சாத்தியமாகிறது.

கிடைத்த விவரங்களைச் சலித்தெடுத்து மக்களை வகைபிரிப்பதற்கு இது வகை செய்கின்றது. ஆபத்தில்லாதவர், நுகர்பொருள் மோகம் கொண்டவர், பாலியல் பலவீனம் கொண்டவர், அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்குள்ளவர், சுதந்திரமான லிபரல் சிந்தனை கொண்டவர், வலதுசாரி சிந்தனை கொண்டவர் என மொத்த சமூகத்தையும் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் மூலம் – பிரிசம் திட்டத்தின் மூலம் – தரநிர்ணயம் செய்தது அமெரிக்க அரசு. தனது சொந்த மக்களையே அமெரிக்க அரசு கள்ளத்தனமாக உளவு பார்த்து வந்ததையும், அதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த பிரிசம் திட்டத்தையும் 2012-ம் ஆண்டு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வர்ட் ஸ்னோடன்.

கைபேசிகள், கணினிகள், மருத்துவ உபகரணங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் என உலகம் முழுவதும் சுமார் 4.4 ட்ரில்லியன் மின் தரவு உற்பத்தி மூலங்களில் இருந்து 70.4 ட்ரில்லியன் குறுக்கு இணைப்புகள் உள்ளதாக பிரிசம் திட்டத்தின் வரைபடம் ஒன்று சுட்டிக்காட்டுகின்றது. பிரிசம் தவிர உலகம் முழுவதுக்குமான மின் தரவுப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், மின் தரவுகளை சேகரிக்கவுமான திட்டங்களை அமெரிக்கா வகுத்து செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் 2013 -ம் ஆண்டு வாக்கிலேயே சுமார் 97 பில்லியன் உளவுத் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் சேகரித்துள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது.

சேமிக்கப்பட்டுள்ள மின் தரவுகளைக் கொண்டு ஒரு நிகழ்வை முன்னறிவது துல்லியமானதா? அல்லது சரியானதா?

மனிதனின் சமூக வலைத்தள செயல்பாடுகள், அவன் பேசும் கருத்துக்கள், விரும்பும் வீடியோக்கள், பகிரும் புகைப்படங்கள், பங்கெடுக்கும் விவாதங்களைக் கொண்டு அவனது ஆளுமையில் விஞ்சி நிற்கும் கூறு என்னவென்பதை ஏறத்தாழ கணிக்க முடியும். ஆனால், அந்த ஆளுமை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேல் கையெடுத்து ஒரு சம்பவத்தை நிகழ்த்துமா இல்லையா என்பதை அது மட்டுமே தீர்மானிப்பதில்லை – அந்த மனிதனின் சமூகச் சூழலும் இன்னபிற காரணிகளும் சேர்ந்தே தான் தீர்மானிக்கின்றன.

உதாரணமாக, தினசரி ஐந்தாறு மணி நேரங்கள் பாலியல் சம்பந்தமான ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர் நிச்சயமாக பாலியல் வல்லுறவுக் குற்றமிழைப்பார் என்று கூறமுடியுமா? அந்த நபரை நம்பி வீட்டில் வயதான பெற்றோர்களோ, கான்சரில் பாதிக்கப்பட்ட மனைவியோ, ஊனமுற்ற குழந்தைகளோ இருக்கலாம் அல்லது, குற்றச்செயலில் ஈடுபடுவதற்கான துணிவு அவருக்கு இல்லாமலிருக்கலாம்.

மேலும், ஒரு நபர் பாலியல் வக்கிரச் செயலில் ஈடுபட ஒரு பொருத்தமான தருணம் அமையாமலே கூட போய் விடலாம். அல்லது அப்படி ஒரு தருணம் அமைந்தாலும் அவரது வக்கிரத்துக்கு இலக்காக கூடிய பெண்ணின் தோற்றம்; சம்பந்தப்பட்ட நபரின் தாயைப் போல அமைந்து அவரைத் தடுமாறச் செய்யலாம்.

ஜெயேந்திர சரஸ்வதியையும், சிம்புவையும் செயற்கை நுண்ணறிக் கணினியின் முன் நிறுத்தினால் முந்தையவரை மகாத்மாவாகவும், பிந்தையவரை காமக் கொடூரனாகவும் அது தீர்ப்பளிக்க கூடும். ஆனால், ஜெயேந்திரன் தான் எழுத்தாளர் அனுராதா ரமணனை பாலியல் துன்புறுத்தல் செய்தார்; சங்கரராமனைக் கொன்று பின் நீதியை விலைக்கு வாங்கினார். சிம்புவோ பீப் பாடலைத் தாண்டியதாகத் தெரியவில்லை.

கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களாகட்டும், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடுவதாகட்டும் – ஒருவர் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவாரா இல்லையா என்பதை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் அவரது செயல்பாடுகளில் இருந்து பெறப்பட்ட மின் தரவுகளின் பகுப்பாய்வுகளின் மூலம் மட்டுமே கணித்து விடமுடியாது.

தொழில்நுட்பங்களின் மூலம் மக்களை மேலிருந்து கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் தன்னளவிலேயே ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், ஆளும் வர்க்கம் அதைத் தான் விரும்புகின்றது. மந்தையில் உள்ள ஆடுகளுக்கு சூடு வைத்து அடையாளமிடுவது போல் மக்களின் மேல் அடையாளக் குறியிட்டு வகை பிரித்து வைக்கும் இந்நடவடிக்கையின் எதிர்கால சாத்தியங்கள் எவ்வாறானதாக இருக்கும்? இதை உலகின் இன்னொரு கோடியில் உள்ள சீன அரசாங்கம் மேற்கொண்ட முன்னோட்டத் திட்டம் (Pilot Project) ஒன்றின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

***

“இன்னும் மூன்றாண்டுகளில் எமது அரசாங்கம் நம்பகமானவர்களை சொர்கத்தின் கீழ் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும்; அதே நேரம் நம்பகமற்றவர்களை ஒரு அடி கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்கிறார் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர். மின் தரவுகளை அடிப்படையாக கொண்டு குடிமக்களுக்கு நன்மதிப்புப் புள்ளிகள் (Rating) வழங்கும் திட்டம் ஒன்று சீனாவில் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க முதலாளித்துவ அரசின் நிர்வாக எந்திரம் நீண்ட அனுபவம் கொண்டது என்பதால் அதன் கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் நுட்பமான முறைகளில் இருக்கின்றது –எதேச்சாதிகார சீனாவிலோ மிகவும் வக்கிரமான முறையில் மேலிருந்து திணிக்கப்பட்டுள்ளது.

மேற்குலகத் தயாரிப்புகளான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசாங்கம், தமது நாட்டுக்குள் சொந்தமுறையில் தயாரித்து வளர்த்தெடுக்கப்பட்ட சமூகவலைத்தளங்களையே ஊக்குவிக்கின்றது. பெரும்பாலான சீனர்கள் வெய்போ, வீசேட், ரென்ரென், டௌபன் போன்ற சமூகவலைத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். இது போன்ற தளங்களின் மூலம் சீன அரசாங்கம் மின் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு உட்படுத்துகின்றது.

ஜியாங்ஜூ மாகாணத்தில் உள்ள சூய்னிங் கவுண்டியில் முன்னோட்ட திட்டமாக (Pilot project) சமூக நன்மதிப்புப் புள்ளிகள் (Social Credit Rating) அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் செலவழிக்கும் விதம், ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்கிற விவரம், பொது இடங்களில் அவர்களது செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், சமூக வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மின் தரவுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் என பல்வேறு தகவல் மூலங்களில் பெறப்பட்ட தரவுகளையும் பகுப்பாய்வு செய்து சுமார் 1,200 அம்சங்களில் மதிப்பிட்டு அவர்களுக்கான நன்மதிப்புப் புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, சூய்னிங் கவுண்டியில் வாழும் குடிமகன் ஒருவருக்கு 1,000 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட நபர் போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவரது 1,000 புள்ளிகளில் இருந்து 20 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும். இணையத்தில் ஒருவரை விமர்சித்தால் 100 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும், அதே போல் குடிப்பழக்கம் இருப்பவர்கள் சில புள்ளிகளை அதற்காக இழக்க வேண்டியிருக்கும். எஞ்சிய புள்ளிகளின் அடிப்படையில் குடிமக்கள் A முதல் D வரை தரநிர்ணயம் செய்யப்படுவார்கள். D என நிர்ணயிக்கப்பட்டவர் அரசின் உதவியையோ, அரசு வேலைகளையோ பெற முடியாது. அவர்கள் சுதந்திரமாக உலவுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஏராளமான ஓட்டைகளுடன் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்தது – சீன ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரே கூட இத்திட்டத்தை விமர்சிக்கத் துவங்கினர். சாலையோரம் சிறுநீர் கழிக்கும் ஒருவர், லஞ்சம் கொடுக்க கூடாது எனும் சிந்தனை கொண்டவராக இருக்கலாம். அதே போல், குடிப்பழக்கம் கொண்ட ஒருவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக இருக்கலாம். ஒரு மனிதனின் மொத்த ஆளுமையின் ஒரு சிறு பகுதி தவறானதாக இருப்பதை வைத்தே அவர் மீதான மதிப்பீட்டைச் செய்ய முடியாது என்கிற அடிப்படை புரிதலின்றி சீன அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் தோல்வியைத் தழுவியது.

சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம், மக்களிடையே எதிர்ப்புகள் எழுந்ததை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாலும், மின் தரவுகளைச் சேகரிப்பதும் அதைப் பகுப்பாய்வு செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சூய்னிங் கவுண்டியில் கிடைத்த அனுபவங்களைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு 2020 -ம் ஆண்டு மேலும் சில திருத்தங்களுடன் நாடெங்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளாதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் தரவுப் பகுப்பாய்வும் செயற்கை நுண்ணறித் திறனும் கைகோர்க்கும் போது ஒவ்வொரு தனிநபரின் எதிர்கால நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்று கண்காணிப்பதற்கான வாய்ப்பை அது ஆளும் வர்க்கங்களுக்கு வழங்குகிறது. எனினும் சமூகத்தை மேலிருந்து நெட்டித் தள்ளுவது சமூகத்தின் எதார்த்த நிலைமைக்கு பொருத்தமற்றது என்பதும் மக்களின் உணர்வுக்கு எதிரானது என்பதும் ஆளும் வர்க்கம் அறியாததல்ல. இருந்த போதிலும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் என்ற குச்சி தனது கரங்களில் இருப்பதால், மக்களை சுய புத்தியற்ற வாத்துக் கூட்டமாக மேய்த்து விட முடியும் என்று முதலாளித்துவம் கருதுகிறது.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.

மின்னஞ்சல்
vinavu@gmail.com

 

ஆண்டவன் சொல்றான் அதானி செய்றான் – கருத்துப்படம்

0

ஆஸ்திரேலியா நிலக்கரி டீல் ஓகே ! நெக்ஸ்ட்டு அமெரிக்கா ஆலிவ் ஆயில ஆயூர்வேத ஆயில்னு விக்கலாமா அதானி ‘ஜி’ !

ஆண்டவன் சொல்றான் அதானி செய்யுறான் !

படம் : வேலன்

இணையுங்கள்:

 

நூல் அறிமுகம் : புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் !

0

புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் !

சந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்த நக்சல்பாரி எழ்ச்சி உள்ளிட்டு, 1960 -ஆம் ஆண்டுகளின் இறுதியில் நடந்த எண்ணற்ற விவசாயிகள் எழுச்சிகள், இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

பல்வேறு காரணங்களால் இந்த எழுச்சிகள் முன்னேற முடியாமற் போனாலும், இந்திய விவசாயிகளை விலங்கிட்டுள்ள அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் குறித்து இந்த எழுச்சிகள் எழுப்பிய கேள்விகள் இன்னமுன் தீர்க்கப்படாமலேயே நீடிக்கின்றன.

அதன் பிறகு, ஆட்சியாளர்கள் பின்பற்றிய பல்வேறு கொள்கைகளும் குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையும் விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் தோற்றுப் போய்விட்டன.

50 ஆண்டுகளுக்கு முன்பு, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாக விவசாய எழுச்சிகள் எதைச் சுட்டிக்காட்டியதோ, அந்த அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் எனும் பிரச்சினையானது, இன்று மேலும் தீவிரமடைந்து, நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது.

இப்பிரச்சினையின் சில கூறுகளையும், புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியையும், விவசாயிகளை ஏய்க்கும் ஆட்சியாளர்களின் மோசடிகளையும், தீர்வுக்கான வழிகளையும் புள்ளிவிவர ஆதாரங்களுடன் இந்நூல் தொகுத்தளிக்கிறது.

நூல் கிடைக்குமிடம்…

கீழைக்காற்று
சென்னை – 02
044- 28412367.

வெளியீடு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

பக்கம் : 208
விலை : 120/- ரூ


செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

1

செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

முன்னுரை:

ரசிய சோசலிசப் புரட்சியின் நேரடி சாட்சியாக இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீடு எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலில், புரட்சியின் வெற்றி தோற்றுவித்த மகிழ்ச்சிக்கிடையே, உயிர் துறந்த தொழிலாளர்கள், படைவீரர்களின் உடல்களைச் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்த நிகழ்வினை விவரிக்கிறது இப்பகுதி. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதற்காகத் தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாசகர்களை அழைக்கிறார் ஜான் ரீடு.

***

ரவு நெடுநேரம் கழித்து நாங்கள் காலியான சாலைகளில் நடந்தோம். இவேர்ஸ்கி வளைவுக்குள் நுழைந்து கிரெம்ளினுக்கு முன்னால் மாபெரும் செஞ்சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தோம். வசீலி பிளழேன்னி தேவாலயத்தின் நெடிதுயர்ந்த விசித்திர உருவம் தெரிந்தது. பளிச்சிடும் வண்ணங்களில் முறுக்கி விடப்பட்ட அலை வரிகளுடன் கூடிய புகழ் மண்டிய குவி மாடங்கள் இருட்டிலே மங்கலான உருவரை காட்டி நின்றன. அவற்றுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டுவிடவில்லை.

சதுக்கத்தின் ஒரு பக்கத்தில் கிரெம்ளினின் கரிய கோபுரங்களும் சுவர்களும் தெரிந்தன. மறைந்திருந்த கணப்புத் தீக்கொழுந்துகளின் செவ்வொளி அந்த உயரமான சுவர்களில் படபடத்து ஆடிற்று. சுவரின் ஒரத்திலிருந்து பேச்சுக் குரல்களும் மண்வெட்டிகள், குத்துக்கோடரிகளின் ஓசையும் அந்தப் பெரும் பரப்பைக் கடந்து வந்து எங்கள் காதில் விழுந்தன. நாங்கள் அவற்றை நோக்கிச் சதுக்கத்தின் குறுக்கே நடந்தோம்.

சுவரடிக்கு அருகே மலைமலையாய் மண்ணும் கற்களும் குவிந்திருந்தன. இவற்றின் மீது ஏறி கீழே இருபெரும் குழிகளுக்குள் பார்த்தோம். பத்து, பதினைந்து அடி ஆழமும் ஐம்பது கஜம் நீளமுள்ள இந்தக் குழிகளுக்குள் பெரிய சொக்கப்பனைகளை எரிய விட்டு, அவற்றின் வெளிச்சத்தில் நூற்றுக்கணக்கான படையாட்களும் தொழிலாளர்களும் நின்று தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

ஜான் ரீடு

இளம் மாணவர் ஒருவர் ஜெர்மன் மொழியில் எங்களுடன் பேசினார். சகோதரத்துவச் சமாதி இது என்று அவர் விளக்கிக் கூறினார். புரட்சிக்காக உயிரைத் தியாகம் புரிந்த ஐந்நூறு பாட்டாளிகளை நாளைக்கு இங்கே அடக்கம் செய்யப் போகிறோம் என்றார். எங்களைக் குழிக்குள் அழைத்துச் சென்றார் அவர். குத்துக் கோடரிகளும் மண்வெட்டிகளும் வேகம் வேகமாய் வேலை செய்தன, மண் மலைகள் உயர்ந்து சென்றன. யாரும் பேசவில்லை. தலைக்கு மேலே இரவு வானத்தில் வீண்மீன்கள் அடர்ந்திருந்தன. பழம் பெரும் கிரெம்ளின் சுவர் வானைத் தொடும்படி உயர்ந்து சென்றது.

“புனிதமான இடம் இது. அனைத்து ருஷ்யாவிலும் மிகப் புனிதமான இவ்விடத்தில் எமது மிகப்பெரும் புனிதர்களை அடக்கம் செய்யப் போகிறோம்” என்றார் அம்மாணவர். ஜார்களுடைய சமாதிகள் இருக்கும் இவ்விடத்தில் எங்களது ஜாராகிய மக்கள் இங்கே துஞ்சப் போகிறார்கள்…. அம்மாணவரின் கை கவணக் கட்டுக்குள் இருந்தது, போரில் குண்டடிபட்டிருந்தது. அவர் அதைப் பார்த்துக் கொண்டார். மத்திய காலத்திய முடியாட்சியினை நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோமென்று வெளிநாட்டவர்களாகிய நீங்கள் எங்களை இளக்காரமாய்ப் பார்க்கிறீர்கள் என்றார். ஆனால், உலகிலுள்ள கொடுங்கோலன் ஜார் மட்டுமல்ல, முதலாளித்துவம் இன்னுங்கூட மோசமானது, உலகின் எல்லா நாடுகளிலும் முதலாளித்துவமே பேரரசன் என்பதை நாங்கள் கண்டு கொண்டு செயல்பட்டோம்… ருஷ்யப் புரட்சியின் போர்த்தந்திரம் மிகச் சிறந்தது…

நாங்கள் அவ்விடத்தை விட்டு நகர்கையில், குழியிலிருந்த தொழிலாளர்கள் அந்தக் குளிரிலும் வியர்த்து வழிய ஓய்ந்து போய் மேலே ஏறத் தொடங்கினர். செஞ்சதுக்கத்தின் குறுக்கே கரிய வரிசையில் ஆட்கள் வேகமாக நடந்து வந்தார்கள். அவர்கள் மளமளவென்று குழிக்குள் இறங்கி மண்வெட்டிகளையும் குத்துக்கோடரிகளையும் எடுத்துக் கொண்டு வாய் பேசாமல் தோண்ட ஆரம்பித்தார்கள்…

இவ்விதம் அன்று இரவு முழுதும் மக்களின் தொண்டர்கள் ஒருவரையொருவர் விடுவித்துக் கொண்டு ஓயாமல் முழு வேகத்தில் வேலை செய்தார்கள்; உதயத்தின் குளிர் ஒளி வெண்பனி மூடிய அந்தப் பெரும் சதுக்கத்தின் முழுப் பரப்பையும் தெரியச் செய்தது. சகோதரத்துவச் சமாதியின் பழுப்பு நிறக் குழிகள் தோண்டி முடிக்கப்பட்டுவிட்டன.

விடியும் முன்பே நாங்கள் விழித்தெழுந்து இருண்ட சாலைகளின் வழியே ஸ்கோபெலெவ் சதுக்கத்துக்கு விரைந்தோம். மாபெரும் நகரில் யாரும் கண்ணில்படவில்லை; கடுங்காற்று மூண்டெழப் போவது போல தொலைவிலும்  அருகாமையிலும் ஒருவித சலசலப்பு கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் சோவியத்தின் தலைமையகத்துக்கு எதிரே ஆடவரும் பெண்டிருமான ஒரு சிறு திரள் பொன்னிற எழுத்துகள் பொறிக்கப்பட்ட செம்பதாகைகளை வைத்து கொண்டு நின்றது தெரிந்தது. மாஸ்கோ சோவியத்துகளின் மத்தியச் செயற்கமிட்டியின் பதாகைகள் அவை. வெளிச்சம் அதிகமாயிற்று. தொலைவிலே சலசலப்பு சப்தம் ஆழமாகி, இடையறாத பேரிரைச்சலாகப் பெருகிற்று. நகரம் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலே பதாகைகள் படபடக்க நாங்கள் புறப்பட்டு திவெர் ஸ்காயா சாலை வழியே சென்றோம்.

நாங்கள் சென்ற வழியில் தெருக்களிலிருந்த சிறிய திருக்கோயில்கள் யாவும் இழுத்து மூடப்பட்டு இருட்டாய் இருந்தன. இவேர்ஸ்கயா தேவ அன்னையின் கோயிலுங்கூட மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு புதிய ஜாரும் கிரெம்ளினுக்குச்  சென்று முடி சூட்டிக் கொள்ளும் முன்பு இந்தக் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இரவும் பகலுமாய் எந்நேரமும் இது திறந்தே இருக்கும்; எப்போதும் கூட்டமாகவே இருக்கும்; பக்தர்கள் ஏற்றி வைக்கும் மெழுகுத் திரிகளின் ஒளி தேவ உருவங்களின் தங்கத்திலும் வெள்ளியிலும் மணிக்கற்களிலும் பளிச்சிட்டுத் தகதகத்துக் கொண்டிருக்கும். நெப்போலியன் முன்பு மாஸ்கோ வந்தபோது அணைக்கப்பட்டதற்குப் பிற்பாடு, இப்போதுதான் இந்த மெழுகுத் திரிகள் முதன் முதலாக அணைக்கப்பட்டிருந்ததாய்க் கூறினார்கள்.

புனித சத்திய சமயச் சபை தனது கடாட்சத்தின் ஒளி மாஸ்கோவுக்குக் கிட்டாதபடிச் செய்தது; பீரங்கிக் குண்டுகள் கொண்டு கிரெம்ளினைத் தாக்கியவர்களின், பக்திநெறி அறியாத இந்த விரியன் பாம்புகளின் உறைவிடமாகிவிட்ட இந்த மாஸ்கோவுக்குக் கிட்டாதபடிச் செய்தது. திருக்கோயில்கள் இருண்டு, நிசப்தமும் குளிரும் குடி கொண்டனவாகிவிட்டன: பாதிரிமார்கள் மறைந்து விட்டார்கள். செஞ்சவ அடக்கத்தின் போது சமயச்சபைப் பெரியவர்கள் பிரார்த்தனை நடத்தவில்லை; நீத்தாருக்குச் சமயச் சடங்கு ஏதும் இல்லை; தேவநிந்தனையாளர்களது சமாதியின் முன்னால் பிரார்த்தனைகள் வேண்டியதில்லை. மாஸ்கோவின் தலைமை மேற்றிராணியார் தீஹன் விரைவில் சோவியத்துகளைச் சமய விலக்கம் செய்யவிருந்தார்…

கடைகளும் மூடப்பட்டுதான் இருந்தன, சொத்துடைத்த வர்க்கத்தார் வீட்டிலே இருந்தார்கள் – ஆனால், இதற்குக் காரணம் வேறொன்று. மக்களது தினமாகும் இது.  மக்கள் எல்லாரும் தெருக்களிலே பிரவாகமெடுக்கப் போகிறார்கள் என்னும் செய்தி கடல் அலையென எழுந்து இடி முழக்கமிட்டது…

இவேர்ஸ்கி வளைவு வழியே மக்கள் வெள்ளம் ஏற்கெனவே கரைபுரண்டு ஒட ஆரம்பித்துவிட்டது. ஆயிரம் ஆயிரமாய் மக்கள் திரள் செஞ்சதுக்கத்தின் பெரும் பரப்பெங்கும் குழுமி வந்தது, முன்பெல்லாம் இவேர்ஸ்கி திருக்கோயிலின் எதிரே செல்லும் போது எல்லாரும் சிலுவைக் குறியிட்டுக் கொள்வது வழக்கம். ஆனால், இப்போது கூட்டத்தினர் அதைக் கடந்து சென்றபோது அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை…

கிரெம்ளின் சுவர் அருகே நெருக்கமாய் நின்றிருந்த கூட்டத்துக்குள் புகுந்து நாங்கள் இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னே சென்று மண் மலைகளில் ஒன்றின் மீது ஏறி நின்றோம். ஏற்கெனவே அங்கே பலரும் இருந்தார்கள், அவர்களிடையே முராலவும் ஒருவர் – மாஸ்கோவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த படையாள் அவர்; தாடியுடைய இதமான முகமும் நெட்டையான எளிய தோற்றமும் கொண்டவர்.

செஞ்சதுக்கத்துக்கு வந்து சேரும் எல்லாத் தெருக்களிலும் மக்கள் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தார்கள். ஆயிரம் ஆயிரமானோர், பஞ்சையருக்கும் உழைப்பாளருக்குமுரிய தோற்றமுடையோர் திரண்டெழுந்து வந்து கொண்டிருந்தார்கள். இராணுவ வாத்தியக் குழு சர்வதேசிய கீதம் இசைத்து நடைபோட்டு நெருங்கி வந்து கொண்டிருந்தது. தன்முனைப்பான முறையில் ஏனையோரும் சேர்ந்து கொண்டு இசைக்க அந்தக் கீதம் மக்கள் வெள்ளத்தின் மீது மெதுவாகவும் இதமான உருக்கத்தோடும் காற்றலைகள் போல் பரவிச் சென்றது. கிரெம்ளின் சுவரின் உச்சியிலிருந்து பிரம்மாண்டமான பதாகைகள் கீழே தரைக்கு விரித்து விடப்பட்டன. அந்தச் செம்பதாகைகளில் பொன்னிலும் வெள்ளையிலுமான எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன: “உலக சோசலிசப் புரட்சியின் முன்னணிப் படையைச் சேர்ந்த வீரத் தியாகிகள்,  உலகத் தொழிலாளர்களது சகோதரத்துவம் நீடுழி வாழ்க!”

சதுக்கத்துக்குள் வீசிய குளிர்காற்று பதாகைகளை விம்மிப் புடைத்தெழச் செய்தது. நகரின் தொலைப்பகுதிகளிலிருந்தும் பற்பல ஆலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் தமது வீரத் தியாகிகளைச் சுமந்து கொண்டு வந்தார்கள். வளைவின் வழியே அவர்கள் வந்து கொண்டிருந்ததை, அவர்களது பதாகைகள் பளிச்சிட்டதையும், அவர்கள் சுமந்து வந்த சவப்பெட்டிகளின் இரத்தச் சிவப்பையும் பார்க்க முடிந்தது. இந்தப் பெட்டிகள் மட்ட ரகமானவை, இழைக்கபடாத பலகை கொண்டு செய்யப்பட்டு, கருஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டவை. முரட்டு ஆட்கள் அவற்றை உயரத் தம் தோள் மீது தூக்கி வந்தனர்.

முகத்தில் கண்ணீர் வழிந்தோட அவர்கள் நடை போட்டனர், அவர்களுக்குப் பின்னால் வந்த பெண்கள் விம்மியழுது கொண்டும் அலறிக் கொண்டுமிருந்தார்கள் அல்லது உயிரற்று வெள்ளையாய் வெளுத்துப் போன முகங்களுடன் விரைப்பாய் நடந்தார்கள். சில சவப்பெட்டிகள் திறந்திருந்தன; அவற்றின் மூடிகளைப் பின்னால் வந்தவர்கள் எடுத்து வந்தார்கள். ஏனையவை பொன் அல்லது வெள்ளிச் சரிகைத் துணிகளால் மூடப்பட்டிருந்தன, அல்லது உச்சியில் படையாளின் தொப்பி வைத்து அடிக்கப்பட்டிருந்தது. பல பெட்டிகளின் மீது கோரமான செயற்கைப் பூ வளையங்கள் இருந்தன.

கூட்டத்தினர் விலகி நின்று வழிவிட்டனர். இப்படித் தோன்றி பிற்பாடு மூடிக் கொண்டுவிட்ட வளைந்து நெளிந்து சென்ற சந்து வழியே இந்த ஊர்வலம் மெல்ல எங்களை நோக்கி நகர்ந்து வந்தது. வளைவு வழியே முடிவில்லாத நீள் வரிசையில் பதாகைகள் வந்து கொண்டிருந்தன. சிவப்பின் எல்லாவிதமான சாயல்களிலும் அமைந்த இந்தப் பதாகைகளில் வெள்ளியிலும் பொன்னிலுமான எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன, இவற்றின் உச்சியிலிருந்து தோரணங்கள் தொங்கின. கறுப்பில் வெள்ளை எழுத்துகளைக் கொண்ட அராஜகவாதிகளது கொடிகள் சிலவும் காணப்பட்டன. வாத்தியக் குழு புரட்சிகர சவ அடக்க ஊர்வல கீதத்தை இசைத்தது. நெரிசலாய் வெற்றுத் தலையுடன் நின்ற பெருங்கூட்டத்தினர் கனத்த பெருங்குரலில் பாட, ஊர்வலத்தினர் கரகரக்கும் குரலில் விம்மித் திணறியவாறு பாடினர்.

ஆலைத் தொழிலாளர்களது திரள்களுக்கு இடையிடையே படையாட்களது குழுக்கள் தமது சவப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு வந்தன. குதிரைப் படையினர் குதிரையில் மரியாதை அணி வகுத்து வந்தார்கள். பீரங்கிப் படையினரும் வந்தார்கள். அவர்களுடைய பீரங்கி சிவப்பு, கறுப்புத் துணிகளால் என்றென்றுக்குமாய் என்று நினைக்கும்படி – மூடப்பட்டிருந்தது. “மூன்றாவது அகிலம் நீடூழி வாழ்க!  நேர்மையான, ஜனநாயகமான, பொது சமாதானம் வேண்டும்” – கோஷங்களைக் கொண்ட பதாகைகளை இவர்கள் எடுத்து வந்தார்கள்.

சவப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு ஊர்வலத்தினர் மெதுவாக நகர்ந்து சமாதியின் ஓரத்தை வந்தடைந்தனர். பெட்டிகளைத் தூக்கி வந்தவர்கள் தமது சுமையுடன் மேட்டின் மீது ஏறிக் குழிக்குள் இறங்கினார்கள். தூக்கி வந்தவர்களில் பலரும் பெண்கள்-கட்டை குட்டையான, வலுமிக்க பாட்டாளி வர்க்கப் பெண்கள். மாண்டோரின் பின்னால் ஏனைய பெண்கள் வந்தார்கள் – உள்ளம் ஒடிந்து போன இளம் பெண்கள், அல்லது வயது முதிர்ந்து சுருக்கங்கள் விழுந்த தாய்மார்கள் இவர்கள்.  அடிபட்ட விலங்குகளைப் போல் இந்தத் தாய்மார்கள் முனகிச் சப்தம் எழுப்பியவாறு தமது புதல்வர்களையும் கணவன்மார்களையும் பின்தொடர்ந்து சகோதரத்துவச் சமாதிக்குள் இறங்கினார்கள். இரக்கங்கொண்ட கரங்கள் அவர்களை அணைத்துத் தடுத்த போது கதறிக் கூச்சலிட்டு அழுதார்கள். ஏழைகள் ஒருவரையொருவர் அப்படி உளமார நேசிப்பவர்கள்!

அன்று பகல் முழுதும் சவ அடக்க ஊர்வலம் ஓயாமல் வந்து சென்றது. இவேர்ஸ்கி வளைவின் வழியே உள்ளே நுழைந்து நிக்கோல்ஸ்கயா வழியே போய்ச் சேர்ந்தது. ஆற்று வெள்ளம் போல் செம்பதாகைகள் சென்று கொண்டிருந்தன. ஐம்பதாயிரம் மக்கள் சதுக்கத்திலே குழுமி நிற்க, அவை நம்பிக்கையையும் சகோதரத்துவத்தையும் மகத்தான தொலைநோக்குடைத்த வாக்குகளையும் வலியுறுத்தும் சொற்களைத் தாங்கிச் சென்றன. உலகின் தொழிலாளர்களும் இனி வருங்காலத்தில் தோன்றப் போகும் அவர்களது சந்ததியினர் எல்லோரும் கண் கொண்டு இக்காட்சியைப் பார்த்திருக்க, சென்றது இந்த ஊர்வலம்….

ஒவ்வொன்றாக ஐந்நூறு சவப்பெட்டிகள் குழிகளினுள் வைக்கப்பட்டன. இருட்டாகி வந்தது, அப்போதும் தொடர்ந்து கொடிகளும் பதாகைகளும் தணிந்து தொங்கியும், படபடத்துப் புடைத்தெழுந்தும் வந்து கொண்டிருந்தன.  வாத்தியக் குழு சவ அடக்க ஊர்வல கீதமிசைத்தது. அம்மாபெரும் கூட்டம் அனைத்தும் சேர்ந்து இசைத்தது.  சமாதிக்கு மேல் இருந்த இலைகளில்லா மரக்கிளைகளில் விசித்திரமான பல்வண்ண மலர்க் கொத்துகள் போல் மலர் வளையங்கள் தொங்கவிடப்பட்டன. இரு நூறு ஆடவர்கள் மண்வெட்டியால் மண்ணைக் குழிகளுக்குள் தள்ள ஆரம்பித்தார்கள். சவப் பெட்டிகள் மீது விழுந்து அது எழுப்பிய ஆழமான தடதடப்பு, கூட்டத்தினர் இசைத்த கீதத்துடன் சேர்ந்து தணிவாய் ஒலித்தது….

விளக்குகள் ஏற்றப்பட்டன. கடைசிப் பதாகைகளும் கொடிகளும் கடந்து சென்றன. அழுது புலம்பிய கடைசிப் பெண்களும் மெல்ல விலகிச் சென்றார்கள். நெஞ்சு பொறுக்காத சோகத்துடன் திரும்பிப் பார்த்தவாறு நடந்தார்கள். பாட்டாளி வர்க்கப் பெருவெள்ளம் அந்தப் பெரிய சதுக்கத் திலிருந்து சிறிது சிறிதாக வடிந்து அடங்கிற்று…

பக்தி உணர்ச்சி வாய்ந்த ருஷ்ய மக்கள் விண்ணுலகை அடைய இனி பாதிரிமார்கள் வந்திருந்து பிரார்த்தனை நடத்தத் தேவையில்லை என்பதை நான் திடுமென உணர்ந்தேன். விண்ணுலகம் வழங்கக்கூடியதைக் காட்டிலும் ஒளி படைத்ததான ஒர் அருளாட்சியை இங்கே இம்மண்ணுலகில் அமைத்திடுகிறார்கள் இவர்கள், இதற்காக இன்னுயிரை அளிப்பது தனிப்பெரும் சிறப்பாகும் என்பது தெரிந்து….

-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

 

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்

0

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு !! கண்டன ஆர்ப்பாட்டம்

டந்த 15.11.2017 கரூர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மேற்கண்ட தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டதிற்கு மக்கள் அதிகாரம் கரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையேற்று நடத்தினர். பறையிசையுடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் மக்களை வரவழைத்தது.

போலீசின் அயோக்கியத்தனத்தை கிழிக்க போறாங்கன்னு தெரிந்து காவல்துறை ஆர்ப்பாட்டத்தை கலைத்து விட சிந்தித்தது. ஆர்ப்பாட்டத்தில் நாற்காலி போடக்கூடாது இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்றது. பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் எல்லாம் கால் வலிக்க நிற்க வேண்டுமா சொல்லுங்க என  தோழர்கள், வழக்கறிஞர்கள் கேட்க சரி எப்படியோ செய்யுங்க என்றது.

“நெல்லை இசக்கி முத்து மரணத்துக்கு காரணமான கலெக்டர், எஸ்.பி ஆகியோரை கைது செய்ய வேண்டுமென சுவரொட்டி ஒட்டிய தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது கரூர் நகர காவல்துறை.”

கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவை பெயரளவுக்குதான் அதுவும் ஆளும் கட்சிகளுக்குதான்! போராடுகின்ற மக்களுக்கும், அமைப்புகளுக்கும் இல்லை. இந்த அடக்குமுறையெல்லாம் கொஞ்சம் நாள் தான்? மக்கள் தங்கள் அதிகாரத்தை எடுக்கும் போது காவல்துறையின் வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும் என்று தலைமையுரையில் தோழர் சக்திவேல் பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய கரூர் பகுதி மக்கள் அதிகாரத்தின் தோழர் இராமசாமி அவர்கள் “கந்து வட்டி கும்பலின் பிறப்பிடம் கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி மண்மாரி கிராமம்தான். இந்த கரூர் மாவட்டம்தான் கந்து வட்டிக்கு தாய் வீடு போல உள்ளது. குறிப்பிட்ட சாதியினர் இந்தியா முழுவதும் வட்டிக்கு விட்டு கரூரில் பல மாடி கொண்ட கண்ணாடி மாளிகை கட்டியதுதான் உதாரணம்.

பல குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி வட்டி தொழிலில் ஊறி திளைத்து வருகின்றனர் ரவுடிகள். இவர்களுக்கு அதிகாரிகள், போலீசு பாதுகாப்பாக உள்ளது. இவர்களின் கொடுமையால் பலரும் இறந்து உள்ளனர். மக்கள் அமைப்பாக திரண்டு போராடினால் கந்து வட்டி காரர்களை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

பிறகு உரையாற்றிய கரூர் பகுதி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் கு.கி.தனபால் “மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர்கள் போஸ்டர்கள் ஒட்டியதற்கு வழக்கு போட்டு சிறையில் தள்ளியதை கண்டித்து பேசினார். வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட ஒன்று திரண்டு போராடுவோம்” என்றார்.

கரூர் பகுதி CPI(ML) விடுதலை அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.ராமச்சந்திரன் “கந்து வட்டிக்கெதிராக இடதுசாரி அமைப்புகள் ஒன்று சேர்ந்துள்ளோம். காவல்துறை நடவடிக்கை கந்துவட்டி நபர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம். தொழிற்சங்கம் வைத்து போராடினாலும் போலீசு மிரட்டுவதும் உள்ளது. நமது ஒருங்கிணைந்த நடவடிக்கை அடக்கு முறைக்கு எதிராக மாறும். இணைந்து செய்வோம்!” என்று பேசினார்.

கரூர் பகுதி வழக்கறிஞர் தோழர் புகழேந்தி பேசுகையில் “போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகார தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது, “இங்க அடிச்சா அங்க வலிப்பதை” போல நெல்லை சம்பவத்தையொட்டி கலெக்டர், எஸ்.பி -ஐ கைது செய் என்றால் இந்த குற்றவாளிகளுக்கு வலிக்கிது என்றும். கந்துவட்டி கொடுமைக்கு குடும்பமே தீயில் கருகியது கண்டு எந்தவித உணர்வின்றி மனசாட்சி இல்லாமல் வழக்கு போடுவதை கண்டித்தார்.”

ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் முல்லையரசு பேசுகையில் “சாதாரண கூலி தொழிலாளர்கள் கந்து வட்டிக்கு வாங்கி குடும்பங்கள் மிகவும் பாதிக்கிறது பல வட்டிகள் உள்ளது ராக்கெட் வட்டி, ரன்வட்டி, மீட்டர்வட்டி என அட்டைபோல உறிஞ்சுகின்றனர். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து செயல்படுவோம்!” என்றார்.

கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கங்கா ஸ்ரீ என்ற பெண்மணி பேசினார். அவர் “இந்த போலீசு கந்துவட்டி பிரச்சனையை தீர்த்து தரவில்லை. பலமுறை புகார் செய்தும் எவரும் கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிறாங்க. மக்கள் அதிகாரத்தை எடுக்கனுங்க அதான் தீர்வு போலீசு எல்லாம் உதவாது” என்றார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பேசுகையில் “கந்து வட்டியை ஒழிக்க கடனைக் கட்டாதே கலகம் செய்! என்ற முழக்கம் அரசுக்கு கோரிக்கை வைப்பதல்ல? மக்களுக்கு வைக்கின்ற முழக்கம். ஏன் என்றால் கந்து வட்டியை இந்த அரசு ஒழிக்காது நெல்லையில் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இசக்கி முத்து குடும்பம் தீக்கீரையானது. இப்படி பல குடும்பங்கள் பலியாகின்றன.

ஏன் மக்கள் கந்து வட்டி வாங்குகின்றனர். விவசாயம் இல்லை, வேலையில்லை, விலைவாசி உயர்வு, வாழவழியில்லாமல் கந்து வட்டி வாங்குறான் இந்த நிலைக்கு தள்ளியது அரசு. விவசாயிகளின் மொத்த கடன் முதலாளிகளின் கடனில் 1% தான் அதை தள்ளுபடி செய்யவில்லை மோடி – எடப்பாடி அரசு. ஆறு இலட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறது முதலாளிகளுக்கு.

கடன் கொடுப்பது கூட மக்களுக்கு கடன் கட்ட முடியுமா? என்று பார்த்துதான் கொடுக்கிறது வங்கிகள். மக்களை விளிம்பு நிலைக்கு தள்ளியது இந்த அரசுதான் கந்து வட்டி கொடுமையை தடுக்கவில்லை போலீசு. அதிகாரிகள்,போலீசு துறையே ஒரு கிரிமினல் மாஃபியா கும்பலாக உள்ளது. இவர்கள் கந்துவட்டியை ஒழிப்பார்களா?

கரூரில் உள்ள தரைக்கடை முதல் சாதாரண கடை வியாபாரிகளிடம் மாமுல் வாங்குவது, லைசென்ஸ், ஹெல்மெட் பிடிப்பதாக வசூல்வேட்டை நடத்துவது சிவகங்கை சிறுமி பாலியல் கொடுமை என பாதிக்கப்பட்டு புகார் கொடுத்தால் ஏட்டு முதல் ஐ.ஜி வரை பல நாட்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வது. பாண்டிச்சேரியில் கிரிமினல் கும்பலுடன் கூட்டு சேர்ந்து போலீசு கொள்ளையடித்தது.

கரூரில் ஹவாலா ஊழல் பணத்தை காவல் ஆய்வாளர் ஆட்டைய போட்டது. மணல் கொள்ளையர்களிடம் இலஞ்சம் பெறுவது போன்ற பல மோசடி, பித்தலாட்டம் போலீசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன யோக்கியதை உள்ளது. இந்த கட்டமைப்பு முழுவதும் தோல்வியுற்று, எதிர்நிலையாக மாறிவிட்டது. இதை நம்பி பலனில்லை. மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக சேருங்கள் அப்போதுதான் கந்து வட்டியை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசுகையில் “கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அரசை கண்டித்து  போஸ்டர் ஒட்டியதற்காக கரூர் பகுதி தோழர் பாக்கியராஜ் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளியது போலீசு.

இந்த நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் என்ற கொஞ்ச நஞ்ச உரிமை கூட காலில் போட்டு மித்திக்கிறது இந்த அரசு. ஆனால் கவர்னர் கோவையில் திடீர் என்று ஆய்வு செய்கிறார். அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது என்று பேசுகின்றனர். ஆனால் இங்கு போஸ்டர் ஒட்டி ஒரு கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லை.

இந்த சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள். மோடி வாய்கிழிய பல வெளிநாட்டு கூட்டங்களில் பேசுகின்றார். ஆனால் அதே சட்டத்தை கரூரில் உள்ள காவல்துறையினர் மதிப்பதில்லை. தோழர் பாக்கியராஜை கைது செய்யும் போது ஆய்வாளர் நீயெல்லாம் ஒரு ஆளு, உன்னை தேடி வந்து கைது செய்ய வேண்டியது உள்ளது. என்று அத்துமீறி வீட்டில் நுழைந்து எளக்காரமாக பேசினார். எங்கள் தோழர் பாக்கியராஜ்  பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

மக்களுக்காக போராட்டம் என தன் வாழ்கையையே தியாகம் செய்கிறார். ஆனால் இந்த காவல்துறை, மாமுல் வாங்கிக் கொண்டு கஞ்சா விற்பவனுக்கும் மணல் கொள்ளையனுக்கு ஆதரவாக இருப்பது தியாகமா? என சாடினார்.

கந்து வட்டிக்கு மக்கள் பணம் வாங்கி விளிம்பு நிலையில் உள்ளனர். மக்களை பாதுகாக்க, ரவுடிகளை ஒழிக்க இந்த அரசு வக்கற்று, தகுதியிழந்து, தோற்றுப்போய் உள்ளது இதை நம்பி எதுவும் செய்ய முடியாது என்றார்.

செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள் எல்லாம் கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்துள்ளான். கரூரில் பல வகையில் மோசடியாக சேர்த்த சொத்துக்கள், இவர்கள்தான் கந்து வட்டி கும்பலின் புகலிடம். கந்து வட்டி மட்டுமல்ல பல நிறுவனங்களின் டிவி விளம்பரத்தில் வாட்டிக்கா கோல்டு லோன் என்ற பெயரில் சேமித்து வைத்திருக்கும் தங்க நகைகளை கூட பொது மக்களிடம் விட்டு வைப்பதில்லை. அடகு வைங்க என ஆட்டைய போட விளம்பரம். இதுவும் கந்து வட்டிக் கணக்கில் வராத கருப்பு பணம்தான்.

விஜய் மல்லையா போன்ற முதலாளிகளுக்கு கடன் கொடுத்து ஏப்பம் விட்டு போனவர்களை பிடிக்கவில்லை இந்த அரசு. ஆனால் திருவண்ணாமலையில் கடன் கட்டாத விவசாயியை SBI வங்கி குண்டர்களை வைத்து அடித்தே கொலை செய்து இருக்கிறது. இதுதான் இந்தியாவின் நம்பர் ஒன் வங்கி என பெயர் எடுத்தது. இது தான் மோடி அரசின் யோக்கியதை.
மக்களே தங்கள் அதிகாரத்தை கையிலெடுத்து போராடும்போது மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இன்று ரெய்டு என்று CBI அதிகாரிகள் 2000 -பேர் வரலாறு காணாத வகையில் அதிரடி ரெய்டு என்று தினகரன், சசிகலா, ஜெயலலிதா வீடுகளில் 1,493 கோடி சொத்துக்களையும், ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறுகின்றனர்.

ஆனால் ஜெயாவின் கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு 5,000கோடி, சிறுதாவூர் போன்ற பல பங்களாக்களின் மதிப்போ பல இலட்சம் கோடி வரும் இதை யார் பறிமுதல் செய்வது? யாரை ஏமாற்ற மோடி அரசின் ரெய்டு நாடகம்? மோடி அரசு மற்றும் எடப்பாடி அடிமை அரசை எதிர்த்து போராட மக்கள் அதிகாரம் அமைப்பில் இணையுங்கள்!” என்று பேசினார்.

ம.க.இ.க கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் மோடி, எடப்பாடி அரசின் அயோக்கியத்தனத்தையும், பித்தலாட்டத்தையும் அம்பலப்படுத்தியது.

இறுதியாக  மக்கள் அதிகாரத்தின் கரூர் பகுதி தோழர் சுதர்சனம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு முழக்கத்தின் மூலம் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கந்து வட்டிக் கொடுமையை முடிவு கட்ட மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர். தொடர்புக்கு : 97913 01097.


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

புரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !

4

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு, ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம்,  கடந்த நவம்பர் 19, 2017 அன்று சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் இரசியப் புரட்சியின் சிறப்பு குறித்த இத்திரைச்சித்திரம் வினவு இணையதளத்தின் சார்பில் திரையிடப்பட்டது.

இப்படத்தில் உலகம் முழுவதும் முதலாளித்துவத்தின் அகோர இலாபவெறிக்காக சூறையாடப்படும் உலக மக்களின் நிலை குறித்து விளக்கி அதிலிருந்து தப்புவதற்கான வழி என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறது. சோசலிசப் புரட்சிக்கு முந்தைய இரசியாவின் நிலையையும் அதன் தொடர்ச்சியாக அங்கு தோழர் லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சியையும் கண் முன் நிறுத்துகிறது.

மேலும், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்திலிருந்து இந்த உலகைக் காத்ததையும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. சோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் கண் முன்னே காட்டுகிறது.

இப்படம் நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தி ரசிய சோசலிசப் புரட்சியைப் போன்று நம் நாட்டில் எப்போது வரும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

பாருங்கள் பகிருங்கள் !


இந்த திரைச் சித்திரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பாலாவின் நாச்சியார் – நக்கலைட்சின் நோச்சியார் !

7

யக்குநர் பாலாவின் நாச்சியார் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. பிதமாகன் விக்ரம் போல ஜி.வி பிரகாஷ் ஓடுகிறார், ஆடுகிறார், பார்க்கிறார். ஜோதிகா கடைசியில் தே … பயலே என்கிறார். இத்தகைய ஆணாதிக்க வார்த்தையை பயன்படுத்தலாமா, ஜோதிகாவுக்கு அடுக்குமா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்தது.

ஒரு கதையில் அதன் பாத்திரத்திற்கேற்ற உரையாடல்கள் வருவதில் என்ன பிரச்சினை? நடிகர் பிரகாஷ் ராஜ், மோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் இந்துமதவெறி வசனங்களை பேசித்தான் நடிக்க வேண்டும். மோடியை எதிர்க்கும் அவர் இத்தகைய வெறிப்பேச்சுக்களை பேசலாமா என்று கேட்பது அபத்தம்.

ஒரு படத்தில் குறிப்பிட்ட சமூகப் பின்னணியில் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார். அதற்கேற்ப பாத்திரங்களையோ, வசனங்களையோ வைக்கிறார். இதில் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் அந்த சமூகப் பின்னணியோ இல்லை பாத்திரங்களின் வகை மாதிரியோ யதார்த்தமாக இல்லை, தவறாக இருக்கிறது என்று விமரிசிப்போர் இயக்குநரை தாராளமாய் விமரிசிக்கலாம்.

அந்த வகையில் பாலா படங்களில்  நடிப்போரோ இல்லை பேசப்படும் வசனங்களோ பிரச்சினை இல்லை. மாறாக பாலாவின் அகவுலகமே பிரச்சினையாக இருக்கிறது. அதனால்தான் கடைசியாக வந்த தாரை தப்பட்டையில் அவரது ரசிகர்களே வெறுப்படைந்தனர். ஊரோடு முரண்படும் விட்டேத்தி சாமியார்கள் எப்போதும் கஞ்சாவோடும், கடுப்போடும் சுற்றி வருவதைப் போன்ற பாத்திரங்களை வைத்தே பல்வேறு நேரங்களில் பாலா படமாக எடுக்கிறார்.

எந்தக் கதையும் அவரது சன்னிதானத்தில் படைக்கப்படும் போது மேற்கண்டவாறு அரையும் குறையுமாக சமைக்கப்படுகிறது. சமூகத்தோடு முரண்படும் ஒரு கதாபாத்திரத்தை இயல்பாக காட்ட தெரியாத அல்லது விரும்பாத பாலா இப்படி எதிர்மறை வில்லத்தனம் நிரம்பிய சூப்பர்மேன்களாக காட்டுகிறார். அதையே எத்தனை தடவை பார்ப்பது என்பது ரசிகர்களது பிரச்சினை!

இதோ பாலாவின் பாத்திரங்களை ‘அழகாக’ காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் நண்பர்கள்! வாழ்த்துக்கள்!

இது பாலாவின் நாச்சியார்!

இது நக்கலைட்சின் நோச்சியார்!


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி