Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 576

விபத்தைத் தடுக்க ஓட்டுநர்களைக் கொல் – மோடி அரசு

11

சாலை பாதுகாப்பு மசோதா - கோத்தகிரி ஆர்ப்பாட்டம்பெருகி வரும் சாலை விபத்துகளை குறைக்கவும், முறைகேடாக உரிமம் பெறுவதை தடுக்கவும் எனக் கூறி மோடி அரசு புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

விபத்து ஏற்படுத்துவோர்க்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுமாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் எனக் கூறுகிறது இந்த  சட்டதிருத்தம். ஆகவே, மக்கள் நலன் கருதி, இந்த சட்டதிருத்தம் அமலுக்கு வர உள்ளது என்று சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்பினர் போன்ற அட்டைக் கத்திகள் மோடியின் இந்த அறிவிப்பை கொண்டாடுகின்றனர். போக்குவரத்து சட்டத்தில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க-வினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் நடக்கப் போவதோ வேறு.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது என்பதை சுட்டிக் காட்டும் அரசு, ஒரு முறை சாலை விதியை மீறினால் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்களில், ஒரு ஆங்கிலச் செய்தித் தாளில் புகைப்படத்துடன் நான் தவறு செய்தவன், என்று தன்னை விளம்பரம் செய்து அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அடுத்த முறை தவறு செய்பவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தண்டனை வழங்கும் அரசு, குடிக்க காரணமான டாஸ்மாக்கையோ அனுமதித்த அரசையோ கேள்விக்குள்ளாக்கவில்லையே ஏன்? தெருவிற்கு தெரு சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை என்பதை இந்த சட்டத் திருத்தம் பேசவில்லை.

சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுனர் 50,000 அபராதம் கட்டி விட்டு ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். இவை புதிய சட்டத் திருத்தத்தின் விதிகளாகும்.

மேலும், இதுவரை ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்களில்  50% பேர் முறையான உரிமம் பெற்றவர்கள் இல்லை எனவும் மோடி அரசு கண்டுபிடித்துள்ளது. முறைகேடாக உரிமம் பெறுகிறார்கள் என்ற அடுத்த குற்றச்சாட்டை சொல்கிறது அரசு. இதனால் உரிமத்தை புதிதாக தரப் போகிறதாம்.

இதுவரை உரிமம் பெற்றது செல்லாது என்றும் அறிவிக்கிறது அரசு. புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற 9 மாதம் பயிற்சியளிக்கப்பட்டு 3 மாதம் சோதனை செய்யப்பட்டு அதன்பிறகு உரிமம் வழங்கப்படும். தற்பொழுது பயிற்சி பெற ஆகும் செலவை விட இதற்கு பல மடங்கு அதிகம் செலவாகும். இதற்கென்று தனிப்படிப்பும், தனியார் கல்லூரிகளும் எதிர்காலத்தில் வர உள்ளன.

சாலை பாதுகாப்பு மசோதா - கோத்தகிரி ஆர்ப்பாட்டம்தற்போது இருக்கும் டிரைவிங் ஸ்கூல் முறை ஒழிக்கப்படும். புதிய சட்டத்தின்படி டிரைவிங் ஸ்கூல் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்க வேண்டும். மருத்துவ சோதனைக் கூடம், பணிமனை (ஒர்க் ஷாப்) போன்றவை இங்கு இருக்க வேண்டும். இதற்கு மூலதனம் அதிகம் தேவைப்படும். எனவே, வாகனத் தயாரிப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே நடத்த வேண்டும். இதன்மூலம், நாடு முழுவதும் இத்தொழிலைச் சார்ந்து பிழைத்து வந்தவர்களின் வாழ்க்கை அழியும்.

முறைகேடாக, உரிமம் பெற்றதாக கூறும் ஓட்டுனர்களுக்கு இது போன்று கடுமையாக நடவடிக்கை எடுக்க உள்ள அரசு இத்தகைய தவறுக்கு காரணமாக இருந்த ஆர்.டி.ஓ உள்ளிட்ட போக்குவரத்து துறையினருக்கு என்ன தண்டனை என்பதை சட்டத்தில் கூறவில்லை..

ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு மூடு விழா!

இதுவரை ஆர்.டி.ஓ அலுவலகம் மூலம் பெறப்பட்டு வந்த ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று, பர்மிட் வழங்குதல், வாகனம் பதிவு செய்தல் போன்ற அனைத்து விதமான பணிகளும் இனிமேல் சேப்டி அதாரிட்டி, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி போன்ற பல பெயர்களில் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்கான கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும். இதில் அரசு இனிமேல் தலையிட முடியாது.

வாகன உதிரி பாகம் விற்பனை, வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் பெயின்டிங் போன்ற சிறு குறு மற்றும் சுய தொழில்கள் அழியும். எந்த ஒரு வாகனத்திற்கும் உதிரி பாகங்கள் வாங்க வேண்டுமென்றால், எந்த கம்பெனியின் வாகனமோ அந்தக் கம்பெனி உதிரி பாகங்களைத்தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் என புதிய சட்டம் சொல்கிறது. இதன் விளைவாக வாகனங்களின் உதிரி பாகங்களை மட்டுமே தயாரிப்பதற்கென்றே உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அதை விற்பனை செய்யும் கடைகளும் அழியும்.

வாகனங்கள் பழுது நீக்கும் (சர்வீஸ்) என்பது பல தனித்தனி சிறு, குறு தொழில்களை உள்ளடக்கியதாகும். பெயின்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் என சுயமாக தொழில் செய்து இதன் மூலம் பிழைத்து வருபவர் பல லட்சம் பேர். பழுதடைந்த பொருட்களை புதுப்பித்தும், பழுது நீக்கியும் பயன்படுத்துதல் என்பது பெரிய அளவில் நடக்கிறது. புதிய சட்டத்தின்படி ஆட்டோ, கார், பேருந்து இனி இங்கு சர்வீஸ் செய்ய முடியாது. மாறாக, அந்தந்த கம்பெனி சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் ஒர்க் செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலை தர வக்கற்ற அரசு சுயமாக தொழில் செய்து பிழைத்து வரும் லட்சக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடப் போகிறது. நான் என்ன செய்யப் போகிறோம்? இவை அனைத்தும் சாலை விபத்துக்களை தடுக்க அரசு கொண்டு வரும் திட்டம் என்று நாம் நம்ப வேண்டும் என்கிறார் மோடி.

ஆணையங்களின் வழியாக கார்ப்பரேட்டுகளின் அதிகாரம்

தற்போது நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பெர்மிட் காலம் முடிந்தவுடன் மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்படி பர்மிட் பறிக்கப்பட்ட வாகனங்களை இரும்பு கடைக்குத்தான் போட முடியும். இனி பர்மிட் வழங்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. நேஷனல் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி என்ற பெயரில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டு நாட்டின் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களையும் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஏலம் விடும். இதில், பன்னாட்டு கம்பெனிகளும் பங்கேற்கும். உள்ளூர் முதலாளிகள் அவர்களுடன் போட்டி போட்டு ஏலத்தில் வெற்றி கொள்ள முடியாது.

இலாபம் தரும் வழித்தடங்களில் மட்டும்தான் இந்த பேருந்துகள் இயக்கப்படும். கிராமங்களுக்கான போக்குவரத்து ஒழிக்கப்படும். இதைவிட கொடுமை இது போன்ற பிரச்சனைகளால் ஒட்டு மொத்த போக்குவரத்து துறையையே கலைத்து விட்டு தனியார் வசம் ஒப்படைக்கப் போகிறதாம். இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், போக்குவரத்தை சரிசெய்ய துப்பு கிடையாதாம். உலக முதலாளிகள் வந்து சாலை விபத்தையும், போக்குவரத்தையும் தடுக்கப் போகிறார்களாம். இதுதான் மோடி கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் யோக்கியதையாகும். இது தேசத்தை பாதுகாக்கும் தேசபக்தன் செய்யும் வேலையா? அல்லது தேசத்தை அடகு வைக்கும் தேசத் துரோகி செய்யும் வேலையா?

போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டமாக்கும் மோடி!

போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் நாடு முழுவதும் பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கொண்டது. அரசுக்கு கோடிகளை வருவாயாக ஈட்டித் தருவதாகும்! இதை கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி கொள்ளையடிக்கும் அதே நேரத்தில் இதைச் சார்ந்து பிழைத்து வரும் சிறு, குறு முதலாளிகள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது. எனவே, இரண்டு பக்கமும் மாபெரும் அழிவை உருவாக்கப் போகிறது சாலை பாதுகாப்பு மசோதா 2015.

தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் தொழிலாளிகளின் உரிமை பறிக்கப்பட உள்ளது. பொதுத்துறை வங்கி, இன்சூரன்ஸ், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் மக்களின் பணம் சூறையாடப்படப் போகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தெருவோர சிற்றுண்டிக் கடைகள், சிறிய உணவு விடுதிகள் ஒழிக்கப்படப் போகிறது. நிலப்பறிப்பு சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாய நிலங்களை அழித்து விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளப் போகிறது மோடியின் அரசு.

மொத்த நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், சிறு குறு தொழில்கள், தொழிலாளர் உரிமைகள், பொதுச்சொத்துக்கள் என்ற அனைத்தையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள் கொள்ளையடிக்க சட்டப்படியே வழிவகுத்து கொடுத்துப் பாருங்கள்! இதுதான் தேசத்தின் வளர்ச்சி என்று கொக்கரிக்கிறது மோடி அரசு.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், வறுமை, வேலையின்மை, வேலை பறிப்பு, சுற்றுச் சூழல் சீர்கேடு, அதிகார முறைகேடுகள் என்ற மொத்த சமுதாயமும் மக்கள் வாழத் தகுதியற்றதாய் மாறிப் போய் நம்மை அச்சுறுத்தி வருகின்றன. இதில் எதையும் தடுப்பதற்கு வக்கற்று போய் நிற்கிறது அரசு. பெயரளவிலான ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டபூர்வமாக்கி வருகிறது, மோடி அரசு.

ஆளத் தகுதியற்றதாய் மாறிப்போன அரசுக் கட்டமைப்பு

அரசு, தான் உருவாக்கிய சட்டத்தின்படியே ஆட்சி செய்வதற்கு தகுதியற்றதாய் மாறிப் போய் விட்டது. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் இனி நம்மை பாதுகாக்காது என உணர்ந்து கொண்ட மக்கள் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக என பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி எதிரிகளை நேருக்கு நேர் களத்தில் நின்று போராடுகின்ற மக்களின் திசைவழியில் நாம் அனைவரும் போராட வேண்டும். ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி விட்டு மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும்.

இதன் பொருட்டு,

சாலை போக்குவரத்து மசோதா திருத்தம்!
சாலை விபத்தைத் தடுக்க வாகன ஓட்டுனர்களை பட்டினி போட்டு கொல்வது மோடியின் புதிய நீதி!

என்ற தலைப்பில் 12-10-2015 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கோத்தகிரி ஜான்சன் ஸ்குயரில் இருந்து பேரணியாகச் சென்று ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் – வாகனப்பிரிவு
கோத்தகிரி தொடர்புக்கு : 9047453204

நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!

0

துரை வழக்கறிஞர்கள் 14 பேர் தற்காலிக நீக்கம்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் விசாரணையின் நேரடி ஒளிபரப்பு; மதுரை மாவட்ட வழக்கறிஞர்களைச் சங்க கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் உத்தரவு; 2000 தமிழக வழக்கறிஞர்களை வெளியேற்றுவேன் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவின் மிரட்டல் – நீதித்துறை அபாயகரமான வேகத்தில் பாசிசமயமாகி வருவதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

வழக்கறிஞர்கள் சென்னை ஊர்வலம்
வழக்கறிஞர்கள் பி.தர்மராஜ், ஏ.கே.ராமசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து வழக்கறிஞர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

அடக்குமுறைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் உரிமையும் வழக்கறிஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. “தமிழகம் முழுவதும் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயோ வெளியேயோ, துண்டறிக்கை, சுவரொட்டி, பேனர், ஆர்ப்பாட்டம் – ஊர்வலம், கூட்டங்கள் எதுவும் கூடாது” என்று தடையாணை பிறப்பித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர்.

“மதுரை உயர்நீதிமன்றக் கிளையை கொஞ்ச காலத்துக்கு மூடிவிட்டால் என்ன” என்ற கருத்தையும் போகிறபோக்கில் வெளியிட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. போராடும் தொழிலாளிகளை பட்டினி போட்டுக் கொல்ல, ஆலையை கதவடைப்பு செய்கின்ற ஒரு முதலாளியைப் போல, நீதிமன்றத்தை தங்கள் பூர்வீகச் சொத்தாகவும், வழக்கறிஞர்களை அங்கே கூலிக்கு அமர்த்தப் பட்டிருக்கும் அடிமைகளாகவும் கருதுகிறார்கள் நீதிபதிகள்.

ஒரு விதத்தில் முதலாளிகள், நீதிபதிகளைக் காட்டிலும் ஜனநாயகவாதிகளாகத் தெரிகிறார்கள். வேலை நிறுத்தம் செய்யும் காலங்களில் கூட தொழிற்சங்க கட்டிடத்தை காலி செய்ய வேண்டும் என்றோ, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது என்றோ தொழிலாளிகளுக்கு அவர்கள் உத்தரவு பிறப்பித்து விடுவதில்லை. இந்த நீதி ‘அரசர்’ களிடமிருந்து மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

“இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர் சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினை அல்ல என்றும் ஒரு சில வழக்கறிஞர்கள்தான் பிரச்சினைக்கு உரியவர்கள்” என்றும் ஒருபுறம் சொல்லிக் கொண்டே, இன்னொரு புறம் அனைவரையும் அச்சுறுத்துகிறார்கள் நீதிபதிகள். உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரையில் தமிழகத்தின் வழக்கறிஞர்கள் அனைவரையும் தாங்கள் நீதிபதிகளின் அடிமைகள்தான் என்று ஒப்புக்கொண்டு மண்டியிடவைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகி விட்டது.

வழக்கறிஞர்கள் திருச்சி கூட்டம்
நீதித்துறை ஊழலையும், அதன் சர்வாதிகாரப் போக்கையும் கண்டித்து திருச்சி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட கூட்டம்.

வயதில் மூத்த வழக்கறிஞர்களிடம் நேற்று வரை மரியாதையாகப் பேசிக்கொண்டிருந்த இளம் மாஜிஸ்டிரேட்டுகளிடம் திடீரென்று ஒரு திமிர்த்தனம் துளிர்த்திருப்பதாகக் கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள். இந்தத் திமிரை இப்போதே ஒடுக்காவிட்டால், சட்டம் – நெறிமுறை அனைத்தையும் மூட்டை கட்டி விட்டு நடுவர்களெல்லாம் நாட்டாமைகளாகி விடுவார்கள். வழக்கறிஞர்களை சொம்பு தூக்க வைத்துவிடுவார்கள்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையே அப்படித்தான் நடந்திருக்கிறது. கட்டாய ஹெல்மெட் தீர்ப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராகத்தான் அவமதிப்பு வழக்கு. ஆனால், ஏ.கே.ராமசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளோ ஊழல் எதிர்ப்புப் பேரணி பற்றியவை. பண்ணையார்கள் விவசாயிகளை நடத்துவதைப் போல அந்த முதியவரை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்தே கேள்வி கேட்டிருக்கிறார்கள். திரைமறைவு விசாரணை என்று ஒருநாள் உத்தரவு போடுகிறார்கள். அடுத்த வாய்தாவில் விசாரணையைத் திரையில் ஒளிபரப்புகிறார்கள். நீதிபதி வைத்ததுதான் சட்டம். நெறிகளுக்கும் மரபுகளுக்கும் மரத்தடி பஞ்சாயத்தில் இருக்கும் மதிப்பு கூட உயர்நீதிமன்றத்தில் இல்லை என்பது கடந்த சில நாட்களில் தெளிவாகிவிட்டது.

‘சட்டத்தின் ஆட்சி’யை சமாதிக்கு அனுப்புவதில் நீதியரசர்கள் காட்டி வரும் இந்த அசாதாரணமான வேகத்துக்கு முக்கியக் காரணம் மதுரை வழக்கறிஞர்களின் ஊழல் எதிர்ப்புப் பேரணி. எத்தனை பெரிய ஊழல் செய்தாலும் தங்களைப் பதவியிலிருந்து இறக்க “இம்பீச்மென்ட்” தீர்மானத்தை தவிர வேறு வழிகிடையாது என்று இறுமாந்திருந்த நீதியரசர்களை இந்தப் பேரணி அச்சுறுத்தியிருக்கிறது.

தஞ்சை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

நீதித்துறையில் ஊழல் என்பது இதுவரை கேள்விப்படாத குற்றச்சாட்டு அல்ல. இதை பல உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் நீதிபதிகளின் சதவீதம் ஐம்பதா, அறுபதா என்று தீர்மானிப்பதில்தான் இவர்களிடையே வேறுபாடு. “கூடியிருக்கும் பெண்களில் பாதிப்பேர் நடத்தை கெட்டவர்கள்” என்று யாரேனும் பேசினால், “பொதுவாகச் சேறடிக்காதே, குறிப்பாகச் சொல்” என்று கூறி சொன்னவனை அந்த இடத்திலேயே செருப்பால் அடிப்பார்கள் பெண்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இதுநாள்வரை அப்படியெல்லாம் கோவப்பட்டதே இல்லை. மதுரைப் பேரணி குறிப்பான உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டதாலும், அடுத்தடுத்து வெளியிடப்போவதாக அறிவித்ததாலும்தான் இது நீதிபதிகள் சமூகத்தின் மானப் பிரச்சினையாகி விட்டது.

ஊழலை மட்டுமல்ல, ஒரு நீதிபதியின் கார்ப்பரேட் சார்பு அல்லது சாதி-மதச் சார்பு தீர்ப்புகளையும் கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற நிலை உருவாவது நீதிக்கு நல்லதாக இருக்கலாம். நீதிபதிகளுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் நல்லதல்லவே! அதனால்தான் எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஆளும் வர்க்கப் பூசாரிகளும் கொதிப்படைந்து விட்டனர்.

வழக்கறிஞர்கள் சேலம் ஆர்ப்பாட்டம்
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

கருவறையின் புனிதம் சந்தேகத்துக்குள்ளாவது குறித்து அதிகம் கவலைப்படுபவர் தேவநாத குருக்களாகத்தானே இருக்க முடியும்! சென்னை உயர்நீதிமன்றத்தின் புனிதப் பாரம்பரியம் குறித்து பொளந்து கட்டினார் தலைமை நீதிபதி தத்து. நீதிபதி கர்ணனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கில், (அது நீதிபதிகள் சிலருக்கிடையிலான ஊழல் உள்குத்து தொடர்பான வழக்கு) சம்மந்தமே இல்லாமல் தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிராகச் சாமியாடினார். சொல்லி வைத்தாற்போல தமிழக வழக்கறிஞர்கள் தரம் கெட்டுப் போனதைப் பற்றி ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.

தமிழக வழக்கறிஞர்கள் மீதான இந்த ‘அனைத்திந்திய வன்மத்துக்கு’ மதுரை ஊழல் எதிர்ப்புப் பேரணி மட்டுமே காரணம் அல்ல. தமிழக வழக்கறிஞர்கள் சமூக அரசியல் பிரச்சினைகளுக்காகப் போராடுவதில் இந்தியாவிலேயே முன்னணியில் இருப்பவர்கள். காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், மூவர் தூக்கு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு, சாதி மதவெறி எதிர்ப்பு போராட்டங்கள் மட்டுமின்றி, நீதித்துறை சார்ந்த பிரச்சினைகளான உரிமையியல் சட்டத்திருத்தம், குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களிலும் இந்தியாவிலேயே முன்னணிப் பாத்திரம் ஆற்றியவர்கள். ஊழல் நீதிபதி சுபாஷண் ரெட்டியை தமது போராட்டத்தின் மூலம் விரட்டியவர்களும், ஜெ வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி தத்துவின் மீது குடியரசுத் தலைவரிடம் வெளிப்படையாகக் கையெழுத்திட்டு (800 பேர்) புகார் கொடுத்தவர்களும் தமிழக வழக்கறிஞர்கள்தான்.

04-1தமிழக வழக்கறிஞர்களை எதிர்ப்பவர்கள் பல வகையினர். வழக்கறிஞர்கள் அரசியல் சமூக விவகாரங்களில் தலையிடுவதை இழிவானதாகக் கருதும் பிழைப்புவாதிகள், இந்தி பேச மறுக்கின்ற தமிழ்நாட்டை இன்னொரு காஷ்மீராக கருதும் வட இந்தியர்கள், சுயமரியாதை, திராவிட இயக்கம், பொதுவுடைமை போன்ற சொற்களைக் கேட்டாலே ஒவ்வாமைக்கு ஆட்படும் பார்ப்பனியர்கள், பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட சாதியினர் கோர்ட்டுக்குள் நுழைந்ததனால் வக்கீல் தொழிலுக்குரிய மாண்பே கெட்டுவிட்டதாகப் புழுங்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள், எந்த விவரமும் தெரியாமல் போராட்டமே தப்பு என்று பேசும் கலாம் ரசிகர்கள், இத்தனை நஞ்சுகளுக்கும் தேன் சேர்த்து மக்களின் நாக்கில் தடவும் ஊடகவியலாளர்கள் – என இந்தப் பொதுக்கருத்தைப் பல கைகளும் வனைந்து உருவாக்குகின்றன.

“யாகுப் மேமன் தூக்கிலிடப்படாமல் தடுக்க நள்ளிரவில் கூட நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராடினோம். இதுவே சென்னையாக இருந்தால், மூவர் தூக்கிற்கு செய்தது போல நீங்கள் நீதிமன்றத்தில் கலகம் செய்திருப்பீர்கள்” என்று சென்னை வழக்கறிஞரிடம் அவரது டில்லி நண்பர் ஒருவர் சமீபத்தில் கருத்து கூறினாராம். இந்தக் கருத்து நடுத்தர வர்க்க சிந்தனைக்கு ஒரு வகை மாதிரி.

உண்மையில், மதச்சார்பற்ற சக்திகள் நாடெங்கும் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் யாகுப் மேமனின் தூக்குத்தண்டனையை ஒருவேளை நிறுத்தியிருக்கலாம். அப்படி போராடியிருந்தால் இந்து மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக கொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் தண்டனையைக் கூட நம்மால் நிறுத்த முடிந்திருக்கலாம். சட்டத்தை மட்டும் நம்பி இருந்திருந்தால் மூவர் தூக்கை நீதிமன்றம் ரத்து செய்திருக்காது என்பதே உண்மை.

04-2சட்டம், நெறி, மரபு ஆகியவற்றை அதன் காவலர்களான நீதிபதிகளும், அரசும், போலீசும் அன்றாடம் மீறிக் கொண்டிருக்கும்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் டில்லி நண்பரைப் போன்றோரிடத்தில் நாம் எழுப்பும் கேள்வி. தலித் படுகொலைக் குற்றவாளிகள் விடுதலை முதல் குஜராத் குற்றவாளிகள் விடுதலை வரை, சல்மான் கான் ஜாமீன் முதல் ஜெயலலிதா ஜாமீன் வரை எண்ணற்ற சான்றுகள் சட்டத்தின் ஆட்சி தோற்றுவிட்டதைப் பறைசாற்றுகின்றன. இருப்பினும் தாங்களே மதிக்காத சட்டத்துக்கும் நெறிமுறைக்கும் கட்டுப்படுமாறு நம்மை மிரட்டுகிறார்களே, இதற்குப் பணிவது வீரமாகுமா என்று கூட நாம் கேட்கவில்லை, அறிவுடைமை ஆகுமா என்று யாரேனும் சொல்லட்டும்.

தத்துவுக்கு எதிராக ஆதாரபூர்வமாக முன்னாள் நீதிபதி கட்ஜு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். “என்னை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அசிங்கப்படுத்திய உச்ச நீதிமன்றம், சாந்தி பூஷண் கொடுத்த ஊழல் நீதிபதிகள் பட்டியல் அடங்கிய உறையை ஏன் பிரிக்க மறுக்கிறது?” என்று என்.டி.டி.வி-யில் கேள்வி எழுப்புகிறார் அலைக்கற்றை தீர்ப்பு புகழ் கங்குலி. நீதிபதிகளுக்கு எதிராக வீதிக்குப் போனது தவறு என்று கூறுவோர் இதற்கு பதில் சொல்லட்டும்.

ஊழலை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதும், இந்தியாவிலேயே முன்மாதிரியானது என்று அழைக்கப்படுவதுமான கர்நாடகா லோக் ஆயுக்தா பதவியில் நியமிக்கப்பட்டார் ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.பாஸ்கர் ராவ். அவருடைய மகன் அஸ்வின், “அப்பாவிடம் சொல்லி ஊழல் வழக்கு போடுவேன்” என்று மிரட்டியே 200 கோடி வசூலித்திருக்கிறான். ஒரே ஒரு தைரியசாலி இதை அம்பலமாக்கியதன் விளைவாக இப்போது சிறையில் இருக்கிறான்.

சாந்தி பூஷண், மார்க்கண்டேய கட்ஜூ
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஊழலை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண் (இடது) மற்றும் உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

“விசாரணை முடிந்து என் மகன் குற்றவாளி என்று தீர்ப்பு வரட்டும். ராஜினாமாவைப் பற்றி அப்புறம் யோசிப்போம்” என்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார், நீதிபதி பாஸ்கர் ராவ். குற்றவாளி என்று யாரேனும் ஒரு குன்ஹா தீர்ப்பளித்தாலும், இன்னொரு குமாரசாமி சிக்காமலா போய்விடுவார் என்பது நீதிபதியின் நம்பிக்கை.

ஊழலுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று மதுரை வழக்கறிஞர்களை மடக்கும் சட்ட வல்லுநர்கள், நீதிபதி பாஸ்கர் ராவை சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்க வழி சொல்ல வேண்டும்.

சட்டம் நெறிமுறைகள் அனைத்தும் மதிப்பிழந்து போய்க்கொண்டிருக்க, நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசமைப்பின் அங்கமான நீதிபதிகள், அதாவது பாஸ்கர் ராவின் சகோதர நீதிபதிகள், தாங்கள் வழக்கறிஞர்களால் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் நீதிமன்றத்தின் மாண்பு கெட்டு விட்டதாகவும் கதறுகிறார்கள். ஒரு நாலாந்தர தெலுங்குப் படத்தின் நகைச்சுவைக் காட்சியைக் காட்டிலும் இது அருவெறுப்பானதாகத் தெரியவில்லையா?

“தமிழை வழக்காடு மொழியாக்கு” என்ற அட்டையைப் பிடித்துக் கொண்டு பத்து பேர் நீதிமன்ற அறையில் அமர்ந்தவுடனே, “எங்களால் நீதி வழங்கும்போது பாதுகாப்பாக உணர முடியவில்லை” என்கிறார் தலைமை நீதிபதி. நீதியரசர்களின் தீர்ப்புகளால் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டின் மக்களல்லவா?

04-3மலை தொலைந்தது, விளைநிலம் பள்ளத்தாக்கானது, கண்மாய் காணாமல் போனது, கடலின் நிறம் மாறியது, நரபலி நடந்தது, புற்றுநோய் பரவியது, பல்லாயிரம் நோக்கியா தொழிலாளிகள் வீதியில் வீசப்பட்டனர் – இந்தப் பாதகங்கள் எதிலும் தமது தசம பாகத்தை எந்த நீதியரசரும் பெற்றுக் கொள்ளவில்லையா? நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒழுக்கம் பற்றி உரையாற்றி அது ஊடகங்களில் வெளிவருவதையும் உத்திரவாதம் செய்து கொள்ளும் சகோதர நீதிபதிகள் பதில் சொல்லட்டும். மேற்படி தசமபாக நீதியரசர்களின் பாதுகாப்புக்கு குறைவேதும் ஏற்படவில்லையே!

தாங்கள் ஏன் பாதுகாப்பாக உணரவில்லை என்பதை தனது உத்தரவில் விளக்கியிருக்கிறார் தலைமை நீதிபதி கவுல். “வழக்கறிஞர்கள் மதுபாட்டிலோடு வருகிறார்கள், பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், நீதிமன்ற வளாகத்தில் கிரிக்கெட் ஆடுகிறார்கள், போலீசு மீது பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள், நீதிமன்றங்களில் ஊர்வலம், போராட்டம் நடத்துகிறார்கள், யோகா வகுப்பு நடத்த விடாமல் தடுக்கிறார்கள், மாட்டுக்கறி, மட்டன், கோழிக்கறி சாப்பிடுகிறார்கள்” – என்று ஒரு போலீசு உதவி ஆணையர் சொன்னாராம்.

“அப்படியானால் ஏன் ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போடவில்லை” என்று தலைமை நீதிபதிக்கு கேட்கத் தோன்றவில்லை. ஏனென்றால், “நான் சொல்லவில்லை அவரே சொன்னார்” என்று கூறுவதற்கு தலைமை நீதிபதிக்கு ஒரு ஆதாரம் மட்டுமே தேவைப்பட்டது. அதை போலீசு அதிகாரி வழங்கிவிட்டார். கறி, சாராயம் மற்றும் காலித்தனங்களின் வரிசையில் தமிழும், ஹெல்மெட் எதிர்ப்பும், ஊழல் எதிர்ப்பும் கொண்டு வரப்பட்டு விட்டன.

கவுல் கோரிய மத்தியப் படை மட்டும்தான் வரவில்லை. அதற்குப் பதிலாக, மாநில பார் கவுன்சிலின் அதிகாரத்தை அனைத்திந்திய கவுன்சில் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொண்டு விட்டது. அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு டில்லிக்கு வழங்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கும் நீட்டிக்கப்பட்டு விட்டது.

மதுரை வழக்கறிஞர்கள் 14 பேரை நேரடியாக டில்லியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து விட்டு, எதிர்ப்போரையெல்லாம் வெளியேற்றுவேன் என்று கொக்கரிக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.

இது வெறும் நீதித்துறை சர்வாதிகாரம் அல்ல. பார்ப்பன பாசிச சர்வாதிகாரம். மோடி அரசின் கீழ் அதிகார வர்க்கம், ராணுவம், கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்துத்துவ சக்திகளால் நிரப்பப்படுவதைப் போல நீதித்துறையிலும் நடக்கிறது. அதன் அறிகுறிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகின்றன.

தாத்ரியில் மாட்டுக்கறி தின்றதாக குற்றம் சாட்டி ஒரு முஸ்லிமை அடித்தே கொல்லலாம் என்றால், இங்கே மத்தியப் படை கொண்டு வருவதை அவசியமாக்கும் குற்றமாக மாட்டுக்கறி காட்டப்படுகிறது. தபோல்கர், பன்சாரே, கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகளைக் கொன்றொழிக்கும் பணியில் சனாதன் சன்ஸ்தா என்ற பார்ப்பன பயங்கரவாதக் குழு ஈடுபட்டதைப் போல, இங்கேயும் அத்தகைய வழக்கறிஞர்களைத் தேடிக் களையெடுக்கும் நீதிபதிகளின் சனாதன் சன்ஸ்தா ஓசைப்படாமல் இயங்குகிறது.

சுயமரியாதைத் திருமணத்தை சட்டத்தை கொல்லைப்புறம் வழியே முடக்க முயலும் தீர்ப்பு, தி.க.-வின் தாலி அகற்றும் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடை, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பழிவாங்குவதற்காக போடப்பட்ட பொய்வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது, ஒன்றேகால் கோடி பணத்தை ஏமாற்றி ஏப்பம் விட்ட ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் என்ற ஸ்ரீரங்கம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு டெபாசிட்டே இல்லாமல் முன்ஜாமீன் வழங்குவது, மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் மறுப்பதை நியாயப்படுத்த சிறையில் வாடும் ஏழைக் கைதிகளின் நிலையை ஒப்பிடுவது, அதே நேரத்தில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பு.மா.இ.மு மாணவனை ஜாமீனில் விடுவதற்கு 50,000 ரூபாய் அபராதம் கட்டச் சொல்வது, யோகா வகுப்பு என்ற பெயரில் ஜக்கி வாசுதேவை உள்ளே கொண்டு வருவது, புரோக்கர் பிரபாகரனின் வழக்கறிஞர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, சாதி ரீதியான சங்கங்களை வழக்கறிஞர்கள் மத்தியில் உருவாக்கி, கையாளாகப் பயன்படுத்திக் கொண்டே, வழக்கறிஞர்கள் சாதி ரீதியாக இயங்குவதாகவும் குற்றம் சாட்டுவது, விசுவ இந்து பரிசத் – பாஜக தலைவர்களுடன் இழைந்து கொண்டே அறத்தின் வீழ்ச்சி குறித்து கவலை தெரிவிப்பது – என இந்த நீதிபதிகளின் சனாதன் சன்ஸ்தா எல்லாக் கோணங்களிலும் வேலை செய்து வருகிறது.

மிஸ்ராக்கள், கவுல்கள், பாண்டேக்கள், சாதிப்பட்டத்தை போட்டுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் மதறாஸ் மாகாணத்தின் ஐயர்கள் ஆகிய அனைவரும் இதில் கூட்டு சேர்ந்திருக்கின்றனர்.

தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) அமைக்கப்பட்டவுடன், காலியாக இருக்கும் சுமார் 300 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் காக்கி அரை நிஜார்களை அமர வைப்பதே இவர்களின் திட்டம். அதனை எதிர்த்து நிற்கக் கூடிய வழக்கறிஞர்களைக் களையெடுக்கும் வேலைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் இது நடத்தப்படுகிறது.

அரசியல், போலீசு, அதிகாரவர்க்கம், ஊடகத்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை போன்ற சமூகத்தின் எல்லாத்துறைகளிலும் கிரிமினல்கள் செல்வாக்கு செலுத்துவதை மறைத்து விட்டு, வழக்கறிஞர் சமூகத்தை மட்டும் கிரிமினல்களாகச் சித்தரிக்கும் சதியில் பார்ப்பனப் பாசிசக் கும்பல் ஈடுபட்டிருக்கிறது. தினமணி தலையங்கமே இதற்குச் சான்று.

வழக்கறிஞர் தொழிலில் கிரிமினல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் ஊழல் நீதிபதிகளின் கூட்டாளிகள், தரகர்கள். இன்னும் ரியல் எஸ்டேட் சொத்து அபகரிப்பு, ரவுடித்தனங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மீதெல்லாம் பார் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இத்தகையோர் பார் கவுன்சில் பதவிகளை அலங்கரிக்கிறார்கள்.

பி.ஆர்.பழனிச்சாமி, வைகுந்தராசன் முதல் அனைத்து மக்கள் விரோதிகளும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதை சட்டப்படி சாத்தியமாக்கி கொடுத்தவர்கள் சாதி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் திரட்டப்பட்ட வழக்கறிஞர் குமபலும் ஊழல் நீதிபதிகளும்தான். இவர்களை எதிர்த்து தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நேர்மையான வழக்கறிஞர்கள்தான் இன்று பழி வாங்கப்பட்டிருக்கின்றனர்.

“நான் மட்டுமே பதிவிரதை” என்று மார்பில் போர்டு மாட்டிக்கொண்டிருக்கும் நீதிபதிகளின் தலைமையில், கிரானைட், தாதுமணல் வழக்குகளில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிகள் ஓரணியாகத் திரண்டிருக்கிறார்கள். தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே ஜனநாயக உரிமைகளை மறுக்க வேண்டும் என்பது பார்ப்பன பாசிசத்தின் தேவை. ஊழல் நீதிபதிகளின் தேவையும் அத்தகையதுதான்.

“ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் குற்றம் சாட்டுபவர்களையும் சாட்சிகளையும் குற்றவாளிகளாக்கி சிறையில் வைக்க வேண்டும். பிறகு அவர்களைக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் ஊழல் ஒழிப்புக்கு பார்ப்பன பாசிசம் வகுத்திருக்கும் தருமம். வியாபம் ஊழல்தான் இந்த தருமத்தை விளக்கும் இதிகாசம்.

பார்ப்பன பாசிசமும் ஊழலும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அணி நீதித்துறையின் தேசிய ஜனநாயக முன்னணி. அதாவது இவர்கள் வழக்கறிஞர்களின் எதிரிகள் மட்டுமல்லர், தமிழ்ச்சமூகத்தின் எதிரிகள் என்பதே நாம் கண்டடைந்திருக்கும் உண்மை. ஆகவே இனிமேலும் இதனை வழக்கறிஞர் போராட்டம் என்று சுருக்கி அடையாளப் படுத்துவது பொருத்தமற்றது.

– மருதையன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

14
நயன்தாரா சகல்
இந்தோ ஆங்கில எழுத்தாளர் நயன்தாரா சகல்

ந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கு நீதி மறுப்பு,  தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத விடம், எழுத்தாளர்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளின் போது சாகித்திய அகாடமி கடைபிடிக்கும் புதிர் மவுனம் ஆகியவற்றை கேள்வி கேட்டிருக்கிறார், சகல். ‘சீரழிக்கப்படும் இந்தியா’ என்று தலைப்பிட்டு எழுதிய திறந்த மடலில் தனது நடவடிக்கை,  “இந்துத்துவத்துடன் முரண்பட்டதால் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்ற மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.

அசோக் வாஜ்பாயி
இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி

‘Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக செகல் 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை பெற்றார். அவருடைய வயது இப்போது 88. நயன்தாரா சகலை தொடர்ந்து இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். நயன்தாரா சகலின் கருத்துக்களை அப்படியே வழிமொழிந்துள்ளார். லலித் கலா அகாடமியின் தலைமை பொறுப்பை அசோக் வாஜ்பாயி முன்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை’ என்று கேட்கிறார். சாகித்திய அகாடமியின் மவுனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார், அசோக் வாஜ்பாயி.

உதய் பிரகாஷ்
இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ்

கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார். ”ஒரு விருதை தந்து விட்டு எழுத்தாளர்களை மறந்து விடுகிறது, சாகித்தியஅகாடமி. ஒரு கொலை நடக்கும் போது ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்க முன்வராத சாகித்திய அகாடமியின் விருது எதற்கு” என்று கேட்டார், உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.

கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே
இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்கள் – கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே

கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. படைப்பு அவஸ்தையை மீறிய ஒரு வலியை அவர்கள் பகிர்கிறார்கள். நயன்தாரா சகலின் எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுபவை. எனினும் அவரால் தாத்ரியின் அடித்தட்டு முஸ்லிம் ஒருவர் சந்தித்த பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற முடிகிறது. ஆனால், இதற்கு மாறான நிலை தமிழக எழுத்து சூழலில் நிலவுகிறது.

அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ டி க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் என்று ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது வாங்கியோரின் பெரும் பட்டியல் இருக்கிறது. சாகித்திய அகாடமி விருது வாங்காத எழுத்தாளர்கள் சிலர், கண்டனங்களையாவது பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை அதே சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ? தாத்ரியின் ஓலம் தமிழகத்தில் உள்வாங்க நாதியற்று அலைகிறது. அது ஒவ்வொரு கணமும் இவர்கள் கல்நெஞ்சில் மோதி செல்ல வேண்டும்.

தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் அரசியல் கண்ணோட்டத்தை வகை பிரிப்பது எளிது. அவர்கள் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவர்கள் — முதல் வகையினர் இந்துத்துவவாதிகள். இரண்டாம் வகையினர் பிழைப்புவாதிகள். வைரமுத்து, ஜோ டி க்ரூஸ் ஆகியோர்களின் தேய்மானம் பிழைப்புவாதம் இந்துத்துவத்துடன் கலக்கும் புள்ளியை சுட்டுகிறது.

எழுத்தாளர்களின் அரசியல் ஆதரவை எதிர்பார்த்து தனது முதிய வயதில் காத்திருக்கிறார் நயன்தாரா செகல். தமிழ் எழுத்தாளர்களோ தங்கள் விருதுகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதவெறியர்களோ அடுத்த குறியை தீர்மானித்து கொண்டிருக்கிறார்கள்.

– சம்புகன்

எழுத்தாளர் நயன்தாரா சகலின் நேர்முகம்

விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !

0

கள்ளக்குறிச்சி SVS இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை முயற்சி!

விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் வட்டம், பங்காரம் அருகில் சேலம் மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது SVS எலக்ட்ரோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. இவை தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி கவுன்சில் அனுமதியுடனும், SVS யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக்கல்லூரி 2008–ல் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தின் அனுமதியுடனும் துவங்கப்பட்டன. பின்னர் 2014-ம் ஆண்டு SVS ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று தொடங்கப்பட்டது. இந்த மூன்று கல்லூரிகளும் ஒரே இடத்தில், ஒரே கட்டிடத்தில் தான் அமைந்துள்ளன.

உப்புமா மருத்துவக் கல்லூரி - எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
உப்புமா மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை

இந்தக் கல்லூரிகளின் நிறுவனர் டாக்டர் சுப்ரமணியன் என்பவர் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் அரசு நியமன உறுப்பினாராம். இவர் மனைவி தாளாளர் ‘டாக்டர்’ வாசுகி சுப்ரமணியன் எந்த மருத்துவக்கல்லூரியிலும் படிக்காமலே மருத்துவராம். இவர்தான், இவரேதான், இவர் மட்டுமேதான் கல்லூரியில் வகுப்புகள் எடுப்பவராம்…

இந்த மூன்று கல்லூரிகளுக்கும் கட்டுமானம் சம்பந்தப்பட்ட எந்தத் துறையிலும் அனுமதி வழங்கப்படவில்லை. தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்தத் துறையும் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கவில்லை. மேற்கண்ட ஏதேனும் ஒரு துறையின் அனுமதி இல்லை என்றாலே கல்லூரியின் அங்கீகாரத்தை சட்டப் படி ரத்து செய்யவேண்டும். ஆனால் மூன்று துறையின் அனுமதியும் இல்லை. மொத்தத்தில் இந்த மூன்று கல்லூரியும் இயங்குவதற்கு சாத்தியப்படும் அனைத்து வகையிலும் நிர்வாகம் முறைகேடு செய்துள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகிறார்கள்.

உப்புமா மருத்துவக் கல்லூரி - எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பல்கலைக் கழகத்தின் நேர்முகத் தேர்வு அல்லது நிர்வாகத்தின் தரப்பில் சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சரியான கற்பித்தல், கட்டமைப்புகள் இல்லாமலும், நிர்வாகத்தின் கல்விக்கட்டண தொந்தரவுகளாலும், பல மாணவர்கள் இடையில் நின்றுள்ளனர்

இக்கல்லூரி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை முழுமையான மருத்துவர் ஒருவரைக் கூட இக்கல்லூரி உருவாக்கியதில்லை. பல்கலைக் கழகத்தின் நேர்முகத் தேர்வு அல்லது நிர்வாகத்தின் தரப்பில் சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சரியான கற்பித்தல், கட்டமைப்புகள் இல்லாமலும், நிர்வாகத்தின் கல்விக்கட்டண தொந்தரவுகளாலும், பல மாணவர்கள் இடையில் நின்றுள்ளனர். தற்போது இக்கல்லூரியில் 25 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏழை எளிய சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2008-ல் இருந்து படித்து வந்தனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை கல்விக்கட்டணமாக கல்லூரி நிர்வாகம் கொள்ளையடித்து உள்ளது. ஆனால், இன்று வரை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்டம் வாங்கிய பேராசிரியர்களை வைத்து பாடம் நடத்தியதே கிடையாது. 2008-ல் இருந்து கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்ரமணியம் ஒருவர் மட்டும் தான் பயிற்றுவித்தார். பின்னர் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் நிலையில் தான் மாணவர்கள் பயின்று வந்துள்ளனர்.

மேலும், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தின் விதிகளும் நடைமுறைகளும் இந்தக் கல்லூரியில் அமுல்படுத்துவது கிடையாது. நவீன ஆய்வகமோ, பல்கலைகழகம் சொல்லுகின்ற 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையோ, மாணவர்களின் செய்முறை ஆய்வுகளுக்கான பிணவறையோ இங்கு கிடையாது. மருத்துவமனையும், ஆய்வகமும் இல்லாமல் மாணவர்கள் செய்முறை பயிற்சிகள் செய்வதற்கும் வழி இல்லை.

உப்புமா மருத்துவக் கல்லூரி - எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பல்கலைகழகம் குறிப்பிட்டுள்ள மூலிகை பூங்கா, நடந்து செல்ல புல் தரைகள், உணவு விடுதி, அரங்கம் , நீச்சல் குளம், நூலகம், விளையாடுவதற்கான இடம் எதுவும் இல்லாமல் இந்தக் கல்லூரி இயங்கி வருகின்றது.

மேற்படி இந்தக் கல்லூரியில் பல்கலைக் கழகத்தின் தரப்பில் ஆய்வு என்றால் மட்டுமே, இரண்டு நாட்கள் படுக்கைகளுடன் நோயாளிகளை பிடித்து வந்து சிகிச்சை அளிப்பது, பேராசிரியர்களை அழைத்து வந்து சொல்லிக்கொடுப்பது போல் நடிப்பார்கள். மேலும் பல்கலைகழகம் குறிப்பிட்டுள்ள மூலிகை பூங்கா, நடந்து செல்ல புல் தரைகள், உணவு விடுதி, அரங்கம் , நீச்சல் குளம், நூலகம், விளையாடுவதற்கான இடம் எதுவும் இல்லாமல் இந்தக் கல்லூரி இயங்கி வருகின்றது.

மாணவிகளுக்கான விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை, உணவும் தரமானதாக இல்லை. மாணவிகளுக்கே இந்த நிலைமை என்றால், மாணவர்களுக்கு விடுதியே இல்லை.

2011-ம் ஆண்டு நீதிபதி என்.வீ.பாலசுப்ரமணியன் அவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக்கல்லூரிக்கு 25,000 ரூபாய் என கல்வி கட்டணம் நிர்ணயிக்க, இக்கல்லூரி நிர்வாகமோ ஏழை மாணவர்களிடமிருந்து ரூ. 1,20,000 என்ற அளவில் கல்விக்கட்டணம் வசூலித்து வருகிறது.. முதலாம் ஆண்டு 2–ம் பருவத்திற்கு கல்விக்கட்டணம் இல்லை என்ற விதி இருந்தும் மாணவர்களிடம் ரூ 80,000 வசூலித்துள்ளது. மேலும் புத்தக கட்டணம், தேர்வு கட்டணம், நூலகக்கட்டணம், உணவுக் கட்டணம் எனப் பலபெயர்களில் கட்டணக் கொள்ளையை மாணவர்களிடம் இக்கல்லூரி நிர்வாகம் அடித்துள்ளது.

இந்தக் கொள்ளையை எதிர்த்து கேட்கும் மாணவர்கள் மேற்படி நிர்வாகத்தால் மிரட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் பல மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை அழைத்து வந்து சண்டை போட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையும் உள்ளது. மேலும், தமிழக அரசால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிற கல்வி உதவித்தொகையை இக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கொடுத்ததே இல்லை.

கல்லூரி நடத்துவதற்கே லாயக்கற்ற இவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்தால் போதும் என்ற எண்ணத்தில் மாற்றுச் சான்றிதழ்களை பெற மாணவர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களிடமும் முழுத் தொகையும் கட்டினால் தான் சான்றிதழ் கொடுப்பேன் என்று நிர்வாகம் சட்டவிரோதமாக கெடுபிடி செய்கிறது.

கல்லூரியின் இந்த முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து கீழ்காணும் துறைகளுக்கு மாணவர்களே முன் நின்று புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

  1. தமிழக மனித உரிமை ஆணையம் – வழக்கு எண்- 8805/2013
  2. தேசிய ஆதிதிராவிட ஆணையம் – சென்னை – எண் – 4/32/2013
  3. மக்கள் சுகாதார துறை – க.எண் . 40884/இம 1-2/2013-1
  4. தமிழக ஆதிதிராவிட நல இயக்குனரகம் – அய்4/34339/2013
  5. தமிழக சட்டப்பணிகள் துறை – 3003/G/2014
  6. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- CC/13/15407
  7. இந்திய மருத்துவம் & ஹோமியோபதி துறை – 12666/திவ2/2013
  8. சுங்க வரி துறை – சி.எண்.11/39/123/2013
  9. தமிழக கவர்னர் – எண்.4910/U2/2013
  10. தமிழ்நாடு டாக்டர் மருத்துவ பல்கலை கழகம் – பல புகார் மனுக்கள்.
  11. தமிழக ஊழல் தடுப்பு பிரிவு – எண்.1341/2014/MED/VPM
  12. விழுப்புரம் ஆதிதிராவிட அலுவலகம் – எம4/2281/2014 பதில் ஏதும் இல்லை.
  13. முதலமைச்சரின் தனி பிரிவு- இது வரை பதில் ஏதும் இல்லை.
  14. உயர்நீதிமன்ற பதிவாளர் – பதில் ஏதும் வரவில்லை.
  15. தமிழக ரகசிய புலனாய்வு துறை – பதில் ஏதும் வரவில்லை.

உள்ளடங்கிய துறைகளுக்கு புகார் மனுவினை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும்,  “கல்லூரியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன” என பொய்யான அறிக்கையை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பியுள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம்.

இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் 07-09-2015 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் 14-09-2015 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் 8 மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்பொழுது நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார் மாவட்ட ஆட்சியர் லட்சுமி. அதனைத் தொடர்ந்து ஒப்புக்கென்று கல்லூரியை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கையை மாணவர்கள் கேட்டதற்கு தர முடியாது என்று கூறி மறுத்து விட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் மனமுடைந்த மாணவர்கள் 05-10-2015 திங்கள் அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கண்ணதாசன், ரவீந்திரன், ஐயப்பன், மாணவிகள் பானுப்பிரியா, கோமலா, பிரியா ஆகியோர் விஷ மருந்தை குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் அவர்களை சந்தித்து பேசுகையில், தற்கொலைக்கு முயன்ற கண்ணதாசன், ரவீந்தரன் மற்றும் ஐயப்பன் கூறியதாவது…

“2011-ல் கல்லூரியில் சேர்ந்தேன். அரசுக்கட்டணம் 25,000 சேர்த்து மொத்தம் 55,000 கட்ட வேண்டும்” என்றார்கள். “ஏன்” என்று கேட்டதற்கு, “ஹாஸ்டல் பீஸ்” என்றார்கள். “இங்கு ஹாஸ்டலே இல்லை” என்றதற்கு, “ஸ்டடீஸ் மட்டும் தான். இங்கு ஹாஸ்டல் கள்ளக்குறிச்சியில் உள்ளது” என்றார்கள். “சேர முடியாது” என்ற என்னை எனது பெற்றோரிடம் பேசி சேர்த்தார்கள்.

பொதுவாக பணக்காரர்களுக்கு அட்மிசன் போடுவது இல்லை. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தான் அங்கு சீட் கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தான். முதலில் ரூ 55,000 என்றார்கள். பிறகு ரூ 1,40,000 கட்டச் சொல்லி மிரட்டினார்கள்.

யோகா என்ற பெயரில் காலை 5 மணிக்கே தொடங்கி விடுவார்கள், இதில் கர்மயோகா என்ற பெயரில் எல்லா வேலைகளையும் செய்ய சொல்லி துன்புறுத்துவார்கள். மரம் வெட்டுவது, சமையல் செய்வது, காரை துடைப்பது என அனைத்து வேலைகளையும் செய்வோம்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வின் போது +2 மாணவர்களை சந்தித்து கல்லூரியின் விளம்பர நோட்டிஸ் கொடுப்பதற்கு எங்களைத் தான் திருச்சி, பாண்டி என பல இடங்களுக்கு அனுப்புவார்கள்.

முதலாமாண்டு, இரண்டாவது செமஸ்டருக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் கட்டணம் வசூலித்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு 3 மாதம் என்னை சஸ்பென்ட செய்தார்கள். இதற்கு அபராதம் ரூ 50,000 கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

கல்லூரியில் நூலகமே கிடையாது. அங்கு ஒரு புத்தகம் காணாமல் போய்விட்டது என்று கூறி ரூ 25,000 கட்டச் சொல்லி எங்களை மிரட்டினார்கள். அதையும் கட்டினோம். இதனை ஒரு புகாராக RDO-விடம் கொடுத்தோம். கள்ளக்குறிச்சி அழகுவேல் MLA-விடம் முறையிட்டோம். மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 15 முறை கொடுத்தோம்.

விஷம் குடித்த மாணவி ஒருவரின் அம்மா
விஷம் குடித்த மாணவி ஒருவரின் அம்மா

மேலும் ஸ்காலர்ஷிப் பணம் வந்தது. அதனையும் “டிரஸ்ட்” பெயரில் எழுதிக்கொண்டு எங்களிடமே கொடுத்து இந்தியன் வங்கியில் மாற்றி வரச் சொன்னார்கள்.

அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் அவர்களுக்கு பட்டுத் துணி எடுத்து வர எங்களையே சிறுவந்தாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

ஒரு மாணவன் கல்லூரி கேட் அருகில் விழுந்து இறந்து விட்டார். அப்பொழுது கூட எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கண்டுகொள்ளாமல் விட்டார்கள்.

இவ்வளவு மோசடியாக கல்லூரியை நடத்துகிறார்கள். இவர்களை நம்பி எங்கள் வாழ்க்கையே தொலைத்து விட்டோம். ஊருக்குள்ளும் அவமானப்படுத்துகிறார்கள். எங்களுக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை” என்றார்.

இது குறித்து மாணவிகள் தரப்பில் கோமலா பேசிய போது…

“2010-ம் ஆண்டு அந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே அனைத்து பணத்தையும் கட்டச் சொன்னார்கள். எங்களை அவர்கள் கல்லூரியில் சேர்த்துக் கொண்டதே அந்த கல்லூரியை மேம்படுத்ததான். எங்களிடம் பணம் வசூலித்து கட்டிடம் கட்டிக் கொண்டார்கள். எங்களை அவர்கள் அடிமைகள் போலத்தான் நடத்தினார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் கூட இப்படி நடத்தியிருக்க மாட்டார்கள்.

முதலில் கல்லூரியில் ஆசிரியர்களே இல்லை. பாடமும் எடுப்பது இல்லை. ஹவுஸ் கீப்பர் கூட கிடையாது. சமைப்பது தொடங்கி வகுப்பு எடுப்பது, புல் தரையை சுத்தப்படுத்துவது வரை சீனியர் என்ற முறையில் நான் தான் அனைத்தையும் செய்வேன். இன்றைக்கு அவ்வளவு பெரிய கட்டிடம் உள்ளது என்றால் அதற்கு முழு காரணம் எங்கள் உழைப்பு தான்.

குடிக்க தண்ணி கூட இல்லை. கல்லூரிக்கு அருகில் 100 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில் இறங்கி தான் தண்ணீர் பிடிப்போம். நாங்களும் போகாத அதிகாரிகள் இல்லை. செய்யாத போராட்டம் இல்லை. எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. எங்களுக்கு சாவதை தவிர வேறு வழி தெரியவில்லை..” என்றார் கண்களில் நீர் வழிந்தபடியே..

இது குறித்து மருத்துவமையில் இருந்த மாணவி பானுப்பிரியாவின் அம்மாவிடம் கேட்ட பொழுது…

“என் பொண்ண காலேஜில சேர்க்கும் போது ரூ. 60,000 கேட்டாங்க. மறு வருஷம் ஒரு லட்ச ரூபா கட்டச் சொன்னாங்க. ஹாஸ்டல் பீசு 2000-னு சொன்னாங்க. ஆனா வாங்கும் போது மூவாயிரமா வாங்கிகிட்டாங்க. ஒரு சாப்பாடு வாங்கினு வந்து அஞ்சி பேரு சாப்டறத என் கண்ணால பார்த்தேன் சார். ஒரு நாள் கையெழுத்து வாங்கணும்னு வரச் சொல்லி நாள் முழுக்க நிக்க வச்சிட்டாங்க. அன்னிக்கு கொத்தனார் வேலை செய்யும் போது இந்த பசங்க தான் கலவை எடுத்துனு போய் தந்தாங்க. இத பார்த்ததும் என் வயிறு எரியுது. இன்னா பண்றது சார். இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டோம். எங்களால ஒன்னும் பண்ண முடியல… ஆனா அந்த காலேஜ மூடனும். எங்க புள்ளங்களுக்கு சர்டிபிகேட்ட திருப்பித் தரனும்” என்றார் கோபமாக…

விஷம் குடித்த மாணவி ஒருவரின் அம்மா
விஷம் குடித்த மற்றொரு மாணவியின் அம்மா

அடுத்ததாக கோமலாவின் அம்மாவிடம் கேட்ட பொழுது,

“என் பொண்ணு SVS காலேஜ் ல தான் படிக்கிறாங்க. அங்க சேர்ந்த பிறகு தான் காலேஜ் மோசமான காலேஜ்’னு சொன்னாங்க. திரும்ப காலேஜிக்கு போயிட்டு நர்சிங் சேர்க்க போறேன்’னு சர்டிபிகேட் கொடுங்கன்னு கேட்டதுக்கு உங்க பொண்ணு டாக்டர் படிக்கிறாங்க. நர்சிங் விட பெரிய படிப்பு’னு சொல்லி சமாதானப்படுத்தினாங்க. ஆரம்பத்துல 25,000 கட்ட சொன்னாங்க. அப்புறம் ஹாஸ்டல் பீசு அது இதுன்னு 75,000 வாங்கிக்கிட்டாங்க. இது வரைக்கும் எதுக்குமே பில்லே கொடுக்கல. கால்ல விழாத குறையா கேட்டோம். எங்கள கழுத்த புடிச்சி வெளில தள்ளிட்டாங்க” என்றார் அழுது கொண்டே..

“ஒரு முறை ஹாஸ்டலை விட்டு இவர்களே வெளியே போக சொல்லிட்டு, பிரேக் பீசு 50,000 கட்டச்சொல்றாங்க. இப்படி விதவிதமா கொள்ள அடிக்கிறானுங்க. TC கேட்டாலும் தர மாட்றாங்க. 5 வருஷம் முடிஞ்சிடுச்சி. ஒரு வேலைக்கு போகணும்னா கூட சர்டிபிகேட் கேக்குறாங்க. எங்க போறது. படிச்ச படிப்பும் இல்லாம இப்ப நடுத்தெருவுல நிக்குறோம். இதனால் தெனம் தெனம் வீட்ல சண்ட தான் வருது.. இப்ப கூட கலக்டர் ஆபிஸ் போறேன்’னு சொல்லிட்டு தான் வந்து இப்படி பண்ணிக்கிட்டா.. நாங்க பட்ட கஷ்டம் இனிமே எந்த புள்ளைங்களுக்கும் வர கூடாது. அந்த காலேஜ இழுத்து மூடனும். கட்டின பணம், சர்டிபிகேட் திருப்பி தரனும்” என்று கதறுகிறார் அந்த ஏழைத்தாய்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பு கூறிய புகார்கள், மேலும் நடந்துள்ள சட்ட மீறல்கள், இந்த சட்டவிரோத போலி மருத்துவக்கல்லூரி மீது அரசமைப்பின் எந்த உறுப்பும் நடவடிக்கை எடுக்காதது போன்ற விசயங்களை உற்று நோக்கினால் அப்பட்டமாக இந்த கட்டமைப்பு சீரழிந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது. இதை அனுபவத்தில் மாணவர்களும் உணர்ந்துள்ளனர். இதை எதிர்த்து நின்று அம்பலப்படுத்தி தான் முறியடிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

svs-issue-rsyf-posterஇந்த டுபாக்கூர் உப்புமா கல்லூரியை மூடக்கோரியும், இத்துணை கிரிமினல்தனங்களில் ஈடுபட்ட திருட்டு நிறுவன கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த நிறுவன பிராடுகளுக்கு பச்சைக் கம்பளம் விரித்து, கிரிமினல் வேலைகளுக்கு துணை நின்று மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடிய மருத்துவ கவுன்சில் அதிரிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டுள்ளது.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு: 99650 97801

வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை …. தீர்வு காண தஞ்சை வாரீர் !

7

வழக்கறிஞர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்…. தீர்வு காண தஞ்சை வாரீர்!

திப்பிற்குரிய வழக்கறிஞர்களே!

தஞ்சை வழக்கறிஞர் கூட்டம்வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள்.  “மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர், செயலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” என்றுதான் இப்பிரச்சனை சென்ற மாதத்தில் தொடங்கியது.  பிறகு, “சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்குப் பாதுகாப்பில்லை  என்பதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டுவரலாம்” என்று தலைமை நீதிபதி தெரிவிக்க, மாநில அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி தடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து, ‘சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரங்கெட்டுப் போனதாக’ உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தொடர்பேயில்லாத ஒரு வழக்கில் பேச, அது நாளேடுகளில் தலைப்புச் செய்தியானது.   மறுகணமே, தமிழக பார் கவுன்சிலைப் புறக்கணித்துவிட்டு, அனைத்திந்திய பார் கவுன்சில் 14 மதுரை வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து அறிவித்தது.  “மதுரை வழக்கறிஞர் சங்கத்தை காலி செய்யவேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  இராமநாதபுரம் போன்ற பல ஊர்களின் சங்கங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில்  நடைபெற்ற விவாதங்கள் அனைத்தும் வழக்கறிஞர் சமூகத்தையே கிரிமினல்கள் போலச் சித்தரித்தன.  “வழக்கறிஞர்கள் நீதிபதிகளையோ போலீசையோ விமர்சித்து எந்த ஊடகத்தில் பேட்டி கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம் தொலைக்காட்சியிலேயே அறிவித்தார்.

“நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே மாலை 7 மணிக்கு மேல் இருக்கக்கூடாது” என்றும், “வளாகத்துக்கு உள்ளேயோ வெளியேயோ துண்டறிக்கை,  சுவரொட்டி, கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது” என்றும் கருத்துரிமையை முற்றிலுமாகப் பறித்து உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார்.

இந்த நிலைமைகள் குறித்து விவாதிக்க திருச்சி வாசவி மகாலில் செப்டம்பர் 27 அன்று கூட்டம் நடத்தினோம்.  அதற்கு ஏற்பாடு செய்த திருச்சி பார் அசோசியேசன் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு பார் கவுன்சில் விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பியிருக்கிறது. அதில் கலந்து கொண்ட பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் விளக்கம் கோரும்  நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது, தமிழகத்துக்கும் தமிழக வழக்கறிஞர்களுக்கும் எதிராக ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் தில்லியில் தீட்டப்பட்டு அமுல்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.

தஞ்சை வழக்கறிஞர் கூட்டம்”நீதித்துறை ஊழலைப் பற்றி பேசக்கூடாது!
நீதிபதிகளின் நியமனத்தைப் பற்றி பேசக்கூடாது!
முறைகேடான தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது!
கை கட்டி வாய் பொத்தி அடிமைகளாய் நடந்துகொள்ள வேண்டும்”

என தில்லியிலிருந்து நம்மை அச்சுறுத்துகிறார்கள்.

இதற்கு நாம் பணிந்துவிட்டால் பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் முந்தைய காலத்துக்கு நாம் தள்ளப்படுவோம். அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, சங்கம் சேரும் உரிமை போன்ற உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை பெற்றுத்தரும் வழக்கறிஞர்களாகிய நாம், இன்று அந்த உரிமைகளை பறிகொடுத்திருக்கிறோம். நாம் அன்றாடம் புழங்குகின்ற நீதிமன்ற வளாகத்தில் நமது பிரச்சனைகளுக்கான துண்டறிக்கை கூட விநியோகிக்க கூடாதாம். இதைவிட பெரிய அவமதிப்பு வெறென்ன இருக்கிறது?

“மேலும் 2000 வழக்கறிஞர்களைக் கூட நீக்குவோம்” என தமிழக வழக்கறிஞர் சமூகத்தையே அடக்கி ஆள நினைக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.

இது சுயமரியாதை மண் என்பதைக் காட்டுவோம். தவறாமல் தஞ்சைக்கு வாருங்கள்!

நாள் : 11-10-2015 ஞாயிறு  நேரம்: காலை 10 மணியளவில்
இடம் : ஆர்.எம்.வி இராஜசேகர் திருமண மண்டபம், வ.உ.சி நகர், தஞ்சாவூர்

திருச்சியில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டம்
திருச்சியில் செப்டம்ப்ர 27-ம் தேதி நடந்த வழக்கறிஞர்கள் கூட்டம்

தகவல்,

வழக்கறிஞர்கள், கீழமை நீதி மன்றங்கள் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 98945 68144

மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

0

05-10-2015 அன்று காங்கயம் பேருந்து நிலையத்தில், “டாஸ்மாக்கை மூடு , மக்கள் அதிகாரத்தை நிறுவு..” என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட அனுமதிக்கு பலமுறை இழுத்தடித்து பிறகு அனுமதி வழங்கியது காங்கயம் போலிசு. திட்டமிட்டபடி மாலை 5.00 மணிக்கு பறை முழக்கத்துடன் துவங்கியது ஆர்ப்பாட்டம் .

காங்கயம் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
“இப்பொழுதெல்லாம் சாராயம் லத்தியாக, பூடிசாக, ஜே.சி.பி இயந்திரமாக, இரும்பு பைப்பாக மாறி வருகிறது. ஆனால் மக்கள் அதிகாரமோ மாணவர்களோ இதற்க்கெல்லாம் அஞ்சி ஓடப்போவதில்லை.”

மக்கள் அதிகாரம் வாழ்க !
அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு !
இதோ ஆளவருகுது மக்கள் அதிகாரம்!
குடி கெடுக்கும் டாஸ்மாக்கை !
இழுத்து மூடு இழுத்து மூடு !

வெட்கக் கேடு வெட்கக் கேடு !
கஜானாவை நிரப்பிட
ஊத்திக்கொடுப்பது வெட்கக் கேடு !

குடி போதையில் கெட்ட குடும்பம்
கோடிகளை தாண்டுது
சாராயம் தான் கொள்கையென
அரசாங்கம் சொல்லுது !

பொறுக்கி செய்யும் வேலையெல்லாம்
அரசாங்கம் செய்யுது ; இத
பொறுப்போட செய்வதற்கே
அதிகார வர்க்கம் இருக்குது.

கடைய மூடுன்னு போராடினா
போலிசு உதைக்குது
கடைக்கு கடை காவல் போட்டு
பாதுகாப்பு கொடுக்குது !

ஊருக்கு ஊரு கடைய வெச்சு
தாலியறுக்குது டாஸ்மாக்கு !
கடைய மூடுன்னு மக்கள் சொன்னா
காக்கிச் சட்ட பாயுது!

கல்வி கொடுக்க வக்கில்ல !
வேல கொடுக்க வக்கில்ல !
குடி கெடுக்கும் டாஸ்மாக் எதுக்கு !

புத்தகத்த படிக்கவா ?
சாராயத்தை குடிக்கவா ?

இழுத்து மூடு ! இழுத்து மூடு !
குடிகெடுக்கும் டாஸ்மாக்கை
இழுத்து மூடு , இழுத்து மூடு !!

ரத்து செய் ரத்து செய்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது
போடப்பட்ட பொய் வழக்கை
ரத்து செய் !

கெஞ்சாதே கெஞ்சாதே !
குடி கெடுக்கும் அரசிடம்
கெஞ்சாதே கெஞ்சாதே !!

தீரவில்லை தீரவில்லை
நீதிமன்றம் தீரவில்லை !
சட்டமன்றம் தீரவில்லை !
ஒன்றே தீர்வு ! ஒன்றே தீர்வு !
மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு!!

என்ற விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

காங்கயம் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
“டாஸ்மாக்கை மூடு , மக்கள் அதிகாரத்தை நிறுவு..”

தலைமை உரையில் தோழர் வசந்தன் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களை இந்த அரசு ஒடுக்குவதை அமைதிப்படை சினிமா வசனத்துடன் ஒப்பிட்டு நையாண்டி செய்தார். சாராயம் சட்ட விரோதம் என்றாலும் அதை பாதுகாக்க இந்த போலிசு எப்படியெல்லாம் பாடுபடுகிறது .என்பதை அம்பலப்படுத்தி பேசினார். ஏதோ சூட்டிங் நடப்பது போல போலிசு கேமராக்கள் ஆங்காங்கே தோழர்களை தீவிரவாதிகளை போல படம் பிடிப்பதை எள்ளி நகையாடினார். ‘நேர்மையான’ காவல் துறை தோழர்களை தேடிச் செல்லும்போது டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்கள் என்று மக்களிடம் விசாரிக்கவில்லை. மாறாக திருடர்களை போல சித்தரிக்க முயற்சி செய்து தோற்று போனதை அம்பலப்படுத்தினார். அடக்கு முறையால் ஒரு போதும் எமது அமைப்பை வெல்லமுடியாது என்பதை பதிவு செய்தார்.

அடுத்ததாக தோழர் புஸ்பராஜ் பேசியபோது

“டாஸ்மாக்குக்கு எதிராக ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் துவங்கி வைத்தனர். சசி பெருமாளின் மரணத்திற்கு பிறகு இந்த டாஸ்மாக்குக்கு எதிரான எழுச்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்டது. இந்தப் போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பற்றி படர்ந்தது. போராடிய மாணவர்களை கொலைவெறியோடு தாக்கும் போலிசு, அவர்களின் பிள்ளைகள் குடித்து விட்டு வரும்போது சந்தோசப்படுவார்களா” என கேள்வி எழுப்பியபோது போலிசாரின் முகத்தில் ஈ ஆடியதை பார்க்க முடிந்தது. “இந்த அடக்கு முறை எங்களை ஒன்றும் முடக்கி விடாது” என்ற அறைகூவலுடன் தமது உரையை நிறைவு செய்தார்.

தோழர் ராமசாமி, மக்கள் அதிகாரம் தமது சொந்த அனுபவங்கள் மூலம் இந்த டாஸ்மாக்கினால் வரும் பாதிப்புகள் அன்றாடம் மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும், இந்த டாஸ்மாக்கினால் பெண்கள் இழந்த குடும்பங்களுக்கும் இந்த அரசு என்ன பதில் சொல்ப்போகிறது என்பதை கேள்வி எழுப்பினார். ஆனால், எதற்கும் சம்மந்தம் இல்லாதது போல் தன்னை காட்டிக்கொள்ளும் இந்த அரசினை இனியும் நம்பி இருப்பதில் பலனில்லை, இனி மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே தீர்வு என்று தன் உரையை முடித்தார்.

காங்கயம் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
“நாங்கள் பிறந்த மண் இது. இதில் எங்கு அநீதி நடந்தாலும் நாங்கள் போராடுவோம்

விளவை ராமசாமி, மாநில துணைத்தலைவர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, “நாங்கள் பிறந்த மண் இது. இதில் எங்கு அநீதி நடந்தாலும் நாங்கள் போராடுவோம்” என்று உரையை துவங்கினார். “நாங்கள் இம்மண்ணில் வாழ்வதே மக்களுக்காக போராடுவதுதான். அதில்தான் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது. எனவேதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் மிகக் கேவலமாக நடந்து கொண்டது போலிசு. நிராயுதபாணியான மாணவர்களை போலிசு லத்திகளும். இரும்பு பைப்புகளும் சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதை விட கோழைத்தனம் வேறெங்கு இருக்க முடியும். இதை ஒரு பெரிய வீரமாக நினைத்துக்கொள்கிறார்கள். இத்தனை ஆயுதங்களை கொண்டு தாக்கியபோதும் கொஞ்சமும் பின்வாங்கவில்லை மாணவர்கள்.

இப்பொழுதெல்லாம் சாராயம் லத்தியாக, பூடிசாக, ஜே.சி.பி இயந்திரமாக, இரும்பு பைப்பாக மாறி வருகிறது. ஆனால் மக்கள் அதிகாரமோ மாணவர்களோ இதற்க்கெல்லாம் அஞ்சி ஓடப்போவதில்லை. உங்களால் என்ன செய்ய முடியுமோ. அதை நீங்கள் செய்யுங்கள். எங்கள் மண்ணிற்கு கேடு வரும் போது நாங்கள் எதிர்த்து நிற்ப்போம்.

இந்த அரசு தோற்று போவது உறுதி. எனவேதான். நேர்மையானவர்கள் இந்த அரசில் நீடிக்க முடிவதில்லை . உதாரணத்திற்கு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை சம்பவம் , ஒவ்வொரு நேர்மையானவர்களையும் அழிக்க வேண்டும் என்று இந்த அரசு துடிக்கிறது. சகாயம் விசயத்திலும் இதுதான் நடக்கிறது. இதைத்தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம். இந்த அரசு ஆளும் தகுதியை இழந்து விட்டது. மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்ற அறை கூவலோடு தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தோழர் செந்தூரன் நன்றி உரை வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையில் ரிசர்வு படையை இறக்கி பீதி ஊட்ட நினைத்தது போலிசு. ஆனால் இதற்க்கெல்லாம் மக்களோ மக்கள் அதிகாரத்தின் தோழர்களோ அஞ்சப் போவதில்லை என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை இந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்துச் சென்றனர். காங்கயத்தில் மக்கள் அதிகாரத்தின் முதல் ஆர்ப்பாட்டம் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
காங்கயம்

முதல் ஆசிரியன் – நூல் அறிமுகம்

0

லைவாரிப் பூச்சூடி உன்னை…
பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை…
மலைவாழை அல்லவோ கல்வி…
நீ… வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.

கவிஞர் பாரதிதாசன்

னிதகுலம் தனது வாழ்க்கைத் தேவைகளுக்காக இயற்கையுடன் நடத்திய போராட்டத்தினூடாக சேகரித்துள்ள அறிவுச் செல்வங்கள் ஏராளம். எண்ணும், எழுத்துமாகக் கொட்டிக்கிடக்கும் அந்த அறிவுச் சாகரத்தின் நுழைவாயில் கல்வி.

முதல் ஆசிரியர் - நூல் அறிமுகம்
சீரழிவுக்குத் தள்ளப்பட்ட தனது வாழ்வை மீட்டெடுத்துப் புத்துயிரூட்டிய தனது முதல் ஆசிரியன் குறித்த ஒரு பின்தங்கிய கிராமத்தின் ஏழைச் சிறுமியின் நினைவுகளாக விரிகிறது இக்குறுநாவல்.

அகர முதல எழுத்தென்று அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் தொட்டு, பேரண்டப் பிறப்பின் இரகசியம் தேடிக் கருந்துளையிருட்டில் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியென… ஆழ்ந்து, அகன்று, விரிந்து, பரந்து, பெருகிக் கொண்டேயிருக்கிறது கல்வியின் விளைபொருள்.

இயற்கையின் புதிர் கண்டஞ்சிக் கிடந்தவர்களை இன்று மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பல்துறை விற்பன்னர்களாகப் பரிணமிக்கச் செய்துள்ளது கல்வி.

அறியாமை இருளகற்றும் கல்விப் பணியின் வாயிலாக, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி, வளமூட்டும் அறிவெனும் அகல்விளக்கேற்றியவர்களில் முதன்மையானவர்கள் நம் ஆசிரியப்பெருமக்கள்.

ஏற்றுக்கொண்ட ஆசிரியப்பணியின் கடமை நிமித்தம் என்றில்லாமல், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டுத் தான் பிறந்து, வளர்ந்த நகர்ப்புறம் விட்டுநீங்கி, நாகரிகத்தின் ‘வளர்ச்சி’ தீண்டியிராத அன்றைய சிற்றூர்களில் சென்று தங்கி துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வங்களின் மனதில் கல்வியின் விதைகளைப் பதியமிட்டு வளர்த்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மகத்தானது.

உயிர்தந்து, உணவூட்டி, உடல்வளர்க்குந் தாயினும் சாலப்பரிந்து கல்வி அமுதூட்டி நம் அறிவுப் பயிர் வளர்த்து, வாழ்க்கையில் ஒளியேற்றிய இத்தகைய ஆசிரியப் பெருந்தகைகள் குறித்த நீங்கா நினைவுகள் இன்றும் நம்மில் பலரின் மனதிலும் உண்டு. இடம், பொருள், ஏவல் என்பதாக களத்தையும், காலத்தையும் பற்றி நிற்கின்றன மாமனிதர்களின் தோற்றங்களும், மனித சமூகத்தை மாற்றியமைத்த வரலாற்றுச் சம்பவங்களும்.

********

து 1924-ம் ஆண்டு. சோவியத் மண்ணில் பொதுவுடமைச் சமூகம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த காலம். தனது மக்களின் அனைத்துந் தழுவிய வளர்ச்சிக்கான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டிருந்தது பாட்டாளிகளின் அரசு. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின்கீழ் கொடூரமாக வதைக்கப்பட்டு ஏழ்மையிலும், அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த மக்களை விடுவித்த கையோடு அவர்களது கல்வி வளர்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டது.

அன்றைய சோவியத் நாட்டின் கிர்கீஸியப் பகுதியில் ஒரு மலையடிவாரத்திலிருந்தது குர்கூரெவு எனும் அந்தச் சிற்றூர். ஏழ்மையின் பிடியில் வாடிய பல நாடோடிக் குடும்பங்கள் அங்கே வசித்தனர்.

அங்கிருந்த சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக சோவியத் அரசால் அனுப்பி வைக்கப்பட்டு அவ்வூருக்கு வந்து சேர்கிறான் துய்ஷேன் எனும் இளங் கம்யூனிஸ்டுக் கழக இளைஞன். அவனும் அவ்வூரைச் சேர்ந்தவன்தான். ஆனால், முன்பு பஞ்சம் நிலவிய காலத்தில் வேலைதேடி வெளியூர் சென்றவன்; இன்று, பள்ளியாசிரியனாகத் திரும்பி வந்துள்ளான்.
விவசாய வேலைகளைச் செய்வதற்குப் பள்ளிப்படிப்பெதற்கு? என்று அறியாமையில் கேட்கும் அப்பாவி ஏழை மக்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறான், துய்ஷேன்; ஏற்க மறுத்து எள்ளி நகையாடுகின்றனர் ஊர்மக்கள். சோர்ந்துவிடவில்லை அவ்விளைஞன்.

அந்தக் கிராமத்தினருகிலிருந்த குன்றின்மீது சிதிலமடைந்த நிலையிருந்த – முன்பொரு காலத்தில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாயிருந்த – குதிரைக் கொட்டடியைத் தனியொருவனாகச் செப்பனிட்டு பள்ளிக்கூடமாக மாற்றுகிறான். வீடு வீடாகச்சென்று பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறான். முன்பு பகல்வேளைகளில் வயலுக்குத் தேவையான சாணத்தைப் பொறுக்குவதற்காக ஸ்டெப்பிப் புல்வெளிகளில் அலைந்து திரிந்த அக்குழந்தைகள் துய்ஷேனின் வருகையால் புத்துலகைக் காணும் வாய்ப்பினைப் பெற்றனர்.

துய்ஷேன் ஆரம்பக் கல்வியினைக்கூட முறையாகக் கற்றிருக்கவில்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் மட்டுமே தெரியும். ஆயினும், தனக்குத் தெரிந்தவற்றையேனும் அக்குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட வேண்டுமென்ற ஆர்வமே உந்து சக்தியாக இருந்து அவனை இயக்கியது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வந்திருக்கும் அவ்விளம் பிஞ்சுகளுக்குக் கல்வி புகட்டுவதில் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் ஈடுபட்டான். தங்களிடம் அன்பு பாராட்டி, இனிமையாகப் பழகிய அந்த இளம் ஆசிரியரிடம் பிள்ளைகளும் மிகுந்த நேசத்துடன் பழகினர்; ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

அல்தினாய் சுலைமானவ்னா – பெற்றோரை இழந்து உற்றாரின் ‘பராமரிப்பில்’ வளரும் அவ்வூரின் ஏழைச் சிறுமி. கற்றுக்கொள்வதில் ஆர்வமிக்க, துய்ஷேனின் அன்புக்குரிய மாணவி. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் வயதில் மூத்தவள்.

அனாதைக்குப் படிப்பெதற்கு? என்று அல்தினாயை ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரமாக மணம்செய்துவைக்க முடிவெடுக்கிறாள் அவளது வளர்ப்புத் தாய். இதனால் அதிர்ச்சியுற்ற அல்தினாய்க்கு ஆறுதல் கூறி அவ்வூரிலிருந்த அவளது பாட்டியின் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாக்கிறார், துய்ஷேன். ஆனால், குண்டர்களுடன் பள்ளிக்கூடத்துக்கே வருகிறாள் அவளது சித்தி. அல்தினாயை அவர்களுடன் அனுப்ப மறுத்துப் போராடும் ஆசிரியரைக் கடுமையாக அடித்து உதைத்து, கைகளை முறித்து, குற்றுயிரும், குலையுயிருமாக்கிவிட்டு அல்தினாயைத் தூக்கிச் செல்கின்றனர் அம்முரடர்கள்.

சோவியத் செம்படை வீரர்களுடன் சென்று அல்தினாயை மீட்டு வருகிறார் அவளது அன்பிற்குரிய ஆசிரியர் துய்ஷேன். அவளது பாதுகாப்பு கருதியும், மேல்படிப்புக்காகவும் நகரத்துக்கு அனுப்பிவைக்கிறார். பாட்டாளிகளின் அரசு அந்த ஏழைச்சிறுமிக்குக் கல்வியூட்டி வளர்த்தெடுக்கிறது. கற்பது மிகவும் சிரமமாக இருந்தபோதிலும் அல்தினாயின் விடாப்பிடியான போராட்டம் அவளை மிகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. தற்போது அல்தினாய் சுலைமானவ்னா ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்; தத்துவ விரிவுரையாளர்.

காலத்தின் கரங்கள் அவளது பிறந்த ஊரிலும் மாற்றத்தைக் கொண்டுசேர்த்தது. அவ்வூரின் மக்கள் இப்போது கூட்டுப்பண்ணையின் உறுப்பினர்கள். துய்சேன் ஊன்றிய கல்வியின் விதைகள் நல்ல விளைச்சலை உண்டுபண்ணியிருந்தன. பள்ளிப் படிப்பும், உயர்கல்வியும் கற்றவர்கள் பலர் தற்போது அவ்வூரிலிருந்தனர்.

தனது ஊரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தின் திறப்புவிழாவிற்கு விருந்தினராக வருகிறார் அல்தினாய். அப்போது தபால்காரர் துய்ஷேன் பற்றிய பேச்சும் எழுகிறது, அவ்விருந்தில்.

ஆம். அவ்வூரின் முதல் ஆசிரியரான அதே துய்ஷேன் தற்போது, தனது முதிய வயதிலும் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். இதை அறிந்துகொண்ட அல்தினாய் மிகவும் வேதனைப்படுகிறார். கல்வியின் விதைகளை அவ்வூரில் முதன்முதலாகத் தூவிய அந்த அற்புத மனிதனை இந்தப் புதிய கல்விக்கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து உரிய மரியாதை செய்யத் தவறியது குறித்து அவரது மனம் வேதனைப்படுகிறது.

சீரழிவுக்குத் தள்ளப்பட்ட தனது வாழ்வை மீட்டெடுத்துப் புத்துயிரூட்டிய தனது முதல் ஆசிரியன் குறித்த ஒரு பின்தங்கிய கிராமத்தின் ஏழைச் சிறுமியின் நினைவுகளாக விரிகிறது இக்குறுநாவல்.

புறக்கணிப்பால் சோர்ந்துவிடாத செயலார்வம்; இன்னல்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் போராடும் வீரம்; குழந்தைகளின் மீதான நேசம்; அவர்களது கல்வி வளர்ச்சியின்பால் கொண்டிருந்த அக்கறை; தனது போதாமை, குறைபாடு குறித்த கழிவிரக்கம் ஏதுமின்றி மக்கள் நலன்பேணும் தனது அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் காட்டிய இலட்சிய உறுதி; பிரதிபலன் பாராமல் பணியாற்றும் கடமையுணர்வு; அனைத்துக்கும் மேலாக தனது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஆசான்.. என்று மாமனிதராக உயர்ந்து நிற்கிறார் அல்தினாயின், குர்கூரெவு கிராமத்தின் முதல் ஆசிரியன்.

மனிதர்கள் தமது உயரிய சிந்தனைகளால் சிறப்படைகிறார்கள். உயரிய சிந்தனைகள் உயர்வான சமூகத்தில் இயல்பாகவே உதித்தெழுகின்றன. பொதுவுடமையே அந்த உயர்ந்த சமூகம். முதல் ஆசிரியன் எனும் இந்நூல் அதில் விளைந்துள்ள இலக்கிய முத்து.

*****

முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது இன்றைய நம் வாழ்க்கை. சந்தையின் விதிகள் சகலத்தையும் மாற்றியமைக்கின்றன. சரஸ்வதியும்கூட ஒரு சரக்கு மட்டுமே.

முன்னாள் கள்ளச் சாராய ரவுடிகளும், திடீர் பணக்கார, அரசியல் ரவுடிகளுமே கல்விக்கோயிலின் இந்நாள் தெய்வங்கள். காசுள்ளவன் பக்கம் மட்டுமே திரும்புகின்றன கல்விக் கடவுளர்களின் கடைக்கண் பார்வைகள். உண்டியலில் கொட்டப்படும் காணிக்கையின் அளவைப்பொருத்தே அமைகிறது கல்விச் சேவையின் தரம். கல்வி வள்ளல்களின் கருணையில் பொங்கி வழிகிறது கல்வி வியாபாரம்.

மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை என்பதாக மாற்றப்பட்டுள்ளது ஆசிரியப்பணியின் வரையறைகள். மெத்தப் படித்திருந்தும் கல்வித்தந்தைகளின் பொறியில் -பொறியியல் கல்வி நிறுவனங்களில்- அகப்பட்ட கூலி அடிமைகளாக உழல்கின்றனர் இன்றைய பேராசிரியர்கள்.

கல்விச்சேவையில் கைகழுவிக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆண்டுதோறும் வெட்டிக்குறுக்கப்படுகிறது கல்விக்கான மானியம். நாள்தோறும் இழுத்துமூடப்படுகின்றன அரசுப்பள்ளிகள். ஏழைகளின் எட்டாக்கனியாகத் தொலைவில் செல்கின்றன அருகமைப்பள்ளிகள். நல்லாசிரியர் விருதுகளை எள்ளி நகையாடுகின்றன சில அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சீரிய கந்துவட்டிப்பணி.

ஆதிக்கசாதி வெறியும், தனியார்மயக் கொள்ளையும் நிரம்பி வழியும் முதலாளித்துவக் குப்பைக்கிடங்கில் பற்றியெரியும் பார்ப்பனியத்தீ இன்றைய கல்விச்சூழலில் நச்சுக்காற்றைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது நம் குழந்தைகளின் கல்வி. பல அல்டினாய்கள் பிஞ்சு வயதில் கருகிகொண்டிருக்கின்றனர்.

முடைநாற்றமடிக்கும் இந்த விசக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு அப்துல் கலாமின் வல்லரசுக்கனவில் மயங்கிக் கிடப்பதா? அல்லது, அழுகி நாறும் இந்த சமூக அமைப்பைத் தூக்கியெறிந்து, நம் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப் போகிறோமா? என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.

முதல் ஆசிரியர்

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

நூல் அறிமுகம் செய்பவர்

மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

மூடு டாஸ்மாக்கை – ஆவுடையார்கோவிலில் திரண்ட மக்கள்

0

“இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடாது” என்று சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆவுடையார்கோவில் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினர், தமிழக மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்ககூடிய மதுவிலக்கிற்கு ஆதரவாக “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் 29-09-2015 அன்று பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

ஆவுடையார்கோவிலில் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
“எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை அகற்ற நீங்கள் தலைமை தாங்குங்கள், நாங்கள் மூடுகிறோம்”

இந்த ஆர்ப்பாட்ட பிரச்சாரங்களை பிரசுரங்களாக அச்சிட்டு மக்களிடம் கிராமம் கிராமமாக கொண்டு சென்றபோது, கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் தோழர்களை வரவேற்று, “எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை அகற்ற நீங்கள் தலைமை தாங்குங்கள், நாங்கள் மூடுகிறோம்” என கோரிக்கை வைத்தனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பினரின் பிரச்சாரம் மக்களை ஈர்க்கும் என்பதை அறிந்த உளவுத்துறையினர் மக்கள் அதிகாரத்தில் திரண்ட புதியவர்களை அணுகி, “டாஸ்மாக்கை மூடுவதை நாங்களும் ஆதரிக்கிறோம், ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் அதிகாரம் அமைப்பில் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். வேறு அமைப்பில் சேர்ந்து செய்யுங்கள். இந்த அமைப்பில் சேர்ந்தால் அரசு வேலை கிடைகக்காது” என்று நயமாகவும், மிரட்டியும் வந்தனர். அதனை புறம் தள்ளிய மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மக்களை திரட்டுவதற்கு முழுவீச்சாக பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஆவுடையார்கோவிலில் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் சரியாக 29-09-2015 அன்று 5.30 மணிக்கு எழுச்சிகரமான முழக்கங்களுடன் தொடங்கியது.

29-09-2015-ம் தேதி ஆர்ப்பாட்ட நாளன்று உளவுத்துறையும், போலீசும் “ஏதோ 10, 20 பேர் வந்து கத்திவிட்டு போவர்கள்” என்று கடைக்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவிய தொடங்கினார்கள். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உளவுத்துறையும், போலீசும் செய்வது அறியாது விழித்தனர்.

ஆர்ப்பாட்டம் சரியாக 29-09-2015 அன்று 5.30 மணிக்கு எழுச்சிகரமான முழக்கங்களுடன் தொடங்கியது. முழக்கம் முடிந்தவுடன் மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவினர் பாடல்பாட துவங்கியவுடன் ஆவுடையார்கோவில் கடைவீதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிய தொடங்கினர். பெருந்திரளான மக்கள் திரண்டு இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினர் தோழர் MSK பழனி அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.

அவர் தனது தலைமை உரையில், பச்சையப்பா கல்லுரி மாணவர்கள் மீதான காவல்துறையின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கும் நீதிமன்றத்தின் நியாயமற்ற போக்கிற்கும் கண்டனம் தெரிவித்தும், ஆவுடையார்கோவில் பகுதியில் டாஸ்மாக்கால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது இடத்தில் ஏற்படும் சீரழிவு ஆகியவற்றை விளக்கி பேசியும், ஆவுடையார் கோவிலில் மக்கள் அதிகாரம் அமைப்பில் தாங்கள் இணைந்து டாஸ்மாக்கை மூட வேண்டி நடக்கின்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசினார்.

ஆவுடையார்கோவிலில் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
ஆவுடையார்கோவில் கடைவீதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிந்தனர்.

அடுத்ததாக கண்டன உரை ஆற்றிய வழக்கறிஞர் உலகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கண்ணன், தி.மு.கவைச் சேர்ந்த சதீஸ் ஆகியோர் “இந்த அரசு டாஸ்மாக்கை மூடமாட்டேன் என அடம் பிடிப்பது தவறு. மக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக்கை மூடவேண்டும்” என்று வலியுறுத்தி பேசினார்கள்.

அடுத்ததாக சமூக ஆர்வலர்கள், அருள்மேகி உலகநாதன், சொனமுத்து ஆகியோர் தங்கள் ஊழல் டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைத்து மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியிருக்கிய இந்த அரசினை கண்டித்தும் உடனடியாக தமது குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனா.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களான பழனி, ரமேஷ் ஆகியோர் தமது உரையில் போலீசின் அடாவடித்தனத்தை கண்டித்தும் குடிகாரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில் காவல்துறை இருந்து வருவதை சுட்டிக்காட்டி, அப்பாவி மக்களிடம் காட்டப்படும் காவல்துறையின் வீரத்தை எள்ளி நகையாடியும், “மக்கள் ஆள தகுதி இழந்த இந்த அரசு கட்டமைப்பிடம் டாஸ்மாக்கை மூட மனு கொடுப்பதால் எந்த பயனும் இல்லை, மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து டாஸ்மாக்கை மூடவேண்டும்” என்று அறைகூவி, “மக்கள் குடியிருப்பு பகுதியில் எங்கள் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடைகள் திறந்து நடத்தப்படுகின்றன. ஏன் கோபாலபுரத்திலும் , போயஸ்தோட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறந்து நடத்த வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

ஆவுடையார்கோவிலில் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கலையாமல் உறுதியாக நின்று கொண்டு பேச்சை கேட்டனர்.

இறுதியில் நிறைவுரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் பேச ஆரம்பித்தபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கலையாமல் உறுதியாக ஆங்காங்கே கடைகளின் கூரைகளில் ஒண்டி நின்று கொண்டு தோழரின் சுமார் 40 நிமிட பேச்சை கேட்டனர்.

தோழர் காளியப்பன் தமது உரையில் ஜெயா அரசின் பாசிச தன்மையையும், இந்த அரசு ஆளத் தகுதி இழந்துவிட்டது என்பதையும் விளக்கிப் பேசி மாவட்ட ஆட்சித்தலைவரும், போலீசும் டாஸ்மாக்கிற்க்காக வேலை செய்வதையும் காவல் நிற்பதையும் அம்பலப்படுத்தியும் டாஸ்மாக்கால் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறினார். ஒட்டுமொத்த தமிழகமே மதுவிலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி போராடும் போது, போராட்டங்களை போலீசை கொண்டு ஒடுக்கிவரும் இந்த அரசின் போக்கை கண்டித்தார். ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு போராட்டங்களை அம்பலப்படுத்தி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்குக்த்தான்” என அரசியல் கட்சிகள் பேசுவதை எள்ளி நகையாடினார். “மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து போராடினால்தான் டாஸ்மாக்கை மட்டும் அல்ல மக்களின் அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்” என்று கூறி நிறைவுசெய்தார்.

கண்டன உரைகளுக்கு இடை இடையே ம.க.இ.கவின் மைய கலைக்குழுவினர் நிகழ்த்திய புரட்சிகர பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக “மூடு டாஸ்மாக்கை”, “ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசுல உல்லாசம்”, “சொத்துக்குவிப்பு வழக்கில் சொன்ன தீர்ப்பு தப்பா” போன்ற பாடல்கள் பாடிய போது மக்கள் சாலைகளின் இரு புறமும் கூடி பாடல்களின் புரட்சிகர தன்மையை கண்டு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த போலீசார் மக்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏறி ஊருக்கு போக சொல்லி விரட்டிக் கொண்டு இருந்தனர். இதனால் ஒலி பெருக்கி மூலம் போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த உடன் போலீசார் தங்கள் செய்கையை நிறுத்திக் கொண்டனர்.

ஆவுடையார்கோவிலில் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
கண்டன உரைகளுக்கு இடை இடையே ம.க.இ.கவின் மைய கலைக்குழுவினர் நிகழ்த்திய புரட்சிகர பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

இறுதியாக மக்கள் அதிகார அமைப்பின் தோழர் கண்ணன் நன்றியுரை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் அந்த பகுதி மக்களிடையே ஆலோசித்து டாஸ்மாக்கை மூடுவதற்கான அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாரகி வருகின்றனர்.

 ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகார தோழர்கள் மீது இன்ஸ்பெக்டர் காட்டிய வீரம்!

ஆவுடையார்கோவிலில் காவல்துறை ஆய்வாளராக உள்ள பிரேம் ஆனந்த் சென்னையில் பணிபுரிந்தபோது யாருக்கும் பயப்படாமல் அரசியல்வாதியையும் வழக்கறிஞர்களையும், எலும்பை முறித்ததாக புகார் கொடுக்கச் செல்லும் மக்களிடமும், இந்த பகுதி அரசியல் கட்சியினரிடமும் பீலாவிட்டு வருவது வழக்கம். “போலீசை எவன் எதிர்த்தாலும் அவன் எலும்பை முறிப்பேன்” என சிங்கம் பட பாணியில் வீர வசனம் பேசி வருவதும் அவரது வாடிக்கை.

இந்நிலையில் 29-09-2015-ம் தேதி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் நிற்கும்போது, காவல்துறையின் அயோக்கியதனங்களை பட்டியலிட்டு தோழர்கள் விமர்சித்து பேசியுள்ளார்கள். தனக்கு கீழ் வேலை பார்க்கும் போலீசுகாரர்களை புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் முன்பே, “பொட்ட பயலே” என்றும், “கோத்த, கொம்மா” என்றும் கெட்ட வார்த்தைகளிலும் பேசி வருபவர் பிரேம்ஆனந்த். மேலும் போலீசுகாரர்களிடம் சென்னையில் வேலை பார்க்கும் போது உயர் அதிகாரிகளையை மதித்தது கிடையாது என்றும் பல பேரை தான் அடித்து புரட்டி எடுத்துள்ளதாகவும் தான் யாருக்கும் பயப்படாத வீராதி வீரன் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி சக போலீசுகாரர்களிடம் பயத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்.

ஆவுடையார்கோவிலில் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 03-10-2015-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக பேசியுள்ளார்கள். இதில் ஆர்ப்பாட்டத்திற்கு இவ்வளவு பெரும்திரளான மக்கள் திரண்டதை முன்கூட்டியே கணித்து அறியமுடியாத ஆவுடையார்கோவில் காவல்துறை ஆய்வாளரை கண்டித்துள்ளதாக தெரிகிறது. போதக்குறைக்கு ஆவுடையார்கோவில் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் மாரிமுத்து என்ற காவலர், “எங்களிடம் வீரன் என தற்பெருமை பேசுகிறாயே, 29-ம் தேதி நடந்த ஆர்பாட்டத்தில் போலீசைப் பற்றியும், மக்கள் அதிகாரத்தைப் பற்றியும் பேசும் போது வாலை சுருட்டிக் கொண்டு ஏன் நின்றீர்கள்? உங்கள் வீரத்தை அவர்களிடம் காட்ட வேண்டியது தானே” எனச் சொல்லி உசுப்பு ஏற்றியுள்ளார். தனது பிம்பம் உடைவதை அறிந்த பிரேம ஆனந்த் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் தலைக்கு ஏறிய பிரேம் ஆனந்த் 04.10.2015-ம் தேதி காலை 8 மணிக்கு கைலியுடன் கடைத்தெருவுக்கு வந்திருக்கிறார். மக்கள் அதிகாரத் தோழர்கள் MSK பழனி, இந்தியன் பழனி ஆகியோர் டீ குடித்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்து கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு “மைக்கை புடிச்சி பேசின தேவுடியா பயலுக நீங்க தானடா? இப்ப போலீச பத்தி பேசுங்கடா, ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா மோதி பார்ப்போம்” என்று தகராறு செய்துள்ளார்.

அதற்கு தோழர்கள் ”நாங்கள் பேசியது தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியதற்கு

“நான் எந்த சட்டத்தையும் மயிருக்குகூட மதிக்க மாட்டேன்” என்று கூறி தன்னுடன் வந்த காவலர் மாரிமுத்துவிடம் “இவனுகளை அடித்து ஸ்டேசனுக்கு இழுத்து வா” என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆவுடையார்கோவிலில் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்
மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவினர் பாடல்பாட துவங்கியவுடன் ஆவுடையார்கோவில் கடைவீதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட இடத்தில் குவியத் தொடங்கினர்

இந்த உத்தரவை நிறைவேற்ற தயங்கிய காவலர் மாரிமுத்துவை பார்த்து ”ஏண்டா பொட்டப் பயலே, நீயெல்லாம் போலீசா?” என்று ஆணாதிக்கத் திமிரோடு திட்டி ஆத்திரத்தில் மாரிமுத்துவின் செல்போனை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்துள்ளார்.

பின்னர் தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றுள்ளார். அதற்கு தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்து நின்றபோது, ஆய்வாளர் பிரேம் ஆனந்த் ”நான் ஆம்பிளடா வாங்கடா மோதி பார்ப்போம்” என்று பலமுறை கூறியுள்ளார். ஆய்வாளரின் கைலியை மடித்து கட்டிய ரவுடித்தனத்தை காண மக்கள் திரளாக கூடிவிட்டதால் ஆண்மையுள்ள இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் ”உங்களை பின்னாடி பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டு சென்றுள்ளார்.

சம்பவத்தை விசாரித்த பொதுமக்கள்,”வார்த்தைக்கு வார்த்தை நான் ஆம்பிள்ளை என்று கூறும் ஆய்வாளார் பிரேம் ஆனந்த் ஆம்பிளையாக இருந்தால் ஆர்ப்பாட்டத்தில் போலீசை விமர்சித்து பேசியபோதே தட்டிக்கேட்டிருக்கலாமே, இப்போ, தோழர்கள் தனியா இருக்கும்போது தகராறு செய்வது என்ன நியாயம்?” என ஆய்வாளர் பிரேம் ஆனந்தின் வீரத்தை எள்ளி நகையாடி சென்றனர்.

மக்கள் அதிகாரம் ஆவுடையார்கோவில் பகுதியில் நடத்திய ஆர்ப்பட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டதால் அதிர்ச்சி அடைந்து அதிகாரவர்க்கமும், போலீசும் முன்னணியில் உள்ள தோழர்களை மிரட்டியும், பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தால் ஒடுக்கிவிடலாம் என திட்டம் தீட்டி இருப்பதாக தெரியவருகிறது. அதன் விளைவு தான் பிரேம் ஆனந்த், வடிவேல் பாணியில் தோழர்களிடம் மீரட்டி தகராறு செய்துள்ளார். ஆனால் மக்கள் அதிகாரம் தோழர்களின் உறுதி பிரேம் ஆனந்த் போன்றவர்களை காமெடி பீஸாக்கி விட்டது.

தோழர்களை அடித்து சித்ரவதை செய்து பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என்றும் ரவுடி லிஸ்டில் சேர்ப்பேன் என்றும் பிரேம் ஆனந்த் மிரட்டினாலும் அல்லது அதை செய்தாலும் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் அதை எதிர் கொண்டு போலீசின் தார்மீக பலத்தை இழக்கச் செய்வார்கள்.

தகவல்

மக்கள் அதிகாரம்
ஆவுடையார்கோவில் பகுதி
புதுக்கோட்டை மாவட்டம்.

தமிழ்நாட்டில் மாபியா கும்பல் ஆட்சி ! – வழக்கறிஞர் மில்டன்

0

தமிழ்நாட்டில் மாபியா கும்பல் ஆட்சி நடக்கிறது!
மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு இல்லாத நிர்வாகத்துறை!

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ-வுக்கு ஜாமீன் வழங்க ஒரு ரூபாய் கூட முன்பணம் கட்ட சொல்லவில்லை!
டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய மாணவனுக்கு ரூ. 50,000 முன்பணம் கட்டினால் தான் ஜாமீன்!
நீதிமன்றம் அரசின் பச்சையான ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது!
பாதிக்கப்படும் மக்கள் போராடும் பொழுது தோளோடு தோளாக துணை நிற்கிறோம்!”

வழக்குரைஞர் மில்ட்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை 16-09-2015 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ”விடியலே வா” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரை மணி நேர காணொளி காட்சி!

வழக்குரைஞர் சு. ஜிம்ராஜ் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
50,  முதல்மாடி, ஆர்மேனியன் தெரு,
பாரிமுனை, சென்னை – 600 001
Contact :  90946 66320

https://www.facebook.com/chennaiprpc

சாலையைப் போடு ! டாஸ்மாக்கை மூடு ! கருவேப்பிலங்குறிச்சி போராட்டம் !

0

12+18  Arpattam 700 pixயிரக்கணக்கான மக்கள் சிறை செல்லத் தயாராகி மணல் கொள்ளைக்கு எதிராக ஆற்றில் இறங்கி போராடினோம். கார்மாங்குடி மணல் குவாரியை மூடினோம்.

மேலப்பாலையூர் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராடி 14 பேர் ஒரு மாதம் சிறை சென்றார்கள். அந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்
மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் (கோப்புப் படம்)

ஆனால், “டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகி விடும். எனவே டாஸ்மாக்கை மூட முடியாது” என்று திமிர்த்தனமாக பேசுகிறார்கள் ஆட்சியாளர்கள். கள்ளச்சாராயம் விற்ற காலத்தில் கூட சிறுவர்கள், மாணவர்கள் யாரும் குடித்ததில்லை. ஊருக்குள் குடிப்பவர்கள் கூட விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் அன்றைக்கு குடிப்பவர்கள், குடிப்பது கேவலம், அசிங்கம் என்று கருதினார்கள். இன்றைக்கு சிறுவர்கள், மாணவர்கள் அனைவரும் குடிப்பது, புகைபிடிப்பது, பாக்கு போடுவது அனைத்தும் நாகரிகமானதாகவும், அது ஒன்றும் பெரிய தவறில்லை என்ற கேடுகெட்ட பண்பாட்டை பரப்பி உள்ளார்கள் ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கங்களும்.

குடிப்பதனால் கொலை, திருட்டு, பெண்களை கேலி செய்வது, பாலியல் வன்முறைக்கு செல்வது போன்ற ஊதாரித்தனமான வாழ்க்கைக்கு சென்றது. கௌரவம், ஒழுக்கம், இந்த சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள், சமூக அக்கறை என அனைத்திலும் ஏதுமற்ற விட்டேத்திகளாக, எது சொன்னாலும் தலையை ஆட்ட வேண்டும் என்ற ஆட்டு மந்தைகளாக நம்மை மாற்றியுள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

இந்த கேடுகெட்ட அடிமைத்தனமான பண்பாட்டை இனியும் சம்மதிக்கப் போகிறோமா? அல்லது அதை வீழ்த்தப் போகிறோமா? ஆம். வீழ்த்துவதுதான் நம்மையும், நமது சமூகத்தையும் சீர்படுத்தும். அடிப்படை உரிமைகளையும், சமூக அக்கறை சமூக அக்கறையையும் பெற்றுத் தரும்.

காவனூர் டாஸ்மாக்கை மூடவும், பவழங்குடி, தேவங்குடி ரோடு போடவும் அனைவரும் குடும்பத்தோடு போராடினால்தான் கோரிக்கையில் வெற்றிபெற முடியும்.

திருடக் கூடாது, பொய் சொல்லக்கூடாது, குடிபோதை கூடாது, பெண்களை மதிக்க வேண்டும் என்பதை குடும்பத்தின், சமூகத்தின் பண்பாடாக மாற்றப் போராடுவோம். இதுதான் எதிர்கால மனித குலத்திற்கு நாம் செய்யும் அடிப்படை கடமையாகும்.

மேலப்பாலையூர் டாஸ்மாக் கடையை மூட போராடி சிறை சென்றவர்கள்

S.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடுS.செந்தில்குமார், மாவட்டத் தலைவர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், விருதைR.நந்தகுமார், மாவட்டச் செயலாளர்,
விவசாய சங்கம், மேலப்பாலையூர்

R.ராஜவன்னியன், ஒன்றியச் செயலாளர்,
தே.மு.தி.க, சி.கீரனூர்

இல.சிறுத்தொண்ட நாயனார், ஓய்வு,
தலைமை ஆசிரியர், தே.பவழங்குடி

சி.தெய்வக்கண்ணு,
உழவர்மன்றம், பவழங்குடிவெங்கடேசன்,
மக்கள் அதிகாரம், விளாங்காட்டூர்K.வேல்முருகன்,
மேலப்பாலையூர்.

K.ரத்தினசாமி, மேலப்பாலையூர்
N.முருகன், மேலப்பாலையூர்
க.இராஜேந்திரன், பவழங்குடி
ஆனந்தன், விருத்தாசலம்.

உத்தரவிடுவோம்!
குடிகெடுக்கும் காவனூர் டாஸ்மாக்கை மூடு!
பாழடைந்த பவழங்குடி, தேவங்குடி ரோடை போடு!

ஆளும் அருகதையற்ற அதிகாரிகள் செய்ய மாட்டார்கள்!
இனி மக்கள்தான் அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும்!!
ஒன்று திரள்வோம் மக்கள் அதிகாரத்தில்!!!

மாபெரும் ஆர்ப்பாட்டம்

07-10-2015 புதன், மாலை 4 மணி, கருவேப்பிலங்குறிச்சி

தலைமை
R. நந்தக்குமார், மாவட்ட செயலாளர், விவசாய சங்கம், மேலப்பாலையூர்

ஆர்ப்பாட்ட உரை

தோழர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், விருதை.R ராஜவன்னியன்,
ஒன்றிய செயலாளர்., தே.மு.தி.க, சி.கீரனூர்திருமதி மந்திரிகுமாரி,
கச்சிராயந்ததம்.T.இளங்கோவன்  தலைமை ஆசிரியர் (ஓய்வு) கருவேப்பிலங்குறிச்சி

இல. சிறுத்தொண்ட நாயனார்,
தலைமை ஆசிரியர் (ஓய்வு), தே.பவழங்குடி

சி.தெய்வக்கண்ணு,
உழவர்மன்றம், பவழங்குடி

வெங்கடேசன்,
மக்கள் அதிகாரம், விளாங்காட்டூர்.

G.கொளஞ்சி,
மேலப்பாலையூர்

M.G.பஞ்சமூர்த்தி,
மருங்கூர்

K. செல்வக்குமார்,  செயற்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருதை.K. சுப்பிரமணியன், நேரம்A.கோபாலகிருஷ்ணன், கார்மாங்குடி

தோழர் கதிர்வேல், செயலர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை

வை.வெங்கடேசன், மாவட்டத் தலைவர்
மா.க.உ.பெ சங்கம், விருதை

வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்

வழக்கறிஞர் பா. சிவாஜிசிங், விருதை
வழக்கறிஞர் S. சுரேஷ்குமார், விருதை

வழக்கறிஞர் R. புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருதை.

சிறப்புரை :
வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

நன்றியுரை :
K.வேல்முருகன், மேலப்பாளையூர்.

தகவல்

மக்கள் அதிகாரம்-தமிழ்நாடு
விருத்தாசலம் வட்டம் : 9791286994

பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !

3
பட்டேல்களின் போராட்டம் - ஆர்.எஸ்.எஸ்-இன் சதித் திட்டம்
வல்லபாய் பட்டேல் சிலை முன்பு ஹர்திக் பட்டேல் - பனியாக்களின் உத்தி!
வல்லபாய் பட்டேல் சிலை முன்பு ஹர்திக் பட்டேல் – பனியாக்களின் உத்தி!

ந்து மதவெறிக் கலவரங்களுக்காக இழிபுகழ் பெற்ற குஜராத்தில் ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞனின் தலைமையில் ஆகஸ்டு மத்தியில் இடவொதுக்கீடு கோரித் துவங்கிய போராட்டம் இலட்சக்கணக்கானவர்களின் பங்கேற்போடு துவங்கி சில பத்து பேர்கள் கலந்து கொண்ட மூத்திரச் சந்து கூட்டம் ஒன்றோடு நிறைவு பெற்றுள்ளது.

படேல் மற்றும் படேல்களின் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் குஜராத் மாநிலமே குலுங்கியதாக முதலாளித்துவ ஊடகங்கள் தெரிவித்தன. தமிழ் நாட்டின் இடஒதுக்கீடு அரசியல் போராளிகளோ “பெரியாரின் சிரிப்பொலி மோடியின் குஜராத்திலேயே கேட்கிறது பாருங்கள்” என்று பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். அகில இந்திய ஊடகங்களோ, ஹர்திக் படேலுக்கு “மோடி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்த புதிய தலைவராக” ஞானஸ்நானம் செய்வித்தன.

2002-ம் ஆண்டுக் கலரவத்தில் மோடி ‘சாதித்துக்’ காட்டியதற்குப் பின் ஹர்திக் படேல் தான் பெரிய கும்பலைத் திரட்டிக் காட்டியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகஸ்டு (2015) மாதம் 25-ம் தேதி அகமதாபாத்தில் ஹர்திக் படேல் நடத்திய ‘புரட்சிப் பேரணியில்’ சுமார் ஐந்து லட்சம் படேல்கள் கலந்து கொண்டனர். பேரணிக்குப் பின் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, போலீசார் பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.

அகமதாபாத் பேரணியைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கபட்டன; ஏ.டி.எம் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன; இதர அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன – வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பின் மதிப்பு நூறு கோடிக்கும் மேல் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெருகி வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து வசதி ரத்து செய்யப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் கலவரக்காரர்களால் தகவல் பரிமாறப்பட்டு அதன் மூலம் வன்முறை பரவுவதைத் தடுக்க கைப்பேசி இணையம் முடக்கப்பட்டது.

இலட்சத்தில் ஆரம்பித்து பத்திருபதில் முடிந்த போராட்டம்
இலட்சத்தில் ஆரம்பித்து பத்திருபதில் முடிந்த போராட்டம்

உச்சகட்டமாக படேல்கள் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்திய பேரணியில் நடந்த கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தின் சிறு மற்றும் குறுந் தொழில்களைக் கையில் வைத்துள்ள படேல்கள், பொருளாதார ரீதியில் தமது எதிர்ப்பைக் காட்ட உள்ளூர் வங்கிகளில் தாம் செய்திருந்த முதலீடுகளைத் திரும்ப பெற்றனர். செப்டெம்பரில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட மோடியின் முன்னிலையில் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் அமெரிக்க வாழ் படேல் சாதியினர்.

எனினும், இந்த ஆரம்பகட்ட ஆரவாரங்கள் ஒருவழியாய் ஓய்ந்து பல ஆயிரங்களில் திரண்ட கூட்டம் மெல்ல சில ஆயிரங்களாக குறைந்து, பின் சில நூறாக சுருங்கி கடைசியில் ஹர்திக் படேல் அறிவித்திருந்த ஏக்தா யாத்ரா பேரணியில் சுமார் ஐம்பதிற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். தடையை மீறி ஊர்வலத்திற்கு ஒழுங்கு செய்ததாக ஹர்திக் படேலை போலீசார் கைது செய்ய முனைந்த போது, ஹர்திக் படேல் பிக்பாக்கெட் குற்றவாளியைப் போல் தெரு வழியே ஓடித் தப்பும் நிலை உருவானது. ஒருவழியாக பெரும் கலகமாக சித்தரிக்கப்பட்ட படேல் இடவொதுக்கீடு போராட்டம் இறுதியில் நகைப்பிற்கிடமான முடிவை எட்டியது.

எனினும், இந்தப் போராட்டங்கள் எதைச் சாதிப்பதற்காக தூண்டி விடப்பட்டதோ அந்த நோக்கத்தை ஏறக்குறைய நிறைவேற்றி விட்டது என்பதை தற்போது வெளியாகி வரும் செய்திகளில் இருந்து அறிய முடியும். அந்தச் செய்திகளை நாம் பார்ப்பதற்கு முன், படேல்களின் கோரிக்கைகள் என்ன? அதன் உண்மையான பின்னணி என்ன? உண்மையில், குஜராத்தில் கேட்பது பெரியாரின் சிரிப்பொலி தானா? என்று பார்க்கலாம்.

இட ஒதுக்கீட்டினால் வாழ்விழந்த பட்டேல் பணக்காரர்கள் - பார்ப்பனிய தந்திரம்
இட ஒதுக்கீட்டினால் வாழ்விழந்த பட்டேல் பணக்காரர்கள் – பார்ப்பனிய தந்திரம்

படேல்கள் – ஒரு சுருக்கமான அறிமுகம்!

லேவா, அஞ்சனா மற்றும் கன்பி அல்லது கடவா ஆகிய மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது படேல் சாதி. பெரும்பாலான சாதிகளின் வரலாற்றைப் போல படேல் சாதி இன்றுள்ள இதே வடிவத்தோடும், சாதிய அடையாளத்தோடும் காலங்காலமாக இருக்கவில்லை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது தான் தனித்தனி சாதிகளாக அறியப்பட்ட இம்மூன்று பிரிவினரும் ஒரே சாதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அப்போது ‘படேல்’ என்பது சாதியின் பெயராக அல்லாமல், ஒரு பட்டப் பெயராகவே பயன்பட்டு வந்தது.

இன்றைக்கு இந்து ஒற்றுமையின் சின்னமாக சொல்லப்படும் குஜராத்தின் ஒற்றுமையை உண்மையிலேயே சாதித்தது இந்து மன்னர்கள் அல்ல – இசுலாமிய மொகலாயர்கள். மத்திய நூற்றாண்டில் சிறிய சமஸ்தானங்களாக பிளவுபட்டு தமக்குள் மோதிக் கிடந்த குஜராத்தை 1600-களில் கேதா நகரில் நிலை கொண்ட மொகலாயப் படை அமைதியை நிலைநாட்டியது. வரலாற்று ரீதியில் மேற்குலகோடு வணிக தொடர்பைப் பேணி வந்த குஜராத்தில் அமைதி நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை மொகலாயர்கள் உணர்ந்திருந்தனர். இந்தக் காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட லேவா படேல்கள், இசுலாமிய ’ஆக்கிரமிப்பாளர்களை’ எதிர்த்து போராடி நேரத்தை வீணாக்காமல் தொழில்களில் ஈடுபட்டு தம்மை வளப்படுத்திக் கொண்டனர்.

மொகலாயர்களுக்கும் தேவைப்பட்ட தொழில் அமைதி அன்றைய அண்டை பிராந்திய ஹிந்து மன்னர்களுக்குத் தேவைப்படவில்லை. வளமான குஜராத்தை கொள்ளையடிப்பதற்கான இலக்காக கொண்டனர் ஹிந்து மராத்தியர்கள். 1705-ம் ஆண்டு வாக்கில் மாராத்தியர்களின் கை ஓங்கி மொகலாயர்கள் குஜராத்திலிருந்து பின் வாங்கினர். மாராத்தியர்கள் தமது வருகையோடு மிகப் பிற்போக்கான நிலபிரபுத்துவ ஆட்சி முறையையும் கொண்டு வந்து சேர்த்தனர். மொத்த மாநிலமும் அதுவரை வணிகத்தின் மூலமும் விவசாயத்தின் மூலம் அடைந்திருந்த செழிப்பைச் சுரண்டித் தின்பதே ஹிந்து மராத்தியர்களின் நோக்கமாக இருந்தது. இதற்காக கீழ்மட்டத்தில் வரிவசூல் செய்யும் முறை ஒன்றை ஏற்படுத்தினர் – அதற்கு கன்பி மற்றும் லேவா சாதியினர் பொருத்தமான அடியாட்களாயினர்.

மோடிக்கு மட்டுமல்ல ஹர்திக்குக்கம் ஸ்பான்சர் பட்டேல்கள்தான்.
மோடிக்கு மட்டுமல்ல ஹர்திக்குக்கம் ஸ்பான்சர் பட்டேல்கள்தான்.

இவ்வாறு வரிவசூலில் ஈடுபட்ட கன்பி மற்றும் லேவா சாதியினருக்கு அளிக்கப்பட்ட பட்டம் – மட்டாதர். இதே சாதிகளைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் – பட்டிதார் (பட்டி – நிலம் (அ) நிலத்தின் அளவை). பின்னர் ஆங்கிலேயர்கள் மராத்தியர்களை விரட்டியடித்த பின்னரும் கீழ்மட்டத்தில் இருந்த நிர்வாக அலகுகளை அப்படியே பயன்படுத்திக் கொண்டனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது விசுவாசத்தை அதிகளவு நிரூபித்த படேல்களுக்கு தேசாய், அமீன் போன்ற பட்டங்களை வெள்ளையர்கள் வாரி வழங்கினர்.

காலை நக்கியே ’முன்னேற’ முடியும் என்பதற்கு சிறந்த இலக்கணம் படேல் சாதியினர். இன்றைக்கு படேல் சாதியினரின் தொழில் வளர்ச்சி திகைக்க வைக்கும் அளவுக்கு உள்ளதற்குப் பின் உள்ள வரலாற்றின் தோற்றம் இது தான். இன்றைய தேதியில் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ள படேல் சாதியின் பதவி விகிதங்களை கவனியுங்கள். 7 பேர் கேபினெட் அமைச்சர்கள். குஜராத்தின் 120 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். தவிர குஜராத்தின் வைர வியாபாரம், நெசவுத் தொழில் மற்றும் பல்வேறு சிறு மற்றும் குறுந் தொழில்கள் முற்றிலும் படேல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது போக கிராமப்புறங்களின் நிலவுடைமையையும் பணக்கார மற்றும் நடுத்தர பட்டேல் விவசாயிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

அமெரிக்கா என்ற தேசம் வல்லரசாக அமையத் துவங்கிய காலம் தொட்டே இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயரத் துவங்கிய படேல்களின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவின் 30 சதவீத உணவு விடுதிகள் உள்ளன. இங்கிலாந்தின் 50 சதவீத நடுத்தர மளிகைக்கடைகளுக்கு படேல்கள் சொந்தக்காரர்கள். முதல் தலைமுறையாக சிறு தொழில் முனைவோராக அமெரிக்காவுக்குச் சென்ற படேல்களின் இன்றைய வாரிசுகள் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருப்பதோடு தமது சாதியைச் சேர்ந்தவர்களை வளர்த்தும் விடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,45,000 படேல்கள் இருக்கிறார்கள்.

பட்டேலை வைத்து திசை திருப்பும் ஆளும் வர்க்கம்
பட்டேலை வைத்து திசை திருப்பும் ஆளும் வர்க்கம்

குஜராத்தின் பனியா சாதிகளில் செல்வாக்கான படேல்கள்தான் இந்துமதவெறியர்களின் முதன்மையான சமூக அடிப்படை. காங்கிரசின் செல்வாக்கில் இருந்த குஜராத்தில் இன்று பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களும் பட்டேல்கள்தான். இந்துமதவெறியர்களின் கலவரங்களில் குறிப்பிடத்தக்க பங்கையும் இவர்கள் அளித்தனர். இசுலாமிய வணிகர்கள் மற்றும் குறு முதலாளிகளோடு தொழில் ரீதியான போட்டியும் இவர்களை இயல்பாக இந்துமதவெறியர் பக்கம் சேர வைத்தது. மேலும் குஜராத்தில் மட்டுமல்ல வட இந்தியாவில் நடந்த பல்வேறு இந்து-முஸ்லீம் ‘கலவரங்களின்’ இறுதியில் இசுலாமியர்கள் தமது பராம்பரிய வணிக உரிமைகளை சொத்துக்களை இழந்ததை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

படேல்களின் இடவொதுக்கீட்டு ‘காதல்’ பின்னணியைப் புரிந்து கொள்வது அத்தனை சிரமமானது அல்ல. அவர்கள் முன்வைத்த கோரிக்கை முழக்கத்தின் முதல் பாதியை மட்டும் ஊதிப் பெருக்கிக் காட்டிய பார்ப்பன மற்றும் முதலாளிய ஊடகங்கள், அந்த முழக்கத்தின் பின் பகுதியை திட்டமிட்டு மறைத்தனர். “படேல்களுக்கு இடவொதுக்கீடு வழங்கு” என்று துவங்கும் அந்தக் கோரிக்கை, “எங்களுக்கு இல்லாவிட்டால் யாரும் இடவொதுக்கீடு வழங்காதே” என்று முடிவுறுகிறது. ஹர்திக் படேலின் ஆரம்ப கால பேரணி மற்றும் ஆர்பாட்ட நிகழ்ச்சிகளில் காவிக் கொடிகளோடும், பாரதிய ஜனதா கொடிகளோடும் இந்துத்துவ அமைப்புகளின் கொடிகளோடு தொண்டர்கள் கலந்து கொண்டதும் – இந்துத்துவ கும்பலின் இடவொதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடும், தற்போது இடவொதுக்கீடு குறித்து நாடெங்கிலும் பெரியளவில் “விவாதம்” ஒன்று நடந்து வருவதாக சொல்லப்படுவதும் தற்செயலானவைகள் அல்ல.

ஆகஸ்டு 25-ம் தேதி அகமதாபாத்தில் ஹர்திக் நடத்திய பேரணி முடிவதற்குள்ளாகவே, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வேறு ஒரு பிரச்சாரம் ’வைரலாக’ (திடீர் பரபரப்பு) கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் மோடிக்கு விண்ணப்பம் என்று துவங்கிய அந்த பகிர்வில் ”இடவொதுக்கீடு என்ற முறை இருப்பதால் தானே எல்லோரும் அதைக் கோரி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்? நாட்டின் முன்னேற்றத்திற்கும், திறமைக்கும், பொது அமைதிக்கும் எதிரான இந்த முறையையே ஒழித்து விட வேண்டும் என்ற கோரிக்கை திட்டமிட்டு பரப்பப்பட்ட்து.

இட ஒதுக்கீடு கொடு இல்லாட்டி எடு
இட ஒதுக்கீடு கொடு இல்லாட்டி எடு

சொல்லி வைத்தாற் போல் அடுத்தடுத்து வேறு சில நிகழ்வுகளும் நடந்தேறின. குஜராத் மாநில பிராமண சமாஜம் என்ற அமைப்பு உடனடியாக தமக்குள் உள்ள 400 உட்பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களோடு கலந்தாலோசித்து பிராமணர்களுக்கும் பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பேரணி ஒன்றை நடத்தினர். அதோடு, படேல்களின் போராட்டங்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பார்ப்பன சங்கம் நடத்திய பேரணியைத் தொடர்ந்து ரகுவன்ஷி என்ற இன்னொரு ‘உயர்’ சாதியைச் சேர்ந்த சங்கமும் இடவொதுக்கீடு கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளது.

‘மேல்’ சாதியினரின் இடவொதுக்கீடு கோரிக்கையை அடுத்து குஜராத் மற்றும் இந்தி பேசும் பிற வட மாநிலங்களைச் சேர்ந்த, ஏற்கனவே இடவொதுக்கீட்டின் பலன்களை அனுபவித்து வரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் படேல்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர். இடவொதுக்கீடு கோரும் போராட்டங்களுக்கு மிகையான முக்கியத்துவம் அளித்த முதலாளிய மற்றும் பார்ப்பன ஊடகங்கள், நடப்பது ஒரு நாய்ச் சண்டை என்பது போன்ற தோற்றத்தை ஒருபுறம் ஏற்படுத்தினர்.

பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு என்ற கோரிக்கையே இடவொதுக்கீட்டின் அடிப்படைகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் தான் முன்வைக்கப்படுகிறது. சமூக ரீதியில் பல்லாண்டுகளாக ஒதுக்கப்பட்டு அதன் விளைவாக பொருளாதாய வாழ்வு முடக்கப்பட்ட பிரிவினருக்கான தற்காலிக நிவாரணம் தான் இடவொதுக்கீடு. தட்டு பொறுக்கும் பார்ப்பனர்களும் பீயள்ளும் தலித்தும் பொருளாதார ரீதியில் ஒரே படித்தானவர்களாக இருக்கலாம் – ஆனால், இருவருக்கும் உள்ள சமூக அந்தஸ்தும், சமூக உறவுகளும், மேல்மட்ட தொடர்புகளும், முன்னேறும் வாய்ப்புகளும் சமமானதல்ல. தட்டு பொறுக்கும் பார்ப்பானுக்கு இடவொதுக்கீடு செய்வது என்பதன் பொருள் – அதன் அடித்தளத்தையே குலைப்பது தான்.

மேலும் இட ஒதுக்கீடு என்பதே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேறிய பிரிவினரின் அரசியல் வேட்கையைத் தணிக்க செய்யப்பட்ட நடவடிக்கை. கூடவே உலகமயமாக்க நாட்களில் சொல்லிக் கொள்ளப்படும் இந்த இட ஒதுக்கீடும் கிடைக்காத படி அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இட ஒதுக்கீடு கேட்டு வட இந்தியாவில் நடக்கும் ஆதிக்க சாதி ‘போராட்டங்கள்’ அனைத்தும் மக்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை திசைதிருப்பும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் இடவொதுக்கீடு வழங்க வேண்டும் என்ற “விவாதம்” பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக பார்ப்பன மற்றும் முதலாளிய ஊடகங்கள் பம்மாத்து செய்து கொண்டிருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ் முகாமிலிருந்து அதன் உண்மையான குரல் வெளிப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பாஞ்சஜன்யாவுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்து, இடவொதுக்கீட்டு முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இடவொதுக்கீட்டு முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதன் பின்னுள்ள பார்ப்பனிய தந்திரம் என்னவென்பதை யாரும் விளக்காமலேயே நாம் புரிந்து கொள்ள முடியும் – “குடிமைச் சமுகத்தின் அங்கத்தினர்” என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறான கமிட்டி ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படும் குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர்கள் யாராக இருப்பார்கள் என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.

அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும், பிற ஜனநாயக சக்திகளும் பல்லாண்டுகளாக போராடிப் பெற்ற இடவொதுக்கீட்டு முறையை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மக்களுக்கு பதில் சொல்லும் கடமை இல்லாத – இந்துத்துவ தலைமை பீடத்தால் பொறுக்கியெடுக்கப்பட்ட “குடிமைச் சமூக பிரதிநிதிகள்” என்கிற இந்துத்துவ அடியாள் கும்பலைக் கொண்டு ஒழித்துக் கட்டும் முயற்சி தான் இது. இந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்க சாதிகளை தொடர்ந்து செல்வாக்கில் வைத்திருக்க ஆர்.எஸ்.எஸ் செய்யும் முயற்சி இது.

பட்டேல்களின் போராட்டம் - ஆர்.எஸ்.எஸ்-இன் சதித் திட்டம்
பட்டேல்களின் போராட்டம் – ஆர்.எஸ்.எஸ்-இன் சதித் திட்டம்

ஹர்திக் படேலின் திடீர் எழுச்சியும், உயர் சாதியினரின் பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு கோரிக்கைகளும், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய கும்பலின் இடவொதுக்கீட்டுக்கு எதிரான கோரிக்கைகளும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் இடம் இது தான். மகாபாரத கர்ணனுக்கு தேரோட்ட முன்வந்த சல்லியனின் ஆத்மார்த்தமான விருப்பம் – கர்ணன் ஒழிந்து போக வேண்டும் என்பது தான். அதே பழைய பார்ப்பன தந்திரத்தை பின்பற்றி இடவொதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசும் தொணியிலேயே அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது இந்துத்துவ கும்பல்.

இடவொதுக்கீடு ஒரு தற்காலிக நிவாரணம், மக்களுக்கு முழு விடுதலை அல்ல என்றாலும், அது ஒரு ஜனநாயக கோரிக்கை என்ற முறையில் கூட நீடிப்பதை இந்துமதவெறியர்கள் விரும்பவில்லை. இடவொதுக்கீடு என்ற ஒரே அம்சத்தை தமது அரசியலின் அடித்தளமாக கொண்டிருக்கும் சமூக நீதிக் கட்சிகளோ படேல்களின் போராட்டத்திற்கு பின் உள்ள பார்ப்பன தந்திரத்தை காணும் திறனற்றவர்களாய் உள்ளனர். காரணம் இவர்களும் ஏனைய அரசியல் கொள்கைகளில் குறிப்பாக மறுகாலனியாக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதால் இந்த வேறுபாட்டிற்கு அடிப்படை இல்லை.

இட ஒதுக்கீட்டின் பெயரில் நடக்கும் போராட்டங்கள் மற்றும் விவாதத்தின் போது, மோடி அரசு முழு இந்தியாவையும் தினுசு தினுசாக விற்று வருகிறது. நில அபகரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு என்பதோடு, இந்துத்துவ செயல்திட்டங்களான இந்தி-சம்ஸ்கிருத திணிப்பு, கல்வி நிறுவனங்களை காவி மயமாக்குதல் போன்றவற்றையும் அமல்படுத்தி வருகின்றது.

இத்தகைய பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களை திசைதிருப்பும் வண்ணமாகவே பட்டேல்களை முன்வைத்து நடந்த இந்த போராட்டம் உதவியிருக்கிறது.

எனவே இதை வெறும் இட ஒதுக்கீட்டு பிரச்சினை என்று புரிந்து கொள்ளாமல் மோடி அரசின் பார்ப்பனிய மற்றும் பொருளாதார தாக்குதல்களோடு இணைத்து மக்கள் அரங்கில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

–    தமிழரசன்

ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?

2

2009-ம் ஆண்டு ஈழத்தில் இறுதி கட்டப் போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப் பொறுக்கும் திருவிழா களை கட்டியிருந்தது. எதிரிகளும், துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும் கூட்டணிகள் அமைத்து தேர்தலில் நின்றும், ஏதாவது ஒரு தரப்பை ஆதரித்தோ, எதிர்த்தோ பிரச்சாரம் செய்தும் ஈழத் தமிழர்கள் மீதான போரை முன்நின்று நடத்திக் கொண்டிருந்த இந்திய ‘ஜனநாயகத்துக்கு’ கொடி பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தகைய சூழலில் “ஈழப்போர் என்பது இந்திய அரசின் மேலாதிக்க நோக்கத்திற்காகவே. இதை முறியடிக்க போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம். புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்” என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர்.

ப.சிதம்பரத்துக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய சிவகங்கை வந்த காங்கிரசின் இளைய இளவரசர் ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி காட்டி கைதான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தோழர்களின் போலீசுடனும், நீதித்துறையுடனுமான போராட்டம் 6 ஆண்டுகள் நீடித்தது. காட்டியது கொடி என்றாலும் அரசும், போலிசும் அதை வைத்து எப்படி எதிர்ப்புணர்வை முடக்க நினைக்கிறது என்பதை இந்த 6 ஆண்டு கால வரலாறு காட்டுகிறது.

கருப்புக்கொடி !

ழத்தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிப்போர் 2009-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உச்சகட்டத்தில் இருந்தது. கொத்துக்கொத்தாக தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் போரை இந்திய அரசுதான் சிங்கள இராணுவத்திற்க்கு முன்னணி படையாக நின்று வழி நடத்திக் கொண்டிருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் துயரக்குரல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுகிறோம். இந்தப் போரை நிறுத்துங்கள்” என்று கதறினார்கள். ஆனால், இந்தக் கதறல் நொடிக்கு நொடி தமிழ் மக்களின் துயரை பேசி திரிந்தவர்களின் காதில் விழவில்லை. (விழுந்தாலும் கேட்காத மாதிரியே நடித்தார்கள்) அவர்களின் காதில் விழுந்தது என்னமோ நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி பேரம், தொகுப்பங்கீடு என்று பொறுக்கித்தின்னும் அரசியலின் வாய்ஜாலங்களே. அவர்களுக்கு தேர்தல், நாற்காலி, அமைச்சரவை, எம்பி, எம்.எல்.ஏ. இதுதான் முக்கியம். இதற்காக அவர்கள் வாய் நீளாத இடமில்லை

இந்த அயோக்கியர்களின் உண்மை முகம் அறியாத தமிழ் மக்களோ இவர்களிடமே போரை நிறுத்த சொன்னார்கள். இது ஒரு குழந்தையை கடத்திச் சென்று கண்ணைப் பிடுங்கி, பிச்சை எடுக்க வைக்கும் அயோக்கியனிடமே, அந்தக் குழந்தை தன்னை விடுவிக்கக் கோருவதற்கு சமம். அந்தக் குழந்தைக்காவது தன் கண்ணை பிடுங்கியவன் யார் என்று தெரியும். பாவம் ஈழத்தமிழ் மக்களுக்கோ யார் பிழைப்புவாதிகள், யார் துரோகிகள் என்று தெரியாது. கையேந்தி உயிர்ப்பிச்சை கேட்டு நின்றார்கள்.

ஆனால் ஓட்டுப் பொறுக்கிகள் தங்களது கைதேர்ந்த பிழைப்பு வாதத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டினர்.

ஈழப் படுகொலை - தமிழக ஓட்டுப் பொறுக்கல்
ஓட்டுப் பொறுக்கிகள் தங்களது கைதேர்ந்த பிழைப்பு வாதத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டினர்.

1. “போரென்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்” என்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசிய ஜெயாவுடன், தமிழ் மக்களின் இரத்த உறவு என்று சொன்ன வைகோ கூட்டணி, பழ.நெடுமாறன் கூட்டணி (இவர்கள் தான் இந்த தாயை ஈழத்தாயாக அறிவித்தார்கள்.)

2. நாம் தமிழர் – சீமானோ “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று முழங்கினார். தமிழர் கண்ணோட்டம் மணியாசனோ “காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க” என்று மறைவில் இலைக்கு ஆதரவு தேடினார்.

3. “தமிழ் நாட்டின் பிரபாகரன்” என்று அழைக்கப்பட்ட தொல் திருமாவளவனோ, ஈழத்தமிழ் மக்களின் மீதான போரை இந்திய அரசு சார்பில் நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடன் அடைக்கலம்

4. பா.ம.க. இராமதாஸ் ஈழ ஆதரவு வேடம் தரித்து அ.தி.மு.க-உடன் இணைந்தார். ஒரு பின் குறிப்பு : மருத்துவரின் மகள் அன்புமணி இராமதாசோ, இதற்கு முன்னாள் காங்கிரசு அமைச்சரவையில், மத்திய அமைச்சர்; ஈழ மக்களுக்கு ஆதரவாக தனது இரண்டு மாத பதவியைக் கூட துறக்காத உத்தமர்.

5. இராஜீவின் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்க்கு கூஜா தூக்கிய வலது கம்யூனிஸ்டு கட்சி தா.பாண்டியன் ஈழ ஆதரவு நிலைப்பட்டுக்கா போயஸ் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தார்.

6. மார்க்சிஸ்டுகள் மட்டும் தான் அம்மாவுடன் கொள்கைபூர்வமாக கூட்டணி அமைத்தார்கள் என்பது இன்னொரு கேலிக்கூத்து.

7. பா.ஜ.க வெளிப்படையாகவே நாங்களும் காங்கிரசும் ஈழப்பிரச்சனையில் ஒன்று என்று பகிங்கிரமாகவே அறிவித்தது. ஆனால் இல.கணேசனும், தமிழிசையும் வாயளவில் பேசி தமிழின ஆதரவாளர்கள் பின்னால் திரிந்தார்கள்.

இப்படி எல்லா கூட்டங்களிலும் துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் நிறைந்து இருந்ததால் எந்தக் கூட்டணியும் எதிர் கூட்டணியைப்பற்றி புகார் தெரிவிக்காமல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் அமைதியான வழியில் நடந்தது.

ஈழப் படுகொலை - தமிழக ஓட்டுப் பொறுக்கல்
தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர் (கோப்புப் படம்).

காங்கிரஸ்காரர்களோ, “ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது, ஈழதமிழ் மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வோம” என்று பொய் கூறி திரிந்தனர்; எந்த வித எதிர்ப்பும் இன்றி தமிழ்நாட்டுக்குள் ஓட்டு கேட்க வந்து போய் கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட நிலைமையில் தான் தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர்.

“ஈழப்போர் என்பது இந்திய அரசின் மேலாதிக்க நோக்கத்திற்காகவே. இதை முறியடிக்க போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம். புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்” என்ற முழக்கத்தின் கீழ் மக்களை உணர்வூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை ம.க.இ.க மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் குலக்கொழுந்து ராகுல் காந்தி 08-05-2009 அன்று சிவகங்கை வரவிருப்பதை அறிந்தார்கள்

பொதுக்கூட்டம் நடக்க இருந்த 08-05-2009-க்கு ஒரு நாள் முன்பே கருப்புக்கொடி காட்டப்போவதாக பத்திரிகை மற்றும் காவல்துறைக்கு அறிவித்தார்கள். போலீசுக்கோ அதிர்ச்சி. அரண்டு போய் எழுந்து தோழர்களை வலை வீசித் தேடினார்கள். தோழர்கள் காவல்துறை கண்ணில் தட்டுப்படவில்லை. போலீசின் மோப்ப சக்தியை நன்கு உணர்திருந்ததால் வீட்டில் இல்லை. தோழர்களின் தொலைபேசிக்கு அழைத்து எப்படியாவது பேசி மயக்கி பிடித்து விடலாம் என்று கட்டம் கட்டினார்கள் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவி பல அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்புக் கொடியுடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்தனர், ம.க.இ.க தோழர்கள் கணேசன், இராஜாங்கம் மற்றும் பு.ஜ.தொ.மு தோழர்கள் ஆனந்த் மற்றும் சபி.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் குலக்கொழுந்து ராகுல் காந்தி

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இராகுல் சிரித்த முகத்துடன், கை அசைத்து மேடையின் அருகில் வந்த போது தோழர்கள் நால்வரும் தங்கள் ஆடைக்குள் வைத்திருந்த கருப்புத் துணியை எடுத்து இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “ஈழத்தமிழ் மக்களை ஒடுக்கும்  இராகுலே திரும்பிப் போ” என்று கோசம் போட்டார்கள்.

இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது. உடனே காங்கிரஸ் கயவாளிகள் கட்டையை உருவி தோழர் ஆனந்தின் தலையில் அடித்தனர். மற்ற தோழர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் கோஷமிட்டனர். சிறிது நேரம் கழித்து வந்த காக்கி துறை அங்கிருந்த தோழர்களை பிடித்துக் கொண்டு போய் போலீஸ் வண்டியில் போட்டு அடைத்தனர்.

இதற்கு பின்பு பேச வந்த இராகுலுக்கு ஒரே நடுக்கம். பதின்மூன்றே நிமிடத்தில் மொழிப்பெயர்ப்புடன் கூடிய தனது உரையை முடித்து விட்டு, “ப.சிதம்பரத்துக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கூட சொல்லாமல் அவசரமாக ஒடினார். சுதாரித்த ப.சிதம்பரம் வேகமாக போய் இராகுலின் காதில் முணுமுணுக்க அவர் திரும்பி வந்து “ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடுங்கள்” என்று சொல்லி ஓடி விட்டார். இதன்பின் திருச்சிக்குச் சென்ற இராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அங்கு காத்திருந்தனர் புரட்சிகர இயக்கங்கள்.

ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப்படம்)

ஆனால் கருப்புக் கொடி காட்டிய சிவகங்கை பகுதி தோழர்களை, போலீஸ் கடத்திச் சென்றது. ஐந்து மணி நேரமாக தோழர்கள் எங்கு இருந்தார்கள் என்பதே தெரியவில்லை. பின்பு இருக்கும் இடத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் எஸ்.பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றனர்.

கடத்தி சென்ற போலீஸாரோ தங்களால் முடிந்த அளவுக்கு தோழர்களின் ஆடைகளை கழட்டி இழிவுபடுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொடூரமாக தாக்கினர். சிவகங்கையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காளையார்கோவில் காவல்நிலையத்தில் வைத்து வழக்கு பதிவு செய்தனர். அங்கு சார்பு ஆய்வாளராக இருந்த லேடி சுந்தரி என்பவர் “யாரிடம்  எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு கருப்பு கொடி காட்டினீர்கள்” என்று கேட்க,

“நாங்கள் புரட்சியாளர்கள் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்றவுடன் தான் சட்டையில் மாட்டியிருந்த நேம்பேட்ஜை கழற்றி பைக்குள் வைத்துக் கொண்டு சென்றவர் கடைசி வரை வரவில்லை.

ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப்படம்)

தோழர்களை காளையார் கோவிலுக்கு கொண்டு செல்லும் வழியால் காட்டுப் பகுதியில் சென்றனர்.

“காட்டுக்குள் ஏன் செல்கிறீர்கள்” என்று கேட்க,

“உங்களை சுட்டுக் கொல்லப் போகிறோம்” என்றான் செல்லப்பனேந்தல் கார்த்திக் என்ற போலீஸ்காரன்.

“முடிந்தால் சுட்டுப்பார்” என்றனர் தோழர்கள்.

கோபமுற்ற போலீஸ்காரர்களான கார்த்திக், முத்துக்கருப்பன் கடுமையாக தோழர்களை தாக்கினார்கள்.

தோழர்கள் பதிலுக்கு, “நீங்கள் பணத்திற்காக வேலை செய்கிற அடியாள்படை. நாங்கள் லட்சியத்திற்காக போராடுகிற போராளிகள். நீங்கள் 15 பேர் நாங்கள் 4 பேர். வண்டியை விட்டு இறங்கி அடித்து பார்ப்போம் யார் யாரை அடிக்கிறோம்” என்று கூற எஸ்.ஐ-யாக இருந்த பிரபாகரன் சத்தம் போட்டு, “அடிக்காத கார்த்தி எஸ்.பி-யிடம் சொல்வேன்” என்றவுடன் அடிப்பதை நிறுத்தினார்கள்.

இதற்கு முன்னராக தோழர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதற்கு, “சிறுநீர் தருகிறோம் குடிங்கடா” என்று கூறி அவமானப்படுத்தினார், கார்த்திக்.

பின்பு நள்ளிரவில் மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கொண்டு செல்லும் முன்பாகவே போலீஸ்-மாஜிஸ்ரேட், காங்கிரஸ் சிவகங்கை மாவட்ட தலைவர் ஆகியோர் அனைவரும் சேர்ந்து தோழர்களுக்கு எதிராக பொய் கேஸ் தயாரித்து பிணையில் உடனே வெளி வர முடியாத அளவிற்கு எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்பு தான் மாஜிஸ்ட்ரேட் அனுராதா வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்தம்மா முன் கூட்டியே முடிவு செய்ததை, தோழர்களிடம் கையெழுத்து வாங்க காத்து நிமிடம் தான் ஆனது. எந்த விசாரணையும் செய்யவில்லை. தோழர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்கவில்லை. இதற்காக வழக்கறிஞர் தோழர்கள் போராடியும், அந்தம்மா அதை மறுத்து ஓடி விட்டார்.

ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப் படம்)

பின்பு தோழர்களை மதுரை மத்திய சிறையில் கொண்டு போய் அடைத்தனர். 15 நாட்கள் கழித்து தோழர்கள் வழக்கறிஞர் தோழர்களின் கடும் முயற்சியால் பிணையில் வந்தனர்.

ஆனால் பொய் வழக்கோ தொடர்ந்தது. பொய் வழக்கு என்னவென்றால் தோழர்கள் நான்கு பேரும் கருப்புக்கொடி காட்டவில்லையாம், (இராகுலின் முகத்திடம் கேட்டிருக்கலாம் பதில் சொல்லியிருக்கும்) மாறாக தோழர்கள் நான்கு பேரும் கூட்டத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களை கெட்டவார்த்தையால் திட்டி, கன்னத்தில் அறைந்து, வயிற்றில் குத்தி, அவர்கள் கையில் கட்டியிருந்த 2000ரூ கடிகாரத்தை உடைத்தும் அராஜகம் செய்தார்களாம். இப்படித்தான் இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்கள். இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் தேட நீதித்துறைக்கு ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது.

இப்போது 2015 ஜூலை மாதம்தான் வழக்கை தள்ளுபடி செய்து தோழர்களை விடுவித்துள்ளார்கள். ஆறு வருடங்களாக வழக்கு, வாய்தா, போன்று தோழர்களின் வாழ்க்கையிலும், இழப்புகள் ஏராளம். இதையெல்லாம் கடந்து தான் தொடர்ந்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தோழர்கள் களத்தில் நின்றனர்.

இதை அன்றே உணர்ந்த ஒருவர் கருப்புக் கொடி காட்டியதற்க்கு மறுநாள் ஒரு டீக்கடையில் தோழர்கள் நின்று பேசும் போது அவர்களிடம் கூறியது. “அவர்கள் நான்கு பேரும் சிங்கம்யா. அவ்வளவு கூட்டத்தைப் பார்த்தும் பயப்படாமல் கருப்புக்கொடி காட்டி இரத்தம் சொட்ட அடிவாங்கி, கோஷமிட்டு துணிச்சலா நின்றதை நான் அருகில் நின்று பார்த்தேன். இராகுல், சிதம்பரம் முகம் சுருங்கி விட்டது. ஈழத்திலே தமிழர்களை அழித்து விட்டு தமிழ் நாட்டுக்குள் இவனுங்கள நுழைய அனுமதிக்கலாமா? மிகப்பெரிய காரியம் பண்ணிட்டாங்கையா. பலருக்கும் சந்தோசமையா” என்று கூறி முடித்தார்.

வெள்ளை ஆதிக்க காலத்தின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வீரமிகு வரலாற்றை இன்று இந்த மண்ணில் புரட்சிகர இயக்கங்கள் தொடர்கின்றன.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை

லாட்டரி மார்ட்டின் : கொள்ளைப் பணத்தில் கொள்கை தானம் !

12
லாட்டரி மாஃபியா மார்ட்டின்

Lotteriesகோவையின் கல்லூரி மாணவர்கள் சந்தித்து அரட்டையடிக்க வாய்ப்புள்ள இடங்களில் முதன்மையானது தேநீர் கடைகள். கோவையின் டீ மாஸ்டர்கள் கணக்கில் அசகாய சூரர்கள். “மாஸ்டர், டூ பை த்ரீ… சிக்ஸ் பை 15.. ஒன் பை போர்” என்று விதம் விதமாக வேண்டுகோள் வந்தாலும் குழம்ப மாட்டார்கள். அதிலும், காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் முன்பு ஒரு கில்லாடி கேரள சேட்டன் இருப்பார்.. அவருக்காகவே அந்தக் கடையில் கூட்டம் அள்ளும்.

மேற்படி நாயர் கடையில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இருந்த அந்தக் கட்டிடத்தின் முன் அப்போதே விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கும். பளபளப்பான மேட்டுக்குடி மக்களுக்கு இந்த அழுக்கு சந்துக்குள் என்ன தான் வேலை?

“டேய்… மார்ட்டினை பார்க்க வந்திருருப்பானுக டா.. மார்ட்டின் தெரியுமில்லெ? எமத் திருடன்” நண்பர்கள் குசுகுசுத்தது நினைவில் இருக்கிறது.

மார்ட்டின்…!

கோவையின் அசிங்கம். தற்போது மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கொத்தா மற்றும் சிலிகுரி மாவட்டத்தில் நடந்த வருமானவரித் துறையினரின் சோதனைகளில் சுமார் 80 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி சோதனைகளில் லாட்டரி மார்ட்டினின் நெருங்கிய தொழில் கூட்டாளியான நாகராஜன் மற்றும் செந்தில் குமார் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்டரி மாஃபியா மார்ட்டின்
லாட்டரி மாஃபியா மார்ட்டின்

சோதனைகளில் கிடைத்த ரொக்கத்தைத் தவிர, சுமார் 1200 வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளின் மூலம், மத்திய கிழக்கிலிருந்து வங்க தேசத்தின் வழியே சிக்கிம் மாநிலத்திற்கு நுழைந்துள்ள ஹவாலா பணம், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தின் மூலம் தென் மாநிலங்களுக்குப் பாய்ந்துள்ளது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட கருப்புப் பணம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வைத்து ரியல் எஸ்டேட் தொழிலின் மூலம் வெள்ளையாக்கப்படுவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள நாகராஜனுக்கு சொந்தமான டீசல் மார்க்கெட்டிங் ஏஜென்சி என்ற நிறுவனம் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட ஒரு உப்புமா கம்பெனி. துவங்கிய சில மாதங்களிலேயே இந்தக் கம்பெனியும் ஜார்கண்டைச் சேர்ந்த ஸ்மார்ட் அசோசியேட்ஸ் என்ற மார்ட்டினின் கம்பெனியும் இணைகின்றன.

இணைப்பிற்குப் பின் 2013 பிப்ரவரி மாதம், சட்டப்படியான ஆவணங்களின் படியே டீசல் மார்க்கெட்டிங் நிறுவனம், மார்ட்டினின் இரண்டு மகன்களுக்கு சுமார் 1000 பங்குகளை கைமாற்றிக் கொடுத்துள்ளது. இந்த பரிவர்த்தனைக்குப் பின் வேறு தொழில் முகாந்திரங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் பினாமிகளின் கட்டுப்பாட்டில் பல உப்புமா நிறுவனங்களைத் துவக்கியுள்ள மார்ட்டின், அவற்றை ஹவாலா கருப்புப் பண சுழற்சிக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார்.

போலி லாட்டரியின் மன்னன் என்று வருணிக்கப்படும் மார்ட்டினின் சொத்து மதிப்பு சுமார் 7000 கோடிகளாக இருக்கலாம் என்று பத்திரிகை செய்திகள் மதிப்பிடுகின்றன. ஆனால், பினாமிகளின் பேரிலும் இன்னும் இரகசியமான வகைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவர் குவித்து வைத்திருப்பது நிச்சயம். உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவு என்பதை எவரும் அறிய முடியாது. இந்தியாவிலோ இன்னும் மோசம்.

மனைவி லீமா ரோசுடன் லாட்டரி தாதா மார்ட்டின்
மனைவி லீமா ரோசுடன் லாட்டரி தாதா மார்ட்டின்

இன்றைக்கு தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடை செய்யப்பட்டிருப்பதாக சொன்னாலும், போலி லாட்டரி எந்த தடையுமின்றி புழக்கத்தில் தான் உள்ளன. மாவட்ட வாரியாக லாட்டரி முகவர்கள், அவர்களுக்குக் கீழ் வட்டார முகவர்கள், இவர்களுக்கு கீழே விற்பனை பிரதிநிதிகள் என்று இந்த இரகசிய வலைப்பின்னல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. லாட்டரி மோகத்திற்கு அடிமையானவர்களை தடைக்குப் பின்னும் அறிந்து வைத்திருக்கும் விற்பனை பிரதிநிதிகள், அவர்களிடம் துண்டுச் சீட்டில் எழுதிய எண்களை விற்கிறார்கள். காலையில் இவ்வாறு விற்கப்படும் போலி லாட்டரி சீட்டுகளுக்கான முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்படுகின்றன.

முடிவுகள் மாவட்ட – வட்டார முகவர்களின் வழியே விற்பனை பிரதிநிதிக்கு சொல்லப்பட்டு அவர்கள் மூலம் அந்த குறிப்பிட்ட எண் கொண்ட சீட்டை வாங்கியவருக்கு சொல்லப்படுகிறது. இதில் போட்ட காசைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளமானவர்கள் – ஆனால், எவரும் வாயைத் திறக்க முடியாது. லாட்டரி வலைப்பின்னலின் ஒவ்வொரு கண்ணியும் நெருக்கமாகவும் இரசியமாகவும் உள்ளதோடு ஒரு மாஃபியா கும்பலைப் கட்டுக்கோப்புடன் போல் செயல்படுகிறது. காசைத் தொலைத்தவர்கள் ஒருவேளை எதிர்த்தால், அவர்களை நேரடியாகவும், லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய போலீசு மற்றும் அரசு அதிகாரிகள் மூலமும் ’தட்டி’ வைப்பார்கள்.

லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் இவ்வாறாகவும், தடையில்லாத மாநிலங்களில் சட்டப்பூர்வமாகவும் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ளனர் லாட்டரி மாஃபியாக்கள். இந்த மாஃபியா கும்பல்களிலேயே பெரிய கும்பலின் தலைவர் தான் சாண்டியாகோ மார்ட்டின்.

1988-ல் லாட்டரி தொழிலுக்குள் மார்ட்டின் இறங்குவதற்கு முன் பர்மாவில் சாதாரண தொழிலாளியாக இருந்தார் என்று சொல்வார்கள். அதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பூர்வாசிரமம் என்னவென்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பொதுவில் இத்தகைய திடீர் முதலாளிகள் உழைத்து முன்னேறினார்கள் என்பதற்காகவே இத்தகையை பழங்கதைகள் நேர்த்தியான திரைக்கதையாக தயாரிக்கப்படுகின்றன.

பச்சமுத்து கட்சியில் சேர்ந்தார் லீமா ரோஸ்
பச்சமுத்து கட்சியில் சேர்ந்தார் லீமா ரோஸ்

கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் பத்திருபது ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிகளின் அதிபதி என்றால் அது நேர்மையான வழியில் இருக்க முடியுமா என்ன? இந்நிலையில், தமிழகத்தில் 2003-ம் ஆண்டு வாக்கில் லாட்டரி தடை அமுலுக்கு வந்த போது மார்டினின் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பு 14 ஆயிரம் கோடி என்பது வியப்பு ஏற்படுத்தவில்லை.”எப்படி இவன் அம்மாவை பகைத்துக் கொண்டான்?” என்பதே பலருடைய வியப்புக்கு காரணம்.

ஆட்சியில் யார் அமர்ந்தாலும் உடன் போய் ஒட்டிக் கொண்டு தன்னையும் தனது லாட்டரி சாம்ராஜ்யத்தையும் பாதுகாத்துக் கொள்வது மார்டினுக்கு கைவந்த கலை. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய “இளைஞன்” திரைப்படம் மார்டினின் தயாரிப்பில் வெளியானது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம் – ஆனால், அந்த பாடாவதி படத்திற்கு கருணாநிதி எழுதிய மொக்கை வசனத்திற்கு வழங்கப்பட்ட சம்பளம் 45 லட்சம். அந்த தொகை தான் கருணாநிதி வாங்கிய சம்பளத்திலேயே அதிகமானதாம்.

45 லட்சத்தை சும்மா தூக்கிக் கொடுக்க மார்டின் ஒன்றும் இனா வானா அல்ல – 2011-ம் ஆண்டு கேரள அரசு மார்டின் மீது வழக்குத் தொடுத்த போது அப்போதைய தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் மார்டினுக்காக கேரள நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பின்னர் கேரள அரசே தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பிய பின், ராமனை அந்த வழக்கிலிருந்து திரும்ப பெற்றார் கருணாநிதி.

தொன்னூறுகளின் துவக்கத்தில் அ.தி.மு.கவுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேன் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். மீண்டும், 2001-ல் அ.தி.மு.க் ஆட்சிக்கு வந்ததும் அங்கே ஒட்டிக் கொள்ள கடும் முயற்சிகள் செய்துள்ளார் மார்டின். அப்போது நடந்த பேரம் படியாததால் தான், 2003-ல் லாட்டரி தொழிலை தடை செய்து மார்டினை நெருக்கடிக்குள் தள்ளியது அ.தி.மு.க அரசு.

மார்ட்டினின் மூத்த மகன் சார்லஸ் மார்ட்டின்
மார்ட்டினின் மூத்த மகன் சார்லஸ் மார்ட்டின்

மீண்டும் தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டாலும், லாட்டரியை மீண்டும் திறந்து விட்டு மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொள்ள கருணாநிதி தயங்கினார். ஆனால், அதற்குள் மார்டினின் வலைப்பின்னல் தமிழகத்தைத் தாண்டி மற்ற தென்னிந்திய மாநிலங்களில் வலுவாக நிலை கொண்டிருந்தது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் – நில ஆக்கிரமிப்பு மற்றும் அது தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளை தி.மு.கவின் ஆதரவோடு தக்க வைத்துக் கொண்டார் மார்ட்டின்.

இந்த சமயத்தில் கோவை காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் அமைந்திருந்த லாட்டரி தலைமை அலுவலகம் ரியல் எஸ்டேட் கொள்ளைகளின் குவிமையமாக மாற்றமடைந்திருந்தது. கோவை மாவட்டம் மட்டுமின்றி கொங்கு பெல்ட்டில் எங்கே கோடிகளில் நில பேரங்கள் நடந்தாலும், அதில் மார்டினின் கை இருக்கும் என்று சொல்லுமளவிற்கு தனது செல்வாக்கை நிலை நாட்டியிருந்தார். மற்ற மாநிலங்களில் சட்டவிரோத லட்டரித் தொழிலில் ஈட்டிய கள்ளப்பணத்தை வெள்ளையாக்க தமிழகத்தின் ரியல் எஸ்டேட் தொழிலை பயன்படுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடைசெய்யப்பட்டிருந்தாலும், தனது வலுவான வலைப்பின்னலின் மூலம் சட்டவிரோத லாட்டரிகளை நடத்தி வந்திருக்கிறார் மார்ட்டின் – அத்தனைக்கும் 2006 – 2011 காலகட்டத்தில் தி.மு.கவின் நேரடி மற்றும் மறைமுக ஆசி இருந்தது. அந்த உதவிக்கான கைமாறுதான் 45 லட்ச ரூபாய் சம்பளம்.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க பதவிக்கு வந்ததும் மார்ட்டின் குடும்பத்தின் மேல் சராமாரியாக வழக்குகள் பாய்ந்தன. மார்ட்டினின் மீதே நில அபகரிப்பு வழக்குகள் அடுக்கடுக்காக பாய்ந்தன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க அம்மாவின் ஆசியோடு மார்ட்டின் தனது மனைவியின் மூலம் கருணாநிதியின் மகள் செல்வியின் மீது ஒரு வழக்கை பதிந்தார் – தனது கணவருக்கு நில அபகரிப்பில் தொடர்பு ஏதும் இல்லை என்றும், கருணாநிதியின் மகள் செல்வியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அதில் மார்டினின் மனைவி லீமா ரோஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

ஜெயலலிதா எதிர்பார்த்ததும் இது தான் – அதாவது, எப்போது வேண்டுமானாலும் கருணாநிதி குடும்பத்திற்குள் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான கதவை மார்ட்டினைக் கொண்டு திறந்து வைத்துக் கொண்ட ஜெயலலிதா, அதன் பின் மார்ட்டினின் மேலான வழக்குகளின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டார்.

பா.ஜ.கவில் சேர்ந்தார் சார்லஸ் மார்ட்டின்
பா.ஜ.கவில் சேர்ந்தார் சார்லஸ் மார்ட்டின்

ஏறக்குறைய இதே நேரத்தில் மார்ட்டினின் மற்ற மாநில போலி லாட்டரி தொழிலும் தொய்வடைந்திருந்தன. கர்நாடக அரசில் நல்ல செல்வாக்கோடு இருந்த மார்ட்டின் அங்கே நடந்த ஆட்சி மாற்றங்களுக்குப் பின் புதிய அதிகார பீடங்கள் உடனான பேரங்கள் படியாமல் முரண்பட்டிருந்தார். கேரள ’காம்ரேடுகளின்’ கட்சிக்கு 2 கோடி ரூபாய் மொய் வைத்து முந்தைய ’இடது’ முன்னணி அரசின் உள்வட்டங்கள் வரை நுழைந்து வருமளவிற்கு செல்வாக்கோடு இருந்தவருக்கு அடுத்து வந்த காங்கிரசின் மேல்மட்டத்தோடு பேரம் படியவில்லை.

கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக மார்டினின் போலி லாட்டரி தொழிலை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த கர்நாடக அரசு, மார்ட்டினின் நெருங்கிய கூட்டாளியான பார் ராஜனை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. கேரள அரசாங்கம் 2011-ம் ஆண்டு முதலே வழக்கு மேல் வழக்காக தொடுத்து மார்ட்டினின் லாட்டரி தொழிலை நெருக்கடிக்குள் தள்ளி விட்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிம் மாநில அரசு தமக்குச் சேர வேண்டிய 4500 கோடி ரூபாய் வருவாயை மார்ட்டின் கையாடி விட்டதாக வழக்கு ஒன்றைத் தொடுத்திரக்கிறது. இவை தவிர வருமான வரித்துறையினரால் 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் மார்ட்டினின் மேல் பதியப்பட்டுள்ளன.

தனது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகளே ஒரே வழி என்று தீர்மானித்த மார்ட்டின், தன்னைப் போலவே சிந்தித்து தனது கல்வி வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயர்பலகை கட்சி நடத்தி வரும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவின் கட்சியில் தனது மனைவி லீமா ரோஸை இணைய வைக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த மோடியின் மேடையை லீமா ரோஸ் வீர வாளும் கையுமாக அலங்கரித்தார்.

தமிழர் விடியல் கட்சியின் மேடையில் டைசன் மற்றும் திருமுருகன் காந்தி
தமிழர் விடியல் கட்சியின் மேடையில் டைசன் மற்றும் திருமுருகன் காந்தி

மனைவியின் மூலம் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியில் நுழைந்த மார்ட்டின் தனது மூத்த மகன் சார்லஸ் ஜோஸ் மார்டினை பாரதிய ஜனதா கட்சியிலேயே நுழைத்துள்ளார். இன்னொரு மகன் டைசனை வைத்து தமிழர் விடியல் கட்சி என்ற இன்னொரு பெயர் பலகை அமைப்பைத் துவங்கி தமிழ்நாட்டின் தமிழ் மற்றும் ஈழ “உணர்வாளர்களோடு” நெருங்கியுள்ளார். இதே டைசனால் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்திக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என அந்த அமைப்பிலிருந்து விலகிய உமர் சமீபத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தது நினைவிருக்கலாம். மேலும் இதே டைசன் பல்வேறு ‘போரட்டங்களில்’ கலந்து கொண்டு போஸ் கொடுக்கும் ஃபோட்டோக்களை மேற்படி தமிழ் உணர்வாளர்கள் மரியாதையுடன் வெளியிடுகின்றனர்.

காலையில் கக்கூசு ஒழுங்காக போகவில்லை என்றாலும் கருணாநிதியை காரணம் காட்டும் உணர்வாளர்கள், தற்போது லாட்டரி மார்ட்டின் வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் தி.மு.கவை விமரிசிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பதே உமரின் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நிரூபிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை ‘உணர்வாளர்கள்’ என்ற பெயரில் செயல்படும் பல்வேறு பெயர்ப்பலகை குழுக்களின் யோக்கியதை இதுதான். இதற்கு மேல் நாம் உள்ளே நுழைந்து எதையும் புதிதாக கண்டுபிடிக்கவோ நிரூபிக்கவோ அவசியமில்லை.

ஜெயாலலிதா, கருணாநிதி, போலிக் கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், பாரதிய ஜனதா என்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் தமிழ் சார்ந்த குட்டிக் குழுக்கள் வரை மார்ட்டினின் பணம் விளையாடுகிறது. உங்கள் முன்னே தெரிவிக்கப்படும் பல்வேறு ‘அரசியல்’ கொள்கைகள் – போராட்டங்கள் – களப்பணிகளின் ஸ்பான்சரே மார்ட்டின்தான் என்றால் அந்த அரசியலின் யோக்கியதை என்ன என்பதை விளக்க வேண்டுமா?

ஆளும் வர்க்கம், அரசு மட்டுமல்ல அரசியல் கொள்கை சாரந்து பேசும் கட்சிகளும் காலாவதியாகி வருகின்றன. புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் மக்கள் அதிகாரம் மலர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதற்கு மார்ட்டினின் லாட்டரி கொள்ளைப் பணமும் அந்த கொள்ளைப் பணம் பேசும் ‘கொள்கைகளும்’ ஒரு சான்று!

–    தமிழரசன்.

செய்தி ஆதாரங்கள்: