Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 614

TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

31

35 வயதில் வாழ்க்கையை திரும்ப ஆரம்பிக்க முடியுமா?

14 வருடங்களாக தடுப்பலைகளில் எதிர் நீச்சல் போட்டு, அழுது, சிரித்து, சோர்ந்து போய், இரவு முழுதும் கண் விழித்து வேலை பார்த்தது எல்லாம் இப்போது அர்த்தமில்லாமல் ஆகியிருக்கிறது.

இனிமேல் புதிதாக தொடங்க வேண்டுமாம். இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடி, அங்கும் படிப்படியாக உள்ளே பொருந்தி போய், நமது திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்ய வேண்டுமாம். இது சாத்தியமா?

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க

இப்படி ஒரு நாள் வரும்னு நினைச்சே பார்த்ததில்ல. ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க. “இது மேனேஜ்மென்ட் முடிவு, நான் ஒண்ணும் செய்ய முடியாது. பாருங்க, நானே மன உளைச்சலில் இருக்கிறேன்” ன்னு எச்.ஆர் முறிச்சி சொல்றாரு. எத்தனையோ கடிதங்களில், நீங்க இல்லாம இதை நாம சாதிச்சிருக்க முடியாதுன்னு இவங்க சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைதானா!

யார்கிட்ட போய் சொல்றது, அடுத்து என்ன என்று தெரியவில்லை.

பக்கத்து இருக்கைகளில் இருக்கறவங்க மனசில, நமக்கும் இது போல நடந்திடுமோன்னு ஒரு பயம்; இது வரை நடக்கலைன்னு ஒரு நிம்மதி; நம்மைப் பார்த்து அழவா, சிரிக்கவான்னு ஒரு குழப்பம்; வாழ்த்து சொல்லி, ஒரு செண்ட் ஆஃப் கொடுத்து அனுப்பிடலாம்னு முயற்சிக்கிறாங்க. அவங்க மேல போட்டியோ, பொறாமையோ எனக்கு இல்லை.

எனக்கு ஏன் இப்படி நடந்தது? கல்லூரியில் ஆரம்பிச்சி இந்த இடத்தை வந்தடைய அப்பப்பா எவ்வளவு உழைப்பு, போட்டிகள். அத்தனையும் ஒரு நொடியில் நொறுங்கி விட்டது.

டி.சி.எஸ் – இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டது கல்லூரி முதலாம் ஆண்டில். எங்கள் மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமானது எங்கள் கல்லூரிதான். இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். டி.சி.எஸ் என்றால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்பதையும் அங்குதான் தெரிந்துகொண்டேன்.

டி.சி.எஸ் ராக்ஸ்
இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

பலரின் ரெக்கமன்டேசனுக்கு பிறகு பாங்க் மேனேஜர் கல்விக்கடனுக்கு ஒப்புதலளிக்க, கடனுடன் ஆரம்பித்த கல்லூரி வாழ்க்கை விரைவாக மூன்றாம் ஆண்டை அடைந்தது. அடுத்து காம்பஸ் இன்டர்வியு.

அந்த வயசுக்கே உண்டான சுய சந்தேகம், நாம உண்மையிலேயே வொர்த்துதானா, நம்மையும் ஒரு ஆளா மதிப்பாங்களான்னு கேள்விகள். அதை நிரூபிச்சிக்க ஆட்ட சவடால்கள், போட்டிகள், ஓட்டங்கள், வேகங்கள், தேர்வுகளில் மதிப்பெண் கூடுதல்/குறைவு என்று ஓடிக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை என்பதுதான் அல்டிமேட் அங்கீகாரம் என்று தோன்றியது.

டி.சி.எஸ் தான் எங்கள் கல்லூரியில் அதிக நபர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனம். அதில் அடித்து பிடித்து எப்படியாவது இடம்பிடித்து விடவேண்டும். மூன்றாம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே சில ஆயிரங்கள் செலவு செய்து போட்டித் தேர்வுகளுக்கான பல புத்தகங்களை வாங்கி குவித்திருந்தேன்.

எங்களுக்கு முன்னர் டி.சி.எஸ்-ல் வேலைக்கு சேர்ந்து, இப்பொழுது வெளியேற்றப்படவிருக்கும் இருக்கும் சீனியர்கள் அவ்வப்போது கல்லூரிக்கு வருவார்கள்.

“தம்பி எப்படியாவது கேம்பஸ்ல செலக்டாயிருங்கடா. அவ்வளவு தான், லைஃப் செட்டிலாகிரும். நம்ம சீனியர் கலை தெரியும்ல. இப்ப யு.எஸ் போயிட்டாரு. “

“அப்டிடியூட்க்கு இப்பவே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிருங்க. ஆர்.எஸ்.அகர்வால்னு ஒரு புக். அதை வாங்கிக்கோ. அதிலருந்துதான் கேப்பான்”

“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

எங்களின் ‘வளர்ச்சி’க்கு அவர்களால் முடிந்த அளவு வழிகாட்டினார்கள்.

டி.சி.எஸ் சென்னை
“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

அப்பாவுக்கோ வேற கவலை – “எல கடைல வச்சி அந்த மேனஜரை பாத்தேன். மூணாவது வருசத்துல ஏதோ இன்டர்வியூ நடக்குமாம்ல. நடந்துச்சானு கேட்டான்?”. இப்படித்தான் அப்பாவை ஏற்றிவிடுவார் அந்த பேங்க் மேனேஜர். மூன்றாண்டுகளில் பேங்க் லோனும் என்னுடன் சேர்ந்து வளர்ந்திருந்தது.

“நம்ம தென்காசி சித்தப்பா பையன் இப்படித்தான் …காம்ப்ஸ்.. அமெரிக்கா. எப்பிடியாவது பல்லக் கடிச்சிட்டு ஒரு ரெண்டு வருஷம் நல்லா பிரிப்பேர் பண்ணிட்டா லைஃப்ல செட்டில் ஆகிறலாம்“ என பல சக்சஸ் ஸ்டோரிகளை எடுத்துவிடுவார்கள் சொந்தக்கார ஷிவ்-கேராக்கள். “உங்க பையன் கையில தான் எல்லாம் இருக்கு” என்று தான் அநேகமாக முடிப்பார்கள். அந்த சமய்ங்களில் எல்லாம், பொருள் தெரியாத பார்வையில் என்னை பார்ப்பார் அப்பா.

காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தால் தான் வாழ்க்கை. அதை இழந்தால் அவ்வளவுதான் என்ற நிலைமை. வேலை இல்லை என்பதோடு எதற்கும் லாயக்கில்லாதவன் என்ற முத்திரையும் ஊரார், உறவினர்கள் மத்தியில் குத்தப்படும். கல்விக்கடன் வேறு. வெளிய போய் ஃபார்ம் நிரப்பி அனுப்பி, தெருத்தெருவா சுத்தி கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கணுமான்னு ஒரு பதட்டம்.

கல்விக் கடனை அடைக்க வேண்டும், வீட்டை இடிச்சிட்டு பெரிய வீடா கட்டணும்; அக்கா திருமணம்; ஊர் உறவு மத்தியில எப்படியும் ஒரு ஆளா ஆகவேண்டும்; இதை விட எனக்கு பெரிய ஆசைகள் அப்போது இருக்கவில்லை. இதை நிறைவேற்ற இருக்கும் ஒரே வழி இந்த கேம்பஸ் இன்டர்வியூ; அதுதரப்போகும் ஐ.டி துறை வாழ்க்கை.

அதைப்பெற கடினமாக உழைத்தேன். “டி.சி.எஸ் இன்டர்வியூ கொஸ்டீன்ஸ்” என்று கூகுளில் தேடினால் எத்தனை பக்கம் கிடைக்கும்.அதில் என்னென்ன்ன கேள்விகள் இருக்கும் என்பது வரை எனக்கு அப்போது அத்துப்படியாகியிருந்தது.

எனது முன்னேற்றத்துதாக உழைப்பதாக நினைத்துக்கொண்டு என்னை அறியாமலேயே டி.சி.எஸ்சின் தேவைக்கு உகந்த புராடக்ட்டாக (Product – செய்பொருள்) நான் மாறிக்கொண்டிருந்தேன். அதற்குத்தான் அத்தனை செலவு, அத்தனை முயற்சி.

”யூ ஆர் எ புராடக்ட். யூ ஹவ் டூ செல் யுவர்செல்ஃ” என்று பின்னாட்களில் இதே நிறுவனத்தில் எனக்கு வகுப்பெடுத்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது “யூஸ்&த்ரோ புராடக்ட்” (பயன்படுத்தி விட்டு எறியும் பொருள்) என்பதை அவர்கள் மறைத்து விட்டார்கள். எனக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

இங்கிலீஷ் மீடியம்
இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது.

அடுத்த பிரச்சனை ஆங்கிலம். அப்பா, இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது. அதை சரிசெய்ய சில “ஷிவ்-கேரா”க்களின் ஆலோசனைப்படி தினமும் காலை மாலை மூன்று டோஸ் இந்து பேப்பரை எனக்குள் திணித்துக்கொண்டிருந்தேன். கூடுதலாக “மை நேம் இஸ்….” செல்ஃப் இன்ட்ரோவை மனப்பாடம் செய்துவிட்டிருந்தேன்.

கேம்பஸ் இண்டர்வியூக்கான அந்த நாளும் வந்தது. இரண்டாம் ஆண்டில் படித்த எலெக்ட்ரானிக்ஸ் பாடத்திலிருந்து ஒரு அடிப்படைக் கேள்வி. தேர்வு எழுதியதோடு அதை மறந்து விட்டிருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய ஒரு கேள்வி என அடுக்கடுக்கான பல கேள்விகள்.

சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. இண்டர்வியூ நடந்த ஏ.சி அறைக்குள்ளும் அவ்வளவு வேர்த்திருக்கிறது, டி.சி.எஸ் வேலை இல்லை என்று ஆகி விட்டது! சர்வாங்கமும் தளர்ந்து சோர்வாக வெளியில் வந்தேன். யாரிடமும் பேசவே பிடிக்கவில்லை. நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். “சில சமயம் ஸ்ட்ரெஸ் இண்டர்வியூன்னு வைப்பாங்க, அதுமாதிரி கேட்டிருப்பாங்க. பரவாயில்ல விடு, வேற கம்பெனில கிடைச்சிரும்”னு நண்பர்கள் ஆறுதல் சொன்னாங்க.

இரண்டு நாட்களில் முடிவை அறிவித்திருந்தார்கள். 50 பேர் பட்டியலில் என் பெயருமிருந்தது. அதல பாதாளத்திலிருந்து சிகரத்தில் ஏறி விட்டது போல இருந்தது. ஜிவ்வென்று பறந்தது மனம். கனவில் நடப்பது போல அந்த மாலை கழிந்தது. வீட்டுக்கு வந்து நல்ல சேதியைச் சொல்லி விட்டு செட்டில் ஆனேன். டாடாவின் கரங்களுக்குள் விழுந்து விட்டேன். இனிமேல் நமக்கு விடிவுகாலம்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறேன். மீண்டும் வேலை தேட வேண்டும். மீண்டும் இன்டர்வியூ; வங்கிக்கடன்; கல்விக்கு பதிலாக வீடு, கார் கடன். ஆனால் இப்பொழுது 21 வயது இளைஞன் அல்ல நான். என் இளமையை நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே செலவிட்டு தளர்ந்திருக்கிறேன்.

இருண்ட வாழ்க்கை
ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

இனி கல்லூரி நாட்களைப்போல என்னால் மாற முடியாது. அப்படி என்னை தயார்படுத்திக் கொண்டாலும் என் முன் உள்ள வாய்ப்புகள் மிகக்குறைவு.

பணிநீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. ஓரிருவருக்கு கிடைத்தாலும் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும். வேறு நிறுவனங்களிலும் வேலைநீக்க நடைமுறையை தொடர்ந்தால் எம்மை போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்னும் போட்டி அதிகரிக்கும். என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது.

பள்ளிமுடிந்து வரும் குழந்தையிடம் என்ன சொல்வது? நாளை அலுவலகத்திற்கு செல்லவில்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

பேரண்ட் டீச்சர் மீட்டிங்-ன் போது நமக்கு மரியாதை கொடுப்பார்களா? ஃபாதர் நேம் என்ன என்ற கேள்விக்கு அடுத்த வழமையான கேள்வியான “வாட் இஸ் யூவர் ஃபாதர்?” என்று கேட்டால் மற்ற குழந்தைகளின் முன்னால் என் குழந்தை கஷ்டப்பட்டுவிடுவானோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது. முன்னர் எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நிறுவனத்திற்கு வந்த புதிதில். அப்பா தள்ளுவண்டி கடை வைத்திருக்கிறார் என்று சொல்ல கூச்சப்பட்டு “பிசினஸ்” செய்கிறார் என்று பொதுவாக சொல்லியிருக்கிறேன்.
இதென்ன அபத்தம்? வேலையே இல்லை என்றான பிறகு தற்போதைய பள்ளியில் படிக்கவைக்க முடியுமா? அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கமுடியுமா? என்பதுதானே கவலைப்பட வேண்டிய விசயம்.

நான் தவறு செய்துவிட்டேன். வேலை நீக்கம் செய்யும்போதே நிறுவனத்துடன் எதிர்த்து போராடியிருக்க வேண்டும். போராடினால் வேலை கிடைத்திருக்குமா? தெரியவில்லை. ஆனால் இப்பொழுது போல வேலைக்கான வாய்ப்பு முழுமையாக அடைக்கப்பட்டிருக்காது என்பது நிச்சயம். இப்போதைய மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொடரும்……

(ஐ.டி துறை நண்பர்களின் உண்மைக்கதைகள் இங்கே இடம்பெறுகின்றன)

– ரவி.

தொழிற்சங்கம்
மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

கொலைகார அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை – புதுச்சேரி பு.ஜ.தொ.மு

0

பாலியல் வன்கொடுமைக் கூடாரமான புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை!

டந்த 18.12.2014 அன்று புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமக் குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தில் பெற்றோர், 5 மகள்கள் என மொத்தக் குடும்பமும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததில் தாய் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயக்க நிலையில் இருந்த ஒரு பெண்ணை இருவர் வன்புணர்ச்சி செய்த கொடுமையும் நடந்துள்ளது.

அரவிந்தர் ஆசிரமம் தற்கொலை
ஆசிரமக் குடியிருப்புக் கட்டிடத்தின் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றனர் (படம் : நன்றி thehindu.com )

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத், தனது மனைவி மற்றும் 5 மகள்களுடன் 1970-களின் துவக்கத்தில் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தார். அரவிந்தர் மேல் உள்ள பற்றால், அவரின் 5 மகள்களும் ஆசிரமத்திற்கு சொந்தமான பள்ளியிலேயே படித்து, ஆசிரம விடுதியில் தங்கி சேவை செய்து வந்தனர்.

கடந்த 2002 -ம் ஆண்டில் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாகக் கூறி, ஆசிரம நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், புகார் கூறிய பெண்களில் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் சகோதரிகள் 5 பேரும், 2004-ம் ஆண்டு காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆசிரமத்தில் நடப்பவைகளை வெளியில் சொல்லக் கூடாது என்ற ஆசிரம விதியை மீறிவிட்டதாகச் சொல்லியும், விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்தும், அந்தப் பெண்கள் மீதே குற்றம் சுமத்தி, ஆசிரமத்தை விட்டு வெளியேறச் சொல்லி நடவடிக்கை எடுத்தது. தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் முதல், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து 12 ஆண்டு காலம் வரை போராடியும் இறுதியில் தோல்வியே கண்டனர். மேலும், ஆசிரம விடுதியில் இருந்து வெளியேற மறுத்துப் போராடிய அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டு, கட்டாய வெளியேற்றம் செய்ய உத்தரவிட்டது உச்சநீதி மன்றம்.

தாங்கள் நேசித்த ஆன்மீகப் பணியில், தாங்கள் தேடிய அமைதி கிடைக்காமல், பாலியல் தொந்தரவுகளின் மூலம் அமைதியற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர். மேலும், தாங்கள் நம்பிய அரசும், நீதிமன்றமும், நீதியை மறுத்து கைவிட்டதால் தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக, தற்கொலையில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் குமுறி வெடிக்கின்றனர். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் மனம் நொந்து, இந்த தற்கொலை சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்னேயே தாங்கள் வசித்து வந்த ஆசிரமக் குடியிருப்புக் கட்டிடத்தின் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது காவல்துறை தடுத்து காப்பாற்றி விட்டனர். அவர்களின் இரண்டாவது முயற்சியில் 3 பேர் இறந்துவிட்டனர்.

அரவிந்தர் ஆசிரமம் பாதுகாப்பு
ஆசிரமத்திற்கு அரச பாதுகாப்பு. (படம் : நன்றி thehindu.com )

இந்த தற்கொலை மரணங்களை, ஆசிரமத்திற்கு எதிராகப் போராடி வெற்றி பெற முடியாததால் இந்த முடிவை எடுத்தனர் என சுருங்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில், இன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரமங்களும், மடங்களும், ஆதினங்களும் இந்திய நாட்டின் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத வகையில் தனி சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வருகின்றன. இவை, பாலியல் வக்கிரங்களின் ஒட்டு மொத்த உருவமாகவும், காமக் களியாட்டக் கூடாரங்களாகவும், நிதி, ஊழல், முறைகேடுகளுக்குப் பெயர் போனதாகவும் மாறிவிட்டன. இதற்கு, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமும் விதிவிலக்கல்ல.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு கிட்டத்தட்ட ரூ 7500 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளது. ஆசிரமத்திற்கு சொந்தமான, ஆரோவில் என்ற பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்குள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள் எதுவும், புதுச்சேரி தொழிலாளர் துறையின் பார்வைக்குக் கூட வராது. ஆசிரமத்தின் அதிகாரம் வானளாவியதாக இருப்பதால், தொழிலாளர் துறையும் தலையிட முடியாது. அது மட்டுமின்றி, ஆசிரமத்திற்கு சொந்தமாக சொகுசு பங்களாக்கள், பால் பண்ணை, பள்ளிக்கூடங்கள், பழ – காய்கறித் தோட்டங்கள், பெட்ரோல் பங்க், பேக்கரி மற்றும் பல்பொருள் அங்காடிகள் என பல தொழில்கள் உள்ளன.

அரவிந்தர் ஆசிரமம்
புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முதல் கவர்னர், அரசு அதிகாரிகள் வரை ஆசிரம நிர்வாகத்தின் யோக்கியதையைப் பற்றிப் பேசுவதே இல்லை. (படம் : நன்றி ndtv.com)

புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முதல் கவர்னர், அரசு அதிகாரிகள் வரை ஆசிரம நிர்வாகத்தின் யோக்கியதையைப் பற்றிப் பேசுவதே இல்லை. இது போன்ற பிரச்சினைகள் எழும் போது கூட அதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இந்த தற்கொலை சம்பவத்திலும் அதே நிலைமை தான். ஆனால், இந்த அநீதியை எதிர்த்துப் போராடும் சமூக ஜனநாயக சக்திகளின் போராட்டத்தை, சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு எனச் சொல்லி, சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் அறிவிக்கிறார் எனில், இதிலிருந்து அரவிந்தர் ஆசிரமத்தின் அதிகாரங்களைப் புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட ஆசிரமத்தைத் தான் தனியொரு குடும்பமாக நின்று 12 ஆண்டுகள் போராடி தோற்றிருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

அதனால் தான், இது தற்கொலை அல்ல! புதுச்சேரி அரசும், நீதிமன்றமும் அரவிந்த் ஆசிரமும் நீதியை மறுத்து திட்டமிட்டு செய்த படுகொலை! என நாம் சொல்கிறோம்.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், காமக் களியாட்டக் கூடாரமாகவும், நிதி ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளின் ஒட்டு மொத்த உருவமாகவும் திகழ்கிறது. ஆசிரமத்தில் நடக்கும் விசயங்களை வெளியில் சொல்லக் கூடாது என்ற ஆசிரம விதியிலிருந்தே, இது மர்மங்களின் கூடாரம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விசயங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில்,

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகை

  • அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமையால் 3 பெண்கள் தற்கொலை!
  • இது தற்கொலையல்ல! அரசு நடத்திய படுகொலை!

மத்திய மாநில அரசுகளே!

  • அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!
  • ஆசிரமம் என்ற பெயரில் காமக் களியாட்டம் நடத்திய ஆசிரம நிர்வாகிகளைக் கைது செய்!
  • அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்து!

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகைஉழைக்கும் மக்களே

  • முற்றும் துறந்த ஆன்மீகவாதிகளுக்கு சொகுசு பங்களா, பால்பண்ணை, பழக்காய்கறித் தோட்டங்கள் எதற்கு?
  • மடங்கள், ஆதினங்கள், ஆசிரமங்கள், கோயில்களின் சொத்துக்களை மக்கள் போராட்டத்தின் மூலம் பறித்தெடுப்போம்!

அரவிந்தர் ஆசிரமம் - பு.ஜ.தொ.மு முற்றுகைஎன்ற முழக்கங்களின் கீழ் 23.12.2014 அன்று அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை என அறிவித்து, போலீசு போட்டிருந்த இரண்டு அடுக்குப் பாதுகாப்பில், முதல் அடுக்குப் பாதுகாப்பை மீறி, ஆசிரமத்தை நோக்கி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் முன்னேறினர். ஆசிரமத்தில் அருகில் தடுப்பரண்களை ஏற்படுத்தி தோழர்களைத் தடுத்து கைது செய்து மாலையில் விடுவித்தது போலீசு.

இந்த முற்றுகை பக்தி, ஆன்மீக சேவை என்று சொல்லிக் கொண்டு உழைக்கும் மக்களை அறியாமை இருளில் தள்ளும் அரவிந்தர் ஆசிரமத்திற்கு எதிரான போராட்டத்தின் துவக்கப் புள்ளி தான். நமது தொடர்ந்த போராட்டத்தின் மூலம், உழைக்கும் மக்களை விழிப்படையச் செய்யும் வரை தொடரும் வகையில் அடுத்த கட்ட போராட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது புதுச்சேரி புஜதொமு.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

மேலும் படிக்க

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் – நேரடி ரிப்போர்ட்

2

kanchiளர்ச்சி, முன்னேற்றம், வேலை வாய்ப்பு என்கிறது தனியார் மய, தாராள மய, உலகமயக் கொள்கை. மேக் இன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவக்கு பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வருவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கலாம் என்கிறார் மோடி. ஆனால், வேலை வாய்ப்பு வழங்குவதற்காக செயல்பட்டு வரும் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிலை என்ன?

வேலை தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைக்கு செல்கிறார்களா? அவர்களுக்கு, இந்த அலுவலகம் எவ்வாறு உதவுகிறது? வேலையற்ற இளைஞர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயற்பாட்டைப்பற்றி என்ன கருதுகிறார்கள்?

சென்னை மாநகர் மற்றும் புறநகர் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலங்களுக்கு சென்றோம்.

வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள், வேலைத்தேடி அலுவலகத்திற்கு வரும் இளைஞர்கள், அவர்களுடன் வந்த பெற்றோர், உறவினர் மற்றும் அலுவலகத்தின் அருகில், ஆன்லைன் பதிவு மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்களிடமும் உரையாடினோம். அவர்களின் வாக்குமூலங்களை கேளுங்கள்!

ஜனனி, கொளத்தூர், சென்னை, (2011-ல் பி.காம்):

ஜஸ்ட், ரிஜிஸ்டர் பண்ணி வைக்கிறேன். வேலை, கிடைக்குமா கிடைக்காதா என்பது எனக்கு தெரியாது. இது வீட்டெல இருக்குறவங்க விருப்பம். எனக்கு, அப்பா இல்ல. பொண்ணாச்சே, புருஷன் பாத்துக்குவானோ இல்லையோனு அம்மாவுக்கு பயம். ஏதாவது எதிர்த்து சொன்னா அம்மா கோபப்படும்.

காண்ட்டீபன்,சென்னை. (B,E, 2014):

நான், அவரேஜ் பாஸ் 75%. கேம்பஸூல வேலைக்கு, ஆவல. 90% எடுத்தவனே அங்க க்யூல நிக்கிறான். இங்க ரிஜிஸ்தர் பண்ணி வைச்சா, கவர்மென்ட் எக்ஸாம் போது இந்த நெம்பர் கேக்கிறான், அதுக்காக இது.

guindy
அரசு வேலை வாய்ப்பு அலுவலகம், கிண்டி

சேகர், காஞ்சிபுரம், வயது 45 (SSLC)

பதிவு செய்து 18 வருடமாக ஒரு லெட்டர்கூட வரல. கூட இருந்தவங்களெல்லாம் வேலைக்கு போய்ட்டாங்க. எனக்கு வராததக்கு என்ன காரணம்னே தெரியல. 30, 40 முறை வந்து போயிருக்கேன். 10-வது பாஸ். கவர்மெண்ட் வேலையில்லானாலும் எதாவது சின்ன தொழிலுக் குடுத்தாக்கூட பொழைச்சிக்குவேன். வேலை எதுவும் இல்ல. 45 வயசாயிடுச்சி. என்கூட இருந்தவங்க எல்லாம், வாத்தியாரு, போலிசு, எல்ஐசி னு பெரிய பெரிய வேலை செய்றாங்க, என்னை மதிக்கமாட்டாறங்க. என் பையன் வக்கீலுக்கு படிக்கிறான் செங்கல்பட்டுல. ஒருபொண்ணு 10வது செய்யூர்ல படிக்குது. இன்னொரு பொண்ணு 8 வது படிக்கிது. என் பையனே வேலைவாங்கிடுவான் ஆனா எனக்கு வேலை கிடைக்காது உண்மைதான். வாழ்க்கையே தலைவலியா இருக்கு. உள்ளப்போய் எழுதிக்கொடுத்துட்டு வந்திடுறேன் சார். (இவர் ஒரு தலித்)

வசந்தா, வயது 45, காஞ்சிபுரம். வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்துபவர்.

நிறையபேருக்கு கவர்மெண்டு மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சி, அதுவும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கூட்டம் குறைஞ்சதுக்கு காரணமா சொல்லலாம், அதில்லாம இப்ப நிறையபேருக்கு கம்பியூட்டர் தெரிஞ்சி இருக்கறதாலே ஆன்லைனிலயே பதிவு, அடிஷனல், ரினிவல் பண்ணிடுறாங்க. வர்றவங்கள்ல, ஊனமுற்றவர்கள், விதவைகள் நம்பிக்கையோடு வந்து, போறது பாக்கறதுக்கு கவலையா இருக்கும்.

ராமு, முதியவர், காஞ்சிபுரம்:

என் பேத்திக்காக வந்திருக்கேன். இதுவரைக்கும் எங்க குடும்பத்துல ஒருத்தருக்கும் வேலை கிடைக்கல. நான் அந்த காலத்துலயே 8-வது படிச்சிருக்கேன். நான் பாக்கறவங்கள்ள பலபேரு ஒரே குடும்பத்துல நிறைய கவர்மெண்ட் வேலையில இருக்காங்க. ஏன்? நமக்கு மட்டும் கிடைக்க மாட்டேன்ங்குதுனு தெரியல. பேத்திக்கு வேலை கிடைச்சிடும்னு நம்பிக்கையெல்லாம் இல்லை. நிறைய படிக்க வைச்சிருக்கேன் எம்புள்ளய, கவர்மெண்ட் வேலையா இருந்தா நிரந்தரமா இருக்கும். சம்பளம் கம்மியா இருந்தாலும், வேலைநேரம் கரெக்டா இருக்கும், பொம்பள புள்ளக்கி சரியானதா இருக்கும்னு தான் அலைய வேண்டியதா இருக்கு.

விஜியா, காஞ்சிபுரம். படிப்பு M.COM

ரினிவலுக்காக வந்திருக்கேன். கண்டிப்பா வேலை கிடைக்காதுனு தெரியும். இருந்தாலும், பார்மலிட்டிக்காக வந்தேன். இல்லைனா எப்படியாவது எங்களையே குறை சொல்லிடுவாங்க. பதிவு பண்ணி வச்சிருக்கலாம் இல்லயானு. எங்கப்பா, விவசாயம் பாக்கறாரு. நான் வாலாஜாபாத் ல கடையில கேசியரா வேலைப் பாக்கிறேன். இந்த வேலையை முடிச்சிட்டு கடைக்கு போய்டனும். 2007-ல் பதிவு செய்தேன். இதுவரைக்கும் ஒரு கார்டு கூட வரல. கேட்டா, உள்ளிருக்கறவங்க சரியா பதில் சொல்ல மாட்டேன்றாங்க. அதியே தெரிஞ்சிரும், வேலை கிடைக்காதுனு. என் பிரண்ட்சுக்கும் யாருக்கும் இதுவரைக்கும் வேலை கிடைக்கல. ஆனா சிலரு மட்டும் டிஎன்பிசி எழுதி செலக்ட் ஆகி இருக்காங்க. எனக்கும் அதுலயும் அதிர்ஷ்டம் இல்ல.

துரை, வயது 55, காஞ்சிபுரம். வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் பிரவுசிங் சென்டர் நடத்துகிறார்:

துரை காஞ்சி
துரை, காஞ்சிபுரம்

போன கவர்மெண்ட்ல வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலின் மூப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. ஆனா, இந்த கவர்மெண்ட்ல அப்படி கிடையாது. எல்லாத்தையும் டி.என்.பி.சி, ஓபன் கால்ஃபார், அதனால, அதுமேல நம்பிக்கை போய்டுச்சி. கண்டக்டர், டிரைவர் வேலைகளுக்கும் பதிவு செய்த மூப்பு அடிப்படையில அப்ப எடுத்தாங்க. இப்ப, இன்னிக்கி லைசன்ஸ் எடுத்தவன்கூட வேலைக்கு அப்ளை பண்ற சூழ்நிலையா மாத்திட்டாங்க. அதனால, பதிவு செய்து வைத்தும் எந்த பிரயோசனமும் இல்லாத நிலைமை. இதனால, பதிவு பண்ணவங்களும் வேலை கிடைக்காது என்ற மனநிலைமைக்கு வந்துட்டாங்க. அதனால, அலுவலகத்துக்கு வரது சுத்தமா குறைஞ்சிபோச்சி.

தினேஷ் வயது 30 காஞ்சிபுரம்:

எல்லாரும் சொல்றாங்க, கலப்பு திருமணம் செய்துகிட்டவங்களுக்கு முன்னுரிமை இருக்குனு. அதானல என் மனைவியோட பத்தாவது படிப்பை பதிவு செய்ய காத்திட்டு இருக்கோம்.

காமாட்சி, வயது 30, காஞ்சிபுரம்: இரண்டு குழந்தைக்கு தாய், பிரவுசிங் சென்டரில் வேலைபார்ப்பவர்.

எம்பிளாய்மெண்ட் எதிர்ல 6 மாசமா வேலை பார்க்கிறேன். நானும் 12-வது முடிச்சிட்டு பதிவு செய்து வச்சிருக்கேன். 10 வருடமாக காத்திருக்கேன். கவர்மெண்ட் வேலைன்னு சொல்றது படித்த பெண்களுக்கு சிறந்த கணவன் மாதிரி. அது எல்லோருக்கும் கிடைக்கிறது இல்ல. ஆனா அது பெரிய கனவா இருக்கு. நம்பிக்கையில பதிவு செய்து வைத்திருக்கிறேன். என்னப் பொறுத்தவரைக்கும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சினு சொல்றது பொய். அப்போ வெள்ளைக்காரன்கிட்ட அடிமையா இருந்தோம். இப்ப, அரசியல்வாதிங்ககிட்ட அடிமையா இருக்கோம். இதப் பத்தி நிறைய பேசலாம், என் குடும்பம், குழந்தைகள் இல்லனா நிறைய பேசுவேன்.

காஞ்சி காமாட்சி
காமாட்சி, காஞ்சிபுரம்

எவ்ளோ அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்டமுடியாம கிடக்கிறேன். என் குடும்பம் குழந்தைகளை நினைச்சி. பெண்களுக்கு தனியார்கிட்ட வேலைக்குப் போன எந்த மதிப்பும் கிடையாது. மதிப்பு இல்லனாலும் சம்பளம் தேவையாயிருக்குறதால போக வேண்டி இருக்கு. அதுக்குதான் படித்த பெண்களுக்கு கண்டிப்பாக கவர்மெண்ட் வேலை கொடுக்கணும் உறுதியா சொல்லுவேன். ஆனா, நம்ம கவர்மெண்ட் கொடுக்கும் என்ற நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது. நப்பாசையில காத்திட்டுருக்கேன். இதுவரைக்கும் ஒரு லெட்டர்கூட வரல.

ஆனந்தன், வயது 53, காஞ்சிபுரம். தன்மகளுடன் வந்திருந்தவர், ஆட்டோமொபைல் கடை நடத்துகிறார்.

என் கைத்தொழில் எனக்கு கைகொடுத்து, என் குடும்பத்தையும், என் குழந்தைகளின் படிப்புக்கும் பெருந்துணையாயிருந்தது. அதை வைச்சி, என் பொண்ணை நல்லா படிக்க வைச்சிட்டேன். ஆனா, கவர்மெண்ட் வேலை கிடைக்குமானு தெரியல.அப்படியே, கிடைச்சாலும் அந்தப் பேப்பர் இல்ல, இந்தப் பேப்பர் இல்லனு அனுப்பிடுறாங்களாம். அதனாலதான் பதிவு செய்ய வேண்டியது நம்ம கடமை. என் குடும்பத்துலயே கவர்மெண்ட் வேலைனு இவதான் முதல்ல பதிவு செய்ய வந்திருக்கா. ஏன்னா? நிரந்தரமான வேலை, தனியார்கிட்ட போனா எப்ப மூடுவானு தெரியாது. பாண்டிச்சேரில ஒருகம்பெனி, மெட்ராசுல நோக்கியா இதெல்லாம் பாக்கும்போது நம்ம கொழந்த படிச்சிட்டு நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறது தப்பா? அந்த ஆசைதான் எல்லாருக்கும் இருக்கு. எனக்கும் இருக்கு. என் தொழில என் பொண்ணு தொடர முடியாது. வெளியதான் வேலைக்கு போயாகணும். நம்பிக்கையோட பதிவு செய்துட்டு போறோம். மூணு வருசம் கழிச்சி வரசொல்லிட்டாங்க.

ரேவதி, இன்ஜினியரிங் முடித்த மாணவி: மேலே பார்த்த ஆனந்தனின் மகள்.

எங்கப்பாவின் ஆசைக்காகத்தான் பதிவு பண்றதுக்கு வந்தேன். என் பிரண்ட்செல்லாம் கிண்டல் பண்ணீனாங்க. கவர்மெண்ட்ல வேலையெல்லாம் கிடைக்காது. ஐ.டி கம்பெனிகளின் கேம்பஸ்லதான் ஒர்த்துனு சொன்னாங்க, நிறைய பேர் செலக்ட் ஆகி வேலைக்குப் போயிட்டாங்க, ஆரம்பத்துல 15ஆயிரம் சம்பளம் வாங்கறாங்க. இருந்தாலும், கேம்பஸ்ல செலக்ட் ஆனாலும் எம்பிளாய்மெண்ட் நெம்பர் கேட்பாங்கனுதான் பதிவு பண்ண வந்திருக்கேன். பார்மாலிடிக்காகத்தான் பதிவு பண்றேன். பெரிய அளவுல நம்பிக்கையெல்லாம் இல்ல. அப்பாவுக்காத்தான் வந்தேன்.

கோமதி நாயகம், 55, கிண்டி அரசு வேலை வாய்ப்பு அலுவலகம். ஊர், திருநெல்வேலி.

பெண்ணுக்காக வந்தேன். Msc IT,-யில 85%, ctc கம்பெனியில் வேலை. 5 வருஷமா அங்கு புரமோஷன் இல்ல, சம்பளமும் பெரிசா ஏத்தல. இப்ப 35,000 ரூ சம்பளம். தினமும், இரவு 12.45 க்குதான் வருது. கவர்மென்ட் வேலை கிடைச்சா 10 to 5 வேலை. நாளைக்கு கல்யாணம் முடிஞ்சி நடுராத்திரிக்கு போனா மாப்பள ஒத்துக்குவானா? இப்ப டிரைவரெ 10 பவுன் நகை டூவிலர் கேக்குறான். எங்க சாதியில பொண்ணுக்கு கல்யாணம் பண்ண 10 லட்சம் வேணும். அதன் பிறகு நான் ஊரோட போகவேண்டியதுதான். ஆனால்,இங்க பதிவு பண்றதுக்கே அலையவுடறாங்க.

தெய்வசிகாமணி, வயது 50, காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்.

சென்னை  சாந்தோம் mnc ஆள் பிடித்தல்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆள் பிடிக்கும் கவுன்சிலிங் கூட்டம் – அரசு வேலை வாய்ப்பு அலுவலகம், சாந்தோம்.

இப்ப கவர்மெண்ட் வேலையெல்லாம் கிடைக்காது. பாதிக்கு பாதியா குறைச்சிட்டாங்க, எங்க ஆபிசுலயே 32 பேர் வேலை செய்யணும். ஆனா, 16 வேலை காலியா இருக்கு. பல லட்சம் பதிவாளர்களை டீல் பண்றது 16 பேருதான். அதில 4 பேரு அதிகாரி, 4 பேர்தான் எழுத்தர். மீதிப்பேர் கீழ்நிலை ஊழியர்கள்.

இதுமட்டுமில்லாமல், பிரைவேட் கம்பெனிக்காரனுகளுக்கு ஆள் சேர்த்துவிடனும்.
சுத்துப்பட்டுல இருந்து சென்னையில இருக்கிற கம்பெனிக்காரங்க வரைக்கும் தனக்கு தேவையான ஆட்களை தெரிவு செய்துக் கொள்ள நாங்கதான் ஏற்பாடு செய்து தரணும். அதுக்கான லெட்டருல கலெக்டர் அனுமதி கையெழுத்துப் போட்டு அனுப்பிடுவாரு.
பிறகு, பதிவு செய்திருக்கறவங்களை கூப்பிடுவோம். அவங்ககிட்டயேயும், தனியார் வேலைக்கு போறதால உங்களுடைய எம்பிளாய்மெண்ட் மூப்பு எதுவும் பாதிக்காது. தொடர்ந்து புதுப்பிக்கிணும்னு தைரியம் சொல்வோம். அது போல, கோல்கேட் கம்பெனியிலிருந்து செக்யுரிட்டி கம்பெனி வரைக்கும் எல்லா தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பாடு செய்து தர்றோம். கம்பெனியில இருந்து ஜிஎம், எச்ஆர்ஒ, நிறையப் பேர் வருவாங்க. அவங்களுக்கு தேவையானவங்கள எடுத்துக்குவாங்க.

இப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சென்னை, மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டிவிட்டது.

விரைவில், தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன. இந்த மையங்களில் பதிவுதாரர்களின் திறமை, ஆர்வம், மனோபாவம் ஆகியவை கண்டறியப்பட்டு அதற்கேற்ற படிப்பை படிக்கவோ, தொழில் பயிற்சியை பெறவோ உளவியல் ரீதியாக கல்வி ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக, தனியார் நிறுவனங்களைப் போன்று உளவியல் பரிசோதனை (சைக்கோமெட்ரிக் டெஸ்ட்) திறனாய்வு சோதனை (ஆப்டிடியூடு டெஸ்ட்) போன்ற பரிசோதனைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிண்டி வேலைவாய்ப்பு அலுவலகம்
என்றாவது கிடைத்து விடுமா?

HDFC bank இன்சுரன்ஸ் பாலிசி ஏஜெண்ட்

கவர்மெண்ட் வேலையில்லைனா என்னா? இன்சுரன்ஸ் பாலிசி பிடித்துக் கொடுத்தால் கமிஷன் வரும் தெரியுமா உங்களுக்கு? இருக்கறதுலேயே அதிகமா சம்பாதிக்கறது யாருனு பாத்திங்கனா, எல்ஐசி மற்றும் இன்சுரன்ஸ் ஏஜெண்டுகள் தான். குறைந்தது 2 லட்சம் மாசத்துக்கு சம்பாதிக்கலாம்.

ஒரு அரை மணிநேரத்துல நீங்க பாலிசி பேசிப் போட்டுடலாம். இன்சுரன்ஸ், ஜஸ்ட் ஒரு லைப் கவர்தான். 5 ஆயிரம் கொடுத்து வாங்குற செல்போனுக்கே ரூ- 100 க் கொடுத்து கவர் போட்டுடுறோம். அதமாதிரிதான் இது, லைப் கவர்னு பேசறோம்.
hdfc bank, இன்சுரன்ஸ் ஏஜண்டா டோனி மனைவி சாக்சி இருங்காங்க. நிறைய பேரு லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்க. எல்லாரையும் லிஸ்ட் அவுட் பண்ண முடியாது. மேலும், சென்னையில லிடிங்ல இருக்கற சொர்ணலட்சுமியோட டார்கெட் பாத்திங்கனா 88 லட்சம் அப்ப அவங்களுக்கு மாசத்துக்கு எவ்ளோ கமிஷன் வரும். ரூ 25லட்சம். இதுல, வேலையினு பாத்தா, ஜம்முனு உட்கார்ந்துக்கினு பிரண்டுங்கிட்ட பேசப்போறோம். ஏஜண்டாக மாறி சம்பாதிக்கப்போறோம்.

என்றார்.

இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பயன் இதுதான். வேலை கிடைக்காது என்று நிச்சயமாக தெரிந்தும், வேறு வழியின்றியும், நமக்கு ஏதேனும் அதிர்ஷம் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்தும் இளைஞர்கள் இந்த பாழடைந்த அரசு கட்டிடத்திற்குள் வந்து செல்கின்றனர். அவர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை மேலும் அச்சுறுத்தி இத்தகைய காப்பீடு தரகர்கள் பணம் பறிக்கின்றனர்.

தனியார் மயம் வந்தால் நாட்டில் தேனும் பாலும் வெள்ளமென ஓடுமென கனவு கண்டவர்கள் இந்த இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும். எவருக்கும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலையோ, பணி பாதுகாப்போ இருக்குமென்பதை ஏற்கவில்லை. அதே நேரம் அரசு வேலைகள் பாதுகாப்பானது என்றாலும் அங்கே வேலையே கிடைக்காது என்பதும் அவர்கள் அறிந்த ஒன்றுதான்.
ஏதோ கிடைக்கும் வேலையை வைத்துக் கொண்டு கனவில் மட்டும் ஒரு நல்ல வேலை கிடைக்குமென்ற நம்பிக்கையின்பாற்பட்டு இங்கே வருகிறார்கள். ஒரு வகையில் நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று கடவுளையும், மதத்தையும் நம்பி சாத்திரம் சடங்கு செய்யும் அப்பாவி ஆத்தீக நபர்களின் செயலோடும் இதை ஒப்பிடலாம்.

ஏழு கோடி தமிழ் மக்களில் 80 இலட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்கில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை நிலையை காட்டுகிறது. வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்றே நம் மக்களின் வாழ்க்கை கடந்து போகிறது என்பதன் சாட்சியங்களாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் நிற்கின்றன.

இந்த விதியை மாற்ற முடியும் என்று இளைய சமூகம் வெடித்தெழாத வரை இங்கே வேலையும் இல்லை, வாழ்க்கையும் இல்லை.

– வினவு செய்தியாளர்கள்

குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள்

0

“ஊத்திக் கொடுப்பதும், சீரழிப்பதுமா… அரசின் வேலை?” என்ற கேள்வியை முன்வைத்து கடந்த இரண்டு மாதங்களாக உழைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். பேருந்து, இரயில், உழைக்கும் மக்கள் பகுதிகள், கடைவீதிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் பிரச்சாரமும் வசூலும் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தின்போது பெண்களிடம் பலத்த ஆதரவினை காண முடிந்தது.

wlf-tasmac-siege-10பிரசுரம், இன்றைய தமிழக நிலை, அதற்கான தீர்வு மற்றும் ஏற்ற படத்துடன் (ஓவியம்) பேசியது. மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

பகுதிப் பெண்கள் பலர், பிரசுரத்தை நம்மிடம் காட்டி, “இந்தப் படத்தை போஸ்டர் அடிச்சி, வீட்டுக்குவீடு ஒட்டணும்மா” என்று கூறியதிலிருந்து இது விளங்கும்.

பேருந்துப் பிரசாரத்தின்போது, ஒருவர் “சரியான விசயந்தான், (பஸ்ஸிலிருந்தவர்களை நோக்கி) முக்கியமான பிரச்சினையப் பத்தி பேச வந்திருக்காங்க, பேசமா கவனியுங்க” என்று கூறியது, மேலும்,”தாராளமா வசூல் போடுங்க” என்று ஊக்குவித்தது என பலவிதமான ஆதரவைக் காண முடிந்தது.

wlf-tasmac-siege-05பேருந்துகளில் பேசும்போது, பலர் தோழர்களிடம், “சாராயக்கடைய முடூணும் சரி, இலவசங்களை ஏன் வேணாங்கிறீங்க?”, “டாஸ்மாக் இல்லனா, அரசுக்கு வருமானம் இருக்காதே, மறுபடியும் எல்லாத்தையும் வெலை ஏத்திடமாட்டாங்களா?” என்று பல கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு, தோழர்கள் பொறுமையுடன், “குடும்பமே சீரழிந்து, குடியால கணவரை இழந்தபிறகு இலவசம் எதுக்கு, இலவசமா கொடுக்கவேண்டிய, கல்வி, மருத்துவம், தண்ணீர், வேலை இதெல்லாம் தனியாருக்கு கொடுத்துட்டு, சாராயக்கடையை மட்டும் அரசு நடத்தும்னா, மக்கள் மேல அக்கறையில்லாத அரசு எதுக்கு?” என்று விளக்கிப் பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

இதன் மூலம், பேருந்தில் பிரச்சாரத்தினை மக்கள் நன்கு கவனிக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. பல பேருந்துகளில், நடத்துனர்களும், ஓட்டுநர்களும் ஆதரவளித்தனர். “சீக்கிரம், பேசிடுங்கமா டைம் ஆச்சி கெளம்பணும்” என்றும், சிலர், “பேச, நேரம் இல்ல, எல்லார்கிட்டயும் நோட்டீசு குடுத்துடுங்க, நேரம் ஆயிடுச்சி கத்துவாங்க” என்று தங்களால் முடிந்த ஆதரவை தர யாரும் மறக்கவில்லை.

wlf-tasmac-siege-02கடைவீதியில் பிரச்சாரத்தின்போது, மளிகைக் கடைக்காரர் ஒருவர், “இந்த நாடு திருந்தாது, அரசியல்வாதிகள கேள்விக்கேட்க முடியாது, கேட்டா… துட்டு வாங்கிட்டுதானே ஓட்டுப் போட்டே வாயை முடூ னு சொல்வானுங்க, இவனுங்களையும் மாத்த முடியாது” என்று விரக்தியுடன் பேசினார்.

அதற்கு, தோழர்கள் “நீங்க, சொல்றதுஎல்லாம் கரெக்டுதான், இந்த நிலைமைக்கு நம்மள தள்ளிவிட்டது யாரு, எதையும் யோசிக்கவிடாம போதையில வெச்சிருக்கறது யாரு, இத நாம எல்லாருக்கும் விளக்க வேணாமா, அதுக்கான தீர்வு காண வேண்டாமா, இதனால, நம்ம புள்ளங்கதானே பாதிக்கபோவுது அப்ப நம்ம முன்ன நின்னு செயல்பட வேணாமா” என்று விளங்க வைத்தனர்.

அம்பேத்கர் பகுதியில் ஒரு குடும்பத்திடம் பேசியபோது, “சரியான விஷயம்மா, எங்க ஏரியாவுல பல குடும்பம் பாதிக்கப்பட்டுகிட்டிருக்கு, சாப்பாடு ஆக்க வைச்சிருந்த காசு, பரவாயில்ல, இந்தாங்க வைச்சிக்கிங்க எங்களோட ஆதரவு இதுக்கு எப்பவுமே உண்டு” என்று தன்னிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்து சிலிர்க்க வைத்தார்.

ராமதாஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், “எங்கம்மா, நாங்களும் பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்னு போராடுனோம், அதெல்லாம் முடியாது, குடிக்கிறவனே திருந்தினாதான் உண்டு. பொம்பளங்க நீங்க முழுவீச்சா செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நிதி கொடுத்துதவினார்.

அதைப்போல, வைகோ கட்சியை சேர்ந்த ஒருவரும், “எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு, எங்க தலைவரு எல்லாத்துக்கும் நடைபயணமாக போறாரு, ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகமாட்டேங்குது” என்றார்.

இப்படியாக, காலை முதல் மாலை வரை பெண்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின்போது தொப்பி, பேட்ச், மற்றும் முழக்கம் பொருந்திய ஏப்ரான்களை அணிந்துச் சென்றது, ஜெயலலிதா வேடமிட்ட தோழர் தன் கழுத்தில் சாராயப் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்தது, பார்ப்போரை, இவர்கள் முழுமூச்சாக இறங்கி வேலைசெய்கிறார்கள் என்பதை உணரவைத்தது.

வண்டியை நிறுத்திவிட்டு இளைஞர்கள், நிதி கொடுத்துவிட்டு பிரசுரம் பெற்று சென்றது என்று பல அனுபங்களை கற்றுத் தந்தது இந்த இயக்கப்பிரச்சாரம்.

ஆர்ப்பாட்டம்

இப்படியாக முழுவீச்சில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 24.12.12 அன்று நாகல்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது, பெண்கள் விடுதலை முன்னணி.

wlf-tasmac-siege-13காலை 11 மணிக்கு முற்றுகை ஆர்ப்பாட்டம் என்று சுவரொட்டிகள் மூலம் தெரிந்துக் கொண்ட போலீசு நாகல்கேணியில் உள்ள எந்த கடை என்று திணறி, மூன்று கடைகளையும் இழுத்து மூடி அடைத்து காவல் காத்து கிடந்தது.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று 70 மேற்பட்டவர்களால் நாகல்கேணி டாஸ்மாக் எதிரில் தொடங்கியது முற்றுகை ஆர்ப்பாட்டம்.

இழுத்து மூடுவோம்! இழுத்து மூடுவோம்!,
தமிழகமெங்கும், டாஸ்மாக் கடைகளை
இழுத்து மூடுவோம்! இழுத்து மூடுவோம்!

ஊத்திக் கொடுக்கும் தமிழக அரசே!
தாலி அறுக்குது டாஸ்மாக் கடைகள்!
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம்!
இழுத்து மூடுவோம்!

என்று முழக்கங்கள் நாகல்கேணியை அதிர செய்தன.

wlf-tasmac-siege-05தலைமை தாங்கிய தோழர் அமிர்தா ஆற்றிய உரையில்,

“பெரும்பான்மையான தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நிறைந்த இந்த பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

“சரியான குடிநீர் வசதி இல்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதே சிரமமா இருக்கு. பக்கத்துல பள்ளிகூடம் இருக்கு. பள்ளிக் கூடத்தில படிக்கற மாணவர்களுக்கு எப்படி சாராயம் கொடுக்குது அரசு. வேலைக்கு போயிட்டு பெண்கள் நிம்மதியா வீடு சேர முடியல. வழியில குடிச்சிட்டு அம்மணமா படுத்துகிடக்கிறாங்க. சீண்டி சில்மிஷம் பண்றாங்க.  இதையெல்லாம் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும்,  சாராயக்கடைகளால் இளம் விதவைகள் கிராமமே உருவாகி இருப்பதை இடித்துரைத்தார். “பர்மிஷன் கேட்கும்போது, போலிசு 24,25 வேணாம்மா, எம்.ஜி.ஆர். நினைவுநாளும், கிறிஸ்மசும் வருது தொந்தரவு பண்ணாதீங்க, ஜனங்க கொண்டாடட்டும்” என்று கூறிய அவலத்தை எடுத்துரைத்தார்.

wlf-tasmac-siege-06“அரசு சட்டப்படியே 3 கி.மீ தூரத்துக்கு ஒரு சாராயக் கடைதான் இருக்கணும், ஆனா இங்க அரை கி.மீட்டருக்கு 3 கடை இருக்கு. தனது சட்டத்தையே அமல்படுத்த வக்கற்றது” என்று அரசை தோலுரித்தார்.

“பக்கத்துல,கேரளத்துல படிப்படியா மதுவிலக்கு என்ற பேச்சுனா இருக்கு, ஆனா தமிழகத்துல டார்கெட் குறைஞ்ச காரணத்தை அலசவும், சரக்கு விற்பனை அதிகரிக்கவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்” என்று அதிகாரிகளை அம்பலப்படுத்தினார். மாணவர்களும், வயது வித்தியாசமின்றி குடித்து, ஆபாசப் படங்களைப் பார்த்து சீரழிவதையும், இதனால் தொடரும் பாலியல் வன்கொடுமைகளையும் உதாரணங்களுடன் விளக்கினார்.

தற்போது, நாகல்கேணியில் உள்ள சாராயக்கடைகளை பெண்கள் விடுதலை முன்னணிக்கு பயந்து மூடிவைத்திருப்பதே நம் போராட்டத்துக்கு வெற்றியின் முதல்படிதான்” என்றார்.

மேலும், “தமிழகமெங்கும் அரசு நடத்தும் சாராயக் கடைகளை மூடும்வரை போராட்டம் முழுவீச்சில் தொடரும்” என்று கூறி முடித்தார்.

இடைவிடாத முழங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

wlf-tasmac-siege-11சாராயக்கடைகளை பூட்டிவிட்டு வந்த டாஸ்மாக் ஊழியரே எங்கள் பின்னால் நின்று சரியான போராட்டம்தான் என்று கூறினார்.

காற்றில் பறந்த பேனரை எழுத்துக்கள் மறையாதவாறு தடுத்து நின்றது பெண் போலிசு .

இது எல்லார் வீட்டிலும் குடியால் பாதிப்பு உள்ளதை உணரவைத்தது.

ஆர்ப்பாட்டத்தில், ஜெ வேடமணிந்த தோழர் பாட்டில் மாலையுடன் இருந்தது அனைவரையும் நின்று யோசிக்க வைத்தது.

பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்துக்கு வெளியே நின்ற பெண் ஒருவர், போலிசைக் காட்டி, “மத்தவங்ககிட்ட எப்படி நடத்துப்பானுங்க? இவங்ககிட்ட எவ்ளோ மரியாதைப் பாத்தியா?” என்று மற்றவரிடம் கூறி சிரித்தார்.

ஆர்ப்பாட்டம் முடிந்து, டீக்குடிக்க நின்ற தோழர்களிடம், ரோந்து சென்ற போலீசு வண்டி அருகில் வந்து “எங்கம்மா, போகணும், நாங்க வண்டியில விட்டுடட்டுமா?” என்று பவ்வியமாக பம்மியது போலிசு.

“வேணா சார்… நாங்க பஸ்சுக்காக காத்திருக்கோம், வந்ததும் போயிடுவோம்” என்றனர் தோழர்கள் கறாராக.

பஸ்ஸில் ஏறியதும், கண்டக்டர் முதல் பயணிகள் வரை அனைவரும், “முடிச்சிட்டீங்களா, இப்படி செஞ்சாதான் மூடுவானுங்கமா, தொடர்ந்து செய்யுங்கமா” என்று உற்சாகத்துடன் ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்களை மக்கள் விஐபியைப் போல பார்த்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை

தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்

10

”முசுலீம் ஆட்சியாளர்களும் மாட்டுக் கறி தின்பவர்களுமான அந்நிய படையெடுப்பாளர்கள் சன்வார்வன்ஷிய ஷத்ரியர்களின் ஹிந்து பெருமிதத்தை உடைப்பதற்காக மாட்டைக் கொல்வது, அதன் தோலை உரிப்பது, அதன் மீதங்களை கண்காணாத இடத்தில் எறிவது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். பெருமிதம் மிக்க ஹிந்து கைதிகளுக்கு இந்த மாதிரியான வேலைகளைக் கொடுத்ததன் மூலம் தோலை உரிக்கும் (charma-karma) சாதி என்ற பிரிவையே அந்நியப் படையெடுப்பாளர்கள் தான் உண்டாக்கினர்” – இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியின் வார்த்தைகள்.

பையாஜி ஜோஷி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி.

மற்றொரு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுரேஷ் சோனி, “தலித்துகளின் துவக்கம் என்பது துருக்கிய, இசுலாமிய மற்றும் முகலாய சகாப்தத்தில் உள்ளது. இன்றைக்கு இருக்கும் வால்மீகி, சுதர்ஷன், மஜ்ஹாபி சீக்கியர்கள் மற்றும் அதன் 624 உட்கிளைகளும் பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட மத்திய கால அல்லது இசுலாமிய கால கொடுங்கோன்மையின் விளைவுகளே” என்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி எழுதி கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மூன்று நூல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதிய முன்னுரைகளில் தான் மேலே உள்ள வியாக்கியானங்கள் இடம்பெற்றுள்ளன. ’ஹிந்து சர்மாகார் ஜாதி, ஹிந்து கத்திக் ஜாதி, ஹிந்து வால்மீகி ஜாதி’ என்ற மூன்று நூல்களின் பேசு பொருட்களும் மேலே உள்ள முன்னுரை பகுதியின் விரிவாக்கம் தான்.

மத்திய காலத்திற்கு முன் சூத்திர ஜாதியார் தீண்டத்தகாதவர்களாக கருதப்படவில்லை என்றும், முசுலீம் படையெடுப்பு மற்றும் இசுலாமிய கொடுங்கோன்மைகளுக்குப் பின் வந்த காலத்தில் தான் தலித்துகள், இந்திய முசுலீம்கள் மற்றும் ஆதிவாசிகள் உருவாகினர் என்றும், அதன் பிறகே தீண்டாமை இந்திய சமூகத்திற்கு அறிமுகம் ஆனது என்பதே மேற்கண்ட நூல்களின் சாரமான வாதங்கள்.

இந்திய வரலாறு பற்றியோ, பார்ப்பனிய சனாதன தர்மம் குறித்தோ, பார்ப்பனிய பாசிச அரசியலைப் பற்றியோ எந்த அறிமுகமும் இல்லாத நண்பர் ஒருவரிடம் மேலே உள்ள வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் ’பாமரத்தமான’ கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

தலையில் தண்ணி தெளித்தல்
“பார்ப்பானுக வழக்கமா செய்யிற மாதிரி ஓரு யாகத்த நடத்தி தலையில தண்ணி தெளிச்சி தீட்டுக் கழிச்சி தீண்டக் கூடியவங்களா மாத்தியிருக்கலாம்லெ?”

”சரி ஒரு பேச்சுக்காக பாய்ங்க தான் மாட்டைக் கொல்ல வச்சி தலித்துகளை உருவாக்கி தீண்டாமையை கொண்டாந்தாங்கன்னே வச்சிக்கலாம். இவங்க பார்ப்பானுக வழக்கமா செய்யிற மாதிரி ஓரு யாகத்த நடத்தி தலையில தண்ணி தெளிச்சி தீட்டுக் கழிச்சி தீண்டக் கூடியவங்களா மாத்தியிருக்கலாம்லெ? பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்திருக்கலாம்லே? ஆனா இவய்ங்க பாய்ங்க செஞ்ச ‘கொடுமைய’ ஏத்துக்கிட்டாய்ங்க. அப்படின்னா அந்தக் ‘கொடுமை’ இவய்ங்களுக்கு ரொம்ப ‘இன்பமான கொடுமையா’ இருந்திருக்கும் போலயே?”

இப்படி ‘மேலோட்டமாக’ சிந்திக்கும் ‘பாமரர்கள்’ ஏராளமானோரை ஈரோட்டுக் கிழவன் தமிழ்ச் சமூகத்திற்கு கொடையளித்து விட்டுச் சென்றிருப்பதாலேயே உள்ளொளியின் நுண்ணுணர்வு மிக்கவர்கள் தமிழர்களின் மேல் தீராத வெறுப்பில் உழல்கிறார்கள். போகட்டும்.

“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” அதாவது, நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று பகவத் கீதையில் பெருமை பீத்துகிறான் மாயக் கண்ணன். பல்லாயிரம் சாதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதான வர்ணங்களும் பிரம்மாவின் எந்தெந்த உறுப்புகளில் இருந்து பிறந்தார்கள் என்று பட்டியலிடுகிறது புருஷ ஸூக்தம். பிராம்மண, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர என்ற நான்கு வர்ணங்களால் வடிவமைக்கப்பட்ட சமுதாய அமைப்பிற்கு வெளியே இருந்த பழங்குடியினர் பற்றி ரிக்வேதத்தில் குறிப்புகள் உள்ளன.

மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன. சமூகத்தை மேலோர் கீழோர் என்று கோடு கிழித்துப் பிரித்துப் போட்டதோடு அல்லாமல், யாரை யார் மணக்கலாம், யார் செத்தால் யார் தூக்க வேண்டும், யார் கைப்பட்ட உணவு தீட்டு என்பது வரையிலும் தெளிவான வரையறைகளை மனு ஸ்மிருதி வகுத்துக் கொடுத்துள்ளது.

மனு ஸ்மிருதி
மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன.

”இருபிறப்பாளர் சாதிப் பெண்ணோடு உடலுறவு கொண்ட ஒரு சூத்திரனின் ஆண்குறியை சிதைத்து விட வேண்டும், அவனது பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் (VIII 374)” என்கிறது மனுஸ்மிருதி. இன்றைய தைலாபுரத் தோட்டத்து மாம்பழங்களின் விதைகள் எங்கேயிருந்து வந்தவை என்பது புரிகிறதா?

”புனிதமான திருமண பந்தத்திற்கு சொந்த சாதிப் பெண்ணே ஒரு பிராமணனுக்கு பரிந்துரைக்கப்படுகிறாள். ஆசைக்காக இதர மூன்று சாதிகளிலிருந்து மனைவியைக் கொள்ளலாம். அவளின் மதிப்பு மரியாதை என்பது சாதியைப் பொறுத்திருக்கும் (III 12)” – ஜெயேந்திர விஜயேந்திர தேவநாத மைனர் பொறுக்கித் தனங்கள் அந்தரத்தில் தொங்கும் மாங்காய்கள் அல்ல, பிரம்மாவின் மகனான மனுவே தெளிவாக ரூட்டுப் போட்டுக் கொடுக்கிறார்.

என்னதான் சூத்திரச்சி அழகாக இருந்தாலும், ஆசைப்பட்டு வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாமே தவிர அதிகாரபூர்வ தகுதியைக் கொடுக்க நினைத்தால்? அதற்கும் மனுவின் சட்டம் உள்ளது.

”கஷ்டமான காலத்தில் கூட ஒரு பிராமணனோ அல்லது ஒரு ஷத்ரியனோ (சட்டப்பூர்வமாக) ஒரு சூத்திர மனைவியை மணந்ததாக வரலாறு இல்லை. ஆசை என்னும் போதை வசப்பட்டு ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணை மணக்கும் ஓர் இருபிறப்பாளன் தன்னையும், தனது ஒன்பது தலைமுறை பரம்பரையையும் சூத்திரர்களாக தரம் தாழ்த்திக் கொள்கிறான்(III 14-15)”

சம்புகன் வதம்
சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம்

விஷ்ணு புராணம் சாதிப் படிநிலையை மட்டுமின்றி, தீட்டு போன்ற தீண்டாமையின் நுணுக்கமான அம்சங்களை வரையறுத்துள்ளது. “இரு பிறப்பாளனின் சவத்தைச் சுமக்க ஒரு சூத்திரனை அனுமதிக்க கூடாது. அதுபோல, ஒரு சூத்திரனின் சவத்தை ஓர் இருபிறப்பாளன் சுமக்கக் கூடாது. தந்தை அல்லது தாயின் சவத்தைப் பிள்ளைகள் சுமக்க வேண்டும். இறந்தவர் தங்களது தந்தையே என்றாலும் அந்த இரு பிறப்பாளனின் சவத்தை சூத்திரர்கள் சுமக்கக் கூடாது(XIX 1-4)” என்கிறது விஷ்ணு புராணம்.

வேதங்களும், ஸ்மிருதிகளும் காட்டிய வழியில் பீடு நடை போட்ட ராமனின் ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள். ராமனை தேசிய நாயகனாக ஏற்காதவர்களை விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்கிறார் ஒரு மத்திய அமைச்சர். இவர்கள் ராமனைப் போற்ற வேண்டிய தேவை ஏன் வந்தது? அதற்கு பல்வேறு இந்துத்துவ அரசியல் உள்நோக்கங்கள் இருந்தாலும், ராமன் இவர்களின் அன்றைய வடிவமாகவே இருந்திருக்கிறான்.

கிருதயுகத்தில் (சத்யுகம்) பிராமணர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமண, ஷத்ரிய, வைசிய குலத்தவர்களுக்கும் தவம் செய்யும் உரிமை உள்ளது என்கிறது ராமாயணம். கலியுகத்தில் சூத்திரர்களும் தவம் செய்யலாமாம். சத்யுகத்தில் ஒழுங்காக இருந்த தர்மம், பின்னர் ஒவ்வொரு யுகமாக பிற வருணத்தவர் தவத்தில் ஈடுபட ஈடுபட குறைந்து கடைசியாக கலியுகத்தில் சூத்திரன் தவம் செய்யத் துவங்கியதும் முற்றிலுமாக குலைந்து போகும் என்கிறது ராமாயணம். இதை ராமனிடம் சொல்பவர் நாரதர்.

இந்த விளக்கங்களின் அடிப்படையில், தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம். இது தான் ராம ராஜ்ஜியத்தின் சிறப்பு. இந்த ராஜ்ஜியத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது தான் மோடி உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகளின் உள்ளக் கிடக்கை.

தாங்கள் பேசும் மகத்தான பொற்காலம் குறித்து யோக்கியத்தோடு சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலையில் வரலாற்றை தாங்கள் நினைத்தவாறெல்லாம் திருத்தி எழுதி வருகிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள்.

அவர்கள் அப்படியே செய்யட்டும். ஆனால், நமக்குச் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.

முசுலீம்கள் வந்த பின்பு தான் தீண்டாமை, சாதிப் பிளவுகள், பழங்குடியினம் உண்டானது என்பதே ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் இனிமேல் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகும் வரலாறென்றால், மனு ஸ்ம்ருதி பகவத் கீதை, புருஷ ஸூக்தம், ரிக் வேதம் போன்ற பார்ப்பனிய ஹிந்து தண்டனைத் தொகுப்புகளை எழுதிய மாமுனிகள் முசுலீம்களுக்கு பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கவேண்டும்.

ஒருக்கால் தலித்துக்களை வேட்டையாடும் ஆதிக்க சாதி இந்துக்கள் மறுபுறம் முசுலீம்களையும் பகைவர்களாக கருதுவதற்கும் அந்த அடிப்படையில் அந்த சாதிக் கட்சிகளை அணிதிரட்டுவதற்கும் இந்துமதவெறியர்களுக்கு இந்த புதிய ‘வரலாற்றுக் கண்டுபிடிப்பு’ உதவி செய்யும். ராமதாஸ் போன்றோர் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறார்கள்.

மாப்பிளா கலகம்
1921-ம் ஆண்டு மாப்பிளா போராட்டத்தை வெள்ளை இராணுவம் ஒடுக்கியது, வெள்ளையனின் காலை நக்கி அதை வரவேற்றனர் நம்பூதிரிப் பார்ப்பன துரோகிகள்.

சூத்திரன் தவம் செய்தானென்பதற்காக சம்பூகனின் தலையைத் துண்டித்த ராமனின் தந்தை தசரதன் 64 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டியும் பிள்ளையில்லாமல் அசுவமேத யாகம் செய்தான். யாகம் செய்து குழந்தை எப்படிப் பிறந்தது? வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஆதாரங்களை எடுத்துக் கொடுக்கிறார் பண்டிதர் நாதத்தையர்

”தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை (அதாவது அசுவமேத யாகத்தில் பயன்படுத்தப்பட்டது) மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள்”

ஆர்.எஸ்.எஸ் சொல்லித் தரும் புதிய வரலாற்றை புரிந்து கொள்ள நமக்குத் தேவைப்படும் விளக்கங்கள் எல்லாம், அந்த புரோகிதர்கள் மாறுவேடம் பூண்டு வந்த முல்லாக்களா என்பதே ஆகும்.

வேதகாலத்தில் மட்டுமல்ல, கேரளத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நம்பூதிரிப் பார்ப்பனர்களை விட்டு எந்தெந்த சாதியினர் எத்தனை அடி விலகி நிற்க வேண்டும் என்பதில் இருந்து சண்டாள சாதியினர் எச்சில் துப்ப கழுத்தில் மண் சட்டியைக் கட்டிக் கொண்டே திரிய வேண்டும் என்பது வரை தீண்டாமையை தெளிவாக வரையறுத்து வைத்திருந்தனர். விவேகானந்தரே அந்த முடை நாற்றம் பொறுக்காமல் கேரளத்தை பைத்தியக்காரர்கள் விடுதி என்றார்.

நம்பூதிரி பார்ப்பனர்கள் கீழ்ச்சாதியினரின் மேல் அமுக்குப் பேய்களைப் போல் அழுந்திக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் மாப்ளா முசுலீம்கள் தாழ்த்தப்பட்ட ஈழவர்களின் தோளோடு தோள் நின்று நிலவுரிமைக்காக போர்க்குரல் எழுப்பினர். கேரளத்தின் வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் முதன் முறையாக சுதந்திரக் காற்றை அந்தப் போராட்டத்தினூடாகவே சுவாசித்தனர். 1921-ம் ஆண்டு மாப்பிளா போராட்டத்தை வெள்ளை இராணுவம் ஒடுக்கியது, வெள்ளையனின் காலை நக்கி அதை வரவேற்றனர் நம்பூதிரிப் பார்ப்பன துரோகிகள்.

விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி
வரலாறே கூட திருத்தி எழுதப்படுகிறது. ஏன்? (விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி)

இன்று நமக்கு நன்றாகத் தெரியும் வரலாறே கூட திருத்தி எழுதப்படுகிறது. ஏன்?

தலித்துகளையும் ஆதிவாசிப் பழங்குடிகளையும் காலாட்படையாக கொண்டே 2002-ம் ஆண்டு குஜராத்தின் ரத்த வெறியாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள். அவர்களுக்கு தலித்துகள் தேவைப்படுகிறார்கள்.

ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.

குஜராத்தில் ஓடிய ரத்த வெள்ளம் இந்தியாவை மூழ்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் கடமை. சுடலை மாடனுக்கு சுருட்டும் சாராயமும் படைத்து கோழியை அறுத்துக் கொண்டாடும் எதார்த்தமான ஹிந்து மக்களின் எளிமையான மத நம்பிக்கைகள் வேறு, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் புகுத்த நினைக்கும் வர்ணாசிரம அடிப்படையிலான பார்ப்பனிய மதவெறி வேறு என்பதை நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்புகள்:

1.  இருபிறப்பாளர் : பார்ப்பனர்கள். பூணூல் போடும் சடங்கிற்கு பிறகு பார்ப்பனர்கள் மீண்டும் ஒரு பிறவி எடுத்தவர்கள் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.

2. ராமன் பிறப்பு மற்றும் அசுவமேத அசிங்களை அறிந்து கொள்ள : இந்து மதம் எங்கே போகிறது?

3. பார்ப்பனிய சனாதன தருமம் தீண்டாமை மற்றும் சாதிக் கொடுங்கோன்மையை எப்படியெல்லாம் காலங்காலமாக வளர்த்தெடுத்து வந்தது என்பதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு இரண்டு நூல்களைப் பரிந்துரைக்கிறோம்.
அ) அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) – தி.க வெளியீடு
ஆ) காலம் தோறும் பிராமணீயம் – அருணன்.

– தமிழரசன்

இரண்டு தொழிலாளிகள் பலி – கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தாலிபான்கள்

1

கும்மிடிப்பூண்டி ‘சூர்யதேவ்’ ஆலை முதலாளியின் லாபவெறிக்கு 2 தொழிலாளர்கள் பலி, 3 பேர் படுகாயம் !

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ‘சூர்யதேவ்’ இரும்பு உருக்கு ஆலையில் கடந்த 24.12.2014 அன்று ரசாயன கழிவு அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேன் வெடித்து சிதறியதில்

  • அருகில் இருந்த தொழிலாளி ஒருவர் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்தார்.
  • இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • படுகாயமடைந்த இரண்டுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
  • மேலும் ஒருவர் தனது காது கேட்கும் திறனை இழந்துள்ளார். இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தொழிற்சாலை
கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தொழிற்சாலை

இவர்கள் அனைவருமே வடமாநிலத் தொழிலாளிகள். அதில் செவி திறன் இழந்தவர் உட்பட நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாதச் சம்பளம் வெறும் ரூ.6000/-க்கு குடும்பத்தோடு உழைக்க வந்தவர்கள் ’சூர்யதேவ்’ ஆலை முதலாளியின் லாபவெறிக்கு ஈவு-இரக்கமின்றி ‘படுகொலை’ செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். செல்லும் வழியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தபோது உதவி ஆய்வாளர் அலமேலு அவர்கள் “தகவல் தெரியும், அது ஒன்றுமில்லை கெமிக்கல் கொட்டிடிச்சி” என்றார். 5 தொழிலாளர்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்ட செய்தி சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் காவல் நிலையத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

மாலை 04.00 மணி

உடனே பத்திரிகையாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ‘சூர்யதேவ்’ இரும்பு உருக்கு ஆலைக்கு சென்றபோது அங்கு எந்த பதட்டமும் இல்லாத சூழ்நிலை தான் காணப்பட்டது; ஆலை வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. கேட்டில்  செக்யூரிடியிடம் விசாரித்தபோது எதுவும் தெரியாதவர்களைப்போல “ஒன்றும் இல்லை” என்றே கூறினர். ஆலைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மாலை 04.15 மணி

சிறிது நேரத்தில், பத்திரிகையாளர்களும் வந்துவிட்டனர். அவர்களும் ஆலைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களும் வலுக்கட்டாயமாக ஆலைக்குள் நுழைந்தோம்.

செல்லும் வழியில் ஆச்சரியம் என்னவென்றால் ஆலை எப்போதும்போல இயங்கிக்கொண்டிருக்கிறது. சற்றுநேரத்திற்கு முன்பு அவர்களது சக தொழிலாளர்கள் தங்கள் உயிரையும், உடல் உறுப்புகளையும் இழந்ததற்கான அறிகுறி இல்லாமல் (தென்படாமல்) நிர்வாகம், மற்ற தொழிலாளிகளை வேலைவாங்கிக்கொண்டிருந்தது. இப்படி மனித மாண்புகளைக் கூட மறக்கடித்து தனது இடைவிடாத லாபச் சுரண்டலை தொடர்ந்து கொண்டிருந்தது சூர்யதேவ்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் ஆலையின் மறுபுறம் கழிவுகளை கொட்டுவதற்காகவே பல ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மாலை 04.30 மணி

முகேஷ் அகர்வால்
கொலைகார சூர்யதேவ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அகர்வால்

விபத்து ஏற்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதற்குக் கூட இவ்வளவு நேரம் ஆகி விட்டது.

ஏதோ ‘இரண்டு உயிர்கள் போய் விட்டன, 2 பேர் படுகாயமடைந்து விட்டனர்’ என்று செத்த எலியை ஒதுக்கித் தள்ளுவது போல தள்ளி தடயங்களை மறைக்க முயற்சித்திருக்கிறது நிர்வாகம்.

விபத்து ஏற்பட்ட இடம் அடையாளம் தெறியாமல் மணலால் மூடப்பட்டிருந்தது. சற்று உற்று பார்த்தபின் தெரிந்தது, தொழிலாளிகளின் ரத்தமும், சதையும் மண்ணோடு மண்ணாக கலந்திருப்பது.

அருகே ஒரு ‘செல்போன்’ உருகிய நிலையில் சிதறி கிடந்தது. அங்கு வெடித்துச் சிதறிய ‘பிளாஸ்டிக் கேன்’ 200 மீட்டருக்கு அப்பால் துண்டு துண்டாக கிடந்தது.

விபத்து நடந்தபோது தொழிலாளிகள் எப்படி துடித்துபோய் இருப்பார்கள் என்று நினைத்து பார்த்தாலே மனம் கொதிக்கிறது; நவீன தொழில்நுட்பத்தில் இயங்குவதாக பீத்திக் கொள்ளும் சூர்யதேவுக்கு கற்கால மனித உணர்வு கூட இல்லை என்பதை நினைத்து பதறுகிறது.

மாலை 05.00 மணி

15 நிமிட ஆய்விற்கு பிறகு மீண்டும் நுழைவாயிலுக்கு வந்தபோது மணி 05:00, அப்போதுதான் பொன்னேரி ஆர்.டி.ஓ,  வட்டாட்சியர், மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் துறை ஆய்வாளர் சேகர் ஆகியோர் தொழிற்சாலைக்குள் ஆய்வு செய்ய நுழைகிறார்கள். பிணத்திலும் அரிசி பொறுக்கும் அதிகார வர்க்கம், தொழிலாளர்களின் கொலையையும் இன்னொரு சடங்காக கருதி முடிந்த வரை ஆதாயம் பார்த்து, முதலாளியை பாதுகாக்க வந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் அங்கே சாலையோரம் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்மணியையும் ஒரு வாலிபரையும் விசாரிக்க முயற்சித்தோம். நமது மொழி அவர்களுக்கு தெரியவில்லை. இந்தி தெரிந்த நபர் ஒருவர்மூலம் விசாரித்தோம். அவர்கள் கூறியது

“ நாங்கள் ஒரிசா மாநிலத்தை செர்ந்தவர்கள். விபத்தில் செத்தவர் பெயர் எம்.டி.அப்தாப். காயமடைந்தவர்கள்: அப்தாபின் தந்தை எம்.டி.மோலின் (இவர் 25.12.2014. தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்), சகோதரன் எம்.டி.அலாம், மற்றொருவர் எங்கள் பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ். இப்போ நாங்க எங்கே போகணும், எப்படி போகணும் ஒண்ணும் புரியாம நிக்கிறோம்.” என்று தங்களுடைய சோகத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்தினர்.

இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தலையை தொங்க போட்டுக்கொண்டு சோகமாக ஒருவர் அந்த இடத்திற்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது தனது பெயர், எம்.டி. அபுதசாம் என்றும், விபத்து நடந்தபோது அங்கு இருந்ததாகவும், விபத்தின் அதிர்ச்சியால் தனது வலது பக்கம் காது செவிடாகிவிட்டது, யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார்.

“இது என்ன கொடுமை? மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கே என்ன செய்றிங்க?” என்று பதறினோம்.  நமது தோழர்கள் அவரை ‘சூர்யதேவ்’ ஆலை வாயில் முன்பு அழைத்துச் சென்று மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினோம். பலன் ஏதும் இல்லை. உடனே ’கேட்டை’(Gate) இழுத்து மூடினோம்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என்றோம்.

மாலை 05.45 மணி

ஆலைக்குள் ஆய்வு செய்துகொண்டிருந்த (ரேட் பேசிக்கொண்டிருந்த) ஆர்.டி.ஓ, மற்றும் காவல் துறை ஆய்வாளருக்கு தகவல் தெரிந்து, ஆய்வாளர் சேகர் மெயின் கேட்டிற்கு வந்தார்.

வந்ததுமே என்ன? ஏது? என்று விசாரிக்காமல் “லாரியை ஏன் மறிக்கிறீங்க? மரியாதயா எல்லோரும் ஓரமா விலகுங்க!” என்றார். தொழிலாளர் உயிரைப் பற்றி அக்கறை இல்லாத போலீசுக்கு முதலாளியின் லாப வெள்ளம் தடைப்படுகிறது என்றதும் பொத்துக் கொண்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர் இதுவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவில்லை என்று எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் ஆய்வாளர் சேகரின் காதில் விழவில்லை. அவர் கவனம் முழுவதும் லாரிகளை உடனே வெளியே அனுப்பவேண்டும் என்பதிலேயே இருந்தது.

“ஒரு தொழிலாளி தனது ஒரு காது செவிடாகி தவிக்கிறார், அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்” என்று உறுதியாக நின்றோம்.

ஆய்வாளர் சேகருக்கு வந்தது பார் கோவம்! “என்ன? சொல்றத கேட்கமாட்டீங்களா? அவ்வளவு அக்கறையா இருந்தா 108-க்கு போன் செஞ்சி அனுப்பவேண்டியதுதானே!” என்று சீறினார். தொழிலாளிக்கு 108 ஆம்புலன்ஸ், முதலாளிக்கு ஆய்வாளர் சேகரின் தனிப்பட்ட பாதந்தாங்கும் சேவை என்பதுதான் இந்திய அதிகார வர்க்கத்தின் நடைமுறை.

“அப்போ உங்களுக்கு இங்கே என்ன வேலை? நீங்க கிளம்புங்க நாங்க பாத்துக்கிறோம்” என்று எதிர்த்து நின்ற பிறகு, இதற்கு மேல் அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி நிர்வாகத்திடம் பேசி வாகன ஏற்பாடு செய்து செவி இழந்த தொழிலாளி எம்.டி.அபுதசாம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அதன் பிறகு, வேறு வழியில்லாமல் கவனக்குறைவால் நேர்ந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து ‘சூர்யதேவ்’ நிர்வாகத்தின் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆலை எப்போதும் போல இயங்கிக்கொண்டே இருக்கிறது.

தொழிலாளர் வாழ்க்கையை கழிப்பறை காகிதம் போல மதித்து, சட்டவிரோதமாக வேலைக்கு வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் உயிர் விடுவதை தனது மயிர் உதிர்ந்தது போல நடத்தியிருக்கிறது. சூர்யதேவ். இது போன்ற படுகொலைகள் தொடர்கதையாகி வருகிறது. முதலாளியின் லாப வெறிக்கு தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாக பலியிடப்படுகின்றனர்.

தொடரும் ஆலைச்சாவுகளை தடுக்க ஆலை வேறுபாடுகளை கடந்து தொழிலாளி வர்க்கமாய் அணிதிரண்டு, முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க களம் இறங்கவேண்டும். .

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்- 9444213318.

படங்கள், வீடியோ : இணையத்திலிருந்து

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்

179

blorebrahmincolonyஅன்பு வினவு நண்பர்களுக்கு,

வணக்கம்.

என்னை நினைவிருக்கிறதா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை அனுப்பினேன். அதில் மகளிர் தினம் பற்றி என் அனுபவங்கள் எழுதியிருந்தேன். தனிப்பட்ட விவரங்களை வெளியிடாமல் அதை மாற்றி எழுத கேட்டிருந்தீர்கள். அப்போது அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. பிறகு நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்த ஆண்டுகளில் பெண் என்ற வரம்பைத் தாண்டி சுயமா வாழவும், போராடவும் நிறைய கற்றுக் கொண்டேன். கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் இருப்பேன், உங்க கட்டுரைங்களும் படிப்பேன்.

சமீபத்தில் பூர்வாசிரம பிராமணர் கடிதம் படித்தேன். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ரசித்தேன். இந்த மாதிரி சமூகத்தில் ஒரு நண்பர் மாறி வந்து கலப்பு திருமணமெல்லாம் செய்ஞ்சாருன்னா நம்பவே முடியலை, வாழ்த்துக்கள்! அத்தோடு உங்கள மாதிரி தீவிர கொள்கைக்காரர்களோடு அவர் இணைந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சரி அதிர்ச்சி எதற்கு என்று கேக்குறீங்களா?
அதுக்குத்தான் இந்த கடிதம்.

கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம். இதெல்லாம் மூணு வருடத்துக்கு முன்பு உள்ள நிலை.

அது பார்க்க ரொம்ப அழகான அப்பார்ட்மெண்ட். சிங்கிள் பெட் ரூம் என்றாலும் வெளியே டு வீலர் பார்க்கிங், குழந்தைகள் விளையாட வசதி, காற்றோட்டமான குடியிருப்பு, எங்க பட்ஜெட்டுக்கு ஏத்த வாடகைன்னு எல்லாம் பொருந்தி வந்தது.

எங்களுக்கு பூர்வீகம் தென்மாவட்டம். அங்க இருக்கும் மக்கள் மாதிரி அன்னியோன்யமாய் இல்லாட்டாலும் இங்கேயும் ஓரளவுக்கு நல்லாத்தான் பழகுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆரம்பத்தில் அப்பார்ட்மெண்ட் பெண்கள் சினேகமாக சிரிச்சாங்க. என்ன ஏதுன்னு பொதுவா பேசிக்குவாங்க. சரி நல்லாத்தான் போகுதுன்னு நினைச்சேன். ஆனா அது கொஞ்ச நாளைக்குத்தான்.

எங்கள் அப்பார்ட்மெண்டில் 30 வீடுங்க, மூன்று ஃபுளோரில் இருக்கு. தரை தளத்துல முகப்பு கேட்டுக்கு உள்புறம் அழகான குரோட்டன்ஸ் செடியெல்லாம் நிறைய வச்சருந்தாங்க. ஒரு நாள் நான் ஸ்கூலுக்கு கிளம்பிய போது எதிர்த்த வீட்டு அம்மா நிறுத்தி கேட்டார்.

brahmin“பூச்செடி நன்னா வளரணுமுன்னு, மீன் கழுவுன தண்ணியெல்லாம் ஊத்றேளாமே”!?”

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. மீன் கழுவன தண்ணியை சிங்குல ஊத்தாம பூச்செடிக்கு ஏன் ஊத்தப்போறேன்?

“யார் சொன்னாங்க மேடம்” திருப்பிக் கேட்டேன்.

பக்கத்து வூட்டு மாமிதான்ன்னு அந்த அம்மா சொன்னாங்க. சரி அவுங்ககிட்ட கேக்குறேன்னு எரிச்சலுடன் சட்டுனு திரும்பினேன். உடனே அந்த அம்மா இல்லையில்லை அப்படி சட்டுபுட்டுன்னு கேக்காதீங்கோ, சும்மா இட்டுக்கட்டி சொன்னதாக்கும், மீன் தண்ணியெல்லாம் அங்க ஊத்தக் கூடாதுன்னு சொல்ல வந்தேன்னு சொன்னாங்க.

இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பாங்க! இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே அப்ப புரியல. கொஞ்ச நாட்களல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்.

அங்க இருக்குறவங்க யார், என்ன சாதின்னு ஆரம்பத்துல தெரியாது. அது தேவையுமில்லை. என்னென்ன வெலை பார்க்குறாங்கன்னு மட்டும்தான் தெரியும். பக்கத்து வீட்டு குழந்தைகள் என் குழந்தையோட விளையாட வீட்டுக்கு வருவாங்க. ஆனா அந்த அப்பார்ட்மெண்டுல என்னமோ கண்ணுக்குத் தெரியாத பிரிவினை, என்னண்ணு சொல்லத் தெரியாத ஒரு அலர்ஜி இதையெல்லாம் நானே கொஞ்ச நாள்ல உணர்ந்தேன். கணவருக்கும் இதே மாதிரி சில அனுபவங்கள்.

அப்பார்ட்மெண்டுல 20 வீடுகள்ள பிராமிண்ஸ் இருந்தாங்க. ஐஞ்சு வீடு நான்-பிராமின்ஸ், மூன்று வீடுகள்ள கத்தோலிக்ஸ், இரண்டுல நார்த் இன்டியன்ஸ் இருந்தாங்க. எங்க வீட்டுல ஜீசஸ், மாதா படங்கள பார்த்துட்டு ஆரம்பத்திலேயே நாங்க இன்னாருன்னு அவங்க கண்டு பிடிச்சிருப்பாங்க போல. மதம் மட்டுமில்ல, சாதியும் அவுங்களுக்கு முக்கியமில்லையா?

தூத்துக்குடியா, தூத்துக்குடியில எங்க-ன்னு ஆரம்பிச்சு தெரு, டோர் நம்பர் வரைக்கும் போவாங்க. இதுதான் நோக்கமான்னு தெரிஞ்சாச்சு, பிறகு எதுக்கு தயக்கம்? நான் மீனவர் சமுதாயம், கணவர் நாடார்னு ஒரே போடா போட்டுருவேன். இப்ப நடுத்தர வர்க்கமா மாறினாலும் ஒரு மீனவச்சிக்கு இருக்கும் சுயமரியாதை எங்கிட்ட நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்.
அவங்களுக்கு கருவாட்டு சாதி பிடிக்காதுன்னாலும் எங்களோட மாறிப்போன வர்க்கம் காரணமா சகிச்சுக்கிட்டாங்க போல. இது மேலும் எனக்கு அறுவெறுப்பை உண்டாக்கிச்சு.

பிராமின்ஸ் வீடுகள்ள இருக்கும் குழந்தைங்க எங்க வீட்டுக்கு எப்பவாச்சும் வருவாங்க, சாக்லேட், பாக்கட் சிப்ஸ் கொடுத்தா சாப்பிடுவாங்க. பரவாயில்லயே நல்லாத்தானே பழகுறாங்கன்னு ஆரம்பத்துல நினைச்சேன். பிறகு பார்த்தா அவங்க பேக்டு ( உறை போட்ட) உணவு மட்டும்தான் சாப்பிடுவாங்க, வடை, பணியாரம்முனு இதர பதார்த்தங்கள கொடுத்தா நாசுக்கா தவிர்ப்பாங்க. ஒருநாள் ஏன் என்னென்னு கேட்டப்பிறகுதான் சொன்னாங்க. நம்ம கைபட்ட பதார்த்தம் அவங்களுக்கு தீட்டாம். அதே மாதிரி தண்ணியும் குடிக்க மாட்டாங்க. இதெல்லாம் அந்த குழந்தைங்க சரளமா செய்யுறதப் பாத்து எனக்கு இன்னும் அதிர்ச்சி. எப்படியெல்லாம் டிரெயினிங் கொடுத்துருக்காங்க!

மாசத்துக்கு ரெண்டு நாளாவாது முழு அப்பார்ட்மெண்டையும் கழுவி ஊத்துவாங்க. ஏதோ பிரதோஷம், இன்னும் வாய்க்குள் நுழையாத சடங்கு சாஸ்திரமுன்னு சொல்லி தண்ணி இல்லாத ஊருல வெள்ளமா ஊத்துவாங்க. காலைல ஸ்கூலுக்கு கிளம்பும் போது இவங்க ஊத்துண தண்ணியல விழாம கவனமாக பாத்துப் போகணும். மற்றவர்களுக்கு இப்படி இடையூறு செய்யுறமேன்னு கொஞ்சம் கூட நினைக்கமாட்டாங்க.

rentஇவங்க வீட்டுல வேலை செய்யுற பெண்கள் 50, அறுபது வயசானாலும் ஏன்டி, போடின்னுதான் கூப்பிடுவாங்க. கொடுமை என்னண்ணா அவங்க பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. காலையில் வேலைக்கு வந்தா அப்பார்ட்மெண்ட் வெளி கேட்டுக்கு பக்கத்துல செருப்பை கழட்டிவிட்டுத்தான் இந்த பெண்கள் வரணும். இவங்க சமையலறையில அந்த பெண்கள் நுழைய கூடாது. பாத்திரங்களையெல்லாம் குளியலறையில்தான் கழுவணும். பழையது, மிஞ்சனதெல்லாம் யூஸ் அண்ட் த்ரோ டப்பாக்களில்தான் கொடுப்பாங்க.

அவங்க குழந்தைங்க எங்க வீட்டுக்கு வர மாதிரி (அதுலயும் நிறைய கட்டுப்பாடு) என் குழந்தை அவங்க வீட்டுக்கு போக மாட்டான். இது குழந்தை தன்மையிலேயே அவனே தெரிஞ்சிக்கிட்ட விசயம்கிறதால பல நாட்கள் நான் உடைஞ்சு போயிருக்கேன். குழந்தைங்கள விடுங்க, நாங்களே ஒரு ஆத்திர அவசரத்துக்கு அவங்க வீட்டுக்கு போயி மணிய அழுத்துனா வீட்டு ஜனங்க அத்தன பேரும் வாசலை மறிச்சுக்கிட்டு என்ன, என்னன்னு கேப்பாங்க. எதா இருந்தாலும் வாசலிலேயே பேசி முடிச்சிக்கலாம், வீட்டுக்குள்ள என்ன வேலைங்குற மாதிரி இருக்கும்.

வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உக்காருங்கன்னு சொல்லி பழகுனவங்களுக்கு இது ரொம்ப நெருடலா இருக்கும். ஒரு முறை நான் சொன்ன நான் – பிராமின் குடும்பத்துல ஒருத்தங்க பொங்கலுக்கு அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் ஏரியாவுல ஒரு ஓரத்துல கோலமெல்லாம் போட்டு, அடுப்பு மூட்டி பொங்கல் சமைச்சாங்க. பொங்கலோ பொங்கல்னு குழந்தைகள் கும்மாளமும் வேடிக்கையுமா இருந்தது. பிறகு ஆளுக்கொரு இலையில பொங்கல கொடுத்து சாப்பிடச் சொன்னாங்க. பிராமண குழந்தைங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஸட்ரக்சனை மறந்துட்டாங்களான்னு தெரியல, சாப்பிட்டாங்க. என்ன இருந்தாலும் குழந்தைங்க இல்லையா!

பிறகென்ன நான்கைந்து வீடுகள்ள கதவ சாத்திட்டு அடி உதை, எதுக்கு சாப்பிட்டேன்னு! பொங்கல் போட்ட அந்த பெண் அவ எனக்கும் தோழிதான், இத கேட்டு அவங்கிட்ட போய் சண்டை போட்டா! நீங்க குழந்தைங்கள ஆச்சாரமா வளர்க்கிறதா இருந்தா வீட்டுக்குள்ள பூட்டி வச்சு வளருங்க, எங்க்கிட்ட வந்தா இப்படித்தான் பொங்கல கொடுப்போம், அதை மறைச்ச வைச்சு சாப்பிடுற பழக்கம் எங்களுக்கு இல்லேன்னா.

கத்தோலிக்ஸ் பொதுவா பொட்டு, பூவெல்லாம் வைப்பாங்க. எனக்கு அது விருப்பமில்லேன்னாலும் எப்பவாச்சும் வைப்பேன். அப்ப முறைச்சு பாப்பாங்க. ஒரு நாள் தலை குளிச்சிட்டு சாம்பிராணி போட்டேன். உடனே வெளிய வந்து நீங்களெல்லாம் சாம்பிராணி போடுவேளான்னு கேட்டாங்க. வந்த புதிசில் என் கணவர் வேட்டியுடன் சென்ற போது நீங்களெல்லாம் வேட்டி கட்டுவேளான்னு கேட்டாங்க. அவரோ நாங்க மட்டும்தான் வேட்டி கட்டி பழக்கமுணு சொன்னாரு.

இது மாதிரி சின்ன விசயங்கள் நிறைய இருக்கு. எதுக்கு சொல்றேன்னா இதெல்லாம் அவங்களுக்கு பாத்தியப்பட்ட சமாச்சாரங்கள்னு ஒரு நினைப்பு. குங்கும பொட்டு வைக்காதது, வகிடெடுத்து பொட்டு வைக்காதது, மஞ்சள் பூசி குளிக்காதது இதெல்லாம் அவங்க கருத்துப்படி ஒழுக்கமில்லாத பெண்களோட குணம்.

அந்த பிராமின் வீடுகள்ள ஒருத்தரு ஏதோ சில கோவில்கள்ல ஐயரா இருக்காரம். அவரு செல்போன், பைக்குனு அல்ட்ரா மாடர்னா இருந்தாலும் வீட்டு பெண்கள் பீரியட்ஸ்னா அபார்ட்மென்ட் தரை தளத்துல ஒரு சேரைப் போட்டு உக்காருவாங்க. ஒரு பெண்ணா எனக்கு அது பயங்கர கூச்சமாவும், வெறுப்பாவும் இருக்கும். மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க. வீட்டுல எதாவது துணிமணி கேட்டாங்கன்னா கொடியில இருந்து கம்பு வைச்சு எடுத்துக் கொடுப்பாங்க. இதெல்லாம் 21-ம் நூற்றாண்டுல சென்னையில ஒரு நவீன குடியிருப்புல நடக்குது!

kanchiபிராமின் வீட்டு பசங்க எல்லாம் சிபிஎஸ்இ பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறாங்க. என்னோட பையனை ஸ்டேட் போர்டு பள்ளிக்கூடத்துல அதுவும் சாதாரண மக்கள் படிக்கும் பள்ளின்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு நாசுக்கா ஆனா ரொம்ப கீழா பேசுவாங்க. அங்க படிக்கிற பிள்ளைங்களெல்லாம் மக்காச்சே, சிபிஎஸ்இ இல்லேன்னா பியூச்சர் பாழாச்சே, மத்த படிப்பெல்லாம் வேஸ்ட்டாச்சேன்னு இதுதான் அல்டிமேட் உண்மை போல பேசுவாங்க. அதே மாதிரி வெளிய போனா உடுப்பி, கிராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன்னு ரொம்ப ஆச்சாரமான சைவக் கடையா பாத்துத்தான் சாப்பிடுவாங்க!

இதன் மறுபுறமும் உண்டு. தள்ளு வண்டியில் வரும் கடைக்காரர்களிடம் இவர்கள் பேரம் பேசும் சித்ரவதைய தனியா சொல்லணும். பத்து ரூபாய்க்கு ஐந்து விதமான காய் வாங்கி அதில் ஐம்பது காசு மிச்சம் பிடிக்க பிளான் பண்ணுவாங்க. காய்க்காரரிடம் வத்தலும், தொத்தலுமாய் இருக்கே, என்னா இவளோ ரேட்டு என்று ஆரம்பித்து நாலணா, எட்டணாவுக்க்கு உலக அரசியலே பேசுவாங்க. மற்றவர்களிடம் சாதாரணமாக பேசும் அந்த வியாபாரிகள் இவர்களை மட்டும் ஜன்ம எதிரி போல நடத்துவாங்க. ஆனால் அவர்களுக்கிடையே தினமும் வியாபாரம் நடந்துதான் வருகிறது.

எங்கள் அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் மின்வாரியம், தலைமைச் செயலகம், இன்சூரன்சுன்னு பல அரசு, தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் வாழ்றவங்கதான். ஆனா பாத்தீங்கன்னா ரேசன் பொருட்கள் ஒன்று விடாமல் வாங்கி வருவாங்க. அதில் பொங்கல் இலவச வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் கூட அடக்கம். நாங்களெல்லாம் ரேசன் கடைகளில்தான் கால்வயிற்று கஞ்சியுடன் வளர்ந்து ஆளானவங்கதான். ஆனா இன்னைக்கு ஒரு நடுத்தர வர்க்க வாழ்வு கிடைத்ததும், வறுமைக் கோடுக்கு கீழே இருக்கும் மக்களின் பங்கை நாம எடுக்க கூடாதுங்கிறதெல்லாம் யோசிக்காமலே செய்கிறோம். அவங்களோ எந்த குற்ற உணர்வும் அடையறதில்லை.

இவங்களோட ஆச்சார அனுஷ்டாங்களாவது உண்மையான்னு பார்த்தால் அது இன்னும் போலியா இருக்கும். ஒரு வீட்டில் கையில் ஏதோ ஜபமாலை வைத்துக் கொண்டு எதிரில் குட்டி ஹோமம் மாதிரி ஒன்றில் (நெருப்பு கிடையாது) ஏதோ எடுத்து போட்டு கொண்டிருப்பார் ஒருவர். எதிரில் ஷேர் மார்கெட் சானல் ஓடிக் கொண்டிருக்கும். அதுல ஷேர் விலைகளை பாத்துகிட்டு இங்கே மந்திரம் ஓதிகிட்டு………எப்படி இது?

எங்களைப் போன்ற பின்தங்கிய சமூகத்தின் முதல் தலைமுறை அறியாத பங்கு மார்கெட்டெல்லாம் அவர்களுக்கு அத்துப்பிடி. இதர வருமானங்களை இதற்கென்றே ஒதுக்கி பணம் சேர்க்கிறார்கள். அதில் கோவில் பூசாரியாக இருக்கும் ஐயரும் உண்டு. பிராமண வீட்டு பெண்கள் பகலில் எல்லா சேனலிலும் சீரியல் பாப்பாங்க. கைகளில் இருக்கும் நோட்டுக்களில் ராம மந்திரமோ ஏதோ ஒன்றோ எழுதிக் கொண்டே இருப்பார்கள். இதுல எது உண்மை?

Kalady Avani Avittamகோடைகாலத்தில் தண்ணீரில்லை, தினமும் ஒரு குடிநீர் லாரி நிரப்ப வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் சேர்த்து மெயின்டெனன்சுக்கு மொத்தம் 2000 ரூபாய் வாங்கினார்கள். என் கணவர் யதேச்சையாக வாச்மேனிடம் தினமும் லாரி வருகிறாதா என்று கேட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிறது என்று அவர் சொன்னார். அவருக்கு பிறகு வந்த புது வாச்மேனோ குடிநீர் லாரி வாரத்துக்கு ஒரு தடவைதான் வருகிறது என்றார். ஆத்திரமடைந்த கணவர் அங்கேயே இவர்களை திட்டி விட்டு சென்றார். அடுத்த நாள் அந்த வீட்டு பெண்கள் என்னிடம் வந்து குழந்தைங்க ஸ்கூலுக்கு போகும் போது திட்ட வேண்டாமென கேட்டுக் கொண்டார்கள். இது என்னன்னு சொல்ல?

அந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் தலைவர், செயலர், பொருளாளர் எல்லாம் இவங்கதான். அனேகமா பிரமாணரல்லாதோரிடம் மட்டும்தான் அவங்க அதிக பணம் வசூலிக்கிறாங்க. அதை வைத்து அப்பார்ட்மெண்ட் கிளீனிங் இதர செலவு என்று அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களை இலவசமாக வேலை செய்ய வைக்கிறாங்க. இந்த டெக்னிக்கெல்லாம் எங்கேயும் பாக்கவே முடியாது.

இப்போது என் குழந்தை இந்த சூழலில் ஒன்ற முடியாமல் தனியா தவிக்கிறான். அவனோட உலகில் இது ஒரு பொதுவிதி போல புரிந்து கொள்ளப்படுது. பிராமண வீட்டு குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல ஏதாவது கெட்ட வார்த்தை பேசினாலும் அதில் பெரிய வித்தியாசம் இருக்கு. மற்றவர்கள் பேசுவது பிடிவாதம், அடம், சேட்டை என்று மட்டும் போகும். இவர்களோ தங்களது ஏசுதலில் ஒரு போலிஸ்காரரது தோரணையோடு அதிகாரமாக திட்டுவாங்க. அதாவது மற்ற குழந்தைகளெல்லாம் இவர்களை விட கீழே என்பதா அந்த தொனி இருக்கும்.

முக்கியமான ஒன்று உண்டு. இந்த குடியிருப்பில் பிராமண உரிமையாளர்கள் வீடு விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது பிராமணர்களுக்கு மட்டும்தான். ஏழெட்டு பிராமணரல்லாதோருக்கு சொந்தமான வீடுகளில் மட்டும் எங்களைப் போன்றோரை குடி வைக்கிறாங்க.

உங்கள் கட்டுரையில் கிழக்கு புத்தக பத்ரி, எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளை சேர்த்திருந்தீர்கள். அதையும் படித்தேன். என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.

எங்க அப்பார்ட்மெண்ட விடுங்க. கணவர் வேலைபார்க்கும் சிறுசேரி ஐடி கம்பெனிய எடுத்துக்கங்க. இங்க மேனேஜர் லெவலில் இருக்கிறவங்கள்ல 90 சதவீதம் பிராமணருங்கதான். இதெல்லாம் எப்படி மத்தவங்களுக்கு தெரியும்?

ஆவணி அவிட்டம்முனு ஒரு நாளில்தான் பிராமணர்கள் பூணூல் மாத்துறாங்களாம். அதுக்கு அவங்க அத்தனை பேரும் விடுமுறை எடுப்பாங்களாம். அப்படி எடுக்கும் போது உங்களுக்கும் அவிட்டமான்னு சக பிராமண மனிதர்களை அடையாளம் கண்டு கொள்றாங்க. போலவே மத்த டெக்கிசுக்கும் நம்ம ஆபிசுல, டீம்ல யாரு பிராமின், நான் பிராமின்கிறது தெரிஞ்சு போகும்.

இப்படி சொல்லலாம்ணு தோணுது. பிராமணர்கள் மத்த சாதிக்காரங்கிட்ட என்ன சாதின்னு கேட்டு தெரிஞ்சுக்குவாங்க, பிராமணங்க மட்டும் என்ன சாதின்னு அவங்களே சொல்லுவாங்க.

கணவரு ஆபிசில் ஒரு பிரமாண பெண் மேனேஜர் ஆன்சைட்டுக்கு போன கணவருடன் சேர அமெரிக்கா போறாங்க. அங்க சைவ உணவு சரவண பவன் எங்க இருக்கமுணு பாத்து வீடு பார்க்கிறாங்க. அதிலயும் கருப்பர்கள் இல்லாத வெள்ளையினத்தவர் மட்டும் வாழும் குடியிருப்பா பாத்து போறாங்க. இதுக்காக அவங்க டீமே ஒரு நாள் இணையத்துல கூகிள்ள தேடிப் பாத்தாங்களாம்.

பிரதமரா மோடி ஜெயிச்சதோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைச்சதோ இந்த ஐ.டி துறை பிராமணர்கள் பகிரங்கமாக ஆபிசுல கூடி கொண்டாடியிருக்காங்க. என் கணவர மாதிரி ஆளுங்களெல்லாம் வினவு கட்டுரைகளை கூட திருட்டுத்தனமா படிக்க வேண்டிய நிலையை இதோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.

பிறகு ஆபிசில இருக்கும் பிராமணர்களோட பாடி லேங்குவேஜ், கம்யூனிகேசன், அப்ரைசில் ரேட்டிங் எல்லாமே ரொம்ப நுட்பமா அவங்களோட குணத்தை காட்டுற மாதிரி இருக்கும். அதையெல்லாம் சொல்லி புரிய வைக்கிறது ரொம்ப சிரமம். இதனால எல்லா பிராமணருங்களும் இப்படித்தான்னு சொல்லலை. ஆனா அவங்க கண்டிப்பா விதி விலக்காத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

DSC_0055பிரமாணரல்லாதோருகிட்ட சாதி உணர்வு நிச்சயமா இருக்கு. இல்லேங்கல. எங்க அப்பார்ட்மென்டிலேயே அவங்க கூட நான் எஸ்சியான்னு கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. மீனவர்னு தெரிஞ்சப்பிறகு பெரிய பாதிப்பில்லேன்னு விட்டுட்டாங்க போல. ஆனா அவங்கிட்ட இருக்குற சாதி உணர்வு ரொம்ப வெளிப்படையானது, கொஞ்சம் வெள்ளேந்தியாவும் இருக்கும். அதாவது கொஞ்சம் பேசி கூட மாத்த முடியும். ஆனா பிராமின்ஸ்கிட்ட இருக்கும் சாதி உணர்வுங்கிறது ஒரு ஆடிட்டர் பேலன்ஸ் ஷீட் போட்டு பைனான்ஸ் நிலைமைய கண்டுபிடிக்கிற மாதிரி ரொம்ப ஆழமா இருக்கும்.

எங்க மாவட்டங்கள்ல் இருக்கும் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூராவும் ஏதோ ஒரு சாஃப்ட் வேரை வச்சு மத்தவங்களை துன்புறுத்துறாங்க. அது என்ன, எப்படின்னெல்லாம் என்னால விரிச்சு சொல்ல முடியல.

சரி, வினவு, ஒரு போராட்ட குணம் கொண்ட மீனவப் பெண்ணான நானே இப்ப ரொம்ப களைச்சு போயிட்டேன். இனியும் இங்க குடியிருக்க மனமில்லை. கணவர் மீன் வாங்க செல்லும் போது நல்ல சாளை மீனா, சுறா மீனா, ஆந்திரா நண்டா பாத்து வாங்குங்கன்னு கத்திகிட்டே சொல்லுவேன். ஏம்மா அப்படி கத்தி அவங்கள வம்புக்கு இழுக்குறேன்னு அவர் கேட்பார். அதெல்லாம் அடிபட்ட ஒருத்தியோட சின்ன சின்ன எதிர்ப்புகள்தான். ஆனா அதெல்லாம் நம்ம மனக்காயங்கள குணமாக்காது.

வேற வழி? இப்ப வேறு வீடு பார்த்துட்டு போகப் போறோம். ஆனா ஒரு கண்டிசன் உண்டு. அந்த அப்பார்ட்மெண்டுல மெஜாரட்டியா பிராமின்ஸ் இருக்க கூடாது.

இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்குமுணு என் கணவர் அடிக்கடி சொல்வார்! அத நினைக்கவே பீதியா இருக்கு.

அன்புடன்
மாலா

குறிப்பு: இந்த கடிதம் வெளியிடத் தகுந்ததுன்னா வெளியிடுங்க. பிறகு இந்த கிறிஸ்மசுக்கு உங்களை விருந்துண்ண அழைக்கிறோம். உங்களுக்கு மதம் இல்லேன்னாலும் இன்னைக்கு சர்ச் மாறியிருந்தாலும் ஆரம்பத்துல ஏசுநாதரும் ஏழைகளுக்காக பாடுபட்டவருன்னு ஏத்துக்கிவீங்கள்ல? எனக்கு ஏசுநாதரும் வேணும், பெரியாரும் வேணும். என் குழந்தை படிக்கிற மிஷனரி பள்ளியில அவன் இந்த வருடம் மாறுவேடப் போட்டியில பெரியார் வேஷத்தோடதான் போனான். தாடி வச்சா தாகூரான்னு என் காது படவே அவங்க பேசுனாங்க. எனக்கு என்ன தோணுதுன்னா பெரியாரோ உங்கள மாதிரி கட்சிங்களோ இருந்தாதான் ஜீசஸ் பாதுகாப்பா இருப்பாருன்னு தோணுது. இந்த அப்பார்ட்மெண்டுல இதுதான் கடைசி கிறிஸ்மஸ்!

(ஊர், பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன – வினவு)

கொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்டம்

6

வியாசர் பாடி – (யானைக்கவுனி) வால்டாக்ஸ் ரோடு, உட்வார்பு பகுதியில் வசிக்கும் திருமதி சாந்தா என்பவரின் வளர்ப்பு மகள் ஜெயஸ்ரீ கடந்த 24.11.2014 முதல் காணாமல் போனார்.

ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள்.  ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

jeyashree-sliderஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடிஅலைந்து விசாரித்த பின்னரும் அவர் பற்றி தகவல் தெரியாத நிலையில் 27.11.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில், செல்வி ஜெயஸ்ரீ காணாமல் போனது பற்றி புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது பணியில் இருந்த ஏழுகிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மேற்படி புகாரை பெற்றுக்கொள்ளாமல், அவரை கண்டுபிடித்து தருவதாக சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். மேலும், ஜெயஸ்ரீயை அப்பகுதியில் உள்ள பிரான்சிஸ், சங்கர் மற்றும் முரளி ஆகியோர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்த பிறகும் அது பற்றி பின்னர் விசாரிப்பதாக தெரிவித்துவிட்டார்.

காதல் என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான் ஒருவன்.  அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள் பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.

2.12.2014 அன்று ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சியில் இருப்பதாக அங்கிருந்து அண்ணாமலை என்பவர் தகவல் தெரிவித்தார். இதுபற்றியும் ஏழுகிணறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மோகன்தாஸிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அப்போதும் இதுபற்றி தீர விசாரணை செய்யாமல் கள்ளக்குறிச்சிக்குச் சென்று ஜெயஸ்ரீயை அழைத்து வர இரண்டு காவலர்களை மட்டும் அனுப்பி வைத்தார். கள்ளக்குறிச்சியில் செல்வி ஜெயஸ்ரீ உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மிக மோசமான நிலையில் நடக்ககூட இயலாத நிலையில் இருந்தார். அவருக்கு ‘அடைக்கலம் வழங்கி’ வைத்திருந்ததாக தெரிவித்த அண்ணாமலையிடம் ஜெயஸ்ரீ எப்படி அவர் வீட்டிற்கு வந்தார் என்பது பற்றியோ, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக அவரது வீட்டில் ஜெயஸ்ரீ இருப்பது பற்றிய விபரம் பற்றி தகவல் கொடுக்காமல் இருந்தது பற்றியோ காவல்துறை எவ்வித விசாரணையும் செய்யவில்லை.

ஜெயஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க முயன்ற போது, காவல்துறை உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் அவ்வாறு அரசுமருத்துவமனையில் ஜெயஸ்ரீயை சிகிச்சைக்குச் சேர்த்தால் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விபரம் ஊடகங்களுக்கு தெரிந்து அவரது பெயர் கெட்டுப்போய்விடும் என்றும், தொலைக்காட்சியில் போட்டு அவரை அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்றும் கூறி வீட்டிலேயே சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக குடும்பத்தை மிரட்டி நிர்ப்பந்தம் செய்து ஜெயஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்வதை தடுத்து நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த 04.12.2014 அன்று ஜெயஸ்ரீயின் உடல்நிலை மோசமாக ஆனதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் செய்தி அறிந்து, மருத்துவமனைக்குச் சென்ற பொழுது, ஜெயஸ்ரீயின் உடல் மார்ச்சுவரியில் இருந்தது.  காதுகளில் காயம், இரு கைகளிலும் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்த கயிறால் தடமாய் பதிந்திருந்தன.  உடல் முழுவதுமே அங்காங்கே காயங்கள். பாலியல் வெறிபிடித்த மிருகங்கள் அந்த பெண்ணை மோசமாக குதறியிருந்தார்கள்.  அந்தப் பெண்ணின் அக்கா “பிறப்புறுப்பையே சிதைந்திருந்தார்கள்” என  அழுதுகொண்டே சொன்னார்.

jayashree_dinakaranஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதிகேட்டும், அதற்கு காரணமானவர்களைத் தண்டிக்கக் கோரியும் பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு தோழர்களும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞரும் பகுதிவாழ் பொது மக்களும் மறியல் போராட்டம் செய்த பிறகே 04.12.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில் பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலும் திருமதி சாந்தா 04.12.2014 அன்றுதான் புகார் கொடுத்தார் என்று தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயஸ்ரீ கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி  எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், கடந்த 27.11.2014 அன்று இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது பற்றியோ, 02.02.2014 அன்று கள்ளக்குறிச்சிக்கு ஜெயஸ்ரீயை மீட்டு வர காவலர் சென்ற விபரம் பற்றியோ எவ்வித விசாரணையுமின்றி கண்துடைப்பான முறையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்றுவரைக்கும் கூட முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றவாளிகளில் சங்கர், முரளி ஆகியோர் கைது செய்யப்படவில்லை.

தற்போது இந்தப்பிரச்சினையில் மேற்கொண்டு எதுவும் செய்யக் கூடாதென்றும், ஜெயஸ்ரீயின் சாவுக்கு காரணமான சமூக விரோதிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையிலும், காவல்துறையினரே மறைமுகமாக செயல்பட்டு நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். தங்களின் கண்முன்பாகவே தமது மகள் கொடூரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட பின்னரும் அதற்கு நியாயம் கேட்கும் வகையில் எதுவும் பேசக்கூடாதென்று காவல்துறையினர் சொல்வதும், குற்றவாளிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கினை முடித்துவைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் சட்டவிரோதமானதும், மனித உரிமை மீறலுமானதாகும்.

  1. கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஜெயஸ்ரீயின் வழக்கினை விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டுமென்றும்
  1. ஜெயஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்றும்
  1. இவ்வழக்கினை முறையாக விசாரணை செய்யாமல் மேற்படி சமூக விரோதிகளை காப்பற்றும் வகையில் செயல்பட்ட ஏழுகிணறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்
  1. ஜெயஸ்ரீயின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க ஆவன செய்ய வேண்டுமென்றும்

நான்கு கோரிக்கைக்களை முன்வைத்து, பெண்கள் விடுதலை முன்னணி போராடி வருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வாதாடாமல், ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார் என வழக்கை ஊத்தி மூட முயன்றார்கள்.  மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்  ஜெயஸ்ரீ  கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் என்றும், குற்றவாளிகளை தப்புவிக்க அரசு தரப்பு முயல்கிறது என்றும் வாதிட்டு, கைது செய்யப்பட்டுள்ள பிரான்சிஸ்க்கு ஜாமீன் கொடுக்க இருந்ததை போராடி நிறுத்தி வைத்துள்ளனர்.

ஒரு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, மயக்க நிலையில் குடும்பத்தினருக்கு கிடைத்து, மயக்கம் திரும்பாலே இறந்தும் போய்விட்டார். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம். ஆனால், துவக்கத்திலிருந்தே காவல்துறை மெத்தனமாகவும், அலட்சியமாகவும் நடந்துகொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தவறுதலாக வழிகாட்டியும் இருக்கிறது. இந்த வன்புணர்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்கிற எல்லா வேலைகளையும் கவனமாக செய்து வருகிறது!

நாம் வைத்த குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், காவல்துறை துணை ஆணையர் பதவியில் உள்ள ஒரு அதிகாரியை, இவ்வழக்கு விசாரணையை கண்காணிக்க நியமனம் செய்யும்படி காவல்துறைத் தலைவருக்கு இடைக்கால உத்தரவிட்டுள்ளது. வழக்கினை இரணடு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

ஜெயஸ்ரீயின் வழக்கினை எப்படியாவது ஊத்தி மூடிவிடலாம் என்ற சமூகவிரோதிகளின் சதியினை முதற்கட்டமாக சட்டரீதியாக முறியடித்துள்ள பெண்கள் விடுதலை முன்னணி, ஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதிகேட்டு போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு தீர்வாக சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என குரல்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஜெயஸ்ரீ வழக்கை காவல்துறை பதிவு செய்வதற்கே நீண்ட நெடிய போராட்டம் செய்யவேண்டியிருந்தது! இதுதான் சமூக எதார்த்தம்.

சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளை பாதுகாக்குகிற வேலைகளை செய்யும் பொழுது சட்டங்களை கடுமையாக்கி என்ன செய்ய?

எத்தனையோ ஓட்டுக்கட்சிகள் இருந்தாலும், யாரும் இந்த பிரச்சனையை கையில் எடுக்கவில்லை. இறந்த ஜெயஸ்ரீ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கேட்பதற்கு நாதியில்லை என்ற உண்மை தான் முகத்தில் அறைகிறது.

புகைப்படத்தில் இருக்கும் ஜெயஸ்ரீயின் மலர்ந்த புன்னகையும், மார்ச்சுவரியில் ரணமாக இருந்த சலனமற்ற உடலும் “மீண்டும் ஒரு ஜெயஸ்ரீயை உருவாக்க விட்டு விடாதீர்கள் அக்கா” என அவளின் குரல் மீண்டும் மீண்டும்  நினைவலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!

தெருவில் இறங்கி போராடாமல் எதுவும் இங்கு சாத்தியமில்லை! பெண்கள் விடுதலை முன்னணி இறந்த ஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுகிறது! எங்களுடன் கைகோர்த்து இணைந்து போராட வாருங்கள்!

Jayashree

தகவல்:

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை கிளை.
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை – 95.
பேச : 98416 58457

மேலும் படிக்க

2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!

11

ருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.

சேகர் குப்தா
2ஜி ஊழலை ஊடகங்களை ஊதிப் பெருக்கி விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள இந்தியா டுடே குழுமத்தின் துணைத்தலைவர் சேகர் குப்தா : காலங்கடந்த ஞானோதயத்தின் காரணமென்னவோ?

காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.

மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார்.  ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.

பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.

எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது.  நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது.  வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.

"கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்" எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ
“கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்” எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ

அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:

“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)

ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது.  ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம்.  சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.

இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)

2ஜி ஊழல்
பூஜ்யங்களின் எண்ணிக்கையைக் காட்டியே 2ஜி ஊழலைப் பரபரப்பூட்டும் செய்தியாக்கின ஊடகங்கள்.

ஊழல் விவகாரம் போலவே கருப்புப் பண விவகாரமும் மிகைப்படுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள சேகர் குப்தா, “கருப்புப் பணம் தொடர்பான எண்ணிக்கையை நடைமுறை சாத்தியம் எனும் சோதனைக்கு (யாரும்) உட்படுத்தவில்லை. இது ஜிடிபியைவிட பல மடங்கு அதிகமானது என்றும், சுவிஸ் வங்கியில் இவை முடங்கிக் கிடக்கிறது என்றும் பாபா ராம்தேவ் மட்டுமே கூறமுடியும். இதைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக்குவதற்கு முன்பாக, ஆட்சிக்கு வரும் வாப்பு உண்மையில் இருக்கிறது என்றும், இது உருவாக்கிய பூதத்தை சமாளித்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும்நினைவில் கொள்ள யாரேனும் பா.ஜ.க.விற்கு அறிவுறுத்தியிருக்கலாம். உங்கள் சொந்த கற்பனையில் சிக்கித் தவிப்பதைவிட தர்மசங்கடமானது வேறில்லை” என அடக்கி எழுதுகிறார்.

கருப்புப் பண விவகாரத்தில் சேகர் குப்தாவைவிட துக்ளக் சோவின் மழுப்பல்கள், மோடியின் ‘தர்மசங்கடத்தை’ நமக்கு இன்னும் தெளிவாக விளங்க வைக்கின்றன.

“கருப்புப் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றும்கூட, அதை வெளியிடாமல் இருந்ததற்குச் சில காரணங்களை அந்த அரசு கூறியது. அவை பொய்கள் என்று தீர்மானித்து, அந்த அடிப்படையில் அப்போது மத்திய அரசை விமர்சனம் செய்தவர்களில் நாமும் அடங்குகிறோம்.

2ஜி ஊழல்
2ஜி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஆ.ராசா ஏமாற்றி விட்டதைப் போல அவதூறு செய்து ஊடகங்கள் வெளியிட்ட கேலிச்சித்திரப் படத்தின் ஒரு வகை மாதிரி.

இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது.  காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”

(துக்ளக், 12.11.2014)

“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.

முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார்.  இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)

நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார்.  (துக்ளக், 19.11.2014)

இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது.  இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)

“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)

முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்!  இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது.  ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை.  கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

– திப்பு
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

மிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.

எம்.ஜி.ஆர் பாசிஸ்ட்
கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் படம்.

இன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும் காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற புதிய திரைப்படம் சென்னையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.

எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, பச்சோந்தித்தனமாக நிறத்தை மாற்றிக் கொண்டு நாற்பதாண்டு இனிய நண்பரை இழந்த துக்கத்தில் மூழ்கிவிட்டார், கருணாநிதி. கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும், இத்தகைய கேடுகெட்ட ‘ராஜதந்திரங்களை’ நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இவற்றையெல்லாம் உயர்ந்த அரசியல் பண்பாடு என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.

எம்.ஜி.ஆர் கவர்ச்சி அரசியல்
இறந்தும் உயிர்வாழ்பவர் : எம்.ஜி.ஆர் உருவாக்கிய கவர்ச்சிவாத பொறுக்கி அரசியல்தான் இன்றும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.

திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் சவக்குழி தோண்டியவர் எம்.ஜி.ஆர். இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப்போலத்தான், எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் இருந்தன. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாசு தலைமையிலான போலீசு மிருகங்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் பிழைப்புவாத ஊடகங்களும் சினிமாக்காரர்களும் புளுகித் திரிகின்றனர்.

சந்தேகப்பிராணியான ஜெயலலிதா தனது உடன் பிறவாத சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உட்பட விசுவாசிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் உளவுப்படை போலீசை விட்டு வேவு பார்ப்பதும், சொந்த புத்தி இல்லாமல் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் கோள் மூட்டும் போதெல்லாம் பதவிகளைப் பறித்து அவர்களைப் பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களைக்கூட தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள அரசியல் பிரமுகர்களுக்குப் பலவகை விருந்து வைப்பதுகூட எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் கலைதான். ஏன், ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி, ஒதுக்கி வைத்தார், அவரை விஞ்சிய சந்தேகப் பிராணியான, எம்.ஜி.ஆர்.

இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக்கட்சிக்கும், அதன் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை. இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. இதனை அனுபவித்த முந்தைய தலைமுறையினரோ மறந்து விடுகின்றனர். இதுதான் அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்படும் நமது மக்களின் மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பராமரித்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு, அவருடைய ‘அரசியல் உடன்கட்டை’ எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் புரிந்து கொள்வது அவசியம். 1987-ல் எம்.ஜி.ஆர். இறந்ததை ஒட்டி, “புதிய ஜனநாயகம்” ஏட்டில் வெளியிடப்பட்ட “ஒரு பாசிஸ்டின் மரணம்” என்ற சிறப்புக் கட்டுரையை இங்கே சுருக்கித் தருகிறோம்.

புர்ரட்சித் தலைவர்!

வெங்கட்ராமன் - எம்.ஜி.ஆர்
ஆர்.வி – எம்.ஜி.ஆர் அணைப்பு : திராவிட இயக்க அரசியலை ஒழிக்க பார்ப்பனப் பிணைப்பு!

காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக் கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!

அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தைப் பத்து ஆண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். எம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப் படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. அவற்றை எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினா கடற்கரையில் புதைத்துவிட முடியாது. மெரினா – அங்குதானே எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; அங்குதானே மீனவர் குப்பங்களைச் சூறையாடின. அவை நினைவுக்கு வருகின்றன. அவை தமிழகத்தின் இருள் நிறைந்த பத்தாண்டு வரலாறு ஏற்படுத்திய வடுக்கள்!

கருணாநிதி ஆட்சியின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் சொல்லி தூய்மையான “அண்ணா”வின் ஆட்சிக் காணப் போவதாகச் சொன்னார், எம்.ஜி.ஆர். ஆனால், அவரது ஆட்சியில் தழைத்தோங்கிய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடு, மோசடி, தில்லுமுல்லு, எத்து வேலை, பித்தலாட்டம் அனைத்திற்கும் மூலகர்த்தாவாக எம்.ஜி.ஆரே விளங்கினார். தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்தார்.

படிக்க :
♦ ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!
♦ பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

இடி அமீனையும் விஞ்சிவிடும் ஆடம்பர, வக்கிர வாழ்வும், விருந்தும், அரசு விழாக்களும் நடத்தினார். சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது “சின்ன வீடு” சினிமா பார்த்து மகிழ்ந்தார். 12 கோடிக்கு ஆடம்பரமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். கருணாநிதி நடத்தினார் என்பதற்காகவே அடுத்த உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்து, பங்கேற்பவர்களையும் தடுத்தார்.

ஒரு வள்ளலும் ஓராயிரம் ஒட்டுண்ணிகளும்!

பாசிசக் கோமாளி
பாசிசக் கோமாளியின் அடுத்த வாரிசு

“மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.” என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரே இருக்க வேண்டும் என்று வெறியோடு உத்திரவிட்டார். முகத்துதிபாடும் கூட்டத்துக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார்.

இதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் ஆகிய அவரது முகத்துதிபாடும் பத்திரிக்கை எடுபிடிகள்; போலி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன் ஆகிய அரசியல் ஆலோசகர்கள்; மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை, தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை – இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர்.

தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார். சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார்.
முனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார்.

பாசிசக் கோமாளி!

தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என்று பல வக்கிரமான வழிகளை மேற்கொண்டார்.

04-mgr-1மோகன்தாஸ் – தேவாரம் படையை ஏவிப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்தார். பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார். தனது அரசுக்கு விரோதமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளையும் தனது அரசை விமர்சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கச் செய்தார். நாடு கடத்தும் சட்டம் என்றொரு வக்கிரமான சட்டத்தைக் கொண்டு வந்தார்.

பெரியாரின் வாரிசு, பகுத்தறிவு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டே குறி கேட்டுத்தான் எந்தச் செயலையும் செய்தார். கோஷ்டி பூசலால் ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி வந்த போதெல்லாம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மனைவிமார்களில் சிலரையே அந்நிய உளவாளிகள் என்று அறிவித்துக்கொன்றான் இடி அமின். எம்.ஜி.ஆரோ ஒரு பாசிசக் கோமாளிக்கே உரிய முறையில் பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் கொடுத்தார்.

“அரசு நிர்வாகத்தில் சம்பந்தமில்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாக இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்களே ஆனாலும் சரி, தலைமைச் செயலாளர் அல்லது உயர் அதிகாரிகள் சம்பந்தபட்ட ஏனைய யாராக இருந்தாலும் சரி என்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.”

எம்.ஜி.ஆர். ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் அதன் அருவருக்கத்தக்க இழிவான அம்சம் முழுவதுமாக வெளிப்பட்டு அம்பலமான பின்னும், நோயுற்று நடைபிணமான பின்னும், அவர் மத்திய அரசுக்குத் தேவையான எடுபிடி என்பதால் ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின் பாசிச, சேடிச, கோமாளித்தனங்களை அவருடைய “தோழமை”க் கட்சிகள், பத்திரிக்கைகளே நியாயப்படுத்த முடியாமற் தவித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு. மறைமுகமாக அவரை ஆதரித்த துக்ளக், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும், போலி கம்யூனிஸ்டுகளும் கூட அவற்றைக் “கிண்டலடித்த – கண்டித்த” சம்பவங்களும் ஏராளமாக உண்டு.

அட்டைக் கத்தி வீரனின் அழுகை!

சக்களத்திச் சண்டை
சக்களத்திச் சண்டை : ஆட்சி எம்.ஜி.ஆரின் பூர்வீக சொத்தா?

பாசிச எம்.ஜி.ஆர் மூன்று தவணைகளாக பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தார். முதல் மூன்றாண்டுகள் போலீசையும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஏவி ஏழை – எளியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர் – அரசு ஊழியர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரையும் அடக்கி ஒடுக்கிவிட்டார். கடைசியாக, சங்கம் வைக்கும் உரிமைக்காகப் போராடிய போலீசார் மீதே மத்தியப்படையை ஏவி ஒடுக்கினார். சந்தர்ப்பவாதமும் அரசியல் பித்தலாட்டமும் அம்பலப்பட்டு போகவே 1980 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டபோது எம்.ஜி.ஆர். நிலைகுலைந்து போனார்.

அதைத்தொடந்து, (சினிமாவில் வீரதீரமாகச் சண்டையிட்ட எம்.ஜி.ஆர்.) இரண்டு கண்களிலும் “கிளிசரினை” ஊற்றிக் கொண்டு தமிழக மக்களிடம் குடம் குடமாக கண்ணீர் வடித்தார். விவசாய சங்கத் தலைவரிடமும், போலீசு சங்கத் தலைவரிடமும் மண்டியிட்டார். மன்னிப்பு கேட்காத குறையாக சரணடைந்தார். ஏராளமாகப் பொய்யான வாக்குறுதிகளை வீசி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

மீண்டும் பதவி நாற்காலியில் அமர்ந்தவுடன் அத்தனையும் காற்றில் பறந்தது. அதிகார மமதை தலைக்கேற, மீண்டும் அந்த பாசிச வேதாளம் தமிழக மக்கள் மீது பாய்ந்தது. அரசியல் எதிரிகளையும், பத்திரிக்கைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. இதிலே வெற்றி பெற்ற பிறகு தமிழகத்தைத் தனது கட்சியின் ஊழல் “பேரரசாக” மாற்றுவதில் முழு மூச்சாக இறங்கினார். தனது பினாமிகளையும், சாராய சிற்றரசர்களையும், தனது புகழ்பாடும் விசுவாச ஒட்டுண்ணிக் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

படிக்க :
♦ ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !
♦ வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !

தனது அரசியல் – அதிகார அட்டூழியங்களுக்கும், பகற்கொள்ளைக்கும் வசதியாக இந்திராவின் இளைய பங்காளியாகவும் பாசிச பாதந்தாங்கியாகவும் மாறினார். இலஞ்ச ஊழலும், பாசிச அடக்குமுறையும் நிறுவனமயமானது – ஆட்சியின் ஒழுங்குவிதியானது. அதன் பிறகு அவரது ஆட்சியின் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க யாரும் துணியவில்லை. நோயுற்று நடைபிணமான நிலையில், அதைக் காட்டியே அனுதாப அலையை எழுப்பி, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரின் எடுபிடிகள் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதற்கான உரிமை பெற்றவர்களாகிவிட்டனர். சட்டமன்றத்துக்குள் சர்வாதிகாரி பாண்டியனும், வெளியே மோகன்தாஸ் – தேவரம் கும்பலும் காட்டுமிராண்டித்தனமாக ஆட்சி நடத்தினர். சாதி, மதவெறியர்களும், சாராய- மாஃபியா – கடத்தல் தலைவர்களும் கட்டுப்பாடற்ற கொள்ளையில் இறங்கினர்.

பத்தாண்டு ஆட்சியின் கருப்பு சிவப்பு புள்ளிகள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டினாலே போதும். அவரது பாசிச, சேடிச கோமாளித்தனங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

  • எம்.ஜி.ஆர் - இந்து மதவெறி
    பகுத்தறிவுக்குச் சவக்குழி, இந்து மதவெறிக்குப் பிள்ளையார் சுழி

    எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜ.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர். விடுதியைச் சூறையாடினர்.

தொழிலாளிகள் மீது எம்.ஜி.ஆர். குண்டர் படையின் தாக்குதல்!

  • 1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது. பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி காங்கிரசு குண்டர்கள் வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதானவர்களை விடுதலை செய்தார். 1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய காலித்தனங்களுக்காக அவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.

04-mgr-2

  • 1978 அக்டோபரில் பஸ் தொழிலாளர் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது. பஸ் தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காணாது தன்னிச்சையாகக் குறைந்தபட்ச போனஸ் தருவதையே எம்.ஜி.ஆர். அரசு வழக்கமாகக் கொண்டிருப்பதை எதிர்த்து இரண்டே நாட்கள்தான் வேலைநிறுத்தம் செய்தனர். அதற்குள் ‘மினிமிசா’வையும் அவசர சட்டத்தையும் எம்.ஜி.ஆர். அரசு ஏவியது. 5000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கருங்காலிகளையும், போலீசையும், எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் வைத்து பஸ்கள் ஓட்டப்பட்டன. பஸ்களை நிறுத்துபவர்களைக் கண்டதும் சுட எம்.ஜி.ஆர். உத்திரவு போட்டார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல, அதை ஆதரிப்பவர்களையும், நிதி அளிப்பவர்களையும் கூட சிறையிலடைக்கும் சட்டம் கொண்டு வந்தார். “பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்கிற பெயரில் – எம்.ஜி.ஆரின் குண்டர்படை – அடையாள அட்டைகளும், வெள்ளைச் சட்டைகளும் அணிந்த தொண்டர்கள் என்கிற பெயரில் – பஸ் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளாக எம்.ஜி.ஆர் அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்துத் தரும் குறைந்தபட்ச போனசுதான் கொடுக்கப்பட்டது.
  • பஸ் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த கருங்காலி காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிந்து போலி கம்யூனிஸ்டு வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். மதுரையிலிருந்து குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பஸ்களில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர்.04-mgr-3மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக போலி கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும், போலி கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரசு மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
    எம்.ஜி.ஆர் அடிமைகள்
    சுயமரியாதை இல்லாத தோட்டத்து அடிமைகள்!

    எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. குண்டர்படை வெறியாட்டம் போட்டது. ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.

  • இனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும் கருங்காலி ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத் வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.
    14 விவசாயிகள் சுட்டுக்கொலை!
  • மீனவர் துப்பாக்கிச் சூடு
    பிணந்தின்னிகள் : மெரினா மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

    தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பஸ்களை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமுற்று விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு எம்.ஜி.ஆரின் போலீசு, விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தது. சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து கிழவிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கியது. பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது. தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.

அரசு ஊழியர்களைத் தாக்கிய அ.தி.மு.க. குண்டர்கள்!

  • தனது பாசிச ஒடுக்குமுறைகள் மூலம் இரத்த ருசி பார்த்த எம்.ஜி.ஆர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந்தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிக் கருங்காலி சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா? பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க. குண்டர்களை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம் – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிக் கொண்டு, சில்லரைச் சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.
  • எம்.ஜி.ஆர் : அமைச்சர்கள் பதவி பறிப்பு
    அமைச்சர்கள் பதவி பறிப்பு : இதற்கும் ஜெ.யின் முன்னோடி எம்.ஜி.ஆரே!

    பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது கருங்காலிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.

  • பெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்கிற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர். தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. காரனால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே!
  • மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! நக்சல்பாரிகள் நரவேட்டை!

  • உலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
  • 04-mgr-4சாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாசிச எம்.ஜி.ஆர். கம்யூனிச புரட்சியாளர்களை விட்டு வைப்பாரா? வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பலை ஏவி படுகொலை செய்துவிட்டு, “நக்சலைட்டுகளுடன் போலீசு மோதல்” என்று கதை கட்டினார். நக்சலைட்டுகளைப் பூண்டோடு ஒழிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். சபதமேற்றார். போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமை அமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்!
  • அ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக முதலை கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார். போலி கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசரநிலை பாசிச ஆட்சியை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்ட போலீசு குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வளித்தார். ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.

“ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்று கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.!

– ஆர்.கே.
(புதிய ஜனநாயகம், 1-5, ஜனவரி 1988)
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

1

டிசம்பர் 25 – கீழ்வெண்மணி நினைவு தினத்தில் சூளுரைப்போம்!

வெண்மணி தியாகிகள் தினம்

சாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் !

  • விடிந்த பின்னர் தான் ஏர் கட்ட வேண்டும் !
  • சூரிய உதயத்திற்கு பின்னர் தான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் !
  • கரை ஏறித்தான் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்!
  • வேலைக்கேற்ற கூலி வேண்டும் !
  • அனைவரும் விவசாய சங்கத்தில் சேரவேண்டும் !

ராமையாவின் குடிசைவற்றைப் படித்தால், இவை எல்லாம் ஒரு 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பண்ணையடிமைக்கால கூலி-ஏழை விவசாயிகள் எழுப்பிய கோரிக்கை முழக்கங்களாகத் தான் இருக்குமென்றே கருதத்தோன்றும். 1970-ம் ஆண்டு வரையிலும் இப்படி கோரிக்கை வைக்கின்ற அவல நிலையில்தான் தஞ்சை மாவட்ட விவசாயிகள் இருந்தனர்.

இப்படி கொத்தடிமைகளைப் போல வாழ்ந்த சூழலில் தான் ரத்தத்தை உறைய வைக்கின்ற அந்த கொடூரம் நடந்தது.

1968-ம் வருடம், டிசம்பர் 25! தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.

20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.

இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர் (அ)நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.

நோக்கியா
நோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது.

பொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன?

  • தலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம்.
  • கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.
  • சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.

வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் பெருமை பேசுகின்ற தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் சாதி-தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது.

“என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !

அருந்ததி ராய்
அருந்ததி ராய் : தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;

புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய இழிவு என்ற கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;

ஒவ்வொரு நாளும், நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்;

ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறாரக்ள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.

2012-இல் மட்டும் அதாவது தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண் கூட்டமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும், 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் மட்டுமே.  உடையவிழ்த்து அம்மண ஊர்வலம் நடத்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்கவிடாது தடுத்தல் ஆகிய்வை அடங்குவதில்லை.

மசாபி தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாக கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005ல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்ப்ட்ட செய்தி இந்த புள்ளிவிவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபை சேர்ந்த பந்த் சிங்.

கவுரவக் கொலைகள் என்கிற கொடூரங்கள் !

காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் சினிமாவில் கூட செல்லுபடியாகாத வசனங்களாகி விட்டன. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டும் போதாது. காதல் அரும்புவதற்கு முன்பாகவே இருவரும் ஒரே சாதியா என்பதை தெரிந்து கொண்டு தான் காதலிக்க துவங்கவேண்டும். இல்லை என்றால் தருமபுரி திவ்யா-இளவரசனுக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும். நாடெங்கும் அரங்கேற்றப்படுகின்ற கவுரவக் கொலைகளே இதற்கு சாட்சி.

‘ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு எங்கள் வீட்டுப் பெண்களை மயக்குகின்றனர்’ என்று தலித் இளைஞர்களை சாடுவதுடன், அழகான உடையைக் கண்டு மயங்குவதாக தன் சாதிப் பெண்களையே கொச்சைப்படுத்தி வருகிறார், ராமதாசு.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி : ‘கோடிக்கணக்கில் பணம் பறிப்பதற்காகவே தலித் இளைஞர்கள் தங்கள் வன்னிய சாதி பெண்களை காதலிக்கின்றனர்’

அப்பனை மிஞ்சிவிட்டார், அன்புமணி. ‘கோடிக்கணக்கில் பணம் பறிப்பதற்காகவே தலித் இளைஞர்கள் தங்கள் வன்னிய சாதி பெண்களை காதலிக்கின்றனர்’ என்ற பொய்மூட்டையை அவிழ்த்துவிடுகிறார். உண்மையில் திவ்யா குடும்பத்தைவிட இளவரசன் குடும்பம் ஒப்பீட்டளவில் வசதியானதுதான். ஒருவேளை அன்புமணி தன்னைப் போன்ற கோடீஸ்வர ‘பாட்டாளி சொந்தங்களை’ நினைத்து கவலைப்படுகிறாரோ?

கொலைகளுக்கு கவுரவக் கொலைகள் என்று பெயர் சூட்டி அவற்றை ‘புனிதப்படுத்தியவை’ நீதிமன்றங்கள். வேறு சாதி இளைஞனைக் காதலித்ததற்காகவும், திருமணம் செய்து கொண்டதற்காகவும் பல்லாயிரம் இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் கடந்த 5 ஆண்டுகளில் தீவிரம் அடைந்துள்ளன. நவீனம் வளர வளர சாதி-தீண்டாமையும் நவீனத்தை அடைந்திருக்கிறது.

பட்டினியையும் தாண்டி நிற்கிறது, சாதிவெறி!

சாதித் திமிர் உழைக்கும் மக்களை எவ்வாறு பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்பதற்கு டிசம்பர் முதல் வாரத்தில் மைசூர் அருகில் நடந்த சம்பவம் நல்ல உதாரணமாக இருக்கிறது. மைசூருக்கு அருகில் உள்ள குப்பேகலா என்கிற கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று உள்ளது.

இதில் படிக்கும் 138 ‘உயர்’ சாதி மாணவர்கள் வறுமை காரணமாக பள்ளியிலேயே அரசாங்கம் போடுகின்ற மதிய உணவை சாப்பிட்டு வந்தனர். சமீபத்தில் மதிய உணவு சமைப்பதற்கு ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த ஊழியர் தலித் என்பதால், அவர் சமைத்த உணவை சாப்பிடாமல் புறக்கணித்தன்ர், ‘உயர்’ சாதி மாணவர்கள்.

இதே போன்று பல சம்பவங்கள் சாதி எதிர்ப்பு போராட்டங்களைக் கண்ட தமிழகத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வயிற்றுப் பசியைவிட சாதித்திமிர் முக்கியமாகி இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இவற்றை தூண்டியும், வளர்த்தும் வருவது யார்?

யாருக்கு வேண்டும் சாதிவெறி?

கருப்பையா மூப்பனார்
கருப்பையா மூப்பனார் தான் இந்த கமிட்டிக்கு பொறுப்பேற்று கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கொலையாளிகள் விடுதலை பெறுவதற்கு பாடுபட்டார்.

ஆலை முதலாளிகளாக, தனியார் பள்ளி-கல்வி அதிபர்களாக, திரையரங்கு-திருமண மண்டபம், பேருந்துமுதலாளிகளாக, கனிம வளக்கொள்ளையர்களாக, ஃபைனான்சு தொழில் ஈட்டிகளாக உலாவரும் தொழிலதிபர்கள், பெரும் பண்ணையார்கள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் ஆகியோர் தான். தன்னுடைய சாதி மக்களைக் கூட்டம் சேர்த்துக் கொண்டு ஓட்டுப் பொறுக்கவும், கொள்ளையடிக்கவும் கேந்திரமான பதவி நாற்காலிகளைக் கைப்பற்றவும், சுருட்டியதை பாதுகாத்துக் கொள்ளவும், தமது தொழிலுக்கு லைசென்ஸ் பெறவும், கல்லூரிகள் துவங்கவும் சாதி வெறியைத் தூண்டி விட்டு ஆதாயம் அடைகின்றனர்.

வெண்மணிப் படுகொலையை முன்னின்று நடத்திய கோபாலகிருஷ்ணனை விடுவிக்கின்ற வழக்கை தஞ்சை மாவட்டத்தில் இருந்த பண்னையார்கள் தான் நடத்தினர். இதற்காக அவர்கள் ஒரு கமிட்டியை அமைத்தாரகள். தஞ்சையின் மிகப்பெரிய பண்ணையாரும், பின்னாளில் த.மா.கா என்கிற கட்சியை நடத்தியவருமான கருப்பையா மூப்பனார் தான் இந்த கமிட்டிக்கு பொறுப்பேற்று கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கொலையாளிகள் விடுதலை பெறுவதற்கு பாடுபட்டார்.

வெண்மணி மக்களின் வழக்கை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இந்தக் கட்சி தான் பின்னாளில் மூப்பனாருடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொண்டது. தலித் மக்களின் விடிவெள்ளி எனவும், சேரிப்புயல் எனவும் அடைமொழிகளை அடுக்கிக் கொள்கின்ற திருமாவளவன் மூப்பனாருடன் கைகோர்த்துக் கொண்டு ஓட்டு பொறுக்கியதையும் நாம் கண்டிருக்கிறோம்.

பாட்டாளிச் சொந்தமே, உறவே, ரத்தமே – எனத் தேனொழுக நைச்சியம் பேசும் சாதியத் தலைவர்களில்

  • பைனான்சு தொழில் நடத்துபவன் தன் சாதிக்காரன் என்பதற்காக ஒரு பைசா வட்டியைக்கூட குறைக்கமாட்டான்.
  • தொழிற்சாலை முதலாளி தன் சாதிக்காரன் என்பதற்காக தொழிற்சங்க உரிமையையும், சம்பளத்தையும், சலுகைகளையும் வாரி வழங்க மாட்டான்.
  • பேருந்து முதலாளி தன் சாதிக்காரன் என்பதற்காக கட்டணச் சலுகை செய்யமாட்டான்.
  • தனியார் கல்லூரி கொள்ளையன் தன் சாதிக்காரன் என்பதற்காக நன்கொடையைக் கூட தள்ளுபடி செய்யமாட்டான்.
  • பண்ணையார் – முதலாளி – பணக்காரன் நிலையிலுள்ள எவனும் தன் சொந்த சாதியிலுள்ள கூலி ஏழைக் குடும்பங்களில் சமபந்தம் செய்து கொள்ள மாட்டான்; சமமாகக் கூட நடத்தமாட்டான்.

– இவை தான் உண்மை எனில் சாதியின் தேவை தான் என்ன?

சாதியை பொசுக்கு! வர்க்க உணர்வை உயர்த்து!

மீத்தேன் வாயு
பொன் விளையும் தஞ்சை பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சுவதால் சோற்றுக்குக் கூட பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையேந்த வேன்டிய நிலை ஏற்படும்.

சாதியம் உழைக்கும் மக்கள்து ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகளோ நம்முடைய உயிர் வாழும் உரிமையைக்கூட பறித்து வருகின்றன.

  • நோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது.
  • பொன் விளையும் தஞ்சை பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சுவதால் சோற்றுக்குக் கூட பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையேந்த வேன்டிய நிலை ஏற்படும்போது எந்த சாதிக்கு பிரச்சனை என்பதை பிரித்து பார்க்க முடியாது.

விலைவாசி உயர்வும், வேலைபறிப்பும், வறுமையும், தற்கொலையும் சாதி பார்த்து வருவதில்லை.

தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா? விடியலைக் காண உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வோடு அனைவரும் போராட்டக் களத்தில் ஒன்றிணைய வேண்டாமா?

யாரால் இந்த இழிவை ஒழிக்க முடியும்?

புரட்சிகரமான சமூக மாற்றத்தை லட்சியமாகக் கொண்ட புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே வர்க்கப் போராட்டத்தையும், சாதி ஆதிக்கத்திற்கெதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்களையும் ஒன்றிணைக்க முடியும். ரயில் தண்டவாளத்தின் இருபக்கத் தடயங்களைப் போல வர்க்க போராட்டத்தையும், சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் இணைத்துச் செய்ய வேண்டிய பாரிய கடமை உழைக்கும் மக்கள் முன்னே காத்துக் கிடக்கிறது.

நாட்டை மறுகாலனியாக்கிட தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்கிற பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கி வருகின்ற ஆளும் வர்க்கம், பாசிச அடக்குமுறைகளை ஏவிவிட்டும் லாபவெறி பிடித்தலையும் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகுமுதலாளிகள், பண்ணையார்கள், அவர்களின் கைத்தடிகளான ஓட்டுக்கட்சிகள் பாசிச அடக்குமுறைகளை ஏவிவிட்டு மறுகாலனியாக்க சேவை செய்கின்ற பார்ப்பன இந்துவெறி பாசிஸ்டுகள் – ஆதிக்க சாதி வெறியர்கள், இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் போலீஸ்-இராணுவம்-நீதிபதிகள்-ஐ.ஏ.ஸ் – ஐ.பி.எஸ்- இவர்கள் எல்லோரும் தான் நமது எதிரிகள்.

இந்த பாரிய கடமைகளை நிறைவேற்றி, நமக்கான விடியலைப் படைக்க சாதி-மத பேதங்களைத் தூக்கி எறிவோம்! பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! புதிய மாற்றத்துக்கான களம் காணுவோம்! சாதி இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம். இதுவே டிசம்பர் 25 கீழ்வெண்மணித் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.

– எழில்மாறன்
______________________________
புதிய தொழிலாளி, டிசம்பர் 2014
(படங்கள் இணையத்திலிருந்து)
______________________________

venmani-poster
உழைக்கும் வர்க்கமே!

  • கூலி உயர்வுக்காக அன்று போராடிய உரிமைக் குரல்களைத் தீயிலிட்டு எரித்தது நிலப்பிரபுத்துவ-சாதி ஆதிக்க வெறியாட்டம்
  • ஏகாதிபத்திய சுரண்டலுக்காக குறைந்த பட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கூடத் தீயிலிட்டு எரிக்கிறது மோடி அரசின் முதலாளித்துவ பயங்கரவாதம்!
  • சாதிவெறியும், மதவெறியும் அரசாள்கிறது!
    வெண்மணித் தீயின் கனலை விசிறியெழச் செய்வோம்!
    ஏகாதிபத்திய – நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்குத் தீ வைப்போம்! வாரீர்!!

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்

கனிம வளக் கொள்ளையில் கவிழும் நீதிமன்றங்கள்!

2
கிரானைட்-ஊழல்

செவ்வாய்க் கிழமை (22-12-2014) அன்று அரசு கணக்கின்படி ரூ 16,000 கோடி கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி நிறுவனம் மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்டதல்ல; வாங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 2012-ல் சகாயம் அளித்த அறிக்கையின்படி 90 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பி.ஆர்.பி. உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கிரானைட்-ஊழல்
கோப்புப் படம்

84 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, குவாரிகளை இயக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றம் சென்ற பி.ஆர்.பி. நிறுவனத்தின் மனுக்கள் கடந்த 13.12.2013-ல் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

அதன்பின் கடந்த ஆகஸ்ட், 2014-ல் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சகாயத்தை நீதிமன்ற ஆணையராக நியமித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சூழலில்தான் குவாரிகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கொள்ளை நீதிமன்ற உத்தரவுகள் – பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அனுமதித்த நீதித்துறைக்கு சில கேள்விகள்!

1. உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியான வழக்கின் கோரிக்கையை,வேறு வார்த்தைகளில் கேட்டால் அனுமதிக்க முடியுமா?

2. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கிரானைட் பிரச்சனையை கையாளுகையில் மதுரையில் ஒரு நீதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

3. 2012-ல் போடப்பட்ட விசாரணை அதிகாரியின் உத்தரவை டிசம்பர், 2014-ல் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

4. இன்றோடு (23.12.2014) நீதிமன்றம் முடிய உள்ள சூழலில், அட்மிசன் வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் நிலையில் பி.ஆர்.பி வழக்கை அவசரமாக விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன?

5. அரசு வழக்கறிஞர், “இவ்வழக்கில் A.G ஆஜராக உள்ளார், அரசு செயலர் அனைத்து மாவட்டங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கையில் வந்து விட்டது. சரிபார்த்து தாக்கல் செய்கிறேன்” எனச் சொல்லி மன்றாடி ஒரு வாய்தா கேட்டபோதும் நீதிபதி மறுத்ததேன்?

6. “INTERIM PRAYER-ம், MAIN PRAYER-ம் ஒன்றுதான் அடுத்த வாரம் போடுங்கள்” என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்கப்படாதது ஏன்?

7. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் IMPLEAD PETITION அனுமதிக்கப்படாதது ஏன்?

8. பி.ஆர்.பி மனுவில் மதுரை தவிர வேறு எந்த மாவட்டங்களில் குவாரி நடத்தப்படுகிறது, எங்கு குவாரி நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே குறிப்பிடப்படாத நிலையில், பெயர் குறிப்பிடாத இடங்களில் குவாரி நடத்த அனுமதித்தால் அது நீதிமன்றமா? கடந்த 2 மாதங்களாக மற்ற வழக்கறிஞர்களிடம் பல கேள்விகளை தேவையின்றி எழுப்பியது வேற வாயா?

9. அரசை, தொழிற்துறை செயலரை, கனிம வளத்துறை இயக்குநரை, மாவட்ட ஆட்சியரை, எஸ்.பி.யை எதிர்மனுதாரராகச் சேர்க்காமல் ஒரே ஒரு டி.எஸ்.பி.யை மட்டும் சேர்த்த மனுவில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

10. நேற்று சென்னையில் தலைமை நீதிபதி அமர்வு, சகாயம் விசாரணைக்கு 2 மாதம் நீட்டிப்பு வழங்க, மதுரையில் குவாரி இயக்க உத்தரவு பிறப்பித்தால்-மக்கள் காறித் துப்ப மாட்டார்களா?

11. நேற்று அரசு அலுவலகங்களில் குற்றவாளி ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரிய வழக்கில் ஆஜராக மதுரை வந்த ஓ.பன்னீர் செல்வம் அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி கிரானைட் வழக்கிற்கு வராத மர்மம் என்ன?

12. பி.ஆர்.பி.க்கு முந்தைய வழக்கில் மனுதாரரான துணை தாசில்தார் அடுத்தவர் ஏ.டி.எம்.-ல் 10,000 ரூபாய் எடுத்ததற்காக நோட்டீஸ் இன்றி பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் திருடனுக்கு உத்தரவு வழங்க முடியாது என்று சாமியாடிய ராஜா, ரூ 10,000 கோடி திருடியவனுக்கு உத்தரவு வழங்கியதேன்?

இன்னமும் இந்த ஊர், உலகம் கோர்ட்டை எப்பிடித்தேன் நம்புதோ!
————————————————————————-
கிரானைட் கொள்ளைக்கெதிராக தொடர்ந்து போராடி வரும்…..
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை

தொடர்புக்கு.
ம.லயனல் அந்தோணிராஜ்,
மாவட்ட செயலர்,
9443471003