ஊழல் ராணியின் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஊழல் சக்கரவர்த்தி!
ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பாசிச ஜெயாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்? மக்களை ஏமாற்றி நாமம் போட்டு அதே நாமத்தை இன்று அடையாளமாக்கி பாஜகவின் பல்லக்கில் பவனி வருகிறார் இவர். திருச்சி சென்று வினவு செய்தியாளர்கள் திரட்டியிருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி அறிக்கை. படியுங்கள். பாஜகவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துங்கள்!
– வினவு
சுப்ரமணிய வைரஸ் நிகழ்த்திய முதல் தாக்குதல்!
“தோழரே, சரியா சொல்லணுமுனா அது 1993-ம் வருசம். எங்க ஊரு திருச்சி துறையூருக்கு பக்கத்தில இருக்கும் கரட்டாம்பட்டி. ரொம்ப சின்ன கிராமம். மக்கள் யாருக்கும் பெரிசா படிப்பறிவு கிடையாது. ஊர்ல படிச்ச முதல் தலைமுறையே என்னோடது தான்.
93-ம் வருசத்தில ஒரு நாள் ஊரெல்லாம் பரபரப்பா இருந்திச்சி. யாரோ எங்க வயல்லே அஸ்திவாரம் பறிக்கிறாங்கன்னு பேசிகிட்டாங்க. எல்லாரும் அவங்கவங்க வயலைப் பார்க்க ஓடிப் போனோம். எங்களுக்கு ஒரு ஏக்கர் 41 செண்டு நிலம் இருந்திச்சி. அந்த சமயத்துல எங்க நிலத்தில சோள விதை தூவி இருந்தோம்”
விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய விபரங்களைக் காட்டும் வரைபடம்
“நாங்க போய் பார்க்கும் போது ஏதேதோ மிஷின்லாம் எறக்கியிருந்தாங்க. எங்க நிலத்துல கோடு கிழிச்சி பள்ளம் பறிச்சிட்டு இருந்தாங்க. என்னோட நிலத்துல தூவி இருந்த சோளத்தையெல்லாம் வாரிக் கொட்டிட்டாங்க. துரைசாமி தம்பு ரெட்டியாரு எல்லாத்தையும் மேப்பார்வை பார்த்துகிட்டு நின்னாரு”.
“ ’என்னா துரைசாமி இது.. கேக்காம கொள்ளாம அஸ்திவாரம் பறிக்க வந்திருக்கியே இது என்னா நாயம்னு’ அவரைப் பார்த்து கேட்டோம். அதுக்கு அவரு, ‘எல்லாம் ஊர் நன்மைக்குத் தான்.. இங்க ஒரு காலேஜு வரும் நம்ம பிள்ளைங்க எல்லாம் படிக்கலாம். ஒரு நல்ல காரியத்த தடுக்காதீங்க’ அப்படின்னு சொன்னாரு”
”துரைசாமி ரெட்டியாரு தி.மு.க கட்சிக்காரரு. அப்ப அவரு தான் பிரெசிரெண்டு. சரி நம்ம தலைவரே சொல்லிட்டாரே அப்ப நல்லதுக்கா தான் இருக்கும்னு கேட்டுகிட்டோம். ஆனா நிலத்துக்கு வெலை பேசலையேன்னு கேட்டோம். அதுக்கு அவரு, ‘முதல்ல காரியம் நடக்கட்டும், அப்பால அரசாங்கத்து கிட்டே சொல்லி எதுனா பாக்கலாம்’ அப்படின்னு சொல்லி முன்பணமா வச்சிக்கங்கன்னு ஆளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் மூணாயிரம்னு நிலத்தோட அளவுக்கு தக்க கொடுத்தாரு. வாங்கிட்டு வந்துட்டோம். ஆரம்பத்துல மொத்தம் 62 ஏக்கரா நெலத்த பிடிச்சிக்கிட்டாங்க”
”காலேஜு கட்டிடம்னு சொன்னா மொதல்ல ரெண்டு பெரிய ஷெட்டு தான் போட்டாங்க. தோ இந்த மாதிரி ஆஸ்பெஸ்டாசு கூரை போட்ட செட்டு தான். கட்டிடம் எழும்பி ஒரே மாசத்துல காலேஜு தொறந்தாங்க. அப்ப தான் எங்களுக்கு சேர்மன் சுப்பிரமணியத்தை தெரியும். அவருக்கும் துறையூர் பக்கத்துல தான் அப்படின்னு சொல்லிகிட்டாங்க. ரெட்டியாரு எங்க கிட்டே சொன்னா மாதிரி அது கெவருமெண்டு காலேஜு இல்லைன்னு தெரிஞ்சு கிட்டோம்”
“நிலத்தை பறிகொடுத்தவங்க எல்லாருமா சேர்ந்து போயி காலேஜு சேர்மனை பாத்தோம். அவரு தேனா பேசுனாரு. அவரு கூட துரைசாமி தம்பு ரெட்டியாரும் இருந்தாப்பல. ’காலேஜு கட்டவே காசு பத்தலை, பேங்குல லோனு கேட்டிருக்கோம்.. அதுக்கு நெலப் பத்தரம் வேணும்’ அப்படின்னு சேர்மன் சொன்னாரு. வெலை பேசாம கொள்ளாம எப்படி எழுதிக் குடுக்க முடியும் அப்படின்னு நாங்க கேட்டோம். அதுக்கு நெலத்தை தம் பேர்ல மாத்தி பேங்குக்கு அனுப்பினா தான் அதுக்கு என்னா மதிப்புன்னு அரசாங்கம் சொல்லும், மதிப்பு தெரிஞ்சா தான் லோனு கெடைக்கும்.. லோனு வந்தா தான் காசு தர முடியும்னு சேர்மன் சொன்னாரு”
“சேர்மன் சொன்னதை நம்புங்கன்னு துரைசாமி ரெட்டி கேட்டுகிட்டாரு. வேணும்னா முன் பணமா கொஞ்சம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு. அப்படியே ஆளுக்கு ரெண்டாயிரம் மூவாயிரம்னு அதே எடத்துல வச்சி வாங்கியும் குடுத்தாரு. ’ஒரு நல்ல காரியத்த தடுக்க வாணாம்.. எனக்கு தான் புள்ள குட்டி இல்லே.. இந்தக் காலேஜுல நாளைக்கு உங்க பிள்ளைங்க தானே படிக்க போகுது’ அப்படின்னு தலைவர் துரைசாமி ரெட்டி கேட்டாரு. சரி தலைவரு நம்ம நல்லதுக்கு தான் சொல்லுவாருன்னு நீட்டின பேப்பர்ல எல்லாம் கைநாட்டு வச்சிட்டு குட்டுத்த காசை வாங்கிட்டு வந்தோம்”
“நெலமில்லாதவன் பொணத்துக்கு சமானம்னு சொல்லுவாங்க. எங்க நிலம் போச்சு தோழரே.. எங்களை ஏமாத்திட்டாங்க. பொறவு 2000-மாவது வருசத்துல விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைப் பத்தி கேள்விப் பட்டோம். படிப்பறிவில்லாத எங்களை ஏறி மிதிச்சவங்க நக்சல்பாரி அமைப்புன்னா பயந்து போவாங்கன்னு கேள்விப்பட்டோம். ஏமாந்த விவசாயிகள்ல விலை போகாம நியாயத்துக்காக நின்ன 14 பேரு ஒன்னு சேர்ந்து பொம்மன் தோழருக்கு பெட்டிசன் அனுப்புனோம். அதுக்கு பின்னே நடந்த எல்லா விசயமும் இந்த பைல்ல வச்சிருக்கேன் நீங்களே பாருங்க”
கரட்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தாங்கள் ஏமாற்றப்பட்ட கதையை எங்களிடம் விவரித்தார். கடந்த இருபதாண்டுகளில் இந்தக் கதையை தான் கண்ட ஆயிரக்கணக்கானோரிடம் ஆயிரக்கணக்கான முறை சொல்லி இருப்பார். என்றாலும், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளிலும் அடிபட்ட வலி ஆழமாய் பதிந்திருந்தது. அது ஆறாத வடுவாக அந்த மக்களிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அவர்கள் நம்ப வைத்துக் கழுத்தறுக்கப்பட்டவர்கள். தாங்கள் கவுரவமாக உழைத்துப் பிழைத்த நிலத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் துரோகம் என்ற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டதை அறிந்தும் ஏதும் செய்ய முடியாத ஆற்றாமை அவரது வார்த்தைகளில் எதிரொலித்தது. விவசாயிகளின் வயிற்றிலடித்துக் கட்டப்பட்ட பொறியியல் கல்லூரியின் பெயர் ”ஜெயராம் என்ஜினியரிங் காலேஜ்” திருச்சியின் மிக முக்கியமான கல்விக் கொள்ளையன் ஒருவனுக்குச் சொந்தமானது இது.
உலகில் எங்கும் கேள்விப்பட முடியாத இந்த எத்து வேலையின் சூத்திரதாரியைப் புரிந்து கொள்வோம்.
சுப்பிரமணிய வைரஸ் உருவான வரலாறு!
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட உடனேயே பொறி தட்டியது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட உடனேயே பொறி தட்டியது. நான்கு கல்லூரிகளை வைத்திருக்கும் இந்த நபர் எப்படியும் ஒரு மோசடிக்காரராகவே இருக்குமென்று விசாரித்து பார்த்தோம். அதற்கு எமது திருச்சி பகுதி தோழர்கள் முக்கிய தகவலொன்றை அனுப்பினர். ஆக்ஸ்போர்ட் சுப்பிரமணியம் என்று தற்போது அறியப்படும் கரட்டாம்பட்டி சுப்பிரமணியமாகிய பா.ஜ.க வேட்பாளர் ஒரு ஊரறிந்த அயோக்கியப் பயல் என்பதே அத்தகவல். உடன் வினவுவின் செய்தியாளர் குழு திருச்சிக்குப் பயணமானது.
திருச்சி – ஸ்ரீரங்கம் பகுதிகளில் ஓரளவுக்குப் பெரும்பான்மையானவர்கள் முத்து ராசா சாதியினர். ஓட்டுக்கட்சி தேர்தல் அரசியலின் விதிகளுக்கு உட்பட்டு காய்நகர்த்தும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் அதே சாதியைச் சேர்ந்தவர்களை களமிறக்க, பாரதிய ஜனதா கல்வி வியாபாரியான கரட்டாம்பட்டி சுப்பிரமணியனை களமிறக்கியது. அரசியல் கிசுகிசு பத்திரிகைகளின் வட்டத்தில் மெல்லிய சலசலப்பு ஒன்று எழுந்து அடங்கியது.
யார் இந்தக் கரட்டாம்பட்டியான்?
ஆறு நாட்டு வேளாளர்கள் என்றழைக்கப்படும் பிள்ளைமார் சாதியின் ஒரு சிறிய பிரிவைச் சேர்ந்தவர் இந்தச் சுப்பிரமணியன். திருச்சியைச் சுற்றியுள்ள பகுதியில் இவர்கள் சிறுபான்மையினர் என்றாலும் திருச்சியின் பெரும்பாலான வர்த்தகத்தை இவர்களே கட்டுப்படுத்துகின்றனர். மங்கள் & மங்கள், சாரதாஸ் போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்கள் இவர்களிடம் உண்டு. ஓரளவுக்குப் பணக்காரர்கள்.
கரட்டாம்பட்டியானின் வாழ்க்கையில் முதன்முதலாக விளக்கேற்றி வைத்த புண்ணியவானின் பெயர் பிரேமானந்தா சுவாமிகள். ஆம், அதே பொறுக்கி புகழ் செக்ஸ் சாமியார் தான்.
ஆனால், கரட்டாம்பட்டி சுப்பிரமணியனின் ஆரம்ப காலங்கள் அத்தனை வளமானதல்ல. கீழ்நடுத்தர குடும்ப பின்னணி கொண்டவர். கல்லூரி படிப்பை முடித்த பின் எண்பதுகளில், தனது ஒன்றுவிட்ட சகோதரர் நடத்தி வந்த சிறிய நகைக்கடை ஒன்றில் சும்மா உட்கார்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார் என்றும், பிறகு சிறிய அளவில் பாத்திரக்கடை ஒன்றை சில காலத்திற்கு நடத்தியதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
கரட்டாம்பட்டியானின் வாழ்க்கையில் முதன்முதலாக விளக்கேற்றி வைத்த புண்ணியவானின் பெயர் பிரேமானந்தா சுவாமிகள். ஆம், அதே பொறுக்கி புகழ் செக்ஸ் சாமியார் தான். திருச்சி பிரேமானந்தா ஆசிரமம் அப்போது இலங்கைத் தமிழர்களின் (சரியாகச் சொன்னால் இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின்) மையமாக இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.
இலங்கையில், குறிப்பாக கொழும்பு நகரின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் பலருக்கு திருச்சியுடன் ஒரு தொடர்பிருந்தது – காரணம், அவர்களின் பெரும்பான்மையினர் திருச்சியைப் பூர்வீகமாக கொண்ட ஆறுநாட்டு வேளாளர்கள் (பிள்ளைமார்). அந்த வர்த்தகர்களுக்கு இந்தியாவிலிருந்து சரக்குகள் சென்றது, அவர்கள் அங்கிருந்து சரக்குகளை அனுப்பினர்.
இந்த சரக்குப் பரிவர்த்தனைக்கான பணப்பரிமாற்ற மையமாக பிரேமானந்தா ஆசிரமம் விளங்கியது மிக இயல்பானதே – ஏனெனில், அவரே இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பதோடு ஆசிரமம் அமைந்த பகுதியும் அதற்குத் தோதாகவே இருந்தது. இது தவிர பல அரசியல்வாதிகளின் கருப்புப் பண சுழற்சியின் மையமாகவும் அந்த ஆசிரமம் இருந்ததென்பது தனிக்கதை. பொறுக்கித்தனமும் கள்ளப் பணமும் பிரிக்க முடியாத கூட்டாளிகள் அல்லவா!
பிரேமனந்தாவுக்கு கிரிமினல் புத்தி இருந்த அளவுக்கு நிர்வாகத் திறன் இல்லை. வேலு நாயக்கருக்கே ஒரு ஐயர் வேண்டியிருந்தாரல்லவா! குறிப்பாக ஆசிரமத்திற்கு வந்து குவியும் கணக்கு வழக்கற்ற கருப்புப் பண மூட்டைகளை பராமரிப்பது, அதை முறையாக பதுக்குவது, வேறு தொழில்களில் முதலீடு செய்து கருப்பை வெளையாக்குவது போன்ற வேலைகளைப் பார்க்க ஆள் தேவைப்பட்ட நிலையில் பிரேமானந்தாவுக்கு முதலில் சுப்பிரமணியத்தின் மனைவி நெருக்கமாகிறார் – அவர் மூலம் சுப்பிரமணியம் அறிமுகமாகிறார்.
பிரேமானந்தா ஆசிரமம்
இடைக்குறிப்பு : எம்மிடம் சுப்பிரமணியத்தின் பழைய வரலாற்றை சொன்னவர்கள் பலரும் இந்த இடத்தில் வடிவேலுவின் “கணேச அய்யர் பேக்கரி” கதை ஒன்றைச் சொன்னார்கள். இருப்பினும் அதை மட்டுறுத்தியுள்ளோம். நமது நோக்கம் அரசியலின் பாற்பட்டதேயன்றி தனிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் அந்தப்புர அசிங்கங்களும் இரண்டாம்பட்சமானதே.
எப்படியோ பிரேமானந்தா ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்ளும் முக்கியப் பொறுப்பில் சுப்பிரமணியம் அமர்கிறார். 1993-ம் ஆண்டு பிரேமானந்தாவின் புகழ் உச்சத்தில் இருந்த அதே காலகட்டத்தில் கரட்டாம்பட்டி கிராமத்தில் கல்லூரிக்கான வேலைகளைத் துவக்குகிறார் சுப்பிரமணியன். திருடனுக்கே தெரியாமல் அவனிடம் செய்யப்பட்ட திருட்டா, அல்லது பிரேமானந்தாவே கருப்பை வெளுக்கும் இந்த வேலையை சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தாரா என்பது தேவ ரகசியம்.
1994-ம் ஆண்டு ஆசிரமக் கொலை மற்றும் வன்புணர்ச்சி வழக்கில் பிரேமானந்தா மாட்டிக் கொள்கிறார். பிரேமானந்தா ஆசிரமம் நக்கீரன் புண்ணியத்தில் உலகப் ‘புகழ்’ பெற்றுவிடுகிறது. அதே 1994-ம் ஆண்டு ஜெயராம் கல்லூரி துவங்கப்ப்பட்டது. இதில் இருக்கும் அவசரத்தை கவனித்தீர்களா? 1993-ம் ஆண்டின் பிற்பகுதியில் கட்டிட வேலைகளைத் துவங்கி 1994-ம் ஆண்டே – அதாவது, கட்டுமான வேலைகள் முடிந்தும் முடியாமலும் – கல்லூரியைத் துவங்கி விடுகிறார். ஆசிரமக் கணக்கப்பிள்ளை என்ற பல்லி வாலை கத்தரித்துக் கொண்டு சேர்மன் சுப்பிரமணியனாக அவதரிக்கிறார்.
1997-ம் ஆண்டு பிரேமானந்தா இரட்டை ஆயுள் தண்டனை பெறுகிறார் – அதே ஆண்டு சுப்பிரமணியம் ’ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் காலேஜ்’ என்ற இரண்டாவது கல்லூரிக்கான வேலையைத் துவங்குகிறார். ஆக்ஸ்போர்டு கல்லூரி 1998-ம் ஆண்டிலிருந்து செயல்படத் துவங்குகிறது. ஆயுள் தண்டனையில் ஒரு முடிவும் ஆக்ஸ்போர்டில் ஒரு துவக்கமும் இருப்பதை கவனியுங்கள்.
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வினவு செய்தியாளர்கள் சென்று பேசிய போது கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் குறித்து பேசுவதற்கு பலரும் அஞ்சினார்கள்
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வினவு செய்தியாளர்கள் சென்று பேசிய போது கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் குறித்து பேசுவதற்கு பலரும் அஞ்சினார்கள். தவிர்த்தார்கள்.
ஏறக்குறைய இதே காலகட்டத்தில் மேஜர் சீனிவாசன் என்பவர் தலைமையில் நடந்து வந்த அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் நிர்வாகத்தில் ஒரு பங்குதாரராக நுழைகிறார் கரட்டாம்பட்டி சுப்பிரமணியன்.
சுப்பிரமணியன் நுழைந்த சில வருடங்களிலேயே அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் நிர்வாகம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறார். தொடர்ந்து மேஜர் சீனிவாசனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறார். நாங்கள் விசாரித்த சிலர் சுப்பிரமணியன் மேஜரின் மகனைக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகச் செய்தார் என்றனர் – அத்தகவலை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எப்படியாயினும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் அங்காளம்மன் கல்லூரி சுப்பிரமணியனின் பகுதியளவிலான கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
2006-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மேஜர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். விளைவாக, மொத்த கல்லூரியின் ஏகபோக கட்டுப்பாடு சுப்பிரமணியனின் கையில் வந்து விழுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் தெருவும் திண்ணையுமாக திருச்சியைச் சுற்றி வந்த கரட்டாம்ப்பட்டியான் இன்றைய தேதியில் மூன்று கல்லூரிகளும், வேறு சில வியாபார நிறுவன்ங்களுமாக கோடிகளில் புரளும் அளவிற்கு வளர்ந்த சுருக்கமான வரலாறு இது.
சுப்பிரமணிய வைரஸ் வளர தேர்ந்தெடுத்த கம்பெனி
தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தின் மேல் சுப்பிரமனியனின் கண் அழுத்தமாக பதிகிறது. மேஜர் சீனிவாசனின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஜெயராம் கல்லூரிக்காக மோசடி செய்து விவசாயிகளின் நிலத்தை அபகரித்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநிலைக்குச் சென்று கொண்டிருந்தது. சூட்டோடு சூடாக 1998-ல் ஆக்ஸ்போர்ட் கல்லூரியையும் துவங்கி தனது சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவடையச் செய்திருந்தார்.
திடீர் பணக்கார ரவுடிகளின் வளர்ச்சி இரண்டு உடனடி விளைவுகளை ஏற்படுத்தும்; ஒன்று, அயோக்கியத்தனமான நடவடிக்கைகள் சம்பாதித்துக் கொடுக்கும் மக்கள் எதிர்ப்பு; இரண்டு – ஏற்கனவே தொழில் போட்டியில் இருக்கும் சக ரவுடிகளின் கண்களுக்கு உறுத்தலாக மாறுவது. எனவே அவர்கள் திடீர் பணக்க்கார ரவுடியில் இருந்து திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக பதவியேற்றம் பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கு தி.மு.க / அ.தி.மு.க நல்ல தேர்வாக இருந்திருக்கும் என்றாலும் பாரதிய ஜனதா கட்சியைத் தேர்ந்தெடுத்தார் சுப்பிரமணியன்.
ஏனெனில், அரசியல் ரவுடித்தனத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இருக்கும் மாநில வரம்பு ஒருபக்கம் இருக்க, இவர்கள் கடந்த சில ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட கத்துக்குட்டிகள். பாரதிய ஜனதாவுக்கு ஒரு தேசிய முகம் உள்ளது, அந்த முகத்திற்கு ஒரு நீண்ட வரலாறும் உள்ளது. பாரதிய ஜனதாவின் தேசிய முகத்தின் அங்கங்களாக சுஷ்மா சுவராஜும் இருப்பார், அமித்ஷாவும் இருப்பார்; ஒருபக்கம் குருமூர்த்தி இன்னொரு பக்கம் ரெட்டி சகோதரர்கள்;
நரோதா பாட்டியா கொலை வெறியாட்டமும் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பேசப்படும் ‘வளர்ச்சியும்’ வேறு வேறல்ல
நாணயத்தின் இரண்டு முகங்களுமாக மோடியே இருக்கிறார். அவரே வளர்ச்சி, அவரே நரோதா பாட்டியா.
நரோதா பாட்டியா கொலை வெறியாட்டமும் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பேசப்படும் ‘வளர்ச்சியும்’ வேறு வேறல்ல. இந்துத்துவ பாசிஸ்டுகள் தங்கள் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக திட்டமிட்டுக் கொள்ளும் போது மிக கவனமாக இரண்டு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஒன்று, புரவலர்கள்; இரண்டு அடியாட் படை.
உதாரணமாக, கோவை கலவரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இந்து முன்னணியால் கீழ்மட்டத்தில் அணிதிரட்டப்பட்டவர்கள் – இதற்காக கரும்புக்கடை, குனியமுத்தூர், கெம்பட்டி காலனி, செல்வபுரம் போன்ற உதிரிபாட்டாளிகள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் பல ஆண்டுகள் இந்து முன்னணி செயல்பட்டுள்ளது. கோவை கலவரங்களுக்கான புரவலர்களாக மார்வாடி சேட்டுகள், செங்குந்த முதலியார்கள், கவுண்டர்கள், நாயுடுகள் என்று மேல்மட்டத்தினரை ஆர்.எஸ்.எஸ் நேரடியாகவும் விஜில் என்ற போர்வையின் கீழும் தயாரித்து வந்தது.
திருச்சி பகுதியில் கொழுத்த புரவலர்களைத் தேடி வந்த இந்துத்துவ கும்பலுக்கு கரட்டாம்பட்டியான் மிக இயல்பான கூட்டாளியாக அமைந்தார்
தனது கல்வி வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்ள பொருத்தமான கூட்டாளியைத் தேடிய கரட்டாம்பட்டி சுப்பிரமணியனுக்கு பாரதிய ஜனதா மிக இயல்பான தேர்வாக அமைந்தது. அதே நேரம் திருச்சி பகுதியில் கொழுத்த புரவலர்களைத் தேடி வந்த இந்துத்துவ கும்பலுக்கு கரட்டாம்பட்டியான் மிக இயல்பான கூட்டாளியாக அமைந்தார்.
திருச்சியின் மேல் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு கண் உண்டு. பல ஆண்டுகளாக திருச்சியை மையமாக வைத்து தலையால் தண்ணி குடித்தும் கோவை மற்றும் கன்யாகுமரி மாவட்டம் போல் திருச்சி அமையவில்லை. அதை நிறைவேற்றுவதற்கு இந்த இடைத் தேர்தலை பாரதிய ஜனதா ஒரு அதிருஷ்டமாக கருதுகிறது.
எப்போதும் இல்லாத வகையில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காக்கி டவுசரோடு பாரதிய ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்க களம் இறக்கப்பட்டுள்ளனர். திருச்சிக்கென ஆர்.எஸ்.எஸ் வகுத்துள்ள எதிர்கால திட்டங்களில் வணிக சாதியினராக உள்ள ஆறு நாட்டு வேளாளர்களுக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. அந்த வகையில் தான் சுப்பிரமணியனை வேட்பாளராக களமிறக்கியதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சுப்பிரமணிய வைரசின் விளைவுகள்
“அண்ணே, இந்த ஹாஸ்டல்லே நாங்க ஒரு முன்னூறு பாய்ஸ் ஸ்டூடண்ட்ஸ் தங்கியிருக்கோம்ணே.. கேர்ல் ஸ்டூடண்ட்ஸ் எங்களை விட அதிக எண்ணிக்கையில் தங்கியிருக்காங்க. எனக்கு திருவண்ணாமலை பக்கம் சொந்த ஊரு. வருசத்துக்கு 45 ஆயிரம் ஹாஸ்டல் பீஸ்னு புடுங்கறாங்க. சாப்பாடெல்லாம் வாய்லயே வைக்க முடியாதுண்ணே” – ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அந்த முதலாம் ஆண்டு மாணவர் சுரத்தின்றி பேசினார்.
ஒவ்வொன்றினுள்ளும் மூன்று உடைந்த தகரக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன
அந்த உறைவிடக் கட்டிடத்தின் ஒரு தளத்தில் சுமார் இருபது அறைகள் இருந்தன. ஒவ்வொன்றினுள்ளும் மூன்று உடைந்த தகரக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையினுள்ளும் ஆறு மாணவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் நூறு மாணவர்களுக்கு மூன்றே மூன்று கழிவறைகள் ஒரே ஒரு வாஷ்பேசின் மற்றும் ஐந்து குளியலறைகள். கழிவறைகளின் தரம் மூக்கே இல்லாதவர்கள்தான் அங்கு சீவிக்க முடியும் என்றது.
நூறு மாணவர்களுக்கு மூன்று கழிவறைகள்!
“காலைல நாங்க லேட்டா போனா பைன் போடறாங்கண்ணா. ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு மாணவரும் சுமார் எட்டாயிரம் பத்தாயிரம் நோ டியூ (No due) பைனா கட்டறாங்க. ஆனா, ஹாஸ்டல்ல தங்கற மாணவர்களால சீக்கிரம் கிளம்பவே முடியாது. காலைல பார்த்தீங்கன்னா பெரிய க்யூவே நிக்கும். நானெல்லாம் காலைல நாலு மணிக்கு எழுந்துக்குவேன். ஆனாலும், லேட்டாயிடும்”
வினவு செய்தியாளர் குழு ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்திருந்தது. திருச்சி நகருக்கு வெளியே தீரனூர் என்ற பகுதியை அடுத்து அமைந்திருக்கும் அந்தக் கல்லூரி வளாகத்திற்கு முறையான சுற்றுச்சுவர் கூட கிடையாது. யார் வேண்டுமானாலும், போகலாம் வரலாம்.
விவசாயிகளை அடித்து பிடுங்கி சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்ட ஆக்ஸ்போர்டு கல்லூரி எனும் காயலான் கடை!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் முறையின் கீழ் கல்லூரியில் சேர்ந்த மாணவர் ஒருவரிடம் பேசினோம்.
“அண்ணா, யூனிவர்சிட்டி எங்களுக்கு நிர்ணயம் செய்த பீஸ் 32,500 ரூபா தான். இவனுங்க அந்த அமவுண்டுக்கு மட்டும் தான் கம்ப்யூட்டர் பிரிண்ட் பில் குடுப்பானுங்க. மத்தபடி ஒரு வருசத்துக்கு 60,000 – 65,000 வரைக்கும் பிடுங்கிடறாங்க. அது தவிர வெளியூர் மாணவர்களுக்கு ஹாஸ்டல் பீஸ்னு தனியா 45 ஆயிரம் வாங்கறாங்க.
மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தொகையில் 4,000 ரூபாய் புத்தகங்களுக்கென்று வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் பரீட்சைக்கு சற்று முன்பு தான் புத்தகங்களே கையில் கிடைக்கும். அந்த புத்தகங்களும் அதே கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளரகள் எழுதியதாக இருக்கும். சாணித்தாளில் அச்சடிக்கப்பட்ட அந்த புத்தகங்களின் மதிப்பை கணக்கிட்டால் ஆயிரம் கூட தேறாது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்புகளில் தலா 500 மாணவர்களும், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் தலா 350 மாணவர்களும் படிக்கிறார்கள். கவுன்சிலிங் மாணவர்களும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களும் சம அளவில் உள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் முதலாம் ஆண்டு டொனேஷனாக லட்சங்களில் வசூல் நடக்கிறது. அது தவிர ஆண்டுக் கட்டணங்கள் கவுன்சிலிங் மாணவர்களை விட நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அதிகம் – எண்பதாயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
அதிகப்படியாக வசூலிக்கப்படும் பணத்திற்கு துண்டுச் சிட்டையில் கிறுக்கித் தருவதைத் தவிர வேறு முறையான ஆவணங்கள் ஏதும் கிடையாது. கவுன்சிலிங் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகைக்கு ஒரு சராசரியை நிர்ணயிப்பதாக இருந்தால் சுமாராக கல்விக் கட்டணம் என்ற வகையில் மட்டும் வருடத்திற்கு எட்டரை கோடி ரூபாயும், உறைவிடக் கட்டணமாக சுமார் மூன்று கோடிகளும் சேர்கிறது – அவ்வளவும் துண்டுச் சிட்டையில் எழுதிக் கணக்கு வைக்கப்பட்டும் கருப்புப் பணம்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் முதலாம் ஆண்டு டொனேஷனாக லட்சங்களில் வசூல் நடக்கிறது.
ஆக்ஸ்போர்ட் கல்லூரி என்பது சுப்பிரமணியன் நடத்தி வரும் மூன்று கல்லூரிகளில் தரம் குறைந்த ஒன்று என்றாலும், இதே கணக்கை மற்ற இரு கல்லூரிகளுக்கும் போட்டுப் பார்த்தால், மூன்று கல்லூரியிலும் சேர்த்து கல்விக் கொள்ளையில் ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்து கோடி கொள்ளையிடப்படுகிறது. நோ ட்யூ என்று ஒவ்வொரு பருவத்தேர்வின் போதும் சராசரியாக ஒரு மாணவரிடம் இருந்து நான்காயிரம் வசூலிக்கப்படுகிறது. இதை மூன்று கல்லூரிகளுக்குமாக தோராயமாக கணக்கிட்டால் இரண்டு கோடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் சுருட்டும் கருப்புப் பணத்தின் குறைந்தபட்ச அளவு 37 கோடிகள்! இது குறைந்தபட்ச கணக்கு தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில், அவர் நடத்தும் மற்ற இரு கல்லூரிகளும் ஓரளவிற்கு பிரபலமானவை என்பதாலும் அந்தக் கல்லூரிகளில் படிப்புப் பிரிவுகள் அதிகம் என்பதாலும் அங்கே வசூலாகும் தொகை நிச்சயம் அதிகமாகத் தான் இருக்கும்.
ஆறு ஆண்டுகளாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடம்
இது ஒருபக்கம் இருக்க, கல்லூரியில் சுமார் 120 விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் இளங்கலை பொறியியல் படித்தவர்கள் – சம்பளம் வெறும் 12,000 ரூபாய்கள் தான். ஓரளவு அனுபவம் வாய்ந்தவர்களுக்கு சுமார் 20,000 ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைவர்களுக்கு அறுபதாயிரம் வரை சம்பளம். பரிசோதனைக்கூட உதவியாளர்களுக்கு பத்தாயிரத்திற்கும் கீழ் தான் சம்பளம்.
இந்தச் சம்பளமெல்லாம் நிர்ணயம் செய்யப்பட்டவை மட்டும் தான். வழங்கப்படுபவை அல்ல. கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றார் ஒரு ஊழியர். முதலாமாண்டு விரிவுரையாளர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் அலுவலக அறையில் வைத்தே சம்பளம் கேட்டு தகராறு செய்ததோடு, சம்பளம் தராமல் பண நெருக்கடியின் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்குக் காரணம் சேர்மன் தான் என்று எழுதி வைத்து விட்டுத் தான் சாவேன் என்று அழுதவாறே ஏசியுள்ளார்.
சுப்பிரமணிய வைரசோடு ஒரு நேர்முகம்
“இது காலேஜ் ஆபீஸ் தானே? அப்புறம் ஏன் பி.ஜே.பி ஆபீஸ் மாதிரி வச்சிருக்கீங்க?”
சுப்பிரமணியன் நடத்தும் கல்லூரிகளுக்கும் கல்விக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அவை மூன்றும் பணம் கறக்கும் தொழிற்சாலைகள் தானென்பதையும் உறுதி செய்து கொண்ட வினவு செய்தியாளர் குழு, இக்கல்லூரிகளின் சார்பாக திருச்சி தில்லை நகர் பத்தாவது தெருவில் செயல்பட்டு வரும் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றது.
நுழைவிலேயே பாரதிய ஜனதாவின் கொடி ஒட்டப்பட்டு அதில் “vote for BJP” என்று அச்சிடப்பட்டிருந்தது. நாங்கள் அலுவலக நிர்வாகி மகேந்திரன் என்பவரை ஓரம் கட்டினோம்.
மாணவர்கள் மத்தியில் பேசும் சேர்மன் சுப்பிரமணியன்
”சார் எங்க அண்ணன் மகன் வேற கல்லூரில படிக்கிறான். ஆறாவது செமஸ்டர். டீபார் ஆகிட்டான். அவனை உங்கள் கல்லூரிக்கு மாற்றணும். அதுக்கு என்ன விதிமுறைகள் இருக்குன்னு சொல்லுங்களேன்” – தயாரித்து வைத்திருந்த கதை ஒன்றை எடுத்து விட்டோம்.
“ஆறாவது செமஸ்டரா? முடியாதுங்க. ஆட் நெம்பர் செமஸ்டர்ல தான் டிரான்ஸ்பர் செய்ய முடியும்; அது தான் யூனிவர்சிட்டி நார்ம். உங்க பையன் ஈவன் செமஸ்டர்ல இருக்கானே. நிச்சயமா முடியாதுங்க”
(ஆட் செம் (ODD Semester) என்பது கல்வியாண்டின் துவக்கத்தில் வரும் ஒன்று, மூன்று, ஐந்து மற்றும் ஏழாவது பருவங்கள். ஈவன் செம் (Even semester) என்பது கல்வியாண்டின் மத்தியில் வரும் இரண்டு, நான்கு, ஆறு மற்றும் எட்டாவது பருவங்கள்)
“சார் எப்படியாவது ட்ரை பண்ணுங்க சார். எவ்வளவு செலவு ஆனாலும் பார்த்துக்கலாம்” அடுத்த தூண்டிலை வீசினோம்.
“அது வந்துங்க.. கொஞ்சம் கஷ்டம் தான். இப்ப கூட பாருங்க நாலாவது செமஸ்டர்ல ஒரு பொண்ணை மாத்தி கொண்டாந்தோம். ஈவன் செமஸ்டர் தான். உங்க கேசாவது பரவாயில்ல டீபார் தான்.. அந்தப் பொண்ணு டிஸ்கண்டினியூவே பண்ணின கேசு. அதுக்கு மினிஸ்டர் பி.ஏவை பிடிச்சி மினிஸ்டர் லெவல்ல மூவ் பண்ணி தான் செய்ய முடிஞ்சது” மீன் மாட்டியது.
“பரவாயில்ல சார். நாங்களும் மினிஸ்டர் வரைக்கும் பார்க்க தயார் தான். செலவு என்னான்னு சொல்லுங்க, எப்படி பார்க்கிறதுன்னு சொல்லிட்டிங்கன்னா செய்துடலாம்”
“நீங்க ஒன்னு செய்யுங்க. அக்டோபர் மாசம் பையன் கடைசியா வாங்கின ஹால் டிக்கட்டோட வாங்க விஷயத்தை முடிச்சிடலாம்”
“சார் அக்டோபர்னா செமஸ்டர் எக்சாம் நடக்கும் நேரமாச்சே சார்… பரவாயில்லையா?”
”அதெல்லாம் பரவாயில்ல பார்த்துக்கலாம், வேணா கொஞ்சம் முன்னாடி கூட வாங்க ஒன்னும் பிரச்சினையில்லை”
இவர்கள் கல்லூரிக்கு வேறு ஒரு கல்லூரியில் இருந்து ஒரு மாணவரை மாற்றி அக்டோபரில் ஆறாவது செமஸ்டர் பரீட்சைக்கு உட்கார வைப்பது என்பதன் பொருள் – அந்த மாணவர் ஆறாவது செமஸ்டர் பாடங்களை கேட்கவோ வகுப்புகளுக்கு வரவேண்டிய தேவையோ இல்லை என்பது தான். செய்வதும் பிராடு, செய்யும் விதமும் பிராடு. நாங்கள் ’நன்றி’ தெரிவித்து விட்டுக் கிளம்பினோம்.
“ஆமா சார்… இது காலேஜ் ஆபீஸ் தானே? அப்புறம் ஏன் பி.ஜே.பி ஆபீஸ் மாதிரி அவங்க கொடி வச்சிருக்கீங்க?”
“ஹிஹி.. ரெண்டும் ஒன்னு தான் சார்”
நியாயமாக இந்தக் கட்டுரையின் இறுதி பன்ச் லைன் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். சொல்ல இன்னும் கொஞ்சம் இருப்பதால் தொடர்கிறோம்.
சுயநிதிக் கொள்ளையர் பச்சமுத்துவின் விருதை வாங்கி எழுத்தாளர் ஜெயமோகன்!
தேர்தல் வாக்குமூலத்தில் தனது கல்லூரி சொத்துக்களை மறைத்துவிட்டு வெறும் 33 கோடி ரூபாயை மட்டும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார் இந்த மோசடிச் சக்கரவர்த்தி. ஆனால் கல்லூரி அலுவலகமும், கட்சி ஆபிசும் ஒரே அலுவலகத்த்திலிருந்து செயல்படுகிறது. கல்லூரிகளெல்லாம் ட்ரெஸ்ட்டுகளாக வைத்து கல்லா கட்டுவது என்ன இந்தியாவிற்கு புதிதா? பச்சமுத்து கூட தனது கல்லூரிகளை அப்படித்தான் நடத்துகிறார். அவரது சொத்து பத்திரத்திலும் நாம் எஸ்.ஆர்.எம்மை கண்டுபிடிக்க முடியாது.
இப்பேற்பட்ட கொள்ளையர் பச்சமுத்துவின் தமிழ் விருதுகளைத்தான் நமது தமிழ் எழுத்தாளர்கள் வெட்கம் கெட்டு பெற்றுக் கொள்கிறார்கள். அதில் அன்னிய நிதி குறித்து சிலிர்த்துக் கொள்ளும் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர். இங்கே சுப்பிரமணியன் போன்ற கொள்ளையர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடித்து இந்து அறம் காக்க தேர்தல் களம் புகுகிறார்கள்.
சுப்பிரமணிய வைரஸ் – ஒரு முறி மருந்து
கரட்டாம்பட்டி சுப்பிரமணி பாரதிய ஜனதாவில் உறுப்பினராக இணைவது தொண்ணுறுகளின் இறுதிக் கட்டத்தில் என்றாலும், தனது அரசியல் நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தியதும், கட்சிப் பொறுப்புகளை வாங்கிக் கொண்டதும் இரண்டாயிரங்களுக்கு பிந்தைய காலகட்டத்தில் தான் நடந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஜெயராம் கல்லூரியைக் கட்ட தங்களது நிலத்தை அபகரித்துக் கொண்ட சுப்பிரமணியனோடு சுமார் ஆறாண்டுகள் மல்லுக்கட்டிப் பார்த்த விவசாயிகள் இரண்டாயிரமாவது ஆண்டில் விவசாயிகள் விடுதலை முன்னணியை நாடுகிறார்கள். வி.வி.மு தோழர் பொம்மன் அவர்களின் தலைமையில் வி.வி.மு தோழர்கள் விசாரணை ஒன்றை நடத்தி மோசடி நடந்திருப்பதை உறுதி செய்கிறார்கள்.
தோழர் பொம்மன் தலைமையில் உடனடியாக களமிறங்கும் வி.வி.மு விவசாயிகளின் சார்பாக பல போராட்டங்களை முன்னெடுக்கிறது. கல்லூரியைச் சுற்றிலும் மோசடிப் பேர்வழி சுப்பிரமணியனை எதிர்த்து போஸ்டர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர் மற்றும் துண்டுப் பிரசுர பிரச்சாரங்கள் என்று வி.வி.மு முன்னெடுத்த போராட்டங்களின் வீரியம் ”ஏற்கனவே ஏமாற்றி பத்திரத்தில் கைநாட்டு வாங்கி விட்டோமே; நம்மை அசைக்க முடியாது” என்ற மிதப்பில் இருந்த சுப்பிரமணியனை நிதானத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் கவுன்சிலிங் நடந்த சமயத்தில் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் அவரது தொழிலின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்தது.
சுப்பிரமணியன் நிலப்பறிப்பு தொடர்பான ஆவணங்களின் நகல்கள்
விவிமுவுக்கு நிலமிழந்த விவசாயிகள் மனு – 1
விவிமுவுக்கு நிலமிழந்த விவசாயிகள் மனு – 2
விவிமுவுக்கு நிலமிழந்த விவசாயிகள் மனு – 3
நிலப்பறிப்பு தொடர்பாக வி.வி.மு விசாரணை அறிக்கை – 1
வி.வி.முவுக்கு விவசாயிகள் மனு
நிலப்பறிப்பு தொடர்பாக வி.வி.மு விசாரணை அறிக்கை – 2
விவசாயிகள் வாக்குமூலம் – 1
விவசாயிகள் வாக்குமூலம் – 2
விவசாயிகள் வாக்குமூலம் – 3
விவசாயிகள் வாக்குமூலம் – 4
விவசாயிகள் வாக்குமூலம் – 5
விவசாயிகள் வாக்குமூலம் – 6
விவசாயிகள் வாக்குமூலம் – 7
காவல்துறை முதல் தகவல் அறிக்கை – 1
சுப்பிரமணியனுக்கு வி.வி.மு கடிதம்
காவல்துறை முதல் தகவல் அறிக்கை – 2
காவல்துறை முதல் தகவல் அறிக்கை – 3
வங்கி கடன் சொத்து அறிவிக்கை – 1
வங்கி கடன் சொத்து அறிவிக்கை – 2
வங்கி கடன் சொத்து அறிவிக்கை – 3
வி.வி.மு போராட்ட பிரசுரம் – 1
வி.வி.மு போராட்ட பிரசுரம் – 2
வி.வி.மு போராட்ட பிரசுரம் – 3
வி.வி.மு புகாருக்கு சுப்பிரமணி தரப்பு பதில்
சுப்பிரமணியின் பொய்யை அம்பலப்படுத்தும் வி.வி.மு கடிதம்
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 1
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 2
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 3
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 4
விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய விபரங்களைக் காட்டும் வரைபடம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பல வழிகளில் வி.வி.மு தோழர்களை அணுகி பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிகளின் முன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அவற்றில் சுப்பிரமணியன் முன்னுக்குப் பின் முரணாக வாக்குறுதிகள் வழங்கியதாலும், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலரை காசு கொடுத்து கருங்காலிகள் ஆக்கும் முயற்சியை எடுத்ததாலும் பேச்சுவார்த்தையை வி.வி.மு முறித்துக் கொண்டது. சுப்பிரமணியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையைத் தொடர்ந்தது.
இந்தப் பேச்சு வார்த்தைகளின் குறிப்பிட்ட ஒரு சுற்றின் போது சுப்பிரமணியன் தனக்கு ஆதரவாக பேச பழக்கமான அரசு உயரதிகாரி ஒருவரோடு வந்துள்ளார். அவருக்கு எதிர்தரப்பில் வந்தமரப் போவது வி.வி.மு தோழர்கள் என்பது தெரியாது. பேச்சுவார்த்தையின் போது வி.வி.மு தோழர்கள் வந்தமர்ந்ததைப் பார்த்ததும் பதறிப் போய் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு கிளம்பியுள்ளார்.
மேலும் அவரே சுப்பிரமணியனிடம் இவர்கள் தான் (வி.வி.மு) வரப்போகிறார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும், இவர்கள் நக்சலைட்டுகள் என்றும், விவசாயிகளை ஏமாற்றினால் ஏதாவது ’ஒன்னு கிடக்க ஒன்னு’ செய்து விடக்கூடியவர்கள் என்றும் எச்சரித்துச் சென்றுள்ளார். ஏற்கனவே சுப்பிரமணியன் வி.வி.மு தோழர்களை விலைக்கு வாங்க முயற்சித்து மூக்குடைபட்டவர் என்பது தனிக்கதை.
இந்தப் பின்னணியில் அவர் பாரதிய ஜனதாவோடு நெருங்கியதைப் பொருத்திப் பார்த்தால் முழு சித்திரத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே தனது கல்விக் கொள்ளைக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு என்ற வகையில் பாரதிய ஜனதாவை நாடியிருந்த சுப்பிரமணியம் தற்போது அக்கட்சியில் முக்கிய அந்தஸ்த்தைப் பெறுவதன் மூலம் அதை உறுதி செய்கிறார். கூடவே தனது கொள்ளையை பெருக்கவும் செய்வார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் என்பது பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. தேர்தல் முடிவு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. அ.தி.மு.கவின் பணபலம் மற்றும் அதிகார பலத்தின் முன் தி.மு.கவே போட்டி போட முடியாமல் சோம்பிக் கிடக்கும் போது முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அ.தி.மு.கவின் பணபலம் மற்றும் அதிகார பலத்தின் முன் தி.மு.கவே போட்டி போட முடியாமல் சோம்பிக் கிடக்கும் போது முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சின்ன உதாரணம் மட்டும் – முத்தரச நல்லூர் என்ற 300 குடும்பங்கள் மட்டும் வசிக்கும் குக்கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி அ.தி.மு.க கறி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. 100 கிலோ மட்டன், 200 கிலோ சிக்கன் மற்றும் மீன் வருவல் என்று தடபுடல் பட்ட விருந்தைத் தொடர்ந்து பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஊரில் தி.மு.க குடும்பம் என்று அறியப்பட்ட குடும்பங்களை குறிவைத்து தேர்தல் வேலைக்காக களமிறங்கியுள்ள வெளியூர் அ.தி.மு.கவினர் களமிறங்கியுள்ளனர். சில வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒழுங்காக அ.தி.முகவிற்கு ஓட்டளிக்க வேண்டுமென்றும், தவறினால் வீட்டுப் பெண்களைத் தூக்கிச் செல்வோம் என்றும் பகிரங்கமாகவும் மிரட்டியுள்ளனர்.
அதி.முக தான் வெல்லப்போகிறது என்பது தி.மு.கவுக்கே தெரிந்த சேதி தான்.
என்றாலும் டெப்பாசிட் வாங்குவதைத் தாண்டி பாரதிய ஜனதா வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் அடுத்த தேர்தலில் அதற்கு பேரம் பேசும் வலிமையைச் சேர்த்துக் கொடுக்கும். அதற்காகவே செலவு செய்யும் வாய்ப்புள்ள சுப்பிரமணியனைக் களமிறக்கி விட்டுள்ளது பாரதிய ஜனதா.
திராவிடக் கட்சியினரை பொறுக்கிகள், ரவுடிகள் என்று சித்தரித்து பாரதிய ஜனதா எடுக்கும் வாந்தியை அப்படியே தின்னும் தமிழக பத்திரிகைகள் கர்ம சிரத்தையாக அதை மறுவாந்தி எடுத்து அக்கருத்தை பொதுபுத்தியில் நிலைநாட்டியுள்ளனர்.
திராவிடக் கட்சியினரை பொறுக்கிகள், ரவுடிகள் என்று சித்தரித்து பாரதிய ஜனதா எடுக்கும் வாந்தியை அப்படியே தின்னும் தமிழக பத்திரிகைகள் கர்ம சிரத்தையாக அதை மறுவாந்தி எடுத்து அக்கருத்தை பொதுபுத்தியில் நிலைநாட்டியுள்ளனர்.
சொல்லப் போனால் இந்தப் பிரச்சாரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக சிம்மாசனம் ஏற முயல்கிறது.
ஊரே காறித்துப்பும் ஒரு மோசடிப் பேர்வழியை செலவு செய்யும் வாய்ப்பு உள்ளவர் என்ற ஒரே காரணத்துக்காக வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது என்றால், பாரதியஜனதாவின் அரசியல் தராதரத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் வலுவாக காலூன்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதை பாரதிய ஜனதா இதன் மூலம் அறிவித்துள்ளது.
மேலும் கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் – புதிய தலைமுறை பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்றவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தமிழக புரவலரகளாக இருந்து இரண்டு சீட்டு பெற்றார்கள். இப்போது அந்த கொள்ளையர் அணி நேரடியாகவே பாஜகவில் போட்டியிடுகிறது.
கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் – புதிய தலைமுறை பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்றவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தமிழக புரவலரகளாக இருந்து இரண்டு சீட்டு பெற்றார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வென்ற பாரதிய ஜனதாவின் எம்.பிக்களில் பெரும்பாலானோரின் மேல் கற்பழிப்பு, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பதையும் கரட்டாம்பட்டியானையும் இணைத்துப் பார்த்தால் இது ஜாடிக்கேற்ற மூடி என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதை எதிர்கொள்வது எப்படி என்பதை காலம் சென்ற பொம்மன் தோழர் கோடி காட்டிச் சென்றுள்ளார். கட்டுரையின் இணைப்பில் பொம்மன் தோழர் கரட்டாம்பட்டியானுக்கு 2000-வது ஆண்டு எழுதிய கடிதத்தை அவசியம் வாசியுங்கள். நாம் அதை மெய்யாக்கும் போது தான் இந்துத்துவ பாசிச அபாயத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.
பாஜகவிற்கு தேசிய அளவிலும் உள்ளூர் வரையிலும் முதலாளிகள் தேவை. முதலாளிகளுக்கோ பாஜக எனும் கட்சின் முகவரி தேவை. எப்படியும் தோற்போமென தெரிந்தும் சுப்பிரமணியம்ஏன் போட்டியிடுகிறார்? அவரைப் பொறுத்த வரை பாஜக பெயரும், வேட்பாளர் அடையாளமும் தொழிலை அதாவது முறைகேடை தொடர்வதற்கு ஒரு பாதுகாப்பு. பாஜகவிற்கு இத்தகைய புரவலர்கள் இருந்தால்தான் உள்ளூரில் கட்சி நடத்த பணம் கிடைக்கும். அந்த புரவலர்களின் தொழில் மோடியின் தயவில் தேசிய அளவில் பரவும் போது கணிசமான கமிஷனும் கிடைக்கும்.
வேட்பாளர் கரட்டாம்பட்டி சுப்ரமணியம் மீது திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீசில் 1.13 கோடி மோசடி செய்ததாக 420 வழக்கு நிலுவையில் உள்ளது. M/s Precision Medic(P)ltd என்ற நிறுவனம் சுப்ரமணியம் கல்லூரி மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்கியதற்கான தொகையை சுப்ரமணியமும் அவரது கல்லூரி முதல்வர்களும் மோசடி செய்துள்ளனர்.
சுப்ரமணியத்திற்கு பிணை வழங்கிய நீதிபதி பி.என்.பிரகாசு ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்.வழக்கமாக ஏமாற்றுதல்,மற்றும் மோசடி(420) தொடர்பான வழக்குகளில் மோசடித் தொகை செலுத்தினால் மட்டுமே பிணை வழங்கும் நீதித்துறை இவர் கோடி ரூபாய்க்கும் மேலான மோசடி வழக்கில் பணம் கட்டாமல் ஜாமின் வழங்கியது இதுவே முதல் முறை.
மேலும் தனது வேட்பு மனுவில் குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதில் அளித்துள்ளார்.இந்தப் பொய்யை தி.மு.க. அ.தி.மு.க.வினர் புகாராக அளித்த போதும், தேர்தல் அதிகாரி அதை விசாரணையின்றி நிராகரித்துள்ளார். மோடி ஆட்சியில் கேடிகளுக்குத்தான் சட்டமும், பாதுகாப்பும் இருக்கும். பா.ஜ.கவின் பலமே இத்தகைய அதிகார வர்க்க, நீதித்துறை அனைத்தும் காவிகளின் ரவுடித்தனத்தை பாதுக்காப்பதுதான்.
அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடித்து நான்கு கல்லூரி கட்டி ஆண்டுக்கு சில பல கோடிகளை கொள்ளையடித்து அதை பாதுகாக்க கட்சி சேர்ந்து, இப்போது வேட்பாளராகவும் உலா வரும் இந்த நபரையும் இத்தகைய பேர்வழிகளுக்கு ஒளிவட்டம் போட்டு தூக்கி பிடிக்கும் பா.ஜ.கவையும் அப்புறப்படுத்தாமல் இந்திய மக்களுக்கு விடிவு இல்லை.
___________________________
– வினவு செய்தியாளர்கள்
_______________________________________________
இணைப்பு 1: புதிய ஜனநாயக் இதழில் வெளிவந்த தோழர் பொம்மனின் அஞ்சலிக் குறிப்பு:
பா.ஜ.க வேட்பாளர் சுப்பிரமணியனின் நில அபகரிப்பை எதிர்த்து சாகும் வரை போராடிய விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் பொம்மன் 2002 நவம்பர் 25 அன்று மறைந்தார். புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த அஞ்சலிக் குறிப்பு.
இணைப்பு 2: விவசாயிகளின் நிலத்தை அபகரித்த சுப்பிரமணியத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் தோழர் பொம்மன் அனுப்பிய கடிதங்கள்:
Take a Sweatshop, Add Toxic Chemicals, And You Get This
ராணிப்பேட்டை சிப்காட் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கடந்த 30-ம் தேதி நள்ளிரவு இரசாயனச் சேறு நிரப்பி வைத்திருந்த தொட்டி உடைந்து சுனாமி போல சேறு வெளியானதில் அருகில் இருந்த ஆர்.கே தோல் தொழிற்சாலையில் தூங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பான விபரங்களை வினவில் வெளியிட்டிருந்தோம்.
கந்தக அமிலம், ஃபார்மிக் அமிலம், சுண்ணாம்பு போன்ற அமில, கார வேதிப் பொருட்கள், சாதாரண உப்பு (சோடியம் குளோரைடு), சோடியம் சல்ஃபைடு போன்ற நிலத்தை நிரந்தரமாக மலடாக்கி விடும் உப்புகள், , குரோமியம் உப்புகள், சாயப் பொருட்கள், கொழுப்பு வேதிப் பொருட்கள் என நீரை நச்சாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வேதிப் பொருட்கள் தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்படும் இரசாயனங்களில் சுமார் 20% மட்டுமே இறுதியாக பயன்படும் தோலில் சேர்கிறது; 80% கழிவு நீரில் வெளியேற்றப்படுகிறது.
எளிதில் அழுகிவிடும் தோல்களையும், அரிக்கக் கூடிய நச்சுத் தன்மையுடைய இரசாயனங்களையும் பயன்படுத்தும் தோல் தொழிற்சாலைகளுக்குள் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் அனைத்திலும் ஒரே போலத்தான் உள்ளது. அந்த வகையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கொல்கத்தா, கான்பூர், போன்ற பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளின் நிலைமைகளுக்கு ஒரு வகைமாதிரியாக உள்ளது.
மேலும், ராணிப்பேட்டை தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி, தொழிற்சாலைகளிலேயே தங்க வைத்து வேலை வாங்குவதன் மூலம் அவர்கள் மீதான பாதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது.
நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச் சூழல் மாசுபடுதலைப் பொறுத்த வரை, ஹசாரி பாக் பகுதி இப்போது எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை 1990-களில் இந்திய தோல் துறை சந்தித்தது. அவற்றுக்குத் தீர்வாக உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடனும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தனி அல்லது பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன; அடுத்தடுத்த கட்டங்களாக ஒரு சொட்டு நீரைக் கூட வெளி விடாத சுத்திகரிப்பு நுட்பம் (எதிர் சவ்வூடுபரவல் நுட்பம்), திடக் கழிவு மேலாண்மை, இரசாயனக் கழிவுச் சேற்றை கையாளுதல் என செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், ராணிப்பேட்டை சிப்காட் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய விபத்து அம்பலப்படுத்தியது போல, தோல் கழிவுகளை முறையாக கையாள்வது, அதன் மூலம் நிலம், நீர் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது என்பது எட்டாக்கனவாகவே உள்ளது. சுற்றுப் புற பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு நிலத்தடி நீர் குடிக்க முடியாத அளவுக்கு நஞ்சாகியிருப்பது, விவசாயம் செய்ய முடியாமல் நிலம் பாழாவது, காற்று மாசுபடுதல் என்று சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடாகவே இந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முதலான அரசு உறுப்புகளோ தமது கடமையை நிறைவேற்றாமல், பெயரளவு கண்காணிப்பு அதிகாரத்தை லஞ்சம் சம்பாதிக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி, இந்த பேரழிவுக்கு உடந்தையாக இருக்கின்றன.
இத்தகைய அழுக்கான, சுற்றுச் சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் கேடான தொழில்களை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டி விட்ட ஐரோப்பிய, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களோ, தமது சொந்த நாட்டு மக்களின் (நுகர்வோரின்) எதிர்ப்புகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களையும் சமாளிப்பதற்கு பல்வேறு சீர்திருத்தங்களை முன் வைக்கின்றன. ஐ.எஸ்.ஓ 14000 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிதழ், தொழிலாளர் நல ஆய்வு, பாதுகாப்பு முறைகளை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் பிரச்சனைக்கு திரை போட்டு மூட முயற்சிக்கின்றன.
ஆனால், குறைந்த விலைக்கு பொருட்களை செய்து வாங்கிக் கொள்ளும் அவர்களது நோக்கத்துக்கு தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு இவற்றை உறுதி செய்வது எதிராக உள்ளது.
இந்த நிலையில், இந்த வீடியோ படம் பிடித்து காட்டும் அவலத்தையும், எதிர்கால பிரச்சனைகளையும் எதிர் கொள்ள அதற்காக நியமிக்கப்பட்ட அரசு உறுப்புகள் செயலிழந்து, சீரழிந்து போயிருக்கும் நிலையில் தோல் துறை தொழிலாளர்களும், பகுதி மக்களும் அமைப்பாகத் திரண்டு இவற்றை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை தாமே கையில் எடுப்பதுதான் தீர்வாக இருக்க முடியும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மணற்கொள்ளையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதனை முன்நின்று நடத்துவது தமிழக அரசு என்பதுதான். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலெல்லாம், மணல் குவாரி தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசின் பொதுப்பணித்துறையே மணல் குவாரிகளை நடத்தி வருகிறது.
புற்றீசலாய் படையெடுத்துள்ள லாரிகள்… காவிரி ஆற்றுப் படுகையில் பகிரங்கமாக, எதற்கும் துணிந்து நடக்கும் மணற்கொள்ளை!
தனியார் மணற்கொள்ளைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், மணற்கொள்ளை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை ஆராவதற்கு வல்லுநர் குழுவொன்றை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். பாதிப்புகளை ஆராந்த வல்லுநர் குழு, மணற்குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதன் மூலம்தான், சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியும் என்று பரிந்துரைத்தது.
உடனே மணல் குவாரிகளைப் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதாக அக்டோபர் 2003-ல் அரசாணை பிறப்பித்தது ஜெ. அரசு. மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவதால், ஆறுகள் நாசமாக்கப்படாமல் பாதுகாக்கப்படுமென்றும், மணல் விற்பனையின் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என்றும் வீடு கட்டுபவர்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும் என்றும் பிரமைகள் பரப்பப்பட்டன.
உண்மையில் நடந்தது வேறு. பல மணற்கொள்ளையர்களின் வேட்டைக்காடாக இருந்த தமிழக ஆறுகள், ஜெயா-சசி கும்பல் என்ற ஒரு கொள்ளைக் கும்பலின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அதன் பின்னர் 2007-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆளும் கட்சி என்ற முறையில் கொள்ளைக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் மணற்கொள்ளை அரசுடைமையாக்கப்பட்டது.
மன்னராட்சிக் காலத்தில், குடிமக்களைக் கொள்ளையடிக்கும் உரிமையைக் குறுநில மன்னர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் வழங்கி விட்டு, அவர்களிடமிருந்து கப்பம் வசூலித்துக் கொண்ட சக்கரவர்த்திகளைப் போல, மணற்கொள்ளையைக் குத்தகைக்கு விட்டது ஜெ-சசி கும்பல். அரசிடம் லாரிகள் இல்லாத காரணத்தினால், லாரிகள் வைத்திருப்பவருக்கு மணல் அள்ளும் குத்தகையை வழங்குவதாகக் கேலிக்கூத்தானதொரு விளக்கம் அளித்து, ஆறுமுகசாமி என்ற நபரிடம் தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கான லிப்டிங் அண்டு லோடிங் காண்டிராக்டை வழங்கியது ஜெ. அரசு. திருட்டை அவுட் சோர்ஸ் செயும் இந்த ஏற்பாட்டின் மூலம், கையில் கறை படாமல் திருடமுடிவதால் தி.மு.க. ஆட்சியிலும் இந்த ஏற்பாடு தொடர்ந்தது.
சட்டபூர்வமான பதுக்கலின் மறுபெயரே மணல் யார்டு
2004 முதற்கொண்டே மணற்கொள்ளை புதிய பரிமாணத்தை அடைந்தது. மண்வெட்டிகள் இருந்த இடத்தில் பொக்லைன் எந்திரங்கள் நுழைந்தன. அள்ளப்படும் மணலைக் குவித்து வைத்து, கொள்ளை லாபம் அடிக்கத் தோதாக ஸ்டாக் யார்டுகள் உருவாக்கப்பட்டன. யூனிட் (100 கன அடி) ஒன்றுக்கு ரூ 315 என்பது மணலுக்கு 2003-ல் பொதுப்பணித்துறை நிர்ணயித்த விலை. அன்று அதைப்போல சுமார் பத்து மடங்கு இருந்த மணலின் சந்தை விலை இன்று 100 மடங்குக்கும் மேலாக உயர்ந்து விட்டது.
வெளி மாநிலங்களுக்கு மணலைக் கடத்துவதற்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராடுவதும், லாரிகளைச் சிறைப் பிடிப்பதும் நடக்கவே, மணல் கடத்தலுக்கு எதிராக ஒரு கண் துடைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இன்றைக்கும் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் நாள் தவறாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மணலைக் கடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. சட்டப்படி ஆற்றுமணலை பிற மாநிலங்களுக்கு அனுப்ப முடியாது என்பதால், மணலுடன் சிறிதளவு சிமெண்டைக் கலந்து “மதிப்புக்கூட்டப்பட்ட மணல்” என்ற பெயரில் சட்டப்படியே மணல் கடத்தப்படுகிறது.
வெளி மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் மணல் கடத்தப்படுகிறது. இது கட்டுமானத் தேவைகளுக்கானது மட்டுமல்ல, விவசாயத்தையே பெயர்த்து ஏற்றுமதி செய்வது போல; காவிரி டெல்டாவின் வளமிக்க வண்டல் மண் உள்ளிட்ட தமிழகத்தின் வளமிக்க ஆற்று மணல் துபாய், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் மணலின் அளவு என்ன, அதன் மதிப்பு என்ன, பயன்பாடு என்ன, சந்தை விலை என்ன என்பவையெல்லாம் யாரும் அறியாத மர்மங்கள்.
ஆகஸ்டு 2012-ல் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்திய ஆய்வின்படி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் டன் ஆற்றுமணல், பொதுப்பணித்துறையின் கணக்கில் வராமல் கடத்தப்படுவதாகக் கூறுகிறது. தமிழகத்தில் ஓடுகின்ற சுமார் 50,000 மணல் லாரிகளில் மூன்றில் இரண்டு பங்கு லாரிகளுக்கு பர்மிட் கிடையாது என்பதும், ஒரே பர்மிட்டில் குறைந்த பட்சம் மூன்று லாரிகள் ஓடுகின்றன என்பதும் நாடறிந்த இரகசியங்கள்.
2011-21-ம் ஆண்டில் மொத்தம் 31,33,932 லாரி லோடு மணல் (ஒரு லோடுக்கு 2 யூனிட்) விற்கப்பட்டதாகவும், அதிலிருந்து அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ 188.03 கோடி என்றும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது. (தி இந்து, செப் 3, 2012). இதன்படி பார்த்தால் சராசரியாக நாளொன்றுக்கு 8586 லாரி மணல் மட்டுமே அள்ளப்பட்டிருக்கிறது என்று ஆகிறது. 2012-ல் சி.என்.என். தொலைக்காட்சி நடத்தியிருக்கும் ஆய்வோ நாளொன்றுக்கு 20,000 லாரி மணல் கணக்கில் வராமல் கடத்தப்படுவதாக கூறுகிறது.
உண்மையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் மணற்கொள்ளையின் அளவு என்ன? இது பொதுப்பணித்துறை காட்டுகின்ற கணக்கைக் காட்டிலும் நிச்சயமாகப் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். கார்மாங்குடியில் உள்ள வெள்ளாறு மணல் குவாரியில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையை ஒரு மாதிரியாக (model) வைத்துப் பார்க்கும்போது மேற்கண்ட மதிப்பீட்டுக்கு நாம் வர முடிகிறது.
எந்த ஒரு ஆற்றிலும் மணல் அள்ளும் அனுமதி வழங்க கீழ்க்கண்ட அளவீட்டு முறையைப் பொதுப்பணித்துறை பின்பற்றுகிறது. உலக இடங்காணல் கருவியின் (Global positioning system set) துணை கொண்டு இத்தனை டிகிரி அட்சக்கோடுக்கும் தீர்க்கக் கோட்டுக்கும் இடையில் உள்ள, இன்னின்ன கிராமங்களின் எல்லைக்குள் வருகின்ற, இன்ன சர்வே எண்ணில் உள்ள, இத்தனை ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என்று பொதுப்பணித்துறை தனது அனுமதியில் குறிப்பிடுகிறது. இதனைப் பரிசீலிப்பதுடன், சூழலியல் தொடர்பான கட்டுப்பாடுகளையும் விதித்தபின் மாநில சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State level Environment Impact assessment authority) ஒப்புதல் அளிப்பதாக சொல்லப்படுகிறது.
அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள், “ஆற்றுப்படுகையின் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும்; ஒரு மீட்டர் ஆழத்திலேயே தண்ணீர் ஊற்றெடுக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் மணல் அள்ளக்கூடாது. மணல் எடுக்கும் பகுதியை அடையாளம் காட்டும் விதத்தில் தூண்கள் நடப்பட்டு சிவப்புக் கொடி கட்டப்படவேண்டும். ஆற்றின் இருபுறமும் கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது; மனித உழைப்பைப் பயன்படுத்தித்தான் மணலை அள்ளவேண்டும்” என்பன போன்ற விதிமுறைகளைக் குறிப்பிடுவதுடன், மொத்தம் எத்தனை கன மீட்டர் மணலை அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதும் அந்த உத்தரவில் குறிப்பிடப்படுகிறது.
கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட கனிமவளங்களைச் சூறையாடும் ‘தேசிய’க் கொள்ளையர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி.
மேற்சோன்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு கார்மாங்குடி கிராமத்தில் வெள்ளாற்றில், மூன்றாண்டு காலத்தில், 19.1 ஹெக்டேர் பரப்பளவில், 1,91,000 கனமீட்டர் மணலை அள்ளுவதற்கு பொதுப்பணித்துறையும், மாநில சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளன. ( Lr. No.SEIAA&TN/F.No. 1669/EC/1(a)/ 953 /2013 dated: 09.01.2014 )
தமிழகத்திலுள்ள எல்லா குவாரிகளையும் போலவே, கார்மாங்குடி குவாரியிலும் எந்தவித நிபந்தனையும் பின்பற்றப்படவில்லை என்பதுடன், அனுமதி அளிக்கப்பட்ட 19.1 ஹெக்டேர் எல்லைக்கு வெளியே வரைமுறையின்றி ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது.
மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளின் பரப்பளவை ஜி.பி.எஸ். கருவியின் மூலம் அடையாளம் கண்டு அளந்திருக்கின்றனர். பல இடங்களில் 35 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு, ஆறே ஒரு திறந்தவெளிச் சுரங்கமாகக் காட்சியளிக்கிறது. இத்தகைய பிரம்மாண்டமான பள்ளங்களின் நீள, அகலம் மற்றும் ஆழத்தையும் அளந்து உத்தேசமாக எத்தனை கன மீட்டர் மணல் அள்ளப்பட்டிருக்கிறது என்றும் கணக்கிட்டிருக்கின்றனர்.
குவாரி இயங்கத் தொடங்கி பத்து மாதங்களாகின்றன. மூன்றாண்டு காலத்தில் மண்வெட்டியின் துணை கொண்டு மனித உழைப்பை பயன்படுத்தி எடுக்கப்படவேண்டிய மொத்த மணலையும், அதாவது அனுமதிக்கப்பட்ட 1,91,000 கனமீட்டர் மணலையும், பொக்லைன் எந்திரங்களைப் பயன்படுத்தி முதல் மாதத்திலேயே அள்ளி முடித்து விட்டனர்.
அதன் பிறகு, அடுத்த 9 மாத காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல பத்து மடங்கு மணல் அள்ளப்பட்டிருக்கிறது. இதேநிலையில் மூன்றாண்டு காலம் முழுவதும் இந்தக் குவாரி இயங்க அனுமதிக்கப்பட்டால், அனுமதிக்கப்பட்டதைப் போல 36 மடங்கிற்கு மேல் மணல் அள்ளப்பட்டுவிடும். இருந்தபோதிலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே மணல் எடுக்கப்பட்டதாகத்தான் பொதுப்பணித்துறை கணக்கு காட்டும். 2012-ம் ஆண்டு முழுவதும் 31,33,932 லாரி மணல்தான் அள்ளப்பட்டிருக்கிறது என்று பொதுப்பணித்துறை கொடுக்கும் கணக்கு இத்தகையதுதான்.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குவாரியிலும் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல 10 மடங்கிற்கும் மேல் மணல் அள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை நிர்ணயித்துள்ள விலையைப் போல 100 மடங்கு விலைக்கு சந்தையில் விற்கப்படுகிறது. இந்தக் கணக்கின் படி 2004 முதல் இன்றுவரை தமிழகத்தில் நடந்துள்ள மணல் கொள்ளையின் பண மதிப்பு பல இலட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும்.
இரும்பு, நிலக்கரி, பாக்சைட், கனிம மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள் எல்லாவற்றிலும் இந்த வழிமுறையைக் கையாண்டுதான் கொள்ளை நடத்தப்படுகிறது. பத்து ஏக்கருக்கு அரசாங்க உரிமத்தை வாங்கிக் கொண்டு நூறு ஏக்கரை சூறையாடுவது என்ற இந்த உத்தியைத்தான் ஆறுமுகசாமி, படிக்காசு, வைகுந்தராசன், பி.ஆர்.பி, ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்ட கொள்ளையர்கள் மட்டுமின்றி, டாடா, ஜின்டால், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளும் பின்பற்றுகிறார்கள்.
நிலக்கரி, இரும்பு, கிரானைட் கொள்ளைகளைக் காட்டிலும் மணற்கொள்ளை தோற்றுவிக்கும் இந்தப் பேரழிவு கொடியது. மணல் திருடப்படுகிறது என்று இதனைப் புரிந்து கொள்வதை விட, ஆறுகளே திருடப்படுகின்றன என்று புரிந்து கொள்வதே சரியானது. இதனைத் திருட்டு என்றோ கொள்ளை என்றோ என்று புரிந்து கொள்வதை விட, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை என்று புரிந்து கொள்வதே சரியானது. இது சமூகத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாத நடவடிக்கை. ஆனால், இதுதான் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் சித்தரிக்கப்படுகிறது. அரசாங்கக் கொள்கையாக அமல்படுத்தப்படுகிறது.
பயங்கரவாதிகள் தமது நடவடிக்கையை இலாபகரமான தொழிலாக நடத்துவதில்லை. பேரழிவை ஏற்படுத்தும் தமது பயங்கரவாத நடவடிக்கை மூலம் பல இலட்சம் கோடி இலாபமும் ஈட்டுகிறார்கள் மணற்கொள்ளையர்கள்.
– தொரட்டி
________________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________
இது ‘கருத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திர’த்திற்கான போராட்டங்களின் காலம். ஐரோப்பிய மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களோடு மகா கனம் பொருந்திய பெட்ரோ பொரெஷென்கோ அவர்களும் கைகோர்த்து பாரீஸ் வீதிகளில் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஊர்வலத்தில் நடந்து சென்ற அழகை நீங்கள் பார்த்தால் பிரமித்திருப்பீர்கள். ஆனால், உக்ரைனியர்களோ இந்த ஆபாசக் கூத்தை காறித் துப்புகிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் சுமார் 33 பத்திரிகையாளர்களை கடத்தி, 47 பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையிலடைத்த பெட்ரோ பொரெஷென்கோ உக்ரைனின் தற்போதைய அதிபர்.
சார்லியின் மேல் தாக்குதல் தொடுத்து பதினேழு உயிர்களைக் கொன்றொழித்த ஜிஹாதிகளின் செயல் காட்டுமிராண்டித்தனமானது; கண்டனத்திற்குரியது. உலகமே காறித்துப்பும் தங்களது மூடத்தனமான செய்கையால் ஆகக் கீழ்த்தரமான கடைந்தெடுத்த ஒரு தெருப் பொறுக்கியான பெட்ரோ போன்ற கனவான்களுக்கெல்லாம் கருத்துரிமை போராளிகளாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.
சார்லி ஹெப்டோ படுகொலையும், அது குறித்த போராட்டங்களும், விவாதங்களும் அனைவரையும் உணர்ச்சி வேகத்தில் சில விசயங்களை பரிசீலிக்க அல்லது பார்க்க விடுவதில்லை.
சார்லி ஹெப்டோ ஒரு பிரெஞ்சு மஞ்சள் பத்திரிகை. அறுபதுகளில் பிரபலமாக இருந்த ஹாரா கிரி என்ற பத்திரிகையின் வழித்தோன்றல் தான் சார்லி ஹெப்டோ. எந்தப் பொறுப்புமின்றி சகலரையும் வம்பிழுப்பது சார்லியின் சிறப்பு. அவர்களது கார்டூன்களுக்குத் தப்பியவர்கள் மிகச் சிலரே. ஓரினச் சேர்க்கையாளர்கள், கத்தோலிக்கர்கள், பெண்கள், புலம்பெயர்ந்த கருப்பின மக்கள், ஆசியர்கள் என்று நீளும் இந்தப் பட்டியலில் அரிதாக யூதர்களும் இசுரேலும் கூட இடம் பெற்றதுண்டு. சார்லி ஹெப்டோ ப்ரெஞ்சு மக்களின் நாசூக்கான ரசனைக்கு தீனி போட்ட பத்திரிகை இல்லை என்பதால் அது எப்போதும் வணிக ரீதியில் வெற்றிகரமான பத்திரிகையாக நடந்ததில்லை.
2000 ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து (அல்லது 1990-களின் இறுதிப்பகுதியில் இருந்து) சார்லி ஹெப்டோவின் ‘பகடியின்’ தரம் ஆக கீழ்த்தரமாக செல்லச் செல்ல அதன் விற்பனை எண்ணிக்கையும் கணிசமாக சரியத் துவங்கியது. இந்நிலையில் தனது வர்த்தக இருப்புக்காக இசுலாமியர்களைக் குறிவைக்கத் துவங்கியது இப்பத்திரிகை. ஏறக்குறைய அதே சமயத்தில் இரட்டை கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து மேற்குலகில் கலாச்சார ஒதுக்குதலை எதிர்கொள்ளத் துவங்கியிருந்தனர் இசுலாமிய மக்கள்.
அமெரிக்கா தலைமையிலான ‘பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியில்’ அங்கம் வகித்து அமெரிக்காவின் போர் தந்திர நலன்களுக்கு கணிசமாக செலவு செய்யத் துவங்கின ஐரோப்பிய நாடுகள். அதே நேரம் இரண்டாயிரங்களின் பிற்பகுதியில் துவங்கவிருந்த பொருளாதாரப் பெருமந்தத்தின் வருகையை முன்னறிவிக்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை நாடத் துவங்கியிருந்தன. இந்நடவடிக்கைகளின் உடனடி பலி – மக்கள் நலத் திட்டங்கள். இது பரவலாக ஐரோப்பாவெங்கும் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருந்தது.
எழுந்து வரும் மக்களின் அதிருப்திக்கு இணையாக ஐரோப்பிய வலதுசாரிகளும் நியோ நாஜிகளும் மெல்லத் தலையெடுக்கத் துவங்கியிருந்தனர். அந்த சமயத்தில் ஐரோப்பாவெங்கும் தலைவிரித்தாடிய இசுலாமிய வெறுப்பின் அறுவடையில் சார்லி ஹெப்டோ தனது பங்கையும் எதிர்பார்த்தது. விளைவாக இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து கார்ட்டூன்களை வெளியிடத் துவங்கினர்.
’இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து’ என்ற இந்த மூன்று வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், இன்று “ஜெசூயிஸ் சார்லி” (அதாவது ‘நான் சார்லி’) என்பது மேற்குலகில் ஒரு முழக்கமாகியுள்ளது. இந்த முழக்கம், பொதுவில் கருத்துரிமைக்கான அறைகூவலாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் மேற்குலகில் மெல்ல மெல்ல திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் இசுலாமிய வெறுப்பே இதன் அடிநாதமாக உள்ளது.
ஜனநாயகத்தின் தொட்டிலான ஐரோப்பியாவின் சிறப்பான தனிமனித சுதந்திரம், வாழும் உரிமை மற்றும் இவற்றின் வழி சொல்லப்படும் கருத்துரிமை என்பதெல்லாம் முக்காடிட்ட முல்லாக்களுக்கு புரியாத சமாச்சாரங்கள் என்ற கோணத்தில் ஒரு பொதுபுத்தி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கருத்துரிமை என்ற திரையை நாம் கொஞ்சம் விலக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பிரான்ஸ் நாடு ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களின் ஒரு முன்மாதிரியாக போற்றப்பட்ட நாடு; தனிமனித சுதந்திரத்தின் உச்சங்களைத் தொட்ட தேசம் என்பதெல்லாம் பிரான்சைக் குறித்து வெளியுலகில் அறியப்படும் நைந்து போன பிரச்சாரங்கள். “சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் என்பது மானுடத்தின் பின்தங்கிய பகுதியில் இருந்து மானுடத்தின் உச்சநிலை நோக்கி செய்யப்பட்ட தாக்குதல்” – என்று கேட்டுத் தேய்ந்து போன அதே ரிக்கார்டை மீண்டும் ஓட்டுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இதே பிரான்சில் தான் அல்ஜீரியாவிலிருந்தும் பிற ஆப்ரிக்காவின் முன்னால் பிராஞ்சு காலனிய நாடுகளில் இருந்தும் குடியேறிய கருப்பின மக்கள் இன்றும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு இணையாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல்பழுப்பு மற்றும் கருப்புத் தோல் மனிதர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வாடகைக்கு வீடு பிடிப்பதும் கூட அத்தனை சுலபமல்ல.
நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்து ஜனநாயகத்திற்கான – விடுதலைக்கான – முதல் குரலைக் கொடுத்தவர்கள் பிரெஞ்சு தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் தான். ஆனால், உழைக்கும் மக்களின் வெற்றி வெகு சீக்கிரத்திலேயே முதலாளி வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது; முதலாளித்துவ ஜனநாயகத்தின் ’மாண்பும்’ சந்தி சிரித்தது. அதன்பின் உலகுக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்த ’உச்சநிலை மாந்தர்கள்’ தான் ஆப்ரிக்காவில் அடிமை வியாபாரம் செய்தார்கள். மூன்றாம் உலக நாடுகளைச் சூறையாடும் போட்டியில் முன்னிற்பதும் ஜெயமோகன் உச்சிமோந்த அதே ‘உச்சநிலை மாந்தர்கள்’ தாம்.
முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரையவே கூடாது, குரானை விமரிசிக்கவே கூடாது, இசுலாமிய பிற்போக்குத்தனங்களை இடித்துரைக்கவே கூடாது என்பது போன்ற தலீபானிய கடுங்கோட்பாட்டுவாதத்தை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால், பொருளாதார ரீதியிலும், சமூக கலாச்சார தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா? அவர்களை மேற்குல வெறுப்பிற்கான பலனை முன்னிட்டு இழிவுபடுத்தவது சரியா?
கருத்துரிமை ‘போராளிகளுக்கு’ புரியும் விதத்தில் சொல்வோம். பார்ப்பனியத்தின் அடையாளமாக உழைக்கும் மக்களை ஒடுக்கும் ராமன்-கிருஷ்ணன் போன்ற பார்ப்பன தெய்வங்களை கிண்டலாக வரையும் நாம் அதே போன்று நாட்டுப்புறத் தெய்வங்களை வரைவோமா? இசக்கியும், சுடலைமாடனும், மதுரை வீரனும், முனியாண்டியும் என்னதான் சுருட்டு, சாராயம், கறி சகிதம் வணங்கப்பட்டாலும் இந்த தெய்வங்களையும் பார்ப்பனிய தெய்வங்களையும் ஒன்றாக பார்க்க மாட்டோம். அதே நேரம் இப்பிரிவு மக்களிடமும் நாத்திகமும், மூடநம்பிக்கை எதிர்ப்பும் பிரச்சாரம் செய்வோம். மறுபுறம் பார்ப்பனியத்தின் அஜென்டாவாக ஆடு கோழி பலி தடை சட்டம் வந்தால் அதை எதிர்த்தும் போராடுவோம்.
இசுலாமிய மதவெறியையும், மதப்பிற்போக்குத்தனங்களையும் எதிர்ப்பவர்கள், அதற்கு மேல் அவர்களது கடவுளையோ, தூதரையோ ஆபாசமாக படம் வரைந்து பேசுவது உண்மையில் இசுலாமிய மதவெறிக்குத்தான் வலு சேர்க்கும். ஏசுவையும், மேரியையும் கூட சமூக ரீதியிலான பின்புலத்தில் பரிசீலிப்பதற்கும் தனிப்பட்ட பாலியல் ரீதியில் இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னதை நாம் செய்ய மாட்டோம். அதே போல பார்ப்பனியத்தின் மீதான நமது விமரிசனம் என்பது அதன் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பை நியாயப்படுத்தும் அதன் புராண, இதிகாச, கடவுள், சடங்குகள் மீதானே அன்றி வெறுமனே கடவுளை கிண்டல் செய்வது என்றல்ல.
வேறு ஒரு பின்புலத்தில் இதை வைத்துப் பார்க்கலாம். தமிழகத்தின் ஆதிக்க சாதி ஒன்று பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் பத்து அருந்ததியினர் குடும்பங்கள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரே நேரத்தில் – “_____ நாய்களே” என்று ஆதிக்க சாதியை ஏசுவதும், “______ நாய்களே” என்று அருந்ததினரை ஏசுவதும் ஒரே தரத்திலான ‘விமரிசனம்’ என்று சொல்ல முடியுமா? இல்லை இரண்டையும் நாம் ஒரே அளவில் பரிசீலிக்க முடியுமா?
ஏற்கனவே சமூக ரீதியிலான ஒதுக்குதலை சந்தித்து மனதளவில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு தரப்பு மக்களின் தவறுகளையோ பிற்போக்குத்தனங்களையோ சுட்டிக்காட்டும் போது சொற் தேர்விலும், சொல்லும் தன்மையிலும் ஒரு குறைந்தபட்ச கவனம் தேவைப்படுகிறது. இங்கோ சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முகமது நபியைக் குறித்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள் விமரிசனம் என்ற வரையறைக்குள் வருவன அல்ல. அவை கண்மூடித்தனமான வசைகள். எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.
வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன்
ஒரு உள்ளடக்கத்தோடு வரும் போது தான் விமரிசனம் அல்லது எதிர்க்கருத்து என்பவை அவற்றுக்கான பொருளைப் பெறுகின்றன. தமிழ் பத்திரிகை உலகில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் மற்றும் வினவு இணையதளத்திற்கு இணையாக ஜெயலலிதாவை காட்டமாக விமர்சிக்கும் வேறு பத்திரிகைகள் இல்லை – ஆனால், நாங்கள் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான ஜெயலலிதாவின் ஆபாச கேலிச்சித்திரத்தை எதிர்க்கிறோம் என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன். இத்தனை ‘ராவாக’ சொல்வது 21-ம் நூற்றாண்டின் நாஸ்டர் டாமஸான ஜெமோவுக்கு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். எனவே தான் ‘வசைபாடும் உரிமைக்கு’ அரசின்மைவாதம் (அராஜகவாதத்தின் ஜெயமோகனிய மொழிபெயர்ப்பு) என்ற மேக்கப்பை போட்டு விடுகிறார்.
அராஜகவாதம் என்கிற ‘ஐரோப்பிய மையவாத’ கருத்தியலை ஜெயமோகனின் வாயில் இருந்து வரவழைத்த அன்னிய சக்தி யார் என்று தெரியவில்லை.கட்டுப்பட்டிற்கும் சமூக ஒழுங்கிற்கும் எதிரான ’உன்னத’ நிலையான அரசின்மைவாதத்திற்கு காட்டுமிராண்டி இனக்குழு மனப்பான்மை கொண்ட நாம் சென்று சேர்வதில் இருக்கும் சிக்கலை ஜெயமோகன் பீராய்ந்துள்ளார் – அதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. விஷ்ணுபுரம் வட்ட உன்னதர்களின் ஊட்டி சந்திப்புகளுக்கான விதிமுறைகளே புத்தகமாக அச்சிடும் அபாக்கிய நிலையில் தானே நாம் இன்னமும் இருக்கிறோம்.
அராஜகவாதத்தைப் போற்றிப் புகழும் ஜெயமோகன், அவரது வாசகர் சந்திப்புக் கூட்டங்களில் அராஜகவாத அணுகுமுறை பின்பற்றப்படுவதற்கு அவரே விதித்துள்ள தடைகளுக்கு என்ன காரணம்? என்னதான் அராஜகவாதத்தைப் பற்றி கதாகலாட்சேபம் நடத்தினாலும் கேட்பவர்கள் சரக்கடித்து விட்டு அராஜகாவாதத்தை கடைபிடித்தால் பிறகு பிரசங்கத்தை எப்படி நடத்துவது? ஆக ஒரு வீணாப் போன இலக்கியக் கூட்டத்திற்கே இத்தகைய ஒழுங்குகள் தேவையென்றால் பெருந்திரளான மக்கள் கூட்டம் அதன் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் ஒரு வரைமுறை தேவையா இல்லையா?
சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரம் ஒன்றை கவனியுங்கள்: (இங்கே பிரசுரிக்கப்படவில்லை)
க்வென்னெல்லி வணக்க முறை!
அந்தப் படத்தில் உள்ளவர் பெயர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) – இவர் ஒரு ப்ரெஞ்சு நகைச்சுவையாளர். யூத வெறுப்பாளராகவும் நாஜி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். இவர் க்வென்னெல்லி என்ற சைகை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார் – அது நாஜி வணக்கத்தின் தலைகீழ் வடிவம். படத்தில் அவரது பின்புறத்தில் சொருகியிருப்பது வாழைப்பழம் போல் தோன்றும் ஒரு உணவுப் பதார்த்தம்; அதன் பெயரும் க்வென்னெல்லி தான்.
இந்தப் படத்தை இந்தளவுக்குத் தகவலோடு அவதானிக்கும் எவரும் அதில் இருக்கும் பகடியைப் புரிந்து கொள்ள முடியும். நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தக் கேலிச்சித்திரத்தில் அது ஒரு அடுக்கு (Layer) மட்டும் தான்.
க்வென்னெல்லி உணவுப் பதார்த்தம் வேறு வேறு வடிவங்களில் செய்யப்படும் போது, ஏன் குறிப்பாக வாழைப்பழ வடிவத்தை ஓவியர் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் வாழைப்பழத்தின் பெயரை நினைவூட்டும் தலைப்பு வைக்க வேண்டும்? (போன் அனானியா – பிரித்துச் சொன்னால் நல்ல பைனாப்பிள் / சேர்த்துச் சொன்னால் போனானியா)
போனானியா என்பது வாழைப்பழம் மற்றும் கோகோ கலந்து செய்யப்படும் ஒரு பானம். அதன் டப்பா முகப்பில் முதலாம் உலகப் போர் சமயத்தில் பிரெஞ்சு இராணுவத்தில் பிரான்சின் ஏகாதிபத்திய நலனுக்கான போரில் பங்கேற்ற செனகலைச் சேர்ந்த வீரர் ஒருவரின் படம் இடம்பெற்றிருக்கும். இன்றளவிற்கும், அவ்வாறு செனகல் வீரரை விளம்பர முகப்பில் பயன்படுத்துவது பிரான்சின் கடந்தகால இனவெறி மேலாதிக்கத்தின் குறியீடாக உள்ளது என்ற விமரிசனம் பிரான்சின் முற்போக்காளர்கள் மத்தியில் உண்டு.
இப்போது கேலிச்சித்திரத்தின் நாயகன் யுடொன்னே, காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் என்பதை சேர்த்துப் பாருங்கள். எமது இனப் பெருமையின் அன்றைய காலாட்படை கருப்பர்கள், இன்றைக்கு எமக்குத் தேவையானதை (நியோ நாஜிசம்) பேசும் வேலையையும் அவர்களே செய்வார்கள் (அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள்கள்) என்ற ஒரு பொருள் வருகிறதா? இது இன்னொரு அடுக்கு.
மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு –
இது பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம்.
கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம். (கருப்பின மக்களை குரங்குகள் என்று வெறுப்பை உமிழ்வது ஐரோப்பிய இனவாதிகளின் வழக்கம்)
இது போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.
இந்தச் சித்திரம் மேல் தோற்றத்தில் ப்ரான்சு அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை நிறுத்துவதாக சொல்லிவருவதற்கான விமரிசனமாக தெரியலாம். அனால், அதில் ஏன் வெளிநாட்டைச் சேர்ந்த போகோஹராம் பெண்கள்? அப்பெண்களின் கவலையெல்லாம் தீவிரவாதிகளிடம் தாம் பாலியல் அடிமைகளாக இருப்பதில் இல்லை – காசு தான் அவர்களது குறிக்கோள் என்று அவதூறு செய்வது உண்மை நோக்கம்.
Surrogacy என்ற வாடகைத் தாய் முறையைக் கேலி செய்வது போன்ற இந்த கேலிச் சித்திரத்தில், நிர்வாணமான கருப்பின பெண்ணை இழுத்து வருபவர்கள் இரண்டு ஐரோப்பிய ஓரினச் சேர்க்கையாளர்கள்.
மேல் விளக்கம் தேவையில்லை.
கருத்துச்சுதந்திரம் என்கிற வஸ்து அந்தரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கும் மந்திர மாங்காய் இல்லை. அது வாழும் உரிமையோடு பிரிக்க முடியாதபடிக்கு இணைந்தது. சார்லி ஹெப்டோவின் கருத்துரிமை என்பது ப்ரான்சில் வாழும் சிறுபான்மையினரான கருப்பர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழும் உரிமையை கருத்தியல் ரீதியில் பாதிக்கக் கூடியது. அல்லது சிறுபான்மை மக்களை வெறுக்கும் வெள்ளை நிறவெறியின் அதிகாரத்திற்கு மயிலிறகு ஆட்டுவது போன்றது. இந்துக்கள் அல்லாதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று சொல்வதும் கூட ஒரு ‘கருத்து’ தான். இதை வெளிப்படுத்துவதற்கு இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு இருக்கும் உரிமையை அறிவுள்ளவர்களால் ஆதரிக்க முடியுமா? இலக்கியத் தவளைகளை விடுங்கள், கிணற்றுக்கு வெளியே வாழும் மனிதர்களாக சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மால் சார்லியாக இருக்க முடியுமா? பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். அபூகிரைபின் சொந்தக்காரர்கள் தம்மைச் சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். நரோதா பாட்டியாவின் கசாப்புக்காரர்கள் தம்மை சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொந்த நாட்டு மக்களை ஷரியா சட்டங்கள் என்கிற மத்தியகால இருட்டுப் பெட்டிக்குள் பூட்டி வைத்துள்ள அரபு நாட்டுத் தலைவர்கள் தங்களைச் சார்லி என்கிறார்கள்.
ஒட்டுமொத்த மனிதகுல விரோதிகள் எல்லோரும் சார்லிகளாக இருக்கும் உலகில், நீங்களும் சார்லியாக இருக்க முடியுமா?
சிப்காட்டின் சிற்றிலையும்
கண் அயர்ந்த தருணம்.
மரணத்தின் சகதி
சுனாமியாய் பாய்ந்து வர
கண் விழிக்காமலே
இன்னதென்று தெரியாமலே
பத்து உயிர்கள்
துடித்து அடங்கிய கொடூரம்!
ரசாயனக் கழிவால் புரட்டி எடுக்கப்பட்ட அந்த பிணங்களை மனிதர்கள் என்று! இப்பொழுதாவது அடையாளம் காண முடிகிறது அல்லவா?
உயிரோடு
கசக்கிப் பிழியப்பட்ட
பணிக் காலங்களில்
அவர்களை
கண்டு கொள்ளாமல் இருந்த
கண்களால்,
ரசாயனக் கழிவால்
புரட்டி எடுக்கப்பட்ட
அந்த பிணங்களை
மனிதர்கள் என்று
இப்பொழுதாவது
அடையாளம் காண
முடிகிறது அல்லவா?
நெஞ்சை அறுக்கும்
சோகம் இது…
நினைத்தே பார்க்க முடியாத
விதங்களில்
முதலாளித்துவம்
நம்மைக் கொல்லும்
காலம் இது.
இப்படியா
சாவு வரவேண்டும்?
மூலதனத்தால்
மெல்லமெல்ல
கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பதை
வாழும் போது
அவர்கள் அறிந்தார்களா?
தெரியவில்லை!
சாகடிக்கப்பட்ட நேரத்திலும்
அவர்கள்
உணர்வதற்கு வாய்ப்பில்லை!
எதற்காக வாழ்கிறோம்
என்பதை தெரிந்து கொள்ளவும்
அவர்களுக்கு நேரம் வாய்க்கவில்லை.
எதற்காகச் சாகிறோம்
என்பதை
அறிந்து கொள்ளவும்
அவர்களுக்கு வாழ்க்கை இல்லை!
இரவில் வந்த
சாவின் இரைச்சல்
அசைக்க முடியாதபடிக்கு
பகலின் வேலைகள்
ஏற்கனவே அவர்களை
பாதி கொன்றிருந்தது.
வாழ முடியாத
வாழ்க்கையின் கனவுகளை
மீளமுடியாத மரணம்
அவர்கள் கண்களிலேயே
புதைந்து விட்டது
நம்மைப்போலவே…
ஒரு தாயால்
பத்து மாதம் பார்த்து பார்த்து
சுமந்து பெத்தவர்களை
நிமிடத்தில்
மூலதனத்தின் லாபவெறி
சிதைத்துவிட்டது.
“திட்டமிட்டே…தெரிந்தே தேக்கி வைக்கப்பட்ட மூலதனத்தின் நஞ்சு,ரத்தமும், சதையும் நம்மைப்போலவே சுவாசமும், கற்பனையும் கொண்ட தொழிலாளர்களை மூழ்கடித்தது”
விதிமுறைகளை மீறி
வரையறைகளைத் தாண்டி
திட்டமிட்டே…தெரிந்தே
தேக்கி வைக்கப்பட்ட
மூலதனத்தின் நஞ்சு,
ரத்தமும், சதையும்
நம்மைப்போலவே
சுவாசமும், கற்பனையும் கொண்ட
தொழிலாளர்களை மூழ்கடித்தது
விபத்தா?
இல்லை… இது
திட்டமிட்ட படுகொலை!
இனி என்ன?
ஏழைகளுக்கு
மானியம் தருவதுதான்
அரசின்
வளர்ச்சிக்கு தடை
ஆதலால்
பிணங்களுக்கு
விலை பேசும்
தொழில் வளர்ச்சி தொடரும்…
கொலையாளிகளே
தடயங்கள் சேகரிக்கும்
நாடகம் நடக்கிறது,
மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு
இப்போதுதான்
அங்கே சட்டவிரோத
கழிவுநீர் தொட்டிகளே
கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது!
தொழிலார் நல ஆணையத்துக்கோ
தொழிலாளிகளாக சில மனிதர்கள்
அங்கு இருந்திருப்பதே
இப்போதுதான்
தோலுக்கு உரைத்திருக்கிறது!
கால்கட்டு, கைகட்டு
வாய்கட்டை
வாழும்போதே
சட்டத்தால் சரிக்கட்டிய
சட்டம்-ஒழுங்கு
மீண்டும் ஒரு முறை
பிணங்களை பரிசோதிக்கிறது!
உண்மைகள்
மீண்டு விடக் கூடாதென்று!
உரிமைகளை பிணமாக்கிய
ஒவ்வொரு அரசுத் துறையும்
பிணங்களின் உரிமைகளை
பாதுகாக்க வந்துவிட்டன.
போயசு கழிவிற்கு
கோயில் கோயிலாக
பூசை செய்யும் அமைச்சர்களுக்கு
இப்பொழுதுதான்
ராணிப்பேட்டை சிப்காட்டில்
ரசாயன கழிவிருப்பதே
தெரிந்திருக்கிறது!
எல்லாமே
இப்பொழுதுதான் தெரிந்ததுபோல
அரசும், ஆளும் வர்க்கமும்
நடிக்கிற நடிப்பில்
வெளிப்படும் கழிவு
அமிலத்தை விட கொடியது!
ராணிப்பேட்டை மட்டுமா?
நாடெங்கும்
மூலதன லாபவெறியின்
ரசாயனத் தொட்டிகள்
நம்மைச் சுற்றி
எழுப்பப்பட்டுள்ளன…
தகவல் தொழில்நுட்ப (I.T.) நிறுவனங்கள்… இங்கெல்லாம் கொத்தடிமைகளாக பிணைக் கைதிகளாக நம்மைப் பிடித்து வைத்திருக்கிறது மூலதனத்தின் ரசாயனம்.
ஆந்திரா அரிசி ஆலைகள்…
பெங்களூர் கல் குவாரிகள்
மகாராஷ்ட்டிரா மிட்டாய் கம்பெனிகள்…
குஜராத் உப்பளங்கள்..
கூர்கான் தொழிற்சாலைகள்…
திருப்பூர் சாயப்பட்டறைகள்…
கோவை பஞ்சாலைகள்…
திருப்பெரும்புதூர் பன்னாட்டுக் கம்பெனிகள்..
தகவல் தொழில்நுட்ப (I.T.) நிறுவனங்கள்…
இங்கெல்லாம்
கொத்தடிமைகளாக
பிணைக் கைதிகளாக
நம்மைப் பிடித்து வைத்திருக்கிறது
மூலதனத்தின் ரசாயனம்.
வேறு வேறு விதமாய்
அது வெடித்துக் கொல்வதை
உணர
வெறும் மனித உணர்வு
மட்டும் போதாது
வர்க்க உணர்வு வேண்டும்!
அதிரும் எந்திரங்களின் ஒலியில் மெட்ரோ ரயில் பணிகளில் சத்தமில்லாமல் கொல்லப்படுபவர்கள் எத்தனை?
அதிரும் எந்திரங்களின் ஒலியில்
மெட்ரோ ரயில் பணிகளில்
சத்தமில்லாமல்
கொல்லப்படுபவர்கள் எத்தனை?
விண்ணை முட்டும்
நகரத்து
கட்டிட கவர்ச்சிக்காக
பளபளக்கும்
வண்ணக் கலவையில்
கலந்த
இளரத்தம் எவ்வளவு?
எண்ணூர் பவுண்டரிகளின்
இரும்புக் குழம்பில்
அடையாளம் தெரியாமல்
கரைந்துபோன முகங்கள் எத்தனை?
கண்ணுக்கு நேரே
வாழ்வின் அதிர்ச்சிகளை,
பிறரின் துன்பங்களை
கண்டும் காணாத மனம்
சாவின் அதிர்ச்சியில்
உறையும் என்று!
நம்பாமல் செத்தவர்களின்
பார்வை,
நம்மையும் குற்றம் சாட்டுகிறது!
ஒன்று தற்கொலை
இல்லையேல் கொலை
என்று நெருக்கும்
இந்தக் கட்டமைப்பை
நொறுக்கும் சக்தியை
தேடித் தவித்து
உணர்ச்சிகளை எழுப்புகின்றன
அந்தப் பிணங்கள்.
யாருக்கு வேண்டும்
உங்கள் அனுதாபம்?
ஒட்டுமொத்த குடும்பமே
ஊருக்கு பிணமாகத் திரும்பும்
கொடுமையின் காரணங்களை
தட்டிகேட்க முடிந்தவர்கள்
கிட்ட வாருங்கள்!
யார் பெற்ற பிள்ளைகளோ அவர்கள்? இல்லை… நம் வர்க்கத்து கருவறையில் வந்த உடன் பிறப்புகள்!
இறந்தவர்களுக்கும்
நமக்கும் என்ன உறவு?
“அங்கே இருப்பவர்களும்
நம்மைப்போல
உழைத்து வாழும் மனிதர்கள்தானே”
என்ற நம்பிக்கையில்தானே
அவர்கள்
வந்திருப்பார்கள்.
யார் பெற்ற
பிள்ளைகளோ அவர்கள்?
இல்லை…
நம் வர்க்கத்து கருவறையில்
வந்த உடன் பிறப்புகள்!
உழைக்கும் இனமாய்
தேநீர் கடையிலும்..
கையேந்தி உணவகத்திலும்
கடைத்தெருவிலும் …
ஒன்று கலந்தவர்கள்
தனது மகன் 46 வயதான அன்வர் கானையும், 22 வயதான அலி அக்பர் கான், 19 வயதான அலி அஸ்கர் கான் இரண்டு பேரன்களையும் அன்வர் கான் மேற்கு வங்க கிராமத்தில்…
பிணமாய்
மேற்கு வங்கம் திரும்புவது
ஏற்க கூடியதா?
அபிப்கான்
அவரது மகன்கள்
அலிஅக்பர், அலி ஆஸ்கார்
சகோதரர்கள் ஷாஜகான், குதூம்
சுக்குர், ஏசியாம்,பியார்
அக்ரம்- கண்களோடு
கண்ணமங்கலம் சம்பத்
விழி குளறி
மூச்சு துடித்த அந்த நேரம்,
என்ன நினைத்திருப்பார்கள்?
யாரை அழைத்திருப்பார்கள்?
என்ன சொல்லி துடித்திருப்பார்கள்?
மூழ்கடிக்கப்பட்டவர்களால்
சொல்ல முடியவில்லை…
தேக்கி வைக்கப்பட்டிருக்கும்
மூலதனத்தின் சாவுத் தொட்டிகளுக்கிடையே
மீதமிருப்பவர்களே
நீங்கள் சொல்லுங்கள்!
கழிவாய்த் தேங்கி
உடையக் காத்திருக்கும்
இந்தக் கட்டமைப்பை
விழிப்போடு நாமே
உடைத்து எறிவதை விட
வேறு என்ன
வாழ வழி?!
பச்சையப்பன் சொத்துக்களை பார்ப்பன ஆதிக்க சாதிக் கூட்டம் தின்று கொழுத்ததை எள் முனையளவாவது தடுத்து ஒடுக்கப்பட்ட சமூகக் குழந்தைகள் கல்வி பெற உருவாக்கபட்ட பச்சையப்பன் அறக்கட்டளையிலும் அதன் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களிலும் கொள்ளை கொடிகட்டி பறக்கின்றது.
கடலூரில் உள்ள கந்தசாமி மகளிர் கல்லூரியில் ( KNC) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. கேமராக்களை வைத்து மாணவிகளை வேவு பார்ப்பது, கட்டிட நிதி பெற்று கழிவறைகள் கூட கட்டாமல் இன்னொரு புறம் ஓட்டுக் கட்சி தலைவர்களை அழைத்து அரசியல் நிகழ்ச்சி நடத்துவது, முற்பகல் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கையின் போது பொது பட்டியல் மட்டும் வெளியிட்டுவிட்டு, வெய்டிங் லிஸ்டு வெளியிடாமல், காசுக்கு விற்பனை செய்வது என்று முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன.
“மாலை நேர சுயநிதி கல்லூரியின் மூலம் மாணவிகள் சேர்க்கையை அதிகரித்து கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் KNC கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் மீது நடவடிக்கை எடு” என்று போர்க்கொடி தூக்கிய கணிதத்துறை பேராசிரியை சாந்தியை பணியிடை மாற்றம் செய்துள்ளது பச்சையப்பன் அறக்கட்டளை கும்பல்.
பேராசிரியை சாந்தியின் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டியும், ஊழலால் நாற்றமெடுத்து நாறுகின்ற பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரியும் இங்கே மாணவிகள் இரண்டு மாதங்களாக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 27.01.2015 அன்று காலை சுமார் 10 மணியளவில் 300 மாணவிகள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மணி நேரம் முழக்கமிட்டு ஒரு மணி நேரம் வகுப்பு புறக்கணிப்பு செய்து பிறகு வகுப்புக்கு சென்றனர்.
பின்னர் தலா பத்து ரூபாய் என்று நிதி வசூல் செய்து இந்திய மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் 24 மணி நேர உள்ளிருப்புப் போராட்டம் என்று நுழைவு வாயிலில் பேனர் கட்டி விட்டு மாலை 2 மணிக்கு மேல் மாணவிகள் தாங்களாகவே உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.
இரவு போராட்டம் தொடங்கியதும் கடலூர் NT போலீசார் வந்து, “இரவு நேரங்களில் போராட்டம் நடத்துற உங்களையல்லாம் எவன் கல்யாணம் செஞ்சுக்குவான்? ஊர்ல எவனாவது உங்களை குடும்பப் பெண் என்று மதிப்பார்களா? ஒழுங்கா எல்லோரும் வீட்டுக்கு ஓடி விடுங்க” என வக்கிர புத்தியுடன் மிரட்டியது.
“அதெல்லாம் எங்களோட பிரச்சனை அதை நாங்க பார்துக் கொள்கிறோம். முதலில் நீங்க எங்க கல்லூரியை விட்டு வெளியே போங்க” என மாணவிகள் எச்சரித்து வெளியேற்றினார்கள்.
மாணவிகளோடு இணைந்து போராட வந்த பெற்றோர்களிடம், “எஃப்.ஐ.ஆர் போடப் போறோம். உன் பிள்ளைப் படிப்பு பாழாய் போக போகுது” என மிரட்டி விரட்டி அடித்தனர். அவர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை மாணவிகளுக்கு கொடுக்க விடாமல் பிடுங்கி சாக்கடையில் வீசினார்கள்.
“வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டேன், அதனால் வீட்டுக்கு போகிறேன்” எனக் கூறிய ஒரு மாணவியிடம் ஒரு பெண் எஸ் ஐ, “என்னடி உன்னோட பாய்பிரண்ட பார்க்க போறியா. உன்னுடைய செல்போனை கொடு, பாய்பிரண்ட் நம்பர் எடு” என்று பலபேர் முன்னிலையில் அந்த மாணவியை அசிங்கப்படுத்தினார். அந்த மாணவி அழுது கொண்டே போராடும் மாணவிகளோடு இணைந்து கொண்டார்.
பின்னர் RDO ஷர்மிளா வந்து போராடும் மாணவிகளை பார்த்து, “உங்களுக்கு எங்களால பாதுகாப்பு வழங்க முடியாது ஆதலால் எல்லோரும் கலைந்து செல்லுங்கள்” என்றார்.
இதற்கு மாணவிகள், “கல்லூரியை பாதுகாக்க போராடும் நாங்கள் எங்களையும் பாதுகாத்துக் கொள்ள மாட்டோமா? எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தால் போதும்” என்று முகத்தில் அறைந்தாற்போல் பதில் அளித்தனர்.
இச்சம்பவத்தை கேள்விப்பட கடலூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர் கடலூர் மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவிகளை சந்திக்க சென்றனர்.
போராடிக் கொண்டு இருந்த மாணவிகளை வக்கிரமாக திட்டிக்கொண்டு இருந்த போலீசும், நிர்வாகத்திற்கு ஆதரவான ரவுடிகளும் தோழர்களைக் கண்டதும், “நீங்க எதற்கு இங்கு வந்திங்க” என்று தோழர்களை வெளியேற்றுவதில் கவனமாக இருந்தார்கள்.
தோழர்கள் போலீசிடம், “நாங்கள் ஒரு ஜனநாயக அமைப்பு. இப்படி போராடுகிற மாணவிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் நிறைய போலீசை குவிப்பதும், உணவு கொண்டுவந்த உறவினர்களை தடுப்பதும் தவறு” என்றும் அவர்கள் கொண்டு வந்த ஆட்டோவை விடுவிக்க கோரியும் டி.எஸ்.பி-யிடம் பேசினர்.
அப்போது, பா.ஜ.கவைச் சேர்ந்த வழக்குரைஞர் முழு குடிபோதையில், “எங்க அண்ணன் பொண்ணு உள்ள இருக்கிறாள், அவள வெளிய அனுப்புங்க” என்று கூறிக்கொண்டு மாணவிகளை கேவலமாக திட்டிக்கொண்டு இருந்தார்.
இதை பார்த்த தோழர்கள், “அவர்கள் அவர்களுடைய கல்லூரிக்காகதானே போராடுகிறார்கள். போராடும் மாணவிகளை இப்படி அசிங்கமாக பேசலாமா” என்று கேட்டவுடன்,
“உங்க வீட்டு பொண்ணாயிருந்தா இப்படி விடுவீங்களா” என்று கேட்டு விட்டு, அந்த நேரத்தில் வெளியேறிக் கொண்டிருந்த சில மாணவிகளின் ஒரு மாணவியை பார்த்து “இப்பவே இப்படியெல்லாம் போராட்டம் நடத்துறது உங்களுக்கு அசிங்கமா இல்லையா” என்று கேட்டு அங்கு சலசலப்பை ஏற்படுத்தினார்.
அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்கள் நடக்கின்ற எந்த சம்பவத்தையும் புகைப்படமோ, வீடியோ பதிவோ செய்யாமல் போலீசோடு சேர்ந்து நின்று கொண்டு இருந்தனர். “போராடும் மாணவிகளை போலீசு கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதையும் அவர்களை தரக்குறைவாக பேசுவதையும் பதிவு செய்யாமல் நிற்கிறீர்களே” என்று தோழர்கள் கேட்டதற்கு ஒரு நிருபர் போலிசுக்கு ஆதரவாக பேசினார். மற்றவர்கள் செயலற்று நின்று கொண்டிருந்தனர்.
போலீசுகாரர்கள் ஒரு மாணவியின் தந்தையிடம் , “உங்க பெண்ணை போராட்டத்துக்கு அனுப்பியிருககீங்களே, நாளைக்கு அந்த பெண்ணை எவராவது மதிப்பார்களா” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போது அந்த மாணவி போலீசிடம், “எதுவாக இருந்தாலும் எங்கிட்ட பேசுங்க. எங்க அப்பாவ மிரட்டுற வேல வேணாம். FIR போடணும்னா போட்டுக்கோங்க” என்று கூறி, “நைனா நீ தைரியமா வீட்டுக்குப் போ. நான் மாணவிகளோடுதான் இருக்க்கிறேன்” என்று சொல்ல, “அந்த மாணவி திமிரா பேசுகிறது” என ஆணாதிக்க திமிரோடு கூறினார், போலீஸ் அதிகாரி.
அதற்கு நம் தோழர்கள், “இதில் எந்த திமிர்த்தனமும் இல்லையே, அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இரவு நேரத்தில் பெண் காவலர்கள் வீட்டுக்கு போகாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களையும் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்வீர்களா” என்று கேட்டவுடன் பிறகு அமைதியானார்.
பிறகு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவிகளை பு மா இ மு தோழர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “உங்களுடைய போராட்டம் மிகச் சரியானது. காவல் துறையின் அடக்குமுறைகளைக் கண்டு பயந்து விடவேண்டாம். ‘பெண்கள் இரவு நேரங்களில் போராடினால் இவர்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள், இவர்களை யார் மதிப்பார்கள், இவர்களெல்லாம் வீட்டிற்கு அடங்காதவர்கள்’ என்றெல்லாம் போலீசு பேசுவதைக் கேட்டு துவண்டு விடவேண்டாம். ஆர்.டி.ஓ. ஒரு பெண், அவர் இரவு நேரத்தில் பணிபுரிகிறார், பெண்கள் இரவுக் காவலர்களாக வேலை செய்கிறார்கள், இவர்களையும் தவறானவர்கள் என்று போலீசு பேசுவார்களா ? எதைப் பேசினால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடுவீர்கள் என்று புரிந்து பேசுகிறார்கள்.
இந்தப் பிரச்சனை போன்று எல்லா கல்லூரியிலும் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைதான். அரசுடைமையாக்கினால்தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். நீங்கள் கல்லூரியில் உறுதியாக நின்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடருங்கள்,வெளியில் மக்களிடம் இந்த போராட்டத்தை நாங்கள் எடுத்து செல்கிறோம்.
பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும், பேராசிரியர் சாந்தியின் பணியிடை மாற்றத்தை இரத்து செய்யவும் தொடர்ந்துப் போராட பு மா இ மு உங்களோடு இணைந்து நிற்கும்” என்று மாணவிகளை உற்சாகப் படுத்திப் புரட்சிகர வாழ்த்து கூறினார்கள். இதை லவ்டு ஸ்பீக்கரில் ஒலிபரப்பி அனைத்து மாணவிகளும் ஆர்வமாகக் கேட்டனர்.
அன்று இரவு 2 மணி அளவில் பெண் போலீசு கல்லூரிக்ககுள்ளே சென்று தூங்கிய மாணவிகளை எழுப்பி உங்களுடைய தொலைபேசி எண்ணை கொடுங்க என்று கேட்டதுக்கு மாணவிகள் கொடுக்கவில்லை என்றதும் அவர்கள் புத்தகப் பையை எடுத்து அதை கீழே கொட்டி அதில் இருந்த மாணவிகளின் அடையாள அட்டையில் உள்ள விவரங்களை எடுத்துக் கொண்டனர்.
இச்சம்பவத்துக்கு பிறகு மாணவிகள் பு.மா.இ.மு ஆதரவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து போலீசுக்கு எதிராக வரண்டாவில் வந்து முழக்கமிட்டனர். இதனால் போலீசு பின்வாங்கியது.
போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இரவே சுவரொட்டி தயாரித்து நகர பேருந்துகளில் போலீசையும், ரவுடிகளையும் அம்பலப்படித்து பரவலாக ஒட்டப்பட்டது.
28/01/15 காலை 10 மணிக்கு சி.பி.ஐ(எம்)-ஐச் சேர்ந்த ரமேஸ் பாபு வந்து, “நாம் அறிவித்தது போல 24 மணிநேரம் முடிந்துவிட்டது. நாம் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று மாணவிகளின் தன்னெழுச்சியான போராட்டத்தை முடித்து வைக்க முயற்சித்தார்.
மாணவிகள், “நமது போராட்டத்தின் விளைவு என்னவென்றே தெரியாமல் எப்படி போராட்டத்தை முடித்துக் கொள்வது” என்று கேட்டதற்கு “போராட்டத்தை முடித்தால் தான் என்னவென்று தெரியும்” என்று மாணவிகள் போலீசையும் கல்லூரி நிர்வாகத்தையும் எதிர்கொண்டு நடத்திய போராட்டத்தை முடித்து வைத்து நிர்வாகத்துக்கு உதவி செய்தார்.
மாணவிகள் அடுத்த கட்டமாக எனனசெய்வது என்று புரியாமல் இருந்த போது போலிசும், ஓட்டுக் கட்சி SFI யும் இணைந்து மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியது.
அப்போது கடலூர் பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த 2 தோழர்களை காவல் துறை கைது செய்து, “பேருந்தில் போஸ்டர் ஓட்ட அனுமதி வாங்கினீர்களா” என்று கேட்டனர். அதற்குத் தோழர்கள் “மூலம், பவ்த்ரம் ஆண்மைக் குறைவு, ஆபாசப் போஸ்டர்கள் இவற்றை எல்லாம் உங்களிடம் அனுமதி வாங்கித்தான் ஓட்டுகிறார்களா” என்று கேட்டதற்கு “தேவை இல்லாமல் பேசாதே” என முறைத்தது போலீசு. பேருந்து நடத்துனர் இருவரிடம் புகார் வாங்கி தோழர்கள் மீது போலீசு வழக்கு போட்டு KNC ,பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சாதகமாக நடந்து கொண்டு பின்னர் தோழர்களை ஜாமீனில் விடுவித்தது திருப்பாப் புலியூர் போலீசு.
மீண்டும் KNC மாணவிகளை தொடர்பு கொண்டு அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒன்றிணைத்து பேராசிரியர் சாந்தியின் பணிநீக்கத்திற்கு எதிராகவும், கொள்ளைக் கூடாரமாக உள்ள பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும் தொடர்ந்து போராடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர்
தொடர்புக்கு:9791776709
தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் ஐந்தாவது மற்றும் இறுதிப் பகுதி.
14. காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில்
இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து காவேரி டெல்டா மாவட்டங்களில் ம.க.இ.க – பு.மா.இ.மு. – வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் வீச்சான சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. ஆர்.எஸ.எஸ, பி.ஜே.பி மத வெறியர்கள் மிஸடு கால் உறுப்பினர் சேர்க்கை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஆரிய பார்ப்பன எதிர்ப்புப் போரில் தளப்பிரதேசமாகத் தமிழ் நாட்டைக் கட்டியமைப்போம் என்ற முழக்கம் அடங்கிய சுவரொட்டி இயக்கம் மூலம் விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தில் ஜனவரி 25 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வி.வி.மு நாகை மாவட்ட அமைப்பாளர் தோழர் தனியரசு தலைமையில் இளைஞர்கள் அணிதிரண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்றனர். பு.மா.இ.மு தோழர் சரவணத் தமிழன் தலைமையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் வி.வி.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் கு.ம. பொன்னுசாமி மொழிப்போர் தியாகிகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
பட்டுக்கோட்டையில் விவசாயிகள் விடுதலை முன்னணி தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாரிமுத்து தலைமையில் தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அணிவகுத்துச் சென்று பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்றனர்.
27.01.2015 அன்று தஞ்சை ரயிலடியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக உறுதியேற்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன், “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50-ம் ஆண்டு என்று குறிப்பிட்டாலும் வெற்றி விழா கொண்டாடும் நிலையில் நாம் இல்லை, மொழிப் போர் முன்னிலும் கடுமையாகி உள்ளது. தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றியோ, இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறு பற்றியோ இன்றைய இளைஞர்களுக்கு கற்பிக்கப்படவில்லை. அதனைப் பற்றி புதிய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எஸ.எம்.எஸ., வாட்ஸ அப் என்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியினூடாக பயணிக்கும் இளைய சமூகம் தாய்மொழியை மறந்த சமூகமாகவே உள்ளது.
புரட்சிகர ஜனநாயக சக்திகளின் செயல் வேகம் பெற வேண்டும் என்பதைத்தான் புறநிலைமை வலியுறுத்துகிறது. 2000 ஆண்டு கால பழமை வாய்ந்த செம்மொழியான தமிழ்மொழியை பாதுகாக்க சமஸகிருத, இந்தி திணிப்பு, ஆங்கில மோகத்துக்கு எதிராக பண்பாட்டுத் தளத்தில் போராட மொழிப்போரின் 50 ஆம் ஆண்டில் உறுதியேற்போம்” என்று பேசினார்.
அடுத்த்தாக பேசிய பேராசிரியர் அரங்க. சுப்பையா, “மொழியைக் காப்பாற்ற எல்லா இனங்களும் போராடியுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகமே கொந்தளித்தது. குறிப்பாக மாணவர்களிடம் எழுச்சி இருந்த்தது, புரட்சிகரத் தோழர்களிடம் சோர்வு இருக்காது என்றாலும் சோர்வை உருவாக்கும் கடுமையான களப்பணியில் முன்முயற்சியுடன் செயல்படும் தோழர்களை வாழ்த்துவதோடு, மக்கள் ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்து சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் உரை பின்வருமாறு:-
50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் மூன்று கட்டப் போராட்டமாக நடைபெற்றது. 1937-ல் இராஜகோபாலாச்சாரி, சென்னை இராஜதானியின் பிரதமராக இருந்தபோது 125 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். பெரியார், மறைமலையடிகள், உ.வே.சா போன்றவர்கள் இதை எதிர்த்தனர். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற தாளமுத்து – நடராஜன் ஆகியோர் அங்கே நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.
பார்த்தாலே தீட்டு என்று கருதப்பட்ட நாடார் சமூகத்தை சேர்ந்த தாளமுத்துவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நடராஜனும் சிறை அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோராமல் மாண்டனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்துதான் முதல் தியாகம் தோன்றியது.
இராஜாஜி அரசு பின்வாங்கியது. வெள்ளைக்காரர்களுக்கு சங்கடம் வரக் கூடாது என்று கருதி போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இது முதற்கட்டம். பிறகு, இரண்டாம் கட்டமாக 1948-ல் நேரு அரசாங்கம் இந்தி ஆட்சிமொழி அறிவிப்பை செய்த்து. ம.பொ.சி, திரு.வி.க போன்றவர்கள் எதிர்த்தனர். இந்தப் போராட்டத்தில் திராவிட இயக்கத்தின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
ஆங்கிலம் இணையாட்சி மொழி என்ற நேருவின் சட்டமாக்கப்படாத வெற்று வாக்குறுதியை நம்பி ஏற்று போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மூன்றாவது கட்டப் போராட்டம் தற்போது பேசப்படும் 1965 போராட்டமாகும். 1963-ல் உருவாக்கப்பட்ட ஆட்சிமொழிச் சட்டம் இந்தி ஆட்சிமொழி, ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும், இந்தி மொழிபெயர்ப்புத்தான் அதிகாரப்பூர்வமானது என்று கூறியது. இதனை வலியுறுத்திய 17 ஆவது அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தும் போராட்டம் கொழுந்து விட்டெரிந்த்து. தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறிப் போராட்டம் முன்னோக்கி சென்றது.
மாணவர்கள் போராட்டக் குழுக்களைக் கட்டி, போராட்டக் களத்தில் இறங்கினார்கள். முதன்முறையாக மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க இராணுவம் களமிறக்கப்பட்டது. பிரதமர் லால்பகதூர் சாஸதிரியும், அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தாவும் நேருவின் வாக்குறுதி காப்பாற்றப்படும் நம்புங்கள் என்று மன்றாடினர். எண்ணற்ற தியாகங்களுடன் 55 நாள் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்திய மொழிகள் எல்லாம் சமஸகிருத இந்தி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டது. வரலாற்று வளர்ச்சிப் போக்கிலும், தொடர்ச்சியான போராட்டத்திலும் தமிழ் ஓரளவு கட்டிக் காப்பாற்றப்பட்டு சுய அடையாளத்தைக் கொண்டதாக இன்றுவரை உள்ளது.
தற்போது மோடி அரசு சமஸ்கிருத-இந்தித் திணிப்பை மிக வேகமாக செய்து வருகிறது. பகவத் கீதையை புனித நூலாக அறிவிப்பது, சரஸவதி பூஜையை குரு உத்ஸவ் ஆக்குவது என்று அடுத்தடுத்த தாக்குதல்களை மோடி அரசு தொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்கள் புதியது அல்ல, தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள் தான்.
காங்கிரசை சேர்ந்த சத்தியமூர்த்தி அய்யர் “எனக்கு அதிகாரம் கிடைத்தால் வருணாஸரம தர்மத்தை அமல்படுத்துவேன், சமஸகிருதத்தை ஆட்சி மொழியாக்குவேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார். அவருடைய பெயரில்தான் காங்கிரசு அலுவலகம் சென்னையில் சத்தியமூர்த்தி பவன் என்று உள்ளது. இதனைத் தமிழக, தமிழ்ப் பாரம்பரியத்திற்கு ஓர் அவமானமாக கருத வேண்டும். காங்கிரசு பெயர் மாற்றம் செய்யாது, அதன் பாரம்பரியம் அப்படிப்பட்டது தான்.
காந்தியமும், ஆர்.எஸ.எஸ சித்தாந்தமும் வேறு வேறு அல்ல, காங்கிரசும் பி.ஜே.பி-ம் வேறு வேறு அல்ல. காந்தி ராமராஜ்யத்தை வலியுறுத்தினார். அதனை அப்போதே பேரறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் அம்பலப்படுத்தினார். அதே ராமராஜ்ய திட்டம் தான் மோடியின் திட்டம். காங்கிரஸ தயங்கித் தயங்கி செய்த்தை மோடி அரசு வேகமாக வெளிப்படையாக செய்கிறது.
ஆளும் வர்க்கத்தின் பிராந்திய விரிவாக்க கொள்கையும், ஆர்.எஸ.எஸ-ன் அகண்ட பாரத ஜனநாயகமும் இங்கு ஒன்றிணைகிறது.
மக்களுக்கு பெயரளவில் கொடுக்கப்பட்ட உரிமைகளும், புனிதமென்று சொல்லப்படும் சட்டங்களும் நீதித்துறையால் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. தில்லை வழக்கில் நீதிபதி பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஆட்சிப்பணி, நீதித்துறை, காவல்துறை எல்லாமே உபயோகமற்றதாகிக் கட்டமைப்பு நெருக்கடிக்குள் சிக்கி நிற்கிறது.
இந்தக் கட்டமைப்பை தகர்த்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவது மூலம் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த உறுதியேற்போம்.
என்று கூறி முடித்தார்.
பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் பலர் உறுதி ஏற்புக் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு சிறையிடப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைக்கும் சி.ஐ.ஏ.-வின் சித்திரவதைகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ள அமெரிக்க செனட் அறிக்கை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்டுவரும் ஆக்கிரமிப்புப் போரையும், சித்திரவதைகளையும் மட்டுமின்றி, இச்சித்திரவதைகள் அமெரிக்க அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் தெரிந்தேதான் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த செனட் அறிக்கை அம்பலமாக்கியிருக்கிறது.
விசாரணைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதைப்பது, பல நாட்களுக்குத் தூங்கவிடாமல் தொடர்ந்து சித்திரவதை செவது, மலக்குழாய் வழியாக உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி வதைப்பது, வாட்டர் போர்டிங் எனப்படும் நீரில் மூழ்கடித்துச் சாவின் விளிம்புவரை கொண்டு சென்று வதைப்பது, நடுங்கவைக்கும் குளிரில் நீண்டநேரம் நிற்க வைப்பது, குறுகிய சங்கிலியின் மீது பல மணி நேரம் குனிந்தே நிற்க வைப்பது, நாய்களைக் காதருகே குரைக்கவிட்டு அச்சுறுத்துவது, சுவரில் கைதியைத் தூக்கிவீசி அறைவது, பெட்டிக்குள் கை, கால்களை மடக்கி நீண்ட நேரத்துக்கு உட்கார வைப்பது, சவப்பெட்டிக்குள் அடைத்து வைத்து மூச்சுத் திணற வைத்து வதைப்பது, பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி வதைப்பது, விசாரணைக் கைதிகளது குடும்பத்தாரையும், அண்டை வீட்டாரையும் மிரட்டி வதைப்பது-என அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நடத்தியுள்ள கொடூரமான சித்திரவதைகள் இன்று பகிரங்கமாக வெளிவந்து உதிரத்தையே உறைய வைக்கின்றன.
“காலவரையற்ற சட்டவிரோதக் கைதுகளை ரத்து செய்! விசாரணைக் கைதிகள் மீது வழக்கைப் பதிவு செய்! அல்லது விடுதலை செய்!” என்ற முழக்கத்துடன், விசாரணைக் கைதிகளைப் போல வேடமணிந்து மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் நடத்திய ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவில் இத்தகைய சித்திரவதைகளை நடத்தினால் அம்பலமாக நேரிடும் என்பதால், தனது விசுவாச – கைக்கூலி நாடுகளில் இரகசிய வதைக்கூடங்களை அமைத்து, சந்தேகிப்போரை இரகசியமாக கடத்திச் சென்று, இக்கொடூரங்களை கிரிமினல்தனமாக சி.ஐ.ஏ.வும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நடத்தியிருக்கின்றனர். அமெரிக்காவுக்கும் அதன் விசுவாச கைக்கூலி நாடுகளுக்குமிடையே ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டு, அதன் படியே இத்தகைய வதைமுகாம்கள் அமெரிக்காவுக்கு வெளியே வைத்து இயக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவ விஞ்ஞானி கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்தபோது ‘காணாமல்’ போனார். அவர் ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தி சி.ஐ.ஏ.வால் கடத்தப்பட்டு பல ஆண்டுகளாக வெளியுலகுக்கே தெரியாமல் ஆப்கானிலுள்ள அமெரிக்க சித்திரவதைக் கூடமான பாக்ராம் விமான தளத்தில் அடைக்கப்பட்டு, மிருகத்தனமான சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளான கொடூரத்தை பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர் வெளிக்கொணர்ந்தார். முஸ்லிமாகப் பிறந்ததைத் தவிர அந்தப் பெண் வேறெந்தக் குற்றத்தையும் செயவில்லை.
அபு சுபைதா என்ற இஸ்லாமியர் போலந்து நாட்டின் எல்லையில் உள்ள இரகசிய வதைமுகாமில் வைத்து வாட்டர் போர்டிங் எனும் தண்ணீரில் மூழ்கடிக்கும் சித்திரவதையால் உடலெல்லாம் விறைத்து மரக்கட்டையாகி வாயிலிருந்து நுரை தள்ளும் வரை அவரை 12 ஆண்டுகளாக வதைத்துள்ளதை அவரது வழக்குரைஞர் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படித்தான் கியூபா அருகே குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள சி.ஐ.ஏ.வின் இரகசிய கொட்டடியிலும், மிதக்கும் சிறைச்சாலை எனும் கப்பல்களிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரகசிய சிறைக் கொட்டடிகளிலும் பலர் வதைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய இரகசிய ஆட்கடத்தல் – சித்திரவதைகள் நடந்துள்ளதைப் பற்றி ஏற்கெனவே சில மனித உரிமை அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும், ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த விசாரணைக் குழுவும், விக்கி லீக்சும் அம்பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல்கள் வலுவடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் விசாரணைக் கமிசன் அறிக்கை போல நீர்த்துப்போன வழியில் இப்போது இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
இச்சித்திரவதைகளை ஏதோ கொள்கையில் நேர்ந்த தவறு போலத்தான் செனட் குழுவின் அறிக்கை கூறுகிறது. ஆனால், வரலாற்று ரீதியாகவே சி.ஐ.ஏ. என்பது பிற நாடுகளை உளவு பார்க்கவும், பயங்கரவாதப் படுகொலை – சித்திரவதைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதே உண்மை. இதனால்தான் 6700 பக்கங்களைக் கொண்ட செனட் அறிக்கையில் தற்போது 500 பக்க அளவுக்கு வடிகட்டப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டு, ஏனைய பக்கங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
சி.ஐ.ஏ, அமெரிக்க இராணுவம், ஜார்ஜ் புஷ் “ஆஹா, இதுதான் ஜனநாயகம்! இதுதாண்டா மனித உரிமை”
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகுதான் இத்தகைய சித்திரவதைகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ஒட்டுமொத்த சித்திரவதைகளில் ஒரு சிறு கூறுதான். ஆக்கிரமிப்புப் போரும், கொடிய சித்திரவதைகளும் ஏகாதிபத்தியத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள். கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து இதுவரை அறிந்திராத கொடூரமான சித்திரவதைகளை வியட்நாம் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் தலைவர்களை அது படுகொலை செய்ததோடு, முன்னணியாளர்களைக் கடத்திச் சென்று காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, காணாமல் போனதாக அறிவித்தது.
அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு உடன்படாத அல்லது அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் இத்தகைய சித்திரவதைகளைச் செய்துள்ளதாக செய்திகள் கசிந்தால், அதையே முகாந்திரமாக வைத்து மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் கூப்பாடு போட்டு அந்நாட்டின் மீது இந்நேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்திருக்கும். அல்லது பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை முடமாக்கி அடிமைப்படுத்தியிருக்கும். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தகைய சித்திரவதைகளைச் செய்திருப்பதால், அது பயங்கரவாதத்துக்கு எதிரான செயலாகவும் தேசிய பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கையாகவும் நியாயப்படுத்தப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசுக் கொலைகள், போர்க் குற்றங்கள், உளவுத்துறையின் கொலைகள், நிதி மோசடிகள் பற்றிய எந்த விசாரணையும் அமெரிக்காவில் நடத்தப்பட்டதில்லை. எந்தக் குற்றவாளியும் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டதுமில்லை. ஜனநாயக நாடகமாடும் ஒபாமா ஆட்சியில், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்றொழித்த போதிலும் கூட, இக்கொடூரத்துக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
ஏனெனில், அவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களால் பாதுகாக்கப்படுகின்றனர். அமெரிக்க பட்ஜெட்டில் பல நூறு கோடி டாலர்களை கொலைகார சி.ஐ.ஏ.வுக்கு ஒதுக்கி வருவதை அவர்கள் அங்கீகரித்தே வருகின்றனர். இதனால்தான் புஷ் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த டிக் செனியும், சி.ஐ.ஏ. இயக்குனரான ஜான் ப்ரென்னனும், வெள்ளை மாளிகையின் வழக்குரைஞர்களும் நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.
வடிவங்களில் வேறுபட்டாலும் சாராம்சத்தில் ஏகாதிபத்தியம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். பெருமையாக பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகம், மனித உரிமைகளின் யோக்கியதையையும், முதலாளித்துவ ஜனநாயகம் என்பதே மோசடி ஜனநாயகம்தான் என்பதையும் இப்போது செனட் குழுவின் அறிக்கையே அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. இந்த யோக்கிய சிகாமணிகள்தான் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், அடக்குமுறை என்றெல்லாம் இன்னமும் வெட்கமின்றிப் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.
– தனபால்
________________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________
திவாலாகிப்போன அரசியல் சமூக கட்டமைவைத் தகர்த்தெறிவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
தமிழகத்தின் அரசியலில் மட்டுமல்ல, நமது நாடு முழுவதுமான அரசியலிலும் பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான அரசியல் முடிவுகளை, ஜனநாயகபூர்வமான உட்கட்சி அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து, 2015, ஜனவரி 2-3 தேதிகளில் நிகழ்ந்த மாநில சிறப்புக் கூட்டத்தில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) -இன் மாநில அமைப்புக் கமிட்டி எடுத்திருக்கிறது. அவற்றின் சாரம் வருமாறு:
இப்போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக (bankrupted, failed, collapsed and turned into opposite forces) மாறிவிட்டன.
நாட்டின் அரைக்காலனி – அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு, தரகு முதலாளிய அரசியல் அமைப்பு எதிர்கொண்ட நெருக்கடிகளுக்குத் தீர்வாக ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையும், கட்டுமான மாற்றங்களும் அரசியல் – பொருளாதார – சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கி முற்றச் செய்துவிட்டன.
மேற்கண்ட போக்குகள் ஒரு உச்ச நிலையை எட்டி, இன்றைய சமூக கட்டமைப்பின் பொருளாதாரம், அரசியல், பண்பாடு போன்ற அனைத்து கட்டுமானங்களும், கட்டமைப்பு முழுவதும் தீராத, தீர்வு காண இயலாத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இவற்றின் கையாலாகாத்தனத்தை, காலாவதியாகிப்போன நிலையை, இற்றுப் போனதை, திவாலாகிப் போனதை, தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. நாட்டின் நடப்புகளே இதற்குச் சான்று கூறுகின்றன.
இந்தக் கட்டமைப்பை தாங்கிப் பிடித்து, நியாயப்படுத்தி மக்களிடம் அங்கீகாரம் பெற்றுத் தந்து வந்த ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டமும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூடத் திவாலாகி, தோற்றுப்போய் விட்டன. சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள், கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் மேலும் மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள் போய்க் கொண்டிருக்கும் பரிதாப நிலையையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர், மற்றும் மத்திய – மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட உயர் அரசுப் பதவிகளை வகிப்பவர்களில் பலர் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக இருந்தும் தண்டிக்கப்படவில்லை; மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள்.
குஜராத்தில் இசுலாமியரைப் பெருந்திரளாகக் கொலைசெய்த கிரிமினலான பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பைக் கீழமை நீதிமன்றங்களிடம் உச்சநீதி மன்றம் தள்ளிவிட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கும்பல் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, தனது வழிகாட்டுதலைத் தானே மீறி 18 ஆண்டுகளாகத் தள்ளித் தள்ளி வைத்தது. அக்கும்பலின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டபோதும், அவசர அவசரமாக உச்சநீதி மன்றம் தலையிட்டு, விதிவிலக்கு(!) என்றே சொல்லிக்கொண்டு, தாராளமான சலுகைகளுடன் பிணையில் விடுவித்தது.
ஜெயலலிதாவைப்போல, மமதாவைப் போல, ஜெகன்மோகன் ரெட்டியைப் போல, சரத் பவாரைப் போல, மாயாவதி-முலாயமைப் போல, லாலுவைப்போல, சௌதாலாவைப்போல, எடியூரப்பாவைப்போல, சந்திரபாபுநாயுடுவைப்போல ஏராளமான அரசியல்வாதிகள் இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஈடுபட்டுப் பல இலட்சம் கோடி ரூபாய் கள்ளப்பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் வரும்போது அவை அரசியல் சதிகள் -சூழ்ச்சிகள், அரசியல் பழிவாங்குதல்கள் தாம் என்று கூறி, கூலிப் படையை வைத்துப் போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.
நீதித்துறை, உளவுத்துறை, போலீசு ஆகிய மேலிருந்து கீழ்வரையிலான குற்றத் தடுப்பு – தண்டனை வழங்கும் அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் உச்ச, உயர்நீதி மன்றங்களே தமது பொறுப்புகளைத் தட்டிக்கழித்துத் தாராளமாக நடந்து கொள்கின்றன. நீதிபதிகளே இலஞ்ச ஊழல், பாலியல் குற்றவாளிகளாக, கிரிமினல் குற்றக்கும்பல்களின் டவாலிகளாக இருக்கின்றனர்; நீதியே விற்பனை சரக்காகி – நீதித்துறையே நிர்வாணமாகி நிற்கிறது.
இந்திய அரசே ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்ற, ஒரு மிகப் பெரும் கார்ப்பரேட் கொள்ளை நிறுவனமாகிவிட்டது. பிரதமரே அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மாநில முதலமைச்சர்களே அதன் இயக்குநர்களாகவும் செயல்படுகிறார்கள். அம்பானி, அதானி, மிட்டல், பிர்லா, டாடா, ஜிண்டால் போன்ற பெரும் தரகு முதலாளிகள் அரசுப் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்து, பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அந்நியநாட்டு வங்கிகளில் குவித்துவைத்து ஹவாலா மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். சட்டமுறைப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் முதலீடுகளை முடக்கிவிடுவதாக மிரட்டுகிறார்கள். உள்நாட்டு, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களின் பழைய, புதிய தரகு முதலாளிகளும் பெருமளவிலான கிரானைட், மணற் கொள்ளையிலும், கனிமவள, உலோகத் தாதுக் கொள்ளையிலும் ஈடுபட்டுக் காடுகளையும் மலைகளையும் நீர்நிலைகளையும் அழித்து நாட்டையே பாலைவனமாக்கி வருகிறார்கள்.
அதேசமயம், அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாகவும், எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாகவும் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகாரவர்க்க அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைக்கும்போது, அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில் விசாரணைகள் தரும் ஆதாரங்கள் இருந்தும், சட்ட நியதிப்படி நடந்து கொள்வதற்குப் பதில் சமரசமாக முடிவுகள் எடுக்கின்றது.
குறிப்பாக, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், குஜராத் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கம் பரவியுள்ள மாநிலங்களில், இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள் ஆகிய நிறுவனங்கள் நடத்தும் போலி மோதல் கொலை வழக்குகளில் இதற்கான சான்றுகளைக் காணலாம். பயங்கரவாத, பிரிவினைவாத பீதி கிளப்பி மக்களுக்கு எதிராக கடுமையான பெருந்திரள் கண்காணிப்பு, அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. கிரிமினல் குற்றக் கும்பல்கள் – ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் – போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறிமிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.
நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்க-வீக்கம், அன்னிய செலாவணிப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாதவாறு கடும் நெருக்கடிக்குள், சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு விட்டது. ஆலைமூடல், ஆட்குறைப்பு, கட்டணச் சுமையேற்றியும், விலைவாசியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் விண்ணை முட்டுவதாக எகிறச்செய்தும், அரசே ஏழை-எளிய மக்களின் தலையிலேறி மிதிக்கின்றது. மக்களுக்கு கல்வி, அடிப்படைப் பொதுச் சுகாதாரம்- மருத்துவம், குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு எல்லாம் கானல்நீராகவே உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் ஆதாயத்துக்காக குவிக்கப்படுகின்றன.
ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்கமுடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின் உச்ச நிலையை எட்டிவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள் தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத் தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச் சிறுபான்மையினர் மீது பாசிசப் பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. அவற்றுக்கு வழமையான வழக்கு மன்றங்களில் நீதி கிடைக்காதென்பது உறுதியாகிவிட்டது. இயற்றப்படும் புதிய சிறப்புச் சட்டங்களும் அமைக்கப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களும் சிறப்பு விசாரணை ஆணையங்களும் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கிடப்பில் போட்டு, ஊற்றிமூடுவதற்கான குறுக்கு வழிகளாகிவிட்டன. இந்த அக்கிரமங்கள், அநியாயங்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லையே, என்றும் எதையாவது செய்து இவை எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும் என்ற கோபாவேசத்துடனும் மக்கள் குமுறுகின்றனர்.
இந்த அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றுவதன் வெளிப்பாடாக, மக்கள் தனித்தனிப் போராட்டங்களில் தன்னெழுச்சியாக ஈடுபடுவது பெரிதும் அதிகரித்து வருகின்றது. எனினும், அவர்கள் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும், தொடர்பையும் ஒருங்கிணைந்த முறையிலானவையாக தொகுத்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டங்களிலேயே அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களும் ஊடகங்கள் மூலம் பல்வேறு வகைகளில் மக்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. தாது மணற்கொள்ளை, ஆற்று மணற்கொள்ளை, மீத்தேன் எரிவாயு எடுப்பு, எரிவாயுக் குழாய் அமைப்பு, காவிரி நீர் முதலான பல்வேறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காகத் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் ஈடுபடும் மக்களிடம், அவற்றுக்கிடையிலான பொதுத் தன்மையையும் உறவையும் தொகுத்துப் பார்க்கவேண்டிய அவசியத்தையும், தனித்தனித் தீர்வுகளை நாடும் போராட்டங்களுக்குப் பதிலாக, புரட்சிகர அரசியல் தீர்வுகளைக் கொண்ட பொது முழக்கங்களை முன்வைத்துப் போராடவேண்டியதன் முக்கியத்துவத்தையும் புரியவைக்கவேண்டும்.
மோடி போன்றவர்கள் அன்றாடம் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சு அல்லது அறிவிப்பின் மூலம் மக்களிடையே விவாதத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை உருவாக்குகிறார்கள். பார்ப்பனப் பாசிசக் கும்பல் ஆத்திரமூட்டும் மதவெறி நடவடிக்கைகளின் மூலம் மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திட்டமிட்டே திருப்புகிறது. அதே நேரத்தில் தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளுக்கு மக்களைப் பழக்கப்படுத்திப் பணியவும் வைக்கிறது. இதனை முறியடிக்கும் விதத்தில், நாடும் மக்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம், கட்டமைப்பு நெருக்கடியே என்ற ஒருங்கிணைந்த, முழுமையானதொரு பார்வையை மக்களுக்குக் கற்றுத்தருவதன் மூலம், புதிய, அவசியமான, விவாதத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை நாம் மக்கள் முன்பு வைத்திட வேண்டும்.
அதாவது, நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டதை, அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டதை மக்களிடம் கொண்டு செல்வதுடன், ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால் விடவும் மக்களைத் திரட்டவேண்டும். அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக, மக்களின் அதிகாரத்தை மையப்படுத்துகின்ற ஒரு புதிய, அவசியமான பொது அரசியல் அரங்கத்தைக் கட்டி, முழக்கங்களை வகுத்து மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் புரட்சிகர இயக்கத்திற்குரிய பொறுப்பும் கடமையுமாக இருக்கிறது.
ஆழமான விவாதத்திற்குப் பிறகு, உடனடிக் கடமை குறித்த இம்முடிவை ஒருமனதாக நிறைவேற்றி, மாநிலச் சிறப்புக் கூட்டம் புரட்சிகர எழுச்சியுடன் நிறைவுற்றது.
இவண், செழியன், செய்தித் தொடர்பாளர், மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்), தமிழ்நாடு.
இராணிப்பேட்டை சிப்காட் – வட இந்தியத் தொழிலாளர்களின் நிலை
30 அடி நீளம், 50 அடி அகலத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஷெட். அங்குதான் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஓய்வு நேரமான 6 மணி நேரத்தை தூங்கி, பாட்டு கேட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு செலவழிக்க வேண்டும். தூங்கி எழுந்தால் சில அடிகள் தூரத்தில் பணியிடம். அதிகாலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை “ரெகுலர் ஷிப்ட்”, அதன் பிறகு இரவு 12 மணி வரை “ஓவர் டைம்” என்பது வாடிக்கையான வேலை.
“பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் போது ஓய்வெடுத்தாலோ அல்லது வேலையை மெதுவாக செய்தாலோ அது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிவிடும். வீட்டிலிருந்தே முதலாளியால் பார்க்க முடியும். ஒன்று மறுநாள் திட்டு வாங்க நேரிடும். இல்லையேல் ஓய்வெடுத்த நேரத்திற்கு சம்பளம் வெட்டப்படும். பெரும்பாலும் எல்லாத் தொழிற்சாலைகளின் நிலையும் இதுதான்.”
எப்போதும் துணையாக தோல் நெடி
தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் பக்கத்து ஷெட்டில் இயங்கும் தோல் பதனிடும் உருளைகளின் சத்தம் இடைவிடாத துணையாக காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுவாசிப்பதற்கு ஆலைக்குள் பதனிடப்படும் ஆயிரக்கணக்கான தோல்களின் நாற்றத்தோடு நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் நெடி கலந்த காற்று 24 மணி நேரமும் துணையாக இருக்கும்.
உடன் தங்கியிருக்கும் 18 தொழிலாளர்களோடு சேர்ந்து வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு அல்லது வேலைக்கு நடுவில் ஷெட்டுக்குள்ளேயே சமைத்துக் கொள்ள வேண்டும், சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஷெட்டுக்கு எதிர் முனையில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் காதை நிறைக்கும் உருளைகளின் இயக்கம்
குளிப்பதற்கும், துவைப்பதற்கும் மஞ்சள் கலந்த தண்ணீர் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதையே கொஞ்சம் வடிகட்டி குடிக்கலாம்.
வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு மேல் உருளைகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அன்று மாலைதான் வார விடுமுறை. துணி துவைக்க, கடைக்குப் போய் சமையலுக்கான பொருட்கள் வாங்கி வர, இதற்குப் பிறகு நேரம் இருந்தால் பொழுதுபோக்க வெளியில் போய் வரலாம்.
இந்த ‘பூலோக சொர்க்கத்திலிருந்து’ சொந்த ஊருக்கு தொலைபேசிக் கொள்ளலாம். சில ஆயிரம் மாதச் சம்பளத்தில் ஊருக்கு அனுப்பியது போக மிச்சம் பிடித்து ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை ஊருக்குப் போய் வரலாம்.
ஜனவரி 30, 2015 அன்று வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் தனியாரால் பராமரிக்கப்படும் தோல் இரசாயனக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரசாயன சகதி சேகரிப்புத் தொட்டி உடைந்து 10 வட இந்தியத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பிறகு தொழிலாளர்கள் சிலரை சந்தித்து பேசிய போது கிடைத்த அவர்களது வாழ்க்கை சித்திரம்தான் மேலே சொன்னது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 17-வது வயதில் ரூ 4,200 மாத ஊதியத்தில் ஒரு தோல் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு அவரது ஊதியம் இன்று ரூ 5,700 ஆக உயர்ந்திருக்கிறது.
மாலை 6 மணி முதல் இரவு 12 வரை மிகை நேரப்பணியாக கருதப்படும். மிகை நேரப்பணி என்றால் இருமடங்கு ஊதியம் என்பது விதியாக இருந்தாலும் இங்கே ஒரு மடங்கு ஊதியம்தான் எல்லா ஆலைகளிலும் தரப்படுகிறது.
அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.
இவருக்கும் இவரோடு பணிபுரியும் 17 வயது முதல் 24 வயது வரை உள்ள திருமணமாகாத 18 இளைஞர்களும் தொழிற்சாலை முதலாளி கருணையுடன் ஒதுக்கிக் கொடுத்த ஷெட்டில் வசித்துக் கொண்டு ஆலையில் வேலை செய்கிறார்கள்.
அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் இவர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.
குடும்பத்தோடு வசிப்பவர்கள் மட்டுமே சிப்காட் குடியிருப்புப் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். அப்படி வசிப்பவர்களில் ஒருவர் மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளி ஒருவர். தோல் தொழிற்சாலையில் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு அவரது இன்றைய மாத ஊதியம் ரூ 10,000 எனவும் கூறினார். இதில் வாடகைக்கு மட்டுமே ரூ 2,000 போய்விடுகிறது. மனைவி, இரண்டு குழந்தைகள் அவர்களுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட தேவைகள் அனைத்தையும் இந்தத் தொகைக்குள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவர்கள் ஊருக்குச் செல்வது அரிதாகவே சாத்தியமாகிறது. ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையோதான் செல்கின்றனர். அதற்கு மேல் சென்று வர பொருளாதாரம் அனுமதிக்காது, அப்படியே அனுமதித்தாலும் முதலாளிகள் லீவு தர மாட்டார்கள்.
சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்
சிப்காட் வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 5,000 வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்.
இந்தியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 35.6 கோடி இளைஞர்கள் உ ள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று கூறுகிறது. பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்களது கிராமங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாய பொருளாதாரத்தில் அற்பக் கூலிக்கான வேலை மட்டுமே கிடைப்பதால் இவர்கள் பெருமளவில் தமிழகம் மற்றும் பிற தொழில் மையங்கள், பெருநகரங்களை நோக்கி படை எடுக்கின்றனர். பெரும்பாலும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக ஒருவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வருகின்றனர்.
“மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் அன்னிய நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வந்து இத்தகைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கப் போகிறேன் என்பது மோடியிசத்தின் சவடால்களில் ஒன்று.
இந்த சவடால் மோடியால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல, 1990-களிலிருந்தே 25 ஆண்டுகளாக “அன்னிய நேரடி முதலீடு” என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு வரப்படுவதுதான். கூடவே, ‘அன்னிய முதலீட்டை ஈர்க்க தொழிலாளர் நலச்சட்டங்களை கைவிட வேண்டும், தொழிற்சாலைகள் மீதான கண்காணிப்புகளை ஒழித்துக் கட்ட வேண்டும். சுற்றுச் சூழல் சட்டங்களை செல்லாமல் செய்து விட வேண்டும்’ என நாட்டை அன்னிய நிறுவனங்களுக்கு காலனியாக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களில் அதை இன்னும் தீவிரமாக செய்து வருகிறது மோடி அரசு.
இந்த மறுகாலனியாக்கக் கொள்கைள் ஆலைத்துறையிலும், கட்டுமானத் துறையிலும், பிற சேவை நிறுவனங்களிலும் உருவாக்கியிருக்கும் வேலை வாய்ப்பின் குறுக்குவெட்டுதான் ராணிப்பேட்டையில் பணிபுரியும் வட இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை.
சிப்காட் பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரிவோரைப் பற்றிய பதிவேடு கிடையாது. அப்பகுதியில் வசிப்பதற்கான பதிவேடும் கிடையாது. எத்தனை வட இந்திய தொழிலாளர்கள் சிப்காட் பகுதியில் உள்ளனர் என்கிற கணக்கு அரசாங்கத்திற்கே தெரியாது. உழைப்பை மட்டுமே விற்கும் நாடோடிகளாக கொத்தடிமைகளாக மட்டுமே இவர்களது வாழ்க்கை தொடர்கிறது. இவர்கள் நவீன கால கொத்தடிமைகள்.
இவர்களுக்குள்ளே சங்கமோ அமைப்போ எதுவும் கிடையாது. இவர்கள் தனித்தனியாய் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு இவர்களிடமிருந்து பணத்தையும் கைபேசிகளையும் உள்ளுர் போக்கிரிகள் சிலர் மிரட்டிப் பறிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதால் இவர்கள் வெளியில் நடமாடுவதைக்கூட தவிர்த்து வருகிறார்களாம்.
இவர்களில் ஒருவர் காணாமல் போனாலோ அல்லது அடித்து கொல்லப்பட்டாலோ அல்லது பலர் கொத்துக் கொத்தாய் செத்துப் போனாலோ யாராலும் கண்டு பிடிக்கவோ அடையாளம் சொல்லவோ முடியாது. அரசாங்கம் இவர்களை நிச்சயம் கண்டு கொள்ளப் போவதில்லை. இவர்களாக அமைப்பாக ஒன்று சேர்ந்தாலொழிய இவர்களுக்கு விடிவேதுமில்லை.
ஆலைக்கு வெளியே மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடங்களை முதலாளிகளே உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும். தொழிலாளர்களை ஆலைக்குள்ளே தங்க வைக்கும் அனைத்து முதலாளிகளையும் கைது செய்யப்பட வேண்டும்.
தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு கொட்டமடிக்கும் முதலாளிகள், முதலாளிகளுக்கு துணைபோகும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட இந்த சமூக விரோத பயங்கரவாதக் கூட்டத்தை ஒழித்துக் கட்டாமல் தொழிலாளர்களுக்கு விடிவில்லை.
தமது பணியிட மற்றும் வாழும் உரிமைகளுக்காக சங்கமாக திரண்டு ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் 1886-ம் ஆண்டு சிகாகோ நகரில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைப் போன்று தொழிலாளர் வர்க்கம் மீண்டும் எழவேண்டும். உழைக்கும் மக்களையும், இந்த உலகையும் முதலாளித்துவ பேரழிவிலிருந்து காப்பாற்ற வழி காட்ட வேண்டும்.
சிகாகோ எரிமலையாய் சீறட்டும் தொழிலாளி வர்க்கம்! பொங்கி எழும் நெருப்புச் சுனாமியில் அழியட்டும் முதலாளித்துவ பயங்கரவாதம்!
தகவல் மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்
(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. விளக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன)
மதுரை செல்லூர் பந்தல்குடியில்கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட கந்துவட்டி கும்பல் ஆஷா, மகா, செல்வம், சதீஷ், பூஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கவும், இந்த அராஜகத்திற்கு துணை நிற்கும் செல்லூர் எஸ்.ஐ. அன்பழகனை பணி நீக்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் பா நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பந்தல்குடியில் பாதிக்கப்பட்ட மக்களும், வழக்குரைஞர்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை போன்ற அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செல்லூர் – பந்தல்குடி – சுயராஜ்யபுரம் பகுதி பெரும்பான்மை தலித் மக்கள் குடியிருந்து வரும் பகுதியாகும். கூலிவேலை, சிறு வியாபாரம் செய்துவரும் ஏழை உழைக்கும் மக்களே அதிகம் உள்ளனர். விலைவாசி முதல், எல்லா செலவினங்களும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் வருவாய் பற்றாக்குறை காரணமாகவும் மருத்துவ சிகிச்சை, நல்லது கெட்டது போன்ற அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பந்தல்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, மகாலட்சுமி, செல்வம், சதீஷ், செல்வராஜ், ரமேஷ் போன்றவர்கள் கந்துட்டித் தொழிலில் தங்களது சொந்த மக்களையே கடுமையாகச் சுரண்டி வருகின்றனர். ரன் வட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, நேர வட்டி எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் கேட்சிற வட்டியைத் தராவிட்டால் நடுத்தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பது, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, வீடு புகுந்து சாமான்களை அள்ளுவது, மானபங்கப்படுத்துவது போன்ற அடாவடிகளில் ஈடுபடுவதே இவர்களது வாடிக்கை. இந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டவர்கள் ஒருபோதும் மீண்டதில்லை.
வட்டிப்பணம் மாலை 4 மணிக்குள் தர வேண்டும். 1 மணி நேரம் தாமதமானாலும் வட்டித் தொகை 2 மடங்கு ஆகிவிடும். ஏன் என்று கேட்டால் அடி உதை. செல்லூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. செல்லூர் எஸ்.ஐ.அன்பழகன் இந்த கும்பலுக்கு மிக மிக நெருக்கம். அவரை மகா குடும்பத்தினர் செல்லமாக “மொட்டை மாமா” என்று அழைக்கிற அளவுக்கு நெருக்கம். எந்நேரமானாலும் மகா வகையறாக்கள் வீட்டுக்கு அவர் வந்து போவார். அன்றாடம், அவருக்கு விருந்துதான். கந்துவட்டியில் அவர் பங்காளி.
கடந்த 08.01.2015 அன்று கந்து வட்டி கேட்டு பாண்டிமகன் பாஸ்கரன் என்பவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்த சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா ஆகியோர் மீது பாஸ்கரன் புகார் அளித்த போது வழக்குப் பதிவு செய்த செல்லூர் காவல் அதிகாரிகள் கந்துவட்டி கும்பலிடம் ஒரு புகாரைப் பெற்று முதலில் புகார் கொடுத்த பாஸ்கரனின் மருமகன் அசோக் என்பவரைக் கைது செய்தது. அவர் ஜாமீனில் வந்துள்ளார். இப்படி இந்தக் கும்பல் மீது பல புகார்கள் கொடுத்தும் செல்லூர் காவல் நிலையம் செவிடன் போல உள்ளது. இந்த கும்பலின் அராஜகம் தொடர் கதையாக உள்ளது.
கந்துவட்டி கும்பலுக்கு நெருக்கமான எஸ்.ஐ.அன்பழகனிடம் அவர்களைக் கைது செய்யும்படி கேட்டபோது, “ஏன்டா நான் கூப்பிட்டா அவளுங்க வீட்டுல 5 பொம்பளைங்களும் வருவாளுங்க, உன் வீட்டில் எவளாச்சும் வருவாளா?” என்று திமிருடன் ஆபாசமாக திட்டியிருக்கிறார். ஆஷா, பூஜா, செல்வம் கும்பல் “போலீஸ் ஸ்டேசன் எங்க கண்ட்ரோல்ல இருக்குடா, நீ எத்தனை புகார் கொடுத்தாலும் உன்னால் எங்க மயிரக் கூட புடுங்க முடியாது” என்று சொல்லியுள்ளனர்.
‘காவல் நிலையங்கள் மக்களுடைய பாதுகாப்புக்கானது, காவலர்கள் உங்கள் நண்பர்கள்’ என்று அரசும் அதிகாரிகளும் சொல்கிறார்கள். ஆனால் காவலர்கள் யாருடைய நண்பர்களாக இருக்கிறார்கள். காவல் நிலையம் யாருக்காக இருக்கிறது என்றால் அது கிரிமினல்களுக்காகத்தான் என்பது இந்த கந்து வட்டி கிரிமினல் கும்பலின் பிரச்சனையில் பளிச்சென்று தெரிகிறது. கிரிமினல்களும் காவல் துறையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற இந்தக் கூட்டணி மறைமுகமானது அல்ல. வெளிப்படையானது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர் ஏழையாக இருந்தால் நிச்சயம் அவர்தான் சிறைக்குப் போவார். அவர் மீது பொய் வழக்கு போடப்படும் என்பதுதான் உண்மை நிலை. சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா இவர்கள் மீது 08-01-2015 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் இதே கும்பல், “பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக போராடத் துணிந்துவிட்டார்கள். காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கிறார்கள்” என்பதை அறிந்தவுடன் கடந்த 17.01.2015 அன்று அந்தப் பகுதியில் பயங்கர கலவரம் நடத்தி வினோத்குமார், சுந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேரை தலையில் அரிவாளால் வெட்டி அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் கொலை முயற்சி செய்த ஆஷா, மகா, செல்வராஜ், செல்வம், சதீஷ், ரமேஷ், பூஜா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். எஸ்.ஐ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அவ்ரைப் பாதுகாக்கின்றனர்.
அதன் பொருள் என்ன? கந்து வட்டி கும்பலின் செல்வாக்கு எஸ்.ஐ. அன்பழகனோடு நின்றுவிடவில்லை. அது மேல்மட்டம் வரை பரவியிருக்கிறது என்பது தான்; அதுமட்டுமல்லாமல் பகுதியில் நடக்கும் விபாச்சார தொழிலில் அன்பழகன் பங்காளிதான் என்றும் சொல்கிறார்கள். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வீட்டுக்கு அனுப்ப காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை அம்பலப்படுத்தி ம.உ.பா. மையம் சுவரொட்டி ஒட்டியதற்காக துணை ஆணையர் புகார் கொடுக்கச் சென்ற மக்களைக் கடிந்து கொண்டுள்ளார்.
கந்து வட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று அரசு சொல்கிறது. ஆனால் அரசின் சட்டம் ஒழுங்கு பாதுகாவலர்களான காவல் துறைதான் கந்துவட்டி கும்பலைக் காப்பாற்றுகிறது. இப்போது சிறையிலிருக்கும் கிரிமினல்களை விரைவில் மீட்டுக் கொண்டுவந்து திரும்பவும் ஆதிக்கத்தில் அமர்த்த முயற்சி செய்கிறது செல்லூர் காவல்துறை.
கந்து வட்டி பிரச்சனை இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. எனவே இதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து உறுதியுடன் போராடி கந்து வட்டிக் கும்பலை அந்தப் பகுதியை விட்டே விரட்டியடிக்க வேண்டும். ஏற்கனவே இந்த கும்பல் ஒருமுறை ஊரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லூர் காவல் நிலையத்தின் ஆதரவுடன் மீண்டும் அந்த கும்பல் வந்துவிட்டது. இந்த கிரிமினல் கூட்டணியை விரட்டியடிப்பது ஒன்றே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகும்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ம.க.இ.க தோழர் ராமலிங்கம் “இன்று மதுரையில் பல பகுதிகளில் கந்துவட்டிக் கும்பல் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றன. பந்தல்குடியில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல், செய்கின்ற அராஜகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ஒரு சிறிய கும்பல், அந்தப்பகுதியிலுள்ள 1000 பேரையும் கட்டுப்படுத்தி, ரவுடித்தனம் செய்ய முடிகிறது என்றால் அதற்குக் காரணம் காவல் துறைதான். கந்துவட்டிக் கும்பலுக்கும் காவல் துறைக்கும் உள்ள கள்ள உறவு தான் இத்தனை அராஜகத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது” என்று பேசினார்.
“கந்து வட்டி வன்கொடுமைக்கு எதிராகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், காவல்துறை அதைக் கண்டு கொள்வதேயில்லை. பந்தல்குடியில் கந்துவட்டிக் கும்பல் அராஜகத்திற்குக் காரணமே செல்லூர் எஸ்.ஐ அன்பழகன் தான். அவரை தட்டிக் கேட்காத மாவட்ட காவல் துறை நிர்வாகம் போலீக்கு எதிராக ஏன் போஸ்டர் போட்டாய் என்று கேட்கிறது” என்று இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் தென்னரசு கேள்வி எழுப்பினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
வி.வி.மு. உசிலை வட்டம் தோழர் குருசாமி பேசியதாவது
“கந்து வட்டிக்கு மதுரை சிறப்புத் தகுதி பெற்றது. தமிழ் நாட்டிற்கே மதுரை தான் வழிகாட்டி. இந்தக் கந்து வட்டியால் ஏழை மக்களின் வாழ்க்கையே நாசமாகிப் போய்விடுகிறது. சொந்த சாதிக்காரன், உறவுக்காரன் ஊர்க்காரன் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எல்லோரையும் உறிஞ்சிக் கொழுக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.
மக்கள் பிரிந்து கிடப்பதும், பலவீனமாக இருப்பதும் தான் அவர்களுக்கு பலம். புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே காவல்துறை வழக்குப் போடுகிறது. வட்டிக்கு கடன் வாங்கும் ஏழை மக்கள், ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குவதில்லை. நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் கந்துவட்டியில் சிக்கியவுடன் அவர்களது வாழ்க்கை நிலை கீழாகப் போய் விடுகிறது. மீளவே முடியாத அளவிற்கு மேலும் மேலும் வட்டி அவர்களை அழுத்துகிறது. இதனால் வட்டி கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர்.
கந்து வட்டிக் கும்பலோ வீட்டிற்குள் நுழைந்து இரக்கமின்றி சூறையாடுகிறது. கேவலமாகத் திட்டுகின்றது. மானபங்கம் நடக்கிறது. இத்தனையும் காவல் துறையின் உதவியோடு நடக்கிறது என்பது தான் கொடுமை.”
கந்துவட்டிக் கும்பலால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூதாட்டி மகாராணி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்ணீர் மல்கப் பேசினார்.
“பேங்க் புத்தகத்தை அடமானம் வைத்து ரூ 4,000 கடன் வாங்கினேன். தின வட்டி 100-க்கு 10 ரூபாய். இது வரை ரூ 75,000 கட்டிவிட்டேன், இன்னமும் கடன் தீரவில்லை. எனக்கு வரும் 6,000ரூபாய் பென்சனில் 2,500 ரூ வங்கியில் வாங்கிய கடனுக்காக எடுத்துக் கொள்வார்கள். மீதப் பணத்தை இந்த கந்து வட்டிக்காரங்க எடுத்துக்கிறாங்க. எனக்கு கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியில்லை. மேலும் பணம் கேட்டு, என் வீட்டிற்குள் புகுந்து பாத்திரங்களையும் சூறையாடியுள்ளனர். இதே நிலை தான் பலருக்கும் ஏற்பட்டிருக்கு” என்று கண்ணீர் மல்கக் கூறினார் அந்த மூதாட்டி.
ம.உ.பா. மையம் லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்டச் செயலர்
“கந்து வட்டிக் கொடுமை நாடுமுழுவதும் இருக்கிறது. பந்தல் குடியிலும் நடக்கிறது. எல்லை மீறும் பொழுதுதான் போராட்டமாக வெடிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பந்தல்குடி பகுதி மக்கள், இனிமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் வீதிக்குப் போராட வருகிறார்கள்.
பந்தல்குடியில் சுரண்டுபவர்களும், சுரண்டப்படும் மக்களும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். பணம் கட்டினாலும் கடன் மட்டும் தீருவதேயில்லை. அசல் அப்படியே நிற்கிறது. செல்லூர் எஸ்.ஐ அன்பழகனை இந்தக் கந்துவட்டிக் கும்பல் “மொட்டை மாமா” என்று செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறது என்றால் அவர்களுக்கிடையிலான உறவைப் புரிந்து கொள்ளுங்கள். மேல் மட்டம் வரை மாமூல் பிரித்துக் கொடுக்கப்படுவதால் உயர் அதிகாரிகள் எஸ்.ஐ அன்பழகனைத் தட்டிக் கேட்பதேயில்லை.
இன்றைய உலகமய சூழலில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா, கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாபில் இது நடந்தது. காரணம் கந்து வட்டிதான். வறட்சியினாலும் விவசாயிகள் செத்தனர். அதிகமாக விளைந்தும் விலை இல்லாமலும் செத்தனர். அங்கேயும் கந்துவட்டி பலரை பலி வாங்கியது.
இங்கேயும், கீரைத் தோப்பு, வாழைத்தோப்பு, அண்ணா தோப்பு, ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், செல்லூரிலும் பலி கேட்கிறது. இந்த கந்து வட்டிக் கும்பலுக்கு எதிராக இங்கே உள்ள அரசியல் கட்சிகள் போராட மாட்டார்கள். ஏனெனில் இவர்களும் அந்தக் கும்பலுக்குப் பின்புலமாக இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகளை நம்பிப் பயன் இல்லை.
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக திரண்டு, எழுந்து ம.உ.பா.மையம் மற்றும் மக்களுக்காக சமரசமின்றி போராடும் புரட்சிகர இயக்கங்களின் பின் நின்றால் இந்தக் கும்பலை ஓட ஓட விரட்டி அடிக்க முடியும்.
தமிழக அரசே ! காவல்துறையே !
செல்லூர் – பந்தல்குடி கந்துவட்டி கும்பலை உடனே குண்டர் சட்டத்தில் சிறையிலடை !
எஸ்.ஐ.அன்பழகனைப் பணி நீக்கம் செய் !
தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கு !
கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க விரைந்து நடவடிக்கை எடு !
தகவல் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை
விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.
இரவு 12.10 மணி. தூங்கிக் கொண்டிருந்த அவர்களை, சேறும் சகதியுமான இரசாயனக் கழிவு திடீரென சுனாமியாய் தாக்குகிறது; என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர்களை புதைத்து மூடிய கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; சகதியில் இருந்த இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; அருகில் இருந்த தொழிற்சாலை பேனல் போர்டு உள்ளிட்ட மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி பரவிய மின்கசிவு தப்பிக்க சிறிதளவு வாய்ப்பிருந்திருந்தால் அதையும் காலி செய்கின்றன; அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.
இரசாயன சகதி சுனாமியில் கொல்லப்பட்டவர்கள் (படம் : நன்றி தினத்தந்தி)
அவர்கள் மேற்கு வங்க மாநிலம் மிதினாப்பூரிலிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதைவிட கான்பூரைச் சேர்ந்த ஒரு முதலாளியால் இராணிப்பேட்டையில் இயங்கும் ஆர்.கே.லெதர்ஸ் என்கிற தனது தோல் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை.
தொழிற்சாலைகளுக்கு புதிதாய் வேலைக்கு வருபவர்களுக்கு உடனடியாக வீடு கிடைக்காது என்பதால் அவர்களை தொழிற்சாலையிலேயே தங்க வைப்பது வழக்கமாம். 2015 சனவரி மாதம் 30-ம் தேதி அன்று வந்து சேர்ந்த அவர்களும் இரவு ஆலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1500 கிமீ தூர நெடுந்தொலைவு தொடர்வண்டிப் பயணக் களைப்பில் இருந்த அவர்கள் அனைவரும் ஆர்.கே லெதர் ஆலையில் தோலுக்கு சாயம் ஏற்றும் உருளைகளுக்கருகில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.கே லெதர் ஆலைக்கு அருகில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு சகதியை சேகரிக்கும் தொட்டியின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து சுமார் 4 டன் வரையிலான நிறை கொண்ட சகதி சுனாமி போல வெளியாகியிருக்கிறது.
விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.
மிதினாபூர் மாவட்டத்தின் வித்யாபூர் சல்பதவானி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான அபீப் கான், அவரது மகன்கள் 25 வயதான அலி அக்பர் மற்றும் 23 வயதான அலி அங்கர், பல்ராம்பூரைச் சேர்ந்த 27 வயதான ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர் 18 வயதான குதூப் கான் மற்றும் அக்ரம், அசியான், ப்யார், ஹபீப் ஆகிய அவர்கள் ஒன்பது பேருடன், தொழிற்சாலை இரவுக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு ஆரணி தாலுகா கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சம்பத் (45) என்பவரையும் சேர்த்து பத்து பேரை பலிவாங்கியுள்ளது இந்தச் சகதி சுனாமி.
சம்பவ இடத்தில் இருந்த 21 வயதான அமீனுல் அலிகான் மற்றும் 50 வயதான ரவி என்ற சூப்பர்வைசர் இருவர் பிழைத்துக் கொண்டனர். வெளியில் ஓடிச்சென்ற தொழிலாளிகள் தகவல் தெரிவித்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்;
போராடி 2 உயிர்களை காப்பாற்றிய தீயணைப்புப் படை வீரர்கள் (படம் : நன்றி thehindu.com)
தொட்டியிலிருந்து வெளியான கழிவுச் சகதி 60 அடி அகல சாலையில் 300 அடி வரை 3 அடி உயரத்துக்கு தேங்கியிருக்கிறது. தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடனும், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தும் அதன் உதவியுடன் நள்ளிரவு முதல் காலை 9 மணி வரை மீட்புப் பணியில் ஈடுபட்டனர்; உயிர் பிழைப்பதற்காக தொழிற்சாலையின் உயரமான சுவரின் மீது ஏறியிருந்த ரவியை மீட்டனர்.
தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கழிவுநீரில் மூழ்கியதாலும், தொடர்ந்து துர்நாற்றம் வீசியதாலும் அவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 10 பேரின் உடல்களையும் ஒவ்வொன்றாக மீட்டனர். உடல்கள் அனைத்தும் சகதியில் சிக்கியதால் தோல்கழிவுகள் ஒட்டியபடி கருப்பு நிறத்தில் காணப்பட்டன.
இந்த கழிவுச் சுனாமி எங்கிருந்து வந்தது?
பச்சைத் தோலை பதப்படுத்தப்பட்ட தோலாக (வெட்புளூ -wet blue) மாற்றும் தோல் தொழிற்சாலைகள் இராணிப்பேட்டை – முத்துக்கடைக்கு கிழக்கில் பெருமளவில் இயங்குகின்றன. பதப்படுத்தப்பட்ட தோலை அழகுபடுத்தப்பட்ட தோலாக (finished leather – ஃபினிஷ்ட் லெதராக) மாற்றும் தொழிற்சாலைகள் இராணிப்பேட்டை சிப்காட் தொழில் வளாகத்தில் பெருமளவில் உள்ளன. அழகுபடுத்தப்பட்ட தோலை பொருட்களாக (காலணி, செருப்பு உள்ளிட்ட) மாற்றும் சில தொழிற்சாலைகளும் ராணிப்பேட்டையில் இயங்குகின்றன.
இவற்றில் முதல் இரண்டு வகை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து அதிக அளவு உப்பு (சோடியம் குளோரைடு), சுண்ணாம்பு, அமிலம் மற்றும் குரோமியம் உள்ளிட்ட இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது. அழகுபடுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து பலவகையான உப்புகள், சாயங்கள், நிறமித் துகள்கள், கொழுப்பு இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது.
1980-களிலும், 1990-களிலும் இந்த கழிவுநீரை பெயரளவுக்குக் கூடச் சுத்திகரிக்காமல் வெளியேற்றி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கின இந்தத் தொழிற்சாலைகள். விவசாயம் பாழ்படுவது, கால்நடைகள் உயிரிழப்பு என அழிவுகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கவே மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் தோல் தொழிற்சாலை முதலாளிகளின் நிதியைக் கொண்டு ராணிப்பேட்டே சிட்கோ தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் (RANIPET SIDCO FINISHED LEATHER EFFULENT TREATMENT COMPANY LTD) டிசம்பர் 6, 1990-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் சுத்திகரிப்பு ஆலை தனியாரின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் முகப்பு
சுற்று வட்டாரத்தில் செயல்படும் பயனியர் லெதர், ஆன்ட்லர் லெதர்ஸ், வசந்த் லெதர்ஸ், ஆர்.கே.லெதர்ஸ், ஐ.வி.லெதர்ஸ், அலெக்கியா லெதர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோல் அழகுபடுத்தும் ஆலைகளின் இரசாயனக் கழிவ நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பல நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது; கழிவுகளிலிருந்து நீர் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, சேறும் சகதியுமான இரசாயனக்கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்படுகின்றன; நாளடைவில் காய்ந்த பிறகு அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றன.
கூழ் போன்ற இந்தச் சகதி பல வகையான நச்சு இரசாயனங்கள் கலந்தது. இதை நிலத்தில் புதைத்தால் அவை நிலத்துக்கடியில் பரவி பல கிலோமீட்டர் தூரம் வரை நஞ்சாக்கி விடும். ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் சகதி மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்க 100 அடி நீளம், 100 அடி அகலம் கொண்ட தொட்டிக்கு 15 அடி உயரத்தில் முக்கால் அடி தடிமனில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளார்கள். இதைத்தான் கழிவு நீர்த்தொட்டி என்கிறார்கள்.
சுத்திகரிக்கப்படும் கழிவுகளை சேகரிக்கும் இடம்.
ஏற்கனவே காய்ந்து போன மலை போல குவிந்துள்ள கழிவுகள் அகற்றப்படாததால் இடமின்மை காரணமாக புதிய கழிவுகளைக் கொட்ட ஆறு மாதங்களுக்கு முன்புதான் தென்பகுதியில் ஒரு சுவர் எழுப்பி உள்ளார்கள். அந்தச் சுவர்தான் தற்போது உடைந்து உள்ளிருந்த கழிவுகள் ஒரே நேரத்தில் வெளியேறி சுனாமியைப் போல சீறிப்பாய்ந்து பத்து உயிர்களை பலிவாங்கி உள்ளது.
சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படும் இடம்
விபத்தா? கொலையா?
அதிக அளவில் கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டதால் சுவற்றில் ஏற்கனவே ஆங்காங்கே கசிவுகள் ஏற்பட்டுள்ளதையும் காண முடிந்தது. கழிவுகள் கசியாமல் இருக்க சுவற்றின் உட்புறமாக கருப்பு நிற பாலிதின் ஷீட்டுகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கசிவுகளைப் பார்த்தாவது எச்சரிக்கை அடைந்திருந்தால் இத்தகைய விபத்தை தடுத்திருக்க முடியும்.
தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இரசாயனக் கழிவு சேற்றில் ஒரு பகுதி.
சுத்திகரிப்பு ஆலையில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர்த் தொட்டியின் சுற்றுச் சுவர் மற்றும் அங்கே அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் காய்ந்து போன கழிவுகள் இவற்றை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. எந்தவித பாதுகாப்பும் இன்றி ஒரு நிலையம் எப்படி இயங்குகிறது? தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது.
தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?
நடந்தது விபத்தல்ல. தெரிந்தே நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை. இதற்குக் காரணமானவர்களை கைது செய்வதோடு மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால் குற்றவாளிகள் அனைவரையும் கொலை வழக்கில் கைது தண்டிக்க வேண்டும்.
இங்கே நடந்த உயிர்ப்பலிக்கு யார் காரணம்?
தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?
சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?
சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?
மிகமோசமாக இயக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்துவதற்கு அனுமதி அளித்து வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காரணமா?
ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?
ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?
அரசு அதிகாரிகளும் அரசு நிர்வாகமும், சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தும் தனியார் நிர்வாகமுமே முதல் நிலைக் குற்றவாளிகள். தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடத்தை ஏற்படுத்தி தராமல் ஆலைக்குள்ளேயே அவர்களை தங்கவைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி இரண்டாம் நிலைக் குற்றவாளி.
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.
பலி வாங்கும் மறுகாலனியாக்கம்
ஆலைகள் தொடங்கினால் வேலை வாய்ப்பு பெருகும்; மக்களிடம் காசு புழங்கும்; அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்; அதுவும் தோல் பொருட்களை செய்து ஐரோப்பியர்களுக்கு ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலாவணி கிடைக்கும் என்று நம்மை ஆளும் அரசுகளும், மேற்கத்திய உலகுக்கு சேவை செய்யும் தரகு முதலாளிகளும் கூக்குரலிடுகிறார்கள். இப்படிச் சொல்லித்தான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளையும் இரசாயனத் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள்.
இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com )
தோல் பதனிடுதல், அழகுபடுத்தல் இவற்றுக்கான ஆலைகள் வெளிப்படுத்தும் இரசாயனக் கழிவுகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் போராட்டங்கள் வலுக்க, அவற்றை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன பன்னாட்டு நிறுவனங்கள். பளபளப்பான தோல் பொருட்களை செய்வித்து மேற்கு நாடுகளுக்கு இறக்குமதி செய்து ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்கின்றன அந்நிறுவனங்கள்.
அவர்களுக்காக நமது மண்ணையும், நீரையும், மக்களின் உயிரையும் பணயம் வைத்து உள்நாட்டில் தொழில் செய்யும் முதலாளிகள் தமது பங்காக கணிசமான லாபத்தை குவித்துக் கொள்கின்றனர். சந்தைப் போட்டியைத் தூண்டி விலைக்குறைப்பு என ஒரு புறமும், உயர்ந்த விலையிலான இரசாயனங்கள், எந்திரங்களை விற்பது என்று மறுபுறமும் அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டையும் சிறுமுதலாளிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.
மேற்கத்திய வசதிக்காக பளபளக்கும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com)
10 தொழிலாளர்களை கொடூரமாக கொன்று குவித்த விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னையில், உயிர்ப்பலி நடந்து 24 மணி நேரத்துக்குள், ஜனவரி 31-ம் தேதி மாலை 6 மணிக்கு 30-வது இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றிருக்கிறது. அதில் ஏற்றுமதி சாதனைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 30 ஆண்டுகளாக இந்திய மண்ணும், நீரும், மக்களும் சிறுகச் சிறுக கொல்லப்பட்டு வரும் சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டையில் வெளியாகும் தொழிற்சாலை கழிவு (படம் : நன்றி http://www.livescience.com/4226-world-10-polluted-places.html )
இந்தியாவின் தோல் துறையின் முக்கியமான உற்பத்தி மையமாக வேலூர் மாவட்டம் உள்ளது. தோல் தொழிற்சாலைகள் கக்கும் கழிவுகளால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீரும் நிலமும் கெட்டுப் போனதால் வேளாண்மை அற்றுப் போனது. நிலத்தடி நீரைக் குடிக்கும் மக்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள்கூட நோயினால் அவதியுறுகின்றன. காற்றும் நஞ்சாகிப் போனதால் நுரையீரல்களெல்லாம் நடுங்குகின்றன.
நூற்றுக்கணக்கான ஆலைகள் குவிந்து இயங்கும் இராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதி ஏரிகளின் நீர் நிலைகளில் முற்கால மன்னர்களின் மனைவிமார்கள் நீராடியது அந்தக் காலம். உலகின் ஆக மோசமான மாசடைந்த நகரங்களில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது இந்தக் காலம்.
இரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் குவிந்துள்ள ராணிப்பேட்டையின் பகுதிகளில் காற்றையே வடிகட்டித்தான் சுவாசிக்க வேண்டும். வடிகட்டிய காற்றுகூட நுரையீரலைத் துளைத்துவிடும் என்பதால் எதிர்காலத்தில் இப்போது குடிநீருக்கு கொடுப்பது போல காற்றைக்கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டி வரும். “காற்று வேண்டுமா காசை எடு; இல்லையேல் ஊரைவிட்டே ஓடு!” என்பதுதான் எதிர்காலமாக இருக்கும். எங்கே ஓடுவது?
இது போன்று விவசாயம் அழிக்கப்பட்டு வாழ்க்கை பறிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் பிற வடமாநில கிராமங்களிலிருந்து சோற்றுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் இயங்கும் நகரங்களை நோக்கி பஞ்சம் பிழைக்க ஓடுகின்றனர். எந்தவித பணிப்பாதுகாப்பும் இன்றி, கொலைக்களங்களாக இயங்கும் தொழில் மையங்களில் தொழிலாளர்கள் பலி கொடுக்கப்படும் சம்பவங்களின் தொடர்ச்சிதான் ராணிப்பேட்டையில் இப்போது நடந்திருக்கும் கொடூர சம்பவம்.
நெஞ்சை உருக்கும் இத்துயரச் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் 30.01.2015 சனிக்கிழமை ராணிப்பேட்டை சிப்காட் பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்தனர். சுமார் 150 பேர் கைதாகி பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாண்டு போனவர்கள் வடஇந்தியர்கள், இஸ்லாமியர்கள் என்பதால் பிற கட்சிகள் இந்த உயிர்க்கொலைகளை அலட்சியப்படுத்துகின்றனரா?
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட உத்தரவிட்டிருக்கிறது. அதில் இணைக்கப்பட்டிருந்த 79 உறுப்பினர் ஆலைகளையும் மூடியிருக்கிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.
சுனாமியை நினைவுபடுத்தும் வெளியேறிய கழிவின் ஒரு பகுதி.
தமது கடமையை புறக்கணித்து, மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோவதற்கு துணை நிற்கும் தமிழக, மேற்கு வங்க மாநில அரசுகள் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சில லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் நிறுவனங்களின் சங்கமும் சில லட்சங்களை அறிவித்துள்ளன. அரசும், முதலாளிகளும் தோல் கண்காட்சிக்கு மட்டும் செலவிடும் தொகையில் ஒரு துளிதான் இந்த நிவாரணத் தொகை.
மக்கள் நலனை பாதுகாக்காத, கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசு உறுப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள், எதிர்த்து வாதிட பல லட்சம் ரூபாய் ஊதியத்தில் முதலாளிகளின் வழக்கறிஞர்கள், ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சில தீர்ப்புகள், அவற்றை அமல்படுத்துவதற்காக பல நூறு கோடி ரூபாய் அரசு மானியம், வெளிநாட்டு சுத்திகரிப்பு நுட்ப நிறுவனங்களின் சுரண்டல், சுத்திகரிப்பு முறையாக நடைபெறுகிறதா என்று கட்டுப்படுத்த வேண்டிய அரசு உறுப்புகளின் ஊழல் என்று அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள், முதலாளிகள் என்று இந்த ஒட்டுமொத்த கட்டமைப்புமே தொடரும் இந்த படுநாசத்தை இணைந்து நடத்துகின்றனர்.
தோல் துறை முதலாளிகளும், அவர்கள் சேவை செய்யும் மேற்கத்திய எஜமானர்களும், குளிரூட்டப்பட்ட வர்த்தக மையத்தில் வணிக பேரங்களை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவர்களது லாபத்துக்காக கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள், தகப்பனையும் இரண்டு மகன்களையும் ஒரே நேரத்தில் இழந்த குடும்பத்தை சென்றடையும்; இரண்டு சகோதரர்களையும் இழந்த குடும்பத்தை சென்றடையும். கொல்லப்பட்டவர்களுக்கு வாய்க்கரிசியாக முதலாளிகளும் அரசும் போட்ட சில லட்சம் ரூபாய்களும் விரைவில் அந்தக் குடும்பங்களை போய்ச் சேர்ந்து விடலாம்.
ஆனால், நம் நாட்டையும், மக்களையும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு அடகு வைத்து தரகு வேலை பார்க்கும் இந்த அரசமைப்புக்கு எதிராக மக்கள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடாத வரை, உயிரின் விலை என்னவென்று குற்றவாளிகளுக்கு உணர்த்தாத வரை, பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுக்காத வரை இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.
மணற்கொள்ளை தோற்றுவிக்கும் பேரழிவு என்ன என்று தெரிந்த போதிலும், குடிநீரின்றி விவசாயமின்றி நாடே பாலைவனமாகிவிடும் என்ற அபாய எச்சரிக்கை கண் முன்னே உண்மையாகி வந்தபோதிலும், எதைப்பற்றியும் அக்கறையோ கவலையோ இல்லாமல், இந்தக் கொள்ளை தொடர்கிறதே ஏன்?
கொள்ளையடிப்பதற்காகவே பதவிக்கு வருகின்ற அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள், ஆறுமுகசாமி, படிக்காசு, கே.சி.பி., பி.ஆர்.பி., வைகுந்தராசன் போன்ற கிரிமினல்கள், காசுக்காக எதையும் விற்கத் தயாராக இருக்கும் ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகாரிகள், மணல் கொள்ளையர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசு, பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு எழுதும் நீதிபதிகள் போன்ற நேர்மையற்ற பலரின் நடவடிக்கைகள்தான் மணற்கொள்ளை தொடர்வதற்குக் காரணம் என்று பலர் எண்ணுகிறார்கள்.
இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தண்ணீரை விற்பதும், மணலை விற்பதும், மலைகளை விற்பதும் கண்ணில் பட்ட இயற்கை வளங்களையெல்லாம் வெட்டி விற்பதும் முன்னெந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நடப்பது ஏன்? ஏனென்றால், இந்தக் கொள்ளையைத்தான் வளர்ச்சிக்கான கொள்கை என்று மத்திய, மாநில அரசுகள் அமல் படுத்துகின்றன. எந்த விதமான ஆக்கபூர்வமான உற்பத்தி நடவடிக்கையும் இல்லாமல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து விற்பதே ஒரு தொழிலாகவும், அதுவே முன்னேற்றத்துக்கு வழியாகவும் அரசால் சித்தரிக்கப்படுகிறது.
மணற்கொள்ளையை எதிர்த்துப் போராடியதற்காக வெட்டிக் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் – மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கார்த்திக் மற்றும் ராஜேஷ். நம்பியாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையை அம்பலப்படுத்திப் போராடியதால் கொல்லப்பட்ட திசையன்விளையைச் சேர்ந்த சதீஷ்குமார் (கோப்புப் படங்கள்)
தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்றால் அது தொழில் வளர்ச்சி, ஏரி குளங்களை அழித்துப் பல மாடி கட்டிடங்கள் கட்டினால் அது ரியல் எஸ்டேட் வளர்ச்சி, இரும்பையும் பாக்சைட்டையும் ஏற்றுமதி செய்தால் அது அந்நியச் செலாவணி ஈட்டும் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் அது பொருளாதார முன்னேற்றம் – இப்படிப் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கு காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்கி விட்டு, அவற்றை வெட்டும் “வேலைவாய்ப்பு” மக்களுக்குக் கிடைப்பதைக் காட்டி இதுதான் நாட்டின் வளர்ச்சி என்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
இந்த அநீதியை விவசாயிகளும் மீனவர்களும் பழங்குடி மக்களும் நாடு முழுவதும் எதிர்ப்பதால், மக்களைக் கட்டாயமாக அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. எனவே, நாட்டின் முன்னேற்றத்துக்காக என்ற பெயரில் ஆளும் வர்க்கம் வகுத்திருக்கின்ற இந்தக் கொள்கைதான் கொள்ளையர்களை உருவாக்குகிறது. வளர்ச்சி என்ற பெயரில் அரசு முன்தள்ளும் இந்தக் கொள்கையைத் தடுத்து நிறுத்தாதவரை இத்தகைய கொள்ளையர்கள் உருவாவதைத் தடுக்கவியலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண் டும்.
மணல் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்றபொழுது, மணற் கொள்ளையர்களால் டிராக்டரை ஏற்றிக் கொல்லப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசு கான்ஸ்டபிள் கனகராஜ் (கோப்புப் படம்)
இயற்கை வளக்கொள்ளை என்பது அரசே நடத்தும் கொள்ளை. நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, மத்திய-மாநில அமைச்சர்கள் இலஞ்சம் வாங்கிக் கொள்கின்றனர். தமிழகத்தின் மணற்கொள்ளையோ நேரடியாக அரசாங்கத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் நடத்தப்படுகிறது.
மாநில முதல்வர் தான் இந்த மணல் மாஃபியாவின் தலைவர். அதற்கு கீழே உள்ளவர்கள் ஏஜென்டுகள். அமைச்சர், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சிகள், கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசு, ஊடகங்கள், சாதிக்கட்சித் தலைவர்கள், உள்ளூர் கையாட்படையினர் என இந்தக் கொள்ளைப் பணம் எல்லா மட்டங்களிலும் பாந்து பரவுகிறது. பணம் வாங்க மறுப்பவர்கள், மணற்கொள்ளையை எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.
ஓட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை, எதைச் சொல்லியாவது ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்து விட்டால், 5 ஆண்டுகளுக்கு இந்த நாடே தங்களுக்குச் சொந்தம் என்றும், எந்த பொதுச்சொத்தையும் தமது விருப்பப்படி விற்க உரிமை உண்டென்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோதமாக இதைச் செய்கிறார்கள். அல்லது இதற்குத் தோதான சட்டத்திருத்தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள்
அவர்கள் தாங்களே இயற்றிய சட்டங்களை மீறுகிறார்கள். 35 அடி தோண்டி மணலை அள்ளிவிட்டு, 3 அடிதான் தோண்டியிருக்கிறோம் என்று சாதிக்கிறார்கள். இதனைக் கேள்விக்குள்ளாக்கினால், இது மூன்றடியா முப்பதடியா என்று முடிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு இல்லை, அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ, எந்த தவறும் நடக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.
பொதுச்சொத்தை திருடுவது மட்டுமல்ல, அதைத் தட்டிக் கேட்கும் மக்களிடம் “அப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று இவர்கள் சவால் விடுகிறார்கள். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் அனைத்து விவகாரங்களிலும் நடப்பது இதுதான். இவர்களிடமே மனுக்கொடுத்து மணற்கொள்ளையைத் தடுக்கவியலுமா? ஒருக்காலும் முடியாது.
“பொதுச்சொத்துக்கு நீ உரிமையாளன் அல்ல, மக்களின் சொத்தை விற்கும் அதிகாரம் உனக்கு கிடையாது. இது மக்கள் சொத்து. சட்டம் சோல்கின்றபடியே கூட அரசும் அரசாங்கமும் இதன் காப்பாளர்களேயன்றி உரிமையாளர்கள் அல்ல. உரிமையாளர்கள் மக்கள்தான்” என்று அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற பிரிட்டிஷ்காரனிடம் கொள்ளையை நிறுத்துமாறு நாம் மனு கொடுக்கவில்லை. அவனை வெளியேற்றவேண்டும் என்று விடுதலைப் போராட்டம் நடத்தினோம். இப்போது சுதந்திர நாடு என்கிறார்கள். ஜனநாயகம் என்கிறார்கள். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எனப்படுவோர் மக்கள் ஊழியர்கள் என்கிறார்கள். நடப்பது என்ன? மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டுள்ள வேலைக்காரர்களான இவர்கள், மக்களை ஏறி மிதிக்கிறார்கள். அதிகாரம் செய்கிறார்கள். மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.
களத்தூர் கிராமப் பகுதியில் ஓடும் பாலாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையைத் தடுக்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு முழக்கமிடும் பொதுமக்கள் (கோப்புப் படம்)
பொதுச்சொத்துகளையும் பாதுகாப்பவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் அவற்றை விற்பதில் முன் நிற்கிறார்கள். கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்தும் கணவனின் அதிகாரத்துக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க முடியுமா? நாட்டின் வளங்களைக் கூட்டிக்கொடுக்கும் இவர்களின் ஆணைக்கு மக்கள் அடிபணிய முடியுமா?
மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்கள் இவர்களிடம் மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை என்று எண்ணுகிறார்கள். எல்லோரும் திருடர்கள் என்பது உண்மைதான் என்றாலும், தப்பித்தவறி யாராவது ஒரு நேர்மையான அதிகாரி இருந்து மணல் கொள்ளையைத் தடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறார்கள்.
அப்படி அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் ஒரு சிலர்தான் லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார்கள். தாசில்தார் முதல் போலீசு ஏட்டு வரை பலர் மணற்கொள்ளையர்களால் கொல்லப்படவில்லையா? நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம் கிரானைட் கொள்ளையை விசாரிக்கிறார். அவருடைய அறையிலேயே உளவுக்கருவியைப் பொருத்தி வேவு பார்க்கிறது அரசு. சகாயத்துக்கு அருகிலேயே நிற்கும் உளவுத்துறை அதிகாரிகளும், கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சகாயத்திடம் புகார் கொடுப்பவர்கள் பெயரைக் குறித்துக் கொண்டு பி.ஆர்.பி.க்கும் அமைச்சர்களுக்கும் உளவு சோல்கிறார்கள்.
மலைக்குன்றுகளைக் காணவில்லை, கண்மாய்கள், குளங்கள், விளைநிலங்களைக் காணவில்லை. இவற்றை காணாமல் போகச் செய்ததில் கலெக்டர் முதல் தலையாரி வரை, முதல்வர் முதல் ஊராட்சி தலைவர் வரை அனைவருக்கும் பங்கு உண்டு. சகாயத்தின் அறிக்கை இவர்களை என்ன செய்து விடும்? தாதுமணல் கொள்ளை குறித்த ககன்தீப் சிங் பேடி அறிக்கை என்ன ஆனது? மொத்த அரசுமே ஒரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருக்கும்போது சகாயத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்போவது யார்? நீதிமன்றமா?
முதலில் கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளை அனைத்தையும் விசாரிக்குமாறு கூறிய சென்னை உயர் நீதிமன்றம், கிரானைட் விவகாரத்தை மட்டும் விசாரித்தால் போதும் என்று மற்றவற்றை மர்மமான முறையில் கைவிட்டு விட்டது. அரசாங்கமோ சகாயத்துக்கு அலுவலகம் ஒதுக்கவே மறுக்கிறது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை எள்ளி நகையாடுகிறது. பெரும் சவடால் அடித்த நீதிமன்றமோ அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பின்வாங்குகிறது.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் கார்மாங்குடி மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய மக்களிடம், “போராட்டத்தைக் கைவிடுங்கள், நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்” என்று போலீசு – வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். நீதிமன்றத்தின் மீது மணல் கொள்ளையர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. பொக்லைன் வைத்து மணல் அள்ளுவதை அனுமதிக்கும் தீர்ப்புகளை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ளன. தடையில்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் நோக்கத்துக்காகவே பசுமைத் தீர்ப்பாயம் என்ற சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்துக்குப் போனால் என்ன நடக்கும் என்பது ம.உ.பா.மைய வழக்குரைஞர்களுக்கு தெரியுமாதலால், அதிகாரிகள் பின்னிய சதிவலையில் அவர்கள் சிக்கவில்லை.
கிரானைட் குவாரிக்கு நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் கொள்ளையர்களால் தனது கை வெட்டப்பட்டதை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.
நீதித்துறை, கட்சிகள், அதிகாரிகள் உள்ளிட்ட இந்த மொத்த அரசமைப்பும் ஆட்சி செய்யும் அருகதையை இழந்து விட்டது. இந்த அரசமைப்பு தோற்றுவிட்டது. இது ஜனநாயகம் என்பது பொய். இது ஊடகங்களும் அறிவுத்துறையினரும் திட்டமிட்டே உருவாக்கும் ஒரு மாயை. இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இந்த அரசமைப்பு எதையும் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, காடுகள் மீதும் கடலின் மீதும் நீர்நிலைகளின் மீதும் மேய்ச்சல் நிலங்களின் மீதும் அவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமையையும் சூறையாடுகிறது, திருடுகிறது. எதிர்த்துக் கேட்பவர்களைக் கொன்று போடுகிறது. இதுதான் மன்மோகன் சிங்கும், மோடியும், ஜெயலலிதாவும் முன்வைக்கின்ற வளர்ச்சிப்பாதை. மக்கள் சொத்தைக் கொள்ளையிடுவதென்பது இதன் வழிமுறை.
இப்படிப்பட்ட ஒரு அரசமைப்பை ஜனநாயகம் என்று அழைப்பது அயோக்கியத்தனமில்லையா? இந்த அமைப்பின் அதிகாரத்தின் கீழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற முடியும் என்று நம்புவது மடமையில்லையா?
மக்கள் தமது வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றாலே, தங்களது சொந்த அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆற்று மணலாகட்டும் தாது மணலாகட்டும் அவை மக்களின் உடைமைகள். ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளே மேற்கொள்வது ஒன்றுதான் இந்தப் பேரழிவைப் தடுப்பதற்கான ஒரே வழி. அந்தந்த வட்டாரத்து விவசாயிகள் தமக்கான பேராயம் ஒன்றை நிறுவிக்கொண்டு தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.
மணல் எடுக்கலாம் என்று பொதுப்பணித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை ரத்து செய்யுமாறு மணற்கொள்ளையர்களின் கூட்டாளிகளான அதிகாரிகளிடம் மன்றாடுவது தவறு. மனுக்கொடுப்பதும், உண்ணாவிரதம் இருப்பதும் பயனற்ற நடவடிக்கைகள். அவர்களுடைய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
மணல் குவாரிக்குத் தடை விதித்து விவசாயிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தங்களது உத்தரவை அமல்படுத்தவும், மணல் மாஃபியாவுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கவும் பாதுகாப்புக் குழுக்களை கிராமம் தோறும் கட்டவேண்டும். தமிழகம் முழுவதும் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் தமக்குள் ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது நடக்க முடியாத கனவல்ல. மக்கள் போராட்டத்தின் வலிமையால் சுமார் ஒரு மாத காலமாக கார்மாங்குடி மணல் குவாரி மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு மணல் குவாரியையும் நாம் மூட முடியும். இந்தப் போராட்ட முறை எந்த அளவுக்கு எல்லா இடங்களுக்கும் பரவுகிறதோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் ஈட்ட முடியும்.
– சூரியன் __________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
__________________________________