தம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும் – குறிப்பாக, இந்து மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது.

அனாதிகாலம் தொட்டே இந்து மதம் உலகுக்கு ஆன்மீகத்தை அளித்தது என்ற புரட்டை – புனிதமுலாம் பூசப்பட்ட மடமையை – நமது பேராசிரியர் உடைத்து நொறுக்குகிறார். இந்திய ஆதி பொருள்முதல் வாதத்தில் இருந்து ஆன்மிகக் கற்பனைகள் எவ்வாறு தோன்றின? ஏன் தோன்றின? என்பன போன்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமாகவும் – தத்துவ அடிப்படையிலும் விளக்கி மதத்தின் முறிவு சமதர்ம சமூக உருவாக்கக் கட்டத்தில் சர்வ நிச்சயம் என உறுதிபட உரைக்கிறார்.

காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியதை எதிர்த்த விடுதலைக்கான போர் இந்திய தேசியத்தை அனைத்துத் துறைகளிலும் கட்டமைக்க வேண்டிய பணியை தேசிய இயக்கத்துக்கு வழங்கியது. இந்திய தேசியத்தின் இருப்புக்கான நியாயங்களை அது வழங்க வேண்டி வந்தது. தத்துவத் துறையிலும், வரலாற்றுத் துறையிலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இது பெரிதும் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசியத்தின் பெருமிதங்களை முன்வைத்தபோது ஆன்மிகம் அதன் பெருமைகளில் ஒன்றாக முன்னிறுத்தப்பட்டது. சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா போன்ற அறிஞர்கள் தத்துவத் துறையில் இதனை நிலைநாட்டப் பாடுபட்டனர். இயல்பாகவே, அவர்களுடைய முயற்சிகள் இந்திய அறிவியல் மரபுக்கும், பொருள் முதல் வாத மரபுக்கும் (நாத்திக மரபு) எதிரானவையாகவே முடிந்தன. குடும்பம், ஒழுக்க நெறிகள், பண்பாடு போன்றவற்றில் காணப்படும் இந்தியத் தன்மைக்கு ஆன்மிகமே அடிப்படை எனவும், நாத்திகம் அவற்றுக்கெல்லாம் எதிரானது எனவும் மதவெறிக் கூச்சல் அதனையொட்டிப் பரப்பப்பட்டது.

இந்தியத் தத்துவஞானத்தின் வரலாற்றில் கருத்துமுதல் வாதத்துக்கும் – பொருள்முதல் வாதத்துக்கும் இடையிலான போர் – ஆன்மிகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையிலான ஓய்வறியாப் போர் நடந்துவந்த வரலாற்றை எடுத்துரைத்து இந்தியப் பொருள்முதல் வாதத்தின் மேன்மையை நிலைநாட்ட வேண்டிய அவசியம் எழுந்தது.

அதனைத் தத்துவஞானத் துறையில் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா தனியராய் நின்று சாதித்தார். இந்திய மார்க்சியத்தை வளப்படுத்தினார். இந்தியப் பகுத்தறிவு இயக்கத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தார். வரலாற்றுத் துறையில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, இர்பான் ஹபீப் போன்ற மார்க்சிய அறிஞர்கள் அனைவரும் ஆற்றிய சாதனைகளுக்கு ஈடானது அது.

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா (பிறப்பு: 19-11-1918; மறைவு: 8-5-1993) இந்திய அறிவியல் வரலாற்றுக்கும், தத்துவஞானத்துக்கும் அளித்த மேதமை மிகுந்த பங்களிப்பு இல்லாமல் முற்போக்கு இயக்கம் தனக்கான கருத்தியல் கருவியை வளப்படுத்திக்கொள்ள இயலாது…

… மதம் குறித்த மார்க்சியத்தின் அணுகுமுறை, இந்திய மதம் / மதங்கள் தோன்றியதற்கான சமூக – பொருளியல் மற்றும் கருத்தியல் அடிப்படைகள், வேத மதம் பற்றிய மாயை, ஆதி பொருள்முதல் வாதத்தின் அழிவுக்கும் – ஆன்மிகத்தின் எழுச்சிக்குமான பொருளாயத, வரலாற்றுக் காரணிகள், மீமாம்சம் / பௌத்தம் போன்றவை ஆன்மிக வாதத்துக்குள் கொண்டு வரப்பட்டதன் வரலாறு முதலிய பலவும் இந்த நூலில் மிக எளிமையாக – ஒரு சாதாரண வாசகன் புரிந்து கொள்ளும் வரையில் “உரையாடல்’ மொழியில் சொல்லப்படுகிறது.

இந்த நூலைப் பயில்வதற்கு உதவியாக சில குறிப்புகளை இங்குத் தரவேண்டிய அவசியம் உள்ளது. தத்துவம் மட்டுமல்லாது தொல்லியல், மானுடவியல் போன்ற துறைகளின் துணையோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளதால் அத்துறை சார்ந்த சொல் வழக்குகளை அத்துறைகளின் சொல் வழக்குகளாகப் புரிந்துகொண்டு பயில்வது அவசியமாகும். அதேபோல, மாயை, மாய வித்தை போன்ற சொற்களை அவற்றின் இன்றைய புரிதல் அடிப்படையில் அல்லாது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் தத்துவப் புரிதல் அடிப்படையில் புரிந்துகொண்டு பயில்வது மிகவும் அவசியமாகும். இல்லையேல், மதம் குறித்த இந்த உரையாடலைக் கொச்சைப்படுத்திப் புரிந்துகொள்ளும் அபாயம் ஏற்படும். இந்தப் பொருளைப் பற்றி மேலும் பயில்வதற்கான நூல் பட்டியலாகவே கடைசியில் இணைக்கப்பட்டுள்ள நூல் பட்டியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நூல்களைப் பயில்வது மதம் குறித்த மார்க்சிய அறிதலுக்கு மேலும் துணை புரிவதாக அமையும். (நூலின் பதிப்புரையிலிருந்து)

படிக்க:
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

ஒரு காலத்தில் தவிர்க்கவியலாமல் தோன்றிய மதம் இறுதியில் மறைந்தே தீரவேண்டும். நமது விவாதத்துக்கு வசதியாக நாம் இதனை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலாவதாக, மதத்திற்கு உறுதியான ஒரு துவக்கம் உள்ளது. இரண்டாவதாக, அது உதிர்வதைத் தவிர அதற்கு வேறு எதிர்காலம் இல்லை. முதலாவது அம்சத்தை நாம் இரு கட்டங்களாக விளக்கலாம். நாம் மதம் என்றழைப்பதை மனிதகுலம் அறியாத காலம் ஒன்று இருந்தது. அது வர்க்கங்களாகப் பிளவுபடுவதற்கு முந்திய தொல்குடி சமுதாயமாகும். காட்டுமிராண்டி மனிதர்கள் உலகின் சில பகுதிகளில் இன்னமும் வசித்து வருகின்றனர்.

வர்த்தகர்களும், தொண்டு நிறுவனங்களும் இல்லாது இருந்த இவர்களிடம் மதம் கிடையாது. மதத்திற்குப் பதிலாக இவர்கள் மாயவித்தைகளை கடைபிடித்து வந்தனர். வரலாற்றுக்கு முந்திய சமுதாயத்தை நாம் உள்நோக்கும்பொழுது அங்கு மதத்திற்குப் பதிலாக மாயவித்தை இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக, வர்க்கத்துக்கு முந்திய சமுதாயத்தில் மனிதன் இதே நிலையில்தான் இருந்து வந்தான். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்நிலையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். தமது குறைந்தபட்ச தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே அதிகபட்சமாக உழைக்க வேண்டியிருந்தது.

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா.

உபரி எதுவும் இல்லாததால்தான் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்கள், மற்றொரு பிரிவினரின் உழைப்பைக் கொண்டு வாழ்வது சாத்தியமில்லாமல் இருந்தது. இத்தகைய எளிமையான உற்பத்தித் திறனைச் சார்ந்து வாழவேண்டிய, ஆதரவற்ற கட்டத்தில் மனிதன் தனது உண்மையான தொழில்நுட்பத்துக்கு மாறாக, மாயையான ஒன்றின் தேவையை உணர்ந்தான். அதுவே மாயவித்தை ஆகும்…

… உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக மனிதன் தனது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடுதலாக ஒரு கட்டத்தில் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றான். அதாவது உபரியாக உற்பத்தி செய்யத் தொடங்கினான். இது நடைபெற்றபொழுது மனிதன் நாகரிகத்தின் வாசற்படியை எட்டினான். ஆனால், இன்னும் முழுமையான நாகரிகத்துக்கு வரவில்லை…

… சமூக உபரியை ஆரம்ப நிலையிலுள்ள நகர மையங்களுக்குக் கொண்டு செல்ல சில கருவிகள் தேவைப்பட்டன. இதற்குத் தேவையான எல்லாவிதமான கருவிகளையும் பரிசீலித்த நாம், மிகவும் சாத்தியமான, சாத்வீகமான மதம் என்ற ஒரு சித்தாந்தக் கருவி உருவானதைக் கண்டறிந்தோம். வெற்றிடத்திலிருந்து இது உருவாகவில்லை. மாயத் தன்மையுடன் விளங்கிய  புராதன மாயவித்தையிலிருந்து திறம்பட உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது பல்வேறு தாய் தெய்வங்களும், கடவுள்களும் உருவாக வழிவகுத்தது…

… இத்தகைய தாய் தெய்வங்களும், கடவுள்களும் நேரடி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பொருட்களை அளித்ததாக அவர்கள் கருதினர். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்காகச் செயல்பட, அவர்களது விவகாரங்களைக் கவனிக்க இகலோக அல்லது பூவுலகப் பிரதிநிதிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டனர். எனவே, அவர்களிடமிருந்து மதகுருமார் வர்க்கம் என்ற சமூகப் பிரிவுத் தோன்றியது. அவர்கள் மட்டுமே வாழ்வின் ரகசியங்களை அறிந்திருந்தனர். இவ்வாறுதான் மதம் உருவாக்கப்பட்டது அல்லது செயல்பாட்டுக்கு வந்தது. (நூலிலிருந்து பக். 181-183)

நூல்: மதமும் சமூகமும்
தமிழில்: டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா
தமிழில்: இரா.சிசுபாலன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 044 – 2625 1968 | 2635 9906

பக்கங்கள்: 202
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க