சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கிற விஷயம் முதலில் எடுத்துக்கூறவேண்டியது அவசியமல்லவா? அதற்குமுன் என்னைப் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா என்பது விளங்கும்.

எனக்குச் சிறுவயது முதற்கொண்டே ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுசரிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக்கொண்டிருந்திருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ, தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்கமாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.

எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதியையோ, மதத்தையோ கடவுகளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னமும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பலதடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன்; கண்டுபிடிக்க முடியவே இல்லை. (நூலிலிருந்து பக்.3-4)

நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புத்தகங்களையோ படிப்பதில்லை என்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்பந்தமாக உள்ள கதைகளோ சரித்திரங்களோ சதா சர்வகாலம் எங்கள் வீட்டில் இருசமய ”பக்தர்”களாலும் காலாட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன்? பணம் வந்து குவியும்போது தர்மம் செய்து தர்மப்பிரபு பட்டம் வாங்க வேண்டாமா? ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்துகிடப்பார்கள். என் தாயார் இவர்கள் அளப்புகளை அதக ”பக்தி சிரத்தை” யுடன் கேட்டுக் கொண்டே இருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்பந்தமான விஷயங்கள் – புராண சம்பந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும். அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும், அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒருவிதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னை ஒரு ‘கெட்டிக்காரப் பேச்சுக்காரன்’ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சொல்லுமளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் தகப்பனார் நான் இப்படி ”விதண்டாவாதமான” கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படிப் புத்தியாய்ப் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சியுண்டு.

இந்தச் சம்பவங்கள்தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். (நூலிலிருந்து பக்.8-9)

படிக்க:
காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !
ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

நிற்க, ஜாதி – மதக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும், கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான கவலையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான்தான் செய்யவேண்டுமென்றோ, அதற்காகத்தான் இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை. என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாய் உயிர்வாழுகின்றோம். எப்படியோ உயிர்வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது, சோம்பேறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்கு சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை, முடிவுகளைத் தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும்வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத்தகுந்நிலை எதுவோ அதுவே மேற்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால், (இருக்கிறதாக) நான் நினைத்துக் கொண்டிருப்பதால் அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ, அதை செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.

நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால்  நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்துதானே ஆக வேண்டும். ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் – இதை அதாவது, ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானது, முடிவானதுமான வேலையென்று இறங்கிவிட்டேன். இந்த எண்ணத்தின் மீதே ‘சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பித்தேன்.

இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் பெரிதும் மறைந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும். தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது, பண்டிகைக்காக ஓய்வெடுத்துக் கொண்ட மக்கள் பலர்கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ, விளையாடும் போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவது போல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் இருந்துதான் தீரும். ஆகையால் மனிதனுக்கு எந்த நிலையிலும் வேலை, கவலையுணர்ச்சி, சுக துக்கம் இருந்தே தீரும். அதை உத்தேசித்தே இந்த வேலையை மேற்கொண்டேன். (நூலிலிருந்து பக்.11-13)

நூல் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ?
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி: 8428 455 455
மின்னஞ்சல்: periyarbooks.in@gmail.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 8.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க