ராயல் என்ஃபீல்டு ஆலையில் வாகன சோதனை தொழிலாளர்களுக்கோ வேதனை !
கம்பீரமாகவும் கண்ணை கவரும் பல வண்ணங்களில் சாலைகளில் கடந்து செல்லும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரு சக்கர வாகனத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இந்த வாகனத்தின் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரகடம் தொழிற்பேட்டையில் இயங்கி வருகின்றது. இங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள்.
கடந்த 18.10.19 அன்று டெஸ்ட் டிரைவிங் என்ற அடிப்படையில் வாகனத்தை சோதித்த போது நடந்த விபத்தில் NEEM தொழிலாளி ஜீவாவின் வலது கால் முறிந்து போனது. குறிப்பாக காலின் முட்டி பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் வைக்கப்பட்டுள்ளது. முழங்காலில் எலும்பு உடைந்திருக்கின்றது அதற்கு (ஸ்குரு போட்டு இணைத்து ) கட்டு போடப்பட்டுள்ளது.
விபத்து குறித்து நிர்வாகத் தரப்பில், ” டெஸ்ட் டிரைவிங்க்காக வண்டியை குறிப்பிட்ட வேகத்தில் ஒட்டிச் செல்லும்போது நாய் குறுக்கே வந்து விட்டதால் எதிர்பாராமல் இந்த விபத்து ஏற்பட்டு விட்டது” என்கிறார்கள். காயமடைந்த தொழிலாளி ஜீவா படப்பை பகுதியில் உள்ள சாய் என்கிற தனியார் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து என்பதே எதிர்பாராமல் நடப்பதுதான். ஆனால், ஏற்கெனவே நடந்த விபத்துகளில் இருந்து பெற்ற படிப்பினையின் அடிப்படையில்தான் தகுந்த முன் எச்சரிக்கையும் வேகத் தடைகளும் ஏற்படுத்தி விபத்தைத் தடுக்க முனையும் அரசின் அறிவிப்புகளை நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளிலும் குறுக்கலான மலை பாதைகளிலும் பார்க்கின்றோம்.
அப்படியான அனுபவம் நிர்வாகத்திற்கு இல்லை என்று சொல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது. ஏனெனில், இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விபத்து ஏற்பட்டு கை கால்கள் முறிந்து போவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. சென்ற மாதம் கூட ஒரு நிரந்தர தொழிலாளியின் கை உடைந்திருக்கின்றது. ஆக இது போன்ற விபத்துகள் ஏற்படுவதற்கான அடிப்படையான காரணம் என்ன ? ஷிப்ட் ஒன்றுக்கு 500 – பைக்குகள் தயாராகின்றது. இந்த 500 பைக்கை 10 பேர் தலா 50 பைக்கை டெஸ்ட் செய்ய வேண்டும். டெஸ்ட் செய்வதென்றால் ஒவ்வொரு வாகனத்திலும் உள்ள குறைபாட்டை கண்டறிய வேண்டும்.
வேகம், பிரேக், கிளர்ச்சி, கியர் ஆகிய ஒவ்வொன்றின் செயல்பாட்டை அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சோதிக்க வேண்டும். மேலும் விசாலமான இடத்தில் 4 – 5 கி.மீ. துரம் ஒட்டி பார்ப்பது என்று இல்லாமல் ஒன்றறை கிலோமீட்டர் துரமே உள்ள சாலையில்தான் இந்த சோதனையும் இலக்கையும் எட்டவேண்டும். அதாவது விபத்து ஏற்படுவதற்கான வேலை சுமையும் அதற்கான சூழலை கொடுத்து விட்டு அதனை விபத்து என்று சொல்வதே மோசடிதான்.
ஒவ்வொரு ஆலையின் உற்பத்தி வளாகத்தில் SAFETY FIRST WORK MUST என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். அதாவது வேலையின் போது பாதுகாப்புதான் முதன்மையானது என பீற்றிக் கொள்வார்கள். ஆனால் நடப்பதோ TARGET FIRST SAFETY NEXT என்பதுதான் யதார்த்த உண்மையாகும். முதலாளித்துவம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தரம் நேர்த்தி விலை குறைவு என்பதற்கு பின்னால் விபத்து என்ற பெயரில் ஜீவா போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உடலின் பாகங்களை இழந்து பலரின் உயிரும் பறிக்கப்படுகின்றது.
படிக்க:
♦ ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!
♦ கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
சான்றாக சாலை விபத்தில் ஒருவர் இறந்தாலோ விபத்தில் கை – கால்களை இழந்தாலோ பெயரளவில் இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி நட்ட ஈடு கோருகின்றோம். ஆனால் ஜீவாவின் விஷயத்தில் நடந்தது என்ன ? அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பவரை ஸ்டெர்ச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து படுத்தபடியே கை விரலால் பிங்கர் பிரிண்ட் வைத்து சம்பந்தப்பட்ட தொழிலாளி குணமாகி ஆலைக்கு வந்து விட்டார். பிறகு சொந்த காரணங்களுக்காக வேலையை விட்டு நின்று விட்டார். என்ற சதியுடன் நிர்வாகம் செயல்படுவதை புரிந்து கொண்டு தொழிலாளர்களின் எதிர்த்த பிறகே கூடுதலாக இரண்டு நாள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
நிர்வாகம் என சொல்லும் போது ராயல் என்ஃபீல்டு நிர்வாகத்தை மட்டும் அல்ல NEEM ஸ்கீமில் தொழிலாளர்களை மூன்று வருட ஒப்பந்தத்தில் நிர்வகிக்கும் TVS –குழுமத்தையும் சேர்த்துதான் சொல்கின்றோம். (இந்த TVS –குழுமம் ஹூண்டாய் செயின்ட் கேபின் அசாகி இந்தியா இன்னும் பல் வேறு ஆலைகளில் குறிப்பிட்ட துறைகளை அவுட்சோர்சிங் அடிப்படையில் ஆயிரக்கணக்காண ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு வேலையில் ஈடுபடுத்தி வருகின்றது.)
இந்நிறுவனத்தின் சூப்பர்வைசர் சிவா என்பவர் பெயருக்கு பார்த்து விட்டு பிறகு மருத்துவமனை பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் குவாலிட்டி ( QUALITY ) அதிகாரியான நவீனுக்கு இந்த நிகழ்வு கொசுக்கடிக்கு ஒப்பனாது. வாகனத்தின் QUALITY – விட மனித உயிர் ஒன்றும் மதிப்பு வாய்ந்தது இல்லை என்ற முதலாளித்துவ நியதியை தவறாது கடைபிடிப்பவர். எப்படி என்கிறீர்களா ? பாதிக்கப்பட்ட தொழிலாளியிடம் தவறியும் போன் மூலம் கூட விசாரிக்கவில்லை.
நாம் கடைகளில் செல்போனோ தொலைக்காட்சியோ வாங்குவது என்றால் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப திட்டமிடுகின்றோம். ஆனால் ஆலையில் நடப்பது என்ன ? ஒரே வேலையை நான்கு விதமான தொழிலாளர்கள் கொண்டு அதாவது நான்கு விதத்தில் உழைப்பை விலை பேசி உற்பத்தியை நடத்தும் முதலாளித்துவம் உழைப்புக்கேற்ற கூலியை மறுக்கும். மறுபுறம் பொருளின் தரத்திற்குகேற்ப விலை என்று சோல்வதே மோசடிதான்.
காண்டிராக்ட் தொழிலாளி, NEEM – தொழிலாளி, CTA தொழிலாளி, (அதாவது கம்பெனி அப்ரெண்டீஸ்) இவர்கள் யாருக்கும் தொழிற்சங்க உரிமை கிடையாது. குறைந்த பட்சம் ஊதிய சட்டத்தின்படி ஊதியம் இல்லை. தொழிலாளர் சட்டத்தின் படியான பலா பலன்கள் கிடையாது. குறிப்பாக வேலை நிரந்தரம் கிடையாது. அப்படியென்றால் அடிமைகள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதற்காகத்தான் நாகரிகமான பெயரை வைத்து தொழிலாளர்களை ஏய்க்கின்றார்கள். இவர்களை தவிர்த்து நிரந்தர தொழிலாளர்கள் என்ற சொற்ப பிரிவும் அருகி வருகின்றது. இந்தப் பிரிவினை சட்டப்படியானதுதான் ஒன்றும் செய்ய முடியாது. இழப்புகள் வந்தால் நாம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இளம் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமாக அன்றாடம் பதியவைக்கப்படுகின்றது.
கன்வேயரின் ஓயாது இயக்கத்தின் ஒவ்வொரு வினாடியும் உழைப்பு சுரண்டலில் மையம் கொள்கின்றது. தொழிலாளர்களின் இயற்கைத் தேவையான தண்ணீர் – தேநீர் குடிக்க உணவு உன்ன இதற்கே நேரம் சரியாக கொடுக்காத போது தொழிலாளர்கள் இயல்பாய் சிந்திக்கும் திறன் அறுத்தெறியப்படுகின்றது இந்நிலையில் நிர்வாகத்தால் தனது வேலை குறித்து சொல்லப்படும் விளக்கங்கள் பிற வியங்கள் என… இவையெல்லாம் சரிதானா என சோதித்து பார்க்கும் திறனை இழக்கும் நிலைக்கு தொழிலாளர்களை தள்ளுகின்றது முதலாளித்துவம்.
குறிப்பாக NEEM – தொழிலாளி CTA தொழிலாளி ஆகிய பிரிவனர் 20 – 23 வயதுடைய இளம் தொழிலாளர்கள். இளமைக்கே உரிய துடிப்பு கிராமபுறத்தில் வந்திருப்பதால் கஷ்டத்தை மனமுகந்து ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் ஆகியவை தங்கள் மீதான அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள செய்கின்றது.
இவைகளில் இருந்து விடுபட்டு தொழிலாளர்கள் சிந்திக்க தொடங்கும் நேரம் அதற்குள் 1 – 2 வருடம் ஆக வேலையும் பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதும் அடுத்த செட்டு ஆலைக்குள்ளே நுழைவதும் இவர்களுக்கும் அதே நிலை. ஒரு செடி நட்டு வேர் பிடிக்கும் நிலையில் பிடுங்கி எறியப்படுவதை போலத்தான் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். நிறுவனம் வழங்கியிருக்கும் வேலை தன்னை வளப்படுத்த அல்ல என்பதை கரு வடிவில் உணரும் தருவாயில் வெளியேற்றப்படும் நடைமுறை வித விதமான முறையில் அரங்கேற்றப்படுவதால் முதலாளித்துவத்திற்கு எதிரான கோபம் செயலாக மாறாமல் மடைமாற்றப்படுகின்றது.
இது போன்றுதான் தொழிலாளர்களை வழி நடத்த வேண்டும் இதற்கு கேற்ப சட்டங்களை மாற்ற வேண்டும் என்பதுதான் கார்ப்ரேட் முதலாளிகளின் இலக்காக உள்ளது. இதைத்தான் தொழில் துவங்குவதற்கு உகந்த நாடு என ஏகாதிபத்திய நிறுவனங்கள் அறிவிக்கும் அறிவிப்பினை பாசிச மோடி கும்பல் பெருமையடித்துக் கொள்கின்றது.
ஒரகடம் தொழிற் பேட்டையை அடுத்து வல்லம் ஆகிய இடங்களில் தனது ஆலையை விரிவுப்படுத்தி தனது கொள்ளையைத் தொடரும் ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களால் தொழிலாளர்கள் அமைதியாய் போவதாக நினைத்து மகிழ்ச்சியில் திளைக்கலாம்.
படிக்க:
♦ தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
♦ ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
ஆனால், அடிமைத்தனத்திற்கெதிராகவும் அநீதிக்கெதிராகவும் போராடுவதும் புரட்சியை நடத்தி முடிப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பு எதிர்பாராமல் நடக்கும் விபத்து அல்ல அப்படிபட்ட நோக்கதிற்காக தொழிலாளி வர்க்கத்தை அறை கூவி அழைக்கின்றது காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி ! கூடவே தொழிலாளி ஜீவாவிற்கு பூரணமாக குணமாகும் வரையில் சிகிச்சையளிக்கவும் குரல் கொடுப்போம்.
தகவல்: காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.