ஷாகீன் பாக் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் ஜாமிய மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பெண்கள் தலைமையேற்று 55 நாட்களாக நடத்தும் ஒரு தொடர்ப் போராட்டம்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம். அதற்காக தானாகவே முன்வந்து (suo moto) அது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 25 பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி நீதிமன்றம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.

குழந்தையின் தாய் நாசீயா.

போராட்டக்காரர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தயாரில்லை. கர்நாடகா மாநிலம், பிதாரில், நரேந்திர மோடியை விமர்சிக்கும் நாடகம் ஒன்றில் பள்ளிச் சிறுவர்கள் நடித்ததற்காக அவர்கள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் துன்புறுத்தப்படும் போது உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.

வழக்கும் இல்லாமல், விசாரணையும் இல்லாமல் மாதக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் பற்றி விசாரிக்கத் உச்ச நீதிமன்றம் தயாரில்லை. காஷ்மீர் மக்கள் இணையத்ததைப் பயன்படுத்தவதற்கான உரிமையை வழங்க உச்ச நீதிமன்றம் மறுக்கிறது. CAA -வுக்கு எதிராக அமைதியின்மையும், கொந்தளிப்பான சூழலும் நிலவுவதாக நீதிபதிகள் கருதினாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறது.

எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள், தங்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அசாம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 1000 பேருக்கு உச்ச நீதிமன்றம் நீதி வழங்கவில்லை. “முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்; இஸ்லாமியர்கள் மட்டுமே முகாம்களில் இருப்பார்கள்” என்று இந்த வாரம் மோடி அறிவித்த போதும், அதில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை.

படிக்க:
♦ 2002 குஜராத் இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !
♦ பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்

அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படாத 19 லட்சம் பேரில், முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் வாய்ப்பு குறித்த பிரச்சனையை உச்நீதிமன்றம் காது கொடுத்துக் கேட்கத் தயாரில்லை. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதில் நடைபெற்ற கடுமையான முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் அது தயாரில்லை. லட்சக் கணக்கானவர்களை சட்ட விரோதிகளக அறிவிக்கக் காரணமாக இருந்த, NRC தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பா.ஜ.க அரசு ஒப்பந்த நீட்டிப்பு செய்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை. ஆவணங்களில் உள்ள சில எழுத்துப் பிழைகள் மற்றும் மாறுபட்ட தேதிகள் உள்ளிட்ட அற்பக் காரணங்களுக்காக பலர் ‘வெளிநாட்டினராக’ அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த பிரச்சனை மீதும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை.

பாபர் மசூதி எழுப்பப்பட்டிருந்த நிலத்தைப் பறித்து, மசூதியை இடித்தக் கயவர்களிடமே ஒப்படைத்துள்ளது உச்ச நீதிமன்றம். மசூதியை இடித்தக் குற்றவாளிகள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வற்புறுத்தவில்லை. எல்.கே அத்வானி மீதான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. முப்பதாண்டுகளைக் கடந்த இந்த வழக்கில் அவருக்கு தற்போது 90 வயது ஆகிறது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள, முக்கியத்துவம் வாய்ந்த NPR மற்றும் NRC குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றத்தின் மாற்றாந்தாய் மனப் போக்கு குறித்து இப்படி நிறைய சொல்ல முடியும்.

சொல்வதற்கு கசப்பானதாக இருந்தாலும், இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சமானப் போக்கையே உச்ச நீதிமன்றம் கடைபிடிக்கிறது என்பதுதான் உண்மை. எதை விசாரிக்க வேண்டும்? எதை விசாரிக்கக் கூடாது? என்பதை தீர்மானிக்கும் அதன் போக்கே இதை நிரூபிக்கிறது. சாதாரண காலங்களில் இந்த நடை முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும் ஒரு அசாதாரமான சூழல் நிலவும் போது உச்ச நீதிமன்றம் இவ்வாறு நடந்து கொள்வது கவலைக்குரிய ஒன்று.

இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக வீதியில் இறங்கிப் போரடிக் கொண்டிருக்கும் போது, இந்தியா தனது சொந்த நாட்டு மக்குளுக்கு என்ன செய்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்களை பாரபட்சமாக நடத்துகிறது என்கிற உண்மை வெளிப்படையாக தெரிந்த போதும் பெரும்பான்மைவாதத்தில் சிக்குண்டு உச்ச நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் அபாயகரமானது.

படிக்க:
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !
♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?

சட்டத்தின ஆட்சி மூலம் இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன் பேணப்படும் என்கிற நற்பெயரை மோடியும் இந்த அரசும் களங்கப்படுத்திவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான பாராளுமன்னற உறுப்பினர்கள் இந்தச் சட்டத் திருத்ததிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர உள்ளனர். இன்னும் சில நாட்களில் பிரசல்சுக்குச் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோரை விடுவிக்க வேண்டும், காஷ்மீரிகளுக்கு இணைய வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை 59 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது நாம் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று. அதுவும்கூட நடந்து விட்டது.

அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். 1950 -இல் 8 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 2008 இல் 31 ஆக உயர்த்த வேண்டும் என்பதற்குப் பதிலாக இன்று 33 ஆக உயர்த்திக் கொண்டனர். மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய தலைமை நீதிபதி நீதிமன்ற அமர்வு ஒன்று மற்றும் அன்றாட வழக்குகளை விசாரிப்பதற்கான 2 நீதிபதிகளைக் கொண்ட 13 அல்லது 14 அமர்வுகள் உச்ச நீதிமன்றத்தில் செயல்படுகின்றன. இந்தியாவில் உள்ளது போன்று 2 நீதிபதிகளைக் கொண்ட 14 அமர்வுகள் உலகில் வேறு எங்கேனும் உண்டா? நாம் வடிவமைத்திருக்கும் உச்ச நீதிமன்ற வடிவம் அமெரிக்க மாதிரியிலானது. ஆனால் அங்கு இருப்பதோ 12 நீதிபதிகள் கொண்ட ஒரே ஒரு அமர்வு மட்டுமே.

ஆனால் இத்தனை அமர்வுகள் இருந்தும் ஏதாதவது நீதி கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில் மக்களிடமிருந்து வர வேண்டும். இன்று அரசு மிருகத்தனமாக நடந்து கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தனது நாட்டிலிருந்து குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலிருந்து தங்களுக்கு நீதி கிடைக்கிறது என்று இந்த நாட்டு முஸ்லீம்கள் கருதுகிறார்களா? அவர்கள் சார்பாக என்னால் பேச முடியாது என்றாலும் என்னிடம் அதற்கான உறுதியான பதில் ஏதும் கிடையாது.

(டெக்கான் கிரானிக்கிள் ஏட்டில் ஆகர் படேல் அவர்கள் எழுதிய கட்டுரையின் சாரம்.)


கட்டுரையாளர் : Aakar Patel
தமிழில் : 
ஊரான்
நன்றி :  டெக்கன் க்ரானிக்கல். 

குறிப்பு : மேலும் போராட்டக்காரர்களால் போக்கவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் மீதான வழக்கு ஒன்றும் தனியாக பிப்ரவரி 10 அன்று விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி 55 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தை தடை செய்யமுடியாது என உச்ச நீதிமன்றம் 10.02.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது.