நெல்லை மாநகராட்சியில் கொரோனோ ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் நிலை எப்படி உள்ளது என்பதை அறிய கள ஆய்வு மேற்கொண்டோம். அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலமாக அறிந்த சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

நாடு முழுக்க தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்யும் கயவாளித்தனத்துக்கும், உண்மை நிலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

1) கொரனோ தடுப்புப் பணிக்காக மேலப்பாளையத்தில் உள்ள கிரவுண்டில் மதியம் 1 மணியளவில் உச்சிவெயிலில் நிற்க வைத்து பயிற்சி என்ற பெயரில் தண்டித்துள்ளார்கள். இவ்வாறு ஏன் வெயிலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்? என்று நிரந்தரப் பணியாளர் ஒருவர் கேள்வியெழுப்பி உள்ளார். பின்னர் அவரை சஸ்பெண்ட் செய்துவிடுவதாக மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

2) ஒரு நபருக்கு வாரம் ஒரு சோப் தரவேண்டும் என்பது முடிவு. ஆனால் இரண்டு வாரங்கள் வரை ஒரே சோப்பைத்தான் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். சில இடங்களில் ஒரே சோப்பை 50 பேர் வரை பயன்படுத்தும் அவல நிலையே தொடர்கிறது.

3) வாரம் ஒரு மெடிக்கல் செக் அப் செய்வதாக முடிவு. மூன்று வாரங்களாகியும் இன்னும் செக் அப் நடக்கவில்லை.

4) கையுறை, முகக் கவசம் இதுவரை ஒருமுறைதான் கொடுத்துள்ளார்கள். உடல் கவசம் கொடுக்கப்படவில்லை.

5) உணவு, அரசு சார்பாக கொடுக்கப்படவில்லை. தொண்டு நிறுவனங்கள்தான் கொடுக்கின்றன. அதுவும் அரை வயிற்றுக்குத்தான் இருக்கிறது.

6) நோய் எதிர்ப்பு சக்திக்கு பழங்கள் சாப்பிட வேண்டும் என்று நமக்கு உபதேசம் செய்யும் அரசு, ஆபத்தை எதிர்கொண்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு பழங்களோ, முட்டைகளோ எதுவும் வழங்குவதில்லை.

7) மூன்று வேளையும் டீ, பிஸ்கெட் தரவேண்டும் என்பது முடிவு. ஆனால் டீ மட்டும்தான் தருகிறார்கள்.

படிக்க:
♦ கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

8) ஏற்கனவே ஆள்பற்றாக்குறையுடன் இருந்து வரும் நிலையில் கொரனோ தடுப்புப் பணியில் கடுமையான வேலை நெருக்கடியில் பணியாற்றி வருகின்றனர்.

9) கொரனொ தடுப்புப் பணியை ஒட்டி நிரந்தரப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

உண்மையில் கொரனோ தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் நிலை கொரனோ தொற்றுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அதிலிருந்து எந்த மாற்றமும் இல்லை. அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் மாநகராட்சி நிர்வாகத்திடம் இல்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை உறிஞ்சுவது மட்டும்தான் நிர்வாகத்தின் போக்காக உள்ளது.

உண்மையில் பிரச்சினை கொரனோ மட்டுமல்ல. தொடர்ந்து அவர்களின் மீது செலுத்தப்படும் அடக்குமுறையின், புறக்கணிப்பின் தொடர்ச்சிதான் இது. அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறோம். இப்போதைக்கு கொரனோ தடுப்புப் பணியில் அவர்களுக்கான தேவைகளை அரசு நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம் நண்பர்களே…

தகவல் :
மக்கள் அதிகாரம்
நெல்லைப் பகுதி.