PP Letter headபத்திரிகைச் செய்தி

10.06.2021

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் வழக்கா ?
போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !

கடந்த ஜூன் 5-ம் தேதி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு விடுத்த அறைகூவலை ஏற்று (AIKSCC) தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக போலீசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு ஆதரவான முழக்கத் தட்டியை பிடித்து இருந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போலீசு சென்று மிரட்டி இருக்கிறது. சேத்துப்பட்டில் நமது போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவரின், இளைஞர்களின் முகவரி என்ன என்று விசாரித்துக் கொண்டு இருக்கிறது.

முழக்கத் தட்டியைப் பிடித்துக் கொண்டு வீட்டு வாசலில் யார் யார் இருந்தார்களோ அவர்கள் மீதெல்லாம் வழக்குப் போடுவோம் என்று கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு பகுதியிலும் விசாரணை செய்து கொண்டிருக்கிறது போலீஸ்.

கடந்த அதிமுக ஆட்சியில் வாசலில் கோலம் போட்டவர்கள் மீது வழக்கு தொடுத்தபோது கண்டனம் தெரிவித்த திமுக இப்போது ஆட்சியில் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக கோலம் போட்டார்கள், கையில் முழக்கத்தட்டி வைத்திருந்தார்கள் என்று இப்போது வழக்குப் போடுகிறது . திமுகவுக்கு கடந்த ஆட்சியில் ஜனநாயகமாகப் பட்டதெல்லாம் இந்த ஆட்சியில் ஜனநாயக விரோதமாக மாறி இருக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வீட்டின் முன் கோலம் போடுவதற்கு கூட அனுமதி வாங்க வேண்டும் என்று புது விதி உருவாக்கி வைத்திருக்கிறது போலீஸ். போலீசின் அடக்குமுறைகளுக்கு எப்பொழுதும் பணியப் போவதில்லை. விவசாயிகள் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவை தெரிவிப்போம்.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை