ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகலும்
மத்திய ஆசியாவைச் சுற்றி நடக்கும் காய் நகர்வுகளும்!

டந்த 20 ஆண்டுகளாக ஆப்கானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கா, தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளும் (நேட்டோ – NATO) தங்கள் படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள 9,500 படைவீரர்களில் 2,500 பேர் அமெரிக்காவையும் மீதம் 7,500 பேர் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளையும் சேர்ந்தவையாகும். மே 1–ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11–ம் தேதிக்குள் – இரட்டை கோபுரத் தாக்குதலின் 20–ம் ஆண்டு – படிப்படியாக படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதனை விளக்கியுள்ளார்.

படிக்க :
♦ ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்
♦ ஆப்கான் – மத்திய ஆசியா எண்ணெய் – இசுலாமிய தீவிரவாதம் !

2001 செப்டம்பர் 11–ல் உலக வர்த்தக மையம், பெண்டகன் ஆகியவை அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் ஆப்கானின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். “பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர்” என்றும் “இந்த நூற்றாண்டின் – ஆயிரமாவது ஆண்டின் முதல் போர்” என்றும் அவரால் அறிவிக்கப்பட்ட “அமெரிக்க வரலாற்றின் நீண்ட போரை” முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாக பைடனும் அவரது ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பைடனின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். “ஆப்கான் போரை நடத்தும் நான்காவது அதிபர் நான். ஐந்தாவதாக ஒரு அதிபரின் கையில் அதை ஒப்படைக்க மாட்டேன்”, “அமெரிக்கப் படைகள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றெல்லாம் படைவிலக்கத்தை பெருமையுடன் குறிப்பிடுகிறார், பைடன்.

பைடனின் இந்த அறிவிப்பையும் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நகர்வுகளையும் புரிந்துகொள்ள, ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாற்றைச் சுருக்கமாகவேனும் பார்ப்பது நமக்கு அவசியமாகும்.

ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாறு

1978–ல் ஆப்கானில் “ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி” ஆட்சியை அமைத்தது. 1979–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்க நோக்கத்திற்காக ஆப்கான் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அதன்பிறகு, 1986–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான நஜிபுல்லா-வின் தலைமையிலான அரசு அமைந்தது. பெண் கல்வி உள்ளிட்ட சில சீர்திருத்த நடவடிக்கைகளை நஜிபுல்லா அரசு மேற்கொண்டதாகப் பேசப்பட்டாலும், சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த சொந்த நாட்டு மக்கள் 80,000-க்கும் மேற்பட்டோரை கொன்றொழித்தது.

சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் – என இரு மேல்நிலை வல்லரசுகளுக்கு இடையில் தீவிரமான பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. மத்திய ஆசியப் பகுதியில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்தது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. 1979–ல் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜிம்மி காட்டரும் அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்பிக்னியேவ் ப்ரெஸ்சின்ஸ்கியும், பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து – சோவியத்தை எதிர்ப்பதற்காக – இசுலாமிய அடிப்படைவாத கும்பலான முஜாகிதின்களை வளர்த்து விட்டார்கள்.

ஆப்கான் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பை “இசுலாத்தின் மீதான நாத்திக, கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு” என்றும், “சோவியத்தை எதிர்த்த புனிதப் போர்” என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவையனைத்துக்கும் பின்னிருந்து நிதியுதவியும் ஆயுத உதவிகளும் செய்தவை அமெரிக்காவும் அதன் (அப்போதைய) கூட்டாளியான பாகிஸ்தானுமே ஆகும். பாகிஸ்தானில் தொடர்ச்சியாக முஜாகிதின்கள் ஆயுதப் பயிற்சியும் மதப் பயிற்சியும் பெற்றனர். ஆப்கான் மீது சோவியத் சமூக ஏகாதிபத்தியம் நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் உடைமையிழந்த, அகதிகளான இளைஞர்கள்தான் இந்த முஜாகிதின்களில் பெரும்பாலானோர் என்பது சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் மீதான அவர்களின் வெறுப்புக்கு இன்னொரு முக்கியமான காரணமாகும்.

இதன் விளைவாக, முஜாகிதின்களோடு நடந்த தொடர்ச்சியான போரில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தோற்றது. 15,000 சோவியத் துருப்புகளை இழந்த பின்னர், 1989–ல் தன் படைகளை ஆப்கானிலிருந்து விலக்கிக் கொண்டது. ஆப்கான் மீதான சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் தோல்வியானது, அமெரிக்காவின் கை மேலோங்குவதில் முடிந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து பல நாடுகளாகச் சிதறியது.

முகமது நஜிபுல்லா

1992–ல் சோவியத் எடுபிடியான நஜிபுல்லா ஆட்சியை முஜாகிதின் குழுக்கள் வீழ்த்தினர். அதன் பிறகு, முஜாகிதின் குழுக்களிடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. அதில், பத்தானிய இனத்தைச் சேர்ந்த குல்புதின் ஹெக்மெத்யார் தலைமையிலான “ஹிஸ்ப்-இ இஸ்லாமி” என்ற குழுவை ஓரங்கட்டிவிட்டு, தாஜிக் இனப்பிரிவைச் சேர்ந்த ரப்பானி மற்றும் அகமத் ஷா மசூத் ஆகியோர் தலைமையிலான “ஜமாத்-இ இஸ்லாமி குழு” என்ற குழு அதிகாரப் போட்டியில் வென்றது.

அதன்பிறகு, 1994–ல் சன்னி மதப் பிரிவு மற்றும் பத்தானி இனப்பிரிவைச் சேர்ந்த தாலிபானும் அதிகாரப் போட்டியில் குதித்தது. அப்போதைய அதிபர் ரப்பானி மற்றும் இராணுவத் தளபதி முகமது ஷா மசூத்-க்கும் முல்லா உமரைத் தலைமையாகக் கொண்ட தாலிபான்களுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் 1996–ல் தாலிபான்கள் நாட்டின் பெரும்பகுதியைக் – 95 சதவீதத்தைக் – கைப்பற்றினர். இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக, ஐ.நா அலுவலகத்தினுள் பதுங்கியிருந்த ‘கம்யூனிஸ்டு’ அதிபர் நஜிபுல்லாவைக் கொன்று தூக்கிலிட்டனர், தாலிபான்கள்.

பின்னர், ஏழு ஆண்டுகள் (1996–2001) தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி ஆப்கானில் நடந்தது. ஷரியத் சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்பட்ட தாலிபான் ஆட்சியில் பெண்கள் மீது எண்ணற்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பர்தா அணியாத பெண்கள் கல்லால் அடித்தே கொல்லப்பட்டனர். ரப்பானி அரசை அதுவரை ஆதரித்து வந்த அமெரிக்கா, தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கியது.

அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன்-இன் அரசு தாலிபான்களை அங்கீகரித்தது. ஐ.நா.விலும் அவர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர முயன்றது. இதற்குக் காரணம், ஆப்கானின் பூகோள முக்கியத்துவமே ஆகும். ஈரானைக் கண்காணிப்பதும், சோவியத் ஒன்றியம் உடைந்து உருவாகியுள்ள தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மேனிஸ்தான், காசக்ஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் – எரிவாயு வளங்களைக் கைப்பற்றி, அவற்றை ஆசிய, ஐரோப்பியச் சந்தைக்கு கொண்டுசெல்ல ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக் கடல் வழியாக பாதை அமைப்பதே இதன் நோக்கமாகும். சுருங்கச் சொன்னால், மத்திய ஆசியப் பகுதியில் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதே ஆகும்.

ஆனால் 1996–க்குப்பின், பின்லேடனுடன் தாலிபான்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். தன் நோக்கத்திற்கேற்ப செயல்படாமல் தாலிபான்கள் வேறு திசையில் பயணித்ததால், அமெரிக்கா அப்போது செய்வதறியாமல் திகைத்தது. ஆப்கானின் உள்விவகாரத்தில் தலையிட்டு எப்படியாவது தனது நோக்கத்திற்கேற்ப அங்கு ஒரு பொம்மை அரசை அமைக்க வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புதான் செப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல். உலக வர்த்தக மையமானது, அல்கொய்தா எனும் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டதைச் சாக்கிட்டு, உடனே ஆப்கானில் படைகளைக் குவித்து தாலிபான்களை அழித்துவிட்டு தனது கைக்கூலி அரசை நிறுவ வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்தது. இதுதான் “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” என்று பீற்றிக் கொள்ளப்படும் ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னணி.

அதாவது, எந்த இசுலாமிய பயங்கரவாத அமைப்புகளை சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமெரிக்கா வளர்த்துவிட்டதோ, அவற்றையே பின்னர் எதிரிகளாகவும் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளாகவும் அறிவித்து – அவற்றிடமிருந்து உலகைக் காக்க வந்த மீட்பன் போலத் தன்னைக் காட்டிக் கொண்டு – தன் ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தது, அமெரிக்கா.

இதுஒருபுறம் இருக்க, 1996–இல் அதிகாரப் போட்டியில் தோற்ற ரப்பானி மற்றும் மசூத் குழுவானது, தோஸ்தம் என்ற யுத்தப் பிரபுவுடன் சேர்ந்துகொண்டு சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு தாலிபான்களை எதிர்த்து வந்தது. இது “வடக்குக் கூட்டணி” என அழைக்கப்பட்டது. இந்த வடக்குக் கூட்டணியை ஒழிக்க 1996–களில் அமெரிக்கா தாலிபான்களுடன் சேர்ந்து கொண்டது. ஏனெனில், இக்கூட்டணியானது ரசியா மற்றும் ஈரானின் ஆதரவைப் பெற்றிருந்தது.

2001–ல் அமெரிக்க, பிரிட்டன், நேட்டோ படைகள் ஆப்கானை ஆக்கிரமித்து கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதால், தாலிபான்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அவர்கள் காபூலைக் காலிசெய்துவிட்டு பத்தானியர்கள் அதிகமுள்ள மலைகளில் போய் பதுங்கிக் கொண்டனர். தாலிபான்கள் காபூலைக் காலிசெய்யும் செய்தி அறிந்ததும், வடக்குக் கூட்டணியானது காபூலைக் கைப்பற்றிக் கொண்டது. அப்போது அமெரிக்கா வடக்குக் கூட்டணியை ஆதரித்தது. அதாவது, 1996–களில் வடக்குக் கூட்டணியை ஒழிக்க தாலிபான்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட அமெரிக்கா, 2001–ல் தாலிபான்களை ஒழிக்க வடக்குக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது.

ஆனாலும் வடக்குக் கூட்டணியை முழுமையாக அமெரிக்கா நம்பவில்லை. ஏனெனில், அந்நாட்டில் பத்தானிய இனப்பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய சன்னி மதப்பிரிவு மக்கள்தான் பெரும்பான்மையாகும். இக்கூட்டணியோ தாஜிக், உஸ்பெக் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் சேர்க்கையாக இருந்ததால், இவர்களின் ஆட்சி நிலையானதாக இருக்காது என்பதே இதற்குக் காரணமாகும்.

சி + சி5

எனவே, தனது மறுகாலனியக் கொள்கைக்கு ஏற்ப ஆப்கானில் ஒரு இடைக்கால அரசை அமைக்க அமெரிக்கா முயன்றது. அதன்படி, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர், பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஆகியோரின் திட்டப்படி ஜெர்மனியில் கூட்டம் நடத்தி, பத்தானிய இனத்தைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவர் தலைமையில் 2001-ல் ஒரு கைப்பாவை அரசை அமெரிக்கா அமைத்தது. பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒரு தேர்தல் நாடகம் நடத்தப்பட்டு, 2004 மற்றும் 2009-இல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, கர்சாய் அதிபரானார். அதன் பின்னரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறாமல் அங்கேயேதான் இருந்து வந்தன. அதன் பின்னர், தாலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு நடுவே மிகக் குறைவான வாக்குப்பதிவுடன் நடந்த 2014 இத்தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்று அதிபரானார். பின்னர் 2019-இல் நடைபெற்ற தேர்தலிலும் இரண்டாம் முறையாக அவரே வெற்றி பெற்று அதிபராக நீடிக்கிறார்.

ஆப்கானில் தாலிபான்களின் வளர்ச்சியும், அமெரிக்கா ‘பின்வாங்குவதன்’ பின்னணியும்!

அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப்பெறும் அறிவிப்பை இப்போது வெளியிட்டிருப்பது ஒன்றும் வியப்பான விடயமல்ல. இது, அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, கடந்த 20 ஆண்டுகளில் தாலிபான்களின் வளர்ச்சியாகும்.

தாலிபான்களின் வளர்ச்சிக்கு முக்கியமான மூலாதாரம் கஞ்சா (அபினி) உற்பத்தி. 2001–இல் பின்னடைவுக்குப்பின் தாலிபான் யுத்தப் பிரபுக்கள் சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, அங்கு அபினி பயிரிடுவதைச் செய்து வந்தனர். 2003–இல் 3,600 டன்கள் அளவுக்கு நடைபெற்ற அபினி உற்பத்தியானது, 2007–இல் 8,200 டன்களாக உயர்ந்தது. இது, உலகின் மொத்த சட்டவிரோத அபினி உற்பத்தியில் 93 சதவீதமாகும். அக்காலத்திலேயே தாலிபான்கள், படிப்படியாக கிராமப்புறங்களைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தொடங்கினர்.

படிக்க :
♦ ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !
♦ ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் – சில குறிப்புகள்

ஆப்கானில் தனது கைப்பாவையான கர்சாய் அரசின் பிடி தளர்ந்து வருவதைக் கண்டு அஞ்சிய அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், தாலிபான்களைக் கட்டுப்படுத்த, 7 பில்லியன் டாலர்களைச் செலவு செய்து “போதை மருத்து ஒழிப்புப் போர்” என்ற பெயரில் ஒரு தாக்குலை நடத்தினார். அதன் பின்னர் 2009–ல் ஒபாமா நிர்வாகம், 1,00,000 துருப்புகளை அங்கே குவித்தது. தாலிபான்களைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றியடைந்தாலும், அபினி பயிரிடுவதை அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை. மீண்டும் 2014–ம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கான் அரசுப் படைகள் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். 2017–ல் அபினி சாகுபடி 9,000 டன்களாக உயர்ந்தது.

தற்போது பெரும்பாலான கிராமப்புறங்களைத் தாலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டுவந்து விட்டனர். கடந்த பிப்ரவரியிலிருந்து, அஷ்ரப் கானி அரசின் செல்வாக்கிலுள்ள கேந்திரமான கந்தகார், குண்டூஸ், ஹெலமந்த், பக்லான் ஆகிய பகுதிகளை அச்சுறுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் ஆப்கான் போலீசு மற்றும் இராணுவத்தின் பிடி தளர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் விரைவில் அமெரிக்க–ஆப்கான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் போர் மூளும் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.

ஏற்கெனவே ஆப்கான் போரில் மட்டும் ஏறத்தாழ 2 டிரில்லியன் டாலர் (2 லட்சம் கோடி டாலர்) அளவுக்கு அமெரிக்கா செலவு செய்துள்ளது. மேலும் 2,500–க்கும் மேற்பட்ட படைவீரர்களை அது இழந்துள்ளது. 57 சதவீத அமெரிக்க மக்கள் ஆப்கான் போரை எதிர்ப்பதாகக் கூறுகிறது, 2007–ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு. எனவே, மேலும் மேலும் ஆப்கான் போருக்காக அதிக செலவுகள் செய்தால், அது அமெரிக்க மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க அரசு உணர்ந்துள்ளது. அதனால், ஆப்கானிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெறுவது, போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியன பற்றி நீண்ட காலமாகவே அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளின் அரசுகள் விவாதித்து வந்தன.

இப்பின்னணியில், டிரம்ப் அதிபராக இருந்தபோதே, 2019 பிப்ரவரியில் தாலிபான்களும் அமெரிக்காவும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் கூடி ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். இதன்படி, அமெரிக்கா ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக முடிவானது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பைடன் இப்போது செயல்படுத்துகிறார். இனி படிப்படியாக ஆப்கான், தாலிபான்களின் பிடியில் செல்லும் என்பது உறுதியாகிவிட்டது.

“பயங்கரவாதத்தை எதிர்த்த உலகப் போர்” என்றும், “ஆப்கானில் நீடித்த சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான போர்” என்றும் அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்ட இந்தப் போர், அதன் நோக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என முதலாளித்துவ பத்திரிக்கையாளர்களே கேலி செய்கின்றனர். ஆனால் பைடனோ, “அமெரிக்கா தான் வாக்களித்த கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டதாகவும், அல்கொய்தாவை அழித்துவிட்டதாகவும்” கூச்சமின்றிப் பேசுகிறார்.

மதவெறி – பயங்கரவாத யுத்தப் பிரபுக்களான தாலிபான்கள் மீண்டும் ஆப்கானை ஆளப்போகின்றனர். இதுதான் அமெரிக்கா மீட்டெடுத்த ‘ஜனநாயகம்’. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா நடத்திய இந்த ஆக்கிரமிப்புப் போரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். காயமுற்றவர்களும் உடைமையிழந்தவர்களும் உடல் ஊனமானவர்களும் அகதிகளானவர்களும் எண்ணிலடங்காதோர்.

மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் கேந்திரமான தளம் ஆப்கான்!

ஆப்கானிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெறுவது, சீனாவின் பக்கம் பாகிஸ்தான் இருப்பது – ஆகிய இவையெல்லாம் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும், அதன் உலக மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய சரிவு என்றும் பலராலும் கருதப்படுகிறது. ஒருபுறம் அது உண்மைதான் என்ற போதிலும், இன்னொருபுறம் அவ்வளவு எளிதில் ஆப்கானை அமெரிக்கா விட்டுவிடாது. “ஆசியா ஒரு விமானம் என்றால், அதில் விமான ஓட்டியின் அறைதான் ஆப்கான்” என்றது, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் நிர்வாகம். இப்போதும் அமெரிக்கா ஆப்கானை அப்படித்தான் பார்க்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 20 ஆண்டுகளாகத் தொடரும் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நோக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை. அதை வேறு வழிகளில் தொடர்வதற்கு மட்டுமே திட்டமிட்டுள்ளது.

உலக அரங்கில் தனக்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனாவையும், ரசியா, ஈரான் ஆகிய நாடுகளையும் கட்டுப்படுத்த ஆப்கானை ஒரு முக்கியமான தளமாகவே அமெரிக்கா கருதுகிறது. “ஆப்கானில் அமெரிக்கா இருப்பதற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, சீனாவைக் கட்டுப்படுத்துவதே” என்று அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி லாரன்ஸ் வில்கர்சன் 2018–இல் கூறியுள்ளார். அதிபர் பைடன் பதவியேற்றதும் பெண்டகன் எனும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்துக்கு வந்தபோது, “சீனாதான் 21–ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால். சீனாவின் சவாலைச் சந்திப்போம். எதிர்காலத்துக்கான போட்டாபோட்டியில் வெற்றி பெறுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

சீனாவுக்கும் ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லைப் பகுதியாக உள்ள ஷின்ஜியாங் (Xinjiang) என்ற சீனாவின் தன்னாட்சி பெற்ற மாநிலமானது, உய்குர் சுயாட்சிப் பிரதேசம் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியிலுள்ள துருக்கி மொழி பேசும் தேசிய இனச் சிறுபான்மையினரான முஸ்லிம்களே உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றனர். உய்குர் முஸ்லிம்கள், இப்பிராந்தியத்தை “கிழக்கு துர்கிஸ்தான்” என்று குறிப்பிடுகின்றனர். தற்போது உய்குர் பிரதேசத்தில், துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியும் (TIP) இன்னும் சில ஆயுதக் குழுக்களும் தனிநாடு கோரிக்கையுடன் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இக்கட்சியும் இதர ஆயுதக் குழுக்களும் ஆப்கானில் பயிற்சி பெற்றதோடு, பயங்கரவாதி பின்லேடன் தலைமையிலான குழுவினர் மூலம் நிதியும் ஆயுதங்களும் பெற்றுள்ளன. 2009-லிருந்து தொடர்ச்சியாக உய்குர் பிராந்தியத்திலும், சீனாவிலும், சீனத் தூதரகம் அமைந்துள்ள நாடுகளிலும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி வந்துள்ளன. சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உய்குர் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க – சீன மோதல் தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரின் மனித உரிமைகளைப் பறித்ததாகக் குற்றம்சாட்டி மூன்று சீன அரசு அதிகாரிகளைத் தனது நாட்டுக்குள்ள நுழையக் கூடாதென அமெரிக்க வல்லரசு தடை விதித்துள்ளது. மறுபுறம், “வெளிநாட்டில் இயங்கும் கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கம்” என்ற அமைப்பும், “கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழித்தெழும் இயக்கம்” என்ற அமைப்பும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இயங்கி வருகின்றன.

சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின்படி (BRI), மேற்காசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியப் பகுதியாக ஷின்ஜியாங் மாநிலம் அமைந்துள்ளது. எனவே, உய்கூர் பிரச்சினையைப் பயன்படுத்தி, அங்குள்ள இஸ்லாமிய ஆயுதக் குழுக்களை வளர்த்துவிட்டு சீனாவுக்குத் தீராத தொல்லைகளையும் நெருக்கடியையும் உருவாக்க வேண்டும் என்று ஒபாமாவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு ஆப்கான்தான் கேந்திரமான தளமாக இருக்கப் போகிறது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானில் அமெரிக்கா ஒரு பெரிய புலனாய்வு வலையமைப்பை நிறுவியுள்ளது. ஆப்கானின் பாதுகாப்புப் படையில் 17,000–க்கும் மேற்பட்டோரை “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” எனும் பெயரில் அமெரிக்கா நுழைத்துள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆயுதந்தாங்கியவர்கள். படைகளைத் திரும்பப்பெறும் பைடனின் திட்டத்தில் இந்தப் “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும், “ஆப்கானில் நாம் இராணுவ ரீதியாக ஈடுபாடு கொண்டிருக்க மாட்டோம் என்றாலும், அரசு தந்திர, மனிதாபிமான பணிகள் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்”, “ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பிராந்தியத்தில் பயங்கரவாத அபாயத்தைத் தொடர்ந்து நாங்கள் கண்காணிப்போம், அதற்கு எதிராக தொடர்ந்து சண்டையிடுவோம்” என்று கூறியுள்ளார் பைடன். “ஆப்கானை அமெரிக்கா கைவிடுவது என்பது, அதோடு கொண்டிருக்கும் தொடர்பின் வடிவத்தை மாற்றுவதுதான்” என்று கூறியுள்ளார் ஆப்கானில் நல்லிணக்கத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான, சால்மே கலீல்சாத்.

படைகளைத் திரும்பப் பெறும் பைடனின் அறிவிப்புக்குப் பின்னர், அமெரிக்க இராணுவ தளபதி கென்னத் பிராங்க்ளின் மெக்கென்சி, “அமெரிக்கா அப்பகுதியில் தனது இராணுவ செல்வாக்கை தொடர்ந்து பராமரிக்கும். மேலும், ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறனையும் உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.

இவற்றின் மூலம் ஆப்கானில் அமையவுள்ள அரசை அமெரிக்கா மறைமுகமாகக் கட்டுப்படுத்தவே முயலும். தனது ஆதிக்கத்தைத் தொடரவே முயலும். நேரடியாகப் படைகளைக் குவித்து, ஆக்கிரமிப்பைச் செய்து ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், இவ்வகையான மறைமுகமான நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு – சர்வதேச ரீதியில் அவப்பெயர் இல்லை என்பதால் – சாதகமானதே ஆகும்.

இன்னொருபுறம், சீனாவோ ஆப்கானுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள 2017–இல் இருந்து முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், ஆப்கானில் தாலிபான்களையும் அஷ்ரப் கனியையும் உள்ளடக்கியதொரு ‘ஜனநாயக’ அரசை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறது. “ஆப்கானின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்” என 2020–ஆம் ஆண்டு நடந்த ஷாங்காய் கூட்டுறவு (SCO) உச்சி மாநாட்டில் பேசியுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். தன்னுடைய புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஆப்கானை இணைத்துக் கொள்ளவும் சீனா முயற்சிக்கிறது.

சீனாவின் ஷின் ஜியாங் பகுதி

இதுவொருபுறமிருக்க, அமெரிக்காவின் திட்டங்களை முறியடிக்கும் நோக்கத்துடன் மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகளுடன் சீனா ஒரு கூட்டணியைக் கட்டியமைத்துள்ளது. அது சி+சி5 (C+C5) என்று குறிப்பிடப்படுகிறது. (சீனா + காசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் கூட்டணி) கடந்த மே 12 அன்று இந்தக் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், மத்திய ஆசியப் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முதலானவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அமெரிக்கப் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர் எழுந்துள்ள புதிய நிலைமைகளையொட்டி கடந்த ஜூன் 5-ஆம் தேதியன்று ஆப்கான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் இணையவழி கூட்டத்தையும் நடத்தியுள்ளன.

புதிய போர் அபாயம் ஏற்படுமா ?

ஏற்கெனவே ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா முயற்சித்து வருவதற்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு “குவாட்” கூட்டணியை அமெரிக்கா அமைத்துள்ளது. இப்போது மத்திய ஆசியப் பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், இக்கூட்டணியானது சீனாவுக்கு எதிரான போரில் இறங்கவும் வாய்ப்புள்ளது. இப்போரானது, ஆப்கான், பாகிஸ்தான், ஈரான், சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும், மத்திய ஆசிய நாடுகளும் ஈடுபடக்கூடிய மிகப் பெரிய போராக மாறவும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் விசுவாசக் கூட்டாளியாகவும், தெற்காசியாவில் பிராந்திய மேலாதிக்கம் செய்யும் பெரிய நாடாகவும் உள்ள இந்தியா, ஆப்கானில் அமெரிக்காவின் பொம்மை அரசு அமைந்த பிறகு, அமெரிக்காவின் தயவில் ஆப்கானில் மறுசீரமைப்பு – கட்டுமானப் பணிகளைச் செய்யத் தொடங்கியது. இதன் மூலம் ஒருபுறம் இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும், மறுபுறம் உலக அரங்கில் மனிதாபிமான முகமும் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று கருதியது.

ஆப்கானில், தாலிபான்களை வீழ்த்தி, அந்நாட்டை மீண்டெழச் செய்யும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தெற்காசியா மட்டுமின்றி, மத்திய ஆசியப் பகுதியிலும் தனது வல்லரசு பராக்கிரமத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்ற உத்தியுடன் தனது அரசு தந்திரக் கொள்கையை அமைத்துக் கொண்டது. ஆனால், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பழிதீர்க்க இந்தியத் தூதரகத்தின் மீதும், இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் மீதும் தாலிபான்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அமெரிக்காவின் தயவில் பெயரளவிலான ஒரு அரசு ஆப்கானில் நீடிக்கும் வரை, உதவி என்ற பெயரில் இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், அமெரிக்காவின் தயவிலான அரசும் நீடிக்க இயலாமல் போய், தாலிபான்களின் கை மேலோங்குவதால், இந்திய அரசின் நோக்கங்கள் தோற்றுப்போய் புஸ்வாணமாகிவிட்டன. இதனால்தான் அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 2020-ல் ஒப்பந்தம் கையெழுத்தானதும், “இது தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் கிடைத்த வெற்றி” என இந்திய அரசு சித்தரித்தது.

பைடனின் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர், ஆப்கானில் அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்தைச் செயல்படுத்துமாறு மோடி அரசின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரியது. இல்லையேல், இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிக்கல்களை உருவாக்கும் என்று கவலை தெரிவித்தது.

படிக்க :
♦ ஆப்கான் : அமெரிக்கா வளர்த்த கிடா மாரில் பாய்கிறது!
♦ ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர் : புதை மணலில் சிக்கியது அமெரிக்கா!

ஏற்கெனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் முறுகல் நிலை நீடிக்கிறது. இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படை விலகலையொட்டி அங்கு தமது தரகு முதலாளிகளின் முதலீடுகளைத் தொடர்வது குறித்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போட்டி உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை.

மத்திய ஆசியாவில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா ஒருபுறம் முயற்சிக்கும் வேளையில், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவுடன் “குவாட்” கூட்டணி அமைத்து போர் சூழலை உருவாக்கியுள்ளது. ஒருவேளை, அமெரிக்காவின் மத்திய ஆசியாவைக் கைப்பற்றும் போரிலோ, தென் கிழக்கு ஆசியாவில் சீனாவுக்கு எதிராக நடத்தப்படும் ‘குவாட்’ இராணுவ நடவடிக்கைகளிலோ இந்திய அரசு ஈடுபட்டால் அது புதைசேற்றில் இந்திய மக்களைத் தள்ளுவதாகவே போய் முடியும்.

தீரன்

உதவிய கட்டுரைகள் :