தென்கரையில் கொள்ளிடத்தின் வடஎல்லையில் வெள்ளாறு என்ற டெல்டா பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் – தமிழ்நாட்டின் சிறிய மாவட்டங்களில் ஒன்றான – அரியலூர் அமைந்துள்ளது. தொண்ணூறுகளின் கடைசி வரை விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
அரியலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் சிறுதானியப் பயிர்களான கம்பு, கேழ்வரகு, எள்ளு, சோளம், நிலக்கடலை, கொண்டக்கடலை, முந்தரி ஆகிவையும் டெல்டா பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பரப்பில் நெல்லும் கரும்பும் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன. மேலும், கொத்தமல்லி மற்றும் மிளகாய் என இரண்டுக்கும் பிரசித்தி பெற்ற மாவட்டமாகவும் அது அறியப்படுகிறது.
இப்படி அனைத்து வகையான பயிர்களும் விளைய முக்கியமான காரணம் அங்குள்ள நில அமைப்பு மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மையாகும். கரிசல் மண், மணல் மண், வண்டல் மண், செம்மண், சுண்ணாம்பு மண் என அனைத்து வகையான மண்ணும் பரவலாக அங்கு காணப்படுகிறது. இப்படி இயற்கையாகவே செழிப்போடு அமைந்த காரணத்தாலேயே அரியலூரானது கார்ப்பரேட்டுகளின் கோரப்பிடியிலும் சிக்கியது.
இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 70 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதிகளில் பவளப் பாறைகள் மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் பூமிக்கு அடியில் உள்ளன. இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் அதிக செலவில்லாமல் சிமெண்ட் தாயரிப்பதற்குப் பயன்படுகிறது என்பதை அறிந்து கொண்ட பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்விடத்தை பாலைவனமாக மாற்றி வருகின்றன.
படிக்க :
♦ கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
♦ சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
1979-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு டான்செம் (TANCEM – Tamilnadu Cement Corporation Limited) என்ற சிமெண்ட் ஆலை ஒன்றை முதன்முதலில் அரியலூரில் நிறுவியது. அதன்பிறகு 90-களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயயம் என்ற மறுகாலனியக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பின், வேறுசில தனியார் நிறுவனங்களும் சிமெண்ட் கம்பெனிகளை நிறுவத் தொடங்கின.
முதலில் ராம்கோ என்ற தனியார் நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கான சுரங்கங்களையும் அதை சிமெண்டாக மாற்றுவதற்கான தொழிற்சாலையையும் நிறுவியது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா சிமெண்ட், டால்மியா சிமெண்ட், செட்டிநாடு சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் எட்டு இடங்களில் அரியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்தன. பூமியில் சுரங்கத்தை அமைத்து கிட்டத்தட்ட 100 அடிக்கு மேல் தோண்டி சுண்ணாம்புக்கல்லை வெளியில் எடுத்து தொழிற்சாலைகளில் சிமெண்ட் தாயரித்து வருகின்றன.
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை அங்குள்ள மக்கள் அதை எதிர்த்துப் போரடி வருகிறார்கள். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, மண் மாசுபாடு என அனைத்து வகையான கொடூரங்களையும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் இலாபவெறி பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதைப்போலவே பல்வேறு விதிமீறல்களும் கொடூரங்களும் நிகழ்ந்து கொண்டு வருவதைக் கண்டுகொள்ளாமல் அரசும் அவர்களின் காவலாளியாகச் செயல்படுகிறது.
அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் சிமெண்ட் ஆலைகள் :
செந்துறை ஒன்றியத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன. மேலும் அரியலூர் ஒன்றியத்திலும் ராம்கோ சிமிண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன.
டால்மியா சிமெண்ட் ஆலைகள் கல்லக்குடியிலும் (டால்மியாபுரம்) தாமரைக்குளத்திலும் அமைந்துள்ளன. தளவாயில் இந்தியா சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. கீழபழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் யூனிட் 1, யூனிட் 2 செயல்படுகிறது. அரியலூரில் ரெட்டிப்பாளையத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அரியலூரில் தமிழக அரசின் டான்செம் ஆலையும் செயல்படுகிறது.
செறிவான கள அறிக்கை. கூடுதலாக உள்ளூர் மக்களின் வேதனைகளை அவர்கள் மொழியில் சொல்ல வேண்டும். இதை பகுதியில் பிரசுரமாக விநியோகிக்கலாம்.