‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் !
சாதி வெறியை கட்டுப்படுத்த பல பத்து ஆணையங்கள் இருந்தாலும் அன்றாட சாதிய ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை. முதலில் திமுக-வால் தனது கட்சியில் இருக்கும் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியுமா ?
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதுதான், தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறையின் நிலைமை. அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல் சாதிய ஆணவப் படுகொலையும் சாதிக் கலவரங்களும் அனைத்து ஆட்சிகளிலும் தமிழகத்தில் தொடர்கின்றன.
திமுக ஆட்சியிலும் சாதிய ஆணவப்படுகொலை, சாதிய ஒடுக்குமுறை, சாதிமறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு என அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தி.மு.க.-வின் தேர்தல் செயலுத்திகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆதிக்க சாதிகளை திருப்திபடுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றனவே அன்றி, சமூக நீதியின் அடிப்படையில் என்றும் அமைந்ததில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க-விற்கு ஒதுக்கிய தொகுதிகளே இதற்குச் சாட்சி.
கும்பகோணத்தில் 24 வயது தலித் இளைஞரை திமுக கவுன்சிலர் ஒருவர் சாதி ஆணவக் கொலை செய்வதற்குத் தூண்டியதாக கூறப்படும் சமீபத்திய நிகழ்வு இதற்குக் கூடுதல் சாட்சி.
கும்பகோணத்தில் உள்ள வேட்டமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்த 24 வயது தலித் இளைஞர் பிரபாகரன். ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், பந்தநல்லூரில் வெல்டர் மணிகண்டன் என்பவரின் மகளை காதலித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக பிரபாகரனும், பந்தநல்லூர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். 18 வயது நிறைந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் காத்லித்து வந்துள்ளார், பிரபாகரன்.
தலித் சமூகத்தை சார்ந்த பிரபாகரன் தனது மகளை விரும்புவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மணிகண்டன் இல்லை. தனது வீட்டிலேயே தனது மகளை கடுமையாக ஒடுக்கி அடக்கி வைத்திருக்கிறார். வீட்டிலிருந்த மிரட்டலின் காரணமாக, மணிகண்டனின் மகள், பிரபாகரனின் வீட்டிற்கே சென்று தங்குவதற்கு முடிவெடுத்து அங்கு சென்றுவிட்டார்.
பிரபாகரனின் வீட்டிற்கு வந்த மணிகண்டன் தன் மகளை அடித்து அழைத்து சென்றுள்ளார். அழைத்துச் செல்லும்போது, பிரபாகரனுக்கு கொலை மிரட்டல் விட்டுச் சென்றிருக்கிறார் மணிகண்டன். இதனை முதல் தகவல் அறிக்கையில் பிரபாகரனின் சகோதரி பிரியங்கா தெரிவித்திருக்கிறார்.
“என் மகளுடன் பழகுவதை நிறுத்தாவிட்டால் பிரபாகரனை கொலை செய்துவிடுமாறு காவனூர் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சீத்தாபதி சொல்லியிருக்கிறார். பிரபாகரனை நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்” என தனது மாமா ராமகிருஷ்ணனிடம் மணிகண்டன் கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளார் பிரியங்கா.
வீட்டில் இருந்த பிரபாகரனை வலுக்கட்டாயமாக கார்த்தி எனும் நபர் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி அழைத்துச் சென்று மதுவாங்கி கொடுத்துள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் அங்குவந்த மணிகண்டன் பிரபாகரனின் தலையில் பீர்பாட்டிலால் அடித்துள்ளார். கீழே விழுந்த பிரபாகரனை மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டுமுறை குத்திவிட்டு, மணிகண்டனும் கார்த்தியும் ஆயுதங்களுடன் தப்பியோடிவிட்டனர் என்று முதல் தகவல் அறிக்கையில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
0-0-0
நாகப்பட்டினத்தை சார்ந்த மதன்ராஜ்(23), புதுக்கோட்டையை சார்ந்த பாரதி(21) ஆகிய இருவரும் திருச்சியில் ஓர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர். மதன்ராஜ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் பாரதியின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
எதிர்ப்பையும் மீறி கடந்த ஒருமாதத்திற்கு முன்பு இருவரும் திருச்சியில் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பாரதியின் குடும்பத்தினரிடம் இருந்து மேலும் எதிர்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கருதி, பதிவுத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி தன் சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு பாரதியை அழைத்து வந்திருக்கிறார் மதன்ராஜ்.
திட்டமிட்டபடி, வழக்கறிஞர் உதவியுடன் அக்டோபர் 12-ம் தேதியன்று, சார் பதிவாளர் அலுவலகத்தில் மதன்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் திருமணப்பதிவு செய்து கொண்டனர். பதிவு செய்து முடியும் தருணத்தில் பாரதியின் தந்தையும், அவருடன் வந்த ஐந்து நபர்களும் பாரதியை வலுக்கட்டாயமாக சார்ப்பதிவாளர் அலுவலக வளாகத்திற்கு வெளியே இழுத்து சென்று தன் காரில் ஏற்றினர். அதை பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீசு ஒருவரும், பொதுமக்களும் காரை மறித்து பாரதியை மீண்டனர்.
முதலில் அந்தப் பெண் போலீசு காரை மறித்து கேட்டதற்கு, தாம் ஒரு கிராம நிர்வாக அலுவலர் (VAO) எனவும் தன்னை தடுக்கக் கூடாது எனவும் கூறியிருக்கிறார். பின்னர் பொதுமக்கள் கூடியதால் அப்பெண்ணை அவரது தந்தையால் கடத்திச் செல்ல முடியவில்லை.
தன்னை தாக்க வந்ததுமட்டுமல்லாமல், தனது மனைவியைத் தாக்கி பலவந்தமாக இழுத்துச் சென்ற பாரதியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்கும்படி நாகை வெளிப்பாளையம் போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மதன்ராஜ். ஆனாலும் போலீசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனக்கும் தனது மகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணின் தந்தை சென்றுவிட்டதாக போலீசு கூறியது.
சமூகம் முழுக்க விரவிக் கிடக்கும் சாதி வெறியை கட்டுப்படுத்த பல பத்து ஆணையங்கள் இருந்தாலும், போலீசுப் பிரிவு இருந்தாலும் குரூரமான சாதி ஆணவப் படுகொலைகளும் தாக்குதல்களும் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன.
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டது குறித்து பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் அரசுக் கட்டமைப்பு, அரசியல்வாதிகள், ஆணையங்கள், இவற்றை வழிநடத்தும் சட்டங்கள் எல்லாம் சாதிய தாக்குதல்களையும் வன்கொலைகளையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. புதிய ஆணையம் அமைப்பது மட்டும் தீர்வைத் தருமா ?
முதலில், சாதிய ஆணவப் படுகொலைகளை நடத்தாமல், தூண்டிவிடாமல், ஆதரிக்காமல் இருக்குமாறு தமது கட்சிக்காரர்களுக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான புகார்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கும் உத்தரவிடட்டும். பின்னர் சமூக நீதி பற்றி பேசட்டும்!