2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாக்குவதை நுட்பமாக செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல். 2025-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டாகும். அதற்குள் இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.
மோடி ஆட்சியின்கீழ் போலீசு, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் – பேராசிரியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதுவரை காணாத அளவிற்கு நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கடந்த 2018-ல் பீகாரில் நடந்த கூட்டமொன்றில், “இக்கட்டான சூழலில் போருக்கு வீரர்களைத் தயார்படுத்த இராணுவத்திற்கு 6 அல்லது 7 மாதங்கள் ஆகும். நம்முடைய நாட்டிற்கு தேவையென்றால், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தால், நம்மை கேட்டுக் கொண்டால் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை இராணுவமாகத் தயார்படுத்திவிடுவோம் அதுதான் நம்முடைய திறமை” என்று பேசினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தையே அவர் அவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.
படிக்க :
எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம் !
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சிக் காலத்திலிருந்தே இராணுவத்திற்குள் ஊடுருவி அதைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமாக இருந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களுள் ஒருவரான மூஞ்சே, 1935-ம் ஆண்டிலேயே இராணுவத்தை இந்தியமயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பெயரில், மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தை நாசிக்கில் நிறுவினார். 1937-ம் ஆண்டு பொன்சாலா இராணுவப் பள்ளியை நிறுவினார்.
போலி சுதந்திர காலத்திற்கு பின்பு, பல தருணங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்திய இராணுவத்தின் ஒரு துணைப்பிரிவாகவே கருதி நடத்தப்பட்டுள்ளது. 1948-ம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் போரில் பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு இராணுவம் பயிற்சியளித்திருக்கிறது. 1962-ல் நடைபெற்ற இந்திய – சீனப் போர் மற்றும் 1965-ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போர் ஆகியவற்றின் போது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சிவில், இராணுவ வேலைகளில் பங்குபெற்றிருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் பேரிடர் கால பணிகளின்போது இராணுவத்துடன் இணைந்து வேலை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மூஞ்சே தொடங்கிய இராணுவப் பள்ளியைப் போல, கடந்த 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் ஆர்.எஸ்.எஸ் புதிதாக தனது இராணுவப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறது. கீழ்நிலை வீரர்களிலிருந்து இராணுவத் தளபதிகள் வரை ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். தற்போது அடுத்த நிலைக்குச் சென்று, அலையலையாக இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு.
நாடு முழுவதும் புதிதாக 100 இராணுவப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதன் முதல்கட்டமாக, இந்தியா முழுவதும் புதிதாக 21 இராணுவப் பள்ளிகளைத் தொடங்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று அனுமதியளித்துள்ளது.
பொன்சாலா இராணுவப்பள்ளி மாணவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் மூஞ்சே.
1961-ம் ஆண்டிலிருந்து இந்திய இராணுவத்திற்குரிய அதிகாரிகளை உருவாக்குவதற்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் நாடு முழுவதும் இராணுவப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 194 இராணுவப்பள்ளிகள் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள இராணுவக் கழகத்தால் (Sainik Society) நிர்வகிக்கப்படுகிறது.
 ஆனால், தற்போது புதிதாகத் தொடங்கப்படும் இராணுவப் பள்ளிகள் இதற்கு முன்னர் தொடங்கப்பட்ட பழைய பள்ளிகளிலிருந்து வேறுபட்டவையாக இருக்கும் என்று கூறியுள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சகம். இப்புதிய பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள இராணுவக் கழகம் தொடங்கி நடத்தப்போவதில்லை. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குறிப்பிட்ட சில மாநில அரசுகளின் கைகளில் இப்பணியை ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
முதல் கட்டமாக அனுமதியளிக்கப்பட்டுள்ள 21 பள்ளிகளில் 12 பள்ளிகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது சமூகக் குழுக்களும், 6 பள்ளிகளை தனியார் பள்ளிகளும் மீதமுள்ள 3 பள்ளிகளைக் குறிப்பிட்ட சில மாநில அரசுகள் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இராணுவப் பள்ளிகளை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ். சார்பு நிறுவனங்கள்.
அவை, கேரளாவில் சிருங்கேரி மடத்தின் கீழ் செயல்படும் ஆதி சங்கரா அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்ரீ சாரதா வித்யாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் வித்யா மந்திர், குஜராத்தில் பிரம்மச்சாரி பகவதி நந்த்ஜி அறக்கட்டளை, ஹிமாச்சலப் பிரதேசத்தில் சாத்வி ரிதம்பராவால் நடத்தப்படும் ராஜ்லட்சுமி குருகுலம், பஞ்சாபில் வித்யா பாரதியின் (ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனம்) கிளை நிறுவனமான தயானந்த் பள்ளி மற்றும் உத்தரகாண்ட்டில் குரு ராம்தாஸ் பள்ளி ஆகியவைகளாகும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாஜி சித்தாந்தம் கொண்ட பாசிச கும்பல் இராணுவத்தில் ஊடுருவி வருகிறது. இரசியாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கின்ற போரில், உக்ரைன் இராணுவத்தில் நவநாஜி ஆயுதப்படையான அசோவ் படைப்பிரிவு பங்குபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த அசோவ் பாசிசக் கும்பல் சொந்தநாட்டு சிறுபான்மையினரைக் கொல்வதையும், அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும் செய்து வருகிறது.
படிக்க :
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !
நாகாலாந்து படுகொலை : இராணுவத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள்
உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச படையணியாகிவிடும்.
ஹரித்துவார் மாநாட்டில், முசுலீம்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று காவி கும்பல் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இராணுவம் அலையலையாக ஆர்.எஸ்.எஸ் மயமாக உள்ளது.
2002 குஜராத் இனப்படுகொலை போல, நாடு தழுவிய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்த ஆர்.எஸ்.எஸ் எத்தனித்தால், இம்முறை அதை இராணுவமே அரங்கேற்றும். அது இந்துராஷ்டிரத்திற்கான இராணுவமாக இருக்கும்.
பாசிச எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் நாம் மக்கள் இராணுவத்தைக் கட்டினால் மட்டுமே காவி பாசிஸ்டுகளை மோதி வீழ்த்த முடியும். களப்போராட்டங்களே நமது பயிற்சிப் பள்ளிகள். இந்துராஷ்டிரத்திற்கான இராணுவம் தயாராகிவருகிறது. நாமும் தாமதிக்காமல் தயாராவோம்!

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க