Tuesday, June 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 498

தணல்

1

ஏப்ரல் – 22 – தோழர் லெனின் பிறந்த நாள்

இந்தியாவில் புரட்சி வருமா?
ஏங்குகிறார்கள் சிலர்.

இந்தியாவிலெல்லாம்
புரட்சி வராதுங்க…
புலம்புகிறார்கள் சிலர்.

இந்தியாவில்
புரட்சி வரவேண்டுமெனில்
இங்கொரு
லெனின் வரவேண்டும்…
விரும்புகிறார்கள் சிலர்.

ஏன்,
புரட்சிக்கு நீங்கள் வருவதில்
என்ன பிரச்சினை?

புரட்சியல்லாது
உங்களுக்கு
வேறென்ன வேலை?
கேட்கிறார் லெனின்

பேசுவதல்ல
செய்வதற்கு பெயர்
லெனின்!

மெரினா
விரிந்து கிடக்கிறது
நெடுவாசல்
நீண்டு கிடக்கிறது
தில்லி ஜந்தர் மந்தர்
பிடிவாதம் பிடிக்கிறது…
உடனே புரட்சி வேண்டுமென
ஒவ்வொரு தருணமும் துடிக்கிறது.

உழைக்கும் வர்க்கம்
நீங்கள் எனில்
இதற்கென இயங்காமல்
எது உங்கள்
இதயத்துடிப்பை மறுக்கிறது?

பிஞ்சுக்குரல்கள்
டாஸ்மாக் எதிர்ப்பில் வெடிக்கிறது.
ஒரு குடம் தண்ணீருக்காக
நம் பெண்களின் கர்ப்பம்
தவிக்கிறது…
பிறப்புறுப்பையே
சாதிவெறி அறுக்கிறது…

காவிக் கொலைகாரர்களின்
கையில்
சிக்கிக்கொள்பவர்களின் குரல்
நம் ஈரக்குலையில் ஒலிக்கிறது.
மூலதனம்
தன் கோரைப் பல்லை
நம் கருவறை வரை  பதிக்கிறது…

வர்க்கப்போராட்டத்தின் தணல்
வாசல் தோறும் தகிக்கிறது..

புரட்சியின் ஒவ்வொரு அசைவினிலும்
உன்  பெயரும் சேர்ந்தே இருக்கிறது

கொடுமைகள்
எதிரியிடம் மட்டும்
உயிர் வாழ்வதில்லை
நம் இயலாமையாலும் வாழ்கிறது
அயற்சியடைய நியாயமில்லை
அச்சம் உதறி போராடு!

வர்க்கத் தாய்மடி இணைந்து கொள்ள
லெனின் பிறந்தநாள் அழைக்கிறது!

– துரை. சண்முகம்

மோடி அரசுக்கு பாடை கட்டு ! எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டு !

0

டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக 35 நாட்களுக்கும் மேலாகவும் பல்வேறு வழிகளில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரை நிர்வாணமாய் தொடங்கி, முழு நிர்வாணமும் ஆனார்கள், விவசாயிகள். ஆனால் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தனக்கு வக்கில்லை என அம்மணமாய் நின்றது மத்திய மாநில அரசுகள். விவசாயிகள் போராட்டமானது அனைவருக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்த சென்னை மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை அணுகினர்.

பகுதிமக்களும் புமாஇமு தோழர்களும் ஒன்றிணைந்து 19/04/17 அன்று மாலை  மதுரவாயல் ரேஷன்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நொளம்பூர் பகுதி செயலாளர் தோழர் கணேசன் தலைமையில் சுமார் 70 பேர் விவசாயிகளின் கதறலுக்கு பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தி அவமதித்து வரும் மோடி அரசுக்கு பாடைகட்டு! டாஸ்மாக்-கை முட வக்கில்லாத எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டு ! என்கிற தலைப்பில் போராட்டத்தை தொடங்கினர்.

சிறுவர்கள் செங்கொடியுடன் முழக்கமிட்டவாறு அணிவகுக்க, மோடி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து நொளம்பூர் தொடங்கி மதுரவாயல் பேருந்து நிறுத்தம் வரை சென்றனர். போராட்டத்தை மக்களுக்கு தெரியா வண்ணம் தடுப்பரண்களை அமைத்து, மறைத்து நின்றது போலீசு. உடனே சுதாரித்துகொண்டதோழர்களும் பொதுமக்களும் பேருந்து நிறுத்தத்திற்கு நேரடியாக சென்றனர். இதை எதிர்பார்க்காத போலீசார் போராட்டத் தலைவரான தோழர் கணேசனிடம் வந்து கெஞ்சி நின்றது. முழக்கமிட்டவாறு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மோடியின் உருவபொம்மைக்கு ஊர் பெண்கள் செருப்பு மாலை அணிவித்தார்கள். உடனே அரசின் விசுவாசமிக்க ஏவல் படையான போலீசு, பதறியடித்துக் கொண்டு வந்து, தயவுசெய்து அத மட்டும் கீழ போடுங்க என்று கெஞ்சியது.
பின்பு புமாஇமு சென்னை கிளை இணை செயலாளர் தோழர் சாரதி பத்திரிகைகளிடம் பேசிய போது நடிகர், நடிகைகளையும், வெளிநாட்டு தலைவர்கள் சுற்றுலா வந்தாலும் உடனடியாக சென்று பார்க்கும் மோடிக்கு, நமது விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா? 35 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையில் போராடுவதை பார்த்தும் துளியும் மதிக்காத மத்திய அரசுக்கு பாடைகட்டுவதை தவிர வேறு வழியில்லை, இன்னொரு புறம் ஊர் தாலி அறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வக்கில்லாத எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டவேண்டும் என நேர்காணல் அளித்தார்.
 தகவல்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
சென்னை-9445112675

கோக் பெப்சி புறக்கணிப்பு : சென்னையில் ஒரு கருத்துக் கணிப்பு

1

மிழகத்தில் காளைக்காக நடந்த போராட்டமானது காவிகளை மட்டுமல்ல, கார்பரேட்களையும் கலங்கச் செய்தது. அமெரிக்க மோகம் மற்றும் நுகர்வு மோகத்தாலும், கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா நடிகர்கள் ஆகியோரின் விளம்பர மோகத்தாலும் இளைஞர்களிடையே ஒரு பண்பாடாக பரவி இருந்த கோக் – பெப்சியை அதே இளைஞர்களே சுயமரியாதை உணர்வோடு மெரினா போராட்டத்தில் சாலைகளில் ஊற்றி ”அமெரிக்க கோலா பானங்களைத் தடை செய்” என முழக்கமிட்டனர்.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் கோக், பெப்சி புறக்கணிப்பு முழக்கம் மக்களின் முழக்கமாக மாறியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கோக் – பெப்சியை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இந்த புறக்கணிப்பைப் பற்றி கடந்த மார்ச் மாதத்தில் வினவு செய்தியாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கணிசமான வணிகர்கள் உணர்வுப்பூர்வமாகவே அதனை அமுல்படுத்தியிருந்தனர். பல வாடிக்கையாளர்களும் இந்திய குளிர்பானத் தயாரிப்புகளைக் கேட்டு வாங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனாலும் பொதுவில் கோடைக்காலம் ஆரம்பிக்கும் போது தான் கோக்-பெப்சி குறித்த மக்களின் மனநிலை தெரியவரும் என்றனர்.

வணிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு வாடிக்கையாளர் கேட்கும் சரக்கு வேண்டும். பல கடைகளில் மக்கள் வாங்குவதில்லை என்பதால் கோக் பெப்சி இருப்பில்லை என்றனர். சில கடைகளில் புறக்கணிப்பிற்கு முன்பே வாங்கிய இருப்பு இன்னும் இருப்பதாக கூறினர். சில கடைக்காரர்கள் கோக் பெப்சி தொடர்ந்து வாங்குவதாகக் கூறினர். சில வணிகர்கள் உணர்வுப் பூர்வமாகவே புறக்கணித்தனர். இருப்பினும் அனேகர் கூறியது என்னவென்றால் மக்கள் வாங்குவது, புறக்கணிப்பதை வைத்தே கோக் பெப்சி விற்பனை தொடரும் அல்லது குறையும்.

சரி, அதையும் நேரில் அறியலாம் என்று இந்த கணிப்பை மேற்கொண்டோம்.

இதோ, கோடைகாலம் தொடங்கி விட்டது. ஏப்ரல் மாத துவக்கத்திலேயே வரவிருக்கும் தண்ணீர் பஞ்சமும் நம் கண் முன்னே தெரிய ஆரம்பித்துவிட்டது. எனவே இந்த சமயத்தில் கோக் – பெப்சி பற்றி மக்களின் கருத்ததை அறிவது இன்னும் பொருத்தமாகவும் இருக்கும்.

கடந்த 9.4.2017 ஞாயிறு அன்று சுமார் 15 தோழர்கள் இக்கணிப்பை மக்களிடம் நடத்தினர். சென்னை நகரில் மட்டும் மேற்கொண்ட இக்கணிப்பில் வடபழனி, வடபழனி முருகன் கோவில், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, மீர்சாப்பேட்டை, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்றனர்.

முதன்முறையாக இக்கணிப்பை சர்வே விண்ணப்பங்களுக்கு பதில் கேள்விகளை படித்துக் காண்பித்து பதில்களை செல்பேசியில் ஒரு செயலியில் பதிவு செய்து கொண்டோம். இதன் மூலம் மக்களுக்கு கேள்விகளை தெளிவாக விளக்கி பதிலை வாங்கலாம் என்பதோடு பிறகு கருத்துக் கணிப்பு முடிந்த பிறகு தனியாக கணினியில் விவரங்களை உள்ளீடு செய்யும் பெரும் பணி மிச்சம். அந்த வகையில் இதை ஒரு சோதனை முயற்சியாகவும் மேற்கொண்டோம். எதிர்காலத்தில் இத்தகைய ஸ்மார்ட் ஃபோன் மூலம் மேற்கொள்ளப்படும் சர்வேயை பரந்து பட்ட மக்களிடம் எடுத்த கையோடு முடிவுகளை வெளியிடுவதையும் செய்ய முடியும்.

கணிப்பைப் பொறுத்த வரை பெரும்பாலான மக்கள் பொதுவில் கோக் பெப்சியை குடிப்பதே இல்லை. நடுத்தர வர்க்கம், ஐ.டி போன்ற மாதச் சம்பளம் வாங்கும் பிரிவினரைத் தாண்டி மற்றவர்களிடம் இக்குளிர்பானங்களை குடிக்கும் பழக்கம் இல்லை. டாஸ்மாக் மிக்சிங்கிற்காக சிலர் வாங்குகிறார்கள். அதிலும் நீரை பயன்படுத்தும் மக்களே அதிகம். இக்கணிப்பில் கோக் பெப்சியோடு தண்ணீர் தனியார் மயம் குறித்தும் சில கேள்விகள் இருக்கின்றன. தண்ணீருக்காக அதிகம் செலவழிக்கும் நிலை வந்தாலும் மக்கள் தண்ணீரை தனியாருக்கு விடுவதை எதிர்க்கின்றனர்.

தாமிரபரணி தண்ணீரை தாரை வாய்ப்பதை எதிர்க்கும் மக்கள் வணிகர் சங்கங்களின் கோக் பெப்சி புறக்கணிப்பை வரவேற்கின்றனர். மொத்தம் 511 பேர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் தமிழக மக்களின் மன ஓட்டத்தை காட்டுவதாக இருக்கின்றன.

கருத்துக் கணிப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் – அதற்கு மக்கள் அளித்த பதில்கள்

1. உங்கள் வீட்டில் எந்தக் குடிநீர் உபயோகிக்கிறீர்கள் ?

————————————-

2. அரசாங்கம் தண்ணீர் வியாபாரத்தை அனுமதிப்பது

—————————————–

3. அரசாங்கம் மக்களுக்கு தரமான இலவச குடிநீர் வழங்காமலிருக்கக் காரணம் ?


4. தாமிரபரணி நீரைக் கோக் நிறுவனம் எடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது சரியா ?


5. வணிக சங்கங்கள் – கோக் பெப்சி விற்பதில்லை என அறிவித்திருப்பதை ஆதரிக்கிறீர்களா ?


6. லிம்கா ஃபாண்டா போன்ற குளிர்பானங்கள் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது ?


7. “பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது” என மத்திய அரசு கூறுவதை ஆதரிக்கிறீர்களா ?


8. இதற்கு முன்னால் கோக், பெப்சி குடித்து வந்திருந்த நீங்கள், தற்போது குடிப்பதை நிறுத்தியிருந்தால் அதற்கு என்ன காரணம் ?


9. கோக், பெப்சி விளம்பரத்தில் நடிகர்கள் தோன்றுவது


ஆய்வு – ஒருங்கிணைப்பு: வினவு கருத்துக் கணிப்புக் குழு

ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!

6

ந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கையை, சிறு  திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அறிக்கை மற்ற அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ஒப்புதல் பெற அனுப்பப் பட்டுள்ளது . ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் மோடி அரசால் சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்தித் திணிப்பிற்கு ஒப்புதல் கொடுக்கிறார்.

இவ்வறிக்கையின் படி, இனி அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து முக்கிய அரசு பிரமுகர்களும், அவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்கும் பட்சத்தில் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும். ’ஏர்-இந்தியா’  நிறுவனத்தில் இனி டிக்கெட்டுகள், பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் கணிசமான அளவில் ஹிந்தியில் மட்டுமே இருக்க வேண்டும். அதோடு தனியார் வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும்.

மற்றும் மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான, சி.பி.எஸ்.ஈ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில்  10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் திட்டத்திற்கு கொள்கையளவிலான ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளித்திருக்கிறார். இதனை அடிப்படையாக வைத்து மோடி அரசு மாநில அரசுகளிடம் பேசி அதனடிப்படையில் மொழிக் கொள்கையை வகுக்கும்.

ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், தேர்விலும், நேர்காணலிலும் மாணவர்கள் ஹிந்தி மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது இந்த அறிக்கை. அதே போல அரசு, தகவல் பரிமாற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ள ஹிங்கிலிஸ் (ஹிந்தியை ஆங்கிலத்தில் எழுதுவது) வார்த்தைகளை உள்ளடக்கிய அகராதி ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

இந்தப் பரிந்துரைகளில் சில பிரணாப் முகர்ஜிக்கே மிகவும் ‘ஓவராக’த் தெரிந்ததாலோ என்னவோ, அவரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து உற்பத்திப் பொருள்களிலும் அச்சிடப்படும் தகவல்களும் ஹிந்தியிலும், பொருட்களின் பெயர் தேவநாகரியிலும் அச்சிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையைத் தமது கார்ப்பரேட் எஜமானர்களின் நலன் கருதி நிராகரித்துள்ளார் பிரனாப் முகர்ஜி. எனினும் அனைத்து அரசு, அரசு சார் நிறுவனங்களின் பொருட்களின் பெயரும் கண்டிப்பாக ஹிந்தியில் இருக்க வேண்டும் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதோடு அரசு வேலைவாய்ப்புகளுக்கு கண்டிப்பாக குறைந்த பட்ச அளவில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற பரிந்துரையையும், நடைமுறை சிக்கல் கருதி நிராகரித்திருக்கிறார்  குடியரசுத் தலைவர்.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயம் ஹிந்தி சொல்லித் தர உத்தரவிட வேண்டும் எனக் கடந்த ஏப்ரல் 14 அன்று பாஜகவின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் முன் வைத்துள்ள வாதங்களின் படி இந்தியாவில் 1968-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்த மும்மொழிக் கொள்கையை பல மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை – குறிப்பாக ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. எனவே அத்தகைய நிலையைப் போக்கி ‘தேசிய மொழியான’ ஹிந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாய மொழியாக்க உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார்.

பள்ளிகளில்  மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் ஹிந்தி

குறிப்பாக ”ஹிந்துஸ்தான் என்ற பெயரே, ஹிந்தி மொழியை அதிகமாகப் பேசும் மக்கள் இருப்பதால் தான் வந்தது” என்ற புதிய கண்டுபிடிப்பையும் இவ்வழக்கின் முக்கியமான வாதமாக முன் வைத்திருக்கிறார்கள் என்றால் இவ்வழக்கின் ”ஹிந்து – ஹிந்தி – இந்தியா” தன்மையைப் புரிந்து கொள்ளுங்களேன்.

இதற்கு முன்னரே, இரகசிய சுற்றறிக்கைகள் மூலம் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்பு, உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத்த் திணிப்பு என சேட்டையைக் காட்டி வந்த பாஜக, சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறை, வங்கிகள் ஆகியவற்றின் மூலமும் கொல்லைப் புற வழியாக தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணித்து வருகிறது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது.  அதனைத் தொடர்ந்து பல இடங்களில், கருப்பு மை பூசி ஹிந்தியை அழித்தனர் தமிழக இளைஞர்கள். அடுத்த படியாக கடந்த 2 மாதங்களில் பல வங்கிகளின் ஏடிஎம்களிலும் தமிழ் மொழித் தேர்வு செய்வதற்கு இருந்த வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்று மட்டுமே தகவல் பரிமாற்ற மொழியாகத் தேர்ந்தெடுக்க முடியும். இப்படி நேரடியாகவும், பின்வாசல் வழியாகவும் தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணிக்க எத்தனித்து வருகிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

தற்போது ஒப்புதலைப் பெற்றுள்ள அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்திலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் 2011-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டவையே. கடந்த 6 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த இவ்வறிக்கை, தற்போது மோடி அரசின் கீழ், பிரணாப் முகர்ஜியின் ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் அவசர அவசரமாக சட்டமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது மோடி அரசு

சுதந்திரம் அடைந்த பிறகு அலுவலக மொழியாக இந்தியைக் கொண்டு வர இந்தக் கமிட்டியால் இதுவரை 9 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன.   எனினும் ஹிந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்தகைய பரிந்துரைகள், தற்போது தனிப் பெரும்பான்மையுடனும், பாசிசத் தன்மையுடனும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாஜக கும்பலால் நடைமுறைப்படுத்தபட உள்ளன.

1938-ம் ஆண்டு தொடங்கி எழுச்சியுறு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி தனது சுயமரியாதையை தமிழகம் நிலைநாட்டியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற போராளிகள், தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் சிறையிலேயே தியாகிகளாகினர். 1965-ம் ஆண்டு ஹிந்தியை ஆட்சி மொழியாக மத்திய காங்கிரசு அரசு அறிவித்த போது, தமிழகம் முழுவதும் தீப்பிழம்பாக பற்றியெரிந்தது. சனவரி 25 அன்று சென்னையில் தொடங்கிய போராட்டம், நெல்லை, கோவை, மதுரை, சிதம்பரம், திருச்சி எனப் பற்றிப் படர்ந்தது . மாணவர்களை ஒடுக்க அப்போதைய பக்தவத்சலம் அரசு இராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கியது. இராணுவம் எங்கள் மயிருக்குச் சமானம், என ஒட்டு மொத்தத் தமிழகமும்  வெகுண்டெழுந்து போராடியது. 55 நாட்கள் நீடித்த மாணவர்களின் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.

நமது பண்பாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையும் போர்க்குணமும் அதிகார வர்க்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலையும் அடிபணிய வைத்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழகத்திடமும் செருப்பால் அடிவாங்கிய மத்திய பாஜக அரசு மீண்டும் ஒருமுறை தன்னுடன் மோதிப் பார்க்க அறைகூவல் விடுக்கிறது. நாமும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பை எதிர்கொள்ள மீண்டும் ஒரு டெல்லிக் கட்டைத் தொடங்குவோம்.

– நந்தன்

மேலும் படிக்க:
President Pranab Mukherjee okays call for all speeches to be in Hindi
PIL in Supreme Court to make Hindi compulsory in class I-VIII in country
Tamil Nadu may see revival of anti-Hindi protests as Centre replaces English signages on highways
Hindi could be compulsory till Class 10 in all CBSE schools

ஆதார் – மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு : மக்களை ஒடுக்கும் டிஜிட்டல் ஆயுதம்

0

”உங்களுடைய வீட்டுப் பணியாளர்கள், கார் ஓட்டுநர், எலக்ட்ரீசியன், வீட்டு வாடகைக்காரர்கள், யாராயிருந்தாலும் ஆதாரை அடிப்படையாக கொண்ட எங்களுடைய ஆண்டிராய்ட் ஆப் மூலம் அவர்களது பின்னணியை பரிசோதித்துக் கொள்ளலாம்” என்கிறது அந்த ட்ரஸ்ட் ஐடி(TrustID) என்ற கம்பெனியின் விளம்பரம். “முகத்தைப் பார்த்து நம்பாதீர்கள், ட்ரஸ்ட் ஐடியைப் பாருங்கள்” என்கிற முழக்கத்தை வைத்துள்ளது அக்கம்பெனி.

டிரஸ்ட் ஐடி - யின் விளம்பரம்
டிரஸ்ட் ஐடி – யின் விளம்பரம்

அதாவது எந்த ஒரு தனிநபராக இருந்தாலும், அவரது தனிப்பட்ட தகவல்களை ஒரு தனியார் நிறுவனத்திற்கு காசு கட்டி நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதே மேற்படி விளம்பரத்தின் பொருள். ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், உச்சநீதிமன்றமே ஆதாரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்பாடுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையிலும் தான் மேற்கண்ட விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

அரசின் நலத்திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் (இடைத்தரகர்களுக்குச் செல்லாமல்) நேரடியாக மக்களிடம் சென்று சேர்வதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படவுள்ள ஒரு பிரத்யேக அடையாள எண்ணாகத் தான் முதலில் ஆதாரைச் சொன்னது அரசு. ஆனால், ஆதாரின் மூளையான நந்தன் நிலேகானி ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு வகையான வியாக்கியானங்களை சொல்லி வந்திருக்கிறார்.

“ஆதார் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல – அது ”அடையாள செயற்தளம்” (Identity Platform)” என்று 2011-ம் ஆண்டு பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் கருத்தரங்கு ஒன்றில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள், ஆதாரை ஒட்டுமொத்த மக்களுடைய அடையாளங்களின் மீப்பெரும் மின்தரவுக் கிடங்காக அரசு உருவாக்கியுள்ளது.

மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது, அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது; செல்போன் இணைப்பு பெற ஆதார் எண் அவசியம்; ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு நபருக்கு நபர் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்தப் போக்குகள் மெல்ல மெல்ல இந்தியர்களுடைய வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக ஆதார் மாற்றப்பட்டு வருகிறது.

ஒரு தனி நபரின் கடன் எவ்வளவு, யாருக்குப் பணம் கொடுக்கிறார், யாரிடம் வாங்குகிறார், சம்பளம் எவ்வளவு, அந்தச் சம்பளத்தில் வீட்டுக்கு செலவு செய்வது எவ்வளவு சேமிப்பது எவ்வளவு என்பவை உள்ளிட்டு அந்த தனிநபரின் பொருளாதார செயல்பாடுகளில் துவங்கி, அவர் ஓய்வு நேரத்தில் எந்த மாதிரியான திரைப்படங்கள் பார்க்கிறார், செல்பேசியில் எத்தனை நேரம், எதற்காக செலவிடுகிறார் என்பன போன்ற அவரது சமூக செயல்பாடுகள் வரை கண்காணிக்க முடியும்.

நூற்றி முப்பது கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவது அரசுக்கும் முதலாளிகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது.

உதாரணமாக, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இணையத்தின் மூலம் கட்டணம் செலுத்தி நீங்கள் வாங்கிப் படிக்கும் நூல்கள், பார்க்கும் படங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு உங்களது ஆர்வம், ஆளுமை, பண்புகள் எவ்வாறிருக்கும் என்பதை கணிக்கும் கணினி செயலிகளை உருவாக்க முடியும். இது போன்ற செயலிகள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒரு முதலாளி தன்னிடம் வேலைக்குச் சேர முன்வரும் ஒருவரை வேலைக்குச் சேர்க்கலாமா அல்லது பணிநீக்கம் செய்யலாமா என்பதை முடிவு செய்ய முடியும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் விளம்பரத்தின் உட்பொருளும் இது தான்.

நூற்றி முப்பது கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவது அரசுக்கும் முதலாளிகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது.

அரசைப் பொருத்தவரை மக்களை சதாகாலமும் கண்காணிக்க முடியும். மேலும் மீப்பெரும் மின்தரவுகளை செயற்கை அறிதிறனுடன் (Artificial Intelligence) இணைக்கும் தொழிநுட்ப சாத்தியமும் உள்ளது. அவ்வாறு செய்யப்படும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட நபர் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதை (ஆதார் மூலம் இணைக்கப்பட்டு, மீப்பெரும் மின்தரவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருக்கும்) விவரங்களைக் கொண்டு கணிக்க முடியும். இவ்வாறு கணிக்கும் போது வந்தடையும் முடிவுகள் எந்தளவுக்குத் துல்லியமாக இருக்கும் என்பதும் அது சரியாக இருக்குமா என்பதும், இவ்வாறு மனிதர்கள் குறித்த தீர்மானங்களைக் கணினிகள் எடுப்பது சரிதானா என்பதும் அறிவியல் உலகில் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இன்றைக்கே மக்களின் வாசிப்பு, ரசனை, அரசியல் தரம், சமூக உணர்வு அத்தனையும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களாலேயே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது மேற்கண்ட ஆய்வு முற்றிலும் சாத்தியமல்ல என்று ஒதுக்கிவிட முடியாது.

அறிவியல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் ஒருபுறமிருக்க – “எனது செயல்பாடுகளை அரசு கண்காணிப்பதில் என்ன தவறிருக்கிறது? நான் என்ன தீவிரவாதித்திலா ஈடுபட்டுள்ளேன்?” என்பது போன்ற பாமரத்தனமான, அடிமுட்டாள்தனமான வாதங்களும் இணைய விவாதங்களில் முன்வைக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தையும் அதன் மனிதர்களையும் கண்காணிப்பது என்பது அவர்களை மொத்தமாக கட்டுப்படுத்துவதற்கான முன்நிபந்தனை என்பதையும் அது அடிப்படையான மக்கள் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என்பதையும் “இராணுவ ஆட்சி வந்தா எல்லாம் சரியா போயிடும் சார்” என்று முந்தைய காலங்களில் பிதற்றிக் கொண்டிருந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் வகையான பாமர மூளைகள் புரிந்து கொள்ளவில்லை.

ஆதாரின் உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஓரளவு ஜனநாயக உணர்வுள்ளவர்கள் அதைக் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர். ஆதாரைக் கேள்விக்குள்ளாக்குபவர்களையும் உச்சநீதிமன்றத்தில் ஆதாருக்கு எதிராக நடக்கும் வழக்கின் தீர்ப்பு அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்  என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட அபாயம் என்பது ஆதாரின் வடிவத்தில் மட்டும் இல்லை.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு தேசிய புலனாய்வுச் சட்டகத்தை (நேட்கிரிட் : NATGRID – Nationlan Intellingence Grid) புனரமைத்துள்ளது. வங்கிப் பரிவர்த்தனைகள், கடனட்டைகள், குடியேற்றத் துறை, இரயில்வே பயண விவரங்கள், விமான பயண விவரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் காவல்துறை மாநில புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்டு 21 துறைகளின் மின்தரவுகளை ஒருங்கிணைக்கும் மையமாக நேட்கிரிட்டின் செயல்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது மோடி அரசு.

நேட்கிரிட்டுடன் ஆதார் விவரங்களையும் – ஆதார் எண்ணால் இணைக்கப்பட்ட பல்வேறு பொருளாதார பரிவர்த்தனை, செல்பேசி உரையாடல் விவரங்கள் மற்றும் இன்னபிற விவரங்களையும் இணைப்பது தொழில்நுட்ப ரீதியில் எளிதானது. அப்படி இணைக்கப்பட்டிருப்பதான செய்திகள் இதுவரை வெளியாகவில்லை எனினும், ஏற்கனவே அப்படியான ஒரு இணைப்பு செய்யப்பட்டிருந்தால் வியப்பதற்கு ஏதுமில்லை.

மனிதப் புலனாய்வையே (Human Intelligence) முந்தைய காலங்களில் அரசுகள் சார்ந்திருந்தன. இதனிடத்தில் பல்வேறு தகவல்மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்தரவுகளை சேமிக்கும் மீப்பெரும் மின்தரவுக் கிடங்குகளை (Big Data Lakes) உருவாக்குவது, அதின் விவரங்களை செயற்கை அறிதிறன் பெற்ற கணினிகளின் மூலம் சலித்தெடுத்து முன்னறிப் புலனாய்வு முறையை (predictive intelligence) புகுத்தும் முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை (அது நடந்த பின் அல்லது நடக்கும் முன்) யார் செய்திருக்க முடியும் (அல்லது செய்ய முடியும்) என்பதை அனுமானிக்கும் சாத்தியங்களை தொழில்நுட்பம் வழங்குகின்றது.

அவரை கேள்விக்கேட்ட பத்திரிகையாளரை தேசவிரோதி என்று கூறிய பாரதிய  ஜனதாவின் ஹெச்.ராஜா

இது ஒரு மாபெரும் தொழில்நுட்ப பாய்ச்சல் என்று தூய அறிவியல்வாதிகள் கொண்டாடலாம். ஆனால், அந்த தொழில்நுட்பத்தை யார் எந்த நோக்கத்திற்காக எந்த மக்களின் மேல் பிரயோகிக்கிறார்கள் என்பதே நமது கவலைக்குரியதாகும். இந்த தொழில்நுட்ப சாத்தியங்களை அமெரிக்கா எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தியது என்பதையும் அதனால் தனிநபர் சுதந்திரம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதையும் ஸ்நோடன் அம்பலப்படுத்தினார். இங்கோ மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலே உச்சநீதிமன்றத்தில் தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசனத்தால் உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என வாதிடுகிறார்.

மோடி அதிகாரத்திற்கு வந்த பின் நாடு மொத்தமும் காவிமயமாக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகின்றது இந்துத்துவ கும்பல், தமது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ள அனைவரையும் தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றனர் – இதற்கு அவர்கள் குறைந்தபட்சமாக கூட கூச்சப்படுவதில்லை. சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மோடி அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை நோக்கி “தேச விரோதி” என சீறினார் பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜா.

ஹெச்.ராஜா போன்றவர்களின் கட்டுப்பாட்டில் மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற தொழில்நுட்பங்கள் சென்று சேர்ந்தால் என்ன நடக்கும்? அந்த பத்திரிகையாளர் தேசவிரோதி தான் என்பதற்கான ’தரவுகளுடன்’ மறுநாள் காலை போலீசார் அவரது வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருப்பார்.

ஆதார், மீப்பெரும் மினதரவுக் கிடங்குகள், செயற்கை அறிவு துணையுடன் மனிதர்களின் செல்நடத்தையை முன்னோக்கி அறிவதும், அந்த அறிதலை முன்வைத்து அரசியல் -பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை வகுத்துக் கொள்வது இவர்களது நோக்கம். இது மக்களின் சிவில் அரசியல் உரிமைகளை காவு கொடுப்பதோடு அதில் முன்னணியாளர்களாக இருக்கும் இடதுசாரி முற்போக்கு அமைப்புக்களின் தோழர்களையும் ஆதரவாளர்களையும் முடக்க நினைக்கிறார்கள். இன்னொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முதலாளிகளின் ஏகபோகத்திற்கும் இந்த புதிய வகை ஆதார் திட்டம் பயன்படும். இப்படி இரண்டு புறங்களிலும் நம்மை அடிக்கப் போகிறது ஆதார் திட்டம்.

நேட்கிரிட், ஆதார் குறித்த இணைய விவாதம் ஒன்றில் ”எந்த நேரமும் சமூகத்தைக் கண்காணிப்பதும் எச்சரிக்கையாக இருப்பதும் அதன் பாதுகாப்பை உத்திரவாதிப்படுத்திக் கொள்வதற்கு தானே.. அதில் ஓரிரு நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட மொத்த சமூகத்திற்குமான பாதுகாப்பு முக்கியமானதல்லவா?” என வாதிட்டுக் கொண்டிருந்தார் மோடி பக்தர் ஒருவர். அதீத பாதுகாப்புடன் உடலுக்குள் இருக்கும் நல்ல செல்களைக் கூட நோய் கிருமிகள் என சந்தேகப்பட்டு தாக்கியழிப்பதற்கு பெயர் நோயெதிர்ப்பு சக்தியல்ல – கான்சர்.

உடலை அரிக்கும் கான்சரைப் போல் நாட்டைப் பீடித்து வருகிறது இந்துத்துவ கும்பல். புற்றுநோயை வெட்டி எறியாமல் நமது ஆரோக்கியத்தை மீட்க முடியாது.

– முகில்

டாஸ்மாக் கடையை திற ! திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம் !

1

மிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்களின் கோபத்தை கண்ட தமிழக பாஜக “என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார்” என்பதாக  ஆர்பாட்டம் ஒன்றை அறிவித்தது.

அதன்படி 18-ந்தேதி (18.04.2017) காலை 10:00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிராதான மதுக்கடைகள் முன்பாக பா.ஜ.கட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி சார்பற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆர்ப்பாட்டதை நடத்தும்” என்று அறச்சீற்றம் கொண்டு தமிழிசை அறிக்கை வெளியிட்டார்.

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்றால் கடையை சுற்றி இரும்பு தடுப்புகள்  போடப்பட்டு, காக்கிகள் குவிக்கப்பட்டு பொது மக்களை பீதியூட்டுவது போன்றவை  சமீபத்திய நடைமுறையாகும். ஆனால் ஏப்ரல் 18 அன்று பாஜக போராட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் அப்படிபட்ட பதட்டம் எதுவும் இல்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வெள்ளக்குளம் அருகில்  உள்ள டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் வித்தியாசமான நூதனப்போராட்டமாக இருந்தது.

பாஜக -வின் மாவட்டம், ஒன்றியம் என அனைத்தும் டாஸ்மாக் கடையை நோக்கி வந்து முழக்கமிட்டனர். இதில் சிலர் “பாரத் மாதாக்கீ ஜே” என்று அவ்வபோது ஈனஸ்வரத்தில் ஊளையிட்டனர். மாவட்டம், வட்டம், சதுரம், முக்கோணங்களின் சவடால்கள் கேட்கவே நாராசமாக இருந்தது.

முற்றுகைப் போராட்டம் இருப்பதால் கடை திறக்க வேண்டாம் முற்றுகை முடிந்த பின்னால் திறந்து கொள்ளலாம் என்று கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததனால் 12:00 மணி கடந்தும் கடை திறக்கப்படவில்லை. “கடையை திறந்தால் தான் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்வோம், இல்லையேல் போராட்டம் நீடிக்கும்” என காவிப்படை வானரத் தளபதிகள் கூறியதும் குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அதாவது திறக்கப்பட்ட் டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் பாஜக-வினர் அதை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் அப்பிலும், தலைமைக்கும் அனுப்பி தமது இருப்பை பதிவு செய்ய முடியுமாம். என்ன இருந்தாலும் செல்ஃபி நாயகனைத் தலைவனாக கொண்ட கட்சியல்லவா!

இந்த அறிவிப்பு  காவல்பணிக்கு வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை  உருவாக்கிவிட்டது. டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் மனநிலையை உணர்ந்தவர்கள் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று அச்சப்பட்டு யோசித்து தயங்கியபடி நின்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து கடை திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டம் வரிசை கட்ட ஆரம்பித்தது. முற்றுகை போராட்டமும் முடித்துக் கொள்ளப்பட்டது.

“இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்தும்” என்றதமிழிசையின் பேச்சைக்கேட்டு, பா.ஜ.க-வை ‘நம்பி’ போராட்டத்துக்கு வந்த மக்கள், பெண்கள் முகம் சுழித்தபடியே செய்வதறியாமல் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.

மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் – லெனின் 148-வது பிறந்த நாள் – புஜதொமு பிரச்சாரம்

0

மே 5, 2017 பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் ! ஏப்ரல் 22, 2017 பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 148-வது பிறந்தநாள் !

தமிழகம் மற்றும் புதுவையில் அரங்கு மற்றும் ஆலைவாயில் கூட்டங்கள் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே !

“முதலாளி இல்லாமல் தொழிலாளி இல்லை, முதலாளிகளால்தான் எல்லாமே நடக்கிறது. அவன் முதல் போட்டவன், நாம எதுவும் கேட்க முடியுமா?” என விரக்தியோடு அடங்கிக் கிடப் பவர்கள் ஏராளம். இது காலங்காலமாக நடந்து வரும் சமாச்சாரம்தானே என சலித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் விருப்பம். அதனால்தான் இது போன்ற நச்சுக் கருத்துக்களைத் தமது அடிவருடிகள் மூலம் அவிழ்த்துவிட்டு நம்மை நம்ப வைத்து வருகின்றனர். இதெல்லாம் உண்மை இல்லை, மோசடி அயோக்கியத்தனம் என உலகமே அதிரும்படியாக உரக்கச் சொல்லி, உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தவர் காரல் மார்க்ஸ், அவர் உருவாக்கிய தத்துவம், உழைக்கும் வர்க்கத்துக்காகவே உருவாக்கப்பட்ட தத்துவம், உழைக்கும் வர்க்கத்துக்காக மட்டுமே பேசுகின்ற, போராடுகின்ற தத்துவம். அதுதான் கம்யூனிசம் அதனால்தான் கம்யூனிசம் என்ற வார்த்தையைக் கேட்டாலே முதலாளி களுக்கு மிளகாயை அரைத்து எங்கோ பூசியது போல எரிகிறது.

உழைப்பாளிக்கு உரிய கூலியைத் தரமறுப்பதன் மூலம் அவனது உழைப்பைக் கொள்ளையடித்து சேர்த்ததுதான் முதலாளிகளின் மூலதனம், என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார் காரல் மார்க்ஸ், முதலாளிகளின் சொத்து மட்டுமல்ல, அனைத்து உற்பத்தி சாதனங்களுமே உழைப்பாளிகளின் உழைப்பின் பயனாக உருவானவைதான் என்பதையும், அதையெல்லாம் தனது தனிப்பட்ட சொத்தாக வைத்திருப்பதன் மூலம் முதலாளிகள், உழைப் பாளிகளை அடிமைப்படுத்தி சுரண்டுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்திக் காட்டினார்.

இப்படிப்பட்ட திருட்டு முதலாளிகள் தமது சொத்தை, மூலதனத்தைப் பாதுகாக்கவும், பெருக்கிக் கொள்ளவும் உருவாக்கியது தான் தற்போதைய அரசு அமைப்பு என்பதையும், அந்த அரசிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதையும் வரலாற்று அனுபவங்களில் இருந்து தெளிவாக்கிக் காட்டினார் மார்க்ஸ். எனவே, பாட்டாளி வர்க்கம் இப்போதுள்ள முதலாளித்துவ அரசமைப்பைப் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்துவிட்டு தனக்கான புதிய அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; இதற்காக தொழிலாளி வர்க்கம் தன்னைப் போலவே ஒடுக்கப் படும் பெரும்பான்மை விவசாய வர்க்கத்தையும் தன்னோடு அணிசேர்த்துக் கொண்டாக வேண் டும் எனவும் வழிகாட்டினார். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு, அதைக் காப்பாற்றி நிலைநாட்டவும், நடைமுறையில் சாதிக்கவும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார் காரல் மார்க்ஸ்.

மார்க்சின் வழிநின்று, அவரது தத்துவத்தை நடைமுறையில் சாதித்துக் காட்டி உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் காட்டியவர் ஆசான் லெனின், ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி, அதன் பாதுகாப்பில் தொழிலாளிகளை உறிஞ்சிக் கொழுத்த முதலாளிகள், விவசாயிகளை சுரண்டிக் கொள்ளையடித்த பண் ணையார்கள் என ரஷ்ய நாட்டு உழைக்கும் மக்கள் நடுங்கித் தவித்தனர். அம்மக்களின் துயரம் தீர்க்கும் விடிவெள்ளியாக, ரஷ்ய போல்ஷ்விக் கட்சியை உருவாக்கி, தொழிலாளி – விவசாயி வர்க்கங்களின் கூட்டை உறுதியாக நிறுவினார் லெனின்.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமை யில் 1917- நவம்பர் 7-ஆம் நாளில் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி பாட்டாளிகளின் புதிய அரசு அமைக்கப்பட்டது.

உழைக்கும் வர்க்கத்தின் கையில் அரசதிகாரம் வந்தவுடன் உழுபவருக்கே நிலம், உழைப் பவருக்கே அதிகாரம் என்ற முழக்கத்தை நிறை வேற்றும் வகையில், ஆலைகள் அனைத்தும் அரசுடைமை ஆனது. பணக்கார விவசாயிகளின் நிலங் கள் பறிமுதல் செய்யப்பட்டு உழுபவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் அறியாமை போக்க அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது. ஆயிரம், லட்சம் என உழைப் பாளிகள் வேலையே இல்லாமல் அலைந்த நாட் டில், எங்கு திரும்பினாலும் ஆலைகளின் வாச லில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அட்டை களே தொங்கின என்னுமளவிற்கு தொழிற்துறை உற்பத்தி பெருகியது. சிறுவிவசாயிகளை ஒன் றிணைத்து கூட்டுறவுகளும், கூட்டுப்பண்ணை களும், பிறகு அரசுப் பண்ணைகளும் உருவாக்கப் பட்டன. யாரும் பட்டினியில்லை என்று சொல்லும் அளவுக்கு தானியக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன.

தேர்ந்தெடுக்க, தவறு செய்வோரை திருப்பியழைக்க – தண்டிக்க மக்களுக்கு அதிகாரம் கொடுத்த சோவியத்துகளுக்கு தொழிலாளி களும், விவசாயிகளும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் நலன் காக்கும் சட்ட திட்டங்களை உருவாக்கி, மக்கள் ஒப்பு தலோடு நிறைவேற்றினார்கள். தங்களது மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக இருந்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்தன. கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் இலவசம், மிகச்சொற்பமான தொகையில் வீட்டுவசதியும், போக்குவரத்தும் சாத்தியமாகின. அவரவர் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆண் – பெண், தொழிலாளி – விவசாயி, உடலுழைப்பு – மூளையுழைப்பு, நகர்ப்புறம்-கிராமப்புறம் ஆகிய வேறுபாடுகளை ஒழித்துக்கட்டியதுடன் உழைப் பாளிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிலை நாட்டப்பட்டன.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி விட்டதாகக் கூறப்படும் நமது நாட்டில் என்ன நிலைமை கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் தனியார்மயம், பகற்கொள்ளை வீட்டு வாடகையும், போக்குவரத்தும் தகவல் தொடர்பும் பாதிச் சம்பளத்தை விழுங்கும் நிலை, வாழ்க்கைக்குத் தகுதியான படிப்பில்லை, படித்தவருக்கும் வேலையில்லை, வேலையில் இருப்பவருக்கோ தக்க ஊதியமில்லை. விவசாயமே வேண்டாம் என விவசாயிகளே கிராமங்களை விட்டு ஓடும் நிலை, அப்படியும் உயிரைக் கொடுத்து விளைய வைத்தாலும் போதிய விலை இல்லை, விலையை நிர்ணயிக்கும் உரிமையுமில்லை. விளைந்த தானியங்கள் எல்லாம் அரசாங்க குடோனில் எலிக்கும், கரப்பானுக்கும் உணவாகி வீணாகின்றன. உழைக்கும் மக்களோ கோடிக்கணக்கில் இராப்பட்டினி, முழுப் பட்டினி கிடக்க, பெண்களும் குழந்தைகளும் கோடிக்கணக்கில் ரத்தசோகையில் வாட லட்சம் கோடிகளில் கொழிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளோ சுகவாழ்வு வாழ்கிறார்கள். அவர்களின் அடியாளாய் நிற்கும் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லாம் ரொக்கத்தில் மிதக்கிறார்கள்.

அந்தத் திமிரில் தான், போராடும் விவசாயிகளைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் உரிமை கேட்கும் தொழிலாளர்களை ஒடுக்குகிறார்கள் மீனவர் படுகொலைகளைக் கண்டும் காணாதது போல நடிக்கிறார்கள். முதலாளிகளின் லாபத்திற்காக, ரேசன் கடைகளை மூடிப்பட்டினிப் போட்டு, தெருக்கள்தோறும் சாராயக்கடைகள் திறந்து மக்களைக் கொள்ளையிடத் துடிக்கிறார்கள். மக்கள் சிந்தனையை மழுங்கடித்து, ஊழல்படுத்த விழை கிறார்கள். மக்களோ வாழ்க்கை இழந்து வாழும் வழி தெரியாது அலைகிறார்கள்.

இந்த அவலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிப்பது? நாட்டையே பீடித்துக் கொண்டிருக் கும் இந்தக் கேவலத்தை விரட்டவே முடியாதா? முடியும் என வழிகாட்டியவர்கள்தான் மார்க்சும், லெனினும். பரதேசிகள், அழுக்குச் சட்டைகள் என்றெல்லாம் ஆளும்வர்க்கம் கேவலப்படுத் திய உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியைப் புரட்சி மூலம் நிறுவுவதே ஒரே வழி. நம்மால் முடியுமா? யாரும் வரமாட்டார்கள், மக்கள் சுயநலக்காரர்கள் என்பதெல்லாம் வீண்பழி, இதோ மெரீனா காட்டி விட்டது நமக்கு வழி.

உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கே வழிகாட்டிய ஆசான் காரல் மார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டு மே 5 அன்று தொடங்குகிறது. ஆசான் லெனினின் 149-வது பிறந்த நாளான ஏப்ரல் 22 நெருங்கிவிட்டது. இனியும் எதற்கு நம்மால் முடியுமா என்னும் தயக்கம்?

  • தொழிலாளிகளும் விவசாயிகளும் ஒன்றிணைவோம் !
  • மாணவர் – இளைஞர்களுடன் கைகோர்ப்போம் !
  • மார்க்ஸ் – லெனின் வழியில், நவம்பர் புரட்சியின் ஒளியில் தமிழகத்தையே மெரினாவாக்குவோம் !
  • உழைக்கும் மக்களின் துயர் நீக்குவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
94444 61480, 94453 68009, 88075 32859, 84897 35841.

மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?

0

டந்த ஏப்ரல் முதல் நாளிலிருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் இதை நடைமுறைப்படுத்துவதைப் போல பாவ்லா காட்டிவிட்டு போங்காட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தீர்ப்பும்கூட, நகரங்கள் எனில் நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் சாராயக் கடைகளை நடத்தலாம் என்றும், 20,000 பேருக்குக் குறைவான மக்கள் தொகை உள்ள கிராமப்புற – சிறுநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலையிலிருந்து 220 மீட்டருக்கு அப்பால் சாராயக் கடையை நடத்தலாம் என்றும் நீர்த்துப்போன வகையில்தான் உள்ளது.

பொள்ளாச்சியில், மூடப்பட்ட சாராயக் கடையைப் புதிதாகக் கட்டிடம் கட்டித் திறக்க முயற்சிப்பதைத் தடுக்கும் பொதுமக்கள்.
பொள்ளாச்சியில், மூடப்பட்ட சாராயக் கடையைப் புதிதாகக் கட்டிடம் கட்டித் திறக்க முயற்சிப்பதைத் தடுக்கும் பொதுமக்கள்.

தொளதொளப்பான இந்த உத்தரவையும்கூட செல்லாக்காசாகிவிட்டது தமிழக அரசு. விளக்குகளை அணைத்துவிட்டு பழைய டாஸ்மாக் கடைகளில் வியாபாரத்தை நடத்துவதோடு, அருகிலேயே புதிய கடைகளைத் திறந்தும், கிராமங்களில் அவரசமாகப் புதியக் கடைகளைக் கட்டியும் வருகிறது. இவற்றுக்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் தாய்மார்கள் துடப்பத்துடனும் செருப்புகளுடனும் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளன. போராடும் மக்களை மிருகத்தனமாகத் தாக்கி சாராய முதலாளிகளின் அடியாள் படையாக வெறியாட்டம் போடுகிறது தமிழக போலீசு.

இதர மாநிலங்களில் சாராயக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் போராட்டங்கள் தொடர்வதற்குக் காரணமே, தமிழகத்தில் டாஸ்மாக் என்பது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதுதான். கடலூர் மாவட்டம், கச்சிராயநத்தம் கிராமத்திலுள்ள 450 குடும்பங்களில் 105 பெண்கள் தங்கள் கணவரை டாஸ்மாக்கினால் இழந்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் சாராயம் குடிப்பதும்,  சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் பெருகுவதுமாக தமிழகமே மிகப் பெரிய சாராய சீரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

நேற்றுவரை இச்சீரழிவுக்கு எதிராக அக்கறை கொண்டவர்களைப் போல பேசியவர்கள், தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்த வேண்டுமேயன்றி, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களிலுள்ள பார்கள் அனைத்தையும் வேண்டுமென்று உத்தரவிடுவது சரியல்ல என்று இப்போது நாக்கைச் சுழற்றிப் பேசுகிறார்கள். குடிப்பது தனிமனிதனின் உரிமை; அதைத் தடுக்க முடியாது; அதேசமயம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை சட்டப்படி தண்டிக்க வேண்டுமென்கிறார்கள். சாராயக் கடைக்கு வாகனத்தில் வந்து குடிக்கலாம்; ஆனால் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதுதான் குற்றம் எனும் இக்கோமாளித்தனமான சட்டத்தைத்தான் கடுமையாக நடைமுறைப்படுத்தச் சொல்கிறார்கள். இதன்படி வாகனத்தில் வரும் குடிமகனின் வாயை ஊதச் சொல்லி அபராதம் விதிப்பதாக மிரட்டி போலீசார் மாமூல் கறப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் பொதுமக்கள்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் பொதுமக்கள்

ஈராண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராட்டங்கள் வலுத்த நிலையில், சாராய சீரழிவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சஞ்சீவி குமார் எழுதிய “மெல்ல தமிழன் இனி…’’ என்ற  தொடர் கட்டுரையை தி இந்து தமிழ் நாளேடு வெளியிட்டது.  ஆனால் ஆங்கில தி இந்து நாளேடானது, தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் சுற்றுலாவை நம்பியுள்ள சிறிய மாநிலங்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் தலையங்கமே எழுதுகிறது. ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை விட, இரட்டை நாக்குடன் பேசும் இந்து நாளேட்டின் ஊடக சந்தர்ப்பவாதம் மிகக் கேவலமானதாக இருக்கிறது.

நெடுஞ்சாலையிலுள்ள நட்சத்திர ஓட்டல்களின் சாராய பார்களையும் மூடச் சொல்வதால் ஓட்டல் தொழிலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் பல மாநில அரசுகள் நியாயவாதங்களை அடுக்குகின்றன. டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ. 25,000 கோடி ஆண்டு வருவாயில் ரூ.10,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும், சுமார் 10,000 ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் என்று கூச்சநாச்சமின்றி தமிழக அரசு வாதிடுகிறது. சாராய வியாபாரிகள் அரசாங்கத்தை நடத்தினால் எப்படியிருக்கும் என்பதை இந்த அரசுகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

ஆற்றுமணல் அள்ளுவதைத் தடை செய்தால், வீட்டுமனைத் தொழிலும் அதைச் சார்ந்துள்ள இலட்சக்கணக்கோனோருக்கு வேலையிழப்பும் வருவாய் இழப்பும் ஏற்படும் என்று வாதிடுவதைப் போன்ற அயோக்கியத்தனம்தான் இது. அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக் கூடிய லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்த்துவிட்டும், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட மூலவளங்களைத் தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்துவிட்டும், சாராயக் கடைகளை மூடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாதிடுவதே மோசடித்தனமானது.

ஓட்டல் அதிபர்களோ, எங்கள் வாடிக்கையாளர்கள் மேட்டுக்குடியினர், கார்களில் குடிக்க வரும் அவர்கள் தனியாக ஓட்டுநரை வைத்திருப்பதால், அவர்களால் சாலைகளில் விபத்துகள் நடப்பதில்லை என்கிறார்கள். ஆனால் சென்னையில் ஐஸ்வர்யா என்ற மேட்டுக்குடி பெண், எம்.பி.டிஸ்டில்லரிஸ் நிறுவன உரிமையாளர் மகன் ஷாஜி, நாமக்கல் தொழிலதிபர் யுவராஜ் ஆகியோர் போதையில் கார் ஓட்டிச் சென்று நடத்தியுள்ள விபத்தும் பலிகளுமே இந்த அண்டப் புளுகைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

திருப்பூர்-சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கும் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
திருப்பூர்-சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கும் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளால் விபத்துகள் அதிகரித்து வருவதால், இக்கடைகளை அகற்றக் கோரி ஆந்திராவின் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக இருந்த புல்லா ராவும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் 2003-லிருந்தே மைய அரசிடம் பலமுறை மனு கொடுத்து வலியுறுத்தி வந்த பிறகு, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்றுமாறு ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் 2007 அக்டோபரில் மைய அரசு அனுப்பியது.

ஆனால், தமிழகம் உட்பட எந்த மாநிலமும் இக்காகிதச் சுற்றறிக்கையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  மறுபுறம், நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் காரணமாக நாடெங்கும் விபத்துகள் மேலும் தீவிரமடையத் தொடங்கின. கடந்த பல ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் சாலை விபத்துகளிலும், உயிரிழப்புகளிலும் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும்படி அரசுச் செயலாளருக்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலு கடிதம் எழுதிய போதிலும் தமிழக அரசு அசைந்து கொடுக்காததால், கடந்த 2012-இல் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

2003 லிருந்து 2013 வரை நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்ற மனு கொடுத்துப் போராடி, அதன் பிறகு மைய அரசு சுற்றறிக்கை அனுப்பிய போதிலும் தமிழகம் உள்ளிட்டு எந்த மாநில அரசும் செயல்படுத்தவில்லை. பின்னர் 2013-இல் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டபோதிலும் அதையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

நீதிமன்ற உத்தரவும் தோற்றுப் போன நிலையில்தான், தமிழக மக்கள் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய மாணவர்கள் ஜெ. அரசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். டாஸ்மாக்  எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறையிடப்பட்டனர். மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியவர்கள் மீதும், ம.க.இ.க. பாடகர் கோவன் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.

வேலூர் மாவட்டம்-அணைக்கட்டுக்கு அருகேயுள்ள அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பூட்டுப் போட்டு மூடும் பெண்கள்.
வேலூர் மாவட்டம்-அணைக்கட்டுக்கு அருகேயுள்ள அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பூட்டுப் போட்டு மூடும் பெண்கள்.

குமரி மாவட்டம் உண்ணாமலைக் கடை எனும் ஊரிலுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுளாகியும் அக்கடை மூடப்படாததால், முதியவர் சசிபெருமாள் 2015 ஜூலை 31 அன்று அலைபேசி கோபுரத்தின் உச்சி மீது ஏறி அக்கடையை மூடக் கோரி  போராடியபோது உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், ஜெ. அரசு அத்தீர்மானத்தை நெல்லை ஆட்சியரைக் கொண்டு ரத்து செய்தது. பின்னர் இதற்கெதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அக்கடையை மூடாமல், இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெ. அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கையும், நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்றக்கோரி பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மான் சித்து மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகள் அனைத்தும் 2017 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும் என்று கடந்த 2016 டிசம்பர் 15-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசும் பத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. இவற்றைப்  பரிசீலித்து கடந்த மார்ச் 31 அன்று உச்ச நீதிமன்றம் தற்போதைய இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகள் மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி வழக்கம் போல சாராய வியாபாரத்தைத் தொடர்கின்றனர். காரைத் திருடுகிறவன் நம்பர் பிளேட்டை மாற்றி போர்ஜரி செய்வதற்கும் இந்த அரசுகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. தமிழக அரசோ அவசரமாகப் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறப்பதோடு, அதற்கெதிராகப் போராடும் மக்கள் மீது அடக்குமுறை வெறியாட்டம் போடுகிறது.

சாராயத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், தனது கீழ்த்தரமான நடவடிக்கைகளால் இவ்வளவு வக்கிரமாக நடந்து கொள்கிறதே, இதனை ஒரு அரசு என்று அழைக்கத்தான் முடியுமா? வறட்சியும் விவசாயிகளின் மரணமும் தமிழக அரசுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை மூடவேண்டுமென்ற உத்தரவுதான் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனில் இது ஒரு அரசா?  தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகள் இப்படித்தான் உள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாக்காசாக்க அரசுகள் செய்துவரும் அயோக்கியத்தனமான வழிமுறைகளும், அவை முன்வைக்கும் வாதங்களும் இது ஒரு அரசு என்று சொல்லிக் கொள்வதற்கான தகுதியை இழந்துவிட்டதையே காட்டுகின்றன. மாஃபியா கும்பலுக்கும் அரசுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டதையும், அரசு எனும் அதிகார நிறுவனம் மக்களுக்கு முற்றிலும் எதிரானதாக மாறிவிட்டதையும் துலக்கமாகக் காட்டுகின்றன. நீதிமன்ற உத்தரவுகளால்கூட டாஸ்மாக் கடைகளை மூட முடியாது, இந்த அரசியலமைப்பில் இதற்குத் தீர்வு காணவும் முடியாது என்ற நிலையில், “மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்துடன் போராடி தமிழக மக்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?

கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !

1

புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான தோழர் சாய்பாபா, உத்திரகண்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் ராகி, ஜே.என்.யு. மாணவர் ஹேம் மிஸ்ரா, கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரான மகேஷ் திர்கி, பாண்டு நரோதே ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், விஜய் திர்கி என்ற பழங்குடி இளைஞருக்குப் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கின்றது, மகாராட்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்ட செசன்சு நீதிமன்றம். “இதைவிட அதிகமான தண்டனை கொடுப்பதற்குச் சட்டத்தில் இடமில்லாத காரணத்தினால், ஆயுள் தண்டனைக்கு மேல் கொடுக்க முடியவில்லை” என்று நீதிபதி சூர்யகாந்த் ஷிண்டே தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பான குற்றச்சாட்டுகளே சுமத்தப்படாத வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும் பேராசிரியருமான சாய்பாபா. (கோப்புப் படம்)
குறிப்பான குற்றச்சாட்டுகளே சுமத்தப்படாத வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும் பேராசிரியருமான சாய்பாபா. (கோப்புப் படம்)

சாய்பாபா 90% ஊனமுற்றவர், இதய நோயாளி. பிறர் உதவியில்லாமல் கழிவறைக்குக்கூடச் செல்ல முடியாதவர். ஹேம் மிஸ்ரா என்ற மாணவரும் ஊனமுற்றவர். சாய்பாபாவோ, மற்றவர்களோ குண்டு வைத்ததாகவோ, கொலை செய்ததாகவோ, காயம் ஏற்படுத்தியதாகவோ, குறைந்தபட்சம் ஆயுதம் வைத்திருந்ததாகவோ போலீசார் பொய்யாகக்கூடக் குற்றம் சாட்டவில்லை. இருந்த போதிலும், இந்துத்துவ பயங்கரவாதிகள், ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளிலெல்லாம் எந்த நீதிமன்றமும் காட்டாத ஒரு ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் சாய்பாபா மீது காட்டியிருக்கிறார் நீதிபதி.

தடா, பொடா ஆகிய சட்டங்களைக் காட்டிலும் கொடிய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act) 13-வது பிரிவு (சட்டவிரோத நடவடிக்கையில் பங்கேற்பது, தூண்டுவது அல்லது நியாயப்படுத்துவது), 18-வது பிரிவு (பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சதி செய்வது), 20-வது பிரிவு (பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருப்பது), 39-வது பிரிவு (பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தேடுவதற்காக பிரச்சாரம் செய்வது) – இவையெல்லாம் சாய்பாபா உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கின் குற்றப் பிரிவுகள். ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கு அவர்கள் செய்த குற்றம் என்ன?

அவர்கள் மாவோயிஸ்டு கட்சி மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள்; மாவோயிஸ்டு கட்சியின் இலக்கியங்கள் அவர்களிடம் இருந்தன; அதன் உறுப்பினர்கள் என்ற முறையில் பொது ஒழுங்கைக் குலைக்கும் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு அவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் – இவைதான் குற்றச்சாட்டுகள். அதாவது, சாய்பாபாவும் பிறரும் கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றம் கூறியிருக்கும் குற்றச்சாட்டு.

எந்தவொரு குறிப்பான குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகவும் சாய்பாபாவோ மற்றவர்களோ தண்டிக்கப்படவில்லை. சாய்பாபா, அவர் கொண்டிருந்த கருத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குடிமகனை அவர் கொண்டிருக்கும் கருத்துக்காகவே தண்டிக்க முடியும் என்ற வாய்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் வழங்குகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரண தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமானால், ஆயுள் தண்டனை கூட விதிக்க முடியும். இதே சட்டத்தின் கீழ்தான் மாவோயிஸ்டு சிறைக் கைதிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் முருகன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சாய்பாபாவை இப்படி ஒரு வழக்கில் கைது செய்வதற்குப் பல மாதங்கள் முன்னதாகவே, மத்திய அரசு தனது நோக்கத்தை வெளிக்காட்டி விட்டது. நவம்பர் 2013-இல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.  “நகரங்களின் உள்ள மாவோயிஸ்டு கொள்கையாளர்களும் அதன் ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள்தான் மாவோயிஸ்டு இயக்கத்தை உயிருடன் வைத்திருப்பவர்கள். மாவோயிஸ்டு கொரில்லாப் படையின் உறுப்பினர்களைக் காட்டிலும், இவர்கள்தான் பல விதங்களில் ஆபத்தானவர்கள்.”

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள (இடமிருந்து) ஜே.என்.யு. மாணவர் ஹேம் மிஸ்ரா, பழங்குடியினத்தைச் சேர்ந்த பாண்டு நரோதே, மகேஷ் திர்கி, பத்திரிகையாளர் பிரசாந்த் ராகி மற்றும் விஜய் திர்கி.

இவ்வளவு ஆத்திரமாக மத்திய அரசு பேசுவதற்குக் காரணம் இருந்தது. மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து அவர்களின் பாரம்பரிய உரிமையான காடுகளைப் பறித்து, பன்னாட்டு – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உடைமையாக்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் எதையும் மக்களின் போராட்டங்கள் காரணமாக அரசால் அமல்படுத்த முடியவில்லை. அதாவது, கனிம வளங்களை அம்பானிகளுக்குத் தாரை வார்க்கும் “வளர்ச்சித் திட்டங்கள்” எதையும் அரசால் அமல்படுத்த முடியவில்லை.

எனவே, மாவோயிஸ்டு கொரில்லாக்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவது என்ற பெயரில் பழங்குடி மக்களை அடித்துத் துரத்தும்பொருட்டு சல்வா ஜுடும் என்ற கூலிப்படையை உருவாக்கி, இலட்சக்கணக்கான பழங்குடி மக்களைக் கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தியது. அரசாங்கமே சட்டவிரோத கூலிப்படையை இயக்குவது அம்பலமாகி சந்தி சிரித்ததால், 2010-இல் காட்டு வேட்டை (Operation Greenhunt) என்ற பெயரில் அதிகாரபூர்வமான படையெடுப்பையே அறிவித்தது, மன்மோகன் அரசு.

ஒரு பகை நாட்டுக்கு எதிரான போரைப் போன்று, சொந்த நாட்டு மக்கள் மீதே வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட எல்லா வடிவங்களிலும் போர் தொடுக்க ஆயத்த நிலையில் இருந்த இந்திய அரசு, உள்நாட்டிலும் உலகளவிலும் எழுந்த கண்டனக் குரல்களின் காரணமாக, அந்த போரையே கைவிட வேண்டியதாயிற்று. கையாலாகாத பிரதமர் என்று மன்மோகன் சிங்கை உலக முதலாளி வர்க்கம் காறித் துப்பியது. அடுத்த பிரதமராக மோடியைத் தயார் செய்யும் முயற்சியிலும் இறங்கியது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் பின்புலம் இதுதான்.

காட்டு வேட்டைக்கு எதிராகக் குரல் எழுப்பிய அருந்ததி ராய், பிரசாந்த் பூஷண் முதலானோர் முதல் நோம் சோம்ஸ்கி வரையிலான அறிவுத்துறையினர் யாரும் மாவோயிஸ்டுகள் அல்லர். வளர்ச்சி என்ற பெயரில் பொதுச்சொத்தை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையிடுவதையும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பதையும், இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்குவதையும், இதற்காக அப்பட்டமான சட்ட மீறல்களில் அரசு ஈடுபடுவதையும் மக்கள் மீது போர் தொடுப்பதையும் அவர்கள் எதிர்த்தார்கள். இதைத் தவிர, வேறு எந்த சட்டவிரோதமான காரியத்திலோ, வன்முறையிலோ அறிவுத்துறையினர் ஈடுபடவில்லை. இப்படித் தேசிய, சர்வதேச அளவில் காட்டு வேட்டைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குரல், அரசைத் தோற்கடித்தது. இப்படிக் குரலெழுப்பச் செய்ததில் தோழர் சாய்பாபாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரண தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமானால், ஆயுள் தண்டனைகூட விதிக்க முடியும். இதே சட்டத்தின் கீழ்தான் மாவோயிஸ்டு சிறைக்கைதிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் முருகன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராகப் பொதுக்கருத்தை உருவாக்கினார் சாய்பாபா. இது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்று சட்டம் அங்கீகரிக்கிறது. குறிப்பான வன்முறை நடவடிக்கை அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால் அன்றி, தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த காரணத்துக்காகவோ, அவ்வியக்கத்தின் உறுப்பினர் என்பதற்காகவோ ஒருவரைத் தண்டிக்க இயலாது என உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் கூறுகின்றன.

ஆனால், சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனையே போதாது என்று கூறுவதற்கு இந்த நீதிபதி குறிப்பிட்டிருக்கும் காரணம் என்ன தெரியுமா? 1982 முதல் கட்சிரோலி மாவட்டத்தில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் அரசு அமல்படுத்த முடியவில்லையாம். அதற்குக் காரணம் நக்சலைட்டுகளின் வன்முறைதான் என்பதால், சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனையே போதாதாம். சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு குற்றவியல் வழக்கில், எச்.ராஜாவின் மொழியில் தீர்ப்பளித்திருக்கிறார் இந்த நீதிபதி. இவ்வழக்கு விசாரணை எப்படி நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்கண்ட ஒரு வரியே போதுமானது.

ஆகஸ்டு 2013-இல் சந்திரபூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மகேஷ், பாண்டு, ஹேம் மிஸ்ரா ஆகியோரை கட்சிரோலி மாவட்டத்தில் கைது செய்ததாகப் பொய்யாகக் காட்டியது போலீசு. ஒரு மாதத்துக்குப் பின் டில்லியில் இருக்கும் சாய்பாபாவின் வீட்டுக்குள் திமுதிமுவென்று நுழைந்த மகாராட்டிர போலீசார், அவர் வீட்டிலிருந்து கணினி உள்ளிட்ட பொருட்களையும் ஆவணங்களையும் திருடிச் சென்றனர். இந்த நடவடிக்கையை சட்டபூர்வமானதாகக் காட்டும் பொருட்டு, திருட்டுப் பொருளைத் தேடுவதற்கான வாரண்ட் ஒன்றை மகாராட்டிர மாஜிஸ்டிரேட்டிடமிருந்து பெற்று வந்திருந்தது போலீசு. இந்த நடவடிக்கையை எதிர்த்து இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் அவர் வீட்டின் முன் திரண்டுவிட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, யாருடைய ஒப்புதலோ சாட்சியமோ இல்லாமல்தான் இந்த தடயங்கள் கைப்பற்றப்பட்டன என்பதை போலீசு கொண்டு வந்த சாட்சிகளே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதாவது, சாய்பாபாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகின்ற ஆவணங்கள் எதுவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டவை அல்ல என்று சாய்பாபாவின் வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக நிறுவிவிட்டனர். இதை நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை.

அதுமட்டுமல்ல, கணினி உள்ளிட்ட மின்னணு சாட்சியங்கள் (Digital evidence) தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை நிறுவப்பட்டால்தான் நீதிமன்றம் அதனைச் சாட்சியமாக ஏற்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் விசாரணை நீதிமன்றம் மதிக்கவில்லை. சந்தேகத்திற்கிடமான தடயங்களை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

போலீசார் கொண்டு வந்து நிறுத்திய சாட்சிகளுக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் கூடத் தெரியவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை அடையாளம் காட்ட அழைத்துவரப்பட்ட சாட்சிகளுக்கு பென் டிரைவ், மெமரி கார்டு போன்ற சொற்களுக்கான பொருளே தெரியவில்லை. போலீசார் தங்களை விடுதியில் தங்க வைத்து, குளிப்பாட்டி அழைத்து வந்ததை, குறுக்கு விசாரணையின்போது சாட்சிகள் இயல்பாக விளக்கினர். அனைத்தும் பொய் சாட்சிகள் என்று தெரிந்தும், அவற்றை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை.

பேராசிரியர் சாய்பாபா மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஆள்தூக்கி கருப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தை நீக்கக் கோரியும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கம்.

இத்தனைக்கும் மேல், சாய்பாபாவிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்டவை என்று போலீசார் காட்டியிருந்த ஆவணங்களும் நூல்களும் தடை செய்யப்பட்டவை அல்ல. அவற்றில் எந்த விதமான இரகசியமோ, சதித்திட்டமோ இல்லை. இலங்கை போர்க்குற்றம் குறித்த வீடியோக்கள், அருந்ததி ராய் கட்டுரைகள், கயர்லாஞ்சி படுகொலை தொடர்பான கட்டுரைகள், காஷ்மீர் குறித்த பி.பி.சி.யின் ஆவணப்படம் போன்றவைதான் கைப்பற்றப்பட்ட திடுக்கிடும் ஆவணங்கள். என்ற போதிலும் இவற்றையெல்லாம் அபாயகரமான ஆவணங்கள் என்று குறிப்பிடுகிறது தீர்ப்பு.

மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்த நர்மதா என்ற தோழருக்கு கணினிச் சில்லு ஒன்றை ஹேம் மிஸ்ரா என்ற மாணவர் மூலம் கொடுத்தனுப்பினார் என்பதும், புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் இணைச்செயலாளராக இருந்தார் என்பதும் சாய்பாபா மீதான கூடுதல் குற்றச்சாட்டுகள்.

பு.ஜ.முன்னணி என்ற அமைப்பு ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில்தான் தடை செய்யப்பட்டுள்ளதேயன்றி, மத்திய அரசால் தடை செய்யப்படவில்லை. வழக்கு நடத்தப்பட்ட மகாராட்டிரத்திலும், சாய்பாபா செயல்பட்டு வந்த டெல்லியிலும் தடை செய்யப்படவில்லை. இருப்பினும் அது தடை செய்யப்பட்ட அமைப்புதான் என்று நீதிபதியே ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி, அதன் அடிப்படையில் தண்டனையும் வழங்கியிருக்கிறார். சுமார் 827 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு முழுவதும் இத்தகைய அபத்தங்களும் முரண்பாடுகளும் நிரம்பி வழிகின்றன என்று கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள்.

பொதுவாக அரசோ போலீசோ பொய் வழக்கு போடும்போது, “உங்கள் மீது குற்றம் இல்லையென்றால் நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்ள வேண்டியதுதானே” என்றொரு வாதம் எல்லோராலும் வைக்கப்படும். அதாவது, ஒருவேளை சட்டத்தை மீறி ஒரு குடிமகனின் உரிமையை அரசு பறித்திருந்தாலும், ஜனநாயகத்தின் சுயேச்சையான தூணாகிய நீதிமன்றம் அவருக்குச் சட்டப்படியான நிவாரணத்தை வழங்கிவிடும் என்பதுதான் நீதித்துறை குறித்து ஏற்படுத்தப்படும் இந்த நம்பிக்கைக்கு அடித்தளம்.

அந்த நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை என்பதைப் பல தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் நிரூபித்து வருகின்றன. இது அத்தகையதோர் தீர்ப்பு. போதிய சாட்சியங்கள் இல்லாத போதிலும், தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தும்பொருட்டு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை விதிப்பதாகக் கூறியது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில், மறுக்க முடியாத சாட்சியங்கள் இருந்தும், நான் தான் செய்தேன் என்று நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்த அசீமானந்தா போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

நக்சலைட்டுகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஏனென்றால், அவர்கள் வளர்ச்சித் திட்டத்தின் எதிரிகள் என்கிறார் நீதிபதி. “ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கெயில் போன்ற ‘வளர்ச்சித்திட்டங்களை’ எதிர்ப்பவர்கள் அனைவரும் நக்சலைட்டுகளே” என்று வெறி பிடித்தவர்களைப் போலக் கூச்சலிடுகிறார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கானது என்று இன்னமும் யாரேனும் கருதுகிறீர்களா?

மண்ணைப் பறித்து, மலடாக்கி, மக்களை அகதிகளாக்கும் கார்ப்பரேட் பயங்கரவாத நடவடிக்கையின் பெயர் – வளர்ச்சி. இதற்கு எதிராக வாழ்வுரிமைக்கு குரல் கொடுப்போரின் பெயர் பயங்கரவாதிகள்.

அரிசியை டவுண்லோடு செய்ய முடியாது – ஐ.டி. ஊழியர்கள் விசாயிகளுக்காக போராட்டம்

0

சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் 18.04.2017 அன்று மாலை 5:00 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர் பிரிவு மற்றும் மெப்ஸ் (MEPS) வளாகத்திள் வேலை செய்யும் ஐ.டி. ஊழியர்கள், இணைந்து விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெடுவாசலில் விவசாயிகளின் வாழ்வைச் சூறையாட வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்தும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த பிரச்சினைகளையொட்டி ஒரு மாதத்திற்கு முன்னரே மெப்ஸ் வளாகத்திற்கு முன்பு போராட முடிவு செய்து, அதற்கான அனுமதி கோறி இருந்தனர்,ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்ததால் இறுதியாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு- ஐ.டி. ஊழியர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் தலைமை தாங்கினார். மேலும் மெப்ஸ் ஐ.டி. ஊழியர் வினோத் மற்றும் சமந்தா ஆகியோர் பங்குபெற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் பு.ஜ.தொ.மு –வின் வழக்கறிஞர் சக்தி சுரேஷ் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

தோழர் கற்பகவிநாயகம் தனது தலைமை உரையில் “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராடி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது மத்திய அரசு. மேலும் தமிழகத்தை தொடர்ந்து மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என வஞ்சித்து வருகிறது. இதனை தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவற்றை எதிர்த்து விவசாயிகளுக்காக போராட நாம் களமிறங்கியுள்ளோம்.

நம்மிடம் சிலர் கேட்கலாம் மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன சம்மந்தமென்று. இன்று ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பலரும் விவசாயிகளின் பிள்ளைகள் தான். நமது தந்தையும், சகோதரர்களும் செத்துக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சும்மா இருக்க முடியாது. மேலும் பலர் நாங்களும் விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம் என்கின்றனர். ஆனால் அந்த கண்டனங்கள் எப்படி மாறியுள்ளது என்றால் சமூகவலைதள மீம்ஸ்களாக உள்ளது. அவற்றை தாண்டி நாம் நமது கண்டனங்களை வீதிகளில் தெரிவிக்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு மெரினா போராட்டத்தைப் போன்ற உறுதியான போராட்டத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது.” என பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து மெப்ஸ் ஐ.டி ஊழியர் திரு வினோத் தனது உரையில் “நமக்கெல்லாம் சோறு போட்ட விவசாயிகள் ஆடையின்றி அமர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை, கட்சியின் சின்னத்திற்காக சண்டையிட்டுக் கொண்டு அதற்கான பேரங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பிரதமரோ கூப்பிடும் தொலைவில் இருந்தும், விவசாயிகளை பார்க்க மறுக்கிறார். ஊர் ஊராக சுற்றி செல்பி எடுப்பவர் ஏன் விவசாயிகளை சந்தித்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே? அதைச் செய்வாரா?

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள் ஆனால் அது முறிக்கப்பட்டு விட்டது. அதை முறித்துவிட்டு என்ன டிஜிட்டல் இந்தியா? டிஜிட்டல் இந்தியாவில் ஒரு கிலோ அரிசியை டவுன்லோடு செய்து கொள்ள முடியுமா. எந்தத் துறையாக இருந்தாலும் விவசாயமே அனைவருக்கும் சோறு போடுவது. அதனால் தான் ஜப்பான் கப்பலில் விவசாயம் செய்து கொடிருக்கிறது. ஆனால் எல்லா சூழலும் இருந்தும் நமது விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுகின்றனர். நாளை நமது நாடும் சோமாலியா போல் பட்டினிச் சாவை நோக்கி செல்லாமல் இருக்க விவசாயத்தை காக்க வேண்டும் அதற்காக அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.” எனக் கூறினார்.

அதன் பின்னர் ஐ.டி. ஊழியர் சமந்தா அவர்கள் பேசினார். அதில் “இன்று நாம் கூடி இருப்பது விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தான். விவசாயம் என்பதை அத்தனை சுலபமாக செய்துவிட முடியாது என்பது இங்கு உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும். நாம் எல்லாம் சில செடி நடலாம், 10 மரங்களை நடலாம் ஆனால் அதை தாண்டி பெரிதாக எதையும் செய்ய முடியாது. ஆக விவசாயத்தை காக்க வேண்டும் என்ன செய்யலாம்? இந்த மத்திய மாநில அரசுகள் மக்கள் அரசாக மாறும் போது மட்டுமே இது சாத்தியம்.” என பேசினார்.

பு.ஜ.தொ.மு. வழக்கறிஞர் சக்தி சுரேஷ் தனது கண்டன உரையில் “ஐ.டி. ஊழியர்கள் பற்றி ஒரு பொதுவான பார்வை உள்ளது; மடிப்பு கலையாத உடையுடன், கையில் ஸ்மார்ட் போன் இவைதான் அவர்களின் அடையாளம். ஆனால் இந்த பொதுப் பார்வையை மாற்றும் விதமாக உள்ளது அவர்களின் இந்த போராட்டம். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இங்கு சாலையில் கையில் பதாகையேந்தி, விவசாயிகளுக்காக நின்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

திட்டமிட்டே விவசாயத்தை அழிக்க மீத்தேனும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. உ.பி-யில் தேர்தல் வெற்றிக்காக விவசாயக் கடன்களை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு அரசியல் லாபம் இல்லாத காரணத்தால் திட்டமிட்டே வஞ்சிக்கிறது.

பல லட்சம் கோடி கடன் தொகை கார்பரேட் நலன்களுக்காக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு.

விவசாயிகளுக்கு மட்டும் இன்று பிரச்சினை இல்லை ஐ.டி. ஊழியர்களுக்கும் பிரச்சினை உள்ளது. தற்போது சி.டி.எஸ். நிறுவனமானது தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப் போகிறது. இவ்வாறு அனைத்து தரப்பினருடைய வாழ்கையும் கார்பரேட் நலன்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது.” ஆக இவை அனைத்துக்கும் எதிராக மக்கள் திரள வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி பேசினார்.

இறுதியாக தோழர் திலீபன் அவர்கள் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு வாகன ஓட்டுநர் சங்கத் தொழிலாளிகளும் கலந்து கொண்டனர். இந்த் ஆர்ப்பாட்டத்தை வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்களில் செல்வோர் என பலரும் கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

இந்திய இராணுவத்தின் ஊழலைப் பார்க்காதே கேட்காதே பேசாதே !

0

மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் பொதுமக்கள் வெறுப்பும் கோபமுமாகக் குமுறிக் கொண்டிருந்த வேளையில், “இராணுவ வீரர்கள் நாட்டு எல்லையில் நேரம் காலம் பார்க்காமல் நின்று கொண்டிருக்கும்பொழுது, உங்களால் ஒரு சில மணிநேரம் வங்கி வாசலில் காத்திருக்க முடியாதா?” என இந்து மதவெறியர்களும் தேசபக்த சிரோமணிகளும் எதிர்க்கேள்வி கேட்டு, பொதுமக்களின் வாயை அடைக்க முயன்றார்கள்.

தன்னைக் கொலை செய்ய நடந்த முயற்சியில், குண்டு துளைத்துச் சென்ற காயத் தழும்போடு சத்ருகன் சிங் சவுகான்.
தன்னைக் கொலை செய்ய நடந்த முயற்சியில், குண்டு துளைத்துச் சென்ற காயத் தழும்போடு சத்ருகன் சிங் சவுகான்.

இப்பொழுதெல்லாம் யாராவது ஒரு இராணுவ வீரன், எல்லைப் பகுதியிலோ, காஷ்மீரிலோ செத்துப் போனால், அவனது மரணமும் இறுதிச் சடங்கும் ஊரே கூடிவந்து ஒப்பாரி வைத்துவிட்டுச் செல்லும்படி நடத்தப்படுகிறது.

இப்படியெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய அளவிற்கு, இந்திய இராணுவம் தகுதியும் தரமும் மிக்கதா?

தேஜ் பகதூர் யாதவ் என்றொரு இராணுவ வீரர், தங்களுக்குக் கொடுக்கப்படும் ரொட்டிக்கு சப்ஜி தரப்படுவதில்லை என்றும், பல நேரங்களில் இராணுவ வீரர்கள் அரைப் பட்டினியாகக் கிடக்குமாறு விடப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டு, இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தி, வாட்ஸ் அப் வீடியோவொன்றை வெளியிட்டார்.

அரசு நடத்தும் மாணவர் விடுதிகளில்தான் இப்படியெல்லாம் கேவலமாக ஊழல் நடைபெறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

ரொட்டிக்கு குருமாகூடத் தராமல் கமிசன் பார்க்கும் இந்திய இராணுவ அதிகாரிகள், வேறெந்த பஞ்சமா பாதகம் செய்வதற்கு அஞ்சப் போகிறார்கள்?

உ.பி. மாநிலத்திலுள்ள மெயின்புரி என்ற ஊரைச் சேர்ந்தவரும், இந்திய இராணுவத்தில் இரண்டாவது லெஃப்டினண்ட் அதிகாரியாக காஷ்மீரில் பணியாற்றியவருமான சத்ருகன் சிங் சவுகானின் கதையைக் கேட்டால், இந்திய இராணுவத்தின் கேவலமான, சதித்தனங்களும் கொடூரமும் நிறைந்த பக்கம் அம்பலமாகிறது.

சத்ருகன் சிங் சவுகான், 1990 ஏப்ரலில் ஆறாவது ராஜ்புட் படைப் பிரிவில் இரண்டாவது லெஃப்டினண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, காஷ்மீரில் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டார். காஷ்மீரில் இந்திய அரசிற்கு எதிரான போராட்டங்களும் ஆயுதத் தாக்குதல்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. பணியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே, சிறீநகரிலுள்ள பதாமாலூ பகுதியில் வீடுவீடாகப் புகுந்து தீவிரவாதிகளைப் பிடிக்கும் தேடுதல் வேட்டைக்குச் சென்றார், சவுகான். அத்தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை என்றாலும், 27.5 கிலோகிராம் எடை கொண்ட 147 தங்கக் கட்டிகள் (தற்போதைய மதிப்பில் 9 கோடி ரூபாய் பெறுமானமுள்ளவை) அப்படைப்பிரிவால் கைப்பற்றப்பட்டது.

இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.
இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.

கைப்பற்றிய பொருட்களை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், நடந்ததோ வேறு. அப்படைப்பிரிவின் தலைமை அதிகாரியான பன்வார் அந்தத் தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றார். மறுநாள், அவரிடம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதை சவுகான் நினைவுபடுத்தியபொழுது, “எந்தத் தங்கக் கட்டி?” எனக் கேட்டார், பன்வார். தங்கக் கட்டிகளைத் தனது உயர் அதிகாரியே அமுக்கிக் கொண்டுவிட்டார் என்ற உண்மை அப்பொழுது சவுகானுக்குப் புரிந்தது.

பன்வார் தங்கக் கட்டிகளைத் திருடிக்கொண்ட உண்மையை மற்றொரு உயர் அதிகாரியான கர்னல் சவுகானிடம் முறையிடுவதற்காக அவர் வீட்டிற்குச் சென்று திரும்பினார் சத்ருகன் சிங் சவுகான். இதனைத் தெரிந்துகொண்ட பன்வார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியும், மற்ற அதிகாரிகளின் துணையோடும் சத்ருகன் சிங் சவுகானை ஒழித்துக் கட்டும் முயற்சியில் இறங்கினார்.

அன்றிரவே சவுகானைக் கொல்லும் சதித் திட்டம் தீட்டப்பட்டாலும், அத்திட்டம் சவுகானின் முன்னெச்சரிக்கையின் காரணமாக நிறைவேறாமல் போனது. அதனையடுத்து, முட்டிபோட்டு மைதானத்தைச் சுற்றிவரும் தண்டனை சவுகானுக்குத் தரப்பட்டது. இதன் பிறகு, சொந்த ஊருக்குச் சென்று வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. சொந்த ஊருக்கு வந்த சவுகான், மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பன்வார், சத்ருகன் சிங் சவுகான் முறையான அனுமதி பெறாமல் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக குற்றப் பத்திரிகையைத் தயாரித்தார். போரில் இருந்து விலகி ஓடுவதற்கு இணையான இந்தக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனைகூட அளிக்க முடியுமாம். இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியதோடு, சத்ருகன் சிங் சவுகான் மனப் பிறழ்வு நோய்க்கு ஆளாகிவிட்டதாகவும் கூறி, அவருக்குச் சிகிச்சை அளிக்க உதம்பூருக்குக் கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரொட்டிக்குக் குருமாகூடத் தரப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்திய "ஒழுங்கீனத்திற்காக"த் தண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ்.
ரொட்டிக்குக் குருமாகூடத் தரப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்திய “ஒழுங்கீனத்திற்காக”த் தண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ்.

உதம்பூரில் வைத்து சவுகானுக்குச் சிகிச்சையளிப்பது என்ற பெயரில் இரண்டு முறை அவரைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டது. முதல் முயற்சியில் மற்றொரு அதிகாரியால் சவுகான் காப்பாற்றப்பட்டார். இரண்டாவது முயற்சியில் அவர் கடுமையான குண்டுக் காயங்களோடு சாவின் விளிம்பிற்குச் சென்று திரும்பினார்.

இன்னொருபுறம், இராணுவ விசாரணை என்ற பெயரில் உண்மையைக் குழிதோண்டி புதைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சவுகான் மீது நடத்தப்பட்ட கொலைத் தாக்குதல், அவர் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சியாகச் சித்தரிக்கப்பட்டது. சவுகான் தங்கத்தைத் திருடியதாக யார் மீதெல்லாம் குற்றஞ்சுமத்தினாரோ, அவர்களெல்லாம் சவுகானுக்கு எதிரான சாட்சியங்களாக நிறுத்தப்பட்டனர். இறுதியாக, உண்மைக்காகப் போராடத் துணிந்த சவுகான் இராணுவத்திலிருந்து விலக்கப்பட்டார். விசாரணையின்போது அவர் சிறையில் இருந்த எட்டுமாத காலம் தண்டனைக் காலமாக அறிவிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து, 1993-இல் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், சவுகான். அந்நீதிமன்றம், 19 ஆண்டுகள் கழித்து அவ்வழக்கை, லக்னோவிலுள்ள இராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றியது. லக்னோ இராணுவ நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சவுகான் நிரபராதியென்றும் தங்கக் கட்டிகள் திருடப்பட்டது குறித்தும், சவுகான் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி குறித்தும் விசாரிக்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து இராணுவ அமைச்சகம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தான் நிரபராதி என நிரூபிப்பதற்காகச் சலிப்படையாமல் இருபத்தாறு ஆண்டு காலமாகப் போராடிய சவுகானை, மேலும் அலைக்கழிக்கும் குரூரம்தான் இராணுவ அமைச்சகத்தின் முடிவு.

உண்மையைச் சொல்ல முயன்ற தனது சக ஊழியனைக் கொலை செய்யவும், பைத்தியக்கார பட்டம் கட்டவும் தயங்காத இந்திய இராணுவம், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ள காஷ்மீரிலும், மணிப்பூரிலும், தன்னை எதிர்த்து நிற்கும் மக்களை என்னவெல்லாம் செய்யும் ? இந்தக் காலனிய காலச் சட்டம் பொதுமக்களைக் கொல்லவும், அவர்களது உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் இராணுவத்திற்குச் சட்டபூர்வ உரிமையை அல்லவா வழங்கியிருக்கிறது.

தங்கக் கட்டிகளைத் திருடிய பன்வார், எந்தத் தங்கக் கட்டி எனக் கேட்ட அந்த நிமிடத்தில், தனது இலட்சிய வேட்கையெல்லாம் செத்துப் போனதாக நினைவு கூர்கிறார், சவுகான்.

இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதால் பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அருண்குமார், “இலட்சிய வேட்கையோடு இராணுவத்தில் சேரும் இளைஞர்களை, ஊழல் நிறைந்த இராணுவ அமைப்பு சீரழித்துவிடுவதாக”க் கூறுகிறார்.

ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க நிறுவனமாகவும், தேச பக்தியின் அத்தாரிட்டியாகவும் முன்நிறுத்தப்படும் இந்திய இராணுவம், அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டு வரும் ஒட்டுண்ணி அமைப்பு என்பதை நிறுவும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.

– ஆதவன்
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2017

சென்னை சேத்துப்பட்டில் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா !

1
தோழர் காமராஜ்

அண்ணல் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா !
நாடு முழுவதும் பரவி வரும் பார்ப்பன பாசிச இந்து மதவெறியை முறியடிப்போம் !

அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதியேற்போம் !

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை ம.க.இ.க.வின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அனந்தப்ப ராஜா தலைமை தாங்கி நடத்தினார்.

முதல் நிகழ்ச்சியாக முழக்கமிடப்பட்டது.

தோழர் காமராஜ்

மார்க்சிய ஆசான் தோழர் மார்க்ஸ் வாழ்க !
அண்ணல் அம்பேத்கர் வாழ்க !
தந்தை பெரியார் வாழ்க !

முறியடிப்போம் முறியடிப்போம் !
பார்ப்பன-இந்து மதவெறி
பா.ஜ.க-இந்து முன்னணி கும்பல்களை
முறியடிப்போம் முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்க துடிக்கின்ற
பா.ஜ.க சதியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்துமதவெறியூட்டி
சாதி-மத கலவரம் தூண்டி
உழைக்கும் மக்களை கூறுபோடும்
பா.ஜ.க-இந்துமுன்னணி கும்பலை
முறியடிப்போம் முறியடிப்போம் !

சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மோடியின் டிஜிட்டல் இந்தியா
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மேக்கின் இந்தியா-கிளின் இந்தியா
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மோடியின் கருப்புபண ஒழிப்பெல்லாம்
மோடியின் ஊழல் ஒழிப்பு-நாடகமெல்லாம்
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!

அரிசி இல்லை! பருப்பு இல்லை!
சர்க்கரை இல்லை! கோதுமை இல்லை!
பாமாயில் இல்லை! மண்ணெண்ணெய் இல்லை!
அட தூ ! துவரம் பருப்பு ஏதுமில்லை!
உணவுப்பொருளுக்கு மானியம் இல்லை !
ஸ்மார்ட் கார்டு – என்னமசுருக்கு !
ஸ்மார்ட் கார்டு – என்ன மசுருக்கு !

உழைக்கும் மக்களே, உசார் உசார் !!
கும்பல் வருது ! கும்பல் வருது !
பா.ஜ.க-இந்துமுன்னணி கும்பல் வருது !
முஸ்லீம் மக்களை கொன்றுகுவிக்கும்
தலித்மக்களை கொன்றுகுவிக்கும்
இந்து மதவெறி கும்பல் வருது !
உழைக்கும் மக்களே, உசார்! உசார் !!

முழக்கங்கள்

பன்னாட்டுமுதலாளிகளின்
ஓட்டல்களுக்கு தாராளமாக தண்ணிரு
எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு
தாரளமாக தண்ணிரு
நீதிபதி – ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ்.
அதிகாரிகளுக்கு – தாராளமாக தண்ணிரு
கோல்ஃப் – மைதானத்திற்கு தண்ணிரு
நீச்சல் குளத்திற்க்கு தண்ணிரு
மக்களுக்கு – எஸ்.கே. – தண்ணிரு

பதில் சொல் ! பதில் சொல் !!
இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க-வே
பதில் சொல் ! பதில் சொல் !
உழைக்கும் மக்கள் – சாமியை தொட்டால் தீட்டு என்றாய்
கருவறைக்கு நுழைந்தால் தீட்டு என்றாய்
மக்கள் தரும் தட்டில் துட்டு தீட்டில்லை !
உண்டியல் துட்டு தீட்டு இல்லை !
பூ பழம், தேங்காயும் தீட்டில்லை !
பதில் சொல் ! பதில் சொல் !!
இந்துமதவெறி – பிஜேபியே
பதில் சொல் ! பதில் சொல் !!

அடுத்ததாக அம்பேத்கரின் சிலைக்கு சேத்துப்பட்டு பகுதி தோழர்கள் ஜெயகாமராஜ், பாஸ்கர் ஆகியோர் அம்பேத்கர், பெரியாரின் சிலைகளுக்கு மாலையணிவித்தனர். இதைத் தொடர்ந்து ம.க.இ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் புவன் உறையாற்றினார்.

தோழர் புவன்

அவர் பேசியதாவது ”அம்பேத்கரின் இந்த 126-வது பிறந்தநாள் தினத்தை நம்மை போன்று பல்வேறு அரசியல் சக்திகள், ஜனநாயக சக்திகள் மாலையணிவித்து நினைவுக்கூறும் அதே நேரத்தில்தான் அவர் தீவிரமாக யாரை எதிர்த்தாரோ அந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பலும் அவருக்கு மாலையணிந்து மரியாதை செலுத்துகின்றனர்.

நாடு முழுவதும் சாதி – மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை பிளவுப்படுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.மோடி கும்பலுக்கு அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்க எந்த அருகதையும் இல்லை.

மேலும், நாடு முழுவதும் இன்றைக்கு, தலித் மக்கள், சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல், சாதி-மதவெறியைத் தூண்டி மக்களை பிளவுப்படுத்துவது. உழைக்கும் மக்களின் உணவான மாட்டுக்கறிக்கு தடை போடுகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டுக்கறியை வைத்திருந்தாலே அவர்களுக்கு மரணதண்டனை என பாசிச சட்டங்களை போடுகிறது.

இதுமட்டுமல்லாமல் நாட்டில் விவசாயிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றி அவர்களையும், உழைக்கும் மக்களையும் மரண குழியில் தள்ளுகிறது. பாசிச மோடி அரசு.

பரவி வரும் பார்ப்பன பாசிச இந்து மதவெறியை முறியடிக்க அம்பேத்கரின் பிறந்த நாளில் உறுதியேற்போம் ” என்றுபேசினார்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

தஞ்சை மானோஜிப்பட்டி டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

0

ஞ்சை நகரில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள மானோஜிப்பட்டி எனும் கிராமத்தின் முக்கிய சாலை சந்திப்பில், மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் பள்ளிக்கு அருகாமையில் 15 ஆண்டுகளாக ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதை எதிர்த்து அப்பகுதி வாழ் மக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தாருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் என அனைத்து அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக பலமுறை மனுக்கள் கொடுத்து நொந்து போயினர்.

தற்போது தஞ்சையில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பல ஊர் குடிகாரர்கள் இந்த மானோஜிப்பட்டி கடைக்கு படையெடுத்தனர். அந்த சிறிய கடைவீதியில் தினமும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் குவிகின்றனர். அப்பகுதி சாலைகள் அனைத்தையும் பார்களாக மாற்றிவிட்டனர். அப்பகுதி மக்கள் இக்கடைவீதியில்  நடமாட முடியாமல் தவித்தனர். பெண்கள், பள்ளிக் குழந்தைகள் தினந்தோறும் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் இருப்பவர்கள் எவ்வாறு இந்த கடையை மூடுவது என்ற குழப்பத்தில் மக்கள் அதிகார அமைப்பை நாடினர்.

உடனே மக்கள் அதிகார அமைப்பை சார்ந்த தோழர்கள் அப்பகுதியில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக திரட்டினர். மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசு மனு கொடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்று கெஞ்சிக்கொண்டிருந்தால் மூடமாட்டார்கள். கடையை இங்கு நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுத்து விரட்டியடிக்க வேண்டும் என்று திரட்டி 18.04.2017 அன்று காலை  11:00 மணிக்கு மக்கள் அதிகார தஞ்சை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில், சுமார் 300 பேர் திரண்டு கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.

கடை திறக்காவிட்டால் இந்த அரசே ஸ்தம்பித்து விடும் என்பது போல் தாசில்தார், மாவட்ட துணை கண்காணிப்பாளர், டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர், கோட்ட கலால் அலுவலர் என ஒட்டுமொத்த அதிகாரவர்க்க கும்பலும் காவலர் புடைசூழ போராட்டக் களத்திற்கு வந்தனர். போராடும் மக்களை ஏய்த்துவிடலாம் என்றும், காவல் துறையினர் கலவரத்தை தூண்டி மக்கள் அதிகார அமைப்பு தோழர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி விடலாம் என்றும் பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டது. ஆனால் அனைத்தையும் அங்கு திரண்டுள்ள பெண்களும், மக்கள் அதிகார தோழர்களும் முறியடித்தனர்.

வேறு வழியில்லாமல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் இன்று மூடிவிட்டுதான் வீட்டிற்கு செல்வோம் என்று உறுதியாக இருந்தனர். இறுதியாக மே 5-க்குள் மூடிவிடுகிறோம் என்று அதிகாரிகள் கெஞ்சி கூத்தாடி மக்களிடம் அனுமதி கோரினர். பிறகு பெண்கள் இதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைத்து அதிகாரிகளும் கடிதமாக எழுதி கையெழுத்திட்டு கொடுத்தால் தான் கலைவோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு, மே 5க்குப் பிறகு கடையிருந்தால் இடித்துவிடுவோம் என்றும் அரசை எச்சரித்துவிட்டு சென்றனர்.

இப்போராட்டம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தையும், அனைத்து பிரச்சனைகளுக்கும் களத்தில் இறங்குவது தான் ஒரே தீர்வு என்பதையும் விதைத்தது. மக்கள் அதிகார அமைப்பை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம் என்ற அதிகாரிகளின் நப்பாசையும் பொய்த்துப் போனது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

சேவைக் கட்டணம் = மக்களுக்கு கட்டணம் தனியாருக்கு சேவை !

0

சேவைக் கட்டணம் தனியார்மயத்தின் மற்றொரு முகமூடி !

ழாவது ஊதியக் குழு பரிந்துரைத்திருக்கும் ஊதிய உயர்வைத் தனது ஊழியர்களுக்குத் தரப் போவதாக அறிவித்திருக்கும் மைய அரசு, அதனால் ஏற்படும் கூடுதல் செலவை மக்கள் தலையில் சுமத்த முயலுகிறது. குறிப்பாக, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், நிமான்ஸ் உள்ளிட்ட பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் – என மைய அரசின் நிதிஉதவி பெறும்  600-க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் அதிக செலவில் 30 சதவீதத்தை அந்தந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டுதான் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில் மைய அரசின் சுற்றறிக்கையைக் காரணமாக வைத்து  இன்னொரு மடங்கு கல்விக் கட்டணத்தை உயர்த்துவது எளிதாகிவிட்டது.

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெறுவதற்காக முதல்நாள் இரவே வந்து, அம்மருத்துவமனையின் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் படுத்துறங்கும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும். (கோப்புப் படம்)

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால், பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மனநல மருத்துவமனைக்குக் கூடுதலாக 50 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இக்கூடுதல் செலவில், 15 கோடி ரூபாயை அம்மருத்துவமனையே ஈடுகட்ட  வேண்டுமெனில், நோயாளிகளிடமிருந்து இந்தத் தொகையைப் பிடுங்குவதைத் தவிர வேறுவழியில்லை. “நோயாளிகள் பெறும் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையென்றால், மருத்துவ வசதிகளுக்குச் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு, அதனை நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியிருக்கிறது, அம்மருத்துவமனை நிர்வாகம். கட்டணம் வசூலிக்கவில்லையென்றால், நோயாளிகளுக்கு இப்பொழுது கிடைக்கும் அளவில்கூடத் தரமான சிகிச்சை கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பொது மருத்துவமனைகளில் முன்பு போல அனைத்து நிலைகளிலும் இலவச சிகிச்சை இப்பொழுது தரப்படுவதில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், பரம ஏழை நோயாளிகளாக இருந்தாலும், காப்பீடு அட்டை இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் அறுவை சிகிச்சைக்குத் தேதி தரப்படுகிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் நோய்களுக்கான மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதில்லை. அவற்றை வெளியே வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவர்களே சீட்டு எழுதிக் கொடுத்துவிடுகின்றனர். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட முக்கியப் பரிசோதனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, நோயாளிகளிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. இவையல்லாமல், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் ஏற்பாடுகள், பார்வையாளர் கட்டணம் என அரசு மருத்துவமனைகள் வசூல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்ற மைய அரசின் சுற்றறிக்கை, இனி இலவச மருத்துவமே கிடையாது என்ற நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். ஆசிரியர்களுக்குத் தரும் சம்பளத்தின் ஒருபகுதியை மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றால், இனி ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படும்.

கலெக்சன் காட்டவில்லையென்றால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் அன்றைக்கான கூலி கிடையாது என்பது தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் எழுதப்படாத நடைமுறையாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், அ.தி.மு.க. அரசு மோடி அரசிற்கு முன்னோடியாக உள்ளது.

சம்பள உயர்வை ஈடுகட்ட, பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என இன்று உத்தரவிடும் மைய அரசு, நாளை அனைத்துச் சேவைகளுக்கும் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறத் தயங்காது. ரயில்வேயில் கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு ரயில் கட்டண முறை இந்த அபாயத்திற்கான முன்னறிவிப்பு.

அரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.

-அழகு 
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

ஐ.டி ஊழியர்களை சதி செய்து வெளியேற்றும் காக்னிசண்ட் நிறுவனம் !

3

லகம் முழுவதும் சுமார் 2.6 இலட்சம் பேரை ஊழியர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது காக்னிசண்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ் (சி.டி.எஸ்) நிறுவனம். அந்நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.8 இலட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். அதில் சுமார் 6,000 முதல் 10,000 பேரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக ஊடகங்களுக்குக் கடந்த மார்ச் மாத இறுதியில் தகவல்களை கசிய விட்டது சி.டி.எஸ் நிறுவனம். இச்செய்தி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறிய பின்னர், தகுதி குறைந்தவர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்களை ஒவ்வொரு ஆண்டும் எடுப்பது இயல்பாக நடக்கும் ஒன்று தான் என்று கார்ப்பரேட் அறிவுஜீவிகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகளும் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தனர்.

இந்த தகுதி குறைவு பூச்சாண்டியே ஒரு மோசடி என்பது ஒருபுறமிருக்க இதன்  காரணமாகத் தான் ஆட்குறைப்பு செய்யப்படுகிறதா ?

பணிநீக்க செய்திகள் வெளியாவதற்கு முன்பே, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்யத் தொடங்கியிருந்தது சி.டி.எஸ். நிறுவனம். அந்நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் (HR), ஊதிய உயர்வுக்கான ஊழியர் பரிசீலனையில்(Appraisal), ஒவ்வொரு குழுவிலும்(Team) இருக்கும் மொத்த நபர்களில் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு தர வரிசைப் பட்டியலில் கண்டிப்பாக 4 வது தரநிலை (4th Grade) கொடுக்க வேண்டும் என அனைத்து செயல்திட்ட மேலாளர்களிடமும் (Project Manager) வலியுறுத்தியுள்ளனர்.  அதாவது ஒரு குழு முழுவதுமே சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அதிலிருந்து ஒருவர் அல்லது இருவர் கண்டிப்பாக பலிகடாவாக்கப்பட வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

இவ்வாறு 4-வது தரநிலை கொடுக்கப்பட்டுள்ள ஊழியர்களை, அவர்கள் வேலை பார்த்து வரும் குறிப்பிட்ட செயல்திட்டத்திலிருந்து (Project) இருந்து நீக்கி காத்திருப்புப் பட்டியலில் வைத்தது நிர்வாகம். அவர்களை இரண்டு மாதங்களுக்குள் வேறு செயல்திட்டங்களில் ஏதேனும் ஒன்றுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்று சேர்ந்து கொள்ளுமாறும், ஒரு வேளை இரண்டு மாதங்களுக்குள் வேறு எந்த ப்ராஜெக்ட்களிலும் சேரவில்லை எனில் அவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில் செயல்திட்ட மேலாளர்களிடம், அவர்களது செயல்திட்டங்களில் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் ஊழியர்களை எடுக்கும் போது 4-வது தரநிலை கொடுக்கப்பட்ட ஊழியர்களைக் கண்டிப்பாக எடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

அதாவது ஒரு குழுவிற்கு ஒருவரோ அல்லது இருவரோ கண்டிப்பாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், அவர்களுக்கு வேண்டுமென்றே 4-வது தரநிலை கொடுத்து, அதன் காரணமாக அவர்கள் வேலை பார்க்கும் செயல்திட்டங்களிலிருந்து நீக்கி, வேறு எந்த செயல்திட்டங்களிலும் சேர முடியாதவாறு நிர்பந்தத்தை உருவாக்கி அதனடிப்படையில் அவர்களைப் பணியை விட்டு நீக்குவது என்பதை திட்டமிட்டு சதி செய்திருக்கிறது சி.டி.எஸ். நிர்வாகம்.

இது தவிர சம்பந்தப்பட்ட ஊழியரை மனித வளத்துறை அதிகாரி அறைக்கு வரவழைத்து ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் அவர்களிடம் அவர்களது குறைகளாக பல்வேறு கதைகளைக் கூறி அவர்களைத் தானாக இராஜினாமா செய்யத் தூண்டுவதன் மூலமும் ஆட்குறைப்பைச் செய்து வருகிறது சி.டி.எஸ். நிறுவனம். இத்தகைய உளவியல் தாக்குதல்களை பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் நெடுங்காலமாக செய்து வருகின்றன.

இப்படி ஊழியர்களை சட்டவிரோதமாக மனிதத் தன்மையற்று சி.டி.எஸ். நிறுவனம் வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? ஒரு வேளை அந்நிறுவனம்  நட்டத்தில் செயல்படுகிறதோ? நிச்சயமாக இல்லை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8% அதிகமான வளர்ச்சியைச் சாதித்துள்ளது இந்நிறுவனம். தற்போது பணிநீக்கம் செய்யப்படும் இதே ஊழியர்களின் கண் துஞ்சாத  உழைப்பில் தான் இந்த வளர்ச்சியை எட்டியிருக்கிறது சி.டி.எஸ். இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளுக்குக் கொழுத்த இலாபத்தை உறுதி செய்யும் பொருட்டே பல ஆயிரம் ஊழியர்களை ஈவிரக்கமின்றி பணிநீக்கம் செய்துவருகிறது சி.டி.எஸ். நிறுவனம்.

இது வெறுமனே காக்னிசண்ட் நிறுவன ஊழியர்களின் பிரச்சினை அல்ல. அனைத்து ஐ.டி. நிறுவனங்களிலும் இது தான் நடைமுறை. பணிநீக்கம் ஒரு பிரச்சினை என்றால் சம்பளத் திருட்டு அடுத்த பிரச்சினை. ஐ.டி. ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதித் தொகை திறன் சார்ந்த ஊதியம் என்று பிரிக்கப்படுகிறது, அதாவது நிறுவனத்தின் மொத்த வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணிபுரியும் ப்ராஜெக்டின் வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியரின் (அடிமைத்) திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த சம்பளப் பகுதியை 200%ஆக அதிகரிக்கவோ அல்லது 0%ஆக குறைக்கவோ செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு.

இரவும் பகலும் வேலை பார்த்து கூடவே மேலதிகாரியின் ‘குட் புக்கில்’ இடம்பெறும் ஊழியனுக்கே இச்சம்பளத்தில் அதிகபட்சமாக 95% தான் தரப்படுகிறது என்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.  அதுவும் ஒட்டு மொத்த நிறுவனமும் அந்த ஊழியர் வேலை செய்யும் ப்ராஜெக்டும் வெற்றிகரமாக இலக்கை அடையும் பட்சத்தில் தான் இதுவும் சாத்தியம்.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் சங்கமான நாஸ்காம் ( NASCOMM) தனது ஆண்டுப் பரிசீலனைக் கூட்டத்தில் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016-17 நிதியாண்டில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி 8.6% அளவில் இருந்த போதிலும், வேலை வாய்ப்பின் வளர்ச்சி 5% தான் உயர்ந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அதோடு அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதும் 20 முதல் 25% வேலைகள் பறி போகும் என்றும் கூறியுள்ளது.

இதே போல சமீபத்தில் மும்பையில் நடந்த நாஸ்காம் தலைமை மாநாட்டில் பேசிய கேப்-ஜெமினி என்னும் பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்  இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரி சீனிவாச கண்டுலா, ஐ.டி. துறையில் நடுத்தர மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பெருமளவில் வேலை இழப்பு ஏற்படும் என்று கூறினார். மேலும் தற்போதைய ஐ.டி. ஊழியர்களில்  பயிற்சியளித்தாலும் தேறாதவர்கள் சுமார் 60 முதல் 65% வரை இருப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். கேப் ஜெமினி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டின் கீழ் மட்டும் 1,00,000 ஊழியர்கள் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஐ.டி. மற்றும் வியாபாரத் துறையில் ஹோம்ஸ் (HOLMES –  Heuristics and ontology-based learning machines and experiential systems ) என்னும் தானியங்கி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளது விப்ரோ நிறுவனம். இந்த்த் தானியங்கித் தொழில்நுட்பம் சுமார் 30,000 ஊழியர்களின் வேலைகளைத் தானே செய்ய வல்லது. அந்த அடிப்படையில் விரைவில் சுமார் 30,000 ஐ.டி. ஊழியர்கள் விப்ரோ நிறுவனத்தால் விரைவில் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம் உண்டு.

முதலாளிகளுக்கு அடிமைச் சேவகம் புரிய, சக ஐ.டி ஊழியர்களை வேவு பார்க்கும் மனித வளத்துறை அதிகாரிகளுக்கும் ஆப்பைத் தயாராகவே வைத்துள்ளன ஐ.டி.நிறுவனங்கள்.  மனித வளத்துறை மற்றும்  நிதித்துறையிலும் தானியங்கித் தொழில்நுட்பத்தை உபயோகித்து ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

படிக்கவே அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் இவை யாவும் உங்களை பீதியூட்டுவதற்காக இட்டுக்கட்டி சொல்லப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் முதலாளித்துவ பத்திரிக்கைகளில், அவர்களது இணையதளங்களில், முதலாளிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களே. இன்று “திறமையற்றவர்களாக” காட்டப்படும் சக ஊழியருக்காக குரல் கொடுக்க நீங்கள் தயங்கினால், நீங்களும் உங்கள் நிறுவனத்தால் ‘திறமையற்றவராக’ காட்டப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், உங்களது தேவை நிறுவனத்திற்கு மறைந்த உடனோ அல்லது உங்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளத்தில் வேறொருவர் உருவாக்கப்பட்டவுடனோ, நீங்கள் கருவேப்பிலையாக தூக்கியெறியப்பட்டு விடுவீர்கள்.

– நந்தன்

செய்தி ஆதாரம் :