Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 499

மக்களை எமனாய் அச்சுறுத்தும் ராம்கி நிறுவனம் !

0

விருதுநகர் மாவட்டம், அ.முக்குளத்தில் அபாயகரமான மருத்துவக் கழிவுகளை எரித்து, நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்று, பொது அமைதியை சீர்குலைக்கும் ராம்கி நிறுவனத்தை மூடு!

திருப்பூர்,ஈரோடு மாவட்ட சாயப்பட்டறை மற்றும் வெளிநாட்டு மின்னணுக் கழிவுகளைப் புதைக்கும் புதிய நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்!

பேரணி-பொதுக்கூட்டம்

நாள் : 25.05.2017 வியாழன்
நேரம் : மாலை 04.30 மணி
பேரணி துவங்குமிடம்:சந்தைகடை பஜார்,காரியாபட்டி
பொதுக்கூட்டம்: திருச்சுழி முக்கு ரோடு,காரியாபட்டி

தலைமை :

  • தோழர் சே.வாஞ்சிநாதன், சட்ட ஆலோசகர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு. மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம.

கண்டன உரை :

  • திரு.சொ.ராஜா,  மாவட்ட செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
  • திரு.ஜெயராஜ்,முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க(அம்மா) கட்சி
  • திரு. சண்முக சுந்தரம், மாவட்ட செயலாளர்,ம.தி.மு.க
  • திரு. அர்ச்சுனன், மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு. ராமசாமி, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு.பவுன்ராஜ்,மாவட்ட செயலாளர்,புதிய தமிழகம்
  • திரு. முருகன், மாவட்ட செயலாளர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி
  • திரு.கலைவேந்தன்,கொள்கை பரப்பு செயலாளர்,தமிழ் புலிகள் கட்சி
  • திரு. பாலகங்காதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க(புரட்சித் தலைவி)அம்மா கட்சி

சிறப்புரை :

  • திரு. தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர்,திருச்சுழி விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க

நன்றியுரை :

  • திரு.தங்கப்பண்டியன்,ஒருங்கிணைப்பாளர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு

அன்பார்ந்த பொதுமக்களே!

விருதுநகர் மாவட்டம்,திருச்சுழி வட்டம்,அ.முக்குளம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ராம்கி நிறுவனம்.அபாயகரமான மருத்துவக் கழிவுகளை எரித்து, நச்சுப் புகையை வெளியிடும் ராம்கி நிறுவனத்தால்,இன்றுவரை ஆயிரக்கணக்கான மக்கள் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இதில், நூறுக்கும் மேலானோர் இறந்துவிட்டனர்.இன்னும் ஏராளமானோர் மருத்துவமனைக்கு அலைந்து கொஞ்சம்,கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். டி.வேப்பங்குளத்தில் மட்டும் ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்திருக்கிறார்கள்.5,10 வயது  குழந்தைகள் கூட டயாலிசிஸ் செய்து வருகிறார்கள்.கர்பப்பை பாதிப்பு,மலட்டுத்தன்மை,கேன்சர் எனப் புதுப்புது நோய்கள் அ.முக்குளத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சீரழித்து வருகின்றன.விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்க,எடுக்க மறுக்கிறார்கள்.நோயால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் ஊரைக் காலி செய்து விட்டன.

ராம்கி நிறுவனத்தின் பின்னணி என்ன?

ராம்கி குரூப் என்ற பெயரில் பல தொழில்கள் நடத்திவரும் ஆந்திராவைச் சேர்ந்த அயோத்ய ராமிரெட்டி என்ற நபருக்குச் சொந்தமானது ராம்கி நிறுவனம்.தற்போது ஆந்திராவில் நடந்து வரும் 143 கோடி நில மோசடி ஊழல் வழக்கில், சி.பி.ஐ.  ராமிரெட்டியை பிரதான குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.இந்த ஊழல்பேர்வழி கோடி,கோடியாகச் சம்பாதிக்க மக்களைப் பலி கொடுக்கிறது விருதுநகர் மாவட்ட நிர்வாகமும்.

அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ற துறையே ராம்கியின்  கீழ்தான் செயல்படுகிறது. ராம்கி-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சேர்ந்து நிகழ்த்தும் இந்த அநீதிக்கு வருவாய், பொதுப்பணி, சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் துணை நிற்கின்றன.

அரசு தரப்பின் செயல்பாடுகள் என்ன?

கடந்த 2013-ஆம் ஆண்டு கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் ராம்கி நிறுவனத்தை ஆய்வு செய்து, பாதிப்புகள் இருப்பதை உறுதிசெய்து கம்பெனியை மூடி சீல் வைத்தனர்.அதன்பின் கலெக்டர் உத்தரவின்பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் கம்பெனியை சேலத்துக்கு மாற்றப் பரிந்துரைத்தது.கடந்த 2015 ஏப்ரல் 7-ஆம் தேதி திருச்சுழியில் நடந்த சமாதானக் கூட்டத்தில்  கம்பெனியை கு.வி.ச பிரிவு 133-ன் கீழ் மூட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.பின்பு ஏப்.9,2015-ல் அருப்புக்கோட்டையில் டி.ஆர்.ஓ முன்பு நடந்த கூட்டத்தில்,புதிய கம்பெனி திறக்கப்படாது, பழைய கம்பெனியை மூடுகிறோம் என்றனர்.

ஆனால்  சமீபத்தில்(12.05.2017)  அருப்புக்கோட்டையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் புதிய கம்பெனிக்கு மூன்று மாதத்திற்கு முன்பு அனுமதி வழங்கியுள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சொல்கிறார். மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது. திருப்பூர், ஈரோடு மாவட்ட பனியன் கம்பெனி, சாயப்பட்டறைக் கழிவுகளைச் சுத்திகரித்து வரும் அழிக்க முடியாத கழிவுகளைக் கொண்டுவந்து,  அ.முக்குளம் அருகே 200 ஏக்கர் நிலத்தில் புதைக்கப்போவதாகச் சொல்கின்றனர்.

நான்கு ஆண்டுகளாய் பழைய கம்பெனியை அகற்றச் சொல்லி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இச்சூழலில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல புதுக் கம்பெனிக்கு அனுமதி தந்துள்ளனர் அதிகாரிகள்.இந்த அதிகாரிகளை நம்ப முடியுமா? மக்களை, கிள்ளுக் கீரையை விடக் கேவலமாக மதித்து, புதிய கம்பெனியை அனுமதிக்கிறார்கள்.

இந்திய அரசியல் சட்டப்படி எல்லோருக்கும் வாழ்வுரிமை உண்டு.அந்த வாழ்வுரிமையை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமை.தங்களது அரசியல்சட்டக் கடமையை மீறும் அதிகாரிகள், விதிகளை மீறி மக்களைக் கொன்று, மலடாக்கும் கம்பெனிக்கு ஆதரவாக நிற்கிறார்கள்

ராம்கி ஓர் சட்டவிரோத நிறுவனம்

ராம்கி நிறுவனம் அடிப்படையில் ஓர் சட்டவிரோத நிறுவனம். பஞ்சாயத்தில் உரிய அனுமதி பெறாமல், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி மக்கள் குடியிருப்பு மற்றும் நீராதாரப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சுற்றுச் சூழல் சட்டம் என ஒன்று இருப்பதையே மதிப்பதில்லை. பணம், செல்வாக்கை வைத்து எதையும் சாதிக்கலாம் எனக் கருதுகிறார்கள். தன்னிடம் வேலை செய்து நச்சுப் புகையால் இறந்தவர்களுக்குக்கூட இழப்பீடு கொடுப்பதில்லை. 14 பஞ்சாயத்துகள் ராம்கியை மூடக்கோரி தீர்மானம் நிறைவேற்றியதை யாரும் மதிக்கவில்லை.

என்ன செய்யப் போகிறோம்?

அரசு அதிகாரிகள் கம்பெனிக்கு ஆதரவாக  நிற்கிறார்கள். போலீசு,அதிகார பலம் கம்பெனிக்கு உள்ளது. நமக்கோ மக்கள்தான் பலம். 20 கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும், ஆயிரக்கணக்கில் திரண்டு போராட வந்தால் ஒரே வாரத்தில் கம்பெனியை மூடலாம். தமிழகம் முழுக்க போராடியவர்கள் ஜெயிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகள் எல்லா ஊரிலும் பெண்களால் நொறுக்கப்படுகிறது. பெண்கள் முன்னே வரும்போது அரசு பணிகிறது. நாம், நம் குடும்பம், நமது தலைமுறை வாழ வேண்டுமானால் போராடியே தீர வேண்டும்.

ஆயிரக்கணக்கில் திரள்வோம்! தொடர்ந்து போராடுவோம்! கொலைகார ராம்கியை விரட்டுவோம்! தொடக்கமாக, காரியாபட்டி பேரணி,பொதுக்கூட்டத்தில் குடும்பத்தோடு, ஆயிரக்கணக்கில் பங்கேற்போம்!


கூட்டஏற்பாடு : அ.முக்குளம், எழுவணி, ஆலாத்தூர், திருவளர்நல்லூர், வி.கரிசல்குளம், திம்மாபுரம், பூலாங்குளம், வேப்பங்குளம், முடுக்கன்குளம், புல்வாய்கரை, அழகாபுரி, மறைக்குளம், பூம்பிடாகை, பிள்ளையார்குளம் பஞ்சாயத்துமக்கள், திருச்சுழி, காரியாபட்டி- வட்டம், விருதுநகர் மாவட்டம்.


தகவல் :
ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு.
தொடர்புக்கு – 98434 87989, 86750 86377, 98653 48163.

போக்குவரத்துத் துறை நட்டம் யார் காரணம் ?

0

 மிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் தமிழகத்தில்  இதுவரை இல்லாத ஒரு மக்கள் ஆதரவைப் பெற்றது. இரண்டு நாட்களிலும் போராட்டம் பெரும் வெற்றியை பெற்றது. போராட்டத்தை முடக்க அரசு மேற்கொண்ட சதி வேலைகள்  எதிர்பார்த்த பலன்களை அளிக்காத நிலையில் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிலாளர்  தரப்பில் அறிவிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், நிர்வாகத்தால் கையாடல் செய்யப்பட்ட தொழிலாளர் சேமிப்புத் தொகையை திரும்ப ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. மற்றொரு புறம், போராடிய தொழிலாளர்களிடம் அரசும் – நீதிமன்றமும் எஸ்மா சட்டத்தைக் காட்டி மிரட்டியுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் முன்பை விடக் கூடியுள்ளது.
மக்கள் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டும் தொழிலாளர்களின் இணையற்ற உழைப்பால் வளர்ந்துள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் முக்கியமாக பேசப்பட்ட விசயம் போக்குவரத்துத் துறையின் கடன் -நஷ்டம் தான். இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வதும் அதற்கான தீர்வை முன்வைப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை.
தொழிலாளர்களுக்கு சொந்தமான PF, பென்சன் உள்ளிட்ட சேமிப்பு தொகை சுமார் 6700 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இதற்கு வெளிப்படையான காரணம் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல் தான் என்பது ஊரறிந்த உண்மை. மறைக்கப்படும் மற்றோர் உண்மையும் உள்ளது. தொழிலாளர்களின் பணத்தை ஏன் அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தினார்கள்? ஊழல் கடன் – நட்டத்திற்கான காரணங்களை ஏன் தடுக்கப்படவில்லை.
இந்த நிலைமை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல.  பல ஆண்டுகள் பல்வேறு வழிவகையில் நடந்தது. பேருந்து ஒன்று விபத்தில் சிக்கினாலோ அல்லது கண்ணாடி உடைந்தாலோ ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் லைசென்ஸ் மீதும் சம்பளத்திலும் கை வைக்கின்றனர் அதிகாரிகள்.  அப்படியிருக்க ‘கட்டுபாடுள்ள’ கழக நிர்வாகம் நஷ்டமடைந்து, கடன் ஏற்பட்டு, தொழிலாளர்களின்  கோடிக்கணக்கான பணத்தை முறைகேடு ( ஊழல்) செய்யப்படும் வரை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன்? இந்தக் கேள்வியில் தான் கழகத்தொழிலாளர்கள் பிரச்சனைக்கான தீர்வு அடங்கியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்யக் கூடாது, அந்த நோக்கிலான தொழில்களை நடத்தக் கூடாது, மக்கள் நல அரசு என்ற கொள்கையைக் கைவிட வேண்டும், அனைத்து துறைகளையும் அரசு தனியார்மயமாக்க வேண்டும்  என்பது தான் உலக வங்கியின் உத்தரவு. இதனை ஏற்று தான் காட்-டங்கல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டு நடைமுறைபடுத்தி வருகிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் போது,  பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டது. மாநில அரசுகளும் அதே பாதையில் செயல்பட்டன.
பெரியமரத்தை வெட்டி சாய்க்க அதன் கிளைகளை முதலில் வெட்டி கழிப்பது போல இந்தத் துறைகளையும் பல கட்டமாக வெட்டி சுருக்கின. இதில் முக்கியமான அம்சம் நட்ட கணக்கு காட்டுதல். இந்த நட்டக் கணக்கு பார்முலா பயன்படுத்தித்தான்  மார்டன் பிரட், பால்கோ, VSNL உட்பட ஏராளமான பொது மற்றும் அரசுத்துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. சேலம் உருக்காலையை தனியாரிடம் தாரை வார்க்க சதிகள் நடக்கிறது.
நட்ட கணக்குக் காட்ட ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்கள் காட்டப்பட்டுள்ளன; பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும்  பொய்யாவை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம், அவர்களது செயல்பாடு மந்தம், உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை குறைந்து விட்டது,  அவற்றின் தரம் தனியாருடன் போட்டி போடும் வகையில் இல்லை போன்றவை தான் நட்டத்திற்கு காரணம் என  பொய்யான குற்றச்சாட்டுகளை சதித் தனமாக தயார் செய்து காட்டின.
அதே போல போக்குவரத்து துறையும் நட்டக் கணக்கு காட்டினர். மேற்கண்ட பல்வேறு காரணங்களை போக்குவரத்துத்  துறை நட்டத்திற்கு காரணமாக பல்வேறு காலங்களில் கூறப்பட்டுள்ளன என்றாலும் இவையெல்லாவற்றையும் விட அரசே முன்வைக்காத காரணம்  ஒன்று உண்டென்றால் அது ஊழல் – முறைகேடுகள் தான். அமைச்சர்கள் – அதிகாரிகளால் செய்யப்பட்ட இந்த ஊழல் – முறைகேடுகளைத் தடுக்காமல்,  குறைந்தபட்சம் முறைபடுத்தாமல் அப்படியே கைவிட்டதற்கு இந்தத் தனியார்மயமாக்க சதிதான் முக்கியக் காரணம். ஊழலும் தனியார்மயமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
அனாமத்தாக கைவிடப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள், கம்பிகள், கற்கள் என அவரவருக்கு வேண்டியதை அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதைப் போல இந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போக்குவரத்துத் துறையை சுருட்டியுள்ளனர். அடுத்து, அரசு போக்குவரத்து கழக நஷ்டத்திற்கு மற்றொரு வழியை அகலத் திறந்து விட்டுள்ளது, தமிழக அரசு . அதாவது நல்ல வருமானமுள்ள  வழித்தடங்களை ஆம்னி பஸ், தனியார் பஸ், மினி பஸ் உள்ளிட்ட 7500 பஸ்களை இயக்கி தனியார் இலாபம் ஈட்டிட அரசே துணை நிற்கிறது.  இந்தத் ‘தனியார்’களில் அமைச்சர்கள் அவர்களது உறவினர்கள் அல்லது கூட்டாளிகளும் பங்காளிகளும் அடங்குவர். அரசு போக்குவரத்துத் துறை நட்டத்தைக் காரணம் காட்டி பேருந்துக்  கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட ஒவ்வொறு முறையும்  பல கோடி ரூபாயை கொள்ளைக்காரர்கள் போல இந்த முதலாளிகள் தான் சுருட்டிக்கொண்டனர். அல்லது அவர்கள்  சுருட்டுவதற்கு பேருந்துக்  கட்டணம் உயர்த்தப்பட்டது.
இப்படி உயிருக்குப் போராடி வரும் போக்குவரத்துத் துறையின் உயிர் மூச்சை நிறுத்தி விட முடிவு செய்துள்ளதுதான் மோடி அரசின் சாதனை. பன்னாட்டு பஸ் கம்பெனிகளே வழி தடத்தை தீர்மானிக்கலாம், பேருந்துக் கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம், FC பார்த்துக் கொள்ளலாம், டிரைவிங் லைசன்ஸ் வழங்கலாம் என ஒட்டு மொத்தப்  பொதுப் போக்குவரத்தையே கார்ப்பரேட்  முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் புதிய போக்குவரத்து சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது,
போக்குவரத்துத் தொழிலாளர்  மீதான அடக்கு முறை அதிகரிப்பு, உரிமைகள் பறிப்பு, பேருந்து கட்டண உயர்வு, ஓட்டைப் பேருந்துகளால் அவதி – மரணம், விழாக்கால  கொள்ளை போன்றவை இந்தப்  பின்னணியில் உள்ளன. போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவையும் ஊடகங்களின் எதிர்-பொய் பிரச்சாரத்தையும் இந்த வகையில் உணர வேண்டும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கான மெரினா எழுச்சிக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் இதற்கு காரணம்.
ஜல்லிக்கட்டுக்காக எழுந்து நின்ற தமிழகம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காகவும் எமுந்து விடக் கூடாது என அவர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை நிரந்தரமாக்குவோம்!
தகவல் :
புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி, 
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784.

காரல் மாக்ஸ் பற்றி பேசினால் சட்டம் ஒழுங்கு கெடுமாம் !

0
கார்ல் மார்க்ஸ்

டந்த 21.05.2017 அன்று கோவை ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில் பேராசன் காரல் மார்க்சின் 200 -ஆம் ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் தெருமுனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக முன் அனுமதி கேட்டு காவல் துறையிடம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையானது, நமது தெருமுனைக் கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்தது.

காரல் மார்க்சைப் பற்றி பேசினால் மக்கள் கம்யூனிசத்தின் பால் அணிதிரண்டு வந்து விடுவார்கள் என்று பயமா? அப்படிப் பார்த்தால் மார்க்ஸ் குறித்த நூல்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள், படங்கள் இலட்சக்கணக்கில் உள்ளன. இவற்றையெல்லாம் தடை செய்வார்களா? உலக மனித குலத்தின் விடுதலைக்கு பாடுபட்ட ஒரு மகத்தான தலைவரைப் பற்றி பேசினாலே சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றால் இது அடிமை நாடு இல்லாமல் வேறு என்ன? இந்தத் தடையைத் தாண்டி தெருமுனைக் கூட்டம் நடத்த உள்ளோம். அதனடிப்படையில் வருகின்ற 28.05.2017 அன்று தெருமுனைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இக்கூட்டத்துக்கு பொதுமக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் என அனவரும் திரண்டுவரக் கோருகிறோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
கோவை – 94879 16569.

கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

4

கீழடி அகழாய்வு முடமாக்கப்பட்டுவிட்டது ! கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழர்நாகரிகம் புதைக்கப்படுகிறது என்ன செய்யப்போகிறோம்?

அரங்கக் கூட்டம்

நாள் : 28.05.17 ஞாயிறு, மாலை 5.00 மணி
இடம் : செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.

  • தலைமை :
    தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.
  • சிறப்புரை :
    முனைவர் சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர்
  • தோழர் காளியப்பன், ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர்

துரைக்கு அருகில் கீழடியில் நடந்துள்ள அகழாய்வு மூலம், சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர அமைப்பு தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 110 ஏக்கரில் வெறும் 50 செண்ட் பரப்பளவில் நடந்துள்ள அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு.1000-ல் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள், பெரிய தொட்டிகள், தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள், உலைகள், வட்டக்கிணறுகள், மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களால் ஆன வடிகால்கள் என முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் தான் கிடைத்திருக்கிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மண்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டிருந்தன. ஆனால் கீழடியில் கிடைத்த மண்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. தொழில் பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டவை நாமெல்லாம் பெருமைப்படத்தக்க மிக அரிய பொக்கிஷமாகும்.

ஆகவேதான் கடந்த டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர் கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய கீழடி அகழாய்வைப் புதைத்து சமாதி கட்டப் பார்க்கிறது மோடியின் பாஜக அரசு. ஏன்? ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கனவே நிருபிக்கப்பட்டுள்ளது. தற்போது கீழடி அதை மேலும் நிறுவும் விதமாக இருக்கிறது. சமஸ்கிருத ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் பாஜக காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக கீழடி அகழாய்வு அமைந்திருக்கிறது.

இந்து-இந்தி-இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கேற்ப வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் பார்ப்பன இந்து மதவெறிக்கும்பல், புராண கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் அறிவியல் பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை அனுமதிப்பார்களா?

அதனால்தான் இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

கார்பன்-14 பகுப்பாய்வுக்கு இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் 28 பொருட்களையும், குஜராத்தின் தொலவிராவிலிருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியவர்கள், கீழடியில் கண்டறியப்பட்ட 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் குறைந்தது 10 மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இரண்டிற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது மத்திய தொல்லியல் துறை.

இந்தியாவில் நடந்துள்ள பல அகழாய்வுகள், பல ஆண்டுகள் பல கட்டங்களாக தொடர ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி அகழாய்வை இரண்டே ஆண்டுகளில் முடிவு கட்ட முயற்சித்தது. இதற்கெதிராக எழுந்த எதிர்ப்பால் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி என அறிவித்து விட்டு, கீழடி அகழாய்வில் முக்கியப் பங்கு வகித்த, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தலைமையில் செயல்பட்ட குழுவை கூண்டோடு அசாமுக்கும், வேறு இடங்களுக்கும் தூக்கியடித்துவிட்டது. துணை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒருவரை இங்கு நியமித்துள்ளது. இந்த மாறுதல் வேண்டாம் என்கிற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிந்துரையையும் குப்பையில் வீசிவிட்டனர்.

தற்போது முக்கியமான அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இந்தியாவின் நான்கு இடங்களில், கீழடி தவிர மற்ற மூன்று இடங்களிலும் கண்காணிப்பாளர்கள் மாற்றப்படவில்லை. ஏனென்றால் அகழாய்வு, ஆராய்ச்சியில் அதே குழுவினர் தொடர்ந்தால்தான் சிறப்பாகவும், தொடர்ச்சி கொடுத்தும் நிறைவேற்ற முடியும். மூன்றாண்டுக்கு ஒருமுறை பணி மாறுதல் என்ற விதி இந்த ஆராய்ச்சிக்கு பொருந்தாது. அப்படியிருக்கும்போது அமர்நாத் இராமகிருஷ்ணாவை மாற்றியதன் மூலம் கீழடி அகழாய்வை முடமாக்கிவிட்டனர். ஆனால் இது வழக்கமானது தான் என பச்சையாகப் புளுகுகின்றனர். அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளிக்கின்றனர் மத்திய அமைச்சர்கள்.

சமஸ்கிருத ஆரிய கலாச்சார மேலாதிக்கத்திற்கெதிராக வரலாறு நெடுகிலும் எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது தமிழகம். அதன் சமீபத்திய வெளிப்பாடு தான் ஜல்லிகட்டு தடையை எதிர்த்த தமிழக மக்களின் தை எழுச்சிப் போராட்டம். அதன்பிறகும் இந்தித் திணிப்பு, விவசாயிகளுக்கான நிவாரணம், நீட் தேர்வு என தமிழகம் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழர் நாகரிகத்தை, நமது பாரம்பரியத்தை மதிப்புமிக்க பொக்கிஷத்தை புதைத்து அழித்துவிட முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ், பாஜக காவிக்கும்பல்.

கீழடியில் கண்டறியப்பட்டது நமது பெருமைமிக்க பாரம்பரியம், அரிய பொக்கிஷம் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்வோம்! கீழடி அகழாய்வை பாதுகாக்கவும், கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா குழுவே கீழடி ஆய்வில் தொடரவும், அகழாய்வில் கண்ட பொருட்களைக் கொண்டு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கவும் எழுச்சி மிக்க போராட்டத்தை உருவாக்குவோம்! வாரீர்!!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை, தொடர்புக்கு – 97916 53200.

ஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் !

0

விப்ரோ, காக்னிசன்ட் (சி.டி.எஸ்) நிறுவனங்களில் நடந்து வரும் ஆட்குறைப்பை கண்டித்தும், ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு-வில் இணைய அறைகூவியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மே 18-ம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்களும், பு.ஜ.தொ.மு வாகன ஓட்டுனர்கள் சங்க உறுப்பினர்களும் தவிர பல்வேறு ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு-வின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சக்தி சுரேஷ் உரையாற்றினார். “ஐ.டி துறையில் வேலை பறிப்பு என்பது தமிழகத்தின் பிரச்சனை மட்டுமில்லை, பூனாவில், கொல்கத்தாவில், பெங்களூருவில் என்று இந்தியா முழுவதும் 37 லட்சம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. எனவே, இந்தப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிடும் அவசியம் இருக்கிறது.

ஐ.டி துறையில் ஊழியர்கள் பிற துறைகளைப் போல வலுவான யூனியன் இல்லாத நிலை உள்ளது. ஊழியர்கள் தனித்தனியாக பிளவுபட்டு இருக்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக ஐ.டி ஊழியர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என்று பிற துறை பிரச்சனைகளுக்குக் கூட தெருவில் இறங்கி போராட முன்வந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரையும் யூனியனாக திரட்டுவதற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று அவர் பேசினார்.

வாகன ஓட்டுனர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் தெய்வீகன் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றியும் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் மூலம் போராடி வென்ற உரிமைகள் பற்றியும் பேசினார்.

பி.பி.சி வேர்ல்ட், நியூஸ் 18, ராஜ் நியூஸ், சன் நியூஸ், கலைஞர் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்டு பல்வேறு ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்து செய்தி சேகரித்தனர். பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகமும், சட்ட ஆலோசகர் சக்தி சுரேஷூம் ஊடகங்களுக்கு நேர்முகம் அளித்தனர். பெங்களூருவைச் சேர்ந்த லைவ் மின்ட் பத்திரிகையாளர் பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர் ஒருவரிடம் பேசி நேர்காணல் பதிவு செய்து கொண்டார்.

உரைகளுக்கு நடுவே ஐ.டி துறை ஆட்குறைப்பை கண்டித்தும், அரசை தலையிட கோரியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக போலீஸ் அமைத்திருந்த தடுப்பரண்கள் ஆர்ப்பாட்ட தட்டிகளை கட்டுவதற்கு பயன்பட்டன. 20-க்கும் மேற்பட்ட அத்தகைய தட்டிகள் கட்டப்பட்டு, ஆர்ப்பாட்டத்தை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஐ.டி ஊழியர்களுக்கு தாம் ஏந்தியிருந்த செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஐ.டி ஊழியர் ஒருவர் தெரிவித்த கருத்தின் தமிழாக்கம்

“பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் பு.ஜ.தொ.மு நன்றாக செயல்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால், ஐ.டி ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. தொழிலாளர் துறைக்கு மனு கொடுக்கப் போகும் போது கூட பல்வேறு நிறுவனங்களிலிருந்து சில உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். சி.டி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர்கள் இணை ஆணையரை சந்திக்கச் சென்ற போது ஒரு ஊழியர் மட்டுமே தனது குறையை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இப்போது நடப்பதெல்லாம் நமக்குத்தான் நடக்கிறது என்பதையும், அதற்கு எதிர்வினை ஆற்றுவதில் இதை நிலைமை தொடர்ந்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்குறைப்புகளுக்கு எதிராக போராடுவது குறித்து பு.ஜ.தொ.மு செய்துள்ள பிரச்சாரம், கூடிய விரைவில் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.”

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு,
தொலைபேசி : 90031 98576
இணையம் : new-democrats.com
மின்னஞ்சல் combatlayoff@gmail.com

மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

7

மார்க்ஸ் பிறந்தார் – 1

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)


னிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டு ஆக முடியும்.
வி. இ. லெனின்

ங்கள் கைகளில் தவழும் புத்தகம் கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் சரிதம் அல்ல, அல்லது மார்க்சியத் தத்துவத்தை எளிய முறையில் விளக்குகின்ற நூலும் அல்ல. இப்புத்தகம் மார்க்சியத்துக்கு ஒரு வகையான “அறிமுகம்” என்று கூறலாம். வேறு எத்தத்துவத்தைக் காட்டிலும் அதிகமாக மனிதகுலத்தின் விதியை நிர்ணயித்திருக்கின்ற இந்த மாபெரும் தத்துவத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விவரிக்கின்ற நூல் இது.

இளைஞரான மார்க்சின் தேடல்கள், சிந்தனைகள், உணர்ச்சிக் குமுறல்கள் என்ற உலகத்துக்குள், அவருடைய நெருப்புப் போன்ற கருத்துக்கள் பரிணாம வளர்ச்சியடைந்த படைப்புத் தன்மை கொண்ட சோதனைச் சாலைக்குள் தன்னோடு வாசகரையும் அழைத்துச் செல்வதற்கு, இந்த உலகத்துக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளும்படி வாசகரை ஊக்குவிப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார், ஏனென்றால் ஒரு மேதையுடன் ஆன்மிக ரீதியில் கலந்துறவாடுவதற்கு அவருடைய தத்துவத் தேடல்களின் பாதையைப் பின்தொடர்வதைக் காட்டிலும் அதிக வளமான சாதனம் வேறில்லை.

மார்க்சியம் வறட்டுக் கோட்பாடு அல்ல, அது செயலுக்கு வழிகாட்டி என்பது பிரபலமான உண்மையாகும். எனவே உருப்போட்டு ஒப்பிக்கப்பட வேண்டிய, “முன்னரே தயாரிக்கப்பட்ட” உண்மைகளின் தொகுப்பு என்றபடி இல்லாமல் மார்க்சியத்தை அதன் வளர்ச்சியில், இயக்கத்தில், நடவடிக்கையில் ஆராய வேண்டும் என்பது பெறப்படும்.

நாம் மார்க்சியத்தின் இதயத்துக்குள் நுழைவது எப்படி? உலகத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்வதற்கு அது வழங்கியுள்ள பங்கை நாம் மதிப்பிடுவது எப்படி? மார்க்சியத்துக்கு முந்திய தத்துவஞான மற்றும் சமூக-பொருளாதாரப் போதனைகளிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுவது எது? இதைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியதத்தின் மூலவர்கள் நடந்து சென்ற பாதையை நாம் சிந்தனையில் பின்பற்றிச் செல்ல வேண்டும். புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு இட்டுச் சென்ற படைப்பாற்றல் மிக்க சிந்தனையின் அனுபவத்தையும் கடுமுயற்சிகளையும் நாம் ‘மீண்டும் செய்வது’ இதற்கு அவசியம். எல்லாவற்றையும் காட்டிலும், மார்க்சியத்தின் பிறப்பிடமாக இருந்த மனித சமூகப் பண்பாட்டுச் செல்வத்தை நாம் தன்வயமாக்குவதும் விமர்சன ரீதியில் மறு பரிசீலனை செய்வதும் மிக அவசியம். இதைச் செய்வதற்கு மார்க்சியத்தைத் தத்துவ ரீதியாகவும் செய்முறையாகவும் கையாள்வதற்குரிய திறமையை நாம் பெறுவதும் அவசியம்.

இது மிகவும் கடினம் என்பது உண்மையே. இதற்குச் சக்தி, முயற்சி மற்றும் காலத்தை அதிகமாகச் செலவிடுவது அவசியம். ஆனால் “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.”( 1)

சுலபமான பாதைகளும் உண்டு; ஆனால் அவை பொதுவாக மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்துவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முடிகின்றன. அவை ஒரு பக்கத்தில் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளைத் தயாரிக்கின்றன, மறு பக்கத்தில் ‘ஏமாற்றத்தைத்’ தோற்றுவிக்கின்றன. இதை மனத்தில் கொண்டு தான் லெனின் கம்யூனிஸ்டு இளைஞர் சங்கத்தின் மூன்றாவது காங்கிரசில் உரையாற்றிய பொழுது பாடபுத்தகங்கள் மற்றும் பொதுமக்களுக்காக எழுதப்பட்டிருக்கும் பிரசுரங்களில் உள்ள முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் கோஷங்களின் உதவியுடன் மார்க்சியத்தை (கம்யூனிசத்தை) அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு எதிராக எச்சரிக்கை செய்தார்.

மார்க்ஸ் “மனித சிந்தனை தோற்றுவித்திருந்தவை யாவற்றையும் மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்துக்கு உட்படுத்தினார், தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டு சரிபார்த்தார். முதலாளித்துவ வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டோரால் அல்லது முதலாளித்துவத் தப்பெண்ணங்களால் கட்டுண்டோரால் வந்தடைய முடியாத முடிவுகளை இவ்வழியில் வந்தடைந்து அவர் வரையறுத்துக் கொடுத்தார்.” (2)

காரல்மார்க்ஸின் இளவயது தோற்றம்

மார்க்ஸ் மார்க்சியத்துக்கு வந்த பாதை எது, மனித மேதாவிலாசத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று எப்படி சாத்தியமாயிற்று என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்பினால், மார்க்சியத்தை அதன் கரு நிலையில், அதன் தயாரிப்பு நிகழ்வுப் போக்கில் புரிந்து கொள்வதற்கு இதை அறிய விரும்பினால் நாம் இயற்கை யாகவே மார்க்சின் ஆரம்ப கால நூல்களுக்கு அவருடைய வாழ்க்கை மற்றும் பணியின் துவக்கக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். மனிதகுலத்துக்குப் புதிய கண்களே” வழங்கிய, அதற்கு முன்னால் புதிய வானங்களைத் திறந்து காட்டிய தத்துவஞானப் புரட்சியை மார்க்ஸ் எப்படி நிறைவேற்றினார்? இதற்கு எத்தகைய தனிப்பட்ட, மனித குணாம்சங்கள் அவசியமாக இருந்தன? மார்க்சின் தத்துவஞானத்தையும் வாழ்க்கையையும் பின்தொடர்ந்து செல்பவர்களுக்கு இக்கேள்விகள் மிக முக்கியமானவை என்பது தெளிவு.

ஒரு மனிதனுடைய நடவடிக்கை அவனை விளக்கிக் காட்டும் என்பது உண்மையானால் இது மார்க்சுக்கு மிகவும் பொருந்தும். ஏனென்றால் அவர் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரே குறியும் நோக்கமும் கொண்ட மனிதராக இருந்தார்.

மார்க்சின் புரட்சிகரத் தத்துவஞானம் வளர்ச்சியடைந்த பொழுது அவருடைய ஆளுமையும் உருவாயிற்று. அவருடைய ஆன்மிக சோதனைச் சாலையின் மிக ஆழமான இடங்களை அறிந்து கொள்வதற்கு, அறிஞர், புரட்சிவாதி, குடிமகன் என்ற முறையில் அவருடைய தார்மிகப் பண்பை வெளிக்காட்டுவதற்குரிய திறவுகோல் அவருடைய நூல்களை ஆராய்ச்சி செய்வதே. ஆகவே இப்புத்தகத்தில் மார்க்சின் ஆளுமையின் வளர்ச்சியும் மார்க்சியத்தின் வளர்ச்சியும் ஒரே நிகழ்வுப் போக்காக ஆராயப்படுகிறது.

விஞ்ஞான கம்யூனிசத்தின் மூலவருடைய வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் ஒரு சிறு காலப் பகுதியில், 1835க்கும் 1844க்கும் இடையிலுள்ள காலப் பகுதியில், அதாவது அவர் பள்ளிக் கல்வியை முடித்ததிலிருந்து முதல் நூல்கள்-அவர் பொருள்முதல்வாதத்துக்கும் விஞ்ஞான கம்யூனிசத்துக்கும் மாறிவிட்டது இவற்றில் நிரூபணமாகின்றன – எழுதிய வரையிலுள்ள காலப் பகுதியில் இப்புத்தகம் அதிகமான கவனம் செலுத்துகிறது.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பத்து வருடங்கள் அவ்வளவு முக்கியமாகத் தோன்றுவதில்லை. ஆனால் இக்காலப் பகுதியில் ஒரு குட்டிமுதலாளி வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவன் தன்னுடைய பல்துறைப் புலமை கொண்ட ஆளுமையின் வளர்ச்சியில் புதிய சிகரங்களை எட்டியபடியால் அவர் தன்னுடைய காலத்தையும் தன் காலத்தைச் சேர்ந்தவர்களையும் வெகுதூரத்துக்குப் பின்னால் விட்டுவிட்டு முன்னே போய்விட்டார்.

இளைஞரான மார்க்சின் ஆன்மீக வளர்ச்சியைப் பற்றிய நுணுக்கமான அல்லது முழுமையான சித்திரத்தை வரைவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. அவருடைய ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் வளர்ச்சியடைந்த முக்கியமான திசைவழிகளைக் குறிப்பிடுவது இந்தச் சிறு நூலுக்குப் போதுமானதாகும். மார்க்சின் நூல்களில் உள்ள கருத்துக்களை விளக்குவதும் விமர்சிப்பதும் என்னுடைய நோக்கமல்ல; அவற்றில் வாசகரின் அக்கறையைத் தூண்டி தானாகவே சிந்திக்கும்படி, தேடும்படி வாசகரை ஊக்குவிப்பதே என்னுடைய நோக்கம்.

செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்

இளம் வாசகர் தனக்கு அறிமுகமில்லாத பெயர்கள், கருத்தினங்கள், பிரச்சினைகளை இந்நூலில் சந்திக்கக் கூடும்; அவர் எல்லாவற்றையும் உடனடியாகப் புரிந்து கொள்வதும் இயலாதிருக்கலாம். ஆனால் அவரை சிந்தனை செய்யத் தூண்டுகின்ற பகுதிகள் அதிகம்; பிரச்சினைகளை எழுப்பி அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டுகின்ற பகுதிகள் அதிகம். இங்கே மூல நூல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இவை மேலும் சிந்திப்பதற்குப் பேருதவியாக இருக்கும். இங்கே எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகளை சுயேச்சையாக ஆராய்வதற்கு வழிகாட்டியாக உதவும்.

இந்நூலைப் படித்த பிறகு மார்க்சின் கருத்துக்களின் உலகத்தில் இன்னும் ஆழமாகப் பயில்வதற்கு வாசகர் விரும்பினால், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில், கான்ட் மற்றும் ஃபிஹ்டே, ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹ் ஆகியோருடைய தத்துவஞானத்துக்கும் சான்சிமோன், ஃபூரியே மற்றும் ரிக்கார்டோவின் நூல்களுக்கும் ஷேக்ஸ்பியர் மற்றும் பல்ஸாக், கேதே மற்றும் ஹேய்னெயின் இலக்கியங்களுக்கும் வாசகர் திரும்பினால் மார்க்சியம் எப்படித் தோன்றியது, அதில் என்ன இருக்கிறது என்பனவற்றைப் புரிந்து கொள்கின்ற பாதையில் அவர் முன்னேறிக் கொண்டிருப்பார் .

இங்கே நாம் கலை, இலக்கியத்தை ஏன் குறிப்பிடுகிறோம்? மார்க்சியத்தின் வளர்ச்சியில் தத்துவஞான மற்றும் சமூக-பொருளாதாரக் கருத்துக்கள் மட்டுமின்றி கலை-அழகியல் கருத்துக்களும் முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்பது மெய்யாகும். சுதந்திரத்தை நேசிக்கின்ற கலை உலகமே இளைஞரான மார்க்சின் கருத்துக்கள் மலர்ந்த முதல் கல்விக்கூடமாகும். கலை அவரை யதார்த்தத்தின் பால் விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு செய்தது, தன்னிறைவுடைய அற்பவாதத்தைக்(2) கண்டனம் செய்யுமாறு பணித்தது. மார்க்சின் கலையுணர்வின் வளர்ச்சி அவருடைய அரசியல் உணர்வின் வளர்ச்சியுடன் இணைந்தது. அற்பவாதத்தைப் பற்றிய அவருடைய விமர்சனம் அதைப் பேணி வளர்த்த சமூகத்தின் அடிப்படைகளைப் பற்றிய விமர்சனமாயிற்று.

கலையில் மார்க்சுக்கு ஏற்பட்டிருந்த தீவிரமான ஈடுபாடு, தொடக்க காலத்திலேயே அவரிடம் ஏற்பட்டிருந்த கலா ரசனை, கவிதையிலும் உரைநடையிலும் அவர் செய்த சோதனைகள் இவை அனைத்தும் பிற்காலத்தில் அவருடைய எழுத்துக்களின் மீது மிகச் சிறப்பான தாக்கத்தைக் கொண்டிருந்தன. அவருடைய எழுத்துக்கள் ஆழமான விஞ்ஞானச் சிந்தனையை மேதா விலாசம் நிறைந்த கலா வடிவத்துடன் இணைத்தன.

குறிப்பு :
(1) Karl Marx, Capital, Vol. 1, Moscow, 1977, p. 30. (2) வி. இ. லெனின், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 11, மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம், 1982, பக்கம் 87
(2) அரசியல் மற்றும் சமூகத் துறையில் குறுகிய மலட்டுத் தனமான மனோபாவத்தைக் கொண்டவர்கள் அற்பவாதிகள் (Philistines), அவர்களுடைய சித்தாந்தம் அற்பவாதம் எனப்படும். – மொ-ர்.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

ஒகேனக்கல் வறட்சி : எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி பாத்ததில்லை !

0

கேனக்கல் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஊட்டமலை எனும் சிற்றூர். கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட இந்த ஊரில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பரிசல் ஓட்டுவது, மீன்பிடிப்பது, ஆடு, மாடுகள் மேய்ப்பது/வளர்ப்பது போன்றவைகள்தான் இவர்களில் பெரும்பாலானோரின் முதன்மையான தொழிலாகும். போலீசின் அடக்குமுறை கடுமையாக உள்ளதால், மக்கள் நம்மிடம் பேசவே பெரிதும் தயங்கினர்.

மதிய வேளை சுமார் 2:30 மணியளவில் ரேசன் பொருட்களை வாங்குவதற்காக கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசிய போது….

“வாங்கப்பா எங்க துக்கத்தை கேட்க நீங்களாச்சு வந்தீங்களே. இங்க மொத்தமா 700 குடும்பமிருக்குப்பா, எங்க பொழப்பே இங்க வர்ற டூரிஸ்ட்ங்கள நம்பிதாம்பா. நாங்க இங்க வந்து 70 வருஷமிருக்கும்பா, மேட்டூர் டாம் கட்டுனப்போ அங்கருந்து இந்த ஊருக்கு தொரத்தி விட்டாங்க. ஆறுதான் எங்க தொழிலே. அதான் இந்த இடம் எங்களுக்கு செட்டாச்சு. எட்டு மாசத்துக்கு முன்னாடி பரிசல்காரங்க மேல  போலீசுகாரங்க பொய் கேஸ் போட்டாங்க அதுக்காக நாங்க போராடுனோம். அப்பருந்தே எங்க வாழ்வாதாரத்த திட்டமிட்டு அழிக்கிறாங்கப்பா. சுற்றுலாக்காரங்கள அப்பப்போ விடமாட்றாங்க, பரிசல் ஓட்ட விட மாட்றாங்க கேட்டா  நாங்கதா தண்ணியை அழுக்கு பண்ணீருவோம்ன்றாங்க.

அப்ப நடந்த போராட்டத்துல கடுமையான அடக்குமுறைப்பா, பொம்பளங்களெல்லாம் அசிங்கசிங்கமா கேட்டாங்க, எங்க மேல பொய் கேசா போட்டு தள்ளுனாங்க. அதுலருந்தே எங்களை துரத்தனும்னு குறியா இருக்கானுங்க. ரெண்டு  வருஷமா இந்த நெலமதாம்பா. முதல்ல தண்ணீல சாக்கடை கலந்து வந்துச்சு, வேற வழியில்லாம அதயும் குடுச்சோம் இப்பத்திக்கு அந்த பிரச்சனை தீந்துடுச்சு. ஆனா நாங்க எத நம்பி இங்க வந்தோமோ அந்த வாழ்க்கையே இப்போ எங்களுக்கு இல்லன்னு ஆயிட்டிருக்கு…குடிக்க தண்ணி கெடச்சுருச்சு ஆனா ஊட்டுல பொங்க வெக்க வழியில்லாம போயிடுச்சுப்பா… இந்த ரேசன் அரிசிய நம்பித்தான் எங்க எல்லாரோட வாழ்க்கையுமே ஓடிக்கிட்டிருக்குப்பா…

இங்கருந்து எங்களுக்கு தேவையான பொருள் ஏதாவது வாங்கனும்னா பென்னாகரம் போவேண்டியிருக்குப்பா. தண்ணியில்லாதனால டூரிஸ்ட்ங்க இல்லை,  மீனில்லை பரிசல் இல்லை போட்ட கடைகளும் ஓடலை. எங்க வீட்டு ஆம்பளைங்க எல்லாம் ஊரை விட்டு கல் ஒடைக்க போறாங்கப்பா. இப்புடியே போனா நாங்க பூரா ஊரை காலி பண்ணீட்டு போக வேண்டியதுதான். தண்ணி ஓடுனப்ப எத்தனை பேர் வந்து எங்களை அத தொடாத, இங்க போகாதன்னு ஆர்டர் போட்டானுங்க. இப்ப ஒன்னுத்துக்கு வழியில்லாம நிக்கிறோம் எந்த நாயும் எட்டி பாக்கல. 70 வருஷத்துல இப்புடி ஒரு வறட்சிய பாக்கலப்பா நாங்க….இந்த ஊருல நூறு நாள் வேலையுமில்லை ஒன்னுமில்லை.

கிருஷ்ணா – ஊட்டமலை

சார்! ஒரு காலத்துல நாங்கெல்லாம் குடிக்கிற தண்ணிக்கு கஷ்டப்பட்டுட்டிருந்தோம் இப்ப ஆடு மாடுங்க கஷ்டப்படுதுங்க. மாடுங்கெல்லாம் தொடர்ந்து செத்துப்போயிட்டே இருக்குது. எங்கேயுமே தண்ணி இல்ல. முன்னெல்லாம் மேச்சலுக்கு நெறையா எடமிருக்கும்; அங்கங்க குட்டையில தண்ணி கெடக்கும்; மேவுக்குப் போற மாடுங்க வயிறார தண்ணி குடுச்சுக்கும்; ஆனா இப்ப ரெண்டு வருசமா தண்ணியே இல்ல; அதனால காட்டுக்குள்ள போற மாடுங்கல்லாம் செத்துப் போகுது; மாடுங்க மட்டுமில்ல; யானைங்களும் சேந்து தான் செத்து போகுது…

காட்டுக்குள்ள போற மாடுங்கல்லாம் செத்துப் போகுது; மாடுங்க மட்டுமில்ல; யானைங்களும் சேந்து தான் செத்து போகுது…

நமக்கு ஏதோ தண்ணி ரெடி பண்ணிட்டாங்க சார்…முன்னெல்லாம் நாங்களும் இந்த ஆத்துத் தண்ணிய தான் குடிச்சிட்டுருந்தோம்; இப்போ கூட்டுக்குடிநீர் திட்டம் வந்ததுனால குடிக்க தண்ணி கெடைக்குது; ஆனா எங்க வாழ்க்கையே போச்சு; நாங்க பொழைக்கிறதுக்கான ஆதாரமான தண்ணியே இல்ல ரெண்டு வருசமா…இருக்குற தண்ணியில ஏதோ போட்டிங் விட்டு பொழச்சுக்குலாம்னு பாத்தா இந்த கலெக்டரும் போலீசும் விடமாட்றாங்க….

தண்ணி இருக்கப்ப போட்டிங் விட்டா அவுங்களுக்கு என்ன பிரச்சினை?

2015-ல நடந்த ஆக்சிடெண்டு-க்கு அப்புறமா எங்களுக்கு ஏக கெடுபிடி சார்….ஒரு படக ஆறு மாசம் வரைக்கும் தான் ஓட்டனும்; அப்புறம் ஏதேதோ வாங்கி போட்டுக்கனும்; இப்புடியா ஒரே கெடுபிடியா போயிட்டிருந்துச்சு…இவுங்க கெடுபிடிகள சமாளிக்க முடியாம நாங்கெல்லாம் ஒன்னு சேந்து கெடுபிடிகள தளர்த்தனும்னு 2016-ல பென்னாகரத்துல ஒரு போராட்டம் நடத்துனோம். அதுலேருந்து தர்மபுரி கலெக்டருக்கும், போலிசுக்கும் எங்களக் கண்டாலே ஆகமாட்டேங்குது… கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒரு சின்ன விபத்து ஒன்னு நடந்துச்சு அதுல எங்க மேல பொய் கேசு போட்டு உள்ள தள்ளிட்டாங்க! இதனால எங்க மக்கள் எல்லாரும் சேந்து போராட்டம் பண்ணாங்க! இதுல போலீசுக்கு எங்க மேல இருந்த கோவம் இன்னும் கூடிப்போச்சு….மீடியாக்காரங்கள வெச்சு ஒகேனக்கல்-ல தண்ணியே இல்லன்னு சொல்லி டூரிஸ்ட் காரங்கள வரவுடாம பண்ணுறாங்க!

ஊட்டமலையில் தண்ணீர் இருந்தும் பரிசல் செலுத்த அனுமதிக்காமல் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசு.

முன்னெல்லாம் 30 பஸ்ஸுக்கு மேல ஓடிக்கிட்டிருந்துச்சு ஆனா இப்ப அத பாதிக்கும் மேல கொறச்சுட்டாங்க! ஒருநாளு நாங்கெல்லாம் சேந்து போயி ஒகேனக்கல்ல தானே தண்ணியில்ல, ஊட்டமலையில இருக்க தண்ணியில பரிசல் ஓட்டி பொழப்ப நடத்துறோம்-னு கேட்டோம்…ஆனா நாங்கல்லாம் இங்க போட்டிங் விட்டா தண்ணி கலீஜ் ஆயிருதாம்! அதனால கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்னு சொல்லி அனுமதி தரவேயில்ல! ஒகேனக்கல் அருவிக்கு ஊட்டமலை வழியாத் தான் தண்ணி போகுது; இங்கேயிருந்து போற தண்ணியெல்லாத்தையும் அருவிக்குப் போக விடாம, குடிநீர் திட்டத்துக்குத் திருப்பி விடுறாங்க; அதனால அருவியில சுத்தமா தண்ணியில்ல. கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவங்க தான் இங்க வர்றாங்க; ஆனா அவுங்களயும் வரவிடாம பண்ணிடுறாங்க.

அந்தப் பக்கமா நாங்க வண்டியில போனாலே எஸ்.ஐ-யும் ஏட்டும் மடக்குறாங்க, அன்னக்கி கூட வண்டியில போயிக்கிட்டு இருந்த என்ன மொடக்கி, கால்ல சைலன்சர் சுட்டு காயமாயிடுச்சு. மொடக்குனா கேசெல்லாம் போடுறதுல்ல…அன்னக்கி புல்லா அடிமை மாதிரி தான்..எடுபிடி வேல அப்புறம் வேற எதாவது வேல இருந்துச்சுன்னா அதையெல்லாம் செய்ய வெச்சுட்டு சாயங்காலம் தான் வெளியில விடுவாங்க! மொடக்கிருவாங்கன்னு பயந்துகிட்டே போட்டிங்கே போறதுல்ல.

இப்படியே தொடர்ந்து நடந்துகிட்டிருந்துச்சு…ஒரு நாள் சாயந்திரம் நான் ஏட்டையாகிட்ட போயி, நீங்க எதுக்குய்யா எப்ப பாத்தாலும் என்னய மொடக்குறீங்கன்னு கேட்டப்ப! அதுக்கு அந்த  ஏட்டய்யா “ நீங்கெல்லாம் போட்டிங் ஓட்டுறீங்க, அதனால தான் மொடக்குறோம்” னாரு. போட்டிங் போறப்ப புடிச்சு மொடக்குங்க சார்! ஆனா சும்மா வந்தாலே மொடக்குறீங்க! புடிச்சிகிட்டு நாளு முழுசா வேல வாங்குறீங்க! இனிமே வேலயெல்லாம் பாக்க முடியாது. வேணும்னா சம்பளம் கொடுங்க வேல செஞ்சு தர்றோம்னு சொன்னேன் பாருங்க, உடனே அவருக்கு கோபம் வந்துருச்ச…உள்ளே தள்ளிடுவேன், கேசு போட்ருவேன்னு மெரட்டுனாரு…ஒடனே நான் ‘சார்! நீங்க வேல நேரத்துல யூனிபார்மோட ஒக்காந்து தண்ணியடிச்சது, அப்பறமா எங்கள வேல வாங்குனதுன்னு ஒன்னு வுடாம போட்டோ வீடியோ எடுத்து வெச்சுருக்கேன்! எஸ்.பி ஆபிஸ்-கு போனுச்சுன்னா அவ்ளோதான்னு மெரட்டுனப்புறம்தான் இப்ப மொடக்குறதுல்ல…

சரி, எப்படி வாழ்க்கைய ஓட்டுறீங்க?

மொத்தமா பரிசல் ஓட்டுறவங்க 400 பேரு கிட்ட இருக்கோம்…ஒன்னு ரெண்டு பேரத்தவிர யாரும் போட்டிங் போறதுல்ல! அதனால எங்கள்ல நெறையா பேரு கல்லு ஒடக்க போறோம். பெங்களூரு பக்கம் வாரம் முழுசா போயிட்டு வாரக்கடைசியில வருவோம். வேல எதாவது கெடைக்குமான்னு அலையுறதுக்கே 50, 100 செலவாகுது! வேல கெடச்சா தான் உறுதி

பரிசல் தொழிலும் இல்லாமல் போனதால் ஆண்கள் பெரும்பாலும் கல் உடைக்கும் வேலைக்குப் போகின்றனர்.

இந்த மாதிரி வறட்சிய பாத்துருக்கீங்களா?

எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி வறட்சிய பாத்ததில்லங்குறாங்க… ஆறும், தண்ணியுந்தான் எங்க வாழ்க்கையே….மீனெல்லாம் புடிச்சோமுன்னா ஒரு மீனு மட்டும் ஒன்னரை கிலோ, ரெண்டு கிலோ தேறும்…வீட்டாளுகிட்ட கொடுத்தா, அத வறுத்து டூரிஸ்ட் வர்றவுங்க கிட்ட வித்து கொஞ்சம் செலவுக்குக் காசு கெடைக்கும். இப்ப ஒகேனக்கல்ல பாத்தீங்கன்னா, வளர்ப்பு கெண்ட மீன வெச்சு விக்க வேண்டிய நெலமயாயிடுச்சு.

வறண்டு போன ஒக்கேனக்கல் மெயின் அருவி

நிவாரணமெல்லாம் கொடுத்தாங்களா?

சார்! நம்மகிட்டேருந்து காசு புடுங்காமயிருந்தா போதும்…நம்மல்லாம் இருந்தாலும் நிவாரணம் கெடையாது, செத்தாலும் நிவாரணம் கெடையாது…போட்டிங் போறதுக்கு லைசென்ஸ் வாங்கி வெச்சுருக்கோம்; ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி சொந்த செலவுல போட்டு செஞ்சுக்குறோம்.. நம்மள போட்டிங் ஓட்ட விட்டா பொழச்சுக்குவோம், ஆனா அதுக்குத்தான் அனுமதி தர மாட்டேங்குறாங்க…ரேசன்-ல பகுதிக்குப் பகுதியாத் தான் தர்றாங்க, கொடுக்குற பொருளும் தரமாயில்ல. கோதுமையே இருப்பு இல்லங்குறாங்க! களி தின்னாலும்னு பாத்தா வெல ரொம்ப ஏறிப்போச்சு.

திருவிழா நடத்தி முடிச்சிட்டீங்களா?

இந்த மாச கடைசியில தான் இருக்குது…கையில யாருகிட்டயும் காசு இல்ல…அதான் என்ன பண்ணலாம்னு முழிச்சிகிட்டிருக்கோம்.

புள்ளங்க படிப்புக்கெல்லாம் என்ன பண்ணுறீங்க?

பத்தாம் கிளாஸ் வரைக்கும் இங்க இருக்குது. 12-ம் வகுப்புக்குன்னா பென்னாகரம் போகணும். காலேஜின்னா தர்மபுரிக்குத் தான் போகணும்.

ஒரு கிலோ மீட்டருக்கு தண்ணீர் இருக்கும் ஊட்டமலை
மேய பச்சையின்றி தரையை மேயும் மாடு
ஒக்கேனக்கல் கழிவு நீரேற்றும் நிலையம்
ஒக்கேனக்கல் கழிவு நீரேற்றும் நிலையம்
காட்டில் பட்டி மாடு
சின்னாற்றங்கரையில் பட்டுபோயுள்ள மரங்கள்
நீர் இல்லாததால் கவிழ்க்கப்பட்டுள்ள பரிசல்கள்

செய்தி, படங்கள் – வினவு செய்தியாளர்கள்

அண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை !

0

அண்ணா பல்கலைக் கழகத்தில் மோசடியாக பட்டம் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி!

மாணவர்கள் நலனுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி – கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் – கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா – பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – உயர்நீதிமன்றம் கூட்டு சதி!

இதை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

பல்கலைக் கழகங்களின் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் இந்த நீதிமன்ற தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதிகள் சொன்ன காரணம் அதன் யோக்கியதை என்ன என்பதை மீண்டும் நிரூபித்து விட்டது. அதாவது, ‘துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் கையெழுத்திடக் கூடாது என்று பல்கலைக் கழக விதியில் இல்லையாம்’ அதனால் துணைவேந்தர் இல்லை என்பதால் பட்டமளிப்பு விழாவை நிறுத்த முடியாதாம்.

மாணவ சமுதாயத்தின் நலனில் அக்கறையுள்ள நீதிபதியாக இருந்திருந்தால் என்ன கேட்டிருக்க வேண்டும், துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கையெழுத்திடலாம் என்று இருக்கிறதா? என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நீதிமன்றம் மாணவர்களுக்கு எதிரானது. அரசின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை நிற்பது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அதே போல், பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர். அந்த வகையில் பட்டமளிப்பு விழாவில் நடைபெறும் இந்த மோசடியை தடுத்த நிறுத்தும் பொறுப்பு ஆளுநருக்கும் உண்டு. ஆனால், துணைவேந்தர் இல்லாமல் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்தான் சிறப்பு விருந்தினர். இப்படிப்பட்ட கேடுகெட்ட கிரிமினல் கூட்டத்திடம், கல்வித்துறையும், மாணவ சமூகமும் சிக்கி இருக்கிறது. இதைக் கண்டித்து எமது பு.மா.இ.மு சார்பில் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தோம். தொடர் போராட்டத்தால் பீதியானது போலீசு. எனவே சைதை நீதிமன்ற வாயிலில் இருந்து ஆளுநர் மாளிகை வரை 500-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

சரியாக மாலை 5:00 மணியளவில் பு.மா.இ.மு தோழர்கள், மாணவர்கள் காம்பீரமாக முழக்கமிட்டபடி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை முன்னேற விடாமல் சைதாப்பேட்டை நீதிமன்ற வாயிலேயே சுற்றி வளைத்து கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் !

0

மே 14-ஆம் தேதி மதியம் தொடங்கிய போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், மே 16-ஆம் தேதி இரவில் முடிவுக்கு வந்தது. தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

இந்த அறிவிப்பு வெளிவருவதற்குச் சற்று முன்பாக, எஸ்மா சட்டத்தின் கீழ் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்த மதுரை உயர்நீதி மன்றக் கிளை, “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

தொழிலாளர் விரோத தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம்

நீதிமன்றத்தின் ஒருதலைப்பட்சமான, அத்து மீறிய இந்த உத்தரவு, தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சுறுத்த திட்டமிட்டே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவையில், முதல் கட்டமாக 2,000 கோடி ரூபாயைத் தர வேண்டும்; மீதமுள்ள நிலுவையை தருவதற்கான கால அட்டவணையை நிர்ணயித்து, அதனை ஒரு ஒப்பந்தமாக அரசு கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கை.

தொழிலாளர்களின் கோரிக்கைகளுள் ஊதிய உயர்வும் ஒன்று. போராட்டத்தின் முக்கிய கோரிக்கை அதுவல்ல. போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்றுவிட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, சேமநல நிதி, ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட எல்.ஐ.சி. பிரீமியம் தொகை, கூட்டுறவுக் கடன் தொகை ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்க வேண்டும்/செலுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதாவது தொழிலாளிகளுக்கு சொந்தமான பணத்தை அதிமுக அரசு திருடித் தின்றுவிட்டது. அதைத் திருப்பிக்கொடு என்பதுதான் கோரிக்கை.

போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

இப்படித் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களுக்குத் திருப்பித் தராமல் இருக்கும் தொகை 7,000 கோடி ரூபாய் என்கிறார்கள், தொழிலாளர்கள். குறிப்பாக, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை மட்டும் 1,700 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக மாதாமாதம் ஓய்வூதியம் தருவதைக்கூட மறுத்துவருகிறது, அ.தி.மு.க. அரசு. நாங்கள் வாழ்வதா, சாவதா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறார்கள் தொழிலாளிகள்.

தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து பெறப்பட்ட இந்தப் பல்லாயிரம் கோடி ரூபாயை ஊழல், முறைகேடுகள் மூலம் திருடித் தின்றுவிட்ட அ.தி.மு.க. அமைச்சர்களும் அதிகார வர்க்கமும் நிதி நெருக்கடி என்று நாடகமாடுகிறார்கள். நீதிமன்றமோ இந்தத் திருட்டைக் கண்டுகொள்ளாமல், “அதுதான் அரசாங்கம் 50 சதவீதப் பணத்தைத் தருவதாகக் கூறிவிட்டதே, அதற்குப் பிறகு ஏன் போராடுகிறீர்கள்?” எனக் கேட்டுத் தொழிலாளர்களைக் குற்றவாளிகளாக்குகிறது.

தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தால்தான் 1,250 கோடி தருவதாக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வெறும் வாக்குறுதிதான். இந்த 1,250 கோடியில் முதல் தவணையாக 800 கோடி ரூபாய்தான் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. இதைத்தான் பாதி என்கிறது நீதிமன்றம். எது பாதி? 7000 கோடியில் 800 கோடி பாதியா? இதென்ன குமாரசாமி கணக்கா?

அமைச்சர் எனும் பெயரில் சுற்றிவரும் செல்லூர் ராஜூ

தொழிலாளிகளுக்கு உரிமையான அவர்களுடைய பணத்தை போக்குவரத்து துறை நிர்வாகமும், இந்த அரசும் அவர்களுடைய அனுமதி இல்லாமல் களவாடி விட்டன. கரும்பு விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு பணம் கொடுக்காமல் சுமார் 2000 கோடி ரூபாயை தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் எப்படி திருடியிருக்கிறார்களோ அப்படி தொழிலாளிகளின் பணம் திருடப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடு குறித்து குற்றவிசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.

பேருந்துகள் வாங்குவது முதல் டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவது வரையிலான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும், அரசுப் பேருந்துகளை காயலாங்கடை சரக்குகளாக மாற்றுவதன் மூலம் தனியார் பேருந்து முதலாளிகளுக்கு கள்ளத்தனமாக உதவுவது, வருமானம் வரும் ரூட்டுகளை அவர்களுக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசுப்போக்குவரத்து கழகம் திவாலாக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுதும் உழைத்து தேய்ந்த தொழிலாளிகளின் குடும்பங்களோ தமக்கு சேரவேண்டிய ஓய்வூதியமும் கிடைக்காமல் பட்டினியிலும், நோயிலும் துடிக்கிறார்கள்.

கந்து வட்டிக்காரனும் வங்கியும் கொடுக்கின்ற நெருக்கடியில் கடன் வாங்கிய விவசாயிகளும் சிறு தொழில் செய்வோரும் உழைப்பாளிகளும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் இங்கே கடன் கொடுத்தவர்களான தொழிலாளர்கள் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தொழிலாளிகளின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் திருடிய நிர்வாகத்திடம், தொழிலாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறது நீதிமன்றம். திருடிய பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டால், கேட்டவனை சிறைக்கு அனுப்புவார்களாம், இதற்குப் பெயர் சட்டத்தின் ஆட்சியாம்.

அமைச்சர் என்ற பெயரில் உலாவரும் அ.தி.மு.க ரவுடி செல்லூர் ராஜுவின் மிரட்டல்களுக்கு தொழிலாளிகள் அஞ்சவில்லை என்பதால், எஸ்மா என்ற உருட்டுக்கட்டையை காட்டி மிரட்டும் வேலையை நீதிபதிகள் செய்கிறார்கள்.

“போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொழில்தாவா சட்டத்தின் கீழ் வருகின்றனர். இச்சட்டப் பிரிவு 22-இன் கீழ் 14 நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கி போராட்டத்தில் ஈடுபடலாம். மேலும், போக்குவரத்துக் கழகங்கள் வாங்கும் டீசல், ஆயில், உதிரி பாகங்களுக்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரூபாய் வரியாகச் செலுத்துகின்றன. அத்தியாவசியத் தேவை சட்டத்திலும், எஸ்மாவின் கீழும் வந்தால், சேவை செய்யும் நிறுவனங்களுக்கு அரசு எப்படி வரி வசூலிக்கலாம். இதனால் எஸ்மா சட்டம் போக்குவரத்து ஊழியர்களைக் கட்டுப்படுத்தாது” என்கிறார், போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளன செயல் தலைவர் திரு மலைச்சாமி.

வேலைநிறுத்த உரிமை என்பது உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமை. அந்த உரிமையை எஸ்மா சட்டம் மிகவும் வெளிப்படையாக மறுக்கிறது.  2003-இல் நடந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தடை செய்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை நாடே கண்டது. “தமது குறைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பணியாளர்கள் வேலைகளை மேலும் நேர்மையாக, திருத்தமாக, திறமையாகச் செய்வார்களேயானால், அம்மாதிரியான நடத்தையை அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் அங்கீகரித்து வரவேற்பார்கள்” என உச்சநீதி மன்றம் அத்தீர்ப்பில் எழுதியது.

ஆண்டைகளின் மனம் குளிரும்படி அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாரம். இது போராடும் ஒரு பிரிவினருக்கு எதிராகப் பொதுமக்களுள் மற்றொரு பிரிவினரை நிறுத்தும் ஆண்டைகளின் நரித்தனம். தற்போது மதுரை உயர்நீதி மன்றமும் பொதுமக்களின் நலனில் இருந்தே தீர்ப்பளிப்பதாக கூறியிருக்கிறது.

ஓ.பி.எஸ். தொடங்கி இ.பி.எஸ் வரை, சேகர் ரெட்டி தொடங்கி ராம மோகன ராவ் வரை என நம் கண் முன்னே தமிழகத்தைக் கொள்ளையடித்த ஒரு பெருங்கூட்டம் உலவிக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய திருட்டுச் சொத்திலிருந்து ஒரே ஒரு ரூபாயை பறிமுதல் செய்வதற்கு கூட சட்டத்தில் இடமில்லை. அப்படி பறிமுதல் செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்வதற்கு கூட நீதிபதிகளுக்கு நாக்கு வருவதில்லை. ஏனென்றால் அது வர்க்கபாசம்.

ஆனால் பட்டினியில் தவிக்கும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் கொடு என்று கேட்டால், அவர்களை அடுத்த கணமே சிறைக்கு அனுப்புவதற்கு சட்டம் இருக்கிறது. மாண்புமிகு நீதியரசர்களும் தயாராக இருக்கிறார்கள்.

குடிமக்களின் உரிமைகளை ரத்து செய்வதில் போலீசை விட நீதிமன்றமே முன் நிற்கிறது

மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டுமென்றும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வேலை நிறுத்த உரிமையை உடனே தடை செய்வதாக அறிவித்த நீதிபதிகளுக்கு, கொள்ளையடிக்கும் உரிமையைத் தடை செய்ய விருப்பமில்லை.

இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள், நேற்று அரசு மருத்துவர்கள், அதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்கள் எஸ்மாவால் தடை செய்யப்பட்டன. ஏன் நோக்கியா தொழிலாளர்களின் போராட்டத்தையும் இந்தச் சட்டப்பிரிவைக் கொண்டுதான் அடக்க முயன்றது அரசு.

தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.

நீதிபதிகளின் அதிகார அத்துமீறல்களையும், முறைகேடான தீர்ப்புகளையும் அம்பலப்படுத்தத் துணிந்த வழக்குரைஞர்களின் தொழில் உரிமையை இந்திய பார் கவுன்சில் மூலம் ரத்து செய்ய வைத்தது, சென்னை உயர்நீதி மன்றம். இவையனைத்தும் நீதிமன்றங்கள் நீதிக்கு எதிரான மன்றங்களாக நடந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றன.

ஜனநாயகத்தின் எல்லா தூண்களும் உளுத்துப்போய்விட்ட நிலையில் நீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசிப் புகலிடமாக இருப்பதாக அறிவுத்துறையினர் சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்கங்களுக்கு, அத்தகைய காரியங்களை  சத்தமில்லாமல் முடித்து தரும் முதல் புகலிடமாக நீதிமன்றங்கள்  மாறி வருகின்றன  என்பதையே அனுபவம் காட்டுகிறது.

-திப்பு

மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது ?

5

மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து மே 26-ல், 3 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளது. இதை 2019-ல் மக்களவை தேர்தலை மனதில் வைத்து நாடு முழுவதிலும் ‘மோடி விழா’ என்ற பெயரில் கொண்டாட பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்த மோடி விழாவிற்கு  நமது பங்களிப்பாக இந்தக் கருத்துக் கணிப்பு! ஆம். மோடி என்றால் நீங்கள் அதிகம் வெறுப்பதை கீழே தெரிவு செய்யுங்கள். எந்த வெறுப்பு முதலிடம் என்று பார்ப்போம்.

கருத்துக் கணிப்பை பகிருங்கள்! பரப்புங்கள்! நன்றி!

உத்திரப்பிரதேசம் : தோல் பதனிடும் தலித் மக்கள் – படக்கட்டுரை

1

ந்துத்துவத்தின் நேரடியான ஆட்சி அதிகாரத்திற்குள் சமீபத்தில் சிக்கியுள்ள உத்திரப்பிரதேசத்தில் இசுலாமியர்கள் மற்றும் தலித்துகளின் நிலை மட்டுமா மோசமாகவும் அபாயகரமாகவும் உள்ளது? அவர்கள் வேலையாக விதிக்கப்பட்ட மாட்டுத் தோலுறித்தல், தோல் பதனிடுதல் தொழிலும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் தோல் தொழிலுக்கு வலுச் சேர்க்கும் இரு கிராமங்களின் நிலைமையை இப்புகைப்படங்கள் நமக்குக் காட்டுகின்றன.

உத்திரப்பிரதேசத்தில் ரோஹ்டா மற்றும் ஷோபாபூர் ஆகிய ஊர்களில் இரண்டு தோல் பதனிடும் நிலையங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பதனிடுபவர்களால் இயக்கப்படுகின்றன. அவர்கள் தங்களது தொழிலைக் கீழ்நிலையில் இருத்தி வைத்திருக்கும் சாதிய அமைப்பையே தங்களது துயர்மிகு வேலை நிலைமைகளுக்குக் காரணமாகக் குற்றம் சுமத்துகின்றனர். மற்ற தொழிற்சாலைகளைப் போல் ரோஹ்டா தோல் பதனிடும் நிலையம் நவீனமயமாக்கப்படவில்லை, மாறாக ஒரு நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த பதனிடும் தொழிலாளர்களைக் கொண்ட கிராமம் தான் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஷோபாபூர் கிராமம். பதனிடப்பட்ட தோல்கள் சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்டிருக்கும் காட்சி. இப்பதனிடப்பட்ட தோல்கள் மீரட்டில் உள்ள கிரிக்கெட் பந்து உற்பத்தியாளர்களுக்கு விற்கப்படுகின்றன

தற்போது 55 வயதாகும் கமல், தொடக்கப்பள்ளி முடித்தவுடன் தனது தந்தையைப் போலவே தோல் பதனிடும் தொழிலுக்கு வந்துவிட்டார். நாளொன்றுக்கு 200-250 ரூபாய்கள் சம்பாதிக்கும் இவர் மரப்பட்டையால் ஆன தேய்ப்பானைக் கொண்டு கால்நடைகளின் தோல்களிலிருந்து ரோமங்களை அகற்றுகிறார்.

கால்நடைகளின் தோல்கள் சிதைவடையாமல் தடுக்க உப்பிடப்பட்டு பின்னர் அடுக்கப்பட்டிருகின்றன. இதன் துர்நாற்றம் மிகவும் மோசமானதாக இருந்தாலும் ஷோபாப்பூர் தொழிலாளிகளுக்கு அதைத் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் இத்தொழிலை நவீனப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை. நவீனப்படுத்திக் கொள்ள  அரசாங்கத்திடம் தொடர்ந்து உதவி கேட்டுக் கோரிக்கைகள் விடுத்தும் எந்தப் பலனும் இல்லை.

34 வயதான மஹிந்தர், கால்நடையின் தோலை இரண்டாகப் பிளக்கின்றார். அதன் மிருதுவான கீழ்த் தோல் காய்ந்த பின்னர், வர்ணம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஷோபாப்பூர் தோல்பதனிடுபவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு – சூழலியலாளர்களே பெரும் தலைவலியாக இருக்கின்றனர்.

காயவைக்கப்படும் மிருதுவான தோல் அடுக்கு.

ஷோபாப்பூரில் குடியிருப்பவர்களுக்கு தங்களது வாழ்க்கை நிலைமை மீது கசப்புணர்வே மிஞ்சியிருக்கிறது, அவர்களுக்கு வடிகால் வசதியும், மின்சார வசதியும் தேவைப்படுகிறது. “எங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் சமூகம் ஒரு தலித் மருத்துவரை ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறுகின்றனர் அம்மக்கள்.

பதனிடுவதற்கான இரசாயனங்களை சேமிப்பதற்கு தனிப்பட்ட இடமில்லாததால், சுண்ணாம்பை வெட்ட வெளியில் போட்டு வைத்திருக்கின்றனர். சுண்ணாம்பு அப்பகுதியில் மண்ணில் இயற்கையாக எங்கும் கிடைக்கிறது.

உத்திரப்பிரதேசத்தின் ரோஹ்டாவைச் சேர்ந்த பிரேமாவதி, பதனிடுவதற்குத் தோல்களை ஆயத்தம் செய்ய தோல் பரப்புகளை நார் கொண்டு தைத்துக் கொண்டிருக்கிறார். ரோஹ்டாவின் தோல் பதனிடும் நிலையம் சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அரசாங்கத்தின் உதாசீனத்தாலும் புறக்கணிப்பாலும் சமீபத்திய நிலநடுக்கத்தாலும் தற்போது பாழ்படுத்தப்பட்டிருக்கிறது

ஷோபாப்பூரிலும் ரோஹ்டாவிலும் ரசாயனங்களை சேமித்து வைக்க கிடங்குகளோ, ரசாயனங்களை வெளியேற்ற வடிகால்களோ இல்லை.

இவ்விரு சகோதரர்களைப் போல ஷோபாப்பூரில் வாழும் மக்களுக்குத் தெரிந்த ஒரே தொழில் தோல் பதனிடுவது மட்டும் தான். ஒவ்வொரு வீடும் ஒரு தோல் பதனிடும் இடத்தையும் தோல் பதனிடுபவரையும் கொண்டுள்ளது. இவ்வேலையைத் தூய்மையுடையதாக்க எதையும் செய்யாமல் இது தூய்மையற்ற வேலையாக அழைக்கப்படுவதாகக் கூறி ஆத்திரமடைகின்றனர் இவர்கள்.

ரோஹ்டா தோல் பதனிடும் இடம் : தோல்கள் மற்றும் திறந்த வெளி வடிகால்களிலிருந்தும் வரும் துர்நாற்றம் எங்கும் நிறைந்திருக்கிறது. தோல் பதனிடும் நிலையத்தை நவீனப்படுத்த பல மனுக்கள் கொடுத்தும் எவ்விதப் பலனும் இல்லை. உள்ளூர் விவசாயிகள் இத்தோல் பதனிடும் தொழிற்கூடம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் ரோஹ்டாவைச் சேர்ந்த தலித்துகளுக்கு கடந்த 10 தலைமுறையாக இதனைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது.

ரோஹ்டாவில் உள்ள தோல் பதனிடும் இடத்தைச் சுற்றி சுதந்திரமாக அலைந்து திரியும் நாய்களின் கால்களில் நிரந்தரமாகவே சாயம் ஏறியிருக்கிறது.

ரோஹ்டா தோல் பதனிடும் நிலையம் கடந்த 20 ஆண்டுகளாகவே சிதைந்த நிலையில் உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதன் சுற்றுச் சுவரையும், கதவையும் தகர்த்துவிட்டது. பதனிடுபவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இங்கு நாய்கள் சுதந்திரமாக உலாவுகின்றன.

வேலையின் இடைவெளியில் நீர் அருந்தும் தலித் தொழிலாளி ராஜ்குமார். இங்கு பணிபுரியும் பதனிடும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்புக் கருவியோ, தொழில் செய்யும் உடையோ வழங்கப்படாததால், உள்ளாடைகளுடனேயே வேலை செய்கின்றனர்.

தோல் பரப்பு ஒன்றை ராஜ்குமார் கழுவுவதை மெஹர் சிங்கும் விஜயும் கவனிக்கின்றனர். இந்த பதனிடும் நிலையத்தின் சுவர்களும், மேற்கூரையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன. இவற்றைச் சரிசெய்வதற்குப் பதிலாக இவற்றை அப்புறப்படுத்துவதையே தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தோல்களைத் தைத்து தொங்கவிட்டு, சுண்ணாம்பு மற்றும் ரசாயனங்களை அதனுள் ஊற்றி, 3 வாரங்களுக்கு நீராற்றும் வரை அப்படியே விட்டுவிடுகின்றனர்.

நீராற்றப்படும் தோலிலிருந்து நீர் மெதுவாக சொட்டு சொட்டாக வெளியேறுகிறது. கைகளால் தயாரிக்கப்பட்ட இரசாயன நீரை மறுபடியும் அதில் ஊற்றி நிரப்புகிறார் தொழிலாளி ராஜேஷ். ஷோபாப்பூரிலோ அல்லது ரோஹ்டாவிலோ மின்சாரம் அறவே கிடையாது.

ஒரு தொழிலாளி குழிகளில் நீரை ஊற்றவும் , வெளியேற்றவும் பிளாஸ்டிக் வாளியை உபயோகிக்கிறார். இந்த வேலை நிலைமைகள் மிகவும் கடினமானவை. இங்கு இவர்களுக்கு மருத்துவ உதவி கூட கிடைப்பதில்லை.

தண்ணீரில் ரசாயனங்களை சேர்க்கும் போது உருவாகும் நச்சு நீராவியானது தொழிலாளர்கள் சுவாசிக்கும் காற்றில் மேகங்களை போல சூழ்ந்து கொள்கின்றன. இதன் விளைவாக அவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுவதோடு சருமம் மற்றும் ஆடைகளில் நீங்காத துர்நாற்றம் வீசுகிறது.

ராஜ்குமாரை போன்ற தோல் பதனிடும் தொழிலாளிகள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள். ஏனெனில் நம் அனைவருக்கும் தோல் பொருட்கள் தேவைப்படுகின்றது. ஆனால் அவர்கள் தலித் என்பதாலேயே அவர்களின் வாழ்க்கை பரிதாப நிலையில் இருப்பதாகவும், தங்களைப் பற்றி அரசாங்கம் உட்பட யாரும் கவலை கொள்வதில்லை என்றும் இத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

– தமிழாக்கம்: நந்தன்

நன்றி : அவுட்லுக் ( Outlook )

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு

0

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பதை கண்டித்து, கடந்த 2017 மே 4 -ஆம் தேதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு பல்கலைக் கழக வாயிலில் போராட்டம் நடத்தியது.

இந்த போராட்டத்தில் விளைவாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் சங்கம் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு நீதிமன்றம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் எப்படியாவது பட்டமளிப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என முடிவு செய்து வரும் மே 19-ம் தேதி திட்டமிட்டுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவை தடுத்து நிறுத்த வேண்டும். இலட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் எனற நோக்கத்தில், 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புமாஇமு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் வியோகிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ளேயும், வெளியேயும், சென்னை பல்கழைக்கழகத்திலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

நேற்று 17.5.2017 காலை பல்கலைக்கழகத்தில் அனைத்து வாயிலிலும், பேருத்து நிறுத்தத்திலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர். காலை 11 மணிக்கு பு.மா.இ.மு-வின் மாணவர்கள், பெண்கள் உட்பட 70-க்கும் மேற்ப்பட்டோர் அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை முன்னேற விடாமல் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்திலேயே தடுத்து நிறுத்தியது போலீசு.

போராட்டத்தின் தலைவர் ராஜா (பு.மா.இ.மு சென்னைக்கிளை செயலர்) ஊடகங்களுக்கு அளித்த உரையில் “ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.

இது நாங்கள் கற்பனையாக கூறவில்லை, ஏற்கனவே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரம் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் தரப்பட்ட சான்றிதழ்கள் வெளிமாநிலங்களில் செல்லாமல் போனது. அது போலி சான்றிதழ் தயாரித்தக் குற்றத்திற்கு சமமானது. இதே வேலையை ஒரு தனியார் கல்வி நிறுவனம் செய்தால், அது கடும் தண்டணைக்குறிய குற்றம். ஆனால், இந்த குற்றத்தைதான் தற்போது தமிழக அரசும், தமிழகக் கல்வித்துறையும் செய்து கொண்டிருக்கிறது.

மாணவர்கள் கடினமாக உழைத்து, பெற்றோர்கள் லட்ச லட்சமாக செலவழித்து வாங்கப் போகும் பட்டத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது.

ஏன் இந்த அரசால் துணைவேந்தரை நியமிக்க முடியவில்லை? ஏனெனில் ஒருவர் துணைவேந்தர் ஆகவேண்டும் என்றால் அதற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என வெளிப்படையாகவே பேரம் நடக்கிறது. இதுமட்டுமல்லாமல், பேராசிரியர் பதவிக்கு 50 லட்சம், துணை பேராசிரியர் பதவிக்கு 30 லட்சம் ரூபாய் என பேரம் மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே நடக்கிறது.

இப்படி பணம் லஞ்சம் கொடுத்துவரும் துணைவேந்தர் நல்ல கல்வியை தரவேண்டும் என கனவில் கூட நினைக்க மாட்டார். மாறாக எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் நினைப்பார். எனவே தனியார் கல்லூரிகளிடம் பணம் வாங்கி கொண்டு கல்லூரி திறக்க அனுமதிப்பார். கட்டணக் கொள்ளையை நடத்துவார். இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த கல்வித்துறையில் எப்படி நம்மைப் போன்ற ஏழை மாணவர்கள் படித்து பொறியாளராகவோ, மருத்துவராகவோ வரமுடியும், கண்டிப்பாக முடியாது. தற்போது பேரங்கள் படியவில்லை என்பதாலும், பேரங்களுக்கு பலமுனைப் போட்டி இருப்பதாலும் துணை வேந்தர்களை நியமிக்காமல் இருக்கிறது எடப்பாடி அரசு.

எனவே அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் ஊழல் முறைகேடுகள் இன்றி உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டுவோம்.” என கூறினார்.

அதன் பின் போராடிய மாணவர்களை தரதரவென இழுத்து வாகனத்தில் ஏற்றி, காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது போலீசு. ஊழல் செய்து மாணவர்களின் எதிர்கலத்தை சீரழிக்கும் இந்த அண்ணா பல்கலைக் கழகத்திற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்கிறது. மாணவர்களின் நலனுக்கான போராடுபவர்களை காட்டுமிராண்டிதனமாகத் தாக்குகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94451 12675.

சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம்

0

பத்திரிக்கை செய்தி

நாள்:17.05.2017

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய் !
தஞ்சையில் ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய் !!

கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 18.05.2017 வியாழன் காலை 10.30 மணி
இடம்:தஞ்சை இரயிலடி.

ஞ்சை வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த 12-ம் தேதி முதல் இங்கு வந்து பயிற்சியளித்து வருவதாக ஓரிரு செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அப்பல்கலைக் கழகத்தில் 400-க்கும் மேற்ப்பட்ட  போலீசைக் குவித்தும், பயிற்சி நடக்கும் 2 கட்டிடங்களைச் சுற்றி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டும், கண்காணிப்பு கோபுரம், வெள்ளமென ஒளி உமிழும் விளக்குகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை–திருச்சி சாலையில் இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது. இது முற்போக்கு சக்திகள், ஜனநாயக வாதிகள், தலித்துகள், சிறுபான்மை மதத்தினர் அனைவரையும் கவலை கொள்ளச்செய்யும் செய்தியாகும். இத்தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்காமல் அதற்கு 400-க்கு மேற்பட்ட காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குறியது

தந்தை பெரியார் கட்டி வளர்த்த பகுத்தறிவு சுயமரியாதை உணர்வுகளை குழிதோண்டி புதைக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.   ஆட்சியையும் பதவியையும் காத்துக் கொள்வதற்காகவும் தங்கள் ஊழல் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எடப்பாடி அரசு தமிழ்ச்சமூகத்துக்கு எதிரான இச்செயலில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு  இடமளித்து, பல்கலைக்கழகம் என்ற அர்த்தத்துக்கே எதிராக செயல்படும் சாஸ்திரா-வை இனியும் பல்கலைக்கழகமாக கருத முடியாது. எனவே, சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தை தமிழக மக்கள் புறக்கணிப்பததோடு இழுதது மூடப் போராட வேண்டும்.

குஜராத்திலும் வடமாநிலங்களிலும் கலவரத்தை நடத்தியே கட்சியைக் கட்டி சிறுபான்மையினருக்கெதிரான பச்சைப் படுகொலைகளை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.  ஜெயலலிதா மரணத்தை ஒட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வை பிளவு படுத்தியும் அதன் இரண்டு அணியினரின் கிரிமினல்-குற்றச் செயல்களை வைத்து மிரட்டி, தமிழகத்தில் ஒரு பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.

உலகில் ஹிட்லருக்கு அடுத்து மிக கொடூரமான மனித குல விரோத சித்தாந்தத்தை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட அதன் பல்வேறு உறுப்புக்களும் இந்தியாவிலிருப்பதே இந்திய மக்களை உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைக்கிறது.  பா.ஜ.க, இந்து முன்னணியில் இருந்த சிலர் தங்கள் தொழில் போட்டி, கிரிமினல் நடவடிக்கைகள், கள்ளத் தொடர்புகள் போன்றவற்றால் கொல்லப் பட்டதையெல்லாம் கூட மத விவகாரமாக்கி கலவரத்தை தூண்டி வருகிறது. தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டும், தன்னைக் கடத்தியதாக தானே நாடகமாடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

பெரியார் பிறந்த தமிழகம் ஆரிய-பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் அதன் அடிப்படையிலான சாதிய கட்டமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் கணிசமான வெற்றிகளைப் பெற்ற மாநிலமாகும். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான பூமியாகும். இங்கு குஜராத் போன்ற ஒரு கொடூர மதக் கலவரம் ஏற்படாமல் தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வறட்சி, வறுமை கடன் சுமை ஆகியவற்றிற்கு ஆளான விவசாயிகளின்  தற்கொலை,  தொழில் முடக்கம், டாஸ்மாக் சீரழிவு, இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்றி தவிக்கும் அவலச் சூழல் ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் தமிழகத்தை அப்பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி மதக்கலவர பூமியாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொடும் செயல்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் விழிப்போடு இருந்து ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும்.

தமிழக அரசின் ஆர்.எஸ்.எஸ். சார்பு நிலையை கண்டித்தும்,  சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்  18.05.2017 வியாழன் காலை 10.30 மணி  தஞ்சை இரயிலடியில் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி..

இவண்,
இராவணன்
செயலர், மக்கள் கலை இலக்கியக்கழகம், தஞ்சை.
____

இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தஞ்சை.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்

12

மிழகம் முழுவதும் கடந்த 15-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போடப்படும் ஊதிய ஒப்பந்தம் இதுவரை போடப்படாததை கண்டித்தும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்த செய்தி வெளியானதும் பல இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். மே 15, மே 16 ஆகிய இருதேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அடிமைகளின் கூடாரமான அதிமுக தொழிற்சங்கம் மட்டும் பேருந்துகளை இயக்க விருப்பதாகக் கூறியது. அந்த சங்கத்திலும் கணிசமான தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஓய்வு பெற்ற ஊழியர்களையும், பள்ளி – கல்லூரி பேருந்து ஓட்டுநர்களையும் வைத்து வாகனங்களை இயக்கப்போவதாகவும், கூடுதலாக சிறப்பு இரயில்களை இயக்குவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கப் போவதாகவும் அறிவித்தது எடப்பாடி அரசு.

ஆனால் உண்மையில் இரத்த நாளங்கள் போல இரண்டு கோடி மக்களை அன்றாடம் தமிழகம் முழுக்கத் தாங்கிச் செல்லும் அரசுப் போக்குவரத்துத் துறையின் சேவையை வேறு எதனைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது. இந்நிலையில் நேற்று(16.05.2017) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ‘பொது நல வழக்கை’ விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்மா சட்ட்த்தை வேலைக்குச் செல்லாத தொழிலாளர்கள் மீது ஏவப் போவதாக மிரட்டியது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடனடியாக ரூபாய் 1000 கோடியை ஒதுக்குவதாகவும், அதன் பின்னர் வரும் செப்டம்பர் மாதத்தில் மீதித் தொகையை ஒதுக்குவதாக தமிழக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

தமிழக அரசு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 1,700 கோடியில் வெறும் 750 கோடியை மட்டுமே தற்போது ஒதுக்குவதாக பேச்சுவார்த்தையின் போது கூறியுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் ஈ.எஸ்.ஐ., பி.எஃப், க்ராஜுவிட்டி நிலுவைத் தொகையான சுமார் 4730 கோடி நிதியைப் பற்றி வாயே திறக்கவில்லை.  போக்குவரத்துத் துறை அமைச்சரோ தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கோரினார்.

இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முன்னர் கடந்த 13.05.2017 அன்று தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் போது அங்கு சென்றிருந்தோம்.

காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி அவர்கள், முதல்வரைச் சென்று பார்த்துப் பேசி ஒரு நல்ல முடிவை மாலை 4:00 மணிக்கு சொல்வதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துவிட்டு சென்றார்.

ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.லட்சுமனன்

அவரைத் தொடர்ந்து தி.மு.க –வின் தொ.மு.ச வின் செயலாளர் சண்முகம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதனால் வேலைநிறுத்தப் போராட்டமானது கட்டாயம் நடைபெறும். முதல்வரையும் அமைச்சரையும் சந்திப்பதாக கூறினார். அவர்கள் 4:00 மணிக்கு சொல்லும் முடிவில் இருந்து போராட்டத்தைப் பற்றி பரிசீலிப்போம் என ஊடகங்கள் மத்தியில் அறிவித்தார்.

அப்போது ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.லட்சுமனன் அவர்களிடம் போக்குவரத்துத் துறை, வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி கேட்டறிந்தோம்.

************

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?

தமிழகத்தில் சுமார் 23,000 அரசுப் போருந்துகள் உள்ளன. அவை சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், கோயம்பத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவத்துக் கழகங்கம் என நிர்வாக வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் சேர்த்து சுமார் 1,30,000 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். மேலும் 50,000 பேர் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளனர்.

அதே போல நாள் ஒன்றுக்கு 2.2 கோடி பயணிகள் தமிழக அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மலைப் பிரதேசங்களில் அசாம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் தான் சிறந்த சேவைகளை வழங்கிவருகின்றது. இந்தியாவின் மொத்த இரயில் சேவையைப் பயன்படுத்துபவர்களை விட, தமிழக பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கிறது. அதே போல இந்தியா முழுவதும் உள்ள 55 போக்குவரத்துக் கழகங்களை ஒப்பிடும் போது தமிழகம் தான் மக்களுக்கு அதிக அளவில் சேவை செய்யக்கூடிய பெரிய போக்குவரத்துக் கழகமாக உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

 தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலைமை என்ன?

போக்குவரத்துத் தொழிலாளிகள் தமிழகம் முழுக்க உள்ளவர்கள் 1,70,000 அதில் சுமார் 40,000 பேர் அதிகாரிகளாக உள்ளனர். மீதமுள்ள தொழிலாளிகளில் 40% பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகளாக உள்ளனர். தற்போது ஒப்பந்தத் தொழிலாளிகளிலும் கணிசமான பேரை ரிசர்வ் தொழிலாளிகள் என மாற்றியுள்ளது அரசாங்கம். நிரந்தரப் பணிகளில் இது போன்ற ரிசர்வ் பணியாளர்களை வைத்திருக்கக் கூடாது என சட்டம் உள்ளது. பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் பேருந்துகளை இயக்கவே இவர்களை வைத்துள்ளதாகக் கூறுகிறது போக்குவரத்துத் துறை. ஆனால் இவர்களைக் கொண்டுதான் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

குறிப்பாக ஆளும் கட்சி ஊழியர்கள் பலரும் வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வேலையையும் ஒப்பந்த மற்றும் ரிசர்வ் தொழிலாளிகளை வைத்துச் செய்கிறார்கள். அதிலும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவு இருந்தாலும் இவர்களுக்கு குறைவான சம்பளமே தரப்படுகிறது. 610 ரூபாய் சம்பளம் தரவேண்டிய தொழிலாளிகளுக்கு 310 ரூபாய் தான் சம்பளமாகத் தரப்படுகிறது. மற்ற அரசுத் துறை ஊழியர்கள் போல் உத்திரவாதமான 8 மணி நேர வேலை இங்கு கிடையாது.

ஒரு தொழிலாளி வேலைக்கு வருகின்றார், எனில் அவருடைய இடைவேளை நேரம் போக 6 மணி நேரம் தான் வேலை நேரம் (Wheel Hour) என விதி சொல்கிறது ஆனால் அப்படியான நடைமுறை இங்கு கிடையாது. 130-வது மேதினம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இன்னமும் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை எங்களுக்கு நிறைவேறவில்லை.

அதுமட்டுமல்லாது பணியில் உள்ள நெருக்கடி ஒரு பக்கம் என்றால் நிர்வாகம் மேலும் தொழிலாளிக்கு சுமையை ஏற்படுத்துகிறது. டீசல் லிட்டருக்கு 5 கி.மீ தர வேண்டும் என நெருக்கடி தருகிறது. அசோக் லேலண்ட் நிறுவனமே 4 ½ கி.மீ கிடத்தாலே பெரிய சாதனைதான் என்கிறது. அதே போல வழித்தடங்களில் வசூல் குறைந்தால் நடத்துநர் பொறுப்புடன் செயல்படுவது இல்லை என விசாரணை வைக்கிறது. அவர்களிடம் எதையும் பேசாமல் மெமோ அளிக்கிறது. பரிசோதகர்களுக்கும் இலக்கு வைத்து தொழிலாளிகள் மீது மெமோ தரவேண்டும் எனச் சொல்கிறது. இவ்வாறு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நெருக்கடிகள் தரப்படுகிறது. தொழிலாளிகளின் சோர்வைப் போக்க அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும். அதையெல்லாம் செய்வதே கிடையாது.

இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் பல சலுகைகள் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு உள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்களே ?

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைப் பணத்தின் விவரங்கள்

இங்கு உரிமைகளே இல்லை, சலுகைகள் எங்கிருந்து கிடைக்கப் போகிறது? எல்லாம் காகிதத்தில் தான் உள்ளது. ஒரு தொழிலாளிக்கு வருடத்திற்கு 5 சீருடை வழங்க வேண்டும். முறையான காலணிகள் வழங்க வேண்டும். போதிய விடுப்பு வழங்க வேண்டும். குடு்ம்ப உறுப்பினர்களைச் சேர்த்து 5,000 மணி நேர பயணம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். திருமண உதவித்தொகை வழங்க வேண்டும். விபத்தில் உயிர் பிரிந்தால் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றதும் வருங்கால வைப்பு நிதியை உடனே வழங்க வேண்டும். கிராஜுவிட்டி தொகையை ஓய்வு பெற்ற ஐந்தாண்டுகளில் வழங்க வேண்டும் என பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என உத்திரவு உள்ளது. ஆனால் இவை எதுவும் தற்போது வழங்கப்படுவது இல்லை. இறந்தவர்களின் வாரிசுகளுக்கான வேலைக்குக் கூட லஞ்சம் தரவேண்டிய நிலை தான் உள்ளது.

தங்கள் வாழ்நாளில் குடும்பத்துக்காக ஒரு நல்லது கெட்டதில் பங்கெடுக்கமுடியாத தொழிலாளி தன்னுடைய ஓய்வுக் காலத்திலாவது நிம்மதியாக வாழமுடிகிறதா என்றால் கிடையாது.

சரி தற்போது நடைபெறும் (13/05/2017) பேச்சுவார்த்தையின் நிலை என்ன ?

ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஆனால் கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் போட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் இதுவரை போடப்படவில்லை. அதே போல கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியும் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்லாம தொழிலாளிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு பணம் என சுமார் 7000 கோடி ரூபாய் முறையாக செலுத்தப்படாமல் உள்ளது. இப்போது வரை இந்த நிலுவைப் பணம் பற்றித் தான் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

நாங்கள் மற்றவர்களின் பணத்தை கேட்கவில்லை. தொழிலாளர்களுடைய பணத்தை தான் கேட்கிறோம். நேற்று அமைச்சர் நிலுவைப் பணமான 750 கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறியுள்ளார். ஆனால் தொழிலாளிகளுக்கு வரவேண்டிய 7,000 கோடியைப் பற்றி பதில் ஏதும் இல்லை. தற்போது பேச்சுவார்த்தையில் 1,200 கோடி ஒதுக்குவதாக கூறியுள்ளனர். ஆனால் அவை எப்படி எந்த வகையில், எத்தனை தவணையில் வழங்கப்படும் என இதுவரை சொல்லவில்லை.

இப்படி 7000 கோடிவரை நிலுவை வரக் காரணம் என்ன?

தமிழக அரசின் போக்குவரத்து துறையானது 1972-ல், 3000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அரசு நிறுவனமாக இருந்தது. அதன் பின்னர் அவை வெவ்வேறு கால கட்டங்களில் போக்குவரத்து கழகங்களாக மாற்றப்பட்டது. அதன் வரவு செலவு விவகாரங்கள் அந்தந்த கழகங்களுக்கு உட்பட்டதாகும். இதை காரணமாக வைத்து தமிழக அரசானது போதிய நிதியை ஒதுக்குவது கிடையாது.

மேலும் தமிழக அரசு வழங்கக்கூடிய சலுகைகள் மாணவர்களுக்கான இலவச பாஸ், முதியோர்களுக்கான இலவச பயணச்சீட்டு, கல்லூரிகளுக்கான சலுகை பயண அட்டை போன்று மக்களுக்கு சேவையாக வழங்கக் கூடிய சலுகைகளுக்கு அரசு போதிய நிதியை போக்குவரத்து கழகங்களுக்கு அளிப்பதில்லை. அதே போல மலைபகுதிகள் போன்ற இடங்களில் இலாப நோக்கில்லாமல் மக்களுக்கு சேவையாக போக்குவரத்து வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் சுங்கச்சாவடி கட்டணங்கள், வாகன உதிரி பாகங்களுக்கான செலவு இவற்றால் தான் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய தொழிலாளர்களின் பணத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்கள் முறைகேடாக செலவு செய்கின்றன. இது கடந்த பல ஆண்டுகளாக நிலவுவதால் சிறுகச் சிறுக இந்தத் தொகை சேர்ந்து தற்போது 7000 கோடி ரூபாயாக மாறியுள்ளது.

அப்படி என்றால் அரசாங்கம் மக்களுக்கு சேவையாக சலுகைகள் எதையும் வழங்கக் கூடாதா ?

மக்களுக்கு சலுகைகளை வழங்கக் கூடாது எனச் சொல்லவில்லை. மாறாக அதனால் ஏற்படும் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அதைக் கூட மக்களுக்கான சேவை எனும் அடிப்படையில் அரசுப் பேருந்துகளுக்கு எரிபொருளில் மானியம் வழங்குவது. மற்றும் சுங்கச் சாவடிகளில் கட்டனம் இரத்து செய்வது போன்றவற்றிம் மூலம் ஈடு கட்டலாம். விமானங்களின் எரிபொருளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது எனும் போது சாதாரண மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துக்கு இது போன்ற சலுகைகள் அறிவிக்கலாம் அல்லவா?

அதைவிடவும் போக்குவரத்து துறையில் அதிகாரிகளின் விகிதம் அதிகமாக உள்ளது. இதில் அதிகாரிகளைக் குறைத்து நிர்வாகத்தை சீர்படுத்தினாலே இந்த இடைவெளியை குறைக்க முடியும். மேலும் அரசானது துறையை தனியார்மயப்படுத்தும் வேலைகளச் செய்து வருகிறது.

அரசாங்கப் பேருந்துகள் நட்டத்தில் இயங்குவதால் தானே தனியார்மயப் படுத்தப்படுகிறது. மேலும் தனியார் பேருந்துகள் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என்பது தானே  பலரின் கருத்து?

திட்டமிட்டே பல பணிமனைகளில் ஊழல் அதிகாரிகள் பல இடங்களில் பேருந்து எடுக்கும் நேரத்தை தனியார் பேருந்துகளுக்காக விட்டுக் கொடுக்கின்றனர். அதனால், அந்த வழித்தடங்களில் தேவை இல்லாத நேரங்களில் பேருந்துகளை இயக்குவதால் நட்டம் ஏற்படுகிறது. உதிரி பாகங்கள் வாங்குவதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்த அ.தி.மு.க அரசின் முயற்சி

சேவைகளில் குறைபாடு ஏற்படவும் இந்த அரசுதான் முக்கிய காரணமாக உள்ளது. வேண்டுமென்றே உதிரிபாகங்களை வழங்காமல் இருப்பது. புதிய பேருந்துகளை வாங்காமல் காலவதியான பேருந்துகளை இயக்கச் செய்வதன் மூலம் சேவை குறைபாடும் நட்டமும் ஏற்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சுமார் 17,000 காலாவதியான பேருந்துகளை இன்னமும் இயக்கி வருகின்றனர். அதுமட்டுமல்ல தமிழகத்தில் இயங்கும் எந்த அரசுப் பேருந்துக்கும் காப்பீடு கிடையாது.

ஆனால் அதற்காக போக்குவரத்துத் துறையை தனியார்மயப் படுத்துவது என்பது தீர்வாகாது.  ஏனெனில் தற்போது வரை வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி இருந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் போக்குவரத்துக்கான கட்டனம் குறைவாகத் தான் உள்ளது. தனியாரிடம் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு பண்டிகை கால கட்டணங்களைப் பார்க்கலாம். பல மடங்கு கட்டணம் அதிகரிக்கும். இன்று வரை தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை பேருந்து வசதி உள்ளது. தனியார்வசம் சென்றால் லாபம் அதிகம் இருக்கும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்து சேவை கிடைக்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களும் மக்கள் தான். அதே போல தொழிலாளிகளுக்கு தற்போது இருக்கும் பெயரளவிளான உரிமைகள் கூட கிடைக்காது.

நீங்கள் தற்போது வேலை நிறுத்தம் நடத்தினால் மக்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படுவார்களே?

மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கு  அரசு தான் காரணம். இந்த நிர்பந்தத்திற்கு எங்களை ஆளாக்கியது அரசுதான். அதனால் தான் எங்கள் கோரிக்கைகளை மக்களுக்கு புரிய வைக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கேட்பது எங்களுடைய உரிமையைத்தான். அதற்காகத் தான் பேச்சுவார்த்தைக்கும் வந்துள்ளோம். ஆனால் இந்த அரசு அதற்கு செவிசாய்காமல் உள்ளது. இது தொழிலாளர்கள் மீதும் மக்கள் மீதும் இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுவிட்டதாக சொல்கிறாரே அமைச்சர். அது பற்றி?

தமிழகப் போக்குவரத்துத் துறையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன அவற்றில் பல பெயர் பலகைச் சங்கங்கள். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி சார்பாக தொழிற்சங்கங்கள் வைத்துள்ளன. குறிப்பாக அ.தி.மு.க, தி.மு.க, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, வி.சி.க., பா.ம.க. என ஒரு பத்து தொழிற்சங்கங்களில் தான் பெரும்பாலான தொழிலாளிகள் உள்ளனர்.

தற்போது பேச்சுவார்த்தையில் 47 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. விதிப்படி பேச்சுவார்த்தையில் 50 சதவிகித சங்கங்கள் முடிவை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை வெற்றி என உள்ளது. அதனால் தான் பெயர்பலகை சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கிறது. இது தொழிலாளிகளை அவர்களின் உரிமைக்காகப் போராடவிடாமல் பிளவுபடுத்தும் முயற்சியே ஆகும். ஆனாலும் இதைத்தாண்டி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கட்டாயம் வேலை நிறுத்தம் கட்டாயம் நடைபெறும்.


இந்நிலையில் நேற்று(16.05.2017) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ‘பொது நல வழக்கை’ விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்மா சட்ட்த்தை வேலைக்குச் செல்லாத தொழிலாளர்கள் மீது ஏவப் போவதாக மிரட்டியது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடனடியாக ரூபாய் 1000 கோடியை ஒதுக்குவதாகவும், அதன் பின்னர் வரும் செப்டெம்பர் மாதத்தில் மீதத் தொகையை ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு பணிக்குத் திரும்பியிருக்கின்றனர், தொழிலாளர்கள். எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை. ஆளும் அதிமுக அரசோ, தொழிலாளர் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய தனது தொழிற்சங்கம் மூலமாக உள்ளடி வேலை பார்த்தும், மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனுபவமற்ற ஓட்டுநர்களை வைத்து வண்டி எடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. முழுக்க முழுக்க தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான அமைப்பாகவே இந்த அரசுஇயந்திரம் மாறி இருப்பதையே இச்சூழல் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

– வினவு செய்தியாளர்

***

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்குத் தமிழக அரசே முழுப்பொறுப்பு !
பத்திரிகைச் செய்தி

நாள்: 15.05.2017

மிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முதல் நாளிலேயே பொது மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசே முழுக்காரணம். ஊதியம், ஓய்வுகாலப் பயன்கள் எனப் பல்வேறு இனங்களில் சுமார் 7000 கோடியை அபகரித்துக் கொண்டு தொழிலாளர்களை வஞ்சிப்பதோடு பாதிக்கப் பட்டவர்கள் மீதே பழியையும் போடுகிறது.தொழிலாளர்களின் பணத்தைத் திருப்பித்தருவதற்கு போக்குவரத்துத் துறையின் நட்டத்தைக் காரணம் காட்டுவது மிகப்பெரிய மோசடி. நாளொன்றிற்கு ஒன்றரை கோடிபேர் பயணிக்கும் நிலையில், விரைவுப் பேருந்து என்ற பெயரில் மக்களிடம் கட்டணக் கொள்ளையை நடத்திக் கொண்டு, நட்டம் என்பது அரசு செய்யும் மிகப் பெரிய மோசடி.

ஊழலில் புழுத்து நாறும் துறைகளில் போக்குவரத்துத்துறை முதன்மையானவற்றுள் ஒன்று. கடந்த 15, 20 ஆண்டுகளில் வருமானத்தில் ஆகப்பெரும்பகுதி அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் பங்கு போடப்பட்டுவிட்டது.உதிரிப்பாகங்கள் வாங்குவது தொடங்கி அற்றுக் கூலிக்கு வேலைக்கமர்த்துவது வரை அனைத்திலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுவது ஊரறிந்த ஒன்று.எனவே போக்குவரத்துத்துறையை சீரழித்த அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

தகுதியற்ற பேருந்துகள்,மனவுளைச்சலை உண்டாக்குமளவுக்குக் கடும் பணிச்சுமை இவற்றைத் தாங்கிகொண்டு உழைக்கும் போக்குவரத்துத்தொழிலாளர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.இந்தப் போராட்டம் போக்குவரத்து ஊழியர்களின் தனிப்பட்ட போராட்டமல்ல; மக்கள் வாழ்வைச்சூறையடும் அரசுக்கு எதிரான போராட்டமுமாகும்.எனவே அனைத்துத்தரப்பு உழைக்கும் மக்களும் இப்போராட்டத்தை ஆதரிப்பதோடு தற்காலிக இடயூருகளைப் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். தமிழக அரசு காலங்கடத்தாமல் கோரிக்கைகளை நிறைவேற்றி இயல்பு நிலையை ஏற்படுத்தவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தங்கள் அன்புள்ள,
காளியப்பன்.
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !

0

திருவள்ளூர் மாவட்டம்: பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்சின் 200 – வது பிறந்த நாளில்
ஆலைவாயில் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள்!

முதலாளி முதல் போடுகிறான், அவன் பக்கம் அரசாங்கம் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் தலையெழுத்து என்று வாழ்ந்து கொண்டிருந்த உழைப்பாளி மக்களை ஏமாற்றிச் சுரண்டுபவர்களின் தலையில் இடிவிழுந்ததைப் போல உருவானது கம்யூனிசத் தத்துவம். அனுதினமும் உழைப்பதும் அணுஅணுவாய்ச் சாவதும் உழைப்பாளிகளின் தலைவிதி அல்ல, அது முதலாளிகளின் சதி என்று உண்மையை உடைத்துக் காட்டியவர் காரல் மார்க்ஸ். உழைப்பின் மீதான மூலதனத்தின் மேலாதிக்கத்தையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்ட முடியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதன் மூலம் வர்க்கங்கள் இல்லாத கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் ஆணித்தரமாக நிறுவி உழைக்கும் வர்க்கத்துக்கு வழிகாட்டியவர் ஆசான் மார்க்ஸ். 1818-ஆம் ஆண்டில் பிறந்த மார்க்சின் 200-வது பிறந்த நாளைக் கொண்டாடுவது, மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற வகையில் ஆலைவாயில் கூட்டங்களும், தெருமுனைப் பிரச்சாரங்களும் திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட பு.ஜ.தொ.மு சார்பில் நடத்தப்பட்டன.

ஆலைவாயில் கூட்டங்கள்:

நெமிலிச்சேரியில் உள்ள டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலை வாயிலில் நடந்த கூட்டத்தில் பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர்.ப.விஜயகுமாரும், ஆவடி டி.பி.ஐ – ஐ.பி.பீ ஆலைவாயிலில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுர் (மேற்கு) மாவட்டத் தலைவர் தோழர்.மா.சரவணனும் கலந்து கொண்டு, ஆசான் மார்க்ஸ் படத்திற்கு மாலை அணிவித்து உரையாற்றினர்.

உழைப்பதைத் தவிர வேறொன்றும் அறியாமல் இருந்த உழைக்கும் வர்க்கத்திற்கு புதிய வெளிச்சத்தைக் காட்டிய மார்க்சின் தத்துவம் குறித்தும், அத்தத்துவத்தைப் படைப்பதிலும் செயல்படுத்துவதிலும் மார்க்ஸ் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டதைக் குறித்தும் உணர்வூட்டும் வகையில் விரிவாகப் பேசினர். இக்கூட்டங்களில் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

தெருமுனைப் பிரச்சாரங்கள்:

பு.ஜ.தொ.மு  – பட்டாபிராம் பகுதிக்குழு சார்பில் மாலையில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. சோழன் நகர், காந்தி நகர் பாரதமாதா தெரு 1&2, உழைப்பாளர் நகர், பாபு நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் ஆசான் மார்க்சின் படங்களையும், செங்கொடியையும் ஏந்தி, மெகா போன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டப் பொருளாளர் தோழர் மேரிக்குமார் மற்றும் இணைச்செயலாளர் தோழர் லட்சுமணன், டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர் சங்க துணைத்தலைவர் தோழர் சேதுராமன் ஆகியோர் உரையாற்றினர்.

உழைப்பைக் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ சதியை அம்பலப்படுத்தியதோடு, அதை உடைத்தெறிந்து விடுதலை பெறும் வழியையும் படைத்துத் தந்தவர் மார்க்ஸ், அவர் வழி நின்று ரஷ்யாவிலும், சீனாவிலும் இன்னும் பல நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் பூலோக சொர்க்கமான சோசலிசத்தைப் படைத்தனர் என்பதையும் விளக்கிப் பேசினர். இன்றைய சூழலில் மார்க்சின் தத்துவம் மட்டுமே நமக்கான ஒரே வழிகாட்டி, முதலாளிகளுக்கான இந்த அரசமைப்பு இனியும் நமக்கு சேவை செய்யும் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்காமல் உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் அணிதிரள வாருங்கள் என அறைகூவல் விடுத்தனர்.

மாலை நேரத்தில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள், கடைகளுக்கு வருவோர் என திரளான மக்கள் கூடி நின்று கவனித்தனர். 200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்றும் முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பகுதியில் உள்ள வி.சி.கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் அவர் பகுதியில் நமது பிரச்சாரத்தைக் கவனித்துக் கேட்ட பிறகு அனைத்துப் பகுதிகளுக்கும் உடன் வந்து தனது ஆதரவை வழங்கினார். தலைவர் பிறந்த நாள் என்றால் சிலைக்கு மாலை போட்டுவிட்டு சென்றுவிடும் சூழலில், இதுவரை இல்லாத வகையில் அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்த நாளில் தெருத்தெருவாக நின்று மக்களுக்கு அவர் ஆற்றிய பணி குறித்து விளக்கிப் பேசுவதை மக்கள் வியப்போடு பார்த்தனர். பிரச்சாரக் கூட்டங்களின் முடிவில் மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. தெருமுனைப் பிரச்சாரத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

தொடர்புக்கு: 94453 68009.