Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 500

வறுமையின் கணிதம் – கேலிச்சித்திரங்கள்

0

உலகளாவிய வறுமை
ஓவியம்: Steve Greenberg, அமெரிக்கா.


விலைவாசியும் வறுமையும்
ஓவியம்: Saad Murtadha, ஈராக்.

வறுமையின் கணிதம்
ஓவியம்: Vladimir Kazanevsky, பிரேசில்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே?
ஓவியம்: Dan Carino, அமெரிக்கா.

பசியாறுதலின் இரண்டு யதார்த்தங்கள்
ஓவியம்: Daniel Clós Cesar பெரு.

இரண்டு வரிசைகள்
ஓவியம்: Daniel Clós Cesar, பிரேசில்.


ஷாப்பிங் வண்டிகளின் விசித்திரங்கள்
ஓவியம்: Steve Greenberg, துருக்கி.

நன்றி: Cartoon Movement.

மம்தா பானர்ஜி தலைக்கு விலை வைத்த பா.ஜ.க தலைவர்

3
மம்தா பானர்ஜி மற்றும் பா.ஜ.கவின் இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினி

ம்தா பானர்ஜி வங்கத்தின் ஜெயலலிதா. அவரை எதிர்த்து கார்ட்டூன் வரைந்தவர்கள், பகிர்ந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசு கட்சியை சகல மட்டங்களிலும் உறுதியாக நிறுத்தியிருக்கின்ற மம்தா பானர்ஜி, மோடியின் வருகைக்கு பிறகு பா.ஜ.கவை தீவிரமாக எதிர்த்து வருகின்றார்.

இருப்பினும் இத்தகைய ‘இரும்பு’ பெண்மணியைக் கண்டு மற்றவர்கள் அஞ்சினாலும் பார்ப்பன இந்துமதவெறியர்கள் அஞ்சுவதில்லை. கருணாநிதி, பினரயி விஜயன் தலையை வெட்டி வருவோருக்கு பரிசு என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தற்போது மம்தா பானர்ஜியின் தலைக்கும் பரிசு அறிவித்து விட்டது.

மேற்கு வங்கத்தின் பிர்ப்ஹம் மாவட்டத்தில் நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் வன்முறையில் முடிந்து போலீசு தடியடி வரை போயிருக்கிறது. அதனால் கொதித்தெழுந்த யோகேஷ் வர்ஷினி எனும் பா.ஜ.கவின் இளைஞர் அணி தலைவர், முதலமைச்சர் மம்தாவின் தலையை வெட்டி வருவோருக்கு 11 இலட்சம் ரூபாயை பரிசுப் பணமாக அறிவித்திருக்கிறார்.

“சரஸ்வதி பூஜைக்கு ஒருபோதும் அனுமதிக்காத மம்தா பானர்ஜி அதுபோல ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி ஊர்வலங்களையும் அனுமதிப்பதில்லை. மீறினால் மக்களுக்கு கடும் தடியடி உண்டு. இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்யும் அவர் எப்போதும் முசுலீம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்று அவர் இந்து முன்னணி இராம கோபாலன் பாணியில் பொங்கியிருக்கிறார். இதை செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா

இது குறித்து பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா விளக்கமளித்த போது மம்தா பானர்ஜி இப்படி சிறுபான்மை மக்களுக்கு ஆதவாக அரசியல் செய்தாலும் இத்தகைய வன்முறை பேச்சுக்களை தான் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார். அப்போதும் கூட அவர் தனது இளைய பங்காளியை கண்டிக்கவில்லை. காரணம் ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் உபி முதலமைச்சராக வந்த பிறகு இப்படி அடாவடியாக பேசுவோரே கட்சியிலும், இந்துக்களிடமும் பெயர் எடுத்து முன்னேற முடியும் என்று பா.ஜ.க பண்டாரங்களிடம் கடும் போட்டி இருக்கிறது. இங்கேயும் எச்ச ராஜா அப்படி ஊளையிடுவது கூட இத்தகைய கனவுகளை எதிர்பார்த்துத்தான்.

பிர்ப்ஹம் மாவட்டத்தில் இந்துமதவெறியர்களின் ஊர்வலத்திற்கு போலீசு அனுமதி கொடுக்கவில்லை. அதை மீறி இவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டு, காவிக் கொடியுடன் ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். ஊர்வல ஏற்பாட்டளர்கள் தாங்கள் ஆயுதம் ஏதும் ஊர்வலத்தில் கொண்டு செல்லவில்லை என்று போலீசிடம் விளக்கமளித்தார்களாம். இதிலிருந்தே இவர்களது வன்முறை திட்டம் தெரிகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் இக்கூட்டம் வாள்களையும் மற்ற ஆயுதங்களையும் பகிரங்கமாக கொண்டு சென்று பீற்றியிருக்கிறது. அப்போது பா.ஜ.கவின் மேற்கு வங்கத் தலைவரே கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி பார்த்தால் போலீசின் ஊர்வல அனுமதி மறுப்பு மிகவும் நியாயமானது.

மம்தா பானர்ஜி போன்ற தீவிரமான மோடி எதிர்ப்பு தலைவர்கள் ஆளும் மாநிலத்திலேயே இப்படி ஒரு காக்கி டவுசர் தலைவெட்டி பரிசு அளிக்க முடியுமென்றால் பா.ஜ.க மாநிலங்களில் முசுலீம்களுக்கும், தலித்துக்களுக்கும், மற்ற சிறுபான்மை மக்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் உள்ள கதி என்ன?

ரவுடித்தனம் செய்யும் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து தெருவிலும், ஊரிலும் களமிறங்க வேண்டும். சட்டமன்றம் பாராளுமன்றத்தில் இவர்களை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரால் இனி பலனேதுமில்லை.

மேலும் படிக்க,

Watch: BJP youth wing leader offers Rs 11 lakh for Mamata Banerjee’s head

போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !

1

PP Logo12-04-2017

பத்திரிகைச் செய்தி

 ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து – வருமானவரி ரெய்டுகள்,
போராடும் விவசாயிகள் மீதும், டாஸ்மாக்கை எதிர்த்தும்,
குடிநீர் கேட்டும் போராடும் பெண்கள் மீதும், போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதல்!
மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும், பதவியில் நீடிக்க
எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது
அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. .
இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?

அன்புடையீர் வணக்கம் !

ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்க முயன்றதாகவும், அதையும் மீறி நடந்து விட்டதாகவும், அதனாலேயே தேர்தலை  ரத்து  செய்ததாகவும் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் அறிவித்து நாடகம் ஆடுகின்றன. இது ஒரு வகையில் அவர்களின் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்வதாகவே இருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள், மத்திய காவல் படைகள், பறக்கும் படைகள், காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் என அதி தீவிர நடவடிக்கை, கண்காணிப்பு என்பது வெறும் பாவ்லாதான். ஓட்டுகட்சி அரசியல் குற்றவாளிகள் தாங்கள் பிடிபட்டு விடுவோம், சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சவில்லை. மாறாக நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். கண்டெய்னர் பணத்தை காப்பாற்றி கொடுத்த தேர்தல் ஆணையமும், மத்திய அரசும்  இன்றைக்கு உத்தமர் வேடம் போடுவதை எப்படி நம்புவது?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் என்பது உருட்டி மிரட்டி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுகின்றன. நேற்று ராம்மோகன் ராவ், கரூர் அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி, இன்று விஜயபாஸ்கர், துணை வேந்தர் கீதாலட்சுமி மீதான ரெய்டுகள் எல்லாம் காதும் காதும் வைத்தாற்போல் எந்த விவரங்களையும் வெளியிடாமல் கமுக்கமாக நடக்கின்றன. இறுதியில் வருமானத்திற்கு வரி கட்டுங்கள் என பேரம் பேசி முடிக்கப்படுகிறது.

விதிமுறைகள் தெரிந்தே மீறப்பட்டுதான், தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.  டாஸ்மாக் வேண்டாம் என போராடும் மக்கள் மீது தடியடி, தேசத்துரோக வழக்கு, சிறை என செயல்படும் அரசும், போலீசும், தேர்தலை சீர்குலைக்கும் அரசியல் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்துகொள்கிறார்கள். தேர்தல் நடப்புகளும், இன்று தமிழகத்தில் நடக்கும் ஏராளமான போராட்டங்களும்  இதையே காட்டுகின்றன. மெரினா முதல் டெல்லி விவசாயிகள் போராட்டம் வரை நெடுகக் காண்கிறோம். பணப்பட்டுவாடா போன்ற கிரிமினல் நடவடிக்கை, ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என்றால் அந்த குற்றவாளிகள் மீது தேசத்துரோக குற்றம்சாட்டி உள்ளே தள்ளுவதற்கு பதில், வருமான வரித்துறை அமலாக்கத்துறை என்ற அட்டைக் கத்தியைக்  கொண்டு ரெய்டுகள் நடத்தி சவடால் விடுவது ஏன்?

செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு  தீர்வு காணாமல் சூழ்ச்சி, இழுத்தடிப்பு, அவதூறு ஆகியவற்றால் போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. ஆங்கிலேயர் காலத்து போலீசைப் போல பிரச்சனைகளை பேசுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும், போராடுவதற்கும் கூட  உரிமை இல்லை என தடுக்கிறது. மக்களை உரிமைகளற்ற அடிமைகளாக  கருதுகிறது போலீசு. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட திரளும் நான்கைந்து மாணவர்களும் இளைஞர்களும் கூட வேட்டையாடப்படுகிறார்கள்.

தேர்தல்களில் பணப்பட்டுவாடா, ஊழல் முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிப்பது, சட்டத்தை கடுமையாக்குவது போன்ற தீர்வுகளை முன்வைக்கின்றனர். வாக்காளர்கள் தேர்தல் நடக்கும்போது மட்டும்தான் பணம் வாங்குகிறார்கள். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகார வர்க்கம்  ஆண்டு முழுவதும் ஊழல், முறைகேடு. கிரிமினல் குற்றங்களில் மூழ்கி கிடக்கிறது.

சாதி, மதம், பணம், பரிசுப்பொருள், ஊழல் முறைகேடு இல்லாமல் ஒரு நாளும் தேர்தலை நடத்த  முடியாது என்பது மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். தேர்தல்கள் மூலம் ஆளை மாற்றுவதால் எந்த தீர்வும் ஏற்படாது. அவர்களால் இந்த ஊழல் அரசு கட்டமைப்பை வைத்து நியாயமான தேர்தலை ஒருக்காலும்  நடத்த முடியாது.

போராடும் அய்யாக்கண்ணு சொல்வதைப் போல மாத சம்பளத்திலும், லஞ்ச ஊழலிலும் ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் புரியாது. ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை டெல்லியில் நடத்தி துன்புறும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதுகாக்கும் என எப்படி நம்புவது?.

டாஸ்மாக்கை மூடு என போராடும் சாதாரண மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பதவியில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பவர்கள் :

  1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
  2. தோழர்..கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,பு.மா.இ.மு.
  3. தோழர்.வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர். மக்கள் அதிகாரம்.
  4. தோழர்.கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு. ஐ.டி.ஊழியர்கள் பிரிவு.
  5. தோழர். அமிர்தா, மக்கள் அதிகாரம், சென்னை.

தோழமையுடன்
வழக்குரைஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

0

நம்மைப் பொறுத்தவரை ஒரு மாதம் என்பது ஊதியத்திற்கான கால மதிப்பீடு. அல்லது பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக் காலம். அல்லது வருடத்தில் கடந்து செல்லும் மற்றுமொரு மாதம். ஆனால் பாலஸ்தீன மக்களுக்கோ அது அப்படியல்ல. பிறப்பு, இறப்பு, பட்டினி, போராட்டம், வீடிழப்பு, அகதிகாளய் வெளியேறுதல், ஆதரவற்ற குழந்தைகள், உறுப்புகள் இழந்தோர், வேலையிழந்தோர் என்று வாழ்வின் அத்தனை அழிவுகளையும் அன்றாடம் பார்த்து வரும் மண்ணிது. மார்ச் மாதம் 2017-ல் மட்டும் அங்கு நடந்தவற்றின் காட்சிப்பதிவுகளை இங்கே காணலாம்.

தெற்கு காசாவில் இருக்கும் ராஃபா அகதி முகாமில் 15 வயது சிறுவனான யூசுப் ஷபீன் அபு அத்ராவின் இறுதி ஊர்வலம். சிறுவன் அபு அத்ரா, காசா மற்றும் இஸ்ரேல் எல்லையில், இஸ்ரேலிய இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டான். அன்றாடம் ஒப்பாரியும் முழக்கமும் கேட்கும் மண்ணிது. (மார்ச் 22)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேலின் பிரம்மாண்டமான காங்கிரீட் சுவருக்கு அருகே “தி வாலட் ஆஃப் ஹோட்டல்” எனும் விடுதியின் முகப்பு. இதைத் திறந்து வைத்த பிரிட்டீஷ் கலைஞரான பாங்க்ஸ்கி, “உலகின் மோசமான காட்சியை தரிசிக்க உதவும் விடுதி” என்று கூறினார். இந்த விடுதியில் சாப்பிடச் செல்வோரின் நிலையை பாருங்கள்! (மார்ச் 3)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான நாப்லஸில், இஸ்ரேலிய விமான போக்குவரத்து நிறுவனத்தால் கைவிடப்பட்ட போயிங் விமானம் ஒன்று காலி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை கடந்து போகிறார் பாலஸ்தீனியர் ஒருவர். குப்பைகளுக்கு இடம் கொடுக்கும் இசுரேல் பாலஸ்தீனர்களின் தாய்நாட்டிற்கு எதையும் கொடுப்பதில்லை.(மார்ச் 7)

தெற்கு காசாவிலிருந்து ராஃபே வழியாக எகிப்திற்கு அகதிகளாய் செல்ல அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். மனிதாதபிமான உதவிக்காக இந்தப் பாதையை எகிப்து திறந்திருக்கிறது. இருக்குமிடத்திலும் வாழ்வில்லை, செல்லுமிடத்திலும் நிம்மதியில்லை! (மார்ச் 7)

ழைக்கும் மகளிர் தினமன்று, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவேண்டுமென்றும், பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்தும் காசா நகரத்தில் பாலஸ்தீனிய பெண்கள் நடத்திய போராட்டம். இழப்புகளுக்கு அஞ்சாத பாலஸ்தீன பெண்கள்! (மார்ச் 8)

ரு கால் அகற்றப்பட்ட பாலஸ்தீனக் கலைஞரான முகமது டோடா, காசா நகர கடற்கரையில் காயமுற்ற பாலஸ்தீனர்களுக்கா அனுசரிக்கப்படும் மார்ச் 12 நாளை குறிப்பிடும் மணற் சிற்பத்தின் பின் நிற்கிறார். காயமுற்றவர்களுக்கு ஒரு நாளென்றால், ஒரு ஆக்கிரமிப்பில் அவதிப்படும் மண்ணில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும்? (மார்ச் 12)

காசா நகரத்தை பிரித்திருக்கும் இஸ்ரேலின் தடுப்புச் சுவர் தற்போது பத்தாவது வருடத்தில் நுழைகிறது. அதை அகற்றுமாறு காசாவில் இருக்கும் ஐநா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். ஆண்டுகள் பத்தானாலும் சோர்வடையாத போராட்டம்! (மார்ச் 13)

மார்ச் 6 அன்று, அங்கே அனைவரும் அறிந்த களச்செயல்பாட்டளரும், அறிஞருமான பாசெல் அல் அராஜ், இஸ்ரேலின் இராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் மேற்கு கரை நகரமான பெத்லஹேம் அருகே இருக்கும் அல் வாலஜா எனும் கிராமத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் பாலஸ்தீன பெண்கள் தலை வணங்காத வீரத்துடன் கலந்து கொள்கிறார்கள். (மார்ச் 17)

மேற்கு கரை நகரமான ஹெப்ரான் அருகே இருக்கும் க்யுலாக் கிராமத்தின் முதன்மை நுழைவு வாயிலை 17 வருடங்களாக மூடிவிட்டது, இஸ்ரேல் இராணுவம். இதை எதிர்த்து போராடும் பாலஸ்தீன மக்கள். சொந்த மண்ணில் எத்தனை தடுப்புக்கள், அரண்கள், சுவர்கள், சோதனைச் சாவடிகள்! (மார்ச் 17)

தெற்குகரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேல் இராணுவம் அமைத்திருக்கும் சோதனை வாயிலில் குவிந்திருக்கும் பாலஸ்தீன தொழிலாளிகள். வாயில் திறந்த உடன் இஸ்ரேல் பகுதியில் விரைவாக வேலைக்கு போக அவர்கள் முன்பே வந்து காத்திருக்கிறார்கள். இவர்களைச் சுரண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை போராளிகளாக பார்க்க விரும்புவதில்லை! (19 மார்ச்)

மீபத்தில் சுவிட்சர்லாந்து அரசு ஒரு மசோதாவைக் கொண்டு வந்து அதன் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு போய்ச் சேரும் நன்கொடைகளை, அரசுப்பணத்தை தடை செய்திருக்கிறது. அதைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரமான ராமல்லாவில் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதிநிதித்துவ அலுவலகம் எதிரில் பாலஸ்தீன மக்களின் ஆர்ப்பாட்டம். எப்படியெல்லாம் பொருளாதார முற்றுகை போடுகிறார்கள்! (20 மார்ச்)

மார்ச் 22 அன்று மேற்கு கரை நகரமான பெத்லகேமில் ஆர்ப்பாட்டம் செய்த பாலஸ்தீன மக்கள் மீது ரப்பர் பூசப்பட்ட இரும்பு குண்டுகள், காதைக் கிழிக்கும் ஒலிக் கொண்டுகள் மற்றும் கண்ணீர் குண்டுகளை வீசியது இசுரேலின் இராணுவம். இதில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களை தர மறுக்கும் இசுரேலைக் கண்டித்து போராடுகிறார்கள் மக்கள். 2015-ம் ஆண்டிலிருந்து இப்படிக் கொல்லப்படும் மக்களின் உடலை தர மறுத்து சுயேச்சையான சவப்பரிசோதனை செய்வதையும், முறையாக நல்லடக்கம் செய்வதையும் தடுக்கிறது இசுரேல் அரசு. நல்லடக்கம் செய்வது குறித்து கொலைகாரர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்!

ராணுவத்தில் பணியாற்ற மறுத்த மூன்று மாணவர்களை இஸ்ரேல் அரசு கைது செய்ததைக் கண்டித்து அதி தீவிர பழமைவாத யூதர்கள் ஜெருசேலத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தண்ணீரை பீற்றி கலைக்க முயல்கிறது போலீசு. இசுரேலின் மக்கள், இராணுவம் இரண்டு பிரிவுமே ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத படி இணைந்திருக்கிறது.

சுரேலின் எல்லையில் இருக்கும் வடக்கு காசாவில் ஒரு இசுரேலிய உளவுத்துறை அதிகாரி, பாலஸ்தீனர்களிடம் தகவல் சொல்லுபவர்களை சேர்க்க முயற்சிக்கிறார். இந்த எல்லையில் பாலஸ்தீனத்தின் பக்கம் இருக்கும் பகுதியை ஹாமாஸ் அதிகாரிகள், மாசென் ஃபுகாகா கொல்லப்பட்ட பிறகு மூடி விட்டனர். ஆட்காட்டிகள் இன்றி ஆக்கிரமிப்பு ஏது? (மார்ச் 26)

மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் குடியமர்த்தப்பட்டிருக்கும் யூதக் குடியிருப்புக்களை கண்டித்து பதாகை பிடிக்கிறார் ஒரு பாலஸ்தீனத்து பெண். இசுரேலின் குடியிருப்பு ஒரு ஆக்கிரமிப்பு – பாலஸ்தீனத்தின் குடியுரிமை ஒரு அடிப்படை உரிமை. (மார்ச் 26)

கொல்லப்பட்ட ஹமாசின் அதிகாரியான மாசென் ஃபுகாகாவின் மகளை தோளில் சுமக்கிறார் காசாவில் செயல்படும் ஹமாசின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார். கொல்லப்பட்ட தலைவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தும் ஹமாஸ் ஆதரவாளர்கள். அப்பா போனால் என்ன என்று மகன் வந்து விட்டான்!

பாலஸ்தீனத்து மண்ணை ஆக்கிரமித்த இசுரேலைக் கண்டித்து போராடிய ஆறு பாலஸ்தீனர்கள் மார்ச் 30, 1976-ம் ஆண்டில் கொல்லப்படுகிறார்கள். அந்த தினத்தை நில தினமென்று வருடந்தோறும் மக்கள் கடைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இங்கே மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் மார்ச் 30 நடந்த ஆர்ப்பாட்டம். நிலத்தை மீட்பதற்காக ஒரு விடாப்பிடியான போராட்டம்!

நன்றி:  Electronicintifada.net

திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !

0
தோழர் காளியப்பன்

மாருதி தொழிலாளர்களின் சிறைமீட்புக்கான நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது மாருதி தொழிலாளர் சங்கம்.  அதனை ஆதரித்து திருச்சியில் பு.ஜ.தொ.மு சார்பில் கடந்த 06.04.2017 அன்று மாலை மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ம.க.இ.க. திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா பேசியதை அடுத்து, சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசினார்.

சங்கம் என்றாலே முதலாளிக்கு பிடிக்காது. முதலாளித்துவம் தோன்றி 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் முன் வைக்கும் எந்த கோரிக்கையையும் முதலாளிகள் நிறைவேற்றுவதில்லை. மாறாக தொழிற்சங்கத்தை முடக்குவது, தலைவர்களை தண்டிப்பது போன்ற  நடவடிக்கை மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதலாளிகள் இன்று அடியாட்கள் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். மாருதி ஆலை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க ஆலை நிர்வாகமே HR அதிகாரிக்கு தீவைத்து விட்டு பழியை தொழிலாளர்கள் மீது போட்டது. 90 தொழிலாளர்களை கைது செய்தனர். 1வாரம் கழித்து மேலும் 50 தொழிலாளரகளை கைது செய்தது. ஆண்டுக்கணக்கில் பிணை வழங்காமல் சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்து நான்காண்டுகள் போராடியும் குற்றம் நிருபிக்கப்படாமலேயே   தற்போது 117 பேர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 31 தொழிலாளிக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது நீதிமன்றம். இத்தொழிலாளர்களது குடும்பங்கள் இதுநாள் வரை பட்ட துன்ப துயரங்கள் எத்தனை, எத்தனை குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. எத்தனை பேர் செத்து மடிந்துள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

எந்த முதலாளியாவது சட்டப்படி நடக்கின்றானா ? முறையான வேலை, சம்பளம், விடுப்பு, உரிமை தொழிலாளிகளுக்கு வழங்குகின்றார்களா ? உரிமையை பறித்தெடுத்த முதலாளிகள் யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா ? இதனை நீதிபதிகள் என்றைக்காவது  கண்டித்தது உண்டா ? நீதித்துறை ஒழுங்கு பற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொடுத்த பேட்டியை படித்து பாருங்கள் நீதிபதிகள் யோக்கிதையை சந்தி சிரிக்க வைத்துள்ளார். இவர்கள் தான் தொழிலாளர்களை குற்றவாளிகள் என சித்தரிக்கின்றனர். மாருதி ஆலைக்குள் உள்ள 13 தொழிற்சங்கத்தை நிர்வாகம் முடக்கியுள்ளது.

ஜெயா குற்றவாளி என தீர்ப்பு வந்த போது 3 மாணவிகளை தீவைத்து கொளுத்திய அ.தி.மு.க. ரவுடிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சங்கரராமனை கோயில் கருவறையிலேயே வைத்து கொலை செய்த சங்கராச்சாரிக்கு 1 மாதத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. மணல் கொள்ளையன் சேகர் ரெட்டிக்கு 3 மாதத்துக்குள் பிணை வழங்கப்பட்டது. தவறான சிகிச்சை அளித்து 13 பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் குற்றவாளியான மருத்துவருக்கு ஒரு மாதத்தில் பிணை வழங்கப்பட்டு பின் அவர் அரசு மருத்துவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோக் நிறுவனம் சொன்னதை அங்கீகரித்து நீதி மன்றம் உத்தரவு போட்டுள்ளது. ஆனால் மாருதி தொழிலாளர்களுக்கோ 4 ஆண்டுகள் கழிந்தும் பிணை வழங்க மறுப்பது என்ன நீதி?  ஆகவே நீதி மன்றம் பெறும் பணக்காரர்களுக்கும் கிரிமினல் கும்பளுக்காக  மட்டும்தான்  செயல்படுகின்றது..

இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு – நீதி மன்றம் – அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம் !  போராடுவோம்! என தனது உரையை முடித்தார்.

இடையிடையே ம.க.இ.க தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், ம.க.இ.க, பு.மா.இ.மு உள்ளிட்ட முன்னணியாளர்கள் உள்ளிட்டு திரளான தொழிலாளிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆ.ஓ.பா.சங்கத்தின் தலைவர் தோழர் கோபி அவர்கள் நன்றியுறையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

உலக மக்களின் ஆரோக்கியம் – கேலிச்சித்திரங்கள்

0

மனமெனும் குரங்கு தாவிக் கொண்டே இருப்பது கூட பெரிய பிரச்சினையில்லை. ஒரு இடத்தில் முடங்கி விடும் போது அதுதான் மன அழுத்தம். விளைவு உடல் நலமின்மையோடு செயல்படாதவாறு முடங்கிப் போய்விடுகிறார்கள். தற்போது முப்பது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகமெங்கும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இதில் 2005-2015 காலகட்டத்தில் மட்டும் 18% பேர் சேர்ந்திருக்கிறார்கள். ஐ.நா சபையின் உலக சுகாதார நிறுவனம் 2017 ஏப்ரல்7-ம் தேதியை உலக ஆரோக்கிய நாளாக கடைபிடித்தது. இந்த நாளை வைத்து உலக அளவில் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும், அப்படி பாதிக்கப்பட்டவர்களை கண்டிபிடித்து உதவுதும் நோக்கங்களாம்.

மன அழுத்தத்தை நீக்க வேண்டிய மருத்துவத் துறையே ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறிவரும் நிலையில் இம்மக்களுக்கு உதவுவது எங்கனம்? இந்தியாவில் ஏழைகள் மட்டுமல்ல முசுலீமாகவோ தலித்தாகவோ அடையும் மன அழுத்தத்திற்கு என்ன தீர்வு? சங்கம் அமைக்க வேண்டும் என்று சிறையில் இருக்கும் மாருதி தொழிலாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வந்த மன அழுத்தத்தின் காரணம் என்ன? வளைகுடா நாடுகளில் அமெரிக்கா போட்ட குண்டுகளிலும், அன்றாடம் இசுரேலின் கண்காணிப்பில் வதைபடும் பாலஸ்தீனத்திற்கும் என்ன மருந்து மாத்திரையை கொடுத்து விட முடியும்? இல்லை அதிக வருமானம் வாங்கிய ஒரு ஐடி ஊழியர், தானியங்கி மாற்றத்தால் வேலை இழக்கும் போது வாழ்வை எப்படி எதிர் கொள்வார்?

உலக அளவிலான கேலிச்சித்தரக் கலைஞர்கள் உலக ஆரோக்கிய நாள் குறித்து வரைந்த சித்திரங்களை இங்கே வெளியிடுகிறோம்.

சுரண்டல்
ஓவியம்: Amr Okasha, எகிப்து.

இனிமேல் மருந்துக் கடையில் உணவுகளைப் போன்று மருந்துகளை அள்ளி வாங்க வேண்டியிருக்கும்
ஓவியம்: Gatis Sluka, லாட்வியா.

காற்று மாசுபாடு
ஓவியம்: Payam Boromand, ஈரான்.

சிந்தனையை விடுதலை செய்!
ஓவியம்: Lorenzo Conti, இத்தாலி.

முதல் உலகிலும், மூன்றாம் உலகிலும் கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு – விசித்தரமான உலகம், வேறுபடும் யதார்த்தம்! 
ஓவியம்: Dan Carino, அமெரிக்கா.

சீனாவில் காற்று மாசுபாடு – சிவப்பு எச்சரிக்கை
ஓவியம்: Alex Falcó Chang, கியூபா.

மதுப்பழக்கம்
ஓவியம்: Enrico Bertuccioli, இத்தாலி

நடப்பதில் முதுமை இதயத்தில் இளமை
ஓவியம்: Payam Boromand, ஈரான்

நன்றி: Cartoon Movement.

நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?

0

“காசுக்கேற்ற தோசை”தான் வர்க்கத்திற்கேற்ற வாழ்க்கைதான். அதே நேரம் தமது வருமானம் குறைவாக இருந்தாலும் சுற்றி நடக்கும் வாழ்க்கை குறித்த ஏக்கத்தால் இளைப்போரும் இங்கே சகஜம். இத்தகைய நுகர்வு பண்பாடு அலை மோதும் சென்னை தி.நகரில் அனைத்துப் பிரிவு மக்களையும் காணலாம். வாங்கும் சம்பளத்தின் அளவுக்கேற்ப செலவழிக்க வரும் மக்கள் ஒரு பக்கம். வண்ண வண்ண பொருட்கள் நிறைந்த உலகை கண்டு மகிழ மட்டும் வரும் கூட்டம் இன்னொரு பக்கம். இவர்களுக்கிடையில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு நாள் சாப்பாட்டுக்காகவாவது இன்றைய வியாபாரம் வழிவகுக்குமா என்ற தவிப்பில் வியாபாரிகள் இருக்கிறார்கள். இப்படி இந்த மக்களில் சிலரை சந்தித்தோம். அவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழ் மக்கள், உள்ளூர், வெளியூரிலிருந்து வந்த மக்கள், சிறு வணிகர்கள், அனைவரும் உண்டு. பொதுவில் உரையாடினாலும் அவர்களிடம் உங்களின் பொழுது போக்கு என்ன என்று கேட்டோம்.

லெட்சுமி, வயது 50, குமரன் சில்க்ஸ் வாசலில் தள்ளு வண்டி கர்ச்சிப் கடை.

ங்க வர்றவங்கள பாக்குறதுதான் பொழுதுபோக்கு. வியாபாரத்துக்காக பொருள் வாங்க பாரிஸ் போவேன் அதுதான் ஷாப்பிங்கு. 40 வருசமா இந்த குமரன் சில்க் வாசல்லதான் கடை வச்சிருக்கோம். ஒரு மாடியா இருந்த கடை இன்னைக்கி நாலு மாடியா ஆச்சு. ஆனா எங்களுக்கு அதே கடை வாசல்ல பூ, பழம், கர்ச்சிப்புன்னு வியாபாரம் தான் மாறுதே தவிற பொழப்பு அப்படியேதான் இருக்கு.”

முன்னெல்லாம் இது போல பெரிய கடைகள்ள நாங்க வச்சுருக்க மாதிரியான சின்ன பொருளெல்லாம் இருக்காது. இப்ப பாருங்க வளச்சுப் பிடிச்சு கட்டடத்தக் கட்டி குண்டுசீல இருந்து கொழுந்து வெத்தல வரைக்கும் எல்லாத்தையும் கடைக்குள்ள வச்சுருக்கான்.  எங்களப் போல சின்ன கடைக்காரங்களுக்கு வியாவாரமெல்லாம் கெட்டுப்போச்சு. இப்ப நாலு மாசமா செல்லாத நோட்டு பிரச்சினையால இருக்குற வியாவாரமும் குறைஞ்சு போச்சு ”

தரணி, வயது 43 சீசன் பழ வியாபாரி.

னக்கு 43 வயசாகுது இந்த தி.நகர விட்டா வேற எடம் தெரியாது. காலையில8 மணிக்கு வந்தா ராத்திரி 10 மணிக்கு வீட்டுக்கு போவேன். மாசம் ஒருக்க சனக்கூட்டம் கொஞ்சம் கொறையிர நேரமா பாத்து அரமணி நேரத்துல சரவாணாவுல போயி மளிக சாமான் வாங்யாருவேன். அதுவுமே பக்கத்துல யாவாரம் பாக்கறவங்கக் கிட்ட பாத்துக்க சொல்லிட்டு போவேன். இதுல நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு?”

கற்பகம், வயது 50 வீட்டிலேயே தையல் தொழில் செய்பவர்.

னக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டும் இஞ்சினியரிங் படிக்குது. எங்கூட்டுக்காரரு காலையில 8 மணிக்கி வேலைக்கி போனா ராத்திரி 10 மணிக்கு மேல ஆயிரும் வீடு திரும்ப. வீட்டு வேலைய முடிச்சுட்டு தையல் மிஷின்ல உக்காந்தேன்னா பிள்ளைங்க வந்ததும்தான் எழுந்திருப்பேன். அதுங்களுக்கு பீசு கட்டி துணிமனி வாங்கி கொடுத்து வீட்டு வாடகை கொடுக்கவே நாக்கு தள்ளுது இதுல பொழுதுபோக்க ஏது நேரம். வீட்டு பிரச்சனையை சமாளிக்கறதுதான் பொழுதுபோக்கு வாழ்க்கை எல்லாம். நான் டைலருங்கிறதால என் தொழிலுக்கு தேவையான லைன் கிளாத், லேஸ், பார்டரு. புடவை ஃபால்ஸ் மாதிரி ஐட்டங்களை இங்க சரவணா ஸ்டோருலு வாங்க வருவேன். அப்படி வரும் போது என் பொண்ணையும் கூட்டிட்டு வருவேன். இதுல நமக்கு எங்கம்மா ஷாப்பிங்கு?”

மீனாம்பாள், வயது 60, சவுரி முடி விற்பவர்.

ந்த போத்தீஸ் வாசல்ல நின்னுதான் வித்துட்டு இருக்கேன். வாச்சுமேனுட்ட கேட்டுக்கிட்டு தண்ணி குடிக்க உள்ள போயிருக்கேன். ஆனா  ஒரு தடவ கூட உள்ள போயி எப்புடி இருக்குமுன்னு பாத்தது கூட கெடையாது. இதுல நாம எங்க ஊர் சுத்தி பாக்க போறது. விடியக்காலையில எட்டு மணிக்கு வூட்ட வுட்டு கிளம்புவேன். இங்க வந்துதான் நாஸ்டா துன்னுவேன். ராவுல வீடு திரும்ப 8 மணியாவும். ஒரு நாளைக்கு 200 ரூபா நின்னா ஜாஸ்தி.

முடிதான் அழகுன்னு நீண்ட முடிய விக்கிறீங்களே, நீங்க மட்டும் கிராப் வெச்சிருக்கிங்களே?

அதுவாம்மா, சொந்த வூடு இருந்தா நல்லாருக்கும். 1,500 ரூபா வாடகை குடுக்க முடியல. எதாவது வழி செய்யி ஆண்டவரேன்னு ஒரு தடவ வேளாங்கன்னி போயி முடிய காணிக்கையா கொடுத்துட்டு வந்துருக்கேன். அதான் நான் போன வெளியூரு.”

சண்முகம், சைக்கிளில் டி, காப்பி விற்பவர்.

மக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்குறதுதானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன். தொழில விட்டு வெளிய போறதுன்னா முக்கியமான சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்கு தலைய காட்டுறதோட சரி. சினிமா, பீச்சு இப்படி வெளிய போகனுன்னு பிள்ளைங்க கேட்டா வீட்டுல சம்சாரம் கூட்டிட்டு போகும். இதுக்கு மேல உங்க கிட்ட பேசினாக்க என் டீ ஆறிப்போயிடும். வரட்டுமா?”

அர்ஜுன், வயது 30, தனியார் நிறுவன ஊழியர்.

ங்க வாரா வாரம் ஞாயித்துக் கிழம வந்துருவேன். எதுவும் பொருள் வாங்குறேனோ இல்லையோ வர்ரதுல ஒரு சந்தோசம். இங்கேருந்து பாண்டி பஜார் முழுக்க சுத்துவேன். கசகசன்னு சனங்க ஏதோ ஒன்னு வாங்கிட்டு போறதும் வர்ரதும் பாக்க வியப்பா இருக்கும். மதியம் சாப்பாட்ட முடிச்சுட்டு வீட்டுக்கு கெளம்பிருவேன். ஷூன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்க வர ஆரம்பிச்சு மூணு வருசத்துல எழு ஷூ வாங்கிருக்கேன். “

வேலு, வயது 45 ,ஆட்டோ ஓட்டுனர்.

ரெல்லாம் சுத்தி சுத்தி ஆட்டோ ஓட்டுறோம் எங்களுக்கும் கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு. குடும்பத்தோட அப்புடி சந்தோசமா எங்கனாச்சும் போயி வரலான்னு தோனும். ஆனா நேரம் கெடைக்க மாட்டேங்குது. எதுத்தாப்போல இருக்குற நகைக்கடைக்கி லட்ச கணக்குல பணத்த எடுத்துட்டு வந்து பேரமே பேசாம வாங்கிட்டு போறவங்க, ஆட்டோவுல ஏறும் போது பத்துருவா காசுக்கு நியாய தர்மப்படி எல்லாம் பேரம் பேசுவாங்க. டீசல் வெல ஏறிப்போச்சு, டீ வெல ஏறிப்போச்சுன்னு நாம வாதாடனும். இதுக்கு மத்தியில பொழுது போக்கு……. பாக்கலாம்!

கஸ்தூரி, வயது 35, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்.

நாம சும்மா இருந்தாலும் பிள்ளைங்க விடாது அவங்களுக்காக எங்கனா போயி வருவோம். சொல்லிக்கிறா போல பெருசா எந்த எடத்துக்கும் போனதில்ல. எங்க ஊருக்கு பக்கத்துல உள்ள எடங்களுக்கு கூட்டிட்டு போயிருக்கோம். நாங்க சென்னைக்கி ஒரு வேலையா பத்துப் பேரு வந்தோம். எங்கயுமே போகல சரி தி.நகராச்சும் போகலாம்ன்னு வந்தோம். ஈரோட்ட விட ஒரு மடங்கு விலை அதிகமா இருக்கு. வெளியூரு வந்தா எதுவும் வாங்கிட்டு போகனுமேன்னு கொஞ்சம் வாங்கினோம்.”

பானு, வயது 27, கணவருடன் வந்திருந்தார், ஸ்ரீபெரும்புதூர்.

பொழுது போக்குன்னு ஒன்னும் கெடையாது. ரெண்டு பேருமே ஒர்க் பன்றோம். ஆபீசுக்கு போட்டுட்டு போறதுக்கு துணிங்க எடுக்க மாசத்துக்கு ஒருக்க இங்க வருவோம். ரொம்ப விலையுள்ளத எடுக்க மாட்டோம். ஆயிரம்,ரெண்டாயிரம் செலவு செய்வோம். ஃபோட்டோல்லாம் எடுக்காதீங்க. நெட்ல போட்டு அசிங்கபடுத்துராங்க, பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நடிகை பாவனாவ என்ன செஞ்சுருக்கானுங்க பாத்தீங்களா? ஆக்சுவலா நீங்க யாரு? எங்கெருந்து வாரீங்க? என்ன பத்திரிக்கை?”

நாங்க வினவுங்குற இணைய பத்திரிக்கையில இருந்து வருகிறோம்..

“வினவா, தெரியுமே எனக்கு. ஒரு புத்தகம் பத்தி இணையத்துல தேடும் போது வினவு சைட்ட பாத்தேன். அதுலேருந்து தொடர்ந்து படிக்கிறேன். பரவால்ல பெண்கள் பிரச்சனையெல்லாம் எடுத்து பேசறீங்க. மீடியான்னதும் பயந்து போயிட்டேன். இப்ப நீங்கன்றதுன்னால எனக்கு பயமில்லை. ஃபோட்டோ எடுக்குறதுன்னா எடுத்துக்குங்க.”

ராதாகிருஷ்ணன், வயது 55, இலங்கையைச் சேர்ந்த கோயில் குருக்கள்.

னகல் பார்க் பக்கத்தில் மெகந்தி வைக்கும் வடமாநில தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களிடம் மெகந்தி வைத்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரைப் பார்த்தோம்.

“ பொழுது போக்கு…… வேலையே சரியா இருக்கும். நான் இலங்கையில குருக்களா இருக்கேன். வீட்டு விசேசம், பூசை, கோயில் திருவிழா எல்லா எடத்துலயும் வேலை செய்வேன். வருசத்துக்கு இரண்டு தடவை வெளிநாடுகளுக்கு போவேன்.  இத்தாலி, ஆஸ்த்ரேலியா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின் இன்னும் பல நாடு போயிருக்கேன்.  இங்க  மெகந்தி போட்றத பாத்ததும் எம்பொண்ணு ஆசப்பட்டுச்சு.

பல நாடு போற அளவுக்கு உங்க வேலையில வருமானம் இருக்கா?

இல்லன்னு சொல்ல முடியாது. சீசனுக்கு தகுந்தாப் போல ஓரளவு வருமானம் வரும். வெளிநாடுகள்ள இருக்கும் நம் பிள்ளைகளும் குடுத்து உதவாங்க. ஆண்டவன் புண்ணியத்துல சிரமம் எதுவும் கிடையாது.”

– வினவு செய்தியாளர்கள்

கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா ? வீடியோ

0

 

மிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.

இது ஒன்று போதாதா? உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.

இது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.

”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த்து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.

அடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான்! அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் ! இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.

பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!

BEML : தேசத்தின் சொத்தை விற்கும் மோடி அரசு !

4

தேசத்தின் சொத்தான BEML (Bharath Earth Movers Ltd) பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கிறது, “தேசபக்தர்” மோடி அரசு.

“வெற்றிக்கதைகளைக்” கேட்பது  நம்மில் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆம், தனிமனிதனோ, நிறுவனமோ சந்தித்த சவால்கள், திருப்பங்கள், தோல்விகள், துரோகங்கள், வெற்றியின் “சூட்சமங்கள்”, தொழில் வெற்றிகள் அடங்கிய “வெற்றிக்கதை”புத்தகங்கள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. அம்பானியின் திருட்டைக்கூட சாமர்த்தியம் என அடித்துப்பேசும் காரியவாதிகளுக்கு அந்த “வெற்றிக்கதைகள்’ அவ்வளவு அலாதியானது. ஆனால் பாருங்கள் தனி மனித/தனியார் நிறுவனங்களின் “வெற்றிக்கதை” தெரியும் அளவுக்கு நமக்கு பொதுத்துறை நிறுவனங்களின் வெற்றிக்கதைகள்  தெரிவதில்லை.

தேசபக்தியின் மொத்த குத்தகைகாரர்களான காவிவெறி மோடி அண்ட் கோ-வுக்கோ, பொதுத்துறையின் வெற்றிக்கதைகளே பிடிப்பதில்லை. எந்த அளவு பிடிக்காதென்றால், மாபெரும் லாபத்தில் இயங்கிவரும் எல்.ஐ.சி-யின் வைரவிழாவுக்கு போன அருண்ஜெட்லி, ஆட்டைப்பார்த்த ஓநாயைபோல வாயில் எச்சில் ஒழுக எல்.ஐ.சி-ஐ  தனியார்மயமாக்குவது குறித்து பேசியதைக்கேட்ட அதிகாரிகள் ஒரு நொடி ஆடிப்போய்விட்டார்கள்.

இந்திய ராணுவத்துக்கு தேவையான டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய தற்சார்பு உற்பத்தி நிறுவனமாகும்

எல்.ஐ.சி-யைப் போலவே மோடி அண்ட் கோவிற்கு பிடிக்காத வேறு சில வெற்றிக்கதைகளும் இருக்கின்றன. அப்படி ஒரு வெற்றிக்கதைதான் BEML-ன் கதை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் 150 ரயில் பெட்டிகளை செய்துதரும் வேலைக்கான ஒப்பந்தத்திற்கு டெண்டர் கோரியது. அத்துறையின் முன்னணியில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுடன் கலந்து கொண்டு BEML டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 1,421 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான BEML பெற்றுள்ளது. டெண்டரில் கலந்துகொண்ட மற்ற நிறுவனங்கள் ஒரு பெட்டிக்கு 34 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருந்த நிலையில், BEML நிறுவனம் 9 கோடி ரூபாயில் பெட்டியை தயாரித்து தருகிறது.

விலை குறைவு என்பதற்காக தரத்தில் எந்த குறையும் கிடையாது. BEML, 2016-ம் ஆண்டு பேங்க்காகில் நடைபெற்ற சர்வதேச மெட்ரோ ரயில் உற்பத்தியாளர்களுக்கான போட்டியில் (ICQCC-2016) மெட்ரோ ரயில்பெட்டிகளின் தரத்திற்காக தங்கப்பதக்கத்தை தட்டிவந்துள்ளது.

ஆனால் “மேக் இன் இந்தியா” புகழ் மோடியின் அமைச்சரவையோ, பாதுகாப்புத்துறையில் குறைந்தபட்ச தற்சார்புடன் விளங்க காரணமான BEML நிறுவனத்தில் அரசு கொண்டிருக்கும் 54% பங்குகளில் 28% -ஐ விற்று 26% என்ற அளவுக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இது  நிறுவனத்தை தனியார்மய புதைகுழியில் தள்ளி தொழிலாளர்களின் வாழ்வையும் மக்களின் சொத்தையும் நாசமாக்கும் நடவடிக்கையாகும். நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீட்டை திரும்ப எடுப்பதன் மூலம் ரூ.56,000 கோடி திரட்ட மோடியின் ஏலக்கம்பெனி முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது.

BEML நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக்கொண்டு 1965-ல் உருவாக்கப்பட பொதுத்துறை நிறுவனமாகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய கனரக இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் அந்த துறையில் நாட்டின் 70% சந்தையை கையில் வைத்திருக்கக்கூடிய BEML-க்கு கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல், மைசூர், பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்திய ராணுவத்துக்கு தேவையான டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், சுரங்கங்களுக்கு தேவையான வெட்டியெடுக்கும்  கனிமங்களை இடம் மாற்றும் கனரக வாகனங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரொ ரயில் பெட்டிகள் இவைகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு என மிகப்பெரிய தற்சார்பு உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவில் எல்லா யூனிட்டுகளையும் சேர்த்து 2,000 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,500 ஒப்பந்தத்தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

1965-ல் தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு ரூ.5 கோடி வர்த்தகத்தில் துவங்கி இன்று  ரூ.3,500 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாகும். உலகம் முழுதும் 56 நாடுகளில் BEML வர்த்தகம் செய்கிறது. சீனா, மலேசியாவைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியாவில் நேரடி நிறுவனத்தை திறந்து தனக்கென வெற்றிகரமான, பரந்த வியாபாரத்தைக் கொண்டிருக்கிறது.

BEML

முற்றிலும் அரசு நிறுவனமாக இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த BEML  நரசிம்மராவ் பிரதமராக இருந்த பொழுது (புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்ப காலகட்டம் ) 1992-ல் 25% பங்குகளை விற்றதன்மூலம் அரசு, பெரும்பான்மை பங்குகளைக்கொண்ட வெறும் “பங்குதாரர்” ஆனது.

திட்டக்கமிசன் கலைக்கப்பட்டு அதற்கு பதில் மோடி அரசால் உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு பி.இ.எம்.எல், ஹெச்.ஏ.எல், பெல், ஓ.என்.ஜி.சி கோல் இந்தியா, எல்.ஐ.சி உள்ளிட்ட 44 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்ட செப்டம்பர் 2016-ல் அரசுக்கு பரிந்துரை செய்தது.

அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே சேலம் உருக்காலையும் தனியார் மயமாக்கிவிட துடிக்கிறது அரசு. ஏனைய நிறுவனங்களைக் கூட திட்டமிட்டே நட்டத்தில் தள்ளி அதனைக் காரணம் காட்டி முதலைக்கண்ணீர் வடித்து, ஊடக வித்வான்களை வைத்து வாய்கிழிய நியாயம் பேசி, லாபம் வந்தால் அதை ஏன் விற்கப் போகிறோம் ? என்கிற ரீதியில் கதையளந்தார்கள்.

ஆனால், லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும், காலத்திற்கு ஏற்ப பழைய உற்பத்தி மட்டுமல்லாது மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்ய தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கும் BEML விஷயத்தில் அப்படிக்கூட அரசால் ஒரு பொய்க்காரணத்தை கூறமுடிவில்லை. அதாவது, மோடி தலைமையிலான பாசிசக் கும்பலுக்கு ஒரு ‘ஜனநாயக’ முகமூடி கூட தேவைப்படவில்லை. சர்வாதிகாரி குடிமக்களுக்கு ஏன்? எதற்கு? என காராணமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?

BEML கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தியில் மட்டும் வரி கட்டியது போக நிகர லாபமாக ரூ. 53 கோடி ஈட்டியுள்ளது. மெட்ரோ ரயில் கோச்சுகள் உற்பத்தியில் அதன் முன்னேறிய தொழில் நுட்பத்தால் ஏனைய போட்டி நிறுவனங்களைவிட குறைந்த விலையில் உற்பத்தியை செய்து தருவதால் டெல்லி மெட்ரோ , பெங்களூரு மெட்ரோ, ஜெய்ப்பூர் மெட்ரோ என அதிகமான ஆர்டர்களை பெறுகிறது.

மோடி அரசு கொண்டுள்ள திட்டத்தின்படியே ஸ்மார்ட் நகரங்களை கொண்ட உள்கட்டமைப்புகள் பெருக்கப்பட்டு உருவாகப்போகும் “புதிய இந்தியாவில்” மெட்ரோ ரயில் உற்பத்திக்கு மிகச்சிறந்ததொரு எதிர்காலமும், வாய்ப்பும் இருக்கிறது. பிராசிஞ்சித் போஸ் என்கிற பொருளியலாளர், “ஒருமுறை வருகின்ற வருமானத்திற்காக எல்லா வகையிலும் லாபம் தரும் பிஇஎம்எல் பங்குகளை விற்பது பொருளாதார ரீதியில் அர்த்தமற்ற செயல்” என்கிறார்.

இந்த நிலையில்தான் இவையாவும் நன்றாக தெரிந்திருந்தும் தங்கமுட்டையிடும் வாத்தின் வயிற்றைக்கிழிக்கும்  அயோக்கியத்தனமான வேலையை செய்கிறது மோடி அரசு. மக்களின் வரிப்பணத்தில், தொழிலாளார்களின் உழைப்பில் உருவான இக்குழந்தையை கடத்திக்கொண்டு போய் விற்று, பன்னாட்டுக் கம்பெனிக்காக பிச்சையெடுக்க வைக்கப் பார்க்கிறார் மோடி.

BEML தொழிலாளர்கள் தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் தொழிற்சங்கத் தலைமையோ சீனிவாச ரெட்டி என்கிற பாஜக ஆதரவாளரிடமிருக்கிறது. பெயரளாவிளான அடையாளப் போராட்டத்தை அறிவிப்பது, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து கோரிக்கை வைப்பது என களவாணியிடமே தீர்ப்பு வேண்டி நிற்பது என்பதையெல்லாம் தான் செய்கின்ற “போராட்டமாக” தொழிலாளார்களை ஏய்க்கிறார்.

ஹெச்.ஏ.எல் (ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட்டட்) தொழிற்சங்கமும், BEML தொழிற்சங்கமும் “BEML-ஐ காப்போம்; தேசத்தைக் காப்போம்” (Save BEML; Save Nation), “தேசத்தின் சொத்தை விற்காதே” என்கிற முழக்கங்களோடு ஒரு கூட்டு போரட்டக்குழுவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில் ஏதாவது வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? அரசு, நிறுவனத்தின் மதிப்பை எவ்வாறு கணக்கிடும் என்பதெல்லாம் புரியாத புதிரல்ல. “எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஏதோ ஒன்றுக்கு அடிமாட்டு விலைக்கு தொழிற்சாலையும், நிறுவனத்தின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களும் விற்கப்பட இருப்பதை எங்களால்  புரிந்துகொள்ள முடிகிறது” என்று ஆதங்கப்படுகிறார்கள் தொழிலாளார்கள்.

ஆனால், இம்முறை தொழிலாளர்களின் கோரிக்கை வழக்கமான வேலை உத்திரவாதத்தை வழங்கு என்பது மட்டுமல்ல, “பொதுத்துறை நிறுவனத்தை காப்போம்; தேசத்தைக் காப்போம்” என்பதாக இருக்கிறது, மோடி கும்பல் தேசத்தை விற்பதை தொழிலாளார்கள் கண்டுணர்ந்து அதை இன்று பிரச்சாரமும் செயயத்தொடங்கி இருக்கிறார்கள், நாடு முழுதும் கார்ப்பரேட் காலை நக்கும் மோடி தலைமையிலான தேசதுரோக கும்பலின் தொடர் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துவது என்ன?

அன்று பாளையங்களையும், நகரங்களையும், துறைமுகங்களையும் கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியதைப்போல இன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெருமளவு நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன; மாருதி தொழிற்சாலையைப் போல் “சட்டத்தின் ஆட்சியே” நிலவாத தொழிற்சாலைகள் நிறுவப்படுகின்றன; நாட்டுக்குள்ளேயே நிலவும் அந்நிய நிலப்பரப்பு, தாதுக்களுக்காக தண்டகாரண்யக் காடு, நியாம்கிரி-கஞ்சமலையும், மீத்தேனுக்காக காவிரி டெல்டாவையும் பெட்ரோலியத்துக்கு கோதாவரிப் படுகையையும் கைப்பற்றி இயற்கையும் மனித வாழ்வையும் அழிக்கின்றன; இவை தவிர, சாலைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்ற எல்லா வகையான உற்பத்திக்கேந்திரங்கள் கல்வி, மருத்துவம் என இன்றியமையாத எல்லாத் துறைகளும் பன்னாட்டுக் கபெனிகளின் ஆக்டோபஸ் கரங்களால் சுற்றி வளைக்கப்படும் போது, இவையாவும் தனித்தனி பிரச்சனைகளாக இனியும் இல்லை என்பதை உணர வேண்டும்.

அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து போராடுவதால் மட்டுமே இந்த தேசவிரோத கும்பலை வீழ்த்த முடியும்!

தொகுப்பு:
பு.ஜ. செய்தியாளர், KGF.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்

0

DIGITAL INDIA வின் தலைநகரில் விவசாயிகளின் நிர்வாணப்போராட்டம் !

ஓவியம் : முகிலன்
palachennaitn@gmail.com
பேச: 95518 69588

இணையுங்கள்:

***

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் பு.ஜ.தொ.மு-வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள், விவசாய கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை, இதுவரை பிரதமர் மோடியோ, அவரது அமைச்சர்களோ, சந்தித்து அவர்களின் பிரச்சினை குறித்து கேட்கவில்லை. அதே நேரம், தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, நாடெங்கும் விவசாயிகளுக்காக மாணவர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் போராடி வருகின்றனர்.

அதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பு.ஜ.தொ.மு வினர் விவசாயகளின் போராட்டத்தை ஆதரித்தும் இந்த பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வது என்கிற வகையில்,  07/04/17 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று காவல் துறையிடம் அனுமதி கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், தோழர்கள் கையில் தட்டி, பேட்ஜ்யுடன் பேருந்து நிலையம் , பேருந்து நிறுத்தம்,மார்க்கெட் போன்ற 6 இடங்களில் முழக்கமிட்டு,போராட்டம் நடத்தினோம். விவசாயகளின் போராட்டத்தை திரும்பி பார்க்காத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் மோடியை அம்பலப்படுத்தி, தோழர்கள் பேசினார்கள். இந்த போராட்டத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து ஆதரித்தனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.

உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா – படங்கள்

0

லக தண்ணீர் தினமென்று மார்ச் 21-ம் நாளை ஐ.நா சபை அனுசரித்திருக்கிறது. உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது? தண்ணீரை சுத்தமாக பாதுகாப்பாக குடியுங்கள் என்பதில் துவங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எவையும் தனியார் மயத்தை கண்டு கொள்வதில்லை. இன்று சுத்தமான பாதுகாப்பான குடிநீர் என்பது உலகெங்கும் வசதி படைத்த மக்களுக்கு மட்டுமே என்பதை நிலைநாட்டியிருக்கிறது உலகமயம்.

முதலாளித்துவம் எனும் நச்சை அகற்றாமல் நல்ல நீர் எப்படிக் குடிக்கும்? புவி வெப்பமாதல் அதிகரித்து வரும் நிலையில் வறட்சியும், வெயிலும் ஆண்டுக்காண்டு  அதிகரிக்கின்றன. புவி வெப்பமாதலுக்கு முதன்மைக் குற்றவாளிகளாக மேற்கத்திய நாடுகள்தான் இத்தகைய ‘தண்ணீர் உபதேசங்களையும்’ நடத்துகின்றன. உலக தண்ணீர் தினமென்று இந்தியாவெங்கும் காலி குடங்களுடன் காத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் காட்சியை ஜம்மு, அஸ்ஸாம், ஹைதராபாத் என்று அனைத்து மாநிலங்களிலும் காணலாம்! சில படங்கள் இங்கே இடம்பெறுகின்றன. தண்ணீர் தாகத்திற்காக இலாபத்திற்கா என்ற பிரச்சினை தீர்க்கப்படாத வரை நமது குடங்களில் நீர் நிரம்பிவிடாது.

மார்ச் 21 2017 உலக தண்ணீர் தினத்தில் போபால் மக்கள் எப்போது தண்ணீர் வருமென்று காலி பாத்திரங்களுடன் காத்திருக்கிறார்கள். வாழ்வில் பெரும் பகுதி காத்திருத்தல் என்பது நமக்கு தண்ணீருக்காகத்தான்!

லையில்தண்ணீர் சுமையுடன் செல்லும் பெண்கள் – ஜம்முவில். குடிநீர் உயிர்வாழ அத்தியாவசியமென்றால் நீர் எடுக்க அலைவது அன்றாட கடமையாகிவிட்டது.

ஸ்ஸாம் தலைநகரம் கௌகாத்தியில் பொதுக்குழாயில் வரப்போகும் நீருக்காக காத்திருக்கும் சிறுமி. அருகில் மக்கள் வரிசைப் பதிவுக்காக விட்டுச் சென்றுள்ள காலிக் கேன்கள். விளையாடப் போகாமல் இப்படி குடிநீருக்காக காத்திருப்பது குழந்தை தொழிலாளர் உழைப்பென்று என்ஜிவோக்கள் கருதவில்லையா?

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் மரபார்ந்த ஆடை அலங்காரங்களோடு இரண்டு அடுக்கு குடங்களுடன் செல்லும் பெண். ஆடை அணிகலன்களோடு குடங்களும் சேர்ந்து விட்டன!

ஹைதராபாத்: பொதுக்குழுயில் எப்போது நீர் வருமென்று காலிக் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள். போதுமான அளவு நீர் கிடைக்காத போது இங்கே சண்டையும் சகஜம். குழாயடிச் சண்டை என்ற வழக்கே குடிநீர் கிடைப்பது அரிது என்ற அவலநிலையை சுட்டாமல் பெண்கள் என்றால் சண்டை என்று மடை மாற்றுகிறது

குஜராத்தின் அகமதாபாத்தில் கைவண்டியில் குடிநீர் எடுத்துச் செல்லும் பெண். மோடியின் மண்ணில் குடிநீர் கிடைப்பது அவ்வளவு கடினம்.

கௌகாத்தி: மலைமேல் சென்று நீர் எடுத்து வரும் ஒரு பெண். குடிநீருக்கா அலையும் உழைப்பு ஒரு உடற்பயிற்சியல்ல அது ஒரு உடல்வதை!

ஹைதராபாத் புறநகர்ப்பகுதியில் பொதுக்குழாய் ஒன்றில் குளிக்கும் தொழிலாளி. இப்படி எப்போதாவதுதான் குற்றாலக் குளியல் வாய்ப்பு கிடைக்கும்! இதை வைத்து நீரை விரயமாக்காதீர்கள் என்று நீச்சல் குளங்களில் நித்தம் நீர் மாற்றும் கனவான்கள் மன்றாடுவார்கள்!

லக தண்ணீர் தினத்தை முன்னிட்டு “ பாதுகாப்பான குடிநீரை அருந்துங்கள்” எனும் விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் தேசிய விருது வென்ற நடிகை ரிதுபர்ணா சென்குப்தா. பாதுகாப்பான குடிநீருக்கு இப்படி பளிச்சென்று விளம்பரம் கொடுக்கும் அம்மணிகள்தான் தண்ணீரை பறித்து வைத்திருக்கும் பெப்சி கோக்கிற்கும் ஆஸ்தான தூதர்களாக இருக்கிறார்கள்.

லைக்கவசத்தோடு பூஜை செய்யப்பட்ட பூ இதர பொருட்களை எடுத்துச் சென்று பிரம்ம்புத்திரா நதியில் கொட்டச் செல்கிறார் ஒருவர் – இடம் கௌகாத்தி. இந்திய நதிகளை சாக்கடையாக்குவதில் பார்ப்பனியத்திற்கு போட்டி யாருமில்லை.

கௌகாத்தி: பிரம்மபுத்ரா நதியில் பக்தர்கள் வீசிய காசுகளை தேடி எடுக்கும் சிறுவன். நதியில் காசுகளை வீசும் பக்தர்கள் குடிநீருக்கும் காசுகளை அல்ல கணிசமான பணத்தையே ஒதுக்க வேண்டும்.

நன்றி: Out Look

தருண் விஜயைக் கழுவி ஊற்றும் தமிழ் பேஸ்புக்

6

நாங்கள் என்றால் சிவப்பானவர்கள் இந்தியர்கள், அவர்கள் என்றால் கருப்பர்கள் தென்னிந்தியர்கள் என்று நனவிலி மனதிலிருந்து உண்மை பேசியிருக்கிறார் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்! என்ன செய்தாலும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் ஆதிக்க உணர்வை எங்கேயும் மறைக்க முடியாது என்பதற்கு தருண் விஜயின் நழுவாத நாக்கு ஒரு சான்று! ஃபேஸ்புக்கில் தருண் விஜயின் திமிருக்கு விதவிதமான எதிர்வினைகள் வந்து கொண்டே இருக்கின்றன! அவற்றில் எம் கண்ணில் பட்டவைகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

தருண் விஜய் குரலில் பேசும் திமுக எம்.பி!

தருண் விஜய் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் எனவும் கறுப்பர்கள் மட்டமானவர்கள் என்ற அர்த்தத்திலும் கூறியிருக்கிறார். தருண் விஜய்க்கு பதில் சொன்ன இளங்கோவனும் தனது ஒரிஜினல் நிறமான கருப்பை மட்டமாக நினக்கிறார். “தென்னிந்தியர்கள் அனைவரும் கறுப்பர்கள் அல்ல கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெள்ளையானவர்களே” என்பது கருப்பை மட்டமாக, தாழ்வாக நினைக்கும் மனதில் வெளிப்பாடுதான்.

– Arul Ezhilan

“நாங்கள் கறுப்பர்களுடன் வாழ்கிறோம் என்கிறார் தருண் விஜய், நான் கேட்கிறேன் நாங்கள் என்றால் யார்? ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. ஆகியோர் மட்டும்தான் இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறீர்களா?” – ப.சிதம்பரம்

– Tamilnadu Congress Committee

வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் வரலாற்று ரீதியாக இருந்த முரணை தருண் விஜய் இன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாவம்..! இங்குள்ள நம்மூர் பாஜகவினருக்கு அடிமை விசுவாசம். அதனால் தான் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புனிதமாக கருதுகிறான்.

தென்னிந்திய கறுப்பர்கள் என தருண் விஜய் யாரை சொல்லுகிறார் ? நமது தமிழிசை உட்பட உள்ள பாஜகவினரையும் சேர்த்து தான் சொல்லுகிறார். நாங்கள் ஒரு தலித்தான கங்கை அமரனை தேர்தலில் விட்டிருக்கோம் என வானதி புளகாகிதம் அடையும் போது கங்கை அமரன் மீது பெரியாரும் மார்க்ஸும் என்ன மாதிரியான பார்வையை வீசியிருப்பார்கள் ?

ஆர்.கே நகரில் சுய மரியாதையை கங்கை அமரன் அடகு வைத்தார் எனில் தற்போது சுயமரியாதையை தமிழிசை, பொன்னார் போன்றோர் அடகு வைக்கின்றனர். தமிழிசையும், பொன்னாரும் குமரி மாவட்ட பின்னணியில் வந்தவர்கள் ஆனதால் பெரியாரை தெரியாமல் கூட போகலாம். ஆனால், அய்யா வைகுண்டரும், அய்யங்காளியும், சட்டம்பி சாமிகளும் கற்று தந்த சுயமரியாதையை இவ்வளவு வேகமாக பணயம் வைக்க வேண்டிய தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.

பல நேரங்களில் பிராமணீய தலைமை இன்னும் தெளிவாக சொன்னால் ஆர் எஸ் எஸ் தலைமை மத்திய ஆசியாவிலிருந்து வந்த வந்தேறிக் கூட்டம் தான் என்பதை தங்களையும் அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக வட இந்திய தலித்கள் மற்றும் தென்னிந்திய மக்கள் தொடர்ந்து வருகிறார்கள். கறுப்பான தோற்றமிக்கவனாக சித்தரிக்கப்பட்ட மன்னன் மாவேலியை வஞ்சனையாக கொன்ற ஆரியன் வாமனனின் வழியாக இந்த முரண்பாட்டின் வரலாறு தொடருகிறது.

இன்று தருண் விஜய் மூலம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. நான் தருண் விஜயை மத்திய ஆசியாவிற்கு திரும்பி செல்லுங்கள் கூற மாட்டேன். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மக்களின் வரிசாக வந்தவர்கள் நாங்கள். எங்களை அடிமைப்படுத்த வேண்டாம். –

– Govindaraj Ramaswamy

செவப்பு…தருண் விஜய், பி ஜே பி, M P யின்….திராவிட கருப்பு விமர்சனத்துக்கு….. தமிழிசையும், பொன்னாரும் சொல்லும் பதில் என்ன….? நாங்களும் சிகப்புத்தோலுதான் என்று சொல்லப்போகிறீர்களா…..? நீங்கள் பி.ஜே.பியில்…பட்டம்.. பதவியில்…. இருந்தாலும்…அவர்களுக்கு நீங்கள்…..சூத்திர திராவிடர்களே….

புரிஞ்சுதா…..

– Msrm Murugan

தருண் விஜய் தனது ஆர்எஸ்எஸ் வளர்ப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.இப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

இதை மறைத்துக்கொண்டு நடிப்பதற்கும்.தமிழர் ,திருவள்ளுவர் போன்ற நாடகங்களை நாமும் பார்த்தோம். எல்லாம் பயிற்சிதான்.

மக்களை நிறம்,சாதி,மதம்,பாலின பாகுபாட்டுடன் நடத்துவதே அவர்கள் கொள்கை. உண்மையில் அவர்கள் பின்பற்றும் நூல் பகவத்கீதை அல்ல மனுஸ்மிருதி. அவர்கள் சொல்கிற ஹிந்துத்துவாவும், நாம் நினைக்கிற இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அங்கே மக்கள் இந்துக்கள் அல்ல கருப்பர்களும் இன்னபிறவும். இதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

– jothimani Sennimalai


மதிப்பிற்குரிய தருண் விஜய் அவர்களே…

பொறுப்பான மனிதராய் இருந்தால்… நாங்கள் நிறவெறி இன்றி வாழ்கிறோம் என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.. எதற்கு தென் இந்தியர்களை கருப்பாக இருப்பதாக கூற வேண்டும்.. என்னவோ பெருந்தன்மையாக இவங்க கூட எல்லாம் நாங்க வாழுறோம்ன்னு சொல்லிக்கிறா மாதிரி இருக்கு. இந்தியாவை தாண்டி விட்டால் நீங்களும் ப்ளடி பிளாக் இந்தியன்தான் என்று மறந்து போனது ஏன்..

திருக்குறள் படித்தால் மட்டும் திருவாளர் ஆகி விட முடியாது என்பதற்கு நீங்கள் உதாரணம்….

– Manojkumar Pandian


தருண் விஜய் அன்று திருவள்ளுவரை அவமானப்படுத்தினார் – இன்று நம்மையே அவமானப்படுத்துகிறார். இதற்குக் கீழாக அவமானப்படுத்த இயலாது, தமிழனுக்கு மான உணர்ச்சி குறைகிறதோ? ஆன்மீகம் நம் அறச்சீற்றத்தை குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.

  • ராஜா ஜி  feeling sad.

தருண் விஜய் சொன்னது கூட கவலை இல்லடா

ஆனா அதுக்கு நம்ம அக்கா எமிஜாக்சன் தமிழைசையும்,டிகாப்ரியோ பொன்னரும் கொடுக்க போற விளக்கத்த நினச்சாதான் பயம்மா இருக்கு

– Alagendran R Alagendran R


தருண் விஜய்: நுண்ணிய நூல் பல கற்பினும்…

தருண் விஜயுடைய திருக்குறள் ஆர்வம், தமிழ்க்காதல் இதையெல்லாம் பெரும்பாலும் நான் கிண்டலடிப்பதில்லை. மனுசங்களுக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்கலாம்.

கடந்த முறை சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கே வைத்து ஒரு நிகழ்வில் தருண் விஜயின் பேச்சைக் கேட்டேன். தமிழ், தமிழர் வரலாறு, ராசேந்திரசோழன், வேலு நாச்சியார் என எல்லாவற்றையும் பேசினார். தமிழர்களின் வரலாற்றை அறியாத வட இந்தியர்களான தாங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று கூட கூறினார்.

தமிழ்நாட்டில் காவி அரசியலை நுழைப்பதற்கான சதிகளில் ஒன்றுதான் தருணுடைய செயல்பாடு என்பதைக் கூட நாம் பொருட்படுத்தாமல், தருணுக்கு உண்மையிலேயே குறள் மீது பற்று இருக்கிறது, தமிழ் தருண் என்று அழைக்கப்படுவதில் பெருமை கொள்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் தனனை மிகவும் பாதித்ததாகவும் உத்தரகாண்டில் தலித்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டதற்குக்கூட அந்த குறள்தான் காரணம் என்றும் அந்தக் கூட்டத்தில் கூறினார். நான் கூட கொஞ்சம் நெகிழ்ந்து போய்விட்டேன்!

ஆனால் ஒரு சங்கியால், ஒரு சாவர்ண கருத்தாளரால், ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தவாதியால் – அதில் ஊறிப்போன ஒருவரால் – ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை உண்மையிலேயே உட்கிரகிக்க முடியுமா?

முடியாது என்பதுதான் உண்மை. அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள்தான் அதற்கான ஒரே அத்தாட்சி. அவர் தென்னிந்தியர்களை கருப்பர்களாகப் பார்ப்பது மட்டும் சிக்கல் இல்லை, இந்தக் கருப்பர்களோடு நாங்கள் இணைந்து வாழவில்லையா என்று அவர் கேட்கிறாரே அந்த பார்வைதான் சங்கியின் பார்வை.

இந்தியா என்பது இந்து மேல்சாதிக்கார்ரகள் – மூவர்ணர்களின்- நாடு என்பதுதான் அவரது பார்வை. அவர் தென்னிந்தியாவிலும் வடக்கு மத்திய மாநிலங்களிலும் கோடிக்கணக்கான கருப்புத் தோலர்களை சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. நாங்கள் வெள்ளையர்கள், நீங்கள் கருப்பர்கள் என்கிற எதிர்வை அவர் முன்வைத்திருக்கிறார். இதுதான் தருண். இதுதான் ஆர்எஸ்எஸ்.

எங்கிருந்து வந்தது இந்த வெள்ளை vs கருப்பு பிரிவு? இது பழைய பிரிவா? கார்மேனியனையும் பச்சை மா மலை போல் மேனியை உடையவனையும் காளியையும் கும்பிட்டவனிடமிருந்து வந்த பிளவு அல்ல இது. ஒரே சமயத்தில் பொன்னார் மேனியனையும் காக்கை நிறத்துக் கண்ணனையும் கும்பிட்டவர்களின் குரலா இது?

உண்மையில் ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவா என்பது மேலைநாட்டு ஆரியவாதத்திடமிருந்து, வெள்ளை நிறவெறி சித்தாந்தங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது. தருணின் ஆழ்மனத்திலுள்ள வெள்ளை vs கருப்பு என்பது பாசிசத்தின் நாங்கள் vs நீங்கள் என்ற உளவியலோடும் ஐரோப்பிய நிறவெறியோடும் இணைகாண வேண்டிய ஒன்று.

இந்திய வர்ண சித்தாந்தமும் ஐரோப்பிய வண்ண சித்தாந்தமும் இணைந்த ஒரு புள்ளியில்தான் இந்தியாவில் தோலின் நிறம் பார்க்கப்படுகிறது. அதை மேலும் அழகூட்டுகிறது சிவப்பழகு மோகச் சந்தை.

உண்மையில் இந்தியாவில் யாரும் கருப்பும் அல்ல வெள்ளையும் அல்ல என்பான் அமெரிக்கன், நாமெல்லாம் அவனுக்கு colored people.

தோலின் நிறம் பற்றிய தமிழர்களின் கலாச்சாரப் பதிவுகள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். எப்போது தோல் நிறம் சார்ந்த உயர்வு, தாழ்வு மனப்பான்மைகள் நம்மை பீடிக்க ஆரம்பித்தன என்பதைப் பார்க்கவேண்டும்.

தருணுடைய குரல் என்பது வட இந்திய / தென் இந்திய மேல்சாதிகளின் குரல்தான். அது வண்ணம் தொடர்புடையது மட்டுமல்ல, வர்ணம் தொடர்புடையது.

ஆனால் அவர் தென்னிந்திய “வெள்ளைத் தோலர்களை” சட்டென்று கைகழுவிவிட்டார் என்பதில் இங்கு பலருக்கு அவர் மீது கோபம் ஏற்படலாம். நாங்களும் வெள்ளைதான் அல்லது சிவப்புதான் என்று அவர்கள் குதிக்கலாம்.

இந்துவத்துவ சக்திகளின் கலாச்சார தேசிய அடையாளங்களில் ஒன்றாக திருக்குறளை ஆக்க முயன்ற தருணால், ஒருபோதும் திருவள்ளுவரை புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் உண்மை.

இறுதியாக ஒரு திருக்குறளைப் பார்ப்போம்.

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்”

இதற்கு தமிழ்நாட்டு ‘வெள்ளையர்’ (நன்றி: டிகேஎஸ் இளங்கோவன்) கலைஞர் எழுதிய உரை:

“கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.”

இங்கே உண்மை அறிவு என்பது என்ன? ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிக்கு உண்மை அறிவு என்பது என்னவாக இருக்கமுடியும்?

–  ஆழிசெந்தில்நாதன்


தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பை விரிவுபடுத்துவோம்:

இதுவும் நன்மைக்கே. ஆம். பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான தருண் விஜய் சொன்னது நன்மைக்கே. நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால், தென்னிந்திய கருப்பர்களோடு சேர்ந்து வாழ்வோமா? என்று அவர் சொன்னதன் பிறகு, தென்னிந்தியாவில் பலருக்கும், பரந்த இந்த இந்திய தேசத்தில், தங்களுக்கான அடையாளம் என்னவென்று புரியத் தொடங்கி உள்ளது.

சில நாட்களுக்கு முன், தமிழ் நாட்டின் எல்லை ஓர மாவட்டங்களில், மைல்கற்களில் ஆங்கிலத்தை அழித்து, ஹிந்தியை எழுதி, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பை தமிழ் நாட்டில் மீண்டும் புதுப்பித்துடும் ஓர் வாய்ப்பை தந்தார்கள்.

ஹிந்தி படித்தால்தான், இந்தியாவில் சிறப்பான கல்வியும், வேலையும் கிடைக்கும் என்ற பொய் தோற்றத்தை, மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்லூரி தரப்பட்டியல் அம்பலப்படுத்தி விட்டது. முதல் நூறு தரவரிசைக் கல்லூரிகளில், முப்பத்தேழு கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை; அறுபத்து ஏழு கல்லூரிகள் தென்னகத்தைச் சேர்ந்தவை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடிந்தது.

இப்போது தன் பங்குக்கு, தருண் விஜய், தென்னிந்தியர்களைக் கருப்பர்கள் என்ற உண்மையைக் கூறி உள்ளார். இராமாயணம் எனும் கதையே, ஆரியர் திராவிடர் போராட்டம்தான் என இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் தெளிவாக்கினார்கள். அதில் வரும் அரக்கர்கள், குரங்குகள் அனைவரும் திராவிடர்களைக் குறிப்பனவே என்றும் கூறினார்.

ஏதோ தென்னிந்தியாவின் கருப்பர்களை வட நாட்டில் வாழும் இவர்கள் சுமந்து செல்வதுபோல் தருண் விஜய் கருத்தினைக் கூறினார். இப்போது எதிர்த்தவுடன், பின்வாங்கி உள்ளார். எனினும், உண்மை நிலை என்ன?

கல்வி, வேலைவாய்ப்பு என தமிழகமும், தென்னிந்தியாவும், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே எடுத்துக் காட்டுகின்றன.

GDP எனப்படும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் எந்தெந்த விகிதத்தில் தங்கள் பங்களிப்பைத் தருகின்றன என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால், தென்னக மாநிலங்களின் பங்களிப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திடுகிறது என்பது விளங்கும்.

இந்தியா முழுமைக்குமான முப்பத்திரெண்டு மாநிலங்களும் சேர்த்து 161 லட்சம் கோடி ரூபாய்; இதில் தென்னகத்தின் பங்கு 48.71 லட்சம் கோடி ரூபாய். அதாவது, மொத்த ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கு தென்னக மாநிலங்கள் அளிக்கின்றன.

இத்தகைய பங்களிப்பை தென்னக மாநிலங்கள் தந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு இதே அளவில் மத்திய அரசால் திரும்பவும் தரப்படுகிறதா? என்பதை தென்னக மாநில அரசுகள் ஆராயும் காலம் வந்துள்ளது.

திராவிடர் இயக்கம் துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1917-ல் இங்கே துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை கூட்டமைப்பு, பின்னாளில் நீதிக்கட்சியாக ஆட்சியைப் பிடித்து, அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக, பொருளாதார புரட்சிக்கு வித்திட்டது.

நூறாண்டு முடியும் இன்றைய நிலையில், இதன் நீட்சியாக தென்னக மாநிலங்களோடு, தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பை புதுப்பித்து, தென் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க, இதுவே நல்ல தருணம்.

–  திராவிடர் கழகம் ( DK )

****

யார்டா அது தருண் விஜய் எப்டியாது நாக்கபுடுங்குற மாதிரி இழுத்து திட்டிபுடனும்-ங்கிற கனலாக எரிகிற கோபத்தோடு போனேன். அங்கிட்டு பாத்தாக்க பயபுள்ள அம்பது நூறு லைக் வாங்கிண்டு பொழப்பு நடத்துது. நம்ம ரேஞ்சுக்கு இந்த சல்லிப்பயலயா திட்டுறதுன்னுட்டு அப்டியே உ டர்ன் அட்ச்சு வந்துட்டேன்.

–  மாக்கான் மாக்ஸ்


தருண் விஜய் உள்நோக்கத்தோடு அந்த கருத்தை சொன்னாரா? அல்லது அவருடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா என்று தெரியாது. ஆனால் தமிழர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடக் கூடிய அளவுக்கு அவர் தகுதியானவர் அல்ல என்பதை தாமதமாக இருந்தாலும் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி..

–  $Honey Kumar


ஆப்பிரிக்க நாட்டவர் மீது டில்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், “நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?” என்று கேட்டுள்ளார்.

உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும். கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் காரரான இந்த மனிதரைத்தான் புனிதராகக் காட்டும் முயற்சியில் இங்கு சிலர் ஈடுபட்டுள்ளனர்.

கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வங்கி அதிகாரிகளைப் பார்த்து, ‘பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா?’ என்று கேட்டார் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அதுபோல், ‘தமிழுக்கு அரண் தருண்விஜய் என்றும் தலித்களின் குரல் தருண்விஜய் என்றும் கூறி முலாம் பூசுவதன் மூலம், அவரது வர்ணாசிரம கொள்கை மாறிவிடுமா?’ என்பதை, அவருக்கு கொடி பிடிக்கும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்.

–  Aloor Sha Navas


ஆர்எஸ்எஸ்-க்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று டெர்ரஸ் பேஸ். மோகன் பகவத்திலிருந்து துவங்கி எச்.ராஜா வரை உதாரணங்களை நாம் கூறமுடியும். மற்றொன்று பேபி பேஸ். வாஜ்பாயிலிருந்து துவங்கி தருண் விஜய் வரை. சண்டமாருத கலவர உரை வீச்சு செய்து கிலியை உருவாக்குவது டெர்ரல் முகங்கள். தடுமாற்ற மாயையை உருவாக்கி மீன்பிடிப்பது குழந்தை முகங்கள். 20 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இதழான பஞ்சசன்யாவின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் தருண் விஜய். காவியிசத்தின் தத்துவார்த்த எதிரிகளை வீழ்த்துவதற்கு நாக்பூர் பீடத்தால் தீட்சையளிக்கப்பட்டு பஞ்சஜன்யாவிலிருந்து 2008 இல் விடுவிக்கப்பட்டு சமூகத்தின் பல தளங்களிலும் வேலை செய்ய அனுப்பப்பட்டவர்தான் தருண்விஜய்.

நீண்ட காலம் சுதந்திர இதழாளராக பல மொழி ஏடுகளில் எழுதிய காலங்களில் 2013 செப்டம்பரை வரை தருண் விஜய் தமிழை அல்லது திருவள்ளுவரைப் பற்றியோ அப்படியொன்றும் புகழ்ந்து பிரமாதப்படுத்தி எழுதியவரல்ல. பேசியவரும் அல்ல. 13.9.2013 இல் பாராளுமன்றத்தில் தமிழைப் பற்றி முதன்முறையாக தருண் விஜய் பேசியபோது தமிழ்கூறும் நல்லுலகின் முக்கிய புள்ளிகளும் கூட க்ளீன் போல்டானார்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவை இழந்தார்கள். 2014 பாராளுமன்ற மற்றும் 2016 தமிழ்நாட்டின் தேர்தல்களில் தமிழ்மக்களின் கவனத்தை பெற தமிழ்நாட்டின் ஆர்எஸ்எஸ்-இன் காவியிச அஜெண்டாக்களை நோக்கி பைய்யப் பைய்ய முன்னேற பயன்படுத்தப்பட்ட பல உத்திதான் மிக முக்கியமானதுதான் தருண் விஜய்யின் திடீர் தமிழ் பாசம் என்பதை இடதுசாரிகள் மட்டுமே அம்பலப்படுத்தினார்கள்.

இப்போது மீண்டும் தருண் அம்பலமாகி உள்ளார். நொய்டாவில் நைஜீரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று தருண்விஜய் பேசியவர் இந்தியர்களை இனவெறியர்கள் என்று கூறுவதில் நியாயமில்லை தாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ்வோம் என்று தன்னிலை மறந்து காவியிச உளநிலையை ஒப்புவித்துவிட்டார்.ஆர்எஸ்எஸ்-இன் டெர்ரர் முகங்களை பாசிசனத்தின் இந்திய முகங்கள் என எளிதில் கண்டு கொள்ள முடியும். ஆனால் பேபி முகங்களை இனம் கண்டு கொள்வதற்கு தத்துவார்த்த அடிப்படை தேவை.

–  தீக்கதிர்


கோகுலத்தில் சீதை படத்தில் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்ணை ஏதேதோ ஆசைவார்த்தை பேசி விபச்சார தொழிலுக்கு அழைப்பார் தலைவாசல் விஜய். அந்தப் பெண் காறித்துப்பிவிட்டு போவார் என்பது வேறு விஷயம். அதே போல தருண் விஜய் என்பவர் பாஜகவில் இருக்கும் தலைவாசல் விஜய். அதிரடியாக செயல்படுவது தமிழர்களிடம் வேலைக்கு ஆகாது, பணிய மாட்டார்கள் எனத் தெரிந்துகொண்டு திருக்குறள், அது, இது என ஆசைவார்த்தை காட்டி இந்துத்துவ சகதிக்குள் ஐக்கியமாக அழைத்தார். ஆனால் எப்படி வேடமிட்டு வந்தாலும் கொண்டையை எளிதில் கண்டுபிடித்துவிடும் தமிழர்கள் அதற்கும் மசியவில்லை. அந்த கடுப்பிலோ என்னவோ இதுவரை ஒரே தாய் ஒரே பிள்ளைகள் என புழுகிவந்தவர் கடுப்பாகி, “தென்னிந்தியர்கள் கருப்பர்களாக இருந்தாலும் நாங்கள் அவர்களோடு இணைந்து வாழவில்லையா?” என கேட்டிருக்கிறார். இதுதான் தருண் விஜய்யின், பாஜகவின் உண்மையான சுயரூபம்.

ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களும் உண்டு. தென்னிந்தியாவில் பெரும்பாலானோர் கருப்புதான் என்றாலும் வட இந்தியாவில் கூட எல்லோரும் சிகப்பு மனிதர்கள் இல்லை. தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களில் ஏனையோரும் மொகஞ்சாதரோ நாகரீகத்தின் எச்சமாக இன்னமும் திராவிட நிறத்தில்தான் இருக்கிறார்கள். சிகப்பு என்பது இந்த நிலப்பகுதியில் வந்தேறிய ஆரிய நிறம்தான் என்பதால் கலப்பின் அடிப்படையிலேயே சிகப்புத்தோல் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் தருண் விஜயோ ஏதோ இந்த நிலப்பகுதி மொத்தத்திற்கும் சிகப்புத்தோல்காரர்கள் தான் உரிமைபோலவும், ஏனையோர் எல்லோரும் அடிமைகள் போலவும் பேசியிருக்கிறார்.

மதப்பற்று என்ற பெயரில் இப்படி உயர்சாதி திமிர் பிடித்து அலைவதுதான் பாஜகவின் அரசியல். அவர்களுக்கு கூட்டாக எல்லோரையும் அரவணைத்து சமத்துவத்துடன் வாழ்வதெல்லாம் ஆகவே ஆகாது, வரவும் வராது. நிறத்தில் உயர்ந்தவர்கள் சிகப்புத் தோல்காரர்கள் மதத்தில் உயர்ந்தது இந்து மதம். சாதியில் உயந்தவர்கள் பார்ப்பனர்கள். மொழியில் உயர்ந்தது சமஸ்கிருதம்/இந்தி. ஏனைய எல்லாமும் அவர்களுக்கு இரண்டாம் தரம்தான். சுருக்கமாக பாஜகவின் கொள்கை என்பது இவ்வளவுதான்.

தருண் விஜய் தனக்கே தெரியாமல் தன் பேச்சில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். என்னதான் பாம்பு வேடமிட்டு பல்லிளித்தாலும் அதன் பல்லில் விஷம்தான் இருக்குமே தவிர பாயசம் இருக்காது என்பதற்கு தருண்விஜய்யின் பேச்சு ஒரு சோற்றுப் பதம்.

–  Don Ashok


தான் சொல்ல வந்த கருத்து சரியாக வெளிப்பட வில்லை என்கிறார் தருண் விஜய் …

இல்ல தருண் விஜய் சரியாகவே வெளிப்பட்டுஉள்ளது உங்களது மேலாதிக்க மனப்பான்மை.. உங்கள் சுயரூபத்தை காட்டியதற்கு நன்றி ..

–  Sajeev Narayan


#கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் இணைந்துதான் வாழ்கிறோம்.#தருண் விஜய்

#பொன்னர் அண்ண! பொன்னர் அண்ண! உங்க மூஞ்சில கறுப்பு மைய அள்ளி பூசன மாதிரி இருக்குதாம்.

–  Anand Anandan


தம்பி தருண் நாங்கள் தென் இந்தியர்கள் அல்ல. முதலில் இது இந்தியா அல்ல பாரதம். நாங்கள் ஆரியர் அல்ல திராவிடர். நாங்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல இங்கே தோன்றியவர்கள். உங்களை போல் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்கள் இல்லை நாங்கள். உனக்கு நாங்கள் வாழ்தற்க்கான சான்று வேண்டுமா? போய் பார் பாகிஸ்தானில் மெகந்சாதாரோ, அரப்பா என்னும் இடத்தில் திராவிடர் வாழ்ந்த தொல்லியல் சரித்திரம் சொல்லும்.

–  Pandurangan Venugopal


பாஜக மத்திய இணை அமைச்சர் பொண் ராதா கிருஷ்ணனை வேற்றின வாசியாகத் தான் இதுவரை பார்த்திருக்கிறார் தருண் விஜய்….

இதுகூட புரியாமத் தான் அவர்களோடு சேர்ந்து குப்பை கொட்டுகிறார் போல மன்னாரு…

–  தமிழன் டி. சிவா


தென்னிந்தியர்கள் இந்தியர்கள் அல்ல.ஏனெனில் அவர்கள் கருப்பாக இருக்கிறார்கள்.- பாஜக மு.எம்பி தருண் விஜய்.

டேய்…செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்டா… கரெக்ட்டு நாங்க இந்தியர்கள் அல்ல… தமிழர்கள்.

–  அலையாத்தி செந்தில்


ஆந்திரா தெலுங்கானா வில் தருண் விஜய்க்கு வலுக்கிறது எதிர்ப்பு!! உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் தருண் விஜய் மன்னிப்பு கோர வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு!!

ஜெய் சென்னகேசவா.
–  Naveen Kumar


தருண் விஜய், வழக்கமான வெள்ளைத் தோல் ஆணவத்துல, கருப்பான தென்னிந்தியர்களை சகிச்சு வாழ்றோம்னு சொல்லிருக்காரு… திமுக எம்பி இளங்கோவன், எல்லா தமிழனும் கருப்பு இல்ல… எங்க தலைவரு வெள்ளை கலருதான்னு பதிலடி குடுத்திருக்காரு….

இவங்களை எல்லாம் பார்லிமென்ட்ல சகிச்சிட்டிருக்கோமேன்னு ஒரு வேளை தருண் விஜய் மீன் பண்ணிருக்கலாமில்லையா….

–  Nanjil Aravintha


என்னடா பொழுது போயிடுச்சே, ஒன்னும் நடக்கலையேனு பார்த்தேன்……இந்தா சிக்கிடுச்சில்ல தருண் விஜய் னு ஒரு பீஸு……இன்னும் ஒரு வாரம் வச்சு செய்வோம்….

–  கரூர் மகேஸ்வரன்


ஒரு முசுலீம் மாடு வாங்கினாலே ஆர்.எஸ்.எஸ் கொல்லும் !

4
தாக்குதலின் போது கான்

சுவைக் கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்கு” என்கிறது மனுநீதி ! மோடியின் ஆட்சியில் அந்த தண்டனையை வழங்குகிறது சங்க பரிவாரம். ஆயினும் பழைய நீதிப்படி பசுவை கொன்றிருக்க வேண்டும் என்பதல்ல ! பசுவை கொல்வதற்காகத்தான் நீங்கள் வாங்குகிறீர்கள் என்ற சந்தேகமே போதும் !

பெஹ்லுகானின் மனைவி மகன்கள்
பெஹ்லுகானின் மனைவி மற்றும் மகன்கள்

இந்தியா முழுவதும், கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி பசுவதைத் தடுப்பின் பெயரில் முசுலீம்கள், தலித்துக்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தல்களில் உ.பி., உத்திரகாண்ட் தவிர கோவா மற்றும் மணிப்பூரில் குதிரைப்பேர மோசடி மூலம் ஆட்சியைப் பிடித்த பிறகு பாஜக – ஆர்.எஸ்.எஸ். கிரிமினல் கும்பல்களின் பார்ப்பனியத் தாக்குதல்கள் இன்னும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் குஜராத்தில் பசுவதைக்கு ஏற்கனவே இருந்த 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி சட்டதிருத்தம் கொண்டுவந்திருக்கிறது பாஜக மாநில அரசு. அதை மரண தண்டனையாக்க வேண்டும் எனக் கொக்கரிக்கிறார், உ.பி. யின் ரவுடி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இச்சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று ஹரியானா மாநிலம் மேவட் மாவட்டத்தின் ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெஹ்லு கான் தனது இரண்டு மகன்களான இர்ஷாத், ஆரிஃப் ஆகியோருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த அசுமத் கான் என்பவரோடு சேர்ந்து தங்களது பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஹத்வாரா சந்தையிலிருந்து பசுக்களை வாங்கி, இரண்டு வாகனங்களில் அவற்றை ஏற்றிக் கொண்டு நால்வரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது விசுவ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்தியது. பசுக்களை மாட்டிறைச்சிக்காக ராஜஸ்தானிலிருந்து ஹரியானாவிற்கு சட்டவிரோதமாகக் கடத்துவதாகக் குற்றஞ்சாட்டி அவர்கள் நால்வரையும் உடன் வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. பசுக்களை பால் பண்ணைக்கு வாங்கிச் சென்று கொண்டிருப்பதாக பெஹ்லுகான் கூறி, அதனை வாங்கிய ரசீதைக் காட்டிய பின்னரும் கூட அவர்களை விடாமல் தாக்கியது

வாகன ஓட்டிகளில் ஒருவரான அர்ஜூன் என்பவர் தான் ஒரு ஹிந்து என்று கூறியதும் அக்கும்பல் அவரை மட்டும் விடுவித்து விட்டு மீதமுள்ள ஐவரையும் சுமார் அரை மணி நேரம் கம்புகளையும், கற்களையும், இரும்புப் பைப்புகளையும் கொண்டு கடுமையாகத் தாக்கியது. அதோடு அவர்களிடமிருந்து சுமார் 75,000 ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போலீசு, தாக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தது. பெஹ்லு கானின் மகனான இர்ஷாத், போலீசிடம்  நடந்தவற்றை எல்லாம் குறிப்பிட்டு, மாடு வாங்கிய இரசீதையும் காட்டியிருக்கிறார்.

தாக்குதலின் போது பெஹ்லுகான்

அனைத்தையும் கேட்டுக் கொண்ட போலீசு மறுநாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் இருந்து ஒரு புகாரைப் பெற்றுக் கொண்டு “சட்டவிரோதமான முறையில் மாட்டை அடிமாட்டுக்கு கடத்துவது“ என்ற பிரிவின் கீழ் முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்தது. அதன் பின்னர் தான், தாக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையில், குறிப்பாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறது இராஜஸ்தான் மாநிலப் போலீசு.

ஹிந்துத்துவக் கிரிமினல் கும்பலின் கொடுந்தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் பெஹ்லுகான் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 5 அன்று மருத்துவமனையிலேயே மரணமடைந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்கள் எடுத்த வீடியோக்கள் இணையத்திலும், போலீசுக்கும் பகிரப்பட்டும், இராஜஸ்தான் போலீசு இதுவரையிலும் அக்கும்பல் சம்பந்தமாக வெறும் 3 பேரை மட்டும் கண் துடைப்புக்காகக் கைது செய்திருக்கிறது

இச்சம்பவம் குறித்து இராஜஸ்தான் மாநில பாஜக அரசின், உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா கூறுகையில், “ பசுக்களை கடத்துவது சட்டவிரோதம் எனத் தெரிந்தும் அவர்கள் (முசுலீம்கள்) அதனைச் செய்திருக்கிறார்கள். பசுப்பாதுகாவலர்கள் (வி.எச்.பி, பஜ்ரங்தள் காலிகள்) அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது தவறு” என பார்ப்பனிய இந்துமதவெறிக் கும்பலைச் செல்லமாக்க் கடிந்து கொண்டு, ஒரு பச்சைப் படுகொலையை மிகச் சாதாரணமாக நியாயப் படுத்தியுள்ளார்.

பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான அஸ்ஸாமில் இதே போன்று மற்றொரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜோராத் நகரில் ஒரு சிறுவன் உட்பட மூன்று முசுலீம்களை மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி கடந்த ஏப்ரல் 4 அன்று இரவில் கைது செய்திருக்கிறது அஸ்ஸாம் மாநிலப் போலீசு. மிரிதுபவன் போரா என்ற இந்து வெறியனிடமிருந்து புகார் பெற்று இந்நடவடிக்கையை போலீசு எடுத்துள்ளது.

பஞ்சாப்பின் கவ் ரக்‌ஷா தள் முகநூல் முகப்பு பக்கம்

குறிப்பாக சொல்லப் போனால், அஸ்ஸாமில் மாட்டிறைச்சி மக்களின் முக்கிய உணவாகும். அங்கு அங்கீகரிக்கப்பட்ட  மாட்டிறைச்சிக் கூடங்களில் இருந்து மாட்டிறைச்சி விற்பதும், மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சட்டப்பூரவமானதே. இந்நிலையில் சமைப்பதற்கு மாட்டுக்கறி வாங்கிச் சென்ற ‘குற்றத்திற்காக’, ”மாற்று மதத்தினரின் மனதைப் புண்படுத்திய” குற்றப் பிரிவின் கீழ் அவர்களைக் கைது செய்திருக்கிறது போலீசு.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலுமே மாட்டுக்கறியை முகாந்திரமாக வைத்து முசுலீம்களை அச்சுறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதனால் தான் இராஜஸ்தானில் தான் ஒரு இந்து எனக் கூறிய வாகன ஓட்டி அடிவாங்காமல் தப்பிக்கவும், இசுலாமியத் தோற்றம் கொண்ட வாகன ஓட்டி அடி வாங்கவும் நேர்ந்தது. அதே போல, சட்டப்படி மாட்டுக்கறி சாப்பிடலாம் என அனுமதி உள்ள ஒரு மாநிலத்தில் இசுலாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் மாட்டுக்கறி தின்பதையே ’குற்றமாக்கி’யிருக்கிறது அஸ்ஸாம் மாநில பாஜக அரசு.

இந்து மதவெறி பிடித்த பாஜக பாசிஸ்ட்டுகள் ஆளும் மாநிலங்களில் படிப்படியாக இந்து மத வெறியும், முசுலீம்கள் மற்றும் தலித்துகளின் மீதான வெறுப்புணர்வும் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன.  மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அப்பிளவை தமக்குச் சாதகமாக்கி தேசத்தின் வளங்களையும், அவர்களது வாழ்வாதாரங்களையும் கபளீகரம் செய்து வருகிறது இந்துத்துவக் கும்பல்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்களை சாதிய ரீதியாகப் பிரித்து, சாதியப் படிநிலையில் மேல்நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மக்களைச் சுரண்டிக் கொழுத்த பார்ப்பனீயம், இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் வாயிலாக தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

உழைக்கும் மக்களின் பொது எதிரிகளான முதலாளித்துவத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் எதிராக மக்கள் கொதித்தெழா வண்ணம், அவர்களை இருத்தி வைப்பது தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் நோக்கம். அதற்கு பெரும்பான்மை இந்துக்களின் பொது எதிரியாய் முசுலீம்களைக் காட்டி, அப்’பயங்கரவாதி’களிடமிருந்து காக்க வல்ல இரட்சகனாகத் தம்மை முன்நிறுத்தி பெரும்பான்மை மக்களை முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் பார்ப்பனிய ஒடுக்குமுறையின் நுகத்தடியில் சிக்க வைத்திருக்கிறது பாஜக கும்பல். இதை நாம் முறியடிக்கவேண்டும்.

ஒரு முசுலீமோ, தலித்தோ தாக்கப்படும்போது, இங்கு தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நிலை உருவாக்கப்பட்டால் தான் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் நச்சுப் பிடியில் இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் மீட்க முடியும் ! மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “இந்து நண்பன் இல்லாத ஒரு முசுலீமும், முசுலீம் நண்பன் இல்லாத ஒரு இந்துவும் இங்கு இல்லை, தமிழன்டா” என்று முழங்கிய தமிழகம் அதை நடைமுறையிலும் நிரூபிக்க வேண்டும்.  இல்லையேல் விரைவில், பசு மாட்டு மூத்திரத்தை முகஞ்சுழிக்காமல் ‘மடக்’ ’மடக்’ கென்று குடிக்காத ’தேசவிரோதச்’ செயலுக்காக நமக்கும்  7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

  • நந்தன்

செய்தி ஆதாரம்:

தூத்துக்குடி சிறுமி காமாட்சி பலி – தடுப்பூசி விதிமுறைகள் கலெக்டருக்கே தெரியாதாம் !

0

தூத்துக்குடியில் 20.03.17 அன்று ICE தனியார் ஆங்கிலப்பள்ளியில் நடந்த முகாமில் வைத்து அரசு தடுப்பூசி போடப்பட்டது.  அன்று மாலையே சிறுமி காமாட்சிக்கு காய்ச்சல் வந்துள்ளது. நான்கு நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், 25.03.17 அன்று அவரது தாய் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 10 நாட்கள் சிகிச்சையின் முடிவில் 04.04.17 அன்று மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சிறுமி காமாட்சி

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு – ஹவுசிங்போர்டு  கொத்தனார் காலனியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவியான இவருக்கு தந்தை இல்லை. தாய் வீட்டுவேலை செய்து மகளை வளர்த்து வந்துள்ளார். இவர் படித்துவந்த அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஊசிபோட பலமுறை வற்புறுத்தியும் இவர் போட்டுக்கொள்ள மறுத்துள்ளார். பின்னர் தடுப்பூசி நல்லதுதான் என்றும்,  “வெளியில் 1,500 ரூபாய் செலவாகும்; நாங்கள் இலவசமாக போடுகிறோம்” என்று இவர்கள் தெருவில் அரசு பிரச்சாரம் செய்தது. முகாம் குறித்து பிரசுரம் வாங்கிய பின்னர்  தனது மகளை ஊசிபோட்டுக்கொள்ள அனுப்பிவைத்துள்ளார் அந்த ஏழைத்தாய்.

தமிழக அரசோ உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. முகாமில் மாணவர்களுக்கு ஏற்கனவே என்னென்ன  நோய்க்குறிகள் உள்ளது என்று விசாரிக்கவும் இல்லை; இந்த ஊசி போட்டபின் வரும்  பின்விளைவுகளையும், அதை எதிர்கொள்ள வேண்டிய எந்த ஒரு அணுகுமுறை குறித்து விளக்கவும் இல்லை. அரசு பொதுப்பிரச்சாரமாகவும் இதை கொண்டு செல்லவில்லை. பொதுவில் தடுப்பூசி போட்டால் வரும் காய்ச்சலுக்கான மாத்திரைகளைக்கூட தரவில்லை.

பொதுவாக ஒரு அரசு தன் குடிமக்களுக்கு தடுப்பூசி போட்டால் தொடர் கண்காணிப்பு செய்து  Post Margeting Surveillance Registry  எனும் பதிவேடை பராமரிக்க வேண்டும். நம் நாட்டில் எங்காவது இதை செய்துவருவதை பார்த்துள்ளோமா?

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் சிறுமிக்கு  “என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அது டெங்கு அல்லது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம்” என்றுதான் 10 நாட்களாக கூறிவந்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால் காமாட்சி இறந்தபின் மூளைக்காய்ச்சலால் சாவு என்று அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம். அதுவும்கூட மறுநாள் 05.04.17 அன்று வந்த செய்தித்தாளை பார்த்துதான் தெரிந்தது கொண்டார், தாய் ராமலட்சுமி.

“பத்து நாளா வைரஸ் காய்ச்சல்னு  கண்டுபிடிக்கிறதா சொல்லிட்டு இப்ப எப்படி  மூளைகாய்ச்சல்னு நியூஸ் தந்தீங்க” என்று சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். நிர்வாகத்தின் மழுப்பலால் சந்தேகம் வலுத்ததால் காமாட்சியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கினர்.

04.04.17 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் வழக்குரைஞர்கள் (அரிராகவனும், பால்முருகனும்) நேரில் சென்று விசாரித்தோம். தவறிழைத்த மருத்துவர்கள், முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் கட்டமாக ஒரு புகார் மனுவை தாய்  ராமலட்சுமியை அழைத்துச்சென்று மாவட்ட ஆட்சியரிடம் தர வைத்தோம்.

கலெக்டரோ “விஷயம் கேள்வி பட்டேன், டாக்டர் டீமை இந்த இறப்பு பற்றி விசாரிக்க நியமித்துள்ளேன் அவர்கள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு தான் இறப்பிற்கான காரணம் தெரியும் என்று சொன்னாம் மேலும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் வராது. மரணமும் வராது என்று கூறி விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் ஒரு “முடிவு”க்கு வந்துவிட்டார் என்று நாம் தெரிந்து கொண்டோம்.

எந்த பிள்ளைகளையும் இதை போன்று கொன்றுவிடாதீர்கள் என் மகளே கடைசியாக இருக்கட்டும்

நாம் மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வைக்க சிப்காட் காவல் நிலையத்தில் புகார் தந்தோம். புகாரை பெற்ற காவல்துறையோ மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக மரணம் நிகழ்ந்ததை அதற்குறிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய தயங்கினார். “DSP, மேலதிகாரிகளிடம் கேட்டுவிட்டுதான் முடிவெடுக்க முடியும்” என்று காக்க வைத்தனர். நாம் தொடர்ந்து முயற்சி செய்ததில் முடிவில் சந்தேக மரணமாக (CRPC பிரிவு 174ன் கீழ் நிலைய குற்ற எண் 85/2017 ல்) வழக்கு பதிவு செய்தனர்.

இரண்டாம் நாளில் (05.04.17 முற்பகலில்) DSP நம்மிடம் வந்து “பிரேத விசாரணை அறிக்கையில் கையெழுத்து போட பஞ்சாயத்தார் 4 பேர் வாங்க” என்றழைத்தார். அவர் நிரப்பப்படாத படிவத்தில் கையெழுத்து கேட்டார். நாம் படிவத்தை நிரப்பும் படியும், மாணவியின் தொடையில் சதை வெட்டியெடுக்கப்பட்டு பிளாஸ்டெர் ஒட்டப்பட்டுள்ளதை குறிப்பிடும்படியும் மேலும் உறவினர்களான பஞ்சாயத்தார் இந்த சாவுக்கு ரூபல்லா தடுப்பு ஊசி போட்டதுதான் காரணம் என்றும் கூறும் கருத்தை அதில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்வைத்தோம். அதன் பின்னரே மீண்டும் உடலை பரிசோதித்துவிட்டு நாம் கூறியபடி படிவத்தில் குறித்தனர்.

பிரேத பரிசோதனையை ஒரு மருத்துவர் அல்ல மருத்துவர்கள் குழுதான் செய்யவேண்டும்; அதை வீடியோ எடுக்கவேண்டும் என்றும்  மனுசெய்து நிபந்தனை வைத்தோம். அதை நிர்வாகம் ஏற்றதன் பேரில்  உறவினர்கள் கையெழுத்து போட்டனர். இதற்கிடையில் மருத்துவமனை நிர்வாகம் சதிகளில் இறங்கியது. காமாட்சியின் தாயாரை அழைத்துச் சென்ற செவிலியர்  “உங்க பிள்ளையோட கம்மலை தர்றோம். அதுக்கான அத்தாட்சி கையெழுத்து போடுங்க” என்றுள்ளார். ஆனால் ராமலட்சுமியோ “எங்க வக்கீல கேட்டுட்டு வர்றேன்” என்று கையெழுத்து போட மறுத்துவிட்டு வந்துவிட்டார். நாம் போய் கையெழுத்து போடச்சொன்ன பதிவேட்டை பரிசோதித்தோம். அதில் நகை குறித்து எதுவும் இல்லை. ஆனால் அதில் ஆங்கிலத்தில் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் (Body handed over to the relative), என்றும் தமிழில் எனது மகளின் உடலை பிணவரையில் வைக்க பெற்றுக்கொண்டேன் என்றும் எழுதியிருந்தனர். நாம் அதிர்ந்துபோனோம் ! இந்த அரசு எவ்வளவு  நேர்மையானது என்பதற்கான ஒரு உதாரணம் இது. நாம் சத்தம்போட்டவுடன் செவிலியர் அந்த பதிவேட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

அதன் பின்னர் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு காவல் துறை அனுப்பியது. பிரேத பரிசோதனை முடிந்தபின் உடலை ஒப்படைக்க வந்தது காவல்துறை. உடலை வாங்க உறவினர்கள் தயாரில்லை. கொடுத்த புகாரின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? ஏன் போலீசைத் தவிர எந்த அதிகாரியும் இதுவரை வரவே இல்லை? இதற்கு முடிவு தெரியாமல் உடலை வாங்க மாட்டோம் ! என்று அறிவித்தனர். வேறு வழியின்றி DSP போன் செய்து தாசில்தாரை வரவைத்தார். ஒரு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடந்தது.  “கலெக்டர் விசாரிக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன்  நடவடிக்கை எடுப்பார்.” என்றார் தாசில்தார். அவருடைய உத்திரவாதத்தை எழுதித்தரும்படி கேட்டோம். மறுத்துவிட்டார். நாம் மேற்கொண்டு பேசாமல் கலெக்டரே வந்து சொல்லட்டும் என்று முடித்துக் கொண்டோம். காமாட்சியின் உறவினர்களான DYFI இளைஞர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் உடன் நின்றனர். உடலை இரண்டாவது நாளும் நாம் வாங்கவில்லை.

மூன்றாம் நாள் (06.04.2017) கலெக்டரை பார்த்து விசாரிக்க நேரில் சென்றோம். அங்கு “கலெக்டர் இல்லை, கலெக்டர் வரமாட்டார், PA கிட்ட பேசுங்களேன்” என்று சிப்காட் உதவி ஆய்வாளர் நம்மிடம் கூறினார். நாம் PA கிட்ட பேச வரவில்லை  என்று கூறிவிட்டோம். ஒரு மணி நேரம் போனது. முதல்நாள் பேசிய அதே தாசில்தார் வந்தார். அவர் “சார் சப்-கலெக்டர் வந்திருக்கிறார் கலெக்டர் வர முடியாததால் கலெக்டரேதான் சப்-கலெக்டரை அனுப்பி இருக்கிறார் அவரிடம்  பேசலாம் அவரும் IAS தான்.” என்று அழைத்தார்.

பின்பு உறவினர்கள் ஒப்புதலுடன் நடந்த IAS தீபக் ஜேக்கப்புடனான பேச்சுவார்த்தையின்போது தாசில்தார், துணை தாசில்தார்கள் இருவரும், அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர். இவர் புதிதாக எதையும் சொல்லவில்லை. தடுப்பூசி போடும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை ஏன் மீறினீர்கள்? UNICEF, WORLD HEALTH ORGANISATION பெயரில்தான் கலெக்டர் தந்த முகாம் அழைப்பு அட்டை உள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலையே நீங்கள் மதிக்காதது ஏன்? என்றோம். “எனக்கே இப்படி தடுப்பூசி போட்டபின் கண்காணிக்கனும்ங்கற விதி தெரியாது. விசாரித்து நடவடிக்கை எடுக்கறோம்” என்றார் சப் கலெக்டர். உடன் வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கோ IAS களின் மீதான மதிப்பு சரிந்தது. அவர்களே வகுத்து கொண்ட விதிமுறைகளை அவர்களே மதிக்காமல் எதிராக தான் செயல்படுகின்றனர். இவ்வளவு தூரம் மனு தந்தும், 3வது நாளாக உடலை வாங்காமல் போராடியும் வரும் சூழலில் சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக ஆட்சி எவ்வளவு தரங்கெட்டுவிட்டது என்பதை உணர்த்துவதாக இந்த IAS ன் ஒப்புதல் வாக்குமூலம் இருந்தது.

ஒரு வாரத்திற்குள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் இன்று இரவே அதற்கான ஆணையை வெளியிடுகிறேன் என்ற உத்திரவாதம் தந்தார். மற்றபடி வீடு கட்டித்தருகிறேன். விதவைகள் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் கூறியதை மாணவியின் தாயார் அதை பொருட்டாக கூட எடுக்கவில்லை. சப்-கலெக்டரை பார்த்து கையை கூப்பி அடுத்து எந்த பிள்ளைகளையும் இதை போன்று கொன்றுவிடாதீர்கள் என் மகளே கடைசியாக இருக்கட்டும் என்று கண்ணீர் தழும்ப கோரிக்கை வைத்தார். அதன் பின் உடலை பெற்றுச் சென்று எரியூட்டினர்.

இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த சமூகமே போராடவேண்டிய மிக முக்கிய பிரச்சினை. தூத்துக்குடியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அம்மை என்று கோரத்தாண்டவம் ஆடிவருவதற்கும், ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் நம் முன் நிற்கிறது. விதிகளை மீறிய மருத்துவர்களின் அலட்சியம் மட்டுமல்ல, தேவையற்ற மருந்தை நம் உடலில் கட்டாயமாக திணிக்கும் அரசின் சதியும்தான் இப்போதைய முக்கிய பிரச்சினை. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் காமாட்சி இறப்பையும் அரசின் அலட்சியத்தையும் மக்கள் மத்தியில் உடனடியாக துண்டு பிரசுரம் மூலம் கொண்டு சென்றோம். மக்கள் விரோத அரசின் ரூபெல்லா தடுப்பூசியின் சதி திட்டங்களை எதிர்த்து களம்காண தயாராகி வருகிறது மக்கள் உரிமை பாதுக்காப்பு மையம்.

பத்திரிக்கைகளில் வந்த செய்தி

தகவல்
அரிராகவன்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி.


ரூபெல்லா தடுப்பூசி போட்டபின் வந்த காய்ச்சலுக்கு மாணவி காமாட்சி பலி!

  • நம்மை தடுப்பூசியை போடும்படி தொடர்ந்து வலியுறுத்தியும் கட்டாயமாக்கியும் தான் நிறைவேற்றிவருகிறது அரசு!
  • தடுப்பூசி போட்டபின் எவ்வித கண்காணிப்பையும் செய்யாமல் மக்களுக்கும் விழிப்புணர்வூட்டாமல் புறக்கணித்ததன் விளைவாகவே சிறுமி பலி !
  • அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் உண்மையை சொல்லவில்லை மருத்துவர்கள்.
  • முதலில் டெங்கு என்றனர் ! ஆனால் குழந்தை இறந்த பின் மூளைக்காய்ச்சல் என்று செய்தி வெளியிடுகின்றனர்.
  • உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டிய வழிமுறைகளை நம் மருத்துவத்துறை அமல்படுத்தவில்லை.
    2016ல் தமிழகத்தில் ரூபெல்லா பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு புள்ளிவிவரம் தருகிறது. இது உண்மைதானே!
  • இங்கு இருக்கும் நோயான டெங்கு, பன்றிக்காய்ச்சல், போன்றவற்றை தடுக்க தீவிர முயற்சி எடுக்காமல், இல்லாத ரூபெல்லாவுக்கு இவ்வளவு அக்கறை காட்டுவது சந்தேகத்தை தருகிறது.
    இந்த தடுப்பூசி மருந்தில் மனிதர்களின் ஹார்மோன் வளர்ச்சியை தடுத்து மலடாக்கும் மருந்து இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளதே!
  • அரசு தடுப்பூசியை இலவசமாக வாரிவழங்கி வரும் பில்கேட்சின் “ கேட்ஸ் மெலிந்தா பவுண்டேசனின்” கடந்தகால உதவிகள் மாணவர்களை சோதனைச்சாலை எலிகளாக்கிய சதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது!
  • “குழந்தையின் நகைகளை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் அழைத்துவிட்டு “குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டேன் என்று எழுதி வைத்ததில் கையெழுத்து கேட்பது எதைக் காட்டுகிறது?
  • நம் சந்தேகங்களுக்கு பதில்தர வேண்டிய அரசு காவல்துறை உடலை எரிக்க வைக்க மட்டுமே வழிகாட்டுவது எதனால்?
  • சிறுமி காமாட்சியின் மரணத்துக்கு நீதி கிடைக்க போராடுவோம்!
  • எந்த விதிகளையும் மதிக்காமல் நம் உயிருடன் விளையாடும் அரசின் அலட்சியத்துக்கு முடிவு கட்டுவோம்!

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தொடர்புக்கு 94435 84049

அடங்காத சுயமரியாதைச் சுடர் ஆறுமுகச்சாமி !

0
2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார்

க்தனாய் பாடவில்லை
சுயமரியாதை சித்தனாய்
கனகசபையில்
கனன்றெழுந்த உன் பாடல்,

எத்தனாய் திரிந்த
தீட்சிதக் கொட்டமடக்கி
அத்தனாய் வீற்றிருந்த
அம்பலத்தரசும்
உன்பலத்தால் ஆடியதை
உலகமே கண்டதய்யா
ஆறுமுகச்சாமி !

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார்

வேதியர் வடிவில்
நந்தனின் கனவில் வந்த
ஈசன்,
முதியவர் உருவில்
நீ முன்னேறியதைப் பார்த்து
ஜோதியில் கலக்காமல்
சுயமரியாதையில் கலந்தான்.

வாழ்ந்தால்
உம் போல் வாழ வேண்டும்
எந்த வடிவிலும்
இடையறாது போராட வேண்டும்.

பனித்த சடையும்
பவளம் போல் மேனியும்,
பார்ப்பனத் திமிருக்கெதிராய்
தெறித்த உன் சொல்லால்
தமிழினித்த உருவமாய்
தடுத்தாட் கொண்டாய்
ஆறுமுகச்சாமி !

எல்லோரும்
கடவுள் மேல்
பாரத்தை போடையில்,
கடவுள் பாரத்தை
உன் மேல்
போட்டுக்கொண்டாய் !

வியாபாரம் பார்த்த
வேதியக் கூட்டத்தை
தமிழ் தேவாரம் பாடி
தன்மானம் காட்டினாய்
தாவாரம் நின்று
தயங்கிய பக்தர்களுக்கு
சிற்றம்பல அவமானம் போக்கி
தமிழ் மானம் ஊட்டினாய் !

இரைஞ்சுதல்
இறை நெறி என்று
அடியார்கள் அடங்கையில்,
போராடுதல்
பொது நெறி
என எழுந்த உன் ஆளுமை
ஈசனுக்கும் வாய்க்கவில்லை !

சிவனடியார் ஆறுமுகச்சாமி
எவனடிக்கும் படியார்.
சிவனே
ஒரு தில்லைவாழ் அந்தணன்
என அவிழ்த்துவிட்டாலும்
சீறும்
சுயமரியாதை முடியார்.

ஆயிரம் முறை
ஆரியக் காட்டுமிராண்டிகள்
தள்ளிவிட்டாலும்
அம்பலத்தேற
மனம் ஒடியார்.

‘‍பொது தீட்சீதர்
கோயில் தனியார்’
எனும் அநீதிக்கெதிராக
அடங்கார்.
அய்யா ஆறுமுகச்சாமி
உம் போல் இனி யார் ?
விடையேறி  திருமேனியனுக்கும்
தமிழ் தடை உடைத்த கண்மணியே
நெற்றி‍யெல்லாம் திருநீறு
உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு
ஓயாதய்யா உன் போர் !

போற்றுதலுக்குரிய
உம் போராட்டக் குணம் பற்றி,
தமிழுணர்வின் சிற்சபை காட்ட
சுயமரியாதை அற்புதம் காட்ட
ஆயிரமாயிரம்
ஆறுமுகச்சாமிகள் வருவார் !

துரை. சண்முகம்