நாம் ஒன்றிணைய வேண்டிய தருணமிது., விவசாயிகள் தற்கொலை, வறட்சி, தண்ணீர் பஞ்சம் என தமிழகமே சுடுகாடாக மாறி வருகிறது. நமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காகவும் அரசின் அழிவுத்திட்டங்களுக்கு எதிராகவும் கொதித்து எழுந்துள்ளோம்.
போராடும் அனைவரும் ஒன்றிணைய முடியாதவாறு, எவ்வாறு மெரினாவையும், தமுக்கத்தையும், வ.உ.சி. மைதானத்தையும், முற்றுகையிட்டு தாக்கினரோ, அதே போல தமிழகம் முழுவதும் அதிரடிப்படையும், உளவுப்படையும் முற்றுகையிட்டுள்ளன. முக்கிய சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு போராடுவோர் தடுக்கப்படுகிறார்கள். நகரங்கள், கிராமங்கள் என்று பாராது தமிழகத்தின் அனைத்து முக்கியப் புள்ளிகளையும் போராட்டக்களமாக மாற்றுவதன் மூலம்தான் இந்த சதிகாரர்களையும் அடக்குமுறை சக்திகளையும் முறியடிக்க முடியும்.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, இயற்கை நீர் நிலைகளை அழித்து, டெல்டா மாவட்டங்களை குடிநீருக்கு அலையும் பாலைவனமாக்கியுள்ளனர். கீழே தள்ளியதோடு குழியும் பறிக்கும் விதமாக வளர்ச்சி என்ற பெயரால் மக்களுக்கு பேராபத்து விளைவிக்கும் நாசகரத்திட்டங்களைத் திணிக்கின்றனர்.
நாடு முழுவதுமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் மின் தேவைக்கான உற்பத்தி குவிமையமாக தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக நமது காட்டுவளம், கடல்வளம், நீராதாரம், அனைத்தையும் சூறையாடுகின்றனர். அதற்காக கடற்கரை நெடுக அணு உலைகள், அனல் மின் நிலையங்கள், நிறுவப்படுகின்றன. இவற்றின் கழிவுகளால் நீர், நிலம், காற்று அனைத்தும் நஞ்சாக்கப்படுகின்றன.
அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் 37 லட்சம் கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்திருக்கிறார்கள். சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்திருக்கிறது மத்திய அரசு. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து நாடகமாடுகிறது.
அமைதி வழியில், அறவழியில் அனைத்து வடிவங்களிலும் போராடி பார்த்துவிட்டோம். நம்மை நாமே வருத்தி கொள்ளும் போராட்டங்களுக்கு ஆளும் உணர்ச்சியற்ற பிண்டங்கள் அசைந்து கொடுக்கவில்லை. கொள்ளையே குறியாக செயல்படுகிறார்கள். மக்கள் போராட்டங்களை வரிசைகட்டி ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இனி என்னதான் செய்வது? டாஸ்மாக்கிற்கு எதிராக கோர்ட் மூலம் தீர்வுகாண முடியாது. அதனால் விளக்குமாறு, செருப்போடு போய்தான் போராட வேண்டும் என தாய்மார்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
விவசாயிகளை கொன்று, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குகிறார்கள். இனியும் சகிக்க முடியாது. சோறு சாப்பிடும் அனைவரும் பதில் சொல்ல வேண்டும். விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண இன்னும் எத்தனை விவசாயிகள் சாக வேண்டும்? மயிலே மயிலே என்றால் இறகு போடாது. வேறு வழியில்லை. புடுங்கிதான் ஆக வேண்டும்.
தனித்தனியான போராட்டங்களால் இனி தீர்வு காண முடியாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான, ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் எதிர்த்துப் போராட வேண்டும். இதற்கு மக்கள் போராட்டங்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். மக்கள் அதிகாரம்தான் ஒரே தீர்வு.
சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் இன்று (8.4.2017) பிற்பகல் 2.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் நாளை (9.4.2017) பிற்பகல் 3 மணியளவில், சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் அடக்கம் செய்யப்படும்.
தமிழ் உரிமைக்காகவும், தமிழ் மக்களின் வழிபாட்டுக்காகவும், தில்லை தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உடமையான தில்லைக் கோயிலை மீட்பதற்காகவும் இறுதி வரை போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களுக்கு இறுதி அஞ்சலி!
இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ் மக்கள் திரளாக பங்கு கொள்ளுமாறு கோருகிறோம்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு
பத்திரிகைச் செய்தி
தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய
சிவனடியார் ஆறுமுகசாமிக்கு எம் அஞ்சலி!
சிவனடியார் ஆறுமுகசாமி இன்று (8.4.2017) மதியம் இயற்கை எய்திவிட்டார். தில்லைக் கோயில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றி கண்ட எளிய மனிதர் அவர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அவர் வந்தார். தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடிய தன்னை தீட்சிதர்கள் கையை முறித்து கீழே தள்ளிவிட்டார்கள் என்ற அவரது முறையீடு கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவருக்குத் துணை நிற்க உறுதியளித்தோம்.
“தமிழ்நாட்டுக் கோயிலொன்றில் தமிழர்கள் தம் தாய்மொழியில் பாடி வழிபடக் கூடாது” என்று தடுக்கப்படும் அநீதியை தமிழகம் அறிந்திருக்கவில்லை. இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சென்றோம். அடுத்த நான்கு ஆண்டுகளில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, தமிழ் பாடும் உரிமைக்காக சிதம்பரத்தில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தியது. எல்லாப் போராட்டங்களிலும் முன் நின்றார் ஆறுமுகசாமி.
உயர் நீதிமன்றம் சென்றோம். “தேவார மூவரே சிற்றம்பலத்தில் நின்று பாடியது கிடையாது” என்று திமிர்வாதம் புரிந்தார்கள், தேவாரப் பதிகங்களை கரையானுக்கு இரையாக்கிய தீட்சிதர்கள். தடை பல தாண்டி தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டினோம். “பக்தர்கள் அனைவரும் சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடி வழிபடலாம்” என்று அறநிலையத்துறை ஆணை பிறப்பித்தது. அரசாணையின் படி பாடச்சென்ற சிவனடியாரை சிற்றம்பலத்தில் ஏற விடாமல், தீட்சிதர்கள் நடத்திய கைகலப்பையும், தாக்குதலையும் தொலைக்காட்சிகளில் கண்டு தமிழகமே கொதித்தது. அஞ்சிப் பணிந்தார்கள் தீட்சிதர்கள். ஆறுமுகசாமி சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடினார். தமிழ் வழிபாட்டுரிமை நிலைநாட்டப்பட்டது.
தில்லைக் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தீட்சிதர்களின் தனிச்சொத்தாக இருப்பதுதான் இத்தகைய அநீதிகளுக்கு காரணம் என்பதால், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான சட்டப்போராட்டத்தைத் தொடங்கினோம். வழக்கில் தீட்சிதர்களுக்கு எதிரான மனுதாரராக ஆறுமுகசாமி முன் நின்றார். “அறநிலையத்துறையிடம் தீட்சிதர்கள் கோயிலை ஒப்படைக்க வேண்டும்” என்று 2009 இல் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றோம்.
உடனே போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவிடம் முறையிட்டார்கள் தீட்சிதர்கள். சுப்பிரமணியசாமியின் தலையீட்டால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மிக விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் தீட்சிதர்களுக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் கள்ளத்தனமான ஒத்துழைத்தது ஜெ அரசு. கோயிலை தீட்சிதர்களுக்கே உரிமையாக்கி ஜனவரி 2014 இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி மனமுடைந்தார். இத்தகையதொரு அநீதியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க முடியும் என்ற அதிர்ச்சியை அவரால் தாங்கமுடியவில்லை.
சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எளிய மனிதர். எனினும், தில்லை தீட்சிதர்களின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றைக் கண்டு அவர் எப்போதும் அஞ்சியதில்லை. தான் நம்பிய இறைவனிடம் அவர் கொண்டிருந்த உணர்வு பக்தி. தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கெதிராக அவர் கொண்டிருந்த உணர்வு சுயமரியாதை. அந்த சுயமரியாதை உணர்வுதான் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டத்தில் அவரை இயக்கிச் சென்றது.
சிற்றம்பலத்தில் நின்று அனைவரும் தேவாரம் பாடும் அரசாணையைப் பெற்ற பின்னரும், தன்னைத் தவிர யாரும் அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லையே என்று அவர் பெரிதும் வருந்தினார். “போராடிப் பெற்ற உரிமை பயன்படுத்தப்படாத காரணத்தால் பறிபோய்விடக் கூடாதே” என்று கவலைப்பட்டு, தள்ளாத வயதிலும், தட்டுத்தடுமாறி மெள்ள நகர்ந்து சென்று, சிற்றம்பல மேடையேறி, தனது நடுங்கும் குரலில் பாடி வழிபட்டு வந்தார். நடக்கவே முடியாத நிலை எய்தும்வரை அவர் அயரவில்லை. அவர் போராடிப் பெற்ற உரிமையைப் பயன்படுத்துவதுதான் பக்தர்கள் அவருக்குச் செலுத்தக் கூடிய நன்றி.
குறிக்கோளில் வெல்லும் வரை அவர் ஓய்ந்ததில்லை. மற்றவர்களை ஓயவிட்டதும் இல்லை. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் காலம் இது. இயற்கை அவருக்கு ஓய்வளித்து விட்டது. நந்தனையும் வள்ளலாரையும் எரித்த அதிகாரமிக்க சக்திகளை ஒரு எளிய மனிதன் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டியவர் சிவனடியார் ஆறுமுகசாமி. அவரது மனத்திண்மையை வரித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
இவண்,
மருதையன், பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம். வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம். 8.4.2017
*******
(தில்லைக் கோவிலில் தமிழில் பாட முடியாது என்ற நிலையை சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள், ம.க.இ.க மற்றும் ம.உ.பா.மை உதவியுடன் மாற்றிய வரலாறு இது. இன்று அவரது மறைவை ஒட்டி அந்த போராட்ட வரலாற்றை நினைவுகூரும் பொருட்டு 2008-ம் ஆண்டில் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கே பகிர்கிறோம்)
2008 மார்ச் 2 -ஆம் நாளன்று காலை தில்லைச் சிற்றப்பல மேடையில் தமிழ் ஒலித்தது. கண்கள் மங்கி, கால்கள் தள்ளாடி, நடக்கும் ஆற்றலைக் கூட இழந்து விட்ட முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி, சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். “திலைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று பார்ப்பன அடிமைத் தொழில் செய்வதற்கு அந்த சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்தாகக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரத்தின் எந்த வரிகளை ஆறுமுகசாமி பாடினார் என்று யாருக்கும் கேட்கவில்லை. கலவரத்துக்கும் தீட்சிடப் பார்ப்பனர்களின் ஊளைச்சத்ததுக்கும் இடையில் அவர் அருகிலேயே நின்றிருந்த எமது தோழர்கள் கூட ஆறுமுகசாமியின் உதடு அசைந்த்தை மட்டும்தான் பார்க்க முடிந்த்து.
ஆனால் அவர் பாடினார். தில்லையிலிருந்து சிலநூறு கல் தொலைவில் இருந்த எமக்கு மட்டும் ஆறுமுகசாமியின் குரல் தெளிவாகக் கேட்டது. “தில்லைவாழ் அந்தணர்க்கு நான் அடியார் இல்லை… இல்லை… இல்லவே இல்லை…” என்று சிற்றம்பல மேடையில் நின்றபடி அந்த தில்லை நடராசனுக்கு அறிவித்திருக்கிறார் ஆறுமுகசாமி. அவர் உதடுகளிலிருந்து வெளிப்பட்ட சொற்கள் எவையாக இருந்த போதிலும் அவை உணர்த்தும் பொருளும் உணர்வும் இதுதான். இது மட்டும் தான்.
அவர் மனம் உருகிப் பாடவில்லை, பாடியிருக்கவும் முடியாது என்பதை தொலைக்காட்சியில் அந்த நிகழ்வைப் பார்க்காத அறிவிலிகளும் கூடப் புரிந்து கொண்டிருக்க முடியும். அவர் மனம் குமுறிக் குரல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அங்கே நடந்தது ‘வழிபாடு’ அல்ல, போராட்டம்!
‘சைவ மெய்யன்பர்கள் மனமுருகித் தமிழில் பாடி இறைவனை வழிபடுவதற்கான உரிமையை வழங்குவதாக’ கூறும் அந்த அரசாணையின்படி சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை நடராசனை ‘வழிபடவில்லை’. வழிபட முடியவும் இல்லை. அங்கே நடந்தது போராட்டம். போராட்டம் மட்டும் தான். அங்கே ஒலித்தது தமிழே அன்றித் தேவாரம் அல்ல. அங்கே நின்ற ஆறுமுகசாமி போராளியே அன்றி பக்தர் அல்ல.
நேர்ப்பொருளிலும் இது தான் உண்மை. ஆறுமுகசாமி வாய் திறந்தவுடனே கருவறையை இழுத்து மூடிவிட்டு நந்தியாய் நடராசனை மறைத்து நின்று கொண்டார்கள் தீட்சிகர்கள். அன்று நடராசனைக் காணவிடாமல் நந்தனை மறைத்தது கூட உயிரற்ற கல்லான நந்தியல்ல, உயிருள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் காட்சியை, நம் கண்முன்னே கொண்டுவந்ததன் மூலம், வரலாற்றை இன்னொரு முறை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டினார்கள் தீட்சிதர்கள்.
ஆம்! இது ஒரு வரலாற்றுச் சாதனை. நந்தனையும், பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் ஜோதியில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள் “அந்தத் தில்லைக் கூத்தனே மூவாயிரமாவது தீட்சிதந்தான்” என்று இறுமாப்போடு பிரகடனம் செய்து அதை இன்றுவரை நிலைநாட்டிவரும் தீட்சிதர்கள், எந்த வித பட்டாவோ பாத்தியதையோ இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஆலயத்தின் சொத்துக்களுக்கு பாத்தியதை கொண்டாடி வரும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தை பிணம் மறைக்கும் கொளைக்களமாகவும், ராஜகோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிகர்கள்,
பிரதமர்கள், முதல்வர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் இன்றளவும் தம் சிண்டின் நுனியிலே முடிந்து வைத்திருக்கும் தீட்சிதர்கள், கொலை – கொள்ளை முதலான எந்தக் குற்றங்களுக்காகவும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படாத தீட்சிதர்கள் – இன்று கடலூர் சிறையில் களி தின்று கொண்டிருக்கிறார்கள்.
எந்தச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்கவிடாமல் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்களோ அதே மேடையில், அவர்களால் அடித்து வீழ்த்தப்பட்ட அதே ஆறுமுகசாமி யானை மீதேறி சிற்றம்பல மேடையில் வந்து இறங்கினார். தீட்சிதர்களோ, அதே இடத்தில் தூக்கி வீசப்பட்டார்கள்.
இது இறுதி வெற்றியல்ல, முதல் அடி மட்டுமே என்பதென்னவோ உண்மைதான். ஆனால் முதல் அடி என்றாலும் அவர்கள் முகத்தில் விழுந்த அடி. முன் எப்போதும் விழுந்திராத அடி. ஆனானப்பட்ட மாமன்னன் இராசராசனையே ஆட்டிப்படைத்த தீட்சிதர்கள், ஆறுமுகசாமி எனும் ஏதுமில்லாப் பரதேசியால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறார்களே, எப்படி? இது ஆண்டவனின் அனுக்கிரகமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எனில் இது என்ன அரசாங்கத்தின் அனுக்கிரகமா? அரசாங்க முட்டைதான் அம்மியை உடைத்திருக்கிறதா? அப்படித்தான் கூறுகின்றன இதுவரை ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.
சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம் என்று திமுக அரசு ஆனையிட்டதாம். தடுத்து நின்ற தீட்சிதர்களைத் தூக்கி வீசிவிட்டு அரசாணையை அமல்படுத்திவிட்டதாம் போலீசு. “தீட்சிதர்கள் – போலீசு கைகலப்பு” பிறகு “ஆறுமுகசாமியின் ஆதரவாளர்கள் – போலீசு கைகலப்பு”, “தீட்சிதர்கள் 11 பேர், ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 35 பேர் – ஆக மொத்தம் 46 பேருக்கு சிறை!” இறுதியில் போலீசு வென்றது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது! – இது தான் தில்லைப் போராட்டம் பற்றி ஊடகங்கள் அளித்துள்ள சித்திரம்.
நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுகசாமிக்குத் துணை நின்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.
இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய எமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூற வேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்களை மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள் தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச்2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடைகண்டுவிடமுடியும்.
நீண்ட நெடிய போராட்டம் நடத்தி அதன் இறுதியில் அரசாங்கத்தின் வாயிலிருந்து நாங்கள் வரவழைத்ததுதான் இந்த அரசாணை. மார்ச் 1-ஆம் தேதி அரசாணையின் நகல் கையில் கிடைத்தவுடனே “மார்ச் 2-ஆம் தேதி ஆறுமுகசாமி பாடுவார்” என்று அறிவித்தோம். சுமார் 300 தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால், வெறும் 30 பேரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்து மற்றவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீசு. சுற்றுவட்டாரத்து மக்களும் பிற அமைப்பினரும் பல நூறு பேர் திரண்டு வர விரும்பினர். ஆனால் அவர்களை அச்சுறுத்தி அப்புறப்படுத்தும் வண்ணம் நகரத்தையே வெள்ளை வாகனங்களால் போலீசு நிரப்பியது.
கோயிலுக்குள்ளே நூற்றுக்கணக்கான போலீசார், வெறும் 30 தோழர்கள்! இந்த ஏற்பாடுகள் எல்லாம் யாரைப் பாதுகாக்க? தமிழுக்குப் போராடச் சென்ற தோழர்களைப் பாதுகாக்கவா, அல்லது தமிழ் விரோதிகளான தீட்சிதர்களைப் பாதுகாக்கவா?
சூழ்ச்சிகரமான இந்த போலீசு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் செஞ்சட்டைகளால் சூழப்பட்டிருக்க வேண்டிய சிற்றப்பல மேடை, காக்கிச்சட்டைகளால் நிரம்பியிருந்தது. பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கும் நடந்திருக்க வேண்டிய போராட்டம், போலீசுக்கும் தீட்சிதர்களுக்குமான கைகலப்பாக மாற்றப்பட்டது. ‘பார்ப்பானையும் பாதுகாப்பது, தமிழையும் பாதுகாப்பது’ என்ற கேலிக்குரிய கொள்கையின் கோமாளித்தனமான காட்சி வடிவம் தான் அன்று சிற்றம்பல மேடையிலிருந்து உலகத்துக்கே ஒளிபரப்பப்பட்டது.
காக்கிச் சட்டைகளின் இடத்தில் செஞ்சட்டைகள் சூழ்ந்து நிற்கும் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்! அது மட்டும் நிகழ்ந்திருந்தால் வேறு சில அதிசயங்களும் நிகழ்ந்திருக்கும். ஆறுமுகசாமி வெறும் அரை நிமிடம் பாடியிருக்க மாட்டார். அந்தத் தில்லைக் கூத்தனே தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, ஆறுமுகசாமியின் முன் பிரசன்னமாகி, ‘போதும் பக்தனே போதும்’ என்று கதறும் வரையில் ஆறுமுகசாமியை நாங்கள் பாடவைத்திருப்போம். சிற்றம்பல மேடையில் கொஞ்சம் இரத்தமும் சிந்தியிருக்கக் கூடும். அதனாலென்ன, நூற்றாண்டுகளாய் அங்கே சிந்திய இரத்தத்தின் கறையைக் கழுவுவதற்கு அது பயன்பட்டிருக்கும்.
சிற்றம்பல மேடையில் தீட்சிதர்களுடன் போலீசு மல்லுக்கட்டுவதைப் போன்ற காட்சி ஒளிபரப்பானதே, அந்தக் காட்சிதான் ‘கண்ணால் காண்பது பொய்’என்ற முதுமொழிக்கு மிகப் பெரும் சான்று. தீட்சிதர்களிடமிருந்து தமிழைப் பாதுகாப்பதற்கு அல்ல, எமது தோழர்களிடமிருந்து தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஆயிரக்கணக்கில் அங்கே போலீசு குவிக்கப்பட்டிருந்தது.
……………………………………………
இதை நம்ப மறுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்காகவே இரண்டாவது காட்சி தில்லைக் கோயிலின் வாசலில் அன்று மாலையே அரங்கேறியது. “சிற்றம்பல மேடையில் 2 வரிகள் கூடத் தேவாரம் பாட இயலவில்லை. எனவே, அரசு ஆணையின்படி சிற்றம்பல மேடையில் அமைதியாக தேவாரம் பாடி வழிபட காவல்துறை வழி செய்யவேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் 30 பேர்மீது கொலைமுயற்சி மற்றும் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்” என்று கோரினார் ஆறுமுகசாமி. அவரது தலைமையில் எமது தோழர்கள் தெற்கு வாயிலின் முன் மறியல் நடத்தினர்.
“நீங்கள் கலைந்து செல்லாத வரை தீட்சிதர்கள் மீது நீங்கள் கொடுத்துள்ள புகாரை வாங்கமுடியாது” என்றனர் போலீசு அதிகாரிகள். “ஆறுமுகசாமி பாடுவதற்கு உத்திரவாதம் அளித்தால் கலைந்து செல்கிறோம்” என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு கூறினார். ஆனால் “அதற்கெல்லாம் எந்த உத்திரவாதமும் தரமுடியாது, கலைந்து செல்லுங்கள்” என்றார் ஆர்.டி.ஓ. “மீண்டும் பாட அனுமதிக்கும் வரையில் அமைதியாக ஆலயத்தின் வாயிலிலேயே அமர்ந்திருப்போம் கலைந்து செல்ல முடியாது” என்று ஆறுமுகசாமியும் அனைத்து தோழர்களும் ஒரே குரலில் கூறினர்.
உடனே, பின்புறத்திலிருந்து மர்மமான முறையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அடுத்த கணமே கூட்டத்தினர் மீது போலீசார் தடியடித் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிவப்புச் சட்டை அணிந்த எங்களது தோழர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் சிதறிக் கலைந்தவர்களையும் தெருத்தெருவாக விரட்டி விரட்டித் தாக்கியது போலீசு. இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாத காட்சி. இதற்கு சிதம்பரம் நகர மக்கள்தான் சாட்சி.
சிற்றம்பல மேடையில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பிடித்துத் தள்ளுகிறான் ஒரு தீட்சிதன். பத்திரிக்கைகளில் புகைப்படங்களே வெளிவந்திருக்கின்றன. “போலீசு அதிகாரிகளை தீட்சிதர்கள் தண்ணீர் பாக்கெட்டால் அடித்தார்கள், கடித்துக் குதறினார்கள், தாக்கினார்கள்” என்று கண்ணால் கண்ட பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் சாந்த சொரூபிகளாக, சட்டையைக் கழற்றிவிட்டு நோகாமல் அணைத்து தீட்சிதர்களையும் வெளியேற்றுகிறார்கள் போலீசுக்காரர்கள்.
அதே போலீசு அன்று மாலை தோழர்கள் மீது தடியடி நடத்தும் காட்சியும் தொலைக்காட்சிகளில் சிறிதளவு ஒளிபரப்பானது. ஒரு தோழரை 4 போலீசார் சுற்றிக் கொண்டு மண்டையில் அடிக்கின்றனர். வயிற்றில் லத்தியால் குத்தி அவரைக் கூழாக்குகின்றனர். இது மாலையில் போலீசின் நடத்தை!
‘சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி தமிழுக்கு ஒரு நீதி’ என்பதைக் களைவதற்காகப் போடப்பட்ட ஒரு அரசாணை! அதனை அமல் படுத்தக் கோரினால் ‘சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி’ என்ற அதைவிடப் பெரிய அரசாணை அம்பலமாகிறது! “தமிழ் பாடலாம்” என்று ஆணையிடுகிறது அரசு. “அதை அமல்படுத்த உத்திரவாதம் தரமுடியாது” என்று அந்தக் கோயிலின் வாசலிலேயே நின்று பிரகடனம் செய்கிறார் ஆர்.டி.ஓ. “அமல்படுத்து” என்று கேட்ட எமது தோழர்கள் போலீசு வேனுக்குள் இரவு முழுவதும் வைத்துப் பூட்டப்படுகிறார்கள்.
மார்ச் 2-ஆம் தேதி காலையில் யானை மீது ஏறி தில்லை நகர வீதிகளில் நாயகனாகப் பவனிவந்த ஆறுமுகசாமி அன்று மாலையே ‘அவருக்கு உரிய’ இடத்துக்கு தள்ளப்பட்டு விடுகிறார். “எனக்காகப் போராடிய பிள்ளைகளை அடித்துக் கைது செய்தாயே, என்னையும் கைது செய்!” என்று தன்னந்தனியனாக போலீசு நிலையத்தின் முன் மறியல் செய்கிறார். காலையில் சிற்றம்பல மேடையில் போராட்டம்! மாலையில் போலீசு நிலையத்தின் முன் போராட்டம்!
பார்ப்பனத் திமிரையோ, போலீசின் அராஜகத்தையோ, இந்த அரசின் இரட்டை வேடத்தையோ அம்பலப்படுத்துவதற்காக மட்டும் இவற்றையெல்லாம் விவரிக்கவில்லை. இதுவரை விவரிக்கப் படாத ஒரு கொடுமையை, பலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு எதார்த்தத்தை, நந்தனின் உள்ளத்தை எரித்திருக்கக் கூடிய அந்த உண்மையை வாசகர்கள் உணரச் செய்வதற்காகத்தான் இவற்றை விவரித்தோம்.
……………………………………………..
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நுழையக்கூடாத கோயிலுக்குள் நுழையக் கனவு கண்ட நந்தனை ‘கிறுக்கன்’ என்று அவனுடைய சொந்த சாதிகாரர்களே ஏளனம் செய்திருக்கக் கூடும். ‘திமிர் பிடித்த மூடன்’ என்று பார்ப்பன உயர்சாதிக்காரர்களே ஏளனம் செய்திருக்கக் கூடும். கேட்பாரில்லாத அநாதையாய் அவன் அந்த ஆலையத்தின் வாயிலில் எரிந்திருக்கக் கூடும்.
நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. அரசும் ஆணையிட்டு விட்டது. ஆனால் மார்ச் 2-ஆம் தேதி மாலை தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலில், எமது தோழர்கள் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிக் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நந்தனைப் போலவே, கேட்பாரற்ற அநாதையாக, நந்தன் எரிந்த அதே வாயிலில் ஆறுமுகசாமியும் அமர்ந்திருந்தார். ‘என்னை எரித்துக் கொல்’ என்று நந்தன் பார்ப்பனர்களிடம் மன்றாடவில்லை. ஆறுமுகசாமியோ ‘என்னைக் கைது செய்’ என்று போலீசிடம் போராடினார். நீதிமன்றத்தில் மன்றாடினார். ஏனென்றால் நாங்கள் அகற்றப்பட்டபின் அவருக்குத் துணை நிற்க அங்கே யாரும் இச்லை. தமிழுக்குத் துணை நிற்க ஒரு தமிழனுமில்லை. பக்தனுக்குத் துணை நிற்க ஒரு பக்தனுமில்லை.
ஆறுமுகசாமி என்ற எஃகுறுதி மிக்க ஒரு கிழவனை முன்னிறுத்திப் போராடித் தமிழ் பாடும் உரிமையை நாங்கள் பெற்றோம். அரசாணை வந்ததை உலகறியும். அன்று காலை ஆறுமுகசாமி பாடப் போகிறார் என்பதை அந்த மாவட்டமே அறியும். தில்லைக் கோயிலைச் சுற்றியிருக்கும் ஆதீனங்கள் எத்தனை? தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்…! எல்லாம் ஏக்கர் கணக்கில் தமிழ் வளர்த்த ஆதீனங்கள்! தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்கள்! ஆறுமுகசாமியோ நெய்யைக் கண்ணாலும் கண்டறியாத ஒரு பரதேசி.
தில்லையைச் சுற்றித்தான் எத்தனை ஓதுவாமூர்த்திகள்! சைவத் திருமறை வளர்க்கத்தான் எத்தனை மன்றங்கள்! எத்தனை புலவர்கள், அறிஞர்கள், விழாக்கள், பட்டங்கள், விருதுகள்! வாய்க்கு வாய் ‘திருச்சிற்றம்பலத்தை’ மென்று துப்பும் உதடுகள்! ஆனால் உதைபட்டவர்களோ நெற்றி நிறைய நீரணிந்த பக்கர்கள் அல்ல. திருமறையில் ஒருவரியைக் கூட ஓதியறியாத செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள்!
எங்கள் பெருமையை எடுத்தியம்புவதற்காக இவற்றைக் கூறவில்லை. தமிழகத்தின் சிறுமையை எண்ணி மனம் நொந்ததனால் கூறுகிறோம். நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பலமேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்கமுடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்கமுடியாது.
கருணாநிதி அரசின் இடத்தில் ஜெயலலிதாவின் அரசு இருந்திருக்குமானால் இப்படியொரு அரசாணையே வந்திருக்காது. உண்மைதான். ஆளும் இந்த அரசாங்கங்களிடையே வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆளப்படும் மக்கள்? ஒருவேளை இப்படியொரு அரசாணை வந்திருக்கவில்லையென்றாலும், தமிழகம் குமுறிக் கொந்தளித்து எழும்பியிருக்கப் போவதில்லை. கசப்பானதுதான், எனினும் இதுதான் உண்மை.
இந்த உண்மையைத்தான் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்கள் தீட்சிதப் பார்ப்பனர்கள். “யாருக்கும் பிரச்சினை இல்லை, இவர்கள் மட்டும்தான் பிரச்சினை செய்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். தீட்ச்சிதன் வாயிலிருந்து வந்தாலும் உண்மை உண்மைதானே!
இந்த உண்மையின் காரணமாகத்தான் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவர் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறலாமென்ற அரசாணை வந்தபிறகும், தமிழர்கள் கிடைக்காமல் அந்த மேடை தவித்துக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும் ஆறுமுகசாமியின் போராட்டத்தைத் தொடர்வதற்கு அடுத்தொரு ‘சாமி’ வரவில்லையென்றால், எந்தச் சாமியின் மீதும் பூததின் மீதும் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அந்த மேடைமீது ஏறிநின்று “உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” என்று பாட வேண்டியிருக்கும். அது இன்னொரு வரலாற்றுச் சாதனையாக அமைய நேரிடும்.
அத்தகையதொரு ‘சாதனை’ தமிழகத்துக்கு நிச்சயம் பெருமை சேர்க்காது. எங்களுக்குச் சிறுமையும் சேர்க்காது.
சமீபத்தில் தோழர் ஒருவரது நண்பருக்கு திருமணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட சிறு நகரத்தில் நடைபெற்ற திருமணம் அது. மணமக்கள் விவசாயப் பின்னணியைக் கொண்டவர்கள். மணமகனுக்கு சென்னையில் வேலை. மணமக்கள் குடும்பத்தினருக்கு நேரடியாக எமது அரசியல், பத்திரிகைகள், அமைப்புக்கள் பரிச்சயம் கொண்டவர்கள் அல்ல. மணமகனின் நண்பரான அந்த தோழர் அவ்வப்போது அவரிடம் அரசியல் பேசுவதோடு சரி.
இருப்பினும் இந்த திருமணத்திற்கு வருகை தருவோருக்கு மணமக்கள் சார்பில் புதிய கலாச்சாரம் புத்தகங்களை பரிசாக வழங்கலாமே என்று கேட்டதும் ஒத்துக் கொண்டார். அவ்வண்ணமே திருமணத்திற்கு வந்த மக்களுக்கு அவரது சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அனைவரும் வித்தியாசமான இந்த பரிசை விரும்பி வாங்கினர். எனினும் நண்பர் தீர்மானித்திருந்த எண்ணிக்கை விரைவிலேயே காலியாகி பலர் புத்தகங்கள் கிடைக்கவில்லையென வருத்தப்பட்டனர்.
வழக்கமாக தாம்பூலப்பை வழங்கப்படும் இத்தகைய திருமணங்களில் இப்படியும் ஒரு பரிசு கொடுக்கலாம். முற்போக்கு முகாமில் மணம் செய்வோருக்கு இது அறிமுகமாகியிருக்கலாம். அதிலும் மண நிகழ்வில் கலந்து கொள்வோர் மணமக்களுக்கு பரிசளிக்கும் விதமாக புத்தக விற்பனை செய்யப்படும். கூடவே வருவோர் அனைவருக்கும் இத்தகைய முற்போக்கு நூல்களை வழங்குவது இன்னும் சிறப்பு.
ஏனெனில் பெரும்பாலான மக்கள் அனைவரும் இன்னும் நேரடியான அரசியல் அமைப்புக்கள், கருத்துக்கள், நூல்களுக்கு வெளியேதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புரட்சிகர அரசியல் மற்றும் பண்பாட்டை அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கலாம்.
குறிப்பிட்ட தலைப்பில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு கட்டுரைகளை தொகுத்து அழகிய நூலாக்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறோம். இந்த ஏப்ரல் 2017 வரை 22 நூல்களை வெளியிட்டுள்ளோம்.
இருபது ரூபாய் விலையில் எண்பது பக்கங்களில் மேப்லித்தோ தாளில், ஃபெர்பெக்ட் பைண்டிங், மேட் லேமினேசன் ஆர்ட் பேப்பர் அட்டையுடன் அழகிய புத்தகமாக வெளிவருகிறது புதிய கலாச்சாரம். இத்தகைய கட்டமைப்பில் ஒரு நூலை இந்த விலையில் நீங்கள் எங்கேயும் வாங்க முடியாது. அச்சிடும் செலவை மட்டும் விலையாக வைத்து இந்த நூல் வெளியாகிறது என்றால் மிகையல்ல. தற்போது தாள்கள் விலை, அச்சக கட்டணங்கள் உயர்ந்திருந்தாலும் அதே இருபது ரூபாயில் தொடர்ந்து வெளிவருகிறது புதிய கலாச்சாரம்.
இது வரை வெளிவந்த 22 நூல்களும் 22 விதமான தலைப்புகளில் செறிவான கட்டுரைகளை கொண்டிருக்கின்றன. சினிமா விமரிசனம், பெப்சி கோக், குப்பை உணவு, எது காதல், மீடியாவை நம்பலாமா, விவசாயத்தின் அழிவு, மாட்டுக்கறி துவேசம் என சமகால அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த நூல்கள் பேசுகின்றன.
ஆகவே தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம். கைவசம் இருக்கும் நூல்களின் இருப்பை வெளியிட்டுள்ளோம். அதிலிருந்து உங்கள் தலைப்புக்களை தெரிவு செய்யலாம். அவை ஒரே தலைப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எவ்வளவு வேண்டுமானலும் (இருப்பைப் பொறுத்து) வாங்கிக் கொள்ளலாம்.
ஏற்கனவே வெளிவந்த நூல்களில் குறைந்தபட்சம் 500 படிகள் வாங்குவதாக இருந்தால் அதை மீண்டும் அச்சடித்து தருவோம். சில நூல்களை திருமணங்களைத் தாண்டி பள்ளிகள், கல்லூரிகள், ஊர்க்கூட்டங்களிலும் விநியோகிக்கலாம். தேவைப்படுவோர் உடன் தொடர்பு கொள்க.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி
புதிய கலாச்சாரம்
மே 2015
விலை: ரூ.20
கையிருப்பு : 18 புத்தகங்கள்
குற்றங்களின் அம்மா
புதிய கலாச்சாரம்
ஜூன் 2015
விலை: ரூ.20
கையிருப்பு : 148 புத்தகங்கள்
பன்றித்தீனி
புதிய கலாச்சாரம்
ஜூலை 2015
விலை: ரூ.20
கையிருப்பு : இல்லை
டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்
புதிய கலாச்சாரம்
ஆகஸ்ட் 2015
விலை: ரூ.20
கையிருப்பு : 22 புத்தகங்கள்
அறிவியலா ? இறையியலா ?
புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2015
விலை: ரூ.20
கையிருப்பு : 18 புத்தகங்கள்
எது காதல் ?
புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2015
விலை: ரூ.20
கையிருப்பு : 20 புத்தகங்கள்
ஊடகங்களை நம்பலாமா ?
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2015
விலை: ரூ.20
கையிருப்பு : 80 புத்தகங்கள்
ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2015
விலை: ரூ.20
கையிருப்பு : 233 புத்தகங்கள்
அகதிகளா தலித் மக்கள் ?
புதிய கலாச்சாரம்
பிப்ரவரி 2016
விலை: ரூ.20
கையிருப்பு : இல்லை
காவி பயங்கரவாதம்
புதிய கலாச்சாரம்
மார்ச் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : இல்லை
பெண் : வலியும் வலிமையும்
புதிய கலாச்சாரம்
மார்ச் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : இல்லை
தொழிலாளி : வியர்வையின் மணம்
புதிய கலாச்சாரம்
ஜுன் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : 100 புத்தகங்கள்
அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ?
புதிய கலாச்சாரம்
ஜுலை 2016
விலை: ரூ.20
கையிருப்பு : 100 புத்தகங்கள்
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி !
புதிய கலாச்சாரம்
ஆகஸ்ட் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : 108 புத்தகங்கள்
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா…
ஹீரோவா ஜீரோவா…?
புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : 126 புத்தகங்கள்
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : 211 புத்தகங்கள்
நுகர்வு – கழிவு – பண்பாடு
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : 210 புத்தகங்கள்
விடாது கருப்பு – மோடியின் கபட நாடகம்
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2016
விலை: ரூ.20
கையிருப்பு : 40 புத்தகங்கள்
மோடியின் டிஜிட்டல் பாசிசம்
புதிய கலாச்சாரம்
சனவரி 2017
விலை: ரூ.20
கையிருப்பு : 104 புத்தகங்கள்
விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா ?
புதிய கலாச்சாரம்
பிப்ரவரி 2017
விலை: ரூ.20
கையிருப்பு : 161 புத்தகங்கள்
எதிர்த்து நில் !
புதிய கலாச்சாரம்
மார்ச் 2017
விலை: ரூ.20
கையிருப்பு : 330 புத்தகங்கள்
கோக் – பெப்சி : கொலைகார கோலாக்கள் !
புதிய கலாச்சாரம்
ஏப்ரல் 2017
சத்தியபாமா பல்கலைக் கழகத் தொழிலாளிகள் போனஸ் வழக்கு உயர்நீதிமன்ற தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வெற்றி !
சென்னை செம்மஞ்சேரி OMR சாலையில் இயங்கிவரும் ஜேப்பியாருக்குச் JPR சொந்தமான சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் மாணவ – மாணவிகளை ஏற்றிவரும் வாகன ஓட்டுநர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் மற்ற பல்கலைக்கழக ஊழியர்கள் என அனைவரையும் நிர்வாகம் கொத்தடிமைகளாக நடத்தி வந்தது. இவர்களுக்கு தொழிலாளர் தகுதிகள் ஏதுமின்றியும், உரிமைகள், தற்காலிக விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு என எதுவும் முறைப்படி வெளிப்படையாக அறிவிக்காமல் நடத்தியது நிர்வாகம். தனக்கு ஏற்படும் தற்செயல் பிரச்சினைகளுக்குக் கூட விடுப்பு எடுக்க இயலாமல் இதுபற்றி கேட்கவும் முடியாமல், கேட்பாரற்ற நிலையில் இந்தத் தொழிலாளிகள் இருந்தனர்.
கல்வி கொள்ளையன் ஜேப்பியார்
இந்த கொத்தடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு தொழிற்சங்கத்தைத் தொடங்க முடிவு செய்தார்கள் தொழிலாளிகள். இதற்காக 2006 இல் பெருங்குடி வட்டார CITU தொழிற்சங்கத்தை அணுகி கேட்டபோது, அவர்கள் உங்கள் நிர்வாகம் தொழிற்சாலை நடத்தவில்லை, கல்வித் தொழில் செய்கிறார்கள். அது சேவைக்குரிய தொழில் என்பதால் அங்கு தொழிற்சங்கம் கட்ட முடியாது என அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். இப்போது CITU-வும் சில கல்வி நிறுவனங்களில் தொழிற்சங்கம் கட்டிச் செயல்படுகின்றனர்.
இதை ஏற்க மறுத்தத் தொழிலாளிகள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிடம் வந்தனர். இவர்கள் பிரச்சினையைக் கேட்டு சங்கம் சேரலாம் என உணர்வூட்டி உறுப்பினராக்கியது புஜதொமு. பிறகு, புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம் என பதிவு எண் 3103/CNI என்ற சங்கத்தைப் பதிவு செய்து இதன் மூலம் நிர்வாகத்திற்கு கோரிக்கைகளைக் கொடுத்தது.
இதனால் கொதிப்படைந்த சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சேர்மன் திரு. ஜேப்பியார் அவர்கள் சங்கத்தின் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியனை தடாலடியாக வேலைநீக்கம் செய்து தொழிலாளர்களை பணியவைத்து தொழிற்சங்கத்தை கலைக்க முற்பட்டார். இருந்தும் மற்ற நிர்வாகிகள் மூலம் சங்கம் உறுதியாக நின்றதால் அடுத்த கட்டமாக ஆத்திரம் கொண்டு சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னணியாளர்கள் என 20 தொழிலாளிகளை தொடர்ந்து சட்டவிரோத வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். இதன் பேரில் தொழிலாளர் ஆணையத்தில் தாவா எழுப்பியதும் முன்னுக்குப் பின் முரணாக அனைவர் மீதும் கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு புகார்களை ஜோடித்து, உள்துறை விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றினார்கள். தொழிலாளர்களை சங்கமாக்க வேண்டாமென்று பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த ஜேப்பியார் அவர்கள் சுயநிதி கல்லூரி முதலாளிகளின் சங்க செயலாளராக இருந்தார். இப்பொழுது அவரது சகபாடியான RMK & RMD கல்விக் குழும முதலாளி திரு. R.முனிரத்தினம் என்பவர் செயலாளராக செயல்படுகிறார். இவரது கல்லூரிகளிலும் தொழிலாளர் மீதான அனைத்து அடக்குமுறைகளும் கட்டமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
உள்துறை விசாரணை அதிகாரிகள் அனைவரும் தொழிலாளர் நலத்துறையில் ACL, DCL, JCL என்ற பதவிகளில் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு தம்பிதுரை (ACL ஓய்வு). திரு அருணாச்சலம் (ACL ஓய்வு), திரு சந்திரமோகன் (JCL ஓய்வு), திரு ரவீந்திரன் (JCL ஓய்வு) ஆகியோர் ஆவர். இந்த தொழிலாளர் நலத்துறை ஆணையர்கள் மூலம் தொழிலாளிகள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்து வேலைநீக்கம் சரியென உறுதி செய்தார்கள். தொழிலாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் இந்த மேற்படி அதிகாரிகளின் ஆலோசனைப்படியே ஜோடிக்கப்பட்டவை. தாங்கள் ஜோடித்தவைகளையே அவர்கள் நிரூபிக்கப்பட்டதாக தீர்வு எழுதினார்கள். இவர்கள் இந்த நிர்வாகம் மட்டுமின்றி இதுபோன்ற சுயநிதி கல்லூரிகள், தொழிற்சாலை முதலாளிகள் என முதலாளிகளுக்கு ஆலோசகர்களாக இருந்து தொழிலாளர்களின் உரிமைப்பறிப்புக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். மேற்கண்ட துரோகிகள் இன்னாள் தொழிலாளர் நலத்துறை ஆணையர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும்படியான தரகு வேலைகள் செய்து வருகின்றனர்.
தொழிலாளிகள் மீது நிரூபித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது. இதில் முதல் வழக்கான தோழர் வெற்றிவேல் செழியன் வேலைநீக்கம் தவறானது என தொழிலாளர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் பின் சம்பளத்துடன் பணி வழங்க ஆணையிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலைக்கு எடுத்துக்கொண்ட நிர்வாகம் தோழருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் வெறுமனே மரத்தடியில் உட்கார வைத்தது. அது மட்டுமின்றி மற்ற தொழிலாளர்களுடன் இவர் பேசாமலிருக்குமாறு பார்த்துக்கொள்ள ஒரு கங்காணியாக Transport incharge திரு முகமது கரிமுல்லா என்பவரை நியமித்தது நிர்வாகம். இவர் மூலம் 3 நாட்கள் தொடர்ந்து தகாத வழியில் இம்சிக்கப்பட்டதால் எதிர்த்துக் கேட்ட தோழர் வெற்றிவேல் செழியனை இழிவான வார்த்தைகளால் பேசி இழிவுபடுத்தினார்கள். பதிலுக்கு இவரும் பேசவே, தள்ளுமுள்ளாகியது.
இதனை வைத்து இந்த கருங்காலியை அடித்துவிட்டதாக போலீசில் புகார் செய்து கிரிமினல் வழக்குப் போடப்பட்டது. இதில் பேச்சுவார்த்தைக்குச் சென்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் அப்போதைய செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் திரு சிவக்குமார் என்பவர் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை, தன்னால் இதில் எதுவும் செய்ய இயலாது, எல்லாம் மேலிருந்து நடக்கிறது என அவர்கள் சொல்லும் வேலையையே செய்தார். நமது தோழர்கள், வழக்குரைஞர்கள் என 50 பேர்களுக்கும் மேல் இருந்தும் 10க்கும் மேற்பட்ட உளவுப்பிரிவு சஃபாரி போட்ட போலீசு கும்பல் மூலம் திடீரென ஒரு காரில் 4 கதவுகளையும் திறந்து வைத்து, ஒரு கடத்தல் கும்பலைப் போல நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ந்து கொண்டு தோழர் வெற்றிவேல்செழியனை கடத்திச் சென்றார்கள். எங்கு கொண்டுச் சென்றார்கள் என்ற விவரம் கூட தெரிவிக்கவில்லை. மாலை 4 மணிக்கு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு இரவு 10 மணிக்கு இது போன்ற ஏற்பாட்டைச் செய்து உளவுப் பிரிவு போலீசு ஜேப்பியாருக்கான ‘சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி சேவை செய்து’ தோழர் வெற்றிவேல் செழியனை சிறையிலடைத்தது.
சத்தியபாமா பல்கலைகழக வளாகம்
தோழர் வெற்றிவேல் செழியனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முகம்மது கரிமுல்லாவுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க தனது பணபலத்தால் போலீசு உதவியுடன் முயற்சித்தார்கள். அன்றைய மருத்துவர், அவருக்கு ஒன்றுமில்லை என மருத்துவத்தை முடித்து அனுப்பி வைத்துவிட்டார். இந்த கருங்காலி கரிமுல்லாவை தாம்பரம் சரஸ்வதி தனியார் மருத்துவமனையில் சேர்த்து பிறகு பாதிப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவ பராமரிப்பில் உள்ளார் என மறைமுகமாக வைத்து ஏமாற்றினார்கள்.
அவர் டிஸ்சார்ஜ் ஆனால்தான் பெயில் கொடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் போலீசு பெயில் கொடுக்காமல் இழுத்தடித்தது. இதனை கண்டுபிடித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் உதவியுடன் தாம்பரம் சரஸ்வதி மருத்துவமனை நிர்வாகத்தை நேரில் அணுகியபோது, அவருக்கு ஒன்றுமில்லை, அவருக்கு பெட் ரெஸ்ட் வேண்டுமென எங்கள் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். மற்றபடி எங்களுக்கு உள் விவகாரங்கள் எதுவும் தெரியாது என்று கூறிய நிர்வாகம் உடனே அவரை அரைமணி நேரத்தில் வெளியேற்றியது மருத்துவமனை நிர்வாகம். இதற்கடுத்த நாள் போலீசின் வேசம் கலைந்து பெயில் கொடுக்கப்பட்டது.
இது போன்ற எல்லா நெருக்கடிகளையும் எமது சங்க உறுப்பினர்கள் உறுதியாக நின்று நிர்வாகத்திடம் தங்களது நியாயமான உரிமைகளுக்காக தொடர்ந்து சட்டபூர்வ வழிகளில் போராடி வந்தனர். இந்தப் போராட்டங்களால் அனைவருக்கும் நிர்வாகம் மூலம் பணிநிரந்தர ஆணை வழங்கப்பட்டது. அடுத்தபடியாக ESI மருத்துவப் பாதுகாப்பிற்கு சேர்க்க நிர்வாகம் மறுத்ததால் ESI நிர்வாகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் மீது நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. தொழிலாளர் தரப்பு நிர்வாகத்தின் தடையாணைக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. இதேபோல் தொழிலாளர் ஆய்வாளர் மூலம் தொழிலாளர்களுக்குரிய ஆவணங்களை பராமரிக்கும்படி தாவா மூலம் செய்யப்பட்டது. இதிலும் நிர்வாகம் பரங்கிமலை நீதிமன்றத்தில் 3 முறை தண்டத் தொகை கட்டியுள்ளது. இருந்தும் இன்னாள் வரை முறையான ஆவணங்களை பராமரிக்காமல் இழுத்தடித்து வருகிறது. போனஸ் கோரி சட்டபூர்வ போராட்டங்கள் நடத்தி அடுத்த கட்டமாக 2014 முதல் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் (tribunal) வழக்காடினார்கள். போனஸ் பெறுவதற்கான தங்கள் நியாயத்தை தமது வழக்குரைஞர்களான திரு பாலன் ஹரிதாஸ், திரு காமாட்சி சுந்தரேசன் மூலம் வாதாடினர். இதன் பேரில் தொழிலாளர் தீர்ப்பாயம் 24.03.2017 இல் இந்த வழக்கில் தொழிலாளர் தர்ப்பு நியாயங்களை ஏற்று போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.
கட்டணக் கல்வி சேவையாகாது. கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நிறுவனங்களே கல்வியுடன் உபதொழில்களாக பேருந்து போக்குவரத்து, உணவு விடுதி, தங்கும் விடுதி, சுற்றுலா.. . என அனைத்திற்கும் கல்வி கற்க வரும் மாணவர்களிடம் கட்டாய வசூலில் தனியார் பள்ளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நுற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள், பல கோடிகளில் சொத்து வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களாக இந்த கல்வி முதலாளிகள் வளர்ந்து வருவதை இந்த வழக்கின் மூலம் நீதிமன்றத்தில் எடுத்து வைத்ததன் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர் தீர்ப்பாயம் தொழிலாளர்க்கு போனஸ் உரிமை நியாயமானது எனக் கூறியது.
எமது தொழிற்சங்கத்தை உடைக்க தொழிலாளிகளை தனித்தனியாகப் பேசி நிர்வாகம் கலைக்க முயற்சித்தது. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளை சட்டவிரோத வேலைநீக்கம் செய்து பழிவாங்கியதால் தொழிலாளிகள் அஞ்சுவார்கள் என எண்ணி ஏமாந்தது. அடுத்த கட்டமாக வெல்பர்அசோசியேசன் என்ற ஒரு ஸ்பான்சர் சங்கத்தை உருவாக்கி தொழிலாளர் சங்கம் என கூறி இந்தச் சங்கத்தில் உறுப்பினராகும் தொழிலாளிக்கே வருடந்தோறும் கல்விச் சலுகை கிடைக்கும் எனக் கூறி கட்டாயத்தின் பேரில் ஒரு பகுதி தொழிலாளர்களை பிரித்து அவர்களுக்கு நிர்வாகம் ID கார்டை மஞ்சள் நிறத்தில் வழங்கியது. எமது சங்க தொழிலாளிகளுக்கு ID கார்டை சிவப்பு நிறத்தில் வழங்கி பேதம் பிரித்தது, மஞ்சள் கார்டு தொழிலாளிகளுக்கு சில சொற்ப சலுகைகளை வழங்கிய நிர்வாகம், அவர்களை செல்லப்பிள்ளைகளாக அரவணைத்துப் பேசுவது அவர்கள் கேட்கிற ரூட்டு, விடுப்பு என வழங்கி தங்கள் கைப்பாவையாக வைத்திருக்கின்றனர். இருந்தும் நிர்வாகத்தின் சூழ்ச்சிக்கு பலியாகாமலும், தங்களது சுயமரியாதையை இழக்காமலும், சோரம் போகாமலும், தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர், எமது சங்கத் தொழிலாளிகள்.
இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்கள்
1980-களில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க-வின் முதற்சுற்று கட்சிப் பெரும்புள்ளிகளாக இருந்த திரு ஜே.பங்கராஜ் என்கிற ஜேப்பியார், வேல்ஸ் கல்விக்குழும தலைவர் திரு ஐசரி கணேசன், காரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் இயங்கும் RMK, RMD கல்வி குழுமத் தலைவர் ஆர்.முனிரத்தினம், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக குழுமம் ஏ.சி.சண்முகம் போன்றவர்களால் தனியார் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. அதேபோல் SRM., SRE குழுமத்தின் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், தனலெட்சுமி சீனிவாசன் குழுமம், சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் இவை தவிர்த்து அமிர்தானந்த மாயி, சத்திய யோகி, சங்கராச்சாரி, கிறித்துவ மெஷினரிகள், முசுலீம் ட்ரஸ்ட்கள் என பலரும் இந்தத் தொழிலில் கோடிகளில் லாபமீட்டும் கார்ப்பரேட் பணக்காரர்களாக பல்கிப் பெருகி கல்விக் கொள்ளையர்களாக இருந்து வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட தனியார் கல்வி, தொழிற்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.
இவர்கள் கல்வி வியாபாரத்தில் கொழுத்த பணக்காரர்களாக இருந்து கொண்டு இதில் பணிபுரியும் தொழிலாளர்களை எவ்வித உரிமையுமற்ற கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர். இதற்கான நியாயத்தை தொழிற்சங்கம் மூலம் கேட்டபோது, இவர்கள் ‘கல்விசேவை’ செய்வதாகக் கூறுகிறார்கள். இதற்கு தொழிலாளர்களை தங்கள் வாழ்க்கையையும் உரிமைகளையும் இழந்து ‘சேவையாற்ற’ கோரி நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள்.
ஜேப்பியாரின் குழுமம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சேவை என்ற பேரில் அனைத்து கல்வி முதலாளிகளும் தொழிலாளர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிலாளர்களை உரிமைகளற்ற கொத்தடிமைகளாகவே இந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள், IT கம்பெனிகளில் பேருந்து ஓட்டுநர்களாக பணிபுரியும் சுமார் 1 லட்சம் தொழிலாளிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்குச் சென்று பேருந்திலேயே படுத்திருந்து அந்த வாரம் முழுவதும் பேருந்துள்ளேயே தனது வாழ்க்கையை நடத்தி சனிக்கிழமை இரவு வீடு சென்று மீண்டு ஞாயிறு மதியம் தனது பேருந்துக்கே வந்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே வாழ்ந்து பராமரித்து கொத்தடிமைகளாக வாழும் இவர்கள் தமது குடும்பம், பிள்ளைகளை வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பார்த்து வர முடிகிறது. மற்ற 6 நாட்களில் ஒவ்வொரு 24 மணி நேரமும் தொடர்ந்தார்போல் பேருந்தை இயக்குவது, பராமரிப்பது, பாதுகாப்பது என கொத்தடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பெறும் ஊதியமும் அடிப்படைச் சம்பளத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. செங்கல் சூளைகளில், விவசாயப் பண்ணைகளில் கொத்தடிமைகளை மீட்பதாக்க் கூறும் அரசும் தொழிலாளர் நலத்துறையும் இந்த கல்லூரிகள், IT நிறுவனங்களில் படித்து ஒரு தொழிலை செய்யும் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள வாகன ஓட்டுநகர்களைப் பற்றி இன்றுவரை பேச மறுத்து வருகிறது.
இவ்வாறே கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ESI சட்டத்தின் கீழ் மருத்துவ பாதுகாப்பு கொடுக்க முடியாது என அடாவடியாக மறுத்து வருகின்றனர். ESI நிர்வாகம் இந்த நிறுவனங்களை ESI சட்டப்படி சேரக்கேட்டதின்பேரில் 400-க்கும் மேற்பட்ட கல்வி முதலாளிகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி மறுத்து வருகின்றனர். ESI நிர்வாகம் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கல்வி நிறுவனங்களுடனும் வழக்கு நடந்து வருகிறது.
சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு எதிராக ESI கட்டக்கோரி புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றம் டெனிஷியன்கள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகின்றனர். இந்த ஒரு வழக்கு மட்டுமே தொழிற்சங்கம் மூலம் ESI இல் தொழிலாளர்களுக்காக நடந்து வருகின்றது. மற்றவை அனைத்தும் ESI நிர்வாகத்திற்கும் கல்வி நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே நடைபெற்று வருகிறது.
கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் தகுதி, உரிமைகள், போனஸ், ESI. சம்பளத்துடன் கூடிய விடுப்பு என அனைத்திற்கும் நமது சங்கம்தான் உரிமை கோரி வந்தது. இந்த தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க தொழிற்சங்கம் கட்டியதும் நாம்தான். இதன் முதல் வெற்றியாக போனஸ் வழக்கு தீர்ப்பைப் பெற்றுள்ளோம். 80-களுக்குப் பிறகு உருவான தனியார் வேலைவாய்ப்பில் லட்சக்கணக்கான தொழிலாளிகள் இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் உரிமைகளற்ற நிலையில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு அரசே நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளத்திற்கும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. இவர்களின் உரிமை நசுக்கப்படுவதை முறியடிக்க வேண்டும். அவர்கள் தொழிலாளிகள்தான் என்ற வரையறையில் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
இந்த போனஸ் தீர்ப்பிற்கு எதிராக கல்வி முதலாளிகள் செயல்படுவதை நிறுத்த, தொழிலாளிகள் போனஸ் பெற, அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க என அனைத்திற்கும் தொழிலாளிகள் தொழிற்சங்கங்களுடன் இணைந்து உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்த புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவல் விடுகிறது.
தகவல்: புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்
இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சத்தியபாமா பல்கலைக் கழகக் கிளை
***
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கத்தின் சுற்றறிக்கை
அன்பார்ந்த தொழிலாளர்களே நமது சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நாம் தொழிலாளர்களாக அங்கிகாரம் பெறவும் பணிநிரந்தரம், தற்காலிக விடுப்பு முறையான வார விடுமுறை, மருத்துவ பாதுகாப்பு (EST) போனஸ், தொழிலாளர் என்பதற்கான ஆவணங்கள் (ரெக்காட்ஸ்) பராமரிப்பது, நமக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் ரசீது பெறுவது போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமை அனைத்தும் நாம் புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னிஸியன்கள் சங்கம் என்ற சங்கத்தை துவங்கி கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் பெற்று வருகிறோம்.
இதற்காக 20-க்கும் மேற்ப்பட்ட முன்னணி தொழிலாளர்கள் வேலையை இழந்தும் போராடி வருவது தாங்கள் அறிந்ததே இந்த ஒற்றுமையை கலைக்க நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் செய்து சத்யபாமா பல்கலைகழகம் டிரைவர்ஸ் மற்றும் டெக்னிஸியன்ஸ் வெல்பர் அசோசியேசன் என்ற சங்கத்தை உருவாக்கி ஒரு பகுதி தொழிலாளர்களை பிரிவினை முலம் எதிராக வைத்துள்ளது. தொழிற்சங்க சட்டத்தின் படி தொழிலாளர் சங்கமாக சத்யபாமா பல்கலைகழகம் டிரைவர்ஸ் மற்றும் டெக்னிஸியன்ஸ் வெல்பர் அசோசியேசன் அங்கிகாரம் பெற முடியாது. இதனை தொழிலாளர்கள் புரிந்து கொண்டு நமது உரிமைகளை காக்க தொடர்ந்து போராடி வரும் புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுகொள்கிறோம்.
போனஸ் வழக்கில் வெற்றி பெற்று உள்ளோம் (ESI) வழக்கில் வெற்றி பெற போகிறோம். நமது நிர்வாக தொழிலாளர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கி வரும் 400-க்கு மேற்ப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களை தொழிலாளர் உரிமை பெறும் தகுதிக்கு உருவாக்கும் வரலாற்று கடமை நமது சங்கம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வழிகாட்டுதலில் நடந்து வருகிறது என்பதை உணர்ந்து நமது தொழிலாளர்கள் அனைவரும் ஒரே சங்கமாக சேர்ந்து நமது உரிமையை நிலை நாட்ட வருமாறு அறைகூவல் விடுகிறோம்.
தகவல்: புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்
டாஸ்மாக்கை எதிர்த்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம்
கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் போராட்டப் பாரம்பரியம் கொண்டவர்கள். வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் விவசாயிகள் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காகவும் போராடி இருக்கிறார்கள்.
மற்றவர்களுக்காக போராடியவர்கள் தங்களது உரிமைகளுக்காக கடந்த 18-08-2016 அன்று அரசு சட்டக் கல்லூரியின் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், கல்லூரி வளாகத்திலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் மாணவர்கள் போராடினார்கள். அந்த நாள் முதலாகவே போராட்டத்தை முன் நின்று நடத்திய மாணவர்களை எப்படி பழி தீர்ப்பது என்று காத்துக் கொண்டு இருந்தது நிர்வாகம்.
இந்நிலையில் விடுதியில் உள்ள மாணவர்கள் இடையில் ஏற்பட்ட சிறு சச்சரவை விடுதி துணை காப்பாளர் ராஜாவின் துணையோடு மாணவர்கள் இடையே மோதலையும் பிளவையும் தூண்டி விட்டு ஒரு தரப்பு மாணவர்களின் வார்த்தைகளை மட்டும் வைத்து அதை புகார் கொடுத்தது போல் திரித்து அந்த பொய் புகாரின் மீது நடவடிக்கை போல 6 மாணவர்களை இடைநீக்கம் செய்தது. அதோடு நில்லாமல் அந்த புகாரின் மீது விசாரணை என்ற பெயரில் தனக்கு தேவையான பொய் சாட்சியங்களை உருவாக்கி முடித்ததும் புகார் கூறப்பட்ட 6 மாணவர்கள் உடன் இன்னும் 2 மாணவர்களை சேர்த்து 8 பேருக்கு தண்டனை, இடமாற்றம் போட்டுள்ளது நிர்வாகம். புகார் கூறப்பட்டதிலேயே ஒருவர் இவ்விவகாரத்திற்கு முற்றிலும் தொடர்பற்றவர். புதிதாக சேர்க்கப்பட்ட இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட சச்சரவில் எந்த பங்கும் இல்லாதவர்கள். இது போதாது என்று விடுதியில் இருக்கும் இன்னும் ஐந்து மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது நிர்வாகம்.
இப்படி மாணவர்களுக்கு போராட்ட குணமே கூடாது என்றும் அதை மழுங்கடிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கை என்ற பெயரில் கொடுரமாக நடந்து கொண்டும் இருக்கிறது நிர்வாகம். அடிப்படை உரிமைகளுக்காக மாணவர்கள் போராடாமல் இருந்திருந்தால் இந்த தண்டனை விவகாரமே நடந்திருக்காது.
நீதித் துறையே பாசிச மயமாகி வழக்கறிஞர்களையும் நீதிபதிகளின் அடிமைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை நீதித்துறையின் ஒவ்வொரு அங்கக்திற்கும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சட்டக்கல்லூரியிலும் மாணவர்களுக்கு இருக்கும் போராட்டப் பண்பினை அழித்து விட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
கோவை அரசு சட்டக்கல்லூரியின் நிர்வாகத்தின் சூழ்ச்சிகரமான அடக்குமுறையை எதிர்த்து பாதிப்புக்குள்ளான மாணவர்களின் போராட்டம் கடந்த 05.04.2017 முதல் நடந்து வருகிறது. அதோடு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணனுக்கும் பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி உள்ளது. எனவே தனது முடிவை மறு பரிசீலிக்க நிர்வாகம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.
போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத நிர்வாகம் மாணவர்களிடையே பொய் புனைசுருட்டுகளை கொண்ட எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்களும் போராட்டத்தை தொடர்கிறார்கள்.
பின்வரும் நிபந்தனைகளை முன் வைத்து மாணவர்கள் போராடுகிறார்கள்.
முறைகேடாக விதிக்கப்பட்ட தண்டனை இடமாற்றத்தை ரத்துச் செய்
வஞ்சககாரர் பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணனையும் விடுதி துணைக் காப்பாளரையும் இட மாற்றம் செய்.
இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே தமிழக வழக்குரைஞர்கள் சமூக அக்கறை கொண்ட நீண்ட பாரம்பரியத்தை காக்கும்.
மாருதி தொழிலாளர்கள் 13 பேருக்கு ஹெச். ஆர். அதிகாரியை கொலை செய்ததாக பொய்க்குற்றம் சாட்டி ஆயுள் தண்டனையும், வன்முறை தீயிடல் குற்றங்களுக்காக 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 14 பேருக்கு 03 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது குர்காவ்ன் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். 10.03.2017 அன்று குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், 18.03.2017 அன்று மேற்படி தண்டனையை வழங்கியது. இவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 117 பேரை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்கள், இருக்கின்ற வழக்கின் படியே நான்கரை ஆண்டுகள் சட்டவிரோதமாக அனுபவித்த சிறைத் தண்டனை பற்றியோ அவர்களது வேலை பறிபோய், வாழ்வே கேள்விக்குள்ளானது பற்றியோ வாயே திறக்கவில்லை.
மாருதி தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதியான, சட்டவிரோதமான தீர்ப்பை கண்டித்தும் அவர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையிலும் 04.04.2017 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இப்பிரச்சினையின் துவக்கத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்திவருவதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை புஜதொமு-வின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாருதி தொழிலாளர் போராட்டத்தின் நியாயத்தை விளக்கியும், மாருதி நிர்வாகத்தின் சூழ்ச்சிகள், நரித்தனங்கள், வஞ்சகங்களை விளக்கியும், போலீசு, நீதிமன்றத்தின் கூட்டுச் சதியை விளக்கியும், உரையாற்றினார். மேலும், குற்றமே நிரூபிக்கப்படாத போதும், மாருதி தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கும் நீதித்துறை, புதுச்சேரியில் வெட்ட வெளிச்சமாக நடந்த ரவுடி கொலையை செய்தது, அரசியல்வாதிகளின் தூண்டுதலில் தான் என்று தெரிந்த போதும், சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்கிறது என்று நீதித்துறையின் தொழிலாளர் விரோதப் பண்பை அம்பலப்படுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய புஜதொமு-வின் திருபுவனை வட்டாரக் கிளைப் பொருளாளர் தோழர் சங்கர், ” தொழிலாளர் விரோதமாகச் செயல்படும் தொழிலாளர் துறையைச் சாடியதுடன், தொழிலாளர் போராட்டம் என்பது மட்டுமில்லை, எந்தப் போராட்டமானாலும், அதைத் தீர்க்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளோ, துறை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ வருவதில்லை. முண்டியடித்துக் கொண்டு வருவது போலீசு தான். அவர்களும் பிரச்சினையைத் தீர்க்க வழி சொல்லாமல், போராட்டத்தை கலைப்பதற்கு, பேச்சுவார்த்தை நாடகமாடுவது, அதையும் மீறி மக்கள் உறுதியாக இருந்தால், அவர்களை வழக்கு போட்டு மிரட்டுவது என்பதையே வேலையாகச் செய்து வருகிறது. உண்மையில் அரசின் உறுப்புகள், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதில்லை. மக்களை ஏமாற்றுவதற்கும், மிரட்டுவதற்கும் தான் உள்ளது. இந்த அரசுக் கட்டமைப்பு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதும், மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பதும், தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, இந்த அரசுக் கட்டமைப்பை நம்பிப் பலனில்லை. அதைத் தகர்த்தெறிந்து, நமக்கான அரசுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்; அதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க அமைப்பாகத் திரள வேண்டும்” என்று அறைகூவி உரையாற்றினார்.
அடுத்ததாக, சேதுராப்பட்டு தொழிற்பேட்டைக் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் ரமேஷ், தொழிலாளர் பிரச்சினையைப் பற்றிய போராட்டத்தில் பேச அழைத்ததை பெருமையாகவும், கடமையாகவும் கருதி உரையைத் தொடங்கியவர், ”புதுச்சேரி தொழிலாளர் அதிகாரிகளின் முதலாளிகளின் ஆதரவான நடவடிக்கையைப் பற்றி அவர்களிடம் பேசும் போது, தங்களது நடவடிக்கையைப் பற்றி குற்ற உணர்வு ஏதுமின்றி, தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும் ? மிஞ்சிப் போனால், போஸ்டர் அடித்து ஒட்டியும், மைக்கைப் பிடித்துக் கத்தியும் போராட்டம் செய்வீர்கள் ? என அதிகாரத் திமிரோடு பேசியதை அம்பலப்படுத்திய தோழர், தொழிலாளர்களை வன்முறையைத் தூண்டுவதற்கு இது போன்ற அதிகாரிகளின் தொழிலாளர் விரோத சட்ட விரோத நடவடிக்கைகள் தான் காரணம் என்பதை விளக்கினார். மேலும், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இது போன்ற முன்னெடுப்புக்களுக்கு எப்போதும் துணை நிற்போம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக உரையாற்றிய, புதுச்சேரி புஜதொமு-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன், மாருதி தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விளக்கி, அத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது, அவர்களை மிரட்டி தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்குத் தான். அதன் வெளிப்பாடு தான் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தில் மாருதி நிறுவனம் அமைந்துள்ள மானேசர் தொழிற்பேட்டை வட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கான கலவரத் தடுப்புப் போலீசாரைக் குவித்து, தொழிலாளர்கள் மீண்டும் சேர்ந்து தங்களது எதிர்ப்பைக் காட்டி விடக்கூடாது என அச்சுறுத்தியது. ஆனால், அந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர் ஒன்று கூடி தீர்ப்புக்கு முன்னதாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மேலும், தொழிலாளர்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் கருவியாகத் தான் அரசு உள்ளது என்ற மார்க்ஸின் வரிகளைச் சுட்டிக் காட்டி, கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, பணமில்லாப் பரிவர்த்தனை, வங்கி இருப்பு அதிகரிப்பு என மக்களைச் சுரண்டுவது, உலக நாடுகள் வரையிலும் பேசப்படும் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை, மோடி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் தவிர்ப்பது, என உழைக்கும் மக்கள், விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார். மேலும், தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதில் அரசும், இவ்வொடுக்குமுறைகளை மூடி மறைப்பதன் மூலம் பத்திரிக்கைகளும் தங்களுக்குள் கள்ளக் கூட்டு வைத்துச் செயல்படுவதையும் தோலுரித்தார்.
ஆனால், அரசு நினைப்பதைப் போல், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டும் காணாமல் புறக்கணிப்பதன் மூலமோ, போலீசு, நீதிமன்றங்களின் மூலமோ, நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது. ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வு என்பது நீரில் மிதக்கும் காற்றடைத்த பந்தைப் போன்றது. அதை என்ன தான் முயற்சி செய்து தண்ணீருக்குள் அமிழ்த்தினாலும், இறுதியில் அது நீரின் மேலே தான் எழும்பி நிற்கும்.
உழைக்கும் மக்களின் ஒவ்வொருவர் மனதில் எழும்பி நிற்கும் உணர்வை அரசின் எந்த ஒடுக்குமுறையாலும் நசுக்கி விட முடியாது. அந்த உணர்வை ஒன்று பட்ட வர்க்க உணர்வாக மாற்றி, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கி அமிழ்த்துவதன் மூலம், உழைக்கும் மக்களுக்கான உண்மையான அதிகாரத்தைப் படைத்து நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்கான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் போராட்டமாக இதை மாற்றுவோம் என்று கூறி நிறைவு செய்தார்.
இறுதியாக நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.
மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!
போலிசு – நீதிமன்றம் – போலிசு கூட்டுச்சதியை முறியடிப்போம்!
ஆயுள்தண்டனையை ரத்து செய்யும் வரை போராடுவோம்!
தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக தக்க பதிலடி கொடுப்போம்!
முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
பாட்டாளி வர்க்க அரசை கட்டியமைப்போம்!
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு தோழர் பழனிசாமி, 95977 89801.
மார்ச் -23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் – நினைவுதினம் !
1991 – தனியார்மயம், தாராளமயம், உலகமயம் இந்தியாவில் திணிக்கப்பட்டதன் விளைவுகளை இன்று காண்கிறோம். இன்று விவசாயம் அழிவை நோக்கி நகர்கிறது, இளைஞர்களுக்கான வேலையில்லா திண்டாட்டம், கல்வி காசுக்காகவும், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், இயற்கை வளங்களை சூறையாடவும் இதனை எதிர்க்கும் மக்களின் சுய உரிமையை பொசுக்க ராணுவம், காவல்துறை கட்டவிழ்த்தும் விடப்படுகிறது.
மேலும் இதற்கு பொருத்தமாய் பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் RSS-BJP-ABVP கும்பல் முதலாளிகளுக்காக வேலை செய்கிறது.
இயற்கை வைட்டமின் நிறைந்த மாட்டுக்கறியை சாப்பிட்டால் அடித்துக் கொல்கிறது
தொழில் நிமித்தம் மாட்டுத்தோலை உரிக்கும் தலித்துக்களை பிடித்து அடிக்கிறது BJP
ரோகித் வெமுலா படுகொலை, கண்ணையகுமாருக்கு அடி, சிறை, தலையை துண்டிப்பேன் என மிரட்டல், என் தந்தை போரில்தான் இறந்தார் என்று சொன்ன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என மிரட்டுகிறது ABVP வானரக் கும்பல்
பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள தமிழக மக்களையும் தொடர்ந்து நசுக்கிறது. காவிரி நீர் – மேலாண்மை வாரியம் மறுப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் – கடன் தள்ளுபடி இல்லை, நியூட்டிரினோ, மீத்தேன் ஹைட்ரோ கார்பன், கெயில், இணையம் துறைமுகம், ரேசனில் பொருட்கள் இல்லை, நீட் தேர்விற்கு விலக்கு இல்லை என்று பல்வேறு திணிப்புகளை செய்கிறது. எனினும் தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு அனுமதி மறுப்புக்கு எதிராக RSS – BJP மோடிக் கும்பலை கிழித்தெறிந்தது, தமிழகத்தின் இளைய சமூகம்.
இதே மெரினா புரட்சியை நாளை விவசாயிகளுக்காகவும், சமூக மாற்றத்திற்கான கல்விக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராட பகத்சிங் நினைவுகளை நெஞ்சிலேந்துவோம். இது தொடர்பான துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் – விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
பெரிய குப்பம்
கோ.பூவனூர்
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி(விருதை)
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி(விருதை)
அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி(சி.முட்லூர் – சிதம்பரம்)
அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி(சி.முட்லூர் – சிதம்பரம்)
தகவல் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விருதை – சிதம்பரம்.
புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 4
நாங்கள் குர்காவ்ன் மானேசரில் அமைந்துள்ள தேவிலால் பூங்காவில் இருந்தோம். மார்ச் 23-ம் தேதி வியாழக்கிழமை. மாருதி தொழிலாளர் வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பால் தண்டிக்கப்பட்ட 31 தொழிலாளிகளை விடுவிக்க கோரியும் வேலையிழப்புக்கு ஆளான 2340 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும் “சலோ மானேசர்” என்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று அன்றைய தினம் ஏற்பாடாகியிருந்தது.
தேவிலால் பூங்கா
மாலை நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு குர்காவ்ன் – மானேசர் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. வேலையிழப்புக்கு ஆளான மாருதி தொழிலாளர்கள் பலரும் அந்த ஆர்பாட்டத்திற்கு வரவுள்ளதாக எமக்குத் தகவல் சொல்லப்பட்டிருந்ததால் அன்றைய தினம் காலையிலேயே நாங்கள் மானேசர் சென்று காத்திருந்தோம்.
நேரம் நண்பகலைக் கடந்த சமயத்தில் பத்துக்கும் குறைவான தொழிலாளிகளே இருந்தனர். ராம் நிவாசுடன் வந்த தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது உடனிருந்த ராஜஸ்தான் தோழர் மொழி பெயர்த்தார்.
”வேலை இழந்த மாருதி தொழிலாளிகள் என்னவானார்கள் ? அவர்களுக்கு வேலை கிடைத்ததா ? அவர்களின் குடும்பங்கள் என்னவாயின ?” என்றோம்.
“வேலை இழப்பு ஒருபுறம், கொலைப்பழி இன்னொரு புறம். அவர்களுக்கு வேறெங்கும் வேலை கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. சில காலம் இங்கேயே சுற்றித் திரிந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. சிலர் சொந்த ஊர்களுக்கே திரும்பினர். சிலருக்கு வேறு தொழிற்சாலைகளில் வேலை கிடைத்தது. வாழ்க்கை சென்றாக வேண்டும் அல்லவா ? உயரத்தில் இருந்து விழுந்தால் தானே பிரச்சினை. நாம் தரையில் இருப்பவர்கள் தானே? எப்படியோ பிழைத்துக் கொண்டோம். முதலாளிக்கு ஒரு தொழிற்சாலை, தொழிலாளிக்கு ஆயிரம் தொழிற்சாலைகள்” என்றவர் பலமாகச் சிரித்தார்.
”தொழிற்சங்க முன்னோடிகள்?”
“பன்னிரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்துள்ளனர் அல்லவா ? ராம் நிவாஸ் போல் ஒருசிலரை ஜூலை 18 சம்பவத்துக்கு முன்பே வேறு வேறு காரணங்கள் சொல்லி வேலை நீக்கம் செய்திருந்தனர். ராம் நிவாஸ் இப்போது வரை தொழிலாளர்களின் பராமரிப்பில் தான் இருக்கிறார். தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார்”
”வேலையிழப்பு ஆளான தொழிலாளர்களின் குடும்பங்களைச் சந்திக்க திட்டமிட்டிருதோம். அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருப்பார்கள் தானே?”
“இங்கே வாழ்க்கையே சிரமம் தான் நண்பரே. மாருதியால் மேலும் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளானோம் என்பது உண்மை தான். ஆனால் தாக்குப்பிடித்துக் கொண்டோம். பெரும்பாலான தொழிலாளிகள் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் தான். அதிலும் பலருக்கு திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. எனவே அவர்களின் குடும்பங்கள் வெளியூர்களில் தான் இருக்கின்றன”
“நீங்கள் சொன்ன பிறகு தான் கவனிக்க முடிந்தது. தொழிலாளர்கள் பலரும் இளம் வயதினராக இருக்கிறார்களே? முதிய தொழிலாளிகளை அதிகம் காண முடியவில்லையே ?”
“இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் என்ன செய்வார்கள் என்றால், ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை இருபது வயதுகளின் துவக்கத்தில் ட்ரைனியாக எடுப்பார்கள். பின்னர் அப்பிரண்டிஸ் ஆக்கி சில ஆண்டுகள் கழித்து கான்டிராக்ட் தொழிலாளியாக்குவார்கள். ஒரு தொழிலாளி வேலைக்குச் சேர்ந்து முப்பது வயது கடந்த பின்னரே வேலை நிரந்தரம் செய்யப்படுவார். வருடங்கள் கூடக் கூட உற்பத்தி இலக்குகளும் வேலை நிலைமைகளும் கடினமாக்கப்படும், முப்பத்தைந்து வயதுக்குப் பின் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு கடினமாக உழைக்க முடியாது. ஒரு கட்டத்தில் மருத்துவ ரீதியில் வேலைக்குத் தகுதியில்லை (Medically unfit) என்கிற சான்றிதழைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நாற்பத்தைந்து வயதுக்குள் எல்லாம் முடிந்து போகும்.”
”இதையெல்லாம் தொழிற்சங்கங்கள் தட்டிக் கேட்காதா?”
மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.
”தொழிற்சங்கம் வலுவாக இருக்கும் ஆலைகளில் இப்படிச் செய்ய முடியாது. எனவே தான் அவர்கள் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் சிவப்புச் சங்கங்களை விட மஞ்சள் சங்கங்களை அனுமதிப்பார்கள். மீறி சிவப்புச் சங்கங்களைக் கட்ட முயற்சித்தால் எல்லா வகையிலும் தடை போடுவார்கள்”
”ஆனால், சட்டப்படி தொழிற்சங்கம் துவங்குவதைத் தடுக்க முடியாதே? சட்டப் பாதுகாப்பு உள்ளது தானே?”
”தோழரே. சட்டம் எங்கே உள்ளது? காகிதத்தில் தானே? அது பின்பற்றப்படுகிறதா இல்லையா என்பதை யார் கண்காணிப்பது? அரசாங்கம் தானே? நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் ? இப்போது ஒரு ஆலையில் தொழிற்சங்கம் துவங்கினால் அதை முதலில் பதிய வேண்டும். பதிவு அலுவலகத்தில் கொண்டு போய் அதற்கான மனுவைக் கொடுத்தால் அந்தக் காகிதங்கள் அப்படியே தேங்கி நிற்கும். அதற்கு நடையாய் நடக்க வேண்டும். பல வாரங்கள் தொடர்ந்து பிச்சைக்காரர்களைப் போல் அதிகாரிகளின் டேபிள்களுக்கு முன் கைகட்டி நிற்க வேண்டும். பின் அந்தக் காகிதத்தில் ஏதோ எழுத்து குறைகிறது என்று முகத்தில் எரிந்து துரத்தி விடுவார்கள். நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதற்கு வேலையை விட்டுவிட்டு அலைய வேண்டும். இதற்குள் ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும். இதற்கிடையே சங்கம் துவங்க முன்னே நிற்பவர்களை விலைக்கு வாங்கும் பேரத்தை நிர்வாகம் துவங்கியிருக்கும். ஒருவேளை படிந்து வந்தால் மஞ்சள் சங்கமாக உடனடியாக பதிந்து விடலாம். சங்க முன்னோடிகள் பேரத்துக்குப் படியவில்லை என்றால் ? மேலும் சில மாதங்கள் நீதி மன்றத்துக்கு அலைய வேண்டியிருக்கும்.”
நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ராம் நிவாசும் அவருடன் வந்த தோழர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க விரைந்தனர். நாங்கள் அந்த வளாகத்தைச் சுற்றி வந்தோம். பூங்கா எனச் சொல்லப்பட்டாலும் பூச்செடிகளோ புல்வெளியோ சரியான பராமரிப்போ இன்றி வறண்டு கிடந்தது. சில பத்து ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த அந்தப் பூங்காவின் ஒரு முனையில் முன்னாள் ஹரியாணா முதல்வர் தேவிலாலின் சிலை ஒன்று நின்றது.
தேவிலாலின் சிலையைச் சுற்றிலும் அகழி போல் அமைத்திருந்தனர். அதன் ஓரத்தில் நீரூற்றுக்கான குழாய்கள் துருப்பிடித்த நிலையில் தென்பட்டன. பூங்காவுக்கு நேர் எதிரே இருந்த சாலையில் மேம்பால வேலை நடைபெற்று வந்தது. அருகிலேயே வேறு சில கட்டுமானப் பணிகளும். தேவிலாலின் சிலை எதிரே புழுதி பறந்து கொண்டிருந்த குர்காவ்ன் மானேசர் சாலையையும் உயிரற்ற அந்த நகரத்தின் எந்திரகதியான இயக்கத்தையும் வெறித்துக் கொண்டே நின்றது.
ஆளரவமற்றுக் கிடந்த அந்தப் பூங்காவின் மறுகோடியில் மெல்ல மெல்ல தொழிலாளிகளின் நடமாட்டம் தென்படத் துவங்கியது. சரியாக 3:45 மணிக்கு சாரை சாரையாக அணிவகுக்கத் துவங்கிய தொழிலாளிகள் எழுப்பிய கோஷங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
பள்ளமான நிலத்தை நான்கு திசைகளிலும் பாய்ந்து சூழ்ந்து கொள்ளும் காட்டாற்று வெள்ளம் போல் வெவ்வேறு திசைகளில் இருந்தும் தொழிலாளர்கள் அணியணியாக பூங்காவினுள் நுழைந்தனர். தொழிலாளர்களில் சிலர் அப்போது தான் ஷிப்டு முடித்திருந்தனர்; அவர்கள் நிறுவனத்தின் சீருடைகளோடு செங்கொடியேந்தி அணிவகுத்து வந்தனர். மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.
அதன் பின்னும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சில பத்து பேர் கொண்ட குழுக்களாக தொழிலாளிகள் வந்த வண்ணமிருந்தனர். அங்காங்கே ஜே.என்.யூ-வைச் சேர்ந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் காண முடிந்தது. நம்முடன் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ராஜஸ்தானி தோழர் இருந்தார்; எனினும், தொழிலாளிகளின் வெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்பட்டு விட்டோம்.
இந்தி மட்டுமே தெரிந்த தொழிலாளிகளிடம் ஆங்கிலமும் தமிழும் உடைந்த இந்தியும் கலந்து பேச்சுக் கொடுத்தோம். தமது பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள நாட்டின் தென்கோடியிலிருந்து வந்தவர்கள் என்பதே அவர்களுக்கு உற்சாகமூட்டியது. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக இந்தியிலும், உடைந்த ஆங்கிலத்திலும், சைகை பாஷையிலும் என மூன்று முறை பதில் சொன்னார்கள். பதிலைப் புரிந்து கொண்டோம் என்பதை தலையசைப்பில் நாம் உறுதி செய்ததைக் கண்டு தோழமையுடன் சிரித்தார்கள்.
”தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” மானேசரில் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணி
”பாஷா கோயி தக்லீஃப் நஹி ஹேய்” என்ற ரஜேந்தர் சிங், (மொழி ஒரு பிரச்சினையே அல்ல) வலதுகையை இடது மார்பில் வைத்து விட்டு நமது தோளைத் தட்டினார். அவரிடம் மேலே எழுப்பப்பட்ட கோஷங்களின் பொருளைக் கேட்டு விளங்கிக் கொள்ள முயற்சித்தோம். அவர் விளக்கியதில் இருந்து நாம் புரிந்து கொண்டது.
”ஆவாஸ் தோ ஹம் ஏக் ஹே” – ”உரக்கச் சொல், நாம் ஒன்று என” ” பர்க்காஸ்ட் மஸ்தூர் கோ பஹால் கரோ.” – “தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” “”இன்குலாப் ஜிந்தாபாத். மோடி சர்க்கார் முர்தாபாத்” – “புரட்சி ஓங்குக. மோடி அரசு ஒழிக”
கூட்டத்தில் மாருதி ஆலையில் தற்போது பணிபுரிந்து வரும் தொழிலாளிகளைத் தேடினோம். சீருடையின்றி சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம்.
”2012, ஜூலை 18 அன்று நடந்த சம்பவத்துக்குப் பின் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்னவாயின?” பெயர் குறிப்பிட மறுத்த அந்த தொழிலாளியிடம் கேட்டோம்.
”தொழிற்சங்கம் மொத்தமும் முடக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டன. வெளியில் இருந்து மீண்டும் ஒப்பந்த தொழிலாளிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்”
”தற்போது மானேசர் ஆலையில் எத்தனை தொழிலாளிகள் பணிபுரிகின்றனர்”
”சுமார் ஐயாயிரம் பேர். வழக்கம் போல இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளிகள் தான்”
”தொழிற்சங்க நடவடிக்கைகள்?”
அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்
“நாளுக்கு நாள் நிர்வாகம் தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விடும் சித்திரவதைகள் அதிகரித்து வந்தன. சரியாக இரண்டே ஆண்டுகளில் நாங்கள் மீண்டும் ஒரு சிவப்புத் தொழிற்சங்கத்தைக் கட்டினோம். எங்கள் அதே பழைய கோரிக்கைகளை தூசி தட்டி கையிலெடுத்தோம். ”சமமான வேலை, சமமான கூலி, சமமான சலுகைகள்” என்பதை முன்வைத்தோம். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்த தொழிலாளிகளாக்குவது, வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை என்பதை முன்வைத்து மீண்டும் போராடத் துவங்கினோம். அதே போல் 44 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற உற்பத்தி இலக்கை தளர்த்தக் கோரினோம்”
”இந்தக் கோரிக்கைகளை வென்றெடுத்தீர்களா ?”
“சிலவற்றில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை நிர்வாகம் எடுக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். உதாரணமாக 42 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற இலக்கை தற்போது 60 நொடிகளாக தளர்த்தியுள்ளனர். வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற கோரிக்கையை நாங்கள் இன்னும் விடவில்லை. எப்படியும் விரைவில் வெல்வோம்” என்றவர் நம்மிடம் விடைபெற்றுக் கூட்டத்தில் கலந்தார்.
மாருதி ஆலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் உற்சாகமாக இருந்தனர். அந்த பூங்கா முழுவதிலும் நிறைந்திருந்த தொழிலாளர்களிடம் ஒருவிதமான அச்சமற்ற களிப்பைக் காண முடிந்தது. தாங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்கிற நம்பிக்கையை அந்தக் கூட்டம் அவர்களுக்கு ஏற்படுத்தியதா? அல்லது இந்திய அரசின் ஆதரவையும் சர்வ வல்லமையையும் கொண்ட ஒரு ஜப்பானிய கோலியாத்தைப் பணிய வைத்த வர்க்கப் பெருமிதமா? அல்லது இறுக்கமான சாதிய கட்டுமானத்தின் நடுமையத்தில் சாதி கடந்த வர்க்க ஒற்றுமை ஒன்றைச் சாதித்த வெற்றிச் செருக்கா?
தேவிலால் பூங்காவில் எதிரொலித்த முழக்கங்களில் வெளிப்பட்ட வர்க்க கோபத்தின் அடியாழத்தில் இருந்த தோழமைப்பூர்வமான மகிழ்ச்சியின் நினைவுகளோடு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
கோழி கூவும் முன்னே எழுந்து இரவு படுக்கச் செல்லும் வரை கிராமப்புறப் பெண்களுக்கு ஓய்வில்லை. அப்படி இடையறாது உழைத்தும் அவர்களது வாழ்க்கை என்பது ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. வேலை செய்தே வாழவேண்டும் என்பதில் இங்கே வயது வித்தியாசம் இல்லை. ஆதிக்க சாதியானாலும், ஒடுக்கப்படும் சாதியானலும் இப்பெண்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் இடம்பெறும் பெண்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வாழ்பவர்கள்.
95 வயது தொழிலாளி பெரியம்மாள்.
சாலப்பாளையத்தைச் சேர்ந்த பெரியம்மாளுக்கு 95 வயதாகிறது. தள்ளாத வயதிலும் தடியூன்றி (மரவள்ளிக்கிழங்கு குச்சி) உழைக்கிறார். அவரது முதுகு கூனினாலும் சுயமரியாதைக்கு கூனில்லை. தென்ன ஓலை உரித்து ஈக்குமாறு தயாரித்து விற்பனை செய்கிறார். ஒரு நாளைக்கு நான்கைந்து செய்வார். ஒரு ஈக்குமாறுக்கு 15 ரூபா கிடைத்தால் அதிகம்.
கல்லக் கொடி (நிலக்கடலை செடி) சுமந்து வரும் செல்லம்மாள்.
சிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சிறு விவசாயியான செல்லம்மாவிற்கு 60 வயது இருக்கும். அவருக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்ததாகக் கூறும் அவர் இந்த ஆண்டு மழையும் காவிரியும் பொய்த்து விட்டதால் ஒரு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிட்டவர் இந்த நிலைமையே இன்னும் நீடித்தால் அதுவும் வந்து சேராது என்கிறார். அவரது கணவர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது எல்.ஐ.சி ஏஜென்டாக வேலை பார்க்கிறார். விவசாயம் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை அவர்.
செல்லம்மாவின் வயலில் வேலை செய்யும் பாப்பா கூறுவது போல அதிகாலை 3-லிருந்து 4 மணிக்குள் செல்லம்மாவின் நாள் ஆரம்பிக்கிறது. வீடு, வாசல் மற்றும் கட்டுத்தாரை(மாட்டுத் தொழுவம்) பெருக்குவது, வாசலுக்கு சாணம் தெளிப்பது, எருமை மாடுகளுக்கு களநீர் காட்டுவது, பால் கறப்பது, சமையல் வேலை என்று பம்பரமாய் சுழல்வதில் எட்டு மணியாகி விடுகிறது. அதன் பின்னர் கரும்பு சோவை உரிக்க சென்று நண்பகலுக்கு தான் வருகிறார். மதிய உணவை முடித்து விட்டு எருமை மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு முடுக்கி விடுகிறார். மீண்டும் பால் கறத்தல், சமையல் என்று இரவு 8 மணிக்கு அவரது அன்றைய ஒரு பகலும் இரவும் ஒருவாறாக முடிகிறது.
இருப்பினும் இங்கு ஒரு பெண்ணை விவசாயி என்று சமூகம் அழைப்பதில்லை. அது ஆண்களுக்குரியதாகவே இருக்கிறது.
பாப்பா செல்லம்மாவின் ஊரைச்சேர்ந்த ஒரு விவசாயக் கூலி. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 7 மணிக்கு கூலி வேலைக்குச் செல்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை மாலை 5 மணிக்கு முடிகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நூறு ரூபாயாக இருந்த கூலி தற்போது 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் வந்தபிறகுதான் பாப்பா போன்ற கூலி விவசாயிகளுக்கு கூலி உயர்ந்திருக்கிறது.
நாங்கள் பார்த்த அன்று செல்லம்மாவும் பாப்பாவும் காய்ந்த நிலக்கடலைக் கொடியை சுமந்து வந்து சாலையோரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் நிலத்தில் இருந்து அவர்களது ஊர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வெள்ளாளக் கவுண்டர் எனும் ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர் செல்லம்மாள். அருந்ததியர் எனும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவர் பாப்பா. இன்றும் செல்லம்மாவின் தெருக்கு சென்றாலும் வீட்டிற்குள் பாப்பா போக முடியாது. இருப்பினும் இருவருமே உழைத்து கருத்தவர்கள்.
புகைப்படம் எடுத்த பிறகு பாப்பா அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். இருப்பினும் “எங்க வீட்டில் நீங்கள் சாப்பிடுவீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டார். “அவர்கள் டவுனில் இருக்கிறார்கள் அதனால் வித்தியாசம் பார்க்கமாட்டார்கள்” என்று செல்லமாள் பதிலளிக்கிறார்.
மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மோகனாம்மாள்.
மோகனாம்மாளுக்கு நான்கு வயதில் ஒரு மகன். காலையில் வீடு வாசல் பெருக்கிய பின்னர் ஆறு மணி அளவில் சமையல் வேலையில் ஈடுபடுகிறார். அவரது கணவரும் கட்டுத்தாரை பெருக்குவது, பால் கறப்பது என்று வேலைகளில் ஈடுபடுகிறார். பையனை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு கரும்புச் சோவை (தோகை) உரிக்கச் சென்று பிற்பகல் பன்னிரெண்டு மணிக்கு தான் மோகனாம்மாள் வீடு திரும்கிறார். குளித்த பின்னர் மதிய உணவை (மூன்று வேளையும் சோறு மற்றும் பருப்புக் குழம்பு) முடித்துவிட்டு எருமை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலை 4 மணிக்கு வீட்டிற்குத் திரும்புகிறார். ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் வீட்டு வேலைகள்… மோகனாம்மாளின் உழைப்புக்கு மாத சம்பளம் கொடுப்பதாக இருந்தால் எவ்வளவு கொடுக்கலாம்?
விதைக்கரும்பு ஊன்றும் வேலையில் ரேவதி.
கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேவதி. பறையர் சாதியைச் சேர்ந்த அவருக்கு 10-வது படிக்கும் ஒரு மகளும் 10-வது வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட ஒரு மகனும் இருக்கிறார்கள். அவருடன் அவரது பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் கரும்பு வெட்டுவது, கரும்புக் கரணை (விதைக் கரும்பு) ஊன்றுவது உள்ளிட்ட விவசாயம் சம்மந்தப்பட்ட வேலைகளைக் குத்தகையாக(Contract) எடுத்து செய்கிறார்கள். வெளியூர் வேலைக்கு என்றால் 10 பெண்களும் அதிகாலை 3 மணிக்கே கிளம்பி விடுகிறார்கள். வேலைக் குத்தகைக்கு வரும் வருமானத்தை பத்து பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவரது மகள் வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும் 10 ஆம் வகுப்பு படிப்பதனால் வீட்டுவேலை செய்வதிலிருந்து ரேவதி தடுத்து விட்டார். அவரது கணவரும் கூலி வேலைக்குத்தான் செல்கிறார். உடல் வலிக்காக குடிக்கத் தொடங்கியவர் தொடர்ந்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறார் ரேவதி. “பொம்பளைங்களும் தான் உடம்பு வலிக்க வேலைச் செய்யறாங்க. அவங்களும் குடிச்சா குடும்பம் என்னத்துக்கு ஆகும்? பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க? ஒரு நாள் பொம்பளைங்க வீட்டு வேலைக்கு லீவு போட்டா அன்னைக்கு தெரியும் அவுங்களுக்கு பொம்பளைங்களோட அருமை” என்கிறார்.
விளக்குமாறு தயாரிக்கும் வேலையில் இலட்சுமி.
கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இலட்சுமிக்கு 65 வயது. கணவர் ஓராண்டிற்கு முன்பு காலமாகி விட்டார். அவருக்கு திருமணமான 2 மகள்களும் ஒரு மகனும் இருகிறார்கள். காவிரித் தண்ணீர் வராததால் தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளார். 100 நாள் வேலைக்கும் செல்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஈக்குமாறும் உரிக்கிறார். “பொழைக்கணும்னா ஏதாச்சும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும். சும்மா இருக்க முடியாதுல்ல”.
கடை விற்பனையோடு வீட்டு சமையலுக்கான காய்களையும் நறுக்குகிறார் வகிதா பீவி.
வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வகிதா பீவிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். மதிய உணவிற்காக காய்கறியை நறுக்கிக்கொண்டே தனது சிறிய மளிகை கடையைக் கவனித்துக் கொண்டு பேசினார். கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருவது மட்டும் தான் பாயுடைய(அவரது கணவர்) வேலை. மற்றபடி கடையைத் தானே கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். காலை 6 மணியில் இருந்து வீட்டு வேலைகளை பரபரப்புடன் முடித்து விட்டு கடைக்கு செல்கிறார். இரவு 9 மணிக்கெல்லாம் கடையை அடைத்து விட்டு 9 அல்லது பத்து மணிக்கு உறங்கச் செல்கிறார்.
ஒரு செங்கல் அறுத்தால் 55 காசு என்கிறார் ஐந்து இலட்சம்!
விழுப்புரத்தைச் சேர்ந்த கலகலப்பான பெண் “ஐந்து இலட்சம்”. அவரது பெயரே அதுதான். கொக்கராயன்பேட்டையில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலைச் செய்கிறார். தனக்கு முன் பிறந்த 5 குழந்தைகளும் இறந்து விட்டதால் அரிய பொக்கிஷமாக பிறந்த தனக்கு ஐந்து இலட்சம் என்ற பெயரை பெற்றோர்கள் வைத்ததாக பெயரின் பின்னணியை விளக்குகிறார். ஒரு செங்கல்லிற்கு 55 காசுகள் கிடைக்கும் என்று கூறுபவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 1500 செங்கற்கள் வரை அறுக்கிறார். அதன்படி இவர்களுக்கு ரூ 855 கிடைக்கும். சூளை முதலாளியிடம் பெற்ற முன்பணம் 70 ஆயிரம் ரூபாயில் மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கழித்து வருகிறார்கள். ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்கிறார்.
அவரது மகன் விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு படிக்கிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அரசு வேலை கிடைத்தும் தன்னுடைய மகளை அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டதாக கூறுகிறார். தனது மருமகனை விட தனது மகள் நன்கு படித்திருந்ததாகவும் ஆனால் தன குடும்பத்திற்கு சமையல் செய்து கொண்டு வீட்டை கவனித்து கொண்டாலே போதுமானது என்று மகளின் கணவர் கூறி விட்டாராம். தனது மகள் தன்னைப் பார்க்க வருவதற்கு அவரது மருமகன் மறுப்பதை நினைத்து மனம் வெதும்புகிறார். விடைபெறும் போது “அடுத்த முறை நீங்க கண்டிப்பாக வரணும். நான் நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வெச்சு போடுறேன்” என்று அன்புடன் அழைக்கிறார்.
செங்கல் அறுக்கும் பச்சியம்மாள்.
பச்சியம்மாள் ஓமலூரைச் சேர்ந்தவர். வயது 60 ஆகிறது. தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் குடும்பமாக கொக்கராயன்பேட்டை செங்கல் சூளையில் வேலைச் செய்கிறார். தினமும் காலை 4 மணிக்கு செங்கல் அறுக்கும் வேலையைத் தொடங்குகிறார். அறுக்கும் செங்கலின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலி கிடைக்கும். ஆயினும் பொதுவாக பெண்கள் 500 செங்கல்கள் வரையும் ஆண்கள் 1000 வரைக்கும் அறுக்க முடியும் என்கிறார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழைமைகள் செங்கல் சூளைக்கு விடுமுறை” என்கிறார். ஆனால் அந்த இரு நாட்களிலும் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்குச் செல்வதாக கூறுகிறார்.
கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பச்சியம்மாள்.
பச்சியம்மாளின் மருமகள் மல்லிகாவிற்கு ஐந்தாவது படிக்கும் ஒரு மகளும் 3 வது படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவரும் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அவரது குழந்தைகள் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.
மணத்தக்காளி விற்கும் தங்கம்மாள்.
கணவனை இழந்த கூலி விவசாயியான தங்கம்மாளுக்கு 60 வயதாகிறது. தொட்டிக்காரப்பாளையத்தைச் சேர்ந்த அவருக்கு திருமணமான மூன்று மகன்கள் இருந்தாலும் தனியேதான் வாழ்கிறார். முதன்முதலாக கீரை விற்க (மிளகு தக்காளி கீரை அல்லது மணத்தக்காளிக் கீரை) கொக்கராயன்பேட்டைக்கு வந்தாராம். “பொண்ணுன்னு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லேன்னா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க” என்று தனது இயலாமையை நினைத்து கண் கலங்குகிறார். இருந்தும் தம்முடைய உடலில் வலு இருக்கும் வரை தன்னால் தனித்து வாழ முடியும், பின்னாடி கடவுள் விட்ட வழிதான் என்கிறார்.
வேங்கிபாளையத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பெண்கள்.
பொதுவாக நீர்வளம் குறைந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஆண்டு வேங்கிபாளையத்தை வறட்சி கடுமையாக தாக்கியிருக்கிறது. ஆடு மாடுகளை வைத்து சமாளிப்பது மிகவும் சிரமம் என்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். நிலங்கள் தரிசானதால் நிலமுள்ளவர்கள் நிலமற்றவர்கள் என்ற பேதமில்லாமல் அனைத்து பெண்களும் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள்.
பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனை!
சிவில்-ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நீதிமன்றங்கள் !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளை சார்பாக கடந்த 2-4-17 ஞாயிறு அன்று “ பேராசிரியர் சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய் ! கருத்துரிமையை நசுக்கும் ஊபா (UAPA) சட்டத்தைநீக்கு!” என்ற முழக்கத்தை முன் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது.
பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்“மாபெரும் அபாயமாய் மின்னணு சாட்சியங்கள் ! சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள் !” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தோழர் பாலன்
நரசிம்மராவ் – மன்மோகன் சிங் இணைந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் கொள்கையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள். பகத் சிங் ஏகாதிபத்தியத்தை முற்றிலும் ஒழிக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்தார். இப்போது நரேந்திர மோடி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தரகர் வேலை பார்க்கிறார். பறந்து பறந்து பன்னாட்டு முதலாளிகளை இந்தியாவுக்கு அழைக்கிறார். ஆனால் அவன் நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை சொந்த நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கேட்பதில்லை. கடமையைச் செய் ! பலனைக் கேட்காதே என்று கீதையில் கண்ணன் சொன்னதை மோடி அமல்படுத்துகிறார்.
நமது தாய் நாட்டின் வளங்களை எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார். தண்டகாரண்யா மலைப் பகுதியிலே எண்ணற்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அவற்றைக் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கத் தடையாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். ராணுவத்தை ஏவி அந்த மக்களைக் காட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை பேராசிரியர் சாய்பாபா எதிர்த்துப் போராடினார். அவர் டெல்லியில் இருக்கிறார். மராட்டிய மாநிலம் கட்ஜ்ரோலி மாவட்டக் கோர்ட் அவருக்கு தண்டனை கொடுத்துள்ளது. எப்படி? அந்தப் பகுதியிலுள்ள இரண்டு பேருக்கு சாய்பாபாவைத் தெரியும் என்பதை வைத்து வழக்குப் போட்டு ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர் பிணையில் வந்தார். இப்போது அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப், பென் டிரைவ், சி.டி., டி.வி.டி. போன்ற மின்னணு சாதனங்களை சாட்சியங்களாக வைத்து அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. மின்னணு சாதனங்கள் முதல் நிலை சாட்சியங்கள் அல்ல. இந்த சாட்சியங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தீர்ப்பு வழங்கியுள்ளார். அது 7 நீதிபதிகள் அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் உள்ளது. எனவே மின்னணுக் குப்பைகளை வைத்துச் சொல்லப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(ஊபா) ஒரு மக்கள் விரோதக் கருப்புச் சட்டம். குடிக்கத் தண்ணீர் கேட்டால் அது சட்ட விரோதம். ஆற்று நீர், நிலத்தடி நீரைக் கொள்ளையடித்தால் அது சட்டப் பூர்வம். வேலை கேட்டால் சட்டவிரோதம். வேலையை விட்டுத் தூக்கினால் சட்டப்படியானது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடினால் சட்டவிரோதம். வாழ்வாதாரங்களைக் கொள்ளையடித்தால் அது சட்டவிரோதம் இல்லை. தாடி வைத்துள்ள இசுலாமியருக்கு ஊபா.
மதுரை வழக்கறிஞர் முருகன் ஊபா சட்டதில் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? மாவோயிஸ்டுகள் என்று சொல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில தோழர்களுக்காக அவர் கட்டணம் வாங்காமல் வாதாடினார். அவர் கடமையைச் செய்தார். பலனை எதிர்பார்க்கவில்லை. அதுதான் குற்றம் என்று ஊபா அவர் மீது பாய்ந்துள்ளது. சட்டவிரோதம் என்று எதை வேண்டுமானாலும் அரசு சொல்லலாம். அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அதுதான் பெரிய அபாயம்.
ஒரு நாயைக் கொன்றால் அதை ஏன் கொன்றாய் என்று கேட்டால் அதற்குப் பைத்தியம் என்று சொல் என்றான் ஹிட்லர். அதுபோலத்தான் மக்களுக்காகப் போராடுகிறவர்களை நக்சலைட்டுகள். பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்று சொல்லி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் மோடியின் வேலை. ஹிட்லரின் முடிவு மோடிக்கும் ஏற்படும் என்று சொல்லி தனது சிறப்புரையை முடித்தார் வழக்கறிஞர் தோழர் பாலன்.
முன்னதாக தலைமையுரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் “ பேராசிரியர் சாய்பாபா முதலில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனால் இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எழ வேண்டிய எதிர்ப்புக் குரல்கள் குறைந்துள்ளன. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது படித்த அறிவுஜீவி தரப்பினர் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கோ இருக்கிற சாய்பாபாவுக்குத்தானே வந்திருக்கிறது. நமக்கு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட முடியாது. மதுரையில் வழக்கறிஞர் முருகனுக்கு எதிராக இந்தக் கருப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. நாளை நெடுவாசலில், தஞ்சையில், கூடங்குளத்தில், மெரினாவில் போராடுகிற மாணவர்கள் – இளைஞர்கள் மீது பாயலாம். டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது, என் மீது தேச துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழலுக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது நிரந்தரத் தொழில் தடைவரை தண்டனை சட்டப் புறம்பாக மின்னணு சாட்சியங்களை வைத்து விதிக்கப்பட்டுள்ளது.
தோழர் வாஞ்சிநாதன்
சாய்பாபா 90% உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலியில் தான் அவரால் இயங்க முடியும். அவருடைய சிந்தனைக்கு, கருத்துக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காகப் போராடுகிற முன்னணியாளர்கள், அமைப்புகள், இயக்கங்கள் அறிவுஜீவிகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.
ஆஜ்மீர் தர்கா, மாலேகான், ஹைதராபாத் போன்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துமத வெறியர் அசீமானந்தா குண்டு வைத்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பின்பும், பத்திரிகைகளில் நேரடியாக பேட்டி கொடுத்து தண்டனையும் எதிர்பார்த்திருந்த போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு போதிய சாட்சியங்கள் இல்லையாம். ஆனால் நேரடி சாட்சியங்களே இல்லாத நிலையில் இரண்டாம் தர சாட்சியங்களை வைத்து சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. பார்ப்பன இந்து மத வெறிக் கும்பலின் பாசிசக் கொடுங்கரங்கள் நீதிமன்றங்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி தன் வசமாக்கி வருகின்றன. எனவே மக்கள் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிற, ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்டுள்ள அனைவரும் செயலை நோக்கி முன்வரவேண்டிய தருணம் இது “ என்று கூறி முடித்தார்.
அதன் பிறகு கேள்வி-பதில் நிகழ்வு நடை பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பினர்களும் தங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மின்னணு சாட்சியங்கள் பற்றியும், தற்போதைய அரசியல் சமூக சூழலில் நீதிமன்றங்களை நாம் பயன்படுத்த முடியுமா? சாய்பாபா பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என்ன? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.பொருத்தமான முறையில் பாலன் பதில் சொன்னார். மேல்முறையீட்டில் அவருக்குப் பிணை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார். லாட்டரி விழுவது போல் சில வேளைகளில் தீர்ப்புகள் வருவதுண்டு என்று தெளிவுபடுத்தினார்.
நிறைவாக கிளைச் செயலாளர் லயனல் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் பெண்கள் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் சுமார் 250 பேர்வரை கலந்து கொண்டனர். 5000- துண்டறிக்கை, சுவரொட்டி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பலர் செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். சட்டம், நீதி சார்ந்த பல அறிஞர்களின் மேற்கோள்கள் பிளக்ஸில் அச்சிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது.
தகவல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை, தொடர்புக்கு – 9443471003
பொய்வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை அனுபவித்து வருகின்ற மாருதி ஆலைத்தொழிலாளர்களது சிறை மீட்புக்காக 4.4.2017 அன்று நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டங்கள், பேரணிகளை நடத்த மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கம் அறைகூவல் விடுத்திருந்ததையடுத்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டக்குழு சார்பில் 4.4.2017 அன்று காலையில் ஆவடியை அடுத்துள்ள டி.ஐ மெட்டல் பார்மிங் ஆலைவாயிலிலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சாய்மிர்ரா ஆலைவாயிலிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மெட்டல் பார்மிங் ஆலைவாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநிலப்பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். சாய்மிர்ரா ஆலைவாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் முகிலன் கண்டன உரையாற்றினார். இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் நிரந்தர தொழிலாளர்தள், கான்டிராக்ட் தொழிலாளர்கள் ஆகிய இருபிரிவினரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வர்க்க ஒற்றுமையையும், போராட்ட மரபையும் உயர்த்திப்பிடித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) தொடர்புக்கு: 9445368009
***
ஏப்ரல் 4 2017 ல் மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்கான நாடு தழுவிய போராட்டங்கள் – கும்மிடிப்பூண்டி
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கும்மிடிபூண்டி
***
ஏப்ரல் 4 2017 ல் மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்கான நாடு தழுவிய போராட்டங்கள் – திருவொற்றியூர்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவொற்றியூர்
***
மாருதி தொழிலாளிகளை விடுதலை செய்! ஓசூரில் போராட்டம்!
ஒசூரில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 4.4.2017 அன்று மாலை 5 மணியளவில் ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத் தலைவர் தோழர்.பரசுராமன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தோழர் செந்தில் தனது கண்டன உரையில், ஓசூரில் செயல்பட்டுவரும் கமாஸ் வெக்ட்ரா ஆலை மாருதி சுசுகி ஆலையைப் போலவே ஒரு பன்னாட்டு நிறுவனம். அங்கே மாருதி ஆலை நிர்வாகம் தொழிலாளர் மீது நடத்துகின்ற தாக்குதல் அத்தனையும் இங்கேயும் தொழிலாளர் மீது ஈவிரக்கமற்றமுறையில் தொடுத்து வருகிறது என்பதையும் அதற்கு தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதையும் ஆதாரங்களுடன் முன்வைத்து அம்பலப்படுத்தினார். அந்தவகையில் மாருதி தொழிலாளர் போராட்டம் நாம் சந்திக்கின்ற பிரச்சினையை முன்வைத்து நடக்கின்ற போராட்டம் இதனை ஆதரிப்பது என்பது நமது உயிராதாரமான கடமை என்பதை வலியுறுத்திப் பேசினார்.
அடுத்ததாக, பேசிய தோழர் பரசுராமன் தனது உரையில், உழைப்புக்கேற்ற ஊதியம், சட்டப்படியான ஒய்வு, தொழிற்சங்க உரிமை இவைகள் பெறவே மாருதி தொழிலாளர்கள் தங்கள் ஆலையில் சங்கமாக சேர்ந்தார்கள். மாருதி நிர்வாகமோ இதனை அங்கீகரிக்க மறுத்து சங்கத்தை ஒழித்துக்கட்ட சதி செய்தது. அதன் விளைவாக தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின்மீது பொய்யாக அவர்களாலே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்முறை நிகழ்வை காரணமாக வைத்து அவர்கள்மீது கொலைப்பழி போடப்பட்டது. தற்போது ஒரு தொழிலாளி உட்பட 12 சங்க நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனை, 19 பேருக்கு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது, மாருதி நிர்வாகத்தின் அடியாளாக செயல்படும் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
இத்தீர்ப்பின் நோக்கம் தொழிலாளர் வர்க்கம் சங்கமாய் திரளக் கூடாது என ஆளும் வர்க்கம் கருதுகிறது. இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதும் அதற்காக செயல்பட்டுவருகிறது என்பதையும் பார்க்கமுடிகிறது. ஆனால் தீவிரமாகும் கார்ப்பரேட் கொள்ளைகள் உழைக்கும் மக்களை போராட்ட பாதைக்கு தள்ளுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ் மோடியின் சட்ட திருத்தங்களும் புதிய திட்டங்களும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்குகிறது. அரசும் அதன் போலீசு, நீதிமன்றம் போன்ற அதன் உறுப்பும் மக்களுக்கானதல்ல என்பதை மாருதி தொழிலாளர்கள் தங்களது வழக்கின் மூலம் நிரூபிக்கும் வகையில் சாட்சியமாகி நிற்கிறார்கள். நாம் மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காக வர்க்கமாய் திரண்டு போராடுவோம் என்று அறைகூவி அழைத்து பேசினார். இறுதியாக தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.
தோழர் முருகேசன்
தோழர் பரசுராமன்
தோழர் செந்தில்
தோழர் பரசுராமன்
இலங்கை ஆர்ப்பாட்டம்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 9788011784
சவுதி அரேபியாவின் தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளில் ஏமன் தலைநகர் சானாவில் பல பத்தாயிரக்கணக்கான ஏமன் மக்கள் பெருந்திரளாக அணிதிரண்டனர். 2017, ஜனவரியில் ஏமனைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சவுதியின் இராணுவத் தலையீட்டை எதிர்த்தும் நாட்டின் அமைதியை மீட்டெடுக்கவும் ஏமன் மக்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துனீசியாவில் மல்லிகைப் புரட்சியாகத் துளிர்த்த அரபு வசந்தம் ஆள அருகதையற்ற ஏகாதிபத்தியங்களுடன் கள்ளக்கூட்டணி வைத்திருந்த சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து ஜனநாயகத்தின் தேவைக்காக வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் வெடித்துக் கிளம்பியது. ஆயினும் இப்போராட்டங்களின் விளைச்சலை இசுலாமிய மத அடிப்படைவாதிகளும் மறைமுகமாக ஏகாதிபத்திய நாடுகளும் அறுவடை செய்து கொண்ட கேலிக்கூத்துகளுடன் வசந்தம் முடிவுக்கு வந்தது. அரபு வசந்தத்தால் ஏமனில் 2012 ஆம் ஆண்டு தூக்கியெறியப்பட்ட அலி அப்துல்லா சலே (Ali Abdullah Saleh) மீண்டும் தலைவராக போராட்டக்காரர்களால் அழைக்கப்பட்டிருப்பது அந்த கேலிக்கூத்துகளில் ஒன்று.
அரபு வசந்தத்தை அறுவடை செய்து ஆட்சியைப் பிடித்த சவுதி சார்பு அப்த் – ரப்பு மன்சூர் ஹதியின் (Abd-Rabbu Mansour Hadi ) ஆட்சியை அந்நாட்டு மக்கள் ஹூத்திகளுடன் (Houthis) சேர்ந்து 2015 ஆண்டில் தூக்கி எறிந்தனர். மீண்டும் அவரை அரியணையில் அமர்த்த சவுதி கூட்டுப்படை சதி வேலையிலும் குண்டு வீச்சிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதனை எதிர்த்து ஏமன் மக்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்று கூறி கொண்டு எண்ணெய் வளங்களுக்காகவும் ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் முசுலீம் மக்களுக்கு எதிராக குண்டுவீச்சுத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. முசுலீம் பயங்கரவாதத்திற்கு கருத்தும் காசும் கொடுத்து புரவலராக இருக்கும் சவுதி ஷேக்குகளிடம் மட்டும் அவர்களிடம் இருக்கும் பெட்ரோலுக்காகவும் ஷேக்குகளின் டாலர் மோகத்தினாலும் அமெரிக்கா கூடிக் குலாவுகிறது. அமெரிக்காவும் ஷேக்குகளுக்கு நவீன ஆயுதங்களை அனுப்பிச் சவுதியை மத்திய கிழக்கின் நம்பிக்கைக்குரிய அடியாளாக வைத்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க-சவுதிக் கூட்டணியை ஏமன் ஆதரிக்க மறுத்த ஒரே காரணத்திற்காகப் பத்து இலட்சம் ஏமன் தொழிலாளிகளின் விசாக்களை இரத்து செய்தது சவுதி அரேபிய அரசு.
சவுதிப் கூட்டணிப் படைகளின் குண்டு வீச்சுகளாலும் கொலைவெறித் தாக்குதல்களாலும் ஏமன் இன்று நிலைகுலைந்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏமன் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சம் பட்டினியில் வாடி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
நாதியற்ற இந்த ஏமனின் முசுலீம் அகதிகளை உலகின் ஒரே அக்மார்க் இசுலாமிய அரசான சவுதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்பதுதான் ஆளும் வர்க்கங்களுக்கு பயன்படும் இசுலாத்தின் சர்வதேசத்திற்கு ஒரு எடுப்பான சான்று. குர் ஆனிலும், ஹதீசுகளிலும் மத்தின் பெருமையை தோண்டி எடுத்துப் பேசும் முசுலீம் மதவாதிகள் யாரும் சமகாலத்தில் சவுதி அரேபிய செய்து வரும் கொடுமைகளை கண்டிப்பதில்லை.
ஆயினும் ஏமன் மக்களது போராட்ட உணர்வுகளை அரசியல்படுத்தி ஏகாதிபத்திய மற்றும் இசுலாமிய அடிப்படைவாத சக்திகளிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் வரை அவர்களுக்கு விடிவுகாலம் இல்லை.
சவுதிக் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டேன். இந்தப் போரை நிறுத்துவதற்கு உலகின் காதுகளுக்கு ஒருவேளை எங்களது கூக்குரல் கேட்கக்கூடும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.
அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை இல்லையென்றாலும் குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் மத்திய சபீன் சதுக்கத்தில் (central Sabeen square) நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சவுதியின் இராணுவத் தலையீட்டிற்குப பிந்தைய இரண்டு ஆண்டுகளில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய அரசியல் கூட்டம் இது.
2012 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவை மீண்டும் பதவியேற்க போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சலே, அந்தப் பேரணியில் சற்றுநேரம் கலந்து கொண்டார்.
2015 க்குப் பிறகு ஏமனில் நடந்து வரும் மோதலில் கொல்லப்பட்ட 16,000 பேர்களில் பொதுமக்களின் எண்ணிக்கை மட்டும் பத்தாயிரத்தைத் தாண்டும்.
30 இலட்சம் ஏமன் மக்கள் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டிருப்பதுடன் 70 இலட்சத்திற்கும் அதிகமானோர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.
சவுதி மற்றும் அதன் சன்னி இசுலாமியக் கூட்டணியினால் 2017, ஜனவரி மாதம் ஏமனில் பலப்பத்து முறை வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவற்றில் பெரும்பாலானவை போர் குற்றங்களாக இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.
“நீரின்றி அமையாது உலகு” என்பது குறள். உயிரின் ஆதாரமான நீரை லாபத்தின் ஊற்றாக கருதுகிறது உலக முதலாளித்துவம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மண் தனியார்மயமாகிவிட்டது. இது மழை தனியார்மயமாகி வரும் காலம்.
தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரை கர்நாடகம் மறுப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் விளைவாக தஞ்சை பாலைவனமாகி வருவதும் தெரியும். தஞ்சை மட்டுமல்ல, தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. விவசாயிகள் சாகிறார்கள், கால்நடைகள் சாகின்றன, விலங்குகள் காடுகளிலிருந்து தண்ணீர் தேடி நகரத்துக்குள் நுழைகின்றன, மக்கள் குடிநீரைத் தேடி வீதி வீதியாக அலைகிறார்கள்.
கிருஷ்ணா நீருக்காக ஆந்திரத்திடம் கெஞ்சுகிறது தமிழக அரசு. கடல் நீரைக் குடிநீராக்குகிறது. குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரை குடிநீராக்குகிறது. அடுத்து சாக்கடைத் தண்ணீரைக் குடிநீராக்க முடியுமா என்று யோசிக்க வேண்டிய நிலையில் தவிக்கிறது தமிழகம்.
இப்படிப்பட்ட சூழலிலும், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்க அனுமதிக்கிறது தமிழக அரசு. தமிழகத்தின் இளைஞர் சமூகமும், வணிகர் சமூகமும் கோக் பெப்சிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகின்றன. இந்த சூழலில் மோடியை சென்று சந்திக்கிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவர். கோக் பெப்சி நிறுவனத்து தண்ணீரை உறிஞ்சி விற்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
ஒரு லிட்டர் கோக் தயாரிக்க ஏழு லிட்டர் கழிவுநீரை வெளியேற்றுகின்றன கோக்-பெப்சி ஆலைகள். வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும் மேலும் எட்டு லிட்டர் நிலத்தடி நீரை மாசுபடுத்திப் பயனற்றதாக்குகிறது என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.
ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஆப்பிரிக்க – ஆசிய நாடுகளில் குடிநீரின்றி வெளியேறும் மக்களை “தண்ணீர் அகதிகள்”என்கின்றனர். இவர்கள் வானம் பொய்த்ததனால் அகதிகளானவர்கள் அல்ல. பணமில்லாத காரணத்தினால் அகதிகளானவர்கள். பட்டினிச் சாவை உலகுக்கு வழங்கிய முதலாளித்துவம், அடுத்தபடியாக தாகச்சாவை வழங்குகிறது. குளிர்பானங்கள் எனப்படுபவை தாகத்தை தணிப்பவை அல்ல, தாகத்தால் மக்களை தவிக்க வைப்பவை.
தண்ணீரைப் பண்டமாக்கி விற்பவர்கள் மனித குலத்தின் எதிரிகள், கொடிய பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளுக்குத் துணை நிற்பவைதான் மத்திய மாநில அரசுகளும் நீதிமன்றமும் என்ற உண்மையை, காலிக் குடங்களுடன் சாலைகளை மறிக்கும் பெண்களுக்குச் சொல்லுங்கள்.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
கோக்-பெப்சி : கொலைகார கோலாக்கள் ! – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
தண்ணீர் தனியார்மயம் : பேரழிவின் தொடக்கம் !
அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர் !
உலக வங்கி – சர்வதேச நாணயநிதியம் : பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் !
ராஜஸ்தான் : கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில் ! – சாய்நாத்
பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
கோக் எதிர்ப்பு : பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி !
மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !
காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
ஏப்ரல் 04: மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்கான நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம்!
கடந்த 18.06.2012-ல் தொழிற்சங்க உரிமைக்காகவும், சட்டவிரோத ஒப்பந்த முறைக்கு ஏதிராகவும் போராடிய மாருதி தொழிலாளர்கள் 148 பேரை சிறையிலடைத்தது, ஹரியானா போலிசு. அவர்களில் 13 தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சிறை. 4 தொழிலாளிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 14 பேருக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்து, கடந்த 18.03.17 தேதியில் தீர்ப்பளித்துள்ளது, ஹரியானா மாநில கீழமை விசாரணை நீதிமன்றம். தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க மாருதி நிர்வாகம் – ஹரியானா போலிசு – நீதிமன்றம் கூட்டுச்சதி செய்து போராடும் தொழிலாளர்களை பழி வாங்குகிறது.
நாடு முழுவதிலும் போராடுகின்ற தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக அளிக்கப்பட்ட இந்த தண்டனையின் மூலமாக போலீசும் நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கானதல்ல என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. இந்த அரசு உழைக்கும் மக்களுக்கானதாக இல்லாமல் முதலாளிகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது என்பது நாளுக்கு நாள் அம்பலப்பட்டு வருகிறது.
இனியும் அரசை, நீதிமன்றத்தை நம்பி பயனில்லை. மாருதி தொழிலாளர்களை பாதுகாக்க நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கமும் போராட வேண்டும். அது ஒன்றே சிறையில் இருக்கும் மாருதி தொழிலாளர்களை மீட்பதற்கான ஒரே வழி !
இந்த பாதையில் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. ஏப்ரல் 04-ம் தேதியில் நாடு முழுவதிலும், மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்காக நடைபெறவுள்ள போராட்டத்தை எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரித்து கீழ்கண்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளோம்.
பேருந்து நிலையம், கும்முடிப்பூண்டி
பெரியார் நகர், திருவொற்றியூர்
அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம்.
தாலுக்கா அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்.
இந்த செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இப்படிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
9444461480, 9445368009, 8807532859, 8489735841
***
ஏப்ரல் 4: மாருதிதொழிலாளர்களின்சிறைமீட்ப்புக்கானநாடு தழுவியபோராட்டத்தைஆதரிப்போம்!
ஏப்ரல் 4 செவ்வாய்க் கிழமை,
மாலை 5 மணி – ராம்நகர் அண்ணா சிலை அருகில்,
ஓசூர்.
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்ததொழிலாளர்களே, தோழர்களே!
ஹரியானா மாநிலம், மானேசர் மாருதி தொழிற்சாலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மாருதி நிர்வாகம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே வெளியில் இருந்து ரவுடிகளையும், போலீசையும் வரவழைத்து தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தியது. ரவுடிகளைக் கொண்டு வன்முறையை திட்டமிட்டு நிர்வாகமே நடத்தி, ஆலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தது. அவினேஷ் குமார் என்ற எச்.ஆர். அதிகாரியைக் கொன்றது.
ஆனால், வன்முறையும் இந்தக் கொலையையும் காரணம் காட்டி 546 நிரந்தரத் தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 2346 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது மாருதி நிர்வாகம். குர்கான் மாவட்ட நீதிமன்றம், எத்தகைய ஆதாரங்களும் இல்லாத நிலையில், நிர்வாகம் ஏற்பாடு செய்த போலியான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, மாருதி சுசுகி தொழிற்சங்கத்தின் (MSWU) நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் 4 பேருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது. மேலும், 14 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே இந்த தண்டனையை சிறையிலேயே கழித்துவிட்டனர்.
ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எதிர்த்தும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமையைப்போல நடத்தப்படுவதை கண்டித்தும் உறுதியுடன் போராடி வந்ததால், இவ்வழக்கில் மாருதி நிர்வாகம் – போலீசு – நீதிமன்றம் – ஹரியானா அரசினால் குறிவைத்து பழிவாங்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு “வர்க்கத் தாக்குதல்”. அதிகாரத்தில் இருப்பவர்களால், உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே வழங்கப்பட்ட தீர்ப்பு இது.
ஆனால், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும், உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்ச் 18-ம் தேதி வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பை எதிர்த்து 30,000 தொழிலாளார்கள் குர்கானிலும், மானேசரிலும் வெலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
தேசவிடுதலைப் போராளிகளான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளான மார்ச் 23-ம் தேதி மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று, அரசு விடுத்திருந்த 144 தடையுத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வர்க்க ஒற்றுமையை நிலைநாட்டினர்.
“சட்டப்பூர்வமாக” தொழிலாளர் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவேண்டி அரசு நமக்கு வகுப்பெடுக்கிறது. பொய், பித்தலாட்டம், மோசடி மூலம் மாருதி தொழிலாளர்களை தண்டித்துள்ள இந்த அரசுக்கு அவ்வாறு கூறுவதற்கு அருகதை உண்டா? அன்னிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்காக பெயரளவில் இருந்த தொழிலாளர் நலச்சட்டங்களை “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசின் மூலம் முதலாளிகளின் கழிவறைக் காகிதங்களாக்கி விட்ட மோடி அரசுக்கு அந்த அருகதை உண்டா ? இல்லை, முற்றிலும் சட்டபூர்வமாகவே ஆள அருகதை இழந்துவிட்டது ஆளும் இந்த அரசுக் கட்டமைப்பு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இப்போது சட்டவிரோதமே சட்டமாக, அநீதியே நீதியாக, பொய்யே உண்மையாக, முதலாளி வகுத்த விதிகளே வழிகாட்டுதலாக முற்று முழுதாக அம்மணமாக நிற்கிறது. ஆம், சர்வாதிகாரத்தின் நிழல் பரவிவருகிறது. எதிர்த்து முறியடிக்காவிட்டால் இன்று மாருதித்தொழிலாளர்களின் நிலைதான் நம் அனைவருக்குமே. மாருதி நிர்வாகம் மற்றும் அரசின் கூட்டுத்தாக்குதலை தொழிலாளர் ஒற்றுமை கொண்டு முறியடிப்போம் !
ஏப்ரல் 4 மற்றும் 5 ம் தேதிகளில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாருதி தொழிலாளர்கள் சிறை மீட்புக்கான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது, மாருதி தொழிலாளர் சங்கம். அந்த போராட்டம் வர்க்க ஒற்றுமையின் அடையாளமாகவும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு மரண அடியாகவும் அமைய நாம் ஒன்றிணைவோம்!
மாருதி நிர்வாகம், போலீசு மற்றும் நீதித்துறையின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
ஆயுள் தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்யும் வரை போராடுவோம்!
தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்!
முதலாளிகளின் அடியாள் படையான இந்த அரசுக்கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784, ndlfhosur2004@gmail.com
உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம்: பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள்
தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால், மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பாட்டைக் கொண்டது நமது தமிழகம், ஆனால், இப்பொழுதோ, தாகத்துக்குத் தண்ணீர் கேட்கும் முன்பாக, பாக்கெட் தண்ணீர் வாங்கும் அளவிற்கு சட்டைப் பையில் காசு இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டிய பண்பாடு நம் மீது திணிக்கப்படுகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சி பாக்கெட்டுகளில், கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பது என்ற வரம்போடு இந்த தண்ணீர் வியாபாரம் நின்றுவிடவில்லை.
1985-ஆம் ஆண்டு வாக்கில் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 750 ஆக இருந்ததாகவும், 1995-இல் இந்த எண்ணிக்கை 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாகவும் அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. கிராமத்து உழைக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், இந்தியாவெங்கும் தண்ணீர் வியாபாரம் சூடு பிடித்து நடக்கத் தொடங்கியது.
குடிநீர் பிரச்சினைக்கு வறட்சி, மழையின்மை, நிலத்தடி நீர் வறண்டு போவது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், இந்தக் காரணங்களால் தண்ணீர் வியாபாரம் சிறிதளவுகூடப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவில் நடந்து வரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு மட்டும் 10,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை உறிஞ்சி பாக்கெட்டுகளில், கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பது என்ற வரம்போடு இந்த தண்ணீர் வியாபாரம் நின்றுவிடவில்லை. சமூகத்தின் சொத்தாகப் பாவிக்கப்படும் ஆறுகள், ஏரிகளைத் தனியாருக்கு குத்தகைக்கு விடுவது; விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசனத்தைத் தனியார்மயமாக்குவது; அரசாங்கம் வழங்கி வரும் குடிநீர் சேவையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எனத் தண்ணீர் வியாபாரம் ‘வளர்ச்சி’ அடைந்து வருகிறது.
இந்த அபாயகரமான வளர்ச்சிப் போக்கை, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அனைத்திலும் விரைவுபடுத்துவதற்காகவே, “காட்ஸ்” என்ற பெயரில் பொது ஒப்பந்தம் ஒன்றை (சேவைகளில் வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம் – General Agreement on Trade in Services) உருவாக்குவது குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உலகம் நாற்புறமும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், பூமி பந்தில் கிடைக்கும் மொத்த நீரில், 25% நீரைத்தான் மனிதன் குடிப்பதற்கும், தனது பிற தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த 2.5 சதவீத நன்னீரிலும், 68.9 சதவீத நீர், பனியாக உறைந்து கிடக்கிறது. இந்த உறைபனி போக, எஞ்சியுள்ள நன்னீர் ஆதாரங்களை ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தின் மூலம் கைப்பற்றுவதுதான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் நோக்கம். ஏனென்றால், எதிர்வரும் 2025-ஆம் ஆண்டில், உலக மக்களின் தண்ணீர் தேவை, தற்பொழுது இருப்பதைவிட, 56 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் பெட்ரோல் வியாபாரத்தில் சம்பாதிக்கும் இலாபத்தில், 40 சதவீத இலாபத்தை, மிகவும் எளிதாக தண்ணீர் வியாபாரத்தின் மூலம் சம்பாதித்து விட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஏகாதிபத்திய நிறுவனங்களின் இந்த இலாப நோக்கம் ஒருபுறமிருக்க, நன்னீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவதன் மூலம், ஏழை நாடுகளின் மீது தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்க தாக்குதலை, அந்நிறுவனங்களால் இன்னும் மிகக் கொடூரமாக நடத்த முடியும் என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். காட்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் தண்ணீர் என்பது மறுகாலனியாதிக்கத்தின் புதிய ஆயுதமாக ஏகாதிபத்தியங்களுக்குப் பயன்படும்.
அடித்தளம் போட்ட உலக வங்கி
அரசாங்கமும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஆறுகளையும், குடிநீர் வழங்குவதையும் தனியார்மயமாக்குவது இன்று வெளிப்படையாகவே தெரிகிறது.
”காட்ஸ்” ஒப்பந்தத்தின் மூலம் உலகு தழுவிய அளவில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திருப்பணிக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்ததே உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் தான். இந்த இரு நிறுவனங்களும், கடந்த இருபது ஆண்டுகளாக, மிகவும் கமுக்கமாகப் பல்வேறு நாடுகளில் தண்ணீரைத் தனியார்மயப்படுத்த முயன்ற விவரங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.
வளரும் நாடுகளில் காணப்படும் ஏழ்மையை ஒழிப்பதற்காகக் கடன் கொடுக்கும் வள்ளல்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், தண்ணீர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் 10 பன்னாட்டு நிறுவனங்களின் தரகனாகவே செயல்பட்டு வந்துள்ளன; கடன் வாங்கும் ஏழை நாடுகளின் நீர் ஆதாரங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்வதற்காகவே ஐந்துவிதமான பொறிகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1. கடன் மற்றும் அங்கீகார முத்திரை
ஏழை நாடுகளின் குடிநீர் திட்டங்களுக்கும், கழிவுநீர் சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கும் உலக வங்கி கடன் கொடுக்கும் பொழுது, அத்திட்டங்களில் தனியாரும் பங்கு பெற அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதன் மூலமே இந்தச்சேவைகளை உலக வங்கி தனியார்மயப்படுத்தி விடுகிறது.
குடிநீர் திட்டங்களுக்குச் செலவிடப்படும் மூலதனத்தை முழுமையாகத் திரும்ப எடுக்க வேண்டும் எனக் கோரும் உலக வங்கி, அதற்கு, ‘தண்ணீரைச் சந்தை விலைக்கு விற்க வேண்டும்’ என்றும் ‘சந்தை விலையைக் கொடுத்துத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அளவிற்கு நுகர்வோரின் வருவாயை அதிகரிக்க வேண்டும்’ என்றும் நிபந்தனைகளை விதிக்கிறது.
தற்பொழுது 530 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட 86 குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. உலக வங்கி ஏழை நாடுகளுக்கு வழங்கும் ஏழ்மை குறைப்பு ஆதாரக் கடன் திட்டங்களில், மூன்றில் இரண்டு கடன்களில் தண்ணீர் தனியார்மயம் நிபந்தனையாக விதிக்கப்படுகிறது. உலக வங்கி மூலம் குடிநீர் அல்லாத திட்டங்களுக்கு வழங்கப்படும் கடன்களில், தண்ணீர் தனியார்மயம் ஒரு நிபந்தனையாகவோ அல்லது கொள்கை அறிவுரையாகவோ ஏழை நாடுகளின் மீது திணிக்கப்படுகிறது.
அரசாங்கம் வழங்கி வரும் குடிநீர் சேவையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எனத் தண்ணீர் வியாபாரம் ‘வளர்ச்சி’ அடைந்து வருகிறது.
”தண்ணீரை இலவசமாகப் பொது மக்களுக்கு வழங்கக் கூடாது; குடிநீர் வழங்குவது சேவை அல்ல; அதை வியாபாரமாகப் பார்க்க வேண்டும்” என்ற மனோ நிலையை ஏழை நாடுகளில் ஏற்படுத்துவதன் மூலம், பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள் ஏழை நாடுகளில் மூலதனம் போடுவதற்கு ஏற்ற சூழலை, உலகவங்கி உருவாக்கிக் கொடுக்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் நுழைவதற்கு முன்பாகவே, அந்நாட்டு அரசாங்கத்தையே தண்ணீர் கட்டணத்தை உயர்த்தச் செய்வதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் கட்டண கொள்ளையை நியாயப்படுத்தி விட முயலுகிறது.
சர்வதேச நாணய நிதியம் 2000-ஆம் ஆண்டில் வழங்கிய 40 கடன்களில், 12 கடன்கள் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் அல்லது தண்ணீர் திட்டத்திற்குச் செலவாகும் மூலதனத்திற்கு ஏற்ப தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனைகளோடுதான் வழங்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கும் ஏழை நாடுகள், அந்நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் முத்திரையொன்றைப் (Seal of Approval) பெற வேண்டும். அந்நிறுவனம் கடன் கொடுக்கும் பொழுது விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைப் பொருத்துதான், இந்த ஒப்புதல் முத்திரையை அந்நிறுவனம் ஏழை நாடுகளுக்கு வழங்கும். இந்த ஒப்புதல் முத்திரையைப் பெற முடியாத ஏழை நாடுகள், பிற ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்தோ, ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்தோ எவ்விதக் கடனோ, உதவியோ, மூலதனமோ, தொழில்நுட்ப உதவியோ பெற முடியாது. இந்த அதிகாரத்தைக் காட்டியே தண்ணீரைத் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு ஏழை நாடுகளைச் சம்மதிக்க வைத்துவிடுகிறது, சர்வதேசநாணய நிதியம்.
2. சர்வதேச நிதிக்கழகம் மற்றும் பலதரப்பு முதலீட்டுகாப்புறுதி குழுமம்
ஏழை நாடுகளின் மின்சாரம், தொலைபேசி, குடிநீர் வழங்குதல் போன்ற அடிக்கட்டுமானத் துறைகளில் மூலதனம் போட விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள அமைப்புதான் சர்வதேச நிதிக் கழகம்.
ஏழை நாடுகளின் குடிநீர் வழங்கும் திட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் போடும் மூலதனத்திற்கு ஏற்படும் அரசியல் ரீதியான இடர்ப்பாடுகளுக்கு எதிராகக் காப்புறுதி அளிப்பதுதான் பல்தரப்பு முதலீட்டு காப்புறுதி குழுமத்தின் நோக்கம்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இண்டர்நேஷனல் வாட்டர் சர்வீசஸ் – பி.வி என்ற நிறுவனம், ஈக்வடார் நாட்டின் குடிநீர் திட்டமொன்றில் 1.8 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. உள்நாட்டுக் கலகம், போர், ஒப்பந்தத்தை மீறுதல் போன்ற அரசியல் காரணங்களால் இம்மூலதனம் பறிமுதல் செய்யப்படுவதில் இருந்து முதன்முதலாக பல்தரப்பு முதலீட்டு காப்புறுதி கழகத்தால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழை நாடுகளின் மின்சாரம், தொலைபேசித் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதைப் போலவே, தண்ணீர் வியாபாரத்திலும் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காகவே, இந்த இரண்டு நிறுவனங்களையும் தனது துணை அமைப்புகளாக உலக வங்கி இயக்கி வருகிறது. மேலும், ஏழை நாடுகளின் குடிநீர் திட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதற்கு வசதியாக, அத்திட்டங்களை இலாபம் தரும் திட்டம், இலாபம் தராத திட்டம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.
3. சட்டம், கண்காணிப்பு மற்றும் துறைசார்ந்த சீர்திருத்தங்கள்
பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள் ஏழை நாடுகளில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எளிதாக மூலதனம் போடுவதற்கும், தங்களுக்குக் கிடைக்கும் இலாபத்தை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக எடுத்துச் செல்லுவதற்கும் வசதியாக சுங்கவரிகளை நீக்குவது தொடங்கி சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஏழை நாடுகளின் பணத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது உள்ளிட்டு பல சீர்திருத்தங்களை உலக வங்கி கோருகிறது. ‘ஒருங்கிணைந்த சட்டகம்’ என உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம் – உலக வர்த்தகக் கழகம் என்ற சூலாயுதத்தால் அழைக்கப்படும் இச்சீர்திருத்தங்களின் கீழ்,
நீர் ஆதாரங்களின் மீதான உரிமை மற்றும் நீர் ஆதாரங்களைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக வரையறுத்தல்;
பொது மக்களுக்குக் குடிநீர் வழங்கும் அரசுத்துறை நிறுவனங்களையும் தனியார் தண்ணீர் வியாபார நிறுவனங்களையும் சமமாக நடத்துவது தொடர்பாக சட்டம் மற்றும் கண்காணிப்பு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல்,
தண்ணீர் வழங்குதலைக் கண்காணிக்க அரசின் தலையீடின்றி சுதந்திரமாகச் செயல்படக்கூடிய கமிட்டியை அமைத்தல்;
கிராமங்களுக்குக் குடிநீர் மற்றும் பாசன வசதிகள் செய்து கொடுப்பதை அரசின், பஞ்சாயத்துக்களின் பொறுப்பில் இருந்து கழட்டிவிடுவதோடு, அச்சேவைகளை வியாபார நோக்கில் தனியாரிடம் ஒப்படைத்தல்;
குடிநீர் வழங்கல் சேவையை இலாபம் தருவது, இலாபம் தராதது எனப் பிரித்தல்
என்ற ஆறு நிபந்தனைகள் ஏழை நாடுகளின் மீது விதிக்கப்படுகின்றன.
4. அறிவு வங்கி (Knowledge Bank)
ஏழை நாடுகள் பற்றிப் பல தகவல்களைத் திரட்டி வைத்துக்கொண்டு, அந்நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவது என்ற பெயரில், அந்நாடுகளின் எல்லா துறைகளிலும் சந்தை பொருளாதாரத்தைப் புகுத்திவிடும் அறிவு வங்கியாகவும் உலக வங்கி செயல்படுகிறது. பொது மக்களுக்குக் குடிநீர் வழங்குவதை அரசின் பொறுப்பாகக் கருதும் ஏழை நாடுகளின் அரசாங்கங்களுக்கு ‘இலவசக் குடிநீர் என்பது அபாயகரமானது’ எனப் ‘புரிய’ வைப்பதுதான் இந்த அறிவு வங்கியின் முக்கிய நோக்கம். குடிநீர்க் கட்டணங்களை உயர்த்தக் கோரி ஏழை நாடுகளை நிர்பந்திப்பது மூலம், குடிநீர் வழங்குவதை வியாபாரமாக்குவது; குடிநீர் திட்டங்களில் போடப்படும் மூலதனத்தை முழுமையாகத் திருப்பி எடுக்கும் வகையில் கட்டண விகிதங்களை மாற்றியமைப்பதன் மூலம் குடிநீர் வழங்குவதைத் தனியார்மயமாக்குவது என்ற அடிப்படையில் உலக வங்கி ஏழை நாடுகளை மூளைச் சலவை செய்கிறது. இந்த வேலையை மிகத் திறம்படச் செய்வதற்காக, ஒரு கூட்டணியை, வலைப் பின்னலையே உலக வங்கி உருவாக்கி வைத்திருக்கிறது.
5. கூட்டணி வலைப் பின்னல்:
ஏழை நாட்டு மக்களையும், அரசுகளையும் தண்ணீரை ஒரு பண்டமாக, வியாபாரப் பொருளாக கருத்து ரீதியாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள், ஐ.நா. மன்றத்தைச் சேர்ந்த அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து பல்வேறு சர்வதேச அமைப்புகளை நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளுள், ‘உலக நீர் கவுன்சிலும்’, ‘உலக நீர் கூட்டணியும்’ முக்கியமானவை. கருத்தரங்குகள், மாநாடுகள், செயல் விளக்கக் கூட்டங்கள், சிறு வெளியீடுகள் எனப் பல வடிவங்களில் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகள், இதன் மூலம் ஏழ்மையையும், குடிநீர் பற்றாக் குறையையும் ஒழிக்க முடியும் எனப் பொது மக்களை மூளைச் சலவை செய்கின்றன. பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும், மேலாண்மை திறமைகளையும் குடிநீர் வழங்குதலில் பயன்படுத்தும் பொழுது, ஏழை மக்கள் கூடப் பலன் அடைய முடியும் என்ற தேன் தடவிய அண்டப் புளுகை, இந்த கூட்டணி அமைப்புகள் அவிழ்த்து விடுகின்றன.
நாஃப்டா (NAFTA)வின் கள்ளக் குழந்தை “காட்ஸ்”
அமெரிக்கா தனது தலைமையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (நாஃப்டா – North American FreeTrade Agreement) என்ற பெயரில் பிராந்திய பொருளாதார வளையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. தண்ணீரைத் தனியார்மயமாக்க நாஃப்டாவில் என்னென்ன விதிகள் உருவாக்கப்பட்டதோ, அதே விதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் உலக வர்த்தகக் கழகமும் தண்ணீர் வர்த்தகம் குறித்த விதிகளை உருவாக்கியிருக்கிறது.
உலக வர்த்தகக் கழகம் தண்ணீரை இயற்கையின் கொடையாகவோ, சமூகச் சொத்தாகவோ பார்ப்பதில்லை. மாறாக, உ.வ.க. தண்ணீரை வியாபாரப் பண்டமாகப் பார்க்கிறது. உவ.க. உருவானதற்கு அடிப்படையாக இருந்த காட் விதிகள், ‘கடல் நீரைத் தவிர, பிற இயற்கையான தண்ணீர் அனைத்தும் வியாபாரப் பண்டம் தான்’ எனக் குறிப்பிடுகிறது. உவ.க., தண்ணீரை அடிப்படையான மனித உரிமையாகப் பார்ப்பதில்லை; “நீர் என்பது மனிதனின் தேவைகளுள் ஒன்று என்றும்; மற்ற தேவைகளைப் போலவே, அதனையும் வியாபாரத்தின் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்” என்றும் கூறுகிறது.
உலக வர்த்தகக் கழக விதிகளின்படி தண்ணீர் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் மீது எந்தவொரு நாடும் தடையோ, கட்டுப்பாடுகளையோ விதிக்கக்கூடாது.
உவ.க.வில் உறுப்பினராக உள்ள ஒருநாடு, சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைக் காரணமாகக் காட்டி தண்ணீர் ஏற்றுமதியைத் தடை செய்தால், அந்நடவடிக்கை வர்த்தகக் காப்பு நடவடிக்கையாகக் கருதப்பட்டு, உவ.க.வில் அந்நாட்டின் மீது வழக்குத் தொடர முடியும். தண்ணீர் வர்த்தகம், நீர் ஆதாரங்களையே மாசுபடுத்துவதாக, அழிப்பதாக இருந்தாலும்கூட, தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை எந்தவொரு நாடும் தடை செய்யக்கூடாது என உ.வ.க. கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்தையும் காட்டி, தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்யக்கூடாது என உவ.க.வில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘நாஃப்டா’ விதிகளின்படி உள்நாட்டு நிறுவனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் இடையே எவ்விதப்பாகுபாடோ, பாரபட்சமோ காட்டக் கூடாது; அவ்வாறு இருந்தால், அந்நிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து நட்ட ஈடுகோரலாம்.
தண்ணீர் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அந்நிய நிறுவனங்களின் மீது வர்த்தகத் தடையோ / கட்டுப்பாடுகளோ விதிக்கக் கூடாது. அவ்வாறு தடை விதித்தால் எதிர்கால இலாபம் கருதி வழக்குத் தொடர்ந்து நட்டஈடு கோரலாம்.
இந்த விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள “காட்ஸ்”, தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் அந்நிய நிறுவனங்களை உ.வ.க. உறுப்பு நாடுகள் தேசிய நிறுவனங்களைப் போல நடத்த வேண்டும் என்கிறது. மேலும், உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படும் சலுகை, மானியம் அனைத்தும் அந்நிய நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதோடு, குடிமகன்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரப் படவேண்டும் எனக் கோருகிறது.
உ.வ.க. உறுப்பு நாடுகள், தண்ணீர் வியாபாரத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்க முயன்றாலோ தர நிர்ணயம் செய்ய முயன்றாலோ, அந்தக் கட்டுப் பாடுகள் குறைந்தபட்ச சுமைகளைக் கொண்டிருக்க வேண்டும்; சர்வதேச அளவுகளின்படி, குறைந்தபட்ச கட்டுப்பாடுகள்தான் விதிக்க வேண்டும் என்கிறது “காட்ஸ்”.
தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து நடைப்பெற்ற போராட்டங்கள்
அதாவது, ஒரு நாடு, தனது தேவைக்கு ஏற்றபடி சட்டம் கொண்டு வர முடியாது; பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பாதிக்காதவாறு தான் சட்டம், கட்டுப்பாடுகள், தர நிர்ணயம் இருக்க வேண்டும். மேலும், சட்டம் / கட்டுப்பாடுகள் கொண்டுவர எண்ணும் நாடுகள், இக்கட்டுப்பாடுகள் குறைந்தபட்ச சுமையைத்தான் கொண்டிருக்கும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு இக்கட்டுப் பாடுகளால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என உலக வர்த்தகக் கழகத்தின் முன் நிரூபிக்க வேண்டும். இதற்கும் மேலாக, உ.வ.க. உறுப்பு நாடுகள் இயற்றும் சட்டங்கள் / கட்டுப்பாடுகளை ரத்து செய்யும் ”வீட்டோ” அதிகாரம் ”காட்ஸ்” ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனக்கோரி, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஒரு இரகசிய அறிக்கை, உ.வ.க.வால் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உவ.க.வில் உறுப்பினராக உள்ள ஏழை நாடுகள், உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளை மீறிச் செயல்பட முடியாத பொறியில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனென்றால், உ.வ.க., வெறும் சர்வதேச வர்த்தக அமைப்பாக உருவாக்கப்படவில்லை. சட்டம் இயற்றவும் அதை மீறும் ஏழை நாடுகளைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட “உலக அரசாக” உருவாக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தனியார்மயம்: மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம்
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை உள்நாட்டு அரசாங்கம் முதல் ஐ.நா. மன்றம் முடிய, ஆளும் கும்பல் அனைவரும் ஒரு கொள்கையாகவே அறிவித்திருக்கிறார்கள். ஆனால், குடிநீர் வழங்கும் சேவையை வியாபார நோக்கில் தனியார்மயமாக்கினால், தற்பொழுது கிடைக்கும் ‘சுகாதாரமற்ற’ குடிநீர் கூடக் கிடைக்காமல் போய்விடும். ஏற்கெனவே குடிநீர் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்ட சில நாடுகளின் அனுபவங்களைப் பார்த்தே இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தென் ஆப்பிரிக்க நாட்டில், வெள்ளை நிறவெறி ஆட்சியை வீழ்த்திவிட்டுப் பதவிக்கு வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சி, 1997-ஆம் ஆண்டு தண்ணீரைத் தனியார்மயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்நாட்டின் குடிநீர் விநியோகம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களான விவாண்டி மற்றும் சூயஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின், செல்ஃபோன்களில் பயன்படுத்தப்படும் “ஃப்ரீபெய்ட் அட்டையைப் போல, தண்ணீரைப் பெற முன்பணம் கட்டும் ‘ப்ரீ-பெய்ட்” கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாடு முழுவதும் ஏறத்தாழ 1 கோடி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதே குதிரைக் கொம்பானது. இதன்விளைவாக, தண்ணீர் தனியார்மயமான ஆறே மாதத்தில் அந்நாட்டில் காலரா நோய் பரவியது.
பொது மக்களுக்குக் குடிநீர் வழங்குவதைத் தடுத்து நிறுத்திவிட்ட தண்ணீர் நிறுவனங்கள், ”ஒரு மாதத்தில் ஐந்து முறை குளித்தால் போதும்; ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் கக்கூஸ்க்கு தண்ணீர் ஊற்றுங்கள்” எனத் தண்ணீர் சிக்கனம் பற்றிப் பொதுமக்களுக்குப் போதித்தது.
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பொலிவியா நாட்டைச் சேர்ந்த கொச்ச பம்பா நகருக்கு குடிநீர் வழங்குவதை பெக்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைத்தது, அந்நாட்டு அரசு. 1999-ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடனேயே, கொச்ச பம்பா நகர மக்கள் தன்னுடைய அனுமதியின்றி மழை நீரைக் கூடச் சேகரிக்கக் கூடாது எனக் கட்டளையிட்டது, பெக்டெல். இதன் விளைவாக, மாதமொன்றுக்கு வெறும் 4,500 ரூபாய் சம்பாதிக்கும் குடும்பம், குடி தண்ணீருக்காக மாதாமாதம் 900 ரூபாய் செலவழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்தக் கொள்ளைக்கு எதிராகவும் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்கவும் அந்நகர மக்கள் பெக்டெல்லை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். பெக்டெல்லைப் பாதுகாக்க அந்நகரில் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், பெக்டெலுக்கு எதிராக பொலிவியா எங்கும் நடந்த போராட்டங்களின் விளைவாக, பெக்டெலுக்கு வழங்கப்பட்ட வியாபார உரிமை ரத்து செய்யப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த 9 நாடுகளில் 1998-ஆம் ஆண்டு குடிநீர் வழங்கும் சேவை தனியார்மயமாக்கப்பட்டது. தண்ணீர் கட்டண உயர்வால், அந்நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் குளங்களிலும், குட்டைகளிலும் தேங்கிக் கிடக்கும் நீரைக் குடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதையடுத்து இந்நாடுகளில் பரவிய காலரா நோய்க்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 25,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பிலிப்பைன்சு நாட்டிலும் தண்ணீர் தனியார்மயமான பிறகு, தண்ணீர் கட்டணம் 4 முதல் 10 மடங்கு வரை உயர்ந்தது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால் காலரா நோய் பரவியது.
எனவே, தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். உணவு இல்லாமல் கூட பல நாட்கள் வாழ்ந்துவிட முடியும்; ஆனால், தண்ணீர் இல்லாமல், மனிதன் ஓரிரு நாட்கள் கூட வாழ முடியாது. எனவே, நாம் உயிர் வாழ வேண்டும் என்றாலே, இத்தனியார்மயத்தை எதிர்த்துப் போராடியே தீரவேண்டும்.