Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 502

கோவை – புதுச்சேரி பகத்சிங் நினைவு நாள் ஆர்ப்பாட்டம்

0

நாடு நம்மை அழைக்கிறது – பல்லடத்தில் பகத் சிங் நினைவு நாள் கூட்டம்

பல்லடம் செம்மிபாளையத்தில் அமைந்துள்ள ஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால், நிர்வாகம் இதனை ஏற்க மறுத்து தொழிலாளர்களை பல்வேறு வகையில் பழிவாங்க ஆரம்பித்தனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் கடந்த 24.03.2017 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர். கம்பெனிக்கு நேர் எதிரில் போராட்ட பந்தல் அமைத்து செங்கொடிகளுக்கு இடையே போராட்டம் நடைபெறுகிறது. 31.03.2017 அன்று காலை 11 மணி அளவில் தோழர்கள் பகத் சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி‌டி‌என் துணைத் தலைவர் தோழர் சந்திரஹாசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

தொழிலாளர்களாகிய நமக்கு என்று ஒரு மரபு உண்டு. வரலாற்று தொடர்ச்சி உண்டு. அதனை தெரிந்து கொள்வதன் மூலம் இன்றைய தினத்தில் போராடுவதற்கான ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும். நம்முடைய மரபில் மகத்தான 1917-ஆம் ஆண்டு ரசியப்புரட்சி உள்ளது. இதிலிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்ற இந்திய தொழிலாளி வர்க்கம் போராடத் துவங்கியது. போராட்டத்தை நசுக்குவதற்கு வெள்ளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத சட்ட மசோதா கொண்டு வர எத்தனித்தது. இதனை எதிர்த்து இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார். வெறுமேன சத்தமும் புகையும் மட்டும் வரக்கூடிய குண்டுகளை வீசி வெள்ளை அரசாங்கத்தை அதிரச் செய்தார்.

அதன் பின்னர் தனது சிறை வாழ்க்கை மூலமும் நீதிமன்றங்களை பிரச்சாரம் செய்யும் மேடையாக மாற்றியதன் மூலமும் தனது வாழ்க்கையே போராட்டம் என்றார். தனது வாழ்க்கையே இந்திய மக்களுக்கு ஓர் செய்தி என்றார் தனது வாழ்க்கையே இன்பத்தின் ஊற்று என நிலை நாட்டினார். இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு போராடுவதற்கு ஆற்றல்களை அள்ளித் தரும் மகத்தான மரபு இது. நாம் இன்று அனுபவித்து வரும் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட இதர உரிமைகள் அனைத்தும் இதன் மூலமே நமக்கு வாய்த்தது என்பதை நெஞ்சு நிமிர்த்தி பூரிப்புடன் நினைவு கூறுவோம். இத்தகைய மாபெரும் வரலாற்றின் தொடர்ச்சி தான் இன்று நாம் நடத்தும் போராட்டம் என்று உணர்ந்து கொண்டால் போராடுவதற்கு நமக்கு இன்னும் உரம் கிடைக்கும்.

1930-களில் இந்திய பாராளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதா கொண்டு வரப்பட்டது. மாபெரும் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் மூலம் இந்திய தொழிலாளர் வர்க்கம் பதிலடி கொடுத்தது.

ஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
ஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்

2017 ஆம் ஆண்டும் தொழிலாளர் விரோத மசோதாக்கள் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வந்து விட்டனர். இதனை இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று பகத்சிங் வழியை விட இன்னும் ஆயிரம் மடங்கு வீரியத்துடன் வரலாறு விதித்துள்ள கடமையை நிறைவேற்றும் இடத்தில் நாம் உள்ளோம். புஜதொமு தலைமையில் இதனை நிறைவேற்ற சபதமேற்போம்.

தோழர் பகத்சிங் தனது 23ஆம் வயதில் லாலா லஜபதி ராய் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றார். பத்திரிக்கை நடத்தினார். நான் நாத்திகன் ஆனது ஏன் ? போன்ற பல நூல்கள் எழுதினார். பாராளுமன்றத்தில் தொழிலாளர்களுக்காக குண்டு வீசினார். வெள்ளைக்கார நீதிமன்றங்களை நாட்டு விடுதலைக்கான பிரச்சார மேடையாக்கினார். கடுகளவும் கவலையின்றி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினார். இதற்கெல்லாம் அவருக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை. அவர் தன் ஆளுமைக்கு முன் மாதிரியாக யாரையும் வரித்துக் கொள்ளவில்லை. தானே ஒரு முன்மாதிரியாக நடந்து கொண்டார்.

 நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம்
நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம்

1931 மார்ச் 23 இல் மாலை 7.30 மணிக்கு தூக்கு மேடை ஏறும் போதும் தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் எனும் நூலை படித்துக் கொண்டுள்ளார். 1917 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலை தடை செய்யபட்ட நிலையிலும் சிறைக்குள்ளே அதனை பெற்று படிக்கிறார் என்றால் தன்னை எப்போதும் புத்தாக்கம் செய்தே வைத்துள்ளார். இதுதான் நாம் பெற வேண்டிய படிப்பினை ஆகும். தோழர்களுடைய வாழ்க்கையின் பாடங்களை இது போல நாம் பயின்று இன்றைய புற நிலையை எதிர்கொள்ள வேண்டும்.

சேலம் உருக்காலை தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி விற்கப்படுகிறது. தேசிய பஞ்சாலை கழக மில்கள் விற்கப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் மூலம் நமது குழந்தைகளுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் அழிக்கப்படுகிறது. காவிரியில் தண்ணீரை மறுத்து மணல் திருட்டு ஊக்குவிக்கப்படுகிறது. ஓசூரில் MBA Engineering படித்த 22 வயதான காதல் தம்பதிகள் வேலை கிடைக்காமலும் நுகர்வு வெறியின் காரணமாக கொள்ளைக்காரர்களாக மாறி வாழ்வை இழக்கிறார்கள்.

இப்படியாக தமிழ் சமூகம் புழுத்து நாறுகிறது. புரட்சியை  எதிர்பார்த்து ஏங்குகிறது. பகத்சிங் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம் எனக் கூறி முடித்தார்.

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
கோவை


பகத் சிங் சுகதேவ் ராஜகுரு நினைவு நாள்.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம் !
அதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்றுவோம் !

ன்றைய மிக அசாதாரணமான போராட்டக் களமாக மாறியுள்ள அரசியல் சூழலில், சினிமா கழிசடைகளை தங்களது ஆதர்ச ஹீரோக்களாக எண்ணிக் கொண்டு அவர்களின் பின்னே அணிவகுக்கும் இளைஞர்கள், மாணவர்களுக்கு, உண்மையில் யார் நமக்கு ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சேவகம் செய்வதையே சுதந்திரம் என்று சொல்லி நம்மை ஏமாற்றி வந்த ‘மகாத்துமா’வின் துரோகத்தை தோலுரித்து, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கனலை நாடெங்கும் விசிறியெழச் செய்து, சமூக மாற்றமே உண்மையான விடுதலை என்பதை உரக்கச் சொல்லி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவை வழிநடத்தும் அரசியல் கம்யூனிசமே என்பதை நடத்திக் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும், அதற்குத் தடையாக உள்ள ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்தவும், அதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் மார்ச் 23 பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, நினைவு நாளில் புதுச்சேரி புமாஇமு, புஜதொமு சார்பில் வில்லியனூர் கோட்டமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணியின் புதுச்சேரி அமைப்பாளர் தோழர் பரத் தலைமை தாங்கினார்.

அடுத்ததாக, புஜதொமு புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன், பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக இருப்பதை அம்பலப் படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் குண்டு போட்டு, பிரிட்டிஷ் காலனியவாதிகளின் செவிட்டுக் காதுகளைக் கேட்க வைத்தார். தற்போது தொழிலாளர்களுக்கென 44 சட்டங்கள் இருப்பதாகச் சொன்னாலும், தொழிற்சங்கம் அமைக்கவோ, சட்டப்படியான உரிமைகள் கோரவோ முடியவில்லை. மாருதி, பிரிக்கால் தொழிலாளர்கள் மேற்படி உரிமைகள் கோரியதற்காக கொலைப் பழி சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இச்சட்டங்களும்  தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகச் சொல்லி, ஒழிக்கப் பட்டு விட்டது. புதிய குலக்கல்வித் திட்டத்தை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை, சமூக நீதியை மறுக்கும் நீட் தேர்வு என மாணவர் கல்வி உரிமைகளை பறித்து வருகிறது மோடி அரசு, காவிரியில் தண்ணீர் விட மறுப்பது, மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் என விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நாசகர திட்டங்களை திணிப்பது என அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களையும் ஒழிக்கும் வகையில் செயல்படும் பார்ப்பன பாசிச மோடி அரசை வீழ்த்த வேண்டுமெனில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கியதுமில்லை, எங்கள் வாழ் நாளோடு முடியப் போவதுமில்லை என முழங்கிய பகத் சிங் உள்ளிட்ட தியாகத் தோழர்களின் வழியில் அப்போரைத் தொடர்ந்து நடத்தி முடிப்பது தான் தீர்வு என சொல்லி நிறைவு செய்தார்.

அடுத்து உரை நிகழ்த்திய எல் & டி பாட்டாளி தொழிற்சங்க செயலாளர், தோழர் மாதேஷ்வரன், இவ்வார்ப்பாட்டத்தில் பேச அழைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து பேசத் துவங்கிய தோழர், தியாகிகளின் நினைவு நாளில் மகிழ்ச்சி என்ற வார்த்தையைச் சொன்னதன் பொருள், அத்தியாகத் தோழர்களின் பணியைத் தொடரவும், அதைப் பற்றி சிந்திக்கத் தூண்டியதற்குமாகத் தான் என்றார். மோடியின் மக்கள் விரோதத் திட்டங்களைச் சாடிய தோழர், இன்றைய சூழலில் மாற்று அரசியல் தேவை என்பதையும், ஓட்டுக் கட்சிகளை விட்டொழித்து, ஒன்றுபட்டுப் போராடுவது ஒன்று தான் வழி என்பதையும் உறுதிபடக் கூறி முடித்தார்.

இறுதியாக உரையாற்றிய புஜதொமு மாநில இணைச் செயலாளர், இன்று யார் கதாநாயகர்கள், மக்களின் உழைப்பை கோடி கோடியாய் சுரண்டும், கிரிக்கெட் கழிசடைகளும், சினிமா பொறுக்கிகளுமா நமக்கு கதாநாயகர்கள்? தங்களது செயல் மரணத்தைத் தான் பரிசாகத் தரும் என்று தெரிந்து தங்களது மரணத்தைக் கூட ஒரு அரசியல் செயல்திட்டமாக நடத்திக் காட்டி தியாகத்தின் ஒப்பற்ற தோழர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தானே நமக்கு கதாநாயகர்களாக இருக்க முடியும். போராட்டம் என்பது அதன் வடிவத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. காந்தியின் போராட்ட வடிவங்கள் பிரிட்டிசாரின் நகத்தைக் கூட அசைக்கவில்லை. ஆனால், பகத்சிங்கின் அரசியல் உள்ளடக்கம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை குலை நடுங்கச் செய்தது.

மேலும், மோதி வீழ்த்துவது என்பது நேருக்கு நேர் நின்று தெருவில் இறங்கி சண்டை போடுவது மட்டுமல்ல, நம்மீதான பொருளாதாரத் தாக்குதல்கள், சமூக ஒடுக்குமுறைகளை அவ்வப்போது போராடுவது என்ற அளவில் இல்லாமல், விடாப்பிடியாகவும், இறுதிவரையிலும் உறுதியாகப் போராடி வீழ்த்துவது தான்.

இன்று, அனைவருக்குமான நல்லாட்சி தருவதாக சொல்லி ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல், மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் கல்விக் கொள்கைகளையும், தொழிலாளர் உரிமையைப் பறிக்கின்ற தொழிலாளர் சட்டத் திருத்தத்தையும், விவசாயிகளின் உயிரைப் பறித்து, நாட்டையே பாலைவனமாக்கும் நாசகாரத் திட்டங்களையும் திணித்து வருகிறது. கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, மக்களின் சிறு சேமிப்பையும் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எடுத்துக் கொடுக்க குறுக்கு வழிகளின் மூலம் முயற்சி செய்கிறது. ஓட்டுக் கேட்க வரும் முன் இத்திட்டங்களை எல்லாம் நடைமுறைக்கு கொண்டு வருவதாகச் சொல்வதில்லை. தான் சொன்னதையே செய்ய முடியாமல், மக்களுக்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு.

மறுபுறம் அனைவருக்கும் பொதுவான அரசு என்று சொல்லிக் கொண்டு, தனது பார்ப்பன கொடுங்கரங்களால் எழுத்தாளர்கள், மாணவர்கள், அடித்தட்டு மக்களைக் கொலை செய்து கலவரங்களின் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என தனது இந்துத்துவத்தை திணிக்க பயங்கரவாதத்தை திணித்து வருகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையை, உரிமையைக் காக்க வக்கற்றும், அமைதியான வாழ்வை உத்திரவாதப் படுத்த முடியாமல் பொருளாதாரத் தாக்குதல்களாலும், மதவெறி பயங்கரவாதத்தாலும் மக்களை நிலை குலையச் செய்து தான் மக்களுக்குச் சொன்ன எதையும் செய்ய முடியாமலும், எதிராகவும் மாறிப் போன இந்தக் கட்டமைப்பை மோதி வீழ்த்துவது தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளில் நாம் ஏற்க வேண்டிய சூளுரை என்று சொல்லி முடித்தார்.

இறுதியாக புமாஇமு தோழர் பிரகாஷ் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி. தொடர்புக்கு: 8124412013, 9597789801

கும்மிடிப்பூண்டி : பாரத் நிறுவனத்தின் அடாவடி !

0
தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, சூரவாரிகண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் பாரத் டெக்ஸ்டைல்ஸ் &  புரூஃபிங் லிமிடெட் ஆலையில் 51 நிரந்தர தொழிலாளர்களை கொண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை சங்கம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தார்பாய் உற்பத்தியை நடத்தி வருகிறது.

இந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ’ஸ்ரீ சிட்டி’ என்னுமிடத்தில் தனது புதிய நிறுவனத்தை திறந்து இதே தார்பாய் உற்பத்தியை துவங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆலையை மூடவேண்டும் என்கிற நீண்ட நாள் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைக்கால முன்பணம் வழங்காமல் இழுத்தடித்தது. இதை எதிர்த்து தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு செய்யப்பட்டது. அதற்கு நிர்வாகம் சமர்ப்பித்த விளக்க கடிதத்தில் “தங்கள் ஆலையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுள் பலர் தமிழர்கள் அல்ல, தெலுங்கு பேசக்கூடியவர்கள். ஆகவே அவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடமாட்டார்கள் எனவும், பெரும்பாலும் அனைத்து தொழிலாளர்களும் விவசாயம் பார்ப்பவர்கள். தற்சமயம் நல்ல மழை பொழிந்திருக்கிறது. ஆகவே நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்பதால் அவர்களுக்கு பணம் தேவை ஏற்படாது” எனவும் நிர்வாகம் திமிராக பதிலளித்துள்ளது.

அந்த வகையில் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சீருடை, பாதுகாப்பு காலனி, பண்டிகைக்கால முன்பணம் ஆகியன வழங்காததை எதிர்த்து சட்ட ரீதியாக எதிர்கொண்டு வந்த சூழலில் கடந்த 24.10.2016 தேதி முதல் 23.11.2016 வரையில் ஆலை லே-ஆஃப் விடப்பட்டது. ஒரு தொழிற்தாவா நிலுவையில் இருக்கின்றபோது தாவா சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையினையும் நிர்வாகம் மேற்கொள்ளக்கூடாது என்பது சட்டம். அதனை மீறி லே-ஆஃப் அறிவித்திருப்பது சட்டவிரோதம் என்பதை தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கம் சார்பில் மீண்டும்  தொழிற்தாவா ஏற்படுத்தப்பட்டது.

நிர்வாகத்தின் அடுத்த கட்ட தாக்குதலாக 24.11.2016 தேதியிலிருந்து 14.12.2016 தேதி வரை லே-ஆஃப் -ஐ காலநீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டதுடன், 30 தொழிலாளர்களை, 02.12.2016 தேதியில் இருந்து ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அறிவிப்பு செய்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்து 30 தொழிலாளர்கள் மீதான ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக 02.12.2016 தேதியில் இடைக்கால தடை ஆணை பெறப்பட்டது.  தடையாணை பெறப்பட்ட தகவலை நிர்வாகத்திற்கு அதே தேதியில் தொழிற்சங்கத்தால் தெரியபடுத்தப்பட்டது. அச்சமயம் ஆலை லே-ஆஃப்-ல் இருந்தது. ஆகவே, ஆலை மீண்டும் இயக்கப்படும்போது அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தொழிலாளர்கள் நம்பியிருந்தனர்.

லே-ஆஃப் காலக்கெடு முடிந்து 15.12.2016 அன்று ஆலை இயக்கப்பட்டபோது பணிக்கு வந்த தொழிலாளர்களுள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்திருந்த 30 தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. நிர்வாகத்தின் இந்நடவடிக்கை சம்பந்தமாக அன்றைய தினமே பிற்பகலில் நிர்வாக இயக்குனர்களிடம் தொழிற்சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பெற்றதாக தெரிவித்த தடையாணை நகலை பார்த்த பின்னரே எந்த முடிவையும் எடுக்க இயலும் எனவும், அதுவரை ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என திட்டவட்டமாக நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

மேற்படி ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட இடைக்கால தடையாணை நகல் 11.01.2017 அன்றுதான் தொழிற்சங்கத்திற்கு கிடைக்கப்பெற்றது என்பதையும், அதில் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் 12.01.2017 தேதியிட்ட  தொழிற்சங்க கடிதத்தின் வாயிலாக நிர்வாகத்திற்கு அனுப்பப் பட்டது.

ORDER: IN view of the retrenchment order dated 24.11.2016, there shall be an order of interim injunction as prayed for – “(ii) Grand interim injunction restraining the 3rd respondent from altering the service conditions of the members of the petitioner union whose names are annexure to this petition in any manner including discontinuance of their services, engaging outsiders in the production activities or removing the materials, machinery or closing the factory or any act which will make result in non – employment to them (in WMP.NO.36394/2016) pending disposal of above WP.No.42500/2016 respectively)

ஆலை நிர்வாகத்திடமிருந்து போராட்டத்தை கைவிட தொழிலாளர்களுக்கு விடப்பட்ட மிரட்டல்

மேற்படி ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 13.01.2017 தேதியில் ஆலை நிர்வாகத்திடம் வேலை செய்ய அனுமதிக்குமாறு கோரி ஆலை வாயிலில் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். ஆட்குறைப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ள நிலையிலும் நிர்வாகம் அதை சிறிதளவும் மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வது சட்டத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானதாகும்.

தொடர்ந்து 17.01.2017 தேதியன்று உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தக் கோரியும், அனைத்து தொழிலாளர்களையும் வேலை செய்ய ஆலைக்குள் அனுமதிக்கக் கோரியும் ஆலை வாயிலில் காத்திருந்தனர். காலை முதல் மாலை வரை காக்க வைத்து பின் காவல் துறை ஆய்வாளரை  வரவழைத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலை நிர்வாகம் முயற்சித்தது. ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் துறை ஆய்வாளர் திரு.டில்லிபாபு தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார். அவரிடம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை காண்பித்து நியாயம் கேட்டபோது நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆலை நிர்வாகத்தை எந்த கேள்வியையும் கேட்காமல், ஆலை நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேற்கொள்ளுங்கள் என தொழிலாளர்களுக்கு காவல் துறை ஆய்வாளர் உபதேசம் செய்தார்.

அந்த வகையில் பாரத் டெக்ஸ்டைல்ஸ் & புரூஃபிங் லிமிடெட் ஆலை நிர்வாகம் எந்தவித சட்ட – திட்டங்களையும் மதிக்காமல் காவல் துறையின் உதவியோடு தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறையையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து குடும்பத்துடன் பொருளாதார ரீதியாக மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில்தான் கடந்த 29.03.2017 தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர். ஆறு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வுகான இதுநாள்வரை அரசு சார்பில் எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை. இருப்பினும் தங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையின் வழிகாட்டுதலின்படி போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

செய்தி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்- தொடர்பு எண்:9444461480.

கடலூரில் மூன்று துப்புரவுத் தொழிலாளிகளைக் கொன்ற அரசு !

0
துப்புரவுப் பணியாளர்களுக்கு மரணமே சம்பளமாகத் தரப்படுகிறது..

டந்த 20.03.2017 அன்று கடலூர் துறைமுகம் செல்லும் வழியில் பாதாளச் சாக்கடை தூர்வாரச் சென்ற மூன்று தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக பாதாளச் சாக்கடை குழிக்குள்ளே மாண்டு போனார்கள். உண்மையைச் சொன்னால் கொலை செய்யப்பட்டார்கள். மனித கழிவை மனிதன் அள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் மசுருக்கு சமம் என்பதற்கு சாட்சி தான் அரசு அதிகார வர்க்கத்தின் இந்த படுகொலை.

கடந்த 2008 முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் கடலூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது.  இத்திட்டம் கொண்டு வரப்படும்போதே தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மண்சரிந்து உயிரோடு புதைந்து பிணமாகினர்.  அப்படி கடலூரிலும் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி 8 பேர் செத்துபோனார்கள்.  இத்திட்டம் மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒப்பந்ததாரர்களும் கொள்ளை அடிப்பதற்கே பயன்படுகின்றன. 20-ம் தேதி இறந்துபோன 3 பேரில் அப்பாகுட்டி என்கிற ஜெயகுமார்,  காண்ட்ராக்ட்காரர்கள் எஸ்,ஆர் என்கிற ராமச்சந்திரன் (ஓபிஎஸ் உறவினர்), ராவணன் (சசிகலா உறவினர்) ஆகியோரின் நிறுவனங்களில் பலவருடமாக வேலை செய்கிறார்கள்.

இறந்து போன தொழிலாளிகள் அப்பாகுட்டி (இடது), முருகன், வேலு

சம்பவம் நடந்த இடத்தில் நீண்டகாலமாக அடைப்பு இருந்து உள்ளது.  அதை எடுக்க வேண்டுமென்று நீண்டகாலமாக வலியுறுத்தி உள்ளனர் காண்ட்ராக்ட் காரர்கள். தன்னால் உள்ளே இறங்கி வேலை செய்ய முடியாது அது மிக ஆபத்தான இடம் நவீன கருவி கொண்டு தான் வேலை செய்ய வேண்டும் என்று கடலூர் கொடிக்கால் காலனியைச் சேர்ந்த அப்பாகுட்டியும், வேலுவும் மற்றும் சோரியான்குப்பம் முருகனும் கூறி உள்ளனர்.

ஆனால் நீங்கள் இதை செய்தால் தொடர்ந்து வேலை கொடுப்போம். அரசு வேலைக்கும் ஏற்பாடு செய்வோம்.  இல்லையென்றால் இத்தோடு போய்விடுங்கள் என்று மிரட்டி இருக்கிறார்கள் கான்ட்ராக்ட்காரர்கள்.  இந்த மிரட்டலைப் பற்றி தன் தாயிடமும், அக்காவிடமும் பலமுறை வேதனையோடு புலம்பி இருக்கிறார் அப்பாகுட்டி.  இறந்துபோன 3-பேரில் முருகனுக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  அப்பாகுட்டிக்கும், வேலுவுக்கும் திருமணம் செய்யப் பெண் பார்க்கப்பட்டு வந்த நிலையில் மணமகனாய் மேடை ஏறவேண்டியவர்கள்.  இன்று செத்த பிணங்களாய் சுடுகாட்டில் கிடக்கின்றனர்.  20-ம் தேதி காலையில் தன் பேர பிள்ளைகளை பார்க்க வந்த முருகனின் மாமனார் மருமகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் 23-ம் தேதி மாராடைப்பால் இறந்துவிட்டார்.

என் சாமியே போனபிறகு இனி நான் வாழ்ந்து என்ன செய்ய போகிறேன் என்று புலம்புகிறார் முருகனின் மனைவி.  சம்பவத்தன்று 3 பேரும் மதிய உணவுக்கு சாப்பிட வந்தவர்களை சாப்பிட கூடவிடாமல், போன் போட்டு வேலைக்கு விரட்டி இருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.  இவர்களின் மிரட்டலால் முன் ஏற்பாடு ஏதுமற்ற நிலையில் பாதாள சாக்கடை குழிக்குள்ளே முதலில் இறங்கிய வேலு நீண்டநேரமாகியும் வரவில்லையே என்று உள்ளே இறங்கினார் முருகன். அவரும் சென்ற கொஞ்ச நேரத்தில் போனில் ஒப்பந்ததாரருடன் பேசிக் கொண்டிருந்த முருகன் இதோ வேலை நடக்கிறது முடித்து விட்டோம் என்று சொல்லி கொண்டே பாதாள சாக்கடையை எட்டி பார்க்க வேலை செய்த இருவரையும் காணவில்லையே என்று அதிர்ச்சி அடைந்து இவர்களை தேடி அப்பாகுட்டியும் உள்ளே இறங்கினார் அவரையும் காணவில்லை. கொஞ்சநேரத்தில் அங்கு வந்த அவரின் நண்பர்கள் அப்பாகுட்டியின் டூவீலரில் அவரின் செல்போன் ஒலிக்க எடுத்து பேசினார்கள்.

முருகன் அவர்களின் குடும்பம்

எதிர்முனையில் வடிகால் வாரிய அதிகாரிகள் என்ன முடிச்சிட்டியா என அதிகார தொனியில் கேட்க போனில் பேசிய அப்பாகுட்டியின் செல்லங்குப்பம் நண்பர்கள் சார் 3 பேரும் குழிக்குள் இறங்கி செத்துட்டாங்க சார் தயவு செய்து உடனே வாங்க என்று கதறியிருக்கின்றனர்.  அப்படியா என்று கேட்ட அதிகாரி நீண்டநேரமாகியும் வரவில்லை.  பிற அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் தொடர்பு கொண்டபோது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் அப்பாகுட்டியின் நண்பர்களே 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தந்தனர்.  இறந்துபோன அப்பாகுட்டி மற்றும் வேலுவின் உறவினர்கள் அங்கு கூடிவிட்டனர்.

ஒவ்வொருவராக தூக்கும்போது வேலுவும், முருகனும் முன்பே இறந்துவிட அப்பாகுட்டி மயக்கநிலையில் இருந்துள்ளார்.  அப்பாகுட்டியின் மண்டையிலும், கழுத்திலும் தீயணைப்பு துறை ஊக்குபோட்டு தூக்கும்போது தான் இறந்துவிட்டார் என்று அதிகாரிகளை குற்றம்சாட்டுகிறார் அப்பாகுட்டியின் அண்ணனும், அம்மாவும். மூன்று பேரின் உடல்களும் பிணவறையில் கிடக்க எந்த அதிகாரிகளும் வராத நிலையில் மருத்துவமனையின் எதிரில் பொதுமக்களும், உறவினர்களும் மக்கள் அதிகார தோழர்கள், விசிக, சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களும் சாலை மறியல் போராட்டம் செய்தனர் 2 மணி நேரம் போராட்டம் தொடர்ந்தது.  இறுதியாக பேச்சுவார்த்தைக்கு வந்தார் ஆர்.டி.ஓ வர்க்கிஸ். பேச்சுவார்த்தை அன்று இரவும், மறுநாள் காலையும் நீண்டநேரம் நடந்தது.  முடிவில் ஈமச்சடங்கிற்கு ஐம்பது ஆயிரமும், நிவாரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவு படி 10 லட்சமும் தருவதாக மாவட்ட நிர்வாகம் ஒப்பு கொண்டபின் அதோடு முடித்து கொள்ளலாம் என்று இருந்த நிலையில் அதிகாரிகளை வேலைநீக்கம் செய்து கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், கான்ட்ராக்டர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டுமென்று முழக்கமிட்டு போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அழுத்தம் கொடுத்தது.

அப்பாகுட்டியின் தாயார்

மக்களும் இதை விடாமல் அழுத்தம் கொடுத்து பேசினார்கள்.  இதன் இறுதியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்ட் செய்வதாகவும், கான்ட்ராக்டட்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.  இந்நிலையில் அதிகாரவர்க்கத்தின் இந்த சதிச்செயலை கண்டித்து மக்கள் அதிகார அமைப்பும், பல்வேறு அமைப்புகள், கட்சிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை நடத்துவதுடன் தொடர்ச்சியாக வரும் 6-ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தை பூட்டி முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வேற்று கிரகங்களுக்கு பாயும் செயற்கை கோள்களை தயாரித்து அனுப்புகிறார்கள் விஞ்ஞானிகள். கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை கண்டுபிடிக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். ஆனால் மனித மலக்கழிவுகளை அள்ளுவதற்கு பல நவீன கருவிகளை கண்டுபிடித்தாலும் பணம் சம்பாதிப்பதே எங்கள் நோக்கம் என்ற வெறியாலும், ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே இதில் ஈடுபடுத்துவது என்ற பார்ப்பனியக் கொடுங்கோன்மையாலும், இந்த படுகொலைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவருகிறது.

நாம் சட்டபூர்வமான போராட்டங்களை நம்பி கொண்டு இருந்தால் இந்த ஆளும் அருகதையிழந்த தோற்றுபோன இந்த அரசமைப்பு முறையில் எதையும் பெறமுடியாது.  பாதாள சாக்கடையை விட அழுகி நாறும் இந்த அரசு கட்டமைப்பை தூர்வாறி மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது தான் நமது உடனடி கடமை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர், தொடர்புக்கு – 81108 15963

வழக்கறிஞர் ஹர்ஷ் போரா நேர்காணல் – அவசியம் படியுங்கள் !

0

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 3

“ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர். அரசு தரப்பும் சரி, காவல் துறையும் சரி புகாரளித்த தரப்பான மாருதி நிர்வாகத்தின் பக்கம் நின்றே செயல்பட்டுள்ளனர்” என்கிறார் வழக்கறிஞர் ஹர்ஷ் போரா. பொய்யான கொலைப்பழி சுமத்தப்பட்ட மாருதி தொழிலாளர்கள் தரப்பில் வழக்கை எடுத்து நடத்திய மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜோனின் உதவியாளரான ஹர்ஷ் போரா, இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் இருந்து நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று வாதாடியவர்.

வழக்கறிஞர் ஹர்ஷ் போரா

“நீங்கள் சொல்லும் போது, காவல் துறை, அரசு வழக்கறிஞர் மற்றும் மாருதி நிர்வாகம் ஒரே தரப்பாக நின்று செயல்பட்டிருப்பதாக குறிப்பிட்டீர்கள். நான் சட்ட அறிவற்ற சாதாரண மனிதனாக வழக்கின் தீர்ப்பையும் கணக்கில் கொண்டு கேட்கிறேன் – நீதிமன்றமும் கூட தொழிலாளிகளுக்கு எதிராக ஒரு தரப்பாக செயல்பட்டதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது?” என்றோம். கேள்வியை உள்வாங்கி விட்டு நீளமாய்ச் சிரித்தார்…

“நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதைக் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது, கூடாது. ஒரு வழக்கறிஞராக வழக்கு நடந்த முறை, போலீசார் விசாரணை செய்த முறை, தீர்ப்பு பற்றி எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதிலிருந்து நீங்கள் என்னவிதமான புரிதலுக்கும் வரலாம். ஒரு வழக்கறிஞராக இருக்கும் போது நீதிமன்றத்தின் பக்கச் சார்பற்ற தன்மையை நம்ப வேண்டும் என்பது ஒரு முன்நிபந்தனை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

“மூத்த வழக்கறிஞர்கள் பிருந்தா குரோவரும் ரெபெக்கே ஜோனும் இந்த தீர்ப்பு தொழிலாளிகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள். 13 பேர் ஆயுள் தண்டனையும், 18 பேர் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனையும் பெற்றிருக்கும் நிலையில், இதை எப்படி வெற்றி என்று புரிந்து கொள்வது ?”

“குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை படித்துப் பாருங்கள். அவர்கள் சுமார் நான்காண்டு காலம் அனுபவித்த சிறைக் காவல் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே முடியாதது என்று குறிப்பிடும் நீதிபதி, அதற்காக போலீசாரைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

இப்போது தண்டிக்கப்பட்டவர்களுக்கு வாருங்கள். விடுவிக்கப்பட்டவர்களை எந்த அடிப்படையில் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் கணிக்கிறதோ அதே அடிப்படைகள் இவர்களுக்கும் பொருந்துகிறது. இதைத் தீர்ப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தே எடுத்துக் காட்ட முடியும். எனவே வழக்கு மேல்முறையீட்டில் நிற்காது” என்றார் ஹர்ஷ் போரா.

“சரி, இந்த 31 பேரின் மேல் எந்த அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியது?”

“ஒரு அடிப்படையும் கிடையாது. இந்த தொழிலாளிகள் தான் தீ வைத்தனர் என்றும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் இன்னின்னார் என்றும் அரசு தரப்பில் இருந்து நிர்வாகத்தினர் சிலரை சாட்சிகளாக ஆஜர் படுத்தினர். ஆனால், ஒரு சாட்சியால் கூட குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் அடையாளம் காட்ட முடியவில்லை. போலீசு மற்றும் பிராசிக்யூசன் தரப்பால் ஒரே ஒரு சந்தர்ப்ப சாட்சியத்தை நிறுவ முடியவில்லை.”

ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர்
ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர்

“பிறகு எப்படி நீதிமன்றம் இவர்களைக் குற்றவாளிகள் என்றது ?”

“இந்த தீர்ப்பில் உள்ள பல்வேறு முரண்பாடுகளில் இது முக்கியமானது. அதாவது, ஜியாலால் தன்னை சாதிப் பெயர் சொல்லி இழிவாகத் திட்டியதாக சங்கராம்ஜி என்கிற மேலாளரின் மீது ஒரு எதிர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தவறானது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் தீர்ப்பின் போது ஜியாலால் புகார் அளித்திருப்பதால், தொழிலாளிகள் கூட்டமாகச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்றும், சம்பவம் நடந்த இடத்தில் தொழிலாளிகள் இருந்ததற்கு இதுவே ஆதாரம் என்றும் கணக்கில் எடுத்து தீர்ப்பளித்துள்ளது.”

“இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதத்தை வைத்து தள்ளுபடியான வாதத்தை கணக்கில் எடுக்கலாமா ?”

“எடுக்க கூடாது. அப்படி எடுக்க கூடாது என்பதற்கு வழிகாட்டியாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளே உள்ளன. 31 பேரைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பே முழுக்க முழுக்க அனுமானத்தின் அடிப்படையிலானது; அந்த அனுமானமும், அப்படி அனுமானிப்பதற்கு வசதியான முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வைத்த வாதங்களில் தோதான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து சேர்த்துக் கொண்டதால் வந்தடைந்ததே. வேடிக்கை என்னவென்றால் குற்றவாளி என்று அறிவிப்பதற்கு வசதியாக செலக்டிவாக எடுத்துக் கொண்ட வாதங்களை வழக்கு விசாரணையின் போது நீதிமன்றமே தள்ளுபடியும் செய்திருக்கிறது. உங்களுக்கு இந்த முரண்பாடு புரிகிறதல்லவா?” என்றவரின் முன் வழக்கு தொடர்பான பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட தொகுதிகள் இருந்தன.

“புரிகிறது. ஆச்சரியமாகவும் உள்ளது” என்றோம்.

“அது மட்டுமல்ல, தொழிலாளிகள் தான் தீ வைத்தனர் என்பதற்கு போலீசார் நிறுத்திய சாட்சிகள் அனைவருமே நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் தொழிலாளிகளில் ஒருவர் கூட சாட்சியாக கிடைக்கவில்லையா ? மானேசர் ஆலையின் காவலாளிகள் தரப்பில் இருந்து தீபக் என்பவரை சாட்சியாக நிறுத்தினார்கள். தொழிலாளிகள் தீ வைப்பதை சி.சி.டி.வி மூலம் பார்த்ததாக சொல்லும் அவரால் ஒருவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. மேலும், சி.சி.டி.வி பதிவுகள் நெருப்பில் சேதமாகி விட்டதாகவும் தெரிவித்து விட்டார்கள்”

“அது சாத்தியமில்லையே. என்னதான் நெருப்பு பற்றியிருந்தாலும் கணினியின் ஹார்ட்டிஸ்குகளின் உள்ளே இருக்கும் மின்காந்த தகடுகள் உருகிப் போயிருப்பதற்கான சாத்தியங்கள் இல்லையே. ஒருவேளை சர்வர் எரிந்திருந்தாலும் கூட அதிலிருக்கும் ஹார்ட்டிஸ்குகளை கைப்பற்றி பாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தால் வலுவான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருக்குமே?”

“போலீசார் செய்த குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அரசு தரப்பில் நிறுத்திய சாட்சிகள் தெளிவாக இப்படிச் சொல்கிறார்கள் – ‘குர்காவ்னில் உள்ள ஜப்பான் ஹாஸ்டலில் தங்கியிருந்த போலீசார் எங்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள்’ என்று. எனில், போலீசார் குற்றம்சாட்டியவர்கள் அளித்த தங்குமிடத்தில் வசித்துக் கொண்டு, அவர்கள் அளித்த பிற வசதிகளைப் பெற்றுக் கொண்டே தான் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்கள் தரப்பு சாட்சிகள் மூலமே தெளிவாகிறது. இவ்வாறு விசாரணை நடத்தினால் அதில் நடுநிலைமை இருக்காதென்றும், அப்படி விசாரிக்க கூடாதென்பதற்கும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. அவை மீறப்பட்டுள்ளதை தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை”

”இது ஒரு சிறிய தவறாக கூட இருக்கலாமே. போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்பதற்கு இது மட்டும் தான் உங்கள் வசமிருக்கும் வாதமா?” என்றோம்.

நன்றி: rebel politik

”அதுமட்டுமல்ல. உதாரணமாக கொலைக்கான ஆயுதம் கார் கதவின் பீம் என்று நீதிமன்றத்தில் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையின் படி முட்டுக் கம்புகள், இரும்பு ராடு, மண்வெட்டி மற்றும் இன்னபிற என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கார் கதவின் பீமை புத்திசாலித்தனமாக ‘இன்ன பிறவுக்குள்’ கொண்டு வந்து விட்டார்கள். என்ன புத்திசாலித்தனம் என்கிறேன் என்றால், கொலை ஆயுதங்களாக குறிப்பிடப்பட்ட மற்றவை கட்டிடம் கட்டும் போது பயன்படுத்தப்படுபவை. கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் இந்தப் பொருட்களுக்கு என்ன வேலை ? என்கிற கேள்வியை புத்திசாலித்தனமாக தவிர்க்க கார் கதவின் பீம் என்று புதிய பொருளை நுழைத்துள்ளனர்.” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“குற்றவழக்குகளைப் பொருத்தவரை கொலைக்கான ஆயுதம் சந்தேகத்துக்கிடமின்றி நிறுவப்பட வேண்டும் என்பது அரிச்சுவடி. கார் பீமை கொலை ஆயுதமாக பின்னர் சொருகிய போலீசார், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் பீம்களை தொழிலாளர்கள் களவாடிச் சென்று தாக்கியதாக குறிப்பிடுகின்றனர். சரி, ஒரு வாத்ததிற்கு அதை ஏற்றுக் கொள்வோம். போலீசார் என்ன செய்திருக்க வேண்டும் ? கம்பெனியின் இன்வெண்டரி ரிக்கார்டுகளில் கார் பீம்கள் குறைந்திருப்பதை ஆவணப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்திருக்க வேண்டும் – செய்யவில்லை. அதே போல் கைப்பற்றப்பட்ட கொலை ஆயுதத்தை பாரன்சிக் ஆய்வுக்கு அனுப்பி காயங்கள் இதனால் தான் ஏற்பட்டதென அறிக்கை பெற்று சமர்பித்திருக்க வேண்டும் – இதையும் செய்யவில்லை. அட குறைந்தபட்சம், இதோ கைப்பற்றப்பட்ட ஆயுதத்தில் உள்ள கைரேகைப் பதிவுகள் என பாரன்சிக் ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும் – அதையும் செய்யவில்லை. அடுத்து முக்கியமாக, கொலை ஆயுதத்தை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவரிடம் அளித்து, இந்த ஆயுதத்தை இப்படித் தாக்கியதால் இவ்வாறான காயங்கள் ஏற்பட சாத்தியமுண்டு எனச் சான்று பெற்று சமர்பித்திருக்க வேண்டும் – அதையும் செய்ய வில்லை.”

“ஏகப்பட்ட முரண்பாடுகளுடன் விசாரணை நடந்துள்ளது போல் இருக்கிறதே ?”

“அதோடு நிற்கவில்லை. மாருதி மேலாளர் அவினேஷ் எரித்துக் கொல்லப்பட்டதாகத் தானே ஊடகங்கள் சொல்கின்றன ? ஆனால், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் படி அவர் மூச்சுத்திணறலால் (asphyxia) இறந்துள்ளார். அதாவது தொழிலாளிகள் அவரது கையையும் காலையும் முறித்து விட்டதால் நெருப்புப் பிடித்த கட்டிடத்திலிருந்து அவரால் வெளியேற முடியவில்லை என்றும், அப்போது சூழ்ந்த புகையில் மூச்சுத்திணறி இறந்துள்ளார் என்றும், அதன் பின்னரே அவரது உடல் தீயில் கருதியது என்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது. அவர்கள் வாதப்படியே பார்த்தாலும் கூட தாக்கியவர்களுக்கு கொல்ல வேண்டும் என்கிற நோக்கம் இல்லை. காயம் ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். பிறகு எப்படி அவர்களுக்கு கொலைக்கான தண்டனையைக் கோரினார்கள்?” என்றார் ஹர்ஷ் போரா.

“அரசு தரப்பு கொலைக்கான தண்டனை கோரியதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறதே?”

“எனவே தான் இந்த வழக்கு மேல் முறையீட்டில் நிற்காது என்கிறோம்”

“ஆனால், அரசு வழக்கறிஞர் எந்த அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்குமாறு கோரினார்?”

“அதுவும் தவறு தான். தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்கு அரசு தரப்பில் இருந்து சில தீர்ப்புகளை முன்னுதாரணமாக காட்டினார்கள். அதில் ராவ்ஜி என்பவருக்கும் ராஜஸ்தான் அரசுக்கும் நடந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனைத் தீர்ப்பு ஒன்று. ஆனால், இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து குறைத்துள்ளதை அரசு தரப்பு கவனிக்கவில்லை. மிக முட்டாள்தனமான விசயம் இது. எனது சந்தேகம் என்னவென்றால், அரசு தரப்பு வக்கீலின் ஜூனியர் கூகிளில் தூக்கு தண்டனை தீர்ப்புகளைத் தேடி எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் கூகிளைக் கேட்டால் அது கேட்டதை மட்டும் கொடுக்கும் – ஆனால், மேல் முறையீட்டில் அந்த தண்டனை குறைக்கப்பட்டதைச் சொல்லாது. இவ்வாறு தண்டனை குறைக்கப்பட்டதை எல்லாம் முன்னுதாரணமாக காட்டக் கூடாது என்பது மிக மிக அடிப்படையானது. நாங்கள் இதை நீதிமன்றத்தில் தெரிவித்த போது அரசு தரப்பு வழக்கறிஞர்களின் முகங்கள் தொங்கிப் போனது. கூகிளை நம்பி வழக்கு நடத்தினால் அவமானப்படாமல் வேறு என்ன நடக்கும் சொல்லுங்கள் ?” என்று சிரிக்கத் துவங்கியவர், சற்று நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தார்.

“…ம், தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பு 1972-ல் வழங்கப்பட்டது. ஆனால், பாருங்கள் 73-ல் அந்தச் சட்டம் மாற்றப்பட்டது. அதாவது ஒரு சட்டத்தின் முந்தை வடிவத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தண்டனையை அந்தச் சட்டம் மாற்றப்பட்ட பின் அளிக்கப்படவுள்ள தீர்ப்புக்கு முன்னுதாரணமாக காட்டக்கூடாது என்பதும் அடிப்படையானது. இதுவும் அனேகமாக கூகிளின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். இங்கே எனது அலுவலக நண்பர்களிடம் கூகிள், இண்டெர்நெட் போன்றவைகளையெல்லாம் மிதமிஞ்சி நம்பாதீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏன் நம்பக் கூடாது என்று இப்போது அவர்கள் புரிந்திருப்பார்கள்…”

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு கொண்டுசெல்லப்படும் மாருதி தொழிலாளர்கள்

”வழக்கின் விசாரணையின் போக்கில் உள்ள முரண்பாடுகளைக் குறித்து தெளிவாக விளக்கினீர்கள். போலீஸ் மற்றும் நீதிமன்றங்களின் விசாரணை நடைமுறை குறித்து தெரியாத சாதாரணமானவர்களுக்குப் புரியும் விதமாக இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதை எப்படி விளக்குவீர்கள்?”

”முதலில் கொலைக்கான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 13 பேர். இதில் ஜியாலாலைக் கழித்துப் பார்த்தால் 12 பேர். அவர்கள் அத்தனை பேரும் தொழிற்சங்க நிர்வாகிகள். ஆக, தொழிற்சங்க நிர்வாகிகளாக குறிவைத்து கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருப்பதில் இருந்தே அவர்களது நோக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிப் போடுவது தான் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். அடுத்து, தாக்குதல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 135 பேர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் அத்தனை பேரின் பெயர்களும் அகர வரிசைப்படி அமைந்துள்ளது. அதே போல் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டிய சாட்சிகளுக்கும் அகர வரிசைப்படியே குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.”

“இதைக் கொஞ்சம் புரியும் படி விளக்குங்களேன்”

”இதைப் புரிந்து கொள்ள சட்ட அறிவெல்லாம் தேவையில்லை நண்பரே. பொது அறிவே போதுமானது. அதாவது போலீசார் ஆரம்பத்தில் எழுதிய முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக தொழிற்சங்க நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி விட்டு அவர்களுடன் ‘அடையாளம்’ தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்று குறிப்பிடுகின்றனர். தீவைப்புச் சம்பவம் நடந்த மறுநாள், கம்பெனியின் பதிவேட்டைக் கையில் வைத்துக் கொண்டு வரிசையாக ஒவ்வொருவராக கைது செய்து வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே தான் பெயர்கள் மிகச் சரியாக அகர வரிசைப்படி அமைந்துள்ளது.” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“அடுத்து, கார் கதவின் பீமை பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை”

“நானும் முன்பு பார்த்ததில்லை. இந்த வழக்கிற்காக நான் ஒரு கார் பீமை வாங்கி தூக்கிப் பார்த்தேன். சுமார் மூன்று கிலோ வரை இருக்கும். போலீசாரும் அரசு தரப்பு வழக்கறிஞரும் சொல்வதைப் போல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கொலைவெறியோடு இந்த மாதிரி பயங்கரமான ஒரு ஆயுதத்தைக் கொண்டு தாக்கியிருந்தால் அடிபட்டவர்களுக்கு எந்தமாதிரியான காயங்கள் ஏற்படும் சொல்லுங்கள் ?”

“பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.”

“ஆனால், அப்படி நடக்கவில்லை. ஓரிருவருக்கு கை கால் எலும்புகளில் மெல்லிய விரிசல் ஏற்பட்டது என்கிறது போலீசின் விசாரணை அறிக்கை. நான் ஒரு கிரிமினல் லாயர். எத்தனையோ கிரிமினல் வழக்குகளைப் பார்த்திருக்கிறேன். கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கை கால்களை மாத்திரம் குறிபார்த்து – அதுவும், மெல்லிய காயங்கள் ஏற்படும் படி அடிக்கவே மாட்டான். தலையில் அடிப்பான் அல்லது உடலில் குத்துவான். இதையெல்லாம் போலீசாரும் சரி, நீதிமன்றமும் சரி கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.”

“எங்களுடன் நேரம் செலவழித்ததற்கும் பயனுள்ள இந்த உரையாடலுக்கும் மிக்க நன்றி திரு.போரா”

“நன்றி”

இரவு நேரம் பத்தைக் கடந்திருந்தது. நாங்கள் தில்லி டிபென்ஸ் காலனியில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரெபெக்கா ஜோனின் அலுவலகத்தில் இருந்து வெளியேறினோம். மறுநாள் மானேசர் சென்று தொழிலாளிகளைச் சந்திப்பது என திட்டம்.

மாருதி தொழிலாளர்கள் இந்த அநீதியான அடக்குமுறைகளுக்குப் பணிந்தார்களா ? அவர்களது தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கருவிலேயே சிதைத்து அழிக்க வேண்டும் என்ற மாருதி முதலாளியின் நோக்கம் நிறைவேறியதா ?

(தொடரும்)

வினவு செய்தியாளர் குழு.

மாருதி தொழிலாளர் நிலை : நேரடி அறிக்கை ( பகுதி – 1 )
அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில் (பகுதி 2)

விவசாயிகளுக்காக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

0

துப்பாக்கிக் சூட்டுக்கு மீனவர்கள் பலி, காவிரி துரோகத்திற்கு விவசாயிகள் பலி, கோகோ கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி… இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் சதித்தனமாக அழிவுத் திட்டங்களை கொண்டு வந்து அழிக்க துடிக்கிறது பாரதிய ஜனதா அரசு. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடினால் தேசத்துரோகி என்கிறது மோடி அரசு. இதற்கு ஒத்தூதுகிறது சசிகலாவின் பினாமி அரசு! தமிழக விவசாயிகளின் பிரச்சினைக்காக சென்னையைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பாக எழும்பூரில் நாளை 1.4.2017 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடக்கவிருக்கிறது.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளிகள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம். வாருங்கள், அணிசேர்வோம், போராடுவோம், தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டெடுப்போம்.
மெரினாவில் சாதித்த தமிழக மாணவர் சக்தியின் பலத்தை இங்கேயும்  காட்டுவோம்.
தமிழகம் அடிமையில்லை என்பதை மோடி அரசுக்கு நிரூபிப்போம்.

நாங்கள்
காத்திருக்கமாட்டோம்…!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
மூடாமல் ஓயமாட்டோம்…!

ஹைட்ரோ கார்பன்
திட்டத்தை உடனே மூடு!
விவசாயத்தையும்,
விவசாயிகளையும் வாழவிடு!

தமிழகத்தை அழிக்கும்
ஹைட்ரோ கார்பனை மூடச்சொன்னால்…
வறட்சி நிவாரணம் கேட்டால்…
விவசாயிகளை காக்க
மாணவர்கள் போராடினால்…
பத்திரிக்கையாளர்கள்
கேள்வி கேட்டால்…
தேசத்துரோகிகளா?

அடித்தாலும்
அடங்காது இது வேற தமிழ்நாடு!
தமிழனை அழிக்கத்துடிக்கும்
பி.ஜே.பி கும்பலே
தமிழகத்தை விட்டு ஓடு!

காளைக்காக கூடிய தமிழினமே
விவசாயிகளின்
கதறலுக்காகவும் கூடுவோம்!

இடம்: எழும்பூர் ரயில் நிலையம் அருகில் (தாளமுத்து நடராசன் மாளிகை எதிரில்)
தேதி: 01-04-2017  நேரம்காலை 11.30 மணி

இவண்
அனைத்துக்
கல்லூரி மாணவர்கள்
தொடர்புக்கு:
90924 64675

அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில்

2

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 2

”இது என்னுடைய கதை மட்டுமல்ல. அனைத்து தொழிலாளிகளின் கதையும் இது தான்” என்கிறார் ராம் நிவாஸ். மாருதி சுசுகி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராம் நிவாஸ். 2012 ஜூலை 18-ம் தேதி சம்பவத்தைத் தொடர்ந்து மாருதி நிர்வாகத்தின் வேலைப் பறிப்பு நடவடிக்கைக்கு ஆளானவர். அன்றைய தினம் ராம் நிவாஸ் இரண்டாவது ஷிப்டில் பணிபுரிய வேண்டியிருந்ததால் ஆலையைக் கொளுத்திய ‘தீவிரவாதிகள்’ பட்டியலில் இடம் பெறவில்லை.

”மானேசர் ஆலைக்கு வருவது எங்களுக்கு ஒரு இன்பக் கனவாக இருந்தது. நான் ஐ.டி.ஐ படித்து விட்டு மாருதியின் குர்காவ்ன் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தேன். அங்கே இருந்த உற்பத்தி லைனில் 72 நொடிகளுக்கு ஒரு கார் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது இலக்கு. உங்களுக்கு மாருதியின் வேலை நிலைமைகள் குறித்து தெரியும் தானே?” என்றார் ராம் நிவாஸ்.

ராம் நிவாஸ்

இழிபுகழ் பெற்ற மாருதியின் சுரண்டல் முறை மாருதி தொழிலாளிகளின் பல்லாண்டு காலப் போராட்டங்களுக்குப் பின்னரே அம்பலமானது. தொழிலாளிகளுக்கு விடுமுறை கிடையாது – அவசரகால விடுமுறை எடுப்பதாக இருந்தால் ஒரு நாள் விடுப்புக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். தேனீர் குடிக்க ஏழு நிமிடங்கள், உணவுக்கு 20 நிமிடங்கள், கழிவறை செல்ல ஐந்து நிமிடங்கள் என வரையறுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்குள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

காரின் பல்வேறு உதிரி பாகங்கள் நீண்ட கன்வேயர் பெல்டில் நகர்ந்து கொண்டிருக்கும். நகரும் கன்வேயர் பெல்டில் உள்ள பாகங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளி இணைப்பதற்கு சில வினாடிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அதற்குள் அந்த வேலையை அவர் செய்யவில்லை என்றால், அடுத்ததாக உள்ள தொழிலாளியால் அந்த குறிப்பிட்ட உதிரி பாகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாது.

சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தின் காட்சியை நினைவூட்டிக் கொள்ளுங்கள்.  மானேசர் ஆலையின் உற்பத்தி அவ்வாறே நடந்தது. கன்வேயர் பெல்டின் அருகே தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும் – குடிப்பதற்கு நகர்ந்தால் கன்வேயர் பெல்டில் அவர் இணைக்க வேண்டிய உதிரிபாகம் நகர்ந்து சென்றிருக்கும். தொழிலாளிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு கூட ஆலை நிர்வாகம் தடை போட்டிருந்தது.

”குறிப்பாக குர்காவ்ன் ஆலையில் இருந்து மானேசர் ஆலைக்கு மாறுதல் பெற்று வரவேண்டும் என தொழிலாளிகள்  ஏன் விரும்பினார்கள்?”  ராம் நிவாசிடம் கேட்டோம்.

”எல்லோரும் அல்ல. ஒப்பந்த தொழிலாளிகளே அப்படி விரும்பினார்கள். மானேசர் ஆலை 2007-ம் ஆண்டு தான் உற்பத்தியைத் துவங்கியது. குர்காவ்ன் ஆலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளிகளிடம் மானேசருக்குச் சென்றால் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என சொல்லப்பட்டு வந்தது. அதை நம்பினோம். எனவே மானேசருக்கு பணிமாற்றம் விரும்பிக் கேட்டு வந்தோம்”

தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும்
தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும்

”மானேசரில் பணி நிரந்தரம் செய்யப்பட்டீர்களா?

“சிலருக்குக் கிடைத்தது; பலருக்கு கிடைக்கவில்லை. மொத்தம் 3000 தொழிலாளர்களில் 1100 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். ஆனால், பிரச்சினை அதுவல்ல. இங்கே குர்காவ்னை விட ஒடுக்குமுறை அதிகமானது. குர்காவ்னில் 72 நொடிகளுக்கு ஒரு கார் என இலக்கு வைத்து கன்வேயர் பெல்ட் நகர்ந்தது என்றால் இங்கே முதலில் 60 நொடிகளுக்கு ஒரு கார் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது 44 நொடிகள் என குறைக்கப்பட்டது”

கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டதுடன் வேறு கொடூரமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தொழிலாளிகள் செல்பேசிகள் வைத்துக் கொள்ளக் கூடாது, வேலைக்கு இடையே தண்ணீர் குடிக்க கூடாது, வேலை நேரத்துக்கு இடையே வரும் ஓய்வு நேரமும் உணவு நேரமும் சுருக்கப்படுவது, முந்தைய நாளின் வேலை அறிக்கையை மறுநாளின் தேனீர் இடைவெளியின் (7 நிமிடங்கள்) போது நிரப்பிக் கொடுப்பது என நினைத்துப் பார்க்கவே முடியாத வடிவங்களில் எல்லாம் தொழிலாளிகளின் மேல் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மாருதி நிர்வாகம்.

”சரி.. இந்த மாதிரியான ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்வினை எந்தமாதிரியாக இருந்தது?”

”முதலில் எங்களுக்கான சங்கம் துவங்க வேண்டுமென திட்டமிட்டோம்”

“உங்களுக்கான சங்கம் என்றால்…”

“ஆம், ஏற்கனவே நிர்வாகத்தின் கைக்கூலி சங்கம் ஒன்று இருந்தது. நாங்கள் அதை மஞ்சள் சங்கம் என்று அழைப்போம். இதற்கு மேல் மஞ்சள் சங்கத்தை நம்பத் தேவையில்லை என்றும் ‘சிவப்பு’ சங்கம் ஒன்றைக் கட்டுவதென்றும் 2011-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி தீர்மானித்தோம். இதனை அறிந்த நிர்வாகம், மஞ்சள் சங்கத்தின் செயல்பாடுகளில் தொழிலாளர்களுக்கும் ஒப்புதல் உள்ளதெனக் காட்ட கையெழுத்து வாங்க முற்பட்டார்கள். எனவே நாங்கள் அன்றைய தினமே வேலை நிறுத்தத்தில் இறங்கினோம்.”

2011-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்ற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சுமார் 13 நாட்களுக்கு நீடித்தது. மூவாயிரம் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் நிர்வாகம் இறங்கி வந்துள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியபடி சங்கம் கட்டிக் கொள்வதை அனுமதித்த நிர்வாகம், 13 நாள் வேலை நிறுத்தத்திற்காக 29 நாளுக்கான சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொண்டது. ஆலை திறக்கப்பட்டு உற்பத்தி துவங்கிய நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 29-ம் தேதி கதவடைப்பு செய்தது நிர்வாகம்.

சங்கம் கேட்டுப் போராடிய தொழிலாளர்களில் 94 பேரை பணி நீக்கம் செய்த மாருதி, எஞ்சியவர்கள் நன்னடத்தை பத்திரம் ஒன்றைத் தொழிலாளர்கள் மேல் திணித்தது. ‘நன்னடத்தை’ எனச் சொல்லப்பட்டாலும், சாராம்சத்தில் அது ஒரு கொத்தடிமைப் பத்திரமாகவே இருந்துள்ளது. பணியின் போது ஏற்படும் சிறிய தவறுகளுக்கு 15 நாட்கள் பணியிடை நீக்கம், புகையிலை போடக்கூடாது, பேசக்கூடாது, கழிவறையில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரான விதிகளை மேற்படி ‘நன்னடத்தை’ பத்திரம் கொண்டிருந்தது. மைய அரசும் அரியானா மாநில அரசும் ஒரு ஜப்பானிய கார்ப்பரேட் கம்பெனி தமது சொந்தக் குடிமக்களைக் கொத்தடிமைகளாக்க ஒப்பந்தம் செய்யத் துடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மாருதி நிர்வாகத்தின் பின் போலீசு உள்ளிட்ட சகல அரசு எந்திரங்களும் துணையாக நின்றன.

சுமார் முப்பத்து மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் ஆலையைத் திறந்த மாருதி நிர்வாகம் உடனடியாக 1200 ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்தது. எஞ்சிய தொழிலாளர்களையும் வேறு வேறு தொழிற் பிரிவுகளுக்கு பணியிட மாற்றம் செய்தது – அதாவது பெயிண்டருக்கு வெல்டர் வேலையும், வெல்டருக்கு டர்னர் வேலையும், டர்னருக்கு பெயிண்டிங் வேலையும், எலக்ட்ரீசியனுக்கு மிசின் மேல் வேலையும் என வேலைகளை மாற்றிப் போட்டனர். இதன் மூலம் வேலையில் ஏற்படும் தவறுகளைக் காட்டி மீண்டும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதே நிர்வாகத்தின் தந்திரமாக இருந்துள்ளது.

2011ம் ஆண்டு அக்டோபர் 7ம் தொடங்கிய தொழிலாளர்கள் போராட்டம்
பணிநீக்கம் செய்யப்பட்ட சக தொழிலாளிக்காக 2011-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

இந்தக் கொடுமைகளை எதிர்த்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட சக தொழிலாளிகளை சேர்க்கக் கோரியும் மீண்டும் 2011-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் நாள் முதல் வேலை நிறுத்தத்தை துவங்கினர் தொழிலாளார்கள். 14 நாட்கள் நீடித்த போராட்டத்தை சீர்குலைக்க வேறு தந்திரங்களைக் கையாண்டது மாருதி நிர்வாகம். தொழிற்சங்கத்தின் முன்னணியில் நின்ற சில தொழிலாளிகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 16 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை கொடுத்துள்ளது. இதை அப்படியே பத்திரிகைகளுக்கும் தெரிவித்து, “தொழிற்சங்க முன்னோடிகள் தங்களையே விற்றுக் கொண்டார்கள்” என தலைப்புச் செய்தியையும் வரவழைத்தது.

நிர்வாகத்தின் நரித்தந்திரங்கள் ஒருபக்கமும், சங்க முன்னோடிகளின் துரோகத்தனம் ஒருபக்கமும் சூழ்ந்து கொண்ட நிலையிலும் சோர்ந்து போகாத தொழிலாளர்கள், மீண்டும் 12 பேர் கொண்ட தொழிற்சங்க செயற்குழு ஒன்றை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைத்தனர். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டது.

“எங்களுடைய கோரிக்கையான ’சமமான வேலைக்கு சம ஊதியமும் வசதிகளும்’ என்பதை மீண்டும் கையிலெடுத்துப் போராடத் துவங்கினோம்” என்றார் ராம் நிவாஸ்.

”ஜூலை 18 சம்பவத்தின் பின்னணி குறித்து சொல்லுங்கள்..” என்றோம்.

”2012-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே முறுகலான நிலை இருந்து வந்தது. எங்களுக்குள் எப்படியாவது பிரிவினையைத் தூண்டி விடவேண்டும் என்பதில் நிர்வாகம் குறியாக இருந்தது. அதற்கு நாங்கள் இடம் கொடுக்காமல் எங்களுடைய நியாயமான  கோரிக்கைகளுக்காக விடாப்பிடியாக போராடி வந்தோம். இந்நிலையில் தான் ஜூலை 18-ம் தேதி வந்தது…” என்றவர் சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

இறந்து போன அவினேஷ் குமாரின் சடலம்
இறந்து போன அவினேஷ் குமாரின் சடலம்

“அன்றைக்குக் காலை ஒன்பது மணிக்கு ஜியாலால் என்கிற தொழிலாளியிடம் முந்தைய நாளின் வேலை அறிக்கையை தேனீர் இடைவெளியின் போது நிரப்பிக் கொடுக்குமாறு மேலாளர் வற்புறுத்தியுள்ளார். ஜியாலால் அதற்கு மறுக்கவே தலித்தான அவரை சாதிப் பெயர் சொல்லித் திட்டியும் அடித்தும் உள்ளார் மேலாளர். ஜியாலால் உடனடியாக இதை தொழிற்சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறார். சுமார் 10 மணி அளவில் 12 தொழிற்சங்க நிர்வாகிகளும் நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதற்கிடையே 11 மணி அளவில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று போலீசாரும், தனியார் ரவுடிப் படை ஒன்றும் வந்து சேர்ந்தது”

“தனியார் ரவுடிப் படையா?”

”ஆம். பௌன்சர்கள் கேள்விப் பட்டிருப்பீர்களே, அவர்கள் தான். தொழிலாளிகளைப் போல் உடையணிந்து வந்த அவர்களை நாங்கள் முன்பின் பார்த்ததில்லை என்பதால் விசாரித்தோம்… அவர்கள், தாங்கள் புதிதாக சேர்ந்திருப்பதாகவும், அடையாள அட்டை இன்னமும் தரப்படவில்லை எனவும் தெரிவித்தனர். ஜியாலாலுக்கு நியாயம் கேட்டு நாங்கள் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் போது போலீசாரும் இந்தப் புதியவர்களும் உள்ளே தான் இருந்தனர். முதல் ஷிப்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாக அலுவலகம் முன்பாக நின்று கொண்டிருந்த நேரத்தில் தான் அதற்கு சற்று தள்ளியிருந்த கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்தோம்”

“நீங்கள் தீ வைக்கவில்லை என்கிறீர்களா?”

”நிச்சயமாக. நாங்கள் தீ வைக்கவில்லை. சொல்லப் போனால் இப்போது நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் 12 பேரும் அன்றைக்கு நிர்வாக கட்டிடத்தின் முன் அனைத்து தொழிலாளர்களும், நிர்வாகத்தின் மேலாளர்களும் பார்க்க அவர்கள் கண் முன் நின்றனர். சுற்றிலும் போலீசாரும், நிர்வாகத்தின் குண்டர் படையும் நிற்க தொழிலாளிகளால் செய்திருக்கவே முடியாது. ஆனால், தீ பிடித்துக் கொண்டது. அதை நிர்வாகத்தினர் தான் வைத்திருக்க வேண்டும். தீயில் எரிந்தவைகளுக்கு அவர்கள் இன்சுரன்ஸ் இழப்பீடு பெற்றுள்ளனர். அவர்களுக்கு அனைத்தும் கிடைத்து விட்டது. ஆனால், எங்களுக்கு? எங்கள் வாழ்க்கையையே இழந்திருக்கிறோமே?” என்றவர் மேலும் தொடர்ந்தார்…

ஜூலை 19-ம் தேதி தீ விபத்துக்கு பின் மாருதி ஆலை

”இறந்து போன அவினேஷ் குமாரை தொழிலாளிகள் தாக்கியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவர் எங்களிடம் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொள்வார். மேலும் அப்போது அவருக்குமே கூட நிர்வாகத்துடன் முரண்பாடுகள் இருந்து வந்தது. அவர் வேலையை இராஜினாமா செய்யவிருந்ததாக பரவலாக தொழிலாளர்கள் பேசிக் கொண்டனர். நிர்வாகத்தினர் தான் அவரைத் தாக்கி நெருப்பில் எரியும்படி விட்டுச் சென்றதாக தொழிலாளிகள் பலரும் கருதுகின்றனர். உண்மை வேறு விதமாக இருக்க வாய்ப்பே இல்லை”

”சரி, தீ விபத்துக்குப் பின் என்ன நடந்தது?”

“அடுத்து அங்கே ஒரு கலவரம் நடந்தது. குண்டர்களும், போலீசாரும் எங்களைத் தாக்கினர். எங்களில் சிலர் திருப்பித் தாக்கினோம். ஆனால், அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நாங்களோ நிராயுதபாணிகளாக நின்றோம். எனவே அனைவரும் சிதறி ஓடிப் போனோம். மறுநாள் சுமார் 91 பேரைக் கைது செய்தார்கள். சில நாட்களுக்குள் மேலும் 56 பேரைக் கைது செய்தனர்.” என்றார் ராம் நிவாஸ்.

கலவரத்தைக் காரணம் காட்டி மொத்தம் 2346 தொழிலாளர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்தது மாருதி நிர்வாகம். அதில் 546 பேர் நிரந்தர தொழிலாளிகள், 1800 பேர் ஒப்பந்த தொழிலாளிகள்.

போலீசாரின் துணையுடன் தொழிலாளர்களின் மேல் கொலைப் பழி சுமத்திய நிர்வாகம், கைதுகள் மற்றும் பணிநீக்க நடவடிக்கைகளால் தொழிற்சங்க கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளையும் துடைத்தழித்து விட்டதாக நம்பியது. அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை மாருதி நிர்வாகத்திற்கு சேவகம் செய்யத் தயாராக இருந்தன. இதனால் தொழிலாளர்கள் தமக்கு அஞ்சிப் பணிந்து விடுவார்கள் என்றும், அவர்களைச் சுரண்டிக் கொழுப்பதற்கு எல்லையே இல்லை என்றும் மகிழ்ந்தது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி.

அந்த முதலாளிகளின் கனவு பலித்ததா?

வழக்கின் கதி என்னவானது?

(தொடரும்)
வினவு செய்தியாளர் குழு.

மாருதி தொழிலாளர் நிலைமை – நேரடி அறிக்கை

1

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 1

கீழமை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது! 13 பேருக்கு வாழ்நாள் சிறை; 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை. 117 பேர் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என விடுவிப்பு. விடுவிக்கப்பட்டவர்கள் சுமார் நான்கரை ஆண்டுகள் பழியைச் சுமந்தனர்; கொலைப்பழி. அவர்கள் அனைவரும் வாழ்விழந்து, வேலையிழந்து, வருமானமிழந்து, வாழும் வழியிழந்து நிற்கின்றனர்.

இவர்களோடு சேர்த்து சுமார் 2,347 தொழிலாளர்களின் வேலை ஒரே நாளில் பறிக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டன. அவர்கள் ஹரியானா மாநிலம் குர்கான்னை அடுத்துள்ள மானேசர் மாருதி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள்.

அவர்கள் செய்த குற்றம்? உரிமைகளைக் கோரியது.

தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிய மாருதி தொழிலாளர்களின் மீது கொலைப்பழி சுமத்தியது போலீசு. ஜூலை 18, 2012-ம் ஆண்டு நடந்த சிறிய வாய்த் தகறாரை பெரும் தீவிபத்தாக மாற்றியது மாருதி நிர்வாகம். அப்போது மாருதி நிர்வாகத்தால் அழைத்து வரப்பட்ட குண்டர்படையால் கொல்லப்பட்ட மேலாளர் ஒருவரின் மரண கணக்கை தொழிலாளர்களின் தலையில் சுமத்தி வழக்கு நடத்தியது மாநில அரசு.

அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி அதில் தண்டிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் கடந்த மார்ச் 18, 2017 அன்று கீழமை விசாரணை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து வினவு செய்தியாளர் குழு மானேசரில் களமிறங்கியது.

“முதலில் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், 117- பேரை விடுவித்து 31- பேரை குற்றவாளிகளென அறிவித்தது. 18-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை கேட்டிருந்தார். எங்கே தங்களது தோழர்களைக் தூக்கில் போட்டுக் கொன்று விடுவார்களோ என பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளிகள் பதறி விட்டார்கள்” என்றார் இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச்(IFTU) சேர்ந்த  தோழர் அபர்னா.

இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச்(IFTU) சேர்ந்த தோழர் அபர்னா

மாருதி தொழிற்சங்க வரலாறு மட்டுமின்றி, தில்லியைச் சுற்றியுள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத், குர்கான் மற்றும் மானேசர் போன்ற துணை நகரங்களின் தொழிற்சாலை மற்றும் தொழிற்சங்க வரலாற்றைக் குறித்து கேட்டறிய அவரைச் சந்தித்தோம். தில்லி டிஃபென்ஸ் காலனியை அடுத்த கோட்லா பகுதியில் இருந்த ஒரு நெரிசலான இடுக்கினுள் அமைந்திருந்த தொழிற்சங்க அலுவலகத்தில் தோழர் அபர்னாவுடன் பேசினோம்.

“தண்டனை விவரங்களை அறிவித்த 18-ம் தேதியன்று எல்.ஜி, மோசர்பேர், என்.டி.ஐ, டென்சோ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது மதிய உணவைப் புறக்கணித்தனர். சுமார் 20,000 தொழிலாளர்கள் தங்களது தொழிற்கருவிகளை ஒரு மணிநேரம் எடுக்கவில்லை (Tool Down)… மாருதியின் அனைத்து ஆலைத் தொழிலாளர்களும் அன்றைக்கு மதிய உணவையும் இரவு உணவையும் புறக்கணித்திருந்தனர். சுமார் 25,000 கலவரத் தடுப்புப் போலீசார் மனேசரில் மட்டும் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் தொழிலாளிகள் அஞ்சவில்லை”

“தோழர், மாருதி ஆலையில் பற்றிய நெருப்பின் வெளிச்சத்தில் இந்தப் பகுதி தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் நாடெங்கும் அம்பலமாகியிருக்கின்றன.. பொதுவாக இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இங்கே நிலவும் சுரண்டல்கள் குறித்து சொல்ல முடியுமா?”

மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு.

“சொல்லலாம்.. ஆனால், அதற்கு முன் இரண்டு விசயங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – முதலில் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு. அடுத்து, அது முதன் முதலாக நிகழ்ந்த ஒரு தனித்துவமான சம்பவமும் அல்ல. அதற்கு முன்னும் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன…” என்றவர் தொடர்ந்தார்.

எழுபதுகளில் சூழலுக்குப் பொருத்தமின்றி தலைநகர் தில்லி வீங்கிச் சென்றதை உணர்ந்தது காங்கிரசு. மொத்த வளர்ச்சியையும் ஓரிடத்தில் ஒன்று குவித்த நகரமயமாக்கலின் விளைவாக ஏற்பட்ட கான்சர் கட்டி விரைவில் வெடித்துச் சிதறும் சாத்தியங்களை உணர்ந்ததால், அதை அக்கம் பக்கத்துப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டதன் விளைவே நொய்டா, காஸியாபாத், குர்கான், மனேசர் உள்ளிட்ட தலைநகரத் துணை நகரங்கள்.

நகரமயமாக்கலின் ஆபாசங்களுக்கு சிறந்த உதாரணம் தில்லியும் அதன் துணை நகரங்களும். பளீர் நகரங்களுக்கும், பின்தங்கிய கிராமங்களுக்கும் ஒரு சில கிலோமீட்டர்களே தொலைவு. தில்லி தௌலா-குவானில் இருந்து குர்கான் – மானேசர் வரையிலான நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதன் ஓரங்களில் 21-ம் நூற்றாண்டையும் 10-ம் நூற்றாண்டையும் மாறி மாறிப் பார்க்க முடியும். வறண்ட பாலைவனத்தின் மத்தியில் எங்கிருந்தோ பிடுங்கி வரப்பட்டு நடப்பட்ட மலர்ச்செடிகளைப் போல் வானுயர்ந்த கண்ணாடிக் கட்டிடங்கள் சூழலுக்குப் பொருந்தாமல் உயர்ந்து நிற்கும். அருகிலேயே கயிற்றுக் கட்டிலில் ஹூக்கா புகைக்கும் கிராமத்து ஆதிக்க சாதிப் பெரிசுகளையும் உருவத்திலேயே வதைகளை உணர்த்தும் தலித்துகளையும் பார்க்க முடியும்.

வரலாற்று ரீதியில் உற்பத்தித் துறையுடன் எந்த தொடர்புமற்ற இந்தப் பகுதியில் பெரும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளி வர்க்கத்தின் தொழிற்சாலைகளை நிறுவ எழுபதுகளின் மத்தியிலிருந்தே துணை நின்றது காங்கிரசு அரசு. யாதவ் மற்றும் ராஜ்புத் சாதியினர் கணிசமாகவும் ஜாட் மற்றும் குஜ்ஜார் சாதியினர் ஓரளவிற்கும் வசித்த இப்பகுதியில் முன்பு மானாவரி விவசாயம் நடந்துள்ளது. அதிகம் படிப்பறிவில்லாத மேற்குறிப்பிட்ட சாதியினரிடமே பெருவாரியான நிலம் குவிந்து கிடந்தது.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அரசு நினைத்ததைப் போல் அத்தனை எளிதாக நடக்கவில்லை. எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு வழியின்றி மக்களின் முன் கருணை பிரபுக்களாக நடிக்க வேண்டியிருந்தது.

பாலைவனத்தின் மத்தியில் எங்கிருந்தோ பிடுங்கி வரப்பட்டு நடப்பட்ட மலர்ச்செடிகளைப் போல் சூழலுக்கு பொருத்தமில்லாத வானுயர் கட்டிடங்கள்

“அவர்கள் (முதலாளிகள்) முதலில் வந்த போது கேட்காமலேயே அனைத்தையும் கொடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு நிலம் தேவையாய் இருந்தது.. அவர்கள் கேள்விகளை விரும்பவில்லை; உரிமைக் குரல்களை வெறுத்தார்கள்; எனவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கு வேலை செய்யாமலேயே காசு கொடுத்தார்கள்; மதிய உணவுக்கான இலவச டோக்கன்கள் வழங்கினார்கள்.. ஆலையின் உள்ளே இருக்கும் உணவகங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டுகளை வாரி வழங்கினர்.. அந்த வட்டாரத்து மண்ணின் மைந்தர்களின் சிந்தனையைக் கறைப்படுத்தினர், ஊழல்படுத்தினர்.. பின், சில ஆண்டுகள் கழித்து தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள்..”

“நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு ஆலைகளிலேயே முறையான வேலை வாய்ப்புகளை ஏன் கொடுக்க வில்லை?”

“வெகுசிலருக்கு கிடைத்தது.. ஆனால் பெரும்பாலானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். எனவே பெரும்பாலான தொழிலாளர்கள் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஐ.டி.ஐ படித்து விட்டு வந்தவர்கள் தான். அவ்வாறு வெளியில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பது குறிப்பிடத்தகுந்தது”

என அபர்னா சொல்லும் போது குறுக்கிட்டோம்.

“சரி பெரும்பான்மை தலித்துகளாகவே இருக்கட்டுமே. உள்ளூர் ஆதிக்க சாதியினரும் நிலத்தை இழந்திருக்கிறார்கள்.. நீங்கள் சொன்னது போல் சிலரை ஊழல்படுத்தியிருக்கலாம்.. என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கார்ப்பரேட்டுகள் தங்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் உணரவில்லையா? அவர்களும் விவசாய பின்னணி கொண்டவர்கள் என்பதைக் கணக்கில் கொண்டு வர்க்க அடிப்படையில் பார்த்தால் அவர்கள் தொழிலாளர்கள் பக்கம் அல்லவா நின்றிருக்க வேண்டும்?”

“தோழர் நீங்கள் சில விசயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில், உள்ளூர் ஆதிக்க சாதியினரை கார்ப்பரேட்டுகள் ஊழல்படுத்தியிருக்கின்றன என்பதை பருண்மையாக புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, இங்கே கம்பெனிகளில் லட்சத்துக்கும் மேலானவர்கள் வேலை செய்கிறார்கள்.. அதில் 80 சதவீதம் காண்டிராக்ட் தொழிலாளிகள். பத்து அல்லது சில பத்து காண்டிராக்ட் தொழிலாளிகளுக்கு ஒரு காண்டிராக்டர் இருப்பார் – அவர் உள்ளூர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். இப்படி காண்டிராக்ட் எடுத்து செய்ய அவருக்கு திறமை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானது”

குர்கான் – மானேசர் வரையிலான நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதன் ஓரங்களில் 21-ம் நூற்றாண்டையும் 10-ம் நூற்றாண்டையும் மாறி மாறிப் பார்க்க முடியும்.

“தாமே நேர்முகத் தேர்வு நடத்தி தெரிவு செய்த படித்த இளைஞர்களை ஒப்பந்த தொழிலாளியாக எடுத்துக் கொள்வார்கள் – இந்த தொழிலாளர்களைப் பிரித்து காண்டிராக்டர்களின் சம்பளப்பட்டியலில்(Payroll) சேர்த்து விடுவார்கள். இதே போல், போக்குவரத்து காண்டிராக்டு, உணவக காண்டிராக்டு, சிறியளவில் பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டு என பல்வேறு வாய்புகளை வீசியெறிந்து இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வாழ்க்கையை கம்பெனிகள் நேரடியாகவே கட்டுப்படுத்துகின்றன. சாதியைப் பொருத்தவரை, வெளியே எங்கிருந்தோ வந்த தலித் அல்லது கீழ்நிலை பிறப்படுத்தப்பட்ட சாதிக்காரன் நம்ம ஊரில் வந்து பிழைக்கிறானே என்கிற ஆத்திரம்…”

“தோழர், இந்தப் பகுதியில் துவங்கப்பட்ட தொழிலாளர் யூனியன்கள் குறித்து சொல்லுங்கள்”

“எந்தவொரு பன்னாட்டுக் கம்பெனியின் உற்பத்தி ஆலையை எடுத்துக் கொண்டாலும் செயல்படத் துவங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே தங்களது சுயரூபத்தைக் காட்டிவிடுவார்கள். அதற்கு எதிர்வினையாக தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளும் தொழிற்சங்கங்களும் ஏற்படத் துவங்கின”

தில்லி மற்றும் அதன் துணை நகரங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான யூனியன்கள் அரசியல் சார்பற்றே உள்ளன – குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் சார்பற்று சுயேச்சையானவைகளாக இருக்கின்றன. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.எப்.டி.யூ (இ.பொ.க – மா.லெ புதிய ஜனநாயகம்) மற்றும் சி.எல்.ஐ (கம்யூனிஸ்ட் லீக் ஆப் இந்தியா) போன்ற கட்சி சார்புள்ள தொழிற்சங்கங்கள் ஓரளவுக்கு உள்ளன. என்றாலும், கணிசமாக சுயேச்சையான சங்கங்களே செயல்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதியில் துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்டு கட்சி அமைப்புகள் வலுவில்லாமல் இருந்தது இந்தப் போக்குக்கு முக்கியமான காரணம். இதன் விளைவாக கட்சி சார்பான தொழிற்சங்கங்களும் பல்வேறு துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. மேலும், பல்வேறு என்.ஜி.ஓ குழுக்களும் தொழிற்சங்கங்களை நடத்தி வருகின்றன. அரசியல் ரீதியில் வழிகாட்டுவதற்கு உறுதியான கட்சி அமைப்புகள் இல்லாத நிலையில் தொழிற்சங்கங்கள் மட்டும் கையை மீறி வளர்ந்ததால் இச்சங்கங்களுக்கு இயல்பாகவே சந்தர்ப்பவாத தலைமைகளே அமைந்தன. இதன் காரணமாகவே தொழிலாளர்களுக்கு கட்சி சார்பான தொழிற்சங்கங்களின் மீது ஒருவிதமான அவநம்பிக்கை நிலவுவதைக் காண முடிந்தது.

விசாரனைக்கு அழைத்துவரப்படும் மாருதி தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )

அரசியல் ரீதியான உறுதியான வழிகாட்டுதல் இல்லாத நிலையிலும், தொழிலாளிகள் தம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சுரண்டலை தன்னியல்பாகவே எதிர்த்து நின்றனர். குறிப்பாக தொன்னூறுகளின் மத்தியிலிருந்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தலையெடுக்கத் துவங்கின. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் உரிமைப் போராட்டங்கள் மேலும் உக்கிரமடையத் துவங்கின. இந்நிலையில் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய கார்ப்பரேட் முதலாளிகளும் அரசும் சதித்தனமாக கைகோர்த்தனர்.

தோழர் அபர்னா தொடர்ந்து பேசினார்…

“மாருதியின் மானேசர் ஆலையில் 18 ஜூலை 2012-ல் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. இங்கே நீங்கள் ஒரு மாதிரியை (pattern) கவனிக்க வேண்டும் – அதாவது ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவார்கள் – முதலில் அது அமைதியான கோரிக்கையாக இருக்கும் – அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட பின், வேலை நிறுத்தம் நடக்கும், அல்லது ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நடக்கும் – அப்போது திடீரென ஒரு பதற்றமான சூழல் உருவாகும் – அந்த சூழலில் யார் செய்தார்களென்றே தெரியாமல் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழும் – அநேகமாக அந்த தாக்குதலில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் காயம் பட்டிருப்பார் – அதற்காகவே காத்திருந்ததைப் போல் அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் உள்ளே புகுந்து தொழிலாளர்களை அடித்து வெளுப்பார்கள் – சில பத்து பேர்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதியப்படும் – அவர்கள் தொழிற்சங்கத்தின் முன்னணியில் நின்றவர்களாக இருப்பார்கள் – அதன் பின் அந்த தொழிலாளர்களின் வாழ்கையும், அவர்களின் தொழிற்சங்க முன்னெடுப்புகளும் மொத்தமாக சீரழிந்து போகும் – இறுதியாக பன்னாட்டுக் கம்பெனியின் சுரண்டல் எந்த சிக்கலுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கும்… “ என்று பேசிச் சென்றவரை இடைமறித்தோம்..

“நீங்கள் சொல்வது ஏதோ சதிக்கோட்பாடு (conspiracy theory) போல் இருக்கிறதே?”

“நான் சொல்வது கற்பனையல்ல; நடந்த உண்மைகளைத் தான் சொல்கிறேன். 2005-ல் ஹீரோ ஹோண்டாவில் இது தான் நடந்தது, 2008-ல் இத்தாலி கம்பெனி கிராசியானோவிலும், அதற்கு ஆறு மாதம் கழித்து ஜப்பான் நிறுவனமான நிப்பானிலும், இவ்வாறு தான் நடந்தது. இவை தவிர வேறு சில கம்பெனிகளிலும் சிறியளவில் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகத் தான் மாருதியில் நடந்த தீ வைப்புச் சம்பவத்தைப் பார்க்க வேண்டும்”

“அரசு தரப்பில் இதற்கு விசாரணைகள் ஏதும் நடக்கவில்லையா?”

”தோழர்.. அரசு வேறு கார்ப்பரேட்டுகள் வேறா? நீங்க காங்கிரசு பாரதிய ஜனதாவைக் கூட விடுங்கள்… மாயாவதியை எடுத்துக் கொள்ளுங்கள். சமூக நீதி அரசியல் பேசியவர் தானே? கிராஸியான நிறுவனம் நோய்டாவில் அமைந்துள்ளது. நோய்டா உத்திரபிரதேசத்தில் வருகிறது. சம்பவம் நடந்த போது மாயாவதி தான் ஆட்சியில் இருந்தார். என்ன செய்தார் தெரியுமா? உடனடியாக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து உத்திரபிரதேச மாநில போலீசாரிடம் பன்னாட்டுக் கம்பெனிகளின் பாதுகாப்பை ஒப்படைத்தார். மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரியின் பொறுப்புகளை மாவட்ட போலீசு கமிசனரிடம் ஒப்படைத்தார். போலீசாரைக் கொண்டு துரித நடவடிக்கைக் குழு (Quick Reaction Team) ஒன்றை ஏற்படுத்தினார். முதலாளிகளுக்கு ஏதும் சிக்கல் என்றால், ஐந்து நிமிடத்தில் போலீசார் உதவிக்குச் செல்ல வேண்டுமென விதிகளை ஏற்படுத்தினார். இப்படி மொத்த போலீசாரையும் முதலாளிகளின் அதிகாரப்பூர்வ குண்டர் படையாக்கினார்… தொழிற்சங்க உரிமைகள் அனைத்தும் போலீசின் பூட்ஸ் கால்களால் மிதித்து நசுக்கப்பட்டன.”

சுரண்டலுக்கு எதிராக சங்கமாகத் திரளும் தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கங்களைப் பதிவு செய்யக் கூட முடியவில்லை – ஏதேதோ உப்பு பெறாத காரணங்களை முன்வைத்து அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டன. மீறினால் தொழிலாளர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பது; அதையே முகாந்திரமாக கொண்டு தொழிற்சங்க உரிமைக் கோரிக்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பது என்ற வெற்றிகரமான சூத்திரத்தை முதலாளிகள் கையிலேந்திச் சுழற்றினர். இதற்கு அரசு, போலீசு மற்றும் நீதித் துறைகள் துணை நின்றன.

இவ்வாறான ஒரு நிகழ்ச்சிப் போக்கின் தொடர்ச்சியாகவே 2012-ம் வருடம் ஜூலை 18-ம் நாள் விடிந்தது. அன்றைய தினம் உண்மையில் நடந்தது என்ன? நெருப்பை மூட்டியது யார்? மாருதியின் மனேசர் ஆலையின் மனிதவளத் துறை மேலாளர் அவனீஷ்குமார் சிங் எப்படி இறந்தார்? தொழிலாளர்கள் ஏன் கிளர்ந்தெழுந்தனர்? வழக்கை எவ்வாறு தொழிலாளர்களுக்கு அநீதியான முறையில் அரசு தரப்பில் நடத்தினார்கள்?

(தொடரும்)

  • வினவு செய்தியாளர் குழு.

மிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்

0

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 7

காஞ்சிபுரம் மாவட்டம் என்றாலே பட்டு நெசவு, பாலாற்று விவசாயம் என்பதெல்லாம் இனி வெறும் கனவு மட்டுமே. ஆளும் அதிமுக குண்டர்களின்  ஆற்றுமணல் கொள்ளையால், குதறப்பட்டிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு ஒரு சான்றுதான் தற்போது எச்சில் சாராய பாட்டில் கழுவும் நிலை. கிரிமினல் சசிகலாவின் மிடாசு சாராய கம்பெனிக்கு தேவையான பழைய பாட்டில் கழுவும் தொழில்தான் இப்போது இங்கு வளர்ந்து வருகிறது. காஞ்சிபுரம் – சென்னை ஆறுவழி நெடுஞ்சாலையில் உருவாகியிருக்கும் புதிய பட்டறைத் தொழில் இது.

காஞ்சிபுரம்-கருக்குப்பேட்டை வட்டாரத்தில்,  எச்சில் பாட்டில் கழுவும் கம்பெனிகள் பல குவிந்துள்ளன. கம்பெனி என்றால் அஸ்பெட்டாஸ் அல்லது ஓலையால் வேயப்பட்ட மாட்டுக் கொட்டகை. 10-க்கு 10-அடி அளவுள்ள 10-க்கும் மேற்பட்ட கழிவுத்தொட்டிகள் அடங்கிய கொட்டாய்கள்தான் கம்பனிகள். குப்பையிலிருந்தும் டாஸ்மார்க் பாரிலிருந்தும், காயலான் கடையிலிருந்தும் பொறுக்கபட்ட பழைய எச்சில் பாட்டில் மூட்டைகள்தான்,கச்சாப்பொருட்கள்போல் லோடு லோடாக கம்பெனிக்கு வரும்.

அச்சு அசலாக புதிய பாட்டில் போல் கழுவி மிடாசுக்கு அனுப்புவதுதான் இந்த கம்பெனிகளின் வேலை.
மூட்டைகளில் வந்த பாட்டில்களை ஓட்டை ஒடைசலை நீக்கி, 13க்கு மேற்பட்ட பிராண்டுகளின் வகைகளை பிரிக்க வேண்டும். பிறகு,பாட்டில்களின் வாய்புறத்தில் சுற்றியுள்ள பழையமூடியின் ரிங்கை (வளையம்) கோணி ஊசியால்  கழற்றி எடுக்கிறார்கள்.

கையை அரித்துத்தின்னும்  தண்ணிக்குள் 8 மணிநேரம்,  42 கிரேடு பாட்டில்களை கழுவினால்தான் 150 ரூபாய் சம்பளம்.

இப்படி,ஒரு கிரேடுக்கு 42 பாட்டில் பிரிக்கப்பட்டு, ஒரு தொட்டியில் ஒருமுறை 42 கிரேடு பாட்டில்கள் கொட்டப்படுகிறது. ஆசிட், சோப் ஆயில் ஊற்றப்பட்ட தொட்டியில் பாட்டிலில் ஒட்டியிருக்கும் பழைய லேபிளை விரலால் சுரண்டி எடுக்கவேண்டும். ”லேபில் கறை, பழைய பாட்டிலிலிந்து சீக்கிரம் போகவேபோகாது” என்று,நொந்து சொல்கின்றனர்,தொழிலாளர்கள். சுத்தமாக கழுவுவதற்கு அடுத்தடுத்த, மூன்று தொட்டிக்கு மாற்றப்பட்டு பளிச்சென ‘எலைட்’ பாட்டில்களாக உருவமாற்றம் அடைகிறது எச்சில் பாட்டில்கள்.

தகரம், பாத்திரமாய் மாறுவதற்க்கு நிகரான உழைப்பு இது. கையை அரித்துத்தின்னும்  தண்ணிக்குள் 8 மணிநேரம்,  42 கிரேடு பாட்டில்களை கழுவினால்தான் 150 ரூபாய் சம்பளம். ஆசிட் தண்ணீர் மேலே படாமல் இருக்க, எச்சில் பாட்டில் வரும் மூட்டைக்கோணிகளையே  உடம்பில் கவசமாக சுற்றிக் கொள்கிறார்கள்,பெண்கள். தொட்டி எட்டாத சிறுவர்கள், காலி கிரேடை காலுக்கு கீழேப்போட்டுக்கொள்கிறார்கள்.

“ஆசிட்டு தண்ணியில் தொடர்ந்து நிற்பதால், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் வரும், இதற்கு, லீவு போட்டால் சம்பளம் கட்டாகும் என்ன செய்வது?” என்று பெருமூச்சுவிடுகிறார்கள்.

பவானி, வயது 55.

பாட்டில் கழுவுறது என்னுடைய வேலை கிடையாது. பட்டு தறி நெய்யறதுதான் சொந்த தொழில். பட்டு தறி அழிஞ்சிப்போச்சி, வீட்டுக்காரு பெயிண்ட் அடிக்கற வேலை, கல்யாண சமையல் வேலைன்னு போவாரு… மாசம் புல்லா வேலை இருக்காது. பெரிய பையனுக்கு வயசு 30 ஆவுது.. அவனுக்கு வலிப்பு நோய் இருக்கு… எங்கயும் தனியா விட முடியாது. மனநலம் பாதிச்ச மாதிரி இருப்பான்.. அவனுக்கு எல்லா வேலைகளையும் நான்தான் செய்யணும். கவர்மெண்ட்ல உதவிக்கு வருஷக்கணக்கா அலைஞ்சதுதான் மிஞ்சம்.. எவனும் சரியான பதில் சொல்லறதுல்ல… செங்கல்பட்டு,மெட்ராஸ்னு தூக்கினு அலைஞ்சது முடியல… குழந்தையா இருந்தா பரவாயில்லை.. 30 வயசு பையன எப்படி தூக்க முடியும் சொல்லுங்க… இப்ப கடவுள்கிட்ட வேண்டிகிறது ஒண்ணுதான் நான், உயிரோட இருக்கும்போதே என் பிள்ளை போய்டணும்… நான் முதல்ல போய்ட்டா எம் புள்ள நாறிப்புடுவான்… அதை என்னால்  நெனச்சிக்கூட பார்க்கமுடியல…

ஒரு மூட்டை பாட்டில் மூடி எடுத்தா 7-ரூபா… கோணி ஊசிய வெச்சி கழற்றணும்… அடிக்கடி,கையில பாளமா பொளந்துக்கும்.. அன்னிக்கு வேலை போய்டும்.. ஒருமுறை உடைஞ்சிப்போன பாட்டில்மேல தவறி விழுந்துட்டேன்… உடம்பெல்லாம் பொத்துக்குனு புண்ணாயிடுச்சி.. தலைவிதி, எச்சப்பாட்டில துடைக்கற வேலைய செய்யறேன்.. எங்க வீட்டுக்காரும், நானும் உட்கார்ந்தமுனா, ஒரு வாரத்துல ஒரு சேலை அறுப்போம்.. தொழில் அழிஞ்சதாலே, பட்டு புடிச்ச கையில பாட்டில புடிச்சிட்டுருக்கேன்….

ஹேமலதா, 8-ம் வகுப்பு மாணவி

என்னைய போட்டோல்லாம் எடுத்து பேப்பர்ல போடாதீங்க.. எங்க டீச்சர் பார்த்தா திட்டும்..  வெள்ளேந்தியாக சிரித்தார். பாட்டில் கழுவுற வேலையெல்லாம் நாங்க செய்ய மாட்டோம்…  அக்காங்க, கழுவி வைச்சா… கேஸ்ல அடுக்கி… எண்ணி வைக்கற வேலைய செய்வோம்.லீவு வந்தா, வாரம் 50, 100 சம்பாதிப்போம். எங்கம்மாக்கிட்ட கொடுத்து எங்களுக்கு தேவையான பொருள வாங்கிக்குவோம். எங்கம்மாவும் பக்கத்துல கம்பெனியிலதான் பாட்டில் கழுவுது. எங்க கூட பத்தாவது படிச்சிட்டிருந்த கீதா அக்கா கூட எங்கம்மாக்கூட அங்க போகுது…

பாரதி, வயது 30

வீட்டுகாரரு ஆச்சாரி வேலை பாக்கறாரு… சம்பாதிக்கறத குடிச்சிட்டு வந்துடுவாரு….. பாட்டில கழுவிதான் குடும்பத்தை பாக்கணும் நான்… இந்த அழுக்கு பாட்டிலை நோண்டி, நோண்டி கழுவுனாதான் கூலி……கையும் காலும் ஆசிட் தண்ணிலய ஊறணும். டெய்லி இந்த தண்ணியிலத்தான் நான் நீச்சலடிக்க வேண்டி இருக்கு….. எதிருல நிக்கிற பிரியாவுக்கு இரண்டு வாரமா ஜூரம் இப்பத்தான் உடம்புத் தேறி வந்திருக்கா. அதோ,அந்த அக்கா கைய பாருங்க.. .. எந்த நேரமும் ஆசிட்டும், சோப்பாயிலும் கலந்த தண்ணியிலயே ஊறி உடம்பே செல்லரிச்சு போச்சு.. எவன்.. குடிக்காதனு சொன்னா கேட்கிறான்.. இந்த பாட்டில பாத்தவே நமக்கு… ஒப்ப மாட்டேனுது…. பல சமயம், பாட்டில்ல ஓணான், அரன, பாம்பு தவளை,,, னு பூச்சிங்க செத்துவரும்…  இந்த, பிரச.. வைச்சுதான் முடிஞ்சவரைக்கும் கழுவுவோம்.

எதுக்கு, ஒப்பாம.. இங்க வர்றோம்னா, இது குடும்ப செலவுக்கு தள்ளிக்கினுப் போய்டும். இன்னிக்கு கூலி வாங்கினா  காய்கறி சந்தையில கொழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்கு காய் ஆக்கிப் போட்டுடலாம்…

இங்கிருந்து, கழுவுற பாட்டிலெல்லாம், பெரிய பெரிய கம்பெனிகளுக்கு போகுதாம்…. 13 கம்பெனிப் பேரு சொல்லுவாங்க… பீரு, பிராந்தி, ஒயினு, விஸ்கி-னு  மெக்டோலு, வி.எஸ்.ஓ.பி, ராயல் சேலன்ஜ் னு என்னன்மோ சொல்றாங்க. இந்த இடத்திலேயே… சுத்தி, சுத்தி, எட்டு எடத்துல பாட்டில் கழுவுறாங்க…எங்க இருந்துதான் வருதோ மலை மாதிரி இவ்ளோ பாட்டில்கள்.

இந்த வேலையும் பத்தலை, ஏதோ எக்ஸ்ட்ரா கூலி கிடைக்கும்னுட்டு, லாரில லோடு ஏத்தற வேலையும் செய்வோம்.. அது,ஆம்பளங்க செய்ற வேலைனு சொல்லுவாங்க… . என்ன பண்றது…

இதுக்கூடப் பரவாயில்லை… வயசானவங்க எல்லாம் இங்க, குப்பையில எச்ச பாட்டில பொறுக்கற வேலைதான் செய்றாங்க… ரோட்டோரத்துல பாட்டில பொறுக்கிகினு போகும்போது லாரியில மாட்டி செத்த ஆயாவெல்லாம் இருக்காங்க… குடிகாரனுங்க பக்கத்துலபோய் பாத்துகினு, எப்ப குடிச்சி முடிப்பானுங்கனு காலி பாட்டில வாங்க நிப்பாங்க… அத பாக்கவே சகிக்காது… அதுக்கு இந்த பாட்டில கழுவுற வேலை எவ்ளோ பரவாயில்ல…

இளமதி, வயது 45

எனக்கு 2 ஆம்பிள பசங்க… படிக்கறானுங்க… வீட்டுக்காரு நூல் தறி நெய்றாறு… அவன்,குடிய கத்துக்கிட்டு குடியே கதின்னு ஆயிட்டான்… வீட்டுல இருக்கற எல்லாத்தையும் வெச்சி வாங்கி குடிக்கிறதே வேலை… பிள்ளைகளோட புக்கக்கூட வெச்சி குடிச்சிடுவான்… நான்  பாட்டில கழுவுனாத்தான் குடும்பம் நடத்தமுடியும்… அதில அவன் குடிக்கவும் பிடுங்கிடுவான். எப்ப வருவேன்னு காத்திருப்பான்.

ஆசிட்டால்-பொத்தலாகிப்போன-கை

என்னத்த சொல்ல, நாள் எல்லாம், எங்க வீட்டுக்காரு சாராய தண்ணீயில….. நான் இங்க எச்சில் பாட்டில கழுவுற அழுக்கு தண்ணியில….. இப்படியே வாழ்க்கைப்போயிட்டு இருக்கு…

இந்த வேலை, உடம்புக்கு ஒத்துக்கல… அடிக்கடி பல்வலி, ஜூரம்-னு பாடா படுத்தும்… சரி விட்டுட்டு தறி வேலைக்கே போயிடலாமுனு… புடவைக்கு பார்டர் வைக்கும், பார்டர் தறியும் நெஞ்சேன்…. கூலி சரியா தரல…. வேலையும் தொடர்ந்து தரல மறுபடியும் இங்க வந்துட்டேன்… இன்னும் எவ்ளோ நாள் செய்ய முடியுமுனு தெரியல… லீவு எல்லாம் எடுத்தா நமக்குத்தான் கஷ்டம்… வேலைக்கு வந்தா கூலி… இல்லைனா கிடையாது..  ஒரு வேளை டீ மட்டும் கொடுப்பாங்க.

சின்ன வயசுல  எங்கள எங்கம்மா, சாணித் தட்டி, சுள்ளிப்பொருக்கி இட்லி சுட்டு வித்து காப்பாத்துனாங்க…… இப்ப நான் எச்ச பாட்டில் கழுவி என் புள்ளைகள காப்பாத்துறேன், என்றார் விரக்தியாக.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு செய்தியாளர்

பகத்சிங் – புதிய சிந்தனையின் பிறப்பு

0

பகத்சிங் – புரட்சியின் புரிதல்!

கத்சிங் என்றால்
பலரையும் குறிக்கும்
பல தலைமுறைகள் சிலிர்க்கும்.

ராஜகுரு, சுகதேவ், ஆசாத்
பகவதிசரண், யதீந்திரதாஸ்
படுகேஷ்வர், யஷ்பால், துர்க்காதேவி
இன்னும்… இன்னும்…

இவைகள்
நாம் அழைப்பதற்கான பெயர்களல்ல
நம்மை அழைக்கின்ற பெயர்கள்.
உறங்கும் வேளையிலும்
நாட்டுப்பற்றை உறங்கவிடாமல்
நம்மை ஊடுருவும் கதிர்கள்.

காலனியாதிக்கத்திற்கு  எதிராக
கனன்றெழுந்த  அந்த நெருப்பு –  இன்று
மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக
உளத் தீயை மூட்டும்,
மறுகணமே புரட்சி வேண்டுமென
மனதைப்படுத்தி வாட்டும்!

புரட்சி எனில்
ஆயத்தமாய் இருக்கும் ஒன்றை
அடைந்து விடும் ஆசை அல்ல
அடுத்தடுத்து செய்ய வேண்டியதின்
செயலூக்கம்.

புரட்சியை விரும்புவதே பெரிதல்ல
புரட்சிகர நடைமுறைக்குப் பொருந்த வேண்டும்
அமைப்பில் இருப்பதே நிறைவல்ல
அரசியலின் இலக்கு நோக்கி
இயங்க வேண்டும்.

முக்கியமாய்
புரட்சியை புரிந்துகொள்ளும்
தெளிவு வேண்டும்.
உருவாக்கி வைத்திருக்கும் ஒன்றை
உள்ளம் நோகாமல்
தொட்டுக் கும்பிடும்
பக்தி பரவசமில்லை புரட்சி

உருவாக்க இருக்கும்
புதிய சமூக அமைப்புக்காக
தன்னிடமிருந்து
தடைகளைத்  தகர்க்கத் தொடங்கும்,
புற உலகின் இயக்கம் அறியும்
இயங்கியலின் செயல்துடிப்பு புரட்சி.

ஒவ்வொரு நொடியும்
புரட்சி நடக்கிறது
அதன் உயிர்துடிப்பாக
என் இதயம் இருக்கிறது.
எனும்  செய்முறையின்
அழகியல் பகத்சிங்.

புரட்சி எனும்
அடைமொழி வேண்டும்
புரட்சிகர நடைமுறையிலிருந்து
விலக்கு வேண்டும்,
என்ற போலித்தனத்தை
வேரோடு வெறுத்தவன் பகத்சிங்
ஒரு பக்கம்
பிரிட்டிஷ் கோட்டை
மறுபக்கம்
காந்தியின் ராட்டை.

வரன்முறையற்ற
பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக
மக்கள் கிளர்ந்த போதேல்லாம்
வன்முறை என சாடியது
மகாத்மாவின் அகிம்சை சாட்டை.

நன்முறை
புரட்சி ஒன்றே
நாட்டை மீட்கும் – என
தன்னையே
ஒரு புறநிலையாக்கி
தன் சாவையும்
மண்ணில் விதைத்தான்,
தூக்குக்கயிற்றில் துளிர்த்தான்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…
உயிரின் தேவையிலிருந்து
தங்களைப் பார்க்கவில்லை
உயிர்வாழும்   நோக்கத்தின் தேவையிலிருந்து
பார்த்தார்கள்.
ஒவ்வொரு தருணமும்
உழைக்கும் மக்களுக்காகவே
வியர்த்தார்கள்.

அது மரணமல்ல,
முடிந்த முடிவுமல்ல,
புதிய சிந்தனையின் பிறப்பு.
அடக்குமுறையாளர்களால்
ஆளும் வர்க்கத்தால்
ஒரு போதும் பகத்சிங்கை சாகடிக்கமுடியாது.

அவசர அவசரமாக தூக்கிலிட்டு
அறைகுறையாக வெட்டியெறிந்து
சட்லெஜ் நதியில் கரைத்தார்கள்
இதோ அவன்
மெரினா கரையில் துளிர்க்கிறான்…

அலகாபாத்
ஆல்பிரட் பூங்காவில்
வீரமரணம் எய்திய ஆசாத்தை
வெறிகொண்டு முடித்தார்கள்.
இதோ
அவன் நெடுவாசலில் வந்து  நிற்கிறான்.

நீங்களாக
திரும்பும் பகத்சிங்கை
எவனும்
நீங்கலாக  செய்ய முடியாது…

இந்த
அரசுக்கட்டமைப்பில்
இந்தியாவிற்கு ஏது விடுதலை?
முதலாளித்துவத்தை முடிக்காமல்
சோசலிசம் படைக்காமல்…
உழைக்கும் இந்தியா ஒளிராது
என்றான் பகத்சிங்.

வாடி வாசல் தொடங்கி
மோடி வாசல் வரை
மோதுகிறது அந்தக் குரல்!

புரிதலுக்கும்
புத்துயிர்ப்புக்கும்
பொருந்தாதது சமஸ்கிருதம்
என,
புறந்தள்ளினான் பகத்சிங்.
திருந்தாத ஜென்மங்கள்
மீண்டும் திணிக்கையில்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பவும் பிறக்கிறான்
ஆயிரம் பகத்சிங்!

மத உணர்வை
வர்க்க உணர்வால் வெல்வோம்!
என்ற பகத்சிங்கின் குரலை
பஞ்சாபிலேயே புதைத்துவிட்டோம்
என இறுமாந்திருந்த
இந்து பாசிசம்,
பெரியார் பிறந்த மண்ணில்
பேச்சுக் குரல் கேட்க
மீண்டும் பகத்சிங் பயத்தில்
‘பயங்கரவாதிகள், நக்சல்பாரிகள்’ என
பாராயணத்தில் உதற ஆரம்பித்துவிட்டது.

செத்தவனை அல்லவா?
புதைக்க முடியும்?
செய்யும் நற்‍செயல் ஒவ்வொன்றிலும்
நக் ‘செல்லாய்’ பிறக்கும்
பகத்சிங்கை பார்த்து
ஆளும்வர்க்கம்
பதைக்கத்தான் முடியும்!

மறைவில்லை பகத்சிங்…
காலத்தின் தேவையறிந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…

தேவையின் செயல் புரிந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…
செயலின் தொடர்ச்சியில் இணைந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…

அந்தத் தொடர்ச்சியின் மகிழ்ச்சியை உணர்ந்தால்
அங்கே…       அனைவரும் பகத்சிங்!

 – துரை. சண்முகம்.


மார்ச் 23 பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்
ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பி. கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்!
அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்!

பென்னாகரம் பேருந்து நிலையம்
தெருமுனைக்கூட்டம்

என்ற முழக்கத்தை முன்வைத்து பென்னாகரம், தருமபுரி, சுற்றுவட்ட பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக பள்ளி, கல்லூரி, கிராமங்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறுதியாக மார்ச் 23 அன்று காலை 8 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையத்திலும், மாலை 5 மணிக்கு தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலும் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் அன்பு பேசுகையில் ஏன் பகத்சிங் பாதையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும், அன்று ஒரு பிரிட்டிஷ்காரனிடம் நாடு அடிமையாக இருந்தது, ஆனால் இன்று ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கையில் நாடு அடிமைப்படுத்தப்படுகிறது நம்முடைய இயற்க்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது மேலும் கல்வியில் சமஸ்கிருதம், நீட் தேர்வு என மாணவர்களின் கல்வி உரிமைகளை மறுக்கும் மோடியின் திட்டத்தையும் அம்பலபடுத்தினார். இதனை முறியடிக்க புரட்சிகர அமைப்பில் மாணவர்கள் இணைய வோண்டும் என அறைகூவல் விடுத்தார்.

அடுத்து பேசிய பு.மா.இ.மு. தோழர் மலர்கொடி பேசுகையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறையும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது இயற்க்கை வளங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இந்த அரசு மக்களை பாதுகாக்காது எனவே இயற்க்கையை பாதுகாக்க மக்களே அதிகாராத்தை கையிலெடுத்து போராடுவதுதான் ஒரே தீர்வு என விளக்கினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தருமபுரி, தொடர்புக்கு: 81480 55539


மார்ச்- 23 பகத்சிங், சுகதேவ், இராஜகுரு நினைவு நாளையொட்டி ஓசூர் கொத்த கொண்டப்பள்ளியில் “ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான தளமாக தமிழகத்தை மாற்றுவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் 23.03.2017 அன்று விளக்கக்கூட்டத்தை நடத்தினர்.

தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார்.  இன்றைய தினத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள் என்று பலரும் இந்த அரசமைப்பினால் அதன் கொள்கையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுகளின் கைத்தடியாக அடியாளாக பிரதமர் மோடி செய்துவரும் செயல்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவில் மணிப்பூர், கோவா இரு மாநிலங்களில் பா.ஜ.க-வின் அணுகுமுறை ஜனநாயகத்தின் வழியாகவே பாசிச சர்வாதிகாரத்தை நிறுவமுடியும் என்பதை காட்டி விட்டது.

இதன் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் , சிறந்த அரசியல் சாசனம், சட்டம் என்று இனி யாரும் பேசினால் அவர்கள் அம்பலப்பட்டே போவார்கள் என்பதையும் எச்சரிக்கையாக சொல்லி தற்போது பார்ப்பன பாசிசத்திற்கு சவாலாக இருந்துவரும் தமிழகத்தை அழிக்கும் வகையில் மோடியின் காட்டாட்சி  விகாரமாக உள்ளது. இதனை மக்களுக்கு உணர்த்தி அணிதிரட்டி இவர்களை மோதி வீழ்த்துவது ஒன்றுதான் தீர்வு அந்தவகையில் நாம் அணிதிரளவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். இதில் பள்ளி சிறார்கள், பெண்கள், இவ்வமைப்பின் முன்னணித் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

அடுத்து, மறுநாள் 24.03.2017 மாலை 6 மணியளவில் பாகலூர் சர்க்கில் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனைக்கூட்டத்தில் இவ்வமைச் சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். தோழர் இராணி நெடுவாசல் பிரச்சனையில் போலீசின் நடவடிக்கை மற்றும் பி.ஜே.பி பிரமுகர்களான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் தமிழிசை போன்றோர்களின் நயவஞ்சக அறிக்கைகளை அம்பலப்ப்டுத்திப்பேசினார்.

தோழர் இரவிச்சந்திரன் தனது சிறப்புரையில் பகத்சிங் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தன்னுடைய இளம் வயதில் வீரம்செறிந்த அளவில் போராடிய வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை எடுத்துரைத்து இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் பகத்சிங்குகளாக மாறவேண்டிய அவசியத்தை உணர்த்திப்பேசினார். பாகலூர் பிரிமியர் மில் ஆலைநிர்வாகம், ஏ.பி.எல் நிர்வாகம் ஆகியவற்றினால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு நாடோடிகளாக திரியும் அவலத்தை விளக்கிப்பேசியதோடு அல்லாமல் நாடு முழுவதும் இந்த நிலமைதான் உள்ளது. பாசிச ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியின் காட்டாட்சியில் இந்த நிலமை பன்மடங்கு முற்றி, முடைநாற்றம் வீசுவதை இனியும் நாம் பொறுத்துக்கொள்ளமுடியாது. வீதியில் இறங்கி இந்த பாசிஸ்டுகளை அவர்களின் திட்டத்தை அம்பலப்படுத்தி மோதி வீழ்த்த முன்வரவேண்டும் என்று அறைகூவி அழைத்துப்பேசினார். திரளான மக்கள் இறுதிவரை நிகழ்ச்சியை கேட்டுச்சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


மாருதி தொழிலாளர்கள் 13 பேருக்கு வாழ்நாள் தண்டனை !


கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாட்களே பேலீசும், நீதிமன்றமும் !

  • தினந்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் !
  • மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடுவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784

சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்

0

“புவியியல் ரீதியில் கனிமவளம் மிகுந்த பகுதி இது தோழர். சேலம் இரும்பாலையை தனியார்மயப்படுத்துவதை வெறும் ஒரு அரசுப் பொதுத்துறை ஆலையோட பிரச்சினையாவோ, அங்கே வேலை செய்கிற தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினையாவோ பார்ப்பது சரியில்லை. அரசு கிட்டே ஒருங்கிணைத்த ஒரு திட்டம் இருக்கு. அது இந்த பூமிக்கு கீழே புதைந்து கிடக்கும் வளங்களை மொத்தமாக அள்ளி தனியார் முதலாளிகள் கிட்ட கொடுக்கிறது. அவன் அந்த வளங்களை வெட்டி எடுக்கிறது ஒரு புவியியல் பேரழிவையே உண்டாக்கப் போகிறான்” என்றார் சுரேஷ் குமார். சேலம் இரும்பாலையில் செயல்படும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார் சுரேஷ்.

“பூமிக்குக் கீழே உள்ள வளங்களை வெட்டியெடுப்பதால் எப்படியும் இயற்கையின் சமநிலை குலையத்தான் போகுது.. அதை அரசே செய்தாலும் அது தானே நிலைமை?”

சேலம் இரும்பாலை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுரேஷ் குமார்.

“உண்மை தான். ஆனால், அரசு செய்யும் போது அந்த நடவடிக்கையின் மேல் ஒரு கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருக்கும். தனியார் முதலாளிகளுக்கு லாபமே பிரதான நோக்கம் என்பதோடு அவனுக்கு  மண்ணின் மீதோ அங்கே வசிக்கும் மக்களின் மீதோ எந்தவொரு பிடிப்பும் கிடையாதே? இதே அரசாங்கம் செய்யும் போது வரம்பு மீறிப் போகும் நிலையில் தேர்தல் வெற்றி, அதிகாரம்னு குறைந்தபட்சம் சுயநல நோக்கோடவாவது ஒரு கட்டுப்பாடு இருக்கும் இல்லையா?”

“இந்த பகுதியில் எந்த மாதிரியான கனிமங்கள் கிடைக்கின்றன?”

“ஒரு விசயம் புரிந்து கொள்ளுங்கள் தோழர்… இந்தியாவில் பூமிக்குக் கீழே என்ன இருக்கு என்பதைப் பற்றி முழுமையான ஆய்வோ, தரவுகளோ அரசாங்கத்து கிட்டயே இல்லை. இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கனிம வளங்கள் ஒரு பத்து சதவீதம் தான் இருக்கும். வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த வரைபடங்களே இப்ப வரைக்கும் வழிகாட்டியா இருக்கு… சேலம் பகுதியை எடுத்துக்கிட்டீங்கன்னாக்க… இங்கே இரும்புத் தாது இருக்கு அப்புறம் பாக்சைட், மேக்னசைட், புளூ மெட்டேல் எல்லாம் இருக்கிறதா கண்டு பிடிச்சிருக்காங்க…”

மேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகள் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் என தமிழ்நாட்டை புவியியல் ரீதியில் இரண்டு பகுதிகளாகப் பிரித்த வெள்ளை ஆட்சியாளர்கள், இதில் மேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகளாக தர்மபுரி, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலூர், மதுரை வடக்கு மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை இனம் பிரித்தனர். மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாக அறியப்பட்ட சேலம் தர்மபுரி மாவட்டங்களை பாரோமகால் பகுதியாக ஆங்கிலேயர்கள் இனங்கண்டனர்.

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பிரதேசங்களின் கனிம வளங்களை அறிந்து கொண்ட ஸ்டெர்லைட், ஜிண்டால் போன்ற பெரும் முதலாளிகள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இப்பகுதியில் சிறிதும் பெரிதுமாக இயங்கி வருகின்றனர். எனினும், சேலத்துக்குக் கீழே புதைந்து கிடக்கும் இரும்புத் தாது இன்னமும் வெட்டியெடுக்கப்படாமல் உள்ளது.

“இந்தப் பகுதியில் உள்ள இரும்புத் தாதுவை வெட்டி அந்த மூலப் பொருளில் இருந்தே சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்திருக்கலாமே? ஏன் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை?”

“சேலம் இரும்பாலையானது மறிநிலை ஒருங்கிணைவு (Reverse integration) முறையில் துவங்கப்பட்டது. அதாவது உருகிய இரும்புக் கூழை இரும்புப் பாளங்களாக்கி வெப்ப உருட்டாலை, குளிர் உருட்டாலைகளில் ப்ராசஸ் செய்து அதன் இறுதி வடிவத்துக்கு கொண்டு வருவார்கள். இந்த செயல்முறையில் பின் பகுதியில் வரும் யுனிட்டுகள் முதலிலும், முன் பகுதியில் வரும் யுனிட்டுகள் பிற்காலத்திலும் துவங்கப்பட்டன. இங்கேயே தாதுவை அகழ்வாய்வு செய்வதெல்லாம் நீண்டகால திட்டங்கள். ஆனால், மொத்தமாக அனைத்தையும் தனியார் முதலைகளின் கையில் ஒப்படைக்கும் திட்டத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் சுரேஷ் குமார்.

“இரும்பாலை நட்டத்தில் இயங்குவதைப் பற்றி ஊடகங்களில் வந்துள்ள செய்திக்கட்டுரைகளில், இதன் வணிகப் பிரிவு கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதையும் அரசின் ஆர்டர்கள் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன…” என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

“அந்தக் காரணங்கள் உண்மை தான் என்றாலும் அவை மட்டுமே முழு உண்மைகள் அல்ல” என்றார்..

“வேறு காரணங்களைக் கொஞ்சம் விளக்க முடியுமா?”

“முதலில், இரும்பாலைக்கென கையகப்படுத்தப்பட்ட நிலம் பெருவாரியாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றது. இதில் ஒரு ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா – அதாவது அரசின் கட்டுப்பாட்டில் ஸ்டீல் பொருட்களை தயாரிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம். இன்று வரை அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அப்படியான தொழிற்பூங்கா இருந்திருந்தால், எங்களிடம் மூலப்பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக எடுத்துச் செல்லும் செலவும் குறையும், இங்கே வேலை வாய்புகளும் பெருகும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்…

“அடுத்து, குறைந்தபட்ச இறக்குமதி விலைக் கொள்கை சரியாக பின்பற்றப்படாத காரணத்தால் எங்களை விட குறைந்த விலைக்கு இரும்பு இறக்குமதி செய்யப்படுகிறது – குறிப்பாக சீனாவில் இருந்து. மேலும் வியாபாரப் போட்டிகளை முறைப்படுத்தும் கமிசனின் (Competitive commision of India) விதிகள் ஒன்று முடமாக்கப்பட்டன, அல்லது ஓரளவுக்கு காகிதத்தில் உள்ள விதிகளையும் கூட அமல்படுத்தவில்லை”

“மேலும் 2000-மாவது ஆண்டில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கான நிதியை வங்கிகளில் கடன் வாங்கியே ஒதுக்கினர். சேலம் இரும்பாலை இந்தியாவின் மகாரத்தினங்களில் ஒன்று என்பதுடன், தனது லாபத்தைக் கையாளும் உரிமையும் அதற்கு உள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த ஆலையின் மூலம் ஈட்டப்பட்ட பலநூறு கோடி லாபம் அரசிடம் அப்படியே இருந்த நிலையில் விரிவாக்கப் பணிகளுக்கு வங்கியில் வாங்கிய 2000 கோடி கடனுக்கான வட்டியையும் நாங்கள் முறையாக கட்டி வருகிறோம். நல்லா கவனிங்க.. மல்லையா, அம்பானி, அதானி மாதிரி பெரிய முதலாளிகள் வங்கிகள்ல கடன் வாங்கிட்டு நாமம் போட்டுட்டு போறான். நாங்க முறையா வட்டி கட்டிட்டு வர்றோம். இதனால் கடந்த ஆண்டுகளில் லாபம் குறைந்தது. இப்ப அதையே காரணமா வைத்து தனியார்மயமாக்க பார்க்கறாங்க…”

“உண்மையில் இப்போது நடப்புக் காலாண்டில் மீண்டும் லாபமீட்டத் துவங்கியிருக்கிறோம். அடுத்து ஓரிரு ஆண்டு இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை பழையபடி வலுப்பெற்றுவிடும். இவ்வாறு நாங்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் தான் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை மீண்டும் தூசிதட்டியெடுத்து துரிதப்படுத்துகின்றனர்” என்றார்.

சேலம் இரும்பாலையைக் கபளீகரம் செய்ய தனியார் முதலாளிகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆலையுடன் அதனுடன் இணைந்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தொழில்நுட்ப அறிவில் தலைசிறந்து விளங்கும் தொழிலாளர்களையும் அபகரித்துக் கொள்வது; சேலத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் இரும்புத் தாதுவை சுரண்டும் போது சேலம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்ள ஆலையும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. வளங்களைக் கொள்ளையிடும் இடத்திலேயே அதைக் கொண்டு தொழில் செய்யும் வசதியும் இருக்க வேண்டுமென்பதற்காகவே மத்திய அரசின் துணையுடன் சேலம் இரும்பாலையைக் குறிவைத்துள்ளனர்.

மிகுந்த தனிச்சிறப்புடனும் உயர்மதிப்புடனும் குறிப்பிடப்படும் ஆலைத் தொழிலாளர்களின் தொழில்நுட்ப அறிவு குறித்து ஓய்வு பெற்ற தொழிலாளி திரு மாதவனிடம் பேசினோம்.

விஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது

“இங்கே உள்ள காயில் வெட்டும் இயந்திரத்தை நாங்கள் மறுவடிவமைப்பு செய்து அதைக் கொண்டே வைண்டிங் செய்தோம்.. இயந்திரத்தை எங்களுக்கு சப்ளை செய்த ஜெர்மன் நிறுவனத்தின் பொறியாளர்களே அசந்து போனார்கள்” என்றார் மாதவன். இவர் சிறந்த தொழிலாளிக்கான மத்திய அரசின் விஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது பெற்றவர்.

“இதே போல் வேறு என்ன மாதிரியான புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறீர்கள்?”

“எத்தனையோ சொல்லலாம் சார்… பிளாங்கிங் லைனில் உள்ள இயந்திரங்களை மறுவடிவமைப்பு செய்து அதில் இருந்து வெளியேறும் கழிவுகளின் அளவைக் குறைத்திருக்கிறோம். இங்கே உள்ள தகடுகள் வெட்டும் இயந்திரம் அதிகபட்சம் 4 மீட்டர் தகடுகளைத் தான் வெட்டும்; அதை மறுவடிவமைப்பு செய்து 6.2 மீட்டர் தகடுகள் வெட்டும்படி செய்திருக்கிறோம். அப்புறம் சிலிட்டிங் லைனில் ஒரு சிப்டுக்கு அதிகபட்சம் 10 டன்கள் தான் கையாள முடியும். நாங்கள் அதில் சில தொழில்நுட்ப மறுவடிவமைப்பு செய்தோம்.. இன்று அதே லைனில் ஒரு சிப்டுக்கு 200 டன்கள் கையாளப்படுகின்றது”

“பொதுவா அரசுத் துறை, பொதுத்துறை அப்படின்னா வேலை செய்யாத சோம்பேறிகள் தான் இருப்பாங்கன்னு வெளியே ஒரு கருத்து..”

இது எங்கள் தொழிற்சாலை –  உழைப்பின் பெருமிதத்துடன் சொல்லும் முன்னாள் ஊழியர் மாதவன்

“யார் சார் சொன்னது..? இது எங்களோட ஆலை. உள்ளே போயி கேட்டுப் பாருங்க; ஒரு தொழிலாளியாவது சோம்பேறியா உட்கார்ந்து இருக்க மாட்டான். லேட்டா வர்றது, சீக்கிரம் போறது எல்லாம் இங்கே கிடையாதுங்க. தோ பக்கத்து வீட்டுக்காரன், என்னோட நண்பன் தான். சிப்டு நேரம் தாண்டி வேலை செய்துட்டு வந்து படுத்திருக்கான்..”

தொழிலாளர்களின் முன்முயற்சிகளைக் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும், அதனால் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதையும் மாதவன் விவரித்தார்.

“சரிங்க.. தனியார் நிறுவனம் வந்தாலும் இது தானே நடக்கப் போகுது?”

“இல்லை சார்.. இப்பவே நிறைய ஒப்பந்த தொழிலாளிகளை எடுக்கிறாங்க. அவங்களுக்கு இது தங்களோட நிறுவனம்ங்கற நினைப்பு இல்லை. எப்படி இருக்கும்? சம்பளமும் குறைவு, மற்ற வசதிகளும் இல்லை. இதே தனியார் முதலாளி வந்தாச்சின்னா அவன் லாபத்துக்காக இஸ்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளிகளை எடுத்துப் போடுவான்… தொழிலாளிக்கு எப்படி நிறுவனத்து மேல் ஒரு பிடிப்பு வரும்? ஏதோ வந்தமா வாங்குற சம்பளத்துக்கு ஒப்பேத்திட்டுப் போனமான்னு தானே இருப்பான்?”

எனினும், மத்திய அரசு சேலம் இரும்பாலையைத் தனியார் முதலாளிகளுக்கு சல்லிசான விலையில் தள்ளி விடுவதில் குறியாக இருப்பதை தொழிலாளர்கள் சிலரிடம் பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த சில ஆண்டுகளும் சுமார் 450 நிரந்தரத் தொழிலாளிகள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. ஆட்பற்றாக்குறை நிலவும் நிலையிலும் தொழிலாளர்கள் உற்பத்தியைக் குறையவிடாமல் பார்த்து வருகின்றனர்.

ஆனாலும் நீண்ட நாட்களுக்கு இந்த நிலை தொடர முடியாது என்பதை பலரும் வெளிப்படுத்தும் சலிப்பான வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடிந்தது.

ராஜேந்திரன் தனது காது கேளாத தனது குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்..

“சார் பையனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிப் பார்த்தேன்.. ஆனாலும், லீவு கொடுக்கலைங்க.. நேத்து ரெண்டாவது சிப்டு முடிச்சிட்டு அப்படியே காலைல பையன ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போயிட்டு தூங்காம ஓடியாறேன்” என்றார்.

“இந்த ஆலையில் புதிதாக ஊழியர்கள் எவரையுமே சேர்த்துக் கொள்வதில்லையா?”

“ஏன் சேர்க்காம? ஏகப்பட்ட மேனேஜர்களை எடுத்து வச்சிருக்கான். கணக்குப் போட்டுப் பார்த்தா நாலு தொழிலாளிக்கு ஒரு மேனேஜர்னு வருது. பல பேருக்கு என்ன பதவி கொடுக்கிறதுன்னு கூட தெரியாம புதுசா பதவிகளை உருவாக்கறாங்க.. இப்ப கூட புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்கார்… Employee pool manager அப்படின்னு ஒரு பதவி. அவருக்கெல்லாம் எந்த வேலையும் கிடையாதுங்க. சும்மா வருவாரு போவாரு. நல்ல வசதியான அப்பார்ட்மெண்டு ஏகப்பட்ட சலுகைகள். 40 வகையான அலவன்ஸ் (சலுகைகள்)  கொடுக்கிறாங்க சார். சொன்னா  சிரிப்பீங்க.. ஜன்னல் திரைச்சீலைகள் மாத்துறதுக்கு கூட அலவன்ஸ் குடுக்குறாங்க..” என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஆலை தனியார்மயமாவதை தடுக்கப் போராடிவரும் தொழிலாளிகள் ( கோப்புப் படம் )

“ஒரு அதிகாரிக்கு குடுக்கும் சம்பளத்தில் பத்து தொழிலாளிகளை எடுக்கலாம்… ஆனா செய்ய மாட்டானுக. எப்படியாவது இந்த  ஃபாக்டரி நட்டத்துல போகுதுன்னு கணக்கு காட்டி தனியார்ட்ட குடுத்துடலாம்னு பார்க்கறாங்க. நாங்களும் விடாம உழைச்சிட்டு இருக்கோம். ஓட்ட வாளில தண்ணி அள்ற மாதிரி. சரிங்க, லேட் ஆயிடிச்சி… போகனும்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

தனியார்மயமாக்கள் நடவடிக்கை தொழிலாளர்களைத் தட்டியெழுப்பியுள்ளது. தொடர்ச்சியான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இன்று வரை அந்தப் போராட்டங்களும் எதிர்ப்பியக்கங்களும் ஒரு ஆலை மற்றும் அதன் தொழிலாளர்கள் என்கிற வரம்புக்குள் தான் நிற்கின்றன. போராட்டங்கள் மக்கள் மயமாவதும் சேலம் இரும்பாலைத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக பகுதிமக்களைத் திரட்டுவதும், மக்கள் ஆதரவின் மேல் தங்களது போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே மோடி எனும் கார்ப்பரேட் கைக்கூலி அரசாங்கத்தை வீழ்த்த முடியும்.

கடினமான இரும்பை உருக்கி விரும்பும் வண்ணம் வளைத்துப் பழகிய தொழிலாளர்களின் முன் இருமாப்பில் தடித்துப் போன ஒரு அரசு இயந்திரம் மறுவார்ப்பு செய்யப்படுவதற்காக காத்துக்கிடக்கிறது.

-வினவு செய்தியாளர்

ஏர்டெல் வேலை சமத்துவத்தை தருமா ?

2
இணையத்தில் எடுக்கப்ப்ட்ட மாதிரிப் படம்.

ழகப்பன் ஏர்டெல் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்று சொன்ன போது மகிழ்ச்சியோடு வேலை பற்றிக் கேட்டேன். கொஞ்ச நேரத்திலேயே அந்த வேலை அவரை சுயமரியாதை இல்லாம நடத்தறதுக்கு உதவியா இருக்குன்னு வருத்தமாயிருந்தது.

அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்  ‘ஏர்டெல்’ டிஷ் ஆன்டனா பழுதானதால் நிறுவனத்துக்குப் புகார் கொடுத்துருந்தாங்க. கம்பெனியோட வட்டார அலுவலகம் பக்கத்து நகரத்தில் இருந்தது. புகார் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவனத்தின் ஊழியர் அழகப்பனைச் சர்வீஸ் செய்ய நிர்வாகம் அனுப்பியது. இதுல என்ன பிரச்சினைன்னு கேக்குறீங்களா?

டிவி ஆன்டனா பழுதானது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் வீட்டில். பழுது பார்க்க வந்த அழகப்பன் அதே ஊரைச் சேர்ந்த தலித் சாதியைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெருவுல வச்சு சோறு போடும் பாத்திரத்தையே மூணு முறை தண்ணி விட்டு தீட்ட கழிச்சு வீட்டுக்குள்ள எடுத்துட்டுப் போற பழக்கத்த இன்னும் கடைபிடிக்கும் இந்த ஊருல, வீட்டுக்குள்ள போய் டிவி ஆன்டனா ரிப்பேர் செய்றது எப்படி?

அழகப்பனுக்கு இதே ஊருல ஏற்கனவே இப்படி பழுது பார்த்த திகில் அனுபவம் உள்ளது. அது தந்த கசப்பான நினைவுகள் இருக்கும் போது மீண்டும் ஒரு பெருங்கசப்பைச் சந்திக்க அந்தத் தம்பி ரொம்பவே தயங்கிச்சு. சாதி தன் வேலைக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதை மேலதிகாரியிடம் சொல்ல முடியாது. பிறகு ஊருக்குள்ளதான் அதிகம் வேலை இருக்குன்னு ஆதிக்க சாதிக்காரரை வேலைக்கு போட்டுருவாங்க, வேலை போயிரும். இந்த வேலையும் போச்சுன்னா பெத்தவங்க போல கைகட்டி இவங்ககிட்ட  தான் வேல செய்யனும். பழசுக்குத் திரும்பி போறத விட புதுசுக்கு போராடி பார்க்க நினைக்கும் வயசுப்பசங்க மனசோட ஆனது ஆகட்டுமுன்னு முடிவுக்கு வந்தவர் நேராப் புகார் கொடுத்த வீட்டுக்குப் போய்விட்டார். ஆனால் வீட்டில் ஆள் இல்லை.

“நான் ஏர்டெல்லருந்து வந்திருக்கேன். உங்க டிஷ் ஆன்டனாவுல பிரச்சனைன்னு புகார் வந்துருக்கு. வீட்டுக்கு வந்து பார்த்தா ஆள் இல்லை. அதான் போன் பண்றேன். நாளைக்கு வரட்டுமா? இல்ல காத்திருக்கவா?” என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டார்.

“நான் வெளியூர்ல இருக்கேன். வீட்டுச் சன்னல் சட்டத்தில் சாவி இருக்கும் நீங்க எடுத்துக் கதவை திறந்து வேலையைப் பாருங்க. எங்க அம்மா வயலுக்குத்தான் போயிருப்பாங்க வந்துருவாங்க” என்ற பதிலை கேட்ட அழக்கப்பனுக்கு தலைசுற்றியது.

வீட்ல உள்ளவங்க நேரில பார்த்தா, தான் யார்ன்னு தெரிஞ்சுரும், வேலை செய்வதா வேண்டாமான்னு முடிவு தெரிஞ்சுரும் என்று நெனச்சவருக்கு இப்படி ஒரு சோதனை.

“அது சரிபடாதுங்க ஆள் இல்லாம கதவை திறந்து எப்படிங்க உள்ளே போறது?”

“நீங்க எடுத்துட்டு போற அளவுக்கு வீட்டுக்குள்ள ஒன்னுமில்லைங்க. உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் குடுக்க கூட வீட்டுல பணம் இருக்கோ இல்லியோ பயப்படாம வேலையப் பாருங்க.” என்றார் வீட்டுக்காரப் பையன்.

அழகப்பனுக்கு என்ன செய்றதுன்னு புரியல. போன்ல பேசர வீட்டுக்கார மனிதரை நேர்ல பாக்கும் போதும் பேசும் போதும் சாதி வித்தியாசம் காட்டாத மரியாதை அவர் பேச்சில் தெரியும். அது அவர் பார்க்கும் ஆசிரியர் வேலைக்கான அருகதையாய் கூட இருக்கலாம். அதை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது. வேலை நடக்க வேண்டுமே என்று வீட்டுக்குள் விடுவார்களே தவிர சாதியை விட்டு விடமாட்டார்கள் என்பது அழகப்பன் கணிப்பாக இருந்தது.

“விசயம் அது இல்லிங்க நான் யாருன்னு தெரியாம பேசறீங்க, நானு எஸ்சி தெருவைச் சேந்த அழகப்பன்.”

“அட நம்ம அழகப்பனா? ஆரம்பத்துலேயே சொல்லி இருக்கலாமே, எதுக்கு இவ்வளவு தயங்குற. உன்னோட வேலையத் தானே செய்ய வந்துருக்க நீ பாட்டுக்கு போயி வேலையப் பாரு. எந்த பிரச்சனையும் இல்ல.”

வேலைக்குச் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் ஊருக்குள் 20 வேலைகளுக்கு மேல் பார்க்க வேண்டி இருந்தது. முடிந்த அளவு தவிர்த்தது போக பார்த்த வேலைகளில் வீட்டுக்குள் விட யோசித்தவர்கள் தான் அதிகம். இவர் ஒருவர் தான் விதிவிலக்கு. சாதி வெறி புடிச்சு பேசற ஊருக்குள்ள அவர் படித்த படிப்பும் பார்க்கும் வேலையும் அவரை பண்புள்ளவரா மாத்திருக்கு” என்று ஆச்சரியத்துடன் சொன்னார் அழகப்பன்.

இப்படித்தான் ஊருக்குள் ஆதிக்க சாதி வீடுகளில் வேலை செய்ய வேண்டி வரும்போது அழகப்பன் மிகவும் பதட்டம் அடைகிறார். வீட்டுக்காரங்க அனுமதியோடு உள்ள போய் வேலை பார்க்கிறார். அவர்களும் இந்த வேலைக்கு வேறு வழி இல்லாமல் அனுமதிக்கிறாங்க. அதப்பாத்துட்டு இருக்க முடியல சிலருக்கு. காலம் காலமா உண்ட சோத்துக்கு திண்ண கங்குல நின்னவங்க இன்னைக்கி வீட்டுக்குள்ள வாராங்களே இனி என்ன நடக்குமோங்கற நடுக்கத்துல நெஞ்சுல ஈரம் இல்லாம இப்பவும் பேசத்தான் செய்றாங்க.

அழகப்பனும் அவர் கூட வேலை செய்யும் வேறு ஒரு இளைஞருமாக அதே ஊருக்குள்ள ஒரு வீட்டுக்கு டிஷ் ஆன்டனா பொருத்த போயுள்ளனர். வீட்டுக்காரருக்கு வந்தது யார் என்று தெரியும்.

“என்னப்பா நீ ஏர்டெல்ல தான் வேலை பாக்குறியா. பரவால்லையே நாங்க பாரு இன்னமும் வெட்டிகிட்டும் கொத்திகிட்டும் வயல் வேலை பாக்குறோம் நீ படிச்சு வேலைக்கு போற. நாடு முன்னேறிருச்சு. ஆள் அனுப்புறோம்னு சொன்னாங்க, நீதான் வருவேன்னு நெனைக்கல. பரவால்ல. ஹோம் தியேட்டர் வாங்கி இருக்கேன் அதையும் சேத்து பொருத்திக் குடுத்துட்டு போ” என்று கூறியுள்ளார்.

அழகப்பனோடு வந்தவருக்கு முதலில் புரியலேன்னாலும் அப்பால முழுக்க புரிஞ்சுக்கிட்டார்.

நடு வீட்டில் ஒயர், செட்டாப் பாக்ஸ், ஆண்டனா, ஸ்பீக்கர் எல்லாத்தையும் பரப்பி வைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க அழகப்பன் தொடங்கி இருக்கார். அதே தெருவைச் சேர்ந்த வேறு இரண்டு பேர் நடந்த வேலையைப் பார்த்துச் சென்றார்கள். மரத்தடியில் நின்ற வீட்டுக்கார பையனிடன் போய் “யார்ரா இது. சின்னக்கருப்பு மகனாடா இவன். நடு வீட்டுல உக்கார வச்சு என்னடா பன்னிட்டு இருக்கிங்க” என்று கேட்டுள்ளார்கள்.

“ஏர்டெல் கம்பனிலதான் வேலை பாக்குறானாம். கம்பனிலேருந்து வரச்சொல்லி இருக்காங்க. நானும் ஒரு மாசமா அலையிறேன். இந்த ஸ்பீக்கர மாட்டுவோமுன்னு ஒருத்தனும் கெடைக்கல அதான்” என்று இழுத்துள்ளார் ஏர்டெல்ல புகார் கொடுத்தவர்.

சாதிக் கொடுமை

“காலம் கெட்டுப் போச்சுடா அவங்கப்பன் காலத்துல மாட்டு கொட்டையில உட்காந்து சோறு சாப்புட அஞ்சுவான். இவன் ஏதோ பொண்ணக் கட்டுன மாப்பிளையாட்டம் நடு வீட்டுல உக்கார்ந்திருக்கான் பாரு. உங்களச் சொல்லி குத்தமில்ல எல்லாம் அந்த டிவி படுத்துற பாடு.”

அழகப்பனுக்கு காதுல விழுந்தாலும் அந்த வேலையைத் தொடர்ந்து பார்த்துள்ளார். போங்கடா உங்களுக்கு நான் வேலை பாக்க முடியாது என்று சொல்ல முடியாததற்கு காரணம் மேலதிகாரிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம். காதில் விழாத மாதிரி இருந்துள்ளார். இதையெல்லாம் பிரச்சினையாக்கினால் வேலையும் போய் விடும். கம்பெனியும் இனிமேல் இது மாதிரி ஊரில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைத்தான் போட வேண்டும் என்று முடிவு செய்து விடுவார்கள்.

கூட வந்த பையன் ஆண்டனா பொருத்திக் கொண்டு வீட்டுக்கு மேல இருந்துள்ளார். அவருக்கு காதுல விழுந்துருக்குமோ என்ற அச்சத்தோடும் அவமானத்தோடும் அழகப்பன் பதட்டத்துடன் இருந்தார்.

“இந்த அவமானத்துக்குப் பிறகு ஊருக்குள்ள வேலையின்னா பாக்க கூடாதுன்னுதான் நெனச்சேன். ஆனா இதை மேலதிகாரிகிட்ட சொல்லி வேலைக்கே ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு நெனச்சுதான் மீண்டும் இங்கன வந்து நிக்க வேண்டியதா போச்சு.”

“வெளியூருன்னா பிரச்சனை இல்லை நாம யாருன்னு தெரியாது போனமா வேலையை பாத்தமான்னு வந்துட்டே இருக்கலாம். இவனுங்ககிட்ட வேலை பாக்கறதுக்கு நாண்டுகிட்டுச் சாகலாம். ஊருக்குள்ள இந்த வேலைக்கி ஆள் கெடைக்காமயும் டிவி பாத்துப் பழக்கப்பட்டு போயி சும்மாருக்க முடியாமதான்  நம்மள வீட்டுக்குள்ள விட்றாய்ங்கென்னு தெரிஞ்சதும் கோபமாதான் இருந்துச்சு. என்னடா பொழப்பு இது, எதுக்கு இந்த கேடுகெட்ட சாதி வெறி புடிச்சவங்ககிட்ட வேலை பாக்கனுமுன்னு தோணும். ஆனா எதுத்து கேக்க முடியல.”

கக்கத்துல துண்ட வச்சுகிட்டு கூழ கும்புடு போட்டு பேசுனது. தவிச்ச வாயிக்கி கையில தண்ணிய வாங்கி குடிச்சது, பாத்திரமில்லாம பன ஓலையில கஞ்சி ஊத்துனது இது போல எத்தனையோ எங்கப்பங்கூட சின்னப் பிள்ளையா போனப்ப பாத்திருக்கேன். இப்புடியேப் பழகி பழகி அந்த நடுக்கத்துலேயே எனக்கும் வீட்டுக்குள்ள போறதுக்கு ஒடம்பு கூசுது.

ஊருக்குள்ள மரக்கா நெல்லுக்காக அறுப்புக்கு போனப்ப சாதிக்கு அடிபணிஞ்சு போற நிலமை இருந்ததையும், இதுலேருந்து விடுபட தட்டுத்தடுமாறி ஏதோ கொஞ்சம் படிச்சுட்டு வேலைக்கி போன பின்னும் அதே நிலைமை நீடிப்பதையும் அழகப்பன் பேச்சு உணர்த்தியது.

ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.

– சரசம்மா

(உண்மைச் சம்பவம், பெயர் – அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு ! – மதுரையில் கருத்தரங்கம்

0

பேராசிரியர் சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய் ! கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு !

நாள் : ஏப்ரல் 02, 2017, ஞாயிறு மாலை 4.30 மணி.
இடம் : வேலாயுத நாடார் திருமண மகால், கே.கே நகர், மதுரை.

தலைமை : சே. வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர். ம.உ.பா.மையம்
சிறப்புரை : வழக்கறிஞர் பாலன், பெங்களூரு
நன்றியுரை : ம.லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்டச் செயலர். ம.உ.பா.மையம்

அன்பார்ந்த நண்பர்களே…

கடந்த மார்ச் 7, 2017 அன்று பேராசிரியர் தோழர் சாய்பாபா உள்ளிட்ட அய்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகாராஷ்டிரா மாநில, கட்ஜ்ரோலி மாவட்ட நீதிமன்றம். மின்னணு, கணினி சாட்சியங்களை மட்டுமே வைத்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவியல் நீதிபரிபாலன முறை மீதான நம்பகத்தன்மையைத் தகர்த்திருக்கிறது. அரசின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோரை மிரட்டும் இத்தீர்ப்பு குறித்து நாடுதழுவிய விவாதமும்,எதிர்ப்பும் அவசியம். இல்லையேல் நாளை அணு உலை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீனவர் படுகொலை, கோக் எதிர்ப்பு எனப் போராடும் மக்கள் அனைவருக்கு எதிராகவும் இது போன்ற தீர்ப்புகள் விரிவாக்கப்படும். டாஸ்மாக்கை எதிர்த்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதையும், நீதித்துறை ஊழலை எதிர்த்ததற்காக 7 தமிழக வழக்கறிஞர்களுக்கு மின்னணு சாட்சியங்கள் அடிப்படையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருப்பதையும் நாம் மறக்கமுடியாது.

பேராசிரியர் சாய்பாபா யார்?

டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்த சாய்பாபா, அரசின் பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடி வந்தார். மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்ற இந்திய அரசு, அதற்குத் தடையாய் இருந்த பழங்குடி மக்களைக் காட்டைவிட்டு அகற்றும் நோக்குடன் மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்ற பெயரில் “காட்டு வேட்டை” என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது. துணை இராணுவப் படைகள் மூலம் 600 பழங்குடி கிராமங்களைக் கொளுத்தியது. 50,000 பழங்குடி மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏராளமானோர் கொல்லப்பட்டு, பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். அரசின் இந்த அநீதிகளை எதிர்த்து காந்தியவாதி ஹிமன்சு குமார் உள்ளிட்ட பலரும் களம் இறங்கினர். அதில் முன்னணியாய் இருந்தவர் சாய்பாபா. இவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கால் அரசின் அத்துமீறல்கள் அம்பலமாயின. தொடர் போராட்டங்களால் இன்றுவரை கனிம வளங்களை எடுக்கமுடியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே சாய்பாபா போலீசால் கடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 90% உடல் ஊனமுற்றவரான சாய்பாபா, சக்கர நாற்காலியில் மட்டுமே செல்ல முடிந்த மாற்றுத் திறனாளி. சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலையிலும், மக்களின் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அரியதொரு போராளி.

அரசு தரப்பு வழக்கு

“சாய்பாபா தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் அமைப்பான புரட்சிகர ஜனநாயக முன்னணியின் நிர்வாகி. அரசுக்கு எதிரான வெறுப்பை, வன்முறையைத் தூண்டும் நோக்கோடு பிரச்சாரம் செய்தார். மாவோயிஸ்டுகளின் புத்தகங்களை வைத்திருந்தார், கடிதம், இ-மெயில் தொடர்பும் இருந்தது. இதற்கு அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட சி.டி, மெமரி கார்டு, துண்டறிக்கைகள், பென் டிரைவ், லேப்டாப் ஆகியவை ஆதாரங்கள். மாவோயிஸ்டுகள் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள். எனவே சாய்பாபாவின் இந்த நடவடிக்கைகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்,1967 பிரிவுகள் 13,18,20,38,39-ன் கீழ் குற்றம்” -இவைதான் சாய்பாபாவுக்கு எதிராக அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள்.

விசாரணையும், சாட்சியமும்

வழக்கில் நேரடி சாட்சி யாரும் இல்லை. மாறாக, “சாய்பாபா வீட்டில் கைப்பற்றப்பட்ட சி.டி, பென் டிரைவ், லேப்டாப் ஆகியவை உண்மையானவை” என்று காட்டுவதற்கான சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டனர். விசாரிக்கப்பட்ட 23 சாட்சிகளில் 10 பேர் காவல்துறையினர்; 8 பேர் அரசு அதிகாரிகள்; 4 பேர் போலீசார் அழைத்துச் சென்ற மகஜர் சாட்சிகள்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில் மட்டும் தண்டனை தருவது சரியா?

சாய்பாபா வீட்டில் சோதனை செய்யும்போது அவர் வீட்டில் இல்லை. அரசு சாட்சிகள் 2,4,5,15-ன் படிசாய்பாபா வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது சாட்சிகளுக்குப் படித்துக் காட்டப்படவில்லை; கைப்பற்றப்பட்ட பொருட்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பாக்ஸ் நீதிமன்றத்தில் இல்லை; நீதிமன்றத்தில் உள்ள பாக்ஸை சாட்சி பார்த்ததில்லை; சீலும், கையெழுத்தும் இல்லை. சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்கள் தடயவியல் துறைக்குச் செல்லும் முன் போலீஸ் பாதுகாப்பில் பல நாட்கள் இருந்துள்ளன. 26.02.2014-ல் சர்ச் வாரண்ட் வாங்கி ஏழு மாதங்கள் கழித்து சோதனை நடத்தியுள்ளனர். இது தவிர சாய்பாபா வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் மாவோயிஸ்ட் கட்சித் தீர்மானங்கள் உள்ளிட்ட எவையும் ரகசிய ஆவணங்கள் அல்ல. அவற்றில் பலவும் மாவோயிஸ்டு கட்சியின் வெப்சைட்டில் உள்ளவை தான் என்பதை விசாரணை அதிகாரி குறுக்கு விசாரணையில் ஒத்துக் கொண்டுள்ளார். மேற்கண்ட சாட்சியத்தைப் படிக்கும் எவரும் டிஜிட்டல் ஆவணங்களைத் திருத்துவது, மாற்றுவது எளிது என்பதை ஏற்பார்கள்.

மாவோயிஸ்டு என்பதற்காக ஆயுள் தண்டனை விதிக்கலாமா?

ஒரு வாதத்திற்காக, சாய்பாபாவிற்கு மாவோயிஸ்ட்டுகளுடனான தொடர்பு நிரூபிக்கப்பட்டதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியுமா? தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருப்பதோ, அதை ஆதரிப்பதோ குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. மாவோயிஸ்டு என்பதற்காக மட்டும் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. சாய்பாபாவின் நடவடிக்கையால் குறிப்பிட்ட வன்முறை சம்பவம் நிகழ்ந்தது என்பது அரசு தரப்பு வழக்கே அல்ல. அவர் மாவோயிஸ்டுகளைக் கருத்து ரீதியாக ஆதரித்தார் என்பதற்காக, அதாவது, அவரது சிந்தனைக்காக ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம். உடல் ஊனமுற்றாலும் சிந்தனை ரீதியாக சாய்பாபா வலுவானவர் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி. மேலும் “மாவோயிஸ்டு அமைப்பு உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொல்லியுள்ளார். மாவோயிஸ்ட் அமைப்பு இன்று நகரத்திலும் வளர்ந்து வருகிறது.அதைத் தடுக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்ஜ்ரோலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததற்கு மாவோயிஸ்ட் அமைப்பே காரணம். எனவே சாய்பாபா உள்ளிட்டோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். சட்டப்படி ஆயுள் மட்டுமே விதிக்க முடியும் என்பதால், ஆயுள் தண்டனை விதிக்கிறேன்” என்கிறார் நீதிபதி. துப்பாக்கி எடுத்துச் சுடாததுதான் பாக்கி!

கொடூர UAPA சட்டம்

சாய்பாபா மீது புனையப்பட்ட வழக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழானது. இந்தக் கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.1967-லிருந்து இன்றுவரை “ஊபா” சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள்,மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊபா சட்டப்படி “நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரான செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றம். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு. இச்சட்டத்தில்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆஜரான மதுரை வழக்கறிஞர் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இயற்கை வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் மக்கள், மக்களை ஆதரிக்கும் அமைப்புகள், அறிவுத்துறையினர் ஆகியோரை குறிவைத்துப் பாய்கிறது ஊபா சட்டம். நேற்று பிநாயக் சென், இன்று சாய்பாபா எனத் தொடர்கிறது. பாசிசத்தின் கரங்கள் அரசைத் தாண்டி நீதிமன்றங்களை நோக்கி நீள்கின்றன!

எனவே, நாட்டை, மக்களை, ஜனநாயகத்தை, உரிமைகளை நேசிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் இது. இணைந்து சிந்திப்போம், விவாதிப்போம். சாய்பாபா விடுதலைக்குக் குரல் எழுப்புவோம் ! அநீதிகளுக்கு எதிரான போரை உறுதியுடன் தொடர்வோம் !

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 94434 71003

அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்

0

தாமிரபரணி மக்கள் சொத்து! அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு!!  என்ற முழக்கத்தை முன்வைத்து 24.03.17 மாலை  திருநெல்வேலியில் பாளை ஜவகர் திடலில் மக்கள் அதிகாரம் சார்பாக தாமிரபரணியை கோக்குக்கு தாரைவார்க்கும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் தோழர் ஆதி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சிவா, மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி தோழர் அரிராகவன், பொட்டல் கிராம இளைஞர் செல்வக்குமார், நாகர்கோவிலிலிருந்து வந்திருந்த வின்சாண்டோ (குமரி பாசனத்துறை) ஆகியோர் கண்டனங்களை பதிவு செய்தனர். மக்கள் அதிகாரம் சிவகங்கை தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து மாணவர்கள் – இளைஞர்களும், விவசாயிகளும் பெண்களும் கலந்துகொண்டனர். ஓட்டுக்கட்சிகள் காசு தந்தும், வண்டி அனுப்பியும் தான் கூட்டம் கூட்டுகின்றனர். ஆனால் மக்கள் அதிகாரம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உணர்வுபூர்மாக நிதியளித்தும், சொந்த செலவில் வந்து கலந்துகொண்டதையும் பார்த்த பலவேறு அமைப்பினர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தோழர் “எங்க உண்ணாவிரதத்துல ஒரு கான்ஸ்டபிள்தான் குச்சிய வெச்சிக்கிட்டு நின்னார். உங்க ஆர்ப்பாட்டத்துல இவ்வளவு போலீஸ்காரங்க குவிஞ்சிருக்கராங்களே! வஜ்ரா வண்டிய வேர கொண்டாந்திட்டான்” என்று ஆச்சர்யப்பட்டார்.

சீமைக்கருவேல மரம்தான் முதன்மையான பிரச்சினை என்று தண்ணீர் பிரச்சினையை திசைதிருப்பும் அரசை கண்டித்தும், காடுகளை அழிக்கும் கும்பல்களான எஸ்டேட் முதலாளிகள் முதல் சாமியார்கள் வரை அம்பலப்படுத்தியும், பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான தனியார்மயத்தை அம்பலப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர்கள் அம்பலப்படுத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் கெஞ்சுவதாலோ, நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாலோ பலனில்லை. தாமிரவருணியை உறிஞ்சிக்கொழுக்கும் கோக் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளை விரட்ட மெரினா போன்றதொரு எழுச்சியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை இளைஞர்களிடம் உருவாக்கினார்.

கல்லூரி மாணவர்கள் “தட்டிக்கு (பதாகை) எங்கிருந்த இந்தமாதிரி போட்டோவை பிடிக்கறீங்க. முழக்கமும் அருமை” என்று பாராட்டினர். பொட்டலைச் சேர்ந்த பெண்மணியோ “ஆசியாவிலேயே முதல்முறையா நம் நாட்லதான் பெக்டெல் நுழைஞ்சிருக்கான்னு, திருப்பூரப்பத்தி சொன்னீங்க! ஒவ்வொன்னும் புது செய்தியா இருந்துச்சு!” என்றார்.

நாம் தாமிரபரணியை பாதுகாக்க இந்த அரசை கெஞ்சிப்பயனில்லை! நாமே அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்! மெரினா எழுச்சியை நெல்லையில் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பதியவைத்துள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.

சொல்லிவைத்தாற்போல் எந்த ஒரு நாளிதழிலும் இந்த ஆர்ப்பாட்ட செய்தி வரவில்லை. “கலெக்டரே சொல்லிருப்பான். நம்மளையே ஏசுறானுங்க, ஒருத்தனும் செய்திபோடக்கூடாதுன்னு” என்று ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரே ஊடக தர்மத்தையும், அரசின் ஜனநாயகத்தையும் விமர்சித்தார்.

கிராமங்களில் நம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  சொன்னதைக்கேட்டு பலரும்  “என்னை விட்டுட்டு போயிட்டியே, இவ்வளவு நல்லா நடக்கும்னு தெரியல்லியே” என்று ஆதங்கப்பட்டுள்ளனர். “அடுத்து கூட்டம்னா நாங்க நிச்சயமா 100 பேர கூட்டியாருவோம்!” என்று சில ஊர்களில் மக்கள் நம்மிடம் கருத்து கூறினர்.  அடுத்தகட்ட போராட்டத்துக்கு மக்களை தயார்படுத்தும் ஆலோசனைகளை செய்துவருகிறது மக்கள் அதிகாரம்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – 80152 46753

சென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் ! செய்தி – படங்கள்

0

மார்ச், 23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாளை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் சென்னையில் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடந்தது.

தோழர் ராஜா

இந்த கருத்தரங்கிற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை செயலர் தோழர் ராஜா தலைமையேற்றார்.

அவரைத் தொடர்ந்து இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் எழிலன், தனது உரையில் “எனது துறையிலிருந்தே ஆரம்பிக்கிறேன். நான் படிக்க சேர்ந்த போது என்னுடன் இருந்த சக நண்பர் ஒருவர் திருப்பதிக்கு மொட்டை போட்டு இருந்தார். அதே போல மற்றொருவர் சபரிமலைக்கு மாலையணிந்து இருந்தார். முதல் தலைமுறை மருத்துவராக வந்திருப்பதால் கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறினர்,  இன்று நீயும், நானும் மருத்துவர்களாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அவர்கள் பெற்றுத்தந்த இடஒதுக்கீடு தான் காரணம். அவர்களை நாம் நினைவு கூற வேண்டும்.

டாக்டர் எழிலன்

இந்த தகவலைச் சொல்லக் காரணம் இன்று ஓரளவுக்கு கல்வி நிலையங்களில் சமூக நீதி உள்ளது. ஆனால் இவற்றை அழிக்கவே மோடி அரசானது நீட் தேர்வை அமல்படுத்தியுள்ளது. மாநிலஉரிமையில் இருந்து கல்வியை பிரிக்க நினைக்கிறது. இதனை நாம் வீழ்த்த வேண்டியுள்ளது.

இன்னொருபக்கம் சுதேசி என பேசிக்கொண்டே ஆர்.எஸ்.எஸ்- கும்பல் நாட்டை தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஆக இதையெல்லாம் முறியடிக்க நாம் பெரியாரையும், அம்பேத்கரையும், சிவப்பையும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதை இந்த போராளிகளின் நினைவு நாளில் நாம் தொடங்க வேண்டியுள்ளது.” என தனது உரையை முடித்தார்.

தோழர் ரமேஷ்

அவரைத் தொடர்ந்து அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ( சென்னை – ஐ.ஐ.டி ) நிறுவன உறுப்பினர் தோழர் ரமேஷ். “ ஸ்மிருதி இரானி, மனிதவள அமைச்சராக இருந்த போது ஐ.ஐ.டிக்களில்  சமஸ்கிருதத்திற்கு தனித்துறையைக் கொண்டுவந்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் நகைக்கத்தக்கது. நமது நாட்டின் பாரம்பரிய அறிவுச் செல்வங்கள் சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ளனவாம். அதனைக் கண்டுபிடிக்க மாணவர்கள் சமஸ்கிருதம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். எவை அந்த அறிவுச் செல்வங்கள்? பிரம்மாஸ்திரம் – அணுகுண்டு, பிள்ளையார் – பிளாஸ்டிக் சர்ஜரி என நீள்கிறது பட்டியல். அது தவிர யோகாவிற்கு தனித்துறை. அதற்கு பாடத்திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவில ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி, பாபா ராம்தேவ் போன்ற தற்குறிகளே உறுப்பினர்கள், இதெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படுகின்றன.

நாட்டின் பிரதமரும் இதையே அறிவியல் மாநாட்டில் பேசுகிறார். இப்படி இவர்கள் ஏன் கல்வியை காவிமயமாக்க நினைக்கின்றார்கள். ஏனெனில் ஒருபக்கம் பார்ப்பன மேலாண்மையை உறுதிப்படுத்துவது, மற்றொன்று ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வது. இவை இரண்டுக்குமே எதிரி தான் பகத்சிங். ஆகவே அவரது நினைவு நாளில் இரண்டையும் வீழ்த்த உறுதி ஏற்போம்.” எனப் பேசினார்.

அதன் பின்னர் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் “ பகத்சிங் நாட்டின் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்காகவும் தொழிலாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கெதிராகவும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடினார்.

தோழர் ம.சி. சுதேஷ்குமார்

ஆனால் இன்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அன்றாடம் தொழிலாளிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம் நாட்டையே இந்த காவிக்கும்பல் கபளீகரம் செய்து வருகிறது. நம்முன் இந்த இரட்டை அபாயங்கள் உள்ளது, இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்ட நாம் பகத்சிங்கின் வாரிசுகளாக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையுடன் களத்தில் நிற்க வேண்டியுள்ளது.” என தனது உரையில் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம் அவரது உரையில் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் நினைவு நாள். பகத்சிங் என்ற ஒற்றைச் சொல்லானது அவரை மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக தன்னுள்ளே சுகதேவையும், ராஜகுருவையும், பட்டுகேஷ்வர் தத்தையும், யஷ்பாலையும், சிவவர்மாவையும், ஆசாத்தையும் இன்னும் எண்ணற்ற தோழர்களின் தியாகத்தையும் ஒரு தலைமுறையையும் குறிக்கிறது. இன்று தியாகம் என்பதையும் கூட நாம் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த வார்த்தைக்கூட யார் வாயிலிருந்து வருகிறது என்பதை பகுத்தாய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.

நமது தோழர்கள் இந்த கருத்தரங்கப் பிரச்சாரத்திற்கு ரயிலில் சென்றிருந்த போது ஒரு வடமாநில இளைஞருக்கு தமிழ் புரியவில்லை. இருந்தாலும் படத்தைப் பார்த்து பகத்சிங் என்று கூறுகிறார். சுகதேவ், ராஜகுரு படங்களைக் காட்டி அவர்களது பெயரைக் கோட்கிறார் தனது சைகைளால் கேட்க முற்படுகிறார். அவரிடம் நமது தோழர்களும்  அந்த வார்த்தையற்ற மொழியினை புரிந்து கொண்டு பெயர்களைச் சொல்கின்றனர். அந்த வடமாநில இளைஞர் ஓ…அச்சா எனக்கூறி தனது சட்டைபையில் வியர்வையில் நனைந்திருந்த 10 ரூபாய் நோட்டை உண்டியலில் போடுகிறார்.

தோழர் துரை. சண்முகம்

ஆனால் இன்று காலை செய்தித் தாள்களில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு படங்களைப் போட்டு மகத்தான தியாகிகள் கண்ட கனவு இந்தியாவை உருவாக்கும் சபதமேற்போம் என தனது பற்பசைக்கும், சோப்புக்கும் விளம்பரம் செய்கிறான்.

ஆக பகத் சிங்கின் தியாகம் இவர்களில் யாருக்கானது அந்த தொழிலாளி இளைஞனுக்காகவா. இல்லை பாபா ராம்தேவுக்கானதா ? அதனால் தான் பொதுவாக தியாகம், தியாகி என்பதைவிட அதை எதற்காகச் சொல்கிறார்கள் யார் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா இல்லையா என்பதில் இருந்து தான் அவனை மதிப்பிட வேண்டும் என தந்தை பெரியார் பகத்சிங்கின் தியாகத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

இன்று நாமும் கூட நம் முன் உள்ள கடமைகளைச் செய்கிறோமா என்பதில் இருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. அறிவு என்பது பிறர் துன்பம் அறிதல் என்கிறார் வள்ளுவர். நாமும் பிறர் துன்பம் அறிந்து நம் கடமையைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக உழைக்க வேண்டியுள்ளது.

நம் முன் உள்ள கடமை இந்த நாட்டை விழுங்கவரும் காவிபயங்கரவாதத்தை வீழ்த்த வேண்டியது தான். அதைச் செய்யும் போது தான் நாமும் பகத்சிங்கின் வாரிசுகள்.” என பேசியமர்ந்தார்.

கூட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட இரவு 7:35 மணியில் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் டெல்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடங்கினார். அதனை பு.ஜ.தொ.மு-வின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் மொழிபெயர்த்து வழங்கினார்.

தமிழகம் முதல் கம்யூனிஸ்ட்டை பெற்றெடுத்த பெருமையைக் கொண்ட மாநிலம். சமூகநீதி இயக்கங்களையும், சமூக நீதிக்காக போராடிய பெரியார் போன்ற பல்வேறு போராளிகளையும் பெற்றெடுத்தது தமிழகம். தோழர் பகத்சிங் ஒரு தனி நபர் அல்ல. அவர் புரட்சிகர அரசியலின் அடையாளம். அவர் சுகதேவ், ராஜகுரு, ஆசாத், அஷ்ஃபகுல்லா கான், ஆகிய புரட்சியாளர்களின் உள்ளடக்கம்.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின், ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேசன் அமைப்பு,  வெள்ளைக்காரனின் கைகளில் இருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, இங்கிருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோர் கையில் அதிகாரம் வேண்டும் எனப் பிரகடனம் செய்தது.

பகத் சிங் சிறையில் இருக்கும் போது அவர் தூக்கில் போடப்படுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பும், லாகூரில் நடைபெற்ற இளம் அரசியல் ஊழியர்களின் மாநாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். தாம் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய கடைசி நொடி வரை புரட்சிகர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

பகத் சிங்கும் அவரது தோழர்களும் புரட்சியில் ஈடுபட்டு சிறையும் தூக்கும் அனுபவிக்கும் போது அவரது வயது வெறும் 21 முதல் 30க்குள் தான்.

பேராசிரியர் சம்சுல் இஸ்லாம்

பகத்சிங் சிறையில் இருக்கும் போது சுமார் 20 முறை கடிதம் எழுதியுள்ளார்.  அனைத்துக் கடிதங்களும் தாம் படிப்பதற்கு புத்தகங்கள் கேட்டு எழுதப்பட்ட கடிதங்களே.

சாவர்க்கரும் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 50 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்ட சாவர்க்கர் தனது சிறை வாழ்க்கையில் 5 முறை கடிதங்கள் எழுதியுள்ளார்.  அவை அனைத்தும் மன்னிப்புக் கடிதங்களே. பிரிட்டிஷ் தாயிடம் தம்மைத் தனையனாகக் கருதி  மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக வெறும் 10 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்தார்.

பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஹெக்டேவார் 1921இல் நடைபெற்ற கிலாபட் இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று ஒராண்டு இருந்தார். வெளியே வரும்போது 25 பவுண்டுகள் அதிகரித்து விட்டது மேலும் அவர் ஜெயிலரோடு நட்பாக இருந்த்தாக அவரது சுயசரிதை கூறுகிறது.

பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல்,  பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானவர்கள். பகத்சிங், மதத் துவேசத்தையும், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்தவர். அவர் இப்போது இருந்திருந்தால், இந்த இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகப் போராடியிருப்பார். ஆர்.எஸ்.எஸ். கும்பல் அவர் தலையை எடுத்திருக்கும்.

பகத் சிங்கும் அவரது தோழர்களும் ஏகாதிபத்திய, பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளே. அவர்கள் வழியில் பார்ப்பனியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் நாமும் எதிர்க்க வேண்டும் ” என்று கூறி தமது உரையை முடித்தார்.

அதன் பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் கணேசன் உரையாற்றினார். அதில் அவர் டெல்லியில் இருந்து வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு பகத்சிங் இன்று இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் எனும் வகையில் நம்மத்தியில் உரையாற்றிச் சென்ற தோழர் சம்சுல் இஸ்லாமிற்க்கு நன்றி தெரிவித்து தனது உரையை இறுதி செய்தார்.

இறுதியாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள்

கருத்தரங்க படங்கள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !

3

“மை லார்ட்” என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தமுள்ளது. பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.  அரசியல்வாதிகளாக இருக்கக்கூடியவர்கள் பொதுவாழ்வில் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டக்கூடியதாகவும், வரலாற்றுச் சிறப்புக்குரிய வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.  ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களைப் புற்றீசல் போலச் சூழ்ந்திருந்து அவர்களைச் சீரழிக்கும் நிழல் அதிகார மையங்களுக்கும் விடுவிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே இந்தத் தீர்ப்பைக் கருத வேண்டும்.

வையெல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக ஊடகங்களும் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும் சிலாகித்துச் சூட்டியிருக்கும் புகழாரங்கள். இந்தத் தீர்ப்பின் இணைப்பாக நீதிபதி அமிதவராய் ஊழல் குறித்தும் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் கூறியிருக்கும் தத்துவ ஞானபோதனைகளை எடுத்துப் போட்டு, ஊழலுக்கு எதிராக உச்சநீதி மன்றம் வெட்டரிவாளைத் தூக்கிவிட்டதாகவும், அதனால் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் அஞ்சி நடுங்குவதாகவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

அந்நியன், இந்தியன் பட ரசிகர்கள் வேண்டுமானால் இத்தீர்ப்புக்கு மயங்கலாம். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்துக்கு இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நடந்துகொண்ட விதம் வேறொரு நம்பிக்கையை அளித்திருக்கிறது. “ஊழல் வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்கலாம், அதற்குச் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் எப்படியெல்லாம் வளைத்துப் போட்டுக் கொள்ளலாம் என்பதை எடுத்துக்காட்டி, பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அஞ்சத் தேவையில்லை” என அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது இந்த வழக்கு.

“புற்றுநோயைவிட மோசமானது ஊழல். இதை நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம்தான் ஒழிக்கமுடியும்” எனத் தீர்ப்பில் அருள்வாக்கு சொல்லியிருக்கிறார், நீதிபதி அமிதவராய். இந்தியாவே கவனித்துவந்த இந்த புற்றுநோய்க் கட்டியை ஒழிப்பதற்கே 21 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றால், சமூகம் முழுவதுமே வேர்விட்டிருக்கும் ஊழலை நீதிமன்றங்கள் மூலம் ஒழிப்பதற்கு எத்தனை ஆண்டு காலம் ஆகும்? அதுவரை, “என்றாவது ஒருநாள் நீதி நிச்சயம் கிடைக்கும்” என்ற நம்பிக்கையில் மக்கள் அனைவரும் கையைக் கட்டிக்கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்க்க வேண்டும் போலும்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் (இடது) மற்றும் அமிதவராய்.

“இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டோம்” என்று இலக்கியமாய் நெகிழ்ந்திருக்கிறார் நீதிபதி அமிதவராய். பாரம் பெருத்துப் போனதற்கு இந்த வழக்கு 21 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது முக்கிய காரணமில்லையா? அந்தப் பாவத்தில் நீதிமன்றங்களுக்குப் பங்கில்லையா? இந்தக் குற்றக்கும்பலின் பாரத்தைத் தமிழக மக்கள் இத்தனை ஆண்டுகள் சுமக்கக் காரணமே நீதித்துறைதான். இந்த 21 ஆண்டுகளில் உச்சநீதி மன்றமே எத்தனை முறை ஜெயாவைக் கைதூக்கிவிட்டிருக்கிறது?

ஒரு கிரிமினல் வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்கலாம் என்பதற்கு ஜெயாவின் வழக்கைச் சட்ட மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம் என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். அது, ஜெயாவின் சாதனை மட்டுமேயல்ல.

விசாரணை நீதிமன்றங்கள் முதல் சென்னை, பெங்களூரு உயர் நீதி மன்றங்களும் உச்சநீதி மன்றமும் எப்படியாவது ஜெயாவைக் காப்பாற்றுவதற்காக நடத்திய தகிடுதத்தங்களைப் பட்டியல் போட்டால், அது வழக்கறிஞர்களுக்கே பெரிய “பாரமாக” இருக்கும் என்பதால், உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் ஆற்றிய பாத்திரத்தை நினைவூட்ட சிலவற்றை மட்டும் சுருக்கமாகத் தந்திருக்கிறோம்.

வழக்கை இழுத்தடித்ததில் உச்சநீதி மன்றத்தின் பங்கு !

சொத்துக் குவிப்பு வழக்கை 2003-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டது. மேலும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று பிறிதொரு வழக்கில் உச்சநீதி மன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், ஜெயாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது ஆணைகளை உச்சநீதி மன்றமே காற்றில் பறக்கவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முடக்க, இலண்டன் ஹோட்டல் வழக்கையும் இதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்து, சாதகமான தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பெற்றார் ஜெயா. இதனை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதி மன்றம் அது குறித்து விசாரித்து உடனே தீர்ப்பு வழங்காமல், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கே இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக்காலத் தடை காரணமாக நான்கு ஆண்டுகள் வழக்கு விசாரணை முற்றிலுமாக முடக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றமே பொறுப்பு. இது உச்ச நீதிமன்றம் ஜெயாவுக்குச் செய்த மிகப்பெரிய சேவை.

தற்போதைய தீர்ப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதாவை விடுவித்த குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் ஜூன் 2016-இல் முடிந்து விட்டது. பிப், 2017 -இல் ஜெயா இறந்த பிறகு, அரசு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே நினைவூட்டிய பிறகு, சசிகலா முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில்தான் தீர்ப்பை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள், நீதிபதிகள்.

குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்திருப்பதற்கு மேல் இவ்வழக்கில் புதிய வெளிச்சம் எதையும் இந்தத் தீர்ப்பு பாய்ச்சவில்லை. தண்டனையைக் கூட்டவில்லை. குமாரசாமியின் முறைகேடான தீர்ப்புக்குக் கடுமையான கண்டனங்களும் இல்லை. ஜெயா மரணமடைந்துவிட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீடு மட்டும் தணிக்கப்படுகிறது (abated) எனக் கூறுகிறது இத்தீர்ப்பு. தணிந்து விட்டது என்று கூறியிருப்பதனால் நூறு கோடி அபராதத்தைக் கட்டத் தேவையில்லை என்றும் ஒரு வாதம் கிளப்பப்படுகிறது. இதற்கு ஏன் இந்தத் தாமதம் என்று கேள்வி எழுப்பினாலே, கேட்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏவுவார்கள் நீதிபதிகள்.

உச்சநீதி மன்றம் ஜெயாவிற்கு வழங்கிய சலுகைகள் !

2001-இல் இந்த வழக்கு சென்னையில் நடந்தபோது, சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு ஜெயாவிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. “தனக்குத் தொண்டை கட்டியிருப்பதால் நீதிமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது” என அலட்சியமாக மறுத்தார், ஜெயா. நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் கேள்விகளோடு போயசு தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்படிப்பட்ட சலுகையை ஜெயாவைத் தவிர, இந்தியாவில் வேறெந்த கிரிமினலுக்கும் நீதிமன்றம் வழங்கியதாகத் தெரியவில்லை.

ஜெயாவின் திமிர் குன்ஹாவிடம் செல்லுபடியாகவில்லை. நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அவர் ஆணையிட்டார். கோயில் கோயிலாகப் போவதற்கு நேரம் இருக்கிறது, நீதிமன்றத்துக்கு வர நேரமில்லையா என்று கேட்டார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா. உடனே உச்ச நீதிமன்றம் போனார் ஜெயா. “உங்களுக்கு எந்த தேதி வசதிப்படுமோ, அந்தத் தேதியில் நீதிமன்றத்திற்குச் சென்று பதில் அளியுங்கள்” என ஜெயாவிற்குச் சலுகை காட்டியது உச்சநீதி மன்றம்.

அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து, அவரைப் பதவி விலக வைத்த ஜெயா-சசி கும்பல், கர்நாடக பா.ஜ.க. அரசைப் பயன்படுத்தி அவரது இடத்தில் பவானி சிங்கை நியமித்துக் கொண்டது. பவானி சிங்கும், அச்சமயத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணாவும் கூட்டுச் சேர்ந்து, ஜெயா-சசி கும்பலுக்குச் சாதகமாக வழக்கை நடத்திச் சென்றனர்.

பவானி சிங்கின் நியமனமே முறைகேடாகச் செய்யப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டிய தி.மு.க., அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வுயர் நீதிமன்ற நீதிபதி வகேலா பவானி சிங் நியமனத்தை ரத்து செய்தார்.

“பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும், நீதிபதி பாலகிருஷ்ணாதான் வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா. “இந்த ஏட்டய்யாவோடுதான் போவேன்” என்ற வடிவேலு காமெடியை விஞ்சிய கேலிக்கூத்து இது. தனக்கு எதிராக இந்த அரசு வக்கீல்தான் வழக்கு நடத்த வேண்டும், இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று ஒரு குற்றவாளி கோரிக்கை வைத்த முதல் வழக்கும் இந்தியாவிலேயே இதுவாகத்தான் இருக்கும்.

இவ்வழக்கை விசாரித்த சௌஹான்-பாப்டே அமர்வு, குற்றவாளிகள் எதைக் கோரினார்களோ அதையே உத்தரவாகப் பிறப்பித்தார்கள். பவானி சிங் நியமனம் முறைகேடானது என்பது நிரூபணமான பிறகும், “புதிய வழக்குரைஞரை நியமித்தால், வழக்கு விசாரணை தாமதப்படும்” என்று கூறி பவானி சிங் தொடருவதற்கு அனுமதி அளித்ததுடன், நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு, வழக்கு விசாரணை முடியும் வரை பதவி நீட்டிப்பு வழங்குமாறும் கர்நாடக அரசுக்கு சிபாரிசு செய்து, கூடுதலாகக் கூவினார்கள்.

ஜெயாவின் தரகராக தலைமை நீதிபதி தத்து !

நீதிபதி குன்ஹாவால் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட மறுநிமிடமே, தீர்ப்பை நிறுத்தி வைத்து பிணை வழங்கக் கோரி, கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தனர். “குற்றவாளிகளுக்கு தற்பொழுது பிணை அளிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதைப் பல்வேறு சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்தார், கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரா.

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா−சசி கும்பலுக்குப் பிணை வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரா.

இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அப்பொழுது உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தத்து தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஜெயாவுக்கு பிணை மறுத்த சந்திரசேகரா, ஊழல் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியிருக்கும் வழிகாட்டுதல்களை விரிவாக எடுத்துக்காட்டியிருந்தார். ஆனால் தத்துவோ, அவை குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல், தடாலடியாக ஜெயாவுக்குப் பிணை வழங்கினார்.

இந்த தீர்ப்பு ஒரு அப்பட்டமான முறைகேடு என்று எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால், அதை மறைக்கும் விதத்திலும், ஜெயலலிதாவுக்கு இன்னொரு சலுகை வழங்கும் விதத்திலும் கூடுதலாக ஒரு பித்தலாட்டமும் செய்தார் தத்து.

தத்து பிணை வழங்கிவிட்ட போதிலும், உயர்நீதி மன்றம் நிரபராதி என்று தீர்ப்பளிக்காத வரை, ஜெயாவால் மீண்டும் முதல்வராக முடியாது என்ற நிலையே இருந்தது. ஜெயா மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு ஏற்பாடு செய்து தரும் விதத்தில், மேல்முறையீட்டின் விசாரணையை மூன்றே மாதங்களில் முடிக்க வேண்டுமென்றும், இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது என்றும், மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு நாள் கூடப் பிணையை நீட்டிக்க முடியாது என்றும் ரொம்பவும் கண்டிப்பான பேர்வழி போலத் தீர்ப்பில் குறிப்பிட்டார் தத்து. இதைவிடத் தரம் தாழ்ந்த ஒரு மோசடி நாடகத்தை உச்சநீதி மன்றம் கண்டிருக்காது என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் பிணை மனு விசாரிக்கப்படுவதற்கு முன்னரே, டிராபிக் ராமசாமி தத்துவிடம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் உங்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது, சம்மந்தப்பட்ட நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதுதான் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் மரபு. ஆனால் தத்துவோ, “அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அந்தப் புகாரையே அலட்சியப்படுத்தினார்.

இந்தப் பிணை வழக்கில் ஜெயாவின் சார்பாக வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். அவரது மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றுவதால், பாலி நாரிமன் அவ்வழக்கில் வாதாடுவது பார் கவுன்சில் வகுத்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று டிராபிக் ராமசாமி புகார் செய்த போதிலும், அந்த முறைகேட்டையும் அனுமதித்தார் தத்து.

குமாரசாமி மட்டுமா எட்டப்பன்?

ஜெயாவை விடுதலை செய்ய “நாலும் மூணும் எட்டு” என்று கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு, சிரிப்பாய் சிரித்த தீர்ப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கை குமாரசாமியை வைத்து விசாரித்து, ஜெயாவுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்ற திட்டத்தோடு உச்சநீதி மன்றத்தின் துணையுடன், கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் அரங்கேறிய முறைகேடுகளை எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜெயாவின் கைக்கூலியாகச் செயல்பட்ட அரசு வழக்குரைஞர் பவானி சிங் (இடது); சிறப்பு நீதிமன்றத்திற்கு பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடானது எனத் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி வகேலா.

குன்ஹா தீர்ப்பு வழங்கியதோடு, பவானி சிங்கின் பணி முடிந்து விட்டதெனினும், ஜெயலலிதாவின் பிணை மனுவையும் மேல் முறையீட்டையும் எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கும் பவானி சிங்கையே நியமித்து உத்தரவு பிறப்பித்தது பன்னீரை பினாமி முதல்வராக கொண்ட ஜெயா அரசு. கர்நாடக அரசால் நடத்தப்பட்ட இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என்ற போதிலும், வேண்டுமென்றே இந்த முறைகேட்டைச் செய்தது தமிழக அரசு.

பவானி சிங் நியமனத்தை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் ஐந்து முறை அடுத்தடுத்து வழக்குகளைத் தொடுத்தார், அன்பழகன். இவ்வழக்குகளை மாறி மாறி விசாரித்த கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதிகளுள் வகேலா என்பவரைத் தவிர, மற்ற நீதிபதிகள் பவானி சிங் நியமனத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

நீதிபதி வகேலா பவானி சிங் நியமனத்தை ரத்து செய்துவிடுவார் என்ற நிலையில் “என்னுடைய நியமனத்துக்கு எதிராக நீங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்தவர் என்பதால், உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று பவானி சிங்கை வைத்து வாதாடியது ஜெயா கும்பல். வகேலா வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார். மேல்முறையீட்டு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று தத்து போட்டிருக்கும் உத்தரவைக் காட்டி, பவானி சிங்கே அரசு வழக்கறிஞராகத் தொடருவதை அனுமதித்துத் தீர்ப்பளித்தது, கர்நாடகா உயர்நீதி மன்றம்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்பழகன் உச்சநீதி மன்றம் சென்றார். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான மதன் லோகூர், பவானி சிங்கின் முறைகேடான நியமனத்தை ரத்து செய்ததோடு, மேல் முறையீட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான பானுமதி, ஜெயலலிதாவை அரசு விழா மேடையிலேயே புரட்சித்தலைவி என்று துதிபாடியவர். இவர் பவானி சிங்கின் நியமனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவின் தரகனாகச் செயல்பட்ட உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து (இடது); சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயாவைத் தப்புக் கணக்கின் மூலம் விடுதலை செய்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி.

இந்த  முரண்பட்ட தீர்ப்பின் காரணமாக மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது இவ்வழக்கு. “பவானி சிங்கின் நியமனம் முறைகேடானது, மேல்முறையீட்டு வழக்கை கர்நாடகா உயர்நீதி மன்றம் சட்டத்திற்குப் புறம்பாக அவசர அவசரமாக நடத்தி வருகிறது” என்பதை அந்த அமர்வு ஒப்புக்கொண்டாலும், வழக்கைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி, குமாரசாமி நடத்திய முறைகேடான விசாரணையை நியாயப்படுத்தியது. கர்நாடக அரசால் பவானி சிங்கிற்குப் பதிலாக அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட பி.வி. ஆச்சார்யாவும், அன்பழகனும் தமது எழுத்துப்பூர்வ வாதத்தை நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்யலாம் எனக் கூறி, தனது கட்டைப்பஞ்சாயத்து உத்தரவுக்கு சப்பை கட்டியது. உச்ச நீதிமன்றம் நிகழ்த்திய இத்தனை முறைகேடுகளுக்குப் பின் கடைசியாக வந்த முறைகேடுதான் நாலும் மூணும் எட்டு என்று கூறிய குமாரசாமியின் தீர்ப்பு.

பஞ்சுமிட்டாய் நீதி

குற்றவாளிகளான ஜெயா உள்ளிட்ட நால்வரும், இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக ஏறத்தாழ 300 மனுக்களை அடுத்தடுத்து, ஒருவர் மாற்றி ஒருவர் மாற்றி போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நீதிமன்றத்தைக் கேலிப்பொருளாக்கியவர்கள் யாரும் இல்லை. ஆனால் நீதிமன்றங்களோ, கைப்புள்ளை கணக்காக அவற்றையெல்லாம் துடைத்துப்போட்டுவிட்டு, இக்கட்டான தருணம் ஒவ்வொன்றிலும் ஜெயாவைக் காப்பாற்றி விட்டன. கீழிருந்து மேல் வரை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு நீதிமன்றங்கள் நடத்திய இந்த கள்ள ஆட்டத்தின் தீய விளைவுகளைத் தமிழக மக்கள் அனுபவிக்க நேர்ந்தது.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த 21 ஆண்டுகளில், 2001, 2011, 2016 என மூன்று முறை குற்றவாளி ஜெயலலிதா முதலமைச்சர் ஆக முடிந்தது. சசிகலாவும், இளவரசியும் ‘துரைசாணிகளைப்’ போல, அதிகாரம் செலுத்த முடிந்தது. சிறை வாசமும், கொலை வழக்குகளும் தொழில்முறை கிரிமினல்களின் “அந்தஸ்தை” உயர்த்துவதைப் போல, இந்த ஊழல் வழக்கு ஜெயாவை, ஓட்டுப்பொறுக்கி கிரிமினல்கள் அனைவரும் கண்டு வியக்கும் “சொர்ணாக்கா” ஆக்கியது.

வழக்கிற்கு முன்னால் ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையைக் காட்டிலும் அதற்குப் பின்னர் அடித்த கொள்ளை பன்மடங்காகப் பெருகியது. தானே நேரடியாகக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, மொத்த அ.தி.மு.க. கட்சியையும் அரசு எந்திரத்தையுமே ஒரு கொள்ளைக்கூட்டமாக ஒழுங்கமைத்து வெளிப்படையாகவே திருடியதும் இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிதான். மொத்தத்தில் ஊழலுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல நினைப்பதே முட்டாள்தனம் என்ற அனுபவத்தைத்தான் இந்த வழக்கு சமூகத்துக்கு வழங்கியிருக்கிறது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா, குன்ஹா தீர்ப்புக்குப்பின் வெறும் 21 நாட்கள்தான் சிறைவாசத்தை அனுபவித்தார். தற்பொழுது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவோ, சிறையிலிருந்தபடியே தனது கூட்டத்தை இயக்கும் மாஃபியாத் தலைவனைப் போலத் தமிழக அரசை இயக்குகிறார். இவையனைத்தும் இந்த வழக்கில் நீதி வென்றிருப்பதையா காட்டுகின்றன?

சொத்துக் குவிப்பு வழக்கில் கண்ணுக்குத் தெரிவது நான்கு குற்றவாளிகள்தான். இவர்கள் தவிர, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பத்திரப் பதிவு அதிகாரிகள், பொதுத்துறை வங்கி அதிகாரிகள் என ஒரு பெரும் அதிகார வர்க்கமே இந்தக் குற்றத்தின் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். மேலும், தத்து, சௌஹான், பாப்டே, செல்லமேஸ்வர், குமாரசாமி, அருணா ஜெகதீசன், பானுமதி என்றொரு நீதிபதிகளின் கூட்டமே, ஜெயாவிற்கு விசுவாசமாக நடந்துகொண்டிருப்பதை இவ்வழக்கு நெடுகிலும் காண முடியும். குற்றத்தின் பங்குதாரர்களாக இருந்த இவர்கள் அனைவருமே, இப்பொழுதும் நம்மைச் சுற்றி யோக்கியவான்களைப் போல நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதி நீதிபதிகள் சௌஹான் (இடது) மற்றும் பானுமதி.

இன்று சசிகலா கும்பல் சிறையில் இருக்கிறது என்றால், நிச்சயமாக அதற்கு உச்ச நீதிமன்றம் காரணமல்ல. கீழிருந்து மேல் வரை நீதித்துறையிலும், காங்கிரசு- பா.ஜ.க. கட்சிகளிலும், அதிகார வர்க்கத்திலும் நிறைந்திருந்த ஜெயலலிதாவின் ஆட்கள் இந்த வழக்கை ஒவ்வொரு படியிலும் முடக்கினார்கள். அதையெல்லாம் மீறி ஓட்டைகள் நிறைந்த இந்த சட்டத்தின் வழியாகவும் இப்படி ஒரு தீர்ப்பை வரவழைக்க முடிந்ததற்கு நான்கு பேரைக் காரணமாகச் சொல்லலாம்.

ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையில் 66 கோடி என்பது ஒரு சிறு துளிதான். எனினும், தப்பிக்க முடியாத, ஓட்டைகள் இல்லாத, அசைக்க முடியாத சாட்சியங்களின் அடிப்படையிலான குற்றவியல் வழக்காக இதனைக் கட்டியமைத்த விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு,

ஜெயா-சசி கும்பல் மற்றும் கர்நாடக பா.ஜ.க. அரசின் மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் பணிந்து போகாமல் நேர்மையாகவும் ஈடுபாட்டுடனும் விசாரணையை நடத்திச் சென்ற அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா,

இந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்து கொண்டு, ஜெயாவைக் காப்பாற்ற முனைந்த நீதித்துறையின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வழக்கு செத்து விடாமல் காப்பாற்றி, குன்ஹாவிடம் கொண்டு சேர்த்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க.வின் வழக்கறிஞர்கள்,

அசைக்கமுடியாத ஆதாரங்களோடு குற்றவியல் வழக்காகக் கட்டியமைத்த விசாரணை அதிகார நல்லம்மா நாயுடு (இடது); நேர்மையாக விசாரணையை நடத்திச்சென்ற அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா (நடுவில்); ஜெயாவின் அதிகார பலத்துக்குப் பணிந்துவிடாமல் இரும்புப் பின்னலாகத் தீர்ப்பை எழுதிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

ஜெயாவின் அதிகார பலத்தையும் ஆணவத்தையும் பார்ப்பனத் திமிரையும் எள்ளளவும் சட்டை செய்யாத, நீதிமன்ற அறைக்குள் மற்ற குற்றவாளிகள் எப்படி நடத்தப்படுவார்களோ அதே போன்று ஜெயலலிதாவையும் நடத்தும் துணிவினை இயல்பாகக் கொண்டிருந்த, உச்சநீதி மன்றத்தின் அறிவார்ந்த நீதிபதிகள் எத்தனை முயன்றாலும் அறுக்கவியலாத இரும்புப் பின்னலாகத் தீர்ப்பை எழுதும் திறமையும் கொண்டிருந்த நீதிபதி குன்ஹா.

இந்த நான்கு பேரைத் தவிர ஜெயாவின் தண்டனைக்கு காரணமான ஐந்தாவது நபரும் உண்டு. அது ஜெயா-சசி கும்பலேதான். அறிவும் சுயமரியாதையும் உள்ளவர்கள் அண்டத்தயங்கும் ஜெயாவின் அரசவை, அதில் நிறைந்திருந்த துதிபாடிகள், பாசிசக் கும்பலுக்கே உரிய திமிர், குறுக்குப் புத்தி ஆகியவை காரணமாக வழக்கினை முடிவே இல்லாமல் இழுத்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு, ஆச்சார்யாவிடமும், குன்ஹாவிடமும் வந்து சிக்கிக் கொண்டார்கள்.

இந்த தீர்ப்பு ஜெயா உயிருடன் இருந்திருந்தால் வந்திருக்குமா? 21 ஆண்டு வரலாறு ஐயத்தையே தருகிறது. ஜெயாவுக்கு 100 கோடி அபராதம் என்று கூறிவிட்டு, மரணத்தின் காரணமாக அவருடைய மேல்முறையீடு தணிந்திருப்பதாகவும் இத்தீரப்பு குறிப்பிட்டிருப்பது குழப்பத்தையே விதைத்திருக்கிறது. டான்சி வழக்கில் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்து தீர்ப்பெழுதிய பெருமை கொண்டது உச்ச நீதிமன்றம். வேண்டுகோள் விடுவதற்குத் தகுதியான மனச்சாட்சி இல்லாமலிருப்பதும், நீதி கிடைப்பதற்கான ஒரு நிபந்தனை போலும்!

-குப்பன்

புதிய ஜனநாயகம், மார்ச் 2017