Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 503

கமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் !

1
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.

ன்பே சிவம் திரைப்படத்தில் பிரளயனின் ‘வீதி நாடகக்குழு’ இருக்கிறது; தொழிலாளிகளின் சம்பள உயர்வு கோரிக்கை இருக்கிறது; செங்கொடி இருக்கிறது; சி.ஐ.டி.யு.வின் அறிவிப்புப் பலகையே இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களைத் தாக்கும் வசனங்கள் இருக்கின்றன; மொத்தத்தில் மார்க்சிஸ்டு கட்சியினர் மனக்கிளர்ச்சியடைந்து தியேட்டர் வாசலில் தோரணம் கட்டுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் படத்தில் இருக்கின்றன.

இருந்த போதிலும் வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமா கொட்டகையில் 40, 50 அபராதம் கட்டிய ரசிகர்களுக்கு  “கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார்” என்ற குழப்பமும் இருக்கிறது.

மார்க்சிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இந்தப் படத்தைப் பாராட்டியிருப்பதிலோ, தீக்கதிர் உச்சி மோந்திருப்பதிலோ நமக்கு வியப்பில்லை. பா.ஜ.க. தலைவர் இல.கணேசனும் இதைப் பாராட்டியிருக்கிறார் என்பதுதான் இதில் சுவையான செய்தி. செங்கொடியும், சி.ஐ.டி.யு. பலகையும் தெளிவாகக் காண்பிக்கப்பட்ட பிறகும் இல.கணேசன் பாராட்டுகிறாரென்றால், ஏமாந்தது யார் என்று நமக்குத் தெரிந்தாக வேண்டும்.

நல்லசிவம் (கமல்) எனும் விகாரமான தோற்றம் கொண்ட மார்க்சியவாதி, அன்பரசு (மாதவன்) எனும் அழகான, அமெரிக்காவில் படித்த, செல்போன் பிடித்த, ஜீன்ஸ் போட்ட இளைஞனை புவனேசுவர் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தன்னுடைய தமிழ்ப்பெயரையே இழிவாகக் கருதி ஏ.அர்ஸ்.  என்று சுருக்கிக் கூறிக் கொள்ளும் அளவு தீவிரமான அமெரிக்க மோகியான அன்பரசு, நல்லசிவத்தைத் தீவிரவாதி என சந்தேகித்து போலீசிடம் போட்டுக்கொடுத்து, இல்லையென்று நிரூபணமானதால் அவமானப்படுகிறான்; கொஞ்சம் ‘குற்றவுணர்வும்’ அடைகிறான்.

புவனேசுவரிலிருந்து சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் இந்த சின்னக் குற்றவுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக நோண்டிப் பெரிதாக்குகிறான் நல்லசிவம். கிரெடிட் கார்டும், வெளிநாட்டு ஷுவும், நுனி நாக்கு ஆங்கிலமும் செல்லுபடியாகாத உண்மையான இந்தியாவை அந்த அமெரிக்க குஞ்சுக்கு அறிமுகம் செய்கிறான். அந்த இளைஞனின் இதயத்திலும் பெயரிலும் ‘இயற்கையாகவே’ குடிகொண்டிருக்கும் ‘அன்பை’, அதாவது கடவுளை, சாமார்த்தியமாகத் துழாவி வெளியே எடுத்து அவனுக்கே அறிமுகப்படுத்தியும் விடுகிறான்.

புவனேசுவரிலிருந்து சென்னைக்கு முன்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தினூடாக, நல்லசிவம் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்லும் பயணமும் வருகிறது. வீதி நாடகக் கலைஞனும், மார்க்சியவாதியும், ஓவியனும், கணினி விற்பவனுமான நல்லசிவத்தைக் கண்டு – அதாவது அவனிடம் பொதிந்துள்ள சராசரித் தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்ட ‘திறமை’யைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள் முதலாளியின் மகள். எதிர்பாராத விபத்து அவர்களைப் பிரிக்கிறது.

சிவத்தின்(நல்லசிவத்தின்) காதலி அன்புக்கு(அன்பரசுவுக்கு) மனைவியாகிறாள். தொழிலாளர்கள் தமது சொந்தத் தியாகத்தால் வாங்க முடியாத கூலி உயர்வை, தனது காதலைத் தியாகம் செய்து அவர்களுக்கு வாங்கி வழங்கிவிட்டு, ஒரு சித்தரைப் போலத் தெரு நாயுடன் நடந்து மறைகிறான் நல்லசிவம்.

கதையின் தர்க்கரீதியான தொடர்ச்சியில் விழும் ஓட்டைகளை ஒதுக்கிவிட்டு மையக்கருத்துக்குச் செல்வோம்.

டம் உலகமயமாக்கத்துக்கெதிராகப் பேசுகிறதா? ஆம், என்கிறார் கமலஹாசன். வீதி நாடகத்திலும், மாதவனிடம் கமல் பேசும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் வசனங்களை வைத்து அத்தகைய பிரமை சிலருக்குத் தோன்றக்கூடும்.

சரி, உலகமயமாக்கலை எதிர்த்து இந்தப் படம் யாரிடம் பேசுகிறது? என்ன பேசுகிறது? இந்தக் கொள்கைகளினால் ஆதாயமடைகின்ற வர்க்கத்தின் பிரதிநிதியிடம் பேசுகிறது. கணினி வல்லுனர்களாகவும், பொறியாளர்களாகவும்,  சேவைத்துறையினராகவும், வேலை செய்கின்ற நுனிநாக்கு ஆங்கிலப் பேர்வழிகளிடம், அமெரிக்காவிற்கு ஓடுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெப்சி மாதவன்களிடம் பேசுகிறது.

“சோற்றுக்குப் போராடும் இந்த தேசத்தைப் பாருங்கள். மக்களைப் பாருங்கள். மனமிரங்குங்கள். அற உணர்வு கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் மன்றாடுகிறது. அவ்வப்போது நல்லசிவத்தின் சாமார்த்தியமான வசனங்களால் அவர்களை மடக்குகிறது. லேசாக இடித்துரைக்கிறது.

பிறப்பால் இந்தியனாகவும் சிந்தனையால் அமெரிக்க அடிவருடியாகவும் வளர்ந்துள்ள “யுப்பி” என்றழைக்கப்படும் நவீன மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதியாகத் திரையில் தோன்றுகிறார் மாதவன். இந்த வர்க்கம் அறவுணர்வற்றுப் (Amoral) போனதற்கு காரணமென்ன என்பது நமது முதல் கேள்வி.

உலகப் புகழ் பெற்ற பங்குச்சந்தைச் சூதாடியான ஜார்ஜ் சோராஸ் எனும் கிழவனிடம் அவனுடைய ஒழுக்கம், அறவுணர்வு பற்றிய கேள்விகளை எழுப்பியபோது “சந்தைக்கு அறவுணர்வு இல்லை; எனவே எனக்கும் இல்லை” என்று பதிலளித்தானாம். அந்தக் கிழட்டுப் போக்கிரியின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை.

பன்னாட்டு நிறுவனங்கள் உலகச்சந்தையைக் கைப்பற்ற எத்தகைய ‘நெறிகளைக்’ கடைப்பிடிக்கின்றனவோ அவற்றின் பிரதிபலிப்பைத்தான் நாம் இந்த யுப்பி வர்க்கத்திடம் காண முடியும். ஏனென்றால் இவர்கள் அதன் ஊழியர்கள், தரகர்கள், துதிபாடிகள் அல்லது நல்லசிவத்தின் மொழியில் சொன்னால் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் கூலிகள்.

அவ்வாறிருக்க, நிஜத்தின் தலையைச் சீவுவதைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்டு, நிழலுக்கு முடிவெட்டி அழகுபடுத்த முனைகிறார் நல்லசிவம்.

அன்பரசுவின் (மாதவனின்) வர்க்கத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவ உலகச் சந்தைதான் அவர்களது கடவுள். சந்தையின் விதிகள்தான் இறைவனின் பத்துக்கட்டளைகள். இந்த ஆட்டத்தில் வெல்லும்போது அதைத் தனது திறமைக்கும், புத்திக்கூர்மைக்கும் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இதில் தோற்று மடிபவர்களைக் குறித்து அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.

சூறாவளியில் பிடுங்கியெறியப்பட்ட தென்னை மரத்துக்காக இவர்கள் எப்படி கண்ணீர் விடமாட்டார்களோ, அவ்வாறே உலகமயமாக்கத்தால் பிடுங்கி எறியப்பட்டுச் செத்து மடிகின்ற விவசாயிகளுக்காகவும் இவர்கள் கண்ணீர் விடுவதில்லை.

“சோமாலியா முதல் தஞ்சை வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் முன்னறிந்து சொல்ல முடியாத சந்தையின் விதிகள்தான்” என்று கூறும் உலக முதலாளித்துவத்திடம் இந்தச் சாவுகளுக்கான தார்மீகப் பொறுப்புண்ர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி வர்க்கத்திடமும் அதை எதிர்பார்க்க முடியாது. “பட்டினிச் சாவா அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று அவர்கள் தோளைக் குலுக்குவார்கள். அவ்வளவுதான்.

ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் அன்பு ஊற்று இருப்பதாகவும் ஏதோ சில காரணங்களால் அது அடைபட்டிருந்தாலும் அதைத் தோண்டியோ, நோண்டியோ வெளியே கொண்டு வந்து விட முடியுமென்றும் நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த பார்முலாவின்படி மாதவனுக்குள் இருக்கும் ‘கடவுளை’ நாலே நாளில் தோண்டி எடுத்து விடுகிறார்.

எல்லோருக்கும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி (கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிபடி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன்.

அமெரிக்க அன்பே சிவத்தை விஞ்சிய கமலின் ‘கம்யூனிச’ சிவம்!

மனச்சாட்சி என்பது என்ன? அது சமூக விதிமுறைகள் குறித்தும், தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் (அல்லது உருவாக்கிய வண்ணமிருக்கும்) ஒரு கையேடு. எந்த முதலாளியும் தன் மனச்சாட்சிக்கு விரோதமாகத் தொழிலாளியைச் சுரண்டுவதில்லை; மனச்சாட்சிப்படிதான் சுரண்டுகிறான். இந்திய மக்களின் வரிப்பணத்தில் I.I.T.யில் படித்துத் தேறிய யுப்பி வர்க்கம் “இந்த நாட்டில் என் திறமைக்கு மரியாதை இல்லை” என்று திட்டிவிட்டு விமானமேறும் போதும் அதுதன் மனச்சாட்சிப்படி தான் நடந்துகொள்கிறது.

சாதி இந்துக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதாகவும், குற்றவுணர்வை உசுப்புவதாகவும் கூறிவந்த காந்தியின் பசப்பல்களை இதனால்தான் அம்பேத்கர் ஏற்கவில்லை. அரியானா முதல் மேலவளவு வரை ‘சாதி இந்து மனச்சாட்சி’ அன்றாடம் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

தீண்டாமை அல்லது மறுகாலனியாக்கம் போன்ற சமூக, அரசியல் அநீதிகள் (சமூக) அறிவியலின் துணை கொண்டு ஆராயப்பட வேண்டியவை. இவற்றை அறம் சார்ந்த பிரச்சனையாகச் சுருக்குவதும், திசை திருப்புவதும் முதலாளித்துவக் கலைஞர்கள் வழக்கமாக நடத்திவரும் கழைக்கூத்து. பெப்சி மாதவன் வர்க்கத்திடம் “அறம் செய்ய விரும்பு” எனப் போதிக்கிறார் நல்லசிவம்.

மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.

விசாரித்துப் பாருங்கள்! உலகமயமாக்கம் குறித்து தனது கவலையை அவரும் வெளியிடுவார். “நமது கலாச்சாரம், தர்மங்கள், குடும்ப உறவுகள் ஆகியவற்றைப் பலி கொடுத்து விடக் கூடாது” என்பதே உலகமயம் குறித்த அவரது கவலை. அறம் சார்ந்த கவலை!

மார்க்சிஸ்டு கட்சியின் தூண்களான வங்கி, காப்பீடு, பொதுத்துறை ஊழியர் சங்க முன்னோடிகளிடம் பேசிப் பாருங்கள். பையனுக்கு விசா கிடைக்காத கவலையை நெஞ்சில் தேக்கியபடியே மேற்படி அறம் சார்ந்த கவலையையும் வெளியிடுவார்கள். இதே வகைப்பட்ட அறம் சார்ந்த கவலைதான் சிலிகான் வேலி பையனுக்குச் சீரங்கத்தில் பெண் தேடுகிறது.

இவர்களது ஆன்மாவின் குரல் ஓவியர் மதனின் வசனமாகத் திரையில் சிந்துகிறது. கலப்புப் பொருளாதாரத்தின் ஆதாயங்களை அனுபவித்த மனிதனின் வர்க்கம், புதிய பொருளாதாரத்தால் தத்தெடுக்கப்பட்ட தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்துச் செல்லமாக கடிந்து கொள்கிறது. தங்கள் புத்திரர்களான யுப்பி வர்க்கம் கையில் தீவட்டியுடன் திரிந்தாலும் “அவர்கள் அடிப்படையில் நல்லவர்கள்தான்” என்று நம்மை நம்பச் சொல்கிறது.

“ரத்ததானம் கொடு, ஏழைகளுக்குச் சின்ன உதவி செய், இரண்டு சொட்டு கண்ணீர் விடு – முடிந்தது கதை. நீதான் கடவுள்” என்று மாதவனைத் தயார்படுத்துகிறார் கமலஹாசன். மஞ்சள், வேப்பங்கொட்டை, பாசுமதி, M.N.C., எலும்புத்துண்டு…. என்று தன் அறிவின் மேன்மையை மாதவன் மீது நிலைநாட்டுகிறார். பட்டணத்துக் கதாநாயகியைப் பட்டிக்காட்டு கதாநாயகன் சீண்டுவது போலக் கொஞ்சம் சீண்டுகிறார். இப்படியாக யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதியிடம் குற்றவுணர்வு தோற்றுவிக்கப்பட்டு விட்டது.

தமிழ் சினிமாவில் குற்றவுணர்வுக்கு ஆளாகின்ற பாத்திரம் அதை செண்டிமெண்டு மூலம் நிரூபிக்க வேண்டும் என்பது விதி; மாதவன் நிரூபிக்கிறார்; தோழர் நல்லசிவம் அண்ணன் நல்லசிவமாகிறார். யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் ‘பிரதிநிதி’க்குமிடையிலான உறவு அண்ணன்-தம்பி உறவுதானென்று திரைக்கதையின்படியே நிரூபணமாகிறது.

நல்லசிவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு என்ன? “நல்லசிவம் நாடகம் போட்டால் தொழிலாளிகள் வேடிக்கை பார்ப்பார்கள்; நல்லசிவத்தை முதலாளி ஆள் வைத்து அடித்தால் அதையும் வேடிக்கை பார்ப்பார்கள்; மற்றப்படி சம்பளம் 910ஐ, 920 ஆக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் புரியும், ‘முதலாளி நாசர்தான் எதிரி’ என்று தாடிவைத்து டான்ஸ் ஆடிக் காட்டினால் புரியும். தொழிலாளர் தலைவர் முதலாளி மகளை ஏன் காதலிக்கிறார் என்று கேட்கக்கூடத் தெரியாது. மற்றப்படி உலகமயமாக்கம், அமெரிக்க, ஜப்பான் இதெல்லாம் புரியாது. சொல்லவேண்டியது நம் கடமை என்பதால் நாலு வார்த்தை சொல்லி வைப்போம்”- இதுதான் தொழிலாளி வர்க்கத்தின்பால் நல்லசிவத்தின் அணுகுமுறை.

முதலாளியின் வரவேற்பரையில் ஒவியம் வரைந்து கொடுத்துக் காசு வாங்கித் தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் ‘அறவுணர்வு’ தடுக்கவில்லை.

“ஏனென்றால் கதையில் அவர்கள் இல்லை” என்ற வழக்கமான கோடம்பாக்கம் பதில் நம் காதில் விழுகிறது. “எடுத்த கதையைப் பற்றிப் பேசு; எடுக்காத கதையைப் பற்றிப் பேசாதே” என்ற எச்சரிக்கைக் குரலும் கேட்கிறது.

இருந்தாலும் “உலகமயமாக்கத்துக்கு எதிரானது” என்று கூறிக் கொள்ளப்படும் திரைப்படத்தில், அதனால் பாதிக்கப்பட்ட வர்க்கம், அதை எதிர்த்துப் போரட வேண்டிய வர்க்கம் ஏன் செவிடாகவும் ஊமையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கேட்காமலிருக்க முடியாது.

உலகமயமாக்கலின் விளைவாகப் பட்டினிச் சாவுக்கும், நோய்க்கும், வேலையின்மைக்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்ற நாட்டின் 90 சதவீத மக்கள், தங்களுடைய தலைவிதி எங்கே, யாரால், எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று அறியாமல் இருக்கிறார்களே, அதுதான் இன்றைய அவலம். குடிநீருக்குத் தவமிருக்கும் பெண்கள் பெப்ஸி கடைகளை நொறுக்கத் தொடங்கினால், பட்டினியால் வாடும் விவசாயி மெக்டொனால்ட்ஸ் கடையை இனம் கண்டு சூறையாடினால், தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயி அமெரிக்க ஜீன்ஸ் கடைகளுக்குத் தீ வைத்தால்…. அப்போது யுப்பி வர்க்கம் ‘எனக்கென்ன’ என்று தோளைக் குலுக்காது. ஒவ்வொரு மாதவனாகத் தேடிப்பிடித்து அவர்களுடைய அறவுணர்வை உசுப்பி விடும் சிரமும் நல்லசிவத்துக்கு இருக்காது. இதயத்தில் ‘கடவுள்’ உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அந்த வர்க்கம்தானே இரண்டாகப் பிளந்து விடும்.

அல்லாமல் அந்த வர்க்கத்தின் அறவுணர்வை வேண்டி மன்றாடி நின்றால், கஞ்சித் தொட்டி, உண்டைக் கட்டி அல்லது பிச்சையிடுதல் மூலம்தான் அது தன் அறவுணர்வை வெளிப்படுத்தும். ஒரு வர்க்கம் என்ற முறையில் அதன் மனநிலையும் சிந்தனை முறையும் இதுதான். அந்த வர்க்கத்திலிருந்து நீங்கிய சிலர் இருக்கலாம். ஆனால் மாதவன் அவ்வாறு நீங்கியவர்களின் பிரதிநிதி அல்ல; அந்த வர்க்கத்தின் பிரதிநிதி.

உலகமயமாக்கத்தைச் சாடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு திரைப்படம், அதை உண்மையிலேயே எதிர்த்துப் போராடக் கூடிய உழைக்கும் வர்க்கத்தையோ அதன் பிரதிநிதியையோ மையமான பாத்திரமாகத் தெரிவு செய்யவில்லை. மாறாக உலகமயத்தால் ஆதாயமடைகிற, அதை ஆதரிக்கிற ஒரு விளம்பர சினிமாத் தயாரிப்பாளனை, அதாவது யுப்பி வர்க்க பிரதிநிதியை வம்படியாக இழுத்து வைத்துக் கொண்டு அவனிடம் மூச்சைக் கொடுக்கிறது; அவன் மீது தன் மேதாவிலாசத்தைப் பொழிகிறது.

தொழிலாளி வர்க்கத்தின்பால் மார்க்சிஸ்டு கட்சியின் அணுகுமுறையும் இதுதான். “போனஸ், கூலி உயர்வு, சூரியன், இரட்டை இலை தவிர வேறெதுவும் மக்களுக்குப் புரியாது, புரியத் தேவையில்லை” என்பது அவர்கள் கருத்து.

சமீபத்தில் மாணவர் போரட்டத்தின் போது “உலக வர்த்தகக் கழகத்தின்  ஆணைப்படிதான் கல்லூரிகள் தனியார்மயமாக்கப்படுகின்றன” என்ற விசயத்தை மாணவர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்பதே அவர்களுடைய கருத்தாய் இருந்தது. ஏனென்றால் அதெல்லாம் மாணவனுக்குப் புரியாதாம். “கட்டணம் உயரும் என்ற ஒரு விசயம்தான் மாணவர்களின் அறிவுக்கு எட்டும்” என்பது அவர்களின் முடிவு.

எனில், அரசியல், பொருளாதாரம், தத்துவம் எல்லாம் யாருக்கு? அது ஆங்கிலம் படிக்கத் தெரிந்த மேட்டுக்குடிகளுக்கு. பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிய மற்றும் அனுப்ப விரும்புகிற வர்க்கத்திற்கு உலகமயமாக்கம் குறித்த தத்துவஞான உபதேசம்! அன்றாட வாழ்வில் பார்ப்பனியச் சாதிய சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்துப் போராட முனையாத L.I.C. வர்க்கத்துக்கு வரலாற்றில் பார்ப்பனமயமாக்கம், பூகோளத்தில் சமஸ்கிருதமயமாக்கம் குறித்த ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள்.

களத்தில் நிற்கும் அடிப்படை உழைக்கும் வர்க்கத்துக்கு தீக்கதிர் சார்பில் தீபாவளி மலர், திருவண்ணாமலை தீபம் சிறப்பிதழ்; தொழிலாளி வர்க்கம் தன் அன்றாட வாழ்வில், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கு வழிகாட்ட தீக்கதிர் நாட்காட்டி, அதில் இந்து, கிறித்தவ, இசுலாமியப் பண்டிகைகளின் பட்டியல், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் இன்னபிற… இன்னபிற…

இது இரட்டை அணுகுமுறை மட்டுமல்ல, இரட்டை வேடம்! மார்க்சிஸ்டு கட்சியின் இந்த அரசியல் இரட்டை வேடத்தை அறம் சார்ந்த இரட்டை வேடமாக வெளிப்படுத்துகிறான் நல்லசிவம்.

நண்பர் மதன் தன்னை விருந்துக்கு அழைத்த இடம் முதலாளியின் வீடு என்று தெரிந்த பின்னரும் உள்ளே நுழைகிறான். (இதிலென்ன தப்பு தோழரே, நாம பேச்சுவார்த்தைக்கு முதலாளி வீட்டுக்குப் போறதில்லையா, அறிவொளி இயக்கத் தோழர்கள் கலெக்டர் விருந்துல கலந்துக்கிறதில்லையா?)

முதலாளியின் மகள் கைதவறிச் சிந்திய ஐஸ்கிரீமினால் கோலம் போட்டுக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறார். (நம்ம எழுத்தாளர்கள் குமுதத்தில் போட்டிக்கதை எழுதிப் பரிசு வாங்குறதில்லையா?) அவள் ‘சாரி’ என்று சொன்ன 30 நொடிகளில் காதல் வயப்படுகிறார். (B.J.P.யை ஆதரிச்சதுக்கு ‘சாரி’ன்னு ஜெயலலிதா சொன்னவுடனே நாம கூட்டணி வச்சுக்கறதில்லையா?)

இப்படி ஒரு பட்டியல் போடலாம். அன்பரசுவுக்கு அடுத்து நல்லசிவத்துடன் உறவு வைக்கும் முக்கியப் பாத்திரம் அவன் காதலி – அதாவது முதலாளியின் மகள். “தொழிலாளர்களுக்கெதிராக முதலாளி (காதலியின் அப்பா) செய்யும் சதியை அவளை வைத்து வேவு பார்க்கலாம்” என்று ஒரு தொழிற்சங்கத் தோழர் கூறியவுடனே அதை நிராகரிக்கிறான் நல்லசிவம். இதற்கு அவன் கூறும் காரணம்: தன் காதலி நேர்மையானவள்; இரண்டாவது காரணம்: இது நேர்மையற்ற வழிமுறை.

சிவன் படத்திற்குள்ளேயே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ.910-ஐயும் நல்லசிவன் புகுத்தி விடுகிறானே, பாராளுமன்றத்தில் 50 வருடமாகப் புரட்சியைப் புகுத்துவதுபோல!

“தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை முதலாளி வர்க்கம் கூறிக் கொள்ளும் அறநெறிகளின்படி நடத்த வேண்டும்” என்று இலக்கணம் வகுக்கும் நபரைக் கடந்த காலத்தில் தேடினால் காந்தியிடம் பார்க்கலாம்; நிகழ்காலத்தில் அந்த தார்மீக  ஆவேசத்தை சோம்நாத் சட்டர்ஜியிடம் பார்க்கலாம்.

‘புனிதமான’ அரசியல் சட்டத்தின் மீதும் அது எழுந்தருளியுள்ள பாராளுமன்றக் கருவறையின் மீதும் சங்க பரிவாரத்தினர் காலைத் தூக்கி அலட்சியமாக ஒன்னுக்கடிக்கும்போது, சாட்டர்ஜியின் முகத்தில் ஒளிரும் தார்மீக ஆவேசத்தையும், வாஜ்பாயிடம் நீதி கேட்கும்போது துடிக்கும் அவருடைய உதடுகளையும் யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாது.

பாத்திரங்களை மிக நுட்பமாக ஆய்வு செய்து தனது நடிப்புக்கு மெருகேற்றிக் கொள்ளும் கமலஹாசன் இந்தக் காட்சியைப் படமாக்குமுன் சிறிது நேரம் தூர்தர்சன் நேரடி ஒளிபரப்பை பார்த்திருந்தால் காட்சி வேறுவிதமாக மாறியிருக்கும். இப்படியொரு அறம் வழுவிய யோசனையைச் சொன்ன தோழரை ஓங்கி ஒரு அறை விட்டிருப்பான் நல்லசிவம்!

இதில் வேடிக்கை என்னவென்றால், முதலாளியின் வரவேற்பரையில் ஒவியம் வரைந்து கொடுத்துக் காசு வாங்கித் தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் ‘அறவுணர்வு’ தடுக்கவில்லை. “கலை விலை போகலாம்; கலைஞந்தான் விலை போகக் கூடாது” என்று அவன் சார்பாக அவனுடைய காதலி தத்துவ விளக்கம் தந்து விடுகிறாள்.

மேலும் சிவன் படத்திற்குள்ளேயே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ.910-ஐயும் நல்லசிவன் புகுத்தி விடுகிறானே, பாராளுமன்றத்தில் 50 வருடமாகப் புரட்சியைப் புகுத்துவதுபோல!

மார்க்சிஸ்டு கட்சியின் அரசியலும் அவர்களது அழகியல் ரசனையும் துல்லியமாக ஒன்றுபடும் ஒரு காட்சியும் படத்திலிருக்கிறது. கமலஹாசனைக் கொலை செய்ய முதலாளி அனுப்பும் கூலிப்பட்டாளத்தைத் தன்னந்தனியே நின்று சமாளிக்கிறார் ஹீரோ. நகைச்சுவை நடிகர்களைப் போல தோழர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். பிறகு சண்டையே நகைச்சுவை போல மாறுகிறது; “இந்த உதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று முழக்கமிட்டபடியே கமலஹாசனுக்குப் பின்னே அணிவகுக்கிறார்கள் தோழர்கள்.

“இந்தப் படை போதுமா…” என்று தி.மு.க., அ.தி.மு.க.வின் பின்னே மார்க்சிஸ்டுகள் கோஷம் போட்டுச் சென்ற காட்சிகளையும், சிரிக்கும் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம் எனத் தொழிலாளி வர்க்கத்துக்கு அவர்கள் கண்டுபிடித்துத் தந்திருக்கும் போராட்ட முறைகளையும் மனதில் ஓட விடுங்கள். அந்த அரசியல் இந்தக் காட்சியின் அழகியலுக்குக் கனக்கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

படத்தில் பரிதாபத்துக்குரியவர்களாக வந்துபோகும் பாத்திரங்கள் இரண்டு. முதலாவதாக, பிரளயனின் வீதி நாடகக்குழு. சகலகலா வல்லவனான ஹீரோவுக்கு அவர்கள் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக, நாசர். வாய்க்கு வாய் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சொல்லிக் கொண்டே வில்லன் வேலை செய்யும் M.R.ராதா வகைப்பட்ட பாத்திரம் அவருக்கு. கமலஹாசன் கூறுகின்ற உலகமயமாக்க சகாப்தத்தின் வகை மாதிரி இவரல்ல. அது யார் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டோம்.

பேச்சில் கடவுளும், செயலில் கயமையுமான கதாபாத்திரங்களை அண்ணாத்துரை காலத்துச் சினிமாக்களே போதிய அளவு சித்தரித்து விட்டன. “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று கூறும் இந்த முதலாளிதான் “ஜெய் சீயாராம்” என்று அலறும் இந்துத்துவச் சக்திகளின் வகை மாதிரி என்று கருதிக் கொண்டு சிலர் புளகாங்கிதம் அடையளாம். குஜராத் படுகொலைக்கு ‘பைனான்ஸ் பண்ணியவர்கள்’ N.R.I.யுப்பிகள் என்ற உலகறிந்த உண்மையை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

இந்த சூட்சமம் புரிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட இல.கணேசன் படத்தைப் பாராட்டி விட்டார். நாசர் பாத்திரத்தைக் காட்டி “உங்களுக்குக் கோபம் வரவில்லையா?” என்று அவரிடம் கேட்டால் “நான் அவனில்லை” என்று பதில் சொல்லிவிடுவார்.

இத்தகைய தொலைநோக்கில்லாத ஓட்டைவாயான இராம.கோபாலன் படத்தை எதிர்க்கிறார். “யார் யார் சிவம்” என்ற பாடல் காட்சியில் கன்னிகாஸ்திரி சிலுவை போடுவது மட்டும்தான் அவரை அலைகழித்திருக்கும்.

இல.கணேசனைக் கேட்டிருந்தால் “கிறிஸ்தவர்கள் சேவை செய்வதை நாங்கள் மறுக்கவில்லையே. அதை வைத்து மதமாற்றம் செய்வதைத்தானே கண்டிக்கிறோம்” என்று மிகச் சுலபமாக இந்தக் காட்சிக்குள் நுழைந்து வெளியே வந்திருப்பார்.

“மோசமான ஒரு முதலாளியை இந்து ஆன்மீகவாதியைச் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின் மதவுணர்வைப் புண்படுத்தி விட்டீர்கள்” என்று கமலஹாசனைக் குற்றம் சாட்டிப் பாருங்கள். “நானே ஆன்மீகவாதிதான், நான் தான் கடவுள்” என்று கண் சிமிட்டுவார் நல்லசிவம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, ‘இந்து மதவெறி’ என்று பெயர் சொல்லிக் கண்டிக்காமல் “கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு?” என்று நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்கள் மார்க்சிஸ்டுகள். “எங்கள் இந்துமத உணர்வைப் புண்படுத்தி விட்டீர்கள்” என்று குற்றம் சாட்ட முடியாமல் தவித்தார்களே R.S.S.காரர்கள்! அதே உத்திதான்!

படத்தில் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா என்று நல்ல சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் வருத்தப்பட்டால் அவர்களுக்குக் கூறிக் கொள்கிறோம்: “ஐயா, படத்தையே பாராட்டுகிறோம். மார்க்சிஸ்டு கட்சியின் திரை அவதாரத்தை இத்தனை துல்லியமாக யாரும் வழங்கியதில்லை. ஒருவேளை C.I.T.U.வின் அறிவிப்புப் பலகையைக் காட்டாமல் இருந்திருந்தாலும் இது மார்க்சிஸ்டு கட்சிதான் என்ற உண்மை காட்சிக்கு காட்சி பொருத்தமான கலையம்சத்துடன் எடுத்தியம்பப்படுகிறது. அதற்காக மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்.

– மருதையன்
புதிய கலாச்சாரம்,
பிப்ரவரி 2003

ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !

5

காஞ்சிபுரத்திலிருந்து ஒரு நகரப் பேருந்து.  பக்கத்தில்,  ஒரு பெண் அசதியாக உட்கார்ந்தார்.  உடல் நலமில்லை என்பது பார்த்ததுமே தெரிந்தது. சிறிது நேரம் கழித்து,  “உடம்புக்கு என்னாச்சு” என்றேன்.  “நாலு நாளா, பச்ச தண்ணி பல்லுல படல, மனசே ரொம்ப கஷ்டமாயிருக்கு… சாப்புட நினைச்சாலும், வாந்தி மயக்கமா இருக்கு… அதான் டாக்டரான்ட போய்ட்டு வரேன்” என்றவாறு தன்னுடைய பழைய செல்போனில் வீடியோ ஒன்றை எனக்கும் காட்டினார். அதில், இரண்டு பெண் குழந்தைகள் பள்ளி விழாவில் ஆடுவதற்காக வீட்டில் பயிற்சி செய்துக் கொண்டிருப்பது ஓடியது.  முடிந்ததும் போனை உள்ளே வைத்துவிட்டு  பேசத் தொடங்கினார்.

“சர்மிளா… எங்க பக்கத்துவீட்டுப் பொண்ணு, என் பொண்ணு மாதிரித்தான் இரண்டு பேரும் ஏகனாம் பேட்டை ஸ்கூல 7 வது  படிக்கறாங்க… போன வாரம் இன் நேரம் நினைச்சிக்கூட பார்திருக்கமாட்டோம்…சர்மிளாவ…  வெள்ள துணியில சுத்தி சுடுகாட்டுல புதைப்போம்னு…” சொல்லிக்கொண்டே அழுதார்.

சிறுமி சர்மிளா

எனக்கு, எப்படி ஆறுதல் சொல்லுவது, என்ன விசாரிப்பது என்றே புரியவில்லை… பிறகு, மெதுவாக “ஏன் குழந்தைக்கு ஏதாவது உடம்புக்கு சரியில்லையா?” என்றேன்.

“எம்பொண்ணு… வயசுக்கு வந்திட்டா,சர்மிளா… இப்பவோ, அப்பவோனு இருக்காளேனு பேசிப்போம்.. படிப்புலயும் சுட்டி, வீட்டு வேலைகளை அவ்வளோ மணி மாதிரி செய்யும்… அவங்க, அம்மாவும், அப்பாவும் வண்டியில காய்கறி வியாபாரம்  செய்றவங்க… அவங்களுக்கு மூணுப்பொண்ணு, சர்மிளாத்தான் கடைசி….  அவங்க அம்மா என்கிட்ட சொல்லிட்டு, வீட்டை போட்டதுபோட்டபடியே  விட்டுட்டு போய்டுவா… சர்மிளாத்தான் ஸ்கூல் முடிச்சி வந்ததும் வீட்டை சுத்தம் செய்யும், எல்லா வேலையும் முடிஞ்சதும் உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சுடுவா… போன ஞாயிற்று கிழமை(19-3-17) லீவுங்கிறதால… வீட்டில இருந்தா,  அவளோட அப்பாவும், அம்மாவும் வியாபாரத்துக்கு போய்ட்டாங்க…   காலைல 11 மணியிருக்கும், சர்மிளா, “அக்கா, அக்கா,” னு ஓடி வந்தா. “என்னாடீ” ன்னு கேட்டேன்.. “வீட்டுக்கு பக்கத்துல ஓடு அடுக்கி வைச்சிருக்காங்கள்ள அங்கிருந்த, ஓணான இல்ல என்னனு தெரியல… கடிச்சிருச்சிக்கா…. “னு சொன்னாள்.

எனக்கு பக்குனு ஆயிடுச்சி, எங்க காட்டுனு பார்த்தேன், சோத்துக்கால்ல சுண்டு விரல்ல இரண்டு பல்லு பதிஞ்ச மாதிரி இருந்தது, உடனே குழந்தைய உட்கார வைச்சிட்டு வெளியில் இருந்த என் வீட்டுக்காரர் கிட்ட அடுத்த நொடியே எதிருல இருக்கற அய்யம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு (ஆரம்ப சுகாதார நிலையம்) வண்டில கூட்டிட்டு போக சொன்னேன்…குழந்த தண்ணிக் கேட்டா அதுக்கூட கொடுக்கல…. எதாச்சும் ஆயிடப்போதுனு பயத்துல…..
சீக்கிரமா போனு அவரை தள்ளிவிட்டேன்… அவரும் விழுந்தடிச்சிப் போனாரு…

அங்க போனவரு எனக்கு போன் பண்றாரு… சீக்கிரம் வா… இங்க பாக்க மாட்டாங்களாம்… காஞ்சிபுரத்துக்குத்தான் போகணுமா… ன்னுட்டு…நான் சொன்னேன்…  முதல்ல எதனா ஊசிப் போடச் சொல்லு…ஸ்கூட்டர்ல போக லேட்டாகும்… ஆம்புலன்சு கேளு… னு அவரும் கேட்டீருக்காரு…  ஆனா ஆஸ்பத்திரியில வேலை பார்க்குறவங்க… ஆம்புலன்சுக்கு டிரைவர் இல்ல…. இது,நேரா நீங்க கூப்பிட்ட உடனேல்லாம் வராது. 108-க்கு போன் பண்ணி, விசயத்த சொன்னா, அங்கிருக்கிறவங்க… டிரைவருக்கு தகவல் சொன்னாத்தான் வண்டி எடுப்பாங்க….ன்னு  சொன்னாங்க… உங்க… வண்டி இருக்கே எடுத்துகிட்டு போக வேண்டியது தானே?  என்று, துரத்திவிட்னர்.

எந்த வேதனையும் வெளிக்காட்டாமல், இதையெல்லாம் சர்மிளாவும் உட்கார்ந்து வெறித்து..பார்த்தாள்…..

பிறகு, ஸ்கூட்டரில் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றதும் ஒபி சீட்டு போடச் சொன்னார்கள்.  ஓபி சீட்டு போட்டுக்கொண்டு வந்து, சர்மிளாவிடம், நடக்க வேண்டாம் தூக்கி செல்கிறேன் என்றதற்கு மறுத்து, சர்மிளா கேட்டிலிருந்து, நடந்தே வந்தாள்.
அங்கு, டாக்டர் “என்ன கடித்தது, அதை கூடவே கொண்டு வந்திருக்கலாமே,  நீங்க யாரு… குழந்தைக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

சர்மிளாவுக்கு முதலுதவி கூட தராமல் துரத்திய உள்ளூர் சுகாதார நிலையம்

“எங்க பக்கத்து வீட்டு குழந்தை” என்றதும்… டாக்டர், “அம்மா,அப்பாவை வரச் சொல்லு அப்பத்தான் பாப்போம்… அட்மிஷனுக்கு கையெழுத்து வேணும்… என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “இல்ல, இல்ல,, எங்க தங்கச்சிப் பொண்ணு எது ஆனாலும் நான் பொறுப்பேத்துக்குறேன்… குழந்தைக்கு வேர்க்க, ஆரம்பிக்குது என்னான்னு பாருங்க… அப்பா, அம்மா வந்துட்டே இருக்காங்க… ” னு சொல்லி அட்மிசன் போட வைச்சிருக்கிறாரு…என் வீட்டுக்காரு.  அங்கு,  குழந்தய படுக்கவெச்சதும் வாயில நுரை தள்ளிடுச்சி…  டாக்டருங்க எங்கள வெளியில இருங்கனுட்டு இரண்டு ஊசிப் போட்டாங்க… உடனே எங்க வீட்டுக்காரு எனக்கு போன் போட்டு, குழந்தை நிலைமை பயமா இருக்கு, அவங்க அப்பா அம்மாவுக்கு சொல்லி சீக்கிரம் வரச்சொல்லுன்னாரு… நான்  பக்கத்து வீட்டு பாட்டிய அனுப்பி வெச்சேன். அப்புறம்…  நான் குழந்தை கடிப்பட்ட..அந்த இடத்துலப் போய் கிளறிப்பார்த்தேன்…. சின்ன, மெல்லிசான பாம்பு,  அதைப் பார்த்ததுமே அடிச்சி எரிச்சிட்டேன்…

உடம்பு மட்டும் தான் எங்கிட்டருந்ததே ஒழிய உசிரு எங்கிட்ட இல்ல…  உடனே நானும் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன்…  உள்ளவே விடாம.. டாக்டர் மட்டும் பேசிட்டே இருந்தாரு… குழந்தை நிலைமை மோசமா இருக்கு செங்கல்பட்டு போனா காப்பாத்திடலாமுனு அங்க இருந்து, குழந்தைய மூட்டை கட்ட ஆரம்பிச்சாங்க… ஆம்புலன்ஸ்ல குழந்தைய ஏத்துனாங்க… குழந்தை என்னய வெறிச்சி, வெறிச்சிப் பார்த்தா… அவங்க ஆயாக்கிட்ட… “ஆயா, நான் செத்துடுவேனாயா… ” னு கேட்டா… எங்களால தாங்க முடியல… இன்னுமும் அந்த வார்த்தை என் காதுல கேட்டுட்டேயிருக்கு… சாவுற வயசாம்மா அது…    கடைசில இரண்டு மணி நேர அலைக்கழிப்புக்குப் பிறகு,    செங்கல்பட்டு அனுப்பி, சாவடிச்சி, அறுத்து, வெள்ளத்துணியில பொட்டலம் கட்டி அனுப்பிட்டானுங்களே… னு சத்தமிட்டு அழுதார்.

அவரை தேற்றியபோது, “எப்படிம்மா அழாம இருக்க முடியும்… அதுக்கூட ஸ்கூல்ல படிச்ச புள்ளைங்க, சர்மிளா செத்துட்டான்றத நம்ப முடியாம தினமும் வந்து பார்த்துட்டு போதுங்க… அவங்க அம்மாக்காரி மணிக்கொருக்கா எங்கிட்ட, எம்பொண்ணு உங்கிட்டத்தான் கடைசியா பேசியிருக்கு…. என்ன சொல்ல வந்தாளோ, என்ன வேதனைய அனுபவிச்சாளோ, பக்கத்துல இல்லாம பாவியாயிட்டேனேனு பித்து பிடிச்சி பேசறாளே… எப்பிடி பதில் சொல்லுவேன் நான்… அவங்க அப்பா, அம்மா இருந்தா காப்பாத்தி இருப்பாங்களோ,  நாம வுட்டுட்டோமோனு மனசாட்சி… என்ன கொல்லுதே… என்னா அழகு, என்னா பேச்சு….அது கடைசியா, வீட்டு வேலைய செஞ்சத பார்த்தது… கண்முன்னாடிய ஓடுதம்மா…. கடைசியா பேசுன பேச்சுலயிருந்து….. என்னால மீண்டு வர முடியலேயம்மா… என்று அழுதார்.

அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நான், இறந்த குழந்தையின் தாயாரைப் பார்க்க வேண்டும் என்று மனசு பாரமாக அழுத்த, அவருடனே இறங்கிவிட்டேன்.

இறந்த சர்மிளா உடுத்திய துணி, அவளுக்கு பிடித்த பிஸ்கட், மிட்டாய் வைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள்.

சர்மிளாவின் ஓட்டு வீடு. அங்கு, சர்மிளா பெற்றோர்கள் இறந்த சர்மிளா உடுத்திய துணி, அவளுக்கு பிடித்த பிஸ்கட், மிட்டாய் வைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள்.  தெருக்காரர்கள் ஆறுதல் சொல்ல, தாங்க முடியாத துயரம் அங்கே இறுகியிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சர்மிளாவின் தந்தையிடம் மெதுவாகப் பேசினேன்.

” எப்படியோ எங்களுக்கு தகவல் வந்ததுமா….. பக்கத்தூர்ல தள்ளு வண்டில காய்கறி வியாபாரம் பண்ணிகினு இருந்தோம்.   அலறி அடித்து காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.  டாக்டருங்க…  என்ன கிட்டவே சேர்க்கல….. போன உடனே குறைஞ்சது பத்து கையெழுத்துக் கேட்டாங்க…. எதையும் யோசிக்காம பொண்ணுப் பொழைச்சா போதும்னு போட்டேன்… கடைசியில….. முடியாது… செங்கல்பட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்கனு….. அவசரப்படுத்தி ஆம்புலன்சுல ஏத்திவிட்டுட்டாங்க….. கடைசி வரைக்கும் கடிப்பட்ட எடத்துல எந்த ட்ரிட்மெண்டும் பண்ணல…. குளுக்கோஸ் மட்டும் ரெண்டு கையிலயும் போட்டு என்னைய பிடிச்சிக்க சொல்லிட்டாங்க…… ஆம்புலன்ஸ்சுல ஏத்துனதும்… குழந்தை துவண்டு கருப்பாயிடுச்சி,  நினைவு இல்ல….  சர்மிளா… சர்மிளா……. னு கத்தினேன் “ம்ம்ம்….ம்ம்ம்……னு” ….மொனவுனா குழந்தா…….ஆம்புலன்சுல வேலை பாக்கிற தம்பி, பயப்படாதீங்க….. சீக்கிரம் போய்டலாம்….னு சொல்லி வேகமா கூட்டிட்டுப் போய் விட்டுடுச்சி……. குழந்தையின் முனகல் சுத்தமா நின்னுடுச்சி…… செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்குபோனா அங்க, குழந்தய கீழ இறக்கறதுக்கு சக்கர நாற்காலி இல்லன்னாங்க…… எங்கப் போய் சொல்லுவேன்…. அந்த கொடுமைய…. சக்கர வண்டிக் கேட்டு சண்ட போடுறதா….. துவண்டு கிடக்கிற புள்ளய தூக்குறதா…… நினைச்சிப் பாருங்க.

கூட இருந்த தம்பி… மருந்து பாட்டில்களை தூக்கிகிச்சி, நான் எம்பொண் இரண்டு கையாலயும் அள்ளிக்கிட்டேன்….. பொறந்தப்ப எப்படி ஒண்ணும் தெரியாம கிடந்ததோ…… அதுபோலவே…… எந்த உணர்ச்சியும் இல்ல….. குழந்தை சில்லுனு இருந்தது………. அங்க… சின்னப் புள்ளங்கதான் டாக்டரா இருந்தாங்க…. பெட்டுல போட சொன்னாங்க… போட்டதும் ஒரு நர்சம்மா வந்து, “…ஒண்ணும் இல்ல எதுக்கு தூக்கி வந்தீங்கனு…..”  சொல்லுச்சி… கூட வந்த பக்கத்து வீட்டம்மா… கத்துனாங்க….. இப்பத்தான்மா புள்ள…. ஆயா நான் செத்துடுவேனானு கேட்டிச்சி, ….பேசிச்சிம்மா ….. பாருங்கம்மா… ன்னு அழுதாங்க. பக்கத்துல இருக்கற டாக்டருங்க “மெஷின் வேண்ணா போட்டு பாக்கலாம்..  ஒரு நாள் கழிச்சித்தான் சொல்ல முடியும்” னு சொன்னதும்…  நமக்குத்தான் படிக்கதெரியாதே,  சரி, படிச்சவங்க காப்பாத்தி குடுப்பாங்கனு… ஒத்துக்கிட்டேன்.

சர்மிளாவின் குடும்பத்தினர்.

ஒருநாள் முழுக்க மெஷினப் போட்டு ஷாக் கொடுத்தாங்க…. டாக்டருங்க எல்லாரும் அடிக்கடி வந்துப் பார்த்து நோட்டுல எழுதிப்பாங்க…. என்னன்னு நமக்கு தெரியும்…. கடைசில பெருக்கறவங்கதான் சொன்னாங்…. “அவங்களெல்லாம் படிக்கிறவங்க… அப்படித்தான் செய்வாங்கனு”…… , நான்  ஜில்லுனு இருந்த குழந்த  கையையும், காலையும் தடவி, தடவி விட்டேன்.அது என் கையே மறத்துப்போச்சி…. ஆனா எந்த பிரயோஜனமும்.. இல்ல…  அப்பத்தான் எனக்கு பட்டது இவங்க புள்ளய வைச்சி பாடம் ஏதுனாச்சும் படிக்கிறாங்கனு…. அப்புறம் கேட்டேன்…. எதனா முன்னேற்றம் தெரியுதா…. எனக்கு ஒண்ணும் புடிபடலேன்னேன்…  அவங்க, பெரிய டாக்டர வரவெச்சி சொன்னாங்க…  “நினைவு திரும்பும்னு எதிர்ப் பார்த்தோம்…. இல்ல…..மெஷன எடுத்துடுறோம்…. போஸ்மார்ட்டம் செய்ததும் வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுங்க….  ஆம்புலன்சுக்கு ஏற்பாடு பண்றோம்”னு சொன்னாங்  ….. வெள்ளை துணியிலருந்து எல்லாத்தையும் வெளியே வாங்கிக்கு வான்னு  எழுதிக் கொடுத்தாங்க……  மனசு பூரா கோபம் கொப்பளிச்சிது…. குழந்தைய நல்லா அடக்கம் பண்ணனுமே… என்ன செய்ய…. கத்தி கதறிட்டு வந்துட்டேன்…..

என் குழந்தைக்கு …. எந்த உதவியும் செய்யல…எம்பொண்ணு செத்துப்போச்சி….. நமக்குத்தான் ஒண்ணும்.. தெரியாது, டாக்டருக்கு படிச்சிட்டு வர்றவங்களுக்கு, பாம்புகடிக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? நர்சுக்கு தெரியாதா? அய்யம்பேட்டை ஆஸ்பத்தியில  டாக்டர் வெளியிலகூட வந்துப் பாக்காமா துரத்தியிருக்காங்க…. இதே அவங்க புள்ளயாவோ, பணக்காரன் வுட்டு புள்ளயாவோ இருந்திருந்தா வுட்டுருப்பாங்களா….. ஏழை புள்ளதானே என்னா செய்யப்போறாங்கனு வுட்டுடானுங்க….. நான், பொண்ண புதைச்சிட்டு, மனசு கேக்காம சொந்தகாரங்களோடு ஆஸ்பத்திரிக்கு போனேன்.  கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி டாக்டர வெளிய வரவெச்சேன்…. டாக்டரு இங்க எந்த வசதியும் இல்ல…. இங்க இருந்து டைம வேஸ்ட் பண்ண வேண்டாமுனுதான் அனுப்பினேன்னு சொல்றான்…. அங்க கூட வேலைப் பாக்கிறவங்க…. விதி….. 13 வயசுல பொம்பள புள்ளங்களுக்கு சகடை அடிச்சிருக்கும் அத நீங்கத்தான் முன்னாடிப் பார்த்திருக்கணும்னு சொல்றாங்க….. ஏண்டா பாவிகளா… முதலுதவி பண்ண வேண்டாமா?…… என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே…. பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா….  உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்….

ஒரு விசயம்…. நல்லா யோசிச்சிப் பாருங்க…. எம்பொண்ண சுண்டு விரல்ல பாம்பு கடிச்சிருக்கு….. குழந்தை ஆஸ்பத்திரிக்கு போயிருக்கு, அதுக்கப்புறம் ஸ்கூட்டருல 10 கிலோ மீட்டருக்கு காஞ்சிபுரம் போயிருக்கு…. அங்க இருந்து 100 அடி உள்ள நடந்து போயிருக்கு…..அங்கயும் எந்த கவனிப்பு இல்லாம படுக்க வெச்சிட்டாங்க… நுரை தள்ளிப் போய்ட்டா…. இப்படி.. என்பொண்ணுக்கு வந்த கதி யாருக்கும் வரக்கூடாது……. என ஓவென்று வாய்விட்டு அழுதார்.

அவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது?

– ஜோதி.

காஞ்சிபுரம் என்றால் பட்டுச் சேலைகளும், அந்தப் பட்டுச் சேலைகளின் சங்கமமான பாண்டி பஜாரும் தமிழக தொலைக்காட்சிகளில் அடிக்கடி விளம்பரமாய் ஒளிரும். சங்கரமடம் எனும் மேல் மட்ட அதிகாரத் தரகர் இடத்திற்கு வராத முதலாளிகளோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எவரும் இல்லை. பாஜக-வின் அகில இந்திய தலைவர்கள் முதல் உள்ளூர் நாட்டாமைகள் வரை காஞ்சிபுர சங்கரமடம்தான் அவர்கள் கால் பதிக்கத் தவறாத புண்ணிய பூமி.

இங்குதான் நெசவாளிகள் எனும் பெரும் சமூகப் பிரிவே வதைபட்டு வருகிறது. அழிக்கப்படும் விவசாயத்தின் எச்சமும் மரண அவஸ்தையில் இருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் நிறுவனங்களுக்கு அடிமாட்டுக் கூலி வேலைக்காக உடலை சிதைக்கும் இளைஞர்கள் ஏராளம்.

ஆயினும் இங்கே ஒரு பாம்பு கடித்தால் முதலுதவி செய்வதற்கு அரசு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. ஓடாத ஆம்புலன்ஸ்,  நச்சு முறிவு மருந்தில்லாத மருந்தகம், முதலுதவி செய்யவோ இல்லை பிரச்சினை என்ன என்று விளக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாத மருத்துவமனை ஊழியர்கள் – மருத்துவர்கள்….. அருகாமை பகுதிகளில் மருத்துவமனையோ இல்லை வாகன வசதியோ இல்லாத தமிழக கிராமங்கள் எதுவுமில்லை. ஆனால் இங்கே ஒரு பாம்பு கடிக்காக சிறுமி ஒருத்தி சாக வேண்டியிருக்கிறது. ஜெயா எனும் ஏ 1 குற்றவாளிக்காக கோடிக்கணக்கில் மக்கள் நிதியை செலவழித்த அரசு நிர்வாகம் மக்களை நடத்தும் விதத்திற்கு இந்தக் கொடூரமான கொலை ஒரு சான்று.

செத்துப்போன குற்றவாளி பாசிச ஜெயாவின்  படத்திற்கு முன்னால் கும்பிட்டு விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும், உயிரோடு சிறையிலிருக்கும் குற்றவாளி சசிகலாவின் காலில் விழுகின்ற திருடர்கள் மறுபுறமும் நின்று லாவணி பாட, இக்கேடுக்கெட்ட கூட்டத்தின் காலடியில் மிதிபடும் தமிழகம் மொத்தமும் சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சுடுகாட்டிற்கு காரணமான கயவர்களை சுளுக்கெடுக்காமல் ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றி வருகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகளும், கார்ப்பரேட் ஊடகங்களும்.

மருத்துவமனைகளை செயல்படவைப்பது மட்டுமல்ல, மரத்தும் கொழுத்தும் போன இந்த அரசுக் கட்டுமானத்தை புரட்டிப் போடாமல் இங்கே மக்களுக்கு விடிவு இல்லை.

– வினவு

முல்லை பெரியாறு – திருவாரூர் களச் செய்திகள்

0
முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! -

கத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாளான மார்ச் 23, 2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தேனி லோயர்கேம்பில் ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

ஐந்து மாவட்ட மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமான முல்லை பெரியறு அணையில் கேரள அரசு நயவஞ்சகமாக நீர் தேக்க பகுதியில் கார் நிறுத்துமிடம் அமைத்துள்ளது. இது அணையின் மொத்த கொள்ளளவான 152-அடி நீரை தேக்க விடாமல் செய்வதற்கான சதி செயலின் ஒரு துவக்கம்தான். இந்த செயல்பாடு நீர் தேக்க பகுதியில் பல்வேறு காரணங்களைக் காட்டி நடத்தப்படும் ஆக்கிரமிப்பு ஆகும்.

கேரள அரசானது தொடர்ச்சியாக தமிழகத்திற்கு பல்வேறு வகையில் முல்லைப் பெரியாறு விசயத்தில் துரோகம் செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யவில்லை. இவற்றை கண்டித்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாளில் தொடர் முழக்க போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் துவக்கினர்.
(படங்கலைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்.
தேனி மாவட்டம்.
_____
டாஸ்மாக் கடையை திறந்து மக்களின் தாலியை அறுக்காதே !
டாஸ்மாக் நிர்வாகமே !
68, காவனூர் ஊராட்சி, கருப்பூர் குடியிருப்பு பகுதியில்
டாஸ்மாக் கடையை திறக்கும் திட்டத்தை உடனே கைவிடு !
பொதுமக்களே !
ஏழை, எளிய மக்களின் வாழ்வை சூறையாடும் டாஸ்மாக்கை தடுத்து நிறுத்துவோம் !
தகவல் :
மக்கள் அதிகாரம்.
திருவாரூர் – 96263 52829.

பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

1

2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த லஞ்ச லாவண்யங்களில் முக்கியமான நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிர்லா என்ற தரகு முதலாளியின் அலுவலகங்களில் ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியது, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ). அந்தத் தேடுதலில் 25 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டதோடு, பிர்லா குழுமத்தின் தலைவர் (CEO) சுபேந்து அமிதாப்பின் கணினியில் இருந்து பல கோப்புகள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக குறிப்புகள் இருந்தன. சுபேந்து அமிதாபின் கணினியில் கிடைத்த ஆவணங்கள் ஒன்றில் – “Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?” (குஜராத் சி.எம்.- ரூ 25 கோடி.12 கொடுத்தாச்சு. 13?) என்ற குறிப்பு காணப்பட்டது.

அதாவது மன்மோகன் ஆட்சியின் நிலக்கரி ஊழல் பற்றி புலனாய்வு செய்யப்போன இடத்தில், வேறொரு ஊழலுக்கான ஆதாரம் சி.பி.ஐ. வசம் சிக்கியிருக்கிறது. குஜராத் முதல்வருக்கு பிர்லா நிறுவனம் எதற்காகப் பணம் கொடுத்தது என்ற கோணத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்னொரு விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களை வருமானவரித் துறையிடம் ஒப்படைத்த சி.பி.ஐ, மேற்படி 12 கோடி ரூபாய்க்கு பிர்லா வருமான வரி கட்டியிருக்கிறாரா என்று மட்டும் விசாரிக்கும்படி கோரியது.

அதன்படி வருமான வரித்துறை அமிதாபை பல முறை விசாரித்ததில் “Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?” என்று எழுதியது தான்தான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அது “Gujarat Alkalis and Chemicals” என்பதை (ஒரு இரசாயன நிறுவனம்) குறிப்பதாக விளக்கம் சொல்லியிருக்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று வருமான வரித்துறை தனது 1287 பக்க விசாரணை அறிக்கையில் முடிவு செய்தது. ( http://indianexpress.com/article/india/india-others/regularly-routed-cash-through-hawala-top-birla-executive-tells-income-tax/ )

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் (இடது) மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா.

மோடிதான் அந்த அந்த காலகட்டத்தில் குஜராத் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் பற்றிய வருமான வரித்துறையின் விரிவான விசாரணையிலிருந்து தெரிய வந்த இரண்டு முக்கிய விஷயங்கள் – ஒன்று, பிர்லா குழுமம் ஹவாலா மூலமாக பெருமளவு ரொக்கப் பணம் பெற்று வந்தது; இரண்டு, அவ்வாறு பெறப்பட்ட பணம் உயர் பதவிகளில் இருந்த பல்வேறு நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கிடைத்த ஆவணங்கள் பற்றி வருமான வரித்துறை முறையான ஆய்வு நடத்தி இந்தத் தகவல்களை உறுதி செய்திருக்கிறது.

இரண்டாவது வழக்கு சகாரா குழுமம் தொடர்பிலானது. அந்தக் குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலமாக கருப்புப் பணத்தை புழங்க விட்டதாக உச்சநீதி மன்றத்தால் மார்ச் 2014-இல் திகார் சிறையில் வைக்கப்பட்டவர்.

2014 நவம்பர் 22-ஆம் தேதி டெல்லி நொய்டாவில் உள்ள சகாரா குழுமத்தின் அலுவலகங்களில் தேடுதல் நடைபெற்றது. ரூ.137 கோடி ரொக்கப் பணமும், பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களும், சுப்ரதா ராயின் தனிப்பட்ட ஊழியர்களின் கணினிகளில் இருந்து பல கோப்புகளும் கைப்பற்றப்பட்டன. பல மூத்த அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட ரொக்கப் பணம் பற்றிய விபரங்கள் அவற்றில் இருந்தன.

ஒரு கணினி கோப்பின் அச்சுப் பிரதியில் ‘இன்னின்ன தேதியில் இன்னின்ன நபரிடம் இருந்து இவ்வளவு தொகை பெறப்பட்டது’ என்று பணம் வரத்து பட்டியல் ஒன்று இருந்தது. தொகைகளின் கூட்டல் ரூ.115 கோடி. அதன் பிறகு பல்வேறு நபர்களுக்கு, பல்வேறு தேதிகளில் ரொக்கம் பட்டுவாடா செய்யப்பட்ட விபரங்களும், பணம் கொண்டு கொடுக்கப்பட்ட இடமும், கொண்டு போனவர் பெயரும் இருந்தன.

பிர்லா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபேந்து அமிதாப்.

தேடுதலின் போது கைப்பற்றப்பட்ட அந்த அச்சுப் பிரதியில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி, இரண்டு சாட்சியங்கள் மற்றும் ஒரு சகாரா அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்டு உறுதி செய்திருந்தனர்.
இதே ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் சிறு சிறு மாற்றங்களோடு இன்னொரு கோப்பிலும் இருந்தன. முதல் ஆவணத்தில் “cash given at  Ahmedabad, Modiji” (அகமதாபாதில் கொடுக்கப்பட்ட ரொக்கப் பணம், மோடிஜி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, பிற ஆவணங்களில் “cash given to CM Gujarat” (குஜராத் சி.எம்-க்கு கொடுக்கப்பட்ட ரொக்கப்பணம்) என்று எழுதப்பட்டிருந்தது.

“அகமதாபாதில் மோடிஜி”க்கு கொடுத்ததாக ரூ.40 கோடி, “மத்திய பிரதேச சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.10 கோடி, “சத்தீஸ்கர்  சி.எம்.”-க்கு கொடுத்ததாக ரூ.4 கோடி, “டெல்லி சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பணப் பட்டுவாடாக்கள் 2013-க்கும் 2014 மார்ச்சுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது குஜராத் முதலமைச்சர் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வராக இருந்தவர் பா.ஜ.க.-வின் சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதலமைச்சர் பா.ஜ.க.-வின் ராமன் சிங், டெல்லி முதல்வராக இருந்தவர் காங்கிரசின் ஷீலா தீட்சித்.

சகாரா நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. ஆனால், சகாரா ஆவணங்கள் மட்டுமின்றி முன்னர் குறிப்பிட்ட பிர்லா ஆவணங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பிர்லா ஆவணங்கள் மீது நடத்திய விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும் சகாராவில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி வருமான வரித்துறை சி.பி.ஐ.-க்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் விஷயம் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இப்படிஊழலை இருட்டடிப்பு செய்த வருமான வரித்துறை அதிகாரி கே.வி.சவுத்ரிக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?
வருமான வரித் துறை புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த கே.வி சவுத்ரி, 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) தலைமை கண்காணிப்பு ஆணையராக மோடியால் நியமிக்கப்பட்டார். ராம மோகனராவை ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஜெயலலிதா நியமித்தாரே அதுபோலத்தான்.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.
முதலாவதாக, வருவாய்த் துறை அதிகாரி (ஆட்சிப் பணி அந்தஸ்து – I.R.S.) இல்லாத ஒருவர் கண்காணிப்பு ஆணையராக இதுவரை நியமிக்கப்பட்டதில்லை என்ற முறைகேட்டை சுட்டிக்காட்டினார் பூஷண்.

இரண்டாவதாக,  2-ஜி ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்துக் கொண்டிருந்தபோது, அதோடு தொடர்புடைய பலருடன் பேரம் பேசியதாக உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் சின்ஹா-வின் வீட்டின் வருகைப் பதிவேட்டில், அப்போது வருமான வரித்துறையின் புலன் விசாரணை பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த சவுத்ரியின் பெயர் 4 முறை இடம் பெற்றிருந்தது.

அந்தக் காலகட்டத்தில்தான் ஸ்டாக் குரு ஊழலில் (ஸ்டாக் குரு என்ற மோசடி நிறுவனத்தை ஆரம்பித்து 6 மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நடந்த மோசடி) சவுத்ரியின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம், சவுத்ரியால் விசாரிக்கப்பட்டு வந்த ஹவாலா டீலர் மொயின் குரேஷியும் அதே காலகட்டத்தில் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்.அதாவது, ஸ்டாக் குரு ஊழலுக்காக சவுத்ரியை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரி சின்ஹாவும், ஹவாலா வழக்கில் சவுத்ரியால் விசாரிக்கப்படும் மொயின் குரேஷியும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர். இதுதான் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் வருமான வரித்துறை ஆகியவற்றின் லட்சணம்.

மூன்றாவதாக, எச்.எஸ்.பி.சி. என்ற பன்னாட்டு வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணத்தை பதுக்கி, சுமார் 4500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீதான வருமான வரித்துறை விசாரணையை 3 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதும் திருவாளர் சவுத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசால், முறைகேடான வழியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கே.வி.சௌத்ரி.

இத்தகைய ‘தூய்மை’யான பின்னணி கொண்ட சவுத்ரி, ‘தூய்மை’யான பிரதமரால் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரசாந்த் பூஷண் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பின்னர், 2016 நவம்பர் மாதம் சகாரா – பிர்லா ஆவணங்கள் பற்றிய தகவல் கிடைத்ததை ஒட்டி, அவற்றின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதே வழக்கில் ஒரு மனு தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷண்.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. இந்த வழக்கில் ஆஜரான மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “இத்தகைய ஆவணங்களையெல்லாம் ஆதாரங்களாக ஏற்றுக் கொண்டால், நாட்டில் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று வாதிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றமோ, “இந்த ஆவணங்கள் சில உதிரித் தாள்கள் மட்டுமே. அவற்றின் அடிப்படையில் உயர் பதவியில் இருக்கும் முக்கியமான தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு உயர் பதவியில் இருப்பவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டால் அவர்கள் எப்படி ஆட்சி புரிய முடியும். இன்னும் வலுவான ஆதாரங்கள் இருந்தால் பேசுங்கள் என்று கூறி பல முறை இழுத்தடித்து  கடைசியில் வழக்கை தள்ளுபடியே செய்து விட்டது.

முறைகேடும் ஊழலும் நடந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன வலுவான ஆதாரத்தை தர முடியும்? மோடி –  25 கோடி ரூபாய் என்று ஒரு துண்டு சீட்டில் யாராவது எழுதிக் கொண்டு வந்து காண்பித்தால், உடனே ஊழல் வழக்கு போட முடியுமா என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பும் கேள்வி. இந்த ஆவணங்கள் பிரசாந்த் பூஷண் கொண்டு வந்து காட்டிய உதிரிக் காகிதங்கள் அல்ல. பிர்லா மற்றும் சகாரா அலுவலகங்களில் சி.பி.ஐ.யும் வருமான வரித்துறையும் கைப்பற்றியிருக்கும் ஆவணங்கள். இதற்கு மேல் வலுவான ஆதாரம் காட்ட வேண்டுமென்றால், அது லஞ்சப் பணத்துக்கு பெற்றுக்கொண்டவர் வழங்கும் ரசீதாகத்தான் இருக்க முடியும். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, ஊழல் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது.

1990-களில் பா.ஜ.க தலைவர் அத்வானி முதற்கொண்டு பல்வேறு கட்சிகளின் முக்கியமான தலைவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஜெயின் ஹவாலா டயரி வழக்கில் உச்சநீதி மன்றம் கொடுத்த வழிகாட்டலின்படி, ‘ஆதாரங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் உயர்பதவியில் இருப்பவர்கள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள்  தவறாமல் விசாரிக்கப்பட வேண்டும்’. 2013-இல் லலிதா குமாரி வழக்கில், “எந்த ஒரு ஆதாரம் கிடைத்தாலும், அந்த ஆதாரம் உண்மையானதா, போலியானதா என்று கவலைப்படாமல், அது உண்மையானது என்ற ஊகத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ஒன்று தீர்ப்பளித்திருந்தது.

இந்த உச்சநீதிமன்ற வழிகாட்டல்களின்படி சகாரா- பிர்லா ஆவணங்கள் மீது விசாரணை நடத்தும்படி பிரசாந்த் பூஷண் தலைமை கண்காணிப்பு ஆணையம், நேரடி வரிகளுக்கான வாரியம், அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அலுவகம், உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட கருப்புப் பணத்துக்கான சிறப்பு விசாரணைக் குழு ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
வருமான வரி  சட்டத்தின் 132(4A) பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் உள்ள விபரங்கள், மேற்படி விசாரிக்கப்படுவது வரை உண்மை என்றே கருதப்பட வேண்டும். மேலும், ஐ.டி. துறையின் மதிப்பீட்டு அறிக்கையில் சகாரா தானாகவே முன்வந்து ரூ.1,217 கோடி பணத்தை ஒப்படைத்ததாக பதிவாகியிருக்கிறது.

ஜெயின் ஹவாலா டயரிகளில் இருந்ததைவிட வலுவான ஆதாரங்கள் சகாரா மற்றும் பிர்லா ஆவணங்களில் இருந்தன.ஜெயின் குறிப்புகளில் “LKA”, “HN”, “AB” என்று சில முதலெழுத்துகள் குறிப்பிடப்பட்டு பல லட்சம் கொடுக்கப்பட்டதாக பதிவாகியிருந்தது.அதன் அடிப்படையிலேயே அத்வானி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது, உச்சநீதிமன்றம்.

பிர்லா ஆவணங்களிலோ, இன்னும் தெளிவாக, விபரமாக குறிப்பிட்ட திட்டங்களுக்கு இன்ன அமைச்சகத்துக்கு, இன்ன அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகைகள் பற்றிய குறிப்பான விபரங்கள் காணப்படுகின்றன.இவை தொடர்பான மின்னஞ்சல் பரிவர்த்தனை விவரங்களும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ளன. அந்த மின்னஞ்சல் எழுதப்பட்ட காலத்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் தனது அலுமினியம் ஆலைக்காக மத்திய பிரதேசத்தின் சிங்கரவுலி நிலக்கரி வயல்களின் மகான் பிளாக்கிலிருந்து நிலக்கரி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விபரங்கள் காட்டுவது என்னவென்றால், நவம்பர் 16, 2012 தேதியிட்ட “GC October/ November” என்ற ஆவணத்தில் “Gujarat CM”-க்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான குறிப்பை ஏதோ கிறுக்கல் என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதைத்தான்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய உச்சநீதி மன்ற நீதிபதி பிரசாந்த் பூஷண்.

“இது துரதிர்ஷ்டவசமானது. ஊழலுக்கு எதிராகவும், பொது வாழ்க்கையில் நேர்மைக்காகவும் நடத்தப்படும் இயக்கத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு. நிலக்கரி ஊழலிலும், 2ஜி ஊழலிலும் சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட்டு தன்னை சிறப்பித்துக் கொண்ட உச்சநீதி மன்றத்தின் பிம்பத்தின் மீதும் இது ஒரு கறுப்புப் புள்ளி. அதிகாரத்தில் இருக்கும் பலம் பொருந்தியவர்கள் சிறை செல்ல நேரிடும் என்றால், தீர்ப்பெழுதும் உச்சநீதி மன்றத்தின் கைகள் நடுங்குகின்றன” என்று கூறியிருக்கிறார் பிரசாந்த் பூஷண்.
ஆ.ராசாவையோ, கனிமொழியையோ, சாகித் பல்வாவையோ, அம்பானியின் ஊழியர்களையோ சிறைக்கு அனுப்புவதற்கு உச்ச நீதி மன்றத்தின் கைகள் நடுங்கவில்லை. ஆனால் அதே வழக்கில் அம்பானியையும் டாடாவையும் நீரா ராடியாவையும் சிறைக்கு அனுப்ப உச்ச நீதிமன்றத்துக்கு துணிவில்லை. இது நேரடி சாட்சியமே இல்லாமல் அப்சல் குருவுக்கு தூக்குதண்டனை விதித்த உச்ச நீதிமன்றம். பொய் சாட்சி என்று தெரிந்த பின்னரும் பேரறிவாளனை விடுவிக்க மறுக்கும் நீதிமன்றம்; நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் தீர்ப்பு சரியா தவறா என்று மாதக் கணக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதான ஊழல் வழக்குகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் நீதிமன்றம்.

உச்சநீதி மன்றத்தின் கைகள் நடுங்குவது அதிகாரத்தில் இருக்கும் மோடி பற்றிய பயத்தால் மட்டுமில்லை, இந்த வழக்கில் இதற்கு மேல் அக்கறை காட்டினால், ஒட்டு மொத்த நீதிபதிகளின் மாண்பும் தெருவுக்கு வந்து விடும் என்ற கவலையினாலும் கூடத்தான். மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டும் பிர்லா முதலான தரகு முதலாளிகளின் பணப் பட்டுவாடாவும் விசாரணைக்கு அப்பாற்பட்டவை. அதை விசாரிக்க உச்சநீதிமன்றம் முயற்சித்தால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்கள் எதிர்த்தரப்பால் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டு விடும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியும்.

சஹாரா−பிர்லா ஆவணங்கள் குறித்த வழக்கைப் புலன் விசாரணை செய்யவும் மறுத்து, அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமிதவராய் (இடது) மற்றும் அருண் மிஸ்ரா.

பிர்லா, சகாரா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பல 100 கோடி கணக்கில் ஹவாலா பணத்தை ரொக்கமாக கையாள்கின்றன என்ற உண்மை, பண மதிப்பு நீக்கத்தை கொண்டாடிய ஊடகங்களின் 24 மணி நேர கவரேஜில் வரவில்லை. இதே காலகட்டத்தில் எஸ்ஸார் நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்னஞ்சல்களில் சகாராவைப் போலவே பல்வேறு தரப்பு மூத்த அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விபரங்களும் இருள் உலகுக்கு அனுப்பப்பட்டு விட்டது. நிலக்கரி இறக்குமதி மதிப்பை அதிகமாக காட்டி பணத்தை வெளிநாட்டில் பதுக்கிய அதானி, அம்பானி குழுமங்கள் பற்றிய செய்தியும் புதைக்கப்பட்டு விட்டிருக்கிறது.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து தன்னிடம் உள்ள பணம் கருப்புப் பணம் அல்ல என்று ஒவ்வொரு குடிமகனும் நிரூபிக்க வேண்டும் (நிரூபிக்கப்படுவது வரை எல்லோரும் குற்றவாளிகளே) என்று கூறிய உத்தம சீலர்தான் பிரதமர் மோடி. அவரது பெயர் குறிப்பிட்டு பணப் பட்டுவாடா நடந்திருப்பது பற்றிய ஆதாரங்கள் கையில் இருந்தும் சி.பி.ஐ.யும் வருவாய் புலனாய்வுத்துறையும் விசாரிக்க மறுக்கின்றன.இவை போதுமான சாட்சியங்கள் அல்ல என்கிறது நீதிமன்றம்.

சஹாரா குழுமத்திடமிருந்து முறைகேடாகப் பணம் பெற்றுள்ள சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வர் ராமன் சிங் (இடது), ம.பி. மாநில பா.ஜ.க. முதல்வர் ‘‘வியாபம் ஊழல் புகழ்’’ சிவராஜ் சிங் சௌஹான் (நடுவில்) மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.

லஞ்சம் வாங்குபவர் பிரதமர், அதை மூடி மறைத்தவர், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்; அதை விசாரிக்க மறுப்பவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்; மொத்த விவகாரத்தையும் இருட்டடிப்பு செய்பவை ஊடகங்கள்.
இத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் எல்லாம் புலன் விசாரணைக்கு உத்தரவிடுவோமானால், அரசமைப்பைக் காக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இயங்கவே முடியாது. ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்காது என்று நீதிபதிகள் அருண் மிஸ்ராவும் அமிதவா ராயும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மைதான், ஜனங்களின் நலனைக் காட்டிலும், ஜனநாயகத்தின் நலன் அல்லவோ முக்கியம்!

-அறிவு

புதிய ஜனநாயகம், மார்ச் 2017

கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

6
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

ந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்மீது திணித்து வருகிறது. ஆனால், ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்து மதவெறிக் கும்பலின் ஆரிய பித்தலாட்டங்களுக்கு எதிரான மிக முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டை போடும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியது. பா.ஜ.க.  அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அறிவுத்துறையினர்,  அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் எனப் பலரும் கண்டனங்கள் எழுப்பிய பிறகு, கீழடி ஆய்வுகள் தொடரும் என அறிவித்துத் தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மைய அரசின் தொல்லியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு பிரிவுகளாக அகழாய்வு நடத்தியது. வைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி  பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் இருந்ததற்கான சான்று.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

சென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது.  அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கீழடியில் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தும், வெறும் 50 செண்ட் நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்தவை. மொத்தமாக உள்ள 110 ஏக்கர் நிலத்திலும் அகழ்வாய்வு செய்தால், அது தமிழக வரலாற்றை மட்டுமல்ல; இந்திய வரலாற்றையே திருப்பிப் போடும் ஒரு அகழ்வாராய்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 1970-க்குப் பிறகு தமிழகத்தில், மைய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆய்வு கீழடி மட்டுமே.

கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில்தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி.  “தமிழ் மொழியை ஒரு சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த மொழியியல் அறிஞர் கால்டுவெல்லின் கருத்துக்குச் சான்றாக கீழடி நாகரிகம் இருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பெருந்தெய்வங்கள் மற்றும் மதமற்ற சமூகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை நிறுவுகிற ஆய்வுகளை, இந்தியச் சமூகமே வேத-வைதீக மரபுடையது எனப் பிதற்றிக் கொண்டிருக்கும் காவிக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மட்பாண்டங்கள் உட்புறத்தில் சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்று

அதனால்தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. குஜராத்தின் தொலவிராவில் 13 ஆண்டுகள், லோத்தலில் 5 ஆண்டுகள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளோடு மங்களம் பாடுவதற்கு பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டது. தற்போது வேறு வழியின்றி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடைபெறும் என அறிவித்திருக்கிறது. தமிழக மக்கள் விழிப்போடு இல்லையென்றால், இந்த அறிவிப்பைக் கிடப்பில் போட்டுவிடவும் காவிக் கும்பல் தயங்காது.

மேலும், அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 (கார்பன் தேதியிடல்) பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறைதான் முடிவு செய்யும். இந்நிலையில் இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில்  இருந்து 28 பொருட்களையும், தொலவிராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் குறைந்தது பத்து மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், இரண்டை மட்டுமே கார்பன்–14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்நதியே சிந்து சம்வெளி நாகரிகத்திற்கான தொடக்கம் எனக் கூறி, தாங்கள் இதுவரைப் பிரச்சாரம் செய்தது அனைத்தும் உண்மை என நிரூபிக்கக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற இக்காவிக்கூட்டம், அறிவியல்பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை மட்டும் மாற்றந்தாய் மனப்பாங்கு கொண்டு பார்க்கிறது. மேலும், அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களைக் காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற உண்மையை இந்துத்துவா கும்பல் எப்போதும் ஏற்றுக் கொள்வது கிடையாது. காவிக்கு ம்பலின் வரலாற்றுத்  திரிபின் படி , ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அதேபோன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம், அதனைத் தாண்டி வேறு எந்த கலாச்சாரமும் இந்தியாவில் இருக்கவில்லை. சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்றும், மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்துதான் தோன்றின என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், திராவிடர் என்ற கருத்தாக்கம், ஆரிய-திராவிடப் பாகுபாடு, திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியது ஆகியவை ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எனக் கூறி,  தொன்மை வரலாறையெல்லாம் மறுத்து வருகிறது.

வட்டவடிவிலான உலைகள்

ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே நாடு – இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்றவாறு நம் நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்கவே இந்துத்துவா கும்பல் விரும்புகிறது. ஆனால், இதனை உண்மை என நிறுவுவதற்கு அவர்களிடம் சான்றுகள் எதுவும் இல்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பனைகளை, கட்டுக் கதைகளை மட்டுமே அவர்களால் சான்றுகளாகக் காட்ட முடிகின்றது. இந்தக் கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல் துறையின் முழுநேரப் பணியாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.

காவிக்கும்பலின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு வரலாறு நெடுகிலும் தமிழகம்  ஒரு எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஆரிய-திராவிட முரண்பாட்டையும் ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப்படுத்தியதையும் முன்வைத்துத் தமிழகம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்ற பிரச்சாரத்திற்கு எதிராக, தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் சார்பு இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய செம்மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் கால்டுவெல்லால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமஸ்கிருத, ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக  கீழடி அகழ்வாய்வு அமைந்திருக்கிறது.  சீப்பை ஒளித்துவைத்துவிட்டுக் கல்யாணத்தை நிறுத்திவிடும் முட்டாள்தனம் போல, கீழடி அகழ்வாராய்ச்சியைத் தடுப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிடலாம் எனப் பகற்கனவு காண்கிறது, காவிக் கும்பல்.

-அழகு

புதிய ஜனநாயகம், மார்ச் 2017

மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கும் திருச்சி மண்டல போலீசு !

0

PP Logo

அனுப்புதல் :
க.காளியப்பன், மாநில பொருளாளர்,
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
அண்ணா நகர், சிவாஜி நகர் வழி
தஞ்சாவூர்.

பெறுநர் :
திருமிகு. காவல் துறைத் தலைவர் அவர்கள்,
மத்திய மண்டலம்,
திருச்சி.

அய்யா,

பொருள்: பொதுக்கூட்டம்,  ஆர்பாட்டம் போன்றவற்றிற்கு  காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது, அமைப்பு குறித்து அவதூறான கருத்துக்களை காவல்துறையினர் பரப்புவது குறித்து நடவடிக்கை கோரி மனு

எமது அமைப்பான மக்கள் அதிகாரம் தமிழகத்தையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடி வரும் அமைப்பு என்பதை அனைவரையும் போன்றே தாங்களும் அறிவீர்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி எல்லா கட்சிகள், அமைப்புகள் போன்று எமது கருத்துக்களையும் மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், அமைப்பை வளர்க்கவும் எமக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறோம்.

ஆனால் அண்மைக் காலமாக தங்கள் தலைமையிலான திருச்சி மண்டலத்தில் எமது அரசியல் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக பொதுக்கூட்டம், ஆர்பாட்டம், தர்ணா போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவதுடன் எமது தோழர்களின் பிரச்சாரத்திற்குத் தடைகளை உருவாக்குகின்றனர். மேலும் எமது அமைப்பைப் பற்றி தவறான கருத்தைப் பரப்பி மக்களிடம் பீதியூட்டுகின்றனர். இந்த நடவடிக்கைகளில் உளவுப்பிரிவினர்  குறிப்பாக கியூ பிரிவினர் ஈடுபடுகின்றனர்.

நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறையினர் குறிப்பிட்ட அமைப்புக்கு எதிராக செயல்படுவது சட்டவிரோதமானது,  ஜனநாயக விரோதமானது. இதற்கு ஆதாரமாக ஒருசில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறோம்.

  1. தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் நாள் திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டம் நடத்த 17.01.2017ல் அனுமதி கோரினோம். ஆனால் கடைசி நேரத்தில் ரத்து செய்து அறிவித்தனர். மீண்டும் 25.02.2017 அன்று நடத்த அனுமதி கோரினோம் இதையும் கடைசி நாள் நள்ளிரவு ரத்து செய்ததுடன் எமது தோழர்கள் முரளிஇ செல்வம் ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது 29.03.2017 அன்று நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தினை ஏற்கவே மறுத்துவிட்டனர். எனவே பதிவஞ்சலில் அனுப்பியுள்ளோம்.
  2. இம்மாதம் 15ந் தேதி (15.03.2017) மணப்பாறையில் தர்ணா நடத்த அனுமதி கோரினோம். வாய்வழியாக அனுமதியளித்து விட்டு தர்ணா தொடங்கிய நேரத்தில் அனுமதியை மறுப்பதாக அறிவித்து 25 தோழர்களையும் கைது செய்தனர்
  3. கரூரில் சுவரொட்டி ஒட்டியதற்காக இரு தோழர்கள் 26.01.2017 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
  4. பிப்ரவரி 17-ம் தேதி மாணவர்களின் புத்தக அட்டையில் திருவள்ளுவர் படம் கொண்ட லேபிள் ஒட்டியதற்காக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  5. அதே போன்று திருச்சியில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
  6. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு நல்லாண்டார் கொல்லை ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் வந்து ஆதரித்துப்பேசி வருகின்றனர். போராட்டத்திலும் கலந்து கொள்கின்றனர். எமது தோழர்களும் போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொள்கின்றனர். ஆனால் அங்குள்ள உளவுப்பிரிவினர், குறிப்பாக கியூ பிரிவினர் எமது தோழர்களை மட்டும் குறிப்பாக தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என அவதூறாகப்பேசி மக்களிடம் பீதியூட்டுகின்றனர். எமது அமைப்புத் தோழர்களை ஆதரித்துப் பேச அனுமதிக்கக் கூடாது என மக்களை மிரட்டுகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அதை அவமதிக்கும் செயலாகும். மேலும் காவல் துறை குறிப்பிட்ட அமைப்பு மற்றும் அதன் அரசியல் கொள்கைகள் குறித்து எதிர்ப்பிரச்சாரம் செய்வதும், பொய்யான கருத்தைக் கூறி அவதூறு செய்வதும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.

எனவே போலீசார்  எமது அமைப்புக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவும்,எமது சட்டப்பூர்வ உரிமைகளை மறுப்பதைக் கைவிடவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி !

தங்கள் உண்மையுள்ள
க.காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு

மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் ! டி ஜ மெட்டல் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் !

0

கொலைப்பழி, வன்முறைப்பழி சுமத்தி வாழ்நாள் சிறை உள்ளிட்ட தண்டனை வழங்கப்பட்ட மாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும். முதலாளிகளது அடியாளாக செயல்பட்டு வருகின்ற அரியானா மாநில அரசைக் கண்டித்தும். பொய்வழக்கு என்பதை அறிந்தும் அநீதி மன்றமாக செயல்பட்டுள்ள நீதித்துறையை அம்பலப்படுத்தியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து  இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

பு.ஜ.தொ.மு-வின் இணைப்புச் சங்கங்களும் இத்தகைய இயக்கத்தினை முன்னெடுத்து வருகின்றன. கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஆலைவாயில் கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்ற பல்வேறு வடிவங்களை கையாண்டு வருகின்றன.
பு.ஜ.தொ.மு-வின் இணைப்புச் சங்கமான டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கமும், அதே ஆலையில் இயங்கி வருகின்ற பு.ஜ.தொ. முன்னணியால் வழிநடத்தப்படும் காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியும் இணைந்து 22.3.2017 அன்று காலை 7.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. நிரந்தர மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு டி.ஐ. மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் செல்வன் தலைமை தாங்கினார்.
இந்த சங்கங்களின் சிறப்புத்தலைவரும், பு.ஜ.தொ.மு-வின் மாநிலப் பொருளாளருமான தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். “முதலாளிகளது இலாபவெறிக்காக தீவிரமாகி வருகின்ற காண்டிராக்ட் வேலைமுறையை எதிர்த்து மாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்கள் போராடினார்கள். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை, போர்க்குணம் ஆகியவற்றைக் கண்டஞ்சிய முதலாளி வர்க்கம் போராடிய தொழிலாளர்தள் மீது வன்முறையை ஏவிவிட்டதோடு, கொலைப்பழி சுமத்தி சிறையில் அடைத்துள்ளது.
தொழிலாளி வர்க்கம் ஒன்று திரண்டு போராடுவதன் மூலம் மாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையையும், தொழிலாளி வர்க்கத்துக்கு விடப்படுகின்ற அச்சுறுத்தலையும் முறியடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.” விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களது ஒற்றுமைக்கு சான்றாக அமைந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் ( மேற்கு).

பொறுக்கி போலீசு சேதுமணி மாதவனுக்கு பத்தாண்டு சிறை !

0

ஞ்சை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் அளித்த தீர்ப்பு 20-03-2017 அன்று காவல் ஆய்வாளரும் பொறுக்கியுமான சேதுமணி மாதவனை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தது.

ஆய்வாளர் சேதுமணி சிறப்பு குற்றத்தடுப்பு (என்கவுண்டர்) பிரிவில் முதன்மை இடத்தில் இருந்தவர். நேர்மையான அதிகாரி என்றும், ரௌடிகளுக்குச் சிம்மசொப்பனமானவர் என்றும் ஒளிவட்டம் உருவாக்கப்பட்டு தஞ்சையில் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்.

காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார், துணை கண்காணிப்பாளர் மூர்த்தி, துணை ஆய்வாளராக சேதுமணி மாதவன் அடங்கிய இக்கூட்டணி தஞ்சையில் கொடிகட்டி ஆண்டனர். எந்தப் பகுதிப் புகாராக இருந்தாலும், பணமோசடி வழக்குகளைத் தான் பணியாற்றும் காவல் நிலைய புகாராகப் பெற்று விசாரித்துக் கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பதில் இழிபுகழ் பெற்றவர் இந்த சேதுமணி மாதவன்.

பொறுக்கி போலீசு சேதுமணி மாதவன்

தஞ்சை ஆட்டோ ஓட்டுனர் முத்துசாமி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கட்டைப் பஞ்சாயத்து பாலு என்கிற பாலசுப்ரமணியன் என்று ஒரு கும்பல் எப்போதும் இவர் பின்னால் நின்று செயல்படும். ‘நான் தேவன்டா’ என்று சாதியை அடிக்கடி சொல்லி வீரத்தை வெளிக்காட்டியவர். ஆனால் ஏழைபாழைகள் என்று வரும் போது அவர்கள் “தேவர்” சாதியாக இருந்தாலும் துன்புறுத்துவார்.

தரைக்கடை தேங்காய் வியாபாரி காசிநாத தேவரை ஊரை விட்டு மதுரைக்கு ஓடிவிடு என்று மிரட்டியவர். தரைக்கடை உருளைக்கிழங்கு வியாபாரி கணேசனின் கைகளை உடைத்து கட்டுப்போட்டு வழக்குப்பதிவு செய்தவர். இவரால் வியாபாரி சேட்டு காவல்துறை கொட்டடியில் வைத்து சித்ரவதை செய்யப்பட்ட போது தரைக்கடை வியாபாரிகள் திரண்டு சென்று மீட்டு வந்தனர்.

இவை அனைத்தும் MVK மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் பாரதிமோகன் மற்றும் மருத்துவர்களுக்காக மாலைநேர தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்த சேதுமணி மாதவன் செய்த திருப்பணிகள். சங்க உணர்வின்றி இருந்த எங்களைச் சங்கமாக அணிதிரள வைத்தவர் சேதுமணி என்று வலிகளோடு நன்றியையும் பதிவு செய்கிறார்கள் தரைக்கடை வியாபாரிகள்.

பணமோசடி வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கென்று அழைத்து வரப்பட்ட கோவையைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்ற பெண் கணினிப் பொறியாளர், தஞ்சை டெம்பிள் டவர் விடுதியில் 19.11.2007 அன்று கொலையுண்ட செய்தியையும், அப்பெண்ணைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி மரணத்தை விளைவித்த தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்துறை ஆய்வாளர் சேதுமணி மாதவன் மற்றும் தஞ்சை பூக்கார 1-ஆம் தெரு பாலு என்ற கட்டைப்பஞ்சாயத்து போலீஸ் புரோக்கரையும் கைது செய்ய பல்வேறு அமைப்புகளின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானவுடன் மக்கள் கலை இலக்கியக்கழகம், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலை சிறுத்தைகள், மனித உரிமை கழகம், ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இது தற்கொலையல்ல பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு நடந்த கொலை என அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிய பின்னர்தான் பொறுக்கி ஆய்வாளர் சேதுமணி மாதவன் மீது பெயருக்கு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது காவல்துறை.

கோவை அகிலாண்டேஸ்வரி காவல் கொலைக்கு நீதிகோரும் கூட்டமைப்பு தஞ்சையில் உருவாக்கப்பட்டு தஞ்சை புகைவண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், பனகல் கட்டிடம் அருகில் ஆர்ப்பாட்டம், மருத்துவக்கல்லூரி எதிரில் ஆர்ப்பாட்டம், சேதுமணி மாதவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது ஆர்ப்பாட்டம் என்று தொடர் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் இப்பொறுக்கி போலீசை சிபிசிஐடி விசாரிக்குமாறு வற்பறுத்தி விரிவான இயக்கத்தை நடத்தினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்கள் சிலர் சேதுமணியின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்த போதும் கூட்டியக்கத்திற்கு வரமறுத்தது. அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தின் முன்னணியாளர் தோழர் தையல்நாயகி, அகிலா தற்கொலை வழக்கை வெளியில் கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தாலும்   CPI கட்டுப்பாட்டில் இருந்த அவ்வமைப்பு போராட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆய்வாளர் சேதுமணி மாதவனைத் தப்பிக்க வைக்க தொடக்கம் முதலே தஞ்சை மாவட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் முயற்சி செய்தனர். சேதுமணி மாதவன் காவலர் கணேசன் கட்டப்பஞ்சாயத்து பாலு இவர்கள் மீது ஆள்கடத்தல், அடைத்து வைத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கற்பழித்து மரணம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய் என்று கூட்டமைப்பு போராடியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுமணி மாதவன் சிறையில் அடைக்காமல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் துணைபுரிந்தது. போராட்டக்குழுவின் எதிர்ப்பால் பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சேதுமணி மாதவன் பற்றி சிலர் தெரிந்தும், பலர் தெரியாமலும் அவர் நேர்மையான அதிகாரி எனப் பிரச்சாரம் செய்தார்கள். சேதுமணி மாதவன் ரௌடிகளை ஒழிக்கிறேன் என்று மார்தட்டிக் கொண்டு ஒரு பகுதி ரௌடிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு எதிர்கோஷ்டி ரௌடிகளை மிரட்டிப் பணம் பறிப்பது பணம் தராதவர்களை அடித்து, உதைத்துச் சுட்டு விடுவேன் என்று மிரட்டிப் பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது, மேலும் சிறுகுற்றம் புரிந்த அப்பாவிகளின் கைகளை முறிப்பது, கால்களை உடைப்பது, சாலையோரங்களில் வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழைகளை எட்டி உதைப்பது பொருள்களை நாசம் செய்வது, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது போன்ற கொடிய செயல்களையும் செய்துள்ளர்.

நிலம் மோசடி செய்யும் ரியல் எஸ்டேட் பேர்வழிகளுக்கு அடியாளாய் இருந்து பணம் வாங்குவதும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டிப் பணம் பறிப்பது என சட்டவிரோதமாக செயல்பட்டு லட்சக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் யோக்கிய சிகாமணி தான் சேதுமணி மாதவன். இது தொடர்பாக, தமிழ்நாடு மனித உரிமை கழகத்தின் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் பெற்றுள்ளவர் சேதுமணி.

தீர்ப்பின் நகல்

வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி கூட்டமைப்பு போராடியது. சேதுமணியைக் காப்பாற்ற சாதிஅமைப்புகள், பிழைப்புவாதிகள் ஓரணியில் திரண்டு சேதுமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினர். தஞ்சை பார்கவுன்சில் முற்போக்கு வழக்குரைஞர்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சேதுமணிக்குப் பிணை கேட்டு அணிதிரண்டனர்.

இந்த நிலையில் அகிலா, மரணத்திற்கு முன் அவரது அன்னைக்கு எழுதிய கடிதம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்திற்குக் கிடைத்தது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அக்கடிதத்ததை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அகிலாவின் கடித நகலை சுவரொட்டியாக்கி இயக்கமெடுத்தது. இது வழக்கில் ஒரு திருப்பத்தைத் தந்து முக்கியமான ஆதாரமாகி சேதுமணியை சிறைக்கு அனுப்பியுள்ளது.

கிரிமினல் குற்றவாளி ஆணைக்கிணங்க இயங்கும் அரசு, ஊழல் பேர்வழிகள், கிரிமினல்களின் உற்ற நண்பனாக விளங்கும் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் இருக்கும் நம்பிக்கையில் முகமலர்ச்சியோடு சேதுமணிமாதவன் தியாகியைப் போல சிறை சென்றிருக்கலாம். எனினும் தொடர் மக்கள் போராட்டங்களே இத்தகைய பொறுக்கி போலீசை தண்டிப்பதற்கு உதவி செய்யும். ஏனெனில் போலீசுத் துறையே இத்தகைய பொறுக்கிகளை உருவாக்குவதற்கு காரணமாக அமைவதால் மக்கள் தமது அதிகாரத்தை மீட்டெடுக்கும் போராட்டமாகவும் இவர்களை தண்டிக்கும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.

-வினவு செய்தியாளர்

புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?

1

தமிழக மின் துறையில் புரட்சிகர தொழிற்சங்கம் உருவானது எப்படி ?

னியார்மயம்-தாராளமயம் – உலகமயம் அமுலாக்க தொடங்கிய பிறகு தொழிற்சங்க சுல்தான்களாகவும், தொழிலாளி வர்க்கத்தை தொழிற்சங்கவாத, பொருளாதாரவாத புதை சேற்றில் தள்ளி சந்தா மற்றும் துறை வாரியாக தேர்தல் நிதி, கட்சி வளர்சி நிதி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை எதாவது ஒரு பெயரில் மாநாடு என்று நிதி திரட்டுவதை மட்டும்  தொழிற்சங்க நடவடிக்கை என்று சீரழிவின் உச்சத்திற்கே சி.ஐ.டி.யு. – சி.பி.எம் – CITU – CPI(M) கட்சி சென்றுள்ளது.

ஆனால், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான மோடி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கும் இந்திய அரசியல்-பொருளாதார நிலைமைகளோ தொழிலாளர்களை மாற்றுப் பாதையில் சிந்திக்கும்படி நிர்பந்தித்துக் கொண்டே உள்ளது. சமீப பத்தாண்டுகளில் மேற்கு வங்கம், திரிபுராவில் ஓட்டுப்பொறுக்கி அரசியலை கூட நடத்துவதற்கு திராணியின்றி சிபிஎம் கட்சியினர் தோல்வியடைந்து வருகின்றனர்.

தடைகளைத் தாண்டி புரட்சிகர சங்கத்தை துவக்கிய முன்னணியாளர்கள்

தொழிற்சங்கத்திலும், அரசியலிலும் பூச்சியமாகி விட்ட இவர்களது தலைமையை உதறி தள்ளிவிட்டு வெளியேற ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறும் தொழிலாளர்களை முதலாளிகளும் போலிசும் செய்யத் துணியாத பல்வேறு கீழ்த்தரமான நடவடிக்கைகளை செய்து அணிகளை தக்க வைக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் செய்த எட்டப்ப வேலையை பட்டியலிட்டு மாளாது. இனியும் சிஐடியு – CITU சங்கத்தை நம்புவதற்கு ஊழியர்கள் தயாராக இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக மின்சாரவாரியத் துறையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதிய தொழிற்சங்கம் துவங்கப்பட்டுள்ளது

 

தமிழகத்தில் மின்சாரவாரியத்தை பொறுத்தவரையில் குறிப்பாக 16 மாதமாக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தள்ளிப்போடுவதோடு, 2.5 கோடி மின் இணைப்புகள் நிலுவையில் உள்ள நிலையில் வெறும் 74,000 ஊழியர்களை மட்டும் கொண்டு வேலை வாங்குகிறது நிர்வாகம். ஏற்கனவே 1.5 கோடி இணைப்புகள் நிலுவை இருந்த போது ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றினார்கள். ஆனால், இப்பொழுது வேலை அதிகம், ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் புதிய ஆட்களை நிரப்பாமல் இருப்பது குறித்து  தொழிற்சங்கம் போர்குணமாக போராடவில்லை, பணி உயர்வு என்று எதையும் பேசுவதில்லை. இந் நிலையில் சிஐடியு மீது  நம்பிக்கையிழந்து அதனை விட்டு வெளியேறி வருகின்றனர்.  சிலர் வேறு புகலிடம் தெரியாமல் அங்கேயே குமுறிக் கொண்டுள்ளனர்.

தோழர்.ஸ்ரீதர்

கடந்த 2013-ம் ஆண்டு சொத்து குவிப்பு குற்றவாளி ஜெயா ஆட்சியில்  கடும் மின்வெட்டு நிலவிய போது தமிழகம்  தழுவிய அளவில் பு.மா.இ.மு, புஜதொமு ஆகிய அமைப்புகள் சார்பாக “திட்டமிட்டே திணிக்கப்படுகிறது மின்வெட்டு! “பவரை கையில் எடுத்தால் பவர் வரும்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டது. இந்த  பொதுக்கூட்டங்கள் மின் துறை ஊழியர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது.

தொடர்ந்து பு.ஜ.தொ.மு-வின் செயல்பாடுகளை, தொழிலாளர்கள் பிரச்சனையில் பு.ஜ தொ.முவின் நிலைப்பாடுகளை கவனிக்க ஆரம்பித்ததுடன் துண்டறிக்கை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், புதிய தொழிலாளி மற்றும் புரட்சிகர அமைப்புகளின் வெளியிடுகளை தொடர்ந்து படித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பில் செயல்பட்ட தோழர்  ஸ்ரீதர், இளமின் பொறியாளர். சிஐடியு சங்கத்தின் தொழிற்சங்க  செயல்பாடுகளும், இன்றைய அரசியல் சூழலில் தொழிலாளி வர்க்கத்தை காக்கும் கொள்கை இல்லாமல் செயல்படுவதையும் பிடிக்காமல் அதிலிருந்து விலகி எமது தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை தொடர்பு கொண்டு இணைவதாக கூறினார். அவரை தொடர்ந்து முருகையன், பாவாடைசாமி, சண்முகம் மற்றும் பல தோழர்களை இணைத்து புதிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி  என்ற புதிய தொழிற்சங்க அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் துவக்க விழாவை முறையாக நடத்துவதென முடிவு செய்து அதற்கான பிரசுரம், சுவரொட்டிகள் அனைத்தும் தயாரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த CPM – சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன்,  தோழர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு “நீங்கள் வேறு சங்கத்திற்கு செல்ல வேண்டாம் எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம்” என்றார். அதற்கு தோழர் ஸ்ரீதர், ”நான் வெளியேறி இன்னொரு அமைப்பிற்கு வந்த பிறகு பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று பதிலளித்துள்ளார்.

அதற்கு CPM மாதவன் “சரி செல்வது என்று முடிவெடுத்து விட்டீர்கள் ஏஐடியூசி – சிபிஐ கட்சிக்கு (AITUC)  செல்லுங்கள். புஜதொமு NDLF க்கு செல்ல வேண்டாம்” கூறியுள்ளார். 0அதற்கு தோழர் ஸ்ரீதர் “நான் எங்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல தேவையில்லை” என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

தொடர்ந்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் (இவர் தொழிலாளிகளுக்கு நெருக்கமனவரா இல்லை முதலாளிகளுக்கு அனுசரணையானவரா என்பதை சிபிஎம் கட்சியினரே அறிவார்கள்) தோழர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு “ஒரு விபத்து நடக்க போகிறது. அந்த விபத்தில் மாட்டிக் கொண்டால் மரணம் நிச்சயம். அந்த விபத்து தான் NDLF – புஜதொமு” என்று பதறினார். “அதனை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று தோழர் பதில் கூறவே இணைப்பை துண்டித்து விட்டார். இனிமேல் அவரிடம்  பேசி பயனில்லை என்பதை புரிந்து கொண்டு முன்னாள் மாவட்ட செயலரை அனுப்பி இந்த விழாவை தள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார்… தோழர் “முடியாது” என்றதும் சென்று விட்டார்.

பிறகு, மாட்டு வண்டி  சங்கத் தொழிலாளர்களையும், ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தொழிலாளர்களையும் தூண்டி விட்டு பேச்சுவார்த்தைக்கு  சமாதான தூது அனுப்பினார்கள். இந்த வழிமுறைகள் எல்லாம்  தோழர் ஸ்ரீதரிடம் பேசி  முடியாமல் போனதால் தோழர் முருகையனிடம் வந்து பேசியுள்ளார்கள். தொடர்ந்து வீட்டிற்க்கு செல்வது, வேலை செய்யும் அலுவலகம் செல்வது என தொடர்ந்து அவரை சந்தித்துள்ளார்கள். அவரும் உறுதியாக நிற்கவே வேறு வழியின்றி அணிகளிடம் இப்பிரச்சனையை கொண்டு சென்றனர்.

கடந்த 15-ம் தேதி அன்று சிஐடியு கூட்டம் போட்டு தோழர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டோம். அந்த விழாவிற்கு யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்த வேலையை செய்து கொண்டிருக்கும்பொழுதே கடலூர் மாவட்டபோலீசின் SP – CID மற்றும் கியூ பிரிவு CITU  முன் வைத்த இதே கோரிக்கைகளை மிரட்டும் தொனியிலும், ஆலோசனைக் கூறுவது போலவும் களமிறங்கினர் என்பது CITU க்கும் போலிசுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

கிராமம் தோறும் கிளை கமிட்டியை கூட்டி யாரும் கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று தடை போட்டுள்ளார்கள். தொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று  அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.

மூன்று கார்களை வாடகைக்கு பிடித்து சிதம்பரம், விருதாசலம், நெய்வேலி, தொழுதூர், திட்டக்குடி ஆகிய ஊர்களுக்கு சென்று யாரும் சிஐடியு வில் இருந்து வெளியேராதீர்கள். இது நக்சலைட் சங்கம், இதில் சேர்ந்தால் வழக்கு வரும் என பீதியூட்டி பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இவர்களின் பொய் பிரச்சாரத்தை அன்னவெளி,கூத்தப்பாக்கம் ஆகிய பகுதி தொழிலாளிகள் காறி துப்பினர். அதுமட்டுமில்லாமல்,   பிரசுரம் போட்டு இவர்களை  நீக்கி விட்டோம். இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் விநியோகித்தனர். இந்த சம்பவம் சிஐடியு தொழிலாளர்கள் மத்தியில் எரிச்சலை எற்படுத்தியுள்ளது.

சங்கத்தில் இருந்து வெளியேறியவர்களை நீக்கிவிட்டதாக பொய்யுரைக்கும் சி.ஐ.டி.யு நிர்வாகம்

ஏற்கனவே அவர்கள் வெளியேறி விட்டார்கள். போனவர்களை பற்றி  எதற்கு நாம் பேச வேண்டும். நமது சந்தாவில்  நாமே நோட்டிஸ் போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று CITU உறுப்பினர்களே தலைமையிடம் எதிர்கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிலாளர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து விலகி வெறுமனே பொருளாதர கோரிக்கை, சட்டவாதத்தை மட்டுமே முன்னிறுத்தி வளர்ப்பதால் தான் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்கிறது CITU சங்கம்.

அதன் வெளிப்பாடு தான்  உறுப்பினர்கள் பிரிந்து போகும் ஜனநாயக உரிமையை கூட மறுக்கிறது. இவர்கள் தான் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு மற்ற ஓட்டுப்பொறுக்கி கட்சிகளிடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க போகிறார்களாம்.

இதற்கிடையில் அரசு தரப்பில்  கியூ பிரிவு போலிசு தோழர்.ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அது நக்சலைட் அமைப்பு. அதில் சேராதீர்கள். உங்கள் வேலைக்கு பிரச்சனை வந்துவிடும் என்று மிரட்டியுள்ளார்கள். இந்த மிரட்டலுக்கு பயப்படாத தோழர், என் வேலை போனாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அது மா-லெ கட்சி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு தோழர்.ஸ்ரீதர் “எல்லா கட்சியிலும் பொறுப்பாளர்கள் தான் தொழிற்சங்கத்திலும் பொறுப்பில் இருப்பார்கள். CITU செளந்தர்ராஜன் கூட அப்படி தான் என்று கூறியதும் வேறு வழியின்றி போனை வைத்து விட்டது கியூ பிரிவு போலிசு.”

ஒரு பக்கம் சிஐடியு வில் இருந்து  பிரிந்து போகக்கூடாது என்று போலிக் கம்யுனிஸ்ட்களின் மிரட்டல், மற்றொருபுறம் அரசு தரப்பில் போலிசு மிரட்டல் என்று தொடர்ந்து வந்த  தடைகளை  எல்லாம் தகர்த்து தான் புதிய சங்கம் வெற்றிகரமாக துவக்கப்பட்டது. இன்னும் வரவிருக்கும் பல்வேறு தடைகளையும் தகர்ப்போம்.

-வினவு செய்தியாளர், புதுச்சேரி
(புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உதவியுடன்)

பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !

0

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 6

துளசியம்மா, செருப்பு தைக்கும் தொழிலாளி, சென்னை சைதாப்பேட்டை.

“மகளிர் தெனமா? காதலர் தெனமுன்னா கேள்விப்பட்டுக்குறேன். பசங்க சொல்லிகினு கெடக்கும். இது இன்னான்னு தெரியாதும்மெ?

வயசா? தெரியாத கேள்வியா பாத்து கேளும்மே நீ. நீயே போட்டுக்கோ.

எனக்கு வெவரம் தெரியச் சொல்லோ, பொழப்புத் தேடி அப்பா கோவளத்துலேந்து சென்னைக்கி இட்டாந்தாரு. ஆளான மொதலா நானும் கட்டட வேலைக்கி போயினுருந்தேன். கல்யாணம் ஆச்சு அவரும் சித்தாளுதான். 2 பையன், ஒரு பொண்ணு. படாத பாடுபட்டு பொண்ண கட்டிக் குடுத்தேன். மருமகங்காரன் குடிபோதையில எம்பொண்ண கொளுத்தி சாவடிச்சிப்புட்டான். கேசு போட்டு ஸ்டேசனுக்கெல்லாம் அலஞ்சேன். ஒங்களுக்குள்ளேயே தீத்துகினு போங்கனானுங்க. எம் மகளா நெனச்சு பேரப் பிள்ளைய இட்டுனு வந்து வளக்கேறேன் 11 ஆச்சு. முடியலன்னாலும் பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன்.

நடந்து போகச்சொல்லா கீழ விழுந்துட்டேன். காலு எலும்பு துருத்திகினு போச்சு. கட்டட வேலைக்கி போக மிடியல. அப்பா செஞ்ச செருப்பு தக்கிற தொழில 7 வருசமா செஞ்சுனுருக்கேன். புருசங்காரன் என்னேரமும் குடிபோதையில இருக்கான். பையனுக்கு வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.

இப்பிடியான ஆம்ளைய வச்சுகினு நான் வீட்டாண்ட குந்திகினு இருக்க முடியுமா? வீட்டு வாடக ரெண்டாயிரம். எனக்கு ஒரு நாளைக்கி 200, 300 கெடைக்கும். ஒரு நா ஒன்னுமே இருக்காது. நேத்துப் பாரு ஒரு ரூவா கூட இல்ல கை காசு போட்டு நாஸ்டா வாங்கி துன்னேண். மாசத்துக்கொருக்க பாரீசு போயி செருப்பு தைக்க ஊசி, நூலு, லெதரு பட்ட, ஆணி, பாலிசு, கொடகம்பி எல்லாம் வாங்கினு வருவேன்.

இன்னா பேசினே இருந்துட்டு பொசுக்குன்னு கெலம்புறெ காபி வாங்கினு வாரேன், ஒரு வா குடிச்சுனு போமே!

பானுமதி, ஒப்பந்த துப்புறவு தொழிலாளி.

யதை கேட்டதும் தெரியாது என்று வெட்கத்துடன் சிரித்தார்.

“மகளிர் தினம்  என்னான்னு எனக்கு தெரியாது. விடியக்குள்ள வேலைக்கி வந்துருவேன் இதெல்லாம் தெரிஞ்சுக்க நேரமும் இருக்காது.

இது அரசாங்கம் கொடுத்த வேலை கெடையாது. காண்டிராக்ட் படிதான் வேலை பாக்குறொம். 5500 ரூபா சம்பளம். காலையில 6 மணிக்குள்ள வந்துறனும் மதியம் 2.30 மணிக்கு பொறவுதான் போகனும். வீட்டுக் குப்பைங்க தெரு குப்பைங்க எடுக்கனும். பிளீச்சிங் பவுடர் போடனும். தொடப்பம், மருந்து, கைப்பிடி கம்பு எல்லாம் காண்ராக்ட்ர் வாங்கிக் குடுத்துருவாங்க. எல்லாத்தையும் பாத்து பக்குவமா வச்சுக்கனும், அடிக்கடி தேஞ்சுருச்சுனு சொல்லக் கூடாது.

இந்தச் சம்பளம் மட்டும் குடும்பத்துக்கு போதாது. எம் பசங்க ரெண்டு பேரும் லாரி கிளீனர் வேலை செய்றானுங்க. சாப்பாட்டுக்கு கஸ்டம் இல்லாம வண்டி ஓடுது. மாசத்துல ஒரு நாளு லீவு உண்டு, நாமா போட்டா சம்பளத்துல பிடிச்சுப்பாங்க. தீபாவளி பொங்கலுக்கு போனசெல்லாம் கெடையாது, விருப்பப்பட்டா ஏதாச்சும் கொஞ்சம் காசு தருவாங்க. வருசத்துக்கு 2 சேல தருவாங்க அம்புட்டுதான்.”

அவரிடம் பேசிக்கொண்டிருந்த இடத்தில் அதிமுக – திமுக கட்சி போஸ்டர் இருந்தது. அதை காண்பித்து பேசினார்.

“இவங்கப் போல ஆளுங்க மீட்டிங் போட்டா குப்பை இல்லாமெ சுத்தமா கூட்டி பவுடர் போடனும். கூட்டம் முடிஞ்சதும் அதேப் போல சுத்தப்படுத்தி பவுடர் போடனும். வழக்கத்துக்கு அதிகமா அன்னைக்கி மட்டும் வேலை இருக்கும் மத்தபடி எப்பவும் போலதான் வண்டி ஓடிட்டு இருக்கும்.”

லட்சுமி, வயது 58, பொதுக் கழிப்பறை  பராமரிப்பாளர்.

சென்னையில் பல இடங்களில் இலவச பொதுக் கழிப்பிடம் அரசியல் கட்சி ஆதரவோடு ஏரியா தாதாக்களுக்கு ஏலத்துக்கு விடப்படுகிறது. அதில் வரும் வசூலில் அமுக்கியத் தொகைப் போக சொற்பமாக பராமரிப்பும் நடக்கிறது. அந்த வகையில்தான் லட்சுமியம்மா வேலை செய்கிறார்.

“இங்க மூனு வருசமா வேலை செய்றேன். காலையில 9 மணிக்கெல்லாம் வந்துருவேன் ராத்திரி 9 மணிக்கிதான் போவேன். நடுவுல 3 தபா கக்கூச அலசி விடுவேன். வசுலாகுற காசுல பாதிய காண்ட்ராக்டர்ட்ட குடுத்துறனும். கக்கூசு போறவங்க 5 ருவாயும் தருவாங்க 3 ருவாயும் தருவாங்க. ஒரு நாளைக்கி 100, 150 கெடைக்கும். பெருசா ஒன்னும் வேலை இல்லையே குந்திக்கிட்டு காச வாங்கி வச்சுக்கப்போறோம். வீட்டுல குத்திருந்தா ஆருப்பா ஒத்த ருவா தருவா.

தாம்பரத்துல பேரு கூட வரமாட்டேங்குது துணி தைக்கிற கம்பெனில 7 வருசமா வேலை பாத்தேன். அங்கேயும் எல்லா எடத்தையும் கூட்டி பெருக்கி கக்கூசு கழுவனும். வேலைக்கி போயிட்டு வரச் சொல்லோ ரயிலாண்ட தடுக்கி விழுந்து கை முறிஞ்சிப் போச்சு. ஆறு மாசம் வீட்டுலதான் இருந்தேன். வேற எங்கயும் அலைய முடியாது. வீட்டாண்டயே இருக்குன்னு இங்க வேலைக்கி வந்துட்டேன்.

புருசெ புள்ள இருந்தும் இல்லாத மாதிரிதாப்பா. வாச்சுமேனு வேலைக்கி போறான் அந்தாளு. புள்ள போஸ்டர் ஒட்டப் போவான். அப்பனும் மகனும் குடிச்சே அழியிரானுங்க. மருமக ரெண்டு பிள்ளைங்கள வச்சுட்டு வதபடுறா. நானும் வீட்டுல உக்காத்துட்டு சாப்புட முடியுமா சொல்லுப்பா?

வினவு செய்தியாளர்கள்

அமெரிக்கக் கோக்கே வெளியேறு ! – ம.க.இ.க பாடல் வீடியோ

0

 

நெல்லையில் தாமிரபரணி ஆற்றை உறிஞ்சுக் கொண்டிருக்கும் ‘கோக்’ ஆலைக்கு எதிராக 2005 -ம் ஆண்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் அங்கே பிரச்சார இயக்கமும் போராட்டமும் நடைபெற்றது.  அப்போது எழுதப்பட்டு அவ்வட்டாரத்தில் பிரபலமாக பாடப்பட்ட போராட்டப் பாடல் இது. ஜல்லிக்கட்டை தடை செய்த டெல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவில் நடந்த எழுச்சிப் போராட்டத்தின் போது தோழர் கோவனால் பாடப்பட்ட இப்பாடல் ஆயிரக்கணக்கான மக்களால் வரவேற்கப்பட்டது. அத்தகைய மக்கள் குரலால் அமெரிக்க கோக்கே வெளியேறு என்ற முழக்கம் இன்று தமிழகம் எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. வணிகர் சங்கங்கள் பெப்சி கோக்கை விற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றனர். பெருவாரியான மக்களும் அவற்றை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையிலும் தாமிரபரணியில் மற்ற தொழிற்சாலைகள் நீரை பயன்படுத்தும் போது கோக் ஆலை மட்டும் உறிஞ்சக் கூடாதா என்று உயர் நீதிமன்றம் (அ)நியாயம் பேசியது. கூடவே கோக் – பெப்சி ஆலைகள் நமது நீரை உறிஞ்சலாம் என தீர்ப்பை வழங்கி தனது உண்மை முகத்தை காட்டியுள்ளது. இதே காலத்தில்தான் தமிழகத்தில் விவசாயிகள் பரவலாக தற்கொலை செய்து வருகின்றனர். தாமிரபரணியை அமெரிக்காவின் கோக் உறிஞ்சக் கூடாது என்பதும் விவசாயிகளின் போராட்டமும் வேறு வேறு அல்ல.

“தாமிரபரணி எங்கள் ஆறு – அமெரிக்க கோக்கே வெளியேறு” பாடல் தற்போது முறையான இசை காட்சிகளோடு வெளியிடுகிறோம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இப்பாடலை எடுத்துச் செல்வதன் மூலம் கோக் பெப்சிக்கு எதிரான விழிப்புணர்வை அரசியல் உணர்வாக மாற்றுவதற்கு முயல்வோம். பாடலைப் பாருங்கள், பகிருங்கள். இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து செய்வதற்கு நன்கொடை தாருங்கள்!

 

தாமிரபரணி எங்கள் ஆறு
அமெரிக்கக் கோக்கே வெளியேறு

தண்ணீர் விற்பனைச் சரக்கல்ல
தாயும் விற்பனைச் சரக்கல்ல
தாய் நாடும் விற்பனைச் சரக்கல்ல
அமெரிக்கக் கோக்கே வெளியேறு…       (4)

கட்டபொம்மன் சுந்தரலிங்கம்
கப்பலோட்டிய வ.உ.சி. – எங்கள்
பூலித்தேவன் பிறந்த மண்ணிது
அமெரிக்கக் கோக்கே வெளியேறு…      (4)

எம் கண்ணில் நிற்குது கயத்தாறு – இது
இன்னொரு விடுதலை வரலாறு            (2)
இந்தத் தீயின் எரிபொருள் தண்ணீரு
அமெரிக்க கோக்கே வெளியேறு…          (4)

சென்னை – கோவை : பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் கூட்டம் !

0

மார்ச்,23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள் : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்!

சென்னைக் கருத்தரங்கம்:
நாள்: மார்ச் 23 மாலை 5 மணி
இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை
(வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்)

  • கருத்தரங்கம்: தலைமை – தோழர் ராஜா, செயலர், புமாஇமு, சென்னை
    உரையாற்றுவோர்:
  • பேராசிரியர் சம்சுல் இஸ்லாம், டெல்லி பல்கலைக்கழகம்
  • டாக்டர் எழிலன், நிறுவனர், இளைஞர் இயக்கம்
  • தோழர் துரை. சண்முகம், ம.க.இ.க,
  • தோழர் ரமேஷ், நிறுவன உறுப்பினர், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்,
  • தோழர் ம.சி. சுதேஷ்குமார், மாநில இணைச் செயலர், புஜதொமு, தமிழ்நாடு
  • தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு – 94451 12675, 94444 61480,
94453 68009, 88075 32859


கோவைக் கருத்தரங்கம்:

நாள் : 23.03.2017
நேரம் : மாலை ஐந்து மணி
இடம் : எஸ்.ஆர்.ஐ கிளை அலுவலகம் , கோவை.

நிகழ்ச்சி நிரல்
தலைமை : தோழர் சரவணன், மாவட்டக் குழு, பு.ஜ.தொ.மு , கோவை.
சிறப்புரை : தோழர் விளவை இராமசாமி , மாநில துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ் நாடு.
நன்றியுரை : தோழர் திலீப், மாவட்ட செயலர், பு.ஜ.தொ.மு , கோவை.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோயம்பத்தூர். தொடர்புக்கு  90924 60750

ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

1

 “அவர்கள் (முஸ்லீம்கள்) ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” – இது கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியாரின் பிரச்சார உரை. சுவாமி அசிமானந்தா, சாத்வி ஜோதி, சாத்வி ப்ரக்யா, சுவாமி சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்ட சாமியார்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், இந்த சாமியாரைக் குறித்து அதிர்ச்சி அடைய மாட்டீர்கள். ஆனால் மேற்சொன்ன சாமியார்களை விட அபாயகரமான சாமியாரைக் குறித்து தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் வேறு யாருமல்ல,  கடந்த ஞாயிற்றுக் கிழமை 19.03.2017 உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் தான் அவர்.

“ஒரு இந்துப் பெண்ணை எடுத்தால், நாங்கள்100 முஸ்லீம் பெண்களை எடுப்போம்” என அறிக்கை விட்ட யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்தைப் பொறுத்தவரை,  குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியைப் போன்று மதவெறிப் பேச்சால், அடிக்கடி மீடியாக்களின் விவாதங்களில் பேசப்படும் நபர். தற்போதைய உத்திரகாண்ட் மாநிலத்தில் பிறந்த யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் அஜய் மோகன் பிஷ்ட். கல்லூரிக் கல்விக்குப் பின், 1990-ம் ஆண்டு இந்தியா முழுவதும் இரத்த வெள்ளம் ஓட வைத்த ஆர்.எஸ்.எஸ் – விசுவ ஹிந்து பரிஷத்தின் இராம ஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அச்சமயத்தில் இவரது இரத்தவெறியைப் பார்த்து வியந்த கோரக்பூரின் ‘குரு கோரக்நாதர்’ ஆலயத்தின் தலைமைச் சாமியார் அவைதியநாத், அஜய்யை தமது சீடராக ஏற்றுக் கொண்டு, அவருக்கு யோகி ஆதித்யநாத் எனப் பெயர் சூட்டினார்.

யோகி ஆதித்யநாத் முதன்முதலாக தமது 26வது வயதில் (1998), கோராக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்று தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் ’ஹிந்து யுவ வாஹினி’ என்னும் ஒரு அடியாள் படையை உருவாக்கினார். இவ்வானரப் படையை வைத்து 1998 – 2007 காலகட்டத்தில் மட்டும், கோரக்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 கலவரங்களை நடத்தியிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய ‘பெருமைகள்’ இந்துத்துவக் கும்பலிடையே வெகு வேகமாகப் பரவக் காரணம், கலவரங்களைத் தொடங்க அவர் எடுத்துக் கொள்ளும் காரணங்கள் தான். மோடிக்கு குஜராத் கலவரம் நடத்த இரயில் எரிப்பு காரணம் தேவைப்பட்டது.  ஆனால் யோகி ஆதித்யநாத்துக்கு மசூதிக்கு அருகில் அரசமரம் வளர்ந்தது கூட கலவரம் செய்ய போதும். இத்தகைய திறன் தான் இந்துத்துவக் கும்பலின் மத்தியில்  ஆதித்யநாத்தின் பெருமையை கொண்டு சேர்த்தது.

மசூதிக்குள் வளர்ந்த அரச மரத்தை வைத்து ஒரு மதக் கலவரம், பான்பராக்கை மென்று  துப்பியதில் இரு நபர்களுக்கு நடுவே நடந்த சண்டையை வைத்து ஒரு மதக் கலவரம், இரு தனிநபர்களுக்கு இடையே இருந்த சிறு தகராறை வைத்து ஒரு மதக் கலவரம் என யோகி ஆதித்யநாத் நடத்தியிருக்கும் கலவரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆதித்யநாத்தின் உத்தரவுப்படி, 1998-2007-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடத்தப்பட்டன.

கோரக்பூரில் 2007-ம் ஆண்டு ஆதித்யநாத்தால் முன் நின்று நடத்தப்பட்ட கலவரம், இந்தியாவையே பதற வைத்தது. ஜனவரி மாத இறுதியில், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு கோரக்பூரில் இசுலாமியர்கள் ஒரு பேரணி நடத்தினர். அந்த சமயத்தில் இந்துத் திருமணத்தில் இரு தரப்புகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பேரணியில் பங்கேற்ற இசுலாமியர் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட இராஜ்குமார் அக்ரகர் என்பவர் பேரணிக்கு வந்த இசுலாமியர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத், கோரக்பூருக்கு சுற்றுவட்டார பகுதி முழுக்க தமது விஷ-வன்மப் பிரச்சாரங்களின் மூலம் இந்து, முசுலீம் கலவரத்தைத் தூண்டினார்.

ஆதித்யநாத்தின் “ஹிந்து யுவ வாஹினி” சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து பெரும் கூட்டத்தைத் திரட்டி வந்து, இசுலாமியர்களின் கடைகளுக்குத் தீ வைப்பதும், அவர்களது பொருட்களைச் சூறையாடி, திருடிக் கொள்வதும் என மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது.

கருத்துப்படம் – முத்து

இக்கலவரத்தின் தாக்கம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. யோகி ஆதித்யநாத்துக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இரத்து செய்யப்பட்டது. ஆதித்யநாத்தின் “ஹிந்து யுவ வாஹினி” – வானரக் கும்பல் கைது செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பும் இல்லாமல் அடியாள் படையும் இல்லாமல், கோரக்பூருக்குள் செல்வதற்கு பயந்த ‘மாவீரர்’ ஆதித்யநாத், தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக்க் கூறி, தமக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்கும்படியும் கேட்டு நாடாளுமன்றத்திலேயே கண்ணீர் விட்டுக் கதறினார்.

அதன் பின்னர், சிறு சிறு கலவரங்களை நடத்துவதைக் கைவிட்டு, அதிகாரவர்க்கத்தைத் தனது கைக்குள் போட்டுக் கொண்டு திட்டமிட்ட கலவரங்களை நடத்தத் தொடங்கினார்.

உத்திரப் பிரதேசத்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற முசாஃபர்நகர் கலவரங்களைத் தொடர்ந்து, லவ்-ஜிஹாத் என்னும் பெயரில் இந்துப் பெண்களைத் திட்டமிட்டு காதலித்து இசுலாமிய இளைஞர்கள் மதமாற்றம் செய்து வருவதாகக் கூறி இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரங்களை ஏற்படுத்தினர். கர்-வாப்சி என்னும் பெயரில் மாற்று மத்த்தினரை மிரட்டி, மதம் மாற்றும் வேலைகளிலும் ஈடுபட்டார். 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஆதித்யநாத்தின் கை மேலும் ஓங்கியது. பகிரங்கமாக இசுலாமிய விரோத அறிக்கைகளை வெளியிடுவது என அவ்வப் போது தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டிருந்தார்.

இதுவரை யோகி ஆதித்யநாத்தின் மீது கலவரம் செய்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், இடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொடூர ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை எதுவும் இந்தச் ‘சாமியார் ’ முதலமைச்சர் ஆவதைத் தார்மீகமாகவும், சட்டரீதியாகவும் தடுக்கவில்லை என்பது தான் சிறப்பு.

இந்தக் கிரிமினலை உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக்குவதன் மூலம், உத்தரப் பிரதேசத்தில் வாழும் முசுலீம்களுக்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருக்கும் மதச்  சிறுபான்மையினருக்கும் பகிரங்கமாகச் சவால் விட்டிருக்கிறது மோடி – அமித்ஷா கும்பல். ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை உபயோகித்து ஆட்சிக்கு வந்த மோடியைப் போலவே, அகிலேஷ் யாதவின் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையையும், ஆதிக்க சாதி அரசியலையும் வைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.  இவரது தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கையில் இந்த ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதோ இல்லையோ, உத்தரப் பிரதேசத்தில் இரத்த ஆறு ஓடும் என்பது மட்டும் புரிகிறது.

ஒரு தேர்ந்த ரவுடியை, நாடறிந்த காவி பயங்கரவாதியை, பல வழக்குகளின் குற்றவாளியை, முசுலீம்களை வெளிப்படையாகவே கொல்வதாக மிரட்டும் ஒரு வன்மம் பிடித்தவரை முதலமைச்சராக அறிவிப்பதன் மூலம் பார்ப்பனிய பாசிசத்தின் வெளிப்படைத்தன்மையை அறிவித்திருக்கிறார் மோடி.

என்ன செய்யப் போகிறோம்?

-நந்தன்

ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

0

ஜெயலலிதா எப்படிச் செத்திருந்தால் நமக்கென்ன? “ஜெயலலிதா இயல்பாகவே நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, சசிகலா கும்பல் சதி செய்து கொன்று விட்டது” என்று நிரூபிப்பதன் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகத் தன்னை காட்டிக் கொள்வதும், கட்சிக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் வாரிசுரிமை கொண்டாடுவதுமே பன்னீர்செல்வம் கும்பலின் நோக்கம்.

இதனுடன் இசைந்து போகின்ற வேறொரு நோக்கம் ஆளும் வர்க்கத்துக்கு, குறிப்பாக சங்க பரிவாரத்துக்கு இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் தற்போதைய நெடுவாசல் மற்றும் மீனவர் போராட்டம் வரையிலான அனைத்திலும், தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் காட்டும் ஈடுபாடும் போர்க்குணமும் இவர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கின்றன.  எச்.ராசா, பொன்னார், இல.கணேசன் போன்றோரின் சமீபத்திய குமுறல்களைக் கவனிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள இயலும். மக்களிடம் அரும்பியிருக்கும் சுயமரியாதையையும் போர்க்குணத்தையும் கருக்கி, “கருணையே வடிவான அம்மாவுக்கு நேர்ந்து விட்ட பரிதாபத்துக்குரிய மரணம் பற்றிப் பிலாக்கணம் வைக்கும் அடிமைகளாக” எப்பாடுபட்டேனும் தமிழ் மக்களை மாற்றிவிட வேண்டுமென எல்லா ஆளும் வர்க்கக் கும்பல்களும் தவிக்கின்றன.

காவிரி மறுக்கப்பட்டதால் மரணத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் தஞ்சை விவசாயிகள். விவசாயிகளின் தற்கொலை அன்றாட நிகழ்வாகி வருகிறது. “கடலுக்குப் போகும் தண்ணீரை கோக், பெப்சிக்குக் கொடுத்தால் என்ன?” என்று வாதாடும் தமிழக அரசு, நெடுவாசல் போராட்டத்தில் மக்களை ஆதரிப்பது போல நாடகமாடுகிறது. ரேசன் கடைகள் மெல்ல மூடுவிழாவை நோக்கித் தள்ளப்படுகின்றன. நூறுநாள் வேலைத் திட்டக் கூலி பல மாதங்களாக வரவில்லை, முதியோர் ஓய்வூதியம் வரவில்லை. மக்களின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளையிடுவது போல பெட்ரோலுக்கு அடாவடியாக வாட் வரி விதிக்கிறது அ.தி.மு.க. அரசு. தமிழ்ச் சமூகத்தின் காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, மீனவ இளைஞனைச் சுட்டுக் கொல்கிறது சிங்கள இராணுவம்.

ஜெயாவின் சாவுக்கு விளக்கம் கேட்கும் பன்னீர் கும்பல், மேற்கூறிய பிரச்சினைகளுக்கு அளிக்கும் விளக்கம் சசிகலா கும்பல் அளிக்கின்ற அதே விளக்கமாகத்தான் இருக்கும். அ.தி.மு.க. என்பது ஜனநாயகத்தின் வாசனைகூட அண்டாத ஒரு கொள்ளைக் கூட்டம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை மர்மமாகத்தான் இருந்தது. அவர்களுடைய மரணமும் மர்மமாவதில் வியப்பில்லை. எம்.ஜி.யாரை ஜானகி விசம் வைத்துக் கொன்றதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சசிகலா மீது குற்றம் சாட்டுகிறார் பன்னீர். அப்போலோ மருத்துவமனையில் நடந்த மர்ம நாடகத்தின் பங்காளிகள் இப்போது நியாயம் பேசுகிறார்கள்.

“காவிரிப் பிரச்சினையைக் கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஜெயலலிதா வழிகாட்டினார்” என்ற செய்தி வெளியானபோது, அந்தச் சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடையே பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கருணாநிதி கோரினார். “நாகரிகமற்றவர்” என்று அவரை வசை பாடினர் அ.தி.மு.க. அமைச்சர்கள். “அமைச்சரவையும் முதல்வரும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்” என்ற கோணத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போதெல்லாம், அதனைத் திமிர்த்தனமாக அலட்சியம் செய்தவர்கள், இப்போது தங்களது பதவிச் சண்டைக்காக ஜெயலலிதாவின் பிணத்தைத் தோண்டுகிறார்கள்.

அடிமைத்தனத்தின் முடை நாற்றத்தில் தமிழகம் மூச்சுத்திணறியது போதும். ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் பொதுச்சொத்தைக் கொள்ளையிட்ட ஒரு கிரிமினல். மரணத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிய ஒரு குற்றவாளி. செத்துப்போன குற்றவாளியின் படத்திற்கு முன்னால் கும்பிட்டு விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும், உயிரோடு சிறையிலிருக்கும் குற்றவாளியின் காலில் விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும் நின்று லாவணி பாடுகிறார்கள். “தமிழகத்தையே சாவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதற்குப் பொறுப்பான ஜெயலலிதா, எப்படிச் செத்திருந்தால் எங்களுக்கென்ன?” என்று நாம் கேள்வி எழுப்பினால்தான் இந்த லாவணி நிற்கும். தமிழகம் சுயமரியாதையுடன் நிமிரும்.

புதிய ஜனநாயகம், மார்ச் 2017

ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

0

தாமிரபரணியில் நீரை உறிஞ்சும் கோக் ஆலையை மூடு என நீங்கள் போராடினால்  உங்களை கைது செய்து 6 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையே (Charge Sheet)  சமர்ப்பிக்காமல் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சரி ஓய்வு நேரத்தில் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றியோ, ரசியப் புரட்சியைப் பற்றியோ படிக்கிறீர்களா? கடுமையான கால் வலி காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கவில்லையா? இதில் எதைச் செய்தாலும் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் உரிமை அரசிடம் சட்டப்படியே இருக்கிறது. “புறாவைக் கொன்றதற்கெல்லாம் போரா…? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது” என்கிறீர்களா?

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட பேராசிரியர் சாய்பாபா

இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி? விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை உங்களுக்கு பிணை மறுத்துச் சட்டப்படியே உங்களைச் சிறையிலேயே வைத்திருக்க முடியும். அப்படி என்ன சட்டம் அது? அது தான் ’ஊபா’ (UAPA) என அழைக்கப்படும் ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’  (Unlawful Activities Prevention Act).  இந்த ‘ஆள்தூக்கி’ கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.

கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஊபா’ சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்கள், அரசியல் சாசன சட்டத்தின் 19-வது பிரிவு குடிமக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமை, சுதந்திரத்தை அனுபவிப்பதற்கானஉரிமை மற்றும் வாழ்வுரிமை, சங்கமாக சேர்வதற்கான உரிமை ஆகிய அனைத்தையும், படிப்படியாக வெட்டிச் சுருக்கியுள்ளது.

இந்திய அரசு, இந்தக் கருப்புச் சட்டத்தை உருவாக்கியதன் பின்னணியில் இரு பெரும் சம்பவங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் பற்றியெழுந்த நக்சல்பாரி எழுச்சியும், தமிழகத்தில் மாணவர் போராட்டமாகப் பற்றியெரிந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் ஆளும் வர்க்கங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. இந்த இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எரியவே, கொடூரமான இந்த ஊபா சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்த ஆள்தூக்கிச் சட்டத்தின் சாரமே, தெளிவில்லாத பொதுவான விளக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட விதம் தான். இந்தியாவின் இறையாண்மைக்கு ‘எதிரான நடவடிக்கைகளில்’ ஈடுபடும் அமைப்புகளை உடன் தடை செய்வதும், அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும் இச்சட்டத்தின் நோக்கங்கள். எவையெல்லாம் இறையாண்மையை பாதிக்கின்ற விசயங்கள் என்பதைத் தெளிவாக விளக்காமல், அதனைக் காக்கிகளின் கையிலும் ‘குடுமி மன்றத்’ தின் கையிலும் ஒப்படைத்திருக்கிறது இச்சட்டம்.

அதன் பின்னர், சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கையை ஒடுக்க, 1985-ம் ஆண்டு, மத்திய அரசு ஊபாவைக் காட்டிலும் கடுமையான தடா (TADA – Terrorist and Disruptive Activities (prevention) Act) சட்டத்தை  இயற்றியது. இச்சட்டத்தின் படி, சிறப்பு நீதிமன்றம், இரகசிய நீதிமன்ற விசாரணை, இரகசிய சாட்சிகள் போன்ற ஜனநாயக விரோத புறவழிப் பாதைகள் அதிகார வர்க்கத்தினருக்கு திறந்து விடப்பட்டன.  1995-ம் ஆண்டு வரை தொடர்ந்த ‘தடா’ வின் கீழ் வெறும் பத்தே ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 75,000 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் வெறும் 750 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றனர். அதாவது 99% நிரபராதிகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கின்றனர்.

‘தடா’வின் கொடுமையையும், அது அதிகாரவர்க்கத்தால் பழி வாங்கும் நோக்கோடு பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டியும், பல்வேறு ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அதன் விளைவாக தடா சட்டம் 1995-இல் கைவிடப்பட்டது. அதன் பின்னர் , 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, அனைத்து உலக நாடுகளையும் தீவிரவாதத்திற்கு எதிரான  உள்நாட்டு சட்டங்களைக் கடுமையாக்குமாறு அமெரிக்கா மிரட்டியது.

அமெரிக்க ஆண்டையின் உத்தரவுப்படி 2002-ம் ஆண்டில் ‘பொடா’ (POTA – Prevention of Terrorism Act) சட்டத்தைக் கொண்டு வந்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு.

காங்கிரசு கிரிமினல்களின் ஆட்சியில் ‘தடா’ சட்டம் 8 அடி பாய்ந்தது என்றால், இந்துமத வெறி பாஜக பாசிஸ்டுகளின் ஆட்சியில் ‘பொடா’ 24 அடி பாய்ந்தது. மத்திய பாஜக ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளில் இந்தியாவே ‘பொடா’வின் வேட்டைக்காடாகியது. கோத்ரா கலவரம் நடந்த குஜராத்தில் மட்டும் அந்த 2 ஆண்டுகளில் சுமார்  240 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 239 பேர் இசுலாமியர்கள், மீதமுள்ள ஒருவர் சீக்கியர். குஜராத் கலவரங்களின் போது மூன்றே நாட்களில்  2,000 பேரை எரித்துக் கொன்ற எந்த இந்து மதவெறியனும் ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட பத்திரிக்கையாளர் ஷாஹைனா

பொடா சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்புக் கிளம்பியதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக்  ’பொடா’-வைத் திரும்பப் பெறுவதாக காங்கிரசு பெருச்சாளிகள் அறிவித்ததோடு ஆட்சிக்கு வந்ததும் நீக்கவும் செய்தனர். ஆனால் ‘பொடா’வில் இருந்த அத்தனை ஒடுக்குமுறை சரத்துக்ளையும் புறவாசல் வழியாக ‘ஊபா’ சட்டத் திருத்தத்திற்குள் நுழைத்தது காங்கிரசு கும்பல். ‘ஊபா’ சட்டத்தின் அத்தியாயங்கள் 4,5,6 ஆகியவற்றுள் ‘பொடா’ சட்டத்தின் தண்டனைப் பிரிவுகளும், தீவிரவாதம் குறித்த குதர்க்கமான விளக்கங்களும் சொருகப்பட்டன.

அடுத்தபடியாக 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்த மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து, ‘ஊபா’ சட்டத்தின் விதிமுறைகளை இன்னமும் தீவிரப்படுத்தியது காங்கிரசு அரசு. பிணை அளிப்பதற்கான நிபந்தனைகளைக் கடுமையாக்குவது முதல், பல்வேறு கெடுபிடிகளையும் உட்சேர்த்து, மிச்சசொச்ச ஜனநாயக உரிமைகளையும் பறித்தது.

பிறகு 2012-ம் ஆண்டில், இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் பட்டியலில் “நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு எதிரான செயல்களையும்” சேர்த்தது. அதாவது இங்கு தொழில் செய்யும் கார்ப்பரேட்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களும், சட்டவிரோத செயல்களே என்று மாற்றினார்கள். இதன் மூலம் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்தையும் மறுத்தது மத்திய அரசு. இது தான் ஐம்பதாண்டு கால ‘ஊபா’ சட்டம் வளர்ந்து வந்த விதம்.

ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ’ஊபா’ சட்டத்தின் விஷ நாவுகள் இதோ:

  • விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒருவரை 180 நாட்கள் வரை எவ்விதக் காரணமும் இன்றி சிறையில் அடைத்து வைக்க முடியும்
  • போலீசு கொட்டடியில் வைத்து விசாரிக்க 30 நாட்கள் வரை அனுமதிக்கப்படும்
  • இச்சட்ட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டால், பிணை என்பது உங்களது உரிமையிலிருந்தும், அகராதியில் இருந்து அகற்றப்பட்டு விடும். நீதிபதியாகப் பார்த்து இரக்கப்பட்டால் ஒரு வேளை பிணை கிடைக்கலாம்.
  • அரசு முடிவு செய்து விட்டால், ஒருவர் மீதான விசாரணை ‘பாதுகாப்பு’ கருதி நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெறும்.
  • இரகசிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
  • தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நோட்டீசைக் கையில் வைத்திருந்தாலும், ஒருவரைக் கைது செய்ய முடியும்.
  • தீவிரவாதம் என்ற சொல்லுக்கு தெளிவற்ற விளக்கங்களின் மூலமும், இச்சட்டத்திற்குள் அனைத்து வகை அரசியல், பொருளாதார, தொழிற்சங்க வகைப்பட்ட அமைதி வழிப் போராட்டங்களையும் கூட கொண்டு வர வழிவகை செய்கிறது
  • போலீஸால் வாரண்டு இல்லாமல் ஒருவரின் வீட்டைச் சோதனையிட, பொருட்களைக் கைப்பற்ற / பறிமுதல் செய்ய மற்றும் கைது செய்யவும் முடியும்.

இவற்றை எல்லாம் விட முக்கியமானது, கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக ஒருவர் வழக்காடினால் கூட அவரையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகனை, அவர் மாவோயிஸ்ட்டுகள் மீது போலீசு போட்ட பொய் வழக்கிற்கு எதிராக ஆஜரானார் என்ற காரணத்திற்காக இந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று ’ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீசு. இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் சாசனம் தரும் வாதாடும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

தடா, பொடாவைப் போலவே இச்சட்டமும் முழுக்க முழுக்க ஆளும் வர்க்கத்தின்  பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது உதாரணத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர்  குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர். அதில் ஒரு சிறுவனுக்கு வயது 12-க்கும் குறைவு. இதுவே இச்சட்டத்தின் கொடூர முகத்தைக் காட்டுகிறது.

தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நமது பேச்சுரிமை, கருத்துரிமை, உயிர்வாழும் உரிமை, தொழிற்சங்க உரிமை என அனைத்து உரிமைகளின் குரல்வளையையும் இறுக்கிப் பிடிக்கும் ஊபா என்னும் கொடிய சட்டத்தை இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறிவது தான் இழந்த நம் உரிமைகளை மீட்டெடுக்க நம் முன் இருக்கும் ஒரே தீர்வு. இல்லையேல் பாஜக பாசிஸ்டுகளின் ஆட்சியில் மோடிக்கு எதிராக பெருமூச்சு விடுபவர்களைக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.

– நந்தன்

தொடர்புடைய செய்திகள் :