Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 504

மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !

0

நீதித்துறையும் போலீசும் நமக்கானதல்ல – மாருதி ஆலைத் தொழிலாளர்களை பாதுகாப்போம் ! எனும் முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம். நீதித்துறையை விமர்சித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தர முடியாது என வழக்கம் போல் காவல்துறை கூறிவிட்டது.

17.03.2017 வெள்ளி மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பு.ஜ.தொ.மு மாவட்டக்குழு தோழர் சரவணன் தலைமை தாங்கி கம்பீரமாக முழக்கமிட ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. காவல்துறை தடை காரணமாக மாநிலத் துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி மட்டும் கண்டன உரையாற்றினார்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அரியானாவில் உள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அடக்கு முறையைக் கண்டித்து இங்கு நாம் முழங்குகிறோம். அரியானாவில் மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு இன்று தரப்படும் தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

எனவேதான் போராட்ட மரபில் எழுந்து நிற்கும் கோவை தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நமது தோழமையை கண்டன ஆர்ப்பாட்டமாக முழங்குகிறோம்.

தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நாம் நிற்கிறோம். இதனை ஏட்டில் மட்டும் எழுதாமல் நடைமுறையிலும் வெளிப்படுத்துகிறோம். மாருதி ஆலைத் தொழிலாளர்கள் நமது தோழர்கள் என்றால், அவர்களது எதிரிகளும் நமது எதிரிகளே. மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை என்பது இனி அடுத்து வரப்போகும் தாக்குதல்களுக்கு முன் அறிவிப்பு ஆகும்.

நாட்டில் ஏறத்தாழ பெரும்பகுதி தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டு விட்டனர். சிறுபகுதி மட்டும் நிரந்தரம், இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் என சின்ன சின்ன சலுகைகள் தங்கள் போராட்டங்கள் மூலம் பெற்று உள்ளனர். இவர்களைக் காரணம் காட்டி இதர தொழிலாளர்கள் உரிமை கேட்கின்றனர். எனவே நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த கூலிகளாக மாற்ற வேண்டும் என்பது கார்ப்பரேட்களின் உத்தரவு. இதனை உபி தேர்தல் வெற்றிக்கு பிறகு உற்சாகமாக அமுல்படுத்துவோம் என தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா அறிவிக்கிறார்.

வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாட்டில் அகதிகள் போல ஏதிலிகளாய் எந்தவித உரிமைகளும் அற்று அலைகிறார்கள். அவர்களது உழைப்பு வரைமுறையற்று சுரண்டப்படுகிறது. அதே நிலைமை இனி அனைவருக்கும் ஏற்படும். அரசு ஊழியர்களும் ஒப்பந்தக் கூலிகளாய் மாற்றப்படுவர்.

எனவே இப்போதே இந்தக்கணமே விழித்தெழுந்து போராட வேண்டும் எனக்கூறி முடித்தார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு அண்ணாமலை அரங்கில் வைக்கப்பட்டனர். அங்கும் தோழர்கள் நித்தியானந்தன் பி.ஜெகநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை இந்தியா தொழிலாளி வர்க்கத்தை மிரட்டும் என ஆளும் வர்க்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் நாம் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு – 90924 60750

குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?

0

ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு அவரும் பரப்பன அக்ரஹாரா சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருந்திருக்கும். ஜெயில் களியைத் தின்ன வேண்டிய தண்டனையிலிருந்து ஜெயாவை மரணம் காப்பாற்றிவிட்டாலும், அவர் தமிழகச் சொத்துக்களை வளைத்துப் போட்டுக்கொண்ட ஊழல் குற்றவாளி, சதிகாரி என்ற உண்மையை அந்த மரணத்தாலும் மூடிமறைத்துவிட முடியவில்லை.
ஜெயா-சசி கும்பலின் ஊழல், கொள்ளை, கிரிமினல் சதித்தனங்கள் குறித்து, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க., உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகளும், சமூக அக்கறை கொண்ட சில தனிநபர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் கூறி வந்தவை, இப்பொழுது உச்சநீதி மன்றத் தீர்ப்பு வழியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தாலும், ஜெயா-சசி இணை கடைந்தெடுத்த கிரிமினல்-மாஃபியா கும்பல், தமிழகத்தைக் கவ்வியிருந்த மலைப்பாம்பு என்ற உண்மை மறைந்து போயிருக்காது.

ஜெயாவின் மரணம், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நல்வாய்ப்பை அவருக்கு வழங்கியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கும், ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் “நிலைய வித்வான்களுக்கும்” ஜெயாவின் குற்றப் பின்னணி பற்றிப் பேச வேண்டிய தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் நல்வாய்ப்பையும் சேர்த்தே வழங்கிவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கின் மூளையாகச் செயல்பட்ட சதிகாரி ஜெயா.

“சசிகலாவின் கூடாநட்பினால்தான் ஜெயாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது; உச்சநீதி மன்றத் தீர்ப்பில் மற்ற மூவர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர், ஜெயா விடுவிக்கப்பட்டுவிட்டார்; தமிழக மக்களுக்கு ஜெயலலிதா மீதிருந்த மதிப்பும் மரியாதையும் இந்தத் தீர்ப்பினால் மங்கிப் போய்விடவில்லை; ஒவ்வொரு நீதிமன்றமும் ஒவ்வொரு விதமாகத் தீர்ப்பளிப்பதால், உச்சநீதி மன்றத் தீர்ப்பை இறுதியானதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” எனப் பலவாறு வாதங்களை அடுக்கி, ஜெயாவை உத்தமியாகக் காட்டுவதை அ.தி.மு.க. அடிமைகளும், ஜெயாவின் ஊதுகுழல்களும் திறமையாகச் செய்து வருகின்றன.

ஆனால், உச்சநீதி மன்றத் தீர்ப்போ, சொத்துக்களைச் சட்டவிரோதமாகவும் முறைகேடான வழிகளிலும் வாங்கிக் குவித்த இந்த கிரிமினல் வழக்கின் மூளையாகச் செயல்பட்டிருப்பது சசிகலா அல்ல, ஜெயலலிதாதான் என உறுதிபடுத்தியிருக்கிறது.

  • சொத்துக்களை வாங்கி குவிக்கவும், அச்சொத்துக்களை பினாமி லெட்டர் பேடு நிறுவனங்களின் பெயரில் காட்டவும் ஆழமான சதித் திட்டம் இவ்வழக்கில் தீட்டப்பட்டிருக்கிறது. இறந்து போன ஜெயலலிதாவும், சசிகலா உள்ளிட்டு மற்ற மூவரும், ஜெயலலிதா முறைகேடான வழிகளில் சேர்த்த பணத்தைக் கொண்டு, லெட்டர் பேடு நிறுவனங்களின் பேரில் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கு போயசு தோட்டத்தில் இருந்துகொண்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர்.
  • இந்த வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் சதித் திட்டம் தீட்டி, அதன் அடிப்படையில், ஜெயலலிதா வருமானத்துக்கு மீறிய வகையில் குவித்த சொத்துக்களை, மற்ற மூவரும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டதோடு, பினாமி நிறுவனங்களின் பெயரிலும் மாற்றிக்கொண்டு, ஜெயலலிதாவின் முகமூடியாகச் செயல்பட்டிருப்பது சாட்சியங்களின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது.
  • இந்த லெட்டர் பேடு நிறுவனங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்துதான் இயங்கி உள்ளன; இதெல்லாம் தனக்கு தெரியாது; சசிகலா, சுதாகரன், இளவரசியின் நடவடிக்கைகள் பற்றித் தனக்கு தெரியாது என ஜெயலலிதா பாசாங்கு செய்வதை ஏற்க முடியாது.
  • ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தைப் பயன்படுத்தித்தான் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனக் கணக்கில் புழங்கியுள்ளன. இத்தகைய சொத்துக் குவிப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று காட்டிக் கொள்ளும் நோக்கில்தான், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை (பவர் ஆஃப் ஆட்டர்னி) சசிகலாவுக்குக் கொடுத்திருக்கிறார், ஜெயலலிதா.
  • குற்றவாளிகள் நால்வரும் போயசு கார்டன் இல்லத்தில் சமூக உறவின் அடிப்படையிலும் சேர்ந்து வாழவில்லை. முதல் குற்றவாளி ஜெயலலிதா, மற்ற மூவரையும் மனிதாபிமான அடிப்படையிலும் தனது வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. மாறாக, முதல் குற்றவாளி முறைகேடாகச் சேர்த்த பணத்தில் குவித்த சொத்துக்களை, மற்ற மூன்று குற்றவாளிகளின் பெயர்களில் பிரித்துக்கொண்டு நிர்வகிப்பது என்ற சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே, முதல் குற்றவாளி ஜெயலலிதா, மற்ற மூன்று குற்றவாளிகளையும் தனது இல்லத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ள அனுமதித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் கொள்ளைகளுக்கு உடந்தையாகவும், அவரின் முறைகேடான சொத்துக்களுக்கு பினாமியாகவும் இருந்த திருட்டுக் கும்பல்: சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி.
  • சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது. இவர்களது தந்திரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும். இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.- இவை அனைத்தும் பரலோகம் போய்விட்ட ஜெயலலிதாவின் பங்கு குறித்து உச்சநீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள் (findings). மேலும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும், அமிதவராயும் ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளனர். குன்ஹாவின் தீர்ப்பு ஜெயலலிதாவின் சதிகளையும், கிரிமினல்தனங்களையும் அசைக்க முடியாத ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் நிரூபித்திருக்கிறது.குன்ஹா அளித்த தீர்ப்பில், இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளன. அந்த மூவாயிரம் ஏக்கர் நிலமும் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதைக் குற்றவாளிகளால் சொல்ல முடியவில்லை.
  • வடக்கு கடற்கரை சப்-ரிஜிஸ்ட்ரார், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த சாட்சியத்தில், அந்த இருவரும் அவர்களது மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் போயசு தோட்ட வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாமல் பத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்த நிலங்களின் பத்திரங்கள் அனைத்தும் அடிமாட்டு விலைக்குப் பதியப்பட்டுள்ளன. மிகவும் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், அதில் ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், பெயர்கூடக் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது அவை யாருடைய அனுபவத்தில் உள்ளது எனப் பார்த்தால், அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது.

    1991−96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா முறைகேடான வழியில் சம்பாதித்து, போயசு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த தங்க, வைர நகைகளின் ஒரு பகுதி.
  • சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி அளித்த வாக்குமூலத்தில், “இந்த நிறுவனங்கள் எந்தக் காலக்கட்டத்திலும் எதையும் உற்பத்தி செய்யவில்லை. பொருட்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன” எனக் கூறியிருக்கிறார்.
  • நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைப் பார்க்கும்போது மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. மூலதனமே இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்களும், எந்த வியாபாரத்திலும் ஈடுபடாத நிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் பல ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் பணப் பரிவர்த்தனை செய்துள்ளன. இப்படிப் பணத்தைச் சுற்றி வளைத்துப் போட்டு எடுப்பதற்காகவே, 1991-க்கு முன்புவரை 12 வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும், அதன் பிறகு 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.
  • போயசு கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர் ஜெயராமனிடம் ஒவ்வொரு முறையும் பை மற்றும் சூட்கேஸில் இலட்சக்கணக்கான ரூபாய்களை வைத்து, நிரப்பப்பட்ட வங்கி சலான்களைக் கொடுத்து வங்கியில் செலுத்த சசிகலாதான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தப் பணத்தை இவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கணக்குகளில் வரவு வைத்து, அவற்றை நிறுவனத்தின் பணமாக மாற்றி, அதன் பிறகு நிறுவனத்தில் இருந்து தங்கள் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
  • ஜெயலலிதாவிடம் இருந்து அரசு தரப்பு கைப்பற்றிய நகைகளின் எடை 27,588 கிராம். இதில், ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த நகைகள் 7,040 கிராம். மீதமுள்ள 20,548 கிராம் எடையுள்ள தங்கம் பதவிக் காலத்தில் சம்பாதித்தவை என்றாகிறது. இத்துணை ஆயிரம் எடையுள்ள தங்கம் தனது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை சொல்லவே முடியவில்லை.
  • ஜெயலலிதாவிடம் இருந்த வைரங்களின் மதிப்பு 1,62,61,200 ரூபாய். அதனைத் தங்க நகைகளின் மதிப்போடு சேர்த்துக் கணக்கிட்டால், 2,51,59,144 ரூபாய் வருகிறது. இத்தனை மதிப்புடைய தங்கத்தாலும், வைரத்தாலும் இழைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ஜெயலலிதாவால் முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்டது.
1991−96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா முறைகேடான வழியில் சம்பாதித்து, போயசு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெள்ளிப் பொருட்களின் ஒரு பகுதி.

தங்க, வைர நகைகள், வீட்டு மனைகள், நிலங்கள், கட்டிடங்கள், கொடநாடு எஸ்டேட், பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள் என ஜெயா-சசி கும்பல் முறைகேடான வழிகளில் சம்பாதித்த பணம், சொத்துக்களை நுணுக்கமாக ஆராய்ந்துள்ள குன்ஹா, தனது தீர்ப்பில் குற்றவாளிகள் 1991-96 காலக் கட்டத்தில் 53,60,49,954 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முறைகேடான வழிகளில் ஈட்டியதாக நிரூபித்திருக்கிறார்.

வழக்கு தொடர்பான காலக்கட்டத்தில் (1991-96) ஜெயா-சசி கும்பல் முறைகேடான வழிகளில் குவித்த சொத்துக்களின் மதிப்பு இவ்வளவுதானா என்றால், நிச்சயமாக இல்லை. “இன்னும் நிறைய சொத்துக்கள் வைத்திருக்கின்றனர். எனவே, அவற்றை எல்லாம் விசாரிப்பதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 178(2)-ன் படி எனக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்கிறார், சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற நல்லம்மா நாயுடு. (ஜூ.வி., 22.2.17, பக்.14)

1991-96 காலக் கட்டத்தில், ஜெயா-சசி கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொத்துக்களை மட்டுமா வாங்கிக் குவித்தார்கள்? தமது ஊழல், கொள்ளைகளை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியினர், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மீதும், கவர்னர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மீதும் ரவுடிக் கும்பலை ஏவிவிட்டு வன்முறைத் தாக்குதலை நடத்தியதற்கு ஏராளமான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக அக்கும்பல் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை.

அ.தி.மு.க.வின் 2011-16 ஆட்சிக் காலம் 40 பர்செண்ட் ஆட்சி என்ற அடைமொழியால் குறிப்பிடுமளவிற்கு ஊழலிலும் கொள்ளையிலும் மூழ்கித் திளைத்தது. தாது மணல், ஆற்று மணல், கிரானைட் – என இயற்கை வளங்கள் தொடங்கி முட்டை, பால், மின்சாரக் கொள்முதல் வரை எங்கும் எதிலும் ஊழல், கமிசன் என பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதில் வரலாறே படைத்தது ஜெயா-சசி கும்பல்.

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சியையும் கட்சியையும் நடத்தி வந்த ஜெயா, தனது கிரிமினல் குற்றங்களைத் தமிழகத்தின் பாமர மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவர்களைச் சாராய போதையிலும், இலவச போதையிலும் மூழ்கடித்தார். பணத்தை வாரியிறைத்துப் பாமர மக்களின் ஓட்டுக்களை, வழிப்பறித் திருடனைப் போலப் பறித்துக் கொண்டார். இதனையும் மீறித் தன்னை எதிர்த்தவர்கள் மீது அவதூறு வழக்குகளையும், தேசத் துரோக வழக்குகளையும் போட்டு, அவர்களைச் சிறையில் அடைத்தார்.

ஜெயா−சசி கும்பல் அடித்த கொள்ளையின் வெளிப்படையான ஆதாரங்கள்: கொடநாடு எஸ்டேட் (இடது) சென்னையில் உள்ள மிக நவீன ஜாஸ் திரையரங்கு.

தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா, அந்தக் குற்றங்களில் ஒரு சிறு பகுதிக்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்டதொரு இழிந்த கழிசடையை, தண்டிக்கப்பட்ட குற்றவாளியைத் தமிழகத்தின் அம்மாவாக அ.தி.மு.க. கும்பலும், அக்கட்சியின் துதிபாடிகளும், அவர்களது அரசும் கொண்டாடுவதும் துதி பாடுவதும் தமிழகத்திற்கு நேர்ந்துவிட்ட அவமானம்.

மேலை நாடுகளில் ஊழல் மற்றும் குற்றம் புரிந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் கைவிலங்கிட்டு இழுத்துச் செல்லப்பட்டுச் சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். அந்நாடுகளில் குற்றவாளிகள் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும், எந்தவிதமான சலுகையும் மரியாதையும் காட்டப்படாது எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற மத்திய உளவுத் துறை அதிகாரி ப.ஸ்ரீ.ராகவன். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள்.

ஆனால், தண்டிக்கப்பட்ட ஜெயா விடயத்தில் என்ன நடக்கிறது? அம்மாவின் வழியிலேயே ஆட்சியை நடத்துவோம் என வெட்கங்கெட்டு அறிவிக்கிறார், சசிகலாவின் பினாமி முதலமைச்சர் பழனிச்சாமி. ஜெயாவின் பெயரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நலத் திட்டங்கள் இன்னமும் அவரது பெயரிலேயே தொடர்கின்றன. அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயாவின் பிறந்த நாளைத் தமிழக அரசே முன்னின்று கொண்டாடுகிறது. மெரினாவைக் களங்கப்படுத்தும் ஜெயாவின் சமாதியை நினைவிடமாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன.

தலைமைச் செயலர், காவல் துறை தலைவர் தொடங்கி அதிகார வர்க்கம் அனைத்தும் குற்றவாளி ஜெயாவின் படத்தின் கீழ் அமர்ந்துகொண்டு நீதி பரிபாலனம் செய்யும் கேலிக்கூத்து நடக்கிறது. சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவைச் சந்திப்பதற்குத் தமிழக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அனுமதி அளிக்கக் கோரி தமிழக போலீசு தலைமையே கர்நாடக சிறைத்துறைக்குக் கடிதம் எழுதும் அசிங்கமும் அரங்கேறுகிறது.

அம்மாவின் வழியில் நடப்பதாகக் கூறப்படும் இந்த ஆட்சியின் சுக்கான், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், லெக்ஸஸ் கார் இறக்குமதி மோசடி வழக்கை எதிர்கொண்டுவரும் நடராஜன் ஆகிய கிரிமினல் பேர்வழிகளின் கைகளில்தான் உள்ளது.

முதலமைச்சர் நாற்காலி தொடங்கி அனைத்து உயர் பதவிகளிலும் இந்தக் கும்பலின் அடிவருடிகள்தான் உட்கார முடியும் என்பதை உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தூக்கியடிக்கப்பட்ட விதம் உணர்த்துகிறது. சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், உளவுப் பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட தனது விசுவாசமிக்க ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்துக்கொண்டு, மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆட்சியை அடுத்த நான்காண்டுகளுக்குத் தொடர்ந்து நடத்திவிட எத்தணிக்கிறது, சசிகலா குடும்பம். சுருக்கமாகச் சொன்னால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்துள்ள அ.தி.மு.க. அரசு, கிரிமினல்களால், கிரிமினல்களுக்காக, கிரிமினல்கள் மூலம் நடத்தப்படும் அரசாகும்.

அம்மா கொடுத்த இலவசப் பொருட்களை வாங்கி அனுபவித்து வரும் தமிழக மக்கள் அம்மாவையும் எதிர்க்க மாட்டார்கள், இந்த அரசையும் எதிர்க்கத் துணியமாட்டார்கள் என வாதாடி, இந்த மானக்கேட்டை நியாயப்படுத்தி வருகிறது, அ.தி.மு.க. கும்பல். இதன் மூலம் தமிழக மக்களை எவ்வித அறவுணர்ச்சியும் அற்ற, தன்மான உணர்ச்சி இல்லாத சோற்றால் அடித்த பிண்டங்களாக இழிவுபடுத்துகிறது.

இந்த இழிவை, அவமதிப்பை எப்படித் துடைத்தெறிவது? இந்த இழிவைத் தடுக்கக் கோரித் தலைமைச் செயலரிடம் மனு கொடுக்கிறது, தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிவிக்கிறது, பா.ம.க. சட்டம், நீதிமன்றங்கள் மூலம் இந்த இழிவிற்கு விடிவு கிடைக்குமா என்றால், முந்தைய அனுபவங்கள் இந்த நிறுவனங்களை நம்ப முடியாது என்றே உணர்த்துகின்றன. பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயா அடைபட்டிருந்த நாட்களிலும், அவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நடந்துகொண்டிருந்த போதும் தமிழகத்தில் என்ன நடந்தது?

இப்பொழுது சசி-தினகரன் இருக்கும் இடத்தில், அப்பொழுது ஜெயா இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தார். குற்றவாளி ஜெயா போயசு தோட்டத்தில் பதுங்கிக்கொண்டு நடத்திய ஆட்சியை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எந்தவொரு உயர் அதிகார நிறுவனமும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயாவின் சட்டமன்றத் தொகுதியான சீறிரங்கம் தொகுதி காலியாக இருப்பதை உடனடியாக அறிவிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது, “சுதந்திரமான” தேர்தல் ஆணையம். அரசு அலுவலகங்களிலும் அதன் இணைய தளங்களிலும் ஜெயாவின் படத்தை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வாய்தாவுக்கு மேல் வாய்தா என இழுத்தடிக்கப்பட்டது.

ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிப்பது என்ற பெயரில் அ.தி.மு.க. ரவுடிகள் நடத்திய வன்முறை குறித்து உச்சநீதி மன்றத்தில் நடந்த விசாரணையில், “ஜெயாவின் கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்துகொள்வதற்கு அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரமுண்டா?” என ஜெயாவின் வக்கீலாகவே மாறி வாதிட்டார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து. “அம்மா என்பது அனைவரும் பயன்படுத்தும் பொதுவான சொல்தானே” என அ.தி.மு.க. அடிமையைப் போல விளக்கமளித்த பெருமைமிக்கது சென்னை உயர்நீதி மன்றம்.

ஜனநாயகத்தைத் தாங்கும் நான்காவது தூணாகக் கூறப்படும் ஊடகங்களின் அறவுணர்ச்சியோ நீதிமன்றங்களைவிடக் கேவலமாக இருக்கிறது. ஒருபுறம் உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்று எழுதிக் கொண்டு, இன்னொருபுறம் ஜெயாவிற்கு வக்காலத்து வாங்கும் மாமா வேலையையும் திறம்பட நடத்துகின்றன, ஊடகங்கள். குற்றவாளி ஜெயாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் தமிழக அரசின் விளம்பரத்தைக் காசுக்காக முழுப் பக்க அளவில் வெளியிட்ட ஊடகங்களுக்கு (தினமணி, தமிழ் இந்து உள்ளிட்டவை) பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை குறித்துப் பேசும் தகுதி இருக்க முடியுமா?

இன்றைய அரசியல் அமைப்பு முறை தோற்றுப் போய் நிற்பதை, எந்தச் சட்டம், நீதி, அறம் குறித்துப் பேசுகிறதோ அதற்கு எதிராக இவ்வமைப்பு செயல்படுவதை ஜெயா விவகாரம் துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது. எனவே, குற்றவாளி ஜெயாவின் படங்களை, அவரது சமாதியை, அவரது பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அகற்றவும், நீக்கவும் கோருவதோடு, கிரிமினல்களால் நடத்தப்படும் அ.தி.மு.க. அரசைப் புறக்கணிக்கும் மக்கள் திரள் போராட்டங்கள் மட்டும்தான் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட இழிவை, அவமானத்தைத் துடைத்தெறியும்.

-செல்வம்
புதிய ஜனநாயகம், மார்ச் 2017

மாருதி தொழிலாளிகளுக்காக புதுச்சேரியில் ஏன் போரடுகிறீர்கள் ?

0

 

ரியானா மாநிலம் குர்கானில் மாருதி தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் அந்நிறுவனத்தின் மனித வள அதிகாரி அவனிஷ்குமார், நிறுவனத்தின் குண்டபடையால் கொல்லப்பட்டார். இந்த கொலையை தொழிலாளிகள் தான் செய்தார்கள் என்று கூறி, அந்த மாநில அரசும் போலீசும் 148 தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்தது. தொழிலாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கபடாத போதும் அவர்களுக்கு பிணை வழங்க மறுத்தது நீதி மன்றம். இந்நிலையில் 118 பேரை விடுதலை செய்த நீதிமன்றம் 13  பேர் மீது கொலை வழக்கு, 18 தொழிலாளர்கள் மீது தீயிடல், சூறையாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்து 18.03.2017 அன்று தீர்ப்பு வழங்க உள்ளது (தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள்  சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்). அவர்களை விடுதலை செய்யகோரி தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக 16.03.2017 அன்று  புதுச்சேரி-மதகடிப்பட்டு  பேருந்து நிறுத்தத்தில்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் சரவணன் தலைமையுரையாற்றினார். இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மாருதி காரை உற்பத்தி செய்யும்  தொழிலாளியின் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் போராடினார்கள்.  திட்டமிட்டே வன்முறையை ஏவிவிட்டது மாருதி நிர்வாகம். அதில் ஒரு எச்ஆர் அதிகாரி இறந்துவிட்டார். அவரை கொலை செய்தது தொழிலாளிகள் தான் என்று, அன்று முதல் இன்று வரை தொழிலாளிகளுக்கு பிணை மறுத்தது  ஹரியானாவின் நீதித்துறை.

செய்யாத குற்றத்துக்காக தொழிலாளிகளுக்கு தண்டனை  என்றால், தினந்தோறும் முதலாளிகள்  செய்து வரும் குற்றத்திற்கு என்ன தண்டனை? தொழிலாளர் துறை என்பது முதலாளிகளின் கால்களை நக்கி பிழைக்கும் துறையாக மாறிவிட்டது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அதற்கடுத்ததாக திருபுவனை வட்டார கிளை பொருளாளர் தோழர் சங்கர் அவர்கள் பேசுகையில், இங்கே திருபுவனையிலும், தொழிலாளர்களுக்கு இதே நிலைமை தான். குறிப்பாக மதர் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அடிமைகளை போன்றே நடத்தப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிகள் சார்பாக ரவுடிகள் தாக்குதல் நடத்தினார்கள்.  இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட  தொழிலாளிகளை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட  எட்டு தொழிலாளிகளை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தனர். காரணம் கேட்டால் சட்டப்படி நடந்து கொள்கிறோம் என்றனர். ஆனால், தொழிலாளிக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய எந்த உரிமையும் வழங்குவதில்லை. தொழிலாளர் துறையில் முறையிட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசையும், காவல்துறையும் அம்பலபடுத்தினார்.

அவரை தொடர்ந்து பேசிய திருபுவனை வட்டாரக் கிளை செயலாளர் தோழர் மகேந்திரன் பேசும்போது, இந்த ஆர்ப்பட்டத்திற்கு திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் அனுமதி கேட்ட போது நீங்கள் ஆர்பாட்டம் நடத்தினாலே பிரச்சனை தான் அனுமதிதர முடியாது என்றார். எங்கோ நடந்த பிரச்சனையை ஏன் இங்கு பேசுகிறீர்கள், ஏற்கனவே திருபுவனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் தானே அடி வாங்கினீர்கள், பிறகு ஏன் அங்கேயே கேட்கிறீர்கள், தேவையில்லாத பிரச்சனை வரும்  என்றார் காவற்துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி. நீண்ட விவாதத்திற்கு பிறகு மதகடிபட்டில் நடத்திகொள்ளுங்கள் என்றார்.

“நாங்கள் அடி  வாங்கினோம் என்றால் எங்கள் மீது ஏன் வழக்கு போடணும்?  ரவுடிகளுக்கும், முதலாளிகளுக்கும்  சாதகமானவர்கள் தான்  என்பதை தன் வாயால் ஒத்துக்கொள்கிறார் SP தெய்வசிகாமணி. இதே திருபுவனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்பனிகள்  இருந்தது. அவை பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டது. காரணம் இங்கு இருக்க கூடிய ரவுடிகள், அரசியல்வாதிகள்  ஒப்பந்த தொழிலாளிகளை எனது காண்ட்ராக்டில் தான் விட வேண்டும், கமிசன் தர வேண்டும் என்று கம்பனிகளை மிரட்டுகிறார்கள்.

திருபுவனையில் 1988 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கம்பனியில் பெரும் ஊழல் நடந்தது. இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு  நிர்வாகத்தை மூடிவிட்டார் அதன் முதலாளி. தொழிலாளிகள் மத்தியில் கட்டைப்பஞ்சாயத்து  பேசியது இந்த லோக்கல் ரவுடிகள் தான். 20,000 மாத வருமான வாங்கியவர்கள்  தற்பொழுது ஐந்தாயிரம் சம்பளத்திற்கு பல கம்பனிகளில் பணியாற்றுகிறார்கள் என்று தொழிற்சாலைகளின்  மோசடித்தனங்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ரவுடிகளையும் அவர்களுக்கு  துணையாக இருக்கும்  அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையை அம்பலபடுத்தி  பேசினார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய புதுவை மாநில இணைச் செயலர் தோழர் லோகநாதன் பேசுகையில், ஏரிப்பாக்கம் எல்லையில் அமைந்துள்ள புல்கிட் என்ற இரும்பு தொழிற்சாலையில் அடுத்தடுத்து இரண்டு தொழிலாளிகள் இறந்து போனார்கள். ஒருவர் நிரந்தர தொழிலாளி, மற்றொருவர் ஒப்பந்த தொழிலாளி. மூன்று நாள் விடுமுறை விட்டார்கள். தற்பொழுது கம்பனி இயங்குகிறது. இந்த படுகொலைக்கு யார் காரணம்?

மாருதி தொழிற்சாலையில் மனிதவள அதிகாரி அவனிஷ்குமார் இறந்து விட்டார் என்பதற்காக தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இவர்கள் மீதான குற்றம் நிருபிக்கப்படவில்லை இருப்பினும் தண்டனை வழங்கினார்கள். ஆனால் கண்முன்னே நடந்த ஏரிபாக்கம் தொழிலாளிகள் கொலையில்  காவல்துறை அதன் முதலாளி மீது ஏன் வழக்கு போடவில்லை?

இதேபோல் ஹரியானாவில், ஹோண்டா நிறுவனத்தில் பணிபுரியும் அஜித்சிங் என்ற தொழிலாளி, ஐந்தாயிரத்துக்கும்  மேற்பட்ட தொழிலாளிகளை திரட்டி முதலாளித்துவ  பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடினார். அவர் முதலாளிகளால்  அடித்தே கொல்லப்பட்டார். இதற்காக கொலைக்கு ஒரு வழக்கு கூட பதியவில்லை காவல்துறை.

தமிழகத்தில் கோவை பிரிக்காலில் மனித வள அதிகாரி கொல்லப்பட்டார் என்று தொழிற்சங்க முன்னணியாளர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளினார்கள். ஆனால், ஸ்ரீபெரும்பத்தூர் தொழிற்பேட்டையில் முதலாளிகள் கோரத்தாண்டவம் ஆடுகிறார்கள். தினந்தோறும் தொழிலாளி வர்க்கம் கொல்லப்படுகிறார்கள், ஆனால் முதலாளிகள் மீது ஒரு வழக்கு கூட போடுவதில்லை.  இதை எல்லாம் எதிர்த்து தொழிலாளிக்கு நீதி கேட்டு போராடுகின்ற எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.

டெல்லிக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கிரேசியானோவில்  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொழிலாளிகளை அவமதிப்பாக பேசிய மனிதவள அதிகாரி மீது ஒரு தொழிலாளி  சம்மட்டியை எடுத்து வீசியதில் அதிகாரி இறந்துவிட்டார். அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஆஸ்கர் பெர்னாண்டர்ஸ் “தொழிலாளி வர்க்கத்தை கோபப்படுத்தினால் இப்படி தான் நடக்கும்” என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார். இதனை கேட்ட முதலாளிகள்  அனைவரும் உடனே பதறினார்கள். தொழிலாளர் சட்டத்தை திருத்துங்கள் என்று நாங்கள் பேசுகிறோம் நீங்கள் தொழிலாளிக்கு அதரவாக பேசுகிறீர்கள். நாங்கள் தொழிலை நடத்த முடியாது என்று கூவினார்கள்.

தொழிலாளி யாரையும்  கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. எங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுங்கள் என்று நியமான கோரிக்கைக்கு போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கையை கேட்க கூட தயங்குகிறது தொழிலாளர் துறையும், இந்த அரசும்.

முதலாளிகளின் எடுபிடியாக மாறிப்போன  இந்த அரசமைப்பில்  தொழிலாளி வர்க்கத்திற்கு நீதி கிடைக்காது என்பதற்கு தான் மேற்கூறிய சான்றுகள். இந்த உண்மையை புரிந்து கொண்டு  தொழிலாளி வர்க்கம் புரட்சிகர அமைப்பின் கீழ் ஒன்று திரளவேண்டும்.  விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிராகிப் போன, அழுகி நாறும்  இந்த அரசை  தகர்த்தெரிந்தால் தான் நாம் விடுதலை பெற முடியும் என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்ததுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திரளான தொழிலாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி

2

   புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
NEW  DEMOCRATIC  LABOUR  FRONT
தமிழ்நாடு-புதுச்சேரி
TAMIL NADU & PUDUCHERRY
e-mail : ndlftn@gmail.com                   puthiyathozhilali@gmail.com

         PRESIDENT :   A.MUKUNDAN
GENERAL SECRETARY :   S.THANGARAJ

 பத்திரிக்கைச் செய்தி

மாருதி  தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாழ்நாள் சிறை!
தொழிலாளி
 வர்க்கத்துக்கு  அச்சுறுத்தல்!

13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள்  சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். இந்த தண்டனை எப்படி அநீதியானதோ அதே போல இந்த வழக்கு  நடந்த விதமும் அநீதியானதாக இருந்தது.

மாருதி சுசூகி  ஆலைத்தொழிலாளர்கள் செய்த குற்றம் என்ன?

  • அவர்கள் இந்திய நாட்டு சட்டப்படி தொழிற்சங்கம் துவங்கினார்கள்!
  • அவர்கள் காண்டிராக்ட் என்கிற கொடூரமான சுரண்டல் முறையை எதிர்த்தார்கள்!
  • அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமும், சட்டப்படியான ஓய்வும் கேட்டார்கள்!
  • அவர்கள் தங்களை மனிதனாக நடத்துமாறு கேட்டார்கள்!
  • எல்லாவற்றுக்கும் மேலாக, நிரந்தரத் தொழிலாளர்கள்-காண்டிராக்ட் தொழிலாளர்களது ஒற்றுமையைக் கட்டியமைத்தார்கள்!
  • இதுதான் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முக்கிய காரணம்.

நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய தொழிலாளிகளை ஒடுக்கும் பொருட்டு, ஜூலை 2012-ல் மனேசரில்  உள்ள மாருதி சுசூகி கார் தொழிற்சாலை நிர்வாகம்  திட்டமிட்டு ஒரு வன்முறை நாடகத்தை அரங்கேற்றியது. நூற்றுக்கணக்கான குண்டர்களை ஆலைக்குள் குவித்து, ஆலையின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தி, தொழிலாளிகள் மீது அனுதாபம் கொண்டவராக இருந்த அவனேஷ் குமார் தேவ் என்ற மனித வள அதிகாரியை எரித்துக் கொன்றுவிட்டு, பழியை தொழிலாளிகளின் மீது போட்டது.

148 தொழிலாளர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். 2300 தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிறை வைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு  4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. நான்கு ஆண்டு விசாரணைக்குப் பின்னர் தொழிற்சங்க  நிர்வாகிகள் 13 பேரை கொலையாளிகளாகவும், 18 பேரை கலவரக்காரர்களாகவும் குர்கான் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் போலீசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டாக நடத்தி இருக்கின்றன. இந்த வழக்கை நடத்துவதற்காக அரியானா மாநில அரசு பல  கோடிகளை  செலவழித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட மார்ச் 10- க்கு முன்னதாகவே மனேசர்- குர்கான் தொழிற்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆயுதப் போலீசார் எஸ்.பி ஒருவரது தலைமையில்  குவிக்கப்பட்டுள்ளனர். ‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான்  அரசு எந்திரம் கூறும் நடுநிலையின்  இலட்சணம்.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையானது சிறை வைக்கப்பட்டிருந்த 148 தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுத்த நாள் முதல், சட்டம் – நீதி என்பதெல்லாம் மக்களை ஒடுக்குவதற்குத்தான் என்பதை பட்டவர்த்தனமாக்கிக் காட்டியது. 4 ஆண்டு சிறைக்குப் பின்னர் 117 பேரை குற்றமற்றவர்கள்  என்று விடுவித்திருக்கும்  நீதித்துறை  நிரபராதிகளைத் தண்டித்திருக்கும் மாருதி நிர்வாகத்துக்கும் அதற்கு அடியாள் வேலை செய்த போலீசுக்கும் என்ன தண்டனை வழங்கியிருக்கிறது?

2012 வன்முறை  மாருதி  நிர்வாகமும், அரியானா அரசும் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியே என்பது விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அம்பலமானது. அப்போதெல்லாம் நீதிமன்றம் என்ன செய்தது? குறைந்தபட்சம் ஜாமீன் கூடக் கொடுக்கவில்லை. போலீசு  கொண்டு  வந்த  சாட்சியங்கள்  மாருதி ஆலையின் காண்டிராக்ட் முதலாளிகள் ஸ்பான்சர் செய்த சாட்சிகள் என்பது நீதிமன்றத்திலேயே சந்தி சிரித்தது.  அதையெல்லாம் நீதிபதிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட மர்மம் என்ன? சிறையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் தானே என்கிற அலட்சியமா ? ஜப்பான் முதலாளியின் இலாபவேட்டைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற பதைப்பா?  தொழிலாளி வர்க்கம் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

அரசும்,முதலாளிகளும் மாருதி தொழிலாளர்களது போராட்டத்தை வெறுமனே கூலி அல்லது வேறு சலுகைக்கான போராட்டமாகப் பார்க்கவில்லை.அந்நிய மூலதனத்துக்கு எதிரான போராட்டமாகவே இந்த போராட்டத்தை பார்த்தனர். இதை அனுமதித்தால் மொத்த அந்நிய மூலதனத்துக்கும் ஆபத்து என்று அஞ்சினார்கள்.இதன் விளைவுதான் இத்துணை கொடூரமான தண்டனை.

2012 சம்பவத்தின்போது மாருதி சுசுகியின் கொடுங்கோன்மையும் சுரண்டலும் நாடு முழுவதும் அம்பலமாகியிருந்த சூழ்நிலையில், அன்று குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, ஜப்பானுக்கு ஓடினார். சுசூகி அதிபரை சந்தித்து மானேசரில் தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள், குஜராத்தில் உங்கள் ஆலையைத் தொடங்குங்கள். போராட்டமோ பிரச்சினையோ இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வெட்கங்கெட்ட முறையில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தவர்தான் இன்று நம் நாட்டின் பிரதமர். அவரது கட்சிதான் அரியானாவையும் ஆள்கிறது.

நான்தான் குண்டு வைத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தாவை சாட்சியமில்லை என்று விடுவிக்கும் நீதித்துறை, செட்டப் செய்யப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும், நாடே குர்கானாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் மோடியின் உ.பி வெற்றியை கொண்டாடுகிறது கார்ப்பரேட் முதலாளிவர்க்கம்.

என்ன செய்யப்போகிறது, தொழிலாளி வர்க்கம்? மாருதி தொழிலாளிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, இந்தியத் தொழிலாளிகள் அனைவரின் உரிமைக்காகவும் போராடியிருக்கிறார்கள். இந்த அநீதியை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

வடக்கே குர்கான் எழுப்பும் போர்க்குரலை தெற்கே இந்தியாவின் டெட்ராய்ட் என்று கார்ப்பரேட் உலகம் கொண்டாடும் தமிழகம் எதிரொலிக்க வேண்டும். மெரினா போராட்டத்தின் வாயிலாக பாரதிய ஜனதா அரசை நடுங்கச் செய்த தமிழகம்,  இன்னொரு முறை தனது போர்க்குணத்தை காட்ட வேண்டும்.

தோழமையுடன்
சுப.தங்கராசு
பொதுச்செயலாளர், புஜதொமு

மாருதி தொழிலாளிகளுக்காக சென்னை – ஆவடியில் புஜதொமு நடத்திய ஆர்ப்பாட்டம்

தில்லி மனேசாரில் உள்ள மாருதி சுசூகி கார் தயாரிப்பு நிறுவனத்தில் 18, சூலை 2012 அன்று உரிமைகளை கேட்கச்சென்ற தொழிலாளர்கள் மீது நிர்வாகம் குண்டர்களை வைத்தும், அரியானா மாநில போலீசை பயன்படுத்தியும் கொடுந்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆலையில் தீமூண்டது. வன்முறைத் தீயில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியான அவானேஷ் குமார் தேவ் என்பவர் இறந்து போனார். அவரது இறப்பை சாக்காக வைத்து நிரந்தர மற்றும் காண்டிடாக்ட் தொழிலாளர்களை அரியானா மாநில போலீசு நரவேட்டையாடியது. 148 தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையிலடைத்தது. அவர்களுக்கு தொடர்ச்சியாக பிணை மறுக்கப்பட்டது. உயர்நீதி மன்ரம், உச்சநீதிமன்றம் வரையிலும் போராடித்தான் பெரும்பான்மையானவர்கள் பிணையைப் பெற்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 10.3.2017 அன்று குர்கான் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.குற்றம்சாட்டப்பட்ட 148 தொழிலாளர்களில் 117 பேரை விடுவித்த நீதிமன்றம் எஞ்சிய 31 பேரில் 13 பேர் கொலைக்குற்றத்தையும், 18 பேர் மீது வன்முறை,தீயிடல் உள்ளிட்ட குற்றத்தையும் உறுதிப்படுத்தியது. இந்த 31 பேருக்கும் என்ன தண்டனை என்பதை 18.3.2017 அன்று அறிவிப்பதாக குர்கான் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமானதாகவும், மாருதி நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களது தொழிலாளர் விரோதப்போக்குகளுக்கு துணை நிற்பதாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிவித்தது.

மார்ச் 17 அன்று தண்டனை விபரம் அறிவிப்பதற்கு முன்னதாக போலீசு மற்றும் நீதிமன்றத்தின் கார்ப்பரேட் சார்பை அம்பலப்படுத்துவதோடு, “நீதித்துறையும் ,போலீசும் நமக்கானதல்ல; மாருதி தொழிலாளர்களைப் பாதுகாப்போம்” என்கிற தலைப்பில் தமிழகம் மற்றும் புதுவையில் சென்னை, கோவை,ஓசூர், புதுச்சேரி ஆகிய  4 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென பு.ஜ.தொ.மு அறிவித்தது. “குற்றம்சாட்டப்பட்டுள்ள  மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்!” என்கிற முழக்கத்தை தொழிலாளி வர்க்கம் தனது சொந்த முழக்கமாக உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் ஒத்த கண்ணோட்டமுடைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இதே முழக்கத்தை நாடெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முனைப்போடு இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ( Indian Federation of Trade Unions – IFTU ) புதிய தொழிற்சங்க முன்முயற்சி  ( New Trade Union Initiative – NTUI ) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மாருதி தொழிலாளர்களைப் பாதுகாக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

16.3.2017 அன்று அறிவிக்கப்பட்ட கண்டன இயக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் கிழக்குமேற்கு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டக்குழுக்களின் சார்பில் ஆவடி பெருநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பு.ஜ.தொ.மு-வின் மாநிலத்தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையேற்றினார். அவரது சிறப்புரையில்,

“மாருதி நிர்வாகம் குண்டர்களையும், போலீசையும் பயன்படுத்தி தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே அடித்து நொறுக்கியதுடன், தானே ஆலைக்குத் தீவைத்து அந்த பழியை தொழிலாளர்கள் மீது சுமத்தியது. இந்த வன்முறையின்போது மாண்ட மனிதவள அதிகாரி எப்படி செத்தார் என்பதற்கான பிரேதப் பரிசோதனை அறிக்கையே தெளிவில்லாத நிலையில்,  போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள் நிரூபிக்காத நிலையில் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டு திட்டமிட்ட சதிதான் என்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. இவ்வளவு ஓட்டைகள் கொண்ட குற்றச்சாட்டினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களை குற்றவாளிகளாக அறிவித்திருப்பதானது, நீதித்துறையோ, போலீசோ உழைக்கும் மக்களுக்கானதல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தை சாக்காக வைத்து குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் தொழிற்சங்க இயக்கங்களே வந்து விடாமல் அடக்கிஒடுக்குவதற்கான வேலையை அரியானா போலீசும், பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தரகு முதலாளிளும் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தொழிலாளர்களை வீடு வீடாகத் தேடி போலீசு வேட்டையாடியது. மறுபுறத்தில்  மாருதி நிர்வாகமோ சுமார் 800 நிரந்தரத்தொழிலாளர்களையும் 1500 காண்டிராக்ட் தொழிலாளர்களையும் உடனடியாக வேலைநீக்கம் செய்தது. இது பயங்கரவாதமில்லையா? இந்த பயங்கரவாதத்தை ஏவிவிட்ட முதலாளிகள் மீது எந்த நீதிமன்றம் தண்டனை கொடுக்கப்போகிறது?

தொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்க இயக்கத்தின் மீதும்  அடக்குமுறை ஏவப்படுவது புதிதல்ல. காலனியாதிக்க காலத்தில் பின்னி ஆலையில் தொழிற்சங்கம் துவங்கியதற்காக சர்க்கரைச் செட்டியார், வாடியா போன்ற தலைவர்கள் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டது. சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இந்தியாவில் இதே அடக்குமுறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 2016-ல் கூட கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீதான வழக்கில் தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான வழக்குகளில் சாட்சியங்கள் பலவீனமாக இருந்தாலும், குற்றச்சாட்டுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குவதே நீதிமன்றங்களின் இயல்பாக இருக்கிறது.

அதே நேரத்தில் முதலாளித்துவ பயங்கரவாதம் தனது இலாபவெறிக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை ஆலைவிபத்தில் கொலை செய்தும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும் வன்முறையை ஏவிவருகிறது. இதற்கு ஒரு தண்டனையும் இல்லை. இவர்கள் தொழிலதிபர்கள் என்கிற பெயரில் பல இலட்சம் கோடிகள் மானியமாகவும், வட்டி இல்லாக் கடனாகவும் வாங்கிக்கொண்டு உலா வருகின்றனர்.

மாருதி தொழிலாளர் பிணைவழக்கில் தொழிலாளர்களை அவமானச் சின்னம் என்று நீதிமன்றம் முத்திரை குத்தியது. ஆனால், மக்களது வரிப்பணத்தில் வங்கிக்கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவருகின்ற மல்லையா போன்ற தொழிலதிபர்களை கவுரவமாக நடத்துகிறது இந்த கட்டமைப்பு.

நீதிமன்றமும், போலீசும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறதென்றால், தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கின்ற தொழிலாளர் நலத்துறையோ, தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்கின்ற துறையாகவே இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் 2011-ல் தொழிற்சங்கம் துவங்கியபோது, அவர்களது தொழிற்சங்க விண்ணப்பத்தை மாருதி நிர்வாகத்திடம் கொண்டுவந்து கொடுத்தது,  அரியானா மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள் தான். இந்த அதிகாரிகளை நம்பி தொழிலாளி வர்க்கம் இருக்க முடியாது.

தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள  போராடித்தான் ஆக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற சூழலில். அனைத்துதரப்பு உழைக்கும் மக்களுடனும் இணைந்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது.

நடந்து முடிந்த உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து கார்ப்பரேட்டுகள் துள்ளிக்குதிக்கின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் மோடிக்கு எந்த தடையும் இல்லை என்று குதூகலிக்கின்றனர். இந்துமதவெறி பாசிஸ்டுகள் பெற்றிருக்கின்ற வெற்றி முதலாளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. மெரினா போராட்டத்தில் தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் காட்டிய உறுதியும், ஒற்றுமையும் நமக்கு நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் மட்டுமல்ல; இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்துக்கே விடிவினைத் தருகின்ற போராட்டத்தை; உழைக்கும் மக்கள் அனைவருக்கும் விடிவினைத் தருகின்ற போராட்டத்தைக் கட்டியமைப்போம், வாரீர் !” – என அறைகூவல் விடுத்தார்.

விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ( மேற்கு ) மாவட்டக்குழு தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையுடன் ஆப்பாட்டம் முடிவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தவவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர்-காஞ்சிபுரம்-வேலூர் மாவட்டங்கள்.

புதிய ஜனநாயகம் – மார்ச் 2017 மின்னிதழ்

0

புதிய ஜனநாயகம் மார்ச் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன?
“தமிழகத்தையே சாவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதற்குப் பொறுப்பான ஜெயலலிதா, எப்படிச் செத்திருந்தால் எங்களுக்கென்ன?”

2. ஹைட்ரோ கார்பன் திட்டம் : மோடி ஏவிவிடும்ம் பேரழிவு!
ஷேல் எரிவாயுவை எடுக்கும் நீரியல் விரிசல் முறைக்கு மிகப்பெருமளவு தண்ணீர் தேவை. ஷேல் கிணறுகள் இருக்கின்ற நீரை உறிஞ்சுவதுடன், மிச்சமிருக்கும் நீரையும் நஞ்சாக்கி விவசாயத்தையும் குடிநீரையும் அழிக்கிறது.

3. ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி!
இந்தத் திட்டத்தின் நோக்கம் சுயசார்பும் அல்ல, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவம் அல்ல. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கூறு போட்டு விற்பதுதான்.

4. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் : வளர்ச்சியல்ல, திருட்டு!
ஆற்று மணலை, தாது மணலைத் தோண்டியெடுத்ததில், கிரானைட் மலைகளை வெட்டியெடுத்ததில் என்ன நடந்ததோ, அதுதான் நெடுவாசலிலும் நடக்கும்.

5. குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம்?
தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் ஜெயலலிதா.

6. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம்!
ஜெயா, சொத்துக் குவிப்பு வழக்கை 21 ஆண்டு காலம் இழுத்தடிப்பதற்கு உடந்தையாகவும், அவர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்படுவதற்கு புரோக்கராகவும் செயல்பட்ட உச்சநீதி மன்றம், அவர் இறந்த பிறகும் குழப்பத்துக்கு இடமளிக்கும் தீர்ப்பையே அளித்திருக்கிறது.

7. பிர்லா-சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது!
இலஞ்சம் வாங்கியிருப்பவர், மோடி; அதை மூடி மறைத்தவர், இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்; அதை விசாரிக்க மறுப்பவர்கள், உச்சநீதி மன்ற நீதிபதிகள்; மொத்த விவகாரத்தையும் இருட்டடிப்பு செய்தவை ஊடகங்கள்.

8. பண மதிப்பு நீக்கம் : கருப்பை வெள்ளையாக்கியதே மோடியின் சாதனை!
நாட்டில் நான்கு இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் புழங்குவதாகக் கூறி வந்தார், மோடி. அந்தக் கருப்பெல்லாம் வங்கிகளின் வழியாகவே வெள்ளையாக மாறிச் சென்றுவிட்டதை வங்கிகளின் பண இருப்பு விவரம் காட்டுகிறது.

9. கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்!
கீழடி அகழாய்வை நிறுத்திவைப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிடலாம் எனப் பகற்கனவு கண்ட ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல், தமிழ் மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கியிருக்கிறது.

10. தகுதி, திறமை, நுழைவுத் தேர்வு : புதிய மனுநீதி!
தகுதி, திறமை என்ற போர்வையில், அந்தமான்-நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு உரிமையை அங்கீகரிக்க மறுத்திருக்கிறது, இந்திய மருத்துவ கவுன்சில்.

புதிய ஜனநாயகம் மார்ச் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !

0
ஃபாசில் அல் அராஜ்

சுரேல் ஆக்கிரமித்திருக்கும் மேற்குக் கரையில் உள்ள அந்தப் பழைய வீட்டுச் சாளரத்தின் திரைச்சீலைச் சற்றே விலகியிருந்தது. அங்கிருந்து தான் ரமல்லாவின்(Ramallah) தெருக்களை 34 வயதான பாசில் அல்-அராஜ்(Basil al-Araj) கவனித்துக் கொண்டிருப்பார். அந்தப் பழைய வீட்டின்  சாளரத்தின் விளிம்பில் தண்ணீர் புட்டிகள் வரிசையாக இருந்தன. அங்கு தான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் தலைமறைவாகச் சென்றார்.

மேசையில், பாசில் படித்த நூல்களுக்குச் சற்றுத் தள்ளி சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. அவர் கடைசியாகச் சாப்பிட்ட பீன்ஸிற்கு அருகே ஒரு கோப்பையில் காபி இன்னும் அப்படியே இருக்கிறது. வீட்டின் தரையெங்கும் உலர்ந்த இரத்தக்கறை படிந்திருக்கிறது.

பல மாதங்களாக தேடப்பட்டு வந்த பாசில் படுகொலை செய்யப்பட்டதை இசுரேலிய இராணுவம் அறிவிப்பதற்கு முன்னதாக மார்ச் 6 ஆம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு துப்பாக்கி வெடியோசைகள் ரமல்லாவின் தெருவெங்கிலும் கேட்டன.

இசுரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டதற்காக பாசில் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களும் மிகவும் மதிக்கும் நபராக அறியப்பட்டார். இசுரேலுடன் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக பாலஸ்தீன [தேசிய] ஆணையத்தால்(Palestinian Authority) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஆபத்துக்கள் வரும் என்று நம்பிய அவர் தொடர்ந்து அதற்கெதிராக இளைஞர்களை அணிதிரட்டி ரமல்லாவில் போராட்டங்களை நடத்தினார். தேசிய அளவிலான தேர்தலுக்கும் அறைகூவல் விடுத்தார். பாலஸ்தீன தேசிய ஆணையம் – ரமல்லாவைத் தலைமையிடமாகக் கொண்டு மேற்குக் கரையை(West Bank) ஆட்சி செய்யும் ஒரு தன்னாட்சி அமைப்பு(semi-governmental body).

பாசிலையும் அவரது நண்பர்கள் பலரையும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வடக்கு ரமல்லாவில் உள்ள ஒரு கிராமமான அருராவிற்கு(Arura) அருகில் பாலஸ்தீனிய பாதுகாப்புப் படை கைது செய்தது. உரிமம் பெறாத ஆயதங்களை அந்த இளைஞர்கள் வைத்திருந்ததாகவும் இசுரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே இசுரேலுடைய ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்ததைப் பாலஸ்தீன ஆணையத்தின் தலைவரான முஹம்மது அப்பாஸ் பெருமைபடக் கூறினார்.

“தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக எங்களது பாதுகாப்புப் படையினர் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சில நாட்கள் முன்பு தான் ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த மூன்று இளைஞர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இசுரேலுடனான எங்களது பாதுகாப்பு ஒப்பந்தம் நன்றாகச் செயல்படுகிறது” என்று ஜெர்மன் செய்தி நிறுவனமான டெர் ஸ்பீகலிடம்(Der Spiegel) அப்பாஸ் தெரிவித்தார்.

சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதையும் மோசமாக நடத்தப்பட்டதையும் எதிர்த்து அந்த இளைஞர்கள் ஒன்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதன் பின்னணியில் உருவான மக்கள் இயக்கம் ஒன்று அவர்களை விடுதலை செய்யச் சொல்லி பாலஸ்தீன தேசிய ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பரில் பாசில் விடுதலை செய்யப்பட்டு தலைமறைவானார். பிறகு அவர் இசுரேலிய இராணுவத்தால் தொடர்ச்சியாகத் தேடப்படுபவர் ஆனார்.

பாசில் உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஆறு பேரும் சிறையில் மிகவும் கடினமான காலத்தைக் கழித்ததாகவும் அவர்களுடையக் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் பாசிலின் வக்கீலான முஹான்னத் காரியா(Muhannad Karrajeh) சிறையில் அடைக்கப்பட்ட போது அல்ஜசீராவிடம் கூறினார்.

“சட்ட நடைமுறைகள் என்ற பெயரில் ஒரு ஆறு மாதங்கள் அந்த இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இது குறித்து புலனாய்வு செய்வதில் பாலஸ்தீனிய அரசாங்க வக்கீல்கள் ஆர்வம் காட்டவில்லை” என்று காரியா கூறினார்.

விடுதலை செய்யப்பட்டவுடன் ரமல்லாவில் ஒரு வாடகை வீட்டில் பாசில் குடி புகுந்தார். தன்னை ஒரு சுவீடன் குடிமகன் என்று பாசில் கூறியதாகவும் ஆங்கிலத்தில் பேசியதாகவும் அந்த வாடகை வீட்டின் உரிமையாளர் கூறினார். “அவர் அந்த வீட்டை விட்டு ஒரு போதும் அகன்றது இல்லை. நான் ஒவ்வொரு முறை வாடகை வாங்க வரும் போதும் தனக்கு பாசில் காபி கொடுப்பார்” என்று அவர் அல்ஜசீராவிடம் கூறினார்.

பெத்லேகம் நகருக்கு அருகிலிருக்கும் அல்- வாலாஜ்(al-Walaja) ஊரிலிருக்கும் பாசிலுடைய வீடு அவரைக் கைது செய்வதற்காக இசுரேலின் இராணுவத்தால் பல முறை சோதனை செய்யப்பட்டது.

பாசிலுடைய இடத்தைக் கண்டறிய இசுரேலிய இராணுவம் பாலஸ்தீன ஆணையத்துடன் சேர்ந்து செயல்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீன ஆணையத்தையும் அதற்கும் இசுரேலுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தங்களையும்(security coordination)  குற்றஞ்சாட்டுகின்றனர்.

இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய பாசில் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்த நடவடிக்கையானது இசுரேல் மற்றும் பாலஸ்தீன தேசிய ஆணையத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருந்துள்ளதைக் காட்டுவதாக பாசிலுடைய மாமா காலித் அல்-அராஜ்(Khalid al-Araj) கூறினார்.

மகன் கொல்லப்பட்ட செய்தியறிந்த பாசிலுடைய தாய் உணர்ச்சிவயப்பட்டு மனமுடைந்ததாக காலித் கூறினார். தனக்குள்ளே அழுதபடியே இருந்தாலும் அந்த தாய் உறுதியாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டார். “பாசிலுடைய குடும்பம் அமைதியாகவும் விடாப்பிடியான நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். அவர்கள் பாசிலையும் அவர் தேர்ந்தெடுத்தப் பாதையையும் நம்புகிறார்கள்.“ என்று காலித், அல்ஜசீராவிற்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.

பாசில் தலைமறைவாக இருந்த வீட்டில் ஆயுதங்களைக் கண்டுபிடித்ததாகக் குற்றஞ்சாட்டிய இசுரேலிய இராணுவம் அதைக் குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது. இசுரேலிய இலக்குகளுக்கு எதிராக ஷெல் தாக்குதல்களுக்குத் திட்டமிடும் குழுவிற்கு பாசில் தலைவராக இருந்தார் என்று இசுரேல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அவர் படுகொலைச் செய்யப்பட்ட உடனே அங்கு பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களும் குடும்பத்தினரும் சென்றனர். பாசிலுடைய உருவப்படங்களைத் தங்கள் கைகளில் ஏந்தியபடி கண்ணீருடன் தெருவில் அணிவகுத்து சென்றனர். “பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கொல்லப்பட்டத் தியாகி (martyr of security coordination)” என்று பாசிலை அவர்கள் அழைத்தனர்.

பாசிலுடையப் படுகொலையைத் தொடர்ந்து பாலஸ்தீன தேசிய ஆணையம் மற்றும் இசுரேலுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கண்டித்து காஸாவைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு எதிர்ப்பியக்கமான ஹமாஸ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. “ஆக்கிரமிப்பு எதிர்ப்பை நசுக்குவதனாலும் மக்களுடைய உறுதிப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதனாலும் திட்டமிட்டப் படுகொலைகளும் இசுரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தமும் வெற்றி பெறாது” என்று அது கூறியிருக்கிறது.

இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிரான துரோகம் என்று பாலஸ்தீன விடுதலைக்கான இடதுசாரி மக்கள் முன்னணி(The leftist Popular Front for the Liberation of Palestine) கருத்துத் தெரிவித்துள்ளது. “ஒரு சக மனிதனாக பாசிலை நாங்கள் இழந்து விட்டோம். ஆனால் அவரது கருத்துக்களும் மதிப்பீடுகளும் என்றென்றும் எங்களிடையே இருக்கும்” என்று பாசிலுடைய நெருங்கிய நண்பரான ஹம்சா அக்ரபவி (Hamza Aqrabawi) அல்ஜசீராவிடம் கூறினார். “பாசிலுடைய மரணம் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்திற்கும் ஒரு பேரிழப்பாகும் ஆனால் ஆக்கிரமிப்பிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அவரது போராட்ட மரபு எங்களை என்றென்றும் வழிநடத்தும்” என்றும் அவர் கூறினார்.

ஃபாசிலுக்கு நீதி கேட்டு வாஷிங்கடனில் போராட்டம்!

செவி வழி வரலாறுகளைச் சேகரிப்பதில் பாசில் குறிப்பான ஆர்வம் கொண்டிருந்ததாக அக்ராபவி குறிப்பிட்டார். “தன்னுடைய மக்கள் மற்றும் தாய்நாட்டின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள அந்த வரலாறுகள் உதவும் என்று படித்த நபரான பாசில் நம்பினார் என்று எங்களுக்குத் தெரியும். ஒரு ஆய்வாளராக எங்களது வரலாற்றையும் போராட்டத்தையும் ஆழமாக ஆய்வு செய்தார் என்பதும் எங்களுக்கு தெரியும்” என்று அவர் கூறினார்.

“இளைஞர்களின் கலங்கரை விளக்கம் பாசில். பாலஸ்தீன வரலாற்றை சேகரிக்கும் அனைவருக்கும் ஒரு அடையாளத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அவர் தான் நம்பிய அந்த உறுதியான பாதைக்காக தன்னுடைய இரத்தத்தையே தியாகம் செய்துள்ளார்” என்று அவர் கூறினார்.

எகிப்தில் மருந்தியலைக் கற்றரிந்த பாசில் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்திருக்கிறார். பாலஸ்தீனியர்களின் உடைமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றிய அரசியல் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். முறைகேடான இசுரேலிய குடியிருப்பான கிலோவிற்கு(Gilo) அருகில் அவரது சொந்த நகரத்தில் இசுரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை வகித்ததற்காக அவர் அறியப்பட்டார். அங்கு இசுரேல் எழுப்பிய பிரிவினைச் சுவர் அவரது குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை விழுங்கியிருந்தது.

எருசலேத்திற்குள் நுழைவதற்கு மேற்குக் கரையில் வாழும் பாசில் உள்ளிட்ட 30 இலட்சம் பாலஸ்தீனியர்களும் இசுரேலிடம் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். ஆனால் அது மிகவும் கடினமானது. ஆனால் அவர்களது நண்பர்களைப் பொறுத்தவரையில் இசுரேலிய ஆக்கிரமிப்பை மீறுவதற்கு பாசில் முடிவு செய்துவிட்டார்.

“2010 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பு குடியிருப்புவாசிகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற பேருந்தில் பாசில் பயணம் செய்து எருசலேத்திற்குள் நுழைந்தார்” என்று பெயர் சொல்ல விரும்பாத பாசிலுடைய நண்பர் ஒருவர் அல்ஜசீராவிடம் கூறினார். “எருசலேம் தன்னுடைய நகரம். என்றும் அங்கு செல்வது தன்னுடைய உரிமை என்றும் பாசில் கூறினார்” என்கிறார் அவரது நண்பர்.

பாசில் தான் இறப்பதற்கு முன் எழுதியக் கடைசிக் கடிதத்தில் பின்வருமாறுக் குறிப்பிடுகிறார். “அரபு தேசீயம்(Arab nationalism), தாய்நாடு(homeland) மற்றும் விடுதலைக்கான(liberation) வாழ்த்துக்கள்….எனக்கான விடைகளை நான் கண்டறிந்து விட்டதால் விதிக்கப்பட என்னுடைய சாவை நோக்கி மனநிறைவுடன் இப்போது நடந்து செல்கிறேன். தாய்நாட்டு விடுதலைக்காக உயிர் துறக்கும் ஒரு தியாகியுடைய வாக்குமூலத்தை விடத் தெளிவான ஒன்று ஏதேனும் இருக்கிறதா என்ன?”.

நன்றி: அல்ஜசிரா
தமிழாக்கம்: சுந்தரம்

மூலக்கட்டுரை: ‘Basil al-Araj was a beacon for Palestinian youth’

ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !

0

மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரி ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 16.03.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 18.07.2012 அன்று மாருதி ஆலையில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி 148 தொழிலாளர்கள் 4- ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாகவே வைத்திருக்கப்பட்டனர். இந்திய வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய அடக்குமுறை.

மேற்கண்ட 148 தொழிலாளர்களில் 117 பேர் குற்றமற்றவர்கள் எனவும், மாருதி சுசுகி தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் உள்ளிட்ட 31 பேர் குற்றவாளிகள் எனவும் 2017 மார்ச் மாதம் 10-ம் தேதி குர்கான் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இவர்களுக்கு நாளை (மார்ச் 17) அன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

சங்க நிர்வாகிகள் அனைவரும் இந்தக் குற்றவாளிப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆலை நிர்வாகமே திட்டமிட்டு நடத்திய வன்முறை என்பதையும், தொழிலாளர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதையும், சங்க நிர்வாகிகள் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததிலிருந்தே தெளிவாக உணரமுடிகிறது. ஆகையால், மாருதி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தொழிலாளர்கள் மீதான மாருதி சுசுகி நிர்வாகத்தின் அடக்குமுறையை விசாரணை கமிசன் அமைத்து முறையாக விசாரிக்கவேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார். பல தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

சிறப்புரையாற்றிப் பேசிய தோழர் பரசுராமன் தனது உரையில், மாருதி தொழிலாளர்மீது புனையப்பட்டுள்ளது அனைத்தும் பொய்வழக்கு. மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் என்பது மார்ச் 2012-இல் தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் அந்தச் சங்கம் கோரிக்கை மனுவைக் கொடுக்கிறது. ஜூலை மாதத்தில் மேற்கண்ட வன்முறை சம்பவத்தை அரங்கேற்றி 2,300 சங்க உறுப்பினர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஆலை நிர்வாகம். ஆலை நிர்வாகம் கொடுத்த பட்டியலின் படி 148 முன்னணியாளர்கள் மீது குற்றம் சுமத்தி சிறையிலடைத்தது போலீசு.

சங்கம் தொடங்கப்பட்ட 4 மாதத்திலேயே இப்படி ஒரு வன்முறையை மிகவும் நன்கு திட்டமிட்டு நிர்வாகத்தால் நடத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றவேண்டும் என்றும் சங்கம், உரிமைக்காகப் போராடியதுதான். இது சங்கத்துக்கு எதிரான பொய்வழக்கு என்பதை புரிந்துக்கொள்ள இதைவிட ஒரு நிரூபணம் தேவையில்லை.

18.07.2012 அன்று காலை 7.20 க்கு வன்முறை நடந்து முடிந்தது. ஆனால், போலிசோ காலை 11 மணிக்குத்தான் வந்தது. அந்தபோலீசும் ஆலைக்குள்ளே நுழையவில்லை. ஆனால், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுவிட்டது, எப்படி? காரணம், நிர்வாகம் கொடுத்த பட்டியல் அடிப்படையிலே அந்த எஃப். ஜ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

முதல்நாள் சம்பவம் நடந்து மறுநாள் காலை 6 மணி வரை தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி முடிக்கின்றனர். முற்றிலும் எரிந்துப் போன அறையை பல பாகங்களாக பிரித்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். தடவியல் ஆய்வாளர்களுக்கு கிடைக்காத ஆதாரங்களை (தீப்பெட்டி) அதற்கு பிறகு போலியாக ஆலை நிர்வாக அதிகாரிகளே தயார்செய்து கொடுத்தனர். அந்த வகையில்தான் தொழிலாளர்கள் மீது தீவைப்பு சம்பவம் திணிக்கப்பட்டது.

ஒரு அதிகாரியை 4-5 தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக எஃப்.ஐ.ஆர். சொல்கிறது. தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட எந்த அதிகாரியும் மருத்துவ சான்றிதழ்களை கொடுக்கவில்லை. ஒரு அதிகாரி தனது பல்லின் ஈறு அழுக்குகள் பிரச்சனைக்காக மருத்துவம் எடுத்துக் கொண்டதை தான் தாக்கப்பட்டதற்கான சான்றாக நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். அதிகாரிகள் தாக்கப்பட்டதாக சொல்வது பொய் என்று இதனைவிட வேறு காரணங்கள் வேண்டுமா?

இறந்து போன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியோ மூச்சுத்திணறலில்தான் இறந்து போனதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது. ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, இது எப்படி?

குற்றம் சாட்டப்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் (89 பேர்) பெயர் காண்ட்ராக்ட்காரனின் பதிவேட்டில் உள்ள அகரவரிசைப்படி (A, B, C…Z) அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சாட்சி சொல்பவர்களும் அகரவரிசைப்படியே  முதல் 25 பேருக்கு ஒருவர் அடுத்த 25 பேருக்கு ஒருவர் என்று சாட்சி சொல்கின்றனர். இது போன்றவையெல்லாம் இந்த சாட்சிகளும் குற்றப்பட்டியலும் முற்றிலும் பொய்யானவை என்பதை நிரூபிக்கவில்லையா? சாதாரண பொது அறிவு உள்ள எவரும் ஏற்கதக்க இந்த உண்மைகளை குர்கான் மாவட்ட நீதிபதி ஏன் ஏற்கவில்லை ?

இது தான் நீதிமன்றம். இதுதான் போலீசு. தண்டனையை அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். குற்றங்களை முன்னமே தயார் செய்துவிட்டார்கள். சம்பவங்களை அதற்காக நிகழ்த்திவிட்டார்கள். இதற்கு மேல் அதற்கேற்ப குற்றப்பட்டியலையும் ‘நீதி’ விசாரணையையும் நடத்திக் காட்டும் பொறுப்பு போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் கொடுத்துள்ளனர். அதற்காக எந்த சட்டங்களைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த நீதி நியாயங்களையும், இயற்கை நியதிகளைப் பற்றியும் கவலைப் படாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது குர்கான் நீதிமன்றம்.

போலீசின் வேலை இத்துடன் முடிந்து விடவில்லை. அடுத்தக் கட்டமாக தொழிலாளர்கள் கிளர்ந்தெழாத வகையில் தடுக்கும் ‘கடமை’ அதற்கு கார்ப்பரேட் உலகத்தினால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு வழங்கவிருந்த கடந்த 9-ம் தேதி முதல் குர்கான் மானேசர் தொழிற்பேட்டை முழுவதும் துணை இராணுவப்படை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொழிலாளர்கள் கூட்டம் நடத்துவதற்கும், நடமாடுவதற்கும், பேசுவதற்கும் கூட நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாருதி தொழிலாளர்கள் ஆலைக்குள்ளே சிறைவைக்கப்பட்டு ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒரு போலீசு என்ற அளவிற்கு நிறுத்திவைத்து கொடிய அடக்குமுறை செலுத்தப்பட்டு வருகிறது. பொய்வழக்கை போட்டது மட்டுமல்ல மேற்கண்ட அடக்குமுறையையும் இந்த போலீசுதான் செலுத்தி வருகிறது. இதன் மூலமெல்லாம் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கிவிடலாம் என்று போலீசு கருதினால் அது பகல்கனவே.

அரியானா அரசு தன்பங்குக்கு இன்னும் கூடுதலாக தொழிலாளர்கள்மீது அடக்குமுறை செலுத்திவருகிறது. இதனைப் புரிந்து கொள்வது மிக அவசியம். தொழிலாளர்களுக்கு எதிரான இந்த வழக்கை நடத்துவதற்கு மாருதி ஆலை நிர்வாகம், அரசு தரப்பு வழக்கறிஞர் மட்டும் வாதாடவில்லை. குறிப்பாக, அரசே தனிச்சிறப்பாக 5.5 கோடி ரூபாய் செலவு செய்து கே.டி.எஸ். துளசி என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளது. இந்த வழக்கறிஞர் ஒரு முறை நீதிமன்றத்ததில் ஆஜர் ஆவதற்கு ரூ.11  லட்சம் கட்டணமாகப் பெற்றுள்ளார். இவ்வளவு செலவு செய்துதான் இந்த மோசடியான தீர்ப்பை அரியானா அரசு மாருதி கார் நிறுவனத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. 148 தொழிலாளர்கள்  4 ஆண்டுகள் வரை சிறையில் விசாரணைக் கைதிகளாகவே, பிணைவழங்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்; இன்னும் 11 சங்க நிர்வாகிகளுக்கு பிணை வழங்கப்படவில்லை. முக்கியமாக இன்று 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் அரசின் தீவிரமான முயற்சியால்தான் நடந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்காக இவ்வளவு முயற்சிகளை அரியானா அரசு எடுத்துள்ளது? யாருடைய பாதுகாப்புக்காக? யாருடைய சொத்தைப் பாதுகாப்பதற்காக? மாருதி-சுசுகி ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறை-இலாபங்களை பாதுகாக்க!

தமிழகத்தில் உள்ள எந்த பத்திரிக்கையும் மாருதி தொழிலாளர் மீதான இவ்வளவு பெரிய அடக்குமுறையைப் பற்றி ஒரு வரிகூட பேசவில்லை. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக இவை அனைத்தும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகவும், கெயில் எரிவாயு திட்டத்துக்காகவும் மீத்தேன், கூடங்குளம், நியூட்ரனோ போன்ற பல்வேறு அழிவுத்திட்டங்களை தமிழகத்தின்மீது திணிக்கும்போதும் அரசு, நீதிமன்றம், போலீசு, இதே வகையான அடக்குமுறைகளைத்தான் செலுத்தி வருகின்றன. ஓசூரில் கமாஸ் வெக்ட்ரா, வெக் இந்தியா, குளோபல் ஃபார்மாடெக், ஏ.பி.எல்,லால், சாகாகீல், உமாமகேஸ்வரி, போன்ற பல ஆலைகளிலும் உரிமைக்கோரி போராடிய தொழிலாளர்களுக்கு எதிராக இதே வழியிலதான் கூட்டுசேர்ந்து அடக்குமுறை செலுத்தின, செலுத்தி வருகின்றன. ஆகையால், நீதிமன்றம், போலீசு, இந்த அரசு கட்டமைப்பு முழுவதுமே கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் செயல்படுகிறது என்பதை நாம் உணர்ந்து, இவற்றிற்கு வெளியே இந்த ஒட்டுமொத்த கட்டமைவுக்கு எதிரானதொரு எழுச்சியை கட்டியமைப்பதன் மூலமாகத்தான்  தொழிலாளர் வர்க்க உரிமைகள், உழைக்கும் மக்களின் அடிப்பபடைத் தேவையை பாதுகாக்க முடியும்.

மாருதி ஆலைத் தொழிலாளர்கள் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாகப் போராடி வருகின்றனர். குர்கான் – மானேசர் தொழிலாளர்கள் 9-ம் தேதிமுதல் உணவுப் புறக்கணிப்பு, ஆலைவாயில்கூட்டங்கள் போட்டு இந்த தீர்ப்பைக் கண்டித்து வருகின்றனர்; மாருதி தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒருமித்த வகையில் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. நீதியும் சட்டமும் வெறும் மாயை என்பதை உணர்ந்து வருகின்றனர். இந்த சட்டத்திடமிருந்து இது போன்ற ஒரு தீர்ப்புதான் வரும் என்பதை உணர்ந்தும் வருகின்றனர். இனி ஒன்றுதான் தீர்வு, குர்கான் முதல் ஒசூர் வரையிலான தொழிலாளர்கள் ஒன்றிணைக்கப்படவேண்டும்! முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு அது பெரிய அடியாக அமையும். அடுத்து அதற்கு சவக்குழி தோண்டுவதற்கான தொடக்கமாகவும் இருக்கும்!

அந்த வகையில், மாருதி தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்த நீதிமன்ற அரசுக்கட்டமைப்புக்கு வெளியே ஒரு தொழிலாள வர்க்க எழுச்சியை நாம் உருவாக்குவோம் என்ற அடிப்படையில் அறைகூவி அனைவரையும் அழைக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தருமபுரி -கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784


Judiciary and police not for us! Save Maruthi Suzuki Workers!

Statewide Protest

On March 16, 2017 at 5 p.m. near Ram Nagar Anna Statue, Hosur

Dear Workers!

On March 10, Once again the Delhi-Gurgaon Sessions court proved that, the judiciary, police and entire state machinery is against working people. In the judgment of criminal case against Maruthi-Suzuki workers (MSW) the court released 117 workers are innocence and announced that 31 workers including entire body of the MSW union are criminals. Among the 31 workers, the crime of murder is imposed on 13 workers and the crime of violence, setting fire and looting. The quantum of punishment for these crimes the 31 workers will be held on coming March 17.

Conspiracy of State machinery and Owners!

On 18.07.2012, Violence was erupted in the Factory of Maruthi-Suzuki Car Company which was located in Manesar industrial estate near New Delhi. This violence and setting fire was performed by the hundreds of goons arranged by the management of this company. In this violence a HR officer, Mr.Avanishdev was dead. By name of the death the management terminated 2,300 workers and 148 were arrested by the false case of murder, violence, setting fire, looting.

The Maruthi-Suzuki workers were demanding Hariyana Government, to arrange an Enquiry Committee leading by the present Judge. Not only the Haryana Government rejected the plea of workers, but also opposed to give bail the workers in the court. By the reason the workers took bail by hard struggle in the court for a long time of 3 ½ years.

But, in the name of Maruthi-Suzuki violence, the Haryana Government and the owners of Multi-National Companies (MNCs) jointly restricted the workers unions in the hundreds of MNCs situated in the industrial area of Gurgaon-Manesar.

Collaboration of Police-Judiciary-Managements!

In every stages of the trail of this case, it was witnessed that the above collaboration actively tried to suppress the workers movement. The police blatantly lied in the court that in the violence of the workers 90 police men and managing officers of Maruthi-Suzuki were injured, but, no one worker was not. The court accepted it. The same court released 117 accused workers have no offence. Then, who was injured the officers, particularly the striking force police men? It become clear that the accusation of gang violence was fabricated by the police.

The evidences and witnesses produced by the police in the court are fake and guilty. Majority of the witnesses gave confessions in the court. And they openly stated in the court that they were not at the spot of violence and police forced them to give false witness. The postmortem report of the diseased officer was not proved the murder. The role of the 13 workers who are subjected to crime does not establish beyond doubt. The Gurgaon Court has accused the all workers despite many loopholes in the ‘preparation’ of police.

What is the lesson to learn?

The judiciary, police and the entire state machinery is against working people. Each and every day the Capitalist terrorism is killing thousands of workers by the accidents in factories, unsafe working conditions. The labour department is unfit to sake the hair of corporate owners and and buckling like worm in front of the corporate owners who is flush the employment of lacks of workers and torturing, threatening the workers to do hard work and banning the workers union.

The Labour department which is Betraying workers trying to form a union, sightseeing the owners attacks the union and getting them to bribery and the Judicial system which covers might makes right eye are not save us. The police threaten workers by registering false cases like from murder to riot. Why we have to stoop to these? It’s time to stand united working class. The unity of working class is protecting not only to Maruthi workers, but the entire working class!

Let us unify the working class! Defeat the Capitalist terrorism!

New Democratic Labour Front
Krishnagiri – Dharmapuri – Salem Districts.
For Contact: 97880 11784 – ndlfhosur2004@gmail.com


న్యాయ స్థానములు, పోలీసులు మనకోసం కాదు!
మారుతి కర్మాగర కార్మికులను రక్షించెదము!

రాష్ట్రం పూర్తిగ ఆర్బాటం
2017 మార్చి 16 సాయంకాలం 5.00 గంటలకు
రామనగర్ అణ్ణాశిల ప్రక్కన హొసూరు.

ప్రియమైన కార్మికులారా!
న్యాయస్తానము, పోలీసులు, ప్రభుత్వ నిర్మాణము పూర్తిగ కష్ఠపడు ప్రజలకు విరుద్దం అనుట మార్చి 10 తేదిన డిల్లినందు గుర్కాన్ జిల్లా క్రిమినల్ న్యాయస్తానము మరల ఒక్కసారి నిరూపించినది. మారుతి కర్మాగార కార్మికుల పైన నడపించుచున్న క్రిమినల్ కేసునందు 117 మంది కార్మికులను విడుదల చేసిన న్యాయస్తానం 31 కార్మికులను అపరాదిలుగ ప్రకడించినది. వీరులో 13 మంది హత్య అపరాదులని 18 మందిపై హింసాకాండం, దోపిడి తగల పెట్టుట వంటి నేరములు మోపబడినది. ఈ నేరములకు తగిన దండన వచ్చు మార్చి ౧౭వ తేది నందు ప్రకటించునట్లు తెలియపరచినది.
ప్రభుత్వము-మొదళాలిలు దిట్టమేసిన తంత్రం!

గడచిన 18.07.2017 నందు డిల్లి మనేసర్ పారిశ్రామిక ప్రాంతములొ నడపుతున్న మారుతి సుజుకి కారు కర్మాగారములో తగరాలు ఏర్పడినది. యాజమాన్యం సూరారు మంది గూండాలను కర్మాగారం లోపలికి రప్పించి ఈ హత్యాకాండమును నిప్పంటించుట వంటి అసంబవములను నడపించినది. ఈ అసంబవములో అవానిష్ దేవ్ అను హె.ఆర్. అధికారి చనిపోయినాడు. ఈ చావును కారణముగా చెప్పి 2,300 కార్మికులను పనులనుండి తొలగించినారు. 148 కార్మికులపై హత్యా, నిప్పంటించుంట, దోపిడి, హత్యాకాండం వంటి కేసులు పదవిచేసి జైలునందు పెట్టినారు.

ఈ అసంబవమునకు కారణం ఎవరు? అదికారిని చంపినది ఎవ్వరని విచారించు సుప్రీం కోర్టు న్యాయాదిపతి అద్యక్షతన విచారణ కమిసన్ జరపవలయునని కార్మికులు కోరు కొనుదానిని అర్ధం చేసుకొనక రాష్ట్ర ప్రబుత్వం నిరాకరించినది. పైగ ఖైదు చేయబడెన కార్మికులను జామీనునందు విడవరాదని న్యాయస్తానములో పోరాడినది. దీనినుండి కార్మికులు కొన్ని సంవత్సరములు పోరాడినపిదప జామీను దొరకినది. ఈ అసంబవమును వాదుకొనిన గుర్కాన్-మానేసర్ పారిశ్రామిక ప్రాంతములో నడపుతున్న నూరారు బహుళజాతి కంపెనిలలో కార్మిక సంఘములు స్థాపించక పోవు సందర్బములలో హరియాన రాష్ట్ర ప్రభుత్వం – బహుళజాతి కంపెనిలు చేతులుకలిపి నడపుతున్నారు.
పోలీసు-మొదళాలిలు-న్యాయస్థానములు ఉమ్మడి!

బ్రదుకు జీవితములో ఒకోక్క సంభవములో ఈ ఉమ్మడి నడవడికలు కార్మిక వర్గ సంఘములను నులిపిటను తీవ్రముగ ప్రయత్నం చేయుట కన్నుల ముందు తెలిసినది. కార్మికుల తగరాలులలో 90 మంది పోలీసులు మరియు మారుతి అధికారులు గాయపడినట్లు చెప్పిన పోలీసు, ఓకేఒక కార్మికునకు కూడ చిన్నగాయమోకాని, గీతనేకాని ఏర్పడలేదని అపద్దమును చెప్పినది. దీనిని న్యాయస్తానం అంగీకరించినది. కాని ఈ న్యాయస్థానము 148 మందిలో 117 మంది నిరపరాదులని విడుదలచేసెనది. అట్లున్న 90 అధికారులకు-ముఖ్యముగ స్ట్రైకిం ఫోర్స్ పోలీసులకు గాయములను ఏర్చరచినది ఎవ్వరు? గుంపు జగడములను క్రిమినల్ పోలీసు మూలముగనే నడచినదని తెలియపరచలేద!

పోలీసు తీసుకొచ్చిన సాక్షిలు, కాగితములు తప్పని పలుసందర్భములలో నిరూపించబడినది. పోలీసు తీసుకొని వచ్చిన సాక్షిలలో కొందరు సంబవం నడచిన స్తలమునందు లేదని, తప్పుసాక్షిచెప్పుమని నిర్బందించినారని న్యాయస్థానమునందే వాక్మూలము చెప్పినారు. చనిపోయిన అధికారి శవ పరిక్షలో హత్య అని నిర్ణయంచలేదు. ఇప్పుడు హత్యనేరమునకు గురియైన 13 మందికి బాగము ఏమనునదిని సందేహపరిస్థితిలో యున్నప్పడికి తీర్పునిలపడం లేదు. పోలీసు తయారింపులో యున్న ఇన్ని తూట్లను మీరి సంఘ నాయకులందరిని నేరస్తులని బావించిన గుర్కాన్ న్యాయస్థానం.
నేర్చుకోవలసిన పాఠం ఏమి?

పోలీసు-న్యాయస్థానములు మాత్రంకాదు, అన్ని ప్రభుత్వ యంత్రాంగములు ఉమ్మడిచేరి కష్ఠపడు ప్రజలకు వ్యతిరేకముగ యున్నది. కర్మాగార అపఘాతములు, అనురక్షిత పనిపరిస్తితిని మొదళాలి భయంగరవాదులు దినదినము వేలాది మంది కార్మికులను చంపి పూడ్చుచున్నది. లక్షలాది మంది కార్మికుల పనులను తీసి, మానసికముగ హింసించి హత్యవెర్రి ఆట వేయు కార్పరేట్ మొదళాలిల చిన్నవ్రేలు కదలించడానికి చేతకాని లేబర్ డిపార్టుమెంట్ (కార్మిక శాఖ).

సంఘం స్థాపించాలని ప్రయత్నించిన కార్మికులను చూపించు, సంఘము నడపించు నాయకులపై నడవడికలను ఎత్తు యాజమాన్యాం వేడికలను చూచు లేబర్ డిపార్టుమెంట్, మొదళాలిలు చెప్పినదే చట్టం అని కల్లుమూసుకొనిన న్యాయస్థాం, మనలను రక్షించలేదని మనం నేర్చుకోవలసిన పాఠం.

హత్య కేసునుండి అల్లర కేసువరకు తప్పు కేసులు దాకల్‌చేసి కార్మిక వర్గామునకు భయపెట్టిన పోలీసులకు ఎందుకు భయపడవలేను? కోట్లాదికోట్ల కార్మికులు ఐక్యమైయుటకు సందర్పమిది. ఈ కార్మికుల ఐక్యం మారుతి కర్మికుల మత్రమే కాదు అన్ని కార్మికుల వర్గములను రక్షించి మొదళలి భయంకరవాదములను ఓడించెదము!

కార్మిక వర్గ ఐక్యతను కట్టికాపాడుదము! మొదళాలి భయంకరవాదమును ఓడించెదము!

నుతన ప్రజాస్వామ్య కార్మిక రంఘం
క్రిష్ణగిరి-ధర్మపురి-సేలం జిల్లాలు.
సంప్రదింపులకు: 97880 11784

பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்டுவோம் – கருத்துப் படங்கள்

217

குருதியில் மலர்ந்த மகளிர் தினம் !

புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது !
புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம் !


பெண் : தன்னை மட்டுமல்ல சமூகத்தையே விடுவிக்க போராடுகிறாள் !

நந்தினி, நிர்பயா, ஹாசினி, ரித்திகா
பச்சிளம் குழந்தை வரை தொடரும் பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்ட அமைப்பாவோம் !


மெரினாவைத் தொடர்ந்து நெடுவாசலில் கிளர்ந்த பெண்களின் எழுச்சி வெல்லட்டும் !

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வோ, மாநிலத்தின் எடப்பாடியோ…
மண்ணை அடகுவைக்கும் மாஃபியாக்களாக மாறிவரும் ஆட்சியாளர்களுக்கெதிராக வீரம் செறிந்த போராட்டத்தில் பெண்கள் !


பெண்ணே எழு !

படிதாண்டு, கூந்தல் நறுக்கு
பூ வெறு, பொட்டழி, தாலி மறு,
மனமறிந்து மணம்புரி
நீ விரும்பினால் பெரு
தகாத மணமெனில் முறி
தடை மரபை உடை
அடிமை என்றால் அடி
கேட்டால் சொல்…

நீயும் நானும் ஒன்றென்று !


அழுகிப் போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிடு…

பார்ப்பன சனாதன இந்து மதத்தை விட்டு வெளியேறினார் டாக்டர் அம்பேத்கர் !
பார்பனியத்தை தோலுரித்தார் தந்தை பெரியார் !

அழுகிப் போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிட்டு…
புதிய சமூகத்தை கட்டியமைக்கும் மாற்று அரசியலுக்கான எழுச்சியே பெண்விடுதலையை சாதிக்கும் !


புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் !

இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். அல்லது புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்

தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம் உருப்படியாகாது !

-தந்தை பெரியார்

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி, தொடர்புக்கு : 97503 74810.

நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ? சிறப்புக் கட்டுரை

27

துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகள், ஹோட்டல்களில் தங்கும் அறைகள், விடுதிகள், குளியலறைகள் ஆகிய இடங்களில் இரகசிய கேமராவை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் வக்கிரக் கும்பல்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இடங்களுக்குச் செல்லும் போது எச்சரிக்கையாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ’நமது வீட்டிற்குள் மட்டும் தான் நமது தனியுரிமைக்கும், அந்தரங்கச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு’ என்று எண்ணியிருந்திருப்பீர்கள். அப்படி ஒரு எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., இந்த நொடியிலும் கூட உங்களை ஸ்மார்ட் ஃபோன், அதிநவீன தொலைக்காட்சி மற்றும் கணினி மூலமாக உங்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து கொண்டிருக்கலாம். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ?

உங்கள் வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தின் இயங்குதளங்களுக்குள்  (Operating System) புகுந்து, உங்களது செயல்பாடுகளை ஒன்று விடாமல் பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பிவைக்கத்தக்க வகையில் மால்வேர்கள்(Malwares) என்றழைக்கப்படும் தீய மென்பொருள்களை உருவாக்கி அதனை வைத்து கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது சி.ஐ.ஏ. இதனை மறுக்க முடியாத ஆதாரங்களோடு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.

விக்கிலீக்ஸைப் பற்றி பெரியதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. முதன்முதலில், கடந்த 2010ம் ஆண்டு உலகப் பெரியண்ணன் அமெரிக்காவின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ். ஆப்கனிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் மற்றும் வீடியோப் பதிவுகளை அமெரிக்க இராணுவத்தின் சர்வர்களில் இருந்து ’ஹேக்’ (Hack) செய்து வெளியிட்டது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேவைப் பிடிக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெறி கொண்ட ஓநாய்களைப் போல இலண்டனில் இருக்கும் ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தின் வாயிலில் எச்சில் வழியும் நாக்கோடு இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றன.

அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தின் காண்ட்ராக்ட் ஊழியரான எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் ( NSA) ‘ப்ரிஸ்ம்’ என்னும் இரகசிய உளவு நடவடிக்கை குறித்து கடந்த 2013-ம் ஆண்டு அனைத்து ஆவணங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். அதன் மூலம் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தர்களின் கணினியிலிருந்து தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை திருடியதை அம்பலப்படுத்தினார். உடனடியாக அவரையும் கைது செய்யத் துரத்தியது அமெரிக்கா. ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்களில், ரசிய அதிபர் புதினை ‘நாய்’ எனத் திட்டி ஒரு அமெரிக்காவின் தூதரக அதிகாரி அனுப்பிய மின்னஞ்சலையும் சேர்த்து அம்பலப் படுத்தியதாலோ என்னவோ, ரசியா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

அதன் பிறகு தற்போது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ எவ்வாறு நாம் உபயோகிக்கும் மின்னணு சாதனங்களின் மூலம் நம்மை வேவு பார்த்து, நமது அனுமதியின்றியே நமது அந்தரங்கங்களைப் பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதன் முதல் பகுதியை வால்ட்-7 என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.

நமது கணினியில் செயல்படும் விண்டோஸ் (Windows), மாக்(MAC), லினக்ஸ்(Linux) ஆகிய இயங்கு தளங்களில் உட்புகும் வகையில் மால்வேர்களை (Malware) உருவாக்கி, அதனையே நம்மைக் கண்காணிக்க உபயோகித்து வருகிறது சி.ஐ.ஏ. . நமது கணினியின் அனைத்துத் தகவல்களையும் திருடவும், அதன் வெப்கேமராவையும் , மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் நமக்கே தெரியாமல் உபயோகித்து ஒலி, ஒளிப்பதிவு செய்து, தனது சர்வருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பிக் கொள்ளவும் ஏற்ற வகையில் இந்த மால்வேர்களை சி.ஐ.ஏ, உருவாக்கியிருக்கிறது.

உங்கள் கைப்பேசி உங்களைக் கண்காணிக்கிறது

கணினியைப் போலவே நமது ஸ்மார்ட் போன்களின் (Smart Phone) இயங்குதளங்களாகிய ஆண்டிராய்ட் (Android), ஐ.ஓ.எஸ் (IOS), ஆகியவற்றிற்குள் புகுந்து ஆக்கிரமிக்கும்படியான மால்வேர்களையும், செயலிகளையும்(Apps) உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் செயலிகளும் மால்வேர்களும் நமது அலைபேசியின் தகவல்களைத் திருடுவதோடு, நமக்குத் தெரியாமலேயே நமது செல்போனின் கேமராவையும், மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் ’ஆன்’ (ON) செய்து ஒளிப்பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பி வைக்கும்.

அது தவிர “ஜீரோ டேஸ்”(Zero Days) எனப் பெயரிடப்பட்ட இரகசிய நடவடிக்கைகளின் மூலமாக கடந்த ஆண்டு மட்டும் 24 ஆண்ட்ராய்ட் இரகசிய ஆப்களை சி.ஐ.ஏ. உருவாக்கியுள்ளது. இந்தச் செயலிகள் வாட்ஸப், டெலிகிராம், சிக்னல், வீபோ ஆகிய சமூக தகவல் பரிமாற்ற செயலிகளில் நாம் பகிர்ந்து கொள்ளும் குறுஞ்செய்திளையும், தொலைபேசி அழைப்புகளையும், வீடியோ அழைப்புகளையும், சி.ஐ.ஏ. சர்வருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கும். இதைப் போலவே ஐ.ஓ.எஸ்.-க்கான செயலிகளையும் சி.ஐ.ஏ. உருவாக்கியிருக்கிறது.

அடுத்தபடியாக, உங்கள் வீட்டு ஸ்மார்ட் தொலைக்காட்சியின்(Smart Television)  மூளைக்குள்ளும் கையை விட்டிருக்கிறது சி.ஐ.ஏ. கடந்த 2014-ம் ஆண்டிலேயே, சாம்சங் நிறுவனத்தின் எஃப் 8000 ரக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஊடுறுவுவதற்குத் திட்டமிட்டு, அத்திட்டத்திற்கு ”அழும் தேவதை” (Weeping Angel) எனத் திருநாமம் சூட்டியிருக்கிறது. ஸ்மார்ட்  தொலைக்காட்சிகளில், பயனாளரின் வாய் வழி உத்தரவிற்கிணங்க சேனல்களை மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ‘மைக்’கின் கட்டுப்பாட்டை தனது கையில் எடுத்துக் கொள்கின்றன சி.ஐ.ஏ. மால்வேர்கள். இந்த மைக்கை நமக்கே தெரியாமல் எப்போது வேண்டுமானாலும் ’உயிர்ப்பித்து’ நாம் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பதிவு செய்து இணையத்தின் மூலம் சி.ஐ.ஏ. சர்வருக்கு நேரடியாக அனுப்பும் வகையில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் மென்பொருளிலும் மால்வேர்களின் மூலம் மாற்றம் செய்திருக்கிறது அமெரிக்கா. இதெல்லாம் ஹாலிவுட் படங்களில் கற்பனையாக பார்த்திருப்போம். இனிமேல் அவை வெறும் கற்பனையல்ல.

அமெரிக்க வல்லூரின் திருட்டுக் கண்கள் – சி.ஐ.ஏ.

உங்கள் கணினியையோ, அலைபேசியையோ நீங்கள் அதில் உள்ள இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் மூலம் அணைத்து(Shut down) வைத்தாலும், அவற்றை உண்மையாகவே அணைய விடாமல், அவை அணைந்தது போன்ற ஒரு போலித் தோற்றத்தை இந்த மால்வேர்கள் ஏற்படுத்தும். ஆனால் பின்னணியில் மைக் மற்றும் கேமரா ஆகிய உபகரணங்கள் சி.ஐ.ஏ.வால் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதைப் போலவே தொலைக்காட்சியை நீங்கள் ரிமோட் மூலம் அணைத்தாலும், அதன் மைக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்கள் பேச்சுக்கள் பதியப்பட்டு சி.ஐ.ஏ.விற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.

இதை விட முக்கியமாக, ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொலை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தைக் கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. பல நவீன கார்களில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார்களின் கட்டுப்பாட்டகத்தின் மென்பொருளை இணையத்தின் வழியாகவே மேம்படுத்தும் வசதியை வைத்திருக்கின்றன. அந்த வசதியைப் பயன்படுத்தி, கார்களின் மென்பொருளை ஹேக் செய்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வேலையையும் சி.ஐ.ஏ. செய்திருக்கிறது. இதன் மூலம் சி.ஐ.ஏ.-வால் காரின் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் தளர்த்தி தமக்கு எதிரானவர்களை சந்தேகத்திற்கிடமில்லாத படி கொலை செய்யவும் முடியும்.

சி.ஐ.ஏ.வின் இந்த பொறுக்கித்தன்ங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் நிறுவனர் அசாஞ்சே, சி.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கைகளின் பின்விளைவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். சி.ஐ.ஏ இவ்வாறு உருவாக்கி வைத்திருக்கும் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட மின்னணு சாதனங்களைச் சிறிது ஹேக்கிங் தொழில்நுட்பம் தெரிந்த யார் வேண்டுமானாலும் எளிதில் தவறாக உபயோகித்துக் கொள்ள முடியும். அடுத்தவர்களின் அந்தரங்கத் தகவல்களை சேகரிப்பது, அதனைக் கொண்டு மிரட்டுவது, பணப் பரிவர்த்தனையை முடக்குவது, வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது என அனைத்து வகையான மோசடிகளையும் செய்ய முடியும். ஆகவே தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல, இது பெரும் இழப்பையும், துயரையும் ஏற்படுத்தப் போகும் செயல் ஆகும் என்று எச்சரிக்கிறார் அசாஞ்சே.

உலக நாடுகளை வேவு பார்த்த பெரியண்ணனின் டவுசரைக் கிழித்த ஸ்நோடன்

இதற்கு முன்னர் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் ’பிரிஸ்ம்’ என்னும் தூதரகத் தகவல் திருட்டு நடவடிக்கை குறித்த ஆவணங்களை வெளியிட்டபோது, அதில் தமது நாட்டையும், தமது கணினியையும் உளவு பார்த்ததற்காக பிரேசில் நாட்டின் அப்போதைய அதிபர் தில்மா ரூசப், அமெரிக்காவிற்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ரசிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் அப்போதைய மத்திய அரசு என்ன சொன்னது தெரியுமா?  “ இதெல்லாம் சர்வதேச அரசியலில் சாதாரணமாக நடக்கக் கூடிய விசயங்கள் தான்” எனக் கூறியது. சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து, ’மக்களின் உரிமைகளைப் பறித்து கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே’ எனப் போராடினால், ”அது இந்திய இறையான்மைக்கு எதிரானது” என சவுண்டு கொடுக்கும் இதே அரசு தான் அமெரிக்க ஆண்டை தம்மை வேவு பார்ப்பதை அங்கீகரித்து, ”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!” என மம்மியைப் பார்த்த எம்.எல்.ஏ.-வாகப் பம்மியது.

தற்போது உலக மக்கள் அனைவரையும் வேவுபார்க்கும் அமெரிக்காவின் திட்டம் அம்பலப்படுத்தப்பட்ட போதும், ’தேஷாபிமானி’ மோடி தலைமையிலான மத்திய அரசு இது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்ய வில்லை. தங்களது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்ப்பது அயோக்கியத்தனம் என்றோ, இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றோ வாய் திறக்கவில்லை.

அதற்குப் பதிலாக, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அமெரிக்காவின் இணைய வலைக்குள் இந்திய மக்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ’மாமா’ வேலையைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் மோடி. அது தான் மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம். ஊர் ஊருக்கு சாலை இருக்கிறதோ இல்லையோ, வை-ஃபை யும், இண்டெர்நெட்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என மோடி கும்பல் துடியாய் துடிப்பதன் நோக்கம், மக்கள் அனைவரையும் தமது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது தான்.

ஏற்கனவே, ஒட்டு மொத்தக் குடிமக்களுக்கும் ‘மாட்டிற்குச் சூடு போடுவது’ போல் கை, கண் அடையாளங்களை எடுத்து ஆதார் அட்டையைக் கொடுத்து அதனை அவரவர் வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கிறது இந்திய அரசு. நமது அன்றாட நடவடிக்கைகளில் அவசியமானதாக மாற்றப்பட்டுள்ள ஆதார் அட்டைக்கு நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களால் தவறாக உபயோகிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் அம்பலமானது.

நம்மைக் கண்காணிப்பு வளைக்குள் கொண்டு அந்து நமது தகவல்களைத் திருடி வியாபாரம் செய்யக் காத்திருக்கும் கூகுள், பேஸ்புக், மைரோசாப்ட் நிறுவன்ங்களின் தலைமை அதிகாரிகளான சுந்தர் பிச்சை, மார்க் சூக்கர்பெர்க், சத்யா நாதெலா வுடன் டிஜிட்டல் இந்தியா ‘மோடி’

நமது தனித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட தகவல்கள் எப்படி தனியார் நிறுவனங்களுக்கு கசியவிடப்பட்டன என்பது குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஸ்க்ரோல்.இன்(scroll.in) என்னும் இணையதளம் கேட்ட போது, அது அரசு இரகசியம் எனக் கூறி அது குறித்த தகவலை வெளியிட மறுத்தது மத்திய அரசு.

முதலாளிகளுக்கு  நமது சேமிப்பை அள்ளிக் கொடுக்க, தற்போது நம்மைப் பணமில்லாப் பரிவர்த்தனையை நோக்கி முட்டித் தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. பணமதிப்பு நீக்கத்தின் மூலமும், பணப் பரிவர்த்தனைக்கு எதிரான வங்கிகளின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும், இணையம் மற்றும் மொபைல் ஆப்புகளின் வழியான பரிவர்த்தனைகள் மூலமும் நம்மை அமெரிக்காவின் இணைய கண்காணிப்பு வலைக்குள் தள்ளிவிடுகிறது மோடி அரசு.

நாம் நமது அண்டை வீட்டுக்காரரைக் கூட நமது தனிப்பட்ட விவகாரங்களுக்குள் தலையிட அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கோ இருக்கும் அமெரிக்கா நமது படுக்கையறை வரை நமது ஒப்புதல் இன்றியே வந்து நமது அந்தரங்கங்களைப் படமெடுத்துக் கொள்ள அனுமதிக்கப் போகிறோமா?  அமெரிக்க ஆண்டையின் அத்துமீறல்களுக்கு இந்திய ஆளும் வர்க்க அடிமைகள்  வேண்டுமானால் ஒத்துழைக்கலாம், உழைத்து உணர்வோடு வாழும் நாம் ஒத்துழைக்கலாமா?

– நந்தன்

மேலும் படிக்க:

சீர்காழி : ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் போலீசு

0

மிழகத்தின் காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் ONGC – யை கண்டித்து 14-03-2017 அன்று தாண்டவன்குளம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராம மக்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுத்த காவல்துறை கிராம மக்களுக்கு அனுப்பிய குறிப்பாணை.

தடையை மீறி 14/03/2017 – அன்று நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையபாளையம் தாண்டவன்குளம் பகுதியில் ஒ.என்.ஜீ.சி, ஹைட்ரோ கார்பன் இயற்கை பேரழிவு கொள்ளை திட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் அராஜகமாக  நடந்து கொண்டது. இதனை செய்தியாக மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி கொடுத்த தகவலை, வினவுக்கும் முகநூல் பதிவுக்கும் மக்கள் அதிகாரம் ஆதரவாளர் தோழர் வீரசோழன் அனுப்பியுள்ளார். இத்தகவலை முகநூல் பதிவில் பார்த்த புதுப்பட்டினம் காவல்துறை ஆய்வாலர் முருகேசன் தோழர் வீரசோழனை அழைத்து,”எப்படி நீ காவல்துறையை பற்றி எழுதலாம் இனிமேல் இப்படி எழுதினால் உன்மேல் நடவடிக்கை எடுப்பேன் ஜாக்கிரதையாக இரு” என்றும் ”F.I.R. போட்டுவிடுவேன்” என்றும் மிரட்டினார்.

தகவல்
ஒருங்கினைப்பாளர் ரவி
மக்கள் அதிகாரம். தொடர்புக்கு 9843480587

***

இன்று (16.03.2017 )சீர்காழி தாலுக்கா தாண்டவன்குளம் பகுதியில் இயற்கை எரிவாயு பேரழிவு கொள்கைக்கு எதிராக நடக்க இருந்த போராட்டம் போலீசின் பீதியூட்டலாலும், அச்சுறுத்தலாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாண்டவன்குளத்திற்கு வரும் சாலை பகுதியிலுள்ள மைதானம், பண்ணீர்கோட்டகம், பழையபாளையம், தாண்டவன்குளம், புதுப்பட்டினம்  என 15 கீ.மீ வரை சீர்காழியின் டி.எஸ்.பி  தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுக்கின்றனர். போலீசு கிராமம் முழுவதையும் ரீமாண்ட் செய்துவிடுவோம் யாரும் போராட்டத்திற்க்கு வரக்கூடாது என்று எச்சரிப்பதுடன், ஊர் நாட்டாமை, முக்கியஸ்த்தர்கள், போராட்டக்குழு என அனைவரையும் மிரட்டி போராட்டம் நடத்த கூடாது என்று எழுதிவாங்கி கொண்டனர். போலீசின் பீதியூட்டலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். ஒரு பக்கம் போலீசு சில அமைப்பு தோழர்களை கைது செய்து கொண்டு இருக்கின்றது, இருப்பினும் இன்னோரு பக்கம் போராட்டத்தை உறுதி படுத்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்று கொண்டே இருக்கின்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
சீர்காழி

மணப்பாறை – தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0

ணப்பாறையில் 15-03-2017 புதன்கிழமை காலை 10-00 மணிமுதல் மாலை 05-00 மணிவரை மக்கள் அதிகாரம் தோழர் பாண்டியன் தலைமையில்
துப்பாக்கிச்சூட்டுக்கு மீனவர் பலி ! காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி !!
கோக்கோ கோலாவிற்கு தாமிரபரணி பலி ! ஹைட்ரோகார்பனுக்கு நெடுவாசல் பலி !!
புதிய பொருளாதாரக் கொள்கையின் தனியார் மயம், தாராளமயம், உலகமயத்திற்கு நாடே பலி !
என்ற முழக்கத்தை முன்வைத்து மணப்பாறை பெரியார் சிலை அருகில் தர்ணா போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு  காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் 13-03-2017 அன்று எழுத்துப்பூர்வமாக அனுமதிவழங்கியுள்ளனர்.

தர்ணா போராட்டம் குறிப்பிட்ட தேதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் 15-03-2017 அன்று காலை 10-00 மணியளவில் அனுமதி மறுக்கப்பட்டது என வாய்மொழி உத்தரவு மூலம் காவல் துறை தடுத்தனர். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கும், மக்கள் அதிகார தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டமாக மாற்றி நடப்பட்டது.

தோழர் இரும்பொறை பிச்சை, நகர தலைவர், திராவிடர் கழகம்
திரு மணவை துரை காசிநாதன் திமுக தலைமைகழக பேச்சாளர்
தோழர் பழனிச்சாமி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்
தோழர் ந. பிரபாகரன் மாநில து. பொதுச்செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம்
தோழர் வீ. தனபால் திராவிடர் விடுதலைக்கழகம்
திரு தே. கோபி புதிய தமிழகம், புறநகர் மாவட்டச் செயலாளர்
தோழர். கராத்தே வீர. முருகன் மாவட்டச் செயலாளர், ஆதிதமிழர் கட்சி
வழக்கறிஞர் கு. தமிழ்மணி சமூக ஆர்வலர்
திரு சுப்பிரமணியன் சேர்மன் சூர்யாநர்சிங்கல்லூரி, வையம்பட்டி
கவிஞர் பசுலுதீன், தலைவர், மணவைத்தமிழ்க் கழகம்
கவிஞர் வே. பால சுப்பிரமணியன், மணவை தமிழ்ச்சங்க பொருளாளர்
கவிஞர் அறிவுச் செல்வன் சமூக ஆர்வலர்
தோழர் வை.கண்ணன் மக்கள் அதிகாரம், மணவை

ஆகிய தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள் மற்றும் முற்போக்கு ஜனநாயக் சக்திகள் கலந்துகொண்டு தங்களது கருத்தை பதிவு செய்தனர். நிறைவாக தோழர்காளிதாஸ் நன்றியுரை ஆற்றினார்.

மக்கள் அதிகார தோழர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் 30 பேரை கைசெய்து மாலை 06:00 மணிக்கு விடுதலை செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
மணப்பாறை. தொடர்புக்கு – 98431 30911

ஷாப்பிங் மால்களுக்காக தரைக்கடை வணிகர்களை அழிக்கும் வேலூர் மாநகராட்சி

0

வேலூர் மாவட்ட நிர்வாகமே ! மாநாகராட்சியே !! தரைக்கடை வியாபாரிகளுக்கு கட்டிய கடைகளை மாநகராட்சியே ஏற்று நடத்து என்று 13.03.2017 அன்று திங்கள் மாலை வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு.-வின் கிளை சங்கமான வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், அடுக்கம்பாறை பகுதி தரைக்கடை வியாபாரிகள் மற்றும் ம.க.இ.க. தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு.-வின் மாவட்ட இணை செயலாளர் மற்றும் இச்சங்கத்தின் செயலாளர் தோழர் சரவணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.  வேலூர் லாங் பஜாரில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக  வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறி அப்புறப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். பின்னர் வேறு இடத்தில் கடைக்கட்டி தந்து அதை தனியாரிடம் ஒப்பந்தம் என்ற பேரில் டெண்டர் விட்டு  தனியார் பகல் கொள்ளைக்கு மாநகராட்சியே துணை நின்றது இதை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்தாக  இரு பகுதி சங்க செயலாளர்கள் மாநகராட்சி மற்றும் போலீசு ஆகியோர் முன்பு எவ்வாறு நடத்தினர் என்றும் இச்சங்கத்தில் இணைந்த பிறகு எவ்வாறு சுயமரியாதையுடன் தொழில் செய்து வருகிறோம் என்றும் விளக்கி பேசினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் இவ்வார்ப்பாட்டம் கடந்த மாதம் நடத்தப்படிருக்க வேண்டியது, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று சொல்லி போலீசு மறுத்துவிட்டதை அம்பலப்படுத்தினார்.

சாதாரண உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக போராடும்போது சட்டம் ஒழுங்கை காட்டும் போலீசு இன்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் இந்நாட்டை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல்களுக்கு பாதுகாப்பு தருகிறது. சாதாரண வியாபாரிகளுக்கு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள பெரிய பெரிய உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முன் சாலைகளை மறித்து நிற்கும் வாகனங்களை தடுக்காமல் அவற்றுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இது எந்த வர்க்கத்திற்கான அரசு இதில் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை நடைமுறை ஆதாரமாக விளக்கினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு.-வின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் இவ்வியாபாரிகள் தினந்தோறும் வட்டிக்கு கடன் பெற்று பிழைப்பு நடத்துவதையும், இத்தொழில் என்பது சதவீத சாதாரண உழைக்கும் வர்க்கத்துக்கு எந்தளவு இன்றுள்ள விலைவாசியில் பயனுள்ளதாக உள்ளது என்பதையும் விளக்கிப்பேசினார். இதை தனியார்மயம் தாராளமயம் உலகமயம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர்களில் இவர்களின் வாழ்வுரிமையை பறித்து கொள்ளை கும்பலிடம் தாரை வார்க்கிறது என்பதையும் விளக்கிக்கூறினார். இன்று அனைத்து பிரிவு மக்களும் போராடுகிறார்கள், போராட்டம் தான்  நம் அனைவருக்குமான தீர்வு என்று கூறினார்.

இறுதியாக தோழர் சுப்பிரமணி நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஒரு நாள் தனது வியாபாரத்தை இழந்தாலும் அவர்களுடைய தொழிலே போய்விடும் என்ற நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம்)
வேலூர் மாவட்டம். தொடர்புக்கு : 84897 35841

ஆறு வருசத்துதல மூணு சாவு – ஆனாலும் குடும்பத்த காப்பாத்தணுமே !

1

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 5

ழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னைச் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் இளநீர் கடை வைத்திருக்கும் சத்தியவாணியைச் சந்தித்தோம்.

“மகளிர் தினமா? கேள்வி பட்டுருக்கேன். அது எங்க நடக்குதுன்னு தெரியாது. நான் போனதுமில்ல. எந்த நல்ல நாளு வந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோசம்தாங்க. ஏன்னு கேட்டா நாளு கெழமையில இன்னும் நாலு எழநி கூட விக்குமே!. சரி அது போகட்டும் உழைக்கும் மகளிர் தினம் கொண்டாற்றீங்கன்னா நீங்க எங்கள நெதமும் கொண்டாடனும்.பொண்ணுங்களுக்கான நல்ல நாளுன்னா சந்தோசமா எதுனாச்சும் சொல்லனும் எங்கிட்ட அப்படி ஒன்னும் இல்லையே என்னத்த சொல்ல.”

சத்தியவாணிக்கு வயது 46. திருமணம் செய்துக் கொள்ளாமல் தனி ஒருவராக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கும் போராட்ட மனுசி. இதே இடத்தில் 40 வருடங்களுக்கு முன் அவர் அப்பா, அம்மா ஆரம்பித்த இளநீர் கடையைக் கடந்த 17 வருடங்களாக நடத்தி வருகிறார். வெளியூரிலிருந்து லாரியில் கொண்டு வரப்படும் இளநீரை, நடு இரவிலும் தனி ஆளாக நின்று இறக்கி பத்திரப்படுத்திவிட்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு வாழும் தைரியமான பெண்.

“கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு கொள்கையெல்லாம் கெடையாதுங்க. எல்லாரப் போலவும் கல்யாண பன்னிக்கிட்டு புருசம் புள்ளையோட வாழ ஆசப்பட்டவதான் நானும். 1998-ல அப்ப எனக்கு 25 வயசு. கல்யாணம் பேசி அதுக்கான வேலைங்க சந்தோசமா நடந்துட்டு இருந்துச்சு. கல்யாணத்துக்கு நாலு நாள் இருக்கறப்ப எங்க அம்மா இதே எடத்துல அடிப்பட்டு எறந்து போச்சு. என்ன செய்ய ஏது செய்யன்னு ஒன்னும் புரியல. நாலு மாசம் தள்ளி வச்சுக்கலான்னு மாப்ள வீட்டல சொன்னோம் அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.”

“அம்மா அப்பா ரெண்டு பேருமே நடு ராத்திரி எழநி எறக்க வந்தாங்க. எறக்குனது அசதியாருக்குன்னு அப்பா கொஞ்சம் கண்ண மூடிருக்காரு ,அம்மா வெத்தல போட்டுட்டு காவலுக்கு உக்காந்திருக்கு. எந்தப் பாவியோ எமனப்போல எங்குட்டுருந்து வந்தானோ அடிச்சு தூக்கிட்டான். அஞ்சு நிமிசத்துல அப்பா மடியிலேயே  அம்மா உயிரு போச்சு. ஸ்டேசனுக்கு அலஞ்சு பாத்தோம் யாருன்னே கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லிட்டாங்க. அம்மா செத்து கல்யாணம் தள்ளிப் போயி என்ன செய்றதுன்னு முழி பிதுங்கி நிக்கிறப்ப ஆண்டவன் அடுத்த பாரங்கல்ல நடு மண்டையில நச்சுன்னு போட்டான்.”

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, 6 வயது வளர்ப்பு குழந்தை இதுதான் சத்தியவாணியின் குடும்பம். பெற்றோர் இறந்ததால் அனாதையான மாமன் மகனை 3 வயதிலிருந்து சத்தியவாணியின் அம்மா எடுத்து வந்து வளர்த்துள்ளார். அம்மா இறப்புக்கு பிறகு தன் பிள்ளையாகவே வளர்த்துள்ளார் சத்தியவாணி. இந்தச் சூழலில் சோதனைகளும் அவரை துரத்துவதை விடவில்லை.

“பட்ட கால்லேயே படும் கெட்ட குடியே கெடுமுன்னு பழமொழி ஒன்னு சொல்லுவாங்களே அது எனக்குதாங்க பொருந்தும். சரி போனது போச்சு, ஆக வேண்டியத பாக்கலான்னு திரும்பவும் கல்யாணத்துக்கு நல்ல நாள் பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அண்ணெ லவ் பெயிலியருன்னு மண்ணன்னெய ஊத்தி கொளுத்திக்கிட்டான். தலையில இருந்து கால் வரைக்கும் சரி பாதியா வெந்துப் போச்சு. ஆறு மாசம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா நடந்து உயிரக் காப்பாத்தி கொண்டாந்தேன். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. ஆனா அங்கங்க நரம்பு சுருட்டி இழுத்துகினு பாக்க கோரமா இருப்பான். கையில வெரலெல்லாம் கோணிக்கிச்சு. எந்த வேலையும் செய்ய முடியாது.”

“வீட்டுல நான் ஒரு பொம்பள வயசான அப்பா, முடியாத அண்ணன், வெவரம் இல்லா தம்பி, வயசு கொழந்த எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு கல்யாணம் செஞ்சுக்க மனசு வரல. அப்பா ஆத்தா இல்லாதப் புள்ளைய நெனச்சு பாருங்க, அம்மாவும் போச்சு நானும் கல்யாணம் பன்னிட்டு போனா எங்கன்னு போவும் அந்தக் கொழந்த. மாப்ள வீட்டுல ஒரு வருசம் போலக் காத்துருந்தாங்க வேற எடம் பாத்துக்கச் சொல்லிட்டேன்.”

“அம்மா சாவரதுக்கு முன்ன வரைக்கும் வீட்டு வேலை மட்டும் செய்வேன். எந்த வெளி வேலைக்கும் போனதில்ல. அம்மா செத்து தெவசம் முடிஞ்சுச்சு இனிமே வீட்டுல இருக்க கூடாது தொழில கத்துகனும்னு அப்பாக் கூட நானும் கொஞ்ச நேரம் கடைய பாத்துக்க ஆரம்பிச்சேன். சரியா மூனே வருசம்தான் 2001-ல அப்பா எறந்துட்டாரு. வேலையே செய்ய முடியலன்னாலும் ஆதரவா இருந்த அண்ணனும் அடுத்ததா போய் சேந்துட்டான். ஆறு வருசத்துல மூனு சாவு தாங்க முடியல. நானே ஒரு நட பொணமா மாறிட்டேன்.”

“கெட்டது நடந்த வீட்டுல ஒரு நல்லது நடந்தா கொஞ்சம் நெலம மாறுன்னு நெனச்சேன். சொந்தத்துல ஒரு பொண்ண பாத்து தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன். சொந்தக்கார புள்ள நம்மள நல்லா பாத்துக்குமுன்னு நெனச்சேன். நெனப்பு பொய்யாப் போச்சு. எந்தம்பியும் ரொம்ப பாசக்கார பய. என்ன பாசம் இருந்தாலும் தாம்பொண்டாட்டி புள்ளன்னு வரும்போது நாம கொஞ்சம் தூரம்தான்.”

“ஒரு வருசத்துக்குள்ள குடும்பத்துல எண்ணிப் பாக்க முடியாத பிரச்சன. தனியா போய்ட்டான். கொஞ்சமா குடிச்சவன் முழு நேர குடிகாரனாயிட்டான். அரிசி, பருப்பு அத்தனையும் நான் கொடுக்கனும். மொளகா, மல்லியக் கூட அரச்சு கொடுக்கனும். தம்பி நல்லாருந்தா போதுமுன்னு அத்தனையும் செஞ்சேன். 2 வருசமாச்சு அவனும் என்ன விட்டுட்டு போய்டாங்க. அவன நெனச்சு நெனச்சு உருகொலஞ்சு போய்டேன். கழுத்தே தெரியாது அந்த அளவு குண்டா இருந்தேன். வேல செய்ய முடியல ஒடம்ப கொறையனுமுன்னு என்னான்னாவோ செஞ்சு பாத்தேன். எந்தம்பி செத்தான் தானா உடம்பு எறங்கிப்போச்சு.”

உறவினர் ஒருவர் இரட்டை பெண் குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டார்.  அந்தக் குழந்தையை அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். தம்பி தனி குடித்தனம் சென்றதில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் குழந்தையை வைத்து சரிசெய்ய நினைத்தார்.  பெண் குழந்தை என்பதால் தான் அம்மாவாக பாவித்து ஆசையாக வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

“கல்யாணம் தான் ஆகல ஆனா ரெண்டு பிள்ளைங்களுக்கு தாயாயிட்டேன். மனசார சொல்றேன் இந்தக் கொடுப்பன யாருக்கு வரும் சொல்லுங்க. (பெருமையோடுஅழகாக சிரிக்கிறார்) எம்பொண்ணும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவா. மாமா பையனும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவான். இப்ப அவனும் ஒரு குடும்பமாயிட்டான். தம்பி எறந்ததால தம்பி பொண்டாட்டியும் எங்கூடத்தான் இருக்கா ஆனா நாங்க இருக்கும் போது இந்தப் பொண்ணு எதுக்கு வளக்குறேன்னு அப்பப்ப வம்பு பன்னுவா. யாருக்காகவும் எம்பொண்ண நான் விட்டுத் தர மாட்டேன்.”

எம் பொண்ண ஒரு வயசுலேருந்து வளத்துகினு இருக்கேன். நாலு கட தள்ளிதான் அவளப் பெத்த அப்பா கட போட்ருக்கான். அவனாண்ட ஒர்ரூவா எனக்கு வேணுன்னு போய் நிக்க மாட்டா. எல்லா நல்லது கெட்டதும் நானே பாத்துப்பேன். படிப்பு வரல எத்தனேயோ சொல்லிப் பாத்துட்டேன் படிக்க மாட்டேன்னுட்டா. இப்ப ஒரு கடைக்கி வேலைக்கிப் போறா சம்பளத்த அப்படியே எங்கிட்ட குடுத்ருவா. அவளுக்கு நல்லபடியா ஒரு கல்யாணத்த பன்னிப் பாக்கனும் அதுதான் என் கடைசி ஆசை.”

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏரோபிக் அண்ட் ஃபிட்னஸ் அசோசியேசன் ஆப் அமெரிக்கா என்ற அமைப்பு அங்கீகரித்த ‘பெல்லேடி’ என்ற நடனத்தை சென்னை ஜூம்பா நடன அமைப்பு தமிழகத்தில் பல இடங்களில் அறிமுகம் செய்திருக்கிறதாம். இந்த நடனம் ஆடினால் பெண்களின் மன அழுத்தம் குறைந்து இலகுவாக காணப்படுவார்களாம். சத்தியவாணி போன்ற உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு உள்ள மன அழுத்தத்தைக் குறைக்க எங்கு செல்வது?

– வினவு செய்தியாளர்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி !

5
"பெட்ரோல் டெக்" சர்வதேச மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்கள், முதலீட்டாளர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடியதையடுத்து, அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நாடகமாடிய மோடி அரசு, அதே திட்டத்தை “ஹைட்ரோகார்பன் திட்டம்” என்ற பெயரில் நரித்தனமாகக் கொண்டு வந்துள்ளது.  கூடங்குளம் அணு மின்நிலையம், நியுட்ரினோ ஆய்வுத் திட்டம், ஷெல் எரிவாயுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, மற்றும் தமிழகக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கும் திட்டம் ஆகியவற்றின் வரிசையில் தமிழகத்தைச் சுடுகாடாக்குவதற்கு மோடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம்!

ஹைட்ரஜன், கார்பன் என்ற இரு வேதிப்பொருள்கள் இணைந்த மீத்தேன், ஈத்தேன், புரோத்தேன், ஹெக்சேன், மண்ணெண்ணெய், பெட்ரோலியம் போன்ற 14 வகைக் கனிமங்கள் ஹைட்ரோகார்பன்கள் எனப்படுகின்றன. பூமிக்கடியில் சுமார் 6000 மீட்டர் ஆழம் வரை பாறை இடுக்குகளில் படிந்திருக்கும் இந்த எரிவாயுவை ஆழ்துளையிட்டு உறிஞ்சி எடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

நெடுவாசலில் எரிவாயுவை எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு.

இந்தியாவின் எண்ணை மற்றும் எரிவாயுவின் ஒரு ஆண்டுத்தேவை 226 மில்லியன்  டன்கள். இதில் 70 மில்லியன் டன்கள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, நமது மொத்தத் தேவையில் 78 சதவீதத் தேவைக்கு இறக்குமதியை நம்பியுள்ளோம்.  அதிகரித்துவரும் இந்த இறக்குமதியில் 10 சதவீதத்தைக் குறைப்பதுதான் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. இந்தக் கூற்று உண்மையா?

ஒ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா முழுவதும் ஆய்வு செய்து எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் அதிகமுள்ள 310 இடங்களைக் கண்டறிந்தன. இதில் முதல்கட்டமாக, மகராஷ்ட்ராவில் 29, ஆந்திராவில் 15, அஸ்ஸாமில் 13, குஜராத்தில் 6, இராஜஸ்தானில் 2, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2, (நெடுவாசல்,காரைக்கால்) என மொத்தம் 67 இடங்களில் ஆய்வுக்கான நிலங்களைக் கையகப்படுத்தி, ஒவ்வொரு இடத்திலும் எத்தனை டன் எண்ணெய் உள்ளது, எத்தனை கனஅடி எரிவாயு உள்ளது என்று ஆய்வுகள் செய்து முடித்துள்ளன. இவ்வாறு மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் எரிவாயுவை, அன்னிய நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதென்று முடிவு செய்திருக்கிறார் மோடி.

“பெட்ரோல் டெக்” சர்வதேச மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்கள், முதலீட்டாளர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

2016 டிசம்பர்  5-ம் தேதி, சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகள் கலந்துகொண்ட ”பெட்ரோல் டெக்”’ என்ற சர்வதேச மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். இந்தியாவின் எண்ணெய் எரிபொருள் தேவை ஒவ்வொரு ஆண்டும் 3.5% அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் தயக்கமின்றி முதலீடு செய்யுங்கள்” என கார்ப்பரேட் கம்பெனிகளை தாஜா செய்தார்

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ””கண்டுபிடிக்கப்பட்ட சிறு வயல்களின் ஏலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் கலந்து கொள்ளாது” என்று அன்னிய முதலாளிகளுக்கு சத்தியம் செய்கிறார்.

பன்னாட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கும் வாக்குறுதிகளையும் சலுகைகளையும் பாருங்கள்:

  • ஏலம் எடுக்கும் நிறுவனங்களுக்கு தொழிலில் முன்அனுபவம் எதுவும் தேவையில்லை. தொழில்நுட்ப அறிவு மட்டும் இருந்தால் போதுமானது.
  • இதற்கென இறக்குமதி செய்யப்படும் எந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் அனைத்துக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • ஏலம் எடுத்த நிலப்பரப்பில் எத்தனை கிணறுகள் வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளலாம்! இத்தனை மீட்டர் ஆழம்தான் தோண்ட வேண்டும் என்றும் நிபந்தனை இல்லை.
  • ஷேல், மீதேன் உள்ளிட்ட எல்லா வகையான ஹைட்ரோ கார்பன்களையும் எடுப்பதற்கு எந்தவித தடையோ, கட்டுப்பாடோ கிடையாது.
  • பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி கிடையாது, எரிவாயுவுக்கு ராயல்டி 10% மட்டுமே.
  • உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சர்வதேச சந்தை விலையில் விற்றுக் கொள்ளலாம். ஏலம் எடுக்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
  • ஒப்பந்த காலமான 15 ஆண்டுகள் முடிந்தபின், மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்க முடியும். ஒப்பந்த காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தாலோ அல்லது காரணமின்றியோ திட்டத்திலிருந்து விலகும் நிறுவனங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது.

இப்படி அடுக்கடுக்கான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு.

நெடுவாசல் பூமியின் அடியில் கிடக்கும் வளத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வரா

எண்ணெய், எரிவாயு வயல்களைச் சர்வதேச சந்தையில் ஏலம் விடுவதற்காக மோடி அரசு நியமித்திருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற தரகு கம்பெனி வெளியிட்டிருக்கும் ஆவணமும், 14.10.2015 தேதியிட்ட பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணமும், டைரக்டரேட் ஜெனரல் ஆப் ஹைட்ரோ கார்பன்ஸ்-இன் ஆவணங்களும் மேற்கூறிய விவரங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன.

நெடுவாசல், காரைக்கால் மட்டுமல்ல, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், இராமநாதபுரம், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் சுமார் 3,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 398 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் திட்டமிட்டுள்ளது மோடிஅரசு. நெடுவாசலை பி.ஜே.பி.-யின் முன்னாள் மத்திய மந்திரியான ஜி.எம்.சித்தேஸ்வராவின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளதைப் போல, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையை ரிலையன்ஸ் மற்றும் அதானிக் குழுமத்திற்கும், இராஜஸ்தானில் வேதாந்தா மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கும், குஜராத்தில் அதானிக்கும் ஒதுக்கியிருக்கிறது மோடிஅரசு. இதற்காக நாடு முழுவதும் 16,82,657சதுர கி.மீ. பரப்பளவு நிலங்கள் கண்டுபிடிப்புகளுக்கும், எண்ணெய் உற்பத்திக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 2015-16 வரை சுமார் 40  பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மோடி அரசு சொல்லிக் கொள்வது போல, இந்த திட்டத்தின் நோக்கம் சுயசார்பும் அல்ல, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவதும் அல்ல. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கூறுபோட்டு விற்பதுதான் மோடி அரசின் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

வெளிப்படையாகத் தெரியாத நோக்கம் ஒன்றும் மோடி அரசுக்கு இருக்கிறது. காவிரி வடிநிலத்தை ஹைட்ரோ கார்பன் வேட்டைக்குப் பயன்படுத்துவதற்காகத்தான், காவிரி நீரை மோடி அரசு திட்டமிட்டே தடுத்து வருகிறது என்பது இப்போது உறுதியாகிறது.

  • மாறன்.
    புதிய ஜனநாயகம், மார்ச் 2017

புத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் !

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மார்ச் 8 – ஆம் தேதி உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி  பெ.வி.மு தோழர்.ஜெயமணி தலைமையில் மாலை அணிவித்து பெண் விடுதலைக்கான முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர். வெடிவெடித்து முழக்கமிட்டு, அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் சென்று பிரசுரங்கள் விநியோகித்து இனிப்பு கொடுக்கப்பட்டது.

மகளிர் தினம் என்பதையே அறியமுடியாத அளவு நிறைய பெண்கள் இருப்பதை அங்கே காண முடிந்தது. தேநீர் கடைகள், உணவகங்களில் பணியாற்றும் பெண்களிடம் சென்று பிரசுரம் கொடுத்து விளக்கப்பட்டது. அதன்பிறகு மாலை அரங்குக்கூட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள சுமங்கலி மகாலில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

தலைமையேற்ற பெ.வி.மு தலைவர் நிர்மலா இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டத் தீ பற்றியுள்ளது. மெரினாவின் போராட்டம் போட்ட விதை நெடுவாசலில் முளை விட்டுள்ளது. கோக், பெப்சி கம்பெனிகளை தடுத்து நிறுத்த கோரி, தாமிரபரணி தண்ணிரை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என நெல்லையில்கூடியுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்க சென்று தொடர்ந்து தமது உடமைகளை சிங்கள கடற்படைக்கு பறிகொடுத்து இறுதியில் 2O வயதில் உயிரையும் கொடுத்துவிட்டு மீனவ மக்களையும் போராட்டக்களத்தில் குதிக்க வைத்துள்ளான் அந்த இளைஞன் பிரிட்ஜோ. மகளிர் தின வரலாறும், போராட்டத்தை உள்ளடக்கியதுதான். ஐரோப்பா, அமெரிக்காவில் வீதியில் திரண்டபெண்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கு சாவுமனி அடித்தனர்.

இந்தப் போர்க்குணத்துக்கு தலைவணங்கி சோசலிசப் போராளி கிளாரா ஜெட்கின், சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிப்பதன் தேவையை உலகுக்கு அறிவித்தார். தோழர் மாமேதை லெனினும் அதை வழிமொழிந்தார். ஆக இந்த போராட்டதினம், பெண்கள் மீதான கொடுமைகளை தொடர்ந்து பொசுக்கும் என்றார்.

தோழர் சிவானந்தம் குடும்பமும், மகளிர் எனும் தலைப்பில் பேசும் போது பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள்? அது தனியாக நடந்த நிகழ்வு அல்ல சமூகமாற்றத்தின் போக்கே என்பதை விளக்கினார்.

மனிதர்கள் தமது வாழ்க்கை மீதான பயம், அவமான உணர்ச்சி, வேதனை, தாழ்வு மனப்பான்மை, வாழ்வுக்கான வழிதெரியாமல் கையறு நிலை இவைகளை தனித்து பார்த்து திகைப்பதை விட இந்த சமூகமே அனைத்துக்குமான காரணிஎன்பதை உற்றுப் பார்ப்பதே முதன்மையானது.

சுயநலத்தை விட்டொழித்து பொதுநலத்தை பேணும் போது உடலில் உள்ள நோய்களும் ஓடிப்போய்விடும். அதை நடைமுறையில் சாத்தியமாக்கும் போராட்டத்தில் ஒன்றிணைவோம் வாரீர் என அறைகூவினார்.

அவரைத் தொடர்ந்து. பெண் விடுதலை இந்த கட்டமைப்புக்குள் சாத்தியமா? என  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசினார்.

பெண்கள் இன்று ஒன்று திரள துவங்கியுள்ளார்கள். மெரினாவுக்கு பின் இன்று போராட்டம் என்றால் வருகிறார்கள். மெரினாவில் நாம் பறை அடித்து பாடும் போது பெண்கள் 5 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளவர்கள் என அனைவரும் அங்கு  ஆதரவு தருகின்றனர்.

மாணவர்களை நாங்கள் தவறாக நினைத்திருந்தோம். போன், வாட்ஸ்அப், என உருப்படாம போகிறார்கள் என்று நினைத்திருந்தோம் அதே போதில் மெரினா புரட்சிக்கு வித்திட்டவர்கள் இவர்கள் தான் என்ற போது ஒரு தாய் அங்கே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

அடுப்படியில் கிடந்த பெண்ணின் நிலை மாறி உள்ளது. ஆனால் ஆணின் சிந்தனை மாறி உள்ளதா? அது இன்னும் வக்கிரமாக, இரக்கமற்றதாக மாறியுள்ளது. நிர்பயா துவங்கி, சுவாதி முதல் இன்று நந்தினி, ஹாசினி, ரித்திகா என எண்ணிலடங்கா பெண்கள், குழந்தைகள் ஈவிரக்கமற்று பாலியல் துன்புறுத்தலுக்கும் கொடுர ஆணாதிக்க வெறியாலும் குதறப்படும் நிலையை வார்த்தையால் சொல்ல முடியாது. அதிகாரியாலும் அடிமட்ட ஊழியர்களாலும் சிதைக்கப்பட்டு நடைப்பிணங்களாக எத்தனைபேர் வாழ்கின்றனர்.

சந்தேக கேசுன்னு ஸ்டேசனில் வைத்து மானபங்கம் செய்து வெளியில் தெரியாமலே புதைக்கப்பட்டனர். சிறுமிகள் எத்தனை பேர் பாலியல் துன்புறுத்தல் உறவினர்களால் செய்யப்பட்டு, புகார் கொடுக்க சென்று காவல்துறையை சேர்ந்த 10, 15 பேரால் கூட்டுபாலியல் வன்முறைக்குள்ளானது தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

நீதி கேட்டு நீதிமன்ற படியேறினால் அங்கும் பாலியல் வெறியர்கள். இந்த நிலைத் தொடர்ந்தால் பெண்கள் யாரிடம் பாதுகாப்புக்கு செல்ல முடியும். அதிகார வர்க்கம், காவல்துறை, நீதிமன்றம் என ஒட்டு மொத்த அருவருப்பான இந்தகட்டமைப்புதாரர்கள் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்தரமுடியாது.

சமூக விடுதலையை சாதிக்கும் போது பெண் விடுதலை தானாய் வரும், பெண்ணின் பாதுகாப்பு பலப்படும். இத்தகைய மாற்றத்தை நோக்கி பயணிப்போம், நன்றி என்றார்.

இறுதியில் பெ.வி.மு தோழர்களின் நாடகம் – பஞ்சாயத்தை கலைக்கிறான் பா.ஜ. என நெடுவாசலில் மக்களின் விவசாயத்தை காக்கும் போராட்டம் வெல்ல வேண்டும், அதை மடைமாற்றும் அரசியல்வாதிகளை தோலுரிப்போம், எனும் களத்தை வைத்து நடத்தப்பட்டது. புரட்சிகர பாடல்கள், நடனத்துடன் பெண் தோழர்களால் அரங்கேற்றப்பட்டது. சமூக விடுதலையே பெண் விடுதலை என மூன்று பெண் தோழர்கள் கவிதைவாசித்தனர்.

நன்றியுரையாக பெ.வி.மு தோழர். ஜெயமணி பேசினார். அரங்குநிறைந்த கூட்டமாக 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரங்கு வளாகத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. சமீபகால பெண்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வரவேற்பை பெறுவதை எடுத்துக்காட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, அது பெண் தோழர்களை மேலும் ஊக்கப்படுத்துவது போல் இருந்தது.

மகளிர் தின நிகழ்ச்சிக்கு இடம் தேடுவது பெரும்பாடானது.

ஜனநாயக நாடு என பேசும் விளக்கெண்ணைகள் உள்ள நாட்டில் ஒரு கூட்டம் போட மண்டபம் வாடகைக்கு கிடைக்கவில்லை, காரணம் மண்டப உரிமையாளிடம் போய் பேசும் போது என்ன அமைப்பு, என்ன விலாசம் இதை நீங்க அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுதி கொடுங்கள் இல்லையேல் மண்டபம் தர இயலாது என்றனர்.

ஏங்க மகளிர்தினத்தை பெண்களிடம் பேச எதுக்குங்க காவல்நிலையம் போகணும் என்றதற்கு, எங்களுக்கு இப்படி தாம்மா ஆர்டர் போட்டிருக்காங்க என்றனர். இறுதியாக ஏற்பாடு செய்த மண்டப உரிமையாளரிடம் என்ன பேசுறாங்க என கேட்டது போலீசு. அதற்கு அவர் “வாடகைக்கு கொடுக்கிறது மட்டும் தான் எங்க வேலை, யார் வருவாங்க என்ன பேசப் போறிங்க என்று கேட்பது நாகரீகமில்ல, அது எங்க வேலையும் இல்ல என மூக்குடைத்து அனுப்பியுள்ளார்.”

மக்களை, புரட்சிகரஅமைப்புகளை வேவுபார்க்கும் இந்தகேடுகெட்டஅரசைகாறிஉமிழ்வோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி.