கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை.
பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை – குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
கடந்த 2017 மார்ச் மாதம் குஜராத் அரசு தனது மாநிலத்தின் ’விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில்’ ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அதே போல, பசுப்பாதுகாப்பு குறித்து சமீபத்தில் பேசியுள்ள சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங், பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவருக்கு ஒரு படி மேலே போய் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், பசுவுக்கு அவமரியாதை செய்பவனின் கைகளை உடைப்பேன் என கூவியுள்ளார்.
பசு வதையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு சட்டரீதியாகவும், தாத்ரி, அல்வார் சம்பவங்கள் போன்று சட்டவிரோதமாகவும் பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள், மாட்டுக்கறி மற்றும் தோலுறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இசுலாமியர்கள் மற்றும் தலித்துகளை மட்டும் பாதிப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் இந்நடவடிக்கைகள் பசுக்களை வளர்க்கும் பெரும்பாண்மை விவசாயிகளுக்குத் தான் மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளைப் பொறுத்தவரையில், பால் கொடுப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுக் கன்றுகளையும் வளர்ப்பது என்பது தற்போதைய சூழலில் வாய்ப்பில்லாத ஒன்றாகும். ஆகவே விவசாயிகள் பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுகளையும், அடிமாட்டிற்கு விற்றுவிட்டு அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு மீண்டும் பசுக்களை வாங்கி வளர்க்கும் போது மட்டும் தான் இத்தொழிலில் சிறிதாவது வருமானம் பெற முடியும். ஆனால், தற்போதைய கடும் சட்டங்களின் காரணமாக விவசாயிகள் எருதுக் கன்றுகளையும், பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும் விற்பனை செய்வது சிக்கலாகி இருக்கிறது. இதனால் அவர்களுக்கு புதிய மாடுகளை வாங்கி வளர்ப்பதில் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை – சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங்
இதன் தாக்கத்தால், பால் உற்பத்திக்கு பசுக்களை வாங்குவதை விட எருமைகளை வாங்கினால், பால் கறப்பதை நிறுத்திய பிறகும் அவற்றை அடிமாட்டிற்கு விற்க முடியும் என்பதாலேயே பசுக்களைத் தவிர்த்து எருமைகளை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் விவசாயிகள். இதன் காரணமாக எருமைகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 100 கிலோவிற்கு சுமார் 10,000 ரூபாய் முதல் 11,000 வரை விற்பனையாகிக் கொண்டிருந்த எருமை மாடுகளின் விலை 13,000 முதல் 14000 வரை விலையேற்றம் அடைந்தது. பசுக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.
2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடை கணக்கெடுப்பின் படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்திரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்படுகின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவிற்கும் குறைவாகவே உள்ளது.
ஆனால் இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அஸ்ஸாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கின்றது. இந்தக் கணக்கெடுப்பு மிகத் தெளிவாக ஒரு விசயத்தை உணர்த்துகிறது. அதாவது மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால் பசுவதை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் இந்துத்துவ வார்த்தைகளில் சொல்லுவதானால், விவசாயிகளிடமிருந்து ’லெட்சுமி’யைப் பிடுங்கி விட்டு அவர்களது கைகளில் ’எமனைக்’ கொடுத்திருக்கிறது.
இது போக, பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன. உதாரணமாகக் கடந்த 2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின் படி, ’ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிவடைந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது, இச்சரிவிற்குக் காரணம், இப்பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திய பின்னர் இவற்றால் பலனில்லை என்பதால், விவசாயிகள் இப்பசுக்களை வளர்ப்பதற்கே விரும்புவதில்லை என்பதேயாகும்.
கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் மராட்டிய அரசு, பசுக்கள் மற்றும் காளைகள் வெட்டப்படுவதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும் முழுமையான தடை விதித்த பிறகு இம்மாநிலத்தில் மாடு வெட்டும் தொழிலைச் செய்து வரும் குரேசி சமூகத்தினர், மாட்டு வியாபாரிகள், தோல் உரிப்புத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பசு மற்றும் காளைகளுக்கான சந்தை மற்றும் தோல் மற்றும் அது சார்ந்த தொழில்கள் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் மாட்டுக் கறி மற்றும் மாட்டுத் தோல் சார்ந்த தொழில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 1,14,338 கோடி (17.8 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிற்கு மாட்டுத் தோல் மற்றும் அது சார்ந்த வியாபாரங்கள் நடக்கின்றன. பாஜக கும்பலின் இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கையால் இத்தொழில்களிலும் அது சார்ந்த தேசிய வருவாயிலும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
சங்கப் பரிவாரக் கும்பலான விசுவ ஹிந்து பரிஷத்தின் மதிப்பீட்டின் படியே மஹாராஸ்டிராவில் மட்டும் சுமார் 7,50,000 பசுக்களும் எருதுகளும் கேட்பாரற்று, கவனிப்பாரற்று, வீதியில் அலைகின்றன. இக்கால்நடைகள் அனைத்தும் விவசாயிகளால், விற்பனை செய்ய முடியாமலும், உபயோகப்படுத்த முடியாமலும் வீதியில் விடப்பட்டவையே. இப்படி கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை. இந்நிலை தொடருமானால், பசுக்களையும் காளைகளையும் இனி உயிரியல் கண்காட்சிகளிலும், சரணாலயங்களிலும் தான் காண முடியும் !!
காம்பியாவின் தலைநகரும் தனது சொந்த ஊருமான பான்ஜூலை விட்டு 2016-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி ஐரோப்பாவுக்குக் கிளம்புகிறார் பத்தொன்பது வயது மாலிக் ஜெங். அப்போது அவருக்கு தான் வழியில் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்களைக் குறித்து ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக். மூச்சுத் திணறடிக்கும் அந்த நீண்ட பயணத்தின் இடையே லிபியாவைக் கடக்கும் போது மாலிக் பிடிபட்டார். லிபியாவில் மாலிக்குடன் பயணித்துக் கைதானவர்கள் அவரது கண் முன்னே கொல்லப்பட்டனர். நல்லவேளையாக விசயத்தைக் கேள்விப்பட்டு மாலிக்கின் குடும்பத்தார் சரியான நேரத்தில் அனுப்பி வைத்த பணம் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
லிபியாவின் சிறையில் ஒரு மாதத்தைக் கழித்த பின் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சட்டவிரோத ஆள் கடத்தல் ஏஜெண்டுகளின் உதவியுடன் திரிபோலி கடற்கரையை வந்தடைகிறார் மாலிக். அங்கிருந்து சுமார் 120 பேருடன் ரப்பர் படகு ஒன்றின் துணையுடன் மத்திய தரைக்கடலைக் கடப்பதாக திட்டம். அந்தப் படகு பயணிகளுடன் தனது பயணத்தைத் துவங்கிய சில மணி நேரங்களிலேயே, லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் தன்னார்வக் குழு ஒன்றின் மீட்புப் படகான லுவெண்டாவால் கண்டறியப்பட்டு மீட்கப்படுகிறது.
மாலிக்கை முதலில் சிசிலியில் உள்ள கடானியா நகரத்திற்க்கும் பின்னர் வடக்கு இத்தாலியின் பெய்லா நகரத்திற்க்கும் மாற்றுகிறார்கள். அவர் தற்போது பெய்லாவில் தற்காலிக அகதிகள் முகாமான கோலிப்ரியில் தங்கியுள்ளார். அது சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட ஓட்டல் ஆகும். தற்போது அந்த ஓட்டலை அகதி மையமாக பராமரித்து வரும் கூட்டுறவு நிறுவனம், தமது மையங்களில் அனுமதிக்கும் அகதி ஒருவருக்கு ஒரு நாள் வாடகையாக 35 யூரோக்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. மாலிக்கிற்கும் அவருடன் தங்கியுள்ள குடியேறிகளுக்கும் தினசரி மூன்று வேளை உணவும், உறங்குவதற்கு ஒரு படுக்கையும், ஒவ்வொரு மாதமும் செலவுக்கு 75 யூரோக்களும் கிடைக்கின்றன.
அகதியாக தஞ்சம் கோரும் விண்ணப்பத்திற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் மாலிக். அந்த விண்ணப்பத்தின் பேரில் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே சட்டப்பூர்வ அகதியாகவோ அல்லது தற்போதைய நிலையைப் போல் தொடர்ந்து போராடியவாறோ அவரது எதிர்கால வாழ்க்கை அமையும்.
ஜூகெண்ட் ரெட்டெட் என்கிற தன்னார்வக் குழுவுக்குச் சொந்தமான லுவெண்ட்டா மீட்புப் படகில் இத்தாலி கடல் பாதுகாப்பு போலீசாரின் வருகைக்காக காத்திருக்கும் அகதிகள். இத்தாலிக்கு கொண்டு செல்லப்படவிருக்கும் இவர்கள் லிபிய கடற்கரையில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் மீட்கப்பட்டனர்.மீட்புப் படகு லுவெண்டாவில் இருந்து கடலைப் பார்க்கும் காம்பியாவைச் சேர்ந்த மாலிக் (வலதுபுறம் இருப்பவர்) மற்றும் செனகலைச் சேர்ந்த ம்பேயி. லிபியாவில் இருந்து 12 பேர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணமான இவர்கள் சுமார் 7 மணி நேரம் கழித்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.கொள்ளளவையும் மீறி 120 பேர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் ரப்பர் படகில் இருப்பவர்களை மீட்க லுவெண்டா மீட்புப் படகின் ஊழியர்கள் உதவுகின்றனர். லுவெண்டாவின் ஊழியர்கள் தடுமாறிக் கொண்டிருந்த ரப்பர் படகை சமநிலைக்குக் கொணர்ந்து அதில் உள்ளவர்களை மாதுகாப்பாக மீட்க முயற்சித்தும் சிலர் கடலில் தவறி விழுந்தனர்.அகதித் தஞ்சம் கோரிய காம்பியாவின் மாலிக் ஜெங்கின் புகைப்படம். இவர் மத்திய தரைக்கடலில் இருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி மீட்கப்பட்டார். முதலில் சிசிலிக்கும் பின்னர் வடக்கு இத்தாலிக்கும் மாற்றப்பட்ட மாலிக், தற்போது ஒரு தற்காலிக அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.கோலிப்ரி ஓட்டலின் முகப்பு. ஓட்டலாக இருந்து கைவிடப்பட்டு பின்னர் தற்காலிக அகதிகள் முகாமாக பராமரிக்கப்படும் இந்த இடத்தில் தான் மாலிக் தங்கியுள்ளார். இதைப் பராமரிக்கும் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் இத்தாலியில் பல்வேறு இடங்களில் இதே போன்ற அகதி முகாம்களை நடத்தி வருகின்றனர்.கோலிப்ரி ஓட்டலின் தாழ்வாரம். இந்த கட்டிடத்தில் சுமார் 55 பேர் வரை தங்க முடியும். பொதுவாக அகதிகளாக தஞ்சம் கோருபவர்கள் சுமார் 2 ஆண்டுகாலம் வரை இது போன்ற மையங்களில் தங்க முடியும். தற்போது இந்த இடத்தில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் ஆப்ரிக்காவின் சப்-சஹாரா நாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கு தங்கியிருக்கும் பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதிலும், உறங்குவதிலும், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அரட்டையடிப்பதிலுமே பொழுதைப் போக்குகின்றனர். இது போன்ற மையங்களில் இலவச வைஃபை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.மாலிக் தனது நண்பரின் அறையில் ஒரு சிறிய மின்சார ஹீட்டரின் மூலம் தேனீர் தயாரித்துக் கொண்டுள்ளார். அவர் முன்பு குடும்பத்தோடு வசித்து வந்த போது பின்பற்றிய அதே தேனீர் தயாரிக்கும் முறையைத் தான் இங்கும் பின்பற்றுகிறார். நண்பர்களுடன் தேனீர் பருகுவது இங்கே தங்கியிருப்பவர்களின் நேரப் போக்குகளில் ஒன்று.பெய்லாவில் உள்ள வெவ்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்தவர்கள் ஒரு சனிக்கிழமை காலை கால்பந்து விளையாடுகின்றனர். பின்னணியில் ஆல்ப்ஸ் மலைத் தொடர். கால்பந்தாட்டம் தான் அகதிகளின் முக்கியமான பொழுபோக்கு. இங்குள்ளவர்கள் பலருக்கும் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களாகும் கனவு உண்டு. பெய்லாவில் உள்ள அகதிகள் ஒருங்கிணைப்பு மையம் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்கின்றது. இந்தப் போட்டிகளில் உள்ளூர் இளைஞர்களோடு சேர்ந்து வாய்ப்பும் கிட்டுவதுண்டு.பனிபடர்ந்த கால்பந்தாட்ட மைதானத்தில் செனகலைச் சேர்ந்த பாபா காம்பியாவைச் சேர்ந்த மாலிக்குடனும் மாலி நாட்டைச் சேர்ந்த முகமதுடனும் கால்பந்து விளையாடுகிறார். சிதோஷ்ணம் நன்றாக இருக்கும் நாட்களில் இவர்கள் தினசரி கால்பந்தோ கூடைப்பந்தோ விளையாடுகிறார்கள். அகதி மையத்தில் உள்ள மற்றவர்களைப் போல் இப்போது தான் முதன் முறையாக பனிப் பொழிவைப் பார்க்கிறார் மாலிக். அந்த அனுபவத்தால் வியந்து போன அவர்கள் விளையாடச் சென்றனர்; ஆனால், சீக்கிரமே பனியை நீண்ட நேரம் ஸ்பரிசிப்பது அத்தனை சுலபமானதல்ல என்பதைப் புரிந்து கொண்டனர்.தனது அறையில் தொழுகை நடத்தும் மாலிக். அவர் ஒரு முசுலீம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோலிப்ரியில் இருந்து சுமார் 20 நிமிட நடை தூரத்தில் இருக்கும் மசூதிக்குச் செல்கிறார். மற்ற நாட்களில் தனது அறையிலேயே வழிபடுகிறார். அகதிகள் மதத்தை தற்காலிக நிவாரணத்திற்கான வழியாக பாவிக்கின்றனர். முசுலீமாக இருந்தாலும், கிருஸ்தவராக இருந்தாலும் தமது நம்பிக்கைகளில் ஊன்றி நிற்கின்றனர்.காம்பியாவைச் சேர்ந்த டெம்பா தனது படுக்கையில் படுத்தவாறே தனது அறைத் தோழன் மாலிக்குடன் உரையாடுகிறார். தனது நாட்களை உறக்கத்திலும் நண்பர்களுடன் அரட்டையடிப்பதிலும் கழிக்கிறார் டெம்பா. அங்கே செய்வதற்கு வேறு வேலைகளும் இல்லை.மாலிக்கும் அவரது நண்பர்களான ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த மௌசாவும், செனகலைச் சேர்ந்த முகமதுவும் படுக்கைக்குச் செலுலும் முன் உடற்பயிற்சி செய்கின்றனர். ஒவ்வொரு இரவும் அவர்கள் உடற்பயிற்சியைத் தவற விடுவதில்லை. அவர்கள் உடற்பயிற்சி செய்வது உடலுக்காக மட்டுமில்லை – அந்த நேரத்தில் மனதை அலைபாயாமல் நிறுத்த முடிவதுடன், நல்ல உறக்கத்திற்கும் அது உதவி செய்கிறது.காம்பியாவின் அப்தௌலி தனது நண்பரின் அறையில் சிகரெட் பற்ற வைக்கிறார். லிபியாவில் இருந்து வந்த படகிலிருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீட்கப்பட்டவர் இவர். தற்போது லிபியாவில் கடலைக் கடக்க காத்திருக்கும் தனது சகோதரருடன் தினசரி தொலைபேசிக் கொண்டிருக்கிறார்.2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோலிப்ரி ஓட்டலுக்க்கு வந்து சேர்ந்த நாள் முதல் கானா தேசத்தைச் சேர்ந்த பாட்ரிக் அங்குள்ள சமையல் அறையில் பணிபுரிகிறார். மாதச் சம்பளத்திற்காகவே வேலை செய்ய முன்வந்திருக்கிறார், என்றாலும் இதுவரை அவரது சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து வேலை செய்து வருகிறார் – அப்படி வேலை செய்வது ஒன்று தான் சுறுசுறுப்பாக தன்னை வைத்திருக்க ஒரே வாய்ப்பு என்று கருதுகிறார். அரசிடம் இருந்து பெறும் நிதியை சேமிப்பதற்காக தற்காலிக அகதி மையங்களை நடத்தும் நிறுவனங்கள் இப்படி அகதிகளிடமிருந்து சம்பளமில்லாமல் வேலை வாங்கிக் கொள்வதுண்டு.கடந்த காலத்தின் நினைவுகளாக மத்திய தரைக்கடலைக் கடந்த நிகழ்வு அகதிகளின் சிந்தனையில் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. அவர்கள் அதை எப்போதும் மறப்பதில்லை. மேலே உள்ள படத்தில் அகதிகளை ஏற்றி வந்து மீட்கப்பட்ட படகிலிருந்து எழும் புகையைப் பார்க்க முடியும். அகதிகள் வரும் படகுகளை மீட்கும் இத்தாலி அரசு, அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் எரித்து அழித்து விடுகின்றது
இந்திய இராணுவத்தின் அதிகாரத் திமிருக்கு தமது தாய் மண்ணின் கற்களால் பதில் சொல்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவிகள் !!
காஷ்மீர் இளைஞர் ஒருவர் மீது இந்திய இராணுவம் காட்டுமிராண்டித தனமாகத் தாக்கிய வீடியோப் பதிவு ஒன்று, காஷ்மீர் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு கண்டனம் தெரிவித்து போராடிய பல்வாமா அரசு கல்லூரி மாணவர்களுக்கும் காஷ்மீர் போலீசுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசுக்கல்லூரி வாயிலில் சோதனைச் சாவடி அமைத்துப் போராடிய மாணவர்களைக் கைது செய்ய இராணுவத்துடன் காத்திருந்தது போலீசு. அதற்கு எதிராக ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்களும் போலீசு கும்பலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டும் மாணவர்களை ஒடுக்க நினைத்தது இராணுவம். இதில் சுமார் 20-க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வாமா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் பெல்லட் குண்டுகளால் தனது கண் பார்வை இழந்த மாணவர்களே.
இதனைத் தொடந்து ஏப்ரல் 17 அன்று காஷ்மீரில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும், காஷ்மீர் போலீசுக்கு எதிராகவும் பெருந்திரளாகக் களத்தில் இறங்கிப் போராடினர். மாணவர்களின் உணர்ச்சிமிகு போராட்டமும், பல்வேறு இடங்களில் போலீசு மற்றும் இராணுவத்துடனான மோதலும் ஏப்ரல் 17 முழுவதும் நீடித்தது. இப்போராட்டத்தில் காஷ்மீர் மாநில கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் களத்தில் இறங்கி அதிகாரத் திமிர் பிடித்த போலீசு மற்றும் இராணுவத்திற்குத் தக்க பதிலடி கொடுத்தனர்.
இது வெறும் வாகனத்தின் மீது விடப்படும் உதை அல்ல – காஷ்மீரை ஒடுக்க நினைக்கும் இந்திய வல்லாதிக்கத்திற்கு அடிபணியாத வீரத்தின் உதைஇந்திய இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்கும் பள்ளி மாணவிகள் – கனல் நெருப்பினில் – குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?.இராணுவத்திடம் துப்பாக்கிகள் – காஷ்மீர் மக்களிடம் வெறும் கற்கள்!பல்கலைக்கழக மாணவி – இக்ரா சித்திக் – காஷ்மீர் போலீசு மற்றும் துணை இராணுவத்தின் கொடுந் தாக்குதலில் இவரது மண்டை ஓடு பிளந்து, மூளையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.வீதிகளில் இறங்கிய காஷ்மீரத்து – அஸ்ரத் மஹல்கள். (அஸ்ரத் மஹல் – 1857 முதல் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற வீராங்கனை)போலீசின் மிரட்டலுக்கு பயப்படாமல் போராடும் மாணவிகள்!ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் உள்ள எஸ்.பி. பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவியர்களின் போராட்டத்தை ஒடுக்க உபயோகிக்கப்பட்ட தண்ணீர் பீரங்கி!போராடும் மாணவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் காஷ்மீர் பெண்கள் – இதைப் பார்க்கையில் மெரினா போராட்டத்தின் இறுதி நாளில் சென்னை மீர்ஜாப் பேட்டையில் போலீசுக்கு பயப்படாமல் போராடிய இளைஞர்களுக்கு நீரும் – உணவும் கொடுத்து உதவிய அப்பகுதி முசுலீம் பெண்களே நினைவுக்கு வருகிறார்கள்!பேரணியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக முழக்கமிடும் பள்ளி மாணவிகள்!இதோ – தங்களது உரிமைகளை வென்றெடுக்க கையில் சிக்கியதை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ள காஷ்மீரின் வீரமகள்இந்திய இராணுவத்தின் அதிகாரத் திமிருக்கு தமது தாய் மண்ணின் கற்களால் பதில் சொல்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவிகள் !போலிசின் கண்ணீர்ப் புகையையும், மிளகாய்த் தூள் குண்டையும் சுவாசித்ததால் மயக்கமடைந்த மாணவி ஒருவர்!!ஆயிரக்கணக்கான காஷ்மீர மக்களை கொன்று காணாமல் போகச் செய்து, சிறையில் அடைத்து, ஒடுக்கி வரும் இந்திய அரசிற்கு – கற்களால் பதிலளிக்கும் மாணவிகள்!
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சவுகான். இவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரதமர் மோடி முதன் முதலாக கடவுச் சீட்டு பெறுவதற்காக அளித்த விவரங்கள், ஆவணங்கள் மற்றும் கடவுச் சீட்டை புதுப்பிக்க அவர் அளித்த விவரங்கள், ஆவணங்கள் ஆகியவை குறித்துக் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம், மத்திய தகவல் ஆணையத்திடம் விவரங்கள் கேட்டிருந்தார். இது குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது என வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் தகவல் அலுவலகம் கைவிரித்துவிட்டது. மோடியின் வீட்டு முகவரி, குடும்பத்தினர், மனைவி, சொத்து முதலிய இன்ன பிற விவரங்கள் அனைத்தும் இராணுவ இரகசியமா என்ன?
இதற்கு முன்னர் இதே போல, மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்கு ஆகும் செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி லோகேஸ் பத்ரா கேட்டதற்கு “தேசத்தின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி” செலவுகள் குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனக் கூறி மறுத்தார் மாத்தூர். இது முன்னால் தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த மிஷ்ரா, “மிக முக்கிய நபர்களின் பயணச் செலவுகள் மக்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்”என அறிவித்ததற்கு எதிரானது. சவுதி மன்னரோ, அமெரிக்க அதிபரோ வெளிநாடு செல்லும் போது எவ்வளவு செலவழிக்கிறர்கள் என்பது தெரிய வந்ததால் நாம் விமரிசிக்கிறோம். அப்படி ஒரு விமரிசனம் வந்துவிடக் கூடாது என்றே இத்தகவல்களை மறுக்கிறார்கள்.
மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என முழுக்க முழுக்க அயோக்கியத்தனங்களையே வரலாறாகக் கொண்டுள்ள மோடிக்கு, இன்னும் நூறு அமித்ஷாக்களும், சதாசிவங்களும், மாத்தூர்களும் தேவை. இருப்பினும் இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேடாக தடை செய்யும் மோடியின் நடவடிக்கைகள் மக்களிடையே வலம் வருவதையோ அம்பலப்படுத்துவதையோ எவர் தடுக்க முடியும்?
கடந்த 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லக் இந்துமதவெறி குண்டர் படையால் கொல்லப்படுகிறார். அக்லக்கின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்திய இந்துத்துவ ரவுடிக் கூட்டம், அவரை வீட்டிலிருந்து இழுத்துப் போட்டு அடித்தே கொன்றது. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக்கின் வீட்டில் இருந்தது மாட்டுக்கறி இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது.
அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள்.
அதே போல 2015-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அருகே வழிமறிக்கும் பார்ப்பனிய இந்துமதவெறி கும்பல் ஒன்று, லாரி ஓட்டுநனர் ஜாகித் அகமதுவையும் அவருடன் வந்த இன்னொரு முசுலீமையும் கண்மூடித்தனமாக தாக்கியது. கொடூரமாக தாக்கப்பட்ட ஜாகித் பத்து நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறார். தாக்குதல் குறித்த தகவல் பரவியதும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் பரவுகின்றன.
உதம்பூர் தாக்குதலை அடுத்து போராடிய காஷ்மீர் மக்களை ஒடுக்க வந்த பாதுகாப்புப் படையினர் கல்வீச்சுக்கு ஆளாகினர். ’தேசிய ஊடகங்களோ’ பாதுகாப்புப் படையினர் அநியாயமாக தாக்கப்படுவதாக திரித்து தேசியவெறியைத் தூண்டின. பின்னர் விசாரணையில் ஜாகித் ஓட்டி வந்த லாரியில் கிடைத்த செத்த மாடுகள் விச உணவின் காரணமாகவே இறந்தன என்பதும் அவற்றின் இறைச்சி உண்பதற்கானதல்ல என்றும், அவை கசாப்புக்காக எடுத்து வரப்பட்டவை அல்ல என்பதும் உறுதியானது.
உதம்பூர் தாக்குதல் நடந்த அதே சமயத்தில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சகரன்பூர் அருகே மாடுகளைக் ’கடத்திச்’ செல்ல முயன்றதாக இருபது வயது இளைஞர் ஒருவரை அடித்தே கொன்றது இந்துத்துவ குண்டர் படை ஒன்று.
ஜனவரி 2016-ல் மகாராஷ்டிர மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கிர்க்கியா இரயில்வே நிலையத்தில் பயணிகள் சிலரை கண்மூடித்தனமாக தாக்குகிறது இந்து பரிவார அமைப்பான கோரக்ஷன சமிதியைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. மறுநாள் உள்ளூர் பத்திரிகைகள் பசு மாமிசத்தை கடத்திய முசுலீம் பயணிகளை கோரக்ஷன சமிதி தாக்கியதாக செய்தி வெளியிட்டன. எனினும், பின்னர் நடந்த விசாரணைகளில் போலீசாரால் “கைப்பற்றப்பட்டு” தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது பசு மாமிசம் இல்லையென்றும், எருமைக் கறி என்றும் தெரிய வந்தது.
2016 மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலம் லாத்தேகர் மாவட்டத்தில் இரண்டு முசுலீம் கால்நடை வியாபாரிகளை அடித்துக் கொன்று மரத்தில் தொங்க விட்டனர் இந்துத்மத வெறியர்கள். கொல்லப்பட்டவர்கள் மஸ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் லாத்தேகர் மாவட்டத்தில் நடக்கும் புகழ்பெற்ற கால்நடைச் சந்தையில் இருந்து வளர்ப்பதற்காக ஆடு மாடுகளை வாங்க வந்தவர்கள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
ஊனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாக தாக்கியது இந்துத்துவ கும்பல்
2016 ஏப்ரல் 5-ம் தேதி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டெய்ன் அப்பாஸ் என்கிற 27 வயது வாலிபர் விவசாயத்திற்காக காளை மாடுகளை வாங்கி விட்டுத் திரும்பும் வழியில் கோ ரக்ஷா தள் என்கிற பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
2016 ஜூன் மாதம் சுமார் 40 பேர் கொண்ட பஜ்ரங் தள் குண்டர்கள் கர்நாடக மாநிலம் கோப்பா அருகே தலித் குடும்பம் ஒன்று மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. கொடூரமான இத்தாக்குதலில் அந்த தலித் குடும்பம் மரண காயங்களுக்கு உள்ளானது.
அதே ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலம் ஊனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாக தாக்கியது இந்துத்துவ கும்பல் ஒன்று. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் குஜராத் மாநிலம் முழுக்க தலித் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். செத்த மாட்டை சுமக்க மாட்டோம், உரிக்க மாட்டோமென தீர்மானித்த குஜராத் தலித் மக்கள், அரசு அலுவலகங்களை செத்த மாடுகளால் நிறைத்தனர். பல வாரங்கள் தொடர்ந்த இந்தப் போராட்டங்களால் அதிர்ச்சியடைந்த இந்துத்துவ கும்பல், தலித் வாக்குகளை இழந்து விடுவோம் என்கிற அச்சத்தில் ஆழ்ந்தன.
அதே மாதம் மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சோர் மாவட்ட இரயில்வே நிலையத்தில் மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம் சாட்டி இரண்டு முசுலீம் பெண்களைத் தாக்கியது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. 2016, ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மோகதி எலிசா, லாசர் எலிசா ஆகிய இரண்டு தலித் சகோதரர்கள் இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கும் போது கோ ரக்சா சமிதியைச் சேர்ந்த 100 குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
2017, ஏப்ரல் ஒன்றாம் தேதி ஹரியானா மாநிலத்தில் முறையாக அனுமதி பெற்று மாடுகளை ஏற்றி வந்த டெம்போ வாகனங்களை வழிமறித்த பஜ்ரங்தள் குண்டர்கள், மாடுகளை ஏற்றி வந்த 15 இசுலாமியர்களைக் கொடூரமாக தாக்கினர். இந்த தாக்குதலில் பெஹ்லு கான் என்கிற முதியவர் கொல்லப்பட்டார் (இணைப்பில் வீடியோ : Rajasthan cow vigilante beat Muslim man to death; Police books six, launches manhunt). இதே மாதம் கடந்த 21ம் தேதி ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கால்நடைகளுடன் இடம் பெயர்ந்த நாடோடிக் குடும்பம் ஒன்றை வழிமறித்த கோ ரக்ஷக் குண்டர் படை, கொடூரமான முறையில் தாக்கி உள்ளது. (இணைப்பில் வீடியோ: In Shocking Videos Of Cow Vigilante Attack, Jammu Family Begs For Mercy).
பஜ்ரங்தள் குண்டர்களால் கொல்லப்பட்ட இஸ்லாமிய முதியவர்.
ஜம்முவில் தாக்குதல் நடத்திய அதே நாளில் (21-ம் தேதி) புது தில்லி கால்காஜி பகுதியில் எருமைகளைக் கடத்த முற்பட்டதாக பொய்யாகக் குற்றம் சுமத்தி மூன்று முசுலீம் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். கடுமையான தாக்குதலோடு இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர்களை மறுநாள் எழுப்பி விசாரித்த போலீசார், அவர்கள் மேல் மிருக வதைத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலே விவரிக்கப்பட்டவை அனைத்தும் ஊடகங்களில் வெளியான சம்பவங்கள் மட்டுமே. ஊடகங்களில் வெளியாகாமல் சிறியளவிலான சம்பவங்களின் பட்டியல் மிக நீண்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சுமார் 317 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இந்த தகவலை கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கான பதிலாக உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜ்ஜுவே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உத்திரபிரதேச தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் மதக் கலவரங்களின் எண்ணிக்கை ’திடீரென’ உயர்ந்துள்ளன. அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள். 2014-ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன் மோடி உத்திரவாதம் அளித்திருந்த “வளர்ச்சி” ஏதும் நடைபெறாத நிலையில் தான் இந்துத்துவ வெறுப்பரசியலை உயர்த்திப் பிடிக்கத் துவங்கினர்.
உண்மையில் மோடி வாக்களித்த “வளர்ச்சியை” அவரே கூட நம்பியிருக்க மாட்டார். காங்கிரசின் ஊழல்களால் ஆத்திரமுற்றிருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு காட்டிய கண்கட்டி வித்தை தான் மேற்படி “வளர்ச்சி”. ஆட்சிக்கு வந்ததும் பீறிட்டுக் கிளம்புவதற்கு தயாராக இருக்கும் பாலாறு மற்றும் தேனாற்றின் மதகுகளைத் திறந்து விடப் போவதாக சொல்லி வந்த மோடி, மெல்ல மெல்ல சுதி குறைந்து ”60 ஆண்டு கால காங்கிரசு ஆட்சி அவலங்களை ஐந்தாண்டுகளில் தீர்க்க முடியுமா?” எனக் கேட்க ஆரம்பித்துள்ளார் –ஆராசனை தலைக்கேறிய நிலையில் இடையில் ஆறாண்டுகள் நடந்த வாஜ்பாயின் ஆட்சியையும் காங்கிரசின் கணக்கிலேயே வரவு வைத்து விட்டனர் மோடி பக்தர்கள்.
தற்போது 2019-ல் நடக்க இருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை குறிவைத்து களமிறங்கியிருக்கும் இந்துத்துவ கும்பல், சகல வகைகளிலும் மத ரீதியிலான பதற்ற நிலையில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை நாடெங்கும் வெவ்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தமிழர் கலாச்சாரத்தை மீட்பது எனும் முகாந்திரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நைச்சியமாக இந்துத்துவ கோமாதா அரசியலுடன் முடிச்சுப் போட பாரதிய ஜனதா எடுத்த முயற்சிகளை நாம் அறிவோம். ”ஜல்லிக்கட்டுக்காக” நடந்ததாக சொல்லப்பட்டாலும், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கமாக பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பு இருந்ததாலும், தொடர்ந்து மத்திய அரசின் மாநில விரோதப் போக்குகளால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் போராட்டக் களத்தில் ஆளுமை செலுத்தியதாலும் பாரதிய ஜனதாவின் முயற்சி படுகேவலமாக தோற்றுப் போனதையும் நாம் கண்டோம்.
தமிழகத்தைப் போல் ஒப்பீட்டளவில் பார்ப்பன எதிர் மரபுகள் மக்கள் மயமாகாமலும் அவற்றுக்கு வலுவான அரசியல் அடித்தளங்கள் ஏற்படாத வரலாற்றுச் சூழலும் இந்தி பேசும் வட மாநிலங்களில் நிலவுவதால் இந்துத்துவ கும்பலின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்து வருகின்றன. சான்றாக யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட முடியும்.
கலவரங்களின் மூலம் வகுப்புவாத பதட்டத்தை உண்டாக்கி அதன் மூலம் சமூகத்தை மதரீதியில் பிளந்து அதனடிப்படையில் தொடர்ந்து தேர்தல்களில் வெல்வவது இந்துத்துவ கும்பலின் திமிரை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆதித்யநாத்தின் வெற்றிக்குப் பின் பசுப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை அடுத்த ஃபதேபூர் சிக்ரியைச் சேர்ந்த முசுலீம் காய்கரி வியாபாரி ஒருவரைத் தாக்கிய ஹிந்து யுவ வாகினி, பஜ்ரங் தள் மற்றும் கோ ரக்ஷக் சேணாவைச் சேர்ந்த குண்டர்கள், அவரது காய்கறிக் கடையைக் கொள்ளையடித்துள்ளனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது உள்ளூர் காவல் துறை. பாரதிய ஜனதாவே அதிகாரத்தில் இருப்பதால் முதல் தகவல் அறிக்கையே கூட மலம் துடைக்கும் தாளாகத் தான் மதிக்கப்படும் என்பது வேறு விசயம். ஆனால், தாமே அதிகாரத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில், தமது அடாவடிகளை குறைந்தபட்சமாக பதிவு கூட செய்யக் கூடாதென்கிற ஆத்திரத்தில் ஃபதேபூர் சிக்ரி காவல் நிலையத்தை கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த துணை சூப்பிரெண்டை குறி வைத்து அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு 20 நாட்களுக்கு முன் சகரான்பூரில் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கலவரம் ஒன்றின் போது ரோந்து வந்த மூத்த போலீசு சூப்பிரெண்டு லவ குமாரைத் தாக்கியுள்ளனர். சகரன்பூரைச் சேர்ந்த தலித்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடியுள்ளனர் – இதற்கு போட்டியாக இந்துத்துவ கும்பல் நடத்திய ஊர்வலமே கலவரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கலவரங்களின் மூலம் வகுப்புவாத பதற்றத்தை உண்டாக்கி அதன் மூலம் சமூகத்தை மதரீதியில் பிளந்து அதனடிப்படையில் தொடர்ந்து தேர்தல்களில் வெல்வதால் இந்துத்துவ கும்பலின் திமிர் பல மடங்கு அதிகரித்துள்ளது. போலீசு, இராணுவம், நீதித்துறை, அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரங்களைக் காவிமயமாக்குவது, அதனைக் கொண்டு சட்டபூர்வமாகவே தமது செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்கிற அவர்களது வழக்கமான அணுகுமுறைக்கு இணையாக தாமே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வது, தமது பரிவார அமைப்புகளையே சட்டவிரோத சிவில் இராணுவ படையாக மாற்றியமைப்பது என்கிற புதிய உத்தியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதையே மேற்படி தாக்குதல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தொடர்ந்து மதரீதியிலான பதற்ற நிலையில் சமூகத்தைத் வைத்திருப்பதற்காக மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் தமக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு புதுப் புதுக் கோணங்களில் இருந்தெல்லாம் திட்டங்களை யோசித்து அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது மாடுகளுக்கும் ஆதார் எண் வழங்கும் திட்டத்தை துவங்கவுள்ளனர்.
“இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாட்டுக்கும், மாட்டு வம்சத்தைச் சேர்ந்த கால்நடைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்பட உள்ளது” என்று உச்ச நீதிமன்றத்தில் ஆதார் தொடர்பாக நடந்து வரும் வழக்கின் போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேட்பதற்கே கேனத்தனமாக உள்ள மேற்படி திட்டத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக கடந்த ஜனவரி மாதமே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மோடி அரசின் திட்டங்கள் முட்டாள்தனமானவை என்று நம்பியவர்கள் கூட அது இந்தளவுக்கு அடிமுட்டாள்தனமானது என்பதை நம்பாததால், அப்போது வெளியான செய்திகளை ’முட்டாள்கள் தின’ விளையாட்டென நினைத்துக் கடந்து விட்டனர்.
ஆனால், மாடுகளுக்கு ஆதார் எண் வழங்கும் தமது திட்டத்தை முனைப்புடன் தொடங்கியுள்ளது மோடி அரசு. நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகளைப் பொருத்த சுமார் ஒருலட்சம் பணியாளர்களைத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள். சுமார் 150 கோடி ருபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளின் சட்டவிரோத நடமாட்டத்தைக் கண்காணிப்பது சாத்தியமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகளைப் பொருத்த சுமார் ஒருலட்சம் பணியாளர்களைத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள்.
அதாவது கன்று ஈனும் வயதைக் கடந்த, பால் வழங்க முடியாத வயதான மாடுகளை கைவிடுவது அல்லது மாடுகள் அறுப்பது அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு அடிமாடாக அனுப்புவது போன்ற முடிவுகளை எடுக்கும் விவசாயிகளையும் கூட இனிமேல் இத்திட்டத்தின் விளைவாக குற்றவாளிகளாக்க முடியும். இந்துத்துவ அரசியல் மாடு தின்னும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் இன்னபிற சாதியினருக்கும் மாத்திரமின்றி – விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்குமே எதிரானது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது.
ஒரு பக்கம் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் தமது பயங்கரவாதப் படைகளைக் களமிறக்கி கலவரங்களைத் தூண்டி நாட்டை எந்நேரமும் பதற்றத்தில் வைத்திருப்பது – இன்னொரு பக்கம் அவ்வாறு பதற்றத்தில் வைத்திருப்பதை உத்திரவாதம் செய்யும் விதமான திட்டங்களை சட்டப்பூர்வமாகவே நிறைவேற்றி வைப்பது என இரட்டை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது இந்துத்துவ கும்பல். இவையனைத்தும் எதிர்வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகளோ பாரதிய ஜனதாவின் கோமாதா அரசியலைக் கேள்விக்குட்படுத்தினால் தங்களுடைய இந்து ஓட்டு வங்கியிலும் ஓட்டை விழுந்து விடுமென்கிற அச்சத்தில் கள்ள மௌனத்தோடு உடன்பட்டுப் போகின்றன. இந்நிலையில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் முற்போக்காளர்களுமே இந்துத்துவ அரசியலைக் களத்தில் முறியடிக்க முடியும். எப்படி தமிழகத்தின் வீதிகளில் இசுலாமியர்களை விரோதிகளாக கட்டமைக்க முனைந்த இந்துத்துவ கோமாதா அரசியல் தோற்கடிக்கப்பட்டதோ அதே போல் நாடெங்கும் முறியடிக்கப்பட வேண்டும்.
கிரானைட் மாஃபியா கும்பலால் வெட்டிக் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, எஞ்சி நிற்கும் மேலூரிலுள்ள பஞ்சபாண்டவர் மலை.
கிரானைட் மாஃபியா கும்பலால் வெட்டிக் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, எஞ்சி நிற்கும் மேலூரிலுள்ள பஞ்சபாண்டவர் மலை.
கிரானைட் கொள்ளை : இந்த அமைப்புமுறை தோற்றுப் போய்விட்டது !
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சகாயம், அது குறித்து அளித்திருந்த அறிக்கையை, இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் பிரண்ட்லைன் ஆங்கில இதழ் (மார்ச் 31, 2017), “ஒரு கொள்ளையின் கூறுகள்” (Anatomy of a Loot) எனும் தலைப்பில் கட்டுரை வடிவில் மிகச் சுருக்கமாக வெளியிட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம் செப்.11, 2014 அன்று சகாயத்தை சட்ட கமிசனராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 2014-இல் தனது விசாரணையைத் தொடங்கிய சகாயம், நவம்பர் 2015-இல், ஓராண்டுக்குள்ளாகவே தனது அறிக்கையை நீதிமன்றத்திடம் அளித்தார். சமூகத்தில் நிலவும் ஊழல் பற்றி அடிக்கடி சவுண்டுவிட்டு வரும் நீதிபதிகள் தாமாகவே முன்வந்து அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களோ, “சகாயத்தின் அறிக்கையை வெளியிடுமாறு அ.தி.மு.க. அரசிற்கு அறிவுறுத்திவிட்டு”த் தமது கடமையை முடித்துக் கொண்டனர்.
சகாயம் சட்ட கமிசனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற, சகாயம் விசாரணை நடத்துவதற்கு பெஞ்சு – நாற்காலியைக்கூடத் தராமல் அலைக்கழித்த, சகாயம் எங்கே போகிறார், யாரிடம் விசாரணை நடத்துகிறார், யாரெல்லாம் அவரைச் சந்தித்து புகார் தருகிறார்கள் என்பதையெல்லாம் உளவுத்துறையின் மூலம் கண்காணித்த புர்ரட்ச்சித் தலைவியின் அரசு, கிரானைட் கொள்ளை பற்றி அவர் தந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியிடும் என நீதிமான்கள் நம்பியது, ”இன்னுமடா நம்பள நம்புறாங்கே” என்ற வடிவேலுவின் காமெடியை மிஞ்சக்கூடியது.
அறிக்கை அளிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், அதனை உடனடியாக வெளியிடக் கோரும் பொதுநல வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கை கடந்த மார்ச் 3-ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முதல் அமர்வு, அப்பொழுதும்கூட அறிக்கையை வெளியிடுமாறு உத்தரவிடாமல், இது குறித்துத் தமிழக அரசு பதில் அளிப்பதற்கு ஆறு வாரம் அவகாசம் அளித்து, வழக்கை ஒத்தி வைத்துவிட்டது. இந்த நிலையில்தான், பிரண்ட்லைன் இதழ் வழியாக சகாயம் அறிக்கை கசிந்து வெளியே வந்திருக்கிறது.
தமிழக அரசின் கடனும் கிரானைட் கொள்ளையும்
நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பு தோற்றுப் போய், திவாலாகி, மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது என நமது ஏட்டில் தொடர்ந்து எழுதி வருகிறோம். மக்கள் அதிகாரம் இக்கருத்தை முன்வைத்து, மக்களை அணிதிரட்டி வருகிறது. 600 பக்கங்களைக் கொண்டிருக்கும் சகாயத்தின் அறிக்கை இக்கருத்தை உறுதிப்படுத்தும் பல்வேறு தரவுகளையும் சான்றுகளையும் கொண்டிருக்கிறது.
சகாயம் அறிக்கையின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் கிரானைட் கற்களின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் வரி ஏய்ப்பால் தமிழக அரசிற்கு ஏற்பட்ட இழப்பு 65,154.60 கோடி ரூபாய். இந்த முறைகேடுகளின் மீது அபராதம் விதிக்கப்பட்டிருக்குமானால், அரசிற்கு 44,283.12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆக, மதுரை மாவட்டத்தில் மட்டும் நடந்துள்ள கிரானைட் சுரங்க ஒதுக்கீடு, உள்ளூர் விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,09,437.72 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டிருக்கிறார், சட்ட கமிஷனர் சகாயம்.
கிரானைட் கழிவுகளால் குப்பைத் தொட்டியாக்கப்பட்ட மேலூர் வட்ட கிராமப்புறம்.
பி.ஆர்.பி. உள்ளிட்டவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் குவாரிகள் உள்ளன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் மதுரையைத் தவிர, பிற மாவட்டங்களில் விசாரணை நடத்த தேவையில்லை என சகாயத்துக்கு உத்தரவு போட்டதால், அங்கு நடந்திருக்கும் கொள்ளை வெளியே வராமல் அமுக்கப்பட்டுவிட்டது.
ஒருபுறம் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளக் கொள்ளை; இன்னொருபுறம் ஆளும் அ.தி.மு.க. கும்பலின், அதிகார வர்க்கத்தின் அடிமடியிலேயே கைவைக்கும் ஊழல். இந்த இரண்டும் சேர்ந்ததன் விளைவுதான் தமிழக அரசின் 3.14 இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமை.
பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து, அதனைக் கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்த மாஃபியா கும்பல் காராகிரகத்தில் அடைக்கப்படவில்லை. ஆனால், அப்பாவித் தமிழர்களோ, கூடுதல் வாட் வரி, பேருந்துக் கட்டண உயர்வு, ரேஷன் சர்க்கரைக்குக் கூடுதல் விலை என இக்கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துமாறு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
டாமின் – கிரானைட் கொள்ளையின் சூத்திரதாரி
தமிழகத்திலுள்ள கனிம வளங்களை முறையாக வெட்டியெடுத்து விற்று, அதன் மூலம் அரசிற்கு வருமானம் தேடித் தரும் நோக்கில்தான் டாமின் நிறுவனம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம், சொல்லிக் கொள்ளப்படும் அந்த நோக்கத்திற்கு எதிராகத் தமிழக அரசிற்கு வர வேண்டிய வருமானத்தையும் இலாபத்தையும் தனியாரிடம் கொண்டு சேர்க்கும் கைக்கூலியாகச் செயல்பட்டிருக்கிறது எனக் குற்றஞ்சுமத்துகிறது, சகாயத்தின் அறிக்கை.
“டாமின் நிர்வாகம் குவாரிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் நோக்கில் 1984-லும், அதன் பின்னர் 1998-லும் முகவர்களை உருவாக்குவது என்ற முறையே ஏற்படுத்தி, கிரானைட் கற்களை வெட்டுவதற்கும் அவற்றை விற்பதற்குமான உரிமங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தது. இவ்வாறு குவாரிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சட்டபூர்வ அதிகாரம் டாமின் நிர்வாகத்திற்கு இல்லாதபொழுதும், 1998, டிசம்பர் 28-இல் நடந்த டாமினின் 134-வது இயக்குநர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தனியார் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என சகாயத்தின் அறிக்கை டாமினில் நடந்த மோசடியைப் பதிவு செய்கிறது.
அதன் பிறகு, குத்தகைதாரர்கள் என்ற கொள்ளைக்கூட்டம், எந்த இடத்தில் கற்களை வெட்டியெடுக்க விண்ணப்பம் போடுகிறதோ, அந்த இடம் தொன்மை வாய்ந்த மலையா, நீர்ப்பாசன கண்மாயா, வாய்க்காலா, பஞ்சமி நிலமா, பொதுப்பாதையா, தனியார் நிலமா, சுடுகாடா என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனுமதி வழங்கி, அக்கும்பல் மேலூர் வட்டாரத்தை கிரானைட் கழிவுகளின் குப்பைத் தொட்டியாகச் சீரழித்ததற்குத் துணை போயிருக்கிறது, டாமின்.
திருவாதவூர் ஓவா மலையில் அமைந்துள்ள மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சமணர்களின் குகைகளுக்கு கிரானைட் மாஃபியா கும்பலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யும் சகாயம்.
மேலும், “குவாரிகளில் புதைந்து கிடக்கும் கற்களின் மதிப்பைக் குறைவாக மதிப்பிடுவதன் மூலம், தனியார் குத்தகைதாரர்கள் கொள்ளை இலாபம் அடைவதை டாமின் அதிகாரிகள் உத்தரவாதப்படுத்தியதோடு, டாமினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குவாரிகளில் வெட்டியெடுக்கப்பட்ட கற்களை உள்ளூரில் விற்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் பல முறைகேடுகளைத் தாமே நடத்தி, 5,507.53 கோடி ரூபாயைத் தமக்குள் பங்கு போட்டு முழுங்கியதாக”க் குற்றஞ்சுமத்துகிறது சகாயத்தின் அறிக்கை.
கிரானைட் கொள்ளை – ஒரு பயங்கரவாத நடவடிக்கை
“அதிகார வர்க்கத்தின் துணையோடு கிரானைட் குவாரி குத்தகைதாரர்கள் நடத்திய முறைகேடுகளிலேயே மிகப்பெரும் முறைகேடு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதில் நடந்த அந்நியச் செலாவணி மோசடிதான்” எனப் பதிவு செய்கிறது, சகாயத்தின் அறிக்கை. மேலும், “இந்த ஏற்றுமதி மோசடிகள் ரூபாயின் மாற்று மதிப்பைப் பாதிக்கக்கூடிய வகையில் அபாயகரமானதாக இருந்தன” என்று தனது அறிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார், சகாயம்.
மதுரை மாவட்டத்தில் வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் கற்களில் எழுபது சதவீதம் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட கற்களின் அளவையும், மதிப்பையும் குறைத்துக் காட்டி, அதன் மூலம் அமெரிக்க டாலர்களாகக் கிடைத்த கருப்புப் பணத்தை, குவாரி குத்தகைதாரர்கள் அந்நிய நாடுகளில் பதுக்கியிருக்கின்றனர்.
“இம்மோசடியைத் தாய்நாட்டின் பொருளாதார நலன்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கும் சகாயம், “இந்தத் துரோகத்திற்கு தூத்துக்குடி, கொச்சி, சென்னை, மங்களூர் துறைமுகங்களின் அதிகாரிகளும், சுங்கத் துறையும், அரசு வங்கிகளும் உடந்தையாகச் செயல்பட்டிருப்பதோடு, விசாரணையின்போது தகவல்களைத் தர மறுத்தும், ஆவணங்களை அழித்தும் பி.ஆர்.பி., துரை தயாநிதி உள்ளிட்ட குத்தகைதாரர்களைக் காப்பாற்றும் விசுவாசத்தோடு நடந்து கொண்டனர்” என அம்பலப்படுத்துகிறார்.
“கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதில் பல்வேறு தில்லுமுல்லுகளை நடத்தவும், இந்த ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அந்நிய நாடுகளில் பதுக்கி வைக்கவும் குவாரி குத்தகைதாரர்கள் லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கியதாக”க் குறிப்பிடும் சகாயம், தனது விசாரணையில் 15 லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கப்பட்டு, கருப்புப் பணம் அந்நிய நாடுகளில் பதுக்கப்பட்ட பிறகு கலைக்கப்பட்டதை ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார்.
நரபலி குறித்த விசாரணையை போலீசே தடுக்க முயற்சி செய்ததையடுத்து, சாட்சியங்களைப் பாதுகாக்க சுடுகாட்டிலேயே தங்கிய சகாயம்.
இந்த லெட்டர் பேடு கம்பெனிகளை உருவாக்குவதற்கு மைய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறை உதவியிருக்கிறது. இந்த நிறுவனங்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், அதன் வழியாக ஏற்றுமதி வர்த்தகத்தில் பல்வேறு தில்லுமுல்லைகளை நடத்தவும் வங்கிகள் உதவியிருக்கின்றன.
ஆம்னி பேருந்து முதலாளிகள் ஒரேயொரு போக்குவரத்து உரிமத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பல பேருந்துகளை இயக்குவதைப் போலவே, குவாரி குத்தகைதாரர்கள் ஒரேயொரு உரிமத்தையும், லாரி எண்ணையும் பயன்படுத்தி, பல லாரிகளை இயக்கியுள்ளனர். துறைமுகத்தின் ஆவணங்களில் குறிப்பிட்ட பதிவெண்ணும் உரிமமும் கொண்ட லாரி, ஒரு முறையோ, இரண்டு முறையோ கிரானைட் கற்களைக் கொண்டு வந்து இறக்கியதாகப் பதிவாகியிருக்கும். ஆனால், உண்மையில் அதே பதிவெண்ணையும் உரிமத்தையும் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான லாரிகள் கிரானைட் கற்களை குவாரியிலிருந்து துறைமுகத்திற்குக் கடத்தியிருக்கும்.
இந்தக் கடத்தலுக்கும், முறைகேடான ஏற்றுமதிக்கும் துறைமுகத்திலுள்ள மத்திய சுங்கத் துறை அதிகாரிகளும், கலால் துறை அதிகாரிகளும் உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர். “எத்துணை டன் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றின் தரம் என்ன, அவற்றின் விலையென்ன, இதன் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணி எவ்வளவு என்ற விவரங்களைக் கேட்டபோது, சென்னை, கொச்சி, தூத்துக்குடி, மங்களூரு துறைமுகங்களைச் சேர்ந்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்த விவரங்களை அளிக்க மறுத்துவிட்டதாக”க் குற்றஞ்சுமத்துகிறார், சகாயம்.
குத்தகைதாரர்களின் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பெரும்பாலான வங்கிகள் இந்த ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான அந்நியச் செலாவணி வரவு-செலவு கணக்குகளைத் தர மறுத்துள்ளன. குறிப்பாக, ஒலிம்பஸ் கிரானைட்ஸ் என்ற நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான அழகிரியின் மகன் துரை தயாநிதி குறித்த விவரங்களை சகாயம் கேட்டதற்கு, மதுரையிலுள்ள கார்ப்பரேஷன் வங்கிக் கிளை, “துரை தயாநிதி அந்நிறுவனத்தின் பங்குதாரர்தான். ஆனாலும், அவர் குறித்த விவரங்கள் (know your customer) தங்கள் வங்கிக் கிளையில் இல்லை” எனக் கூசாமல் கையைவிரித்துக் காட்டியிருக்கிறது.
கிரானைட் ஏற்றுமதி தொடர்பாகவும், அதில் ஈடுபட்ட லெட்டர் பேடு நிறுவனங்கள் தொடர்பாகவும் 2012-ஆம் ஆண்டுக்குரிய விவரங்களை மட்டும்தான் தேடி எடுக்க முடிந்தது என்றும், அதற்கு முந்தைய, பிந்தைய ஆண்டுகளுக்குரிய விவரங்களைத் தம்மால் நெருங்கவே முடியவில்லை என்றும் அறிக்கையிலேயே பதிவு செய்திருக்கிறார், சகாயம். அந்த ஒரு ஆண்டில் மட்டும் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம், ஒரு லெட்டர் பேடு நிறுவனத்தின் மூலம், தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ததில் 38.78 கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணி மோசடி செய்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியான பி.ஆர்.பி.க்குச் சிறந்த ஏற்றுமதியாளர் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது, மைய அரசு.
தனது மூன்று வயது குழந்தை கோபிகா, பி.கே.எஸ். குவாரியில் நரபலியாகக் கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த உஷா.
இந்தத் தொகையை (38.78 கோடி ரூபாயை) எதனால் பெருக்கினால், எத்தனை தடவை பெருக்கினால் கிரானைட் ஏற்றுமதியில் நடந்துள்ள மோசடிகளின் மொத்த மதிப்பு கிடைக்கும் என்பதை சகாயத்திற்கும் அப்பனான அதிகாரிகள் விசாரணை நடத்தினால்கூட கண்டுபிடித்துவிட முடியாது. ஏனென்றால், “தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள சுங்கத் துறை மற்றும் கலால் துறையின் கணினிப் பதிவுகளில், கிரானைட் ஏற்றுமதி தொடர்பான விவரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கிறது; கம்பெனிகள் விவகாரத் துறை, அந்நிய வர்த்தக இயக்குநரகம் ஆகியவற்றின் கணினிப் பதிவுகளில், பி.ஆர்.பி. கிரானைட்ஸ், ஒலிம்பியா கிரானைட்ஸ் உள்ளிட்ட கிரானைட் குவாரி நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான விவரங்களை நாங்கள் பெற முடியாதபடி தடுக்கப்பட்டோம். இந்த நிறுவனங்களின் ஏற்றுமதி/இறக்குமதி இரகசியக் குறியீட்டு எண், இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குறித்த விவரங்கள், இந்த நிறுவனங்களின் கார்ப்பரேட் இரகசிய குறியீட்டு எண் போன்றவற்றைக்கூட அரசின் இணையதளங்களில் இருந்து எம்மால் பெற முடியவில்லை” எனக் குறிப்பிடுகிறார், சகாயம். தொழில் அதிபர்கள் என்ற போர்வையில் பொதுச் சொத்தைத் திருடித் தின்ற ஒரு மாஃபியா கூட்டத்தை, இந்த அரசுக் கட்டமைப்பு எப்படியெல்லாம் பாதுகாக்கிறது என்பதை நிறுவும் சான்றுகள் இவை.
அதிகார வர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனம்
“கிரானைட் கொள்ளை தொடர்பான செய்திகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த சமயத்தில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுப்பதுபோலக் காட்டிக்கொண்டு, 44 கிரிமினல் வழக்குகளை கிரானைட் குவாரி அதிபர்கள் மீது தொடுத்தது. தமிழக அரசின் ஊழல் கண்காணிப்புத் துறை 34 அதிகாரிகளின் வீட்டைச் சோதனையிட்டது. மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர்களான மதிவாணன், காமராஜ்; சுரங்கத் துறையைச் சேர்ந்த துணை இயக்குநர் ராஜாராம் உள்ளிட்டுப் பல அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், நாளாக நாளாக விசாரணையின் சூடு தணிந்து போய், வழக்குகள் இயற்கையாக மரணித்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.”
“நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் சகாயம் கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவதையே உள்ளூர் போலீசு விரும்பவில்லை. நரபலி போன்ற கொடூரமான கொலைக் குற்றத்தைச் சட்ட ஆணையர் விசாரிப்பதைக்கூடச் சீர்குலைத்து, சுரங்க குத்தகைதாரர்களைப் பாதுகாக்கத் துணிந்தது போலீசு. கீழவளவு உதவி ஆய்வாளர் அய்யனார், மேலூர் பகுதி கூடுதல் துணை போலீசு கண்காணிப்பாளர் மாரியப்பன் ஆகிய போலீசு அதிகாரிகள் நரபலி தொடர்பான விசாரணையைத் தடுத்து அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்றால், மதுரை ஊரகப் பகுதி போலீசு மாவட்ட கண்காணிப்பாளர் விஜயேந்திர பிடாரி இந்த அதிகாரிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்.”
“ஊழல் அதிகாரிகள், நாணயமற்ற உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்கள், பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாத குவாரி குத்தகைதாரர்கள் என்று அமைந்திருந்த இந்தக் கூட்டணி, முறைகேடுகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தடுப்பதை உறுதிப்படுத்தியது.”
“ஒவ்வொரு குத்தகைதாரரும் அரசுக்கு ஏற்படுத்தியிருக்கும் நட்டத்தைத் தனித்தனியாகக் கணக்கிட்டு, அந்தத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் இரண்டே மாதங்களில் முடிக்க வேண்டும் என செப்.2015-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம், இது நாள்வரை ஒரு நயாபைசாவைக்கூட குத்தகைதாரர்களிடமிருந்து வசூலிக்கவில்லை. அவர்களிடம் பேருக்கு ஒரு விசாரணையை நடத்திவிட்டு, உச்சநீதி மன்ற உத்தரவையே முடக்கிப் போட்டுவிட்டது.”
“தாங்கள் மாட்டிக்கொள்ள மாட்டோம், தங்களை யாரும் தண்டித்துவிட முடியாது என்ற தைரியத்தில்தான், அதிகாரிகள் குத்தகைதாரர்களின் கொள்ளைக்கும் குற்றங்களுக்கும் எல்லாவிதத்திலும் உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இலஞ்சம் பணமாகவும், பொருட்களாவும் தரப்பட்டு, மேலிருந்து அடிவரை தமக்கு எதையும் செய்துகொடுக்கக் கூடிய அதிகாரிகளின் கூட்டத்தைக் குத்தகைதாரர்கள் உருவாக்கி வைத்திருந்தனர்” என அதிகார வர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனத்தைப் பதிவு செய்திருக்கும் சகாயம், “அதிகார வர்க்கத்தின் இத்தகைய ஒத்துழைப்பின்றி, பள்ளிப் படிப்பையே முடித்திராத ஒரு குத்தகைதாரர் (பி.ஆர்.பழனிச்சாமி) ஒரு மாபெரும் கிரானைட் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறுகிறார்.
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையை நடத்திய பெரும்புள்ளிகள் பி.ஆர்.பழனிச்சாமி (இடது) மற்றும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி.
கிரானைட் கொள்ளையை மாபெரும் கருந்துளையைப் போல ஆழங்காண முடியாத மோசடி என்று கூறும் சகாயம், “இந்த அமைப்பு முறை முற்றும் முழுதாக தோற்றுப்போயிருப்பதுதான், இந்தக் கொள்ளையின் ஆணி வேராக இருக்கிறது” என்று தனது அறிக்கையில் ஒப்புக்கொள்கிறார். பிறகு, தனது கூற்றுக்கே முரணான வகையில் நாய் வாலை நிமிர்த்துவதற்கான பரிந்துரைகளையும் தனது அறிக்கையில் பட்டியலிடுகிறார்.
சென்னை உயர்நீதி மன்றம், மத்தியப் புலனாய்வுத் துறையின் கீழ் ஒரு பன்முகப் புலனாய்வு அமைப்பை உருவாக்கி கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
மைய அரசின் கீழுள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், கிரானைட் தொழில் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தைக் கண்காணிப்பதற்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மையத்தை உருவாக்க வேண்டும்.
கிரானைட் ஏற்றுமதி தொடர்பாக நடந்துள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்கு மத்திய அரசின் அமலாக்கத் துறை சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்.
கனிமப் பொருட்களை வெட்டியெடுப்பது தொடர்பாக உள்ள பழைய சட்டங்கள் அனைத்தையும் திருத்தி அமைக்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டங்களில் நேர்மையான, அப்பழக்கில்லாத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறார்.
தோற்றுப் போய்விட்ட அமைப்பு முறையை, அப்பழுக்கற்ற அதிகாரிகளைக் கொண்டும் சட்டங்களைத் திருத்துவதன் மூலமும் சீர்செய்துவிட முடியும் என்ற சகாயத்தின் நம்பிக்கை, கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற திரைப்பட காமெடியைத்தான் நினைவுபடுத்துகிறது. சகாயம் மட்டுமல்ல, நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரும், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அடிபணியாத, இலஞ்சத்திற்கு மயங்காத அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால்தான், இந்த அரசமைப்பு முறை சீரழிந்துபோய்விட்டதாகக் கருதுகிறார்கள்.
இந்த கிரானைட் கொள்ளை விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். மதுரை மாவட்டத்தில் இந்த முறைகேடு கடந்த இருபது ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள், போலீசு கண்காணிப்பாளர்கள், சுரங்கத் துறை இயக்குநர்கள் வந்து போயிருப்பார்கள். அவர்களுள் இரண்டே இரண்டு பேர்தான், சகாயமும், அன்சுல் மிஸ்ராவும்தான் இந்தக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணிந்தார்கள். நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் இருவரையும் பணிமாறுதல் என்ற பெயரில் தூக்கியெறிந்து, கிரானைட் கொள்ளையர்களைப் பாதுகாத்தார், அன்றைய முதல்வர் ஜெயா.
கிரானைட் கொள்ளையை விசாரிக்குமாறு சகாயத்திற்கு உத்தரவிட்டு, நெற்றிக் கண்ணைத் திறந்துவிட்டது போலக் காட்டிக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம், தனது உத்தரவின் மை காய்வதற்கு முன்பே விசாரணையை மதுரை மாவட்டத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு மறு உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தையும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும், எந்தவொரு அரசுத் துறையும் கால்தூசுக்குச் சமமாகக்கூட மதிக்கவில்லை. தனக்கு ஒத்துழைக்க மறுத்த தலையாரி, ஏட்டய்யாவைக்கூட சட்ட ஆணையர் சகாயத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைத்துவிட்டு நீதிமன்றம் பூச்சாண்டி காட்டியிருக்கிறது என்ற உண்மை விசாரணையின் போக்கிலேயே அம்பலமானது.
குவாரிக்குத் தனது நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் மாஃபியா கும்பலால் கை வெட்டப்பட்டதைச் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.
இதற்கும் மேலாக, கிரானைட் கொள்ளையின் முக்கிய புள்ளியான பி.ஆர்.பழனிச்சாமி, மதுரை தவிர, பிற மாவட்டங்களில் தனது தொழிலை நடத்திக் கொள்ள அனுமதித்தார், உயர்நீதி மன்ற நீதிபதி ராஜா. இந்த முறைகேடான தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியிடமும் ஆளுநரிடமும் வழக்கறிஞர்கள் புகார் செய்தனர். அந்தப் புகாரின் மீது நடவடிக்கை இல்லை. மாறாக, தீர்ப்பை விமரிசித்த வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது அனைத்திந்திய பார் கவுன்சில்.
மதுரையில் உள்ள ஐந்து காவல் நிலையங்களைக் குறிப்பிட்டு, அந்த போலீசு நிலைய அதிகாரிகள் எந்த வழக்கிலும் பி.ஆர்.பழனிச்சாமியையோ, அவரது குடும்பத்தாரையோ கைது செய்யக்கூடாதென்ற உத்தரவையும் நீதிமன்றம் வழங்கியது.
“நீதிமன்றங்களின் ஒத்துழைப்போடுதான் கிரானைட் கொள்ளை நடந்திருக்கிறது. அதையும் சகாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு வெளிப்படையாகவே இந்து நாளிதழில் எழுதினார். ஆனால், ஏட்டய்யாவையே விசாரிக்க முடியாத சகாயம் நீதிபதியை எங்கே விசாரிப்பது?
இந்த இலட்சணத்தில் சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்குப் புலனாய்வு, அதனை உயர்நீதி மன்றம் கண்காணிப்பது என்றெல்லாம் சகாயம் பரிந்துரைத்திருக்கிறார். இவையெல்லாம் சங்கர் பாணி சினிமாக்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.
இயற்கை வளங்களைத் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏற்றவாறுதான் தற்பொழுது சட்டங்கள் திருத்தப்படுகின்றன. நெடுவாசல் பகுதியில் எதை வேண்டுமானாலும் உறிஞ்சி எடுத்துக்கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படிபட்ட நிலையில், கனிம வளங்களைக் கொள்ளையிட முடியாதவாறு சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற சகாயத்தின் பரிந்துரை போகாத ஊருக்கு வழி சொல்லுவதாகும்.
நாடும் மக்களும் எதிர்கொள்ளும் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகள் தொடங்கி இயற்கை வளக் கொள்ளை வரையிலான எதையும் இன்றைய அரசு, அதிகாரக் கட்டமைப்புக்குள்ளே தீர்க்க முடியாது என்பதுதான் சகாயம் அறிக்கை கூறவரும் உண்மை. இதனை சகாயம் புரிந்துகொண்டாரோ இல்லையோ, பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணமும் கடன் தள்ளுபடியும் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.
அன்று இருந்த குடும்பக் கடனை அடைக்க வேறு வழியில்லை. விவசாயத்திலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. கவுரவமாக இருந்துவிட்டு சொந்தபந்தங்களிடம் கடன் கேட்கவும் மனசு வரவில்லை. கையிலிருக்கும் ஒரே சொத்து இந்த நாலு ஏக்கர் நிலம்தான். என்ன செய்யப்போறோம்னு குடும்பமே கண்ணு முழி திருகிப்போயி நின்றபோது, ஒரு நண்பன் கொடுத்த யோசனதான் இந்த வங்கிக்கடன்.
“தென்னையிலிருந்து மாத வருமானம், சப்போட்டாவில் வருடம் முழுவதும் வருமானம், மா, நெல்லியில் ஆண்டுக்கு இருமுறை வருமானம். இதற்கிடையில் மூன்று வருடம் ஊடுபயிர் செய்தால் அந்த வருமானத்திலேயே குடும்பத்தை ஓட்டிவிடலாம். மரப்பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு 36,000 ரூபாய் தவணையைக் கட்ட முடியாதா?” என்று ப்ராஜெக்ட் ரிப்போர்ட் எழுதிக்கொடுத்த விவசாய அதிகாரி என்னிடம் கேட்டபோது, மூணு லட்சம் ரூபாய் கடன் ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால், இன்றைக்கு வந்து குரல்வளையைப் பிடிக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நம்ம வறுமைக்கு பேங்குக்காரன் மீது ஆத்திரப்படுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?
அம்மா சொன்ன தைரியத்தில் அடுத்த நாள் காலையில் வங்கி வாசல்வரை சென்று விட்டேன். ஆனால் உள்ளே நுழைவதற்குத் தைரியம் வரவில்லை. “உள்ளே என்ன கேட்டுத் தொலைப்பானோ?” என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. ஒரு டீயும் இரண்டு பீடியும் குடித்த பிறகும் தணியாத பதட்டத்துடன், மனசுக்குள் முரட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வங்கிக்குள் நுழைந்தேன்.
நீளமான அந்த ஏ.சி. அறையில், ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இரண்டு நாளைக்குமுன் வீட்டுக்கு வந்த அதே பெண் அதிகாரி எதையோ உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தார். நான் அறை வாசலில் போய் நின்றதுமே கவனித்துவிட்ட அவர், கையில் ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியில் வந்து, “வாங்க ..மேனேஜரைப் பார்ப்போம்” என்று கூறி, இன்னொரு கண்ணாடிக் கூண்டுக்கு அழைத்துச் சென்றார்.
நான் வணக்கம் சொன்னதைக் கண்டுகொள்ளாத மேனேஜர், பெண் அதிகாரியிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறிமாறிப் பேசிவிட்டு, என்னை கண்ணாடி இடுக்குவழியாகப் பார்த்து, ”உட்காருங்கய்யா’’ என்றார்.
இல்ல… பரவாயில்ல சார்… என்று தயக்கத்துடன் நின்றேன்.
“அட..உட்காருங்கய்யா…நானும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். சும்மா உட்காருங்க” என்று சிரித்த முகத்துடன் சொன்னார்.
பெரிய அதிகாரிகளைப் போல பந்தா எதுவுமில்லாமல், ஒல்லியாக இருந்தார் மேனேஜர். ஒரு பார்வைக்கு சாதாரண வாத்தியார் மாதிரி தெரிந்ததால், உள்ளே நுழையும்போது இருந்த நடுக்கம் கொஞ்சம் குறைந்து மெதுவாக உட்கார்ந்தேன்.
“ஏன் இவ்வளவு ஏற விட்டீங்க? 3.5 லட்சம் கடன் வாங்கியிருக்கீங்க. இப்போ அசலும் வட்டியும் சேர்ந்து 6.5 லட்சமாகி நிக்குது. ஏன் இப்படி ஆச்சு?” என்ற மேனேஜரின் கேள்வியில் ஒரு அப்பாவின் அக்கறை தெரிந்தது.
“விவசாயத்துல எதிர்பார்த்த வருமானம் இல்ல. குடும்பத்துல அடுத்தடுத்து கஷ்டமான சூழ்நிலை, அதனாலதான் சார், ஒண்ணும் பண்ண முடியாம போச்சு.” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மனதில் தோன்றியதைச் சொன்னேன்.
“சரி..தோட்டத்துல வருமானத்துக்கு என்ன பண்ணி வச்சிருக்கீங்க?” என்று மீண்டும் அதே அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.
“மா, நெல்லி, சப்போட்டா, மரம் வச்சோம். எல்லாம் வருமானத்துக்கு வரும் நேரத்தில் யானைத் தொந்தரவு அதிகமாயிருச்சு சார். அதனால எல்லா மரத்தையும் வெட்டிட்டு இப்போ தென்னை மட்டும்தான் வச்சிருக்கோம். ரெண்டு வருசமாதான் மகசூல் ஆரம்பிச்சிருக்கு சார்”
“பதினோரு வருசமாச்சு. இப்பதான் மகசூல் எடுக்கிறேன்றீங்க. மா மரத்தை வெட்டுற வரைக்கும் வருமானம் எடுத்திருப்பீங்கள்ல… அதிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயாவது கட்டியிருக்கலாமே” என்ற மேனேஜரின் அடுத்த கேள்விக்கு என்னால் பதிலே பேசமுடியவில்லை.
“கதை சொல்றத விட்டுட்டு, வாங்குன கடனுக்கு வழி சொல்லுடா”ன்னு நாசூக்கா கேட்குறான். இவன்கிட்ட, அப்பாவின் ஆஸ்பத்திரி செலவு, தம்பியின் திருமணம், தங்கச்சியின் மகளுக்குச் செய்த சீர், என் மகளின் கல்லூரி படிப்புச் செலவு என்று நம் குடும்பத்தின் கஷ்டங்களை எல்லாம் வரிசையா சொன்னா கேட்கவா போறான். என்ன காரணம் சொல்லி இவன்கிட்ட இருந்து தப்பிக்கிறது? என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
“என்னங்கய்யா பேச்சக் காணோம்… நீங்க யோசிக்கிறதப் பார்த்தா என்ன பொய் சொல்லலாம்னு நினைக்கிற மாதிரி இருக்கு! நான் சொல்றது கரெக்ட்டா” என்ற மேனேஜரின் பேச்சில் நக்கல் தெரிந்தது.
கல்விக் கடன் தவணையைக் கட்டத் தவறிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவமானப்படுத்தியது, போடிநாயக்கனூர் ஸ்டேட் பாங்க். (கோப்புப் படம்)
“நூறுநாள் வேலைக்குப் போற பொம்பளைங்க லோன் வாங்கி மாதம் 460 ரூபா கட்டுறாங்க. உங்களால மட்டும் ஏன் முடியல? வாங்குன கடன திருப்பிக் கட்டணும்னு மனசுல நினைக்கணும்யா. கவர்மென்ட் பணத்தை வாங்குனா, எவனாவது வந்து தள்ளுபடி பண்ணிருவானு நினைச்சா எப்படிக் கட்டுவீங்க? எதையாவது பொய் சொல்லி சமாளிக்கனும்னுதான் தோணும்.”
மேனேஜரின் ஏளனமான வார்த்தைகள் குத்தூசியாக தெறித்துவந்தது. நம்மைக் களவாணிப் பட்டம் கட்டப் பார்க்கும் மேனேஜரை விடக்கூடாது என்று மனசுக்குள் கோபம் கொப்பளித்தாலும், கொஞ்சம் அடக்கியே வாசித்தேன்.
“சார் உங்ககிட்ட பொய் சொல்லனும்னு எனக்கு அவசியமில்ல. மரக் கன்றுகள் நட்டது, சொட்டுநீர் போட்டது, எல்லாத்தையும் போட்டோ எடுத்து பேங்குல கொடுத்திருக்கேன். யானைத் தொந்தரவுனாலதான் அஞ்சு வருசம் வளர்ந்த மரத்தை வெட்டினோம். நான் சொல்றது பொய்யினா நேரில் வந்து, ஏன் வெட்டினோம்னு அக்கம்பக்கத்துல விசாரிச்சு பாருங்க சார்”
“சரிங்கய்யா, நீங்க சொல்றதை ஒத்துக்கிறேன். இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட நீங்க கட்டலையே, ஏன்? அதுக்கு பதில் சொல்லுங்க.”
“தோட்டக்கலைத் துறையிலிருந்து 60,000 ரூபாய் மானியம் வாங்கிக் கொடுத்திருக்கேன். 2007-இல் பயிர்க்கடன் 54,000 ரூபாய் தள்ளுபடியாகி இருக்கிறது.”
“இதெல்லாம் அரசாங்கம் கொடுத்தது. விவசாய வருமானத்துல இருந்து நீங்க ஒரு பைசா கூட கட்டலையே…. ஏன் வருமானமே வரலையா?”
“வர்ற வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு சார். பிள்ளைகள் படிப்புச் செலவு, ஆஸ்பத்திரி செலவு எல்லாத்தையும் பாக்கணும்ல சார். எங்களுக்கு வேற வருமானமும் இல்ல. இந்த நிலத்தை நம்பித்தான் குடும்பமே இருக்கு.”
“ஓஹோ…உங்க பிரச்னையை எல்லாம் தீர்த்துட்டுத்தான் கடன் கட்டுவீங்களோ? கந்துவட்டிக்காரன்கிட்ட இப்படிக் காரணம் சொல்லுவீங்களா, சொல்ல முடியுமா?”
மேனேஜரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பாம்பு படம் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மளும் கம்பைத் தூக்கிற வேண்டியதுதான் என்று முடிவு பண்ணிவிட்டேன்.
“சார் கடன் வாங்குனவன் கஞ்சி குடிக்கிறதே தப்புங்குறீங்களா? இப்படி வந்து பதில் சொல்றதுக்காவது நாங்க உயிரோட இருக்கனும்ல சார்! கந்துவட்டிக்கு வாங்கினா, உள்ளூருல நாலு பேரை வச்சுப் பேசி வட்டியைக் குறைச்சு கணக்கு முடிச்சுறலாம். அல்லது அவனையே விவசாயம் செய்யச் சொல்லிட்டு, வட்டியே இல்லாமக்கூட கணக்கு முடிக்கலாம். இதெல்லாம் உங்ககிட்ட நடக்குமா சார்?”
பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டுவிட்டு, இலண்டனுக்குத் தப்பியோடிவிட்ட தரகு முதலாளி விஜய் மல்லையா. (கோப்புப் படம்)
“என்னய்யா திடீர்னு இவ்வளவு எமோசன் ஆயிட்டீங்க! நீங்க வாங்கியிருக்குறது கவர்மென்ட் பணம். என்னோட பணம் கிடையாது. கொடுத்த கடனை வசூலிக்கிறதுக்குதான் எனக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. நீங்க கடன் கட்டலைனா நான்தான் மேலதிகாரிக்குப் பதில் சொல்லணும். நான் என்ன பதில் சொல்றதுன்னு நீங்களே சொல்லுங்க!”
“என்னை இப்படிக் கேட்குற மாதிரி 15,000 கோடி கடனை வாங்கிக்கிட்டு ஓடிப்போன மல்லையாவை உங்களால கேட்கமுடியுமா சார்? என் கஷ்டத்தைச் சொல்லி இதுவரைக்கும் கட்டமுடியலை சார்….. இனிமேல் கட்டுறேன், எனக்கு அவகாசம் கொடுங்கன்னு கேட்குறேன். என்னைய களவாணிப்பய மாதிரி பேசுறீங்க. நான் என்ன பதில் சொல்றது?”
“அய்யா நீங்க விவரமான ஆளா இருக்கீங்க. உங்ககிட்ட நான் அதிகமா பேச விரும்பல. இந்தக் கடனை எப்போ கட்டப் போறீங்க? அதை மட்டும் சொல்லுங்க.”
“என்னால இப்போதைக்கு ஒரு பைசாகூட கட்ட முடியாது சார். வட்டியைக் குறைச்சு சலுகை கொடுத்தா ரெண்டு மாசத்துல எப்படியாவது கட்டுறேன். இதுதான் என்னோட நிலைமை. இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது சார்.”
“வட்டியைக் குறைக்கிறதெல்லாம் என்னால முடியாது. மேலதிகாரிகள்தான் முடிவு செய்யணும்” என்றவர், ஏதேதோ கணக்குப் போட்டுவிட்டு “வட்டியில நீங்க எவ்வளவு கட்டுவீங்க?” என்று கேட்டார்.
“ஒரு 50,000 ரூபாய்தான் கட்ட முடியும் சார்.” என்றதுமே உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டிவிட்டு, “மேடம் இது கதைக்கு ஆகாது. இவர் கணக்கை வாராக்கடன் லிஸ்ட்டில் போட்டுருங்க. இவரு கோர்ட்டுல போயி பணத்தைக் கட்டட்டும்” என்று பெண் அதிகாரிக்கு உத்தரவு போட்டார்.
என்னை தன் ஆபீசுக்கு கூட்டிச்சென்ற பெண் அதிகாரி, “அய்யா உங்க கணக்கை வாராக் கடன் லிஸ்ட்டில் சேர்த்துட்டோம்னா, நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்குச் சலுகை கிடைக்கும். ஆனால், உங்கள் பெயரை ‘பிரச்னைக்கு உரியவர்’ என்று முத்திரை குத்தி கம்ப்யூட்டரில் போட்டுருவாங்க. அப்புறம் நீங்க தமிழ்நாட்டுல கூட்டுறவு பேங்குல கூட கடன்வாங்க முடியாது. பிள்ளைகளுக்கு கல்விக் கடனும் வாங்க முடியாது. நீங்க எங்க அப்பா மாதிரி இருக்கீங்க, அப்படின்றதால இதைச் சொல்றேன்.” என்றார்.
“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”
“இவ்வளவு பெரிய தொகையைக் கட்டுற அளவுக்கு என் சூழ்நிலை இல்ல, வேற வழியே இல்லையா, மேடம்”
“நான் சொல்றது உண்மையானு மற்ற பேங்க்குலயும் விசாரிச்சுக்கங்க. ஒன்னும் அவசரமில்ல. பொறுமையா யோசிச்சு சொல்லுங்க. உங்களுக்கு இன்னும் ஏழு மாத தவணை இருக்குது. வருசக் கடைசிங்குறதால மேனேஜர் கோபப்படுறார். நீங்க போயிட்டு வாங்க, நான் சொல்லிக்கிறேன்.” என்று சற்று ஆறுதலாக வழியனுப்பி வைத்தார்.
சிறிது நேரத்திற்கு முன்னாள் மேனேஜரிடம் காட்டிய வீராப்பெல்லாம் சட்டென்று மறைந்து, மீண்டும் என் மனதிற்குள் பயம் தொற்றிக்கொண்டது. அம்மா சொல்லி அனுப்பியதுபோல கொஞ்சம் பொறுமையாகப் பேசியிருந்தால், இந்தப் பிரச்சனை வந்திருக்காதோ என்றுகூடத் தோன்றியது.
கடைசியாக எனக்கு முன்னாள் இருப்பது இரண்டே வாய்ப்புகள். ஒன்று, வட்டியும் முதலும் பைசா குறையாமல் கட்டி ‘நான் யோக்கியன்’ என்பதை நிரூபிக்கணும். அல்லது அசலோடு வட்டியைக் குறைத்துக் கட்டி ‘நாணயமற்றவன்’ என்ற பட்டத்தைச் சுமக்கணும்.
இப்படியும் சொல்லலாம். நான் யோக்கியனாகணும்னா நிலத்தை முழுசா விக்கணும்! நிலத்தை காப்பாத்தணும்னு நினைச்சா நாணயமற்றவனாகனும்! நான் என்ன செய்யட்டும்?
மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … செங்கொடி ஏந்தி போராடு… !
8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான்.
8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை ! தொழிற்சங்கம் துவங்கியதற்காக கொலைப்பழியோடு வாழ்நாள் சிறையில் தள்ளப்பட்டுள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்களும், முதலீட்டாளர்களது இலாபவெறிக்காக ஒருமணிநேர அவகாசத்தில் வேலையை விட்டே துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான காக்னிசண்ட் ஐடி நிறுவன ஊழியர்களும் மிகச்சமீபத்திய உதாரணங்கள். இரண்டு பிரிவிலும் வேலைமுறைதான் வெவ்வேறாக இருக்கிறதே தவிர, துயரங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறது. வாழ்நாள் சிறையும், வேலைபறிப்பும் சாராம்சத்தில் ஒரே மாதிரியான தண்டனைதான்.
எல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டதால் எப்போது வேலை பறிபோகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. வேலை கிடைப்பதே அரிதாகி வருகிறது. கிடைக்கிற காண்டி ராக்ட் வேலைக்கும் போட்டிகள் அதிகரித்து வருகிறது. எத்தனை மணிநேர வேலைக்கும் தயார்; எவ்வளவு குறைந்த சம்பளத்துக்கும் தயார், எந்த வேலைக்கும் தயார் என்றெல்லாம் இறங்கி வந்து, கிடைத்த காண்டிராக்ட் வேலையை காப்பாற்றிக் கொள்ள குட்டகுட்ட குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பதை உள்ளடக்கிய மறுகாலனியாக்கக் கொள்கையை மத்திய – மாநில அரசுகள் கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமல்படுத்தியதால் முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளி வர்க்கம் மட்டும் பலியாகவில்லை. விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களும் பேரழிவை சந்தித்து வருகின்றன. நாட்டின் இயற்கை வளங்கள், தாது வளம், ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் ஆகிய அனைத்து வாழ்வாதாரங்களையும் சூறையாடி வருகிறது, மறுகாலனியாக்க நடவடிக்கைகள்.
மறுகாலனியாக்கக் கொள்கையானது இந்திய விவசாயத்தை குறிவைத்து அழித்து வருகிறது. விவசாயத்துக்கு தரப்படுகின்ற சலுகைகள் அனைத்தையும் வெட்டுவது, விவசாயக் கடன்கள் மறுப்பு, நீராதாரங்களை வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய ஆதாரவிலையை நிர்ணயிக்க மறுப்பது, உரம், விதைகள் உள்ளிட்ட இடு பொருட்களை பன்னாட்டு நிறுவனங்களது ஆதிக் கத்துக்கு விட்டுவிடுவது, வீரிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கட்டாயமாக்கி, விதைகளுக்காக பன்னாட்டு விதைக்கம்பெனி களை சார்ந்து நிற்பது, ஒப்பந்த விவசாயம் என்கிற பெயரில் சிறுவிவசாயிகளையும், உணவுப்பயிர் விவசாயத்தையும் ஒழித்துக்கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நம்பி இருந்த விவசாயம் கைவிட்டுப்போன நிலையில் கடன் தொல்லை தாங்க முடியாமலும், பிழைப்புக்கு வழி தெரியாமலும் தற்கொலை செய்து கொள்ளுகின்ற விவசாயிகள் மத்தியில், பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்தால் காண்டிராக்ட் வேலையைத் தவிர வேறு வழியில்லை.
ஆன்லைன் வர்த்தகம், ஒற்றை முத்திரை – பல் முத்திரை வணிகம் ஆகிய அனைத்துக்கும் அனுமதி அளித்து சிறுவணிகத்தை ஏகபோக வர்த்தகத்துக்கு பலியிட்டுள்ளது, அரசு. நவீனமயமாக்கல், காப்புரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் சிறுதொழில்கள் சுடுகாட்டுக்கு அனுப்பப்பட்டுள் ளன. பலகோடி பேருக்கு வேலைவாய்ப்பினை தந்து கொண்டிருந்த சிறுவணிகமும், சிறுதொழில்களும் ஒழிக்கப்பட்ட நிலையில், இவற்றை சார்ந்திருந்த மக்களின் கதி என்ன?
காடுவளம், தாதுவளம், நீர்வளம், கடல்வளம் ஆகிய அனைத்தும் இலாபத்துக்காகவே என்கிறது, அரசின் கொள்கை. குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்தாலும், கோக்-பெப்சிக்கு தண்ணீர் தந்தாக வேண்டும். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களை துரத்திவிட்டு, காடுகள், மலைகளை கார்ப்பரேட் கம்பெனிகளது சூறையாடலுக்கு அனுமதிக்க வேண்டும். கடலன்னை மீன்வளத்தை வாரிக்கொடுத்தாலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கே அவை சொந்தம்.
சொந்த நாட்டு மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகளது இலாபவேட்டை முக்கியம் என்கிறது, அரசு. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை, மானியங்கள், பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட எல்லா அடிப்படை துறைகளிலும் தொழில் துவங்க அனுமதி, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வணிகமாக்கிக் கொள்ள அனுமதி, இயற்கை வளங்களை அள்ளிக் கொள்ள அனுமதி, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், நில அபகரிப்பு ஆகிய அனைத்தையும் செய்து முடிக்கிறது.
வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எங்கு போனாலும் வேலையின்மையும், விலைவாசி உயர்வும் நம்மை துரத்திக் கொண்டு தானிருக்கின்றன. கார்ப்பரேட் காட்டாட்சி நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதை என்னதான் பிழைப்புக்கு வழியில்லை என்றாலும் எத்தனை காலத்துக்கு இந்த கொடுமைகளை சகித்துக் கொண்டிருப்பது ? மறுகாலனியாக்க கோரத்தாண்டவத்தை ஆடினாலும், இந்து மதவெறியர்கள் உழைக்கும் மக்களை தேசபக்தி போதையில் மூழ்கடித்து வருகின்றனர்.
இத்தனை நெருக்கடியிலும் மக்கள் தங்களது வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க போராட்டக்களம் புகுந்துள்ளனர். குறிப்பாக, மெரீனா எழுச்சிக்குப் பின்னர் போராட்டமே தமிழகத்தின் முகவரியாகி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன. குறைந்தபட்ச போராட்டமே மறியலும், முற்றுகையும்தான் என்கிற அளவுக்கு தமிழக மக்களது போராட்டங்கள் வீச்சாக நடந்து வருகின்றன.
இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு போலீசு விதவிதமான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. நியாயம் கேட்டு நீதிமன்றம் போனால், நீதிமன்ற பாசிசம் மக்களது ஜனநாயக உரிமைகளைக்கூட பறிக்கிறது. அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக சொல்லிக் கொண்டாலும், நடந்து கொண்டிருப்பது முதலாளிகளது அரசுதான் என்பதை ஒவ்வொரு நடவடிக்கையும் நிரூபிக்கின்றன. மக்கள்நலன், நாட்டுநலன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எந்த கட்சி ஆட்சி செய்தாலும் கார்ப்பரேட் முதலாளிகள் போடுவதே சட்டம் என்றாகிவிட்டது. உழைக்கும் மக்கள் வாழ வேண்டும் என்றால் இந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
மக்களுக்கான அரசு தேவை என்றால், அங்கு கார்ப்பரேட்டுகளது அதிகாரம் ஒழிக்கப்பட்டு மக்களது அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும். முதலாளித்துவ இலாபவெறிக்காக திணிக்கப்பட்டு வருகின்ற மறுகாலனியாக்கத்துக்கும், அதனைப் பாதுகாப்பாக சுமந்து செல்கின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கும் முடிவுகட்டுகின்ற ஆற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது. போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம். போராட்டக்களத்தில் செங்கொடி ஏந்தி முன்னேறுவோம். மேதினத்தின் போராட்ட பாரம்பரியத்தையும், மே தினத் தியாகிகளது நினைவையும் உயர்த்திப்பிடிப்போம்!
மேதின தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்துவோம் !
மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம் !
பேரணி – ஆர்ப்பாட்டம்
மே 1, 2017
நேரம் : மாலை 4.30 மணிக்கு
ஆவடி – கும்மிடிப்பூண்டி – காஞ்சிபுரம் – வேலூர்
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள். 94444 61480, 94453 68009, 88075 32859, 84897 35841.
3. லா பிடா சுரங்கத்தில் ஜார்ஜ் கூடியெரஸ்(Jorge Gutierrez) வேலை செய்கிறார். அவருடைய பச்சை நிறக் கண்கள் சனந்தர் பகுதியைச் சேர்ந்த மியூசோ(Muzo) பழங்குடியாக அவரை அடையாளம் காட்டுகிறது. அங்கு பெரும்பான்மையானவர்கள் அரிய மியூசோ பூர்வக்குடி மக்களைச் சேர்ந்தவர்கள்.
கொலம்பியா – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த செழிப்பான நாடு. வற்றாத ஆறுகளான அமேசானும் ஒரினோக்கோவும் கொலம்பிய மக்களின் உயிராதாரங்கள். இயற்கை வனப்புகளும் வளங்களும் கொள்ளை அழகாய் இருக்கும் கொலம்பியாவில்தான் உலகின் மிகச்சிறந்த மரகத கற்கள் உற்பத்தியாகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு மரகத கற்களுக்கு தாயகம் கொலம்பியா. கண்கொள்ளா அழகுடன் பச்சை நிறத்தில் மின்னும் மரகத கற்களில் சில வகைகள் வைரத்தை விடவும் விலை உயர்ந்தவை. உலகெங்கும் பணக்காரர்களின் விரல்களில் அழகுடன் வீற்றிருக்கும் பச்சை நிற மரகத கல் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியினால் உருவானவை. உழைப்பை நீக்கிவிட்டால் நிறத்தை தவிர கருங்கல்லிற்கும் மரகத கல்லிற்கும் வேறுபாடு ஏதுமில்லை.
மரகத கற்களை ஏற்றுமதி செய்யும் ஏகபோக உரிமைக்காக ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் 1980-களில் மாஃபியா கும்பல்களுக்கு இடையே நடந்த வன்முறைகளில் சிக்கிக்கொண்டு சிதைந்து போன கொலம்பிய மக்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் இருக்கும். கொலம்பிய அரசின் உதவியுடன் சட்டபூர்வமாகவும் மாபியா கும்பல்களால் சட்டவிரோதமாகவும் நடத்தப்படும் இந்த காட்டு வேட்டையினால் கொலம்பியா நாடு இழந்த இயற்கை வளங்களும் எண்ணி மாளாதவை.
கரிய பாறைகளில் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மரகதத்தின் மின்னும் பச்சை நிறம் வறுமையை அகற்றி தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று பல்லாயிரக்கணக்கான கொலம்பிய மக்கள் அன்று நம்ப வைக்கப்பட்டார்கள். மரகத கல்லைத் தேடி புறப்பட்ட கொலம்பிய மண்ணின் மைந்தர்கள் பேரகொய்ரா(Berraquera) என்று அழைக்கப்பட்டனர். ஆனால் அப்படி மரகதம் தேடிய பெரும்பான்மையான கொலம்பிய மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
இன்று அந்த படுபயங்கர பச்சை யுத்தம் இல்லாமல் போய்விடினும் அது தோற்றுவித்த உள்நாட்டு அரசியல் குழப்பங்களாலும் போதை கடத்தல் கும்பல்களாலும் இயற்கை வளங்கள் சூறையாடுவதாலும் கொலம்பியா இரத்தக்களரி ஆகிவிட்டது. ஒட்டுமொத்த கொலம்பிய மக்களுக்கும் சொந்தமான இயற்கையை எதிரிகளிடம் இருந்து மீட்பதற்கான ஒரு போராட்டக்களத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன மரகதத்தின் பச்சை நிறமும் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியும்.
கொலம்பியாவின் மேற்கு பொயகா(Boyaca) மாநிலத்தில் இருண்டு போன ஒரு சட்டவிரோதமான சுரங்கமொன்றில் மரகத கல்லை தேடுகின்றனர் இரண்டு தொழிலாளர்கள்.மாரிபியை சேர்ந்த லா பிடா(La Pita) சுரங்கத்தில் தோண்டி எடுத்த செப்பனிடப்படாத ஒரு சிறிய மரகதப் பாறையொன்றை தன் கையில் வைத்திருக்கிறார் ஒரு சுரங்க தொழிலாளி. செதுக்கியப் பின்னர் அளவில் சிறிதாக இருக்கும் அதன் வர்த்தக மதிப்புக் குறைவு.லா பிடா சுரங்கத்தில் ஜார்ஜ் கூடியெரஸ்(Jorge Gutierrez) வேலை செய்கிறார். அவருடைய பச்சை நிறக் கண்கள் சனந்தர் பகுதியைச் சேர்ந்த மியூசோ(Muzo) பழங்குடியாக அவரை அடையாளம் காட்டுகிறது. அங்கு பெரும்பான்மையானவர்கள் அரிய வகை மியூசோ பூர்வகுடி மக்களைச் சேர்ந்தவர்கள்.சுரங்கக் கழிவுகள் சுரங்கப்பாதையை ஒட்டியோ அல்லது ஆற்றிலோ கொட்டப்படுகின்றன. இந்த பொதுவான பழக்கவழக்கம் கொலம்பியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களால் தடை செய்யப்பட்டிருந்தாலும் தற்போது தான் கடுமையாக்கப்பட்டிருகின்றனசுரங்க ஆறானது மேற்கு போயகாவை(Boyaca) கடந்து செல்கிறது. பல நிறுவனங்கள் அருகிலுள்ள மலைகளில் மரகத கற்களைத் தோண்டுகின்றன. அங்கு வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளிகளும் பேரகொய்ராக்களும் தாங்கள் முகாம்களை அதற்கருகே அமைத்து கொள்கிறார்கள்.சுரங்க ஆற்றின் பள்ளத்தாக்கில் சுமார் 40 ஆண்டுகளாக பேரகொய்ராவாக இருக்கிறார் ஜோஸ் இலியாஸ் வல்லேஜோ (Jose Elias Vallejo). மியூசோ சுரங்கங்களுக்காக உருவாக்கப்பட்ட நகர்புறச் சேரிப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத குடியிருப்பான டாடிகபேவில்(Matadecafe) அவர் குடியிருக்கிறார்.ஜெய்மி வார்கஸ்(Jaime Vargas), ஒரு சுரங்க விபத்தில் தனது இரண்டுக் கால்களையும் இழந்து விட்டார். அதன் பிறகு லூயிஸ் கோமஸ்(Luis Gomez) மற்றும் மர்கஸ் எர்ராடா(Marcos Errada) இருவருடன் சேர்ந்து மரகத கல்லை தேடுவதற்காக தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்.சுரங்க ஆற்றினை வெறும் கைகளாலும் மண்வெட்டிகளாலும் துழாவி மரகத கல்லைத் தேடும் குழு ஒன்று தோண்டுகிறது. இங்கே முன்புறத்தில் இருக்கும் கார்லோஸ் சாலமன்சா(Carlos Salamanca) அந்தப் பகுதியில் அனுபவம் மிக்கவர்களில் ஒருவர்.நிலத்தை ஊடுறுவி மரகத கல்லை தேடுவதென்பது முழுவதும் மனித உழைப்பைச் சார்ந்த ஒன்றாகும். கரும்பாறைகளில் ஒளிந்திருக்கும் மரகதப் பச்சையின் ஒளிக்கீற்றை கண்டறியும் திறமை அதற்கு தேவைப்படுகிறது.பள்ளத்தாக்கில் இன்று இவர்கள் கண்டறியக் கூடிய கற்கள் சிறியது மற்றும் சந்தை மதிப்பும் குறைவு. தங்கள் சகாக்களிடம் ஏற்படும் பொறாமைகளைத் தவிர்க்கப் பொதுவாக கற்களை கண்டறிந்த பின்னர் வாயில் ஒளித்து அதன் ஒளியை மறைக்கிறார்கள்.மரகதத்தைத் தேடி தனது வீட்டிலிருந்து பல மைல் தொலைவு பயணம் செய்த பிறகு பெண் பேரகொய்ரா ஒருவர் ஓய்வெடுக்கிறார்.சுரங்கத் தொழிலாளிகளிலும் பேரகொய்ராக்களிலும் சிலர் மட்டுமே பெண்கள். பெரும்பான்மையான பெண்கள் கேன்டினஸ்(cantinas) என்றழைக்கபடும் உணவு மற்றும் மதுக்கூடங்களில் பணிப் புரிகிறார்கள். மேலும் சுரங்கத் தொழிலாளிகள் மற்றும் பேரகொய்ராக்களின் துணிகளைத் துவைக்கிறார்கள்.மரகத கல் செதுக்கும்(carver) வேலை செய்பவரான பிரெடி மாண்டில்லா (Fredy Mantilla) தனது வீட்டில் அமைந்துள்ள பட்டறையில் மரகத கல்லொன்றை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். பேரகொய்ராக்கள் மரகத கல்லை கண்டறிந்தவுடன் ஒன்று அதை சராசரியான விலையில் விற்கிறார்கள் அல்லது தங்களது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கொடுத்து அதை மறு மதிப்பீடு செய்கிறார்கள்.சிறந்த மரகத கல்லைத் தேடுவதற்காக சுரங்கம் தோண்டுபவர்கள், பேரகொய்ராக்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் தங்களுக்குள்ளே நாள்தோறும் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள். போகோடோவின் ஜிமினேஷ்(Jimenez) தெருவைச் சுற்றிலும் உள்ள கடைகளில் சிறிய அளவிலான மரகத கல் வியாபாரம் நடைபெறுகிறது. விலை மதிப்பற்ற மரகத கல்லை மதிப்பீடு செய்யவும் மெருகேற்றவும் விற்பதற்கும் பல்வேறு வகையான கடைகளும் பட்டறைகளும் அங்கே அக்கம்பக்கமாக இருக்கின்றன.மரகத சுரங்க முதலாளிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்க நடுவராக செயல்பட்டவர் மோன்சிங்கர் ஹெக்டர் குட்டியர்ஸ் பாதிரியார். ஆறு மரகத கற்களால் உருவான சிலுவை சின்னத்துடன் இருக்கும் மோதிரத்தை அணிந்துள்ளார். இவரது நண்பரான மறைந்த பிரபல மரகத மாபியா கும்பல் தலைவரான விக்டர் கிரான்சாவினால்(Victor Carranza) இவருக்கு இது பரிசாக வழங்கப்பட்டது.
மாருதி தொழிலாளர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றவழக்கில் மார்ச் 18-ஆம் தேதியன்று குர்கான் செசன்ஸ் நீதிபதி கோயல் தீர்ப்பு வழங்கி விட்டார். குற்றம் சாட்டப்பட்ட 148 பேரில் 117 தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், 13 தொழிலாளிகளுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கொடும் காயம் விளைவித்த குற்றத்துக்காக 14 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரில் 12 பேர் சங்க நிர்வாகிகள். ஒருவர் சம்பவ நாளன்று மேலாளரால் சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்ட ஜியாலால் என்ற தொழிலாளி.
கொலைக் குற்ற வழக்கில் ஆதாரமின்றித் தண்டிக்கப்பட்ட மாருதி தொழிலாளர்கள்.
“148 தொழிலாளிகள் சேர்ந்து அவனிஷ் குமார் தேவ் என்ற அதிகாரியைக் கொலை செய்தார்கள் என்பது வழக்கு. அதில் 117 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மீதமுள்ளவர்களைத் தண்டிப்பதற்கான எந்தவித ஆதாரமும் தீர்ப்பில் இல்லை” என்கிறார் தொழிலாளர்களின் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான்.
அரசு வழக்கறிஞர் அனுராக் ஹூடா, 13 தொழிலாளர்களையும் தூக்கில் போடவேண்டுமென்று கோரினார். “மாருதி சம்பவம் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவத்தை தாழ்த்திவிட்டது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள்” என்று தொழிலாளர்களின் பிணையை மறுப்பதற்கு பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் 2013-இல் கூறியதை மேற்கோள் காட்டி, மரண தண்டனையை அவர் வலியுறுத்தினார். “மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி முழங்கி வரும் சூழலில், இத்தகைய சம்பவங்கள் தேசத்திற்கே களங்கமாக இருக்கின்றன” என்று கூறி ஊடகங்களிடமும் தூக்குத் தண்டனைக்காகப் பிரச்சாரம் செய்தார் ஹூடா.
சாட்சியங்கள் இல்லாத போதிலும் தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அந்நிய முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு 13 பேரைத் தூக்கில் போடவேண்டும் என்று வெளிப்படையாகக் கோருகிறார் அரசு வழக்கறிஞர்.
2012-இல் மாருதி தொழிலாளர்கள் மீது ஜப்பானிய சுசுகி நிர்வாகம் ஒரு கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த தருணத்தில், அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி என்ன செய்தார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மோடி ஜப்பானுக்கு நேரில் சென்று சுசுகி முதலாளியைச் சந்தித்தார். அங்கிருந்தபடி மாருதி தொழிலாளர்களுக்குக் கண்டனமும் தெரிவித்தார். இன்று டில்லியிலும் அரியானாவிலும் நடந்து கொண்டிருப்பது பா.ஜ.க.-வின் ஆட்சி. தொழிலாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கொந்தளிப்பதில் வியப்பென்ன?
“குற்றம் சாட்டுபவர்கள் குற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க இயலாதபட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க இயலாது” என்பது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு. மாருதி வழக்கைப் பொருத்தவரை ஒரேயொரு தொழிலாளிக்கு எதிராகக்கூடக் கொலைக்குற்றத்தையோ, காயம் விளைவித்த குற்றத்தையோ அரசு தரப்பு நிரூபிக்கவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மாருதி தொழிலாளர்கள் மானேசரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
“தொழிலாளர்கள் வன்முறை மற்றும் தீவைப்பில் ஈடுபட்டு அவனிஷ் குமார் தேவைக் கொன்று விட்டார்கள்” என்று போலீசுக்கு புகார் கொடுத்தவர் தீபக் ஆனந்த் என்ற எச்.ஆர். மானேஜர். புகார் கொடுத்த அவரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட முடியவில்லை. “தான் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும், நிர்வாகத்தின் ஆணைப்படிப் புகார் கொடுத்ததாகவும்” குறுக்கு விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டார்.
சாட்சிகளாக ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒரு தொழிலாளிகூட இல்லை. எல்லா சாட்சிகளும் நிர்வாகத்தினர் மற்றும் காண்டிராக்டர்கள். தொழிலாளர்களின் பெயர்களை அகர வரிசைப்படி குற்றப்பத்திரிகையில் எழுதியது மட்டுமல்ல; ஏ, பி என்பவற்றை முதல் எழுத்தாக கொண்ட தொழிலாளிகளை அடையாளம் காட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், பின்னர் சி,டி என்ற முதல் எழுத்து கொண்ட பெயர்களை உடைய தொழிலாளிகளை அடையாளம் காட்ட சில காண்டிராக்டர்கள் என்று செட்டப் செய்து, சாட்சிகளுக்குப் பயிற்சி கொடுத்து அழைத்து வந்தனர். இருந்த போதிலும் தொழிலாளிகளை அவர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை.
“தொழிலாளர்கள் உருட்டுக் கட்டைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதாக” முதல் தகவல் அறிக்கையில் வழக்கம்போல எழுதிவிட்டது போலீசு. ஆலைக்குள்ளே உருட்டுக்கட்டையோ இரும்புக்கம்பியோ கிடையாது என்று நிர்வாகம் போலீசுக்குப் புரிய வைத்த பின்னர், “கார் கதவுக்குள்ளே பொருத்தப்படும் 3 கிலோ எடையுள்ள இரும்பு பீம்களால் தாக்கியதாக” குற்றச்சாட்டைத் திருத்தினர். 139 தொழிலாளிகள் = 139 பீம்கள் என்று கணக்குக் காட்டினர். 139 பீம்கள் தொழிற்சாலையின் இருப்பில் குறைவதாகவோ, திருட்டுப் போனதாகவோ நிர்வாகம் பதிவு செய்யவில்லை என்பதைத் தொழிலாளர்கள் தரப்பு அம்பலப்படுத்தியது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களான பீம்களை, ஆலையிலிருந்து 20 கி.மீ. முதல் 70 கி.மீ. தொலைவில் உள்ள தொழிலாளிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றியதாகக் கூறியது போலீசு. கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை 70 கி.மீ. தள்ளியிருக்கும் தமது வீட்டில் கொலைகாரன் பத்திரமாக வைத்திருந்ததாகவும், சுமார் ஒரு மாதம் கழித்து அதைக் கைப்பற்றியதாகவும் போலீசு சொன்ன கதையைக் கேட்டு நீதிபதி சிரித்திருக்க வேண்டும் அல்லது சீறியிருக்க வேண்டும். அவரோ போலீசின் கட்டுக்கதையை ஏற்றுக்கொண்டார்.
“3 கிலோ எடையுள்ள இரும்பு பீமால் நிர்வாகத்தினரையும் போலீசாரையும் தொழிலாளர்கள் தாக்கியதாக”க் குற்றச்சாட்டு. ஆனால், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நபருக்குக்கூடச் சிறிய எலும்பு முறிவுகூட இல்லை. வெறும் சிராய்ப்புக் காயங்களைத்தான் அவர்களால் காட்ட முடிந்தது. இந்தக் காயங்களுக்காக போலீசார் கொடுத்த மருத்துவச் சான்றிதழ்களும் போர்ஜரி என்பதைத் தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்தனர். இருப்பினும், “சான்றிதழ்கள் பொய் என்பதால், காயங்கள் பொய்யாகிவிடாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி.
மாருதி தொழிலாளர்கள் சார்பாக வாதாடி மூத்த வழக்குரைஞர் ரெபக்கா ஜான் (இடது); அவரது ஜூனியர் வழக்குரைஞர் ஹர்ஷ் போரா.
ஜியாலால் என்ற தலித் தொழிலாளியை ஒரு மேலாளர் சாதியைச் சொல்லி இழிவு படுத்தியதை ஒட்டித்தான் அன்றைய பிரச்சினை மாருதியில் தொடங்குகிறது. இது தொடர்பாக மேலாளர் மீது ஜியாலால் கொடுத்த தீண்டாமைக் குற்றப் புகார் “பொய்யானது” என்று போலீசு நிராகரித்து விட்டது. அதே நேரத்தில், தொழிலாளிகள் ஆத்திரம் கொண்டு தாக்குவதற்கான நோக்கத்தை (motive) நிரூபிக்கும் பொருட்டு, சாதியைச் சொல்லி இழிவுபடுத்திய அந்தச் சம்பவத்தை போலீசு பயன்படுத்திக் கொண்டது. அப்பட்டமான இந்த முரண்பாட்டையும் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. ஆனால், அத்தனை பெரிய ஆலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட இடமோ ஒரேயொரு கட்டிடம் மட்டும்தான். மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவனிஷ் குமார் தேவின் கை, கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் அந்த அறை தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது. அவர் தப்பிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார் என்பதுதான் கூராய்வின் முடிவு.
“இன்னார் அவரைத் தாக்கினார்” என்றோ, “இன்னார் அறைக்குத் தீவைத்தார்” என்றோ யாரும் சாட்சியமளிக்கவில்லை. கண்காணிப்பு காமெரா பதிவுகளைக் காட்டுமாறு தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் கோரியபோது, “பதிவுகள் அனைத்தும் எரிந்து விட்டதாக”ப் புளுகியது அரசு தரப்பு. “காமெரா எரிந்திருந்தாலும் பதிவான வன்தகடு எங்கே” என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்கவில்லை.
எரிந்து கருகிப்போன அந்த அறையிலிருந்து எரியாத தீப்பெட்டி ஒன்றைக் கைப்பற்றி, அதுதான் “கொளுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தீப்பெட்டி” என்று காட்டியது போலீசு. அந்த தீப்பெட்டியில் எந்த தொழிலாளியின் ரேகைப்பதிவும் இல்லை. அதை வைத்துத்தான் கொளுத்தினார்கள் என்பதையும் போலீசு நிரூபிக்கவில்லை.
“தீப்பெட்டியைக் கைப்பற்றியதாகக் (போலீசார்) காட்டியிருப்பது சந்தேகத்துக்குரியதுதான் என்பதில் சந்தேகமேயில்லை. அதன் காரணத்தினாலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொளுத்தியிருக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி. இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் குற்றவியல் விசாரணையாம்!
மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை-ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கொலை செய்யப்பட்ட அவனிஷ் குமார் தேவ் தங்களது நண்பர் என்கிறார்கள் தொழிலாளிகள். சங்கமே வைக்கக்கூடாது என்று நிர்வாகம் வெறிகொண்டு ஒடுக்கி வந்த சூழலில், சங்கத்தைப் பதிவு செய்வதற்குத் தொழிலாளிகளுக்கு அவர்தான் உதவியிருக்கிறார். “நிர்வாகம் ஆலைக்குள் கொண்டு வந்து இறக்கியிருந்த அடியாள் படையினர்தான் அவனிஷைக் கொலை செய்திருக்கிறார்கள்” என்று அமர்ஜித் என்ற தொழிலாளி குற்றம் சாட்டினார்.
“தீ வைத்த அடியாள் யார் என்று அமர்ஜித்தால் நிரூபிக்க முடியாத காரணத்தினால், அமர்ஜித்தும் அவரது சக தொழிலாளிகளும் தான் தீ வைத்தார்கள் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருவதாக”த் தனது தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி.
ஆகத் தொன்மையானது என்று கூறப்படும் ஹமுராபியின் சட்டம்கூட (கி.மு.1800), “குற்றம் சாட்டுபவன்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும்” என்கிறது. “தவறும்பட்சத்தில், சாட்டப்படும் குற்றத்துக்கான தண்டனை மரணம் என்றால், அந்த தண்டனைக்குக் குற்றம் சாட்டுபவன் ஆளாக வேண்டும்” என்றும் எச்சரிக்கிறது.
“தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்று குற்றவியல் சட்டத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றின தடா, பொடா சட்டங்கள். தற்போது மாருதி தீர்ப்பு இன்னும் ஒரு படி மேலே போகிறது. குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளிகள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபித்துக் கொள்வது மட்டும் போதாதாம். குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து, அதனை நிரூபிக்க வேண்டிய புலனாய்வு அமைப்பின் பொறுப்பையும் சிறையில் இருந்த தொழிலாளர்கள் மீது சுமத்துகிறார் நீதிபதி. அவ்வாறு “நிரூபிக்கத் தவறிய காரணத்தினால், நீங்கள்தான் குற்றவாளிகள்” என்று 13 தொழிலாளர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்.
உலகத்தின் கவனத்தையே ஈர்த்த ஒரு போராட்டம் தொடர்பான வழக்கை போலீசும் நீதித்துறையும் எப்படிக் கையாண்டிருக்கின்றன என்பதை மேற்கண்ட விவரங்களைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். ஒரு நிலப்பிரபுத்துவ கட்டப்பஞ்சாயத்தில்கூட செல்லுபடியாகாத பொய்களை ஏற்றுக் கொண்டு தண்டனை வழங்கியிருக்கிறது விசாரணை நீதிமன்றம். கார்ப்பரேட் ஊடகங்களோ, “13 பேருக்கு ஆயுள் தண்டனை” என்பதை முதன்மைப் படுத்தி செய்தி வெளியிட்டு, விசாரணை என்ற பெயரில் நடைபெற்றிருக்கும் இந்த கேலிக்கூத்தை இருட்டடிப்பு செய்து விட்டன.
மார்ச் 18 அன்று இந்த தீர்ப்பு வெளியானதையொட்டி மானேசருக்கு நேரில் சென்ற வினவு இணையதளத்தின் செய்தியாளர், மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று மானேசரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
“உறக்கச் சொல், நாம் ஒன்று என்று! தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு! மோடி அரசு ஒழிக! புரட்சி ஓங்குக” என்று முழங்கிய அந்தத் தொழிலாளர்களிடம் “ஒரு பன்னாட்டு நிறுவனத்தைப் பணிய வைத்த பெருமிதம் தெரிந்தது. சாதிய கட்டுமானத்தின் இறுக்கத்தை உடைத்து வர்க்க ஒற்றுமையைக் கட்டியெழுப்பிய செருக்கு தெரிந்தது. அச்சமற்ற களிப்பு தெரிந்தது” என்று தான் கண்ணுற்ற அனுபவத்தை அவர் பதிவு செய்கிறார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத்தையும், அரசையும், போலீசையும் எதிர்த்து மாருதி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் பல வகைகளிலும் முன்னுதாரணம் படைத்திருக்கிறது. 2012-இல் கைது செய்யப்பட்ட 148 தொழிலாளிகளில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குக் குறைவானவர்கள். பலர் புதிதாகத் திருமணமானவர்கள். கொலை வழக்குகளில் கூலிப் படையினருக்கெல்லாம் ஒரு சில மாதங்களிலேயே பிணை வழங்கும் நீதிமன்றங்கள், மூன்றரை ஆண்டு காலத்துக்குத் தொழிலாளர்களுக்குப் பிணை வழங்கவில்லை.
மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காக நாடு தழுவிய அளவில் 4.4.2017 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, சென்னை – டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இப்படி நிர்வாகமும் போலீசும் மட்டுமின்றி, நீதிமன்றமும் தமக்கு எதிராக நின்ற போதிலும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அசாதாரண உறுதியைக் காட்டினர். “உயரத்தில் இருந்து விழுந்தால்தான் பிரச்சினை. நாம் தரையில் இருப்பவர்கள் தானே? எப்படியோ பிழைத்துக் கொண்டோம். முதலாளிக்கு ஒரு தொழிற்சாலை, தொழிலாளிக்கு ஆயிரம் தொழிற்சாலைகள்” என்று மானேசர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தொழிலாளி அடக்குமுறையை எதிர்கொண்ட அனுபவத்தை அலட்சியமாக சொல்லிச் சிரித்தார்” என்று குறிப்பிடுகிறார் வினவு செய்தியாளர்.
சங்க நிர்வாகிகளையும் முன்னணியாளர்களையும் கொலை வழக்கில் சிறை வைத்துவிட்டால், அத்தோடு தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று மாருதி நிர்வாகம் போட்ட கணக்கை இளம் தொழிலாளர்கள் முறியடித்திருக்கிறார்கள். வழக்கை எதிர்கொள்வதற்கு இமான் கான் என்ற தொழிலாளியின் தலைமையில் கமிட்டி அமைத்தார்கள். உடனே இமான்கானைக் கைது செய்து சிறைவைத்தது போலீசு. அவருடைய இடத்திற்கு ஓம் பிரகாஷ் ஜாட் என்ற 28 வயது இளைஞனைத் தெரிவு செய்தனர். அவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது போலீசு. அவர் தலைமறைவானார். மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் இறந்தார். அவருடைய பொறுப்பை ராம் நிவாஸ் என்ற 31 வயது தொழிலாளி எடுத்துக்கொண்டார். அடக்குமுறைகள் செல்லுபடியாகவில்லை.
தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே ஒரு கொலை, தீவைப்பு நாடகத்தை அரங்கேற்றிய மாருதியில், தொழிற்சங்கத்தை அசைக்க முடியாமல் நிறுவிவிட்டார்கள் தொழிலாளர்கள். மாருதி தொழிலாளர்களின் உறுதி காரணமாக, அதன் கிளை நிறுவனமான பெலசோனிகாவில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 89-லிருந்து 705-ஆக உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்திருக்கிறது. “48 நொடிகளுக்கு ஒரு கார்” என்று 2012-இல் இலக்கு வைத்து மிரட்டிய நிர்வாகம், இப்போது “59 நொடிக்கு ஒரு கார்” என்று பணிந்திருக்கிறது.
117 தொழிலாளர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இருப்பினும் மாருதி நிர்வாகம் அவர்களுக்கு இழப்பீடும் கொடுக்காது, வேலையும் கொடுக்காது. 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற 14 தொழிலாளிகள் ஏற்கெனவே தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்துவிட்டதால், வெளியே வந்து விட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர். “ஆகப்பெரும்பாலான தொழிலாளிகள் விடுதலை ஆகிவிட்டார்கள். அது போதும். எங்களைப் பற்றிக் கவலை வேண்டாம்” என்று சிறையிலிருக்கும் தொழிலாளிகள் தனக்கு செய்தி அனுப்பியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான்.
“நிரந்தரத் தொழிலாளிகளுக்கும் தற்காலிகத் தொழிலாளிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறோம். இது நிர்வாகத்தால் உடைக்க முடியாத ஒற்றுமை. இதுதான் 2012-இல் தொடங்கிய எங்கள் போராட்டத்தின் முக்கியமான வெற்றி” என்று சொல்கிறார் சங்கத்தின் முன்னாள் தலைவரான தொழிலாளி பவன் குமார்.
அரசும் போலீசும் தொழிலாளர் நலத்துறையும் நீதிமன்றமும் தமது நடுநிலை முகமூடி கழன்று பன்னாட்டு முதலாளிகளின் கூலிப்படைகள் என்று அம்பலமாகியிருக்கின்றன. இது மாருதி போராட்டம் வழங்கியிருக்கும் முக்கியமான செய்தி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வேலூரில், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது. ஏற்கனவே வேலூரில் இயங்கி வருகின்ற இரண்டு கிளைகளின் அரசியல் செயல்பாடுகளை பார்த்து இந்த வியாபாரிகள் புஜதொமு-வுடன் இணைவது, என முடிவு செய்து தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அதன் அடிப்படையில் தோழர் லெனின் பிறந்த தினத்தில், புதிய கிளை திறக்கப்பட்டது. புதிய கிளை திறப்பு நிகழ்ச்சியும், ஏப்ரல்-22 தோழர் லெனின் பிறந்த தினத்தை நினைவுகூறுவதும், இரண்டும் ஒன்று சேர்ந்து நடத்தப்பட்டது. மூன்று இடங்களில் தோழர் லெனின் படத்தை திறந்து வைத்து, கொடியேற்றி, தோழர்கள் லெனின் பற்றியும், இரசிய புரட்சி பற்றியும், பேசினார்கள். பழைய மீன் மார்க்கெட், பெரியார் பூங்கா, அடுக்கம்பாறை போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதில் சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில தலைவர் தோழர் முகுந்தன், உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய தோழர்கள், “அழுக்குச் சட்டையும் நாட்டை ஆளமுடியும் என்று நிரூபித்தவர் தோழர் லெனின்”, 70 ஆண்டுகளாக விலைவாசியே மாறாத நாடாக இரசியா இருந்தது, பசி அறியாத நாடாக இரசியா இருந்தது, என சோசலிச சாதனைகளைப் விளக்கி பேசினர்.
இன்றைய சூழலில் தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் அமைப்பாக திரளவேண்டியதன் அவசியம் குறித்தும், மற்றும் சங்க நிர்வாகிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், தோழர்கள் கூட்டத்தில் பேசினார்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம்)
வேலூர் மாவட்டம். தொடர்புக்கு : 84897 35841
ராமநாதபுரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயலும் பெண்கள்.
கடந்த நூறாண்டுகளில் காணப்படாத வறட்சியில் சிக்கி, தமிழகமே பாலைவனம் போலாகிவிட்டது. மாநிலம் முழுவதும் தை பட்ட விவசாய சாகுபடி பொய்த்துப் போய், ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் இறந்து போனார்கள். வறட்சியால் விவசாயத்தின் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பும் பாழ்பட்டு, ஆடு – மாடுகளை வந்த விலைக்கு விவசாயிகள் தள்ளிவிடுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. விவசாயம் பொய்த்துப் போனதால் வேலையில்லா திண்டாட்டம், குடிநீர்கூட இல்லாத அவல நிலைமை என்ற இரண்டு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், கிராமப்புற மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி அகதிகளாக ஓடிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், இந்த வறட்சி தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் போராட்டக் குணத்தை வற்றச் செய்துவிடவில்லை.
கோவை மாவட்டம், சூலூர் ரோடு, ராவுத்தர் பிரிவு பகுதியில் தண்ணீரின்றிப் பட்டுப்போய் நிற்கும் தென்னை மரங்கள்
தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கவுள்ளது. “வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” என்ற அவர்களின் கோரிக்கைகள், தமிழக விவசாயிகளின் நலனை மட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நலனையும் பிரதிபலிப்பதாக இருப்பதால், உ.பி., பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராடும் தமிழக விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.
தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றக் கோரித் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் தஞ்சையில் இரண்டு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.
மாடு செத்துப் போவதையெல்லாம் தேசியப் பிரச்சினையாக உருவேற்றி வரும் இந்து மதவெறிக் கும்பலோ, தமிழக விவசாயிகள் சாவோடு போராடுவதை உப்புப் பெறாத விசயமாக ஒதுக்கித் தள்ளுகிறது. இப்போராட்டங்களைப் பார்ப்பன, மேட்டுக்குடித் திமிரோடு அணுகி கொச்சைப்படுத்தி வருகிறது.
“டெல்லியில் ஒரு நாளைக்கு நூறு போராட்டங்கள் நடக்கும், அத்தனையையும் பிரதமர் போய் பார்க்க முடியுமா?” எனத் திமிராகக் கேட்கிறார், பொன்னார். “நிதியமைச்சரிடம் கோரிக்கைகளைத் தெரிவித்த பிறகு, போராட்டத்தைத் தொடருவதில் நியாயம் இல்லை” என எச்சரிக்கும் தொனியில் பேசுகிறார், ஹெச்.ராஜா. பத்து இலட்ச ரூபாய் செலவில் கோட்டு சூட்டு போட்ட மோடியை நியாயப்படுத்திய இந்து மதவெறிக் கும்பல், “ஆடி கார் வைத்திருக்கும் அய்யாகண்ணு விவசாயியா?” என அவதூறு செய்கிறது. வழக்கம் போலவே, “தமிழகத்தில் மோடி எதிர்ப்பைத் தூண்டிவிடுபவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்” என உளவுத் துறைக்குப் போட்டுக் கொடுக்கும் வேலையையும் செய்கிறது, பா.ஜ.க.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இதில் கடைசி இரண்டு ஆண்டுகள் மோடியின் ஆட்சி. 2016 இறுதியில் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து, சம்பா சாகுபடியை நடத்தி முடிக்கலாம் என விவசாயிகள் நம்பியிருந்தனர். “நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது” எனக் கூறி விவசாயிகளின் நம்பிக்கையில் மண்ணைவாரிப் போட்டது, மோடி அரசு. காவிரியில் தண்ணீர் மறுக்கப்பட்ட நிலையில், பருவ மழையும் பொய்த்துப் போனது. இதனையடுத்துதான், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் பிணங்கள் விழத் தொடங்கின. தமிழக விவசாயிகளின் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பா.ஜ.க., தனது குற்றத்தை மறைத்துக்கொண்டு, மொத்தப் பழியையும் தமிழக அரசின் மீது சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகிறது.
ராமநாதபுரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயலும் பெண்கள்.
வறட்சி நிவராணம் 39,565 கோடி, வார்தா புயல் நிவாரணம் 22,573 கோடி – என 62,138 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்தது. மோடி அரசோ பிச்சை போடுவது போல, 2,014 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணமாக ஒதுக்கியிருக்கிறது.
4,702 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கோரிய கர்நாடக மாநிலத்திற்கு 39 சதவீதத் தொகையும் (1,782 கோடி ரூபாய்), 1,500 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கோரிய ஆந்திர மாநிலத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் (518 கோடி ரூபாய்) அளிக்கப்பட்டிருக்கும்போது, தமிழகம் கோரிய தொகையில் வெறும் மூன்று சதவீதமே மட்டும் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை முழுவதுமாகப் பொய்த்துப் போகவில்லை. அம்மழையையும், காவிரி நீரையும் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்கும் கர்நாடகாவையும்; காவிரி நீரும் மறுக்கப்பட்டு, வடகிழக்குப் பருவ மழையும் முற்றிலுமாகப் பொய்த்துப் போய் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தையும் ஒரே தட்டில் வைத்து அணுகுவது, எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி.
62,138 கோடி ரூபாய் நிவாரணம் கோரிய தமிழகத்திற்கு எந்த அடிப்படையில் 2,014 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதற்கு எந்த விளக்கத்தையும் மைய அரசு அளிக்கவில்லை. ஒதுக்கப்பட்டுள்ள 2,014 கோடி ரூபாயில் வறட்சி நிவாரணத்திற்கான பங்கு 1,748 கோடி ரூபாய். இந்தத் தொகையையும் மைய அரசு முழுவதுமாக அளிக்கப் போவதில்லை. தேசியப் பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு நானூறு கோடி ரூபாயைத் தமிழக அரசு செலவழிக்கவில்லையாம். அதனால், அந்த நானூறு கோடி ரூபாயைக் கழித்துக்கொண்டு, மீதியைத்தான் மைய அரசு தரவிருக்கிறது.
தமிழகம் முழுவதும் விவசாயம் பொய்த்துப் போய், கிராமப்புறங்களை வேலையில்லாத் திண்டாட்டம் கவ்வியிருக்கும் நிலையில், வறட்சி நிவாரணத்தில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தது, தமிழக அரசு. அந்தளவிற்குக்கூட வறட்சி நிவாரணம் ஒதுக்கப்படாமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.
இந்த அநீதி குறித்துக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை, தேசத் துரோகி என முத்திரை குத்தி மிரட்டினார், தமிழின விரோதி ஹெச்.ராஜா. மேலும், தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளைதான் வறட்சிக்குக் காரணமென்றும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக மைய அரசு ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியுதவிகளைத் திராவிடக் கட்சிகள் கொள்ளையடித்துவிட்டு, அண்டை மாநிலத்தோடும், மைய அரசோடும் மோதும் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்றும் கூறி, தனது ஓரவஞ்சனையை, தமிழக விரோதப் போக்கை மூடிமறைத்துவிட முயலுகிறது, பா.ஜ.க.
தமிழகத்தைக் கவ்வியுள்ள வறட்சிக்கும், விவசாயிகளின் சாவுகளுக்கும் திராவிடக் கட்சிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் இந்த ஆரிய பார்ப்பன யோக்கியர்கள், இதே அளவுகோலைத் தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கும் பொருத்துவார்களா? நாட்டிலேயே மிக அதிக அணைகளைக் கொண்ட மாநிலமான மகாராஷ்டிராதான் அடிக்கடி வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. நீர்த் தேக்கங்களை அமைப்பதில் மிகப் பெரும் ஊழலும் கொள்ளையும் அம்மாநிலத்திலும் நடந்திருக்கிறது. விவசாயிகளின் தற்கொலையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலமும் மகாராஷ்டிராதான். கடந்த இருபது ஆண்டுகளாக அந்த மாநிலத்தை மாற்றிமாற்றி ஆண்டுவரும் “தேசிய”க் கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.க.வும்தான் இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட கட்சியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், திராவிடக் கட்சிகள் எனப் பேதமிட்டுப் பிரித்துக் காட்டுவதன் மூலம், திராவிடம் – தமிழினத்தின் மீதான பகையைதான் வெளிப்படுத்துகிறது, ஆரிய பா.ஜ.க. மேலும், அ.தி.மு.க.வையும் திராவிடக் கட்சியாகப் பார்ப்பது அடிப்படையிலேயே அயோக்கியத்தனமானது. திராவிடக் கட்சிகள் எனப் பொதுவாகக் குற்றம் சுமத்துவதன் பின்னே, பார்ப்பனத்தி ஜெயா அடித்த வரலாறு காணாத கொள்ளையைப் பூசிமெழுகும் தந்திரம் மறைந்திருக்கிறது. இவை ஒருபுறமிருக்க, ஆற்று மணல் கொள்ளை, ஊழல் என்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு பா.ஜ.க.வினருக்கு எந்தத் தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது.
அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்திற்குத் தலைவியாக இருந்த ஜெயாவைத் தனது இயற்கையான கூட்டாளியாக நட்பு பாராட்டி வந்த கட்சிதான் பா.ஜ.க. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு பாரதிய ஜனதா செய்திருக்கும் உதவிகளும் மோசடிகளும் ஏற்கெனவே நாறிப் போனவை. உதாரணத்திற்குச் சொன்னால், அரசு வழக்குரைஞராக பவானி சிங்கை முறைகேடான முறையில் நியமித்துக் கொடுத்ததே கர்நாடகா பா.ஜ.க. அரசுதான்.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி தஞ்சையில் நடைபெற்று வரும் போராட்டம்.
குன்ஹா அளித்த தீர்ப்பால் தண்டிக்கப்பட்டு, பிணையில் வெளியே வந்திருந்த ஜெயாவை, அவரது போயசு தோட்டத்து வீட்டுக்கே போய் சந்தித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்தச் சந்திப்பிற்கு பிறகுதான், ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக நடந்துவந்த வருமான வரி வழக்கில் சமரசம் செய்துகொள்வதற்கு வருமான வரித் துறை ஒப்புக் கொண்டது.
கண்டெய்னர் பணக் கடத்தில் விவகாரத்தைச் சுமுகமாக முடித்துக் கொடுத்ததில் வெங்கய்யா நாயுடுவின் பங்கு அளப்பரியது. இப்படி பா.ஜ.க., ஜெயா-சசி கும்பலுக்கு காலத்தே செய்த உதவிகள் ஏராளமுண்டு.
மிகப் பெரிய தேசியக் கட்சி எனப் பீற்றிக் கொள்ளும் பா.ஜ.க., தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் இருந்து வருவதை சந்தர்ப்பவாத ஓட்டுக்கட்சி அரசியல் என்ற வரையறைக்குள் அடைத்துவிட முடியாது. ராம மோகனராவ்-சேகர் ரெட்டி-ஓ.பி.எஸ். என்ற கூட்டணிதான் ஆற்றுமணல் கொள்ளையின் சூத்திரதாரிகள் என்பது ஊரே அறிந்த உண்மை. அந்த உத்தமர் ஓ.பி.எஸ்.ஐத்தான் இப்பொழுது பாரதிய ஜனதா முட்டுக் கொடுத்து வருகிறது. ராம மோகனராவ் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட பின்னணியில் மோடி அரசின் சம்மதமும் உண்டு என்று தமிழகப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.
இப்படி ஆற்று மணல் கொள்ளையர்களோடு பல வழிகளில் நேரடியாகவும் இரகசியமாகவும் உறவு வைத்திருக்கும் பா.ஜ.க.வை, காவரியில் தமிழகத்தின் உரிமைகளை வெளிப்படையாக மறுத்துவரும் பா.ஜ.க.வை., வளர்ச்சி என்ற போர்வையில் தமிழக விவசாயத்தை, குறிப்பாக தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைச் சுடுகாடாக்க முயலும் பா.ஜ.க.வைத் தமிழகத்தின் எதிரியாக நிறுத்த வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த காட்சி ஊடகங்கள் வறட்சி குறித்த விவாதங்களில், பா.ஜ.கட்சியினரை நியாயவான்களைப் போலப் பேச அனுமதிக்கின்றன.
60,000 கோடி ரூபாய் கேட்டதற்கு, வெறும் இரண்டாயிரத்து சொச்சம் கோடி ரூபாயைப் பிச்சைப் போலத் தூக்கியெறிந்து சிறுமைப்படுத்தியிருக்கும் மோடி அரசைக் கண்டிக்காமல், அ.தி.மு.க.(அம்மா) அரசு சும்மா கிடப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அவர்களின் மௌனம் திருடர்களின் மௌனம். வாயைத் திறந்தால், அடுத்த வருமான வரித்துறை ரெய்டு பாய்ந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவர்களை வாயை அடைத்துப் போட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தை வஞ்சித்த மோடி அரசை எதிர்த்துப் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு, தனது அடிவருடித்தனத்தைக் காட்டி, மோடியின் கருணையைப் பெற முயலுகிறது.
திட்டத்தில் கொள்ளை என்பதை மாற்றி, கொள்ளையடிப்பதற்காகவே திட்டம் என ஊழலில் புதிய சாதனையை உருவாக்கியவர்தான் ஜெயலலிதா. அவரது ஆசியோடு நடப்பதாகக் கூறிவரும் சசிகலாவின் பினாமி அரசு, கொள்ளையடிப்பதற்காகவே 60,000 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரண உதவி கேட்டிருக்கும் என்பதை மறுக்கவியலாது. அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, குடிமராமத்துப் பணியின் கீழ் தமிழகம் முழுவதுமுள்ள 1,519 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிக்கு 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது, தமிழக அரசு. இந்தப் பணி எப்படி நடைபெறுகிறது தெரியுமா?
டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து வெளியேறும் திருச்சி அரசு கலைக்கல்லூரி மாணவிகள்.
இந்த நீர்நிலைகளைத் தூர் வாருவதைச் செங்கல் சூளை அதிபர்களிடம் சட்டவிரோதமாகத் தூக்கிக் கொடுத்துவிட்டு, 100 கோடி ரூபாயை ஆளுங்கட்சியும் அதிகாரிகளும் அமுக்கிக் கொள்வதாகவும், தூர்வாரும்பொழுது கிடைக்கும் சவுடு மண்ணை, விவசாயிகளுக்குத் தராமல், சூளை அதிபர்களிடம் கமிசனுக்கு விற்றுவிட்டு இலாபம் பார்ப்பதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாசு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இந்து மதவெறி அரசியலை முதன்மைப்படுத்தித் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டுள்ள பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்., இப்படிபட்ட ஊழல், முறைகேடுகள் மீது தமிழக மக்கள் அடைந்திருக்கும் வெறுப்பை அறுவடை செய்து கொள்ள முயலுகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க.தான் எனப் பீற்றிக் கொள்கிறது.
ஆனால், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி.வரி, ரேஷன் அரிசிக்கு மானியம் ரத்து என மோடி அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் உரிமைக்கு எதிரானதாகவே உள்ளன. அது மட்டுமா, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம், டெல்டா பகுதியில் மீண்டும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி, காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மறுப்பதோடு, அப்பிரச்சினையில் நிரந்தரமாகத் தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் ஒற்றை நதி நீர் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு, நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட முடியாது என்ற அறிவிப்பு, பாலாற்றில் ஆந்திர அரசும், பவானியில் கேரளாவும் தடுப்பணைகள் கட்டி வருவதைத் தடுக்க மறுப்பது, பிச்சையைவிடக் கேவலமான வறட்சி நிவாரணம் – எனத் தமிழக விவசாயத்தை அழிக்கும் தீய சக்தியாக நிற்கிறது, பா.ஜ.க. கூடுதலாக, திராவிட இயக்கங்கள் கொண்டுவந்திருக்கும் சமூக சீர்திருத்தங்களை ஒழித்துக்கட்டி, ஆரிய -பார்ப்பன மேலாதிக்கத்தைத் தமிழக மக்களின் மீது மீண்டும் சுமத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்து மதவெறிக் கும்பலைத் தமிழகத்தின் முதன்மையான எதிரியாகத்தான் கருத முடியுமே தவிர, அரசியல் பிரதிநிதியாக நினைத்துப் பார்ப்பதுகூட வெட்கக்கேடானது, அருவருப்பானது.
தமிழகத்தின் விவசாயம் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதற்கு வறட்சி, காவிரி பிரச்சினை என்பவற்றையும் தாண்டிப் பல்வேறு வலுவான காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மைய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைதான் விவசாயத்தைச் சூதாட்டமாக்கி, விவசாயிகளை மரணத்தை நோக்கித் தள்ளி வருகிறது. தனியார்மயத்தின் பிறகுதான் ஆற்று மணல் கொள்ளை பிரம்மாண்டமாக வளர்ந்தது; தனியார்மயத்தின் பிறகுதான் ஏரிகளும், கண்மாய்களும் ஒருபுறம் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் ஆக்கிரமிப்புகளாலும், இன்னொருபுறம் பராமரிப்பின்றியும் அழிக்கப்பட்டன; தனியார்மயத்தின் பிறகுதான் விவசாய மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட்டன, விவசாய உற்பத்திச் செலவு அதிகமானது, விவசாய விளைபொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைந்தது. இந்த விஷச்சுழல்தான் விவசாயிகளைத் தீராத கடனில் சிக்க வைத்து, அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிச் சென்றது; அவர்களை விவசாயத்தைவிட்டு ஓட வைத்தது.
இப்படி விவசாயத்தைக் கைவிட்டு நகரத்திற்கு இடம்பெயரும் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, கிராமத்து இளைஞர்களைத்தான் குறைந்த கூலிக்கு காண்டிராக்டு தொழிலாளர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், விவசாயத்தின், விவசாயிகளின் அழிவில்தான் நாடு எட்டு சதவீத “வளர்ச்சியை”ச் சாதித்து.
நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து, வல்லரசாக்கப் போகும் மந்திரக் கோலாகக் கூறப்பட்ட தனியார்மயம்-தாராளமயம் மிகப்பெரும் தோல்வியடைந்து நிற்பதை, விவசாயத்தின் நசிவு துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது. “அனைவருக்குமான வளர்ச்சி” எனக் கூறி ஆட்சியைப் பிடித்த மோடியும் தோல்வியடைந்துவிட்டதை, அவரது ஆட்சியிலும் தொடரும் விவசாயிகளின் மரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனாலும், மோடி உள்ளிட்ட ஆளுங்கும்பல் தமது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, நாட்டை மேலும் மேலும் தனியார்மய நாசகாரப் பாதையில் இழுத்துச் செல்கிறார்கள். மக்களுக்கு எதிராகத் திரும்பிவிட்ட அவர்களிடம், விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்குமாறு இனியும் கெஞ்சிக்கொண்டு நிற்பதால் எந்தவொரு பயனும் ஏற்படாது என்பதைப் போராடும் தமிழக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் உணர வேண்டும். அந்த உணர்வுதான், நமது நாட்டின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முதல் படியாகும்.
அண்ணன் எப்ப சாவான், திண்ண எப்ப காலியாகும் என்று யாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது எழவுக் கட்சி. அண்ணனாவது சித்தியாவது இருக்குற நாலு வருசத்துக்கு தொண்ண கெடச்சா போதும் என்று நடுநிசி பேய்களாய் அலைகிறது களவு கட்சி. சசிகலா குடும்பத்திடம் இருந்து ஆன்ம விடுதலை பெற, அடித்தக் கொள்ளையின் ஆன்மா நிலைபெற அம்மாசமாதி குறிசொல்லி தியானத்தில். நேற்று வரை இருட்டில் பர்சை பறி கொடுத்தவன் போல் உயரமா இருந்தான், மிரட்டுனான், பாக்கவே பயங்கரமா இருந்தான் என்று குத்துமதிப்பாகவே பேசிக் கொண்டிருந்த நாஞ்சில் சம்பத் நடுராத்திரியில் ஞானோதயம் வந்து எழுந்ததுபோல் இது திராவிடத்தை அழிக்கும் ஆரிய சதி! இது பெரியாரின் பூமி, அண்ணாவின் நந்தவனம், எம்.ஜி.ஆரின் தோட்டம், அம்மாவின் ஆஸ்பிட்டல் கோட்டை, தினகரனின் திண்ணை எனுமளவுக்கு கண்ணை மூடிக்கொண்டு இங்கு பா.ஜ.க. கனவு பலிக்காது, இது கலாச்சார யுத்தம், டி.டி.வி. தலைமையில் யுத்தம் தொடரும் என இன்னும் கோர்த்துவிட்டு பீதியை கிளப்புகிறார்.
உங்க டவுசரை காப்பாத்தவே உங்களால் முடியல, இதுல திராவிட மானத்தைக் காப்பாற்ற கிழிக்கப் போறிங்களாக்கும் என்று சைடில் கேட்கும் குரலை தவிர்க்க முடியவில்லை. இந்தச் சுயமரியாதை சுய நினைவு எத்தன நொடி உயிர்வாழும் என்பது தினகரனுக்கே வெளிச்சம் ! கழுத்தைப் பிடித்து நெறிக்கும் நேரத்தில்கூட யாரோ சதி செய்கிறார்கள், அ.தி.மு.க. வை அழிக்க சதி யாரோ… யாரோ.. என்று மங்கலாக பேசிய தினகரனை நம்பி, நீட்டிய நாக்கை வேறு திசைக்கு வாடகைக்கு விட இன்னோவாவுக்கு இராமாயணத்திலோ மகாபாரதத்திலோ இன்னொரு உதாரணம் கிடைக்காமலா போகும் !
அதாவது இவர்கள் கட்சிக்கு ஆபத்து என்றால், சொத்துக்கு ஆபத்து என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். கட்சி என்பது வெறும் கள்ளச்சாவிதான், சொத்துக்கு ஆபத்து என்றால் அதையும் கைமாற்றிக் கொள்ளத் தயங்காதவர்கள்தான் இந்த அம்மா ஆவிகள். காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் – மீத்தேன் திட்டம் திணிப்பு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, வறட்சி நிவாரணம் புறக்கணிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் கோரிக்கைகளை முன்வந்து பேச மறுக்கும் கொழுப்பு, என தமிழகமே அழிக்கப்படுவதைப் பற்றி இம்மியும் கவலைப்படாத, இதற்காக ஒரு பேச்சுக்கும் கூடாத இந்த அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூடாரம் பல அணிகளாய் இன்னும் நீடிப்பதுதான் வரலாற்றின் துயரம். சங்கபரிவாரத்தின் தமிழகத்து சுங்க பரிவாரமாய் வலம் வரும் இவர்கள் இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன?
ஒன்றாக இணைய நிபந்தனை விதிக்கும் பன்னீருக்கு, மக்களின் ஒரு கோரிக்கை நிறைவேற நிபந்தனை விதித்து அரசியல் செய்ய தகுதி உண்டா? அன்றாடம் விவசாயிகளை சாகடிக்கும் ஆட்சியை நடத்திய திடீர் யோக்கியரின் ஒரே தாரக மந்திரம் அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை ! இந்த டெட்பாடி அணிக்கும் எடப்பாடி அணிக்கும் கொள்ளையடித்ததை பங்கு போடுவதைத் தவிர வேறு என்ன கொள்கை முரண்பாடு ! மக்களது பிரச்சனைக்காக வாதாட, போராட தகுதியற்ற இவர்கள் நம்மை ஆள நினைப்பது தான் சகிக்கமுடியாத கொடூரம். ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, களவாணிகளுக்குள் நடக்கும் தர்மயுத்தத்திற்கு கிருஷ்ண பரமாத்மா வேலைபார்க்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து தமிழகத்தைவிட்டே தள்ளி வைக்கவேண்டிய நேரம் இது. சட்டவிரோத, தேசவிரோதக் கும்பல்களான இவர்களுக்கு நம்மை ஆளும் தகுதி உண்டா?
சங்கபரிவாரத்தின் தமிழகத்து சுங்க பரிவாரமாய் வலம் வரும் இவர்கள் இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன?
ஒரு குடம் தண்ணீருக்காக சாலையில் வந்து நாம் போராடினால் சட்டம் – ஒழுங்கு மீறக்கூடாது என்று போலீசை வைத்து அடிக்கும் இவர்கள் சட்டத்தை மதிப்பவர்களா ? உயர்நீதி மன்றமே மதுக்கடைகளை மூடச்சொன்னாலும், மக்கள் குடியிருப்பில் வந்து திறக்கும் இவர்கள் சட்டத்தை மதிப்பதுண்டா ? காவிரியில் தண்ணீர் திறந்துவிடச்சொல்லி உச்சநீதி மன்றமே உத்திரவிட்டாலும் மறுக்கும் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கிறதா ? இல்லை உத்திரவிட்ட உச்சநீதி மன்றம் தான் சட்டத்தை மதித்து ஆவண செய்கிறதா ? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்திரவிட்டால், அதைச் சொல்ல நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்கிறது மோடி அரசு ! அரசே சட்டத்தை மதிக்காத போது தாமிரவருணியில் மட்டும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நாம் கோக்குக்கு கொடுக்கவேண்டுமா நமது ஆற்றை. அனைத்து பள்ளி, கல்லூரி, விடுதிகளிலும் கழிவறை, குடிநீர் வசதி இருக்கவேண்டும் என்கிறது சட்டம், நீதி மன்ற உத்திரவு. அரசு சட்டத்தை மதிக்கிறதா ? தொழிலாளிக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கும் சட்டத்தை எந்த முதலாளியாவது மதிக்கிறானா ? ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும், முதலாளிகளும் மதிக்காத சட்டத்தை நாம் மட்டும் மதிக்க வேண்டும் என்பது என்ன நியாயம் ?
போராட்டம் தான் நமக்கு அதிகாரத்தை பெற்று தந்திருக்கிறது, அந்த அதிகாரம்தான் இன்று சட்டப்படியான உரிமைகளைக் கூட பெற்றுத் தந்திருக்கிறது. மக்கள் திரண்டு போராட அதிகாரத்தை கையில் எடுத்துதான் டாஸ்மாக்கை மூடி இருக்கிறார்களே ஒழிய, சட்டமும் சரக்கடித்துதான் கிடக்கிறது. மக்கள் ஒன்று திரண்டு போராடி அதிகாரத்தை பயன்படுத்தினால்தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கிறது. மின்சாரம் கிடைக்கிறது. மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் போராட்டங்கள் தான் உதவி இருக்கிறதே ஒழிய இவர்களது ஆட்சி எது ஒன்றையும் செய்ததில்லை. மாறாக போராடும் மக்களை ஒடுக்கவும், உதைக்கவும் நமக்கு ஒரு அரசு தேவையா ? இவர்கள் மட்டுமல்ல இந்தக் கட்சிகளும், அரசும், அரசுக் கட்டமைப்பும் நம்மை ஆளும் அருகதையற்று போய்விட்டன என்பதுதான் இந்தத் தருணம் உணர்த்தும் உண்மை.
தமிழகம் போராட்ட அரசியலின் புதுக் குறியீடாக எழுந்து நிற்கிறது. மக்கள் தங்களது அதிகாரத்தின் சுவையை உணர ஆரம்பிக்கும் அரசியல் திசையில் அடியெடுத்து நிற்கிறார்கள். இந்தக் கட்டமைப்புக்கு உள்ளேயே எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது திண்ணமான அனுபவமாகி வருகிறது. ஏன் ஆளும் வர்க்கமே, அரசு உறுப்புகளே தானே வகுத்துக் கொண்ட கட்டமைப்புக்குள்ளாக மட்டுமா இயங்குகின்றன? எந்தப் பாராளுமன்றம், மக்கள் மன்றத்தில் விவாதித்து மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்? எந்த அரசமைப்பிற்குள் நின்று கொண்டு பசுவை பாதுகாக்க மனிதர்களைக் கொள்கிறது இந்துத்துவக் கும்பல்? பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தையே நீதிமன்றத்துக்கு வெளியே பேசித்தீர்த்துக்கொள்ளச் சொல்வது எதைக் காட்டுகிறது? இல்லை, வெளியே வந்த ‘பணக் கன்டெய்னர்’ எந்தக் கட்டமைப்பிற்கு உள்ளே போய் நிற்கிறது ! ஆள்பவர்களே இந்தக் கட்டமைப்புக்குள் எதையும் தீர்க்க முடியாது என தகர்த்து வெளியே போய் தமது நலன்களை அடையும் போது, மக்களுக்கு இந்தக் கட்டமைப்பை கட்டி அழ வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம்தான் இனி ஜனநாயகமே சாத்தியம் என்ற அரசியலின் பக்கம் கவனம் கொள்ள வேண்டும் அவசியத்தை உணர்த்துவதுதான் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும்.
அரசியல்கட்சிகள், அரசு, ஆளும் வர்க்கம் அதிகாரவர்க்கம் இந்தக் கூட்டுக்களவாணிகளை முன்னறிந்து நமக்கான அரசியல் அதிகாரத்தை மக்களிடம் திரட்டுவதுதான் மக்கள் அரசியல். இவர்கள் சமாதிக்கு ஓடுவதும், நடு ராத்திரியில் அலைவதும், அவ்வப்போது ரெய்டுக்கு போஸ் கொடுப்பதும்தான் தமிழகத்து பரபரப்பு அரசியல் என்றும் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்றும் படம் காட்டுகின்றன ஊடகங்கள். மக்கள் அதிகாரம்தான் அனைத்துக்கும் என்ற முழு உண்மையையும் தமிழகம் கண்ணில் காட்டும் வரை பிரேக்கிங் நியூசும், பின்னணி இசையும் இருக்கத்தான் செய்யும்!
பழைய தருமபுரி பஞ்சாயத்திற்கு அருகில் உள்ள கே. என் நடு அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த டாஸ்மாக் கடையை உச்சநீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட நிர்வாகம் அகற்றியது.
ஆனால் ஏற்கனவே இருந்த கடையிலிருந்து 50 அடி தூரம் தள்ளி கடையை நிறுவ பழைய தருமபுரியைச்சேர்ந்த குடவை என்கிற சின்னப்பையனின் மகன் மணிமேகன் என்பவர் தனது நிலத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து மதுகடைவைக்க கட்டிடம் கட்டிவருகிறார். இத்தனைக்கும் சிபிஐ கட்சியைச்சேர்ந்த கிளைச்செயலாளரான சின்னராஜ் என்பவரது தைரியத்தில்தான் இவர் கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இக்கடையை மூட ஊர்த்தலைவர்களை மக்கள் அதிகாரம் தோழர்கள் சந்தித்து பேசினர். அவர்களும் உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டனர். இதன் அடிப்படையில் மனுநாளில் ஊர்தலைவர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்களும் சென்று மனு கொடுத்தனர்.
மனுநாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கவேண்டும். ஆனால் அன்று பத்திற்கும் மேற்பட்ட ஊர் மக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மனுகொடுக்க வந்திருந்த்தால் மாவட்ட ஆட்சியர் மனுவை பெறாமல் அந்த துறை அதிகாரிகளே பெற்றனர். அதன்படி கலால் மற்றும் ஆயத்தீர்வை அதிகாரியான பெண் அதிகாரியிடம் மனுகொடுக்கப்பட்டு பாதிப்புகள் பற்றி விளக்கி பேசப்பட்டது. ஆனால் இதை ஏற்காத அந்த அதிகாரி அரசாங்கம் கடைகளை வைக்கச் சொல்கிறது என்றார்.
இந்நிலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சுவரொட்டி, மெகாஃபோன் பிரச்சாரம் என்ற வகையில் மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிதிரட்டினர். மேலும் ஏரி வேலை செய்யும் பெண்களையும் சந்தித்து பேசினர். இந்நிலையில் ஊர் தலைவர்கள் 20 பேர் சென்று நிலம் கொடுத்த மணிமேகனிடம் பாதிப்பைக்கூறி நிலம் டாஸ்மாக்கிற்கு தருவது தவறு என பேசினர். ஆனால் அவர் திமிராக மறுக்கவும் ஊர் தலைவர்கள் ஆத்திரம் அடைந்து வந்துவிட்டனர்.
இந்த நிலையில் மணிமேகன் சிபிஐ சின்னராஜ் வழிகாட்டலில் மாவட்ட ஆட்சியருக்கு மனுகொடுத்துள்ளார். இதில் ஊர்த்தலைவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளையும் அவமானப்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டிருந்தது. இது மேலும் ஊர் மக்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. இது குறித்து கேட்க சென்ற மக்களை அவமதித்து நடந்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அவனுக்கு தர்ம அடிகொடுத்தனர்.
மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை திரட்டி காலை 11 மணிக்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் பகுதிமக்களிடம் கடையை உடைக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
(படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல அழுத்தவும்)
தகவல்: மக்கள் அதிகாரம், தர்மபுரி
ஏப்ரல் 25 பந்த் – மோடியிடம் கெஞ்சாதே, தமிழகமே போராடு !
இது ஜல்லிக்கட்டில் டெல்லியை பணியவைத்த தமிழகம் !
தமிழனத்தின் எதிரிகளுக்கு பாடம் புகட்டுவோம் !
தகவல் மக்கள் அதிகாரம்
சென்னை – 91768 01656
சத்தியபாமா பல்கலைக்கழகத் தொழிலாளர் போனஸ் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வெற்றி
போனஸ் பெறுவது தொழிலாளர் உரிமையே !
கட்டணக் கல்வி சேவையாகாது !
தனியார் கல்வி நிறுவனங்கள் லாபமீட்டும் நிறுவனமே !
தொழிலாளர்களே !
புரட்சிகர சங்கத்தில் உறுப்பினாராவோம் !
தொடர்ச்சியான போராட்டமே வெற்றிக்கு வழி !!
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்
சென்னை – 94871 51165