Tuesday, June 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 496

தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 2

0

சென்னை ஆவடி

திருவள்ளூர் மேற்கு மாவட்ட, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடி பகுதியில் நடைபெற்றது. இப்பேரணி, இராமரத்னா திரையரங்கம் அருகில் இருந்து துவங்கி குடியிருப்பு பகுதிகள் வழியாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் சென்னை பகுதி மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்களுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை மற்றும் இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 600 பேர் கலந்துக் கொண்டனர்.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன், துவங்கிய பேரணியை திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட தலைவர் தோழர் சரவணன் துவக்கி வைத்து மே தின தியாகிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். இப்பேரணியில் சிறுநகர் இசை சமர் கலைக்குழுவின்  பறையிசையுடன், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணி காமராஜர் நகர், எம்.ஜி.ஆர் சாலை மற்றும் TNHB குடியிருப்பு வழியாக வீறுநடை போட்டு ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில் முடிவடைந்தது.

ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் மு.முகிலன் தலைமை தாங்கினார். தலைமையுரையில் மே தின தியாகிகளது கோரிக்கையான 8 மணிநேர வேலை உரிமை இன்று வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம் கோரும் உரிமை ஆகிய அனைத்தும் சட்டமாக மட்டுமே உள்ளன. தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற எல்லா உரிமைகளையும், சட்டங்களையும் முதலாளிகளின் நலனுக்காக இன்று மத்திய அரசு காவு கொடுக்கிறது. தமிழகமே போராட்ட களமாக மாறி வருகிறது. எல்லா போராட்டங்களுக்கு அடிப்படையான மறுகாலனியாக்க நடவடிக்கையை தகர்க்க வேண்டும் என உரையாற்றினார்.

மேநாள் எழுச்சி உரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் அவர்கள், மோடி அரசின் மறுகாலனியாக்க நடவடிக்கையையும், இந்து மதவெறி பாசிச நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக துலக்கமாக எடுத்து விளக்கினார். தமிழக அரசு எப்படி செயல்படாத அரசாகவும், விவசாயிகளுக்கும், மாணவர்கள், மீணவர்கள் என அனைத்து மக்களுக்கும் இழைத்த துரோகத்தையும் பட்டியலிட்டு உரையாற்றினார். இந்த அரசை தூக்கியெறிந்து, உழைக்கும் மக்களுக்கான புதிய ஜனநாயக அரசை நிறுவ வர்க்கமாக இணைந்து புரட்சிகர தலைமையின் கீழ் அணித்திரண்டு போராட வேண்டும் என அறைகூவி உரையை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் சூழ்ந்து நின்று கூட்டத்தை கவனித்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக மே நாள் முழக்கமிட்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்
தொடர்புக்கு: 94453 68009

***

ஒசூர் புஜதொமு கிளை சங்கம் – கமாஸ் வெக்ட்ரா

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம்!
பார்ப்பன இந்துவெறி பாசிச ஆர். எஸ். எஸ் – பா.ஜ.க கும்பலை மோதி வீழ்த்துவோம்!
முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைக் கட்டியமைப்போம்!

  • என்ற முழக்கத்தின் அடிப்படையில் மே நாளில் 01.05.2017 காலை 10.30 மணியளவில் ஒசூரில் உள்ள கனரக வாகன உற்பத்தி நிறுவனமான கமாஸ் வெக்ட்ரா ஆலையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் கிளைச் சங்கத்தின் சார்பாக அவ்வாலை வாயிலில் கொடியேற்றி மேதின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இவ்வாலையின் கிளைச்சங்க தலைவர் தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கொடியேற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார். சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்கொண்ட முழக்கங்களை முன்வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஒசூர்

***

ஒசூர்

மே நாளில் 01.05.2017 மாலை 4.30 மணியளவில் ஒசூர் பழைய நகராட்சி அலுவலம் அருகில், புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் சிற்றுரையும், பு.ஐ.தொ.மு.வின்  மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையும் ஆற்றினர். இறுதியாக, தோழர் இ.கோ.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார். தொழிலாளர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துக்கொண்டனர்.

தோழர் செந்தில் தனது உரையில், “1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது . பல லட்சகணக்கான தொழிலாளர்கள் உயிரை கொடுத்து போராடி 8 மணி நேர வேலை பெற்றனர் . ஆனால் இப்போது அந்த போராடி பெற்ற உரிமை நமது கை நழுவி மீண்டும் பழைய முறைக்கு செல்கிறது. பல நிறுவனங்களில் 12 மணி நேர 14 மணி நேரம் என வேலை செய்கிறோம். 8 மணி நேரத்திற்கு தர வேண்டிய சம்பளத்தை 14 மணி நேர வேலைக்கு தருகிறான் முதலாளி .. மேதினத்தில் இந்த மனித கொடுமைகளை , உழைப்பை கொள்ளை அடிப்பதை எதிர்த்து 8 மணி நேரம் போராட வேண்டுமே ஒழிய… இது கொண்டாடப்பட வேண்டிய தினமில்லை… அந்தவகையில் போராட்ட நாளாக அறிவித்து நமது உரிமைகளை பறித்தெடுக்கும் வகையில் நாம் ஒன்றிணைந்துப் போராடுவோம்” என்றவகையில் அறைகூவிப் பேசினார். அடுத்ததாக, பள்ளிச்சிறுமிகளான நக்சல்பாரி, செஞ்சுடர் இருவரும் புரட்சிகர பாடல்களை பாடினர். குறிப்பாக, “கஞ்சி ஊத்த வக்கில்லை என்னடா கவர்மெண்டு” என்ற பாடல் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில், ” மே 1 உலகத் தொழிலாளர் தினம். 8 மணி நேர வேலை உரிமை நிலைநாட்டப்பட்ட நாள் தொழிலாளர் வர்க்கத்தின் அரைநூற்றாண்டு கோரிக்கை போராட்டம் சிகாகோவில் உயிர் தியாகத்துடன் மேநாள் வரலாறு உருவானது. போராடிப்பெற்ற 8 மணிநேர வேலை உரிமை உலகமயமாக்கல் கொள்கையால் நசுக்கப்படுகிறது.

உலகமயமாக்கல் கொள்கை உலகம் முழுமைக்கும் 167 நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல நாடுகளில் மக்கள் வாழ்வையும் இயற்கை வளத்தையும் சூறையாடிவிட்டது. கிரீஸ் திவாலிகிவிட்டது. பிரிட்டன் வெளியேறுகிறது. அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் முற்றுகைப்போராட்டம். சுரண்டுவது சூறையாடுவது உலகமயக் கொள்கையின் நோக்கம் என்று தெளிவாகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சிறு தொழில் புரிவோர் வாழ்வும் பறிக்கப்படுகிறது.

இன்று இந்தியாவில் கொள்முதலிலும் நியாயமான விலை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாத தொழிலாக மாற்றிவிட்டது இந்திய ஆளும் வர்க்கம். சில்லறை வர்த்தகத்தை கைப்பற்றி கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயத்தை கைப்பற்றிட திட்டமிட்டு செயல்படுகிறது. இதற்கு நாடாளுமன்ற ஓட்டுச்சீட்டு அரசியல் துணைநிற்கிறது. கடந்த 11 – ஆண்டுகளில் 47 – லட்சம் வரிச்சலுகை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மோடி அரசுமட்டும் 2 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கியுள்ளது. இந்த ஆளும் வர்க்கத்தின் சட்டம் ஒழுங்கு, அதிகாரம் மக்களுக்கு எதிரானது. கார்ப்பரேட்டுக்கு நாட்டை தாரைவார்க்கப்படுவதில் காங்கிரசுக்கு பி.ஜே.பி சளைத்தவை அல்ல. இதில்  ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல் தனது கார்ப்பரேட் சேவையை மறைக்க இந்து மதவெறி, சாதிவெறி அரசியல் திட்டமிட்டு பரப்புகிறது.

இந்த நாடாளுமன்றம் சட்டமன்றம் நீதிமன்றம் போலீசு இவற்றின் நோக்கம் நமது நாட்டை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு விற்பதாகும். இவர்களின் கொள்கையையும் அதிகாரத்தையும் தூக்கியெறிய இந்த மே நாளில் நாம் உறுதியேற்போம். என்று பேசினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தொடர்புக்கு -9788011784. ஓசூர்.

***

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பில் போடி நகரில் 01-05-2017 அன்று மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போடி நகரச் செயலர் தோழர். கணேசன் தலைமையில் பறை முழக்கத்துடன் துவங்கிய ஊர்வலமாகச் சென்று இறுதியில் கூடலூர் கிளைச் செயலாளர். தோழர். இராசேந்திரன் அவர்கள் அமைப்புக் கொடி ஏற்றிவைத்தார்.

பின்னர் மாலை 6 மணிக்குத் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள் பாக்கியராஜ், சேகர், தாலுக்கா செயலர் முருகன் ஆகியோர் மே தினத் தியாகிகள் பற்றியும், அவர்கள் வழியில் விவசாயிகள் போராட வேண்டிய அவசியம் பற்றியும் உரையாற்றினர்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், “மே தினத் தியாகிகள் போல உலகமெங்கும் உழைப்பாளிகள் போராடிப் பெற்ற உரிமைகள் எல்லாம் இன்று கார்ப்பறேட்டுகளின் நலனுக்காக மோடி அரசு அழித்துவருகிறது! ரேசன் பொருள்கள் முதல் டாஸ்மாக் பிரச்சனைகள் வரை கட்சிகளைக் கடந்து, நேரடியாக மக்கள் திரண்டு போராடாமல் தீர்க்க முடியாது என்பது நிதர்சனமாகி வருகிறது. இத்தகைய போராட்டங்களை விரிவாக முன்னெடுத்துச் செல்வதுதான் நாம் மே தினத் தியாகிகளுக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும்” என்று பேசினார்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
தேனி மாவட்டம்

மதுரை : டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம்

0

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ் உரப்பனூர் இந்திரா காலனியைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவினை கேலி செய்யும் விதத்தில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை இந்திரா காலனி குடியிருப்புக்குள் கொண்டு சென்று அமைத்தனர்.

ஊருக்குள் இந்தச் சனியன் வந்ததால் மக்களே தோழர்களை அழைத்தனர். 12.4.2017 அன்று கடைக்கு போகும் பாதையில் முட்களை வெட்டிப்போட்டு அடைத்து பகுதி மக்கள் மறியல் செய்தனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் ஏப்ரல் இறுதி வரை கால அவகாசம் கேட்டு, மே 1-ம் தேதிக்குள் கடையை மூடிவிடுவதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர்.

மே 1-ம் தேதி அடைக்கப்பட வேண்டிய கடை அடைக்கப்படவில்லை, டாஸ்மாக் அதிகாரிகளின் திமிர்த்தனத்தைக் கண்டு கொதிப்படைந்த மக்கள் மீண்டும் மே 2 அன்று காலையிலேயே தோழர்களை அழைத்து கடையை இன்று நடத்த விடக்கூடாது என்று உறுதியாக நின்றனர். தகவலறிந்த காவல்துறை 100 -க்கும் மேற்பட்ட  காக்கிகளோடு வந்து அச்சுறுத்தியது. போலீசுக்கு அஞ்சாமல் பெண்கள் உறுதியாக நின்று சரமாறியாக கேள்வி எழுப்பியதால் காவல்துறை பின்வாங்கியது. உடனே நேரடியாக உதவி மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்தனர்.

“மக்களோடு, மக்கள் அதிகாரம் தோழர்கள் உள்ளதால் தொடர்ச்சியாக போராட வாய்ப்பு உள்ளது. எங்களால் கடைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கடையை மூடுவதாக அறிவித்தனர். அதன் பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். மனுகொடுப்பது, கெஞ்சுவது தீர்வாகாது, போர்குணமிக்க போராட்டமே தீர்வு என்பதற்கு இந்த போராட்டம் ஒரு சான்று. தொடர்ச்சியான மக்கள் பிரச்சனைக்கும் இணைந்தே போராடுவோம் என்று மக்கள் உறுதியளித்தனர்.

இதே போல் உசிலை வட்டம் முண்டுவேலம்பட்டி அருகில் புதிதாக திறக்கவுள்ள டாஸ்மாக் கடைக்கு கட்டிட வேலை நடைபெற்று வந்தது. இதை அறிந்த மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி அவர்கள் மக்களைத் திரட்டி ஊர்ப்பொதுமக்கள் சார்பாக, கடையைத் திறந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மனு அளிக்கப்பட்டது. அதன் விளைவாக அந்தக்கடையையும் திறக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.


( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருமங்கலம் பகுதி.

டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !

0

மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே !
அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே !
மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம் !
நம்ம ஊரில் இனி கிடையாது டாஸ்மாக், அடிச்சு தூக்கு !…

  • இவை கடந்த ஆண்டு மக்கள் அதிகாரம் வைத்த முழக்கங்கள்.

க்கள் அதிகாரத்தின் முழக்கம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இன்று தமிழக தாய்மார்கள் ஊர்தோறும் டாஸ்மாக்கை அடித்து மூடுகிறார்கள்.  அரசு மூடாது மக்களது அதிகாரம்தான் மூடும் என்பதை தமிழகத்தில் தொடரும் போராட்டம் நிரூபித்து வருகிறது. போலீசாரின் அடக்குமுறைகளுக்கு அஞ்சவில்லை. கடப்பாரையால் கடையை இடிக்கிறார்கள். சாராய பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைக்கிறார்கள். சட்டவிரோதமாக சாராயம் விற்பதை கைப்பற்றி உடைக்கிறார்கள். போலீசோ செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இன்னும் சில மாதங்கள் இதே நிலை நீடித்தால், பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த முடியும்.

டாஸ்மாக் கடைக்கு இடம் தரமுடியாது என மக்கள் அதிகாரிகளை புறக்கணிக்கிறார்கள். வெட்கம் கெட்ட அதிகார வர்க்கம் ஊரின் ஒதுக்குபுறத்தில் கடையை கட்டுகிறது. அதையும் மக்கள் இடிக்கிறார்கள். சொரணையுள்ள அரசாக இருந்தால் உடனே டாஸ்மாக்கை மூடுகிறேன் என உத்தரவிட்டிருக்கும். சாக்கடையில் மிதக்கும் காசையும் நக்கி எடுக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது.

அன்று டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதற்காக சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மக்கள் அதிகாரத் தோழர்கள் பலரும் சிறை சென்றார்கள். மூடு டாஸ்மாக்கை என பாடியதற்காக தோழர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். டாஸ்மாக் எதிர்ப்பு மாநாட்டில் பேசியதற்காக பலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் டாஸ்மாக் போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டனர். அய்யா சசி பெருமாள் உயிரையே விட்டார். இவ்வாறு தொடரும் மக்கள் போராட்டதால் அரசு தனிமைப்பட்டு திகைத்து நிற்கிறது.

மணல் கொள்ளையா ஆற்றிலிறங்கி மணல் லாரியை மறித்து போராடு, கட்டணக் கொள்ளையா, தனியார் பள்ளியை முற்றுகையிடு, தரமான சிகிச்சை இல்லையா? மருத்துவமனையை சூழ்ந்து கொள், குடிநீர் இல்லையா? நகராட்சி அலுவலகத்தில் குடியேறு, போலீசாரின் அத்துமீறலா, விடாதே போராடு, ஜல்லிக்கட்டு மெரினா எழுச்சிக்கு பிறகு, அடித்தாலும் அடங்காது இது வேற தமிழ்நாடு என முழங்கு!

குடிவெறிகொண்டு அரசே டாஸ்மாக்கை திறக்க முயற்சிக்கிறது. மின்சாரம், கல்வி, மருத்துவம், குடிநீர் கொடுக்க வக்கில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்கத் துப்பில்லை. நம்மை ஆள்வதற்கு இந்த அரசுகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?

மக்களுக்கு எதிரியாகிப்போன இந்த அரசிடம் கெஞ்சுவதால் பயன் இல்லை. அரசை பணியவைக்கும், டாஸ்மாக், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம்தான் சரி. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமே தோற்றுப் போன இந்த அரசு கட்டமைப்புதான்.

மக்களின் இந்த மகத்தான எழுச்சி பற்றிப் பரவட்டும்!
போதையிலிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்க மக்கள் அதிகாரமே தீர்வு!

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

இவண்
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
91768 01656

ஓசிக்குச் சோறு போடலைன்னா லாடம் கட்டும் – குஜராத் போலீசு !

0

டைத் தெருக்களில் வாழ வழியில்லாதோர்  பிச்சை எடுப்பதைப் பார்த்திருப்போம். ஏங்கும் கண்களோடு கடைக்காரர் பிச்சை போடும் வரையோ அல்லது விரட்டி விடும் வரையோ கடை ஓரமாய் நின்று கொண்டிருப்பார்கள். இன்னொரு புறம் உரிமையோடு கடைப் பொருளை எடுத்துக் கொண்டு அதிகாரத் தொனியோடு பணத்தையும் பிடுங்கிச் செல்லுபவர்களையும் பார்த்திருப்போம். சமூகத்தில் இத்தகைய வழிப்பறிக்காரர்கள் கொஞ்சம் ஸ்பெசல் தான். இவர்களுக்கு அரசே தொப்பி, பெல்ட், பூட்ஸ் மற்றும் காக்கி உடை ஆகியவை கொடுத்து கையில் லத்தியையும் கொடுத்திருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற இச்சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்  சில சமயங்களில் செய்யும் அட்டூழியங்கள் பரபரப்புச் செய்தியாகி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது.

கரீம் பாய்

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் பாலிடானா. அப்பகுதியில் பல ஆண்டுகளாக திலிப் பாய் நோடியா என்பவரும் அவரது சகோதரர்களும் இணைந்து சில உணவகங்களையும், ஒரு துணிக்கடையையும் நடத்தி வருகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் திடீரென ஒரு போலீசு ஏட்டு, திலீப் பாய் நோடியாவிடம் போலீசு நிலையங்களுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தை அவரது குடும்ப உணவகங்களுக்கு வழங்கவிருப்பதாகக் கூறினார். அதனை நம்பிய நோடியா சகோதரர்கள் தங்கள் உணவகங்களில் இருந்து, போலீசு நிலைய காக்கிகளுக்கும், அங்கு லாக் அப்பில் இருப்பவர்களுக்கும், சில சமயங்களில் அதிகாரிகளின் வீட்டு விருந்துகளுக்கும் உணவு வழங்கி வந்தனர்.

முதல் மாதம் முடிந்ததும், அதுவரை வழங்கிய உணவுக்கு பணம் கேட்ட போது பணம் வரும் போது தருவதாகவும் அது வரை பணத்தைக் கேட்காமல் உணவு சப்ளை செய்ய வேண்டும் எனக் மிரட்டியது போலீசு. போலீசின் மிரட்டலுக்கு பயந்து கடந்த 5 ஆண்டுகளாக உணவு சப்ளை செய்து வந்த நோடியா குடும்பத்தாருக்கு இது வரை மொத்தத்தில் இரண்டு முறை மட்டுமே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ரூபாய் பத்தாயிரமும் மற்றொரு முறை  ரூபாய் தொள்ளாயிரமும் போலீசால் கொடுக்கப்பட்டது.

குஜராத்தின் ‘வளர்ச்சி நாயகன்’ மோடி, இந்தியாவின் பிரதமரான பின்னர், ஒரே இரவில் இந்தியாவை ’வல்லரசாக்க’ மக்களின் தலையில் இடியாய் இறக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கம் நோடியா குடும்பத்தின் உணவங்களையும் விட்டு வைக்கவில்லை. அச்சமயத்திலும், போலீசு கும்பல் குறை வைக்காமல் ஓசிச் சாப்பாடு வாங்கித் தின்று சென்றது. நோடியா குடும்பத்தினர் உணவிற்கான பாக்கிப் பணத்தைக் கொடுக்குமாறு பல முறை கேட்டும் போலீசு கும்பல் கொடுக்க மறுத்தது.

வெறுத்துப் போன நோடியா குடும்பத்தின் மூத்த சகோதரரான திலீப் பாய், இனி தமது உணவகங்களிலிருந்து போலீசு நிலையத்திற்கு உணவு வழங்க வேண்டாம் என முடிவெடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான எந்த ஒரு உணவங்களிலிருந்தும் உணவுப்பொருள்கள் வழங்க வேண்டாம் என தெரிவித்தார். கடந்த மார்ச் 14, அன்று ஓசிச் சோறு வாங்கிச் செல்ல திலீப் பாயின் கடைக்கு வந்த போலீசிடம், இனி போலீசு நிலையத்திற்கு உணவு வழங்குவதாக இல்லை எனவும், பழைய பாக்கி ரூ. 3,00,000 த்தை கொடுத்த பின்னரே உணவு வழங்க முடியும் எனவும் கூறி திருப்பியனுப்பிவிட்டார்.

கரீம் பாய் மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள்

மறுநாள் காலை சுமார் 10 மணியளவில் திலீப் பாயின் கடைக்கு வந்த போலீசு, அச்சமயத்தில் கடையில் இருந்த கரீம் பாயிடம் (திலீப் பாயின் சகோதரர்) “அய்யா, ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் சொன்னதாகக்” கூறி அவரை பாலிடானா போலீசு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

இச்செய்தி அறிந்ததும், திலீப் பாய், அவரது மனைவி ஜெய்புன்பென் மற்றும் அவர்களது மகன்களான ஃபைசல் பாய், ஃபரூக் பாய், திலீப் பாயின் மற்றொரு சகோதரரான யூசஃப் பாய்  மற்றும் கரீம் பாயின் மூத்த மகனான ஃபெரோஸ் பாய் ஆகியோர் போலீசு நிலையத்திற்கு உடனடியாக விரைந்தனர். அங்கிருந்த போலீசு கண்காணிப்பாளர் வி.எஸ். மஞ்சாரியா, 40 வயது பெண்ணான ஜெய்புன்பென்னையும் சேர்த்து அங்கு வந்திருந்த  நோடியா குடும்பத்தினர் அனைவரையும் சிறைக் கொட்டடியில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன் பின்னர் அன்று மாலையில் கரீம் பாயைக் கைவிலங்கோடு, ஊர்வலமாக இழுத்துச் செல்ல முடிவெடுத்தது. அவரை போலீசு வாகனத்திற்கு முன்னால் கைவிலங்கோடு நடக்க வைத்து ஊர்வலமாக இழுத்துச் சென்றது. போகும் வழியில் அவர்களது உணவகத்தில் இருந்த கரீம் பாயின் இளைய மகனான நவாப்பையும் இணைத்துக் கொண்டு பாலிடானா நகரைச் சுற்றி அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்றது. அதன் பின்னர் அவர்களைப் போலீசு நிலையத்தில் அடைத்தனர். அன்று இரவு யூசுஃப் பாயையும், ஃபெரோஸ் பாயையும் மட்டும் விடுவித்து விட்டு, மற்ற அனைவரையும் போலீசுக் கொட்டடியில் அடைத்துச் சித்திரவதை செய்தது. அன்று இரவே சுமார் 11 மணியளவில், நோடியா குடும்பத்தினருக்கு எதிராக சங்வி என்ற குற்றவாளி ஒருவனை வைத்து பொய்ப்புகார் கொடுக்க வைத்து, பொய் வழக்கு பதிந்தது போலீசு. திலீப்பாயின் கடைக்கு அருகே, துணி வியாபாரம் செய்து வரும் சங்வியிடமிருந்து நோடியா குடும்பத்தினர் ரூ.2000-த்தை திருடிக் கொண்டதாகவும், குடும்பத்துடன் சேர்ந்து ஆயுதங்களோடு கொள்ளையில் ஈடுபட்டதாகவும் வழக்கைப் பதிவு செய்தது போலீசு. இந்த பொய்ப் புகாரை அளித்த சங்வி அதற்கு முன்னர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது 3 மாத பெயிலில் வெளி வந்திருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட திலீப் பாயின் மனைவியான ஜெய்புன்பென் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு , பாவ்நகர் குடும்ப மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவங்களில் ஈடுபட்ட போலீசு கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கருத்துத் தெரிவித்துள்ள பாவ்நகர் மாவட்ட எஸ்.பி. டிபாங்கர் திரிவேதி, இச்சம்பவம் குறித்து தமக்குத் தாமதமாகத் தான் தகவல் கிடைத்ததாகவும், விசாரணைக் கமிட்டி அமைப்பது குறித்து  ஆராய்ந்து வருவதாகவும் கூறி மழுப்பியுள்ளார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் திலீப் பாயின் மனைவி ஜெய்புன்பென்

திலீப்பாயின் இளைய சகோதரரான ராஜேஸ் பாய் இப்பிரச்சினையை உடனடியாக குஜராத் உயர்நீதி மன்றத்தில் ராகுல் சர்மா என்ற வழக்கறிஞரின் வாயிலாக வழக்குப் பதிவு செய்தார். கடந்த ஏப்ரல் 13 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.பி.பர்திவாலா, இவ்வழக்கு கும்பலாக ஆயுதங்களோடு கொள்ளையடித்தல் என்ற பிரிவின் கீழ் வராது எனக் குறிப்பிட்டு திலீப் பாய், கரீம் பாய், ஃபைசல் பாய், ஃபரூக் பாய் மற்றும் நவாப் நோடியா ஆகிய ஐவரும் அடுத்த 3 மாதங்களுக்கு பாலிடானாவிற்குள் நுழையக் கூடாது வரக் கூடாது என்றும் ஜெய்புன்பென் மட்டும் நகருக்குள் வரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். விரிவான தீர்ப்பு வழங்கப்படாமல் இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவில், நோடியா குடும்பத்தினரை ஊர்வலமாக அழைத்துச் சென்றது குறித்தும், போலீசின் அத்துமீறல்கள் குறித்தும் சிறு  கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு குஜராத் அரசின் சீருடை அணிந்த கூலிப் படைக்கு உயர்நீதி மன்றமும் காவலாக நிற்கின்றது.

தற்போது நோடியா குடும்பத்தில் உள்ள ஆண்களில் பெரும்பான்மையானோர், நீதிமன்ற உத்தரவுப்படி வெளியூரில் வீடெடுத்து தங்கியிருப்பதால் அவர்களால் உணவகங்களை நடத்த முடிவதில்லை. கிட்டத்தட்ட அவர்களது  வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன.

திலீப் பாய் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பம் வெகு நாட்களாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில், சுமார் 25 ஆண்டுகளுக்கு அவரது தந்தையும் தாயும் தான் அப்பகுதி கார்ப்பரேட்டர்களாக (நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பதவி) இருந்து வந்திருந்தனர். அந்த அளவிற்கு அப்பகுதியில் செல்வாக்கோடும், மக்களுடன் இரண்டரக் கலந்தும் வாழ்ந்து வந்திருந்தனர். ஆனால் தற்போது இச்சம்பவத்திற்குப் பிறகு மக்கள் மத்தியில் தலைகுனிவோடு வாழ வேண்டியிருப்பதாக்க் கூறியிருக்கிறார் நோடியா குடும்பத்தின் இளைய சகோதரரான ராஜேஷ் பாய்.

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் – மனித உரிமை போராளி – நல்லகாமன்

தமிழகத்தில் 1982-ம் ஆண்டு, வாடிப்பட்டி அருகே நல்லகாமன் – பிரேம்குமார் வழக்கினை ஒத்ததாக இருக்கிறது இவ்வழக்கு. நல்லகாமன் என்ற ஓய்வு பெற்ற இராணுவ சுபேதாரை வீடு காலி செய்யும் விவகாரத்தில் அப்பகுதி எஸ்.ஐ. பிரேம்குமார் அவரையும் அவரது மனைவியையும், அடித்து கைவிலங்கோடு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தார். பிரேம்குமாரை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர சுமார்28 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தினார் நல்லகாமன். தமிழகத்தின் நிலைமையே இப்படி என்றால், மோடி புகழ் ’போலி என்கவுண்டர் ஸ்பெசல்’ – குஜராத்தின் நிலைமையைப் பற்றி சொல்லவே தேவையில்லை.  திலீப் பாயும் அவரது குடும்பத்தினரும் இன்னும் எத்தனை ஆண்டுகள் சட்டரீதியாகப் போராடினால் நீதி கிடைக்கும் என்பது நீதித் துறைக்கு தான் வெளிச்சம்!! முதலில் நீதி கிடைக்குமா என்பதே கேள்விக் குறி!!

போலீசு அதிகாரி ப்ரேம் குமாருக்கு எதிரான வழக்கை 28 ஆண்டுகளாக நடத்திய அய்யா நல்லகாமன், அது குறித்துக் குறிப்பிடும் போது நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து சொத்துக்களை விற்று வழக்கு நடத்தியதற்கு பதிலாக அன்றே உலக்கையைக் கொண்டு அவனை அடித்திருந்தால் சில ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டு இந்நேரம் வெளியில் வந்திருப்பேன், சொத்துக்களாவது மிஞ்சியிருக்கும் என்று கூறினார்.

போலீசு கும்பலின் அராஜகங்களுக்கும் ஒடுக்குமுறைச் செயல்களுக்கும் துணை நிற்கும் நீதித்துறையை நம்பினால் சொத்துக்களை இழந்து 28 ஆண்டுகளோ, 58 ஆண்டுகளோ காத்திருக்க நேரிடும் சூழல் தான் இன்றும் நிலவுகிறது. இன்னும் சொல்லப் போனால் இன்று நிலைமை அதை விட மோசமாகி இருக்கிறது. அநீதிகளுக்கு எதிராக நீதி பெற வேண்டும் எனில், நல்லகாமன் கூறியது போலக் கையில் உலக்கையை எடுக்கிறோமோ இல்லையோ, நீதியை நிலைநாட்ட மக்களே அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்கான அவசியச் சூழல் இங்கு உள்ளது.

மக்களுக்கு நீதி வழங்கத் திராணியற்றதாக, முழுக்க முழுக்க ஊழல்மயமாகிப் போய், அழுகி நாறிப் போன நீதித்துறை, மக்களை அரித்துத் திண்ணும் போலீசு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என நமக்கு எதிராக இருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பு நமக்கு உதவப் போவது இல்லை. அது முழுக்க முழுக்க ஆளும்வர்க்கத்தின் எடுபிடி வேலைகளைச் செய்வதற்கான அமைப்பாகவே இருந்து வருகிறது. நமது உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும், சுயமரியாதையையும் நாமே பாதுகாப்பதற்கு மக்கள் அதிகார மன்றங்களை நிறுவுவது தான் நம் முன் உள்ள ஒரே வழி !!

– நந்தன்.

மேலும் படிக்க:
Denied Free Food, Gujarat Police Parade Restaurant Owner Across Town in Handcuffs, Arrest Family

கென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை

0
சமூக நடைமுறைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள பெண்களின் மேல் ஏராளமான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. வழக்கமாக ஆண்களுக்கானதாக கருதப்படும் விளையாட்டுக்களிலும் உடற்பயிற்சிகளிலும் பெண்கள் ஈடுபடுவதை சமூகம் இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. “பாக்சிங் என்பதை இன்னமும் ஆண்களுக்கானதாகவே பார்க்கிறார்கள்” என்கிறார் ”பாக்ஸ் கேர்ல்ஸ்”ல் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஃப்ளோரன்ஸ். ”பாக்சிங் கற்றுக் கொள்வது பெண்களை மூர்க்கமானவர்களாக்கி பெற்றோர் மற்றும் கணவரின் மேல் அவர்கள் வன்முறை செலுத்தச் செய்து விடும் என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நீண்ட காலமாக பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வதைக் கண்டவுடன் அவர்களது எண்ணங்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் கூட எங்களுக்கு நிறைய சவால்கள் இருக்கத் தான் செய்கின்றன” என்கிறார் ஃப்ளோரன்ஸ்.

ரியோபாங்கி. கென்யா – நைரோபியில் உள்ள கரியோபாங்கி ஒரு ஆபத்தான சேரிப் பகுதி. குற்றங்கள் மலிந்த இப்பகுதியில் ஏராளமான மதுபானக் கூடங்கள் உண்டு. கரியோபாங்கியில் உள்ள பாக்சிங் பயிற்சி நிலையம் ஒன்று இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பாக்சிங் பயிற்சி மட்டுமின்றி, சுயமரியாதையாக வாழ்வதையும், பொருளாதார ரீதியில் சுயேச்சையாக இருப்பதற்கும், கௌரவமான வாழும் நிலையை அடையவும், வன்முறையிலிருந்து காத்துக் கொள்ளவும் பயிற்சியளித்து வருகின்றது.

”பாக்ஸ் கேர்ல்ஸ்” என்கிற இந்தப் பயிற்சி நிலையத்தை 2008-ல் அல்ஃப்ரெட் அனலோ என்பவர் தோற்றுவித்தார். இப்பகுதியில் ஆல்ஃப்ரெட்டை சமயகுரு எனும் பொருள்பட “குரு” (Priest) என்றே அழைக்கின்றனர்.

தற்காப்பு முறைகளைப் பயிற்றுவிப்பதன் ஊடாக, பெண்கள் தன்னிறைவாக வாழ்வதற்கும் உணர்வுப்பூர்வமாகவும், உடல்ரீதியிலும் உறுதியாக இருப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது இந்தப் பயிற்சி நிலையம். இதன் மூலமாக இங்கே பயிற்சி பெறும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்பதற்கான மனவுறுதியைப் பெறுவதாகவும் குறிப்பிடுகிறார் பயிற்சியாளர் ஆல்ஃப்ரெட்.

”சேரிகளில் உள்ள கடுமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் உள்ளத் துணிவையும் உடல் உறுதியையும் எங்கள் பயிற்சி நிலையம் வழங்குகின்றது” என்கிறார் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆல்ஃப்ரெட் அனாலோ (அல்லது குரு)
2007-2008 பொதுத் தேர்தல்களுக்குப் பிந்தைய கலவரங்களைத் தொடர்ந்து வெறும் 19 பெண்களுடன் துவங்கப்பட்டது தான் கரியோபாங்கியில் உள்ள பாக்சிங் பயிற்சி மையம். இன்று சுமார் 1500 பெண்கள் பயிற்சி பெறுகின்றனர்.
“பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வது குறித்து ஏராளமான அவதூறான தகவல்களும், அவநம்பிக்கையும் இருந்ததால் ஆரம்பத்தில் பெண்களுக்குப் பயிற்சியளிப்பது கடினமாக இருந்தது” என்ற ஆல்ஃப்ரெட், குறிப்பாக பெற்றோர்கள் பாக்சிங் என்பது ஆண்களுக்கானது என்றும் அது பெண்களை மூர்க்கமாக்கி விடுமென்றும் தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததையும் துவக்கத்தில் வெகுசில பெண்களைக் கொண்டே பயிற்சிகளைத் துவங்கி பின்னர் மற்றவர்கள் பயிற்சியில் சேர்ந்ததையும் நினைவுகூர்கிறார்.
அதிகாலையில் ஆண் பாக்சர்களோடு பயிற்சி எடுத்துக் கொள்ளும் டமாரிஸ் என்கிற இந்தப் பெண் பின்னர் அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு பயிற்சியளிக்கச் செல்கிறார். விளையாட்டுக்களும், உடற்பயிற்சியும் பெண்களுக்கு வாழ்நிலை சார்ந்த கல்வியளிக்க உதவியாக இருக்கும் என்று “பாக்ஸ் கேர்ல்ஸ்” மையம் நம்புகிறது.
மேலே உள்ள படத்தில் உள்ளவர் ஜேன். இவரை சோன்க்கோ என்று அழைக்கிறார்கள். மற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் சோன்க்கோ, தினசரி தவறாமல் பயிற்சி செய்கிறார்.
“பாக்சிங் என்பதை இன்னமும் ஆண்களுக்கானதாகவே பார்க்கிறார்கள்” என்கிறார் ”பாக்ஸ் கேர்ல்ஸ்”ல் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஃப்ளோரன்ஸ். ”பாக்சிங் கற்றுக் கொள்வது பெண்களை மூர்க்கமானவர்களாக்கி பெற்றோர் மற்றும் கணவரின் மேல் அவர்கள் வன்முறை செலுத்தச் செய்து விடும் என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நீண்ட காலமாக பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வதைக் கண்டவுடன் அவர்களது எண்ணங்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் கூட எங்களுக்கு நிறைய சவால்கள் இருக்கத் தான் செய்கின்றன” என்கிறார் ஃப்ளோரன்ஸ்.
ஆதரவற்ற சிறார்களுக்கான பள்ளியில் பாக்சிங் கற்றுக் கொள்வதற்கு முன் செய்யப்படும் வார்ம்-அப் பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள். பெண்கள் பாக்சிங்கின் அடிப்படைகளான நிற்கும் நிலை, கால்களை நகர்த்துவது, அடிப்படையான குத்து முறைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் வேகத்தையும், துல்லியமாக தாக்கும் ஆற்றலையும், விளையாடும் போது உடலைச் சமநிலையுடன் பராமரிப்பதையும் கற்றுக் கொள்கின்றனர்.
நைரோபியின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளிச் சிறுமிகளுக்கும் பாக்ஸ் கேர்ல்ஸ் பயிற்சியளிக்கின்றது. இந்தச் சிறுமிகள் தற்காப்பு முறைகளைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்கள் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் உணர வேண்டும் என்பதற்காக பாக்சிங் பயிற்சிகள் அவர்கள் படிக்கும் பள்ளி மைதானத்திலேயே வழங்கப்படுகின்றன.
சோன்கோவிடம் பயிற்சி பெறும் ஆதரவற்றோருக்கான ரெஹெமா பள்ளியைச் சேர்ந்த சிறுமி பாக்சிங்கின் அடிப்படை நிலைகளைக் கற்றுக் கொள்கிறார்.
 “நான் முன்பெல்லாம் நிறைய வெட்கப்படுவேன். ஆனால், பாக்சிங் கற்றுக் கொள்ள துவங்கிய பின் எனக்கு நிறைய தன்னம்பிக்கை பிறந்துள்ளது. இப்போதெல்லாம் நான் உறுதியாகவும், நம்பிக்கையோடும் பேசுகிறேன்” என்கிறார் பயிற்சி பெறும் பெண் ஒருவர்.
ரெஹெமா ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு வார்ம்-அப் மற்றும் தசைகளை இலகுவாக்கும் பயிற்சிகளை முன்னின்று நடத்துகிறார் சோன்கோ. குறிப்பிட்ட சமூகப் பிரிவில் இருக்கும் பெண்களைக் கொண்டே மற்ற இளம் பெண்களுக்கு பயிற்சியளிக்கும் அணுகுமுறை சாதகமான முறையில் பலனளிக்கின்றது.
கோரொகொச்சோவில் உள்ள ரெஹெமா மையத்தில் உள்ள சிறுமிகளுக்கு அடிப்படையான வாழ்வியல் பாடங்களை நடத்துகிறார் பயிற்சியாளர் டமாரிஸ். “இளம் பெண்களுக்கு பயிற்சியளிக்க பெண் பயிற்சியாளரையே பயன்படுத்துவதால் அவர்கள் இயல்பாக தங்கள் பிரச்சினைகளைக் குறித்துப் பேசுகின்றனர். மாணவிகள் தங்களது பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ தங்களுடைய பிரச்சினைகளைக் குறித்து பேசுவதால் தீர்வு கிடைக்காது என்று நினைக்கிறார்கள். எங்கள் பயிற்சிகளின் போது பேசுவதற்கான தயக்கங்கள் மறைந்து எங்களது பெண் பயிற்சியாளர்களிடம் மனம் விட்டுப் பேசுகின்றனர்” என்கிறார் ஆளுமைத் திறன் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் ஃப்ளோரன்ஸ்.
வாழ்வியல் பயிற்சிப் பட்டறைகளின் மூலம் பெண்கள் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருப்பது சாத்தியமாகின்றது. இந்தப் பயிற்சிகளின் மூலம் பெண் குழந்தைகளின் தன்நம்பிக்கை அதிகரிப்பதுடன், பெண்ணுரிமைகள் குறித்தும் கற்றுக் கொள்கின்றனர். இந்தப் பயிற்சிகளில் மொழித் திறன், சிக்கலான சமயங்களில் முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல், சுயேச்சையாக முடிவுகள் எடுப்பது போன்ற ஆற்றல்கள் வளர்கின்றன.
ஆர்வமுள்ள பையன்களுக்கும் பயிற்சிகளில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.
“பயிற்சியில் முக்கியமானது என்னவென்றால், உறுதியாக இருப்பது எப்படி, எங்கள் குறிக்கோள்களைச் சாதிப்பது எப்படி என்று கற்றுக் கொள்வது தான்” என்கிறார்கள் பயிற்சிபெறும் சிறுமிகள்.

– நன்றி: அல்ஜசிரா
தமிழாக்கம்: முகில்
மூலக்கட்டுரை: The boxing girls of Kenya

கடலூர் மே நாள் : சிவந்தது வங்கக் கடற்கரை !

0

மே 1 தொழிலாளர் தினம் உலகு தழுவிய அளவில்  போராட்ட நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அந்நாநளை கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் பல்வேறு ஓட்டுக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அதற்கு மாற்றாக புரட்சிகர அமைப்பான ம.க.இ.க  மற்றும் அதன் தோழமை அமைப்புகள்  தொழிலாளிகளின் அடிமைத் தனத்தை உடைத்து விடுதலைக்காகவும்,  முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு எதிராகவும் போராடி வருகின்றன.

கடலூரில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி இணைந்து பேரணி-பொதுக்கூட்டம் நடத்தின. முதலில் காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதி மறுத்தது. பிறகு தோழர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சில நிபந்தனைகளோடு பேரணிக்கு அனுமதி வழங்கியது. ஜனநாயகம் என்பதே வரம்புக்குட்பட்டதே என்பதை நிரூபித்து விட்டது காவல்துறை.

இராணுவக் கட்டுப்பாடுடன் நடந்த இந்த பேரணியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வீட்டின் மாடியிலும், வெளியிலும் நின்று கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாதிரிக்குப்பத்தில் தொடங்கிய இந்த பேரணியை விவசாயிகள் விடுதலை முன்னணி திருவெண்ணெய்நல்லூர் வட்டாரச்செயலர் தோழர்.ஏழுமலை அவர்கள் தொடங்கி வைத்து பேரணியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

 

கடலூரின் முக்கியமான சாலை, இடைவிடாமல் போக்குவரத்து சென்று கொண்டேயிருக்கும். சாலையின் இரு புறங்களிலும் கடைகள்,வீடுகள் நிறைந்த பகுதியின் வழியே பேரணி சென்றது. முன்னே சென்றவர்கள் வானுயர செங்கொடியை ஏந்திச் சென்றார்கள். அதற்கடுத்து வந்த தோழர்கள் ஆசான்களின் படத்தை பிடித்துக்கொண்டு விண்ணதிரும் முழக்கங்களோடு சென்றதை பார்த்து உற்சாகமடையாதோர் யாரும் இல்லை.  இராணுவக் கட்டுப்பாடுடன் நடந்த இந்த பேரணியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வீட்டின் மாடியிலும், வெளியிலும் நின்று கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாலையின் இரு புறங்களிலும் கடைகள்,வீடுகள் நிறைந்த பகுதியின் வழியே பேரணி சென்றது.

மோடியின் முகத்திரையை கிழிக்கும் விதமாக முழக்கங்கள், இந்த அரசமைப்பு தோற்று விட்டது என்பதை பறைசாற்றும் விதமாக பதாகை வாசகங்கள் என பேரணி முழுவதும் புரட்சிகர அரசியலால் வண்ணமயமாகியிருந்தன.

நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணியில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் சென்றதை பார்த்த மக்கள் யார் இவர்கள், எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்ககூடும். ஏனெனில் ஓட்டுக்கட்சிகள் குடியும் கூத்துமாக நடத்தியிருப்பதை தான் இத்தனை நாட்கள் அவர்கள் பார்த்திருப்பார்கள். கட்டுப்பாட்டுடனும் ,நேர்த்தியாகவும் நடந்த இந்த பேரணியை முதன்முதலில் இப்பொழுது தான் பார்ப்பதாக டீக்கடையில் பேரணியை பார்த்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பேரணியின் நீளம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு கொண்டே  ஒரு கொடியின் கீழ் மாபெரும் படையாக சென்றனர். புதிய ஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் செங்கொடியையும், பதாகையையும் பிடித்திருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது.

வெகுஜன மக்களும், தோழர்களும் கலந்து கொண்ட இந்த பேரணி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பொதுக்கூட்டம் நடக்க இருந்த தேரடி தெருவில் வந்தமர்ந்தனர்.

சரியாக மாலை 7.00 மணிக்கு ஆரம்பித்த இந்த பொதுக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலாளித்துவ சுரண்டலாலும், அரசின் அடக்கு முறையாலும் இன்று கொடுந்துயரத்திற்கு ஆளாகி வருவதையும் அதனை வீழ்த்துவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக செங்கொடி ஏந்த வேண்டிய நோக்கம் குறித்து தலைமையுரையில் பேசி முடித்தார்.

தோழர் ஸ்ரீதர்

அடுத்ததாக பேசிய புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் அவர்கள் பேசுகையில், தனியார்மயம், தாராளமயம் வந்த பிறகு விவசாயிகள் விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கப்படுள்ளார்கள். லட்சக்கணக்கில் விவசாயிகள் இறந்துள்ளனர்கள். இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக போராடியவர்கள் விவசாயிகள் மரணத்திக்கு எதிராக பேசவில்லை. “உழவுச்சக்கரம் சுழலவில்லை என்றால் பூமி சக்கரம் நின்று விடும்” என்பார்கள். ஆனால் இன்று விவசாயம் அழிக்கப்பட்டு விட்டது. கல்வியில் ஏழை மாணவர்கள் படிக்க கூடாது என்பதற்காக NEET தேர்வை மோடி அரசு திணிக்கிறது. மற்றொருபுறம் இந்து மதவெறி பாசிசத்தை கட்டவிழ்த்து விடுகிறது. நாம் ஒரு மாபெரும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறோம். இந்த அபாயத்தை முறியடிக்க புரட்சிகர அமைப்பாக அணி திரளவேண்டும் என்று கூறி முடித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின்  ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது. இவை எல்லாம் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடாமல் தங்களுடைய பதவி உரிமைக்காக போராடி வருகிறார்கள். இன்றைக்கு மின்துறையில் நடந்து  வரும் ஊழல்கள், முறைகேடுகள் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. மின்துறை கடனால் திவாலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போதிய ஆட்களை நியமிப்பதில்லை. குறைந்த ஆட்களை மட்டும் வைத்து உழைப்பு சுரண்டலை இந்த அரசு ஏய்த்து வருகிறது. நிலக்கரி உள்ளிட்டவை அனைத்தும் இந்தோனோசியா உட்பட தனியார் முதலாளிகளிடம் இருந்து வாங்குவதால் தான்  மின்துறை திவால் நிலைக்கு சென்றுள்ளதை  அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர் தோழர் லோகநாதன் அவர்கள் பேசுகையில், நாடு முழுவதும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் நடந்து வருகிறது.  போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்கள் அனைத்தும் இன்று முதலாளிகளுக்கு சாதகமாக மோடி அரசு மாற்றி வருகிறது.மக்களிடம் சேவை வரி பிடுங்கும் மோடி, முதலாளிகளுக்கு சேவை செய்கிறார். முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்கிறார். விவசாயிகள் கடனை ரத்து செய், வறட்சி நிவாரணம் கொடு என்று கேட்டால் மட்டும் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடும் என்று என்று கூச்சலிடுகிறது. மக்களுக்கு சேவை செய்யாத இந்த அரசை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். இன்று “தல”யின் பிறந்த நாள் என்று மக்களை திசை திருப்புகிறது ஊடகம். உண்மையான தலையோட பிறந்த நாள் மே 5. உழைக்கும் மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்த ஆசான் காரல் மார்க்ஸ். அவரிடம் இருந்து நாம் கற்று கொள்வதற்கு நிறைய இருக்கிறது. அந்த வகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்பு மக்கள் அதிகாரம் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை முன் வைத்தது. இன்று  மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து கடைகளை மூடுகிறார்கள். அணைந்து கிடந்த தீ இன்று பற்றிப் படருகிறது. நாளை இந்த தீயில் அரசும் பொசுங்கும். அதுவரை போராடுவோம் என்று கூறி தனது உரையை முடித்தார்.

தோழர் ராஜூ

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் பேசுகையில், இன்று நடந்து வருவது முதலாளிகளுக்கான  ஆட்சி தான். விவசாயிகள், தொழிலாளிகள், மக்களுக்கான ஆட்சி கிடையாது. விவசாயிகளுக்காகவும், தொழிலாளிகளுக்காகவும் என்ன கொள்கையை வைத்திருக்கிறது மத்திய, மாநில அரசுகள். ஏற்கனவே இருந்த தொழிலாளர் நல சட்டம், தொழிற் தகராறு சட்டம் அனைத்தையும் செல்லாக்காசு ஆக்கியது தான் இன்றைய அரசின் சாதனை. சாதாரண டீக்கடை தொழிலாளி தொடங்கி யாரும் 8 மணி நேர வேலையை பேச முடியாது. எந்த கட்சியும் இதற்காக பேசாது. மக்களை அடிமைகளாக்கி, குடிகாரர்களாகவும், காமந்தாரர்களாகவும் தான் இந்த அரசும், கட்சிகளும் மாற்றி வைத்துள்ளது.

OPS முதல் EPS வரை எவருக்கும் மக்களை ஆளும் தகுதி கிடையாது. எடப்பாடி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கிரிமினல். OPS தான் சுருட்டி வைத்திருந்த சொத்துக்களை சின்னம்மாவும், பெரியம்மாவும் அடித்து உதைத்து எழுதி வாங்கும் அளவிற்கு கொள்ளையடித்த ஒரு கிரிமினல்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி மக்களின் சேமிப்பை வழிப்பறி செய்தவர் மோடி. ஆனால் முதலாளிகளுக்கு செய்யும் சேவையை விவசாயிகளுக்கு செய்வதில்லை. சட்டமன்றம் முதல் பாராளுமன்றம் வரை தலையாரி முதல் தலைமை செயலர் வரை கிரிமினல் மயமாகிவிட்டது. இந்த கும்பல் மக்களை எப்படி வழி நடத்தியுள்ளார்கள் என்றால், எங்கள் ஊரில் இடைத்தேர்தல் வராதா, தொகுதி MLA  சாக மாட்டாரா என எதிர்பார்க்கும் அளவிற்கு மக்களையும் மாற்றி வைத்துள்ளார்கள். இது தான் இவர்கள் மக்களை வழி நடத்தும் யோக்கியதை.

பொய், பித்தலாட்டம் என்று இந்த அரசுக்கட்டமைப்பே அழுகி நாறுகிறது. அதிமுக கும்பல் அடித்த கொள்ளை, சீரழிக்கப்பட்ட மக்களின் வாழ்வு, தாலியருக்கப்பட்ட தாய்மார்களின் கோபம் இனி சும்மா விடாது. போராட்டத்தை இனி தடுக்க முடியாது. அடித்தாலும் அடங்காது. இது வேற தமிழ்நாடு என்பதை நிருபிப்போம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

தோழர் விஜயகுமார்

இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் அவர்கள், எந்த கோரிக்கைக்காக தொழிலாளர் வர்க்கம் போராடி துப்பாக்கி சூட்டுக்கு பலியானதோ, தொழிலாளர், முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டு அமெரிக்க அரசு கொலை செய்ததோ, அந்த கோரிக்கை இன்றும் கோரிக்கையாகவே இருக்கிறது.

எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து உலகெங்கும் இருக்கின்ற தொழிலாளர்கள் போராடக்கூடிய அவல நிலை தான் உள்ளது. ஆனால் தமிழகம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இது வேறு தமிழகம் என்று பதிவு செய்துள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில இதழ் தமிழக போராட்ட மரபை வியந்தெழுதுகிறது. இந்த போராட்டத்தின் உச்ச கட்டம் தான் திருப்பூரில் பெண்கள் டாஸ்மாக்கை மூடு என்று நடத்திய போராட்டம். அடித்தாலும் இவர்கள் போராடுகிறார்களே இது எப்படி சாத்தியம் என்று வியப்படைகிறது.

இன்று தமிழகத்தில் போராட்டம் நடைபெறாத ஊர் எதுவுமில்லை என்றளவிற்கு வந்துள்ளது. ஆறுகளில் மணல் அள்ளப்படுவதற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. விவசாயத்தை காப்பதற்காக போராட்டம் நடைபெறுகிறது. எங்கும் போராட்டம்.  விவசாய தொழில் என்பது தற்கொலைக்கு சமமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளார்கள். வாழ வழி இல்லாமால் நகரத்தை நோக்கி விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டு அவர்களின் கடனை தள்ளுபாடி செய்ய அரசு மறுக்கிறது. விவசாயிகள் கடன் வங்கி விட்டு ஏமாற்றுகிறார்கள் என்று இழிவு படுத்துகிறது பார்ப்பன ஜனதா கும்பல். பன்னாட்டு முதலாளிகள் லாபவேட்டைக்காக சிறு தொழில்களை அழிக்கின்றன பெரும் வணிக நிறுவனங்கள். இதனால் வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களோ இந்தியாவில் ஏராளம்.

தனியார் முதல் அரசுத்துறை வரை அனைத்திலும் காண்டிராக்ட்மயம். இதில் உச்சகட்டம் மின்துறை. அதிக விதவை தொழிலாளர்களை கொண்ட ஒரே துறை. அதிக அளவில் காண்டிராக்ட் தொழிலாளியையும் கொண்டுள்ளது. சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளின் அவலம் மிகக் கொடுமையானது.  சுரங்கம் தோண்டும் பொழுது மண் சரிந்து செத்துப்போன தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இப்படி பல்வேறு துறைகளில் ஒப்பந்த முறையை அமுல்படுத்து தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி கொழுக்கிறது உலக முதலாளித்துவம்.

மகஇக – வின் கலை நிகழ்ச்சி

தொழிலாளிகளின் அவல நிலையை கண்டுகொள்ளாத இந்த மோடி அரசு தான் முதலாளிகளுக்கு ஊஞ்சலாட்டி விட்டுக்கொண்டிருக்கிறது. மறுபுறம் மாட்டுக்கறிக்கு தடை விதித்து விட்டு மாட்டுக்கறியை வெட்டி ஏற்றுமதி செய்கிறது இந்த பார்ப்பன கும்பல். இந்த கும்பல் தான் இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்றியே தீருவேன் என்று வெறி கொண்டு அலைகிறார்கள். சிறுபான்மையினர், தலித்துகளை கேள்விக்கிடமற்ற முறையில் கொலை செய்கிறார்கள்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் காலூன்றி வரும் இந்த கும்பல் மேற்கு வங்கத்தை அடுத்து தமிழகத்தை குறி வைத்துள்ளது. முதலாளிகளும், பார்ப்பன இந்து மதவெறி கும்பலும் ஓரணியில் இருக்கிறது. ஏற்றத்தாழ்வான இந்த சமூகத்தில் அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. இது ஏமாற்று ஜனநயகம். இது காவி கும்பலுக்கும், கார்ப்ப்ரேட்டுக்குமான அரசு இந்த அரசை தூக்கி எரிந்து விட்டு உழைக்கும் மக்களுக்கான ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவ நாம் செங்கொடி ஏந்தி போராட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

பொதுக்கூட்ட  நிகழ்ச்சியில் இடையிடையே பாடப்பட்ட மக.இ.க.- வின் பாடல்கள் தோழர்கள் மற்றும் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கடலூரில் நடந்த மே தின பேரணி-பொதுக்கூட்டம் வங்கக் கரையை சிவப்பாக்கியதோடு, மக்களிடையே அரசியதல் கோபத்தையும், போராட்ட உற்சாகத்தையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!

-வினவு செய்தியாளர்.

மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்

0

மே நாளின் பாதம் பட்ட இடமெங்கும்  நகரம் சிவந்திருந்தது.  ஆவடியும் அப்படித்தான்.  அன்று, தொடர்வண்டி நிலையம் தொடங்கி பேரூந்து நிலையம் வழியாக செல்லும் திசையெங்கும் செங்கொடிகள் சிறகசைத்தன.  அந்த மாலைநேரம் சூரியன் மேற்கசையும் வானமும் சிவப்பின் வண்ணத்தில் சிலிர்த்தது.  “சிவப்பென்றாலே சிலருக்கு முகமெல்லாம் கருப்பாக மாறுது,  இளம் பிள்ளை நெஞ்சம் என்றும் மறவாது உடலெங்கும் சிவப்பு நிறம்தானே ஓடுது!” என்ற ஆந்திராவின் நக்சல்பாரி கவிஞன் சுப்பாராவ் பாணிக்கிரகியின் கவிதை போல அரசியல் உணர்வின் காட்சிகளில் மே நாள் இனித்தது.  எத்தனை தொழிலாளர்கள், எத்தனை தோழர்கள் தியாகத்தில் சிவந்தது இந்நாள்.  வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களின்  ரத்தநாளங்களில்  விடுதலை உணர்வு கொப்பளிக்கும் வீரத்திருநாள் அல்லவா இது!

மானுட மகிழ்ச்சிக்காக போராடும் தொழிலாளி வர்க்கத் தோழர்களை, கம்யூனிஸ்டுகளை காராகிரகத்தில் அடைத்தபோதும், அவர்களின் மே நாள் உணர்வுகளை யாராலும்   சிறைப்படுத்த முடியவில்லை.  செக்கோஸ்லோவேக்கியாவின் வீரப்புதல்வன் கம்யூனிச போராளி ஜூலியஸ் பூசிக்கை நாஜிக்கள் சிறைவைத்து சித்ரவதை செய்தபோதும்,  அடைக்கப்பட்ட சிறை இருளில் இருந்து அடைக்கப்பட முடியாத அவரின் மே நாள் நினைவுகள் மேலெழுந்தது!

சிறைப்பட்டிருந்தாலும்,  மே நாள் என்றவுடன் அவரது அரசியல் உணர்வுக்கு சிறகு முளைத்தது,  “மே முதல் நாள்!  இந்த நன்னாளில் பொழுது புலர்வதற்குள் நாங்கள் எழுவோம்.  கொடிகளை  தயார் செய்வோம்.  இந்த நேரத்தில் மாஸ்கோவில்,  மே தின அணிவகுப்பில் செல்லும் பொருட்டு முதல் வரிசையினர் ஆயத்தமாகி, தத்தம் இடத்தில் தயாராகப் போய் நிற்பர்.  இன்றைக்கு இந்த நேரத்தில் மனித சுதந்திரத்தைக் காப்பதற்காக  நடைபெறும் மகத்தான இறுதிப்போரில் லட்சோபலட்சம் மக்கள் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  நான் அவர்களில் ஒருவன்.  அவர்களில் ஒருவனாகவே என்றும் இருப்பேன்.  சுதந்திரத்திற்கான இறுதிப்போரில் ஒரு வீரனாக இருப்பது எவ்வளவு மகத்தான கொடுப்பினை?”  என்று மே நாளின் லட்சியக் வேட்கையில் பூசிக் மகிழ்வார்.  சிக்காகோவோ,  செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கோ, சென்னை ஆவடியோ இடங்கள் தான் வேறு,  சிவப்பின் வர்க்கத்துடிப்போ ஒன்று.  “போராடு… செங்கொடி ஏந்தி போராடு..”  என்று  முழங்கிட்டு துவங்கிய ஆவடி மே நாள் நிகழ்வுகள், இந்த வரலாற்றின் ‍தொடர்ச்சியாய்,   பார்த்த அனைவரையும் தனது பாட்டாளிவர்க்க விடுதலை முழக்கத்தில் இழுத்துக்கொண்டது.

சிக்காகோவோ, செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கோ, சென்னை ஆவடியோ இடங்கள் தான் வேறு, சிவப்பின் வர்க்கத்துடிப்போ ஒன்று. “போராடு… செங்கொடி ஏந்தி போராடு..” என்று முழங்கிட்டு துவங்கிய ஆவடி மே நாள்

பேரணி தொடங்கிய இடத்தில்,  ஒரு நாளின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக உதட்டில் குவித்திருந்த அந்த மூத்த தோழரை பார்க்க முடிந்தது.  சி.பி.எம்.  அமைப்பிலிருந்து விலகி வந்த கடந்தகால செயல்பாட்டாளர் அவர்.  ‘மே நாள் வாழ்த்துகள் தோழர்!’ என்று இறுகப்பற்றிய கரத்தில் என்ன ஒரு வர்க்கப்பாசம்!  இதயத்தில் பைபாஸ் ஆபரேசன் செய்து முடித்து, சில மாதங்கள்தான் ஆகியிருக்கும் அவருக்கு.  என்னங்க பேரணியில் நடக்க முடியுமா? என்று நான் அக்கறை காட்ட, ‘பைபாசில்’ நடந்து வர்க்கத்துக்காக முழக்கமிடும் உற்சாகத்தில்,  பைபாஸ் ஆவது?  ஆபரேசனாவது? வர்க்கத்துக்காக வாளாவிருப்பதுதான் நோய்..  என்பதுபோல் அவரது உணர்ச்சி நடை அரசியல் காட்டியது.  பாடுபட்டு பாடுபட்டு பஞ்சடைந்த விழிகளும்,  பசி நிரம்பிய வயிறுகளும் போராடிப் போராடி வாங்கித் தந்த உரமான நாள் அல்லவா இந்த மே நாள்!  ஒருவர் போயின் ஒருவர் வருவர்,  ஒருவர் மாயின் ஒருவர் எழுவர், எனும் கம்யூனிச கால் தடத்தின் அரசியல்  நடையில் ஆவடி வீதிகள் ஆக்சிஜன் பெற்றன..

கக்கத்தில் இரண்டு குடம், கைகளில் இரண்டு குடம் என்று எதிர்பட்ட பெண்ணிடம் எப்படி மே நாள் துண்டறிக்கைய‍ை கொடுப்பது என்று தயங்கிய தோழரிடம்,  “இந்த குடத்துல போடுங்க, தண்ணிதான் இல்ல,  இதாவது ரொம்பட்டும்!”  என்று போகிற போக்கில் அந்த அம்மா உதிர்த்த வார்த்தைகள் இலக்கியமா! இலட்சியமா!  மக்களிடம் எதார்த்தத்தில் வெளிப்படும் மகத்தான உணர்வுகளை எந்த இலக்கியவாதியின் கற்பனையில் படைக்க முடியும், மே நாள் பேரணியில் கிடைத்த மேலான அனுபவம் இது.  அந்த தோழரின் நடவடிக்கை ஒரு துண்டறிக்கையை கொடுப்பது ‍போல தெரியவில்லை.  கையில் இருக்கும் குழந்தையை இன்னொருவர் கைக்கு மாற்றித்தரும் உயிரோட்டமானதாக இருந்தது.  உடல்நலம் குன்றிய நிலையிலும் அந்த மூத்த தோழரின் மே நாளின் லட்சிய உணர்வுகளை மக்களிடம் கையளிக்க காட்டிய உற்சாகம் யாவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று!

மக்களிடம் பழக ஒரு கம்யூனிஸ்டுக்கு என்ன கூச்சம்.  முன்பின் தெரியாதவர்களிடம் ”தம்பி இந்தாங்க நோட்டீச படிச்சு ஆயாகிட்ட சொல்லுங்க, அம்மா படிச்சு பாத்துட்டு வீட்டுக்காரர் வந்தோன்ன கொடுங்க”.. என்று அவர் துண்டறிக்கையை ஒவ்வொருவரிடமும் கொடுத்தவிதம் வர்க்கம் கலந்த வாஞ்சை அது.  நான் சற்று அவரை உற்றுப் பார்த்து ரசிக்க,  “என்ன தோழர், எல்லாமே நம்ப வர்க்கம்தான்,  ஏழைங்கள இப்ப நாம ஏழைன்னு உணர வைக்கவே போராடவேண்டி இருக்கு!  ஒவ்வொருவரும் தன்ன ஒரு முதலாளின்னு நெனைக்கும்படி முதலாளித்துவம் மயக்கி வச்சிருக்கு!  நீயும் உழைக்கும் வர்க்கம்னு இந்த  மாயச்சுவரை உடைக்கறதுக்கும் நாம போராட வேண்டியிருக்கு,  இந்த துண்டறிக்கை அதச்செய்யும்! என்று அவர் மக்களிடம் தாவித் தாவி இன்முகத்தோடு தருவதில் நாம் பெறுவதற்கும் பல கண்ணோட்டங்கள் இருக்கிறது.  மே நாளில் கலந்து கொண்டால் மட்டும் போதுமா? மே நாளை மக்களிடம் கலக்கும் மகோன்னத கம்யூனிச  உழைப்பு  வேண்டும். அந்த போல்சவிக் புத்துணர்ச்சியை ஆவடியில் காட்டியது கம்யூனிசம்.  பொங்குமாங்கடலின் ஆழத்தை தன்னடக்கத்தோடு தரையில் தழுவிக்கொள்ளும் உணர்ச்சி அது.  கட்டாயம் நாம் கைகொள்ள வேண்டிய உணர்ச்சியும் அது!

பேரணியில் உற்சாகமாக பெண்கள்

நூற்றுக்கணக்கில் தோழர்கள்,  தொழிலாளர்கள், பீறிட்டெழும் முழக்கத்தில் கைகளை உயர்த்தும் பெண்கள், பறை இசையுடன் அசைந்தாடும் சிறுவர்கள், செங்கொடிகள், பதாகைகள்.. வீதி இருமருங்கிலும் வியப்போடு பார்த்த விழிகள் முழக்கத்தின் முடிவில் உவப்போடு கலந்தன.  “மக்களின் வாழ்வுரிமையைக் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம்!  பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஆர். எஸ். எஸ். – பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!  பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கட்டியமைப்போம்!  என்ற மையமான முழக்கத்தின் வீச்சோடு ‍பேரணி நியைவுற்ற ஆவடி நகராட்சி கட்டிடம் அருகே நிகழ்ந்த ஆர்ப்பாட்ட மேடையை நோக்கி மக்களின் கவனம் குவிந்தது.  மே நாள் வாழ்த்து சொன்ன மோடி அரசின் அருகதைக்கு உகந்த அரசியல் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பேச்சாளர்கள்.  கருத்துரையில் கலந்துவிட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சவாரி போறியா என்று கேட்ட சக தொழிலாளியிடம் இல்ல  தோ பாரு சரியான போடு! இவுங்க என்னா கம்யூனிஸ்டு? என்று ஆர்வம் மிக கேட்க,

ஆவடி மேதினப் பேரணியின் ஒரு பகுதி

அருகே வந்த தோழர் ஒருவர் அமைப்பை பற்றி விளக்கினார்.  ஆயிரக்கணக்கில் நாற்காலிகளைப்  போட்டாலும் மக்களால் அனாதையாக்கப்படும் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் மத்தியில்,  உழைப்பின் வலி மறந்த பல தொழிலாளர்கள் நெடுநேரம் நின்றுகொண்டே தமக்கான வர்க்க அரசியலில் ஒன்று கலந்தனர்.  பேரணி மட்டுமல்ல, ஆர்ப்பாட்ட மேடை நிகழ்வுகள் வரைக்கும் கூடி நிற்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் அயராது பணியாற்றிய பெண் தோழர்களை பார்த்து இருவரில் ஒருவர், எங்க போனாலும்  ஒரு டம்ளர் தண்ணீ கேட்டா மதிச்சு கொடுக்க ஆளில்ல,  இங்க பார்த்தா அசறாம அந்த பொண்ணு போய் எடுத்து வந்து எடுத்து வந்து அலுப்பு பாக்காம தண்ணி தருது!  என்று வியக்க, ஏய்! சிவப்பு சட்ட  ஆளுங்கடா இவங்க என்று ஒற்றை வரியில் மக்களுக்கான உழைப்பு யாரிடம் கிடைக்கும் என்பதை புரியவைத்தார் இன்னொருவர். கம்யூனிசம் என்பது அரசியல் சித்தாந்தம் மட்டுமல்ல ஒரு புதிய சமூக அமைப்பின் பண்பாட்டின் தரம் என்பதை புரியவைக்கும் உழைப்பின் உரைகல் இது.  மே நாள் உருவாக்கும் அரசியல் பயன் மகிழ்ச்சியில் இதுவும் ஒன்றுதான்.

மோடி, எடப்பாடி, பன்னீரு.. என சிறப்புரை நடப்பு மக்கள் விரோத ஆட்சியாளர்களின்,  கட்சிகளின் யோக்கியதையை கிழித்து தொங்கவிட அங்கு செட்டு சேர்ந்திருந்த அ.தி.மு.க. கரைவேட்டிகளில் ஒருவர் என்னன்ணே! இந்த வாங்கு வாங்குறாங்க, என்ன குரூப்பு! என்று ‘அண்ணனை’ கேட்க, ஏய்! இவங்கதான்டா டாஸ்மாக்க உடைக்கிறவங்க..  மக்கள் அதிகாரம்னு பாட்டெல்லாம் பாடி அரஸ்ட் ஆனாரு பாரு அதெல்லாம் இவங்கதான் பயப்பட மாட்டாங்க.. பின்னே! சரியாத்தானே பேசுறாங்க.. என்று போராடுற குரூப்பு என விளக்கினார் அண்ணன்.  மே நாளின் இலக்கு என்பது குறிப்பிட்ட பொருளாதார கோரிக்கைகள் மட்டுல்ல,  நிலவும் முதலாளித்துவ அரசியலமைப்பிற்கு மாற்றாக பாட்டாளிவர்க்கம் தனது அதிகாரத்தை நிறுவிக்கொள்ளும் அரசியல் தலைமை கொடுப்பது என்பதும்தான்.. அதை அரசியில் விவாதக்களத்தில் எழுப்பும் விதத்தில் மே நாளின் நிகழ்வு பங்காற்றுவதை பார்க்க முடிந்தது.

நிகழ்ச்சிகள் முடிந்து புறப்பட்டு சென்றுக்கொண்டிந்த போது ஒரு தள்ளுவண்டிக்காரர்  என்னங்க அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா என்றார் ஏக்கத்தோடு.  இது வெறும் கூட்டம் தொடர்பான ஏக்கம் மட்டுமல்ல.  இந்தக் ‘கூட்டம்’ நமக்குத் தொடர்பானது எனும் வர்க்க உணர்விலிருந்து பிறக்கும் ஏக்கம் அது!  அனாதையாக்கப்பட்டுள்ள  உழைக்கும் மக்கள் காணத்துடிப்பது கம்யூனிசம் என்பதற்கான ஏக்கப்பார்வை அது!   மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பது மட்டுமல்ல,  மக்களின் தேவைக்குரியவர்களாக நாம் என்ன செய்ய போகிறோம்..  எனும் சிந்தனையில் என்னுள் மே நாள் தொடர்ந்தது…

– துரை. சண்முகம்

மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மே 2017

0

முப்பது வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகள்தான் முதலமைச்சர்களே சிகிச்சை பெறும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. இன்றோ தினக்கூலியில் வாழும் தொழிலாளிகளே தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. சிசு மரணமும் சிகிச்சையின்றி மரணமும் அரசு சுகாதார மையங்களின் யோக்கியதையைக் காட்டுகின்றன.

இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இக்கல்லூரிகளின் மருத்துவமனைகளில் சோதனைச்சாலை எலிகளாகும் பாக்கியம் மட்டும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவின் பில்கேட்ஸ் மெலிந்தா அறக்கட்டளையும் கேட்பாரின்றி இந்திய மக்களை எலிகளாக சோதித்து வருகிறது.

இந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கும் மலிவு விலை புற்று நோய் மருந்துகளை செத்து மடியும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப இயலாது. ஏனெனில் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியிருக்கும் வணிக காப்புரிமை ஏழை நாடுகளின் எமனாக நிலைபெற்றுவிட்டது.

அரசு நிதியை பெறுவதற்காக ஏழை மக்களின் கண்களை பறித்த ஜோசப் கண் மருத்துவமனை இருப்பது ஆப்பரிக்காவில் அல்ல, தமிழகத்தில். தரத்தின் சின்னமாக காட்டப்படும் அப்பல்லோ மருத்துவமனைதான் புதுதில்லியில் ஏழைகளின் சிறுநீரகங்களை பறிப்பதிலும் ஈடுபடுகிறது.

அமெரிக்காவிலோ உங்கள் காப்பீடு குறைவு என்றால், தொகைக்கேற்ப கையில் உள்ள ஐந்து விரல்களுக்கு பதில் இரண்டு விரல்களுக்கு மட்டும் சிகிச்சை கிடைக்கும். தமிழகத்திலோ அரசின் காப்பீடு அட்டை. தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் அள்ளும் இந்தப் பணம் மக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் வரிப்பணம்.

மராத்திய விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் மிக முக்கியமான காரணியாக கண்டறியப்பட்டிருக்கிறது தனியார் மருத்துவக் கொள்ளை தோற்றுவிக்கும் கடன். உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயம் என்பதன் உண்மையான பொருள்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

மருத்துவ எமன் ! – புதிய கலாச்சாரம் மே 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
  • இந்தியக் குழந்தைகளைக் கொல்லும் தனியார்மயக் கிருமி !
  • இப்படி ஒரு மருத்துவரை சந்தித்திருக்கிறீர்களா ?
  • இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !
  • ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
  • மருத்துவர் – தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !
  • பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
  • ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி PRPC சாதனை
  • சிப்ரோபிளாக்சசின்
  • அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ?
  • SICKO மைக்கேல் மூரின் ஆவணப்படம் !
  • இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள்
  • உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு !

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 1

0

நீலமலை

‘போராடு செங்கொடி ஏந்திப் போராடு’ என்ற முழக்கத்தின் கீழ் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
– மே தின தியாகிகளால் குருதி சிந்தி பெறப்பட்ட 8-மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் இன்று இல்லாத போது, இழந்த உரிமைகளைப் பேராடிப் பெறாமல் மே தினத்தை கொண்டாட இயலாது.  எனவே செங்கொடி ஏந்தி புரட்சிகர சங்கங்களில் இணைந்து அனைத்து ஒடுக்குமுறை, சுரண்டல்களை ஒழித்துக்கட்டப் போராடுவோம்.புதிய ஜனநாயகம் படைப்போம் !

–  என்று தொழிலாளர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக நீ.அ.தொ.ச. மாவட்ட பொருளாளர்  தோழர் விஜயன் தலைமையில் மாவட்ட செயலாளர் தோழர் பாலன் கொடியேற்றினார்.  மே தின தியாகிகளை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து தோழர். விஜயன் அவரது தலைமை உரையில் மே நாள் தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்த வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராகிய மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் தமது உரையில், இன்று நாடு முழுவதும் பெருகிவரும் போராட்டங்கள், கோரிக்கைகளை தீர்க்க முடியாமல் இந்த அரசுகளும் அரசுக் கட்டமைப்பும் தோற்றுப்போய் நிலைகுலைந்து உள்ளது. உரிமைகளை பெறவும், பிரச்சனைகளை தீர்க்கவும் இந்த அரசு கட்டமைப்பை நம்பிப்பயனில்லை.  அவற்றை தூக்கியெறிந்து மக்கள் தங்களுக்கான அதிகாரங்களை கையிலெடுக்க வேண்டும்.  அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நீ.அ.தொ.ச. மாவட்ட துணை செயலாளர் தோழர் ராஜா உரிமைகளை இழந்து விட்டு மே-நாள் கொண்டாடுவதால் பயன் இல்லை. சுரண்டும் முதலாளிகளே இன்று உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சொல்கிறார்கள்.  விடுமுறை அளித்து டூர் போக டிக்கட்டும் தருவது முரணாக உள்ளது. இந்த சூழ்ச்சியில் பலியாகாமல் போராடுவோம், பட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்றார்.

சிறப்புரை ஆற்றிய மாவட்ட செயலர் தோழர் பாலன் போராட்டத்தால் தீர்வு கிடைத்ததா என்று சிலர் கேட்கின்றனர். போராடாமல் இன்று நம்மிடமுள்ள எந்த உரிமைகளும் போராடாமல் கிடைத்ததில்லை. அதற்கு ஒட்டுமொத்த தீர்வாக செங்கொடி ஏந்தி கம்யூனிச புரட்சிகர அரசியலின் வழிகாட்டலில் போராட வேண்டும்.  அதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன.  எனவே போராடுவோம் என்று முடித்தார்.

முடிவில் தோழர் விஜயன் நன்றியுரையாற்றினார். கொண்டாட்டத்தை மறுத்து போராட்ட நாளாக மாற்றிய இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி. தொடர்புக்கு – 90474 53204.

***

சென்னை திருவெற்றியூர்

திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் தோழர் சதீஷ் மே நாள் உரையாற்றினார்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவொற்றியூர்

***

காஞ்சிபுரம்

மே தினத்தில் சூளூரைப்போம். போராடு செங்கொடி ஏந்தி போராடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் பு .ஜ. தொ .மு. சார்பாக மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று 5 மணிக்கு வீர வணக்கத்துடன் பேரணி துவங்கியது சிறுநகர் இசை சமர் கலைக்குழுவினரின் பறை இசையுடன் பேரணி புறப்பட்டது.

மே தின தியாகிகளுக்கும் உழைக்கும் மக்கள் விடுதலைக்கு போராடி உயிர்நீத்த புரட்சியாளர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் முழக்கமிட்டும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராக போராட வேண்டி விண்ணதிர முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று பேசிய மாவட்ட தலைவர் தோழர் சரவணன் மே தின வரலாற்றின் நோக்கத்தை நினைவுகூர்ந்து முதலாளித்துவம் தொழிலாளர்களின் உரிமையும் மொத்த சமுதாயத்தையும் சூறையாடுவதை ஒப்பிட்டு இதற்கு எதிராக போராட வேண்டும் எனஅறைகூவி தலைமை உரையை நிறைவு செய்தார். இதையடுத்து மேநாள் உரையாற்றிய மாவட்ட செயலாளர் தோழர் சிவா பேசுகையில் மே நாளில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பணியென்பது மறுகாலனியாக்கத்ததை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி உரையை நிறைவுசெய்தார். மாவட்டதுணை தலைவர் தோழர் ஏழுமலையான் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் புஜதொமு, இணைப்பு சங்கத்தினர், புமாஇமு, மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களுடன் 165 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். இவ்வார்பாட்டம் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்றது. தொடர்புக்கு :8807532859.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் தொடர்புக்கு : 8807532859

***

வேலூர்

மே 1 உலக தொழிலாளர்கள் தினத்தில், வேலூரில் பு.ஜ.தொ.மு சார்பில், மத்திய, மாநில அரசுகளை, மாலை 4.00 மணியளவில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே, “போராடு செங்கொடி ஏந்தி போராடு” என்ற தலைப்பின் கீழ் மாவட்ட செயலாளர், தோழர் சுந்தர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ம.க.இ.க. தோழர் வாணி, பு.ஜ.தொ.மு இணை செயலாளர் தோழர் சரவணன், பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் முகுந்தன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். முழக்கங்கள், பாடல்கள், பாடப்பட்டது. முழக்கங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பேசுகையில்…

”மே-தினம் என்பது இந்த ஆளும் வர்க்கமும், ஊடகங்களும், ஓட்டுக்கட்சிகளும் சொல்கின்ற மாதிரி கொண்டாட்ட நாள் இல்லை, இது பல தொழிலாளிகள் ஈன்னுயிர் இழந்து 8-மணி நேர வேலை, 8-மணி நேர கேளிக்கை, 8-மணி நேர ஒய்வு, என்ற உரிமை பெற்று தந்த நாள். ஆனால் இன்று அந்த உரிமைகள் ஏதும் இன்றி நசுக்கப்பட்டு கொன்டு இருக்கிறோம். எனவே அந்த உரிமைகளை மீட்கும் நாளாகவே போராட்ட நாளாகவே இன்று இருக்கிறது.”

”அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றாலும் அதை தலைமை இல்லாமல் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. அதற்கு புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரள வேண்டும்”

”8-மணி நேர வேலை என்பது இப்போது எங்கும் இருப்பதில்லை, ஏன் இங்கிருக்கும் காவல் துறையினருக்கே இந்த நிலைமை தான், அவருக்கும் இந்த செங்கொடி போட்ட தோழர்கள் தான் போராட வேண்டியிருக்கிறது”

”இந்தியாவிலயே அதிகமாக போராட்ட நடைபெற்ற மாநிலம், தமிழ்நாடு தான் விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், டாஸ்மாக்கிற்கு எதிராக பெண்களின் போராட்டம், I.T. ஊழியர்கள் என அனைத்து தரப்பினர்கள் மீதும் இந்த பாசிச அரசு அடக்குமுறையை செலுத்துகிறது”

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள், உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வேலூர்

***

திருவள்ளூர்

மே நாளையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் மே நாள் உரையாற்றினார்.

முன்னதாக, கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் துவங்கி, இரட்டம்பேடு சாலை வழியாக தபால் நிலையம் வரை பேரணிக்கும், தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்துக்கும் அனுமதி வழங்கியிருந்தார், கும்முடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் டில்லிபாபு. ஆனால் மே 01 காலையில் ‘திடீரென’ காவல் சட்டம் 30(2) அமுலுக்கு வந்து, திடீரென பேரணிக்கு அனுமதி மறுத்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்துவிட்டார் காவல் ஆய்வாளர் டில்லிபாபு. அனுமதியளித்தவரே, அவசர அவசரமாக எழுத்து மூலம் அனுமதி மறுத்ததற்கான காரணத்தை பெரிய ஆராய்ச்சி செய்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை என்றாலும் அனுமதி மறுப்பதற்கு புரட்சிகர அமைப்பு என்ற தகுதியே போதுமானது என்பதை உழைக்கும் மக்களுக்கு தாமாகவே உணர்த்தி விட்டார் காவல் ஆய்வாளர்.

மே 1 உருவான நாள் தொட்டு இன்று வரை தொழிலாளர்களின் பிரச்சனை தீரவில்லை, தீர்க்கவும் வக்கற்று தான் இந்த அரசமைப்பு உள்ளது. அரசை நம்பிப் பயனில்லை. தொழிலாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டுமெனில் புதிய ஜனநாயகப் புரட்சி தான் தீர்வு என்றும், அதற்கு தொழிலாளிகள் புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு.வில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்து தனது தலைமையுரையை நிறைவு செய்தார், மாவட்டச் செயலர் தோழர் விகந்தர்.

முழக்கங்களைத் தொடர்ந்து பேசிய தோழர் ம.சி.சுதேஷ்குமார், மே நாளின் முக்கியத்துவம் மறக்கடிக்கப்பட்டு, மேநாள் ஒரு கொண்டாட்ட நாளாகவும், விடுமுறை நாளாகவும் தொழிலாளிகளை பார்க்கும் வண்ணம் சமூகம் சீரழிந்துள்ளது என்று துவங்கி, மோடி அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தினார். மூன்று திரிசூலக் கொள்கைகள் என்ற பெயரில் மோடி அரசு மக்களின் மீது நடத்தும் தாக்குதலை நாம் முறியடிக்க வேண்டும். தனியார்மய, தாராளமய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை தொழிலாளிகள் மீதான தாக்குதல், அடக்குமுறை தொடரும். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை தகர்க்காமல் தொழிலாளி வர்க்கத்துக்கு விடிவில்லை. அதை ஒரு புரட்சிகர தொழிற்சங்கத்தினால் தான் தகர்க்க முடியும் என கூறி அதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள், தொழிற்சங்க ஜான்பவான்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், லட்சக்கணக்கில் தொழிலாளிகளை உறுப்பினராக வைத்திருப்பவர்கள் யாரும் கும்முடிப்பூண்டியில் மே நாள் கூட்டம் நடத்தாத நிலையில், புரட்சிகர அரசியலுக்கே உரிய தன்மையோடு விண்ணதிரும் முழக்கங்களுடன்    நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளைக் கொண்டு நாம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பகுதி மக்கள் சிறுகடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

அனுமதி மறுப்பு கடிதம்

திருவள்ளூர் மாவட்டம் ” கும்மிடிப்பூண்டி உட்கோட்டம். கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் – பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான காவல்துறை செயல்முறை உத்தரவு

Present: P. டில்லிபாபு
காவல் ஆய்வாளர்,
கும்மிடிப்பூண்டி உட்கோட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்.

Pettioner: திரு.எம். விகேந்தர்,(மாவட்ட செயலாளர்)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்

  1. தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள ஊர்வல பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கிடும் உத்தரவு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பெறவேண்டும்.

  2. கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்தில் காவல் சட்டம் 30(2) அமுலில் உள்ளது.

  3. எனவே தாங்கள் மனுவானது அனுமதி மறுக்கப்படும் நிலையில் உள்ளது.

  • மேலும் தாங்கள் நிகழ்வினை குறிப்பிட்டுள்ள காரணங்களால் அனுமதி மறுக்கப்படுகிறது.

  • மாவட்ட காவல் கண்காணிப்பாளின் ஊர்வலம் செல்வதற்கான அனுமதியும் பெறவில்லை.

  1. எனவே இன்றைய நாளில் தாங்கள் நிகழ்வினை நடத்திட விரும்பினால், ஊர்வலமாகமோ, பேரணியாகவோ செல்லாமல், கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் அருகில் வாகன போக்குவரத்திற்கு இடையூறின்றி தெருமுனை பிரச்சாரம் மட்டுமே செய்வதென முடிவெடுத்தால் அனுமதிக்கு பரிசிலனை செய்யப்படும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

  2. மீறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்படிக்கு
இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்
கும்மிடிப்பூண்டி

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்

***

திருவாரூர்

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

தஞ்சை-திருவாரூர்-நாகை மாவட்டங்கள்

குறிஞ்சிப்பாடியில் தூளான டாஸ்மாக் – நேரடி ரிப்போர்ட்

0

டலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள அன்னதானப்பேட்டை கிராமத்தில், அரசு சாராயக்கடை மக்கள் குடியிருப்புகளோடு கலந்து 22 கிராமங்களுக்கு ஊத்திக் கொடுக்கும் ஊழியத்தை செய்து வருகிறது. இந்த கிராமத்தில் குடியால் ஏராளமான வாகன விபத்துகளும், மரணங்களும் குடும்பங்களில் பிளவுகளும் ஏற்பட்டு குழந்தைகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது. விவசாயிகள் மாணவர்கள்-இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் குடிகாரர்களாக மாறி  சீரழிந்து உள்ளனர்.

அன்னதானபேட்டை டாஸ்மாக்கை முற்றுகையிடும் பெண்கள். படம் நன்றி: விகடன்

அரசு சாராயக்கடைக்கு இடம் கொடுத்தவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் இந்த கடையை அகற்றுங்கள் என மனு அளித்தார் உடனே அவரின் கணவனின் சிந்தனையை இலவச மதுவால் நிரப்பி, அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கி, அவரை வைத்தே அவரின் மனைவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளது அரசு. குறிஞ்சிப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தற்போது ஏறக்குறைய 50 கிராமங்களுக்கு மேல் விதவிதமான கார்களிலும், ஆயிரக்கணக்கான மொட்டார் சைக்கிள்களிலும் பேருந்துகளிலும் இந்த பகுதிக்கு படையெடுக்கின்றன.

பாண்டிச்சேரியில் உள்ள  கன்னிக்கோயில் தமிழக குடிகாரர்களின் சொர்க்க பூமியாகும். ஆதலால் அன்னதானப்பேட்டையை கன்னிக்கோயில் என்றே அழைத்து ஆனந்தம் அடைகின்றனர். பேருந்துகளில் பயணச்சீட்டும் அப்படியே கேட்கப்படுகிறது. இரவு பத்துமணிக்கு மேல் குடிமகன்களின் அவஸ்தைகளைப் புரிந்து கொண்ட கடை ஊழியர்கள், பாச்சாரப்பாளையத்தை சார்ந்த அதிமுக கட்சியை சார்ந்த தங்கமணியை கள்ள வியாபாரியாக்கி பார் நடத்த அனுமதியும் கொடுத்து  விடிய விடிய சாராய விற்பனை ஓகோ என நடக்கிறது. வெய்யில் கொடுமை தாங்காமல் வீட்டிற்குள் படுக்க முடியவில்லையே என குழந்தைகளோடு வெளியில் படுத்து உறங்கினால், விடியும் வரைக்கும் எவர் எவரோ தெரியாத முகங்கள், பாட்டில் இருக்கா இல்லையா என்று விசாரிப்பதால் பயத்தில் யாரும் தூங்குவதே கிடையாது.

இரவில் வெளியில் தூங்கும் குழந்தைகளிடமும் தெருவில் விளையாடும் குழந்தைகளிடமும் அவர்களின் கழுத்தில் கிடந்த தங்க தாயத்துகள் இதுவரை நான்கு குழந்தைகளிடம் குடிகாரர்களால் அறுக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிறுத்தத்திற்கும் சாலை ஓரத்தில் உள்ள கடைகளுக்கு, பெண்களையும் மாணவிகளையும் குழந்தைகளையும் அனுப்புவதற்கு மொத்த கிராமமும் பயப்படுகிறது. போதை குறைவாக உள்ள மதுபாட்டில்களில் ஆன்சை ஊறவைத்து அதன் சாரை ஊசியின் மூலமாக அந்த பாட்டில்களில் செலுத்தி அதிக விலைக்கு விவரம் அறியாதவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் ஏராளமான கொடுமைகளில் சிக்கிக்கிடந்த இப்பகுதிமக்கள், மாவட்ட ஆட்சியர் தான் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்குகிறார் என்பதை அறியாமல் அவரிடமே 5 முறை மனுகொடுத்தனர்.  கடலூர் குடிகாட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலரிடமும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த பயனும் இல்லை. குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக MLA சபாராஜேந்திரனிடம் டாஸ்மாக் அகற்றுதல் தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது. நான் அதிகாரிகளை உடனே உங்களிடம் பேச அனுப்பி வைக்கிறேன் என்று உறுதியளித்தார். மறுநாள் டாஸ்மாக்கை நேரில் வந்து பார்த்துவிட்டு ஆமாம் டாஸ்மாக் ஊருக்குள் தான் இருக்கிறது என வாஸ்கொடகாமா போல கூறிவிட்டு சென்றவர்தான் இன்றுவரை அவரின் பேச்சு மூச்சு எதுவும் டாஸ்மாக்கிற்கு எதிராக இல்லை. இறுதியாக  அதிகாரிகளை சந்திக்கச் சென்ற மக்களிடம் நீங்கள் கடை இருக்கக் கூடாது என்கிறீர்கள், உங்க ஊரில் உள்ளவர்கள், கடையால் எந்த பிரச்சனையும் இல்லை, யாருடைய வாழ்க்கையும் நாசமாக வில்லை என்றும் எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்துள்ளனர். ஆதலால் உங்கள் ஊரில் உள்ளவர்களிடம் பேசுங்கள் என மக்களுக்குள் மோதலை உருவாக்க முயற்சித்துள்ளனர்.

அரசின் கள்ள வியாபாரியும் பார் உரிமையாளருமான  தங்கமணி என்பவன்  டாஸ்மாக்கை மூடச் சொல்லி என்னுடைய பொழப்பை ஏன் இவளுங்க கெடுக்குறாளுங்க என்றும், கணவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வராததால் படுக்க ஆள்கிடைக்கல என்பதால் தான் இவளுங்க கடைய மூடச்சொல்லி அங்கும் இங்கும் அலையராளுங்க என்று திமிராக பேசி வந்தார். இந்த அயோக்கியர் கள்ளத்தனமாக மதுவை விற்பனை செய்வது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் மக்கள் புகார் செய்தபோது, அங்கிருந்த ஆய்வாளர் ரேவதி உங்க ஊரே ஒரு அம்மாத்தோப்பு  (குறிஞ்சிப்பாடியில் உள்ள அம்மாத்தோப்பு விபச்சாரம் நடைபெறும் பகுதி என கூறப்படுகிறது )  அதுல டாஸ்மாக்கு பெரிய பிரச்சனையாமா, உங்க ஊரில் எவடி யோக்கியம், முதல்ல உங்க ஊரில் உள்ளவளுங்களை திருத்துங்க தங்கமணியை திருத்தத் வந்துட்டாளுங்க என புகார்கொடுக்கச் சென்ற பெண்களைக் கேவலப்படுத்தினார். இதையெல்லாம் மக்கள் மனம் நொந்து வெளிப்படுத்தினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் பெண்கள். படம் நன்றி : தி இந்து

அதிமுக தங்கமணி என்ற பொறுக்கிக்கு ஒரு வரலாறு உள்ளது. இவர் கடந்த காலத்தில் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. இதே வடலூர் போலிஸ் தான் இவன் கழுத்தில் சாராய கேன்களைத் தொங்கவிட்டு புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இந்த மகா உத்தமனுக்கு தான் இதே காவல் நிலையம் சலாம் போடுகிறது.

இதையெல்லாம் சகிக்க முடியாத மக்கள் கடந்த மார்ச் மாதத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸ்காரர்கள் வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டே என்ன பிரச்சனை என திமிராக விசாரித்தனர். அதிகாரிகள் கூடிய சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பிறகு நாளுக்கு நாள் அரசின் சாராயக்கடையால் பிரச்சனைகள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே இருந்தன. பல குடும்பங்களில் கணவன் மனைவிகளுக்கு இடையில் பிரச்சனைகள் பெருகிக் கொண்டே இருந்தன. மக்களும், போராடும் பெண்களின் கணவன்மார்களும் உங்கள் போராட்டம் என்ன ஆச்சு கடையை மூடிட்டீங்களா என ஏளனமாக பேச துவங்கினர்.

பொறுத்துக்கொள்ள முடியாத பெண்கள் சுமார் 500 பேர் திரண்டனர் அரசின் சாராயக்கடைக்கு எதிராக எந்தமாதிரியான போராட்டத்தை நடத்துவது என திட்டமிட்டனர். கண்டிப்பாக எந்த கட்சிகளையும் நாம் இணைத்துக் கொள்ளக் கூடாது, மீறி யாரேனும் உள்ளே நுழைந்தால் உடனே கட்சிகளை வெளியேற்ற வேண்டும் என தீர்மானித்தனர். பிறகு ஒருவர் சாலைமறியல் செய்யலாம் என்றார். ஒரு பெண்மணி கடையை முற்றுகையிட்டு அமரலாம் என்றார். சிலர் கடையை அடித்து நொறுக்கலாம் என்றார்கள். இறுதியாக நம்மைக் கேவலப்படுத்திய அரசுக்கு பாடம் புகட்டும் விதமாக 5 பாட்டில்களை மட்டும்  உடைப்போம் கடையின் கதவை இழுத்து பூட்டுவோம், சாலைமறியலும் செய்வோம் என்று மக்கள் முடிவு செய்தனர். இப்படி பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் 27.04.2017 அன்று காலை போராட்டம் தொடங்கப்பட்டது.

அரசின் சுரண்டலுக்கு  ஆளாக்கப்பட்ட பெண்கள், பார்ப்பனியத்தால் பின்னப்பட்டிருந்த அடிமைவிலங்கை உடைத்துக் கொண்டு வீறுகொண்டு வீதியில் இறங்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள் என உரக்க முழங்கினர், மொத்த குடும்பத்தினர்களையும் ஒன்று திரட்டினர். பேருந்துகளையும் வாகனங்களையும் மறித்தனர். நாம் தேடிச்சென்ற அதிகாரிகள் இப்போது நம்மைத்தேடி வரட்டும் என போராடிய பெண்கள் இரண்டாக பிரிந்து ஒரு பிரிவினர் சாராயக் கடையை முற்றுகையிட்டனர் அப்போது விற்பனையாளர் பாட்டிலை உடைத்து ஒரு பெண்ணின் கையை கிழித்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற பெண்கள்  கடையில் இருந்த 5 மது பாட்டில்களை மட்டும் முடிவு செய்தபடி உடைத்தனர், பிறகு கடையை இழுத்து பூட்டினர். அப்பகுதி மக்களின் குரல் விண்ணைமுட்டும் அளவிற்கு ஆர்ப்பரித்து இச்செயலை வாழ்த்தி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.  மற்றொரு பிரிவினர் சாலையை மறித்து கடையை மூடச்சொல்லி முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். வர்க்கப் பாசம் பொத்துக்கொண்டு அரசின் சாரயக் கடையை  பாதுகாக்க வந்த போலீசு ஒழுங்கா எல்லோரும் ஓடிவிடுங்க இல்லன்னா ரிசர்வ் போலீசை வரவழைத்து எல்லோரையும் உதைத்து கைது செய்வோம் என மிரட்டியது. போலிசின் மிரட்டலுக்கு அஞ்சாத மக்கள் முற்றுகையை விளக்கிக் கொள்ளாமல் நெஞ்சுரத்தோடு நின்றனர்.

காவல்துறையின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களை போலீசு மிரட்டியது. போராடிய இளைஞர்களை போலீசார் வீடியோ எடுத்தனர். எதற்கு சார் பசங்கள படம் எடுக்குறீங்க? நீங்க இப்படி செய்தா நாங்க பயந்துடுவோமா அந்த கட்டத்தை எல்லாம் நாங்க தாண்டிட்டோம் என பதிலளித்தனர் பெண்கள். இவர்களோடு ஏராளமான ஆண்களும் திரண்டிருந்தனர். இந்த கடை தான் என் குடும்பத்தை அழித்தது. இது இல்லை என்றால் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்திருப்போம் என்று கூறி சில ஆண்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

பஞ்சாயத்துத் தலைவரின் கணவரை போலீசு அழைத்து வந்து பேச வைத்தது. அவர் வந்து ஏம்மா உங்களுக்கு வேறு வேலை கிடையாதா இதல்லாம் உங்களுக்கு தேவையா என சொல்லி முடிப்பதற்குள் போனால் போகட்டும் என உன் பொண்டாட்டிக்கு ஓட்டுப் போட்டோம் இப்ப நீ வந்து எங்களுக்கு வேலை இல்லையா என்றா கேட்குற ஒழுங்கா கிளம்பிடு என மக்கள் விரட்டியதும் அவரின் உரையை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

கடையின் உரிமையாளர் வந்து எனது வீட்டில் கடை உள்ளது உங்களுக்கு என்ன கெட்டுப்போச்சி என மக்களிடம் சண்டையிட்டார் அவரை மக்கள் கண்டுகொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

வட்டாட்சியர் ஜான்சி ராணியுடன் பேச்சு வார்த்தை நடத்தும் உழைக்கும் பெண். படம் நன்றி : தி இந்து

பாமக-வை சார்ந்த ஒருவர் முன்னணியார் போல் காட்டிக் கொண்டு செயல்பட்டார். அவரிடம் பெண்கள் தயவு செய்து மக்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம், போராட்டக் களத்தைவிட்டு உடனே வெளியேறுங்கள் என விரட்டியடித்தனர்.

பிறகு தாசில்தார் வந்து நானும் உங்களைப் போன்று ஒரு பெண்தான். இவ்வளவு நாட்களாக இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக எனக்குத் தெரியாது. கண்டிப்பாக உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றுகிறேன், எனக்கு இந்த போராட்டம் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனையோடு உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உறவு முடிந்து விடாது. உங்கள் முகத்தை நானும் எங்களின் முகத்தை நீங்களும் நாளை பார்க்கணும். ஆதலால்  தயவு செய்து சாலையைவிட்டு விலகுங்கள் என்று சென்டிமென்டாக பேசியதும் மக்கள் சாலையைவிட்டு மறியலையும், முற்றுகையையும் விலக்கிக் கொண்டனர்.

கடையை மூடும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு அகலமாட்டோம் என உறுதியாக நின்ற மக்களிடம் வரும் மே மாதம் 19 தேதி மாலையுடன் இந்த கடையிருக்காது என்றும் இவ்வளவு பணம் மதிப்பு கொண்ட பொருட்களை வேறு இடத்தில் வைக்க இடம் தயார் செய்து கொள்ளும் வரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்  என தாசில்தார நைச்சியமாக பேசியதை மக்கள் நம்பி போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொள்வதாக முடிவு செய்தனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்…  என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது, அந்த மக்களின் அடுத்தக்கட்டப் போராட்டத்தின் தன்மையைப் பறை சாற்றியது.

இப்பகுதி மக்களின் போராட்டத்தைக் கேள்விப்பட்ட பிறபகுதி மக்கள் எங்களை ஏன் கூப்பிடவில்லை சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போம். அதிகாரிகள் சொன்னபடி கடையை மூடவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெருந்திரளாக போராடலாம் என போராட்டத்தை திருவிழாவாக பாவித்து தீர்மானம் போட்டு கலைந்தனர்.

இச்செய்தியை கேள்விப்பட்டு கடலூர் புமாஇமு தோழர் சத்தியகுமார் தலைமையில் இரு தோழர்கள் அடுத்த நாள் அப்பகுதிக்குச் சென்றனர். மக்களை சந்தித்ததும் டாஸ்மாக் போராளிகளுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த பிறகு குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது தாய்மார்களே விடாதீர்கள் விளக்குமாற்றால் அடித்து விரட்டுங்கள், என்ற  சுவரொட்டியை பகுதிகளில் ஓட்டியதும் மக்கள் மகிழ்ச்சியோடு பார்த்தனர். வீடுகளில் சுவரொட்டி போடலாமா என்று கேட்டால் மக்கள் திட்டுகிறார்கள், டாஸ்மாக்கிற்கு எதிரான சுவரொட்டி என்றால் இதை முன்னாடியே சொல்லவேண்டியது தானப்பா, ஒட்டுப்பா எந்த சுவற்றில் வேண்டுமானாலும் ஒட்டுப்பா என்றனர். மாணவர்கள் இளைஞர்கள் இதுபோன்ற சுவரொட்டிகளை நிறைய பார்த்துள்ளோம் ஆனால் யாருன்னுதான் தெரியாம இருந்தோம். கண்டிப்பாக அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு வருவோம் என அனைவரும் வீட்டு விசேஷத்திற்கு கூறுவதுபோல் மகிழ்ச்சியாக கூறினார்கள்.

பிறகு போராடிய மக்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதா என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டு போராடிய மக்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது என்றும், 20 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது 5 பாட்டில் உடைத்ததை 40 பாட்டில்கள் உடைத்தார்கள் என்றும் சாராயம் விற்பவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தார்கள் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

உங்களின் வழக்குகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமே இலவசமாக நடத்தும் என்று உறுதியளித்துவிட்டு, சுற்றுவட்டார மக்களை ஒற்றைக் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்று திரட்டுவோம், அரசின் அடக்கு முறைக்கும், அரசின் நைச்சியமான பேச்சிக்கும் இடமளிக்காமல் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு தயாராவோம் என்ற தோழர்கள் பேசினிர்.

இது எங்களின் மானப்பிரச்சனை இந்த கடையை மூடியே தீரனும், அதனால் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையே ஏற்பட்டாலும் இந்த கடையை மூடியே தீருவோம், டாஸ்மாக் இல்லையென்றால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது நாங்கள் செத்தால் தான் மதுக்கடையை மூடமுடியும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். கட்சிகளை இணைத்துக் கொண்டால் எந்த போராட்டமும் வெற்றிபெறாது கட்சிகள் தங்களின் சுய லாபத்துக்காகத்தான் செயல்படுகின்றன ஓட்டு மட்டுமே அவர்களின் நோக்கம் ஆதலால்  மக்களின் போராட்டமே தீர்வைத்தரும்.

மக்கள் கூறுவதைத்தான் அரசு செய்ய வேண்டும். இப்படி ஒரு நிலையை உருவாக்கினால் தான் நாம் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியும், அமைதியான கிராமத்தை உருவாக்க முடியும் என எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த திருமதி தையல்நாயகியும் ராஜேஸ்வரியும் கூறுவதை கேட்கும் போதும், வயது முதிர்ந்த நிலையிலும் என் தலைமுறை எப்படியோ போய்விட்டது, இந்த ஊரை அரசிடமிருந்து பாதுகாத்தாக வேண்டும் ஆதலால்  சுற்றுவட்டாரப் பகுதிகளை நான் திரட்டுகிறேன் நீங்கள் மட்டும் எங்களோடு இருப்பீர்களா என பெரியம்மா நாகவள்ளியம்மா கூறுவதையும் கேட்கும் போது,

புரட்சிகர காலகட்டங்களில் சமூக சூழல் மாற்றம் பெற்றுக்  கொண்டே இருக்கும் – என்ற தோழர் லெனினின் வார்த்தைகளே சாட்சியாக நிற்கின்றன.

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி

கடலூர் பகுதி

பண்ருட்டி : உறவுகளே தடுத்தாலும் மதுக்கடையை மூடுவோம் !

2

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள அங்குசெட்டிப்பாளையத்தில் இரண்டு மதுபானக் கடைகள் இருந்தன.  அந்த இரு கடைகளும் தற்போது மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடமாக,  மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒருவரின் கொல்லையில் டாஸ்மாக் கடை வேகமாகக் கட்டப்பட்டது. இதையறிந்த மக்கள் ஒன்று திரண்டு எப்படி இதை தடுத்து நிறுத்துவது என பேசிக்கொண்டிருக்கும் போது தோழர் சத்தியக்குமார் மக்களை சந்தித்து ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் போராடுகிறார்கள். அதே போல்  அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் இந்த பகுதியில் டாஸ்மாக்கை திறக்கவிடாமல் செய்யலாம் என்று விளக்கினார்.

பின்னர் டாஸ்மாக்கிற்காக கட்டப்படும் கடையின்  உரிமையாளரை அழைத்து இது என்ன கட்டிடம்? என கேட்டதற்கு, இது மோட்டர் கொட்டகை என்றார். இப்படித்தான் தமிழகம் முழுக்க சொல்லப்படுகிறது என்பதை  மக்களிடம் விளக்கப்பட்டது.  இது எந்த கொட்டகையாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் இதில் மதுவிற்பனை நடந்தால் கண்டிப்பாக கடை தரைமட்டமாக இடித்து நொறுக்கப்படும் என்று மக்கள் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர். பின்னர் ஒரு குழுவாக இருந்தால் தான் இந்த பிரச்னையை முறியடிக்க முடியும் என மக்கள் போராட்டத்திற்கு தயாராகினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் பெண்கள். (மாதிரிப் படம்) நன்றி : தி இந்து

கட்டியக் கடையை திறக்க முடியாது என்றதும் ஊரில் வசதிபடைத்த ஒருவர் தோழரை அழைத்து நம்ம இடத்துலதா மாப்ள… கடைகட்டப் போறோம் நீங்க டாஸ்மாக்கிற்கு எதிராக நிறையப் போராட்டங்களை நடத்தி இருக்கீங்க. நான் கடை கட்டுவதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என அவர் கேட்டார். அதற்கு தோழர், சாராயம் விற்பது தவறு, இதில் உறவு என்று பார்க்கமுடியாது. கடையைக் கட்டி, வைத்திருக்கும் காசை பாழாக்கிவிடாதீர்கள், என கூறிவிட்டு வந்துவிட்டார்.

அதே பகுதியில் உள்ள இருளர் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து டாஸ்மாக் கடையை  கட்ட முயற்சித்தனர். தோழர் அங்கும் சென்று அப்பகுதி மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த பகுதிக்கு வாப்பா… அந்த கடைய இங்கு கட்டிவிட்டால் எங்களால வாழவே முடியாதுப்பா… என உரிமையுடன் கூறியுள்ளனர். அவர்களும் போராட்டத்திற்கு தயாராகினர்.

இப்படி அனைத்து இடங்களிலும் டாஸ்மாக்கை திறக்க விடாமல் தோழர் தடுத்ததை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரவர்க்கம் விழிபிதுங்கி நின்றது. புதுப்பேட்டை காவல்நிலையத்தை சார்ந்த சி.ஐ.டி. போலீஸ், தோழரை சந்தித்து என்ன சத்தியகுமார் உங்களுடைய உறவினர் இடத்தில் கடைகட்டுவதற்கு நீங்க கேட்டிங்களாம். அது கிடைக்கலன்னுதான் எல்லா இடத்திலும் டாஸ்மாக் கட்டவிடாமல் தடுக்கிறன்னு உங்கள் பகுதியில் உள்ளவங்க சில பேர் கூறுகின்றனர் என்று அவதூறை மற்றவர்கள் கூறுவதாக நோட்டம் பார்த்தார். அதற்கு  அவர்கள் சொல்வது உண்மையா சார்? என்று நம் தோழர் எதிர் கேள்வி கேட்டதற்கு உங்களைப் பற்றி எனக்கு தெரியும்பா… எவனாவது எதையாவது பேசிவிட்டுப் போகட்டும் விடுப்பா என்று நழுவிச் சென்றுவிட்டார்.

தோழருடைய நெருங்கிய நண்பர்தான் அங்குசெட்டிபாளயத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். அவருக்கு எப்படியாவது கடை இங்கேயே திறந்து விட்டால் நல்லது என்பது எண்ணம், அதற்கு தோழர் தடையாக உள்ளார் என்பதால் அவர் தோழரிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டார். என்னுடைய வாழ்க்கையை அழிப்பதில் இவன்தான் முதல் ஆளாக இருக்கிறான் என பார்ப்பவர்களிடத்தில் புலம்புகிறார். அதற்கு தோழர் என்னுடைய நண்பர் உள்ளிட்டு அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்று தான் நாங்கள் அரசியல் பணி செய்கிறோம். நாட்டை சுடுகாடாய் மாற்றிவிட்டு யாரும் நிம்மதியாக வாழமுடியாது  அதை அவர்தான் புரிந்துகொள்ள வேண்டும், டாஸ்மாக்கினால் ஊரே கெடும் போது அதை தனிப்பட்ட நபரின் வாழ்க்கை நலனோடு பார்க்க முடியாது என்றார்.

குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது என்ற சுவரொட்டியை தோழர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஓட்டினார். அதைக் கண்ட மக்கள் புதிதாக கட்டப்பட்ட வீடாக இருந்தாலும் எங்கள் சுவற்றில் ஒட்டுங்கள் என விருப்பத்தோடு கேட்டுக் கொண்டனர்.

கடந்த 28.04.2017 அன்று டாஸ்மாக்கை எங்கும் திறக்க விடாமல் மக்களைக் கொண்டு, விரட்டியடித்ததால் சாராயப்பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரைவிட்டே டாஸ்மாக் ஓடி விட்டது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக நுழைந்திருக்கும் தமிழக மக்களிடத்தில் இத்தகைய ஊர், உறவு, சாதி, நட்புக்களை வைத்தும் கூட கடை திறக்க முனைகிறார்கள் என்பதற்கு இந்த ஊர் ஒரு சான்று. ஆயினும் இங்கே அதை ஒரு தோழரே முன்னின்று மறுக்கும் போது மக்களின் போராட்டத்திற்கு புதிய உற்சாகம் பிறக்கிறது.

பொது வாழ்க்கையில் அரசியல் பணி செய்வது, போராடுவது என்பது இத்தகைய அம்சங்களையும் கொண்டிருக்கிறது. பொது வாழ்க்கையில் எதைப் பேசுகிறோமோ எதைக் கடை பிடிக்கிறோமோ அதை சொந்த வாழ்க்கையிலும் கடை பிடிக்க வேண்டும் என்பது புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்களுக்கு அத்தியாவசியமான ஒரு பண்பு.  அனைத்துப் போராட்டங்களும் இப்படித்தான் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி புதிய பண்புகளை மக்களுக்கும், தோழர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றன. தொடர்ந்து போராடுவோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
கடலூர் பகுதி.

கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம்

0

தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி! கேடுகெட்ட தொழிலா விவசாயம்! என்ற தலைப்பில் கடந்த 26/04/2017-ல் கம்பம் நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு அவர்கள் கலந்துகொண்டார்.

தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி! கேடுகெட்ட தொழிலா விவசாயம்! கருத்தரங்கம்

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.மோகன் தனது உரையின் துவக்கத்தில்,”இந்த கருத்தரங்கப் பிரச்சாரத்தின் போது “இதுவரை ஓட்டுக்கட்சிகளை எல்லாம் புறக்கணித்து வந்த நீங்கள் இன்று ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ-வை கூட்டிவந்து கூட்டம் நடத்துகிறீர்களே நியாயமா?” என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். திரு.அப்பாவு அவர்களுக்கு விவசாயி என்பதுதான் முதல் அடையாளம். கட்சி என்பது அவருக்கு இரண்டாவது அடையாளம்தான். அப்படித்தான் அவர் கடந்த காலங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தனது பகுதியில் நடந்த ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகவும், தாமிரபரணி ஆற்றுநீரை கொள்ளையடிக்கும் கோக் நிறுவனத்திற்கு எதிராகவும் இன்றுவரை சமரசமின்றி போராடி வருகிறார். நதிநீர் இணைப்புப் பிரச்சனைக்காக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்திருக்கிறார். தான் சார்ந்திருக்கும் கட்சி கடந்து, விவசாயிகள் நலனுக்காக போராடி வருகிறார். இதுபோன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட அப்பாவு போன்றவர்களை எங்கிருந்தாலும் தேடிச்சென்று அவர்களின் போராட்ட உணர்வை, அனுபவங்களை எங்களோடு இணைத்துக் கொள்வதற்கு மக்கள் அதிகாரம் தயங்காது என்று விளக்கமளித்தார். மேலும் டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்திய மத்திய மோடி அரசையும், மோடியின் தமிழகக் கைத்தடிகளான எச்.ராசா, தமிழிசை, பொன்னார் ஆகியோரையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

அடுத்துப் பேசிய வி வி மு. தோழர் மாறன், விவசாயத்தை ஒழித்துக்கட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம், கெயில் திட்டம், நியட்ரினோ திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் “தேசத்துரோகி” என்கிறது பி.ஜே.பி! மோடி கூறுவது போல இந்தியாவை “டிஜிட்டல் இந்தியா” என்று உலகநாடுகள் வர்ணிப்பதில்லை. விவசாய நாடு என்றுதான் கூறுகிறார்கள். ஏனென்றால் இன்றுவரை இந்தியாவின் 65 சதவீத மக்களுக்கு உணவளித்து உயிரூட்டி, வேலைவாய்ப்பும் அளித்து வருவது நமது விவசாயம் தான்! நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்தையும், விளை நிலங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறிக்குப் பலியிடும் மோடிக் கும்பல்தான் உண்மையான தேசத்துரோகிகள்!”என்றார்!

கூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்

சிறப்புரை ஆற்றிய திரு.அப்பாவு அவர்கள், ‘நாட்டைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக இங்கு நீங்கள் வரவில்லை. மக்கள் அதிகாரத்தில் இருந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று எதையும் எதிர்பார்த்து நீங்கள் கூடவில்லை என்பதை நான் அறிவேன். நான் இங்கு எனது கட்சி நண்பர்களுடன் வந்திருந்தாலும், விவசாயிகளின் நலனுக்காகப் போராடும் உங்கள் முயற்சியில் கடுகளவாவது உதவி செய்ய முடியுமா என்ற எண்ணத்தில்தான் வந்திருக்கிறேன்” என்று தனது உரையைத் துவக்கியவர், ‘இந்தியாவில் ஆண்டுக்கு 88,000 டிஎம்சி நீர்வளம் கிடைக்கிறது. இதில் நாம் பயன்படுத்துவது வெறும் 6,900 டிஎம்சி தான்! கேரளாவில் 44 ஆறுகள் மூலம் 2500 டிஎம்சி நீர் கிடைக்கிறது. ஆனால் 500 டிஎம்சி நீரைத்தான் பயன்படுத்து கிறார்கள். மீதி நீரெல்லாம் வீணாக கடலில் கலக்கிறது! தண்ணீர் பற்றாக்குறையில் தள்ளாடும் தமிழகத்தில் 36 ஆறுகள் இருந்தும், ஆண்டுக்கு 240 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது! இந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் ஒரு நாதியில்லையே! பென்னிகுயிக் போன்ற ஒருவர் இருந்தால் இப்படி நடக்குமா?” என்று விவசாயத்திற்கான நீராதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தினார்!

“1950-51-பட்ஜெட்டில் விவசாயத்திற்கு 14% தொகை ஒதுக்கப்பட்டது. அதனால் விவசாயத்துறையின் வளர்ச்சி விகிதம் 55% ஆக இருந்தது ! இது2012-13-ல் 6% ஆக குறைக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் வெறும்   3% மேலும் குறைந்துவிட்டது. 55% மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்திற்கு மோடியின் மத்திய அரசு காட்டியுள்ள அக்கறையின் அளவு இதுதான்! இதனால்தான் நாட்டின் மொத்த உற்பத்தியில் 55% ஆக இருந்த விவசாய உற்பத்தி இன்று வெறும் 17% ஆக குறைந்துபோனது. பிறகு எப்படி விவசாயம் செழிப்பாக வளர முடியும்?” என்று ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார்.

மேலும், “2010-11-ஆம் ஆண்டு இந்திராகாந்தி மற்றும் டாடா இன்ஸ்டியூட்கள், நபார்டு வங்கி, ஏ.ஜி.எம் வாங்கடே ஆகியோர் அடங்கிய குழு விவசாயிகள் தற்கொலை பற்றிய அறிக்கை ஒன்றை மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தது. அதில் “விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் இடுபொருள்களின் விலை உயர்வு, வங்கிக் கடன் தொல்லை,விளைபொருள்களுக்கு உரிய விலையில்லாதது ஆகியவைதான் 80% விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்” என்று குறிப்பிடுகிறது. இதனை முன்வைத்துதான் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 50% லாபத்துடன் விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சியைப் பிடித்தார் மோடி! நியாயமாகப் பார்த்தால், கடந்த இரண்டு வருட ஆட்சியில் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மோடி, டெல்லியில் போராடிய நமது அய்யாக்கண்ணுவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்! ஆனால் போராடிய விவசாயிகளை நேரில் பார்க்காமலே அவமானப்படுத்தும் மோடியிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?”

“20 கார்ப்பரேட் கம்பெனிகளின் மொத்த வங்கிக் கடன் 12.25 லட்சம்கோடி ரூபாய் ! இதில் மத்திய அரசு தள்ளுபடி செய்த தொகை  4 லட்சம் கோடி! மீதியுள்ள  8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கும் மத்திய அரசுதான் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது ! 18 பொதுத்துறை நிறுவனங்களை விற்று கார்ப்பரேட்டுகளின் 70,000 கோடி கடனை அடைத்த மோடிக்கு இப்படி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? இதையெல்லாம் தமிழ்நாட்டில் பேசுவதற்கே இடமில்லை. பேசினாலும் காதுகொடுத்து கேட்பதற்கு நாதியில்லை. அதனால்தான் மக்கள் அதிகார கூட்டத்தில் பேசுகிறேன் !”

பிற விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்

“காவிரி ஒருங்கிணைப்பு வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எனக்கு அதிகாரமில்லை என்று பேசுகிற மோடிக்கு இந்த உண்மை இன்றுதான் தெரியுமா ? GST திட்டத்தைக் கொண்டுவர அதிகாரமுள்ள மோடிக்கு காவிரி ஆணையம் அமைக்க மட்டும் அதிகாரமில்லாமல் போய்விடுமா ? 20,000 பேர் பேசும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 600 கோடி ஒதுக்கும் மோடி நதிநீர் இணைப்புக்கு வெறும் 100 கோடி ஒதுக்குகிறார் ! இவர் எப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்?”

“சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமுலாக்கத்துறை இம்மூன்றும் வேட்டை நாய்கள் ! எதிரிகளை பிடி என்றால் கடிக்கும்! விடாதே என்றால் ஓடவிடாமல் சுற்றிவளைத்து விடும் ! இந்த நாய்களை மேய்ப்பவர்தான் மோடி! மோடியின் இந்த நாய் விளையாட்டுக்கள்தான் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது ! கொள்ளையடித்த சொத்தை பங்குபோடுவதற்கு துடிக்கும் கூட்டம்தான் தமிழகத்தை ஆள்கிறது!”

“ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் வளைவதைவிட, அதானியின் மகளிடம் வளைந்து நெளிகிறார் மோடி ! FICCI, CII போன்ற கார்ப்பரேட்டுகளின் சங்கங்களில் போடும் தீர்மானங்கள்தான் நமது நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படுகிறது. இவர்களிடம் விவசாயிகளின் வாழ்வுக்கு வழி கிடைக்காது. பதவி சுகத்திற்கு ஆசைப்படாமல் தியாக உணர்வுடன் செயல்படும் மக்கள் அதிகாரத்தின் கோரிக்கைகளுக்கு நான் என்றைக்கும் துணை நிற்பேன்.” என்று முடித்தார்.

கூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார். சிறப்புரை ஆற்றிய திரு அப்பாவு அவர்களுக்கு பெரியார் இன்றும்- என்றும் எனும் நூல் பரிசளிக்கப்பட்டது!

இறுதியில் தோழர் ஈஸ்வரன் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது. பிற விவசாய சங்கத்தினர் உட்பட சுமார் 200 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்

தேனி

மே தினம் : போராடு… செங்கொடி ஏந்தி போராடு …!

0

 

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … செங்கொடி ஏந்தி போராடு …!

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம் !
பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம் !
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கட்டியமைப்போம் !

பேரணி :  மாலை 4 மணிக்கு ரங்கசாமி குளம்
ஆர்ப்பாட்டம் : காவலான் கேட்

அனைவரும் வருக !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் மாவட்டம் – 88075 32859


 

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … ஒன்றிணைந்து போராடு !

மக்களது வாழ்வுரிமையை முற்றிலும் நாசமாக்குகிறது அரசு கட்டமைப்பு !
நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுக்கிறது மோடி அரசு !
மறுகாலனியாக்கத்தையும், இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிப்போம் !

மே 1 2017
பேரணி : மாலை 5 மணி மரக்கடை
ஆர்ப்பாட்டம் : மாலை 6.30 மணி சத்திரம் பேருந்து நிலையம் – அண்ணாசிலை.

பேரணி துவக்கிவைப்பது :
தோழர் சி.கோபிநாத் செயலாலர், ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கம், திருச்சி.
தலைமை : தோழர் க.சுந்தரராசு பொதுச்செயலாளர், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி.
கண்டன உரை : தோழர் ஜீவா, செயலாளர், ம.க.இ.க. திருச்சி.
தோழர் பிரிதிவ் பொருளாளர், பு.மாஇ.மு. திருச்சி.
தோழர் செல்வராஜ், பொருளாளர், ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கம்
தோழர் பழனிச்சாமி செயலாளர், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுக்காப்பு சங்கம், திருச்சி.

சிறப்புரை : தோழர் கோவன் ம.க.இ.க. திருச்சி.

நன்றியுரை : தோழர் குத்புதீன் தலைவர், சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுக்காப்பு சங்கம்.

மே நாள் சூளுரைகள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 97916 92512, 89030 42388
மக்கள் கலை இலக்கிய கழகம் – 80569 05898
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி – 99431 76246
திருச்சி மாவட்டம்

தஞ்சை : நீரையும் நிலத்தையும் காக்க அணிதிரள்வோம் !

1

திருமருகல் : குருவாடி – அண்ணவாசல், இன்னுமொரு நெடுவாசல்!
ஹைட்ரோகார்பன் திட்டம்:
விவசாயத்தை அழிக்க மோடி ஏவும் அணுகுண்டு !
விவசாயிகளே நாம் என்ன செய்யப்போகிறோம்?

டந்த சில ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆகவே மீத்தேன் திட்டத்தை திரும்ப பெறுவது போல் நடித்த மோடி அரசு தற்போது ”ஹைட்ரோகார்பன்‟ என்ற பெயரில் சதித்தனமாக இத்திட்டத்தை திணிக்க முயற்சி செய்கிறது.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள, மக்கள் அதிகமாக குடியிருக்கும்பகுதிகளில் இந்த ஹைட்ரோகார்பனை எடுப்பது அப்பகுதியையே சுடுகாடாக்கி அழித்துவிடும். பலநாடுகளும் இந்த திட்டத்தை கைவிட்டு, தடையும் விதித்துள்ளன. ஆனால் மோடி அரசோ நெடுவாசல், திருமருகல் உள்ளிட்ட 31 இடங்களில் இத்திட்டத்தை கொண்டுவர கார்ப்பரேட் நிறுவனங்களுக்குஅனுமதி வழங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் இன்னும் 15 ஆண்டுகளில் 40 மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. இதை அனுமதித்தால் நமது நிலமும், நீரும், வாழ்வாதாரமும் என்ன ஆகும்?

தமிழக விவசாயிகள் தொடர்ச்சியாக டெல்லியில் போராடினர், உலகமே இவர்களின்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது, ஆனால் இந்த நாட்டின் பிரதமரான மோடிக்கு மட்டும் விவசாயிகளை சந்திக்க நேரமேயில்லையாம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு அந்நிய பானங்களான பெப்சி, கோக்கை விற்க தமிழக வணிகர் சங்கங்கள் தடைவிதித்தன. உடனே பெப்சியின் தலைமை அதிகாரி இந்திரா நூயி பிரதமரை சந்திக்கிறார், அடுத்த நாளே தாமிரவருணி நீரை அந்நிய குளிர்பானங்கள் பயன்படுத்திக் கொள்ள விதித்திருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்குகிறது. இப்படிபட்ட கார்ப்ரேட்டுகளின் விசுவாசியான பிஜேபியும், மோடியும் விவசாயிகளை அழிக்கும் இந்த நாசகார திட்டங்களை ”வளர்ச்சி” என்ற பெயரில் திணித்து நமது காதில் பூச்சுற்ற முயற்சிக்கின்றனர். பிஜேபியின்  தமிழக ஏஜென்ட் இல.கணேசனோ “நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும்” என்று கொக்கரிக்கிறார்.

இதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையம், நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், ONGC –ஷெல்எரிவாயு திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழித்து விவசாயிகளையும், மக்களையும் பிச்சைகாரர்களாக்கத் துடிக்கிறது மோடி கும்பல்.

தமிழக அரசோ ஆற்று மணலை கொள்ளையடிப்பது, மண்குவாரி, ஏரி – குளங்கள் ஆக்கிரமிப்பு,கிரானைட் கொள்ளை என உள்ளுர் மாஃபியா கும்பலாக மாறி விவசாயத்தை அழித்து, விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகிறது. திருமருகல் ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சவ்வூடு மண் குவாரியை கொண்டு வர ஒரு மாஃபியா கும்பல் எத்தணிக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் அடியாள் வேலை செய்கிறார்கள். நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, போராடும் மக்களிடம் “உங்களுக்கு விவசாயம் எப்படி ஒரு தொழிலோ, அவர்களுக்கு மண்குவாரி ஒரு தொழில்” என்று அடாவடியாக பேசி மக்களை மிரட்டுகிறார்.

ஆகவே காவல்துறை, கலெக்டர், நீதிமன்றம், அரசியல் கட்சிகள் என அரசின் அனைத்து உறுப்புகளும் பொதுமக்களுக்கு குறிப்பாக விவசாயத்திற்கு எதிராக செயல்படுவதையே நம்மால் காணமுடிகிறது.

இதெல்லாம் எங்களுக்கு புரிகிறது, என்ன தான் தீர்வு என்று கேட்கிறீர்களா? நம்மிடம் இருப்பது ஒரே தீர்வு தான். இந்த அரசு நமக்கு நல்லது செய்யும் என்று நம்புவதோ, மனுக்கொடுத்து கெஞ்சி கூத்தாடுவதோ அடிமுட்டாள்தனமான செயல். ஆகவே விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், தாய்மார்கள் என பாதிக்கப்படும் அனைவரும் களத்தில் இறங்குவதும், கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் தான் தீர்வு. இராணுவமே வந்தாலும் மக்கள் கமிட்டிகளை மீறி ஒருபிடி மண்ணைக்கூட அள்ளவிடாதபடி அரணாக மாறவேண்டும், இது தான் உண்மையான மக்களாட்சி.

வாருங்கள்! உங்களை மக்கள் அதிகாரம் அறைகூவி  அழைக்கிறது!

திருமருகல் ஒன்றிய பொதுமக்களே !
நீரையும் நிலத்தையும் காக்க திரண்டெழுங்கள் !

நாகை மாவட்ட ஆட்சியரே !
ஏர்வாடி ஊராட்சியில் மண்குவாரி  கொண்டுவர சதி செய்வதை நிறுத்து !

பொதுமக்களே !
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மண்குவாரிக்கு எதிராக ஒன்றுபடுவோம் !
கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுக்காப்போம் !

தகவல்
மக்கள் அதிகாரம் மற்றும் ஏர்வாடி ஊராட்சி பொதுமக்கள்
தஞ்சை, திருவாரூர், நாகை – 96263 52829