எல்லையில்
பதட்டம் நீடிக்கிறது
எல்லையில் நாங்கள்
ஒரு சிறிய யுத்தத்தை
நடத்திக்கொள்கிறோம்
1962 ல் இருந்ததுபோல இல்லை
இப்போது எங்கள் மார்புகள்
அவை 56 இஞ்சுகளாக விரிந்துவிட்டன
மஞ்சள் தேகத்தினரே
எமது இந்த சவடால்கள் கண்டு நீர்
கோவிக்க வேண்டாம்
அவை உள் நாட்டு தேவைகளுக்கானவையே தவிர
உமக்கானவையல்ல
நமக்குள் என்ன சண்டை
நாங்கள் பல் குத்தும் குண்டுசி
நீங்கள் செய்ததுதான்
நாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
நீங்கள் செய்ததுதான்
எங்கள் குழந்தைகள் விளையாடும்
பொம்மையும் நீங்கள் செய்ததுதான்
ஏற்கனவே முழு நாடும்
உங்கள் கையிலிருக்கும்போது
எல்லையில் ஒரு துண்டு நிலத்தை ஆக்ரமித்து
உங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை
என்பதை அறியாதவரா நீங்கள்?
எல்லையில் எங்களுக்கு
இப்போது அவசரமாக
ஒரு யுத்தம் தேவைப்படுகிறது
தேசபக்த ஒலிப்பெருக்கியின்
பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டது
செல்லாத நோட்டுகளுக்குப்பின்
தேச விரோதிகள் அதிகரித்துவிட்டார்கள்
ஜிஎஸ்டிக்குப் பின் மக்கள்
எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்கிறார்கள்
மாட்டுக்கறிக்காக தோல் உறிக்கப்படும் மனிதர்கள்
அதிகமாக கூச்சல் போடுகிறார்கள்
விவசாயிகள் ஜட்டி போடாமல்
பிரதமர் அலுவலகம் முன் வந்து நிற்கிறார்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால்
எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில்
எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்
கார்கில் போரில் பனிபடந்த மலைகளில்
வெற்றிடத்தில் பீரங்கிகள் சுடுவதை
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தோம்
நாடாளுமன்ற தாக்குதலின் போது
இந்தியா எழுச்சியடைந்து
தனது எல்லாக் கவலைகளையும்
மறந்ததுபோல இப்போதும்
நாங்கள் எழுச்சியடைய விரும்புகிறோம்
அனுமதியுங்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தத்தை நடத்திகொள்கிறோம்
யாரோ சில அப்பாவி பலியாடுகள்
இரு புறமும் இறப்பார்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு அவ்வப்போது
தியாகங்கள் முக்கியம்
சமாதானத்திற்குப் பிறகு
புதிய இந்தியா இன்னொரு முறை பிறக்கும்
அரசர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட
உங்கள் தேசத்திற்கு வெற்றி வீரனாக வருவார்
இப்போது அவசரமாக எங்களுக்கு
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் தேவைப்படுகிறது
நீங்கள் இப்போது எங்களை
ஒரு சிறிய யுத்த்திற்கு அனுமதித்தால்
நாங்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது
ஒரு சிறிய யுத்தத்தை அனுமதிப்போம்
அண்டை நாடுகளுடனான
எங்கள் வெளியுறவுக்கொள்கையை
இதைவிட எளிமையாக
என்னால் விவரிக்க முடியாது
நல்லெண்ணத்தின் அடிப்படையில்
அன்பு கூர்ந்து
ஒரு சிறிய யுத்தத்தை எங்களுக்கு
அனுப்பி உதவுங்கள்
புதிய கலாச்சாரம் வெளியீடாக இதுவரை 24 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஜூலை 2017-ல் 25-ஆவது வெளியீடு வருகிறது. நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா? என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்” எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது.
பரவலான வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வழக்கமாக வெளிவரும் மலிவுப் பதிப்பு வெளியீட்டு வடிவத்திலும், நூலக புத்தகமாக சேமித்து வைப்போருக்காக தரமான தாள், கட்டமைப்புடன் கூடிய நூலாகவும் கொண்டு வருகிறோம். இந்த நூல் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று 07.07.2017 அன்று வெளிவருகிறது. நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை:
“நீங்கள் என்ன சோப்பை பயன்படுத்துகிறீர்கள் என்பதை விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன” – இது நுகர்வுக் கலாச்சாரத்தில் விரும்பியே சிக்கும் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை விளக்கிய நேற்றைய கருத்து. “நீங்கள் என்ன மாதிரியான வாழ்வில் பயணிப்பீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும்.” – இது நான்காம் தொழிற்புரட்சியை முன்வைத்து ஏகாதிபத்திய உலகம் உருவாக்க முயலும் புதிய ஆக்கிரமிப்பு.
நான் விரும்பாமலே என்னை யார் வடிவமைக்க முடியும் என்று மறுக்கிறீர்களா?
முடியும். அன்றாட வாழ்வில் நீங்கள் ஈடுபடும் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள், இணையம் உள்ளிட்ட செல்பேசி பயன்பாடுகள், தொலைக்காட்சி – சமூக வலைத்தளங்களில் உங்களது பங்களிப்பு, அலுவலகத்தில் உங்களது வேலைத் திறன் – என அனைத்தும் மின் தரவுகளாக இணைக்கப்பட்டு உங்களைப் பற்றிய பகுப்பாய்வை அதிநுட்ப மென்பொருள் நிரல்கள் அதி வேகத்தில் செய்கின்றன. வாழ்நாள் முழுதும் நீங்கள் சம்பாதிக்கப் போகும் பணம், அதற்காக செலவழிக்கப்படும் நேரம், வருமானத்தை செலவழிக்கப் போகும் விதம் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.
மீப்பெரும் மின்தரவுப் பகுப்பாய்வு தொழில்நுட்பம், ரோபொட்டிக்ஸ் எனப்படும் தானியங்கிப் பொறி, வேலைகள் தானியங்கிமயமாக்கம், நானோ எனப்படும் மீநுண் தொழில்நுட்பம், குவையக் கணியத் தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் துறை……… இவை அனைத்தும் மிச்சமிருக்கும் உலகை நேர்த்தியாக கபளீகரம் செய்ய ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் முதலாளித்துவ உலகத்துக்கும் உதவப் போகின்றன.
இந்த நூல் நான்காம் தொழிற்புரட்சியின் அறிவியலை எளிமையான முறையில் அறிமுகம் செய்கிறது. இது சமூகத்தில் உருவாக்கப் போகும் மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. இணையம் – சமூக வலைத்தளங்கள் போன்றவை உங்களை எப்படி வழிநடத்துகின்றன என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.
இறுதியில் ஒட்டு மொத்த மனித குலமும் முதலாளித்துவத்தின் அதி நவீன எந்திர உலகில் சிக்குண்டுவிடும் சாத்தியம் உள்ளதா என்ற அச்சத்தையும் பரிசீலிக்கிறது.
நான்காம் தொழிற்புரட்சி என்றழைக்கப்படும் புதிய அடிமை யுகம் பற்றிய எளிய அறிமுகம் அல்லது எச்சரிக்கையே இந்நூல்.
சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும், நம்மை ஆள நினைக்கும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவோர்க்கும் இந்நூல் ஒரு ஆரம்ப நிலைக் கையேடு.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்
புதிய கலாச்சாரம்
ஜூலை 2017 வெளியீடு
அழகிய வடிவமைப்பில்,
70 GSM தாளில் 80 பக்கங்கள்.
நூல் வடிவில்
விலை : ரூ.60
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்
புதிய கலாச்சாரம்
ஜூலை 2017 (மலிவுப் பதிப்பு) வெளியீடு
80 பக்கங்கள்
விலை ரூ. 20
அறுபது ரூபாய் மதிப்புள்ள நூலை தபாலில் (உள்நாடு) வாங்க விரும்புவோர் ரூ. 100 அனுப்புக. பதிவு செய்யப்பட்ட அரசு தபால் மூலம் நூல் அனுப்பிவைக்கப்படும். பணத்தை கீழே கண்ட வங்கிக் கணக்கில் அனுப்புங்கள்.
மலிவுப் பதிப்பு நூல் வாங்க விரும்புவோர் புதிய கலாச்சாரம் ஆண்டுச் சந்தா அனுப்புங்கள்.
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலாக பெறுவதற்கு :
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
SKU: N/A
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
சென்னையில் புதிய கலாச்சாரத்தின் நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
(வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் எதிரில், சிவா ஜிம் மாடியில்)
கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் மதகளிர்மாணிக்கம். விருத்தாசலத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செல்லும் வழியெங்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையும் நம்முடன் பயணிக்கும். சில்லென்ற காற்று முகத்தை வருடிக் கொடுத்தவாரே எதிர்கொள்ளும். தென்னை மரங்கள் சூழ வயல்களை ஒட்டியே வீடுகளைப் பார்த்தால் ஒரு கணம் கேரளாவா என்று தோன்றும். வீடுகளை சுற்றியே நெல் வயல்களையும் காணலாம். வயல்களை சுற்றி நூற்றுக்கணக்கான மயில்கள் தோகை விரித்தாடுவதை நிச்சயம் பார்க்க இயலும். எப்போதும் வயல்களில் மக்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். இக்கிராமத்தின் பசுமை போர்த்திய அழகுக்கு முக்கிய காரணம் வெள்ளாறு.
சேலத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் தோன்றும் வெள்ளாறு, பரங்கிபேட்டையில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வெள்ளாற்றின் வலது கரையோரம் ஆனந்தகுடி, முத்துகிருஷ்ணாபுரம், ஆத்தூர், எசனுர், மதளிர்மாணிக்கம், குணமங்கலம், பூண்டி, கள்ளிப்பாடி, புத்தூர், இனமங்கலம், அம்புஜவல்லிப்பேட்டை, கூடலையாத்தூர், காவாலக்குடி, சோலைவழி, நெடுஞ்சேரி ஆகிய கிராமங்களும், இடது கரையோரம் கார்மாங்குடி, வள்ளியம், சக்கரமங்கலம், கீரனூர், மருங்கூர், காவனூர், கீழப்பாளூர், பவழங்குடி, கீரமங்கலம்,மேலப்பாலையூர்,நேமம், உள்ளிட்ட கிராமங்களும் உள்ளது. அனைத்து கிராமங்களுமே பசுமையாகத் தான் இருக்கின்றன. இந்த வெள்ளாற்றை நம்பி சுமார் 7000 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வருகிறார்கள்.
நெல், கரும்பு போன்றவையும், சாமந்தி, குண்டுமல்லி, சம்பங்கி, கோழி கொண்டை, பட்டன் ரோஸ் ஆகிய பூ வகைகளையும், வெண்டை, கத்தரி, வாழை காய்வகைகள் என அனைத்து வகை பயிர்களும் இங்கு பயிரிடப்படுகின்றன. எந்தப் பயிர் வைத்தாலும் செழித்து வளரும் என்பதே இந்த மண்ணின் சிறப்பு. எந்த ஆறு இந்த வளமான விவசாயத்திற்கு வித்திட்டதோ அந்த ஆற்றை சிதைத்து விவசாயத்தையும் சீரழித்து வருகிறது இந்த அரசு.
வெள்ளாற்றில் கார்மாங்குடி மணல் குவாரியில் மணல் எடுத்த பிறகு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்” மற்றும் கிராம மக்கள் போராட்டத்தின் விளைவாக அந்த குவாரி மூடப்பட்டது. தற்பொழுது கொஞ்ச நஞ்சம் இருக்கும் விவசாயத்தையும் அடியோடு அழிக்க அதே ஆற்றில் மதகளிர்மாணிக்கம் என்ற கிராமத்தில் குவாரி அமைக்க அனுமதி கொடுத்துள்ளது எடப்பாடி அரசு. தங்களின் வாழ்வை அழிக்கும் மணற் குவாரி வேண்டாம் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள் மதகளிர்மாணிக்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள்.
மணல் குவாரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்
இந்த போராட்டத்தில் முன்னணியாக உள்ள தமிழரசன், “19.05.2017 அன்று எங்கள் கிராமத்தில் ஆற்றை சர்வே செய்ய வந்தார்கள். மக்கள் நாங்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தவுடன் நான்கு கல்தூண்களை மட்டும் நட்டு விட்டு சென்று விட்டனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். அதன் பிறகு மீண்டும் 02.06.2017 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் வெட்டும் இயந்திரம், நான்கு லாரிகளுடன் வந்ததால் நாங்கள் குவாரியை முற்றுகையிட்டு போராடினோம்.
ஏற்கனவே கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து கூடலையாத்தூர் வரைக்கும் 2001 – 2015 காலகட்டத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும், சேத்தியாத்தோப்பு முதல் பரங்கிப்பேட்டை வரை சுமார் 20 கிலோ மீட்டருக்கும் மணல் கொள்ளையடித்து விட்டார்கள். 3 அடி தான் அள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி 30 அடி ஆழம் வரை அள்ளியுள்ளார்கள். இரண்டு யூனிட் வரை தான் லாரிக்கு பெர்மிட் வாங்குகிறார்கள். ஆனால் ஆறு யூனிட் வரை அள்ளுகிறார்கள். ஆற்றின் கரையோரம் மணல் அள்ள கூடாது என்ற விதிமுறையை மீறியதன் விளைவு கரையோரம் உள்ள விவசாய நிலங்களளை அறுத்துச் சென்று விட்டது.
விவசாயிகள் புகார் கொடுத்த பிறகு விவசாயிகளின் பட்டா நிலத்தில் தடுப்பணையை கட்டியுள்ளார்கள். மணல் இருக்கும் பொழுது 30 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 300 அடிக்கும் கீழே சென்று விட்டது. இதனால் வெள்ளாற்று கரையோரம் உள்ள 35 கிராமங்களில் 2,450 ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் மூடிவிட்டனர். “விவசாயத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தது போக இப்பொழுது குடிநீருக்கு அலைய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இன்னும் மிச்ச மீதி மணல் இருக்கும் இடம் எங்கள் ஊர் தான். அதனையும் அள்ளிவிட்டு எங்கள் வாழ்வை சூறையாட துடிக்கிறார்கள்”, என்கிறார்.
“சார், ஆத்துல மணல் அள்ளுறதுக்கு முன்னாடி மூணு போகம் பயிர் வச்சோம். இப்ப ரெண்டு மூணு வருசமா கரம்பா தான் கெடக்கு. தண்ணியே இல்ல சார். எங்க போரை பாருங்க. இன்னும் மோட்டார் கூட கெணத்துல தான் இருக்க. சர்விஸ் எல்லாம் இருக்கு. ஆனாலும் எங்களால பயிர் வக்க முடியல. இதை எல்லாம் எப்படி சரி செய்றதுன்னே தெரியல. புதுசா போர் போடணும்னா லட்சக்கணகுல ஆகும். அவ்ளோ பணத்துக்கு எங்க போறது” என்று கேட்கிறார் விவசாயி கருணாமூர்த்தி.
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு வலுவாக இருந்ததால் 11.06.2017 அன்று எந்த தகவலும் தெரிவிக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் போலிசை வைத்து மிரட்டினார்கள். “மணலை அள்ளியே தீருவோம், மணலை அள்ளினால் தான் தண்ணீர் இருக்கும்” என்று பேசுகிறார் தாசில்தார். மணல் அள்ளுவதற்கான அரசு ஆவணங்களை கேட்டால் “ மழையில் நனைந்து விட்டது” என்கிறார்கள் அதிகாரிகள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லாமல் நாங்கள் திரும்பி விட்டோம்.
12-ம் தேதி 500 -க்கும் மேற்பட்ட லாரிகள் ஆற்றில் இருந்தது. ஆற்றின் இரு கரைகளிலும் 400 க்கு மேற்பட்ட போலிசை நிறுத்தி யாரும் ஆற்றின் உள்ளே செல்ல முடியாதபடி மிரட்டினார்கள். உளவுத்துறை தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். பதினைந்து நாள் சிறை, ஒரு மாதம் சிறை என்று ஒவ்வொரு நாளும் உளவியல் ரீதியாக மிரட்டியுள்ளார்கள். சாலையில் நடந்து சென்றவர்களை கைது செய்திருக்கின்றனர். போலிசின் இந்த மிரட்டலை எல்லாம் மீறித்தான் வயலுக்குள் புகுந்து மணல் குவாரிக்கு சென்றிருக்கிறார்கள் கிராம மக்கள்.
கீரனூர், வள்ளியம், சக்கரைமங்கலம், கார்மாங்குடி கிராம மக்கள், பெண்கள் யாரும் ஆற்றினுள் வந்து விடாதபடி போலிசு விரட்டியடித்தார்கள். இது அரசு குவாரி தடுத்தால் கைது செய்வோம் என்று நேரடியாக சிதம்பரம் ஆர்.டி.ஒ மிரட்டியிருக்கிறார். இன்று வரை மதகளிர்மாணிக்கத்தில் போலிசு குவிக்கப்பட்டு மக்கள் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 250 பேரை கைது செய்து வேனில் ஏற்றியது போலிசு. கைது செய்து சென்ற வேனை முற்றுகையிட்ட எங்களை எல்லாம் பெண்கள் என்று கூட பார்க்காமல் தரதர வென்று இழுத்துச் சென்ற ஆண் போலிசு, “அரசு மணல் குவாரியையே நீங்க தடுப்பிங்களா? இன்னா திமிர் இருந்தா அரசாங்க ரோட்டுல வண்டிய போக விடாம தடுப்பிங்க”னு அடித்ததாக சொல்கிறார்கள் கிராமத்து பெண்கள்.
“வயலுக்கு செல்லும்போது அடித்தார்கள். நான்கு பேருக்கு மேல் கூடி நின்றால் துரத்தினார்கள். காலை கடன் முடிக்க கூட எங்களால் செல்ல முடியவில்லை. 24 மணி நேரமும் நாங்கள் போலிசின் கண்காணிப்பில் தான் இருந்தோம். ஒரு அகதியைப் போல சொந்த கிராமத்தில் நாங்கள் நடத்தப்பட்டோம்” என்கிறார் போராட்டத்தில் கைதான ஜான்சன் என்ற இளைஞர்.
ஜான்சன்
போராட்டத்தை முன்னின்று நடத்திய கிராம இளைஞர்கள் 6 பேரை காவல் நிலையத்தில் வைத்து “மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜு உடன் செல்லாதீர்கள். அவர்கள் தீவிரவாதத்தை பரப்புகிறார்கள். உங்களை சிறையில் போட்டுவிடுவோம்”, என்கிறார் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் செல்வம். இரவு பன்னிரெண்டு மணிக்கு தான் “மும்முனை இணைப்பு மின்சாரம்” வரும். அதற்காக வயலுக்கு சென்ற விவசாயிகள் நான்கு பேரை கடுமையாக தாக்கியதோடு, “ஊருக்குள் புகுந்த காட்டு யானை மக்களை மிரட்டுவதைப் போல், பயிற்சி எஸ்.ஐ ரங்கராஜன் எங்களை மிரட்டினார்” என்று அப்பகுதி இளைஞர்கள் கூறுகிறார்கள்.
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
மறுநாள் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் தாசில்தாரிடம் “ போலிசு எங்களை மிரட்டுகிறது” என்று புகார் கூறினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை”. 14-ம் தேதி அனைத்து கிராம மக்களும் சேர்ந்து ரேசன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அட்டையை வாங்க மறுத்து விட்டார் தாசில்தார். 15 -ம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், 16 -ம் தேதி “வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்” சார்பாக ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.
மணல் லாரிகளை மக்கள் ஊருக்குள் விடாததால் ஆற்றுக்குள் பாதை அமைக்கும் மணல் மாஃபியாக்கள்
மணல் லாரிகள் ஊருக்குள் வரவிடாமல் நாங்கள் தடுப்பதால் ஆற்றுக்குள்ளேயே பாதை அமைக்கிறார்கள். எம்.பி அருண்மொழி தேவனிடமும், எங்க தொகுதி எம்.எல்.ஏ முருகுமாறனிடமும் குவாரியை மூடச் சொன்னோம். அதற்கு குவாரி இருக்கும், நீங்க கிராமத்துல இருந்தா இருங்க… இல்லனா கிராமத்த காலி பண்ணுங்க” என்கிறார்கள். எங்களின் வாழ்வாதாரத்தையே அழிக்க நினைக்கும் இந்த அரசு எங்களுக்கு எதற்கு” என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
இது தான் எங்களுக்கு மெரினா -கிராம மக்கள்
பரந்து விரிந்த மணற்பரப்பை காட்டி “சென்னைக்கு மெரீனா’னா எங்களுக்கு இந்த ஆறு தான் சார் மெரீனா” இங்கு தான் நாங்கள் வளர்ந்தோம். இதனை வெறும் ஆறாக நாங்கள் பார்க்கவில்லை. “இது தான் எங்களின் வாழ்வாதாரம்”. இதை எப்படி சார் நாங்க விட்டுக்கொடுப்போம் மணிகண்டன் என்ற இளைஞர்.
பி.எஸ்.சி, பி.எட் முடித்துள்ள வெற்றிவேல், “நான் ஏர்டெல் டிஸ்டிபியுட்டராக வேலை செய்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு விரும்பி வந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இந்த வெள்ளாத்த நம்பித்தான் பயிர் செஞ்சிருக்கேன். இப்ப தண்ணி போர்ல விட்டுட்டா என்ன பண்றது? இது மணல் பகுதி சார். நார்மலா போர் போடுற செலவை விட கூடுதலா செலவாகும்.
வெற்றிவேல்
இப்ப முன்னூறு அடிக்கு கீழ தான் தண்ணி இருக்கு. நாம நானூறு அடி போர் போடணும்’னா ஒரு அடிக்கு ரூ.190 மேனிக்கு 400 அடிக்கு ரூ.76,000, போரை சுற்றி பேக்கிங் ஜல்லி கொட்டனும் அதுக்கு ஆறு யூனிட் 36000, 8 அங்குலம் பைப் ஒரு மீட்டர் 1840 x 133 மீட்டர் ரூ.2,44,720., மட்டு ஜல்லி ரூ.6000, 20hp மோட்டார் ரூ.70,000, கருப்பு ஓஸ் பைப் ரூ.1,52,000, கேபிள் வயர் 266 மீட்டர் ரூ.26,600 மொத்தம் 6,11,320 ரூபாய் செலவாகும். “இந்த மணலை வாரி விட்டால் புதுசா தான் நாங்க போர் போடனும். அதுக்கு இதவிட கூடுதல் ஆழம் தான் போடணும். அந்த பணத்துக்கு எங்க போறது, அரசாங்கம் லோனும் தராது” நான் என்ன பண்றது? என்ன விட்டுடுங்க, நான் படிச்சிருக்கேன் வேற வேலை பார்த்தாவது பொழச்சிக்குவேன்.
படிக்காத விவசாயிங்க என்ன பண்ணுவாங்க? விவசாயிகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு இப்ப தான் சார் தெரியுது. “இயற்கை எங்களை பாழ்படுத்தியதுன்னா, அதுக்கும் மேல இந்த அரசு இருக்கு சார்.” என்கிறார்.
மணலை அள்ளும் போது சொட்டுவது நீர் அல்ல எங்கள் ரத்தம் கொதிக்கும் பெண்கள்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான பெண்கள், “மணலை அள்ளும் பொழுது சொட்டுவது வெறும் தண்ணீர் இல்லை சார்…. அது எங்களோட ரத்தம். எங்களை புதைத்து விட்டு தான் இந்த மணலை அள்ள முடியும் என்கிறார்கள் பெண்கள். ஆற்றில் இறங்கினால் “காலை தட்டிவிட்டு தான் வெளியேற வேண்டும். இங்கு இருந்து ஒருபிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம்” என்கிறார்கள் கிராம இளைஞர்கள்.
மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்டு கட்டாந்தரையாகிய ஆற்றுப்படுகைபயிற்களுக்காக பாலாய்ச் சுரக்கும் வெள்ளாற்றின் ஊற்றுகள்விளைநிலங்கள் வரை மணலை அள்ளிவிட்டார்கள் கொள்ளையர்கள்மணல் கொள்ளையர்கள் ஆற்றில் உருவாக்கியுள்ள சாலை
தங்களை வாழவைத்த வெள்ளாற்றையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்த அரசை எதிர்த்து போராடினால் தான் முடியும் என்பதை வெள்ளாற்று கரையோர கிராம மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்ட போராட்டத்திற்கும் தயாராகி வருகிறார்கள்.
கடந்த வாரம் 22.06.2017 அன்று ஹரியாணாவில் ஜூனைத் கான் என்ற சிறுவனையும் அவனுடன் வந்த சகோதரர்களையும், “மாட்டுக்கறி திண்ணும் தேசவிரோதிகள்” என்று கூறி ஓடும் இரயிலிலேயே கத்தியால் குத்தியது ஒரு கும்பல். இதில் ஜூனைத் கான் மரணமடைந்தார், அவரது இரண்டு சகோதரர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் பசுவின் பெயரால், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இக்கொலைகளைக் கண்டித்துச் சமூக செயற்பாட்டாளர் ‘சபனம் ஹாஸ்மி’ தனக்கு வழங்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் உரிமைக்கான விருதை திருப்பியளித்தார். அதோடு, இந்தியா முழுவதும் இத்தகைய இந்துத்துவக் கிரிமினல்களின் கொலை வெறியாட்டத்திற்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்தன. “எனது பெயரில் அல்ல” என்ற முழக்கத்தின் கீழ், பல்வேறு தரப்பினரும், ஹிந்துத்துவக் கும்பலின் கொலை வெறியாட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட ஆரம்பித்தனர்.
நாட்டையே உலுக்கிய ஜுனைத் கான் படுகொலை குறித்து வழக்கம் போல அமைதி காத்து வந்த மோடி, பிரச்சினை வலுப்பெறத் தொடங்கிய பின்னர், இனியும் மவுனித்திருக்க முடியாது என்பதை உணர்ந்தார். இன்று (29.06.2017) குஜராத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, “பசுக்களின் பெயரால் மனிதர்களைக் கொல்வதை அனுமதிக்க முடியாது. நாம் அஹிம்சையின் நிலத்தைச் சேர்ந்தவர்கள்; வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது; தேசப்பிதா காந்தி, இத்தகைய சம்பவங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளார். இறுதியாக நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம் என்று முடித்துள்ளார்.
இந்த உரையின் பொருள் என்ன? அவர் யாரைக் கண்டிக்கிறார்? யாருக்கு ஆதரவாக பேசுகிறார்?
2002-ம் ஆண்டு குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை குறித்து இன்று வரை வாய் திறவாத மோடி அது குறித்து கரண் தாப்பர் வருந்துகிறீர்க்ளா என்று கேட்ட போது வெளிநடப்பு செய்தார். பிறகு அக்லக், உனா என்று தொடரும் மாட்டுக்கறி வெறுப்பு சங்க பரிவார படுகொலைகள் நடந்த போதும் இது போன்ற கண் துடைப்பு பேச்சுக்களை பேசியுள்ளார்.
இன்றும் அவர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை. மறைமுகமாக பசுவின் புனிதத்தை உறுதிப்படுத்தியதோடு, வன்முறையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள் (சட்டமே தண்டிக்கும்) என்று கூறியுள்ளார். இருப்பினும் மோடியின் பேச்சை மாபெரும் கண்டிப்பு போன்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் என்ன?
மோடியின் வழக்கமான ஏமாற்றுப் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?
மோடியை அம்பலப்படுத்துவதற்கு பயம்
மோடியை ஆர்.எஸ்.எஸ்-க்கு அப்பாற்பட்ட நியாயவானாக காட்டுவது
மோடியின் பேச்சு மீது உண்மையிலேயே நம்பிக்கை
தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்க்கரன்
“வரப்பே தலையன வயக்காடே பஞ்சுமெத்த” இதுதேன் கீதாரிங்க வாழ்க்க. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தோணலிங்களே” என்று ஒற்றை வரியில் கீதாரிகளின் வாழ்க்கையை சுருக்கினார் தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்.
ஐயா! நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலையே?
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிதே சொந்த ஊரு. எங்க ஊர ஒட்டிய கிராமங்கள்ல கோனார் சாதிக்காரவுக அதிகம். அவக தொழிலே ஆடு மாடு மேய்கிறதுதேங். கோடையில ஆறு மாசகாலம் தஞ்சாவூரு மாவட்ட பகுதிய சுத்தி உள்ள நெலத்துல ஆடு மாடு மேய்ப்பாக. மீதி ஆறு மாசம் புதுக்கோட்டக் காட்டுப் பகுதிக்கு போயிடுவாக. ஆடு மாடு இல்லாதவுக, காணி(அளவு) காடு வச்சுருக்கவுக சிலபேரு ஊரோட இருப்பாக. ஊருக்கு தேவையிண்டா மட்டுந்தே போவோம். அதாவது சொந்தமுண்டு சொல்லிக்க ஊரு இருக்கும் ஆனா குடும்பம் நடத்துறது என்னவோ வெளியூருலதேன்.
ஏனுங்கையா ஒரே எடத்துல மேய்க்காமெ ஆறு மாச காலத்துக்கு ஒருக்க எடத்தை மாத்துரிங்க?
எங்க ஊரு பக்கம் வறட்சி அதிகம். ஆடு மாடுக மேய்க்கறதுக்கான காடு கழனி கெடையாது. ஆத்துப் பாசன பகுதில அறுப்பு முடிஞ்சு மறுக்க ஆத்துல தண்ணி வரும்வர கழனிக சும்மாத்தேன் கெடக்கும். மேச்சலுங்கு தோதுவா நெலமும் ஆடு மாடுக குடிக்க குளம் குட்டையும் இருக்கும். அங்கனக்குள்ளையே மேச்சு வெள்ளாமெ நெலத்துக்கு கெடையும் கட்டுவாக. ஆத்துல தண்ணி வந்து வெள்ளாமெ தொடங்கிச்சாங்காட்டி மந்தைய புதுக்கோட்டைக்கி ஓட்டிடுவாக. அங்கெ அரசு பாரஸ்ட் மலைக்காடு இருக்கு. எத்தன மழை பேஞ்சாலும் சேறு சகதி இல்லாம மேச்சல் இருக்கும். பகல் பொழுது மலையில மேச்சுட்டு ராத்திரியானா கீழ ஓட்டியாத்துருவாக. (பருவமழை காலத்தில் மலை பகுதியும் கோடை காலத்தில் சமவெளி பகுதியும் கிடை மந்தை கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதியாகும்.)
ஆட்டுக் கிடை போடும் பாஸ்க்கரன்
ஆடு மேச்சு கிடை கட்டும் உங்க தொழில் முன்னைக்கி இப்ப எப்படி இருக்கு?
என்னோட எளவட்ட காலத்துல ஒத்தாளு 500 ஆடுகளோட ஊடாடுவே. அப்பெல்லாம் அறுப்பு முடிஞ்சு எக்கண்டமும் சும்மாத்தேங் கெடக்கும். என்னப்போல முப்பது கீதாரி குடும்பம் இந்த ஊருல தங்கி ஆடு கெட போடுவாக. அம்புட்டு ஆடுகளுக்கு மேச்சலுக்கு எடமிருக்கும். இருவது வருசமாத்தேன் இங்குட்டு போரு (ஆழ்துளை கிணறு) போட்டுட்டாக. திட்டுத்திட்டா வெவசாயம் செஞ்சுருக்காக. பயிறுக்கு போகாமெ ஆடுகள மடக்கி சோலி பாக்க வாய்க்கல. எங்குட்டு திருப்புனாலும் ஊரச் சுத்தி இதே நெலமதேன்.
ஆடுகளுக்கு முன்னப்போல மேச்ச நெலமுண்டு ஒன்னு இல்லிங்க. தண்ணி இல்லாமெ ஆடுக எறப்பு வாங்குது. குளம் குட்ட எங்குட்டு திரும்புனாலும் வறண்டு கெடக்கு. ஆடு மேஞ்சு முடிச்சு பட்டிக்கி திருப்பியாந்தா விடிய முட்டும் படுத்துக்கும். இப்ப அண்டையில உள்ள பயிருக்கு போயிருதுக. பொழப்புக்கு வந்த எடத்துல கீதாரி பயக வெள்ளாமைய அழிச்சுபுட்டாகன்னு ஒரு சேதி வந்துரப்படாதுல்ல. அதுக்காக ஆடுகள சுத்தி இரும்பு கம்பி அடிச்சி வல(லை) கட்டனும். பாலூட்டு குட்டிகள வெய்யிலு அண்டாமெ பாதுகாக்க கூடாரம், நாங்க படுக்க கட்டிலு இதையெல்லாம் அடுத்த கெடகட்டுற எடத்துக்கு தூக்கிட்டு போக வண்டி செலவுன்னு….. ரொம்பவும் செரமமாத்தே இருக்குங்க.
ஐநூறு ஆடு நின்ன எடத்துல 250 ஆடுகதே இருக்கு. முப்பது குடும்பம் வந்த எடத்துல 4 குடும்பந்தே வந்துருக்காக. 250 ஆட்டுக்கு 7,000 ரூபா கூலி குடுத்து ஒரு மேச்ச ஆளு வச்சுருக்கேன். இது அம்புட்டும் சொந்த ஆடுக அதுனால கூலியாள வச்சு மேய்க்கேன். பத்து இருவது ஆடு வச்சுருக்கவுகளும், மேச்சலுக்கு வர்ர ஊருல சிலபேரும் எங்கக்கிட்ட வாரத்துக்கு ஓட்டி விடுவாக. கூலி கெடையாது ஆடு ரெண்டு குட்டி போட்டுச்சாங்காட்டி ஒன்னு நமக்கு. ஒன்னு அவுகளுக்கு.
ஆட்டுக் கிடைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் செம்மறி ஆடுகள் மற்றும் தங்கும் கூடாரம்
ஆடு வளர்ப்புல லாபமா? கிடை கட்டுறதுல லாபமா?
“ஆடு ஊடாடாமே காடு விளையாதும்பாக”. ஆட்டுக் கெட உரந்தே ஒசந்ததா இருந்தது ஒரு காலம். இப்ப ரசாயன ஒரத்த சக்கரக் கணக்கா வயக்காட்டுல அள்ளி கொட்டுறாக. ஆட்டுப் புளுக்க மூத்தரத்தோட அருமெயெல்லாம் அத்துப் போச்சு. மணலு, வண்டலு, அதிகம் உள்ள கழனிக்கி ஆடு மாடு ஒரமும், கிளாரு மண்ணுக்கு (சுண்ணாம்பு மண்) வாத்து ஒரமும் இடுவாக. நெலத்துக்கு தக்கன வெதையும் ஒரமும் நம்மகிட்டேயே இருந்துச்சு. இப்ப வெதையோட சேத்து ஒரத்தையும் இறக்குமதி பன்றாக. பூச்சி மருந்து கள(ளை)க் கொல்லின்னு, கண்டதும் போட்டாத்தே அதுவும் வெளையுது.
“ஆடு காப்பணம், புழுக்க முக்காப் பணம்னு” சொன்னதெல்லாம் அந்த காலம். இப்ப ஆரும் பெருசா கெட கட்டுவாக கெடையாது. போன வருசம் 250 ஆடு ஒருநா(ள்) கெட கட்ட 300 ரூபா வாங்குனேன். இந்த வருசம் மழத்தண்ணி இல்லன்னு 250 வாங்குரேன். ஒருநா வருமானம் ஒரு வார வெஞ்சனம்(காய்) வாங்க பத்தமாட்டேங்குது. பொறவு மேச்சகாரனுக்கு டீ, சாப்பாடு, வெத்தலபாக்கு, வாரத்துக்கொருக்க பாட்லு இதுக்கெ கெடகூலி பத்தாது. ஆட்டுல நாலு காசு வந்தாத்தே உண்டு. ஒரு ஆடு அஞ்சு அல்லது ஆறு ஆயிரத்துக்கு போகும். வருசத்துக்கு ரெண்டு குட்டி போடும். அத நல்லா மேச்சு குட்டிக்கு பால்குடுத்தா ஆறு மாசத்துல வளந்துரும். இதுலதே குடும்பம் படிப்பு கல்யாணம் எல்லா செலவும்.
கீதாரிகள் ஆடுங்களோட ஊர் ஊரா போறதா சொல்றீங்க, பிள்ளைகள எப்படி படிக்க வைக்கிறீங்க?
இந்த ஊருல முப்பது வருசமா எனக்கு பழக்கம். அண்ண வீட்டு தோப்புலதே கூடாரம் போட்டு தங்கிக்கிடுதேன். அம்மி, ஒரலுன்னு சமையலுக்கு தேவையானத கொடுப்பாக. காசு பணமெல்லாம் அவக கிட்டதே குடுத்து வச்சுருப்போம். தாயா பிள்ளையா பழகிகிடுதொம். எங்க மாமா செத்தப்ப இந்த அண்ணெந்தே சாவு கோடி போட்டாக. எங்க வீட்டு நல்லது கெட்டது அவுக இல்லாம நடக்காது, அவுக வீட்டு நல்லது கெட்டது நாங்க இல்லாம நடக்காது.
அந்த பழக்கத்துல பெரியவெ(ன்) இங்கதே ஆறு வருசமா படிக்கிறேன். இந்த வருசத்தோட படிப்பு முடியிது. நாங்க இருக்குற ஆறு மாசம் எங்க கூட இருப்பேன். நாங்க புதுக்கோட்ட பக்கம் போனபொறவு இவக வீட்டுல தங்கிக்கிருவேன். அவுக பிள்ளப்போல பாத்துக்கிருவாக. சின்னவென் ஊருல இருக்கேன். எங்க காலத்தோட இந்த தொழிலு முடிஞ்சுரும் பிள்ளைங்க இனி செய்யாதுக.
ஊருல யாரு பையன பாத்துப்பாங்க? ஆடுங்கள தவிர எதுனா சொத்து இருக்குங்களாய்யா?
காக்காணி நெலமிருக்கு. அத நம்பி நாலு பேரு என்னத்த சாப்புட முடியும். ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும். இருக்கவுகதேன் ஒத்து உணர்ந்து வேலைய பிரிச்சுக்குறனும். எங்கக்கா ஊருல எம்பையனையும் நெலத்தையும் பாத்துக்குறாக. நா அவுக ஆடுகள பாத்துகிடுதேன். ஆடுக நெறையா நின்னா தனிதனியா கெட போடுவாக. ஆடுக கம்மிங்கறதால சேந்து மேச்சுகிடுதோம்.
மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கேன்
வெய்யிலு காலம் நோயி வருமுண்டு மருந்து குடுத்துருக்கேன். மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கே. மத்த கீதாரி ஆட்டோட கலந்து மேய்க்க மாட்டோம். எல்லாருமே தனிச்சுத்தேன் விடுவோம்.
மார்க்ஸ் பிறந்தார் – 7 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
குறிப்பு: மார்க்சின் பெற்றோர் மறையும் போது தங்கள் மகனது வாழ்க்கை ஒரு தோல்வி என்றே கருதினர். அறிவில் தேடலும், சிந்தனையில் கூர்மையும், ஆய்வில் சுயதிருப்தியின்மையும் மார்க்சை அலைக்கழித்து வந்தன. ஏற்றுக் கொண்ட சமூக அமைப்பு அங்கீகரிக்கும் வரைகையில் தனது மகன் ஒரு அறிஞராக வாழ்வில் கரை சேர வேண்டுமென்று மார்க்சின் தந்தை விரும்பினார். ஆனால் கார்ல் மார்க்சோ தனது வார்த்தைகளைக் கோர்த்து அதே சமூக அமைப்பை கேலியும், முரண்நகையும் கொண்ட விமர்சனத்தால் பதம் பார்க்கிறார். அதற்கு அவருக்கு கவிதைகள் முதலில் கை கொடுக்கின்றன. மார்க்சின் பிந்தைய எழுத்துக்களில் காணக்கிடைக்கும் உலகத்தரமான நகைச்சுவையை இங்கே காண்கிறோம். படித்துப் பாருங்கள்!
– வினவு
4.“உண்மையைச் சொல்வதென்றால்நான் கடவுள்கூட்டத்தைவெறுக்கிறேன்”
அ) “உலகின் அகன்ற முகத்துக்கு” முன்னால் இரும்புக் கையுறையைத் தூக்கியெறிந்த மார்க்ஸ்
இரும்புக் கையுறையை வீசி எறிகிறேன்,
உலகின் அகன்ற முகத்தை அருவருப்பாகப் பார்க்கிறேன்,
அரக்கி பூமிக்குள் ஓடுகிறாள்.
என் மகிழ்ச்சியை நசுக்க முடியாது,
அழிந்த நாட்டில் கடவுளைப் போல
வெற்றி முரசொலிக்க நான் வருகிறேன்.
ஒவ்வொரு சொல்லும் செயல், நெருப்பு.
என் மார்பும் கடவுளைப் போன்றதே.
– கார்ல் மார்க்ஸ்(1)
கார்ல் மார்க்ஸ் பெர்லினில் மாணவனாக இருந்த வருடங்களில் தத்துவஞான உணர்வில் மட்டுமல்ல அரசியல் உணர்விலும் தீவிரமான வளர்ச்சி அடைந்தார். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்திலேயே அவர் பிற்போக்கான எல்லாவற்றையும் தீவிரமாக வெறுத்தார் என்பதை நாம் கண்டோம். பான் பல்கலைக்கழகத்தில் அவர் இளம் எழுத்தாளர்களின் இலக்கியக் குழு ஒன்றில் சேர்ந்திருந்தார். அந்தக் குழு ஆபத்தானது என்று போலீசு இலாகா கருதியது. பான் பல்கலைக்கழகம் கொடுத்த சான்றிதழில் மார்க்ஸ் “கொலோனில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தார்’’(2) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கார்ல் மார்க்ஸ்
பிரஷ்ய முடியரசின் தலைநகரமான பெர்லினில் நாட்டின் அரசியல் வாழ்க்கையை அதிகக் கூர்மையாக உணரக் கூடிய வாய்ப்பு மார்க்சுக்குக் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் தீவிரவாதப் போக்குடைய இளம் எழுத்தாளர்களோடு பழகினார்; ஹான்ஸ் கேஃப்டரைப் போன்ற மிதவாத ஹெகலியவாதப் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார்; கருத்து வேறுபாடான விஞ்ஞான, அரசியல் மற்றும் மதப் பிரச்சினைகளைப் பற்றி மாணவர்கள் நடத்திய விவாதங்களில் கலந்து கொண்டார்.
கார்ல் தன்னிடம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அரசியல் ரீதியான சந்தேகங்களைப் பற்றித் தன் தகப்பனாரிடம் பேசியிருக்க வேண்டும். இச்சந்தேகங்கள் ஹென்ரிஹ் மார்க்சிடமும் ஓரளவுக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் தன் மகனிடம் “அதிதீவிரமான இடதுசாரிக்” கருத்துக்கள் ஏற்படக் கூடிய சாத்தியத்தைப் பற்றி சிறு சமிக்கையைக் கண்டால் கூட அவர் பீதியடைந்தார். ஏனென்றால் மகனுடைய எதிர்காலத்துக்கு அதனால் ஆபத்தேற்படலாம். அவர் 1836ம் வருடத்தின் முடிவில் மகனுக்குப் பின்வருமாறு எழுதினார்: “சட்டவியலைப் பற்றி உன்னுடைய கருத்துக்களில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அவற்றை ஒரு அமைப்பாக மாற்றினால் புயல்கள் ஏற்படுவது சாத்தியமே. கல்வியாளர்களிடம் ஏற்கெனவே எவ்வளவு உக்கிரமான புயல்கள் வீசிக் கொண்டிருக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா? மற்றவர்களிடம் எரிச்சலூட்டுகின்றவற்றை முற்றிலும் அகற்றிவிட முடியாது என்ற போதிலும் குறைந்த பட்சம் வடிவமாவது சமரசமாகவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.”(3)
புயல்களை எழுப்பாதே, சமரசமாகவும் உடன்படக் கூடிய முறையிலும் நடந்து கொள், மற்றவர்கள் எரிச்சலடைகின்றவற்றை அகற்றி விடு வெல்ல முடியாத போர்வீரனுக்குரிய வீராவேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்த, புரட்சிகரப் புயல்களின் எதிர்கால “இடிக் கடவுளான” ஒரு இளைஞனிடம் இப்படி அறிவுரை கூறப்பட்டது!
தகப்பனாருக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அவர்களுக்கிடையில் ஒரு கண்ணாடித் தடுப்பு உருவாகியிருப்பதைப் போலத் தோன்றியது. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் பொழுது சிரித்துக் கொண்டார்கள், அவர்கள் பாச உணர்ச்சியினால் இன்னும் கட்டுண்டிருந்தார்கள். ஆனால் ஒருவர் பேச்சை அடுத்தவர் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏற்கெனவே இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. கார்ல் மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய நீண்ட ஒப்புதல் கடிதத்தைப் பற்றி முந்திய அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். அக்கடிதம் தகப்பனாரிடம் ஏற்படுத்திய விளைவு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
மார்க்ஸ் வருடம் முழுவதும் செய்த தீவிரமான ஆராய்ச்சி, அவருடைய அறிவார்ந்த, கவித்துவம் நிறைந்த தேடல் தகப்பனாருடைய அங்கீகாரத்தைப் பெறவில்லை, அவரிடம் எரிச்சலும் ஆவேசமுமே ஏற்பட்டது. அவர் கண்ணீர் விட்டுக் கொண்டே மகனைக் கடிந்து கொள்கிறார். என் மரணம் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், என்னுடைய இளைய மகன் எட்வார்டு சமீபத்தில் மரணமடைந்திருக்கும் பொழுது, குடும்பத்தின் ஒரே நம்பிக்கையான கார்ல் மிகவும் கசப்பான ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறானே என்று அவர் குமுறினார். அவன் தன்னுடைய நேரத்தையும் பலத்தையும் உடல்நலத்தையும் அர்த்தமற்ற நடவடிக்கைகளில் வீணாக்கிக் கொண்டிருக்கிறான், “அவன் இன்று நிர்மாணிப்பதை நாளைக்கே அழித்து விடுகிறான்”, அவன் “தன்னுடைய சொந்த வேலையைப்” பாராட்டுவதில்லை, “மற்றவர்களுடைய சாதனைகளையும்” தன்வயப்படுத்திக் கொள்வதில்லை, எந்தப் பயனுமே இல்லாத, தெளிவற்ற, சூக்குமமான கருத்தமைப்புகளில், “அர்த்தமில்லாத, உசிதமில்லாத” ஆராய்ச்சிகளில் தன்னுடைய திறமையை வீணாக்கிக் கொண்டிருக்கிறான்.
ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுடைய வாழ்க்கை முறையை நினைத்து வேதனைப்பட்டார்: “ஒழுங்கின்மை, அறிவின் எல்லாத் துறைகளினூடும் நாற்றமெடுக்கும் தேடல்கள், எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் ஊசிப்போன சிந்தனை, ஒரு குவளை பீரைக் குடித்துவிட்டுத் தறிகெட்டு ஓடுவதற்குப் பதிலாக மாணவனின் நீண்ட அங்கியுடன், வாரி விடப்படாத தலைமுடியுடன் அலைதல், எல்லா மரியாதைகளையும்-தகப்பனார் என்ற தகுதியையும்- அலட்சியப்படுத்திவிட்டு மற்றவர்களுடன் கலந்து பழகாமல் ஒதுங்கிக் கொள்ளுதல். உலகத்தோடு உறவாடுவதற்குப் பதிலாகத் துப்புரவில்லாத அறையில் அடைந்து கிடப்பது, அதன் மிகச் சிறப்பான குப்பைகளுக்கு மத்தியில் ஒருவேளை ஜென்னியின் காதல் கடிதங்களையும் கண்ணீருடன் எழுதப்பட்ட தகப்பனாரின் அறிவுரைகளைக் கொண்ட கடிதங்களையும் கிழித்துப் புகைக் குழாயில் போட்டுப் புகைபிடித்தல்….”(4)
நிகழ்காலத்தைப் பற்றி இந்த வர்ணனையே போதுமானது, ஆனால் எதிர்காலத்தைப் பற்றி? “நாகரிகமில்லாத படிப்பாளியுடன்” ஏழைக் குச்சில் நடத்துகின்ற வாழ்க்கை ஜென்னியைப் போன்ற ஒரு பெண்ணுக்குத் தகுதியான எதிர்காலமா? தகப்பனாருடைய வழிகாட்டுதல் இனிமேல் இல்லையென்றால் உலகியலை அறியாதிருக்கின்ற தன் மகனுடைய கதி என்னாகும் என்பதை நினைத்த பொழுது அவருடைய இதயம் புண்பட்டது. “தீங்கான பேய்களை” விரட்டி விட்டு எல்லாவற்றைப் பற்றியும் நிதானமாக, செய்முறை நோக்கில் சிந்திக்க வேண்டும் என்று அவர் மகனிடம் மன்றாடினார். பெற்றோர்களுக்கும் வருங்கால மனைவிக்கும் கார்ல் செய்ய வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் அவர் பட்டியலிட்டார்.
மகன் அவற்றை நிறைவேற்றினால் “சத்தியத்தின் பாதைக்குத்” திரும்புவதற்கு உதவி புரியும் என்று அவர் நம்பினார், அவை, “நாகரிகமில்லாத சிறுவனை ஒழுங்குமிக்க மனிதனாக, அனைத்தையும் மறுக்கின்ற மேதையை உண்மையான சிந்தனையாளனாக, கட்டுப்பாடில்லாத இளைஞர்களின் கட்டுப்பாடில்லாத தலைவனை சமூகத்துக்குத் தகுதியுடைய மனிதனாக மாற்றுவதற்கு உதவி புரியும்; இப்படிப்பட்ட மனிதன் விலாங்கு மீனைப் போல வழுக்கிக் கொண்டு போகாமல் போதிய சுய கெளரவத்தை வைத்துக் கொண்டும் அறவோர்களுடன் கலந்துறவாடுவதன் மூலமாக மட்டுமே தன்னை மிகவும் இனிமையான, சாதகமான முறையில் உலகத்தின் பார்வைக்குக் காட்டுகின்ற கலையைக் கற்க முடியும், மரியாதை, அன்பு, கெளரவத்தை இயன்ற அளவுக்குச் சீக்கிரமாகப் பெற முடியும், இயற்கை அன்னை தன்னிடம் அதிகமான அளவில் வழங்கியிருக்கின்ற திறமைகளை நடைமுறையில் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்குப் போதிய அறிவையும் சாதுரியத்தையும் அடைவான்”.(5)
ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுக்கு எழுதிய கடைசிச் சொற்கள் இவை. அவர் 1839 மே மாதத்தில் மரணமடைகின்ற வரை படுத்த படுக்கையாக இருந்தார். அவர் சீக்கிரத்தில் மரணமடைந்துவிட்டதனால் தகப்பனாருக்கும் மகனுக்கும் இடையில் கசப்பான மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது, ஆகவே கார்ல் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் தகப்பனாரைப் பற்றி இனிய நினைவுகளைக் கொண்டிருக்க முடிந்தது என்று ஒகுஸ்ட் கொர்நியூ எழுதியிருப்பது சரியாகும்.(6)
கார்ல் மார்க்சின் தாயாரான ஹென்ரி யேட்டா தன் மகனுடைய உடல்நலத்தைப் பற்றி எப்பொழுதும் அதிகமான அக்கறை காட்டினாலும், அவருடைய ஆன்மீகத் தேடல்களைப் பற்றி எதுவுமே புரிந்து கொள்ளாமலிருந்தாள். அவள் 1863 வரை உயிருடன் இருந்தாள். தன் மகன் ஒரு பரிதாபகரமான தோல்வி என்றே கருதினாள். மூலதனத்தைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் சிறிதளவு மூலதனத்தையாவது சேகரிப்பதற்குத் தன்னுடைய மகன் முயற்சி செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று அவள் கசப்புடன் கூறுவது வழக்கம். அவள் கருத்து ஒரு விதத்தில் சரியானதே. ஏனென்றால் மூலதனத்தை எழுதுவதற்காகத் தனக்குக் கிடைத்த சன்மானம் அதை எழுதிய காலத்தில் புகை பிடித்த புகையிலைச் செலவுக்குக் கூடப் பற்றாது என்று மார்க்சே ஒத்துக் கொண்டிருக்கிறார். முதலாளி வர்க்க, அற்பவாத நோக்கில் அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறிதும் லாபமில்லாத இலட்சியத்துக்கு அர்ப்பணித்துவிட்டார்.
அவர் “கண்ணியமிக்க” அறிவாளி என்ற முறையில் சமூகத்தில் நடமாட வேண்டும், தன்னுடைய அறிவை உபயோகித்து முழுப் பலனையும் (அது “பொது நன்மைக்காகவே”) அடைய வேண்டும் என்பது பெற்றோர்களின் இலட்சியம்; ஆனால் அந்த இலட்சியம் மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சுக்கு அருவருப்பாக, அந்நியமானதாக இருந்தது. அப்படி எத்தனை “அறிவாளிகளே” அவர் உரையரங்குகளிலும் வாழ்க்கையிலும் கவனித்திருக்கிறார்! (மூலதனத்தின் “பட்டம் பெற்ற கைக்கூலிகள்” எத்தனை பேர்களை அவர்களுடைய தகுதிகளுக்கேற்ப அவர் “சிறப்பித்திருக்கிறார்”!)
“கல்வியாளர்களுடன் புயல்களைத்” தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்குப் பதிலளிப்பதைப் போல இளம் மார்க்ஸ் தன்னுடைய கவிதைகளில் ஒன்றில் பின்வருமாறு எழுதினார்:
என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை,
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை,
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்.
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்.
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்;
ஓய்வு இல்லை, சோர்வும் இல்லை;
செயல் இல்லாத, விருப்பம் இல்லாத,
கிளர்ச்சியற்ற மெளனத்தில் அல்ல;
வலியெனும் நுகத்தடியின் கீழ்க்குனிந்து
ஏங்குகின்ற மோனத்தில் அல்ல;
ஏக்கம், கனவு, செயல் நமக்கு நிறைவேறும் வழியின்றி.(7)
மார்க்ஸ் எழுதிய கவிதைகள் எவ்விதத்திலும் பரிபூரணமானவை அல்ல; இந்த உண்மையை அந்த இளம் கவிஞரே நன்றாக உணர்ந்திருந்தார். ஆனால் இந்தக் கவிதைகள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கின்றன, ஏனென்றால் அவை அவருடைய ஆன்மிகக் கிளர்ச்சிக்குக் கண்ணாடியாக இருக்கின்றன; உலகத்தைப் பற்றி அவருடைய அணுகுமுறையை, சமூக விருப்பு வெறுப்புக்களை, அவரிடம் வளர்ந்து கொண்டிருந்த சமூக உணர்வை அவை பிரதிபலிக்கின்றன.
பொதுவாகக் கலையும் சிறப்பாகக் கவிதையும் அரசியல் சூழ்நிலை மாற்றங்களை எப்பொழுதுமே கூருணர்ச்சியுடன் புரிந்து கொள்கின்றன; அவை சமூகக் கொந்தளிப்புக்களின் வெப்பமானியாக இருக்கின்றன.மற்ற வடிவங்களில் அரசியல் நடவடிக்கை தற்காலிகமாகச் சாத்தியமில்லாமலிருக்கின்ற பொழுது இது சிறப்பான உண்மையாகும். 1830-களின் முடிவில் ஜெர்மனியில் இந்த நிலைமையே நிலவியது; அங்கே “ஒவ்வொரு பொதுஜன இயக்கமும்…. மடிந்தது”(8). ஆனால் அது புயலுக்கு முன்பாக இருக்கும் அமைதியைப் போன்றதே.
புதுக்காற்று ஏற்கெனவே வீசத் தொடங்கிவிட்டது. 1835ம் வருடத்திலிருந்து இளம் எழுத்தாளர்களின் குரல் மென்மேலும் பலமாக ஒலித்தது. அவர்கள் இளம் ஜெர்மனி என்ற சங்கத்தின் உறுப்பினர்கள். அவர்கள் பத்திரிகை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் கோரினார்கள். ஹேய்னெவின் அங்கதக் கவிதை ஜெர்மனி முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. பிளாட்டென், ஃபிரெய்லிக்ராத் ஆகியோரின் சுதந்திர வேட்கைக் கவிதைகள் வெளியாகிக் கொண்டிருந்தன, கியோர்கு ஹேர்வெக் கவிதா வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். மேதாவிலாசம் நிறைந்த கவிஞரும் கட்டுரையாளருமான லுட்விக் பெர்னெ வெளிநாட்டிலிருந்து பிரஷ்ய எதேச்சாதிகாரத்துக்கு எதிராக முழங்கிக் கொண்டிருந்தார்.
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்
இந்தக் காலகட்டத்தில் இளம் மார்க்ஸ், இளம் ஏங்கெல்ஸ் ஆகிய இருவருமே கவிதை மீது அசாதாரணமான அக்கறை காட்டுவதை நாம் காண்கின்றோம். அது இயற்கையே. அவர்கள் முதலில் எழுதியது கவிதைகளே; அவர்களுடைய முதல் வெளியீடுகளும் கவிதை நூல்களே. நெடுங்காலம் வரை மார்க்ஸ் தொழில் முறை எழுத்தாளராகவே விரும்பினார்.
இளம் மார்க்சின் கவிதைப் பரிசோதனைகளில் புயல் வீசப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் கலக உணர்ச்சிகளும் நிறைந்திருக்கின்றன. சுற்றிலுமுள்ள உலகத்தின் பால் தீவிரமான வெறுப்பையும் அதைச் சவாலுக்கு அழைப்பதையும் இக்கவிதைகளில் ஒருவர் தெளிவாகப் பார்க்க முடியும். அவருடைய கற்பனை அதிகமான அளவில் கட்டுப்பாடில்லாத, சூடேறிப்போன உணர்ச்சிகளை, துன்பியற் கதாநாயகனின் மிகையான உருவத்தைப் பிரசவித்தது. அந்தக் கதாநாயகன் “நெருப்புச் சக்கரத்தில் முறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறான்”, உலகத்தின் “கொடுமையான வாழ்க்கையைச் சுற்றித்” தன் கரங்களை வீசித் தன்னுடைய “முறுக்கேற்றப்பட்ட சாபத்தின்” மூலம் அதை நொறுக்கிவிடுவதாகக் கனவு காண்கிறான் (Oulanem என்ற சோக நாடகம்).(9) “நானே வாள், நானே நெருப்பு!” என்று ஹேய்னெ பிரகடனம் செய்தார். அவரைப் போல மார்க்ஸ் தன்னுடைய ஒவ்வொரு சொல்லும் “நெருப்பாக, செயலாக”(10) இருக்க வேண்டுமென்று ஏங்குகிறார்.
மனித வாழ்க்கையில் சில சந்திப்புகள் எவ்வளவு விசித்திரமானவை! 1840-களின் நடுப்பகுதியில் மார்க்சைச் சந்தித்தது ஹேய்னெயின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் சம்பவமாக இருந்தது; அவருடைய கவிதைக் கணைகள் அதிகமான அரசியல் கூர்மையை அடைந்தன. அதற்குச் சிறிது காலத்துக்கு முன்னர், 1830-களின் நடுப்பகுதியில், ஹேய்னெயின் கவிதை மார்க்சுக்கு அறிமுகமான பொழுது மார்க்சின் படைப்பு வளர்ச்சியில் அது அதே அளவுக்கு முக்கியமான பாத்திரத்தை வகித்தது.
1837ம் வருடத்திற்குள் 19 வயது நிறைந்த மார்க்ஸ் ஹேய்னெயின் நூல்களை ஏற்கெனவே நன்றாகப் படித்திருந்தார் என்பது ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் ஜெர்மனியில் ஹேய்னெயின் பெயரை உச்சரிப்பது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது. முன்பு மேற்கோள் காட்டிய மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் நாடு கடத்தப்பட்ட கவிஞர் எழுதிய சமாதானம் என்ற கவிதையிலிருந்து, ஷ்பிரேயே ஆற்றின் அழுக்குத் தண்ணீர் “ஆன்மாக்களைக் கழுவுகிறது, தேநீரை நீராளமாக்குகிறது”(11) என்ற வரியை வேண்டுமென்றே எடுத்தாளுகிறார்.
ஜெர்மானியக் கவிதையின் கலகக்காரரான ஹேய்னெ அந்தச் சமயத்தில் மார்க்ஸ் வழிபட்ட “தெய்வங்களில்” ஒன்றாக இருந்தார் என்பதில் ஐயமில்லை; அவர் கவிதைகள் இதைப் பிரதிபலிக்கின்றன. அவற்றில் ஹேய்னெயின் புதிய யாப்புகளையும் அடிக்கடி வருகின்ற சந்தப் பொருத்தமின்மைகளையும் நாம் உணர்கிறோம்; இப்பொருத்தமின்மைகள் மார்க்சிடம் ஏற்பட்டிருந்த “கலக உணர்ச்சியின்” குமுறல்களுடன் முற்றிலும் பொருந்தியிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக ஹேய்னெயின் அங்கதத்தை அவற்றில் உணர்கிறோம். அந்த அங்கதம் புத்தார்வவாதம் மற்றும் “பூமியில் வேரூன்றிய” யதார்த்த வாதம், தன்னுணர்ச்சிப் பாங்கு மற்றும் சமூக உணர்ச்சியின் கலவையாக இருந்தது.
“உலகின் அகன்ற முகத்துக்கு” முன்னால் இரும்புக் கையுறையைத் தூக்கியெறிந்த மார்க்ஸ் அங்கதம், முரண்நகை என்ற வாளைத் தூக்கிப் “பருத்த வயிறுகளைக் கொண்டவர்களின் பொய் ஒழுக்கத்துக்கும் சீர்மைக்கும்” பலமான அடிகளைக் கொடுக்க மறக்கவில்லை. இவ்விஷயத்தில் ஜெர்மன் அற்பவாதத்தையும் “முட்டாள்தனமான, ஊமை ஜெர்மன் பொதுமக்களையும்” அவர் ஏளனம் செய்கின்ற வரிகள் விசேஷமான அக்கறையைக் கொண்டிருக்கின்றன.
ஜெர்மன் மக்கள், முட்டாள் ஊமைகள்
நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புயல் இங்குமங்கும் சுழன்றடிக்கிறது,
மேகங்கள் இருண்டு தெரிகின்றன, நம்பிக்கையில்லை;
மின்னலடிக்குது, பாம்புகள் மறைகின்றன,
உணர்ச்சிகள் மாறாமல் இருக்கின்றன.
ஆனால் கதிரவன் தோன்றியதும்
காற்று கிசுகிசுக்கிறது, புயல் தணிகிறது;
மக்கள் கடைசியில் எழுகிறார்கள்,
குழப்பம் முடிந்துவிட்டது என்று
புத்தகத்தை எழுதுகிறார்கள்.
அவர்கள் புனைகதையைத் தேடுகிறார்கள்.
எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்வோம்,
நடைபெற்றவை வேடிக்கையே ஆனாலும்
சொர்க்கம் இப்படி விளையாடக் கூடாது.
எல்லாவற்றையும் முறைப்படி செய்ய வேண்டும்;
முதலில் தலை, பிறகு காலைத் தொட வேண்டும்.
குழந்தை போல அவர்கள் நடக்கிறார்கள்:
மாண்டு மறைந்தவற்றைத் தேடுகிறர்கள்!
சொர்க்கமும் பூமியும் தம் வழிகளில் போகட்டும்.
நாம் நிகழ்காலத்தை நேராகப் பார்ப்போம்.
அவை பழகிய பாதைகளில் சென்றன;
கடலலைகள் கரையை அமைதியாகத்
தொட்டுத் திரும்புகின்றன.(12)
ஒரு நபர் தன்னுடைய பணப்பையைப் பத்திரமாக மறைத்து வைத்திருக்கும் பொழுது அவர் தன்னைப் பற்றி எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும் என்று ஜெர்மன் அற்பவாதி நினைக்கிறார். இந்தச் சுயதிருப்தியை மார்க்ஸ் ஏளனம் செய்கிறார். தேளும் ஃபேலிக்சும் என்ற தலைப்பில் அவர் எழுதிய நகைச்சுவை நாவலில் “பழமையான ஜெர்மன் மரபை”, “அதிகமான கிறிஸ்துவத் தன்மை கொண்ட” குடும்பத்தைப் பற்றி ஏளனமாகச் சித்திரிக்கிறார், பிற்போக்கான மனிதர்களையும் மிதவாதத்துக்கு எதிரான போர்வீரர்களையும் கேலி செய்கிறார். மார்க்சின் முதிர்ச்சிக் கால நூல்களில் உள்ள சிறந்த நகைச்சுவையின் சாயல்களை இங்கே நாம் பார்க்கிறோம். சிறந்த ஒவ்வொன்றுக்கும் அதன் எதிரிடை இருக்கிறது, அந்த எதிரிடை அதை அகற்றிவிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்: இராட்சசனுக்கு எதிரிடை குள்ளன், அதைப் போல மேதைக்கு அற்பவாதி, மாவீரன் சீஸருக்கு நடிப்புப் பேர்வழி ஆக்டேவியனஸ், சக்கரவர்த்தி நெப்போலியனுக்கு முதலாளி வர்க்க அரசன் லுயீ ஃபிலீப், தத்துவஞானி கான்ட்டுக்குப் பெண்களை வட்டமிடுகின்ற குரூக், கவிஞர் ஷீல்லருக்கு ஹோஃப்ரட் ராவுபஹ், லேய்ப்னித்சின் வானத்துக்கு வோல்ஃபின் வகுப்பறை. அதைப் போல, கடலில் அடிக்கின்ற ஒவ்வொரு புயலும் சேற்றையும் புழுதியையும் முன்னனுமானிக்கிறது.(13)
குறிப்புகள்:
(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 586.
(2)Ibid., p. 658.
(3)Ibid., p. 665.
(4)Ibid., p. 688.
(5)Ibid.
(6)Auguste Cornu, Karl Marx und Friedrich Engels, Leben und Werke, Bd. 1, S. 103–104.
(7)Marx, Engels, Collected Works, Vol. l., pp. 525 – 527.
(8)Marx, Engels, Collected Works, Vol. 6, p. 32.
(9)Marx, Engels, Collected Works, Vol.1, p.599.
(10)Ibid., p. 586.
(11) Ibid., p. 18.
(12) Ibid., pp. 575-576.
(13) Ibid., p. 628
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
ஜுனைத் வீடு திரும்பவில்லை ……………………….. இப்போது இன்னொரு பெயர்
திடீரெனெ பிரபலமாகிவிட்டது
ஜுனைத் என்ற பதினாறு வயது பையனை
ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி
கொலை செய்துவிட்டார்கள்
ரத்தம் வெள்ளத்தில் மிதக்கும் படங்கள்
பரவலாகக் காணக்கிடைக்கின்றன
ஒரே நாளில் நாம் பிரலமாவதற்கு
தேச பக்தர்களால்
நாம் கொல்லப்படுவதைவிட
சிறந்த வழி வேறு எதுவுமில்லை
ஜுனைத் என்பது ஒரு பையன் அல்ல
ஒரு பெயர் கூட அல்ல
அது ஒரு அடையாளம் அவ்வளவுதான்
அக்லக் என்பது
எப்படி ஒரு அடையாளமோ
அதேபோல
ரோஹித் வெமூலா
எப்படி ஒரு அடையாளமோ
அதே போல
கொலைகாரர்கள் முன்
கைகூப்பிக் கெஞ்சிய
ஒரு டெய்லரின் படம்
நாடு முழுக்க பரவியதே
அந்த டெய்லரின் பெயர் எனக்கு மறந்துவிட்டது
அது முக்கியமல்ல
அந்தப் புகைப்படமும் ஒரு அடையாளம்தான்
ஜுனைத் டெல்லியிலிருந்து
ரமலானுக்கு புத்தாடைகளுடன்
ரயிலில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது
ஒரு கும்பல் அவனைக் கொன்றுவிட்டது என்கிறார்கள்
கொல்வதற்கு காரணம் எதுவும் தேவையில்லை
ஜுனைத்திற்கு ஒரு அடையாளம் இருக்கிறது
அக்லகிற்கு ஒரு அடையாளம் இருக்கிறது
அந்த டெய்லருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது
ஆனால் கும்பலுக்கு எந்த அடையாளமும் இல்லையா?
அவர்களுக்கு பெயர்கள் இல்லையா?
அக்லக்கை கும்பல் ஏன் கொலை செய்தது
என்பது உங்களுக்குத் தெரியும்
அந்த முதியவன் வைத்திருந்த ஆட்டிறைச்சியை
பசு இறைச்சி என சந்தேகித்து கொலை செய்தார்கள்
நாடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது
இப்போது எந்த இறைச்சியும் தேவையில்லை
மாட்டிறைச்சிகான
உங்கள் உரிமையைப்பற்றி பேசினாலே போதும்
நீங்கள் கொல்லப்படுவீர்கள்
ஜினைத் என்று அழைக்கப்படும்
அந்தச் சிறுவன் கும்பலோடு மாட்டிறைச்சியைப் பற்றி
விவாதித்தான் என்று சொல்லப்படுகிறது
ஆயுதம் தாங்கிய பசுப்பாதுகாவலர்கள்
தங்கள் கத்தியை நேராக அவனது நெஞ்சில் இறக்கினார்கள்
ஜினைத் கொல்லப்பட்ட அன்று
ரமலான் நோன்பு இருந்தான்
அவன் அதிகாலையிலிருந்து
ஒரு சொட்டுத்தண்ணீரைக் கூட
அருந்தியிருக்கவில்லை
அவன் நோன்பு திறப்பதற்கான
கடைசி நோன்புக் கஞ்சியை
அவனுக்கு கொடுக்க முடியாமல் போயிற்று
என்று அவனது தாய் கதறிய செய்தியைப் படித்தேன்
இப்போது முற்றுபெறாத அந்த நோன்பு
முடிவற்றதாக நீண்டுகொண்டே இருக்கிறது
அந்தப் பசியும் தாகமும்
முடிவற்றதாக வளர்ந்துகொண்டே இருக்கிறது
இந்த நாட்டின் இதயமற்ற அரசரே
உங்களால் இதை புரிந்துகொள்ள முடிகிறதா?
ஒரு சிறு பையன்
தன் ரத்த வெள்ளத்தில்
தாகத்தோடு பசியோடும்
மிதந்துகொண்டிருக்கிறான்
அவன் நோன்பை முடிக்கவேண்டிய நேரம்’
கடந்துவிட்டது
உங்களுக்கு இந்தப் பாவத்தில்
எந்தப் பொறுப்பும் இல்லையா?
அமெரிக்க ஜனாதிபதியுடன்
இன்றிரவு நீங்கள் விருந்து மேசையின் முன் அமரும்முன்
உங்கள் கரங்களை ஒரு கணம் உற்றுப்பாருங்கள்
இந்தப் பையன்களும் சேர்ந்துதானே
நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும்?
உங்களால் இதைத் தடுக்க முடியாது
என்பதும் எனக்குத் தெரியும்
அந்தக் கும்பலைப் போலவே
நீங்களும் ஒரு கருவி
கும்பலுக்கு பெயர் இல்லை
உங்களுக்கு இருக்கிறது
அவ்வளவுதான்
இன்று சுவரில் ஒட்டப்பட்டிருந்த
ஒரு சுவரொட்டியைப் படித்தேன்
‘’ முஸ்லீம்கள் யாரிடமும்
எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள்
முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ
நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ
உரத்துப் பேசாதீர்கள்
கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள்
நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு
அது மிகவும் அவசியம்’’
ஆம் மெளனமாக இருங்கள்
கொலைகார்கள் உங்கள் அருகிலேயே’
இருக்கக்கூடும்
அவர்கள் உங்களை சற்றுமுன்
கட்டித்தழுவிகொண்டிருந்திருக்கூடும்
நீங்கள் கிரிக்கெட்பந்தயங்களைப்
பார்ப்பதைக்கூட தவிர்த்துவிடுவது நல்லது
நீங்கள் உங்கள் பகைநாட்டு வீரனின் சிக்ஸருக்கு
கைதடிட்டினால்
உங்கள் கைகள் முறிக்கப்படும்
புனித ரமலான் மாதத்தில்
குடிப்பது தடை செய்யபட்டிருக்கிறது
நிரம்பிய கோப்பையிடம்
மனம் கசந்து
நான் என்ன செய்யவேண்டும்
என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை
நான் அமைதியிழந்திருக்கிறேன்
நான் இதையெல்லாம்
கடந்து போய்விடவே விரும்புகிறேன்
இந்த நாட்டில் யாருக்கும் நீதி கிடைத்ததில்லை
கலவரங்களில் கொல்லப்பட்டவர்களுக்கோ
குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கோ
ரயிலில் அடித்துக்கொல்லப்பட்ட
ஒரு பையனுக்கோ
எவருக்கும் நீதி கிட்டப்போவதில்லை
கும்பலைச் சேர்ந்தவர்கள்
காத்திருக்கிறார்கள்
ஒரு பையன் கொல்லப்பட்டதற்காக
தங்களில் இரண்டுபேர் கொல்லப்பட வேண்டும் என்று
அப்போதுதான் பதிலுக்கு இறுநுறு பேரைக் கொல்ல முடியும்
இரண்டாயிரம்பேரைக் கொல்ல முடியும்
அதுதான் திட்டம்
அதற்காக ஒரு பையன்
தான் ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியமலேயே
இறக்கிறான்
மாட்டிறைச்சி என்பது முக்கியமே அல்ல
நிறைய மனித இறைச்சிக்கு தேவை இருக்கிறது
மனித இறைச்சி
அதிகாரத்தின் ஆண்மையை
பெருகச் செய்வது
எனக்கும் ஒரு பெயர் இருக்கிறது
எனக்கும் சில அபிப்பராயங்கள் இருக்கின்றன
அந்தப் பெயர் நான் கொல்லப்படுவதற்கான ஒரு பெயர்
அந்த அபிப்ராயங்கள் நான் கொல்லபடுவதற்கான ஒரு அபிப்ராயங்கள்
மேலும் நான் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறேன்
இதையெல்லாம் மாற்றியமைப்பது
அல்லது மறைத்துவைப்பது
அவ்வளவு சுலபமல்ல
எனது ஆதார் அட்டையில்
என்னைப்பற்றிய எலலா விபரமும் இருக்கிறது
நீங்கள் என்னிடம் வருவதற்கு
இன்னும் அதிக நேரம் ஆகபோவதில்லை
என்பது எனக்குத் தெரியும்
நான் பயப்படவில்லை
தர்க்கரீதியாக இதை
புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்
மக்கள் அந்தப்பையன் கொல்லப்படுவதை
அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்
என்று சொல்லப்படுகிறது
எல்லோராலும்
வெளிப்படையாக கும்பலில்
சேர்ந்துகொள்ள முடியாது
அவர்கள் தங்கள் மனசாட்சியைக்கொல்வதற்கான
வழிமுறைகளை ஏற்கனவே உருவாக்கிவிட்டார்கள்
அந்தப்பையனின் குரல்வளையை
அறுத்தவர்களில் ஒருவன்
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்
சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ
தேர்ந்தெடுக்கப்படலாம்
புனித ரமலான் மாதத்தில்
குடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது
நமது அசோக சக்கரத்தின்
நான்கு சிங்கங்கள்
மிகவேகமாக
ஓநாய்களாக மாறிவிட்டன
அது பரிணாம வளர்ச்சியில்
மிகவும் விசித்திரமான ஒரு சம்பவம்
ரத்தவெள்ளத்தில் மிதக்கும்
ஒரு பையனின் சடலம் அருகே
நான்கு ஓநாய்கள் உற்றுப்பார்த்தபடி
நின்றுகொண்டிருக்கின்றன
ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில் சில வரலாற்று அணுகுமுறை அற்றோர் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் எழுதிய நூல்கள், வைத்த வாதங்கள் அனைத்தும் வரலாற்று அணுகுமுறையின் தொழில் நுட்ப சொற்களை தவறாக பயன்படுத்தி, குதர்க்கவாதங்களோடு ஆரிய குடியேற்றத்தை மறுத்தன. மாறாக ஆரியர்களே இங்குள்ள பூர்வகுடி மக்கள் என்பதை வலிந்தும் பொய்யாகவும் பேசினர். மோடியின் தலைமையில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் இதை அடிப்படையாக வைத்தே வரலாற்றை மாற்றுகிறார்கள். இன்னும் மோசமாக புராணப் புரட்டுக்களையே அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் பேசுகின்றனர். நாட்டின் பிரதமரே உலக அறிஞர்கள் – அறிவியலாளர்கள் கூட்டத்தில் அதை வெட்கம் கெட்டு பேசுகிறார்.
இதை ஆரம்பத்திலிருந்தே வரலாற்று அறிஞர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். அதற்கு சமீபத்திய வரவாக இந்த மரபணு ஆராய்ச்சி உண்மையை மறுக்க முடியாமல் எடுத்துரைக்கிறது. மற்ற ஆய்வுமுறைகளை விட மரபணு ஆராய்ச்சி இன்னும் துல்லியமானது. கி.மு 2000-ம் வாக்கில் மத்திய ஆசியாவிலிருந்து சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை வேராகக் கொண்ட ஆரியர்களின் வருகையை இந்த ஆய்வு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுகிறது. அதே காலத்தில் இங்கு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து போனதும் நடந்திருக்கிறது.
ஆரியர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் மற்ற மக்களும் குடியேறிகள்தான் என்று கட்டுரையாசிரியர் சற்றே நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார். அது உண்மைதான். ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்களே இந்தியாவின் பூர்வகுடிகள். அதன் பிறகு சிந்து சமவெளி நாகரீகத்தை படைத்தோர், கிழக்காசியாவில் இருந்து விவசாயத்தோடு குடியேறிய மக்கள் எல்லாம் ஆரியர் வருகைக்கு வெகு காலம் முன்பே இங்கு குடியேறினார்கள். ஆனால் ஆரியமயமாக்கம் என்பது இங்குள்ள பூர்வகுடிமக்களை விரட்டியது, ஒடுக்கியது, சமஸ்கிருதமயமாக்கம், நிறவெறி, பின்னர் அதுவே வர்ணமாக மாறியது என்று ஒரு பெரும் பார்ப்பனிய அடக்குமுறையோடு தொடர்புடையது.
இன்று இந்த மரபணுக்கள் எல்லாம் கலந்து ஒன்று பிணைந்திருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த ஒன்றிணைவை இன்றைக்கும் பார்ப்பனியம் கேள்விக்குள்ளாக்கி மதம், சாதி, மொழியின் பெயரால் இந்திய உழைக்கும் மக்களை சூத்திரன், பஞ்சமன் என்றே ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறை ஆரியர் வருகையோடு தொடர்புடையது என்பதுதான் முக்கியமானது. “நாங்கள் கருப்பாக இருக்கும் திராவிடர்களோடு சேர்ந்து வாழவில்லையா” என்று தருண் விஜய் கேட்ட கேள்வி அதை வேறு விதத்தில் விளக்குகிறது. இனி இந்துமதவெறியர்கள், ஆரியர்கள்தான் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை மறுத்துப் பேச முடியாது. ஆனால் இந்த வரலாற்று உண்மையை அவர்கள் பாடப்புத்தகங்களில் இருந்து தடை செய்ய முனைவார்கள். உண்மையை வன்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்!
இந்திய வரலாற்றின் மிகவும் நெருடலானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கேள்விக்கான விடை நிதானமாக அதேசமயம் மிக உறுதியாகக் கிடைத்து வருகிறது. தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் தனி வகைப்பட்ட கலாச்சாரத்துடனும் கி.மு 2000 க்கும் கி.மு 1500 -க்கும் இடைப்பட்ட காலத்தில் (அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு) இந்தியாவிற்குள் குடியேறினார்களா என்பதுதான் அந்தக் கேள்வி. அந்த காலகட்டம்தான் சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆம் அவர்கள் குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
மரபணுவியல் ஆராய்ச்சி அளிக்கின்ற இந்த விடை பலருக்கு வியப்பையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடும். ஏனென்றால், சமீபகாலமாக ஆரிய குடியேற்றம் என்ற கருத்தாக்கமே மரபணுவியல் ஆராய்ச்சிகளின் மூலம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற கருத்து பரப்பப்பட்டு வந்தது. இந்தக் கருத்து வலிந்து கூறப்படும் மிகைக் கூற்று என்பது அந்த கருத்தை முன்வைப்பவர்கள் சுட்டும் மூல ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவனமாக படித்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய ஒன்று.
ஆனால், அப்படிப்பட்ட சந்தேகங்கள் எதற்கும் இடமில்லாமல், தந்தை வழியாக ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் Y-குரோமோசோம்கள் தொடர்பாக இப்போது வெள்ளம் போல் வந்து சேரும் புதிய தரவுகள் ஆரியக் குடியேற்றத்தை மறுக்கும் வாதங்களை தூள் தூளாக்கிவிட்டன.
வம்சாவழித் தொடர்கள்
சமீப காலம் வரை தாயிடமிருந்து பெண் வாரிசுகளுக்கு கடத்தப்படுகின்ற mtDNA (matrilineal DNA) என்ற தாய்வழி உயிரணுவைப்பற்றிய தகவல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அந்தத் தரவுகள், இந்திய மக்களின் மரபணு தொகுப்பிற்குள் சுமார் 12,500 ஆண்டுகளாக வெளியிலிருந்து வந்த எந்த புதிய மரபணு சேர்க்கையும் நடைபெறவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தற்போது கிடைத்துள்ள புதிய Y-DNA தரவுகளிலிருந்து இந்த 12,500 ஆண்டு காலகட்டத்தில் இந்திய ஆண் வம்சாவழியில் வெளியிலிருந்து வந்த மரபணுக்கள் கலந்திருக்கின்றன என்பதை நிறுவ முடிகிறது. இது ஆரியக் குடியேற்றம் நிகழவில்லை என்று வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியிருக்கிறது.
தாய்வழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும், தந்தைவழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும் இடையேயான வேறுபாட்டுக்கான காரணம் என்ன என்பது இந்த புதிய விபரங்களின் ஒளியில் வரலாற்றை பரிசீலிக்கும் போது தெளிவாகத் தெரிகிறது. வெண்கல யுகக் குடியேறிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக இருந்திருக்கின்றனர். எனவே, தாய்வழி மரபணு தொடர்பான தரவுகளில் இந்தக் குடியேற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மரபணு கலப்பு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருக்கவில்லை. ஆனால், புதிதாக ஆய்வு செய்யப்பட்ட தந்தை வழி உயிரணு தொடர்பான தரவுகளில் அவை வெளிப்படுகின்றன.
இன்று சுமார் 17.5% இந்திய ஆண்களின் மரபு தொடர்ச்சி, மத்திய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், தெற்கு ஆசியாவிலும் பரவியிருக்கும் R1a ஹேப்லோகுழுவைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. (ஒரு ஹேப்லோகுழு ஒரு தனிப்பட்ட வம்சா வழியை அடையாளப்படுத்துகின்றது). R1a வம்சாவழி மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி பகுதியிலிருந்து மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் பரவியதென்றும் அவ்வாறு பரவும் வழியில் அது பல்வேறு துணைக்கிளைகளாக பிரிந்ததென்றும் தெரிகிறது.
சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்தியாவிற்குள் ஏற்பட்ட குடியேற்றங்களைப் பற்றிய ஒரு செறிவான கோர்வையான வரலாற்றை சித்தரிக்கும் ஆய்வுக்கட்டுரை மூன்று மாதங்களுக்கு முன்னர் BMC Evolutionary Biology என்ற, அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.
“இந்திய துணைக்கண்டத்தின் மரபணுவியல் கால வரிசை பெருமளவில் ஆண் வழியிலேயே மரபணு கலப்பு ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது” என்ற தலைப்பிலான அந்த ஆங்கில ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் மார்ட்டின் பி.ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு பின்வரும் முடிவுக்கு வந்திருக்கிறது :
சிந்து சமவெளி நாகரீகம்
“வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்து கலந்த மரபணு உள்ளீடு பெருமளவில் ஆண்கள் வழி வந்திருக்கிறது. இது இந்தோ-ஐரோப்பிய மேய்ச்சல் சமூகம், ஒரு வட்டார அளவிலான தந்தைவழி ஆணாதிக்க சமூகம் என்ற முந்தைய புரிதலுடன் ஒத்துப்போகிறது. மேற்கண்ட மரபணு கலப்பை உருவாக்கிய இந்த குடிபெயர்வு, இதை விட விரிவான இந்தோ-ஐரோப்பிய குடிபெயர்வின் ஒரு பகுதியே. ஐரோப்பிய-ஆசிய கண்டங்கள் எங்கும், 3,500 முதல் 5,000 ஆண்டுகளுக்கிடைபட்ட காலத்தில் நிகழ்ந்த இந்த குடிபெயர்வு காஸ்பியன் பகுதியிலிருந்து தோன்றியிருக்கிறது.”
இந்திய ஆண்களின் உடலில் R1a குழுவைச் சேர்ந்த மரபணுக்கள் பரவலாக காணப்படுவது, இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வெண்கல யுகத்தில் குடியேறியதற்கான ஒரு வலுவான ஆதாரம் என்று பேரா. ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். பேரா. ரிச்சர்ட்ஸ் குழுவினரின் உறுதியான முடிவுகள், அவர்களது சொந்த ஆராய்ச்சியில் கிடைத்த வலுவான ஆதாரங்களை மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளில் உலகெங்கிலும் நடத்தப்பட்ட மரபணுவியல் விஞ்ஞானிகளுடைய ஆய்வுகளில் கிடைத்த தரவுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மரபணுவியலாளரும், பேராசிரியருமான டேவிட் ரைக் தனது முந்தைய ஆய்வுகளில் மிகவும் எச்சரிக்கையாக முடிவுகளை முன் வைத்திருந்தார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டேவிட் ரைக் தலைமையிலான குழுவின் 2009-ம் ஆண்டு நேச்சர் இதழில் வெளியான “இந்திய வரலாற்றை மீண்டும் பொருத்திப் பார்ப்பது” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையாகும்.
இந்த ஆய்வு இந்திய மக்கள்தொகையின் மரபணுவியல் உட்பிரிவை தீர்மானிக்க “வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர்” என்ற கோட்பாட்டை பயன்படுத்தியது. வடஇந்திய மூதாதையர் மத்திய கிழக்கு மக்களுடனும், மத்திய ஆசிய மக்களுடனும் ஐரோப்பியர்களுடனும் மரபணுவியல் ரீதியில் நெருக்கமானவர்கள் என்றும் தென்னிந்திய மூதாதையர் இந்தியாவில் மட்டுமே காணப்பட்டவர்கள் என்றும் அந்த ஆய்வு நிறுவியது. இன்றைய இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான குழுக்களை இந்த இரண்டு மக்கள் பிரிவினரின் கலப்பாக வகைப்படுத்தலாம் என்றும் மேல் சாதி குழுக்களிலும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை பேசுபவர்களிலும் வட இந்திய மூதாதையர் கூறுகள் அதிகமாக உள்ளன என்றும் இந்த ஆய்வு நிறுவியது. இந்த ஆய்வு ஆரிய குடியேற்றத்தை மறுக்கவில்லை. மாறாக வடஇந்திய மூதாதையர்களுக்கும் மத்திய ஆசிய மக்களுக்கும் இடையேயான தொடர்பை சுட்டிக் காட்டுவதன் மூலம் ஆரிய குடியேற்றம் பற்றிய கருதுகோளை வலுப்படுத்தியிருந்தது.
இருப்பினும், இந்த ஆய்வு உருவாக்கிய வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர் என்ற கோட்பாடு விருப்பம் போல இழுத்துத் திரிக்கப்பட்டு இந்த இரண்டு குழுக்களும், ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறியதாகக் கருதப்படும் 4000-3500 ஆண்டுகளுக்கு வெகு முன்னதாகவே, பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்து விட்டவர்கள் என்றும் வாதிடப்பட்டது.
புதிதாக பெருமளவு தரவுகள் கிடைத்திருக்கும் நிலையில் இப்போது ரைக் என்ன சொல்கிறார் என்று கேட்போம். கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பிப் புல்வெளி பகுதிகளில் தோன்றி பின்னர் ஐரோப்பாவிற்கும் தெற்காசியாவுக்கும் பரவின என்ற கருதுகோளைப் பற்றி பேசும் போது அவர் “மரபணுவியலைப் பொறுத்தவரை ஸ்டெப்பி கோட்பாட்டுக்கு ஆதரவான நிலையே உள்ளது. ஐரோப்பாவில் இன்று வலுவாக காணப்படும் வடக்கு யூரேசிய வம்சாவழி கிழக்கு ஸ்டெப்பியிலிருந்து சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தது என்று நிறுவியிருக்கிறோம்” என்று சொன்னார்.
இந்தியாவைப் பொறுத்தவரை “2000 முதல் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் ஒரு சிக்கலான மக்கள் தொகை கலப்பு நடந்திருக்கிறது. பலவகை சமூகங்களைப் பற்றி பேசும் உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலத்துடன் இது பொருந்துகிறது” என்கிறார் அவர்.
இவ்வாறு, வெண்கலயுகத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் குடியேறினார்கள் என்ற கூற்றை எதிர்க்கும் வாதங்கள் ஒவ்வொன்றும் பொய்ப்பிக்கப்பட்டு விட்டன.
வாதங்களை தொகுத்துப் பார்க்கலாம்
தாய்வழி உயிரணுக்களில் அதற்கான தரவுகள் இல்லை என்பதால் 12,500 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் வெளியிலிருந்து எந்த மரபணு கலப்பும் நிகழவில்லை என்ற வாதம் தந்தைவழி உயிரணு தரவுகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. தந்தைவழி உயிரணு தரவுகள் இன்றைக்கு 4,000 ஆண்டு முதல் 5,000 ஆண்டு வரை முந்தைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பெருமளவு வெளியிலிருந்து மரபணு கலப்பு நடந்திருக்கிறது என்று காட்டுகின்றன. குறிப்பாக இந்தியாவில் 17.5% ஆண் வம்சாவழியினரில் காணப்படும் R1a இந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்குள் கலந்திருக்கிறது. தாய்வழி உயிரணு தரவுகளில் இதற்கான ஆதாரங்கள் காணப்படாமல் இருப்பதற்கான காரணம், வெண்கல யுகத்தின் குடியேற்றங்கள் பெருமளவு ஆண்களால் நிகழ்ந்திருக்கின்றன என்பதேயாகும்.
R1a வம்சாவழி மற்ற பகுதிகளை விட இந்தியாவில் அதிக பன்முகத்தன்மை கொண்டிருப்பதால், அது இந்தியாவில் தோன்றி பிற இடங்களுக்கு பரவியிருக்க வேண்டும் என்ற வாதமும் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால், R1a ஹேப்லோ குழுக்களைப் பற்றி கடந்த வருடம் வெளியிடப்பட்ட உலகளாவிய மிகப்பெரிய ஒரு ஆய்வு, இந்தியாவின் R1a வம்சாவழிகள் R1a-Z93 ன் 3 துணைக் குழுக்களை மட்டுமே சேர்ந்தவை என்றும் அவை 4000-4500 ஆண்டுகளுக்கு முந்தையவை மட்டுமே என்றும் நிறுவியிருக்கிறது.
இந்தியாவில் வடஇந்திய மூதாதையர்கள், தென்இந்திய மூதாதையர்கள் என்ற இரண்டு புராதன குழுக்கள் இருந்தன என்ற கோட்பாட்டின் படி ஆரியர்கள் குடியேறியதாக சொல்லப்படும் காலத்துக்கு வெகு முன்னதாகவே அந்த இரண்டு குழுக்களும் இந்தியாவுக்குள் வந்து விட்டன என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானது. ஏனென்றால் அந்தக் கோட்பாட்டை முன் வைத்த ஆய்வே வடஇந்திய மூதாதையர் குழு என்று கூறப்படுவதே, ஆரிய குடியேற்றம் உட்பட பல குடியேற்றங்களின் கலப்புதான் என்று கூறி எச்சரித்திருந்தது.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் போது நாம் இன்னும் இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, வெவ்வேறு துறைகளில் செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகள் கி.மு 2000 இந்திய வரலாற்றின் முக்கிய காலகட்டம் என்ற முடிவுக்கு வருகின்றன.
அ. பிரியா மூர்ஜானி குழுவின் ஆய்வின் படி, அந்த காலகட்டத்தில்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களினங்களின் கலப்பு பரந்த அளவில் தொடங்கியது. அந்தமான் தீவுகளின் ஒங்கே மக்கள் மட்டும்தான் இந்த கொந்தளிப்பான காலகட்டத்தினால் பாதிக்கப்படாத ஒரே குழுவாகும்.
ஆ. 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட டேவிட் போஸ்னிக் குழுவின் தந்தை வழி மரபணு ஆய்வின் படி, கி.மு 2000 வாக்கில்தான், இந்திய மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் R1a-வின் துணைக்குழுவான Z93 “மிகவும் கவனிக்கத்தக்க வகையில்” பிளவுபட ஆரம்பித்திருக்கிறது. இது “வேகமான வளர்ச்சியையும் பரவலையும்” குறிக்கிறது.
இ. கடைசியாக, நீண்ட காலமாகவே நிரூபிக்கப்பட்டு விட்ட தொல்லியல் ஆய்வுகள், கி.மு. 2000 வாக்கில்தான் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடைய தொடங்கியது என்று நிறுவியுள்ளன.
இந்த எல்லா தகவல்களையும் பக்கச்சார்பில்லாமல் பார்க்கும் போது, இந்திய வரலாற்றின் புதிரான கால கட்டத்தை புரிந்து கொள்வதற்கான தகவல்களும் கிடைக்காமலிருந்த இணைப்புகளும் கிடைத்துவிட்டன என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இரண்டாவதாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆய்வுகளில் பலவற்றின், நோக்கங்களும் மாதிரிகளும் ஆராய்ச்சி முறையியலும் உலகம் முழுவதற்குமானவை. எடுத்துக்காட்டாக, R1a Z93 வம்சாவழியின் சிதறலுக்கான காலத்தை 4000-4500 என்று கணித்த போஸ்னிக் ஆய்வு, பெரிய அளவிலான தந்தைவழி உயிரணு குடியேற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை, இந்தியாவுக்காக மட்டும் நிகழ்த்தவில்லை. மற்ற நான்கு கண்ட மக்கள் மத்தியிலும் நிகழ்த்தியது. அதன் மூலம் அமெரிக்காவில் 15000 ஆண்டுகளுக்கு முன் நடந்த Q1a-M3 ஹேப்லோகுழுவின் குடியேற்றத்தை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது. இது அமெரிக்கக் கண்டத்தின் ஆரம்ப கால குடியேற்றத்தைப் பற்றி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலத்துடன் ஒத்துப்போகிறது.
ஆகையால் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியேற்றங்கள் பற்றிய புதிர்களுக்கு சமீபத்திய இந்த ஆய்வுகள் மூலம் விடை கிடைத்துள்ளன. இந்த உலகளாவிய குடியேற்றங்கள் பற்றிய சித்திரம் மேலும் மேலும் முழுமை அடையும் போது, குடிபெயர்வுகள் பற்றிய இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ஒருமித்த கருத்தை (அறிவியலற்ற உள்நோக்கத்துடன் – மொர்) மறுப்பவர்களின் முயற்சி கடினமாகிவிடும்.
இது வரை, நாம் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்களின் குடியேற்றங்களை மட்டுமே பார்த்தோம். ஏனென்றால் அதுதான் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வாக இருந்திருக்கிறது.
ஆனால் இதை விட விரிவான சித்திரத்தை நாம் காணத் தவறக் கூடாது. R1a வம்சாவழி 17.5% இந்திய ஆண்களிலும், அதை விடக் குறைவான அளவு பெண்களிலும் மட்டுமே காணப்படுகிறது.
உண்மையில், அறுதிப் பெரும்பான்மையான இந்தியர்கள் பல்வேறு குடியேற்றங்களிலிருந்தான மூதாதையரை கொண்டிருக்கிறார்கள்.
55,000 – 65,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் இருந்த வந்த ஆதிமுதல் குடியேற்றம்.
கி.மு 10,000 ஆண்டுக்கு பிறகு மேற்காசியாவிலிருந்து பல அலைகளாக நிகழ்ந்த விவசாயக் குடியேற்றங்கள்
காலம் இன்னமும் கணிக்கப்படாத கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக் மொழி பேசும் முண்டா, திபெத்தோ-பர்மன் பேசும் கரோ போன்ற இனத்தவர்களின் குடியேற்றம்
இப்போது தெள்ளத்தெளிவாகி விட்டது என்னவென்றால் நாம் ஒரு மூலத்தை அல்ல, பல மூலங்களைக் கொண்ட, அவற்றின் கலாச்சார, பழக்கவழக்க, வம்சாவழி, குடியேற்ற வரலாறு போன்றவற்றை ஏற்றுக்கொண்ட நாகரிகம் ஆவோம்.
இந்தியாவை முதலில் கண்டுபிடித்து குடியேறிய நால்திசையும் முன்னேறிச் சென்ற, பயமறியா முன்னோடிகளான, ஆப்ரிக்காவிலிருந்து வந்த மக்கள் நமது நாட்டின் மக்கட் தொகையின் அடித்தளப்பாறையாக இன்னும் இருக்கிறார்கள்.
பிறகு விவசாய தொழில்நுட்பத்துடன் வந்த மக்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை படைத்தனர். அவர்களின் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் இன்றும் நம்மை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
பிறகு நெல் பயிரிடுதலையும் அது தொடர்பான கலாச்சாரத்தையும் கிழக்காசியாவிலிருந்து கொண்டுவந்த மக்கள் இவர்களுடன் இணைந்தார்கள்.
பிறகு சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் அதை ஒட்டிய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்துடனும் வந்து நமது சமூகத்தை அடிப்படையிலேயே உருமாற்றிய மக்களின் குடியேற்றம் நடந்தது.
இன்னும் பிற்காலத்தில் வியாபாரத்திற்காகவோ நாடுபிடிப்பதற்காகவோ வந்து, இங்கேயே தங்கிவிடுவது என்ற முடிவு செய்த மக்களின் கலப்பும் நிகழ்ந்திருக்கிறது.
இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இன்று இந்திய நாகரிகம் என்று நம்மால் அழைக்கப்படுவதை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாம் எல்லோருமே குடியேறிகள் தான்.
– டோனி ஜோசஃப் (Tony Joseph), நன்றி: The Hindu
தமிழாக்கம் – நேசன்
தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த டோனி ஜோசப் எழுதிய கட்டுரை சுருக்கப்பட்டு, மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வருவதை தமிழகத்தின் தலைப்பு செய்தியாக ஊடகங்கள் மாற்றிவிட்டன. பாஜக, ஆர்.எஸ்.எஸ், குருமூர்த்தி வகையறாக்களின் திட்டமும் அதுவே. மாலை நேர தொலைக்காட்சி விவாதங்களோ இல்லை தந்தி டி.வி முன்வைத்த கருத்துத் திணிப்போ எல்லாம் ரஜினியை தமிழகத்தின் அடுத்த ரட்சகராக மக்கள் கருதுவதாக முன்வைத்தன. உண்மையில் ரஜினியைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள திட்டமிட்டோம். முதலில் ரஜினியை நேரடியாக அறிந்த அவரது திரையுலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதறிய சில சினிமாத் தொழிலாளிகளை சந்தித்தோம்.
சென்னையின் அதிகாலை ஐந்து மணி, வடபழனி பேருந்து நிலையம் அருகே சினிமா தொழிலாளிகளை ஏற்றிசெல்லும் ஃபெட்போர்டு வண்டியின் வருகைக்காக காத்திருந்த புரடெக்சன் தொழிலாளி செல்வத்திடம் ஆரம்பித்தோம்.
ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
செல்வம்
நான் இருபத்தி அஞ்சு வருசமா ஃபெட்போர்டு வண்டி ஓட்டுறேன். ஒரு கால்சீட்க்கு 700 ரூபா தான் கூலி.மாசத்துல எல்லா நாட்களும் வேலை கிடைக்காது. ஒரு மாசம் முழுசா வேலை இருக்கும் இல்லனா, சுத்தமா வேலையே இருக்காது. சிலசமயம் மாசத்துல பத்து நாள் தான் வேலை இருக்கும். இந்த வருமானத்தை கொண்டு நான் வீட்டு வாடகை கட்டுறதா? குடும்பத்தை நடத்துறதா? ஆனா, ரஜினி ஒரு படம் நடிச்சா எவ்ளோ? 50 கோடி! இந்த பணத்தை வச்சி என்ன பண்ணுறாரு? அவரோட ரசிகர்களின் பசங்க படிக்க இலவச பள்ளிகூடம் கட்டி கொடுத்திருக்கலாம். வேற ஏதாவது மக்களுக்கு பண்ணியிருக்கலாம். ஆனா, எதுவும் பண்ணது கிடையாது.
ரஜினி ஏற்கனவே ஒரு பள்ளி நடத்துகிறாரே அதில் கொண்டு போய் உங்கள் பிள்ளைகளை சேர்க்கலாமே?
அவரு ஸ்கூல் நடத்துறதே நீங்க சொல்லித் தான் தெரியுமே. எங்க யூனியன்ல எல்லாரோட பிள்ளைங்களும் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம்.
ரஜினி முதலமைச்சர் ஆனால் சினிமாகாரங்களுக்கு நல்லது தானே. தொழிலாளியோட பிரச்சனையை தீர்க்க மாட்டாரா?கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் சினிமாவுல இருந்து தானே வந்தாங்க.
அவங்க என்ன பண்ணிருக்காங்க. எல்லாம் அப்படி தான் சார் சொல்லுவாங்க. எல்லாம் பொய். அவனுங்களால் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா?
நான் வேணாம்னு சொல்லல. அது அவரோட விருப்பம். இன்னைக்கு அரசியலே ஒரு பிசினஸ் தானே. பணம் இருக்கவன் தொழில தொடங்குறான். அவ்ளோ தான். அவனவன் அரசியல்ல கவுன்சிலர், வட்டம், மாவட்டம்னு தான் போவாங்க. இவரு ஒரேடியா முதலமைச்சர் ஆகப் பார்க்கிறார். அப்பதானே அதிகமா சம்பாதிக்க முடியும். மோடி பிரதமராகி என்ன பண்ணாரு. ஏதாவது ஒரு அறிக்கை விடுவாரு, அதோட பறந்து போயிடுவாரு. அதத்தான் ரஜினியும் பண்ணுவார். சினிமாவுக்கு வேணும்’னா ஸ்டாரா இருக்கலாம். அரசியலுக்கு எல்லாம் வொர்த் இல்லை
ரஜினி, அண்ணாமலை படத்தில் ஒரே பாட்டில் பணக்காரர் ஆனது மாதிரி நம்மையும் பணக்காரர் ஆக்கிடுவாராமே?
அருகே இருந்த புரடெக்சன் தொழிலாளி முருகன் பேச ஆரம்பித்தார்.
“சினிமா என்பது ஒரு கவர்ச்சி தான். அது மக்களுக்கு பிடிக்கும்” சினிமாவுல நல்லவரா நடிக்கலாம். அவரோட நடிப்பை ரசிக்கலாம், இது தான் சினிமா. ரசிகர்கள் கொண்டாடுவாங்க. அதுக்காக அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏதாவது செஞ்சிருக்காரா என்றால் இல்ல. மக்களுக்கோ, ரசிகர்களுக்கோ ஒன்னும் பண்ண வேணாம். சினிமா தொழிலாளிங்களுக்கு என்ன பன்னிருக்காருன்னு முதல்ல சொல்ல சொல்லுங்க!
முருகன்
சென்னையில வெள்ளம் வந்தப்ப வீட்டுக்குள்ளயே பத்திரமா இருந்தாரு. சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் வந்தபிறகு தான் இவர் வெளியவே வந்தார். மக்கள் கஷ்டப்படும் போது கூட எதுவும் பேசாதவன் தான் ஆட்சிக்கு வந்து செய்யப்போகிறாரா?
விவசாயியங்க போராடினப்ப ரஜினி எதுவும் பேசல. ஆனா இப்ப எதுக்காக அய்யாக்கண்ணுவை பாக்கணும்? புதுக்கோட்டையில மக்கள் எல்லோரும் போராடினாங்க அதுக்காக என்ன பண்ணாரு? நான் ரஜினியோட தீவிர ரசிகன் தான், இருந்தாலும் அரசியல்ல அவரால ஒன்னும் பண்ண முடியாது. சினிமா கற்பனை; வாழ்க்கை நிஜம். ரெண்டும் வேற தான்……….
அதற்குள் ஃபெட்போர்டு வண்டி வந்ததும் சென்று விட்டார்.
சற்று தொலைவில் நின்றிருந்த தொழிலாளி ஒருவர்,
…. நான் ஒரு சினிமாக்காரன். அதனால் சினிமாவையோ, நடிகர்களையோ பத்தி எதுவும் குறை சொல்ல முடியாது. இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர் எல்லாம் மாற்று மொழியில் இருந்து தான் வந்தார்கள். அந்த வகையில் இவரும் வரட்டுமே என்று கூறியவாறே நகர்ந்தார்.
ஃபெட்போர்டில் அமர்ந்திருந்த பெண் தொழிலாளிகள்,
நாங்க எதுவும் சொல்ல கூடாதுங்க…… எங்க யூனியன்ல பிரச்சனை வந்துடும். ….! யாரு வந்தாலும் எதுவும் பண்ண போறதில்ல. நானும் 20 வருசமா சினிமாவுல சோறு ஆக்கிபோடுறேன். எங்க முகம் கூட அவங்களுக்கு தெரியாது. எந்த நடிகை, நடிகரும் ஒரு புடவை கூட எடுத்து கொடுத்தது இல்லை.
அங்கே வேலைக்காக காத்திருந்த ஆந்திரா தொழிலாளர்கள் ஆர்வமாக,
ரஜினிய பத்தி என்ன சொல்றது….? சொல்லுற அளவுக்கு ஒன்னும் இல்ல..! நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருக்கோம். தொழிலாளிங்க எங்க பாடே பெரும்பாடு. ஷூட்டிங் ஸ்பாட்க்கு ஆறு மணிக்கு போகணும். அதுக்காக நாங்க நாலு மணிக்கே எழுந்து கெளம்புறோம். 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் வேலை செய்றோம்.
ஆந்திர தொழிலாளிகள்
ஷூட்டிங் சாப்பாட்டுக்கு தேவையான எல்லா வேலையும் செய்வோம். ஆனா ஒருநாள், கேமராவுக்கு சூடம் காமிக்க தேங்கா, கற்பூரம் வாங்க மறந்துடுவோம். அதுக்காக வாங்கற திட்டு கொஞ்சமில்ல…..! செட்டு போடுவோம், புரடெக்சன் வேலையும் பார்ப்போம். ரொம்ப கஷ்டமா இருக்கும். வெறும் 750 ரூபா தான் தராங்களே. சொந்தமா வீடு கூட வாங்க முடியல.
அரசு உதவி பெரும் பள்ளியில என்னோட பிள்ளையை சேர்த்தேன். ஐந்தாவது படிக்கிற பையனுக்கு 5,000 பீசு கட்ட முடியாம கஷ்டப்பட்டேன். 25 தேதியிலிருந்து 10 ம் தேதி வரைக்கும் எங்களுக்கு ஏற்படுற மன உளைச்சல் மரண வேதனையா இருக்கும். வீட்டு வாடகை கட்டனும், தண்ணி, கரண்ட் பில் எல்லாம் கட்டனும். ஆனா அந்த நேரத்துல ஷூட்டிங் இருக்காது. ஆனா, இந்த வேலைக்கி யூனியன்ல சேர அப்போ ரூ.4000 கட்டி ஷூட்டிங் கார்டு வாங்கினோம். இப்ப ரூ.2.60 லட்சம் கட்டினா தான் இங்க வேலையே செய்ய முடியும்.
இன்று வேலை கிடைக்குமா கிடைகாதா என என்ற தவிப்புடன் அமர்ந்திருக்கும் பெண்கள்
நாங்க ஓய்வு பெரும் போது ஆறு லட்சம் தருவதற்காக எங்களோட சம்பளத்துல இருந்து 5% பிடிப்பாங்க. 20 வருசமா வேலை செய்றவங்களுக்கு இத கொடுக்கணும், ஆனா 30 வருஷம், 35 வருஷமாகியும் பல தொழிலாளிக்கு இன்னும் பணம் கிடைக்கல. இந்த பிரச்சனைய எந்த ரஜினியும் கேட்டதில்லை. நாங்களும் கேட்க முடியாது. கேட்டா வேலையும் இருக்காது.
இங்க இருக்கவங்க முகத்தை பார்த்திங்கன்னா தெரியும் . ஒரே கலக்கத்தோட இருப்பாங்க. வேலை இருக்குமா? இருக்காதா-ன்னு ஒரே குழப்பமா இருக்கும். எங்க யூனியன்ல 300 பேர் வந்திருக்கோம்.. இதுல ஒரு ஐம்பது பேர் தான் வேலைக்கு போவாங்க. இது தான் எங்களோட வாழ்க்கை. இப்ப ரஜினி வந்து மட்டும் என்ன பெரிய மாற்றம் வரப்போகிறது?
குழுவாக இருந்த பெண்கள்,
35 வருசமா இந்த வேலை செய்யறோம். எங்கள பாத்தா கொத்தனார் வேலைக்கு போற மாதிரி இங்க குந்திக்கினு இருக்கோம். எத்தனையோ ரஜினி படத்துல சோறு ஆக்கி போட்டிருக்கோம். அந்த ஆளு சாப்பிட்ட தட்டை கூட நாங்க தான் எடுக்குறோம். எங்களுக்குன்னு ஒண்ணுமே பண்ணாதவன். அட, எதுவும் பண்ண கூட வேணாங்க. நாம வணக்கம் சார்னு சொன்னா கூட ஒரு “ஹாய்” கூட சொல்ல மாட்டான். அவங்க வந்தாலும் போனாலும் கேரவனு. எங்களுக்கு எப்பவுமே இந்த ஃபிளாட் பாரம் தான். ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க “ஆளப் பார்த்த அழகு, பூ**** பார்த்த சொத்த” அதான் ரஜினி!
தமிழகத்தில் விவசாயம் முதல் குடிநீர் வரை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு. சென்னை வடபழனி கோவிலில் மக்களைச் சந்தித்து குடிநீர் அரசியல், மெரினா கோக் பெப்சி எதிர்ப்பு குறித்து பேசிய போது மழை வெள்ளமாக பொங்கித் தீர்த்தனர்.
இந்த வறட்சி என்பது தானாக உருவான இயற்கை நிகழ்வு இல்லை என்பதை பல பேர் விளக்கவும் செய்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு கோக் பெப்சிக்கான எதிர்ப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவு தமிழகத்தில் வலுவடைந்திருக்கிறது.
சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர்.
“ஒரு கேனு தண்ணீ கொறஞ்சது 40 ரூவாங்க ரெண்டு புள்ளைங்க கொண்ட குடும்பத்துக்கு ஒரு கேனு தண்ணி பத்தமாட்டேங்குது. மாசம் 20,000 சம்பாதிக்கிறேன் கிட்டத்தட்ட தண்ணிக்கே 1,500 செலவழிக்கிறேன். பொறவு வாடக, ஸ்கூல் பீசு, சாப்பாடு நல்லது கெட்டது மனுசனுக்கு எங்கிட்டு நிம்மதி இருக்கும் சொல்லுங்க. அரசாங்கம் நமக்கு நல்ல குடிதண்ணிய குடுக்காம மெத்தனமா இருக்கக் காரணமே தனியாரு வித்துக்கட்டும் நமக்கு கமிசனா ஒரு தொக தருவான் அப்படிங்கறதுதான்.“
“நான் இதுவரைக்கும் கோக்கு பெப்சியெல்லாம் குடிச்சதில்ல. நம்ம தண்ணி பிரச்சனைக்கி அவங்கள ஒரு காரணமா நெனச்சதுமில்ல. ஜல்லிக்கட்டுக்கு பிறகு பயங்கரமா எதுக்குறேன்.
நான் பட்டுக்கோட்டை பக்கத்துல உள்ள கிராமத்த சேந்தவன். ரெண்டு ஏக்கர் நிலத்துல எங்க குடும்பமே பாடுபட்டு பத்தாததுக்கு கூலிக்கி வேலபாத்து வல்லம் பெரியார் கல்லூரியில பி.இ படிக்க வச்சாங்க. 2012-ல படிப்ப முடிச்சேன். வேல தேடுற தேடுறன் தேடிட்டே இருக்கேன். சென்னையில தங்கி வேலை தேடவும் அரை வயித்துக்கு சாப்பிடவும் கெடைக்கிற கூலி வேலைக்கி போறேன். எங்க போறது என்ன செய்றதுன்னு தெரியாம இன்னைக்கி இங்க வந்து குந்திருக்கேன். அப்பா ஊருலேருந்து போன் பண்றாரு ஆத்துல தண்ணி வராம வயல்ல ஒரு பயிரு கூட ஊனல. எப்படியாவது செலவுக்கு கொஞ்சம் பணம் அனுப்புடான்னு. கையாலாகாதவனா இருக்கேன்”
குரோம்பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவி
“எங்க வீட்டுல குழாய் தண்ணிதான் குடிக்குறோம். எந்த நேரத்துல சாக்கட வாசன வரும்னே சொல்ல முடியாது. அத விட்ட வேற வழியும் கெடையாது.. எங்க ஸ்கூல் டாய்லெட்ல தண்ணியே கெடையாது. (அரசு பள்ளி) நான் 12 படிக்கிறேன் பீரியடு நாள்ல கூட அப்படியே வீட்டுக்குதான் வருவேன். விவசாயிங்க டெல்லியில போராட்டம் பன்றாத நியூசுல பாத்தேன் பாவமா இருக்கு. நமக்கு தேவையான தண்ணி பிரச்சனைக்கு வழி செய்ய முடியாத அரசாங்கம் கோக்கு தயாரிக்கவும் விக்கவும் தடை செல்ல முடியாதுங்குது.
மாதிரிப் படம்
தாமிரபரணி ஆத்துல தண்ணி எடுத்துக்கலான்னு அரசு லைசன்சு குடுத்துருக்கும் போது எடுக்க கூடாதுன்னு சொல்ற உரிமையும் அவங்களுக்கு இருக்குமில்ல. விவசாயிங்க தண்ணி இல்லாம கஷ்டப்படும் போது கோக்குக்காறன் தண்ணிய எடுத்துக்கலாம்னு சொன்னா அரசுக்கு நம்மள பத்தின அக்கற இல்லன்னுதானே அர்த்தம். நாங்க பெரியவங்களா ஆகும் போது தண்ணிப் பிரச்சனை எப்படி இருக்குன்னு நெனச்சு பாத்தேலே பயமாருக்கு”
தள்ளுவண்டியில் கூழ் விற்பவர்.
எந்த நாட்டுலங்க சோறு போட்ற விவசாயத்த பத்தி எந்த கவலை இல்லாம இருங்காங்க. தண்ணியில்ல… தண்ணியில்ல… வறட்சி வறட்சின்னு கத்துறது காதுல கேக்குதா எவனுக்காச்சும்? என்னடா இப்புடி பேசுறானேன்னு நெனைக்காதிங்க.
மாதிரிப் படம்
எனக்கு 50 வயசாகுது. ஆத்துல ஓடுற தண்ணி ஓட்டத்துல, வத்திப் போன கெணத்துல கூட ஊத்துக் கண்ணு தொறந்துடும். இன்னைக்கி ஊறே வறண்டு கெடக்கு. கிராமத்துல சனங்க குடிதண்ணிக்கி கொடத்த தூக்கிட்டு அலையிரத பாக்கும் போது வேதனையாருக்குங்க. இப்படி ஒரு நெலம வந்து ரெண்டு மூணு தலமொற ஆகலங்க. எங்கண்ணு பாத்துருக்க உருவானதுதான். அவ்வளவு ஏங்க தவிச்ச வாயிக்கி தண்ணி குடுண்ணு பக்கத்துல இருக்கவன கேக்க முடியல. காசு போட்டு வாங்குன தண்ணிய கேக்கறதான்னு நமக்கு பயம். தண்ணிய கேட்டு இல்லன்னு சொல்றதான்னு சங்கடப்பட்டு பைக்குள்ள மறச்சு வைக்கிறான். இப்படி ஒரு நெலம யாரால வந்துச்சு. பாலைவனம் போல வறண்ட பூமியாங்க இது தண்ணி பஞ்சம் வர? எல்லா வளமும் கொட்டி கெடக்குற நாடுங்க. குட்டிச்சுவரா ஆக்கிட்டானுங்க பாவிங்க.”
சென்னையில் ஆட்டோ மொபைல் கடை வைத்திருப்பவர்.
“எங்க வீட்டுல போர் தண்ணி தாங்க குடிக்கிறோம். கோக்கு பெப்சியெல்லாம் குடிக்கிற பழக்கமில்லைங்க. நான் பாக்குறது ஆட்டோ மொபைல் தொழில். உடம்பு வலிக்க வேல பாத்துட்டு ஒரு டீ குடிச்சா அடுத்த வேலை பாக்க சுறுசுறுப்பா இருக்கும். கூல்டிரிங்சல்லாம் மெழுக்கா வேலை செஞ்சுட்டு ஒதட்டுல ருசி தெரிய குடிக்கிறது. நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.
ஆரம்பத்துல புடிக்காமதான் குடிக்காம இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கு பிறகு நம்ம நாட்டுலேயே இவனுங்க இருக்க கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன். நமக்கு விவசாயத்துக்கே தண்ணி இல்ல, குடிக்க தண்ணியில்ல, இவனுங்க என்ன இங்க ராஜியம் பண்றது. அதுக்காக கோக்கு முதலாளிய தேடி போயி எதுவும் பண்ண முடியாது. அதுக்கு அனுமதி கொடுத்த அரசதான் நாம கேக்கனும். இங்க அடிக்கிற அடியில அங்க நெறி கட்டணும்.”
சென்னையில் ஐ டி வேலை செய்யும் ஊழியர்.
நான் ஏ.டி.எம்.கே –ங்க அம்மா செத்ததுலேருந்து மனசு ஒடிஞ்சு போச்சுங்க. அவவனும் பொறுக்கித் திங்க என்னாமா நாடகம் நடத்துறானுங்க. வெறுத்துப் போயிட்டேன் இப்ப நான் எந்த கட்சியும் இல்ல. ஜல்லிக்கட்டு போராட்டத்தப் பாத்த பிறகு கட்சியே தேவை இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்.
அதுல ஒரு விசயத்த கவனிச்சிங்களா ஜல்லிக்கட்டு போராட்டத்துல கோக்கு பெப்சிக்கு எதிர்ப்பு கெளம்புன ஒடனே ட்ரம்பு (டொனால்ட் ட்ரம்பு) மோடிக்கு போன போட்டு வடிவேலு மாறி “என்னடா நடக்குது அங்க” ஏதோ மாடு புடி மேட்டருன்னு. பாத்தா நம்ம பாட்டில போட்டு ஒடைக்கிறான், கீழ ஊத்துறான் பாட்லுக்கு மாலை போட்டு சங்கூதுறான் இதெல்லாம் ஆவாதுப்பு மாட்ட ஒடனே அவுத்துடுன்னா அதுக்கு பிறகுதான் மோடி அவுத்துட்டார். இதுலேருந்து என்ன தெரியிது தும்ப விட்டுட்டு வால புடிக்க கூடாது. நாம விக்க மாட்டோன்னு சொல்றத விட வெளிநாட்டுக்காரன் இனி இங்க இருக்க கூடாதுன்னு சொல்லனும்.
ஐ.டி-யில இருந்துட்டு என்னடா இப்படி பேசுறேனேன்னு நெனைக்கிறீங்க அதானே! அவன் குடுக்குறத விட புடுங்குறதுதாங்க அதிகம். யோசிச்சு பாருங்க பத்து பேருக்கு வேலை கொடுக்குறா போல இருக்கும். நூறு பேரு உயிரு போக காரணமா இருப்பான். நாளைக்கே அவன் மூட்ட கட்டிட்டா நான் சொன்னது நடக்கும். நான் கை நெறையா சம்பளம் வாங்குறேன் இல்லேங்கல. ஆனா எங்க அப்பா விவசாயம் செய்ய முடியாம நெலத்த தரிசா போட்டுருக்காரு. இப்ப நெலமைக்கி நான் ஒரு கிராமத்தானா இருக்கதாங்க ஆசப்படுறேன்.”
வெள்ளாற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு நீதி விசாரணை கோரி பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்!
வெள்ளாற்றில் இரு மணல் குவாரிகளில் மட்டும் 180 கோடி ஊழல்!
அதிமுக ஆட்சியின் ஊழல்களில் ஒரு துளி!
ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர்களை சந்திதார்கள் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தினர்!
நாள் : 22-6-2017 வியாழன்
நேரம் : காலை 11-00
இடம் : பத்திரிக்கையாளர் மன்றம்,
சேப்பாக்கம், சென்னை.
கலந்து கொண்டவர்கள் :
சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் ஆர்.வெங்கடேசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், கூடலையாத்தூர். சி.மலர்மன்னன், கா.ஆசைதம்பி, கூடலையாத்தூர். எம்.ஜி.பஞ்ச மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், கருவேப்பிலங்குறிச்சி, நந்தகுமார் , தெய்வக்கண்ணு, ராஜவன்னியன்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், பவழங்குடி,சி.கீரனூர், மேல்பாளையூர். அ.தமிழரசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம். மதகளிர் மாணிக்கம், வீ.பட்டுசாமி, ராமச்சந்திரன், ராயர், ஜான்சன், மதகளிர்மாணிக்கம்
வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப் பட்ட மனு :
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம்.
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு – 99651 91023, 9865131060, 99429 46797
_____________
நாள் 22-06-201
பெறுதல் :
உள்துறைச் செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.
அரசு செயலாளர் அவர்கள்,
பொதுப்பணித்துறை,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.
பொருள் :
1. கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, வெள்ளாறு – மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி
2. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா,வெள்ளாறு-கார்மாங்குடி,குவாரி மற்றும் சிதம்பரம் கோட்டம், முடிகண்டநல்லூர் குவாரிகளில் அரசின் கணக்கில் வராமல் நடந்த சுமார் 180 கோடி ஊழல் முறைகேட்டிற்கு விசாரணைக்கு உத்திரவிடக்கோரி
3. வெள்ளாறு மணல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி மணலை எடுத்து ஆற்றின் இயல்பை சீர்குலைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி
மதிப்பிற்குரியீர், வணக்கம் !
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா, கார்மாங்குடி மணல் குவாரியில், புல.எண்.398/1- 19.10 எக்டேர் பரப்பளவில் 191000 c.m மட்டுமே அனுமதி வழங்கபட்டது. ஆனால் ஜனவரி 2014 முதல் டிசம்பர் 2014 வரை அனுமதிக்கபட்ட அளவைவிட சுமார் மூன்று மடங்கு அரசின் கணக்கில் வராமல் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
மாநில சுற்றுசூழல் ஆணையத்தின் உத்திரவுப்படி எந்த விதி முறைகளையும் கடைபிடிக்காமல் 5 பொக்லைன் வைத்து மணல் அள்ளபட்டுள்ளது. 3 அடி என்ற அளவை தாண்டி 30 அடிக்கு மேல் மணல் எடுக்கபட்டுள்ளது. அதற்கான வீடியோ,புகைப்பட ஆதாரங்கள், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு போராட்டங்கள் மூலமாகவும், கோரிக்கை மனுக்கள் மூலமாகவும் அனுப்பி தெரிவித்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் வெள்ளாறு சிதைந்துள்ளது. 40 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இன்று 250 அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான போர்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. நெய்வேலி சுரங்கம் ஒரு புறம் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி வருகிறது.
மழையும் பொய்த்து வருகிறது. வெள்ளாறுதான் நிலத்தடி நீரை காக்க ஒரே வழி. பாசனத்திற்கு போர்வெல்தான் வேறு வழியில்லை. வெள்ளாற்றில் மீண்டும் மணல் குவாரி அனுமதிக்க பட்டால், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் குடிநீருக்கே அலையும் நிலை ஏற்படும். விவசாய நிலங்கள் பாழாகும். கடல்நீர் அருகில் உள்ளதால் உட்புகுந்து விடும். கண்காணித்து முறைபடுத்த வேண்டிய அதிகாரிகள் யாரும் ஆறுகள் சிதைந்து போவது பற்றியும், விதி முறைகள் மீறப்பட்டு மணல் கொள்ளை அடிப்பது பற்றியும் பொறுப்பில்லாமல் குற்றம் செய்பவர்களுக்கு துணை போகின்றனர்.
கார்மாங்குடி குவாரியில் ஊராட்சி மற்றும் மணல் குவாரி சார்பில் தினசரி லோடுகளை கணக்கெடுக்க நியமிக்க பட்ட நபர் தினம்தோறும் எழுதிய கணக்கு விபரங்கள்படி சுமார் 48,500 நடைகள். ஒரு லோடு ஆறு யுனிட் என்ற அளவில் அள்ளப்பட்டது. ஆனால் அரசு பதிவேட்டில் இரண்டு யுனிட்தான் குறிக்கபடுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் கொடுக்க பட்ட தகவலின்படி 8,247 லோடு என குறிப்பிட பட்டுள்ளது. ஆனால் இரண்டு யுனிட் என கணக்கிட்டால் 1,45,000 லோடுகள் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு சுமார் 150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கபட்ட இடத்தை தாண்டி பல இடங்களில் மணல் அள்ளியுள்ளனர். ஜி.பி.எஸ். கருவி வைத்து நாங்கள் ஆய்வு செய்து உறுதி படுத்தியுள்ளோம்.
இணைக்கப்பட்ட புகைப்படம், மற்றும் வீடியோவை பார்த்தால் விதிமுறை மீறியது தெளிவாக தெரியும். மணல் அள்ளிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் விதி முறை மீறியதுடன் மணல் கொள்ளைக்கு துணைபோயிள்ளனர். மேலும் கண்காணிக்க வேண்டிய மாவட்ட அளவிலான, தாலுக்கா அளவிலான கண்காணிப்பு படையும் நேரடியாக வெள்ளாற்றிற்கு சென்று ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.. நாங்கள் பல முறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம் என்பதற்கு நிறை சான்றுகள் உள்ளன.
சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட முடிகண்ட நல்லூர் குவாரியிலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநில சுற்றுசூழல் ஆணயை உத்திரவை மீறியுள்ளனர். உத்திரவுப்படி 106528 c.m. தான் அள்ள வேண்டும். அதாவது சுமார் 37593 யுனிட்தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் சுமார் 150000 யுனிட் வரை அள்ளியுள்ளனர். மார்க்கெட் மதிப்பின்படி சுமார் 30 கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வந்தால் முறையாக செல்லமுடியாத படி ஆற்றின் நீரோட்டங்களை சீர்குலைத்துள்ளனர். வெள்ளாற்றில் மணல் அள்ள வேண்டும் என்பதற்காக வீராணம் ஏரி உபரி நீரை அதிகாரிகள் பாழ்வாய்க்காலுக்கு திருப்பிவிட்டுள்ளனர். அனுமதிக்கபட்ட அளவைவிட மணல் கொள்ளையை கண்காணித்து தடுக்க வேண்டிய அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனால் பகுதி மக்கள் போராடி மணல் கொள்ளையை தடுத்தால் காவல் துறையை வைத்து பொய் வழக்கு போடுவது, கீயு பிரிவு போலீசார் மூலம் மிரட்டுவது. குண்டர் சட்டத்தில் போடுவேன் என மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவது,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் என கோட்டாட்சியர் விசாரணைக்கு அலைகழிப்பது என போலீசார் அத்துமீறுகின்றனர். குவாரிக்கு தகுந்தார் போல் கிராமத்தில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து போராட்டத்தை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.
எனவே நாங்கள் இத்துடன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பரிசீலித்து நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மேலும் வெள்ளாற்று பகுதி கிராம மக்களை அழைத்து பொது விசாரணை நடத்தினால் முழு உண்மைகளை கொண்டுவரமுடியும். ஒருலாரி மணல் கடைமடைக்கு வந்து சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது ஜே.சி.பி.எந்திரத்திற்கு தெரியாது. வெள்ளாற்றின் இயற்கை அமைப்பை சிதைத்த, மணல் கொள்ளைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறாம்.
கடலூர் மாவட்டம், வெள்ளாற்றில் பல ஆண்டுகள் பல இடங்களில் அளவுக்கு மீறி மணல் அள்ளப்பட்டுவிட்டது. மேலும் மணல் அள்ளுவது எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும், விவசாயத்திற்கும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் எனவே தற்போது அனுமதிக்கபட்ட மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் மணல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்து மணல் குவாரிகளை மூடு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“சென்னைக்கு மிக அருகில்” என்று ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் விளம்பரத்தை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். விளைவு, விளைநிலங்கள் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளானது. அவற்றில் இருந்து தப்பி விவசாயம் நடப்பது என்பது மிக மிக அரிது தான். இந்த புரோக்கர்களின் பிடியில் சென்னை போரூர் அருகே உள்ள கோவூர் கிராமும் தப்பவில்லை. இருப்பினும் அங்கே ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயம் நடக்கிறது.
“இந்த கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்தார்கள். அவை கொஞ்சம் கஞ்சமாக சுருங்கி இப்பொழுது 70 ஏக்கருக்கும் குறைவாக வந்து விட்டது. முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் விவசாயத்தில் லாபம் இல்லை , தண்ணீர் இல்லை.
விவசாயி அருள்தாஸ்
இந்த கோவூர் கிராம விவசாயிகளுக்கு பாசன நீர் செம்பரம்பாக்கம் ஏரி நீர் தான். அந்த நீர் தற்பொழுது கார் கம்பனிகளுக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் தான் பயன்படுகிறது. விளைநிலங்களுக்கு செல்லும் கால்வாய்க்கால் அனைத்தும் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
விளைநிலங்கள் அடுக்குமாடி கட்டிடங்களாக மாற்றப்பட்டு வரும் வேளையில், அந்த கட்டிடங்களுக்கு நடுவே தற்பொழுது நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அருள்தாஸ் என்ற விவசாயியை சந்தித்து, விவசாயத்தில் லாபம் இல்லை என்கிறார்கள். நீங்கள் எப்படி பயிர் செய்கிறீகள் என்றோம்.
இலாபம் இல்லை என்பதால் தான் இந்த நிலங்களை எல்லாம் விற்று விட்டார்கள். வீடுகள் வந்துவிட்டது. எனக்கு நிலத்தின் மீது இருந்த பாசம் விற்காமல் இருக்கிறேன். நாற்பது வருடமாக இந்த விவசாயத்தை தான் பார்க்கிறேன். இதை விட்டால் எனக்கு வேறு தொழிலும் தெரியாது. நான் மூன்று போகமும் பயிர் செய்கிறேன். ஒரு போகம் விட்டாலும் அடுத்தது என்னால் பயிர் செய்ய முடியாது. தண்ணீர் கிடைக்காது, நிலம் வறண்டு விட்டால் இப்பொழுது கிடைக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்யவும் முடியாது அதிக செலவு பிடிக்கும். அதனால் தான் விடாமல் நஷ்டம் ஏற்பட்டாலும் விவசாயம் செய்கிறேன்.
ஒரு ஏக்கருக்கு நெல் பயிரிட பிடிக்கும் செலவை ஒவ்வொன்றாக அடுக்கினார். முதலில் நாற்றாங்கால் செலவு, 1 கிலோ விதை உட்பட ரூ.2500, பதினைந்தாம் நாள் மருந்து அடிக்க ரூ.500, நடவுக்கு முன்பு மூன்று சால் உழவு ஓட்ட வேண்டும் அதற்கான செலவு ரூ.6000, பரம்பு கூலி ரூ.600, அடி உரமாக காம்ப்ளக்ஸ் 2 மூட்டை ரூ.2500, நடவு அன்று நாற்று எடுக்கும் கூலி, நடவு கூலி அனைத்தும் காண்ட்ராக்ட் ரூ.3500, வேலையாட்களுக்கு உணவு மூன்று வேளை ரூ.2000 (உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் இல்லை என்பதால் ஒப்பந்த முறையில் திண்டிவனத்தில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறார்கள்) , நடவு நட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு யூரியா, பொட்டாஷ் உரத்திற்கு ஆள் கூலியுடன் ரூ.2500, நாற்பத்தைந்து நாட்கள் கழித்து ஒரு யூரியா , கதிர் வரும் 60 வது நாளில் சல்பேட், பூச்சி மருந்து என்று ரூ.1500, அறுவடையின்போது ரூ.2500, இதர செலவுகள் உட்பட மொத்தமாக ரூ.25000 வரை செலவாகிறது.
ஆனால் அறுவடையின் போது கிடைக்க கூடியதோ வெறும் 25 அல்லது 30 மூட்டை தான். மூட்டைக்கு ரூ.1000 என்றாலும் மிஞ்சுவதோ வெறும் ரூ.5000 தான். அதுவும் எங்கள் உழைப்பிற்கு எடுத்துக்கொண்டால் ஒன்றும் மிஞ்சுவதில்லை. நெல் விலை எப்பொழுதும் ஒரே சீராக இருந்தால் பிரச்சனை இல்லை. எப்பொழுது விலை ஏறும், குறையும் என்று தெரியாது. நெல் மூட்டைகளை காஞ்சிபுரம் கமிட்டிக்கு தான் கொண்டு போகணும். அவ்வளவு தூரம் சென்று வர ஆகும் செலவை ஈடுகட்ட தனியார் வியாபாரியிடம் கொடுத்து விடுகிறோம். எங்களுக்கென்று நாங்கள் ஒருபிடி நெல் கூட எடுத்துக் கொள்வதில்லை.
என் பிள்ளைகளை எல்லோரையும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்ததால் பெரிய சிரமம் தெரியவில்லை. தனியார் பள்ளியில் படிக்க வைத்திருந்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பேன். இந்த நிலத்தை காப்பற்ற வேண்டும் என்பதற்காக நஷ்டத்திலும் இந்த விவசாயத்தை செய்து வருகிறேன். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நிலத்தை விற்கச் சொல்லி தொடர்ந்து நச்சரிக்கிறார்கள். விவசாயத்தின் மீதான பிடிப்பு தான் தற்பொழுது வரை பயிர் செய்து வருகிறேன் என்றார்.
திண்டிவனத்தில் இருந்து வேலைக்கு வந்திருந்த விவசாய தொழிலாளிகளிடம் பேசினோம். அவர்களில் நடவு வேலைக்கு வந்திருந்த பெண்கள், வேலைக்கு போகாத குடிகார கணவனால் குடும்பத்தை தான் பொறுப்பேற்று நடத்த வேண்டிய கட்டாயத்தாலும், இல்லையெனில் குடியினால் கணவனை இழந்த பெண்களும் தான் வந்திருந்தார்கள். “எங்கள் ஊரில் சுத்தமாக விவசாயம் இல்லை. வேறு எந்த வேலையும் இல்லை. அதனால் தான் இவ்வளவு தொலைவு வந்து வேலை செய்கிறோம்” என்றார்கள்.
நடவு நடும்போது இடுப்பு வலி ரணமா இருக்கும், முக்கியமாக ஆப்புரேசன் செஞ்ச ஒடம்புக்கு தான் ரொம்ப பிரச்சனையா இருக்கும். இந்த வலியோட தான் வீட்டு வேலையும் பாத்துக்குறோம் என்றனர்.
அதில் மல்லிகா என்ற பெண் ஒருவர் “ ஊர்ல சாராயம் வித்துகிட்டு இருந்தேன். அந்த தொழில செய்ய மனசு வரல. அதை விட்டுட்டு விவசாய வேலைக்கு வந்துட்டேன். இப்ப கெடக்கிற வேலைய செய்யுறேன். சாராயம் விக்கும்போது பணம் இருந்தது, ஊர்ல எல்லோரும் என்ன திட்டுவாங்க. இப்ப இந்த வேலை கஷ்டமா தான் இருக்கு. ஆனா கொஞ்ச நிம்மதியா இருக்கேன் என்றார்.
அதேபோல், ஆண்களும் நாற்று பிடுங்கியவரே இந்த சாண் வயித்துக்கு எந்தெந்த ஊருக்கெல்லாம் வந்து பொழைக்கிறோம் பாருங்க. தேள், பூரான், பாம்பு எல்லாம் நாற்றில் இருக்கும். எது கடித்தாலும் தண்ணியில் தெரியாது. இரண்டு தோள் பட்டை கடுமையான வலி ஏற்படும், தொடர்ந்து வேலை செய்தால் ஒன்றும் தெரியாது. ஆனால், இந்த வேலை கிடைப்பதேயில்லை. விவசாயமே அழிஞ்சிடுச்சி என்று சொல்லிக்கொண்டே தங்கள் வேலையை செய்தனர்.
அருகே பரம்பு ஓட்டிக்கொண்டிருந்தவரிடம் மோடி மாட்டையெல்லாம் விற்ககூடாதுன்னு சொல்லிட்டாரே இந்த மாடு வயசாகிடுச்சின்னா என்ன பண்ணுவிங்க என்றோம்.
அவன் கடக்கிறான்…பா அவனா மாடு மேய்க்கிறான். ஏறு ஓட்டுறான். மேல வந்து ஒக்காந்துகினு எதையாது ஒன்னு சொல்லுவான் அதெல்லாமா கேக்க முடியும். அப்புறம் விவசாயம் எப்படி பண்றதாம். நாங்க பொழப்புக்கு எங்க போறதாம். என்னமோ சோறு போடறவன் மாதிரி பேசுறான். பாட்டன் காலத்துல இருந்து மாடு வளக்குறோம், கறி சாப்பிடுறோம். அவன் திடீர்னு வந்து நிறுத்த சொன்னா நடக்கிற காரியாமா… நம்ம ஊர்ல அதெல்லாம் முடியாது என்று சொல்லிக்கொண்டே மாட்டை வேகமாக அதட்டினார்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வங்கிக் கடன் தள்ளுபடிக்காக வீதிக்கு வருவது, சாலை மறியல் செய்வது, பேரணிகள் நடத்துவது, கண்ணீர்புகைக் குண்டுக்கு இலக்காவது, சில சமயங்களில் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியாவது போன்ற நடவடிக்கைகளை விவசாயிகள் ஏன் மேற்கொள்கிறார்கள்? ஆனால் புது தில்லி ஜந்தர் மந்தரில் கடன் தள்ளுபடி கோரி எந்த கார்பரேட் முதலைகளும் தர்ணா நடத்துவதை நாம் பார்ப்பதில்லையே ஏன்?
6 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர விவசாயிகள் கிளர்ச்சியின் விளைவாக மகாராஷ்டிர அரசு ரூ. 30, 500 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய இணங்கியுள்ளது. முன்னர், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் திருப்பிச் செலுத்தாத வங்கிக் கடன் ரூ. 36, 359 கோடியை உபி அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இன்று பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மபி, சட்டிஸ்கர் எங்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிப் படர்கிறது. பஞ்சாபின் மோஹாவில், கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை பொறுத்திருந்து வாழ வழியில்லாததால், போராட்டத்தின் போதே ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதிலிருந்து விவசாயிகளின் நிலை எவ்வளவு பரிதாபகரமான வகையில் மோசமாக உள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.
கடன் தள்ளுபடிக்கான விவசாயிகள் போராட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 16 -இல் வடக்கு பிராந்தியம் முழுவதும் மூன்று மணிநேர சாலை மற்றும் இரயில் மறியலுக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. கடன் தள்ளுபடி செய்வது எவ்வளவு அத்தியாவசியமான உடனடித் தேவை என்பதை உணர வைப்பதற்கே தொடர் போராட்டங்களை இவ்வளவு தீவிரமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஏன் தள்ளப்படுகிறார்கள்? நாடுமுழுவதும் விவசாயிகள் நித்தம் சாவது பற்றி ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தெரியாதா? விவசாயம் அவசர நிலையில் உள்ளது.
கடந்த 21 ஆண்டுகளில் 3.18 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் ஏதாவதொரு பகுதியில் 41 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். கடன் திருப்பி செலுத்த முடியாத காரணத்தினாலேயே பெரும்பான்மையான தற்கொலைகள் நிகழ்கின்றன. உண்மையில் அவர்கள் பலதரப்பட்ட கடன்களின் குவியலுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர். வருடாந்திரம் ரூ. 12.60 இலட்சம் கோடிக்கு விவசாயிகள் கடனாளியாவதாக, 2016 நவம்பரில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார். எனவே விவசாயக் கடன் தள்ளுபடி நல்ல அரசியல் மட்டுமல்ல; நல்ல பொருளாதாரமும் கூட.
ஆனால் கடன் தள்ளுபடிக் கொள்கை விவசாயிகளை மட்டும் எவ்வளவு பாரபட்சமாக நடத்துகிறது என்பதைப் பார்க்கும் முன், கார்ப்பரேட்டுகள் அமைதியாக கடன் தள்ளுபடி பெறும் பொழுது விவசாயிகள் மட்டும் ஏன் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் நான் தோல்வியடைந்தேன். எதிர்ப்பை ஒழுங்கமைப்பது பற்றிப் பேசுவதற்குக் கூட அவர்கள் (கார்ப்பரேட்) தங்கள் காரை விட்டு இறங்க வேண்டியதில்லை. கேள்வியென்னவென்றால் விவசாயிகள் வீதிகளிலிறங்கி தோட்டாக்களை எதிர்கொள்ளும் போது தொழிற்துறையினருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கப்படுகின்றதே? எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளும், தொழிற்துறையினரும் ஒரே வங்கியிலிருந்து தான் கடன் பெறுகிறார்கள். அப்படியிருக்கையில் விவசாயிகள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துமளவிற்கு தொல்லை கொடுக்கும் வங்கிகள், கடன் திருப்பி செலுத்தாத தொழிற்துறையினரை அனிச்சமலரைப் போல மென்மையாக கையாள்வதன் காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
உ.பி. -யில் விவசாயக் கடன் தள்ளுபடியை யோகி ஆதித்யநாத் அறிவித்த உடனேயே, எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்யும் தலைவர்கள், ‘கடன் திருப்பி செலுத்தும் ஒழுக்கத்தை’ சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டினார். சில வாரங்களுக்குப் பின், ரூ. 4.85 இலட்சம் கோடி ‘நிலையற்ற’ அழுத்தப்பட்ட கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி (bail out) வழங்கக் கோரி நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதினார். என்னால் புரிந்துக் கொள்ள முடியாதது என்னவெனில், தொலைத் தொடர்புத்துறையில் கடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் சார்பில் எஸ்.பி.ஐ. தலைவர் ஏன் நிதியுதவி கேட்கிறார்?
பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய மகாராஷ்டிர விவசாயிகள்
கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வழக்கமாக கடைபிடிக்கும் வழியைப் போல, புது தில்லியில் தர்ணாவில் தொலைத் தொடர்புத்துறையின் உயர்பதவிகளிலிருப்போர் ஏன் உட்கார வைக்கப்படுவதில்லை? கார்ப்ரேட்டுகளின் இறுதி நிலை அறிக்கைக்காக (balance sheet) ஒதுக்கப்பட்டிருக்கும் அதே சுத்திகரிப்பு முறையை (clean-up mechanism) விவசாயிகள் பயன்படுத்தும் பொழுது, கடன்பெறும் ஏழைகளிடமும், பெருநிறுவனங்களிடமும் இவ்வாறுதான் வங்கி அமைப்பு பாரபட்சம் காட்டுகின்றது.
பாரபட்சம் இத்துடன் முடிந்துவிடவில்லை. விவசாயத்துறை கடன் தள்ளுபடிக்கான நிதி ஆதாரங்களை மாநில அரசுகளே கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடனில் தள்ளாடும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி அளிப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தலைமையில் அமைச்சரவைகளின் குழுவை அமைத்துள்ளார். முன்னதாக எஃகு (steel) நிறுவனங்களின் மோசமான கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கப் போவதாக மார்ச் 23 ஆம் தேதி பிஸினஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டது. அதன்படி, பிரதமர் அலுவலகமும், நிதி அமைச்சகமும் முன்னணி எஃகு நிறுவனங்கள் மற்றும் கடன் அழுத்தத்திலுள்ள 40 வங்கிக் கணக்குகளுக்கு புதியதாக நிதியுதவி வழங்குவது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ. 1.5 இலட்சம் கோடி.
விவசாயத் துறைக்கு எதிரான நடவடிக்கைகள் இத்துடன் முடிவடையவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடியை மகாராஷ்டிரா அறிவித்ததிலிருந்தே, “இது தேசியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும், பணவீக்கத்தை அதிகரிக்கும், வீட்டுக்கடன் தவணையை உயர்த்தும்” என நச்சுப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் தங்கள் நேரத்தை அர்பணிப்பதை நான் பார்க்கிறேன். விவசாயிகளை குற்றவாளிகளாக வேண்டுமென்றே சித்தரிக்கின்றனர். அதே நேரம் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் போது இத்தகைய விஷயங்கள் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. உண்மையில் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், விவசாயக் கடன் தள்ளுபடி, நாட்டின் நிதிச் சரிவுக்கான காரணியாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அமெரிக்க மெர்ரில் லிஞ்ச் வங்கி (Bank of America Merrill Lynch) அறிக்கைப்படி, 2019 பொதுத் தேர்தலுக்கு முன் சுமார் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் (அதாவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%) தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக அளவில் தள்ளுபடி செய்யப்படும் கார்ப்ரேட் கடன்கள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று மெர்ரில் லிஞ்ச் நமக்கு ஒருபோதும் கூறுவதில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான மாபெரும் நிதியுதவி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ. 4 இலட்சம் கோடி நிதியுதவி வழங்கும் திட்டம் பற்றி மெர்ரில் லிஞ்ச் பேசுவதில்லை, ஏன்? விவசாயிகளை மோசமாக சித்தரிப்பதன் மூலம் வழக்கமாக பெருமளவிலான கடன்களை திருப்பிசெலுத்தாத கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கவே மெர்ரில் லிஞ்ச் முதன்மையாக முயல்கிறது.
இப்படித்தான் வங்கிகள் விளையாடுகின்றன. இது வெறும் தார்மீக ஆபத்து மட்டுமல்ல; முற்றிலும் ஒழுக்ககேடானதும் கூட. வங்கி அமைப்பின் விதிகள் ஏழைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது.