Saturday, May 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 517

DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் !

1

NDLF Letter head

கண்டன அறிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலிசின் கொலைவெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்!

31.12.2016 அன்று மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராடிய ஒரு பெண்ணை பள்ளிக்கரணை காவல் நிலைய எஸ்.ஐ வக்கிரத்துடன் நடத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கடத்திக் கொண்டு போய் போலீசு வண்டியிலேயே வைத்து துப்பாக்கியால் கடுமையாக போலீசு தாக்கியது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி மண்டையை உடைத்தது, 14 பேரை சிறையில் அடைத்துவிட்டனர். மக்களை பாதுகாப்பதாகச் சொல்லும் போலீசே பொறுக்கித்தனமானமாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் அதை எதிர்த்துக் கேட்டால் தாக்குவதும் சிறையில் அடைப்பதும் எந்த சட்டத்தில் இருக்கிறது?

மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் மக்கள் ” 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் இல்லையேல் என்னை தூக்கிலிடுங்கள் ” என்று மோடி சவடால் அடித்தார் .

மக்கள் கையிலிருந்த பணத்தை வங்கியில் போட்டார்கள். போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை . ஆலைகளும், நிறுவனங்களும் ஊழியர்கட்கு சம்பளத்தை பணமாக வழங்கவில்லை.

வியாபாரிகளுக்கும் பணம் கையில் இல்லை. விசைத்தறிகள் நூல் வாங்கவும், தொழிலாளர்களுக்கு கூலி தரவும் பணம் இல்லாததால் முடங்கிவிட்டது. மக்கள் மணிக்கணக்காக ATM முன்பு நின்றும் பயனில்லை , வங்கி கணக்கு உள்ளவர்கட்கே இந்த நிலைமை, வங்கி கணக்கு இல்லாதவர்கள் நிலை மேலும் வேதனைக்குரியது கல்யாணம், கருமாதி எதற்கும் செலவு செய்ய பணம் இல்லை.

கோடிக்கணக்கான மக்கள் தங்கள் கையிலிருந்த பணத்தை – சுமார் 15 லட்சம் கோடியை வங்கியில் போட்டுவிட்டனர். திவாலாகிப்போன வங்கிகளுக்கு இந்த பணம் வந்துவிட்டது. இந்த பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தரவே , மோடி இந்த திட்டத்தை அறிவித்தார் . கடன் வாங்கி திருப்பித்தராத முதலாளிகளுக்கு வாராக்கடன் என முத்திரை குத்தி தள்ளுபடி செய்தது மோடி அரசு. அவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்கவே இந்த திட்டம். உள்நாட்டு/அயல்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகட்கும், தரகு முதலாளிகட்கும் தேவையான பணத்தை வழங்கவே , மக்கள் கையிலும், சுருக்குப்பையிலும் உள்ளதை பிடுங்கிக்கொண்டது மோடி அரசின் இந்த திட்டம். உணவு, உடை, தேனிர் என எந்த பொருள் வாங்கவும் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள் . ATM வரிசையில் நின்று 200 பேர் செத்துப்போனார்கள். எனவே மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள்.

சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

நன்றி , வணக்கம்.

தங்கள் உண்மையுள்ள,
சுப.தங்கராசு
பொது செயலாளர்,
பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

___________________________________________________________________________________________

 

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

தமிழ்நாடு. நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 9445112675

 

தேதி : 3.1.2016

வங்கியில்போட்ட பணத்தை எடுக்காதே என்று
மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது மோடி அரசு!
எதிர்த்துப் போராடுபவர்களின் மண்டையைப் பிளக்கிறது தமிழக அரசு!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலீசின் கொலைவெறித்தாக்குதலை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது!

ரூ.500, 1000 செல்லாது என்ற மோடியின் நடவடிக்கையை எதிர்த்து கடந்த டிசம்பர் 31 ந்தேதி சென்னை மேடவாக்கம், மாம்பாக்கம் சாலை சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் வங்கி ஏடிஎம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அங்கு வந்த பள்ளிக்கரனை உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனைக் கண்டித்த மற்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கைது செய்துகொண்டு செல்லும்போது போதும் போலீசு வாகனத்தில் வைத்து லத்தியாலும், துப்பாக்கியின் அடிப்பக்கத்தாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

DYFI Protestஇவர்களை அடைத்து வைத்திருந்த மண்டபத்தின் அருகில் கூடி பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் நடத்தியது பற்றி கேள்வி எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சி.பி.எம் கட்சியினர் மீது பள்ளிக்கரனை ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சிலரின் மண்டை உடைந்துள்ளது, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 14 பேரை சிறையிலும் அடைத்துள்ளது போலீசு. மக்களின் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் மீதான போலீசின் இந்த கொலைவெறித் தாக்குதலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளிக்கரனை போலீசு உதவி ஆய்வாளர் ரவி, தாக்குதலில் ஈடுபட்ட ஈடுபட்ட ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்ட போலீசாரை பணிநீக்கம் செய்து – கைது செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம். ரூ.500, 1000 செல்லாது என அறிவித்து 50 நாட்கள் கடந்துவிட்டது. கருப்புப்பண ஒழிப்பு நாடமாடிய மோடியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.

“50 நாட்களில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் இல்லையென்றால் என்னை நடுத்தெருவில் வைத்து தூக்கில் போடுங்கள்’’ என்று வாய்ச்சவடால் அடித்த மோடி, இப்போது அறிவிப்புகளை மட்டும் மாற்றி பித்தலாட்டம் செய்கிறார். தங்கள் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி, ஏடிஎம் வாசல்களில் காத்துக்கிடக்கிறார்கள் மக்கள். மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அமைப்புச்சாரா தொழில்கள் அனைத்தும் நலிவடைந்துவிட்டது. சிறுதொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.

பலகோடித் தொழிலாளர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் பல லட்சம்கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த 50 நாளில் பெருவாரியான உழைக்கும் மக்கள் வாழ்வை நாசமாக்கி தனியார் வங்கிகளையும், பணமற்ற பரிவர்த்தனை செய்யும் பே.டி.எம் வாலட்டுகள் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளையும் மேலும் மேலும் கொழுக்க வைப்பதைத்தான் செய்துள்ளது மோடி அரசு. மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நாடகமும் முடிவுக்கு வந்துவிட்டது. 2000 ரூபாய்க்காக வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் காத்துக்கிடந்து செத்ததுதான் மிச்சம் என்பதை கண்கூடாக பார்க்கும் மக்கள் மோடியை காறி உமிழ்கிறார்கள்.

உழைத்து சேமித்த மக்கள் பணத்தை கொள்ளையிடுவதுதான் மோடியின் நோக்கம் என்பதை உணர்ந்து நாடு முழுவதும் மக்கள் போராடுகிறார்கள். தமிழகத்தில், எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சேர்ந்து 51 வது நாள் ’’50 நாள் அவகாசம் முடிந்தது, வங்கிகளை முற்றுகையிடுவோம், போட்ட பணத்தை எடுப்போம்’’ என்று அண்ணாசாலையில் அரசு கருவூல வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதுபோல் அமைப்புகளும், எதிர்க் கட்சிகளும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இப்பிரச்சனையை தீர்க்க முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ள மோடி அரசும், மாநில அரசுகளும் போலீசு குண்டாந்தடிகளை ஏவி போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. அந்த வழியில்தான் தமிழக அரசின் போலீசும் போராடுபவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவது, பாலியல் துன்புறுத்தல் செய்வது என அடக்குமுறையை ஏவிவருகிறது. போலீசின் இத்தகைய அடக்குமுறைகளால், ரூ.500, 1000 என்ற மோடியின் பாசிச நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுத்துவிட முடியாது.

த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

0
Percy_Bysshe_Shelley_by_Alfred
கவிஞர் ஷெல்லி

ங்கிலாந்தின் மக்களே!

இங்கிலாந்து தேசத்தின்
தொழிலாளர் தோழர்களே!
உங்களை அடிமை நுகத்தடியில்
பிணைத்து வைத்துள்ள பிரபுக்களுக்காக
நீங்கள் ஏன்
உழுது களைக்கிறீர்கள்?

உங்களை உறிஞ்சிக் கொழுக்கும்
கொடுங்கோலர்களின்
ஆடம்பர ஆடைகளை
நீங்கள் ஏன் நெய்து நோகிறீர்கள்?

உங்கள் வியர்வையை அவித்து
இல்லை, இல்லை –
உங்கள் குருதிகுடிக்கும்
சுயநலச் சோம்பேறிகளுக்கு

உண்டி, உடை, உறைவிடம் அளிக்க
பிறப்பு முதல் இறப்பு வரை
நீங்கள் ஏன்
ஓயாது உழைக்கிறீர்கள்?
இங்கிலாந்தின் இதயத் துடிப்பே,
இடையறா உழைப்பின் தேனீக்களே –
நீங்கள் வடித்தெடுத்த
எந்திரங்களும் ஆயுதங்களும்
உங்கள் உழைப்பின் விளைச்சல்தானே?

உங்கள் உழைப்பின் விடியல்களைக்
கொடும்பார்வைக் கோட்டான்கள்
நாசப்படுத்திக் கொண்டாடுவர் என்பதை
ஏன் இன்னும் நீங்கள் அறியவில்லை?

அதிரடி அதிகார மேய்ச்சலில்
வலியோடும் அச்சத்தோடும்
நீங்கள் கண்டதென்ன, கொண்டதென்ன?
ஓய்வு, சுகம், அமைதி
உங்களுக்குக் கிட்டியதா?
உண்டி – உடை – உறைவிடம்
நோய்க்கு இதமாக அன்பின்
வருடல் தான் எட்டியதா?

உங்கள் விதைப்பு முதலாளி அறுவடை;
செல்வம் நீ கண்டெடுக்க மற்றொருவன் பறிக்கிறான்;
தறியடித்து நீ உழைத்து இன்னொருவன் அணிகிறான்;
நீங்கள் உருவாக்கும் படைக்கலன்கள்
மற்றொருவன் உயிர்காக்கும் அரணாகிறது.

தோழர்களே, விழித்தெழுங்கள்!
விதையுங்கள், கொள்ளையன்
அறுவடை செய்ய அனுமதிக்காதீர்!
செல்வம் கண்டெடுங்கள்,
எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்!
ஆடைகளை நெய்யுங்கள்,
சோம்பேறி அணியவிடாதீர்!
ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!

நீங்கள் மாளிகை எழுப்ப – அவர்களுக்குக் கேளிக்கை!
நீங்களோ – சந்து பொந்துகளில் ஓட்டைக் குடிசைகளில்
கூட்டுக் குருவிகளாய் குமைந்து வேகிறீர்கள்!

நீங்கள் வனைந்த கைவிலங்குகளின்
உடும்புப்பிடியில் நீங்கள் இன்னமும் ஏன்
வளைந்து நெளிகிறீர்கள்?
நீங்கள் காய்ச்சி அடித்த இரும்புச் சங்கிலிகளின்
எக்காளம் பார்த்தீர்களா, ஏகடியம் கேட்டீர்களா?

தோழர்களே,
எரிமலைக் குழம்பாய் நீங்கள் எழவில்லை என்றால்
ஏர்கலப்பை மண்வெட்டி களைக்கொட்டு
தறிக்கட்டை கையில் எடுத்து
உங்கள் சவக்குழியை நீங்கள் தோண்டி
கல்லறை சமைக்க நேரும்;
உங்களுக்கான பிணப்போர்வையை
நீங்களே நெய்யும் நிலை வரும்;

இறுதியில் –
உங்கள் புகழ்மிக்க தேசம்
உங்களுக்கே கல்லறை ஆகவும் கூடும்!

– ஷெல்லி

(மூலம் : ஆங்கிலம்)

தமிழில் – பேரா. திருமாவளவன், பாலு

இங்கிலாந்தின் புரட்சிக்கவி ஷெல்லி பற்றி மார்க்சின் கருத்தை அவரது மகள் எலீனார் மார்க்ஸ் பதிவு செய்துள்ளதை கலை இலக்கியம் பற்றி – மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ; முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ, 1976 (ஆங்கிலத் தொகுப்பு) இங்கே மொழிபெயர்த்துக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

“தத்துவாசிரியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை எவ்வாறு அறிந்து புரிந்து கொண்டிருந்தாரோ அது போலவே கவிஞர்களையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார் மார்க்ஸ். அவர் சொல்வார் “பைரனுக்கும் ஷெல்லிக்கும் உண்மை வேறுபாடு எதில் என்றால் அவர்களைப் புரிந்துகொள்பவர்கள், விரும்பியவர்கள் 36ம் வயதில் பைரன் இறந்த பொழுது ஒருவகையில் நல்லதே என்பார்கள்; ஏனென்றால், இன்னமும் நீண்டநாள் வாழ்ந்திருப்பாரானால் அவர் மிகமோசமான பிற்போக்கு முதலாளித்துவவாதியாக மாறியிருப்பார் என்றார்கள் இதற்கு நேர்மாறாக, 29ம் வயதிலேயே ஷெல்லி இறந்து போனதற்குப் பெரிதும் வேதனைப்பட்டார்கள். ஏனென்றால், இறுதிவரை முழுக்க முழுக்க இடையறாது தொடர்ச்சியாக சோசலிச முன்னோடியாக ஊன்றி நின்று புரட்சியாளனாக வாழ்ந்தார் ஷெல்லி (என்பதே அவர்கள் கருத்து)”.

சிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ?

3
  • ஒரு ஏக்கருக்கு  3,40,000 ரூபாய்! பழுதில்லாமல் லாபம்தரும்   பப்பாளி!!
  • உழவில்லை! உரமில்லை! பராமரிப்பு இல்லை! 100  தென்னை மரங்கள்! ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்!!
  • 60 சென்ட், 70நாள், 90,000ரூபாய்!
    சின்ன வெங்காயம்…பெரிய லாபம்!!
  • அரை ஏக்கர்.. 160 நாள்.. 1,20,000 ரூபாய்! நல்ல வருமானம் தரும் நாட்டு வெண்டை!!
  • ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம்! வேர்கடலை!!
  • தினமும் 20 லிட்டர் பால்! மாதம் 60,000 ரூபாய் வருமானம்!!
  • 5 ஏக்கர்நிலம்! ஆண்டுக்கு  6 லட்சம் வருமானம்!

இவையெல்லாம் “வை ராஜா வை…5 வச்சா 10, 10 வச்சா 20” என்ற மூணு சீட்டுகாரன் பேச்சு என நினைத்துவிடக் கூடாது! ‘பாரம்பரியமிக்க’ விகடன் குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் ‘பசுமை விகடன்’ பத்திரிக்கையின் அட்டைப்பட வாசகங்கள். நல்லவேளையாக அம்பானி அதானிகளின் சேவகரான மோடியின் கண்களில் பசுமை விகடன் சிக்காமல் போனதால் தமிழக விவசாயிகள் தப்பித்தார்கள்! இல்லாவிட்டால் இந்நேரம் வருமானவரி நோட்டீசாவது அனுப்பியிருப்பார்கள்.

ஆகா,…விவசாயத்துல இவ்வளவு லாபம் இருக்கா? “ஒரு ஏக்கர் நிலத்தை மூணு லட்சம் ரூபாய்க்கு வாங்கினால்கூட, பப்பாளி பயிரிட்டால் ஒரே வருசத்துல அசலை எடுத்துவிடலாம். அடுத்தடுத்து வருவது எல்லாமே லாபம்தான்” என்று கணக்குப் போட்டு யோசிக்கும் நடுத்தரவர்க்கத்தின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் மேற்கண்ட தலைப்புகள்தான் விகடன் குழுமத்தின் மூலதனம்!

 விகடனுக்கு இயற்கை ஆர்வம் பிறந்தது ஏன்?

இன்றைய வேளாண்மை, நவீன வேளாண்மை, அக்ரி பிசினஸ் போன்ற பிற விவசாயப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் ரசாயன உரம் சார்ந்த நவீன விவசாயத்தை ஆதரிப்பவை. விதைப்பு முதல் அறுவடை- விற்பனை வரை விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நவீன தொழில்நுட்ப விவரங்களை எழுதுவார்கள். பசுமைக்குடில், நிழல்வலை, மண்ணில்லா விவசாயம் (hydrophonic cuture), திசுவளர்ப்பு முறை போன்ற உயர் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வார்கள். இதற்காகவே வேளாண் பட்டதாரிகளையும், ஒய்வு பெற்ற பேராசிரியர்களையும் ஆசிரியர் குழுவில் வைத்திருப்பார்கள். வீரியரக விதை, உரம், மருந்து, விவசாயக் கருவிகள் தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பர வருவாய்தான் இவர்களின் வருவாய் ஆதாரம்!

ஒரு நாள் விவசாயிகள்
நடுத்தர வர்க்கமே விகடனின் சந்தை

ஏற்கனவே சந்தையிலுள்ள சரக்கையே விற்பதற்குப் பதில் புது சரக்கை சந்தையில் இறக்கினால் நாலு காசு பார்க்கலாமே என்று யோசித்த விகடன் குழுமத்தின் முதலாளித்துவ மூளையில் சிக்கிய சரக்குதான் இயற்கை விவசாயம். இதுவும் விகடனின் சொந்த சரக்கல்ல, திரு.நம்மாழ்வார் அவர்களின் தீவிர முன்முயற்சியால் தமிழகம் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டு விவசாயிகளின் சுய விருப்பத்தினாலும், சில தன்னார்வக் குழுக்களாலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுதான் இயற்கைவிவசாயம். இப்படி அடுத்தவர் உழைப்பில் உருவான சரக்கையே பளபளப்பான விகடன் கவரில் அடைத்து விற்கும் திருட்டுச் சரக்குதான் பசுமை விகடன்.

ஒருவழியாக சரக்கு தயாராகிவிட்டது. இதை விற்று காசாக்க வேண்டுமானால் வாடிக்கையாளர்களை, அதாவது வாசகர்களைப் பிடித்தாக வேண்டும். விவசாயத்தை புத்தகத்தில் படித்து, மனப்பாடம் செய்து, குறிப்பு எடுத்துக் கொண்டு தொழில்செய்யும் விவசாயிகள் எந்தக் கிராமத்திலும் இல்லை. எனவே பட்டிக்காட்டு விவசாயி நமக்கு ஒத்துவரமாட்டான் என்பது விகடன் வகையறாவுக்கு நன்றாகத் தெரியும். அடுத்துள்ள ஒரே தேர்வு படித்தவர்களைப் பிடிப்பதுதான்! அதுவும் சுற்றுச்சூழல் மற்றும் ரசாயன உரம்-மருந்துகளின் அபாயம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தால், ‘இயற்கை விவசாயத்தை’ எளிதாக விற்று விடலாம். இந்தப் பிரிவினரிடம் ஏற்கனவே நம்மாழ்வார் பிரபலமாகி இருப்பதால் விளம்பரச் செலவில்லாமலே சந்தை வாய்ப்பும் தயாராக இருக்கிறது. இப்போது சரக்கும் ரெடி. சந்தையும் ரெடி. இனி ‘படித்தவர்கள் மீது பாரத்தைப் போட்டு விட்டு’ துணிந்து களத்தில் இறங்கிவிடலாம் என்றாலும் விகடனின் ‘தொழில்வளர்ச்சிக்கு’ இன்னமும் சில சவால்கள் இருக்கத்தான் செய்கிறது.

 உள்ளங்கையில் விவசாயம்! விகடனின் சாதனை!

விழிப்புணர்வு பெற்ற படிப்பாளிகள் நகரத்தில் இருப்பார்கள். நகரத்திலோ விவசாய நிலம் இல்லை. இவர்களிடம் விவசாய ஆர்வத்தை உருவாக்குவது எப்படி? என்பது முதல் சவால். ஆன்ட்ராய்டு மொபைலை கையில் பிடித்திருக்கும் நடுத்தர வர்க்கத்தின் கைகள், ஆடுமாடுகளைப் பிடிக்குமா? நகரத்து வீதிகளில் கிளம்பும் தூசிக்கே முகத்தை மூடிக்கொள்ளும் இவர்கள் புழுதிக்காட்டில் கால்பதிப்பார்களா? இவர்களை நமது வலையில் வீழ்த்தி தக்கவைப்பது எப்படி? என்பது இரண்டாவது சவால். ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்துவருபவர்களிடம்  “நம்மாழ்வாரின் ஒரே அவதாரம் நமது பசுமை விகடன்தான்” என்று நம்பவைக்க வேண்டும். அப்போதுதான் சந்தையை நிரந்தரமாக தக்கவைக்கமுடியும் என்பது மூன்றாவது சவால். சவால்களை எப்படி முறியடிப்பது?மாடித் தோட்டம்

இலவசத்திற்கு ஆசைப்படுவது நடுத்தர வர்க்கத்தின் பலவீனம். அவள் விகடனில் டவ் ஷாம்பு பாக்கட்டை இலவசமாக கொடுக்கலாம். பசுமை விகடனில் நாட்டு மாட்டையும், ஏர் கலப்பையையும் இலவச இணைப்பாக கொடுக்க முடியுமா? முடியாது. வேறு என்ன செய்யலாம்? கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்.

என்னதான் ஐ.டி. ஊழியராக நவநாகரீக மேக்கப்புகளுடன் நகரத்து வீதிகளில் வலம் வந்தாலும் இவர்களின் ஆணிவேர் கிராமம்தான். செக்குமாட்டைப்போல ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வதால் மனம் சலிப்படைந்து வெறுமையை உணரும்போது  கிராமத்து நினைவுகள் மின்மினி பூச்சிகளாக வந்துமோதுவதை தவிர்க்கமுடியாது. கம்மாக்கரை, பச்சைப்பசேல் வயல்வெளி, ஆலமரத்து விழுது, வேப்பமரத்தின் குளுமை, ஆடு-மாடு மேயும் புல்வெளி, என்று இழந்துவிட்ட தனது கிராமத்து அடையாளங்களிடம் ஆறுதல்தேட மனம் குறுகுறுக்கும். ஆனால், நகரத்து ஆடம்பர வசதிகளை இழப்பதற்கும் மனம் இடம்தராது.

செல்பி விவசாயிகள்.
செல்பி விவசாயிகள்

சமீபகாலத்தில் கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறி புதுப்பணக்காரர்களாக வளர்ந்து வரும் நடுத்தரவர்க்கத்தின் இந்த ஊசலாட்ட உளவியலுக்கு தீர்வு என்ன? உலகத்தையே ஆன்ட்ராய்டில் அடக்கிப் பார்த்துப் பழகியவர்களுக்கு விவசாயத்தையும் அதே அளவுக்கு குறுக்கிக் காட்டமுடியுமா? இதற்கு விகடன் தேர்ந்தெடுத்த வழிதான் “வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம்” இதுவும் ஏற்கனவே உள்ள விசயம்தான். அதில், நாட்டுரகவிதை, மண்புழுஉரம், பஞ்சகாவியா, அமுதக் கரைசல் என்பதைப் புகுத்தி இயற்கைவிவசாயம் என்ற ‘கெட்டப்பை’ உருவாக்கியதுதான் விகடனின் தொழில்நுட்பம். “எங்கள் வீட்டுமாடியில் முதல் கத்திரிக்காய்” “இயற்கைமுறையில் விளைந்த விஷமற்ற வெண்டிக்காய்” என்று முகநூலில் செல்பி போட்டு நடுத்தரவர்க்கமும் பெருமைப்பட்டுக் கொள்ளும்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள்!

வீட்டுத்தோட்டம் என்று ஒருமுறை இறங்கிவிட்டால், மண்கூடை, நாட்டுரக விதைகள், பஞ்சகாவியா, பூச்சிவிரட்டி, மருந்து அடிக்கும் கருவி, நிழல்வலை என பலவற்றையும் தேடி வருவார்கள். பாக்கட் பாலில் நாட்டுமாட்டின் பாலை பிரித்தறிய முடியாமல் ரெடிமேட் பஞ்சகாவியா, ரெடிமேட் அமிர்தக் கரைசலையும் தேடியாக வேண்டும். இப்போது புதிய சந்தை கிடைத்துவிட்டது. இதையெல்லாம் தயாரிக்கும் இயற்கை விவசாயிகளுக்கு புதிய வாடிக்கையாளர்களை கிடைத்து விட்டார்கள்.

வேளான் கண்காட்சி
வாங்குறவனும், விற்பவனும் அவர்களாக சந்தித்துக் கொண்டால் அது சாதாரண சந்தை. அதையே விகடன் ஏற்பாடுசெய்து நடத்தினால் அது வேளாண் கண்காட்சி

விகடனுக்கு விளம்பர வருமானமும் கிடைத்துவிட்டது. ஆனால், “இந்த கொடுக்கல்- வாங்கலில் நமக்கு புரோக்கர் கமிசன்கூட நமக்கு இல்லையே!” என்று விகடன் மூளையை சொரிந்தபோது கிடைத்த ஐடியாதான் வேளாண் கண்காட்சி. அதாவது வாங்குறவனும், விற்பவனும் அவர்களாக சந்தித்துக் கொண்டால் அது சாதாரண சந்தை. அதையே விகடன் ஏற்பாடுசெய்து நடத்தினால் அது வேளாண் கண்காட்சி.

ஒரு 10-க்கு 10 ஸ்டாலுக்கு 50,000 ரூபாயை கட்டணமாக அள்ளலாம்! ஒரு மண்டபத்தைப் பிடித்தால் மூன்றுநாளில் பல லட்சத்தைப் பார்க்கலாம்.  இப்படி வருசத்திற்கு நான்கைந்து இடங்களில் நடத்தினால் செலவுபோக கோடியை நெருங்கலாம். “ஆடு மேய்ச்சது மாதிரியும் இருக்கணும். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும்.” என்பதைப் போல, இதையெல்லாம் நாசூக்காக செய்வதுதான் விகடனின் ‘தொழில்’ திறமை. ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்பவர்களின் பொருளை சந்தைப்படுத்த வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.

சீரகச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, செக்கில் ஆட்டிய எண்ணைகளைக் காட்டி மாடித்தோட்ட ஆசாமிகளை அதிசயிக்க வைத்த மாதிரியும் இருக்கும். தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்த மாதிரியும் இருக்கும். ஆனால் இறுதியில், எல்லாப்புகழும் கல்லாவும் விகடனுக்கே.

பசுமை அங்காடிகளில் விற்பதெல்லாம் இயற்கையானதா?

ரசாயண உரம் மருந்துகளுக்கு மாற்றாக, இலைதழைகளையும், பசுமாட்டு சாணம், மூத்திரம், பால் பொருள்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதையே பசுமை விகடன் வகையறாக்கள் இயற்கை விவசாயம் என்று சொல்கின்றனர். இதில் பசுமாடு கலப்பற்ற நாட்டுரகமாக இருந்தாலும் அதன் தீவனம் ரசாயனக் கலப்பற்றதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மாடுவளர்க்கும் பெரும்பாலான சிறு விவசாயிகள் அருகிலுள்ள ரசாயன உரம் பயன்படுத்தும் வயல்வெளியிலும், தோட்டக்காடுகளிலும் இருந்துதான் தீவனம் கொண்டுவருகின்றனர். இதிலிருந்து தயாரிக்கும் பஞ்சகாவியாவும், அமிர்தகரைசலும் எப்படி இயற்கையானதாக இருக்காது என்று பரிசுத்தம் பேசுகிறார்கள்!

ஆர்கானிக்
பசுமை அங்காடிகளில் விற்பதெல்லாம் இயற்கையானதா?

500 அடிக்கு கீழுள்ள நிலத்தடி நீரில்கூட டி.என்.டி விஷம் பரவியுள்ளதாக இயற்கை ஆர்வலர்களின் ஆய்வுகளே கூறும்போது, பூச்சிவிரட்டிக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, மிளகாய், வயல்வரப்பில் இருக்கும் நொச்சி, வேம்பு எல்லாமே ரசாயன பாதிப்பில்லாமல் இருக்க முடியுமா? முழுமையான இயற்கைவிவசாயம் செய்யும் நிலத்தில்கூட, அருகிலுள்ள நிலத்தில் பயன்படுத்தும் ரசாயன உரம் மருந்துகளின் பாதிப்பு இருக்கும் என்பதுதான் உண்மை. இதைத் தடுப்பதற்கு, இன்று இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறார்கள்? நிலத்தில் மட்டுமல்ல, பாசன நீரிலுமுள்ள ரசாயன விசத்தையும் அகற்றுவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அபெடாவின்(APEDA) “ஆர்க்கானிக் சான்றிதழ்” பெற்ற இயற்கை விசாயிகளின் பட்டியலை பசுமைவிகடனிடம் கேட்டுப்பாருங்கள் சென்னை, திருச்சியின் இயற்கை அங்காடிகளில் விற்கும் சரக்குகள் எல்லாம் அந்தப்பட்டியலில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததா? அல்லது கோயம்பேடு சரக்கா? என்று பரிசீலியுங்கள். விகடனின் தொழில் தர்மம் என்னவென்று அப்போது புரியும்.

விகடன் தயாரிக்கும் விவசாய ‘சூப்பர் ஸ்டார்கள்’!

“மண்ணின் வளமே மக்களின் வளம்” என்ற முத்திரையுடன் வரும் பசுமை விகடன், இயற்கை விவசாயம்தான் விவசாயிகளின் விடிவுக்கு ஒரே வழிகாட்டி என்று கூறுகிறது. அதை நிரூபிப்பதற்காக இயற்கை விவசாயம் செய்பவர்களின் வெற்றிக்கதைகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வாசகர்களை புல்லரிக்க வைக்கிறது.

“உழவில்லை! உரமில்லை! பராமரிப்பில்லை! 100 தென்னைமரங்கள்! ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம்!”

இது நடப்பு இதழில்(10-01-2017 ) வெளியான ராஜபாளையம் அய்யம்பெருமாள் என்ற வெற்றியாளரின் கதை. பிஎஸ்சி கணிதம் படித்த இவர், பி.எஸ்.என்.எல். ஊழியராக இருந்து கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் தனது பேட்டியில், “36 நாளுக்கு ஒருமுறை வீதம் வருடத்திற்கு 11 முறை தேங்காய் வெட்டுகிறேன், ஒருமரத்திற்கு இரண்டு பாளைகளில் தேங்காய் வெட்டுவதாகவும், 100 மரங்களிலிருந்து ஒரு வெட்டுக்கு 4000 காய்கள் வெட்டுகிறேன்” என்றும் “மூடாக்கு முறையில் சாகுபடி பண்றப்போ தென்னை மூன்றரை வருசத்திலேயே காய்ப்புக்கு வந்துடுது. ரசாயணஉரம் போட்டா நாலஞ்சு வருசமாகும்” என்றும் கூறுகிறார்.05

நாட்டுரக தென்னை பற்றி இவர் கூறும் விவரங்களை பாமர விவசாயிகூட நம்பமாட்டன். நாட்டுரக தென்னை காய்ப்புக்கு வந்து தேங்காய் வெட்டுவதற்கு 7 வருடமாகும். வீரியரக தென்னைகள் மட்டுமே மூன்றரை வருசத்துல காய்ப்புக்கு வரும். பொதுவாக தேங்காய் பருப்பு விளைந்து முற்றுவதற்கு குறைந்தது 45 நாட்கள் ஆகும். வருடத்திற்கு 7 அல்லது 8 முறைதான் வெட்டமுடியும். இதிலும் 5 வெட்டுக்குத்தான் முழுப்பலன் கிடைக்கும், மீதி 2 வெட்டுக்கு குறைந்தளவு காய்கள்தான் கிடைக்கும். இதுதான் தென்னையின் இயல்பான பண்பு.

விவசாயி சொல்வது உண்மையா, மிகைப்படுத்தப்பட்டதா என்று புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட பசுமை விகடனுக்கு விவசாய அறிவில்லை என்பதற்கு இதுவொரு சான்று. மிகையான புள்ளிவிவரங்களை தவிர்த்து விட்டு பார்த்தாலும், தேங்காய் வெட்டுவதால் மட்டும் அய்யம்பெருமாள் 4 லட்சம் சம்பாதிக்கவில்லை. அதைக் கொப்பரையாக்கி பின்பு மரச்செக்கில் ஆட்டி எண்ணையாக்கி அதனை சென்னை, பெங்களுரூ நகரங்களின் இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பி விற்றுத்தான் சம்பாதிக்கிறார் என்று கட்டுரையின் உள்விவரம் கூறுகிறது. இது சராசரி தென்னை விவசாயிகளுக்கு சாத்தியமாகுமா? அல்லது விவசாயிகள் எல்லோரும் விருப்ப ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியராக இருக்க முடியுமா? என்பது விகடனுக்கே வெளிச்சம்.

கொடைக்கானல் மலையில் 40 ஏக்கர் காபித் தோட்டம் வைத்திருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர் செந்தில்,(10-12-2016இதழ்),  பாகப் பிரிவினையாகவே 30 ஏக்கர் நிலம் பெற்ற நெய்யமலை(சேலம்) அப்போலோ என்ற செவ்விளநீர் விவசாயி, தமிழ்நாடு மீன்வளர்ப்புத் துறையில் 27 வருடம் ஆய்வாளராக வேலைசெய்து ஓய்வு பெற்ற விழுதியூர்(தஞ்சை) ரெங்கநாதன்(25-11-2016இதழ்), 130 கலப்பினமாடும், 20 பசுமாடும் வளர்க்கும் விளாத்திக்குளம் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்(25-09-2016) போன்ற புதுப்பணக்கார மேட்டுக்குடியினரைத்தான் பசுமை விகடன் வெற்றி விவசாயிகளாகக் காட்டி பசுமை விரும்பிகளை ஏய்த்து வருகிறது.

இவர்கள் யாரும் விவசாயத்தை முக்கிய  வாழ்வாதாரமாகக் கொண்டவர்களல்ல. பிற தொழில்களில் கிடைத்த லாபத்தை முதலீடு செய்வதற்கு பயன்படும் ஒரு துணைத்தொழிலாக விவசாயத்தைப் பார்ப்பவர்கள்.

ஆனால் விவசாயத்தை மட்டுமே தங்களின் ஒரே வாழ்வாதாரமாகக் கொண்ட கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வும், கரும்பு, வாழை விவசாயத்தால் வாழ்விழந்த பல லட்சம் சிறு, நடுத்தர விவசாயிகளின் வரலாறும் பசுமைவிகடன் கண்ணிற்கு என்றுமே தெரியாது. ஏனென்றால் பசுமைவிகடனின் விற்பனைக்கு இவர்கள் பயன்படுவதில்லை. ஆனாலும் ஆக்சன் படத்தில் அழுகை சீனுக்கு மட்டும் பயன்படும் நடிகை சரண்யாவைப் போல “தஞ்சை விவசாயிகள் தற்கொலை”, “வேளாண் அதிகாரிகளின் கொள்ளை” என்று ‘மரத்தடி மாநாடு’ தலைப்பில் நாலுவரியில் நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் இந்த விவசாயிகள் மீது விகடன் காட்டும் அக்கறை.

சுயசார்புக்கு பயன்படுகிறதா இயற்கை விவசாயம்?

இயற்கை விவசாயம் என்பது, பன்னாட்டுக் விதை, உரம், மருந்துக்கம்பெனிகளின் பிடியிலிருந்து விலகி விவசாயிகள் சுயசார்பாக நிற்பதற்கான அடையாளமாகவே அதன் ஆரம்பகாலங்களில் நம்மாழ்வார் போன்றவர்களால் முன்னிறுத்தப்பட்டது. ரசாயன உரம் மருந்துகளை அதிகவிலை கொடுத்து வாங்கினாலும் புழு பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற சொந்த அனுபவத்திலிருந்து, சிக்கனமான   இயற்கைவிவசாய முறைக்கு விவசாயிகள் மாறினார்கள்.

08-nammalvar-2
வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார்

ஆனால், உலகம் முழுக்க பரவிவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வினால் பன்னாட்டுக்கம்பெனிகளே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டதோடு, ‘உலகத்தரச் சான்று பெற்ற’ இயற்கை உரம்-மருந்துகளை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டன. பசுமைவிகடனிலேயே KTC பயோடெக், ஜெர்மனியின் STIHL போன்ற இத்தகைய நிறுவனங்களின் விளம்பரமும் வருகிறது. பன்னாட்டுக் கம்பெனிகளால் சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டு வரும் இயற்கைவேளாண் சந்தையின் எதிரொலியாகவே, இந்திய நகரங்களிலும் பசுமை அங்காடிகள் முளைத்து வருகின்றன.

இந்திய வேளாண்மைத் துறையும் தற்போது இயற்கை விவசாயத்தை பதிவுசெய்து ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்குப் பொருத்தமாகவே இயற்கைவிவசாயம் என்பது “லாபகரமான விவசாயம்” என்ற கண்ணோட்டத்தில் பசுமைவிகடன் இங்கு செய்துவரும் பிரச்சாரமும் பயன்படுகிறது.

ஒரு பரிசோதனை முயற்சியாக இயற்கைவிவசாயம் செய்துவரும் விவசாயிகளை இந்த விசச்சுழலை நோக்கித்தான் இழுத்துச் செல்கிறது பசுமைவிகடன். இந்த உண்மை புரியாத புதுப்பணக்கார இளைஞர்கள், தாங்கள் சுற்றுலாபோகும் ஊர்களிலெல்லாம் “இங்க ஏக்கர் என்னவிலை சார்?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுமாடு, சாணி, பால்,தயிர், என்பதோடு மட்டும் இயற்கைவிவசாயம் நிற்கவில்லை. பாரம்பரிய உணவுத்திருவிழா, விறகு அடுப்புச் சோறு, மண்பானை பிரியாணி, தினைமாவு அதிரசம், மரச்செக்கு எண்ணை, மூலிகைத்தேநீர், என்று பல பரிமாணங்களில் சென்று கொண்டிருக்கிறது.  பாட்டன் முப்பாட்டன் மரபுகளை மீட்கபோவதாகக் கூறும் மரபுப் போராளிகளும் இதில் தற்போது இணைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து “எல்லாருமா சேர்ந்து நம்மள கற்காலத்துக்கு கூட்டிட்டுப் போயிருவாங்களோ” என்று தனது வாடிக்கையாளர்கள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழில்நுட்பம் அறிய எண் ஒன்றை அழுத்தவும்” “கால்நடை வளர்ப்பு அறிய எண் மூன்றை அழுத்தவும்” மற்றும் “பசுமைசந்தை” போன்ற மொபைல்வழி சேவைகளையையும் நடத்தி வருகிறது பசுமை விகடன்.

seeraga samba
நாட்டுமாடு, சாணி, என்று மட்டுமல்ல விறகு அடுப்புச் சோறு, மண்பானை பிரியாணி, தினைமாவு அதிரசம் என நீள்கிறது விகடனின் இயற்கை விவசாயப் பட்டியல்

இதற்கும் மசியாத தனது வாடிக்கையாளர்களை, “ஒருநாள் விவசாயி” என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட்டோடு சேற்றில் இறக்கிவிட்டு விவசாயம் கற்றுக்கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் விகடன் குழுமம் இயற்கைவிவசாயக் கல்லூரி தொடங்கினால் இந்த “ஒருநாள் விவசாயப் பட்டதாரி”களுக்கு பேராசிரியர் வேலை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சென்னை சரவணா ஸ்டோரைப் போல விகடன் குழுமம் ஒரு மாபெரும் பல்பொரு அங்காடி. ஆன்மீகத்திற்கு சக்திவிகடன், பெண்களுக்கு அவள் விகடன், மருத்துவத்திற்கு டாக்டர்விகடன், பங்குச்சந்தை சூதாட்டத்திற்கு நாணயம் விகடன், ஆடம்பரத்திற்கு மோட்டார் விகடன், கிளுகிளுப்புக்கு டைம்பாஸ்…என்ற பல சரக்குகளைப் போல விவசாயமும் விகடனுக்கு ஒரு விற்பனை சரக்குதான். இயற்கை விவசாயம் என்பது அதற்கு பயன்படும் ஒரு கவர்ச்சிப்பட அட்டை. சரவணா ஸ்டோர் ஊழியர்களைப் போல விகடன் குழமத்தின் நிருபர்களும் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். தனது பணியாளர்களின் உழைப்பை  மதிக்கத்தெரியாத விகடனிடம், விவசாயிகள் எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை…ஏமாற்றம் ஒன்றைத்தவிர.

– மாறன்
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

மோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி

4
படம் : நன்றி நக்கீரன்

க்களிடம் 500, 1000 -ஆக இருக்கும் ரொக்கப் பணம் செல்லாது என்று மோடி கும்பல் அறிவித்ததை நாம் எதன் மூலம் தெரிந்து கொண்டோம்? பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்கள் மூலமாக அல்லவா? அப்படியானால் முதலில் அதன் மாட்சிமையைத் தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்பு என்று காவி வானரங்கள் போக்கு காட்டி வந்த நிலையில், சகாரா குழுமத்திடம் இருந்து மோடி 13 தவணைகளில் 55 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றிருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை பத்திரிக்கைகள் எப்படி கையாண்டன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மோடியின் மீதான இலஞ்சக் குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சுமத்துவதாகவும் இது வழக்கமான தேர்தல் அரசியல் (தேர்தல் அரசியலுக்கு வந்து இழிபுகழைப் பார்த்தீர்களா?!) என்றும் பத்திரிக்கைகள் படம் காட்டின. ஆனால் மோடி இலஞ்சம் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட மத்திய நீதி-பரிபாலன முறைமைகளுக்கு முன்னரே தெரியும் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது (பார்க்க: தி கேரவன் இதழ், 18-11-2016).

படம் : நன்றி நக்கீரன்
படம் : நன்றி நக்கீரன்

வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் அங்கீதா பாண்டே சகார குழுமத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். அங்கீதா பாண்டேவோடு, ஆவணங்களை சரிபார்த்த பிறவருமானவரித்துறை அதிகாரிகளின் கையெழுத்தும் இருக்கிறது.

டெல்லி தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் ஆவணங்களுக்கான துணை இயக்குநர் அனுராக் ஷர்மா 01-07-2016 அன்று கையெழுத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்கிறார்.

வருமானவரித்துறையின் இந்த ரெய்டு குறித்த தகவல் மற்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரசாந்த் பூஷண் கீழ்க்கண்ட அமைப்புகளிடம் முறையிட்டிருக்கிறார்.

  • கருப்புப் பணத்தை ஒழிப்பற்காக உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி எம்.பி.ஷா மற்றும் அர்ஜூன் பயாசத் தலமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு
  • அமலாக்கத்துறை (Enforcement Deparment),
  • மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தலைவர் (Chairman-CBDT, Central Board of Direct Taxes),
  • வருமானவரித் தீர்வை ஆணையத்தின் தலைவர் (Chairperson, Income Tax Settlement Commission )
  • மத்திய ஊழல்ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் (Central Vigilance Commissioner)

இருந்தும் என்ன பயன்? அரசை எதிர்த்து போராடாமல் அரசின் உறுப்புகளிடம் முறையிடுவதுதான் ஜனநாயகம் என்று மக்களுக்கு மூச்சிரைக்க வகுப்பெடுக்கும் பத்திரிக்கைகள் மோடி குறித்த முறையீட்டில் இதுவரை மவுனம் சாதிப்பதன் மர்மம் தான் என்ன?

prashant-bhushan
பிரசாந்த் பூஷண்

சகாரா குழுமத்தில் ரெய்டு நடத்தியது தொடர்பாக வருமானவரித்துறை தாக்கல் செய்த முன்வரைவு அறிக்கை (Appraisal Report) 16-11-2016 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்தது. 15-11-2016 அன்று தி இந்து ஆங்கில நாளிதழ் இதுபற்றிய செய்தியை மேம்போக்காக வெளியிட்டுவிட்டு மோடியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை வெளியிடவில்லை! என்ன காரணமாக இருக்கும்?

உச்சநீதிமன்றம் இத்தகைய ஆவணங்களை ஓர் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கைவிரித்தது (நீதிமன்றத்தின் மாண்பு குறித்து பிறகு நாம் தனியே பார்போம்). நீதிமன்றங்கள் போன்றே தி இந்து  போன்ற பத்திரிக்கைகளும் ஒருவேளை இத்தகைய ஆவணங்களை நம்பத்தகுந்த ஆதாரமாக கணக்கில் கொண்டிருக்காதோ?

ஆனால் தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் விசயத்தில் அப்படி நடக்கவில்லை.

வருமானவரித்துறையினர் ராம்மோகன் ராவ் வீட்டில் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக 24-12-2016 அன்று தி இந்து பத்திரிக்கை “சிக்கியது டைரி” எனும் உட்தலைப்பில் கீழ்க்கண்ட செய்தியை பிரசுரித்திருந்தது.

ராமமோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் பாதுகாப்பாக வைத்திருந்த ரகசிய டைரி ஒன்று சிக்கியுள்ளது. அதில் பல முக்கிய தகவல்களை அவர் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கியப் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல பிரமுகர்களின் பெயர்கள் அந்த டைரியில் உள்ளதாக தகவல் பரவிவருகிறது.

அவர்கள் அனைவரும் ராம மோகன ராவுடன் ஒரு வலைப் பின்னல் போல செயல்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அதில் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எந்த வகையில் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது? பரஸ்பரம் அவர்கள் எவ்வளவு லாபம் அடைந்தார்கள் என்ற விவரங்களையும் ராமமோகன ராவ் விளக்கமாக அதில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக அவர்களிடையே ஏற்கெனவே நடந்துள்ள தொலைபேசி உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.”

மோடி இலஞ்சம் வாங்கியதாக கூறப்படும் சகாரா குழுமத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தி இந்து பத்திரிக்கைக்கு முக்கியமான ஆதாரமாக தெரியாத பொழுது ராம மோகன ராவின் டைரி மட்டும் தி இந்துவிற்கு முக்கிய ஆதாரமாக தெரிவதற்கு என்ன காரணம்?

Samas
சமஸ்

தமிழ்நாட்டில் பா.ஜ.க கும்பல் வேரூன்றுவதற்கு பார்ப்பனியப் பத்திரிக்கைகள் மன்னார்குடி மாஃபியா கும்பலின் ஊழலை மட்டும் தொட்டு நக்கும் ஊறுகாயாக பயன்படுத்துவதற்கான முகாந்திரம் இதில் தெளிவாக தெரிகிறது. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ராம்மோகன ராவ் ஜெயா ஆசியுடனேயே தமிழகத்தில் வலம் வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை மன்னார்குடி கும்பலின் ஊழலை மக்களிடம் இருந்து மறைத்தவர்கள் இதே பத்திரிக்கைகள் தான். அப்பொழுது பார்ப்பன ஜெ-வின் பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இப்பொழுது ஜெயலலிதா செத்தபிறகு, ‘சிக்கியது டைரி’ என்று சீறுகிறார்கள்!

இதை வேறு ஒரு கோணத்தில் இருந்தும் பரிசீலிக்க முடியும். தி இந்து (தமிழ்) நடுப்பக்க கட்டுரைகளுக்கான ஆசிரியர் சமஸ் அவர்கள், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் சுதந்திரமாக காற்று கூட விட்டதில்லை! ஆனால் ஜெயலலிதா செத்தபிறகு ஜெயலலிதாயிசம் என்று எழுதுமளவிற்கு துணிந்திருக்கிறார்! மேலும் மன்னார்குடி கும்பலின் அட்டூழியங்களை சாடுவதிலும் முதன்மையாக இருக்கிறார்! அரசின் எந்த உறுப்பையும் சாராதவர்கள் அதிகாரத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாத எதிர்கட்சிகளை காறித்துப்பாத குறையாக கடுமையாக சாடுகிறார்.

ஆனால் மாண்புமிகு சமஸின் மானமிகு முயற்சிகளை தி இந்து பத்திரிக்கையாளர் இரா.வினோத்தின் கட்டுரை தவிடு பொடியாக்கிவிடுகிறது. 24-12-2016 அன்று “கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழகத்தின் புதிய ஆளுநர்” எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை இப்படிக் கூறுகிறது;

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில் கர்நாடகா மாநில பாஜக மூத்த‌ தலைவரும், சட்டமேலவை உறுப்பினருமான டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரை செய்தது. எனவே டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக‌ நியமிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்தது.(அழுத்தம் எம்முடையது)

இரா. வினோத் தன் கட்டுரையில், அரசு உறுப்புகளில் அங்கம் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் பா.ஜ.க மேலிடம் முடிவெடுத்தது என்று சனநாயகத்தின் சீரிய மாண்பை போட்டு உடைக்கிறார்.

அரசு உறுப்புகளில் அங்கம் வகிக்காத ஆர்.எஸ்.எஸ், மத்திய அரசுக்கு உத்தரவு போடுவதை அமைதியாக ஆமோதிக்கிறவர்கள், அதற்காக குறைந்தபட்சம் இம்மியளவும் முணுமுணுக்காதவர்கள் அதிகாரத்தில் இல்லாத மன்னார்குடி கும்பல், தமிழ்நாட்டு அரசை ஆட்டுவிப்பதாக முக்கி முணுகுவது ஏன்?

Sasikala - AIADMKஇது என்னவகையான அரசியல் என்பதை புரியாதவர்கள் 02-01-2017 அன்று தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த கருத்துப்படத்தைப் பாருங்கள். ஓ.பி.எஸ்ஸின் தலையில் சசிகலா அமர்ந்திருப்பது கச்சிதமாக வரையப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் தலையில் ஆர்.எஸ்.எஸ் உட்கார்ந்திருப்பதை தி இந்து பத்திரிக்கை திட்டமிட்டு மறைத்து ஒற்றைக்கண் ஒட்டகமாக தமிழகத்தில் உலா வருகிறது.

இதில் தி இந்து பத்திரிக்கை புரோமோட் செய்யும் இன்னொரு செய்தியும் கவனிக்கப்படவேண்டும். தலைமைச்செயலகத்திலும் தலைமைச் செயலாளர் வீட்டிலும் வருமானவரித்துறை மத்திய காவல் படையைக் கொண்டு சோதனையை நடத்தியது அரசு நெறிமுறைகளுக்கு எதிரானது என்று குரல் எழுந்தது (தி இந்துவும் கூட குரல் எழுப்பியது!!!).

அப்பொழுது வருமானவரித்துறையே விளக்க அறிக்கை கொடுத்திருப்பது செய்தியாக்கப்பட்டது (பார்க்க: ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையில் விதி மீறல்கள் இல்லை: வருமான வரித்துறை விளக்கம், தி இந்து தமிழ், 28-12-2016).

ஆனால் மோடி இலஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டிருக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்ட வருமானவரித்துறை (புலனாய்வு) இணை இயக்குநர் அங்கீதா பாண்டே தற்பொழுது நீண்ட தொடர் விடுப்பில் இருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்கள் அங்கீதாவிடம் கருத்து கேட்க முயன்ற பொழுது, அரசு பணியாளர் இதுபோன்று பேட்டியளிப்பது கூடாது என்று விதியை நினைவுறுத்தியிருக்கிறார்.

இப்பொழுது மட்டும் வருமானவரித்துறைக்கு எங்கிருந்து விதி வந்தது? அல்லது தி இந்து போன்ற பத்திரிக்கைகள் இதைக் கண்டும் காணாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

தி இந்து போன்ற ஆளும் வர்க்க ஊடகங்களின் செயல்திட்டத்தின் பின்னணியை தோழர் லெனின் இப்படி அம்பலப்படுத்துவதோடு இதை முறியடிப்பதற்கு தீர்வொன்றையும் சொல்கிறார்;

“நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லா விதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு  கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டுவருகிறது.——

இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்த சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.”

(லெனின்-மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்).

– தமிழ்வேல்

அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது !

2
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

“பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து!” – 22/12/2016 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.  கடந்தவாரம் சில உரைகளை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி வருமாறு..

“நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என சுட்டுக்கொல்கிறார்கள்”

– வழக்கறிஞர் பார்வேந்தன்

பார்வேந்தன்
வழக்கறிஞர் பார்வேந்தன்

“ஆளும் பா.ஜனதாவும், இதற்கு முன்பு ஆண்ட காங்கிரசு கட்சியும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நக்கி தின்பதையே கொள்கையாக கோட்பாடாக வைத்திருக்கிறார்கள். ஆற்று நீரையும், மணலையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். சுட்டுக்கொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வன்னமையாக கண்டிக்கிறது. அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் போராடக்கூடிய இயக்கமாக இருக்கிறீர்கள். உங்களோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக நிற்போம்”

– வழக்கறிஞர் பார்வேந்தன்,
வழக்கறிஞர் அணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

“வரலாறு நெடுகிலும் போலி மோதல் படுகொலைகள்! ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் யாரும் ஆண்டதேயில்லை”

– தோழர் தியாகு.

“1930-களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த ஒரு விவாதத்தின் பொழுது, சுதந்திர இந்தியாவில் அடக்குமுறை சட்டமான ரெளலட் சட்டம் போல ஒரு சட்டம் தேவையா? என்ற விவாதம் எழுந்தது. ”அப்படி ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு நாளும் பிரதமராக ஆளமாட்டேன்” என்றார் நேரு. ஆனால், ’சுதந்திர’ இந்தியாவில் ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் இருந்ததேயில்லை.

தியாகு
தோழர் தியாகு

ஆட்சி செய்த காங்கிரசு, திமுக, சிபிஐ, இப்பொழுது ஆட்சி செய்கிற பா.ஜனதா, சிபிஐ (எம்) அதிமுக என ஆட்சியில் இருந்தவர்கள் அனைவருமே வரலாறு முழுவதும் போலி மோதல் கொலைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். சாரு மஜூம்தார், வர்கீஸ், பாலன் என எண்ணற்ற நக்சலைட்டுகள் மட்டுமல்ல, சீவலப்பேரி பாண்டி, வீரப்பன் என பலரையும் சுட்டு கொன்றுகொண்டேயிருக்கிறார்கள்.

”உன்னுடைய சட்டத்தின் படி கைது செய்! சிறையில் அடை! வழக்கு நடத்து! சொத்துக்களை பறிமுதல் செய்! தூக்கு தண்டனை கூட கொடு! ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கட்டிவைத்து ஏன் கோழைத்தனமாக சுட்டுக்கொல்கிறாய்? போலீசில் யாரெல்லாம் கேடிகள், பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் என தெரிய வேண்டுமா? ஆண்டுதோறும் அண்ணா விருது வாங்குகிறவர்கள் தான் அவர்கள்.

நாம் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சனை. போலி மோதல் கொலையைப் பற்றிய மக்களிடம் உள்ள கருத்து தான்! மக்கள் மத்தியில் நாம் தொடர்ந்து எடுத்து சொல்வோம். அதில் போலி மோதல் கொலைகள், கொலைகாரர்கள் எல்லாம் பொசுங்கிபோவார்கள்”

– தோழர் தியாகு,
ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்

“மக்கள் விரோத அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது! கேட்டால் சுடுவோம் என்பது தான் பதிலாக இருக்கிறது”

– தோழர் வெங்கடேசன்

வெங்கடேசன்
தோழர் வெங்கடேசன்

“இந்தியாவில் மூன்று இடங்களில் போலி மோதல் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். போராடுகிற மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்கவேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு கிடையாது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களிலும், சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டங்களிலும் மக்களை கையாண்ட விதத்தை நாடே பார்த்தது. இந்த அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது. கேட்டால் சுடுவோம் என்கிறது. போராடும் மக்களோடு அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராடுவதன் மூலம் தான் அடக்குமுறையை முறியடிக்கமுடியும்! நமது உரிமைகளையும் பெறமுடியும்!”

– தோழர் வெங்கடேசன்,
மாநில பொருளாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

“எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்களை இந்துத்துவ அடிப்படைவாதிகள் கொல்கிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை எதிர்ப்பவர்களை அரசு சுட்டுக்கொல்கிறது”

– தோழர் குமார்.

kumar
தோழர் A.S. குமார்

“இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் என பலரும் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை தடுப்பவர்களை போலி மோதல் படுகொலைகள் மூலம் மத்திய மாநில அரசுகள் சுட்டுக்கொல்கின்றன. பா.ஜனதா ஆட்சி தனது வியாபம் ஊழலை மறைக்க தான் மத்திய பிரதேச போபாலில் 8 சிமி அமைப்பைச் சேர்ந்தவர்களை சுட்டுக்கொன்றார்கள். ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறீர்கள். இணைந்து போராடுவோம்! இறுதி வெற்றி நமதே!”

– தோழர் A.S. குமார்,
மாநில குழு உறுப்பினர்,
சிபிஐ மா.லெ. விடுதலை.

“மோதல் கொலைகளை செய்பவர்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின்படி IPC 302ன்படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்”

-மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

1970 காலகட்டத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்பாரி தோழர்கள் தேவாரத்தின் தலைமையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கில் “மோதல் கொலைகளின் பொழுது, போலீசு மீது IPC 302 – படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்” என உத்தரவிட்டது. தேசிய மனித உரிமை ஆணையமும் இதை வலியுறுத்துகிறது. அதை இன்றைக்கு வரைக்கும் தமிழக அரசு மதிக்கவேயில்லை.

sankara subbu
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

தோழர்கள் குப்புராஜூம், அஜிதாவும், உடல்நலமின்றி இருந்தவர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுடைய உறவினர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு கூட உடல்களை தரமறுக்கிறது அரசு. எப்பொழுதுமே நீண்ட நெடிய போராட்டத்தில் தான் உடல்களை பெறவேண்டியிருக்கிறது. இப்படி தான் மனித உரிமைகளின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கொலை செய்தவர்கள் மீது 302 சட்ட பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய நாம் போராடவேண்டும்”

– மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,
சென்னை உயர்நீதிமன்றம்.

“சட்டங்களை குப்பைக்கூடையில் போட்டு, அதில் கால்வைத்துதான் ஆட்சியே செய்கிறார்கள். உரிமைகளுக்காக போராடும் மக்கள் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகி விடுகிறோம்”

– தோழர் இராஜூ

“எதற்காக இந்த மோதல் படுகொலைகள்? மாவோயிஸ்டுகளை மட்டுமல்ல! ஆந்திராவில், 20 தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள். போபாலில் சிமி அமைப்பைச் சார்ந்தவர் 8 பேரை சுட்டுக்கொன்றார்கள். பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும் கூட படுகொலை செய்கிறார்கள். அரசியல் காரணம் என்ன? மக்களின் வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பேன் என்று உறுதியேற்ற அரசு, அதற்கு எதிராக செயல்படும் பொழுது, வருகிற எதிர்ப்பு குரல்களை சுட்டுக்கொல்வதன் மூலம் எதிர்கொள்கிறது.

தடா, பொடா, உபா என ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை சட்டங்களை உருவாக்கி, தண்டர்போல்டு, அதிரடிப்படை என பல்வேறு பெயர்களில், வானாளவிய அதிகாரத்தோடு அதிகார திமிரோடு வலம் வருகிறார்கள். ஆங்கில ஆட்சியை விட கேவலமாக நடந்துகொள்கிறார்கள். கட்டபொம்மன், மருது வீரர்களை தூக்கில் ஏற்றித்தான் கொன்றான். இவர்களோ கட்டி வைத்து கோழைத்தனமாக சுட்டுகொல்கிறார்கள். தோழர்கள் குப்புராஜ், அஜிதா அவர்களின் கொள்கைகள் தான் அவர்களை அச்சமூட்டுகிறது. அதனால், இறந்த உடல்களை பார்த்தால் கூட பெரிய இராணுவத்தை பார்த்தது போல அலறுகிறது.

raju
தோழர் இராஜு

சட்டத்தின் ஆட்சியா இங்கு நடக்கிறது? சட்டத்திற்கு உட்பட்டு கொல்ல வேண்டுமென்றால் போலீசை வைத்து கொல்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக கொல்லவேண்டுமென்றால் காவி பயங்கரவாதிகளை ஈடுபடுத்தி கொல்கிறார்கள். அப்படித்தான் கல்புர்கி, பன்சாரே, தபோல்கரை சுட்டுக்கொன்றார்கள். சட்டங்களை எல்லாம் குப்பைக் கூடையில் போட்டு, அதற்கு மேல் கால்வைத்துதான் ஆட்சியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களாகிய நமக்கு தான் சட்டம், சகல வரிகளும்! இவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்து என எப்படி போராடமுடியும்?

இந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொள்ளாத மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். இந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொண்டவர்கள் மீது கொலைவழக்கு போடுகிறார்கள். பலதலைமுறைகளை பாழாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது அரசின் மீது போர்தொடுத்ததாய் தேசத்துரோக வழக்கு உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டிருக்கிறார்கள். இதற்காக தூக்குத்தண்டனை கூட அரசால் வாங்கித்தர முடியும்.

லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் பாடகர் கோவன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கு. டாஸ்மாக்கை எதிர்த்து பேசிய எங்கள் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்படி நடப்பது நீதிமன்றத்திற்கு தெரியாதா? நீதிபதிகள் நம் தயவில் தான் இருக்கிறார்கள். மூலதனத்திற்கு பாதுகாப்பாக தான் நாம் இயங்குகிறோம். யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று முடிவு செய்துதான் சுடுகிறார்கள். இதுவரைக்கும் எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக பதவி உயர்வு பெறுகிறார்கள். கெளரவிக்கப்படுகிறார்கள்.

மக்களை ஆளத்தகுதி இழந்துவிட்டது இந்த அரசு. தான் எதற்காக இந்த ஆட்சியில் இருக்கிறோம் என அரசியல் அமைப்பு சட்டத்தின்படி உறுதி ஏற்றதோ அதை செய்ய தவறியது மட்டுமல்ல! அதற்கு எதிராகவும் பச்சையாக நடந்துகொள்கிறது. சட்டபுறம்பானவை அனைத்தையும் சட்டபூர்வமாக்கிவிட்டது. நியாயத்திற்காக, உரிமைகளுக்காக போராடுகிற அனைவரும் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகிவிடுகிறோம்.

கொத்து கொத்தாய் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளுக்காக மட்டும் நின்று போராடி பெற்றுவிடமுடியுமா? முடியாது. வரம்புகளை தாண்டி போராடி, அனைத்து மக்களுக்குமான கோரிக்கைகளுக்காக இணைந்து போராடும் பொழுது அந்தந்த பிரிவினர் கூட‌ தமது உரிமைகளை பெறமுடியும். இப்படி போராடினால், மாற்று அரசியலான மக்கள் அதிகாரம் வெகுதொலைவில் இல்லை!

தோழர் இராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
சென்னை.

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய் !

0

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி . . .

விவசாயி Poster.

காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த
அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்!

கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு – 91768 01656.

பத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து

0

ஜார்கண்ட் கோடா மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஒரு பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சரிந்த மண்ணுக்குள் சிக்கியிருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.

mine-jharkhand1லால்மடியா திறந்தவெளி கனிமச் சுரங்கத்தில் கடந்த வியாழன் அன்று, ஒரு பகுதி நிலம் சரிந்து விழுந்தது 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், கனரக வாகனங்களையும் மண்ணில் புதைத்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு-பகலாக அவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளிகள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

“இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே மேலும் இரண்டு அல்லது மூன்று உடல்கள் இருக்கலாம் என்று சுரங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்று ஜார்கண்ட் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.கே. மல்லிக் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

தொழிலாளிகளில் சிலர் சரிவுக்கு முன் விபத்து பகுதியிலிருந்து தப்பிவிட்டனர். சுமார் 50 பேர் உள்ளே சிக்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன என்றும் மல்லிக் கூறியுள்ளார்.

போலீசும் மீட்பு குழுவினரும் சிக்கியுள்ளோரைக் கண்டறிய மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சரிந்துள்ள பெரும் பாறைகளை, சிதைந்தும் கவிழ்ந்துமுள்ள லாரிகளை நீக்க மண் அள்ளும் இயந்திரங்களையும், வெறும் கைகளையும் பயன்படுத்துகின்றனர்.

மோசமான வானிலை மற்றும் மூடுபனியின் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் வெள்ளி காலை வரை தாமதமாகக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கூறியுள்ளார்.

இந்தச் சுரங்கம் அரசு நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமான ’கிழக்கு நிலக்கரிச் சுரங்க நிறுவனத்திற்கு’ (Eastern Coalfields Limited) சொந்தமானது. வியாழன் அன்று இரவு 7:30 மணியளவில் தொழிலாளர்கள் வெளியேறத் தலைப்பட்ட போது சுமார் 250 மீட்டருக்கும் அதிகமான பகுதி சரிந்து விழுந்ததாக நிறுவனத்தின் மேலதிகாரி நிலாத்ரி ராய் தெரிவிக்கிறார். டஜன் கணக்கான வாகனங்களும் இயந்திரங்களும் இடிபாடுகளின், குவியல்களின் கீழ் சிக்கி மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

mine-jharkhand2ECL நிறுவனத்தின் சார்பாக மஹாலட்சுமி பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனம் சுரங்க அகழ்வில் ஈடுபட்டு வந்தது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 4 மணியளவில் முதல் சரிவு ஏற்பட்டது. பின்னர் 6 மணியளவில் இரண்டாவது முறை சரிவு ஏற்பட்டது. இரண்டு முறையும் எச்சரிக்கை மணியை யாரும் பொருட்படுத்தவில்லை. மூன்றாம் முறை 7:30 மணியளவில் பெருமளவில் சரிவு ஏற்பட்ட போது யாருக்குமே வினையாற்ற கூட நேரம் கிடைக்கவில்லை என்கிறார் ஓட்டுநரான முகமது ராப். இவர் இரவு 9:00 மணி ஷிப்டுக்கு காத்திருந்ததால் விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

ஏற்கனவே தோண்டியெடுக்கப்பட்ட உறுதியற்ற மண் குவியலில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே சிறு சிறு நிலச்சரிவுகள் அங்கு நடந்து வந்ததாகவும் அதிகாரிகள் மெத்தனமாக அவற்றை கண்டுகொள்ளவில்லை என்றும் ஓட்டுநராக வேலை செய்யும் ராஜன் குற்றம் சுமத்துகிறார். சுரங்கத்தில் அந்தப் பழைய மண் குவியலின் அடியில் நிலக்கரியை எடுத்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளனர். 250 மீட்டர் ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளின் மீது மொத்த 250 மீட்டர் உயர மண் குவியலும் விழுந்துள்ளது.

ECL மற்றும் மஹாலட்சுமி நிறுவனங்களின் அதிகாரிகள் இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சரிவுக்கு காரணமாக இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. முன்கண்டிராத இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலங்களின் ஒன்றான ஜார்க்கண்டில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இந்தியாவின் கனிம வளமிகுந்த மாநிலங்களில் ஒன்றாகவும் ஜார்கண்ட்  உள்ளது. நாட்டின் நிலக்கரி வளத்தில் சுமார் 29 சதவீதத்தை இம்மாநிலம் கொண்டுள்ளது.

2015-ம் ஆண்டில் மட்டும் 570 இந்திய சுரங்கங்களில் 38 பேர் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை தொழிலாளிகள் கொல்லப்பட்டும் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்வதில்லை. அப்படி செய்திருக்கிறார்களா என்று தனியார் நிறுவனங்களையும் சோதிப்பதில்லை. வளர்ச்சி என்ற பெயரில் உப்பவைக்கப்படும் நகரங்களுக்கு, உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மின்சாரம் அதிகம் வேண்டும் என்பதால் நிலக்கரி உற்பத்தி மேலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலோ, ஜார்க்கண்டின் நிலக்கரி சுரங்ககளிலோ கொல்லப்படும் தொழிலாளிகளுக்கு அந்த வளர்ச்சியின் வாய்ப்புக்கள் இல்லை என்பதோடு அவர்களே அதன் பலிகடாக்களாவும் இருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்:
Jharkhand mine collapse: Warning ignored, caved in 4 hrs later
At least 10 dead in Jharkhand coal mine collapse

கருப்புப் பண கிரிமினல் சேகர் ரெட்டி ! – வேலூர் ஆர்ப்பாட்டம்

2

மக்களை ஆளும் தகுதியிழந்து தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பு உருவாக்கிய
கருப்புப் பண கிரிமினல்தான் சேகர் ரெட்டி! – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

PALAR
பாலாறு

 கருப்புப் பண கிரிமினல் சேகர் ரெட்டியை உருவாக்கிய அரசை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பாக 27.12.16 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் மோகன்  தலைமையுரையில் பாலாற்றில் மணல் எடுத்து சேர்த்தது தான் சேகர் ரெட்டியிடமுள்ள கோடிக்கணக்கான கருப்பு பணம். இவர்களை போன்ற கொள்ளையர்களை பிடிக்க வக்கில்லாமல் சாதாரண உழைக்கும் மக்கள் எல்லோரையும் வதைக்கிறது இந்த மோடி அரசு என்று பேசினார்.

வழக்கறிஞர் பாலு தனது கண்டன உரையில் மணல் கொள்ளை கண்டித்தும் பணமதிப்பிழப்பு என்பதே ஒரு ஏமாற்று என்பதை சுட்டிக்காட்டிப்பேசினார்.

பாலாறு பாதுகாப்பு குழுவை சேர்ந்த தோழர் விக்னேஷ் :
சேகர் ரெட்டி என்பவன் ஒரு புரோக்கர், கரிகாலன் என்ற மணல் கொள்ளைடிக்கும் கும்பல் போலீசு உட்பட ஒவ்வொருவருக்கும் 10000 ரூபாய் பணம் கொடுக்கிறான். மூன்று அடி தான் மணல் அள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் கணக்கு வழக்கில்லாமல் பல அடி மண்ணை தோண்டி எடுக்கிறான். நம் ஊரில் காவேரியா ஓடுகிறது. வேலூரில் இருப்பது பாலாறு ஒன்று தான்.  அதில் மணலை அள்ளி ஒன்றும் இல்லாமல் செய்து விட்டனர்.

vellore-peoples-power-protest3ரிசர்வ் வங்கியில் பணம் இல்லை அதனால் மக்களிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து பணக்காரனிடம் கொடுத்து அவனை வாழ வைக்க தான் இந்த பணமதிப்பிழப்பு திட்டம். ஏழையும் பணக்காரனும் சமம் என்று பேசினால் மாவோயிஸ்ட், தீவிரவாதி என்கிறான். இந்த பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தால் நாட்டில் கலவரம் வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு முப்படையும் தயார் நிலையில் வைக்கிறான்.

மக்களை கோமாளியாக மாற்றும் திட்டம் தான் இது. இந்த திட்டமே பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்காக தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் போன்றோரின் உதவியால் தான் இங்கு மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. அதைத்தடுக்காமல் கருப்புப்பணத்தை ஒழிப்பது என்பதெல்லாம் ஏமாற்று. இவர்களை அம்பலப்படுத்த வங்கிகளின் வாசலில் நிற்பவர்கள் தெருவில் இறங்கி போராட வரவேண்டும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவது தான் இதற்கு ஒரே தீர்வு என்று பேசினார்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் :
நரேந்திர மோடியின் அரசின் கருப்புப்பண ஒழிப்பு என்ற அறிவிப்பு மக்களை வாட்டி வதைக்கிறது. மோடி அரசு உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழித்தால் நாம் கஷ்டத்தை தாங்கி கொள்ளலாம். ஆனால் மோடியின் இந்த நடவடிக்கையோ சிறுகடை வியாபாரிகள், சிறு வணிகர்கள், தொழிலாளர்கள், மாதம் சம்பளம் வாங்கும், அன்றாடங்காய்ச்சிகள் ஆக உள்ள சாதாரண உழைக்கும் மக்களிடம் உள்ள சேமிப்பை வழிப்பறி செய்து முதலாளிகளுக்கு தாரைவார்க்கிறது.

vellore-peoples-power-protest2மோடி யார்? பிரதமர் என்றால் நமக்காக வேலை செய்பவர் என்று நம்மில் சிலர் தவறாக புரிந்து வைத்து கொண்டிருக்கிறோம். ஆக பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு எதிரானவர் தான் மோடி. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக இந்தியாவை சுரண்டுவதற்கு அரிதாரம் பூசி கொண்டிருப்பவர் தான் மோடி. அதற்கு ஊடகங்கள் மூலம் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து அவர்களுக்கு அடிமை சேவகம் செய்ய உருவாக்கப்பட்டவர் தான் மோடி.

தேர்தலில் நாம் ஓட்டு போட்டதால் மோடி நமக்கு வேலை செய்வார் என்று நினைத்தால் நாம் தாம் முட்டாள். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிறந்த அடிமை சேவை செய்யும் ஆள் தான் மோடி. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சுவிட்ஸர்லாந்தில் இருந்து 70 லட்சம் கோடியை கொண்டு வந்து நாட்டில் உள்ள அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக கூறினார். ஆனால் இப்போது நம்முடைய பணத்தை தூக்கி முதலாளிக்கு தருகிறார். ’சொன்னது என்னாச்சு?’ என கேட்டால் தேர்தலுக்காக சொன்னோம் என திமிராக பேசுகிறார்கள். இவர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் முதலாளியின் நலனுக்காக என்று சொல்ல மாட்டார்கள். மக்கள் நலன் என்ற பெயரில் தான் கொண்டு வருவார்கள்.

மறுகாலனியாக்க கொள்கையான தனியார்மயமாக்கலை அமுல்படுத்தி லாபமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை, வங்கிகளை தனியாருக்கு தாரை வார்த்தார்கள். சேலம் ஸ்டீல் கம்பெனி 1000 கோடி வருமானத்தோடு லாபகரமாக இயங்கிய நிறுவனத்தை தனியாருக்கு தூக்கி கொடுத்தார்கள். இரயில்வே துறையை நவீனமாக்குவது என்ற பெயரில் தனியார்மயத்தை புகுத்துகிறார்கள். விவசாயத்தை முற்றிலுமாக அழிக்கும் வேலையை செய்கிறார்கள்.

வங்கியில் வராக்கடனை write off  என்ற பெயரில் 7016 கோடி தள்ளுபடி செய்தார்களே! அது யாருடைய பணம்? மோடியின் பணமா? பி.ஜே.பியின் பணமா? முதலாளிகளின் பணமா? இல்லை மக்களின் பணம். தங்கள் உழைப்பில் மக்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை தான் முதலாளிக்கு கடனாக மீண்டும் அள்ளிக் கொடுக்கவே பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மோசடி செய்கிறார்கள். இதற்கு எதிராக யாரிடம் முறையிட முடியும்?

vellore-peoples-power-protest4சீட்டு கம்பெனி எப்படி ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்யுமோ அது போல மக்களிடம் கருப்பு பணத்தை ஒழிப்பதாக ஆசை காட்டி மோசடி செய்கிறது மோடி அரசு. கருப்பு பணம் யாரிடம் இருக்கிறது? சேகர் ரெட்டி போன்ற ஆட்களிடமும் தான் இருக்கிறது. ஜனார்த்தன ரெட்டி 650 கோடிக்கு மகள் திருமணத்தை செய்கிறான், மக்கள் 2000 ரூ பணம் எடுக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இது வக்கிரமில்லையா? இந்த திருமணத்திற்கு வருமான வரித்துறை, பி.ஜே.பி, நபர்கள் விருந்து சாப்பிட வரிசையில் நிற்கிறார்கள். இவன் 650 கோடியை எந்த ஏ.டி.எம்மில், எந்த பேங்க் வாசலில் நின்று எடுத்தான். இந்த ஜனார்த்தன் ரெட்டி யார்? ஆந்திராவில் இரும்பு கனிம வளத்தை சூறையாடியவன். கர்நாடகத்தில் அமைச்சராக இருந்தவன். இயற்கையை கொள்ளையடிக்கும் இப்படிப்பட்ட மாபியா கும்பலிடம் தான் கருப்பு பணம் இருக்கிறது. இது மோடி அரசுக்கு தெரியாதா? அம்பானி, அதானியை ஏன் பிடிக்கவில்லை.?

உள்ளூர் காவல் நிலையத்திற்கு எவன் கிரிமினல் என்று நன்றாக தெரியும். அது போல வருமான வரித்துறைக்கு எவன் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்று நன்றாக தெரியும். வருமான வரித்துறையே லஞ்சம் வாங்குகிறது. இவர்கள் நேர்மையாக இருப்பது போல நாடகம் ஆடுகிறார்கள்.

கருப்பு பணம் என்பது மூட்டைக்கட்டி வீட்டில் குழித்தோண்டி பணத்தை பதுக்கியா வைத்துள்ளார்கள். ஆற்றில் உள்ள மணல் முழுவதையும் ஒட்ட சுரண்டியும் கருப்பு பணம் சேர்ந்துள்ளது. இயற்கை வளங்களை சட்டத்திற்கு புறம்பாக எடுப்பதன் மூலமும் கருப்பு பணம் உருவாகிறது. வேலூரில் மணற்கொள்ளையில் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. சேகர் ரெட்டிக்கு அரசு துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வரையிலும் வெளிப்படையாக ஆதரவு தருகிறார்கள். பலமுறை மனு கொடுத்தும் பலமுறை போராடியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் மக்கள் மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் போது மக்களை அடித்து கைது செய்தது போலீஸ். மக்கள் தொடர்ச்சியாக போராடினார்கள் மணல் அள்ளும் வண்டியை மக்கள் சிறைப்பிடித்தார்கள். அதை மக்களிடம் இருந்து பிடிங்கி போலீஸ்காரர்கள் மணற் கொள்ளையர்களிடமே தந்தார்கள். இதற்கு எதிராக யாரிடம் எங்கே போய் முறையிட முடியும்?

டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள், புயல் வந்த போது பணம் தேய்க்கும் மிஷின் வேலை செய்யவில்லை என்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட முடியவில்லை. வளராத பழைய தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடியை மோடி செய்கிறார். விவசாயிகளிடம் swiping machine இருக்கிறதா?. கீரை விற்கும் பாட்டியிடம் நாம் வாங்கு 10ரூபாய் கீரைக்காக swiping machine வைத்திருக்க சொல்வது அயோக்கியத்தனமில்லையா? அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் நம் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் அவர்களிடம் பணமில்லாமல் பரிவர்த்தனை என்பது சாத்தியமா? பெரும்பான்மை மக்கள் கையில் பணம் வைத்து கொண்டு தான் செலவு செய்கிறார்கள். நம்முடைய உரிமை கையில் பணம் வைக்க கூடாது என்று சொல்லவதற்கு இவர்கள் யார்?. நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு வேலை மட்டும் சாப்பிடு என்று சொல்வார்கள். 2008-2009 யில் பொருளாதார நெருக்கடி வந்த போது எல்லா நாடும் திவால் ஆனாது. இந்தியா மட்டும் தான் தப்பித்து கொண்டது காரணம் மக்களின் கையில்  இருந்த சேமிப்பு தான் என பல பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள். இப்போது அதைப் பிடுங்கிவிட்டார் மோடி.

பாகிஸ்தான், காஷ்மீர், சீனா என போர் பதற்றத்தை உருவாக்கி  நாட்டுப்பற்று என்ற நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றும் மோடி. அறிவித்த திட்டமெல்லாம் என்னாச்சு. தோல்வியில் முடிந்தது. அதை மறைக்கவே மக்களை திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு.

சேகர் ரெட்டியை கைது செய்து ’ஏ’ கிளாஸ் பிரிவில் சிறைசாலையில் வைத்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடி செய்த கருப்புப் பண கொள்ளையனுக்கு டி.வி, ஏ.சியோடு சிறையில் வசதி. இவன் என்ன விடுதலை போராட்ட வீரனா? உயர் பதவியில் இருந்த ராம்மோகன் ராவ் ஊழலில் பிடிப்பட்டுள்ளான். அவனை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாக அரசு அறிவிக்கிறது. வீதியில் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டாமா இவர்களுக்கு? பொருளாதார தீவிரவாதிகள் தான் இவர்கள். அரசாங்கம் என்பது யாருக்காக இருக்கு? தவறு செய்தால் தண்டனை இல்லை. குற்றம் செய்பவர்களே அவர்கள் தான் யாரை கொண்டு அவர்களை தண்டிப்பது? இந்த ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. மணல் கொள்ளை, ஊழல், லஞ்சம் என அழுகி நாறுகிறது. இதை நம்பி இனி பயனில்லை. நீதிமன்றம் சென்றோ, மனு கொடுத்தோ, எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது. அனைவரும் சேர்ந்து அழுகிப்போன எதிர்நிலை சக்தியாகிப்போன இந்தக் கட்டமைப்பை வீழ்த்துவதுதான் தீர்வு என்று பேசினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்,
பேச: 9176801656

கோவை : நலியும் விசைத்தறி தொழில் காக்க வீதியில் இறங்குவோம் !

0

விசைத்தறி தொழிலை பாதுகாக்க வீதிகளில் இறங்கி போராடுவோம் !

அன்பார்ந்த விசைத்தறி தொழிலாளர்களே,

கோவை திருப்பூர், பல்லடம் சோமனூர் போன்ற பகுதிகளில் எந்நேரமும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த விசைத்தறிக் கூடங்கள் நிசப்தம் ஆகி வருகிறது. Notice_Visaithari-Tholilalargalai_FRONT-postலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்த விசைத்தறி தொழில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

நாட்டின் துணித் தேவையில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே விசைத்தறி மூலம் உற்பத்தியாகிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் தான் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. மனிதர்களின் மானம் காக்கும் ஆடை தயாரிக்கும் தொழில் என்பது இதன் சிறப்பு.

மாஸ்டர் வீவர்ஸ் எனப்படும் ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உழைப்பாளர்களாக மாறுவதும் உண்டு. கூலி உயர்வு போன்ற பிரச்சினைகளில் இரு தரப்பு ஒப்பந்தமோ, முத்தரப்பு ஒப்பந்தமோ முறைப்படி நடப்பதில்லை.

தொழிலாளர் நலத்துறை உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் இருக்கிறார். காவல்துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். எம்‌.எல்‌.ஏ இருக்கிறார். எம்‌.பி இருக்கிறார். மந்திரி இருக்கிறார். இவர்கள் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் ? சட்டப்படியான ஒப்பந்தம் கூட கடந்த 50 வருடமாக இல்லை. இதுதான் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை.

தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை, பாதுகாப்பான, காற்றோட்டமான குடோன் இல்லை. இ‌.எஸ்‌.ஐ இல்லை. பி‌.எஃப் இல்லை. பணிக்கொடை இல்லை. பென்ஷன் இல்லை. எட்டுமணி நேர வேலை இல்லை. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு இருக்கின்ற சட்டப்படியான எந்த சலுகையும் எட்டு தறி / 12 தறிகள் இயக்கும் தொழிலாளர்களுக்கு இல்லை. கொத்தடிமைகளைப் போல விசைத்தறித் தொழிலாளர்கள் நடத்தப்படுகின்றனர்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும் சட்டப்படியான உரிமைகள் இல்லாமலே உள்ளனர். விசைத்தறியாளர்கள் கெண்டையை நாடாவில் போட்டு உறிஞ்சி எடுத்து அதே நாடாவை தரிகளில் போட்டு ஓட்டுவார்கள். அந்த நாடா இரண்டு பக்கமும் உதை வாங்கி ஓடிக் கொண்டிருக்கும். இதே நிலைமைதான் இவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.

powerloom-workersசெல்லாத நோட்டு பிரச்சினையை வைத்து இருக்கிற கொஞ்ச நஞ்ச ஓட்டமும் படுத்துவிட்டது. ஒரு வாரத்தில் 6 நாட்கள் வேலைசெய்த தொழிலாளிக்கு இப்போது 6 ஷிப்ட் வேலை கூட கிடைப்பதில்லை. ஏற்கெனவே பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்ற அவலம் நடந்தது. இனி பட்டினிச் சாவும், தற்கொலையும், தஞ்சை விவசாயிகளுக்கு ஏற்பட்டது போல விசைத்தறி தொழிலுக்கும் வராமல் தடுப்பது நம் கடமை.

இதற்கான காரணங்கள் மத்திய மாநில அரசுகள், ஓட்டுக்கட்சிகள் கடைபிடித்த தாராளமயக் கொள்கைகளால் இறக்குமதிகள் ஏராளமாகி குவிந்தது. சந்தையில் வெளிநாட்டு போட்டியாளர்களை சமாளிக்க முடியவில்லை. பாரம்பரியமான உள்நாட்டுத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும், இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் எந்த ஓட்டுக் கட்சிகளும் மனதளவில் கூட நினைக்கவில்லை.

ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இதே கொள்கைகளை ஏற்றுக் கொண்டு சங்கம் நடத்தியதால் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுக்க முடியவில்லை. ஜவுளிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு எதிராக போராட வேண்டும். அம்பானிக்கும் அதானிக்கும், மல்லையாவுக்கும் கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, விசைத்தறிக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது ?

பங்களா தேஷ் அகதிகள் வருவதை எதிர்க்கும் பி‌.ஜே.பி-யினர் பங்களா தேஷ் துணிகளை எப்படி இந்திய சந்தையில் வர அனுமதிக்கலாம் ? சீனாவுக்கு எதிராக சண்டமாருதம் செய்பவர்கள் சீனத் துணிகளையும் தடுக்க வேண்டுமல்லவா ? ஊடகங்கள் விசைத்தறி தொழிலாளர்களின் கொடுமைகளை வெளிப்படுத்த மாட்டார்கள், அவர்களுக்கு நடிகை தமன்னா விவகாரம்தான் முக்கியம். தொழிலாளர்கள் மத்தியில் உள்ள போராட்ட உணர்வு புரோக்கர்களால் மழுங்கடிக்கப்பட்டு உள்ளது. நம் போராட்ட உணர்வை புதுப்பிப்போம்.

ஜவுளித் தொழில், விசைத்தறி தொழில் பன்னாட்டு கார்பரேட் முதலாளிகள் நலனுக்காக, ஓட்டுக்கட்சிகளால் பலி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது நாம் போராடவில்லையெனில் எப்போதும் போராட முடியாது. நம் தொழிலையும் காப்பாற்ற முடியாது.

எனவே நம் தொழிலை, நம் குடும்பத்தையே காக்க களம் இறங்குவோம்.

Notice_Visaithari-Tholilalargalai_BACK-postகண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்

  • நாள் : 04.01.2017 புதன் – மாலை 04.00 மணி
  • இடம் : சோமனூர் பேருந்து நிறுத்தம்

தலைமை : தோழர் சரவணன் பு.ஜ.தொ.மு. கோவை

உரைவீச்சு : தோழர் வினோத் பு.மா.இ.மு. கோவை
தோழர் வசந்தன் காங்கேயம்
தோழர் ராமசாமி கரூர்
தோழர் புஷ்பராஜ் பு.ஜ.தொ.மு. ஈரோடு
தோழர் சம்புகன் ம.க.இ.க. கோவை
தோழர் நித்தியானந்தன் பு.ஜ.தொ.மு. கோவை

கண்டன உரை : தோழர் விளவை இராமசாமி
மாநிலத் துணைத் தலைவர்,பு.ஜ.தொ.மு.

நன்றியுரை : தோழர் திலீப், மாவட்ட செயலர் பு.ஜ.தொ.மு. கோவை

  • – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
    கோவை
    தொடர்புக்கு: 90924 60750

இராஜ்குமாரை சந்திக்க எனக்குத் துணிவில்லை

3

மோடி கொண்டு வந்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முதல் சவுக்கடியான ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ஒழிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்து விட்டது.

atm-mumbaiதினக்கூலி தொழிலாளிகள், தரைக்கடை வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளிகள், சிறு வணிகர்கள், சிறு/குறு தொழில் செய்வோர்கள், விவசாயிகள் என ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இதைத்தான் புரட்சிகர நடவடிக்கை என பாஜக அடிவருடிகள் முதுகு சொறிந்து கொள்கின்றனர்.

பொருள், பணம் இவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த பெரும்பான்மை மக்களின் பொருளாதாரத்தை ஊழல், கருப்புப் பண ஒழிப்பு என்று இது குறித்து எதுவுமே அறிந்திராத மற்றும் இதில் துளியும் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களை பலிகடாவாக்கிவிட்டது இந்த அறிவிப்பு.

முன்பெல்லாம், எந்த ஒரு கடைக்காரரிடமும் ரூ.1000-மோ அல்லது ரூ.500-ஓ கொடுத்து 10 அல்லது 15 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை வாங்கினாலும் அவர்களிடம் சில்லறை கிடைக்கும்; ஏனென்றால் அவர்களின் வர்த்தகமே சில்லறை காசுகள் மற்றும் சில்லறை நோட்டுகளின் ஊடாகத் தான் நடக்கும். அவ்வாறு சேர்ந்தவற்றை அவர்கள் ரூ.500-ஆகவோ அல்லது ரூ.1000-மாகவோ தான் மாற்றி வைத்துக்கொள்வர். ஏனென்றால் மறுநாள் சரக்கு வாங்கும்போது எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருக்கும். சேமிப்புப் பணமும் அவ்வாறு தான் 500-ஆகவோ அல்லது 1000-ஆகவோ இருக்கும்.

ஆனால் மோடிக்கும் அவர் இப்போது சேவை செய்து கொண்டிருக்கும் அதானி, அம்பானி வகையறாக்களுக்கும் இந்தக் கருப்புப் பண ஒழிப்பு பெருத்த இலாபத்தைத் தரக்கூடியது என்பது உலகமறிந்த ஒன்று. வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் மோடியின் முடிவைக் காறி உமிழ்ந்து விட்டன.

இந்தப் பின்னனியில் கீழேயுள்ள ஒரு சான்று, நமக்கு இதன் அவலத்தையும், அது தோற்றுவிக்கும் குற்றவுணர்வையும், செவியில் அறைந்து சொல்கிறது.

*****

டெல்லி நகரின் நெரிசல் மிகுந்த ஒரு காலனியின் நுழைவு வாயில் அது. அதனருகில் இராஜ்குமாரின் தள்ளுவண்டிக்கடை. ஏறக்குறைய எல்லா குடியிருப்புவாசிகளும் இராஜ்குமாரின் வாடிக்கையாளர்கள் தான். நீங்கள் விரும்பிய காய்கறிகளை இராஜ்குமார் வாங்கி வைத்திருப்பார்; உங்களின் தேவைக்கேற்ப காய்கறிகளைத் தருவார்.

அன்று நவம்பர் 14 2016:

vegetable-seller
இராஜ்குமாரின் நிலை என்னவாகும்? (மாதிரிப் படம்)

”இராஜ்குமாரை இன்று எப்படி நான் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறேன்; எனக்கு அந்த மனத்திடம் துளியும் இல்லை: பலப்பல வருடங்களாக அவர்தானே என்னைப் போன்ற இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் காய்கறி விற்பனை செய்கிறார். ஆனால் இந்த வாரம் நான் இராஜ்குமாரின் வாடிக்கையாளனல்ல!

இராஜ்குமாரிடம் காய்கறி வாங்காமல் நான் அவரைக் கடந்து செல்லும்போது ஒன்றுமே புரியாமல் அவர் பார்த்த பார்வைக்கு என்ன பதில் சொல்வது?? என்னிடம் 400 ரூபாய் ரொக்கப்பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது அவருக்குத் தெரியுமா? நான் இந்த வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை ஏற்கனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன்; நான் மட்டுமல்ல என்னைப்போன்றே பிற குடியிருப்புவாசிகளும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டோம் என்பது அவருக்குத் தெரியுமா? இராஜ்குமாரைப் பொருத்தவரை ஆன்லைன் ஆர்டர் என்றால் அவருடைய செல்பேசியில் ஆர்டர் கொடுத்து அதை அவர் தன் மகன் மூலமாக வீட்டு வாசலில் வந்து கொடுப்பது தானே! பணமில்லா வர்த்தகம் என்றால், நாம் முடிதிருத்தவோ அல்லது மளிகைப்பொருட்களோ வாங்கச் செல்லும் போது இராஜ்குமாரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு திரும்ப வரும் போது எடுத்துக்கொண்டு போவதுதானே? ஒன்று அந்த நிமிடமே பணம் வாங்கிக்கொள்வார்; இல்லையென்றால் அடுத்த நாள் சந்திக்கும்போது வாங்கிக்கொள்வார். அதற்குமேல் அவருக்கு ரொக்கமற்ற பரிவர்த்தனை பற்றி என்ன தெரியும்?

இங்கு வசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் ஏதாவதொரு கடன் அட்டை வைத்திருப்பார்கள்; ஆனால் தவிர்க்கவியலாத சூழலில் மட்டுமே அதைப் பயன்படுத்த எத்தனிப்பர். ஆனால் இப்போது வேறு வழியே இல்லையே, என்ன செய்ய? அவர்களால் டெல்லியில் ஒரு வீடு வாங்கமுடியும் என்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியுமா அல்லது அந்த வீட்டுக்கான மதிப்பில் 100-ல் ஒரு பங்கையோ செலுத்தத்தான் அவர்கள் கையில் ரொக்கப்பணம் இருக்குமா? அவர்களால் முடிந்ததெல்லாம் கிழக்கு டெல்லியின் புறநகரையும் தாண்டி இப்போதே ஒரு இடத்தை முன்பதிவு செய்தால்தான் அவர்களுடைய குழந்தைகளுக்குத் திருமணமாகும் போதாவது அந்த வீடு அவர்களுக்குச் சொந்தமாகும். இன்னும் சிலரோ வாரச்செலவுகளுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் போது பணம் கையிருப்பில் வைத்திருப்பதை எண்ணிப்பார்க்க முடியுமா? இப்போது வேண்டுமானால் அவர்கள் குடும்பச்செலவுக்கான பொருட்களை கடன் அட்டை(Credit Card) மூலமாக வாங்கியிருக்கலாம். ஆனால் அதைக்கூட திரும்பக்கட்ட முடியாமல் அதை மாதத் தவணைத் தொகையாக(EMI) விரைவில் மாற்றவேண்டி வரும். ஏனெனில் வாங்கிய பொருட்களுக்கு நிகரான பணம் உண்மையில் அவர்களிடத்தில் இல்லை.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்துள்ளது. பணத்தின் மதிப்பு இப்போது ஏகத்துக்கும் அதிகரித்து விட்டது. எனவே பணமின்றி குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியும். ஏனென்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு மாத சம்பளம் பணமாகத் தரப்படுவதில்லை மாறாக வங்கியிலேயே செலுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை ஏழைகளைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் அப்படியா உள்ளது? ரொக்கப் பணம் தான் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவர்களுக்கு அதுவன்றி வேறொரு சிறந்த வழி இதுவரை அறியப்படவில்லை. பற்று அட்டையோ அல்லது கடன் அட்டையோ எதுவாக இருந்தாலும் நம்மில் பலர் அதைப் பத்திரமாகப் பூட்டி வைத்த காலம் மாறி இன்று அதற்கான இரகசியக் குறியீட்டு எண்களைத் தேடி அலைகின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் விரும்புவது பணப் பொருளாதாரத்தைத் தான். ஒருவேளை அது நிகழாமல் போனால் இராஜ்குமாரின் நிலை என்னவாகும்?”

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
மேலும் படிக்க:
Why I can’t face my vegetable vendor this week

புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை

0

விவசாயிகளின் சாம்பலில் பிறக்கும் புத்தாண்டு.

farmer-revised-post

ஓவியம்: முகிலன்
***

தற்கொலை செய்யாதே !  போராடவா !

ஒரே  நாளில் 11 விவசாயிகள் இறந்திருக்கின்றனர் என்ற தகவலோடு புத்தாண்டு பிறந்து விட்டது.  இவர்களில் பலர் வாங்கிய கடனுக்காகவும் தான் வைத்த பயிர் கண்முன்னே காய்ந்துபோய் விட்டதே என்ற சோகம் தாங்க முடியாமலும் மாரடைத்தும், வயலிலே மயங்கி விழுந்தும் இறந்து போய் உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்த விவசாயிகள் தற்கொலைப் பட்டியலில் இப்போது தமிழகமும் சேர்ந்து விட்டது. இங்கே யாரும் விவசாயிகளின் தற்கொலையை ஆத்திரத்தோடு பேசவதில்லை. மல்லையா, அதானி போன்ற முதலாளிகளுக்கு கடன்கொடுத்தும், கடனை ரத்து செய்தும் பாதுகாக்கும் அரசு விவசாயித்தை ஒழித்துக்கட்ட மானியத்தை நிறுத்தியும், கடன் கொடுப்பதை மறுத்தும் விவசாயத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. இது போக போராடி கடன் வாங்கிய விவசாயிகளை தற்கொலை மரணம் ஈர்த்துக் கொள்கின்றது.

அனைவரும் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது உணவு. அந்த உணவை உற்பத்தி செய்து அனைத்து மனித உயிருக்கும் உணவளிக்கும் உழவனின் உயிர், தினந்தோறும் பறித்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் பயங்கரவாதத்தை யாரும் கண்டு கொள்ளாமல் மது போதையில் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருப்பது கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் இன்று உயிர் குடிக்கும் நஞ்சு நிலமாக மாறி நிற்கிறது.

விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை என்று கேட்டபோது இங்கு எத்தனை பேர் அதிர்ச்சியடைந்தார்கள்? அதே தற்கொலை இங்கு நடக்கும்போதும் அதே பாரமுகம். சோற்றை தட்டில் பார்க்கும் போதெல்லம் ரத்தவாடையாக வீசுகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவு உற்பத்தி செய்தவர்கள் தமிழ் மக்கள். அந்த உணவு உற்பத்தி என்பது நமது மரபில், பாரம்பரியத்தில் ஒட்டிய ஒன்று. இருக்க குடியிருப்பு இல்லாத போதும், வறுமை தன்னை வாட்டியபோதும் ஏதோ போராடி வாழ்ந்த விவசாயி இன்று தன்பயிர் தண்ணீர் இல்லாமல் கருகியபோது மணம் தாங்கிக்கொள்ளாமல் தற்கொலையை நாடுகிறான். விவசாய உற்பத்தியில் லாபம் இல்லை நட்டமே என்று தெரிந்தபோதும், தன்னால் ஏதாவது ஒரு நகரத்திற்கு சென்று பிழைப்பு நடத்திக்கொள்ள முடியும் என்ற குறைந்தபட்ச வாய்ப்பு இருந்தபோதும் அவர்கள் விவசாயத்தை விட மறுக்கிறார்கள்.

விவசாயம் என்பது லாபத்திற்கானதல்ல மனித குலத்தை காக்கும் அனைத்து ஜீவராசிகளுடன் ஒன்றியது. கடந்த காலத்தில் பண்ணையார்களிடமும், மிராசுதாரர்களிடமும் அடிமைப்பட்டு விவசாயம் செய்தாலும் தனக்கு ஒருபடி நெல் அதிகமாக கிடைக்காது என்று தெரிந்த பின்னும்கூட  வயலில் நெற்பயிரை காயவிடமாட்டான் அந்த விவசாயி. ஆனால் நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று மார்தட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள். கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி தினம்தினம் ஒரு தகவலை, இல்லை ஒரு உத்தரவை போடும் மோடி, தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து இறந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? விவசாயிகள் தற்கொலைகளை விட போயஸ்தோட்டத்து செய்திகளை மட்டுமே நாட்டின் பிரச்சனையாக காட்டுகிறார்களே ஊடகங்கள்? வெறும் வாய் சவடால்களை மட்டுமே அடித்து வருகிறதே ஓட்டுக்கட்சிகள்?

மக்களை போராடாமல் ஒடுக்குவற்கு போலீசும், நீதி மன்றமும். வரி வசூல் செய்வதற்கு அரசு. எத்தனை நாட்களுக்கு தான்  அமைதி காக்க போகிறோம். இதில் இருந்து மீள வழியில்லையா என்று பதைபதைத்து தற்கொலை செய்வதை நிறுத்த வேண்டாமா? இந்த புத்தாண்டு என்பது மற்றவர்கள் சொல்வது போல் கொண்டாட்டம் அல்ல. மாறாக தமிழகத்தில் இறந்துபோன 70 விவசாயிகளின் கொலைகளுக்கு தீர்வு காணவேண்டிய போராட்ட தினம்.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை. இதே உழவன் நக்சல்பாரி தலைமையில் மாபெரும் இந்திய உழவர் புரட்சிக்கு தலைமை தாங்கினான். அடிமை விலங்கை உடைத்தெறிந்தான். அன்று பண்ணைகளின் கொட்டத்தை மட்டுமல்ல, விவசாயிகளை இன்றுவரை கொல்லும் அரசையும் அஞ்சாமல் எதிர்கொண்டு உரிமையை நிலைநாட்டினான். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உழவன் உரிமையை மீட்டெடுத்தான். அந்த மரபு நமக்கு மட்டும் இல்லையா என்ன? நமது விவசாயிகளை காப்பாற்ற இந்த அரசிடம் மனு கொடுத்தது போதும், கெஞ்சியதும் போதும். இந்த கொலைகாரர்களிடமே நீதி கேட்பதை நிறுத்துவோம். மணளை அள்ளி ஆற்றை சீரழித்தவர்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நீதிமன்றங்கள். கழிவு நீரை வெளியேற்றி ஆற்றை சாக்கடையாக மாற்றி விவசாயம் செய்ய முடியாமல் செய்தவர்களும் இவர்களே. கொள்ளையடிப்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நாட்டுக்கு சோறுபோடும் நம் விவசாயிகள் ஏன் சாகவேண்டும்? நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவசரத் தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிசிச்சைக்கு, (உழவர் எழுச்சிக்கு) தலைமை தாங்க காத்திருக்கிறது நக்சல்பாரி.

– புத்தாண்டு தினத்தில்(01-01-2017) விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் வட்டார செயலர் தோழர் கோபிநாத் ஆற்றிய உரை…

தகவல்: விவிமு, பென்னாகரம் வட்டம், தருமபுரி.
தொடர்புக்கு @ 9943312467

இணையுங்கள்:

கிராமங்களில் புயலடித்தால் மரங்கள் சாயாது !

4

சென்னையில வர்தா புயல் வந்து போன வழித்தடம் முழுவதும் மோசமான அழிவை ஏற்படுத்திவிட்டு போய்விட்டது. அழிவோட அளவு ஆயிரம் கோடிக்கு மேல இருக்கலாம்னு கணக்கு சொல்லுது. இதுல வேறோடு சாஞ்ச மரங்க மட்டும் ஒரு லட்சமாம். புயல்ல ஏற்பட்ட மத்த இழப்புக்கள ஒன்னு ரெண்டு வருசத்துல நம்மால சரிபார்க்க முடியும். ஆனா வேரோடு சாஞ்ச மரத்த மீண்டும் உருவாக்க பல பத்து வருசம் கடுமையா முயற்சி செய்தா மட்டும்தான் முடியும். இருந்த கொஞ்சநஞ்ச மரத்தையும் இழந்துட்டு பல அடுக்கு மாடி கட்டிடத்துக்கு மத்தியில மூச்சுத் திணறுது சென்னை மாநகரம்.

vardah-storm
பேயாட்டம் ஆடிட்டு போன புயலால சென்னையின் வீதியெல்லாம் சின்னாபின்னமா இருந்துச்சு.

பேயாட்டம் ஆடிட்டு போன புயலால சென்னையின் வீதியெல்லாம் சின்னாபின்னமா இருந்துச்சு. போர்க்களத்துல போராடி உயிர் விட்ட வீரனப் போல அடியோட சாஞ்சுக் கெடந்த மரங்கள பலரும் செல்ஃபிக்காக மட்டும் பாத்தாங்க. ஆனா சோத்துக்கு வழியில்லாத நெலையில கூட ஒரு விவசாயி வயித்து பசிக்காக ஒரு மரத்த வெட்டி விக்கனுமின்னா அவரு மனசு பொறுக்காது. ஆனா வீட்டு வாசலுல காவக்கார(ன்) மாதிரி இருந்த மரத்த பறி கொடுத்துட்டு ‘மரம்’ மாதிரி நின்ன நகரத்து மனுசங்கள பாக்க கொஞ்ச கோபமாத்தான் இருந்துச்சு.

இயற்கை சீற்றமுன்னா தவிர்க்க முடியாத அழிவு ஏற்படுங்கிறது நமக்கும் தெரியும். ஆனா இயற்கையோட முடிஞ்ச அளவு போராடுறதுதானே மனித இயல்பு. நம்ம வீட்டு மரத்த நாமதானே காப்பாத்தனுங்கற அக்கறை கொஞ்சம் கூட இல்லாம மரம் உயிர் பிழைக்க எந்த உதவியும் செய்யாத நிலைய சென்னையெங்கும் காண முடிஞ்சது. விழுந்த மரத்த அப்புறப்படுத்திட்டு மின்சாரத்துக்கு வழி தேடுற அவசரத்த மரம் விழாம தடுக்கறதுல காமிக்கல.

ஆனா படிக்காத கிராமத்து விவசாயி புயல எதிர் கொள்ளும் விதமே வேற. மழக்காத்து வருதுன்னாலே தன்கூட இருக்குற மரத்தோட உயிரத்தான் மொதல்ல காப்பாத்த நெனப்பான் விவசாயி. தமிழ்நாட்டு கிராமத்து பக்கம் போய் புயலுங்க கிட்ட இருந்து மரங்களை எப்படி காப்பாத்துவாங்கன்னு கேட்டா எல்லாரும் அதை விலாவாரியா சொல்லுவாங்க!

மரத்த அடியோட அசைக்கும் புயல் காத்தின் அழுத்தத்த குறைக்க முதல்ல மரத்தோட இலைகள சுமந்துருக்கும் சின்ன கிளைகள வெட்டி மரத்தோட பாரத்தையும் அசைவையும் குறைப்பாங்க. மரத்தோட தரத்தையும் வயசையும்  பொருத்து பெருங்கெளைய வெட்டுவாங்க. தேவப்பட்டா மரத்த மொட்டையா வெட்டி அதக்கு ஆயுளைக் கொடுத்து உயிர் உண்டாக்குவாங்க. பெரிய இழப்ப சின்ன இழப்பா மாத்துவாங்க.

vardah-storm1
புயல் மழைன்னதும் சாப்பாட்டு பொருளை வாங்கி பத்திரப்படுத்த ஆளாய் பறக்கும் நகரத்து மனித மனம் அண்டையில நிக்கிற மரத்தோட அருமைய மறந்து விட்றாங்க.

இலைதலைகளை சுமக்கும் ஒரு மரத்தை காத்து வேர் வரைக்கும் அசைக்க முடிம். காத்துல ஆடுற மரம், இலைகளும் சிறு கிளைகளும் இருந்தா பலமா ஆடும். கிளைங்க வெட்டப்பட்ட மரத்த வேரோட சாய்க்கிறது கொஞ்சம் சிரமம். கரண்டு கம்பிங்களுக்கு ஓரளவுக்கேணும் சேதம் வராம இருக்க பக்கத்துல உள்ள மரத்த முக்கியமா வெட்டுவாங்க. ஆடு மடுங்களுக்கு தனி எடமிருந்தாலும் செனையாருந்தா, நோயிருந்தா வீட்டுக்குள்ளேயே ஒரு பக்கம் கட்டுவாங்க. உயிர்கள காப்பாத்தி அதன் வழியாதான் வாழ்வாதாரத்துல ஏற்பட இருக்கும் சேதத்தக் குறைச்சுக்குவாங்க.

புயல் முடிஞ்ச பிறகு வீட்டு வாசல்ல விழுந்த மரத்த முடிஞ்ச மட்டும் நகத்தி போட்டு பாதைக்கு வழி செஞ்சுட்டு இருந்தாரு ஒருத்தர். கண்ண குத்தும் ஒயரத்துக்கு நீட்டிட்டு இருந்த கொம்பை ஒடிக்க முயற்சி செஞ்சுட்டு இருந்தார். ஒடிபடாத அந்த கொம்பு கயிறு போல முறுக்கியது. அவரும் விடாம போராடிகிட்டுருந்தார். மற்றொருவர் ரோட்ல முக்கா பாகம் அடைச்சுட்டு விழுந்து கெடந்த மரத்த வாகன போக்குவரத்துக்காக காய் நறுக்கும் கத்திய வச்சு சரி செஞ்சுகிட்டுருந்தார். எல்லா வேலைகளையும் இயந்திரம் செய்துன்னு ஒத்துக்குவோம். ஆனா அவசர தேவைக்கு ஒரு அருவா வீட்டுல வைச்சுகிட்டா ஒன்னும் சட்ட விரோதம் இல்லையே!

புயல் மழைன்னதும் சாப்பாட்டு பொருளை வாங்கி பத்திரப்படுத்த பறக்கும் நகரத்து மனுசங்களுக்கு அண்டையில நிக்கிற மரத்தோட அருமை தெரியலை. கண்ணுக்கு குளிர்ச்சியா தேவைக்கு ஏத்தபடி இருந்த மரத்த வெட்டிப்புட்டு தகட்டுக் கூரையில நிழல் குடை கட்டுற மனப் போக்கு மனுசங்கிட்ட  உருவாகிப் போச்சு. இயற்கை வளங்கள லாப நோக்கத்துக்காக அரசே திட்டமிட்டு அழிக்கும் போது தனி மனிதனை மட்டும் குத்தம் சொல்ல முடியல. இருந்தாலும் இயற்கையை நம் வாழ்வாதாரத்தோடு வச்சுப் பாக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்படுது.

vardah-storm2
இந்த அபாயத்தில் இருந்து நாம் எப்படி மீண்டு வர போகிறோம்.

ஊரெங்கும் பெருத்துப் போன வான் உயர்ந்த கட்டடத்தின் மத்தியில மூச்சு முட்டி திணறும் வேளையில கூட, எந்த ஏசி மிசின் அதிகக் குளுமையைத் தரும் என்ற சிந்தனையை நோக்கி மனுசங்க தள்ளப்பட்றாங்க. ஒரு பக்கம் பணம் சேக்க நகரத்துல வழி இருக்குன்னா அவங்க அறியாமலே செலவு செய்ய கட்டாயப்படுத்துற வழியும் இருக்கு.

புயல்ல சாஞ்ச மரத்துல தூங்குமூஞ்சி போன்ற அன்னிய ரக மரம்தான் அதிகமுன்னும் நம் பாரம்பரிய மரம் குறைவுன்னும் சொல்றாங்க. யோசன பண்ணி பாருங்க. ஆனி வேரு கொண்ட பூவரசமரம், புளியமரம், புங்கமரம், மாமரம், வேப்பமரம், பலாமரம் இதெல்லாம் சாலையோரத்துல இருக்கான்னு பாருங்க. எல்லாத்தையும் வெட்டிட்டு சல்லி வேரு உள்ள செகப்பா பூப்பூக்குர ஏதோ ஒரு மரத்த நட்டுவக்கிது அரசு. வனத்துறை, தாவர ஆராய்ச்சி என தனி இலாகாவே இருக்கும் போது இதெல்லாம் எப்படி நடக்குது.

இந்தப் புயலினால் விழுந்த மரங்களின் பாதிப்பால் நாம் எதிர் கொள்ளவேண்டிய அபாயமான பாதிப்பை பற்றி தி இந்து நாளிதழில் படித்தது. (நன்றி தி இந்து)

ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்ததில் மரங்களின் அளவு குறைந்து காற்றில் ஈரப்பதம் குறையும். அதனால் நீர்நிலைகள் அதிகம் ஆவியாகும். பசுமை பரப்பு குறைவதால் வெப்பம் அதிகரித்து வரும் கோடையில் 2 டிகிரி வரை கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும். இதனால் திறந்தவெளி தார்சாலைகளில் ஒளி ஒலியின் அளவு கூடி இறைச்சல் அதிகமாகும் கண் கூசும். வாகனங்கள் வெளியிடும் புகை, காற்றில் உள்ள தூசு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு பாதிப்பு வராமல் 70 சதவீதம் வரை மரம்தான் ஏற்றுக்கொள்ளும்.

இந்த அபாயத்தில் இருந்து நாம் எப்படி மீண்டு வர போகிறோம். எதிர் வரும் சந்ததியினருக்கு இதே நிலையைதான் வாழ்நாள் பரிசாக கொடுக்கப் போகிறோமா?

– சரசம்மா

சசிகலா – கேலிச்சித்திரம்

1

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா.

sasi admk

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி – படங்கள் !

4

RSYF NDLF Protest (1)“பாசிச மோடியின் 50 – நாள் கெடு முடிந்தது! உழைக்கும் மக்களின் துயரம் தீரவில்லை!” என்ற முழக்கத்தை முன் வைத்து புரட்சிகர அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் 29 டிசம்பர் 2016 அன்று நண்பகல் 12:00 மணி அளவில் சென்னை அண்ணா சாலை ஜெமினி பாலத்தில் இருந்து முழக்கமிட்டபடி பாரத ஸ்டேட் வங்கியின் மத்தியக் கருவூலக் கிளையை முற்றுகையிட்டனர். போராட்டத்தை முன்பே அறிந்துக்கொண்ட SBI நிர்வாகம் வங்கி அலுவலகத்துக்கு விடுமுறை அளித்தது.

தோழர்கள் சாலையில் அமர்ந்து “மோடி கேட்ட 50 நாட்கள் அவகாசம் முடிந்தது ! 400 கோடி கள்ளப்பணத்தை ஒழிக்கப்போவதாக சொல்லி 127 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய கருப்புப்பண ஒழிப்பு நாடகம் முடிவுக்கு வந்தது!” என முழக்கங்களை எழுப்பினர். வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் முழக்கங்களை ஆர்வத்துடன் நின்று கவனித்து சென்றனர்.

பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது,

“கடந்த 8 நவம்பர் 2016 நள்ளிரவுமுதல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி  அறிவித்துவிட்டு ஜப்பானுக்கு சென்று புல்லட் ரயிலில் வலம் வந்தார். பின்னர் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர் எனக் கூறிவிட்டு இந்தியாவிற்கு விமானம் ஏறினார்.

RSYF NDLF Protest (17)இந்தியா வந்ததும் கோவாவில் பொதுக்கூட்ட மேடையிலேயே மக்கள் படும் துன்பத்திற்காக வருந்துகிறேன் என்றும் கருப்புப் பணமுதலைகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி கண்ணீர்விட்டுக் கதறினார். 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள், எல்லா பிரச்சினைகளும் சரியாகும் என்று கூறினார். அதன் பின்னரும் மக்கள் பாதிப்பு தீரவில்லை எனில் நடுரோட்டில் வைத்து என்னை தூக்கிலிடுங்கள் எனக் கூறினார்.

மேலும் இந்த அறிவிப்பு வெளியானது முதல், பா.ஜ.க தலைவர்களும் அவர்களது ஊடக கூஜாக்களும் மக்கள் எங்கும் பாதிக்கப்படவில்லை எனப் புளுகி வந்தனர். பா.ஜ.க-வின் தமிழிசைசெளந்திரராஜன் மக்கள் இதனை ‘சுகமான சுமையாகத்தான் பார்கின்றனர்’ என்றார். இல.கணேசன் ’50- நாள் கழித்து மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் சட்டையைப் பிடித்து கேள்வி கேளுங்கள்’ என்றார்.

இந்த நிலையில் மோடி சொன்ன 50 நாள் கெடு முடிவடைந்த பின்னரும் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை. தங்களின் சொந்தப் பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு பிச்சைக்காரர்கள் போல வீதிகளில் நிற்கின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவோம். வங்கிகளை மீண்டும் மீண்டும் முற்றுகையிடுவோம். மக்கள் வங்கியில் செலுத்திய அனைத்து பணத்தையும் எடுக்கும் வரை போராட்டம் தொடரும்” என பத்திரிக்கையாளர்கள் மூலமாக மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது போலீசு தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றியது. இப்போராட்டத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் தோழர்களை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்தது.

போராட்டத்தின் முதல் அணியினர் கைதான பிறகு அடுத்த அணியாக பல தோழர்கள் அதே இடத்தை மீண்டும் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் திகிலடைந்த போலீசு அவர்களை கைது செய்து சமூக நல கூடத்தில் அடைத்ததோடு மீண்டும் போராட்டக்காரர்கள் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் SBI கருவூல அலுவலகத்தைச் சுற்றி போலீசு வாகனங்களை அரணாக அமைத்து யாரும் இல்லாத கட்டிடத்தை மீண்டும் காவல் காக்க துவங்கியது.

அண்ணா சாலையின் மையத்தில் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் நடக்கும் போது மோடி கும்பல் தூக்கி எறியப்படும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.

நூல் அறிமுகம் : பார்ப்பனியத்தை பதற வைக்கும் இரண்டு நூல்கள்

4

காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் விடியல் பதிப்பகம் இரண்டு நூல்களை வெளியீட்டிருக்கிறது. கவனத்துக்குள்ளாக்கும் இந்த நூல்களின் கருத்து மற்றும் கண்ணோட்டங்களால் இந்துத்துவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுபவர்களின் சிந்தனைக்கு மலர்ச்சியும், இந்துத்துவ வெறியர்களுக்கு எரிச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

1. பெரியார் : இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)

முதாயம், மதம், சாதி, பண்பாடு, தேசியம்… என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுதும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக தேர்ந்தேடுக்கபட்ட இத்தலைப்புகள் காலம், இடம், விவரங்களுடன், அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.

பெரியார் அன்றும் இன்றும்சமுதாயம் என்ற தலைப்பில் 1926- இல் சென்னிமலையில், கண்ணை மூடி சாமி கும்பிடுபர்களை கண்ணை திறந்து பார்க்க வைக்கிறார் பெரியார்.

” காசி, ஜகந்நாதம், பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்கு கோவிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சாமியைத் தொட்டுத் தலையில் தண்ணீர் விட்டு புஷ்பம் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது நாட்டில் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறது. சீரங்கம், சிதம்பரம், பேரூர், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர் முதலிய முக்கிய ஷேத்திரங்களிலுள்ள சாமிகள் – நாடார்கள் கோவிலுக்குப் போய்க் கும்பிட்டால் – அக் கோவில்களும் சாமிகளும் சாவதில்லை. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களில் உள்ள சாமிகள் மாத்திரம் நாடார்கள் கும்பிட்டால் செத்து விடுகின்றன. இப்படி, சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒருவிதமாய் இருப்பானேன்? பிறகு, பார்ப்பனர்க்கு மாத்திரம் அந்தச் சாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்? “

இந்தச் கருத்தை வெறும் கடவுள் மறுப்பு என்று மட்டும் பார்த்து விட முடியுமா? சாமி யோக்கியதை மூலமாக சாதி யேக்கியதையை கவனத்துக்குள்ளாக்கும் இந்தக் கருத்து இன்றும் தேவைப்படுகிறது.

“பார்ப்பனர் தோழர்களுக்கு” என்னும் தலைப்போ, ” பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ் நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் – ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுத்தான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.”

– என்பதன் மூலம் வெறுப்பு அரசியலின் விளைநிலம் ஆரியமே என்பது அம்பலமாகிறது. இப்படி பல தலைப்புகளும் படிப்பவரை இன்னும் விவாதிக்க வைக்கும் உயிரோட்டமாக பெரியார் காலம் கடந்தும் நிற்கிறார். இந்தக் கூட்டத்தில் நிற்கவில்லை என்றால் ரத்தம் கக்கி சாவாய் என்ற ஆரிய காரிய கட்டளை ஏதும் பெரியாரிடம் இல்லை, உன் அறிவிற்கு சிந்தித்து தேவையானவற்றை எடுத்துக்! என்ற பகுத்தறிவின் அழகை உணர நூலில் பயணியுங்கள்.

( 960 பக்ககள், நல்லதாள், அட்டைக் கட்டுடன் இந்நூல் விலை : ரூ. 300.00 )

2. இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும் – அக்-ஷய முகுல், தமிழில்: அறவணன்.

ராமாயணமும், மகாபாரதமும் நம் சமுகத்தின் மீது காலம் தோறும் நிறுவும் அதிகாரத்தை புரிய வைக்கும் விதமாக ஏற்கனவே வெளிவந்த “இந்திய வரலாற்றில் பகவத்கீதை” (The Role of Bagaved Gita in Indian History – Premnath Bazaz 1975) நூலின் வரிசையில், அந்நூலின் கருதுகோள்கள் பலவற்றை வரலாற்று தரவுகளுடன் உறுதிப்படுத்தும் “இந்து இந்தியா உருவாக்கத்தில் கீதா பிரஸ்” நூலையும் கொண்டு வந்திருக்கிறது விடியல் பதிப்பகம். இந்நூலின் ஆங்கிலப் பதிப்பையும் விரைவில் வெளியீட உள்ளதாக விடியல் பதிப்பகம் அறிவித்துள்ளது. இச்சகம் புரிவதற்வதற்கே அச்சகம் நடத்தும் ஆரியப் பார்ப்பனக் கும்பலின் சிலந்தி வலைப்பின்னலை தரவுகளுவுடன் தருகிறது இந்நூல், இதை தமிழில் வழங்கியதற்காக மொழிபெயர்ப்பாளர், விடியல் பதிப்பக குழுவிற்க்கு நன்றி பாராட்டலாம்.

அச்சும் மதமும்இந்நூலின் தேவை பற்றி நாம் அறிய வேண்டியது,

” ஒரு இந்தியனின் மனக் கட்டமைப்பை உருவாக்கவல்ல வலிமையைப் பெற்றிருக்கும் புராண, இதிகாசங்களை, குறிப்பாக பகவத்கீதையை, படிப்பறிவு மறுக்கப்பட்ட , பகுத்தறிவு உருவாக்கப் படாத மக்களிடம் பலவடிவங்களில் திணித்து அவனது சிந்தனையை பாழ்படுத்தி, ‘இந்து இந்தியா’ என்னும் கட்டமைப்பை செயற்கையாக உருவாக்கியதில் கீதா பிரஸ் முதன்மையானது. இந்துத்துவ மார்வாடி கும்பலின் நோக்கம் – அவர்களுக்கான கட்டமைப்பு, அதிகார வர்க்கம், பொருளியல் சுரண்டல் ஆகியவற்றை நிறுவி பராமரிப்பது மற்றும் தொடர்ந்து விரிவுபடுத்துவது என்பதே. இக்கூற்று மிகையல்ல என்பதை கடந்த காலம் முதல் தற்கால மோடி காலம் வரை உள்ள சம்பவங்களைக் கண்காணித்தாலே போதும், உண்மை விளங்கும்.

இந்து இந்தியா முதலில் பண்பாட்டுத் தளங்களில் தான் எதிர்ப்பின்றி நிறுவப்படுகிறது. பின் பொருளியல் துறையில் பரவ ஆங்கிலேயர்களும், அவர்களின் வணிக, அரசியல் நோக்கங்களும் காரணமாகின்றன. பண்பாட்டின் ஒரு கூறான மொழியைப் பொருத்த வரை இந்தி பரவலாக்கப் படுகிறது,

கீதை பதிப்பகத்தின் நிறுவனர் போத்தார் அடிப்படையில் துணி வியாபாரி. ஆனால் அவர் இறுதி வரை இந்தியா முழுவதும் ‘இந்து இந்தியா’ என்னும் நூலை குறுக்கும் நெடுக்குமாக நெய்த பலருடன் இணைந்து செயல்பட்டு நெசவு செய்த துணியே அவரின் ஆகச் சிறந்த வணிகம். ஊடும் பாவுமாக ஓடுபவர்களில் பெரும் பாலோனோர் பார்ப்பன பனியாக்களே. பெரியாரின் தமிழ்நாட்டில் அத்துணி கிழிந்தே உள்ளது. பெரியாரின் சுயமரியாதை கருத்துகள் போத்தாரின் நூலை விடக் கடினமான நூலில் விரவியுள்ளது. RSS, BJP, VHP. என்னும் விசச் சிலந்திகள் தங்களது, வலையைப் பின்ன கடும் முயற்சி மேற்கொள்ளும். திருவள்ளுவரையும் அம்பேத்கரையும் விழுங்கும். பெரியார் மட்டுமே இப்பணியில் நமக்கான ஊசியும் நூலும்.

ஒரு மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியருக்கு உரிய பணியை தனது கடுமையான உழைப்பின் மூலம் செயல்படுத்தியுள்ள ஆசிரியர் அக் ஷய முகுல் இந்தியாவின் ஊடகத்துறையினருக்கான முன் மாதிரி. அவரின் கடின உழைப்பும், அறிவும் பல நூற்றாண்டுகளுக்கு சமூகத்தை விழித்தெழவைக்கும். அவரின் ஒவ்வொரு பதிவும் காலம் பல கடந்தும் சமூகத்தின் விடுதலைக்கு பயன் தரும் அர்த்தம் உடையவை. “( நூலின் பதிப்புரையிலிருந்து)

( 720 பக்கங்கள், நூலின் விலை : ரூ.650.00 )

-துரை. சண்முகம்.

நூல் வெளியீடு:
விடியல் பதிப்பகம், கோயம்பத்தூர்.
பேச : 0422 – 2576772.

நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.