அதிகாலையில் செய்தித்தாள்களின் விநியோக வேலை துவக்கம்!
விடியலைத் தவறவிடும் சோம்பேறி திலகங்கள் அறியாத ஒன்று காலையின் அழகு. இளங்கதிரவனுக்கு முந்தைய பனியொளியில் ஆரம்பிக்கிறது ஒரு நகரத்தின் வாழ்க்கை. இரவுப் பணி முடிந்து வரும் தொழிலாளிகள், ஊழியர்களையும், படப்பிடிப்பு வேலைக்காக அதிகாலை வரும் சினிமா – தொலைக்காட்சி தொழிலாளிகளையும் ஒருங்கே அரவணைக்கும் தேநீர்க் கடைகள். கூடவே சென்னை நகரெங்கும் ஆங்காங்கே மூடப்பட்ட கடைகளின் வாயிலிலே தினசரி கட்டுக்களை அடுக்கி பிரித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள்.
காலையில் நீங்கள் வாசிக்கும் செய்தித் தாட்களை பெற்று பிரித்து கலந்து நடந்து உங்களிடம் சேர்க்கிறார்கள் இவர்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் வசிக்கிறார் முருகானந்தம். வயது 41. இருபது வயதிலேயே தினசரி விநியோக வேலையை செய்து வருகிறார். இந்த இருபதாண்டுகளில் பல முக்கிய செய்திகள், நிகழ்வுகள் எல்லாம் இவர் மூலமாகவே இப்பகுதிக்கு சென்று சேர்கிறது. ஆயினும் அவரது வாழ்வில் என்ன முக்கியம்?
முருகானந்தம் – 20 வருடம் – இரண்டு வேலை – ஒரு சைக்கிள் !
உங்களப் பத்தி சொல்லுங்களேன்?
பேரு E.முருகானாந்தம்; சொந்த ஊர் திருவண்ணாமலை. ரெண்டு புள்ளங்க இருக்காங்க, வீட்டுல வேலைக்கி எதுவும் போகல. 1996-ல இங்க 200ரூவா சம்பளத்துக்கு வந்தேங்க! அப்பால பாரீசுல ஒரு ஸ்டீல் கம்பெனில வேலைக்கு சேந்தேன். இன்னமும் அங்கதான் வேலைக்கு போயிட்டுருக்கேன். 4000 ரூவா சம்பளம் தர்றாங்க.
காலைல 3.30 மணி, அதிகம் போச்சுனா 4 மணிக்கு எந்திரிப்பேன்; பல்லு தொலக்கி மூஞ்சி கைகால் கழுவிட்டு சைக்கிள எடுத்துட்டு நேரா இங்க(வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம்) வந்துருவேன். டீ, காபி குடிக்க மாட்டேங்க, அதுக்கு நேரமும் இருக்காது. புள்ளங்களுக்கு வேற தொந்தரவா இருக்கும்.
அட்வான்சு கட்டுனாத்தான் பேப்பர் தருவாங்க; அதுக்கு 1000-த்தி சொச்சம் கட்டனும். 300 பேப்பருங்க தெனமும் போடுறேன். இதுல தமிழ், இங்கிலீசு பத்திரிக்கைங்களும் இருக்கு. நியூஸ்பேப்பர வாங்கி பிரிச்சு அடுக்கி வெக்கிறதுக்குள்ள 6 மணி ஆயிடும். 300 பேப்பரையும் போட்டு முடிக்க 1½ மணியிலிருந்து 2 மணி நேரம் ஆயிடும். 8 மணிக்கு வீட்டுக்கு வந்தா வூட்டுக்காரம்மா புள்ளங்கள குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து ரெடியா வெச்சுருப்பாங்க. அவுங்கள இழுத்தாந்து ஸ்கூலாண்ட விட்டுட்டு குளிச்சு முடிச்சு சாப்புட்டுட்டு சைக்கிள எடுத்தா பாரிசுக்கு 10 மணிக்குள்ள போயிடுவேன். அங்க வேலைய முடிச்சிட்டு திரும்பி வீட்டுக்கு வர 9, 10 மணியாயிடும்.
நான் மெட்ராஸுக்கு வந்தப்புறம் பேப்பர் போடுறதுக்காக ஒரு சைக்கிள் வாங்குனேன்; 2015 வரைக்கும் சைக்கிள் தான். பாரீசுக்கும் சைக்கிள்ள தான் போயிட்டு வருவேன். இந்த வருசம் தான் சேத்து வெச்ச காசுலேருந்து ஒரு TVS XL வண்டி ஒன்னு வாங்கிருக்கேன்.
கஷ்டந்தாங்க ஆனா ரெண்டு புள்ளங்க இருக்கு, அதுகல படிக்க வெக்கனும்; அப்பால அதுகளுக்குன்னு ஏதோ கொஞ்சமாவது சேத்து வெக்கனும்ல
பேப்பர் போடுற வேலையைப் பத்தி சொல்லுங்களேன்!
அந்த வேலையை என்னண்ணு சொல்றது! காலைல கொசுக்கடி தான் தாங்க முடியாது; ஆனா இப்பல்லாம் பழகிப்போச்சு, அது பேசாம கடிச்சிட்டிருக்கும்; நாங்க வேலயப் பாத்துகிட்டு இருப்போம். ஆரம்ப காலத்துல பேப்பர பிரிக்கிறது செரமமா இருந்துச்சு. பழகுனதுக்கப்புறம் அது ஒரு வேலயாவே தெரியல; மழைக்காலத்துல தான் ரொம்ப செரமமா இருக்கும். கொசுக்கடி ஒரு பக்கம்; அப்பால பேப்பருங்க நனையாம பாத்துக்கனும், இல்லாட்டி பேப்பர் வாங்குறவுங்க திட்டி தீத்துருவாங்க.
சாதாரண நாட்கள்ல பேப்பர வீட்டு வாசல்ல போட்டுருவோம், ஆனா மழைக்காலத்துல நனையாத எடமா பாத்து போடனும், அதனால நேரம் அதிகம் புடிக்கும். எலக்ஷன் அப்புறம் எதாவது முக்கியமான செய்தி வந்துச்சுன்னா செல பேரு வாசல்ல நாங்க எப்ப வர்றோம்னு காத்துக்கினே இருப்பாங்க. லேட்டாச்சுன்னா ஒரே அர்ச்சன தான்.
கலெக்ஷனுக்கு எப்ப போவீங்க?
அதாங்க ரொம்ப கஷ்டமான வேலயே! வார நாள் அன்னக்கி போனீங்கனா கோவப்படுவாங்க. வாரக் கடைசியில போனீங்கன்னா கதவத் தொறக்க மாட்டாங்க! சில பேரு அப்பறமா வா-ன்னு சொல்லுவாங்க; சில பேரு வீட்டுல இருந்துகிட்டே ஆள் இல்லன்னு சொல்லச் சொல்லுவாங்க. இப்படியா கலெக்ஷன வாங்குறதுக்குள்ள மாசக்கடைசியே ஆயிடும். ஆனா நாங்க இங்க காசு கட்டாம பேப்பர் வாங்கவே முடியாது. இன்னும் சில பேர் வீட்ட காலி பண்ணுறப்ப சொல்லாம கொள்ளாம போயிடுவாங்க! பேப்பர வேஸ்டா போட்டுட்டே இருப்போம்; கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியவரும்.
சரி இந்த பேப்பர் போடுறதுனால இந்த இருபது வருசத்துல என்னதான் சம்பாதிச்சிருக்கீங்க?
அதாங்க மாசம் மூவாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறேன். வீட்டு செலவு அப்பால புள்ளங்களுக்கு துணி மணி அப்படீன்னு கொஞ்சம் வாங்கிப்போட ஒதவுது. ஆனா இதுல சம்பாதிச்சதோட விட்டதுதான் ரொம்ப அதிகம்
புரியலயே??
சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்கெல்லாம் போறதே இல்லங்க. நல்லது கெட்டது எதுன்னாலும் வீட்டுல தான் செல நேரம் தனியாவே போயிட்டு வருவாங்க. சொந்த ஊருக்கே எப்பயாவது தான் போறோம். வாரம் முழுசா வேலை, வாரக்கடைசியில கலெக்ஷன் அவ்ளோ தான் வாழ்க்கையே. இதுல நிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு. ஆனா இத விட்டாலும் வேற வழியில்ல. வேல செஞ்சா காசு வருது; அதனால அப்புடியே வண்டி ஓடிக்கிட்டு இருக்கு……
உங்களுக்கு புடிச்ச நியூஸ்பேப்பர் எது?
அப்படியெல்லாம் எதுவுமே இல்லங்க! எல்லாமே ஒரே மாதிரி தான் நியூஸ் போடுறாங்க! அவுங்க எந்த கட்சிய ஆதரிக்கிறாங்களோ அதப்பத்தி தான் நெறயா நியூஸ் இருக்கும்; வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லங்க!
சுந்தரம்
63 வயதான சுந்தரம் இந்தப் பகுதியில் மொத்தமாக வாங்கி முருகானந்தம் போன்றவர்களிடம் சில்லறை விலைக்குக் கொடுக்கிறார். தினமும் மாங்காடு பகுதியிலிருந்து வந்து விடுகிறார். 14 வயதில் மாதம் 13 ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தவர் இன்றுவரை தொடர்ந்து செய்கிறார். அவரிடம் பேசுகையில்…
“நாளேடுகள் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்குது. இங்கே அனைத்து வகையான செய்தித்தாள்களும் கிடைக்கிறது. வடமொழி நாளேடுகள் கூட உண்டு. வார இதழ்கள் விற்பனை தான் கொஞ்சம் மந்தமாகிவிட்டது. ஏனென்றால் ஆன்லைனில் நிறைய பேர் படிக்கின்றார்கள். எந்த அரசியல் கட்சி ஆளுங்கட்சியாக உள்ளதோ அவர்களுக்கு ஆதரவாகத்தான் எல்லா செய்திகளுமே வரும். அதே போல ஏரியாவுக்குத் தகுந்தாற் போல நாளேடுகள் வினியோகிக்கப்படுகின்றன. முன்னாடியெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரா எதாவது நியூஸ் வந்துச்சுன்னா, இங்க விடியக்காலையிலே வந்து கூடிடுவாங்க, நியூஸ்பேப்பர் லாரி வந்தவுடனே இறக்கிப்போட்டு எரிச்சுடுவாங்க!
நவபாரத் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பரத் அவருடைய தம்பி இருவரும் கடந்த 6 மாதங்களாக பேப்பர் போடுகின்றனர். இவர்களுடைய பெரியம்மா மகன் பிரவீன் ராஜ் இவர்கள் இருவரையும் இந்த வேலையில் சேர்த்து விட்டுள்ளார். பிரவீன் ராஜ் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் B.com படிக்கின்றார். இவருக்கு மாதம் 1650 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. பரத்துக்கு மாதத்திற்கு ரூ.1300-ம் இவருடைய தம்பிக்கு ரூ.1000-ம் கிடைக்கின்றது. பிரவீன் ராஜ் தன்னுடைய போக்குவரத்து மற்றும் இதர சிறு செலவுகளுக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு மீதத்தை குடும்பத்தில் கொடுத்து விடுகின்றார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக பேப்பர் போட்டு வருகிறார்.
13 year old Sobuj works in a textile factory in conditions of extreme heat and noise. For this he earns about 1200 Taka a month (£10.00 GBP).
இந்தியாவின் கல்விக் கொள்கையை மாற்றி அமைப்பதற்காக, மோடி அரசால் அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவைத் தயாரித்து, அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சில மாதங்களுக்கு முன்பு அளித்தது. இந்த வரைவை இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடாத மைய அரசு, “தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆவணத்தை மட்டும் வெளியிட்டு, அதன் மீது ஆகஸ்டு 16-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என அறிவித்திருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன்
தேசியக் கல்விக் கொள்கையை மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மருந்துக்குக்கூட கல்வியாளர் ஒருவரும் இடம் பெறவில்லை. ஐந்து பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் குழுவின் தலைவரான டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர். குழுவின் உறுப்பினர்களுள் நான்கு பேர் அரசுத்துறைச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்கள். எஞ்சியஒருவர், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்தவரும், கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) தலைவராக இருந்து, பாடத் திட்டத்தைக் காவிமயமாக்கியதில் முக்கியப் பங்காற்றியவருமான ஜெ.எஸ்.ராஜ்புத்.
இதுமட்டுமின்றி, இக்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் கமுக்கமாகவே நடந்து வந்தன. 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வலைத்தளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுக் கல்விக் கொள்கைக்கான வரைவு தயாரிக்கப்பட்டதாக இந்தக் குழு கூறினாலும், எங்கே, எப்போது கருத்தறியும் கூட்டங்களை நடத்தினார்கள் என்பது பெரும்பாலான கல்வியாளர்களுக்குத் தெரியவில்லை.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் உறுப்பினரும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவருமான ஜெ.எஸ்.ராஜ்புத்.
அரசு அதிகாரிகளையும் ஆர்.எஸ்.எஸ்.காரனையும் கொண்டு மட்டுமே இந்தக் குழு அமைக்கப்பட்டதும், அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் இரகசியமாகவே நடந்து முடிந்திருப்பதும் தற்செயலானது அல்ல. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கும், தேவைக்கும் ஏற்றவாறு இந்தியாவின் கல்விக் கொள்கையை மாற்றியமைப்பது என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே, கல்வியாளர்களுக்கும் கல்வியில் தனியாரின் கொள்ளை, ஆதிக்கத்தை ஒழிக்கக் கோருபவர்களுக்கும் இக்குழுவில் இடமளிக்க மறுத்திருக்கிறது, மோடி அரசு.
எட்டாவதுவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிப்பது என்றிருப்பதை, தரம் என்ற பெயரில் இனி ஐந்தாவதுவரை மட்டும்தான் அனைவருக்கும் தேர்ச்சி எனச் சுருக்கியிருக்கும் புதிய கல்விக் கொள்கை, அதன்பின் தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களின் பள்ளிப் படிப்புக்கு எட்டாவதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவர்களைத் திறன் மேம்பாட்டுக் கல்விக்கு அனுப்ப உள்ளதாகக் குறிப்பிடுகிறது. படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் மீது புதிய கல்விக் கொள்கை எத்தகைய “அக்கறையைக் கொண்டிருக்கிறது என்பதை இதுவொன்றே எடுத்துக்காட்டி விடுகிறது.
படிப்புத்திறன் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், அதற்குக் காரணம் மேலே சொல்லப்பட்ட விதியோ, மாணவர்களோ அல்ல. அரைகுறை உண்மைகளை வைத்துக் கொண்டு திரித்துப் புரட்டுவது பார்ப்பனக் கும்பலுக்குக் கைவந்த கலை என்பதால், மாணவர்களின் மீதும்தேர்ச்சி விதியின் மீதும் பழியைப் போட்டுவிட்டு, இப்பிரச்சினையிலிருந்து அரசினைத் தப்பவைக்க முயலுகிறது.
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை, ஒவ்வொரு புலத்துக்கும் ஏற்ற சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது, பள்ளிக்கூடங்கள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், திண்ணைப் பள்ளிகளாகவோ, மரத்தடிப் பள்ளிகளாகவோ இருப்பது மற்றும் ஆசிரியர்களின் அக்கறையின்மை இவைதான் பள்ளிக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்திருப்பதற்கு முக்கிய காரணங்கள். இவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட அரசு, அதிலிருந்து கழண்டு கொள்ளும் தீய நோக்கில்தான் தேர்ச்சி விதியை மாற்றியமைக்கும் முடிவை அறிவித்திருக்கிறது.
மும்பயிலுள்ள வெர்ஸோவா புறநகர்ப் பகுதியில் உதிரித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் நடைபாதைப் பள்ளி
கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள், நகர்ப்புறங்களில் உதிரித் தொழிலாளர் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் ஆகியோரைத்தான் இந்த விதி கடுமை
யாகப் பாதிக்கும். சிறப்புக் கவனம்கொடுத்துக் கைதூக்கிவிடவேண்டிய இந்த வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை நைச்சியமான வழியில் பள்ளிக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறது, மோடி அரசு.
பார்ப்பனர் அல்லாத சாதிகளுக்குக் கல்வியறிவு தேவையில்லை என மனுதர்மம் கூறியது என்றால், அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கங்களுக்கு ஆரம்பக் கல்விக்கு அப்பால் தேவையில்லை என்கிறது, புதிய கல்விக்கொள்கை.
ஐந்தாவது வகுப்பிற்குமேல் தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறும் இக்கல்விக் கொள்கை, அந்த மாணவர்களின் உடல் தகுதியையும் பார்த்துப் பயிற்சி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிடுவதாகச் சுட்டிக் காட்டுகிறார், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த அருணன். மூளை உழைப்புக்கு பார்ப்பனர்கள், உடல் உழைப்புக்கு கீழ்சாதியினர் என்ற சனாதன தர்மத்தைத்தான், புதிய கல்விக் கொள்கை சுற்றிவளைத்துக் கொண்டு வருகிறது. மற்ற சாதியினருக்குக் கல்விபெறும் உரிமையை மறுத்ததன் மூலம் பார்ப்பனர்கள் தம்மை அறிவுஜீவிகளாகக் காட்டிக்கொண்ட அயோக்கியத்தனத்தைத்தான் புதிய கல்விக்கொள்கை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர எத்தனிக்கிறது.
தரம் என்ற பெயரில் ஏழை மாணவர்களின் கல்வி யுரிமை பறிக்கப்படும் அபாயம் மட்டுமல்ல, மாநிலப் பாடத் திட்டம், மாநிலக் கல்வி வாரியங்களை ஒப்புக்குச் சப்பாணியாக மாற்றி, கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து தேசியப் பட்டியலுக்குக் கடத்திப் போவது, தாய்மொழிவழிக் கல்வி, தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமை ஆகியவற்றைக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்துவது போன்றவற்றை இப்புதிய கல்விக் கொள்கை தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது.
ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி என்ற ஆலோசனை அடித்தட்டு குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களைத்தான் கடுமையாகப் பாதிக்கும். சிறப்புக் கவனம் கொடுத்துக் கைதூக்கிவிட வேண்டிய இந்த வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை நைச்சியமான வழியில் பள்ளிக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறது, மோடி அரசு.
மாநில பாடத் திட்டத்தை ஒழித்துக்கட்ட இரண்டு வழிகளைக் கையாளுகிறது, இப்புதிய கல்விக் கொள்கை. ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான திட்டத்தை (syllabus) இனி மைய அரசு தயாரித்து அளிக்கும் எனக் கூறும் புதிய கல்விக் கொள்கை, சமூக அறிவியலைப் பொருத்தவரை பாதிப்பாதி என்ற விகிதத்தில் மைய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளப் பரிந்துரைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இனி மாநிலக் கல்வி வாரியங் களுக்கும் ஜெராக்ஸ் மிஷினுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை.
வேத கணிதத்தையும், வேதத்தில் உரைக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிவியல் கருத்துக்களையும் நாடு தழுவியஅளவில் புகுத்துவதற்குத்தான் இந்த ஏற்பாடு. இதன் பிற்பாடு பாபா ராம்தேவும், ரவிசங்கர்ஜியும் அறிவியலையும் கணிதத்தையும் போதிப்பதற்கு நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சமூக அறிவியலில் பாதிப்பாதி என்பது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் (அவர்களின் மொழியில் மாநிலங்களின்) வரலாறு மற்றும் பண்பாட்டை மறைக்கவோ, திரிக்கவோ உதவும். இதனை எதிர்த்து நடந்த தொலைக்காட்சி விவாதமொன்றில், “நீங்கள் மொழிப்போர் தியாகிகளைப் பற்றிப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதை அனுமதிக்க முடியாது எனப் பச்சையாகவே தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டம் மீது வெறுப்பை உமிழ்ந்தார், பா.ஜ.க.பிரமுகர்.
பாடத் திட்டங்களுக்கு அப்பால், இனி மாநிலக் கல்வி இயக்குநர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., போன்று இந்தியக் கல்விப்பணி (ஐ.ஈ.எஸ். ) அதிகாரிகளைத்தான் நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது, புதிய கல்விக் கொள்கை. இந்துமயமாக்கப்பட்ட சமூக அறிவியலையும், கணிதம், அறிவியல் பாடங்களில் புகுத்தப் படும் வேதக் கருத்துக்களையும் மாநில அரசுகள் பிசகாமல் போதிக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. மாநில ஆளுநர் போல இந்தக் கல்வி அதிகாரியும் மைய அரசின் ஏஜெண்டாகச் செயல்படுவார்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திருச்சியில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களால் நடத்திப்பட்ட கண்டன பேரணி.
இப்படி நேரடியாகவே மாநிலப் பாடத்திட்டத்திற்கு வேட்டு வைக்கும் புதிய கல்விக் கொள்கை, அதன் மீது இன்னொரு அடியைக் கொடுப்பதற்காக நுழைவுத் தேர்வு என்ற ஆயுதத்தையும் கையில் எடுத்திருக்கிறது. மருத்துவம், பொறியியில் படிப்புகளுக்கு மட்டுமின்றி, அனைத்து உயர்கல்விக்கும் தேசிய போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொது பாடத்திட்டமுறை சி.பி.எஸ்.இ. அளவிற்குத் தரமானதாக இல்லை என ஏற்கெனவே வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் பார்ப்பன கும்பலுக்கும், கல்வி நிபுணர்களுக்கும் இது அவல் கிடைத்தது போலாகிவிட்டது.
மாநில பாடத்திட்டம் எந்த விதத்தில் தரமற்றதாக உள்ளது எனக் கேட்டால், “ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் கல்விக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுகளிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் கலந்து கொள்வதும், வெற்றி பெறுவதும் குறைவாகஇருப்பதைக் காரணமாகக் காட்டுகிறார்கள், இவர்கள்.
தமிழக மாணவர்களின் பிரச்சினையை விட்டுவிட்டு, தேசியப் பிரச்சினைக்கு வருவோம். சர்வதேச அளவில் நமது நாட்டின் உயர்கல்வி மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தரமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தும், தகுதி, போட்டித் தேர்வுகளை எழுதி ஐ.ஐ.டி.க்களில் படித்து முடித்த பிறகும், நமது நாட்டில் புதிய ஆராய்ச்சிகளோ, கண்டுபிடிப்புகளோ வருவதில்லை. இந்த அவல நிலைமைக்குக் காரணம் கேட்டால், தேசியவாதிகளின் பதில் என்னவாக இருக்கும்? அமெரிக்க பாடத் திட்டத்தை இந்தியாவில் புகுத்த வேண்டுமெனக் கூறுவதற்கும் கூசமாட்டார்கள்.
கல்வி தனியார்மயமாகியுள்ள காலச்சூழலில், மாநில பாடத் திட்டத்தைவிட, மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் தரமானது, மெட்ரிகுலேஷனைவிட சி.பி.எஸ்.இ., தரமானது, சி.பி.எஸ்.இ.- ஊட்டி கான்வெண்டுகளில் போதிக்கப்படும் இண்டர்நேஷனல் பாடத் திட்டம் தரமானது என்ற ஓப்பீடுகளையெல்லாம் தோலுரித்துப் பார்த்தால், அதற்குள் கல்வி வியாபாரிகளின் நலனும், பார்ப்பன- கும்பலின் நலனும்தான் மறைந்திருக்கும். சமச்சீர் கல்வியைவிட, மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் தரமானது எனத் தமிழகக் கல்வி வியாபாரிகளும் சோ போன்ற யோக்கியர்களும் கூப்பாடுபோட்டு அதனை எதிர்த்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள தேசிய நுழைவுத் தேர்வுகள் ஆகட்டும், அல்லது உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஆகட்டும், அவை அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படியும்; ஆகப் பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பல்வேறு தேசிய இனங்களும், மொழிகளும், பாடத்திட்டங்களும் நடைமுறையில் உள்ள நமது நாட்டில், இந்த விதத்தில் தேசிய போட்டித் தேர்வுகளை நடத்துவது சமத்துவத்துக்கு எதிரானது. ஒருவன் இரண்டு கால்களோடும் ஓடுவானாம், அவனோடு போட்டி போடுபவன் ஒரு காலைக் கட்டிக் கொண்டு ஓட வேண்டுமாம் என்ற அயோக்கியத்தனத்திற்கு ஒப்பானது, இது.
இந்த அசமத்துவத்தை, அயோக்கியத்தனமான ஆட்டத்தை எதிர்க்காமல், நாடெங்கும் ஒரே பாடத் திட்டத்திற்கு மாறுவதுதான் புத்திசாலித்தனம் எனக் கூறுவது காரியவாதம். கல்வித் திட்டத்தைக் காரியவாதிகள் தீர்மானிப்பதைவிட அபாயகரமானது வேறொன்றும் இருக்க முடியாது. உடல் அளவில் இந்தியர்களாகவும், மனதளவில் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்குவதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மெக்காலே கல்வித் திட்டத்தைப் புகுத்தினார்கள். அதுபோல, இந்து, இந்தி, இந்தியா என்ற பார்ப்பன தேசியவாதத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்துவதற்காகவே நாடெங்கும் ஒரே பாடத் திட்டம்என மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்தி வருகிறார்கள்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தேசிய அளவில் தகுதித் தேர்வுகள் நடத்துவதன் மூலம் உயர் கல்வியில் தரமான மாணவர்கள் சேருவதை உத்தரவாதப்படுத்த முடியும் எனப் பார்ப்பனக் கும்பலும், நிபுணர்களும் ஒரு கலர் சினிமாவை நீண்டகாலமாகவே ஓட்டி வருகிறார்கள். இதுவொரு மோசடி என்பதை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ள வியாபம் ஊழல் நிரூபித்திருக்கிறது. கல்வி முதலாளிகளோடு, தனிப்பயிற்சி நிறுவன முதலாளிகளும் சேர்ந்து கொள்ளையடிப்பதற்குத்தான் போட்டித் தேர்வுகள் பயன்படுமேயொழிய, அது உயர்கல்வியில் நடக்கும் கொள்ளை, மோசடி, எஸ்.ஆர்.எம். மதன் போன்ற ஏஜெண்டுகளின் வலைப்பின்னல் முதலியவற்றை எந்த விதத்திலும் ஒழித்துக் கட்டிவிடாது.
மருத்துவக் கல்வி தேசியத் தகுதி மற்றும் போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
உயர் கல்வியைப் பொருத்தவரை, அதற்கான பாடத் திட்டத்தைக் கல்வியாளர்கள் தீர்மானிக்கக் கூடாது, அதனை சந்தையின் கையில், அதாவது கல்வி வியாபாரிகளின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் எனப் பத்தாண்டுகளுக்கு முன்பு அம்பானி கமிட்டி மைய அரசிடம் பரிந்துரைத்தது. மோடியின் புதிய கல்விக்கொள்கை அதனை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர்கிறது.
இதற்கேற்ப பாடத்திட்டத்தில் மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக்கழகக் கட்டுமானங்களிலும் மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக, பல்கலைக்கழக ஆட்சிமன்றங்களில், மாணவர்களின் பிரதிநிதிகள் இருக்கக் கூடாது. அம்மன்றங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக்குவதோடு, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுப்பது என்ற பெயரில் அவர்கள் அமைப்பாகத் திரளும் உரிமையைப் பறிப்பது, ஆசிரியர்கள் ஆளும் கட்சியின் கைக்கூலிகளாக இருப்பதை உத்தரவாதப்படுத்துவது, கல்லூரிகளுக்குத் தன்னாட்சி வழங்குவது என்ற பெயரில் அவை குறைந்த கட்டணத்தில் கல்வி அளிப்பதைத் தடுத்து, அவற்றை வணிகமயமாக்குவது, கல்லூரிகள் தமக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு கார்ப்பரேட்டுகளைஅண்டிப் பிழைப்பது என்றவாறு உயர் கல்விச் சூழலை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
உயர்கல்விக் கூடங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை. மேலும், தேவையான அளவிற்கு உள்கட்டுமான வசதிகள் இல்லாமல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இயங்கி வருவது. இப்பிரச்சினைகளில் இனிமேல் அரசோ, நீதிமன்றங்களோ தலையிடக்கூடாது எனப் பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கை, இதற்கென தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கிறது.
காப்பீடு, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைத் துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு, அதில் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதற்கு அனுமதி கொடுத்தபிறகு, அதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒழுங்குமுறை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள் அச்சேவைகளைப் பெறும் பொதுமக்களுக்கு நியாயமாக நடந்து கொள்ளாமல், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் சாதகமாக, அவர்கள் திணிக்கும் கட்டணக் கொள்ளையை உத்தரவாதப்படுத்தும் ஏஜெண்டுகளாகத்தான் நடந்து வருகின்றன. உயர் கல்வியிலும் அதுபோன்ற முதலாளிகளின் எடுபிடிகளை நீதிபதிகளாக்க முனைகிறது, புதிய கல்விக்கொள்கை.
பார்ப்பனியம், அதன் பிறப்புதொட்டே, வர்க்க ஆட்சியை, ஒடுக்குமுறையை உத்தரவாதப்படுத்துவதை, பாதுகாப்பதை, நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது. இந்து மதவெறி மோடி அரசு தயாரித்துள்ள புதிய கல்விக்கொள்கையும் இதிலிருந்து வேறுபடவில்லை. ஒருபுறம் கல்வியைத் தேசியம் என்ற பெயரில் காவிமயமாக்கி, இன்னொருபுறம் அத்துறையில் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை, ஆதிக்கத்தை உத்தரவாதப்படுத்துகிறது. பார்ப்பனியமும், தனியார்மயமும் இணைந்த ஒட்டுரகம்தான் இந்தப் புதிய கல்விக் கொள்கை.
அனைவருக்கும் இலவசக்கல்வி, தாய்மொழிக்கல்வி, கல்வித்துறையில் அரசின் பொறுப்பையும், கடமையையும் உறுதிப்படுத்துவது என்ற உரிமைகளெல்லாம் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகப் பெறப்பட்டவை. இவை அனைத்தையும் தரம், தேசியம் என்ற பெயரில் ஒழித்துக்கட்டுவதோடு, காசு இருப்பவனுக்குத்தான் உயர்கல்வி, அடித்தட்டு மக்களுக்குக் குலத்தொழில் என்ற பார்ப்பன அநீதியை, மறுகாலனியாதிக்கச் சூழலுக்கு ஏற்றவாறு திணிக்க முயலுகிறது, இப்புதியகல்விக் கொள்கை.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை சார்பாக 28-08-16 அன்று “காஷ்மீர்: பறிக்கப்படும் உரிமைகளும் மறைக்கப்படும் வரலாறும்” பற்றி அரங்கக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.முரளி சிறப்புரையாற்றினார்.
“காஷ்மீர் பிரச்சினையைப் பற்றிப் பேசுவது சிக்கலாகி வருகிறது. காங்கிரஸ் எம்.பி.யும் நடிகையுமான ரம்யா பாகிஸ்தானைப் பற்றி பேசியதற்காக அவர் மீது தேச துரோக வழக்குப் போடச் சொல்லி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சர்வதேச பொது மன்னிப்புக் கழகத்தினைக் கண்டித்து கர்னாடகாவில் சங் பரிவார் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜே.என்.யு.பிரச்சினை, எழுத்தாளர் அருந்ததிராய், பேராசிரியர் ஜிலானி போன்றவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. மத்தியில் எந்த அரசு வந்தாலும் காஷ்மீர் விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள்.
புர்கான் வானி கொல்லப்படுவதற்கு முன்பு நான் காஷ்மீர் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. சிறீநகர் முஸ்லீம்கள் நாங்கள் வறுமையில் இல்லை என்கிறார்கள். கடந்த 50 நாட்களாக ரூ 1000 கோடிக்கு ஆப்பிள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. குங்குமப் பூ விளைகிறது. காஷ்மீர் குடிமக்கள் தவிர வேறு யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது. அமைதியாக வாழ்வதற்கான சூழல் அங்கு இருந்தும் அவர்களை வாழவிடவில்லை இந்தியாவும் பாகிஸ்தானும்.
காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்” என்று பாடிக்காட்டுகிறார். எம்.ஜி.ஆர்.சினிமாப் பாட்டைப் பாடி கூத்தடிக்கிறார்கள் நாடாளுமன்றத்தில்.
ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானி என்ற 22 வயது இளைஞன் இந்திய ராணுவத்தால் என்கவுண்டரில் கொல்லப்பட்டான். வானி யாரையும் கொல்லவில்லை. அவன் மீது வழக்கு எதுவும் இல்லை. ஆனால் கொல்லப்பட்டான். ஆங்கில தொலைக் காட்சி டைம்ஸ் நவ் கோஸ்வாமி, ”புர்கான் வானி கொல்லப்பட்டது இந்தியாவிற்கு மாபெரும் வெற்றி” என்று சொல்லுகிறார். பெல்லட் குண்டு தாக்குதல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாதது. காஷ்மீரில் போராடும் மக்களின் முகம் இப்படி சிதைக்கப் பட்டுள்ளது.(புதிய ஜனநாயகம் ஆகஸ்டு மாத இதழின் பின் அட்டையைக் காட்டுகிறார்) சிதைக்கப்பட்ட முகங்கள் தான் காஷ்மீரிகளின் அடையாளமாகி விட்டது. அமைதியான, உலகின் அழகான ஒரு பிரதேசத்தின் அழகும் அமைதியும் சீர்குலைக்கப்பட்டுவிட்டது. காஷ்மீர் மீதான போரில் இதுவரை 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சில லட்சம் பேரைக் காணவில்லை. அடிப்படையில் இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். இந்திய அரசு சாத்வீகமான அரசு அல்ல. ஒரு பயங்கரவாத அரசு. அதன் கோர முகம் காஷ்மீரில் தெரிகிறது.
சில வரலாற்றுக் குறிப்புகள்:-
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.முரளி
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர், ஹைதராபாத், ஜுனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையவில்லை. ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சியும், காஷ்மீரில் மன்னர் ஹரி சிங் ஆட்சியும், ஜுனாகத்தில் இஸ்லாமிய மன்னரின் ஆட்சியும் இருந்தது. காஷ்மீரில் இந்து மன்னன், ஆனால் 80% மக்கள் முஸ்லீம்கள். ஜுனாகத்தில் முஸ்லீம் மன்னராட்சி ஆனால் 90% மக்கள் இந்துக்கள். ஹைதராபாத்தில் 90% இசுலாமியர்கள் என்ற நிலை இருந்தது. ஜுனாகத் இந்தியாவுடன் இணைந்துகொண்டது. நிஜாம் ஆட்சியை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். நேரு ராணுவத்தை வைத்து ஆயுதப் புரட்சியை ஒடுக்கினார். நிஜாமுக்கு சிறப்புச் சலுகைகள் கொடுத்தும் சில அதிகாரங்கள் சொத்துக்கள் கொடுத்தும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. நேருவும் படேலும் காஷ்மீர் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாமென்று உறுதிமொழி கொடுத்து, அரசியல் சட்டம் 370 ஆவது பிரிவின்படி சிறப்புச் சலுகைகள் வழங்கி தக்கவைத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் அளித்த உறுதிமொழி கடந்த 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. அதை நிறைவேற்றக் கோரி மக்கள் 3 தலைமுறையாகப் போராடி வருகிறார்கள்.
காஷ்மீருக்காக சீனாவும் பாகிஸ்தானும் போர் தொடுத்து சில பகுதிகளைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளன. தேசிய மாநாடு கட்சி, ஹுரியத் மாநாடு, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஹிஸ்புல் முஜாகிதின் போன்ற பல அமைப்புகள் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி பயங்கரவாத செயல்களை நடத்திவருகிறது. அதைக் காரணம் காட்டி இந்திய அரசு காஷ்மீரில் நிரந்தரமாக 5 லட்சம் துருப்புகளை நிறுத்திவைத்துள்ளது. காஷ்மீரத்துச் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட ஷேக் அப்துல்லா 1931-ல் இந்திய அரசுக்கு எதிராக நடத்திய பேரணி போராட்டத்தின் போது இந்திய ரணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். ஷேக் அப்துல்லா தமிழ் நாட்டில் ஊட்டியில் 12 ஆண்டுகள் நேருவால் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
1947-ல் காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு உறுதியளித்தபடி மக்களின் விருப்பத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்திருந்தால் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அதைச் செய்வதற்கு இந்திய ஆட்சியாளர்களுக்கு விருப்பமில்லை. காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு மக்கள் பிரிவினர் இருக்கின்றனர். பாகிஸ்தானால் ஊட்டிவளர்க்கப்படும் தீவிரவாதக் குழுக்கள் உள்ளனர். மத அடிப்படைவாதிகள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் தங்களுடைய தலையெழுத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். மற்றவர்கள் காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதைக் காரணம் காட்டி இந்தியா ராணுவ நிலைகளைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களைக் கட்டவிழ்த்துவிடுகிறது. இந்திய அரசு பயங்கரவாதம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஐ.நா., அமெரிக்கா, சீனா போன்றவை காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 50 நாட்களாக காஷ்மீர் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் மக்கள் போராட்டம் ஓயவில்லை. மிகப் பெரிய மனித உரிமை மீறல் அங்கே நடந்துகொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?” இவ்வறு பேராசிரியர் இரா.முரளி பேசினார்.
மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோனி ராஜ்
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோனி ராஜ் பேசியதாவது, “காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமில்லை. காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்தியா ஒரு நாடு அல்ல. பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடம். பலாத்காரமாக ஒன்று படுத்தப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லி மக்களை ஏய்க்கிறது. தேசிய இனங்களின் தனித்த அடையளங்களை ஒழித்து ஒரே அடையளத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது மோடி அரசு.
காஷ்மீர், பாகிஸ்தான் பற்றிய எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.-மோடி அரசு தயாராக இல்லை. விமர்சிப்பவர்களை தேசதுரோகிகள் என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுவதோடு சங்கப் பரிவாரங்களை ஏவி படுகொலை செய்கிறது.
காஷ்மீரில் 95% மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் கூறுகிறார். ஆனால் காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் 5000 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஆனால் புர்கான் வானி கொல்லப்பட்ட போது 2 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இது எதைக் காட்டுகிறது? மக்கள் விரும்பாமலா வருகிறார்கள்? இந்திய அரசு காஷ்மீரில் தேர்தல் நடத்தியபோது 5% வாக்குகள் மட்டுமே பதிவாகியது. 50 நாட்கள் ஊரடங்கு எதனால்.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், ஏராளமான இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். கற்கள்தான் அவர்களது ஆயுதம். பெல்லட் குண்டுகள், கொத்துக் குண்டுகள், மிளகாய்ப் பொடி குண்டுகள், பீரங்கிகளுக்கு அவர்கள் பயப்படவில்லை. காஷ்மீரில் இந்திய ராணுவம் தோல்வியடைந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறைகூவி அழைத்தாலும் மக்கள் வரத் தயாரில்லை. அவர்களது ஒரே கோரிக்கை அன்னியர்கள் எல்லோரும் வெளியேறுங்கள் என்பது தான். ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதம் என்று சொல்லி இந்தியா ஆக்கிரமிப்பைக் கைவிட மறுக்கிறது.
சங்கப் பரிவாரங்கள் இந்து மத வெறி, இந்து தேசிய வெறியூட்டப்பட்டு காஷ்மீர் மக்களின் கோரிக்கையை ஆதரிக்கும் எவரையும் தேச துரோகிகள் என்று பறை சாற்றுகின்றனர். இந்தியாவின் தலைப் பகுதியில் காஷ்மீர் இருக்கிறது. வால் பகுதியில் தமிழ் நாடு இருக்கிறது. காஷ்மீரின் நிலைமை தமிழ் நாட்டிற்கு வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
வேத, யோகா, சமஸ்கிருத வாரியம் அமைத்து, புதிய கல்விக் கொள்கை-2016 உருவாக்கி நாடு முழுவதையும் காவி மயமாக்கத் துடிக்கிறது மோடி அரசு. தலித் மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லை.ஆனால் பயங்கர அச்சுறுத்தல் இருக்கிறது. தமிழ் நாட்டுக்குள்ளும் வேகமாக புராண இதிகாச மூட நம்பிக்கைக் குப்பைகள் கடத்தப்படுகின்றன. தமிழ் மொழி, இனம், பண்பாடு, இலக்கிய வளம், தொன்மை இவற்றின் பெயரைச் சொல்லிக் கொண்டே, செத்த மொழியாகிய சமஸ்கிருதத்திற்கு அடிமைப்படுத்தும் சதி நடந்து வருகிறது. இது நாடு முழுவதும் வேகமாகத் திணிக்கப்படுகிறது. ஆகவே தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத, அனைத்து முனைகளிலும் இற்று, தோற்றுப் போன இந்த அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களைப் போல அதிகாரத்தைக் கையிலெடுத்து நாம் போராடவேண்டும்.”
கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். கேள்வி-பதில் நிகழ்வு இடம் பெற்றது.
தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை, 9443471003
“’சுதந்திரம்’ அடைந்து 69 ஆண்டுகள் ஆகி விட்டன. உலகின் தகவல் தொழில்நுட்ப வல்லரசாக இந்தியா தன்னை சொல்லிக் கொள்கிறது. நாம் மிகப் பெரும் செலவில் சக்தி வாய்ந்த இராணுவம் ஒன்றைப் பராமரிக்கிறோம். நமது பிரதமருக்கு 56 ‘இன்ச்’ மார்பு உள்ளதால், அண்டை நாடுகள் நம்மைக் கண்டு அஞ்சுகின்றன. மெல்ல மெல்ல ஒரு பொருளாதார வல்லரசாக நாம் உயர்ந்து வருகின்றோம். எல்லா இந்தியர்களுடைய கைகளிலும் செல்பேசிகள்! விதம் விதமான ஆடை அணிகலன்கள் நமது அலமாரிகளை அலங்கரிக்கின்றன. வெளிநாட்டவர்கள் கூட அதி நவீன மருத்துவ சிகிச்சைகளுக்காக நமது நாட்டிற்குப் படையெடுக்கின்றனர். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் ஒன்றை அனுப்பியுள்ளோம். விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கிறோம். சுருங்கச் சொன்னால் நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.”
உண்மை என்ன? அன்மையச் செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.
தோளில் துணி மூடிய பிணத்துடனும், பக்கத்திலேயே கண்களில் கண்ணீரோடு அவரது பன்னிரண்டு வயதான மகளும் நடந்து செல்வதை பத்திரிகையாளர்கள் சிலர் எதேச்சையாக கண்ட போது மாஜி ஏற்கனவே 12 கிலோமீட்டர்களைக் கடந்திருந்தார்.
செய்தி 1: ஒடிசாவின் காலகந்தியைச் சேர்ந்தவர் மாஜி. காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாஜியின் மனைவி கடந்த ஆகஸ்டு 24, 2016 அன்று மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் இறந்தார். மாஜி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். வறுமையின் காரணமாக காசநோயிடம் தனது மனைவியைப் பறிகொடுத்தவருக்கு இறந்த உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூட காசில்லை.
சடலத்தை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனையின் பிண வண்டியைக் கேட்டு அணுகுகிறார். ஏழை மாஜியின் குரல் அங்கிருந்த அலுவலர்கள் காதில் விழாத நிலையில் தனது மனைவியின் பிணத்தை ஒரு துணியில் சுற்றி தோளில் சுமந்தவாரே கிளம்பினார். மாஜியின் கிராமம் மருத்துவமனையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தோளில் துணி மூடிய பிணத்துடனும், பக்கத்திலேயே கண்களில் கண்ணீரோடு அவரது பன்னிரண்டு வயதான மகளும் நடந்து செல்வதை பத்திரிகையாளர்கள் சிலர் எதேச்சையாக கண்ட போது மாஜி ஏற்கனவே 12 கிலோமீட்டர்களைக் கடந்திருந்தார்.
செய்தி உடனடியாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகின்றது. பின்னர் தாமதமாக விழித்துக் கொண்ட அரசு இயந்திரம் பிண வண்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தால் தான் மிகவும் மனம் வருந்தியதாகத் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மாஜிக்கு நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாயை ‘பெருந்தன்மையுடன்’ அறிவித்துள்ளார்.
செய்தி 2: முதல் சம்பவம் குறித்த செய்திகள் வெளியான ஓரிரு நாளில் அதே ஒடிசா மாநிலத்திலிருந்து காணொளிக் காட்சி ஒன்று வெளியானது. சோரோ என்கிற சிறு நகரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனையின் கடை நிலை ஊழியர்கள் பிணமொன்றின் மீது ஏறுகின்றனர். அவர்கள் கையில் இருந்த கத்தியைக் கொண்டு அந்தப் பிரேதத்தின் இடுப்பை வெட்டி உடலை இரண்டாகப் பிளக்கின்றனர். துண்டுகளாக்கப்பட்ட உடலை இரண்டு பெரிய பாலித்தீன் உரைகளில் மடித்துக் கட்டுகின்றனர். அதன் பின் அந்தப் பாலித்தீன் பைகளை மூங்கில் கம்புகளில் கோர்த்து இருவருமாக தோளில் சுமந்து நடக்கின்றனர்.
துண்டாக்கப்பட்ட பிணம் சாராமணி பாரிக் என்கிற 76 வயது மூதாட்டியுடையது. இரயில் விபத்தில் இறந்த அவரது உடல் சவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் சோரோவில் அதற்கான வசதிகள் இல்லை என்பதால், அவரது அங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலாசோருக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்ப சோரோ மருத்துவமனையிடம் பண வசதியோ, வாகன வசதியோ இல்லை. எனவே உடலைப் பார்சலாக்கி இரயிலின் மூலம் அனுப்ப முடிவு செய்துள்ளனர். விரைத்துப் போன உடலை பார்சல் செய்வது கடினம் என்பதால் ஊழியர்கள் அதை இரண்டாகப் பிளந்ததாக பின்னர் செய்திகள் வெளியானது.
தனது மகனைத் தோளில் சுமந்து சென்றுள்ளார் சுனில் குமார். குழந்தைகள் மருத்துவரோ அன்ஷ் குமார் அழைத்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவித்து விட்டார்.
செய்தி 3: சுனில் குமார் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். அவரது 12 வயதே ஆன மகன் அன்ஷ் குமாருக்கு திடீரென கடுமையான காய்ச்சல். சோர்ந்து போன மகனை அழைத்துக் கொண்டு அரசு நடத்தும் லாலா லஜபதிராய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சுனில் குமார். அரை மணி நேரத்திற்கு பிறகு, சிறுவன் அன்ஷ் குமாருக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாதென்றும், அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லுங்களென அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காய்ச்சல் கடுமையான நிலையில் நினைவிழந்து போயிருக்கிறான் அன்ஷ் குமார். மருத்துவமனை ஊழியர்களோ, அந்தச் சிறுவனை அங்கிருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஸ்ட்ரெட்சர் – கையிழுவை வண்டி வசதியை மறுத்துள்ளனர். வேறு வழியின்றி தனது மகனைத் தோளில் சுமந்து சென்றுள்ளார் சுனில் குமார். குழந்தைகள் மருத்துவரோ அன்ஷ் குமார் அழைத்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவித்து விட்டார்.
செய்தி 4: மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நன்னேபாய். பழங்குடி இனத்தவரான நன்னேபாயின் மகள் பார்வதி நிறை மாத கர்ப்பிணி. கடந்த 28-ம் தேதி பார்வதிக்கு கடுமையான பிரசவ வலி வந்தது. பதறிய நன்னேபாய், உடனடியாக அரசு ஆம்புலன்ஸ் சேவை தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார்.
பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராத நிலையில் பார்வதியின் உயிருக்கே ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மகளை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்த்தி சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நன்னேபாய். நல்லவிதமாக தாய்க்கும் குழந்தைக்கும் உயிராபத்தின்றி பிரசவம் முடிந்துள்ளது. பின்னர் தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மீண்டும் தனது மகளையும் பச்சைக் குழந்தையையும் சைக்கிளில் அமர்த்தி வீட்டுக்குச் சென்றார்.
மகளை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்த்தி சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நன்னேபாய்.
இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் அதிசயமான நிகழ்வுகள் அல்ல. மும்மயப் பொருளாதார கொள்கைகளைப் பின்பற்றும் இந்திய அரசு, காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் காசுக்கு விற்கப்படும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. சென்னை மருத்துவச் சுற்றுலாவுக்கு உகந்த நகரமாகியுள்ளது அடித்தட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியல்ல – மருத்துவம், உயிர் காத்தல் என்பவையெல்லாம் பண்டமாகி உலகெங்கும் உள்ள வசதிபடைத்தவர்களுக்கானதாக மட்டும் அவை மாற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் சிகிச்சை பெற்றுச் செல்லும் இந்தியாவில் தான் 22 லட்சம் மக்கள் காசநோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் (இது உலகின் மொத்த காசநோயாளிகளான 64 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு). எளிதாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய மலேரியா காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 இந்தியர்கள் பலியாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அடிப்படை மருந்துகளின் விலைகள் அனைத்தும் விண்ணை முட்டிக் கொண்டிருக்க, அரசு மருத்துவமனைகளோ அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மறுக்கப்பட்டு மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.கே அகர்வால் என்பவர் மாடுகளுக்காக பத்து ஆம்புலன்சுகளை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
இந்தியர்களின் உயிருக்கே மதிப்பில்லாத நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கும்பலோ பார்ப்பனிய இந்துமதவெறி அரசியலுக்கும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கு வழங்க மறுக்கிறது. பா.ஜ.க மட்டுமல்ல, காங்கிரஸ் இன்னபிற மாநில சமூகநீதிக் கட்சிகள் அனைத்தும் அரசியல் ரீதியில் ஏகாதிபத்திய சேவையையே மனதாரவும், ஆட்சி அமலிலும் ஏற்றுக் கொண்டுவிட்டன.
நாட்டின் நிலை இதுவென்றால், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.கே அகர்வால் என்பவர் மாடுகளுக்காக பத்து ஆம்புலன்சுகளை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். ஜார்கண்ட் பிரதேச கோசாலா சங்கம் என்கிற அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே அகர்வால், மாடுகளுக்கு சேவை செய்வது தாய்க்கு சேவை செய்வதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவமனை கொண்ட ஜார்கண்ட் மாநிலம் தான் மருத்துவர் – நோயாளி சமன்பாட்டில் மிகவும் பின் தங்கியுள்ளது.
மக்களின் உயிர்களை மலிந்து போகச் செய்ததே உலகமயமாக்கம் நமக்கு வழங்கியிருக்கும் பரிசு. உண்மை இவ்வாறிருக்க, இதற்கு மேலும் இந்தியாவை ‘வல்லரசு’ என்று சொல்லிக் கொள்ள நமக்கு கூச வேண்டாமா?
மாட்டுக்கு ஆம்புலன்ஸை வழங்கி, மக்களை பாடை தூக்கி நடக்கச் சொல்லும் இந்த அரசமைப்புக்கு நாம் பாடை கட்டும் நாள் எப்போது?
கருகும் பயிரை காக்க, காவேரி நீரை மீட்க, தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் ரயில் மறியல், சாலை மறியல் என போராட்டங்கள் திட்டமிடப்பட்டது. தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க விவசாய பிரிவு, தி.க, பெ.தி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், SDPI, விவசாய அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, ஊர்வலமாக சென்று, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், மக்கள் அதிகாரம் சார்பாக அதே ரயில் நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம். இப்போராட்டத்தில் பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி மைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைதான பிறகு அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும், காவேரி பிரச்சினை சம்பந்தமாக கருத்துகளை பறிமாறிக் கொள்வதும் தேவை என உணர்த்தி மக்கள் அதிகாரம் சார்பாக ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைத்து தலைவர்களையும் மேடையில் அமர வைத்து, நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டத்தை மக்கள் அதிகாரம் திருச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தர்மராஜ் தலைமை ஏற்று நடத்தினார். பேச்சாளர்களுக்கு இடையே ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடி உற்சாக மூட்டினர். தயாரிப்பு வேலைகள் முடிந்து, பறையடித்து “ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்“ என்ற பாடல் துவங்கியதும், காவல் துறையினர் பதறி அடித்து ஓடிவந்து தடுத்தனர். மொத்த கூட்டமும் வெகுண்டெழுந்து காவல்துறையை விரட்டினர். பிறகு நாம் சமாதானப்படுத்தி நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தமிழ்மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் தியாகராஜன் உரையாற்றும் போது, “நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் மக்கள் அதிகாரத்திற்கு நன்றி, இங்கு அதிகமாக விவசாயிகள் போராட்டத்திற்கு வரவில்லை. மத்திய அரசு மக்களை மோசம் செய்யும் வேலையை செய்கிறது. அதே வேலையை ஜெயா அரசும் செய்கிறது. இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகம் – சீனி விடுதலை அரசு பேசும்போது, “மக்கள் அதிகார அமைப்பினருக்கு நன்றி. மூடு டாஸ்மாக் பாடல் ஏதோ தடைசெய்யப்பட்ட பாடல் போல அதை பாட விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சி பல கட்சிகள் கலந்து கொண்டுள்ளதால் பாட வேண்டாம் என்ற உடன் தோழர்கள் வேறு பாட்டு பாடினர். ஆனால் இதுவே இவர்கள் கூட்டமாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய காவல்துறை அதிகாரி வந்து தடுத்தாலும் பாடியே தீருவோம் என்று பாடி இருப்பார்கள் இவர்களின் போர்க்குணம் அவ்வளவு சிறப்பு. அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். முதலில் காவிரி நீர் பிரச்சனை என்பது யாருக்கானதோ கிடையாது நமக்கான பிரச்சனை இந்த போராட்டம் என்பது உரிமைக்கான போராட்டம் இறுதி வரை எழுச்சியாக போராட வேண்டும்” என்றார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த G.M.ஹாசிம் பேசும்போது: “இதை மக்கள் பிரச்சனையாக பார்க்க வேண்டும். அவர்கள் மத்தியில் கொண்டு சென்று இந்தியா முழுக்க புரட்சியாக வெடிக்க வேண்டும்” என்றார்.
தியாகராஜன் (த.மா.க)
தங்கதுரை (வி.சி.க)
சீனி விடுதலை அரசு (பெ.தி.க)
சம்சுதீன் (SDPI)
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை பேசும்போது, “விவசாயிகளுக்கு ஆதராவாக கடந்த வாரம் நாங்கள் இரயில் மறியல் செய்தோம். இங்கு விவசாயிகள் அதிகமாக வரவில்லை. ஒரு போராட்டம் நாம் செய்தால் அந்தப் பகுதியே ஸ்தம்பிக்க வேண்டும். அடுத்தகட்ட போராட்டம் நாம் விவசாயிகளை அதிகமாக திரட்டி செய்ய வேண்டும்” என்றார்.
அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த ஃபாரூக் பேசும் போது, “தி.மு.க இந்தப் போராட்டத்தை முடிவு செய்தது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆனால் காவல்துறையினர் 200 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். போராட்டத்தை நீர்த்து போகச் செய்ய திட்டமிட்டே செயல்பட்டுள்ளனர். நாம் தொடர்ந்து விவசாயிகளுக்காக போராட வேண்டும்” என்றார்.
இந்திய தேசிய காங்கிரஸின் விவசாய பிரிவைச் சேர்ந்த கருணாகரன் பேசும்போது, “தமிழக அரசு ஒரு காவல்துறை அதிகாரி இறப்பிற்கு 1 கோடி நிதி தருகிறது. ஆனால் விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறை செலுத்துவதில்லை. விவசாயிகளின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தீட்சிதர் பாலசுப்ரமணியன் பேசும் போது, “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி டெல்லி வரை சென்று போராடி உள்ளோம். இந்த அரசிற்க்கு விவசாயிகள் மீது துளியும் அக்கறை இல்லை. கடன் தள்ளுபடியில் கூட பாரபட்சம் பார்த்துதான் செய்கிறார்கள். 1991-ல் இருந்து போராடி வருகிறாம். இது மக்களின் பிரச்சனையாக மாற வேண்டும். போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய தி.மு.க.விற்கு நன்றி” என்று கூறினார்.
கருணாகரன் (காங்கிரஸ்)
G.M.ஹாஷிம் (இ.முஸ்லீம் லீக்)
பாரூக் (அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு)
திராவிடன் கார்த்திக் (திராவிடர் கழகம்)
தீட்சிதர் பாலசுப்பிரமணியம் (டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்)
சேசு அடைக்கலம் (தி.மு.க விவசாய சங்க அமைப்பாளர்)
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய திராவிடர் முன்னேற்ற கழகத்தின் விவசாய அணி அமைப்பாளர் சேசு அடைக்கலம் பேசும்போது, “7000 கோடி விவசாய கடனை கலைஞர் தள்ளுபடி செய்தார். ஆனால் ஜெயலலிதா வாக்கை மட்டும் தான் பார்க்கிறார். மக்களின் பிரச்சனையாக துளியும் பார்ப்பதில்லை” என்று தனது அரசியலை விளக்கி பேசினார்.
மக்கள் அதிகாரம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானதால் மண்டபத்தில் அத்தனை கட்சி, அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தது. இந்நிகழ்வு கைதான அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இனி மக்களுக்கான பிரச்சனைகளில் மக்கள் அதிகாரத்துடன் கைகோர்த்து களம் இறங்கி போராடுவோம் என்றனர்.
இன்றைய தேதியில் நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை எது? விலைவாசி உயர்வா? வேலையின்மையா? பெண்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளா? இவையெதுவுமில்லை, கோமாதாதான் தலைபோகிற பிரச்சினை என்கிறது மோடி அரசு.
”உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து விடாத காவி கும்பல், தங்கள் ‘புனித அன்னையின்’ புகழைப் பரப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோமாதாவின் மூத்திரத்தையும் சாணியையும் அள்ளி வந்து ஆராய்ச்சி செய்கின்றனர்.
ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப்பேரு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது
இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுடைய கடந்த கால செயல்பாடுகளின் மேல் நமக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, தற்போது மேற்படி நிறுவனங்களை மாட்டு மூத்திரத்தை ஆராய களமிறக்கியிருக்கிறது, பாரதிய ஜனதா அரசு.
நடுத்தர வர்க்க அப்பாவி இந்தியர்களின் தலையில் எதையாவது கட்ட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இன்னன்ன பொருளைத் தின்றால் / பயன்படுத்தினால் – ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப் பேறு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது. குறிக்கப்பட்ட பொருள் மனித மலமாக இருந்தாலும் அள்ளி அப்பிக் கொள்வதே நமது பெருமைக்குரிய பாரம்பரியம். மாட்டு மூத்திரத்தில் மேற்படி ’மருத்துவ’ குணாம்சங்களோடு கூடுதலாக தங்கத் துகள்களும் இருப்பதாக குஜராத்தைச் சேர்ந்த விவசாய பல்கலைக்கழகம் ஒன்று ‘கண்டறிந்துள்ளது’.
ஒருவழியாக கிழவியைக் கண்டிபிடித்தாகி விட்டது – அடுத்து தூக்கி வைக்க மடி இல்லாவிட்டால் நாடு எப்படி வல்லரசாகும்? இந்த வேலையில் ஏற்கனவே பாபா ராம்தேவின் பதஞ்சலி ஈடுபட்டுள்ள நிலையில் கோதாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நேரடியாக குதித்து மாட்டு மூத்திர விற்பனையை துவங்கியுள்ளது.
வாஜ்பாயி தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரத்தில் இருந்த போது மத்திய மனித வளத் துறை மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறைகளின் அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் நேரடிப் பார்வையில் மூத்திர ஆராய்ச்சி துவங்கியது. ”பசு விஞ்ஞான ஆராய்ச்சி மையம்” (Gau Vigyan Anusandhan Kendra – GVAK) என்ற ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பு அப்போதைய மத்திய அரசின் ஆதரவோடு பசு மூத்திரத்திற்கு நான்கு காப்புரிமைகளை பதிவு செய்தது. கடந்த ஆண்டு மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Central Council for Researches in Ayurvedic Science) சார்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் பஞ்சகவ்யத்தை மருந்தாக பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
“கௌலோக பீயா” (Gauloka peya) என்கிற பெயரில் நாடெங்கும் தனக்குள்ள ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளில் மூத்திரத்தை விற்று வருகின்றதது கோ சேவா சங்கம்.
மத்திய அரசின் அழுத்தத்துடன் பெருமளவிலான மக்களின் வரிப் பணமும் மூத்திர ஆராய்ச்சியை நோக்கித் திருப்பி விடப்பட்டன. விவசாய ஆராய்ச்சிகளுக்கான இந்திய மையம் (ICAR), இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் (IVRI), தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (TNAU), அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), ஒரியா மாநில விவசாய பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஏராளமான ’ஆய்வுக்’ கட்டுரைகளை சமர்பிக்கத் துவங்கின.
அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் (Journal) என்கிற பெயரில் இந்திய மற்றும் சர்வதேச அறிவியல் பத்திரிகைகளில் இடம் பெறத் துவங்கிய இந்தக் கட்டுரைகளில் ‘அறிவியல்’ என்கிற கந்தாயத்தை நுண்ணோக்கி கொண்டு தேடினாலும் கிடைக்காது என்பதைத் தனியே விவரிக்கத் தேவையில்லை. உண்மையில், மாட்டு மூத்திரம் என்பதும் மற்ற எல்லா விலங்குகளின் (மனிதன் உட்பட) மூத்திரத்தைப் போன்றது தான். பிற எந்த உயிரினத்தின் உடலிலும் மலம், மூத்திரம் எந்த அடிப்படையில் உற்பத்தியாகிறதோ அதே அடிப்படையில் தான் மாட்டின் உடம்பிலும் நடக்கிறது.
உடலில் உள்ள திரவ நிலைக் கழிவுகள் சிறுநீரகத்தால் பிரித்து எடுக்கப்பட்டு கழிவுப் பாதையின் மூலம் வெளியேற்றப்படுகிறது. உடலுக்குத் தேவையற்ற உயிரிகள் மற்றும் இரசாயனங்கள் இந்தக் கழிவு நீரில் கலந்திருக்கும். (கோமாதாவோ மனிதனோ) 95 சதவீதம் தண்ணீரும், 2.5 சதவீதம் யூரியாவும் சேர்ந்ததே மூத்திரம் – இதோடு உடலுக்குத் தேவையற்ற இரசாயன மற்றும் ஹார்மோன் கழிவுகளும் சிறு சிறு அளவுகளில் கலந்திருக்கும்.
மூத்திரத்தில் உள்ள இரசாயனங்களால் எந்தப் பலனும் இல்லையா? பலன் இருக்கலாம். அந்த இரசாயண மூலத்திற்கு என்று உள்ள அனைத்து பலனும் இருக்கும். ஆனால், அதை இயற்கையிலிருந்து நேரடியாகவே பெறமுடியும் போது ஏன் மூத்திரத்தைக் கிளற வேண்டும். மனிதக் கழிவுகளில் உள்ள நொதிகளின் (enzymes) மருத்துவ பலன்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக மனித மூத்திரத்தில் கட்டுப்படுவதைத் தடுக்கும் குணம் உள்ள ஊரோகினோஸ் (Urokinase) என்கிற நொதி தனியே பிரித்தெடுக்கப்பட்டு இதய நாளங்களில் (Coronory arteries) இரத்தம் கெட்டிப்படுவதை தடுக்க பயன்படுத்தப்படுகின்றது. அதற்காக, மூத்திரத்தைப் பிடித்து நேரடியாக குடிப்பதற்குப் பெயர் அறிவியல் அல்ல – முட்டாள்தனமான காட்டுமிராண்டித்தனம்.
கோமியம்
மேலும் நமது கோமாதா ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் அனைத்தும் சில பழங்கால நூல்களில் உள்ள மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டே சுழல்கின்றன. குறிப்பாக சரகர், சுஸ்ருதர், வாக்பட்டர் போன்றோரால் எழுதப்பட்ட சமஸ்கிருந்த நூல்களில் கோமூத்திரம் மருந்தாக பயன்படுத்தப்பட்டதைக் குறிப்பிடும் இந்துத்துவ வில்லேஜ் விஞ்ஞானிகள், அதே வேத நூல்களில் மாட்டு மாமிசம் உண்பதைப் பற்றி எழுதியுள்ளதைக் குறித்து பேசுவதில்லை.
2010-ம் ஆண்டிலிருந்து மாட்டு மூத்திர யாவாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான கோ சேவா சங்கம் (GSS) நேரடியாக இறங்கியுள்ளது. நீரிழிவு மற்றும் கான்சர் நோயைக் குணப்படுத்தும் அருமருந்து என இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனிய மூடர்களிடையே விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் மாட்டு மூத்திரத்தின் விலை 12ரூபாய் (ஒரு லிட்டர்). “கௌலோக பீயா” (Gauloka peya) என்கிற பெயரில் நாடெங்கும் தனக்குள்ள ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளில் மூத்திரத்தை விற்று வருகின்றது கோ சேவா சங்கம்.
மேற்படி பரிவார அமைப்பு 2002-ல் மாட்டு மூத்திரம் மற்றும் சாணியை அடிப்படையாக கொண்ட அழகுசாதனப் பொருட்கள் சிலவற்றை அறிமுகம் செய்து அவற்றுக்கு விளம்பரம் செய்ய பாலிவுட் நடிகைகள் சிலரை அணுகியுள்ளது. அப்போது உச்சத்தில் இருந்த பல பாலிவுட் நடிகைகள் விசயத்தைக் கேள்விப்பட்டு தெறித்து ஓடியுள்ளனர். பத்திரிகை ஒன்றிடம் இது குறித்து பேசியுள்ள ஐஸ்வர்யா ராய், ”மாட்டு மூத்திரத்தை முகத்தில் தேய்ப்பது அல்லது குடிப்பது பற்றி நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது. நிச்சயம் அழகு குறித்த எனது சிந்தனை இதுவல்ல” என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் தனது கருத்தைத் தெரிவித்த போது பிரதமர் நாற்காலியில் திருவாளர் ஐம்பத்தாறு இன்ச் இல்லை என்பதால் பிழைத்தார் – இல்லாவிட்டால் தேசதுரோகியாக்கி பாகிஸ்தானுக்கு நாடு கடத்தியிருப்பார்கள்.
“வளர்ச்சி” கோஷங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த பின், சொல்லப்பட்ட ”வளர்ச்சி” அம்பானி அதானி வகையறாக்களுக்கே சேவை செய்யக்கூடியதென்பது அம்பலமாகியது. மக்களின் வாழ்நிலையோ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாழ்ந்துள்ளது. இந்நிலையில் மொத்த சமூகத்தையும் மத ரீதியில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடையும் வகையில் இந்துத்துவ செயல்திட்டங்களை வெறியோடு முன்னகர்த்துகின்றது காவி கும்பல். அதற்குத் தோதான ஆயுதமாக கையிலெடுத்திருப்பது தான் ’புனித கோமாதா’.
இந்துக்கள் என தம்மைச் சொல்லிக் கொள்கிறவர்கள் மனசாட்சியோடு இந்த உண்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறும் நம்பிக்கைகள் அரசியலை, சமூகத்தை, பொருளாதாரத்தை, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்றால் – நீங்கள் அடையப் போவது வளர்ச்சியல்ல, காட்டுமிராண்டிக் கலாச்சாரமே.
ஐ.டி.சி சிகரெட் கம்பெனி 1997-ம் ஆண்டில் செய்த ஊழல் குறித்த கட்டுரை
அன்றாடம் சிகரெட் பிடிக்கும் வழக்கமுள்ளவர்கள் கட்டாயம் ஐ.டி.சி. (ITC) என்கிற பகாசுரக் கம்பெனிக்கு பணம் கொடுத்தாக வேண்டும். சிகரெட் உற்பத்தியில் ஏகபோகமாய் விளங்கும் இந்த இந்திய புகையிலை நிறுவனம் தற்போது வேறு பல துறைகளிலும் இறங்கி, சர்வதேச அளவிலும் தனது கிளை நிறுவனங்களைத் துவக்கியுள்ளது. அதனுடைய மூலதன மதிப்பு 1997-ம் ஆண்டின் படி ரூ.5,100 கோடி.
சிகரேட்
ரூ. 350 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர். இதன் முன்னாள் தலைவர்கள் கே.எல். சக் மற்றும் ஜே.என். சாப்ருவும் கைது செய்யப்பட்டு, நீண்ட நாள் கழித்து பிணையில் வெளிவந்தனர்.
இந்திய புகையிலை நிறுவனம் இந்தியாவில் நட்சத்திர விடுதிகளும் உணவு விடுதிகளும் நடத்தத் தொடங்கி வெற்றி பெற்றது. இதனடிப்படையில் 1989-ல் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் இந்திய உணவு விடுதியைத் தொடங்கியது. அங்கிருந்த இந்திய மருத்துவர்களிடம் நிறைய இலாபப் பங்கு கிடைக்கும் எனக்கூறி பங்கு பத்திரம் மூலம் நிதி திரட்டியது. ஆனால் உணவு விடுதி பெருத்த நட்டமடைந்தது.
நிறுவனம் நட்டமடைந்தது வெளியே தெரிந்தால் கெட்ட பெயர் வரும் என்பதற்காக பத்திரங்களுக்கு இலாபப் பங்கு தர ஐ.டி.சி. திட்டமிட்டது. ஏற்கனவே ஐ.டி.சி.யின் பத்ராசலம் பேப்பர் கம்பெனிக்கு பழைய பேப்பர்களைக் கொடுத்து வந்த நியூ ஜெர்சியிலிருக்கும் சுரேஷ் சித்தா லியா, தேவாங் சித்தாலியா என்பவர்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு இலாபப் பங்கு தந்தது. இதற்காக ஐ.டி.சி. இவர்களுக்கு 40 லட்சம் டாலர்களைக் கொடுத்தது. இது முதல் அந்நியச் செலாவணி மோசடி, இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை.
ஐ.டி.சி.யின் முன்னாள் தலைவர்கள் கே.எல்.சக் மற்றும் ஜே.என். சாப்ரு
பின் 40 லட்சம் டாலர் எப்படிக் கிடைத்தது? தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு சித்தாலியாக்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு அனுப்புவது. அவர்கள் சர்வதேச விலையில் (அதாவது கூடுதல் விலைக்கு) விற்று, கூடுதல் பணத்தை வைத்துக் கொள்வார்கள். அதேபோல ஐ.டி.சி. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது கூடுதல் விலைக்கு கணக்கெழுதி சித்தாலியா நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்வது. இதில் கிடைக்கும் அதிகப்படி டாலரை சித்தாலியாக்கள் எடுத்துக் கொள்வார்கள். இப்படி ஏற்றுமதி – இறக்கு மதியில் அந்நியச் செலாவணி மோசடி செய்துள்ளனர்.
உணவு விடுதி நட்டத்தை ஈடுகட்ட சித்தாலியாக்களுடன் ஏற்பட்ட உறவு வேறு பல வழிகளிலும் தொடர்ந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் சலுகைகளைப் பெறவும் இந்த அந்நியச் செலாவணி மோசடி தொடர்ந்து நடத்தப்பட்டது. இப்படி நடந்த மோசடியின் விளைவாக சித்தாலியாக்களுக்கும் ஐ.டி.சிக்கும் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டது. சித்தாலியாக்கள் ஐ.டி.சி.க்கு 1.6 கோடி டாலர் தர வேண்டும் என ஐ.டி.சி. அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சித்தாலியாக்களோ தாங்கள் பணம் தரவேண்டியதில்லை. ஐ.டி.சி.தான் பணம் தர வேண்டும். தவிர தங்களை இழிவுபடுத்தியதால் மான நஷ்டமும் தர வேண்டும் என சுமார் 5 கோடி டாலர் ஐ.டி.சி. தரவேண்டும் என எதிர் வழக்கு தொடுத்தனர்.
குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழியையும் பறித்த கதையாக சித்தாலியாக்கள் இந்தியாவிலுள்ள அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தமக்கு சட்டப் பாதுகாப்பு கேட்டுப்பெற்று. ஐ.டி.சி. நிறுவனத்தின் அந்நியச் செலாவணி மோசடியை ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்து விட்டனர். இதனடிப்படையில் அக்டோபர் 30-ல் தொடங்கி ஐ.டி.சி.யின் உயர் அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதன் முன்னாள் தலைவர்களான சாப்ருவும், சக்கும் தான் இந்த மோசடிகளை நடத்தியவர்கள் என்பதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுதும் ஐ.டி.சி. நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஐ.டி.சி. நிறுவனம் இதுவரை 800 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற வழக்கும் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது.
***
ஷா வாலஸ் பொருட்கள்
ஷா வாலஸ் என்கிற சீமைச் சாராய உற்பத்தி செய்யும் ஒரு பகாசுரக் கம்பனியும் அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியுள்ளது. அதன் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மோசடி செய்துள்ள மொத்த மதிப்பு ரூ.150 கோடி.
ஷா வாலஸ் நிறுவனத்திலுள்ள தொழிற்சங்கமே வழக்கு தொடுத்து இந்த மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் மனு சாஃப்ரியா என்கிற வெளிநாட்டு இந்தியர் மோசடியே மூலதனம் என்கிற அடிப்படையில் செயல்பட்டு திடீர்ப் பணக்காரராகிய இவர் இன்று இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவராவார்.
ஷா வாலஸ் தொழிற்சங்கத்தினரின் வழக்கே நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான். மோசடிகளால் இந்நிறுவனமே மூடப்படும் அபாயமுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
***
இந்த இரு அந்நியச் செலாவணி மோசடிகளைத் தொடர்ந்து 50 பெரிய தொழில் நிறுவனங்கள் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றன.
1991 பட்ஜெட் தாக்கலின் போது மன்மோகன் சிங் மற்றும் 1997 பட்ஜெட் தாக்கலின் போது சிதம்பரம்
1994-95-ல் இந்திய தொழில் நிறுவனங்கள் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியது ரூ. 663 கோடி என்றிருந்தது. இது 1995-96ல் ரூ.1447 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அதிகாரிகள் தமது அறிக்கையில் இதுவரை நடந்துள்ள வருமான வரி-சுங்கவரி ஏய்ப்பு மட்டும் ரூ.10,000 கோடி இருக்கும் என மதிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பொருளாதாரக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. உற்பத்தி முழுவதும் ஏற்றுமதியை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளது. தவிரவும் சர்வதேச அளவில் வியாபாரத்தை நடத்த ஊக்குவிக்கின்றனர்.
இந்நிலையில் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமுறைக்குப் பொருந்தாது என எல்லா முதலாளித்துவப் பத்திரிகைகளும் கூக்குரலிடுகின்றன. ஏற்கனவே மன்மோகன் சிங் தனது காலத்தில் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். அது போதாது. இச்சட்டத்தை முற்றாகத் திருத்த வேண்டும் என்கின்றனர் தரகு முதலாளிகள்.
தவிர தற்போது ஐ.டி.சி. மற்றும் ஷா வாலஸ் கம்பனிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்தியாவின் தொழிற்துறையையே சீர்குலைக்கிறது. வெளிநாட்டிலிருந்து ரூ.14000 கோடி ரூபாய் மூலதனம் போட உள்ள அந்நியக் கம்பெனிகள் தயங்குகின்றன. எனவே உடனடியாக அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் தளர்த்தப்பட வேண்டும் என முதலாளித்துவ வல்லுநர்கள் வரிந்துகட்டி எழுதுகின்றனர். நமது சிதம்பரமும் அவசர அவசரமாகத் திருத்தி எழுதி வருகிறார்.
பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் (BAT) இந்திய கிளையாயிருந்த இம்பீரியல் புகையிலை நிறுவனம் 1971க்குப் பின் இந்திய புகையிலை நிறுவனமாக (ஐ.டி.சி.) புது அவதாரமெடுத்தது.
நமது வளத்தை நூற்றாண்டுகளாக ஆங்கிலேயன் சுரண்டிச் செல்கிறான். போலி சுதந்திரம் என்பது அம்பலப்பட்டு நாறத் தொடங்கிய போது, அதை மூடி மறைக்க அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம், ஏகபோகத் தடுப்புச் சட்டம் என மாய்மாலம் செய்தனர். தற்போது மீண்டும் மறுகாலனியாக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு இவை தேவையற்றவை என ஏகோபித்த குரலில் தரகு முதலாளிகள் எதிர்க்கின்றனர்.
எற்கனவே பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் (BAT) இந்திய கிளையாயிருந்த இம்பீரியல் புகையிலை நிறுவனம் 1971க்குப் பின் இந்திய புகையிலை நிறுவனமாக (ஐ.டி.சி.) புது அவதாரமெடுத்தது. தற்போது இங்கிலாந்தின் பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனம் ஐ.டி.சி.யை மீண்டும் கைப்பற்ற முனைந்துள்ளது. அதற்கான நாடகத்தின் ஒரு பகுதி தற்போது அரங்கேறியுள்ளது. அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தை நீக்கி அடுத்த காட்சி அரங்கேறப் போகிறது. தரகு முதலாளிகள் கைதட்டி ஆரவாரிக்கக் காத்திருக்கின்றனர்.
– பாரி
பெட்டிச் செய்தி:
ஐ.டி.சி மோசடியில்அதிகாரிகளின்பங்கு
அந்நியச் செலவாணி மோசடி நடந்துள்ள ஐ.டி.சி நிறுவனத்தில் மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மொத்த மூலதனத்தில் 32 சதவீதப் பங்குகள் வைத்துள்ளன. எனவே நிதி நிறுவன அதிகாரிகள் ஐ.டி.சி நிறுவன நிர்வாகிகளாக உள்ளனர். நிறுவனம் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது இயக்குனர்களுக்கு தெரியாமல், அவர்களது சம்மதமின்றி முடிவெடுக்க இயலாது.
சித்தாலியாக்களுடனான உறவு, அவர்களின் மூலம் ஏற்றுமதி – இறக்குமதி, அதில் மோசடி – இதெல்லாம் இயக்குனர்களாக உள்ள நிதி நிறுவன அதிகாரிகளுக்கு தெரிந்தே, அவர்களது ஆதரவுடனே அரங்கேறியுள்ளன. ஆனால், இன்றைக்கு இந்த அதிகாரிகள் தமக்கு எதுவும் தெரியாது எனக் கைவிரித்து விட்டனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த அதிகார வர்க்க முதலாளிகள் எவ்விதச் சிரமுமின்றி கோடிக்கணக்கில் நமது செல்வங்களைச் சூறையாடுகிண்றனர். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ் பெயர் தான் வெளிவந்தது – சம்பந்தப்பட்ட அதிகார வர்க்க கும்பல்கள் தப்பிவிட்டன. இன்னும் நாட்டை உலுக்கிய பல மோசடிகளிலும் இந்த அதிகார வர்க்க கும்பல்கள் மீது எவ்வித நடவடிக்கையுமில்லை.
“முன்னொரு காலத்தில் வீரமான மன்னன் ஒருவன் இருந்தான். அவன் சோட்டா காசியை ஆண்டு வந்தான். அவனது மனைவி மிகவும் பக்தியானவள். அவர்கள் தினமும் குளித்து காயத்திரி மந்திரம் ஜெபிப்பார்கள். இருவருமாக சிவலிங்க பூசை செய்வார்கள். சோட்டா காசி நாடே சுபிட்சமாக விளங்கியது. நாட்டு மக்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் வண்ணம் ஒரு நாள் குஜராத்தின் சுல்தான் கான், சோட்டா காசி மேல் படையெடுத்தான்.
கணவன் இறந்தாள் மனைவி தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற பார்ப்பன நியதிக்கு பழங்குடியினரிடம் மதிப்பு உள்ளதா?
கோயிலை இடித்தும், மிருகங்களைக் கொன்றும், குழந்தைகளைக் கொன்றும் வெறியாட்டம் போட்டான் கான். தனது ராஜ்ஜியத்தைக் காக்க உறுதி பூண்ட சோட்டா காசியின் மன்னன், தனது வீரர்களோடு போர்க்களம் விரைந்தான். போர் நடந்து கொண்டிருக்கும் போது சோட்டா காசியின் கொடி தாழ்ந்து விட்டால் தான் உயிர் துறந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டுச் சென்றான்.
பல நாட்களாக போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அரண்மனையில் இருந்து மகாராணியார் போர்க்களத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது சோட்டா காசியின் கொடி விழுந்தது. உடனே தனது தோழியர்கள் மற்றும் பணிப் பெண்களை அழைத்த மகாராணியார், ‘எதிரி வென்று விட்டான். எந்த நேரமும் இங்கே வந்து விடவும் கூடும். இங்கே உள்ள பெண்கள் தங்களது கணவன்மார்களின் கௌரவத்தையும், தேசத்தின் கௌரவத்தையும் காக்க உடனே தீக்குளியுங்கள்’ என உத்தரவிட்டாள்.
உடனடியாக மரக்கட்டைகள் குவிக்கப்பட்டு தீயிடப்பட்டது. எரியும் நெருப்பில் நெய்யும் மற்ற பூசைப் பொருட்களும் இடப்பட்டன. நெருப்பு நன்றாக வளர்ந்த போது மகாராணியார் அதில் பாய்ந்தார். அவரைத் தொடர்ந்து பணிப்பெண்களும் தோழியர்களும் பாய்ந்து உயிரைத் தியாகம் செய்தனர்.
அன்று மாலை மகாராஜா போர்க்களத்திலிருந்து திரும்பிய போது தான் விசயமே புரிந்தது. உண்மையில் போரில் சோட்டாகாசியின் மகாராஜா தான் வென்றிருக்கிறார் – வீரன் ஒருவன் தவறான கொடியைத் தாழ்த்தியிருக்கிறான். ஆனாலும் தனது தாய் நாட்டுக்காக தீக்குளித்து இறந்த மகாராணியின் தியாகத்திற்கு சிவபெருமான் மனமிறங்கி ஒவ்வொரு பூர்ண அம்மாவாசைக்கும் சோட்டா காசிக்கு விஜயம் செய்யும் வரத்தை அளித்துள்ளார். இன்று வரை ஒவ்வொரு பூர்ண அம்மாவாசைக்கும் மகாராணியார், யார் கண்களுக்கும் தெரியாமல் சோட்டா காசிக்கு வந்து செல்கிறார்…..”
நார்த் ஈஸ்ட் டுடே – மே 2016 இதழ்
மயிலாப்பூர் அய்யராத்துக் குழந்தை ஒப்பிக்கும் மேற்படி அம்புலிமாமா பாணி கட்டுக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக விவரித்த பபிதா என்கிற அந்தச் சிறுமி வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த போடோ பழங்குடி இனப் பெண்.
கணவன் இறந்தால் மனைவி தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற பார்ப்பன நியதிக்கு பழங்குடியினரிடம் மதிப்பு உள்ளதா? யார் அவர்களுக்கு இந்த பார்ப்பனப் புரட்டுகளைச் சொல்லிக் கொடுக்கின்றனர்? அப்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
வடகிழக்கு மாநிலங்களில் – குறிப்பாக அசாம் மாநிலத்தில் – வசிக்கும் போடோக்களின் மதம் பார்ப்பனிய இந்து மதத்திற்கு நேர் விரோதமானது. பதோவராய் என்கிற தலைமைக் கடவுளும் அவரால் உண்டாக்கப்பட்டது என்று போடோக்கள் நம்பும் காற்று, சூரியன், பூமி, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பதோயிசம் தான் போடோக்களின் மதம். இயற்கையையும் காட்டையும் காட்டில் வாழும் பல மிருகங்களையும் வழிபடும் பதோயிசத்தில் பார்ப்பனிய தந்தைவழிச் சமூக விழுமியங்களுக்கு இடமில்லை.
அசாம் மண்ணின் மைந்தர்களான போடோக்களோடு அம்மாநில தேயிலைத் தோட்டங்களுக்கு தினக் கூலிகளாக இழுத்து வரப்பட்ட சந்தால் மற்றும் முண்டா பழங்குடியினத்தவரை மோத விட்டது இந்திய ஆளும் வர்க்கம். இந்தியாவின் பிற பகுதியில் பழங்குடியினராக பட்டியிலிடப்பட்ட சந்தால்களுக்கும் முண்டாக்களுக்கு அசாம் மாநிலத்தில் அந்த தகுதியை வழங்க மறுத்த இந்திய அரசு, போடோக்களுக்கு வழங்கியதன் மூலம் இச்சமூகங்களுக்கு இடையில் இருந்த சில்லறை உரசல்களுக்கு ஒரு அடிப்படையை வழங்கியது.
இதற்கிடையே பர்மா மற்றும் வங்கதேசத்திலிருந்து இசுலாமியர்கள் பிழைப்புத் தேடி அகதிகளாக அசாமில் தஞ்சம் புகுந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் கலவரத்தைத் தூண்டி அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில கடந்த மூன்று பத்தாண்டுகளாக ஈடுபட்டு வந்தது இந்துமதவெறிக் கும்பல். மத்திய மற்றும் வட இந்திய மாநிலங்களைப் போன்ற வலைப்பின்னல் இல்லாத நிலையில் பிற சாதி இந்துக்களோடு பழங்குடியினரையும் இணைத்த ஒரு ஐக்கிய அணியை ஏற்படுத்தி அதற்கு பொது எதிரிகளாக இசுலாமியர்களை முன்னிறுத்திக் காட்டுவதன் மூலம் வட கிழக்கில் ஒரு குஜராத்தை உண்டாக்கும் முயற்சியை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி கௌகாத்தியில் விளையாடிய போது ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் “பாரத் மாதா கீ ஜெய்” என கோஷமிட்டுள்ளனர்
இந்திய அரசின் தொடர் முயற்சியால் பழங்குடியின மக்கள் தங்களுக்குள் அணிபிரிந்து மோதிக் கொண்டிருந்தனர். இந்த மோதலுக்குள்ளே புகுந்த இந்துமதவெறியர்கள், அனைத்து பிரிவினரையும் ‘இந்துக்களாக’ ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டது. அந்த வகையில் போடோக்கள் சிவனை வழிபடும் சைவர்கள் எனவும், சந்தால்களும் முண்டாக்களும் வைணவர்கள் எனவும் கற்பித்து அதற்குத் தோதான புராணப் புரட்டுகளை இட்டுக்கட்டியது.
இந்துத்துவ கும்பலின் பெண்கள் பிரிவான ராஷ்ட்ரிய சேவிகா சமிதி, வனவாசி கல்யாண் ஆஷ்ரம், வித்யா பாரதி, சேவா பாரதி, வன பந்து பரிக்சத் உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்கள் அசாமில் குவிந்து வேலை பார்க்கத் துவங்கினர். பார்ப்பனிய இந்துக் கலாச்சாரத்துக்கு வெளியே இருந்த பழங்குடியினரை உள்ளே இழுப்பதோடு, வடகிழக்கில் தமக்கென புதிய ஆதரவுத் தளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்கு அடித்தளமாக குழந்தைகளை குறிவைத்து மூளைச்சலவை செய்வதற்காக ஆயிரக்கணக்கான ஓராசிரியர் பள்ளிகளைத் தோற்றுவித்தனர்.
இந்துத்துவ மூளைச்சலவை நடப்பதெப்படி?
ஓராசிரியர் பள்ளி
1986-ல் துவங்கப்பட்ட ஏகல் வித்யாலயா என்கிற பரிவார அமைப்பிற்கு தற்போது நாடெங்கிலும் சுமார் 52,000 கிளைகள் உள்ளன. அசாமின் கோக்ரஜர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 290 ஓராசிரியர் பள்ளிகளை இவ்வமைப்பு நடத்தி வருகின்றது. 2002 குஜராத் கலவரங்கள் நடந்த பின் அது குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் பலர், இசுலாமிய கொத்துப் படுகொலைகள் அரங்கேறினால் அதற்கு மக்கள் உளவியல் ரீதியில் தயாராவதற்காகவும், பழங்குடியின மக்களை இசுலாமியர்களுக்கு எதிரான காலாட்படையாக பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்குக் கொம்பு சீவவும் பல பத்தாண்டுகளாக வனவாசி கல்யாண் ஆசிரம் ஓராசிரியர் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகல் வித்யாலயா நடத்தி வந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
அது என்ன ”ஓராசிரியர் பள்ளிகள்?”
போதிய கல்வியறிவோ, ஆசிரியர் பயிற்சியோ, அறிவியல் பூர்வமான கல்வித்திட்டமோ இல்லாத இவற்றை “ஓராசிரியர் பள்ளிகள்” என அழைப்பதே பொறுத்தமற்றதாகும். “ஆசிரியர்” என தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் சங்க பரிவார தொண்டர் ஒருவர் நடத்தும் “பள்ளியில்” பழங்குடியினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பிள்ளைகளை சுமார் 40 பேர் வரை சேர்த்துக் கொள்கின்றனர். பள்ளியில் ஏற்றத்தாழ்வான வயதுகளில் சேரும் ‘மாணவர்கள்’ அனைவருக்கும் ஒருவரே ஆசிரியர்.
இந்தப் பள்ளிகளின் பாடதிட்டம் என்ன?
மொழி, அடிப்படைக் கணிதம், பொது அறிவு, தார்மீக அறம் (moral Values), சுகாதாரம், கைவினை மற்றும் யோகா ஆகிய ஏழு பாடங்களே தமது பாடதிட்டம் என அறிவிக்கிறது ஏகல் வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளம். இந்தப் பாடதிட்டத்தில் ஏன் அறிவியல், புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் இல்லையே என கேட்கும் அப்பாவிகளுக்கு மேலும் சில விளக்கங்கள் அளிக்க வேண்டியுள்ளது.
எண் ஒன்றுக்கு ஒரு முறை “ராம்” எண் இரண்டுக்கு இருமுறை “ராம்” மூன்றுக்கு மும்முறை ”ராம்” என குழந்தைகள் கூவ வேண்டும்.
தினசரி மூன்று மணி நேரம் மேனிக்கு மொத்தம் மூன்று வருடங்களில் முடிந்து விடும் ஒரு வகையான பயிற்சியைத் தான் பாடதிட்டம் என நீட்டி முழக்குகிறது ஏகல் வித்யாலயா. சொல்லிக் கொள்ளும் அந்த மூன்று மணிநேர படிப்பின் துவக்கத்திலும் இறுதியிலும் பஜனைக்காக மட்டும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கணிதத்திற்கும் மொழிக்குமாகச் சேர்த்து மொத்தம் 60 நிமிடங்கள். தினசரி 30 நிமிடங்கள் என மூன்று வருடத்திற்கு சொல்லிக் கொடுக்கப்படும் கணிதம் என்னவாக இருக்கும் என்பதை 2004-ம் ஆண்டு ஏகல் வித்யாலய “பள்ளிகளை” குறித்து விரிவன கள ஆய்வு மேற்கொண்ட பத்திரிகையாளர் ஹர்தோஷ்சிங் பால் பதிவு செய்துள்ளார். எண் ஒன்றுக்கு ஒரு முறை “ராம்” எண் இரண்டுக்கு இருமுறை “ராம்” மூன்றுக்கு மும்முறை ”ராம்” என குழந்தைகள் கூவ வேண்டும். இது தான் ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்கள் பழங்குடியினருக்கு அறிமுகப்படுத்தும் கணிதத்தின் யோக்கியதை.
மற்றபடி வழக்கம் போல் திரிக்கப்பட்ட வரலாறு, புராணப் புரட்டுகள், இசுலாமிய/கிறிஸ்தவ வெறுப்பு, போலி தேசபக்த பஜனை தான் பாடங்கள். சுருக்கமாகச் சொன்னால் சமவெளி இந்துக்களுக்கு தினசரி ஒருமணி நேர ஷாகாவை வடிவமைத்த அதே நோக்கத்திற்காகத்தான் பழங்குடி ‘இந்துக்களுக்கு’ மூன்று மணி நேர ஷாகாக்களை உருவாக்கியுள்ளனர்.
கலாச்சார ரீதியிலும், புவியியல் ரீதியிலும் இந்தியாவிலிருந்து துண்டுபட்டுக் கிடக்கும் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் பிடியில் வைக்க உட்குழப்பங்களை ஏற்படுத்தியது மத்திய உளவுத்துறை. அதன் காரணமாக பிளவுண்டு கிடக்கும் பழங்குடியினரை அணுகும் இந்துத்துவ கும்பல், பார்ப்பன இந்துத்துவ விளக்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கு கலாச்சார ரீதியில் “இந்துக்களாக” ஞானஸ்நானம் கொடுக்கும் வேலையைச் செய்கிறது. இதன் மூலம் வடகிழக்கை புவியியல் ரீதியில் இந்து-இந்தியாவின் அங்கமாக்குவதோடு, அதற்கு பொது எதிரிகளாக கிறிஸ்தவர்களையும் இசுலாமியர்களையும் முன்னிறுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதித் திட்டங்கள் ஓரளவுக்குப் பலனளிக்கவும் துவங்கியுள்ளன.
வடகிழக்கை புவியியல் ரீதியில் இந்து-இந்தியாவின் அங்கமாக்குவதோடு, அதற்கு பொது எதிரிகளாக கிறிஸ்தவர்களையும் இசுலாமியர்களையும் முன்னிறுத்துகின்றனர்
மிசோரம் மாநிலத்தில் பரவலாக வசிக்கும் மிசோ பழங்குடியினரோடு நடந்த மோதலில் அம்மாநிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட சில பத்தாயிரக்கணககான புரூ இனத்தவர்கள் தற்போது திரிபுரா மாநில எல்லைக்குள் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். 1998-ல் கலவரம் நடந்த போது ’சேவை’ ஆற்றச் சென்றது சேவா பாரதி. அதைத் தொடர்ந்து வி.ஹெச்.பி, வனவாசி கல்யான் ஆசிரமம், வன பந்து பரிக்சத், பாரதிய ஜனசேவா சன்ஸ்தான் போன்ற பரிவார அமைப்புகள் அப்பகுதியில் குவிந்து முகாமிட்டனர்.
சில ஆண்டுகளிலேயே புரூ இனத்தவரிடையே இருந்து ஒரு சிலரை மூளைச் சலவை செய்து முழு நேரப் பணியாளராக்கினர். புரூ இனம் இந்துக்களின் ஒரு பிரிவு என்பதற்கு வரலாறு மற்றும் பண்பாட்டுத் திரிபான கதைகளை மக்களிடையே பரப்பினர். விளைவாக மிருகங்களை வணங்கும் (animistic religion) பழங்குடி மதமொன்றைப் பின்பற்றி வந்த புரூ இன மக்கள் இன்று முற்று முழுதாக ‘இந்துக்கள்’ ஆக்கப்பட்டுள்ளனர். வெறுமனே ராமனை, ஈசுவரனைக் கும்பிடும் இந்துக்கள் என்றால் கிறிஸ்தவ பாணி ’மதமாற்றம்’ எனக் கடந்து சென்று விடலாம் – மாறாக இம்மக்களை மிக ஆழமாக பார்ப்பனமயமாக்கியிருக்கிறார்கள்.
சதி, குழந்தைத் திருமணம் போன்ற பழைய பார்ப்பனிய வழக்கங்கள் மேன்மையானவை என்று இம்மக்களுக்கு போதித்துள்ள இந்துத்துவ கும்பல், கிறிஸ்தவர்கள் மற்றும் இசுலாமியர்களின் மேல் ஆழமான வெறுப்பை விதைத்துள்ளது. புரூ மற்றும் போடோ இனத்தவரிடையே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயல்பாடுகளை ஆராய்ந்தால் ஒரு வகையான செயல்பாட்டு முறையை (Modus Operandi) கவனிக்க முடிகிறது. இயற்கை இடர்பாடுகள் அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவர காலங்களில் “சேவை” பணியாற்ற சேவா பாரதியின் முகமூடியோடு களமிறங்குவது, பின் பழங்குடியினத்தவர் மத்தியிலிருந்தே ஆள் பிடி தரகர்களை உருவாக்குகின்றனர்.
விசுவ இந்து பரிக்சத்தின் ஆள்பிடி தரகர்கள், பதினைந்து வயதுக்குட்பட்ட பழங்குடி இனக் குழந்தைகளை சட்ட விதிமுறைகளை மீறி வேறு மாநிலங்களுக்குக் கடத்துகின்றனர்.
தம்மை பிரச்சாரக்குகள் என அழைத்துக் கொள்ளும் விசுவ இந்து பரிசத்தின் ஆள்பிடி தரகர்கள், பதினைந்து வயதுக்குட்பட்ட பழங்குடி இனக் குழந்தைகளை சட்ட விதிமுறைகளை மீறி வேறு மாநிலங்களுக்குக் கடத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் சங்கப்பரவார கும்பல்களால் நடத்தப்படும் ஆசிரமங்கள் எனப்படும் மூளைச்சலவை மையங்களில் வைத்து இக்குழந்தைகளை மதத்தீவிரவாதிகளாக வார்த்தெடுக்கின்றனர். பின்னர் இவர்களை பழங்குடியினச் சமூகத்தில் மீண்டும் விதைக்கும் இந்துத்துவவாதிகள், இவர்களைக் கொண்டே மொத்த சமூகத்தின் உளவியலிலும் பார்ப்பன வெறி விசத்தை பரப்புகின்றனர்.
கேட்பதற்கு கொக்கு தலையில் வெண்ணை வைக்கும் வழிமுறையாகத் தெரிகிறதா?
”இன்னும் 100 அல்லது 200 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் பழங்குடி இன அடையாளத்திற்கு என்ன நேர்கிறது என்று பாருங்கள்” என்கிறார் வடகிழக்கு மாநிலங்களுக்கான வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் செயலாளர். (இணைப்பில் உள்ளா ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை). உடனடி பலன்களை நோக்கமாகக் கொள்ளாமல் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டாலும், தேர்தல் வெற்றிகளின் வடிவில் தொட்டறியத்தக்க பலன்களை அடையத் துவங்கியுள்ளது இந்துத்துவ கும்பல்.
அசாம் மற்றும் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா, பிற மாநிலங்களிலும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. குறிப்பாக மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள இந்து மைத்தி இன மக்களை போடோ பழங்குடியின மக்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மேகாலயா மற்றும் திரிபுராவில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகளின் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு “வளர்ச்சி” கோஷத்தை முன்வைத்துள்ள பாரதிய ஜனதா, மத்திய அரசு இம்மாநிலங்களுக்கு வழக்கமாக ஒதுக்கும் நிதியை விளம்பரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றது.
வடகிழக்கு மாநிலத்தின் பழங்குடி மக்களிடமிருந்து 31 இளம் பெண் குழந்தைகள் சங்பரிவார் கும்பலால் இந்துமயமாக்க கொண்டுசெல்லப்பட்டது. குழந்தை எங்கே என தவிக்கும் பெற்றொர்களில் பபிதாவின் பெற்றொர்களும் ஒருவர். நன்றி: அவுட்லுக்
அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் இந்து இந்தியாவின் அங்கம் என்பதை வலியுறுத்தும் விதமாக அம்மாநிலங்களை (வடகிழக்கு மாநிலங்கள் – மதுரா – பிருந்தாவன்) உள்ளடக்கி ”இந்து ஷேத்ராடன வரைபடம்” (Hindu Pilgrimage Map) ஒன்றை உருவாக்கி வருகின்றது மத்திய அரசு. இதற்கான திட்டம் மற்றும் வழிகாட்டுதல் பிரதமர் அலுவலகத்திலிருந்தே பெறப்பட்டு அதனடிப்படையில் தமது அமைச்சகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா.
மணிபூரின் வைணவத் தொடர்பு, திரிபுராவின் சைவ தொடர்பு மற்றும் வடகிழக்கில் உள்ள மூன்று சக்தி பீடங்கள் போன்றவை இந்த ஆன்மீக வரைபடத்தில் இடம் பெறுமென்றும் கூடுதலாக அசாமின் உமாநந்தாவில் உள்ள சிவன் கோவிலும் இடம் பெறும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியதிகாரத்தின் பலன்களை தமது அமைப்பின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும், பழங்குடியினச் சமூகத்தின் வேர்மட்ட அளவில் செயல்படுவதையே முதன்மையாகக் கொண்டுள்ளது இந்துமதவெறிக் கும்பல். இந்துத்துவமயமாக்கல் தேர்தல் வெற்றிகளில் வெளிக் காட்டிக் கொண்டாலும், அதனையும் கடந்து வேறு வேறு தளங்களில் எதிரொலித்துக் கொண்டுள்ளது. கடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி கவுகாத்தியில் விளையாடிய போது ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் “பாரத் மாதா கீ ஜெய்” என கோஷமிட்டுள்ளனர். இது வடகிழக்கு மாநில வரலாறு காணாத சம்பவம் என விவரிக்கிறது ”நார்த்ஈஸ்ட் டுடே” என்கிற பத்திரிகை.
வடகிழக்கு மாநிலங்கள் தவிர பழங்குடியின மக்கள் அடர்த்தியாக வாழும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே உத்தியின் அடிப்படையில் ஆதரவுத்தளத்தை விரித்துள்ள இந்துத்துவ கும்பல், அதன் காரணமாக சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளைக் குவித்துள்ளது. களப்பணிகள் ஒரு பக்கமும், அரசு அதிகாரத்தின் பலன்கள் இன்னொரு புறமுமாக இந்துத்துவ கும்பலுக்கு சாதகமான நிலையை தோற்றுவித்துள்ள நிலையில் கோடிக்கணக்கான அந்நிய நிதியும் இந்த அமைப்புகளிடம் குவிந்துள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதியம், அமெரிக்க ஏகல் வித்யாலயா அறக்கட்டளை, பரம சக்தி பீடம், சேவா இண்டர்நேசனல் போன்ற இந்துத்துவ அமைப்புகள் 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 365 கோடி அளவுக்கு நன்கொடை வசூலித்துள்ளதாக தெரிவிக்கிறது தெற்காசிய குடிமை வலையம் (SACW – South Asican Citizen Web) என்கிற தன்னார்வ அமைப்பு.
ஒருபுறம் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ள கும்பலைக் கொண்டு பார்ப்பனிய மதவெறிப் பிரச்சாரங்களின் மூலம், மதவெறியின் சுவடு கூட இல்லாத பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து சமூகத்தை பல கூறுகளாக வெட்டிப் பிளப்பது – இன்னொரு புறம் அதைத் தேர்தல் வெற்றிகளாக அறுவடை செய்கின்றனர். இந்தப் போக்கிற்கு அக்கம் பக்கமாகவே இசுலாமியர்கள், கிறிஸ்தவர்களை மட்டுமின்றி இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுக்கு தோதுப்படாத ஜனநாயக சக்திகள் அனைவரையும் பொது எதிரிகளாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரித்து ’இந்து’ சமூகத்தை ஒரு நிரந்த அச்சத்தில் ஆழ்த்தி வைத்துள்ளனர். இவர்களையே அடித்தளமாக கொண்டு மொத்த சமூகத்தையும் தமது பாசிச மதவெறி அரசியலின் பிடிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்த்திக் கொண்டுள்ளனர்.
எங்கோ வடகிழக்கிலோ, மத்திய இந்தியாவிலோ நடக்கும் சம்பவங்கள் என இவற்றைக் கடந்து விட முடியாது. பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் ”தமிழ்க் காதலும்” தருண் விஜய்களின் திருவள்ளுவர் பாசமும் ஜனநாயக சக்திகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிகைகள். பெரியாரின் மண் என்கிற செயலற்ற இறுமாப்பு மட்டும் போதுமா?
– தமிழரசன்.
செய்தி,வீடியோ மற்றும் ஆடியோ நன்றி: அவுட்லுக் (The outlook )
திராவிட இயக்கம் சீரழிந்து போனதில், சினிமா கவர்ச்சிக்கு முக்கியப் பங்குண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவில் துவங்கி இன்று அ.தி.மு.கவில் பிழைக்கும் நடிகர்கள் வரையிலான கூட்டம் தமிழக அரசியலின் ‘தரத்தை’ தரணியெங்கும் பரப்புகிறது. இந்திய இராணுவத்தின் பெல்லட் துப்பாக்கிகளால் சிதைக்கப்பட்டு அலறுகிறார்கள், காஷ்மீர் மக்கள். முன்னாள் அட்வகேட் ஜெனரலும், இந்நாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான அ.தி.மு.க-வின் நவநீத கிருஷ்ணன் என்ற பிராணியோ “காஷ்மீர்..பீயுட்டிஃபுல் காஷ்மீர்” என்று நாடாளுமன்றத்தில் வாய் வழியாக மலம் கழித்து காஷ்மீர் போராட்டத்தையும் தமிழகத்தையும் ஒரே நேரத்தில் அசிங்கப்படுத்துகிறது.
சினிமா உலகின் பாராட்டு விழாக்களுக்காக ஏங்கித் தவமிருப்பவர் கருணாநிதி. காங்கிரசோ நக்மா-குஷ்பு-பாபிலோனாவை வைத்து காமராஜரின் ‘பொற்கால’ ஆட்சியை மீட்க முயற்சிக்கிறது. ரஜினியின் குரலுக்கு ஒரு காக்கை கூட செவிசாய்க்காத நிலையில், அவருக்கு மாபெரும் சக்தி இருப்பதாக ஊடகங்கள் உருவாக்கிய பில்டப்பை நம்பி, எதற்கும் இருக்கட்டும் என்று, சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, மான வெக்கம் பாக்காமல் ரஜினி வீட்டுக்குச் சென்று பல்லிளித்தார் மோடி. போலி கம்யூனிஸ்டுகளோ இந்துமதவெறி, ஆதிக்க சாதி வெறியை ஊக்குவிக்கும் மணிரத்தினம், பாரதிராஜா போன்ற நட்சத்திரங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் சினிமா நட்சத்திரங்களைக் கொண்டிராத கட்சியில்லை. சட்டமன்றத்தில் கூட கருணாஸ் எனும் சாதிவெறியன் ‘அம்மா’வால் உறுப்பினராக்கப் பட்டிருக்கிறார். தனது சினிமா செல்வாக்கை வைத்து காரோட்டிக் கொலை செய்த வழக்கிலும், மான் வேட்டை வழக்கிலும் விடுதலையை விலைக்கு வாங்கியிருக்கிறார் சல்மான் கான். கமலஹாசனையும், விஜயையும் வழிக்கு கொண்டு வர அவர்களது படங்கள் வெளியாகும் போது நெருக்கடி கொடுக்கிறது ஜெயா அரசு. மாறாக ஜெயா டி.விக்கும், ஜாஸ் சினிமாவுக்கும் கப்பம் கட்டினால் கபாலி பட குழுவினர் பகற் கொள்ளையடிக்க நேரடியாக அனுமதிக்கப்படுகிறார்கள். தங்களது படங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் ‘அம்மாவிடம்’ கொட நாட்டிலோ, போயஸ் தோட்டத்திலோ தவமிருந்து பிச்சை கேட்கிறார்கள் இளைய தளபதியும், உலகநாயகனும். சொத்துக் குவிப்பு வழக்கிற்காக ஜெயா தண்டிக்கப்பட்ட போது “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?” என்று கொந்தளித்தது தமிழ்த் திரையுலகம்.
கேப்டன் அடிவாங்கி மண்ணைக் கவ்விய பின்னரும், இஸ்திரி பெட்டியும் மூணு சக்கர வண்டியும் கொடுத்து, முதலமைச்சர் ஆகிவிடும் கனவிலிருந்து தமிழ்க் கதாநாயகர்கள் இன்னும் விழிக்கவில்லை. இவர்களது கனவை நிரந்தரமாக கலைத்தாலன்றி தமிழகத்துக்கு விடிவு இல்லை. தமிழ்ச் சமூகத்தை சீரழிக்கும் முதுகெலும்பற்ற இந்த ஒட்டுண்ணிக் கூட்டத்தைத் தொலுரிக்கிறது இந்த தொகுப்பு!
தோழமையுடன் புதிய கலாச்சாரம்
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
1. காந்தி, நேரு, காமராஜர் நக்மா, பாபிலோனா, குஷ்பு… !
2. ஓடு தலைவா ஓடு !
3. புதிய தலைமுறை : நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா ?
4. அஜித்துக்கு உதவிய அப்புக்குட்டியின் பெருந்தன்மை
5. கபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா !
6. விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புகள் ?
7. யு டூ புரூஸ் வில்லிஸ்…
8. கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?
9. ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி !
10. சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள் ?
11. பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்
12. ரஜினி – கமலுக்கு ரேசன் அரிசி வழங்கு !
13. பி.வி.ஆர் சினிமா : அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்
14. பதிவர்களை அழவைத்த ‘தல’யின் மட்டன் பிரியாணி ‘மனிதாபிமானம்!’
பக்கங்கள் : 80 விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களால் கடந்த 24-08-2016 அன்று கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலைய நுழை வாயிலில் நடைபெற்றது.
அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதற்காக கோவை மாவட்ட பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் உமா மீது ஒரு வழக்கு, அனுமதி கேட்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரின் மீதும் ஒரு வழக்கு எனப் பதிந்து கருத்து சுதந்திரம் எனும் தமது ஒப்பனை கலைந்த விகார முகத்தை மீண்டும் ஒருமுறை காவல் துறை காட்டியுள்ளது.
கோவை மாவட்ட ம.க.இ.க செயல் வீரர் தோழர் மணிவண்ணன் இறப்பிற்கு கோவை வந்திருந்த மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒரு கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. “கோவை என்பது குட்டி காஷ்மீரம் போல. இங்கு மட்டும் போலீசுக்கு தனி சட்டம், தனி விதிமுறைகள் அதையொட்டிய அடக்குமுறைகள்”. மேற்கண்ட கூற்றின் நடைமுறை விளக்கமே இந்த வழக்குகள்.
மேற்கண்ட அதே இரங்கல் கூட்டத்தில் பேசிய தோழர் மருதையன், “ம.க.இ,க.விலேயே அதிக முறை சிறை சென்ற தோழர்களில் மணிவண்ணனும் ஒருவர், சுமார் 25 முறை சிறை சென்றிருக்கிறார்” எனக் கூறினார். அவர் 25 தடவைகளிலும் கோவை சிறையைத்தான் கணிசமான முறை பார்த்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை.
ஆக, இப்படி அடக்குமுறைக்கு பெயர் போன கோவை மாவட்டம் தனது இந்த காவல்துறை பாசிசத்துக்கான அடிச்சுவட்டில் முன் சென்ற காலம் என்பது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளும் மத வெறிக் காலிகளும் காவல் துறையுடன் இணைந்து நடத்திய 1998 கலவரத்தில் இருந்து துவங்குகிறது இதன் கேடு கெட்ட வரலாறு. 1998 துவங்கி இதுகாறும் சுமார் 18 ஆண்டுகளாக தொடர்கிறது. சுவரொட்டி ஒட்டத் தடை, தெருமுனைக் கூட்டம் நடத்தத் தடை, பஸ் பிரச்சாரம் செய்ய தடை, பகுதிப் பிரச்சாரம் செய்யத் தடை. வழக்கு வழக்கு வழக்கு என்று சுருங்கச் சொன்னால் இது ஒரு குட்டி காஷ்மீரம் தான்.
இந்த சிறப்பு நிலைமைதான் மத வெறியர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஜனநாயக அமைப்புகளின் நியாயமான போராட்டங்களுக்கு தடை விதிக்கிறது. புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை வழக்கு மிரட்டல் போன்ற பல்வேறு வகைகளில் ஒடுக்குகிறது. ஜக்கிக்கு, சி.ஆர்.ஐ, பெஸ்ட் நிறுவன முதலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதும் இதே காவல் துறைதான். அதே ஜக்கியால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினாலோ – அது மதுரையை சேர்ந்த காவலராகவே இருக்கட்டுமே – அவர்களையும் மேற்கண்ட பாசிச முதலாளிகளை எதிர்த்துப் போராடினால் அவர்களை ஒடுக்குவதும் இதே காவல் துறைதான். மேற்கு தொடர்ச்சி மலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு, நொய்யலை நோயாளியாக்கி ஐ.சி.யு வில் கிடத்தியிருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் இதே காவல் துறை தான். அதே மேற்குத் தொடர்ச்சி மலைக்காக, நொய்யலுக்காக, சிறுவாணிக்காக போராடுபவர்களை நசுக்கி ஒடுக்குவதும் இதே காவல் துறைதான்.
பு.மா.இ.மு-வின் மேற்கண்ட ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்காமல் நடத்துவது என்ற முடிவின் படி அதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தோம். சுவரொட்டியை பார்த்தவுடன் சுமார்-10க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் அழைத்து, “எங்கு செய்யப் போகிறீர்கள் எனக் கூறுங்கள். நாங்க உங்களுக்கு பர்மிஷன் தர மாட்டோம்னு சொல்லிருக்கோமா.. ஏன் இப்பிடிப் பண்ணுகிறீர்கள்?” என கேட்டு டார்ச்சர் செய்வது, “இன்ஸ்பெக்டர்கிட்ட சும்மா அனுமதி மாதிரி எழுதிக் கொடுத்திருங்க.” என்பன போன்ற இடையூறுகளை தாண்டி அந்த வலிய பிரச்சினைக்கான எளிய எதிர்ப்புக் குரல் 24-08-2016 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது. மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற பின்பு கொடி, முழக்கத் தட்டிகள் பதாகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்கின்றனர். வழக்கு போடுவதாக அறிவிக்கின்றனர். ஆக, இவர்கள் அனைத்து முனைகளிலும் அத்துமீறி நடப்பார்களாம். நாம் அனைத்திற்கும் தகவல் சொல்லி இவர்களுக்கு முறையாக அழைப்பு கொடுத்து நடக்க வேண்டுமாம். போராட்டம் கருவாகும் போதே காவல் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டாக வேண்டும் என்பது தான் இங்கு சொல்லிக் கொள்ளும் ஜனநாயகத்தின் நடைமுறை வடிவம்.
அதிலும், இறுதியாக ரேஸ்கோர்ஸ் காவல் துறை ஆய்வாளர் மண்டபத்திற்கு வந்து பேசியது காவல் துறை அதிகாரிகளின் வழக்கமான நயவஞ்சகமான தேன் தடவிய மிரட்டலுக்கு ஒரு வகை மாதிரி. “நீங்க செய்வதெல்லாம் நல்ல விஷயம் தான். நானும் சின்ன வயசில இது மாதிரி இருந்து வந்தவன் தான். நீங்க என்ன பண்ணாலும் சொல்லிட்டு பண்ணுங்க. நாங்களும் இதையெல்லாம் நல்லதுன்னு நினைக்கிறோம். இருந்தாலும், என் உயிர் போன்ற காவல்துறையை நீங்க இதே போல் அலைக்கழித்தால் கண்டிப்பாக ரிமாண்டுதான். மேலதிகாரிங்க சொல்லியும் நாங்க உங்களை வழக்கோடு விடுறோம். எழுதி வச்சுக்கோங்க, இன்னொரு முறை இது போல செய்தால் சிறைதான்.” என்று பகிரங்கமாகவே மிரட்டினார்.
போராட்டக் கொதிகலனாய் பாட்டாளி வர்க்க உலைக்களமாய் இருந்த தொழில் நகரான கோவையை காயடித்ததில் போலிகளான சி.பி.ஐ, சி.பி.எம்.க்கு பிரதான பங்கு இருக்கிறது. போராட்டம் என்பதையே அறிமுகப்படுத்தாத ஒரு தலைமுறையை இங்கு உருவாக்கியதன் விளைவுதான் இது. இதை மாற்றுகையில் நம் பக்கம் ஏற்படும் சேதாரம் தவிர்க்கவியலாதது. மரபு ரீதியிலான போராட்ட வடிவங்களை தாண்டி கோவையில் நடந்த இந்த போராட்டம் என்பது கோலியாத்தை நோக்கி தாவீது வீசிய ஒற்றைக் கல். இதை நிச்சயமாய் வளர்த்தெடுப்போம். அன்று, பேசிப்பார்க்கட்டும் இதே உயிர் போன்ற காவல் துறையின் மேன்மையை பறை சாற்றும் கஞ்சி போட்ட வசனங்களை !
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மூடு டாஸ்மாக்கை ! மணப்பாறையில் போராட்டம் தொடர்கிறது…
மணப்பாறை தாலுக்காவுக்கு உட்பட்ட அமையபுரம், வேங்கைகுறிச்சி, பழைய கோட்டை பஞ்சாயத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைவரும் கூலி வேலை, கட்டிட வேலை செய்வோராகவும் மற்றும் சிறு விவசாயிகளாக உள்ளனர். இப்பகுதியில் மையமாக உள்ள ஒத்தக்கடை அருகே உள்ள டாஸ்மாக் கடையினால் (கடை எண் 10400) அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடையை சுற்றி உள்ள டீ கடை, டிபன் கடை உள்ளிட்ட அனைத்தும் டாஸ்மாக் பார்களாக மாற்றப்பட்டு குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வந்து காலை முதலே குடிப்பதும், குடித்துவிட்டு சாலையில் கிடப்பது, ஆபாசமாக பேசுவது, பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைப்பது, சாலையில் போவோர் வருவோரிடம் தகராறில் ஈடுபடுவது, அப்பகுதியை கடந்து செல்லும் பெண்களை பார்த்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி கிண்டல் செய்வது என தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.
இப்பகுதியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் உள்பட பல வயதினரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் தினந்தோறும் மக்கள் கிராமங்களில் நிம்மதியின்றி தவித்து வருகின்றனர். வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை குடித்தே அழிக்கின்றனர். வேலை இல்லாத நாட்களில் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விற்று குடிப்பதும் தடுத்தால் அடிப்பதும், பொருட்களை உடைப்பது என மனநலம் பாதிக்கப்பட்டோர்களாக மாறி வருகின்றனர். போதை தலைக்கேறிய பிறகு கண்ணெதிரே நிற்பது தாயா, தாரமா என வித்தயாசமின்றி நடந்து கொள்கின்றனர். இதனால் வீதிதோறும் குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மன ரீதியாகவும், உடல் ரீதியாவும் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கணவனை இழந்து 20-க்கும் மேற்பட்டோர் விதவைகளாக உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி கை, கால் உடைந்து முடமாவது, உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. நேர்மையான முறையில் கூலி வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அதில் மண் அள்ளிப் போடும் விதமாக அரசு மதுபான கடை உள்ளது. ஆகவே மேற்கண்ட டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தோழர்கள் பணியாற்றி மக்களை திரட்டி மக்கள் அதிகாரத்தின் சார்பாக ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பது என முடிவு செய்து 22-8-2016 அன்று காலை 11.00 மணியளவில் மணப்பாறை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு பகுதி மக்கள், பகுதி தோழர்கள், திருச்சி பகுதியைச் சேர்ந்த தோழர்கள், மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர். தர்மராஜ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
உள்ளே நுழையும் போதே அப்பகுதி பெண் ஆய்வாளர், “உங்களை பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கபடும் என்றும், கொடி பேனர்கள் உள்ளே அனுமதி இல்லை”யென மிரட்டினார்.
ஆனால் தோழர்கள், “நாங்கள் என்ன குற்றவாளிகளா, அமைப்பின் சார்பாக மனு கொடுக்க வந்துள்ளோம். அதுவும் எங்களது மாவட்ட ஆட்சித்தலைவரிடம். அதை தடுப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது” என கேள்வி கேட்க, ஆய்வாளர் பதில் எதுவும் கூற முடியாமல் துணை கமிசனருக்கு போன் செய்து யாரோ சட்ட விரோதமாக அலுவலகத்திற்கு வந்து விட்டதைப்போல உணர்ச்சி பொங்க கூறினார்.
வந்த கமிசனர் மக்கள் அதிகார பதாகையுடன் குழுமியிருந்ததை பார்த்தபின், “உங்களுக்கு என்ன சார் பிரச்சனை” என்று கேட்டார். அவர் பணிவோடு பேசியதைப்பார்த்து பெண் ஆய்வாளர் வாய் அடைத்துப்போனார்.
அவரிடம், “நாங்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனுகொடுக்க வேண்டும்” என்று கூறினோம்.
வட்டாட்சியர் வருகை தந்து, “ஐந்து பேர் உள்ளே சென்று மனு கொடுங்கள்” எனக் கூறினர்.
“நாங்கள் பல கிராமங்களில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் சென்று ஆட்சியரை சந்தித்து பேச வேண்டும்” என்று கண்டிப்பாக கூறினோம்.
அதை ஏற்றுக் கொள்ள மறுத்து மக்களை 1 மணி நேரம் காக்க வைத்தனர். அப்படி செய்தால் அனைவரும் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் உறுதியோடு அங்கேயே அமர்ந்து விட்டனர். அதன்பின் வேறு வழியில்லாமல் அனைவரையும் உள்ளே சென்று சந்தித்து பேச அனுமதித்தனர்.
அனைவரும் ஆட்சித்தலைவரின் முன்பே வரிசையாக சென்று ஒவ்வொருவரும், “ஒருவார காலத்திற்குள் கடையை மூட வேண்டும், இல்லையென்றால் நாங்களே கடையை மூடுவோம்” என்று கூறியதும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயடைத்துப்போனார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இப்படிப்பட்ட நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். இப்படியெல்லாம் ஆட்சியரிடம் பேசமுடியுமா என்று மக்கள் பரவலாக பேசிக்கொண்டனர். இது மக்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
அரசு என்றாலே மக்களுக்கானது இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக கடையை அங்கே மாற்றப்போகிறோம்! இங்கே மாற்றப்போகிறோம்! என்பது போல நாடகமாடி, உளவுத்துறையை வைத்து மக்களை மிரட்டியதோடும், சரக்கை இறக்க வேண்டாம் என்று வட்டாட்சியர் கூறியது போலவும் அதிகாரிகளும் காவல்துறையும் சேர்ந்துகொண்டு பித்தலாட்டம் செய்து கடையை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் 27-08-2016 அன்று சுமார் 100 காவலர்களை டாஸ்மாக்கை பாதுகாக்க இறக்கியுள்ளது. இது அரசின் அச்சத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதை மீறி இப்பகுதி மக்கள், மக்கள் அதிகாரத்தின் துணையோடு கடையை எடுத்தே தீரவேண்டும் என்று உறுதியோடு போராட தாயாராகி வருகிறார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்தியாவில் மலேரியாவால் ஆண்டுதோறும் இறப்பவர் எண்ணிக்கை என்ன? தொண்டு நிறுவனங்கள் 2 லட்சம் என்றும், உலக சுகாதார நிறுவனம் 15,000 என்றும் கூறும் போது, வெறும் 561 பேர் மட்டும்தான் இறப்பதாக இந்திய அரசு கூறுகிறது. ஏழைகளின் எண்ணிக்கையை குறைப்பது போல அவர்களின் இறப்பையும் குறைத்து வேடம் போடுகிறது இந்திய அரசு.
மலேரியா கொசு
மலேரியாவின் தாக்கத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்திய நோய்கண்காணிப்பு அமைப்பு எனும் பெயரளவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1000 க்கும் மிகாமல் இருக்குமாறு ப் பார்த்துக் கொள்கிறது, இந்திய அரசு.
மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக 2011-ம் ஆண்டில் 665 கோடிகள் வரை செலவிட்ட இந்திய அரசு 2013-ம் ஆண்டிலோ அதில் பாதியை மட்டுமே செலவிட்டு இருக்கிறது. பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதாரத்திற்காக 2,68,551 கோடிகள் நிதியாதாரம் ஒதுக்கப்படும் என்று திட்ட ஆணைக்குழு உறுதியளித்தது. ஆனால் அதில் 45 விழுக்காட்டு நிதி தான் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
பிறகு மலேரியாவோ, டெங்குக் காய்ச்சலோ பரவாது?
இந்திய அரசு 2015-ம் ஆண்டிற்குள் 75 விழுக்காடு வரை மலேரியாவை கட்டுப்படுத்தி விடும் என்று தன்னுடைய 2014 ம் ஆண்டின் மலேரியா அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால் மலேரியாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 8 லட்சத்தில் இருந்து 2014-ம் ஆண்டு 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது.
இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் உறைவிடமான கிராமங்கள் தான் மலேரியாவின் நோய்க்கூடாரம்
மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழும் இந்தியக் கிராமங்களுக்கு மொத்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளில் 20 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. மலேரியாவை ஒழிப்பதற்கான தீர்வுகள் இங்கே பெரும்பான்மையான ஏழை எளிய மக்களுக்கு கானல் நீர்தான். இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் உறைவிடமான கிராமங்கள் தான் மலேரியாவின் நோய்க்கூடம் எனலாம்.
ஆனால் உலக சுகாதார நிறுவனமோ மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை மருத்துவமனைகளில் இருந்து மட்டுமே பெற்று தங்களது ஆய்வறிக்கையை வெளியிடுவதாக லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. ஆனால் 90 விழுக்காட்டு மரணங்கள் கிராமங்களில் தான் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் 86 விழுக்காட்டு மரணங்கள் எந்தவித சிகிச்சையுமின்றி குடிசைகளில் அடைபட்டு வெறும் இறப்புச் சான்றிதழை மட்டுமே கோருகின்றன. எனில் மலேரியாவின் மரணங்கள் இந்தியாவில் இலட்சத்தை தாண்டுவது உறுதி!
மலேரியா நோய்க் கிருமிகளுள் பிளாஸ்மோடியம் பால்சிபரும்(P.falciparum) மற்றும் பிளாஸ்மோடியம் விவக்ஸ்(P.vivax) என்ற இரு கிருமிகள் தான் உலகெங்கும் மலேரியா மூலம் மக்களைக் கொல்லுகின்றன. உயிர்க்கொல்லி நோயான மலேரியாவிற்கு எதிராக உயிர்காக்கும் மருந்துகள் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் வீரியம் குறைகிறது. அந்த மருந்துகளும் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. குளோரோகுயின் என்ற மருந்து பி.விவக்ஸ் கிருமிக்கும், ஆர்டிமிசினின் என்ற மருந்து பி.பல்சிபரும் கிருமிக்கும் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கபடுகிறது.
ஆர்டிமிசினின் மருந்தை கண்டறிந்ததற்காக சீனாவின் யுயு து(Tu Youyou) 2015 ல் நோபல் பரிசை பெற்றிருக்கிறார்.
ஆர்டிமிசினின் மருந்தை கண்டறிந்ததற்காக சீனாவின் யுயு து(Tu Youyou) 2015 ல் நோபல் பரிசை பெற்றிருக்கிறார். ஆர்டிமிசினின் மருந்தை யுயு து சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து கண்டறிந்தார். சோசலிச சீனாவின் சிறந்த கொடைகளில் ஒன்றான ஆர்டிமிசினின் மருந்து உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களை மலேரிய நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து காத்து வருகிறது.
ஆயினும் மருந்து மட்டுமே போதுமானதா? அரசு மருத்துமனைகளில் தேவையான பணியாளர்கள் இல்லாததாலும், மிக மோசமான உள்கட்டமைப்பு காரணமாகவும் 75 விழுக்காட்டு இந்தியமக்கள் தனியார் மருத்துமனைகளில் ஒதுங்குகின்றனர். ஆனால் இலாபம் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் தனியார் மருத்துமைனைகளில் சிகிச்சையைத் தொடர வழியில்லாமல் முடங்கிவிடுகின்றனர்.
இப்படி நவீனமருத்துவம் ஆகப்பெரும்பான்மையான மக்களை நிராகரித்து விட்ட நிலையில் நோய்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள கணிசமான மக்கள் மாற்று மருத்துவத்தை நாடுகின்றனர்.
மாற்று மருத்துவங்களான சித்தா,ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவங்களோ பார்ப்பனிய புரட்டுக்களிடம் சிக்கி திணறுகின்றன. பார்ப்பனர்களின் புராணப் புளுகுகளை ஆராய்ச்சி செய்ய ஆயுஷ் (AYUSH) என்ற தனி அமைச்சரைவையை உருவாக்கி ஆயிரக்கணக்கான கோடிகளை தண்டமாக்குகிறது இந்திய அரசு. நவீனமருத்துவம் கோரும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சிகள் எதுவும் செய்யாமல் அறிவியல் கண்டடைந்த மிகச்சிறந்த கண்டுபிடிப்பான மரபியலை(Genomics) பெயரில் ஒட்டிக்கொண்டு ஆயுர்ஜீனோமிக்ஸ் (Ayurgenomics) போன்ற அதார் உதார்களை அள்ளிவீசுகிறது.
கல்லீரலில் நுழைந்து உடல் முழுக்க பல்கிபெருகும் இந்த நோய்கிருமிகளை முற்றாக அழிக்கும் வரை தொடர்ச்சியான மருத்துவ உதவித் தேவைப்படுகிறது.
தாகம்தணிக்கத் தண்ணீர் உட்பட அடிப்படைவசதிகள் மறுக்கப்பட்டு, மருத்துவசதிகள் தீண்டாத தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உள்நாட்டு அகதிகளாக பிய்த்து எறியப்பட்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்கள்தாம் மலேரியாவின் எளிய இலக்குகளாக இருக்கின்றனர்.
தனியார்மய தாராளமய தயவால் 57 விழுக்காடு இந்திய மருத்துவர்கள் மருத்துவத்தகுதிகள் எதுவுமே இல்லாமல் தற்குறிகளாக இருக்கின்றனர். கல்லீரலில் நுழைந்து உடல் முழுக்க பல்கிபெருகும் மலேரியா நோய்க்கிருமிகளை முற்றாக அழிக்கும் வரை தொடர்ச்சியான மருத்துவ உதவித் தேவைப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவத்திற்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு தவறான மருந்துகளை பரிந்துரைப்பது, முறையான மருத்துவ வழிகாட்டல்களை குடுக்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகிறது.
மலேரியாகிருமிகள் (ஒரு இடத்தில்) ஒரு மருந்தை எதிர்க்கும் வலிமையை பெற்றுவிட்டால் அந்த மருந்தை (அந்த இடத்தில்) தொடர்ந்து பயன்படுத்த இயலாது. அது மட்டுமல்லாமல் அந்த மருந்தை போலவே அமைப்பை கொண்ட வேறு மருந்துகளையும் எதிர்க்கும் ஆற்றலையும் அந்த கிருமிகள் பெற்றுவிடும். அதுவே உலகம் முழுதும் பரவும் போது அதை அழிப்பதற்கான ஒரு புதிய மருந்தை தான் கண்டுபிடிக்க வேண்டும்.
தென்கிழக்கு ஆசியநாடுகளான கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பி.பல்சிபரும் கிருமியும், இந்தோனேசியா, கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பி.விவக்ஸ் கிருமியும் இத்தைகைய தன்மையைப் பெற்று விட்டன. தென் அமெரிக்க நாடுகளில் பி.பால்சிபரும் கிருமியை அழிக்கும் குளோரோக்யூன் மருந்தை உலகில் வேறு எந்த நாடுகளிலும் பயன்படுத்த முடியாத வகையில் புதிய அவதாரம் எடுத்துவிட்டது.
மரபணு வரிசைமுறை(Genome Sequencing) மூலம் நோய்க்கிருமிகளின் மரபியல் மாற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்து அதை அழிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியான ஆராய்சிகள் ஒருபுறம் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக பி.பால்சிபரும் பெற்றுள்ள மருந்து எதிர்ப்புசக்திக்கு kelch13 மரபணுவில் ஏற்பட்டுள்ள 20 மாற்றங்களே காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்..
பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் மீது சுமத்தியிருக்கும் இந்த சமூகச்சூழலை மாற்றாமல் மலேரியாவை ஒழிக்க முடியாது
ஆர்டிமிசினினை தனிமருந்தாக பயன்படுத்தாமல் ஆர்டிமிசினின் கூட்டு சிகிச்சையைப்(Artemisinin Combination Therapy ) பயன்படுத்தும் போது 95 விழுக்காடு வரை நோய்க்கிருமிகள் எதிர்ப்புத் தன்மையை இழந்து விடுகின்றன. ஆர்டிமிசினின் மருந்தை நாம் இழந்து விட்டால் நீண்ட காலத்திற்கு மலேரியா நோயை குணப்படுத்த நம்மிடம் எதுவுமில்லை என்கிறார் மலேரியா ஒழிப்பிற்கான உலக சுகாதாரநிலையத்தின் முன்னாள் இயக்குனர் மருத்துவர் அரட்டா கொச்சி.
ஆர்டிமிசினின் மருந்தை தனிமருந்தாக தயாரித்து விற்ககூடாது என்று 2006-ம் ஆண்டு ஜனவரி 19 அன்று மருந்துநிறுவனங்களுக்கு உலக சுகாதாரநிறுவனம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதன்பின்னரும் இலாபமே குறிக்கோளாக கொண்ட இந்திய மருந்துநிறுவனங்கள் ஆர்டிமிசினினை தனிமருந்தாக தயாரித்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக மலேரியாவிற்கான உலக சுகாதாநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேரியாவிற்கான நிரந்தரமான தீர்வை அறிவியல் உலகம் விரைவில் கண்டுபிடித்து விடக் கூடும். ஆனால் அந்நோயினை பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் மீது சுமத்தியிருக்கும் இந்த சமூகச்சூழலை மாற்றாமல் மலேரியாவை ஒழிக்க முடியாது. அதுவரை இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மலேரியாவால் சாகும் போது, அந்த எண்ணிக்கையைக் குறைத்து விட்டு வல்லரசு ஜோரை காண்பிப்பதையே இந்திய அரசு செய்யும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு கல்லறை கட்டுவதற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடுவோம்!
சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி உரிமையை மறுத்து, அடிமைகளாகவும், வெற்றுச் சதைப் பிண்டங்களாகவும் வைத்திருந்த பார்ப்பனக் கும்பல், உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதைச் சகிக்க முடியாமல், தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்குத் தடை, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலா கொலை, டெல்லி ஜெ.என்.யூ.வில் கண்ணையா குமார் மீது தாக்குதல், பூனா திரைப்படக் கல்லூரி, ஜாதவ்பூர் என மாணவர் அமைப்புகளை ஒடுக்குவது என தொடர்ந்து பார்ப்பன பாசிச கும்பல் ஆட்டம் போட்டு வருகிறது. இறுதியாக, புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் நவீன குலக்கல்வி முறையை கொண்டு வரப் புறப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மாணவர்களின் எழுச்சி மூலம் வால் அறுக்கப்பட்ட போதிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும், கல்வி முறையிலும், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இந்தியாவெங்கும் இந்து மதவெறியர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள், தலித்கள் மீதான அடக்குமுறை வெறியாட்டங்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் படுகொலைகள் என்று அதிகரித்து வரும் பாசிசக் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தி எழுதப்பட்ட நூலை, 28-07-2016 அன்று வெளியிட்டதை எதிர்த்தும், வெளியிட்ட மாணவர் பேரவையின் மீதும், அதற்கு அனுமதி அளித்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவிக் குரங்கான பா.ஜ.க-வும், அதன் குட்டியான ஏ.பி.வி.பி–யும் 01-08-2016 அன்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூச்சலிட்டனர். (இது தொடர்பாக 03-08-2016 அன்று வினவில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது)
பா.ஜ.க, ஏ.பி.வி.பி குண்டர் படையின் இந்த அட்டூழியங்களைக் கண்டித்து ஜனநாயக முறையில் எங்களது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்புக்குழுவின் கருத்தை சொல்ல 22-08-2016 ஆர்ப்பாட்டம் நடத்த போலிசிடம் அனுமதி கேட்ட போது, பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றி கூட்டங்கள் நடத்த பல்கலைக் கழக நிர்வாகம் தடை வாங்கியுள்ளதாக தெரிவித்தது. ஏ.பி.வி.பி உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி அளித்தது பற்றி கேட்ட போது வாய் திறக்க மறுத்து விட்டது. இறுதியில் பல்வேறு போராட்டம், அலைக்கழிப்பிற்குப் பிறகு பல்கலைக் கழகத்திலிருந்து சுமார் 08 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரப் பகுதியான முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில், மாலை 05.00 மணிக்கு, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முதல் நாள் இரவு தான் அனுமதி அளித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக் குழு தோழர் பரத் தலைமை தாங்கினார்.
தனது தலைமையுரையில், இந்தப் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பாசிச குண்டர் படை, நாடெங்கிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தங்களது களமாக்க தாக்குதல் நடத்துவது, கொலை உள்ளிட்ட பாசிச வெறியாட்டங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எனவே, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடக்கும் விசயம் என குறுக்கிப் பார்க்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளாக சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும் கல்வியை மறுத்த பார்ப்பனியம், இன்றும் தனது பாசிசத் தாக்குதல்கள் மூலம் ஜனநாயகமாகவும், முற்போக்காகவும் செயல்படும் மாணவர்களையும், தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் கல்வி பயில வரவே கூடாது என மிரட்டும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம், மாணவர்களை கார்ப்பரேட்டுகளின் அடிமையாகவும், சதைப் பிண்டமாகவும் மாற்றும் வேலைகளிலும் இறங்கியுள்ளது. எனவே, இது வெறும் மாணவர் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் பிரச்சினை என்று போராட அறைகூவினார்.
பெரியார் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கோகுல் காந்திநாத், இந்தியா மதச் சார்பற்ற நாடே அல்ல. மத அடிப்படையிலான நாடு தான் என்பதையும், சுதந்திரம் என்பது ஏமாற்று என்பதையும், கொடியின் மூவர்ணத்தை வைத்து விளக்கியதோடு, இந்து தெய்வங்களின் யோக்கியதையையும் சாடினார். பார்ப்பானர்கள், தமது ஆதிக்கத்தை நிலை நாட்டும் வேலைகளில் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாம் அவன் சொன்னால் சரியாக இருக்கும் என்று ஏமாளிகளாக இருக்கிறோம் என்றார். இன்றைய அதன் உருவம் தான் புதிய கல்விக் கொள்கை, பெரியார் காலத்தில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை, இன்று கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் பார்ப்பனர்கள் கொண்டு வருகிறார்கள். அன்று பெரியாரின் போராட்டம் அதை முடிவுக்குக் கொண்டு வந்தது போல், இன்று நாம் தான் புதிய கல்விக் கொள்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தோழர் தீனா, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ஒரு கருத்தைச் சொல்ல உரிமையில்லை என்றால் இது சுதந்திர நாடா? என்று கேள்வி எழுப்பினார். அவர்வர் தங்களது கருத்தைச் சொல்வது அவர்களின் உரிமை. அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதை அவர்கள் சொல்ல வேண்டும். இதை விடுத்து தாக்குதல் நடத்துவது என்பதே ரவுடித்தனம் என்றார். குலக்கல்வியின் நவீன வடிவம் தான் புதிய கல்விக் கொள்கை என்றவர், வாளெடுத்தால் தான் பிரச்சினை தீருமென்றால், வாளெடுப்பது தவிர வேறு வழியில்லை என்ற பெரியாரின் கருத்தைக் கூறி நிறைவு செய்தார்.
தோழர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த நபர் வந்து தான் அந்தப் பகுதி பா.ஜ.க-வின் பொறுப்பாளர் என்றும், இந்த கூட்டத்தின் தலைவர் யார்? என்றும் கூட்டம் தொடர்ந்து நடந்தால் கலவரம் நடக்கும் என்றும், இந்த விசயங்களைப் பேசுவதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்றும் அருகில் இருந்த எஸ்.ஐ.யிடம், கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் எஸ்.ஐ., ஆர்ப்பாட்டத்தின் தலைவரை அழைத்து, ஆர்.எஸ்.எஸ் பற்றியெல்லாம் பேசாதீங்க என்று சொன்னதை, நாம் பேசுவோம் என்று சொன்னதுடன் அதை அம்பலப்படுத்தியும் பேசப்பட்டது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைச்செயலாளர் தோழர் லோகநாதன், விசயங்களைப் பேசக்கூடாது என்று சொன்னால் எப்படி பேசாமல் இருக்க முடியும் என்று கேள்வி பதில் பாணியில் விளக்கும் வகையில் தோழர் பேச ஆரம்பித்தார்.
ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி குண்டர் படை, தொடர்ந்து நாடெங்கிலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு வகைகளில் முயன்று வருவதை விளக்கி, சந்திரா கிருஷ்ணமூர்த்தி, போலியான ஆவணங்கள், ஆய்வுக் கட்டுரைகள் மூலம் துணைவேந்தராக ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதரித்த மோசடிக் கும்பல், இந்துத்துவாவின் பாசிசத்தன்மையை, மோடியின் கொலை வெறியாட்டத்தை ஆய்வு செய்து எழுதிய உண்மையை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாக்குதல் நடத்துவதைப் பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?
புதுச்சேரியில், காஷ்மீர் பிரச்சினையை ஒட்டி, 300 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் இந்து முன்னணிக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுத்து விட்டு, அதன் மூலம் கலவரத்தை உருவாக்கும் அரசும், மக்களை பாதுகாக்கத் துப்பற்ற போலிசும் பார்ப்பனியத்திற்குப் பங்காளியாக இருப்பது பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ஆண்டு மலரை வெளியிட அழைத்த போது, முதலில் ஏற்றுக் கொண்டு, பின் பிரச்சினை என்னவென்றே ஆய்வு செய்யாமல், ஒதுங்கிய கவர்னர், முதலமைச்சர் ஆகியோரது பார்ப்பனிய ஆதரவு நடவடிக்கைகளையும், முஸ்லிம் மக்களிடம் சமாதானம் பேசிய கவர்னர், முதலமைச்சர் மற்றும் அரசின் உயரதிகாரிகள், இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் அதே பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்து கலவரத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்?
பாஜக. டெல்லி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண்பேடியும், காங்கிரசு அரசில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமியும் மக்கள் பிரச்சினைகளில் அரசியல் செய்யும் நிலையில், இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவு தருவதில் கட்சி, கொள்கை என்ற வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக செயல்படுவதைப் பற்றி எவ்வாறு பேசாமல் இருக்க முடியும்?
புதிய கல்விக் கொள்கை என்பதே மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டு வரும் மோசடி தான், ஆன்லைன் கல்வி மூலம், ஆசிரியரின்றி கல்வி கற்கும் முறை என்பது, கார்ப்பரேட்டுக்களுக்குத் தேவையான கல்வி கற்று, அவர்களின் அடிமைகளாகவும், மனித விழுமியங்கள், பழக்க வழக்கங்கள், நெறிமுறைகள் அல்லாத வெற்றுச் சதைப் பிண்டங்களாகவும் மக்களை மாற்றுவது பற்றியும், அதற்கு மூல காரணமாக உள்ள பார்ப்பனியத்தையும் அதைச் செயல்படுத்தும் மோடி அரசைப் பற்றியும் எவ்வாறு பேசாமல் இருக்க முடியும்?
இவ்வளவு பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமென்றால், இருக்கின்ற அரசின் உறுப்புகள் அனைத்தும், ஒரு புறம் காவி மயமாகவும், மறுபுறம் மக்களுக்கு தேவையற்றதாகவும் மாறியுள்ளதையும், அதற்கு தீர்வு அதிகாரத்தைக் கையில் எடுக்க களத்தில் இறங்குவதே என்பதைப் பற்றியும் பேசாமல் எப்படி இருக்க முடியும்? நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில் பேசியே தீர வேண்டும் என்று பேசி முடித்தார்.
ஆர்ப்பாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த பாஜக.-பகுதிப் பொறுப்பாளர் என்று சொன்ன நபர், ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், “அடுத்த கூட்டம் நடந்தால் பார்த்துக் கொள்கிறேன்” என்று புலம்பி விட்டு சென்று விட்டார்.
இடைஇடையே போன் செய்து இந்நேரத்திற்கு எவனும் போன் எடுக்காமல் இருக்கின்றனர். அவர்கள் வந்தால் ஒரு கை பார்த்து விடலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்த மழை, கொட்ட ஆரம்பித்தது. காவி குண்டர் படை வந்திருந்தால், கொட்டும் மழையில், அவர்களின் கொட்டத்தையும் மக்கள் முன் அம்பலமாக்கி அடக்கி இருக்கலாம்.
தகவல், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – அமைப்புக்குழு, தொடர்புக்கு : 81244 12013.
பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது
கடந்த பத்து – பதினைந்து ஆண்டுகளில் எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் தானாகவே பணத்தை பறிகொடுத்தவர்கள் பல பேர். அதில் 112 மாணவர்கள் தற்போது புகார் கொடுத்திருக்கின்றனர். இவர்களிடம் மதன் மூலமாக பச்சமுத்து கொள்ளையடித்த பணம் சுமார் 72 கோடி ரூபாய். இந்தக் கொள்ளைப் பங்கில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதன் தலைமறைவாக பச்சமுத்து தனக்கும் மதனுக்கும் தொடர்பில்லை என்று அலட்சியமாக கைவிரித்தார்.
பச்சமுத்துவின் புதிய தலைமுறை ஊடக செல்வாக்கு, பா.ஜ.க கூட்டணியின் பாதுகாப்பு, அ.தி.மு.கவிற்கு கப்பம் கட்டுவதால் உள்ள சலுகை காரணமாக பாரிவேந்தர் தரணியெல்லாம் ஜென்டில்மேனாக உலா வந்தார். இத்தகைய பெரும் பண மோசடி குறித்த புகாரை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தால் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வார்கள். ஆனால் மதனைத் தேடுகிறோம், காசி யாத்திரை போகிறோம் என்று போங்காட்டம் ஆடினார்கள். தெருவில் துப்பினாலே துப்பியவனை என்கவுண்டர் செய்ய வேண்டுமென்று குதிக்கும் ஊடகங்களோ இதில் கள்ளமவனம் சாதித்தன. இந்நிலையில் பல்வேறு தயக்கங்கள், தடைகள், ஆலோசனைகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை 26.08.2016 அன்று மதியம் போலிசார் பச்சமுத்துவை கைது செய்திருக்கின்றனர்.
இந்தக் கைதும் ஒரு பெற்றோர் தரப்பினருக்கான புகார் மட்டுமே. மீதி 111 புகார்களுக்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அதிலும் இறுதி வரை பச்சமுத்துவைக் கைது செய்யக் கூடாது என்று உயர் போலீஸ் அதிகாரிகளும், தமிழக அரசின் உயரதிகாரிகளும் கடைசி வரை பெரும் பிரயத்தனம் செய்திருக்கின்றனர். விசாரணையின் போது வீட்டிலிருந்து உணவு,படுக்கை, ஊடக காமராக்களிடமிருந்து பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வரவேற்பு. பிறகு வேறு வழியில்லை, ஏதாவது கைது செய்து கணக்கு காட்டவேண்டிய நிலை என்று வந்த பிறகு முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு போன்று இந்த அனுமதியும் பல மணி நேரங்களுக்கு பிறகு வந்திருக்கிறது. ஒரு கொள்ளையரை கைது செய்ய எதற்கு முதல்வர் அனுமதி?
தற்போது ஏமாற்றுதல், மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிபதி முன்னிலையில் நாங்கள் நிரபராதி என்றே பச்சமுத்து தரப்பு கடைசை வரை பகிரங்கமாக பேசியிருக்கிறது. அரசு தரப்பும் இது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று கூறிவிட்டது. இறுதியில் வேறு வழியின்றி பச்சமுத்து பாதுகாப்பாக சிறைக்கு அனுப்பப்படுகிறார். அதுவும் இதய நோய், சி.டி.ஸ்கேன், மருத்துவர் அறிக்கை என்று அந்த புகழ்பெற்ற நெஞ்சு வலி நாடகத்தின் படி கடைசி வரை தப்பிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
இந்த கைது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது முதலாளி பச்சமுத்துவுக்காக வாதாடும் வழக்கறிஞர்களின் கருத்தை ‘செய்தியாக’ வெளியிட்டு வருகிறது. அதன் படி மதன் சதி செய்தார், பண மோசடி செய்தது அவர், தானில்லை என்று கூறுகிறார்கள். தொழில்போட்டி காரணமாக சன், தினகரன் மட்டும் பச்சமுத்துவின் வண்டவாளங்களை முழுமையாக வெளியடுகின்றன. மற்ற ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. இறுதியில் சில நாட்களுக்குப் பிறகு பச்சமுத்து மீண்டும் கல்வி வள்ளலாக வெளியே வருவார். தமிழ் அறிஞர்களுக்கு விருது கொடுப்பார். தமிழ் நடிகர்களுக்கு பொன்னாடை போர்த்துவார். சாதனை தமிழர்களுக்கு பதக்கமளிப்பார். புதிய தலைமுறையோ ஓனரின் இமேஜுக்குகாக ஹாலிவுட் இயக்குநர்களையே வரவழைத்து ஆவணப் படமெடுப்பார்கள். பத்திரிகையாளர் மாலனோ உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை என்று தத்துவம் எழுதுவார். தனியார் கல்விக்கு இத்தகைய சோதனை வந்தால் மக்கள் பாதிப்பு அடைவார்களா, அதிர்ச்சி அடைவார்களா என்று பாண்டே தந்தி டி.வியில் வாதம் புனைவார்.
பாசிச மோடிக்கும், ஜெயாவுக்கும் சொம்படிக்கும் புதிய தலைமுறையை நடுநிலை ஊடகம் என்று நம்பிய அப்பாவிகளும், ஒவ்வொரு முறையும் பச்சமுத்துவின் கொள்ளையை கூறி புதிய தலைமுறையை விமரிசக்க கூடாது என்று ஆவேசப்பட்ட அறிஞர்களும், பச்சமுத்துதான் தமது பணியை பாராட்டி விருதளித்தார் என மோகம் கொண்ட தமிழ் எழுத்தாளர்களும் இனியாவது திருந்துவார்களா?
மதன் – பச்சமுத்து மோசடி கூறுவது என்னவென்றால் இந்நாட்டில் எந்த சட்டமும், நீதிமன்றமும், அரசும் ஒரு கார்ப்பரேட் கொள்ளையனை எதுவும் செய்ய முடியாது என்பதே.
மாணவர்களும்,பெற்றோர்களும் நேரடியாக பச்சுமுத்துவின் மாளிகை, பல்கலை கழகம், தொலைக்காட்சி வளாகங்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு கைப்பற்ற வேண்டும். இந்த அமைப்பு பச்சமுத்துவை பாதுகாக்கவே செய்யும் என்பதால் இதைத்தவிர எந்த வழியும் இல்லை.
புதிய கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகள் வெளியானதிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் அதற்கெதிரான போராட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்கள், அறைக்கூட்டங்கள் ஆகியவை பல முற்போக்கு அரசியல் இயக்கங்களாலும், கல்வியாளர்களாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு கடந்த நவம்பர் மாதத்திலிருந்து காட்ஸ் ஒப்பந்தத்தை அடியொற்றி எழுதப்படும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான இயக்கத்தை பல்வேறு மட்டங்களில் – அறிவுஜீவிகளிலிருந்து, மாணவர்கள் மற்றும் மக்கள் வரை எடுத்து செல்வதோடு, வரும் ஆகஸ்டு 30-ம் தேதி கருத்தரங்கமும் நடத்த இருக்கிறது.
கல்வியாளர் வசந்தி தேவி
இந்நிலையில், தமிழ் இந்து என்கின்ற பார்ப்பன பத்திரிகை தானும் இக்கொள்கையை படித்து கருத்து கூறப் போவதாக கடந்த வாரம் அறிவித்தது. அன்றையிலிருந்து ‘நம் கல்வி… நம் உரிமை!’ என்ற தலைப்பில் இக்கொள்கைகளின் பல்வேறு அம்சங்களை அம்பலப்படுத்தும் இரா. நடராஜன், வசந்தி தேவி, பிரின்ஸ் கசேந்திர பாபு, ரோஹித் தங்கர் மற்றும் நா. மணி ஆகியோரின் ஐந்து கட்டுரைகளை சனிக்கிழமை வரை வெளியிட்டது. அடுத்து ஞாயிறு வந்தது. அன்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி), வித்யா பாரதி, சமஸ்க்ருத பாரதி, காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி மையம், தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற தலைப்பில் சனிக்கிழமை சென்னையில் நடத்திய கூட்டத்தினை முக்கால் பக்கத்துக்கு தமிழ் இந்து கவர் செய்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய கல்வியாளர்(?!) மாலன்,“புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் அரசியல் தளத்தில் இருந்துதான் வருகிறது. அறிவார்ந்த தளத்தில் இருந்து வரவில்லை” எனக் கூறினார். ஆங்கில இந்து, இக்கூட்டத்தை “கல்வியாளர்கள் (academicians) புதியகல்விக் கொள்கையை அமுல்படுத்தக் கோரி கருத்தரங்கம்” எனத் தலைப்பிட்டு ஞாயிறன்று செய்தி வெளியிட்டது. தமிழ் இந்து கட்டுரை வாங்கிப் போட்ட இரா. நடராஜன், வசந்தி தேவி, பிரின்ஸ் கசேந்திர பாபு, ரோஹித் தங்கர் மற்றும் நா. மணி இவர்களெல்லாம் மாலனுக்கும் இந்துவுக்கும் கல்வியாளர்களாகப் படவில்லையாம். இவர்கள் அரசியல்வாதிகளாம். அதேநேரம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வியாளர்களின் யோக்கியத்தைப் பாருங்கள்:
பார்ப்பனப் பத்திரிகையாளர் மாலன்
1. பார்ப்பனப் பத்திரிகையாளர் மாலன்-கல்வி பற்றி பத்திரிகையில் பெட்டி செய்தியாவது எழுதியிருக்கிறாரா என எமது சிற்றறிவுக்கு எட்டவில்லை
2. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் இயக்குநர் சதானந்தன்– ’சாக்கு யாவாரி’ என பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவலாக அறியப்பட்ட இவரது நியமனமே விதிகளுக்கு புறம்பானது என குற்றச்சாட்டுக்கு ஆளானவர். எந்த தகுதியுமின்றி ஒருநாள் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் அ.தி.மு.க சிந்தியா பாண்டியன் துணைவேந்தராக இருக்கும் போது விதிகளை மீறி நியமிக்கப்பட்டவர். அப்புறம் இவரது கல்வியியல் செயல்பாடுகளை அறிந்து கொள்ள வாசகர்களே கூகுளில் இவரது பெயரை தேடலாம். பல ஆண்டுகள் மூத்த கல்வியாளராக இருந்தவர் ஒரு கட்டுரை கூட எழுதியதாக எங்கும் காணமுடியவில்லை.
3. விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் பிரேமா மகாதேவன், சென்னை விவேகானந்தா கல்லூரி தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ஆர்.ராமச்சந்திரன் – கல்வியாளர் ஆக ஆர்.எஸ்.எஸ் கல்வி நிலையங்களில் தலைமையாசிரியராகவும் முதல்வராகவும் இருப்பது தான் தகுதி போலும்.
4. வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் – கல்வி வியாபாரியைப் பற்றி – மன்னிக்கவும் – கல்வியாளரைப் பற்றி தமிழர்களுக்கு நாம் தனியாக கூறவேண்டியதில்லை.
5. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், காமன்வெல்த் அறிவியல் தொழில் நுட்ப கல்வி ஆராய்ச்சி மைய இயக்குநருமான ஏ.கலாநிதி – இந்த மாபெரும் கல்வியாளர் 1999-2001 காலகட்டத்தில் அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது நடத்திய ஊழல்கள் காரணமாக ஓய்வுபெற்ற போது ஓய்வூதியம் கூட வாங்கமுடியவில்லை. ஓய்வுபெறும்போது ஓய்வுநிதியை ஒரு அரசு ஊழியர் பெறமுடியாதென்றால் அது எத்தகைய குற்றம் என்பது அத்துறையிலுள்ளவர்களுக்குத் தெரியும். தமிழ்நாடு அரசும் அண்ணாப் பல்கலைக் கழக சிண்டிக்கேட்டும் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் 2003-ல் இவர்மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இன்னும் அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இந்த கல்வியாளர் காலத்தில் தான் அண்ணாப்பல்கலைக்கழக நுழைவுத்தேர்விலும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதிலும் மாபெரும் ஊழல்கள் நடந்தேறியது. இன்று தமிழக பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் (இவர்கள் மொழியில் கூறினால்) ’திறமையற்றவர்கள்’ என முத்திரை குத்தப்படுவதற்கு அடிக்கல் நாட்டிய பெருமையும் இவரையே சேரும். ’பிராணாயாமத்தில் பொறியியல் புத்தாக்கம்’ என்ற நூல் இவரது கல்வியியல் வாழ்க்கையின் ஓர் மைல்கல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இப்படி சிலபல திறமைகள் வாய்க்கப்பெற்ற கல்வியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட புதியகல்விக் கொள்கை ஆதரவுக் கூட்டத்தைப் பார்க்கும் போது ஒரு பக்கம் எமக்கு சந்தோஷமாகவும் இருந்தது. இந்து வானரங்களை யாரும் வெளியேயிருந்து அம்பலப்படுத்தி அழிக்க வேண்டியதில்லை. இவர்கள் தாமாகவே அம்பலப்பட்டு, அழிந்து போவார்கள் என்பதற்கு இக்கல்வியாளர்களே சாட்சி. நிற்க.
அடுத்தநாள் திங்களன்று பத்ரி சேஷாத்ரி என்னும் கல்வியாளர் நடுநிலை?!?1? தன்மையோடு புதிய கல்விக் கொள்கையை அணுகிய கட்டுரையை தமிழ் இந்து வெளியிட்டது. செவ்வாய்கிழமை, இன்னொரு மிகப் பெரிய கல்வியாளரும் ஞானியுமான கேக்கே மகேஷின் கட்டுரையை வெளியிட்டுள்ளது. முந்தைய எதிர்ப்பாளர்களைப் போலல்லாமல், இந்த நடுநிலையாளரும் ஆதரவாளரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்து வரவேற்றிருக்கின்றனர். இதில் கேக்கே மகேஷ் சற்று கூடுதலாக அவர் வேலை செய்யும் இந்து பத்திரிகை ஏற்கனவே வெளியிட்ட ஐந்து கட்டுரைகளையும் மொக்கை விமர்சனம் எனக் கிண்டலடிக்கிறார். அடுத்து எஸ்.எஸ். ராஜகோபாலனை, சமஸ் நேர்காணல் நடத்தியிருக்கிறார். கல்விக் கொள்கைக்கு சம்பந்தமில்லாத ’எம்.ஜி.ஆரு-ம் நீங்களும் நெருக்கமா?’ போன்ற மலிவான கேள்விகள் இந்த நேர்காணலில் மலிந்து கிடக்கிறது. ஆசிரியர்கள் பற்றி புதிய கல்விக் கொள்கை வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி எதாவது கேள்வி கேட்டிருந்தால் அவர் தக்க பதிலடி கொடுத்திருப்பார். அதைத் தவிர்க்கவும் அதே நேரம் தன்னுடைய நடுநிலைத் தன்மையை படம் போடவும் சம்பந்தமே இல்லாத மொக்கைக் கேள்விகளை அவரிடம் சமஸ் கேட்கிறார். ஆனால் இத்தகைய மட்டரகமான கேள்விகளையும் மீறி கல்வித்துறையில் காணப்படும் கட்டமைப்பு நெருக்கடிக்கான காரணம் அரசின் கொள்கை முடிவுகள் மட்டும் தான் என்பதை ராஜகோபாலன் மிகத் தெளிவாக, ஆணித்தரமாக தன்னுடைய பதிலில் நிறுவியுள்ளார். இதைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத, பொருட்படுத்தாத சமஸ், ஏற்கனவே எழுதிவைத்த திரைக்கதைப்படி, கல்வித்துறை நெருக்கடிக்கான ஒட்டுமொத்தக் காரணமே ஆசிரியர்கள் தான் என்றும், அந்த ஓட்டையை அடைக்காமல் மீண்டும் மீண்டும் அரசிடம் கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவரக் கேட்பது அபத்தமானது என்றும் கூறி நேர்முகத்தை முடிக்கிறார். ஆசிரியர்கள் மேல் சமஸ், கேக்கே, தி இந்து மற்றும் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள கடுப்புக்கு காரணம் என்ன?
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ் ராஜகோபாலன்
இக்கருத்தைப் பிய்த்து மேய்வதற்கு முன் இந்துவின் யோக்கியதையையும் கல்வியாளர்களின் சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்து நாளேடு முதலில் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களிடம் கட்டுரையை வாங்கி போட்டுவிட்டது. பின்னர் பத்ரி, கேக்கே மகேஷ் போன்றவர்களின் கல்விக் கொள்கை ஆதரவு கட்டுரைகளை பிரசுரிக்கிறது. கல்விக்கொள்கை பற்றி மிகத்தெளிவான பார்வையுள்ள மூத்த கல்வியாளரான ராஜகோபாலனை சரியாக பயன்படுத்தி கல்விக்கொள்கையையும் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துவதற்கு பதிலாக அவரது கருத்துக்களை நீர்த்து போகச்செய்யும் மொக்கை கேள்விகளை சமஸ் கேட்கிறார். அதையும் மீறி அவர் அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை மக்கள் புரிந்து கொண்டு அவர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சமஸ் தானாக சம்பந்தமேயில்லாத ஒரு முடிவுரையை நேர்காணலுக்கு பின் பத்திரிகை மரபையும் மீறி எழுதுகிறார். இடையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடத்தப்போகும் நாட்களைத் தெரிந்து கொண்டு அதனையும் இந்து நாளேடு முக்கால் பக்கம் முழுமையாக கவர் செய்கிறது. அதன் நச்சுக் கருத்துகளுக்கு வலுசேர்ப்பதற்காகவே புதிய கல்விக் கொள்கையை வானளாவப் புகழும் கட்டுரைகளை அடுத்தடுத்த நாட்களில் வெளியிடுகிறது. கல்விசார் செயல்பாடு என்றால் என்னவென்றே தெரியாத பவர்ஸ்டார் பத்திரிகையாளர்களிடம் கட்டுரைகளைப் பெற்றுப் பிரசுரிக்கும் கேடுகெட்ட அயோக்கியத்தனத்தை இந்து நாளேடு செய்கிறது. இதன் வழி நடுநிலை என்ற பெயரில் வலதுசாரி இந்துத்துவ நச்சை மக்கள் மனதில் உட்செலுத்தும் திருட்டு உத்தியே இது. இதற்குமுன் ஈழம், கூடங்குளம் விவகாரம், தில்லை நடராசர் கோயில் வழக்கு போன்றவற்றிலும் இதே நடுநிலை உத்தியை பின்பற்றி ஆளும்வர்க்க நச்சுக் கருத்துக்களுக்கு சாதகமான தளத்தை இதே இந்து நாளேடு உருவாக்கிக் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு முறையும் இடதுசாரி அறிவுஜீவிகள் எனத் தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்களும் இந்து நாளேடு கொடுக்கும் பக்கங்களுக்காக சோடைபோவது தொடர்ச்சியாக நடக்கிறது. இப்படி நடப்பதற்கு அடிப்படையான காரணம் இடதுசாரி கல்வியாளர்களின் கல்விக் கொள்கை பற்றிய நிலைபாட்டிலுள்ள சந்தர்ப்பவாதத்திலும் ஒட்டாண்டித்தனத்திலும் தான் உறைந்து கிடக்கிறது. இவர்கள் கல்விக் கொள்கையில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அவற்றை சரிசெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற கருத்தைத் தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அதையே அவர்களும் நம்புகின்றனர். அதனால் தான் கூட்டங்களின் தலைப்புகள் ’புதியகல்விக்கொள்கைக்கான சில உள்ளீடுகள்’ மீது விவாதம் நடத்தி அதற்கான கருத்துக்களை இவர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு வழங்குவது போன்று தோன்றத் தக்க விதம் உள்ளன.
இதற்கு மாறாக கொள்கை என்ற பெயரில் இந்துத்துவ வானரங்கள் முன்வைப்பது காட்ஸ் நிபந்தனைகளுக்கு உட்பட்ட, அதேநேரம் பார்ப்பனர்களின் கனவான அகண்ட பாரதத்தை நனவாக்கும் முன்நகர்வின் பிரதியே என்பதை மக்களிடம் கொண்டு சொல்வதில்லை. இதில் 60% மேல் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டவை. ’இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வேர்கொண்ட, உலக ஏகாதிபத்திய உழைப்பு சுரண்டலுக்கு ஈடுகொடுக்கும் திறன் வாய்ந்த இளம் தொழிலாளர்களை உலக வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்றுமதி செய்யத் தகுதியான கல்வியை வழங்குவதையே’ இக்கல்விக்கொள்கை தனது இலக்கு என அப்பட்டமாகக் கூறுகிறது. அதாவது சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட, வர்க்கரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட நவீனக் கொத்தடிமைகளை தேசங்கடந்த தொழிற்நிறுவனங்களின் சர்வதேச வியர்வை தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வதைப் பற்றிய கொள்கை முடிவிது. இக்கொள்கை அப்பட்டமான ஏகாதிபத்திய மற்றும் பார்ப்பனிய நலம் சார்ந்த, மக்கள் விரோத திட்டமே என்பதை இவர்கள் யாரும் அம்பலப்படுத்துவதில்லை. அப்படி அம்பலப் படுத்தியிருந்தால் இதற்கான தீர்வு இந்த அழுகி நாறும் கட்டமைப்புக்குள் இல்லை என்பதையும் மக்களுக்கு சொல்ல வேண்டியிருக்கும். கட்டமைப்புக்கு வெளியே தீர்வு என்ற ஒன்று இருப்பதை இவர்களே முதலில் ஒத்துக் கொள்வதில்லை. அப்படிச் செய்தால் இவர்களுக்கு இந்துப் பத்திரிகை இடம் கொடுத்திருக்குமா என்பது மற்றொரு கேள்வி. இதிலிருந்தே கேக்கே மகேஷின் கட்டுரை இவர்களை மொக்கை விமர்சனம் என ஏன் கேலி செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் நமக்கு இத்தகைய சந்தர்ப்பவாத நிலைபாடுகள் இல்லாததால் நவீன கல்வியாள அவதாரமான பவர்ஸ்டார் கேக்கே மகேஷுக்கான பதிலடி நம்மிடமுள்ளது.
கல்வியைக் காவு வாங்க கட்டுமானத்தை அடித்து நொறுக்கும் கொள்கை
கல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்கள் எனப் பட்டியலிடும் கேக்கே, முதலில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் மேலான கண்காணிப்பு பற்றி இக்கொள்கை பேசும் பகுதியை வரவேற்றிருக்கிறார். இதன் பின்னால் ஒளிந்திருக்கும் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தினாலே கேக்கேவ்வின் மீதிக் கட்டுரையில் பட்டியலிடப்படும் நல்ல்ல விஷயங்கள்(?!?!) எப்படி காலாவதியானவை அல்லது கவைக்குதவாதவை என்பது தானே அம்பலமாகும் என்பதால் அதை மட்டும் இங்கு பார்ப்போம். கேக்கே தனது கட்டுரையில், ”………அறிக்கையில் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம், ஆசிரியர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் இருந்த சில பரிந்துரைகள். ‘ஆசிரியர் மேம்பாடும் மேலாண்மையும்’ என்ற பிரிவு ஆசிரியர்களை வாட்டி எடுக்கிறது. ‘பணிக்கு வராமை, பணிப் பொறுப்பின்மை போன்ற தவறுகளைச் செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் ஒழுங்கின்மையையும், வராமையையும் செல்பேசிகள், உடல் அடையாளப் பதிவுக் கருவிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா ஆசிரியர்களும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணியிடைப் பயிற்சியில் பங்கேற்பது கட்டாயமாக்கப்படும். அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணித்திறன் கணிக்கப்படுதல் (அப்ரைசல்) கட்டாயமாக்கப்படும். இந்தக் கணிப்பு அவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு அடிப்படையாக அமையும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கற்பித்தல் திறன், பாட அறிவு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும்… இந்தப் பரிந்துரைகளைப் பற்றி எந்த ஆசிரியர் சங்கமாவது பேசியிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. வரவேற்க வேண்டாம், கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே… ஏன்? இந்தப் பரிந்துரைகளை எல்லாம் வெளியே சொன்னால், அதை மக்கள் ஆதரித்துவிடுவார்களோ என்ற பயமின்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?…”
கல்வித்துறையில் இன்று நிலவும் கட்டமைப்பு நெருக்கடிக்கு ஆசிரியர்கள் மட்டுமே மூலமுதல் காரணம் போல் புதிய கல்விக் கொள்கையும் கேக்கேவும், சமஸும் ஆசிரியர்கள் மேல் வன்மத்தைக் கக்குகிறார்கள். இதில் அரசுக்கோ, அதிகாரவர்க்கத்துக்கோ, அதன் கொள்கை முடிவுகளுக்கோ எந்த பங்குமில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை இது கொடுக்கிறது. ஆனால் உண்மை என்ன?
இந்தியாவில் 1990-களில் அமுல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அதைத் தொடர்ந்து, நாட்டின் உற்பத்தி சார்ந்த தொழில்களான விவசாயம் மற்றும் தேசிய ஆலை தொழிலில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக இளைஞர்கள் எந்த துறையிலும் வேலையின்றி திரிந்தனர். சேவைத் துறை வழங்கிய ஒருசில வேலைவாய்ப்பு கொடுத்த கானல்நீர் போன்ற நம்பிக்கை காரணமாகவும், 2000-ம் ஆண்டிற்கு பின்னர் உலக வங்கி வழிகாட்டுதலில் அரசு மற்றும் நீதித் துறையின் ஒப்புதலுடன் மழையில் முளைத்த காளான்கள் போல் பல்கிப் பெருகிய 500-க்கும் மேற்பட்ட பி.எட் மற்றும் பொறியியல் தனியார் சுயநிதிக் கல்லூரிகளாலும் பெரும்பாலான முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்றனர். ஆனால் வெளியில் வந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் அளவிற்கு சேவைத் துறையிலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாததால் அல்லது ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்திய ஐ.டி துறையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக படித்து முடித்த இவ்விளைஞர்கள் தனியார் பள்ளி மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக போவது மட்டுமே அவர்கள் முன்னாலிருந்த ஒரே ஒரு வழி. அவர்களும் வாழ வேண்டுமல்லவா? தற்கொலை பண்ண முடியாதே? இன்றைக்கு இவ்விளைஞர்களின் இரத்தம் தனியார் சுயநிதிக் கல்வி முதலாளிகள் என்னும் அட்டைப் பூச்சிகளால் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
2000-ம் ஆண்டுக்கு முன் வெறும் 17 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட் கல்லூரிகளும் 12 பொறியியல் கல்லூரிகளுமே தமிழ்நாட்டில் இருந்தன. இப்பொழுதும் இவை மட்டுமே அரசால் நடத்தப்படுகிறது என்பதால், புதிய கல்விக் கொள்கை இக்கல்லூரிகளின் ஆசிரியர்களை உத்தேசிக்கவில்லை என்றே புரிந்து கொள்வோம். மீதமுள்ளது அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் மட்டுமே. ஜெயமோகன் தொடங்கி டி.எஸ்.ஆர் சுப்ரமணியனிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வரை அரசுப் பள்ளிக்கூட வாத்தியார்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள முக்கியமான காரணம் ஒரு காலத்தில் ஆதிக்க சாதி அதிலும் குறிப்பாக பார்ப்பன வெள்ளாள சாதிகளை சேர்ந்தவர்களே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருந்தனர். ஒருகாலத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளின் அனைத்துத் துறைகளும் பார்ப்பன –வெள்ளாள சாதி ஆசிரியர்களால் நிரம்பி வழிந்தது.
ஆனால் சுயமரியாதை இயக்கம் மற்றும் இட ஒதுக்கீடு போன்றவற்றாலும், 60-70 களில் பசுமை புரட்சிக்குப் பின் விவசாயம் நசிந்ததும், ஏகாதிபத்திய நாடுகளின் தொழில்துறையில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக விவசாயத்தைக் கைவிட்டு நகரங்களையும் அதிகார மையங்களையும் நோக்கி பார்ப்பனர்கள் நகர்ந்ததால் கல்வித்துறையில் மட்டுமன்றி உள்நாட்டில் விவசாயம் மற்றும் அரசாங்கத்தின் மூன்றாம், நான்காம் நிலை பணியிடங்களிலும் ஒரு வெற்றிடம் உருவானது. மிஷனரி கல்வி நிலையங்களின் செயல்பாட்டால் தென் தமிழகத்தில் கிருஸ்தவ நாடார்கள் கல்விகற்று 1970 களுக்குபின் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலும் அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். மற்ற இடங்களில் இடைநிலை சாதி மற்றும் தலித் மக்கள் இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை நிரப்பினர். இதை ஜெயமோகன், அவரது தாசர்களான சமஸ் மற்றும் கேக்கே மற்றும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் இவ்வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதற்கு மிக எடுப்பான உதாரணம், 1980-களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத் துறைகள் பார்ப்பன துறைத்தலைவர்களால் நிரம்பி வழிந்தது. ஆனால் 2000-ல் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பார்ப்பன துறைத் தலைவர்களே கலைத்துறைகளில் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. கலைப் புலத்தில் நடந்த மாற்றம் அறிவியல் புலத்தில் இன்னும் ஏற்படவில்லை. இப்பொழுது தான் அதற்கான மாற்றங்கள் அங்கிங்கு தென்படுகின்றன. ஐ.ஐ.டி நிலவரமும் இது தான். கடந்த ஐந்து வருட காலமாக ஓ.பி.சி இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட பின்னர் தான் ஓரளவு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் பேராசிரியர்களாக உள்ளே வருகின்றனர். இதை பார்ப்பனர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஏற்கனவே பல பத்து வருடங்களாக தகுதியில்லை எனக் கூறி இன்றும் கூட தலித்துக்களை உள்ளே விடுவதேயில்லை. இம்முறையில் ஓ.பி.சி.க்களை தடுத்து நிறுத்த இவர்களால் முடியவில்லை. ஏனென்றால் பார்ப்பனர்களுக்கு நிகராக அல்லது இன்னும் கூடுதலான தகுதியோடு இவர்கள் இந்நிறுவனங்களை நோக்கி சாரைசாரையாகப் படையெடுக்கின்றனர்.
இதனால் அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையால் ஐ.ஐ.டி-ன் தரம் கெட்டுப் போனதாக 2010-ல் அமெரிக்காவில் கூடிய பான் ஐ.ஐ.டியன் ஸம்மிட் இல் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூக்குரல் இட்டார். அந்த வருடமே ஐ.ஐ.டி.யையே பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை முன்வைத்த கடோட்கர் கமிட்டியை அரசாங்கம் அமைத்தது. அதன் பரிந்துரையின் பேரில் அரசே தொழிற்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான மசோதாவை திருத்தியது (Institute of Technology Bill (Amendment) 2012). கடோட்கர் கமிட்டியின் முக்கியமான பரிந்துரையே நிரந்தர பேராசிரியர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தான். மாறாக அரசு நிதியுதவியை முழுமையாக நிறுத்துவது, ஃபினான்ஷியல் அட்டோனமி என்ற பேரில் கார்பரேட்டுகளிடம் ஐஐடியை தாரை வார்ப்பது, இருக்கும் பேராசிரியர்களுக்கு அப்ரைசல் போன்ற முறையை அமுல்படுத்தி ஆண்டுதோறும் பரிசீலிப்பது, ஏழு ஆண்டு வரை தற்காலிக பேராசிரியராக பணியாற்றி விட்டு பின்னர் வெளியேற்றுவது, அடிப்படை சம்பளத்தை மட்டும் அரசு நிர்ணயித்து விட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் பெறப்படும் கன்சல்டன்சி அல்லது பிராஜெக்டிலிருந்து தனக்கான சம்பளத்தை எடுத்துக் கொள்வது, அதையே திறமையாக கருதி இப்படி பெறுபவர்களுக்கு மட்டும் அப்ரைசல் வழங்குவது, தொழில்நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து துறைசார் வல்லுநர்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு ஓரிரு வாரத்திற்கே பல பத்து இலட்சம் மக்கள் பணத்தை தாரைவார்த்து வகுப்பெடுக்க செய்து அதை இ-மாட்யூல் ஆக மற்றி என்பிடிஎல் எனப்படும் மூக்ஸில் பதிவேற்றுவது, பின்னர் ஆன்லைன் வழிக் கல்வியையே முதன்மையான கற்றல் முறையாக்குவது, இதன் வழி முதலில் பேராசிரியர்களை வேலையற்றவர்களாக மாற்றி பின்னர் தேவையற்றவர்களாக்கி துரத்தியடிப்பது, கல்விக்கட்டணத்தை வானளாவ உயர்த்தி நடுத்தர வர்க்கத்திற்குக் கூட ஐஐடியில் நுழைவதை எட்டாக்கனியாக்குவது, மீறி நுழைந்தால் கல்விக்கடன் என்னும் சிலந்தி வலைக்குள் சிக்க வைத்து பெற்றோர்களை மொட்டையடிப்பது, மாணவனை வாழ்நாள் கடனாளியாக்குவது, ஐஐடிக்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு திறந்து விடுவது என இன்றைய புதிய கல்விக்கொள்கைக்கான உள்ளீட்டில் பள்ளிக்கல்விக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கடோட்கர் கமிட்டி அறிக்கை தன்னகத்தே கொண்டிருந்தது.
இந்த அறிக்கை ஏகாதிபத்திய பார்ப்பன நலனை நிரந்தரமாக பாதுகாப்பதற்காகவே காட்ஸ் இன் நிபந்தனைகளை வரிக்கு வரி அடியொற்றி, எழுதப்பட்டது. இத்தகையதொரு அறிக்கையை மாடலாக வைத்து எழுதப்பட்டுள்ள புதியகல்விக் கொள்கைக்கான ஊள்ளீட்டில் சமூக நீதியடிப்படையில் வாய்ப்பு பெற்று, சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து முதல் தலைமுறையாக கல்வி நிலையங்களை நோக்கி அணிநடை போடும் இளைஞர்களான ஆசிரியர்களைத் தவிர வேறு யார் வில்லனாக இருக்க முடியும்? இவர்கள் எலியைப் பிடிக்க இல்லத்தையே சுடுபவர்கள் என்றால் எதோ முட்டாள்களின் செயலாகத் தோன்றும். யதார்த்ததில் மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிப்பவர்களின் சதித் திட்டமிது. அதற்கு ஏற்றாற்போல தனது அணுக்கமான கூட்டாளியான ஏகாதிபத்தியத்துடன் இவை கரம் கோர்த்துள்ளன.
கல்வித்துறையில் கட்டமைப்பு நெருக்கடி இருப்பதாக ஓலமிடும் இவர்கள், அதற்கு மாற்றாக என்ன திட்டத்தை வைக்கிறார்கள்?
ஆசிரியனைக் கண்காணிப்பதை மட்டும் தான் இவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் அடுத்த வரியிலேயே மாணவனைக் கண்காணிப்பது, அதுவும் தினமும் காலையில் காவல் நிலையத்தில் குற்றவாளியின் கைரேகையைப் பதிவு செய்வது போல ஒன்றாம் வகுப்பிலிருந்து மாணவனின் கைரேகையை வருகைப் பதிவேட்டில் பதிவது (ஜெயலலிதா சமீபத்தில் சட்டமன்றத்தில் இதை அறிவித்துள்ளார்); ஆதார் அட்டையை ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கே கட்டாயமாக்குவது; லிங்தோ கமிட்டி பரிந்துரையை அடியொற்றி கல்வி நிலையங்களில் காவல்நிலையங்களை நிறுவி மாணவனை குற்றவாளி போல் நடத்தி அவனின் அரசியல் செயல்பாடுகளை தடுப்பது, அது போன்றதொரு சிந்தனை முகிழ்வதைக் கூட ஆசிட் ஊற்றி அழிப்பது, ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சேவை செய்யும் தக்கை மனிதர்களை ‘அதாவது அரசியலற்ற, சாதிரீதியான ஒடுக்குதலை தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும், சுயமாக சிந்திக்க திறனற்ற, நவீன தொழிற்நுட்பக் கருவிகளை ஆன் – ஆஃப் செய்யும் அளவிற்கு மட்டும் திறனுடைய எதிர்த்து கேள்வியே கேட்காத தக்கையான அடிமை இளைஞர்களை உருவாக்கும்’ கொடிய திட்டத்தைத் தான் விவரிக்கின்றது.
இம்மாதிரியான இளைஞர்களிலிருந்து தான் நாளைய ஆசிரியர்கள் உருவாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் ஆரம்பப் பள்ளியிலிருந்தே கண்காணிக்கப்படுவான் என்பதால் ஏகாதிபத்திய பார்ப்பனிய நலனுக்கு விரோதமாக, பெரும்பான்மையான மக்களின் நலனுக்காக சிந்திக்கும் சக்தியுடைய ஒரு அறிவுஜீவி கூட உருவாகாமல் தடுக்கும் மிகப்பெரிய சதித்திட்டமிது. அன்று மனுதர்மம் கல்வி கற்றவனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது; நாக்கை பிடிங்கியது. இன்று தொழிற்நுட்பம் வளர்ந்ததால் ஐந்தாம் வகுப்பிலேயே முத்திரை குத்தி, திறன் என்ற பெயரில் முறைசாராத் தொழிலுக்குள் தள்ளிவிடப்போகிறார்கள். அதற்காகவே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தைத் திருத்தி பிறப்படிப்படையிலான வர்ணாசிரம முறையை மீண்டும் நிறுவ எத்தனிக்கிறார்கள்.
கல்விசார் செயல்பாடு என்பதே ஆசிரியரும் மாணவரும் அவர்களுக்கிடையேயான பரஸ்பர உறவிலும் தான் உள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு எதற்காக கட்டிடங்களும், விளையாட்டுத்திடலும், உட்கட்டமைப்பும்? எனவே அவற்றை தனியாருக்கு வாடகைக்கு விடப் பரிந்துரைக்கிறார்கள். ஐந்தாம் வகுப்புவரையான கல்வியை பற்றி – அதாவது 10 வயது வரையான கல்வியை பற்றி மட்டும் தான் கூறுகிறார்கள். இதிலேயே நாட்டின் 99% மாணவர்களும் வெளியேறிவிடுவார்கள். இவர்கள் யார்? கல்வியறிவில்லாத, நிரந்தர வேலையற்ற நாட்டின் 99% உள்ள முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகள். இக்கொள்கை முன்வைக்கும் பாடத்திட்டப்படி மீதி 1% மீச்சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றாலே அவர்களின் பெற்றோர்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். அத்தகைய சதித்திட்டமும் இந்த கல்விக் கொள்கையிலுள்ளது.
புதிய கல்விக் கொள்கை வியந்தோதும் மாடல் கேந்திரிய வித்யாலயாக்களின் நிலையைக் கொண்டே இதை பரிசீலிப்போம். இங்கு ஆரம்பப் பள்ளியில் 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தாற்காலிக ஆசிரியர். அதில் நிரந்தர ஆசிரியர் என்.சி.சி, ஸ்கவுட், ரெட் கிராஸ், டிசிப்ளின் கமிட்டி போன்ற பலவற்றிலும் இருப்பதால் மாதத்தில் பாதி நாட்கள் மாணவர்களை அழைத்துக் கொண்டு கேம்பிற்கு செல்ல வேண்டும்.
போதாக்குறைக்கு தேர்தல் பணி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சாலைப் பாதுகாப்பு வாரம் என அரசின் எந்த திட்டம் வந்தாலும் இவர்கள் தான் செய்ய வேண்டும். அது போதாதென்று போதுமான அளவு நிர்வாக ஊழியர்களை அரசு நியமிக்காததால் சம்பள பில் எழுதுவது, தரச் சான்றிதழுக்கான கோப்புகளை உருவாக்குவது, அன்றாட அலுவலகப் பணிகளில் தலையாசிரியருக்கு உதவுவது, நூலகத்தைக் கவனிப்பது, மாணவர் சேர்க்கைக் காலத்தில் அவ்வேலைகளை செய்வது என நிர்வாக வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டும். இதற்கிடையே எங்கே கற்றல் –கற்பித்தல் செயல்பாடு நடக்கும்?
ஆரம்பப் பள்ளியில் மாணவர் ஆசிரியர் விகிதத்தின் உலகளாவிய சராசரி 16:1 தான். ஆனால் இந்தியாவில் 1995-ல் 47:1, 2000-ல் 40:1, இது 2008-ல் 34:1. இதில் ஒருவர் தற்காலிகம்; மற்றொருவர் கற்பித்தல் தவிர மற்ற அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும். நம் வீட்டில் ஓரிரு குழந்தைகளை சில மணிநேரம் கவனிப்பதே அவ்வளவு சிரமமானது. அப்படியிருக்கையில் 60 மாணவர்களை ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரம் ஓர் ஆசிரியர் அமைதியாக உட்கார வைப்பதே எவ்வளவு சிரமத்துக்குரியது. இவர்களின் நோட்டுகளைத் திருத்த வேண்டும், தேர்வு நடத்த வேண்டும், அதுவும் ஒவ்வொரு மாணவனையும் தொடர்ச்சியான மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்?
இந்தியாவிற்கே வழிகாட்டும் என்.சி.ஆர்.டி.யின் பாடத்திட்டத்தின் இலட்சணத்தை சொல்ல வேண்டியதே இல்லை. நடைமுறைசார் பாடத்திட்டம் என்ற பெயரில் கணிதத்தில் எலுமிச்சை ஜூஸ் போடுவது எப்படி என்றும், சமூகவியலில் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி என்றும் தான் கற்றுக் கொடுக்கிறார்கள். துணி துவைப்பது, வீடு பெருக்குவது, சமைப்பது போன்றவை தான் வீட்டுப் பாடம். போற்றிப் புகழப்படும் கேந்திரிய வித்யாலயாக்களின் நிலையே இப்படியென்றால் மாநில அரசுப் பள்ளிக்கூடங்களின் நிலையைப் பற்றிக் கூற வேண்டியதேயில்லை. ஐந்தாம் வகுப்பை எட்டும் போது இம்மாணவர்களால் என்ன விதமான திறமையை வெளிப்படுத்த முடியும். இதில் தப்பிப் பிழைப்பவர்கள் ஆறாம் வகுப்பிற்கு செல்லலாம். ஆறாம் வகுப்பிலிருந்து முறையான கல்வியையும் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்போவதாக அறிவிக்கின்றனர். எனில் ஐந்தாம் வகுப்புவரை முறையான கல்வியைப் பெறாத மாணவர்கள் ஆறாம் வகுப்பில் எத்தகைய திறனை வெளிப்படுத்திவார்கள்? ஐந்தாம் வகுப்புவரை கட்டுப்பாடின்றி முறையற்ற வழியில் கற்பிக்கப்படும் மாணவர்களை ஆறாம் வகுப்பில் ஆசிரியரால் எப்படி கையாள முடியும். ஐந்தில் வளையாதது பதினொன்றில் எப்படி வளையும்?
இதற்கான மாற்றுத் திட்டத்தை தான் இக்கல்விகொள்கையின் இதர தலைப்புகள் சொல்கின்றன. குறிப்பாக ICT எனப்படும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்நுட்பத்தை கல்வியில் புகுத்த திட்டமிட்டிருகின்றனர்.இதன் மூலம் ஆசிரியர் என்ற வகையினத்தையே ஒழித்துக் கட்டிவிட்டு, பெரும்பான்மையான மாணவர்கள் டி.டி.எச் வழியாக மூன்று மணிநேரம் தினமும் பாடத்தைக் கற்க வேண்டும். இதனால் இவர்கள் குடும்பத் தொழில்களில் ஈடுபட வசதியாக இருக்கும். அப்படி ஈடுபடும் போது இவர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற வகைப்பாட்டிற்குள்ளும் வரமாட்டார்கள்.
இதற்காகவே ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு அறையில் ஒரு தொலைக்காட்சி நிறுவப்படும். உள்ளூரிலிருந்து தொலைக்காட்சியை இயக்கத் தெரிந்த ஒருத்தர் நியமிக்கபடுவார். அவர்தான் கேக்கே போற்றும் உள்ளூரிலே வேலைவாய்ப்பை பெறப்போகும் ஆசிரியர்?!!? அவரது வேலை குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சியை ஆன் செய்து ஆஃப் செய்வது மட்டுமே. இம்மாணவர்களுக்கு பஞ்சாயத்து சான்றிதழ் வழங்கும். பஞ்சாயத்திலுள்ள முறைசாரா வேலைகளுக்கு இச்சான்றிதழ் பெற்றவர்கள் உபயோகிக்கப்படுவார்கள். இம்முறையின் பெயர் multilevel multigrade. லெவெல் என்றால் ஆரம்பப்பள்ளி, நடுநிலை, உயர்கல்வி, முதியோர்கல்வி மற்றும் பிற. கிரேட் என்றால் வெவ்வேறு வயதினர்கள். அதாவது ஒரு முதியவரும் ஒரு 10 வயதுப் பையனும் லெவல் 1-ல் ஒன்றாக அமர்ந்து படிப்பது. இது எப்படி சாத்தியம் என்றால் டி.டி.எச் வழி மட்டும் தான். இங்கு கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டின் முக்கியமான பங்கேற்பாளர்களாக மாணவனும் டி.டி.எச் வழியாக பாடத்தை வழங்கும் கண்ணுக்கு தெரியாத உடாசிட்டி, கோர்ஸ்எறா, எட்எக்ஸ் போன்ற தேசங்கடந்த தொழிற்நிறுவனங்களுமே இருக்கும். multilevel multigrade கல்விமுறை பரவலாக அமுல்படுத்தப்பட்டால் ஆசிரியர் என்ற வகையினம் அதுவாகவே அழிந்து போகும். அப்படி அழிப்பதற்கான முன்னோட்டம் தான் பயோமெட்ரிக் வருகைபதிவு, கண்காணிப்பு இன்ன பிற.
மேற்கூறிய நிகழ்ச்சிப் போக்குகளை புதிய கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகளுடன் சேர்த்துப் புரிந்து கொள்ள குறைந்தபட்ச அரசியல் அறிவோ, சமூக அறிவோ, வரலாற்று அறிவோ வேண்டும். அது இருந்திருந்தால் பவர்ஸ்டார் பத்திரிகையாளர்களெல்லாம் கல்வியாளர் வேடம் போட்டு கருத்து சொல்லும் அவலம் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்காது.
மோடி அரசின் கல்வி ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் தி இந்துவின் நோக்கத்தை புரிந்து கொள்வதும், நமது மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராடுவதும் வேறு வேறு அல்ல!