Friday, May 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 542

புதிய ஜனநாயகம் – ஜூலை 2016 மின்னிதழ் : பாசிச கோமாளி

0

puthiya-jananayagam-july-2016

புதிய ஜனநாயகம் ஜூலை 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம்!

2. எச்சரிக்கை : வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை!

3. ஆர்.எஸ்.எஸ்-ன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன்!
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றத் துடியாய்த் துடித்தது ஆர்.எஸ்.எஸ்

4. நரேந்திர மோடியின் சவடால்களும் சவால்களும்
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.

5. பத்திரிகை செய்தி : நீதித்துறையின் அடாவடித்தனம்! வழக்கறிஞர்களின் போராட்டம்!
தான் மதிப்பிழந்து போவதைத் தடுக்க முடியாத நீதித்துறை அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாக, அதற்கான பழியை வழக்கறிஞர்கள் மீது போட்டுத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

6. அரசியல் கட்டமைப்பில் அதிகரித்துவரும் அராஜகம்! மக்கள் அதிகாரமே மாற்று!!
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் நடைபெறும் தில்லுமுல்லுகள் அரசியல் கட்டமைப்பு நெருக்கடி தீவிரமடைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. இதற்கான மாற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் அல்ல; மக்கள் தமது பிரச்சனைகளைத் தாமே தீர்வு காண்பதற்கான மக்கள் அதிகாரமே!

7. சட்டமன்றத் தேர்தல்களில் போலி கம்யூனிஸ்டுகளின் தோல்வி : கட்டெறும்பானது கழுதை!
நாடாளுமன்றத்தைப் புரட்சிக்குப் பயன்படுத்தப் போவதாகச் சவடால் அடித்த போலி கம்யூனிஸ்டு கட்சிகள், இன்று மற்ற ஓட்டுக் கட்சிகளாலும், மக்களாலும் சீந்துவாரன்றி ஓரங்ககட்டப்பட்டு விட்டன.

8. குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லை என நீதிமன்றம் ஒத்துக் கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.

9. ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை!
சாதி என்பது தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதல் காட்டியிருக்கிறது.

10. மதன் ‘காணாமல்’ போய் விட்டார்! பச்சமுத்து அரசால் பாதுகாக்கப்படுகிறார்!!
கருப்புப் பணத்தைக் கொண்டு கல்வி, பத்திரிகை, தொலைக்காட்சி, போக்குவரத்து எனப் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைத்திருக்கும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து போன்ற திடீர்ப் பணக்காரர்களைத்தான் தனியார்மயம் உருவாக்கி வருகிறது.

11. இந்தியாவில் மரண தண்டனை: இன்னுமொரு மனுநீதி!
இந்தியாவில் மரண தண்டனைக் கைதிகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்த டில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகம், அக்கைதிகள் பெரும்பாலும் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

12. ஐ.டி துறையில் தொழிற்சங்க உரிமை! பு.ஜ.தொ.மு.வின் வெற்றி!

புதிய ஜனநாயகம் ஜூலை 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3.8 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

எட்டடிக் குச்சுக்குள் அடங்குமா அம்மா உன் அய்யனார் சிலை ?

0

Mother"s tearsன்னோட படிச்சதெல்லாம்
ஊக்கமா பொழைக்குதுங்க,
கச்சி கட்சியின்னு
கட்சிக்கட்டிக்கினு அலையிரியே…

சித்தாகாட்டு வெறகுவெட்டி
செட்டிகுளம் தண்ணிமொண்டு,
செவ்வெண்ணெய் கூட்டினது
எந்தக் கட்சி?

வெய்யில் கானலுன்னு
பாக்காம,
கையும் காலையும்
தூக்கிக்கினு,
கூலிக்கு ஒடுன எடத்துல,
ஊத்துன கூழு கஞ்சிய தூக்கியாந்து,
பள்ளிக்கோட வாசல்ல
உன்னையக்
குடிக்க வச்சிட்டு
கூட்டி முழுங்குன
நெஞ்சுடா!

மறக்க முடியுமா
அம்மா!

எல்லோரும்
புள்ள வளத்தது போலவா
வளத்தேன்,
போலீஸ் புடிச்சிம்போய்
இருக்குமாமே,

எந்த தெய்வம் வந்து
குறுக்க நின்னுச்சோ!

‘தெய்வமா’
அம்மா!

காது மூக்குல
கெடந்ததை உறுவி,
கால் வவுத்தக் காப்பாத்துன
கழனிக் காட்டையும்
கை கழுவிட்டு,
கையேந்த வச்சிட்டேன்ற
கர்வமாடா?

எனக்கா அம்மா?

***

அம்மா நீ
பேசி முடித்து விட்டாயா,
அழுது தீர்த்துவிட்டாயா?

பக்கத்து விட்டுப் பிள்ளைகள் காணாமல்
நீ பதுக்கிய திண்பண்டங்கள்
உரியில்
எனக்காக.

நீ காணாமல்
அண்ணி பதுக்கிய திண்பண்டங்கள்
உரியில்
அவள் பிள்ளைக்காக

கஞ்சி கொடுத்தாய்
காதுத்தோட்டைக் கொடுத்தாய்
எனக்கு
உரி வேண்டாம் அம்மா.

பதுக்குவதற்கு ஒன்றுமில்லை
என்னிடம்
என்பதற்காஅழுகிறாய்?

***

“தனக்கு மிஞ்சிதாண்டா
தான தருமம்
உன் குடும்பத்தைக் காப்பாற்று,
ஏழை பாழைக்கு
ஏதோ முடிஞ்சதைக் கொடு”

உன்னையும் என்னையும் சேர்த்து
ஒரு வளையம் போட்டாய்.
எதிர்வீட்டு ஏகாம்பரம்
மனைவிக்கும் தனக்குமாய்
அந்த வளையத்தைச் சுருக்கிக் கொண்டவுடன்

”கொண்டவ தலையில
பூ சுமையும்
பெத்தவ தலையில
புல் சுமையும்
வச்ச பாவி… போறாம் பாரு”
எனப் பொருமிகிறாய்.

நானும் ஒரு
பாவியாகவில்லை என்றா
ஏங்குகிறாய்?

என் வளையம்
ரொம்பப் பெரியது.
அதில்
நீ உண்டு. அண்ணி உண்டு
ஏகாம்பரம் உண்டு, அவன் தாயு
முண்டு
நம் ஊரே உண்டு.

ஊர் காத்த அய்யனார்
நீ சொன்ன கதைதான்.
எட்டடிக் குச்சுக்குள்
அடங்குமா அம்மா
உன் அய்யனார் சிலை?

***

அம்மா
நீயும் அப்பாவும் அண்ணனும்
என்மீது கொண்ட
அன்பைச் சொல்ல
‘பாசம்’
என்ற சொல் உண்டு.

என்னுடைய அன்பை
எடுத்துச் சொல்ல – உன்
உரியில் இருக்கும் சொற்கள்
உதவாது.

உன் கண்ணிரைத் துடைக்க
உதவும் கைகள்
என் கண்ணிரைத் துடைக்க
உதவாது.

கோபப்படாதே அம்மா.
என் கண்ணிரை
இன்னும் நீ பார்த்ததேயில்லை.

– நிதி. கோமேதகம்

புதிய கலாச்சாரம், ஆகஸ்ட் 1999

வங்கதேசத்தை கொன்று வரும் முசுலீம் பயங்கரவாதம் !

33
தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது

“என்ன மாதிரியான முசுலீம்கள் இவர்கள்? இவர்கள் எந்த மதமும் கிடையாது… பயங்கரவாதமே இவர்களின் மதம்” – வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

தலைநகர் டாக்காவின் மையத்தில் அமைந்துள்ள குல்ஷான் தானா பணக்காரர்களின் பகுதி. பல வெளி நாடுகளின் தூதரகங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. மால்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், வெவ்வேறு நாடுகளின் உணவுகளுக்கென்று அமைக்கப்பட்ட சிறப்பு உணவு விடுதிகள் இங்கே இருக்கின்றன. தூதரகங்களில் பணிபுரியும் ஐரோப்பியர்கள் உள்ளிட்ட மேலை நாட்டினருக்கு அறிமுகமான பங்களாதேஷின் பரப்பரளவும், குல்ஷான் தானாவின் பரப்பளவும் ஏறக்குறைய ஒன்று தான்.

தூதரக அதிகாரிகள் சகஜமாக புழங்குவதால் இப்பகுதி இருபத்தி நான்கு மணி நேரமும் உயர் பாதுகாப்பு வளையத்திலேயே இருக்கும். கடந்த ஜூலை 2016 ஒன்றாம் தேதி இரவு 9:20 மணியளவில் குல்ஷான் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியினுள்ளே ஆறு இளைஞர்கள் துப்பாக்கி, அறிவாள், நாட்டு வெடிகுண்டுகள் சகிதமாக நுழைகிறார்கள். நுழையும் போதே நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

பிறகு அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக பிடிக்கின்றனர். மறுநாள் அதிகாலை 3 மணி வரை ஆர்டிசன் பேக்கரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகள், ஒன்பது இத்தாலியர்கள், ஏழு ஜப்பானியர்கள் உள்ளிட்ட பதினெட்டு வெளிநாட்டவர்கள், இரண்டு வங்கதேசத்தவர்கள் மற்றும் இரண்டு போலீசு அதிகாரிகளைக் கொன்று குவித்தனர். அந்த பயங்கரவாதிகள், தாம் ஐ.எஸ் (Islamic State) அமைப்பின் சார்பில் இத்தாக்குதலை நடத்துவதாக அறிவித்ததோடு, அந்த அமைப்பின் தலைமைக்கு தமது கீழ்ப்படிதலை உணர்த்தும் அறிவிப்பு ஒன்றையும் வாசித்துள்ளனர். பின்னர் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்களில் முசுலீம்களை மட்டும் விடுவித்துள்ளனர்.

kahirul-islam-payal1
தாக்குதல் நடத்திய இஸ்லாமிய இளைஞர்கள் இடமிருந்து வலமாக கெய்ரூல் இஸ்லாம் பாயல், ஷஃபிகுல் இஸ்லாம் உஸ்ஸல், ரோஹன் இமிதாஸ், மீர் சமக் முபாஷிர், நிப்ராஸ் இஸ்லாம்,

முசுலீம்களை அடையாளம் காண ஒவ்வொருவரிடமும் குரான் ஒன்றைக் கொடுத்து வாசிக்குமாறு கேட்டுள்ளனர். அதிகாலை வங்கதேச இராணுவத்தின் ”அதிரடி நடவடிக்கை படையணியை” (Rapid action battalion) சேர்ந்த வீரர்கள் பேக்கரியினுள் திடீர் தாக்குதலை நடத்தி ஐந்து பயங்கரவாதிகளைக் கொன்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடந்ததற்கு மறுநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் ஷேக் ஹசீனா பேசிவற்றில் ஒரு வரியைத்தான் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.

”அவர்கள் இசுலாமியர்கள் அல்ல” ”அவர்கள் பின்பற்றுவது இசுலாம் அல்ல” ”அவர்கள் இசுலாத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்’ “இசுலாம் உண்மையில் அமைதி மார்க்கம்” என்கிற வாதங்கள் நமக்குப் புதிதல்ல – குறிப்பாக இசுலாமின் பெயரால் பெரிய தாக்குதல்கள் நிகழும் சமயங்களில். தமிழ்நாட்டு தவ்ஹீது ஜமாஅத் இயக்கம் இன்னும் ஒரு படி மேலே போய் ஐ.எஸ்.ஐ.எஸ் இசுலாமியர்களே இல்லையென்று சுவரொட்டி கூட ஒட்டியது.

எனினும், எது சரியான இசுலாம், எது தவறான இசுலாம், குரானை எப்படிப் படிக்க வேண்டும் – படிக்க கூடாது, எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் – புரிந்து கொள்ளக் கூடாது, தொழுகையின் போது விரலை ஆட்டுவதா – கூடாதா என்பதைப் போன்ற ’அறிவியல் ஆராய்ச்சிகளை’ இசுலாமிய மதவாதிகளிடமிருந்து பறித்துக் கொள்வது கட்டுரையின் நோக்கமல்ல. நாம் மீண்டும் வங்கதேசத்திற்கே செல்வோம். முசுலீம் பயங்கரவாதம் வங்கதேசத்தைப் பீடித்த வரலாறை புரிந்து கொள்வோம். அதன் போக்கில் இசுலாம் ஒரு மதம் என்கிற நிலையிலிருந்து மனிதர்களைக் கொள்ளும் பயங்கரவாத தத்துவமாக எப்போது மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வோம் – ஏனெனில், இது இசுலாத்திற்கு மட்டுமின்றி கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கும் – ஏன், அமைதியின் மதமாக சொல்லப்படும் பௌத்தத்திற்கும் கூட பொருந்தக் கூடியதே. சமூக பொருளாதார அரசியல் போக்கிலிருந்து துண்டிக்கப்பட்ட மதம் என்று எதுவும் கிடையாது. அதனாலேயே ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்வதே மதங்களின் தலையாயக் கடமையாக இருக்கின்றன. இது இசுலாமிற்கும் பொருந்தும்.

***

”நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்” – 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சியின் போது கேட்ட முழக்கங்களில் ஒன்று.

1971-ம் ஆண்டு பிறந்த வங்கதேசம் இன்றைக்கு உலக முசுலீம் மக்கள் தொகையின் அடிப்படையில் நான்காவது பெரிய இசுலாமிய நாடு. ஆனால், அரசியல் சாசனமோ வங்கதேசத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கிறது. வங்க தேசிய உணர்வின் குழந்தையே இன்றைய வங்கதேசம். அறுபதுகளில் எழுந்த வங்காள தேசிய உணர்ச்சியை நசுக்கியழிக்க ஒன்றுபட்ட பாகிஸ்தானின் இராணுவம் களமிறங்கிய போது அவர்களுக்கு மத ரீதியிலான காலாட்படையாக இருக்க முன்வந்தனர் ரஜாக்கர்கள். பாகிஸ்தான் இராணுவம் முறியடிக்கப்பட்டு தேசம் பிறந்த பின் ரஜாக்கர்கள் ஜமாத்-ஏ-இஸ்லாமி என்கிற கட்சியில் அடைக்கலமாயினர்.

2013 ல் ஷாபாக் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்
2013 ல் ஷாபாக் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

தேச விடுதலைப் போரின் சமயத்தில் எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு கொலை கொள்ளை வண்புணர்ச்சிகளில் ஈடுபட்ட ரஜாக்கர்களால் மதச்சார்பற்ற வங்கதேசத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஜமாத்-ஏ-இஸ்லாமி தொடர்ந்து மத ரீதியிலான அரசியலில் ஈடுபட்டு வந்தது. விடுதலைப் போரின் சமயத்தில் பெரியளவிற்கு வங்காளிகளைக் கொன்று தீர்த்து மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா, ஜமாத் கட்சியின் தலைவராகியிருந்தார். படுகொலைகள் தொடர்பாக விசாரணைகளின் முடிவில் 2013 பிப்ரவரி 5-ம் தேதி அப்துல் காதர் மொல்லாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை துச்சமாக மதித்து தனது கட்சியின் குண்டர் படையினர் புடைசூழ வெற்றிப் புன்னகையோடு கையசைத்துக் கொண்டே நீதிமன்றத்திலிருந்து அப்துல் காதர் வெளியேறும் காட்சி ஊடகங்களில் வெளியானது.

விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த கொலைகள் வங்க தேச மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருந்து வந்த நிலையில் மொல்லாவின் தெனாவெட்டு அந்தப் புண்ணைக் கீறி விடுவதைப் போல் அமைந்தது. அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஷாபாக் சதுக்கத்தில் கூடி கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி போராடினர். இசுலாமிய மதவெறியின் முகத்தில் ஒட்டுமொத்த வங்கதேசமும் ஒன்றுகூடிக் காறி உமிழ்ந்த நிகழ்வு இது.

மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா
மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா

ஷாபாக் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமியும் கொலையாளிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியது. தண்டனை கோரி போராடும் மக்களின் மேல் ஜமாத்-ஏ-இஸ்லாமி குண்டர்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தினர். மொத்த விவகாரத்திற்கு மதச்சாயம் பூச வேண்டுமென்கிற வெறியில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஜமாத்-ஏ-இஸ்லாமி.

பரந்துபட்ட மக்களின் தேசியப் பெருமிதத்தினால் செலுத்தப்படும் அரசியலுக்கு எதிராக இசுலாமிய மத வெறியை நிறுத்தும் அளவுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி எப்படி வளர்ந்தது? முன்னொரு காலத்தில் வங்கதேசத்தில் இழிவாக மதிக்கப்பட்ட மதவெறி செல்வாக்காக எவ்வாறு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது?

***

”சோவியத் நாத்திக கம்யூனிஸ்டுகளை ஆப்கானிலிருந்து விரட்ட அல்லாவின் குழந்தைகளே வாரீர்” – 80-களில் அப்கான் முஜாஹித்தீன் படைகளில் சேர உலக முசுலீம்களுக்கு விடப்பட்ட அழைப்பு.

எண்பதுகளில் பணிப் போரின் இறுதிக் காலத்தில் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்திருந்த ரசியாவுக்குமான கடைசி யுத்த முனையாக விளங்கியது ஆப்கானிஸ்தான். சோவியத் படைகளை ரசியாவிலிருந்து விரட்ட நேரடியாக தனது இராணுவத்தை களமிறக்க விரும்பாத அமெரிக்கா, அந்தப் போரையே சாத்தானுக்கு எதிராக இசுலாமியர்கள் நடத்தும் ஜிஹாத் எனும் புனிதப் போராக சித்தரித்தது. சவூதியின் பெட்ரோல் டாலரையும் பாகிஸ்தானின் ராஜதந்திர உதவியையும் பெற்றுக் கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப்ரெஸென்ஸ்கி ஜிஹாதுக்குப் புதிய விளக்கங்களை எழுதிக் கொண்டிருந்தார்.

ரொனால்ட் ரீகன் ஆப்கன் முஜாஹித்தீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் காட்சி
அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆப்கன் முஜாஹித்தீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் காட்சி

‘கிறிஸ்தவ’ அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இசுலாமிய ஜிஹாத் இந்தப் போருக்காக பல நாடுகளில் இருந்து இசுலாமிய இளைஞர்ளை ஆப்கான் நோக்கிக் கிளப்பியது. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே கூட தமது குடிமக்கள் இன்னொரு நாட்டில் ஆயுதப் போருக்காக கிளம்பிச் செல்வதைக் கண்டு கொள்ளவில்லை – ஏனெனில், அமெரிக்காவின் ஆதரவும் ஊக்குவிப்பும் அதை அங்கீகரிக்க வைத்தது. வங்கதேசத்திற்கு மேலும் ஒரு காரணம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வங்கதேசத்தில் பதவிக்கு வந்த அவாமி லீக், மதச்சாரபற்ற கட்சியாக இருந்தாலும் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்குத் தரகு வேலை பார்க்கும் முதலாளிகளின் நலன்களையே பிரதிபலித்தது.

எழுபதுகளின் துவக்கத்தில் இந்திய எல்லையில் அமைந்திருக்கும் மேற்கு வங்கமாநிலத்தில் செல்வாக்காக எழுந்த நக்சல்பாரி புரட்சியின் தாக்கம் வங்கதேச கம்யூனிஸ்டு கட்சியிடமும் எதிரொலித்தது. வங்கதேச கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவாமி லீக், அரசியலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மத உணர்வு கலப்பது எதிர்காலத்தில் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என கணித்தது. எனவே, தமது தேசத்தின் இளைஞர்கள் எல்லை தாண்டி ஆப்கானுக்குச் செல்வதை கண்டும் காணாமலும் விட்டது அவாமி லீக்.

1984-ம் ஆண்டு துவங்கி தொடர்ந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3000 வங்க இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட போதும் சரி, பின்னர் சுமார் 10 உலோமாக்கள் ஆப்கான் சென்ற போதும் சரி, பின்னர் 1992-ல் காபூலை முஜாஹித்தீன்கள் கைபற்றிய போது அவர்களின் வங்கதேசத்து பங்காளிகள் வெளிப்படையாக வெற்றி விழாக்கள் கொண்டாடிய போதும் சரி – வங்கதேச ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது. ஆப்கான் சென்ற வங்காளி முஜாஹிதீன்கள் நாடு திரும்பினர். அவர்கள் தங்களோடு சேர்த்து அமெரிக்கா அருளிய வகாபியத்தையும் அழைத்து வந்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில் துவங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி, வகாபிய இசுலாமியத்தை தீவிரமாக முன்னெடுத்தது. ஜமாத் கட்சி தனக்கென ஒரு வர்த்தக அமைப்பாக இஸ்லாமி வங்கிகளைத் துவங்கி நிதி வசூல் நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டது. டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, உள்ளிட்ட ஊடகங்களைத் துவக்கி கடுங்கோட்பாட்டு இசுலாமியத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஜமாத்-ஏ-இஸ்லாமி, பல்வேறு பெயர்களில் கலாச்சார நிறுவனங்களையும் ஆயிரக்கணக்கான மதரசாக்களையும் திறந்தது.

தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது
தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது

ஷாபாக் சதுக்கத்தில் நடந்த பேரெழுச்சியைத் தொடர்ந்து, மதச்சார்பற்றவர்களையும் நாத்திகர்களையும் கொன்றொழிப்பதற்கென்றே எண்ணற்ற முன்னணி அமைப்புகளையும் துவங்கியது ஜமாத் கட்சி. ஹெபாஜாட்-ஏ-இஸ்லாம், ஜமாத்-அல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ், ஹர்க்கத்துல் ஜிஹாத், ஜூந்த்-அல்-தவ்ஹீத் வல் கலீபாஹ் என கணக்கற்ற அமைப்புகள் முளைவிடத் துவங்கின. இதில் சில அமைப்புகள் இந்திய துணைக்கண்டத்திற்கான அல்குவைதா (AQIS) உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சில அமைப்புகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு தொடர்புகளைப் பேணி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித் தனி அமைப்புகளைப் போல் வெளிக் காட்டிக் கொண்டாலும் தமக்குள் பரஸ்பர தொடர்புகளைப் பேணி வருகின்றன. போலீசு மற்றும் உளவுத் துறை நடவடிக்கைகள் ஒரு அமைப்பின் மீது எடுக்கப்படும் போது பெயரை மாற்றிக் கொள்வது அல்லது இன்னொரு அமைப்புடன் இணைந்து கொண்டு புதிய பெயரில் வேறு ஒரு அவதாரத்தில் திரும்பி வருவது போன்ற உத்திகளைக் கையாளுகின்றனர்.

இரண்டாயிரங்களுக்குப் பின் அதிகாரத்திற்கு வந்த வங்க தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி, அதிகாரத்தில் இருப்பதன் சாதகங்களைத் தனது பயங்கரவாத வலைப்பின்னலை உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்டது. 2001-ம் ஆண்டு துவங்கி ஜமாத் கட்சியின் இரகசிய முன்னணி அமைப்புகள் முன்னெடுத்த பயங்கவாத நடவடிக்கைகள் அலையலையாக வங்கதேசத்தை தாக்கி வருகின்றன. 2001-ம் ஆண்டு வங்க புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களில் குண்டு வீசி பத்து பேரைக் கொன்றதில் துவங்கி, அவாமி லீக் கட்சி கூட்டத்தில் 2004-ம் ஆண்டு நடந்த குண்டு வீச்சில் 24 பேர் பலியானதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடெங்கும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களாக வளர்ந்த போது தான் வங்கதேச அரசு கொஞ்சம் விழித்துக் கொண்டது.

கொல்லப்பட்ட மதசார்பற்றவர்கள் மற்றும் bloggers நசிமுதீன் சமத், நிலொய் நீல், பேராசிரியர் சித்திக்
முஸ்லீம் மதவெறியால் கொல்லப்பட்ட மதசார்பற்றவர்கள் மற்றும் bloggers நசிமுதீன் சமத், நிலொய் நீல், பேராசிரியர் சித்திக்

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் மத்தியில் துவங்கி 2010 வரையிலான காலகட்டத்தில் தீவிரவாத அமைப்புகளின் தலைமைகள் கைது செய்யப்பட்டது மற்றும் கடுமையான இராணுவ மற்றும் போலீசு நடவடிக்கைகளின் விளைவாக பல அமைப்புகள் செயலிழந்து போயின. எனினும், எஞ்சியவர்கள் புதிய புதிய பெயர்களில் அமைப்புகளைத் துவங்கி இசுலாமிய அடிப்படைவாத அரசியலை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இசுலாமிய தீவிரவாதம் மக்களிடையே ஒரு பிரிவினரிடம் செல்வாக்கோடு விளங்கியதற்கு மதரசாக்களும், இசுலாமிய கலாச்சார நிறுவனங்களும் ஒரு காரணம் என்றாலும், வேறு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

2008-ல் துவங்கிய உலகப் பொருளாதார பெருமந்தம் ஆடை ஏற்றுமதிப் பொருளாதாரத்தையே நம்பியிருந்த வங்கதேசத்தை மிகக் கடுமையாக தாக்கியது. வேலை இழப்புகளால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலால் ஒருமுனைப்படுத்தப்படவில்லை. வங்க தேசத்தில் செயல்பட்ட தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களின் அதிருப்தியை அமைப்பாக்கும் கடமையிலிருந்து பின்தங்கிய போது இசுலாமிய மதவெறி அந்த இடத்தில்தன்னை பதிலீடு செய்து கொண்டது.

பரவி வந்த வகாபிய இசுலாமிய மதவெறிக்கு எதிராக நின்ற ஜனநாயக சக்திகளும், ”இது இசுலாத்தை தவறாக புரிந்து கொண்டதன் விளைவு” என்றும் “குரானுக்கு தவறான விளக்கம் கொடுக்கிறார்கள்” என்றுமே சூழலை எதிர்கொண்டனர். அதாவது, குரானை செம்மையான முறையில் (அதாவது அமைதி மார்க்கமாக) வாசிக்க முடியும் என்கிற இந்த சில்லறை தொழில்நுட்ப பிரச்சினையை வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மிக எளிதாக முறியடித்து தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டனர்.

டாகா பல்கலைகழக வளாகத்தில் அவிஜித் ராய் கொல்லப்பட்டதற்காக மாணவர்கள் மற்றும் முற்போக்காளர்கள் நடத்திய போராட்டம்
டாக்கா பல்கலைகழக வளாகத்தில் அவிஜித் ராய் கொல்லப்பட்டதற்காக மாணவர்கள் மற்றும் முற்போக்காளர்கள் நடத்திய போராட்டம்

இந்நிலையில் 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சி, வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகளே எதிர்பாராத வண்ணம் பெருந்திரளான வங்காளிகளை மதச்சார்பற்ற அரசியலின் பின்னே அணிவகுக்கச் செய்தது. மக்களின் நினைவுகளில் இருந்து தாம் அழிக்க விரும்பிய வங்க தேசிய அடையாளம் வெடித்துக் கிளம்பியதை வகாபிகள் “அல்லாவுக்கு எதிரான” தாக்குதலாகவே எடுத்துக் கொண்டனர். ஷாபாக் சதுக்க எழுச்சிக்காக பிரச்சாரம் செய்த மதச்சார்பற்ற எழுத்தாளர்களின் பெயர்களையும் மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டனர். மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக ஆளும் வர்க்கம் மீண்டும் ஒரு சுற்று வகாபிய பயங்கரவாத அமைப்புகளின் மேல் நடவடிக்கைகளைத் துவங்கியது.

2013 துவங்கி கடந்த மூன்றாண்டுகளில் அரசின் கைது நடவடிக்கைகள் ஒருபக்கமும், வகாபிய தீவிரவாதிகளின் அறிவாள் வெட்டுக் கொலைகள் மறுபக்கமுமாக வங்கதேசத்தின் நாளேடுகளை நிறைத்தன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சிறுபான்மையினர் மற்றும் நாத்திகர்களின் மேல் சுமார் 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்திருப்பதாக சுயேச்சையான சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலைகளை ஒருபக்கம் முன்னெடுத்துக் கொண்டே கைதுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகும் பயங்கரவாதிகளின் மேல் அனுதாபம் வரவழைக்கும் வகையிலான பிரச்சாரங்களையும் செய்து வந்தனர் வகாபிகள்.

இந்த சூழலில் ஏற்கனவே அல்குவைதாவின் செயல்பரப்பில் இடம் பெற்றுள்ள வங்கதேசத்திற்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் நுழைகிறது. இந்த அமைப்புகள் மூளைச்சலவை செய்யும் விதம் மிக எளிமையானது. முதலில் ஒரு நல்ல இசுலாமியனாக இருக்க வேண்டும். எப்படி நல்ல முசுலீமாக இருப்பது? அல்லாவுக்காகவும் இசுலாமிய மதத்திற்காகவும் உயிரைத் தியாகம் செய்ய தயங்காமல் முன்வருகிறவன் எவனோ அவனே நல்ல முசுலீம். அதற்காக ஒருவன் ஜிஹாது செய்ய வேண்டும். ஜிஹாதில் உயிரைத் தியாகம் செய்கிறவன் சொர்க்கம் செல்வான்.

இவ்வாறாக தூய மதவாத மூளைச் சலவைக்குள்ளான இளைஞர்களே குல்ஷான் தானாவில் தாக்குதல் நடத்தியவர்கள். தாக்குதல் நடத்திய ஆறுபேர் கொண்ட கும்பலில் ஒருவர் தவிற மற்றவர்கள் எல்லோரும் செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புதிய போக்கு. மதவாத / தீவிரவாத கருத்துக்கள் ஏழைகளையே பற்றிக் கொள்ளும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி விட்டால் தீவிரவாத கருத்துக்கள் இளைஞர்களைப் பற்றிக் கொள்ளாமல் தடுத்து விட முடியும் என்பது போன்ற என்.ஜி.ஓ கருத்தாக்கங்கள் குல்ஷானில் வெடித்த குண்டுகளால் தகர்ந்து போயிருக்கின்றன.

 இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும்.
இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும்.

உலகமயக் கொள்கைகள் மக்களின் பொருளாதாய வாழ்க்கையை மட்டுமின்றி அவர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வின் சகல பகுதிகளையும் குலைத்துப் போட்டுள்ளது. அதிகரித்து வரும் தனிநபர்வாதம் ஏழைகளை விட உயர் நடுத்தரவர்க்க மற்றும் மேல் தட்டு வர்க்கங்களின் இளைஞர்களே பாதிக்கிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நுகர்வுக் கலாச்சாரத்தையும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியையும் சமூகத்தில் அக்கம் பக்கமாக பரப்பி விட்டுள்ளன. இதன் விளைவாக சமூகத்தின் அங்கங்கள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் துண்டித்து விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய காற்று வெளி முழுக்க பெட்ரோலின் ஆவி பரவியுள்ளதற்கு ஒப்பான நிலையில் மதவெறித் தீக்குச்சியின் சிறு உரசல் கூட மொத்த சமூகத்தையும் எரித்து சாம்பலாக்கப் போதுமானதாகும்.

ஆக, மதவெறி எதிர்ப்பும் ஏகாதிபத்திய பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் கைகோர்த்துக் கொள்வது மட்டுமே நமது இளைஞர்களை கடுங்கோட்பாட்டுவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஒரே வழி. நமது இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும். மாறாக, குரான் போன்ற மத இலக்கியங்களை சிறப்பாக படித்து சிறந்த முறையில் புரிந்து கொண்டு சரியான முறையில் அமல்படுத்துவது எப்படி என போதிக்கக் கிளம்பி பீ.ஜே, ராம கோபாலன், ஜாஹீர் நாயக், பிரவீன் டொகாடியா போன்றவர்களிடம் போட்டிக்குச் சென்றால் நாம் தோற்பது உறுதி.

இறுதியாக… நல்ல இசுலாம் என ஒன்று இருக்க முடியுமா?

எப்படி நல்ல இந்து மதமோ, நல்ல கிறிஸ்தவமோ இருக்க முடியாதோ அப்படியே நல்ல இசுலாமும் இருக்க முடியாது. தனிப்பட்ட ஒருவரின் மத நம்பிக்கைகள் “தனிப்பட்டதாய்” மட்டும் இருக்கும் வரை பிரச்சினையில்லை. மாறாக அவரின் சமூக கண்ணோட்டத்தையும் உலக கண்ணோட்டத்தையும் மதமே தீர்மானிக்கும் என்றால் ஆன்மீகம் பின்னுக்குப் போய் பயங்கரவாதம் முன்னுக்கு வருவதை தவிர்க்க முடியாது. மதம் தான் அரசியல் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் என்றால் இசுலாமியர்கள் மட்டுமின்றி, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் – ஏன், அமைதி மதத்தைப் பின்பற்றும பௌத்தர்களும் – கூட தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதியாகி விடுவர்.

– தமிழரசன்

மேலும் படிக்க:

வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?

8

லெனின் வாழ்க்கைச் சம்பவம்: பக்கோமோவ்கா கிராமத்திலிருந்து ஒரு தூதுவர்

மாஸ்கோ அருகே கூட்டுப் பண்ணையில் பெண்கள்
மாஸ்கோ அருகே கூட்டுப் பண்ணையில் பெண்கள்

புரட்சி முடிந்த ரசியா, மப்பும் மந்தாரமுமான அக்டோபர் நாள். அதோ ஒரு விவசாயி. வயதானவர். பழந்துணியால் தைத்த மேல் கோட்டு, இடுப்பில் இறுகக்கட்டிய நைந்துபோன கயிறு. சிறு புதர்போல புருவ மயிர் தொங்க அவரது விழிகள் நிதானமாக, கவனமாகச் சுற்றுமுற்றும் ஆராய்ந்தன. அவரது தோளில் கோணிப்பை.

அவர் மாஸ்கோவுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உண்டு – புரட்சியின் நாயகன் லெனினைப் பார்க்க வேண்டும். அவரது ஸ்மோல்னி அலுவலகத்தை விசாரித்தபோது சிலர் கேலியாகச் சிரித்தார்கள் துப்பாக்கி ஏந்திய மூன்று தொழிலாளிகள் பொறுப்போடு வழி சொன்னார்கள்.

ஒரு வழியாக ஸ்மோல்னியைக் கண்டுபிடித்து லெனினது செயலாளரையும் பார்த்துப் பேசி, அவர் சந்திக்க வேண்டிய விவசாயத் துறைத் தலைவரது அறைக்கும் அனுப்பப்பட்டார்.

அந்த விவசாயி பக்கோமோவ்கா கிராமத்திலிருந்து வருகிறார். ‘பக்கோமோவ்’ என்ற பெயர்கள் கொண்ட குடும்பங்களே அங்கு அதிகம். அவர் பெயரும் பக்கோமோவ் – எவ்கார் பக்கோமோவ். சோவியத் வெளியிட்டுள்ள ‘நில ஆணை’ பற்றி அவருக்குப் பல சந்தேகங்கள் – அதை யெல்லாம் தெரிந்து கொண்டபிறகு தான் கிராமம் திரும்ப வேண்டும். முக்கியமாக அவர் லெனினைப் பார்க்காமல் ஊர் திரும்பக் கூடாது.

ரபரப்பான சோவியத் தலைமை அலுவலகத்தில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தார். ஒரு கையில் தொப்பி. மற்றொன்றில் கோணிப்பை. அவரது கோட்டிலிருந்தும், கோணிப் பையிலிருந்தும் வெந்த ரொட்டி மனமும், புகை மணமும் கலந்து வீசியது.

கோதுமை தூற்றும் களத்து மேடுகள், காய்ந்த உருளைச் செடியைப் போட்டுத் தீமூட்டி எரியவிடும் வயற்புறம், இலையுதிர்கால நீலவானில் கத கதப்பான தெக்கத்திச் சூழல் தேடிப் பறந்து செல்லும் நாரைகள் – இது போன்ற சித்திரத்தை உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவர அந்தக் கலவையான மணம் போதும். அடக்கமும் மரியாதையும் தோன்ற ஒரு பெண் அவரிடம் வந்து பேசினாள். “விவசாயத்துறைத் துணைக் கமிசார் (கமிசார் என்றால் தலைவர்) அதோ அந்த மேசைக்கு வருவார். அதுவரை இங்கே நாற்காலியில் உட்காருங்க” என்று ஒரமாக அமர வைத்தாள்.

பெரிய கூடம். அதில் பல சோவியத் துறைகள் இயங்கின. ஒவ்வொரு துறைக்கும் ஒரு கமிசார், துணைக் கமிசார். அவர்களுக்குத் தனித்தனி மேசைகள் பக்கோமோவுக்கு அது பிடிக்கவில்லை. அவரவர்களுக்குத் தனி அலுவலகம், பல அறைகள். வேலைக்குப் பல ஆட்கள் இல்லாமல் எல்லாருக்கும் சேர்த்து ஒரே ஒரு பெரிய கூடமா? நிர்வாகம் என்று இதை எப்படி நம்புவது? புரட்சி செய்து அதிகாரம் வைத்திருக்கும்போது நம்பிக்கை ஊட்டும், ஏன் அச்சமூட்டும் விதமாக அடக்கி ஆளுகிற விஷயங்கள் கூட தேவைதானே?

பக்கோமோவ் தொடைமீது தாளம் போட்டவாறு யோசித்தார். “என்னதான் புதுசுன்னாலும் அரசாங்கம், அரசாங்கம் தானே? அதிலும் லெனின் நடமாடக் கூடிய கமிசார்கள் நிறைந்த இடம் இப்படி இருக்கக் கூடாது.”

அவரவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சில பெண்களும் சுறுசுறுப்பாக ஓயாது வேலை செய்தார்கள். தொலைபேசி அவ்வப்போது அலறிக் கொண்டிருந்தது. செய்திகள் வந்தன கட்டளைகள் வெளியே சென்றன.

கொஞ்சநேரத்தில் பெரிய புத்தக அலமாரியைப் பலர் சேர்த்து தூக்கி வந்தார்கள். ஒருவர் அவசரமாக வந்து “புகை பிடிக்காதீர்கள்” என்றாரு பலகையைச் சுவரில் பொருத்திவிட்டுப் போனார்.

அதை ஒருமுறை படித்துத் தலையை அசைத்துக் கொண்ட பக்கோமோவ் கோட்டுப் பையிலிருந்து உறையை எடுத்தார். நிதானமாக சிகரெட் தாள் ஒன்றை எடுத்து நன்றாக நீவிவிட்டு அதில் கொஞ்சம் புகையிலைத் துளை விரவிச் சுருட்டினார்.  சுருட்டிய உருளையின் ஒரு ஓரம் நாவினால் பசைப்படுத்தி மூடினார். சிகரெட் தயார்; பற்ற வைத்துக் கொண்டு நாற்காலியில் நன்றாகச் சரிந்து உட்கார்ந்து புகையை ஆழமாக இழுத்தார்.

அதேசமயம் லெனின் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பக்கோமோவைத் தாண்டிப் போக, முயன்றவரால் முடியவில்லை, நின்றார்.

“மன்னிக்கனும் தோழரே” என்று அழைத்தார் லெனின்.

”மன்னிச்சிட்டேன் சொல்லுங்க” என்று சொல்லவிட்டு பக்கோமோ சிகரெட்டில் மேலும் ஒரு இழுப்பை இழுத்துக் கொண்டார்.

“அங்கே என்ன எழுதி இருக்குதுன்னு பார்த்தீங்களா?” – லெனின் சுவற்றில் காட்டினார்.

“பார்த்தேன் பார்த்தேன்” பக்கோமோவ் நிதானமாகவே பதில் சொன்னார்.

“அப்புறம் எதற்காகப் புகை பிடிக்கிறீங்க?”

“நம்ம நாட்டில் கூட எத்தனையோ சட்டங்கள் இருக்குது. ஒரு மனுசன் அதுல பாதியக் கடைப்பிடிக்கனும்னு ஆரம்பிச்சான்னாக் கூட அவன் ஆயுசு முடிஞ்சிடும்.”

“ரொம்பச் சரி. நான் முழுசா ஒத்துக்கறேன். ஆனா நிறைய சட்டம் இருந்தது பழைய ஆட்சியில. இப்ப இருக்கிறது புது அரசாங்கம் அல்லவா?”

சோவியத் கால உக்ரேன் வயல் வெளியில் இளைஞர்கள்
சோவியத் கால உக்ரேன் வயல் வெளியில் இளைஞர்கள்

“ஆமாம், புது அரசாங்கம்தான்….” பேச்சை முடிக்காமலேயே பக்கோமோவ் சிகரெட்டை அனைத்து பத்திரமாகப் புகையிலை உறையில் வைத்துக் கொண்டார்.

“இது எப்படி? நல்ல அரசாங்கமா, கெட்ட அரசாங்கமா?” லெனின் மேலும் விளக்க முயற்சித்தார்.

”நல்ல அரசாங்கம்-தான்னு நெனய்க்கிறேன். நிலத்தை எல்லாம் வினியோகிச்சுட்டாங்கல்ல….” -அவர் இழுத்தார்.

“வேற என்ன சொல்லுங்க”

பக்கோமோவ் கேள்வி கேட்டவரை ஒரு கணம் பார்த்தார் திரும்பி அறை முழுக்க ஒரு கண்ணோட்டம் விட்டார்.

”ஆனால்… ஆனால் எதிர்பார்க்கிற அளவு ’திடமா’ இல்லே. இதச்செய், அதச்செய் என்று கட்டளை போட்டா போதுமா?”

“மன்னிக்கணும் விளாடிமிர் இலியிச், கிரான்ஸ்டாட் உங்களைக் கூப்பிடறார். ஏதோ அவசரமாகப் பேசணுமாம்….” ஊழியர் ஒருவர் ஓடிவந்து லெனினைக் கூப்பிட, “இதோ வருகிறேன்” என்று பக்கோமாவுக்கும் ஊழியருக்கும் சேர்த்து ஒரே பதிலைச் சொல்லிவிட்டு அவர் விரைந்தார். லெனினது வாய் மட்டும் ”அரசாங்கம் இன்னமும் திடமாக இல்லைங்கிறாரே” என்று சொல்லிக் கொண்டிருந்தது.

துணைக்கமிசார் வந்தார். பக்கோமோவோடு கைகுலுக்கினார். அவரும் லேசுப்பட்டவர் அல்ல. நிதானமாக, ஆனால் திட்டவட்டமாக மாணவனுக்கு வாத்தியார் விளக்குவது போல ’நில ஆவணம்’ பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

பாவம். அவரை ஒரு அதிகாரிக்குரிய அந்தஸ்தும் தராமல் அவரது மேசையையே தள்ளி வைத்து விட்டு இடத்தை ஒழுங்குபடுத்தினார்கள் சில ஆட்கள். துணைக்கமிசார் பக்கோமோவுக்கு அருகில் காகிதக் கட்டுக்கள் மேலேயே அமர்ந்து விளக்கிக் கொண்டேயிருந்தார். ஒரு மரியாதை நிமித்தம் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு துணைக்கமிசாரிடமிருந்து ’நிலம் பற்றிய ஆவணம்’ முழுசாக ஒரு புதுப் பிரதியும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார் பக்கோமோவ்.

தோ பக்கோமோவ் மறுபடி லெனினது செயலரின் முன்னால் வந்து நின்றார்.

”தோழரே, துணைக்கமிசார் விளக்கியது போதுமல்லவா?”

”ஆங்…. பேசினேன்… பக்கோமோவ் குத்துமதிப்பாகப் பதில் சொன்னார்.

“நான் நாற்காலியில உட்கார்ந்திருந்தேன். அவர் காகிதக் கட்டுமேலே உட்கார்ந்திருந்தார்… இப்படியே பேசினோம்….” அவரது லேசான கிண்டலை செயலர் ரசித்துச் சிரித்தாள்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு அந்த விவசாயி ஆற்றாமையோடு கேட்டார். “தோழரே நான் லெனினைக் கட்டாயம் பார்க்கணும். இந்தக் கிராமத்தானோட ஆசையைப் புரிஞ்சிக்குங்க”

அவர் அசைவதாகத் தெரியவில்லை.செயலருக்கு லெனினது வேலைகள் பற்றி முழுக்கவும் தெரியும் கடந்த சில நாட்களாகவே ஒருநாளைக்கு இரவில் 2 அல்லது 3 மணி நேரமே உறங்கினார்.

”கொஞ்சம் இருங்க அவர் உங்களோட பேசமுடியுமான்னு கேட்டுச் சொல்றேன்.”

”ஓ, நன்றி தோழரே!” அவர் மகிழ்ச்சியில் கை தட்டினார். “முதல்லேயே அதைச் செஞ்சிருக்கணும் தோழரே!”

லெனின் அறை அது தான் என்று செயலர் அறை ஒன்றைக் காட்டினார். வெளியே காத்திருக்கச் சொன்னார்; பக்கோமோவ் காத்திருந்தார்.

”தோழர் அடுத்து உங்களைக் கூப்பிடுவார். கொஞ்சம் இருங்க” – செயலர் வந்து அவரிடம் சொல்லிவிட்டு எங்கோ வேகமாகப் போனார்.

ஐந்து நிமிடம் நகருவது முப்பது நிமிசமாகத் தெரிந்தது பக்கோமோவுக்கு. பொறுமையிழந்து எழுந்து நின்றார். யாருமே இல்லாத அறைவாசலில் நிற்பது வேடிக்கையாகத் தோன்றவே, உடனே உட்கார்ந்து கொண்டார். ஒரு நிமிடம் போயிருக்கும், தன்னை அறியாமல் தான் எழுந்து நிற்பதையும், அறைக்கு முன் மேலும் கீழும் நடப்பதையும் தானே கவனித்தார்.

நேரம் பறக்கிறதே? அந்தச் செயலர் ஏன் திரும்ப வரவில்லை? உள்ளே லெனின் தனக்காகக் காத்திருப்பாரோ? கடைசியில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு லெனினது அறைக்குள் நுழைந்துவிட்டார் பக்கோமோவ்.

கூட்டுப் பண்ணைகளின் செய்திகள் சோவியத் பத்திரிகைகளில்
கூட்டுப் பண்ணைகளின் செய்திகள் சோவியத் பத்திரிகைகளில்

ட்டையான நடுத்தர உயரம் சாதாரண காற்சட்டை மேல்சட்டை. ஒரு பெரிய மேசை. மேசைக்குப் பின்னால் இரு நாற்காலிகள். ஒரு நாற்காலி அருகே ஒரு சிறு மேசை. அதிலிருந்து ராணுவ வீரர் சாப்பிடும் கேன்டின் உணவு அடைத்த டப்பா ஒன்றைத் திறந்து ஸ்பூனில் அவர் ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர்தான் லெனினாக இருக்க வேண்டும்.

”ஆ நீங்களா தோழர் வாங்க வாங்க” லெனின் வரவேற்றார். புகை பிடிப்பது பற்றிக் கேட்ட அதே நபர் ஓ, இவர்தானா லெனின்?

”உங்க பேர் என்ன?”

”பக்கோமோவ். எவ்கார் பக்கோமோவ்.”

”நீங்கள் ஏன் இங்கே உட்காரக் கூடாது?” தனக்கு அருகிருந்த ஒரு நாற்காலியைக் காட்டினார் லெனின்.

”நீங்க கிராமத்துலேருந்து நில ஆணைப்பற்றித் தெரிஞ்சிக்கணும்னு வந்திருக்கீங்க. அரசாங்கம் போதுமான அளவு ’திடமா’ இல்லேங்கிறீங்க, சரி தானே? ரொம்ப சுவாரசியமான கேள்வி” – அவர் முகத்தில் புன்சிரிப்பு.

பக்கோமோவ் அந்த நாற்காலியில் தொற்றியதுபோல அமர்ந்தார். லெனினையும், அவர் கையிலிருந்த டப்பா உணவையும் மாறி மாறிப் பார்த்தார். வெண்ணெய் இல்லாத ஒட்ஸ் கஞ்சியைச் சாப்பிட்டு இப்பேர்ப்பட்ட தலைவர் எப்படி ஒரு தேசத்தையே தாங்க முடியும்? வந்த வேலையை விட்டுவிட்டு லெனினை விசாரித்து விட அவர் முடிவு செய்தார். “வெண்ணெய் கூட இல்லாமயா சாப்பிடறீlங்க?” என்றார்.

”இப்போதைக்கு அப்படித்தான் தோழர் பக்கோமோவ்” என்றார் லெனின்.

”ம்…ம்…” விவசாயி வாய்க்குள் முனகினார்.

“மன்னிக்கணும் தோழரே…” லெனின் திடீரென்று கேட்டார். “கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா?… ஸ்பூன் வெச்சிருக்கீங்களா? நீங்களே எடுத்துக்கங்க…”

”நன்றி தோழர். எனக்கு வேண்டாம்” – பக்கோமோவ் மறுத்தார்.

சுற்றிலும் எல்லாவற்றையும் ஊன்றிக் கவனித்தார். லெனினையும் சேர்த்து.

”சரி முதல்ல உங்க கிராமத்தப் பத்திச் சொல்லுங்க விவசாயிங்க என்ன சொல்றாங்க? ஆணை பற்றி என்ன பேசிக்கிறாங்க?”

சோவியத்தின் முதல் ஆவணமான நில ஆவணம் – தான் தயாரித்து முன்மொழிந்து இறுதியான ஆவணம் – அவர் நினைவில் வந்திருக்க வேண்டும். விவசாயிகள் அதை எப்படி வரவேற்றார்கள் என்று தெரிந்து கொள்ள லெனினுக்கு ஆர்வம். கற்றுக் கொள்கிற மாணவன் போல ஆசையோடு ஊன்றிக் கேட்கலானார்.

பக்கோமோவ் ”நில ஆணை பற்றி என்ன சொல்றாங்கன்னு கேக்கறீங்க. என் வாழ்க்கையிலேயே மக்கள் அந்த மாதிரிப் பரவசம் அடைஞ்சத நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு சந்தோசம்” என்றார். இப்போதும் அதன் ஒளி அவர் முகத்தில் மினுங்கியது.

“கிராமத்தையே ஒரு கலக்குக் கலக்கிட்டுதுன்னு சொல்லலாமா?” – லெனின் கேட்டார்.

“எங்கப் பார்த்தாலும் அதே பேச்சு தேனி போல இங்கேயும் அங்கேயும் சனங்க போயி வராங்க அங்க அங்க கூட்டமா நின்னு விவாதிக்கிறாங்க. ஏ… அப்பா…”

“என்ன விவாதிச்சிக்கிட்டாங்க…?” லெனின் விவசாயியின் முகத்தைப் படித்தார்.

“எல்லா நிலத்தையும் எடுக்கலாமா, அதுல கொஞ்சம் கொஞ்சம் எடுக்கலாமா?… இப்படி..”

“எல்லா நிலமும், எல்லா நிலமும்…. கடைசி அங்குல இம்மி அளவு நிலம் உட்பட எல்லாம்தான். அப்புறம் வேற என்ன சொன்னாங்க?”

“கொஞ்சம் கூட ஒரு விலை இல்லாம இலவசமாவா நிலம் கொடுப்பாங்க அப்படின்னு ஒரு சந்தேகம் அவங்களுக்கு. ஒருவேளை, கொஞ்சமா ஒரு விலை இருக்கும். அப்பத்தானே பழைய மொதலாளி பசியால சாகாம இருக்க முடியும். இப்படியும் பேசிக்கிட்டாங்க.”

“அப்படின்னா ஈட்டு விலை குடுக்காம நீங்க சம்மா நிலத்தை வாங்க விரும்பலே. உங்களோட அரசாங்கம் திடமா இருக்கனும். விவசாயிகளை அது சவுக்கால அடிக்கனும். காசப் பிடுங்கனும். அப்ப சரியா இருக்கும். அப்படித்தானே தோழரே? நான் மறுபடி சொல்றேன், நிலத்துக்குப் பைசா காசு கிடையாது. நிலம் யாருக்கு உரிமையோ அவங்களுக்குச் சேரனும் அதுல ஒழக்கிறவங்களுக்குத் தான் சொந்தம் சரி. அப்புறம்… அப்புறம்…”

“அப்புறமா அவுங்க வேற ஒரு விசயத்தைப் பேசறாங்க” – பக்கோமோவ் முக்கியமான விசயத்தைத் தொட்டு விட்டார்.

”அதான் வேணும், சொல்லுங்க”

பக்கோமோவ் நீண்டபெரு மூச்சு விட்டார். எதற்கோ தயங்கினார். “தயங்காம சொல்லுங்க தோழர்” – லெனின் ஊக்கப்படுத்தினார்.

கூட்டுப் பண்ணைகளில் கூட்டுழைப்பு
கூட்டுப் பண்ணைகளில் கூட்டுழைப்பு

”ஒருவேளை இப்போ சும்மா நிலத்தை உட்டுப்புட்டு பின்னாடி அடிச்சு ஒதச்சிப் பிடுங்கிட்டாங்கன்னா – அப்புறம் எத்தன தலைமுறை ஆனாலும் நிமிர முடியாது பாருங்க. அதான் சந்தேகம்.”

ஒரு நொடிக்குள் லெனின் கோபாவேசமானார். ”இதெல்லாம் யாரு பேசினாங்க கொஞ்சம் சொல்லுங்க..”

பக்கோமோவ் கையை விரித்தார்.

”அவங்களுக்குப் பின்னால நிச்சயமா ஏதோ ரகசியம் இருக்குது…” லெனின் எடுத்துக் கொடுத்தார்.

”ரொம்பப் பயங்கரம் தோழர்” என்றார் பக்கோமோவ்.

“ஆனால் யாரைப் பார்த்து எதுக்காகப் பயப்படனும்?”

பக்கோமோவ் இப்போது பதில் சொல்லவில்லை.

“பலநூறு வருசமா கொட்டமடிச்ச பண்ணையாருங்களும். மடாலய மாமிச மலைகளும் நிலத்தைச் சும்மா கொடுத்துருவாங்களா? நிச்சயமா மாட்டாங்க. அவுங்க மிரட்டுவாங்க. அதமட்டும் தான் அவுங்க செய்ய முடியும் அவுங்களுக்காக யாரு அடி தடில இறங்கி உதவுவாங்க?” என்றார் லெனின்.

”அதுக்கும் சில ஆளுங்க உண்டு தோழரே”.

“இருப்பாங்க… இருப்பாங்க… ஆனால் அவுங்க அடிக்க அடிக்க சம்மா வாங்கிக்கிட்டு நாம அழிஞ்சு போகனுமா? அது எப்படி சரி?” – லெனின் சூடேற்றச் சூடேற்ற பக்கோமோவ் கறி பிரட்டுவது போல வாகாக விசயங்களை எடுத்து வைத்தார்.

”இல்ல தோழரே, அவங்க வலுவான ஆளுங்க.”

”எதிரிகளத்தானே சொல்றீங்க..” – லெனின் இறுக்கிப் பிடித்தார். பக்கோமோவ் ஆமாம் என்று தலையாட்டினார்.

”இப்போ புரியது தோழர் இப்போ நிலத்தை எடுத்துக்கிறீங்க. பிறகு புது அரசாங்கம் சிதறிப் போகலாம். போல்ஷ்விக்குகளும், கமிசார்களும் ஒடிருவாங்க. நிலத்தை எடுத்ததற்காக விவசாயிகளை எதிரிங்க தண்டிப்பாங்க அடிப்பாங்க. கொல்லுவாங்க. அதனாலதான் சோவியத் அரசாங்கம் திடமாக இல்லைன்னு சொன்னிங்க, அப்படித்தானே தோழரே! சோவியத் அரசாங்கத்த, நம்ம அரசாங்கத்த யாராலயும் அசைக்க முடியாது. அது உயிரோடு வாழனும்னா நம்ம கையில இருக்குது. உங்களையும் சேர்த்துத் தான் தோழரே…”

லெனினது கடைசிச் சொற்கள் புதிராக இருந்தது. அவர் கேட்டார்: “என் கையில என்ன இருக்குது லெனின் தோழர்?”

“தோழரே, சோவியத் அரசாங்கத்தைக் காப்பாற்ற மற்றவங்க எப்படில்லாம் சண்டை போடுறாங்கன்னு ஒரமா நின்னு வேடிக்கையும் பார்க்கலாம்; கூடவே வந்து ஆயுதம் எடுத்து நீங்களும் காப்பாற்றலாம். ஆனால் நம்ம அரசாங்கம் திடமா இருக்கனும்; உங்களுடையதாகவும் இருக்கனும்.”

பக்கோமோவ் தலைகுனிந்தவாறு யோசித்தார்.

குலக்குகள் எனும் நிலப்பிரபுக்களுக்கு எதிரன சோவியத் மக்கள் இயக்கம்
குலக்குகள் எனும் நிலப்பிரபுக்களுக்கு எதிரன சோவியத் மக்கள் இயக்கம்

மேசையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. லெனின் பேசி முடித்தார். இதற்குள் கோணிப்பையைத் திறந்து கொஞ்சம் பன்றிக் கொழுப்பு, ஒரு பெரிய ரொட்டித் துண்டு கொஞ்சம் உப்பு, வெங்காயம் எல்லாவற்றையும் எடுத்து மேசை மேல் வைத்தார். லெனின் வாங்க மறுத்தார்.

“கிராமத்துல போய் இதச் சொன்னா என்னைக் கொன்னுடுவாங்க” என்று கெஞ்சினார் பக்கோமோவ். லெனின் சிறிய அளவு ஏற்க ஒப்புக் கொண்டார்.

நன்றி தோழரே. உங்களிடமிருந்து இதற்கு மேலும் கேட்கலாமா…?” பக்கோமோவ் திகைத்தார்.

“கொழுப்பு – ரொட்டி சாப்பிடறீங்க. ஆனால் தொழிலாளி, ராணுவம், நம்ம படிப்பாளிங்களுக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா? கொஞ்சம் ஒட்ஸ் கஞ்சிதான்” என்றார் லெனின்.

பக்கோமோவ் தலை நிமிரவேயில்லை. லெனினது விமரிசனத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.

”தோழரே… தொழிலாளிகளுக்கு நாங்க நல்ல ரொட்டி கொடுக்க முடியும். எப்படியாவது சேர்த்து அனுப்புவோம்…” என்று பதில் சொன்னார்.

“அற்புதம் தோழரே, உங்க கிராமத்துலயே இருக்கட்டும். தொழிலாளர் பிரதிநிதி வந்து பெற்றுக் கொள்வார். இப்படித்தான் புதுத்திட்டம் வேணும் தோழரே. சரி.நிலம் எடுத்துக்கிறப் போறீங்களா இல்லையா?”

”நிலம் தானே.அந்த ஆணை வந்து ஒரு மணி நேரத்துல எப்பவோ பிரிச்சுகிட்டோம்”

அறையில் ஒரு நிமிடம் ஆழமான அமைதி. அடுத்த நொடி அதை உடைத்து எறிவதுபோல லெனின் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

“மொத்த நிலத்தயும் பிரிச்சிட்டிங்க அப்புறம் எதுக்குத் தோழர் இப்ப ரெண்டாவது யோசனை?”

”ரெண்டாவது யோசனை எனக்கில்லை தோழர் ஆனால் இன்னொரு கேள்வி?”

”ரொம்ப முக்கியமோ?” லெனின் கண்கள் குறும்பாய்ச் சிமிட்டின.

“நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்…”

”அதுவும் அந்தத் தலைவர் ஒரு வழுக்கைத் தலையர்…” தன் தலையைக் கையால் தடவியவாறு பக்கோமோவ் குரலில் பேசிக் கேலிசெய்தார் லெனின்.

”வெறும் கஞ்சி குடிக்கிறவர் மொத்த சோவியத் அரசாங்கத்தை நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா?”

சளைக்காமல் லெனின் எதிர்க் கேள்வி போட்டார். ”ஏன் நம்ப முடியாது தோழர்? இதோ பாருங்க. உங்களை சோவியத்துக்குத் தேர்ந்தெ டுத்தால் நீங்கள் தானே அரசாங்கம். தோழரே, நைந்துபோன மரப்பட்டையாலான ஷூ காலணி, கிழிந்த துணிக் கோட்டு, கயிறு பெல்ட்டு போட்ட நீங்கள்தான் அரசாங்கம். அது என்ன வகையான அரசாங்கம்? ஆனால், உங்க கிராமத்துல ஒவ்வொருத்தரும் சொல்வாங்க, எகோர் பக்கோமோவ் தான் சோவியத் பிரதிநிதி. இப்படிச் சொன்னாங்கன்னா, அது என்னாய்யா அரசாங்கம்?”

பக்கோமோவின் உள்ளம் உருகி ஒடியது.

லெனின் அவரது அறையில்
அலுவலகத்தில் தோழர் லெனின்

அவரை வாயில்வரை அழைத்துச் சென்று கைகுலுக்கி வழியனுப்பினார் தோழர் லெனின்.

அடுத்த சில நொடிகளில் வரவேற்பரைக் கூடத்தில் நின்ற பக்கோமோவ் சுற்றி ஒரு நோட்டம் விட்டார். இப்போது அந்தக் கூடம் போர்க்களத்துக்கான ஆயுதம் தயாரிக்கும் உலைக்களமாக உருமாறி பிரம்மாண்டமாகத் தெரிந்தது. தன்னையே அவர் ஒரு கணம் பார்த்துக் கொண்டார். மரப்பட்டைக் காலணி, கிழிந்த துணிக் கோட்டு, கயிறு பெல்ட் கோணிப்பை…

“நானா சோவியத் அரசாங்கத்தின் பிரதிநிதி.” – அவர் யோசித்தார். அழகான புன்முறுவல் அவர் முகத்தில் பூத்தது.

லெனினது வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘தொலைவில் ஒரு நம்பிக்கை ஒளி’ என்ற நூலிலிருந்து.

ஆசிரியர் :செர்க் ஆன்டோனோல்

– புதிய கலாச்சாரம், டிசம்பர் 2003.

ஏழைகளின் சிறுநீரகம் – அப்பல்லோவின் இலாபம் – வீடியோ

0

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மக்களின் வறுமையை பயன்படுத்தி  சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக அப்பல்லோவின்  மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர்  மற்றும் மருத்துவமனையிலிருந்த  மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ்  உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. டெல்லியிலுள்ள மேலும் இரண்டு பெரிய தனியார் மருத்துமனைகள் மற்றும் அப்பல்லோவின்  சில ஊழியர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த அநீதியை விளக்கும் வீடியோ செய்தித் தொகுப்பு

கல்வியுரிமை மாநாடு – சம்ஸ்கிருத எதிர்ப்பு – பச்சையப்பன் போராட்டம்

0

1. விருதை கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு உரைகள் ( தொடர்ச்சி)

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மக்கள் உரிமை பாதுப்பு மையம் நடத்திய 6-வது கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – 2016 உரைகள்

பேராசிரியர் சாந்தி, சென்னை

“பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை, டி.வி. சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிள்ளைகளிடம் காட்டுவதில்லை” என்று பெற்றோர்களை சாடினார். “உங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள்? என்று நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கல்வி மட்டுமல்ல அனைத்து விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் இயந்திர மயமாய் மதிப்பெண்ணை நோக்கி ஓடுகிறார்கள் ரோபாட் போல. தனியார் பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும். விளையாட்டு மைதானம் என்பது கிடையாது. ஏன் என்று யார் கேள்வி கேட்க முடியும்? நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்துள்ள அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க மட்டுமே நாற்காலி ஏறியுள்ளார்கள். உங்கள் ஊரில் உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரை சட்டையை பிடித்து கேள்வி கேட்க உரிமை உள்ளது. சமுதாய மாற்றம் என்பது நம்முடைய வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். நம் பிள்ளைகளை ஆண், பெண் வித்தியாசமின்றி வளர்க்க வேண்டும். அம்மா, அப்பா, சித்தி, அத்தை, அக்கா, என்று நல்ல உறவுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவன் வெளியில் செல்லும்போது, வேறொரு பெண்ணை பார்த்தால் தவறான எண்ணம் தோன்றாது. இயற்கையான சூழலோடு நல்ல விஷயங்களை எளிமையாக கற்றுகொள்ள முடியும். அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம். அரசுப்பள்ளிகளை கண்காணித்து கல்வித்தரத்தை உயர்த்துவோம். அது அனைவரின் கடமை” என்று சொல்லி அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

virudai-education-conference
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து ஒவ்வொரு மாணவருக்கும், பரிசு, மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

கணேசன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

“பெற்றோர்கள் மனநிலை தன்னுடைய பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்றுதான் இருக்கிறதே தவிர கல்வியை பற்றி அல்ல” என்றும், “இன்று பள்ளி என்பது சாதி ஏற்றத்தாழ்வுகள் போல பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீட்டில் தனியார்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இட ஒதுக்கீடு, சாதிப் பிரிவினை போல கல்வி இன்று அரங்கேற்றப்படுகிறது. திருச்செங்கோடு, ஈரோடு இடங்களிலே ஓட்டல் வியாபாரம் களைகட்டுகிறது என்கின்றனர் முதலாளிகள். ஏனென்றால் கல்வி ஒரு தொழிற்சாலை போன்று அங்கு நடக்கிறது. பெற்றோர்கள் முட்டி மோதுகிறார்கள். கல்வி முதலாளிகளிடம் கை கட்டி நிற்கிறார்கள். தனியார் பள்ளி என்பது முழுக்க முழுக்க ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது.

ஆனால் கல்வி என்பது ஒரு சேவை மட்டுமே. முழுமையான மனிதனை உருவாக்குவது கல்வி. பகுத்தறிய சொல்லிக்கொடுப்பது கல்வி. சுயசிந்தனையை வளர்ப்பது கல்வி. எனவே தனியார் பள்ளியை புறக்கணித்து பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்து கல்வி தரத்தை மேம்படுத்த அனைவரும் போராடுவோம்” என்று பேசியது பள்ளிக்கூடத்தில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும், கல்வியை ஒரு வியாபாரமாக மட்டுமே தனியார் பள்ளி முதலாளிகள் கையாள்வதை அம்பலப்படுத்துவதாக இருந்தது.

ராஜு (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்)

“விருத்தாசலம் தாலுக்காவில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் நடத்துகின்ற 6-வது மாநாடு. இதில் வட்டச் செயலாளர் கிடையாது, பிரதிநிதி கிடையாது, ஒன்றிய செயலாளர் கிடையாது. மாவட்ட கவுன்சிலர் கிடையாது செயலாளர் கிடையாது. எல்லாம் 70 வயது ஓய்வு பெற்ற வயதான ஐயா வெங்கடேசன் (மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர்) அவரை தொடர்ந்து ஐயா சிறுதொண்டநாயனார், (நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்) அன்பழகன் (ஓய்வு பெற்ற பத்திரபதிவுத்துறை) இவர்கள்தான் இரவு பகலாக எழுத்திலும், பேச்சிலும், நடவடிக்கையிலும் செயல்பட்டு இந்த மாநாட்டை இங்கு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் பேரணி நடத்த போலீஸ்காரர்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் பேரணி நடத்தினால் முழக்கம் போடுகிறீர்கள், மக்களுக்கு கேட்கும். மாநாடு என்றால் ஒரு ஒதுக்குபுறமாக பேசிட்டு போயீடுவிங்க. இந்த வருடமும் இதற்கு முன் வருடமும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு போட்டு உயர்நீதி மன்றம் பேரணி நடத்துங்கள் என அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பேரணி வைத்தால் அனைவரும் வருகிறார்கள் என காவல்துறைக்கு அச்சுறுத்தல். இங்கு கல்வி பிரச்சனைக்கு போராடுவார்கள் அங்கு டாஸ்மாக் மூடக்கோரி ஆதரவு தருவார்கள். மணல்குவாரி மூட சொல்லி போராடுவார்கள், நகராட்சி ஊழலை எதிர்த்து போராடுவார்கள். இதனால்தான் காவல்துறை அ னுமதி கொடுக்க மறுக்கிறது.

பெற்றோர்கள் அனைவரும் அரசுப்பள்ளியை தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். ஒன்று பிள்ளைகள் நல்ல மார்க் வாங்க மாட்டான். மற்றொன்று ஒழுக்கமாக (Discipline) இருக்க மாட்டான், கெட்டு போயிடுவான். சரி, எக்கசக்கமா காசு ஆகுதே என்றால், அது பரவாயில்ல, கடன உடன வாங்கி வருடத்திற்கு 50 ஆயிரம், ஒரு லட்சம் என்று கட்டினால் அத்தோடு தொல்லை விட்டது என்று நினைக்கிறார்கள்.

தனியார் பள்ளி தரம் என்பது உண்மையா? (Discipline) என்றால் என்ன? தனியார் பள்ளியி்ல் படித்தால் நல்ல (Discipline) வரும் என்றால் இப்போது உள்ள ஐ.டி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், உயர்நிலை அதிகாரிகள் அனைவரும் ஏன் ஸ்டார் ஓட்டலில் சென்றுசாராயம் குடிக்கிறார்கள்? இன்று உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாம் தனியார் பள்ளியில் படித்தவர்கள் தான். ஊழலுக்கு துணைபோகிறார்கள். இலஞ்சம் வாங்குகிறார்கள். நேர்மையை விலை பேசுகிறார்கள். கனிம வளத்தை சுரண்ட அனுமதி அளிக்கிறார்கள். மக்களிடம் வந்து பொய் பேசுகிறார்கள். சட்டவிரோதமாக நடக்கிறார்கள். அனைத்தும் இவர்களால்தான் நடக்கிறது. இது தான் Discipline ஆ?

இன்று தனியார் பள்ளி, கல்லூரி நடத்தாத அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா? ஏன் என்றால் கல்வி ஒரு வியாபாரம். தனியார் பள்ளியை ஒழிக்காமல் அரசுப் பள்ளியை வளர்த்தெடுக்க முடியாது. இரட்டைத் தண்டவாளம் போல ஒருநாளும் போக முடியாது. விவசாயிகள் தன்னுடைய விளைச்சலுக்கு இலாபம் இல்லாவிட்டாலும், சொன்ன தொகையை கொடு என்று போராட்டம் நடத்தி விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அவர்களை இந்த அரசாங்கம் கண்டுகொள்ள வில்லை. ஆனால் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு 15% கேட்காமலேயே கட்டண நிர்ணயம் செய்து கொடுக்கிறது இந்த அரசு. தனியார் பள்ளி முதலாளிகள் கொள்ளையடிக்க அரசு வழிவகுக்கிறது. வெளியில் 250 ருபாய்க்கு விற்கப்படும் செருப்பு தனியார் பள்ளியில் 1350 ரூ. என்று விற்கிறார்கள். ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று எந்த பெற்றோரும் கேட்பதில்லை. உங்களுடைய சுயமரியாதை எங்கே போனது. உங்கள் பிள்ளைகளை பணயக் கைதியாக்கி உங்களிடம் பணம் பறிக்கிறார்களே? ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்க நீங்கள் எவ்வளவு பாடுபடுகிறீர்கள்? உங்களுடைய மூளை எப்படி ஊழல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை திரும்பி பார்க்க வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் சரியாக சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு தினசரி இரவு 11 மணிக்குமேல் பேப்பர் திருத்தி மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எப்படி ஒரு பிள்ளைக்கு சரியாக சொல்லிக் கொடுக்க முடியும்? கற்பித்தல் என்பது கஷ்டமான வேலையை எளிமையாக எப்படி செய்யமுடியும் என்பதை சொல்லிக் கொடுப்பதுதான். அவ்வாறு கற்றதை பரிசோதித்து மேலும் வளர்க்க வகுக்கப்பட்டதே மதிப்பிடல். அதைத்தான் இன்று தேர்வு என்று மாற்றியுள்ளார்கள். 490 மதிப்பெண் வாங்கியவன் முதல் மாணவன் என்றால், 300 மதிப்பெண் வாங்கியவன் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்றவனா?

தவறுகளை தட்டிக் கேட்பதும், தெரிந்து கொண்ட விஷயத்தின் மீது வாதிடும் அறிவை, ஆற்றலை வளர்த்துக்கொள்வதும்தான் கற்றுக்கொண்டதின் அடையாளம். அனுபவத்தை அறிவோடு, கல்வியோடு சேர்த்து மேலும் மேலும் வளர்த்துக்கொள்வதுதான் கற்றல்-கற்பித்தல் என்பது. சிறு கப்பல், சிறு ஏவுகணை, சிறு கார் என்று அனுபவத்தில் படிப்பை இணைத்து ஒட்டுமொத்த சமூகத்தில் மனிதவளம் கொண்டதாக மாறுகிறது. கல்வி என்பது முழு நிறைவான மனிதனை உருவாக்குவதுதான்.

பெற்றோர்களே, அரசுப் பள்ளி நமது பள்ளி. நீங்கள் மாதம் ஒரு முறை உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று வகுப்பாசிரியரை சந்தித்து எப்படி படிக்கிறார்கள் என்று கேட்டறிந்து ஒரு நாள் முழுவதும் உங்கள் பிள்ளை வகுப்பில் ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்று கண்காணியுங்கள். நீங்கள் கண்காணிக்க ஆரம்பித்தால் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தனியார் பள்ளிக்கு சென்று டியுஷன் எடுக்க மாட்டார்கள். லஞ்சம் வாங்க மாட்டார்கள். மற்ற எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள். அவ்வாறு ஈடுபட்டால் அவர்களை சஸ்பெண்ட் செய்ய ஒரு போஸ்டர் போதும். அதிக செலவில்லை. 1000 ருபாய் போதும். உங்கள் பகுதியிலுள்ள பள்ளியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (கிளை) என்று போர்டு வையுங்கள். அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேளுங்கள். அமைப்பாக திரளுங்கள்.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

2. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் நடத்தி வரும் பல்வேறு அடக்குமுறைகளைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 05-07-2016 அன்று காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Pachiayappa-College-students-struggle-2மாணவர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக போராடக் கூடாது என்பதற்காகவும், அவர்களை ரவுடிகளாக சித்தரிக்கும் வகையிலும் காவல் துறை பல்வேறு அடக்குமுறைகளை மாணவர்கள் மீது ஏவி வருகிறது. கல்லூரி வாயிலில் நின்று ID கார்டை சோதிப்பது, கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து மாணவர்களை தாக்குவது, கேமரா வைத்து கண்காணிப்பது என்று கல்லூரி மாணவர்களை சிறைக் கைதிகளைப் போல் காவல் துறை நடத்தி வருகிறது.

மேலும் கல்லூரிக்குள் உள்ள விளையாட்டுத் திடலையும் மாணவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. கல்லூரியின் மெயின் கேட்டை மூடி, பின்புற வாயில் வழியாகத்தான் வர வேண்டும் என்று மாணவர்களை நிர்jfபந்தித்து, ஒவ்வொருவரையும் சோதனை செய்து அதன்பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர். இவற்றைத் தடுக்க வேண்டிய கல்லூரி நிர்வாகமோ, காவல் துறையை போல் நடந்து கொள்கிறது.

திருவேற்காட்டை சேர்ந்த மணி என்ற மாணவர், ஐந்து நாட்கள் தொடர்ந்து கல்லூரிக்கு வராமல் இருந்துள்ளார். அடுத்தடுத்த நாட்கள் அவர் கல்லூரிக்கு வந்த போதும் அவருக்கு வருகைப்பதிவு அளிக்காமல் இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வதாகவும் கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. மேலும் போலீசை வைத்து விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், அம்மாணவரை மீண்டும் கல்லூரியில் சேர்ந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், கல்லூரிக்குள் போலீசு வந்து மாணவர்களைக் கண்காணிப்பதையும், மாணவர்களை ரவுடிகளாக சித்தரிப்பதையும், மாணவர்கள் மீது போலீசு நடத்தும் அடக்குமுறைகளைக் கண்டித்தும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், 500-க்கும் மேற்பட்டோர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி யை சேர்ந்த மருது தலைமையில், கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மாணவர்களை பயமுறுத்தும் விதமாக, நூற்றுக் கணக்காண போலீசைக் குவித்து போராட்டத்தை அடக்க முயற்சித்தது. இருப்பினும் காவல் துறையின் இந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கல்லூரி முதல்வர், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி பத்து மாணவர்களை உள்ளே அழைத்துள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும், கல்லூரிக்குள் போலீசை அனுமதிக்கக் கூடாது, விளையாட்டுத் திடலை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர்களுடைய கோரிக்கையைக் கூறியவுடன், மாணவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதைத் தவிர மற்ற எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது, என்று அதை மீறி எதுவும் பேசக் கூட விடாமல், மாணவர்களை வெளியே அனுப்பியுள்ளார். கல்லூரி நிர்வாகம் தங்களுடைய கோரிக்கைகளை ஏற்காததால், தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இணைந்து, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தனியார் கல்லூரிகளில் பணம் கட்டி படிக்க வழியில்லாத மாணவர்கள் தான் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை நாடி வருகின்றனர். அவர்களில் பலர் பகுதி நேர வேலைகளுக்கு சென்று தான் படிக்க முடியும் என்ற அவல நிலையில் உள்ளனர். அப்படிப்பட்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பது குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத மாட்டுக் கொட்டகைகள் போல் தான் உள்ளது. மாணவர்களுக்கான கலாச்சார விழாக்கள், மாணவர் பேரவை தேர்தல்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. ஒதுக்கப்பட்ட சேரிகள் போல தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இதை எதிர்த்து போராடும் மாணவர்களை ரவுடிகளாக முத்திரை குத்தி அடக்குமுறைகளை ஏவுகின்றனர்.

இந்த அடக்குமுறைகளை உணர்ந்து அதை உடைக்க, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

3. சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து விருத்தாசலம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

2016-17 கல்வியாண்டிலிருந்து CBSC மற்றும் ICSE பள்ளிகளில் சமஸ்கிருதம் மூன்றாவது மொழிப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. மேலும் புதிய பாடத்திட்டங்கள் என்ற பெயரில் பார்ப்பனிய சாதிய கட்டுமானத்தை உயர்த்தி பிடிக்கும் புராண – இதிகாச ஆபாச குப்பைகளை பாடத்திட்டங்களில் நுழைக்க முயல்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் இந்து – இந்தி – இந்தியா எனும் இந்துராஷ்டிரமாக மாற்ற பல்தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்கும் மோடி அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சியே – இந்த சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு.

rsyf-sanskrit-protest-virudai-1இதைக் கண்டித்தும் விருத்தாசலத்தில் பு.மா.இ.மு சார்பில் 04-07-2016 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர காவல்துறை ஆய்வாளர், டி.எஸ்.பி, எஸ்.பி என பல நாட்கள் இழத்தடித்தது. டி.எஸ்.பி “எத்தனை பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வரப் போகிறார்கள் யார் யார் என்ன பேசப் போகிறார்கள்” என ஒரு புலனாய்வு நடத்தி முடிந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விருத்தாசலம் நகர செயலாளர் தோழர் மணிவாசகம் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில்

மோடி அரசின் இந்த சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கை என்பது இந்து – இந்தி – இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கத்தை முன்னெடுக்கும் முயற்சியே. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்றில்லாமல் வெறும் 3,000 பேரே பேசக்கூடிய இந்த மொழியை ஆட்சி மொழியாக்க நாட்டின் ஒற்றை மொழியாக மாற்றத் துடிக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பேசும் மொழிகள் இருக்கையில் இப்படி அவர்கள் செய்வதன் நோக்கமே அதன்பின் உள்ள பண்பாட்டை திணிக்கவே. அந்த பண்பாடு பார்ப்பனிய சாதிய பண்பாடு ஆகும். ஒரு பக்கம் அண்டை நாடுகளை தன் ஆதிக்கத்தில் கொண்டு வரும் அகண்ட பாரத கலை பிரசாரத்தை செய்து கொண்டே இன்னொரு பக்கம் நாட்டின் மனித வளம், இயற்கை வளம் கனிம வளம் ஆகியவற்றை பன்னாட்டு முதலாளிகளிடம் விற்க வேலைகளை செய்கிறது. இதனால் இவர்களின் உண்மை முகம் என காலிபயங்கரவாதிகளின் தேசம், தேசபக்தி ஆகியவற்றை தோலுறித்து காட்டினார். மேலும் இந்த சங்க பரிவார கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்கள் போராட முன்வர வேண்டும் அறைகூவி அழைத்தார்.

அதன்பிறகு விருத்தாசலம் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் இன்று இந்த சமஸ்கிருத திணிக்கும் மோடி அரசின் நடவடிக்கை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் செயலே. அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தோற்றம், பயங்கரவாதத்தன்மை, இது இந்நாட்டின் மக்களுக்கு பேரபாயம் என்பதை விளக்கி பேசினார். இதை எதிர்த்து போராடுவது ஜனநாயக சக்திகளின் கடமை என்று அறைகூவி அழைத்தார்.

rsyf-sanskrit-protest-virudai-2அடுத்ததாக திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முத்து கதிரவன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில்

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கை என்பதை மூட நம்பிக்கைகளை பார்ப்பனிய சாதிய வருணாசிரமத்தை பரவச் செய்து மேலும் பலம் பெற்றதாக மாற்றும் அதன் நோக்கமாக பார்க்க வேண்டும். செத்த மொழிக்கும் சிங்காரம் செய்வதன் நோக்கம் அதுவே. இந்த சமூக இழி நிலைமைகளுக்கு காரணமானவற்றை அழித்தொழிக்க வேண்டும். இந்த பணியை தமிழகத்தில் பெரியார் தொடங்கி வைத்தார். அதை மாணவர்கள் போர் குணமிக்க போராட்டங்கள் மூலம் தொடர்ந்தனர். இப்போது மீண்டும் அப்படி ஒரு போராட்டம் அவசியப்படுகிறது. அதற்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று கூறினார்.

அடுத்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜு கண்டன உரையாற்றினார். அவர் தனது கண்டன உரையில்

rsyf-sanskrit-protest-virudai-1நாட்டில் மக்கள் நேரடியாக பாதிக்கிற எவ்வளவு பிரச்சனை இருக்கையில் சமஸ்கிருதம் என்ற மொழிக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த வேண்டுமா ? என பலர் கருதுகின்றனர். இந்த சமஸ்கிருதம் கொண்டு வருவது என்பது மக்களின் பண்பாடு, மொழி என்ற பெயரில் அமிலத்தை ஊற்றுவதாகும். உலகில் உள்ள ஏனைய மொழிகளில் எல்லாம் கற்க விஞ்ஞானம், தத்துவம் என ஏதோ ஒன்று உள்ளது. ஆனால் சமஸ்கிருத்தில் இருப்பது பூஜை மந்திரங்களும், மூடநம்பிக்கைகளும் நிரம்பி வழியும் புராணம் கட்டு கதைகளே.

சரி இந்த சமஸ்கிருதம் அனைவரும் கற்க வேண்டும் என்கிறார்களே பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்க்கு பெண் கொடுப்பார்களா ? அதை கற்றால் தில்லை கோயிலில் புஜை செய்ய சூத்திரனை அனுமதிப்பார்களா? அப்புறம் எதற்கு இதை நான் கற்க வேண்டும். மக்களுக்கு தேவையான ஏதாவது இந்த மொழியில் இருக்கிறதா? ஒரு மொழி என்பது அந்த நாட்டினுடைய மக்களின் சொத்து, அனுபவ அறிவு ஆகியவற்றை கொண்டுள்ளது. இவற்றை அழிப்பது ஏற்க முடியாது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அலை அலையாக திரண்டார்கள் அப்படி ஒர போராட்டம் நடப்பதற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டம் கூறியதாக நம்புகிறேன்.

ஆர்ப்பாட்டத்தில் உரைகளின் இடையே தோழர்கள் போர்க்குணமிக்க முழக்கங்கள் விண்ணதிரச் செய்தது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம்

இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?

33
ட்ட்

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை பாசிஸ்டுகள் எப்போதுமே விரும்புவதில்லை. அயோத்தி விவகாரத்தில் தற்போது பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்றும் அவனுக்கு ஆலயம் கட்டப்பட்டிருந்தது என்றும் கூறி வரும் விசுவ இந்து பரிசத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் ஆரம்ப காலத்தில் தங்களது கூற்றுக்கு ஆதாரம் காட்டுவது போல பொய்யையும் புனை சுருட்டுகளையும் கொஞ்சம் அவிழ்த்துவிட்டுப் பார்த்தார்கள். “இதோ ஆதாரம்” என்று வாதாடினார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களும் ஜனநாயக உணர்வுள்ள அறிஞர்களும் அவற்றுக்கு எதிர்வாதங்களை வைத்து முறியடிக்க தொடங்கியவுடனே ராகத்தை மாற்றிக் கொண்டு விட்டனர், இந்து மதவெறியர்கள்.

டிச 6 1992 ல் நடைபெற்ற பாபர் மசூதி கர சேவர்களால் இடிக்கப்பட்டது
டிச 6 1992 ல் பாபர் மசூதி இந்து கர சேவர்களால் இடிக்கப்பட்டது

அயோத்தியில் அவர்கள் குறிப்பிடும் இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பதற்கு அசைக்க முடியாத வரலாற்று ஆதாரம் இருப்பதாகக் கூறியவர்கள் ”சரி அவற்றை முன் வைத்து கோர்ட்டில் வாதாடுங்கள்” என்றவுடனே ”இல்லையில்லை; இது ஒரு மதத்தினரின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதன் மீதெல்லாம் கோர்ட் தீர்ப்பு வழங்க முடியாது” என்று மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர். இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை வெறி கொள்ளச் செய்யும் வகையில் இப்போது பேசுகின்றனர்.

“ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் லண்டனிலா கோயில் கட்ட முடியும்?” என்கிறார், அத்வானி. ”எல்லாம் வல்ல இறைவன் இராமனை கோர்ட் கூண்டில் வாதியாக நிற்க வைத்து வாதாடச் சொல்கிறீர்களா?” என்று திசை திருப்புகிறார், விஸ்வ இந்து பரிசத் தலைவர் சிங்கால்.

அயோத்தி நகரில் எந்த இடத்திலும் கோயில் கட்டக்கூடாது என்று யாரோ தடை விதித்து விட்டதைப் போல அத்வானி பேசுவதில் நயவஞ்சகத்தனமும் பித்தலாட்டமும் வெளிப்படையாகத் தெரிகிறது. பாபர் மசூதி இருக்குமிடத்தில் தான் ராமன் பிறந்தானா? என்று கேட்டவுடன் ”கடவுளைக் கூண்டிலேறி தனக்காக வாதாடச் சொல்கிறீர்களா?” என்று கேட்கும் சிங்காலையோ, விசுவ இந்து பரிசத்தையோ இராமனின் வக்கீலாக யார் நியமித்தார்கள்? அல்லது இந்து மதத்தினரின் பிரதிநிதியாக யார் தேர்ந்தெடுத்தார்கள்?

குருட்டு நம்பிக்கைகளையே தங்களது கோரிக்கைகளின் ஆதாரமாக வைக்கும் இவர்கள் வரலாற்றைத் திரிக்கும் வேலையை நிறுத்தி விட்டார்களா என்றால் இல்லை. அது ஒருபுறத்தில் நடந்து கொண்டு தானிருக்கிறது.

அயோத்தி நகரில் எந்த இடத்திலும் கோயில் கட்டக்கூடாது என்று யாரோ தடை விதித்து விட்டதைப் போல அத்வானி பேசுவதில் நயவஞ்சகத்தனமும் பித்தலாட்டமும் வெளிப்படையாகத் தெரிகிறது.
அயோத்தி நகரில் எந்த இடத்திலும் கோயில் கட்டக்கூடாது என்று யாரோ தடை விதித்து விட்டதைப் போல அத்வானி பேசுவதில் நயவஞ்சகத்தனமும் பித்தலாட்டமும் வெளிப்படையாகத் தெரிகிறது.

அக்டோபர் 30-ம் தேதி பாபர் மசூதியை இடிப்பதற்காக குஜராத் மாநிலம் சோமநாதபுரத்திலிருந்து தனது ரத யாத்திரையைத் துவங்கும் போது அத்வானி பேசியுள்ளதே இதற்கு ஆதாரம். ”சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது மீண்டும் மீண்டும் படையெடுத்துக் கொள்ளையடித்தான். கோயிலை நாசம் செய்தான். இந்த வரலாற்று இழிவைத் துடைப்பதையே தனது முதல் கடமையாக எடுத்துக் கொண்ட சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் இக்கோயிலை புனர் நிர்மாணம் செய்து தூய்மைப்படுத்தினார். அது முதல் கட்டம் தற்போது பாபர் மகுதி எனும் அவமானச் சின்னத்தைத் தகர்த்து ராமனுக்கு நாங்கள் கோயில் கட்டவிருப்பது இரண்டாவது கட்ட நடவடிக்கை. அன்று அதை எதிர்க்காதவர்கள் இன்று எங்களை மட்டும் எதிர்ப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரசை மதசார்பற்ற கட்சியாகவும், படேல் போன்ற இந்து மதவெறியர்களை மத சார்பற்ற தலைவர்களாகவும் ஏற்று தலையில் வைத்துக் கூத்தாடிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஒட்டுக் கட்சிகளால் இதற்கு பதில் சொல்ல இயலவில்லை.

”பிரிட்டிஷார் மட்டுமல்ல முஸ்லீம்களும் அன்னியர்களே. அவர்கள் அன்னியர்கள் மட்டுமல்ல. இகலாமிய மத வெறியர்கள். அதனால்தான் அவர்கள் இந்து கோயில்களைச் சூறையாடினார்கள். இடித்துத் தள்ளினார்கள். இந்த தேசிய அவமானத்தைத் துடைத்தெறிய அவ்வாறு கோயில்களை இடித்துக் கட்டப்பட்ட மசூதிகளை எல்லாம் இப்போது இடிக்க வேண்டும். பழையபடி அங்கே கோயில்களை எழுப்ப வேண்டும்” என்பதுதான் இந்து மத வெறியர்களின் தற்போதைய போர் முழக்கம்.

முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு அன்னியர்கள் என்றால் ஆரியர்கள் மட்டும் என்ன? முஸ்லீம்களிலாவது மதம் மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் ஆரியர்கள் யார்? முழுவதும் அன்னியர்கள் தானே!

aryans
முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு அன்னியர்கள் என்றால் ஆரியர்கள் மட்டும் என்ன?

இசுலாமிய மன்னர்கள் அனைவரும் மதவெறியர்களா? அதனால்தான் அவர்கள் இந்து கோயில்களை இடித்தார்களா? இந்து மன்னர்களும் மதத் தலைவர்களும் ஆர். எஸ்.எஸ் கூறுவது போல சகிப்புத் தன்மை மிக்கவர்களா? அவர்கள் சக மதத்தினரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு சில வரலாற்று ஆதாரங்களை நாம் பார்ப்போம். அதற்கு முன் மன்னர்களின் காலத்தில் அரசியலில் மதத்தின் பாத்திரம் என்ன? மதசார்பின்மை என்பது அப்போது நிலவியதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

மன்னராட்சிக் காலத்தில் இங்கு மட்டுமல்ல உலகெங்கிலுமே மதம் அரசியலுடன் பிரிக்க முடியாதபடி கலந்திருந்தது. மன்னனின் மதம் எதுவோ அதுவே அரசு மதமாக இருந்தது. பிற மதத்தினர் ஒடுக்கப்பட்டனர் அல்லது பாரபட்சமாக நடத்தப்பட்டனர். படையெடுப்புகள் நடத்தப்படும் போது வெற்றி கொள்ளப்பட்ட நாட்டினர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்களுடன் சேர்ந்து அவர்களது மதத்தையும் ஒடுக்குவதென்பது அடக்குமுறையின் வடிவமாக இருந்தது இதற்கு யாரும் விதிவிலக்கில்லை.

இன்று பேசப்படுகிற மதச்சார்பின்மை, அரசியலிலிருந்து மதத்தைப் பிரிப்பது என்ற கோட்பாடுகளெல்லாம் முதலாளித்துவ ஜனநாயக காலத்தின் கருத்துக்கள். மதச் சார்பின்மையைப் போலவே மதவெறி என்பதும் இன்றைய காலத்தில் தோற்றமெடுத்ததுதான். பல்வேறு மதங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களுடைய மதம் சம்பந்தப்படாத கோரிக்கைகளை வர்க்க அடிப்படையிலான கோரிக்கைகளைத் திசை திருப்புவதற்காக ஏகாதிபத்தியம் திட்டமிட்டே ஊட்டி வளர்த்தது தான் மதவெறிக் கோட்பாடு. எனவே இசுலாமிய மன்னர்களெல்லாம் மத வெறியர்கள் என்று பிரச்சாரம் செய்து அதன் மூலம் இந்து மதவெறியைத் துண்டி அதிகாரத்தைப் பிடிக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதியை முறியடிக்க இந்து மன்னர்களின் ’சகிப்புத் தன்மைக்கு’ சில வரலாற்று உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

கஜினி முகம்மது
கஜினி முகமது

கஜினி முகமது மற்ற பல கோயில்கள் இருக்க சோமநாதபுரத்தை மட்டும் ஏன் கொள்ளையடிக்க வேண்டும்? 11-ம் நூற்றாண்டின் துவகத்திலேயே இந்த ஆலயத்திற்கு 10,000 கிராமங்களும், 500 தேவதாசிகளும், 300 முடி திருத்துபவர்களும் சொந்தமாக இருந்தனர். மற்ற சொத்துக்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எனவே இந்து மதத்திற்கெதிரான வெறியல்ல கஜினியின் கொள்ளைக்கு காரணம்; மாறாக சோமநாதபுரம் ஆலயத்தின் சொத்துதான். இத்தகைய கொள்ளையை இந்திய வரலாற்றில் இசுலாமியர்கள் மட்டும்தான் செய்தார்களா என்றால் இல்லை.

11-ம் நூற்றாண்டின் இறுதியில் காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த ஹர்ஷன் என்னும் இந்து மன்னன் தனது அரசவையில் விக்கிரகங்களைத் திருடுவதற்கென்றே ஒரு இலாகாவையும் அதற்கு ஒரு அதிகாரியையும் (தேவோத்பாதனா) நியமித்திருந்தான். மூட நம்பிக்கைகளையும் பொய்களையும் பரப்புவதன் மூலம் மக்களிடம் பணம் வசூல் செய்யலாம் என்று சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் மன்னனுக்கு ஆலோசனை வழங்குகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்கள் தனது மதத்தையே சேர்ந்தவர்களாக இருந்தாலும் அங்கிருந்த கோயில்களை இந்து மன்னர்கள் சூறையாடினார்கள். இதற்கு காரணம் கோயில்களில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்து கிடந்தது தான். இப்படிக் கொள்ளையடிப்பதை கஜினி மட்டும் செய்ய வில்லை, ராஜராஜ சோழன் முதல் ஹர்ஷன் வரை அனைவரும் செய்தனர்.

இசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?

வீர சிவாஜி
சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?

இந்து மன்னர்கள் மட்டுமல்ல மதப் பெரியார்கள் என இன்று வழிபடப்படுகின்ற ‘அன்பின் திருவுருவான ஆழ்வார்களும், நாயன்மார்களும் என்ன செய்தார்கள்? தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருமங்கை யாழ்வார் நாகை புத்த விகாரத்திலிருந்து தங்கத்தினாலான புத்தர் சிலையைத் திருடி உருக்கி விற்று ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்கு ’நன்கொடை’ கொடுத்திருக்கிறார் அவரது பாடல்களில் ஜைனர்களுக்கும், புத்தர்களுக்கும் எதிரான தாக்குதல் நிரம்பி வழிகிறது.

சொத்துக்களைக் கொள்ளையிடுவது ஒருபுறமிருக்க மற்ற மதத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பதிலும் ’இந்து’ மன்னர்கள் முன்னணியில் நின்றனர்.

7-ம் நூற்றாண்டில் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்த சைவ மதத்தைச் சேர்ந்த சசாங்கன் என்ற மன்னன் புத்த மதம் தழைத்தோங்கிய 47 நகரங்களை (உ.பி. மாநிலத்தில்) பூண்டோடு ஒழித்தான். புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்ற போதி மரத்தை வெட்டித் தள்ளினான். அவனுக்கு முன் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜாதசத்ரு என்ற மன்னனும் இவ்வாறே புத்த மதத்தினரை வேட்டையாடினான்.

மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் கங்க வமிச ஆட்சியைத் தோற்றுவித்த புஷ்யமித்திர சுங்கன் எனும் பார்ப்பன மன்னன் “ஒரு புத்த பிக்குவின் தலைக்கு நூறு பொற் காககள்” என்று பகிரங்கமாக பிரகடனம் செய்து புத்த மதத்தினரை ஒடுக்கினான்.

சங்கராச்சியார்
சங்கராச்சியார் – புத்த பிக்குகளில் முக்கியமானவரான நாகார்ஜுனரின் பெயரால் அமைந்த ஒரு புத்த விகாரத்தைத் தகர்த்துத் தரைமட்ட மாக்கி அங்கேயிருந்த புத்த பிக்குகளை கொன்று குவித்தனர் பார்ப்பனர்கள்

7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞான சம்பந்தர் பாண்டிய மன்னனை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மதமாற்றம் செய்ததுடன் 8,000 சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார் என்பது வரலாறு. இந்த வரலாற்றுக் களங்கத்தை மதுரையிலும், சீர்காழியிலும் இன்று வரை விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது நாமறிந்ததே. ’இந்து’ மதத்தினரின் “சகிப்புத் தன்மைக்கு” இன்னும் வேறென்ன சான்றுகள் வேண்டும்?

பார்ப்பன் ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய ஒரே காரணத்திற்காக புத்த மதத்தினரை பார்ப்பனர்களும் அவர்களால் வழி காட்டப்பட்ட மன்னர்களும் துன்புறுத்தினர். புத்த பிக்குகளில் முக்கியமானவரான நாகார்ஜுனரின் பெயரால் அமைந்த ஒரு புத்த விகாரத்தைத் தகர்த்துத் தரைமட்ட மாக்கி அங்கேயிருந்த புத்த பிக்குகளை கொன்று குவித்தனர் பார்ப்பனர்கள். இதற்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர் முதல் சங்கராச்சாரி என்பது குறிப்பிடத்தக்கது.

புத்த மதத்தின் மீது பார்ப்பன மதத்தினர் (அதாவது இந்து மதத்தினர்) கொண்டிருந்த வெறுப்பு அளவு கடந்தது. 11-ம் நூற்றாண்டில் துருக்கியர்கள் (இசுலாமியர்கள்) படையெடுத்து வந்த போது அவர்களை ’போதிசத்துவர்கள்’ என்று கூறி வரவேற்றது யார் தெரியுமா? பார்ப்பனர்கள்தான். யாரோடு கூட்டு சேர்ந்தாவது பெளத்த மதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இருந்த வெறிக்கு இது ஒரு உதாரணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ’சூன்ய புராணம்’ எனும் வடமொழி நூல் இதற்கு ஆதாரமாக உள்ளது.

இசுலாமியர்களால் கறைபடுத்தப்பட்ட வரலாற்றைத் துடைத்து சுத்தம் செய்யப் போவதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். ’இந்து’ மன்னர்கள் தோற்றுவித்த கறைகளைக் கழுவ எத்தனை கோயில்களை இடிக்கத் தயாராக இருக்கிறது?

புத்த சமண மதங்களை எதிர்ப்பதில் மட்டுமல்ல; சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணாபத்யம் போன்ற 6 மதப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதிலும் படுகொலை செய்து கொள்வதிலும் கூட மூர்க்கமாகவே இருந்தனர். (’இந்து’ என்றொரு மதம் இருந்ததில்லை. வருணாசிரம தருமம் தான் இந்து மதம் என்று பின்னர் அழைக்கப்பட்டது. ஆனால் வழிபாட்டு முறைகளின் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் பல்வேறு மதங்கள் இந்தியாவில் நிலவின.)

வைணவ மதத்தைச் சார்ந்த ராமானுஜரும் அவரது சீடர்க்ளும் சோழ மன்னர்களால் துன்புறுத்தப்பட்டனர்; வேட்டையாடப்பட்டனர். கி.பி. 1098 முதல் 1122 வரை ஸ்ரீரங்கத்தை விட்டு ராமானுஜர் கர்நாடக மாநிலத்திற்கு ஓட வேண்டியிருந்தது. அங்கே ஹொய்சாள மன்னனை சமண மதத்திலிருந்து வைணவ மதத்திற்கு மதமாற்றம்செய்து அவனது தயவில் காலம் கழிக்க வேண்டிவந்தது.

வைணவத்திற்கும், சைவத்திற்கும் நடந்த மோதல்களுக்கும், வைணவத்திலேயே வடகலை, தென்கலை ஆகிய இரு உட்பிரிவுகளுக்கு இடையே நடைபெற்ற ஆயுதமோதல்களுக்கும் வரலாற்றில் ஏராளமான ஆதாரங்கள் உண்டு.

ஏன்? டெல்லியை ஆண்ட சுல்தான் ஷா அரசைத்தாக்கி அழித்த தைமூர் கூட ஒரு இசுலாமியன் தானே!

இராஜ ராஜ சோழன்
இராஜ ராஜ சோழன் – கொள்ளையடிப்பதை கஜினி மட்டும் செய்ய வில்லை, ராஜராஜ சோழன் முதல் ஹர்ஷன் வரை அனைவரும் செய்தனர்.

இந்துக்களுடன் சேர்ந்து விட்டதால் முகலாயர்களின் புனிதம் கெட்டுவிட்டதென்றும் அதனால்தான் அவர்கள் மீது படையெடுப்பதாகவும் அன்று தனது ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தான் துருக்கியனான தைமூர். முஸ்லிம் மதவெறியன் என இன்று ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அவதூறு செய்யப்படும் திப்பு சுல்தான் எவ்வாறு முறியடிக்கப்பட்டான்? திப்புவை ஒழித்துக்கட்ட பிரிட்டிஷாருக்கு உதவியவர்கள் யார்? ’இந்து’க்களான மராட்டிய மன்னர்களும், முஸ்லிமான ஐதராபாத் நிஜாமும்தானே ஆர்.எஸ். எஸ். ”தேசபக்தர்கள்” இதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள்?

வரலாற்று நிகழ்வுகளில் இருந்து இன்னும் ஏராளமான உதாரணங்களை நாம் காட்டவியலும். இந்த உதாரணங்களெல்லாம் இசுலாமிய மதத்தைச் சேர்ந்த சில மன்னர்கள் இந்து மதத்தினர்மீது நடத்திய அடக்கு முறைகளை நியாயப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டவை அல்ல; மாறாக இசுலாமிய மன்னர்கள் மட்டுமல்ல; இந்து மன்னர்களும் அவ்வாறுதான் நடந்துகொண்டார்கள் என்பதை நிருபிக்கத்தான். சொல்லப் போனால் இசுலாமியர்கள் ’இந்து’ மதத்தினரிடம் காட்டிய சகிப்புத் தன்மையில் நூற்றிலொரு பங்கைக்கூட சமண, புத்த மதத்தினரிடம் இந்து மன்னர்களும், மதத் தலைவர்களும் காட்டவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

இசுலாமியர்களால் கறைபடுத்தப்பட்ட வரலாற்றைத் துடைத்து சுத்தம் செய்யப் போவதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். ’இந்து’ மன்னர்கள் தோற்றுவித்த கறைகளைக் கழுவ எத்தனை கோயில்களை இடிக்கத் தயாராக இருக்கிறது? மன்னர்களின் நாடு பிடிக்கும் வெறி, பொன்னாசை, மண்ணாசை ஆகியவற்றில் இருந்து விலகி நின்று தங்களுக்குத் தெரிந்த வகைகளில் எல்லாம் (அவை மூட நம்பிக்கைகளாயினும்) பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள் மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் தோற்றுவித்து வளர்த்து வந்திருக்கிறார்கள்.

வடக்கே ஆஜ்மீரிலிருந்து தெற்கே நாகூர் வரை இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வழிபடும் இடங்கள் ஏராளமாக உள்ளன. துருக்கியர்கள், ஆப்கானியர்கள், பத்தானியர்கள், பாரசீகத்தினர், அராபியர்கள் போன்ற பல்வேறு இனங்களைச் சேர்ந்த இசுலாமியர்களும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ’இந்து’ மதத்தினரும் இணைந்து இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சியில், கலை, இலக்கியங்களின் வளர்ச்சியில் கணிசமான பங்காற்றியுள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியிலும், பிறகு முஸ்லிம் லீக்கிலும் இருந்த அப்துல் ரகுமான் சித்திக் என்பவர் ஒருமுறை கூறினாராம் ”ஒரு இந்து இறந்து விட்டால் அவனது உடலை எரித்து சாம் பலை நதியில் கலந்து விடுகிறார்கள். அந்த ஆற்று நீரோட்டம் சாம்பலை எங்கு கொண்டு சேர்க்குமோ, அது கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், ஒரு முஸ்லீம் இறந்து விட்டால் அவனுக்கு ஆறடி நீளம், மூன்றடி ஆழமுள்ள குழி ஒன்று தேவைப்படுகிறது. அவன் பிறப்பிலும், இறப்பிலும் இந்த நாட்டைச் சேர்ந்தவன்தான்”.

வரலாறு அனைவருக்கும் புரிகின்ற மொழிகளில்தான் எழுதப்பட்டுள்ளது. ஒரு வேளை ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறியர்களுக்கு அவை புரியவில்லை என்றால் அவர்களுக்கு புரிகின்ற மொழியில் நாம் பதில் சொல்வோம்.

சூரியன்
நவ, டிச 1990, ஜன 1991.
புதிய கலாச்சாரம்.

கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?

1

அன்புள்ள ஐயா,

என் பெயர் தட்சிணாமூர்த்தி. நான் பாரத ஸ்டேட் வங்கி பவானி கிளையில் கல்விக் கடன் எடுத்திருந்தேன். அதே சமயத்தில் எனக்கு இன்சுரன்ஸ் பாலிசி ஒன்றும் இருந்தது. கல்விக் கடன் செலுத்தவில்லை என்றால் இன்சுரன்சிலிருந்து கழித்துக் கொள்வோம் என்று வங்கியில் இருந்த மேடம் அப்போது சொன்னார்கள். ஆனால், இப்போது எனது கல்விக் கடனுக்கான வங்கிக் கணக்கு ரிலையன்ஸ் கம்பெனிக்கு மாற்றப்பட்டு விட்டது. ரியலைன்ஸ் நிறுவனத்தின் புலியகுளம்(கோவை) கிளையில் இருந்து எனக்கு தினசரி தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னை டார்ச்சர் செய்கிறார்கள். கெட்ட வார்த்தைகளால் ஏசுகிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், என்னையும் எனது குடும்பத்தினரையும் கைது செய்து டார்ச்சர் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நான் எனது கடனை மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிச் செலுத்து விடுவேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்”

பிப்ரவரி 24, 2016.

கல்விக்கடன் நன்றி படம்: தி இந்து
கல்விக்கடன்
நன்றி படம்: தி இந்து

ஸ்டேட் வங்கி தனது கல்விக் கடனை 55 சதவீத தள்ளுபடியில் ரிலையன்சுக்கு விற்ற செய்தி நாளிதழ்களில் கண்கள் சென்றடையாத மூலை முடுக்குகளில் அச்சாகி ஓய்ந்து விட்டது. அது தொடர்பான வேறு செய்திகள் ஏதும் கிடைக்குமா என்று தேடிய போது complaintboard.in என்கிற இணையதளத்தில் மேற்கண்ட அபயக் குரலை காண முடிந்தது. அதே இணையதளத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு மாணவர்கள், இளைஞர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியிருந்ததையும் வாசிக்க முடிந்தது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பெரும்பாலும் வங்கி நடைமுறைகள் குறித்தோ, நுகர்வோர் பாதுகாப்பு குறித்தோ அறியாத அப்பாவிகள். பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். மாதத் தவணை, வட்டி போன்றவை எவ்வாறு கணக்கிடப்படுகின்றது, அசலுக்கும் வட்டிக்கும் உள்ள இடைவெளி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள், அப்படித் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நேரும் என்பவையெல்லாம் இவர்கள் அறியாதவை. எப்படியும் கடன் வாங்கி பட்டம் பெற்று விட வேண்டும் – படித்த உடனே சில பத்தாயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்து விடும் – பின், மாதாந்திரம் கடனைத் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்பதே இவர்களின் குறைந்தபட்ச திட்டம்.

ஆனால், எதார்த்தம் என்ன?

கல்விக் கடனைப் பொறுத்தவரை நாடெங்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனில் 40 சதவீத கடன்கள் தமிழகம் மற்றும் கேரள மாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சுமார் பத்து லட்சம் மாணவர்கள் 17,000 கோடிகளுக்கு மேல் கடன் பெற்றுள்ளனர். கேரளத்தில் 9,865 கோடி மதிப்பிலான கல்விக் கடன் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள இத்தொகையில், தமிழகத்தில் 1,875.56 கோடிகளும் கேரளத்தில் 1,038 கோடிகளும் வாராக் கடன்கள் என குறிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் புற்றீசல் போல பெருகியுள்ள பொறியியல் கல்வித் தொழிற்சாலைகளின் ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளே வங்கிகளிடம் கல்விக் கடன் பெறும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து விடுகின்றனர். நான்கிலிருந்து ஐந்து லட்சங்கள் வரை கடனாகப் பெறும் மாணவர் ஒருவர், அதை ஐந்தாண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்த மாதத் தவணையாக சுமார் ஒன்பதாயிரம் ரூபாய்களைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். பொறியியல் படித்த அனைவருக்கும் படித்தவுடன் வேலை கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் சென்னை பெங்களூரு போன்ற வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கே கிடைக்கின்றன.

அந்த சம்பளமும் உணவு, வீட்டு வாடகை போன்ற இவர்களது சொந்த வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவது இயலாமல் போகிறது. இந்நிலையில் திரும்பி வராது எனத் தாம் தீர்மானித்த சுமார் 875 கோடி மதிப்பிலான கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் 45 சதவீத மதிப்பிலான விலைக்கு (55 சதவீத தள்ளுபடியில்) கைமாற்றி விட்டுள்ளது ஸ்டேட் வங்கி. இந்த 45 சதவீதத்திலும் சுமார் பத்து சதவீதம் பணமாக வழங்கியுள்ள ரிலையன்ஸ், எஞ்சிய தொகைக்கு பதினைந்து ஆண்டுகள் கழித்து பணமாக மாற்றிக் கொள்ளத் தக்க வகையிலான உத்திரவாத பத்திரங்களை வழங்கியுள்ளது.

ரிலையன்சின் கடந்த கால யோக்கியதையைக் கணக்கில் கொண்டால், கொடுத்துள்ள உத்திரவாதப் பத்திரங்களை கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்க முடியாது. இது ஒருபக்கமிருக்க, இந்தாண்டின் துவக்கத்திலிருந்தே நாடெங்கும் ரவுடிகளை பணிக்கமர்த்தத் துவங்கிய ரியலைன்ஸ், அவர்களைக் கொண்டு மாணவர்களையும் பெற்றோரையும் மிரட்டத் துவங்கியுள்ளது. சென்ற ஆண்டு திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் கல்விக் கடனை இதே விதமாக விலைக்கு வாங்கிய ரிலையன்ஸ், கேரள மாணவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ரவுடிகளைக் கொண்டு மிரட்டியது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் அதிர்வுகளைக் கிளப்பியது. கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏழை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் கடன் நிலுவைக்காக கசக்கிப் பிழியும் ரிலையன்சின் யோக்கியதை என்ன?

கடந்தாண்டு இறுதியில் க்ரெடிட் சூசி (Credit Suisse) என்கிற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த வணிக தர நிர்ணய நிறுவனம் இந்தியாவின் கார்ப்பரேட் கடனாளிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடனாளிகளின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தியாவின் வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள கார்ப்பரேட் கடன்களில் சுமார் 27 சதவீதத்தையும் இந்திய வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன்களில் 12 சதவீதத்தையும் வெறும் பத்து கார்ப்பரேட் முதலைகள் மாத்திரமே வாயில் போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த எட்டாண்டுகளில் இந்நிறுவனங்களின் கடன்கள் மட்டும் ஏழு மடங்காக உயர்ந்துள்ளது (700 சதவீதம்!).

ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்?
ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்? – அருந்ததி பட்டாச்சார்யா

பட்டியலில் ரிலையன்ஸ் உள்ளிட்டு முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள கார்ப்பரேட்டுகள் திருப்பிச் செலுத்தாத கடனின் மதிப்பு மட்டும் 7.33 லட்சம் கோடிகள். மற்ற தரகு முதலைகள் அடித்துள்ள தேட்டைகளையும் சேர்த்த ஒட்டுமொத்த மதிப்பின் விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால், பெரும்பாலான தரகு முதலாளிகள் தமது நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகமான அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்துள்ளனர். இதனால், பொதுத்துறை வங்கிகளின் உண்மையான சந்தை மதிப்பை விட ஒன்றரை மடங்கு அதிக மதிப்பிலான கடன்கள் நிலுவையில் உள்ளன.

கார்ப்பரேட் தரகு முதலாளிகள் பல லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வாங்கிக் கொண்டு வங்கிகளுக்கு நாமம் போடும் அதே வேளையில், சிறு கடன்களை வாங்கும் நடுத்தர வர்க்க நுகர்வோரின் கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்தப்பட்டு வருகின்றன என்கிறார் நிதித்துறை நிபுணர் சித்தார்த் புரோகித். 2014ம் ஆண்டுக் கணக்கின் படி நுகர்வோர் கடன்கள் சுமார் 20 சதவீத அளவுக்கு வளர்ந்திருந்தது. இதன் விளைவாக தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சிஐ வங்கியும் ஆக்சிஸ் வங்கியும், தமது வங்கிகள் கார்ப்பரேட் கடன்களை விட நுகர்வோர் வாங்கும் சிறு கடன்களுக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளன.

தனியார் வங்கிகள் தொடர்ந்து கார்ப்பரேட் கடன்களில் இருந்து தமது கவனத்தை தனிநபர் நுகர்வோர் கடன்களின் பக்கம் திருப்புவதை ஸ்டேட் வங்கியின் சேர்மேன் அருந்ததி பட்டாச்சார்யா கண்டித்துள்ளார்.

லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடங்காரர்களின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடங்காரர்களின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

”ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்? ஒரு தேசமாக நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே எந்தவிதமான உள்கட்டமைப்பு வசதிகளும் இன்றி தேங்கி நிற்கப் போகிறோமா?” என்று அருந்ததி பட்டாச்சார்யா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அறச்சீற்றத்தின் உட்பொருள், யார் தான் இனிமேல் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் வாரி வழங்குவது என்ற கவலை தான்.

தற்போது ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தான் பதவி நீட்டிப்புப் கோரப் போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக தகுதியுள்ளவர்களின் பட்டியலில் அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருபக்கம் பொதுத்துறை வங்கிகள், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருப்பில் உள்ள பல லட்சம் கோடி மக்களின் சேமிப்புப் பணத்தை தரகு முதலாளிகளுக்குத் திருப்பி விடும் அரசு, அது தான் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உகந்தது என்று தோசையை திருப்பிப் போடுகிறது. இவ்வாறு மக்கள் பணத்தை திட்டமிட்டு தரகு முதலைகளின் காலில் காணிக்கையாக்குகிறது ஆளும் கும்பல். இன்னொரு பக்கம் வேலை கிடைக்காததால் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதிக்கும் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்களின் மேல் ரவுடிகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுக்கின்றனர்.

இந்நாட்டின் வங்கி, இன்சுரன்சு உள்ளிட்ட நிதி அமைப்புகள் யாருடைய நலன்களுக்குச் சேவை செய்வதற்காக  உள்ளன என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் இது வரை போலியாகவேனும் அணிந்து கொண்டிருந்த “மக்கள் சேவை” என்கிற முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு  முதலாளிகளின் அடிவருடிகளாக தம்மை வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டு விட்டன. இந்நிலையில் பொதுத்துறை வங்களின் நடவடிக்கைகளை மக்கள் தீர்மானிக்காமல் தீர்வில்லை. முதலாளிகளின் கடனை வசூல் செய்யும் போராட்டங்களும், மக்களுக்கு கடன் வழங்க வைக்கும் போராட்டங்களும் ஒருங்கே நடக்க வேண்டும்.

– தமிழரசன்

மேலும் படிக்க
The ‘bad’ side of education loans
Student loan NPAs: parents to take on recovery firm
Study-loan defaulters get harsh life lesson from ARC
Political parties criticise SBI’s move to hand over study loans recovery to Reliance
RBI Defaulters List: Meet the Top 10
#NotEnough: Ballooning list of India’s top bank loan defaulters: Can RBI, FinMin, SC promise action?
Biggest loan defaulters in India
SBI to sell Rs. 5,000-crore NPAs to asset reconstruction cos
SBI EDUCATION LOAN
Debt continues to weigh down India’s top conglomerates
Start repaying bank loans, Govt tells corporate majors
Rising corporate loan defaults force banks like ICICI Bank and Axis Bank to step up retail lending

கோடீஸ்வரன்: மூளை தயார் முண்டங்கள் தயாரா?

1
ஒரு கேள்விக்கு விரைவாக விடைசொல்லும் ஒரு நபரை அறிவாளி என மின் - ஊடகங்கள் முன் மொழிய காகித ஊடகங்கள் வழிமொழிகின்றன

இந்தியாவின் தனியார் தொலைக்காட்சிகள், அறியாமை அரக்கனை சங்காரம் செய்திட இந்த நூற்றாண்டின் மின்னணு யுகத்தில் ”அறிவு அவதாரம்” எடுத்து ஓங்கி நிற்கின்றன. அடித்துக் கொண்டு வரும் அத்தனை அலை வரிசைகளிலும் அறிவை வளர்க்கும்(!) நோக்கமே நீக்கமற நிறைந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை மேம்படுத்த மேனிகளைத்துப் பாடுபட்டவர்கள் இப்போது இறுதியாக ஓர் உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஏன் இந்தத் திடீர் அறிவுப் புரட்சியை தனியார் அலைவரிசைகள் பிடித்துக் கொண்டன?
ஏன் இந்தத் திடீர் அறிவுப் புரட்சியை தனியார் அலைவரிசைகள் பிடித்துக் கொண்டன?

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அறிவின்(!) அடிப்படையில் கோடிகள் கொட்டிக் கொடுத்து அவனை எப்படியாவது சமூக உயர்நிலைக்குக் கொண்டு வந்து விடுவது என்பதுதான் அது. ஒர் ஐந்தாண்டு திட்டத்தை விடப் பொறுப்புணர்வோடும் இலக்குத் துல்லியத்தோடும் “அலைவரிசை முதலாளிகள்” அறிவை சகாய விலையில் சாமானியர்களுக்கும் கிடைக்கச் செய்கிறார்கள். ஸ்டார் டிவி (குரோர்பதி), ஜி.டி.வி (சவால் தஸ் குரோர்கா), சன்டிவி (கோடீஸ்வரன்) என்பவையே அந்த அறிவின் அவதாரங்கள்.

ஏன் இந்தத் திடீர் அறிவுப் புரட்சியை தனியார் அலைவரிசைகள் பிடித்துக் கொண்டன? இதன் பின்னணி மிகவும் வஞ்சகமானதும், அதே நேரத்தில் கூர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டிய அளவுக்கு அடிஆழத்தில் ஆபத்தை உடையதும் ஆகும்.

உண்மையில் அறிவு என்பது இந்த “கோடி ரூபாய் சூதாட்டங்கள்” ஏற்படுத் தும் கருத்துதானா? இல்லை. அறிவு என்பதன் ”நடைவண்டி நிலையோடு” இவர்கள் நிகழ்ச்சிகள் ஒய்ந்து விடுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் கருத்தமைவின் படி, ஒரு கேள்விக்கு சரி, தவறு என்று விடை சொல்வது அல்லது நான்கு விடைகளில் பொருத்தமான ஒன்றைப் பொறுக்கி எடுப்பது – இதைத்தான் நாம் அறிவின் நடைவண்டி நிலை என்கிறோம்.

எப்படி எனில் தகவல்களைப் பதிவு செய்து சேகரம் பண்ணுவது மூளையின் ஒரு பணி. ஆகவே அதை அப்படியே உரிய நேரத்தில் உதிர்ப்பது என்பதை கணிப் பொறியே செய்து விட முடியும். மனித மூளையை இதை விட மகத்தான முறையில் வீணடிக்க முடியாது.

கேள்விகள் ஓர் இலவம் பஞ்சு போல் தனக்குரிய முளைப்பிடம் தேடிப் பறக்க வேண்டாமா? இவை கேள்விகளே அல்ல, "மலிவான தகவல் சரக்குகள்”.
கேள்விகள் ஓர் இலவம் பஞ்சு போல் தனக்குரிய முளைப்பிடம் தேடிப் பறக்க வேண்டாமா? இவை கேள்விகளே அல்ல, “மலிவான தகவல் சரக்குகள்”.

அறிவு என்பது ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நாட்டுச் சூழலுக்கேற்ப ஒவ்வொரு விதமாய்க் கற்பிதம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சான்றாக அரசனுக்கு போர், அரசன் நலம் பற்றி மட்டுமே அறிவுரை வழங்கிய அதிகார மையச் சார்புடைய ஒன்றும் அறிவு என வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த உள்ளர்த்தம் பொதிந்த செய்யுள்கள் (குறிப்பாக வெண்பா) இயற்றுவது என்பதும் அறிவாளியைத் தீர்மானிக்கும் அளவு கோலாக இருந்திருக்கிறது.

முகலாயப் பேரரசின் காலகட்டத்தில் சிறந்த ”சதுரங்க ஆட்டக்காரரே அறிவாளி” என்கிற அபிப்ராயங்கள் நிலவியதுண்டு. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர் வாழும் பகுதிகளில், “கவனகர்கள்” (பதின், பதினெண்) மிகப்பெரிய அறிவாளிகளாக மனப்பாட சக்தியால் மரியாதை பெற்றதுண்டு.

வெள்ளைக்காரர்களின் காலனிய ஆட்சியில் அவர்களின் குமாஸ்தாக் கல்வியின் மனப்பாடக் கிளிகளாக விளங்கியவர்கள் மிகப்பெரிய அறிவாளிகளாகப் பட்டங்களோடு பவனி வந்திருக்கிறார்கள். சான்று ஜஸ்டிஸ், ராவ்பகதூர், திவான் பகதூர், சர் போன்றவை.

இதன் தொடர்ச்சியாக இன்று ஒரு கேள்விக்கு விரைவாக விடைசொல்லும் ஒரு நபரை அறிவாளி என மின் – ஊடகங்கள் முன் மொழிய காகித ஊடகங்கள் வழிமொழிகின்றன. இன்றைய சமூகவியல் வரையறுப்பின்படி அறிவு என்பது நான்கு கூறுகளை உடையது அவை.

  1. தகவல்களைப் புலன் வழி பதிவு செய்தல்
  2. அவற்றை எண்ணங்களாக, சிந்தனைகளாக மாற்றுதல்
  3. சிந்தனைகளின் வழி சூழலுக்குத் தகவமைதல் – தகவமைத்தல்
  4. கடந்த அனுபவங்களில் இருந்து நிகழ்வுக்குப் பாடமும் எதிர்கால முன்னகர்வுக்கு தர்க்கபூர்வமான ஊகங்களை மேற்கொள்ளல். செயல்பட உந்துதல்.

ஆனால் இந்த தகவல் திமிர் பிடித்த சூதாட்டமோ இவற்றின் தொடக்க நிலைத் தகுதியான தகவல்களைப் பதிவு செய்து கொண்டு அவற்றை உதிர்ப்பது என்பதை மட்டுமே அறிவுத் திரவத்தின் உச்சபட்ச கொதிநிலை என்கிறது. அதற்கான சூதாட்டப் பரிசு பார்வையாளர்களிலோ, அல்லது பங்கேற்பாளர்களிலோ உள்ள சமூகவியல் தெளிவு உள்ளவர்களையும் ஈர்க்குச்சியைத் துடுப்பாகப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கிறது.

இதன் இன்னொரு சகிக்க முடியாத விளைவு சில மீடியா பண்டிதர்கள் இந்நிகழ்ச்சிகளுக்கு கேள்வி – பதில் தயாரித்து தரும் சூதாட்டத் தரகர்களாக மாறியிருப்பதுதான். இந்தத் தரகு வேலைக்கு அறிவின் பேரால் கோடிகள் கொட்டிக் கொடுக்கப்படுகின்றன. (சில தினமணி, இந்து வாசகர்கள் அதிலும் காலாவதியான தகவல்களைச் சுட்டிக் காட்டி தங்கள் அறிவின் அபாரத்தை மெச்சி தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக்கொள்கிறார்கள்.)

நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் விளம்பர நிறுவனங்களையும் பொறுத்த வரை மக்கள் வெறும் பார்வையாளர்களும் வெறும் நுகர்வோர்களும் மட்டுமே.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் விளம்பர நிறுவனங்களையும் பொறுத்த வரை மக்கள் வெறும் பார்வையாளர்களும் வெறும் நுகர்வோர்களும் மட்டுமே.

கடந்த சில ஆண்டுகளாகவே அழகிப் போட்டிகளின் வருகையை உச்சி மோந்து உயிர்சிலிப்பவர்கள் அப்போட்டிகளில் அறிவுக்கும் போதுமான அளவுக்கு இடம் அளிக்கப்படுகிறது என்றார்கள் (இங்கே அறிவின் பணயமாக வக்கிரம் காப்பாற்றப்படுவதைக் கவனிக்கவும்). அந்த நான்கே நான்கு கேள்விகள் எப்படி அழகியின் அறிவைத் தீர்மானிக்கப் போதுமானவை என்ற கேள்வியை சில காகிதப் புலிகளும் (வணிகப் பத்திரிகையாளர்கள்) கேட்டிருந்தார்கள்.

ஆனால் இன்றைக்கோ அறிவின் பெயராலேயே நடத்தப்படும் இப்போட்டிகள் குறித்து கொட்டாவி விடக் கூட வாய்திறக்க மறுக்கிறார்கள் இந்த மீடியாப் பண்டிதர்கள். ஒருவேளை வாய்திறந்தால் அதுவும் அறிவின் அவதாரம் பற்றிய கதாகாலட்சேபமாக இருக்கிறது.

இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் இந்நிகழ்ச்சிகளின் நடத்துநர்கள் அனைவருமே முன்னாள், இந்நாள் நட்சத்திரங்கள்.

நட்சத்திரங்களைக் காட்டி நடைபெறும் இந்தச் சூதாட்டத்திற்கான பொருளாதாரம் விளம்பர நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன. விளம்பர நிறுவனங்கள் பார்வையாளர்கள் அல்லது நுகர்வோர்களிடமிருந்து பல்முனை ஏய்ப்புகளின் மூலம் சூறையாடி விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் விளம்பர நிறுவனங்களையும் பொறுத்த வரை மக்கள் வெறும் பார்வையாளர்களும் வெறும் நுகர்வோர்களும் மட்டுமே.

அவர்களுக்கென தனித்த வாழ்க்கை அலுவல், பிரச்சினைகள் என எதுவுமே இருக்காது. இருக்கவும் அனுமதியில்லை. பார்வையாளர்களின் மனத்தில் எப்போதும் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும் ஒரு குரல் (விளம்பரங்களில் ஒலிக்கும் கட்டை யான குரல்) “மெகா சீரியல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை இதோ பளிச்சிடும் வெண்மையில் சூதாட்டம்” என்பதுதான் அது.

நட்சத்திர நடிகர்களைத் துண்டில் புழுக்களாக்கி நீரில் மேயும் மீன்களை (மக்களை) தங்கள் குடுவைக்குள் சேகரிக்கிறார்கள் வியாபாரிகள். மத்தியதர வர்க்க மக்களுக்குத் தெரியுமா துண்டில் புழுக்கள் மீனுக்கு இலவசம் அல்ல என்று? இந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரு தனிமனிதனின் மனப்பாடச் சக்தியை நினைவாற்றலைப் பரிசோதிப்பதாக மட்டுமே அமைந்து விடுகின்றன. சான்றாக கல்பனா சாவ்லா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாகக் கேட்கப்பட்டு விடைகளில் ஒன்றை பொறுக்கி எடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார். இது தகவலாகத் தொடங்கி தகவலாகி மட்டுமே முடிவடைகிறது.

இதையே இந்தியாவில் அதிகமான மக்களால் உண்ணப்படும் அரிசி, கோதுமை ரகம் எது என்று அமைப்பார்களேயானால் அதற்கான விடையைச் சொல்கிற ஒரு பங்கேற்பாளர் ஒரு கூட்டிணைவான பண்பாட்டு அம்சத்தை விளங்கிக் கொண்டவராக ஆகிறார். இதன்மூலம் அவர் அறிவும் சமூகமயப் படுத்தப்பட்டிருக்கிறது எனலாம்.

இதேபோல் தான், மக்களின் உடை ரசனை, பொழுது போக்கு சுற்றுலா, நிலவியல், உளவியல், வரலாறு பற்றிய சமூகமயப்படுத்தப்பட்ட கோணங்களில் இல்லை கேள்விகள். ஆமணக்கு விதையைப் போல் மேலிருந்து தன் மர நிழலிலேயே விழுந்து விளையாமல் போகின்றன. கேள்விகள் ஓர் இலவம் பஞ்சு போல் தனக்குரிய முளைப்பிடம் தேடிப் பறக்க வேண்டாமா? இவை கேள்விகளே அல்ல, “மலிவான தகவல் சரக்குகள்”. இதனுடைய பங்கேற்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்படும் தருணம் ஒரு ஆயுள் முழுக்க சிரிப்பதற்கு தகுதியுள்ளது.

மக்களின் உடை ரசனை, பொழுது போக்கு சுற்றுலா, நிலவியல், உளவியல், வரலாறு பற்றிய சமூகமயப்படுத்தப்பட்ட கோணங்களில் இல்லை கேள்விகள்.
மக்களின் உடை ரசனை, பொழுது போக்கு சுற்றுலா, நிலவியல், உளவியல், வரலாறு பற்றிய சமூகமயப்படுத்தப்பட்ட கோணங்களில் இல்லை கேள்விகள்.

அது என்னவெனில் ஒருகோடிருபாய் பரிசு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு மென்பொருள் நிறுவனங்களில் முதலீடுசெய்து சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுப்பேன் என்பதும், அதே போல் யாருடன் விருந்து சாப்பிட விருப்பம் என்பதற்கு மறக்காமல் ’கம்ப்யூட்டர் கடவுள் பில்கேட்ஸ்’ என எழுத்துப் பிசகாமல் சொல்வதும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்விக்காக உதவுவது (இதில் இடஒதுக்கீடு என்பதற்கு மறைமுகமான எதிர்ப்பு பதிவு செய்யப்படுவது கவனிக்கத்தக்கது) என்பது போன்ற “தர்மகர்த்தா சோசலிசத்தை” அவிழ்த்து விட்டுத் தங்களின் மேட்டிமையைக் காட்டிக் கொள்கிறார்கள். இதற்கும் அழகிப் போட்டியில் அழகிகள் கூறும் விடைகளுக்கும் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? அது அழகின் பேரால் அபத்தம்; இது அறிவின் பேரால் அபுத்தம்.

இந்த நிகழ்ச்சியை பார்வையாளனின் மனத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிய வைக்கவே நட்சத்திர நடத்துநர்கள்; பிரம்மாணடமான அரங்க அமைபபுகள்; பார்வையாளனை நிகழ்ச்சியோடு ஒன்றவைக்க பின்னணியில் இதயத் துடிப்பு

இசை, போட்டியாளர் தன் உறவினரோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் வாய்ப்பு. அரங்கத்தில் குழுமியிருக்கும் பார்வை யாளரின் கூட்டிணைவான(!) உதவியைப் பெறல் எனப்பல்வேறு ஜனரஞ்சக அம்சங்களை இணைத்து வேலிக்காத்தான் முள் மரத்துக்கு வேப்ப மரத்தின் ஒப்பனையைச் செய்கிறார்கள்.

இறுதியாக, இந்த நிகழ்ச்சியால் லாபம் அடைபவர்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், சில மத்தியதர வர்க்க மக்கள். இதற்கு அறிவின் பேரால் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம். நம் விலாக்களில் இருந்தே எலும்பை உருவி நம்மில் சிலருக்கு எலும்பு போடுகிற முதலாளித்துவ சூட்சுமம் தான் இது.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சரத்குமார் கூறுகிறார். “நீங்க கோடீஸ்வரன் ஆகணும். நான் ரெடி நீங்க ரெடியா” என்று. இந்தச் சூதாட்டக் கேவலத்தை ஒழித்துக் கட்டும் நிலை வரும் போது உங்களைப் பார்த்து நீங்க ரெடியா என்று மக்கள் கேட்க மாட்டார்கள். அது அறிவின் மீதான பற்று காரணமாக நிகழாது. சமூகத்தின் மீதான பற்று காரணமாக நிகழும்.

வெயில் மொழியன்,
புதிய கலாச்சாரம், ஜனவரி, 2001.

பெட்டி செய்தி: நீங்கள் கோடீசுவரனாக வேண்டுமா?

இந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்த முதலாளிகள் தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்து

வைத்திருந்தார்கள் – அல்லது நிகழ்ச்சி மூலம் புரிந்து கொண்டார்கள்.

எல்லோரும் பணத்தைத் தேடி ஓடுகிறார்கள்- கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் இசை கொஞ்சம் சமையல் எல்லாவற்றையும் சேர்த்து நொதிக்க வைக்கும் ஒருவித்தை மட்டும் தெரிந்தால் போதும்!

உலகம் முழுவதும் இந்த மோகம் பிடித்து ஆட்டுகிறது. கொலம்பியாவில் உள்ள மருந்துக் கம்பெனிகள், அரச குடும்பங்கள் லெபனியர்கள் என்று பலதரப்பையும் பிடித்துக் கொண்டுவிட்டது.

இந்தியாவில் பிழிந்து எடுத்து விடுகிறார்கள்; ஜப்பானில் கேள்விகள் படுசுலபம். அங்கே ரொம்பக்கஷ்டமான கேள்வி என்ன தெரியுமா? ஏப்ரல் முட்டாள் தினம் எந்த மாதத்தில் வருகிறது? ஜனவரியில், பிப்ரவரியில், மார்ச்சில் அல்லது ஏப்ரலில்.

“உங்களில் யார் கோடீஸ்வரர்?” என்ற இந்தி நிகழ்ச்சி ஸ்டார் டிவி வலைப் பின்னல் சொந்தக்காரர் ராபர்ட் முர்தோக்கினுடையது. போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு கோடி கிடைக்கிறதோ இல்லையோ, அமிதாப்பச்சன் போன்ற பிரபல நடிகரோடு ஒரு மாலை நேரத்தில் பொழுதைப் போக்குகிற பரவசம், ஆனந்த லகரி!

பெரியண்ணன் என்று அழைக்கப்படுகிற பச்சன் இந்த நிகழ்ச்சிக்காகவே வண்ண நூலிழைகளால் பின்னப்பட்ட கோட்டு-சூட்டுகளை மாட்டிக்கொண்டுவருகிறார். இந்தப் பிரமாண்டத்தைப் பார்த்து கலந்து கொள்ள வந்த சிலருக்கு வாய் திறந்துபேசக் கூட முடியவில்லையாம். அத்தனைப் பிரமிப்பு!

அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ? – புதிய கலாச்சாரம் ஜுலை 2016

0

புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு

puka13_july_16_back

அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள்?

அரசு கையிலிருந்து கல்வி தனியாரால் அபகரிக்கப்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டன. இதனால் தற்குறிகளின் தேசம் அறிவார்ந்தவர்களின் தேசமாகிவிட்டதா?

இந்தியாவிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் 17 இலட்சம் இடங்களில் சமீப ஆண்டுகளாக 40% இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி இருக்கின்றன. 2015-ம் ஆண்டு கணக்கின் படி தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாணவர்கள் கிடைக்கவில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கையின் படி கல்வி விற்பனைச் சரக்காக மாற்றப்பட்டு திடீர் பணக்காரகளும், பாரம்பரிய முதலாளிகளும் போட்டி போட்டு திறந்த பொறியியல் கல்லூரிகளின் சாதனை இதுதான். இவர்களிடம் படிப்பதற்கு நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி கனவு கண்டாலும் படித்து முடித்தவருக்கு வேலை இல்லை. இறுதியில் படிப்பதற்கே ஆளில்லை. கடைசியில் ஆள்பிடிப்பதற்கு அரசே பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் கொடுத்தது. என்ன இருந்தாலம் கல்வி முதலாளிகள் நட்டப்படக் கூடாதில்லையா?

தமிழகத்தில் மட்டும் சுமார் 16,381 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் அப்படியே சுயநிதிக் கல்லூரி கொள்ளையரின் கஜானவிற்கு சென்று விட்டது. ஆனால் பட்டம் பெற்ற மாணவர்கள் கடனைக் கட்ட வழியில்லை.

இறுதியாக இந்திய ஸ்டேட் வங்கி தனது பங்கான 847 கோடி கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அதாவது மொத்த தொகையில் 40% செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரன் வேலையை ஆரம்பித்து விட்டது.

கடிதம், தொலைபேசி மூலம் மிரட்டல், கடனை திருப்பாமல் எங்கும் வேலை கிடைக்காது என்று அச்சுறுத்துகிறார்கள். செய்வதறியாது மாணவர்களும், பெற்றோரும் திகைக்கின்றனர். அவர்கள் ஒன்றும் மல்லையா அல்லது அம்பானி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் அல்ல.

கல்விக் கடனை ரத்து செய்த ஜெயா அரசின் அறிவிப்பில் ரிலையன்ஸ் வரும் என்று அந்த அதிகாரியும் முழங்கவில்லை. கல்வி நமது உரிமை என்பது மாறி முதலாளிகளுடைய கொத்தடிமைகளாக மாணவர்கள் மாற்றப்பட்டு விட்டார்கள்.

பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரிகள், பள்ளிகள், மழலையர் பள்ளி வரை இதுதான் நிலைமை. மக்களுக்கான கல்வியை மீட்டெடுக்க நாம் தனியார் முதலாளிகளோடு பெரும் போரே நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இத்தொகுப்பு அறியத்தரும் என்று நம்புகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. அங்கன்வாடி
  2. மாதிரிப் பள்ளிகள் தேவையா ?
  3. நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்
  4. கல்விக்காக ‘கற்பைக்’ கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள் !
  5. ஆங்கிலவழிக் கல்வி சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?
  6. கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் !
  7. ஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !
  8. ’பி ஸ்கூல்கள்….’ புஸ்…. !
  9. அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் நவீன சேரிகள் !
  10. பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு
  11. மருத்துவர் தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய்
  12. அப்பா சிறை சென்றதால்தான் மகள் படிக்க முடியும் !
  13. கல்வி உரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை !
  14. கவரப்பட்டு அரசு பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !
  15. புதிய கல்விக்கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

11

1992-ம் ஆண்டில் கொலம்பஸ் கண்டுபிடிப்பு 500-வது ஆண்டுவிழா

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல; நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். கொலம்பஸ் கண்டுபிடிப்பின் 500-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி எழுதப்பட்ட முக்கியமான புதிய கலாச்சாரம் கட்டுரை .

500 வது கொலம்பஸ் டே - 1992 ல் நியுயார்கில் நடைபெற்ற ஊர்வலம்
500 வது கொலம்பஸ் டே – 1992 ல் நியுயார்கில் நடைபெற்ற ஊர்வலம்
நன்றி: Getty Images

’அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று கூறினால் வாசகர்கள் அதிர்ச்சியடையக்கூடும் அல்லது சுப்பிரமணியசாமி வெளியிடும் பரபரப்பு அறிக்ககை’யுடன் ஒப்பிட்டு ஒதுக்கிவிடவும் கூடும். புதிதாக யோசனை சொல்பவர்களை “இவரு பெரிய கொலம்பஸ் – கண்டு பிடிச்சிட்டாரு” என்று கேலி செய்ததை இன்றோடு நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை. (கொலம்பஸ் ஆக்கிரமிப்பின் வரலாறு – பார்க்க பெட்டிச் செய்தி)

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் என்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால், யுவான் சுவாங், வாஸ்கோடகாமா, ஆரியர்கள் ஆகிய பலரும் தனித்தனியே இந்தியாவைக் கண்டுபிடித்ததாக ஒப்புக் கொள்ளவேண்டும். வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்தார். இந்தியாவை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டத்துடன் அவர் பயணம் செய்தார். கொலம்பஸும் இந்தியாவுக்கு கடல்வழி தேடிப் புறப்பட்டவன்தான். அமெரிக்கக் கண்டத்தையே அவன் இந்தியாவாக நினைத்தான், பெயரிட்டான். துதிக்கையைத் தடவிப் பார்த்து விட்டு ”யானை துண் போல இருக்கிறது” என்று குருடன் சொன்னால் அது நகைப்புக் குரியது. அந்தக் குருடன் வெள்ளைத் தோல் ஐரோப்பியனாக இருந்த காரணத்தால், துதிக்கைக்கு யானை என்று பெயர் வைத்ததை உலகமே ’ஏற்றுக் கொண்டது’. கொலம்பஸ் கரையொதுங்கிய இடத்துக்கு ’மேற்கு இந்தியத் தீவுகள்’ என்று பெயரும் சூட்டப்பட்டது.

கிறிஸ்டோபர் கொலம்பஸ்
கிறிஸ்டோபர் கொலம்பஸ்

சரி, அமெரிக்கா கண்டம் என்று ஒன்று பூமியில் இருப்பதையே முதன்முதலில் கொலம்பஸ்தான் கண்டுபிடித்தாரா? அதுவும் இல்லை. நார்வே, கிரீன்லாந்து போன்ற இடங்களிலிருந்து 10-ம் நூற்றாண்டிலேயே சென்ற மாலுமிகள் வட அமெரிக்கா சென்று அங்கே குடியேறியுமிருக்கிறார்கள். 1440-இல் ரைன்லாந்து பகுதியில் புழக்கத்திலிருந்த உலக வரைபடத்திலும் அமெரிக்கா இடம் பெற்றிருக்கிறது. இது பல ஐரோப்பியர்களுக்கும் தெரிந்திருக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததோ 1492-இல்தான். மேற்கூறிய விவரங்கள் சிதம்பர ரகசியங்களல்ல, ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகள்தான். அப்படியிருக்க கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று உலகம் முழுவதும் வரலாற்றுப் பாடம் போதிக்கப்படுவது ஏன்?

அமெரிக்கா யாருடைய நாடு? கொலம்பஸ் கரையிறங்கும்போது அங்கு வெறும் காடும் மலையும்தான் இருந்ததா. மனிதர்களும் இருந்தார்களா? இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இருந்தார்கள், ”வாஸ்கோடகாமாவின் புண்ணியத்தில் தான் இந்தியாவை அடிமைப்படுத்தினோம்” என்று வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் இறங்கிய ஆண்டை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டாக பிரிட்டிஷார் கொண்டாடியிருந்தால் நாம் சகித்துக் கொள்ள முடியுமா? நமக்கு வாஸ்கோடகாமாவின் வரவு, ஆதிக்கத்தின் வரவு, அடக்குமுறையின் துவக்கம். அமெரிக்கப் பழங்குடியினரைப் பொருத்தவரை கொலம்பஸும் அவ்வாறே. போர்த்துகீசியர்களைவிடப் பன்மடங்கு கொடுரமான அடக்குமுறையை இனக் கொலையை முன்நின்று நடத்தியவன் கொலம்பஸ். நிறவெறியை, பண்டங்கள் போல அடிமைகள் விற்கப்படுவதை, இனப் படுகொலையை, கொள்ளையை முன்நின்று நடத்திய மண் வெறியும், பொன் வெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட ஒரு மாலுமிதான் கொலம்பஸ்.

இந்த உண்மைகளை நிறுவுவதுடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்ளலாம் – அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கொலம்பஸின் கண்டுபிடிப்பிற்கு 500-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட முனையாமல் இருந்தால்! 15-ஆம் நூற்றாண்டின் கொலம்பஸை இருபதாம் நூற்றாண்டின் கொலம்பஸ்கள் உயிர்ப்பிக்கும்போது நாம் வாளாயிருக்க முடியாது.

ஸ்பெயின் பார்சிலோனாவில் அமைந்துள்ள கொலம்பஸ் உருவ சிலை
ஸ்பெயின் பார்சிலோனாவில் அமைந்துள்ள கொலம்பஸ் உருவ சிலை

”1492: கொலம்பஸ் அமெரிக்கா-வைக் கண்டுபிடித்தார். 1992: அமெரிக்கா கொலம்பஸைக் கண்டுபிடிக்கிறது!” அமெரிக்க அரசு கொண்டாடவிருக்கும் ஐநூறாவது ஆண்டு விழாவின் முழக்கம் இது. ”கொலம்பஸின் வீரத்தைக் கவுரவிக்கும் வகையில் நமது கொண்டாட்டங்கள் அமையவேண்டும்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் புஷ். கொண்டாட்டச் செலவுகளுக்கு முதல் தவணையாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினிலிருந்து மூன்று கப்பல்களில் புறப்பட்டு வந்து அமெரிக்காவில் கரையேறிய கொலம்பஸின் ‘சாகசச் செயல்’ மீண்டும் நிகழ்த்திக் காட்டப்பட உள்ளது. ஸ்பெயினில் உள்ள கொலம்பஸின் சிலைக்கும் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலைக்கும் திருமணமும் செய்து பார்க்கப் போகிறார்கள். இன்னும் பல வடிவங்களில் கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.

பிற வடிவங்களைக் காட்டிலும் ஒரளவு பொருத்தமானது இந்தத் திருமணம் தான். அமெரிக்க ஜனநாயகப் புரட்சியின் சின்னம் சுதந்திர தேவியின் சிலை; ஆக்கிரமிப்பு நிறவெறி, பகற்கொள்ளை, இனப்படுகொலை, பொருள் வெறி, நம்பிக்கை மோசடி – ஆகியவற்றின் சின்னம் கொலம்பஸ். அமெரிக்காவின் இரட்டை வேடத்தை சூசகமாகத் தெரிவிக்கவல்லது இந்தத் திருமணம்தான். சுதந்திர தேவியின் சிலையை அகற்றி அங்கே கொலம்பஸின் சிலையை நிறுவுவது மேலும் பொருத்தமாயிருக்கும்.

’அமெரிக்கா கொலம்பஸைக் கண்டு பிடிக்கிறது’ 250 கோடி ரூபாய் செலவு செய்து! விரயம்! ராட்னி கிங் எனும் கறுப்பினத் தொழிலாளியின் மண்டையைப் பிளந்த வெள்ளை காவலர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்த வெள்ளை நீதிபதிகளில் அமெரிக்கா கொலம்பஸைக் கண்டுபிடிக்கவில்லையா? கரீபியப் பழங்குடி மக்களை நரவேட்டையாடிய தனது வெள்ளை மாலுமிகளுக்கு கொலம்பஸ் வழங்கியிருக்கக் கூடிய தீர்ப்புதானே அது!

13 அடி கொண்ட கொலம்பஸின் சிலை 2012ல் நடைபெற்ற கொலம்பஸ் டே கண்காட்சியில் வைக்கப்பட்டது
13 அடி கொண்ட கொலம்பஸின் சிலை 2012ல் நடைபெற்ற கொலம்பஸ் டே கண்காட்சியில் வைக்கப்பட்டது

கொலம்பஸின் ’வரம்புமீறிய’ நர வேட்டையால் கவலை கொண்ட ஸ்பெயின் மன்னன் பெர்டினாண்டைப் போல புஷ் பதறுகிறார்: “நமது முகத்தையே விகாரமாகத் திரித்துக் காட்டும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ச்சியடைவது போல லாஸ் ஏஞ்செல்ஸ் கலவரததால் கவலையுற்றதாக” கூறுகிறார். கண்ணாடியில் பிரசன்னமானது அவரது கொள்ளுப்பாட்டன் கொலம்பஸ் தான் என்பதை யார் அவருக்குப் புரிய வைப்பது? கறுப்பின மக்கள்தான் – புரிய வைக்க வேண்டும்.

“இந்த நாட்டை வெறுக்கிறோம். இதன் கொடியை வெறுக்கிறோம். இந்தத் தீர்ப்பை மன்னிக்கும் எல்லா வெள்ளையர்களையும் வெறுக்கிறோம்’ என்கிறார் நியூ யார்க் கறுப்பின சேரி நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் பெளவெல். மகிழ்ச்சியின் 500-வது ஆண்டு விழாவை, வெறுப்பின் 500-வது ஆண்டு விழா முந்திக் கொண்டு விட்டது. லாஸ் ஏஞ்செல்ஸில் பற்றியெரியும் தீயின் வெளிச்சத்தில் கொலம்பஸின் குற்றங்கள் விகாரமாகத் தெரிகின்றன.

இன்றைய அமெரிக்காவின் கறுப்பின இளைஞர்களில் நான்கில் ஒருவர் சிறையில் இருக்கிறார். வேறு விதமாகச் சொல்வதென்றால் கல்லூரியில் படிக்கும் கறுப்பின இளைஞர்களைவிட சிறையில் இருப்பவர்களே அதிகம். தமது சொந்த மண்ணான ஆப்பிரிக்காவிலிருந்து அவர்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து சீரழித்தது யார்? கறுப்பன் என்றாலே அடிமை என்ற நிலையை உருவாக்கியது யார்?

கொலம்பஸ்
தன்னை அன்புடன் வரவேற்று பொன்னை அள்ளித்தந்த சான் சால்வடார் பழங்குடிகளை விலங்கிட்டு அடிமையாக இழுத்து வந்தான்

நிறவெறியின் தந்தை! கொலம்பஸ். ஆம் அமெரிக்க அடிமை வர்த்தகத்தின் தந்தை கொலம்பஸ்: வெள்ளையர் அல்லாதவர்களை மட்டுமே அடிமையாக்கியதன் மூலம், அடிமை வியாபாரத்துடன் நிறவெறியையும் இணைத்தவன் கொலம்பஸ்.

கொலம்பஸிற்கு முந்தைய காலத்திலும் அடிமை வர்த்தகம் இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து போர்த்துகீசியர்களால் கொண்டுவரப்பட்ட கறுப்பின அடிமைகள் வீட்டு வேலைக்காரர்களாக கணக்கர்களாக வர்த்தக முகவர்களாகக்கூட பணியாற்றியிருக்கிறார்கள். 1440 இல் போர்த்துகலில் ஆப்பிரிக்க அடிமைகள் ஏலம் விடப் பட்டபோது அவர்களை குடும்பங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வந்ததை சாதாரண போர்த்துகீசிய குடிமக்களே எதிர்த்திருக்கிறார்கள். காரணம் நிறம் அல்லது இனம் காரணமாக இயற்கையிலேயே தங்களைவிடத் தாழ்ந்த மனிதர்களாக அடிமைகளை அவர்கள் கருதவில்லை.

ஆனால் அடுத்த 60 ஆண்டுகளில் கி.பி. 1500 இல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மத்திய அமெரிக்கத் தீவுகளின் பழங்குடி மக்களை இரண்டு வகையாகப் பிரித்தான் கொலம்பஸ். ”அரவாக் இனத்தவர்கள் ஆயுதமேந்த லாயக்கற்றவர்கள், ஆனால் சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் – எனவே அவர்களை வேலைக்காரர்களாகப் பயன்படுத்தலாம்; கரீபிய இனப் பழங்குடிகள் மூர்க்கமா னவர்கள் – எனவே அவர்களை அடிமைச் சந்தையில் விற்றுவிடலாம்” என்று ஸ்பெயின் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான்.

இனப்படுகொலை
நிறவெறியின் அடிப்படையிலான அடிமை முறையை கொலம்பஸின் பாதையில் அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவரும் தொடர்ந்தனர்

தன்னை அன்புடன் வரவேற்று பொன்னை அள்ளித்தந்த சான் சால்வடார் பழங்குடிகளை விலங்கிட்டு அடிமையாக இழுத்து வந்தான் ஹெய்தி மக்களைப் பார்த்து ”உலகத்திலேயே இவர்களைப் போல இனிமையானவர்கள் கிடையாது” என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே ”இவர்களை நல்ல வேலையாட்களாகப் பயன்படுத்தலாம்” என்று சிபாரிசு செய்தான். ஆயிரக்கணக்கான அமெரிக்கப் பழங்குடிகளைப் பிடித்து ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்ததுடன் மற்றவர்களை சொந்த மண்ணிலேயே அடிமையாக்கினான். நிறவெறியின் அடிப்படையிலான அடிமை முறையை கொலம்பஸின் பாதையில் அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவரும் தொடர்ந்தனர். 1622 இல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த பெளஹாட்டன் பழங்குடி மக்களை ”மிருகங்கள், மிருகங்களைவிட மிருகத்தனமான மிருகங்கள்” என்று சாடினான் ஆங்கிலேய காப்டன் ஸ்மித்.

இருபதாம் நூற்றாண்டுக்கு வருவோம். ‘ஆரிய இனம் இயற்கையிலேயே உயர்ந்தது’ என்றான் ஹிட்லர், ‘ஆங்கிலேயர்கள் இயற்கையிலேயே தனிச் சிறப்பான குணாம்சங்களைக் கொண்டவர்கள்’ என்றார் மார்கரெட் தாட்சர். ’அமெரிக்க மாண்பு, அமெரிக்க சிந்தனை’ என்று பலவாறாகப் பேசுகிறார் புஷ். வெள்ளையர்களைத் தவிர பிறர் இயற்கையிலேயே தாழ்ந்தவர்கள் என்ற கொலம்பஸின் கருத்து எப்படியெல்லாம் அவதாரம் எடுக்கிறது!

அடிமை விற்பனை – கொலம்பஸின் கண்டுபிடிப்பு

Landing_of_Columbus_(2)
அமெரிக்காவின் நவீன முதலாளித்துவம் கொலம்பஸின் கோட்பாட்டை காலத் திற்கேற்பப் பிரயோகிக்கிறது.

நிறவெறி மட்டுமல்ல: அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ் அவனுக்கு முந்தைய காலத்தில் ஒரு அடிமையை விலைகொடுத்து வாங்கிய ஆண்டை விதிவிலக்கான சமயங்கள் தவிர மற்றெப்போதும் ஆடுகளைப்போல விற்றதில்லை. ஆதிக்கமும் சுரண்டலும் இருந்த போதும் அடிமைகள் தங்கள் ஆண்டையுடன் பல பரம்பரைகளுக்குக்கூட பிணைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் நோயுற்றவர்கள், குறிப்பிட்ட திறமையில்லாதவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை அடிமாடுகளைப் போல விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ். அமெரிக்க முதலாளித்துவத்தின் வளர்ச்சி கொலம்பஸின் இந்தக் கண்டுபிடிப்பை ‘அதன் எல்லைக்கே கொண்டு சென்றது. அமெரிக்காவின் புகையிலை, ரப்பர். காப்பித் தோட்டங்களுக்காக ஆப்பிரிக்க மக்கள் விரட்டி, வேட்டையாடி, கூண்டிலடைத்து ஏலமிடப்பட்டனர்.

Slavery-sale
அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ்

அமெரிக்காவின் நவீன முதலாளித்துவம் கொலம்பஸின் கோட்பாட்டை காலத் திற்கேற்பப் பிரயோகிக்கிறது. Hire and Fire (வேண்டுமென்றால் வைத்துக்கொள். வேண்டாமென்றால் துரத்திவிடு) என்ற மூன்றே சொற்களுக்குள் தனது தொழிலாளர் நல சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்துகிறது. நம்மையும் அமல்படுத்த நிர்ப்பந்திக்கிறது. இளமையை முதலாளிக்குத் தந்துவிட்டு முதுமையில் விரட்டப்பட்டு நிர்க்கதியாய்த் தெருவில் நிற்கும் அமெரிக்க அநாதைகளை உருவாக்கிய பிதாமகன் கொல்ம்பஸ்.

“பொறுமை, வீரம் போன்ற நற்குணங்களை கொலம்பஸிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும்” என்கிறது ஒரு அமெரிக்க பாடநூல்: “கரீபிய மக்களிடம் கொலம்பஸ் பெரும் ஆர்வம் காட்டினார்: இருந்த போதும் கொலம்பஸ் அவர்கள் மத்தியில் நிம்மதியாக வாழமுடியவில்லை” என்கிறது இன்னொரு அமெரிக்கப் பாட நூல்.

இதைப் படிக்கின்ற யாரும் கொலம்பஸை புத்தனாகவும், அமெரிக்கப் பழங்குடிகளை காட்டுமிராண்டிகளாகவும் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். பழங்குடிகளிடம் கொலம்பஸ் காட்டிய ”ஆர்வத்திற்கு” சான்று?

கொலைகாரன் கொலம்பஸ்

தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான். எப்படி என்பதை எழுதுகிறார் கொலம்பஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிர்க் பாட்ரிக் சேல்:

தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான்.
தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான்.

“இந்தியர்களின் (பழங்குடிகளின்) கைகால்களையும் குடலையும் நாய்களைக் கொண்டு குதற வைத்தனர்; தப்பியோடிய இந்தியர்களை புதர்களில் தள்ளி ஈட்டிகளாலும் வாள்களாலும் கிடிக்கிப் பிடிபோட்டுக் கொன்றனர். தப்பி ஓடியவர்களையும் தேடிப் பிடித்துக் கொன்று ‘கடவுள் அருளால்’ விரைவில் முழுவெற்றி அடைந்தனர்

விரட்டிப் பிடித்த பழங்குடிப் பெண்களைத் தன் மாலுமிகளுக்கு பரிசாகத் தந்தான் கொலம்பஸ். அந்தப் பெண்களைத் தாங்கள் பலாத்காரம் செய்ய முனைந்த போது அவர்கள் காட்டிய எதிர்ப்பை ஆத்திரத்துடன் தனது குறிப்புகளில் எழுதுகிறான் மாலுமி. காமவெறியால் கொலம்பஸின் மாலுமிகளுக்குள்ளேயே தோன்றிய கலவரங்களை எழுதுகிறான் இன்னொரு மாலுமி.

புஷ்ஷின் அமெரிக்கா தனது குழந்தைகளுக்குக் கற்றுத்தர விரும்பும் கொலம்பஸின் வீரத்திற்கும் பொறுமைக்கும் இவை சில சான்றுகள். கொலம்பஸ் காட்டிய பாதையை அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவருமே தவறாமல் பின்பற்றினார்கள்.

25,000 ஆண்டுகளாக வாழ்ந்து வளர்ந்த அந்த மக்களின் மண்ணை அவர்களது ரத்தத்தைக் கொண்டே கழுவிவிட்டு, அமெரிக்கா எனப் பெயர் சூட்டி குடியேறினார்கள்.

குழந்தைகளை படுகொலை செய்து தன்னுடைய வேட்டை நாய்களுக்கு உணவாக்கும் வெறியன்
குழந்தைகளை படுகொலை செய்து தன்னுடைய வேட்டை நாய்களுக்கு உணவாக்கும் வெறியன்

கொலம்பஸ் முதன் முதலில் ஆக்கிரமித்த ஹெய்தி மற்றும் டொமினிகன் தீவுகளின் அன்றைய – 1492 இல் மக்கள் தொகை 30 லட்சம். அடுத்த 40 ஆண்டுகளில் அதாவது 1532 இல் அங்கே எஞ்சியிருந்தவர்கள் வெறும் 300 பேர். கொலை செய்யப்பட்டவர்கள் வெறும் பழங்குடி மக்கள் அல்ல; கொலம்பஸின் வார்த்தைகளில் சொன்னால் ”உலகத்திலேயே மிக இனிமையான மக்கள்!”

அமெரிக்கா என இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் வாழ்ந்திருந்த பழங்குடிகள் 2 கோடி. வன விலங்குகளைப் போல மாதிரிக்காக இன்று விட்டு வைக்கப்பட்டி ருப்பவர்கள் 16 லட்சம்.

மெக்சிகோவில் ஐரோப்பியர்களின் நாகரீகக் காலடிகள் பதியும்போது அங்கிருந்த மக்கள் 2 1/2 கோடி இன்று எஞ்சியிருப்பவர்களோ 20 லட்சம். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த இன ஒழிப்பை சாதிக்க நேரடியான கொலைகளைக் காட்டிலும் வக்கிரமான முறைகளையெல்லாம் கையாண்டார்கள் கொலம்பஸின் ஐரோப்பிய வாரிசுகள்.

அழிந்தது போக 4000 பேர் மட்டுமே எஞ்சியிருந்த ‘சேயன்’ எனும் பழங்குடி மக்களை ஆடுமாடுகளைப் போலக் காயடித்தார்கள். வர்ஜினிய பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து கட்டாயமாகப் பறித்துக் கொண்டு சென்றது வர்ஜினியா புகையிலைக் கம்பெனி.

அம்மைநோய்
நிலங்களை பறித்துக்கொண்டு வெள்ளையர்கள் பழங்குடிகளுக்குக் கொடுத்த போர்வை அம்மை நோயாளிகள் பயன்படுத்திய போர்வை.

போர்வையைக் கொடுத்து பழங்குடிகளின் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டார்கள். அந்த அப்பாவி மக்கள் அதைப் பயன் படுத்திய போது அப்போர்வையே அவர்களது இறுதிப் பயணத்திற்கான கோடித்துணியானது. ஆம் வெள்ளையர்கள், பழங்குடிகளுக்குக் கொடுத்த போர்வை அம்மை நோயாளிகள் பயன்படுத்திய போர்வை. வெள்ளையர்களின் நயவஞ்சகம் குறித்து இன்று மனம் வெதும்பிக் கூறுகிறார் ஒரு செவ்விந்தியத் தலைவர் ”பல்வேறு செவ்விந்திய-இனக்குழுக்களுடன் மொத்தம் 371 ஒப்பந்தங்கள் போட்டார்கள் வெள்ளையர்கள் எங்களால் நினைவு வைத்துக் கொள்ளக்கூட முடியாத அளவு பல உறுதி மொழிகளைக் கொடுத்தார்கள். ஆனால் ஒன்றை மட்டும்தான் நிறைவேற்றினார்கள் – எங்கள் நிலத்தை எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். எடுத்துக் கொண்டார்கள்”

மனித நாகரிகத்தின் இருண்ட பக்கங்களைச் சித்தரிக்க செங்கிஸ்கானையும், இடி அமீனையும் உதாரணம் காட்டுகிறார்கள் ஐரோப்பிய அமெரிக்க வரலாற்றாசிரியர்கள். இந்த வக்கிரமான இன ஒழிப்பு நடவடிக்கையை ஒப்பிடும்போது அவர்கள் எம்மாத்திரம்? இந்த குரூரத்தை நடத்தி முடிக்க கொலம்பஸின் வாரிசுகளுக்கு எப்படி மனம் வந்தது? இதை நிறைவேற்றுவதற்கான ’தார்மீக பலத்தை’ எப்படிப் பெற்றார்கள்? ‘தார்மீக நியாயத்தை’ எப்படிக் கற்பித்தார்கள்? இந்தக் கேள்விக்கான விடை அவர்கள் நடத்தி முடித்த படுகொலையை விட பயங்கரமானது.

வெள்ளையனை எதிர்ப்போர் மனிதர்களல்ல!

ஹெய்டியில் கொலம்பஸ் தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து டெய்னோ வழங்குடிகளை சித்ரவதை செய்து, பாலியல் வல்லுறவு செய்து பின்பு கொன்று அவன் வேட்டை நாய்களுக்கு பரிசளித்தான்
ஹெய்டியில் கொலம்பஸ் தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து டெய்னோ பழங்குடிகளை சித்ரவதை செய்து, பாலியல் வல்லுறவு செய்து பின்பு கொன்று அவன் வேட்டை நாய்களுக்கு பரிசளித்தான்

ஒரு நாகரிகம் அல்லது இனம் இன்னொன்றுடன் மோதும்போது போர்களும் கொலைகளும் வரலாற்றில் தவிர்க்கவியலாதவைதான். அதிலும் முன்னேறிய நாகரீகத்தின்மீது பின்தங்கிய நாகரீகம் படையெடுக்கும்போது அழிவு அதிகமாக இருக்கும். சிந்து சமவெளியின் திராவிட நாகரிகத்தின் மீது நாடோடி ஆரியர்கள் நடத்திய தாக்குதலையும், செங்கிஸ்கானின் போர்களையும் இன்ன பலவற்றையும் இதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால் பின்தங்கிய பழங்குடி மக்கள்மீது முன்னேறிய வெள்ளை நாகரிகம் தொடுத்த தாக்குதலுக்கும் இனக் கொலைக்கும் கிறித்துவப் பாதிரிகளும், வெள்ளை ஆதிக்கவாத வரலாற்றாசிரியர்களும் கற்பிக்கும் நியாயத்தின் சாரம் இது தான்.

முறியடிக்க வேண்டிய எதிரிகளை பழங்குடி மக்களை – கொலம்பஸும் அவர்களது வாரிசுகளும் உயிருள்ள மனிதர்களாகக் கருதவில்லை; அகற்றப்பட வேண்டிய உயிரற்ற சடப் பொருளாகவே கருதினார்கள்; சித்தரித்தார்கள்.

“அவர்களிடம் பண்பாடு இல்லை. எழுதத் தெரியவில்லை. வரலாற்றை எழுதி வைப்பதில்லை. எழுதப்பட்ட சட்டமில்லை, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். நம்மைக் கண்டால் பெண்களைப் போல(!) ஒடி ஒளிகிறார்கள்” – பழங்குடிகளை அடிமையாக்கி விற்க 1550 இல் ஸ்பானிய அரசுப் பிரதிநிதி கூறிய நியாயம் இது. தமது கொலைகளும், அடிமையாக்குவதும் சட்டப்படி செல்லும் என்பதற்கு 16-ம் நூற்றாண்டின் ஸ்பானிய நீதிபதி கூறிய நியாயம் ‘அவர்கள் பண்பாடற்ற காட்டுமிராண்டிகள்’ என்பதுதான். ‘அவர்கள் மாற வேண்டும் இல்லையேல் அவர்கள் ஒழித்துக்கட்டப்படுவார்கள்’ என்று 1930 இல் பேசினான் அமெரிக்க செனட்டர் பேண்டல்டன். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த ஐரிஷ் இன மக்களை (அவர்களும் கிறித்துவர்களாக இருந்தபோதும்) கடவுளுக்கு பலியிடுவதில் தவறில்லை எனக்கூறிய கத்தோலிக்கப் பாதிரிகள் அமெரிக்கப் பழங்குடிகளைக் கொலை செய்ய தேவனின் அங்கீகாரத்தை வழங்கியதில் வியப்பில்லை.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தார்
அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தான்

கொலம்பஸின் ஆக்கிரமிப்பை மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடியவர்கள் கரீபிய மக்கள். கரீப் என்றால் அவர்களது மொழியில் வீரம் செறிந்த என்று பொருள் அவர்களை நரவேட்டையாடவும் அடிமையாக்கவும் கொலம்பஸ் கற்பித்த நியாயம் நயவஞ்சகமானது. கரீப் கனிப் கானியல் என்று அந்தச் சொல்லின் மூலத்திற்கு விளக்கம் தந்தான் கொலம்பஸ். கணிபல் என்றால் நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகள் என்று பொருள். உண்மையில் அவர்களிடம் அத்தகைய பண்பாடு இல்லாதபோதும் கொலம்பஸின் இந்த ஆய்வு மட்டுமே அவர்களை கொல்லப் போதுமானதாக இருந்தது.

தொகுத்துக் கூறினால் வெள்ளை நாகரீகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், எதிர்ப்பவர்கள் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள் என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல; எனவே அவர்களைக் கொல்வதில் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் தடைக்கற்கள். ஆம் வெறும் தடைக்கற்கள் மட்டுமே.

இதே கருத்தை அமெரிக்க குழந்தைகளுக்கு வெகு எளிமையாக, பூடகமாக சொல்லித்தருகிறது அவர்களது பாடநூல்:

“அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தார்”.

அமெரிக்க ஆதிக்கத்தின் சின்னம் கொலம்பஸ்!

போராட்டம்
அமெரிக்காவில் கொலம்பஸ் டே – வை எதிர்த்து நடைபெற்ற போராட்டம்

வரலாற்று ஆதாரங்களை எடுத்து வைத்து கொலம்பஸும், வெள்ளை ஆக்கிரமிப்பாளர்களும் பழங்குடிகளுக்கு இழைத்த அநீதிகளுக்கு விளக்கம் கேட்டால் இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய அறிஞர்கள் சொல்கிறார்கள். ”கொடுமை தான். ஆனால் இது தவிர்க்க முடியாதது”. ஈராக்கிய மக்கள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தபோதும் இவர்கள் அளித்த விளக்கம் இதுதான்.

ஏன் தவிர்க்க முடியாது? ஏனென்றால் அமெரிக்கா சொல்வதுதான் ஜனநாயகம், வெள்ளையர்கள் கூறுவதுதான் பண்பாடு; ஐரோப்பியர்கள் கூறுவதுதான் அரசியல் நியாயம். இவற்றை மறுப்பவர்களோ, எதிர்ப்பவர்களோ தடுப்பவர்களோ கொடுமைக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது.

ஏனென்றால் ”தங்கம்தான் செல்வம். அதை வைத்திருப்பவன்தான் உலகத்தில் தான் நினைத்ததைச் சாதிக்கிறான்; ஆன்மாக்களை சொர்க்கத்துக்குக்கூட அனுப்புகிறான். புனித ஜானுக்கு இறைவன் கூறிய புதிய உலகம், புதிய சொர்க்கம் ஆகியவற்றுக்கு என்னையே தூதனாக்கியிருக்கிறார். அதைக் கண்டுபிடிக்கவும் அவரே எனக்கு வழிகாட்டினார்” – கொலம்பஸ்.

2014ல் கொலம்பஸ் டே - வை கண்டித்து நடைபெற்ற போராட்டம்
2014ல் கொலம்பஸ் டே – வில், ஏன் நாங்கள் ஒரு பாலியல் பலாத்காரம் செய்தவன், கொலைக்காரன் மேலும் திருடனை கொண்டாட வேண்டும் என்ற பதாகையோடு நடைபெற்ற போராட்டம்

“புதிய உலக ஒழுங்கை புஷ் இறைவனின் பெயரால் அறிவிக்கவில்லையே தவிர அவர் கொலம்பஸ் பேசியதையே தான் பேசுகிறார். 500 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த ஆணவமும், திமிரும், பொருள் வெறியும் எள்ளளவும் குறையவில்லையே!

கரீபியர்கள், அரவாக்குகள், செவ்விந்தியர்கள், பெளஹாட்டன்கள் ஆகியோர் அமெரிக்கா கண்டத்தை – தங்கள் மண்ணை – இழந்திருக்கலாம். ஆனால் தங்கள் வரலாற்றை இழக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. ஏனெனில் வரலாற்றை இழந்தவனுக்கு வருங்காலமுமில்லை. கொலம்பஸ் விழாவுக்கு எதிரான சிறு பொறியாக தங்கள் போராட்டத்தை அவர்கள் துவங்கியிருக்கிறார்கள். பாம்புப் பிடாரர்களின் நாட்டைச் சேர்ந்த நாமும் அவர்களுடன் இணைந்து கொள்வோம். சீக்கிரம்! லாஸ் ஏஞ்செல்ஸ் மட்டும்தான் எரிந்திருக்கிறது; அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசு; கொலம்பஸ் மிகப் பெரிய எதிரி.

– சூரியன்
மே, ஜூன் 1992, புதிய கலாச்சாரம்.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

  1. என்சைக்ளோபேடியா பிரித்தானிகா
  2. 2 என்சைக்ளோபேடியா அமெரிக்கானா
  3. கிராலியர்ஸ் என்சைக்ளோபேடியா
  4. ரேஸ் அண்டு கிளாஸ் – அமெரிக்க இதழ்.

 

கொலம்பஸ்: ஆக்கிரமிப்பின் வரலாறு

இந்தியா உலக நாடுகளைக் கவர்ந்த மோகினி, பொன் விளையும் பூமி. பல ஆக்கிரமிப்புகளுக்கும், வணிகத் தொடர்புக்கும் இதுவே காரணம், ஐரோப்பியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கி.பி. 1453-இல் துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிலைக் கைப்பற்றியதால், ஐரோப்பிய நாடுகளின் இந்திய வர்த்தகத்திற்கான தரைவழி துண்டிக்கப்பட்டது. இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. ஸ்பெயினிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்த கொலம்பஸ் 1492-இல் அமெரிக்காவில் இறங்கினார். போர்த்துகலில் இருந்து கிளம்பிய வாஸ் கோடகாமா கிழக்கு முகமாக பயணம் செய்து நன்னம்பிக்கை முனையைச் சுற்றி கோழிக்கோட்டில் வந்து இறங்கினார்.

இனி கொலம்பஸின் வரலாறு சுருக்கமாக: ஜெனோவா நாட்டில், நெசவாளி ஒருவரின் மகனாகப் பிறந்த கொலம்பஸ் தனது இருபது வயதிலிருந்து இரண்டாண்டுகள் கடற் கொள்ளைக்காரனாக இருந்தான். பின்னர் போர்த்துகீசிய கப்பல் படையில் சேர்ந்து ஜெனோவாவிற்கு எதிரான யுத்தத்திலும் ஈடுபட்டான். பல்வேறு வர்த்தகப் பயணங்களில் ஈடுபட்ட கொலம்பஸுக்கு மேற்கு முகமாகப் பயணம் செய்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கும் ஆசை ஏற்பட்டது. சரியாகச் சொன்னால் இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பது என்ற தெளிவான லட்சியமும் கொலம்பஸ்க்கு கிடையாது. பொன் விளையும் பூமி ஏதாவது ஒன்றை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறிதான் எஞ்சியிருந்தது. மேற்கு முகமாகச் சென்று இந்தியாவுக்கு குறுக்கு வழி கண்டுபிடிக்கும் தனது திட்டத்திற்கு போர்த்துகல் மன்னன் நிதியதவி செய்ய மறுக்கவே ஸ்பெயின் மன்னன் பெர்டினான்டையும் இசபெல்லாவையும் அணுகினான். ஸ்பெயினிலிருந்து மேற்கே 3900 மைல் துரத்தில் இந்தியா இருப்பதாக (உண்மையில் விண்வெளித் துரமே 10,600 மைல்கள்) கொலம்பஸ் முன் வைத்த கண்டுபிடிப்பை ஸ்பெயின் மன்னன் அமைத்த நிபுணர் குழு 5 ஆண்டுகள் ஆய்வு செய்து இறுதியாக ஏற்றுக் கொண்டது. கொலம்பஸ் கண்டுபிடிக்கவிருக்கும் இடங்கள் ஸ்பெயினுக்கு சொந்தம் என்றும் அதற்குப் பதிலாக கொலம்பஸ்-க்குத் தர வேண்டிய சன்மானங்களும் பேரம் பேசி முடிக்கப்பட்டன. கடற்பயணத்திற்கான செலவுகளுக்கு ராணி இசபெல்லா தனது நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்ததாக ஒரு கட்டுக்கதை உண்டு, அது பொய். யூதர்களிடமிருந்தும், முஸ்லீம்களிடமிருந்தும் பிடுங்கப்பட்ட சொத்துக்கள்தான் கொலம்பஸிற்குத் தரப்பட்டது.

கொலம்பஸின் முதற்பயணம்:

கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம்
கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம்

ஆகஸ்டு, 3 1492 அன்று சந்தா மரியா, பின்டா நினா ஆகிய மூன்று சிறு கப்பல்களில் கொலம்பஸின் தலைமையில் 90 மாலுமிகள் புறப்பட்டனர். அவநம்பிக்கையும். சோர்வும் அளிக்கும் நீண்ட பயணத்துக்குப் பின் அக்டோபர் 12-ம் தேதி நள்ளிரவில் நிலம் தென்படுவதாக ’ரோட்ரிகோ டி டிரியானா’ என்ற மாலுமி ஆனந்தக் கூச்சலிட்டான். முதலில் நிலத்தைப் பார்ப்பவர்களுக் குரிய வெகுமதியையும், பெருமையையும் பறித்துக்கொள்ள விரும்பிய கொலம்பஸ் தான் அவனுக்கு முன்னரே பார்த்துவிட்டதாகக் கூறி அவனை அடக்கிவிட்டான். இது கொலம்பஸின் ’நேர்மைக்கு’ ஒரு உதாரணம்.

கொலம்பஸ் சென்று இறங்கிய இடம் பஹமா தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த குவானா ஹனி என்ற தீவு. தீவில் இறங்கிய கொலம்பஸ் அங்கே ஸ்பானிய கொடியை நட்டு ஸ்பெயின் மன்னனின் கட்டுப்பாட்டில் அத்தீவைக் கொண்டுவருவதாக அறிவித்து அத்தீவுக்கு சான் சால்வடார் என்று பெயரும் சூட்டினான். டெய்னோ பழங்குடி இனத்தைக் சேர்ந்த அத்தீவின் விவசாயிகளின் முக்கிலும் காதிலும் தங்கத்தைப் பார்த்தவுடனே அவர்களை இந்தியர்கள் என்று நம்பினான்.

கொலம்பஸ்
”கடவுள் தங்கத்தின் பிறப்பிடத்தை எனக்குக் காட்டுவார்” என்று பிதற்றியவாறே 15 நாட்கள் அந்தத் தீவுக்கூட்டத்தில் அங்குமிங்கும் தேடி அலைந்தான்.

”கடவுள் தங்கத்தின் பிறப்பிடத்தை எனக்குக் காட்டுவார்” என்று பிதற்றியவாறே 15 நாட்கள் அந்தத் தீவுக்கூட்டத்தில் அங்குமிங்கும் தேடி அலைந்தான். தான் ஆசியா கண்டத்தின் கிழக்கு பகுதிக்கு வந்துவிட்டதாக நம்பிய கொலம்பஸ் அடுத்து ஜப்பானைத் தேடத் தொடங்கினான். அந்தப் பழங்குடி மக்கள் அவனை கியூபாவுக்கு அழைத்துச் சென்றனர். 20-ம் நூற்றாண்டில் வெள்ளையர்களுக்குத் தங்கத்தை வாரிக்கொடுக்க இருக்கும் புகையிலையை அறிமுகப்படுத்தினர். மோசடி பண்டமாற்றுக்குத் தங்கள் நகைகளையும் வாரிக்கொடுத்தனர். தங்கத்தைக் கொடுப்பதன் மூலம் தங்கள் எதிர்காலத்திற்குத் தாங்களே சவக்குழி தோண்டிக் கொள்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

பழங்குடியினரின் அன்புக்கு கைம்மாறாக அவர்களில் 7 பேரை சிறைப்பிடித்து கப்பலில் ஏற்றினான் கொலம்பஸ். மனிதர்களை தின்னும் காட்டுமிராண்டிக் கூட்டம் தான் இது என்று ஆத்திரமுற்ற பழங்குடியினர் எதிர்க்கத் தொடங்கினர். உடனே அங்கிருந்து புறப்பட்ட கொலம்பஸ் இன்று ஹெய்தி, டொமினிகன் குடியரசுகள் என்றழைக்கப்படும் தீவுக்கூட்டங்களை அடைந்தான். அதன் புவியியல் அமைப்பும் வாழ்ந்த மக்களின் தோற்றமும் ஸ்பானியர்களை ஒத்திருக்கவே அதற்கு ‘இஸ்பானோலா என்று பெயரிட்டான். தன்னுடன் வந்த மாலுமிகளில் 38 பேரை அங்கே குடியமர்த்தி அவர்களுக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான உணவும். ஆயு தங்களையும் (’உள்ளுர் பழங்குடியினர்க்கு நம்மிடம் அச்சம் கலந்த அன்பு இருக்க வேண்டும்’ – கொலம்பஸ்) அளித்தான்.

christopher-columbus-queen-isabella-native-americans
கொலம்பஸ் தான் கண்டடைந்த நாட்டின் பழங்குடியினரை அடிமைகளாக்கி ஸ்பெயின் இராணி இசபெல்லாவிற்கு பரிசாக அளித்தான்

தான் கண்டுபிடித்த ’இந்தியா’வை வேறு யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காகத் தூரம் பயண நேரம், பாதை ஆகியவற்றை மிகவும் ரகசியமாக வைத்துக் கொண்டான் கொலம்பஸ்.

கோலாகலகத்திற்கிடையே, தாங்கள் ”கண்டுபிடித்த இந்தியாவை” எங்கே போர்த்துகீசியர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்களோ என்று அஞ்சி அதைத் தடுக்கும் பொருட்டு போப்பை அணுகினான் ஸ்பெயின் மன்னன். ஐரோப்பிய மன்னர்களுக்கிடையே தோன்றும் முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் அன்று வாடிகனுக்கு இருந்தது. கொலம்பஸ் கண்டி பிடித்த இந்தியாவையும் இனி கண்டுபிடிக்க இருக்கின்ற இந்தியாவில் பாதியையும் ஸ்பெயினுக்கு பட்டா போட்டுக் கொடுத் தார் அன்றைய போப் நான்காவது அலெக்சாண்டர்.

கொலம்பஸின் இரண்டாவது பயணம்: போர்த்துகீசியர் குறித்த அச்சம், பொன்னையும் அடிமைகளையும் கண்டதில் தோன்றிய வெறி ஆகியவை காரணமாக கொலம்பஸின் இரண்டாவது பயணத்துக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தான் ஸ்பெயின் மன்னன். முதல் பயணத்தின் போது சிலுவையைச் சுமந்து கிறித்துவத்தைப் பரப்பச் செல்வதாக வேடமிட்ட கொலம்பஸ் இப்போது அப்பட்டமான ஆக்கிரமிப்பாளனாகப் புறப்பட்டான். சிப்பாய்கள், பெண்கள், பாதிரிகள், மருத்துவர்கள், விவசாயிகள் ஆகியோரடங்கிய 1500 பேர் கொண்ட பெரும்படை 17 கப்பல்களில் செப்.1493 இல் புறப்பட்டது.

இஸ்பானோலாவுக்குக் கொலம்பஸின் பட்டாளம் போய்ச் சேர்ந்தபோது அங்கே அவன் விட்டு வந்திருந்த 38 பேரும் உள்ளுர் மக்களால் கொல்லப்பட்டதை அறிந்தான். உடனே அவர்கள் ஒருவேளை தங்கத்தை எங்காவது ஒளித்து வைத்திருக்கக்கூடும் என்று தேடத் தொடங்கினான். பயனின்றிப் போகவே அந்தத்தீவுக் கூட்டங்களிலேயே வேறொரு தீவைத் தெரிவு செய்து அதற்கு இசபெல்லா என்று பெயர் சூட்டி அனைவரையும் அங்கே குடியேற்றினான்.

இஸ்பானோலாவுக்குக் கொலம்பஸின் பட்டாளம் போய்ச் சேர்ந்தபோது அங்கே அவன் விட்டு வந்திருந்த 38 பேரும் உள்ளுர் மக்களால் கொல்லப்பட்டதை அறிந்தான்.
இஸ்பானோலாவுக்குக் கொலம்பஸின் பட்டாளம் போய்ச் சேர்ந்தபோது அங்கே அவன் விட்டு வந்திருந்த 38 பேரும் உள்ளுர் மக்களால் கொல்லப்பட்டதை அறிந்தான்.

காலனியவாதிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கிய உள்ளுர் மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்து அடிமைகளாக ஸ்பெயினுக்கு அனுப்பினான். உள்ளுர் மக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு இவ்வளவு தங்கம் வரியாகச் செலுத்த வேண்டும் என்று சட்டமியற்றினான் இயலாதவர்கள் பட்டினி போடப்பட்டனர். ஆயிரக்கணக்கில் பச்சைப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப் பட்டனர். மற்ற தீவுகளை ஆக்கிரமிக்க ஸ்பெயின் சிறைகளிலிருந்த கிரிமினல்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனது கொடுரமான வழிமுறைகளை எதிர்த்த ஸ்பானியர்களையும் நூற்றுக்கணக்கில் துக்கிலிட்டுக் கொல்ல கொலம்பஸ் சிறிதும் தயங்கவில்லை. தனது சகோதரன் தாமஸை அரசாங்க நிர்வாகியாக நியமித்து விட்டு இந்தியாவின் நிலப்பகுதியையும் சீனத்தையும் கண்டுபிடிக்கப் புறப்பட்டான். சுமார் 240 கிலோ மீட்டர்கள் மேற்கு நோக்கிச் சென்றுவிட்டு வந்த வழியிலேயே திரும்பி கியூபாவை வந்தடைந்தான். இது தான் இந்திய நிலப்பகுதி என்று அவன் நம்பியதுடன் மற்ற மாலுமிகளும் அவ்வாறே கூறவேண்டும் என்றும் சத்தியம் செய்யச் சொன்னான். இது இந்தியா இல்லை என்று சந்தேகம் தெரிவித்தாலோ, கியூபாவை ஒரு தீவு என்று கூறினாலோ அவர்களது நாக்கை அறுத்துவிடுவேன் என அறிவித்தான். மீண்டும் இசபெல்லாவுக்குத் திரும்பியபோது உள்ளுர் மக்களின் பெரும் எழுச்சியை ஒடுக்க வேண்டியிருந்தது. ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, 500பேரை அடிமைகளாக ஸ்பெயினுக்கு அனுப்பினான். சொந்த நாட்டினரையே மிகக் குரூரமாக நடத்தியதால் தோன்றிய அதிருப்தி மன்னன் காதுக்கு எட்டவே, மன்னனை சமாதானம் செய்ய ஸ்பெயினுக்குத் திரும்பினான்.

கொலம்பஸ் டே - வை எதிர்க்கும் அமெரிக்க பழங்குடிகள்.
கொலம்பஸ் டே – வை எதிர்க்கும் அமெரிக்க பழங்குடிகள்.

கொலம்பஸின் மூனறாவது பயணம் : மே 1498 இல் கிளம்பி தென் மேற்காகப் பயணம் செய்து தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியியிலுள்ள டிரினிடாடுக்கு வந்து சேர்ந்தான். பரியா தீபகற்பத்தில் வாழும் பழங்குடிமக்களின் கழுத்தில் முத்து மாலைகளைக் கண்ட மாலுமிகள் இதுதான் இந்தியா என்று ஆர்ப்பரித்தனர்; ஒரனோகோ நதியின் முகத்துவாரத்தில் கடலில் வந்து கலக்கும் நல்ல நீரைப் பார்த்தவுடன் இந்தியாவை மறந்துவிட்டு சொர்க்கம் பற்றிய நம்பிக்கையில் மூழ்கிப்போனான். கூம்பு வடிவிலான உலகத்தின் உச்சியில் சுவர்க்கம் இருப்பதாகவும் அங்கிருந்து பாயும் நான்கு நதிகளில் ஒன்றின் முகத்து வாரத்தில் தான் இருப்பதாகவும் நம்பினான். சொர்க்கம் ஒருபுறமிருக்க கியூபா தான் இந்தியா என்ற நம்பிக்கையை கொலம்பஸ் கைவிடவில்லை.

கொலம்பஸின் நான்காவது பயணம்: புவியியல், விஞ்ஞானத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு புவியியல் குறித்த பைபிளின் கூற்றுகள் அடிப்படையில் இந்தியா, மலேயா, சீனாவைக் கண்டுபிடிப்பதுடன் ஜெருசலேமையும் விடுதலை செய்யத் திட்டம் தயாரித்து, 1502 இல் புறப்பட்டான். இந்தமுறை அவன் போய்ச் சேர்ந்த இடம் ஹொண்டுராஸ், அங்கிருந்த மக்களின் உயர்ந்த பண்பாடும், அவர்களிடமிருந்த தங்கமும் கொலம்பஸை கொள்ளைக்கும் கொலைக்கும்தான் துண்டியது. ஹொண்டுராஸ் சூறையாடப்பட்டது. இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். “இங்கிருந்து பத்தே நாட்களில் கங்கையை அடைந்து விடுவேன்” என்று மன்னனுக்கு கடிதம் அனுப்பினான் கொலம்பஸ். ஆனால் பல தீவுகளில் பழங்குடிகளைக் கொலை செய்யவும் தங்கத்தை சூறையாடவும் மட்டுமே அவனால் முடிந்தது. 1504 இல் ஸ்பெயினுக்குத் திரும்பிய கொலம்பஸ் தான் கண்டுபிடித்த இந்தியத் தீவுகள் முழுவதையும் மன்னன் தனக்கே சொந்தமாக்குவான் என்று கனவு கண்டு ஏமாந்து 1506 இல் இறந்தான்.

பெண்கள் மீதான தாக்குதல் – தீர்வு என்ன ?

0

அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல் – மாற்றுத்தீர்வு குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு!

swathi-murder-pp-press-conferenceநாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்கள், கொலைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் இவற்றை நடைமுறையில் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் அறிக்கையில் மட்டும் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என அம்மா அரசு அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும் யதார்த்தம் என்னவோ அம்மாவின் பேச்சுக்கு நேர்முரணாகத்தான் இருப்பது யாவரும் அறிந்ததே!

போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள எக்கச்சக்க அதிகாரம், எண்ணிலடங்கா சலுகைகள், கருவிகள் இவை எதுவும் குற்றங்களை குறைக்கவில்லை. எந்த வகை குற்றத்தையும் குறைப்பதற்கோ, தடுப்பதற்கோ வழி தெரியாமல், வக்கில்லாமல் சொந்த பந்த பிரச்சனைகளுக்காக கொலை நடக்கிறது என நாக்கூசாமல் போலீசு பொய் சொல்லுகிறது.

இந்நிலையில் டாஸ்மாக்கை மூடுவதற்கு அதற்கு காவலராகவும், புரவலராகவும் உள்ள அரசிடம் கெஞ்சுவதற்கு பதிலாக அதிகாரத்தை மக்களே கையிலெடுத்து மூடிக்காட்ட வேண்டுமென போராடி சில இடங்களில் சாதித்தும் காட்டிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் பெருகி வரும் குற்றங்களை தடுப்பதற்கான மாற்று வழிமுறையை காட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

அதில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, பொருளாளர் காளியப்பன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன், மக்கள் அதிகாரத்தை சார்ந்த அமிர்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

people-power-press-release
01-07-2016

பத்திரிகை செய்தி

மீபத்தில் நடந்த சுவாதி கொலையும், வினுப்பிரியா தற்கொலையும் தமிழ்நாட்டையே உலுக்கி விட்டன. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்கின்றன. சென்னை உயர் நீதிமன்றம் சுவாதி கொலை வழக்கை தானாக கையில் எடுத்து கொண்டு போலீசுக்கு பல கேள்விகளை எழுப்பி உத்தரவுகளை போட்டுள்ளது. மேற்கண்ட கொலை, தற்கொலைகளை கண்டு அதிர்ச்சியடைவதைவிட நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் உத்தரவுகளும் குற்றவாளிகளை பிடிக்க போலீசு எடுக்கும் நடவடிக்கைகளும்தான் கவனிக்க வேண்டியது.

swathi-murder-wlf-poster
ஆள, அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு – பெ.வி.மு

பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக மக்கள் திரள் கண்காணிப்பு (எல்லா இடங்களிலும் சி.சி.டி.வி), போலீசு ரோந்து சுற்றுவது என்பதுதான் அரசும் போலீசும் வைக்கும் தீர்வு. கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவிகள் மூன்று பேர் கல்லூரி அருகிலேயே கொன்று கிணற்றில் வீசப்பட்டனர். அதற்கு முன்பு அவர்கள் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர், பல்கலைக்கழக துணை வேந்தர், போலீசு அதிகாரிகள், நீதிமன்றம், மனித உரிமை ஆணையம், உள்துறை செயலாளர், உள்பட பல்வேறு அரசு அமைப்புகளிடம் முறையிட்டார்கள், அவர்கள் காப்பற்றப்பட்டனரா? அந்தக்காட்டில் எங்கு சி.சி.டி.வி வைப்பது என நீதிமன்றம் சொல்லுமா?.

பெண்களுக்கு நாட்டில் எங்கும் பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை. தன் சொந்த வீட்டில் பெற்றோரே ஆணவக்கொலைகள் செய்கிறார்கள். மாதா, பிதா குரு, தெய்வம் என்கிறார்கள். ஆசிரியர்களாலேயே பள்ளிச்சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. நீதிமன்றம் எந்த வழக்கிலாவது தலையிட்டதா?. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே நடக்கின்றன. அடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசு மற்றும் சீருடை அரசு பணியாளர்கள்தான் மிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது.

swathi-murder-rsyf-poster
ஆள, அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு – பு.மா.இ.மு

சேலம் வினுப்பிரியா தற்கொலைக்கு ஒருவாரம் முன்பாக போலீசிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் தன் கடமையை தட்டி கழித்தார்கள். இது குறித்து நீதிமன்றமோ அரசோ ஏதும் நடவடிக்கை எடுக்க வில்லை. தலைமைக்காவலர் மட்டும் லஞ்சம் பெற்றதற்காக சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். வினுப்பிரியாவின் பெற்றோர் நடத்திய போராட்டம்தான் அதை சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, என்பதுதான் பொதுக்கருத்தாக நிலவுகிறது. ஆனால் மேற்கண்ட உண்மைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கவ்வி கொண்டிருக்கும் தீராத நோயின் அறிகுறிகள் அல்லவா. இவை நாட்டில் நிலவும் சமூகம் பாண்பாட்டு நெருக்கடிகளைதான் சுட்டிகாட்டுகின்றன. அதற்கு முன் வைக்கும் தீர்வுகளும், போலீசு, நீதிமன்றம் உட்பட அரசு கட்டமைப்பின் கடும் நெருக்கடிகளைத்தான் காட்டுகின்றன.

swathi-murder-wlf-demo-poster
ஆள, அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு – பெ.வி.மு ஆர்ப்பாட்ட போஸ்டர்

நிலவும் சமூகத்தின்மீது திணிக்கப்படும் சீர்திருத்தங்கள் இந்த நெருக்கடிகளை தீர்க்கவில்லை. மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் முதன்மையாக பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. பாதுகாப்பற்ற இந்த சமூகத்தில் 24 மணி நேர கேளிக்கை விடுதிகள், சினிமா தியேட்டர், பெரிய வணிக வளாகங்கள் போன்றவை புகுத்தப்பட்டு மேலும் சீரழிவுகளுக்குதான் தள்ளுகிறது இந்த அரசு.

பெண்களின் வாழ்வுரிமைகளை உத்திரவாதப்படத்த வேண்டிய அரசுக் கட்டமைப்பும், ஒட்டுமொத்த சமூக பண்பாட்டு கட்டமைப்பும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக இருக்கின்றன. சாதி மத அமைப்புகள் எல்லாம் காலம் காலமாக பெண்களின் உரிமைகளை மறுப்பதாகவும், ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. ஆனால் சிறுவயதிலிருந்தே ஆண்களுக்கு தனிமனித ஒழுக்க நீதி போதனைகள் மட்டும் தீர்வாக சொல்லப்படுகிறது. ஆனால் இவையனைத்தும் தோற்றுப் போய்விட்டன. பெண்களை சகமனிதர்களாக ஏற்கும் ஜனநாயகப்பண்பு சமூகம் முழுவதும் நிலைநாட்டப்பட வேண்டும். அனைத்து உரிமைகளும் சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்கு இருக்கும் போது மட்டுமே, இந்த சமூகம் விடுதலை பெற்றதாக சுதந்திரமானதாக இருக்க முடியும். ஒரு ஆண் தனது பாலியல் இச்சைகளுக்காக பெண்களை துன்புறுத்தி வன்கொடுமைகள் புரியும் வக்கிரத்திற்காக ஒட்டு மொத்த சமூகமும் வெட்கப்பட வேண்டும்.

பெண்களின் ஜனநாயக வாழ்வுரிமைகளை மதிக்கும் உணர்வுகள் ஒவ்வொரு மனிதனின் ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் மறுவார்ப்பு செய்யாமல் தனிமனித ஒழுக்கம் மூலம் சாதிக்க முடியாது. சமூகத்தையே புரட்டிப்போடும் ஜனநாயக புரட்சியின் மூலமாகத்தான் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும். உடனடியாகவும் சாத்தியமானதாகவும் தோன்றும் தீர்வுகள் அனைத்தும் தோல்வியடைந்தே வந்திருக்கின்றன.

வழக்குரைஞர் சி. ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தோழர். காளியப்பன்
பொருளாளர்

தோழர்.வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையிலிருந்து…….

7. கட்டுக்கடங்காத சமூக சீரழிவுகள், பண்பாட்டு வக்கிரங்கள், கிரிமினல் குற்றங்கள், பெண் சமூகத்திற்கு எதிரான கொடூரங்கள்

2012 டிசம்பர் 16 அன்று, புதுடில்லியில் கும்பல் பாலியல் வன்கொடுமைகுப் பலியான “நிர்பயா”வின் மரணத்தைத் தொடர்ந்து பொங்கியெழுந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவர் சொன்னார் “அரசு மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் தோற்றுப்போனதையே குறிக்கின்றது.” இது இந்நாட்டின் அரசியல், சமூக நெருக்கடியை மிகச்சரியாகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்துகின்றது. அப்போது, நடந்த சம்பவங்களும் வெளியான தகவல்களும் இதை அப்பட்டமாக தெளிவுபடுத்தின. 3 வயது சிறுமிகள் முதற்கொண்டு 60, 70 வயது பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியாகின்றனர். அக்கொடுமைகளுக்கு இலக்கானவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தெரிந்தவர்களால், நெருக்கமான குடும்ப உறவுக்காரர்களால் இழைக்கப்படுகின்றன. இது குடும்ப, சமூக உறவுகளின் சீரழிவையும் நெருக்கடிகளையுமே காட்டுகின்றன.

சமூக அமைப்புக்களும், விழுமியங்களும் பெண்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனாலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பலவும் வெளி உலகுக்கு தெரிய வருவதோ, பதிவு செய்வதோ இல்லை. அவற்றுக்கு பலியானவர்கள் வெளியே சொல்லவே முடியாதவாறு பலவழிகளிலும் மிரட்டி வைக்கப்பட்டுள்ளனர். போலீசு நிலையங்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுக்கின்றன. பல சமயங்களில் பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவர்கள் மீதே பழி போடப்படுகின்றது. குற்றவாளிகள் அரசியல், அதிகாரம்,சாதி, மதம் பிற சமூகச் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். போலீசுக்காரன்கள் தம் ஆளுகையின் கீழுள்ள பகுதியில் குற்றங்கள் நடப்பதே இல்லை என்றோ அல்லது குற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவோ காட்டுவதற்காக வழக்கு பதிவு செய்யவே மறுக்கின்றனர். பதிவு செய்தாலும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீது சாதிய, ஆணாதிக்க மனப்பான்மையோடும் அக்கறையில்லாமலும், வேண்டாத வீண் வேலைச் சுமையாகவும் கருதி வழக்குகளை நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

நாட்டின் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பொதுச்சட்ட நெறிமுறைகளும் தீர்ப்புகளும் கிடையாது. ஒவ்வொரு நீதிபதியும் தான்தோன்றித்தனமாகவும் வெவ்வேறு அணுகுமுறையைக் கொண்டும் தீர்ப்பு வழங்குகின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதற்குப் பலியானவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் அவமதிப்பதாகவுமே சட்ட, நீதிமுறைமைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி போலீசு நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் பலியான பெண்கள் மேலும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். சட்டப்படி பதினெட்டு வயதுக்கு கீழான பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வன்புணர்ச்சியினதாகக் கொள்ள முடியாது. பதினெட்டு வயதுக்கு கீழான ஆண்கள் புரியும் பாலியல் குற்றங்கள் சிறார்களின் தவறாகவும் வன்புணர்ச்சி அல்லாதவையாகவும் சட்டப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்; எனவே, சட்டப்படியே இவ்வழக்குகளில் கடும்தண்டனை வழங்க முடியாது. ஆனால் இயல்பாகவே, பாலியல் வன்கொடுமைகளை போலீசுக்காரன்களும், நீதிபதிகளும் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பெண்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே இவ்வாறானதுதான் என்று சமூகமும் கருதுகிறது.. பாலியல் வன்கொடுமைகளைப்பற்றி, அவை அதிகரித்து வருவதைப்பற்றி சாதி, மத, அரசியல், சமூகப் பிரமுகர்கள் மட்டுமல்ல ஒரு பிரிவுப் பெண்களும் கூறும் கருத்துக்களும் இதையே காட்டுகின்றன.

“நிர்பயா” விவகாரத்தில், புது தில்லியில் பலநாட்கள் நடந்த மக்கள் எழுச்சிகளுக்குப் பிறகு, அவற்றை சமாளிப்பதற்காக நீதிபதி வர்மா தலைமையிலான கமிசனை மத்திய அரசு அமைத்தது. மிகப்பெரும்பாலான மாநில அரசுகள் வர்மா கமிசனுக்குத் தம் கருத்துக்களை, பரிந்துரைகளை, அறிக்கைகளை அனுப்பவே இல்லை. அதற்காக வர்மா கமிசன் தெரிவித்த கண்டனங்களை அவை மதிக்கவும் இல்லை. இதற்காகவும் நீதி கேட்டும் போராடிய இளைஞர்கள் – மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி விரட்டியதற்காகவும் புதுதில்லி தலைமைப் போலீசு இயக்குநர்களின் நியமனங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வர்மா கமிசன் பரிந்துரைத்தது. இதையும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவேயில்லை.

பெண்களுக்கு எதிராகப் பெரும்பாலான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசும், துணை ராணுவமும் மற்ரும் ராணுவத்தினரும்தாம்; அவர்களைப் பாதுகாக்கும் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் அதையொத்த அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்க வேண்டும்; மேலும், ஒரு இராணுவச் சிப்பாய் பாலியல் வல்லுறவுக் குற்றமிழைத்தால் அவரது மேலதிகாரியையும் சேர்த்து இராணுவ ஆணைமீறல் குற்றத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதலான பல பரிந்துரைகளை அக்கமிசன் வைத்தது. இதுவும் இதைப் போன்ற பலபாரிய பரிந்துரைகளில் 90 விழுக்காடு கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, கண் துடைப்புக்குச் சில சில்லரைத் திருத்தங்கள் செய்யும், போலீசுக்கு மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் சட்டம் ஒன்று அனைத்துக் கட்சிகள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. புதுதில்லியில் கும்பல் பாலியல் வன்முறைக்கு “நிர்பயா” பலியானவுடன் கொதித்துப் போனவர்களைப் போல குற்றவாளிகளுக்கு மரணதண்டனை, ஆண்மை நீக்க சிகிச்சை என்றெல்லாம் குத்தாட்டம் போட்ட நாடாளுமன்ற அரசியல்வாதிகளும், ஊடக ஊதுகுழல்களும் “ஒப்புதலுடன் உடலுறவு,” பாலியல்வன்கொடுமைகள் புரியும் சிறார் குற்றவாளிகளுக்கு வயது வரம்பைக் குறைப்பது போன்ற விளிம்பு விசயங்களில் கவனத்தைத் திருப்பி விட்டனர்.

அதே சமயம், அரசியல், சமூகத் தலைவர்கள் வெளியில் என்ன நீதி போதனை சொல்கிறார்களோ அதற்கெதிரான போக்குகளே நாட்டில் அரங்கேறி வருகின்றன. உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கை மிக மிக அதிகரித்த வகையில் கோரும் உலகமயமாக்கமும் மறுகாலனியாக்கமும் திணிக்கப்படுகின்றன. அவை பெண்கள் உடலை சந்தைப்படுத்தும் பண்பாட்டுச் சீரழிவைக் கொண்டு வருகின்றன. ஆண்களிடையே பாலியல் வெறியைப் பரப்பும் தொழில்களும் ( விபச்சாரத்தை சட்டப் பூர்வமாக்குதல், பாலியல் சுற்றுலா முதல் சினிமா, வானொளி, இணையம் ஆகிய ஊடகங்கள் வரை) பெருகி வருகின்றன. ஆணாதிக்கப் பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட அரைநிலவுடமை சமூக அமைப்பில் மேலை பண்பாட்டைப் புகுத்துவது காரணமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பெருகுகின்றன.

ஆனால் போலீசு ரோந்து சுற்றுவது ( போலீசு கண்காணிப்பும் பெண்களுக்கு பேராபத்து விளைவிப்பதாக உள்ளது !) பேருந்து மற்றும் பொது இடங்களில் காமிராக்களை பொருத்துவது, உயர் போலீசு அதிகாரிகளின் மேற்பார்வை, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகளை விரைந்து நடத்தித் தண்டனையை கடுமையாக்குவது போன்ற யோசனைகள் அள்ளி வீசப்படுகின்றன. கூடவே, பெண்கள் பாரதப் பண்பாட்டை மதிக்கவும் கடைபிடிக்கவும் வேண்டும். ஆபாச உடையணியக்கூடாது, இரவு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு வெளியில் “சுற்றக் கூடாது. ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது இயல்பானது” என்பது போன்ற பெண்ணடிமைத்தனத்தைப் பேணும் “உபதேசங்களும்” வழங்கப்படுகின்றன. இதனாலெல்லாம் பெண்களுக்கெதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறையவில்லை. மாறாக பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன்.

பாலியல் வன்முறையோடு அதற்குப் பலியாகும் பெண்கள் படுகொலை செய்யப்படுவதும், சாதிப் பஞ்சாயத்துக்களில் கும்பல் பாலியல் வன்முறைக்குத் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதும் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் இம்மாதிரியான இழிசெயல்களுக்குப் பலியாவதும் என்ற காட்டுமிராண்டித்தனங்கள் மிகையாக நடக்கின்றன. அதிலும் முக்கியமாக நாட்டின் உச்சநீதிமன்றமே இம்மாதிரியான கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றது. இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் பயணம் செய்வதற்கும் தகுதியுள்ள நாடு அல்லவென்ற கருத்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்நாட்டின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சிக்கலுக்குத் தீர்வெதுவும் காணமுடியத இந்தவொரு விவகாரமே போதும் ஆளும் வர்க்கங்களும் அதன் அரசும் ஆளத்தகுதியற்றுப் போயுள்ளதைத் தெளிவாகவும் காட்டுவதற்கு !

(பக்கங்கள் 34 -38 )
கொள்கை அறிக்கை, மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தகவல்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

டாஸ்மாக் – சமஸ்கிருதம் – நீதித்துறை பாசிசம் எதிர்ப்பு போராட்டங்கள் !

0

களச் செய்திகள் – 04/07/2016

1. சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம் – திருநெல்வேலி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

rsyf-tnl-sanskrit-protest-1“மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் 28-06-2016 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மாலை 4.00 மணிக்கு பு.மா.இ.மு. தோழர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேராசிரியர் அமலநாதன் தனது உரையில் “தாய்மொழியை காப்பதிலும் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதிலும் தொடர்ந்து பணியாற்றிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு நன்றி. இந்தியா ஒரு பல மொழி பேசும் மக்கள் வாழும் இடம். இந்த சமஸ்கிருதம் வருவதற்கு முன்பாக இங்கு பல தேசிய இன மக்கள் வாழ்ந்த இடம் இந்தியா. திராவிட நாகரிகம், திராவிட மொழிகளெல்லாம் அதற்கு முன்பாக இங்கு இருந்தது. கி.மு. 18-17-ம் நூற்றாண்டின் போதுதான் இந்த சமஸ்கிருதம் ஆரியர்களால் கொண்டுவரப்படுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழ் மக்களின் பல்வேறு வாழ்நிலைகளை அவர்களின் வாழ்க்கை பிரச்சினைகளை பேசுகிறது. மக்களால் இன்றும் அன்றாட வாழ்வில் பேசப்பட்டு வருகிறது.

rsyf-tnl-sanskrit-protest-2ஆனால் சமஸ்கிருத மொழியானது எந்த ஒரு உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை. பெரும்பான்மை உழைக்கும் மக்களால் பேசப்படுவதுமில்லை. அது கோவில்களில் ஒரு குறிப்பிட்ட பார்பனர்களால் கடவுளிடம் வழிபாடு நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மக்களுக்குமான மொழியாக சமஸ்கிருதம் இருந்ததில்லை. இப்போது ஏன் அதை ஒரு கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும். தேவையில்லை. பொதுமக்களே எல்லா பிரச்சனைகளையும் நாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எங்கோ இருந்து ஒரு நாயகன் ஹீரோ வருவான் என்று எதிர்பார்க்கிறோம். நாம் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொணடு இருந்தால் பிரச்சனை தீராது. அனைவரும் இத்தகைய போராட்டங்களில் பங்கேற்று மத்திய அரசின் இந்த சமஸ்கிருத திணிப்பை முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

rsyf-tnl-sanskrit-protest-3சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர் லயனல் அந்தோணிராஜ்

rsyf-tnl-sanskrit-protest-4ஒரு பண்டம் இருக்கு. சாப்பிட நல்ல ருசியா இருக்குது. அதைவிட்டுட்டு ருசி குறைஞ்ச இன்னொரு கேடான பண்டத்தை சாப்பிட சொன்னால் எப்படி? இனிய தமிழ் மொழி இருக்க கேடான சமஸ்கிருத மொழி எதற்கு? உலகத்திலேயே பழமையான மொழிகளான தமிழ் மற்றும் லத்தீன் மொழிகளில் லத்தீன் மொழி இன்றைக்கு அழிந்து போய்விட்டது. தமிழ் மொழி அன்றிலிருந்து இன்று வரை இளமையாக உலகின் அநேக மக்களால் பேசப்பட்டு வருகிறது. சமஸ்கிருத மொழியும் ஒரு செத்த மொழிதான். அது திரும்ப வளராது. வளருவதற்கு அதனிடம் ஒன்றுமில்லை. அதனால்தான் அதை குறுக்கு வழியில் புகுத்துகிறார்கள்.

ஆங்கில மொழி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களுக்கு தொடர்பு மொழியாக வந்தது. அதை முதலில் கற்றவர்கள் பார்ப்பனர்கள்தான். ஆங்கிலேயரிடம் தொடர்பு ஏற்படுத்தி ஆதாயமடைவதற்காக ஆங்கில மொழியை பார்ப்பனர்கள் தான் முதலில் கற்று அவர்களது மொழிக்கு துரோகமிழைத்தார்கள்.

இந்தி மொழி நுழைப்பை 1965-ல் முறியடித்தவர்கள் நாம். நம்மிடம் நேரடியாக வந்தால் நாம் எதிர்ப்போம் என்று இப்போது புறவாசல் வழியாக வருகிறார்கள். இதற்கு மானங்கெட்ட ஊடகங்கள் முழுவதும் துணைபோகின்றன. மத்திய அரசு விளம்பரங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில் தான் ஒளிபரப்ப வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் மானங்கெட்ட ஊடகங்கள் இந்தி மொழியை அப்படியே வெளியிடுகின்றன. புறவாசல் வழியாக திணிக்கிறார்கள்.

சமஸ்கிருதமொழி பார்பனர்களின் சாதி அமைப்பை பாதுகாக்ககூடியது. நாட்டில் படித்தவர்களுக்கு வேலையில்லை. நித்தமும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடக்கிறது. நேற்றுக்கூட சென்னையில் பட்டப்பகலில் ஒரு பெண் படுகொலை செய்யப்பபட்டுள்ளார். இதைப்பற்றியெல்லாம் மோடிக்கோ அம்மாவுக்கோ கவலையில்லை. ராமயாணத்தை பற்றி பேசியதற்காக சிறையில் போடுகிறார்கள். புத்த மதத்தை இந்து மதம் என்கிறார்கள். அம்பேத்கரை இந்து மதம் என்கிறார்கள். காந்தி இந்து மதத்தை ஆதரித்தார் என்கிறார்கள். ஒரு சாதிக்கெதிராக இனனொரு சாதியை மோதவிடுவது.

ஆர். எஸ். எஸ். பி.ஜெ.பி வேலையே பொய் பித்தலாட்டம் செய்வதுதான். நான் சவால் விடுகிறேன் அம்பேத்கரின் நூல் ஒன்றையாவது இவர்கள் படித்தது உண்டா? இந்து மதத்தை அம்பேத்கர், பெரியார் அளவுக்கு தோலுரித்தவர்கள் உண்டா? ராமயாணத்தை யோக்கியதையை அம்பேத்கர் தெளிவாகவே விளக்கிவிட்டர். தயவுசெய்து இன்று பிற்படுத்தபட்டவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டவர்கள, தலித்துகள் அதை முதலில் படிக்கவேண்டும். அப்போது தான் இவர்களின் அண்டப்புளுகு தெரியும்.

rsyf-tnl-sanskrit-protest-5அமைச்சர் தருண்விஜய்க்கு தமிழ் மீதும் திருக்குறள் மீதும் காதலாம். திருவள்ளுவர் சிலையை கொண்டுபோய் கங்கையில் வைக்கபோகிறாராம். திருவள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்துவைத்தார். அவரோடு நமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவருக்கு அதுக்கு ஒரு தகுதி இருக்கு. கங்கையில திருவள்ளுவர் சிலையை வைத்து என்ன செய்யப்போகிறாய். எவனுக்காவது திருக்குறளை பற்றி அங்கே தெரியுமா? தெரியாது. திருவள்ளுவரை ஏதோ ஒரு இந்து முனிவர் என்று கருதுவான். இவர்களோட நோக்கமும் அதுதான். நான் கேட்கிறேன். தருன் விஜய்க்கு ஒரு திருக்குறளாவது தெரியுமா? அதன் பொருள் தெரியுமா? தெரியும்ன்னு சொன்னா நான் பேசுறத நிறுத்திக்கொள்கிறேன். பத்திரிகை பேட்டியிலே அவரே சொல்லிட்டார். தமிழ் மொழிப்பற்றினால் உங்களிடம் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்று கேட்டதற்கு என் வீட்டில் இப்போது இட்லி வடை போடுகிறார்கள். என் மகன் ரஜினி படம் பார்க்கிறான் என்று பதிலளிக்கிறார். இதெல்லாம் தமிழ் பற்றாம் கேவலம்.

இப்ப சில தமிழறிஞர்கள் நீதிஅரசர்கள் எல்லாம் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைக்காக போராடுகிறார்களாம். ஏன் அங்கே போகிறீர்கள். இங்கே நம்ம ஹைகோர்ட்ல தமிழுக்காக எவ்வளவோ நாள் போராடுகிறோம். அங்கே முதலில் தமிழைக் கொண்டு வாருங்கள். இங்கேயே முடியல ஹார்வர்டு ஏன் போறீங்க. ஜெயலலிதா எப்போதும் தமிழுக்கும் சமச்சீர்கல்விக்கும் எப்பவும் எதிரிதான். ஆதலால் நாம் இந்த நரித்தனமான நஞ்சகமான சமஸ்கிருத திணிப்பை ஆரம்பத்திலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டும். அதற்கு அனைவரும் இணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்” என பேசினார்.

வழக்கறிஞர் அரிராகவன் தனது உரையில் “இங்கே சில பேர் ‘ஹிந்தி படிச்சா என்ன தப்பு. ஹிந்தி படிச்சா வேலை. கருணாநிதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பன்னிட்டு அவரோட குடும்பத்துல உள்ளவங்கள எல்லாம் ஹிந்தி படிக்க வைச்சாரு’ அப்படின்னு சொல்றாங்க. எந்த மொழியையும் எவர் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விருப்பமில்லாமல் ஒரு மொழியை திணிப்பதுதான் தவறு என்கிறோம். மற்ற மொழிகளை அழிக்கும் நயவஞ்சகத்தோடு கொண்டுவரப்படுவதே சமஸ்கிருத மொழி திணிப்பு. தமிழ் முருக கடவுளை பார்ப்பன இந்து கடவுளாக மாற்றிவிட்டார்கள். இந்து மத புராணங்களே ஆபாச குப்பைகள்தான். சமஸ்கிருதமும் அந்த குப்பையில் ஒன்றுதான். அதில் ஒன்றுமில்லை. நாம் சமஸ்கிருத திணிப்பை ஆரம்பத்திலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டும்” என்று பேசினார்.

இறுதியில் தோழர் சிவா நன்றி கூறினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருநெல்வேலி.

2. தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை எதிர்த்து மக்கள் அதிகாரம்

மக்கள் நடத்திய மனு கொடுக்கும் போராட்டம்!

tvr-shutdown-tasmac-6திருவாரூருக்கு அருகில் உள்ள தேவர்கண்டநல்லூர் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் மக்களின் குடியை கெடுத்துக்கொண்டு இருக்கிறது. அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் உச்சிமேடு, சிங்களாஞ்சேரி, நாங்கரை, வடக்குவெளி, பெருந்தரக்குடி, குளிக்கரை, சாருவன், வெள்ளக்குடி, தென்புலியூர், மேப்பலம், கீழப்புலியூர், கீரன்கோட்டகம், கடமங்குடி, தென்பாதி, ஒட்டக்குடி ஆகிய அனைத்து ஊர் மக்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் அன்றாடம் உழைக்கின்ற கூலி விவசாயிகள், தொழிலாளிகளின் வருமானத்தை அபகரித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் சண்டை சச்சரவுக்கு காரணமாக இருக்கின்றது. கடைக்கு அருகில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள், குழந்தைகள் வந்து செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனால் பெண்கள் பல்வேறு பாலியல் சீண்டல்கள், கேலி, கிண்டல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அதனோடு இக்கடை சட்டவிரோதமாக ரேசன் கடை மற்றும் தேசிய நெடுஞ்சாலை, அரசு நடுநிலைப்பள்ளி, நூலகம் ஆகியவற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

tvr-shutdown-tasmac-1டாஸ்மாக்கை எதிர்த்து தமிழ்நாடு முழுக்கப் போராடும் மக்கள் அதிகார அமைப்பின் போராட்டத்தை பார்த்த மக்கள் அப்பகுதியில் செயல்படும் மக்கள் அதிகாரத் தோழர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆகவே மக்களை திரட்டி இந்த டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று திட்டமிட்டு ஏறக்குறைய ஒரு மாதக்காலமாக அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி “நாங்கள் மட்டும் மூட முடியாது நீங்கள் வந்தால் தான் மூட முடியும்” என்பதை வலியுறுத்தி பேசியதில் அந்த மக்களும் நிச்சயமாக வருகிறோம் என்று சொல்லி ஏறக்குறைய 2000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். முதற்கட்டமாக மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுப்பது என தீர்மானித்து 01-07-2016 அன்று மக்கள் அதிகாரம் தோழர் சண்முகசுந்தரம் தலைமையில் 80-க்கும் மேற்பட்டப் பெண்கள், மாற்று கட்சியினர், பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட மக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க சென்றனர்.

tvr-shutdown-tasmac-2முன்னரே இதையறிந்த காவல்துறை 50க்கும் மேற்பட்ட காவலர்களை குவித்து மக்களை ‘வரவேற்க’ தயாராக காத்திருந்தது. மக்களை அலுவலக வளாகத்திற்குள் விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். தோழர்களோடு மக்களும் அதை எதிர்த்து “கலெக்டரிடம் மனுகொடுக்கவரும் எங்களை இப்படித்தான் தடுப்பீர்களா” என வாதிட்டனர். அதன்பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். கலெக்டர் மறுநாள் பத்திரிகை செய்திக்கு போஸ் கொடுக்க வேறு இடத்திற்கு சென்றுவிட்டதால், அங்கிருந்த கலெக்டர் உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

tvr-shutdown-tasmac-3இன்னும் 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்துள்ளனர். மக்களிடம் எப்படியாவது மூடியே தீரவேண்டும் என்கிற உறுதியையும், உற்சாகத்தையும் காண முடிந்தது. மற்ற கட்சியினரும் இதில் கலந்துக்கொண்டு மக்கள் அதிகாரம் நடத்தும் போராட்டங்களில் “எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினர். இவையெல்லாம் மக்கள் முன்னால் இருக்கும் ஒரே மாற்று மக்கள் அதிகாரம் தான் என்பதை உணர்த்தும் விதத்தில் இருந்தது.

tvr-shutdown-tasmac-4இப்போராட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற 7 வயது சிறுவன் கலந்து கொண்டான். இந்த சாராயக்கடையால் அவனது தந்தை குடித்து விட்டு அவனது அம்மாவை நாள்தோறும் அடித்ததில் இறந்துவிட்டார், பிறகு அவரும் குடித்து குடித்து இறந்துவிட்டார். தற்போது அனாதை ஆக்கப்பட்ட அந்த சிறுவனை அவனது சித்தி மகள் 8-ம் வகுப்பு படித்த ராதிகா தனது படிப்பை விட்டுவிட்டு இந்த சிறுவனை பராமரித்து வருகிறார். இந்த அரசை நம்பிய மக்களுக்கு (சக்திவேல் குடும்பத்துக்கு) இந்த அரசு கொடுத்த பரிசு இது! மக்கள் இனியும் இந்த அரசு கட்டமைப்பை நம்ப கூடாது என்பதை தெரிந்தே வைத்துள்ளனர், அவர்களுக்கு தெரியாத விசியம், இந்த கட்டமைப்பை எப்படி தகர்ப்பது என்று! அதை மக்கள் அதிகாரம் அவர்களுக்கு வழிகாட்டும்!

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

3. வழக்கறிஞர்கள் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

சிதம்பரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விருத்தாசலம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

கிடாயின் கருணை மனுவும் – மனுவின் கொலை வெறியும் !

15

மக்களுக்கு ஆன்மீக அறிவு எங்கிருந்து வருகிறது?

துர்கா, ஆடிவெள்ளி, சிவராத்திரி, ராஜகாளி அம்மன், பாளையத்து அம்மன், மாயா என்று திரைப்படங்கள் மூலமாக மக்களை காவிக்கும்பலின் சேட்டைகளுக்கு பழக்கப்படுத்த உதவியவர் இயக்குநர் இராமநாராயணன்.

இராமநாராயணனின் கிராபிக்ஸ் வித்தைகள் மட்டுமன்றி ராமசாமி யானை, நாகேஸ்வரி பாம்பு, ராமு குரங்கு என பலதரப்பட்ட ஜீவ ராசிகள் பிள்ளையார், அனுமனின் அப்ரசண்டிகளாக திலகரின் ராம ராஜ்யத்தை திரையில் வேசம் போட்டு வெளுத்துக் கட்டின!

ramanarayanan
கிராபிக்ஸ் வித்தைகள் இராமநாராயணன்

இது போன்ற குரளி வித்தைகள் தான் சூத்திர பஞ்சம மக்களை ஆட்கொள்ளும் இறுதியான ஆன்மீக எல்லையாக இருக்கிறது. மற்றபடி ஆரியச் சிசு ஆதிசங்கரனின் தன்னையே மறுக்கும் அத்வைதம் என்றோ, உபநிசங்களின் தெய்வாதீனம் என்றோ வேத பாரம்பரிய வியாபாரம் மக்களிடம் போணி ஆகாது என்பதை பார்ப்பனக் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

சான்றாக, ஆறுமுறை தரிசனங்கள், வெண்முரசு, என்று ஜெயமோகன் போன்றவர்கள் அலுப்பில்லாமல் பார்ப்பன இந்துத்துவத்திற்கு வேலை செய்தாலும் ஓய்வு நேரத்தில் ஜாக்கி ஜட்டி குறித்து சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களை வைத்து மக்களை ஆன்மீகமயமாக்குவது ரொம்பவும் சிரமம்!

காவிக்கும்பலுக்கு எஞ்சியிருக்கும் எளிமையான வழி திரைப்படங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் மட்டுமே! எனினும் காட்சி ஊடகங்களில் சற்று பிசகினாலும் காரியம் கெட்டுவிடும். குறிப்பாக ரஜினியின் பாபா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் ஆன்மிக அனுபவமாக தயாரிக்கப்பட்டது. ரஜினி, படம் முழுக்க அபய ஹஸ்த முத்திரையைக் காட்டிக்கொண்டு வருவதைக் காணச் சகியாமல் பல ரஜினி ரசிகர்கள் ‘தற்கொலை’ செய்து கொண்டது தமிழகத்து வரலாறு. இத்துணைக்கும் நடிகை மனீஷா கொய்ராலாவை வைத்து “பாபா ஒரு கிஸ்ஸு தா! அது நூறு கிஸ்ஸு ஆகுதான்னு பாப்போம்” என்று ஆன்மீக சரக்குகளுக்கு இடையில் பலான சரக்குகளை வைத்தும் ஆன்மீகப் பித்து மக்களை ஆட்கொணரவில்லை. மதுரை ஆதீனமே அ.தி.மு.க அடிமைகள் போட்ட குத்துப் பாட்டிற்கு மட்டும் தான் ஆடினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

திரைப்படங்களின் மூலம் பார்ப்பன பாசிசம்

rajini-baba
“பாபா ஒரு கிஸ்ஸு தா! அது நூறு கிஸ்ஸு ஆகுதான்னு பாப்போம்”

பாளையத்தம்மா நீ பாச விளக்கு; உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு என்று இராமநாராயணனின் ஆன்மீக போதையை எடுத்துவிட்டால் பக்தகோடிகளுக்கு ஏற்படும் பல்ஸைப் பார்த்து காவிக் கும்பல் எதைவிடவும் பரவசமடைகிறது!

இன்றைய தமிழகத்து டிரெண்டில் இத்தகைய பாடல்களை வைத்துக்கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பல்

  • திருவிழாக்களை கைப்பற்றுவது,
  • தெருவுக்கு தெரு குத்து விளக்கு பூஜை நடத்துவது,
  • குஷ்பூ நடித்த ‘தாலிவரம் கேட்டு வந்தேன் தாயம்மா; கண் திறந்து பாரம்மா’ எனும் பாடலை வைத்துக்கொண்டு சுமங்கலி பூஜை நடத்துவது

என்று பார்ப்பனியத்திற்கு திரைவடிவத்தையே பிரதானமாக பயன்படுத்துகிறது.

பங்குனி மாதத்தில் மாரியம்மனின் கோயிலில் எல். ஆர். ஈஸ்வரியின் “செல்லாத்தா எங்கள் மாரியத்தா” எனும் ஆல்பத்தை ஓடவிட்ட காலம்போய் புதுப்புது வடிவங்களில் பார்ப்பன பாசிசம் தமிழகத்தில் புகுத்தப்படுகின்றது.

விஷ்வ ஹிந்து பரிஷத் என்று தமிழ்நாட்டில் பெயர் வைத்தால் மார்வாடி பனியா கும்பல் என்று மக்கள் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை அண்டவிட மறுப்பதால், இந்து முன்னணி என்று தமிழில் பெயர்மாற்றிக் கொண்டு பந்தி பாக்கியில்லாமல் ஆஜராகிவிடுகின்றது காவிக் கூட்டம்.

தமிழ்நாட்டிற்கு சாய்பாபா எப்படி வந்தார்?

sai-baba
சாய்பாபாவை முதலில் உள்ளிழுத்துக்கொண்டது மாம்பலத்து அக்ஹரஹாரம் தான்

குறிப்பாக இராம நாராயணனின் மாயா திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நக்மா, நெப்போலியன், எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடி நடித்து சாய்பாபாவின் அற்புதங்களை பிரச்சாரம் செய்யும் படமாக தமிழ்நாட்டில் வெளிவந்தது. ‘பாபா ஓர் கருணாலாயம்; உன் பாதங்கள் கமலாலயம்’ என்று பாடல் பட்டி தொட்டி வரை கொண்டு செல்லப்பட்டது. அப்படியிருந்தும் சாய்பாபா செல்ப் எடுக்காமல் தான் இருந்தார். ஆனால் சாய்பாபாவை முதலில் உள்ளிழுத்துக்கொண்டது மாம்பலத்து அக்ஹரஹாரம் தான்.

சென்னையிலிருந்து சீரடி சாய்பாபாவிற்கு ரெயில் விட்டபோது மாம்பலத்து மாமிகளும் அம்பிகளும் வரிசைகட்டி புளியோதரை கட்டிக்கொண்டு முன்வரிசையில் சென்றனர். இதுதவிர கர்நாடகா ஆந்திராவிற்கு டேப் ரிக்கார்டர், பர்னிச்சர் விற்பனை எனும் பெயரில் கந்துவட்டிக்கும் விடும் தமிழகத்து ஆதிக்க சாதிகள் கணிசமானோர் சாய்பாபா அற்புதத்தில் திளைத்தனர். செவ்வாய், வெள்ளி போதாதென்று வியாழக்கிழமையை பாபாவிற்கு ஒதுக்கி கருவாடு கவுச்சியை ஒதுக்கி தள்ளினர்.

இன்றைக்கு தமிழகத்தில் பாபா பிசினஸ், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா தொழிலைத் தாண்டி சக்கைபோடு போடுகிறது. பாபாவைக் கும்பிடுவதில் நடுத்தரவர்க்கம் என்றில்லாமல் உழைக்கும் மக்கள் கணிசமாக பலியாக்கப்பட்டிருக்கின்றனர். பார்ப்பனக் கூட்டம் நடராசனை 3000 தீட்சதர்களில் ஒருவன் என்று கதைத்தது போல் சாய்பாபா எனும் 420 ஆசாமிக்கு பூணுல் போட்டு கும்பாபிசேகம் நடத்துவது, தீர்த்த கலசங்களுக்கு யாகம் நடத்துவது, தேரோட்டம் நடத்துவது என அடுத்த கலவரத்திற்கு நாள் தேடிக்கொண்டிருக்கிறது.

உழைக்கும் மக்களின் செல்போனிலோ எஸ்.பி பாலசுப்ரமண்யத்தின் பாபா ஓர் கருணாலயம் திரைப்படப் பாடல் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற திரைப்பாடல்கள் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் வாரத்தின் வியாழக்கிழைமையை கைப்பற்றி இருக்க முடியாது!

திரைப்படங்களின் தற்போதைய டிரெண்டு: ஒரு கிடாயின் கருணை மனு (2016) சொல்லப்போவது என்ன?

kidayin-karunai-manu
ஒரு கிடாயின் கருணை மனு (2016) சொல்லப்போவது என்ன?

தற்பொழுது தமிழகத்தில் நிலவிவரும் நூதன டிரெண்டு என்ன?உழைக்கும் மக்களின் அசைவ உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கும் சிறுதெய்வ வழிபாட்டை சமஸ்கிருத பார்ப்பனமயமாக்குவதற்கும் யதார்த்த பாணியில் பல திரைப்படங்கள் எடுப்பதுதான்.

அது என்ன யதார்த்த பாணி?இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் சுரேஸ் சங்கய்யா ‘ஒரு கிடாயின் கருணை மனு’ எனும் படத்தை ஈராஸ் கார்ப்பரேட் தயாரிப்பு கம்பெனியின் முதலீட்டில் இயக்கியிருக்கிறார். படம் ரீலிசாகவில்லை. புரோமோசனுக்காக தமிழ் தி-இந்து பத்திரிக்கை சுரேஸ் சங்கையாவின் நேர்காணலை வெளியிட்டிருக்கிறது.

இதில் பேட்டியாளர், ‘ஆட்டுக்கிடாயை மையமாகக் கொண்ட கதை வித்தியாசமாக இருக்கிறதே’ என்று முதல் கேள்வியைக் கேட்கும் பொழுது, இயக்குநர்  இப்படத்தின் கதை, தனது இலட்சியம் என்கிறார்.

“நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்து வாழ்வில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயயான பிணைப்பு உணர்வுபூர்வமானது. தங்கள் குழந்தைகளுக்கு எப்படிப் பெயர் வைத்து வளர்த்து அவர்களைப் பாராட்டிச் சீராட்டுகிறார்களோ அப்படித்தான் தங்கள் வீட்டு விலங்குகள் மீதும் அக்கறை காட்டுவார்கள்.

கால்நடைகளும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும். கண்கள் வழியாகவும் உடல்மொழி அசைவுகள் வழியாகவும் தங்கள் பசியையும் வலியையும் கூறும். இந்தப் பிணைப்பு வாழ்க்கை, வழிபாடு என்று வருகிறேபாது முரணாக மாறிவிடுகிறது. கோயில் திருவிழாக்களில் ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுப்பதும் வழக்கமானதாகவே இருக்கிறது.

உயிருக்கு உயிராக வளர்த்து இப்படி பலி கொடுப்பது கிராம மக்களின் சம்பிரதாயங்களில் முக்கியமானதாக இருப்பதைக் கண்டு சிறு வயது முதலே மனதுக்குள் புழுங்கி வந்தவன் நான். பலி என்பது வழிபாடாகவும் சடங்காகவும் இருப்பதை இனிவரும் தலைமுறைகள் களைந்தெறிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இக்கதையை எழுதினேன். என்னைப்போன்ற ஒரு புதிய இயக்குநருக்கு ஈராஸ் போன்ற பெரிய தயாரிப்பாளர் கிடைப்பது அரிது.” (மனிதர்களைப் பேச வைக்கும் ஆடு: சுரேஷ் சங்கய்யா நேர்காணல்– தி இந்து தமிழ்-24-06-2016)

இயக்குநரின் மனப்புழுக்கத்தை ஒன்லைனில் சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் கிடாவெட்டுத் தடைச்சட்டம் தமிழகத்து குல தெய்வ கோயில்களில் மீண்டும் வரவேண்டும். இதற்கு பார்ப்பன அடிமையாக போயஸ் தோட்டத்திற்கு போன் போட்டுச் சொன்னாலே போதுமானது என்ற எளிமையை, கலைநயத்தால் வெல்ல வேண்டும் என்று இக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர். இதில் இயக்குநரின் யதார்த்த பாணி பிரச்சாரம்தான் கவனிக்கதக்கது. உயிருக்கு உயிராக வளர்த்த கிடாயை, வழிபாடு என்பதன் பெயரில் எப்படி பலிகொடுக்கலாம் என்கிறார்.

குல தெய்வ வழிபாடு, அசைவத்திற்கு எதிரான பல்வேறு பிரச்சார உத்திகள்

இயக்குநர் சுரேஷ் சங்கய்யா மட்டுமல்ல. இதுவரை, சிறு தெய்வ வழிபாட்டில் ஆடு கோழி பலியிட்டு அசைவ உணவு உண்ணும் பழக்கத்தை பல்வேறு நூதனமான வழிகளில் கரித்துக் கொட்டி தனது மேலாண்மையை நிறுவத் துடித்திருக்கிறது பார்ப்பனக் கும்பல். அவற்றின் உத்திகள் இவ்வாறு இருந்தன.

1. அசைவ உணவு காமவெறியைக் கிளப்பும். அதை உண்பவர்கள் அரக்க குணம் கொண்ட இழிவானவர்கள் என்று திணமணி வைத்தி அடித்து சத்தியம் செய்து தலையங்கம் எழுதுவார். காஞ்சி சங்கராச்சாரி, தேவநாதன், நித்யானந்தாவின் சைவ லீலைகள் அதிகரித்துக் கொண்டு போவது ஒரு பக்கம். இதை மறைத்து கருவாடு நாறுகிறது என்று மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு புகார் படிப்பது இன்னொரு பக்கம் என்று இந்தப் பிரச்சாரம் போய்க்கொண்டிருக்கிறது.

2. வள்ளலாரைப்போன்று ஜீவகாருண்யம் பேசுவது இரண்டாவது உத்தி. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் வள்ளலார் அன்பை வெஜிடபிள்ஸுகளுக்கும் சேர்த்து போதிக்கிறார். வள்ளலாரைப் போன்று வாடிய பயிரை கண்டபோதல்லாம் வாடினேன் என்று மேற்கு வங்கப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல எந்த சாம்பார் வடையும் சொல்வதில்லை. தங்கள் மேலாண்மையை நிரூபிக்க மீனை, தண்ணீர் பூக்கள், கடல் பூக்கள் என்று சொல்கிறார்கள். பூக்களை சூத்திரன் நுகர்ந்தாலே தீட்டு என்று பதைக்கிற இந்து பார்ப்பனியம் பார்ப்பனர்களை மட்டும் மீன் மாமிசத்தை பூக்கள் என்று புசிப்பதற்கு வழிவகை செய்கிறது. மாமிசங்களுக்காக விலங்குகளைக் கொல்கிறார்களே, அய்யோ பாவம் என்று கதறுபவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு மட்டும் மாமிசம் புசிக்க விலங்குகளைக் கொல்லும் உரிமையை எக்ஸ்குளூசிவாக கொடுத்திருக்கிறது என்பதை பார்க்க மறுக்கிறார்கள்.

இதைத்தாண்டித்தான் இயக்குநர் சுரேஸ் சங்கைய்யாவின் மூன்றாவது பாணியிலான பிரச்சாரம் வருகிறது. மனிதனுக்கும்-விலங்குகளுக்கும் உள்ள பிணைப்பு, பந்தம், பாசம் என்று இன்னும் வலுவான கண்ணியைப் பின்னியிருக்கிறார். அவ்வளவு லேசாக இதை அறுக்க முடியாது என்பதால் “ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படம் முழு நீள நகைச்சுவை படமாக வெளிவர இருக்கிறது. கண்டிப்பாக பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கப் போவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்.

2014-ல் சைவம் திரைப்படம் எதை பிரச்சாரம் செய்தது?

saivamயக்குநர் சுரேஸ் சங்கைய்யாவிற்கு இருந்த அதே இலட்சியத்தைத்தான் 2014-ல் வெளிவந்த சைவம் படமும் பேசியது. இயக்குநர் ஏ.எல்.விஜய் குழந்தை சாராவையும் பலியிடப்போகும் சேவலையும் வைத்து சிறு தெய்வ வழிபாட்டில் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலையைச் செய்தார். இந்தப் படத்தில் குழந்தை ஒரு வெடிகுண்டு போல பயன்படுத்தப்பட்டிருக்கும்.

குழந்தை சாரா, பலியிடப்போகும் சேவல் மீது வைக்கிற பாசம் ஒரு பக்கம் இருக்கும். மறுபக்கத்தில் உறவினர்கள் எல்லாம் குழந்தை சாராவை முன்னிட்டு ஒன்று சேரும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். இறுதியில் சாராவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் சேவலை வெட்டும் காட்சியை மிரட்சியுடன் பார்ப்பதாகவும் படம் இருக்கும். இதன் கிளைமாக்ஸை பார்க்காதவர்கள் இங்கு பார்த்துவிடுங்கள்.

சைவம் படத்திற்கு திரை விமர்சனம் எழுதிய தி இந்து விமர்சனக் குழு, விமர்சனத்தின் முடிவுரையில் “அசைவத்துக்கு எதிரான படம், சைவத்தை ஆதரிக்கும் படம் என்ற முன் அனுமானங்கள் தேவையற்றவை. இது குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்” என்று திறனாய்வின் பேரில் வாசகர்களை மிரட்டியது.

ஆனால் இதே விமர்சனக் கட்டுரையின் உள்ளே இந்து விமர்சனக் குழு “சேவலைத் தேடும் போது ஏற்படும் பரபரப்பு சேவலை பலிகொடுக்கப் பூசாரி கத்தியை ஓங்கும்போது ஏற்படவில்லை” என்று எழுதியது. அதாவது சேவலை பலிகொடுக்கிற காட்சியில் அழுத்தமாக பரபரப்பாக நடிக்காமல் ‘சொதப்பிட்டியே ரங்கா’ என்று மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு எரிச்சல் படுகிறது.

சைவம் படத்தில் குழந்தை-விலங்கு எனும் பிணைப்பை இன்னும் சற்று விரிவாக்கி, விலங்கின் துன்பம் என்ற கோணத்தை தன் பேட்டியில் விளக்குகிறார் இயக்குநர் சங்கய்யா. அருப்புக்கோட்டையைச் சுற்றிய கரிசல் மண் இப்படத்திற்கான களம் என்று அறிவிக்கின்றனர் இப்படத்தின் குழுவினர்.

கரிசல் மண் பூமியில் வாழ்ந்த ஒரு கிராமத்து இளைஞன் ஆட்டுக்கிடாயுடன், தான் கொண்டிருக்கும் பாசம் காரணமாக குல தெய்வ வழிபாட்டில் கிடா வெட்டப்படுவதை தடுக்க முயற்சிக்கிறான் எனும் நோக்கம் எந்தளவிற்கு நேர்மையானது? இதில் அம்பலப்படுத்த வேண்டிய பொய் எது? என்பதைப் பார்ப்போம்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலும் உழைக்கும் மக்களும் மாட்டை எப்படி பார்க்கின்றனர்? -போட்டோ ஆதாரம்

Cows-Dying-Rajasthan-BJP-Stateர்.எஸ்.எஸ் கும்பலுக்கு மாட்டுக்கறி அரசியல் என்பது இந்துக்களை இசுலாமியர்களுக்கு எதிராக நிறுத்தவும் மாட்டுக்கறி உண்ணும் சூத்திர தாழ்த்தப்பட்டவர்களை கொலை செய்து பார்ப்பனியத்தைத் தூய்மைப்படுத்தவும் துருப்புச் சீட்டாக பயன்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன் முதலாக ராஜஸ்தானில் பசு நல வாரியம் என்று தனியாக அமைச்சகம் மூலம் கோச்சார்-துங்கபத்ரா ஆற்றுப்படுகையில் பசு பாதுகாப்பு மையத்தை அமைத்தது பிஜேபி பார்ப்பன பரிவாரங்கள். கோமாதா புனிதமானது என்று விவசாயிகளை பால்மடி வற்றிய மாடுகளை விற்கவிடாமல் பிடுங்கிக் கொண்டுபோய் கோசாலையில் சேர்த்தார்கள்.  ஆனால் இங்கு பசுக்களுக்கு அன்ன ஆகாரம் தண்ணீர் ஏதும் கொடுக்காமல் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்து பசுக்களைக் கொன்றிருக்கிறது பி.ஜே.பி. இதற்கு ஆதாரமாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த புகைப்படத்தை வாசகர்கள் முன் வைக்கிறோம். வாயில் நுரைதள்ளி செத்துக்கிடக்கும் இந்த கோமாதாக்கள், ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் மாட்டு அரசியல், பார்ப்பன மேலாண்மைக்கானதேயன்றி பசுக்களின் நலனுக்கானதல்ல என்பதை நிரூபிக்கிறது.

நன்றி: தி இந்து ஆங்கில நாளேடு. (Cows dying in Rajasthan despite special Ministry to protect them)

மாறாக இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது சிறு உற்பத்திக்கு பயன்படும் கால்நடைகளை இயக்குநர் சொல்வது போல தங்கள் பிள்ளை போல பார்த்துக்கொள்கின்றனர். சாம்பிராணி புகை போடுகின்றனர். பால் மடி வற்றி, உழவுக்கு ஆகாது எனும் பொழுது மேற்கொண்டு மாட்டைப் பராமரிக்க முடியாத விவசாயிகள் மாடுகளை விற்கின்றனர், அவை கறிக் கடைக்குத்தான் போகிறது என்றாலும். ஏனெனில் இதுதான் இயற்கையான பொருளாதார சங்கிலியாகவும் புது கால்நடைகளை அபிவிருத்தி செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது. இந்த சுழற்சியை கோமாதா அரசியல் பேசி நிறுத்தினால் விவசாயியும் கால்நடையும் என இருவருமே செத்துப்போகிறார்கள்.

ஜல்லிக் கட்டு குரூப்பின் விலங்குகளின் மீதான பாசம்

ஜல்லிக்கட்டு மற்றும் ரேஸுக்காக காளைகளை வளர்க்கும் ஆண்டைகள் இருக்கிறார்கள். இவர்களும் காளைகளை தங்கள் பிள்ளைகள் என்றே சொல்லிக்கொள்கின்றனர். தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் பொத்தாம் பொதுவாக அடிக்கின்றனர். இவர்களின் பந்தம் எப்படிப்பட்டது என்பதற்கு கரிசல் கதை எழுத்தாளர் அ.முத்தானந்தத்தின் ‘மாடுகள்’ எனும் கதையை எடுத்துக்கொள்வோம்.

அ.முத்தானந்தத்தின் ‘மாடுகள்’ கதை சொல்லும் சேதி

‘மாடுகள்’ கதையில் விவசாயக் குடிகளாக ஆதிக்க சாதிகளான பிள்ளைகளும் கோனாரும் வருகின்றனர். பொன்னுசாமி பிள்ளையின் அப்பா, சொத்துக்களை இழந்து தேசாந்திரம் போய்விடுகிறார். பொன்னுசாமியும் அவரது மனைவி மற்றும் இரு பெண்குழந்தைகளும் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டு உழைக்கின்றனர். இவர்களுக்கு உள்ள ஒரு ஆசை, நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மாடு பூட்டி உழவு செய்து வெள்ளாமை பார்க்க வேண்டும் என்பது. வீட்டில் இதற்காகவே உழுகருவிகளையும் மாட்டைப் பராமரிக்க தேவைப்படும் பல பொருள்களையும் யாருக்கும் விற்காமல் வைத்திருக்கின்றனர். இரண்டு தொத்த மாடாவது வாங்கலாம் என்ற யோசனையில் பொன்னுசாமி ஒரு காலத்தில் தன் தகப்பனார் கைகொடுத்து தூக்கி விட்ட கீதாரி கோனார் வீட்டிற்கு போகிறார். கோனார் பொன்னுசாமியின் வறுமையைப் பார்த்தும் தனக்கு உதவி செய்தவர்களுக்கு உதவும் பொருட்டும் தன் வீட்டில் உள்ள இரு மயிலைக் காளைகளை பொன்னுசாமியிடம் கொடுத்துவிடுகிறார்.

கோனாரின் இரு பிள்ளைகளோ ரேஸ் விளையாட்டில் களித்திருக்கும் லும்பன்கள். எந்த ஊரில் நல்ல காளை இருந்தாலும் எந்த குடியானவனின் வயிற்றில் அடித்தாவது காளைகளை வாங்கி ரேசில் பூட்டி விளையாடுவதே கோனாரின் பிள்ளைகளுக்கு வேலை. ரேசுக்குப் போன காளைகளின் உடம்பெல்லாம் ரத்தமும் வார் வாராய் இழுப்பும் இருப்பதை பார்த்து பொன்னுசாமி மிகவும் வேதனைப்படுவார். பெத்தனாட்சி அம்மன் ரேசுக்கு மாடுகளை விடச்சொன்னாளாக்கும் என்று மனதிற்குள் கடிந்து கொள்கிறார் (இயக்குநர் சங்கய்யா விவசாயியின் இந்த உணர்ச்சியைத்தான் பலியிடலுக்கு எதிரான தன் பிரச்சாரத்திற்கும் கூர்மையாக பயன்படுத்துகின்றார்). தொத்தலாக இருக்கும் காளைகளை வீட்டிற்கு வாங்கி வரும் பொன்னுசாமியும் பொன்னுசாமியின் குடும்பமும் அக்காளைகளை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து வளர்க்கின்றனர். தாங்கள் குடிக்கும் கஞ்சியில் பாதியை மட்டும் குடித்துவிட்டு கும்பாவோடு மாட்டுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். பொன்னுசாமியின் மனைவி பக்கத்து வீட்டுக்காரரின் கிண்டலுக்கு பயந்து மாடுகளை யாருக்கும் தெரியாத வண்ணம் சுடுதண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி விடுகிறாள்.

அந்த வருட மழையில் பொன்னுசாமி குத்தகைக்கு எடுத்த கரிசல் காட்டு புஞ்சைகளில் விளைச்சல் பச்சையாக நிற்கிறது. மாடுகளும் வளர்ந்து ஊரே பொறாமைப்படும் அளவுக்கு கம்பீரமாக நிற்கிறது. இங்கு கோனாரின் பிள்ளைகளுக்கு பொன்னுசாமி வளர்க்கும் மாடுகள் மீது ஒரு கண் வந்துவிடுகிறது. பொன்னுசாமியிடம் மாட்டை வாங்கி ரேசுக்கு விட வேண்டும் என்ற வெறியில் பொன்னுசாமியிடம் தாங்கள் கொடுத்த மாடுகளை பத்திக்கொண்டு போவதற்காக மாட்டுப்பொங்கல் நாளில் வருகின்றனர். முன்னூறு ரூபாயை விட்டெறிந்து மாட்டைப் பராமரித்த கூலியாக வைத்துக்கொள்ளட்டும் என்று மைனர் குஞ்சுகள் பொன்னுசாமியிடம் கூறுகின்றனர். பொன்னுசாமியின் குடும்பம் பணத்தை வாங்காமல் மாட்டை கோனாரின் மகன்களிடம் கொடுத்துவிட்டு தெரு முக்கு திரும்பியவுடன் வீட்டிற்குள் கதவைச் சாத்திக்கொண்டு ஆளுக்கொரு மூலையில் குப்புறப்படுத்து கேவி கேவி அழுகின்றனர். இத்துடன் அக்கதை முடிகிறது.

முத்தானந்தின் கதையில் வரும் உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபடாத சொத்துள்ள இந்த ஆண்டைகள் தான் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக எந்த விவசாயிடமும் இருந்தும் மாடுகளைப் பறித்துக்கொண்டு போகிறவர்களாக நிதர்சனத்தில் இருக்கின்றனர். பெண்ணைப் பார்த்தால் வன்புணர்வு செய்ய வேண்டும். மாடுகளைப் பார்த்தால் ஓட்டிக்கொண்டு போக வேண்டும் என்ற பண்ணையார்தனம் தான் தமிழ்நாட்டு வீரவிளையாட்டுக்கு மூலதனம். மாடுகள் ஜெயித்தால் மீசையை முறுக்கிவிட்டு சாதிப்பெருமை பேசுகிற கும்பலின் கள நிலைமை இது.

இப்படி விலங்குளுக்கும்-மனிதர்களுக்கும் உள்ள பிணைப்பை ஜல்லிக்கட்டு ரேசிற்காக மாட்டைப் பறிகொடுத்து நிற்கும் எத்துணையோ விவசாயிகளின் பாசப்பிணைப்பை பற்றியும் இயக்குநர் வாய்திறக்கவில்லை. அப்படி படம் எடுத்தால் ஈராஸ் நிறுவனத்திற்கு கல்லா பெட்டி ரொம்பாது என்பது இயக்குநர் சங்கய்யாவிற்கும் தெரியும்! இதையெல்லாம் தாண்டித்தான் பலியிடலை தன் கதைக்கான கருவாக எடுத்துக் கொள்கிறார். மேலும் சங்கய்யா எடுத்திருக்கும் கதைக்களம் ஆட்டுக் கறி அரசியலைப் பற்றியது.

ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம் எனும் தலைப்பில் வடஇந்தியாவின் பார்ப்பனக் கொடுங்கோன்மையை சென்ற வருடம் வினவில் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். வட இந்தியாவில் பெரும்பாலான ஆடு வளர்ப்பவர்கள் ஆட்டிறைச்சி உண்பதிலிருந்து பார்ப்பனிய மேலாண்மை காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த நிலைமை உருவாக்குவதற்கு குல தெய்வ வழிபாடு பார்ப்பனமயமாக்கப்பட வேண்டும் என்ற முன்நிபந்தனையை படம் தன் கருவாகவே கொண்டிருக்கிறது.

எனவே சங்கய்யா முன்வைக்கும் விலங்குகளின் மீதான பாசத்தை விளக்குவதற்கு நிறைய ஸ்கோப் இருப்பது என்பது பலியிடலை எதிர்ப்பதற்கு பயன்படுத்தும் கருவிதானே ஒழிய வேறெதுவும் இல்லை.

ஆட்டுக்கிடாய் பலி: கிராமங்களின் நிலைமை எத்தகையது?

கிடாயைக் பலிகொடுப்பது கிராமங்களில் அசைவம் உண்ணும் நடைமுறையின் வழக்கம் தான். கிராமங்களில் கூறுக்கறி என்று கூறுவார்கள். ஊரில் உள்ள சலவைத்தொழிலாளிகளுக்கு ஆட்டுத் தலை கொடுப்பதை பொறுக்காத ஆதிக்க சாதிகள் அவர்களை இழிவுபடுத்தும் வண்ணம் ‘வண்ணான் ஆட்டுத் தலைக்கு பறந்தாப்ல பறக்காதே’ என்று சொலவடையையே புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இதுக்கெல்லாம் மனம் புழுங்காத இயக்குநர் ஆடு சாவதற்காக புழுங்குகிறார் என்றால் இதைவிட அயோக்கியத்தனம் ஒன்று இருக்க முடியுமா?

இதுதவிர கிடாய் பலியை கூட்டாக அல்லாமல் ஒருவர் தனிநபராக கொடுக்கிறார் என்றால் அது வசதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியம். அங்கும் அது உணவுக்காகத்தான். இதுதவிர கிடாய் வளர்க்கும் குடியானவர்கள், தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைக்கு விற்பதற்காக கொண்டுவருகின்றனர். மேலும் சினை பிடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதைத்தாண்டி ஊரில் திரியும் செல்லக் கிடாய்கள் ஜமீன்தார் வீட்டு பிள்ளை கணக்காக அழிச்சாட்டியம் செய்வதற்கும் ஆண்ட பரம்பரையின் சாதிப்பெருமை பேசுவதற்குதான் பயன்பட்டு வருகிறது.

அப்படியானால் ஆடோ, மாடோ, கோழியோ செல்லப்பிராணியாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பலியிடாதீர்கள் என்று படம் எடுத்தால் திரிஷாவின் அனிமல் வெல்ஃபேர் ரசிகர்கள் மட்டுமே படம் பார்ப்பார்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. போயஸ் தோட்டத்து ஜெயா சசிகலா கும்பல் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு நாளொன்றுக்கு பதினைந்து கிலோ கறி போடுகிறார்களாம். இந்த நாய்களுக்கு போடும் கறியும் ஏதோ ஒரு செல்லக் கோழியாக, செல்லச் சேவலாக, செல்ல ஆடாக இருந்து, பலியிடுதலைப் போன்று வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாட்டில் எந்த கலைப்புலிக்காவது தைரியம் இருக்கிறதா?

சிரிப்பதா? சிந்திப்பதா?

ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் இயக்குநர் சங்கய்யா முன்வைக்கும் பிரச்சனை ஆடோ மாடோ, கோழியோ பற்றியது அல்ல. பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் சூத்திர உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தொடுக்கப்படும் பகிரங்கமான போர் தான் ஒரு கிடாயின் கருணை மனு. கிடா வெட்டுத் தடைச் சட்டத்தை காமெடியாக சொல்ல முடியும் என்று இலட்சியத்தோடு வந்திருக்கிறார். சிரிப்பதா? சிந்திப்பதா? என்பது இப்பொழுது உழைக்கும் மக்களின் தன்மானப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. மனுதர்மத்தின் ஆட்சியில் மக்களை பிரித்து வதைத்த மண்ணில் கிடாயின் கருணை மனு – வேண்டுகோளல்ல, விஷம்!

-இளங்கோ

அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் மக்கள் மாநாடு – செய்தி படங்கள்

1

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மக்கள் உரிமை பாதுப்பு மையம் நடத்திய

6-வது கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – 2016

அரசுப் பள்ளியே நமது பள்ளி !
கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல!!
கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்!

puser-rally-01ல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் துவக்கமாக 25-06-2016 சனிக்கிழமை மாலை சரியாக 4.00 மணிக்கு பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் விருத்தாசலம் சந்திப்பு சாலையில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன் திரண்டனர். பேரணியில் தனியார்மய பள்ளி ஒழிப்பு மாநாடு விளம்பர பதாகையைக் கையில் பிடித்துக்கொண்டு அணிவகுத்தனர்.

பெற்றோர் சங்க தலைவர் வை.வெங்கடேசன், “பெற்றோர்களுக்கு தனியார் பள்ளியின் பால் உள்ள மோகம் அறவே நீக்கப்பட வேண்டும். அனைத்து சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும், சாதிய வேறுபாடுகளையும் நீக்கி, மாணவர்களிடம் ஒருமித்த வளர்ச்சியை உருவாக்கும் அரசுப்பள்ளி. அரசுப் பணி புரிந்து அரசின் சம்பளம் பெறும் அனைவரும் கட்டாயம் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளியின் தொய்வைப் போக்க முடியும்” என்று கூறி சரியாக 4.30 மணிக்கு பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் “அரசுப் பள்ளியே நமது பள்ளி!”, “கல்வி தனியார் மயத்தைப் புறக்கணிப்போம்.”, “தாய்மொழி கல்வியைப் போற்றுவோம்.” போன்ற முழக்கங்களுடன் பேரணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துகொண்டு மாநாடு பந்தலை வந்தடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாநாட்டு உரைகள்:

ஜீன் 25 சனி மாலை 5மணி, வானொலித் திடல், விருத்தாசலம்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பெற்றோர் சங்க துணைத் தலைவர் திரு.வா.அன்பழகன் தன்னுடைய உரையில் மாநட்டுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதுடன், பசுமைப் புரட்சி, வெண்மை புரட்சி என்பது போல கல்வியிலே புரட்சி ஏற்பட வேண்டும். பெற்றோர்கள் அரசுப் பள்ளியிலே தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.

puser-conference-11மாவட்ட தலைவர் திரு.வை.வெங்கடேசன் தன்னுடைய உரையில், “ மத்திய அரசு பள்ளி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசிடம் பல கோடி கொடுத்தும் அவற்றைச் சரியானபடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் அவல நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இதை மத்திய அரசின் நிதிக்குழு வன்மையாக கண்டித்துள்ளது. 1353 பள்ளிக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை ஒரு பள்ளிக்குக் கூட புதிய கட்டிடம் கட்டித்தரப்படவில்லை. 4000 பள்ளிகளுக்கு சரியான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்று மத்திய குழு வற்புறுத்தியுள்ளது செய்யவில்லை. ஆயிரக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தரமான கட்டிடவசதி இல்லை. இந்த அவல நிலையை போக்க நாம் கூக்குரலிடவேண்டும். போராடாமல் வெற்றிபெற முடியாது. அரசுப் பள்ளியில்தான் சமூக ஏற்றத் தாழ்வற்ற கல்வியைப் பெற முடியும். ஆகவே நீங்கள் நமது பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்ப்போம் என சபதம் ஏற்கவேண்டும்” என்றார்.

மருத்துவர் செல்வம், மருத்துவர் டேவிட், தோழர் பாரதி தம்பி, அன்பழகன், செந்தாமரைக் கந்தன், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். ஒவ்வொரு மாணவருக்கும், பரிசு, மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மருத்துவர். செல்வம், விருத்தாசலம் : “எனது MBBS படிப்பு சென்னையில் நடைபெற்றது. நான் அரசுப் பள்ளியில், அதுவும் தமிழ்வழியில் எனது துவக்கக் கல்வியை துவங்கி இன்று ஒரு முழுமையான சேவை செய்யும் மருத்துவராகத் திகழ்வதற்கு தாய்மொழிக் கல்வியும், அரசுப் பள்ளியும் என்றால் அது மிகையன்று. எனது துவக்கப்பள்ளி படிப்பையும் அதற்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் பெருமக்களையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த பசுமையான நினைவுகள் என்னைவிட்டு அகலாதவை” என்றார். மாநாட்டிற்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களுடைய கடந்த கால பள்ளிப்படிப்பை நினைவு கூறும் வகையில் அவருடைய பேச்சு இருந்தது.

puser-conference-15புரட்சிகர கலைக்குழு தோழர்கள் “படிப்பை கெடுத்திட்டியே அம்மா” என்ற பாடலை பாடினார்கள். இந்தப்பாடல் அரசுப்பள்ளியைப் புறக்கணித்து தனியார் பள்ளிக்கு ஊக்கம் கொடுப்பதை கண்டிப்பதாக அமைந்திருந்தது.

கற்க கசடற தொடர் பாரதிதம்பி, பத்திரிக்கையாளர், ஆனந்த விகடன், சென்னை :

“தனியார் பள்ளியில் ஒழுக்கம் கட்டுப்பாடு உள்ளதாக பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. தவறான முடிவை எடுத்து கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளியில் நமது பிள்ளைகளைச் சேர்த்து வறுமையடையக் கூடாது. அரசு நியமித்த கோவிந்தராசு கமிட்டி ஒரு அறிக்கை கொடுத்து அந்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக தனியார் பள்ளிகள் வசூல் செய்கின்றன. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகத்தான் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு மாணவருக்கும், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு இணக்கம் கிடையாது. அரசுப்பள்ளியில் அப்படி இல்லை. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தன்னிடம் படிக்கும் பிள்ளைகளிடம் நெருங்கிப்பழகி, அவனது பெற்றோரைச் சந்தித்து குடும்ப நிலையை, மாணவர் நிலைமையைப் புரிந்து கொண்டு கற்பிக்கிறார்கள்.

puser-conference-10

“தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பிணைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். மாணவர்களை துன்புறுத்துகிறார்கள். நாம் அவர்களை எதுவும் கேட்க முடியாது. ஏனெனில் நமது மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண் பெற்று மருத்துவர், பொறியாளர்களாக ஆகவேண்டும். இதற்கிடையில் எது நடந்தாலும் பரவாயில்லை என்று தனியார் பள்ளிகள் செய்யும் அக்ரமங்களையெல்லாம் சகித்துக்கொள்கிறோம். நமது சுயமரியாதையை இழக்கிறோம். கேவலப்படுத்தப் படுகிறோம். நாம் அரசுப் பள்ளியைக் கண்காணித்து ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய உதவி செய்தோமானால் நல்ல முழுமையான கல்வி பெற்ற நமது பிள்ளைகளைப் பார்க்க முடியும். எப்போதோ உள்ள நடைமுறையை வைத்து அனைத்து அரசுப்பள்ளியும் மோசம் என முத்திரை குத்தி விடுகிறோம். இப்போது அப்படி இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளிக்கு சவாலாக மதிப்பெண் பெறுகிறார்கள். அரசுப்பள்ளியை அரசு ஒரு போதும் தூக்கி நிறுத்தாது. நாம் தான் இதற்காகப் போராட வேண்டும். அரசுப் பள்ளியே நமது பள்ளி என்ற முழக்கத்தை முன்னெடுப்போம்” என்றார்.

puser-conference-13புலவர் சிவராம சேது : “மதிப்பெண் மட்டுமே கல்வி வளர்ச்சிக்கு உதவுமா? இதைப் பற்றிய செய்தியைப் பத்திரிகை மூலமே பேசுகிறோம். ஆங்கிலம் படித்தவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்று முன்னேறுகிறார்கள் என்பது மாயை. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பு பெறமுடியாது என்பது உண்மையல்ல. இராமநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த 5 மாணவர்கள் MBBS-ல் இடம் பிடித்துள்ளார்கள். இந்த 5 மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள்.

தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தொடர்புடைய ஆசிரியர்களே விடைக்கான துண்டுச் சீட்டு கொடுத்து பிடிபட்ட செய்தியை நாம் செய்திதாள் மூலம் காண்கிறோம். எப்படியாவது மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்ணை காட்டி கல்விக் கொள்ளை அடிக்கிறார்கள். மதிப்பெண் பெறுவதால் மட்டுமே ஓர் உன்னதமான மாணவனை உருவாக்கிட முடியாது. 9 மாணவர்களுக்கு ஆசிரியர்களே துண்டுச் சீட்டு கொடுத்து பிடிப்பட்டு இன்று அந்த 9 மாணவர்களும் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்கள். ஒரே இடத்தில் உட்காரவைத்து விடை எழுதிய செய்தியெல்லாம் நாம் பார்க்கிறோம். அவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிந்தனை திறனை வளர்க்க நல்ல விஞ்ஞானிகளை உருவாக்க மதிப்பெண் மட்டுமே உதவியாக இருக்க முடியாது.”

puser-conference-14டாஸ்மாக் போராளி. மாணவர் மாரிமுத்து, சென்னை:

“அரசுப் பள்ளியில் கட்டமைப்பு வசதி இல்லை. சிறுநீர் கழிப்பிடம் சரியாக இல்லை. இருக்கும் பள்ளிகளில் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. வீட்டிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு விட்டு பள்ளியிலும் சரியாக படிக்க முடியாமல் தினம் தினம் நாங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். பள்ளி மாணவர்களாகிய நாங்கள் எங்களுடைய எதிர்காலத்திற்கும் தயாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தேன். சமுதாய விழிப்புணர்ச்சிக்காக டாஸ்மாக் போராட்டத்தில் இறங்கினேன் அரசுப் பள்ளிகளின் உயர்வுக்காக போராடுவோம்! வெற்றிபெறுவோம்!!” என்றார்.

பேராசிரியர் சந்திரசேகரன்:

puser-conference-16“பல்வேறு பரிசுகள் இங்கு வழங்கப்பட்டன. பரிசு கொடுத்தவர்களையும், பரிசு பெற்றவர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். தமிழ் வழிக் கல்விகற்றேன், நான் ஒரு சிறந்த பேராசிரியராக பணி புரிகிறேனா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் அவர்கள் வீட்டில் படிக்கிறார்களா என கண்காணிக்கவேண்டும். நீங்கள் சீரியல் பார்ப்பதை அறவே விட்டுவிட வேண்டும். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார் ஔவையார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்தும் வணிக மயமாகி வருகிறது, கல்வியையும் வணிகமயமாக்குகிறார்கள். அரசுப் பள்ளியை உயர்த்திப் பிடித்து எதிர்கால சமுதாயத்தின் உயர்வுக்கு துணை நிற்போம் என்றார். அறிவினால் ஆகுவது உண்டோ என்ற குறளில் பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதுவது தான் உண்மையான வளர்ச்சி” என்றார்.

மருத்துவர் வள்ளுவன், விருத்தாசலம் :

puser-conference-17“கல்வி நிதியைக் களவாடுகின்றன நகராட்சிகள், உள்ளாட்சிகள் மாநகராட்சிகள். கல்விக்காக ஒதுக்கப்படும் 2.5 சதவித கல்விக் கட்டணம் கொள்ளையடிக்கப்படுகிறது. 2006-ம் ஆண்டின் புள்ளி விவரப்படி 33,103 மின் இணைப்புகள் வீடு, வணிகம், சொத்து வரிவிதிப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. 16,201 வீடுகளுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 50 கோடி இழப்பு. இதற்கு யார் குற்றவாளிகள்? நகராட்சி நிர்வாக ஆணையர்கள் நமது வரிப் பணத்தில் சம்பளம் பெற்று கொண்டு அரசியல் வாதிகள் கொள்ளையடிக்க பங்கு போட்டுக் கொள்ள துணை நிற்கிறார்கள்.

கல்வி நிதியைப் பொருத்தவரை சரியாக நிர்வகிக்கப்படவில்லை A பிரிவு மனை, B பிரிவு மனை, C பிரிவு மனை என மூன்று பிரிவாக நமது நகரத்தைப் பிரித்து வரிவிதிக்கிறார்கள். நம்மிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஊழல் செய்தால் தமிழ் நாட்டில் நேர்மையான நிர்வாகத்தை எப்படி பெறமுடியும்.

குடிநீர் வசதி சரியில்லை. 90,000 மக்கள் தொகைக்கு ஏற்ற வசதி இல்லை. தொலை நோக்கு திட்டமில்லை. நம் நாட்டில் இல்லாத வளமில்லை. மக்கள் வரிப்பணம் சீரழிக்கப்படுகிறது.

இங்குள்ள வணிக சங்கங்கள், விருதை நகர மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிலுவையில் உள்ள 52 கோடி வரி நிலுவையை வசூல் செய்யுங்கள். பிறகுதான் நாங்கள் வரிசெலுத்துவோம் என போராடவேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

வழக்கறிஞர் புஷ்பதேவன் :

puser-conference-18“தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் விருத்தாசலத்தில் 33 நகராட்சிகள், வார்டுகள் உள்ளன என்று தகவல் பெறப்பட்டுள்ளது. நகராட்சிப் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து ரூ.5 லட்சம் வீதம் பலமுறை கொள்ளையடித்துள்ளார்கள். காத்தாடி போட்டோம், டைல்ஸ் போட்டோம், மின்விளக்கு போட்டோம் என்று செலவு காண்பித்து இலட்சக்கணக்கில் பணத்தைக் களவாடி இருக்கிறார்கள். நகராட்சியில் என்ன செய்தார்கள்? எப்படி கொள்ளையடித்தார்கள் ? என்பதை விருதைவாழ் மக்கள் கூட்டம் முடிந்து போகும்போது நகராட்சி பள்ளிகளை ஒரு தடவை சென்று பாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

மங்கையர்கரசி, யோகா ஆசிரியை, விருத்தாசலம்:

puser-conference-09“நமக்கு எப்போது ஒரு விஷயம் தலைவலியாக இருக்கிறதோ, அப்பொழுதுதான் அந்த விஷயம் ஒழித்தே தீர வேண்டும் என்ற வேகம் வரும். கல்வி தனியார் மய ஒழிப்பு யாருக்கு இது தலைவலியாக இருக்கு என்று பார்த்தோமானால், பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும்தான். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் நிறைய மதிப்பெண் வாங்கி டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் சுயசிந்தனை என்பதை அழித்துவிட்டு வெறும் மதிப்பெண் வாங்கும் கல்வியை மட்டுமே வழங்குகிறார்கள். சுயசிந்தனை இல்லாமல் ஆளுமைத்திறன் இல்லாமல் வெளிவரும் மருத்துவ மாணவன் எப்படி உண்மையான மருத்துவ சேவையை சமூகத்துக்கு செய்ய முடியும்? என பெற்றோர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் பள்ளியில் படித்தவர்கள் நல்ல பண்பாடு உடையவர்களாக உருவாக்கப்படுவார்கள் என்றால், ஏன் இத்தனை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது? நன்றாக படிக்கத் தெரிந்தவர்கள்தான் சிகரெட், குடிபழக்கத்திற்கு ஆட்படுகிறார்கள். நமக்கு அருகாமையில் யாரெனும் கீழே விழுந்தால்கூட நமக்கென்ன என்று ஓடி ஒளிந்துவிடுகிறோம். நமக்கென்ன? என்ற நிலை, கூடவே மனித நேயம் அறவே இல்லாத நிலை பெருகி வருகிறது. அரசு பள்ளியில், உங்கள் பிள்ளைகளை சேருங்கள். பெற்றோர்கள் அரசு பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து உங்கள் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள்? என்று கேளுங்கள். தனியாக கேட்டால் பிரச்சினையாக இருந்தால் எங்கள் அமைப்போடு தொடர்பு கொள்ளுங்கள். சிறு விஷயத்தை ஏன் கஷ்டமாக மாற்றி கொள்கிறீர்கள். பள்ளியிலே உனக்கு படிப்பு வராது என்று வெளியேற்றப்பட்ட மாணவனின் கண்டுபிடிப்பில் தான் இன்று பள்ளிக்கூடம் வெளிச்சத்தில் இருக்கிறது என்று தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றியும், தமிழ்நாட்டிலே அப்துல் கலாம் அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர்தான் என்று சுட்டிக்காட்டி இது ஏன் நமக்கு தெரியவில்லை? அரசுப் பள்ளியே நமது பள்ளியே” என்று கூறி தன்னுடைய உரையை முடித்தது வந்திருந்த அனைவரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்தது.

மாநாட்டுத் தீர்மானங்கள்

puser-conference-011. கல்வி வியாபாரத்தை தடைசெய்து மத்திய மாநில அரசு சட்டம் இயற்றவும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் அரசே வழங்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

2. அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக அறிவித்து மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், போன்றவற்றை அரசே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

3. 25 சதவீத இலவச ஒதுக்கீடும், கல்விக் கட்டணம் என்ற பெயரில் அதற்காக வழங்கப்படும் மக்கள் வரிப்பணமும் தனியார் பள்ளிகளை பாதுகாக்கவே. இதைக் கைவிட்டு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

4. அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக் கொள்கிறது.

5. அரசுப்பள்ளிகளில் உரிய கட்டமைப்பு இல்லாத சூழலிலும் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக தேர்ச்சி கொடுக்க பாடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு ஒரு மனதார பாராட்டுகிறது.

puser-conference-026. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், போதிய வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், போதுமான கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், நூலகம், சுற்றுச்சுவர், போதிய ஊழியர்கள், ஆகிய கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, அரசாணை நிலை எண் 270, (எக்ஸ் 2) துறை, நாள் 22,10,2012 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

7. கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்தை கல்வியில் முதல் மாவட்டமாக உயர்த்த நமது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பாடுபடுவது என ஒரு மனதாக தீர்மானிக்கிறது.

8. அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களை அரசு நிதி உதவி கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

9. சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்புப்படி தனியார் பள்ளிகளில் “மெட்ரிகுலேஷன் பள்ளிகள்” என்ற பெயரை எடுத்துவிட விரைவில் உத்தரவு வழங்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.

10. அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மாணவர்களின் கல்லி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையம் இணைந்து 19-06-2016 அன்று ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து கொள்ளச் செய்து நடத்திய விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டத்திற்கு ஆதரவு தராத கடலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அவர்களை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.

11. கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியால் நகராட்சி பள்ளிகள் பராமரிப்பில் நடைபெற்ற கல்வி நிதி செலவில் லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக் கொள்கிறது.

12. மத்திய அரசு 2010-11 மற்றும் 2011-12 ம் ஆண்டுகளில் கல்வி நிதியாக அளித்த பலகோடி ரூபாயை உரிய காலத்தில் பள்ளி பராமரிப்பிற்கு செலவிடாமல் கிடப்பில் போட்டுள்ளதும், செலவிடாமல் மத்திய அரசுக்கு திருப்ப அனுப்ப இருப்பதும் குறித்து இம்மாநாடு தமிழ்நாடு அரசை ஒரு மனதாக வண்மையாக கண்டிக்கிறது.

(வை.வெங்கடேசன்),

மாநாட்டுக்குழுத் தலைவர் மற்றும், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான, பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம், கடலூர் மாவட்டம்,
தொடர்புக்கு : 93450 67646