Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 562

அபாண்டமாய் தலைகுனியும் மோடி – கேலிச்சித்திரம்

5
modi-cartoon-slide

தலித் மக்கள் மீதான தாக்குதல்களால் என் தலை அவமானத்தில் தொங்குகிறது !    – மோடி.

modi-cartoon

 

சாதி இந்துக்கள் யாரும் சீரியசா எடுத்துக்காதீங்கபா. உ.பி தேர்தல் முடிஞ்சதும் ‘தல’ தானா நிமிந்துடும் !

ஓவியம் : முகிலன்

இணையுங்கள்:

காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா ?

12

மஸ் ஒரு தத்துவ ஞானி. சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். “ஏம்பா கொஞ்சம் உப்பு கொண்டு வா” என்று எளிமையான முறையில் அதற்குத் தீர்வு கண்டுவிடுவீர்கள். அவரைப் பொருத்தவரை அப்படி தீர்வு காண்பது அவரது தகுதிக்கு குறைவானது. உப்பு ஏன் குறைந்தது? இது தமிழ்ச் சமூகம் சொரணை மரத்துப் போனதன் குறியீடா? அன்றி உப்புக்கே உவர்த்தன்மை குறைந்து வருகிறதா – என்பன போன்ற அறவியல், அறிவியல் சார்ந்த வினாக்களை எழுப்பி, குறைந்த பட்சம் அரைப்பக்க அளவிலாவது ஒரு கட்டுரை எழுதாமல், அவரால் சாம்பாரில் கை நனைக்க முடியாது.

Samas
சாம்பாரில் உப்பு சேர்ப்பதற்கே கட்டுரை எழுதும் தத்துவஞானி சமஸ்!

உப்புப் பெறாத விசயங்களுக்கே அப்படி என்றால், காவிரி பிரச்சினையின் பால் அவர் தனது கவனத்தைத் திருப்பினால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது சரி, உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா” என்று தமிழ் இந்துவில் அக். 21, 2016 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

கட்டுரையின் முதல் பத்தி பாரதிராஜா படம் மாதிரி காவிரியில் புதுப்புனல் வரும் சீனுடன் தொடங்குகிறது. அப்புறம் தஞ்சை விவசாயிகளின் வியர்வை மணத்தை உலகுக்கு காட்டிய கும்பகோணம் தி.ஜானகிராமனுக்கு ஒரு துதி. அடுத்த பாராவில் அப்படியே காமெராவைத் திருப்பி மணற்கொள்ளை, ரசாயனக்கழிவு, சாக்கடை, புதர்கள் மண்டிய காவிரியைக் காட்டுகிறார். ‘’எந்தச் சமூகமாவது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் கழிவுகளை வலிய எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுமா? நாம் சாப்பிடுகிறோம்! உரிமை குறித்து முழங்குவதற்கான தகுதி தமிழர்களுக்கு இருக்கிறதா?’’ என்று டெர்ரராக உறுமுகிறார்.

நாம் என்பது யார் சமஸ் அவர்களே!

ரொம்ப நியாயமான கோபம்தான். ஆனால் “நாம் நாம்” என்று சொல்கிறாரே சமஸ் அந்த “நாம்” யார்? அவரா, நீங்களா, நானா?

பொத்தேரியை ஆக்கிரமித்தது யார்? ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போரூர் ஏரியை தாரை வார்த்தது யார்? மணற்கொள்ளை ஆறுமுக சாமியும், பாஸ்கரும், கரூர் பழனிச்சாமியும் யார்?  நீங்களா, நானா, நாமா?

தலைமைச் செயலர் முதல் தாசில்தார் வரை இவற்றுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகள் யார்? நாமா?

மணற் கொள்ளைகளை ஆசீர்வதித்து அனுமதி வழங்கிய நீதிபதிகள் யார், நாமா?

மணற் கொள்ளை உள்ளிட்ட சகல விதமான கொள்ளைகளையும் தலைமை தாங்கி நடத்தும் அம்மா யார்? நாமா?

மணற்கொள்ளை
மணற் கொள்ளை உள்ளிட்ட சகல விதமான கொள்ளைகளையும் தலைமை தாங்கி நடத்தும் அம்மா யார்? நாமா?

மேற்படி சமூக விரோதிகளின் பெயர்கள் சமஸுக்கு தெரியாதா? அல்லது அவர்களுடைய புனிதத் திருநாமங்களை உச்சரிக்கக் கூடாது என்பதற்காக “நாம்” என்று தமிழ்ச் சமூகத்தின்மீது பழி போடுகிறாரா? யாருடைய நலனுக்காக அவர்களைக் மறைக்கிறார் சமஸ்?

அவர்களுடைய பெயர்களை தமிழ் இந்துவில் சமஸ் வெளியிடுவாரா? அல்லது கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் அவை ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையா என்று விசாரித்து, அவ்வாறாயின் அத்தகைய சமூக விரோதிகளின் விளம்பரங்களை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிர்வாகத்திடம் கோருவாரா?

தன்னுடைய ஊதியத்தையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் உள்ளிட்ட எல்ல ரகங்களையும் சார்ந்த சமூக விரோதக் கழிசடைகள் யார் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு முன்னால் பல்லிளித்து நிற்பதையும் அவர்களை கவுரவப்படுத்துவதையும் தமது தொழில் தருமமாகவே கொண்டிருக்கும் சமஸ் போன்றோர் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிப் பேசுமுன் தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

உங்களுக்கும் கருத்துக் கூற உரிமை இருக்கிறது – தகுதி இருக்கிறதா?

தனது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் தமிழ் மக்களா கழிவுகளை எடுத்து வைத்துக் கொண்டார்கள்? எடுத்து வைத்தவர்கள் சமூக விரோதிகள். முதல்வரென்றும், தொழிலதிபரென்றும், வெங்காயமென்றும் போற்றிப் புகழ்ந்து அத்தகைய குற்றவாளிகளை புனிதர்களாக அடையாளம் காட்டி மக்களை மடமையில் ஆழ்த்தி வைக்கிறீர்களே அந்த சமூகவிரோதிகள்தான். அவர்கள் விட்டெறியும் விளம்பரக் காசிலும், இந்த மக்கள் விரோத அரசின் தயவிலும் வயிறு வளர்க்கும் நாளேடுகளுடைய கருத்து கந்தசாமிகள், தங்களுடைய சாப்பாட்டுத் தட்டில் நிரம்பியிருப்பது சோறா, கழிவா என்பதை முதலில் முகர்ந்து பார்க்கட்டும்.

காவிரி உரிமை கிடக்கட்டும். கருத்துரிமை கூட எல்லோருக்கும்தான் இருக்கிறது சமஸ் அவர்களே, அந்த உரிமையைப் பயன்படுத்தும் “தகுதி” உங்களுக்கு இருக்கிறதா என்று முதலில் சிந்தியுங்கள். அப்புறம் பொங்கலாம்.

மணற்கொள்ளையையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்துப் போராடும் தமிழ் மக்கள் காவிரி உரிமைக்காகவும் போராடுகிறார்கள். எதற்கும் போராடாமல் தன் பிழைப்பை மட்டும் பார்க்கும் தி.ஜானகிராமனின் ரசிகர்கள்தான் கும்பகோணம் காவேரி ஸ்நானத்தின் வழியாக காவிரியை நினைவு கூர்ந்து சமஸ் கட்டுரையை சிலாகிக்கிறார்கள்.

காவிரியும், தமிழகத்தின் நீராதாரங்களும் இப்படி சீரழிக்கப்படுகின்றனவே என்ற நியாயமான கோபம் தமிழகத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் இருக்கிறது. தன்னுடைய கோபமும் அதுதான் என்பதைப் போல ஒரு தோற்றம் காட்டி விட்டு, நைச்சியமாக நஞ்சைக் கக்கத் தொடங்குகிறார் சமஸ்.

காவிரி தமிழகத்துக்கு இரவல் நதியா?

தி. ஜானகிராமன்
தன் பிழைப்பை மட்டும் பார்க்கும் தி.ஜானகிராமனின் ரசிகர்கள்தான் கும்பகோணம் காவேரி ஸ்நானத்தின் வழியாக காவிரியை நினைவு கூர்ந்து சமஸ் கட்டுரையை சிலாகிக்கிறார்கள்.

“எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒரு கருத்து உண்டு; ரொம்பக் காலத்துக்கு இப்படி நீதிமன்றங்களில் வழக்காடி தண்ணீர் தேவையைத் தீர்த்துக் கொள்ளும் உத்தியை நாம் கையாள முடியாது – தமிழகத்துக்குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலான கட்டமைப்புக்கு நாம் மாற வேண்டும் என்பதே அது.”

“தமிழகத்துக்குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது” என்று சமஸ் கூறுவதன் பொருள் என்ன? காவிரி “தமிழகத்துக்குள்ளான” நீராதாரம் இல்லையா? கர்நாடகத்துக்கு சொந்தமான காவிரி நீரை அடித்துப் பிடுங்குவதற்காகத்தான் நாம் நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருக்கிறோமா?

ரொம்பக் காலத்துக்கு வழக்காடும் உத்தியைக் கையாள முடியாதாம். உத்தியை கையாள்கிறோமா, வழக்காடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோமா? சர்வதேச நதிநீர்ச் சட்டங்கள் முதல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரையிலான எதற்கும் கட்டுப்பட முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருவதால் வழக்காடுகிறோம். மத்திய அரசு இந்த அயோக்கியத்தனத்துக்கு உடந்தையாக இருப்பதால் வழக்காடுகிறோம். தனது தீர்ப்புகள் அவமதிக்கப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உச்ச நீதிமன்றமே பித்தலாட்டம் செய்வதால் வழக்காடுகிறோம்.

ஆனால் சமஸின் பார்வை வேறு. தமிழகம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று மிகவும் பொறுப்புடன் பேசுவது போன்ற தோரணையில் அவர் கூறும் கருத்தின் உட்பொருள், “தமிழகத்துக்கு காவிரி இரவல் நதி” என்பதுதான். அதை வெளிப்படையாக சொல்லாமல் சூசகமாக சொல்கிறார். சமஸ் சொல்வதைத்தான் கர்நாடக அரசும் சொல்கிறது. “காவிரி எங்கள் ஆறு, எங்களுக்கு மிஞ்சித்தான் தான தருமம்” என்று பேசுகிறது.

துரதிருஷ்டவசமாக சர்வதேச சட்டமோ, மரபுகளோ சமஸின் கருத்துக்கு ஆதரவாக இல்லை. காவிரியில் தமிழகத்துக்கு சம உரிமை இருக்கத்தான் செய்கிறது.

முன்னாள் நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் சமஸுக்கு பதிலளிக்கிறார்!

தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழகத்துக்கு சார்பாக பேசாதவரான முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் இது பற்றி என்ன கூறுகிறார்?

“சம உரிமை (சம பங்கு அல்ல) என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டையும், சமத்துவமான பயன்பாடு என்ற ஐ.நா தீர்மானத்தையும் கர்நாடகம் ஏற்க மறுப்பதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன. தமிழகத்துடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவே கர்நாடகம் மறுக்கிறது. எங்களுக்குப் போக எவ்வளவு தர முடியும் என்றுதான் பேசுகிறது. அதையும் தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகிறது. அதனால்தான் மேலே உள்ள பகுதிகள் ஒரு ஆற்றின் இயல்பான நீரோட்டத்தை தடுப்பதாக (அணை) இருந்தால், கீழே உள்ள பகுதிகளின் ஒப்புதல் இன்றி செய்யக்கூடாது என்ற சர்வதேச நெறியை அது மீறுகிறது. கர்நாடக நீர்ப்பாசனத்துறை செயலரும் சரி, கர்நாடக முதலமைச்சரும் சரி வெளிப்படையாகவே இந்த நெறியை மீறிப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. இதன்படி பார்த்தால் இந்தியாவைக் கேட்காமலேயே பிரம்மபுத்திராவுக்கு குறுக்கே சீனா அணை கட்டிக்கொள்ளலாம் என்று ஆகிவிடும்.”

கர்நாடக அரசின் நிலையை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையையும் விமரிசனம் செய்திருக்கிறார்.

“நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்தான். ஆனால் நடுவர் மன்றத்தில் தமிழகம் இடைக்கால நிவாரணம் கோரியபோதும் சரி, ஆணையத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் மறுத்தபோதும் சரி, தமிழகம் எழுப்பிய சட்டரீதியான கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்காமல் நழுவியது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக 2007-ல் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 262 இன் படி தனக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். மாறாக, மேல்முறையீட்டை அனுமதித்து அதனைக் கிடப்பில் போட்டிருக்கிறது” என்று சாடியிருக்கிறார்.

Ramaswamy
முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர்

இரு மாநில விவசாயிகளையும் இணைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக, சென்னை மிட்ஸ் (MIDS) அமைப்பின் பேரா.ஜனகராஜனுடன் இணைந்து “காவிரி குடும்பம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதைப் பாராட்டுகிறார். அதன் முன்னோடியாக இருந்த கர்நாடக விவசாயி புட்டண்ணையா என்பவரும், பின்னாளில் “தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது” என்று போராடத் தொடங்கிவிட்டதை விமரிசிக்கிறார். கடைசியில் கோமாளித்தனமானது என்று கூறிக்கொண்டே வேறொரு தீர்வையும் முன்வைக்கிறார்.

“கர்நாடகம் செய்வது சரியல்ல. இருந்த போதிலும் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக கர்நாடகம் கருதுவதால், அவர்களுடைய மனப்போக்கை மாற்றும் பொருட்டு, 192 டி.எம்சி யில், 20 டி.எம்.சி தண்ணீரை குறைத்துக் கொள்வதாக தமிழகம் தானே முன்வந்து கூறலாம். இதன் மூலம், இதற்குத் நிரந்தரத்தீர்வு காண முயற்சிக்கலாம். மாதம் தோறும் முறையாக தண்ணீர் திறந்து விடக் கோரலாம்” என்கிறார்.

கிட்டத்தட்ட பிச்சையெடுக்கும் நிலை அது. ராமசாமி ஐயர் கூறிய நிலையைக் காட்டிலும் தாழ்ந்த, நாயினும் தாழ்ந்த நிலைக்குத் தற்போது தமிழகத்தை தள்ளியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதற்குப் பின்னரும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனைத் தெரிந்து கொள்ள ராமசாமி ஐயர் இல்லை. அவர் சென்ற ஆண்டே இறந்து விட்டார்.

மேற்கண்ட விவரங்கள் பலருக்குத் தெரிந்திருக்க கூடியவைதான் இருந்த போதிலும் பூ என்றோ புட்பம் என்றோ நாம் சொல்வதைக் காட்டிலும், ஐயர் சொல்றா மாதிரி அதைச் சொல்லும்போதுதானே உலகம் அதை நம்புகிறது! எனினும் ராமசாமி ஐயர் கூறும் விசயங்கள் குறித்த அறிவு இருப்பதற்கான அறிகுறி எதுவும் சமஸின் எழுத்தில் தென்படவில்லை. ஆனாலும் தமிழ் சமூகத்துக்கு அறிவுரை கூறும் “தகுதி” தனக்கு இருப்பதாகவே அவர் கருதுகிறார்.

தமிழகம் கர்நாடகத்தை ஆதிக்கம் செய்கிறதாம் – சொல்கிறார் சமஸ்!

“இன்றைக்கு வரலாற்று நியாயங்களின் அடிப்படையிலேயே நமக்கான தண்ணீரைத் தர வேண்டும் என்று பேசுகிறோம். அந்த வரலாற்றின் அடிப்படை என்ன? அந்த நியாயத்தின் அடிப்படை என்ன? ஒருவகையில் அது ஆதிக்க வரலாறு; ஆதிக்க நியாயம்!” என்கிறார்.

ஆதிக்க வரலாறு, ஆதிக்க நியாயம் என்ற சொற்றொடர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம். பிரிட்டிஷ் அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் போடப்பட்ட ஒப்பந்தத்தைத்தான் அப்படி மிரட்டலான மொழியில் சொல்கிறார் சமஸ்.

இப்படி ஒரு கருத்து கர்நாடக மாநிலத்தில் பரவலாக நிலவுகிறது என்ற போதிலும், 1924 ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கும்போது அது ஒரு நியாயமற்ற ஆவணமாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் மைசூர் அரசின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு காரணம் பிரிட்டிஷாரின் வலிமை அல்ல. மாறாக, ஆற்றின் தலைக்கட்டுப் பகுதியில் உள்ளவர்கள் மீதுதான் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிந்து நதி விசயத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீது கட்டுப்பாடு அதிகம். அதேபோல கங்கை விசயத்தில் வங்கதேசத்தைக் காட்டிலும் இந்தியா மீதுதான் கட்டுப்பாடு அதிகம். 1924-ல் கர்நாடகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அதற்குப் பின் காவிரியில் வரிசையாக அணைகளைக் கட்டி விட்டனர். இப்போது தமிழகம்தான் பாதிக்கப்பட்ட மாநிலம்.!” என்கிறார் ராமசாமி ஐயர்.

தமிழகத்தின் “ஆதிக்க நியாயத்துக்கு” எதிராக சமஸ் வெளிப்படுத்தும் ஆவேசம் கண்டு நிலை குலையாமல் இருக்க வேண்டுமானால் நமக்கு கொஞ்சம் புவியியல் ஞானம் தேவைப்படுகிறது. பல்வேறு ஆறுகள் உற்பத்தியாகின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் கணிசமான பகுதி கர்நாடகத்தில் இருப்பதால், தமிழகத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிக நீர்வளமிக்கது கர்நாடக மாநிலம்.

தமிழகத்தைப் போல மூன்று மடங்கு நீர்வளம் கொண்டது கர்நாடகம்!

cauvery1
கர்நாடகத்துக்கு ஆறுகள் அளிக்கும் நீராதாரத்தின் அளவு 3,475 டி.எம்.சி. இவற்றில் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும் 13 ஆறுகளிலிருந்து ஓடும் நீரின் அளவு மட்டும் 2,000 டி.எம்.சி. படத்தில் மைசூருவில் ஓடும் காவிரி!

தமிழகத்தின் ஆறுகள் ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட மொத்த நீராதாரங்களுக்கு ஓராண்டில் சராசரியாக கிடைக்கும் நீரின் அளவு – 853 டி.எம்.சி. இதில் வெளி மாநிலங்களிலிருந்து (காவிரி உள்ளிட்ட) ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு 243 டி.எம்.சி. வங்கக் கடலில் கலக்கும் நீரின் அளவு 177 டி.எம்.சி.

கர்நாடகத்துக்கு ஆறுகள் அளிக்கும் நீராதாரத்தின் அளவு 3,475 டி.எம்.சி. இவற்றில் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும் 13 ஆறுகளிலிருந்து ஓடும் நீரின் அளவு மட்டும் 2,000 டி.எம்.சி. இதில் கடலில் கலக்கும் நீரின் அளவு சுமார் 1,500 டி.எம்.சி.  3,475 டி.எம்.சியில் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவு 1,872 டி.எம்.சி.

கர்நாடகத்தின் பதினொரு பெரிய அணைகளின் கொள்ளளவு 705 டி.எம்.சி. தமிழகத்தின் பதினொரு பெரிய அணைகளின் கொள்ளளவு 190 டி.எம்.சி.

கர்நாடகத்தில் மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் காவிரிப் பாசனப்பகுதிக்கு மிக அருகாமையில் ஓடும் ஆறுகள் தரும் நீரின் அளவு மட்டும் 923 டி.எம்சி. காவிரிப் பாசனப்பகுதி மாவட்டங்கள் பலவற்றுக்கு இவற்றைத் திருப்பி விட முடியுமென்று கூறுகிறார் தமிழக பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.எஸ்.சுப்புராஜ். இவ்வாறு அந்த ஆறுகள் சிலவற்றை கிழக்கு நோக்கி திருப்புவதன் மூலம் சுமார் 142 டி.எம்.சி நீரை காவிரிப் பாசனப்பகுதிக்கு கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டத்தை 2002 இல் எஸ்.எம்.கிருஷ்ணா அரசு உருவாக்கியிருந்ததாக கூறுகிறார் முன்னாள் கண்காணிப்புப் பொறியாளர் நடராசன்.

கர்நாடகத்தின் மக்கட்தொகை சுமார் 6.1 கோடி என்பதையும், தமிழகத்தின் மக்கட்தொகை சுமார் 7.21 கோடி என்பதையும் இந்த இடத்தில் நினைவிற் கொள்ள வேண்டும்.

எனவே கர்நாடகம் தனது பாசனப்பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கான நீராதாரத்தை வழங்காமல் தமிழகம் பறித்துக் கொள்வதைப் போல சமஸ் உருவாக்கும் சித்திரம் உண்மைக்கு மாறானது. பெங்களூருவைச் சேர்ந்த சமூகப் பொருளாதார ஆய்வுக்கழகம் 2013 இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக நாளொன்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீர் எடுக்கப்படுகிறது. அதில் 48% நீர் வீணடிக்கப்படுகிறது. குடிநீரை வீணடிப்பதில் நாட்டிலேயே கல்கத்தாவுக்கு முதலிடம் (50%). பெங்களூருவுக்கு இரண்டாமிடம்.

இதைப்பற்றி கேள்வி எழுப்புவதற்கான தகுதி தமிழகத்துக்கு உண்டா, அல்லது “கர்நாடகத்துக்குள்ளான” நீராதாரம் பற்றி நாம் கேள்வி எழுப்பக் கூடாது என்று சமஸ் கூறுவாரா? மகாராட்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் ஆந்திரம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கும் கிருஷ்ணா நதி, எந்த “மாநிலத்துக்குள்ளான” நீராதாரம்? மகாராஷ்டிரத்துக்கு 666 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 911 டிஎம்சி, ஆந்திரத்துக்கு  1,001 டிஎம்சி  என்று கிருஷ்ணா நதி தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருப்பதை சமஸ் அறிவாரா?

காலையில் பெங்களூருவின் கழிவுநீர், மதியம் தமிழகத்தின் குடிநீர்!

Nityanand_Jayaraman
பெங்களூருவின் கழிவறைகளிலிருந்து காலையில் வெளியேற்றப்படும் கழிவு நீர், அன்று மதியம் நமக்கு குடிநீராக வந்து சேருகிறது என்று எழுதுகிறார் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்.

“காவிரி குடும்பம்” என்ற முயற்சியின் அங்கமாக பல முறை கர்நாடகத்துக்கு சென்று வந்துள்ள ரங்கநாதன், அங்கே புன்செய் நிலங்களில் கரும்பு போன்ற நன்செய் பயிர்களை வலியப் பயிர் செய்து, கோடையில் கூட ஏராளமான தண்ணீரை வீணடிப்பதாக கூறுகிறார். அங்கே பாசனப்பரப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், காவிரி டெல்டாவின் நெல் உற்பத்தி 38 லட்சம் டன்னிலிருந்து 18 லட்சம் டன்னாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கூலி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 80 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இவை 2013-ல் ரங்கநாதன் கூறியவை. இன்று அதற்கும் வழியில்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நெல் விளைவதற்கு மட்டுமே ஏற்ற பகுதியான டெல்டாவில் மாற்றுப் பயிர்களைப் பற்றி யோசிக்குமாறும் நீர் மேலாண்மை சரியில்லை என்றும் அறிவுரை சொல்கிறார் சமஸ்.

பெங்களூருவின் கழிவு நீர் ஆண்டொன்றுக்கு 20 டி.எம்.சி, விருஷபாவதி ஆற்றில் விடப்பட்டு, காவிரி நீராக கணக்கிடப்பட்டு மேட்டூருக்கு அனுப்பப்படுகிறது. பெங்களூருவின் கழிவறைகளிலிருந்து காலையில் வெளியேற்றப்படும் கழிவு நீர், அன்று மதியம் நமக்கு குடிநீராக வந்து சேருகிறது என்று எழுதுகிறார் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்.

“விருஷபாவதி ஆற்றங்கரையில் புளியஞ்சாதம் சாப்பிட்ட சுகானுபவம்” பற்றி தி.ஜானகிராமன் யாருக்காவது “லட்டர்” எழுதியிருந்தால், அந்த இலக்கியத்தை உடனே சமஸுக்கு அனுப்பி வையுங்கள். அப்புறமாவது கர்நாடகத்தின் தகுதி குறித்த்து அவர் கேள்வி எழுப்புகிறாரா பார்ப்போம்.

தமிழகம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அணை கட்டி விட்டதாம், அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால்தான் அணை கட்டியிருக்கிறார்களாம். “காலத்தால் முன்னேறிய மாநிலம், தங்களுடைய முன்னுரிமை தொடரவேண்டும் என்று பேசுவதுதான் சமூக நீதியா?” என்று வருண சாதி ஆதிக்கம் செய்வோரின் இடத்தில் தமிழகத்தையும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் இடத்தில் கர்நாடகத்தையும் வைத்து சமூக நீதி அரசியலை தாக்குகிறார் சமஸ்.

VRISHABHAVATH
பெங்களூருவின் கழிவு நீர் ஆண்டொன்றுக்கு 20 டி.எம்.சி, விருஷபாவதி ஆற்றில் விடப்பட்டு, காவிரி நீராக கணக்கிடப்பட்டு மேட்டூருக்கு அனுப்பப்படுகிறது.

புல்லரிக்கிறது! எச்.ராஜா, நாராயணன், ராகவன், சுமந்த் சி ராமன், மாத்ருபூதம்,  பெருமாள்மணி, பானு கோம்ஸ் உள்ளிட்ட அறிஞர்கள் அனைவரும் ரூம் போட்டு யோசித்திருந்தாலும் திராவிட இயக்கத்தை மடக்குவதற்கு இப்படி ஒரு கேள்வி அவர்களுடைய மூளையில் உதித்திருக்குமா?

கட்டுரையின் முடிவில் சமஸுடைய தத்துவஞானத்தின் ஒளி குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி பரவத் தொடங்குகிறது.

“இன்றைக்கு சிந்து நதி உடன்பாட்டில், பாகிஸ்தானுடனான பகிர்வை ஏன் மாற்றிப் பரிசீலிக்கிறோம்? வளரும் காஷ்மீரின் தேவைகளுக்கு ஏற்ப நமக்கான நீரை அதிகம் எடுத்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கான பகிர்வைக் குறைக்க வேண்டும் என்று எந்த நியாயத்தின் அடிப்படையில் பேசுகிறோம்? இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு இந்த நியாயமே கோலோச்சும்” என்கிறார் சமஸ்.

துருக்கி யூப்ரடிஸ் நதியைத் தடுத்து இராக் மக்களைத் தவிக்க விட்டது போல, ஜோர்டான் நதியைத் தடுத்த இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைத் தவிக்கச் செய்ததைப் போல,  சிந்து நதியைத் தடுப்பதும் நியாயமாம். ஆனால் அது பாகிஸ்தானை தண்டிப்பதற்காக இல்லையாம். காஷ்மீரை முன்னேற்றுவதற்காம்!

பாருங்கள்! மோடிக்கும் ராஜ்நாத் சிங்குக்கும் தெரியாத இரகசியம் சமஸுக்குத் தெரிந்திருக்கிறது.

“இந்தியா சிந்து நதியைத் தடுப்பது எப்படி நியாயமோ, அப்படி கர்நாடகம் காவிரியை தடுப்பதும் நியாயம்” என்று விளக்குகிறார் சமஸ். எப்படியோ பாகிஸ்தானின் இடத்துக்கு தமிழ்நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். சென்ற இதழ் (அக்டோபர் 2016) புதிய ஜனநாயகத்தின் தலையங்கம், “பாஜக-வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?” என்று கேள்வி எழுப்பியிருந்தது. “ஆமாம்” என்று அதற்கு பதிலளித்திருக்கிறார் சமஸ்.

அவருடைய கட்டுரையின் கடைசிப் பத்தி இப்படி முடிகிறது.

samas with vadivelu
உங்க அளவுக்கு நடிக்கிறது ரொம்ப கஷ்டம் சமஸ் சார்!

“அது காவிரியோ, கிருஷ்ணாவோ, முல்லைப்பெரியாறோ நதிநீர்ப் பகிர்வில் நமக்குள்ள உரிமைகள் தனி. அவற்றை நாம் பறிகொடுப்பதற்கில்லை. ஆனால் உரிமைகளைப் பேசுவதற்கான தார்மீகத்தகுதி தமிழினத்துக்கு இருக்கிறதா?”

இந்த வரிதான், சமஸ் யாரென்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டும் முத்திரை வாக்கியம். தொலைக்காட்சி விவாதத்தில் “அக்லக்கை கொன்றது சரியா?” என்று பா.ஜ.க நாராயணனிடம் நெறியாளர் கேட்டால், “யாரைக் கொலை செய்தாலும் அதை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று நாராயணன் பதில் சொல்வார். ஒரு சிறிய இடைவெளி விட்டு அக்லக் பசுமாட்டைக் கொன்றிருக்கிறாரே அதை கண்டிக்காத உங்களுக்கு என்னைக் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறதா?” என்று திருப்பியும் கேட்பார். இதுதான் சங்க பரிவார மூளை. சமஸின் மூளை.

“எந்தச் சமூகமாவது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் கழிவுகளை வலிய எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுமா?” என்று சமஸ் எழுப்பியிருக்கும் கேள்விக்கு நமது பதில் – சாப்பிடும், சமஸ் அவர்களே, சாப்பிடும்.

“சிந்து நதியைப் போல காவிரியைத் தடுப்பதும் நியாயமே” என்று கூறும் உங்கள் எழுத்தை மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல் படிக்க முடிந்த தமிழ்ச் சமூகம், தனது தட்டின் ஓரத்தில் கழிவை வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்கா கூச்சப்படப் போகிறது?

  • சூரியன்

கட்டுரை ஆதாரங்கள்:

மரபீனிக் கடுகு – சிறப்புக் கட்டுரை

0

மரபீனிக் கடுகு: இந்திய உணவுச்சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும்
வல்லரசுகளின் இன்னுமொரு ஆயுதம்!

2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது 2016-ல் மரபீனிக் கடுகு வந்திருக்கிறது!

CitizenCattle
பன்னாட்டு நிறுவனங்களுக்கு பால் கறக்கும் மாடாக குடிமக்கள் (மரபீனி விதைகள், கடன், போலீஸ் அடக்குமுறை அரசு, பொய்கள்…..)

டெல்லி பல்கலைக் கழகத்தின் ‘தாவரங்களின் மரபியல் ஆராய்ச்சி’ப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பெண்டல் மற்றும் அவரது குழுவினர், DMH-11 (DHARA MUSTARD HYBRID-11) எனப்படும் மரபீனிக் கடுகுப் பயிரை, தங்கள் கண்டுபிடிப்பு என உரிமை கொண்டாடி, வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதிகோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

மரபீனிப் பயிர்களை நம் நாட்டில் அனுமதிப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் அதிகார அமைப்பான ‘மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு’(GEAC), மரபீனிக் கடுகு பற்றி முடிவெடுக்க, தனியாக ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை நியமித்தது. இத்துணைக் குழு “மரபீனிக் கடுகுப் பயிரை நம் நாட்டில் பயிரிட அனுமதிக்கலாம்” என பரிந்துரை செய்துள்ளது! மனிதனுக்கோ,விலங்குகளுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை என மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகமும் அறிவித்து விட்டது! ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பியதை அடுத்து கடந்த 24-6-2016-ல் இந்தியாவில் பயிரிடுவதற்கு அனுமதிக்கும் முடிவை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளது ‘மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு’(GEAC)!

no-gmo
“கொலைகார மரபணு மாற்ற விதைகள்”

ஏற்கனவே நாடு முழுவதும் எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக பி.டி.கத்திரியை மத்திய அரசு நிரந்தரமாகத் தடை செய்ததுள்ள நிலையில், அடுத்தடுத்து மரபீனிப் பயிர்களுக்கான ஆராய்ச்சிகள் தொடர்வதற்கு காரணம் என்ன? இந்த ஆராய்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம் என்ன?

மரபீனிக் கடுகு என்பது மண்ணில் இயற்கையாக உயிர்வாழும் “பேசில்லஸ் அமைலொ லிக்யுபாசியன்ஸ்” (bacillus amyloliquefaciens) என்ற பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ‘பர்னாஸ்’, ‘பர்ஸ்டர்’, மற்றும் ‘பார்’ ஆகிய மூன்று ஜீன்களை உள்ளடக்கியது!. இதில் பர்னாஸ் ஜீன், ஆண் பூக்களின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியது. பர்ஸ்டர் ஜீன், தாய் தாவரத்தில் உள்ள ஆண் மலட்டுத்தன்மையை தடுத்து பெண்பூக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பார் ஜீன், என்பது குளுஃபோசினேட் (glufocinate) என்ற களைக் கொல்லியை எதிர்த்து கடுகுப்பயிர் வளர்வதற்கு உதவும். இம்மூன்று ஜீன்களையும் ஒன்றாக இணைத்து DMH-11 என்ற மரபீனிக் கடுகுப்பயிரை உருவாக்கியுள்ளார்கள்!

களவாணிளும்-கைக்கூலிகளும்!

Grinding-Mustard-Seed-for-oil
கடுகிலிருந்து எண்ணெய் எடுக்கும் பாரம்பரிய முறை

மரபீனிக் கடுகுக்கு டெல்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பெண்டால் குழுவினர் உரிமைக் கொண்டாடினாலும், ஏற்கனவே, இது, “2002-ல் பேயர் நிறுவனத்தின் ப்ரோ-அக்ரோ விதைக்கம்பெனி உருவாக்கிய மரபீனிக் கடுகின் தொழில்நுட்பம்தான்” என்று பல சமூகவியலாளர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். மேலும் இந்த பெண்டால் கருத்து திருட்டுக்காகவும், தொழில்நுட்ப திருட்டுக்காவும் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர் என்பதும் அமபலமாகியுள்ளது! கண்டுபிடிப்பாளர்களே திருடர்கள் என்றால், இதற்குப் பரிந்துரை செய்த துணைக்குழு உறுப்பினர்கள் கைக்கூலிகளாகத்தானே இருக்க முடியும்!

  • K.வேலுத்தம்பி – துணைக்குழுவின் தலைவரான இவர், ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் நிதியுதவில் நடைபெறும் நோய்தாக்குதலை எதிர்த்து வளரும் மரபீனி அரிசி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
  • SR.ராவ்- சின்ஜென்டா நிறுவனத்தின் நிதியுதவியில் நடைபெறும் தங்க அரிசி ஆராய்ச்சியில் பணிபுரிந்து வருபவர்.
  • B.செசிகெரன்- பேயர், மான்சாண்டோ, பி.எ.எஸ்.எஃப்,போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினராக உள்ள ‘சர்வதேச வாழ்வியல் அறிவியல் கழக’த்தின் உறுப்பினர்! மத்திய அரசின், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின்(NIN) முன்னாள் இயக்குனர்!

இவர்களைப் போன்ற, பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளின் கையில்தான், நமது தாவரங்களின் மரபியல் ஆய்வுகளும், எதிர்கால விவசாயமும் சிக்கியுள்ளது!

மரபீனிக் கடுகின் இலக்கு இந்தியாவின் எண்ணெய்ச் சந்தை!

அறிவியல் ரீதியாகவே மரபணு தொழில்நுட்பம் ஆபத்தானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. “ஊடுருவித் தாக்கும் மரபணு தொழில்நுட்பம் ஒரு நாட்டின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப உருவாகி வளர்ந்த மரபணுப் பயிர்களை அழித்து, அந்நாட்டின் பல்லுயிர் தன்மையை ஒழித்துக்கட்டிவிடும். ஒரு முறை இத்தகைய மாற்றம் நடந்துவிட்டால், அதன் பிறகு எப்போதுமே அதை மீட்டெடுக்கவே முடியாது.!” என்று அறிவியலாளர்களே அலறுகிறார்கள்.

“மனித உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். இயற்கையின் சமநிலை சீர்குலையும். நிலமும் நீரும் நஞ்சாகிவிடும். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்! குளுஃபோசினேட் களைக்கொல்லியை தொடர்ந்து பயன்படுத்துவதால் எதற்கும் கட்டுப்படாத வீரிய களைச்செடிகள் உருவாகும்!”என்று உலகம் முழுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்!

கடுகு விவசாயம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கனடாவின் செர்ப்ரூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில், மரபீனி சோளம் பயிராகும் பகுதியில் வாழும் 93% கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் பி.டி மரபீனியின் விஷம் பரவி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்!

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய மரபணுப் பொறியியலின் தந்தை என்று கருதப்படும் டாக்டர் புஷ்ப பார்கவா, “மரபணுக் கடுகு தொடர்பான ஆய்வில் பல ஓட்டைகள் உள்ளன, உயிரிப் பாதுகாப்பு சோதனைகள்(BIOSAFTY) போதாது, ஒழுங்குமுறை/ கட்டுப்பாடு சரியில்லை” என்று குற்றம் சாட்டுகிறார்!

கார்ப்பரேட் ஆதிக்கம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களோ, தமக்கு லாபம் ஈட்டித்தராத எந்த அறிவியலையும் (இயற்கை, சுற்றுச்சூழல், விவசாயம் பற்றிய அறிவியலை) கண்டு கொள்வதில்லை! அவர்களின் ஒரே குறிக்கோள் சந்தையும், லாபமும்தான்! மரபீனிக் கடுகின் இலக்கு இந்திய சமையல் எண்ணைச்சந்தை!

கடுகு விவசாயம் ஒரு பார்வை

packaged-oil-prices
இந்திய உணவு எண்ணெய்ச் சந்தை

இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்களில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை முக்கிய சமையல் எண்ணெயாக பயன்படுவது போல, வடக்கு, கிழக்கு மாநில மக்கள் பாரம்பரியமாக கடுகு எண்ணெயைத்தான் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ராஜஸ்தான்,ம.பி, ஹரியான,உ.பி, மாநிலங்களில் அதிகளவில் கடுகு விவசாயம் நடக்கிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களிலும், சில இடங்களில் சிறு விவசாயிகளால் கோதுமையின் ஊடுபயிராகவும் கடுகு பயிரிடப்படுகிறது. இவ்வாறு நாடு முழுவதும் சுமார் 60.36 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 80 லட்சம் டன் கடுகு அறுவடையாகி வருகிறது. பெரும்பாலும் பாரம்பரிய முறையிலான எண்ணெய் பிழியும் 7000-9000 தொழில்கூடங்களில் தான் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது. மிகக் குறைந்த அளவிலேயே நவீன தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய்யப்படுகிறது.

உற்பத்தியும் இறக்குமதியும்

இயல்பில், அதிக காரநெடியும், பிசுபிசுப்புத் தன்மையும் கொண்ட கடுகு எண்ணெயில் இருதய நோய்க்குக் காரணமான கரையாத கொழுப்புகளைக் கரைக்கும் வேதியியல் பொருள்கள் உள்ளன என இந்திய கடுகு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது! இதன் புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், இலைகள் மக்களின் கீரை உணவாகவும் பயன்படுகிறது! மக்களின் இந்த பாரம்பரிய உணவுப் பழக்கத்தை 1990-ல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை தலைகீழாய் புரட்டிப் போட்டுவிட்டது!

பன்னாட்டுக் கம்பெனிகளின் காவல் நாயாக மத்திய அரசு!

parm-oil-imported
இறக்குமதி செய்யப்படும் பாம் ஆயில்

“உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியைக் குறைத்து, தாராள இறக்குமதியை ஊக்குவிப்பது” என்ற மக்கள்விரோதக் கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால், பாமாயில், சோயா எண்ணைகளை பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியச் சந்தையில் இறக்கிவிட்டன. 1998-ல் சர்வதேச சந்தையில் ஒரு டன் 150 டாலருக்கு விற்ற சோயா எண்ணெய்க்கு, அமெரிக்கா 190 டாலர் மானியம் கொடுத்து தனது எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தது! ஏசியான் நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு மலேசியா, இந்தோனேசியா நாடுகள் மிகக் குறைந்த விலையில் பாமாயிலைக் கொண்டுவந்து குவித்தன! இதனால் உள்நாட்டு சமையல் எண்ணெய்கள் விலையிழந்து, எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் விவசாயமும் அழியத் தொடங்கிவிட்டது! இத்துடன், நிறம், வாசனை, ருசியற்ற சோயா, பாமாயில் எண்ணெய்களை, நம் உள்நாட்டு எண்ணெய்களுடன் எளிதாகக் கலந்து விற்கும் கலப்பட எண்ணெய் மோசடிகளும் அதிகரித்தது!

import-of-vegetable-oils
எண்ணெய் இறக்குமதி நிலவரம்

நமது நாட்டின் சமையல் எண்ணெயின் ஒருவருடத்தேவை சுமார் 217 லட்சம் டன். இதில் உள்நாட்டு உற்பத்தி 89.78 லட்சம் டன். மீதி 127.31 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது!  (அட்டவணை கட்டுரையின் இறுதியில்) அதாவது, உள்நாட்டின் 68% தேவைக்கு அந்நிய நாடுகளை நம்பியே இருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள் ளோம்! ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 கோடி ரூபாயை சமையல் எண்ணை இறக்குமதிக்காக மத்திய அரசு செலவிடுகிறது!

ஆண்டுக்கு 20% என அதிகரித்து வரும் இறக்குமதி சந்தையை முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நோக்கத்திற்காகவே தனது உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயத்தை திட்டமிட்டு ஒழித்துக்கட்டி வருகிறது மத்திய அரசு!

edible-oil-situation
உற்பத்தியும் இறக்குமதியும்

2005-06-ல் உள்நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தி 83.16 லட்சம் டன்னாகஇருந்தது. ஒன்பதாண்டுகள் முடிவில் 2014-15-ல் சுமார் 5 லட்சம் டன்கள் மட்டுமே உயர்ந்து 89.78 லட்சம் டன்னாக இருந்தது! இதே காலத்தில் சமையல் எண்ணெய்யின் இறக்குமதி 40.91 லட்சம் டன்னிலிருந்து 127.31 லட்சம் டன் என மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது! பன்னாட்டுக் கம்பெனிகளின் காவல் நாயாக மத்திய அரசு செயல்படுவதை, மேற்கண்ட மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களே நிரூபிக் கின்றன!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“பூச்சி,நோய் தாக்குதல் இல்லாதது”, “25% அதிக விளைச்சல் திறன்”, என்ற வழக்கமான விளம்பரங்களுடன் வரும் மரபீனிக் கடுகுப் பயிரைவிட கூடுதல் விளைச்சல்தரும் உள்நாட்டுரகங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதைக்கூட புறக்கணித்துவிட்டு, மரபீனிக் கடுகை அனுமதிக்க முயல்வது, உள்நாட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யும் பச்சைத் துரோகம்! கடுகு எண்ணெய்ச் சந்தையை, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இறக்குமதி எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ருச்சி, காத்ரெஜ், அதானி, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் சதி!

மோடியே பன்னாட்டு நிறுவனங்களின் மரபணுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வீரிய ரகம்தான்! இதனுடன் ‘இந்துத்துவா’ மரபணுவை சற்று தூக்கலாக பிணைத்துவிட்டால் கிடைப்பதுதான் ‘இந்தியாவின் வீரிய வளர்ச்சி’! இப்போது சொல்லுங்கள் மோடி வளர்ச்சியின் நாயகனா? இல்லையா?

எண்ணெய் வருடம்

நவம்பர்அக்டோபர்

எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி*

உள்நாட்டின் மொத்த .. உற்பத்தி அளவு.

இறக்குமதி **

மொத்த பயன்பாடு

2005-2006

279.79

83.16

40.91

124.07

2006-2007

242.89

73.70

46.05

119.75

2007-2008

297.55

86.54

54.34

140.88

2008-2009

277.19

84.56

74.98

159.54

2009-2010

248.83

79.46

74.64

154.1

2010-2011

324.79

97.82

72.42

170.24

2011-2012

297.98

89.57

99.43

189

2012-2013

309.43

92.19

106.05

198.24

2013-2014

328.79

100.80

109.76

210.56

2014-15

266.75

89.78

127.31

217.09

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

ஐ.எஸ் – சவுதி கூட்டணி அமெரிக்காவுக்குத் தெரியும் !

0

சுலாமிய ஜிஹாதுக்கு இருபத்தோராம் நூற்றாண்டுக்கான புதிய விளக்கங்கள் படைத்தளித்த அமெரிக்கா, ஆப்கானிய முஜாஹிதீன்கள், தாலிபான்கள் உள்ளிட்ட ‘போராளிகளையும்’ உலகிற்கு படைத்தளித்த பெருமைக்கு உரியது. மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை தடையின்றி உறிஞ்சுவது, பெட்ரோல், டாலரின் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வது உள்ளிட்ட நோக்கங்களுக்காக வளைகுடா நாடுகளைத் தனது அடிவருடிகளாக போற்றி வளர்த்து வருகின்றது அமெரிக்கா. அதோடு கூட, தனக்கு படியாத வளைகுடா நாடுகளில் ‘ஜனநாகத்தின் சுவிசேஷத்தை’ அறிவிக்கும் வஹாபிய காலாட்படைகளுக்கு தத்துவார்த்த போதகராகவும் சவுதி உள்ளிட்ட வளைகுடா அடிவருடிகளைப் பயன்படுத்தி வருகிறது.

isisflagஅந்த வகையில் ரசிய சார்பு சிரியாவுக்கு ’ஜனநாயக’ பாடம் எடுக்க அமெரிக்க ஏற்பாட்டிலும் சவுதி ஷேக்குகளின் மேற்பார்வையிலும் களமிறக்கப் பட்ட ஐ.எஸ் கும்பல், ஒருகட்டத்தில் கையை மீறிச் சென்றவுடன், அவர்களை பயங்கரவாதிகள் என்று ஒழிப்பதாக மாற்றிக் கொண்டது அமெரிக்கா. அல் – கைதா, ஐ.எஸ் போன்ற இசுலாமிய அடிப்படைவாத – பயங்கரவாத கும்பல்கள் அமெரிக்க மூளைகளின் குறைப்பிரசவங்கள் என்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்ட அடிப்படைவாத இசுலாத்திற்கென்றே சொந்த முறையிலான இயங்குமுறை இருக்கின்றது. அமெரிக்க நோக்கமும் அது பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகளின் நோக்கமும் தன்னியல்பாகவே ஒருகட்டத்தில் முரண்பட்டாக வேண்டும். அந்த முரண்பாடுகளை தனது நலனுக்காக அமெரிக்க பயன்படுத்தவும் செய்கிறது.

தற்போது ஐ.எஸ். இயக்கத்திற்கு எதிராக தீவிரமாக களமாடுவதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, அதன் தத்துவ குருமார்களின் ஒத்துழைப்பு பூரணமாக தனக்குக் கிட்டவில்லையே என ஆத்திரப்படுகிறது. அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடு அமெரிக்க அதிகாரவர்க்கத்தினரிடையே எதிரொலிப்பதையே RT இணையத்தில் வெளியான இந்தக் கட்டுரை உணர்த்துகிறது. கொலை வழக்கில் ஒன்றில் சவுதி இளவரசர் ஒருவர் சமீபத்தில் மரணதண்டனை பெற்றது குறித்து இசுலாமிய மதவாதிகள் அந்த நாட்டின் நீதி வழுவாமையை போற்றுகின்றனர். ஆனால் உலகெங்கும் அப்பாவி முசுலீம்களைக் கொல்லும் அமெரிக்கா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கூட்டாளியாக சவுதி விளங்குவதை மறைக்கின்றனர். – வினவு

சவுதியும் கத்தார் நாடும் ஐ.எஸ்-சுக்கு ’இரகசிய’ உதவி அளிப்பதை ஹிலாரி கிளிண்டன் அறிவார் – விக்கி லீக்ஸ்

ஹிலாரியும் அவருடைய தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரான ஜான் பொடெஸ்டோவும் பரிமாறிக் கொண்ட  மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஐ.எஸ்-சுக்கு எதிராக தொடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் போரின் திரைமறைவு வேலைகள் அம்பலமாகியுள்ளன. வெளிடப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில், சவுதியும் கத்தாரும் ஐ.எஸ்-க்கு “நிதி மற்றும் பொருள்” உதவிகள் செய்ததை ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.

சவுதியும் கத்தாரும் ஐ.எஸ்-சுக்கு உதவப்போவதில்லை என்று ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தன. இந்நிலையில் அதை மீறி இவ்விரு நாடுகளும் ஐ.எஸ் மற்றும் பிற சன்னி பிரிவு இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்கு கள்ளத்தனமாக ஆயுதம் மற்றும் பொருளுதவிகளை செய்கின்றன எனத் தாம் கருதுவதாக ஹிலாரி, பொடெஸ்டோவுக்கு மறுமொழி எழுதியுள்ளார்.

மேலும் ஹிலாரி ” ஐ.எஸ்-க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்திருந்தாலும், நாம் நம்முடைய தலைமைத்துவத்தையும், பழைய பாரம்பரிய வகைப்பட்ட இராஜதந்திரங்களையும் பயன்படுத்தி சவுதி மற்றும் கத்தார் நாடுகளுக்கு மேலதிக அழுத்தங்களைத் தரவேண்டும். ஏனென்றால் இவர்கள் ஐ.எஸ் மற்றும் சன்னி இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு ஏராளமான பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் இரகசியமாகச் செய்து கொண்டு வருகின்றனர்” என்று பொடெஸ்டோவிடம் குறிப்பிட்டுள்ளார்.

”இராஜதந்திர அழுத்தங்களோடு குர்து தேசிய அரசாங்கத்திற்கு கூடுதல் உதவிகளையும் செய்ய வேண்டும். சவுதியும், கத்தாரும் இதன்மூலம் தங்களுடைய சன்னி மார்க்க அடிப்படைவாதத்தை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கட்டுப்படுத்த வைப்பது மேலும் அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்கிறார் ஹிலாரி.

Arab wealthy princesசவுதி அரேபியா இதற்கு முன்னரும் அல் குவைதா, தலிபான்கள் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்து வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை, பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றுவது போன்ற பல்வேறு அட்டூழியங்களையும் ஐ.எஸ்-சுக்கு நிகராகச் செய்து வருகின்றது.

சவுதி, கத்தார் நாடுகளுக்கெதிராக அமெரிக்கா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஐ.நா-வின் ”குழந்தைகளின் உரிமைக்கான கமிட்டி” சவுதியின் மனித உரிமை மீறல் குறித்து வெளிட்டுள்ள கடுமையான அறிக்கையின் மேல் அமெரிக்கா நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற நாடுகள் இதில் தலையிட வேண்டி வரும்.

2016-ம் ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் ஐ.எஸ்-சுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை என்ற பெயரில் பி-52 ரக குண்டு மழை பொழியும் போர் விமானங்களை அல் உதீத் ஏவு தளத்தில் நிறுத்தி வைத்திருந்தன.

சவுதி அரேபியாவும் தன் பங்குக்கு அமெரிக்காவுடன் இணைந்து ஐ.எஸ்-சுக்கு எதிராகப் போர் புரிவதாக அறிவித்தது. எனினும், இவையெல்லாம் வெற்று பம்மாத்துகளாக இருந்தனவே தவிர எதார்த்தத்தில் எதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் 2016 அன்று அல் நுஸ்ரா தளபதி அபு அல்-ஈஸ் “ அமெரிக்காவும் அதன் வளைகுடா கூட்டாளிகளும் தங்களுக்கு ஆயுதங்களை வழங்கினர்” என்று அம்பலப்படுத்தினார்.

இதை அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில், ”சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் குழுக்களை சிலர் ஆதரிக்கின்றனர், ஆயுதங்களும் கொடுக்கின்றனர். ஆனால் நிச்சயம் அமெரிக்கா அப்படிச் செய்யவில்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்த அந்நாட்டின் அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், இது நிலைமையை மேலும் சிக்கலாக்குவதாகவும் குறிப்பிட்டார்.

சவுதி, கத்தார் நாடுகள் தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்வது குறித்து  பொடெஸ்டோ மட்டுமல்ல, பிரிட்டனும் குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணைக்குழு ஒன்று அரபு நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் நாடுகளுடைய அரச பரம்பரையினர் தீவிரவாதக்குழுக்களுக்கு உதவி செய்வதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் சட்டங்கள் இயற்றவேண்டும் என அழுத்தம் கொடுத்தது.

அரச குடும்பங்களுக்கும், அரசாங்கத்துக்குமான பணப்பட்டுவாடா குறித்து அறிந்து கொள்வது மிக மிகச் சிரமமானது என்கிறார் பிரிட்டனின் வெளி நாட்டு குடிமைப் பணி தலைவரான டான் சக்(Dan Chugg). மேலும் அவர் கூறுகையில்  முந்தய காலங்களில் சவுதி தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்துள்ளது என்பதைக் வலியுறுத்தினார். மேலும், பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை தனது வளைகுடா பங்காளி நாடுகளின் சட்டங்கள் ஐ.எஸ். அமைப்புக்கு சென்று சேரும் நிதியாதாரங்களைத் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் எதிர்காலத்திலாவது ஐ.எஸ் நிதி பெறுவதைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ், அல் நுஸ்ரா போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு மட்டும் அரபு நாடுகள் நிதிப் புரவலர்களாக இருக்கவில்லை. அடிப்படைவாத மதகுருமார்களை களமிறக்கி தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கோசோவாவில் வகாபியத்தை அறிமுகம் செய்வதற்கும் சவுதி, கத்தார், குவைத் போன்ற நாடுகள் ஏராளமாக நிதியுதவி செய்து வருவதை கடந்த  மே மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

பால்கன் போரினால் பாதிக்கப்பட்ட கோசோவாவில் திடீரென இசுலாமிய தொண்டு நிறுவனங்கள் முளைக்கத் துவங்கின. இத்தொண்டு நிறுவனங்கள் போரினால் பாதிப்புள்ளான மசூதிகளை மீண்டும் நிர்மாணிக்க உதவி செய்ததற்கு கைமாறாக கொசோவோ இசுலாமியர்களுக்கு பர்தா உள்ளிட்ட பிற்போக்கான மதச்சட்டங்களை அறிமுகம் செய்து வைத்தன.

ஒருவேளை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குப் பணத்தை வாரி இறைத்ததைப் போல கோசோவாவிலும் வகாபிசத்தை விரிவடையச்செய்து, நிதியையும் கொட்டினால் அமெரிக்கா மேலும் சில பெரும் போர்களுக்குத் தயாராக வேண்டிய நிலை வரும். உதாரணமாக சவுதியால் நிதி உதவி செய்யப்படும் அல் வாக்ஃப்-அல் இஸ்லாமி நிறுவனம் 2000 முதல் 2012-ம் ஆண்டு வரை ஏறக்குறைய 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகத் திரட்டியுள்ளது.

தமிழாக்கம்: தரணி

மேலும் படிக்க :

இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குமா பொம்மை ? சிறப்புக் கட்டுரை

0
வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)

இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குவதாகக் கருதிக் கொண்ட பொம்மை!

கேஜ்ரிவாலைச் சந்தித்திருக்கிறார் இரோம் சர்மிளா. ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தனது 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்டபோது, தனது போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும், போராட்ட முறையை மாற்றி, தேர்தலில் போட்டியிட்டு மணிப்பூர் முதல்வராகி, அதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகவும் பத்திரிகையாளர்களிடம் அவர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியே கேஜ்ரிவாலுடனான இந்தச் சந்திப்பு.

அதாவது, டில்லி போலீசு கான்ஸ்டபிளின் மீது கூட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமில்லாத நிலையில் உள்ள கேஜ்ரிவாலிடம், இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழியை சர்மிளா கேட்டறியப் போகிறார் என்றும் இந்த சந்திப்புக்குப் பொருள் கொள்ளலாம்.

குறிப்பிட்ட அரசியல் – சமூக சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத போராட்ட முறைகளும், தீர்வுகளும் அவற்றை முன்னெடுக்கின்ற நல்லெண்ணம் கொண்ட மனிதர்களை எங்ஙனம் பரிதாபத்துக்குரிய வகையில் ஒரு சுழலில் சிக்க வைத்து விடுகின்றன என்பதற்கு இரோம் சர்மிளா ஒரு எடுத்துக்காட்டு.

நாவில் தேனைத் தடவித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் இரோம் சார்மிளா.
நாவில் தேனைத் தடவித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் இரோம் சார்மிளா.

நாசித்துவாரமே உணவுக்குழலாக மாற்றப்பட்ட நிலையில், நாவில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் படாமலும் மருத்துவமனையின் நிரந்தரத் தனிமையிலும் 16 ஆண்டு காலம் தாக்குப்பிடித்து நின்ற அந்தப் பெண்ணின் உறுதி மணிப்பூர் மக்களுக்குப் பெருமை சேர்த்தது. சர்மிளாவின் 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டம், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தையும், அந்த சட்டத்தை நியாயப்படுத்துகின்ற அதிகார வர்க்கம், ஓட்டுக்கட்சிகள், நீதிமன்றம் உள்ளிட்ட இந்த அரசமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும் போராட்டமாக அது இருந்தது.

இன்னொருபுறம், அந்தப் போராட்டம் நிறுவனமயமாகிக் கொண்டும் இருந்தது. மணிப்பூர் அரசின் அங்கமாகவே இந்திய இராணுவம் மாற்றப்பட்டிருப்பதைப் போலவே, இராணுவச் சட்டத்துக்கு எதிரான சர்மிளாவின் போராட்டத்தையும் இந்திய அரசு நிறுவனமயமாக்கியது. ஆண்டுக்கு ஒருமுறை சர்மிளா விடுவிக்கப்படுவதும், மீண்டும் கைது செய்யப்படுவதும், அன்றைக்கு மட்டும் தொலைக்காட்சி காமெராக்கள் அவரை மொய்ப்பதும், காலப்போக்கில் ஒரு சடங்கிற்குரிய உணர்ச்சியற்ற நிலையை எய்தி விட்டன. இந்த நிலையில்தான், சர்மிளா போராட்டத்தைக் கைவிடுவது என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

சர்மிளாவின் உயிரைப் பாதுகாப்பதற்கா? மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதற்கா?

மணிப்பூரில் ஒரு இலட்சம் இராணுவத் துருப்புகள் – பல பத்து ஆயுதக்குழுக்கள் – 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் சட்டமன்றத் தேர்தல் – அரசு அதிகாரத்திலமர்ந்து தின்றுகொண்டே, ஆயுதக்குழுக்களுடன் இரகசிய உறவு வைத்துக் கொள்ளும் கட்சிகள் – என முரண்பட்டவை போலத் தோற்றம் தரும் பல போக்குகள், தமக்குள் ஒரு ஒத்திசைவை எய்தியிருந்த பின்புலத்தில், இரோம் சர்மிளாவின் போராட்டத்தை நாம் பார்க்கவேண்டும்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்து உரையாடும் இரோம் சர்மிளா.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்து உரையாடும் இரோம் சர்மிளா.

ஐந்து மருத்துவர்கள், 12 செவிலியர்கள், 2 சிறைத்துறை மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய சுமார் 40 பேர் அடங்கிய குழு சர்மிளாவைப் பராமரித்து வந்தது. அவரது மூக்கு வழியாக உட்செலுத்தப்பட்ட ஊட்டச்சத்து உணவுக்காக மட்டும் மணிப்பூர் அரசு மாதம் 10,000 ரூபாய் செலவிட்டிருக்கிறது. இத்துடன் மேற்கூறிய 40 அலுவலர்களின் ஊதியத்தையும் சேர்த்துக் கணக்கிடுவோமேயானால், இரோம் சர்மிளாவைப் பராமரிக்கும் பொருட்டு அரசு ஆண்டுதோறும் சில கோடிகளைச் செலவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் செலவு, மணிப்பூர் மக்களின் உயிர்வாழும் உரிமைக்காகப் போராடிய சர்மிளாவின் உயிரைப் பாதுகாப்பதற்கான செலவு அல்ல; மணிப்பூர் மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதற்கு இந்திய அரசு பெற்றிருக்கும் அதிகாரத்தின் தார்மீக நியாயத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கானது. இது சர்மிளாவின் போராட்டத்திற்கு அரசு அளித்த மதிப்பு அல்ல, அவமதிப்பு.

இந்த உண்மை இரோம் சர்மிளாவுக்கு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் புரிந்திருக்கிறது என்று கூறவியலாது. 16 ஆண்டுகளுக்கு முன் மைலோம் படுகொலையின் கொடூரத்திற்கு எதிர்வினையாக சர்மிளா தொடங்கிய போராட்டம் என்பது ஒரு இளம்பெண்ணின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினை. தான் நடத்தும் போராட்டம் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அகற்றும் வல்லமை பெற்றதா என்று யோசித்து தொடங்கப்பட்டதல்ல அந்தப் போராட்டம். ஆனால் இன்று அவர் எடுத்திருப்பது நன்கு யோசித்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு.

போகாத ஊருக்கு வழி என்பது போராட்ட வடிவம் குறித்த பிரச்சினை அல்ல!

ஒரு போராட்ட வடிவம் பயனற்றது என்றோ, நிறுவனமயமாகிவிட்டது என்றோ புரிந்து கொண்டவுடனே பொருத்தமான மாற்று வடிவம் தெரிவு செய்யப்பட்டு விடுவதில்லை. உண்ணாநிலைப் போராட்டம் தோற்றுவிட்டதால், தேர்தலில் நிற்கப் போவதாகவும், போராட்ட வடிவத்தை மாற்றியிருப்பதாகவும் கூறியிருக்கிறார் சர்மிளா. முதல்வர் பதவியையே கைப்பற்றினாலும், அந்த சட்டத்தை இம்மியளவும் அசைக்க முடியாது என்பது சர்மிளாவுக்குத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மணிப்பூர் தாய்மார்கள், அம்மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள துணை இராணுவப் படை முகாம் முன்பு நடத்திய நிர்வாணப் போராட்டம். (கோப்புப்படம்)
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மணிப்பூர் தாய்மார்கள், அம்மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள துணை இராணுவப் படை முகாம் முன்பு நடத்திய நிர்வாணப் போராட்டம். (கோப்புப்படம்)

இருந்தபோதிலும், ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கு பதிலாக, “என்னுடைய வரம்பு இதுதான்” என்று தீர்மானித்துக் கொண்டு, அந்த வரம்புக்குட்பட்ட நடவடிக்கைகள் மூலமாகவே நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்பும் தலைவர்கள், அதே நம்பிக்கையை மக்களுக்கும் ஏற்படுத்த முனைகிறார்கள்.

தனது கோரிக்கைக்குப் பொருத்தமான போராட்ட முறையைத் தெரிவு செய்து கொள்ளத் தெரியாத அல்லது அதற்குத் தயாராக இல்லாத சமூகமும், “இது போகாத ஊருக்கு வழி” என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே, இன்னொருபுறம் அதன் மீதே நம்பிக்கையும் வைக்கிறது. வேறு வழியென்ன இருக்கிறது என்று கூறி தனது முரண்பட்ட நிலையை நியாயப்படுத்தவும் முனைகிறது.

ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு, இரோம் சர்மிளாவின் காந்திய போராட்டத்துக்கும் ஆதரவு, சட்டமன்றத் தேர்தலில் 80% வாக்குப்பதிவு – இதுதான் மணிப்பூர் சமூகத்தின் நிலை. மணிப்பூர் மக்களின் இந்த நிலை விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படாதவரை, தமது சொந்த நடைமுறையின் வழியாக அம்மக்கள் தங்களது முரண்பட்ட நிலையைப் புரிந்து கொள்ளாதவரை இதற்கு முடிவில்லை. இது போராட்ட வடிவங்களுக்கிடையிலான முரண்பாடு குறித்த பிரச்சினை அல்ல, மக்களுடைய அரசியல் புரிதலில் நிலவும் முரண்பாடு குறித்த பிரச்சினை.

ஏமாற்றம் மக்களுக்கா, சர்மிளாவுக்கா?

உண்ணாநிலையைக் கைவிட்டு தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்த இரோம் சர்மிளா மீது அதிருப்தி கொண்ட மணிப்பூர் சமூகத்தைப் பற்றி, எழுத்தாளர் ஷிவ் விசுவநாதன் கூறும் கருத்து நம் கவனத்துக்குரியது. “ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் ஒரு சமூகம், தியாகம் செய்யும் உண்மையான நாயகர்களிடம் மட்டும் வாழ்க்கையின் உயிர்த்துடிப்புகள் அனைத்தையும் துறந்த ஒரு நேர்மையை எதிர்பார்க்கிறது” என்று மக்களின் போலித்தனத்தை அவர் சாடுகிறார். இதனை போலித்தனம் என்பதா, அல்லது இலட்சியத் தலைவர்களிடம் மக்கள் கொண்டிருக்கும் வழிபாட்டுணர்வு கலந்த நியாயமான எதிர்பார்ப்பு என்பதா?

வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)
வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)

நாயகர்கள் எனப்படுவோரும் மக்களும் எதிரெதிராக நிறுத்தப்படும் இந்த நிலையில், யார் விமரிசனத்துக்குரியவர்கள்? இத்தனை காலம் எந்த மக்களுக்காக உடலை உருக்கிப் போராடினாரோ, அந்த மக்களே தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கருதுகிறார் சர்மிளா. தேர்தல் அரசியல் சபலங்களுக்கு ஆட்படாத இரும்புப் பெண்மணியாக தங்களால் கொண்டாடப்பட்ட சர்மிளா, தன்னிச்சையாக போராட்டத்தை முடித்துக் கொண்டதுடன், முதல்வராக விரும்புவதாகவும் கூறியதன் மூலம் தாங்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலும் மதிப்பிலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டதாக எண்ணுகிறார்கள் மணிப்பூர் மக்கள்.

காந்திய சாகசம்!

இரோம் சர்மிளாவைப் பொருத்தவரை, அவரே சொல்லிக் கொள்வது போல அவர் ஒரு காந்தியவாதி. “பதினாறு ஆண்டுகள் உண்ணாநிலை” என்ற காந்தியவாதியின் தனிநபர் சாகசம், எதிர்முனையில் மணிப்பூரில் இயங்கும் சுமார் 40 ஆயுதக்குழுக்களின் சாகசம் – இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது மணிப்பூர். காஷ்மீரோடு ஒப்பிடத்தக்க போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்கள் எதுவும் மணிப்பூரில் இல்லை. சர்மிளா என்ற தனிப்பட்ட பெண்ணின் போராட்டத்தையே தங்களது போராட்டமாக எண்ணி அம்மக்கள் இறுமாந்து இருக்கக்கூடும். சர்மிளாவை இரும்புப் பெண்மணியாகவும் தெய்வமாகவும் ஆக்கிய சூழல் இதுதான்.

“நான் தெய்வப் பெண் அல்ல, சாதாரணப் பெண்” என்று அவர் கூறிக்கொண்ட போதிலும், தன்னுடைய தியாகத்தின் காரணமாக மணிப்பூர் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தனக்கிருப்பதாக அவர் கருதிக் கொண்டு விட்டார். பட்டினி கிடந்தது அவராக இருக்கலாம். அவர் எதற்காகப் பட்டினி கிடந்தாரோ அந்தக் கோரிக்கை மணிப்பூர் மக்களுடையது.

“யாரும் சொல்லி நான் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. நானாகத் தொடங்கினேன்; நானே முடிக்கிறேன்” என்று தனது விமரிசகர்களுக்கு சர்மிளா கூறியிருக்கும் பதில் அவரது உளப்பாங்கை காட்டுகிறது. “நான் தொடங்கினேன், நான் மூடுகிறேன்” என்பதற்கு இது அவருக்குச் சொந்தமான பெட்டிக்கடை அல்ல, மக்களின் கோரிக்கை.”தொடங்கியவர்களுக்கு முடிக்கும் உரிமை உண்டு” என்று சர்மிளாவின் சார்பில் வாதிடுபவர்கள், “ஆதரித்த மக்களுக்கு எதிர்க்கும் உரிமை உண்டு” என்பதையும் அங்கீகரிக்க வேண்டும்.

“பதினாறு ஆண்டுக்காலம் நாவில் தண்ணீர் கூடப் படாமல் உறுதிமிக்கதொரு போராட்டத்தை நடத்திய ஒரு பெண்ணுக்கு தனது போராட்டத்தை முடித்துக்கொள்ளும் உரிமை கிடையாதா?” என்று யாரேனும் கேள்வி எழுப்பினால், “ஆம், உரிமை கிடையாது” என்று பதில் கூறும் தார்மீக பலம் மணிப்பூர் மக்களுக்கு இல்லை. அதே நேரத்தில், “என் போராட்டத்தை என் விருப்பப்படி நான் முடிக்கிறேன்” என்கிற சர்மிளாவின் ‘ஆணவத்தை’ ஏற்றுக்கொள்ளும் சுயமரியாதையற்ற நிலையிலும் அவர்கள் இல்லை.

மணிப்பூரின் புதல்வியா, சர்மிளாவின் மணிப்பூரா?

தனது போராட்டம் ஊடகங்களில் பிரபலமாகி, “மணிப்பூரின் புதல்வி சர்மிளா” என்பதற்கு பதிலாக “சர்மிளாவின் ஊர் மணிப்பூர்” என்று உலகத்தார் பேசும் நிலை வந்துவிட்டதன் காரணமாக, போராட்டத்தை முடித்துக் கொள்வது பற்றிக் கருத்து கூறும் தகுதி மற்றவர்களுக்கு இல்லை என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

“தங்களது லட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர், தங்களால் இயலாததைச் சாதிப்பவர், தங்களைக் காட்டிலும் நேர்மையானவர்” என்பன போன்ற பல மதிப்பீடுகளின் அடிப்படையில் தலைவர்களுக்கு மக்கள் வழங்கும் அங்கீகாரம்தான் – புகழ். அது ஒரு எழுதப்படாத ஒப்பந்தம். எந்தக் கணத்திலும் ரத்து செய்யப்படும் நிபந்தனையை முதல் சரத்தாக கொண்ட ஒப்பந்தம். “தங்களை விட மேலானவர் தலைவர்” என்று மக்கள் கொண்டிருக்கும் இந்தக் கருத்தை, “தன்னைக் காட்டிலும் கீழானவர்கள் மக்கள்” என்று ஒரு தலைவர் மொழிபெயர்த்துக் கொள்வாரானால், அந்த ஒப்பந்தம் மக்களால் ரத்து செய்யப்பட்டு விடும். ரத்து செய்யப்பட்ட பிறகுதான் தலைவர்கள் அதை தெரிந்து கொள்ளவே முடியும்.

ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தனது போராட்டத்தை முடித்துக் கொண்ட இரோம் சர்மிளா, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். ஆனால் அவருக்கு குடியிருக்க வீடு கொடுப்பதற்கு யாரும் விரும்பவில்லை. “தலைமறைவு ஆயுதக் குழுக்களுக்கு அஞ்சித்தான் மக்கள் இடம் தரத் தயங்கினார்கள்; வெளிமாநிலத்தவர் ஒருவரை சர்மிளா திருமணம் செய்து கொள்வதை மணிப்பூர் மக்கள் ஏற்கவில்லை” என்றெல்லாம் சிலர் இதற்கு விளக்கம் கூறுகிறார்கள். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது என்ற சர்மிளாவின் அரசியல் முடிவு காரணமாக மணிப்பூர் மக்களிடையே அவர் மீது பரவிவிட்ட கசப்புணர்வுதான் இதற்குக் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியவில்லை. தங்குவதற்கு வீடு கிடைக்காமல், 16 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே அவர் மீண்டும் திரும்ப நேர்ந்தது.

சாவியைத் தேடிய முல்லா!

“தேர்தலில் தனக்கு வாக்களித்து முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு மணிப்பூர் மக்களுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்” என்று கூறினார் சர்மிளா. “மாநில முதல்வர் என்ற பொம்மைப் பதவியில் அமர்ந்து கொண்டு இராணுவத்தின் நிழலைக்கூட தண்டிக்க இயலாது என்பது கூடவா சர்மிளாவுக்குத் தெரியவில்லை?”என்று அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொலைத்த இடம் இருட்டு என்பதால் அங்கே சாவியைத் தேடாமல், “விளக்கு கம்பத்தின் கீழே சாவியைத் தேடிய” முல்லாவின் நிலைக்கு வந்து விட்டார் சர்மிளா. மோசடியும் சுயமோசடியும் இரண்டறக் கலந்த நிலை இது.

பதினாறு ஆண்டுகளாகப் போராட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தின் காரணமாக, மற்றவர்களைக் காட்டிலும் தன்னுடைய புரிதல் மேம்பட்டதாக இருக்கும் என்றுகூட அவர் நினைத்திருக்கக் கூடும். “தாங்கள் நடைமுறையில் இருப்பவர்கள்” என்று அகம்பாவம் கொள்வோர் பலரையும் பீடிக்கும் நோயே இத்தகைய சிந்தனை.

கிணற்றுக்குள்ளேயே வாழ்வதனால் கிணறு பற்றிய தவளையின் ஞானம் மேம்பட்டதாகிவிடாது. அனுபவம் என்பது அறிவியலுக்கு மாற்றல்ல. “ஞானம்” கிணற்றுக்கு வெளியே இருக்கிறது.1991-இல் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச விதிகளுக்கும் எதிராக இருப்பது பற்றி ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு கேள்வி எழுப்பியபோது, “வடகிழக்கிந்திய மாநிலங்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று விடாமல் தடுப்பதற்கு இது அவசியம்” என்று விளக்கமளித்தார் இந்தியாவின் அட்டார்னி ஜெனரல்.

இந்தக் கருத்தை வழிமொழிபவர்தான் கேஜ்ரிவால். காஷ்மீர் மக்கள் முதல் வடகிழக்கிந்திய மக்கள் வரையிலான யாருடைய பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிக்காத கேஜ்ரிவாலை, தனது வழிகாட்டியாகத் தேடிக் கண்டடைந்திருக்கிறார் இரோம் சர்மிளா. கிணற்றுக்கு வெளியே வந்து அவர் தேடிக் கண்டடைந்திருக்கும் “ஞானம்” இது.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் இரோம் சர்மிளா தொடங்கிய உண்ணாநிலைப் போராட்டம் என்பது மைலோம் படுகொலையின் உணர்ச்சி பூர்வமான எதிர்வினை. அது “சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு” என்ற போதிலும், அந்த நடவடிக்கை இந்திய அரசமைப்பை வெளியிலிருந்து அம்பலப்படுத்தியது. தற்போது சர்மிளா “சிந்தித்து எடுத்திருக்கும் முடிவு”, மணிப்பூரை ஒடுக்குகின்ற இந்த அரசமைப்பின் அங்கமாக அவரை மாற்றுகிறது. இன்றைய ‘சிந்திக்கும்’ சர்மிளாவைக் காட்டிலும், அன்றைய ‘சிந்திக்காத’ சர்மிளாதான் ‘தெளிவாக சிந்தித்திருக்கிறார்’ என்று எண்ணுகிறார்கள் மணிப்பூர் மக்கள்.

“தன்னுடைய கதை, தன்னுடைய முடிவு” என்று கருதுகிறார் சர்மிளா.”கதை தங்களுடையது” என்று நினைக்கிறார்கள் மக்கள். மணிப்பூரில் ஒரு நம்பிக்கை இருக்கிறதாம். “யாராவது ஒரு கதையைச் சொல்லத் தொடங்கி, முறையாக அதனை முடிக்கத் தவறினால், மதம் பிடித்த யானையொன்று கனவிலும் அவரைத் துரத்தும்” என்பது அந்நம்பிக்கை. சர்மிளாவை யானை துரத்திக் கொண்டிருக்கிறது.

யானையால் துரத்தப்படும் அபாயம், முன்னோடிகள் – நாயகர்கள் எனப்படுவோர் அனைவருக்கும் உண்டு.

– மருதையன்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

சிவகாசி விபத்து : கொன்றது புகையா அரசின் அலட்சியமா ?

0
fire sivakasi

ருடா வருடம் தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு இணையாக பட்டாசு தொழில் விபத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துவதும் அதிகரித்து வருகிறது. சிவகாசி – விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள ராகவேந்திரா பட்டாசு கடையில் 20.10.2016 வியாழனன்று நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

வியாபாரம் என்றால் அதில் சாமி பேர் இருக்க வேண்டும் என்ற விதிக்கு தப்பாத ராகவேந்திர கடையில் நேற்று பட்டாசுகளை வெளியூருக்கு அனுப்பும் முகமாக சிறு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். பட்டாசு பெட்டிகளில் புகையைப் பார்த்த ஊழியர்கள் அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர்களும் அருகாமை கடைக்காரர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

நாற்புறமும் வெடித்துச் சீறிய பட்டாசால் கடை முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது. அந்த சிறு லாரியும், அருகில் இருந்த 20 இருசக்கர வாகனங்களும் எரிந்து கூடுகளாகின. அருகாமைக் கடைகளும் சேதமடைந்தன.

fire sivakasiராகவேந்திரா கடைக்கு பின்புறம் இருக்கிறது தேவகி ஸ்கேன் மையம். கடையை ஒட்டிய பாதை வழியேதான் இந்த ஸ்கேன் நிலையத்திற்கு செல்ல முடியும். விபத்தில் எழுந்த பிரம்மாண்டமான கரும்புகை ஸ்கேன் நிலையத்தை சூழ்ந்து நிரப்பியது. உள்ளே பணியாளர்களும், மருத்துவ சோதனைகளுக்கு வந்தோரும் அதில் மாட்டிக் கொண்டு மூச்சுவிடமுடியாமல் மாட்டிக் கொண்டனர்.

கண நேரத்தில் புகை அவர்களில் எட்டு பேரை கொன்று விட்டது. ஸ்கேன் நிலையத்தின் மேலாளர் பீட்டர், ஊழியர்களான காமாட்சி, வளர்மதி, புஷ்பகலட்சுமி, ராஜா, பத்மலதா மற்றும் சோதனைகளுக்கு வந்த தேவி, சொர்ணகுமாரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். புகை சூழ்ந்த நேரத்தில் உள்ளே இருந்த 41 மக்களில் 15 பேர் வெளியேற மீதிப்பேர் அரை மற்றும் முழு மயக்கமாகியிருக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 14 பேர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமென்று செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மூச்சுத்திணறல் ஏற்படுத்துமளவு புகை மண்டிவிட்டது. ஏ.சி கருவி மூலம் உள்ளே புகை சென்றது, நிலையத்தின் ஒருவழிப்பாதை எல்லாம் சேர்ந்து உயிரிழப்பை அதிகப்படுத்திவிட்டன.

நிலையத்தின் அபாய ஒலிக்கருவி ஒலித்ததை வைத்தே தீயணைப்புத் துறை வந்திருக்கிறது. இருப்பினும் எட்டு பேர் பலி. பிறகு ராகவேந்திரா கடை உரிமம் வைத்திருப்பவரான ஆனந்தராஜ் மற்றுமை கடையை நடத்திய செண்பகராமன் மீது போலிசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஊடகங்களிலும் செய்தி வெளியாகிவிட்டது. அவ்வளவுதானா?

இது விபத்தா இல்லை தொழிலாளிகள் – மக்கள் மீது அரசும் முதலாளிகளும் சேர்ந்து காட்டும் அலட்சியத்தினால் நடந்த கொலையா?

சிவகாசியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் பல 20 ஆண்டுகளுக்கு முன் உரிமம் பெற்றவை. ஆனால் 2008 வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி எந்த நகருக்குள்ளேயும் கடைகளோ, கிடங்குகளோ இயங்கக் கூடாது. கடைகளுக்கு அருகே குறைந்தது 100 அடி தூரத்திற்கு குடியிருப்பு பகுதியே இருக்க கூடாது என்றெல்லாம் இந்த சட்டம் கூறுகிறது.

மற்ற ஊர்களில் பட்டாசுகளை நேரடியாக விற்கும் போது சிவகாசி கடைகளில் அவற்றை வெளியூருக்கு அதிக அளவில் அனுப்புகிறார்கள். தீபாவளி நெருங்குவதால் இக்கடைகள் இரவு பகலாக அதிக நேரம் அதிக பாரத்தை அனுப்பி வருகின்றன. கொல்லப்பட வேண்டிய மாடுகளை கொண்டு செல்கிறார்கள் என்று வழக்கு போடும் போலீசும், விலங்கு ஆர்வலர்களும், அதிகாரிகளும் உள்ள நாட்டில் பட்டாசுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறார்களா என்று எவரும் பார்ப்பதில்லை.

புதிய சட்டப்படி பட்டாசு வைத்து வணிகம் செய்வோர் உரிமத்தோடு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், இருப்பு பதிவேடு, தீ தடுப்பு கருவிகள் அனைத்தும் உரிய முறையில் வைத்திருக்க வேண்டும். இதை பல அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.

புதிய சட்டத்தின்படி பழைய கடைகள் உரிமம் பெற்றார்களா என்றால் இல்லை. அதிலும் இலஞ்சம் – ஊழல். இத்தகைய பண்டிகை காலங்களில் பட்டாசு குறித்த முன் எச்சரிக்கைகளை அதிக கவனத்தோடு செய்ய வேண்டிய உரிய அரசுத் துறைகளுக்கு இதே பண்டிகை காலம் அதிக பணத்தை லஞ்சமாக அள்ளிக் கொடுக்கிறது என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை.

கடையோ கிட்டங்கியோ ஆலையோ யார் சான்றிதழ் பெற்றிருக்கிறார், அதை அவர் முறையாக கடைபிடிக்கிறாரா என்று ஆய்வுசெய்வதற்கு பதில் முறையாக மாமூல் வருகிறதா என்பதை பார்க்கிறார்கள். உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் அப்பல்லோ தளங்களில் தொழுதிருக்கும் போது கீழே இத்தகைய அபாயம் நிறைந்த தொழில்களில் பலி அதிகமாகத்தான் இருக்கும்.

அம்மாவோ, அமைச்சரோ வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஆயிரம், இலட்சம் சரவெடி வெடிக்கும். இந்த வெடிகளை கேட்கும் போதும் கேட்காமலேயே மாமூலையும் எதிர்பார்க்கும் அ.தி.மு.க கூட்டம் ஆளும் போது சிவகாசி உயிர்பலிகளை நரபலி என்றே குறிப்பிடவேண்டும்.

கருணாநிதி ஏன் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கண்டிக்கும் பா.ஜ.க-வின் தமிழிசை இந்த விபத்து குறித்து என்ன சொல்கிறார்? எதிர்காலத்தில் தடுக்க வேண்டும், தொழிலில் ஈடுபடுவோருக்கு உரிய தற்காப்பு பயிற்சி, விழிப்புணர்வு, பயிலரங்குகள் கொடுக்க வேண்டும், சிவகாசி மருத்துவமனையில் தீப்புண் சிகிச்சை பிரிவு வேண்டும் – இவைதான் அவரது கோரிக்கைகள். இதில் எதிலாவது மத்திய மாநில அரசுகளையோ இல்லை அரசுத் துறைகளையோ கண்டிக்கிறாரா இல்லை! இதன்படி இனி இந்துக்களுக்கு பட்டாசுகள் எனும் அஃறிணைப் பொருட்கள்தான் முக்கியமே அன்றி அதை உருவாக்கும் பாவப்பட்ட ‘இந்துக்கள்’ அல்ல.

முதலாளிகளின் கட்சியான காங்கிரசின் திருநாவுக்கரசர், இழப்பீடு 10 இலட்சம் கொடுக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஒரு வேளை காங்கிரசு மிட்டாமிராசுகள் யாரும் கொல்லப்பட்டிருந்தால் இழப்பீடு பத்து கோடியாக இருக்கும். மேலும் அப்பல்லோவில் இருக்கும் அவரது முன்னாள் கடவுளின் மனம் நோகாமல் இருப்பதை பக்தியாக வைத்திருக்கும் காங்கிரசு தலைவர் ஏன் தமிழக அரசை கண்டிக்கப் போகிறார்?

இறந்தவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்துவும் இரங்கலை தெரிவித்திருக்கிறார். இதன்படி எஸ்.ஆர்.எம்-மில் சேர பணம் கொடுத்தவர்கள் அதை திரும்ப பெற முடியாது என தற்கொலை செய்து கொண்டாலும் அவர் இரங்கல் செலுத்துவார். என்ன ஒரு லேசர் பிரிண்ட் அவுட்டிற்கு பத்து ரூபாய் கூட செலவில்லையே!

அன்புமணி ஒரு படி மேலே போய் நீதி விசாரணை மற்றும் கடை வாகன சேதங்களுக்கும் இழப்பீடு கேட்கிறார். இதன்படி ஒரு நூறு வாக்குகள் கூட கிடைக்குமா என்பது அவர் கவலை. மற்றபடி சின்னையா, தமிழக அரசையோ மத்திய அரசையோ கண்டித்து ஒரு காற்புள்ளி கூட சேர்க்கவில்லை. அம்மாவின் அடிமை சரத்குமாரோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிராறாம்.

இந்த இலட்சணத்தில் தேஷ் பக்தர்களின் சார்பில் பா.ஜ.க மற்றும் அதன் ஊடகங்கள் அனைத்தும் சீன பட்டாசுகளை தவிர்த்து இந்திய பட்டாசுகளை வெடிக்கச் சொல்லி உபதேசிக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய பட்டாசு வெடிப்பதுதான் முக்கியமே அன்றி இந்திய மக்கள் அதே இந்திய பட்டாசுகளால் கொல்லப்படுவது முக்கியமல்ல. சீனப் போட்டியால் பாதிக்கப்படும் இந்திய முதலாளிகளைக் காப்பாற்றும் அக்கறை இந்திய தொழிலாளிகளையோ இல்லை மக்களையோ காப்பாற்றுவதில் இல்லை.

சீனாவிலோ உலகின் மற்ற நாடுகளிலோ இத்தகைய பண்டிகை கால பட்டாசுகளை தயாரிப்பதற்கும் விற்பதற்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், விதிமுறைகளை வைத்திருக்கும் போது இந்தியாவில் ஏன் இல்லை? ஏனென்றால் இங்கே மக்களின் நலனை முதன்மையாக வைத்து அரசோ, கட்சிகளோ செயல்படுவதில்லை.

பாதாளச் சாக்கடையோ இல்லை பட்டாசுத் தொழிலோ நம் மக்கள் சாகவேண்டுமா? தீபாவளிக்கு வெடிக்க காத்திருக்கும் உள்ளங்கள் சிந்திக்கட்டும்.

– இராசவேல்
படங்கள் நன்றி: நக்கீரன்

உப்பின் கதை

2

“உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஏனென்றால், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சரியான அளவில் உப்பு இருந்தால் தான் அதனை சுவைத்து சாப்பிட முடியும். இல்லையெனில் அதனை சாப்பிடவே பிடிக்காது. உப்பு சரியாக இல்லையென்றால் “என்ன கொழம்பு வக்கிர, உப்பு ஒறப்பு இல்ல” என்று வீட்டில் வசைபாடுகிறோம்.

salt-uppalam-08
உழைப்பின் உப்பு

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் அண்ணன் ஒத்தை மாட்டு வண்டியில் உப்பினை ஏற்றிக்கொண்டு வந்து வீடு வீடாக கிராமங்களில் விற்பனை செய்ய வருவார். அவர் எப்பொழுது வருவார் என எதிர்பார்த்து நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள். உப்பு வண்டி வந்தவுடன் தானியங்களை கொடுத்து விட்டு உப்பினை வாங்கிச் செல்வார்கள். பண்டமாற்று முறையில் வியாபாரம் இருந்தது. காசோ, தானியமோ எதுவும் இல்லையென்று கடனாக கேட்டாலும் முகம் சுளிக்காமல் உப்பினை கொடுத்து விட்டுச் செல்வார். அதனால் அனைவருக்குமே அவரை பிடிக்கும். வேறுபாடு இல்லாமல் அன்பாக பழகுவார்கள் கிராம மக்கள். பள்ளி செல்லும் மாணவர்களும் அந்த உப்பு வண்டியில் ஏறிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவார்கள். அவ்வளவு ஆனந்தம் அடைவார்கள். மாணிக்கம் அண்ணன் போகும் வழியில் தான் பள்ளிக்கூடம். அங்கே மாணவர்களை இறக்கி விட்டுச் செல்வார். இப்பொழுது மாணிக்கம் அண்ணன் வருவதே இல்லை. உப்பு வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். காரணம் உலகமயமாக்கல் எனும் பெரும்பூதம் அமுல்படுத்தப்பட்டது தான்.

உலகமயமாக்கல் வருகைக்கு பின் இந்தியாவில் உப்பு சந்தை

உலகம் முழுவதும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் நீரைக் கொண்டு தான் உப்பு உற்பத்தி செய்கிறார்கள். உலக அளவில் உப்பு உற்பத்தியில் சீனா தான் முதலிடம். இரண்டாவதாக அமெரிக்கா. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 6.9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டிற்கு சராசரியாக 215.86 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 11,799 உற்பத்தியாளர்கள் உள்ளனர். 1.11 லட்சம் தொழிலாளர்கள் தினசரி கூலிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள்.

உப்பு உற்பத்தி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 180 லட்சம் டன் (76.7 %) உற்பத்தி செய்கிறது. இரண்டாவதாக தமிழ்நாடு 25.8 லட்சம் டன் (11.16), ராஜஸ்தான் 17.5 லட்சம் டன் (9.86%), இதர மாநிலங்களான ஆந்திரா. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக, மேற்கு வங்கம் ஆகியவை 2.28 சதவீதம் அளவு உற்பத்தி செய்கின்றது.

சிறு உற்பத்தியாளர்கள் 10 ஏக்கருக்கும் குறைவாக 87.6 சதவிதத்தினரும், நடுத்தர உற்பத்தியாளர்கள் 10 முதல் 100 ஏக்கருக்குள் 6.6. சதவித்த்தினரும், பெரும் உற்பத்தியாளர்கள் 100 ஏக்கருக்கும் மேல் வைத்திருப்பவர்கள் 5.8% பேரும் இருக்கின்றனர்.

இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 62% சிறிய உற்பத்தியாளர்கள் தான் உற்பத்தி செய்கிறார்கள். 28% நடுத்தர உற்பத்தியாளர்களும், வெறும் 10% மட்டுமே பெரிய உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

salt-uppalam-11இந்த பெரும் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக குஜராத்தில் தான் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு உப்பை ஏற்றுமதி செய்யும் மாபெரும் நிறுவனங்களாகவும் இருக்கிறது.

கிருஷ்ணா சால்ட் ஒர்க் குஜராத்தில் உள்ளது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் முழுவதும் நவீன இயந்திரங்களை கொண்டு உற்பத்தியில் ஈடுபடுகிறது. கோஷர் சால்ட், சால்ட் சென்ஸ், சன் ஷைன் சால்ட் என்று பல பிராண்ட் பெயர்களில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

அஹிர் சால்ட், உப்பு வணிகப் பொருளாக்கப்பட்ட 1990 களின் ஆரம்பத்தில் இருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனம் ஐக்கிய அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என்று 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டேப்லெட் உப்பு, பேதியுப்பு என்று பலவகையாக தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.

இண்டோ பிரைன் இண்டஸ்ட்ரியல்.லிமிடெட் என்ற நிறுவனம் 4,50,000 டன் உப்பினை மொரிஷியஸ், மத்திய கிழக்கு நாடுகள், மஸ்கட், இந்தோனோஷியா, சிலோன், ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

salt-uppalam-12கட்ச் பிரைன் செம் இண்டஸ்ட்ரியல் (ஸ்ரீ ராம் குழுமம்) என்ற நிறுவனம் 3 லட்சம் மெட்ரிக் டன் உப்பினை மலேசியா, பங்களாதேஷ், சீனா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு தனது வாடிக்கையாளராக டாடா கெமிக்கல்ஸ், ஸ்ரேயா எக்ஸ்பர்ட் ஸ்டார் சால்ட், ரிலையன்ஸ் ஹோம் புராடெக்ட், சால்ட் டிரேடிங் & கோ உள்ளிட்ட பத்தொன்பது தொழில் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்து வருகிறது.

நாடு முழுதும் உப்பு ஏற்றுமதி செய்யும் முப்பத்தைந்து பெரும் நிறுவனங்களில் குஜராத்தில் மட்டும் பதினைந்து நிறுவனங்கள் உள்ளன. அதற்கடுத்தாக தமிழகத்தில் ஐந்து நிறுவனங்கள் உள்ள

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஏற்றுமதிக்கு தேவையான உப்பினை சிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து மிகவும் குறைவான, அடிமாட்டு விலைக்கு வாங்கி செல்கின்றன. இதற்கென்று சிறிய ஏஜென்சிகளை அமைத்துள்ளன. ஆண்டிற்கு சுமார் 36 லட்சம் டன் உப்பினை ஏற்றுமதி செய்து வருகின்றன. குறிப்பாக இந்த நிறுவனங்கள் எல்லாம் உலமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பாட்ட பிறகு தான் உருவெடுத்துள்ளன.

salt-uppalam-14உப்பு உற்பத்தியில் ஈடுபடுகின்ற இடங்களில் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இந்த குறைபாட்டினை போக்குவதற்காக “ National Indian Dificiency Disorder Condrol Programme (NIDDCP) என்ற திட்டத்தினை 1962-ல் அறிமுகப்படுத்தி அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துமாறு கூறியது மத்திய அரசு. அதன் பிறகு இந்த திட்டத்தை 1984-ல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இதனை மாபெரும் புரட்சி என்றும் சித்தரித்தனர்.

உண்மை என்னவெனில் 1983-ம் ஆண்டு டாடா நிறுவனம் உப்பு சந்தையை கைப்பற்றுவதற்காக “ டாடா சால்ட்” அயோடின் கலந்த உப்பு . இது “தேசத்தின் உப்பு” என்றெல்லாம் முழக்கமிட்டு தனக்கான சந்தையை விரிவுபடுத்தியது.

salt-uppalam-161984-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மனித நுகர்வுக்கான தேவை 62 லட்சம் டன் தான் என்ற போதிலும் தற்பொழுது 175 லட்சம் டன்னை உற்பத்தி செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் Salt in Central Excesice & salt act 1994-ல் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர். தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஏற்றவாறு Salt in cess act 1964 no.gsr.639(e) சட்டத்தில் 04.09.2001 ல் மாற்றம் கொண்டு வந்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு திறந்து விட்டது பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு.

அழிந்து வரும் சிறு உற்பத்தியாளர்கள்.

தென்னிந்தியாவை பொறுத்த வரை 2012-13 ம் ஆண்டில் 27.7 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. 2013-14 ம் ஆண்டில் 25.8 லட்சம் டன்னாக உற்பத்தி குறைந்துவிட்டது. காரணம் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்குவதே.

salt-uppalam-17இது குறித்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பாரம்பரியமாக உப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் தேவி என்பவர் கூறுகையில், “உற்பத்தி செய்யும் மொத்த நிலம் 2500 ஏக்கர் நாயுடு, முதலியாருக்கு சொந்தமானது. நாங்க எட்டு ஏக்கர் குத்தகைக்கு வாங்கி தான் உற்பத்தி பண்ணுறோம். ஏக்கருக்கு ஆறாயிரம் ரூபா குத்தகை கட்டிடுறோம். முதலில் பாத்தியாக கட்டி சேற்றை மிதிச்சி சமன் படுத்திடுவோம். அப்புறம் தரை கடினமா இருக்கணும்னு கடல் மணலை கொட்டுவோம். ஒரு லோடு மாட்டு வண்டிக்கு 600 ரூபா கேட்பாங்க. அண்டை வெட்டி வாய்க்கால் போடுவது, சேறு மிதிக்கிறது சாதாரண வேலை இல்லை. கடுமையான வெயில் வியர்வை சிந்த உழைக்கணும். முதுகு தோல் பட்டை விட்டுடும். உப்பு தண்ணி என்பதால கை கால்கள் எல்லாம் மரத்து விடும்.

ஒவ்வொரு பாத்தியா தண்ணி வைப்போம். நீர் வடிய வடிய உப்பும் உற்பத்தியாகி இருக்கும். அதை வாரி தலையில சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் தூக்கி வருவோம். உடம்பு முழுக்க உப்பா இருக்கும். வெயில் வேற சொல்லவா வேணும். “மழை வந்து தொலச்சாலாவது வீட்டுக்கு போயிடலாம்” அப்படின்னு நினைப்போம் சார். வெயில்ல வேல செய்றதுக்கு பயந்து உப்பு எடுக்க விடிகாலை 2 மணிக்கு கிளம்பி போய்டுவோம் சார்.

salt-uppalam-07உற்பத்தி செஞ்ச உப்பை எல்லாம் பத்தரமா பாதுகாக்கணும். வியாபாரிங்க வந்து வாங்கிட்டு போற வரைக்கும் கடன் வாங்கி தான் எல்லாம் வேலையும் செய்வோம். நான்கு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபா செலவாகிடும். அதனால் இரண்டு, மூணு குடும்பம் சேர்ந்து தான் குத்தகை வாங்குவோம். தனி ஆளா எதுவும் பண்ண முடியாதுங்க. எங்ககிட்ட வாங்குற வியாரிங்க ரொம்ப கம்மி விலைக்கு வாங்குவாங்க. மூட்டை 140,150 ரூபான்னு வாங்குவாங்க. அதுலயே மூட்டைக்கு 14 ரூ படிச்சிகிட்டு தான் மீதி காசு கொடுப்பாங்க. ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்கும் தான் வேலையே. அதுக்கப்புறம் ஆறு மாசம் வீட்ல தான் இருப்போம். எங்க பிள்ளைங்களை எல்லாம் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம். தனியார் ஸ்கூல்ல படிக்க வக்கிற அளவுக்கு இந்த தொழில்ல வருமானம் இல்லைங்க. எங்ககிட்ட இருந்து வாங்கிட்டு போயிட்டு பாக்கெட் போட்டு விக்கிறவங்களுக்கு தான் சார் லாபம்.

salt-uppalam-03நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புதுசல கிராமத்துல விக்கிறதுக்காக வந்து வாங்கிட்டு போவாங்க. அப்ப செலவுக்கு கையில காசு இருக்கும். இப்ப எல்லாம் பெரிய வியாபாரி வர வரைக்கும் இல்லனா, நல்ல விலை போற வரைக்கும் காத்துகிட்டு இருக்கணும்” என்று கவலையோடு கூறுகிறார்.

குறிப்பாக உற்பத்தியில் ஈடுபடும் கூலித்தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் அறவே இல்லை. இந்தியா முழுவதும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ரத்த சோகை 41% பேருக்கும், பார்வைக்குறைபாடு 42%, பல் சொத்தையாதல் 41.7%, எடைக்குறைவு 19%, முன் கழுத்து கழலை நோய் 19%, தோல் பதிப்பு 91%, சதை மற்றும் எலும்பு செயலிழப்பு பெண்களுக்கு 75% ஆண்களுக்கு 44% போன்ற நோய்களால் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற்கே செலவிட வேண்டியுள்ளது. பெரும்பாலும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுடைய குழந்தைகள் பள்ளிப் படிப்பையே முடிக்கவில்லை. ஒன்று பெற்றோர்களுடன் வேலைக்கு செல்வது இல்லையெனில், வெளியில் வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

salt-uppalam-06இத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாளொன்றுக்கு ஆண்களுக்கு ரூ 250, பெண்களுக்கு ரூ 150 என்று வழங்கப்படுகிறது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் ரூ.80 மட்டுமே வழங்கப்படுகிறது.

சிறு உற்பத்தியாளர்களுக்கு மானியமும் வழங்குவது இல்லை. மின்சாரமும் இல்லை. பன்னாட்டு கம்பனிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு இவர்களை கண்டுகொள்வதே இல்லை. டீசல் எஞ்சின் வைத்து தான் உற்பத்தி செய்கிறார்கள். இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. மழை உள்ளிட இயற்கையின்சீற்றத்தால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு டிசம்பரில் பெய்த மழையால் பல லட்சம் மதிப்புள்ள உப்புக்கள் அழிந்தன. இதற்க்கு எந்த வித நஷ்டஈடும் கொடுக்கவில்லை அரசு. இந்த சூழலில் பெரிய நிறுவங்களோடு போட்டி போட முடியாமல் திணறி இத்தொழிலை விட்டே வெளியேறி வருகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பன்னாட்டு கம்பனிகள், உள்நாட்டு தரகு முதலாளிகள் கொள்ளைக்காக புதிய சட்டங்களை கொண்டு வரும் மோடி அரசு தொழிலாளர்களுக்காக கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. கவலைப்பட போவதுமில்லை. எனவே சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து முதலாளித்துவ லாபவெறிக்கு எதிராக போராடுவது மட்டும் தான் தீர்வு. உப்பிட்டவனை ஒருபோதும் மறவாதே என்பார்கள். இத்தொழிலாளர்கள் உற்பத்தி செய்த உப்பினை சாப்பிட்டவர்கள் சிந்தித்து பாருங்கள். உப்பு உங்களுக்கு உரைத்தால் உப்பளத் தொழிலாளர்களுக்காக நாமும் போராடுவோம்!

செய்தி, படங்கள்:
– வினவு செய்தியாளர்.

இயற்கையை அழித்து யாருக்காக உங்கள் ஆட்சி ? – திருச்சி கருத்தரங்கம்

1

நீர் நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும், என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக 12.10.16 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டம் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்.ப.தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. தி.மு.கவின் திருச்சி வடக்கு மாவட்டச்செயலாளர் திரு.காடுவெட்டி ந.தியாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் தோழர்.த.இந்திரஜித், திரு.திருச்சி.வேலுச்சாமி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.ம.ப. சின்னதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார். தோழர் ஜீவா வரவேற்புரை வழங்கினார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்..தர்மராஜ் உரை:

விவசாயிகளின் வேலை நெல்லை விளைய வைப்பது பிறகு அதற்கு கொள்முதல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்வது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய் மாற்றப்பட்டு உள்ளது. நீர் வேண்டுமானால் போராட வேண்டும், பொருளாதாரத்தை இழக்க வேண்டும், நீதிமன்றத்திற்கு போக வேண்டும், வழக்கு போட வேண்டும், இவையெல்லாம் நாம் செய்ய வேண்டிய வேலையா?  ஆற்று நீரை, ஏரி குளங்களை பாதுகாப்பது யாருடைய வேலை? பொதுப்பணித்துறை வேலை என்ன? பாசனத்துறை, IAS வேலை என்ன? இவர்கள் எங்கே சென்றனர்? இவர்களுக்கு தானே இந்த வேலை. விவசாயிகள் மக்களின் உழைப்பில், வியர்வை சிந்தி கட்டும் வரிப்பணத்தில் தானே சம்பளம் வாங்குகிறார்கள்? அப்படியானால் இந்த மக்களின் உரிமைகளுக்காக தானே நிற்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், கடமையை செய்யவில்லை. இதை யாராவது கேள்வி கேட்கிறார்களா? நமக்கென்ன யாராவது போராடட்டும் என்று ஒதுங்கிப்போவதாக உள்ளது. நமக்கு இவர்கள் தான் எதிரி  நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசு மட்டும் எதிரி அல்ல நமக்கான கடமையை செய்ய தவறிய அதிகாரிகளும் எதிரி தான். இவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டு கடமையை செய்யாததால் தான் இன்று நம் உரிமைகள் கிடைக்காமல் இருக்கிறது என்பது முக்கியமான விசயம்.

தோழர். தர்மராஜ்
தோழர். தர்மராஜ்

அடுத்த உலகப்போரே நீருக்காகதான் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகம் இப்பொழுதே நீருக்கான போராட்டத்தை துவங்கிவிட்டது. இந்த சூழலில் திடீரென வரும் மழை, வெள்ளம் போன்றவற்றை பாதுகாத்து ஏரிகளில் நிரப்பினால் 300 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு பெற முடியும் என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். தமிழ்நாடு முழுவுதும் ஆறு, ஏரி, குளங்கள் 32,000த்திற்கு மேல் இருக்கிறது. இன்று அவை பராமரிக்கப்படுகிறதா? பாதுகாக்கப்படுகிறதா? வரக்கூடிய நீர் மக்களுக்கு முறையாக போய் சேருகிறதா? என்றால் கிடையாது. ஒரு ஆறு எங்கே உருவாகிறதோ அங்கு மட்டும் சொந்தமில்லை. அது ஓடி வரும் கடைமடை பகுதி பாசன பகுதிக்கும் சொந்தம் இந்த காவிரி தமிழகத்திற்கும் சொந்தமானது. இந்த காவேரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். அவன் தரவில்லை என்பது ஒருபுறம். ஆனால் இதற்கு இங்கு இருக்க கூடிய IAS,IPS  இவர்களும் தான் காரணம். இங்கிலாந்தில் கார் கம்பெனிகாரன் ஒருமுறை காரை கழுவி விட்டால் 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இங்கு இங்கிலாந்து காரன் கார் கம்பெனி துவங்கினாலே நாம் 3 ½ லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டுமாம். என்னடா இது கேவலம். இவற்றிற்கு உறுதுணையாக இருப்பது யார் அதிகாரிகள் தான். இவர்களுக்கு எதிராக போராடுவது, ஏரி, குளங்களை மீட்டெடுத்து நம் உரிமைகளை பெற அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்து போராட வேண்டும் என்று தனது தலைமை உரையை முடித்தார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டதலைவர் மா..சின்னதுரை உரை:

மா.ப. சின்னதுரை
திரு. மா.ப. சின்னதுரை

ட்டுப்பூச்சி பூங்காவனம் பகுதிக்கு கட்டாயம் எல்லோரும் சென்று பாருங்கள். இன்று இங்கு எல்லாமும் பட்டு போய்கிடக்கிறது. அதிமுக வினர் இன்று முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று காவடி    தூக்குகிறார்கள். வேல் குத்துகிறார்கள் அது உங்கள் விசுவாசம் பாசம். ஆனால் 1 ½  கோடி உறுப்பினர்களை கொண்ட நீங்கள் காவேரி பிரச்சனைக்கு போராடலாம்ல, ஏன் போராடல? நீங்கள் எங்கள் வேலை காரர்கள் நாங்கள் போட்ட ஓட்டு தான் இன்று நீங்கள் சுகபோகமாக வாழ்வது. இந்த பிரச்சனை துவங்குவதற்கு முன்பே 2014-லில் நானும் மக்கள் அதிகாரத்தின் தோழர். ப.தர்மராஜ்-ம் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை பார்வையிட சென்றோம். அங்கு 42 அடி தோண்டி எடுத்து உள்ளனர். கவுத்தரசநல்லூர் முதல் இடையாற்று மங்களம் வரை. இதை மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று முறையிடும் போது பேச்சே இல்லை. இப்பொழுதே தெரிகிறது எல்லாம் கூட்டு களவாணி என்று. ஏரி குளங்களை பட்டா போட்டதே அரசியல் வாதிகளும் அதிகாரிகளும்தான்.  நதிகரையில் இருந்த மக்களின் நாகரீகத்தையே அழித்து விட்டனர். யாருக்காகடா உங்கள் ஆட்சி எங்கள் இயற்கையை அழித்து விட்டு பின் எப்படி மழை பெய்யும்.  நான் வந்தது மேடை பேச்சுக்காக அல்ல நாட்டை காக்க என் உயிரை கொடுத்தாவது நான் போராடுவேன் என்று தனது முழு ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர் உரை:

திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர்
திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர்

போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய மக்கள் அதிகார அமைப்பினருக்கு நன்றி நாங்கள் அதற்கு முன் பல போராட்டங்கள் செய்து வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது எங்களின் அனைத்து போராட்டத்திலும் மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து பல போராட்டங்கள் செய்துள்ளனர். அரசியல் கட்சிகளை நம்பி இனி பயனில்லை என நீதிமன்றத்திற்கு சென்றோம். 90 மீட்டர் உள்ள அணையை கட்டி கொள்ள அனுமதி கொடுத்தார்கள். காவேரி அணை கட்ட தொடங்கிய உடனே பிரச்சனையும் தொடங்கியது. குடகுபகுதியை அப்பொழுதே தமிழ்நாட்டோடு இணைத்திருக்க வேண்டும் ஆனால் அப்பொழுது நம் ஆட்கள் அதை விட்டு கொடுத்தார்கள். இதில் கர்நாடக காரர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.1928 -ல் இது நடந்தது. தண்ணீர் பிரச்சனை எல்லாம் வராது என்று நினைத்தோம், ஆனால் இன்று வந்து விட்டது. என்ன செய்வது? அன்று கர்நாடககாரர்கள் 5 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்த இடத்திலே இன்று 24 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்கிறார்கள் என்றால் அதற்கான நீர் எங்கே இருந்து வந்தது? ஆனால் இன்று குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வது. மறுபுறம் தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தவேண்டும். மணலை எடுக்க கூடாது என்று நாங்கள் சொல்ல காரணம் மணல் இருந்தால் தான் ஆவியாகி மேலே சென்று மேகத்தை குளிர்வித்து மழை வரும். இந்த பிரச்சனைக்கு காரணம் ஆட்சியாளர்கள் தான். அது நடக்கவில்லை. அதிகார பலத்திலுள்ளவர்கள் எதை பற்றியும் கவலைபடுவதில்லை.  இனி நாம் மக்கள் இயக்கமாக ஒன்றிணைந்து போராடவேண்டும். இதை ஏற்படுத்திய மக்கள் அதிகாரத்தினருக்கு எனது கோடான கோடி நன்றி என்று தனது உரையை முடித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் தோழர்.த.இந்திரஜித் உரை:

தோழர். இந்திரஜித்
தோழர். இந்திரஜித்

ங்கள் தலைப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்குதான் வேண்டும்.தஞ்சை பெரிய கோவிலை கட்டும் போது ராஜராஜசோழன் மக்களிடம் கட்டாய வரி வசூல் செய்தான். தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த காலத்தில் நீர்நிலைகளை மக்கள் தான் பராமரித்தார்கள், பாதுகாத்தார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. இயற்கை அழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது வெள்ளம் வந்தபோது வெள்ளம் புகுந்து விட்டது என்று எல்லாம் சொன்னார்கள். ஆனால் அது தனது அழிக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்துவிட்டது. அதிகமாக பள்ளிகள், கல்லூரிகளுக்குள் தான் வெள்ள நீர் புகுந்துள்ளது. என் முப்பாட்டன் 36ஆயிரம் ஏரி, குளங்களை வெட்டி வைத்தான். ஆனால் இன்று அவை எங்கே? நீர் இன்று வணிக பொருளாக விற்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விட கூடாது என்று போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல இனவெறியர்கள் லும்பன்கள் இவர்கள் அங்கு உள்ள விவசாயிகளுக்காகவோ, மக்களுக்காகவோ போராடுபவர்களும் அல்ல ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து கலவரம் செய்வது மட்டுமே இவர்களின் வேலை.

காவேரி நதி நீர் பிரச்சனைக்கு எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவதே சரியாக இருக்கும். அதை ஏற்பாடு செய்த மக்கள் அதிகாரத்தோழர்களுக்கு நன்றி. 1992-ல் மத்திய அரசு கொண்டு வந்த கொள்கை என்பது நாட்டையே அடகு வைப்பதற்காக போடப்பட்டதுதான். 1976-90வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 1976 வரை 489 டி.எம்.சி தண்ணீர் இருந்தது. பிறகு 389 டி.எம்.சி ஆக குறைந்தது ஆனால் கர்நாடகாவிற்கு 92 டி.எம்.சி  தண்ணீராக இருந்தது 155 டி.எம்.சி ஆக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக பேசும் போதெல்லாம் நமக்குதான் தண்ணீர் குறைந்தது. இருதியாக நமக்கு 323டி.எம்.சி ஆக குறைந்தது. கருநாடகத்திற்கு 293 டி.எம்.சி ஆக உயர்ந்தது. 1956-ல் மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டதில் குடகு காரர்கள் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்றுதான் கேட்டார்கள். ஆனால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டார்கள். இதுதான் உண்மை. உச்ச நீதி மன்றத்தின் மீது எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. கர்நாடக அரசு நீதி மன்றத்தின் தீர்ப்பை ஒருபோதும் மதித்தது கிடையாது. ஆனால் உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் மக்களுக்கானதாக இல்லை. நீருக்காக நாம் ஒன்றிணைந்து போராடியே ஆக வேண்டும் என்ற தருனத்தில் உள்ளோம், நாம் ஒன்றினைந்து போராடுவோம் என்று கூறி தனது உரையை முடித்தார;.

திரு.திருச்சி..வேலுச்சாமி அவர்கள் உரையாற்றும்:

நான் எனது பள்ளி பருவ காலத்தில் பள்ளி விட்டு வரும்போது ஆற்றில் விழுந்து புரண்டுவிட்டுதான் வீட்டுக்கு போவோம், போவதற்குள்ளே துணிகளும் காய்ந்து விடும்.

திரு. திருச்சி. வேலுச்சாமி
திரு. திருச்சி. இ. வேலுச்சாமி

எல்லா நதிகளிலும் இன்று அணைகட்டி விட்டார்கள். குடகு மலை அருகில் கூட தமிழர்கள் இருந்தார்கள். அப்பொழுது தமிழகத்திற்கு எல்லா உரிமையும் இருந்தது. இன்று நீர் மீதான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1 ½  கோடி பேர் உள்ளனர். நமக்கு எதிராக செயல்படுவது கர்நாடகா அரசும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பலும்தான். கர்நாடகாவிலிருந்து நீர் கேட்டு போராடுவது ஒருபுறம் இருக்கட்டும். நீர் வந்தால் அதை தேக்கி வைக்க தமிழகத்தில் வாய்க்கால்,ஆறு,ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதா? அதை நாம் கண்டு கொள்கிறோமா? இயற்கை பல வற்றை நாமே அழிக்கிறோம். 40 ஆயிரம் ஏரிகள் இருந்த இடத்தில் இன்று எவ்வளவு உள்ளது. ஓட்டுப்போடுவதிலும் சட்டமன்றத்தில் சென்று கொட்டாவி விடுபவர்களைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.  நான் தேர்தலில் போட்டியிடும் போது வயதான பார்பனர் ஒருவர் என்னை அழைத்து உங்கள் திறமை பற்றி கல்லூரி படிக்கும் போதிலிருந்தே எனக்கு தெரியும். மக்களின் பிரச்சனையை பற்றி தெளிவாக பேசுபவர் நீங்கள் என என்னிடம் பேசினார்.  கேட்ட உடனே எனக்கு உச்சு குளிர்ந்து விட்டது. நான் தான் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால் அவர் அடுத்த வார்த்தை சொன்னார் .நீ வெற்றி பெற மாட்டாய், என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏன் என்று கேட்கும் போது உன்னிடம் பணம் இருக்கா என்றார். இன்று சமூகம் இப்படி மாறி விட்டது. தனது ஓட்டு உரிமையே வியாபாரமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க என்ன செய்வது? ஒன்றிணைந்து போராட வேண்டும். கர்நாடகாவில் கலவரம் செய்த அனைவருமே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான். எனவே மக்கள் அதிகாரம் சொல்வது போல் இந்த கட்டமைப்புக்குள்ளே தீர்வை  தேடக்கூடாது, மாற்று வழிகளை சிந்திப்போம் அது தான் சரியானது என தனது உரையை முடித்தார்.

தி.மு.க வின் திருச்சி வடக்கு மாவட்டச்செயலாளர், திரு.காடுவெட்டி .தியாகராஜன் உரை:

திரு.தியாகராஜன்
திரு.தியாகராஜன்

அனைவருக்கும் வணக்கம். நம்மை நாம் இன்னும் மாற்றி கொள்ள வேண்டும்.  என்ன செய்ய போகிறோம் என்ற விழித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகாரத்திற்கு நன்றி. எனக்கு முன்பு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. நான் முன்பு மக்கள் அதிகாரம் என்றாலே எதோ சும்மா போராடிட்டே இருப்பாங்க என்று தான் நினைத்தேன். ஆனால் இங்க பேசும் போது தான் நான் எல்லாம் என்ன பேசபோகிறேன் என்று திகைத்து போகும் அளவுக்கு இருந்தது. காலமாற்றத்தில் நாமும் மாற வேண்டும். அண்ணா முதல்வராய் இருக்கும் போது அண்ணாவிற்காக உயிரை கொடுக்க 1000 தொண்டர்கள் இருந்தனர். அதே போல் இளைஞர்கள் நிறைய பேர் அண்ணா வழியில் நின்றனர். அதே போல் இன்று இந்த கருத்தரங்கில் இளைஞர்கள் பட்டாளத்தை பார்க்கிறேன். இவர்கள் தான் சமூகத்தை மாற்றப் போகிறார்கள். முதலில் நாம் ஒற்றுமையாக இணைந்து போராட வேண்டும் நமக்குள் எதிரணி இருக்க கூடாது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தி.மு.க ஜெயித்ததிற்காக மந்திரி அந்த தொகுதிக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கலெக்டருக்கு உத்தரவு போட்டார்.  எவ்வளவு கேவலம் இது.

மக்கள் அதிகாரம் சொல்லும் பாதை தான் சரியானது அந்த வகையில் நாம் இணைந்து போராடுவோம் என்றார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரை:

தோழர் .ராஜீ
தோழர் .ராஜீ

னக்கு முன்பு பேசியவர்கள் காவிரி உரிமை, நிலைமை, செய்ய வேண்டிய பணிகள் பற்றி பேசினார்கள். மலரும் நினைவுகளையும், நம்மிடம் முன்பு இருந்த தடங்களையும்  பார்க்கிறோம். ஆனால் கோபம் யாருக்கும் வந்ததாக தெரியவில்லை. இந்த கூட்டத்தை பொதுக்கூட்டமாக நடத்த வேண்டும், இதை மக்கள் அமர்ந்து கேட்பார்கள். நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும், இது நாம் இழந்தது புதிய விஷயம் அல்ல. இந்தியா பாகிஸ்தான் வாகா எல்லையில் இப்பொழுதும் போராட்டம் நடக்கிறது. சரக்கு லாரி சென்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கர்நாடகாவில் என்ன நடக்கிறது. சிந்து நதி உடன்படிக்கையை மறு பரிசீலனை செய்வோம், விட மாட்டோம் என்கின்றார்கள். காவேரி பிரச்சனையை தீர்ப்பதற்காக அதிகாரம் நம் நாட்டில் இல்லை. நீரை வர விடாமல் தடுப்பது என்பது ஓரு போர் குற்றம். இங்கு நடுநிலை என்பதே கிடையாது. நீதிபதி, பிரதமர் அனைவரும் போலீஸ்காரர்கள் போல் தான் பேசுகிறார்கள். நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு போகும் மணல் மீண்டும் வருமா?

இந்த பிரச்சனையை தீர்க்க இங்கு அமைப்பு கிடையாது. போராடுபவர்கள் மீது கேஸ் போட்டுக் கொண்டே இருப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச ஆளே கிடையாது. காவேரி நதி மீது தமிழகத்தின் உரிமை என்ன? மத்திய மாநில அரசுகளின் தவறான நிலைபாடே  காரணமாக உள்ளது. 25 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டபோது. தமிழ்நாட்டை ரௌடி லிஸ்டில் வைத்துள்ளனர். இங்கு நாம் பண்பாடு பேசுவதால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கதை நடக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு கலவரம் செய்ய மட்டும் தான் தெரியும். கலவரம் நடத்தி ஆட்சியை பிடிக்கின்றனர். இந்துக்களுக்கு இங்கு எந்த உரிமையும் இல்லை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்-ஐ நாம் தமிழகத்தில் உள்ளே நுழைய விடாமல் விரட்டி அடிக்க வேண்டும் ஏனென்றால் இவர்கள் தமிழினத்திற்கே எதிரானவர்கள். நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்ந்த நாம் இன்று மிக கேவலமாக உள்ளோம். இயற்கை என்பதே இன்று தலைகீழாக மாறி விட்டது. ஒரு உண்மையான பிரச்சனைக்கு தீர்வு கானும் வகையில் எந்த கட்சிகளும் இல்லை. ஏனென்றால் இங்கு அரசு கட்டமைப்பே நாறித்தொலைகிறது. எனவே மாற்று மக்கள் அதிகாரம் தான் கட்சி பேரும் அதுதான்.

இதன் மீது கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும். ஏனென்றால் கட்டமைப்பின் வெளியே தான் தீர்வு உள்ளது. ஆட்சியாளர்களோ அதிகாரவர்க்கமோ அவர்கள் போடும் திட்டங்களை அவர்களாளே நடைமுறை படுத்தமுடியவில்லை. ஒரு கோவிலை நிர்வகிப்பதில் கூட மத உரிமைதான் கொடுத்துள்ளனர். தில்லை நடராசர் கோவில் வழக்கில் இதை நேரடியாக பார்த்திருக்க முடியும். அறநிலைத்துறை வசம் கோவிலில் இருந்த போது அரசின் கஜானாவிற்கு நிதி போனது. தீட்சதர் கையில் இருக்கும் போது நட்ட கணக்கு தான் காட்டினார்கள். இதை தான் நீதி மன்றம் ஏற்றுக்கொள்கின்றது. மணற்கொள்ளை எடுத்துக்கொண்டால் பொதுப்பணித்துறை மற்றும் அதிகாரிகள் எல்லோரும் கைகோர்த்துதான் செய்கிறார்கள். கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. வெள்ளாற்றில் மணல் அள்ளும்போது அதை தடுத்து நிறுத்தியது மக்கள் அதிகாரம் தான். எங்கெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி கை கோர்த்து நின்று அதிகாரத்தை தன் கையில் எடுத்து போராடுகிறார்களோ அங்கெல்லாம் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளது.

மணற்கொள்ளை, திருட்டு போன்ற எல்லா சமூககுற்றங்களிலும் முன்னனியாக நிற்பது மக்களுக்கான காவலர்கள் என்று சொல்லப்படும் காவல்துறை தான். எங்கு பிரச்சனை நடக்கிறதோ அங்கு நாம் நேரடியாக சென்று ஒன்று திரண்டு போராட வேண்டும். இங்கு ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் கிரிமினல் மயமாகி உள்ளது. ஜியோ சிம் அறிமுகப்படுத்தி இருப்பதும் கூட மக்களை ரிலைன்ஸ் முதலாளி உளவுபார்பதற்காக தான். நாம் என்ன உடை, எந்த அளவில் அணிகிறோம் என்பதை கூட அவன்தான் முடிவு செய்கிறான். இப்படி இருக்கும் நிலையில் யாரிடம் சென்று தீர்வு கேட்க முடியும். மக்கள் அதிகாரம் மட்டும் தான் தீர்வு  என்று தனது உரையை முடித்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர். ஓவியா நன்றியுரை ஆற்றினார்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம், திருச்சி.

“பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள் !

0

ரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தின் தின்கர்ஹெரி கிராமத்தில் ஒரு முசுலீமின் வீட்டிற்குள் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த பசு பாதுகாப்பு இந்து மதவெறிக் கும்பலொன்று அவர்களிடம், ‘‘ஈத் பண்டிகைக்கு மாட்டுக் கறி சாப்பிடுவியா?” என வக்கிரமாகவும் வன்மத்தோடும் கேட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவரைக் கொலை செய்து, இருவரைக் கொடுங்காயம் ஏற்படும் வண்ணம் அடித்துத் துன்புறுத்தி, சிறுமி உட்பட இரண்டு பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, மிகக் கொடூரமான வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

mewat-victims
இந்து மதவெறிக் கும்பலால் கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் பெண்கள்.

கடந்த ஆகஸ்ட் 24 அன்று நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் ஏழை முசுலீமான இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி ரஷீதா இருவரும் இந்து மதவெறிக் கும்பலால் இரும்புக் கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்டனர். வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த இப்ராஹிமின் உறவினர்களான ஆயிஷாவும் மற்றும் அவரது கணவர் ஜாஃப்ரூதீனும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜாஃப்ரூதினின் பதினான்கே வயதான சிறுமி சாஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் மற்றொரு உறவுக்கார பெண் சமீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இக்கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாப்பட்டுள்ளனர். ஆயிஷாவும் ஜாஃப்ரூதீனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், ஜாப்ரூதீன் கோமா நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘‘ஐந்து பேர் எங்கள் அறைக்குள் நுழைந்தார்கள். என் துப்பட்டாவை கொண்டு வெளியில் இருப்பவர்களைக் கட்டினார்கள். நாங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும் அதற்காகத் தண்டிக்கப்படவிருப்பதாகவும் கூறி மிரட்டினார்கள். நான் தப்பித்து ஓட முயன்றேன். ஆனால், என் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். என் அறையில் இருந்த என் மாமாவின் 14 வயதான மகளையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர்”என இக்கொடூரத்தை நாதழுதழுக்க விவரிக்கிறார், சமீனா.

‘‘இப்பெண்கள் போலீசில் புகார் அளித்த பின்னரும் கூட கொலை மற்றும் பாலியல் வன்முறை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக, அத்துமீறி நுழைதல், திருட்டு ஆகிய பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குரைஞர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சமூக ஆர்வலர்களும் கொடுத்த அழுத்தத்திற்கு பிறகுதான் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்” என்கிறார் ஜனதா தளம் கட்சியின் எம்.பி. அன்வர் அலி.

சமூக செயற்பாட்டாளர்களான சப்னம் ஹஷ்மி மற்றும் அன்வர் அலி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய பிறகே இக்கொடூரம் ஊடகங்களில் வெளியானது.

பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றவாளிகளின் முகநூல் பதிவுகளை வெளியிட்ட சப்னம் ஹஸ்மி, குற்றவாளிகளின் அரசியல் பின்புலம் காரணமாக அவர்கள் பாதுகாக்கப்பட சாத்தியம் இருக்கிறது என எச்சரித்தார். அவர் வெளியிட்ட முகநூல் பதிவுகளில் குற்றவாளிகளில் ஒருவனான ராகுல் வர்மா, ‘‘தான் கடந்த ஏப்ரல் முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேலை செய்துவருவதாக”க் குறிப்பிட்டுள்ளான். மற்றொரு குற்றவாளி ராவ், மோடியின் புகைப்படத்துடன், ‘‘முஸ்லீம்கள் போய்விட்டார்கள்”எனப் பதிவிட்டுள்ளான்.

mewat-protest
ஏழை முஸ்லிம் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட இந்து மதவெறித் தாக்குதலை அற்ப விசயமாக ஒதுக்கித் தள்ளிய அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாரைக் கண்டித்து ஆல்வார் நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியல்.

இச்சம்பவம் குறித்து அரியானாவின் பா.ஜ.க. முதல்வர் கட்டாரிடம் கேட்கப்பட்ட போது, ‘‘இது போன்ற அற்ப விசயங்களில் நான் அதிக கவனம் கொடுப்பதில்லை”என்று திமிராகப் பேசி, இத்தாக்குதலை மறைமுகமாக நியாயப்படுத்தினார்.

கடந்த ஆண்டு அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதும் அம்மாநிலத்தில் அதுவரை அமலில் இருந்த பசுவதை தடைச் சட்டத்தை மேலும் கடுமையாக்கி, 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கக் கூடியதாக அச்சட்டத்தை மாற்றியமைத்தது. அது முதல் அம்மாநிலத்தில் பசுப் பாதுகாப்பு குழுக்கள் என்ற பெயரில் இந்து மதவெறி குற்றக் கும்பல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி, அக்கும்பல் நடத்தும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

அரியானாவில் கடந்த ஜூலை மாதம் மாட்டுக்கறியை கடத்தியதாகக் கூறி இரண்டு முஸ்லீம்கள் வாயில் மாட்டுச்சாணியைத் திணித்து, வீடியோவில் பதிவு செய்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வாகனங்களைச் சோதனையிடுவது, தாழ்த்தப்பட்டோரையும் முஸ்லீம்களையும் தாக்குவது, பணம் பறிப்பது, பாலியல் வன்முறை செய்வது உள்ளிட்டு நகர்புறத்து சல்வாஜூடுமாகச் செயல்பட்டு வருகின்றன, இக்குற்றக் கும்பல்கள்.

அரியானா அரசும் பசு பாதுகாப்பு கும்பலும் கூட்டுச் சேர்ந்துகொண்டு பக்ரீத் பண்டிகையையொட்டித் தெருவோர பிரியாணி கடைகளில் பசு மாமிசம் இருப்பதாகக் கூறிச் சோதனைகளை நடத்தி மக்களிடம் பீதியை ஏற்படுத்தின. இவற்றின் நீட்சியாகத்தான் இப்ராஹிம் குடும்பத்தினர் மீது கொலை மற்றும் கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மாட்டுக்கறி முகாந்திரத்தை வைத்து எந்தக் குற்றத்தையும் செய்யலாம் என்ற நிலைமையை நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆசி பெற்ற மோடி அரசு உருவாக்கியிருக்கிறது. பசு பாதுகாப்பு என்பதை வைத்துக் கொண்டு பல்வேறு பெயர்களில் உருவாக்கப்பட்டு, நடமாடவிடப்பட்டிருக்கும் இந்து மதவெறி அமைப்புகள், சட்டத்தின் ஆட்சி என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் மாண்புகள் அனைத்தையும் தூக்கி கடாசிவிட்டு, தங்களைத் தாங்களே சட்டமாகவும் போலீசாகவும் நீதிமன்றமாகவும் நியமித்துக்கொண்டிருக்கிறார்கள். மைய அரசு, அதன் அமைச்சர்களின் வேலையே இத்தாக்குதலை நியாயப்படுத்துவது, குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக உள்ளன. குறிப்பாக, அரியானா அரசின் அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா, பசு பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் நடத்தப்படும் தாக்குதல்களை இந்து சமுதாயம் விழிப்படைந்து வருவதற்கான உதாரணங்களாகக் கூறுகிறார்.

போலீசும், நீதிமன்றமும் இக்குற்றக் கும்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்டவகளையே குற்றவாளியாக்குகிறது. குறிப்பாக, உ.பி.யில் தாத்ரி பகுதியில் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, தாக்கிக் கொல்லப்பட்ட அக்லக் குடும்பத்தினர் மீது பசுவதைத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உ.பி. மாநில நீதிமன்றத்தாலும், போலீசாலும் அக்லக் குடும்பத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ‘‘இந்த உண்மை உங்களுக்கு எட்டவில்லையா? இப்படி நடப்பது குறித்து நீங்கள் வெட்கப்படவில்லையா? நீங்கள் அனைவரும் நம்பிக்கை துரோகிகளா? இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு நாஜிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நீதிபதிகள் விசாரிக்கப்பட்டதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்”எனக் கடுமையாகச் சாடியும் எச்சரித்தும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார் படிப்பு வட்டத்தின் மீது விதிக்கப்பட்ட தடை, ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை தொடங்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ராஜதுரோக வழக்கு பாய்ச்சப்பட்டது வரை; சமஸ்கிருத வாரம் தொடங்கி புதிய கல்விக் கொள்கை வரை; தாத்ரியில் அக்லக் படுகொலை செய்யப்பட்டது தொடங்கி ஊனாவில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மேவாட்டில் விவசாயக் கூலியான இப்ராஹிம் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொலை, பாலியல் வல்லுறவு ஈறாக இவையாவும் அரசின் உறுப்புகள் அனைத்தும் மிகமிக வேகமாக பார்ப்பன பாசிசமயமாகிவருவதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும், வீழ்த்தி முறியடிக்கவும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை என்ன என்பதுதான் நம் முன்னுள்ள சவால்.

– அமலன்
____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

வாமன ஜெயந்தி – வானரங்களுக்கு ஆப்பு !

2

டந்த மாதம் (செப்.2016) கேரள மக்களால் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவித்த பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா, “கேரள மக்களுக்கு இனிய வாமன ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்” என்று தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ மலையாள இதழான கேசரியும் தனது “ஓணம்” சிறப்பிதழில் இதே கருத்தைப் பதிவு செய்திருந்தது. மாவலி மன்னனின் மறுவருகையை வரவேற்கும் ஓணம் பண்டிகையை, வாமனன் அவதரித்த நாளாக மடை மாற்ற முயலும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இப்பார்ப்பனக் குசும்புத்தனத்தைப் பெரும்பான்மையான கேரள மக்களும் ஓட்டுக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் உடனடியாகக் கண்டித்துக் கருத்துக்களை வெளியிட்டன.

bjp-brahminical-mischief
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மாவலியின் நினைவாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி எனக் குறிப்பிட்டுத் தெரிவித்த வாழ்த்துச் செய்தி

ஓணம் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகளிலிருந்து மாறுபட்ட தொன்மத்தைக் கொண்டதாகும். “கேரளத்தை ஆண்டு வந்த மாவலி என்னும் அசுரகுல மன்னரின் ஆட்சியின்கீழ் மக்கள் பேதமின்றியும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். ஒரு அசுரகுல மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டும், மாவலிக்கு மக்கள் மத்தியில் இருந்த அன்பையும் ஆதரவையும் கண்டும் கொதித்துப்போன தேவர்கள், மாவலியை வீழ்த்த விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். மாவலி தனது யாகத்திற்காகத் தானம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கு வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு தமக்கு மூன்றடி நிலம் வேண்டும் என யாசகம் கேட்டார். மாவலியின் ராஜகுருவான சுக்கிராச்சாரியார், வந்திருப்பது விஷ்ணு என்றும் அவரது சதித் திட்டத்திற்கு பலியாக வேண்டாம் என்றும் மாவலியிடம் எச்சரித்தார். ஆனால், யாசகம் கேட்டு வந்தவற்கு இல்லை என்று தம்மால் சொல்ல முடியாது என்று கூறி, சுக்ராச்சாரியரின் எச்சரிக்கையை மறுதலித்த மாவலி மன்னன், மூன்றடி நிலத்தைக் கொடுக்கச் சம்மதித்தார். குள்ளமாக வாமன வடிவத்தில் வந்த விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். மூன்றாவது அடியைத் தனது தலை மேல் வைக்குமாறு மாவலி கூறினார். இதற்காகவே காத்திருந்த விஷ்ணு மாவலியின் தலையில் கால் வைத்து அழுத்தி, அவரைப் பாதாளத்திற்குள் தள்ளினார். அப்போது மாவலி விஷ்ணுவிடம், தாம் ஆண்டுக்கொருமுறை தமது குடிமக்களைக் காண பூமிக்கு வந்து செல்ல அனுமதித்து வரமளிக்க வேண்டினார். விஷ்ணுவும் அவ்வரத்தை மாவலிக்கு அளித்தார்” என்பதுதான் ஓணம் பண்டிகையின் பின்னுள்ள புராணக் கதை.

இப்புராணக்கதையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில், திருவோண நட்சத்திர நாளன்று மாவலி மன்னன் தனது குடிமக்களைக் காண வருவது ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கேரள மக்கள் மாவலி மன்னனை வரவேற்க, தங்களின் வீட்டின் முன்பு அத்தப்பூக் கோலமிட்டு, பல்வேறு வகையான உணவு வகைகளைச் செய்து படையல் இடுகின்றனர்.

V0044941 Vamana avatar: Vaman before King Bali and consort. Gouache dவிஷ்ணுவின் அவதாரங்கள் அசுரர்களை வதம் செய்ய எடுக்கப்பட்டவை என்றாலும், அந்த அவதாரங்களிலேயே அயோக்கியத்தனமானது வாமன அவதாரம்தான். ஏனெனில், மற்ற அவதாரங்களில் எல்லாம் தேவர்களுக்கு ‘கொடுமை’ செய்த அசுரர்களைத்தான் விஷ்ணு வதம் செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பார்ப்பனப் புராணப்படியே மக்கள் நலம் பேணும் மன்னனாகச் சித்தரிக்கப்பட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மாவலியை விட்டு வைப்பது தமக்கு ஆபத்து எனக் கருதிய தேவர்கள், விஷ்ணுவோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தந்திரமாக அம்மன்னனை வீழ்த்திய அயோக்கியத்தனம்தான் வாமன அவதாரம்.

நரகாசுரன், மகிசாசுரன் போன்ற அசுரர்களைப் பார்ப்பனக் கடவுளர்கள் கொலை செய்ததைப் போற்றி தீபாவளி, துர்கா பூஜை உள்ளிட்ட இந்துமதப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வெற்றி பெற்ற பார்ப்பனக் கடவுளர்கள்தான் அந்தப் பண்டிகையின் நாயகர்கள். ஆனால் ஓணம் பண்டிகையோ, பார்ப்பனக் கடவுளின் சதியால் கொல்லப்பட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மாவலியை நினைவுகூர்ந்து வரவேற்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் நாயகனாக அசுரகுல மன்னன் இருப்பதை உறுத்தலாகக் கருதும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல், அதன் காரணமாகவே ஓணம் பண்டிகைக்கு வாமன ஜெயந்தி என வாழ்த்துத் தெரிவித்து, அப்பண்டிகையின் குறிபொருளையே மாற்றிவிடச் சூழ்ச்சி செய்கிறது.

இந்துமதப் புராணங்களால் கொடுங்கோலர்களாக சித்தரிக்கப்படும் அசுரர்களை, இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குல தெய்வங்களாக வழிபடுகின்றனர். அவ்வகையில், இராமனால் கொல்லப்பட்ட இராவணனை ஜார்கண்டைச் சேர்ந்த பழங்குடி இன மக்களும், துர்க்கையால் நைச்சியமாகக் கொல்லப்பட்ட மகிசாசுரனை சந்தால் பழங்குடி இன மக்களும் குல தெய்வமாகப் போற்றி வருகின்றனர். கேரளத்திலோ பார்ப்பனர் உள்ளிட்ட எல்லாச் சாதியினரும் மாவலியை கொண்டாடுகிறார்களேயன்றி, வாமனனைக் கொண்டாடுவதில்லை.

தனது கருத்துக்குக் கேரள மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சாக்கில், “கேரளாவில் உள்ள வாமன கோவிலில் மக்கள் அன்றாடம் வழிபடுவதால், வாமன ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறியதில் தவறு ஏதும் இல்லை” என்று பா.ஜ.க. கேரள மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் தந்திரமான அறிக்கை அளித்தார். மேலும், ”மாவலியை நினைவுகூரும்போது வாமன அவதாரத்தை நினைவுகூராமல் இருக்க முடியுமா?” என்று அடிமுட்டாள்தனமாகவும் சமாளிக்க முயன்றது ஆர்.எஸ்.எஸ்.

rss-brahminical-mischief-captionஇரண்டாம் உலகப் போர் என்றால் ஹிட்லர் நினைவு வரத்தான் செய்யும். இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கிலேயர்களைப் பற்றியும் சொல்லத்தான் நேரிடும். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வாதப்படிப் பார்த்தால், இந்த வில்லன்களைத்தான் கொண்டாட வேண்டும். அதனுடைய வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைக் கூட காணவியலாத அளவிற்கு ஆரிய – பார்ப்பன வெறி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கண்களை மறைக்கிறது.

இது மட்டுமின்றி, கேரளாவில் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், சாதி இந்துக்கள் எனப் பெரும்பாலான மக்களின் பொதுவான உணவாக மாட்டுக்கறி இருந்துவரும்வேளையில், மாட்டுக் கறிக்குத் தடை கோரி கேரளாவில் பரப்புரை செய்து வருகிறது, பா.ஜ.க. கேரள மக்களின் பாரம்பரியம், பண்பாடு இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தனது ஆரிய கருத்தியலையும், பண்பாண்டையும் திணிப்பதிலே ஆர்.எஸ்.எஸ். கும்பல் குறியாக இருப்பதைத்தான் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

தன்னுடைய ஆரிய வெறியைப் புரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலே கேரள மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இருந்தபோதிலும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான யாரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், “அமித் ஷாவின் கருத்து கேரள மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக” மொன்னையாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். வாமனனின் சூழ்ச்சி தெரிந்தும் அவனுக்கு வரம் கொடுத்த மாவலியை நேர்மையாளன் என்றோ, ஏமாளி என்றோ சொல்லலாம். அமித் ஷாவுக்குச் சலுகை வழங்கும் இவர்களை என்னவென்று அழைப்பது?

– அழகு

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

திரை விமரிசனம் : ஒரு நாள் கூத்து

6

ந்த படம் வெளிவந்து (ஜூன் 2016) நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இறைவி போன்ற ‘பேசப்பட்ட’ படங்களின் காலத்தில் இந்தப் படம் அதிகம் பேசப்படாமல் போனது அதிசயமல்ல. அந்த பேசாமைக்கு காரணம் காதல், திருமணம் குறித்து உள்ளது உள்ளபடி உரையாடுவதற்கு நம் சமூகம் இன்னமும் தயாராக இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் காவ்யா (நிவேதா); அப்பாவின் கௌரவத்தால் திருமணம் தள்ளிப் போகும் லக்ஷ்மி (மியா); நடுத்தர வர்க்கத்திற்கே உரிய நிபந்தனைகளால் திருமணத்திற்கு போராடும் சுசிலா (ரித்விகா) என மூன்று பெண்களின் திருமண – காதல் நிகழ்வுகளை எதிரும் புதிருமான வாழ்க்கை அனுபவங்களைச் சுற்றி இக்கதை பின்னப்பட்டிருக்கிறது.

கதையின் நாயகிகளான மூன்று பெண்களோடு அவர்களைச் சுற்றியும், பாதுகாத்தும், கடைத்தேற்றியும், காதலித்தும் வாழும் ஆண்களும்  கதையில் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

“நீ அழகா அடக்க ஒடுக்கமா இருக்கியாம், உன்ன கல்யாணம் செய்யறவன் கொடுத்து வைச்சவனாம்” என்று திண்டுக்கல் கல்லூரி நாட்களில் நெல்லைத் தோழி “ஏம்லே” சேர்த்துச் சொல்லும் போது லக்ஷ்மி “ஆமாம்ல” என்று வெட்கத்துடன் பெருமைப்படுகிறாள். இருப்பினும் அந்தப் பெருமை சடுதியில் சோகமாய் உருமாறுகிறது. சடுதிகளாய் வரும் காட்சிகளில் பலர் அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். “உங்களைத்தான் மனசுல நினைச்சிருக்கோம்” என்று அனைவரிடமும் ஏமாற்றுகிறார், அவளது அப்பா. நிலைக் கண்ணாடியில் ஒட்டுப் பொட்டை ரசித்துக் கொண்டே பொறித்தவளுக்கு பின்னர் அந்தப் பொட்டே ஒட்டாமல் கீறுகிறது.

வந்தவர்கள் தனது சொத்து, கௌரவத்திற்கு இணையாக இல்லை என்று கருதும் லக்ஷ்மியின் அப்பாவை கடைசியில் வரும் சென்னை இளைஞனது குடும்பத்தினர் அதே விதியைச் சொல்லி (உங்களத்தான் மனசுல வச்சுருக்கோம், போய்ட்டு நல்ல சேதி சொல்லுறோம் காத்திருங்க!) நிராகரிக்கின்றனர். ஆணும் பெண்ணும் காதலித்து மணம் செய்யும் வாய்ப்பில்லாத சமூகத்தில் பெற்றோர் ஏற்பாட்டால் வரும் வாய்ப்பைக் கூட விரும்பும் நிலைமை இல்லை. சென்னை இளைஞன் லக்ஷ்மியை மனதார விரும்புகிறான். அவனது பெற்றோரோ மறுக்கின்றனர். “உன் விருப்பம் முக்கியமல்ல, உன் பெற்றோரை பேசச் சொல்” என்கிறார் லக்ஷிமியின் அப்பா. மொட்டை மாடியில் தோழியின் உந்துதலுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னை இளைஞனோடு வாழச் செல்கிறாள் லக்ஷ்மி. கோயம்பேட்டில் அந்த இளைஞைனை பிடித்துச் செல்லும் குடும்பத்தார் அங்கே பரிதாபமாய் நிற்கும் லக்ஷ்மியை வக்கிரமாக திட்டுகிறார்கள்.

பணிவும் கனிவும் பாந்தமும் சாந்தமும் தனக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் அல்ல, வாழ்வைத் தடை செய்யும் விதிமுறைகள் என்று லக்ஷ்மி உணரும் போது கொஞ்சம் தைரியமடைகிறாள். சென்னைக்கு ‘ஓடிப்’ போன கதையை தோழியைப் பார்க்க போவதாக கூறி ஊர் – உறவு வாய்களை அடைக்கிறாள். அது இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் பிறக்கும் ஒரு வைராக்கியம். பசங்கல்லாம் ரொம்ப நல்லவன்ங்கடி என்று அதிரடியாக பேசும் நெல்லைத் தோழி பிறகு மணமாகி பிரிந்து முன்னாள் காதலன் இரண்டாம் மணம் செய்ததைக் கூறும் போது பசங்களின் உண்மை முகத்தை ஒப்புக் கொள்கிறாள். எனினும் அவன் கொடுத்த இரண்டு குழந்தைகளின் பொருட்டு இனி அவளும் அடக்க ஒடுக்கமாகத்தான் வாழ வேண்டும்.

லட்சுமிகளாக அழைக்கப்பட வேண்டியவர்கள் லக்ஷ்மிகளாக விரும்பும் போது லஷ்மியின் செல்வக் குறியீடு தடை போடுகிறது. லக்ஷ்மியை ‘ஒழுக்கத்துடன்’ வளர்த்திருப்பதால், தனது சொத்து-அந்தஸ்தை திருப்பதி படுத்தும் தரமான காளை மாடு கிடைக்கும் வரை, அவளை அடிமை மகளாக நடத்துவதை எவ்வித உணர்ச்சியுமின்றி நிதானமாக செய்கிறார் தந்தை. தந்தையின் ‘அருளி’ல் உறைந்திருக்கும் வில்லத்தனத்தை, உடன்பிறப்பின் கையறு நிலை கண்டு சாடுகிறாள் லக்ஷ்மியின் அக்கா!

லக்ஷ்மியை பார்த்ததுமே அதிரடியாக காதலிக்கும் சென்னை இளைஞன், எதிர்ப்பு வரும் போது லக்ஷ்மியை ஓடி வா என்று கலகக்காரனாக அழைக்கிறான். எனினும் இந்த நாகரிகமும், அதிரடி சாகசமும் பேருந்து நிலையத்தில் இழுத்துச் செல்லும் அம்மாவின் அடியாட்களை மறுக்கும் வலிமையாக அவனிடத்தில் இருக்கவில்லை. சொத்து – அந்தஸ்தில் முளைத்து எழுந்திருக்கும் அவனது வேரில் சமூகத்தின் நீரை உரிஞ்சும் சக்தி இல்லை என்பதால் அவனது ஆசை நிராசையாக தோற்றுப் போகிறது.

திருச்சியில் அப்பா நடத்தும் வசதியான சாம்ராஜ்ஜியத்தின் உதவியுடன் சென்னை ஐ.டி துறையை தெரிவு செய்யும் காவ்யா, திண்டுக்கல் லக்ஷ்மி போல கட்டுப்பெட்டி அல்ல. “நீங்க ஃபிக்ஸடா, சிங்கிளா” என்று ராஜ்ஜுடன் அறிமுகமாகி, செல்பேசிகளின் பேச்சுக்களில் காதலாகி, நள்ளிரவு பைக் சவாரியில் அடுக்குமாடி தம்பதியினராக கனவும் நனவும் இணைந்த திட்டத்தில் கலந்து பயணிக்கிறாள்.

திண்டுக்கல் அப்பா போல திருச்சி அப்பா அமைதியாக தனது அந்தஸ்து விதிகளை வைத்திருக்கவில்லை. கன்று அலைந்தாலும் பால்மடி தேடி வரவேண்டும் என்பதால் விட்டுப் பிடிக்கிறார். இதற்கு அவர் மெனக்கெடவேண்டிய அவசியத்தை ராஜ்ஜும் வைக்கவில்லை.

ஏழ்மைப் பின்னணியிலிருந்து முதல் தலைமுறையாக பழைய மகாபலிபுரம் சாலை வாழ்க்கையை தரிசிக்கும் அவனுக்கு எங்கே எப்படி நிலை கொள்வது என்பது சிக்கலாகிறது. எனக்கு என் குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று காவ்யாவிடம் தடுமாற்றத்தை பகிர்கிறான். தனது பின்னணியைப் பற்றி, தந்தையைப் பற்றி, காரில்லாத தனது அந்தஸ்தைப் பற்றி காவ்யா அப்பாவிடம் எப்படி சொல்வது என்பதே அவனது தேவதாஸ் சோகத்திற்கு போதுமானது.

Oru-Naal-Koothu-Movie-posterதனது மகளின் சுதந்திரத்திற்கும், தன் மகள் விரும்பும் காதலனது தடைகளுக்கும் காரணமான “சொத்து-அந்தஸ்து” என்ற யதார்த்தமான உண்மையைக் கொண்டு இலாவகமாக விளையாடுகிறார், காவ்யாவின் அப்பா. பெர்னார்ட் ஷாவின் மேஜர் பார்பரா நாடகத்தில் வரும் பீரங்கித் தொழிற்சாலையின் முதலாளி அண்டர்ஸாப்டோடு ஒப்பிடத் தகுந்தவர் இந்த தந்தை. சுதந்திரவாதம் பேசும் தனது மகனை அவன் வாயாலேயே அது முதலாளித்துவம் அருளிய பிச்சை என்று தெளியவைக்கும் அவரது திறமையை இங்கே காவ்யாவின் அப்பாவிடமும் காண்கிறோம்.

போக்குவரத்து நெருக்கடியால் சந்திக்க வரவில்லை என்ற சால்ஜாப்பை சொந்த ஆளுமையின் நெருக்கடி என்பதாக முதல் பார்வையிலும், முதல் கேள்வியிலும் ராஜ்ஜிடம் கிண்டுகிறார் அவர். எதிர்பார்த்தபடி பதட்டமடையும் ராஜ், தனது சுயமரியாதை கேலி செய்யப்படுவதை சகிக்க முடியாததோடு, தனது கனவுக் காதலும் நிறைவேறாது என்பதை அவலத்துடன் ஏற்க வேண்டியிருக்கிறது.

மகளின் சொந்த விருப்பத்திற்கு தடை சொல்லா தந்தையாக காட்சியளிப்பவர், ராஜ் ஏன் அவளை உடன் திருமணம் செய்ய முடியாது என்பதை மறுக்க முடியாதபடி விளக்குகிறார். திருமணப் பேச்சை ஆரம்பித்தால் குடும்ப பாரங்களை கரையேற்றிவிட்டு செய்வதாக ராஜ் கண்டிப்பாக கூறுவான் என்று சரியாக கணிக்கும் அவர், காதலி பெரிதா, குடும்ப பாரம் பெரிதா என்ற போராட்டத்தில் சிக்குண்ட ராஜ்ஜை மணந்தால் அங்கே மணம் வீசாது, சோகம் வாட்டியெடுக்கும் என்கிறார். இதற்கு மேல் காவ்யாவின் காதல் நீடித்திருக்க அடிப்படையில்லை.

எனினும் தனது தந்தை தனது காதலனை நாயென பகடி செய்து துரத்தி விட்டதாக கருதும் காவ்யா, அதையே தனது காதலனது விளக்கத்தால் பின்னர் அறிந்து கொண்டாலும் அவள் காதலுக்காக எந்த அதிரடி முடிவையும் எடுக்கவில்லை. காரும், சொந்த வீடும், தனித்துவமான வாழ்க்கையும் நிபந்தனைகளாக இருக்குமளவுதான் அவளது சுதந்திரத்திற்கு மதிப்பு. இந்த பேருண்மையை அறிந்ததால்தான் அவள் தந்தை பிடித்து வந்த அமெரிக்க மாப்பிள்ளைக்கு  தலையசைக்கிறாள். பிறகு அந்த திருமணமும் மாப்பிள்ளை தந்தையின் திடீர் மரணத்தால் நிறுத்தப்படுகிறது.

மூகூர்த்தமன்று நின்று போகும் திருமணத்திற்கு பையன்கள் கிடைக்கமாட்டார்கள் என்று சுற்றம் கூறும் போது வேண்டா வெறுப்பாக என்றாலும் தயக்கத்துடன் ராஜ்ஜை அழைத்து வரவா என்று கேட்கிறார். குடித்து விட்டு மட்டையாகிக் கிடக்கும் ராஜும் நண்பனோடு திருச்சியில் நடைபெறும் காவ்யாவின் திருமணத்திற்கு விரையும் போது இதைக் கேள்விப்படுகிறான். அப்போது தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காதல் மேலோங்க விரைகிறான்.

“நீங்கள் நினைத்த போது பயன்படுத்திக் கொள்வதற்கு ராஜ் ஒரு “Back-up option” கிடையாது என்கிறாள் காவ்யா. தனது காதலனது சுயமரியாதையை இழக்க அவள் சம்மதிக்கவில்லை என்று நமக்கும் தோன்றலாம். ஆனால் யதார்த்தம் தந்தை சொல்லும் அந்தஸ்து வகைகளோடு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பழையைவை மறுக்கும் ஒரு புதுக்குருத்து போல இளம்பெண்ணான அவளது காதல் அப்படி கற்பனை செய்வதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அதே போன்று சுயமரியாதையை இழந்தாலும் காவ்யாவை கைப்பிடிப்போமா என்று யோசிக்கும் போது ராஜ்ஜிடமும் அந்த ஏக்கத்தை பார்க்கிறோம். ஏமாற்றங்களை எதிர்த்துப் போராட முடியாத தளைகளில் இரு இளம் மனங்கள் அலைபாய்கின்றன.

க்ஷ்மி ஒரு கட்டுப்பெட்டி, காவ்யா ஒரு சுதந்திரப் பறவை என்றால் சுசிலா யார்? அவள் எல்லாவற்றிலும் நடுவில் நின்று கொண்டு அல்லாடும் நடுத்தர வர்க்கம். அதாவது காதலிக்கும் வாய்ப்பிருந்தும், காதலின் செயற்கை வெளியை அன்றாடம் பார்ப்பவளாக இருப்பதாலும், ஒரு வானொலி பண்பலை அறிவிப்பாளராக வளவளவென்று பேசினாலும், பேச முடியாத பாலினம் மற்றும் ஒரு சராசரிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் அவள் அடங்கியே வாசிக்கிறாள். அவளது மாநிற சராசரி தோற்றம் குறை தேடுவோருக்கு ஒரு கூடுதல் அம்சம். லக்ஷ்மியைப் போன்ற கனவோ, காவ்யாவைப் போன்று தெரிவோ இல்லாமல் கிடைக்கும் வாழ்வு போதுமென்பவள் சுசிலா. ஆயினும் கிடைத்ததா?

அண்ணன் பெண் பார்த்து அலைவது போதாது என்று அவளும் இணைய மணமக்கள் தளங்களில் தேடுகிறாள். அந்த தேடலை உளவறிந்து பார்க்கும் சக அறிவிப்பாளரான சதீஷின் பார்வையில் அவள் ஒரு நெருப்பு. ஆனால் அந்த நெருப்பு தனது உள்ளுறை எரிபொருளால் எரிவதல்ல, பெண் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் என்று சுற்றத்தினர் ஊற்றும் சொற்களால் எரிகிறது.

ஒருவழியாக மகிழுந்து விற்கும்  நிறுவனத்தின் ஊழியன் அவளை சம்மதிக்கிறான். எப்படி? ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் மீது சந்தேகப்படும் ஊராருக்கு என்ன பதில் என்கிறான். கோவிலில் மண விசயமாக சுற்றும் நம்மை, தம்பதியினர் எனும் நினைப்போரால் அது உண்மையாகி விடாது அல்லவா, அது போல பார்ப்போரின் முன்முடிவும், தவறான எண்ணங்களுமே அப்படி தீர்மானிக்கும் என்கிறாள். இவளை மண முடிக்கலாம் என்று நண்பனது ஆலோசனையைக் கேட்டு சம்மதிக்கிறான் மகிழுந்து இளைஞன்.

அதே நண்பன் வேறு ஒரு உடன் பணியாற்றுபவனின் மணமகளைப் பார்த்து அவளைப் போன்ற அழகானவள் நமக்கில்லை என்று சொல்லும் போது மகிழுந்து இளைஞன் தடுமாற ஆரம்பிக்கிறான். அதாவது அழகிலும், நிறத்திலும், பணியிலும் தரம் குறைந்தவளை அவசரப்பட்டு ஏற்றுவிட்டோமோ என்று உள்ளே குமைகிறான். நவீன செல்பேசிகளையோ இல்லை சலவை எந்திரங்களையோ ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு கூட உடன் பாணியாற்றும் விற்பன்னர்களிடம் ஆலோசனை கேட்கும் போது வாழ்க்கைத் துணை குறித்த அவர்களின் மதிப்பீடு மிக முக்கியமல்லவா?

ஆனால் அந்த மதிப்பீடு வெறுமனே கார்களை அழகென்றோ, நவீன வசதியானதென்றோ, வட்டியில்லா கடனுக்கு கிடைக்குமென்றோ, நிறுத்தும் வசதி இல்லையென்றாலும் தெருவில் நிறுத்தலாமென்றோ வாடிக்கையாளர்களை வென்றெடுக்கும் ஒரு மகிழுந்து விற்பன்னரிடம் என்னவாக இருக்கும்? காரை எப்படியாவது தள்ளுபவனின் திறமை ஒரு காரிகையை பிடிப்பதில் மட்டும் எப்படி வேறுபடும்?

திருமணத்தை நிறுத்து, அந்தப் பெண்ணின் வாழ்வோடு விளையாடாதே என்று அந்த இளைஞனின் மேலாளர் எச்சரிக்கிறார். அவர் கார்களோடு பல காலம் பழகிய அனுபவஸ்தர். சுசீலாவின் ஃபேஸ்புக் படங்களையை மணிக்கணக்கில் மாற்றி மாற்றி பார்ப்பவனுக்கு அந்த காரை வாங்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. தனது ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டு பல சுற்று போராட்டங்களுக்குப் பிறகு சுசீலாவிடம் அதுவும் அவள் பண்பலை நிகழ்ச்சியை துவக்கும் அவசரமான நேரத்தில் சட்டென்று தெரிவிக்கிறான்.

அவன் ஆசுவாசப்பட ஆரம்பிக்கும் நேரத்தில் சுசீலாவின் வதை படலமும் துவங்குகிறது. நிச்சயதார்த்தம் முடிவாகி, நாள் குறித்து, ஆடை அணிகலன் வாங்கி, மண்டபமும் பிடித்த பிறகு இந்த திருமணம் நின்றால் அவளை சுற்றி வந்து படையெடுக்கும் “என்னாச்சு” கேள்விகளுக்கும், இப்போதாவது முடிந்ததே என்று பெருமூச்சுவிடும் அண்ணன் மற்றம் குடும்பத்தாரின் கடமை அர்ப்பணிப்புகளுக்கும் என்ன சொல்வது? என்னை மணமுடித்து விட்டாவது ரத்து செய் என்று அவலத்தின் கடைசி எல்லை வரை சென்றும் கெஞ்சுகிறாள். அவனோ அழகற்ற ஒரு பெண்ணை இப்போதாவது மறுத்து விட்டோமே என்ற சுய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில் மறுக்கிறான்.

அதே நேரம் அவன் கெட்டவனும் அல்ல. சுசீலாவின் அண்ணனும், மாமாவும் வீடு ஏறி வந்து காத்திருந்த போதும் அவர்களின் முகம் பார்த்து மறுக்கும் தைரியம் அவனுக்கில்லை. பேசி கழுத்தறுத்துவிட்டோமென்ற குற்ற உணர்வு அவனிடம் இல்லாமல் இல்லை. சுசீலாவிடம் அதை வெளிப்படையாக காட்டுபவன், சுற்றத்தாரிடம் ஏன் காட்ட முடியவில்லை?

சுசீலாவோ தனது அண்ணனிடம் எப்படியாவது மகிழுந்து இளைஞனை பேசி சரி செய்யுமாறு நச்சரிக்கிறாள். அவள் நச்சரிக்கவில்லை என்றாலும் கருணாகரனுக்கும் வேறு வழியில்லை. இறுதியில் சாமி மலை இறங்குவது போல மகிழுந்து இளைஞன் மனம் மாறுகிறான். தான் அழகில்லை என்று கருதிய மதிப்பீட்டின் இன்பத்தை விட, கழுத்தறுத்தவன் என்ற குற்ற உணர்வின் துன்பம் அவனை மாற்றியிருக்க கூடும்.

ஆனால் அவனது மனமாற்றம் நடந்தேறும் தருணம் சுசீலாவும் “இனி நமக்கு செட்டாகாது” என்று மனம் மாறி முறித்துக் கொள்கிறாள். அடுத்த காட்சியில் அவளும் சதீஷும் ஒரே படுக்கையில்! “சீ இதுக்குத்தான இவ்வளவும், திருமண ஏற்பாடுகளை நினைச்சாலே கேவலமாக இருக்கிறது” என்பவள் இவ்வுறவின் பொருட்டு உன்னை மணமுடிக்குமாறு கேட்கமாட்டேன் என்று சதீஷிடம் சிரிக்கிறாள். அவனோ அப்படி கல்யாணம் செய்தால்தான் என்ன? என்று புன்னகைக்கிறான்.

கலகத்தின் திளைப்பில் அநாகரீகத்தை புரிந்து கொண்டவள் மீண்டும் திருமண பந்தத்தில் பாதுகாப்பாக அடைக்கலம் தேடலாம் என தனது ஆசையை அதாவது எல்லாம் பொருந்திய உறவை கண்டடைகிறாள். கோயம்பேடு தனியார் சொகுசு பேருந்து நிலையத்தில் ஒரு வாரம் கழித்து பெற்றோரோடு வந்து பேசுவேன் என்று சதீஷ் சொல்லும் போது ஒரு வாரமா என்று மலைக்கிறாள். ஐந்தாண்டுகள் அவள் பட்ட அவதிகளுக்கு இந்த ஒரு வாரமே மிக நீண்ட காலம் என்று தோன்றியிருக்கும். அது உண்மைதான்.

திருச்சிக்குச் சென்ற சதீஷ், எதிர்பாரா விதத்தில் திருமணம் நின்று போன காவ்யாவை மணக்கிறான். சுசீலாவுக்கு அந்த தகவல் தொலைபேசி மூலம் வருகிறது. அடுத்த கணத்தில் அவளது பண்பலை நிகழ்ச்சியும் ஆரம்பிக்கிறது” வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், மேடு பள்ளங்கள், தோல்விகள் எல்லாம் இருக்கும். என்ன ஃபிலாசபிக்கலா பேசுறேன்னு பாக்கிறீங்களா ஏதோ சொல்லணுமுன்னு தோணிச்சு அவ்வளவுதான்.” என்று முடிக்கிறாள்.

க்ஷ்மி, காவ்யா, சுசீலா ஆகிய மூவரின் கதைகளையும் ஒரு இடத்தில் முடிப்பதற்கும், பிறகு தொடர்வதற்கும் இயக்குநர் ஒரு சாலை விபத்தை சேர்த்திருக்கிறார். விபத்து, ரத்தம், மரணம், வேகமான பேருந்து போன்ற அதிரடிகளால் அல்ல, எனக்கு தரங்குறைந்த பட்டுடன் தாம்பளத்தில் அழைப்பிதழ் வைத்தான் போன்னற சில்லறை விசயங்கள் கூட ஒரு நாள் கூத்தை புரட்டி போட்டுவிடும். “காதலில் சொதப்புவது எப்படி” திரைப்படத்தில், புதுவையில் மதுவருந்தும் நண்பனை இலேசாக தூண்டி விட்டு அவனது காதலியை சந்தேகப்பட வைப்பான் அதே காதலியின் முன்னாள் காதலன். ஆகையால் அந்த விபத்து மையமில்லாமலேயே கூட இந்தப் படம் தனித்து மிளிரத்தான செய்யும்.

திருமணம் குறித்த கனவுகள், கற்பனைகளை நாம் ஒவ்வொருவரும் சில பல ஆண்டுகளை தனித்திருந்து அசை போடுவதால் செலவழிக்கிறோம். அந்த செலவால் வரவு என்ன? சில பல இன்பியல் கனவுகள், ஆசைகளைத் தாண்டி இருபாலாரையும் இணைக்கும் இந்த சமூக நிகழ்வின் சட்டதிட்டங்களையும், புரட்டிப் போடும் சதுரங்க ஆட்டத்தையும் நாம் ஒரு போதும் அறிய முடிவதில்லை. அறிவதற்கான அனுபவங்கள் கிடைத்து கனியும் போது மாற்றுவதற்கான முயற்சியோ தேடலோ இல்லை என்பதால் அதே சட்டதிட்டங்களை வாழையடி வாழையாக உபதேசிக்கும் பெரிசுகளாக மாறுகிறோம்.

திருமணம், காதலுக்கு இவ்வளவு விசித்திரமான, நுணுக்கமான, அநாகரிகமான சட்டதிட்டங்களை வைத்திருக்கும் பார்ப்பனிய சமூக அமைப்பு போல உலகில் வெறு எங்கும் இருக்குமா என்பது ஐயம். அதனால்தான் இந்த சட்டதிட்டங்களை மறைத்து திருநெல்வேலி அல்வாவை வெட்டும் திருப்பாச்சி அரிவாள் போல அவ்வளவு சுலபமாக ஆணும் பெண்ணும் பிரச்சினையே இன்றி காதலிக்கும் தமிழ்ப் படங்கள் இங்கே இளையோரின் சுய இன்ப அடையாளங்களாக மாறிவிட்டன. சமூகத்தின் பாதுகாப்பில் திளைத்திருக்க வேண்டிய இன்பம் சுயமாக எப்படி நீடிக்கும்?

வேட்டையாடும் ஆண்களும், வேட்டையாடப்படும் பெண்களும் உருவாக்கி வைத்திருக்கும் சமரசங்கள், காரியவாதங்கள், தயக்கங்கள், ஆசைகள், வேடங்கள் மற்றும் கலகங்களை மிகவும் நேர்த்தியான திரைக்கதையால் செறிவான உணர்ச்சியோட்டத்துடன் சித்தரிக்கிறது, ஒரு நாள் கூத்து திரைப்படம்.

இந்தப் படத்தில் வரும் மையப் பாத்திரங்கள் அனைவரும் அவரவர் நோக்கில வெளிப்படுத்தும் இரு துருவ வெளிப்பாடுகளை இயக்குநர் துல்லியமாக  கொண்டு வருகிறார். அதே நேரம் மூன்று பெண்கள் அவர்களைச் சுற்றி மூன்று விதமான ஆண்கள், குடும்பங்கள் அனைத்தையம் வியப்பூட்டும் விதத்தில் ஓரிழையில் இணைத்து ஒரு கதையாக அதுவும் யதார்த்தத்தோடு போட்டி போடும் அனுபவமாக கையளிப்பது சவாலான விசயம். பல காட்சிகள் சேர்ந்து கூற வேண்டிய உணர்வையும் – உணர்ச்சியையும் இப்படத்தின் கூரிய உரையாடல்கள் ஆழமாக கொண்டு வந்திருக்கின்றன. காட்சி ஊடகத்தை வாழ்க்கை குறித்த ஒரு வலுவான கண்ணோட்டம் பயன்படுத்தும் போது மட்டுமே இத்தகைய சாதனை சாத்தியம்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  • இளநம்பி

தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்

0

த்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் பங்களாக்களிலும் பண்ணை வீடுகளிலும் நடந்த வருமான வரிச் சோதனை ஒரு பரபரப்புச் செய்தி என்பதைத் தாண்டி, எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இன்றி அமுங்கிப் போனது தற்செயலானது அல்ல. இத்துணைக்கும் அவர்கள் இருவரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள், தொழில்களில் போட்டுள்ள முதலீடுகள் பற்றிச் சில புலனாய்வு பத்திரிகைகளில் கசிந்துள்ள செய்திகள், இந்த விவகாரம் சாதாரணமான ஊழல், கமிசன் கொள்ளை அல்ல – என எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும், இந்த வருமான வரிச் சோதனை தமிழக, தேசிய ஊடகங்களிலோ, அரசியல் வெளியிலோ காத்திரமான விவாதத்திற்கு உட்படுத்தப்படாமல், தாலுகா ஆபிஸ், டிராபிக் போலீசு லஞ்ச விவகாரம் போல ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டது.

ஜெயா-சசி கும்பலுக்கு அனைத்துமாக விளங்கிய ஐவரணியில் ஒருவராக இருந்தவரும், கடந்த ஆட்சியில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவருமான நத்தம் விசுவநாதன் மலை முழுங்கி மகாதேவன் என்பதைச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்தன. அவை அனைத்தும் உண்மை என்பதைக் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வருமான வரிச் சோதனை நிரூபித்திருக்கிறது.

கொள்ளைக்கூட்டத் தலைவியுடன்... சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி துரைசாமி. (கோப்புப்படம்)
கொள்ளைக்கூட்டத் தலைவியுடன்… சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி துரைசாமி. (கோப்புப்படம்)

கடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது கரூரைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரது குடோனிலிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கோடி ரூபாயும் நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமானது என்பதோடு, நத்தம் விசுவநாதன் – அவரது மகன் அமர்நாத்; சைதை துரைசாமி – அவரது மகன் வெற்றி துரைசாமி; ஓ.பன்னீர் செல்வம் – அவரது மகன் ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளின் பினாமியாக அன்புநாதன் இருந்து வருவதும் இந்தச் சோதனையின் வழியாக அம்பலமாகியிருக்கிறது.

நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மந்திரிகளும், சைதை துரைசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளும் இலஞ்சம், கமிசன், அதிகாரமுறைகேடுகளின் வழியாகக் குவித்த பல்லாயிரம் கோடி ரூபாய்களை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் கடத்திச் சென்று, அங்கு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கு அன்புநாதன்தான் ஏஜெண்டாகச் செயல்பட்டிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் அன்புநாதன் 90 நாடுகளுக்குச் சென்று திரும்பியிருப்பதை அவரது கடவுச்சீட்டு உறுதி செய்கிறது. இந்த 90 நாடுகளுள், தாய்லாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்(சீனா) ஆகிய நாடுகளில் அ.தி.மு.க.வின் அமைச்சர்களுக்காக அன்புநாதன் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதை தினகரன், நக்கீரன், ஜூனியர் விகடன் ஆகிய ஊடகங்கள் அம்பலப் படுத்தியுள்ளன.

* துபாயில் உள்ள டய்ரா சிட்டியில் 1,900 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட வணிக வளாகம் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் வாரிசுகளுக்காக மனோஜ்குமார் கார்க் என்பவரின் பெயரில் அன்புநாதன் மூலம் வாங்கப்பட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சகம் விசாரித்து வரும் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் தற்பொழுது கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணிக் கொண்டிருப்பவன்தான் இந்த மனோஜ்குமார் கார்க்.

* இந்தோனேஷியாவிலிருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்த ஊழல் வழக்கில் தமிழக மின்சார வாரியமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த ஊழலால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 1,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்திற்குச் செயற்கையாக அதிகரிக்கப்பட்ட விலையில் நிலக்கரியை ஏற்றுமதி செய்த அந்த திவ்ய தேசத்தில் நத்தம் விசுவநாதனுக்குப் பத்துக்கும் மேற்பட்ட நிலக்கரி வயல்கள் சொந்தமாக உள்ளதோடு, அதே எண்ணிக்கையில் நிலக்கரியை ஏற்றிவரும் சரக்குக் கப்பல்களும் சொந்தமாக இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பா.ம.க. நிறுவனர் ராமதாசு.

தலைவிக்கே தண்ணி காட்டிய முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்
தலைவிக்கே தண்ணி காட்டிய முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்

* துபாயின் டய்ரா சிட்டிக்கு அருகிலேயே 10,000 கோடி ரூபாய் முதலீடு கொண்ட சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை, துபாயைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் நத்தம் விசுவநாதன் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலைக்கும் தமிழகத்தைச் சூரிய ஒளி மின்சாரப் பூங்காவாக மாற்றும் ஜெயாவின் திட்டத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்துத் தோண்டினால், பூதம்கூட வெளியே வரலாம்.

* தாய்லாந்தைச் சேர்ந்த காசி கோர்ன் வங்கி, சிங்கப்பூரைச் சேர்ந்த கிட் ஹுவாத் டிரேடிங் கம்பெனி, சீனாவைச் சேர்ந்த லோக்ஸ்லே ஹோல்டிங்கஸ், சீன கம்யூனிகேஷன் வங்கி ஆகிய நிறுவனங்களில் நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ்., ஆகியோரின் பணம் அன்புநாதன் மூலம் முதலீடு செய்யப்பட்டிப்பதாகக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.

* பெங்களூரிலுள்ள மடிவாலா பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள நிலத்தை அன்புநாதன் மூலம் 50 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, அதற்குரிய வருமான வரியைக் கட்டாமல் சைதை துரைசாமி ஏய்த்திருப்பதாக வருமான வரித்துறையே குறிப்பிடுகிறது.

* நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத் பங்குதாரராக உள்ள பிரிமியர் இன்டியா இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்குச் சொந்தமான வி.எம்.டி. நிறுவனம், எடிசன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவை மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கித் தரும் தரகு வேலையில் ஈடுபட்டுள்ளன. அமர்நாத்தும், வெற்றி துரைசாமியும் தங்களின் தகப்பனார்களின் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியே இந்தத் தொழிலில் கொடி கட்டிப் பறந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சார நிலையத்தை அமைத்துவரும் அதானி குழுமத்திற்காக விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, அதனைப் பலமடங்கு இலாபத்திற்கு அக்குழுமத்திற்கு விற்றுக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர்.

நத்தம் விசுவநாதன் மகன் அமர்நாத்.
நத்தம் விசுவநாதன் மகன் அமர்நாத்.

இந்த நிலக் கொள்ளைக்கு அப்பால், சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் நடத்தி வரும் சித்தார்த் எனர்ஜி என்ற சூரிய ஒளி மின்சார நிறுவனம், கிரெசண்டோ இன்ஃபோ டெக் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம்; கோவையைத் தலைமையகமாகக் கொண்டு வைர வியாபாரம் நடத்திவரும் கீர்த்திலால் ஜூவல்லரியில் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி குடும்பத்தின் முதலீடு; இலண்டனில் ஓக்லி பிராப்பர்டி சர்வீஸ், நியூயார்க்கில் ஒரு ஹோட்டல், மலேசியாவில் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் நத்தம் விசுவநாதனின் முதலீடுகள் – என இந்த இருவரும் தனியாகவும் கூட்டாகவும், சொந்தமாகவும் பினாமிகளின் பெயரிலும் நடத்திவரும் தொழில் சாம்ராஜ்ஜியம் மலைப்பு ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.

வருமானவரித் துறையின் சோதனைக்கு ஆளாகியுள்ள இந்த இருவரின் சொத்துக் குவிப்பு மட்டும் கேள்விக்குரியது அல்ல. இவர்களின் இந்தச் சட்டவிரோதமான சொத்துக் குவிப்பில் ஜெயா கும்பலின் பங்கு, பாத்திரம் என்ன, அதாவது சைதை துரைசாமியும், நத்தம் விசுவநாதனும் எந்தெந்த தொழில் முதலீடுகளில் ஜெயா கும்பலின் பினாமிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் மற்ற எல்லாவற்றையும்விட விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய முக்கியமான விடய மாகும்.

2011 அம்மாவின் பொற்கால ஆட்சியில், கமிசன் அடிப்பதற்காகவே அரசு மின்சார நிலையங்களும், திட்டங்களும் முடக்கப்பட்டு, தனியார் மின்சார நிலையங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. குறிப்பாக, யூனிட் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூரிய ஒளி மின்சாரத்தை, ஏழு ரூபாய்க்கு அதானி குழுமத்திடமிருந்து வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் 525 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமான கல்லூரியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானம்.
நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமான கல்லூரியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானம்.

25 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசிடமிருந்து வாங்க வேண்டிய எல்.ஈ.டி. விளக்குகளை வாங்காமல் புறக்கணித்துவிட்டு, அதே விளக்குகளை 145 கோடி ரூபாய் செலவில் தனியாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தார், சென்னை நகர மேயரான சைதை துரைசாமி.

இப்படி பல்வேறு ஊழல்கள், அதிகார முறைகேடுகள் மூலம்தான் அவர்கள் இருவரும் சொத்துக்களைக் குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், நகராட்சி கக்கூசுகள்கூட அம்மாவின் ஆணைக்கிணங்கவே திறக்கப்படும் தமிழகச் சூழலில், சூரிய ஒளி மின்சாரத்தின் விலையை நிர்ணயிப்பதும், மத்திய அரசிடமிருந்து குறைந்த விலையில் எல்.ஈ.டி. பல்புகளை வாங்க மறுப்பதும் அம்மாவிற்குத் தெரியாமல் நடந்திருக்கவே முடியாது.

நத்தம் விசுவநாதனும், சைதை துரைசாமியும் புறங்கையில் வழியும் தேனை நக்கியிருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்கள் அம்மாவுக்குத் தெரியாமல் அமுக்கியதன் காரணமாகத்தான், தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பு, ஜெயா கும்பலின் நம்பகமான வட்டத்திலிருந்து சைதை துரைசாமி ஓரங்கட்டப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட ஐவரணியினர் போயசு தோட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

ஐவரணி மட்டுமே ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தின. அதில் தமிழகத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்தை, வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்களை, தனது விசுவாசமிக்க போலீசு, உளவுத்துறை அதிகாரிகளைக் கொண்டு கைப்பற்றிக் கொண்டார், ஜெயா. அதேசமயம், அந்த ஐவரணியில் கொட்டை போட்ட பேர்வழியான நத்தம் விசுவநாதன் வெளிநாட்டில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களைத் தமிழகப் போலீசைக் கொண்டு கைப்பற்ற முடியாது என்பதால், வருமானவரித் துறை ஏவப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையே அம்மாவுக்குத் தெரிந்துதான், அவரது சம்மதத்துடன்தான் நடந்தது எனப் பத்திரிக்கைகள் குறிப்பிடுவதிலிருந்தே, வருமானவரித் துறை ஜெயாவின் ஏவல் நாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நடந்த கண்டெய்னர் பணக் கடத்தல் விவகாரத்தில் ஜெயாவைக் காப்பாற்றிவிட்ட மோடி – அருண் ஜெட்லி – வெங்கைய்யா நாயுடு கூட்டணி, அவருக்காக இதையும் செய்யும், இதற்கு மேலேயும் செய்யும்.

natham-captionஊடகங்களிலும், அரசியல் வெளியிலும் மிகப் பெரிய அளவிற்குப் பேசப்பட்ட 2ஜி ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்குக் கைமாறியதாகக் கூறப்படும் தொகை வெறும் 200 கோடி ரூபாய்தான். அதைச் சாக்கிட்டே, தி.மு.க.வும், கருணாநிதி குடும்பமும் ஊழல், அதிகார முறைகேடுகளின் மறுபெயராகவும், தேச விரோதிகள் போலவும் சித்தரிக்கப்பட்டனர். கருணாநிதி குடும்பத்தினர் பலரும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆ.ராசா, கனிமொழி மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு, பிணையில் விடப்பட்டனர்.

ஆனால், நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி விவகாரத்தில் மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் அதிகார முறைகேடுகளின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், ஹவாலா வழியில் பணம் கடத்தப்பட்டிருப்பதும் அம்பலமான பிறகும், அது தேச நலனுக்கு எதிரான குற்றமாக ஊடகங்களில் விவாதிக்கப்படவில்லை. தினகரன், நக்கீரன், ஜூனியர் விகடன் இதழ்களைத் தாண்டி, மற்ற பத்திரிகைகள், குறிப்பாக ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட வட இந்திய ஊடகங்கள் இந்தக் கொள்ளை குறித்த செய்திகளைக்கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. இந்த இருவர் தாண்டி, ஹவாலா பணம் கடத்தலில் மற்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தோ, இந்த இருவரின் சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதலமைச்சர் ஜெயாவிற்கும் உள்ள தொடர்பு குறித்தெல்லாம் ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; ‘‘சோதனை” நடத்திய வருமானவரித் துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழலைவிட, பார்ப்பன சாதிப் பாசம் பெரிதல்லவா!

– குப்பன்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு !

0

tn-policeகொடூரமான சித்திரவதைகள், கொட்டடிக் கொலைகள், பாலியல் வன்முறைகள் – என பயங்கரவாத அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துவரும் வன்முறைக் கும்பலாக ஏற்கெனவே தமிழக போலீசு அம்பலப்பட்டுப் போயுள்ளது. போதை, விபச்சாரம், ஆற்றுமணல், தாதுமணல் கடத்தலுக்குத் துணைபோகும் கிரிமினல் கும்பலாகவும் சீரழிந்து கிடக்கிறது. இவையெல்லாம் போதாதென்று, இப்போது ஹவாலா கொள்ளைக் கூட்டமாக வளர்ந்து புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது, தமிழக போலீசு.

கடந்த ஆகஸ்டு மாதம் 25 -ஆம் தேதியன்று கேரளாநோக்கி சென்ற காரை போலீஸ் உடையில் இருந்த சிலர் கோவை மதுக்கரை செக்போஸ்ட் அருகே வழிமறித்து, காரில் இருந்தவர்களை மிரட்டி கீழே இறக்கிவிட்டுவிட்டு காரை கடத்திச் சென்றனர். அந்தக் காரில் வந்த கேரளத்தின் மலப்புரம் தங்க நகைக்கடை அதிபர் அன்வர் சதா என்பவர், தனது கார் கடத்தப்பட்டதாக கோவை மதுக்கரை போலீசிடம் புகார் கொடுத்தார். பின்னர் இதற்கென ஒரு தனிப்படை அமைத்து, ஆகஸ்டு 27 தேதியன்று அந்தக் காரை பாலக்காடு அருகே போலீசார் கண்டறிந்து மீட்டுள்ளனர்.

ஹவாலா கொள்ளையர்கள்:  கரூர்-பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையமு ஏட்டு தர்மேந்திரன்.
ஹவாலா கொள்ளையர்கள்: கரூர்-பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையமு ஏட்டு தர்மேந்திரன்.

இது தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், காரையும் அதிலிருந்த ரூ.3.93 கோடி பணத்தையும் கொள்ளையடித்து, அதில் ரூ.1.90 கோடியை தாங்கள் எடுத்துக் கொண்டு மீதியுள்ள ரூ.2 கோடியை தங்களுக்கு வழிகாட்டி உதவி செய்த கரூர் பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையம் ஏட்டு தர்மேந்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்டு 2 தேதியன்று கரூரில் ஒரு பால்பண்ணை அதிபர் வீட்டில் நடந்த கொள்ளையைத் துப்பறிய நியமிக்கப்பட்ட தனிப்படையைச் சேர்ந்தவர்கள்தான் மேற்குறிப்பிட்ட மூன்று போலீசாரும். இந்த தனிப்படையினர் கோவைக்குச் சென்றபோது, ஆகஸ்டு 25 அன்று ஹவாலா பணத்துடன் நகைக்கடை அதிபர் அன்வர் சதா செல்வதை கோடாலி சிறீதர் என்ற ஹவாலா ஏஜெண்டு மூலம் அறிந்துள்ளனர். அதன்படியே, தமது விசுவாச கூலிப்படையினரான மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோருக்கு போலீசு சீருடையை அணிவித்து, காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3.93 கோடியைத் திட்டமிட்டு சுருட்டியிருக்கின்றனர். அந்தக் காரில் இருந்த பணம் ஹவாலா பணம் என்பதாலேயே, கார் உரிமையாளர் அது பற்றி போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை.

கடத்தப்பட்ட காரைத் தேடிச் சென்ற போலீசுக்கு, கார் கடத்தல் மட்டுமின்றி ஹவாலா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதும், தமது துறைசார்ந்த போலீசே இந்தக் கொள்ளையை நடத்தியுள்ள விவகாரமும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், காரில் இருந்த ஹவாலா பணம் பற்றி இத்தொழிலில் தொடர்புடைய பெரும் புள்ளிகளுக்கும் போலீசு உயரதிகாரிகளுக்கும் தெரியும் என்பதாலும், இந்த வலைப்பின்னலில் உள்ள பல போலீசு உயரதிகாரிகளின் தொடர்புகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதாலும், வேறு வழியின்றி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையைச் சிக்க வைத்துவிட்டு, தாங்கள் கடமை தவறாமல் பணியாற்றுவதாகக் காட்டிக் கொண்டு போலீசு உயரதிகாரிகள் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

ஹவாலா என்ற அரபிச் சொல்லுக்கு பரிமாற்றம் என்ற பொருள். சட்டபூர்வமான வரியைத் தவிர்த்து, வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு இணையான கட்டமைப்புடன் கிரிமினல் மாஃபியாக்களின் மூலம் சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை தரகர்கள் மூலம் விரைவாகப் பரிமாற்றம் செய்வதுதான் ஹவாலா தொழில். இத்தகையதொரு மிகப் பெரிய மாஃபியா வலைப்பின்னலில் ஒரு சாதாரண போலீசு ஆய்வாளர் தொடர்பு கொண்டிருந்தாகவும், தனது அதிகாரத்தைக் கொண்டு அவர் இக்கொள்ளையை நடத்தியதாகவும் நம்பச் சொல்கிறது தமிழக போலீசு. ஆனால், இந்த ஹவாலா கொள்ளைக்கு தென்மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. ஆய்வாளர் முத்துக்குமார் ஏற்கெனவே நாகர்கோவிலில் இதே பாணியில் ரூ.63 லட்சம் ஹவாலா பணத்தைக் கொள்ளையடித்ததாகவும், இத்தகவல் கிடைத்ததும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுவதற்குள் அதில் ரூ. 23 லட்சத்தை மேலதிகாரிகளுக்காக மறைத்துவைத்துவிட்டு, கைப்பற்றியது ரூ.40 லட்சம்தான் என்று சாதித்ததாகவும் செய்திகள் வருகின்றன.

tn-police-thiefகேரள மாநிலமானது இத்தகைய ஹவாலா பணப் பரிமாற்றங்களுக்கான முக்கிய மையமாக உள்ளது. அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கருப்புப் பணத்தை அனுப்புவது சுலபமாக இருப்பதால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இத்தகைய ஹவாலா பணக் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்தெந்த செக்போஸ்ட்டின் வழியாக ஹவாலா பணம் கடத்திச் செல்லப்படுகிறது என்பது தமிழக போலீசு உயரதிகாரிகளுக்குத் தெரிந்தேதான் நடக்கிறது. பணக் கடத்தலுக்கு குறிப்பிட்ட செக்போஸ்ட் வழியாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து அதற்கு கமிசன் பெறுவதோடு, ஹவாலா புள்ளிகளின் செல்வாக்கையும் அதிகார பலத்தையும் பொறுத்து சில நேரங்களில் கடத்தப்படும் ஹவாலா பணத்தை போலீசே கொள்ளையடிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்காகவே போலீசு உயரதிகாரிகள் தனிப்படை என்ற பெயரில் போலீசு குழுக்களை அமைத்து நேரடியாகவே கொள்ளையில் ஈடுபடுபடுவதோடு, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையுடன் கூட்டணி கட்டிக் கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைப் பங்குபோட்டுக் கொள்வதாக இத்தொழில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இத்தகைய தனிப்படை போலீசாருக்கு விடுதிகளில் சிறப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்படுவதும், திட்டமிட்டுக் கொடுத்து வழிகாட்டி உதவிய போலீசு உயரதிகாரிகளுக்குக் கீழ்நிலை போலீசார் கப்பம் கட்டி விருந்துகள் வைத்து குளிப்பாட்டுவதும் நடக்கின்றன. இதனாலேயே தற்போதைய ஹவாலா கொள்ளையில் சிக்கிய இந்த மூன்று போலீசாரும் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

tn-police-captionஒரு கொலையோ, கொள்ளையோ நடந்தால் அதுபற்றி போலீசுக்குக் குடிமக்கள் தெரிவிக்க வேண்டும்; போலீசார்தான் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்; மற்றவர்கள் இதில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு துறை இயங்குவதால், அதன் சட்டவிரோத – சமூகவிரோதக் குற்றங்களைப் பற்றி யாரும் வாய் திறக்க முடியவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல் மாஃபியா கும்பலைவிட மோசமான கொள்ளைக் கூட்டமாகத் தமிழகப் போலீசுத்துறை வளர்ந்து நிற்கிறது.

இதர கிரிமினல் குற்றங்களை ஒப்பிடும்போது ஹவாலா பரிமாற்றம் என்பது மிகக் கொடிய கிரிமினல் குற்றம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அரித்துச் சிதைக்கக் கூடியதாக உள்ளதால் இது தேசவிரோத, மக்கள் விரோத கொடிய குற்றம். அந்தக் குற்றக் கும்பலிலே ஒரு அங்கமாகத் திகழும் அளவுக்கு தமிழக போலீசு கிரிமினல்தனத்தில் புதிய எல்லையைத் தொட்டிருக்கிறது. நமது வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் இந்தச் சட்டவிரோத – சமூகவிரோத கும்பல்தான், குற்றங்களைத் தடுத்து நாட்டையும் மக்களையும் காத்து வருவதாகச் சொல்லப்படுவதை இனியும் நம்பி ஏமாற முடியுமா?

– குமார்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

ரிலையன்ஸ் ஜியோ : அம்பானி – மோடியின் கொடுங்கனவு ! சிறப்புக் கட்டுரை

2

ரிலையன்ஸ் ஜியோ: அம்பானி – மோடி இணைந்து வழங்கும் பாசிசக் கொடுங்கனவு!

“ஜியோ என்பது இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் புதிய தலைமுறைக்கான சேவை” என்று முகேஷ் அம்பானி செப்டெம்பர் 1-ஆம் தேதி அறிவித்தபோது, பங்குச் சந்தையில் ஒரு சூறாவளி வீசியது. அம்பானியின் வாயில் கிளம்பிய வார்த்தைகள் அவரது காதைச் சென்றடையும் முன்னரே, முதலாளித்துவ ஊடகங்கள் தங்களது வாசகர்களிடம் காதில் அதைக் கொண்டு சேர்த்தன. அம்பானி உதிர்த்த ஒவ்வொரு சொல்லுக்கும் ஏழெட்டு விதமான பொருள் விளக்கங்களையும் கடைவிரித்தன. சமூக வலைத்தளங்களில் அனல் பறந்தது. இலவசங்களுக்கு எதிராகக் குடுமி அவிழச் சாமியாடும் நடுத்தர வர்க்கத்தினர் அம்பானி வழங்கும் இலவசங்களைப் பெறுவதற்காக, பாய் – தலையணையுடன் ஜியோ அலுவலக வாசலில் இடம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழா
இந்தி நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முகேஷ் அம்பானியினு குடும்பம் பங்கேற்க, பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக விழா.

முதலில் “அனைத்தும் இலவசம்” என்றனர் அம்பானி கம்பெனியினர். பின்னர் “குரல் அழைப்புகள் இலவசம், இணைய டேட்டாவுக்கு மட்டும் காசு” என்றனர், பின்னர் “டேட்டா இரவில் மட்டும்தான் இலவசம்” என்றனர், பின்னர் “இரவு எனப்படுவது அதிகாலை 2 மணிக்குத் துவங்கி காலை ஐந்து மணிக்கு முடியும்” என்றனர். மெல்ல மெல்ல சுருதி இறங்கியது. “கூட்டிக் கழித்துப் பார்த்தால் குரல் அழைப்புகள் இலவசம் என்று சொல்லி விட்டு, அதை டேட்டாவுக்கு வசூலிக்கும் தொகையில் ஈடுகட்டிக் கொள்கிறான்” என்றும், “செல்போன் சேவையை இலவசமாக கொடுத்து விட்டு பெட்ரோல் விலையைக் கூட்டி விட்டான்” என்றும் சமூக வலைத்தளங்களின் “140 எழுத்து” விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த உண்மை உலகுக்குத் தெரியவருவதற்குள் பங்குச்சந்தையில் ஏர்டெல் ரூ.13,000 கோடிகளையும், ஐடியா 3000 கோடிகளையும் இழந்திருந்தன.

அம்பானி தொடுக்கும் இலவச யுத்தம்!

ஜியோவின் வருகை, செல்பேசித் துறையில் ஒரு மாபெரும் கழுத்தறுப்புப் போட்டியைத் துவங்கி வைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் ‘இலவசப் போரை’ச் சமாளிக்க, அவரது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருக்கிறது. விலைக் குறைப்பால் போட்டி நிறுவனங்களை அழித்தொழித்துவிட்டு மொத்தச் சந்தையையும் தனியாளாக தின்று தீர்த்து விடவேண்டும் என்கிற வெறியில், “இன்னும் ஒரே ஆண்டுக்குள் பத்து கோடி இணைப்புகளை வழங்கவும், அடுத்த சில ஆண்டுகளில் தொண்ணூறு சதவீத சந்தையைக் கைப்பற்றவும்” ஜியோவின் உயரதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.

reliance-jio-modi
இந்தியப் பிரதமரையே தனது விளம்பரத் தூதராகப் பயன்படுத்திக் கொண்டு வெளிவந்த ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பரம்

தனது மொத்த நிதிக் கையிருப்பான 24,000 கோடியில் நாலில் மூன்று பங்கை (18,000 கோடி) முதலீடாக இறக்கியுள்ளார் முகேஷ் அம்பானி. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிக அதிக முதலீட்டுடன் துவங்கப்பட்ட தொழில் இதுதான் என்கிறது முதலாளித்துவ உலகம். நாடு முழுவதும் தொழில்நுட்ப மற்றும் அலைக்கற்றை உட்கட்டமைப்புடன் துவங்கப்பட்ட முதல் நிறுவனம் ஜியோ. கடந்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கான கண்ணாடி இழைக் கம்பிகளை (Fibre Optic Cables) பதித்துள்ள ரிலையன்ஸ், சுமார் 30,000 கோபுரங்களையும் நிர்மாணித்துள்ளது.

இந்த வேகத்தைத் தொழில்முனைவு சாகசம் என வர்ணிக்கும் ஊடகங்கள், இதற்கு பின் உள்ள சட்ட விதிமீறல்களையும், ஊழல் முறைகேடுகளையும், அரசின் கள்ளத்தனமான ஆதரவையும் மொத்தமாக மூடி மறைக்கின்றன. உஜ்ஜயினி, நாசிக், நாக்பூர், கொச்சி உள்ளிட்டுப் பல நகரங்களில் ரிலையன்ஸின் செல்பேசி கோபுரங்களுக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்றம், ரிலையன்சின் செல்பேசி கோபுரங்களை அகற்றுமாறு உத்தரவிட்டது. இவையனைத்தையும் விதிகளுக்குப் புறம்பாக முறியடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

இந்திய தொலைதொடர்புத் துறையைக் கைப்பற்ற முகேஷ் அம்பானி செய்து வரும் முயற்சிகளின் முழு பரிமாணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், 2010 ஆண்டு அரசு நடத்திய மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கற்றை ஏலம் என்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2ஜி = 1,76,000,00,00,000 என்றால், 4ஜி = 000000000000000?

reliance-jio-orissa-q
ரிலையன்ஸ் ஜியோவின் சிம் கார்டை வாங்குவதற்காக ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் கூட்டம்.

“ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை நாம் மறந்திருக்க மாட்டோம். 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக சி.ஏ.ஜி. அறிக்கை மேற்படித் தொகையை முன்வைத்த போது, வடக்கே அண்ணா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ்., பாபா ராம்தேவ் தொடங்கி தெற்கே ஜெயலலிதா வரையிலான உத்தமர்கள் சத்தியாவேசம் கொண்டு சாமியாடினர். “திராவிட இயக்கம் என்றால் ஊழல், ஏலம்தான் ஊழலை ஒழிக்கும் வழி” என்ற இரண்டு தத்துவங்கள் 2ஜி ஊழலின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர், இந்த ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்பது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் 22,000 கோடியாகவும், 30,000 கோடியாகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதெல்லாம் தனிக்கதை. யோக்கியமான முறை எனச் சொல்லப்பட்ட ஏல முறை எப்படி நடந்தது என்பதற்கு வருவோம்.

2010 ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மன்மோகன் அரசின் கீழ் மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை ஏலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக குறுகிய இடைவெளியில் நடந்தன. நான்காம் தலைமுறை அலைக்கற்றையை ஏலம் எடுப்பவர்கள், அதனை இணைய இணைப்பு (data) வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; செல்பேசி இணைப்புகள் வழங்க (voice) பயன்படுத்தக் கூடாது என்று ஏல அறிவிப்பில் கறாராகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

reliance-jio-caption-13ஜி அலைக்கற்றையை ஏலமெடுப்பதற்கு ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா, ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தம் நிதிக் கையிருப்பில் பெரும்பகுதியைச் செலவிட்டன. 4ஜி என்பது இணைய சேவைக்கு மட்டுமானது என்று கூறப்பட்டிருந்த காரணத்தால், இந்நிறுவனங்கள் அந்த ஏலத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. எனவே, மொத்தமுள்ள 22 சேவை பிராந்தியங்களில் (Service Circles) ஏர்டெல் 15 பிராந்தியங்களிலும், வோடஃபோன் 5 பிராந்தியங்களிலும் 4ஜி உரிமத்தை ஏலம் எடுத்தன.

இந்நிலையில், முன்பின் கேள்விப்பட்டிராத இன்ஃபோடெல் ப்ராட்பேண்ட் சர்வீசஸ் லிமிடெட் (IBSPL) என்கிற தனியார் நிறுவனம், இந்தியாவின் அனைத்து சேவைப் பிராந்தியங்களிலும் 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் கோரி விண்ணப்பித்தது. செல்பேசி சேவை வழங்கிய முன் அனுபவமோ, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லாத இந்த நிறுவனத்தைச் சுருக்கமாக “உப்புமா கம்பெனி” என்றும் அழைக்கலாம்.

4ஜி ஏலத்தில் பங்குபெறும் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தகுதி மிகவும் தளர்வாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், வெறும் 2.5 கோடி ரொக்க மதிப்பும், 14 லட்ச ரூபாய் ஆண்டு வருமானமும் கொண்ட மேற்படி உப்புமா கம்பெனி, சுமார் 12,847 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றையை ஏலத்தில் வென்றது.

இங்கே 2ஜி வழக்கை சற்று நினைவு படுத்திக் கொள்வோம். அதில் சி.பி.ஐ. வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானது “தகுதியற்ற உப்புமா கம்பெனிகளுக்கு ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கிக் கொடுத்தார்” என்பதாகும். ஐ.பி.எஸ்.பி.எல். என்பது ஒரு உப்புமா கம்பெனி மட்டுமல்ல, அதன் புரமோட்டரான ஹிமாச்சல் புயூச்சரிஸ்டிக் கம்யூனிகேசன்ஸ் என்கிற நிறுவனம், தொண்ணூறுகளில் சுக்ராம் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது நடந்த முதற்பெரும் தொலைத்தொடர்புத் துறை ஊழலில் கையும் களவுமாக பிடிபட்ட நிறுவனமாகும்.

reliance-jio-caption-24ஜி ஏலம் முடிந்த மறுநாளே ஐ.பி.எஸ்.பி.எல் நிறுவனத்தை முகேஷ் அம்பானி கையகப்படுத்தினார். அலைக்கற்றையை ஏலம் எடுத்த கம்பெனியை வேறொரு கம்பெனி விலைக்கு வாங்குவது என்ற உத்தி 2ஜி-யிலும் கையாளப்பட்டது. அங்கே அது ஊழல் என்று அழைக்கப்பட்டது என்பதையும் இங்கே நினைவில் கொள்க. தான் நேரடியாக களத்தில் இறங்காமல், தனது பினாமியை இறக்கிவிட்டதன் மூலம், அலைக்கற்றை ஏலத்தில் போட்டி ஏற்பட்டிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக்கூடிய பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டினார் அம்பானி. இந்த 4ஜி ஊழலுக்கு எத்தனை சைபர் போடலாம் என்பதை குருமூர்த்திஜி அல்லது சு.சாமிஜி என்ற இரண்டு உத்தமர்கள் மட்டும்தான் சொல்ல முடியும்.

இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு ஐ.பி.எஸ்.பி.எல். நிறுவனம் கொடுத்த வங்கி உத்திரவாதப் பத்திரமே போர்ஜரி செய்யப்பட்டது என்று தனது 2014 ஆண்டு வரைவறிக்கையில் சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியிருக்கிறது. வங்கி வேறொரு நிறுவனத்துக்கு வழங்கியிருந்த உத்திரவாதப் பத்திரத்தில் அந்நிறுவனத்தின் பெயரை வெள்ளை மை வைத்து அழித்து விட்டு, அதன்மீது ஐ.பி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் பெயர் கையால் எழுதப்பட்டிருந்தது. அதாவது கொஞ்சமும் அச்சமின்றி போர்ஜரி வேலை வெளிப்படையாக செய்யப்பட்டிருந்தது.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. முன்வைக்கும் இன்னொரு வாதம், ஒதுக்கப்படும் அலைக்கற்றையை இரட்டைப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதில் ஆ.ராசா பாரபட்சமாக நடந்து கொண்டதன் மூலம் சாகித் பல்வாவுக்குச் சாதகமாக செயல்பட்டார் என்பதாகும். ஆனால், 4ஜி அலைக்கற்றையை இணைய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 2010-இல் ஏலம் விட்டு, பின்னர் 2013-இல் அதை இணையம் மற்றும் செல்பேசி சேவை இரண்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மன்மோகன் அரசு மாற்றியது. இவ்வாறு மாற்றியதன் மூலம் அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டதாக 2014-ஆம் ஆண்டின் சி.ஏ.ஜி. வரைவறிக்கை குறிப்பிடுகிறது.

“முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற முறையில் எல்லோருக்குமான சமமான போட்டி வாய்ப்பு (Level playing Ground) மறுக்கப்பட்டது” என்பது 2ஜி வழக்கின் இன்னொரு குற்றச்சாட்டு. 2010-இல் நடந்த 4ஜி ஏல விதி களின்படி செல்பேசி இணைப்புகளுக்கான உரிமத்தை ஏலம் எடுத்த மற்ற நிறுவனங்கள் அரசுக்கு 4 சதவீதக் கட்டணம் செலுத்தின. ஏல விதிகளை 2013-இல் மாற்றியதன் மூலம், டேட்டாவுக்கான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணமான, ஒரு சதவீதத்தைக் கட்டிவிட்டு அதையே செல்பேசி அழைப்புகளுக்கும் பயன்படுத்திக் கொண்டார் அம்பானி.

காங்கிரசின் ஊழலுக்கு மோடி வழங்கிய ஆதரவு!

reliance-jio-dominationசி.ஏ.ஜி. வரைவு அறிக்கையின் அடிப்படையில் அலைக்கற்றை ஏலத்தில் 40,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, ரிலையன்ஸ் செய்த முறைகேடுகளை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷன். 2014 தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பதற்கு 2ஜி ஊழலைப் பயன்படுத்திக் கொண்ட பாரதிய ஜனதா, இந்த 4ஜி ஊழலில் காங்கிரசுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்று தீர்ப்பளித்த நீதி பதிகள், பினாமி நிறுவனத்தைப் பயன்படுத்தி அலைக்கற்றையை அபகரித்தது, வங்கி உத்தரவாதப் பத்திரங்களில் மோசடி செய்தது உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தனர். பாரபட்சம் என்ற காரணத்தை சொல்லி, 122 உரிமங்களை 2ஜி வழக்கில் ரத்து செய்து, மறு ஏலம் நடத்தச் சொன்ன உச்சநீதி மன்றம், அம்பானிக்கு கட்டணத்தில் பாரபட்சமாக சலுகை காட்டப்பட்டிருப்பது பற்றி தான் முடிவெடுக்க முடியாதென்றும், அதை விசாரிக்க வேண்டியது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்தான் என்றும் தீர்ப்பு கூறியது. அதுமட்டுமல்ல, வங்கி உத்தரவாதப் பத்திரத்தில் செய்யப்பட்டிருக்கும் போர்ஜரி பற்றி மத்திய நிதியமைச்சகம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி பிரசாந்த் பூசணின் வழக்கை மொத்தமாகத் தள்ளுபடி செய்தது.

இதுதான் ரிலையன்ஸ் ஜியோவின் சுருக்கமான ஊழல் வரலாறு. இருப்பினும் அம்பானியின் கடைமுன் காத்திருக்கும் நடுத்தர வர்க்க கனவான்களைக் கேட்டால், “அம்பானி அயோக்கியன் என்பது எங்களுக்கும் தெரியும். திருடிய காசுதானே, இலவசமாக கொடுக்கும்போது அதை நாம் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பதில் சொல்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்பதை விசாரித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

எலி ஏன் அம்மணமாக ஓட வேண்டும்?

reliance-jio-modi-brand“இலவசம் என எதுவும் இருக்கக் கூடாது – குடி தண்ணீர் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரு விலை இருக்க வேண்டும்” என்பது தனியார்மய சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் தத்துவம். அவ்வாறிருக்க மொபைல் சேவையை இலவசமாக அளிக்கும் தரும சிந்தனை முகேஷ் அம்பானிக்கு ஏன் வர வேண்டும்?

பெருநகரங்களில் ஷாப்பிங் மால்களில் உள்ள வைஃபை (கம்பியில்லா) இணைய இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இப்படி இலவசமாக வழங்கும் நிறுவனம், தனது இணைய இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர், என்ன பொருளைத் தேடுகிறார், என்னென்ன பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறார் – என்பன போன்ற விவரங்களை வடிகட்டி, அந்த மாலில் உள்ள கடைகளுக்கு உடனுக்குடன் விற்பனை செய்கிறது. இதன் மூலம் மாலில் உள்ள கடைக்காரர்கள், குறிப்பிட்ட வாடிக்கையாளர் தங்கள் கடைக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவரது பர்சைக் காலி செய்வதற்கான திட்டத்துடன் தயாராக இருக்கின்றனர்.

ஒரு ஷாப்பிங் மாலில் நடக்கும் விவர (data) ஜேப்படியை நாடு முழுக்க விரிவுபடுத்தினால், அதற்குப் பெயர்தான் ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ தனது செல்பேசி சேவையை 4ஜி அலைக்கற்றையில் செயல்படும் VoLTE (வோல்ட்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் இணையம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் அனைத்துமே இணைய நெறிமுறையின் (Internet protocol – IP) அடிப்படையிலேயே செயல்படும். சுருக்கமாகச் சொன்னால், ஜியோவின் செல்பேசி சேவை மூலம் நீங்கள் பேசுவது, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள செயல்பாடுகள் அனைத்தும் மின் தரவுகளாக (data packets) மாற்றப்பட்ட பின்னரே கடத்தப்படுகின்றது. இவற்றைப் பதிவு செய்து சேமிப்பது எளிது. மேலும், பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகளை இடைமறிப்பதும், ஆய்வு செய்வதும் சேவை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் எளிது.

‘டேட்டா”தான் புதிய எண்ணெய் !

reliance-jio-caption-3“ரிலையன்சைப் பொருத்தமட்டில் டேட்டாதான் புதிய எண்ணெய்” என்றார் முகேஷ் அம்பானி. இந்த வாசகம் அம்பானியின் கண்டுபிடிப்பல்ல. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் கணித வல்லுநர் கிளைவ் ஹம்பி வெளியிட்ட கருத்து. தகவல் தொழில்நுட்ப யுகத்தின் தாரக மந்திரமே இந்த வாசகம். கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது அதிலிருந்து பல்வேறு பயன்பாட்டுக்கான பொருட்கள் கிடைப்பதைப் போல, ஒரு வாடிக்கையாளரின் டிஜிட்டல் தரவுகளைச் சலித்துப் பிரித்து வகைப்படுத்தி விற்பதன் மூலம் அதனைப் பணம் காய்ச்சி மரமாகப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் பொருள்.

தம்மிடம் குவியும் டிஜிட்டல் டேட்டாக்களைக் கொண்டு ரிலையன்சால் என்ன செய்து விட முடியும்? ஆழ்தரவுப் பொட்டல ஆய்வு முறை (Deep packet inspection) ஒன்றைத் தங்கள் நிறுவனம் பின்பற்றுவதாக பத்திரிகை ஒன்றிடம் பீற்றிக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் உயரதிகாரி ஒருவர், அதன் தொழில்நுட்ப சாத்தியங்கள் மலைக்கச் செய்வதாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஜியோ செல்பேசி சேவையைப் பயன்படுத்துபவர்களின் பேச்சு, செயல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் பதிவு செய்து, சேமித்து, பிரித்து ஆராய முடியும்.

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் பழைய தொழில்நுட்பத்திலும் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் வசதி உள்ளது. எதிர்க்கட்சியினரையோ, ‘பிரச்சினைக்குரியவர்களாக’ அரசால் கருதப்படும் நபர்களையோ ஒட்டுக் கேட்பதுதான் தற்போதுள்ள நடைமுறை. ஆனால், ஜியோவின் மூலம் கைபேசியை அல்லது இணையத்தை ஒருவர் பயன்படுத்தினால், அவரது எல்லாவிதமான நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் டிஜிட்டல் தரவுகளாக பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.

“வைத்துக் கொள்ளட்டுமே, நாம் என்ன பாராளுமன்றத்திற்கு குண்டு வைப்பது பற்றியா பேசப்போகிறோம்?எதற்குப் பயப்பட வேண்டும்?” என்று சிந்திக்கும் அளவுக்கு நீங்கள் அப்பாவியாக இருப்பீர்களேயானால், கேளுங்கள். உங்கள் வருமானம், கடன், சொத்து, உங்கள் வர்த்தக இரகசியங்கள், நீங்கள் வாங்கும் பொருட்கள் பற்றிய விபரம், உங்கள் மாதாந்திர மளிகை சாமான் பட்டியல், உங்கள் காதல், உங்கள் பிள்ளைகளின் கல்வி, உங்கள் குடும்பத்தினரின் நோய்கள், உங்கள் அரசியல் கருத்து, உங்களுக்கு விருப்பமான இசை, சினிமாக்கள் – என அனைத்து தரவுகளும் அம்பானியின் கையில் இருக்கும். மொத்தத்தில் “நான் – எனது” என்று ஒரு மனிதன் சொல்லிக் கொள்ளத்தக்க அனைத்தும், உங்களுக்கு மட்டுமே சொந்தமான உங்கள் தரவுகள் அனைத்தும் அம்பானிக்கு சொந்தமாகி இருக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அம்பானியின் உடைமையாகியிருப்பீர்கள்.

“செயலி சார்ந்த பயன்பாட்டுச் சூழல்” (App based ecosystem) ஒன்றைப் படைக்கவுள்ளாதாக அறிவித்துள்ளார் அம்பானி. அதன் பொருள், நமது அனைத்துப் பயன்பாடுகளும், செயல்களும், அன்றாட நடவடிக்கைகளும் அம்பானி வழங்கியுள்ள சில செயலிகளின் மூலமே நடக்கும் – வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், செயலிகளே நமது தேவைகளையும் அவற்றைப் பூர்த்தி செய்யும் வழிவகைகளையும் நமக்கு வழங்கும். செயலிக்கு அப்பாற்பட்ட சொந்தத் தேர்வுகள் என எதுவும் இருக்க முடியாது – இருக்கக் கூடாது என்பது அம்பானியின் திட்டம். அதாவது, இந்தியாவின் மொத்த நுகர்வுச் சந்தையையும் அம்பானி தனது பிடிக்குள் கொண்டு வர முடியும்.

விளம்பரத் தூதர் மோடியின் கனவை நனவாக்குகிறார், விளம்பரதாரர் அம்பானி!

reliance-jio-anil-ambani-sunil-mittal
ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கியிருக்கும் கழுத்தறுப்புப் போட்டியால் ஆடிப்போயுள்ள தரகு முதலாளிகள் (இடமிருந்து) ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல்.

இதனை வெறும் வணிகச் சந்தைக்கான ஆயுதம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இன்னின்ன நபர்கள் இன்னின்ன கொள்கை உள்ளவர்கள், அதிலும் இவர்களெல்லாம் தீவிரமானவர்கள் என்று தரம் பிரித்து அவர்களை அரசுக்கு அடையாளம் காட்ட முடியும். அரசியல் எதிரிகளின் பலவீனங்களை அறிந்து அவர்களை முடக்கவும், அழிக்கவும் முடியும். உங்களது விருப்பங்கள், தெரிவுகள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகள் என சகலத்தையும் ரிலையன்ஸ் ஜியோ அறிய முடியும். மீப்பெரும் மின்தரவு ஆய்வு (Big Data Analysis) எனச் சொல்லப்படும் இந்த ஆய்வின் மூலம், நீங்கள் குறிப்பான ஒரு தருணத்தில் எடுக்கவிருக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் ஏறத்தாழ கணிக்க (Artificial Inteligence) முடியும்.

அம்பானி என்ற முதலாளி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையே கட்டுப்படுத்த முடியும், நாட்டு மக்கள் அனைவரையும் வேவு பார்க்க முடியும் என்பது மோடிக்குத் தெரியாததல்ல. நாட்டு மக்களை தனது அடிமைகளாக மாற்றுவதற்கு முன், மோடியே தனது அடிமைதான் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவித்தார் அம்பானி. செப்டம்பர் 2-ஆம் தேதி ஆங்கில நாளேடுகளின் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடி இடம்பெற்றிருந்ததை அனைவரும் காறி உமிழ்ந்தனர். ஆனால், மோடி கவலைப்படவில்லை.

மோடியின் “டிஜிட்டல் இந்தியா” என்ற கனவை நனவாக்குவதே தனது லட்சியம் என்று அந்த விளம்பரத்தில் அறிவித்திருந்தார் அம்பானி. விளம்பரதாரர்கள்தான் தமது கனவை நனவாக்கிக் கொள்ள விளம்பரத் தூதர்களைப் பயன்படுத்துவார்கள். தன்னுடைய விளம்பரத்தூதரின் கனவை நனவாக்கும் பொறுப்பை அம்பானி எதற்காக ஏற்க வேண்டும்?

“படுக்கையறையைத் தாளிடுவது அடிப்படை உரிமையல்ல” – மோடியின் அட்டார்னி ஜெனரல்!

reliance-jio-caption-4ஏனென்றால், “டிஜிட்டல் இந்தியா” என்பது மோடி கூட்டுக்கனவு. சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தில், தேசிய ஊடக ஆய்வு மையம் (National Media Analytics Centre) அமைப்பது, இந்திய மக்கள் அனைவரிடமிருந்தும் கட்டாயமாக மரபணு மாதிரிகளைத் திரட்டுவது (DNA profiling)என்பன போன்ற திட்டங்களை உள்ளடக்கிய மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவின்படி, ஒவ்வொரு இந்தியனும் ஒரு எண் (டிஜிட்). அந்த எண்ணின் (அதாவது குடிமகனின்) நடவடிக்கைகள் குறித்த அத்தனை தரவுகளையும் கண்காணிப்பில் வைக்கும் ஏற்பாடுதான் டிஜிட்டல் இந்தியா.

ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கில், குடிமக்களின் கருவிழி மற்றும ரேகைகளைப் பதிவு செய்வதென்பது அவர்களுடைய தனியுரிமையில் (Right to Privacy) தலையிடுவதாகும் என்று அரசுக்கு எதிரான வாதம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, “இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி குடிமக்களுக்கு தனியுரிமை கிடையாது” என்றார் மோடி அரசின் அட்டார்னி ஜெனரல். அதாவது, அரசாங்கம் குடிமக்கள் அனைவரையும் குற்றப் பரம்பரையாக நடத்தலாம், உங்கள் முகநூலை வேவு பார்க்கலாம், படுக்கையறையை எட்டிப் பார்க்கலாம்; அதுமட்டுமல்ல, அம்பானியும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை யாருக்கும் விற்கலாம் என்பதே இதன் பொருள். இவற்றையெல்லாம் தடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்புகள்கூட இல்லாத நிலையில், மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற கனவு, இந்தியர் களின் கொடுங்கனவாக மாறிவிடும் என்று பல அறிவுத்துறையினரும், டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றனர்.

பாசிசக் கொடுங்கனவு!

கேளுங்கள்! இணையப் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் அமெரிக்காவை விஞ்சி உலகின் முதல் இடத்தை அடுத்த ஆண்டில் பிடிக்கப்போகிறது. இந்தச் சூழலில்தான் இந்தியச் சந்தையை ஏகபோகமாகப் பிடிக்கப் பார்க்கிறது ரிலையன்ஸ் ஜியோ. பாசிசம் என்பதற்கு முசோலினி அளித்த விளக்கத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது” என்றான் முசோலினி.

இது பனியாவின் ஏகபோகமும் பார்ப்பன பாசிசமும் இணைந்த கொடுங்கனவு. ஜியோ என்ற இந்திச் சொல்லுக்கு வாழ்ந்துகொள் என்று பொருள். அடிமை வாழ்க்கையை இந்தியர்களுக்கு வழங்குகிறார் அம்பானி – இலவசமாக!

பின்குறிப்பு:

அனானிமஸ் ஹேக்கர்ஸ் எனும் இணையதளம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் செயலிகளின் மூலம் களவாடப்படும் நமது தனிப்பட்ட தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதை சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. மோடி கூட்டுக்கனவு மெய்ப்படத் தொடங்கிவிட்டது.

– சாக்கியன்
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

ராம்குமார் மரணம்: போலீசைத் தண்டிக்க என்ன வழி?

5
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியின் சடலம். (உள்படம்) சுவாதி.

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான ‘கூராய்வு அவரது உடலின் மீது மட்டும் நடத்தப்பட்டால் போதுமானதா என்பதே நம் கேள்வி.

“கூராய்வின்போது அதனை உடனிருந்து கண்காணிப்பதற்கு தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும்” என்பது ராம்குமார் குடும்பத்தினரின் கோரிக்கை. “அது அரசு மருத்துவர்களின் நாணயத்தைச் சந்தேகத்துக்கு ஆளாக்குகின்ற தவறான முன்மாதிரி ஆகிவிடும்” என்று கூறி அக்கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்துவிட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியின் சடலம். (உள்படம்) சுவாதி.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியின் சடலம். (உள்படம்) சுவாதி.

கண்காணிப்பை மறுப்பதன் மூலம்தான் நிறுவனங்களின்  மீதான மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நீதிமன்றத்தின் கருத்து நகைப்புக்குரியது. மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களில் தலையாயவையான போலீசின் மீதும் சிறைத்துறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பாருங்கள்!

ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தவுடனே, ஆகப் பெரும்பான்மையான மக்கள் அது கொலைதான் என்று ஆணித்தரமாகக் கருதினார்கள். இது போலீசைப் பற்றியும் சிறைத்துறை பற்றியும் இந்த ஒரு வழக்கின் மூலம் மக்கள் மனதில் உருவான கருத்தல்ல. விஷ்ணுப்பிரியா, கோகுல்ராஜ், ராமஜெயம் கொலை வழக்குகளிலும், எஸ்.ஆர்.எம். பச்சமுத்து, அன்புநாதன், கோவை கன்டெயினர், சேலம் ரயில் கொள்ளை போன்றவற்றிலும், சிவகாசி ஜெயலட்சுமி தொடங்கி கரூர் ஹவாலா திருட்டு வரையிலான எண்ணற்ற வழக்குகளின் வழியாகவும்  தனது “திறமை, ஒழுக்கம், நேர்மை பற்றி போலீசே மக்களிடம் உருவாக்கியுள்ள கருத்து.

ராம்குமாரின் தற்கொலை குறித்து போலீசு கூறிய கதை என்ன? “புழல் சிறையின் சமையல் அறைக்குச் சென்று, பத்தடி உயரத்தில் இருந்த சுவிட்சு பெட்டியை உடைத்து, மின் கம்பியைக் கடித்தும், தனது உடம்பில் சுற்றிக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டார்” என்பது முதல் கதை. “அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த குடத்திலிருந்து தண்ணீர் அருந்துவதற்காகத் திறந்துவிடுமாறு கேட்டு, திறந்தவுடன், தடாலென சுவிட்சு பெட்டியை உடைத்து, மின் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார்” என்பது இரண்டாவது கதை.

“சமையல் அறை சி.சி.டி.வி. கேமரா பழுதடைந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட காட்சி பதிவாகவில்லை” என முதல் கதைக்குத் தோதாக துணைக்கதை சொன்ன சிறைத்துறை, இரண்டாவது கதைக்கு ஏற்ப, “உடைந்துபோன சுவிட்சு பெட்டி, சிறை அறையின் கதவுக்கு வெளியே உள்ள தண்ணீர்க்குடம்” ஆகியவற்றின் படத்தை வெளியிட்டிருக்கிறது. நிறுவனங்களின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் பேரார்வமிக்கவரான நீதிபதி சந்துருவாலேயே போலீசின் இந்தக் கதைகளைச் சகிக்க இயலவில்லை எனும்போது சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

“இது கொலையல்ல” என்று சந்தேகிப்பதற்கு நம் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். சிறைத்துறை யினரோ போலீசோ இதனைச் செய்திருக்கும் பட்சத்தில் இவ்வளவு முட்டாள்தனமாகவா செய்திருப்பார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. “இவ்வளவு அலட்சியமாக செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால்தான் இதை போலீசு செய்திருக்கும் என்று கருத வேண்டியிருக்கிறது” என்பதுதான் இதற்கான பதில். எந்தக் குற்றத்துக்காகவும் தாங்கள் தண்டிக்கப்படமாட்டோம் என்ற திமிர்தான், அவர்களுடைய இந்த அலட்சியத்துக்கான அடிப்படை.

ramkumar
ராம்குமார்

ஒரு கொலைக்குற்ற வழக்கில் புலனாய்வு நடத்திக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதென்பது நமக்குச் சாத்தியமற்றது. சுவாதி கொலையையே எடுத்துக் கொள்வோம். தன்னுடைய காதலை நிராகரிக்கும் பெண்ணைக் கொலையும் செய்யலாம் என்ற அளவுக்கு ஆணாதிக்க வெறித்தனம் பரவியிருக்கின்ற பண்பாட்டுச் சூழலில், ராம்குமாரோ அல்லது வேறொரு இளைஞனோ சுவாதியைக் கொலை செய்திருக்கலாம்.

ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்த காரணத்தினாலோ, அல்லது கருவுற்ற காரணத்தினாலோ அவளுடைய உற்றார் மூலமாகவே அவள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம். கொலை நடந்தவுடனே அதனை பிலால் என்ற இசுலாமிய இளைஞனுடன் தொடர்புபடுத்திய சங்கப் பரிவாரத்தினர், உ.பி.யில் லவ் ஜிகாத் என்றொரு பொய்க் காரணத்தை ஜோடித்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் நடத்தியதைப் போல, இந்தக் கொலையின் பின்னணியிலும் ஒரு திட்டத்துடன் இருந்திருக்கலாம். இந்தக் காரணங்களுக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஊகிக்க முடியாத, வேறு ஏதோவொரு காரணத்துக்காக,  கூலிப்படையினரால் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

சுவாதி கொலை ஒரு கொடூரமான சம்பவம் என்பதைத் தாண்டி, அக்கொலையைப் பயன்படுத்தி கலவரத்தைத் தூண்டுவதற்கு பார்ப்பன  இந்து மதவெறிக் கும்பல் தீவிரமாக முயன்றதை யாராலும் மறுக்கவியலாது.  இருப்பினும், அந்தக் கொலை நடந்தவுடனே சமூக வலைத்தளங்களில் மதவெறி, சாதிவெறியைத் தூண்டி கருத்துப் பரப்பிய ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பார்ப்பன வெறியர்களை போலீசு விசாரிக்கக்கூட இல்லை. அதே போல, ராம்குமார் கைது செய்யப்பட்டவுடன் அவருக்கே தெரியாமல் அவரைப் பிணயில் எடுக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு வழக்கறிஞரின் பாத்திரமும் விசாரிக்கப்படவில்லை.

கொலை செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன் யாரோ ஒரு இளைஞன் சுவாதியைக் கன்னத்தில் அறைந்ததாகவும், அதற்கு அவள் எதிர்ப்பு காட்டாதது ஆச்சரியமாக இருந்தது என்றும், அந்த இளைஞன் ராம்குமார் அல்ல என்றும் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் கூறியிருக்கும் சாட்சியத்தின் திசையில் எந்த விசாரணையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

“சுவாதியின் பெற்றோர் விசாரணைக்கு பெரிதும் ஒத்துழைத்தார்கள்” என்று வலிந்து அறிவித்தார் காவல்துறை ஆணையர். கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, “இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடையாள அணிவகுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே ராம்குமாரின் படம் வெளியிடப்பட்டது. இவையனைத்தும் ஒரு குற்ற வழக்கை விசாரிக்கும் முறைக்கு எதிரானவை.

கைது செய்யப்பட்டபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்ற காரணத்தினால், சிறையில் அவருக்கு மனநல மருத்துவ சிகிச்சை தரப்பட்டதாக போலீசு கூறியது. “தற்கொலைக்கு முயன்ற ஒரு கைதியைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சிறையில் என்ன ஏற்பாடு செய்யப்பட்டது?” என்று  கேள்விக்கு போலீசிடமிருந்து பதில் இல்லை.

“ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்” என்று சவடால் பேசிய போலீசு 3 மாதங்களுக்குப் பின்னரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் ராம்குமார் பிணையில் வெளியே வந்து பேசத்தொடங்கினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டுத்தான், அவர் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்று சந்தேகிப் பதற்கு போதுமான முகாந்திரங்கள் போலீசின் நடவடிக்கைகளில் உள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிப்பதற்கோ, மறுப்பதற்கோ ராம்குமார் உயிருடன் இல்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போலீசுதான் இரண்டு கொலைகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். “ராம் குமார் மரணத்தின் பின்னுள்ள உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்கிறார், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி போடப்பட்ட மனுவை நிராகரித்ததுடன், தமிழக போலீசின் விசாரணை சரியான திசையில் செல்வதாகப் பாராட்டும் தெரிவித்திருக்கிறார் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி. இதை அவர் கவனிக்கவில்லை போலும்!

அப்படியானால், வேறு எந்த நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தச் சொல்வது? “இன்ன நீதிபதி விசாரணையைக் கண்காணிக்க வேண்டும்” என்று கேட்பதும், “இன்ன மருத்துவர் கூராய்வை பார்வையிட வேண்டும்” என்று கேட்பதும், அந்நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாகிவிடாதா?

ராம்குமார், சுவாதி போன்றோரின் உயிரைக் காட்டிலும் நிறுவனங்களின் மாண்பல்லவோ ஜனநாயகத்துக்கு முக்கியம்!

– திப்பு
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________