பயிற்சி செய்யும் ஒரு இளம்பெண். பின்னணியில் “ இனி நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என்ற வாசகம்.
பெண்களை அடிமைப்படுத்துவதற்கு ஆண்களும் கடவுள்களும் சேர்ந்து அமைத்த கூட்டணிக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண் எப்படி அடிமையாக ஆயுள்கைதியாக வாழவேண்டும் என்று பார்ப்பனியம் மட்டுமல்ல, அல்லாவைத் தொழும் முசுலீம் மதமும் வரையறுத்து வைத்திருக்கிறது. ஆனால் உலகெங்கிலும் முசுலீம் பெண்கள் அப்படித்தான் வாழ்வதாக வகாபிய வெறியர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து தத்தமது நாட்டின் பெண்களை அடக்கி வருகிறார்கள்.
அது உண்மையல்ல என்பதற்கு இந்த புகைப்படக் கட்டுரை ஒரு சான்று. மதமோ, மார்க்கமோ, புனித நூலோ தராத ஒரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஒரு சண்டைக் கலை தந்ததாக மகிழ்கிறார்கள் இந்த பெண்கள். உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி இந்த இளம் பெண்கள் கூறும் செய்தியை நினைவிலிருத்துவோம்.
She Fighter – ஷி ஃபைட்டர்– ஜோர்டான் நாட்டில் 2012-ம் ஆண்டில் முதன் முதலாக நிறுவப்பட்ட பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி நிலையமாகும்.
இதன் நிறுவனர் லீனா கலீப் கூறுகையில் பாரம்பரிய தற்காப்பு நுட்பங்களோடு ஒரு பெண்ணின் சுய பாதுகாப்பு மற்றும் சுய பலத்தை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிறார். பெண்களின் உரிமைக்காக 10 மாநாடுகளை நடத்துவதை காட்டிலும் SheFighter அவர்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறார்
ஒரு வருடத்திற்கு முன்பு அவருடைய சக ஊழியர் ஒருவர் சொந்த சகோதரனால் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளானார். அதுவே லீனா இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. தலைநகரம் அம்மானில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி முடித்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் இங்கு இளம் பெண்களுக்கு சுவராசியமான முறையில் தற்காப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சியில் முடிவில் “ அவள் கோபமானவள், அவள் அடிப்பாள்” என்று முழக்கமிடுகிறார்கள் இந்த பெண்கள்.
லீனா காலிஃப் – She Fighter சண்டை பயிற்சி நிலையத்தின் நிறுவனர். 15 வயதிலிருந்தே சண்டைக் கலையில் பயிற்சி பெற்றவர். ஒரு வருடமாக பயிற்சி பெற்றுவரும் 13 வயது யாரா தன்னுடைய பள்ளி வகுப்பில் ஆண் மாணவர்களை இப்போதெல்லாம் அனாயசமாக சமாளிப்பதாக கூறுகிறாள்.பல இளம் பெண்கள் இந்த பயிற்சி மையம்தான் தங்களின் பாதுகாப்பு வெளி என்று கூறுகிறார்கள்.பயிற்சி செய்யும் ஒரு இளம்பெண். பின்னணியில் “ இனி நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என்ற வாசகம்.27 வயது சாரா இங்கு பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இதற்கு முன் வெளியே செல்லும் போது ஆண்கள் கும்பலை பார்த்தால் ஒதுங்கி செல்லும் அவர் தற்போது அவர்கள் முன் கம்பீரமாக கடக்கிறார். சண்டைக் கலை மூலம் அவரது உடல் மொழி, நடை, சிந்தனை அனைத்தும் மாறியிருக்கிறது என்கிறார் சாரா.சிறப்பு வகுப்புக்களில் ஆறு வயது சிறுமிகளும் உண்டு. பின்னணியில் ஒரு பாலஸ்தீன் ஓவியரின் படம் வரையப்பட்டுள்ளது.பயிற்சிக்கு தாமதமாக வரும் பெண்கள் “பார்பி பொம்மை” என்று கிண்டல் செய்யப்படுவார்கள். ஆம் “SheFihter”-க்கு அந்த அலங்கார பொம்மைப் பெண் பிடிக்காது.அம்மானில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி பயிற்சி வகுப்புக்கு தயாராகிறாள்.“ ஒரு குத்தின் பலம் என்பது உடல் பலத்தை விட உள்ளத்தின் வலிமையையே அதிகம் சார்ந்திருக்கிறது என்கிறார் சாரா. பயிற்சி மையம் தொடங்கும்போது இந்தப் பகுதி ஆண்களிடமிருந்து மிரட்டல்கள் இருந்த போதிலும் தொடர்ந்து இதை வெற்றிகரமாக நடத்திவருகிறேன் என்கிறார் லீனா காலிஃப்!
இது விவசாயிகளுக்கு ஆதரவானது என்றால்….? பி.சாய்நாத்
ஆம், இனிமேல் அப்படித்தான். இந்த வருடத்திலிருந்து மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் “விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய் பட்டியல்” என்பதே இருக்காது.
சொல்லப் போனால் பெருநிறுவனங்களுக்கு வருமான வரி, கலால் வரி, சுங்க வரி என்ற வகையில் ரூ. 5,51,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல பணக்காரர்களுக்கு பலனளிக்கும் முதல் மரியாதை இது. கடந்த ஆண்டு விட்டுக் கொடுத்த தொகையான ரூ. 5,00,823 கோடியை விட இது அதிகம். ஆனால் இனிமேல் அவற்றை ” விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்று சொல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அவ்வாறு சொன்னால் நீங்கள் “தேச விரோதி” என்ற வளையத்திற்குள் கொண்டுவரப்படுவீர்.
“விட்டுக்கொடுக்கப்பட்ட” என்ற சொல் ஆளும் வர்க்கத்திற்கு சேதம் இழைப்பதாக இந்த ஆட்சியின் விளம்பர தூதர்களால் இனம் காணப்பட்டது. அது கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் அளவிலான இலவசங்கள் கொடுக்கப்படுவதை மக்களிடம் வெளிப்படுத்தி வித்தையை அம்பலப்படுத்தியது.
எனவே இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்பது ஒரே அடியாக கைவிடப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக நமக்குக் கிடைத்திருப்பது”மத்திய வரி விதிப்பு அமைப்பில் வரிச்சலுகைகள் வருவாயில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிக்கை’ என்பதுதான்.
எந்தக் கவலையும் இல்லை (பெரியஅளவிலான தொழிற்சாலை முதலாளிகளின் கூட்டமைப்பு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி)
ஆகா! இது இன்னும் மிடுக்காக உள்ளது. ஆனால் விஷயம் அதேதான். பெரு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடி தொடர்கிறது. தொகை இன்னும் அதிகம். 2005-06 முதல் இன்று வரை அதை கணக்கிட்டால் மொத்த தொகை 42 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். துர்நாற்றத்துக்கு எந்த பெயரிட்டாலும் அதன் வாடை குறைந்து விடப் போவதில்லை!
எடுத்துக்காட்டாக, கார்ப்பரேட் வருமான வரிகளை தள்ளுபடி செய்ததன் வாயிலாக வருவாயில் “தாக்கம்” என்பது ரூ. 68,711 கோடி. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 3,644 கோடி அதிகம். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் ‘மகத்தான அதிகரிப்பு’ என்று சொல்லப்பட்ட ரூ 3,801 கோடியை விட பெரிய அளவில் குறைவு ஒன்றுமில்லை.
பின்னால் சொல்லப்பட்டது கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டது, முன்னால் சொல்லப்பட்டது மிகச் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் தொடர்புடையது. இந்த நேரடி கார்ப்பரேட் வருமான வரி தள்ளுபடி என்பது விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 35,984 கோடியைவிட 91 சதவீதம் அதிகம்.
மேலும் அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிமொழித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ 38,500 கோடி இதுவரையில்லாத அளவுக்கு அதிகம் என்று பொய்யாக சொல்லப்படுகிறது. உண்மை யாதெனில் 2006-ல் இந்தத் திட்டம் மிகச் சிறியதாக துவக்கப்பட்டபோது இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ 40,000 கோடி. திரு ப.சிதம்பரம் அதை பலவீனப்படுத்துவதற்காக கடும் முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தது வரை அது அந்த அளவிலேயே இருந்து வந்தது. இந்தத் திட்டத்திற்கான தொகை அதிகரிக்கப்பட்டதை பார்த்தால் பணவீக்கத்திற்கு தக்கவாறு அது சுருங்கிக் கொண்டே வந்துள்ளதை கவனிக்க முடியும்.
இன்னும் சொல்லப்போனால், ஊரக, கிராமப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது என அரசே கூறும் இந்த ஆண்டில் இந்த ஒதுக்கீடு இயல்பாகவே அதிகரித்திருக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் படு மோசமாக செயல்படுத்தப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் கூட மேலும் மேலும் அதிகமான வறியவர்கள் அதில் வேலை கோருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இந்த பதிவுகளில் சொல்லப்படும் தொகைகளில் சுமார் ரூ 6,000 கோடி முந்தைய பாக்கிகளை தீர்க்கவே சரியாக இருக்கும்.
இந்த நிலையில்தான் இவற்றால் விவசாயிகளின் வருவாய் 2022-ல் இரட்டிப்பாக மாறும் என்ற கோமாளித்தனமான உரிமை கோரலும் முன்வைக்கப்படுகிறது. ஏறிவரும் விலைவாசியை சரிக்கட்டியபின் கிடைக்கும் உண்மையான வருவாயைச் சொல்கிறாரா நமது நிதியமைச்சர்? எவ்வாறு?
விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனை என்பது அரசின் கொள்கைகளால் விவசாயம் எப்படி சாத்தியமற்றதாக்கப்பட்டு விட்டது என்பதாகும்.
நிதியமைச்சர் அவரது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் படி விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிப்பாரா?
அல்லது இந்த உயர்ந்து வரும் செலவிலான பொருளாதார சூழலில் விவசாயிகளின் சுமையை குறைப்பதற்காக, சிறப்பான கடனுதவிகள், மலிவு விலை விதைகள், உரங்கள் போன்றவை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதைப் பற்றி தெரிவிக்கிறாரோ?
இல்லை இவை தொடர்பான ஒரு சிறு குறிப்பு கூட நிதிநிலை அறிக்கையில் இல்லை.
‘விவசாயக் கடன்’ என்பதில் (சிங்கத்தின் பங்கு) பெரும் பகுதி நகர்ப்புற மற்றும் பெரு நகரம் சார்ந்த தொழில்களுக்கு செல்கிறது.
மேலும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட பாசன வசதி என்பது – நீர்நிலைகளை தூர்வாருதல் போன்றவற்றால் (அதை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம்) செய்யப்படுமா அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் லாபத்தையும், பாசன வசதியில் சிறிதளவு தாக்கத்தையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய நதிகள் இணைப்பு போன்ற கனவுகளாலா என்பது தெரியவில்லை.
இருப்பினும், பல தொலைக்காட்சி விவாத தொகுப்பாளர்கள், பல பத்திரிகை தலையங்கங்கள் இந்த நிதிநிலை அறிக்கையை “விவசாயிகளுக்கு ஆதரவானது”, “கிராமப்புறங்களுக்கு ஆதரவானது” என பறைசாற்றி வருகின்றனர். கடந்த 24 வருடங்களில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போலத்தான் அவர்கள் பறைசாற்றியிருக்கின்றனர். ஆனால், ‘விவசாயிகளுக்கு ஆதரவான’ பட்ஜெட் என்கிற வார்த்தை எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டும். வழக்கமாக அதைத் தொடர்ந்து விவசாயத்தை மேலும் வணிகமயமாக்கும் நடவடிக்கைதான் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கடுமையான சிரமங்கள் நிரம்பிய காலம் வரும்.
சிலரின் வருமானம் உண்மையில் 2022-ல் இரட்டிப்பாகும், ஆனால் நிச்சயமாக அது 2014 தேர்தலின் போது பா.ஜ.க அவர்களுக்கு வாக்களித்தது போல குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு தொடர்பாக ஏமாற்றப்பட்டு வரும் விவசாயிகள் அல்ல.
சமீபத்திய ஹருண் அறிக்கையில் இந்தியாவில் 111 பெரும் பணக்காரர்கள் (டாலர் கோடீஸ்வரர்கள்) இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அவர்களின் சொத்து ஒரே வருடத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடத்திலிருந்து புதிய பெரும் பணக்காரர்கள் என பட்டியலிடப்பட்டுள்ள 99 நபர்களில் 27 பேர் அதாவது கிட்டத்தட்ட 3ல் 1 பங்கு இந்தியர்கள் என்கிறது அந்த புள்ளி விபரம்.
இந்த 111 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துக்கள் கடந்த 12 மாதத்தில் ஏறக்குறைய $6,200 கோடி (சுமார் ரூ 4 லட்சம் கோடி) உயர்ந்து $30,800 கோடியை (சுமார் ரூ ரூ 20 லட்சம் கோடி) எட்டியது என ஹாருண் அறிக்கை கணக்கிடுகிறது. இந்த உயர்வு வருவாய்க்கு மட்டும் தற்போதுள்ள ஐரோப்பிய வரி விதிப்பு முறையில் 30 சதவீத வரி என கணக்கிட்டால் கூட வரி $1,800 கோடி அதாவது ரூ 1,22,774 கோடி ஆகும். வருவாயில் “தாக்கம் (Impact)” என்று சொல்லப்படுகிற தள்ளுபடியில் நான்கில் ஒரு பங்கிற்கு நிகரானதுதான் இது. இந்தத் தொகையானது பெருமளவு அவலம் நிலவும் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 3 மடங்கு அதிகரிக்க போதுமானது.
தங்கம், வைரம் மற்றும் நகை வியாபாரிகளுக்கான தள்ளுபடி ரூ 61,126 கோடி. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு ‘முன் எப்போதும்’ இல்லாத வகையில் ஒதுக்கீடு என பெருமைப்பட்டுக் கொள்கிற தொகையை விட 58 சதவீதம் அதிகம் இந்த தள்ளுபடி தொகை. மேலும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைக் காட்டிலும் 70 சதவீதம் அதிகம் இது. 2005-06 லிருந்து தங்கம், வைரம், மற்றும் நகைகள் வகையில் தள்ளுபடி என்பது மட்டும் ரூ 4.6 லட்சம் கோடியை தாண்டுகிறது. இந்த வருடம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைப் போல் 13 மடங்கு அதிகம் இது. இது விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் என்றால் விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
முக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் ஆட்சியாளர்கள் “மானியங்கள்” என வகைப்படுத்தவில்லை, ஆனால் உண்மையில் அவை மானியங்கள்தான். ஆட்சியாளர்கள் மானியங்களை தாக்கும் போது, அவர்கள் உண்மையில் ஏழைகள், வறியவர்களுக்கு செல்லும் மானியங்களை, குறிப்பாக உணவு, வேலைவாய்ப்பு, உடல்நலம் சார்ந்த மானியங்களைத் தான் தாக்குகின்றனர். இருதயமேயில்லாத இத்தகைய தாக்குதலை தூக்கிப் பிடிப்பவர்கள் அவற்றுக்கு “வீணாகும் மானியங்கள்” என பெயரிடுகிறார்கள். ‘வருவாயில் தாக்கம்’ என்ற குப்பையை அவர்கள் ‘ஊக்கத்தொகை’ என்று அழைக்கிறார்கள்.
மானியம் என்பது பொதுவாக ஏழைகளுக்காக கொடுக்கப்படுவது. மானியங்களை அனைவருக்கும் வினியோகிக்கும் முறையை ‘இலக்கிலானது’ என்று மாற்றி கோடிக்கணக்கானவர்களை அதிலிருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.
மறுபுறம் கோடீஸ்வரர்களுக்கான ‘தாக்கம்’ தள்ளுபடி (காட்ஸில்லா தள்ளுபடி என்று அறியப்படுவது) என்பது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. வருவாய் “தாக்கம்” என்ற பெயரிலான தள்ளுபடி இது தொடர்பான புள்ளிவிபரங்கள் கிடைக்கும் 2005-06ம் வருட தொகையைக் காட்டிலும் இந்த ஆண்டு 140 மடங்கு அதிகரித்திருக்கிறது.
கார்ப்பரேட் வருமான வரியில், கலால் வரி, சுங்க வரி என்கிற இனங்களில் 2005-06 லிருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட தள்ளுபடியை மட்டும் வைத்திருந்தால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தை (100 நாள் வேலைத்திட்டம்) இன்றைய அடிப்படையில் 109 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியும். கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வை மேம்படுத்தியிருக்க முடியும். “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு, முதலாளிகளுக்கான மானியத்தை சாதுர்யமாக “வருவாயில் தாக்கம்” என்கிற கோவணத்தால் மறைத்துக் கொள்வது மக்களின் வேதனையில் உப்பு தடவுவது போல உள்ளது. (குறிப்பாக சொல்லப் போனால் அது ‘விட்டுக் கொடுக்கப்பட்டது (foregone)’ அல்ல, ‘கண்டுகொள்ளாமல் விட்டது (forgone)” அது வேறு கதை).
இத்தகைய வார்த்தை மாற்றம் நடைமுறையில் குழப்பமூட்டும் முட்டாள்தனத்தை அறிமுகப்படுத்துகிறது.
சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க இராணுவம் அதன் பல போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, சேதங்களைப் பார்த்து பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படாமலிருக்க “தொடர்புடைய சேதம் (collateral damage)” என்ற வார்த்தையை பயன்படுத்தியது. அமெரிக்கா நடத்தும் போர்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதை குறிப்பதற்கான இடக்கரடக்கல் அது. படுகொலைகள் தொடர்ந்தன, ஆனால் அவை இப்படி வலிக்காமல் இலகுவாக குறிப்பிடப்படுகின்றன. நிதிநிலையறிக்கையின் இந்த மலிவு மொழி ஆசிரியர்கள் தமது வார்த்தை விளையாட்டில் அது போன்ற ஒன்றை செய்கிறார்கள். பொதுப்பணம் கொள்ளையடிக்கப்படுவது, அது போகும் இடம், வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் கடும் துயரம் இவை அனைத்தும் இணை சொற்களில் மூழ்கடிக்கப்படுகிறது.
ஏன் முடியாது? மூடி காட்டுவோம் டாஸ்மாக்கை! அதிகார வர்க்கத்தை பின்வாங்க வைத்த அரித்துவாரமங்கல மக்களின் நெஞ்சுறுதி மிக்கப் போராட்டம்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அரித்துவாரமங்கலம் என்கிற கிராமத்தில் கொலுவிருக்கும் டாஸ்மாக் பல ஆண்டுகளாக அங்குள்ள மக்களை சிறுக சிறுக அரித்துக்கொண்டிருக்கிறது. அவ்வூரை சுற்றியுள்ள பெருங்குடி, மருவத்தூர், மூலக்கால் பெருங்குடி, பேட்டை, பட்டம், அவளிவநல்லூர், செம்பையநல்லூர், குமாரமங்கலம், தேவமங்கலம், கொத்தூர், கொட்டப்படுகை, கேத்தனூர், குவளவேலி, நிம்மேல்குடி, முனியூர், சடையாங்கால், பயரி, சேரி, குப்பணாம்பேட்டை ஆகிய அனைத்து ஊர் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களை இந்த டாஸ்மாக் சீரழித்து வருகிறது. அது மட்டுமா அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, சிவன்கோவில், ரேசன் கடை, பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றுக்கு அருகாமையில் சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்குள் டாஸ்மாக் உள்ளது.
டாஸ்மாக்கை அரசு நடத்துவதே சட்டவிரோதம் என்றால், இது சட்ட விரோதத்திற்கும் மேல் சட்டவிரோதமாகவும், இந்த அரசின் கட்டமைப்பு அனைத்தும் ஆளும் அருகதையை இழந்துவிட்டது என்பதை பறைசாற்றும் வகையில் ‘என்னை உங்களால் என்ன செய்து விட முடியம்?”; என்று அப்பகுதி மக்களை பார்த்து மிரட்டிக்கொண்டிருந்தது டாஸ்மாக் கடை. இப்பகுதி மக்களின், குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்களின் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக 07-03-2016 அன்று பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் பாண்டியராஜன் தலைமையில் காலை 10 மணிக்கு மதுக்கடை திறந்தவுடனே விண்ணதிர முழக்கங்களுடன் பேரணியாக சென்று முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்டு 1 மணி நேரம் கழித்து காவல் துறையினர் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் மக்கள் “டாஸ்மாக்கால் எங்க குடும்பம் அழியிது இதை உடனே மூடுங்க, அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கூடத்திற்கு அருகமையிலே சட்டவிரோதமாக நடக்கிறது, போலீசு நீங்க செய்யுர வேலைய நாங்க செய்யுறோம். கடையை மூடுங்க” என்று சொல்லியதற்கு எந்த பதிலையும் கொடுக்க முடியாமல் பின்வாங்கி ஓடியது.
பிறகு சிறிது நேரம் கடந்து டி.எஸ்.பி யும் வந்து சேர்ந்தார். அவர் மாணவர்களை அப்புறப்படுத்திவிடலாம் என்று எண்ணி நைச்சியமாக சீருடையில் இருக்கும் மாணவர்களிடம் சென்று “தம்பிங்களா உங்கப் பாடம் வீணாகும், எதிர்காலம் என்னவாகும்” என்று நீலிக்கண்ணீர் வடித்தார் அதற்கு பதிலடியாக “தினம் தினம் வீட்டுல எங்கப்பா எங்கள அடிக்கும் போதுதான் எங்க படிப்பு வீணாகுது, இன்னக்கி ஒருநாள் வீணாகுனா ஒன்னும் ஆகாது இந்த கடைய மூடுங்க” என்றனர். இன்னும் சில மாணவர்கள் போலீசின் தந்திரத்தை புரிந்துக்கொண்டு “நான் பெயிலாப்போனாலும் அடுத்த வருசம் படிச்சிக்கிறேன், டி.சி யை கொடுத்தாலும் வேற ஸ்கூல சேர்ந்து படிச்சிக்குறேன். இந்த கடையை மூடுங்க” என்று சொன்னனர். இந்த மாணவர்கள் யாரும் மூளைச்சலவை செய்து அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல அவர்கள் தான் முற்றுகையையே தலைமையேற்று நடத்துகின்றனர் என்பதை புரிந்து கொண்ட போலிசார் செய்வதியறியாது ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.
“அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம் போலீசுக்கு அஞ்சமாட்டோம், விடமாட்டோம் விடமாட்டோம் கடையை மூடும் வரை விடமாட்டோம்” என்று முழக்கங்களுடன் பறையோசை, புரட்சிகரப்பாடல்கள் என தொடர்ச்சியாக தொய்வின்றி போராட்டம் உறுதியாக நடந்து கொண்டே இருந்தது.
பயந்துகொண்டிருந்த பள்ளி தலைமையாசிரியர் மதிய உணவுக்கு கூட மாணவர்களை வெளியே விடாமல் ‘சிறப்பாக’ பாடம் நடத்தினார். சில மணி நேரம் கழித்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரி வந்து சேர்ந்தார், அவரும் தம் பங்கிற்கு மக்களிடம் சென்று “இந்தக் கடை இருப்பது தப்புதான், தேர்தல் முடியும் வரை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குள் மூடி விடுகிறோம்” என்று பேசியதற்கு, பெண்கள் “அதுவரைக்கும் வீட்டுக்கு ஒரு போலீசு பாதுகாப்பு குடுங்க” என்றும் ஒரு பெண் தனது தாலியை காட்டி “பாருங்க வெறும் கயிறு தான் எல்லாம் போச்சு, இப்பவே கடைய மூடுங்க, அதுவரைக்கும் இந்த எடத்தவுட்டு நகர மாட்டோம்” என்று கூறியதற்கும், இளைஞர்கள் அவரிடம் “சார் கடையே சட்ட விரோதமுனு சொல்றோம் அதை ஏன் மூட மாட்டேங்கிறீங்க?” என்றதற்கும் பதிலின்றி பின்வாங்கினார்.
அதற்குள் சில தோழர்கள் போராட்டக்காரர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய பாத்திரம், அரிசி தயார் செய்து அடுப்புகளை கட்ட ஆரம்பித்தனர். கதிகலங்கிப்போன டி.எஸ்.பி ஓடி வந்து “உங்களை கைது செய்யப் போகிறோம்” என்று சொன்னார். யாரும் அசையாமல் விண்ணதிர “டாஸ்மாக்கை மூடும் வரை விடமாட்டோம், போலீசுக்கு அஞ்சமாட்டோம்” என்று முழக்கமிட்டுக்கொண்டே இருந்தனர். போலீசு ‘வேறுவழியின்றி’ இவர்களை தர தரவென்று இழுத்து வேனிற்குள் தள்ளியது. பள்ளி மாணவர்களையும், வயதானவர்களையும் ஏற்ற மறுத்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டது.
காவல் நிலையத்திற்குள்ளும் கடையை மூடும்வரை உணவுக்கூட தொடமாட்டோம் என்று பெண்களும், இளைஞர்களும் கூறிவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களுடன் கைதான 3 வயது குழந்தைக்கு உணவு கொடுத்தனர், அக்குழந்தை உணவு உண்ண மறுத்துவிட்டது, போலீசு காரர்கள் பிஸ்கட் கொடுத்து சாப்பிட சொல்லி போராடியும் அக்குழந்தை மறுத்துவிட்டது. அக்குழந்தையின் தாயை மட்டும் விட்டுவிடுவதாக போலீசு சொன்னதற்கு அந்த தாய் “என் மேலையும் கேஸ்போடுங்க இல்லையனா எல்லோரையும் விடுங்க என” உறுதியாக இருந்தார்.
போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் காவல் நிலையத்திற்கு வெளியே உட்கார்ந்து விட்டனர். சிறிது நேரம் கழித்து அந்த காவல்நிலைய எஸ்.ஐ அந்த மாணவர்களை பார்த்து “கேஸ் போட்டுவிடுவேன், ஒழுங்கா ஓடுங்கடா” என்று மிரட்டிப் பார்த்தார், அதற்கு மாணவர்கள் “அததான் நாங்களும் சொல்றோம் நாங்களும் தான் போராட்டம் நடத்தினோம், எங்களையும் கைது செய்யுங்க, இல்லையனா உள்ளே இருப்பவர்களை வெளியே விடுங்க” என்றனர். பேச வார்த்தையின்றி காவல் நிலையத்திற்குள் அந்த எஸ்.ஐ தஞ்சம் புகுந்துகொண்டார்.
பிறகு சில அ.தி.மு.க அல்லகைகளும், போலீசு எடுபிடிகளும் வந்து அந்த மாணவர்களிடம், “தம்பிகளா டி.எஸ்.பி உங்களை இந்த இடத்த விட்டு போகச் சொல்கிறார் போயிடுங்க, அவருக்கு மூடு மாறுச்சுனா அவ்வளவுதான்” என்றதற்கு அடுத்த நொடியே ஒரு மாணவன் “ஏன் டி.எஸ்.பி.க்குத்தான் மூடு மாறுமா எங்களுக்கெல்லாம் மூடு மாறாதா?” என்றும் இன்னொரு மாணவன் “டி.எஸ்.பி.ய வெளியே வரசொல்லுங்க அவுங்க யூனிபாஃர்மா இல்ல எங்க யூனிபாஃர்மா என்று பார்த்துவிடுவோம்” என்று சட்டை காலரை தூக்கி காட்டியதற்கு அந்த அல்லக்கைகள் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டனர்.
அதேநேரம் காவல் நிலையத்திற்குள்ளே தாயுடன் கைதான ஒரு 3 வயது குழந்தை ஒரு காவலரிடம் “நீங்க நல்லவங்களா, கெட்டவங்களா எங்கள ஏன் இங்க கொண்டுவந்து வச்சிருக்கிறீங்க… நீங்க நல்லவங்கதானாட்டுக்கு…” என்று தன் தாயையும் மீறி கேட்டது, அதற்கு அந்த போலீசுகாரர் எந்த பதிலும் இன்றி உயிரற்ற மரமாக பேசாமல் நின்றார்.
இந்தப்போராட்டமும் அதன் வீச்சும், தாக்கமும் அந்த பகுதி சுற்றுவட்டார மக்களிடையே சூறாவளியாக பரவி ஒரு அலையை உருவாக்கியது. அசைக்க முடியாத பிரமாண்ட ஆலமரத்தை போகிற போக்கில் ஆட்டம் கான வைச்சிட்டாங்களே என்று வாயடைத்து பார்க்கின்றனர். டாஸ்மாக்கை மூட முடியும் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
கைதுசெய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அதில் சில மாதங்களுக்கு முன்பு தான் அமைப்பிற்கு வந்த இளைஞர்கள் “தோழர் மக்களுக்கு போலீசு மீதுள்ள பயத்தை போக்கவேண்டும், பக்கத்து கிராமங்களுக்கு சென்று மக்களிடம் பேசி 1000 பேரை திரட்டி டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும்” என்று கூறியது இந்த போராட்டத்தின் வெற்றியை பறைசாற்றும் வகையில் இருந்தது. எல்லோரும் இந்த டாஸ்மாக்கை மூடுவதற்கான அடுத்துக்கட்ட வேலைக்கான ஆயுத்த பணியில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ஆணவ, அதிகார திமிர் பிடித்த சில காவல் அதிகாரிகளின் திமிர் ஒவ்வொன்றும் எரியும் பிளாஸ்டிக் உருகி ஊத்துவதுப்போல் கரைந்துபோய் வெறும் சக்கையாக்கி நிறுத்தபட்டதும், பெரும்பான்மையான காவலர்கள் இந்த மக்களையும் மாணவர்களையும் ஒடுக்க முடியாமல் தார்மீக நியாயத்தை இழந்து விட்டு நின்றதையும், கடுகளவும் அச்சமின்றி அதிகார வர்க்கத்தை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்து அதிகாரிகளை பின்வாங்க வைத்த பெண்களின் – இளைஞர்களின் போர்குணமும், காலை முதல் மாலை வரை உணவுக்கூட உண்ணாமல் ஆசிரியர்களின், அதிகாரிகளின், போலீசின் மிரட்டல்களையும் எதிர்த்து நின்ற பள்ளி மாணவர்களின் அசைக்க முடியா நெஞ்சுறுதியும் ஒரு விசியத்தை சொல்லவருகிறது… அது “இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்”.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தில்லியின் காற்றில் குளிர் அலைந்து பரவிக் கொண்டிருந்த ஒரு பிப்ரவரி மாத நள்ளிரவில் வினவு செய்தியாளர்கள் உலகிலேயே மிக அதிகளவில் ‘தேசதுரோகிகளை’ உற்பத்தி செய்து வரும் ஜே.என்.யு வளாகத்தின் நுழைவாயிலுக்கு எதிரே காத்துக் கொண்டிருந்தார்கள். நாடே கண்டு அஞ்சும் தீயசக்திகளாக வட நாட்டு ஆங்கில ஊடகங்கள் சித்தரிக்கும் ’தேசவிரோதிகளை’ காண்பதும், அவர்களின் விளைநிலமாக சித்தரிக்கப்படும் ஜே.என்.யு குறித்த ஒரு நேரடி சித்திரத்தை தீட்டுவதே எமது பயண நோக்கம்.
பின்பனிக் காலத்தின் குளிர் ஈரப்பதமின்றி வறட்சியாய் நாசியில் நுழைந்து வெளியேறச் சிரமப்பட்டது. தமிழ்நாட்டின் வெப்பத்திற்குப் பழகிய நாசியின் உட்சுவர்கள் அந்த வறண்ட குளிரில் லேசாகப் புண்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் ஒரு நண்பர் எம்மை முக்கிய நுழைவாலுக்கு வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார். அவரது நள்ளிரவு உறக்கத்தை கெடுக்கிறோமோ என்கிற உறுத்தலோடு காத்திருந்தோம்.
ஜே.என்.யுவின் முக்கிய நுழைவாயிலின் முன் தடுப்பரண்கள் போடப்பட்டு சில போலிஸ்காரர்கள் அமர்ந்த வண்ணம் உறக்கத்திற்காக தங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் கொசுப் படைகளோடு ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தில்லியின் குளிருக்குப் பொருந்தாத உடைகளோடு நின்ற நம்மை நோக்கி போலீசாரின் புருவங்கள் உயர்வதற்குள் நண்பர் வந்துவிட்டார்.
“சாப்பிட்டீங்களா?”
“மணி பண்ணிரண்டைத் தாண்டியாச்சே.. உங்களுக்குத் தொந்தரவு ஏதுமில்லையே. நீங்க தூங்க வேண்டிய நேரம் தானே?”
அடைகாக்கும் கோழிகளைப் போல் பொழுது சாய்வதற்குள் வீடு சேர வேண்டும் – முக்கியமாக நண்பர்களோடு கூடி அரட்டை அடிக்க கூடாது, அப்படியே அரட்டையடித்தாலும் அதில் அரசியல் போன்ற ’கெட்ட’ சமாச்சாரங்கள் இருந்து விடக்கூடாது என்கிற தமிழ்நாட்டுச் சிறு நகர கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டவர்கள் தில்லி ஜே.என்.யு வளாகத்திற்குள் இருக்கும் தாபாக்களை இரவு நேரங்களில் தரிசிக்கக்கடவர். தேனீருக்காக வளாகத்தினுள் இருக்கும் கங்கா தாபாவுக்கு அழைத்துச் சென்றார் நண்பர்.
கங்கா தாபா
அந்த நேரத்திலும் சூடான தேனீரோடு அரசியல் விவாதங்களின் வெப்ப நிலையும் மேலோங்கி இருந்தது. இளைய முகங்களின் மத்தியில் சில வயதானவர்களையும் காண முடிந்தது. கேள்விகளைத் தாங்கிய நமது பார்வைக்கு நண்பர் பதிலிருத்தார்,
”அவர்கள் ஆசிரியர்கள் தோழர்”
”ஆசிரியர்களா?”
“ஆமாம். இங்கே வகுப்பறையில் கற்பதை விட அதற்கு வெளியே நடக்கும் விவாதங்களில் தான் நாங்கள் அதிகம் கற்பது வழக்கம்”
”மாணவர்களில் கூட சிலர் முப்பதுகளில் இருக்கிறார்களே?”
“ஆமாம். அவர்கள் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள். நீங்கள் இங்கே முப்பத்தைந்து வயதுள்ள மாணவர்களையும் கூட பார்க்க முடியும். நாற்பதை நெருங்கிய சிலர் கூட மாணவர்களாக இருக்கிறார்களே”
இந்த பதில் நம்மில் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கலாம். ”தமிழ்ச்சூழலில்” வார்த்தெடுக்கப்பட்ட நாம் ஜே.என்.யுவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள அதன் அறிவுச் சூழலைப் தெரிந்து கொள்வது பயனளிக்கும். அந்த அறிவுச் சூழல் கட்டமைக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தையும் அறிந்தால்தான் ஜே.என்.யூவில் நிலவும் ஜனநாயகத்தின் உயர்ந்த தன்மையையும் அதனுள் கருத்துக்களுக்கு – அது எந்தக் “கருத்தாக” இருந்தாலும் – வழங்கப்பட்டிருக்கும் சுதந்திர வெளியைப் புரிந்து கொள்ள முடியும். அந்த வழியில் நாம் “தேசதுரோகத்தையும்” புரிந்து கொள்வோம்.
நம்மைப் பொருத்தவரை கல்வி என்பது என்ன? நமது இளைஞர்கள் எதற்காக படிக்கிறார்கள்?
17 வயது வரை பள்ளிப் படிப்பு. பொறியியல் கல்லூரியில் நுழைவதற்கான அடிப்படைகளை உண்டாக்கிக் கொள்வதற்கு தேவை என்பதற்காகத் தான் அந்தப் பள்ளிக் கல்வியும் கூட. பின், 23 வயதுக்குள் பொறியியல் படிப்பை முடிப்பது. முடித்த உடன் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலை. வேலையில் சேர்ந்ததும் வங்கிக் கடனில் நான்கு சக்கர வாகனம். கார் வாங்கிய சில ஆண்டுகளில் திருமணம். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் மீண்டும் வங்கிக் கடனில் ஒரு சொந்த வீடு. படிப்போரில் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்தக் கனவை தொட்டுப் பார்க்கும் பாக்கியம் உள்ளவர்கள் என்றாலும் மீதிப் பேருக்கு இந்த ஆசை இல்லாமல் இல்லை. எனினும் அந்த ஐந்திலக்க கனவு நிறைவேறுவதாகவே வைப்போம்.
முப்பது அல்லது முப்பத்து மூன்று வயது வரை தொழில்நுட்ப பொறியாளராக காலம் தள்ளுவது. பின் அதுவரை அனுபவத்தில் சேர்த்த தொழில்நுட்ப அறிவைத் தலையைச் சுற்றித் தூர எரிந்து விட்டு உதவி மேலாளராவது. நாற்பது வயதுக்குள் மேலாளர் பதவியை அடைய அலுவலக அரசியலில் சுற்றிச் சுழல்வது. ஐம்பதுக்குள் மூத்த மேலாளராகவோ பொது மேலாளராகவோ அமர்வதற்கான நாற்காலிச் சண்டைகள். ஐம்பத்தெட்டில் ஓய்வு – எழுபதில் சாவு.
இந்த சுழற்சியின் விளைவு என்ன?
முப்பத்தைந்தில் கற்கும் ஆர்வம் சுத்தமாக வடிந்து போன அரைக்கிழமாகவும்.. நாற்பத்தைந்தில் மூளைச்சரக்கு அத்தனையும் காலியாகி இளம் பொறியாளர்களுக்கு பயனற்ற அறிவுரைகளை அள்ளி வழங்கும் முழுக்கிழமாகவும் ஆகிறார்கள். ஓய்வு பெறுவதற்குள் யாரும் காது கொடுக்க விரும்பாத தத்துவங்களைப் பேசும் தொண்டுக்கிழங்களாக பரிணமிக்கிறார்கள். இப்படித்தான் வாழ்ந்து மறைந்ததற்கு சுவடுகள் ஏதுமின்றியே சென்று சேர்கிறோம்.
முன்னொரு காலத்தில் பி.காம் படித்த குமாஸ்தாக்களால் நிரம்பியிருந்த நமது தமிழ் சூழல், இன்று பொறியியல் படித்த தொழில்நுட்ப குமாஸ்தாக்களால் நிரம்பியிருக்கிறது. கார் வாங்குவதில் துவங்கும் நமது கடங்கார வாழ்க்கை வீடு வாங்கிய பின் உத்திரவாதமாகிப் பின் மாதத் தவணையைத் தவற விடக்கூடாது என்கிற நிரந்தர அச்சத்தில் தள்ளுகிறது. அந்த அச்சத்திலிருந்தே நிறுவனத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற அச்சமும் – இதிலிருந்து அரசியல் சமூக நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்வதிலிருந்து ஒதுங்கிச் செல்லும் அச்சங்களும் முளைத்தெழுகின்றன.
எனவே 35 வயதில் படிப்பு என்பது நமக்கு ஒரு அதிர்ச்சி
நமக்கு அறிமுகமாகியிருக்கும் அறிவுலகத்தை அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் கிடைப்பது தான் ஜே.என்.யு. மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க ஐந்தாண்டு கேள்வித் தாள்களை நகலெடுத்துக் கொடுக்கும் பேராசிரியர்கள் அங்கே இல்லை. கற்றுக் கொடுப்பதல்ல – கற்றுக் கொள்ள உதவி செய்வதையே அங்கே ஆசிரியர்கள் செய்கிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுமாக இணைந்து ஏற்படுத்தியிருக்கும் விவாதச் சூழலுக்குள் நுழையும் மாணவர்கள் இயல்பாக சமூக ஆளுமைகளாக உருவாகிறார்கள்.
கற்றல் என்பது மூடிய சுவர்களுக்குள் மட்டுமின்றி வளாகமெங்கும் மிக இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலைகள், மொழியியல் பற்றி மட்டுமின்றி சமூக மற்றும் மனித உறவுகளின் சிக்கலான பக்கங்கள் மிக இயல்பாக வகுப்பறைக்கு வெளியே புரட்டப்படுகின்றன. அறிவூட்டல் என்பது ஆசிரியரிடமிருந்து மாணவர்களை நோக்கிய ஒற்றைப் பாதையில் அல்லாது – ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்த பரஸ்பர கூட்டு இதைச் சாத்தியமாக்குகின்றது.
நாங்கள் அன்றைய இரவில் கடந்து சென்ற மேசைகளைச் சுற்றி அமர்ந்து கொண்டு விவாதத்தின் போக்கில் பயணித்துக் கொண்டிருந்த எவரிடமிருந்தும் பயனற்ற வார்த்தைகள் ஏதும் வெளிப்படவில்லை என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் அரசியல் என்பது அலுக்காதா? அரசியல் மயமாகவே இருப்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அவர்களின் ஓய்வு நேரங்கள் எப்படிக் கழிகிறது?
இந்தக் கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து அங்கே தங்கியிருந்த நாட்களில் நேரடியாகக் கண்டுணர முடிந்தது. நள்ளிரவு தொடங்கிய எங்களது உரையாடல் சில மணி நேரங்கள் தொடர்ந்தது. தற்போதைய நிகழ்வுகளின் பின்னணியை விரிவாக விளக்கினார். உறங்கச் செல்லும் போது அதிகாலை ஆகியிருந்தது. விழித்த போது மணி பத்தைக் கடந்திருந்தது.
நாங்கள் தங்கியது ஆண்களுக்கான விடுதியில். வெளியிலிருந்து நண்பர்களைக் காண வருபவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு ஒரு சிறிய தொகையைக் கட்டினால் விடுதி நண்பர்களோடு தங்கிக் கொள்ளும் வசதியிருந்தது. மறுநாள் காலை முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண்கள் விடுதியில் உள்ள பொதுக் குளியலறைக்குச் சென்றால் அங்கே வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டிருந்தார் ஒரு பெண்.
“அதிர்ச்சியில் மயங்கி விட்டீர்களா என்ன?” பின்னர் நண்பரிடம் எமது அதிர்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது சிரித்துக் கொண்டே கேட்டார்.
“இல்லை.. அது எப்படி ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் வர முடியும்?”
“இங்கே தங்கியிருக்கும் உடன் படிக்கும் மாணவர் யாரையாவது பார்க்க வருவார்கள். பெண்கள் விடுதிக்கு இங்கேயிருந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டும். ஆத்திர அவசரமென்றால் அதற்காக ஓடவா முடியும்? கழிவறையை அவசரத்திற்கு பயன்படுத்த வந்திருப்பார். ஏன், உங்கள் மேல் உங்களுக்கே ஏதாவது சந்தேகமா என்ன?”
”அப்படியில்லை.. வெளியே ஜே.என்.யு குறித்து சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் இங்கே படிக்கும் ஆண்கள் பெண்களிடையே உள்ள உறவுகள் பற்றி அதிகம் சொல்லப்படுவதால் எழுந்த கேள்வி தான்”
“நீங்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் பொய் பிரச்சாரங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவன் சேற்றிலேயே வாழ்வதால் அவனுக்கு உலகமே சேறாகத் தெரிகிறது என்று நினைக்கிறேன். அப்படியெல்லாம் இங்கே பெண்களை கீழ்த்தரமான பாலியல் கண்ணோட்டத்தோடு யாரும் பார்ப்பதும் இல்லை, பழகுவதும் இல்லை”
”ஆர்.எஸ்.எஸ்காரனை விடுங்கள். அவன் சட்டசபைக்குள்ளேயே நீலப்படம் பார்த்த பாரம்பரியத்துக்கு சொந்தக்காரன் தானே.. ஆனால், பொதுவான சிலர் கூட இங்கே ஆண்களும் பெண்களும் கலந்து பழகுவதைப் பார்த்தால் தவறாகத் தானே கருதுவார்கள்?”
”நானே கூட ராஜஸ்தானில் இருந்து வந்தவன் தான். எனக்கே கூட முதலில் இங்கே உள்ள சுதந்திரத்தைக் கண்டு அச்சம் கலந்த குறுகுறுப்பாகத் தான் இருந்தது. ஆனால், அதெல்லாம் சில மாதங்கள் தான். பிறகு எனது பழைய குறுகுறுப்புக்குக் காரணம் நான் வளர்ந்த பார்ப்பனிய ஆதிக்க கருத்துக்களின் சூழல் தான் என்பதை புரிந்து கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்வது போல பெண்களை பிள்ளை பெற்றுப் போட்டு புருசனுக்கு கால் அமுக்கி விடும் இயந்திரங்களாக இங்குள்ளவர்கள் பார்ப்பதும் இல்லை, அவ்வாறான கண்ணோட்டத்தோடு பழகுவதும் இல்லை”
”நீங்களே கவனித்துப் பாருங்கள், பெரும்பாலான விவாதங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் சூழல் இருப்பதை நீங்கள் சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள். ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பொது விடயங்கள் குறித்து அறிவார்ந்த தளத்தில் உரையாடிக் கொள்ளும் ஒரு ஜனநாயக வெளி இருக்கிறது. அதன் காரணமாக பெண்களை “சைட்” அடிக்கும் ஈவ்டீசிங் போன்ற சில்லறை விசயங்கள் இல்லாமலே போய் விட்டது. அது தான் மாணவிகளுக்கும் ஆண்கள் புழங்கும் கழிப்பறைகளைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமின்றி அங்கே எல்லா கழிவறைகளுக்கும் கதவுகளும் உண்டு.. ஒருவருக்கு மேல் நேரத்தில் ஒரே கழிவறையை பயன்படுத்தப் போவதுமில்லை… யாரால் தான் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியும் சொல்லுங்கள்?”
தொடர்ந்து வந்த நாட்களில் இதை நேரடியாகவே அவதானிக்க முடிந்தது. வளாகத்தின் அரசியல் சூழல் ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஜனநாயக உணர்வும் அது வழங்கியிருக்கும் நம்பிக்கையும் பாலியல் கண்ணோட்டத்தை வெகுவாக பின்னுக்குத் தள்ளியிருந்தது.
வளாகத்தினுள் கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் வண்ணம் பல விடுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி, இருபாலார் விடுதி, மணமான மாணவர் விடுதி என்று அனைத்து வகைகளிலும் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் திரைகளின்றி சேர்ந்து பழகும் வெளிகளில் பாலியல் வன்முறைகளும், பாலியல் கண்ணோட்டங்களும் உதிர்ந்து போய் பெண்ணை சக மனுஷியாக பார்க்கும் இயல்பான கண்ணோட்டத்தை குறிப்பாக ஆண்கள் பெற முடியும் என்பதை ஜே.என்.யூ நிரூபிக்கின்றது.
வளாகத்தினுள் மாணவர் விடுதிகளைச் சுற்றி சிறு சிறு தேனீர்க் கடைகள் உள்ளன. அவற்றுக்கு அருகிலேயே உட்காரும் அளவுக்கான கற்களை சுற்றிப் போட்டு நடுவே கல்லால் ஆன மேசை போன்ற ஒரு வடிவம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவை மாணவர்களின் சந்திப்பு மையங்கள். இது போன்ற இடங்களெல்லாம் மாணவர்களால் நிரப்பப்பட்டு எல்லோரும் எதையோ குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
”கண்ணையா கைது பிரச்சினைக்குப் பின்னர் தான் இப்படி அரசியல் பேசுவது அதிகரித்துள்ளதா?”
”இல்லை பொதுவாகவே இங்கே இப்படித் தான் இருக்கும். ஆனால், நீங்கள் பிரமிப்பதற்கு ஏதும் இல்லை. மேலும் இங்கே அத்தனை பேருமே இடதுசாரி அரசியல் மட்டும் பேசுவதில்லை. இடதுசாரி கருத்துக்கள் செல்வாக்கோடு இருக்கின்றது என்பது உண்மை தான். எனினும், இங்கே விவாதங்களில் பெண்ணியம், பின்னவீனத்துவம், அம்பேத்கரியம், மொழிவழி தேசியம், இன தேசியம்… ஏன் சிலர் இந்துத்துவ அரசியலைக் கூட விவாதித்துக் கொள்வார்கள். இப்படி பல்வேறு அரசியல் கருத்துக்களிடையே மோதலும் கூட நடக்கும்”
”இந்துத்துவ அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையே நடக்கும் மோதல்களில் யார் வெல்வது வழக்கம்” சட்டென எழுந்த குறுகுறுப்பில் கேட்டோம். கொஞ்சம் நேரம் சிரித்தவர், பின் சொன்னார் –
“இப்போது அவர்கள் வெறியேறிப் போய் அரசின் உதவியோடு எங்கள் மேல் பாய்வதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இங்கே இருக்கப் போகிறீர்கள் தானே… திரும்பிப் போவதற்குள் அதைப் புரிந்து கொள்வீர்கள்”
“உங்களது ஓய்வு நேரங்கள் எப்படிக் கழிகின்றன?”
”ஆராய்ச்சிப் படிப்பிற்காக படிப்பதற்கே நிறைய நேரம் தேவைப்படும். வீட்டிலிருந்து அதற்குத் தானே அனுப்பியிருக்கிறார்கள்? ஒழிந்த நேரங்களில் அரசியல் விவாதங்கள், குறும்படங்கள் பார்த்து விவாதிப்பது, அல்லது ஏதாவது நூலைப் படித்து விவாதிப்பது இப்படிச் செல்லும்…”
”சினிமா, ஷாப்பிங் மால்…?”
“சிலர் அப்படியும் நேரத்தைப் போக்குவார்கள். குறிப்பாக அறிவியல் துறை மாணவர்கள் தனித் தனியே தங்கள் ஓடுகளுக்குள் சுருங்கிக் கிடப்பார்கள்… ஆனால், இப்போது எல்லோரையும் அரசு தேசதுரோகிகளாக்கி விட்டுள்ளதால் அவர்கள் வெளியே வந்துள்ளனர். இது உண்மையில் நல்ல விசயம். இதற்காக அரசுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்”
உண்மை தான் வளாகத்தில் தங்கியிருந்த நாட்களில் உள்ளே நடந்த கூட்டங்களுக்கு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். ஜே.என்.யுவில் படித்து தற்போது வெவ்வேறு துறைகளில் அறிஞர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் திகழ்பவர்கள் “தேசதுரோகிகளுக்கு” ஆதரவாகப் பேச வந்தனர். இக்கூட்டங்களில் பொதுவாக ஒதுங்கி வாழும் அறிவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
வளாகத்தில் நிலவும் விவாதச் சூழல் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. மார்க்சியம் செல்வாக்கான ஒரு இடத்தில் இருந்தாலும், எவரும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதில்லை. மார்க்சியத்தை ஒரு இளமைத் துடிப்புள்ள தத்துவமாக உணராதோர் எவரும் இங்கே விவாதிப்பது கடினம்.
எதையும் கேள்விகளுக்கு உட்படுத்தும் இந்த ஜனநாயக கலாச்சாரத்தின் வீச்சை இந்துத்துவ அரசியலால் ஏன் எதிர்கொள்ள முடியவில்லை என்பதை விளக்க வேண்டியதில்லை. பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, வேத கால விமானம், மகாபாரதத்தில் அணுகுண்டு போன்ற சரடுகளெல்லாம் எள்ளி நகையாடி சுக்கல் சுக்கலாக கிழித்தெறியப்பட்டு விடும். அவ்வாறு நிகழ்ந்த சம்பவங்கள் ஏராளம் உள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
வலதுசாரி பிற்போக்குக் கண்ணோட்டங்கள் அறிவியக்கச் செயல்பாடுகளோடு எந்த வகையிலும் பொருந்தி வராததோடு போட்டியிட்டுத் தோல்வியடைந்தும் விடுகிறது. ஜே.என்.யு மாணவர்கள் இன்று ”தேசதுரோகிகளாக” முத்திரை குத்தப்படுவதன் இந்துத்துவ பின்னணியை நாம் பின்னர் விரிவாக காணவுள்ளோம்.
அதற்கு முன், இந்தப் பல்கலைக்கழகத்தின் தோற்றம், மாணவர்கள் தேர்வு மற்றும் அவர்களின் வர்க்க / சாதிய பின்னணி குறித்தும் இவ்வாறு வேறு வேறு சமூக சூழல்களில் இருந்து வருபவர்கள் வளாகத்தில் நிலவும் ஜனநாயகப்பூர்வமான சூழலுக்கு எப்படி தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோம்
நாட்டின் காடுகள், கனிம வளங்கள், பொதுத்துறைகள் முதல் இறையாண்மை சார்ந்த உரிமைகள் ஈறான அனைத்தையும் ஏகாதிபத்தியங்களிடம் எழுதிக் கொடுப்பதுடன் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி வருகிறது மோடி அரசு. இதற்கு இணையாக, அரசு நிறுவனங்களைப் பார்ப்பன பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருகின்றன.
தாத்ரியில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம் பெரியவரைக் கொன்றது, பகுத்தறிவாளர் தபோல்கர் – எழுத்தாளர் கல்புர்கி, பன்சாரே ஆகியோரைச் சுட்டுக் கொன்றது, சமூக வலைத்தளங்களில் எதிர்த்து எழுதுபவரை கைது செய்வது, பூனாவில் ஒரு ஐ.டி துறை முசுலீம் இளைஞரை வாட்ஸ் அப் வதந்தியைக் காட்டிக் கொன்றது, சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, ஐதராபாத் பல்கலையில் ரோஹித் வெமுலாவைத் தூக்கிலேற்றியது, உஸ்மானியா – ஜே.என்.யூ பல்கலைகளில் அசுரர் தினம் கடைபிடிக்க தடை, பூனா திரைப்படக் கல்லூரியின் முதல்வராகத் திணிக்கப்பட்ட இந்துமதவெறிக் கோமாளியை நீக்கப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை, கர்வாப்சி எனும் கட்டாய மதமாற்றம், ஊடகங்களில் எதிர்க்கருத்துக்களை எழுதுபவர்களை அடக்க கமிட்டிகள், தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை!
மறுகாலனியாக்கமும் பார்ப்பன பாசிசமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மையும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கும் மோடியின் வாய்ச்சவடால்கள் அம்பலமாகி நாறுவதை மறைத்துக் கொள்வதற்கும் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது.
ஆனால் அதன் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதையே பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டங்கள் காட்டுகின்றன. விருதுகளை திருப்பித் தரும் அறிஞர்களும், தடையை வென்ற ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டமும், அடக்குமுறைக்கு அஞ்சாத ஜே.என்.யூ மாணவர்களும் இதனை நிரூபித்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்நூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மார்ச் 2016 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
பொருளடக்கம்:
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ÷ ரேட் அம்பலம் !
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
பூனா ஐ.டி இளைஞரை கொன்ற இந்து ராஷ்டிர சேனா!
இந்துக்களே… மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?
அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க் காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
சர்வதேச யோகா தினம்: 64 “ஷாகா”வுக்கு ̈ பதிலாக யோகா!
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அரு ̧ந்ததி ராய்
பக்கங்கள் : 80 விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
குருதியில் மலர்ந்த உழைக்கும் பெண்கள் தினம் – விருத்தாச்சலம்
பெண் விடுதலையை முன்னெடுப்போம்! சமூக விடுதலையைச் சாதிப்போம்
ஆர்ப்பாட்டம்
08-03-2016 செவ்வாய் மாலை 4 மணி பாலக்கரை விருத்தாச்சலம்
தலைமை : தோழர் ரேவதி, பெண்கள் விடுதலை முன்னணி, விருத்தாச்சலம்
தகவல் பெண்கள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்
சென்னை தெருமுனை பிரச்சாரம்
பெண்களின் வாழ்வை சீரழிக்கும் டாஸ்மாக்கை மூடுவோம் உலக பெண்கள் தினமான மார்ச்-8-ல் உறுதியேற்போம்!
உழைக்கும் பெண்களே!
“ஊருக்கு ஊரு சாராயம் கதறுது தமிழகம்” என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கம் தமிழகத்தின் அவலத்தை நாடி பிடித்துக் கூறுகிறது என்றால் அது மிகையல்ல. டாஸ்மாக்கால் ஆண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் என குடித்துச் சாகின்றனர். தமிழகமே சுடுகாடாய் மாற்றப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான். அவர்களின் துயரத்தை, கதறலைச் சொல்ல வார்த்தைகள் போதாது.
குடித்துவிட்டு வந்து அடிப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, சந்தேகிப்பது போன்றவைகளால் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வது, கணவன் வேலைக்குப் போகாததால் தன் பிள்ளைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் மாடாய் உழைப்பது, ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ்வது என பெண்களின் வாழ்க்கையே சீரழிந்து கொண்டிருக்கிறது. அதுவும் கணவனை இழந்த பெண்கள் என்றால் அவர்களது துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கணவன் இல்லாததால் மற்ற ஆண்களின் பாலியல் சீண்டல், விதவை என்று சமூகம் புறக்கணிப்பது என்ற ஒரு நரக வாழ்க்கையைத்தான் அனுபவிக்கின்றனர். இதற்கு மேலும் டாஸ்மாக் கொடூரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமா? கடலென திரண்ட மக்கள் அதிகாரம் நடத்திய திருச்சி மாநாட்டில் தன் வேதனையை வெளிப்படுத்திய நாகராஜின் அவலத்தைக் கேளுங்கள்.
“நான் பித்தளை பாத்திர வேலை செய்பவன். குடிக்கு அடிமையானதால், வாங்குகிற சம்பளத்தை முழுக்கக் குடித்தேன். என்னுடைய குழந்தையின் பசிக்குப் பால் வாங்கக் கூட காசு தர மாட்டேன். குடித்து விட்டால் தினம் சண்டைதான் போடுவேன். ஒரு கட்டத்தில் இவனைத் திருத்தவே முடியாது. இவனுடன் வாழவும் முடியாது என்று முடிவு பண்ணி என்னுடைய 3 குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள் என் மனைவி சர்மிளா. என் மனைவியைக் காப்பாற்றப் போனபோது என்னுடைய கைகளும், முகமும் நெருப்பில் வெந்து போய் விட்டன. இனி என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. பசியால் வாடும் என் குழந்தைகளுக்கு பாலோ, பிஸ்கட்டோ கூட வாங்கித் தர முடியவில்லை” என்று அழுது புலம்பினார்.
இப்படித் தமிழகம் முழுக்க பல சர்மிளாக்கள் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். பல குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவைகளை மேலும் எழுதினால் பக்கங்கள் போதாது. அழுதும் மாளாது.
டாஸ்மாக்கால் குடும்பம் மட்டுமா சீரழிகிறது? மொத்த சமூகமும்தானே சீரழிகிறது. இந்தக் குடிவெறி, 6 வயது குழந்தையா 60 வயது மூதாட்டியா என்று கூட பார்ப்பதில்லை. இதன் விளைவு சிவகங்கையில் 13 வயது சிறுமியை அவளுடைய அப்பாவும், அண்ணனுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதற்குக் காரணம் என்ன? குடிவெறிதானே! டெல்லி மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்யத் தள்ளியது எது? குடிவெறிதானே! இப்படி பல சம்பவங்களை நாம் செய்தித் தாள்களில் படிக்கிறோம்… வேதனைப்படுகிறோம்… போராடவும் செய்கிறோம்.
டாஸ்மாக்கால் ஒட்டுமொத்த தமிழகமும் பெண்களின் வாழ்வும் சிதைக்கப்படுவது பற்றி நம்மை ஆளும் அரசு அதிகாரிகளுக்கோ, ஓட்டு வாங்கிப் போன அமைச்சர்களுக்கோ துளியும் வருத்தமோ, வேதனையோ இல்லை. அதனால்தான், “டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகும், அரசுக்கு வருமானம் போய்விடும்” என்று வாய்கூசாமல் பேச முடிகிறது அமைச்சர் நத்தம் விஸ்வநாதனால்.
ஆனால் கள்ளச்சாராயத்தை எப்படி தடுப்பது? என்றும், அரசுக்கு வருமானம் பெருக்குவதற்கும் வழி சொல்கின்றனர். மக்கள் அதிகாரம் மாநாட்டில் கலந்து கொண்ட டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகள். “ஆம்புலன்ஸ்க்கு 108 என்று ஒரு எண் இருப்பது போல், கள்ளச் சாராயத்தை ஒழிக்க ஒரு போன் நம்பர் கொடுங்க, தகவல் சொல்றோம். போலீசு வந்து புடிச்சிட்டுப் போகும்.அப்புறம் என்ன? கள்ளச்சாராயத்தைத் தடுத்திடலாமே” என்கின்றனர்.
“ஒரு வீட்ல ஒரு கணவன் 500 ரூபாய்க்குக் குடிக்கிறான். அப்போ ஒரு மாதம் 15,000 ரூபாயும், வருசத்துக்கு 1,80,000 ரூபாயும் டாஸ்மாக்குக்கே கொடுக்கிறான். அதை வீட்டுப் பெண்கள்கிட்ட கொடுத்தா காய்கறி, மளிகை மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவாங்க. குடும்பமும் நல்லாருக்கும், அரசுக்கும் மறைமுகமா வருமானம் வருமே” என்கின்றனர்.
இவர்களுக்கு இருக்கும் அறிவும் அக்கறையும் பொறுப்பும் ஆட்சியாளர்களுக்கு இருந்தால் நிச்சயம் கள்ளச்சாராயத்தையும், அம்மா சாராயத்தையும் ஒழிக்க முடியும். ஆனால், இவர்கள் செய்ய மாட்டார்கள். டாஸ்மாக்கை அதிகப்படுத்தி கல்லா கட்டுவதே இவர்கள் கொள்கையாகிருக்கும் போது, இவர்கள் எப்படி கள்ளச் சாராயத்தையும் அம்மா சாராயத்தையும் ஒழிப்பார்கள்?
அப்படி என்றால் நம்முடைய பிரச்சனையை வேதனையை துன்பத்தை கஷ்டத்தை தீர்த்து வைக்க வக்கில்லாத இவர்களிடம் நாம் ஏன் மூடச் சொல்லி கெஞ்ச வேண்டும்? வீதியில் இறங்குவோம்! டாஸ்மாக் கடைகளை நாமே இழுத்து மூடுவோம்!
நமக்கு இடப்பட்ட விலங்குகளான பெண்ணடிமைத்தனத்தையும் நம்மை ஒவ்வொரு நொடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆணாதிக்கத்தையும் நம்மை போராட விடாமல் மழுங்கடித்து வரும் நுகர்வு – சீரழிவுப் பண்பாட்டையும் உடைத்தெறிய முன்வருவது மூலம் நிச்சயம் முடியும். முன்வருவோம் என்று உலகப் பெண்கள் தினமான மார்ச்-8ல் உறுதியேற்போம்!
இரயில்வே பட்ஜெட்: தொழிலாளர்களுக்கு எலும்புத்துண்டு! – முதலாளிகளுக்கு ’சூப்’பு!! – பொதுமக்களுக்கு ஆப்பு!!!
கடந்த பிப்ரவரி மாதக் கடைசியில் 2016-2017-ம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட் வெளியிடப்பட்ட போது பத்திரிக்கைகளும், பொருளாதார மேதைகளும் ஆகா, ஓகோவென புகழ்ந்தனர். குறிப்பாக, பயணச்சீட்டு விலை கூட்டப்படவில்லை என்ற அறிவிப்பு தான் சாதாரண மக்களின் வரவேற்பைப் பலமாகப் பெற்றுள்ளது. எனினும் உண்மை நிலை என்ன?
பயணிகள் இரயில் கட்டணம் மற்றும் சரக்கு இரயில் கட்டணம்:
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, மோடி அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை இரயில் கட்டணத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் சிறிது சிறிதாக அதிகரித்து வந்துள்ளது என்பது அடிக்கடி இரயிலில் பயணம் செய்பவர்கள் அறிந்த உண்மை. உதாரணத்திற்குக் கடந்த டிசம்பர் மாதத்தில் தட்கல் கட்டணத்தை உயர்த்தினார்கள். அவ்வளவு ஏன்? பட்ஜெட் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட, நூற்று தொண்ணூற்றொன்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் பயணம் செய்பவர்கள், பயணச்சீட்டு வாங்கிய நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் இரயில் ஏறத் தவறினால் மீண்டும் புதிய பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று இரயில்வேத்துறை உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும், சிறுவர்களுக்கான அரைக் கட்டணச் சலுகை பறிப்பு, தட்கல் கட்டண அதிகரிப்பு, சுவிதா வண்டிகளில் முதியோருக்கான சலுகைகளை ஒழிப்பது, முன்பதிவை ரத்து செய்யும் பட்சத்தில் திரும்பத் தரும் தொகையில் பிடித்தத்தை அதிகரிப்பது என பல வகைகளில் மக்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஆனால் ஊடகங்களும் பொருளாதார ’மேதை’களும் ஏற்கனவே புழக்கடை வழியே நுழைக்கப்பட்டக் கட்டணக் கொள்ளைகள் குறித்து மூச்சுக் கூட விடாமல் நேரடியான கட்டணக் கொள்ளை அறிவிக்கப்படாததை எண்ணி மகிழ்கின்றனர்.
பதம் பார்க்க வருகிறது இரயில்வே:
இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பகுதிக்கேற்ற உள்ளூர் உணவுகளையும், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் வசதியான இ-கேட்டரிங் சேவையையும் வழங்குவதற்காக பல்வேறு தனியார் உணவு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக இரயில்வேத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே ’மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ போன்ற தனியார் நிறுவனங்கள் தான் இரயிலிலேயே உணவைத் தயாரித்து (பேண்ட்ரி கார்) விற்பனை செய்து வருகின்றன. இந்த உணவுப் பொருட்களின் தரம், சுவை, அளவு குறித்துப் பயணிகள் காறி உமிழாத நாளே கிடையாது.
மோசமான உணவுத் தரம் குறித்து எழுப்பப்படும் புகார்களை மயிரளவிற்கும் கண்டுகொள்ளாத இரயில்வேத் துறை, புதியதாக வரப்போகும் மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி போன்றவற்றையும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஏற்கனவே கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களை விட அதிகமான விலையில் அதே கேவலமான தரத்தோடு நம்மை கொள்ளையடிக்க வருகின்றன என்பதைத் தாண்டி இத்திட்டத்தால் வேரொன்றும் நிகழப் போவது இல்லை. ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், பயணிக்கும் பலரும் அரை வயிற்றுக்குத் தான் உண்கின்றனர். இனி இத்தகைய புதிய நிறுவனங்களின் வரவால் பட்டினியோடும், கால் வயிற்று உணவோடும் தான் பயணிக்கும் நிலை ஏற்படும். ஊடகங்களால் கொண்டாடப்படும் இத்திட்டம் பயணிகளின் சுவை மொட்டுகளைப் பதம் பார்க்க கொண்டு வரப்படவில்லை. பயணிகளின் மணிப்பர்சைப் பதம் பார்க்கவே கொண்டு வரப்படுகின்றது
’சுவச்’சு பாரத்:
உணவுக்கு அடுத்தபடியாக இரயில்களில் மோசமான நிலையில் இருப்பவை கழிப்பறைகள் தான். இப்போது அப்பிரச்சினையை ஒரே எஸ்.எம்.எஸ். மூலம் தீர்த்து விடலாம் என்கிறது இரயில்வே அமைச்சகம். இரயில்களின் பராமரிப்புப் பணிகளும் தனியாரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இரயில் பெட்டிகளை, கிளம்பும் இடத்திலும், போய்ச் சேரும் இடத்திலும் பெயருக்கு சுத்தம் செய்துவிட்டு கணக்கு காட்டும் இத்தனியார் நிறுவனங்கள் தான் இரயிலை அனைத்து நேரத்திலும் சுத்தமாகப் பராமரிப்பதற்குப் பொறுப்பு.
பயணக் கட்டணம் என்ற பெயரில் இரயில்வேத்துறை அடிக்கும் கட்டணக் கொள்ளையில் கக்கூசைக் கூட சுயமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வக்கில்லாமல், கக்கூஸ் நாறினால் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என்றும், அதன் பிறகு பராமரிக்க வேண்டிய தனியார் நிறுவனம் வந்து கக்கூசை கழுவும் என்றும் கூறுவது வக்கிரத்தின் உச்சகட்டம். காசையும் கொடுத்து விட்டு, இது சூப்பர் ஸ்கீம் என்று கைதட்டும் விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கும் வரை இது போன்ற பல திருப்பதி மொட்டை சமாச்சாரங்களை இரயில்வே அமைச்சகத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
ஹை-டெக் – ரயில் நிலையங்கள்:
கையால் மலம் அள்ளும் அவலத்தை மாற்றாமல் வைஃபை வசதிக்கு அள்ளிக் கொடுக்கிறது இந்த மனுநீதி அரசு!
இந்த இரயில்வே பட்ஜெட்டில், இரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப் போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனம் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் தனது வலையை விரித்து வைத்திருக்கிறது. டிஜிட்டல் இந்தியா என்னும் மோசடித் திட்டத்தின் கீழ் இதற்குள் நுழையப் போகும் கூகுள் போன்ற நிறுவனங்கள், முதலில் இலவச சேவையாக அறிமுகப்படுத்தி பின்னர் இதனை பணச் சேவையாக மாற்றும் சதித்திட்டத்தோடு காத்திருக்கின்றன. வங்கிகளில் ஏ.டி.எம் பயன்பாடு முதலில் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டு, மக்களுக்கும் பழக்கப்படுத்தப்பட்டு பின்னர் அதற்கும் பணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டதே இதற்கு நல்ல உதாரணம்.
வை-ஃபை, ஆன்லைன் புக்கிங் என்று ஹை-டெக் புரட்சி பேசும் இரயில்வே பட்ஜெட்டில் ஒரு ஓரத்தில் கூட இரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் மனித மலத்தை மனிதர்களே கையால் சுத்தம் செய்யும் அவலநிலை குறித்து பேசப்படவில்லை. ”மாட்சிமை பொருந்திய இந்திய வல்லரசில்”,”10,000 ஆண்டுகளுக்கு முன்பே விமானம் விட்ட ஞான பூமியில்” இத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் துயரைப் போக்க ஒரு தொழில்நுட்பம் படைக்கக் கூட வக்கில்லையா என்ன? மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலையை ஒழிக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும், கண் துடைப்புச் சட்டங்களை இயற்றுவதைத் தவிர, வேறு எவ்வித நடவடிக்கைகளும், திட்டங்களும் இது நாள் வரையில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசாங்கமும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஹை-டெக் கனவான்களாகத் தங்களைப் பீற்றிக் கொள்ளும் பாஜக கும்பல் மனித மலத்தை மனிதனே அள்ளும் விசயத்தில் மட்டும் கள்ள மவுனத்தோடு தனது மனுநீதிப் பூணூலை உருவிக்காட்டுகிறது.
இரயில்வேத் துறை நவீனமயமாக்கம் – விரிவாக்கம்:
இரயில்வேத் துறையை நவீனமயமாக்கவும் விரிவாக்கவும் மிகப்பெரிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும் முதலாளிகள் பாராட்டியிருக்கின்றனர். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
1. சரக்குகளை இருப்பு வைக்க ரயில்வேத் துறை இரண்டு பிரத்யேக கிடங்குகளை உருவாக்கும்.
2. இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னையில் கும்மிடிப்பூண்டி அருகில் ரயில் ஆட்டோ ஹப் அமைக்கப்படும்.
3. டில்லி முதல் சென்னை வரை, மும்பை முதல் கரக்பூர் வரை, கரக்பூர் முதல் விஜயவாடா வரை என மூன்று தனி சரக்கு இரயில் போக்குவரத்துப் பாதை அமைக்கப்படும்.
4. இரயில் நிலையங்களை, துறைமுகங்களுடன் இணைக்கும் பணி விரிவுபடுத்தப்படும்.
ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சி அடைய இரயில்வேத் துறை இவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு இவை அனைத்தும் பொதுத்துறை தனியார் கூட்டு நிறுவனங்களின் (PPP) மூலம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பது எதற்காக? உலகம் முழுக்க பொதுத்துறை தனியார் கூட்டு மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தனியாருக்கு இலாபத்தை அள்ளித் தந்து பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்குவதாகவும், பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் திட்டங்களாகவுமே இருந்திருக்கின்றன என்பது கண்கூடு.
பொதுத்துறை தனியார் கூட்டு (PPP) – அரசு விளக்குப் பிடிக்க தனியார் அடிக்கும் கொள்ளை:
உதாரணத்திற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம். மும்பை பெருநகர அபிவிருத்திக் கழகத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்சு உட்கட்டமைப்பு நிறுவனமும், வெயோலியா போக்குவரத்து நிறுவனமும் இணைந்து ”மும்பை மெட்ரோ ஒன்” என்னும் நிறுவனம் பொ.த.கூ (PPP) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவே மெட்ரோ ஒன் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தளவாடப் பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிப்பதாகக் கூறிப் பொறுப்பேற்ற ரிலையன்ஸ் நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை இழுத்தடித்து, செலவை மும்மடங்காகக் கணக்குக் காட்டி, நிர்ணயித்த ’ரூ 9 முதல் ரூ 13 வரை’ என்ற கட்டண அளவை விட மூன்று மடங்கு அதிகமாக்கி ’ரூ 10 முதல் ரூ 40 வரை’ என்ற கட்டணத்தை நிர்ணயித்தது. உண்மையில் சொல்லப் போனால் ரிலையன்ஸ் தான் சொன்னபடி இரண்டு ஆண்டுகளில் மெட்ரோவை கட்ட முடியாத தனது கையாலாகாத்தனத்திற்கான தண்டனையை மக்கள் மீது சுமத்தியிருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்த அப்போதைய மகராஷ்டிர முதல்வர் பிரித்திவிராஜ் சவுகானை மயிரளவிற்கும் கூட மதிக்காமல் தான் நிர்ணயித்த கட்டணத்தில் உறுதியாக இருந்தது ரிலையன்ஸ் நிறுவனம். வேறு வழியின்றி இன்றும் மும்பை மக்கள் அந்தத் தொகையைத் தான் கட்டி பயணிக்கின்றனர்.
தற்போது சென்னையில் ஒரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலின் கதையும் இது தான். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு ஒரு ஜப்பானிய வங்கியும் (Japan International Corporation Agency) கடன் கொடுத்துள்ளது. 14,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் ஜப்பானிய வங்கியின் பங்கு வெறும் கடன் கொடுப்பது மட்டுமல்ல. அதனுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவர்கள் கூறும் இடத்திலிருந்து தான் கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டும். உதாரணமாக தரமான மெட்ரோ ரயில் பெட்டிகளை ஒப்பீட்டளவில் குறைவான விலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்தாலும் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அல்ஸ்டோமிடமிருந்து தான் வாங்க வேண்டும் என ஜப்பானிய வங்கி நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அல்ஸ்டோமிலிருந்து மெட்ரோ ரயில் பெட்டிகள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. இந்தக் கூடுதல் செலவு, அதன் மீதான வட்டி போன்றவை தான் அதிகக் கட்டணமாக நம் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய பகிரங்கக் கொள்ளைகளை, பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்கழகங்கள் சட்டப்பூர்வமாக நடத்துவதற்கு ஏற்றவாறு கடந்த 2002-ம் ஆண்டு பாஜக அரசு மெட்ரோ ரயில் சட்டத்தை இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மெட்ரோவின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள மெட்ரோ ஒன் நிறுவனத்தை ரிலையன்ஸ் கட்டுப்படுத்துகிறது. சென்னை மெட்ரோவை ஜப்பானிய வங்கி கட்டுப்படுத்துகிறது. இது தான் பொதுத்துறை தனியார் கூட்டு திட்டங்களின் நிலைமை. இவை ஆங்காங்கே எடுக்கப்பட்ட உதாரணங்கள் மட்டுமே. பொதுத்துறை தனியார் கூட்டில் நடக்கும் கொள்ளையைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றால் தனித் தொடராக வெளியிட வேண்டும். பொதுத்துறை- தனியார் கூட்டுத் திட்டங்களில் அரசு மக்களின் வரிப்பணத்தைக் கணிசமாகக் கொட்டுவதோடு, இத்திட்டங்களுக்கான நிலத்தை மக்களிடமிருந்து பறிப்பதற்கான அடியாளாகவும் செயல்பட்டு தனியார்களின் கொள்ளை இலாபத்திற்கு துணை நிற்கிறது என்பதே உண்மை.
பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்யக் காத்திருக்கும் ரயில்வே அமைச்சகம்:
டில்லி-சென்னை, மும்பை-கோரக்பூர்-விஜயவாடா வழித்தடங்களில் பிரத்யேக சரக்குப் போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. அதோடு இத்திட்டங்களுக்கான நிலத்தை கையகப்படுத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இத்திட்டத்திற்கு 1.5 இலட்சம் கோடி கொடுக்க முன் வந்திருப்பதாகவும், பற்றாக்குறைக்கு இரயில்வேயின் சொத்துக்களை விற்க இருப்பதாகவும் இரயில்வே அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
அனைத்து இரயில்வே பொதுத்துறை தனியார் கூட்டுத் திட்டங்களுக்கும் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காகவே பெருமுதலாளிகள் வாங்கி ஏமாற்றிய வாராக் கடன் சுமையிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்க 2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை மத்திய அரசு கொட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள், அசுரவேகத்தில் இரயில்வேத் துறையை விழுங்க தற்போது தரப்பட்டிருக்கும் ஸ்டார்ட்டர் ’சூப்’பு (Starter Soup) தான் மக்கள் வரிப் பணத்தில் வங்கிகளை வாராக்கடன் சுமையிலிருந்து மீட்கும் நடவடிக்கை.
மக்களை ஒட்டச் சுரண்டும் தனியார் கொள்ளைக்குக் காவலனாகவும், மக்களிடம் இருந்து நிலத்தை அபகரிக்கும் அடியாளாகவும் வேலை பார்க்கும் இந்த அரசு, அதோடு நிற்காமல் நமது தொழிலாளர் வைப்பு நிதி, பொதுத்துறை வங்கிகளில் உள்ள நமது சேமிப்பு போன்றவற்றை அள்ளிக் கொடுத்தே தனியார் நிறுவனங்களை இலாபத்தால் குளிப்பாட்டுகிறது. எதிர்த்துக் கேட்டால் நம்மை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று கூக்குரலிடுகிறது.
புட்டத்தில் தீ பற்றி எரியும் போதும் முன்னால் தொங்கும் கேரட்டின் கனவில் ஓடும் கிழட்டுக் குதிரை:
தனியார்மயத்தை ஒருபுறத்தில் தீவிரப்படுத்திக் கொண்டு மறுபுறத்தில் தொழிலாளர் அமைப்புகளின் வாயை மூட 7-வது சம்பளக்கமிசன் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரயில்வே பட்ஜெட். இரயில்வே தொழிற்சங்கங்களோ 7-வது சம்பளக் கமிசன் அமல்படுத்தப்படும் கனவில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கின்றன. 7-வது சம்பளக்கமிசன் பரிந்துரை நடைமுறைப்படுத்தப் படுமோ இல்லையோ இனி இந்திய இரயில்வேத்துறை தொழிற்சங்கங்களின் வசம் இல்லை என்பது மட்டும் உறுதி. அதனால் தான் தொழிற்சங்கங்கள் மவுனித்திருக்கும் போதும் உணர்வுள்ள எந்தத் தொழிலாளிக்கும் சிவப்பு நிறத்தைக் கண்டு போராட்ட ஞாபகம் வந்து விடக்கூடாது என்று போர்ட்டர்களின் சிவப்புச் சட்டையை மாற்றப் போவதாக சுரேஷ் பிரபு அறிவித்திருக்கிறார் போலும். நல்லவேளை இரயிலை நிறுத்தும் சிவப்புக் கொடியை மாற்றச் சொல்லவில்லை. அடுத்த பட்ஜெட் வரை சிவப்புக் கொடி மட்டும் தப்பியது. (பச்சைக்கொடி பாகிஸ்தான் அடையாளம் என்று இந்த ‘தேச’ பக்தர்கள் அடுத்த பட்ஜெட்டில் அதையும் மாற்றலாம்! யார் கண்டது?). தொழிற்சங்கங்களோ, வாய்க்கு எட்டாமல் கட்டப்பட்ட ஏழாவது சம்பளக்கமிசன் என்னும் கேரட்டை கவ்வும் நோக்கில் ஓடும் ஐந்தறிவு குதிரையின் நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.
பயணிகளுக்கு வைக்கப்போகும் ஆப்பிற்கான இரயில்வே அமைச்சகத்தின் முன்மொழிதல்:
மக்களுக்கான இரயில்வே பட்ஜெட் இது என்று ஊடகங்கள் மூலமும், பொருளாதார ’மேதை’கள் மூலமும் மக்களை இளித்தவாயர்கள் ஆக்கிய இரயில்வே அமைச்சகம், தனது பட்ஜெட் அறிவிப்பிலேயே, விரைவில் பயணிகளுக்கு ஆப்பு வைக்கப்படும் என்னும் விதமாக சூசக தகவல்களையும் வெளியிட்டுள்ளது. இரயில்வே பட்ஜெட்டில் 7-வது சம்பளக்கமிசனின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்கினால் ரூ 50,000 கோடி அதிக செலவு என்றும், குறைவான இரயில் கட்டணத்தினால் (இப்போது இருக்கும் கட்டணமே குறைவாம்) ஆண்டுக்கு ரூ 30,000 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் பஞ்சப் பாட்டை பாடியிருக்கும் அதே சமயத்தில் 2016-17 நிதி ஆண்டிற்கு கடந்த நிதி ஆண்டை விட 10.1% அதிகமாக வருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் வருவாய்க்கான மூலங்களைப் பற்றி வாய் திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. செலவு அதிகரித்திருக்கிறது, வருவாயும் அதிகரிக்க வேண்டும் என்றால் தற்போதுள்ள ஒரே வழி பயணிகளிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டணக் கொள்ளை நடத்துவது தான். அடுத்து நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன் நேரடி மற்றும் மறைமுகக் கட்டண உயர்வு இடியாக மக்கள் தலையில் இறங்கும் என்பதையே தனது பஞ்சப்பாட்டின் மூலம் மக்களுக்கு இரயில்வே அமைச்சகம் அறிவுறுத்துகிறது.
தொடரவிருக்கும் பகற்கொள்ளைக்கு சென்ற ஆண்டே சமர்ப்பிக்கப்பட்ட செய்முறை விளக்கம்:
விவேக் தெப்ராய்
மோடி என்றால் வளர்ச்சி என்று கூவிய நடுத்தர வர்க்க, குட்டிமுதலாளிகள் எல்லாம் வளர்ச்சியின் பெயரில் இரயில் கட்டண உயர்வு மற்றும் பிரீமியம் இரயில்கள், டைனமிக் கட்டண அறிவிப்புகள் வெளியான உடனேயே மோடியை விட மிகப்பெரிய மவுனிகளானது தனிக்கதை. அத்தகைய சிறப்புமிக்க ’வளர்ச்சிக்கு’ இரயில்வேத்துறையை இட்டுச் செல்லும் பொருட்டு மோடி அரசால் ஆட்சியில் அமர்ந்தவுடன் அமைக்கப்பட்ட குழு தான் விவேக் தெப்ராய் குழு. இரயில்வேத் துறையை எப்படி வளர்ச்சிப் பாதையில் எடுத்துப் போவது, அதாவது மக்களிடம் இருந்து எப்படி கட்டணக் கொள்ளையடிப்பது என்பது குறித்த காலக்கெடுவுடன் கூடிய செய்முறை விளக்கத்தை பரிந்துரைகளாக விவேக் தெப்ராய் குழு அளித்துள்ளது. அதன் முக்கியமான பரிந்துரைகளில் சில பின்வருமாறு:
1. இரயில்வேத் துறையில் சரக்கு ரயில்களை விடும் பொறுப்பை தனியாரிடம் விட்டுவிட வேண்டும். (ஏனெனில் அது மட்டும் தான் இரயில்வேக்கு 65% வருமானத்தை ஈட்டித் தரும் இலாபம் தரும் போக்குவரத்து)
2. அரசு இரயில்வேத்துறையில் தண்டாவாளம் போடுவது, சிக்னல் பராமரிப்பு, இரயில் நிலைய பராமரிப்பு ஆகியவற்றைத் தன் கையில் வைத்துக் கொண்டு, பயணிகள் இரயில் போக்குவரத்தையும் படிபடியாக தனியார் கையில் விட வேண்டும்.
3. அவ்வாறு தனியார் கையில் சரக்கு மற்றும் பயணிகள் இரயில் போக்குவரத்தை ஒப்படைக்கும் பட்சத்தில் கட்டண நிர்ணயிப்பில் அரசு தலையிடக் கூடாது. அதை சந்தை நிலவரத்திற்கேற்ப தனியாரே தீர்மானிப்பர். (தற்போதைய பெட்ரோல், டீசல் விலை போல)
4. அரசின் எந்த உறுப்பும் (நாடாளுமன்றம், நீதிமன்றம் உட்பட) தலையிட இயலாத வகையில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இரயில்வேத் துறையின் பிரதிநிதிகளும் மட்டும் உறுப்பினராக இருக்கும் இரயில்வே ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். அதுவே தனியார் மற்றும் அரசுத்துறைக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்.
5. இப்போது ரயில்வேத்துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவற்றின் நிர்வாகத்தில், கட்டண விதிப்பில் அரசு தலையிடக் கூடாது.
6. அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது
7. ஓய்வுபெறும் ஊழியர்கள் மற்றும் பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட நிதியை பணமாகத் தராமல், முப்பது ஆண்டுகள் கழித்து மட்டுமே பணமாக்கப் படக்கூடிய ’புல்லட் பாண்ட்’டாகத் தரவேண்டும்.
இது போன்று வெளிப்படையாகவே மக்களையும் தொழிலாளர்களையும் சுரண்டும் செயல்முறையை பரிந்துரைகளாக வெளியிட்டு அவற்றை அமல்படுத்துவதற்கான கால இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது விவேக் தெப்ராய் குழு. அதையே கடந்த பட்ஜெட்டிலிருந்து பளபளப்பான பெயர்களில் பல்வேறு திட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது மோடி அரசு.
என்ன செய்யப் போகிறோம்?:
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இரயில்வேத் துறை வளர்ச்சித் திட்டங்கள் உண்மையில் இந்தியாவின் சுதேசி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலோ இல்லை பெரும்பான்மை மக்களின் நலன்களின் பாற்பட்டோ தீர்மானிக்கப்பட்டிருக்கிறதா என்பது ஒரு புறம். மறுபுறம், இந்தத் திட்டங்களைக்கூட இந்திய இரயில்வேத் துறையில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளத்தின் மூலமும் மற்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்களிப்பு மூலமும் எளிதில் நடைமுறைப்படுத்தத் தகுந்தவையே. ஆயினும் புகுத்தப்பட்டிருக்கும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் விதிப்படி அவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
எனவே மோடி தலைமையிலான அமெரிக்க அடிமைகள் அதனைக் கனவிலும் செய்ய முடியாது. மாறாக பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களையும், விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு பிடுங்கப்பட்ட நிலங்களையும் தனியாருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்க்கும் தரகு வேலையையே தற்போது பா.ஜ.க அரசும் அதற்கு முன்னால் காங்கிரஸ் அரசும் செய்து வருகின்றன. அதே வேளையில் தேசத்தை அன்னிய, தனியார் முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுக்கும் தனது வேலையை ‘வளர்ச்சி’ என்று கூறி நம்மை ஏய்க்கப் பார்க்கின்றன. நமது உழைப்பைக் கபளீகரம் செய்யும் தனியார்மய, தாராளமய, உலகமய ஓநாய்களின் வெறியாட்டத்தை எவ்வாறு முறியடிக்கப் போகிறோம்?.
தேச பக்தி, தேச வளர்ச்சி என்ற மாயவாதங்களில் சிக்காமல் எதார்த்த நிலையில் இருந்து அணுகும் போதே அரசு அறிவிக்கும் திட்டங்களின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும். நமக்கு எதிரான சதி வலை வளர்ச்சி என்ற பெயராலேயே பின்னப்படுகிறது என்பதை உணரும்போது தான் விடிவுகாலம் பிறக்கும். தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கேற்ப மக்கள் விரோதமாக மாறியிருக்கின்ற, ஆள அருகதையற்ற இந்த அரசுக் கட்டமைப்பிற்கு எதிராகப் போராடும் போது தான் வெற்றி நம் பக்கம் உறுதியாகும்.
”சார், ஆகம விதிப்படி தான் கோயில் நடக்குதா இங்கே? மினிஸ்டர் வாராறுன்னு ஒரு மணி நேரம் சாமிய காக்க வைக்கிறாங்க. ஆகமத்துல அப்படி இருக்குதா? கோர்ட்டு என்னா வேணா சொல்லிட்டுப் போகட்டும் சார். இது நம்மோட கோயிலு. நம்மாளு உள்ளே போனா என்னான்னு கேக்கறேன்…”
வட பழனி கோயில் பக்தர் ஒருவரின் கருத்து இது. பதிலளித்தவர் ‘சூத்திரர்’.
“நானே சொல்லக் கூடாது தான்… ஆனா வேற வழியில்லே. இன்னிக்கு ப்ராமின்ஸ் எவன் யோக்கியம்னு சொல்றீங்க? வெளியில தான் கோயில் காரியம் புண்ணியம்னு எல்லாம் நினைக்கிறாங்க. உள்ளே வந்து பார்த்தா தான் புரியும். பெரியார் கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கா எவனாலயும் பதில் சொல்ல முடியலை. அதானே எல்லாரும் அந்தப் பக்கமா போறாங்க? இவங்களாலே இன்னிக்கு கடவுள் பக்தியே குலைஞ்சி போச்சிது. எத்தனை ஸ்காண்டல் வெளியே வந்திட்டு இருக்கு தெரியுமில்லே? சின்ன பசங்களை கோயிலுக்கு கூப்டா ‘போப்பா வேற வேலையில்லே’ அப்படின்னு ஃபோனை நோண்டிட்டே பதில் சொல்றான். இந்த ஆன்மீக சிஸ்டத்தோட அடிப்படையிலயே ஏதோ பிரச்சினை இருக்கு”
எம்மிடம் சலித்துக் கொண்ட மயிலை கபாலீஸ்வரர் கோயில் பக்தர் ஒரு பார்ப்பனர். ஓய்வு பெற்ற பேராசிரியர். முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான சமன்பாட்டை பராமரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தேவை என்று எம்மிடம் வாதிட்டவர் – அதே குரலில் மத உரிமைகள் தடுக்கப்படும் போது மதமாற்றம் நடக்கத்தானே செய்யும் என்றும் கூறுகிறார். பார்ப்பனர்களைப் பற்றி மிக கடுமையான வார்த்தைகளில் ‘அர்ச்சிக்கிறார்’.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஒரு பார்ப்பனர்
வினவு செய்தியாளர் குழுவினர் பொங்கலன்றும் அதற்கு மறுநாளும் சென்னையின் பிரசித்தி பெற்ற கோயில்களில் அர்ச்சகர் வழக்கு குறித்தும் ஆகம விதிகள் பற்றியும் எடுத்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் சில உண்மைகளை உணர்த்துகின்றன. கருத்துக்கணிப்பிற்காக வெகுமக்களின் கோயில்கள் என்கிற வகையில் வடபழனி முருகன் கோயிலையும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலையும் தெரிவு செய்திருந்தோம். பார்ப்பன – மேல்நிலை ஆதிக்க சாதியினர் புழங்கும் கோயில்கள் என்கிற அடிப்படையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலையும் தெரிவு செய்தோம்.
கருத்துக்கணிப்பை அலசுவதற்கு முன் முடிவுகளைப் பார்க்கலாம்:
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்.
இந்நான்கு கோவில்களில், வடபழனி, மயிலை மற்றும் திருவேற்காடு கோவிலில் சந்தித்த பக்தர்கள் தாராளமாக பேச முன்வந்தனர். பார்த்தசாரதி கோவிலைப் பொறுத்தவரையில் வெளிப் பிரகாரத்தில் ஓய்வாக அமர்ந்திருந்த பக்தர்கள் கூட பேசத் தயங்கினர், சிலரோ வெளிப்படையாக பதிலளிக்க முடியாது என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டனர். நான்கு கோவில்களைச் சுற்றிலும் உள்ள தரைக்கடை, வண்டிக்கடை வியாபாரிகள் மத்தியில் பார்ப்பனர்கள் மேல் கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற கோவில் வணிகர்.
“திருட்டுப் பசங்க சார். சீசன்னாக்க உள்ளேர்ந்து அவுனுங்களே மாலைய கொண்டாந்து குடுத்துடுவாங்க. ஒரே மாலை பூ உதிர்ர வரைக்கும் ஒரு நாலஞ்சி ரவுண்டு போயிட்டு வரும்” என்றார் திருவேற்காடு கோயிலின் வெளியே தேனீர் கடை நடத்தி வருபவர்.
“எல்லாத்துக்கும் காசு தாங்க. 100 ரூபா குடுத்த சாமி மாலை தருவாங்க. 500 ரூபா குடுத்தா பெரிய மாலைய கழட்டி குடுப்பாங்க. காசு குடுத்தா நீங்க என்ன சாதின்னெல்லாம் பார்க்காம கருவறைக்கு உள்ளே விடுவாங்க. விடறது என்ன… கூட்டிட்டு போயி சாமி மடிலயே ஒக்காத்தி வைச்சாலும் வைப்பாங்க. ஆகமம் பத்தியெல்லாம் தெரியாது… ஆனா நான் இதே ஊர்ல ஐம்பது வருசமா இருக்கேன்… எங்க அப்பா தாத்தா காலத்துல இங்கெ அய்யிருங்க பூசை செய்யலை.. பேமசு ஆன பின்னாடி தான் அய்யருங்க வந்தாங்க” என்கிறார் இன்னொரு வியாபாரி.
திருவேற்காடு கோவிலில் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது மற்றும் வயதான பெண்கள் நிறைய பேரைக் காண முடிந்தது. இவர்களிடம் பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு எதிர்மறையான பதிலே வந்தது.
“அய்யய்யோ.. பொட்டப் பசங்களையா உள்ளே விடனும்னு சொல்றீங்க.. அது பெரிய பாவம் தம்பி. கங்கைல குளிச்சாலும் அந்த பாவம் போகாதுப்பா…” என்று பதறினார் கருமாரியம்மன் கோவிலில் நாங்கள் சந்தித்த வீரம்மாள் என்கிற பெண்மணி. அதே கோவிலில் நாங்கள் சந்தித்த அவர் வயதை ஒத்த பலராலும் அந்தக் கேள்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 40 வயதுக்கு உட்பட்ட பெண் பக்தர்கள், “மாதவிடாய்க் காலம் முடிந்த பெண்களை அனுமதிக்கலாம்” என்று தெரிவித்தனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற இளம் பக்தர்கள்
அதே நேரம், பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது தொடர்பாக மயிலை கபாலி கோவிலில் சந்தித்த பக்தர்கள் (பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதவர்கள் உள்ளிட்டு) பெருவாரியாக ஆதரித்தனர். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்திருப்பதாக சலித்துக் கொள்வோர் நிறைய இருந்தனர். பால், சாதி வேறு பாடுகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பது இதற்கு மேலும் தேவையற்றது என்பதை கபாலீஸ்வரர் கோவிலில் சந்தித்த பார்ப்பனர்கள் சிலரே தெரிவித்தனர்.
”நல்லா புரோகிதம் செய்யக்கூடிய விவரம் தெரிஞ்ச வாத்தியார்களே இப்ப குறைஞ்சி போயிட்டாங்க. இப்ப புரோகிதம் செய்யறவங்களும் எல்லா முறைகளையும் தெரிஞ்சிட்டு வர்ரதில்லே. இதெல்லாம் இப்ப பாஷன் இல்ல சார். கோவில்ல அர்ச்சனை செய்யறவங்களுக்கெல்லாம் என்ன சம்பளம்னு நினைக்கிறீங்க? படிச்சிட்டு ஆன்சைட் போயி ஒரு நாள் சம்பாதிக்கிற காசை விட இவாளெல்லாம் ஒரு மாசம் பூரா வேர்வைல ஊறி சம்பாதிக்கிற காசு கம்மி தான் தெரியுமா?” கபாலி கோவிலில் சந்தித்த ஹரிஹரன் நீட்டிக் கொண்டே போனார். நாங்கள் இடைமறித்தோம்.
”சரி, அதான் வருமானம் இல்லைன்னு சொல்றீங்களே அப்ப வேற சாதிக்காரர்களும் இந்த வேலையை எடுத்துக்க முன்வந்தால் விடலாம் தானே?”
”வருமானம் இல்லைன்றதாலே தான் சொல்றேன். எதுக்கு நீங்கெல்லாம் இந்த சின்ன சம்பாத்தியத்துக்கு போட்டிக்கு வர்றேள்? நல்ல படிங்கோ.. பாரின் போங்கோ” ஹரிஹரனின் வயது எழுபதுக்கும் மேல்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஒரு ஏழைப் பெண்
70 வயதைக் கடந்த பார்ப்பனர்களின் குரல்கள் ஒரே தன்மையுடன் இருந்தது என்றால் நடுத்தர வயது மற்றும் இளைய வயதுடையோரின் குரல்களில் கொஞ்சம் ஜனநாயகம் ஏறியிருந்தது.
“பிரதர்! கோயிலைப் பத்தியெல்லாம் எழுதி என்ன சாதிக்கப் போறீங்க, அதுக்குப் பதிலா இங்க நடக்குறதப் பத்தி எழுதுங்க! அங்க நிக்கிறாங்க(அர்ச்சகர்கள்) பாத்தீங்களா ! இவங்க மோசடிக்கு ஒரு அளவே இல்ல! பாருங்க நம்ம கடவுள கும்புடுறதுக்கு தட்டுல உண்டியல் போடனும், அப்புறம் டோக்கன் வேற, இதுல ஸ்பெஷல் டோக்கன் வாங்குனா வரிசையில நிக்காம உடனே போயி பாத்துடலாமாம் …. காசு கொடுத்து வந்து பாருன்னு கடவுளா சொன்னான்?” இது ஐம்பதைக் கடந்த பார்ப்பனர் மகாதேவனின் கருத்து.
எம்மிடம் ஆர்வத்தோடு பேசிய அவரிடம், இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் தானே மத மாற்றங்கள் நடக்கின்றன என்று கேட்டோம். அதற்கு அவர்,
”விவேகானந்தரும் இங்கே சாதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம்னு சொல்லி இருக்கார். ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களை உள்ள வரக்கூடாதுன்னு தடுத்தா எப்படி கோயில்ல கும்பிட வருவார்கள்? மதம் மாறத்தான் செய்வார்கள். முதல்ல இந்து மதத்துல உள்ள எல்லாரும் சரிசமம்-னு சட்டம் கொண்டு வரனும்” என்றார்.
இந்தக் கோவில்களில் இருபதுகளில் உள்ள இளைஞர்களைப் பார்ப்பது அரிதாகவே இருந்தது அதிலும், பார்ப்பனரல்லாத சாதியைச் சேர்ந்த இளைஞர்களை தேடித் தான் பிடிக்க வேண்டியிருந்தது. வடபழனி கோவில் பின்புற பிரகாரத்தில் நான்கு இளைஞர்களைப் பிடித்தோம். பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள். ஆளுக்கொரு தொடுதிரை கைப்பேசியை வைத்துக் கொண்டு ஏதோ நோண்டிக் கொண்டிருந்தனர். வின்சென்ட் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள்.
இவர்கள் அர்ச்சகர் வழக்கு பற்றியோ, ஆகம விதிகள் பற்றியோ கேள்விப்பட்டிருக்கவில்லை. பிரச்சினை பற்றி நாம் விளக்கிய பின் கொந்தளித்து விட்டனர்.
“துட்டு வாங்கிட்டு தானே பூஜை செய்யறாங்க. அதான் யாரு வேணா செய்யலாமே” – அபிஷேக்
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற நடைபாதை வியாபாரம் செய்யும் பெண்மணி
“மச்சி அது நம்ப துட்டுடா.. நம்மளாண்ட பிச்சை எடுத்துனு நம்பளையே உள்ள விடமாட்டானா?” – கணேஷ்
“இவனுங்க கைல துட்டு குடுக்க கூடாதுடா..” – நந்தா
சமஸ்கிருதம் தேவபாஷை எனப்படுவதையும் தமிழ் நீச பாசை எனப்படுவதையும் பற்றிக் கேட்ட போது அவர்களின் எதிர்வினையில் மேலும் சூடு ஏறியது
மதம், அரசியல் குறித்த கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது என்றே பதிலளித்தனர் இளைஞர்கள். சிறுவர்கள் மட்டுமே பெற்றோருடன் வந்தனர்… இளைஞர்களை குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை. வெகு சிலர் மட்டும் தம் வயதை ஒத்தவர்களோடு கும்பலாக வந்திருந்தனர். அந்த வருகைக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்புமில்லை. ஏன் கோவிலுக்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு இப்பிரிவினர் சொன்ன பதில் “சும்மா டைம் பாசுக்கு”
நாற்பதுகளில் இருந்தவர்களுக்கு ஓரளவு வழக்கு பற்றியும் அதன் பின்னணி பற்றியும் பரிச்சயம் இருந்தது. பெரும்பாலும் குடும்பமாக வந்திருந்தனர். இவர்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மேலான விமர்சன்ங்களும் தூக்கலாக இருந்தன. குறிப்பாக கோவிலில் தம்மை பார்ப்பனர்கள் மதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
”நம்ம காசுல தான் கோயிலே நடக்குது. இதுல, நம்ம கிட்ட அவனுங்க கடு கடுன்னு மூஞ்சிய காட்றதும், ஒருமைல வா போ-ன்னு விரட்றதும்.. இதே காசு குடுங்க, தூக்கி வச்சி கொண்டாடுவானுங்க. நான் காசு குடுக்கிற பழக்கமில்ல. நம்ம சாமிய பார்க்க எதுக்கு காசு குடுக்கனும்? வெளியில நம்மை பார்த்தா மனுசனா மதிக்கிறான். சில சமயம் இந்த அவமானத்துக்கு பேசாம கோயிலுக்கே வராம விட்றலாம்னு தோணும். ஆனா, ஒரு விசேசம்னா வீட்ல எல்லாரும் குடும்பமா செலவில்லாமே வந்து போறதுக்கு இதானே இருக்கு?”
கருப்பு சட்டைகளையெல்லாம் அய்யப்ப பக்தர்களாக்கி விட்டோம் – சிவப்புச் சட்டைகளையெல்லாம் செவ்வாடை பக்தர்களாக்கி விட்டோம் என்று காலர் தூக்கி விட்டுத் திரியும் இந்துத்துவ கும்பல் சமீபத்தில் அதிகரித்திருக்கும் ’பக்தியின்’ தன்மை யாதென்று ஆய்வு செய்து பார்த்தார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலான பக்தர்களுக்கு ’பக்தி’ ஒரு அனிச்சையான பழக்கமாகத் தான் இருக்கிறதே ஒழிய உணர்வுப் பூர்வமான பங்கேற்பு இல்லை. கருவறையில் நிலவும் பார்ப்பனர் ஆதிக்கம் பக்தர்களின் ஒப்புதலோடு நிலவவில்லை என்பதை கருத்துக் கணிப்பின் முடிவுகள் உணர்த்தியது என்றால், காவி கும்பலின் பெருமை பீற்றலின் தராதரம் என்பதை பக்தர்களின் கருத்துக்கள் உணர்த்தியது.
அதே நேரம் பார்ப்பனமயாக்கலின் செல்வாக்கில் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது அதற்கு ஒரு சான்று! அதே நேரம் இந்து மதத்தில் மரபு ரீதியாக இருக்கும் அடிமைத்தனங்களை மக்கள் உரிய பொருளில் புரிந்திருக்கவில்லை. பல விசயங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. அதே நேரம் எல்லாரும் அர்ச்சகராவதில் என்ன பிரச்சினை என்று எளிமையாக கேட்கவும் செய்கிறார்கள். பார்ப்பன இந்துமதத்தின் அநீதிகளை உரிய முறையில் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது உச்சநீதிமன்றமோ இல்லை சங்கபரிவாரங்களோ மக்களின் கோபத்திற்கு பதில் சொல்ல முடியாது என்பது மட்டும் உண்மை.
இந்தக் கருத்துக் கணிப்பு நான்கு கோவில்களிலும் சுமார் 200 நபர்களிடம் எடுக்கப்பட்டது. சாதி, வர்க்கம், பால் ரீதியான பிரிவினைகளில் அனைத்தும் 50 : 50 என்று இருக்குமாறு தெரிவு செய்யப்பட்டது. குடியிருப்புகள், ஏனைய பொது இடங்களை விட கோவில்களே பொருத்தமாக இருக்குமென்று முடிவு செய்யப்பட்டது. இறுதியாக இந்துமுன்னணி சொல்வது போல இங்கே பக்தியும், ஆன்மீகமும் செழித்து வளர்ந்துவிட்டதாக சொல்வது கடைந்தெடுத்த பொய். மக்களுக்கு கோவிலும், வழிபாடும் ஏதோ தவிர்க்க முடியாத ஒரு சடங்கு, வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு இப்படியும் ஒரு சுமாரான தீர்வு உண்டு என்பதைத் தாண்டி பெரிய பிடிப்பு இல்லை.
குஜராத் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி பிரதமராவதற்கு முன்பாக, 2014 மே 26-ம் தேதி, ஒரு கோவா இளைஞர் ‘மோடி பிரதமராக பதவியேற்றால் ஹோலகாஸ்ட் போன்ற பாசிசத்தை கட்டவிழ்த்துவிடுவார்’ என பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்காகவே அந்த இளைஞர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 153A, 295A, கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஐ-ன் கீழும், 66A தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
அந்த இளைஞர் சொன்னது போலவே மோடி கும்பல் ஹோலோகாஸ்ட் போன்ற தாக்குதல்களை கல்வி நிலையங்களில் இந்து தேசியத்தின் பெயரில் கட்டவிழ்த்து வருகிறது.
‘இந்தியத்தாயை புண்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று ஸ்மிருதி இராணியும், ‘தேஷமே முதன்மையானது’ என்று நடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் யோக்கியதையை கீழ்க்கண்ட இருசம்பவங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
மார்க் ஆண்ட்ரீசன்
சம்பவம்-1: மிகச் சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் (TRAI), பேஸ்புக்கின் Free Basics திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது எனக் கூறி தடை செய்தது. இந்த தடைக்குப் பின்னால் இந்திய அறிவுத்துறையினர் காத்திரமான கேள்வி ஒன்றை எழுப்பி போராட்டத்தைக் கட்டியிருந்தனர். அமெரிக்காவின் பேஸ்புக் ‘இணையத்தை காலனியாக்குகிறது’ என்று ஏகாதிபத்திய அரசியலை பேசினார்கள். ஆனால் இணையம் மட்டுமல்ல, இந்தியாவே அப்படித்தான் காலனியாகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
என்னதான் சுதந்திர நாடு என்று சுழன்று ஆடினாலும் ராயல் விக்டோரியன் வகையறாக்கள்தான் இந்திய நாட்டின் இறையாண்மை மீது நொடிக்கொரு தரம் எச்சில் துப்புவர்கள் ஆயிற்றே! பேஸ்புக் போர்டு உறுப்பினர் மற்றும் சிலிக்கான் வேலியிலேயே நம்பர் ஒன் முதலாளி மார்க் ஆண்டிரீசன் “காலனியாதிக்கத்தை எதிர்ப்பது இந்திய மக்களின் பொருளாதாரத்தை பல பத்தாண்டுகளாக பேரழிவிற்கு உள்ளாக்கி வருகிறது. இப்பொழுது ஏன் எதிர்க்க வேண்டும்?” என்று திமிராக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
மார்க் ஆண்ட்ரீசனின் டுவீட் – “பல பத்தாண்டுகளாக காலனிய எதிர்ப்பு இந்தி மக்களுக்கு பொருளாதார ரீதியாக பேரழிவாக இருந்திருக்கிறது.”
இந்தியா எனும் அடிமைக்கு எதற்காக திடீரென்று இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவேண்டும் என்று ஆண்டீரிசன் கேட்டிருக்கும் பொழுது பாரத் மாதா ஹி ஜெய், வந்தே மாதரம் இன்னபிற கோசம் போடும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் காவிக்கூட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? தேசபக்தி கொஞ்சமாவது இவர்களது இரத்தத்தில் இருந்தால் 56 இஞ்சு மார்பு அவமானத்தில் வெடித்திருக்க வேண்டும் இல்லையா? நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்மிருதி இரானி, பாரதத் தாயிக்காக இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும் இல்லையா? கோவா இளைஞர் பேஸ்புக் பதிவிட்டதற்காக சிறையில் தள்ளும் மோடி கும்பல் இந்தியா அடிமை நாடு என்று டிவிட்டரில் பதிவிடும் ஆண்டிரீசனை ஆளனுப்பி கைது செய்திருக்க வேண்டுமா கூடாதா?
மேற்கண்ட எதுவும் நடக்காது போது டி.ராஜா மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஊளையிட்ட ஹெச்.ராஜா குசு அளவுக்கு கூட அமெரிக்காவை ஏன் எதிர்க்க வில்லை என்று கேட்பது அநியாயம்.
தெருவில் குலைக்கிற நாய்களுக்கு தன் எல்லை எதுவரை என்று தெளிவாக தெரியும். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் சங்கப் பரிவாரத்தின் தேசபக்தி எல்லையும் இத்தகையது தான்.
ஆனால் இந்த எல்லையை உடைத்துதான் அன்றைய இந்தியாவில் ராஜன் லாகிரி, ரோசன் சிங், ராம்பிரசாத் பிஸ்மில், பகத் சிங், அஷ்பகுல்லா கான், ராஜகுரு போன்ற புரட்சியாளர்கள் உயிரை துச்சமென மதித்து தூக்குக் கயிறை நாட்டின் விடுதலைக்காக முத்தமிட்டனர். மறுபுறத்தில் சாவர்க்கர் கூட்டமோ வெள்ளைக்காரனிடம் மண்டியிட்டு இந்து தேசியம் தான் இந்திய தேசியம் என்று பேசிக்கொண்டிருந்தது. இன்றைக்கு இதே காவிக்கும்பல் அமெரிக்க பேஸ்புக் முதலாளி ‘இந்தியா வெள்ளைக்காரனின் அடிமை நாடு’ என்று சொல்லும் பொழுது மண்டியிடுகிறது. மறுபுறத்தில் தேசத்துரோகம் என்று சொந்த நாட்டு மக்களின் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது.
சம்பவம்-2
ஸ்மிருதி இரானி
மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை மாணவர்கள் முனைப்பாக அம்பலப்படுத்தி வருவதால் தான் சென்னை ஐ.ஐ.டி, ஹைதாராபத் பல்கலைக்கழகம், புனே திரைப்படக் கல்லூரி, ஜே.என்.யூ போன்ற கல்விநிலையங்களை தேசத் துரோகிகளின் கூடாரம் என்று பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு தாக்கி வருகிறது. குறிப்பாக கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மாணவர்களின் கல்வி உதவித் தொகையை இரத்து செய்திருக்கிறது; பல்கலைக்கழக கல்லூரிகளின் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது; ஆய்விற்காக வழங்கப்படும் மானியத்தை நிறுத்தியிருக்கிறது; இதில் காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான ஆராய்ச்சி நிதிகளும் அடங்கும். சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் -ன் விஞ்ஞான் பாரதி முன்னின்று நடத்திக் கொடுத்திருக்கிறது.
தோகா மாநாட்டில் மோடி கும்பல் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரே கல்வித்துறை சீர்திருத்தம் எனும் பெயரில் ஸ்மிருதி இராணியின் கூட்டம் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்து வைத்திருந்தது. பி.ஜே.பி அரசின் இந்த தேசதுரோக நடவடிக்கைகளை மாணவர்கள் பல போராட்டங்களில் வீச்சாக அம்பலப்படுத்தியிருந்தனர். ஜே.என்.யு மாணவர் கண்ணையா குமார் தனது உரையில் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பில் உள்ளவர்களே பாதிக்கப்பட்டார்களா இல்லையா என்பதை மக்கள் முன் பதில் சொல்ல வேண்டும் என்று அவாளது நெஞ்சுக்குலையின் மீது குத்துவிட்டார். இதற்காகத்தான் ஜே.என்.யு மீது கொடூரத்தாக்குதல் நடைபெற்றது என்பது எவர் ஒருவருக்கும் தெரியும். இதில் உதவித்தொகை, ஆராய்ச்சி நல்கை, மானியத்தை இரத்து செய்தல் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் வரை கச்சிதமாக செய்து முடித்த சமார்த்தியசாலி ஸ்மிருதி இராணி 20-02-2015 அன்று புனே இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றும் பொழுது நல்ல ஆராய்ச்சியை குறைவான நிதியிலேயே வழங்க முடியும் என்று வக்கிரமாக பேசினார்.
காசநோய்க்கு செலவு குறைவாகவும், அந்தக் கால பாரதத்தில் விமானம் இருந்தது போன்ற உயரிய ஆய்வுகளுக்கு செலவு அதிகமாகவும் ஆய்வு செய்வதையே ஸ்மிருதி ராணி குறிப்பிடுகிறார். என்ன ஒரு பாசிசத் திமிர்!
3. ஜே.என்.யு மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிசத்துக்குப் பதிலடி!
சென்னையில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்துக்குத் தடை, ரோகித் வெமுலா தற்கொலை ஆகியவற்றைத் தொடர்ந்து ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகிகளாகச் சித்தரிக்க முயலும் மோடி அரசு, கடும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. அதன் பார்ப்பன தேசியக் கருத்தாக்கம் அம்பலமாகிப் பல்லிளிக்கிறது.
4. “லவ் ஜிகாத்” திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஆர்.எஸ்.எஸ்
முசுலீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை மதம் மாற்றுவதற்காக அவர்களை மயக்கி மணம் செய்து கொள்கிறார்கள் என்று நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் பிரச்சாரம் பொய்யானது என்பதை அந்தப் பொய்யர்களின் வாயிலிருந்தே வரவழைத்து அந்த வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றன குலைல், கோப்ரா போஸ்ட் இணைய இதழ்கள்
5. காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!
6. “மூடு டாஸ்மாக்கை” மக்கள் அதிகாரத்தின் மாநாடு
“மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கம் தமிழ் சமூகத்தின் உள்ளக்கிடக்கை என்பதை பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்பு நிரூபித்துக் காட்டியது.
7. அம்மாவின் வந்தனோபசாரா கடைசி ஆட்டம்!
கடந்த ஐந்தாண்டுகளில் முட்டை தொடங்கி மின்சாரம் வரையிலான ஊழல்களின் மொத்தக் கணக்கையும் கூட்டினால், தமிழக அரசின் கடன் சுமை 2,47,031 கோடியாக அதிகரித்திருப்பதன் காரணம் தெரிய வரும்.
8. வாழவைக்கும் ஊழலுக்கு ஜே! – ஜெயலலிதா புதிய அரசாணை
அரசிடம் அனுமதி வாங்காமல், இலஞ்சம் வாங்கிய டவாலி மீது கூட வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று அரசாணை போட்டு, ஊழல் பேர்வழிகளின் குலசாமி ஆகியிருக்கிறார் அம்மா.
9. கெயில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி! விவசாயிகளின் நிலத்துக்கு அநீதி!!
ராமர் பாலத்தைக் காப்பாற்ற சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தச் சொல்லும் உச்சநீதி மன்றம், எரிவாயுக் குழாய்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்லக் கோரினால் சீறுகிறது.
“ஜே.என்.யு வை ஆக்கிரமிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் வடிவமாய் வள்ளுவர் கோட்டம் பதாகைகளாலும், மாணவர்கள், தோழர்களாலும், செங்கொடிகளாலும் நிரம்பியிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கென்றே சென்னை, விழுப்புரம், கடலூர், விருதை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தின் இறுதிவரை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இருந்தது போலீசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
பு.மா.இ.மு 50 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தாலே நூற்றுக்கணக்கில் போலீசு குவிந்துவிடும். ஆனால் இங்கு கிட்டதட்ட ஆயிரத்தை நெருங்கும் மாணவர்கள் கூட்டம் திரண்டதை கண்டு கண்ணீர் புகை குண்டுவீச்சு ‘வஜ்ரா’ வாகனங்கள் இரண்டுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்து சேர்ந்தனர் போலீசார்.
பு.மா.இ.மு சென்னை கிளைச் செயலாளர் தோழர் ராஜாதோழர் வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
பு.மா.இ.மு சென்னை கிளைச் செயலாளர் தோழர் ராஜாவின் தலைமையில் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் எது தேசம்? என்ற தலைப்புடன் உரையைத் துவங்கினார் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியை சார்ந்த தோழர் வாலாசா வல்லவன். இந்தியா ஒரு தேசிய இனங்களின் சிறைக்கூடமே! இதை எதிர்த்து அன்றே பெரியார் முழங்கினார் என இந்து தேசியத்தினை திரைகிழித்து உரை நிகழ்த்தினார்.
பேராசியர் சாந்தி, சென்னை
அவரைத்தொடர்ந்து பேசிய ஆவடி வேல்டெக் முன்னாள் பேராசிரியர் சாந்தி எது தேசத்துரோகம்? என்ற தலைப்பில் கேள்விகளை எழுப்பினார். மாணவர்களை தேசவிரோதிகள் என்றும், துர்கையை இழிவுப்படுத்திவிட்டனர் என அவதூறுகளை அள்ளிவீசும் ஸ்மிரிதி இரானி எனும் முன்னாள் டிவி சீரியல் நடிகையிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும் மாணவர்கள் சமூக, அரசியல் விசயங்களிலும் அக்கறை செலுத்தவேண்டுமென பேசியமர்ந்தார்.
திரு.சின்னப்ப ராஜன், ஊடகவியலாளர், ஜே.என்.யு முன்னாள் மாணவர்
அதன் பின்னர் ஜெ.என்.யூ முன்னாள் மாணவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளருமான சின்னப்பராஜ், ஜெ.என்.யூ கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் நிர்வாக முறைகளையும் விரிவாக விளக்கினார். காலை முதல் இரவு வரை அரசியல் விவாதங்கள் நடைபெறும். தனி ஒரு நபராக இருந்தால் கூட தன்னுடைய கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. அப்பல்கலைக்கழகம் யாரையும் புறக்கணித்தது கிடையாது. மாற்றுக் கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் ஜனநாயக உரிமைக்காக எல்லோரும் சேர்ந்து போராடுவோம் என்றார். அதே போல் போராடினால், போலிசு கைது செய்து வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைக்காது என்பது ஒரு பொய் என தன் அனுபவத்திலிருந்து கூறினார். ஜெ.என்.யூவில் போராடி போலிசால் வழக்கு பதியப்பட்ட அவரது நண்பர்கள் மத்திய தேர்வாணைய தேர்வுகளில் வென்று சிவில் சர்வீஸ் பணிகளை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் போராடத் தயங்க வேண்டாமென நம்பிக்கையூட்டினார்.
பின்னர், ஜெ.என்.யூ மாணவர் பிரதிநிதி, புதிய பொருள்முதல்வாதிகள் (The New Materialists) அமைப்பை சார்ந்த தோழர் ஆனந்த் முதலில் முழக்கங்களை எழுப்பி விட்டு பேச்சினை துவங்கினார். இந்திராகாந்தி துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் – நெருக்கடி நிலையை அறிவித்து பாசிசத்தை அமல்படுத்திய காலத்தில் பல்கலைகழகத்திற்குள் அவரை நுழையவிடாமல் துணைவேந்தர் பதவியை விட்டு விலகுமாறு போராட்டம் நடத்திய பாரம்பரியமிக்கவர்கள் ஜெ.என்.யூ மாணவர்கள் என கூறினார். அத்தகைய சமரசமற்ற போராட்டக் குணமும், மாற்றுக் கருத்திற்கான ஜனநாயகத் தன்மையையும் நசுக்கும் முயற்சியிலே இந்த அரசு ஈடுபட்டுள்ளதை அம்பலப்படுத்தினார்.
தோழர்.ஆனந்த்,ஜே.என்.யு மாணவர், டெல்லி.
மேலும் சம்பவம் நடந்த அன்று மாவோயிச ஆதரவு மாணவர்கள் சிலரே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதை எதிர்த்து ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பை சார்ந்த சவுரவ் சர்மா துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பி, கூட்டத்தை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் சவுரவ் சர்மா தன் சொந்த அனுமதியில் ஜீ செய்திகள் மற்றும் ஆஜ் தக் செய்தி நிருபர்களை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே – பிரச்சனை ஏற்படும் என்பதை முன்னறிந்து அழைத்து வந்து வீடியோ எடுக்க வைத்து செய்தி பரப்பியுள்ளார். எப்படி இவர்களுக்கு தேசவிரோத முழக்கங்கள் எழுப்புவது முன்கூட்டியே தெரியும்? இந்த கூட்டத்தை கலவரமாக மாற்ற ஏ.பி.வி.பி-யினர் துவக்கத்திலிருந்தே முயற்சித்தனர் என தெரிவித்தார். மேலும் தேசவிரோத முழக்கங்கள் ஏதும் அங்கு எழுப்பப்படவில்லை என்பதே உண்மை. அதேபோல் மாணவர் தலைவர் கண்ணையா குமார் விடுதலை மட்டும் இந்த போராட்டத்தின் இலக்கு அல்ல. ஒட்டுமொத்த பார்ப்பனிய பாசிசத்தையும் ஒழித்துக்கட்டுவதே இதன் இலக்கு என பேசி முடித்தார்.
பேராசிரியர் சிவக்குமார், கல்லூரி முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி.
அடுத்து குடியாத்தம் அரசுக் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துத்துவம் என்ற வார்த்தைக்கு பதிலாக தேசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார். மேலும் இதுபோல் பிரச்சனைகளை கிளப்பிவிட்டு இப்போது மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியது ஒரு வகையில் சரியானதே! ஏனெனில் புதிய கல்விக்கொள்கை, கல்வியில் காட்ஸ் ஒப்பந்தம் போன்றவற்றுக்கெதிராக மாணவர்கள் இனி போராடத் துவங்கிவிடுவர். எனவே மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக போராட வேண்டும். அந்த காலத்திலே இருந்தாற்போல ஒவ்வொரு கல்லூரியிலும் அரசியல் விவாதங்களை நடத்தவேண்டுமென அறைகூவல் விடுத்தார்.
பின்னர் பேசிய ஐதராபாத் பல்கலைகழக மாணவரும் ரோகித் வெமுலா தற்கொலைக்கான போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவின் உறுப்பினருமான வெங்கட்ராவ், ரோகித் வெமுலா தற்கொலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ‘மனு’ ஸ்மிரிதி இரானி, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, கல்லூரி முதல்வர் ஆகியோரின் கூட்டுச்சதியே என்பதனை தக்க ஆதாரங்களுடன் எடுத்து வைத்து பேசி அம்பலப்படுத்தினார். உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர் பார்ப்பனியத்தை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம் என்ற அறைகூவலுடன் உரையை முடித்தார்.
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு
அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ பேசுகையில், இது அறிவியலுக்கும் அறிவற்ற அடிமுட்டாளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் என குறிப்பிட்டார். மேலும் மாங்காய் திருட செல்லும் குரங்கு, கூட்டமாக சென்று மாங்காய் திருடும்போது செய்யும் அட்டகாசத்தால் தோட்டக்காரன் விழிப்படைந்து அதை அடித்து விரட்டிவிடுவான். உடனே அடுத்த தோட்டத்திற்கு இந்த குரங்கு செல்லும். அங்கும் தோட்டக்காரனால் அடித்து விரட்டப்படும். பின்னர் அனைவரும் இந்த குரங்கை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக அடித்து துரத்துவர். அதுபோல் சென்னை ஐ.ஐ.டி-யில் வாலாட்டிய பார்ப்பனிய குரங்கு, இங்கு அடித்து விரட்டப்பட்டு ஐதராபாத் சென்றது. அங்கும் விரட்டப்பட்டு இப்போது டெல்லி சென்றுள்ளது. இனி ஒட்டு மொத்தமாக அனைவரும் சேர்ந்து அதனை விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது என் தெரிவித்தார். மேலும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் எப்படி நாட்டாமைகள் போல் நடந்து கொள்கின்றனர் என்பதை விளக்கினார். அதேபோல் தோற்றுப்போய் விட்ட இந்த அரசுக் கட்டமைப்பிற்கு பதிலாக மாற்றுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.
அடுத்துப் பேசிய சட்டக்கல்லூரி மாணவி தோழர் கனிமொழி, ஜெ.என்.யூ மாணவர்கள் மீது குத்தப்பட்டிருக்கும் தேசத்துரோகி முத்திரை இனி அடுத்தடுத்து நம் மீதும் குத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே, இன்றே பார்ப்பனியத்தை முறியடிக்க மாணவர்கள் நாம் அனைவரும் களமிறங்கி போராடவேண்டுமென சுருக்கமாக தன் உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்ததாக ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதைய்யன் பேசுகையில், ஜெ.என்.யூ மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு பிணை வழங்கிய நீதிபதி தன் தீர்ப்பில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரை போலவே தீர்ப்பு சொல்லியிருப்பதை அம்பலப்படுத்தினார். ஜெ.என்.யூ வை ஒரு கிருமி தாக்கியிருப்பதாகவும் அது பரவுவதற்குள் அதற்கு நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படவேண்டுமெனவும், அதைத் தாண்டி போனால் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். முழுக்க பொய்களாலும், மோசடியாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கில் நிபந்தனை பிணை வழங்கும்போதே குற்றத்தை உறுதிப்படுத்திவிட்டார் அந்த நீதிபதி என்றார்.
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
மேலும் சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்து போன ராணுவ வீரர்களின் உடலை கொண்டுவந்து வைத்து இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? என ஜெ.என்.யூ மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அவர்களை அங்கு அனுப்பியவர்களைத்தானே கேள்வி எழுப்ப வேண்டும். 1947-க்கு பிறகே காஷ்மீர், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்கள் வலுக் கட்டாயமாக இணைக்கப்பட்டன. இன்றும் அதனை ‘தேசபக்தி’ என்ற பெயரில் ராணுவத்தைக் கொண்டு இருத்தி வைப்பதற்காக இது போன்று சியாச்சின் பகுதிகளில் ராணுவ வீரர்களை பலிகொடுக்கிறது இந்த அரசு. உண்மையில் இப்படி போலி தேசியவெறி கிளப்பிவிடப்பட்டுத்தானே ஈழத்தில் சிங்களவர்கள் இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுக் குவித்தனர். அதேபோல்தான் இங்கும் தேசவெறி என்ற பெயரில் இந்துவெறி ஊட்டப்பட்டு முசுலீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்படுகின்றனர். அதே தேசவெறிக்குத்தான் அப்சல் குரு பலியிடப்பட்டார். அதே தேசவெறி – இந்துவெறி ஊட்டப்பட்டுத்தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தி பரப்பப்பட்டு ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார்.
உணமையில் எது தேசவிரோதம்? இராமநாதபுரத்தில் பாதியை அதானிக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். தேயிலைத்தோட்டங்களை டாடாவுக்கு இன்னும் பல்வேறு கனிம வளம் நிறைந்த பகுதிகளை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதே இதுதான் தேசத்துரோகம் என பேசினார்.
தோழர் அரவிந்த், சென்னை தியாகராயக் கல்லூரி
அவருக்கடுத்து அனைத்துக் கல்லூரி மாணவர்களின் தலைவர் தோழர் அரவிந்தன் பேசுகையில் செய்முறைத் தேர்வுகளையும் தாண்டி சென்னைக் கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும் அடுப்பில் வாய் வைத்த பூனை கதையாக ஆர்.எஸ்.எஸ் இப்போது உள்ளது. ஒரு பூனை சமையலறையில் நுழைந்து பால், வெண்ணெய் என இருக்கும் அனைத்திலும் வாய் வைத்து ருசிகண்டு கொழுத்துப் போய் அடுப்பில் வாய் வைத்து வாயை பொசுக்கிக் கொண்டது. அதுபோல இப்போது ஆர்.எஸ்.எஸ்., மாணவர்களிடம் பிரச்சனை செய்கிறது. இது நெருப்பு என்பதை அறியாமல் வாயை வைத்துவிட்டது. அது பொசுங்காமல் திரும்பாது என பேசிமுடித்தார்.
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புமாஇமு, தமிழ்நாடு.
இறுதியாக உரை நிகழ்த்திய பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் ஏ.பி.வி.பி அமைப்பை பற்றி எச்சரிக்கை விடுத்தார். நானும் மாணவர் அமைப்பே, நானும் உன்னுடன் படிப்பவனே என சொல்லிக் கொண்டு கல்லூரிக்குள் நுழைவான், கவனமாக இருந்து அவனை அடித்து விரட்ட வேண்டுமென எச்சரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சிகளின் இடையிடையே ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. டாஸ்மாக்கிற்கெதிராக பாடல் பாடி ‘தேசத்துரோக’ வழக்கில் கைதாகி சிறை சென்ற தோழர் கோவன் கலந்து கொண்டு ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டப் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் தொழிலாளர் பிரச்சனை பெண்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, மாணவர் பிரச்சனை என அனைத்திற்காகவும் போராடும் “ஜெ.என்.யூ பேரைத் தெரியுமா? அங்கு மாணவர் போராட்டம் தெரியுமா?” என்ற பாடலைப் பாடினார். மேலும் மாணவர் தலைவர் தோழர் கண்ணையா குமாரின் புகழ்பெற்ற ‘ஆசாதி’ உரையை கண்டு அஞ்சி நடுங்கும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்களை கண்டு கேள்வி எழுப்பும் விதமாக “ஆசாதி சொல் மீது உனக்கேன் வெறுப்பு?” என உணர்ச்சிப் பூர்வமாக பாடினார். மேலும் பார்ப்பனியத்தை திரை கிழிக்கும் வகையில் ‘நாமக்கட்டி ஆளப்போகுது’ போன்ற பாடல்களை பாடி மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வும், போராட்ட உணர்வையும் ஊட்டினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதி நிகழ்வாக ஆர்ப்பாட்ட முழக்கங்களை ஆரவரமாக எழுப்பி முடித்தனர்.
காஷ்மீர் முதல் குமரி வரை
ஆர்.எஸ்.எஸ் க்கு கல்லறை
வேண்டாம் வேண்டாம் ABVP
வேண்டும் வேண்டும் RSYF
வேண்டாம் வேண்டாம் மதவெறி
வேண்டும் வேண்டும் மதச்சார்பின்மை
சாதி மதக் கலவரம் தூண்டி
நாட்டைக் கூறு போடுகின்ற
ஆர்.எஸ்.எஸ் வெறியர்களை
நாட்டிலிருந்தே விரட்டியடிப்போம்!
இந்து இந்தி இந்தியா
என்பது உங்கள் இந்தியா
இந்துத்துவ இந்தியா
காஷ்மிரிக்கும் தமிழனுக்கும்
நாட்டின் எல்லா இனத்துக்கும்
சமத்துவம் எங்கள் இந்தியா
சாதி இல்லா இந்தியா
மதவெறி இல்லா இந்தியா
சமத்துவம் எங்கள் இந்தியா
இது தேசிய இனங்கள் சிறைக்கூடம்
ஒடுக்கப்பட்டோர் வதைக்கூடம்!
எது தேசம்? எது துரோகம்?
அதானி டாடா பிர்லாவுக்கும்
அமெரிக்காவுக்கும் அம்பானிக்கும்
நாட்டை விற்பவன் துரோகியா
அதை தடுத்து நிறுத்தப் போராடும்
மாணவனெல்லாம் துரோகியா
இந்தி திணிப்பை எதிர்க்கின்ற
தமிழன் எல்லாம் தேசத்துரோகி
ஈழம், காஷ்மீர், மணிப்பூர் மக்களை
ஆதரித்தால் தேசத்துரோகி
சாதி வெறியைக்கு பலியான
வெமுலாவும் தேசத்துரோகி
சாராயத்தை ஒழிக்கச் சொன்ன
கோவன் கூட தேசத்துரோகி
தேசத்துரோகிகள் ஒன்றுபடுவோம்!
இந்து வெறியர்கள் பிடியிலிருந்து
இந்தியாவை விடுவிப்போம்!
பேராசிரியர் அனில்சடகோபால் நாடறிந்த கல்வியாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர். வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இவர், டெல்லி பல்கலைக்கழக கல்வித்துறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது அனைத்திந்திய கல்வி உரிமைக்கான அமைப்பின் (AIFRTE) தலைமைக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
1982-இல் இவர் மத்தியப் பிரதேசத்தில் ”ஏகலவ்யா” என்ற அமைப்பைத் தொடங்கி அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அறிவியலைக் கற்பதில், பரிசோதனை மற்றும் சிந்தித்துக் கேள்வி கேட்கும் முறைகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் உட்புகுத்தினார். மத்தியப் பிரதேச மாநில அரசு இம்முறைமையை 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
கல்வித்துறையில் மட்டுமல்லாது, மனித உரிமை மற்றும் குடியுரிமை சார்ந்த இயக்கங்ககளிலும் களப்பணியாற்றி வரும் அனில் சடகோபால், போபால் விசவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுத் தருவதிலும், அவர்களுக்கு முறையான, உயரிய சிகிச்சை கிடைக்கவும் இன்றுவரை தொடர்ச்சியாகப் போராடி வருகிறார். மேலும், கல்வி தனியார்மயமாவதையும் காவிமயமாவதையும் எதிர்த்துத் தொடர்ந்து பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கிவரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 30.11.15 அன்று அக்கல்வி வளாகத்தில் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற அனில் சடகோபால், “உலக வர்த்தகக் கழகமும் காட்ஸும் நிர்பந்தமாகக் கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை-2015, நாட்டை மறுகாலனியாக்கும் வட்டத்தை நிறைவு செய்கிறது” (Recolonization of India: Circle is closing faster through New Education Policy dictated by WTO & GATS) என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது ஆங்கில உரை மொழிபெயர்க்கப்பட்டு, அதன் முதல் பகுதி புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக வெளியிடப்படுகிறது.
– ஆசிரியர் குழு
* * *
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும். அதனைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், முதலில் நாம் சட்டங்கள், கொள்கைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, ஏன் உருவாக்கப்படுகின்றன, யாருடைய நலனுக்காக உருவாக்கப்படுகின்றன என்பது குறித்துப் பார்க்க வேண்டும். அரசின் கொள்கைகள் எல்லாம், அவை எதைப் பற்றியதாக இருந்தாலும் மிக நல்ல கொள்கைகள் என்றும்; ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் தவறு இருப்பதாகவும் நம்மிடையே ஒரு தவறான கருத்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அரசின் கொள்கை முடிவுகளை அரசியல்ரீதியில் ஆராய்வதில் இருந்து நம்மைத் திசை திருப்பி, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். கொள்கைகள் என்ன சொல்கின்றன என்பதைக் கூர்ந்து கவனிக்கும் போதுதான், அதற்குப் பின்னால் உள்ள அரசின் உண்மையான நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பேராசிரியர் அனில் சடகோபால்
1980 முதல் நான் பல்வேறு அரசு கமிசன்களிலும், கமிட்டிகளிலும் பங்கு வகித்துள்ளேன். அவற்றில் நான் பெற்ற அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்டது என்னவென்றால், அரசின் அனைத்துக் கொள்கை முடிவுகளும், சட்டங்களும், மக்கள் விரோதக் கண்ணோட்டத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பதுதான். பல மக்கள் விரோதச் சட்டங்கள், மிகத் திறமையான முறையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை நான் பார்த்துள்ளேன். அவை எதனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டனவோ, அவை அச்சுப் பிசகாமல் அப்படியே நிறைவேற்றப்பட்டுள்ளன.
1985-86 ஆம் ஆண்டுகளில் நவீன தாராளவாதக் கொள்கைகளை இந்தியாவில் புகுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றபோது, அதற்கு ஏற்ற வகையில் தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையானது உருவாக்கப்பட்டது. அப்போது நவீன தாராளவாதக் கொள்கைகளை வடிவமைத்தவரான மன்மோகன் சிங், பிரதமர் அலுவலகத்தின் நிதி ஆலோசகராக, உலக வங்கியால் நியமிக்கப்பட்டிருந்தார். இதே காலகட்டத்தில்தான் கல்வித் துறையானது, மனிதவள மேம்பாட்டுத் துறை எனப் பெயர் மாற்றப்பட்டது. இவ்வாறு பெயர் மாற்றம் செய்வது என்பது வெறுமனே ஒரு துறையின் பெயரை மாற்றி வைக்கிறார்கள் என்பதல்ல; அந்தத் துறை சம்பந்தமான அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையே இந்தப் பெயர் மாற்றம் காட்டியது.
1986 கல்விக் கொள்கை மூலம் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்து மட்டத்திலும் நவீன தாராளவாத கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. முறைசார்ந்த பள்ளிக் கல்விக்குப் பதிலாக முறை சாராக் கல்வி என்ற பெயரில் பகலில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மற்ற குழந்தைகளுக்கும் மாலை நேரத்தில் தினமும் இரண்டு மணி நேரம் மட்டும் படிக்க வசதி ஏற்படுத்தித் தரும் திட்டத்தைச் செயல்படுத்தியது, அரசு. இந்த முறையில் ஆசிரியர் இருக்க மாட்டார்; அதற்குப் பதிலாக மிகமிகக் குறைந்த சம்பளம் வாங்கும், எவ்விதக் கல்வித் தகுதியும் தேவைப்படாத ‘பயிற்சியாளர்’ என்பவர் மாணவர்களுக்குப் ‘பயிற்சி’ அளிப்பார். வீட்டு வேலை செய்யும் பெண் குழந்தைகள் மதிய வேலையில்தான் ஓய்வாக இருப்பார்கள் என்பதால், பெண்களுக்கான கல்வி நிலையங்கள் மதியம் இரண்டு மணி நேரம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நவீன தாராளவாதத்துக்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகக் குழந்தைத் தொழிலாளர் முறையுடன் மைய அரசு சமரசம் செய்து கொண்டது.
கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கும் அரசுப் பள்ளியின் அவலம்: உலக வங்கியின் கட்டளைப்படி பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதன் விளைவு. (கோப்புப்படம்)
அடுத்ததாக, உயர்கல்வியில் கல்லூரிகளின் செயல்திறனைப் பொறுத்து சில கல்லூரிகள் தன்னாட்சி உரிமை உடைய நிறுவனங்களாக்கப்படும் என அரசு அறிவித்தது. இங்கே தன்னாட்சி என்பதன் பொருள் அரசுக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டு, சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றுவதன் மூலம் அவற்றைத் தனியார்மயப்படுத்துவதாகும்.
1991-இல் உலகமயமாக்கல் என்ற பெயரில், உலக மூலதனத்தின் தடையற்றை கொள்ளைக்கு இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டபோது, உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்திய பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறின. கல்வி, சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மானியங்கள் – என அனைத்து செலவீனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தும் வகையில் பொருளாதாரக் கட்டுமானங்களை மறுசீரமைத்தால் மட்டுமே இந்திய அரசு தொடர்ந்து இயங்குவதற்கான கடன்கள் வழங்கப்படும் என்று உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் நிபந்தனை விதித்தன. இதனை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதற்குப் பிறகு கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
1991-இல் நாடு முழுவதும் மொத்தம் 8 இலட்சம் அரசுப் பள்ளிகள் இருந்தன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையோ மிகவும் சொற்பம்தான். அப்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 37 இலட்சம். இவற்றைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று உலக வங்கி உத்தரவிட்டது. 1993 முதல் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முடிவை அரசு எடுத்தது.
1990-களின் மத்தியில் உலக வங்கியின் ஆணைக்கிணங்க ஒரேயொரு அறையில் எல்லா வகுப்பு மாணவர்களையும் அமரவைத்து, ஒரேயொரு ஆசிரியர் அனைத்துப் பாடங்களையும் நடத்தும் ஓராசிரியர் பள்ளிகள் துவங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்களை வைத்துள்ள தனியார் பள்ளிகளில் வசதி படைத்தவர்கள் தங்களது குழந்தைகளைச் சேர்த்துப் படிக்க வைக்கும் அதே வேளையில், வசதியில்லாதவர்கள் எல்லா வகுப்புகளுக்கும், எல்லாப் பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் என்ற ஓராசிரியர் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கும் நிலையை உலக வங்கியின் உத்தரவுப்படி, மைய அரசு திட்டமிட்டு உருவாக்கியது.
1997-இல் கொண்டுவரப்பட்ட பழங்குடியினருக்கான கல்வி உத்தரவாதச் சட்டம், கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் கூட அரசுப்பள்ளிகள் இயங்கலாம் எனக் கூறியது. அதில் வேலை செய்யும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை எனவும் கூறியது. பின்னர் இதே சட்டம், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் “சர்வ சிக்சா அபியான்” என்ற பெயரில் கொண்டுவரப்பட்டது.
2010-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் வசதியற்ற மாணவர்களைச் சேர்த்து அவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வந்ததன் மூலம், இனி அரசுப் பள்ளிகளே தேவையில்லை, இருக்கும் அரசுப் பள்ளிகளும் வெகு விரைவில் மூடப்படும் என்ற அரசின் கொள்கை முடிவை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
கல்வியில் தனியார்மயத்தை முழுமையாகப் புகுத்துவதற்கு ஏற்ப அரசிற்கு அறிக்கை தயாரித்து அளித்த தரகு முதலாளிகள் முகேஷ் அம்பானி…
பள்ளிக் கல்வியில்தான் இவ்வாறு என்றில்லை; உயர்கல்வியிலும் இதற்குச் சற்றும் குறையாத அளவிற்கு நவீன தாராளவாதக் கொள்கைகள் மூலம் பெரும் சீரழிவுகளை உருவாக்கியுள்ளனர். இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 2000-மாவது ஆண்டில் யுனெஸ்கோ மாநாடு ஒன்றில் உரையாற்றிய அப்போதைய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, “உயர்கல்வி என்பது தனிநபருக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது, சமுதாயத்திற்கு அல்ல; இதனால் அதற்கான கட்டணங்களை மாணவர்கள் கொடுத்துத்தான் தீர வேண்டும்” எனக் கூறினார். “கல்வி என்பது ஒரு வணிகப் பொருள். அதனை வாங்கும் மாணவர்கள் வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்கள் பொருளுக்கான விலையைக் கொடுத்து, அதனை வாங்கிச் செல்ல வேண்டும்: அதில் அரசு தலையிடக் கூடாது” என 1990 முதல் உலக வங்கி கூறி வந்ததையே முரளி மனோகர் ஜோஷி இந்திய அரசின் கொள்கையாக யுனெஸ்கோ மாநாட்டில் தெரிவித்தார்.
அதே 2000-மாவது ஆண்டில்தான் இந்தியாவின் மிகப்பெரிய ‘கல்வியாளர்களான’ முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த “அம்பானி-பிர்லா” அறிக்கை பிரதமரின் பொருளாதார ஆலோசனை சபையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் எழுந்த மாணவர்கள் – ஆசிரியர்களின் எதிர்ப்புகளையும் மீறி, “அம்பானி-பிர்லா” அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்த அறிக்கை அரசின் கொள்கைகளில் மூன்று முக்கிய திருத்தங்களைக் கோரியது. “முதலில் கல்வி என்பது சமூக நலனுக்கானது அல்ல, அது சந்தைக்கானது. இரண்டாவது, அரசு விரும்பினால் ஆரம்பக் கல்விக்கான நிதி உதவிகளைத் தொடரலாம். ஆனால், இடைநிலைக் கல்விக்கான நிதி உதவிகளைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதேசமயம், உயர் கல்விக்கான நிதி உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனென்றால், உயர் கல்வியைத் தங்களது கையில் எடுத்துக் கொள்ள உலகச் சந்தை தயாராக உள்ளது. மூன்றாவதாக, அவ்வாறு உயர் கல்வியை உலகச் சந்தை எடுத்துக் கொள்ளும் போது, அதன் அத்தனை துறைகளையும் சந்தையே தீர்மானிக்கும். அதாவது, கல்விக்கான கட்டணம் மட்டுமல்ல; பாடத்திட்டம், பயிற்று முறை, பட்டங்கள் வழங்குவது, கல்லூரிகளின் வடிவம் – என அனைத்தையும் சந்தையின் தேவைகளே தீர்மானிக்கும்; சமூகத்தின் தேவைகள் அவற்றை தீர்மானிக்காது” என “அம்பானி-பிர்லா” அறிக்கை தெளிவாகக் கூறியது. இந்த அறிக்கையானது, இந்தியக் கல்விக் கட்டுமானத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது நமது நாட்டின் அறிவுக் கட்டுமானத்தின் மீதான தாக்குதலாகும்.
…குமாரமங்கலம் பிர்லா
“அம்பானி-பிர்லா” அறிக்கை வெளியான அதே சமயத்தில்தான், இந்திய அரசு கல்வித்துறையில் “பொதுத்துறை – தனியார் கூட்டு” என்ற வடிவம் புகுத்தப்பட்டது. பொதுத்துறை – தனியார் கூட்டு என்றால் இரண்டு வடிவங்களும் இணைந்து செயல்படுவது என்று பொருள் கொள்ளக்கூடாது. இதன் உண்மையான பொருள் பொதுத்துறையைத் தனியார் கொள்ளையடிப்பது என்பதாகும். இந்த வடிவத்தைத் தாங்கள் கொண்டு வரப்போவதாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கூறியிருந்தது. அதனை நிறைவேற்றுவதற்காக பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே, பிரதமர் அலுவலகத்தில் பொதுத்துறை – தனியார் கூட்டிற்கென ஒரு புதிய பிரிவே உருவாக்கப்பட்டது.
பா.ஜ.க.விற்குப் பின், 2004-ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி அமைந்த பிறகும் கூட பிரதமர் அலுவலகத்தில் இதே பிரிவு, அதில் வேலை பார்த்த அதே அதிகாரிகளுடன் தொடர்ந்து இயங்கியது. 2007-ஆம் ஆண்டில் திட்டக் கமிசனின் தலைவராக இருந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், “இனி கல்வித் துறையில் கொண்டுவரப்படும் அனைத்துத் திட்டங்களும் பொதுத்துறை-தனியார் கூட்டு என்ற வடிவத்திலேயே கொண்டுவரப்படும்” என அறிவித்தார்.
உயர்கல்வியில் தனியார்மயம் புகுத்தப்படுவதை எதிர்த்து, பல்கலைக்கழக மானியக் குழுவை முற்றுகையிடுவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து டெல்லியில் மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம்
பொதுத்துறை-தனியார் கூட்டு எவ்வாறு பொது சொத்துக்களை, அரசின் நிதி ஒதுக்கீடுகளைத் தனியார் முதலாளிகள் தின்று தீர்க்க உதவுகிறது என்பதை விளக்கப் பல உதாரணங்களைக் கூற முடியும். 2005-ஆம் ஆண்டில் கல்வித் துறைக்கான மத்திய அலோசனைக் குழுவில் நான் இருந்தபோது, மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி என்னிடம் ஒரு ஆவணத்தை கொடுத்தார். அது, அந்த வருடத்தில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட வருமான வரிவிலக்கின் காரணமாக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்படுத்தியிருந்த ஒரு கமிட்டியின் அறிக்கை. அதன்படி 2004-05- ஆம் ஆண்டில் மட்டும் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட வருமான வரிவிலக்கின் காரணமாக 5,000 கோடி ருபாய் அரசிற்கு வருமான வரி இழப்பு ஏற்பட்டிருந்தது. 2004-05-ஆம் ஆண்டுகளில் இருந்ததைவிட, தற்போது பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் தனியார்மயம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அரசிற்கு ஏற்படும் இழப்பும் முன்பைவிட பல மடங்கு அதிகமானதாக இருக்கும் என்பது நிச்சயம்.
கல்விக்கான நிதி ஒதுக்கீடைப் படிப்படியாக வெட்டி வருவதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களாக மாற வேண்டிய சூழலை அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு சுயநிதிக் கல்வி நிறுவனங்களாக மாறும் போது, அதில் சந்தை மதிப்புள்ள படிப்புகள் மட்டுமே வழங்கப்படும். உதாரணத்திற்கு, தமிழ் இலக்கியம் குறித்த பட்டப் படிப்புகளுக்கு சந்தையில் எவ்வித மதிப்பும் இல்லை. இதன் காரணமாக, தமிழ் இலக்கியம் என்ற துறையே அனைத்துக் கல்லூரிகளிலுமிருந்தும் நீக்கப்பட்டுவிடும். “2009-ஆம் ஆண்டு முதல் அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் ஓவியம், இசை, விளையாட்டு உள்ளிட்ட வகுப்புகளை ரத்து செய்துள்ள” கல்வி உரிமைச் சட்டம், நடுநிலைப்பள்ளிகளில் தற்போதுள்ள வகுப்புகள் பாதியாகக் குறைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.
இந்தப் பின்னணியிலிருந்து நாம் உயர்கல்வியை “காட்ஸ்” ஒப்பந்தத்திற்குத் தாரை வார்ப்பது குறித்துப் பார்க்க வேண்டும். இதற்கு ஏற்பத்தான் மைய அரசின் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் சூரியஒளி மின்தகடுகளை இந்தியா பயன்படுத்துவதை விரும்பாத அமெரிக்கா, காட் (GATT-General Agreement of Trade and Tariff) ஒப்பந்தத்தைக் காட்டி தடுத்து நிறுத்தியிருக்கிறது. இது குறித்த உலக வர்த்தக கழகத்தின் (WTO) தீர்ப்பு 25-02-2016 அன்று வெளிவந்திருக்கிறது.
உள் நாட்டில் தயாராகும் சூரிய ஒளி தகடுகளை பயன்படுத்தும் பொழுது தேசிய சந்தை, வேலைவாய்ப்பிற்கான அபிவிருத்திகள், வெளிநாட்டுக் கடன்களை குறைக்க முயல்வது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என தேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்கும் இறையாண்மை அம்சம் அடங்கியிருப்பதை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தியா இப்படி உள்நாட்டிலேயே தயாரிப்பதால், தனது நாட்டில் 90% சூரிய ஒளி மின்தகடு ஏற்றுமதியாளர்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என உலகவர்த்தகக் கழக தீர்ப்பாயத்தில் பஞ்சாயத்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா. சொந்த உழைப்பில் பொங்கி சாப்பிடுவதற்காக நாம் ஏன் உலகவர்த்தகக் கழகத்தின் முன் ஆஜராகவேண்டும்? இந்தக் கேள்வி எந்த ஒரு தேசபக்தருக்கும் எழவில்லை என்றால் எதுதான் தேசபக்தி?
இந்தியா உலகவர்த்தகக் கழகத்தின் முன் ஆஜராவதற்கு காரணம் 1994-ம் ஆண்டு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால்தான். இந்த காட் ஒப்பந்தம் தனியார்மயம், தராளமயம், உலகமயம் என்பதன் பெயரில் கொண்டு வந்திருக்கும் அழிவுகள் பிரளயமானவை. நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டும் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்ட காலம் போய் தற்பொழுது காட் ஒப்பந்ததைக்காட்டி ‘உன் காலில் நிற்க முயன்றால் உன்னை வெட்டுவேன்’ என்று அமெரிக்கா நேரிடையாக மிரட்டுகிறது.
தனியார்மயம் வளர்ச்சி, அந்நிய முதலீடு வளர்ச்சி என்று “காட்” ஒப்பந்தத்திற்கு கொடி பிடித்தவர்கள்தான் அனைத்துக் ஓட்டுக் கட்சிகளும். ஆட்சியில் மாறி மாறி இருந்த காங்கிரசும், பா.ஜ.கவுல் இந்த அடிமைச் சாசனத்தை நிறைவேற்றவதில் போட்டி போட்டன.
அதிலும் ‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘வந்தே மாதரம்’ கோசம் போட்டு தேசபக்தியில் ஒரு பிடி ஜாஸ்தி என்று வேடம் போடுவதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலை யாரும் விஞ்ச முடியாது. ஆனால் பாரதமாதாவை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொடுத்தவர்கள் இந்தக் காவிக் கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தியாவிற்கு எதிரான உலகவர்த்தகக் கழகத்தின் தற்போதைய தீர்ப்பு.
தீர்ப்பு வெளியானவுடன் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி மைக்கேல் புரோமேன், இந்தியா நாட்டின் இறையாண்மையை மட்டுமல்ல காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லா நாடுகளையும் எப்படி மிரட்டுகிறார் என்று பாருங்கள்.
“உலகவர்த்தக் கழகத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்று. இது இந்த (இந்தியாவிற்கு எதிரான) வழக்கிற்கு மட்டும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல. மாறாக எந்தெந்த நாடுகள் எல்லாம் பாகுபாடான உள்நாட்டுக் கொள்கைகளை கடைபிடிக்கிறதோ அவைகளுக்கு மிகத் தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது” என்கிறார் புரோமேன்.
இந்தியாவிற்கு எதிராக பேசினார்கள் என்று மாணவியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பா.ஜ.க-வின் தமிழக ரவுடியான ஹெச்.ராஜா பேட்டி கொடுத்தது; வக்கீல் சவுகானின் ஆர்.எஸ்.எஸ் கூலிப்படை கோர்ட் வளாகத்தில் மாணவர்கள், பத்திரிக்கையாளர்களை தேசபக்தி வேடத்தில் தாக்குதல் நடத்தியது, பி.ஜே.பி எம்.எல்.ஏ ஓபி சர்மா தேசத்தைக் காக்க ரவுடியாக அவதாரம் எடுத்தது என்று தேசபக்தியின் பெயரில் ஆட்டம் போட்ட காவிக் கும்பல், புரோமேன் இந்திய இறையாண்மை மீது உச்சா போகிற பொழுது கள்ள மவுனமாக இருக்கிறதே ஏன்?
ஏன் என்பதை புரோமேனே மேற்கொண்டு சொல்கிறார் இப்படி
“மிகச் சமீபத்திய இந்த கட்டாய வர்த்தக உடன்படிக்கையின் மீதான வெற்றி அதிபர் ஒபாமா வர்த்தக-எளிமையாக்கல் மற்றும் அமலாக்கம் சட்டம் 2015-ல் (Trade Facilation and Trade Enforcement Act TFTEA 2015) கையெழுத்திடும் இதே நாளில் தான் வந்திருக்கிறது. இச்சட்டம் இருதரப்புகளுக்கிடையேயான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தின் அமல்படுத்தும் திறமையை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இதன்படி அமெரிக்கா, உலக பொருளாதாரத்தில் தன் நாட்டு வணிகர்கள் விவசாயிகள் தொழிலாளிகளின் வர்த்தக உரிமையை உறுதியாக நிலைநாட்டிக்கொள்ளும் வரலாற்றை கட்டியமைக்க முடியும்” என்கிறார்.
புரோமேன் கூறும் வாக்கியத்தின் பொருள் இந்தியாவில் வியாபாரம் செய்யும் அமெரிக்க முதலாளியின் இலாபத்திற்கு இடையூறாக தேசிய பொருளாதாரக் கொள்கை இருந்தால் அமெரிக்கா இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் என்பதாகும்.
இப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாகத்தான் கடந்த டிசம்பர் மாதம் தோகாவில் நடைபெற்ற உலகவர்த்தக கழக மாநாட்டில் மோடி கும்பல் கையெழுத்திட்டது. Level Playing Field என்ற காட்ஸ் ஒப்பந்தத்தின் விதி இந்தியா தேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்கும் திட்டங்களுக்கு நிகராக அமெரிக்க முதலாளிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், உயர்கல்வித் துறையில் இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இணையாக வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கும் அனுமதி அளித்து நாட்டுக்குள் விட வேண்டும் என்று சொல்கிறது. இதன்படி நீங்கள் சோறு சாப்பிட்டால் அமெரிக்கா காரனுக்கும் சேர்த்து ஊட்ட வேண்டும். அவன் வயிறு நிறையாவிட்டால் காட்ஸ் ஒப்பந்தத்தின் படி குற்றமாகும். இந்தவிதியில் கடந்த டிசம்பரில் கையெழுத்திட்டது மோடி கும்பல் தான்.
இதை எதிர்த்து கடந்த டிசம்பரில் நாடெங்கிலும் மாணவர்கள் இந்தியாவின் கல்வித்துறை சூறையாடப்படும் என்றும் விவசாயிகள் விவசாயம் அழியுமென்றும் தொழிலாளர்கள் தாங்கள் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவோம் என்று “மோடியே காட்ஸிலிருந்து வெளியேறு” “ஏகாதிபத்தியத்தின் காலை நக்காதே” என்று போராடினர். உண்மையான தேசத் துரோகிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினர். ஆனால் அப்பொழுது அர்னாப் கோஸ்வாமி போன்ற ஊடக விபச்சாரிகளால் நாட்டு மக்களின் தேசபக்தி கண்டு கொள்ளப்படவில்லை.
தேசத்தைக் காக்கும் உழைக்கும் மக்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத இந்தக் கூட்டம் தான் ஜே.என்.யு மாணவர்கள் தேசவிரோதிகள் என்று திட்டமிட்டு பாசிசத்தைக் கட்டவிழ்த்தனர். மாணவர் உமர் காலித், “மோடி அரசின் கார்ப்பரேட் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்ளைக்கு இந்தியாவை அடகு வைக்கும் சதித்தனத்தை அம்பலப்படுத்திய காரணத்திற்காகத்தான் நாங்கள் வெறிகொண்டு தாக்கப்படுகிறோமேயன்றி இந்தியாவிற்கு எதிரான கோசம் என்பதெல்லாம் வெறும் நாடகம்” என்று காவிக்கும்பலின் களவாணித்தனத்தை நயமாக தோலுரித்தார்.
“ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் கட்டமைக்க விரும்புகிற தேசியம் இந்துதேசியமன்றி காலனிகளை எதிர்க்கும் நாட்டு விடுதலை தேசியம் அல்ல” என்று வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர் காவிகும்பலின் அரசியலை பிளந்துகாட்டினார்.
இதற்கு ஆதாரமாக ‘உன் நாடு என் காலனி’ என்று அமெரிக்கா இப்பொழுது நேரிடையாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. இனி நாம் செய்ய வேண்டியது நாட்டைக்காக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைப்பதுதான். அதற்கான முதற்படியே அமெரிக்காவிற்கு கால் கழுவும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் இந்து தேசிய பாசிசத்தை முறியடிப்பதில் இருந்தே தொடங்க இயலும் என்பதை உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பு நிரூபிக்கிறது அல்லவா?
கும்பகோணத்து புராணம்… பாடல் பெற்ற தலங்களும் பாவப்பட்ட சனங்களும்!
ஒரே நாளில் 10 லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடி, பாவத்தின் ஓவர் லோடில் மகாமக் குளமே காவியாகி விட்டது. கடந்த பத்து நாட்களாக 45 லட்சம் பக்தர்கள், ‘பரம’ சாதுக்கள், நவீன செல்போன் அசரீரியுடன் ஆசி வழங்கிய அகோரிகள், நெய்யால் தொந்தி வளர்த்து பொய்யால் சமயம் வளர்த்து, ஊரான் வீட்டு கையால் கோயில் நிலத்தில் பக்தி வளர்த்து குலநாசம் செய்து சிவன் சொத்து சேர்த்த தகத்தாய மடாதிபதிகள், முற்றும் துறந்த சங்கராச்சாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அடியார்க்கும் அடியார்கள் என கும்பகோணமே குலுங்கிவிட்டதாக பூரிக்கின்றன ஊடகங்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஒன்பது நதிகளும் பரமசிவனிடத்தில் போய், “மக்கள் கொடிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் மூழ்கி, பாவங்களை இறக்கிவிட்டு போய்விடுகிறார்கள், இதைப் போக்கிக் கொள்ள நாங்கள் என்ன செய்வது?” என்று முறையிட, பரிகாரமாக சிவன், “கும்பகோணத்தில் தென்கிழக்கு தீர்த்தமான மகாமக குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மாத மகாமக நாளன்று குளித்தீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்!’’ என்று கூறியதாகவும் எனவே அந்நாளில் போய்க் குளித்தால் சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி புண்ணியம் கிடைக்கும் என்று புராணம் எழுதி வைத்திருக்கிறது. பார்ப்பனீய கட்டுக் கதை இலாகா கம்பெனி.
“ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் குளத்தில் இறங்கி அழுக்கையும், சேறையும் கலக்கி அடக்க முடியாமல் அங்கே சிறுநீரையும் கழித்தால் புண்ணியம் வருமா? காலரா, மலேரியா வருமா?” என்று பெரியார் கேட்டால், நாத்திகர் புண்ணிய தீர்த்தத்தை இழிவுபடுத்துகிறார் என்பவர்கள் அந்த காலத்து மகாமக குளத்து யோக்கியதையை எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு தனது “பசித்த மானிடம்’’ என்ற நாவலில் கணேசன் என்ற கதாபாத்திரத்தின் நனவோடையாக இப்படி காட்டியிருப்பார். “இவன் நாற்பது வருசங்களுக்கு முன் பார்த்த குளம் இல்லை அது. பச்சைப் பசேலென்று பாசி பிடித்துக் கிடக்கும் முன்பெல்லாம். படிகளெல்லாம் வழுக்கும். காற்றில் பாசியும் அழுக்கும் ஒரு புறமாய் ஒதுங்கி அந்த மூலையிலிருந்து குடலைக் குழப்பும். நாற்றம் வீசும். படித்துறைகளில் எல்லாம் சாயம் தோய்த்த நூல் கத்தைகளைக் கயிறுகள் கட்டிக் காய வைத்திருப்பார்கள். அந்த நாற்றமும் வீசும். குளக்கரைகளை ஒட்டிப் பாவுகளைப் பெரிய பெரிய கடப்பாரைகளை நட்டு இழுத்துக் கட்டி நூல்களாய் இழையைப் பிரித்துவிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தத் தொழிலாளர்களில் யானைக்கால் இல்லாத ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது. அந்த பாவுகளையும் காணவில்லை. தெருவும் சுத்தமாயிருந்தது.’’ பெரியார் பார்வையில் மக்களை பழிபாவத்திற்கு ஆளாக்கிய பார்ப்பனியத்தின் மீதான வெறுப்பு வெளிப்படுகிறது. கரிச்சான் குஞ்சு பார்வையில் குளக்கரையைப் பயன்படுத்தும் வர்க்கத்தின் மீதான குமட்டலாக முடிந்து விடுகிறது. உண்மையில் உள்ளூர் வழக்கிலான மாமாங்குளத்தின் ‘கீர்த்தி’ தெரிந்து தீர்த்தமாடாத பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருவன் என்ற முறையில் குளத்தை பெரிதும் அசுத்தப்படுத்த வாய்ப்புள்ளவர்கள் குளக்கரையைச் சுற்றியுள்ள கரிச்சான் குஞ்சுவின் கணேசர்களே என்பதைப் பார்த்திருக்கிறேன். நாலுகட்டு, அஞ்சு கட்டு வீட்டுக்குள் இருந்து கொண்டு நாள் கிழமை என்று கட்டுகட்டாக தலைவாழைகளை கட்டிவிட்டு குளக்கரையில் வீசி எறிவதும், அதில் கும்பகோணத்து பன்றிகள் பாய்ந்து ஏமாறுவதும் குளக்கரையில் சிரார்த்தம், தர்ப்பணம் என்று பிண்டம் வைத்து குப்பை போடுவதுமாக நீர்நிலையை மாசுபடுத்திய போது எச்சிலையைப் போட்டு மாமாங்குளத்தை அசுத்தப்படுத்தாதே என்று நீர் நிலைக்கு குரல் கொடுத்தவர்கள் அந்தக் கால திராவிடர் கழகத்தினர்.
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்துதான் அரசியலே நாசமாப் போச்சு என்ற பார்ப்பன வன்மத்தின் உளவியல்தான், இவாள்’ அசுத்தப்படுத்திய வரைக்கும் புனிதம் பேசியவர்கள் “கண்டவர்களும் வந்து மாமாங்குளத்து லட்சணமே போச்சு’’ என்று மக்களின் பயன்பாட்டில் மாசுப்பட்டபோது கருவினர். எனக்கு நினைவு தெரிந்து எண்பதுகள், எண்பத்தைந்து வரைக்கும் கூட மாமாங்குளம் மக்கள் பயன்பாட்டுக்காக தடையின்றி தான் இருந்தது. தேங்கிய நீரை வெளியேற்றுவது துப்புரவு செய்வது குளக்களை கால்வாய் சீரமைப்பு என்று எந்த பராமரிப்பையும் நகராட்சி நிர்வாகம் சீராக செய்யாதபோது பயன்படுத்துபவர்களால் பாதிப்பு என ஆகி பார்ப்பன புனிதம் மெல்ல மெல்ல வேலிகட்ட வைத்து வெறும் பாவம் கழுவும் குளமாகி விட்டது. மகாமகக் குளத்தைவிட மக்களின் பயன்பாட்டுக்கு நெருக்கமாக பல குளங்கள் கும்பகோணத்தில் உண்டு. நால்ரோடு குளம், அன்னம்மா ஆஸ்பெட்டல் பக்கம் இருந்த குளம், செல்வம் தியேட்டர் பக்கமிருந்த குளம், ஆயி குளம், அம்மா சத்திரம் குளம், வளையப் பேட்டை குளம், தாராசுரம் சத்திரத்துக் குளம், ரயிலடி குளம், பேட்டை நாணயக்காரத் தெரு குளம், தாலுகா போலீஸ் ஸ்டேசன் குளம்… போன்றவைகள் எல்லாம் மக்கள் சரளமாக புழங்கிய குளங்கள். ஏழை உழைக்கும் மக்களுக்கு பசியாற கொட்டிக் கிழங்கும், குரவை மீனும் தந்த பல குளங்களுக்கு ஈடாகாது இந்த மகாமகக் குளம். ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோருக்கு அடைக்கலமாக இருந்த மாமாங்குளங்கரையை மதத்தின் பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டதைப் பார்க்கையில் உண்மையிலேயே அது பாவக்குளம்தான். தாராசுரத்திலிருந்து பட்டீஸ்வரம் போகும் சாலையில் ஒரு அய்யர் பண்ணை வீட்டில் குளம் வெட்டி, மீன் வளர்த்து வியாபாரம் செய்ததும் ஏனோ நினைவுக்கு வருகிறது. அது சரி குலத்துக்குதான் கோத்திரம், குளத்துக்கு இல்லை போலும்!
“செஞ்ச பாவத்த எல்லாம் குளத்துல தீர்த்திடலாம்னா எவனுக்காவது ஒழுக்கம் வருமா? பாவ காரியங்களைச் செய்யத் தயங்குவானா? தவறுவானா? மத்த நதிகளின் பாவம் மகாமக குளத்துல போகும்னா, மகாமக குளத்து பாவம் எங்க போய் போகும். அது எந்த தண்ணியில பாவத்த கழுவும்…’’ என்று பெரியார் தர்க்கவியலாக எழுப்பிய கேள்விகள் மூட நம்பிக்கை ஒழிப்பைத் தாண்டி மக்களின் பண்பாட்டு அக்கறை பற்றியது. கும்பகோணத்தை கோவில் நகரமாகவும், புண்ணிய ஷேத்திரமாகவும் மட்டும் அடையாளப்படுத்தும் பாவத்தை முதலில் கழுவ வேண்டும். எந்த மக்களின் பார்வையில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ஊரின் முகம் மாறுபடுகிறது. ஆதிக்க சாதிகளின் பார்வையில் ஊர் இனிய முகமாக இருக்கலாம். அங்கே அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்டவர்களின் பார்வையில் அது பயம், கொடூரம்!
பக்தி மார்க்கமாக இருந்தாலும் கூட அதையும் ஆரியப் பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் அடையாளத்தின் குறியீடாகத்தான் ’கும்பகோணம்’ என்ற பெயரே உள்ளது. பிரளய காலத்தில் அமிர்த கும்பம் மிதந்து வந்தபோது சிவபெருமான் அதை விழச் செய்த இடமாதலால் இது கும்பகோணம். தமிழில் குடமூக்கு என்று தலபுராணம் கதை அளக்கிறது. அவாளின் மணிக்கொடி மாமாக்களே கும்பகோணம் என்றவுடன் அமிழ்தம் ஓடியதாக மறந்தும் பேசுவதில்லை. தி. ஜானகிராமன் தனது ஆஸ்திரேலிய பயண அனுபவக் கட்டுரையில் “பொதுவாக வெள்ளை நாடுகளைப் பார்த்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஜனங்கள் வாழ்கிற இடத்தில் ஒரு துப்புரவு, நறுவிசு பளிச்சென்ற தோற்றம் கும்பகோணம் போன்ற ஊர்களின் சாக்கடைகள் ஞாபகத்திற்கு வராமல் என்ன செய்யும்.’’ (அடுத்தவீடு ஐம்பது மைல் நூலில் தி.ஜா.ரா) “நவராத்திரிக் கூட்டம் நடமாடத் தொடங்கிவிட்டது. புசு புசுக்கும் புதுப்புடவைகளும், பாவாடைகளும், நடந்த வண்ணம் இருந்தன. கடந்து போகும் ஒவ்வொரு கும்பலும் கதம்ப மனத்தை வீசி வீசிப் போயிற்று. நவராத்திரி முடிவு நெருங்க நெருங்க, வீதியில் கூட்டமும் புதுமையும் பெருகிக் கொண்டிருந்தன. நாளை ஒன்பதாவது நாள். சரஸ்வதி பூசை கட்டுக்கடங்கா பூரிப்பாக ஊர் மலர்ந்து கொண்டிருக்கும். பாபநாசத்தில் என்ன இருக்கப் போகிறது? எப்போதும் போல் மங்கலும் இருளுமாக அழுது வடிந்து கொண்டிருக்கும் இந்தக் கோலாகலத்தில் கும்பகோணத்தை விட்டுப் போவதென்றால் மனசு வரவில்லை. என்ன செய்வது?’’ என்று மோகமுள் நாவலில் அக்கிரகாரத்து கும்பகோணத்தில் மகிழ்ந்த மனம் ஆஸ்திரேலியாவுக்கு போனவுடன் சாக்கடை கும்பகோணத்தை வெறுக்கிறது. சாக்கடையின் தயாரிப்பாளர்களே சாக்கடைக்கு முகம் சுழித்தால், அதை சுத்தம் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட சாதியினர்க்கு அந்த ஊர் எப்படி இருக்கும்?
ஒட்டச் சுரண்டி ஊரைப் பழித்தவுடன் இது ஊரா நியூயார்க் போல வருமா, நியூ ஜெர்சி போல வருமா என வளர்ச்சிக்குத் தாவி லௌகீக உபாசகர்கள் அடுத்தவர் மண்ணை ஆட்டையைப் போடுவதுடன், அதற்கு தன் நோக்கில் கதை கட்டுவது புராணம் எழுதுவது, என்பதுடன் பொருத்தமாக ஊர் பெயரையே வேர் மண் சொல்லையே வெட்டி எறிந்து ஆரியப் பெயராக்குவதையும் செய்வதுண்டு. அதன் வழியில் தான் கும்பகோணத்து தலபுராணமும், குடந்தை என்ற பெயரையே கும்பகோணமாக்கியதும். மயிலாடுதுறையை ‘மாயவரம்’ என்றும் திருமுதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்றும் திருகு வேலை செய்தது போல பெயரிலேயே புகுந்து கலக்கும்போது குளத்தை கலக்க எம்மாத்திரம்? கும்பகோணம் விசுவநாத கோவில் தேவாரப்பதிகத்தில் கூட “குடந்தை’’ என்றே வந்துள்ளது. திருமழிசையாழ்வார் பாசுரத்திலும் “கடந்த கால் பரவி காவிரிக்கரை குடந்தையும் கிடந்தவாறே எழுந்திருந்து பேசு வாழி கேசனே! என்று வருகிறது. பக்தியே ஆனாலும் சரி, சரக்கு என்னதாய் இருந்தாலும், படத்துக்கு தமிழில் பெயர் வச்சாலாவது போதும்! என்ற கோடம்பாக்கத்து சுதந்திரம் கூட ஆரியக் கற்பனையில் இல்லை.
அவிழ்த்து விடப்படும் பெயர்களுக்கு மட்டுமல்ல, ஊரை பார்ப்பன அடையாளமாக்கும் கட்டுக் கதைகளுக்கும் சைவ வெள்ளாக் கூட்டணியே சாதிக் களத்தில் நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ன் தருண் விஜய்க்கு தமிழ் அடையாளம் கொடுக்கும் தமிழ் ஆழ்வார்கள் இப்போதும் இருக்கிறார்கள். பார்ப்பனர்களால் மட்டும் பார்ப்பனியம் உயிர் வாழ்வதில்லை என்பதற்கு கும்பகோண புராணமும் சான்றாக இருக்கிறது. வடமொழியில் புனைந்து விட்ட புராணத்தை தமிழ் மக்களுக்கு அடையாளமாக்க சைவ வெள்ளாளக் கூட்டணியின் கைங்கர்யத்தை புரிந்து கொள்ள “மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உ.வே.சா எழுதியிருக்கும் இந்த நிகழ்வுகளைப் பாருங்கள்,’’ அக்காலத்தில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை என்பவரும், பல சைவப் பிரபுக்களும் கும்பகோண புராணத்தை இக்கவிஞர் தலைவரைக் கொண்டு தமிழ்ச் செய்யுளாக இயற்றுவிக்க வேண்டுமென்று எண்ணினார்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படி குரோதன வருஷம் (1865) இவர் திருவாவடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்று பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தை தம்முடைய இருப்பிடமாகக் கொண்டு பரிவாரங்களுடன் இருந்தார். கும்பகோண புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழில் வசனமாக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழிபெயர்த்ததற்கு உதவியாயிருந்தவர்கள் ஸ்ரீ சங்கராச்சாரியர் மடத்து வித்வானாகிய மண்டபம் நாராயண சாஸ்திரிகள் முதலியவர்கள். பின்பு புராணத்தை இவர் செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார்… (பக்: 259, 5-ஆம் பதிப்பு 2014, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம்) இப்படி பார்ப்பன வெள்ளாள கூட்டுக் கலவையுடன் கும்பகோணத்து புராணம் ரீ மேக் ஆனது. இதுவும் அவாளின் மேக் இன் இந்தியா தான்! எனவே கும்பகோணத்து தீர்த்தக் குளங்கள் சாதாரண தீர்த்தக் குளங்கள் அல்ல. வரலாற்றையும், மக்களையுமே ‘தீர்த்த குளங்கள்’.
என்னைக்கோ கும்பகோணத்தின் காபி ருசியிலேயே வளர்ந்த ஜீவராசிகளின் நாக்கு நீளத்தை நம்பி இன்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ‘கும்பகோணம் டிகிரி காபி’ என்று பெயரை வைத்தே ஏமாற்ற முடியுமென்றால், ‘கும்பகோணம்’ என்பதையே பிராண்ட் வேல்யூவாக ஆக்கியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தின் வெற்றிக்கு காரணம் பார்ப்பன ருசி, சூத்திர நாக்கு என்றால் மிகையில்லை. மடாதிபதிகளின் மகா சன்னிதானங்களின் கைங்கர்யம் மட்டுமல்ல, இலக்கிய சன்னிதானங்களும் கும்பகோணத்து காபி கடைகளையும், கோயில் தீர்த்தங்களையும், இசை, நாட்டியங்களையும் எழுதி உசுப்பேற்றினர். கும்பகோணத்து சீவல், திருவையாறு தாம்பூலம், தஞ்சாவூர் அசோகா என டிகிரி காபியில் மூழ்கி, தலைவாழை மேய்ந்து இலக்கிய எச்சில் ஒழுகினர். ஏதோ கும்பகோணம் என்றாலே கொண்டாட்டம், மகிழ்ச்சி, அழகு என்று இவர்கள் ஏற்றிவிட்ட பாவத்தை எந்த மாமாங்குளமும் தாங்காது!
கும்பகோணம் மட்டுமல்ல, தஞ்சை மாவட்டம் முழுக்கவும், தலம், மூர்த்தி, தீர்த்தம், மடம், ஆதினம் என்று சூழ்ந்திருந்த இடமெங்கும் பண்டைய சோழ மன்னர்களின் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பிரம்ம தேயங்கள், மடம், கோவிலுக்கு வழங்கப்பட்ட இறையிலிகள் என்ற நிலங்களில் கொடூரமாக சுரண்டப்பட்ட கூலி விவசாயிகளின் மரண ஓலம்தான், கோவில் மணிகளைத் தாண்டி காதில் ஒலிக்கிறது. பிற்காலத்தில் தேசிகர், மூப்பனார், வாண்டையார், நாயுடுக்கள், வெள்ளாளர் என பண்ணையார்களின் கீழே கடுமையாக வேலை வாங்கி வாரம், குத்தகை என அளந்து கொடுத்துவிட்டு வற்றிய வயிரோடு, எதிர்த்துக் கேட்டால் சவுக்கடி வலிக்க, சாணிப்பால் ஊற்றி பட்டபாட்டை நினைத்தால் உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கு இவைகள் கோவில் நகரமாக இல்லை, ஆயுள் சிறையாக இருந்தது. தஞ்சை மாவட்டத்திலேயே இவர்களின் உழைப்பை உண்டு கொழுத்த இலக்கியவாதிகள், வேத வியாசகர்கள், தத்துவ போஷினிகள் யாராவது இந்த கொடூர பக்கங்களை கும்பகோணத்து பாவங்களாக காட்டியிருக்கிறார்களா? குறைந்தபட்சம் பட்டுநூல் நெசவாளர்களின் நடுத்தர வர்க்க இருப்பை பேசும் எம்.வி. வெங்கட்ராமை விட அக்கிரகாரத்து பாலியல் நெளிவு சுளிவுகளை அனுபவமாக்கித் தரும் தி.ஜா.ரா. வை அல்லவா திகட்டாத தெள்ளமுதாய் படையல் போடுகிறார்கள். இத்தகைய இலக்கிய பாவங்களும் சேர்ந்த கும்பகோணத்தின் உண்மை முகத்தை துல்லியமாக படம் பிடித்து காட்டுவார் தந்தை பெரியார். “சாதாரணமாக கும்பகோணம் ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ வேறு ஏதாவது வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத்தகுந்த விசேசம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது… அதில் வசிக்கும் மக்களோ பெரும்பாலோர் பார்ப்பனர்களும், மேல்சாதி மிராசுதாரர்களுமாகும்.’’
“பார்ப்பனர்கள், மிராசுதாரர்கள் இரண்டு கூட்டமும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல் ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலையே வாழ்த்து வருகிறார்கள். இதைத் தவிர மற்றபடி இந்த ஜில்லாவுக்கும் கும்பகோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது…’’ (குடியரசு தலையங்கம் 12.2.1933) என்ன ஒரு துல்லியம் உழைக்கும் மக்களின் பார்வையில் உண்மையை போட்டுடைக்கிறார் பெரியார்.
மக்களாட்சி என்று சொல்லக்கூடிய காலத்திலேயே இதுதான் நிலைமை என்றால் மன்னராட்சியில் ஊர்களின் யோக்யதை எப்படி இருந்திருக்கும்? ‘இவர்களுடைய வடமொழிப் புலமையையும், சீலத்தையும் கண்டு மகிழ்வெய்திய பொதுமக்கள் அன்னோரின் நல்வாழ்வின் பொருட்டு ஊர்ப்பொது நிலங்களுள் சிலவற்றை வேதவிருத்தி, பட்டவிருத்தி, பாரத விருத்தி, புராண விருத்தி என்ற பெயர்களோடு இறையிலி நிலங்களாக அவர்கட்கு வழங்கிப் பெரிதும் ஆதரித்து வந்தனர் என்பது பல கல்வெட்டுகளால் நன்குணரக் கிடக்கின்றது. அன்றியும் திருக்கோயில்களில் நாள்தோறும் உச்சியம் போதில் பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் பிற செல்வர்களும் நிவந்தங்கள் வழங்கியுள்ளமை அறியத்தக்கதாகும்’ என்று அறியத் தருகிறார். சி.வை. சதாசிவபண்டாரத்தார். (நூல்: பிற்கால சோழர் வரலாறு).
பொதுமக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஒரு படி நெல் கூலி உயர்வாகக் கேட்டால் ஆளையே கொளுத்தும் ஆதிக்க கும்பல் தான் மக்களின் சொத்தை கோவிலின் பெயரால் பார்ப்பனர்களுக்கு தானம் செய்துள்ளது. நாகர்கோவில் அருகே உழைக்குடி விளை எனும் குடியானவர் கிராமம் உள்ளூர் அரசனால் கையகப்படுத்தப்பட்டு பார்வதிபுரம் என்று பெயரிடப்பட்டு பிராமண மையமாக மாற்றப்பட்டது. செலவுக்கு வளமானதும், பாரியதுமான நிலம் ஒதுக்கப்பட்டது என்கிறது கி.பி. 866-ன் பார்வதிபுரம் சாசனமும் கி.பி. 1125-ன் திருவல்லம் கோயில் சாசனமும். (தமிழ்நாட்டு வரலாறு, கே. ராஜய்யன்).
பார்ப்பன மேலாண்மைக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த மன்னர்கள் மக்களின் மீதோ, தலைவரி, கால்வரி, முலைவரி, முடிவரி, மீசைவரி, சாணார் வரி, வாள் வரி, தாலிவரி, தலைப்பாகை வரி, வெல்ல வரி, ஈழம் பச்சை, தென்னல் திருகு வரி, கூடை வரி, தகன வரி, மரண வரி என பிடுங்கி பெற்றுள்ளனர். (The Dravidian languages – A Social Historical Study, M. Imanuvel, Nagarcoil, 2002). இதுமட்டுமல்ல, திருவாலங்காட்டு வேதாரணி ஈசுவரர் கோவிலுள்ள மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு மடமொன்றின் நிலங்களில் பயிர் செய்ய ஆண், பெண் அடிமைகள் விற்கப்பட்டதை குறிப்பிடுகிறது. மக்களையே கோயிலுக்கும், பார்ப்பனர்களுக்கும் மடத்திற்கும் அடிமையாக்கியிருக்கிறது சோழப் பேரரசுகள்.
பழைய பாணியில் குலத்தையே ‘இசைவுத்திட்டாக’ எழுதி வாங்க முடியாததால் குளத்திலாவது போட்டு அமுக்குவோம் என்பதுதான் மகாமகத்தின் நீட்சி. அந்த காலம் மாதிரி ஓசியில் உழைப்பை வாங்க முடியாது பாவ புண்ணிய பயமுறுத்தல் காட்டி கையிலிருக்கும் காசையாவது உண்டியலில் சேர்க்கலாம், தட்டில் வாங்கலாம் என்று சந்தைப் பொருளாதாரத்திற்கேற்ற பார்ப்பன இறையிலிகள் தான் கோவில் திருவிழாக்கள்! மகாமங்கள்! தமிழ் மன்னர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு கோயிலைக் கட்டிய உழைக்கும் மக்களையே உள்ளே விடாமல் தூரத்தில் நின்று கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள் என்று உயரமான கோபுரங்களை கட்டுவித்து ‘கோபுர தரிசனம் பாவவிமோசனம்’ என்று பார்ப்பனர்களுக்கு செங்கோல் பிடித்து சுரண்டலின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துபவர்கள்தான் சோழ மன்னர்கள், உத்திராட்சயை உருட்டிய மடாதிபதிகளும், சூத்திர ஆதிக்கசாதி பண்ணைகளும், கோவில் நகரங்களின் கொடூர முகங்கள் இப்படிப்பட்ட இதை கோவிலின் பெயரால் அடையாளப்படுத்தி உயர்த்திப் பிடிப்பது நவீன ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் கட்டுப்படுத்தும் கலாச்சார உளவியலாகும்.
வரலாற்றில், அரசன், பார்ப்பனர், வெள்ளாளக் கூட்டணியின் அதிகாரம் மீது, கொடிய அடக்குமுறை மீது குகையிடிக்கலகம் செய்த இடங்கை, வலங்கை சண்டை வராதிருக்கத்தான் கோயில், சத்திரமும் கும்பகோணத்தில் பெருகின. அதுமட்டுமில்லாமல் தஞ்சை மாவட்டத்து விவசாயிகள் உழைத்து உருவாக்கும் உபரியை சுருட்டிக் கொள்ளவும் பாடல் பெற்ற தலங்கள் தேவைப்பட்டன. மக்களின் உழைப்பையும், உடமைகளையும் தட்டிப் பறித்து ஒட்ட உறிஞ்சிய வலி தெரியாமலிருக்க மடத்துல தின்னுக்க, சத்திரத்துல படுத்துக்க என வழிகாட்டப்பட்டது. அதிலும் சாதிக்கேற்ற நீதி நிலவியது. “மகாமகக் குள கீழக்கரை சிவன் கோவிலில் துவாதசிகளில் பலருக்கு சோறு போடுவார்கள். வெற்றிலைச் சீவலும், காலனா தட்சினையும் கொடுப்பார்கள். சத்திரா போஜனா மடா நித்திரா என்ற வசனமும் உண்டு… இரவில் கம்மென்று மோர் சாதமும் ஊறுகாயும், தினம் அம்மாமிக்கும் பாட்டிக்கும் பலகாரத்திற்காகச் செய்த இட்லி, தோசை, உப்புமா, பிடி கொழுக்கட்டை, அடை போடுவார்கள் வயிறு நிரம்பியது. வேறு கவலைகளும் தெரியவில்லை” என்று கரிச்சான் குஞ்சின் ‘பசித்த மானிடம்’ நாயகன் கணேசன் காட்டும் கும்பகோணம் வேறு, இது உறிஞ்சி வாழும் கும்பகோணம். உழைத்து வாழும் தஞ்சை மாவட்ட மக்கள் நிலையோ வேறு. 1947-இல் கம்யூனிச விவசாய சங்க தலைவர் தோழர் சீனிவாச ராவ் காட்டும் காட்சி இது.’’
தோழர் பி.சீனிவாசராவ்
பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே, இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால், 1/2 மரக்கால் நெல்தான். அதாவது பட்டணம் படியில் ஒருபடி நெல்தான் அளந்து கொடுப்பார் மிராசுதார். சமீபத்தில் தான், இவர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு பண்ணையாளர் குடும்பம் முழுவதற்கும் வருசத்தில் மொத்த வரும்படி 160 முதல் 170 ரூபாய் வரை கிடைக்கிறது. இது குடும்பத்தின் மொத்த வருமானம் என்பதை மறந்து விடாதீர்கள்…) பண்ணையாட்களும் அவர்களுடைய மனைவி மக்களும் நிலத்துடன் பிணைக்கப்பட்டு பிறப்பிலேயே அடிமைகளாக இருக்க வேண்டியுள்ளது. பண்ணையாட்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் தினம் ஒரு வேலைதான் சுடுசோறு கிடைக்கும். சுடுசோறு என்று சொல்லுவதை விட சுடுகஞ்சி என்று சொல்லுவதே பொருத்தம். பருப்பு இல்லாமல் சொத்தைக் கத்தரிக்காயைப் போட்டு, கழுநீர் தண்ணீர் போல தயாரித்திருப்பார்கள். அதற்கு சாம்பார் என்று பெயரிடப்பட்டிருக்கும். மற்ற இரண்டு வேலைகளிலும் பழைய கஞ்சியும், உப்பு போட்ட நீராகாரமும் தான், இறைச்சி வாங்க அவர்களுக்கு சக்தியில்லை. ஏன், மாதத்திற்கு ஒரு தடவை கருவாடு வாங்கக் கூட சக்தியில்லை. அப்படியிருக்க மாமிசத்தைப் பற்றி பேசுவானேன்! வருசத்தில் ஓரிரு தடவை தீபாவளியன்றாவது இறைச்சி சாப்பிட்டு விட்டால், அது அவர்களுக்கு ஆடம்பரமிக்க ஆர்ப்பாட்ட விருந்தாகும். மிராசுதார்கள் எங்களை சைவர்களாக்கி விட்டார்கள் என்று பண்ணையாட்கள் தமாஷாகச் சொல்வதுண்டு. ஆனால் இந்த தமாஷிற்குள்ளே எத்தகைய சோகத்தை உள்ளடங்கிக் கிடக்கிறதென்பதை நாமறிவோம்… (நூல்: தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? ப. சீனிவாசராவ்) ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளையும், குத்தகை விவசாயிகளையும் இப்படி சோகத்தில் தள்ளிதான் கோயில்கள் நடந்திருக்கின்றன. மடங்கள் சைவத்தை நெய்யால் உருக்குகின்றன. உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் வியர்வை சிந்துவதை நிறுத்தியிருந்தால் கும்பகோணத்தின் அமிர்த கலசத்தோடு கோயில் பார்ப்பன, சைவ மடங்களின் கும்பியும் சேர்ந்து நாறிப் போயிருக்கும்.
கும்பகோணத்தைப் பொறுத்தவரை கோயில்கள் மட்டும் நிறைய அல்ல. கொசுக்களும் நிறைய. கொசுக்களின் நகரம் என்றும் சொல்லலாம். எண்பதுகளில் கூட யானைக்கால் நோயும், தொழுநோயும் கூட கோயில் நகரத்தின் திவ்ய தேச விசேசங்கள்! பாடல் பெற்ற தலங்களின் பகவான்களால் தீர்க்க முடியாத பெருவியாதியை தொழுநோயை முத்துபிள்ளை மண்டபத்தின் கிறித்துவ ஆஸ்பத்திரிதான். தடுத்தாட் கொண்டது. உலகின் பாவத்தை ஒழிக்கப் போவதாய் கனைக்கும் ஜகத்குரு என்ற சங்கரமடத்தால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியவில்லை. கொசு மருந்தடிக்கும் துப்புரவு தொழிலாளிகளைத்தான் மக்கள் தெய்வமாய்த் தேடினர்.
கோபுரங்களின் மறைப்பை விலக்கிப் பார்த்தால் தான் ஊரின் உண்மை வரலாறு தெரியவரும். ‘‘வருக தெள்ளமுதே, வருக செங்கரும்பே, வருக செந்தாமை மகளே, வருக பொற்கொம்பே..’’ என சாரங்கபாணி கோமளவல்லித் தாயாருக்கு கோட்டையின் கோமளவல்லி ரேஞ்சுக்கு தலபுராணத்தில் கட் அவுட் வைத்த பார்ப்பன சைவ பரிவாரம் ஊரை வாழவைக்கும் உழைக்கும் மக்களைப் பாடாதது வியப்பில்லை. கோபுரங்கள் மறைத்த உண்மைகள் அவைகள்.
இப்போது நினைத்தாலும் குடந்தையின் அதன் சுற்றுப்புறங்களின் கள வரலாறு உண்மையான தல வரலாற்றை என்னுள் அலைஅலையாக எழுப்புகிறது. கும்பகோணத்தைப் பற்றிப் பேசினால் அந்தகால ‘சூத்திர நாக்கு: பார்ப்பன ருசிகளுக்கு’ பஞ்சமி அய்யர் காபி கிளப்பும் பொற்றாமரைப் பகுதி கொழுந்து வெற்றிலையும் நினைவுக்கு வருகிறது. ஆனால் பஞ்சமி அய்யர் காபி கிளப்புகள் போல பல கடைகளுக்கு பால் கொண்டுவர சூரியன் விழிக்கும் முன்னே கண் விழித்து 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் சுற்றளவில் பம்பப்படையூர், பட்டீசுவரம், முளையூர், கொள்கை, கோவிந்தகுடி போன்ற ஊர்களிலிருந்து சைக்கிளில் பால்கேனைக் கட்டிக் கொண்டு விலா எலும்பு வியர்த்து வடிய தடதடவென்று குலுங்கும் சாலைகளில் வைக்கோல் பிரியால் பால்கேனை மூடி சட்டையின் மேல் பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெஞ்சுக் காற்று சூடேறி விரையும் பால் வியாபாரிகளின் சைக்கிள் மணி காதுகளில் ஒலிக்கிறது. இந்த சைக்கிள் மணி இல்லையேது ஏது கோயில் மணி! அபிசேகம்!
வாழை மட்டையில் வாகாக மடித்து காம்புகள் கணக்கு வெளியே தெரியும்படி கிழியாமல் மடித்து வெற்றிலைகளை அடுக்கி, தன்முகம் வியர்வையால் கழுவி வெற்றிலையில் தண்ணீர் தெளித்து வெற்றிலை நரம்புகளுக்கு விரல் நரம்பால் உயிரோட்டம் பாய்ச்சும் பெரும்பகுதியான அந்த இசுலாமியத் தொழிலாளர்கள் இல்லையென்றால் கும்பகோணத்து வெற்றிலைக்கு உயிர் ஏது?
சக்கரைப் படித்துறையும், காவிரித் தீர்த்தமும் புனிதம் என்று கை நனைப்பவர்களைப் பார்த்து காவிரியே நகைக்கும். அதே காவிரி பாலக்கரையில் ஊர் உறங்கும் நேரத்திலும், முட்டைக்கோசு, பீட்ரூட், வெங்காய மூட்டைகளை இறக்கி, முழு நிலாவையும் ஒரு மூட்டையாக காவிரியில் இறக்கியது போல நீரில் நிலா களைந்து வியர்த்த உடலை நினைக்கிறானே, அந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் கை பட்டே காவிரி புனிதமடையும்.
எம்.வி.வெங்கட்ராம்
தலைச்சுமை வியாபாரிகள் தயாராகி தேனீர் கடையில் நிற்கையில், அத்தனைப் பேர் கணக்கையும், தலையாட்டி மனதில் வாங்கி, ‘தர்’ என்ற ஓசையோடு கீழிருக்கும் தகரக் குவளையில் தலைக்கு மேலே தூக்கிய தகரக் குவளையில் வளைத்து ஊற்றும்போது, திடீரென ஒரு நிமிடம் தேநீர் செடி அசைவது போல தெரியும். உழைப்பின் உன்னதத்தை விடியல் சூரியனும் வேடிக்கைப் பார்க்கும். தாராசுரத்திலிருந்து நான் கல்லூரிக்கு நடந்து போகையில் போகிற வழியெங்கும் எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளிகள் குடம், அடிக்கும் ஓசை உழைப்பின் ஓசையாய் என்னுள் இறங்கும். அந்த நேரம் நாம் என்ன வாக்கியம் நினைக்கிறோமோ அதையே அடிக்கணக்கில் திரும்பச் சொல்வது போல அது ஒரு உணர்வைத் தருவதுண்டு. அதை உழைப்பின் ரிதம் என்பதா? எந்த இலக்கியங்களும் சொல்லித் தராத வர்க்கத்தின் பாடலை அது என்னுள் விதைத்தது. பாத்திரம் தயாரிக்கும் அந்த உழைப்பாளிகளின் மூச்சோடு வெளிவரும் வெப்பக் காற்றும், பல பேர் சேர்ந்து ஒரே இடத்தில் தகடுகளைத் தட்டும் ஓசையும் தான் ஊரின் உயிர் துடிப்பு. கரி படிந்த முகத்தோடு அன்றாடம் வேலை முடிந்து வருகையில், பக்கத்து குடியிருப்பில் இருந்த எனக்கு கடலை பக்கோடா வாங்கி வரும் அவரை கரி ‘மாமா’ என்றே அழைத்திருக்கிறேன். சிறு தொழில்களை வாழவைத்த இந்தத் தொழிலாளர்களின் கைகள்தான் குடந்தையை உருவாக்கியவை!
பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சையின் போதெல்லாம் எங்கள் ஊரான தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலுக்கு அமைதியாக இருக்கும் என்று படிக்கப் போனதுண்டு. ஆனால் மண்டபங்களின் வவ்வால் வாடையும் சோழப் பேரரசின் அந்தப் பிரம்மாண்ட தனிமையின் மர்மமும், பேசத் துடிக்கும் சில கற்சிலைகளின் துயரமும் என்னை அங்கே இருக்க விட்டதில்லை. பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும். தம்பி போய் படிப்பா! என்று அவர்களின் அக்கறையைத் தாண்டி அவர்கள் குடும்பம் குடும்பமாக ஈடுபடும் வேலை கவனிக்க வைக்கும். சோழப் பேரரசின் ஐராதீஸ்வரர் கோயிலைச் சுற்றி அந்த ஏழைப் பேரரசுக் குடும்பங்கள் நாள் முழுக்க முகுது தண்டு முறிய உழைக்கும் காட்சிகள் புளிய மரங்களின் நிழல் எங்கும் விரியும். தொலைவிலிருந்து பார்த்தால் அவர்களின் ரத்த நாளங்களையே எடுத்து உலர வைத்தது போல இருக்கும். கும்பகோணம், தாராசுரம், திருபுவனம், அம்மாசத்திரம் என்று சுற்றுப்புறங்களில் உடம்பும் ஒரு நூலாக வெளியும் இவர்களின் அன்றைய அலுப்புக்கு மருந்து ஆனை மார்க் சுருட்டும், எம்.ஜி.ஆர். சினிமாவும்தான். “இந்தக் கஷ்டத்திலும் எத்தன புள்ள பாரு” என்று அவர்களைப் பார்த்து சிலர் கருவுவது உண்டு. உழைப்பிற்கு எண்ணற்ற கைகள் தேவைப்படும் அவர்களின் வாழ்க்கைச் சூழலை அறியாத திண்ணைப் பேச்சு கும்பகோணங்கள் அது! நூல் விரிக்கும் அளவுக்குக் கூட வீடு இல்லாததால் வெளியே நூல், சாயம் பார்ப்பதும் வீடுகளுக்குள் பெருங்குடும்பமாக அவர்கள் மடித்துப் படுத்துக் கொள்வதுமான அந்தத் தொழிலாளிகள் இல்லாவிடில் சாமிகளுக்கு ஏது சரிகைப் பட்டு! மாமிகளுக்கு ஏது மடிசார் கட்டு!
தாராசுரத்தில் எம்.எஸ். ஸ்டாலின் என்ற R.I.M.P ஒரு டாக்டர் இருந்தார். அனுபவ வைத்தியர். அவர் தி.க.காரர் பெரியார் படம், புத்தகங்களை வருபவர்கள் பார்வையில் படும்படி வைத்திருப்பார். பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்களைத் தாண்டி மக்களின் கண்களுக்கு புத்தகங்களைக் காட்டியது அந்தப் பகுதியில் அவர்தான். பார்ப்பனியம் பூஜைகளையும், விபூதியையும் காட்டி புத்தகங்களை மறைத்த காலத்தில் ஊரில் அவர் மட்டுமின்றி பல முடிதிருத்தும் கடைகளில் பெரியார் நூல்கள் மூளையைத் திருத்தும். இவர்களின் பங்களிப்பு விளம்பரமில்லாத சமூகத் தொண்டு. பார்ப்பனர்களும், மடாதிபதிகளும் தீபாராதனைகளைக் காட்டி கண்ணைக் கட்டும் காலத்தில் கண்களைத் திறந்த இவர்கள் அல்லவா கும்பகோணத்தின் குரு பரம்பரைகள்! அதுவும் மண்ணில் விளையாண்டு, சொறி சிரங்கு வந்தபோது ஸ்டாலினிடம் போக அவர் புண்ணைத் துடைக்கையில் அலறினேன். “ஏண்டா பல ஆண்டுகளாய் நம்ம மேல இருக்குற பார்ப்பன சிரங்கையே பொறுத்துகிட்டுருக்கோம், இந்த சொறிசிரங்கு எரியூதாடா? இத விட பெரிய எரிச்சல் அது, அதையே பொறுத்துக்கிட்டு இருக்கோம்! இது போயிடும், அத என்ன செய்ய போறோம்… ஹூம் சொல்லுடா?’’ என்று பேசிக் கொண்டே மருந்து போட்டு, மாத்திரை கொடுத்தது நினைவுக்கு வந்து போகிறது. அது மட்டுமல்ல ஊசி போடும்போது ஆ… என்று சிலர் கத்தும்போது, ஏண்டா! அத்தன ஊசியக் குத்திக்கிட்டு காவடி போட்டுக்கிட்டுப் போற இப்ப கத்துற? என்று இடித்துரைப்பார்! இதில் வியப்பு என்னவென்றால் அவர் தி.க. நாத்திகர், பகுத்தறிவுவாதி, பகுதி மக்களுக்கோ அவர் கைராசி டாக்டர்.
மகாமகத்தில் ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்
குருஸ்தலம், ராகுஸ்தலம், கேதுஸ்தலம் இப்படி கும்பகோணத்தை சுற்றி இருக்கும் பல ஊர்களும் விவசாயிகளின் வேலைக்களம்தான். இந்த விவசாயிகள், சிறு தொழிலாளிகள், வாகன ஓட்டுநர்கள், தெருவுக்கு கீரை கட்டு சுமக்கும் பெண்கள், பொற்றாமரைக்கும், மாமாங்குளத்திற்கும் காலரா வராமல் தடுக்கும் நகர சுத்தி தொழிலாளர்கள் இவர்கள்தான் உழைக்கும் கும்பகோணத்தின் தலைகள்! இவர்கள் இல்லாமல் இவர்களைப் பற்றி பேசாமல் என்னடா தலபுராணம்! இவர்களை அடிமைப்படுத்தும், சுரண்டும் சூழலை எதிர்க்காமல் ஊர் உருப்படுமா? எத்தனை மகாமகம் குளித்தாலும் பாவம் போகுமா? “சாமி கும்பிடுவதற்காக ஏன்? பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா?’’ என்று பெரியார் கேட்ட கேள்வியில் எவ்வளவு நியாயமும், உண்மையும் இருக்கிறது. பெரியாராவது பகுத்தறிவுவாதி. பார்ப்பனர் காளமேகப் புலவரே, “தோளை முறித்ததுமன்றி, நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய்; நாளை இனியார் சுமப்பார். எந்நாளும் உன் கோயில் நாசந்தானே!’’ என கோயில் நாசமாய் போகட்டும் என்று குருக்களையும் பல்லக்கில் சுமந்ததை நொந்து பாடியுள்ளார்.
பார்ப்பன இந்துவெறியை பல்லக்கில் ஏற்றி நம் தோள்களை முறிக்கும் தொலைநோக்குத் திட்டத்தில் ஒன்றுதான் மகாமகத்துக்கு வடக்கிலிருந்து அகோரிகளை அழைத்துவருவது, துறவியர் மாநாடு நடத்துவதெல்லாம், மெல்ல மெல்ல வடக்கே கும்பமேளா போல திருவிழாக்களை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆரிய பரிவாரத்தின் கைக்கருவிகளாக தீட்டிக் கொண்டு மக்களை இந்து மதவெறிக்குள் திரட்டுவது என்பதுதான் அவர்களின் திட்டம். சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கையை மெல்ல மெல்ல இந்துமதவெறி நம்பிக்கையாக மாற்றும் காவியுலக பாவிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற உழைக்கும் வர்க்கத்தின் விசுவரூப எழுந்தருளை வேண்டி நிற்கிறது உலகம்!
நேற்று கேரள கவர்னராக சதாசிவம்! இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!
தத்துவும் சதாசிவமும்
பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது “நீதிபதிகளும் தலைமை நீதிபதிகளும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு என கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிடவேண்டும் என அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகை. சட்டங்களை நன்றாக தெரிந்துவைத்திருப்பவர்கள். இன்னொரு வகை சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என கிண்டலடித்தார். ஜெட்லி சொன்னது இன்று நடைமுறை உண்மையாகி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது ஜெட்லியின் கட்சிதான் அப்படி நீதிபதிகளை ‘வளைத்து’ வருகிறது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம், துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் பா.ஜ.கவின் தேசிய செயலராக இப்பொழுது இருக்கும் அமித்ஷாவை விடுவித்தார். அதற்கு பலனாக தான் அவருக்கு கேரள கவர்னர் பதவி கிடைத்தது என சர்ச்சையானது . மற்றொரு சர்ச்சை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என சதாசிவம் லாபி செய்தார் என பரவலாக பேசப்பட்டது!
”இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரமுகர் சதாசிவம்தான். கடந்த செப்டம்பரில் (2014-ல்) அவருடைய நியமனம் நடைபெற்றபோது 2 முன்னாள் தலைமை நீதிபதிகள் அதை விமர்சித்தனர். அரசியல் நெருக்கடிக்கு ஆளாகாமல் நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதால், இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல என்றே கருதப்பட்டது.”என எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவும் குறிப்பிடுகிறார்.
கேரள கவர்னராக நியமனம் குறித்து தனது அதிருப்தியை முன்னாள் கூடுதல் சாலிசிடர் ஜெனரல் கே.வி. விஸ்வநாதன் திறந்த கடிதம் மூலம் சதாசிவத்திற்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களின் கரங்களுக்கிடையே இடைவெளி என்பது ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்து இருக்க வேண்டும். மாறாக கரங்கள் இடைவெளியை குறைத்து ஆரத்தழுவினால், அது பயங்கர ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நீதிபதிகளான வி.என். கரே மற்றும் கே.டி. தாமஸ், சட்ட ஆனையத்தின் தலைவர் ஏ.பி. ஷா, மூத்த வழக்குரைஞர்கள் ராஜீவ் தவான் மற்றும் பாலி.எஸ்.நாரிமன் போன்றோர் சதாசிவத்தின் நியமனத்தை விமர்சித்து இருந்தனர். அனைத்திந்திய பார் அசோசியஷேனும் மற்றும் கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் நியமனத்தை கண்டித்திருந்தது.
அமித் ஷாவுடன் சதாசிவம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதோ ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்!
குஜராத் படுகொலைகள் வழக்கில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய சஞ்சீவ்பட் மனுவை தள்ளுபடி செய்தார்
மாயா கோத்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைப்பு மற்றும் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதி தத்து, மாயா கோத்னானிக்கு ஜாமீன் கிடைத்தே தீர வேண்டும் என்பது போல செயல்பட்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வருடம் ஜனவரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோடியை சிறந்த தலைவர், நல்ல மனிதர் மற்றும் தொலைநோக்கு பார்வை உடையவர் என்று மோடியை புகழ்ந்தார்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்து மற்றும் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க ‘கால்குலேட்டர்’ புகழ் குமாரசாமியை பயன்படுத்தியவர்
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தத்துவிடம் புகார் அளித்தார்கள். அதற்கு, ’யாராவது ஒருவர் நான் 1000 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்கினேன் என்று கூறுவார்கள். கவலைபடாதீர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு தடித்த தோல் இருக்கிறது’ என தேர்ந்த பிழைப்புவாதி போல் பதில் அளித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் தத்து எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை. அவர் அளித்த உத்தரவு முறைகேடனாது மற்றும் சந்தேகத்திற்கு உரியது அதனால் இந்த வழக்கை மேலும் அவரே விசாரிக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் 1000 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட மனுவை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர்.
எச்.எல் தத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்களுக்கு அனுப்பி இருந்தார். அதை ஊடகங்கள் வெளியிடாததை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்
மதுரையில் வழக்குரைஞர்கள் ரமணா படம் போல டாப் 5 ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டபொழுது மிகவும் துடித்துப்போனவர் தத்து. நீதிபதி கர்ணன் குறித்த ஒரு வழக்கில், சம்பந்தமேயில்லாமல் வழக்குரைஞர்களால் நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்று அலறினார்
இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது தான், தேசிய மனித உரிமை ஆணையர் பதவி கிடைத்திருக்கிறது.
மோடியுடன் தத்து
நீதிபதிகள் இவ்வாறு பதவிகளை தேடி ஓடுவது என்பது நீதித்துறையின் சுதந்திரதன்மைக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கான மோசமான அடையாளங்கள் சதாசிவம் நியமனமும் அதன் பின் தொடரும் தத்துவின் நியமனமும்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்மையாக தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் “ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் என்பது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.” என குறிப்பிட்டார்.
குன்ஹாவின் வரையறைப்படி, பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய முரண் இது!
நிலவுகிற மோடி அரசு அறிவிக்கப்படாத நெருக்கடியை நிலையை நாடெங்கும் அமுல்படுத்திவருகிறது. தனது வானர கொலைகாரப் படைகளை காக்க காவி சிந்தனையுள்ள நீதிபதிகளை நீதித்துறைக்குள் நியமிக்க எல்லாவகையிலும் முயன்றுவருகிறது. அவர்கள் எதற்கு? நாங்களே நீங்கள் நினைப்பதை நிறைவேற்றி தருகிறோம் என்பதை தான் கவர்னர் பதவியும், மனித உரிமை ஆணையர் தலைவர் பதவியும் நிரூபிக்கின்றன.
இறுதிச்சுற்று படத்தில் ஒரு வசனம் வரும். ”ஊழல்வாதிகள் உங்களை நான் விசாரிக்கனும், ஆனால், நீங்க விசாரிக்கிற இடத்துல உட்கார்ந்து இருக்கீங்க!” நேர்மையான வழக்குரைஞர்கள் நாம் இப்பொழுது கூண்டில் நிற்கிறோம். அவர்கள் நம்மை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒன்றிணைந்து நீதித்துறையில் ஊழல்வாதிகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும் பொழுது மட்டும் தான் அவர்கள் பலம் இழப்பார்கள். இல்லையெனில், நம் அமைதியே அவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது!