Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 636

அம்மா சாராயம் எப்போது?

2

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்… அம்மா சாராயம் எப்போது?

ம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா திரையரங்கம், அம்மா விதை, அம்மா தேயிலை, அம்மா பெட்டகம்! கிலுகிலுப்பையிலிருந்து சாவுமேளம் வரையில் தமிழக மக்களின் வாழ்வின் மீது அம்மாவின் தனிப்பெரும் கருணை பொழிந்து கொண்டிருக்கிறது.

அம்மா உணவகம்

சென்னையில் ஏதேனும் ஒரு அம்மா உணவகத்துக்குச் சென்று பாருங்கள். கூலித்தொழிலாளிகள், ஓய்வு பெற்ற நடுத்தர வர்க்க முதியவர்கள், கண்கள் பஞ்சடைந்த செக்யூரிட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், சீருடை அணிந்த மாணவர்கள், கூர்க்காக்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், பி.பி.ஓ. வில் பணியாற்றும் ஐ.டி. ஊழியர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் – என உழைக்கும் வர்க்கத்தின் எல்லாப் பிரிவினரையும் அங்கே பார்க்கலாம். எல்லா மொழிகளையும் அங்கே கேட்கலாம். பசிதான் அம்மா உணவகத்தின் தேசியமொழி.

சென்னையில் தொடங்கிய அம்மா உணவகம் இன்று தமிழகமெங்கும் பரவிவிட்டது. வடமாநில அரசுகள் எல்லாம் இதனைக் கற்றுக் கொள்ளப் படையெடுக்கின்றன. அன்றாடம் யாருக்காவது தானம் செய்யாவிட்டால் தூங்க முடியாத கர்ணனைப் போல அம்மா தவிக்க, புதியதொரு அம்மா திட்டத்தைத் தொடங்கத் தவறினால் தமக்கு நேரக்கூடிய கதியை எண்ணி அமைச்சர்கள் தூக்கம் வராமல் புரள்கிறார்கள்.

பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அம்மா திட்டங்களுக்குத் திருப்பி விடுவதன் மூலமும், ஏற்கெனவே பல துறைகளிலும் அமலாகிக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கு அம்மா பெயரை சூட்டுவதன் மூலமும் அம்மா தேயிலை, அம்மா உப்பு என்பன போன்ற பித்தலாட்டங்கள் மூலமும், இந்த வக்கிரம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. அம்மா சாராயமும் அம்மா சுடுகாடும் மட்டும்தான் பாக்கி. தனது அமைச்சர்களும் கட்சியினரும் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவருமே தனது கருணையில்தான் உயிர் தரித்திருப்பதாகக் கருதுகிறார் ஜெயலலிதா.

***

ன்னொரு புறம், பார்ப்பன ஊடகங்களுக்கும், தனியார்மயக் கொள்கையின் ஆதரவாளர்களான வலதுசாரி வெறியர்களுக்கும் பாரதிய ஜனதா கும்பலுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சி தேனாக இனித்தாலும், இந்த அம்மா திட்டங்கள் மட்டும் வேப்பங்காயாய் கசக்கின்றன. சிறுபான்மை மதத்தினருக்கான சலுகைகளை மட்டுமல்ல, ரேசன் அரிசி, இலவசத் திட்டங்கள், இட ஒதுக்கீடு போன்ற அனைத்தையுமே ஓட்டுவங்கி அரசியல் என்று கூறித்தான் பா.ஜ.க. வெறுக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அம்மா திட்டங்களின் மீது இவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பென்பது அம்மாவின் மீதான வெறுப்பல்ல, ஏழைகளின் மீதான வெறுப்பு.

“இலவசத் திட்டங்களுக்கு” எதிரான இவர்களுடைய பிரச்சாரத்தின் விளைவாக இத்தகைய திட்டங்களால் பயனடையும் ஏழை மக்களே கூடத் தங்களுக்கு உரிமையில்லாத, நியாயமற்ற ஒரு சலுகையை அம்மாவுடைய கருணையின் காரணமாகத்தான் அனுபவிக்க முடிவதாக எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக ஜெயலலிதா, புதிய தாராளவாதக் கொள்கை விதிக்கின்ற கட்டுப்பாடுகளை மீறி ஏழைகளுக்கு மானியம் வழங்கும் “புரட்சி”த் தலைவியாகவும், ஏழை மக்களுக்கு கஞ்சி ஊற்றிக் காப்பாற்றும் “அம்மா” வாகவும் அவதரித்து விடுகிறார்.

அம்மா அரிசி

இதைவிடக் கேவலமான மோசடியோ, அயோக்கியத்தனமோ வேறில்லை. ஒரு ரூபாய் இட்லி முதல் கிலுகிலுப்பை வரையிலான அம்மா திட்டங்களை விட்டுத்தள்ளுங்கள். அவற்றைவிடப் பன்மடங்கு அதிகமான, அடிப்படையான பல உரிமைகளைத் தமது குடிமக்களுக்கு வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட பல உலக நாட்டு அரசுகள் சர்வதேச மன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஐ.நா. மன்றத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (1954) கீழ்க்கண்ட உரிமைகளை மக்களுக்கு வழங்குவது ஒரு மக்கள் நல அரசின் கடமை என்று கூறுகிறது.

போதுமான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட போதுமான தரத்திலான வாழ்க்கை; அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி, உயர்நிலைக்கல்வி, எளிதில் கிடைக்கத்தக்க உயர்கல்வி; வரையறுக்கப்பட்ட வேலை நேரம், போதிய ஓய்வு, முறையான ஊதியத்துடன் கூடிய ஆண்டு விடுமுறைகள்; நோய், ஊனம், பேறுகாலம், பணியிட விபத்து, வேலையின்மை, முதுமை ஆகியவற்றிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான காப்பீடு ஆகியவற்றை வழங்குவது எல்லா நாட்டரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ள கடமையாகும்.

உணவுக்கான உரிமை என்பது ஒரு குடிமகனின் உணவுத் தேவைகளை ஈடு செய்யும் அளவிலும் தரத்திலும் இருக்க வேண்டும் என்றும், உணவுக்கான உரிமை என்பது தண்ணீருக்கான உரிமையையும் உள்ளடக்கியது என்றும் கூறுகிறது இவ்வுடன்படிக்கை. இவை மட்டுமல்ல, மருத்துவம், ஓய்வூதியம், கட்டுப்படியாகும் செலவில் வீட்டு வசதி, பொதுப்போக்குவரத்து ஆகியவற்றை உத்திரவாதம் செய்வது, உற்பத்தியைப் பெருக்குவதற்கும், தேசிய ஒற்றுமைக்கும் சமூக அமைதியைப் பேணுவதற்கும் அவசியம் என்றும் கூறுகிறது ஐ.நா. மன்றத்தின் உடன்படிக்கை.

(முதலாளித்துவ) பொருளாதார அமைப்பின் இயக்கத்தை மாற்றீடு செய்வதற்கும், அதனை மீறிச் செயல்படுவதற்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பதுதான் ஒரு மக்கள் நல அரசின் சமூகக் கொள்கை என்று முதலாளித்துவ அறிஞர்களே வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். இத்தகைய வாழ்வுரிமைகளை வழங்குவதாக உத்திரவாதம் செய்ததன் அடிப்படையில்தான், குடிமக்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கான நியாய உரிமையை எல்லா அரசுகளும் பெற்றிருக்கின்றன.

அம்மா மடிக்கணினி

மேற்கூறிய உடன்படிக்கைகளிலெல்லாம் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசோ, அதன் மாநில அரசுகளோ இவற்றில் ஒரு சதவீதத்தினையேனும் நிறைவேற்றியிருக்கின்றனவா? 2000-க்குள் அனைவருக்கும் குடிநீர், 2005-க்குள் மின்சாரம், 2010-க்குள் கழிப்பறை என்று மாறிமாறித் தேதிகளை அறிவித்திருக்கின்றனரேயன்றி இவற்றை நிறைவேற்றும் திசையில் ஒருஅடி கூட முன்னெடுத்து வைக்கவில்லை. எனவேதான், மனித வளர்ச்சி குறியீட்டெண்ணில் இந்தியா மிகவும் பின்தங்கிய இடத்தில் இருக்கிறது.

35 ஆசிய நாடுகளில் அமலாக்கப்படும் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து ஆய்வு செய்த ஆசிய வளர்ச்சி வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியா 23-வது இடத்தில் (இலங்கை, பிலிப்பைன்சு போன்ற நாடுகளை விட பின்தங்கிய நிலையில்) உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உணவு, வீடு, கல்வி, மருத்துவம், ஓய்வூதியம், வேலையற்றோர் நிவாரணம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஜப்பான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.2 விழுக்காட்டை செலவிடுகிறது. உஸ்பெகிஸ்தான் 10.2%, மங்கோலியா 9.6%, இலங்கை 3.2% செலவிடுகின்றன. இந்திய அரசு செலவிடும் தொகையோ வெறும் 1.7% தான். அம்மாவின் ஆட்சியையும் உள்ளடக்கிய இந்திய அரசமைப்பு, எத்தனை மக்கள் விரோதமானது என்பதற்கு இதுவே சான்று.

இலவசத் திட்டங்களை வாரி வழங்கியதால் கஜானா காலியாகி விட்டது என்று கூறுவதும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் அதிகரித்து விட்டதன் காரணமாகத்தான் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த முடியவில்லை என்று கூறுவதும் வடிகட்டிய பொய். உணவு, இருப்பிடம், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அடிப்படையான தேவைகளை, எவற்றையெல்லாம் மக்களின் உரிமை என்று அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதோ, அவற்றை நிறைவேற்றாமல் குடிமக்களை மோசடி செய்திருக்கிறது. இந்த மோசடியில் ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கமும், ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கூட்டாளிகள்தான். இந்த மோசடியை மறைப்பதற்கு, பசித்து அழும் பிள்ளையைத் திசைதிருப்ப காட்டப்படும் வேடிக்கை போன்றவையே அம்மா திட்டங்கள். இவற்றின் மூலம் மக்களின் மீது கருணை மழை பொழிவது போல ஜெயலலிதா விளம்பரப்படுத்திக் கொள்கிறார். ஆளும் வர்க்கமோ இலவசத் திட்டங்களுக்காக கஜானா கொள்ளையிடப்படுவது போலக் கூச்சல் எழுப்புகிறது.

இந்த நாடகம் வெகு நேர்த்தியாக அரங்கேற்றப்படுகிறது. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அடைந்த படுதோல்விக்கு மிக முக்கியமான காரணம், தனியார்மய – தாராளமயக் கொள்கைகள்தான் என்பதை நாடறியும். இந்தக் கொள்கைகளால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களைச் சமாளிப்பதற்கு நூறு நாள் வேலை போன்ற திட்டங்களை அமலாக்கிய போதிலும், மன்மோகன் அரசால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

அம்மா குடிநீர்

ஆனால் “நூறு நாள் வேலை போன்ற திட்டங்களை வாக்காளர்கள் எதிர்க்கிறார்கள்; தொழில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளிக்கின்ற குஜராத் மாடலையே மக்கள் விரும்புகிறார்கள்; அதனால்தான் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டார்கள்” என்று இத்தேர்தல் முடிவுக்கு தலைகீழ் பொழிப்புரை சொல்கிறார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். நாற்காலியில் உட்கார்ந்த கணம் முதல் மானிய வெட்டு மானிய வெட்டு என்று கூவி வரும் மோடி அரசு, முதலாளி வர்க்கத்தின் மேற்கூறிய கருத்தைத்தான் வழிமொழிகிறது.

இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கிய நாடான மங்கோலியா, தனது மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குச் செலவிடும் அளவில் நான்கில் ஒரு பங்கைக்கூட இந்திய அரசு செலவிடவில்லை. இருந்த போதிலும் மக்களுக்கு மானியங்கள் வழங்கியே திவாலாகி விட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன.

ஏனென்றால், என்னென்ன அடிப்படைத் தேவைகளை இந்த அரசு மக்களுக்கு உத்திரவாதம் செய்ய வேண்டுமோ அவையெல்லாம் – உணவு, குடிநீர், வீடு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து – தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான விற்பனைச் சரக்குகளாக மாற்றப்பட்டு விட்டன. இவை விற்பனைச் சரக்குகளாக்கப்பட வேண்டும் என்பதுதான் “காட் ஒப்பந்தம்”. இந்த துறைகளெல்லாம் பெரும் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளை இலாபமீட்டுவதற்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளும், மருத்துவமனைகளும், தண்ணீர் கம்பெனிகளும் நடத்தி வரும் இலாபவேட்டைக்கு இடையூறு செய்யக்கூடாது என்பதுதான் இவற்றிலிருந்தெல்லாம் அரசு விலகுவதற்கான காரணமேயன்றி, மக்கள் நலத் திட்டங்களுக்கு மானியம் கொடுத்து கஜானா காலியாகிவிட்டது என்பதல்ல. உண்மையில் கஜானாவைக் காலியாக்குபவர்கள் பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான். இவர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும் மானியங்களும்தான் ஆண்டுதோறும் கூடி வருகின்றது என்பதை பத்திரிகையாளர் சாய்நாத் ஆண்டுதோறும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறார்.

பெரு முதலாளிகளுக்கு வரி விதித்து, அந்த வருவாயின் மூலம் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களை அமல் படுத்துவது – இதுதான் மக்கள் நல அரசு என்பதற்கு முதலாளித்துவ அரசியலாளர்களே கூறுகின்ற இலக்கணம். தனது சுரண்டலைத் தொடர்வதற்கும், அதனைப் பாதுகாக்கின்ற அரசமைப்புக்கு மக்கள் மத்தியில் நியாயவுரிமை பெறும் நோக்கத்திலும்தான் மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கத்தை முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கியது.

அம்மா டாஸ்மாக்

ஆனால், இன்று மக்கள் நலத்தைப் பேணும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டுமென்று உலக முதலாளி வர்க்கம் விரும்புகிறது. எனினும், அவ்வாறு விலகும்பட்சத்தில் மக்கள் மத்தியில் எழக்கூடிய லண்டன் கலகம் போன்ற சமூக கொந்தளிப்புகளைக் கண்டு அஞ்சவும் செய்கிறது. இலண்டன் கலகத்தைப் போன்றதொரு கலகம் அமெரிக்காவில் வெடிக்காமல் தடுக்க வேண்டுமானால், அமெரிக்க முதலாளிகள் கூடுதல் வரி விதிப்பை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற உலக கோடீசுவரன் வாரன் பஃபேயின் அறிவுரைப்படி, புதிய வரி விதிப்பை அறிமுகப்படுத்தினார் ஒபாமா. இதே காரணத்தினால்தான் மானிய வெட்டு குறித்து உலகத்துக்கு உபதேசிக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே பல சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்தப்படும் இலவசக் கல்வி, மருத்துவம், உணவு மானியம், வேலையற்றோர் நிவாரணம் போன்ற சமூக நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்குகூட இந்தியாவில் அமல்படுத்தப்படுவதில்லை. அது மட்டுமல்ல, பெருமுதலாளிகள் மீதான வருமான வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற நேர்முக வரிகள் மிகவும் குறைவாக விதிக்கப்படுகின்ற நாடுகளில் ஒன்று இந்தியா.

கடந்த இருபது ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள், இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். விவசாயத்தின் அழிவையும் நகரமயமாக்கத்தையும் ஊக்குவிக்கும் அரசின் கொள்கை, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தரகு முதலாளிகளின் கொள்ளைக்காக விவசாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாகத் துரத்தப்படுதல், தாராளமயக் கொள்கையால் போண்டியாகிப் போன இலட்சக்கணக்கான சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் – இவையனைத்தும் கோடிக்கணக்கான மக்களை வேலையற்றோர் பட்டாளமாக உழைப்புச் சந்தைக்குள் துரத்துகின்றன. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்தும் விற்பனைச் சரக்குகளாக்கப்பட்டு விட்டதால், வரம்பின்றி அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் மிகப்பெரும் அளவில் பெண்களையும் உழைப்புச் சந்தைக்குள் தள்ளியிருக்கின்றன. இவர்களன்றி, ஒன்றுக்குப் பத்தாகத் தனியார் கல்லூரிகளால் உற்பத்தி செய்யப்படும் பொறியாளர்களும், பல்வேறு தொழிற்கல்விகள் பயின்ற பட்டதாரிகளும் வந்து குவிகிறார்கள்.

வேலையற்றோர் பட்டாளம் அதிகரிக்க அதிகரிக்க ஊதியம் குறைகிறது. பொறியாளர் பட்டம் பெற்ற இளைஞர்கள் மாதம் நாலாயிரம், ஐயாயிரம் ஊதியத்துக்கே அலைமோதுகிறார்கள். மறுபுறம் விலைவாசி உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊதியத்தின் உண்மை மதிப்பை ஒவ்வொரு நாளும் குறைத்து வருகிறது.

இந்த இடத்திலிருந்து அம்மா உணவகத்தைப் பாருங்கள். காக்கிச் சட்டை போட்ட துப்புரவுத் தொழிலாளிகள் முதல் கவுரவமாக உடையணிந்த பட்டதாரி இளைஞர்கள் வரையிலான பல்வேறு பிரிவு உழைப்பாளிகள், நீங்கள் இதற்கு முன் ஒரே கூரையின் கீழ் பார்த்திருக்க முடியாத பல வர்க்கத்தினரை இங்கே கொண்டு சேர்த்தது எது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

விண்ணை முட்டும் கட்டிடங்கள், மால்கள், நவீன கார்கள், கைபேசிகள் என்று மின்னும் சென்னை நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கையேந்திபவன்களும் கூழ் விற்கும் பெண்களும் முளைத்து வருவதை அவதானித்த சென்னை மேயர் துரைசாமி, பெருகி வரும் உழைக்கும் வர்க்கத்தின் அழிபசியை அம்மாவுக்கு ஆதரவாக அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்திலும், அப்படியே “சுகாதாரமற்ற” கையேந்தி பவன்களை ஒழிக்கும் மத்திய அரசின் நோக்கத்தை (Food Standards and Safety Act) நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்திலும் அறிமுகப்படுத்தியதுதான் அம்மா உணவகம்.

பணவீக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே அம்மா திட்டங்கள் என்று கூறுகிறது தமிழக அரசு. பணவீக்கத்துக்குப் பொருத்தமான ஊதியத்தை வழங்குமாறோ, சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்குமாறோ முதலாளிகளுக்கு அம்மா உத்தரவிட மாட்டார். ஏனென்றால், குறைந்த பட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை போன்றவையெல்லாம் அம்மாவின் ஆதர்சக் கொள்கையான புதிய தாராளவாதக் கொள்கைக்கு எதிரானவை. சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் அனுபவிக்கும் துயரம் அம்மாவின் பெருங்கருணையை விளங்கிக் கொள்வதற்கு ஒரு சான்று.

இருந்த போதிலும் உழைப்பாளிகள் அரை வயிறு கஞ்சியாவது குடித்தால்தான் அடுத்த நாள் உழைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை அம்மா அறிவார். அம்மா உணவகத்தில் உழைப்பாளிகள் விழுங்கும் ஒவ்வொரு கவளமும் மறு கணமே, பி.பி.ஓ.விலும், கட்டுமானத்தொழிலிலும், சென்னை மெட்ரோவிலும் மலிவு விலை உழைப்பாக மாற்றப்பட்டு முதலாளிகளுக்குத்தான் வழங்கப்படுகிறது. ஆகவே, ஒரு ரூபாய் இட்லியும் சப்பாத்தியும் முதலாளிகளுக்கு அம்மா வழங்கும் மறைமுக மானியம் என்பதே உண்மை. அம்மா உணவகம் முதல் பெட்டகம் வரையிலான திட்டங்களும் இலவச அரிசி, தங்கும் விடுதிகள் போன்றவையும் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.

அம்மா மருந்தகம், அம்மா வாட்டர் போன்ற திட்டங்கள் தனியார்மய கொள்கைகளால் அதிருப்தியுற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தை ஏமாற்றுவதற்கானவை. மருந்துக்கு விலைக்கு உச்ச வரம்பே கூடாது என்ற தாராளவாதக் கொள்கையைத் தடுக்காமல், கழிவுத்தொகையை தள்ளுபடி செய்கிறது அம்மா மருந்தகம். லிட்டர் ஒன்னேகால் பைசா விலையில் கோகோ கோலாவுக்குத் தண்ணீரைக் கொடுத்து, அதை லிட்டர் 20 ரூபாய்க்கு விற்க அனுமதித்து விட்டு, லிட்டர் பத்து ரூபாய்க்கு மலிவு விலை அம்மா வாட்டர்; ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் டிக்கெட் விலை வைப்பதற்கு திரையரங்குகளை அனுமதித்து விட்டு, அம்மா திரையரங்கம் – இவையனைத்தும் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் கோபம் வெடித்து விடாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வுகள்!

இலவச அரிசியும், ஒரு ரூபாய் இட்லியும் இல்லாவிட்டால் வாழ முடியாது என்ற நிலைக்கு உழைக்கும் மக்களை ஆளாக்கியது யார், எந்தக் கொள்கை? இந்தக் கேள்வியையே எழுப்பவிடாமல் தடுத்து, சுரண்டப்படும் மக்களின் வறுமையை அவர்களுடைய துர்ப்பாக்கிய நிலையாகச் சித்தரித்து, கருணை அடிப்படையில் அவர்களுக்கு கஞ்சி ஊற்றுவதாக காட்டுபவையே அம்மா திட்டங்கள்.

அம்மா உணவகம் முதல் பெட்டகம் வரையிலான திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்றப்படுகின்றன? இவற்றை நிறைவேற்றும் செலவுக்காக முதலாளிகள், பணக்காரர்கள்மீது ஜெயலலிதா அரசு சல்லிக்காசு கூட கூடுதல் வரி விதிக்கவில்லை. இதுதான் நாம் கவனிக்க வேண்டிய அம்மாவின் பெருங்கருணை!

இத்திட்டங்களுக்கான ஒவ்வொரு ரூபாயும் உழைக்கும் மக்களிடமிருந்துதான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மக்களைப் போதைக்கு அடிமையாக்கிப் பிடுங்கப்படும் சாராய வருமானத்திலும், எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பிடுங்கப்படும் மறைமுக வரிப் பணத்திலிருந்தும்தான் அம்மா திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. தற்போதைய டாஸ்மாக் விலை உயர்வின் மூலம் மட்டுமே 2500 கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டிருக்கிறது, ஜெ.அரசு.

தான் இதுவரை பெற்றிருக்கும் பட்டங்களிலேயே அம்மா என்ற பட்டத்தைத்தான் பெரிதாகக் கருதுவதாகக் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. ஒரு வக்கிரமான பாசிஸ்டு ஆளுமையின் சுய விளம்பர மோகம், இரக்கமற்ற ஆளும் வர்க்கச் சுரண்டலை மறைப்பதற்கான முகமூடியாகப் பயன்பட்டு வருகிறது.

தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக் கூட வக்கில்லாத ஒரு வர்க்கம் வரலாற்றிலேயே முதலாளி வர்க்கம் மட்டும்தான் என்பார் கார்ல் மார்க்ஸ். அது மட்டுமா, அடிமையின் சோற்றுப்பானையில் கைவிட்டுத் திருடி வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளி வர்க்கம்தான். முதலாளி வர்க்கத்தின் கவுரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு, அவர்களின் சார்பில் நம் சோற்றுப்பானையில் திருடி எடுத்த கவளத்தை, மலிவு விலையில் நமக்கே விற்பனை செய்யும் அம்மா, அன்னலட்சுமி என்று அழைக்கப்படுகிறார்.

– சூரியன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

மணிப்பூர் : இராணுவத்தின் குற்றத்தை விசாரிப்பவனும் குற்றவாளியாம்!

1

ணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போலி மோதல்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சங்கமும் மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பும் அம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் போலி மோதல்படுகொலைகளில் 1528 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படுகொலைகள் குறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தன.

நினைவிடம்
அசாம் துப்பாக்கிப் படை நடத்திய மாலோம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் 13-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர்களின் நினைவிடத்தில் நடந்த அஞ்சலி (கோப்புப் படம்).

இவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ள இப்போலி மோதல்கொலைகளுள் குறிப்பிடத்தக்க சில வழக்குகள் மணிப்பூர் மாநில அரசாலும், அம்மாநில நீதிமன்றங்களாலும் விசாரிக்கப்பட்டு, அவை அரசுப் படைகளால் சட்டவிரோதமான முறையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்தான் என்பதும் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, அப்பாவிகள் என்பதும் ஏற்கெனவே நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும், இப்படுகொலைகளை இழைத்த அரசுப் படையினர் இதுவரை தண்டிக்கப்படவில்லை. காரணம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் அரசுப் படையினர் அம்மாநிலத்தில் நிகழ்த்திவரும் படுகொலை, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல் உள்ளிட்ட சகலவிதமான சட்டவிரோத, பயங்கரவாதக் குற்றங்களிலிருந்தும் அவர்களைக் காக்கும் கேடயமாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது, மைய அரசு. பல ஆண்டுகளாகப் போராடியும் நீதி கிடைக்காத நிலையில்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம் அவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ள போலி மோதல்கொலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆறு படுகொலைகளை எடுத்துக்கொண்டு, அவை குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை கமிசனை கடந்த ஆண்டு ஜனவரியில் நியமித்தது. இப்படுகொலைகளை விசாரித்த ஹெக்டே கமிசன், அவை அனைத்தும் போலி மோதல்படுகொலைகள்தான்” என்பதை உறுதி செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தனது அறிக்கையை உச்சநீதி மன்றத்திடம் அளித்தது.

இதற்கு தற்பொழுது பதில் அளித்துள்ள மோடி அரசு, “ஹெக்டே குழுவின் அறிக்கை தவறானது; சட்டப்படி பொருத்தமற்றது. ஆயுதப்படையினர் மீது விசாரணை நடத்த வழங்கப்பட்டுள்ள பரிந்துரையும் ஏற்கத்தக்கதல்ல” எனக் குறிப்பிட்டு, நீதிபதி ஹெக்டேயின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. மேலும், இவ்வழக்கின் நீதிமன்ற நண்பரான மேனகா குருசாமி நடுநிலையாக நடந்துகொள்ளாமல், புகார் அளித்தவர்களின் வழக்குரைஞராக நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. உச்சநீதி மன்றத்தால் நீதிமன்ற நண்பராக நியமிக்கப்பட்ட மேனகா குருசாமி அறிக்கையிலுள்ள நியாயத்தை ஆதரித்த ஒரே காரணத்திற்காக மோடி அரசால் தீவிரவாதிகளின் நண்பராக ஆக்கப்பட்டுவிட்டார்!

நடந்திருப்பது ஓரிரு படுகொலைகள் அல்ல; 1,528 படுகொலைகள். இவற்றுள் பல படுகொலைகள் போலி மோதல்கொலைகளென்று நீதிமன்ற விசாரணை, தனிநீதிபதி விசாரணை, தேசிய மனித உரிமை கமிசன் விசாரணை ஆகியவற்றின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. முகத்தில் அறையும் இந்த உண்மைகளை ஒருபொருட்டாக மதிக்காமல் ஒதுக்கித் தள்ளியுள்ள மோடி அரசு, அம்மாநிலத்தில் நல்ல நோக்கத்தோடு இந்திய இராணுவமும், போலீசாரும் பணியாற்றி வருவதாகவும் அவர்களைத் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் போலி மோதல்படுகொலை குறித்துப் பிரச்சாரம் நடத்தப்படுவதாகவும் கோயபல்சு பாணியில் அறிக்கை நெடுகிலும் புளுகித் தள்ளியிருக்கிறது.

சாலையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்களை அசாம் துப்பாக்கிப் படை நாயைப் போலச் சுட்டுக் கொன்ற மாலோம் படுகொலை ஒன்றே, இந்திய அரசுப் படைகள் மணிப்பூரில் எத்தகைய பஞ்சமா பாதகங்களைத் துணிந்தும், தம்மை யாராலும் தண்டிக்க முடியாது என்ற திமிரோடும் செய்துவருகின்றன என்பதை நிரூபித்திருக்கிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இப்படுகொலைக்கு இதுநாள் வரை நீதி கிடைக்கவில்லை. இப்படுகொலைக்குப் பிறகுதான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து விலக்கக் கோரி ஐரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரது போராட்டமும் பதினான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது.

கடந்த 2004 ஜூலை 11 அன்று தங்ஜம் மனோரமா என்ற பெண்ணைத் தீவிரவாதி என முத்திரை குத்திக் கடத்திச் சென்ற துணை இராணுவப் படையினர், அவரைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அதன் பின் சாட்சியத்தை அழிக்கும் கிரிமினல் நோக்கத்தோடு அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பைத் துப்பாக்கி குண்டுகளால் சிதைத்துக் கொன்றனர். இப்படுகொலைக்கு நீதி கேட்டு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டமும், அப்போராட்டத்தின்பொழுது “இந்திய இராணுவமே, எங்களையும் பாலியல் வல்லுறவு கொள்” என அத்தாய்மார்கள் எழுப்பிய முழக்கமும் உலகத்தையே உலுக்கிப் போட்டது.

எப்பொழுது மணிப்பூர் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ அப்பொழுதிலிருந்தே அம்மாநிலத்தில் சுயநிர்ணய உரிமை கோரியும், ஜனநாயக உரிமைகளைக் கோரியும், இராணுவத்தை வெளியேறக் கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரியும் தாய்மார்கள், பெண்கள், வாலிபர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அச்சமூகத்தின் பெரும்பான்மையோர் போராடி வருகின்றனர். உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும்.

அம்மக்களது போராட்டம் இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான், மோடி அரசு துணை இராணுவம் நடத்திய பயங்கரவாதப் படுகொலைகளை விசாரிக்க முடியாதென்றும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் சின்ன சீர்திருத்தம்கூடச் செய்ய முடியாதென்றும் உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் நீதிமன்றமாவது நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டுமென அரசு பயங்கரவாதத்திற்குப் பலியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்தும், காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்திய பத்ரிபால் போலி மோதல்படுகொலைகள் குறித்தும் ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளைத் திரும்பி பார்த்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவே கூடாதென கூறிவருகிறது இந்திய இராணுவம். அரசுப் படைகள் நடத்தியிருக்கும் போலி மோதல்படுகொலைகள் மீது விசாரணை நடத்த முடியாதென அறிக்கை அளிக்கிறது மோடி அரசு. இந்த முட்டுக்கட்டைகளையும் மீறி போலி மோதல்படுகொலைகள் விசாரணைக்கு வந்துவிட்டால், அவ்வழக்குகளை இராணுவமே விசாரித்துத் தீர்ப்பளிக்கலாம் எனச் சலுகை வழங்குகிறது, உச்ச நீதிமன்றம். இப்படிப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதை எப்படி உறுதி செய்ய முடியும்? நீதி பெறுவதற்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மட்டுமே நம்புங்கள் என்று கூறுபவர்கள்தான் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

– கதிர்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

தந்தை பெரியாரை கைது செய்த தமிழக போலீசு !

186

மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

கல்லூரி மாணவர்களை சந்தித்த ‘பெரியார்’

“மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ள கருத்தரங்கத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிரசுரங்களை அச்சிட்டு சென்னை மாநகரம் முழுவதும் கொடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மொழிப்போரில் இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடி அதனை வீழ்த்திய மாணவர்கள் மோடி அரசின் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை தந்தை பெரியார் எப்படி நேரடியாக வலியுறுத்தினாரோ அப்படி அணுக வேண்டும் என்பதனால் பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, அம்பேத்கர் சட்டக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, ராணிமேரிக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியாரின் வேடமிட்டு பிரசுரங்கள் கொடுத்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நந்தனம் கல்லூரி,  லயோலா கல்லூரி, சட்டக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியார் வேடமணிந்த தோழர்கள் செல்கின்ற மாணவர்களை அழைத்து “நான் இங்கே  நின்னுகிட்டு இருக்கேன், இங்க வா, இந்த பிரசுரத்தைப்படி, என்ன புரியுது சொல்லு” என்று கேட்டார்கள். மாணவர்களும் பெரியார்களிடம் மரியாதையுடன் பதில் சொல்வது என்றும் தங்கள் சந்தேகங்களை கேட்டுத்தெளிவு பெறுவது என்றும் இருந்தனர். பல மாணவர்கள் தாங்கள் கருத்தரங்கத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். காதில் இயர்போனுடன் சென்று கொண்டிருந்த ஒரு மாணவியை பெரியார் அழைத்து “முதல்ல ஹெட்போனை கழட்டு, உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே” கேட்டவுடன் அந்த மாணவியும் இயர்போனை கழட்டிவிட்டு “ தமிழை கேவலப்படுத்துறவனை செருப்பாலேயே அடிக்கணும்” என்றார்.

பச்சையப்பன் கல்லூரியில் பிரசுரங்கள் கொடுக்கத் தொடங்கியதில் இருந்தே  உளவுப்பிரிவு போலீசு ஒருவர் பிரச்சினை செய்து “வேற எங்கேயாவது போய் கொடு, இங்கே கொடுக்காதே” என்றார். பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்று  நாம் கூறுவது எதையும் கேட்கவில்லை. போலீசுகாரர்களை கூப்பிட்டு  “டேய்! அங்க என்னடா செஞ்சுகிட்டு இருக்கீங்க , இவனுங்களை அடிச்சு வண்டியில ஏத்துங்கடா” என்றவுடன்  பெரியார் வேடமிட்ட 7 தோழர்களையும் அடித்து வண்டியில் ஏற்றி ஜி-3 காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு இருந்த ஆய்வாளரிடம் “பெரியார் என்ற ஒருத்தர் இல்லை என்றால் நீங்க இன்ஸ்பெக்டர் ஆக முடியுமா? அவர் வேசம் போட்டதுக்குதான் எங்களை அடிச்ச்சு கைது செய்தீங்களா?” என்றார்கள் தோழர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதற்கு பதில் அளிக்காத ஆய்வாளர், தான் வந்த 32 நாட்களில் கல்லூரியில் படிக்கின்ற சூழலை ஏற்படுத்த பாடுபடுவதாகக் கூறி அந்தக் கல்லூரியில் பிரசுரம் கொடுக்கக்கூடாது என்றார். “எங்களை ரிமாண்ட் பண்ணுங்க, வெளியே விட்டா கண்டிப்பாக அந்தக்கல்லூரியில் தான் பிரசுரம் கொடுப்போம். ரிமாண்ட் செய்தாலும் கவலை இல்லை, பெரியார் வேசம் போட்டு அவர் என்ன செய்யச்சொன்னாரோ  அதைச் சொன்னதுக்குதானே  கைது செய்தீங்க, சிறைக்கு போகிற வரை  பெரியார் முகமூடியை கழட்ட மாட்டோம், எங்க பேரையும் சிறை வரைக்கும் பெரியார்ன்னு தான் பதிவு செய்வோம்” என்று வாதிட்டார்கள் தோழர்கள்.  “சரி கிளம்புங்க, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கொடுங்க” என்றார் ஆய்வாளர். சொரணை கெட்டுப்போய் இருந்த  இந்த சமூகத்தை தொந்தரவு செய்வதுதான் பெரியார் வேலை என்பது தெரியவில்லை ஆய்வாளருக்கு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அந்தக்காவல் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 2 கி.மீ தொலைவு, அது வரை நடந்தே  சென்று பொது மக்கள் அனைவரிடமும் பிரசுரங்களை கொடுத்தோம். பெரியார் வேடத்தில் இருந்த இளந்தோழர் ஒருவர் கொடுக்கும் பிரசுரத்தை மரியாதையுடன் எழுந்து  நின்று வாங்குவது கட்டிப்பிடித்து வாழ்த்துவதும்  தாங்களே முன்வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்றும் மக்கள் ஆதரவளித்தனர். மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பிரசுரம் கொடுத்தனர். வெள்ளை சட்டை என்று அழைக்கப்படும் அந்த ஐஎஸ் போலீசு  அங்கே போ, இங்கே போ என்று விரட்டிக்கொண்டும் தோழர்களை போட்டோ எடுத்துக்கொண்டும் வழக்கு பதிவு செய்தும்  இருந்தார். ஒரு அமைப்பு என்று இருக்கும் நபர்களையே இப்படி காட்டு மிராண்டி போல அணுகும் போலீசு சாதாரண மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்திக்கொண்டு இருக்கும் என்பதை உணர முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டையை சோதித்து அனுப்புவது முதல் தாமதமாக வரும் மாணவர்களின் அடையாள அட்டைய பிடுங்கி வைத்துக் கொள்வது  தினமும் கல்லூரிக்கு வரும் மாணவர்களை பொய் வழக்கில் பிடித்துக்கொண்டு செல்வது வரை அனைத்தும் போலீசு ராஜ்ஜியம் தான்  பச்சையப்பன் கல்லூரியில் நடக்கிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக்  காட்டியது.

முன்னெப்போதையும் விட பார்ப்பனீய ஆதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் தற்போதைக்கு வந்திருக்கிறது. பெரியார் இப்போதுதானே வர ஆரம்பித்து இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக பார்ப்பனீயமும் அதன் ஊது குழலான போலீசும் வாலை சுருட்டிக்கொண்டுதான் ஆக வேண்டும்.

புமாஇமு கருத்தரங்கம் (1) புமாஇமு கருத்தரங்கம் (2) புமாஇமு கருத்தரங்கம் (3)

தகவல்:

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

ஊடகங்கள் சில உண்மைகள் – கேலிச்சித்திரங்கள்

3
ஊடகங்கள் கார்ட்டூன் 1
ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எது?
ஊடகங்கள் கார்ட்டூன் 1
ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எது?
ஊடகங்கள் கார்ட்டூன் 5
ராயல் குழந்தைக்கு ராயல் படப்பிடிப்பு!
ஊடகங்கள் கார்ட்டூன் 6
இனிமேல் நீதித் தராசு, ஊடகங்களின் கிசுகிசு தராசு என்றழைக்கப்படும்!
ஊடகங்கள் கார்ட்டூன் 4
ரத்தத்தை விழுங்கும் எழுத்தின் மை!
ஊடகங்கள் கார்ட்டூன் 3
டிவி கேமராவுக்கும் துப்பாக்கிக்கும் என்ன வேறுபாடு?
ஊடகங்கள் கார்ட்டூன் 8
போர்க்கால செய்திகள் – முதலாளிகளால் நட்டு வைக்கப்பட்ட சோளக்காட்டு பொம்மைகளின் பிரச்சாரங்கள்!
ஊடகங்கள் கார்ட்டூன் 7
ஃபெர்ஃபெக்ட் ஷாட்!
ஊடகங்கள் கார்ட்டூன் 2
அமெரிக்காவின் வெற்றி அனிமேஷன் வெற்றி!

நன்றி: Cartoon Movement

பொதுத்துறையைப் பாதுகாக்காமல் பணிப் பாதுகாப்பு சாத்தியமா?

2

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: பொதுத்துறையைப் பாதுகாக்காமல் வேலையை மட்டும் பாதுகாக்க முடியுமா?

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி 2012 முடியவுள்ள மூன்றாண்டுகளில் 17,058 கோடி ரூபாய் அளவிற்கு நட்டம் அடைந்திருக்கிறதெனவும், இதிலிருந்து அந்நிறுவனத்தை மீட்பதற்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் நிரந்தர ஊழியர்களை விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வெளியேற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது, நிர்வாகம். தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதனை நாடாளுமன்றத்தில் உறுதி செய்திருக்கிறார்.

பி.எஸ்.என்.எல் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்து தொழிலாளர்களும் – ஊழியர்களும் மகாராஷ்டிரா – நாக்பூர் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

நட்டத்தை ஈடுகட்ட தொழிலாளர்களைப் பலி கொடுப்பதோடு, 8,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிலங்களையும் மொபைல் டவர்களையும் விற்பதற்கும் நிர்வாகத்தை அனுமதித்திருக்கிறது, மோடி அரசு. இந்திய இரயில்வேக்கு இணையாகப் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களைக் கொண்டது, பி.எஸ்.என்.எல். இச்சொத்துக்களில் ஒரு பகுதியையும் இச்சொத்துக்களை உருவாக்க தமது வியர்வையைச் சிந்திய தொழிலாளர்களுள் ஒரு பகுதியையும் தனியார்மயத்திற்குக் காவுகொடுப்பது மன்னிக்கவே முடியாத துரோகமாகும்.

1995-ம் ஆண்டில் அரசின் ஏகபோக நிறுவனமாயிருந்த தொலை தொடர்புத் துறையைத் தனியார்மயமாக்கும் கேடுகெட்ட நோக்கில் அதனை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றியமைத்தது அப்போதைய காங்கிரசு அரசு. அதுவரை இலாபகரமாக இயங்கிவந்த தொலைதொடர்புத் துறையை நட்டத்தில் தள்ளுவதற்கான சதிக்கு இக்கார்ப்பரேட்மயமாக்கம் மூலம் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதனையடுத்து, தொலை தொடர்புத் துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இலாபத்தில் இயங்கி வந்த டெல்லி மற்றும் மும்பை பகுதிகளை இணைத்து எம்.டி.என்.எல்.-ம், மற்ற அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து பி.எஸ்.என்.எல்-ம் உருவாக்கப்பட்டன.

கைபேசித் தொழில்நுட்பம் இந்தியச் சந்தையில் அறிமுகமான போது அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருந்த பி.எஸ்.என்.எல், இச்சேவையில் இறங்குவதற்குத் தடைவிதித்ததன் மூலம் இத்துறையில் நுழைந்திருந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் இலாபத்தில் கொழிப்பதற்குப் பாதை அமைத்துத் தரப்பட்டது. பி.எஸ்.என்.எல்.-ன் காலை ஒடித்து, இத்துறையில் நுழைந்திருந்த கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் “டிராய்” எனும் அதிகாரத்துவ கண்காணிப்பு அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைக் குலைக்கும் சதி வேலைகளிலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன. ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் கம்பெனிகள், பி.எஸ்.என்.எல்-ன் நிலத்தடிக் கம்பி தடங்களைச் சேதப்படுத்துவது, அதனை எதிர்த்துக் கேட்கும் ஊழியர்களை குண்டர்கள் வைத்து தாக்குவது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகார வர்க்கம் சம்பளத்தை இங்கே வாங்கிக்கொண்டு, விசுவாசத்தைத் தனியார் முதலாளிகளிடம் காட்டும் ஐந்தாம்படைகளாக வேலை செய்து, பி.எஸ்.என்.எல்.-ஐப் படுகுழியில் தள்ளினர்.

இப்படிபட்ட சதித்தனங்கள், தில்லுமுல்லுகளுக்கு அப்பால் அத்துறையில் அரங்கேற்றப்பட்ட அடுக்கடுக்கான ஊழல்களும் பி.எஸ்.என்.எல்.-ஐ மீளமுடியாத நட்டத்தில் தள்ளின. தொலைத்தொடர்புத் துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்த காங்கிரசு பெருச்சாளி சுக்ராம்தான் அத்துறையில் அதுவரை இல்லாத அளவில் பல்லாயிரம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் பகற்கொள்ளை நடைபெறுவதற்கும் கால்கோள் நாட்டிச் சென்றார். சுக்ராமிற்குப் பின் தொலைதொடர்பு அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்கினார். பஸ்வானுக்குப் பின்னர் வந்த பிரமோத் மகாஜன் தனியார் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தில் இருந்து அரசுக்குச் செலுத்தவேண்டிய பங்கைக் குறைத்தது மட்டுமன்றி, அவை ஜி.எஸ்.எம். உரிமம் பெறவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதே காலத்தில்தான் இலாபத்தில் இயங்கிவந்த அரசுத்துறை நிறுவனமான வி.எஸ்.என்.எல். அதன் கையிருப்பில் இருந்த 3000 கோடி ரூபாயுடன் டாடாவிற்கு விற்கப்பட்டது. ஊரான் விட்டு நெயே என் பொண்டாட்டி கையே என்ற கணக்காக, இந்தப் பொதுப்பணத்தைக் கடத்திக் கொண்டுபோதான் நட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தை மீட்டார், உத்தமர் ரத்தன் டாடா.

பி.எஸ்.என்.எல் ஊர்வலம்
பி.எஸ்.என்.எல்-ஐச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா மாநிலம் – பெர்ஹாம்பூரில் நடத்திய ஊர்வலம் (கோப்புப் படம்)

உலகமகா யோக்கியராகக் கூறப்படும் அருண்ஷோரி பங்குச்சந்தையில் பி.எஸ்.என்.எல்-ன் பங்குகளை திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு விற்று நட்டத்தை ஏற்படுத்தினார். தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபொழுது, வெளிநாட்டுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்பாகக் காட்டி பல நூறு கோடிகளைச் சுருட்டியது ரிலையன்ஸ். இதற்கு நட்ட ஈடாகச் செலுத்தவேண்டிய 1600 கோடி ரூபாய் அபராதத் தொகையை 600 கோடி ரூபாயாகக் குறைத்து, அம்பானிக்குக் கறி விருந்து படைத்தார். அலைக்கற்றைகளைச் சுருட்டிக் கொள்வது தொடர்பாக தரகு முதலாளிகளுக்கு இடையே நடந்த நாய்ச்சண்டை காரணமாக அம்பலமானதுதான் இழிபுகழ் பெற்ற 2ஜி ஊழல்.

இத்தனியார்மய நடவடிக்கைகளும், கார்ப்பரேட் பகற்கொள்ளைகளும்தான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நட்டத்தில் தள்ளின என்ற உண்மை மூடிமறைக்கப்பட்டு, ஊழியர்கள் எண்ணிக்கைதான் நட்டத்திற்குக் காரணம் என்பது போல பித்தலாட்டம் செய்து வருகிறது, மோடி அரசு. அந்நிறுவனத்தில் பணியாற்றிவரும் 2,81,000 நிரந்தர ஊழியர்களுள் ஒரு இலட்சம் பேரை வெளியேற்றவது என்பது அசாதாரணமானது. இப்பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளர்கள் இந்நேரம் கலகத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஆனாலும், தொழிற்சங்கங்கள் எருமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக சொரணையற்றுக் கிடக்கின்றன.

தனியார்மயத் தாக்குதலைத் துணிந்து எதிர்கொள்ளாமல், அதற்கேற்றாற் போல அடக்கி வாசிக்கும் தொழிற்சங்கத் தலைமையின் துரோகத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. 1995-ல் தொலைதொடர்புத் துறையைத் தனியார்மயமாக்கவும், அத்துறையில் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதற்கு ஏற்ப சீர்திருத்தங்களைப் புகுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து தொலைபேசித் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால், போலி கம்யூனிஸ்டு கட்சியின் கீழிலிருந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் ஐந்தாவது நாளே, அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு உச்சநீதி மன்றம் விதித்த இடைக்காலத் தடையைக் காட்டி, போராட்டத்தை முடித்துக்கொண்டன.

இதன்பின், தனியார்மயமாவது தவிர்க்க முடியாதென்றும், இச்சூழ்நிலையில் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு, போனசு உள்ளிட்ட பண நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதுதான் காரிய சாத்தியமானதென்றும் நச்சுக் கருத்தைத் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து தனியார்மயத்திற்கு எதிரான எதிர்ப்பை மழுங்கடித்து, பிழைப்புவாதத்திற்கு உரமேற்றியது, தொழிற்சங்கத் தலைமை. குறிப்பாக, தொலைதொடர்புத் துறை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்பட்டபின் ஊழியர்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் போனசு கிடைத்ததையே ஆதாரமாகக் காட்டித் தனியார்மயத்திற்கு ஆதரவான மனோநிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டனர்.

மேலும், பி.எஸ்.என்.எல். உருவாக்கப்பட்ட பின், நிரந்தர ஊழியர்களிடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் போக்கு தீவிரம் எடுத்தது. இந்த ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் காண்டிராக்டுகளை எடுக்கும் புதிய முதலாளிகளாக உருவானது தொழிற்சங்கத் தலைமை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசிவது போல ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் காண்டிராக்டு தொழில், தொழிற்சங்கத் தலைமைக்கு ஜால்ரா தட்டும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இப்படியாக தொழிலாளர்களைப் பிழைப்பு வாதத்திற்குள் தள்ளியும், ஊழல்மயப்படுத்தியும் தனியார்மயத்திற்கு எதிரான உணர்வே மழுங்கடிக்கப்பட்டது. தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டிய ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயம் என்ற பெயரில் நடக்கும் பகற்கொள்ளையை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, அவர்களைத் தம்பக்கம் அணிதிரட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட ஊழியர்கள், அதற்கு மாறாக அக்கொள்ளையை மொன்னையாகக் கண்டிக்கும் பார்வையாளர்களாக அல்லது அக்கொள்ளைக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் பங்குதாரார்களாக மாறிப் போயினர்.

தொலைதொடர்புத் துறையில் மட்டுமல்ல, வங்கி, காப்பீடு எனப் பொதுத்துறையின் அனைத்து அரங்குகளிலும் தனியார்மயம் புகுத்தப்படும்பொழுது, அதன் ஊழியர்கள் தங்களின் பணிப் பாதுகாப்பு, சம்பளம், போனசு ஆகியவற்றை முன்னிறுத்தித்தான் அப்பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இக்குறுகிய தொழிற்சங்கவாதக் கண்ணோட்டமும், பிழைப்புவாதமும் அவர்களின் வேலைக்குக்கூடப் பாதுகாப்பு தராது என்பதைத்தான் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு இலட்சம் தொழிலாளர்களை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ள முடிவு எடுத்துக் காட்டுகிறது. பொதுமக்களுடன் இணைந்து பொதுச்சொத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டங்களில் இறங்கும்பொழுது மட்டும்தான் ஊழியர்கள் தங்களின் வேலையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். வேலையை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற பிழைப்புவாதக் கண்ணோட்டம் பொதுச் சொத்தையும் பாதுகாக்காது; வேலைக்கும் உத்தரவாதம் அளிக்காது என்பதை பொதுத்துறை ஊழியர்கள் உணர வேண்டிய தருணமிது.

– அழகு
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

83

சன்னி மார்க்க ஐ.எஸ்.பயங்கரவாதிகள்: இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

துருக்கியில் அன்றைய ஒட்டோமான் பேரரசின் இஸ்லாமிய மதரீதியான கிலாஃபத் அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலாஃபத் அரசாட்சி நிறுவப்பட்டுள்ளதாக “ஐ.எஸ்.” எனும் சன்னி மார்க்க இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் அண்மையில் அறிவித்துள்ளனர். இராக் மற்றும் சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இணைத்துத் தனி நாடாக அறிவித்து, இதனை இஸ்லாமிய அரசு (கிலாஃபத்) என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி இப்புதிய அரசின் தலைவராக தன்னையே நியமித்துக் கொண்டு, இப்புதிய கிலாஃபத் அரசானது வடசிரியாவின் அலெப்போ நகரிலிருந்து இராக்கின் தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும், உலகெங்குமுள்ள சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்தப் புனித ஆட்சிக்கு ஆதரவளிக்குமாறும், இப்புனித நாட்டில் வந்து குடியேறுமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள்
தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம் ஒருவரின் கழுத்தையறுத்துப் படுகொலை செய்து, ஷியா முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்து எக்காளமிடும் சன்னி மார்க்க ஐ.எஸ். பயங்கரவாதிகள்.

மேற்காசியாவில், குறிப்பாக இராக்கில் அதிருப்தியிலும் விரக்தியிலுமுள்ள சன்னி முஸ்லிம் மக்களை இந்த இயக்கத்தினர் தமக்கு ஆதரவாகக் கவர்ந்திழுப்பதில் கணிசமான வெற்றியைச் சாதித்துள்ளனர். இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதத் தாக்குதலாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத் தாக்குதலாலும், இராக்கிலும் ஆப்கானிலும் நடந்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாலும், இப்பிராந்திய மக்களிடம் நிலவும் ஆத்திரத்தையும் நம்பிக்கையின்மையையும் சாதகமாக்கிக் கொண்டு இந்த இயக்கத்தினர் அண்மைக்காலமாக பிரபலமடைந்து வருகின்றனர்.

இராக்கின் அமெரிக்க பொம்மை அரசப் படைகளுக்கு எதிராகவும், சிரிய அரசப் படைகளுக்கு எதிராகவும் நடத்திவரும் தாக்குதல்களையும், பிற சிறுபான்மை மத, இனக்குழுவினர் மீதான படுகொலைகளையும், அமெரிக்கப் பத்திரிகையாளரைப் பகிரங்கமாகக் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளதையும் வீடியோ படம் எடுத்து இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இவ்வியக்கத்தினர் பரப்பிவருகின்றனர். இவற்றின் மூலம், தங்களை உண்மையான இஸ்லாமிய விடுதலை இயக்கமாகச் சித்தரித்துக் கொண்டு தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற பிரச்சாரத்துடன் இணையத்தின் மூலமாக சன்னி முஸ்லிம்களை இவ்வியக்கத்தினர் ஈர்க்கின்றனர்.

யேசிடி பழங்குடி மக்கள்
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலிலிருந்து தப்பித்து, அகதிகளாக அண்டை நாடுகளுக்கு ஓடும் இராக்கின் சிறுபான்மையினரான யேசிடி பழங்குடி மக்கள்.

இவற்றைக் கண்டு சில சன்னி முஸ்லிம்கள், இது நம்ம ஆளு என்று இந்த இயக்கத்தினரை ஆதரிப்பதோடு, ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலான அரசாட்சி உலகில் உதயமாகியிருப்பதைப் புதிய நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். இஸ்லாம்தான் ஒரே தீர்வு என்று இந்தியாவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சில சன்னி முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஐ.எஸ்.படையில் இணைந்துள்ளதோடு, தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் 26 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற முத்திரை பதித்த டி-சர்டுகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுத் தமது ஆதரவைக் காட்டியுள்ளனர். “எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர்; எங்கள் மீது ஐ.எஸ். இயக்கத்தினரின் விரல்கள்கூடப் படவில்லை” என்று இராக்கிலிருந்து மீண்டு வந்த இந்தியச் செவிலியர்கள் அளித்த பேட்டியைக் குறிப்பிட்டு, இஸ்லாத்தின் நெறிப்படி நடப்பவர்கள்தான் பெண்களைக் கண்ணியமாக நடத்துவார்கள் என்றும், ஐ.எஸ். இயக்கத்தினர் இஸ்லாமிய மார்க்க நெறிப்படி நடக்கும் புனிதப் போராளிகள் என்றும் சில சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்த இயக்கத்தினரை ஆதரிக்கின்றனர்.

இஸ்லாமிய நெறிப்படி நடப்பதாக ஐ.எஸ். இயக்கத்தினர் விளம்பரப்படுத்திக் கொண்ட போதிலும், இந்த இயக்கம் மேற்காசிய முஸ்லிம் மக்களின் விடுதலைக்கான, முன்னேற்றத்துக்கான இயக்கமே அல்ல. கடந்த இருபது ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல்கய்தாக்கள் எனப் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகியுள்ள போதிலும், தாங்கள்தான் உண்மையான இஸ்லாமிய நெறிப்படி நடப்பவர்கள் என்று அவை கூறிக் கொண்ட போதிலும், ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி செய்த போதிலும் இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ வீழ்த்த முடியவில்லை. இக்குறுங்குழுவாத சன்னி மார்க்கப் பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்காவை எதிர்ப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும், பல நாடுகளில் அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன.

1970-களில் எகிப்து, சிரியா, இராக் ஆகிய நாடுகள் அரபு தேசியவாத முழக்கத்துடன் பெயரளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பைக் காட்டின. ஆனால் இஸ்லாமிய சர்வதேசியம் பற்றிப் பேசும் இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோ, ஏகாதிபத்தியங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டுச் சேர்ந்து தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டு, கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுவதோடு, பெயரளவுக்குக் கூட ஜனநாயகமே இல்லாமல் அப்பட்டமான கொடுங்கோன்மையைத்தான் நிலைநாட்டின. ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்ட தேசியத்தைக் கட்டியமைப்பதற்கான நோக்கமோ, அதற்கான அரசியல்-பொருளாதாரத் திட்டமோ, நடைமுறையோ இந்த இயக்கங்களிடம் இல்லை என்பதோடு, துருக்கியின் கமால்பாட்சாவும், எகிப்தின் நாசரும், இராக்கின் சதாமும் மேற்கொண்ட பெயரளவிலான சமூக சீர்திருத்தங்களைக்கூட இத்தகைய இயக்கங்கள் கீழறுத்துப் போட்டன. இவற்றின் விளைவாக, நாகரிகத்தால் முன்னேறிய மேற்காசிய சமூகம், பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கப்பட்டு இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்ட அவலம்தான் நடந்துள்ளது.

அல் பாக்தாதி
இசுலாமிய அரசின் (கிலாஃபத்) தலைவராகத் தன்னையே நியமித்துக் கொண்டுள்ள ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி

சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சியில்கூட ஷியா, சன்னி எனும் இஸ்லாமிய மதப்பிரிவினருக்கிடையே மோதல்கள் இருந்ததில்லை. அவரது ஆட்சியில் பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்த காரணத்துக்காக சிறுமி மாலாலாவைச் சுட்ட கொடூரத்தைச் செய்த தாலிபான்கள், இதனை இஸ்லாத்தின் பெயரால் நியாயப்படுத்தினர். அபின் பயிரிட்டு போதை வியாபாரமும், அந்தந்த வட்டாரத்தில் யுத்தப் பிரபுக்கள் ஷாரியத் சட்டப்படி தன்னிச்சையாக நாட்டாமை செலுத்துவதுமாகவே ஆப்கானில் தாலிபான்களது ஆட்சி நடந்தது.

தங்களை இஸ்லாத்தின் மார்க்க நெறிப்படி நடப்பவர்களாகக் காட்டிக் கொண்ட தாலிபான்களும், அவர்களைவிட இன்னும் தீவிரமாக இஸ்லாத்தை செயல்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்ட அல் கய்தாக்களும் சன்னி மார்க்க இஸ்லாமிய ஆயுதக் குழுக்களைக்கூட ஐக்கியப்படுத்த முடியாமல் போனதோடு, தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு மோதிக் கொண்டார்கள். இவற்றுக்குப் பிறகு அல் கய்தாவைவிட இன்னும் மூர்க்கமாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு இப்போது புதிதாக ஐ.எஸ். என்ற சன்னி மார்க்க இயக்கம் முளைத்துள்ளது. இந்த ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணிதான் என்ன?

இராக்கின் அண்டை நாடான சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு, இராக்கின் வடபகுதியில் இயங்கிவந்த அல் பாக்தாதி என்பவர் தலைமையிலான “இராக்கிய அல்கய்தா” என்ற சன்னி மார்க்க ஆயுதக்குழுவை ஆதரித்து வளர்த்த அமெரிக்கா, இவர்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்து ஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்து தனது கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டது. இக்குழுவுக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தாராளமாக நிதியும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களும் வாரிவழங்கப்பட்டன.

சிரியாவில் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டு அதிபர் ஆசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவந்த “அல் நுஸ்ரா”, “எஃப்.எஸ்.ஏ.” முதலான சன்னி மார்க்க ஆயுதக் குழுக்களுடன் இணைந்தும், இதர குழுக்களை அணிதிரட்டியும் அல் பாக்தாதி தலைமையில் உருவானதுதான் “இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்.)” எனப்படும் இயக்கமாகும். சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுத்துவந்த இந்த இயக்கத்தினர் ஆயுதக் கொள்ளைகளிலும் வங்கிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டதோடு, சிரிய நாட்டின் அருங்காட்சியகத்திலிருந்த அரிய கலைப்பொருட்களைக் களவாடி விற்றும், தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கட்டாய வரிவசூல் செய்தும் பணபலமும் ஆயுத பலமும் கொண்ட பயங்கரவாத இயக்கமாக வளர்ந்தனர். “ஐ.எஸ்.ஐ.எஸ்.” என்ற பெயரில் இயங்கி வந்த இப்பயங்கரவாத இயக்கம்தான் இப்போது “ஐ.எஸ்.” (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, புதிய கிலாஃபத் அரசை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அதன் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி, தன்னையே இந்த அரசின் கலீஃபாவாக நியமித்துக் கொண்டுள்ளார்.

ராமநாதபுர இளைஞர்கள்
இது நம்ம ஆளு என்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை ஆதரித்து டி-சர்ட்டின் விளம்பரப்படுத்திக் கொண்ட இராமநாதபுரம் மாவட்ட சன்னி முஸ்லிம் இளைஞர்கள்.

யார் இந்து என்று இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுவதைப் போலத்தான், யார் முஸ்லிம் என்பதை இந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரும் வரையறுக்கின்றனர். ஷியா, சன்னி, சுஃபி என வேறுபட்ட இஸ்லாமிய மார்க்கங்கள் இருந்த போதிலும், வாஹாபி சன்னி மார்க்கம் மட்டும்தான் உண்மையான இஸ்லாமிய மார்க்கம் என்று கூறி, இதர இஸ்லாமிய மார்க்கத்தினரின் மசூதிகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி அவற்றைத் தரைமட்டமாக்கியுள்ளனர். குர்து மொழி பேசும் யேசிடி எனும் பழங்குடியினக் குழுவினரது வழிபாட்டு முறையை பேய் வழிபாடு என்று சாடும் ஐ.எஸ். இயக்கத்தினர், இராக்கின் சிறுபான்மையினரான இப்பழங்குடி இனத்தவர் மீது தாக்குதல் தொடுத்து அவர்களைத் தமது ஆதிக்கத்திலுள்ள பிராந்தியத்திலிருந்து விரட்டியடித்து வருகின்றனர். மெக்காவின் காஃபாவில் உள்ள கருப்புக் கல்லை அகற்றாவிடில், அம்மசூதியைத் தகர்க்கப்போவதாக சௌதி அரேபியாவுக்கு எதிராகச் சவடால் அடித்து, தங்களை இஸ்லாத்துக்கு அத்தாரிட்டியாகக் காட்டிக் கொள்கின்றனர். யேசிடி, ஷாபக், சால்டியன் கிறித்துவர்கள், சிரிய கிறித்துவர்கள் முதலான மத, இனச் சிறுபான்மையினரும் ஷியா பிரிவு முஸ்லிம்களும் சன்னி மார்க்க இஸ்லாமிய

மதத்துக்கு மாற வேண்டும், அல்லது ஜெஷியா வரி கொடுக்க வேண்டுமென இப்பயங்கரவாதிகள் எச்சரித்து, அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இதனால் சிறுபான்மையின மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுவருவதோடு, எஞ்சியோர் அகதிகளாக இராக்கிலிருந்து தப்பியோடுகின்றனர்.

இந்தியாவில் காலனிய ஆட்சிக் காலத்தில் இந்துவெறியர்களின் ஆசானாகிய சாவர்க்கர் இந்துத்துவ தேசியத்தை முன்வைத்து அணிதிரட்டியதைப் போலவே, இஸ்லாமிய சர்வதேசியம் எனும் கற்பனாவாத பிற்போக்கு முழக்கத்துடன், கிலாபத் எனப்படும் இஸ்லாமியத் தாயகத்தை உருவாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு இந்த சன்னி மார்க்கப் பிற்போக்குச் சக்திகள் சமூகத்தை இருண்ட காலத்துக்கு இழுத்துச் செல்கின்றன. மறுபுறம், இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தனது மேலாதிக்கத் தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றன.

இசுலாமிய குறுங்குழுக்கள்
கடந்த 20 ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல் கய்தாக்கள் எனப் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகியுள்ள போதிலும், இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ வீழ்த்த முடியவில்லை. இக்குறுங்குழுவாத சன்ன மார்க்கப் பயங்கரவாத இயக்கங்கள் பல நாடுகளில் அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன.

இப்படித்தான் கடந்த ஆண்டில் வட ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டிலும், அதற்கு முன்னர் ஆப்கானிலும் நடந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற மாலி நாட்டின் சர்வாதிகார அரசிடமிருந்து விடுதலை கோரி மாலியின் வடபகுதியிலுள்ள அசாவத் பிராந்தியத்தில் தூவாரக் இனக்குழுவினர் நீண்ட காலமாகப் போராடி வந்த நிலையில், அல்கய்தாவுடன் தொடர்புடைய இப்பகுதியிலுள்ள சன்னி மார்க்க இஸ்லாமிய தீவிரவாதிகள் இவர்களுடன் சேர்ந்து கொண்டு மாலி ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுத்து, 2013-ல் அசாவத் பிராந்தியத்தைத் தனிநாடாக அறிவித்தனர். இதர சன்னி தீவிரவாதக் குழுக்களை இணைத்துக் கொண்டு “இஸ்லாமிய மெஹ்ரப் அல்கய்தா குழு” என்ற பெயரில் திரண்ட இப்பயங்கரவாதிகள், இப்பகுதியில் சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய மக்களிடம் வாஹாபி சன்னி மார்க்கத்தைத் திணித்து ஷாரியத் சட்டத்தை ஏவி ஒடுக்கத் தொடங்கினர். இச்சன்னி மார்க்கப் பயங்கரவாதிகள் இராக்கிய ஐ.எஸ். இயக்கத்தினரைப் போலத் தனியொரு கிலாஃபத் ஆட்சியையும் கலீஃபாவையும் அறிவிக்கவில்லையே தவிர, இந்த நோக்கத்தோடுதான் இயங்கினர். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்க்க சி.ஐ.ஏ.வினால் பயன்படுத்திக்

கொள்ளப்பட்டவர்கள். இப்பிற்போக்குச் சக்திகளை வளர்த்துவிட்டு பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், மாலியின் ஒருபகுதியை இப்பயங்கரவாதக் குழுவினர் தனிநாடாக அறிவித்ததும், இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்து அந்நாட்டைத் தனது மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைத்துள்ளன.

இதேபோலத்தான் இப்போது இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆளில்லா போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. குர்து இனக்குழுக்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் இராக்கிய பொம்மை அரசுப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி போர் வியூகங்களை வகுத்து வழிகாட்டும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், இதனைப் பயங்கரவாதத்துக்கு எதிரான அவசியமான நடவடிக்கையாகச் சித்தரித்து, மேற்காசியப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.

ஐ.எஸ். இயக்கத்தைப் போன்ற பிற்போக்கு சக்திகளைப் பற்றியும், பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டக் கடமைகளைப் பற்றியும் நீண்ட காலத்துக்கு முன்னரே தோழர் லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். 1920-ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில், பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை முன்வைத்த தோழர் லெனின், “மதகுருமார்களையும் செல்வாக்கு செலுத்தும் பிற்போக்கு மற்றும் மத்தியகால சக்திகளையும் எதிர்த்து பின்தங்கிய நாடுகளில் போராட்டம் நடத்துவது அவசியமாகும். இஸ்லாமிய சர்வதேசியம் மற்றும் இதைப் போன்ற போக்குகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும். நிலப்பிரபுக்கள், கான்கள், முல்லாக்கள் மற்றும் பிற சக்திகளின் நிலையை வலுப்படுத்தவே இத்தகைய போக்குகள் முயற்சிக்கின்றன” என்று உணர்த்தியுள்ளார்.

லெனின் எத்தகைய பிற்போக்குச் சக்திகளை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தினோரோ, அத்தகைய பிற்போக்குச் சக்திகள் இன்று உலகின் பல நாடுகளில் வளர்ந்துள்ளதோடு, மத அடிப்படைவாத பிற்போக்குச் சக்திகளும் மதவெறி பயங்கரவாத இயக்கங்களும் ஆதிக்கம் செலுத்தும் போக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பிற்போக்குச் சக்திகள் ஏகாதிபத்தியங்களுடன் கள்ளக் கூட்டு கொண்டவையாகவும் அவற்றின் கூலிப்படையாகவும் இருப்பதோடு, வரலாற்றைப் பின்னுக்கு இழுத்து சமூகத்தைக் காட்டுமிராண்டி நிலைக்குத் தள்ளவும் துடிக்கின்றன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இத்தகைய பிற்போக்குச் சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டு தமது காலனியாதிக்கத்தையும் மேலாதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொள்கின்றன. எதிரெதிரானவையாகத் தோன்றினாலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ள இத்தகைய ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கும் இத்தகைய பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான உறுதியான விடாப்பிடியான போராட்டம்தான் இன்று அவசியமாகவுள்ளது.

– குமார்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

டிமிக்கி பேராசிரியர்

7

ண்பர் ஒருவர் பேராசிரியர்.

கனமான வருவாய் இருக்கையை ‘போராடிப்’ பிடித்தவர். சம்பள கவருக்கு வெளியேயும் சமூக உணர்வை கொப்பளித்துக் காட்டி, அது வேலைக்கு ஆபத்து இல்லாத வகையில் இருக்கும் ஸ்ட்ரேடஜி தெரிந்தவர்.

hypocrite-2சமூக நடைமுறையில் உள்ள அமைப்புத் தோழர்களை அழைத்து பேசுவதிலும் அவர்களுக்கு புதுப்புது ‘ஐடியா’ வழங்குவதிலும் வற்றாத வள்ளல் அவர். என்னை விட வயதில் மூத்தவர் ஆதலால், பார்க்கும் போதெல்லாம் உரிமையுடன் ஒட்டியும், வெட்டியும் பேச்சில் பொறிபறக்கும்.

“என்னங்க தம்பி, சும்மா பிரச்சாரம் பண்ணிகிட்டு, இன்னேரம் அவுனுங்கள ‘அனிகிலேட்’ பண்ண வேணாம், கம்யூனிஸ்டுகளெல்லாம் முன்ன மாதிரி இல்ல, சும்மா பயப்படுறாங்க! எத்தன காலந்தான் நீங்க பிரச்சாரம் பண்ணிகிட்டே இருப்பீங்க, “தி ஏசியா மூட்” – ங்குற நூல்ல குர்டால் என்ன சொல்றார்னா…” என்று ஆரம்பித்து உலகம் முழுக்க வலம் வந்தவர், நான் கொடுத்த ஆர்ப்பாட்டத்துக்கான துண்டறிக்கையை புரட்டிப் பார்க்கவே இல்லை.

“சார்! வந்துருங்க ஞாயிறுதான் ஆர்ப்பாட்டம்” என்று வலியுறுத்த,

“வெரிகுட்! கல்வி தனியார்மயம் ஆவுறத பத்தி நைன்-டீன்-நைன்டி-நைன்லயே நான் ஆல் இண்டியா செமினார்ல ஒரு ஆர்ட்டிகிள் எழுதிருக்கேன். அப்புறம் தாரேன் உங்களுக்கு! வாரேன் தம்பி சண்டேதான, மொத ஆளா நிப்பேன்!” உற்சாகமாக பேசி அனுப்பினார்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அடுத்த நாள் ஆர்ப்பாட்டத்தில் கடைசி ஆளா கூட அவரைக் காணோம்.

சரி, தொடர்ந்து வலியுறுத்துவதை நாம் செய்வோம். ‘அறிவாளி’ ஆயிற்றே, சமூக நடவடிக்கைக்கு அவர் அறிவும் தேவை என்ற ஆசையில் தொடர்ந்து அவரைச் சந்திப்பது என்வழக்கம்.

“என்னசார்! ஞாயிறு சமூக உணர்வுக்கு விடுமுறையா?” என்று லேசாக பிட்டைப் போட்டேன.

” தம்பி! ஸாரி, அன்னைக்குன்னு பாத்து பி.பி. கொஞ்சம் அதிகமாகி கொஞ்சம் உடம்புக்கு பிரச்சனையாயிடுச்சு” என்றவர் அதோடு நிற்காமல், “என்னங்க எதிரி ஏறி அடிக்கிறான், இப்பப் போயி நம்ப ஆர்ப்பாட்டம், முழக்கம்னா… ஐ டூ நாட் பிலிவ் இட்!” என்று முகத்தை சுழித்து, “நம்ப தியரிட்டீசியன் சொன்ன மாதிரி செயல் ஒன்றுதான் சிறந்த சொல்!” என்றார் தணலாக!

“சார்! அப்ப அந்த காலேஜ் தாளாளரை போட்டுத்தள்ள நீங்க லீட் பண்றிங்களா?” என்றதுதான் தாமதம்,

“என்ன தம்பி! வீ ஆர்  ஐடியாலஜிஸ்ட், ஆக்சனிஸ்ட் எப்போதும் வேற குரூப்பா இருக்கணும், அதான் ஸ்ட்ரேடஜி” என்று இருக்கை நுனிக்கு வந்தவர், “சாந்தி, தம்பிக்கு டீ கொண்டு வா!” என்று மனைவிக்கு அவசரமாக ஆணையிட்டார்.

“என்ன சார் , அனிகிலேசன் தான் இப்ப தேவைங்குறிங்க, அதுக்கு யாரும் லாயக்கில்லிங்குறிங்க, உங்கள கூப்பிட்டா, ஓரம் கட்டுறிங்க!” என்று வாதத்திற்கு இழுத்தேன்.

எனது விடாப்பிடியை சற்றும் எதிர்பார்க்காத பேராசிரியர், “தம்பி, மொதல்ல டீய குடிங்க”, என்று விருந்தோம்பினார்.

“தம்பி உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறது? நாங்களெல்லாம் தியேரிட்டீசியன், நாட் பொலிட்டீசியன். நாலெட்ஜ் ஈஸ் எ பவர்ஃபுல் ஆக்சன்!” என்று  வார்த்தைகளை அள்ளிவிட்டார்.

“என்ன சார்! அறிவாளிங்களுக்கும், தத்துவவாதிகளுக்கும் நடத்தை வேணமா? நீங்கதான் சொன்னீங்க செயல் ஒன்றே சிறந்த சொல்லுன்னு, இப்ப உங்களுக்குன்னா வேற ரூட் போடுறீங்களே…”

“தம்பி! அறிவு உணர்ச்சிவசப்படக் கூடாது, தமிழன் வீணாப் போனதே இப்படி உணர்ச்சிவசப்பட்டுத்தான்… நான் சொல்ல வந்தது பெரிய சப்ஜக்ட், இன்னொரு நாள் டீப்பா பேசுவோம்… டீய குடிங்க… தம்பி! யெங் பிளட், அப்படித்தான் சூடா கேக்கத் தோணும், தம்பி… நீங்க ஒரு செட் ஆஃப் பீப்புள மட்டுந்தான் பாக்குறீங்க, நான் பல ஆங்கிள்ல, பல பேர பாக்குறேன், என் சர்க்கிள்ல பல ஆளும் வாரான், அதால மக்களோட மைன்ட் ரீடிங் பவர் எங்களுக்கு அன் பிளான்டாவே உண்டு!” என்றவர், பேச எத்தனித்த என்னை மீண்டும், “டீய குடிங்க தம்பி, பேச நிறைய இருக்கு… பேசுவோம்”  என்று வாயை அடைப்பதில் நேர்த்தி காட்டினார்.

“சார்! இந்தாங்க வர்ற வெள்ளிக்கிழமை தாது மணல் கொள்ளைக்கு எதிரா ஆர்ப்பாட்டம். இது தவிர வி.வி. மினரல்ஸ்க்கு எதிராக அந்த மாவட்ட உள் கிராமங்களில் பிரச்சார இயக்கம். அவன் மிரட்டி வச்சிருக்குற ஊர்ல போயி, அவனுக்கு எதிராகவே நம்ம தோழர்கள் பிரச்சாரம், செய்தி, படங்கள் பாருங்க…” என்று அவர் பார்வைக்கு அளித்தேன்.

“அட, வெரிகுட், இப்படித்தான் தம்பி போராடணும், அவன் கோட்டையிலேயே போயி கலக்குறீங்களே… வெரிகுட்!” என்றவரிடம்,

“சார்! இதுல பத்து காப்பி இருக்கு, அப்படியே உங்க ஆபிஸ்ல பரப்புங்க… எங்க பத்திரிகையும் இருக்கு, ஒரு பத்து பத்து உங்க சர்கிள்ல விற்பனை செய்யுங்களேன்… கருத்துக்கள் பரவட்டும்…” என்று ஆவலாய் புத்தகங்களை நீட்டினேன்.

முகத்தில் உற்சாகம் இழந்தவராய், “அட! எங்க தம்பி நம்ப சர்க்கிள்ல எல்லாம் வேஸ்ட். ஓசியில கொடுத்தாக் கூட படிக்க மாட்டேங்குறான், சுத்த மட்டிப்பசங்க, அவனுண்டு, ஏனிங் உண்டுன்னு. டார்வின் சொன்ன மாதிரி மேன் ஈஸ் சோசியல் அனிமல்னு போயிகிட்டு இருக்கானுங்க” என்றவர், கொஞ்சம் குரலை தாழ்த்தி அக்கம், பக்கம் மனைவி, மக்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “அப்புறம் தம்பி, நாமெல்லாம் உடனே பப்ளிக்ல ஐடன்டிபை ஆகக் கூடாது, அப்படியே நான் ரகசியமா பல விசயங்கள காலேஜ்ல தூவிவிட்டு இருக்கேன், சமயம் பார்த்து வெளியே வரணும், இல்லேன்னு வச்சுக்குங்களேன் டோட்டல் பிளானும் வேஸ்ட்டா ஆயிடும்! அதனால வச்சுக்குங்க, நேரம் பார்த்து நானே கேக்குறேன் இப்ப வேண்டாம்…” என்று பல ஆங்கிளில் எனக்கு புரிய வைத்தார்.

பிறகு சில நாள் கழித்து மீண்டும் செய்திகள் சொல்லி எப்படியாவது அவரை நடைமுறையில் இணைக்க விரும்பி எனது போராட்டத்தை தொடர்ந்தேன்.

“என்ன சார், இது வரைக்கும் நானும் பழகி பல வருடமா ஒவ்வொரு போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாத்துக்கும் சொல்றேன்… வரவே மாட்டேங்குறீங்க, அன்னைக்கு அவ்வளவு விளக்கியும்…” என்று நான் முடிப்பதற்குள்,

“அட! அத ஏன் கேக்குறீங்க தம்பி, நம்ப ஷேக்ஸ்பியர் மர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்ல வர்ற ஒரு கேரக்டர் கடனுக்கு பதில் இருதயத்தை கொடுங்குற மாதிரி, கொஞ்சம் பழைய கடன்லாம் வந்து மிரட்டி, உடனே பைசல் பண்ண பேங்க், லோனுண்ணு அண்ணைக்கு அலைச்சலா போயிடுச்சி. கார்ல் மார்க்ஸ் சொல்வாரில்ல, சிந்தனை பொருளை தீர்மானிக்கறதில்ல, பொருள்தான் சிந்தனையை தீர்மானிக்குதுன்னு அதுமாதிரி அன்னைக்கு ஆயிப்போச்சு… நம்ம விருப்பம் எறங்கி வேலை பாக்கலாம்னு நெனச்சாலும், சூழ்நிலை ஓவர்லுக் பண்ணுது… மாவோ அழகா சொல்லியிருப்பாரு… மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாயில்லைன்னு….”

அவர் லெனின், ஹோசிமின்னு தொடர்ந்து பேச பேச… சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வேறுபாட்டை, அதாவது சொன்ன மாதிரி வராததுக்கான காரணத்திற்குள் நுழையாமல் இப்படி ஒரு தன்னல கோணத்தில் தத்துவத்தை திரிக்கும் பேராசிரியரின் முழு ‘தம்மிற்கு’ ஈடு கொடுக்க முடியாமல் கொஞ்சம் வதங்கினேன்.

“சரி, சார், பத்து வருசமா பழகுறேன். எங்க அமைப்பு உட்பட எல்லோருக்கும் அப்படி செய்யணும், இப்படி செய்யணும்னு வழிகாட்டுறீங்க… உங்க அறிவுக் கூர்மையையும், சமூக ஈடுபாட்டையும் ஒரு தடவையாவது மக்களோடு சேர்ந்து வந்து பயன்படுத்திக்கக் கூடாதா! நீங்க சொல்ற மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் வீதிக்கு வந்த அறிவாளிங்கதான் சார்!”

hypocriteஉடனே அவர், ” தம்பி! வரக் கூடாதுன்னு இல்ல, டயம் அப்படி, நாங்கள்லாம் இன்டயரக்ட் ஆர்கான்ஸ் மாதிரி, உள்ளிருந்து வேலை செய்யணும், கிளாஸ் ஸ்ட்ரகிள கிளாஸ் ரூம்லய நடத்துனவன் நான்! எதிரிதான் நம்ப ஆயுதத்தை தீர்மானிக்குறாங்குற மாதிரி இப்ப அதுக்கேத்த மாதிரி… ஹ்.. ஹி..”

“அதுக்கில்ல சார், இன்னர் ஆர்கனா இருந்தாலும் மொத்த இயக்கத்தோட இணைஞ்சு இயங்கலேன்னா மூளையும் அழுவிடும்ல… அதான் அதுக்கு ஒரு அமைப்பு, ஒரு நடவடிக்கை தேவைங்குறோம். நீங்க மேற்கோள் காட்டுற தலைவர்களெல்லாம் தொழிலாளிகளுக்கு ஒரு அமைப்பு இல்லேன்னா எதுவுமே இல்லைன்னுதானே சொல்லிருக்காங்க…” என்று  நான் விவாதிக்க,

மேலும் தத்துவார்த்தமாக ரெண்டில் ஒன்று என இறங்குவார் எனக் காத்திருக்க,

“தம்பி, எல்லாம் சரிதான், உங்கள மாதிரி யெங் பிளட்ல நானும் இதவிட பேசுனவன் தான். பாருங்க உங்க வயசுலயே ஒரு முடிவெடுத்து இறங்கிருக்கணும். இப்பப் பாருங்க… பேமிலி செட் அப்… இருக்கே! இண்டியன் சொசைட்டில பெரிய தலைவலி… பொண்டாட்டி, புள்ளன்னு பெரிய புடுங்கல். பையன் டாக்டருக்கு படிக்கிறான். ஒரு ஸ்டஃப்பும் இல்ல. சோசியல் கான்சியசே இல்ல. புரட்சியா, ஒன்னோட வச்சுக்கோங்கிறான்… டோட்டலா கரெப்ட் சிஸ்டம் தம்பி…” என்று எல்லோரையும் திட்ட ஆரம்பித்தார்.

“சார்! அவங்க சிந்தனைக்கு அவங்க இயங்குறாங்க…. உங்க சிந்தனைக்கு நீங்க இயங்குங்க… புரட்சிய மொதல்ல நம்ப உணர்ச்சியில தட்டியெழுப்புங்க… பிறகு அடுத்தவருக்கு. ஒரு கூட்டத்துல வந்து உக்கார்றதுக்கு பத்து வருசமா எதுக்கு சார் இத்தன தியரி, மொதல்ல உங்க தயக்கத்த அனிகிலேட் பண்ணுங்க…” என்றேன் முடிவாக,

“தம்பி! என்ன சூடாயிட்டிங்க, கூல்! கைல என்ன நோட்டீஸ்?… அட! மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமா… வெரிஃபைன்… சரியான நேரத்துல சரியான சுலோகம்… பார்ப்பானுங்க கொட்டத்த அடக்கணும் தம்பி!…” போய்க் கொண்டே இருந்தவரிடம் இயக்கத்தின் அவசியத்தை விளக்கி,

“இந்த முறை கட்டாயம் வாங்க சார்! எதிர்பார்ப்பேன்!” என்று துண்டறிக்கையை தந்தேன்.

“நீங்க போய் மத்த வேலைய பாருங்க, சும்மா எனக்கு போன் பண்ணிகிட்டு உங்க வேலைய கெடுத்துக்க வேணாம், கரெக்ட் நேரத்துக்கு டாண்ணு அங்க நிப்பேன் பாருங்க… ட்ரூத் நெவர் ஃபெயில்ங்குற மாதிரி. இதெல்லாம் கொஞ்ச நாளுதான் தம்பி, பையன் வேலைக்கு போயிட்டான்னு வச்சுக்குங்க அப்புறம் நானும் உங்க கூடத்தான்… ஸ்ட்ரீட் அவர் பேட்டில்… வாங்க தம்பி! மொத ஆளா நிப்பேன்…”

வழக்கமான காரணங்களைத் தாண்டி ஒரு முடிவெடுத்தவர் போலிருந்தது அவர் பேச்சு.

அடுத்த நாள் திரளாக தோழர்கள், முழக்கம், ஆர்ப்பாட்டம், பத்து, இருபது மைல்கல் தாண்டி கம்பெனிக்கு லீவு போட்டுவிட்டு குவிந்திருந்தனர் தொழிலாளர்கள். கூட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து சல்லடைப் போட்டு தேடுவது போல தேடித்தேடிப் பார்த்தேன். இண்டு இடுக்கில், இன்னர் சர்க்கில் இன்டலிஜன்ட் அடையாளத்தோடு தனித்திருப்பாரா என்று திரும்பத் திரும்பத் தேடிப் பார்த்தேன்… கடைசி நிமிடம் வரை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பேராசிரியரைக் காணவில்லை…!

– சுடர்விழி

சமஸ்கிருத வாரம் இந்துத்துவா அதன் சாரம் – புமாஇமு கருத்தரங்கம்

9

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மோடி அரசின் சமஸ்கிருத வாரம் !
இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

‘உலக மொழிக்கெல்லாம்
தாய்மொழி சமஸ்கிருதம்’ என்று
பொய் நெல்லைக் குத்திப்
பொங்குகிறார் மோடி.

மோடி - இந்துத்துவா
மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மறுகாலனியாக்கக் கொள்கையை
பார்ப்பனப் பாசிச வழியில்
உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி,
‘கடவுள் மொழி சமஸ்கிருத’த்தின்
ஆர்.எஸ்.எஸ் புத்திரனே
என்று புரிந்து கொள்வோம்!

நூறாண்டு முன்பே
பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து
சமஸ்கிருதத்திலிருந்து
முற்றாக வேறுபட்ட
தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று
முழங்கினார் கால்டுவெல்.

சமஸ்கிருதம் – இந்தி என்று
எங்கு எப்போது திணிக்கப்பட்டாலும்,
அதை எதிர்த்து முறியடிப்போம்!

கல்வியில் தமிழ் பயிற்றுமொழி
அரசு அலுவலகங்களில் தமிழே நிர்வாக மொழி
நீதி மன்றங்களில் தமிழே வழக்காடும் மொழி
என அனைத்து துறைகளிலும்
தமிழை ஆணையில் வைப்போம்.

மோடி அரசின் பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
இந்து – இந்தி-இந்தியா என்ற இந்து ராட்டிரத் திணிப்பே !

பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்துக்கு எதிரான இன்றைய போரில்
தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும் போர்வாளான கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!

பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனீயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!
மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என திரளாக கருத்தரங்கில் கலந்து கொள்வோம்!

கருத்தரங்கம்

நாள் :
செப்டம்பர் 16, 2014

நேரம் :
காலை 10.30 மணி

இடம் :
கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால்,
ஆவடி ரோடு,
கரையான் சாவடி, சென்னை.

சிறப்புரை :
தோழர் துரை.சண்முகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.

நோட்டிஸ்
Sanskrit

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

NLC தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !

1

NLC நிர்வாகமே!

  • பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும்
    ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்!
  • தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட
    அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்று!

மத்திய அரசே!

  • உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும்
    NLC நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு!

உழைக்கும் மக்களே!

  • ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட
    தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள்வோம்!
  • தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட வழிவகுக்கும்
    மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

என்.எல்.சி தொழிலாளர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்கள்
9444834519

குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!

0

ந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று ஆதாரபூர்வமாக இல்லையானாலும் ஒரு வாதத்திற்காவது சொல்லக்கூடியவாறு இருப்பவை, அரசியல் சட்டப் பிரிவுகள் 21,22. அவைதாம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையையும் குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் உறுதி செய்கின்றன. 1975-76-ம் ஆண்டுகளில் இந்திராவின் அவசரகால ஆட்சி அவ்வுரிமைகளை இரத்து செய்தது; அதனால், ஒரு போலீசு அதிகாரி தன் சொந்தக் காரணங்களுக்காக ஒரு குடிமகனைச் சுட்டுக்கொல்வதும் ஏற்கப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. “ஆம், அப்படித்தான் ஆகிறது” என்று சொன்னார்கள். இப்போது, இந்திய அரசியல் சட்டத்தின் 21,22-வது பிரிவுகளை இரத்து செய்துவிடும் விதமாக, அதாவது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையையும் குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் பறித்து எந்தவொரு குடிமகனையும் விசாரணையின்றி ஓராண்டு சிறையிலடைக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கும் குண்டர் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது, ஜெயலலிதா அரசு. இதன் மூலம் அவசரகால பாசிச ஆட்சியைத் தமிழகத்தில் மறைமுகமாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்த வகையில் பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாக இது விளங்குகிறது.

1982-ல் பாசிச எம்.ஜி.ஆரால் குண்டர் தடுப்புச் சட்டம் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் தொழில்முறை ரவுடிகள், கள்ளச் சாராய வியாபாரிகள், போதை மருந்துக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், புறம்போக்கு – குடிசைப் பகுதி நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பவர்கள் – என்று ஒவ்வொன்றாகச் சேர்த்து ஊதிப் பெருக்கி, இக்குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களையும் ஓராண்டு காலம் விசாரணையின்றிச் சிறையில் அடைப்பதற்கானதாக மாறியது.

இந்தச் சட்டத்தை மேலும் சில திருத்தங்களோடு கடுமையாக்கியுள்ளது, ஜெயலலிதா அரசு. இதன்படி இதுவரை தெளிவாக, கறாராக வரையறுக்கப்படாமல், கேடாக ஏவப்படும் இணையக் குற்ற வழக்குகள்; குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்து போகும் பாலியல் குற்ற வழக்குகள் – இவையும் விசாரணையின்றித் தண்டிக்கக் கூடியவையாகும். இதுவரை, கிரிமினல் குற்றங்கள் புரிவதை வழக்கமாகக் கொண்டவர்கள் மட்டும், அதாவது மூன்று, நான்கு முறை குற்றப்பதிவுக்கு ஆளானவர்கள் மீது மட்டும்தான் குண்டர் சட்டம் பாயும் எனச் சொல்லப்பட்டதை, இனி, முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் இக்குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மீதும் பாயும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. குற்றங்களைத் தடுப்பது, குறைப்பது என்ற பெயரில் கிரிமினல் குற்றவழக்கு முறைமைகளுக்கு எதிராகவும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும் நிரபராதிகளையும் தண்டிக்கவும் அரசும் ஆட்சியாளர்களும் கைக்கொள்ளும் பாசிச முறையிலானது இந்தச் சட்டம்.

கிரிமினல் குற்றங்களைப் புரிந்து விட்டு, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் குறுக்கு வழிகளில் தப்பித்துக் கொள்பவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தடுப்பதற்கான வழிதான் குண்டர்கள் தடுப்புச் சட்டம் என்று அரசியலற்ற பலர் நம்புவதுதான் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வசதியாக உள்ளது. ஆனால், பெரும்பான்மை வழக்குகளில் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியது தவறெனவே நீதின்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. ஜெயலலிதாதான் பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டும், குறுக்குவழிகளில் பல ஆண்டுகளாகத் தப்பித்துக்கொள்ளுவதை வழக்கமாகக் கொண்டவர். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புகளை மதியாது குற்றங்களைத் தொடரும் அவர்தான் முதலில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டியவர்.

– தலையங்கம்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

நாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா – வில்லனா ?

2

ன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் நாவல்காடு பகுதியில் உள்ள ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவர்கள், கல்லூரி சேர்மன் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

james-college-studentsஐ.டி, எலக்ட்ரிகல், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சைன்ஸ், சிவில், எலக்ட்ரிகல்-எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த சுமார் 360 மாணவர்களை கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தொழில்துறை சுற்றுப் பயணத்துக்காக பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் என்ற நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றது கல்லூரி நிர்வாகம்.

ஆனால், தொழில் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பயன்பாட்டிற்கு அற்றது என்று கழிவு செய்து ஒதுக்கிய விமானத்தை மட்டும் காட்டியிருக்கின்றனர். தொழிற்சாலை என்று எதையும் காண்பிக்கவில்லை. மேலும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்ற இந்த நிறுவனம் மாணவர்கள் படிக்கும் துறைகளுக்கு தொடர்பில்லாதது ஆகும்.

இந்த பயணத்துக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ 7,850 வசூல் செய்திருக்கின்றனர். மொத்தம் நான்கு நாட்கள் தொழில்துறை பயணம் என்று கூறியும் எந்த ஒரு தொழில் நிறுவனத்திற்கும் அழைத்து செல்லவில்லை. மேலும் தரமான 3 நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்துள்ளதாகவும், தரமான உணவு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கூறியிருக்கிறது. அதற்காகவே ரூ 7,850 வசூலித்துள்ளதாக கூறியிருக்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை, சரியான தங்கும் இடமும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வருவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் சரியான பேருந்து வசதி செய்யப்படவில்லை. 10 பேர் வரை நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை இருந்துள்ளது. சுமார் 40 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய கல்லூரி பேருந்தில் 50 பேரை ஏறுமாறு கூறியிருக்கின்றனர். ஆனால், இருக்கையில் இருந்து பயணம் செய்யும் அளவிற்கு மட்டுமே ஏறுவோம் என்று கூறி கடைசி பேருந்தில் இருக்கை கிடைக்காத மாணவர்கள் பேருந்தில் ஏறாமல் வெளியில் நின்று விட்டிருக்கின்றனர்.

இந்த தகவல் சொல்லப்பட்ட கல்லூரி சேர்மன் வழிகாட்டுதல்படி, இருக்கை கிடைக்காமல் பேருந்திற்கு வெளியே நின்ற மாணவர்களை அப்படியே விட்டு விட்டு பேருந்தை ஓட்டுநர் நகர்த்தி சென்று விட்டார்.

இதனை தட்டிக் கேட்ட பேராசிரியரையும், மாணவர்களையும் பேருந்து ஓட்டுநர், ஆபாசமாக, தரக்குறைவாக, கெட்ட வார்த்தையில் திட்டி முறைகேடாக நடந்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிறகு பேருந்தை நிறுத்தி கீழே நின்ற மாணவர்களை மீண்டும் பேருந்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார் ஓட்டுனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் பேருந்தின் உள்பக்க மேற்கூரையை அடித்து சத்தம் எழுப்பியதில் மைக்காவில் சிறிய ஓட்டை விழுந்துள்ளது. சேர்மன் வழிகாட்டலின்படி பேருந்தை ஓசூர் தாலுகா சூளகிரி காவல் நிலையத்திற்கு ஓட்டுநர் ஓட்டிச் சென்றிருக்கிறார். மாணவர்கள் கட்டாயப்படுத்தி கேட்டபின் காவல் நிலையம் செல்வதாக கூறியிருக்கிறார்.

காவல் நிலையம் செல்லும் வழியிலேயே சூழகிரி காவலர்கள் பேருந்தை நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். மாணவர்கள் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி சேர்மன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருப்பதாக காவல் அதிகாரிகள் கூறியது மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்த மாணவிகள் காவல் அதிகாரியிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள்தான் பெங்களூரில் இருந்து இங்கு வரை பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர் என்றும் கூறியிருக்கின்றனர். காவல் அதிகாரிகள் மாணவர்களை மிரட்டி பேருந்தின் மேல்கூரை மீது மாணவர்கள் நடனம் ஆடும்போது தலைப்பட்டு மைக்கா உடைந்தது என்று எழுதி வாங்கியிருக்கின்றனர்.

மேலும் பயணம் முடிந்து செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவர்களிடம்,  பிரச்சனைக்கு உள்ளான பேருந்தில் வந்த 36 மாணவர்களுக்கும் தலா ரூ 12,750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணத்தில் சென்ற 360 பேருக்கும் பொது அபராதமாக தலா ரூ 2,000 விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குறிப்பிட்ட அபராதம் கட்டாத வரை மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என்றும் கூறியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். மேலும் தொழில்துறை பயணம் (ஐ.வி- IV) சென்ற மாணவ மாணவியரில் தாமதமாக கல்லூரிக்கு வந்தவர்களுக்கு தலா ரூ 1,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் சேர்மனின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்தும், “இதுவரை கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் மீது சட்டவிரோதமாக விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தும் செப்டம்பர் 2-ம் தேதி அன்று கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி நிர்வாகம் காவல் துறை மூலமாக மாணவர்களை சந்தித்திருக்கின்றனர். சேர்மன் 13-ம் தேதிதான் வெளியூரிலிருந்து வருவார், அன்று எல்லா பிரச்சனைக்கும் நல்ல முடிவை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தித் தரும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.  ஆனால், அன்றைய தினம் இரவே போராட்டத்தில் முன் நின்ற கல்லூரி விடுதியில் உள்ள மாணவர் ஒருவரை, “இந்தக் கல்லூரியில் இனி நீ படிக்க முடியாது” என்று கூறி வெளியேற்றியிருக்கின்றனர்.

இவ்வாறு, நிர்வாகம் ஏற்றுக் கொண்டதற்கு முரணாக விடுதியில் தங்கியிருந்த மாணவனை கல்லூரியை விட்டு வெளியேற்றியதை செப்டம்பர் 3-ம் தேதி மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர். அப்போது கல்லூரி நிர்வாக அதிகாரியான ஐக்கிய கிறிஸ்தவ பேரவையைச் சேர்ந்த தியோடர் சாம் என்பவர், “இது எங்கள் இடம், நாங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம். நாங்கள் போராட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வோம்” என்று கூறியதோடு மாணவர்களை அடிக்கவும் செய்திருக்கிறார்.

இந்த தியோடர் சாம்தான் வேறுபல கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடிய சமயங்களில் அங்கு சென்று அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடிக் கொண்டவர். சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து இப்போது வெளியேறியவர்.

மேலும், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகத்தின் அடாவடியை தட்டிக் கேட்ட மாணவர்களில் முன்னணியாக நின்றவர்களை செப்டம்பர் 3-ம் தேதி கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்திருக்கின்றனர்.

காவல்துறை ஜேம்ஸ் கல்லூரியில் ஊதியம் பெறுவது போன்று கல்லூரிக்கு விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் 9-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளுடன் மனு கொடுத்தனர்.

  • சட்ட விரோதமாக அபராதம் வசூலிக்கும் கல்லூரி சேர்மன் ஜேம்ஸ் பிரேம்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சேர்மனுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் எவ்வித காரணமும் இன்றி அபராதம் என்று அடாவடியாக மாணவர்களிடம் வசூலித்த பணத்தை மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று துறைக்கு தொடர்பில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மாணவர்களை துன்புறுத்தியதற்கு கல்லூரி சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று கூறி ஏமாற்றி பணம் வசூல் செய்ததற்கும், மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக காவல்துறையில் பொய்புகார் கூறியதற்கும் கல்லூரி சேர்மன் மற்றும் ஓட்டுநர் ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று ஏமாற்றியதை கேள்வி கேட்டதற்காக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள்
    அகிலேஷ் ,ஐடி மூன்றாம் ஆண்டு
    எவின், எலக்ட்ரிகல் நான்காம் ஆண்டு
    எஸ்தர், எலக்ட்ரிகல் மூன்றாம் ஆண்டு
    செல்வ அசோக், எலக்ட்ரிகல் மூன்றாம் ஆண்டு
    ஆகியோரை எந்த நிபந்தனையுமின்றி மீண்டும் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்திய பின்பும், அதை மாணவர்களிடம் மறைத்து அதே மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்ததற்கு சேர்மன் ஜேம்ஸ் பிரேம்குமார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • கல்லூரி நிர்வாகம், சேர்மன் ஆகியோரின் அடாவடித்தன்மை, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத அபராத வசூல் ஆகியவற்றை கேள்வி கேட்டதற்காகவும் இது குறித்து புகார் செய்ததற்காகவும் எதிர்காலத்தில் எந்த விதத்திலும் பழிவாங்குதல் நடவடிக்கையில் சேர்மன் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஈடுபடாதவாறு பாதுகாப்பு தர வேண்டும்.

மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுமார் 36 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாணவர்களையே குற்றவாளிகள் போல சித்தரித்து பேசியுள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு, தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் சட்ட விரோதமாக அபராதம் விதிப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறி விட்டார்.

மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக இதுவரை விதிக்கப்பட்ட அபராதங்களை அனைத்து மாணவர்களுக்கும் ரத்து செய்து விட்டதாக செய்தி கசிய விட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். போராடிய மாணவர்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்வது பற்றி எதுவும் கூறவில்லை, மாறாக ஒவ்வொரு மாணவர் பெற்றோருக்கும் தொடர்பு கொண்டு உங்கள் மகன் கல்லூரியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான், கலாட்டா பண்ணுகிறான் என்று பீதியூட்டி அவர்கள் மூலம் மாணவர்களை பின்வாங்கச் செய்யும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. மேலும் மாணவர்களை துறைரீதியாக அழைத்து ஒருவருக்கொருவர் ஒற்றுமை ஏற்படாதவாறு பிரிவினையூட்டி வருகிறது.

ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி அங்கு படிக்கும் அனைத்து மாணவர்களையும் கொள்ளையடிக்கின்றது என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும். துறை ரீதியாக பிரிந்து போவது என்பது கேள்விக்கு இடமின்றி கல்லூரி நிர்வாகம் கொள்ளையடிப்பதற்கு மாணவர்களே வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும்.

கல்லூரி நிர்வாகத்தை வீரமுடன் தட்டிக் கேட்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது சக மாணவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

அடாவடியாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகத்திடம் தன்மானத்தை இழக்க விரும்பாமல் போராடும் மாணவர்களுக்கு துணை நிற்பது சக மாணவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்

தகவல்

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
நாகர்கோவில்.

விஷக்காலிகள்

0

“ஏய்… சின்னண்ணா நம்மூர் கயினி வெளியில எலி புடிக்க வருவாரே, பாவம் அவுரு, செத்துட்டார் தெரியுமா?…”

“யாரு வில்லியா…?…!” ஆச்சரியமாய் ஆரம்பித்த ஆதிகேசவன் சற்றுயோசித்து “வில்லி போய் பாம்பு கடிச்சி செத்துட்டாரா?” நிறுத்தி நம்பிக்கையில்லாமல் கேட்டான். “இன்னா கிண்டல் பண்றயா நாயே…” என்று கேலி, கோபம், ஆதங்கம், வேதனை அனைத்தும் கலந்த குரலில் மறுபடி மெதுவாகக் கேட்டான்.

“அய்ய… மூஞ்சப்பாரு, எது எதுல கிண்டல் பன்னுவாங்கன்னு வெவஸ்தையே இல்ல உனக்கு” உதடுகள் துடிக்க புருவங்களை நெருக்கிக் கொண்டு சற்று கோபமாகவே ஷானு சொன்னாள்.

“இல்லம்மா, எப்பேர்க் கொத்த பாம்புக் கடிக்கும் வெறும் பச்செல மருந்த குடுத்து, வைத்தியம் பாத்து செரியாக்குற வில்லி போய் பாம்பு கடிச்ச செத்துட்டார்னா நம்பவா முடியுது… ” சிறிதே நம்பிக்கை வந்தவன் நினைவுகள் பின்னுக்கு ஓடின.

“உனக்கு தெரியுமா ஷானு… ம்… நீயெல்லாம் அப்ப பொறக்கவே இல்ல நானே அஞ்சாவுதுதான் படிக்கர(ன்).”

“ஒரு நாள் ராத்திரி நல்ல அம்மாச கருக்கல் பன்னெண்டு மணியிருக்கும்; திடீர்னு கோழிகத்தற சத்தம் கேட்டு இன்னாடா இன்நேரத்துல கத்துத, காட்டு பூனை கீட்டுபூன வந்து புடிக்குதா, பொத்த கூடையால இல்ல கோழிகவுத்தம்னு துடிச்சிபுடிச்சு எழுந்து ஓடி கூடைய தொட்டுகீறாரு நைனா.

“சுருக்குனு குத்திகீது. ஒடனே இருட்ல இன்னாடா குத்துதன்னு, பக்கத்துல தடவினா அடுப்புக்கு தறிச்சி வக்கும் வேலிக்காத்தான் முள்ளைகூட காணல. சந்தேகம் வந்து ‘ஜ்ஜேய் பொண்ண கருக்காமலையா சீக்கரம் வெளக்க கொளுத்தியா, இன்னமோ சுருக் சுருக்குனு குத்துனமாரி இருந்திச்சி, ….ன்னதும் வாரிசுருட்டிக்கினு சித்தி ஓடி காலெளக்க (காடா விளக்கு) கொளுத்தியாந்து பாத்தா, நல்லபாம்பு கோழிகாலபோட்டு வலுவா பின்னிக்கினு தலைய கூடை பொத்தல் வழியா வெளிய வுட்டு நட்டுகினு பாத்துங்கீது.

“இன்னா பண்ணுவ, சித்தி பாவம் ‘கூவோ மொறையோன்னு’ கத்தி கூச்சல் போட்டதுல நம்ம சந்து ஜெனம் பூரா கூடிப்போச்சி. மாரிமுத்து அவுங்க அப்பன் ஓடியாந்து, இடுப்புல கட்டியிருந்த அண்ணாகவுர அறத்து கடிவாய்க்கு மேல நல்லா விகிஞ்ஜி கட்டு போட்டாரு.

“நடந்தா வெசம் விறுவிறுன்னு ஏறி தலமாடு கொண்டுடும்னு, கட்டல்ல படுக்கவச்சி ரெண்டுபேரா தலமேலையே தூக்கிக்கினு ஓடனாங்க. நாங்கூடத்தான்…

“மணி ஒன்னு ஒன்ற இருக்கும், கொரல் குடுத்தத்தான் தாமசம், அந்த வில்லி அறக்க பறக்க எழுந்து வெளிய ஓடியாந்து, இன்னா ஏதுன்னு விஷயத்த கேட்டு. ‘நீங்க யாருனா கடிவாய கடிச்சி வெசத்த உறிஞ்சி எடுத்தீங்களா சாமி…’ன்னதும், இவுங்க எல்லாரும் ‘இல்லை..ய்ய்யா கட்டுத்தான் போட்டோம்’னாங்க. அப்பல்லாம் நைனாவுக்கு ஒடம்பெல்லாம் தண்ணியா உட்டு தன்னமீறி போச்சி. கீரத்தண்டுமேரி வெலவெலன்னு உழுந்துட்டாரு.

“இந்த விசயத்த எல்லாம் கேட்டுக்குனே, சிடுக்கா நாழியில பச்செல மூலிகைய எடுத்தாந்து ‘நாலு கடி’ மருந்த உள்ளுக்கு குடுத்தாரு. நல்ல வேள வாந்தி வரல, வாந்தி மட்டும் வந்திருந்திச்சு ஆள கண்டுபுடிக்கறது அறிகண்ணாயமாயிட்டும் இருக்கும்.

“அன்னக்கி ராத்திரி வில்லிவூட்டு புள்ளகுட்டியெல்லாம் முழிச்சிக்கிச்சி. சும்மா சொல்லக்கூடாது. பொழுந்து விடியரவெரிக்கும் ஒருத்தரும் கண்ணாட கண்ணு மூடல, அந்தாளு சம்சாரம் பாவம் அந்நேரத்துல சூடா சுக்காப்பி போட்டு போனஜெனம் பூராத்துக்கும் குடுத்தாங்க.

“நாங்கூட குடிச்சேன், நல்லா நெனப்பு கீது ஷானு” என்றவன் சொல்லும்போது இப்போதுதான் அந்த காப்பியை குடித்ததுபோல் ரசித்து எச்சிலை கூட்டிக் கூட்டி விழுங்கினான்.

“அத்தோடவா வுட்டாங்க, பாம்பு கடிபட்டவங்க இருவத்தினாலு மணி நேரம் தூங்கக்கூடாதுல்லா, அதால வில்லிவூட்டு பசங்க அவுங்க கொலதெய்வத்த வேண்டி கூத்தாடுறதும், வில்லிங்க வீரத்த கதையா சொல்லும் ‘வில்லி வில்லி நாங்கத்தான் வேட்டக்காரு நாங்கத்தான்…’ பாட்ட பாடறதும், ஒரே அமுக்களம்.

“பளபளன்னு பொழுது வெடிஞ்சதும் சூரியன கும்புட்டு ஒரு வேள மருந்த கைல குடுத்து, ‘இனிமே கல்லால அடிச்சாலும் சாவு கெடையாது பயப்படாத கூட்டிம்போங்கம்மா” என்று சொன்னவர், “சொல்ல மறந்துட்டேன் மூணு நாளுக்கு உப்பில்லாத கஞ்சிதான் குடிக்கணும். நெனப்பு இருக்கட்டும் நாட்டு மருந்து பத்தியம் இல்லான்னா உசுருக்கு ஆபத்தாயிடும்”ன்னு தடித்த குரல்ல சொன்னார்.

சொன்னது சொல்லாங்காட்டியும், சித்தி அவர் கால்ல உழுந்து நீ நல்லா இருக்கணும் எப்பா, எனுக்கு மடிப்பிச்ச குடுத்த மவராசான்னு சொல்லிக்கினே எழுந்து, முந்தானியில முடிஞ்சி வச்சிருந்த பத்து ரூவாவ அவுத்து குடுத்தா.

வில்லி நெருப்ப தொட்டது போல “எம்மா இன்னா காரியம் பன்ன எங்க கொலதேவத டேண்டமாரிய பத்தி உனுக்கு தெரியாதா, இந்த பூலோக மக்க(ள்) உசுரகாக்கற இந்த மருந்துக்கு கூலியா பச்சதண்ணிகூட வாங்கமாட்டாம்னு சத்தியவாக்கு பண்ணிட்டு தான், ஆத்தா நல்ல பச்சலமூலிகய வச்சி படைச்சிட்டு மருந்தையே அம்மியில வச்சி அரைப்போம். அவ வாக்க மீறுனா எங்க குடும்பத்த வரக்கா சொறக்காவா ஆக்கிடுவான்னு சொல்லி வானத்தைப் பாத்து கும்பிட்டார்.

‘உடனே என்ன மன்னிச்சிடு யாம் பத்தினி மாரியம்மா புத்திகெட்டன் பீயத்துன்னன்’னு இன்னாவோ ஆணைக்கி கட்டுப்பட்டாமாரி ரெண்டு கைகளாலும் கன்னத்தில் மாறிமாறி புத்தி போட்டுக்குனு அழுதுடிச்சி சித்தி. வூட்டுக்குப் போவ காலெடுத்து வச்சது திரும்பி, ‘ஐயா மறந்தே பூட்டன் இவர கூட்டியார அவுசரத்துல பாம்பு எந்த பக்கம் போச்சின்னு அடிக்காம உட்டுட்டு ஓடியாந்துட்டம். இன்னிக்கி வூட்டான்ட வந்து அந்த கருமத்த புடிச்சாந்துடு சாமி, புள்ளகுட்டிவ நடமாடர எடம்’ன்னுட்டு வூட்டுக்கு கெளம்பினாங்க.

“கோழிய கடிச்சிபோட்டு சாக்கடை உள்ளே கொட்டிவச்சிருந்த பனங்கொட்டைங்க சந்துல போய் கமுக்கமா படுத்துக்குனு இருக்குது. இது தெரியாம மருந்து குடுத்து கூட்டியாந்த மனுசன வாசல்லயே ஒக்கார வச்சிட்டாங்க, பாம்பு எங்க வூட்டு உள்ளே போய்டுச்சோன்ற பயத்துல.

“சிவாவும், பாலண்ணனும் வாசல் எதுருல ஊடு கட்ட பதுவுபோட்டு வைச்சிருந்த பனஓலை, வெருவு எல்லாத்தையும் கலைச்சி போட்டுட்டு தேடினாங்க.

“ஆனா வில்லி வந்த ஒடன சொல்லிவச்சமேரி எறும்பு மொச்சிங்கெடந்த கோழிய பாத்துட்டு, நேரா அந்த பாம்பு போன வழிய கண்டு போய், கோமணத்த நல்லா இருக்கிவுட்டுக்கினு இடுப்புல கட்டிவச்சிருந்த மருந்த எடுத்து வாய்ல அடக்கிக்கினு பனங்கொட்டைங்க சந்துல கையவுட்டு லபுக்குனு புடிச்சி அசால்ட்டா இழுத்தார், மொழங்கால் கனத்துக்கு நெளியுது. வில்லிங்களுக்கு பாம்பு போற காலடி கரக்ட்டா தெரியும், அதான் பாம்பு எங்க போனாலும் புடிச்சிடறாங்க.

“அப்பவே வாய நெகிட்டி வெஷப்பல்ல புடிங்கிட்டு வாசல்ல உட்டாரு; மொறம் அகலத்துக்கு படம் எடுத்துக்கினு, பந்து எகுருறமாதிரி மனசன் மேல சீறிக்கினு பாயுது. நானு, மோகனு, கோய்ந்து எல்லாம், பெரியவங்களும் எங்ககூட சுத்தி நின்னுக்கினு வேடிக்க பாத்தோம்.

கொஞ்ச நேரம் வெள்ளாட்டு காட்டிட்டு பேனாகெத்தியால தலையாண்ட ஒரு கீறு கீறி புடிச்சி இஸ்தாரு. அப்பிடியே சொக்காய கழட்டுன மாதிரி தோலு உரிச்சிக்கினு வந்திச்சி.

“தோல உரிச்சிட்டதும் உக்கரம் ஜாஸ்தி ஆய்டிச்சி, வில்லிய எகிறி எகிறி அடிக்கிது. அத புடிச்சி சின்ன பசங்க மேல போடறமாதிரி காட்னதும் நான் ஓடியாந்து எங்க வூட்டு உள்ளே பூந்துக்கின(ன்).

“வூட்ட சுத்தி உப்பு மந்திரிச்சி கொட்டினார். உப்பு மந்திரிச்சி போட்டார்னா அத்தாண்டி பாம்பு உள்ளே வராது. வில்லி நாகராஜன் கிட்ட சத்தியம் வாங்கிடுவார். அத மீறி உள்ளே வந்த எந்த பாம்பா இருந்தாலும் செத்துடும்.

“சித்திய கூப்புட்டு ‘கோழிகள இங்க கவுக்கவேணாம். கோழிபீநாத்தத்துக்குத்தான் நல்லபாம்பு வரும். அதால இனிமே அந்த பூர்சமரத்து ஒட்டி தனியா கவுருங்கன்’னுட்டு, பாம்பு தோல கழுத்துல போட்டுக்குனு, உரிச்சிட்ட பாம்ப கைல சுத்தி புடிச்சிக்கினு, வில்லி தெருவுல நடந்து போவும்போது ஊர் ஜெனமே வாய்மேல வெரல வச்சிக்கினு பாத்திச்சி. சூராதி சூரனை பார்க்கறமேரி.

***

முடிந்த அளவு ஞாபகம் வந்த விசயங்களைக் கூறியதற்கே ஆதிகேசவனைச் சுற்றி சின்னபிள்ளைகள் கூட்டம் கூடிவிட்டது அதை பெருமையுடன் பார்த்து ஒரு மெல்லிய சோகம் கலந்த புன்னகையை வெளியிட்டான் ஆதி.

“ஆமாம்… யாரு டேண்ட டேண்ட டேண்ட மாரியம்மாளே…” பாட்டுப் பாடி பொம்பள வேஷம் கட்டிக்கினு ஆடுவரே அவரையா சொல்ற.” என்ற ஆதியின் மனதுக்குள் வில்லியர் மாரியாத்தா கும்பிடுவதற்காக ஆளாளுக்கு வேஷம் கட்டிக்கொண்டு வருவதும்; ஒத்தை மேளத்தை (பறை) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாய் சென்று ஆடும் ஆட்டங்களும், வித விதமான ராகங்களில் ஏற்ற இறக்கங்களுடன் பாடும் பாடல்களும் அலை அலையாய் வந்து சென்றன.

“இல்லை சின்னண்ணா மோளம் அடிச்சிக்கினே ஆடுவாரே அசப்புல நம்ம ஏமாறச்சக்கண்ணு பெரிப்பா மாதிரி…” ஷானு வார்த்தையை இழுத்து முடிப்பதற்குள் கெவுளியைப்போல் உச்சுக்கொட்டினான் ஆதி.

“அய்யய்யோ… ரெண்டு பேருமே மருந்து குடுப்பாங்க. நான் முன்ன சொல்லல நைனாவுக்கு மருந்து குடுத்தார்னு அவரும்மா, ச்… எத்தினி பேருக்கு பாம்பு வெஷத்துலர்ந்து காப்பாத்தி உசுர் குடுத்த மனுசன் கடைசில பாம்பே அவுருக்கு எமனாய்ட்டு கீதே.”

நுரையீரலுக்குள் உருவான வெப்பக்காற்றை ஸ்…. ஸ்சூ என ஊதி வெளியேற்றிவிட்டு மறுபடி நினைவில் நீந்திப் பேச ஆரம்பித்தான் ஆதி.

“நல்லா நெட்ட பனையாட்டம் இன்னா தேககட்டு. மல்லாட்ட கொல்லையில எலிபுடிக்க வந்தார்னா ஊதலான் வச்சி பொகை ஊதி எத்தினி எலிபுடிச்சாலும், நாங்க சின்ன பசங்கள்ளாம் சுட்டுத்தின எலிவேணுன்னு கேட்டா புடிச்சத பூராத்தையும் எங்களாண்ட குடுத்துட்டு மொளச்சி போன நெல்லையும், மல்லாட்டையையும் தான் அள்ளிக்கினு போவார்.

“களத்துமேட்டில் நெல்லோ, மொளகாயோ எது காஞ்சிங்கெடந்தாலும் யாரும் காவலுக்கு இல்லாட்டா கூட கையவச்சி தொடமாட்டார் நம்பளா மனசு வந்து குடுத்தா உண்டு.

“ச்சே எப்பேர்பட்ட மனுசனுக்கெல்லாம் எப்பிடியெல்லாம் சாவுவந்து தொலைக்குது… அது செரி ஷானு. எங்க… எப்பிடி செத்தாரு. மருந்து கைல வச்சில்லய்யா…

ஆதியை மறித்து ஷானு வில்லிக்கு நேர்ந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

“நம்ம உண்டை பெரியப்பா வூட்டு கயினில்ல மடுவா இருக்கு. அங்க… அந்த கயினில நண்டு வள நோண்டும் போது நோண்ட நோண்ட ஆழமா போய்க்கீது “எம்மா பெரிய ஆழன்டா எப்பான்தான் கையவுட்டு பாத்துக்கீறாரு. வலைல இருந்த பாம்பு வெடுக்குனு கைய கடிச்சிகீது. அப்ப இவுரு “கைய்யாடி கடிக்கிர உன்ன உப்பு மொளகா தடவி சுட்டு கடவாய்ல வச்சி கடிக்காம வுடரதில்லன்னு” புடிச்சி இஸ்துகீறாரு. நல்லா வெட பாம்பு ஒரு ஆள் நீட்டுக்கு கைல நாய் கோத்துபுடுங்கறமாறி புடுங்கிக்கினு தொங்குதாம்.”

“…ம்… டக்குனு மடியில கட்டியிருந்த பச்செல மருந்த வாயில போட்டு அடக்கி சிரிச்சிக்கினே என்னையாடி கடிக்கர உன்னை எலியின்னுல்ல நெனச்சேன் இன்னா பண்றன் பார்னு பல்ல ஒடச்சிட்டு தோலை உரிச்சி வேஷ்டியில் வைச்சி மூட்டை கட்டிக்கினு பாம்ப அடிச்சி கெணத்து மேட்டில் பள்ளந்தோண்டி பொதச்சிட்டு பஸ் ஸ்டேண்டு போவாங்காட்டியும் தலை சுத்த ஆரம்பிச்சிட்டு இருக்குது.

“அய்யய்யோ அப்பறம்…”- ஆதி பதறினான்.

“பயந்துபோய் ராஜி டாக்கடர் வூட்டுக்கு ஓடி இந்தமாரி இந்தமாரின்னு வெவரத்த அழமாட்டாத கொரையா சொல்லிகீறாரு. அதுக்கு அந்த டாக்கடர் முன்னூத்தி அம்பது ரூவா ஆவும்ன்னானாம். “ஆனா ஆயிட்டு போவுது வுசுருக்கு மிஞ்சியின்னா மசுரு சொல்லும்மா” என்று திண்ணையிலிருந்த ஆதி மேடை நுனிக்கே வந்துவிட்டான்.

“பாம்பு தோல், சேறும் மண்ணுமா கெடந்த மொளவிட்ட நெல்லு, மல்லாட்ட எல்லாத்தையும் சேத்து, கிழிஞ்சி போன அழுக்கு வேஷ்ட்டியால கட்டின மூட்டைய செவுத்து ஓரமா வச்சிட்டு, காச வூட்டுக்கு தான் போய் எடுத்தார்னும்னு வில்லி முடிக்காங்காட்டியும். “போய்யா… போய்… மொதல்ல காச எடுத்துட்டு வான்”னு சொன்னானாம் ராஜி.

“அடக் கொடும்… பாவி…” கண்களை மூடி மூடித் திறந்து கொண்டு ஆதி சொன்னதும், ஷானுவும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பேசினாள்.

“பாவம் அந்த வில்லி. ராஜி டாக்கட்டர் கால்ல நெடுஞ்சாண்கட்டையா விலுந்து ரெண்டு காலையும் கெட்டியமா புடிச்சிக்கினு, ‘அய்யா என் உசுர காப்பாத்துங்க நான் இப்பிடியே காட்லர்ந்து தான் வர்ரேன். சின்னதும் சீத்தானுமா ஆறும் பொட்டபுள்ளங்க சாமி, என்னை வுட்டா அவுகளுக்கு நாதி கெடையாது. மருந்த தாங்க நான் வூட்டுக்கு போய் பணத்த கொண்டாந்து தந்துடரேன். உங்க புள்ள குட்டிவளுக்கு கோடி… கோடி… புண்ணியம் வந்து சேரும்’ன்னு. இன்னான்னாவோ சொல்லி அழுது பொலம்பி கெஞ்சியிருக்கறார். ‘வாத்தியார் கூலியும் வைத்தியர் கூலியும் குடுக்காதவங்களுக்கு எமதண்டியில இன்னா தெண்டனன்னு எனுக்கு தெரியும் சாமின்னு கூட சொல்லி கலங்கியிருக்கார்.

“அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி… கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம்.

“கண்டிப்பா நீ ஒன்னாபாரு ராஜி செத்தான்னா அவனுக்கு அட்டகுழி, அரணகுழி, பாம்பு குழி, பல்லி குழிதான்….” எச்சிலை கூட்டி கூட்டி முழுங்கி அழுத்தி அழுத்தி கூறும்போது ஷானுவின் கண்கள் கலங்கியிருந்தன.

“யார் காந்தி டாக்டரா, வைஜெயந்திமாலாவா நல்லா யோசிச்சி சொல்லு, ராஜி டாக்டர் அப்படி செஞ்சிருக்கமாட்டாரே.”

இவ்வளவையும் கேட்டபின்பு ஆதி இப்படி கேட்டது ஷானுவுக்கு அளவில்லா கோபத்தை உண்டாக்கியது.

“நான், ராஜி… ராஜின்னு.. படிச்சி படிச்சி சொல்ரன் வெடிய வெடிய ராமாயணம் கேட கதயா இன்னா பேசர நீ” என்று நிறுத்தினாள் ஷானு.

ச்சே. ஒரு டாக்டர், தாசிகூட செய்யக்கூசுற காரியமல்லவா, இவன்லாம் நினைக்க நினைக்க உலைகொதிப்பது போல் கொங்கியது கோபம். இதுநாள் வரை மருத்துவர்கள் மீது ஆதி வைத்திருந்த அதீதமரியாதைகள் என்ன ஆனதென்று அவனுக்கே தெரியவில்லை.

“அந்த பொறுக்கி ராஸ்கோலை சும்மாவா வுட்டாங்க ஜனங்க.”

“தெற்கசேரி ஜெனங்க மட்டும்….” ஷானு வாயெடுப்பதற்குள் இன்னொரு குரல் எழுந்தது.

“ஆமாம் போய் கீய்… ச்சிட்டாரு பணம் இல்லாம எவன்தான் மருந்து குடுப்பான்” கட்டையாக சம்பத்தின் குரல். இவன் எப்ப வந்தான் இங்க என்பது போல ஆதி திரும்பிப் பார்த்தான்.

“டே… செம்போத்து உசுர்டா காலகாலப்புடிச்சி செஞ்சிக்கீறான். நெனச்சாலே நெஞ்சி அபுக்குன்னுதுடா.”

“ஆமாம் பெர்… ரீ… ய உசுரு அவன் எம்மாம் செலவு பண்ணி படிச்சி பட்டம் வாங்கியிருப்பான்.”

“…யான்டா டேய்… டாக்டருக்கு படிக்கறது ஊர் ஜெனங்களுக்கு உயிர்பிச்ச குடுக்கடா, ஏழை பாழை தாலியறுத்து எள்ளுந்தர்ப்பனை பண்ரதுக்கா இல்ல.”

“போடா டேய் அவன சாவடிச்சது இன்னாவோ டாக்கடர்ன்ர மாதிரி பேசற ஃபஸ்ட் எயுடு கூட பண்ணிக்க தெரியாதது அந்த வி…ல்…லியோட தப்பு”

‘வில்லி’ என்ற பெயரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக உச்சரித்தான் சம்பத் தொடர்ந்து.

“கண்ட கண்ட மருந்தல்லாம் வேற தின்றது திருந்தாத ஜென்மங்க, அது சரி மருந்துன்னா டாக்டருக்கு மட்டும் சும்மாவா கெடக்கிது, நீயெல்லாம் இருந்தா வில்லிய திரும்பி கூட பாத்திருக்க மாட்ட ஏதோ அவரா இருக்கவோ நின்னு பதிலாவது சொன்னாரு”

நிறுத்தி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு,

“நாய்ங்க ஒரு டாக்டர்னுகூட பாக்காம வூட்டு ஜன்னல் கண்ணாடியெல்லாம் ஒடச்சியிருக்குதுங்க. இன்னாதான் இருந்தாலும் சேரி புத்திய காட்டிருச்சிங்க பார்”

நிறுத்தியதுதான் தாமதம்.

“அந்த நாதாகு படிச்ச புத்திய கான்னதுக்கப்புறம் இவுங்க சேரி புத்திய காட்டினதுல இன்னாடா தப்பு. அவன போஸ்ட் கம்பத்துல கட்டி செருப்பெடுத்து சிங்காரிச்சியிருக்கணும்டா ஏற… எறங்க… அத செய்யாம வுட்டதுதான் ஜெனங்க தப்பு” என்று வரவோட்டில் போட்ட நெல்மணிகளைப்போல் பொறிந்து தள்ளிவிட்டு “இதுக்கு மேல அந்தப் பரதேசி நாய்க்கு பரிஞ்சி பேசன…” பட்டென்று நிறுத்தி சரசரவென்று வீடுபோய்ச் சேர்ந்தான் ஆதிகேசவன்.

இரவு நீண்ட நேரம் ஆதிக்கு தூக்கமே வரவில்லை. சிறுவயதில் இவன் கற்பனை செய்திருந்த டாக்டர்கள் நினைவுத்திரையில் கழுத்திலும் காதிலும் மாட்டிக்கொண்டு பெரிய பெரிய கட்டிடங்களின் வரண்டாக்களில் இங்கும் அங்கும் ஓடினார்கள்.

“டாக்டருக்கு படிக்கரதுதாண்டா ஒலகத்திலயே புண்ணியமான படிப்பு”

“டாக்டருங்க தெய்வத்துக்குச் சமானம்”

“கட்ன பொண்டாட்டிங்கூட படுத்திருந்தாகூட நோவாளி வந்தா எழுந்து வந்து பாக்கணும்னு படிக்கப் போவும் போதே சத்தியவாக்கு வாங்கிக்குவாங்களாம்”

அம்மாவும், அன்னக்கிளி அத்தையும் சிறியவனாய் இருந்தபோது பேசிக்கொண்ட வார்த்தைகள் பாழுங்கிணற்றில் போட்ட கல்லின் ஒலியாய் விட்டுவிட்டு ஒலித்தன.

எப்போது தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை படுபயங்கரமான கனவுகள், ஆதிகேசவன் கழனிக்கு குளிக்க செல்கிறான். அதுவரை மீன்கள் மட்டுமே நீந்திக் கொண்டிருந்த தண்ணீரில் இவன் இறங்கியவுடன் கிணறு முழுக்க தண்ணீர் பாம்புகள் நீந்துகின்றன. திடீரென்று எல்லாவற்றுக்கும் பெரிய பாம்பு ஒன்று சிரித்துக் கொண்டே இவனைத் துரத்துகிறது.

பயந்துபோய் வேகமாய் நீந்தி படியேற முயல்கிறான் கால்கள் தன்னாலேயே பின்னுக்கு இழுக்கின்றனவே தவிர முன்னால் செல்வது கடினமாக இருக்கிறது. ஆனால் பாம்பு மட்டும் சர்… சர் என்று ராக்கெட் வேகத்தில் பாய்கிறது. படியேறி எப்படியோ மேலே வந்து மூச்சு விடும்போது பாம்புக்கு இரண்டு பக்கமும் ரெக்கை முளைத்து பறந்து தரைக்கு வந்து உடனே நல்ல பாம்பாக மாறித் துரத்துகிறது. எப்படியும் தப்பிவிடலாம் என்று ஓடும்போது காலில் எட்டி குத்திவிட்டு மீண்டும் சீறுகிறது பாம்பு. சரி ஏதாவது வைத்தியம் பார்க்கலாம் என்று நினைப்பதற்குள் விஷம் ஏறிவிழுந்து தான் செத்துவிட்டது போல் ஆன உடன், பட்டென்று கனவில் தொடர்பு அறுந்து ஆதிகேசவன் கண் எதிரிலேயே வில்லி வாயில் நொப்பும் நுரையும் தள்ளி சுருண்டு விழுந்து சாகிறான்

ராஜி டாக்டர் அலட்சியமாய் திரும்பிச் சென்று கதவடைக்கப் போகிறான் உடனே அலறி துடித்து “டாக்டர் அந்த வில்லிய பாம்பு கடிச்சிடிச்சி காப்பாத்துங்க காசு நான் தரேன் காப்பாத்துங்க” என்று தூக்கக் கலக்கத்திலேயே எழுந்து உட்கார்ந்து கொண்டு கத்தியவுடன் பக்கத்து திண்ணையில் படுத்திருந்த அவன் அம்மா அன்னம்மா “இன்னாடா பையா எங்க… இன்னா பாம்பு” என்று கூறிக்கொண்டே தட்டுத்தடுமாறி ஓடிவந்து, இவன் கையை காலை பிடித்து உருவிவிட்டுக் கொண்டே பதறினாள்.

“இன்னா எப்பா பயந்துகியந்து பூட்டாயா” என்று அம்மா கேட்பதைக் கூட உணர முடியாமல் ஆதிகேசவன் “அடப்பாவி… சாவுடிச்சிட்டயே…. ராஜி… வில்லி… டாக்டர்…. என முணகிக் கொண்டே இருந்தான்.

– நிதி. கோமேதகம்
______________________

புதிய கலாச்சாரம் 1999
______________________

கோடீசுவரக் கொள்ளையர்கள் !

4

முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், திலிப் சாங்வி, அஸிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி: கோடீசுவரக் கொள்ளையர்கள்!

1990-களில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தரகு முதலாளிகள்தான் உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இப்பொழுது அந்த எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’ 46. அன்று 32 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த அக்கோடீசுவர முதலாளிகளின் சொத்து மதிப்பு, இன்று 17,630 கோடி டாலர்களாக விசுவரூபம் எடுத்திருக்கிறது. இந்த 46 கோடீசுவர முதலாளிகளுள் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, ஆர்சிலர் ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர் லட்சுமி மிட்டல், சன் ஃபார்மா அதிபர் திலிப் சாங்வி, விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி, டாடா சன்ஸ் நிறுவனப் பங்குதாரர் பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி ஆகிய ஐந்து பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு மட்டும் 5,23,897 கோடி ரூபாயாகும். இந்தியாவைச் சேர்ந்த பெரும் கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் சரிபாதி இந்த ஐந்து தரகு முதலாளிகளிடம் குவிந்திருப்பதாக (8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் குறிப்பிடுகிறது.

10-poorஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், வெறும் 5 பேர் அடைந்திருக்கும் ‘வளர்ச்சி’ மலைக்கத்தக்கதாக இருக்கும்பொழுது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ பேரழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

  • இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் (64 கோடி பேர்) வறுமையின் நிழலில் வாழ்கின்றனர்.
  • இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 5,000 குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல், நோய் தாக்குண்டு இறந்து போகின்றனர். உலகின் மொத்தமுள்ள நோஞ்சான் குழந்தைகளுள் 46 சதவீதக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகளாகும்.
  • கொடிய பட்டினியால் தாக்குண்டுள்ள 79 நாடுகளில் இந்தியா 65-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • இந்திய விவசாயிகளுள் 49 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடன் பிடியில் சிக்குண்டு உள்ளன. இந்தக் குடும்பங்களின் சராசரி கடன் சுமை தலா 25,891 ரூபாய். கடந்த இருபது ஆண்டுகளில் கடனை அடைக்க வழியின்றித் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,70,490.
  • தனியார்மயத்திற்குப் பிறகு, இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகளின் ஆண்டு வருமானம் 30,000 மடங்கு அதிகரித்திருக்கும்பொழுது, இந்தியத் தொழிலாளர்களின் கூலி 22 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபொழுதில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் – அதாவது தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்படும் வேகம் 84 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இவை போன்ற மலைக்கும் மடுவிற்குமான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விசயம் நிச்சயம் புலப்படும். கோடிக்கணக்கான விவசாயிகளின், தொழிலாளர்களின், பிற உழைக்கும் மக்களின் உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி, வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பிடுங்கி, சமூக அடுக்கின் உச்சியில் இருக்கும் மேட்டுக்குடி கும்பலிடம் கொண்டுபோய் சேர்த்ததன் விளைவாகத்தான் 5 பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு 5,23,897 கோடி ரூபாயாக வீங்கிப் போயிருக்கிறது.

இந்த நிலையில்தான், புதிதாகப் பதவியேற்றுள்ள மோடி அரசு ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு மானியங்களை ஒழிக்க வேண்டுமென்றும், தொழிலாளர் நலச் சட்டத்தையும் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் திருத்த வேண்டுமென்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்டவற்றை அறவே நீக்க வேண்டுமென்றும் கூறி வருகிறது. மோடி அரசின் இந்த வளர்ச்சிப் பாதை இந்திய உழைக்கும் மக்களுக்குப் பேரழிவுப் பாதையேயாகும்.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

மோடி தர்பார் – கார்ட்டூன்கள்

0
மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் : அரசியல் சட்டத்தைத் தாக்கும் ஹிந்து ராஷ்டிர கருத்துக்கள்
ரயில் கட்டண உயர்வு
ரயில் கட்டண உயர்வு : “எந்திரிச்சி நில்லு, இன்னும் நிறைய இருக்கு…”
மோடி மதவாதம்
“ஒரேயடியாக இல்ல, ஒரு 10 வருஷத்துக்கு மட்டும் மதவாதத்தை அணைத்து வைப்போம்” : மோடி.
அமித் ஷாவுக்கு நற்சான்றிதழ்
அமித் ஷாவுக்கும் இந்திரேஷ் குமாருக்கும் நற்சான்றிதழ் : “சீக்கிரமே, எல்லா பல்லையும் கழுவி சுத்தமா துடைச்சிரலாம்” – விசாரணை கமிஷன்.
காசா தாக்குதல்
காசாவின் மீது இசுரேல் தாக்குதல் – அமெரிக்கா, ஐநா இரட்டை வேடம்

 கார்ட்டூன்கள் : நன்றி IndiaTomorrow.net