Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 637

குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

16
child-marriage

லகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ நடத்திய கூத்துகளை வெளியிடுவதில் மும்முரமாக இருந்த ஊடகங்கள் இந்த செய்தியை  கண்டு கொள்ளவில்லை.

குழந்தை திருமணம்
குழந்தைத் திருமணம்

உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 42% தெற்காசியாவில் நடப்பதாகவும், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 33% நடப்பதாகவும், மற்ற தெற்காசிய நாடுகளின் பங்கு 9% ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவில் திருமணமான பெண்களில் (20 முதல் 49 வய்து வரை) 58 சதவீதத்தினர் தனக்கு குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

பீகாரில் அதிக அளவில் (68%  திருமணங்கள்) குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன். மற்ற ‘முன்னோடி’ மாநிலங்களாக ராஜஸ்தான், பீகார், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளன. இங்கும் அதிக அளவில் அதாவது 51.9% முதல் 68.2 % வரை குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாநிலங்களில் 20-24 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் இரண்டில் ஒரு பெண் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர் என்கிறது அந்த அறிக்கை.

தென்னிந்தியாவில் ஒப்பீட்டளவில் குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருக்கிறது. அதே சமயத்தில் கேரளாவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது அந்த அறிக்கை. கேரளாவில் வடஇந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகரித்து வருவதால் இந்த புள்ளிவிவரம் உயருவதாக கூறுகிறார் யூனிசெஃபின் இந்திய அதிகாரி டோரா ஜியுஸ்டி.

இந்த புள்ளிவிவரத்தை நோக்கும் போது பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கும் வடஇந்திய இந்தி மாநிலங்கள் பிற்போக்கு பழக்கங்களுக்கு பலியாகி வீழ்ந்து கிடப்பது தெரிகிறது. அதே சமயம் சுயமரியாதை இயக்கம் போன்ற பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் கொண்ட பழைய சென்னை மாகாண மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியுள்ளன என்பதையும் இது காட்டுகிறது.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமண ஒழிப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை

குழந்தைத் திருமண ஒழிப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் கூட இல்லை என்கிறது அந்த அறிக்கை. “குழந்தைத் திருமணம் கடந்து இருபது ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு சதவீதம்தான் குறைந்துவருகிறது. இப்படியே போனால் குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆகும்” என்று கவலை தெரிவித்துள்ளார் யுனெஸ்கோவின் இந்திய அதிகாரி டோரா.

குழந்தைத் திருமண ஒழிப்பு குறித்து அக்கறை கொண்டவர்கள் இந்திய வரலாற்றில் குழந்தைத் திருமண ஒழிப்பு தொடர்பாக இதுவரை நடந்துள்ள நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பது அவசியம். அப்பொழுது தான் உண்மையான எதிரியை இனங்கண்டு எதிர்த்து போராட முடியும்.

ந்தியாவில் நடக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு வேதகாலம் தொடங்கி இன்று வரை ஒரு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. ‘பெண்குழந்தை பூப்பெய்தும் முன் திருமணம் செய்து வைக்கா விட்டால் பெற்றோர் நரகத்திற்கு செல்ல நேரிடும்’ என்றும் ‘பூப்பெய்திவிட்ட பின்னர் கணவன் இல்லை என்றால் பெண்கள் நடத்தை கெட்டு விடுவார்கள்’ என பலப்பல காரணங்களை கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறது பார்ப்பன இந்துமதம்.

அதே போல இதை எதிர்த்த போராட்டத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. குறிப்பாக இன்று நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமண தடைச் சட்டமும் அதற்கு முந்தைய சம்மத வயது சட்டமும் எளிதில் நிறைவேறி விடவில்லை. பெரியார், மலபாரி போன்றவர்கள் தொடர்ந்து இதற்காக குரல்கொடுத்து வந்தார்கள்.

1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான். சிறுமிகளை திருமணம் செய்து உடலுறவு கொள்ளுதல் என்பது அன்று வழக்கத்தில் இருந்த ஒன்று. இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரினர்கள் முற்போக்காளர்கள். இந்த விவகாரம் விவாதப் பொருளாகியது.

ஆங்கிலேய அரசு சம்மத வயது சட்டத்தை (Age of Consent Act, 1891) தாக்கல் செய்தது. இதன்படி 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று அறிவித்தது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது.

திலகர்
திலகர்

குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றதும் வெகுண்டெழுந்தார்கள் இந்து ‘தேசியவாதிகள்’. இந்த சட்டம் இந்து மதவிவகாரத்தில் தலையிடுவதாகவும், இது ஒரு  ஆபத்தான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்றும் கூறி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் யார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களின்  ஒருவரும் மாபெரும் தேசியவாதி என்று பார்ப்பன இந்துமத வெறியர்களால் பாராட்டப்படும் ‘லோகமானிய’ திலகர் தான் அவர்.

திலகர் தன்னுடைய கேசரி இதழில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கட்டுரைகளை எழுதினார். இந்து மதத்தின் அடிப்படை கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று  முழங்கினார். மேலும் இந்த சட்டத்திற்காக போராடிய மலபாரி என்பவர் பார்சி இனத்தவர் என்பதால் அவர் இந்து மதவிவகாரங்களில் தலையிடாமல் தன்னுடைய பார்சி இனப் பெண்கள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு அவரை கண்டித்தார் திலகர்.

விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் கட்டுவது போல இன்று திலகரை தேசியவாதியாக காட்ட இந்துத்துவா ஆதரவாளர்கள் பகீரத முயற்சி செய்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலய அரசு கொண்டு வந்ததால் தான் அந்த சட்டத்தை திலகர் எதிர்த்தார் என்று  கேலிக்குரிய வாதங்களை வைத்தாவது திலகருக்கு முட்டுக்கொடுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

அன்றைய சட்டசபைகளில் இருந்த பார்ப்பன இந்துமத வெறியர்களாலும் அந்த சட்டம்  எதிர்க்கப்பட்டது. ஆயினும் இவர்களின் எதிர்ப்புகளை மீறி சட்டம் நிறைவேறியது.

பின்னர் 1929-ல் திருமண வயதை 10 லிருந்து 14 ஆக அதிகரிக்கும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கும் இந்து சனாதனவாதிகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் சின் மூதாதையர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சம்மத வயது  சட்டத்தை திலகர் எதிர்த்தாரென்றால் குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தை மாளவியா, முன்ஷி போன்ற இந்து மதவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த சட்டத்திற்கு எதிராக அன்றைய இந்து மன்னர்கள், சங்கராச்சாரிகள் பிரிட்டிஷ் அரச பிரதிநிதியிடம் தூது சென்றார்கள். தி இந்து உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். சில இஸ்லாமிய தலைவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக மனு செய்துள்ளார்கள்.

‘மதத்திற்கு ஆபத்து’ என்பது முதல் ‘பெண்கள் ஒழுக்கம் கெட்டுவிடுவார்கள்’ என்பது வரை பலவிதமான காரணங்களை கூறி பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். சிலர் இன்னும் நுணுக்கமான வழிகளில் பல்வேறு சூழ்ச்சிகளுடன் சட்டத்தை ஒழிக்க களமிறங்கினார்கள். குறிப்பாக மருத்துவ அடிப்படையில் குழந்தைத் திருமணம் தவறு தான் என்று ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் ‘பார்ப்பன இந்து மதம் குழந்தைத் திருமணம் செய்ய வலியுறுத்துவதால் தடைசட்டம் கொண்டு வரக்கூடாது, இது மதவிவகாரம்’ என்று சிலர் எதிர்த்தனர். இன்று அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை வரையில் பார்ப்பன இந்துத்துவவாதிகளின் வாதம் இதுதான்.

மூஞ்சே
பி. எஸ். மூஞ்சே

இந்த காலகட்டம் பெரியாரின் சுயமரியாதை இயக்க காலகட்டமாகும். இவர்களை பெரியார் அம்பலப்படுத்தினார். குடியரசு இதழில் இது குறித்து பல கட்டுரைகளை எழுதினார். “பார்ப்பனர்கள் சட்டத்தை எதிர்த்து கூட்டம் போட்டால் அதே இடத்தில் நீங்களும் சட்டத்தை ஆதரித்து கூட்டம் போடுங்கள்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

“குழந்தைத் திருமண தடுப்பு விஷயமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்து சட்டசபைகளில் பிரஸ்தாபித்து வந்திருப்பது யாவருக்கும் தெரியும். ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் வைதீகர்கள் என்பவர்களும், இந்து மதத்தை பின்பற்றுகிறவர்கள் என்பவர்களும், தேசியவாதிகள் என்பவர்களும் ஆட்சேபணை செய்துகொண்டே தான் வந்திருக்கிறார்கள். இந்த சமயத்திலும் தேசியவாதிகளே பெரும் முட்டுக்கட்டையாக நின்று எவ்வளவோ சூழ்ச்சிகளுடன் ஆட்சேபித்து பார்த்திருக்கின்றார்கள்.

‘பழுத்த தேசாபிமானிகளும் பிரபல தேசியத் தலைவர்’ களுமாகிய திருவாளர்கள் மாளவியா, கேல்கார், மூஞ்சி, எம்.கே.ஆச்சாரியார், கே.வி.ரங்கசாமி ஐயங்கார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார், மோதிலால் நேரு ஆகியவர்கள் எல்லாருமே இந்த இருபதாம் நூற்றாண்டில் இடையூறாக இருந்திருக்கிறார்கள் …..

மேற்கூறிய எல்லா தேசியவாதிகளும் மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லிக்கொண்டே ஆட்சேபித்திருக்கிறார்களென்றால் இனி ஒப்புக்கொள்ள முடியாத விசயத்தில் இவர்கள் ஆட்சேபணை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்த்தால் விளங்காமல் போகாது.”

திரு மாளவியா அவர்கள் ஆட்சேபணைக்கு சொல்லப்பட்ட காரணமென்றால் “14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லது தான். ஆனாலும் ராஜியை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்” என்றார்.

திரு. மூஞ்சே சொன்ன ஆட்சேபணையை கவனிப்போம். இவர் பார்ப்பன – பார்ப்பன மாணவர்களை மாமிசம் சாப்பிடவேண்டுமென்று சொல்பவர் – வைத்தியர் – வைத்திய சாஸ்திரப்படியும் உடற்கூறு சாஸ்திரப்படியும் பெண்களுக்கு 18 வயதுக்கு முன் விவாகம் செய்வது கெடுதி என்ற அபிப்பிராயம் கொண்டவர். அப்படி இருந்தும் இந்த மசோதா விசயத்தில் 12 வயதுக்கு மேல் கலியாண வயது இருக்கக் கூடாது என்று வாதம் செய்தார்.

மதன்மோகன் மாளவியா
மதன்மோகன் மாளவியா

திரு கேல்கர் திலகரின் ஸ்தானத்திற்கு வந்தவர். அவரோ மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லி ஆனால் வைதீகர்கள் இஸ்டத்திற்கு விரோதமாய் சட்டம் செய்யக்கூடாது என்றனர். இனி சென்னை “தலைவர்களை” பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமிருக்காதென்றே நினைக்கிறோம்…

எனவே நமது நாட்டிற்கென்றோ சமூகத்திற்கென்றோ எவ்வித திருத்தம் கொண்டு வந்தாலும் இந்தக் கூட்டத்தவர்களே அதாவது பார்ப்பனர்களே ஒருபுறம் தேசியத்தின் பெயராலும், மற்றொரு புறம் மதத்தின் பெயராலும், மற்றொரு புறம் சாஸ்திரத்தின் பெயராலும், மற்றொரு புறம் மனசாட்சியின் பெயராலும் தொல்லை விளைவித்து வருவதை வெகுகாலமாக பார்த்து வருகின்றோம்.”

முன்காலத்தில் அதாவது ‘இந்து'(மூட) ராஜாக்கள் அரசாங்கத்திலும் இப்படியே செய்துவிட்டு இப்பொழுது வெள்ளைக்கார (அறிவாளிகள்) அரசாங்கத்திலும் இப்படியே செய்து நமது சமூகத்தை மிதித்துக்கொண்டிருக்க கருதுவதை இனி அரை நிமிஷமும் நம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்பதை வெளிப்படையாகவும் உறுதியாகவும் சொல்லித்தீர வேண்டி இருக்கிறது அதற்காகவே சர்க்காருக்கு ஜே! என்றும் பார்ப்பனீயம் வீழ்க! என்றும் சொல்லுகின்றோம்.

– குடியரசு – தலையங்கம்- 29.09.1929

வேத விற்பன்னர்கள்
தமிழகத்தை பொறுத்தவரை பார்ப்பனர்கள் இச்சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளார்கள்

தமிழகத்தை பொறுத்தவரை பார்ப்பனர்கள் இச்சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளார்கள்.  இந்த மசோதாவிற்கு எதிராக பேசிய அன்றைய பாராளுமன்றத்தின் தமிழக பிரதிநிதியும், பார்ப்பன வருணாசிரம ஆதரவாளருமான ஆச்சாரியார் “பால்ய விவாகமில்லா விட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை”, “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும்”, என்றும் குழந்தைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் கைது செய்யப்படும்படி சட்டவிதி இருப்பதை காட்டி “புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும். பாலிய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்” என்றும் பேசியிருக்கிறார். இதை அன்றைய சுதேசமித்திரன் நாளேடு பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி குடியரசில் கண்டித்து எழுதியுள்ளார் பெரியார்.

“இது பார்ப்பனர்களுக்காக என்றோ அல்லது அய்யங்கார் கூட்டத்திற்காக என்றோ திருவாளர் ஆச்சாரியார் பேசி இருப்பாரானால் நமக்கு அதைப்பற்றி அவ்வளவு கவலையில்லை. ஆனால் நம்மெல்லோருக்குமே பிரதிநிதி என்கிற முறையில் பேசியிருப்பதால் நாம் அதை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை…

ஒரு சமயம் தாம் மற்றவர்களைப் பற்றித்தான் சொன்னதாக சொல்வாரானால் தம் சமூகத்துப் பெண்களும் பக்குவமடைந்து விட்டால் அவர்கள் கலியாணமில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்று கருதி சொன்னவராகவே நினைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர் எப்படியும் பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தியதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரு. ஆச்சாரியார் இப்படி சொல்ல நேர்ந்தது பார்ப்பனியத் தன்மையேயொழிய வேறல்ல. ஏனெனில் பார்ப்பன தன்மையான இந்து மதம் என்பதில் பெண்கள் காவலில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்றே சொல்லப்படுகிறது. உதாரணமாக இந்துக்கள் என்பவர்கள் கல்யாண காலத்தில் கல்யாணப் பெண்களுக்கு கற்புக்கு உதாரணம் காட்டி உறுதிவாங்க வழங்கும் மகா பதிவிரதையென்று சொல்லப்படும் அருந்ததி என்னும் ‘உத்தம ஸ்திரீ’ யின் யோக்கியதையை பார்த்தால் மற்ற பெண்களுடைய நிலைமை தானாகவே விளங்கும். அதாவது ஒரு சத்தியம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் அருந்ததி சொல்வதாக :-

“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும்வரையில் தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகாயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல்காக்க வேண்டும்”.

என்பதாக தேவர்களிடத்தில் சொல்லி சத்தியத்தை காப்பாற்றினதாக இந்துமதம்- அதிலும் சைவர்களுக்கு ஆதாரமான மகாசிவபுராணம் சொல்லுகிறது.

இதற்கு ஆதாரமாக மற்றொரு இடத்திலும் அதாவது திரௌபதையும் அருந்ததி சொன்னதைத்தான் சொல்லி சத்தியத்தை நிரூபித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:

“ஆண்கள் இல்லாதிருந்தாலொழிய பெண்கள் கற்புடையவர்களாக இருக்க முடியாது” என்பதாக பாரதத்தில் இதைப்பற்றி சொல்லும் போது “வசிஷ்டர் நல்லற மனைவியை அணையா” அதாவது அருந்ததிக் கொப்பானவள் சொன்னாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த கொள்கைகளையுடைய இந்துமத பிரதிநிதியிடம் அதிலும் வருணாசிரம தர்மியிடம் வேறு என்ன எதிர்பார்த்திருக்க முடியும்.

புருஷர்கள் சிறைக்குப் போய்விட்டால் பெண்களின் நடத்தை கேவலமாகி விடுமென்றும் சொல்கிறார். இவை எவ்வளவு தூரம் பெண்களை இழிவுபடுத்துவதாகிறது. இந்துமதமும், வேதமும், புராணமும், வைதீகமும், வருணாசிரமும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் அஸ்திவாரமாக கொண்டதால் இம்மாதிரியான வார்த்தை நமது இந்திய சட்டசபை பிரதிநிதிகளிடமிருந்து வருவது ஒரு அதிசயமல்ல.

உதாரணமாக கடவுளுடைய அவதாரமாக சொல்லப்படும் ராமனே கடவுள் பெண்சாதியின் அவதாரமென்று சொல்லப்படும் சீதையின் கற்பில் சநதேகப்பட்டு அவள் நெருப்பில் பொசுக்கப்படவும் பூமியில் புதைக்கப்படவும் செய்ததிலிருந்து ……. திரு ஆச்சாரியார் மற்ற பெண்கள் புருஷனை விட்டு நீங்கியிருந்தால் ஒழுக்கம் கெட்டு விடுவார்கள் என்று சொல்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.

-குடியரசு – தலையங்கம் -23.09.1928

அன்று பெரியார் உள்ளிட்ட சீர்த்திருத்திருத்தகாரர்கள் குழந்தைத் திருமண தடை சட்டத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போட்ட அன்றைய இந்துத்துவாவினருடன் போராடிக் கொண்டிருக்கும்போது பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்தை ஆதரித்து எழுதின. சுதேசமித்திரன் பத்திரிகை சத்தியமூர்த்தி, ஆச்சாரியார் போன்றோரின் கருத்துக்களை வரவேற்று எழுதியிருக்கிறது. போராட்ட காலத்தில் மவுண்ட் ரோடு மகா விஷ்ணு “தி இந்து” பத்திரிகை 10 அல்லது 12 வயது மணமகள் தேவை என விளம்பரம் செய்தது.

இதை எதிர்த்துக் கேட்ட சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கு பின்வருமாறு அயோக்கியத்தனமாக பதிலளித்தது தி இந்து.

“10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாக காணப்படுவது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டு கதவு சாத்துகின்றோமே அது தான் விவாகம்.”  என்று திமிர்த்தனமாக கூறியது.

சீர்திருத்தக்காரர்கள் இதற்கு என்ன மறுமொழி சொல்லவேண்டும் என்பதையும் கோடிட்டுகாட்டி ஒரு உரையாடல் போல பின்வருமாறு எழுதுகிறார் பெரியார்.

“ஓ இந்துவே 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வது போல கண்ணுக்கு தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அது கூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா?” என்று கேட்டார்.

உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி போல “இந்து” இதற்கு ஒரு மறுமொழி சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது. மற்றும் பல சமயங்களில் அது நம்மவர்களுக்கு விரோதமாக எவ்வளவோ கொலை பாதகத்திற்கு ஒப்பான கொடுமைகளைச் செய்திருக்கின்றது. செய்கின்றது. செய்யக் காத்திருக்கிறது.”

-குடியரசு தலையங்கம் 11.03.1928

இன்று ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால் விதந்தோதப்படும் பாலகங்காதர திலகர், முன்ஷி, மாளவியா போன்ற பார்ப்பன இந்துமதவாதிகளின் உண்மையான முகம் இதுதான்.

குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக் கூடாது, 14 வயதுக்குள் திருமணம் செய்யக்கூடாது போன்ற இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் விசயங்களுக்கே கூட திலகர் போன்ற பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது. பார்ப்பன பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக சளைக்காமல் போராடியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

இன்று பார்ப்பன பாசிசம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் திலகரின் வாரிசுகள் தெருவெங்கும் விநாயகரை வைத்து பார்ப்பனீயத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை முறியடித்து பிற்போக்குத்தனத்தின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் இந்த மண்ணில் குழந்தைத் திருமணமல்ல, எந்த பிற்போக்குத் தனத்தையும் வீழ்த்த முடியாது.

மேலும் படிக்க..

இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !

6

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனிக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது சுபேதார் தோட்டம். உதிரிப் பாட்டாளிகள் அதிகமாக குடியிருக்கும் பகுதி. ஜக்காரியா காலனி நடுத்தர வர்க்கம் வசிக்கும் பகுதி. சுபேதார் தோட்டத்தில் இந்து முன்னணி பெயர்ப்பலகை இருக்கும் இடத்தில் 6 அடி பிள்ளையார் சிலையும் அதற்கு முன்புறமாக 2அடி பிள்ளையாரும் வைக்கப்பட்டிருந்தது.

‘அது என்ன சின்னப் பிள்ளையார்’ என்று காவலுக்கு இருந்தவரிடம் கேட்டோம். அப்போது இரவு சுமார் எட்டரை மணி. “அது பணம் கொடுத்தா தலைமல கொடுக்கது சார்” என்றார். முழு போதையில் இருந்தவர் காய்கறி, பழங்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தள்ளுவண்டியில் கொண்டு போய் அன்றாடம் வீதியில் விற்பாராம். வாய்ப்பு கிடைத்தால் சர்ச்சில் ஏதாவது தினக்கூலி வேலைக்கு கூப்பிட்டாலும் போய் வருவாராம். பாக்கு வேறு போட்டிருந்தார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் பிள்ளையாரை சீண்டுவாரில்லை. போலீசாரும் அங்கு இல்லை.

“எனக்கு நாற்பத்தி இரண்டோ ஐந்தோ ஆகுதுங்க. இந்திரா காந்தி செத்தப்போ நான் பள்ளிக் கூடத்த விட்டேன்னா பாத்துக்கங்களேன்” என்றார்.

“அப்போ ப்ளஸ் டூ படிச்சீங்களா’ என்றோம்.

சிறுவர்கள்
ஒரு வார காலம் தூங்க தேவையில்லாத இரவு நேர கொண்டாட்டம்

‘நீ வேற ! அப்பாவுக்கு முடியல. ஆறாவதோ எட்டாவதோ படிக்கறச்சே செய்யாறுல அவரு அப்பாவாண்ட எடுத்துண்டு போயி வுட்டாரு. அப்பால வயசு ஆனவுடனே மெட்ராசுக்கு திருப்பி வந்துட்டேன். என் தம்பி மட்டும் இங்கதான் இருந்தான். இப்போ கழுத்துல ஜெயின்லாம் போட்டு ஒரு இரண்டு ஆட்டோவெல்லாம் வுட்டு, வட்டிக்கு விட்டுகுனு இங்கதான் சுபேதார் தோட்டத்துல ஒரு ஆளாயிட்டான்’ என்றார். ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டாராம்.

தான் தண்ணி அடிக்கவில்லை என்பதை சத்தியம் அடிக்காத குறையாக சொன்னார். இங்கு ஏன் சில பகுதிகளில் இருப்பதை போல பிள்ளையார்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை எனக் கேட்டோம். ‘எங்க ஏரியால தலைவருக்கு போட்டியா யாரும் இன்னும் வரல. அதான் கட்சி சார்பா இது ஒன்னு மாத்திரம் இருக்கு. நீங்க சொல்ற மத்த ஏரியால யாரு பெரியவனு போட்டியாகி பெரிசு பெரிசா வச்சிருப்பாங்க’ என்றார்.

‘எத்தனை ஆண்டுகளாக இங்கு கொண்டாடுகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘’இது பதினைந்தோ பதினொன்றோ சார். நான் இப்போ ஐந்து வருசமாகத்தான் இங்கு வருகிறேன். தலைவர் கண்ணுல பட்டு இரண்டு வருசம் தான் ஆகுது.’’ என்றார். ‘’ஊர்வலம் போவீர்களா?’’ என்று கேட்டோம். ‘’பின்ன நாங்க இல்லாமலா?’’ என்றார். மசூதி பக்கம் போகும்போது அதிகமாக முழக்கம் போடுவது, முசுலீம்களுக்கு எதிராக முழக்கம் போடுவது எல்லாம் தனக்கு பிடிக்காது என்றார். ‘உங்க தலைவர் ராமகோபாலன் அப்படித்தானே செய்கிறார்’’ என்று சொன்னோம். அது தவறுதான் என்று ஒத்துக்கொண்டார்.

‘’உங்களது மனைவி மக்களை கூட்டிக் கொண்டு கோவில் குளம் ஏதாவது இதுவரை போயுள்ளீர்களா?’’ என்று கேட்டோம். ‘’இல்ல சார். அதுக்கெல்லாம் துட்டு வேணாவா? இப்போ திருத்தணியே போறதுன்னா கூட ஈசிதான். ட்ரெயின சென்ட்ரல்ல பிடிச்சா போயிடலாம். சப்போஸ் அத விட்டுட்டா அரக்கோணம் போய் பஸ்ல போவணும். அதில் எதாச்சும் கடையாண்ட போயி பொண்ணோ ஒயிப்போ ஏதாச்சும் கேட்டா நம்மாண்ட காசில்லண்ணு வச்சுக்கோ, கடக்காரன் என்னா நெனப்பான் ‘தோடா! இதுக்கே வழியில்லாத இன்னாத்துக்கு கோவிலுக்கு வந்தே’னு பாப்பான். இதெல்லாம் தேவையா சார்.’’ என்றார்.

‘’இல்ல உங்க மனைவி கிறிஸ்தவர் ஆச்சே. இந்து கோவிலுக்கெல்லாம் வருவாங்களா?’’ என்று இழுத்தோம். ‘’அதெல்லாம் வருவாங்க சார். கூட்டிட்டு போக நமக்கு வசதி தான் இல்ல’’ என்றார். மகளை அரசுப் பள்ளியில் தான் படிக்க வைக்கிறார். இப்படி இரவெல்லாம் கண் விழிப்பதால் பணம் ஏதும் கிடைக்காது என்றும், சபரி மலைக்கு போவது போல இதுவும் ஒரு பக்தி அனுபவம் என்றார்.

ஜக்காரியா காலனியில் ஏன் பிள்ளையார் சிலை இல்லை என்று கேட்டோம். ‘சார் அவங்கல்லாம் வசதியான ஆளுங்க. சுபேதார் தோட்டத்துல இருக்கவுங்க நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க. நம்ம வருவோம். அவங்க ஏன் சார் வரணும்’ என்று சீரியசாகவே கேட்டார்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு அம்பி இன்னும் சில தலைவர்களுடன் அங்கு வந்தார். நம்முடன் பேசிக் கொண்டிருந்தவர் எழுந்து நின்று கொண்டு மரியாதை செலுத்தினார். அவர்கள் வேறு ஒருவரை எதிர்ப்பாத்திருப்பார்கள் போலும், இவரை கண்டுகொள்ளவே இல்லை.

பிள்ளையார்
வட்டார சாதி, பணக்கார பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு, பக்தி, பிள்ளையார் என்ற பெயரில் ஏற்பாடுகள் செய்கின்றனர்.

டுத்த பகுதி. அசோக் நகரில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஒருவர் துவங்கி வைக்க இருக்கும் விநாயகர் ஊர்வலத்திற்கான பிள்ளையார் பிளக்சை பார்க்க நேர்ந்தது. அதில் ‘ஊர்வலம்’ என்ற சொல் ‘ஊர்வளம்’ என்று இருந்தது. இந்த தவறை சம்பந்தப்பட்டவர்களிடம் சுட்டிக் காட்டினோம். ‘ஒரு தமிழன் என்ற முறையில் இதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது பாஸ்’ என்று தள்ளாடியபடியே சொன்னார். உடனே பக்கத்தில் இருப்பவர் ‘ஆமா சார் லட்டுக்கு வரும் ல தான் சார் வரணும்’ என்று நம்மிடம் சொல்லி விட்டு, முன்னவரை அமைதியாக்கினார்.

டுத்து நுங்கம்பாக்கம் கக்கன் காலனியில் உள்ள செல்வ விநாயகர் சிலைக்கு முன் இருந்தோம். விநாயகரை சுற்றி ரூபாய் நோட்டுக்களால் மாலை கட்டிப் போடுவது தான் செல்வ விநாயகர்.

தலித் மக்கள் நிறைந்த இப்பகுதியில் இது ஐந்தாமாண்டாக கொண்டாடுகிறார்கள். விநாயகர் சிலை செய்யவே ரூபாய் இருபதாயிரம் வரை செலவாகி விட்டதாம். விநாயகர் ஊர்வலம் கிளம்பும் அன்று காலை அன்னதானம் போட இருப்பதாக குறிப்பிட்டனர்.

அங்கே வழக்கம் போல கானாப் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. சிறுவர்களில் முசுலீம் சிறுவர்களும் இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு வார காலம் தூங்க தேவையில்லாத இரவு நேர கொண்டாட்டம். அங்கிருந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வேலைக்கும் செல்லாத ஏரியாவின் சுகவாசிகள் என்பதை அவர்களது வாக்குமூலங்களே தெளிவாக்கின.

பிள்ளையாரை தூக்கிப் போக என்று தனியாக ஒரு பாடை வேறு வைத்திருந்தார்கள். அந்த பிள்ளையார் தினமும் அந்த ஏரியாவில் ஊர்வலம் போவாராம். தலித் இளைஞர்களை குறிவைத்து இந்து முன்னணி இயங்குவதற்கு இந்த ஏரியா நல்லதொரு உதாரணம்.

இந்து முன்னணி பிள்ளையார்
இந்து முன்னணி பிள்ளையார்

டுத்து நுங்கம்பாக்கம் ஜோஸ்யர் தெரு. இங்கு தலித், வன்னிய இளைஞர்கள் இணைந்து எட்டு அடி உயரமுள்ள பிள்ளையாரை வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் அடிப்படை வேலைகளில் உள்ளவர்கள். அலுவலக உதவியாளர், செக் வசூலிப்பவர், கூரியர் பாய் என்ற வேலைகளை மாதமொன்றுக்கு நான்காயிரம் முதல் எட்டாயிரம் சம்பளத்தில் பார்த்து வருபவர்கள். ஆளுக்கு தலா எட்டாயிரம் போட்டு இந்த பிள்ளையாரை வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் பெண்கள் ஓரளவுக்கு பிள்ளையாரை பார்க்க வந்தனர். இங்கு இந்த ஆண்டுதான் பிள்ளையாரை முதன்முறையாக வைத்துள்ளனர்.

எங்களை சந்தித்த இளைஞர் ராகேஷ் ஒரு கிறிஸ்தவர். அவரது தந்தை கிறிஸ்தவர், அம்மா இந்து. வங்கி ஒன்றில் செக் பணம் வசூலிப்பவராக இருக்கிறார். ‘’அடுத்த வாரம் அம்மன் திருவிழா. அதுவரைக்கும் சுத்தபத்தமா இருப்போம் சார்’’ என்றார். அவரிடமிருந்து மது வாடை ஆளையே தூக்கியது. அவரது நணபர் ஒருவர் வந்தார். தனியாக நடனக்குழு ஒன்று வைத்திருக்கிறாராம். அவரும் போதையில் இருப்பதை ஒத்துக்கொண்டார். அதனால் தான் மேடைக்கு அருகில் தாங்கள் போவதில்லை என்றும், பொறுப்பாளர் மட்டும் போவார் என்றார்கள். ‘இந்த ஒரு வாரம் மட்டுமாவது சுத்தபத்தமாக இருக்கலாமில்லையா?’’ என்று கேட்டோம். அதெல்லாம் வேலைக்காவாது சார். அதான் நாங்க கேரம் ஆடிண்டு காவல் இருக்கோமில்ல என்று கோரசாக சொன்னார்கள்.

றுநாள் திருவட்டீஸ்வரன் பேட்டை விநாயகர் அதாவது ராமகோபாலன் ஆரம்பித்து வைக்கும் மையமான விநாயகரை பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். திருவல்லிக்கேணி பகுதியில் 24 விநாயகர்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். அதில் பெரும்பான்மை இந்து முன்னணி பிடிக்காமல் அதிலிருந்து வெளியேறிய ஆதிபராசக்தி பீடம் போன்ற ஏரியாவாசிகள் அமைத்திருப்பது. பெரிய தெருவில் இருக்கும் பிள்ளையார், ராமகோபாலன் குழு பிள்ளையாரை விட ஐந்து வயது மூத்தவர், 36 ஆண்டுகளாக ஊர்வலம் போகின்றவர் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதற்கு அருகில் உள்ள தெருவில் அன்று ஒரு சாவு நடந்திருந்த காரணத்தால் பிள்ளையாரை வெள்ளைத் துணி போட்டு மூடியிருந்தார்கள். பல இடங்களில் முதலாண்டு பிள்ளையாரை வைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா இடங்களிலும் செல்வ விநாயகர் சிலைகள் தான் பத்து முதல் பன்னிரெண்டு அடிகள் வரை இருந்தன.

திமுக பேனர்
கருணாநிதி மகன் மு.க. தமிழரசு மற்றும் திமுக மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் ஆகியோரிடம் நிதி பெற்று பிளக்சு பேனர்.

திருவட்டீஸ்வரன் பேட்டைக்கு போனோம். அதே தெருவில் இன்னொரு பிள்ளையாரும் இருந்தார். அங்கே பெரும்பாலும் தலித் இளைஞர்கள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வரை போட்டு வைத்ததாக கூறியவர்கள் நம்மிடமும் காசு கேட்டார்கள். ஆளை விட்டால் போதும் என்று மெயின் பிள்ளையாரை பிடித்தோம். மொத்தமே நான்கு பேர்தான் சிலையை சுற்றிலும் இருந்தார்கள். அதில் ஒருவர் அப்பகுதியின் தொகுதி பாஜக பொறுப்பாளர். பார்ப்பதற்கு பார்ப்பனரைப் போல இருந்தார். குறிப்பாக பேசும்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நஞ்சு கக்கினார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

நாங்கள் பேச ஆரம்பித்த போது தனக்காக ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டவர் கடைசி வரை நம்மை உட்காரச் சொல்லவேயில்லை. அவரிடம் ஒரு மணி நேரம் பேசியதில் இருந்து சில கருத்துக்கள்.

அங்கே ஒரேயொரு ஏட்டையா மட்டும் தான் காவலுக்கு நின்று கொண்டிருந்தார். ‘மிகவும் பதட்டமான பகுதி என்று அரசு அறிவித்துள்ள இப்பகுதியிலேயே இத்தனை குறைவாக காவலர்களா?’’ என்று பாஜக காரரிடம் கேட்டோம்.

‘’சார்! எங்களைப் பொறுத்தவரை காவல்துறையே வரக் கூடாது. ராமனது அரசாட்சியில் கதவுகளே இல்லாமல் இருந்த்தாம். இல்லாமை இல்லாமற் போனதால் கதவே வீடுகளுக்கு தேவையில்லாமல் போய்விட்டதாக கம்பன் கூறுகிறான். அதுபோல இங்கு அமைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை ஒவ்வொரு முசுலீமும், கிறிஸ்தவனும் தன்னுடையதாக நினைத்து பாதுகாக்க முன்வர வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்’’ என்றார்.

‘’தமிழ் நாட்டை திராவிட இயக்க ஆட்சி வந்து தான் கெடுத்து விட்டது.’’ என்றவரிடம் ‘’அப்படியானால் கருணாநிதி மகன் மு.க. தமிழரசு மற்றும் திமுக மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் ஆகியோரிடம் நிதி பெற்று பிளக்சு பேனர் போட்டு இங்கே சிலை வைத்துள்ளீர்களே!’’ என்று கேட்டோம். ‘’சார்! நாங்கதான் கருணாநிதியை பலமுறை ஜெயிக்க வைத்தோம். அன்பழகனையே எடுத்துக்கோங்க. அவர் வேட்பாளர் படிவத்தில் இந்து என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் என்ன கொள்கை பேசினாலும் அவர் இந்து தானே’’ என்றார்.

நாத்திகம் பேசும் எவரும் தம்மை இந்து என்றுதான் அரசு பதிவேட்டில் பதிய முடியும் என்றார். ‘’இல்லையே சார்! அப்படி மதம் இல்லாதவர்கள் என்று பதிய சட்டத்தில் புதிய ஜி.ஓ இருக்கிறதே’’ என்று சுட்டிக் காட்டினோம். ‘’பார்த்தால் படித்தவர் போல இருக்கீங்க. நீங்களே இப்படி வெவரமில்லாத இருந்தா மத்தவங்கள என்ன சொல்றது’’ என்று குறைபட்டுக் கொண்டார்.

போலீசு படை குவிப்பு
லீவு ரத்து செய்து போலீசு படை குவிப்பு

“எங்களை விட சாஸ்திரம், சம்பிரதாயம், வேதம், புராணம் பற்றியெல்லாம் கலைஞருக்கு நன்றாக தெரியும். அவர் தான் ராமனை திட்டுவதாக சொல்லிக் கொண்டு எங்களை விட அதிக தடவை ராம நாமத்தை உபயோகிக்கிறார். அந்த அளவுக்கு விவரமானவர்’’ என்றார். ‘’இந்து ஒற்றுமையை திராவிட இயக்கம் வந்து தான் சார் கெடுத்துட்டாங்க’’ என்றார்.

“சரி சார் இங்கே நம்ம ஜெயலலிதா ஒரு ராம பக்தை. மத்தியில் நம்ம மோடி. அப்புறம் ஏன் சார் பிள்ளையார் ஊர்வலத்தை மசூதி முன்னால எடுத்துட்டுப் போக தடை’’ என்று கேட்டோம்.

மோடி பெயரை கேட்டதும் குதூகலமானவர், “சார் நம்ம ஊர்ல இருக்கும் அம்மா உணவகத்தை பதினோரு ஆண்டுகளுக்கு முன்னரே குஜராத்தில் மோடி ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்து அம்மா அடித்த காப்பிதான் இங்கு செயல்பாட்டில் உள்ளது’’ என்றார்.

இந்த பொறுப்பாளர் ஏதோ தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாக சொன்னார். எப்போதும் பான்பராக் மென்று கொண்டிருந்தார். மறுநாள் ஊர்வலத்தில் கடைசி வரையில் இவர்தான் இந்து முன்னணி கொடியை பிடித்த வண்ணம் வந்தார்.

“டாஸ்மாக் அடித்துக் கொண்டு உங்கள் தொண்டர்கள் இங்கு இருக்கிறார்களே’’ என்று கேட்டோம். “தனி மனிதன் திருந்துவது தான் சார் முதன்மையானது. அதனைத் தான் மோடி குஜராத்தில் செய்தார். என்னைக் கேட்டால் டாஸ்மாக்கை மூடக் கூடாது. ஏன் ஒருத்தன் தண்ணியடிக்கிறான். அவனுக்கு வயிற்றில் இடம் கொஞ்சம் மீதமிருக்கிறது. மோடி அவனுக்கு வயிறு முழுக்க சாப்பாடு கிடைக்க வழி செய்தார். இங்கும் அப்படி செய்து விட்டால் டாஸ்மாக் விற்பனை படுத்து விடும். ஆட்டோமெட்டிக்காக அரசு சாராய விற்பனையில் இருந்து விலகி விடும். இது தான் குஜராத்தில் நடந்தது’’ என்றார்.

’அதெல்லாம் சரி சார்! குஜராத்தில் கறி சாப்பிடுவது குறைவு தானே! அப்படியானால் உடல் வலி அதிகமாகி தொழிலாளிகள் மதுவை நாட வாய்ப்புள்ளதே’’ என்று கேட்டோம். ‘’இல்ல சார்! சைவ உணவில் தான் நல்ல தரமான புரத சத்து உள்ளது. இது சயின்டிஸ்டுகளே சொன்ன உண்மை. அதுனால நீங்க சொல்றது உண்மையில்ல’’.

“சரி சார்! தனி மனித ஒழுக்கத்த பற்றி சொல்றீங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னால பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் கர்நாடகா சட்டசபையில் பிட்டு படம் பார்த்து மாட்டிக் கொண்டார்களே!’’ என்று இழுத்தோம். ‘’அதான் சார்! தனி மனிதன் திருந்த வேண்டும். கட்சிக்குள்ள வந்தாலும் தனி மனிதனை திருத்த நாங்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் அவர்களாக திருந்துவது தான் சரி. சட்டம் போட்டெல்லாம் திருத்த முடியாது’’ என்றார்.

“தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்கிறீர்கள். அப்படி வருபவர்களை எந்த சாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?’’ என்று கேட்டோம். ‘’அவங்க இந்துவா இருக்குறப்போ என்ன சாதியா இருந்தாங்களோ அந்த சாதி தான்’’ என்றார். ‘’அது இந்த தலைமுறையில் மாறியிருந்தால். மூணு நாலு தலைமுறைக்கு முன்னால் மாறியிருந்தா என்ன சாதின்னே தெரியாதே சார்’’ என்று கேட்டோம். ‘’சார் சாதி என்னாத்துக்கு கேக்குறீங்க. ரிசர்வேஷன். ரிசர்வேசனே தப்புங்குறதுதான் சார் பிஜேபி தரப்பு.’’ என்றார்.

“சாதின்னு வேண்டாம்னு சொன்னீங்கன்னா, அவங்க எங்க சார் பொண்ணு கட்டுவாங்க’’ என்று கேட்டோம். ‘’அதெல்லாம் தெரியாது சார். இந்துவாக மாறுவது தான் முக்கியம். அதுக்கும் சாதிக்கும் சம்பந்தமில்ல. அப்படிப் பாத்தா எல்லா மதங்களிலும் சாதிங்குறது, இந்து மதத்தை விட அதிகமாகத்தான் இருக்கு. கிறிஸ்தவர்களில் 1200 க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கு. முசுலீம்களில் 800 க்கும் மேல. இந்துவில் ஒரு 126 சாதி மட்டும் தான்’’ என்றார். ‘’எப்படி.’’ என்று கேட்டதற்கு நாடுகள் வாரியாக பிரிந்து கிடக்கும் இனங்களையும் சாதிகளாக குறிப்பிட்டார்.

“தமிழில் அர்ச்சனை, பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை உருவாக்கியிருக்கும் கருணாநிதியின் திட்டம் பற்றி..’’ என்று கேட்டதற்கு “தமிழில் அர்ச்சனை செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். அப்படியானால் மற்ற எல்லா மொழிகளையும் பயன்பாட்டில் இருந்து தமிழகத்தில் தூக்கியாக வேண்டும். அராபியாவில் உருவான உருதுவை இங்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் மெக்கா, மெதினாவிலேயே சமஸ்கிருதம் தான் ஓதுகிறார்கள். சமஸ்கிருதமும் நமது இந்திய மொழிதானே! அதில் அர்ச்சனை செய்வதில் எந்த தவறும் இல்லை. நம்ம பார்லிமெண்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கிலீஷில் பேசினால் காரியம் நடக்காது. இந்தியில் பேசினால் காரியம் சீக்கிரம் நடக்கும். அது போலத்தான் இறைவன் சந்நிதியிலும். பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களைப் பொறுத்தவரை, இன்னார் இன்ன தொழில்தான் செய்ய வேண்டும் என்பது நமது மரபு. அந்தக் காலத்தில் பண்ணையார் பார்த்து அனைவருக்கும் தேவையானவற்றை கவனித்துக் கொள்வார். சம்பளம், கூலி என்று நம்மை அதற்கு அடிமையாக்கியவன் ஆங்கிலேயன். அப்படி பார்க்கையில் பிராமணர்கள் அர்ச்சகர் வேலையை பார்க்கிறார்கள். புனிதமான அந்த தொழிலில் அடுத்தவன் பிழைப்பில் மண் அள்ளிப் போடும் வேலை எதுவும் கிடையாது. எல்லாவற்றிலும் இருந்து எங்களை துரத்தி விட்டீர்களே. இதிலும் எங்களது பிழைப்பில் கைவைத்தால் நாங்கள் என்னதான் செய்வது?’’ என்று சற்று கோபமாகவே கேட்டார்.

‘’நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னரே வசூலை ஆரம்பித்து விடுவோம். எல்லோரும் பணமாக தர மாட்டார்கள். சிலர் எண்ணெய் தருவார்கள். சிலர் திரி மட்டும் வாங்கித் தர இயலும் எனச் சொல்லி அதனை வாங்கித் தருவார்கள். சிலர் கற்பூரம் வாங்கித் தருவார்கள். அனைவரது பங்களிப்புடன் தீபம் எரிகிறது அல்லவா, அந்த தீபம் தான் இந்து மத ஒற்றுமை’’ என்று குறிப்பிட்டார். ‘’நாளை இங்கு வந்தால் புகைப்படம் எடுக்க முடியுமா ஊர்வலத்தை’’ என்று கேட்டோம். ‘’சாத்தியமில்லை. முடிந்தால் பாருங்கள். கூட்டம் அதிகமாக இருக்கும்’’ என்று எச்சரித்தார்.

டுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் சென்றோம். உட்கார்ந்திருந்தவர்கள், சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோரையும் சேர்த்து பார்த்தால் ஒரு ஐம்பது பேர்தான் இருந்தனர். நாங்கள் போகையில் எச்.ராஜா தனது விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார். இந்துசமய அறநிலையத் துறை இந்து மதத்திற்கு மட்டும்தானா? இங்கே இந்துக்களுக்கு ஊர்வலம் போக உரிமையில்லையா? என்றும் கேட்டார்.

அடுத்து தரும்புரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த ராமானந்த மகராஜ் சுவாமிகள் என்ற சாமியார் பேச ஆரம்பித்தார். சாமியார் ஏதாவது ஆன்மீகம் பேசுவார் என்று பார்த்தால் எச்.ராஜா பேசியதை விட அதிகமாக மதவெறிக் கருத்துக்களை பேசினார். “நமது காலண்டர் நட்சத்திரம், சூரியன், சந்திரன் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. ஆங்கில காலண்டர் என்பது இயேசு பிறந்தவுடன் துவங்குகிறதே தவிர அதற்கு சூரிய, சந்திர அடிப்படை கிடையாது’’ என்று ஒரு போடு போட்டார். ‘’காந்தி குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிக்கவில்லை, நேருவும் அப்படி செய்யவில்லை, இதில் நேரு கம்யூனிச வாதியும் கூட. அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டுதான் முசுலீம்களின் நண்பர்களாக வலம் வந்தார்கள். எனவே நானும் அப்படி சொல்லிக் கொள்வதில் எந்த தவறுமில்லை என்று கேள்வி கேட்டவர்களிடம் பெருமையாக சொன்னாராம் மோடி” என்று இந்துத்துவ ஆட்சியின் ‘பெருமை’களை அளந்து கொண்டிருந்தார்.

ஊர்வலத்தில் மெயின் பிள்ளையாருக்கருகில் சில பக்தர்கள் பான்பராக்கோடு நிறுத்தியிருந்தனர். முன்னால் குத்தாட்டம் போட்டவர்கள் நல்ல போதையில் இருந்தனர். சேரிப் பகுதியில் இருந்து அழைத்து வரப் பட்ட பெண்களும், திருநங்கைகளும் கூட குத்தாட்டம் போட்டனர். ஏற்கெனவே திருவெட்டீஸ்வரன் பேட்டையில் முந்தைய நாள் மெயின் பிள்ளையாருக்கே குத்துப் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘’இன்றைக்காவது பக்தியோடு இருக்க கூடாதா?’’ என்று அந்த இளைஞர்களிடம் கேட்டதற்கு ‘’சார்! இப்போ ராகு காலம் சார். அதுனால பிள்ளையாரு கண்டுக்க மாட்டாரு’’ என்று அதற்கொரு விளக்கம் தந்தார்கள் அந்த இளைஞர்கள்.

திருநங்கையுடன் ஆபாச ஆட்டம்

‘’மடையா மடையா.. பிள்ளையாருக்கே தடையா’’ என்பது போன்ற முழக்கங்கள் போலீசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. போலீசார் செம கடுப்பில் இருந்தாலும் அரசு தரப்பில் இவர்களை மென்மையாக அணுக சொல்லியிருப்பதால் நம்மிடம் தங்களது பிரச்சினைகளை எழுதச் சொல்லிப் புலம்பினர்.

ஊர்வலத்தை சரிசெய்ய முயன்ற எஸ்.ஐ ஒருவரை கூட்டம் அதிகம் இல்லாத இடத்திலேயே ஒரு இளைஞன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான். இது வேறு மக்கள் போராட்டமாக இருந்திருந்தால் நடப்பதே வேறு. இதைப் பற்றி ஏசியிடம் முறையிடப் போன அவருக்குதான் டோஸ் விழுந்தது தனிக்கதை.

யார் ஆடும் டான்சு சூப்பர் என்பதை காண்பிக்க ஒரு பிள்ளையார் சிலை வைத்திருக்கும் கோஷ்டியிலேயே சிலருக்குள் போட்டி. அதற்காக ஆளுக்கொரு டிரம்ஸ் செட் மட்டுமின்றி ஆடுவதற்கும் நபர்களை வெளியில் இருந்து கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். அதில் அவர்களுக்குள் முதலில் முட்டிக் கொண்டது தான் முதல் முக்கிலேயே நடைபெற்றது.

குத்தாட்டம் போடுவதில் போட்டி

ஒவ்வொரு இடம், பில்டிங், நபர்களை காட்டி இது யாருடையது என்று கேட்டு முழக்கமிட்டது ஒரு பார்ப்பன இளைஞர் கூட்டம். அதில் அவர்கள் அடிக்கடி கைகாட்டியது ஒரு மசூதியை நோக்கி. அப்போது கூட்டத்தின் கோஷ ஸ்ருதி அதிகரித்தது.

மசூதிக்கு அருகில் மதவெறிக் கூச்சல்

போலீசாரின் எண்ணிக்கை போதாது என்பதை நன்கு உணர முடிந்தது. ‘’இவனுக பண்ற காவாலித் தனத்தால பெண்கள் யாருமே சாமி கும்பிட வர்றதில்ல சார்’’ என்றார் அந்த தலைமைக் காவலர். ‘’கேட்டால் நெறய சொல்லலாம் சார்.’’ என்றவர் எஸ்.ஐ ஒருவரை கூப்பிட்டு தங்களது பிரச்சினைகளை சொல்லும்படி கேட்டுக் கொண்டார். ‘’இப்போ யாருக்கும் பெர்மிஷன், லீவு கூட கெடையாது சார். இப்போ என் வீட்ல விட்டுட்டு வர ஒரு மணி நேரம் கேட்டேன். கெடைக்கல. கொஞ்சம் இவர பாத்துக்க சொல்லிட்டி ஏசி ரவுண்டு வர்றதுக்குள்ள வரணும்னு அரக்க பரக்க ஓடியார வேண்டியதாயிட்டு சார்’’ என்றார்.

‘’ரெண்டு நாளைக்கு முன்னால இந்த ஏரியா இந்து முன்னணி பிரமுகரு ஒருத்தரு. போலீசு வண்டில ஏறி உக்காந்திருந்தாரு. நாங்களே அப்படி உக்கார மாட்டோம். அதுனால, ‘சார் அது போலீசு வண்டி. இறங்குங்க சார்’ என்று மரியாதையாகத்தான் சொன்னோம். ‘ஓகோ! அப்படியா. டேய்! இந்த போலீசு நாய்ங்களுக்கெல்லாம் போட்டிருக்கும் சேர்களையெல்லாம் தூக்கி அடுக்குங்கடா’ என்று சொல்லிவிட்டு இறங்குறார் சார். இதெல்லாம் கொஞ்சம் எழுதுங்க சார்’’ என்றார். இவரும் அதே பகுதியில் தான் முக்கியமான போலீசு ஸ்டேஷனில் எஸ்.ஐ ஆக இருப்பவர்.

மழையில் பிள்ளையாரை கவரால் மூடி ஊர்வலம் கூட்டிச் சென்றனர். ஊர்வலம் துவங்கும்போதே கழன்று கொண்ட பெரியவர்கள், மழையால் பாதியில் கழன்று கொண்ட இளைஞர்கள் என இவர்களை தாண்டி சிறுவர்கள் மற்றும் சிலருடைய உதவியால் தான் பிள்ளையார் பட்டினப்பாக்கம் வரை போக முடிந்தது. சில பகுதிகளில் இந்து முன்னணி பொறுப்பாளர்களின் குடும்பத்தினர் மூடிய கார்களில் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாரும் கீழே இறங்கவேயில்லை.

மசூதி வரும் இடங்களில் கோஷங்களும், ஊர்வலத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதும் அதிகமாக இருந்தது. இந்து முன்னணி தவிர்த்த சிலர் தனியாக ஊர்வலம் நடத்தினர். வாலஜா சாலையில் திடீரென போலீசார் குவியத் துவங்கினர். ஏதோ கலவரமோ என்று ஓடினோம். அங்கு ஆயிரம் விளக்கு மசூதிக்கு அருகில் உள்ள இளைஞர்கள் கொண்டு போகும் பிள்ளையார் ஊர்வலம் மட்டும் தனியாக ஒரு முப்பது நாற்பது பேருடன் போய்க் கொண்டிருந்த்து. அதன் உச்சியில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டிருந்த்து. ஊர்வலத்திற்கு மத்தியில் முன்னால் ஓடி பிளாட்ஃபார்மில் தங்களது கட்டுச்சோற்றை முடித்துக் கொண்ட அந்த இளைஞர்கள் ‘’நாங்க இந்து முன்னணியில இருந்து வெலகிட்டோம் சார். எங்க பிள்ளையார் மட்டும் தனியானவரு. தேசிய கொடிய மாட்டிதான் கொண்டு போவோம். கரைக்குறப்ப மட்டுந்தான் கழட்டுவோம்’’ என்றார்கள்.

ஜாம்பஜார் பகுதியில் இருந்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட இன்னொரு ஏரியாவாசியை அணுகினோம். அவர்தான் அந்த பிள்ளையாருக்கு பொறுப்பு. பெயிண்டராக இருந்து வருகிறார். “நாங்க முதல்ல பத்து வருசம் இந்து முன்னணி கூட தான் சார் வந்தோம். அவங்க ரூட்டு அதிகமாக இருக்கு. அதில வேற போற வழில கோஷம் போட்டு சண்ட இழுக்குறாங்க. அதான் ஒரு பதினைந்து வருசமா தனியா போக ஆரம்பித்து விட்டோம். நாளப் பின்ன பாத்து பழக வேண்டியிருக்கு இல்லையா’’ என்று எதார்த்தமாக கேட்டார். “அதுல வேற அப்போ வந்து அவங்க கூட்டம் போராட்டத்துக்கு ஆளுங்கள இட்டார சொல்றாங்க. எங்க பசங்களுக்கு இதெல்லாம் பிடிக்கல. நமக்கு தேவ பக்தி. அவ்ளோதான் சார்” என்றார். அவர்களும் குத்தாட்டத்துடன் தான்.

மொத்தமாக பார்த்த வரையில் இந்து முன்னணி சில பகுதிகளை தனது கலவரமூட்டல் காரணமாக இழந்து வருகிறது. புதிய பகுதிகளில் சென்று சிலைகளை நிறுவ முயற்சிக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள், உதிரிப் பாட்டாளிகள், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகப் பார்த்து தான் தேர்வு செய்கிறார்கள். குத்தாட்டம் தான் இளைஞர்களை கவர வழி என்பதால் ஆர்.எஸ்.எஸ் அதற்கும் அனுமதி அளிக்கிறது. ஓம் காளி ஜெய் காளி, இந்துஸ்தான் போன்ற கோஷங்கள் இங்கு எடுபடவில்லை. அதே நேரத்தில் கணேஷ் மண்டல் என்ற பெயரில் சேட் பசங்களுக்காக தனியாக ஒரு அமைப்பையும் இவர்கள் நிறுவி உள்ளனர். இவர்களும் இந்து முன்னணியில் உள்ள தமிழ் பசங்களும் இணைந்து இருப்பதை எங்கேயும் காண முடியவில்லை.

அதே போல மெயின் பிள்ளையார் பக்கம் இருந்த பார்ப்பன ஆதிக்க சாதியினர் அளவுக்கு பிற பிள்ளையார்கள் மத்தியில் அவர்களைக் காண இயலவில்லை. பிள்ளையார் ஊர்வலத்திலும் சாதி, இனம், வர்க்கம் இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக சங்க பரிவாரங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன. பல இடங்களில் வட்டார சாதி, பணக்கார பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு, பக்தி, பிள்ளையார் என்ற பெயரில் ஏற்பாடுகள் செய்கின்றனர். பக்தர்களை இழுப்பதற்கு பல இடங்களில் அன்னதானம் போடுகின்றனர். சில இடங்களில் மைக்கேல் ஜாக்சனே இடைவிடாமல் பாடிக் கொண்டிருந்தார். போலிசாருக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதில் பிள்ளையார் சிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஏழைகள் பகுதியில் பணம் கொடுத்து சிலை வைப்பதோடு, ஊர்வலத்திற்கு ஆள் சப்ளையும் இவர்கள்தான். இவர்களை இந்துக்களாக புடம் போடும் வகையில் சங்க பரிவார உறுப்பினர்கள் இடையிடையே வந்து போகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு இந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் மும்பை போல ஒரு சமூக ஆதிக்க நிகழ்வாகவும், வருடா வருடம் பிரச்சினைகளை கொண்டு வரும் மதவெறி தினமாகவும் மாறப்போவது உறுதி.

–    வினவு செய்தியாளர்கள்

அனந்தமூர்த்தியின் மரணம் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி

1

ன்னடத்தின் புகழ்பெற்ற முற்போக்கு எழுத்தாளரும், காந்திய கொள்கைகளில் பற்று கொண்டவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி கடந்த ஆகஸ்டு 22 அன்று, 82 வது வயதில் பெங்களூருவில் மரணமடைந்தார். ஞானபீட பரிசை வென்ற எட்டு கன்னட எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரது சம்ஸ்காரா, பார்வதிபுரம் போன்ற நாவல்கள் ஒரு மாறி வரும் சமூகத்தின் நிகழ்வுகளையும், அதில் உள்ள சமூகப் பிரச்சினைகளையும் களமாகக் கொண்டு தனிநபர்களிடம் நடக்கும் புதுமைக்கும், பழமைக்குமான போராட்டங்களையும் உணர்த்துகிறது.

u_r_ananthamurthyஆகவே அனந்தமூர்த்தியோடு பழம்பெருமை பேசும் இந்துமதவெறியர்கள் எந்த முறையிலும் நேசத்தை கொண்டிருக்க இடமில்லை. ஆம், அவரது மரணத்தை மங்களூரில் பஜ்ரங் தள் என்ற பரிவார கும்பல் வெடிபோட்டு மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அனந்தமூர்த்தி ஒரு வைதீக பார்ப்பன பின்னணியைக் கொண்டவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு ஆய்வுப் படிப்புக்காக இங்கிலாந்து சென்ற இடத்தில் அவரது பேராசிரியரின் ஆலோசனையின் பேரில் மாறி வரும் இந்திய சமூகத்தை பற்றிய நாவல் ஒன்றை எழுத முனைந்தார். அதுதான் சம்ஸ்காரா நாவல்.

1965-ல் வெளியான இந்த நாவல் அப்போதைய அளவில் பார்த்தால் கன்னட இலக்கியத்தில் பெரும் கலகம்தான். நவோயா இயக்கம் என்ற பெயரில் அவரும், கிரீஸ் கர்னாட்டும் அங்கே புகழ்பெற்றிருந்த காலம் அது. கர்நாட் எழுதிய துக்ளக் நாடகமும் கூட மிகவும் புகழ்பெற்றது தான். அதன் அரசியல் நகைச்சுவைகளை பார்த்த பிறகு அதன் பாதிப்பில் சோ ராமசாமி போட்டுக் கொண்ட சூடுகள் தான் அவரது துக்ளக் காமெடி நாடகம்.

அக்ரகாரம் மட்டுமே இருக்கும் ஒரு மேற்கு கர்நாடக கிராமம் ஒன்றுதான் சம்ஸ்காரா நாவலின் கதைக்களம். அங்குள்ள இரு இளைஞர்களில் ஒருவன் சனாதனவாதி. கடுமையாக இந்துமத கொள்கைகளை, சாதி அனுஷ்டானங்களை கடைபிடித்து மோட்சத்திற்கு செல்ல முயல்பவன். காசிக்கு சென்று சமஸ்கிருதம் படித்து வந்த அவனை ஊரே கொண்டாடுகிறது. திருமணம் செய்து கொண்டு தாம்பத்ய உறவை தவிர்த்து அதன் மூலம் தனது மனைவிக்கும் மோட்சத்திற்கு வழிகாட்டுவதாக அவன் கருதிக் கொள்வான். அதே ஊரில் இன்னொரு பார்ப்பன இளைஞன் இருப்பான். நகரத்திற்கு சென்று படிக்கும் அவன் எல்லா ‘கெட்ட’ பழக்கங்களும் உள்ளவன். விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணை கூட்டி வந்து அவளுடன் தனது வாழ்க்கையை அக்கிராமத்தில் துவங்குவான். அப்போது ஊரில் நடக்கும் கெட்டவை, பிளாக் நோய்கள் அனைத்துக்கும் அவனைத்தான் காரணமாக கூறுவார்கள். சாதியை விட்டு விலக்கி வைப்பார்கள்.

அவன் வேறு சாதிப் பெண்ணை சேர்த்து கொண்டதுடன், மாமிசம் சாப்பிடவும் பழகி விட்டான் என்றும் கூறி அவனுக்கு தண்டனை தரும்படி முதலாவது நல்லவனிடம் கூறுவார்கள் மக்கள். அவன் திருந்தி விடுவான் என்று அவர்களுக்கு பதில் சொல்வான் அவன். இரண்டாமவன் ஒருநாள் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டு இறந்து போவான். அவனை எரிக்க யாருமே முன்வர மாட்டார்கள். பார்ப்பன பிணத்தை பார்ப்பனர்கள்தான் எரித்தாக வேண்டும். அவன் பிணத்தை எரிக்கும் வரை மற்ற பிராமணர்கள் சாப்பிட கூடாது என்பது மரபு. இந்நிலையில் இரண்டாமவனது மனைவி நல்லவருக்கு பிணத்தை எரிக்க பண உதவி செய்வாள். அவளது அழகில் இவரும் மயங்கி விடுவார். அவருக்கு உதவியாக பணத்திற்காக சில பிராமணர்கள் வைதீகத்தை கொஞ்சம் மூட்டை கட்டி வைப்பார்கள். பிறகு அவர் திரும்பி ஊருக்கு வருவார். முடிவை வாசகர்கள் எடுக்குமாறு இந்தக் கதை பின்னப்பட்டிருக்கும்.

பலமான பார்ப்பனர்களின் எதிர்ப்பை இதனால் சம்பாதித்துக் கொண்ட அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். சம்ஸ்காரா பிறகு 1972-ல் திரைப்படமாக்கப்பட்டு சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு நாவலான பாரதிபுரா விலை மாதர்களைப் பற்றியது. இதுபோக மூன்று நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுப்புகளையும் எழுதியிருக்கும் இவர் ஒரு கவிஞரும் கூட.

அவரது அவஸ்தை நாவல் மாறிவரும் அரசியல் போக்குகளைப் பற்றிய ஒரு காந்தியவாதியின் சலிப்புடனே பேசும். அதனால் பிற எல்லா அரசியல் கோட்பாடுகளையும் அந்நாவலில் கேள்விக்குள்ளாக்குவார். தெலுங்கானா போராளிகளை மாத்திரம், தியாகத்திற்கு நிகராக தனி மனித ஒழுக்கத்தை சரிவரப் பேணாதவர்கள் என்ற அவதூறையும் போகிற போக்கில் தூவி விட்டுச் சென்றிருப்பார். பிறப்பு என்ற நாவல் சாமான்ய குடும்பத்தில் வளர்ந்து வரும் பெண்களிடம் இருக்கும் சமூக கோபங்களை வெளிப்படுத்தும் சிறிய நாவல்.

ஆங்கில பேராசிரியராக, துணைவேந்தராக, மத்திய பல்கலையின் வேந்தராக எனப் பல பொறுப்புக்களையும் வகித்த இவர், நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதெமி போன்றவற்றிலும் பல முக்கியமான பொறுப்புக்களை வகித்தவர். பலமுறை ஜனதா தளக் கட்சி சார்பில் ராஜ்யசபாவிற்கும், மக்களவைக்கும் போட்டியிட்டு தோற்ற அனந்த மூர்த்தி தீவிரமான காந்தி பக்தர். அந்த வகையில் ராம் மனோகர் லோஹியாவின் எழுபதுகளின் இளைஞர்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

காந்தியை ஆதரித்த காரணத்தால் நேருவை விமர்சிக்க புகுந்த அவர், அதன் ஊடாக சர்வதேசிய கோட்பாடுகளை விமர்சிக்கவும் தயங்கவில்லை. அதனால் தான் காந்தி முன்னிறுத்தும் ராமனை, ‘தியாக’ மனிதனாக பார்க்கிறார். அதனாலேயே காந்தியின் தவறுகளை ராமனை வைத்து சமனப்படுத்த முயல்கிறார். கம்யூனிஸ்டுகள் காரிய சாத்தியமான விசயங்களை காந்தியை போல பரிசீலிக்க தவறுவதாக விமரிசிக்கிறார்.

அனுபவத்தின் மூலமாக மாற்றிக் கொள்ள ஏற்கெனவே திட்டம் என எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னையே தனது செயலுக்கு நீதிபதியாக நியமித்து பக்கசார்பின்றி நடந்து கொண்டார் காந்தி என்று சொல்லி, கோட்பாடுகளை, திட்டங்களை வைத்திருப்பவர்களை விட காந்தி உயர்ந்தவர் என நிலைநாட்ட முயல்கிறார். ஆனால் காந்தியமே ஒரு கோட்பாடு என்ற முறையில் ஜனநாயகத்தை மறுக்கும் பிடிவாதமாகவே காந்தியிடம் வெளிப்பட்டது. மக்களின் எதிர்ப்புணர்வை தணிப்பதற்கு காந்திய முறைகளும் கொள்கைகளும் ஆபத்தற்ற முறையில் இருந்ததாலேயே ஆங்கிலேயர்கள் சத்யாகிரகத்தை அனுமதித்தார்கள். போராட்டம் எல்லை மீறும் போது ஆங்கிலேயர்கள் பதட்டம் அடையத் தேவையின்றி காந்தியே கோபம் கொண்டு நிறுத்தியிருக்கிறார். இத்தகைய ஆளும் வர்க்க அடிப்படையை புரிந்து கொள்ளுமளவு அனந்தமூர்த்தியின் வரலாற்று பார்வை வளரவில்லை. அன்றைய கால முற்போக்கில் இத்தகைய பார்வை கொண்டோரும் கணிசமாக இருந்தனர்.

அதே நேரம் இந்திராவின் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து பேச அவர் தயங்கியதே இல்லை. பி.எம்.ஸ்ரீ, சிவராம் காரந்த், மஸ்தி வெங்கடேஷ் ஐயங்கார், டி.பி.கைலாசம் என இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால இலக்கிய முன்னோடிகள் அனைவருமே பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறை போன்றவற்றை ஆதிக்க சாதிப் பின்னணியிலிருந்து வந்தே எதிர்க்க ஆரம்பித்திருந்தனர். நாற்பதுகளில் ஏ.என் கிருஷ்ணா ராவ், டி.ஆர். சுப்பாராவ் (தா.ரா.சு) போன்றவர்கள் சமூக மாற்றத்துக்கான கருவியாக இலக்கியத்தை மேற்கொண்டனர். தாராசுவின் மசனாட கூவு என்ற நாவல் விலை மாதர்களைப் பற்றியது, ஹம்ச கீதா என்பது சித்ரதுர்கா பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சூபி பாடகனின் திப்பு மீதான அர்ப்பணிப்பான வாழ்வு பற்றிய வரலாற்றுப் புதினம்.

அறுபதுகளில் தான் ராம் மனோகர் லோஹியாவின் சீடர்கள் இலக்கிய உலகில் பிரகாசிக்க துவங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் இன்று இந்துத்துவா கொள்கையை தூக்கிப் பிடிப்பதற்காக 2007-ல் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தை கொடூரமானதாக சித்தரிக்கும் நாவலை எழுதிய பைரப்பா. இது போக ஜி.எஸ். சிவருத்ரப்பா, பி.லங்கேஷ், நிசார் அகமது என ஒரு பெரிய படைப்பாளிகள் பட்டாளமே அரங்கிற்கு வந்தது. தொன்னூறுகளில் வந்தவர்கள் இதற்கு எதிரான நவயோதரா பிரிவை சேர்ந்தவர்கள். பூர்ணசந்திர தேஜஸ்வி, தேவனூர் மகாதேவா போன்றவர்கள் இப்போது வந்துள்ளனர். சமூக வேலையிலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்களாக இவர்கள் பரிணமித்தனர்.

கன்னட எழுத்தாளர்கள் பொதுவில் சமூக அக்கறை உள்ளவர்களாகவே இருந்திருக்கின்றனர். மதக் கலவரங்கள், கன்னட இனவெறியர்களது தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் போன்றவற்றை எதிர்த்து பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் என தங்களுக்குள் இணைந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இத்தகைய நிலைமைய தமிழக இலக்கிய உலகில் நாம் காண முடிவதில்லை.

பொதுப் பிரச்சினைகளுக்காக முதல்வர்களை சந்தித்து அங்குள்ள எழுத்தாளர் சங்கங்கள் மனு அளிப்பதும் அவ்வப்போது நடக்கும். பெங்களூரு உள்ளிட்ட பத்து நகரங்களின் பழைய பெயர்களை மீண்டும் சூட்டக் கோரி அரசுக்கு ஆலோசனை வழங்கி பழைய பெயர்களை காலனிய முறையில் இருந்து மீட்டவர் யு.ஆர்.அனந்தமூர்த்தி. தாமே தேவையான போது கையால் எழுதிய சுவரொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் வீதியில் ஒட்டி விட்டு வருவார்கள் அங்குள்ள எழுத்தாளர்கள். அனந்தமூர்த்தி அப்படி பலமுறை செய்திருக்கிறார்.

2004-ல் தேவ கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தள வேட்பாளராக தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தார் அனந்தமூர்த்தி. பிறகு அதே மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, ‘முன்னாள் நண்பர்களே! உங்களது இந்த இழிவுச் செயலை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் சேரும்போதே தேவகவுடா கும்பலின் ஆளும் வர்க்க அடித்தளத்தை புரிந்து கொள்ளும் தேவை அவரது சிந்தனையில் இல்லை. 2007-ல் பைரப்பாவின் நாவல் ஔரங்கசீப் ஆட்சியில் நடந்த லவ் ஜிகாத் என்ற புனைவினை முன்வைத்த போது ‘பைரப்பாவுக்கு எழுதவே தெரியவில்லை’ என்று மென்மையாக தனது கண்டனத்தை முன்வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு கூட்டத்தில் ‘மோடி பிரதமரானால் நான் இந்தியாவின் பிரஜையாக இருப்பதை விரும்ப மாட்டேன். அப்படி ஒருவேளை வந்துவிட்டால் நேருவும், காந்தியும் கனவு கண்ட இந்தியா நமக்கு கிடைக்காது. ஊழல் செய்தார்கள் என்பதனால் காங்கிரசு தண்டிக்கப்பட வேண்டுமேயொழிய, மோடியை தேர்ந்தெடுப்பது அதற்கு தீர்வாகாது’ என்றும் பேசினார். இந்துத்துவ வானரங்கள் இதனால் அவருக்கு எதிராக கடுமையான மிரட்டலை கண்டனங்களாக பதிவு செய்தன. அதனாலேயே, தான் உணர்ச்சிவசப் பட்டு சொன்னதாக கொஞ்சம் பின்வாங்கினார் யு.ஆர். அனந்தமூர்த்தி. இந்துமதவெறியை எதிர்த்து ஒரு காந்தியவாதி இவ்வளவு உறுதியாக இருப்பதே பெரும் விசயம். அதே நேரம் அதுவே அவரது வரம்பையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறது.

மோடி வென்ற பிறகு அனந்தமூர்த்திக்கு பாகிஸ்தான் விமான டிக்கெட் போட்டு அவருக்கே அனுப்பி வைத்தனர் இந்துமத வெறி பாசிஸ்டுகள். தொடர்ந்து மெயில்கள், செல்பேசிகள் மூலமாக அவருக்கு தொல்லைகள் பலவற்றை கொடுத்து வந்தனர். பல இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவது அதிகரித்ததால் காவல்துறையினரின் பாதுகாப்பு அவருக்கு தரப்பட்டது. எனினும் மன உளைச்சல் அதிகரித்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

அவர் மரணமடைந்த அன்று உடனடியாக மோடி இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார். ஆனால் மங்களூர் நகரத்தில் உள்ள மோடி ரசிகர்களான பஜ்ரங் தள் அலுவலகத்தில் அன்று அதனை வெடி போட்டு கொண்டாடி இருக்கிறார்கள். மோடியின் இரங்கல் ஒரு நாடகம் என்பதை அந்த வெடிகள் உலகிற்கு தெளிவாக அறிவித்தன. அம்பேத்கரின் மறைவு நாளான டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதியை இடிக்க ஆர்.எஸ்.எஸ் முடிவெடுத்தது. மசூதியை இடித்த கொண்டாட்டத்தையும், அம்பேத்கரின் திவசத்தையும் ஒரு விழா போல கொண்டாடினார்கள்.

இத்தகைய மதவெறியர்களிடம் அனந்த மூர்த்தியின் மறைவன்று மட்டும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்.?

–    கௌதமன்.

சிறை எம்மை முடக்கி விடாது

4

மது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து ஆகஸ்ட் 15-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்திய GSH நிறுவன மற்றும் அவர்களுக்கு ஆதரவான பிற தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு 167 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் வெளிவந்த தொழிலாளர்கள் 23-ம் தேதி காலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமது சிறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

1. GSH கிளை நிர்வாகி தோழர் புரட்சி மணி :

ஆகஸ்ட் 15-ல் தொழிலாளர் கைது
ஆகஸ்ட் 15-ல் தொழிலாளர் கைது

சிறைக்குச் சென்றதன் மூலம் தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களும் அரசியல்படுத்தப்பட்டுள்ளன, எனவே எங்களை சிறைக்கு அனுப்பி எங்கள் குடும்பத்தை அரசியல்படுத்தும் நல்ல வேலையை செய்திருக்கும் அரசுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களோடு கைதான முன்னணித் தோழர்கள் சிறையில் எங்களுக்கு முன்மாதிரியாகவும், நம்பிக்கையூட்டுபவர்களாகவும் இருந்தனர். எதிர்கால புதிய ஜனநாயக சமூக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை சிறையில் இருந்த போது நாங்கள் கூட்டாக, குழுவாக வேலைகளை செய்த போது உணந்துகொண்டோம். இனி சிறைக்கு எப்போதும் செல்லத் தயாராக இருக்கிறோம்.

சிறை எங்களுக்கு அரசியலை மட்டுமல்ல கலையையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. சிறைக்குள் நாங்கள் கவிதைகள் எழுதினோம், பாடல்கள் எழுதினோம், பாடினோம், நாடகங்கள் எழுதினோம், நடித்தோம். சிறைச்சாலை எங்களை கவிஞர்களாகவும் பாடகர்களாகவும் கலைஞர்களாகவும் மாற்றியது.

2. GSH கிளை நிர்வாகி தோழர் சிறீதர் :

அனுபவக் கூட்டம்
அனுபவக் கூட்டம்

முதல் முறை சிறைக்குச் சென்ற அனைவருக்கும் ஒருவித தயக்கமும் பயமும் இருந்தது உண்மை தான். பல தொழிலாளிகள் குடும்பத்திற்கு தெரிவிக்கவே இல்லை, ஆனால் அந்தத் தயக்கமும் பயமும் இப்போது இல்லை. சிறையில் அனைத்து வேலைகளுக்கும் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பல தொழிலாளர்களின் பெற்றோர்களும் துணைவியார்களும் இங்கு வந்திருக்கிறீர்கள். இனி உங்கள் வீட்டில் நீங்கள் எந்த குழம்பை வைத்தாலும், அதில் உப்பு, காரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் கணவன்மார்கள், பிள்ளைகள் குறை கூறாமல் சாப்பிடுவார்கள், உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். சிறையும், சிறையில் நாங்கள் குழுவாக சேர்ந்து வேலை செய்ததும் எங்களிடமிருந்த தவறுகளையும் குறைகளையும் களைந்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் நாங்கள் கைது செய்யப்பட்டோம், சிறையில் இருந்தோம், இப்போது வெளியிலும் வந்து விட்டோம், ஆனால் இந்தப் போராட்டத்தில் இரண்டு உயிர்கள் போய்விட்டன. போலீசு நடத்திய தடியடியில் ஆணா பெண்ணா என்று தெரியாத இரண்டு கருக்கள் கலைந்து விட்டன. நமக்காக இல்லையென்றாலும் பிறக்காமல் போன அந்த கருக்களுக்காகவாவது நாம் போராட வேண்டாமா? போராட வேண்டும். இனி சிறை என்றால் முறையாக வீட்டில் தெரிவித்துவிட்டு தான் செல்வோம்.

3. பு.ஜ.தொ.மு காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் சிவா :

தோழர் முகுந்தன் உரை
தோழர் முகுந்தன் உரை

சிறை என்பது தொழிலாளர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் மேடையாக இருந்தது. அரசு என்பது வர்க்க ஒடுக்குமுறை கருவி என்பதை தொழிலாளர்கள் படித்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இப்போது தான் முதல் முறையாக அதை எதிர்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்கள் நடத்தியது வெறும் உரிமைகளுக்கான போராட்டமல்ல, இது வர்க்கப் போராட்டம். இந்த போராட்டம் தொடரும், ஆனால் இதை எப்போதுமே சட்ட வரம்பிற்குள் நின்று செய்ய முடியாது. நமது அடுத்தடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் வெல்ல வேண்டுமானால் மீண்டும் மீண்டும் சிறை செல்ல வேண்டியிருக்கும். எந்த பிரச்சினைகளுமின்றி பாதுகாப்பாக வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு நமது உரிமைகளைப் பெற முடியாது.

4. ஒரு தொழிலாளியின் துணைவியார் :

னைவரையும் பிணையில் எடுக்க உதவியாக இருந்த வழக்கறிஞர்களுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றி. எனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அமைப்பு தோழர்கள் தான் எங்கள் வீட்டுக்கு வந்து என்ன என்ன தேவை என்பதை கேட்டு செய்து கொடுத்தனர். எங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல கைதான அத்தனை தொழிலாளிகளின் வீடுகளிலும் என்ன தேவை, கையில் பணம் இருக்கிறதா இல்லையா, சமையல் பொருட்கள் இருக்கிறதா இல்லையா, குழந்தைகள் பெரியவர்கள் உடல்நலப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அருகில் இருந்து கவனித்துக்கொண்டனர். கைதான முதல் நாளில் மட்டும் சங்கத்தின் பொருளாளர் தோழர் விஜயகுமாருக்கு தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்திருக்கிறது, அனைத்திற்கும் தோழர் பொறுமையாக பதில் கூறியிருக்கிறார்.

தோழர் சு.ப.தங்கராசு உரை
தோழர் சு.ப.தங்கராசு உரை

இப்படி ஒரு அமைப்பை இதுவரை நான் பார்த்தது இல்லை. உண்மையில் எனது கணவர் பு.ஜ.தொ.மு வில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கே வந்திருக்கின்ற தொழிலாளர்களின் அப்பா அம்மாவா இருந்தாலும் சரி, மனைவிகளாக இருந்தாலும் சரி நீங்களும் அவர்கள் அமைப்பில் இருப்பதை பெருமையாக நினைக்கணும். இனி எந்த போராட்டம் நடந்தாலும் அவரை நான் மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பேன் அதே போல நீங்களும் உங்களுடைய பிள்ளைகளையும், கணவன்மார்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.

5. பு.ஜ.தொ.மு ஆவடி அம்பத்தூர் பகுதி தோழர் முகிலன்:

ங்களோடு முதல் முறையாக சிறைக்கு வந்த தொழிலாளியின் அம்மா அவரை பார்க்க வந்த போது அவர் என்னையும் உடன் அழைத்துச் சென்றார். தோழர் தனது அம்மாவிடம் பேசும் போது, என்னை அறிமுகப்படுத்தி இவர் தான் என்னை போராட்டத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார். அதை கேட்ட அந்த தாய் என் பிள்ளையை நல்ல தைரியசாலியாக மாத்தியிருக்கீங்க தம்பி என்றார். பல தொழிலாளிகளுக்கு ஹான்ஸ், பான்பராக் போடும் பழக்கங்கள் இருந்தன, அந்தப் பழக்கங்களை எல்லாம் சிறையில் இருந்த இந்த ஏழு நாட்களில் தொழிலாளர்கள் கைவிட்டுவிட்டனர்.

தொழிலாளர்களும் குடும்பத்தினரும்
தொழிலாளர்களும் குடும்பத்தினரும்

வீட்டில் வேலை செய்யாத பல தொழிலாளிகள் சிறையில் கூட்டாக உழைத்ததன் மூலம் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும், துணைவியாருக்கு உதவ வேண்டும் என்பதை கற்றுக்கொண்டனர். நாம் முறையாக இயங்கியது, நமது பகுதியை சுத்தமாக வைத்துக் கொண்டது, உணவு உழைப்பு என்று அனைத்தையும் சமமாக பகிர்ந்து கொண்டதை எல்லாம் பார்த்துவிட்டு விடுதலையாவதற்கு முதல் நாள் எங்கள் மத்தியில் வந்து பேசிய ஜெயிலர், “உங்களிடமிருந்து நாங்களே நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கே இருந்திருந்தால் மொத்த சிறையையும் மாற்றிவிடுவீர்கள் போலிருக்கிறதே” என்றார். சிறைக்கு வந்த தொழிலாளர்கள் நிறைய கற்றுக்கொண்டு வெளியே வந்திருக்கின்றனர். இது அவர்களை மேலும் உறுதியான போராட்டங்களை நடத்த பக்குவப்படுத்தும்.

6. தோழர் அசோக்குமார் :

சிறையில் அடைப்பதற்கு முன்னால் அனைத்து கைதிகளையும் ஜட்டி வரை கழட்டி பரிசோதனை செய்து அங்க அடையாளங்களை குறித்துக்கொள்வது தான் சிறை வழக்கம். நமது தோழர்களையும் அப்படி உடைகளை கழட்டச் சொன்னார்கள், ஆனால் முன்னணியாக நின்ற தோழர்கள், “நாங்கள் கிரிமினல்கள் இல்லை அரசியல் கைதிகள் எனவே உடைகளை எல்லாம் கழட்ட முடியாது” என்று கூறியதோடு, “யாரும் சட்டை பட்டனைக் கூடக் கழட்டக் கூடாது” என்று கூறிவிட்டனர். “மச்சம் தானே வேணும் இதோ பார்த்துக்க”ன்னு ஒவ்வொருவரும் தமது அடையாளங்களை காட்டினோம். உடைகளை கழட்ட மறுத்ததும், “ஐயா, சட்டையை கழட்ட மாட்டேங்கிறாங்கய்யா”ன்னு ஜெயிலரிடம் போய் முறையிட்டனர், ஜெயிலர் வந்தார்.

தொழிலாளர்கள்“நீங்கல்லாம் என்ன அமைப்புப்பா” என்றார்.

“பு.ஜ.தொ.மு” என்றோம்.

“ஓ.. ம.க.இ.க வா! சரிய்யா, இவங்க கம்யூனிஸ்டுகள் இவங்களை சட்டையை எல்லாம் கழட்டாம அப்படியே அடையாளத்தை குறிச்சிக்கங்க”ன்னு சொன்னார். இந்த முதல் சம்பவமே எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்டோம். முதல் நாள் இரவு குடும்பத்தை நினைத்து ரொம்ப கஷ்டமா இருந்தது. பல தொழிலாளிகள் மிகவும் மன வருத்தத்தில் உடைந்து போகும் நிலையில் இருந்தாங்க. நானும் அப்படி தான் இருந்தேன் பிறகு எப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்தோம். முன்னணியாக இருந்த தோழர்கள் 167 பேரையும் சுகாதாரக் குழு, மருத்துவக் குழு, உணவுக் குழு, குடிநீர் குழு, விசாரணைக் கைதிகளை சந்திப்பதற்கான குழு, தொண்டர் குழு என்று ஆறு குழுக்களாக அமைத்தனர். ஒரு குழுவுக்கு 10 தோழர்கள் இருந்தனர். இந்த குழுக்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டன.

எனக்கு சிறை அனுபவம் புதிதாக இருந்ததால், என்னடா இது சிறைக்குள்ள வந்தும் குழு அது இதுன்னு பண்ணிக்கிட்ருக்காங்களேன்னு தோணிச்சி. ‘நாம ஒரு போராட்டத்தில் கலந்துகிட்டு கைதாகி வந்திருக்கோம், ரெண்டு நாள்ல வெளிய போகப் போறோம், ஏதோ நிரந்தரமா இங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடு செய்ற மாதிரி குழுவெல்லாம் அமைக்கிறாங்களே’ன்னு கொஞ்சம் எரிச்சலாவும் கூட இருந்துச்சி, பிறகு தான் அது எவ்வளவு சரியானது என்பதை புரிஞ்சிக்கிட்டேன்.

ஆகஸ்ட் 15 அன்று அடக்குமுறை
ஆகஸ்ட் 15 அன்று அடக்குமுறை

அமைப்பு கூட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் செல்லும் போது தோழர்கள் புதிய ஜனநாயக சமூக அமைப்பைப் பற்றி விளக்குவார்கள். புதிய ஜனநாயக அரசில் நாம் தான் அரசு, நாம் அமைப்பதுதான் அரசாங்கம். மக்கள்தான் அரசை நடத்துவார்கள். அந்த அரசில் ஒவ்வொரு குடிமகனும் தலைவனாக இருப்பான். மக்கள் கூட்டாக உழைப்பார்கள், உழைப்பவர்களுக்கு தான் உரிமைகளும் அதிகாரமும் இருக்கும், மக்களைச் சுரண்டுபவர்கள் கொள்ளையடிப்பவர்களுக்கு அதிகாரம் இருக்காது, இப்படித்தான் சீனாவில் மாவோ தலைமையிலான சீன அரசு இருந்தது என்று விளக்கும்போதெல்லாம் அதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. ஆனால் சிறையில் இந்த ஏழு நாட்களில் நாங்கள் 167 பேரும் ஒரு குட்டி அரசாங்கமாகவே இயங்கினோம். நாங்கள் குழுக்களாக இயங்கியது போலத் தான் புதிய ஜனநாயக சமூக அமைப்பும் இயங்கும், ஆனால் அது இதை விட பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான குழுக்களைக் கொண்டு இயங்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இனிமேல் சிறையில் கற்றுக்கொண்ட ஒழுங்கு முறைகளை எனது குடும்பத்திலும் அமுல்படுத்துவேன். இந்த மாதிரியான முறைகளை கடைபிடித்தால் ஒரு குடும்பத்தின் பொருளாதார தேவைகளை எவ்வளவோ குறைத்துக் கொள்ள முடியும், முறைப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு பொருந்துகின்ற இந்த முறைகள் ஒரு நாட்டிற்கு ஏன் பொருந்தாது? இதை ஒரு நாட்டிற்கு பொருத்தினால் அந்த நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். உண்மையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசை நம்மால் கட்டியமைக்க முடியும், அதை நாமே நிர்வாகம் செய்யவும் முடியும் என்கிற உறுதியான நம்பிக்கையை இந்த சிறை அனுபவம் தான் எனக்கு அளித்தது.

குடும்பத்தினர்உதாரணத்திற்கு பார்த்தீங்கன்னா தினமும் வெவ்வேறு தொழிலாளர்களின் உறவினர்கள் வந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில நாட்கள் உறவினர்கள் குறைவாக வருவார்கள், உணவுப் பொருட்களும் குறைவாக வரும். அப்படி ஒரு நாள் மொத்தமே ஆறு வாழைப்பழங்கள் தான் வந்தது. சரி இந்த ஆறு வாழைப்பழத்தை எப்படி 167 பேருக்கு பிரித்து கொடுக்கப்போறாங்கன்னு பார்ப்போமேன்னு நான் உள்ளுக்குள் கிண்டலாக நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஆனால் தோழர்கள் அதையும் 167 பேருக்கு பகிர்ந்தளித்தனர். தனியாக நின்று யோசித்தால் என்னடா இது முட்டாள்தனமா இருக்கு, 167 பேருக்கு ஆறு பழம்னா தோல் கூட கிடைக்காதேன்னு தான் தோணும், ஆனால் உண்மை அப்படி இல்லை. கூட்டாக சிந்திக்கும் போது, கூட்டாக உழைக்கும் போது அனைத்தையும் செய்ய முடியும் என்பதையும் இதில் கற்றுக்கொண்டேன் என்றார்.

7. கோவிந்தராஜ், தொழிலாளி

ன்னைக்காவது ஒரு நாள் சிறைக்கு போகணும்கிற வித்தியாசமான ஆசை எனக்கு இருந்தது. ஆனா அந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் அமையும்னு நான் எதிர்பார்க்கல. நிறைய கூட்டங்கள்ல நம்ம தோழர்கள் பேசும் போது சோசலிச சமூகத்தை பத்தியும், புதிய ஜனநாயக சமூகத்தை பத்தியும் சொன்னதை எல்லாம் இதுவரை கற்பனையா தான் மனதில் ஓட்டிக்கிட்டிருந்தேன், ஆனால் அதை நடைமுறையில் பார்க்கும் வாய்ப்பு இந்த சிறை அனுபவத்தில் கிடைத்தது.

குழந்தைகள்இந்த அரசை ஏன் தொழிலாளி வர்க்கத்தால் நடத்த முடியாது, உழைக்கும் மக்களாலும் ஒரு அரசை நடத்திக்காட்ட முடியும் என்கிற நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்க மட்டும் கைதாகவில்லை, எங்களோடு வந்து நின்ற ஒரு தொழிலாளியின் அப்பாவும், இன்னொரு தொழிலாளியின் அண்ணனையும் கைது செய்து விட்டனர். அந்த தொழிலாளியின் அண்ணன் முதல் நாள் கொஞ்சம் வருத்தப்பட்டார், பிறகு சகஜமாகி விட்டார். எனக்கு இதுவரை ஒரு தம்பிதான் இருந்தான், இப்ப 167 தம்பிங்க கிடைச்சிருக்காங்கன்னாரு. மற்றொரு தொழிலாளியின் அப்பா நாங்கள் சிறையில் நாடகம் போட்ட போது அந்த நாடகத்தில் ஒரு தொழிலாளியின் அப்பாவாகவே பங்கேற்று நடித்தார்.

நாங்க இருந்த வரைக்கும் அந்த பிளாக்கில் எந்த பிரச்சினையும் இல்லை, தண்ணீர் பிரச்சினை சுத்தமாக இல்லை, அனைத்து தேவைகளும் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. நாங்க குழுவாக ஒற்றுமையாக வேலை செய்ததைப் பார்த்த மற்ற சிறைக்கைதிகள் அவர்களுடைய பிரச்சினைகளை எங்களிடம் சொல்லி அதற்காகவும் எங்களை போராடச் சொன்னார்கள். அப்பாவியாக மாட்டிக்கொண்டு சிறையில் இருக்கும் பல கைதிகளிடம் அரசியல் பேசியிருக்கிறோம், இந்த அரசியல்தான் சரியானது என்றும் கூறினார்கள்.

அரசு என்றால் என்ன என்பதை இதுவரை தோழர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும் என்பதை சிறைக்குச் சென்றதன் மூலம் தெரிந்து கொண்டோம். பல அப்பாவிகளை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள், சின்னச் சின்ன திருட்டு வழக்குகளில் மாட்டியவர்கள் மீதெல்லாம் பல பொய் வழக்குகளை போட்டு உள்ளே வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரிய பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லாம் வெளியே சுதந்திரமாக சுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சிறை அனுபவம் மூலம் நன்றாக தெரிந்து கொண்டோம். இந்த சமூக அமைப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதற்கு இந்த சிறை நல்ல உதாரணமாக இருக்கிறது. இந்த சமூக அமைப்பை அடியோடு மாற்றி ஒரு புதிய ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தீவிரமாக வேலை செய்ய வேண்டிய தேவையையும் எங்களை சிறைக்கு அனுப்பியதன் மூலம் இந்த அரசு எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

8. சிறை சென்று வந்த GSH தொழிலாளி புரட்சி மணியின் தந்தை தோழர் கருப்பையாவுக்கு 65 வயது. திருவாரூர் மாவட்டத்தில் CPI கட்சியின் விவசாயத்தொழிலாளர் சங்கத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டவர். தஞ்சை மாவட்டத்தில் நடந்த நிலமீட்பு இயக்கத்தின் போது மூன்று முறை கைதாகி சிறை சென்றிருக்கிறார்.

“நான் மூன்று முறை சிறைக்கு போய்ட்டு வந்திருக்கேன். ஒரு நியாயமான கோரிக்கைக்காக சிறை சென்று வந்த தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் ஆதரிக்க வேண்டும்.

சிறை எல்லாம் எங்க குடும்பத்துக்கு பழக்கப்பட்ட இடங்க, என் பையன் போய்ட்டு வந்தது பெருமையா தான் இருக்கு. யூனியன் தலைவர் சொன்ன மாதிரி சிறைக்கு போனவங்க எல்லாம் என்ன கொலையா பண்ணிட்டு போனாங்க போராடிட்டு தானே போனாங்க.

எங்க மாவட்டமே சிவப்பு மாவட்டங்க, சீனிவாசராவைப் பத்தி கேள்விப்படிருக்கீங்களா? எங்க ஊர் பக்கம் பல பிள்ளைகளுக்கு இப்பவும் சீனிவாசன்னு தான் பேரு, அவரோடெல்லாம் ஒப்பிடும் போது நாம என்ன வேலை செஞ்சிருக்கோம். என் பையனுக்கு கல்யாணசுந்தரம் தான் பேர் வச்சாரு, அந்த பேர் தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு. கம்யூனிஸ்ட் இயக்கமெல்லாம் கொடிகட்டி பறந்த காலம் ஒன்னு இருந்துச்சிங்க.

இந்த அரசு முதலாளிகளுக்கான அரசு, தொழிலாளர்களை ஒடுக்கத்தான் செய்யும், பாட்டாளி வர்க்க சோசலிச அரசு தான் உழைக்கும் மக்களுக்கான அரசு. அதைத் தான் நாம் உருவாக்க வேண்டும்.

– வினவு செய்தியாளர்

சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?

106

வீடியோ

vinavu cartoons 9.9 (5)

தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா
தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா

vinavu cartoons 9.9 (2)

vinavu cartoons 9.9 (4)vinavu cartoons 9.9 (7)vinavu cartoons 9.9 (3)vinavu cartoons 9.9 (1)vinavu cartoons 9.9 (8)

bjp-09

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளரான வெள்ளையம்மாள் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று தனது கைக்குழந்தையுடன், கணவர் ராஜா, வக்கீல் மகாராஜன் ஆகியோருடன் வந்து தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை மேயராக அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்துள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க வேட்பாளர் வாபஸ் என்றும் “மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பா.ஜ.க.வினரின் மனுக்களை ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீசு போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புலம்பியிருக்கிறார். வெள்ளையம்மாள் 3 நாட்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பாரதீய ஜனதா கட்சி டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வளைக்க முயற்சித்துள்ளது.

டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு பதவி விலகிய பிறகு சட்டமன்றம் கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததை அடுத்து, சட்ட மன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையை சரிக்கட்ட, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ரூ 4 கோடி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயற்சித்திருக்கிறது. சங்கம் விகார் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் தினேஷ் மொகானியாவுக்கு, பா.ஜ.க டெல்லி துணைத் தலைவர் ஷெர்சிங்க் தாகர் ரூ 4 கோடி கொடுப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும், தேர்தலில் தோற்றால் ஏதாவது வாரியத் தலைவர் பதவி தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இது தொடர்பான உரையாடல், காட்சிப் பதிவுகள் தன்னிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

லேடியும் சரி, கேடியும் சரி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ‘ஜனநாயக’த்தை விலைக்கு வாங்குவதில் வல்லவர்கள் என்பதைத் தவிர இது வேறு எதைக் காட்டுகிறது?

நெல்லை தவிர இன்னும் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு வழி விட்ட பா.ஜ.க வேட்பாளர்கள்.

1. பா.ஜனதா வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு – “நான் வாபஸ் கடிதம் கொடுக்கவில்லை” என்கிறார் பா.ஜனதா வேட்பாளர்.

– மதுரை மாநகராட்சி 85-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு

2. ஆலந்தூர் மண்டல 166-வது வட்ட இடைத்தேர்தல் : பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ்; அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு.

– பா.ஜனதாவினர் அவர்கள் கட்சி வேட்பாளர் நீதிசேவியர் வீட்டின் முன் போராட்டம்

3. ஆவடி நகராட்சி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ் – அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

– ஆவடி நகராட்சி 33-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் தரணி திடீரெடனு தனது மனுவை வாபஸ் பெற்றார். அவருடன் மாற்று வேட்பாளர் ஸ்ரீகிருஷ்ணவேணியும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இருவரும் பா.ஜ.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து கொண்டனர்.

4. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு பா.ஜனதா வேட்பாளர் உட்பட 4 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5. சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி 7-வது வார்டு, 33-வது வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

6. பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க தவிர பா.ஜ.க வேட்பாளர் உட்பட மற்றவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெற்றது.

தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்

20

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா என்கிற பகுதியைச் சேர்ந்த சல்மான் என்கிற இசுலாமிய இளைஞர் தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அன்று நள்ளிரவில் போலீசாரால் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் இழுத்துச் செல்லப்படும் சல்மான், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு “பயங்கரவாதியைப்” போல் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சல்மான்
சல்மான்

அதிர்ச்சியடைந்த சல்மானின் பெற்றோர் தங்கள் மகனின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டுள்ளான், அவன் செய்த குற்றம் என்ன என்பதை அறிய மறுநாள் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். போலீஸ் தரப்பில் அவர்களுக்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை. ஆகஸ்டு 21-ம் தேதி மாலை “தேசிய கீதத்தை அவமதித்த” காரணத்தின் பேரில் சல்மான் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார், பின்னர் முகநூலில் தேசத்திற்கு விரோதமான தகவல்களை சல்மான் பரிமாறியதாகச் சொல்லி தேச துரோக குற்றத்தையும் இணைத்துக் கொண்டனர்.

ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்தப்படுவதற்கு காரணமாக கூறப்பட்ட சல்மானின் தேசதுரோகச் செயல் என்ன?

கடந்த 18-ம் தேதி சல்மானும் அவரது ஆறு நண்பர்களும் (அதில் இருவர் பெண்கள்) கேரள மாநில அரசுக்குச் சொந்தமான திரையரங்கு ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அங்கே திரைப்படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் போட்டிருக்கின்றனர். தேசிய கீதம் திரையில் ஓடிய சமயத்தில் சல்மானும் அவரது நண்பர்களும் அமர்ந்தே இருந்துள்ளனர். இதைக் கவனித்த இந்துத்துவ காலிகள் சிலர் சல்மான் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக அங்கேயே கலாட்டா செய்து போலீசிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

சல்மானின் அடையாளம் அவர் இசுலாமியர் என்பதல்ல. திருவனந்தபுரத்திலும் அவர் வசிக்கும் பகுதியிலும், கல்லூரியிலும், நண்பர்கள் வட்டத்திலும் அவருக்கு வேறு அடையாளம் இருந்தது. சல்மான் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரிடையேயும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலராக இருந்தார். கடந்த ஆகஸ்டு 14-ம்  தேதி திருவனந்தபுரத்திலுள்ள அரசுத் தலைமைச் செயலகத்தின் முன் ஊஃபா சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கெடுத்திருந்தார். மேலும், மனித உரிமை மீறல் தொடர்பான சில மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருந்தார். அவரது முகநூலில் பதிந்திருக்கும் அனேகமான நிலைத் தகவல்கள், போலீசாரின் அதிகார அத்துமீறலைக் கண்டிப்பதாகவே உள்ளன.

திரையரங்கில் ’தேசிய கீதத்தை’ அவமதித்து வெளியேறிய சல்மான், அவரது பெண் நண்பர் ஒருவர் “தேசியக் கொடியின் நிறத்தில் உள்ளாடை தேவை” என்பதைப் போல வெளியிட்டிருந்த முகநூல் நிலைத்தகவல் ஒன்றிற்கு விருப்பம் தெரிவித்திருந்த தேச ‘துரோக’த்தையும் செய்திருந்தார். இத்துடன் அவர் ஒரு இசுலாமியராகவும் இருக்கவே போலீசார் அவர் மேல் தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

தேசிய கீதம் குறித்து இந்தளவுக்கு அக்கறை காட்டி தம் கட்டும் அதிகார வர்க்கம் ஏன் அரசுத் திரையரங்கில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்க விடுகிறது? ஏன் தனியார் திரையரங்கில் ஒலித்துக் கொண்டிருந்த தேசிய கீத ரிக்கார்டை உருவிப் போட்டது?

ஏனென்றால், திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்படும் போது மக்களே அதை மதிக்கவில்லை. தேசமே அடிமையாகும் போது தேசிய கீதத்திற்கு மட்டும் என்ன மதிப்பிருக்க முடியும்? ஆகவே சுதந்திரமாக வெளியே தம்மடிக்க சென்று விட்டனர். எனவே தான், முன்பு தனியார் திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதாக இருந்த விதிமுறையைத் தளர்த்தினர். ”தேசியப் பெருமிதத்திற்கு அவமரியாதை நேர்வதைத் தடுக்கும்” 1971-ம் ஆண்டின் சட்டம் ‘யாரெல்லாம் தேசிய கீதம் இசைப்பதற்கு இடையூறு செய்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனைக்குரியவர்கள்” என்று சொல்வதன் படி பார்த்தால், முதலில் தண்டனைக்குரியவர்கள் தனியார் திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை தடுத்த அதிகாரிகள் தான்.

சல்மான் ஆதரவு போஸ்டர்
சல்மான் ஆதரவு போஸ்டர்

அப்படியே தனியார் திரையரங்குகளில் மீண்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்தாலும் ‘அஞ்சரைக்குள்ள வண்டி’, ’மாயக்கா’ போன்ற ஷக்கீலாவின் திரைக்காவியங்கள் துவங்குவதற்கு முன் தேசிய பெருமிதத்தை எழுச்சியுறச் செய்த குற்றத்தை இழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஆபாசப் படங்களுக்கும் தேசிய கீதம் போடவேண்டுமென்றால் பிறகு இணையத்தின் நீலப்பட தளங்களுக்கும் அதை அமல்படுத்தலாமே? தற்போது ஷகீலா திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டாலும், வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் வரும் குத்தாட்டங்கள் ஷகீலா படங்ககளுக்கே சவால் விடுப்பதாகவே இருக்கின்றன என்பது வேறு விசயம்.

தேசியக் கொடியை அவமரியாதை செய்த குற்றத்தைப் பொருத்தவரை, இந்தியாவிலேயே தேசிய பெருமிதம் அதிகபட்சமாக பொங்கி வழியும் ஒரே இடம் கிரிக்கெட் மைதானம் தான். மைதானங்களில் உயர் வர்க்க குலக்கொழுந்துகளின் முகரைகளிலும், முதுகு மற்றும் மார்புகளிலும் தேசிய கொடியின் வண்ணங்கள் சீப்பறுந்து சீரழியும் காட்சிகள் நமக்குப் புதிதில்லை. தேசிய கொடியின் வண்ணத்தில் உள்ளாடை கிடைக்குமா என்று கேட்டதற்கு விருப்பம் தெரிவித்தது தேச துரோகம் என்றால், கொடியைத் தன் சளியொழுகும் மூஞ்சியில் வரைந்து கொண்டும், கொடியால் விசிறிக் கொண்டும் மைதானத்தில் அமர்ந்து 20-20 கிரிக்கெட்டை ரசிக்கும் திருமதி. அம்பானியையும் ப்ரீதி ஜிந்தாவையும் எத்தனை முறை கைது செய்யலாம்?

காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது. இந்த வரையறையின் படி பார்த்தால், ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும், தண்டகாரண்யா, கூடன்குளம், ஜெய்தாபூர், விதர்பா என்று நாடெங்கும் பரவலாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கும். ’இந்திய அரசே ஒழிக’ என்பதும் ’தேச துரோக’ குற்றமாகி விடும். 99% சதவீத மக்களின் செயல் தேச துரோகமென்றும் எஞ்சிய 1% கொழுப்பெடுத்தவர்களே தேசபகதர்கள் என்றும் சொல்கிறது ஆங்கிலேயன் போட்ட சட்டம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெரும் நிலப் பிரதேசங்களையும், தண்ணீர் தனியார்மயத்தின் கீழ் ஆறுகளையும், பன்னாட்டு சுரங்க நிறுவனங்களிடம் மலைகளையும், வங்கி இன்சுரன்சு துறைகள் தனியார்மயமாக்கல் என்கிற பெயரில் மக்களின் சேமிப்பையும், இராணுவத்துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில் இராணுவத்தையும் – ஆகமொத்தத்தில் முழு நாட்டையும் கூறுகட்டி விற்பது தேசபக்தியில் சேர்த்தியா என்பது பற்றி வெள்ளைக்காரன் சட்டங்கள் ஏதும் போட்டுள்ளானா, நமக்குத் தெரியவில்லை; ஏனெனில், என்னதான் சுதேசிகளாக இருந்தாலும் தேச பக்தி அல்லது துரோகம் என்று வரும் போது காலனிய எஜமானர்கள் கழித்துச் சென்ற அளவுகோல்களைத் தானே பயன்படுத்தியாக வேண்டியுள்ளது?

நாட்டின் இறையாண்மையை விற்பது தேசபக்தி, பொருளாதார நடவடிக்கை என்றும் அதை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றும் சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சல்மான்கள் கைது செய்யப்படாமலிருந்தால் தான் அதிசயம். சமகாலத்தில் தேசத்தை விற்றதன் மூலம் புகழ்பெற்ற ‘தேசபக்தர்களின்’ பெயர் பட்டியலைப் பார்த்தால், நாமெல்லாம் தேச துரோகிகளாக இருப்பதே உத்தமம்!

எனவே, தேச துரோகிகளாக மாறுவோம் – தேசத்தைக் காப்போம்!

அவாக்கள் யாருமில்லை – ஃபேஸ்புக் பிள்ளையார் பதிவுகள்

0

1. உண்மைத்தமிழன் (truetamilan)

பிள்ளையார் பெயரில் நச்சைப் பரப்பும் இந்துத்துவ அமைப்புகள்
பிள்ளையார் பெயரில் நச்சைப் பரப்பும் இந்துத்துவ அமைப்புகள்

தமிழ்க் கலாச்சாரத்திலேயே இல்லாத இந்த பிள்ளையார் கரைப்பு.. ஊர்வலமாகக் கொண்டு செல்வது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் பாரதீய ஜனதா கட்சி தலையெடுத்த பின்புதான் நாட்டில் அதிகமாகப் பரவியது.. மத பின்னணியில் ஆட்சியைப் பிடித்தவர்கள் செய்த கோலம் இது..!

ஊர்வலத்துல தண்ணிய போட்டுட்டு ஆடிக்கிட்டே போயிருக்காங்க..! ஆக… ஒரு பக்கம் தண்ணியை போட்டுட்டு தலையை விரிச்சுப் போட்டு கிராமத்துல பிள்ளையாரோட அப்பன் முனியாண்டியை பிரியாணி விருந்து போட்டு வணங்குற ஒரு கூட்டம்.. இன்னொரு பக்கம் இப்படி புல்லா ஒரு கட்டுகட்டிட்டு.. ஒரு ஆஃப் அடிச்சிட்டு மவனைத் தூக்கிட்டு போய் கடல்ல தூக்கி வீசுற எந்தக் கொள்கையுமில்லாத இன்னொரு கூட்டம்..!

பக்தியை நல்லா வளர்க்குறாய்ங்கய்ய நாட்டுல.!

பிள்ளையாரப்பா உன்னால் முடிந்தால் இவர்களை தண்டித்து பார்..! நீயே இந்த நாட்டுல இருக்க மாட்ட..!!!

2. பிரகாஷ் ஜே பி (prakash.jp.73)

இன்று காரில் “U” டேர்ன் சிக்னலுக்காக காத்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தங்களின் இருசக்கரவாகனத்தில் அதே சிக்னலுக்கு காத்திருந்தனர்… கணவன், மனைவி, பிள்ளைகள் (பர்தா & தொப்பி அணிந்து)…

மசூதிக்கு அருகில்
மசூதிக்கு அருகில் வலிந்து நிறுத்தப்படும் பிள்ளையார் ஊர்வலம்.

அப்போது பக்கத்தில் ஒரு மினி டெம்போவில் ஒரு பத்து பேர் காவி துண்டுகள் அணிந்து, ஆட்டமும் பாட்டமுமாய், அந்த இரு சக்கர வாகனத்தை மிக நெருங்கி வந்து, அவர்களை பார்த்து ஏளனமாய் சத்தத்துடன் ஊளையிட்டு, நேராக சென்றுவிட்டது… விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு வருகிறார்கள் போல்..

இடது பக்க சாலையில் நேராய் செல்ல காலியாக இருந்தபோதும், இவர்கள் நின்றுகொண்டிருந்த வலதுபக்கம் தேவையில்லாமல் நெருங்கிவந்தனர்… அந்த முஸ்லிம் குடும்பம், அமைதியாய், தலைதொங்க, மீடியன் பக்கமாக தள்ளிவந்து நின்றுகொண்டார்கள்….

இன்று பார்த்த இதுபோன்ற பல மினி டெம்போக்களில் “அவாக்கள்” யாரும் கிடையாது.. நமது ஆட்கள்தான் இப்படி வழிதவறி ஹிந்துத்துவா அடியாட்களாய் இருக்கிறார்கள்…

3. கார்ட்டூனிஸ்ட் பாலா (cartoonistbala)

(பழைய மும்பை அனுபவம்) பாவம் அந்த பிள்ளையார்!
—————————————
மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. இதேப்போன்ற ஒரு விநாயகர் சதுர்த்தியின் மழை நாளில் தான் அவரை நான் பார்த்தேன்.

பத்தாண்டுகள் இருக்கும். அப்போது `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் உதவி ஆசிரியராக பணியிலிருந்தேன். அன்றைய பணி முடிந்து நானும் அலுவலக சகாக்கள் இருவரும் தாதர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். நேரம் இரவு மணி பத்தரை இருக்கும். லைட்டாக மழை தூறிக் கொண்டிருந்து.

தாதர் ரயில் நிலையத்தில் எல்லா நாளும் கூட்டம் அள்ளும். அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் அழகான குட்டி பிள்ளையார் சிலைகளை தங்கள் பகுதிக்கு ரயில் கொண்டு செல்ல காத்திருந்தனர்.

சில நிமிடத்தில் சர்ச்கேட் டூ போரிவலி ரயில் வந்தது. சிலைகளை வைத்திருந்த குரூப் ஒன்று முண்டியடித்து ஏறியது. அவர்களுக்குப் பின்னாடியே என் சகாக்கள் இருவரும் ஏறிவிட்டிருந்தனர்.

நான் மட்டும் கூட்டம் உள்ளே போகட்டும். வாசல் ஓரம் நின்றுக் கொள்ளலாம் என்று வாசலை ஒட்டி இருந்த சிறு கைப்பிடியை பிடித்துக் கொண்டு ரயிலில் ஒரு காலும் பிளாட்ஃபார்மில் ஒரு காலும்வைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.

ரயில் கிளம்புவதற்கான `பூம்ம்ம்ம்ம்ம்..’ அலாரம் ஒலித்தது. மெதுவாக ரயில் நகர ப்ளாட்ஃபார்மிலிருந்த எனது காலை எடுத்து ரயில் வைக்க முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.

மெலிந்த உடலும், பரட்டை தலையும், தாடியும், அழுக்கு உடையுமாக இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் ரயிலின் உள்ளிருந்த கூட்டத்தை பிளந்தபடி மிதித்து தூக்கி வீசப்பட்டார்.

ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் மிதித்து வீசப்பட்டது நிஜம்.

விழுந்த நபர் கூட்டத்துக்கு நடுவே அப்படியே சுருண்டு கிடந்தார்.

யார் அந்த நபர்.. உள்ளே என்ன நடந்தது எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் யாரோ ஒருவரை ஓடும் ரயிலிருந்து மிதித்து தள்ளியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

கோபத்துடன், “ அரே க்யூம் அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்கா..” (ஏன் இப்படி அடிச்சு வீசுறீங்க.. அந்த ஆள் செத்துப்போவான்” ) என்று சத்தம் கொடுத்தேன்.

பிள்ளையார் ஊர்வலம்
பிள்ளையார் மீது நகம் பட்டால் கூட பொறுக்காத பக்தர்கள் (சென்னை ஊர்வலத்தில்)

அவ்வளவுதான்.. அடுத்த நொடி,

“ஆய்லா.. கோன் ஆய்ரே த்தோ..” (..த்தா.. யார்ல அது..) என்று உள்ளிருந்து தடித்த குரல் ஒன்று வந்தது.

குரல் மிதித்து தள்ளியவனுடையதுதான். 40 வயது இருக்கும். மராட்டியர்களுக்கான பாரம்பரிய வெள்ளை உடையுடன் ஆள் வேறு பார்க்க கொஞ்சம் `பல்க்காக’ இருந்தான்.

கூடவே அவனுக்கு ஆதரவாக இருக்கையில் உட்கார்ந்திருந்த குஜராத்தி, மார்வாடிகள் வேறு குரல் எழுப்பினார்கள். அவர்கள் எப்போதுமே அப்படிதான்.. சண்டைபோட மாட்டார்கள்.. வெட்ட மாட்டார்கள்.. குத்தமாட்டார்கள். ஆனால் மத கலவரத்தை பின்னிலிருந்து நன்கு ஊதி பெருசாக்குவார்கள்.

கேள்வி எழுப்பியது நான் தான் என்பதை பார்த்துவிட்டான் அந்த தடியன்.. பதுங்கவும் முடியாது. என்னுடைய குரலுக்கு ஆதரவாக யாராவது வந்திருந்தால் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும்.

ஆனால் நான் நிற்கும் இடம் மதவெறியர்களுக்கு மத்தியில். எதிர்த்து நின்றால் அடுத்து ரயில் நிலையத்தில் மிதித்து தள்ளப்படப்போவது நானாகக்கூட இருக்கலாம். வேறு வழியில்லை.. இந்த இடத்தில் பதுங்க வேண்டும் என்று என் ஏழாம் அறிவு அவசரமாக எச்சரித்தது.

இந்த ரகளை நடந்து கொண்டிருக்கும்போது என்னுடன் வந்த சகாக்கள் இருவரும் கூட்டத்துக்கு நடுவில் குனிந்து தலையை மறைத்து எஸ்ஸாகியிருக்க கூடும்.

கொழுப்பெடுத்துப்போய் கேள்வி கேட்ட குற்றத்திற்காக நான் அடிவாங்கலாம். கூட வந்த பாவத்திற்காக அவர்கள் அடி வாங்க முடியாதில்லையா..

என்னை நோக்கி முன்னேறி நகர்ந்து வந்த அந்த நபரை நோக்கி,

“பாய்.. அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்ஹாதோ க்யா கரேகா தும்..” என்றேன் குரலை தாழ்த்தியபடி..

(அண்ணே.. இப்படி மிதிச்சு தள்ளுறீங்களே.. அவன் செத்துப்போனா என்ன பண்ணுவீங்க..)

அந்த முரடன் அதற்கு பதில் சொல்லாமல் முறைத்தபடி, `

“தூ கோன் ஆய்ரே..” என்றான். ( நீ யார்ரா..)

அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும். ஒரு மதபோதை ஏறியவனின் கண்களை நீங்கள் நேருக்கு நேராக சந்தித்திருக்கிறீர்களா.. நான் பார்த்தேன்.. அவன் கண்களில் அத்தனை வெறி.

அந்த முரடன் மராட்டியன் என்பது தெரிந்ததால்,

“மீ… பிரஸ்ச்சா மானூஷ்..” என்று மராட்டியில் பதிலளிக்க ஆரம்பித்தேன்.

பிரஸ் என்றதும் அவன் மூர்க்கம் லைட்டாக குறைந்தது. ஆனால் குரலின் கடுமையை குறைக்காமல்,

“பிரஸ் மஞ்சே காய்பன் போல்னார் காய்..குட்சா பிரஸ்?”

( பிரஸ்னா என்ன வேணும்னாலும் சொல்வியா .. எந்த பத்திரிகை?) என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

அப்போதுதான் என் `மீடியா புத்தி’ கூடுதலாக வேலை பார்க்க ஆரம்பித்தது. சும்மாவே வட இந்தியர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு எரிச்சல் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் இழிவு படுத்துவார்கள்.

அதனால் தமிழ் டைம்ஸ் என்று தமிழ் பத்திரிகை பெயரை சொல்லாமல், எங்கள் குழுமத்திலிருந்து வெளிவரும் மராட்டி பத்திரிகையானா `மும்பை சவ்ஃப்பர்’’ என்ற பெயரை குறிப்பிட்டேன்.

மராட்டியர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகை அது. அவனும் அதன் வாசகனாக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன். கொஞ்சம் கூலாகிவிட்டான்.

“அரே.. அப்லா சவ்ஃப்பர்ச்சா மானூஷ் ஆய்காய்.. கசா.. அசா போல்தே துமீ.. தோ பாஹல் அப்லா கண்பத்திலா டச் கேலே.. மாய்த்தேகாய்.. தெஜா சாட்டி மீ மார்லே..” என்று சொல்லிவிட்டு இருக்கையை நோக்கி நகர்ந்து சென்றுவிட்டான்.

நடந்த விசயம் இதுதான்..

அந்த பிச்சைக்காரர் இருக்கையில் படுத்து கொண்டு வந்திருக்கிறார். இவர்கள் உள்ளே நுழைந்த வேகத்தில் அவரை தட்டி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பதறி எழுந்ததில் அந்த பிச்சைக்காரரின் கை தடியன் கையில் வைத்திருந்த பிள்ளையார் சிலை மீது பட்டுவிட்டது.

பிள்ளையார் சிலையை தொட்டுவிட்டான் என்ற ஒற்றை காரணத்திற்காகதான் அந்த பிச்சைக்காரர் மிதித்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்..

சிலையை ஒரு பிச்சைக்காரன் தொட்டுவிட்டான் என்ற அல்ப காரணத்திற்காக ஓடும் ரயிலில் இருந்து ஒருவரை மிதித்து தள்ள மனம் வர முடியுமா என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. என்ன செய்வது என்று தெரியவில்லை.

“கண்பத்தி பப்பா மோரியா..’’ கோஷம் காதுகளை பிளக்க.. ரயில் வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது..

அமைதியாக வாசல் ஓரம் நகர்ந்து வெளியே எட்டிப்பார்த்தேன்..

ரயிலிலிருந்து மிதித்து தள்ளப்பட்டு ப்ளாட்ஃபார்மில் பரிதாபமாக விழுந்து கிடைந்த பிள்ளையாரை சிலர் கைதூக்கி எழுப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்…

-கார்ட்டூனிஸ்ட் பாலா

29-8-14

கலையரசன் (Kalaiy Arasan)

விநாயகர் சதுர்த்தி அன்று, இந்து மக்கள் கட்சி விநாயகர் சிலையை கொண்டு சென்று கடலில் கரைக்கும் ஊர்வலம் ஒன்றை ராமேஸ்வரத்தில் நடத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யோகேஸ்வரன், அதில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்றிருந்தார். ஆனால், தமிழக பொலிசார் அவர் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்கவில்லை. யோகேஸ்வரன் இது குறித்து “ஈழத் தாய்” ஜெயலலிதாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் இந்து மக்கள் கட்சியும், சிறிலங்காவில் புத்தர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் பொதுபல சேனாவும், ஒரே மாதிரியான கொள்கை கொண்ட மதவெறி அமைப்புகளாகும். பத்து வருடங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை கொண்டு செல்லும் ஊர்வலங்கள் இஸ்லாமியருக்கு எதிரான மதவெறியை தூண்டியதால், பல தடவை மதக் கலவரங்கள் நடந்துள்ளன. யோகேஸ்வரன் எம்.பி., ஒரு மதவெறி அமைப்பின் ஊர்வலத்தில் கலந்து கொண்டது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை அறிய முடியவில்லை.

ராஜஸ்தானில் குடிநீருக்கு ஏடிஎம் எந்திரம்

14

கேன் இந்தியா (Cairn India) தனியார் எரிசக்தி பெருநிறுவனமும், நவீன தொழில்நுட்பமும் இணைந்ததன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் சத்தமில்லாமல் ஒரு ‘புரட்சி’ நடத்தப்பட்டுள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் வியந்தோதுகின்றன. தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைத்து அவற்றை அக்கிராம மக்களே சுயமாக நிர்வகித்துக் கொள்வது தான் அந்த புரட்சி. இத்தகைய ‘புரட்சி குறித்து’ 2 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவித்திருந்தது வினவு.

தண்ணீர் ஏ.டி.எம்
தண்ணீர் ஏ.டி.எம்மில் ராஜஸ்தானி பெண்கள்

இந்தியாவின் மொத்த பரப்பளவில் 10.4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 5.5% சதவீதத்தையும் கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் நாட்டின் மொத்த நீராதாரத்தில் 1.15% மட்டுமே பெற்றுள்ளது. வருடாந்திர மழையளவோ 100 மி.மீ இருந்து 800 மி.மீக்குள் தான் இருக்கிறது.

ராஜஸ்தானின் வறட்சி மிகுந்த இரு மாவட்டங்களில் 22 எதிர் சவ்வூடுபரவல் (Reverse Osmosis RO) தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அவற்றுடன் தானியங்கி தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் (ATM) இணைக்கப்பட்டுள்ளன.

கவாஸ், குடா, ஜோகாசாகர், பைய்டு உள்ளிட்ட தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தண்ணீர் ஏ.டி.எம் மையங்களில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி ரூ 5 விலையில் 20 லிட்டர் குடிநீரை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக கிராம மக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டின் ஆரம்ப விலை ரூ 150. குறைந்தபட்சம் ரூ 20-க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

“இத்திட்டத்தால் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில் குடிநீர் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் ஏடிஎம்கள் மக்களிடையே பிரபலமடைந்து வருவதாகவும் பலரும் தண்ணீருக்கான ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேன் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவு, ஜீவன் அம்ரித் திட்டத்தின் (Jeevan Amrit Project) மூலம் இத்திட்டத்திற்கு நிதியளித்திருக்கிறது. டாடா திட்டங்கள் (TATA Projects) நிறுவனம் RO நிலையங்களையும், ATM-களையும் நிறுவும் வேலையை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பொது சுகாதார பொறியியல் துறை (PHED) நீராதாரத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் இணைப்பையும், இந்நிலையங்களுக்கான வளாகங்களையும் கட்டித்தந்துள்ளது. உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துக்கள் இதற்கான இடத்தை வழங்கியுள்ளன. அதாவது, இடம், தண்ணீர் இணைப்பு, கட்டிடம் கட்டியது போன்ற அடிப்படை அம்சங்கள் அரசு செலவில்; மக்களிடம் பணம் வசூலிப்பதற்கான ஏ.டி.எம், சுத்திகரிப்பு நிலையம் போன்ற கூடுதல் அம்சங்களை தனியார் அமைக்கின்றனர்; மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக் கொள்ள வேண்டும். மக்கள் பணத்தில் அரிசி, தனியாரின் உமி என்ற இந்த வகை மாதிரிதான் அரசு-தனியார் கூட்டிணைவு செயல்படும் அடிப்படை.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட கிராமங்களில் 15 பேர் கொண்ட ‘தண்ணீர் கமிட்டிகள்’ ஏடிஎம்களையும் வரவு செலவுகளையும் நிர்வகிக்கும் என்றும், தண்ணீர் விற்பனை செய்து வரும் பணத்தில் ஏடிஎம்களின் பராமரிப்பு, இயக்குபவருக்கான ஊதியம் போக மீதியுள்ள தொகை கிராம நலனுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கு செலவளிக்கப்படும் என்றும் கேன் இந்தியா நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த வளர்ச்சிப் பணிகளுக்கான செலவும் தனியார் முதலாளிகளின் கல்லாவை நிறைக்கும் வகையில் திட்டமிடப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தண்ணீர் தனியார்மயம்இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தாரா (Dhara) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பங்குதாரராக செயல்படுகிறது. இந்நிறுவனம் கிராம தண்ணீர் கமிட்டிகளை ஒருங்கிணைப்பதோடு, சுத்தமான, சுகாதரமான குடிநீர் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்துவருகிறது. அதாவது, அரசுத் துறை கொண்டு வரும் தண்ணீரை, கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் நாம் பிடித்துக் கொள்கிறோம். இடையில் குடத்துக்கு ரூ 5 என்று மொட்டை அடிப்பது எதற்காக என்று யாரும் கேள்வி கேட்டு விடாமல் இந்த ‘சிறப்பு’ தண்ணீரின் தேவையை மக்களிடம் நிறுவுவது இந்தத் தொண்டு நிறுவனத்தின் வேலை.

இத்திட்டத்திற்கு நிதியளித்திருக்கும் கேன் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவின் தலைவர் நிலேஷ் ஜெயின் – இது அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களுக்கும், சுயமேலாண்மைக்கும் மிகச் சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.

வறட்சியான கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து கொடுப்பதில் கேன் இந்தியா, டாடா, தாரா என்.ஜி.ஓ இவர்களுக்கெல்லாம் இவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்?

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு, உற்பத்தியில் ஈடுபடும் பெரும் தனியார் நிறுவனங்களில் ஒன்றான கேன் இந்தியாவின் சந்தை மதிப்பு சுமார் 60,000 கோடி ரூபாயாகும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 30 சதவீதத்தை கேன் இந்தியா உற்பத்தி செய்கிறது. ராஜஸ்தானில் உள்ள மங்களா, பாக்கியம், ஐஸ்வர்யா போன்ற இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் கேன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் தற்போதைய உரிமையாளர் வேறு யாருமல்ல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் முதல் செசா கோவா சுரங்க நிறுவனம், சத்தீஸ்கர் ஜர்சுகுடாவில் வேதாநாத அலுமினியன் வரை இழிபுகழ் ஈட்டியிருக்கும் வேதாந்தா நிறுவனம் தான்.

எண்ணெய் உள்ளிட்ட இந்நாட்டின் பொதுச் சொத்துக்களான இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலையில் கொடுத்து அவை கொள்ளை லாபமீட்ட வழி செய்கிறது தனியார் மயக் கொள்கை. இதன் மறுபக்கமாக அரசு மக்கள் நலத் திட்டங்களை வெட்டி வரும் நிலையில், தனியார் முதலாளிகளே சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக காட்டுவதற்கு பெயர்தான் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிடி.

சுய ஆளுகைக்கு (Self Governance) சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் இந்தத் தண்ணீர் ஏ.டி.எம் திட்டம், தண்ணீர் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பதை மாற்றி, காசு உள்ளவருக்கு தண்ணீர் என்பதைக் கொண்டு வந்திருக்கிறது. பணம் உள்ளவர் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொண்டு எல்லா தண்ணீரையும் தனக்கு திருப்பி விட்டுக் கொண்டு, காசில்லாதவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால் அதை இந்த சுயஆளுகை அமைப்புகள் தடுத்து நிறுத்துவது சந்தையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதாக ஆகும் என்பதால் அது அனுமதிக்கப்படாது. மேலும், கிராம தண்ணீர் கமிட்டிகளை கையாளும் பொறுப்பையும், இத்திட்டத்தின் வரவு செலவை நிர்வகிக்கும் பொறுப்பையும், ஏற்றிருக்கும் தொண்டு நிறுவனமான தாராவின் கணக்குகளை தணிக்கை செய்து சரிபார்க்க யாராலும் முடியாது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை சோதித்தறிய மங்கள்யான் அனுப்பி மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கும் அரசுக்கு, தன்னுடைய குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க தேவையான நிதியும், தொழில்நுட்பமும் இல்லையாம். அதனால் தான் இது போன்ற அரசு – தனியார் கூட்டு திட்டத்தின்(PPP) மூலம் செயல்படுத்துவதாக அரசு கூறுகிறது.

குடிமக்களுக்கு தண்ணீர், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை சேவைகளை வழங்கும் தனது பொறுப்பிலிருந்து அரசு விடுவித்துக் கொண்டு, அவற்றை விற்பனை சரக்குகளாக  சந்தை செயல்பாட்டுக்கு திறந்து விடுவதுதான் PPP என்ற அரசு-தனியார் கூட்டு திட்டங்கள் போன்றவற்றின் நோக்கம். உதாரணமாக PPP திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைகள் எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் திட்டத்தில் முதலீடு செய்த தனியார் நிறுவனங்கள் சுங்கச் சாவடிகளை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதன் மூலம் சாலைகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நாள் வரையிலும் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்காமல் மக்களைத் தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கவிட்ட அரசு இன்று இத்திட்டத்திற்கு தண்ணீர் இணைப்பை வழங்கி வேறு வழியில்லாமல் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலைக்கு மக்களை தந்திரமாக தள்ளியுள்ளது.

ஏற்கனவே நகர்ப்புறங்களில் உயிரின் ஆதாரமான குடிநீர், லாபத்திற்கான சரக்காக விற்பனை செய்யப்பட்டுவருகிறது, காசு கொடுத்து வாங்கிக் குடிக்க மக்களும் பழகிவிட்டார்கள். கிராமப்புற மக்களையும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் முறைக்கு பயிற்றுவிக்கும் முகமாகவே இத்தண்ணீர் ஏ.டி.எம்கள் PPP, CSR மற்றும் NGO-களின் கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த செயல்தந்திரமும் கூட இந்த அரசின் சொந்த தயாரிப்பு இல்லை. உலகவங்கி தீட்டிக்கொடுத்த ’குடிநீர் வழங்கி வரும் அரசு முதலில் கட்டணம் விதிக்கத் தொடங்கி படிப்படியாக கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போய் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற திட்டம் தான் இது.

சாலை வசதி, கல்வி, மருத்துவம், சுகாதாரம், தண்ணீர் முதலான அடிப்படைத் தேவைகளை பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமை. இவற்றை குடிமக்களுக்கு ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. அரசு இப்பொறுப்பிலிருந்து விலக்கிகொண்டு அடிப்படை உரிமைகள் அனைத்தையும் விற்பனை சரக்காக்க வேண்டும் என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. மொத்தத்தில் தண்ணீர் தனியார்மய நிகழ்ச்சி நிரலில் வரக்கூடிய மற்றுமொரு திட்டமே இத்தண்ணீர் ஏ.டி.எம்.

குடிமக்களின் அடிப்படை தேவைகளை செய்துகொடுக்கும் கடமையிலிருந்து அரசை விடுவிப்பதன் மூலம் அதன் பணிகளை வெட்டிச் சுருக்கியுள்ளன புதிய தாராளவாத கொள்கைகள். இத்தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் போது அதை எதிர்க்கும் மக்களை ஒடுக்குவதை மட்டுமே தனது தலையாய கடமையாக செய்துவருகிறது அரசு.

பூமியைத் தவிர வேறெந்த கோளிலும் தண்ணீர் இல்லாததால் அங்கு நுண்ணுயிரிகள், தாவரங்கள் உள்ளிட்டு எந்த உயிரினமும் இல்லை. உயிர் வாழ்வதற்கு மூலாதாரம் தண்ணீர். அது இயற்கையின் அருட்கொடை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. அதை சில முதலாளிகள் அபகரித்துக் கொண்டு, மக்களை சுரண்டுவது என்பது இயற்கை நியதிக்கு எதிரானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதம். இது தொடர்ந்தால் நாளை நாம் சுவாசிக்கும் காற்றும் கூட தனியார்மயமாக்கப்படும்.

மேலும் படிக்க…

மோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்

1
விலைவாசி உயர்வு
மின்சாரம், ரயில் கட்டணம், டீசல், சமையல் வாயு, உரங்கள் விலை உயர்வு வழங்கும் “மோடியின் அச்சே தின்”  (நல்ல நாட்கள்)
பாசிஸ்டுகளுக்கு பாதுகாப்பு
பாசிஸ்டுகள் : “எனக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வேண்டும். மனிதர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது”
ஆர்.எஸ்.எஸ் கைத்தடி
1992-ல் பாபர் மசூதி இடிப்பு,  1993-ல் மும்பை கலவரம்,  2002-ல் குஜராத் கலவரம், 2008-ல் கந்தமால் கலவரம், 2012-ல் பைசாபாத் கலவரம், 2013-ல் முசாபர் நகர் கலவரம் என படிகளில் மேலேறும் ஆர்.எஸ்.எஸ் பாசிசத்துக்கு கைத்தடியாக ‘மதச்சார்பற்ற’ கட்சிகள்.
குற்றப் பின்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
16-வது நாடாளுமன்றத்தில் 186 உறுப்பினர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள் : “இப்போ நாம யார் கிட்ட இருந்து நாடாளுமன்றத்த பாதுகாக்கணும்?”
பாகிஸ்தான் - இந்தியா
பாகிஸ்தான் – இந்தியா : இரண்டு பேருக்கும் ஆயுதங்களை விற்றுக் கொண்டே இருதரப்பும் அமைதியாக இருக்கும்படி அறைகூவல் விடுப்பதுதான் அமெரிக்க அரசியல்.

கார்ட்டூன்கள் : நன்றி IndiaTomorrow.net

சென்னை விநாயகர் ஊர்வலம் – வினவு நேரடி ரிப்போர்ட்

22

நாம் அங்கே செல்லும் போது ஆர்.எஸ்.எஸ்-ன் சவுண்டு சர்வீஸ் பிரபலம் எச்.ராஜா பேசிக் கொண்டிருந்தார்.

“நம்மை அந்தத் தெரு (ஐஸ் ஹவுஸ் மசூதி) வழியே செல்ல தடை விதிக்கிறார்கள். முஸ்லீம்கள் இந்தப் பகுதி வழியே வரக்கூடாது என்று இந்துக்கள் நாம் தடை விதித்தால் என்னவாகும்” என்றதும் கூட்டம் “பாரத்மாதா கி ஜெய்” என்று வெறியுடன் சத்தமிட்டது. அதாவது இந்துமுன்னணியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி பள்ளிவாசலில் கலவரம் செய்ததால் அந்தத் தெரு வழியே மதவெறி ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதை வைத்து மதவெறியை கிளப்ப முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம்.

“நாய் செல்கிறது, பன்னி செல்கிறது, ஆனால் நாம் செல்லக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள்” என்று தம் முன்னால் அமர்ந்திருக்கும் சிந்திக்கத் தெரியாத பார்ப்பன அடிமைகளிடம் நஞ்சை கக்கி பேச்சை முடித்தார், எச் ராஜா. சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை பல நூறு ஆண்டுகளாக தெருவுக்குள் நுழையக் கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது என்று மனித உரிமைகளை மறுத்து சட்டம் செய்த பார்ப்பன ஆதிக்க சாதிக் கூட்டம் இதை பேசுவது நல்ல வேடிக்கை.

மாட்டுடன் முட்டிய பக்தர்
மாட்டுடன் முட்டிய பக்தர்

“நாய், பன்னி போறத பத்தி பேசும் எச்.ராசாவே, சங்கராச்சாரி, தேவநாதன் மாதிரியான நாய், பன்றிகள் கருவறைக்குள் செல்லும் போது எங்களை அனுமதிக்க மறுக்கிறாயே?” என்று கேட்கும் பகுத்தறிவு, கேட்டுக் கொண்டிருந்த அடிமைகளுக்கு இல்லை.

அடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த ராமானந்த மகராஜ் சுவாமிகள் என்ற ஒரு சாமியார் பேச ஆரம்பித்தார். சாமியார் ஏதாவது ஆன்மீகம் பேசுவார் என்று பார்த்தால் எச்.ராஜா பேசியதை விட அதிகமாக மதவெறியை கக்கினார். “நட்சத்திரத்தை பார்த்து ‘அறிவியல்’ முறைப்படி பிறந்த நாள் கொண்டாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். “பகுத்தறிவு என்று பெயரில் இந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்தது இனியும் செல்லுபடியாகாது. இளைஞர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தி.க இன்று ஆளில்லாத அநாதை கூட்டமாகி விட்டது. ஆனால், மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. பிஜேபியை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள். அவர் தன்னை ஒரு இந்து பிரதமர் என்று பெருமையாக அழைத்துக் கொள்கிறார்” என்று இந்துத்துவ ஆட்சியின் ‘பெருமை’களை அளந்து கொட்டினார்.

சென்னையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளின் பின்னே தனிப்பெரும் கதைகளும், சதித்திட்டங்களும் இருக்கின்றது. அதை பின்னர் பார்ப்போம். ஆனால் இந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்களுக்கு மட்டுமல்ல, தெருக்களில் வைக்கப்பட்ட பிள்ளையாரை வணங்குவதற்கும் பல ‘செலவுகளை’ செய்தே பக்தர்களையும், தொண்டர்களையும் இழுக்க வேண்டியிருந்தது.

அந்த சாமியார் பேசியதும், ஊர்வலம் புறப்பட்டது. பிள்ளையாரை கிளப்புவதற்கு போலீசார் படாதபாடுபட்டார்கள்.

மூடப்பட்டிருந்த கடைகள்
மூடப்பட்டிருந்த கடைகள்

முதலில் ஐந்தாறு பிள்ளையாருடன் ஆரம்பித்த ஊர்வலம், நகரும் போது குறுக்கு சந்துகளில் இருந்த வந்த பிள்ளையார்களுடன் சேர்ந்து எண்ணிக்கை கூடியது.

மையமான பிள்ளையார் சிலை ஊர்வலத்தின் இறுதியில் இழுத்து வரப்பட்டது. இதைச் சுற்றி இந்து முன்னணியின் தலைவர்கள் இருந்தனர். ஊர்வலத்தின் மொத்த கூட்டத்தில் ஆறு நபர்கள் மட்டும் தான் “ஓம் காளி, ஜெய் காளி” என்று பிள்ளையார் முன்பு கோசம் போட்டுக் கொண்டு வந்தார்கள்.

ஒவ்வொரு பிள்ளையாரின் முன்பும் மேளதாளமும், அதற்கேற்ப இளைஞர்களின் குத்தாட்டமும் கனஜோராக நடந்தது கொண்டிருந்தது. டாஸ்மாக் பற்றி திராவிட இயக்கங்களை பழிக்கும் இந்துத்துவ கும்பல் இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்க அதே டாஸ்மாக் சரக்கை ஊற்றிக் கொடுத்ததது. இதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பதின்ம வயதினர். நேரம் ஆக ஆக ஆபாசமான உடல் அசைவுகளும், பெண்ணைப்போல வேடமிட்டு ஆடியவர் சேலையை அவிழ்ப்பது எனவும் அவர்களது போதை ஆட்டம் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது.

மெயின் பிள்ளையார் போகும் பாதையில்  முன்னால் சென்ற பிள்ளையார் ஒற்றை மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். மாட்டின் முதுகில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார்கள். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட பக்தர் ஒருவர் மாட்டை கொஞ்சுவது போல அதனுடன் முட்ட ஆரம்பித்தார். மாடு கொஞ்சம் கலவரமாகி இரண்டாவது மூன்றாவது முறையில் தன்னுடைய எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தது. ‘கோமாதாடா விளையாடத’ என்று சொல்லி இழுத்து விட்டு மாட்டின் தலையை தடவிக் கொடுக்க போனார், இன்னொருவர். அவரையும் மாடு எதிர்க்க ஆரம்பித்தது. இதற்கிடையில் யாருடைய குத்தாட்டம் பெரிய தெரு சந்திப்பில் சிறப்பாக இருக்கிறது என்ற போட்டியில் இரு இந்து பிரிவினரிடையே சிறிய சண்டை ஆரம்பித்த்து. தடுக்க வந்த போலீசை நெஞ்சில் கைவைத்து தள்ளினார்கள் பொறுப்பாளர்களான இளைஞர்கள்.

ஒரு பிள்ளையாரின் முன்பு ஆடிக்கொண்டிருந்தவர்கள் திருநங்கைகளை அழைத்து வந்திருந்தனர். அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞர் தன்னுடைய சட்டைப் பையில் இருந்த ரூபாய் நோட்டுகளை ஒரு திருநங்கையிடம் நீட்டியபடியே ஆடினார். அவரும் அதை வாங்க முயற்சி செய்தபடி ஆடிக் கொண்டிருந்தார். இருவரும் ஆபாசமான உடலசைவுகளுடன்தான் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

பாதி மூடப்பட்ட கடைகள்
ஊர்வலம் போகும் சில மணி நேரத்துக்கு பாதி மூடப்பட்ட கடைகள்

சற்று நேரத்தில் அந்த இளைஞர் பணத்தை தன்னுடைய ஜட்டியினுள் நுழைத்து அதை எடுக்கும்படி சவால் விட்டார். அந்த திருநங்கையும் அதை எடுப்பதற்கு முயற்சி செய்தார். இந்துக்களை திரட்ட பிள்ளையாரும், இந்து முன்னணி கும்பலும் எத்தகைய ‘தியாகங்களை’யெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? வரும் காலத்தில் ஐபிஎல் சியர்ஸ் லீடர்ஸ் பெண்கள் கூட இறக்குமதி செய்யப்படலாம். அதை மல்லையாவும் ஸ்பான்சர் செய்யலாம்.

மற்றொரு பிள்ளையாரின் முன்பு, அதிமுகவின் மகளிர் அணியினரை மிஞ்சிவிடும்படி குத்தாட்டத்தில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தனர் சில பெண்கள். இவர்கள் அனைவருமே சூத்திர அல்லது பஞ்சம உழைக்கும் பெண்கள் தான். அருகில் இருக்கும் குடிசைப் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கலாம். இவர்கள் ஆடுவதை பார்ப்பனப் பெண்களும் ஆண்களும் சாலை ஓரங்களில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். இந்து தர்மம் எப்படி தீயாய் பரவுகிறது என்ற வெற்றிக் களிப்புடன் அவர்கள் சிரித்திருக்க வேண்டும்.

“எல்லோரும் இந்துதானே, பின்னர் ஏன் பாப்பனத்தி குத்தாட்டம் ஆடுவது இல்லை. சூத்திர உழைக்கும் பெண்களையும், திருநங்கைகளையும் ஆடவைக்கிறார்கள்” என்று தங்களை இந்து என்று கருதிக் கொள்வோர் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜட்டிக்குள் பணம் எடுப்பதோ, இல்லை பாலியல் வெறியை நிகழ்த்தும் உடல் அசைவுகளோ சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு மட்டும்தான் சொந்மென்றால் அங்கே இந்து ஒற்றுமை அடிபடுகிறது. இந்த காட்சியில் அவாள்களும், ஷத்ரியர்களும், வைசியர்களும் இடம் பெற்றால்தான் இந்து தர்மத்துத்துக்கும் மதிப்பு, ஜட்டிக்கும் மதிப்பு!

“எந்த பாப்பானாவது சாமியாடி பாத்திருப்பீர்களா? பேய்பிடித்து ஆடுவதை பார்த்திருப்பீர்களா? நம்மாளு தான் ஆடுறான்” என்ற பெரியாரின் வார்த்தைகளை பொய்ப்பிக்கவாவது இந்ந இந்து ஒற்றுமைக்கு இந்துத்துவ அறிஞர்கள் முயல வேண்டும்.

தற்போது ஊர்வலம் பிரதான சாலையை அடைந்திருந்தது. இநத ஊர்வலத்தை ஒட்டி பெரும்பாலான கடைகள் அச்சத்தின் காரணமாக அடைக்கப்பட்டிருந்தன. சில கடைகள் ஷட்டரை பாதி வரை அடைத்து வைத்திருந்தனர். தெருவோர கடைகள் மூட்டைகட்டி வைக்கப்பட்டிருந்தன.

“ஏம்மா கடைய எல்லாம் பூட்டி வெச்சிருக்காங்க” ஒரு தெருவோர வியாபாரிடம் கேட்டோம்.

“அதாம்பா ஊர்வலம் வுடுறாங்கல்ல. அதுக்குத்தான்.”

“எதும் பண்ணிருவாங்கன்னா?”

“ஆமா. வியாபார சங்கத்திலிருந்து சொல்லிட்டாங்களாம். ஊர்வலம் உடுற ரெண்டு மணிநேரம் கடைய அடைச்சிருங்க. அடைக்காம அப்புறம் வந்துட்டு அது இதுனு சொன்னா நாங்க எதும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்களாம். நாங்களும் மூடிட்டோம்”

மசூதி முன்பு வெறிக்கூச்சல்
மசூதி முன்பு வெறிக்கூச்சல்

ஊர்வலம் மிகமிக மெதுவாக ஊர்ந்து சென்றது. வேண்டுமென்றே மெதுவாக நகர்த்தினார்கள். ஒவ்வொரு பிள்ளையாரின் முன்பும் கழுத்தில் விசிலுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் விசில் அடித்தால் பிள்ளையாரை இரண்டு அடி நகர்த்துகிறார்கள். மீண்டும் விசில். பிள்ளையார் நகருவதில்லை. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் இடையில் பல நூறு மீட்டர் தூரம் இடம் காலியாக இருந்தது. ஆனாலும் வண்டியை நகர்த்தாமல் காலம் தாழ்த்தினார்கள். விசில் வைத்திருப்பவர்கள் இதைத் திட்டமிட்டு செய்தார்கள்.

போலீசார் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். “தயவு செய்து நகத்துங்கப்பா. பாருங்க அந்த பிள்ளையார் எங்க போயிருச்சினு. நகத்துப்பா நகத்து”. உழைக்கும் மக்கள் காவல் நிலையம் சென்றால் கிள்ளுக்கீரையாக மதிக்கும் காவல்துறை இந்துத்துவ கும்பலை கண்டு பம்மியதும், மன்றாடியதும், கெஞ்சியதும் தனிக்கதை.

கடந்த பத்து நாட்களாகவே இப்படித்தானாம். நகரெங்கும் பிள்ளையார் சிலைகளுக்கு காவலாக நிற்க வைக்கப்பட்டிருந்த இந்த வீரர்கள், “உக்கார சேரு தரமாட்டுறாங்கப்பா. போலீசு ஜீப்ல கேரம் விளையாடுறாங்க. பொம்பளைங்க இந்த பக்கம் வரதில்லை, பாத்தீங்களா? எங்களுக்கு லீவு இல்ல தம்பி. வீட்டம்மாவுக்கு காய்கறி வாங்கி குடுக்கக் கூட போக முடியல. பத்திரிகைகல எழுதுங்க” என்று புலம்பினார்கள். அது குறித்து தனியே எழுதுகிறோம்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் போலீசை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அதிலும் குறிப்பாக பெண் போலீசின் நிலைமை மோசம்.

“தம்பி, கரைக்கப்போற பிள்ளையாரு தான. அதுக்கு ஏன் இவ்வளவு நேரம். தயவு செய்து நகர்த்துப்பா” இது ஒரு பெண் காவலர்.

ஒரு சிறுவனிடம் ஒரு பெண் போலீஸ் அதிகாரி “ஒரு ஆபீசரையே இப்படி பேசுறியே. நீ எல்லாம் உருப்படுவியா” என்று சாபம் விட்டுக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களை கடித்துக் குதறும் போலீசு இங்கே இந்துத்துவ பொறுக்கிகளிடம் பங்களா நாய் போல கட்டுப்பட்டு சென்றது.

பிள்ளையார் ஊர்வலத்தால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் அரசியல் இயக்கங்களும் அரசியல், பொருளாதார கோரிக்கைகளுக்காக சாலையை மறித்து போராடினால் “லெட்டர் டூ எடிட்டர்” எழுதி புலம்பும் பார்த்தசாரதிகள் வீதிகளிலும், வீடுகளின் மொட்டைமாடிகளிலும் நின்று கொண்டு ஊர்வலத்தை பெருமிதத்துடன் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

மசூதி முன்பு தேங்காயை சூறை
மசூதி முன்பு ஹால்ட்

கடைசி விநாயகரின் அருகில் கோசம் போட்டுக்கொண்டிருந்த சிலரும் இப்போது சுணங்கியிருந்தனர்.

“ஜீ நீங்க போடுங்கஜி”

“அந்தா அவரு நல்லா போடுவாருஜி” என மந்தமாக சென்ற ஊர்வலத்தில் சற்று நேரத்தில் சுருதி கூடியது. முன்னால் சென்ற பிள்ளையாருக்கு முன்னால் ஆடிக்கொண்டிருந்த சில இளைஞர்கள் இப்போது பெரிய பிள்ளையாரின் அருகே கூடிக்கொண்டிருந்தனர். ஏன்?

சற்று தூரத்தில் மசூதி இருந்தது.

சரியாக மசூதிக்கு அருகே பிள்ளையார் நிறுத்தப்பட்டார். வேறு எங்கும் சாலைகளில் தேங்காய் உடைக்கப்படாத நிலையில் ஐஸ்ஹவுஸ் மசூதி வழியே செல்ல தடைவிதிக்கப்பட்ட சந்திப்பில் தேங்காய் உடைத்தார்கள். பிறகு ஒரு சாக்கு நிறைய தேங்காய் கொண்டுவரப்பட்டு மசூதி இருந்த சாலையில் உடைக்கப்பட்டது.

மசூதியின் அருகில் அவர்கள் போடும் கோசமும் அதன் சுருதியும் மாறியிருந்தது. மற்ற இடங்களில் “ஓம் காளி ஜெய்காளி”, “பாரத் மாதாகி ஜெய்” என்றும் இன்னும் சிலர் “எல்.ஐ.சி ஹைட்டு எங்க பிள்ளையாரு வெயிட்டு”, “கோக்கோ கோலா கருப்பு, எங்க பிள்ளையாரு நெருப்பு” என்றும் முழக்கமிட்டவர்கள் மசூதியின் அருகில் வந்து நின்றதும் முழக்கத்தை மாற்றினார்கள்.

“கட்டுவோம்! கட்டுவோம்! ராமர் கோவில் கட்டுவோம்.
எந்த இடத்தில் கட்டுவோம்! அயோத்தியில் கட்டுவோம்!.

இந்த நாடு! இந்து நாடு!
இந்து மக்கள்! சொந்த நாடு!.

இந்த ரோடு! இந்து ரோடு!.
இந்தக் கடை! இந்து கடை!.

பாகிஸ்தானா? பாதிரிஸ்தானா? இல்லை இல்லை ‘இந்து’ஸ்தான்!.
பாரத்மாதாகீ ஜெய்”

என்று வெறிக் கூச்சலை திரும்ப திரும்ப போட்டுக்கொண்டே இருந்தார்கள். குரலில் அப்படி ஒரு வன்மம்.

பிள்ளையார் அந்த இடத்தை விட்டு நகருவதாக இல்லை. மற்ற இடங்களில் நின்ற நேரத்தைவிட இந்த இடத்தில் பல மடங்கு கூடுதலான நேரம் நின்று வெறிக் கூச்சல் போட்ட பிறகு போலீசார் கிளம்புமாறு தொடர்ந்து கெஞ்ச பிள்ளையார் கிளப்பப்பட்டார்.

அல்லிக்கண்ணி ராஜா
அல்லிக்கண்ணி ராஜா

அல்லிக்கேணி ராஜா என்று பேனர் பிடித்துகொண்டு வந்த ஒரு குரூப்பில் சற்று வயது அதிகமாக மதிக்கத்தக்கவரை ஓரம் கட்டினோம்.

“சார், எச்.ராஜா பேசும் போது அந்த வழியா போக அனுமதியில்லைனு சொன்னாரே. என்ன பிரச்சனை சார்”.

“19 வருசத்துக்கு முன்பு அந்த வழியா, மசூதி அருகே போகும் போது செருப்பு மாலை போட்டுட்டாங்க. அதனால நாம கடைகளை புகுந்து அடிச்சிட்டோம். செம அடி அவங்களுக்கு. இதோ இந்த சோபா கடையிருக்குல்ல உள்ளே புகுந்து அடி.” முகத்தில் பெருமிதம் பொங்கக் கூறினார்.

“அதுக்கு அப்புறம் அந்த வழியா போக அனுமதி தர்றதில்லை. நாமதாங்க பாயி பாயினு சொல்றோம். அவனுங்க நம்மள சொல்றாங்களா?  ஆறு (வேல்) படம்  பாத்தீங்களா அதுல ஒரு டயலாக் வரும் ‘அவன் தான் அண்ணனு சொன்னான் நான் தம்பினு சொல்லலியே என்று’ அது மாதிரிதான்.”

“நாலுவருசம் முன்னாடி நடந்த அமைதிகூட்டத்தில ஏ.சி கிட்டே கேட்டேன். ‘சார் புட்பால் மேட்ச் பாப்பீங்களா? அதுல ரசிகர்கள் அடிச்சிப்பாங்களா? சமயங்களில் கொலை கூட நடக்குதா? அதுக்காக அதே இடத்தில் மீண்டும் மேட்ச் நடத்துறது இல்லையா? நடக்கத்தானே செய்யுது. மறுபடியும் சண்டை வரலாம். ஆனா, அத தடுக்கத்தானே நீங்க இருக்கீங்க. பாதுகாப்பு போடுங்க. அதைவிட்டுட்டு போகக் கூடாதுனு சொன்னா எப்படி?’ அவர் பதிலே பேசவில்லை.”

“நம்ம தமிழ்நாட்டில மட்டும் தான் சார் இப்படி நடக்கும். இந்தியாவுல வேற எங்கயும் இப்படி கிடையாது. மசூதி வழியா போகக் கூடாதுனு வேற எங்கயும் சொல்ல முடியாது. ஹைதராபாத்துல ரெண்டு நாளு லீவு விடுறாங்க. விநாயகர் சதுர்த்திக்கும் அதை கரைக்கும் நாளுக்கும்.”

“அதான் சென்டர்ல நம்மவா ஆட்சி வந்திருச்சே. இன்னும் ஏன் பெர்மிசன் தரமாட்டேங்கறாங்க?”

“ஆட்சி யாருங்குறது முக்கியமில்ல. மக்கள் வரணும், அதுதான் முக்கியம். நரசிம்மராவ் யாரு காங்கிரஸ். பாபர் மசூதியை இடிக்கும்போது என்ன நடந்துச்சி? போலீஸ், துணை ராணுவம் எல்லாம் (..கையைக் கட்டி காண்பிக்கிறார்.), ஒண்ணும் பண்ணல. ஏன்? மக்கள் வரணும்”

“தடையை மீறி போலாம்ல?”

“பாத்தீங்கல்ல போலீசை. வஜ்ரா வண்டி வேற வெச்சி இருக்காங்க. இயக்கமா போனா யாரா இருந்தாலும் அடிப்பாங்க. 2001-ல திமுகவே கடற்கரையில அடிவாங்குனானுக. நம்ம கூட மக்கள் வந்தாதான் போலீசால ஒண்ணும் செய்ய முடியாது.”

“இங்க இருக்கிறவங்க மக்கள் தானே?”

“இல்ல இது பல இயக்கங்கள். நான் சொல்றது மக்களை” கையைக் குவித்து, “இப்படி வீட்டுப் பிள்ளையாரை கையில் எடுத்துட்டு அவர்களும் வரவேண்டும். ஆனால் இவங்க என்ன செய்யுறாங்க. விநாயகர் சதுர்த்தி முடிந்த அடுத்த நாளே வீட்டு வாசலில் போட்டுறாங்க. அதை இரண்டு நாளு கூட வீட்டுல வைக்க மாட்டுறாங்க. வீட்டுல இருக்குறவங்க அதை கையில் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் வரணும். அப்போ தான் போலீசால நம்மள தடுக்க முடியாது.”

“நீங்க எந்த இயக்கம்?”

“ஆர்.எஸ்.எஸ். யோகா மாஸ்டர்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“சரி சரி.  ஆனா பாருங்க பசங்க இவ்வளவு ஆபாசமா குத்தாட்டம் போட்டுட்டு வாராங்க மோசமாக இல்லையா?”

“நான் என்ன சொல்றேன், அப்படியாவது அவங்க வரட்டும். டான்ஸ் ஆடுனா தான் வாராங்களா, குடிச்சிட்டு ஆடுறாங்களா? பரவாயில்லை, வரட்டும். வர்றதுதான் முக்கியம். ஒண்ணு தெரிஞ்சிக்குங்க, கெட்ட இந்துவை மாத்திறலாம், நல்ல முஸ்லீம மாத்த முடியாது.”

“ம். …. இல்ல சார் குத்தாட்டம் ரொம்ப மோசமாக இருக்கு. நம்ம கலாச்சாரத்திற்கு ஒத்துவருமா?”

(பெரிய டிரம் வாத்தியக் குழுவை காட்டி) “இதுக்கு 30,000-க்கு மேல செலவு ஆச்சி. இப்படி வெச்சாதான் ஆடுறதுக்குனு வாரங்க. இவஙக வரலைனா போலீசு நம்மளை கொஞ்ச நேரத்துல வேகமாக நகரச் சொல்லிருவான். விநாயகரை அள்ளிட்டு போயிருவான். இப்ப அப்படி சொல்ல முடியாதுல்ல.”

“நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”

(சற்று சமாளித்துக்கொண்டு) “இல்ல மக்களும் வாராங்க. அவங்கதான் ஆடுறாங்க. நான் என்ன சொல்றேன்னா வீட்டுல பிள்ளையார் வராதவரை யார் வந்தாலும் போலீசை பொருத்தவரை இயக்கம்தான். அதைத் தான் சொன்னேன்.”

இந்துத்துவ கும்பல அல்லாத சாதாரண மக்கள் யாரிடமாவது கருத்து கேட்கலாம் என்று ஒருவரை அணுகினோம்.

“என்ன சார் அந்த வழியா போக கூடாதுனு சொல்றாங்க.”

“ஆமாப்பா. கொஞ்ச வருசத்திற்கு முன்னாடி அந்த வழியா போகும்போது நம்மாளுக மசூதில செருப்ப எறிஞ்சிட்டாங்க, அது பிரச்சனையாயிருச்சி. அதுனால போக உடுறதுல்ல”

“நம்மாளுக தான் எறிஞ்சாங்களா?”

“ஆமா. யாரோ பண்ணிட்டாங்க.”

“பல வருசம் ஆச்சி இன்னும் போக உடமாட்டேன் சொல்றது எப்படி?”

“ஊர்வலத்துக்கு மட்டும்தான். முடிஞ்ச உடன ஒண்ணும் கிடையாது. அங்க போவாங்க இங்க வருவாங்க. பிரச்சனைலாம் ஒன்னும் இல்ல.”

உண்மைதான் சாதாரண மக்களுக்கு பிரச்சனை இல்லை. தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் அமைதி நிலவ வேண்டுமானால் மதவெறி ஆபாச குத்தாட்ட விநாயகர் ஊர்வலங்கள் தடைசெய்யப்பட வேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.

–    வினவு செய்தியாளர்கள்

மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்

5

த்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை இனி ‘குரு உத்சவ்’ என்று அழைக்க வேண்டுமென்று நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருந்தது. 1962 முதல் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்த கல்வியாளர் ராதாகிருஷ்ணன் நினைவாக இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

குரு உத்சவ் திணிப்பு
குரு உத்சவ் திணிப்பு

ஏற்கெனவே வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல், சிபிஎஸ்சி பள்ளிகளில் கட்டாய சமஸ்கிருத வாரம் கொண்டாட வைத்தல், வரலாற்றை நம்பிக்கையின் அடிப்படையில் திருத்தி எழுத வேண்டும் என்ற புதிய இந்தியா வரலாற்று ஆய்வு குழு (ஐ.சி.எச்.ஆர்) தலைவர் ஒய்.எஸ்.ராவின் அறிவிப்பு எனத் தொடரும் பாஜகவின் பார்ப்பனியக் கொள்கையின் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய குரு உத்சவ் அறிவிப்பும் வந்துள்ளது.

தமிழகத்திலிருந்து இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு வந்ததை அடுத்து, ‘நாங்கள் ஆசிரியர் தினம் என்ற பெயரை மாற்றவில்லை. மாறாக அதில் நடைபெற உள்ள கட்டுரைப் போட்டியை மட்டும் தான் அப்படி ஒரு தலைப்பின் கீழ் நடத்துகிறோம்’ என்று சொல்லி தமது சுற்றறிக்கையை சமாளிக்கிறார் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.

தற்போதைய பள்ளிக் கல்வி முறை பழைய குரு குல கல்வி முறைக்கு திரும்ப வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க வானரங்கள் விரும்புகின்றன. நவீன பள்ளிகள் மாணவனுக்கு சம உரிமையளிக்கும் வகையில் ஜனநாயகத்தை போதிக்கும் இடங்களாக மாற வேண்டிய தேவை இருப்பதை பல கல்வியாளர்கள் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பாரதிய வித்யா பவன் பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர் தினத்தன்று மாணவ மாணவிகள் தமது ஆசிரியர்களின் கால்களை கழுவி விடுவதும், அவர்களது பாதங்களில் பூக்களை கொட்டி பூஜை செய்வதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுபோல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி ஆசி பெறுவது என்பது ஒரு பத்தாண்டுகளாக இன்னும் பல பெயர்பெற்ற பள்ளிகள் வரை வந்து விட்டது. இதனை அனைத்துப் பள்ளிகளுக்கும் நீட்டிப்பதற்கான முயற்சியாகத்தான் மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.

தமிழிசை
ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதே ‘குரு உத்சவ்’ நோக்கம்: தமிழிசை சவுந்தரராஜன்

இந்த அறிவிப்பு குறித்து பல காங்கிரசு தலைவர்கள் கருத்து தெரிவிக்க தயங்குகின்றனர். காரணம் அதுவே ஒரு மிதவாத இந்துத்துவா கட்சிதான். சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் இதனை கண்டித்திருந்தாலும், அக்கட்சி அணிகளே பண்பாடு என்ற முறையில் பார்ப்பனியத்தின் பழக்கங்கள் பலவற்றை ஏற்றுக் கொண்டே வாழ்கின்றனர். திருவண்ணாமலை தீபத்திற்கு தீக்கதிர் சிறப்பிதழ் போடும் போது குரு குல பூஜைகள் பெரிய அளவுக்கு பிரச்சினைகளாக இருக்காது.

ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களிடம் இணையம் மூலமாக பிரதமர் மோடி உரையாடியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை எல்லா பள்ளிகளும் வீச்சாக செய்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கவேண்டும். இணைய வசதி, தடையற்ற மின்சார வசதி, அன்றைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது கட்டாய வருகையை உறுதி செய்தல் ஆகியவற்றை முடித்து செப்டம்பர் 1-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு ஒவ்வொரு பள்ளியும் அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழிகாட்டியிருக்கிறது.

இப்படி மாணவர்கள், பள்ளிகள் அனைத்தும் இந்துமதவெறியர்களின் பிடியில் சட்டபூர்வமாக மாற்றப்பட்டு வருகிறது. இவர்களது கருத்துக்களை பாடத்திட்டமாக, பாடத்துக்கு வெளியேயான நடைமுறையாக கொண்டு வளரும் மாணவர்கள் பின்காலத்தில் எத்தகைய மதவெறியைக் கொண்டிருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி மோடி சிபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடியதை வரவேற்றுள்ள வைகோ மற்றும் ராமதாசு போன்றவர்கள் குரு உத்சவ் என்ற பெயர் மாற்றத்தை திரும்ப பெறும்படி கூட்டணிக் கட்சி என்ற முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோளை முன் வைத்துள்ளனர். இந்த மானங்கெட்ட செயலுக்கு அவர்கள் மோடி காலிலேயே விழுந்து பூஜை செய்யலாம். மம்தா பானர்ஜியாவது மாணவர்களுடன் இணையம் மூலமாக பிரதமர் உரையாடுவதை விட பள்ளிகளில் தேவையான அளவு கழிப்பறைகளை கட்டித் தருவது முதன்மையானது என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் எந்த ஒரு சிபிஎஸ்சி பள்ளியிலும் பிரதமருடனான இணைய உரையாடல் நடைபெற விடாமல் கண்காணிக்க மாநில அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கெத்து கூட திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இல்லை.

வைகோ
வைகோ மோடி காலிலேயே விழுந்து பூஜை செய்யலாம்

திமுக தலைவர் கருணாநிதி குரு உத்சவ் என்ற இப்பெயர் மாற்ற முடிவை கடுமையாக கண்டித்திருந்தாலும், உடன்பிறப்புகளின் குழந்தைகளே இத்த்கைய பள்ளிகளில்தான் படிக்கின்றனர், ‘மக்கள் கருணாநிதியின் இந்த வெறுப்பு பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர் ஏன் இவ்வளவு தூரம் கோபமடைகிறார் என்று தெரியவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் நமது மரபு. குருவிற்கு பிறகுதான் கடவுளையே வைத்திருக்கிறோம். அதனால் குருவுக்கு மரியாதை செலுத்துவதில் தவறில்லை’ என்று கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.பி இதுபற்றி கூறுகையில் ‘நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் எல்லோருக்கும் ஏன் தயக்கம் என்றே தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது என்பது இங்கே மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அகண்ட பாரத கனவில் வருணாசிரம தர்மத்தினை ஆயுதமாக கொண்டு செயல்பட விரும்புகின்றன இந்துத்துவா வானரங்கள். தற்போதைய கல்விமுறையில் ஜனநாயக அடிப்படையில் இன்னமும் மாற்றங்கள் தேவைப்படுவதாக பல கல்வியாளர்கள் சொல்லி வரும் வேளையில் குருவை அடிமைத்தனத்தோடு ஏற்றிப் போற்றும், கேள்வி கேட்காத கல்வியை, மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்க விரும்புகிறது. ஏபிவிபி என்ற அவர்களது மாணவர்களது அமைப்பே இதற்காகத்தான் செயல்பட்டு வருகிறது. குரு உத்சவ் என்பது குரு குலக் கல்வி முறையினைப் போற்றும், மீட்டெடுக்க முனையும் சனாதனவாதிகளின் கனவு. அதற்கு கல்லறை கட்டுவது ஜனநாயக வாதிகளின் கடமை.

இந்து-இந்தி-இந்தியா
இந்து – இந்தி – இந்தியா (கார்ட்டூன் : நன்றி indiatomorrow.net)

கல்வி தனியார்மயமாகிய பிறகு கல்வி மறுக்கப்பட்ட மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். கல்வி வழங்கும் இடத்தில் கல்வித் தந்தைகள் அதாவது முன்னாள் சாராய வியாபாரிகள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் தான் அதிகம் இருந்து வருகின்றனர். அல்லது சினிமா கருப்புப் பண முதலைகள் தான் அதிகமும் இருந்து வருகின்றனர்.  பாஜகவின் கூட்டணியில் இருக்கும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்ற கல்வி முதலாளிகளுக்கு இந்த குரு உத்சவை விட வேறு என்ன வேண்டும்?

கல்வி முதலாளிகளை எதிர்த்து போராடாமல் இருப்பதற்கு பார்ப்பனிய அடிமைமுறைகள் நன்கு பயன்படும்.

குரு உத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒய்.ஜி. பார்த்தசாரதி, லதா ரஜினிகாந்த், பச்சமுத்து, சாராய உடையார், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோரின் கால்களை மாணவர்கள் கழுவி பூச்சொரிய வேண்டியிருக்கும்.

கல்வி தனியார்மயத்தை எதிர்ப்பதும், மாணவர்கள்-ஆசிரியர்கள் உறவில் ஜனநாயகத்திற்காக போராடுவதும் தான் குரு உத்சவ் என்ற இந்த இந்துத்துவா பண்டிகையின் நோக்கத்திற்கு சாவு மணி அடிப்பதாகும். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் இதற்காக களம் காண வேண்டும்.

அமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி

7
  • முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி!
  • பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீதான கொலை வழக்கை ரத்து செய்ததற்கான வெகுமதி!
  • நீதித்துறை மீதான மோடி அரசின் தொடர் அத்துமீறல்

ன்பார்ந்த நண்பர்களே!

நீதிபதி சதாசிவம்
கேரள ஆளுநராக பதவியேற்றுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம்

06.09.2014 அன்று கேரள மாநில ஆளுநராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பதவி ஏற்றிருக்கிறார். இதை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அகமதி, பட்நாயக் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர். கேரள வழக்கறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பதவியில் இருக்கும் போதே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது போல் படம் காட்டிய நீதிபதி சதாசிவம் காங்கிரசுக்குப் பயந்து வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார். இவ்வழக்கை பாராளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்க்கு ஜெயலலிதா பயன்படுத்த உதவி செய்தார். ஓய்வு பெற்றபின் மகா கேவலமாக அரசு தரும் எந்தப் பதவியையும் ஏற்கத் தயார் என அறிவித்தார். இப்பேற்பட்ட பெருமைகள் கொண்ட நீதிபதி சதாசிவம் மோடி அரசின் கவர்னர் பதவியை ஏற்பதன் மூலம் பெயரளவுக்கு இருக்கும் நீதித்துறை சுதந்திரத்தையும் வீழ்த்தியுள்ளார்.

நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இவ்விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 8, 2013 அன்று துளசிராம் பிரஜாபதி என்பவரை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீது சி.பி.அய் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான் அடங்கிய அமர்வு. இவ்வழக்கின் பின்னணி மிகவும் கொடூரமானது. திகில் படங்களை மிஞ்சக் கூடியது.

2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன், 2002 பிப்ரவரி 27 அன்று நடந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை ஹரேன் பாண்டியா வாக்குமூலமாக தெரிவித்தார். இந்தத் தகவல் மோடிக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து மார்ச்23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. இக்கொலை வழக்கில் மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கர் அலி உள்ளிட்ட 11 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

கடந்த 2004-ம் ஆண்டு சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் என்ற அதிகாரியிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும்  பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் என்பவனின் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கின்றனர். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட்.

பின்னர் 2005-ம் ஆண்டு சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “இந்தப் போலி மோதல் கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006-ம் ஆண்டு இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.

அதன்பின் சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டார். 2010-ல் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது இதற்காக பதவி விலகிய அமித் ஷா உடனடியாக மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சபர்மதி சிறையிலும் இருந்தார். நிபந்தனை பிணையில் வெளிவந்த அமித் ஷா இரண்டு ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது, பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமித் ஷா மீது போடப்பட்ட சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி ஆகியவர்களைக் கொன்ற போலி மோதல் வழக்குகளில் துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததற்குத்தான் நீதிபதி சதாசிவத்திற்க்கு இன்று கவர்னர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே முன்வைத்துள்ளது. இதற்கு மோடியோ, அமித் ஷாவோ உரிய பதில் அளிக்கவில்லை.

மேற்குறிப்பிட்டது சதாசிவம் பதவி பெற்றதின் ஒரு பரிமாணம்.

சட்டப்படி தீர்ப்பளித்தார் சதாசிவம் என்று கருதும் சிலர் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-சங் பரிவார் கட்சியினர் கவர்னர் பதவிக்கு காவடி தூக்கிய நிலையில் நீதிபதி சதாசிவத்திற்கு இப்பதவி வழங்கப்பட்டதன் பின்னணியை விளக்க வேண்டும்.

இன்றைய மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த ஆண்டு தனது வலைப்பக்கத்தில் எழுதியது “I have held a strong view that Judges of the Supreme Court and the High Courts must not be eligible for jobs in the Government after retirement.  In some cases  the pre-retirement judicial conduct of a judge is influenced by the desire to get a post retirement assignment”. இன்று இக்கருத்து மாறியதன் பின்னணியை அருண்ஜேட்லியும்,பி.ஜே.பி.யும் விளக்க வேண்டும்.

ஏற்கனவே உச்ச, உயர்நீதி மன்ற நீதிபதிகள் பலர் தமது பதவியின் இறுதிக் காலத்தில் அரசுக்கு சாதகமாக இருந்து கமிசன்கள், தீர்ப்பாயங்களில் பதவிகள் பெரும் நடைமுறை உள்ளது. அதன் அடுத்த நிலை ஆளுநர் போன்ற நேரடி அரசியல் நியமனங்களை ஏற்பது. ஏற்கனவே சட்ட ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசுப் பதவிகளை ஏற்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளது. அத்தனையையும் மீறி மோடி, சதாசிவத்திற்கு இப்பதவியை வழங்கியுள்ளார். மோடி அரசு நீதித்துறை சுதந்திரத்தின் மீது வீசிய முதல் குண்டு தனக்கெதிராக வழக்காடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை நீதிபதி ஆக விடாமல் தடுத்தது. அடுத்து கொலீஜியம் முறையை ஒழித்து தேசிய நீதித்துறை ஆணையம் என்ற பெயரில் நீதித்துறையை காவிமயமாக்க முயற்சிப்பது. மூன்றாவதாக நீதிபதி சதாசிவத்திற்கு கவர்னர் பதவி வழங்கியது.

இந்நடவடிக்கைகள் மூலம் மோடியும், அமித் ஷாவும் இந்திய நீதித்துறைக்கு சொல்லும் செய்தி இதுதான். எங்களை எதிர்த்தால் கோபால் சுப்பிரமணியத்திற்க்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும். ஆதரித்தால் சதாசிவம் போன்ற பதவி வெறிபிடித்தலையும் இழிபிறவிகளுக்கு கிடைத்தது போல பதவி கிடைக்கும்.

நீங்களும் தேர்வு செய்யுங்கள் இழிபிறவியாக வாழ்வதா? இல்லை அநீதிகளை எதிர்த்துப் போராடுவதா? என்பதை.

நீதிபதி கெட்-அப்பில் சதாசிவம்
நீதிபதி கெட்-அப்பில் சதாசிவம்

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கேரள ஆளுநர் பதவி மோடி அரசால் வழங்கப்பட்டதைக் கண்டித்தும், பதவி பேரத்தின் பின்னணியான அமித் ஷா-மோடி-சதாசிவம் உறவை அம்பலப்படுத்தியும், நீதித்துறை மீதான மோடி அரசின் தொடர் அத்துமீறலைக் கண்டித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பில் கடந்த 05.09.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துண்டறிக்கைகளை விநியோகம் செய்து கொண்டே தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

நீதித்துறை மீதான மோடி அரசின் அத்துமீறலையும், நீதிபதி சதாசிவம்-அமித் ஷா-மோடி-கள்ள உறவை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 30 வழக்கறிஞர்களும், மனித உரிமை பாதுகாப்பு மைய உறுப்பினர்களும், ஒத்தக்கடை சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோடி அரசின் நீதித்துறை மீதான தொடர் தாக்குதலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் பலர் உரையாற்றினர்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் ரமேஷ்குமார், செயலாளர் ஏ.கே.மாணிக்கம், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.ரத்தினம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க இணைச் செயலர் அப்பாஸ், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாராயணன், ராஜீவ் ரூபஸ் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

உரையின்போது, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் எப்படிப்பட்ட ஊழல் பேர்வழி, பாலியல் பொறுக்கி என்பதைக் குறிப்பிட்டு, சதாசிவம் ஓய்வு பெற்ற பின் பதவிக்காக வெளிப்படையாக அலைந்து திரிந்ததையும், தற்போதைய கவர்னர் பதவி பேரத்தின் பேரில்தான் பெறப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினர். மூவர் தூக்கு வழக்கிலும் சதாசிவத்தின் நடவடிக்கை சந்தேகத்திற்குரியதாக, காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததாக சந்தேகித்தனர்.

மேலும் தடா சட்டத்திற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்ததற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியனுக்கு 5-வது ஊதியக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டதையும், கூடங்குளம் வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததற்கு முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணிக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் பதவி வழங்கப்பட்டதையும், இன்னும் நீதிபதிகள் சவுகான், சொக்கலிங்கம், முருகேசன், பாசா உள்ளிட்ட பலருக்கு அரசுப் பதவிகள் வழங்கப்பட்டது, அரசுக்கு ஆதரவாக அவர்கள் தீர்ப்பு வழங்கியதற்கா? என்ற சந்தேகம் எழுப்பினர். நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் அரசு பதவிகளை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர். நீதித் துறையை காவிமயமாக்கும் சதிக்கெதிரான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர் போராட்டத்தை பாராட்டிப் பேசினர்.

இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இப்பதவி பேரத்தில் அம்பலமாகியுள்ளது. இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே முன்வைத்துள்ளது. இதற்கு மோடியோ, அமித் ஷாவோ உரிய பதில் அளிக்கவில்லை.

2002 குஜராத் கலவரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் என ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்கள் 2000 பேர் பி.ஜே.பி.யால் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சிதான் துளசிராம் பிரஜாபதி என்பவரை போலி என்கவுண்டரில் குஜராத் போலீசு சுட்டுக் கொன்றது. இக்கொலை தொடர்பான வழக்கில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீது சி.பி.அய் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான் அடங்கிய அமர்வு. இதற்கு பிரதிபலன்தான் கவர்னர் பதவி.

இப்பேரத்தில் மோடி-அமித் ஷா பங்கை யாரும் பேச மறுக்கிறார்கள். இதற்கு வெளிப்படையான விசாரணை தேவை. பா.ஜ.க சிறுபான்மை இனத்தைச் சர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல பார்ப்பான் தவிர அனைத்து சமூக மக்களுக்கும் எதிரி. பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தர்மபுரி நத்தம் காலனி, சிதம்பரம் நடராஜர் கோவில், நாடு முழுவதும் நடந்து வரும் தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் என எதையும் பா.ஜ.க.ஆதரித்ததில்லை. ஆனால் சங்கராச்சாரிக்கு ஆதரவாகப் போராடுகிறார்கள்.

இன்று நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது. ஆர்.எஸ்.எஸ் நபர்கள் அனைத்துப் பதவிகளிலும் நியமிக்கப்படுகிறார்கள். நீதித் துறையை காவிமயமாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் பெரியார் பிறந்த மண்ணிலிருந்து போராட்டத்தை தொடங்குவோம். மோடி-அமித் ஷா-நீதித் துறை ஊழலுக்கு எதிராகப் போராடினால் ஊடகங்கள் செய்தி வெளியிட மறுக்கின்றன. மோடி-அமித் ஷாவிடம் அனைத்துக் கட்சிகளும், சகல ஊடகங்களும் சரணடைகிறார்கள். ஆனால் மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களுக்கான தன் கடமையை எச்சூழலிலும் நிறைவேற்றும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது மோடியின் பாசிசத்தை தமிழகத்தில் முறியடிப்போம்” என்றார்.

இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜசேகர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
98653 48163, 94434 71003

லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

0

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை லிபியா டான் (லிபிய விடியல்) என்ற இசுலாமிய குழுக்களின் படைகள் கைப்பற்றியிருக்கின்றன.

திரிபோலி அமெரிக்க தூதரகம்
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகம்

லிபியாவில், மிசுராத்தா என்ற கடலோர நகரத்தைச் சேர்ந்த இசுலாமிய போராளிகளைக் கொண்ட லிபிய விடியல் குழுவிற்கும், ஓடிப்போன ஜெனரல் காலிஃபா ஹிஃப்டருடன் சேர்ந்திருக்கும் கிழக்குப் பகுதி மற்றும் மேற்கத்திய மலை நகரமான சிந்தானைச் சேர்ந்த போராளிகள், கடாஃபியின் முன்னாள் வீரர்கள் ஆகியோருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது.

எதிரெதிராக பிரிந்துள்ள ஆயுதம் தாங்கிய இந்த குழுக்களுக்கிடையேயான சண்டை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் லிபியாவை விட்டு அண்டை நாடான துனிசியாவுக்கு ஓடிவிட்டார்கள். நிலைமை மேம்படும் வரை தூதரக நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது.

முன்னதாக, 2012-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், கடற்படை அதிரடி வீரர்கள் டைரோன் வுட்ஸ், கிளென் டோரத்தி, வெளியுறவுத் துறை தகவல் தொடர்பு அதிகாரி சோன் ஸ்மித் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.

இப்போது, லிபிய விடியல் குழு திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றியிருக்கிறது. லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் ஜெனரல் காலிஃபா ஹிஃப்டரின் படைகளுக்கு எதிராக லிபிய விடியல் குழுவினர் வெற்றி பெற்று வருகின்றனர்.

திரிபோலி விமான நிலையத்தில் லிபிய விடியல் அமைப்பு கைப்பற்றிய 11 ஜெட் விமானங்கள் செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இசுலாமிய குழுவினர் விமானங்களின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு இணையத்தில் வெளியிடுகின்றனர். அவர்கள் வசம் ஏர்பஸ் 319 (பறக்கும் திறன் 3,700 நாட்டிக்கல் மைல்), ஏர்பஸ் 320 (3,300 நாட்டிக்கல் மைல்), ஏர்பஸ் 330 (4,000-7,000 நாட்டிக்கல் மைல்), ஒரு ஏர்பஸ் 340 (7,900 நாட்டிக்கல் மைல்) வகையிலான விமானங்கள் சிக்கியிருக்கின்றன. இந்த விமானங்களின் பறக்கும் திறன் லண்டன், பாரிஸ், வாஷிங்டன் டிசி, நியூயார்க் போன்ற மேற்கத்திய நகரங்களை எட்டும் அளவிலானது.

லிபிய விமானங்கள்
கைப்பற்றப்பட்ட விமானங்களுடன் இசுலாமிய குழுவினர்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் அவரது நாடு, இது வரை இல்லாத அளவு தீவிரமான, ஆழமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக் கொண்டு அமெரிக்கா தமது மூக்குகளையும், ஆயுதங்களையும் நுழைத்த லிபியா இன்று அராஜகத்திலும், வன்முறையிலும் மூழ்கிக் கொண்டிருப்பது குறித்து, தனது முன்னாள் தூதரக வளாகம் கூட இசுலாமிய தீவிரவாதிகள் வசம் போய் விட்டது குறித்து கருத்து கூறிய அமெரிக்க வெளியுறவுத் துறை கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறது.

“நாங்கள் செய்திகளையும், வீடியோக்களையும் பார்த்தோம், கூடுதல் விபரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரம் வரை தூதரக வளாகம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், கள நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்கிறார் ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி. “லிபிய அரசுடனும் தொடர்புடைய மற்ற குழுக்களுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறோம். வாஷிங்டனிலிருந்தும், வலெட்டாவிலிருந்தும் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

லிபியாவுக்கான அமெரிக்க தூதர் டெபொரா ஜோன்ஸ், தூதரக வளாகம் கைப்பற்றப்பட்டதாகத்தான் தெரிகிறது, சூறையாடப்பட்டதாக தெரியவில்லை என்றும் ஜூலையிலேயே அந்த வளாகத்தை விட்டு போய் விட்டதால், அதை அமெரிக்காவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதி என கருத முடியாது என்று இன்னொரு அதிகாரியும் சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவின் அப்போதைய சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபிக்கு எதிரான இசுலாமிய குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி ஊக்குவித்தன நேட்டோ கூட்டமைப்பு நாடுகள். பெங்காசி நகரில் பெருமளவு படுகொலைகள் நடக்கவிருப்பதாக சொல்லி, அதை தடுப்பதற்காக லிபியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதாகக் கூறி கடாஃபியின் படைகள் மீது வான்வழி, கடல் வழி தாக்குதல் நடத்தின.

லிபிய விடியல் விமான நிலையத்தில்
திரிபோலி விமான நிலையத்தில் லிபிய விடியல் குழு

இறுதியில் கடாஃபியின் தலைக்கு விலை வைத்த நேட்டோ நாடுகள் அவரை பிடித்து கொடூரமாக கொன்றொழித்த இசுலாமிய பயங்கரவாத படைகளை லிபியாவை விடுவிக்க வந்த ஜனநாயக சக்திகள் என்று போற்றினர்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்” என்று இளைய புஷ் அறிவித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக ஆதிக்கத்தை நிலைநாட்டவும், எண்ணெய் வளங்களை கைப்பற்றவும் ஆரம்பித்து வைத்த போரில் பரிதாபமான முறையில் தோற்றுக் கொண்டிருக்கிறது. தனது உண்மையான நோக்கங்களை மறைத்து அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டப் போவதாக பொய் சொல்லி தலையிட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், இப்போது லிபியா என அனைத்து நாடுகளும் தீராத உள்நாட்டு போரில் சிக்கியிருக்கின்றன. அமெரிக்கா திட்டமிட்டு வளர்த்து விட்ட இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புகின்றன.

ஒருவகையில் இத்தகைய நாடுகள் இப்படி உள்நாட்டுச் சண்டையில் முடிவே இல்லாமல் சிக்கியிருப்பது அமெரிக்காவிற்கு உதவவும் செய்யும். அடிமைகளை இப்படி சண்டையிட்டுக் கொள்ள வைப்பது ஆதிக்கம் செய்பவனுக்கு தொந்தரவாக மாறாது. அதே நேரம் அமெரிக்காவின் பிரச்சினையே வேறு.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு லிபிய சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபி மேற்கத்திய கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, லிபியாவின் அணுஆயுத திட்டத்தை கண்காணிப்புக்கு உட்படுத்தி, லிபியாவில் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் நுழைய அனுமதி அளித்தார். ஆனால், முழுமையாக பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு சரணடையவில்லை என்பது அமெரிக்காவின் பிரச்சனை.

அமெரிக்கா கொண்டு வருவதாகச் சொன்ன ஜனநாயகமும் சுதந்திரமும் அந்த மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கானவைதான். கடாஃபியின் ஆட்சியின் கீழ் லிபிய தேசிய எண்ணெய் கழகத்திடம் உரிமம் பெற்று தொழில் செய்ய வேண்டிய அவர்களது அடிமை நிலையை ஒழித்து, லிபியாவின் எண்ணெயை எடுத்து விற்பதற்கான ஜனநாயக உரிமையை ஈட்டிக் கொடுப்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது ஆதாரங்களின் மூலம் அம்பலமானது.

ஈராக்கில், “சாதித்து விட்டோம்” என்று இளைய புஷ் அறிவித்தது போன்று லிபியாவில் கடாஃபி வீழ்ந்தவுடன், “நான் அனைவரும் சேர்ந்து வெற்றியை சாதித்திருக்கிறோம்” என்று அறிவித்தார் நேட்டோ தலைவர். ஆனால், அமெரிக்காவின் ஏகாதிபத்திய விரிவாக்க நடவடிக்கைகள் ஈராக்கைப் போலவே லிபியாவையும் வன்முறை சுழலுக்குள் ஆழ்த்தியுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ பலமும் தொழில்நுட்ப வல்லமையும், உலகையே அதற்க்கு அடிமையாக்கும் நோக்கத்துக்கு உதவப் போவதில்லை. ஏகாதிபத்தியங்கள் வெறும் காகிதப் புலிதான் என்பதும் லிபியாவிலும் நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அமெரிக்கா உதவியுடன் விடுதலை பெற்றதாக கூறப்படும் நாடுகளின் யோக்கியதை என்ன என்பதை லிபியாவின் நிலையிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

இந்தோனேஷியா முசுலீம் அறிஞர் பெயர் லெட்சுமணன்

5

மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து…

மொகலாய ஆட்சிக்குட்படாத பகுதிகளில்தான் அதிகமான மதமாற்றம் நடந்துள்ளது

இர்பான் அலி எஞ்சினியர்

“இசுலாமிய மக்களும் இசுலாமிய பயங்கரவாதமும்” எனும் தலைப்பில், மும்பய் நகரில் செயல்பட்டு வரும் “சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையம்” என்ற அமைப்பின் உறுப்பினரும் வழக்குரைஞருமான திரு. இர்ஃபான் அலி எஞ்சீனீயர் உரையாற்றினார். “பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதெல்லாம் மக்கள் சார்ந்தவையாக இருப்பதில்லை; அரசுதான் பயங்கரவாதியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடங்கினார்.

இர்பான் அலி எஞ்சினியர்
இர்பான் அலி எஞ்சினியர்

“முசுலீம்கள் முரட்டுத்தனமான மத நம்பிக்கை கொண்டவர்கள்; மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள்; இறுக்கமான மதச் சமூகம் முசுலீம் சமூகம். முசுலீம்களின் நாட்டுப்பற்று சந்தேகத்திற்குரியது; முசுலீம் மதமும், கிறித்தவ மதமும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்ததால், அவர்கள் இந்தியாவிற்கு விசுவாசமானவர்களாக இருப்பதில்லை.”

-இந்தப் பொய்களை ஆர்.எஸ்.எஸ். 365 நாட்களும் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. பெருவாரியான மக்களும் கூட இந்தப் பொய்களை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், உண்மை மாறானது என்பதற்கு அநேக உதாரணங்களைத் தர முடியும்.

எனது தந்தை – திரு. அஸ்கர் அலி எஞ்சினீயர் கேரள முசுலீம்களின் வாழ்க்கையை ஆய்வு செய்தபொழுது, கேரளாவைச் சேர்ந்த ஒரு முசுலீம் பெண்ணை மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு பேட்டி காணச் சென்றார். அப்பொழுது அந்தப் பெண் மொழி பெயர்ப்பாளரிடம், “மலையாளம் தெரியாத இவர் எப்படி முசுலீமாக இருக்க முடியும்!” எனக் கேட்டார். அப்பெண்ணைப் பொறுத்தவரை மலையாள மொழியையும், முசுலீம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.

நான் சார்ந்திருக்கும் சமூகம் மற்றும் மதச் சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் கூட்டத்தில், “வழிபாட்டு முறையைத் தவிர, வேறெந்த விதத்தில் ஒரு மனிதனின் மதத்தைக் கண்டுபிடிக்க முடியும்” என்ற கேள்வியைக் கேட்டபொழுது, பலரும் பெயரை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்றார்கள்.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த, புகழ்பெற்ற முசுலீம் மார்க்க அறிஞரின் பெயர் லெட்சுமணன். லெபனான் நாட்டில் வாழும் கிறித்தவர்களின் பெயர்களைக் கேட்டால் அவர்களை முசுலீம் என்று நீங்கள் கருதக்கூடம். அப்துல்லா போன்ற பெயர்கள் முசுலீம் மதப் பெயர்கள் அல்ல. அவைகள் அரேபிய மொழிப்பெயர்கள்.

“அடுத்ததாக, தாடி வைத்திருந்தால், அவன் முசுலீம் என்றார்கள். ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தேசிய விரனாகக் கொண்டாடப்படும் சிவாஜிகூட தாடி வைத்திருந்தார். அதனால் அவர் முசுலீமாகி விடுவாரா?”

அரியானா மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியில் வாழும் மியோ முசுலீம்கள், மகாபாரத, இராமாயணக் கதைகளைக் கூறுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். மியோ முசுலீம்கள், இந்து முறைப்படி நெருப்பை ஏழுமுறை வலம் வந்தும், இசுலாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இசுலாமிய நெறிமுறைகளைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் எனப் போதிக்கும் தப்லீக் இயக்கம், மியோ முசுலீம்களை, ‘உண்மையான’ முசுலீம்களாக மாற்ற முயன்றபொழுது, ‘மியோ முசுலீம் மியோவாகவே வாழ்வான்’ எனக் கூறித் திரும்பி அனுப்பிவிட்டனர்.

1980-களில் விசுவ இந்து பரிசத், மியோ முசுலீம்களை இந்துவாக்க முயன்று தோற்றுப் போனது.

குஜராத்தைச் சேர்ந்த பரிணாம் பந்தி முசுலீம்கள் இசுலாமிய -இந்து பாரம்பரியப்படி வாழ்ந்து வருகின்றனர். அந்த முசுலீம் குடும்பங்களில் அண்ணன் குடுமி வைத்திருந்தால், தம்பி தாடி வைத்திருப்பான். இறந்து போனவர்களைப் புதைக்கவும் செய்வார்கள்; எரிக்கவும் செய்வார்கள். அவர்களின் மதக் கோட்பாடு, கீதை, குரான் இரண்டும் கலந்தது. அவர்களின் மதப் புனித நூலை பரிணாம் பந்தி முசுலீம்களைத் தவிர, பிற முசுலீம்கள் கூடத் தொடமுடியாது.

மொகலாய மன்னர்கள் வாள் முனையில் கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என்பது ஆர்.எஸ்.எஸ்.-இன் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை என்னவென்றால், மொகலாய ஆட்சிக்கு உட்பட்ட தில்லி, ஆக்ரா பகுதிகளை விட அந்த ஆட்சிக்கு உட்படாத எல்லைப் பகுதிகளில் வங்காளம், பஞ்சாப், எல்லைப்புற மாகாணம் ஆகிய இடங்களில்தான் பெருவாரியான மதமாற்றம் நிகழ்ந்துள்ளது.

சூஃபி ஞானிகள் மனிதத்துவத்தையும், அன்பே கடவுள் என்றும், எல்லோரும் கடவுளை வழிபடலாம் என்றும் போதித்ததுதான் சூத்திர சாதி மக்களை இசுலாத்தை நோக்கி ஈர்த்தது. மத மாற்றம் மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1981-இல் நடந்த மீனாட்சிபுர மதமாற்றம்.

கலாச்சார மாற்றம் இரண்டு அரசியல் காரணங்களுக்காக நடக்கிறது. முசுலீம் மதத்திலுள்ள மேல் சாதியினருக்கு ஷெரீப் முசுலீம்கள் என்று பெயர். ஓரளவு வசதி வாய்ப்பு வரப் பெற்ற கீழ்ச் சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்க முசுலீம்கள், ஷெரீப் முசுலீம்கள் போல மாற விரும்புகின்றனர். உடனே, தங்கள் வீட்டுப் பெண்கள் பர்தா அணிய வேண்டும் எனக் கட்டாயப் படுத்துகின்றனர். இரண்டாவதாக, இந்து மதவெறியர்களின் தாக்குதல், சில முசுலீம்களை மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் பக்கம் தள்ளிவிடுகிறது.

இந்த முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது; ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ச்சியும், முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003

____________________________