privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்அசோக் லேலாண்டு தேர்தலில் புஜதொமுவை ஆதரியுங்கள்

அசோக் லேலாண்டு தேர்தலில் புஜதொமுவை ஆதரியுங்கள்

-

சூர் அசோக் லேலாண்டு 2-ல் 19-09-2014 அன்று சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. தொழிற்சங்கத்துறையில் பெரிதும் பேசப்படுகின்ற தலைவர்கள், புதிதாக தோன்றியுள்ள தலைவர்கள் இங்கு களத்தில் நின்றாலும் ஆலையில் நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் மேற்கொண்ட போராட்டங்களை இவர்கள் செய்ததில்லை; குறைத்ததில்லை என்பது கடந்தகால வரலாறு.

அசோக் லேலாண்ட் சங்கத் தேர்தல்

குறிப்பாக, லேலாண்டு 1-ல் 482 நிமிடம் என்ற டைம் ஸ்டடியை லேலாண்டு ஆலை நிர்வாகம் கொண்டு வந்தது. மேலும் 160 கிலோ எடையுள்ள பொருளை கையால் தள்ளிக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற முறையைப் புகுத்தியது. இவ்விரண்டிற்காகவும் இயந்திரத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு சிரமமான பகுதிகளை சீரமைக்கவும் பு.ஜ.தொ.மு. தோழர்கள் போராடினர். இதனால் பல சார்ஜ்-சீட்டுகள், சஸ்பெண்ட் அடக்குமுறைகளை எதிர்கொண்டு இறுதியில் வெற்றி பெற்றனர். 482 நிமிட உற்பத்தியை முறியடித்தனர். கையினால் தள்ளுவதற்கு பதிலாக கன்வேயர் முறையை கொண்டுவர வைத்தனர்.

அசோக் லேலாண்ட் தொழிற்சங்கத் தேர்தல்

ஆலை நிர்வாகம் கருவிகளில் மாற்றம் செய்யாமல் இருந்த பகுதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். இன்று வாய் கிழிய மேடை போட்டு பேசுகின்ற தலைவர்கள் இதனை களத்தில் சாதித்ததில்லை. மேலிருந்து ஒருதலைவர் வந்து தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை ஒழித்துவிட முடியாது. கீழிருந்து தொழிலாளர்களை விழிப்படையச் செய்து களப்போராளிகளை உருவாக்கி போராடுவதன் மூலமே அடக்குமுறைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்ற நோக்கில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அசோக் லேலாண்ட் தொழிற்சங்கத் தேர்தல்

15-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்

[பிரசுரத்தைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • அசோக்லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • ஜனநாயகமான உற்பத்திச் சூழல், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை வென்றெடுப்போம்!
  • புதிதாக 1,000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தப் போராடுவோம்!
  • களப்போராளிகளை வெற்றி பெறச் செய்வோம்!

ன்பார்ந்த லேலாண்டு தொழிலாளர்களே! தோழர்களே!

பாதுகாப்பற்ற பணிச்சூழல், அடக்குமுறை, ஆட்குறைப்பு என்ற பொதுநிலைமை நமது நாட்டின் தொழிற்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக தலைவிரித்தாடுகிறது. தொலைபேசி, இரயில்வே, போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறைகளிலே தொழிற்சங்கங்கள் மிக மோசமான அளவில் சிதைக்கப்பட்டுள்ளன. மிச்சமீதம் இருக்கின்ற சட்டங்கள், உரிமைகள் எல்லாம் படுவேகமாக பறிக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் அசோக்லேலாண்டும் இதிலிருந்து தப்பவில்லை. 14,000 ஆக இருந்த நமது ஆலைத் தொழிலாளர்கள் இன்று 6,000 தொழிலாளர்களாக சுருக்கப்பட்டுள்ளனர். இந்தப் போக்கு நம்மை இன்னும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அசோக்லேலாண்டு 1-ல் நடந்த ஆட்குறைப்பு நடவடிக்கை!

அசோக்லேலாண்டு 1-ல் இருந்து சுமார் 900 தொழிலாளர்களை இடமாற்றம் செய்து அசோக்லேலாண்டு 2-க்கு அனுப்பியது இது தமிழக அளவில் நடந்த ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை; அசோக்லேலாண்டில் தாண்டவமாடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மிகப் பிரம்மாண்டமான தாக்குதலின் கூரிய வெளிப்பாடு. 2004-ம் ஆண்டிலிருந்து இதை முன் ஊகித்து தொழிலாளர்களுக்கு உணர்த்தி, போராட அறைகூவி வருகின்றோம். இன்று நிலைமைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

உணவுத் தட்டில் புழு இருந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது முதல், ஆலை நிர்வாகம் பணியிடத்தில் தோண்டிய பாதுகாப்பற்ற குழியில் தவறிவிழுந்த தொழிலாளிக்கு உதவச் சென்றவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வரை லேலாண்டு 2-ல் நிலவுவதெல்லாம் “இம்மென்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம்!”. ஆலையில் நிலவும் பணிச்சூழல் என்பது மிகவும் கொடூரமானது. இந்தப் பணிச்சூழல் என்பது ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல; மேலும் இது உளவியல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், இவற்றை எதிர்த்துக் கேட்கவேண்டிய சங்கத்தின் நிலைமை என்ன? பாராளுமன்ற ஓட்டுச்சீட்டு சீரழிவு அரசியலுக்கு சற்றும் குறையாத எல்லா சீரழிவுகளையும் இந்தத் தேர்தலில் நாம் காண்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நமது ஆலையில் போட்டியில் ஈடுபடும் அணியினர் கொள்கை என்று ஏதாவது பேசுவார்கள். தற்போதோ கொள்கை என்று எதுவும் இல்லை. இந்த அணியில் இருந்து கொண்டே அந்த அணிக்கு ஆதரவு! ஒரு கருத்தை மேடையில் முழங்கிக் கொண்டே அதனை கீழே போட்டு புதைப்பது என்று வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. தற்போது கொள்கை ஒன்று இருப்பதாக இவர்கள் காட்டிக் கொள்வதெல்லாம் தொழிலாளர்களை ஏமாற்றும் நடவடிக்கை மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு செய்யும் சேவைதான்!

இது மட்டுமா, சொந்த அணியிலேயே தேர்தலில் நிற்பதற்கு பணத்தைக் கொடுத்து சீட் கேட்பது, சாராயம், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, பொய்யான கருத்துக்களை கிசுகிசுக்களாக பரப்பி ஓட்டு வாங்குவது, செய்யாத விசயங்களை செய்துவிட்டதாகக் கூறி ஓட்டு வாங்குவது, அடுத்தவர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறி ஓட்டுவாங்குவது என எல்லா சீரழிவுகளும் தலைவிரித்தாடுகின்றன. தங்களுக்குள் பதவிப்போட்டி, காலைவாருதல், ஈகோ, காரியவாதம் ஆகியவைதான் நிறைந்துள்ளன.

நாம் விரும்பவில்லை என்றாலும் இவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், தண்ணீர் வியாபாரம், கந்துவட்டி, பைனான்ஸ் போன்ற தனியார்மயம், தாராளயமயத்தால் உருவான எல்லா கேடுகெட்ட ‘தொழில்’களையும் செய்பவர்களாக உள்ளனர். இயன்றவரை எல்லா சமூக விரோத நடவடிக்கைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். ஒரு வேட்பாளர் என்பவர் இவற்றில் ஏதாவது ஒரு ‘தகுதி’யைக் கொண்டவராகவே உள்ளார். மொத்தத்தில் இந்த வகையினரின் கைதான் தேர்தலில் உயர்ந்து நிற்கிறது; இவர்களின் குரல்தான் தேர்தலில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தொழிற்சங்கத் தலைமை எப்படியெல்லாம் சீரழிந்துள்ளது என்பதை கடந்த காலத்தில் பலமுறை பு.ஜ.தொ.மு.வின் பிரசுரங்களில் விளக்கியுள்ளோம். தொழிற்சங்க சுல்தான்களாக, தாதாக்களாக இருக்கின்றனரே ஒழிய, தொழிலாளர்களின் ஜனநாயக பூர்வமான தலைமையாக இவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அசோக் லேலாண்டின் வரலாறாக உள்ளது. தொழிலாளர்களுக்காக போராட்ட குணம் இல்லாத இவர்களால், ஆலை மேனேஜ்மெண்டுடன் அட்ஜெஸ்ட்மென்ட் இல்லாமல் தொழிற்சங்க பதவிக்கு போட்டி போடமுடியாது; போட்டியிடவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம்.

கேவலத்திலும் கேவலமான விசயம் என்னவென்றால், ஆட்குறைப்பு, வேலைப்பளு திணிப்பு உள்ளிட்ட தாக்குதலை இவர்கள் மறைக்கின்றனர். மாறாக, தொழிலாளர்களுக்கு வழக்கமாக ஆலை நிர்வாகம் செய்யக்கூடிய, செய்யவேண்டிய கடமைகளையே இவர்கள் தங்களது சாதனைகளாக காட்டிக்கொள்கின்றனர்.

இவ்வளவும் தொழிலாளர்களாகிய நாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை திசைதிருப்புவதில் இவர்கள் எல்லோரும் உடன்படுகின்றனர் என்பதையே காட்டுகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர்கள் எல்லோரும் நமக்கு முக்கியமான பிரச்சினை என்று சொல்வது, எல்லோரும் முன்தள்ளும் விசயம் பணம் என்பதைத்தான். இதனைத்தான் எல்லா தொழிலாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சனை என்பதாகக் கூறி, தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை சுருக்கிக் காட்டுகிறார்கள். மற்றபடி ஆலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதான ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

ஆனால், இவர்களே சொல்கின்ற இந்தப் பிரச்சனையை இவர்கள் தீர்த்ததில்லை என்பதுதான் வரலாறு. ஒசூரில் நமக்கு சமமான அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்தைவிட பாரிய அளவில் குறைவான ஊதியம் வாங்குபவர்கள்தான் லேலாண்டு தொழிலாளர்கள் என்ற நிலைமைக்குக் காரணமான இவர்கள், இதனை மாற்றியமைக்கப் போவதாகவும், இதனால் தங்களை ஆதரிக்குமாறும் மீண்டும் மீண்டும் ஓட்டுக் கேட்கிறார்கள். நிலைமையை மாற்றிவிடுவார்கள் என்ற கருத்தும் சில தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.

ஆனால், இது உண்மையா? இந்த நிலைமையை இவர்கள் மாற்றுவார்களா? இவர்களால் மாற்ற முடியுமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. ஒசூரில் நமக்கு, ‘சமமான அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்திற்கு சமமான ஊதியம்’ என்ற அகத்திக்கீரையைக் காட்டி கசாப்புக் கடைக்காரன் ஆடுகளை ஏமாற்றுவதைப் போல தொழிலாளர்களான நம்மை ஏமாற்றுகின்றனர். ஆகையால், சம ஊதியம் – குறைந்த பட்ச மாற்றம் என்று எதையும் இவர்கள் சாதிக்க மாட்டார்கள் என்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். மற்றபடி பாதுகாப்பான பணிச்சூழல், ஜனநாயக பூர்வமான உற்பத்தி என்று இவர்கள் பேசுவதெல்லாம் பம்மாத்து. ஏனென்றால், பாதுகாப்பான பணிச்சூழல் என்பது மேலிருந்து சங்கத் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வாங்கிக் கொடுத்து விடுவதல்ல.

தொழிலாளர்கள் இந்த அவலங்களை வெளி உலகிற்கு காட்டி, ஆலை நிர்வாகத்தின் பயங்கரவாதங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் ஆதரவை வென்றெடுப்பதன் மூலம் தான் வெற்றிபெற முடியும். அந்த உரிமைகளுக்காக போராடும் களப்போராளிகளே இன்றைய தேவை. இன்று வேட்பாளர்களாக நிற்கும் பலரும் பாதுகாப்பற்ற, கொடூரமான நமது ஆலையின் பணிச்சூழலை எதிர்த்து நின்றதில்லை என்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். இவ்வாறு எதிர்த்து நின்று தொழிலாளர்கள் குரல்கொடுத்த போதெல்லாம் அவர்களுக்கு துணைநின்றதும் இல்லை. சில கமிட்டி உறுப்பினர்கள் தொழிலாளர் பிரச்சனைகளை கமிட்டிக் கூட்டங்களில் எடுத்துச் சொன்னாலும், ஆலை நிர்வாகத்தின் குரலையே இவர்களுக்கு பதிலாக தந்து அவர்கள் குரலை அடக்கிவிடுகின்றனர். சங்கப் பொறுப்புகளில் இருந்த பலரும் நிர்வாகத்துடன் சமரசம், ஆலை நிர்வாகத்தின் எல்லா உத்தரவுகளுக்கும் அடக்கி வாசித்தல் என்று லேலாண்டு தொழிலாளர்களை பரதேசி திரைப்படத்தில் வருகின்ற கொத்தடிமை நிலைக்கு கொண்டு சென்றவர்கள்தான் என்பதை நாம் உணரவேண்டும்.

இவ்வாறு ஆலைக்குள் லேலாண்டு தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற நிர்வாகத்தின் அடக்குமுறை, ஜனநாயகமற்ற உற்பத்திமுறை, பாதுகாப்பற்ற பணிச்சூழல், நியாயமற்ற ஊதியம் போன்றவற்றிற்கு எதிராக குரல்கொடுத்து வருபவர்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள்தான். ஆலையில் பாதுகாப்பற்ற பணிச்சூழலால் ஏற்பட்ட விபத்தை எதிர்த்து கேட்டதற்காக, நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நேர்மையாக எதிர்கொண்டு வருபவரும் பு.ஜ.தொ.மு. தோழர்தான். இவற்றால் ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை சந்தித்து வருபவர்களும் பு.ஜ.தொ.மு. தோழர்கள்தான். இதற்கெல்லாம் அஞ்சாமல் களத்தில் போராடி வருபவர்களும் பு.ஜ.தொ.மு. தோழர்கள் தான்!

அந்த வகையில் இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு.வின் தோழர்களான

தோழர்.சு.பரசுராமன், இணைச் செயலாளர் பொறுப்புக்கும்
தோழர்.எஸ்.இரவிச்சந்திரன், எல்.சி.வி.சேசிஸ் பகுதி கமிட்டிக்கும்

போட்டியிடுகின்றோம்.

எங்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.

16-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்

[பிரசுரத்தைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • அசோக்லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • ஜனநாயகமான உற்பத்திச் சூழல், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை வென்றெடுப்போம்!
  • புதிதாக 1000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தப் போராடுவோம்!
  • களப்போராளிகளை வெற்றி பெறச் செய்வோம்!

லேலாண்டு-2 ஆலை முதலாளித்துவ பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்களை இங்கே உங்கள் முன் வைக்கிறோம். இவை நாம் நாளும் அனுபவிக்கும் கொடுமைகள், கொடூரங்கள், சித்திரவதைகள்! இயன்றவரை தொகுத்துள்ளோம்! இந்த அவலங்களுக்கு முடிவுகட்டதான் எமது பு.ஜ.தொ.மு. தோழர்களான நாங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றோம். பதவி பவிசுக்காக அல்ல. நாங்கள் வெற்றிபெறுவது எவ்வளவு அவசியம், அவசரம் என்பதை இந்த இரத்த சாட்சியங்களைப் படித்தால் நீங்களே உணர்வீர்கள்!

  • அசோக்லேலாண்டு யூனிட் 2 என்பது கம்பெனி எனும் பெயரில் உள்ள இட்லரின் வதைக்கூடமாக உள்ளது. கம்பெனி நுழைவாயிலே முதல் கேட் நிர்வாகத்தரப்பு ஆட்கள், இரண்டாவது கேட் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள், மூன்றாவது கேட் முழுக்க பெரும்பான்மையாகிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என தனித்தனிதீவுகளாக தொழிலாளர்களைப் பிரித்துள்ளது லேலாண்டு நிர்வாகம். வர்க்க ஒற்றுமையின் வாசனை கூட வெளிவந்துவிடக் கூடாது என்ற லேலாண்டின் நரித்தனம் இது!
  • கேண்டீனை சரியாக 8.00 மணிக்கெல்லாம் மூடிவிடுகிறார்கள். அதற்கு பிறகு காலதாமதமாக ஒருவர் 8.01-க்கு சென்றாலும் அங்கே அனுமதியில்லை. தாமதமாக வருபவர், தான் வேலைசெய்யும் பகுதிக்கு சென்று காலை உணவு உண்ணாமலேயே பட்டினியுடனே உற்பத்தி போட வேண்டும். அதுமட்டுமின்றி நிர்வாகம் காலதாமதத்திற்கு தண்டனையாக 15 நிமிடத்திற்கான வேஜ்-கட் செய்துவிடுகிறார்கள். 8.16-க்கு ஒருவர் சென்றால் 30 நிமிடத்திற்கான வேஜ்-கட் செய்துவிடுகிறார்கள். இது நினைத்துப் பார்க்க முடியாத வன்முறையாகும். அதுவும் கேப் வெல்டு, பெயின்ட் சாப் தொழிலாளர்கள் மலை ஏறுவது போல் ஓடவேண்டும். தன்னுடைய வேலைப்பகுதிக்கு அவ்வளவு மேடு-பள்ளங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும், இதற்கான முறையான பாதைவசதி ஏதும் கிடையாது. தொழிலாளர்கள் முட்டிமோதி சென்றுதான் தங்களது வருகையைப் பதிவு செய்யவேண்டும் என்ற நிலை.
  • வெல்டிங் சாப்-பில் பல்வேறு பிக்சர்கள் இருக்கும். தொழிலாளர்கள் அதனைச் சுற்றி வேலை செய்துவிட்டு கேபினின் பகுதிகளான அவற்றை அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்கு மாற்றித்தர வேண்டும். அதாவது பிக்சர் மற்றும் வெல்டிங்கள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். தொழிலாளர்கள்தான் கன்வேயர் மாதிரி ஓடிஓடி வேலைசெய்ய வேண்டும். இதற்கு டைம்-ஸ்டடி எப்படி தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? சி.எல் மற்றும் அப்ரண்டீசை மிரட்டி ஆசைகாட்டி ஓடஓட விரட்டி வேலை வாங்குவதன் மூலம்தான். இவ்வாறு சக்கையாக பிழிந்து வேலைவாங்கியதைவிட, பன்மடங்கு இலக்கை வைத்து தொழிலாளர்களை செய்யச் சொல்கின்றனர். கம்ப்யூட்டர் மூலம் கணக்கீடு செய்து வைத்துக்கொண்டு அதன்படியும் உற்பத்தி செய்யவேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர்.
  • ஏற்கனவே, உடல்நிலை சரியில்லாதவர்கள், விபத்துக்குள்ளானவர்கள் போன்றோர்களுக்குக்கூட அங்கே இரக்கம் காட்டுவதில்லை. அங்கே இருக்கின்ற ஸ்பாட் வெல்டிங் கன்கள் அனைத்தும் ஃபோர்டு போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் (பழைய காலாவதியான தொழில்நுட்பம் என்பதாலும், அவற்றை பயன்படுத்த அந்நாட்டு அரசுகள் தடைவிதித்து விட்டதாலும்) வீசியெறிந்தவற்றை எடுத்துவந்து அவற்றை பொருத்தி வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றனர். ஒவ்வொரு கன்னும் யானை, முதலை மாதிரி இருக்கின்றன. அவை அனைத்தும் அனகோன்டா பாம்பினைப்போன்ற ஹோஸ்பைப்பில் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை தன் உடம்பில் சுற்றிக்கொண்டுதான் வெல்டிங் செய்யவேண்டும். அதில் உள்ள மேக்னட் தொழிலாளியுடைய உடம்பை, தொழிலாளியின் உள்ளுறுப்பைக்கூட பதம்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.
    இது இளம் வயது தொழிலாளர்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அவர்களை ஆறுமாதம், ஒருவருடம் என வேலை வாங்கிவிட்டு உனக்கும் இந்த கம்பெனிக்கும் இனி எந்தவித சம்மந்தமுமில்லை என துரத்தி விடுகின்றனர். வேலை செய்யும்போது கடும் வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும்அதிகாரிகள் வேலை வாங்குகின்றனர். பெயரளவிலான மரியாதைகூட அங்கே அவர்களுக்கு இல்லை. இப்படி வாங்கப்பட்ட, வாங்கப்படுகின்ற உற்பத்தியைத்தான் பிளான்ட்-1 லிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மூத்த தொழிலாளர்களை செய்யச் சொல்லி நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது. வேறுவழியின்றி வேதனையோடு புலம்பிக்கொண்டேயும் தனது மனதிற்குள் புழுங்கிக்கொண்டேயும் வேலைசெய்துவருகின்றனர்.

ஸ்லோ பாய்சன் கில்லர் ஷாப்!

  • ஒரு சீனியர் தொழிலாளி கம்பெனி டாய்லட்டில் இடறி விழுந்து விட்டதால் அவரது வலதுகரம் ஒடிந்துவிட்டது. அதற்காக மருத்துவம் எடுத்துக்கொண்டு தனது உடல்நிலையை ஓரளவிற்கு சரிசெய்துகொண்டு வேலைக்கு திரும்பியுள்ளார். அவரது வலதுகரத்தில் ஸ்டீல் ராடு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொழிலாளிக்கு ஸ்பாட்வெல்டிங் அடிக்கச் சொல்லி அதிகாரி நிர்ப்பந்திக்கிறார். விபத்துக்குள்ளான, ராடு பொருத்தப்பட்ட அந்தக்கையால் ஸ்பாட் வெல்டிங் வைக்க வேண்டியிருப்பதால் அதனை அந்தத் தொழிலாளி மறுத்தார். இதற்காக, பல முறை சங்கச் செயலாளர் உட்பட நிர்வாகிகளிடம் முறையிட்டும் பலனின்றி மன வெறுப்புடனே வேலைசெய்தார். பின்னர் அவருடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களின் முயற்சியால் பெயின்ட்சாப்பில் உள்ள ஒருவரிடம் பேசி பரஸ்பரம் இடமாற்றம் செய்துகொள்ளப்பட்டது. அந்தளவிற்கு ஈவிரக்கமற்ற கொலைக்களமாக எம்.டி.விஸ்பாட் வெல்டிங் சாப் (ஸ்லோ பாய்சன் கில்லர் ஷாப்) உள்ளது.
  • ஸ்பாட் வெல்டிங் சாப் முழுவதும் வெல்டிங் இயந்திரம் வெளியேற்றும் புகை வெளியேறி விடாமல் அது தொழிலாளர்களையே தாக்கும் வண்ணம் காற்றோட்டம் இல்லாமல் எக்ஸாஸ்ட் ஃபேன் போன்றவை போதிய அளவில் பொருத்தப்படாமல் உள்ளது. கணக்கு காட்டும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் ஓரிரு ஃபேன்கள் இயங்காமலேயே இருக்கின்றன. இதுகுறித்து கேட்டால் “அது மெயின்டனன்ஸ் பிரிவினருடைய வேலை”, என்று கைகழுவி விடுகின்றனர் அதிகாரிகள். இது குறித்து அக்கறை கொள்ளும் ஓரிரு தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திப் போராடினால், அந்த நேரத்தில் மட்டும் ஃபேனை இயங்கச்செய்து விடுகின்றனர். பிறகு அந்தக் குறிப்பிட்ட தொழிலாளியை வேறு இடம் மாற்றி அனுப்பி வைத்து விடுவது போன்ற இழிந்த போக்கையே கடைபிடிக்கின்றனர். ஃபேன்களும் பழைய இயங்கா நிலைக்கு சென்றுவிடுகின்றன!
  • உற்பத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு தொழிலாளர்கள் வேலைவாங்கப்படுகின்றனர். இதற்கு தொழிலாளியாக இருந்து நிர்வாக அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டிருப்பவர்களையே ஆலைநிர்வாகம் பெரிதும் பயன்படுத்துகிறது. அவர்கள்தான் வெறித்தனமாக அங்கே வேலைசெய்யும் வாரிசு எம்ப்ளாயிகளான இளம் தொழிலாளர்களை அதட்டியும், “ரிப்போர்ட் எழுதிக் கொடுத்து விடுவேன்”, என மிரட்டியும்வேலைவாங்குகின்றனர். “இந்த வயதில் உனக்கு இவ்வளவு சம்பளமா?”என்கிறவன்மத்தோடு வேலைவாங்குகின்றனர். தன்னோடு நெருங்கிப் பழகும் தொழிலாளர்களிடம், சீனியர்- ஜூனியர் பாகுபாடு பார்க்கும் கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். நிர்வாக அதிகாரிகளின் இந்த பிரித்தாளும் நயவஞ்சகத்தை புரிந்துக்கொள்ளாமல் சிலர் இதற்கு பலியாகிவிடுகின்றனர்.
  • மெடிக்கல் பிரச்சினையில் உள்ளவர்களை அவர்களுக்காக அனுதாபம் காட்டி இடமாற்றம் செய்கிறோம் என்று சொல்லி அதனினும் கொடுமையான மெட்டீரியல் மூவ்மென்ட் என்ற ட்ராலி தள்ளும் வேலையை கொடுக்கின்றனர். அதனைச் செய்து பார்த்துவிட்டு,“இதற்கு ஏற்கனவே செய்த வேலையே போதும்!” என தொழிலாளி கருதும்வண்ணம் செய்துவிடுகின்றனர். இதனை பார்க்கும் பிற தொழிலாளர்கள் (மெடிக்கல் பிரச்சினை உள்ளவர்கள்) இடமாற்றம் கோராமல் மனதில் புழுங்கிக்கொண்டே வேலைசெய்து வருகின்றனர்.
  • எல்.சி.வி. கேப் வெல்டிங் பகுதியில் ஒரு பி.டி.சி தொழிலாளி ட்ராலியில் வைத்து மெட்டீரியல் மூவ்மென்ட் செய்தால் லேட்டாகிறது என்று சொல்லி, பெரிய கத்திபோன்ற கூரிய முனையுள்ள கேபின் பாடியை தூக்கிவர நிர்ப்பந்தித்ததால் விபத்தாகி இரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்தும் அவரது வலது கரமே செயலிழந்து போயிற்று. பெங்களூர் தனியார் மருத்துவமனையில் வைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதற்கான இழப்பீடுகளைக் கொடுத்து கவனித்துக் கொள்கிறோம் என வாய்வழி பேச்சில் சொல்லிவிட்டு வெறும் முதலுதவி மட்டுமே செய்துவிட்டு அவரை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.கடைசியில் அவரது சக தொழிலாளர்கள்தான் அவருக்கு உணவளித்து பாதுகாத்தார்கள். இதுபோன்ற கொலைபாதகச் செயல்களை எல்லாம் பட்டியலிட்டால் கருட புராணத்திலும் மனுதர்மத்திலும் சொல்லப்பட்டவை குறைவோ என்று எண்ணத்தோன்றும்.

அடுத்து, பெயிண்ட் சாப்!

வெளிக்காற்று நுழையவிடாமல் மூச்சுத் திணறவைத்து தொழிலாளர்களை கொலை செய்வது எப்படி என கருட புராணத்தில் சொல்லப்பட்டதை நிலைநாட்டும் சாப்! இந்த சாப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு முறையாக மெடிக்கல் டெஸ்ட் எடுத்து சோதித்தாலே இவர்களது நிலைமையை புரிந்து கொள்ள முடியும். சார்ஜ் சீட், சஸ்பெண்ட் போன்ற அடக்குமுறைகளை தொழிலாளர்கள் மீது செலுத்துவதன் மூலம் பல உண்மைகளை மறைத்துவிடுகிறது ஆலைநிர்வாகம்.

எல்.சி.வி.: தலைக்கு மேல் தொங்குவது கேப் அல்ல! கொலைக்கருவி!

  • எல்.சி.வி சேசிஸ் லைனில் கேப் மௌன்ட்டிங் ஆகின்ற ஸ்டேஜில், கன்வயர் ஓடிக்கொண்டிருக்கின்ற போதே சேசிஸின் முகப்புப்பகுதியில் கேபினானது மேலிருந்து வந்திறங்குகிறது. கேபினை மேனுவல் கிரேனைக் கொண்டுதான் மூவ் செய்து கொண்டே லாவகமாக இறக்கிக் கொண்டே அதனை பொருத்தவேண்டும். தொங்கிக்கொண்டிருக்கும் கேபினுக்கு கீழே தொழிலாளர்கள் வேலைசெய்து கொண்டிருக்கும்போது பலமுறை கேபினானது அதன் நிலையிலிருந்து நழுவி தொழிலாளர்கள் மீது விழும் வண்ணம் இறங்கி வந்துள்ளது. இவ்வாறு இறங்கி வருவதற்குக் காரணம் அங்கே நிலையான தடுப்பான் (ஸ்டாப்பார்) ஏதும் பொருத்தப்படவில்லை. மேலும், மேனுவலாக கீழே இறக்கும் பொழுது அது சீரான வகையில் இறங்கி வராது, பலநேரங்களில் ஜர்க் ஆகி வேகமாக இறங்குவதுதான் நடக்கிறது. இவையெல்லாம் கேபினுக்கு கீழே வேலை செய்கின்ற தொழிலாளர்கள் மீது விழுந்து அவர்களின் உடல்நசுங்கி போவதற்கோ, அல்லது பலத்த உடலுறுப்பு சேதங்கள் நடப்பதற்கோ வாய்ப்புகள் உள்ளன. இதற்கு சாட்சியாக சமீபத்தில் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுகிறோம்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள், தொழிலாளி ஒருவர் கேபினுக்கு கீழே வேலைசெய்துக் கொண்டிருக்கும்போது திடீரென கேபின் இறங்கிவிட்டது. உடனே அவர் சுதாரித்துக்கொண்டார். அதனால், மயிரிழையில் உயிர் தப்பினார். இதனால், ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவால் அவர் அங்கேயே மயக்கமடைந்தார். ஆம்புலனஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இதற்கு பிறகு, இந்த இடத்தில் நிரந்தரத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து, டிப்ளமோ அப்ரண்டீஸ், சி.எல் தொழிலாளர்களை ஈடுபடுத்தியது ஆலைநிர்வாகம். இதன் மூலம் விபத்து நடப்பதற்கான ஆபத்தான சூழலை தொடரவைத்துள்ளது. அப்போதைக்கு பிரச்சனைத் தீர்ந்ததாக நிரந்தரத் தொழிலாளர்களாகிய நாம் கருதினோம். ஆனால், ஒருசில வாரத்திற்குள் மெல்ல மெல்ல நிரந்தரத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. கன்வயர் லைனில் அந்த இடத்தில் மட்டுமாவது (கேப் மௌவுண்டிங் பகுதியில்) கன்வயரை நிறுத்தி ஸ்டாப்பரை பொருத்தி பாதுகாப்பாக வேலையை முடித்தனுப்ப முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தொழிலாளரின் உயிரை மயிராய் மதிக்கிறது ஆலை நிர்வாகம். இது குறித்து தொழிலாளர்கள் எடுத்துரைத்தாலும் ஏற்பதில்லை. சங்கநிர்வாகிகளை அழைத்து சுட்டிக்காண்பித்தால் அந்த நேரத்தில் இயல்பாக அவர்களும் கோபமடைந்து அதிகாரிகளை திட்டுகின்றனர். அடுத்து மேல்மட்ட நிர்வாகம் சொல்லும் கருத்துக்கு பலியாகி அதனை தொழிலாளர்களிடம் ஒப்பித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

எல்.சி.வி. சேசிஸ் லைன் – தொழிலாளர்களின் காலை ஒடித்து கண்ணைக் குருடாக்கும் பகுதி!

  • எல்.சி.வி. கேப் டிரிம், சேசிஸ் லைன்களை சி.எல், அப்ரண்டீஸ் இளைஞர்களை வேலைசெய்ய வைத்து அதிகபட்சமாக விரட்டிவிரட்டி வேலை வாங்கி இதுதான் இதற்கு உரிய டைம் என்று சொல்கின்றனர். ஒரு வண்டிக்கு 5.3 நிமிடம் என்று கால இலக்கை இவர்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். இந்த வேகத்தில் கன்வேயரை இயக்கி தொழிலாளர்களை வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்கள் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போதே இடையில் கன்வயர் வேகத்தை அவர்களுக்கே தெரியாமல் கூட்டிவைத்து விடுகின்றனர். இதனைப்பற்றிக் கேள்வி கேட்டால் சார்ஜ்-சீட், சஸ்பெண்ட் என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டுகின்றனர். கன்வேயரில் மூவ் ஆகிக்கொண்டிருக்கும் மவுண்ட் செய்யப்பட்ட கேபினுக்கு மேல் ஏறி வேலை செய்துவிட்டு மூவிங் நிலையிலிருந்து கீழே குதித்துத்தான் இறங்க வேண்டும் என்ற ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால் இடறி விழுந்து கால் ஒடிந்து சிலமாதங்கள் விடுப்பில் இருந்து மருத்துவம் செய்துகொண்டு வேலைக்கு திரும்பியுள்ளார் ஒரு தொழிலாளி. அந்த வேலைகளை மூத்த தொழிலாளர்களை செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் கொடுமை இங்கே இன்னும் நிகழ்கிறது. பாதுகாப்பு குறித்து அக்கறையோடு இருக்கும் ஓரிரு தொழிலாளர்கள்தான் அதனை எதிர்த்துப் போராடுகின்றனர். ஆனால், பிரச்சினையை தீர்க்காமல் அத்தொழிலாளர்களை இடமாற்றம் செய்து விடுகின்றனர். இங்கு மூவிங்கில் இருக்கின்ற கன்வேயரில் இருந்து இறங்குவதற்கு தேவையான பிளாட்ஃபார்ம் பொருத்தமாக அமைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஆலை நிர்வாகம் அமைக்கவில்லை. இதனை கேட்கும் தொழிலாளர்களை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு தொழிலாளியை அங்கே அதே வேலையை செய்ய வைத்து, கேள்வி கேட்கும் தொழிலாளி வேலை செய்வதில்லை என்றும் பழி போடுகின்றனர். தங்களுக்கு விசுவாசமான கெம்பா தொழிலாளர்கள் மூலம் அவதூறு செய்கின்றனர்.
  • எல்.சி.வி. சேசிஸ் அசெம்பிளி லைனில் உள்ள ரேடியேட்டர் பிட்மண்ட் வலதுபுற ஸ்டேஜ்ஜில் கிளிப் பொறுத்துவதற்கு சர்க் கிளிப் ட்ரைவர் கொடுப்பதற்கு பதிலாக சாதாரண கட்டிங் பிளேயரைத்தான் கொடுத்து வேலைபார்க்கச் சொல்கிறார்கள். இது பாதுகாப்பற்ற செயல் என்றும் இவ்வாறு வேலைசெய்தால் வேலை செய்யும் தொழிலாளியின் கண்ணோ அல்லது சக தொழிலாளர்களின் கண்களையோ பதம் பார்த்துவிடும் என்று சொல்லி அதனால் அதற்குரிய சரியான டூலைக் கொடுங்கள் என்று கேட்கும் தொழிலாளரை, “இதற்கு முன்னர் எல்லோரும் இந்த கட்டிங் பிளேயரை வைத்துத்தான் செய்துள்ளார்கள். நீங்கள்தான் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறீர்கள். நான் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துவிடுவேன்” என்று சொல்லி மிரட்டுகின்றனர் அதிகாரிகள். சர்க் கிளிப் பிளேயர் என்ற உபகரணம் சுமார் 500 ரூபாய் விலை கொண்டது. அவ்விலைக்குரிய இச்சிறு கருவியை கொடுப்பதால் பல லட்சம் வண்டிகள் உற்பத்தி செய்யும் ஆலை நிர்வாகத்திற்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லைதான். டூலை கேட்கும் ஒரு சிறு விசயத்தில் கூட தொழிலாளியின் கோரிக்கையை அங்கீகரிக்க மறுக்கின்ற வக்கிரம் இங்கு நிலவுகிறது. ஜனநாயகமற்ற கொடுங்கோன்மையாக இது உள்ளது. இதற்கு காரணம் தொழிலாளியை அவர்கள் அடிமைகளாகக் கருதுகிறார்கள் என்பதால்தான்.

எம்.டி.வி. கேப் ட்ரிம் பகுதி – தொழிலாளரின் உணர்வை ட்ரிம் செய்யும் பகுதி!

  • எம்.டி.வி. கேப் டிரிம் என்பது கேபினை இறக்கும் இடம். இங்கு கன்வேயரைச் சுற்றி ஓடிஓடி வேலை செய்ய வேண்டும். இதற்கு முக்கியக் காரணம் கன்வேயரின் வேகம் அந்த வேலையை முடிப்பதற்கு போதுமானதாக இல்லாமல், அதில் நான்கில் ஒரு பகுதியாக இருப்பதே. மார்பின் மேல் பகுதியில் விபத்துக்குள்ளாகி ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டுள்ள தொழிலாளி ஒருவர் இப்பகுதியில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தார். தனது உடல்நிலைமை காரணமாக அவர் தொடர்ந்து இப்பகுதியில் வேலை செய்ய இயலாது எனத் தெரிவித்து வந்தார். இதனை பொருட்படுத்தாமல் அவரை ஆலை நிர்வாகிகள் இந்தப் பகுதியில் வேலை செய்ய கட்டாயப்படுத்தினர். இதனால், ஒருநாள் அதிக பலம் காட்டி வேலை செய்து கொண்டிருக்கும் போது, மார்பில் பொருத்தப்பட்டிருந்த ஸ்டீல் பிளேட் சதையைப் பிய்த்துக்கொண்டு வெளியே வந்தது. உடல்முழுவதும் இரத்தம் சொட்டச்சொட்ட அதிகாரியிடம் சென்று தனது இரத்தம் வருவதைக் காட்டி இனியாவது தனக்கு இடமாற்றம் செய்துதருமாறு கேட்டார். ஆனால், சிறிதும் இரக்கமற்ற முறையில் லேலாண்டு நிர்வாகம் அத்தொழிலாளியை அந்தப் பகுதியிலேயே வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றும் வேதனையோடு அவர் அங்கேயே வேலை செய்துக்கொண்டிருக்கிறார்.
  • நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் அனுபவமிக்க மூத்த அதிகாரிகளை நியமிப்பதில்லை. மாறாக அனுபவமற்ற, தொழிலாளர்களின் நிலைமை புரியாத, பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்த இளம் அதிகாரிகளை நியமிக்கின்றனர். இந்த இளம் அதிகாரிகள் மேல் அதிகாரிகள் போடும் உத்தரவுக்கு ஆடுவது மட்டுமின்றி மூத்தத் தொழிலாளர்களை அவர்களின் வயதுக்குரிய மரியாதைகூட கொடுக்காமல் கிண்டல் அடிப்பது, அவமானப்படுத்துவது, நகைப்பது, சீண்டுவது என்ற எல்லாவிதமான சேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர். மூத்தத் தொழிலாளர்களின் தன்மான உணர்வை கேள்விக்குள்ளாக்குகின்றனர். இதனை எதிர்த்து கேட்டால், ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தத்தில் அதிகார வெறிபிடித்தவர்களாக இந்த இளம் அதிகாரிகள் உருவெடுத்துள்ளனர்.

உணர்ச்சிகளை அடக்குகிறோம் – உணர்வுகளற்ற நடைப்பிணங்களாகிறோம்!

கன்வேயரின் வேகம் 5.3 நிமிடங்கள்! அதாவது 5.3 நிமிடத்திற்கு ஒரு வண்டி!இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பலரும் இரண்டு ஸ்டேஜ், மூன்று ஸ்டேஜ் வரை ஓடி ஓடிதான் அவரவர் வேலைகளை முடிக்கின்றனர். உரிய ஸ்டேஜ்குள்ளேயே வேலையை முடிக்கவில்லை என்று அதிகாரிகள் விரட்டுகின்றனர். இந்தச்சூழலே சிறுநீர், மலம் கழிப்பது போன்ற மனித கழிவுவெளியேற்றத்திற்கே நேரம் கொடுப்பதில்லை. அதிகாரிகள் வேலை முடிக்கவில்லை என்று விரட்டுவதால், பலரும் டாய்லெட்டுக்கு போகாமல் அடக்கி வைத்துக்கொண்டு வேலை செய்கின்றனர். இதனால் சிறுநீரகக்கல், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு தொழிலாளர்கள் பலர் ஆளாகி அவதியுறுகின்றனர்.

நாம் எந்த அளவிற்கு அடிமைகளாக்கப்பட்டுள்ளோம் என்ற இந்த அடக்குமுறையை நீங்கள் உணரவேண்டுமென்றால், சிப்ட் முடிந்தவுடன் எல்லா டாய்லெட்டும் அவுஸ்ஃபுல்லாக இருப்பதையும் தொழிலாளர்கள் வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும் அந்த அவலக்காட்சியையும் பாருங்கள்! லேலாண்டு ஆலை நிர்வாகத்தின் இந்த அடக்குமுறைக்கு சாட்சியம்!

தற்காலிகத் தீர்வு!

நிமிட உற்பத்தி முறை என்பது ஓர் நவீன அடக்குமுறை. இது தொழிலாளர்களை நிரந்தர நோயாளியாக்குகிறது. இந்த நிமிட உற்பத்திமுறையை எதிர்க்காமல் மேற்கண்ட அடக்குமுறைகளிலிருந்து தொழிலாளர்கள் விடுதலை அடைய முடியாது. அடுத்து, தற்போதுள்ள இந்த அடக்குமுறைகள் குறைந்த பட்சம் குறையவேண்டுமென்றால் நமது ஆலையில் மட்டும் சுமார் 1,000 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும். மூன்றாவதாக, நம்மீதான அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கான களப்போராளிகளை,தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அவர்கள் மூலம் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைக்கவேண்டும். அந்த வகையில் இன்று களத்தில் நிற்கின்ற பு.ஜ.தொ.மு. தோழர்களை வெற்றி பெறச் செய்வீர்!

இறுதியாக,

ஒரு முறை, சிப்ட்டுக்கு இடையே தொழிலாளி ஒருவர் டாய்லெட்டிலிருந்து வெளிவரும்போது அழுதுகொண்டே வெளிவந்தார். காரணம் என்னவென்று கேட்டார் தோழர்.“எனக்கு பைல்ஸ் பிரச்சினை உள்ளது. டாய்லெட்கூட நிம்மதியாக இருந்துவிட்டுச் செல்ல முடியவில்லை. வலியைத் தாங்க முடியவில்லை, லேட் ஆகிவிட்டது” என்று கண்ணை துடைத்துக்கொண்டே சொல்லிச்சென்றார்.

அன்று… அவர் கண்ணைத் துடைத்துக் கொண்டார், வலியைப் பொறுத்துக்கொண்டார், துன்பத்தைத் தாங்கிக்கொண்டார்!

இன்று… நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!

தேர்தல் நாள் 19-09-2014

தோழர்.சு.பரசுராமன்,
இணைச் செயலாளர் பொறுப்புக்கு

தோழர்.சீ.இரவிச்சந்திரன்.
கமிட்டி உறுப்பினர் பொறுப்புக்கு, எல்.சி.வி. சேசிஸ் பகுதி.

எங்களுக்கு வாக்களித்து பெருவரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.
ndlfhosur2004@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க