வக்ஃப் ஆவணங்களில் குளறுபடி எனக்கூறி 31,328 சொத்துகளின் பதிவுகளை யோகி அரசு ரத்து செய்துள்ளது.
பாசிச மோடி கும்பல் தனது இந்துராஷ்டிர கொடுங்கனவிற்காக இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு, வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.
அதில் நாடு முழுதும் உள்ள வக்ஃப் சொத்துகளின் பதிவு, ஆண்டுக்கணக்குகள், வழக்குகளைக் கையாள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காக மையப்படுத்தப்பட்ட இணையதளப் பக்கம் ‘உமீத்’தை ஒன்றிய அரசு தொடங்கியது.
இந்த இணையதளத்தில் ஆறு மாதங்களுக்குள் வக்ஃப் சொத்துக்களை விரிவான தகவலுடன் பதிவு செய்ய வேண்டும் எனவும் பதிவு செய்யப்படாத சொத்துகள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி நாடு முழுதும் வக்ஃப் சொத்துகளை, ‘உமீத்’ (UMEED) இணைய தளத்தில் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், பாசிஸ்ட் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக 1,18,302 வக்ஃப் சொத்துகள் ஆவணப்படுத்தப்பட்டன.
இதில், உமீத் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சொத்து விபரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல் என்ற பெயரில், சில சொத்துகளில், வக்ஃப் வாரிய ஆவணங்களில் உள்ள, ‘கஸ்ரா’ எனப்படும் நிலப் புல எண்களும், இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எண்களும் முரண்பாடாக உள்ளது எனக் கூறி 31,328 சொத்துகளின் ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளனர். மேலும், அவற்றுடன் தொடர்புடைய, 31,192 வக்ஃப் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதாவது வக்ஃப் பத்திரம் இல்லாத சொத்துகளை வக்ஃப் சொத்துகளாகக் கருத இயலாது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1900-களின் முற்பகுதியிலிருந்தே வக்ஃப் சொத்துகளை நிர்வகித்துவரும் வக்ஃப் வாரியத்திடம் பல இடங்களுக்கு முறையான சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படையில்லை. அப்படி சமர்ப்பிப்பதற்கான சாத்திய கூறுகளுமில்லை. எனவே தான் வக்ஃப் சொத்துகளை அபகரித்து இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்காகவே இப்பாசிசக் கும்பல் வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.
ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய மக்களின் வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாதம் தினந்தோறும் அரங்கேறிவரும் நிலையில் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலை இது மேலும் தீவிரப்படுத்தும். அதுமட்டுமின்றி நாம் முன்பே கூறியது போல இஸ்லாமியர்கள் மீது இதுவரை இல்லாத வகையில் பாசிச பயங்கரவாதத் தாக்குதல் ஒரு உச்சத்தை எட்டியுள்ளது.
எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், அனைத்து ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும். மேலும் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பின்வாங்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
கருப்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











