தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்: பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம்

தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.

டந்த ஏப்ரல் 16, 2026 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், “131-வது அரசமைப்புத் திருத்த மசோதா 2026”, அதனுடன் தொடர்புடைய “தொகுதி மறுவரையறை மசோதா 2026” (Delimitation Bill 2026) மற்றும் “யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026” ஆகிய மூன்று மசோதாக்களை ஒன்றிய மோடி அரசு தாக்கல் செய்தது. இவற்றில் முதல் மசோதா அரசமைப்புத் திருத்த மசோதா என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதும், அது நிறைவேற்றப்படாவிட்டால் மற்ற இரு மசோதாக்களும் நடைமுறையாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாசிச மோடி அரசின் தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க., காங்கிரசு, சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) மற்றும் திரிணாமுல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏப்ரல் 17 அன்று இம்மூன்று மசோதாக்களும் தோல்வியடைந்தன. இது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாசிச கும்பலுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிகத் தடையாகும்.

மறுபுறம், கடந்த பன்னிரண்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், மோடி-ஷா கும்பல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்கள் முதன்முறையாக தோற்கடிக்கப்பட்டிருப்பது இந்திய அளவிலும் சர்வதேச ஊடகங்களிலும் கவனத்தைப் பெற்றது. இதுகுறித்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இம்மசோதாக்களை கொண்டுவந்து எதிர்ப்பை சம்பாதித்தது மோடி அரசின் முட்டாள்தனம் என்றும் எரிசக்தி தட்டுப்பாட்டால் இந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்கான திசைதிருப்பல் நடவடிக்கை இது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், இம்மசோதாக்களின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் சதித்திட்டம் மிகவும் ஆழமானதாகும்.

பாசிச கும்பலின் நெருக்கடியும் சதித்திட்டமும்

மக்கள் போராட்டங்களால் அரசியல் அரங்கில் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இத்தோல்வி முகத்திலிருந்து மீள்வதற்காக போலி வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) முறைகேடுகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட மோசடிகளின் மூலம் அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. 2029 நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் இம்மோசடிகளையே நம்பியுள்ள மோடி-அமித்ஷா கும்பல், தொகுதி மறுவரையறையை அதற்கான முக்கிய ஆயுதமாக கருதுகிறது.

அசாம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டதைப் போல், பாசிச பா.ஜ.க. கும்பல் வெற்றி பெறுவதற்கு ஏற்பவும் அதன் இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதகமாகவும் நாடு முழுவதும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் சதித்திட்டமாகும்.

மேலும், 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரையில் தொகுதி மறுவரையறை செய்யப்படக் கூடாது என்ற அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையிலான தடைக்காலம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறைக்கான நகர்வுகளை மோடி அரசு தொடங்கியுள்ளது. “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027”-கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிகள் நிறைவடைந்து தரவுகள் வெளியாக 2028-ஆம் ஆண்டு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தொகுதி மறுவரையறையை முடிக்க முடியாத நெருக்கடி பாசிச கும்பலுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், மக்கள்தொகையில் வடமாநிலங்களுக்கும் தென்மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளியைக் கொண்டுள்ள 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது பாசிச கும்பலின் நோக்கத்திற்கு ஏதுவானதாகும். 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளும் இவ்வாறு அமையுமா என்பது கேள்விகுறியே. அதைப்போல், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைத்து நடத்தப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்களை தேர்தலுக்கு முன்னர் வெளியிட்டால் அது பாசிச கும்பலுக்கே எதிராக முடியவும் வாய்ப்புள்ளது.

ஆகவேதான், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் உடனடியாக தொகுதி மறுவரையறையை தொடங்கி, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் முடிப்பதற்கு பாசிச கும்பல் திட்டமிடுகிறது.

ஆனால், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 82, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்களவையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்றும் அது சமீபத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் கூறுகிறது. அதாவது, சட்டப்படி, 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி அத்தரவுகளின் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும். இதுவே, பாசிச கும்பலின் நோக்கத்திற்கு தற்போது தடையாக அமைகிறது.

எனவே, தொகுதி மறுவரையறையை எப்போது மேற்கொள்வது, எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்துவது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும்; நாடாளுமன்றத்தில் 50 சதவிகித பெரும்பான்மையின் (Simple majority) அடிப்படையில் இம்முடிவுகளை எடுக்க முடியும் என்ற அடிப்படையில் அரசியலமைப்பின் பிரிவுகள் 81, 82 மற்றும் 170-இல் திருத்தங்களை முன்மொழிந்து மோடி அரசால் கொண்டுவரப்பட்டதே மேற்குறிப்பிட்ட “131-வது அரசமைப்புத் திருத்த மசோதா 2026” ஆகும்.

இதற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டிய மோடி-அமித்ஷா கும்பல் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியோ அல்லது ஏமாற்றியோ எப்படியேனும் இம்மசோதாக்களை நிறைவேற்றிவிட வேண்டுமென்பதற்காக பல்வேறு சதித்தனங்களில் ஈடுபட்டது. ஆனால், தொகுதி மறுவரையறையால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் தென்மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை பெரியளவில் குறைக்கப்படும் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இம்மசோதாக்களை தோல்வியுறச் செய்துள்ளன.

எனினும், பாசிச மோடி கும்பல் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தொகுதி மறுவரையறையை நடத்தி முடிக்க பல்வேறு குறுக்கு வழிகளில் சதித்தனமாக தொடர்ந்து முயற்சிக்கும் என்பது எச்சரிக்கைக்கு உரியதாகும்.

மகளிர் இட ஒதுக்கீடு:
பாசிஸ்டுகளின் ட்ரோஜன் குதிரை

பாசிச கும்பலின் இந்த அதிகாரக் குவிப்பு சதித்திட்டம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகிவிடக் கூடாது என்பதாலேயே, அதனை மூடிமறைத்துவிட்டு, மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான மசோதாக்கள் இவை என மிகவும் கவர்ச்சிகரமாக அறிவித்தது மோடி-ஷா கும்பல். ஆனால், செப்டம்பர் 19, 2023 அன்றே, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இம்மசோதாவை வரவேற்று ஆதரித்துதான் எதிர்க்கட்சிகள் வாக்களித்தன.

இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டால் ஏற்கெனவே உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 33 சதவிகிதத்தை (அதாவது 180 தொகுதிகளை) பெண்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதனாலேயே, அச்சட்டத்தில் புதிதாக 334-ஏ (Article 334A) என்ற பிரிவை வஞ்சகமாகச் சேர்த்தது மோடி-ஷா கும்பல். இப்பிரிவின்படி, 2026-இல் புதிதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்த பிறகே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆக, இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களில் ஒன்றான தொகுதி மறுவரையறையைச் சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக் கொள்வதற்கான “ட்ரோஜன் குதிரை”யாகத்தான் மகளிர் இட ஒதுக்கீட்டை கையிலெடுத்தது பா.ஜ.க. கும்பல்.

இதன் அடுத்த கட்டமாகத்தான், ஏப்ரல் 16, 2026 அன்று இரவு, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் விதிகளை அவசர அவசரமாக அரசிதழில் வெளியிட்டது ஒன்றிய மோடி அரசு. ஒரு சட்டத்தின் விதிகளை முதல் நாள் இரவு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, அதைக் காரணம் காட்டி அடுத்த நாள் காலை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டும் கேலிக்கூத்து வேறு எங்கும் அரங்கேறியிருக்காது.

முதலைக் கண்ணீரும்
ஊடகங்களின் சரணாகதியும்

இம்மசோதாக்களைத் தாக்கல் செய்த போது, 40 ஆண்டுகாலம் கிடப்பில் கிடந்த (மகளிர் இட ஒதுக்கீடு) மசோதாவை நிறைவேற்றுவது தங்கள் கடமை என்று முதலைக் கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி. ஏப்ரல் 17-இல் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டவுடன், “உடனடியாகப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கொண்டுவரப்பட்ட மசோதா நிறைவேற்றப்படாமல் போனதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் திசைதிருப்பி மோடி கண்ணீர்விட்டு நாடகமாடினார். “எதிர்க்கட்சிகள் பெண்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டன; அவர்களைப் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று அமித்ஷா சாபம் விட்டார்.

எல்.முருகனோ ஒரு படி மேலே சென்று, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முடக்கவே தி.மு.க. சதி செய்கிறது என்றும் இதற்காகவே தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாடகமாடுகிறது என்றும் பேசினார். பெண்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறையைச் சட்டமாக்கும் வஞ்சகத்தை எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தியதால், அவர்களைத் துரோகிகள் என்றும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்றும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மோடி ஊடகங்களோ பா.ஜ.க-வின் பொய்களையும் வெறுப்புக் கருத்துக்களையும் செய்திகளாகத் திரும்பத் திரும்ப எதிரொலித்தன. பத்திரிகை அறநெறி விலை பேசப்பட்டு, பெரும்பாலான ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் ஊதுகுழல்களாக மாறிவிட்டன என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணமாக இது அமைந்தது.

உண்மையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது தாங்கள்தான் என மார்த்தட்டிக்கொள்ளும் மோடி-அமித்ஷா கும்பல், உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’க் குடியரசில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவில்லை. 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு அமல்படுத்துவோம் என்று கூறியது. தற்போது, 131-வது அரசமைப்பு திருத்த மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாமல் போய்விட்டது என்பார்கள். இப்படியே தள்ளிப்போட்டுக் கொண்டே செல்வார்கள். ஏனெனில், இப்பாசிச காவி கும்பலின் பார்ப்பனிய சித்தாந்தம் ஜனநாயக விரோதமானதும் பெண்களுக்கு முற்றிலும் எதிரானதுமாகும். இந்த ஊரறிந்த உண்மையை மூடிமறைத்துக் கொண்டுதான் முற்போக்கு அரிதாரம் பூசிக்கொண்டு எதிர்க்கட்சிகளைக் குற்றஞ்சாட்டி வருகிறது இக்கும்பல்.

மேலும், தேர்தல் சூழலில் பெண்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் திருப்புவதன் மூலம், மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தனது பாசிச அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்வது என்ற நோக்கிலும் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

தொடரும் தொகுதி மறுவரையறை அபாயமும்
எதிர்க்கட்சிகளின் குறுகிய கண்ணோட்டமும்

ஏப்ரல் 17 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களை தோல்வியடையச் செய்தது, ஒரு தற்காலிக வெற்றியே ஆகும். ஏனெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் பொழுது மக்கள்தொகை அதிகமாக உள்ள, பாசிச கும்பலுக்கு மக்கள் அடித்தளம் இருக்கின்ற உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குரிய மக்களவை எண்ணிக்கையைக் குறைக்கும். குறைவான மக்கள்தொகையைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்களை வஞ்சிக்கும். இம்மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் குரலும் ஒடுக்கப்படும்.

மேலும், பாசிஸ்டுகள் தங்களுடைய மக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கேற்ப இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும், சாதி-மத முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் வகையிலும் தொகுதிகளை பாசிசமயப்படுத்தும் அபாயமும் இதில் அடங்கியுள்ளது. அசாம் மற்றும் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதி மறுவரையறையே இதற்கான சான்று. எனவேதான், இத்தொகுதி மறுவரையறை நடவடிக்கையை இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களில் ஒன்று என்று கூறுகிறோம்.

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

ஆனால், தொகுதி மறுவரையறையை பாசிஸ்டுகளின் நோக்கத்திலிருந்து ஆராயாமல், குறுகிய கண்ணோட்டத்தில் எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. ஏனெனில், காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் மையப்படுத்தப்பட்ட இந்தியா என்ற கருத்தியலை ஏற்றுக் கொண்டவை. இவர்களும் அதிகாரத்தை மையத்தில் குவித்துக்கொள்ளவே செய்தார்கள் என்பதே கடந்த கால வரலாறு. அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தி மாநிலங்களின் கொஞ்சநஞ்ச உரிமையையும் பறித்துக் கொண்டவர்கள்.

மேலும், அம்பானி-அதானி-அகர்வால் வகையறா ஆளும் வர்க்கக் கும்பல்களின் கொள்ளைக்கான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கிறது பா.ஜ.க. கும்பல். பாசிச எதிர்ப்பு பேசுகிற எதிர்க்கட்சிகளுக்கும் இந்த ஆளும் வர்க்கங்களுக்கும், இதர உள்நாட்டு முதலாளிகளுக்கும் சேவை செய்வதே நோக்கமாகும். இந்த ஆளும் வர்க்கச் சார்பும் குறுகிய கண்ணோட்டமும் இந்திய தேசியவாதமுமே பாசிஸ்டுகளுக்கு எதிரான சரியான திட்டத்தை முன்வைப்பதில் தடையாக இருக்கின்றன. எனவேதான், சந்தர்ப்பவாத குறுக்குவழியில் தொகுதி மறுவரையறையை முறியடிக்க எத்தனிக்கின்றன.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, தொகுதி மறுவரையறையைக் காலவரையறையின்றி தள்ளிப்போடுதல், அதாவது 2026-க்குப் பிறகு நடக்கவுள்ள தொகுதி மறுவரையறையை மேலும் சில பத்தாண்டுகளுக்கு (எடுத்துக்காட்டாக 2050 வரை) முடக்கி வைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் முதல் கோரிக்கையாக உள்ளது. இரண்டாவதாக, நிதி ஒதுக்கீட்டில் பேரம் பேசுதல், அதாவது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் நாடாளுமன்றத் தொகுதிகளை இழந்தால், அதற்கு இழப்பீடாக ஒன்றிய அரசின் வரியில் அதிகப் பங்கைத் தர வேண்டும் என்ற வாதத்தை மாநிலக் கட்சிகள் முன்வைக்கின்றன. மூன்றாவதாக, மக்கள்தொகை மட்டுமல்லாது, பரப்பளவு, மேம்பாட்டு நிலை போன்ற பிற காரணிகளையும் கருத்தில் கொண்டு தொகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இந்தத் தீர்வுகள் எதுவும், மாநில உரிமைகளை நிலைநாட்டவோ அல்லது தொகுதி மறுவரையறையைத் தடுத்து நிறுத்தவோ செய்யாது. மாறாக இத்தீர்வுகள், இந்துராஷ்டிரத்தை உருவாக்கத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் தொகுதி வரையறைக்கான ஒரு அங்கீகாரமாகவே அமையும்.

எதிர்க்கட்சிகள் பாசிச எதிர்ப்பு மாற்று சித்தாந்தம் – திட்டமின்றி பா.ஜ.க-வை எதிர்ப்பதால், இத்தகைய இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்களுக்கு எதிராக மாற்று திட்டத்தை முன்வைக்க முடியாமல் பாசிச கும்பலின் திட்டத்திற்கே பலியாகின்றன.

மக்கள்தொகை என்கிற ஒற்றை அளவுகோலும்
போலி கூட்டாட்சியும்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு மக்கள்தொகை என்பதை மட்டுமே ஒற்றை அளவுகோலாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இந்தியா என்பது பல்வேறு மொழி, பண்பாடு மற்றும் மாறுபட்ட சமூக-அரசியல்-பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்ட தேசிய இனங்கள் வாழும் நாடாகும். இத்தகைய சூழலில், அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொள்வது அநீதியானது. இது சிறிய தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறித்து, அவர்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும்.

இந்த 70 ஆண்டுகால போலி சுதந்திர இந்தியாவில் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீரை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றன. இம்மாநிலங்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் காலில் போட்டு மிதிக்கின்றன. உரிமைப் பறிப்பும் அடையாள ஒழிப்பும் ‘ஜனநாயகத்தின்’ பெயரால் நடந்து கொண்டிருக்கிறது.

உண்மையில், தற்போது நடைமுறையிலுள்ள மாநிலங்களின் கூட்டாட்சி என்பது சுயாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சியாக இல்லை. இங்கு மாநிலங்களுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை. ஒன்றிய அரசு அமல்படுத்துகின்ற அனைத்தையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது. மாநிலங்கள் தாங்கள் வசூலிக்கும் வரிப்பணத்தை ஒன்றிய அரசிடம் கொடுத்துவிட்டு, பேரிடர் நிவாரணத்திற்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் நிதியைக் கெஞ்சிப் பெற வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. மாநிலங்கள் தேசிய இனங்களின் சுயாட்சிக் கூடாரங்களாக இல்லாமல், ஒன்றிய அரசின் வெறும் நிர்வாக அலகுகளாகவே மாற்றப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா தேசிய இனங்களின் சிறைச்சாலையாகத் திகழ்கிறது.

காலத்தின் கட்டாயம்

தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.

பொருளாதாரம், வரி வசூல், இயற்கை வளங்கள், கல்வி மற்றும் மொழி ஆகியவற்றின் மீதான முழுக் கட்டுப்பாடும் அந்தந்த தேசிய இனங்களிடமே இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசுக்கு வெளியுறவு, பாதுகாப்பு போன்ற மிகச் சில துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். இதுவே உண்மையான மாநிலக் கூட்டாட்சியாகும்,.

பா.ஜ.க-வின் தீவிரமான ஒற்றைமயமாக்கல் திட்டத்தை எதிர்க்கட்சிகளின் சீர்திருத்தவாதக் கோரிக்கைகளால் முறியடிக்கவே முடியாது. அதிகாரத்தை டெல்லியிலிருந்து உழைக்கும் மக்களிடமும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடமும் பரவலாக்கும் ஒரு புதிய அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

மக்கள்தொகை அடிப்படையிலும், வெறும் புவியியல் எல்லைகளை வைத்தும் தொகுதிகளைப் பிரிக்கும் தற்போதைய தேர்தல் முறைக்குப் பதிலாக, தொழிற்சாலைகள், விவசாயப் பகுதிகள் ஆகிய உற்பத்தித் தளங்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் அதிகார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த மையங்களுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களைத் திரும்பி அழைக்கவும்  மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

கீழிருந்து மேல் என்ற வகையில் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் இருப்பது போல, மக்கள் பிரதிநிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்களவையும், தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய இனங்களுக்கான பிரதிநிதித்துவ அவையும் அமைக்கப்பட வேண்டும். அதேசமயம், தேசிய இனங்களுக்கு பிரிந்து செல்லக்கூடிய உரிமையுள்ள சுயநிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசாக விளங்கக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்காகப் போராடுவதன் மூலமே தேசிய இனங்கள் மற்றும் மாநில உரிமைகளை நிலைநாட்ட முடியும். அதற்கான போராட்டத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க