கடந்த ஜனவரி 20, 2026 அன்று, மனிதர்களின் நீர் நுகர்வு இயற்கையின் மீளுருவாக்கத் திறனைத் தாண்டிவிட்டதால், உலகம் அதிகாரப்பூர்வமாக “உலகளாவிய நீர் திவால்நிலை” (Global Water Bankruptcy) எனும் கட்டமைப்பு வீழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU) எச்சரித்துள்ளது.
இது வெறும் பருவமழை பொய்ப்பதால் ஏற்படும் தற்காலிக நீர் நெருக்கடி அல்ல. மாறாக, கடந்த பல பத்தாண்டுகளாக நிலத்தடி நீரை வரம்பின்றி உறிஞ்சியதால், நீரைத் தேக்கி வைக்கும் பாறையடுக்குகளும் (Aquifers) இயற்கை நீரூற்றுகளும் சிதைந்துவிட்டதன் விளைவாகும். அதாவது, கார்ப்பரேட்டுகளின் வரைமுறையற்ற இயற்கை வளச் சூறையாடலால் ஏற்பட்டுள்ள மீளமுடியாத ஒரு சூழலியல் அழிவு இது.
இந்தியாவை அச்சுறுத்தும்
நீர் பற்றாக்குறை
இந்தியாவின் உணவு மற்றும் குடிநீர் பாதுகாப்பிற்கு நிலத்தடி நீரே முதுகெலும்பாக விளங்குகிறது. நாட்டின் விவசாயத் தேவையில் 62 சதவிகிதமும் கிராமப்புறக் குடிநீர்த் தேவையில் 85 சதவிகிதமும் நகர்ப்புறத் தேவையில் 45 சதவிகிதமும் நிலத்தடி நீர் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது.
இருப்பினும், தற்போது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. 2025-26 தரவுகளின்படி, இந்தியாவின் வருடாந்திர நிலத்தடி நீர் மீளுருவாக்கம் 448.52 பில்லியன் கன மீட்டர் (BCM) ஆக உள்ள நிலையில், உறிஞ்சப்படும் நீரின் அளவு 247.22 பி.சி.எம். என்ற அபாயகரமான எல்லையைத் தொட்டுள்ளது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் எடுக்கப்படும் விகிதமானது, இயற்கை மீளுருவாக்கம் செய்யும் அளவை விடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது.
மேலும், இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் சூழலில், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 40 சதவிகித மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதியின்றித் தவிக்கும் அபாயம் நிலவுவதாக நிதி ஆயோக் (NITI Aayog) கூறுகிறது.
ஏற்கெனவே, இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்கள் தீவிரமான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. 85 சதவிகிதம் நிலத்தடி நீரை சார்ந்திருக்கும் கிராமப்புறங்களின் நிலை இன்னும் மோசமான நிலையை அடையக்கூடும்.
இந்தியாவில் நிலவும் இந்த நீர் பற்றாக்குறையின் கொடூரமான சுமை உழைக்கும் வர்க்கப் பெண்கள் மீதே பெருமளவு சுமத்தப்படுகிறது. குடிநீருக்காகத் தினசரி பல கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் சுமப்பதால் பெண்களுக்கு கருப்பை பாதிப்பு, எலும்புத் தேய்மானம் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீரை சேகரிப்பதற்காகப் பெண் குழந்தைகள் பள்ளிக்கல்வியிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றனர்; மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் “தண்ணீர் மனைவிகள்” (தண்ணீரைச் சுமந்து வருவதற்காகவே ஆண்கள் பல திருமணங்களை மேற்கொள்வது) எனும் ஆணாதிக்க கொத்தடிமை முறை இன்றும் தொடர்கிறது. இவ்வாறு நீர் பற்றாக்குறை பெண்கள் மீது ஒரு ஆணாதிக்க வன்முறையாகவும் உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு
தாரைவார்க்கப்படும் நீராதாரங்கள்
ஒருபுறம் டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்கள் கடும் குடிநீர் பற்றாக்குறையில் தவிக்க, மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தடி நீரை வரைமுறையற்றுச் சூறையாடுவதற்கு ஏற்பத் திட்டங்களையும் சட்டங்களையும் பாசிச மோடி அரசு உருவாக்கி வருகிறது.
மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் அணைகளின் மீதான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசின் கைகளில் குவிப்பதற்காக 2021 அணைப் பாதுகாப்புச் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியது. அதேபோல், நதிகள் மீதான மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் அணை கட்டுதல் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகளை உருவாக்க அதானி, எல் அண்ட் டி (L&T) போன்ற பெருநிறுவனங்களுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், அம்ருத் 2.0 (AMRUT 2.0 – Atal Mission for Rejuvenation and Urban Transformation) என்ற திட்டத்தின் மூலம் நகரங்களின் நீர் விநியோகத்தை நவீனப்படுத்துவதாகக் கூறி, குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்கி வருகிறது பாசிச மோடி அரசு. இத்திட்டத்தின் கீழ் நிதி பெற வேண்டுமெனில், உள்ளாட்சி அமைப்புகள் நீர் விநியோகத்தைத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து (PPP Model) செயல்படுத்த வேண்டுமென்ற நிபந்தனை மறைமுகமாக விதிக்கப்படுகிறது. நீர் மேலாண்மையை ஒரு சூழலியல் அமைப்பாகப் (Ecological System) பார்க்காமல், கான்கிரீட் குழாய்களுக்கான ஒப்பந்த வணிகமாக (Contractor Business) மட்டுமே அரசு அணுகுகிறது. சான்றாக, அம்ருத் திட்ட நிதியில் 62 சதவிகிதத்தை குழாய் விநியோகக் கட்டமைப்புக்கும், வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே நீர்நிலைப் புனரமைப்பிற்கும் மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
அதேபோல், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட 2025 பேரிடர் மேலாண்மை (திருத்தச்) சட்டம் என்பது நதி நீர் பகிர்வு அல்லது அணைகளில் இருந்து நீர் திறப்பது போன்ற விவகாரங்களை “பேரிடர் மேலாண்மை” என்ற பெயரில் ஒன்றிய அரசு தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

இதுமட்டுமின்றி, தேசிய நீர்க் கொள்கையை (National Water Policy – 2026) கொண்டுவரவும் மோடி அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்தப் புதிய கொள்கையின்படி, நீர் என்பது ஒரு சமூகச் சொத்தாகப் பார்க்கப்படாமல், பொருளாதாரப் பண்டமாக (Economic Good) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதன் விளைவாக, நீர் விநியோகம், பராமரிப்பு மற்றும் கட்டணம் வசூலித்தல் ஆகியவை முழுமையாகக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்; ஸ்மார்ட் மீட்டர்கள் கட்டாயமாக்கப்படும். இது ஏழை, எளிய மக்களின் நீர் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் அப்பட்டமான பாசிச தாக்குதலாகும்.
இவ்வாறு நீர் ஆதாரங்களின் மீதான மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை சர்வதேச மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்க மோடி அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய நுகர்வோர் சந்தையில் (FMCG) நுழைந்தபிறகு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் வணிகச் சந்தையை மிக வேகமாகத் தனது ஏகபோகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
அதேபோல், அதானி குழுமம் தற்போது தூர்வாருதல் (Dredging), கழிவுநீர் சுத்திகரிப்பு (Sewage Treatment) மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகளில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் “ஹைபிரிட் அனிட்டி” முறையில் (Hybrid Annuity Model) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. இவ்வாறு “தூய்மையான கங்கை” (Namami Gange) மற்றும் “அம்ருத்” திட்டங்களின் கீழ் வரும் ஒப்பந்தங்களை, அதானி குழுமம் கைப்பற்றி வருவது எதிர்காலத்தில் குடிநீர் விநியோகம் முழுமையாகக் அதானியின் ஆதிக்கத்திற்குச் செல்ல வழிவகுக்கும்.
மறுபுறம், அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளான கூகுள், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் “செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களை” (AI Data Centers) அமைக்க மோடி அரசு தாராளமாக அனுமதி வழங்கி வருகிறது. நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான லிட்டர் நன்னீரை உறிஞ்சும் இந்தத் தரவு மையங்கள், சுற்றுச்சூழலுக்கு மீளமுடியாத இழப்புகளை ஏற்படுத்தும் பெரும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
உலகம் நீர் திவால்நிலையை அடைந்துவிட்டதாக சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், பாசிச மோடி அரசு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக நெருக்கடியை தீவிரப்படுத்தவே செய்கிறது.
முதலாளித்துவத்தின் லாபவெறியின் விளைவு
உலகளவில் பாதுகாப்பற்ற குடிநீரால் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலகளாவிய நீர் திவால்நிலையானது உயிரிழப்புகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் விவசாயம் பொய்த்து, உலகளவில் வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, இடப்பெயர்வு, அமைதியின்மை, மோதல்கள் ஆகியவை மேலும் அதிகரிக்கும்.
மறுபுறம், இந்த நீர் திவால்நிலை குறித்தும் அதன் எதிர்கால ஆபத்துகள் குறித்தும் பேசும் சர்வதேச அமைப்புகளும் ஊடகங்களும் இதற்கு ஊற்றுக்கண்ணான முதலாளித்துவம் குறித்து வாய்திறப்பதில்லை. உண்மையில், முதலாளித்துவ இலாபவெறியின் விளைவுகளான அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சல், காலநிலை மாற்றம் மற்றும் தவறான நீர் மேலாண்மை ஆகியவையே இந்த திவால்நிலைக்கு முதன்மை காரணங்களாகும்.
ஆனால் முதலாளித்துவமோ, விவசாயமே அதிக நீரை உறிஞ்சுகிறது என்று கூறி விவசாயிகளைப் பலிகடாவாக்கி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயல்கிறது. உண்மையில், நிலத்தடி நீர் வீழ்ச்சிக்குச் சிறு, குறு விவசாயிகள் காரணமல்ல. மாறாக, ஏகாதிபத்தியச் சந்தை நிர்ப்பந்தத்தால் அதிக நீர் தேவைப்படும் பணப்பயிர்களை விளைவிக்கத் தூண்டி, அவற்றை “மறைநீராக” (Virtual Water) ஏற்றுமதி செய்யும் உலகளாவிய வேளாண்-மூலதனக் கும்பலும் (Global Agri-Capital), ரியல்-எஸ்டேட் மாஃபியாக்களின் திட்டமிடப்படாத முறையற்ற நகரமயமாக்கலுமே முதன்மைக் காரணங்களாகும்.
உண்மையில் நாம் அரிசியையும் சர்க்கரையையும் மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை; நம் நாட்டின் நிலத்தடி நீரையும் சேர்த்தே ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஒருவகை “சூழலியல் காலனியாதிக்கம்” (Ecological Colonialism) ஆகும். இதுதான் உலகம் முழுவதும் காலனிய நாடுகளின் நிலையாகும்.
இந்நிலையில், காலநிலை மாற்றம் என்பதையே நிராகரிக்கும் டிரம்ப்-மஸ்க் தலைமையிலான பாசிச கும்பல் அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி, உலகை மேலாதிக்கம் செய்து வருகிறது. இக்கும்பல் கடந்தாண்டில் சர்வதேச வளர்ச்சிக்கான முகமையின் (USAID) நிதியுதவிகளை முடக்கியதன் விளைவாக, பின்தங்கிய நாடுகளில் சுவாஷ் (SWASH- Sanitation, Water, and Sanitation for Health) போன்ற அடிப்படைத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுமார் 9.5 கோடி மக்கள் அடிப்படை சுகாதாரச் சேவைகளை இழந்துள்ளனர். இது, பின்தங்கிய நாடுகளின் முக்கிய நகரங்களை அதிவிரைவில் “டே ஜீரோ” (Day Zero) எனப்படும் “நீர் அறவே இல்லாத” நிலைக்குத் தள்ளிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.
இந்தியாவில், கார்ப்பரேட் – தனியார்மயத்திற்கு எதிராக, நீர் வளத்தின் மீதான முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக வழங்கும் “பரவலாக்கப்பட்ட ஜனநாயக நீர் மேலாண்மை” நிலைநாட்டப்பட வேண்டும்; பாரம்பரிய ஏரிகள் மற்றும் குளங்களை மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலான குடிமராமத்து திட்டங்கள் மூலம் தூர்வார வேண்டும்; பயன்படுத்தப்பட்ட நீரை 100 சதவிகிதம் சுத்திகரித்து மறுசுழற்சி செய்யும் முறையைக் கட்டாயமாக்க வேண்டும். தரவு மையங்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் பயன்பாட்டை வெளிப்படையாக்கி, வரம்புகளை விதிக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் கீழ் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதனை நமது நாட்டில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு கட்டமைப்புக்கான மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுப்பதே நம் முன்னுள்ள வரலாற்றுத் தேவையாகும்.
ஆனால், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பில் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டமாக இருக்கும் வரை நீர் திவால்நிலையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, நீரை ஒரு சமூக உடைமையாக மாற்றி, மனிதத் தேவைகளுக்கும் இயற்கையின் மீளுருவாக்கத்திற்கும் ஏற்பத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் சோசலிச சமூக-பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இதற்கான ஒரே நீண்டகால தீர்வாகும்.
![]()
ஜென்னி லீ
(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











