அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
மே 25, வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டு. 1967-ஆம் ஆண்டின் மே மாதத்தில் பண்ணையாதிக்கத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிராக நக்சல்பாரியின் ஏழை, எளிய விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர். “உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர். தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய அரசின் கொடிய இராணுவத்தை எதிர்த்து நின்று போர் புரிந்தனர்.
இதன்மூலம், நக்சல்பாரி எழுச்சி இயக்கம் இந்திய கம்யூனிச இயக்கத்தை ஆட்கொண்டிருந்த நாடாளுமன்ற திரிபுவாதப் பாதையை திரைக்கிழித்தது. “நக்சல்பாரி எழுச்சிப் பாதையே இந்திய புரட்சிக்கான பாதை” என கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு புரட்சியின் திசையைக் காட்டியது.
இன்று, நம் நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பலின் பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அப்பாசிச கும்பலானது இந்திய உழைக்கும் வர்க்கத்தினர் மீது பாசிச தாக்குதலை மூர்க்கத்தனமாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. நிலவுகின்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கான கட்டமைப்பாக மறுவார்ப்பு செய்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், பாசிச சட்டதிட்டங்களுக்கு எதிராக மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். தங்களின் உறுதிமிக்க போராட்டங்கள் மூலம் பாசிச கும்பலைப் பணிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போராட்டங்களும், நாடாளுமன்றப் பாதையின் மூலம் அல்ல, மக்கள் எழுச்சிகள் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
அந்தவகையில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்; அப்போராட்டங்களை பாசிச சக்திகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதைத் தடுத்து நிறுத்தும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கி வளர்த்தெடுப்போம் என நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டில் உறுதியேற்போம்!
![]()
ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











